Jeyamohan's Blog, page 996

April 27, 2021

ஓஷோ கடிதங்கள்

ஜெமோ,

இந்த மேடைப் பேச்சு இல்லையெனில் இத்தனை தீவிரமாக என்னால் ஓஷோவை தொகுத்துக் கொண்டிருக்க முடியாது என்று, இந்த வாய்ப்பை அளித்த கிருஷ்ணா ஸ்வீட்சுக்கு நன்றி கூறியிருந்தீர்கள். இன்னமும் உங்களுக்குள்ளிருக்கும் மாணவர்களுக்குரிய இந்த கற்கும் தீவிரமே உங்களுடைய உரைகளைத் தனித்துக் காட்டுகிறது. கடந்த ஆறாண்டுகளாக உங்களைத் தொடரும் என் போன்றவர்களுக்கு கூட புதியவைகளைத் தந்து கொண்டே இருக்கிறது.

ஓஷோ, ஜெ.கி. போன்ற  சிந்தனையாளர்களை இந்து மெய்ஞான மரபுகளில் ஒன்றான யோகாசாரமரபில் நீங்கள் பொறுத்திப் பார்த்தது (இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம்) எனக்கு மிகப் பெரிய திறப்புக்களை அளித்த ஒன்று.

எனக்கு, ஓஷோ அவ்வளவு பரிட்சயம் இல்லை என்றாலும் கூட ஜெ.கி. யின் மேற்கோள்களான “Confident man is a dead human being”, “Living in the Presence” போன்றவைகளால் ஈர்க்கப்பட்டு அவரை அறிய முயன்றதுண்டு.

ஆனால், தங்களுடைய உரையில் நிகழ்காலத்தில் வாழ்வது என்பதற்கான அன்றைய அறைகூவலிற்கான அவசியத்தை நீங்கள் விளக்கிய விதம் ஒரு பொறுப்பான ஆசிரியர்க்குரியது. சமீபத்தில் இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய Goethe என்ற சிறு புத்தகத்தை (தமிழினி வெளியீடு) படிக்க நேர்ந்தது. அதில் தாமஸ் கார்லைல் என்ற அறிஞரை  சமகாலத்தில் வைத்து மார்க்ஸூம், எமர்சனும் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பது விளக்கப் பட்டிருந்தது. மார்க்ஸின் மூலதனம், தாமஸினுடைய Cash Nexusல் இருந்து உருவானது என்பதும் தெரிய வந்தது. இதன் ஒரு சிறு தெறிப்பைத்தான் நீங்கள் அன்றைய இன்றையும், இன்றைய இன்றையும் தொடர்புபடுத்தியதில் உணர்ந்தேன்.

அன்றைய ‘இன்று’ பெரும்பாலும் கடந்த கால உலகப் போர்களின் துயரங்களாலும், நவீனத்தின் சோர்வுகளாலும் நிரம்பி குறுகியிருந்தது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் அன்றைய ‘இன்று’ கடந்த கால நினைவுகள் மட்டுமே. இந்த நினைவுகளை ஒதுக்கி வெல்வதற்காக உருவாக்கப்பட்ட ஆப்த வாக்கியம்தான் நிகழ்காலத்தில் வாழ்வதென்பது.

ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியது போல் இன்றைய ‘இன்று’ தொழில்நுட்ப பாய்ச்சலால் விரிவடைந்து கடந்த காலத்திற்கு மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் இடமில்லாமல் செய்திருக்கிறது. தற்போதைய ‘இன்றில்’ மட்டுமே இருப்பது கிட்டத்தட்ட தன்னை மறந்த ஒரு போதை நிலைதான்.

முதன்முதலாக இவ்வுரையைக் கேட்பவர்களுக்கு, தங்களுடைய பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் மற்றும் இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள் போன்ற படைப்புக்களைப் படித்தபோது எனக்குக் கிடைத்த பிரமிப்பும் அதைத் தொடர்ந்த தெளிவும் நிச்சயம் கிட்டியிருக்கும்.

அன்புடன்

முத்து

அன்புள்ள முத்து,

இந்த உரை ஓஷோவை அறுதியாக வகுத்துக்கொள்வதற்கு உரியது அல்ல. அதை தன்னளவில் ஒவ்வொருவரும் அவர்களே செய்யவேண்டும். இது அதற்கான ஒரு வழிகாட்டி, எந்தெந்த கோணங்களில் அதைச் செய்ய முடியும் என்பதற்கான ஒரு தொடக்கம்.

ஓஷோவை நாம் வெவ்வேறு கோணங்களில் பார்த்திருப்போம். ஓஷோ முற்றாக அனைத்தையும் மறுத்தவர் என்றும், இதுவரை இல்லாத சிலவற்றைச் சொன்னவர் என்றும் பலர் நம்புகிறார்கள். அவ்வாறல்ல, மரபின் தொடர்ச்சியாக அவர் இருக்கிறார், எங்கே பொருந்துகிறார் எங்கே விலகுகிறார் என அறிவது ஒரு தெளிவை அளிக்கும்

ஓஷோவின் ஒட்டுமொத்தம் என்ன ஏன்று சொல்வதை விட எந்தெந்த சரடுகள் வழியாக அவரை சென்றடையலாம் பரிசீலிக்கலாம் என்றே இந்த உரை சொல்கிறது

ஜெ

திரு ஜெமோ

ஓஷோ உரை கேட்டேன். நான் ஓஷோ மேல் அழுத்தமான நம்பிக்கை உடையவன். ஓஷோவை மறுக்க எந்த மனிதனாலும் முடியாது என்று நினைக்கிறேன். அவரைப்பற்றிப் பேசவே தகுதி வேண்டும். அவர் ஞானி. அவரைப்பற்றி நீங்கள் பேசியதே தவறு. அவர் உங்களுக்கு உரியவர் அல்ல.

நாகராஜன்

அன்புள்ள நாகராஜ்

தவறு இருப்பது நீங்கள் என் உரையை கேட்டதில்தான். ஓஷோ ஞானத்தின் முழுமை, அவரன்றி வேறு ஒருவர் தேவையில்லை, அவரை மறுக்கவே முடியாது என நினைப்பவர் இந்த உரையையே கேட்டிருக்கக் கூடாது. உங்களுடையது நம்பிக்கையின் பாதை- அதைப் பேணிக்கொள்க

இது அவரை அறிந்து, ஐயம்கொண்டு மேலே செல்ல விழைபவர்களுக்கான உரை

ஜெ

ஓஷோ- கடிதங்கள் ஓஷோ- உரை- கடிதம் ஓஷோ,கோவை, நான்குநாட்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2021 11:31

அறிவியல்,கற்பனை- கடிதங்கள்

அறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா?. தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை? தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?

அன்புள்ள ஜெ,

ஒருவருடம் ஆகிவிட்டது. கடைசியாக புனைவுக்களியாட்டு வாசிப்பு அனுபவங்களை உங்களுக்கு எழுதினேன். இந்தக் கடிதம் வழியாக உள்ளேன் என்று அட்டெண்டன்ஸ் போட்டுக்கொள்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்  உங்களைப் பற்றி பேச்சு வந்தபோது ஐ மிஸ் ஹிம் என்றான் விஷ்வா. நானும்தான் என்றேன். உங்களை நேரில் எப்போது சந்திப்பேன் என்று காத்துக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் கோடல், எய்ஷர் பாக் நூலை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். டக்ளஸ் ஹாஃப்ஸ்டாட்டரின் surfaces and essences என்ற நூலை ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.  அதுவும் மிக முக்கியமான நூல். ஆனால் கோடல் நூலை இன்னும் வாசிக்கவில்லை. ஆழ்ந்து வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

ஆனந்த் குருவின் கடிதத்தை கண்டேன்.  உங்கள் சிறப்பான பதிலையும்.

அறிவியலில் கற்பனைக்கு இடம் இருப்பது போல தெரியவில்லையே என்று கேட்கிறார்.

விசையுடன் பந்தை எறிகிறோம். திரும்பி வருகிறது. இன்னும் விசையுடன் எறிந்தால் பொருள் பூமியை சுற்றுகிறது. மேலும்  விசையுடன் எறிந்தால் அது வெளியில் விரைகிறது.


ஒவ்வொரு கணமும் சூரியன் ஒளித்துகள்களை ‘எறிகிறது’. அது ஏன் சூரியனுக்கே திரும்பிச் செல்லவில்லை?  எப்படி அந்த ஈர்ப்பை விட்டு ஒளித்துகள்கள்  பூமிக்கு வருகின்றன?

ஒருவேளை ஒளி என்ற துகள் நிறையிலி என்பது காரணமாக இருக்குமா? அல்லது அதன் உச்ச வேகம்தான் காரணமா?  அல்லது அதை செலுத்தும் விசையா?

ஆனால் கருத்துளை உச்சவேகம் கொண்ட ஒளியைக் கூட  விடாமல் பொத்தி வைத்துக்கொள்கிறதே!

பூமியின் ’விருப்பம்’ பொருள்கள் வந்திறங்க வேண்டும் என்றால்… மரங்கள் எப்படி அதற்கு எதிராக ஓங்கி வளர்ந்தன ? வளர்கின்றன? பறவைகள் வானில் எழுந்து பறக்கின்றனவே? அப்போது  இந்த உயிர்விசையின் விருப்பமும் இயல்பும் தோற்றமும் என்ன?

இன்னும் கூட அருவமாக செல்லலாம். திரும்பி வரமுடியாத இடத்திற்கு அகத்தை எறியும் விசை ஒன்று இருக்கிறதா?  அதன் தன்மை எப்படி இருக்கும்?

