Jeyamohan's Blog, page 997

April 25, 2021

வாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்

அன்புள்ள ஜெ

“சில உணர்வு நிலைகள் ஊர்திகள் போல. அவற்றில் ஏறிய அவற்றுக்குரிய இடங்களுக்கு செல்ல முடியும்.” இந்த வரிகள் இப்போது எனக்கு மிகவும் தேவையாக இருந்தன. இதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வரிகளை கொண்டு மேலே சிந்திக்கிறேன். குற்றமும் தண்டனையும் படித்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. அதிலிருந்து வரும் கேள்விகள் விடாமல் என்னை தொடர்ந்த வண்ணம் உள்ளன.ஒருபக்கம் மீள் வாசிப்பை நிகழ்த்த வேண்டும் என நினைக்கும் போதே அச்செயல் ஆற்ற இயலா ஓர் இனமறியா உள்ளத்தையும் உள்ளது. இன்னொரு பக்கம் அந்த கேள்விகள் தொடர்ச்சியாக நாவல் என்னை உந்தி தள்ளுகின்றன.

இது ஏன் என்று யோசிக்கையில் உங்கள் வரிகள் ஏணி அமைத்து கொடுத்தன. எந்த கேள்வியுமே அடிப்படையில் நம் சொந்த வாழ்வில் இருந்து வரும் போது தான் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. வாழ்வின் அத்தனை செயல்களும் நேரடியாக நம் உணர்வு நிலைகளோடு தொடர்புள்ள வை.அதனாலேயே அந்த கேள்விகள் அத்தனை தாக்கம் செலுத்துகின்றன. ஒரு புனைவு நமக்கு அளிப்பது நிகர் வாழ்க்கை ஒன்றை என்பதனாலேயே அவற்றின் கேள்விகளும் ஆழமும் விரிவும் கொண்டவையாக ஆகின்றன. நாவல் ஒன்று உருவாக்கும் மைய கேள்வியை தாண்டி மேலும் மேலும் நிறைய கேள்விகளை அடைதல் என்பது நாவலுடனான வாசகனின் ஒன்றுதலின் அளவே தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.

இந்த ஒன்றுதல் செவ்வியலாக்கங்களில் கூடுதலாக நிகழ்கிறது என்பது என் எண்ணம். இன்று என் உளத்தடைகளை உடைத்து கொள்ள தொடங்கி விட்டேன். அதிகாலையில் எத்தனை மணிக்கு எழுந்தேன் என்று தெரியவில்லை. குற்றமும் தண்டனையும் நாவலில் இருந்து உருவான கேள்விகளையும் அதற்கு என்னுள் உருவாகி வரும் பதில்களையும் எழுதினேன். அவற்றில் சிறு பகுதியே தாளில் வந்துள்ளது. என் பதில்களும் கேள்விகளும் ஆங்காங்கே தெளிவில்லாமலே உள்ளன‌.

இப்பொழுது இலக்கிய வாசகனின் பயிற்சி பதிவை படித்தேன். உங்களின்  நூறு கதைகளின் போது தொடர்ச்சியாக வெளிவந்த வாசகர் கடிதங்கள் நிறைய கதைகளை புரிந்து கொள்ள மிகவும் உதவியது. அந்த கதைகளை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. படிக்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ளேன்.

தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும் நாவல் குறித்து உங்கள் தளத்தில் வந்துள்ள வாசிப்புகளையும் மேலும் வாசித்தறிய வேண்டிய முக்கியமான தளங்களையும் புத்தகங்களையும் சுட்டிக் கொடுத்தால் எனக்கும் இனி மேல் வாசிப்பவர்களுக்கும் மிகவும் உதவியாயிருக்கும். என் அகத்தத்தளிப்பை தீர்த்து வைக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள சக்திவேல்

இந்த தளத்தில் தொடர்சியாக எழுதப்படுபவை எல்லாமே வாசகனுக்கான பயிற்சிகள்தான். இந்த தளமே ஒரு வாசகர்பயிற்சிக்கூடம்தான்

இந்த தளத்தில் மூன்று வகையான பயிற்சிகள் நிகழ்கின்றன. ஒன்று, நூல்கள் மீதான மதிப்புரைகள். அவை எப்படியெல்லாம் நூல்களை வாசிக்கமுடியும் என்பதற்கான வழிகாட்டல்கள். இரண்டு, கொள்கைகள் மற்றும் கருத்துக்களாக நான் முன்வைப்பவை. அவற்றில் சிலவற்றை வகுத்துரைக்கிறேன். மூன்று, வாசகர்கடிதங்கள். அவை விவாதங்களுக்கு களமொருக்குகின்றன

ஒரு கல்விக்கூடம் என்றால் இதை பாடநூல்கள், ஆசிரியர், சகமாணவர்கள் என கருதலாம்

ஜெ

குற்றமும் தண்டனையும் பற்றி… குற்றமும் தண்டனையும் – சில எண்ணங்கள் குற்றமும் தண்டனையும் -செம்பதிப்பு குற்றமும் தண்டனையும் குற்றமும் தண்டனையும் வாசிப்புக் குற்றமும் விமர்சனத்தண்டனையும் தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா – கடிதம் தஸ்தயேவ்ஸ்கி இரு கடிதங்கள் தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ் மேலும் தஸ்தயேவ்ஸ்கி தஸ்தயேவ்ஸ்கி-கடிதம் தஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள் ருஷ்ய இலக்கியம் வாசிப்பதன் தடைகள் மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?   -விஷால் ராஜா இனக்காழ்ப்பும் இலக்கியவாதிகளும் அயல் இலக்கியங்களும் தமிழும் அசடன் ,நற்றிணை பாரஞ்சுமக்கிறவர்கள்  (அசடன் நாவலை முன்வைத்து)  – விஷால்ராஜா அசடன் -மேரி கிறிஸ்டி அசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன் அசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 11:33

முகில் கடிதங்கள்- 13

ஜெயமோகன் அவர்களுக்கு,

என் வாழ்க்கையிலும் அப்படி ஒரு பயணம் இருந்தது. அவள் பயின்று கொண்டுஇருந்த ரீசேர்ச் இன்ஸ்டிடுயிலிருந்து அவளுக்கு குடை பிடித்து கொண்டு, அவள் கொலுசு ஒளியை கேட்டு கொண்டு, அவளை அவ்வப்போது பார்த்து கொண்டு, ஒன்றை கிலோமிட்டர் நடந்து அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு சென்றோம்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பல வித எதிர்ப்புகளுக்கு பிறகு, இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் அவள் என் மனைவியானாள். அதன் பிறகு அதுபோல் பல பயணங்கள். அருகில் இருக்கும் கடை முதல், நீண்ட தூரம் வரை. ஆனாலும் அந்த முதல் பயணத்தின் நினைவுகள்தரும் சுகம் வேறு வகை.

காதலினால் எவ்வளவோ இழந்திந்திருந்தாலும்,  நல்லவேளை நான் காதலை இழக்கவில்லை. இல்லை என்றல் அது ஒரு மாறாத ஏக்கமாகவே மனதிலே தங்கியிருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன் காதல் மட்டும் போதும் என்று நான் எடுத்த முடிவு, நல்ல முடிவு. தினம் தினம் காதலினால் நிறைந்த வாழ்க்கை. காதலுக்காக நான் இழந்ததை விட, என் தோழியுடன், இந்த 15 ஆண்டுகளில் நான் வென்றதே,  பெற்றதே அதிகம்.

உங்களுடைய அந்த முகில்  இந்த முகில், எங்களின் அந்த முதல் நடையை நினைவுபடுத்தியது. மீண்டும் அதே இடத்தில், அவளுடன் அதே போல் நடக்க வேண்டும் என்று தோன்ற வைத்துவிட்டது.

சு. பவளகோவிந்தராஜன்.

ஜெ

குமரித்துறைவி வந்து அந்த முகில் இந்த முகில் அலையை குறைத்துவிட்டிருக்கலாம். ஆனால் நான் இன்னமும்கூட அந்த மனநிலையிலேயே இருந்துகொண்டிருக்கிறேன். சினிமா, அதனுள் ஒரு வாழ்க்கை இதெல்லாமே அடையாளங்கள்தான். நான் அதில் காண்பது அழிவின்மைக்கும் அழிவுக்குமான போராட்டம். இங்கே எல்லாமே அழிந்துகொண்டிருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கை கணந்தோறும் மறைந்துகொண்டிருக்கிறது. அதை நிறுத்திவைக்க முடியாது. ஆனால் நிறுத்தி வைக்க முயன்றுகொண்டே இருக்கிறோம். கல்லிலும் காவியத்திலும் பொறித்துவைக்கிறோம்.

சினிமா இன்றைய கல். இதிலுள்ளவை எப்படியோ நிலைத்துவிடுகின்றன. எவ்வளவோ சினிமாக்கள் மறைந்துவிட்டன. ஆனால் யூடியூப் வந்தபின் எதுவுமே அழியாது என்று தோன்றுகிறது. நான் ரசித்த ஒரு நடிகை இன்று சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரை இளமையில் அப்படி விரும்பியிருக்கிறேன். அவரைப்போல ஒரு பெண் என்று கனவு கண்டிருக்கிறேன். அவர் மாறிவிட்டார். நான் மாறிவிட்டேன். ஆனால் எண்பதுகளின் சினிமா அப்படியே இருந்துகொண்டிருக்கிறது.

