Jeyamohan's Blog, page 974
June 4, 2021
மெய்ஞானம் டாட் காம்
”பிரிஸ்கிரிப்ஷன் எழுதி தாறேன். தினசரி மூணுவேளை சாப்பாட்டுக்கு பின்னாடி அஞ்சு நிமிசம் சந்தோஷமா இருக்கணும், அதான்”
தமிழகத்தின் ஆன்மிகவிவாதங்களை கூர்ந்து கவனித்து நான் புரிந்துகொண்டது என்னவென்றால் மெய்ஞானம் என்பது ஒரு மேற்கோளாகவே இருக்கும் என்பதுதான். பெரும்பாலான மெய்ஞானத் தேடல்கொண்டவர்கள் மேற்கோள்களை மட்டுமே படிக்கிறார்கள். மேற்கோள்களையே ஞாபகம் வைத்திருக்கிறார்கள். மேற்கோள்களைச் சிந்திக்கிறார்கள். புத்தகங்களே அவர்களுக்கு மாபெரும் மேற்கோள்கள். கடவுளே கூட ஒரு நல்ல மேற்கோளாக இருக்கவே வாய்ப்பு.
விளைவாக அவர்கள் மேற்கோளர்களாக மாறிவிடுகிறார்கள். மேற்கோள்களாகப் பேசுகிறார்கள். “குரு என்ன சொல்றார்னா…” என்றுதான் பேச ஆரம்பிக்கிறார்கள். அல்லது “பிரஸ்னோபநிஷத்திலே ஒரு வரி வருது. சூரியனும் அவனே, மேகமும் அவனேன்னு…அவனே பிரகாசிக்கிறான், அவனே மூடிக்கிறான். மாஸ்டர் ஒரு சிங்கிள் டீ. சக்கரை கம்மி”. கால்தடுக்கினால்கூட அவர்களால் மேற்கோளாகவே முனக முடியும்.
கபே: தன்பரிமாற்றம்
புத்த கபே: தானிலா பரிமாற்றம்
ஆரம்ப கட்டத்தில் அந்தக் குருவே சொன்ன எளிமையான வரிகளை நினைவிலிருந்து சொல்கிறார்கள். “பாத்தீங்கன்னாக்கா, ஆன்மாவுக்கு எந்த சந்தோசமும் கிடையாது.ஆன்மாவை அடைச்சு வைச்சிருக்கிற பெட்டிதான் இந்த உடம்பு. இதிலேதான் சந்தோசம் இருக்கு…”
நானும் நீண்டநாட்களாக ஆன்மா என்பது கூரியரில் அனுப்ப அழுத்தி கட்டப்பட்ட பொட்டலம் என்றுதான் நினைத்திருந்தேன். பெண்களுக்கு மேல் “Fragile handle with care” என்று எழுதப்பட்டிருக்கும் என்று. ஆண்களுக்குமேல் “If undelivered return to this address” என்று அம்மாவின் விலாசம்.
உள்ளே என்ன இருக்கும் என்ற ஆர்வத்தை எழுப்புபவை. போலியா அசலா? அமேசான் வந்தபின் தெரியவந்தது, எந்தப் பொட்டலத்தையும் திறந்து உள்ளடக்கத்தை பார்க்கும் கணத்தை வீடியோ எடுத்துக் கொள்ளவேண்டும். ஆத்மா சுயம்பிரகாசமானது. பெட்டிக்குள் அது ஒளிவிட்டால் அது ஒளியா? ஷ்ரோடிங்கரின் தத்துவக்குழப்பம்!
”ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் ஞானம் கிடைச்சுது. ஆனா இப்ப அதுக்கு மார்க்கெட் இல்லை”
மேற்கோளர்கள் கொஞ்சம் கூவித்தெளிந்து கொக்கரக்கோ ஆனதும் சொந்தமாக மேற்கோள்களைச் சொல்கிறார்கள், அதை குருவின் பெயரில் சாற்றிவிடுகிறார்கள். “ஆன்மாவை எப்பவும் சீண்டிக்கிட்டே இருக்கக்கூடாது. அது பாட்டுக்கு அங்க இருக்கட்டும். நாம பாட்டுக்கு நாம இருப்போம். அதுக்கு வேணுங்கிறத அதுக்கு குடுத்தா அது நம்மள என்ன செய்யப்போகுது? நான் சொல்லல, குரு சொல்றார்”
ஆன்மா இப்போது ஒரு கூண்டுவிலங்கு ஆகிவிடுகிறது. கூண்டிலேயே தின்று, கூண்டிலேயே கழிந்து வைத்து, அதையே மிதித்து மிதித்து சுற்றிவந்து, சுவர்களை அறைந்து உறுமியபின் அப்படியே படுத்து தூங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அந்த கூண்டே பழகி பெரும்பாலான நேரம் மப்படித்ததுபோல பீளை பிதுங்கிய கண்களுடன் படுத்துக்கிடக்கிறது. சந்தடி கேட்டால் எழுந்து வாய்பிளந்து கொட்டாவிவிடுகிறது.