அறிவியலை வறண்ட அறிவுத்துறையாக கொள்ளவேண்டியதில்லை. கற்பனை வந்து தொடும் புள்ளிகள் ஏராளமாக உள்ளன. முறையாக பயின்றால் அதை  கண்டுகொள்ளலாம்.

மேலும்… செயலை அனுபவித்தல் என்று வரும்போது அறிவியல் சார்ந்த தரவுகள் மட்டும் அல்ல. அனைத்து எண்ணங்களையும் திரும்ப வரமுடியாத புள்ளிக்கு எறிந்துவிட்டு செயலில் மூழ்குங்கள். அனுபவியுங்கள். என்றுதானே நம் மரபு சொல்கிறது.?!

அன்புடன்,
ராஜா

அன்புள்ள ஜெ

அறிவியலுக்கு அப்பாற்பட்டவற்றைக் கற்றுக்கொடுக்கலாமா என்ற கட்டுரை வாசித்தேன். சுவாரசியமான கேள்வி,சரியான பதில்.

அந்தக்கேள்வி எங்கிருந்து வருகிறது? அறிவியலை ஓர் அனுபவமாகக் கற்றுக்கொடுக்காமல் அதை ஒரு தெரிந்துகொள்ளலாக அளிக்கும்போதுதான் ஒரு பெரிய சலிப்பு வருகிறது. அறிவியலை ஒரு பிரபஞ்ச ரகசியத்தின் வெளிப்பாடாகவே கற்றுக்கொடுக்க முடியும்

உதாரணமாக, நான் என் பையனுக்கு நீரின் புற அழுத்தம், சவ்வூடு பரவல் ஆகியவற்றை சேர்த்து கற்றுக்கொடுத்தேன். பல சோதனைகளை செய்து கற்றுக்கொடுத்தேன். நாங்கள் அவன் பாட்டி வீட்டுக்கு போயிருந்தோம். அங்கே சுவரில் இரண்டடி உயரத்தில் பெயிண்ட் சீராக உரிந்திருந்தது. ஃபங்கஸும் வந்திருந்தது.அதைக் காட்டி என்ன என்று சொல் பார்ப்போம் என்றேன்

மழை நனைந்திருக்கிறது என்று சொன்னவன் உடனே தரையிலிருந்து நீர் மேலேறி ஊறியிருக்கிறது என்று சொன்னான். சரி என்று சொன்னதும் அவனால் அந்தப் பரவசத்தை தாளவே முடியவில்லை. அதைச் சொல்லி சொல்லி மிதந்துகொண்டிருந்தான். ஒவ்வொரு இடத்திலும் அதைச் சுட்டிக்காட்டினான்

ஏனென்றால் அது ஓரு பிரபஞ்ச உண்மை. அதை அறிவியல் விளக்குகிறது. அறிவியலை கொள்கைகளாக விளக்குவது பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதுதான். அதற்கு கற்பனையும் இண்டியூஷனும் நிறையவே தேவை.

அதைச் சொல்லிக்கொடுத்து கூடவே அதை கடந்துசெல்லும் கற்பனையையும் சொல்லிக்கொடுக்கலாம். என் பையன் டிரான்ஸ்ஃபர்மர்ஸ் படத்தை பார்த்துவிட்டு ’டென்சிட்டி மாறாதவரை இப்படி ஒரு பொருள் அதைவிட பெரிய பொருளாக மாறமுடியாது’ என்று சொன்னான். அந்த ஞானம் கற்பனையும் கலந்ததுதான்

ஆர்.ராஜ்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 27, 2021 11:31

April 26, 2021

பழையதொரு மாயம்

விஜயா வாகினியின் அந்தக்கால கிளாஸிக்குகளில் ஒன்று மாயாபஸார். இளமையில் இருமுறை பார்த்திருக்கிறேன். அதன்பின் பலமுறை அதை துளித்துளியாகப் பார்த்தேன். முழுமையாக பார்க்கவில்லை.

நேற்று முதல் இருநாட்களிலாக அதை வண்ணத்தில் பார்த்தேன். ஒரு கனவனுபவமாக இருந்தது. சினிமாவாக அல்லாமல் ஓர் இசைநாடகத்தின் திரைப்பதிவாக பார்க்கவேண்டும். தெலுங்கு இசைநாடக மேடை அறுபதுகள் வரைக்கும்கூட மிக வீச்சுடன் செயல்பட்டு வந்த ஒன்று. இந்த சினிமாவே அங்கிருந்து வந்ததுதான்.

சினிமா என்னும் கலைவடிவம் என்று சொல்லவும் நம்பவும் எண்பதுகளின் திரைப்பட இயக்கங்கள் எனக்கு பயிற்றுவித்தன. அடூர் கோபாலகிருஷ்ணனை அந்த அழகியல்பார்வையின் குரலாக அறிமுகம் செய்துகொண்டு அதன்மேல் உறுதியான நம்பிக்கைகளை உருவாக்கிக் கொண்டேன்.

ஆனால் இன்று அப்படி சினிமாவுக்கென ஒரு காட்சிமொழி தேவையானதா என்னும் ஐயம் இருக்கிறது எனக்கு. ஒருசினிமா இசைநாடகத்தின் அழகியலுடன் இருக்கலாம். இன்னொன்று தெருக்கூத்துபோல் இருக்கலாம். சினிமா ஏன் எல்லாவகை காட்சிக்கலைகளின் அழகியல்களும் வந்துசேரும் ஒரு பொதுவான கலைப்பரப்பாக இருக்கக் கூடாது? சினிமா ஏன் நாடகமாக நடனமாக ஓவியமாக எல்லாம் இருக்கக்கூடாது?

மார்க்கஸ் பர்ட்லே

இப்படத்தைப் பார்க்காமல் நான் தவிர்த்தமைக்குக் காரணம் வண்ணம். பழைய கருப்புவெள்ளைப் படத்தை வண்ணப்படுத்தியிருப்பது பற்றிய ஓர் ஒவ்வாமை இருந்தது. ஏனென்றால் கருப்புவெள்ளையில் அதன் ஒளிப்பதிவு ஒளிப்பதிவுமேதை மார்க்கஸ் பட்லேயின் சாதனையாக சினிமாவில் சொல்வார்கள். கருப்புவெள்ளை ஒளிப்பதிவுக்கான ஒரு பாடநூலாகவே இங்கே நெடுங்காலம் பார்க்கப்பட்ட படம் அது.

ஆனால் டிஜிட்டல் முறையில் வண்ணப்படுத்தப்பட்டது மிகச்சிறப்பாக இருப்பதாக இப்போது படுகிறது. அதன்பிறகும்கூட இத்தனை தரமாக எந்தப்படமும் வண்ணமாக்கப்படவில்லை. அதற்கு முதன்மைக்காரணம் விஜயா-வாகினி ஸ்டுடியோவிடமிருந்த மிகச்சிறப்பாக பேணப்பட்ட பல நெகட்டிவ்கள்தான்.

அத்துடன் ஒரு புதுப்படம் தயாரிக்கும் அளவுக்கே செலவிட்டு ஒவ்வொரு ஃப்ரேமாக வண்ணம் கொடுத்தனர். பின்னர் தமிழ்- தெலுங்கு படச்சூழலில் புகழ்பெற்ற ஏராளமான வண்ணக்கலவை நிபுணர்கள் அதில் பணியாற்றினர். வண்ணப்படுத்துதலில் மாயாபஜார் ஒரு சாதனை- ஓர் அளவுகோல்.

இன்று பார்க்கையில் பல ஃப்ரேம்கள் அப்படியே பெரிய செவ்வியல் ஓவியம் போலிருக்கின்றன. அதற்குக் காரணமும் மார்க்கஸ் பட்லேயின் அற்புதமான படச்சட்டகக் கட்டமைப்புதான். இவை சினிமாவுகான சட்டகங்கள் அல்ல. செவ்வியல் சுவரோவியங்களுக்கான சட்டகங்கள். ஒளிநிழல்கோப்பும் அதற்கேற்ப சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஆகவேதான் வண்ணத்திலும் அழகிய காட்சியொழுக்காக உள்ளது இந்தப்படம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2021 11:35

கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ

தமிழில் திடீரென்று புதிய வீச்சுடன் எழுத வந்திருக்கும் எழுத்தாளர் சுஷீல்குமார். இன்றைய சூழலில் ஒருவர் நன்றாக எழுதினால் மட்டும் போதாது. தொடர்ச்சியாக நிறைய நன்றாக எழுதவேண்டும். அப்போதுதான் அவருடைய எழுத்தின் உலகமும் அவருடைய பார்வையும் வாசகரிடம் தெளிவாக உருவாகி வரும். சுஷீல்குமார் அப்படி நிறைய எழுதுபவரும்கூட.

தமிழ்ச்சூழலில் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்ட பாலியல்மீறல், அடித்தளமக்களின் வன்முறை என்ற இரண்டு பேசுபொருட்களுக்கு வெளியே சென்று கடந்தகால வரலாறு, தொன்மங்கள், இன்றைய வாழ்க்கையிலுள்ள கலைச்செயல்பாடுகள் என்று பல்வேறு வாழ்க்கைக்களங்களில் இருந்து கதைக்கருக்களை கண்டடைகிறார். பெரும்பாலான கதைகள் கற்பனைநிறைந்தவை.