முகில்கள் மறைந்துவிடும். வானம் அப்படியே இருந்துகொண்டிருக்கும்

ஜெ

அந்த முகில் இந்த முகில் அனுபவங்களால் ஆனது. அந்த எளிமையான காதலனுபவம் ஒன்றை இளமையில் அடைந்தவர்கள் பாக்கியவான்கள் அவர்களுக்கு துன்பமே இல்லை. அவர்களின் அந்தக் காதல் பிற எவருக்கும் தெரியாது. அவர்களுக்குள்ளேயே ஒரு கனவாக இருந்துகொண்டிருக்கும். ஆனால் அங்கேயே இருக்கும்.

அந்தக் கதையில் நான் பார்த்த ஒருவிஷயம் ராமராவ் அடையும் அந்த கொந்தளிப்பும் கிறுக்கும். அது ஏன்? அந்த கிறுக்கு நாட்கள் இன்னெவிட்டபிள் ஆன விதியை அவர் செரித்துக்கொள்ளும் முயற்சிதான் என்று தோன்றுகிறது. செரித்தபின் ஒரு மென்மையான வலியாக அதை மிச்சம் வைத்திருக்கிறார்

சந்திரமோகன் எம்

முகில்- கடிதங்கள் 10 முகில் கடிதங்கள்-9 முகில்- கடிதம்-8 முகில் கடிதங்கள்-7 முகில் கடிதங்கள்-6 முகில்- கடிதங்கள்-5 முகில்- கடிதங்கள்-4 முகில் -கடிதங்கள்-3 முகில் கடிதங்கள்-2 முகில்- கடிதங்கள்1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 11:30

April 24, 2021

சூல்கொண்ட அருள்

தென்னந் தமிழினுடன் பிறந்த

சிறுகால் அரும்ப தீ அரும்பும்

தேமா நிழல் கண்டு அஞ்சும் இளஞ்

செங்கண் கயவாய் புளிற்றெருமை

 

இன்னம் பசும்புல் கறிக்கல்லா

இளங்கன்று உள்ளி மடித்தலம் நின்று

இழிபாலருவி உவட்டு எறிய

எறியும் திரை தீம்புனல் பொய்கைப்

 

பொன்னங் கமல பசுந்தோட்டுப்

பொற்றாது ஆடி கற்றைநிலா

பொழியும் தரங்கம் பிறை உயிர்த்த

பொன் போற்றோடு தோலடிப்பொலன் சூட்டு

 

அன்னம் பொலியும் தமிழ் மதுரைக்கு

அரசே தாலே தாலேலோ!

அருள் சூல் கொண்ட அங்கயற்கண்

அமுதே தாலே தாலேலோ!

[குமரகுருபரர். மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ். தாலப்பருவம்.1]

தென்னகத்தமிழுடன் பிறந்த தென்றல் அரும்ப,

அப்பருவத்தில் தீயென அரும்பும்

தேன்மாமரத்தின் தளிரின் ஒளியைக் கண்டு

தீயென்று எண்ணி அஞ்சும்

செவ்விழிகளும் கரியவாயும்கொண்ட  அன்னை எருமை

இன்னும் பசும்புல்லை கடிக்க்கத் தெரியாத தன் இளங்கன்றை எண்ணி

மடித்தலத்தில் இருந்து ஒழுகவிடும் பாலருவி பெருக்கெடுக்க

அந்தப் பால் கலந்து அலையடிக்கும் நீர்கொண்ட பொய்கையில்

மலர்ந்த தாமரையின் மென்மையான இதழ்களிலுள்ள

தங்கப்பொடியில் ஆடிய அன்னப்பறவைகள்

நிலவெழுந்த கடலில் அலையெழுகையில்

பொன்னணிந்து எழும் திருமகள் என பொலியும்

தமிழ்மதுரைக்கு அரசியே தாலேலோ.

அருளைச் சூல்கொண்ட அழகிய கயல்கண் அமுதே தாலே தாலேலோ

மூன்றுவகை மடங்கள் உண்டு. தாய்மைமடம், கொடைமடம், பக்தி மடம். அன்னை குழந்தையை எண்ணி தேவையின்றியே அச்சமும் பதற்றமும் அடையும் மடமை. பெறுபவனின் தகுதியோ தன் தேவையோ எண்ணாமல் அக்கணமே கொடுக்கும் வள்ளலின் மடமை. ஏழுலகாளும் தெய்வத்தை தனக்கு அணுக்கமான மானுடவடிவமாக எண்ணி பக்தன் கொள்ளும் மடமை. மூன்றும் தெய்வத்தன்மை கொண்ட அறியாமைகள்.

அவற்றில் முதல் மடமையே கண்கூடானது, இப்புவியை வாழச்செய்வது. மனிதனில் இருந்து புழுப்பூச்சிகளில் வரை எங்கும் திகழ்வது. தாய்மைமடம். தென்றல் வீசும் சித்திரையில் மாந்தளிர் செந்நிறமாக எழக்கண்டு தீ என்று அஞ்சி தன் குட்டியை எண்ணி பால்பெருக்கும் அன்னையில் எழும் மடமையே அங்கயற்கண்ணி இங்கு கண்கூடாக அளிக்கும் பெருந்தோற்றம். ‘சர்வ ஃபூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா’. அனைத்துயிர்களிலும் அன்னைவடிவென நிலைகொள்பவள் அவள்.

அதிலும் இப்பாடலில் எருமை வருவது நிறைவளிப்பது. பால் நினைந்துச் சொரிவதாகச் சொல்லப்படும் பல பாடல்களில் எருமைதான் குறிப்பிடப்படும். முட்டி முட்டி கோரினால் பாலூட்டுவது பசு. தொட்டாலே பால் சொரிவது எருமை. எண்ணியே பால் பொழிவது. பால் நினைந்தூட்டும் அன்னை என்னும் உருவகத்துக்குப் பசுவைவிட எருமையே பொருத்தமானது.

அந்தப் பால்பெருகி கலந்து பாற்கடலின் அலையென்றாகிய பொய்கையில் மலர்ந்த தாமரையின் பூந்தாதைப் பூசிக்கொள்ளும் அன்னம் என்னும்போது தாய்மையின் கனிவிலிருந்து வளர்ந்து அழகுக்கும் செழிப்புக்கும் செல்கிறது அப்படிமம். பாற்கடல் அலையில் தோன்றிய திருமகள் நிலவொளியின் பொன்னைச் சூடியதுபோல பொலிகின்றன அன்னங்கள். அவ்வன்னங்களின் நாடான மாமதுரையின் அரசி கண்ணயர்கிறாள்.

அங்கயற்கண்ணியின் கண்கள் துயிலில் மூடியிருக்கின்றன. ஆகவே அருள் உள்ளே சூல்கொண்டிருக்கிறது. உலகு புரக்க பேருருக்கொண்டு எழும்பொருட்டு.

*

குமரித்துறைவி [குறுநாவல்] – 6

குமரித்துறைவி [குறுநாவல்] – 5

குமரித்துறைவி [குறுநாவல்] – 4

குமரித்துறைவி [குறுநாவல்] – 3

குமரித்துறைவி [குறுநாவல்] – 2

குமரித்துறைவி [குறுநாவல்] – 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2021 11:35

பெண்ணமுது

உண்ணமுத நஞ்சாகி ஒண்மதுரைச் சொக்கருக்கு என்

பெண்ணமுத நஞ்சாயோ பேதைமீர்- தண்ணிதழி

இந்தா நிலமேவெனச் சொலார் என் செய்வாள்

மந்தா நிலமே வரின்

[குமரகுருபரர்- மதுரைக் கலம்பகம். செவிலியன்னைக் கூற்று]

உண்ணும் அமுதென நஞ்சையே கொண்ட சொக்கருக்கு என் பெண் எனும் அமுதம் எப்படி நஞ்சானாள் பேதையரே? தண்ணிதழ் கொன்றையை இந்தா, நில் அம்மையே என்று சொல்லி அளிக்கமாட்டார் என்றால், தென்றலும் வருமென்றால், என்னதான் செய்வாள் அவள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2021 11:34

குமரித்துறைவி -திருத்தங்கள்

குமரித்துறைவி நாவலில் சில திருத்தங்களை நானே செய்தேன். அது முழுமையாகவே மங்கலநாவல். ஆகவே அதன் தொடக்கப்பகுதிகளில் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றிய போரைப்பற்றி வரும் பகுதிகளிலுள்ள கடுமையான விவரிப்புகளை மாற்றிவிட்டேன். அவை ஒற்றைவரிகளாகவே இருந்தாலும் எதற்கு என்று நினைத்தேன்.

தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் ஓர் இடத்தில் படைத்தலைவன் ஒருவனை கடுமையாக சொல்லும் வரி இருந்தது. அவ்வளவு கடுமை அல்ல, பதற்றத்தில் சொன்னது. ஆனாலும் சிறு அமங்கலமே. ஆகவே மாற்றிவிட்டேன்.

