ஐரோப்பிய இசை,வாக்னர்- ஓர் அறிமுகப்பயிற்சி

ஐரோப்பியப் பண்பாட்டின் உச்சப்புள்ளி என்பது ஓப்பராதான் என்று டி.எஸ்.எலியட் ஒரு கட்டுரையில் சொல்கிறார் (The decline of music hall). ஏனென்றால் செவ்வியல் இசை, செவ்வியல் நாடகம்,ஓவியம் ஆகியவை செவ்விலக்கியத்துடன் இணையும் புள்ளி அதுவே. ஓப்பரா இன்றும்கூட ஐரோப்பாவில் முதன்மைக்கலையாகவே உள்ளது. The lion king போன்ற நவீன ஓப்பராக்களும் உருவாகின்றன. ஓப்பராவின் இன்னொரு வடிவம் நவீன இசைநாடகம்.

ஓப்பராவிலேயே மேலையிசையின் உச்சகட்ட சாத்தியங்கள் நிகழ்ந்துள்ளன. ஐரோப்பிய இசையின் முதன்மை ஆளுமை ரிச்சர்ட் வாக்னர். அவருடைய ஓப்பராக்கள்தான் இலக்கியவடிவமான காவியம் மாபெரும் இசைக்கோலங்களாக வெளிப்பட்ட கலைப்பெருநிகழ்வுகள். ஓப்பராவை விட எளிமையான வடிவமே சிம்பனி என்பது.

அஜிதன் ஏற்கனவே சிம்பனி இசை மேதையான பீத்தோவனை அறிமுகம் செய்து இரண்டு வகுப்புகளை நடத்தியிருக்கிறார். பல இளைஞர்களும் கோரியதற்கிணங்க வாக்னரின் ஓப்பராக்களைப் பற்றிய அறிமுக வகுப்பு ஒன்றை நடத்தவிருக்கிறார்.

ஓப்பரா போன்ற கலைவடிவை எளிதாக அறிமுகம் செய்துகொள்ள முடியாது. அதன் இலக்கியப்பின்புலம், பண்பாட்டுப்பின்புலம் ஆகியவற்றுடன் அவ்விசையை கேட்டு உணரவேண்டும்.இந்த வகுப்பில் ஓப்பராவின் தத்துவம், இலக்கியம் ஆகியவற்றுடன் இசையமைப்பையும் அறிமுகம் செய்து ஒரு தொடக்கத்தை அஜிதன் அளிக்கிறார்.

நாள் ஜூலை 25, 26 மற்றும் 27

programsvishnupuram@gmail.com

ஜூலை 10 ஆம் தேதி குருபூர்ணிமா (வியாசபூர்ணிமா) நித்யவனத்தில் கொண்டாடப்படுகிறது. வெண்முரசு – மகாபாரத நாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. குரு.சௌந்தர் முன்னின்று நடத்துவார். யோகப்பயிற்சிக்கு வருபவர்கள் ஒருநாள் முன்னதாக வந்தால் அந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்.

இலக்கிய விவாதங்கள், கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகளுடன் ஒரு நாள் மாலை நிகழ்வாக நடைபெறும்.

குருபூர்ணிமா நிகழ்வில் மட்டும் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தனியாக எழுதலாம்.

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

நிஷா மன்ஸூர் நடத்தும் இஸ்லாமிய தத்துவம் – சூபி மரபு பற்றிய வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன. ஏற்கனவே நிகழ்ந்த இவ்வகுப்புகள் முற்றிலும் புதிய ஓர் ஆன்மிக உலகைத் திறந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள்.

இரண்டு வகைகளில் இந்த வகுப்புகள் முக்கியமானவை. இவை இந்தியப்பண்பாட்டை முழுமையாக உணர்வதற்கு இன்றியமையாதவை. கலை இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர்கள் கற்றே ஆகவேண்டிய வரலாற்று- ஞானப் பரப்பு இது. இஸ்லாமின் மெய்யியல், சூஃபிகள் இந்தியாவில் அதை நிலைநிறுத்திய வரலாறு, சூபி மரபின் உள்ளடக்கம் ஆகியவற்றை அறியாமல் ஒருவர் இந்திய இலக்கியம், இந்தியக் கலை, இந்திய இசை ஆகியவற்றை அறிந்தார் என்று சொல்ல முடியாது.

சென்ற ஆயிரமாண்டுகளாக இஸ்லாமின் ஆன்மிகமரபும் சூஃபி மெய்யியலும் இந்தியாவின் எல்லா மெய்ஞான மரபுகளிலும் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் நாராயண குரு வரை பிற மரபுகளைச் சேர்ந்த ஞானிகள் கூட அதன் ஒளியை பெற்றுக்கொண்டவர்கள். இந்திய மெய்ஞான மரபின் சாரத்தை அகத்தே உணரவிரும்புபவர்களுக்கு அவசியமான வகுப்புகள் இவை.

நாள் ஜூலை4,5 மற்றும் 6 

programsvishnupuram@gmail.com

யோகப்பயிற்சி.தொடக்கநிலை.

பிகார் சத்யானந்த குருமரபின் முதன்மை ஆசிரியர் என றிவிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் குரு. சௌந்தர். இருபதாண்டுகளுக்கும் மேலாக சௌந்தரின் யோகப்பயிற்சிகள் இந்தியாவிலும், இலங்கை மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் நடந்து வருகிறன. ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை என்று கருதும் பயிற்சிகள் அவை.