சென்ற இரண்டுமாதங்களில் சுஷீல் எழுதிய இரு கதைகள் கவனத்திற்குரிய நல்ல படைப்புக்கள். உங்கள் வாசிப்புக்காக

எம்.ராஜேந்திரன்

சப்தாவர்ணம் தோடுடையாள்

அன்புள்ள ராஜேந்திரன்,

சுஷீல்குமாரின் இரு கதைகளுமே நன்றாக உள்ளன. கதைகள் அன்றாடத்தை கடந்து படிமங்களாக விரியும்போது மட்டுமே ஆழம் பெறுகின்றன. அந்த வகையான விரிவுக்குத் தேவையாக இருப்பது அவற்றின் களமும் முன்வைப்பும். வாசகனுக்கு சற்றே கனவு கலந்த களம் அதிலுள்ள எல்லாவற்றையும் படிமங்களாக ஆக்கி அளிக்கிறது. சுஷீல் அதை திறம்பட சாதித்திருக்கிறார்

பாலியல் மீறலைச் சித்தரிப்பதோ அல்லது வேறொரு பேசுபொருளை முன்வைப்பதோ தன்னளவில் கலைக்கு எதிரானதாக ஆகாது. அதை எழுதும்போது படைப்பாளியின் கையடக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது, அதேசமயம் பறக்கவேண்டிய தருணத்தில் எப்படி எல்லா தன்னுணர்வுகளும் மறைகின்றன என்பதே கலையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் பா.திருச்செந்தாழை [பெயர் அமைந்தால் இப்படி அமையவேண்டும்] எழுதிய ‘திராட்சை மணம்கொண்ட பூனை’ [காலச்சுவடு] விலாஸம் [தமிழினி] ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை.

தமிழ் வாசிப்புச்சூழல் திராட்சைமணம்கொண்ட பூனை கதையை உடனடியாக ரசிக்கும். ஏனென்றால் அதன் பேசுபொருள் பாலியல் மீறல். ஆனால் திராட்சை மணம்கொண்ட பூனை கதையை விட விலாஸம் கதையையே நான் ஒரு படி மேல் எனச் சொல்வேன். திராட்சைமணம் கொண்ட பூனை நேர்த்தியாகச் சொல்லப்பட்ட நல்ல கதை. பாலுறவுசார்ந்த உளவியலின் ஒரு நுண்புள்ளியை தொடுகிறது. ஆனால் அந்தப் பாணி, அந்த நுண்புள்ளிகூட இலக்கியத்தில் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. மாப்பஸான் காலம் முதல். புதுமைப்பித்தனின் கல்யாணி முதலிய கதைகள் வரை இவ்வகை ஆண்பெண் கோணங்கள் அமையும் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கினன. ஸ்ரீரங்காவின் முதலில்லாததும் முடிவில்லாததும் அவ்வகையில் கன்னடத்தில் இருந்து வந்த ஒரு நல்ல படைப்பு. ‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’ ]

ஆனால் விலாஸம் கதையின் களம், அதில் முளைத்தெழும் உணர்ச்சிகள் தமிழ்வாசகனுக்கு மிகப்புதியவை. அக்கதையில் பரவலாக வாசகர்கள் எதிர்பார்க்கும் கிளர்ச்சிக்கூறு சற்றும் இல்லை. வணிகப்போரின், அதனூடாக உருவாகும் ஆளுமைப்போரின், அதன் வெற்றிதோல்விகளில் உருவாகும் வெறுமை மற்றும் கண்டடைதல்களின் உலகம். அனேகமாக இக்களத்தில், இக்கருவில் தமிழில் எழுதப்பட்ட முதல்கதை, ஆகவே முன்னோடிக்கதை என இதைச் சொல்லமுடியும்.

நம்மைச்சுற்றி வாழ்க்கையின் பெரும்பரப்பு இப்படி பலகளங்களில் விரிந்து கிடக்கிறது.பேசித்தீராதது அது. நாமோ இன்னமும் அதைப் பேசவே ஆரம்பிக்கவில்லை. எது நமக்கு கிளர்ச்சியூட்டுகிறதோ எது வாசகர்களுக்கு உடனடியாக பிடிக்கிறதோ அதை எழுத முற்படுகிறோம். ஆனால் நம் வாழ்க்கையை தீர்மானித்துக்கொண்டிருப்பவை விலாசம் போன்ற கதைகள் பேசும் உளநிலைகளும் கண்டடைதல்களும்தான். அரசியல், வணிகம்,சமூகவியல் என நம் அன்றாடத்தின் பெரும்பகுதி அதைச் சார்ந்தது. எளிய கிளர்ச்சிகளுக்கு அப்பால் சென்று இவற்றை கவனிப்பதே வாசிப்பின் முதிர்ச்சி எனலாம்.

இத்தகைய கதைகளை வாசிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட முன்தயாரிப்பு தேவை. பாலியல்கரு கொண்ட கதைகளுடன் நாம் எளிதில் இணைந்துகொள்கிறோம். ஏனென்றால் அவை அகவுலகு சார்ந்தவை. ஆகவே மானுடப்பொதுவானவை. நமக்கு அக்கதையின் கருவுடன் ஏதோ ஒரு பொதுவான அனுபவப்புலம் இருக்கும். எந்த பாலியல் கதையையும் நாம் எளிதில் நம் அனுபவமாக கற்பனை செய்ய முடியும். ஏனென்றால் மானுடன் காணும் பகற்கனவுகளில் பெரும்பகுதி பாலியல் சார்ந்தது. பாலியல்கதைகள் அப்பகற்கனவின் நீட்சிகள். அவை இனிய உளநாடகங்கள்.

ஆனால் விலாஸம் போன்ற கதைகளின் கதைக்களம் நமக்கு அன்னியமானதாக இருக்கலாம். உடனடியாக அவற்றின் பிரச்சினைகளும் உளநிலைகளும் நம்முடன் தொடர்புறக்கூடியவையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவற்றின் மையம் மானுடப்பொதுவானதாகவே இருக்கும். நாம் அதை அணுக சற்று முயன்றாகவேண்டும். நாமறிந்த புறவாழ்க்கைக் களங்களில் எங்கோ அதற்கிணையான ஒன்று இருக்கும். அதை நினைவில் உயிர்பெறச்செய்து அதனூடாக இக்கதைநோக்கிச் செல்லமுடியும்

காட்டில் பெருமரங்கள் வீழ்ந்து கிடக்கும். அவற்றில் முளைத்து, அவற்றை உண்டு, அவற்றின்மேல் ஏறி வளர்ந்து புதிய மரங்கள் நின்றிருக்கும். இயற்கையின் விதி. எல்லா உயிர்களிலும் செயல்படுவது. ஆனால் ஒரு கணத்தில் அது வீழ்ந்த மரத்தின் மறுபிறப்பும் அல்லவா என்றும் உள்ளம் மலைக்கும். அந்த உறவை நம்மால் எளிமையாக வகுத்துக்கொள்ள முடியாது. அதில் ஒரு பிரபஞ்சவிதி உள்ளது. அதன் தீராமர்மத்தைச் சுட்டிக்காட்டும் அரிய கதை இது. நான் தமிழில் இன்று பெருகி எழவேண்டிய கதைகள் எவை என நினைக்கிறேனோ அவ்வகைப்பட்டது.

வணிக உலகில் நிகழும் உரையாடல்களை நான் கூர்ந்து கவனிப்பதுண்டு. அவை மிகமிக வழவழப்பான கூழாங்கற்கள் உரசிக்கொள்வதுபோல மென்மையானவை. ஆனால் அழுத்தமும் வெப்பமும் கொண்டவை. அந்த மொழியை எழுதவேண்டுமென எண்ணுவேன். ஆனால் எனக்கு அது இன்னமும் அன்னியமானதே. அதை திருச்செந்தாழை எழுதியிருக்கிறார்.

ஜெ

விலாஸம்– பா.திருச்செந்தாழை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2021 11:35