இரு குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஒன்று வியாசராஜ மடம் பற்றி. அந்த மடத்தின் முதல்பெயர் தக்ஷிணாதி மடம். அக்காலச் சித்தரிப்பில் அப்பெயர் இடம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் நூல்களில் முதலில் அதுவே மடத்தின் முதல்பெயர் என்று சொல்லிவிட்டு தொடர்ந்து வியாசராஜ மடம் என்றே சொல்கிறார்கள். நூல்களை தேவைக்கு புரட்டி நடுவே குறிப்பு எடுக்கும்போது வரும் குளறுபடி இது. வியாசராஜர் இக்கதை நடந்ததற்கு பிறகு பிறந்தவர். ஆகவே தக்ஷிணாதி மடம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடைசியாக குறை, நாஞ்சில்நாட்டு சீர்களில் அரிவாள்மணை, திருவலக்கட்டை அல்லது துருவி அளிக்கப்படுவதில்லை. அது நன்கு தெரிந்தும்கூட சீர்வரிசைப் பொருட்களில் அவை இருந்தன என்று எப்படி எழுதினேன் என தெரியவில்லை. உலகளந்த அம்மைக்கு அமங்கலமும் மங்கலமும் என பேதமில்லை என்று கொள்ளலாம்தான். ஆனால் வாசிப்பவர் நாம். ஆகவே பேதம் உண்டு. அதையும் மாற்றிவிட்டேன்

சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2021 11:32

முகில்- கடிதங்கள் 12

அன்புள்ள ஜெ

அந்தமுகில் இந்த முகில் பற்றிய கடிதங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தக்கதை வெளிவந்தபோதே இதற்கு இத்தனை ஆழமான வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி கடிதங்கள் எழுதாத சில ஆயிரம்பேர் இருப்பார்கள். அவர்கள்தான் இந்தக்கதையின் மெய்யான வாசகர்கள் என்றும் தோன்றியது. நரம்பில் அடிபட்டது போல இந்தக்கதை அவர்களுக்கு கடுமையான வலியை தந்திருக்கும். ஆனால் அவர்களால் வாய் திறந்து ஒரு வார்த்தைகூட எவரிடமும் பேசமுடிந்திருக்காது. முடியாது. அதிலும் என்னைப்போல பெண்கள் ஒன்றுமே சொல்ல முடியாது.

ஆனால் இழப்பின் வலி என்பது மிகப்பெரியது. ஸ்ரீபாலாவின் வலி இந்தக்கதையில் உணர்த்தத்தான் படுகிறதே ஒழிய சொல்லப்படவில்லை. ஒர் ஆழமான உணர்ச்சியை பலகாரணங்களால் சொல்லமுடியாமல் போவது என்பது ஆண்களால் நிறைய முறை எழுதப்பட்டுள்ளது. அவமானம் நடக்குமா என்ற பயம், பொறுப்புகள் பற்றிய பயம் என்று அதற்கு நிறைய தடைகள் உண்டு. ஆனால் பெண்களின் உண்மையான வலி வேறு. எந்தப் பெண்ணுக்கும் அது கொஞ்சமாவது இருக்கும்.

பின்னால் ஓர் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து காதுகளை முழுக்க தீட்டிக்கொண்டு, மனசை பின்னால் வைத்துக்கொண்டு முன்னால் நடந்து விலகிச்செல்லாத பெண் குறைவாகவே இருந்திருப்பாள். தொண்ணூறு சதமானம் பெண்களின் வாழ்க்கையிலும் அந்த பின்னாலிருந்து வரும் அழைப்பு வந்திருக்காது. அது வரும் என்ற எதிர்பார்ப்பு அவளுடைய பின்பக்கம் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். அதன்பிறகு அதிலிருந்து அவளுக்கு விடுதலையே இல்லை

எஸ்.என்

ஜெ,

வாழ்நாளில் என்றென்னறக்குமான ஆணை ஒரு பெண் சந்திப்பதும்  இழப்பதும் அல்லது ஒரு பெண்னை ஆண் சந்திப்பதும் இழப்பதும் எத்துனை சுகமானது சோகமானது என்பதை காவியமாக சொல்லியுள்ளீர்கள்.

“நம் எல்லோருக்குள்ளும் நிராசை கொண்ட காதலன் ஒருவன் இருக்கிறான்,  அவனின் அடையாளம் தான் “செம்மீன்” பரிக்குட்டி என்பார் எஸ்.ரா.  நீங்கள் இதைத்தான் இறந்த காலத்தில் உறைந்த போன, நிகழ்காலத்தாலும் எந்த எதிர்காலத்தாலும் நிரப்பமுடியாத பள்ளம் எனறு கொடவட்டிகண்டி குடும்பராவ்  வரிகளால் குறிப்பிடுகிறீர்கள். “செம்மீன்” போன்று,  “அந்த முகில் இந்த முகிலும்” எனக்கு காவியமாக தோன்றுவது இதனாலேயே.

மகா பிரஸ்தானத்தின்போது திரும்பி பார்க்கக் கூடாது என்பது ஏனெனில் அது இவ்வாழ்க்கைச் சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு விடைபெறும் நிகழ்வு.  ராஜமந்திரியில் ஶ்ரீபாலா திரும்பிபாராமல் போனது சற்று மாறுபட்ட  மகாபிரஸ்தான நிகழ்வு. எதனையும் இறக்கி வைக்காமல் துளிகூட சிந்தாமல் அவன் நிணவுகளை நெஞ்சில் இருக்கிபிடித்து செல்கிறாள்.  ராஜமந்திரி பேருந்து நிலையத்தை கடந்த பின் அவள் உடல் முழுக்க மறைக்கும் கூந்தல் கொண்ட ஶ்ரீ பாலா அல்ல.  கைபிடியளவு நீளம் குறைந்த கூந்தல் கொண்ட விஜயலட்சுமி என்கிற வேறறெருத்தி. அவள் மறுபடியும் ஶ்ரீ பாலாவாக உயர்த்தெழுவது இருபத்தெழு வருடங்களுக்கு பிறகு ஶ்ரீ வெங்கடேசஸ்வரா திரையரங்கில் – அதுவும் படத்தின் இடைவேளையில்.

ராஜமந்திரி பேருந்து நிலையத்தில் திரும்பி பாராமல் செல்லும் ஶ்ரீ பாலாவை ராமராவ் அழைப்பான் என்பது அவளுக்கு தெரிந்திருப்பது போலவே  எனக்கும் தெரிந்திருந்தது. எனெனில் அவள் மேல் அவன் “பெரும் பித்து கொண்டுருந்தான்”. பின் ஏன் அது குரல் வழி வரவில்லை? ஏனெனில் அந்த பித்தைக்கண்டு அவன் அஞ்சினான்”.  அதானல்.

சென்னை செல்லும் பொழுது வடபழனியை கடக்கும் பொழுது விஜயா ஸ்டுடியோவும் பரணி ஸ்டுடியோவும் இனிமேல் ராமராவையும் ஶ்ரீபாலாவையும் எனக்கு நிணவுபடுத்தும். அந்த நிணவு படுத்தும். ” பறக்காத பொழுது பறவையல்ல”,  படுத்தாத பொழுது நிணவுமல்ல.

icf சந்துரு

பிரஸ்காலனி, கோவை-19

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் கதையை உணர்ச்சிவேகத்துடன் வாசித்தேன். சுருக்கமாக இந்தக்கதையை ஒருவரிடம் சொன்னால் என்னென்ன விடுபடுமோ அதெல்லாம்தான் இந்தக்கதை. அவளுடைய நீளமான கூந்தலும் மயிலின் சாயலும் எப்படி இல்லாமலாகின்றன என்பதில் தொடங்கி அத்தனை நுட்பமான செய்திகளும் குறியீடுகளுமாக இந்தக்கதை நீண்டு செல்கிறது. கருப்புவெள்ளை சினிமாக்கள் மனிதகுலம் ஒரு முப்பது ஆண்டுகள் கண்ட ஒரு விசித்திரமான கனவுகள். அவை அப்படியே எப்போதைக்குமாக இனிமேல் இருந்துகொண்டிருக்கும். ஹம்பியில் உள்ள கல்லால் ஆன சிற்பங்களை மாதிரி. எவரோ கண்ட கனவுகள்.