அன்றாடவாழ்க்கையில் கவனக்குறைவு, பொறுமையின்மை, பதற்றம் போன்ற அகப்பிரச்ச்னைகளுக்கும்; முதுகுவலி, கழுத்துவலி, உடல்சோர்வு போன்ற பலவகையான புறப்பிரச்சினைகளுக்கும் ஒருங்கிணைந்த தீர்வாக அமைவது முறையான யோகப்பயிற்சி. யோக ஆசிரியர் யோகமுறைகளைப் பயிற்றுநர் என்பதுடன் வாழ்க்கை முழுக்க துணைவராக நம்மைக் கண்காணித்து, உடன் வருபவராகவும் அமையவேண்டும். சௌந்தர் அத்தகைய ஆசிரியர்.

நான்காண்டுகளாக நிகழும் இந்த வகுப்புகளில் ஏற்கனவே ஐநூறு பேருக்குமேல் முழுமையறிவு வகுப்புகள் வழியாக சௌந்தரிடம் பயின்றுள்ளனர்.

நாள் ஜூலை 11, 12, 13

programsvishnupuram@gmail.com

 

ஜெயக்குமார் நடத்திய கர்நாடக இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு பங்கேற்றவர்களுக்கு ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது என்று எதிர்வினைகள் வந்தன. மீண்டும் அவ்வகுப்பு நிகழவிருக்கிறது

நம்மில் பலருக்கும் கர்நாடக இசையை அறிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் உண்டு. ஆனால் நம்மால் அதை அறிந்துகொள்ள முடியுமா என்னும் சந்தேகமும் இருக்கும். அது மிகச்சிக்கலானது என்ற பிரமையும் உண்டு. உண்மையில் மரபிசையை ரசிக்க ஒரு நல்ல தொடக்கம் அமைந்தாலே போதுமானது. அதற்கு மூன்றுநாட்கள் நடக்கும் 16 மணிநேரப் பயிற்சி வகுப்பு மிக உதவியானது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கர்நாடக இசையின் முதன்மை ராகங்களின் ஒரு அறிமுகம் நிகழும். அதை நினைவில் நிறுத்த உதவும் கீர்த்தனைகளும், சினிமாப்பாடல்களும் கேட்கச்செய்யப்படும். இசை கேட்பதற்கான அந்த தொடக்கம் நிகழ்ந்தால் நம்மையறியாமலேயே நாம் பாடல்களை கவனிக்கத் தொடங்கிவிடுவோம். மரபிசையின் மாபெரும் உலகுக்குள் நுழைவதற்கான வாசல் அது.

நாள் ஜூலை 18 ,19 மற்றும் 20 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

இசைநாட்கள் மாயாமாளவகௌளை எனும் மாயக்கரம்

 

வரவிருக்கும் நிகழ்வுகள்

தியானம் – உளக்குவிப்பு பயிற்சி முதல் நிலை

தில்லை செந்தில்பிரபு நடத்திவரும் தியானம் மற்றும் உளக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலைப் பயிற்சி முடித்துள்ளனர். இரண்டாம்நிலைப் பயிற்சி வகுப்பும் நிகழ்ந்துள்ளது.

இன்றைய சூழலில் உள்ளத்தைக் குவித்து செயலை ஆற்றுவதென்பதே மிகப்பெரிய சவால். கல்வியிலானாலும் தொழிலில் ஆனாலும். செயற்கையாக உள்ளத்தை தீவிரமாக்கிக்கொண்டால் அதன் விளைவாக உளச்சோர்வு உருவாவது இன்னொரு சிக்கல்.

இன்றைய வாழ்க்கை நம் அட்ரினல் சுரப்பியை சீண்டிக்கொண்டே இருக்கிறது. ஒரு விலங்கு அபாயத்தில் இருக்கையில் அதன் உடலில் முழு ஆற்றலும் வெளிப்படவேண்டும். அதன் உடலின் உணவு முழுமையாக எரிக்கப்பட்டு, தசைகள் முற்றாகச் செயலாற்றவேண்டும். அட்ரினல் அப்பணியைச் செய்கிறது. ஆனால் நாம் இன்று உருவாக்கிக்கொண்டிருக்கும் பதற்றம், பரபரப்பு கொண்ட வாழ்க்கையில் நாம் நிரந்தரமாகவே சிங்கத்தால் துரத்தப்படும் மான் போல் இருக்கிறோம். நாம் பொழுதுபோக்கு என நினைக்கும் கேளிக்கைகள், சமூகஊடகங்கள் ஆகியவையும் நம் அட்ரினலைத் தூண்டுவனதான். அதுவே நம்மை கவனமின்மை மற்றும் உளச்சோர்வுக்குக் கொண்டுசெல்கிறது. செரிமானமின்மை, தூக்கமின்மை முதல் சோரியாஸிஸ் வரையிலான நோய்களுக்கும் காரணமாகிறது.

யோக முறைகள், தியானங்கள் நாமே நம் உடலின் சுரப்பிகளை அமைதிப்படுத்தும் பயிற்சிகள்தான். நம் உள்ளத்தை நாமே மெல்ல அடங்கச் செய்து உடலை ஆறவைக்கிறோம். அவை மிகப்பயனுள்ளவை என்பதனால்தான் உலக அளவில் மிகப்பெரிய அளவில் பரவியுள்ளன. உலகிலேயே மிக அதிகமானபேர் யோக – தியானப்பயிற்சிகளைச் செய்யும் நாடுகள் ஐரோப்பா- அமெரிக்காதான்.

தில்லை செந்தில்பிரபு பயிற்றுவிக்கும் தியானமுறை இன்றைய காலகட்டத்திற்காக வரையறை செய்யப்பட்ட ஒன்று. உலகமெங்கும் செல்வாக்குடன் இருப்பது.

நாள் ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு)

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2025 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.