முகில்- கடிதங்கள் 14

அன்புள்ள ஜெ.,

ஒரு கடவுள் வேடமணிந்த சிறுமியைப் பார்த்து சினிமாத் தயாரிப்பாளர் கூறும் கீழ்த்தரமான நகைச்சுவையைப் பற்றிய ஒரு இழையிலேயே அந்தத் தொழிலில் புழங்கி வரும் கீழ்மையைக் கோடிட்டிருப்பார் ‘கரைந்த நிழல்களில்’ அசோகமித்திரன். தன் மகளை இரவில் கொண்டுவந்து விட்டுவிட்டு காலையில் அழைத்துச் செல்லும் தந்தையைப் பற்றி எழுதியிருப்பார் கோமல் சுவாமிநாதன் அவருடைய கட்டுரையில். உங்கள் ‘கேன்வாஸ்’ இன்னும் பெரிது. எழுத்து இன்னும் நுண்மையானது. ‘கேமரா’வில் முகம் தெரியாமல் இருக்க ஸ்ரீபாலாவின் தோழி கூறும் காரணம் திகைக்க வைக்கிறது. பெரிய நடிகைகள் இந்த எருமைகளைத் தவிர்க்கலாம், அவ்வளவுதான் வித்தியாசம். அன்றைய உச்சகட்ட பாலியல் சுரண்டலில் இருந்து இன்றைக்கு ‘மீ டூ’ வரை எவ்வளவு நீண்ட பயணம். இன்றைக்கும் அந்தச் சுரண்டல் இருக்கும்தான். அதேசமயம் மறுப்பதற்கான உரிமையும், இல்லாவிட்டால் அதற்கான சரியான பணத்தையோ, வாய்ப்பையோ சம்பாதித்துக்கொள்ளும் விழிப்புணர்வுமாவது நிச்சயமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் ராமப்பா கோயில் பயணத்தைப் பற்றி எழுதிய கட்டுரையில் இதே அனுபவங்களுடைய ஒரு சினிமா துணை நடிகையைச் சந்திப்பீர்கள், அவள்தான் இந்த விஜயலஷ்மி. சரியா?  ‘யாரோட அப்பா செத்துப்போனது?’ என்று இரண்டு முறை அந்தக் கிளீனர் கேட்பதில் ஏதாவது பொடிவைத்திருப்பீர்களோ, அந்த உண்ணி ரெட்டி அடுத்த லாரியில் வந்து இறங்கி விடுவானோ, எங்கே  கடைசியில் பாலாபடம் ‘க்ளைமாக்ஸ்’ போல முடிக்கப்போகிறீர்களோ என்று ஒரு பதை பதைப்பு இருந்து கொண்டே இருந்தது. பலரையும் போல அந்த சைக்கிள் பயணத்தின் போது ‘விருமாண்டி’ படப்பாடல் ஞாபகத்திற்கு வந்தது. கூடவே விஜயலஷ்மி அந்தத் தெருவுக்குள் மறையும்போது ‘நெஞ்சம் அலைமோதவே  கண் குளமாகவே ராதை கண்ணனையே பிரிந்தே போகிறாள்…’ என்ற ‘மணமாலை’ வரிகள் கண்டசாலாவின் குரலில் ஒலித்தது என் மனதில்.  குறுநாவலின் செறிவில் சிறுகதைகள் கொடுத்தீர்கள். இப்போது ஹம்பியின் முப்பரிமாணச் செறிவை இருபரிமாணத்தில் காட்டும் ஒரு குறுநாவல். உங்களுக்குள் ஒரு கூட்டமாகப் பல எழுத்தாளர்கள் இயங்கிக்கொண்டிருப்பது போலத் தெரிகிறது. இந்த கதாபாத்திரங்கள் நினைவுக்கு வராமல் பழைய படங்கள், பாடல்கள் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்   

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

‘அந்த முகில் இந்த முகில்’ குறுநாவல் பற்றி நான் எழுதிய வாசிப்பனுபவம் கீழே:

சில பாடல்கள் அவ்வாறு தான்-இசையினாலோ, வரிகளாலோ, அதை முதலில் கேட்டபோதிருந்த நிலையினாலோ, அது எழுப்பும் கனவினாலோ-ஏதோ ஒரு காரணத்தால், பித்துக் கொள்ள வைத்து விடுகின்றன. ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்..’, ‘நானே வருகிறேன்..’ , எங்கே எனது கவிதை..’, ‘நேனா நீர் பஹாயே..’ இது போன்ற பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் நானும் முற்றிலும் helpless ஆகி விடுவதுண்டு. அதுவும் இரவு நடைகளின் போது, தற்செயலாக முழு நிலவும் சேர்ந்து விட்டால்,  மின் விளக்குகள் இல்லாத ஒரு பகுதியாக அவ்விடம் இருந்து விட்டால், இல்லை, சலசலக்கும் கடல் நீரில் நிலவின் ஒளியாலான ஒரு தீற்றல் கண்ணுக்குத் தெரிந்து விட்டால், உருகி விடும் நான் மீள்வது வெகு நேரம் கழித்துத் தான்.

மோட்டூரி ராமராவும் ஸ்ரீபாலாவும் சைக்கிளில் ‘ஆ மப்பு, ஈ மப்பு..’ பாடலைப் பாடும் இடம் இதே போன்ற ஒரு பெரும் கிறக்கத்தை எனக்களித்தது. இக்கதையின் உச்ச தருணம் அது. மற்றொரு உச்ச தருணம் மிக மிக மென்மையாய் அவள் தலைமுடியை அவன் தொடும் இடம்.

அவனுக்கு அவள் அறிமுகமாவது ஒரு குழு நடனமங்கையாக. திரைச்சீலையைப் போன்ற அவளின் அநாயாசமான நடனமே அவனை முதலில் ஈர்க்கிறது. பின் அவள் நிமிர்வும், நீள் விழிகளும். ஏதோ ஒரு நுண்ணுணர்வினால், இவள் மற்றவர் போலில்லையென அவன் உள்மனத்திற்கு தெரிந்து விடுகிறது. இவள்தான் தனக்கானவள் என்றும் அவனுக்குத் தோன்றி விடுகிறது. அவளின் அகவுலகான ரசனைகள் பற்றியெல்லாம் அவனுக்குத் தெரியாது, புறவுலகான வாழ்க்கை முறை பற்றியும் தெரியாது. அகமோ புறமோ அறியும் முன்னரே உள்ளுணர்வினால் அவன் அவளை காதலிக்கத் தொடங்குகிறான். கவிதைகளை ரசிப்பவன், நேசிப்பவன் வேறெப்படி இருக்க முடியும்.

அவனுக்கு ஏற்படும் முதல் கலைதல், அவள் தோழியின் மூலமாக அவளின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ளும் இடத்தில். அக்கால குழு நடனமாடும் மங்கையரின் வாழ்க்கை முறையைப் பற்றி அவனுக்குத் தெரியாமல் இருந்தது என்றில்லை. ஆனால் பட்டவர்த்தனமான சொற்களில் அது சொல்லப்படும் போது, அவளால் அது பலகீனமான புன்னகையோடு கடந்து செல்லப்படும் போது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான். ‘ஏன் இப்படி’ என்று அங்கலாய்க்கிறான். பின் தன் காதலுக்கான முகமாக அவளை சுருக்கிக் கொண்டு மேற்செல்ல முடிவு செய்கிறான். ஹம்பிக்குக் கிளம்பும் போது கூட அவளிடம் அவன் சொல்லிக் கொள்வதில்லை. தன்னுடைய மற்றொரு கனவு வெளியான ஹம்பியைப் பற்றிய எண்ணங்களே அவனை முழுமையாக ஆக்கிரமித்திருக்கின்றன.

பின் மீண்டும் அவனே தேடிச் சென்று அவளைச் சந்திக்கிறான். அவளைக் கடந்து செல்லுதல் அவனுக்கு அத்தனை சுலபமல்ல. நள்ளிரவில் அவனிடம் அடைக்கலம் கோரி அவள் வரும் போது, அவன் காதல் உச்சத்தை அடைகிறது. அவளைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறான்.

முதன்முதலில் தன்னை போகப் பொருளாகப் பார்க்காத, தன் நீள விழிகளையும், குவிந்த உதடுகளையும் ரசிக்கும் ஆண்மகனை அவள் பார்க்கிறாள். இத்தனை நாட்களில் முதன்முறையாக அவள் காதலை வெளிக் காட்டத் துணிகிறாள். தன் தலை முடியைப் பற்றிச் சொல்கையில் அவள் மீண்டும் தன் வாழ்க்கை முறை பற்றிச் சொல்ல, அவன் மறுமுறை அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியே அவளை எச்சில் என்று சொல்லி அவமானப் படுத்தத் தூண்டுகிறது.

அவனொரு நுட்பமான ஊசலாட்டத்தில் உள்ளான். தனக்கு மிகப் பிடித்தவளின் புற வாழ்க்கை அவனுக்கு முற்றிலும் பிடிக்காத வகையில் உள்ளது. அவளின் அதுவரையிலான வாழ்க்கையை அவனால் முற்றிலும் புறந்தள்ள முடியவில்லை. அவனுக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகள் எச்சரிக்கைகள் அனைத்தும் இது போன்ற ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் அவனைக் ‘காப்பதற்காக’த்தான். இது போன்ற ஒரு புறவாழ்க்கை கொண்டவளை அருவருக்கத்தான் சொல்லித் தந்திருக்கிறது அவனுக்கு அது வரை கையளிக்கப்பட்ட விழுமியங்கள்.

அவளை அருவருப்பது, அவனை குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்கிறது. அவளிடம் மன்னிப்பு கோர வேண்டும் என நினைத்தாலும் அவனால் முடிவதில்லை. எப்போதைக்குமாக அவளை இழந்து விட்டான் என அவனுக்குத் தெரிகிறது.

இருந்தாலும் அவனால் அவளைக் காப்பாற்றாமலிருக்க முடியாது. காப்பாற்றுபவனே ஆண் என்பது அவனுக்கு அளிக்கப்பட்ட மற்றொரு விழுமியம்.

அவளைப் பத்திரமாக பேருந்தில் ஏற்றிவிடப் போகும் போது, அவளின் அகவுலகை அவன் அறிந்து கொள்கிறான. அவள் ரசனைகளை, அவள் வாசிப்பை அறிந்து கொண்டதும், அவன் காதல் மேலும் தீவிரம் கொள்கிறது. முனிப்பள்ளி வரை செல்லும் அப்பயணத்தை அவர்களின் வாழ்க்கைப்பயணமாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள். குறைந்த அவகாசத்தில் தம்பதியருக்கான அனைத்துத் தருணங்களையும் வாழ்ந்து பார்க்க முயற்சி செய்கிறார்கள். ஆயினும் ராஜமந்திரியில் அவள் கண்களை விட்டு அகலும் போது கூட அவனால் தன் காதலைச் சொல்ல முடியவில்லை. அவள் திரும்பியும் பாராமல் சென்றது அவனுக்கு மேலும் அதிர்ச்சி தருகிறது.