நாம் பழைய கருப்புவெள்ளை சினிமாக்களை வண்ணத்திலே பார்த்தால் அப்படி ஒரு கசப்பு வருகிறது. அவை அந்த கருப்பு வெள்ளையிலேயே நம் மனசில் ஒரு நிலைகொண்டிருக்கின்றன. அந்தப்பாடல்களில் உள்ள மேகம் கருப்புவெள்ளையில்தான் அழகாக இருக்கிறது. மேகங்களும் பாறைகளும் கருப்புவெள்ளையில் அழகானவை. ராமராவும் ஸ்ரீபாலாவும் அந்த இரவில் பாடிக்கொண்டே செல்லும்போது உருவாகும் ஒரு கனவு கருப்புவெள்ளையில்தான் பதிவாக முடியும்

எம்.கிருஷ்ணன்

முகில்- கடிதங்கள் 10 முகில் கடிதங்கள்-9 முகில்- கடிதம்-8 முகில் கடிதங்கள்-7 முகில் கடிதங்கள்-6 முகில்- கடிதங்கள்-5 முகில்- கடிதங்கள்-4 முகில் -கடிதங்கள்-3 முகில் கடிதங்கள்-2 முகில்- கடிதங்கள்1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2021 11:31

விசும்பின் மூன்று கதைகள்- கடிதம்

சிறுகதைகள் வாசிக்க

அன்பு ஜெயமோகன்,

கோபிசெட்டிபாளைய பூங்கா நூலகம் எனக்கு அணுக்கமானது. ஈரோடு மாவட்டத்தின் பல நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். பூங்கா நூலகத்தைப் போன்று எதனோடும் நட்பாக முடியவில்லை. இந்நூலகத்தின் குறிப்புதவிப் பகுதி(Reference Section) காற்றோட்டமான சாளரங்களைக் கொண்டிருக்கும். அருகில் இருக்கும் நகராட்சிப் பூங்கா மரப்பறவைகளின் தொண்டைச் சிணுங்கல்களுடன் வாசிப்பது நற்பேறு. இலக்கியச் சிற்றிதழ்த் தொகுப்புகளை மேசையில் விரித்து வைத்துக் கொண்டு வாசிக்கப் போராடுவது இன்னும் இதம்.

கடந்த பல ஆண்டுகளாக அந்நூலகத்தில் நான் உறுப்பினன். கொரோனா பெருந்தொற்றுச் சூழலால் நூல்களை அலமாரிகளில் இருந்து தேர்ந்தெடுக்க இயலாது. பல நூல்களை ஒரு மேசையில் பரப்பி வைத்திருப்பர். அவற்றில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்படி வந்து சேர்ந்ததுதான் விசும்பு(அறிவியல் புனைகதைகள்). முன்பே அத்தொகுப்பின் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனாலும், மறுவாசிப்பில்தான் சில கதைகள் பிடிபட்டதைப் போல் இருந்தன.

விசும்பு தொகுப்பில் மூன்று கதைகள் என்னளவில் முக்கியமானவை. ஐந்தாவது மருந்து, பூர்ணம் மற்றும் உற்று நோக்கும் பறவை. குறிப்பாக, உற்று நோக்கும் பறவை பலமுறை வாசிக்க வைத்தது. கதைகளை அறிமுகம் செய்வதை விட அவற்றை வாசிக்கத் தூண்டுவதான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலே முக்கியம் என நினைக்கிறேன்.

பிரபஞ்சத்தில் மனிதச் சமூகம் தவிர்த்து வேறு உயிர்ச்சமூகம் இல்லை அல்லது இருக்கலாம்(சமூகம் என்பது பருண்மையான உலகைக் குறிப்பதன்று). அதை ஆராய்வதை விடுத்து, மனிதச்சமூகத்தை மட்டும் கவனம் கொள்வோம். நம்மால் அது மட்டுமே இயலும்.

மனிதன் தன் சமூகவாழ்வில் பிளவு, முழுமை எனத்தவிக்கிறான்; நல்லது, கெட்டது என அல்லாடுகிறான். முழுமை, நல்லது போன்றவற்றை விடுதலையாகவும் பிளவு, கெட்டது போன்றவற்றை விலங்காகவும் கொண்டு.. ஊடாடிக் கொண்டே இருக்கிறான். ஊடாட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்தபடியே இருக்கிறது; இனியும் தொடரும் என்றே ஊகம் செய்கிறேன்.

பூர்ணம் கதையில் முழுமனிதன் குறித்த பேச்சு வரும். முழுமனிதனை அதிகாரமே உருவான அதிமனிதன்(நீட்சேவு), ஞானமே உருவான உயர்மனிதன்(அரவிந்தர்) போன்ற வியாக்கியானங்களை நடைமுறை அபத்தத்தால் கேள்விக்குள்ளாக்கும் இடம் அது. நீட்சேவின் அதிமனிதன் தன்னை மட்டுமே முன்வைப்பவன்; தன்னால் எதுவும் சாத்தியப்படும் என உறுதியாக நம்புபவன். அரவிந்தரின் உயர்மனிதன் தன்னை ஒரு பொருட்டாகவே மதியாதவன்; தான் சாத்தியப்படுத்துவதற்கு எதுவுமில்லை என்பதான நம்பிக்கையில் இருப்பவன். இங்குதான் முழுமை, பிளவு குறித்த யோசனை அவசியமாகிறது.

நீட்சே பிளவை முழுமையைப் போன்று பூதாகாரப்படுத்த அரவிந்தரோ முழுமையைப் பிளவின் வழி பிரம்மாண்டமாக்குகிறார். இப்புள்ளியில்தான் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. பிளவு, முழுமை இரண்டும் புறக்கூறுகள் போன்ற தோற்றம் கொண்டவை அல்லது அப்படியே நாம் நம்பத் திணிக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில், அவை அகக்குறியீடுகள். அதிமனிதன், உயர்மனிதன் போன்ற சொல்லாடல்கள் வழி அக்குறியீடுகள் விளக்கப் பெறுகின்றன. அவ்விளக்கங்களும் புறத்தன்மை கொண்டவை அன்று. ஒரு மனிதனுக்கு நடைமுறை வாழ்வில் வரும் அகச்சலிப்பைப் போக்குவதற்கான கனவு மனிதநிலைகள் அவை. ஒரு மனிதன் ஒருபோதும் பூர்ண அதிமனிதனாகவோ அல்லது பூர்ண உயர்மனிதனாகவோ தன்னை உருவாக்கிக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அதிமனிதனும் இருப்பான்; உயர்மனிதனும் இருப்பான். இருவரும் வெளிப்படக்கூடிய தருணங்களை முன்கூட்டி முடிவு செய்து விட முடியாது. அதுவே வாழ்வின் மர்மம். அம்மர்மத்தை அறிவியல் கணக்கீடுகளால் நெருங்கி விட முடியும் எனத் தோன்றவில்லை.

பூர்ணத்தின் தொடர்ச்சியாக உற்று நோக்கும் பறவை இருப்பதாகவே கருதுகிறேன் அல்லது அப்படி வாசித்தல் நலம் எனப் பரிந்துரைக்கிறேன். ”மரத்தைத் தறிக்க வேண்டுமென்றால் மனம் உளியாகவும் சுத்தியலாகவும் ஒரே சமயம் மாறும். தன் மனம் ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலை வேறு ஒரு மனம் வேடிக்கை பார்க்கிறது” எனும் வியாக்கியனமே அக்கதையின் வேர். ஒரு மனிதனுக்குள் இருக்கும் அதிமனிதனை அதே மனிதனுக்குள் இருக்கும் உயர்மனிதன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அதேபோன்று உயர்மனிதனை அதிமனிதனும். நடைமுறை வாழ்வில் சலிப்புறும் ஒருவனுக்கு அதைக் கண்டுகொள்ளும் வாய்ப்பு அமைகிறது. அவனையே சாதகன் என்கிறது யோகமரபு. சாதகனைப் பக்தனாகக் கருதிவிடல் ஆபத்து. பக்தன் தன் பொறுப்பைக் கடவுளிடம் ஒப்படைத்து விடுபவன்; அதில் தீவிர உறுதியோடு இருப்பவன். சாதகனோ குறைந்தபட்சப் பொறுப்பேற்றுக் கொள்கிறவன்; அதன் பொருட்டு செயல்படுகிறவன்; செயல்பாடுகளால் தான் பெறுகின்றவற்றைக் கொண்டு தன்னைப் புனரமைத்துக் கொள்கிறவன்.

நடைமுறைச் சமூக வாழ்வில் நல்லவன், கெட்டவன் போன்ற அடையாளங்களை நிரந்தரப்படுத்தி விட விரும்புகிறோம். நல்லவனே சமூகத்துக்கு அவசியமானவன், கெட்டவன் அழிக்கப்பட வேண்டியவன் என்பதாகவும் யோசிக்கிறோம். அங்குதான் கடும் மனநெருக்கடியை எதிர்கொள்ள நேரிடுகிறது; வாழ்வுச்சம்பவங்கள் புலியின் கண்களாய்க் குழப்பியடிக்கின்றன; பூனையின் காலோசையாய்த் திகைக்கச் செய்கின்றன. ஒரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள் அல்லது பல சட்டகங்களுக்குள் அவற்றை அடைத்து ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட முடிவதில்லை.

உற்று நோக்கும் பறவையின் காலன்சாமியை மனிதனாகக் கொண்டு சிந்திக்கலாம். அவர் தன்னை சுக்லன், சியாமன் என இரண்டாகப் பகுக்க்கிறார். வளர்நிலவுக் கட்டத்தில் அவர் சுக்லன்; தேய்நிலவில் சியாமன். என் கோணத்தில் சொல்வதானால், சுக்லன் தனிமனிதன்; சியாமன் சமூக மனிதன். சுக்லனை அரவிந்தரின் உயர்மனிதனுக்கும், சியாமனை நீட்ஷேவின் அதிமனிதனுக்கும் இணை வைத்தால் இன்னும் தெளிவு கிட்டும். சுக்லன்(வெண்மை) நன்மைகளை மட்டுமே விரும்புபவன்; சத்வ குணம் கொண்டவன். சியாமனோ(கருமை) காம, வெகுளி, மயக்கம் நிறைந்தவன்; தமோ மற்றும் ரஜோ குணங்கள் கொண்டவன்.