சொல்ல நினைத்தை சொல்லாமல், நினைத்துக் கூட பார்க்காததை சொல்லி அவளை அவமானப் படுத்தியதே, அவனை பைத்தியமாக்குகிறது. தலையை ஆட்டிக் கொண்டும் தனக்குத் தானே பேசிக் கொண்டும் கண்ணீர் விட்டுக் கொண்டும் அவன் மீண்டும் மீண்டும் சரி செய்ய நினைப்பது இத் தருணங்களையே.

இதிலிருந்து மீளவே அவனுக்கு ஓராண்டு காலமும், ஜானகியும் தேவைப் பட்டிருக்கிறார்கள். ராமராவுக்கு ஏற்ற ஜானகி தேவி. பொறுமையையும் தியாகத்தையும் மட்டுமே செலாவணியாகக் கொண்ட கூட்டம் அக்காலப் பெண்கள் கூட்டம். காலங் காலமாக தொடரும் மற்றொரு விழுமியத்தின் மூர்த்தம் அவள்.

யோசித்துப் பார்த்தால் ராமராவின், ஸ்ரீபாலாவின் துயருக்கு மிகப்பெரிய காரணம். அப்போது நடைமுறையிலிருந்த கலாச்சார விழுமிய அமைப்பே என்று சொல்லலாம். இப்போதும் பெரிதாக ஒன்றும் மாறிவிடவில்லையென்பதால், கதை இவ்விஷயத்திலும் நிகழ்காலத் தொடர்பு கொள்கிறது.

ஸ்ரீபாலாவின் பார்வையிலிருந்து பார்த்தால் அவள் தன் மீது சுமத்தப்பட்ட அவ்வாழ்க்கை முறைக்கு முற்றிலும் தன்னை கையளித்து விட்டாள். உண்மையில் இந்த வாழ்க்கை முறை குறித்த குற்றவுணர்வு எல்லாம் அவளுக்கு இல்லை. தன் ஊர்காரர்கள், சாதிக்காரர்கள், அம்மா உள்பட அனைவரும் செய்யும் வேலை தான் இது. முனிப்பள்ளிக்கு சென்று சேர்ந்த ஒரு வாரத்திலேயே அவள் மீண்டும் தன் அன்னையாலேயே இதே வாழ்க்கை முறைக்கு மற்றொரு முறை அனுப்பப் படுகிறாள். அதை அவளும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறாள். அவள் எதிர்பார்ப்பதெல்லாம் அடிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று தான். இத்தனைக்கும் தனக்கு மிகப் பிடிக்காததை யாராவது செய்யும் போது, அவன் மண்டையை உடைத்து விடுமளவு உடல் வலுவும், அவன் மண்டையை உடைத்ததை நினைத்து துளியும் வருந்தாத அளவு நெஞ்சுரமும் கொண்டவள் தான் அவள்.

நடைமுறையில் இவ்வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட அவள், தன் கனவுலகை புத்தகங்களால் நிறைத்திருக்கிறாள். தனக்காக மட்டுமன்றி குடும்பத்தில் அடி உதை வாங்கும், அவமானப்படும் பெண்களுக்காகவும் கல்வியை கனவு காண்கிறாள்.

ராமராவின் பார்வையிலிருப்பது காமம் அல்ல, காதலென்று தோழி சொன்னவுடன், அவள் மனதில் முதலதிர்வு எழுகிறது. தன்னை ரசிக்கும் ஒரு ஆண்மகனை காதலிக்கிறாள். ஆனால் அவனும் தன்னை எச்சில் என்று சொல்லி ஏளனப்படுத்தியதும் அதிலிருந்தும் அவள் முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொள்கிறாள். அவன் தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான் என்றதும், தூங்கி வழிந்தவள், அவன் அருவருக்கிறான் என்று தெரிந்ததும் தூக்கத்தை நிறுத்திக் கொள்கிறாள். அவளே சொல்வது போல அவன் எப்போதும் தன்னை நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தான் அவன் முன்னால் அவள் ஆடையின்றிக் குளிக்கிறாள். ராமராவுக்கு அவள் அளிக்கும் ஒரு விதமான தண்டனை அது.

பின்னர் அந்த சைக்கிள் நடையில் அவரிருவரும் ஒருவர் மற்றவரின் அகத்தை அறிந்து கொள்கின்றனர். அவனுக்கு மனைவியாகவே அவள் அந்தப் பயணத்தில் வாழ்ந்து பார்த்துக் கொள்கிறாள். அவளுடைய பெரும்பாலான இரவுகள் மற்றவருக்கானது. இப்பயணத்தின் இரவுகள் அவளுக்கானது. வாழ்க்கை முழுவதும் துணை நிற்கப்போகும் நினைவுகளை அளிக்கப் போவது. அவ்வினிய நினைவுகள் செறிவு குன்றாமலிருக்கவும், சேர்ந்து வாழ ஆரம்பித்தால் ஏதோவொரு தருணத்தில் மீண்டும் அவமானப்பட நேரும் என்பதாலுமே அவள் திரும்பியும் பாராமல் அவனிடமிருந்து பிரிகிறாள். முன்பாவது அவன் அவளை அவமானப்படுத்தினால் தாங்கிக் கொள்ள முடியும், தங்கள் அகங்களை பகிர்ந்து கொண்டபின் அவனிடம் ஒரு நொடியும் அவளால் தாழ்ந்து போக முடியாது.

ஒருவரின் அகத்தை மட்டுமே பொருட்படுத்தி காதல் கொள்ளும் ஒரு கலாச்சாரத்தில் அவளும் அவனுடன் ஒரு இனிய வாழ்வை வாழ்ந்திருக்கக்கூடும்.

அவளுக்கு அவனால் தன் எல்லைகளைத் தாண்ட முடியாதென்பது தெரியும். மீண்டும் சந்திக்கும் போது கூட முதல் கேள்வியாக அவன் மக்களைப் பற்றியே கேட்கிறாள். அவன் திருமணம் செய்யாமல் வாழ்ந்திருக்க மாட்டான் என்பதில் சிறிதளவும் அவளுக்கு சந்தேகமில்லை.

அவன் வாயால் அவளுக்கான அவன் உணர்வுகள் இங்கனம் தான் இருந்தன என்பதை சொல்லாகப் பெற்றுக் கொண்டு மீண்டும் அவன் வாழ்க்கையிலிருந்து பிரிகிறாள். இம்முறை அவனுடைய சொற்கள் அவளின் காதலுக்கான பரிசு. அதனாலேயே அதை அதிர்ஷ்டம் என்கிறாள்.

மிக மிக நுட்பமான ஆடல் நிறைந்த கதையிது.

கண்ணெதிரே கற்கோபுரத்தைப் போன்ற திடமான காதலிருக்க, துளை வழி தெரியும் கோபுரத்தின் தலை கீழ் பிம்பத்தையே பார்க்கும் மனிதர்களைப் போல பிம்பத்துக்குக் கட்டுப்பட்ட ராமராவின் காதல் கதையிது என்றும் இதை வாசிக்கலாம்.

கருப்பு-வெள்ளை தரும் கனவுத் தன்மை, அதன் பூடகம், நிறங்களிலிருக்கும் வெட்ட வெளிச்சம், பட்டப் பகலை ஃபில்டர் போட்டு இரவாக்குவது, சினிமா என்னும் நிழலாட்டம், என்.டி.ஆருக்கும், பானுமதிக்கும் இருந்த உணர்வுகள் பேயாய் நிரந்தரமாய் சினிமாவில் தங்கியது விஜயநகரம் ஹம்பியில் தங்கியதைப் போல, ராமராவ் தைத்த ஆடையை நிரந்தரமாய் அணிந்திருக்கும் அச்சினிமாவின் ஸ்ரீபாலா, கண்ணுக்குத் தெரியாத அவர்களின் கலந்துபோன முகில்களை தாங்கி நிற்கும் வானம் எனத் திரும்பிய பக்கமெல்லாம் கவித்துவம் பொங்கும் படைப்பிது. ‘நிழல்கள் மனிதர்கள் பின்னாலேயே அலைந்து அவர்களை நகலெடுக்கக் கற்றுக் கொண்டு விட்டன’-நல்ல வரி.

விரும்பும் வகையிலெல்லாம் விரிந்து கொடுக்கும் அடுக்குகளைக் கொண்ட இது போன்ற எத்தனை கதைகள் தமிழிலக்கியத்தில் இருந்து விட முடியும்.

அன்புடன்,

கல்பனா ஜெயகாந்த்.

முகில்- கடிதங்கள் 10 முகில் கடிதங்கள்-9 முகில்- கடிதம்-8 முகில் கடிதங்கள்-7 முகில் கடிதங்கள்-6 முகில்- கடிதங்கள்-5 முகில்- கடிதங்கள்-4 முகில் -கடிதங்கள்-3 முகில் கடிதங்கள்-2 முகில்- கடிதங்கள்1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2021 11:31

அறம்- கடிதம்

யானை டாக்டர் மூலம் என்னை யானையை நோக்கி நகர்த்திய எழுத்தாளர் நீங்கள் உங்களின் வாசகனாக ஒரு கடிதம்

என் வாழ்வில் நான் படித்த மிகப்பெரிய புத்தகங்களில் இரண்டாவது அறம் , முதலாவது திருடன் மணியம்பிள்ளை என் மூலையின் சேமிப்பு சரியென்றால் 783 பக்கங்கள் என்று நினைக்கிறேன் அறம் 399ல் முடிந்து விட்டது.

அறம் முழுக்க மனித முகங்கள் அறம் என்ற இந்த பெயரை யானை டாக்டர் என்ற நூலின் மூலம் தான் பிடித்தேன் , யானை டாக்டர் அறம் புத்தகத்தில் வரும் 12 கதைகளில் ஒன்று .. என் வாழ்வை மாற்றி கதையாக யானை டாக்டர் அமைந்தது , அதனை பின்தொடர்ந்த போது அறம் தானாகவே என் பின்னால் நிழலாடி கொண்டு இருந்ததை இன்று தான் புரிந்து கொண்டேன்.

அறம் 12 கதைகளை கொண்ட ஒரு முழு தொகுப்பு தமிழகத்தின் ஆக சிறந்த எழுத்தாளரான ஜெயமோகன் அவர்களால் எழுதப்பட்டது எப்படி டாக்டர் கே என் வாழ்வில் அழிக்க முடியாது மனிதராக மாறினாரோ அதே போல இந்த புத்தகம் முழுக்க நிறைய மனிதர்கள் வந்து சேர்ந்தார்கள்.

முதலமானவர்  டாக்டர்கே என்றால் இரண்டாமானவர்  கோட்டி கதையில் வரும் பூமேடை. இந்த கதாபாத்திரத்தை படிக்க படிக்க பிரபல தமிழ் திரைப்படமான ராஜூ முருகனின் ஜோக்கர் கதாபாத்திரத்தில் வரும் சோமசுந்தரம் கண் முன்னே நின்றார் . அது வேறு கதை இது வேறு கதை என்றாலும் கூட இரண்டு மனிதர்களையும் பிரித்து பார்த்து விடவே முடியாது . பூமேடை நிஜமாகவே மனதில் பூமேடையில் நிற்கிறார்.

மூன்றாவது மனிதர் சோற்றுகணக்கு கதையில் வரும் கெத்தேல்சாகிப் உண்மையாகவே நேற்று இரவு முழுக்க ஒரே சிந்தனை தான் இப்படி ஒரு மனிதர் இருப்பாரா , இன்றைய சூழலில் இப்படி ஒரு உணவகத்தை நடத்த முடியுமா , கெத்தேல் சாகிப் எங்கு இருப்பார் எப்படி இருப்பார் என்ற பல கேள்விகள் என்னை உறங்க விடாமல் செய்தது .‌. சில நேரங்களில் இவர் என்ன முட்டாளா என்று கூட தோன்றியது .

நான்காவது மனிதர் : உலகம்யாவையும் கதையில் வந்த காரிடேவிஸ் படிக்கும் பொழுதே கூகுல் பண்ண தொடங்கிவிட்டேன் , உலக குடிமகனாக எப்படி பதிவு செய்வது என்றும் , world passport , world service Authority என என் கூகுள் வரலாறு முழுக்க என்னை உலகமயமாக்கல் ஆக்கி கொண்டது தான் மிச்சம் .

ஐந்தாவது மனிதர்  ஓலைச்சிலுவை கதையில் வந்த டாக்டர்சாமர்வேல் முதலில் இவர் ஒரு மதம் மாற்றும் நபர் தானே என்று தான் தோன்றியது ஆனால் இவரின் தூய சேவை மனிதம் என்றபோது அந்த பிம்பம் தானாக உடைந்து இவர் மதம் மனிதம் என்ற புரிதலுக்கு உந்தி தள்ளியது .

ஆறாவது மனிதர்  வணங்கான் கதையில் வரும் மார்ஷல் நேசமணி இப்பொழுது நான் தட்டச்சு செய்யும் இந்த நொடியில் கூட யானையில் கம்பீரமாய் நடந்து வருகிறார் நேசமணி .குறிப்பாக வணங்கான் கதையில் யானை கையாளப்பட்டு இருக்கும் விதம் என்னை போன்ற யானை காதலர்களுக்கு அடடே ரகம் .

இறுதியாக நாராயண குரு நூறுநாற்காலிகள் முழுக்க நாராயணகுரு , இயற்கை இறை என்றவனை ஒரே கடவுள் , ஒரே மதம் , ஒரே இனம் , ஒரே மனிதன் என்று இந்த உலக எல்லைக்கு உந்த தள்ளி மனிதர் மாமனிதராய் காட்சி அளிக்கிறார்.

படிக்க வேண்டிய புத்தகம் அறம் .. நன்றி எழுத்தாளர் ஜெமோ

ஜெகதீஷ் ரவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 26, 2021 11:31

April 25, 2021

இன்று ஒரு சந்திப்பு

இன்று சித்ரா பௌர்ணமி. நாங்கள் ஈரோட்டில் ஒரு நண்பர் சந்திப்பு திட்டமிட்டிருந்தோம். அது நிகழாமல் போய்விட்டது. அடுத்த ஆண்டுமுதல் சித்திரை முழுநிலவுகளை தவறவிடக்கூடாதென்பது எண்ணம்.

இன்று இரவு 11 மணிக்கு ஒரு சூம் சந்திப்பில் பேசிக்கொண்டாலென்ன என்று தோன்றுகிறது. வாசகர்கள் மட்டும் பங்கெடுக்கலாம்

ஜெ

Topic: Jeyamohan’s Zoom Meeting
Time: Apr 26, 2021 11:00 PM India

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)

Meeting ID: 462 525 8729

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 18:59

குமரித்துறைவி- ஒரு சொல்

குமரித்துறைவி குறித்து நிறைய கடிதங்கள் வந்தன. ஒவ்வொருநாளும் வந்துகொண்டிருக்கின்றன. இம்முறை கடிதங்களை வெளியிடவேண்டியதில்லை என்று தோன்றியது. பெரும்பாலும் எல்லா கடிதங்களுமே மிக அந்தரங்கமான உணர்ச்சிக்கொந்தளிப்புகளால் ஆனவை. அவ்வுணர்ச்சிகள் தூயவை, அதனாலேயே அவை பொதுவெளி விவாதத்திற்கு உரியவை அல்ல.

அக்கடிதங்களை எல்லாம் படிக்கிறேன். அனைவருக்கும் மறுமொழி அனுப்பியிருக்கிறேன். அவர்கள் என்னுடன் ஆழ்ந்த உரையாடலில் இருக்கிறார்கள். என் உணர்வுகளை, என் ஆழ்நிலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு என் அன்பு.

கடிதங்களை வெளியிடுவதன் நோக்கம் என்பது ஒரு கூட்டுவாசிப்பை உருவாக்குவது. ஒருவர் தவறவிட்ட நுட்பத்தை இன்னொருவர் கண்டடையக்கூடும். ஒருவரின் குறையை இன்னொருவர் நிரப்ப ஒரு பொதுவான முழுவாசிப்பு விவாதங்களினூடாக உருவாகி வரும். வாசிப்புப் பயிற்சி என்பது அவ்வாறு நிகழ்வதே. எல்லா வாசிப்பும் வாசிப்புப் பயிற்சிதான்.

ஆனால் சில கதைகள் அவ்வண்ணம் பொதுவெளி விவாதங்களுக்கு உரியவை அல்ல. அணுக்கமானவர்களுடன் உணர்ச்சிகரமான பகிர்வு நல்லது. ஆனால் பிரித்துப் பிரித்து விவாதித்தால் அவை அழகிழக்கும், ஆழ்ந்த உணர்வுநிலைகளும் மறையக்கூடும். குமரித்துறைவி அத்தகையது.

குமரித்துறைவி போன்ற ஒருகதை, அறிவுத்தளமே இல்லாமல், முற்றிலும் வேறொரு அகநிலையில் நிகழ்ந்து முடியும் ஒரு கதை, எந்த எழுத்தாளனும் கனவுகாணும் ஒரு நிகழ்வு. நிகழ்ந்தால் உண்டு. அவன் அறிந்து மீண்டும் நிகழ்த்திவிட முடியாது. மிக அரிதாகவே இலக்கியத்தில் அத்தகைய ஆக்கங்கள் காணக்கிடைக்கின்றன.

அவ்வகைப் படைப்புகளுக்கு இரண்டு அதீதநிலைகளே உண்டு. உள்ளே சென்றவர் உணரும் உச்சம் ஒன்று. செல்லாதவருக்கு ஒன்றுமே சிக்குவதில்லை. ஏனென்றால் அதில் அறிய, யோசிக்க ஒன்றுமில்லை.

நண்பர்கள் அதன் நூல்வடிவைப் பற்றி கேட்டிருந்தனர். விரைவில் வெளிவரும். இரு நண்பர்கள் திருமணப் பரிசாக விருந்தினர்களுக்கு அளிக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தனர். ஒருவர் சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிடுவதாகச் சொன்னார். அவை நிகழட்டும்.

நான் இனி ஒருபோதும் அதைப் படிக்கப்போவதில்லை. இனி அதைப்பற்றிய விவாதங்களும் இங்கே நிகழாது. அது இங்கிருக்கட்டும். மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை. அதற்கான வாசகர் சிலரே. அவர்கள் காலந்தோறும் வந்துகொண்டிருப்பார்கள்.

குமரித்துறைவி [குறுநாவல்] – 6

குமரித்துறைவி [குறுநாவல்] – 5

குமரித்துறைவி [குறுநாவல்] – 4

குமரித்துறைவி [குறுநாவல்] – 3

குமரித்துறைவி [குறுநாவல்] – 2

குமரித்துறைவி [குறுநாவல்] – 1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 11:36

அற்ப சகி

முன்பு ஒரு நோக்கியா செல்பேசியை வைத்திருந்தேன். அது எனக்கு கைக்கடக்கமானது, என் தேவைகளுக்கு அது போதும். நான் விரும்பும்போது மட்டுமே மின்னஞ்சல் பார்ப்பவன். செல்பேசியை அணைத்தே வைத்திருந்து நடைசெல்லும்போது மட்டும் பேசுபவன். என் பொழுதுகளை அப்படி திட்டமிட்டு சேமித்துக்கொள்ளாவிட்டால் இத்தனை எழுத முடியாது.