துவாத்மம் எனும் மதம் நடைமுறச் சமூக வாழ்வே. நாமெல்லாம் துவாத்மர்களே. ”ஒரு மதநம்பிக்கையாளன் கண்டிப்பாக ஆளுமைப்பிளவுக் கூறுகளைக் கொண்டிருப்பான். அது குறியீடுகள் மூலம் எல்லையிட்டுக் கட்டுப்படுத்தப்பட்ட மனப்பிளவு” எனும் வாக்கியமும், “எந்த அளவுக்கு நாம் கல்வியும் நாகரீகமும் அடைகிறோமோ அந்த அளவுக்கு மனப்பிளவு அதிகரிக்கிறது. ஆம், நாம் இன்று வாழும் இது உண்மையில் ஒரு மாபெரும் மனப்பிளவுச் சமூகம்தான்” எனும் வாக்கியமும் ஊன்றித் தெளிவு கொள்ள வேண்டியவை.

நடைமுறை வாழ்வில் நாம் ஒற்றைத்தன்மையையே வேண்டுகிறோம். ஒளி அல்லது இருள். வாழ்வு ஒளியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஒருபோதும் இருளை எதிர்கொண்டுவிடக் கூடாது என்றும் தவிக்கிறோம். சற்று நிதானித்தால், ஒளியின் இருப்பு இருளாலும் இருளின் துலக்கம் ஒளியாலுமே அர்த்தப்படுவதை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இன்னும் நிதானித்து யோசித்தால், இரண்டும் வெவ்வேறானவை அல்ல என்பதும் புலப்படலாம். ஒருமையை அல்லது பன்மைகளை இரண்டாகப் புரிந்து வைத்திருக்கும் அபத்தமும் விளங்கலாம். நவீனச் சமூகக்கோட்பாடுகள் இருள் எதிர் ஒளி எனும் முரண்பாட்டை வலியுறுத்தியதன் ஊடாக நம்மைக் குழப்பி இருக்கின்றன.

“நல்லியல்பென்பது தீய இயல்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமே செயல்பட முடியும். அப்படி கட்டுப்படுத்த தீய இயல்பு இல்லாத தூய நிலையில் நல்லியல்பு செயல்பாடு அற்று தேங்கி இல்லாமலாகிறது. அப்படித்தான் இருக்க இயலும். நன்மை என்பது என்ன? தீமையை எதிர்ப்பதே நன்மை. தீமை இல்லாத இடத்தில் நல்லது என்பதே இல்லை” எனும் கதையின் உரையாடல் நீதிமொழியன்று; அகத்தரிசனத்துக்கான சிறுபொறி.

அன்றாட வாழ்வில்       சமயம் ஒருவிதச் சமூகக்கோட்பாடாகவே நிறுவப்பட்டிருக்கிறது அல்லது அப்படியாகத்தான் முன்னெடுக்கப்படுகிறது. அவ்வகையில் சமயப்பயிற்சிகள் நம்மை மீட்டெடுப்பது என்பது சாத்தியமில்லை. அதனால்தான் வள்ளுவன் மெய்ப்பொருள் என அழுத்திச் சொல்லி இருப்பதாக யோசிக்கிறேன். இங்கு மெய்ப்பொருள் என்பது பொய்ப்பொருளுக்கு நேரெதிராக முன்வைக்கப்படும் மாற்றுக்கருத்தன்று. பொருளின் இருமைத்தன்மைகளின் முரணியக்கத்தை, அவ்வியக்கத்தை முரண்பாடுகளாகத் திரித்துப் புரிந்து கொள்ளும் அவலத்தையே அச்சொல் உணர்த்துவதாக ஊகிக்கிறேன். அதனால்தான் வள்ளுவன் எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும், எப்பொருள் எத்தன்மைத்தாயினும் எனச் சொல்லி இருக்கிறான் என்பதாகவும் சிந்திக்கிறேன்.

மெய்ப்பொருளை இன்னும் விசாலமாய் யோசிப்பொம். அச்சொல் இருள் அல்லது ஒளியின் பக்கம் நிற்பதைக் குறித்துப் பேசவில்லை. இருளை விலக்கி ஒளியையோ அல்லது ஒளியை ஒதுக்கி இருளையோ தேர்ந்தெடுக்கவும் சொல்லவில்லை. இரண்டையும் கடந்து நின்று சிந்தித்தலையே குறிக்கிறது அல்லது அப்படியாகவே பரிந்துரைக்கிறேன். செயல்பட்டுக் கொண்டிருக்கும் பறவையும்(ஒளி), செயலற்றிருக்கும் பறவையும்(இருள்) ஒரு மரக்கிளையில் இருக்கின்றன. உற்று நோக்கும் பறவை(மெய்ப்பொருள்) அங்கு இல்லாமல் இருக்கிறது. பக்தி மரபின் நெற்றிக்கண் அல்லது யோக மரபின் மூன்றாவது கண் எனும் உருவகத்தின் வழி மெய்ப்பொருளை ஓரளவு நெருங்கலாம்.

”உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” எனும் கந்தரனுபூதிப் பாடலின் முதல்வரி இருளையும் ஒளியையும் குறிப்பிடுவதாகவும், “மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்” எனும் அடுத்த வரி மெய்ப்பொருளைச் சுட்டுவதாகவும் சிந்திக்கிறேன். ஒரு மலரின் பூத்தலை ஒளியாகவும், உதிர்தலை இருளாகவும் கொள்வோம். பூத்தலையும், உதிர்தலையும் கொண்டா நாம் மலரைக் கவனிக்கிறோம். அதன் நறுமணத்தைக் கண்டல்லவா அதை மலரென்கிறோம். பூத்தலையும், உதிர்தலையும் கடந்து மலரை நறுமணமாகப் புரிந்து கொள்வதே மெய்ப்பொருள்.

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2021 11:31

எழுதுவது- கடிதம்

எழுதும் கலை நூல் வாங்க

அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு வணக்கம்

எனது பெயர் சு. இசக்கியப்பன். எனது பெயரே சொல்லும் எனது சொந்த ஊர் எதுவென்று.

வேலை நிமித்தம் தற்பொழுது ஓசூரில் வசித்து வருகிறேன் சிறுகதைகள் மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வம் உண்டு. இதுவரை எனக்கு தெரிந்த மாதிரி மூன்று கதைகள்  எழுதியுள்ளேன்.  மற்றும் ஹைக்கூ கவிதைகள் எழுதுவேன் எதுவும் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை.

என்னை போன்று எழுத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் தாங்கள் சிறுகதை மற்றும் கவிதை எழுதுவதை பற்றி ஒரு இணயவழி பயிலரங்கம் அமைத்துக் கொடுத்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ….

தங்களின் மேலான பதிலுக்கு காத்திருக்கிறேன்

நட்பும் பாசத்துடன்

உங்கள் அன்பு தம்பி

சு.இசக்கியப்பன்

ஓசூர்

***

அன்புள்ள இசக்கி

ஓசூரின் வரண்ட காட்டில் இருந்தாலும் நம்மூர் காற்றும் அங்கு வீசட்டும்

இலக்கியத்தை எழுத அகத்தூண்டல்தான் முக்கியமானது. அது வாழ்க்கை அனுபவங்களை கூர்ந்து கவனிப்பது, நல்ல இலக்கியங்களை தொடர்ந்து வாசிப்பது ஆகிய இரண்டினூடாகவே அமையும்

அதற்கு அப்பால் பயிற்சி என்பது கதை கவிதை கட்டுரைகளின் வடிவம் பற்றிய அறிமுகமும் சில பிழைகளை சுட்டிக்காட்டி திருத்துவதும்தான். அதை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கிறேன்

எழுதும்கலை என்னும் சிறுநூல் வெளிவந்துள்ளது. பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். அரங்குகளை நடத்தியிருக்கிறேன். மலேசியா சிங்கப்பூரில் அதற்கான அமைப்புக்கள் உள்ளன

இங்கே நானே இளம்வாசகர் சந்திப்பு என்றபேரில் அதைத்தான் நடத்துகிறேன். அவ்வாறு வந்து கலந்துகொண்ட பலர் இன்று அறியப்பட்ட படைப்பாளிகள்

கொரோனா முடிந்தபின் பார்ப்போம்

ஜெ

எழுதுவதுபற்றி… மீண்டும் புதியவர்களின் கதைகள் நாவல் – ஒரு சமையல்குறிப்பு சிறுகதை ஒரு சமையல்குறிப்பு சிறுகதையின் திருப்பம் ‘நான் எழுதலாமா?’ ஒரு கடிதம் நல்ல கட்டுரையில் … கதைத்தொழில்நுட்பம்:ஒருபயிற்சி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2021 11:31

April 23, 2021

திருமணம்

இன்று மதுரை மீனாட்சி -சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். தமிழகத்தின் மாபெரும் திருவிழாக்களில் ஒன்று. சென்ற ஆண்டு செல்லவேண்டும் என திட்டமிட்டோம். இவ்வாண்டும் திட்டமிட்டோம். சொல்லிலேயே நிகழ்த்திப் பார்த்துவிட்டேன்.