நான் எழுதுவதில், அல்லது வேலைசெய்வதில் ஒருபகுதிதான் பொதுவாக நண்பர்களுக்கு தெரியும். இலக்கியம் மற்றும் இணைய எழுத்துக்கள். சினிமாவுக்கு எழுதுகிறேன் என்று பலருக்கு தெரியும், ஆனால் எவ்வளவு எழுதுகிறேன் என்று தெரியாது. திட்டமிடப்பட்டு, முழுத்திரைக்கதையும் எழுதப்படும் சினிமாக்களிலேயே சிறுபகுதிதான் கடைசியில் திரையை அடைகிறது- எழுதப்படும் எல்லாவற்றுக்கும் எழுத்தாளனுக்கு பணம் உண்டு.

நான் இதற்கு அப்பால் மலையாளத்தில் தென்திருவிதாங்கூர் வரலாற்றாய்வாளர்களுடன் தொடர்பு கொண்டிருப்பவன். இங்குள்ள வரலாற்றுச் செய்திகளுக்கு பலரும் என்னை அணுகுவதுண்டு. பழைய மலையாண்மை என்பது முக்கால்வாசித் தமிழ். பலவற்றை தெளிவாக வாசித்துப் பொருள் சொல்பவர்களில் இளையவன் நானே.

வரலாற்றாய்வாளர்களுக்கு நிறைய மொழியாக்கம் செய்து கொடுப்பேன். சமீபத்தில் தென்திருவிதாங்கூரின் நாலைந்து நாட்டார்காவியங்களை மொத்தமாகவே மொழியாக்கம் செய்து ஓர் ஆய்வாளருக்கு அளித்தேன். மொழியாக்கம் என்பது ஆழமாக வாசிப்பதுதான். எல்லாம் நட்பு அடிப்படையில். ஆய்வாளர்களுக்கு எங்கே காசு?

இதுபோக மலையாள இஸ்லாமியக் கலைக்களஞ்சியத்திற்காக குமரிமாவட்ட இஸ்லாமிய வரலாற்றிடங்கள் பற்றிய குறிப்புகளை நூல்களில் இருந்து திரட்டி அளிப்பதுமுண்டு. இதெல்லாமே என்னுடைய சொந்த ஆர்வத்தால்தான். இவை எனக்கு ஆழமாக கற்கும் அனுபவங்கள். ஆகவே தவிர்ப்பதில்லை.

ஆகவே செல்பேசியை பெருஞ்சுமையாகவே எண்ணியிருக்கிறேன். சமூகவலைத்தளங்களையும் தவிர்க்கிறேன், நேரமில்லை. ஆனால் நவீனச் செல்பேசி தேவையாக ஆகியது. 2.0 படப்பிடிப்பு நடக்கும்போது அதன் அன்றாடச்செய்திகளை எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். திருத்தங்கள் போடவேண்டியிருந்தது. மின்னஞ்சலை ஒருமணிநேரத்துக்கு ஒருமுறையாவது பார்க்கவேண்டும். அப்படியே இப்போது வாட்ஸப் பார்ப்பது வரை வந்துவிட்டது.

ஆனால் தேவையில்லாமல் வாட்சப் செய்திகளை அனுப்புபவர்களை உடனடியாக ‘பிளாக்’ செய்து மட்டுமே என்னால் காலந்தள்ள முடியும். மின்னஞ்சல்களிலேயே நான் தடைசெய்திருப்பவை மூவாயிரத்துக்கும் மேல் இருக்கும். என்னை எல்லைக்குள் ஒடுக்கிக் கொண்டாலொழிய தீவிரமாகச் செயல்பட முடியாது.

இன்றைய இணையச்சூழலில் ஒருவர் தன் ஆர்வ எல்லையை, செயல்பாட்டு எல்லையை மிக திட்டமிட்டுச் சுருக்கிக்கொள்ளவேண்டும். இல்லையேல் ஒரு கோப்பை நீரை ஆயிரம் சதுர அடிக்கு பரப்புவதுபோல ஆளுமை அர்த்தமில்லாமல் ஆகிவிடும்.

இணையவெளியில் பொழுதுழல்வது ஒரு மாபெரும் வீணடிப்பு. உண்மையில் தீவிரமாக எதையோ செய்வதுபோல தோன்றும். ஆனால் அது தீவிரமல்ல, பாவனைதான். ஏனென்றால் கண்கூடான விளைவுகளை உருவாக்காத செயல் அது. காற்றாடிச்சிறகுகளுடன் வாள்சண்டை.

ஓய்வுநேரத்தை மட்டுமே அதில் செலவிடுவதாகத் தோன்றும். அதுவும் மாயை. நாம் எஞ்சியநேரம் முழுக்க அதையே எண்ணிக்கொண்டிருப்போம். நீண்டநேரம் ஒன்றில் ஈடுபட்டுப் பணியாற்ற நம்மால் முடியாதுபோகும்.

நான் குமரித்துறைவி எழுதியபோது 16 மணிநேரம் எந்த இடைவெளியும் விடாமல், நடுவே வேறெதையும் நோக்காமல், எழுதினேன். அதுதான் தீவிரம் என்பது. எச்செயலையும் அவ்வண்ணம் செய்ய முடியுமா என்று பார்க்கவேண்டும்.

செல்பேசியின் பொன்விதிகள் மூன்று.

அ. எப்படி எப்போது எந்த அளவுக்கு தவிர்ப்பது என்று தெரிந்திருக்கவேண்டும்.

ஆ.கூடவே இருக்கவேண்டும், ஆனால் இல்லாமலும் இருக்கவேண்டும்.

இ.மிகவும் மலிவானதாக வைத்துக்கொள்ளக்கூடாது, அலட்சியமாக கீழே போட்டு உடைத்துவிடுவோம். மிக விலை உயர்ந்ததாகவும் வைத்துக்கொள்ளக்கூடாது. கீழே விழுந்தால் நம் உள்ளம் உடைந்துவிடும்

ஆனால் இதைமீறி செல்பேசி பயனுள்ளது என்பதையும் கண்டுகொண்டிருக்கிறேன். பொதுவாக வெளியே சென்றால் செல்பேசி எனக்கு பலவாறாகக் கை கொடுக்கிறது. எவ்வாறெல்லாம்?

அ. சலிப்போ எரிச்சலோ ஊட்டும் ஒன்றிலிருந்து விடுபட்டுக்கொள்ள செல்பேசியை திறந்து எதையாவது பார்ப்பது உதவும். பெரும்பாலும் நம்மை உடனே அது திசைதிருப்பிவிடும்.

. செல்பேசி சரியாக பயன்படுத்திக்கொண்டால் நம்மை ஒரு நல்ல மனநிலையில் வைத்திருக்க உதவும். நான் ஆங்கில ‘காமிக்’ துண்டுகளின் பெரிய ரசிகன். பெரும்பாலும் எல்லாவற்றுக்கும் உறுப்பினர்தொடர்பு கொண்டவன். அவை எனக்கு வந்துகொண்டே இருக்கும். ஹெர்மன், டெனிஸ் த மெனஸ், பீ நட்ஸ் என புகழ்பெற்ற காமிக் துண்டுகள் தவிர பின்டிரஸ்ட் போன்ற தளங்கள் அன்றாடம் இருநூறுக்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. ஓய்வென்பது அவற்றைப் பார்ப்பது. அவை என் வாழ்க்கையின் மலர்ச்சியான தருணங்களை உருவாக்குகின்றன. விலங்குகளின் விளையாட்டு பற்றிய காட்சித்துணுக்குகளும் எனக்கு மிக உகந்தவை

. நாம் ஒன்றை கவனிக்கையில் கவனிக்காததுபோல் நடிக்க செல்பேசி மிக உகந்தது. பொது இடங்களில் இருக்கையில் பிறர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்பது எழுத்தாளனுக்கு அள்ளக்குறையா வாழ்க்கைக்களஞ்சியம்  ஆனால் நாம் கவனிப்பதை அவர்கள் அறிந்தால் உடனே ’நியாயம் பேச’ ஆரம்பித்துவிடுவார்கள்.

.நாம் உள்ளத்தின் ஆழத்தில் ஓர் அசைவு கொண்டிருக்கையில் அதை புறச்செயல்கள் வழியாகத் தாண்டவேண்டியிருக்கிறது. என்னுள் அப்படி ஒன்று நிகழும்போது செல்பேசியின் தேவையில்லாத குறுஞ்செய்திகளை ஒவ்வொன்றாக அழிப்பேன். அது விழிப்புநிலையை ஏமாற்றி திசைதிருப்ப ஆழம் தன்னை அழுத்தமாக தொகுத்துக்கொள்ளச் செய்கிறது

.வெவ்வேறு சிறு காத்திருப்புகளின்போது எதையாவது வாசிக்கலாம். நான் சிறுகதைகளை பெரும்பாலும் அப்போதுதான் வாசிக்கிறேன். ஒருநாளில் பத்துச் சிறுகதைகள்கூட வாசித்ததுண்டு.

ஆகவே கொஞ்சம் நொச்சு பண்ணுகிற, ஆனால் உதவியான ஒரு நண்பன்தான் செல்பேசி. நண்பி என்று சொல்லவேண்டும். மேலே சொன்ன எல்லா எச்சரிக்கைகளும் நண்பிகளுக்கும் பொருந்தும் இல்லையா?

மேல்ஷாவனிஸ்ட் பிக் என்று வரும் கருத்துரையாளர்களுக்காக மேலதிக வரி. பயனர்கள் பெண்கள் என்றால் செல்பேசி ஒப்புமை கணவர்களுக்கும் பொருந்தும். கொஞ்சம் கடினமான செல்பேசி இருப்பது நன்று. கோபத்தை காட்டிக்கொள்ளவு  உதவும். தொண்ணூறுகளில் லோகி நோக்கியா செல்பேசியை பற்றி பெருகும் பாராட்டுணர்வுடன் சொன்னார். “அற்புதமான செல்போன். உறுதியானது, நாயை எறியலாம்.”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 11:35

தெரிந்துகொள்ளலும் அறிதலும்- கடிதம்

வயதடைதல்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மேலே உள்ள மூன்று வார்த்தைகளை எழுதுவதற்குள், எனக்குள் ஓர் பதட்டத்தை உணர்கிறேன். உங்களுக்கு எழுதும் வாசகர்களில், உங்களது படைப்புகளை மிகக் குறைவாகவே வாசித்த ஒருவனாக நான் இருக்கிறேன்.குறிப்பாகச் சொல்லப்போனால், இரண்டு படைப்புகள் தான். ‘அறம்’ ஒன்று, மற்றொன்று ‘முகங்களின் தேசம்’. இரண்டுமே குக்கூ சிவராஜ் அண்ணன் அறிமுகம் செய்தது தான்.அவ்வப்பொழுது சில கட்டுரைகளையும் கடிதங்களையும் வாசித்ததுண்டு.

நான் கட்டிடக்கலையில் முதுகலைப் பட்டம் படிப்பதற்கான நேர்காணலிற்காக அகமதாபாத் சென்றிருந்தேன். அங்கு, கேட்ட ஒரு கேள்வி – “நீங்கள் உங்கள் இளங்கலையில் படித்த ஏதேனும் ஐந்து புத்தகங்களைப் பற்றிக் கூருங்கள்”.என்னிடம், ஒரு அசட்டுப் புன்னகையைத் தவிர வேறு பதில் இல்லை.ஏனென்றால், ஐந்து வருடப் படிப்பில் ஒரு புத்தகம் கூட வாசித்ததில்லை என்பது தான் உண்மை. பள்ளி காலங்களிலும் வாசித்ததில்லை. வாசிப்பின் ஆரம்பம் முதுகலையில் தான் நடந்தது.

அதன் பின்னர், சென்னையில் ஓர் கல்லூரியில் பேராசிரியராக வேலைக்குச் சேர்ந்தேன். நான் இளங்கலையில் தவறவிட்ட கற்றல் அனுபவங்களை, என்னுடைய மாணவர்களுக்கு அளிக்க வேண்டி விரும்பினேன். அதில் முதன்மையாகப் புத்தகம் வாசிப்பு இருந்தது.அதற்கான சிறு முயற்சிகளும் செய்தேன்.மாணவர்களிடம் தொடர்ந்து வெவ்வேறு வழிகளில் புத்தகங்களை அறிமுகம் செய்தேன்.

அதே காலகட்டத்தில் கல்லூரியின் அமைப்பிற்கு வெளியே, மாணவர்களுடன் தொடர்ந்து புத்தகங்களையும்,ஆவணப் படங்களையும், பயண அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள ‘அகர்மா’ எனும் ஒரு பொதுத் தளத்தை, குக்கூ காட்டுப்பள்ளியின் ஆதிக்குடிலில் வேரூன்றி நிறுவப்பட்டது. வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு உரையாடல் வட்டத்தைத் தொடங்கினோம்.

அதில் முதன் முதலில் உங்களின் ‘Jeyamohan speech at UCEN’ காணொளியைத் திரையிட்டோம். நீங்கள் ஏன் அதை முப்பது வருடங்களாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் என்பதை , மாணவர்களுடன் பயணிப்பதால் இப்பொழுது என்னால் ஓர் அளவிற்குப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தக் காணொளியைப் பல மாணவர்களுடன் அறிமுகம் செய்ய முயற்சிக்கும் பொழுது அதில் சிறு நடைமுறை சிக்கல் இருப்பதைக் கண்டடைந்தோம். ஒன்று, சென்னையில் பெரிதலிவில்லான கல்லூரிகளின் கால அட்டவணையில் ‘வாசிப்பு நேரம்’ அல்லது ‘நூலக நேரம்’ என்பது ஒன்றில்லை. சில கல்லூரிகளில் இருப்பினும் அது வெறும் காகிதத்தில் தான் இருக்கிறது. காலையில் கல்லூரிப் பேருந்தைப் பிடிப்பது, மீண்டும் மாலை அதே பேருந்தில் திரும்பிச்செல்வது என்பதிலேயே அவர்களின் நான்கு வருடமும் முடிந்துவிடுகிறது.ஆகவே இதைப் போன்ற காணொளிகளைத் திரையிடுவதற்கும், உரையாடுவதற்குமான நேரம் கல்லூரியின் மனதில் ஒதுக்கப்படுவதில்லை.

இரண்டு, சென்னையில் ஒரு கல்லூரி வகுப்பில் இருக்கும் நாற்பது மாணவர்களில்,நான்குப் பெயரால் தான் இந்தக் காணொளியின் சொற்களையும் அதன் வழியே கருத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆக அதை ஒவ்வொரு நிமிடமும் நிறுத்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூற வேண்டியிருந்தது.இதை நானே தமிழ் வாசிப்பின் ஆரம்ப காலகட்டத்தில் உணர்ந்திருக்கிறேன். தமிழ் இலக்கிய வாசிப்பு பழக்கம் இல்லாதது இதற்கு ஒரு பெரும் காரணமாக இருக்கிறது.

‘ஏன் வாசிக்க வேண்டும்’ என்பதைத் தமிழில் புரிந்துகொள்வதற்குச் சிறிதேனும் வாசித்திருக்க வேண்டும். இது ஒரு முடிவில்லா சுழற்சியாகத் தென்பட்டது. ஆனால் இந்தக் காணொளியின் கருத்தைக் கல்லூரி மாணவர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தோம். தமிழ் மட்டும் அல்லாது அனைத்து மொழி மாணவர்களுக்கும் இந்த காணொளி கண்டிப்பாகப் புரிந்துகொள்ளும் படி ஏதோ ஓர் வடிவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எங்களின் அகத்தின் ஆழ்ச்சொல்லாக இருந்தது.

இது இந்தக் காணொளி மட்டும் அல்லாது உங்களின் அனைத்து படைப்புகளுமே வெவ்வேறு வடிவில் இப்புவி முழுவதும் ஒலிக்க வேண்டும் என்பதே எங்களின் பிரார்த்தனை. அதற்கான முதல் கட்டமாய் இந்தக் காணொளியை ஆங்கிலத்தில் ஒலி பெயர்த்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முடிந்தவரையில் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு , அதற்குத் தகுந்த ஆங்கில சொற்களைப் பயன்படுத்தியுள்ளோம். மொழி என்பதைத் தாண்டி, கருத்துகளின் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாகவே இதைப் பார்க்கிறோம்.

திருவண்ணாமலையில் சமகால தொற்று நோயினால் அனாதையாக இறந்தவர்களை தன் மார்பில் சுமந்து அடக்கம் செய்த பீட்டர் அண்ணாவிற்கு, இந்த மொழிபெயர்ப்பு சமர்ப்பணம். –

நன்றியுடன்

அகர்மா குழுமம்

www.instagram.com/akarmaa_

www.akarmaafoundation.wordpress.com

அன்புள்ள அகர்மா நண்பர்களுக்கு

சிலநாட்களுக்கு முன் சென்னையில் ஒரு கூட்டத்திற்கு முனைவர் பட்ட ஆய்வு செய்யும் ஒரு வாசகி வந்திருந்தார். அறிவியலில் முனைவர். அவர் பேசும்போது அவருடைய தோழிகள் எதையுமே படிப்பதில்லை என்றார். ஆய்வேடுகளைக்கூட. தேவையான நூல்களையே காணொளிகள், உரைகள் வழியாக அறிகிறார்கள். கொஞ்சம் செய்திகளை வெட்டித்தொகுத்துக் கொள்கிறார்கள். ஒரு நூலை, ஒரு கட்டுரையை முழுக்க வாசிக்க அவர்களால் இயலாது என்றார்.

திகைப்பாக இருந்தது. நம் காட்சிக்கலாச்சாரம் நம்முடைய அடுத்த தலைமுறையை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. நம் கல்விமுறை அதிவேகமாக அழிந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர்கள் வாசிப்பதில்லை, மாணவர்கள் காகிதத்தையே கண்களால் பார்ப்பதில்லை. இந்த வீழ்ச்சி அளிக்கும் எதிர்விளைவுகள் நம்மை வந்து அறைய இன்னும் பத்தாண்டுகளாகும். நமது கல்வியால் பயனே இல்லை என்ற நிலை வந்துசேரக்கூடும்

இந்த உரை ஏன் புரிந்துகொள்ளப்படவில்லை என்றால் இதில் சொல்லப்படுபவை மிகமிக புதியவை. உண்மையில் மிகத் தொன்மையானவை. நடைமுறையில் இன்றைய தலைமுறையில் எவருக்குமே தெரிந்திராதவை. ஆகவே இக்கருத்தை வந்துசேர வாசகர்கள் கொஞ்சம் முயற்சி செய்யத்தான் வேண்டும். அந்த அளவுக்கு அன்னியப்பட்டுள்ளோம்..

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.