இணையத்திலும் தொலைக்காட்சிகளிலும் நேரடி ஒளிபரப்பு இருக்குமென நினைக்கிறேன். நண்பர்கள் பார்க்கலாம். எந்த திருவிழாவானாலும் நேரில் செல்வதுபோல மகத்தான அனுபவம் வேறில்லை. தமிழகத்தில் ஆலயங்கள் தோறும் நிகழும் மாபெரும் திருவிழாக்கள் நமது மகத்தான பண்பாட்டுச் செல்வங்கள். தமிழ்ப்பண்பாடு உருவாக்கி எடுத்த அழகுகள் அவை. ஆத்திகர்களுக்குரியவை மட்டும் அல்ல, பண்பாட்டுணர்வுகொண்ட அனைவருக்கும் உரியவை.

அவற்றில் பங்கெடுக்கும்போது நாம் பல்லாயிரம் ஆண்டு பழைமை கொண்ட நம் பண்பாட்டுடன் இணைகிறோம். நாம் முடியுடை மூவேந்தர்களின், நாயக்கர்களின் காலத்திலிருந்து ஓர் அகநீட்சியை அடைகிறோம். திரளாக இருக்கையில் மானுடன் அடையும் நிறைவு ஒன்று உண்டு. தன்னை மானுடம் என அவன் உணர்கிறான். துளியென்றும் முடிவிலி என்றும் ஒரே சமயம் உணர்கிறான். அந்த அனுபவம் வேறெங்கும் இல்லை. வேறெந்த கொண்டாட்டமும் கேளிக்கையும் அதற்கு நிகர் அல்ல

ஒரு முறை இளம் வாசகர்- எழுத்தாளர் சந்திப்புக்கு வந்திருந்த நண்பர்களிடம் அவர்கள் தமிழகத்தில் கலந்துகொண்ட திருவிழாக்கள் என்னென்ன என்று கேட்டேன். ஆச்சரியம், இளைஞர்களில் ஒருவர்கூட ஒரு திருவிழாவில்கூட கலந்துகொண்டதில்லை. பலர் அவர்களின் ஊர்களில் மாபெரும் திருவிழாக்கள் நிகழ்வதை அறிந்திருந்தார்கள், கலந்துகொண்டதே இல்லை.

காரணம் இளமையிலேயே பெற்றோர் திருவிழாக்களுக்குச் செல்வதை தடுத்துவிட்டார்கள். ‘படிப்பில் கவனம் சிதறிவிடக்கூடாது’ என்பதற்காக. எங்கும் அனுப்பியதில்லை. பள்ளி, டியூஷன், டிவி, அவ்வப்போது சினிமா- அவ்வளவுதான். அப்படியே அச்சிட்டு எடுத்துக்கொண்டுவிட்டார்கள் பிள்ளைகளை.

நான் சொன்னேன். “ஒரு மரத்தின் கனிகளை உண்ணாதவர் எப்படி அந்த மரத்தை அறியமுடியும்? தமிழ்ப்பண்பாட்டின் கனிகள் இங்குள்ள ஆலயங்கள், திருவிழாக்கள், இலக்கியங்கள், சிற்பங்கள், நிகழ்த்துகலைகள். அவற்றில் அறிமுகமே இல்லாமல் நீங்கள் எழுதப்போவதுதான் என்ன? நீங்கள் வாசிக்கும் எந்த மேலைநாட்டு எழுத்தாளனாவது அவனுடைய பண்பாட்டை அறியாதவனாக இருக்கிறானா?”

இந்தப் புறக்கணிப்புக்கு எந்த பகுத்தறிவுப் பார்வையும் காரணம் அல்ல. மிக சில்லறைத்தனமான லௌகீகவெறிதான் காரணம். இவர்கள் பரிகார பூஜைகளுக்காக பிள்ளைகளுடன் பரிகாரத்தலங்களுக்கு ஏறி இறங்குபவர்கள்தான். நம் திருவிழாக்கள் வெளிறிக் கொண்டிருக்கின்றன. அதிலும் இந்த கொரோனாவின்போது அவை எவ்வளவு பெரிய இழப்புகள் என்பது முகத்தில் அறைகிறது.

ஐரோப்பாவுக்குச் சென்றபோது அங்கே அவர்கள் ஒவ்வொரு திருவிழாவாக மீட்டுருவாக்கம் செய்துகொண்டிருப்பதைக் கண்டேன். தேவாலயங்களில் வண்ணக் கற்கண்டு விற்பனைநிலையங்கள், பாலாடைக்கட்டி விற்பனை நிலையங்கள், ஜிப்ஸிகளின் நடனம் என அந்த திருவிழாக்களை பதினேழாம் நூற்றாண்டு பாணியிலேயே நடத்திக்கொண்டிருந்தனர். அந்தக் காலகட்டத்து ஆடைகளுடன்.

அவை அவர்கள் அறியாமையால் மறையவிட்ட விழாக்களை மீட்டெடுக்கும் பரிதாபகரமான முயற்சிகள். கேரளம் சரியான நேரத்தில் தன் அனைத்து விழாக்களையும் மீட்டுக்கொண்டது- விவேகமுள்ள இடதுசாரியான இ.எம்.எஸ் அதற்குக் காரணம்.நாம் அழியவிட்டுக்கொண்டிருக்கிறோம்.

நான் அந்த இளைஞர்களிடம் சொன்னேன். “இனிமேல்கூட நீங்கள் திருவிழாக்களுக்குச் செல்லலாம். அவை அனுபவங்களாக ஆகும். ஆனால் இளமையில் சென்றிருந்தால் அது வாழ்நாள் நினைவு. புனைவுஎழுத்தாளனுக்கு வற்றாத படிம ஊற்றாக ஆகும் கனவு. அதை என்றென்றைக்குமாக இழந்துவிட்டீர்கள்”

குழந்தைகளுக்கு மரபை, அதன் மாபெரும் தொடர்கனவை மறுக்க நமக்கு என்ன உரிமை? அற்பமான அரசியல் நம்மை நம் முன்னோரின் வரலாற்றையும் பண்பாட்டையும் பார்க்க முடியாதவர்களாக ஆக்குமென்றால் நாம் எத்தகைய குடிகள்?

இந்நாளில் மீனாட்சியின் திருமணத்தை ஊடகங்களில் பார்ப்போம். அடுத்த ஆண்டு நேரில்.

குமரித்துறைவி [குறுநாவல்] – 6

குமரித்துறைவி [குறுநாவல்] – 5

குமரித்துறைவி [குறுநாவல்] – 4

குமரித்துறைவி [குறுநாவல்] – 3

குமரித்துறைவி [குறுநாவல்] – 2

குமரித்துறைவி [குறுநாவல்] – 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2021 18:37

குமரியும் குருவும்

அறுபது தொடங்கும் இப்பிறந்தநாள் அன்று கன்யாகுமரிக்குச் செல்லவேண்டுமென்று ஏன் முடிவெடுத்தேன் என்று சொல்லத்தெரியவில்லை. நாகர்கோயிலுக்கு டிக்கெட் போடச் சொல்லியிருந்தேன். அதை கன்யாகுமரி வரை நீட்டித்துக் கொண்டேன். தனியாக இருக்கவேண்டும், குருவின் இடம் ஒன்றில் இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

கன்யாகுமரியை தெரிவு செய்ய குமரித்துறைவியின் உளநீட்சி ஒரு காரணம். அத்துடன் அருகே மருத்துவாழ்மலை இருக்கிறது. அங்கே ஒரு குகையில் நாராயணகுரு துறவியாக ஆவதற்கு முன் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். துறவியானபின் இரண்டு ஆண்டுகள்.

அருண்மொழியின் இல்லத்தில் ஒரு துயரம், அவள் தம்பி லெனின் கண்ணன் சென்ற ஏப்ரல் 6 ஆம் தேதி மறைந்துவிட்டான். அருண்மொழியின் இளம்பருவத் துணைவன். அவளைவிட நான்காண்டு வயது குறைந்தவன். முன்பு அவளுக்கு இலக்கியத்தை அறிமுகம் செய்தவனே அவன்தான்.

நான் அருண்மொழியை திருமணம் முடித்த நாட்களில் அவன் பிளஸ்டூ மாணவன். திசைகளின் நடுவே தொகுதியிலிருக்கும் எல்லா கதைகளையும் கையால் அழகாக நகலெடுத்தவன். அந்தப் பதிப்பில் அவனுக்கு நன்றி சொல்லியிருப்பேன். பின்னர் அவன் வாழ்க்கை பலவாறாக திசைதிரும்பிவிட்டது. கலையுள்ளம் என்பது பலசமயம் ஒருவகை சாபம்.

அருண்மொழியும் சைதன்யாவும் திருவாரூரில் இருந்தனர். தாய்மாமனை ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்துக்கொண்ட அஜிதனுக்கு கொரோனா. 10 ஆம்தேதி அவனை நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அவனுக்கு உடம்பு ஓரளவு சரியானபின் நான் சென்னை சென்றேன்.

நான் சென்னையில் இருக்கையில் அருண்மொழியும் சைதன்யாவும் நாகர்கோயில் வந்தனர். அஜிதன் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினான். மொத்தத்தில் துக்கம், நோய் என சலிப்பூட்டும் சூழல்.

ஆனால் அதற்குச் சம்பந்தமே இல்லாமல் என் மனம் வேறொரு திசையில் இருந்தது. நான் எனக்குள்ளிருந்து ஒரு வழிகாட்டுதலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். இந்த சிக்கல்களுக்கு நடுவேதான் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு மதுரைக்குச் சென்றேன். நித்யாவைப் பற்றி உரையாற்றினேன்.

அஜிதன் ஆஸ்பத்திரியில் இருக்கும்போதுதான் வீட்டில் தனிமையில் இருந்து குமரித்துறைவி எழுதினேன். அந்த அல்லல்களிலிருந்து என்னை மேலெடுத்துக்கொள்ள மீன்விழியை நாடினேன். ஒரு காலப்பயணம், ஒரு கனவு. என்னை அது எப்போதுமே அணைத்துக் காக்கிறது. அங்கே சென்று மிக உயரத்தில் விலகிச்சென்று அங்கிருந்து அனைத்தையும் பார்த்தேன்.

கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் 21-4-2021 அன்று காலை கன்யாகுமரிக்கு வந்திறங்கினால் அங்கே ஊரடங்கு. தெருக்களில் ஒருவர்கூட இல்லை. கடைகள் இல்லை. முன்பதிவுசெய்த விடுதியில் நான் மட்டும். அருகே ஒரு சிறு ஓட்டல் செயல்பட்டது- காவல்நிற்கும் போலீஸ்காரர்களுக்காக. கன்யாகுமரி முனைக்குச் செல்ல தடுப்பு அமைத்திருந்தனர். ஆனால் எனக்கு கன்யாகுமரியில் எல்லா வழிகளும் தெரியும்.

கன்யாகுமரியின் சுற்றுலாக்கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. நெரிசல் பிதுங்கும் சாலைகள் ஓயந்து கிடந்தன. தெருநாய்கள், பைத்தியக்காரர்கள் மட்டும் நிதானமாக உலவிக்கொண்டிருந்தனர். கூட்டிப்பெருக்கப்பட்ட சாலை குப்பையில்லாமல் கடற்காற்றில் மணல்சுழிக்க திறந்து விரிந்து கிடந்தது.

சாலைகளிலேயே நரிக்குறவர் குடும்பங்கள் குடியிருந்தன. அவர்களுக்கு அரசு கட்டிக்கொடுத்த ஊர் ஆரல்வாய்மொழியில் உள்ளது. ஆனாலும் கால்வாசிப்பேர் அங்கே தங்குவதில்லை. அவர்களுக்கு கன்யாகுமரியின் வணிகமும் கொண்டாட்டமும் தேவைப்படுகிறது. கடும் உடலுழைப்புகள் செய்ய அவர்கள் வருவதில்லை. அவர்களின் அந்த மனநிலை பற்றிய புகார்களை பலரும் சொல்வதுண்டு. ஆனால் எனக்கென்னவோ அவர்கள் வாழ்வது சரி என்று படுவதுண்டு. கடும் உழைப்பு ஒரு தண்டனை.

நரிக்குறவர்கள் கொரோனாவையே அறியவில்லை. அத்தனைபேருமே சீன செல்பேசிகளில் கூடிக் கூடி அமர்ந்து சினிமா பார்த்துக்கொண்டிருந்தனர். முன்பெல்லாம் வானொலிப்பெட்டி வைத்திருப்பார்கள். அவர்களின் குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடின. சண்டைபோட்டு கட்டிப்புரண்டன. தேங்காய் நார்போன்ற தலைமுடி கொண்ட, மாநிறமான, அழகான குழந்தைகள்.

பெரிய கூடைகளில் உணவைக் கொண்டுவந்து எவரோ அவர்களுக்கு அளித்தனர். ஆச்சரியமான ஒன்றைக் கண்டேன். நரிக்குறவர்களும் சரி பைத்தியங்களும் சரி நாய்களுக்கும் உணவை பகிர்ந்துகொண்டே சாப்பிட்டனர். கிட்டத்தட்ட பாதிப்பாதியாகவே பங்கிட்டனர். நாய்கள் பட்டினி கிடக்கவில்லை.

வந்த அன்றே அன்னை குமரியைச் சென்று பார்த்தேன். ஆலயத்தில் நானும் அர்ச்சகரும் மட்டுமே. அத்தனை நேரம், அத்தனை அணுக்கமாக, அத்தனை தனிமையாக குமரியை நான் பார்த்ததே இல்லை. சிற்றாடை கட்டி தவமணிமாலையுடன் நின்றிருந்தாள் சிறுமி. இருபுறமும் அடுக்கு விளக்குகளின் சுடர்கள் அசைந்தன. மூக்குத்தியின் ஒளி இன்னொரு விழி. ஈசனின் அனல்விழி அல்ல, குளிர்விழி.

இளமையில் அங்கே வந்து மெய்யாகவே அங்கே ஒரு கரிய அக்கா நிற்பதாக உணர்ந்து சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறேன்.  இரண்டு வயது இருக்கும். இன்றும் அக்காட்சி, அந்த சூழல் எல்லாமே அப்படியே நினைவிருக்கிறது. அது ஒரு கனவாக பலமுறை வந்துள்ளது பலவாறாக அதை எழுதிக்கொண்டே இருக்கிறேன்.

அலைகள் இல்லாத கடல். ஓய்ந்து விரிந்த கன்யாகுமரியில் நான் மட்டுமே நின்று சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்த்தேன். இத்தனை நாளில் தோன்றும்போதெல்லாம் வரும் ஓர் இடம் கன்யாகுமரி. அதன் நெரிசலும் குப்பையும்கூட ஒருவகை மகிழ்ச்சியை அளிக்கும். ஏனென்றால் அங்கே அத்தனை முகங்களுமே மகிழ்ச்சிகொண்டிருக்கும். கடற்கரை மகிழ்ச்சியாக இருக்கையில் அலைகள் கொண்டாட்டமிடுபவைபோல ஆகிவிடுகின்றன.

ஆனால் அந்த ஆளில்லா வெற்றுவிரிவு வேறொரு உளநிலையை அளித்தது. காலியான பாதைகள், காத்திருக்கும் பெஞ்சுகள், மணல் பரவிக்கிடந்த கருங்கல் பரப்புகள், உப்புக்காற்றின் நைப்பு பரவிய தூண்கள். நான் ஒவ்வொன்றாக விழிகளால் தொட்டுத்தொட்டு அலைந்தேன். சிதறிப் பரவினேன். ஏதேதோ உதிரி எண்ணங்கள். ஏதேதோ குழப்பங்கள். பின்னர் மெல்ல குவிந்தேன். நான் மட்டுமேயாகி அங்கே கடலைப் பார்த்து நின்றிருந்தேன்.

முதல்நாள் கன்யாகுமரி அலங்கார உபகார மாதா கோயிலுக்குச் சென்றேன். கன்யாகுமரியில் எனக்கு இனிய இடங்களில் ஒன்று இது. கோயிலுக்குள் உள்ளறை ஒன்றில் இருக்கும் பழைய மாதாசிலைதான் அனேகமாக இந்தியாவிலுள்ள மாதா சிலைகளில் அழகானது என்று நினைக்கிறேன். அங்கும் எவருமே இல்லை. ஆலயம் திறந்திருந்தது. ஓருசில மெழுகுவத்திகள் எரிந்தன. மாதாவும் நானும் மட்டும்தான்.

மதியவெயில் பத்துமணிக்கே எரியத்தொடங்கியது. அறைக்குத் திரும்பி குமரித்துறைவியை படித்து திருத்தங்கள் போட்டேன். மதிய உணவு உண்டதுமே தூங்கிவிட்டேன் நான்கு மணிக்கு விழித்து மீண்டும் கடற்கரைக்குச் சென்றேன். கடலோரமாக நடந்தேன். ஒவ்வொரு கல்பெஞ்சிலும் அமர்ந்திருந்தேன். அந்தி இருட்டியபின் மீண்டும் குமரியைச் சென்று பார்த்தேன்.

21 முதலே என் செல்பேசியை பெரும்பாலும் அணைத்து வைத்திருந்தேன். இரவில் தூக்கத்தில் குமரித்துறைவியின் காட்சிகள். இன்னும் விழாவின் வேலை முடியவில்லை, முக்கியமான எதையோ விட்டுவிட்டேன் என்னும் பதற்றம் என்னை இருமுறை எழுப்பியது.

22 ஆம் தேதி அதிகாலை நான்குமணிக்கு விழித்துக்கொண்டேன். குளிர்நீரில் குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்றேன். செல்லும் வழியில் எவருமில்லை. ஒரு கடைகூட திறந்திருக்கவில்லை. செருப்புவைக்கும் இடம் இல்லை. கடைகளின் பெயர்ப்பலகை விளக்குகள் மட்டும் எரிந்து அணைந்துகொண்டிருந்தன.

ஆனால் பூ- அர்ச்சனைத்தட்டு விற்கும் கடை திறந்திருந்தது. உள்ளே ஆலயம் திறந்திருந்தது. அர்ச்சகர் இருந்தார். கருவறையிலும் மண்டபங்களிலும் சுடர்கள் பொலிந்தன. நீண்ட தெற்குவாயில் வழியாக மிகத்தொலைவில் தெரியும் தேவியை பார்த்தேன். பின் அருகே சென்று நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

திரும்பி வரும்போது ஒரு டீக்கடை திறந்திருந்தது. காபி சாப்பிட்டுவிட்டு கடற்கரைக்குச் சென்று புலரியைப் பார்த்தேன். அந்தப் பொழுதில் திளைப்பதென்பது எத்தனை கடினமானது. அதற்கு அர்த்தமில்லாமல் எதையாவது செய்யவேண்டியிருக்கிறது. கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தேன். அதன்பிறகு கொஞ்சம் கற்களை பொறுக்கி மேலிருந்து கடல்மேல் வீசினேன். மணலைக் கூட்டிவைத்து அதை கடற்கரைக் காற்று கரைப்பதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

என்ன செய்கிறேன் என்று எனக்கே சிரிப்பு வந்தபோது திருவிதாங்கூர் ராஜா முன்பு எங்கிருந்தாலும் ஊழலில் திளைத்த கரைநாயர் ஒருவரை கடலில் அலையெண்ணும் பணிக்கு அனுப்பிய ஞாபகம் வந்தது. [மீன்பிடிப்பவர்களின் படகுகள் அலையெண்ணுவதை தடுப்பதனால் அவர்கள்  தனக்கு லஞ்சம் கொடுக்கவேண்டும் என ஓர் ஏற்பாட்டை கரைநாயர் செய்துகொண்டார்] ஆகவே கொஞ்சநேரம் அலையெண்ணினேன்.

அதன்பின் நாய்களைப் பார்த்தேன். அங்கே எங்கும் பலவகை நாய்கள். சுருண்டு தூங்குபவை. ஆர்வமின்றி ஈ கடிப்பவை. அடிவயிற்றில் மூக்கால் நிமிண்டிக்கொண்டிருப்பவை. கோணல் வாலுடன் ஒரு நாய் என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றது.

இரண்டு நாய்கள் ஏதோ செய்துகொண்டிருந்தன. கவனித்தபோது ஆச்சரியமாக இருந்தது. தார்ப்பாயால் ஒரு கடை மூடி கட்டப்பட்டிருந்தது. அதை கட்டியிருந்த நைலான் கயிற்றை ஒரு நாய் கடித்துக்கொண்டிருந்தது. அருகே இன்னொரு நாய் அமர்ந்திருந்தது.  பின்னர் அந்த கடித்த நாய் ஓய்வெடுக்க அதுவரை அருகே இருந்த நாய் கடிக்க ஆரம்பித்தது.

என்ன செய்கிறதென்று கடைசிவரை பார்த்தேன். கடைசியில் நைலான் கயிற்றை அறுத்துவிட்டன. தார்ப்பாயை விலக்கி ஒரு நாய் உள்ளே புகுந்தது. எதையெதையோ உருட்டியது. வாயில் எதையோ கவ்விக்கொண்டு ஓட இன்னொருநாய் உள்ளே சென்றது. கூட்டு உழைப்பும் அதற்குரிய பொறுமையும் கொண்டவை.

இந்த உளவியாட்டுக்கள் வழியாகவே நாம் ஒரு தருணத்தில் இருந்துகொண்டிருக்க முடிகிறது. நம்மை அறியாமலேயே நமக்குள் நம் உள்ளம் அமைதியடைந்து அந்த இடத்தில், அத்தருணத்தில் படிந்து கொண்டிருக்கிறது. எப்போதோ பெஞ்சில் அமர்ந்து அலைகளை பார்த்துக்கொண்டிருந்தபோது முற்றாகவே என்னை இழந்து, காலத்தில் கடந்துசென்று, விழிப்புகொண்டு மீண்டேன்.

பின்னர் அறைக்குச் செல்லாமலேயே மருத்துவாழ்மலைக்குச் சென்றேன். அரியமூலிகைகள் இருப்பதனால் அப்பெயர் பெற்ற மலை இது. அனுமன் தூக்கிச் சென்ற சஞ்சீவி மலையின் துண்டு என்பது தொன்மம். உண்மையில் பெரும்பாறைமேல் பெரும்பாறையென அமைந்த ஒரு வறண்ட குன்று. ஆனால் இடுக்குகளில் மரங்கள் எழுந்திருக்கும். மருத்துவாழ்மலைமேல் சித்தர்கள் வாழ்ந்ததாக வரலாறுண்டு. ஐயா வைகுண்டர், நாராயணகுரு உட்பட பலர் இங்கே தவமிருந்திருக்கிறார்கள்.

மலைக்குமேல் நாராயணகுருவின் குகைக்குச் சென்றேன். மாலை வரை அங்குதான் இருந்தேன். திரும்பி வந்து மீண்டும் கடற்கரை. மீண்டும் குமரியின் தரிசனம். இரவில் விண்மீன்கள் நிறைந்த வானின் கீழ் தனியாக கடற்கரையில் நின்றிருந்தேன். எட்டு மணிக்கு சாலைக்கு வந்தபோது கன்யாகுமரி நாகர்கோயில் பஸ் சென்றுகொண்டிருந்தது. ஏறி மீண்டும் மருத்துவாழ்மலைக்கு வந்தேன்.

இருண்டிருந்தது மலையடிவாரம். மலைக்குமேல் செல்லும் பாதையில் மின்விளக்குகள் தனிமையில் எரிந்துகொண்டிருந்தன. காற்று சுழற்றிக்கொண்டு வீசியது. மேலேறிச் சென்று மீண்டும் அங்கேயே அமர்ந்திருந்தேன். சீவிடுகளின் ரீங்காரம் என்று சொல்வதுண்டு. செவிதுளைக்கும் விசில் ஓசையை அவை எழுப்பிக்கொண்டிருந்தன. விண்மீன்கள் இடம் மாறின. காற்று குளிரத்தொடங்கியது.

இறங்கி கீழே வந்தேன். நடந்தே நெடுஞ்சாலை முகப்புக்கு வந்தேன். சாலைப்பணிகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஒரு டீக்கடை திறந்திருந்தது. டீ குடித்துவிட்டு காத்திருந்தேன். கன்யாகுமரி செல்லும் ஒரு வேன் வந்தது. ஏதோ பொருட்கள் கொண்டுசெல்வது. மீண்டும் விடுதிக்கு வந்தபோது மூன்றரை மணி.

அரைமணிநேரம் விடுதியில் இருந்தேன். நீராடி மீண்டும் அன்னையின் ஆலயம் சென்றேன். மிக முன்னரே சென்றுவிட்டேன். நான் உள்ளே சென்றபோது நிர்மால்யபூஜை தொடங்கிவிட்டிருந்தது. அபிஷேகம் முடிய முக்கால்மணிநேரம். நானும் வேறு மூன்றுபேரும்தான்.

கடற்கரைக்குச் சென்று உதயத்தைப் பார்த்தேன். துயில்நீக்கம் இருந்தாலும் சற்றும் களைப்பில்லை. உள்ளம் நிறைந்திருந்தது. விடுதிக்கு வந்து அறையை காலிசெய்துவிட்டு நாகர்கோயிலுக்குச் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டேன். வீடு திரும்பினேன்.

என்ன செய்தேன் என்பதையே சொல்லமுடியும். நாளை ஒருநாள் நானே படித்துப் பார்ப்பதற்காக. என்னென்ன எண்ணினேன் என்று சொல்லமுடியாது. எண்ணங்கள் சில பொழுது கொந்தளித்தன. சிலபொழுந்து பாறைவெளியென அசைவிழந்து கிடந்தன. சில சமயங்களில் ஒரு சொல் துளித்து அப்படியே நின்றது. சம்பந்தமே இல்லாமல் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்ற பாட்டு எங்கோ கேட்டு உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அப்படியே மறைந்தும் போயிற்று.

இந்த தனிமை நன்று. மெல்லமெல்ல திரட்டிக்கொள்ள முடிந்தது. சில தெளிவுகள், அதிலிருந்து சில திட்டங்கள். எதுவானாலும் இப்போதைக்கு 2028 வரை, என் அறுபத்தாறு வயது வரை மட்டுமே. எஞ்சியதை அதற்கப்பால் பார்ப்போம்.

செயல்திட்டங்கள் சில உண்டு, ஆனால் அவற்றை நான் இயற்றவேண்டுமே ஒழிய அவை என்னை கொண்டுசெல்லக் கூடாது. அவற்றிலிருந்து முற்றாக விலகியும் நின்றாகவேண்டும். அவற்றின் வெற்றிதோல்விகளுக்கு அப்பால் நின்று வேடிக்கை பார்ப்பவனாக திகழவும் வேண்டும்.

*

இன்று மின்னஞ்சலில், வாட்ஸப்பில், குறுஞ்செய்தியில் வாழ்த்துக்களை பார்த்து அனைவருக்கும் மறுமொழி இட்டேன். அதிலேயே இந்த நாள் சென்றது. மூத்தவர்கள் நண்பர்கள் வாசகர்கள் என பலதரப்பினரின் செய்திகள். அனைவருக்கும் நன்றி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2021 11:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.