”வேண்டாம், வேலை கிடக்கு. கொண்டுட்டுப்போயி சேக்கணும்ல?”
இப்படியே மேலேபோய் , கொஞ்சம் முற்றிவிட்டால் சொந்தமாக மேற்கோள்களைச் சொல்லலாம். அது ஞானியாவதன் முதல்நிலை. “ஆத்மாங்கிறது டிரைவர் மாதிரி. சிந்தனைங்கிறது ஸ்டீரிங்கு. ஒளுக்கம்னா பிரேக்கு…நல்லா சிந்திச்சுப்பாக்கணும். இப்ப நாம ரோட்டிலே நேராட்டு போறோம்…”
ஆனால் இதை தகுதியானவர்களிடம் சொல்லவேண்டும். சின்னப்பிள்ளைகளிடம் சொல்லப்போய் “அப்ப ஹெட்லைட்டு?”என்று கேட்டு குழப்பிவிடும். என்னைப்போன்ற இலக்கியக்குழப்பர்கள் ஆத்மா ரைட் திரும்பவேண்டும் என்றால் கையை வெளியே விட்டு சிக்னல் காட்டி ஆட்டுமா என்று ஆழமாகச் சிந்தித்துக்கொண்டு விலகி நின்றிருப்ப்போம். போகன் சங்கர், அனீஸ்கிருஷ்ணன் போன்ற பேய்பிடியர்கள் டிரைவருக்கு பேக்சீட் டிரைவராக இருந்து ஆட்டிப்படைப்பது முற்பிறவியாக இருக்குமோ என நினைத்து பீதியுறுவார்கள்.
”கல்லுருண்டைய கீழே இறக்கிற வேலைக்கு நடுவே கொஞ்சம் சாப்பாடும் ரெஸ்டும்”
அடுத்தகட்டம் நாமே ஞானியாக ஆகிவிடுவது. தொடர்ந்து முயன்றால் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்தில் ஞானியாக ஆகிவிடலாம். யூடியூப் கமெண்டுகளை வைத்து கணக்கிட்டு தமிழகத்தில் பன்னிரண்டு லட்சத்துக்குமேல் மெய்ஞானிகள் இருப்பதாக கூகிள் சொல்கிறது. கூகிள் லாகிர்தம் அவர்களுக்கான விளம்பரங்களை இப்போது தயாரிக்கிறது. “ஞானிகளுக்கான தனி மேற்கோள்கள்” “நாற்பதுவகையில் மேற்கோள் தயாரிப்பது எப்படி?” “மேற்கோள்களை ஒடிப்பதும் திரிப்பதும், செயல்முறை விளக்கம்” “ஞானிகளுக்கான வாயுலேகியம்”.
ஞானியர் மேற்கோள்கள் இருவகை. அன்பான அறிவுரைகள். “அன்புநண்பரே, அன்பே உலகின் ஆதாரம். நான் யார் என எண்ணிப்பாருங்கள். நானே என்று எண்ணிக்கொண்டிருக்காதீர்கள். உங்கள் யூடியூப் உரையை நான் கேட்கவில்லை. என் உரையை கேட்க இணைப்பை சொடுக்கவும்” இது எளியவகை. யூடியுபில் கமெண்ட் போடுவதற்கு அப்பால் ஃபேஸ்புக் பதிவுபோடவும் உதவும். அடுத்த கட்டம் அலட்சியமான ஹாஸ்யம். “ஆத்மாவை கொண்டுட்டுப்போயிக் குடுத்தா அரைக்கிலோ சீனிகூட குடுக்கமாட்டான், என்ன நான் சொல்றது?”
”பரவால்ல டாக்டர், சொல்லட்டும். ஆனா நான் மூணாவது ஒப்பீனியனும் எடுத்த பிறகுதான் ஆப்பரேஷன் பண்ணிக்குவேன்”
ஒரு கட்டத்தில் நாம் பேசுவதெல்லாமே மேற்கோள்களாக ஆகிவிடுகின்றன. ஆத்திர அவசரத்துக்கு மேற்கோள் அல்லாத சொற்றொடர்க்ளைச் சொல்ல மிகவும் கஷ்டப்படவேண்டியிருக்கிறது.”ரொம்ப தாகமாக இருக்கு, ஒரு டம்ப்ளர் தண்ணி கிடைக்குமா?” என்பதை “தாகம் என்பதை தணிக்கும் ஆற்றலுள்ள தண்ணீருக்காக காத்திருப்பதுதானே வாழ்க்கை?”என்றுதான் சொல்ல வருகிறது. “தணிக்கிறதனாலேதான் அது தண்ணி’ என்ற சொல் எழுந்து நாக்கை முட்டுகிறது. ஆபத்தான கட்டம்தான். ஆனால் நாம் ஞானியாக ஆகிவிட்டோம்.
மேற்கோள்களின் மூலப்பொருட்கள் நான்கு.
1. அரைகுறை அறிவியல். “இப்ப co2ன்னா என்ன? கார்பன் டை ஆக்ஸைட். கார்பன் செத்த பிறகு உருவாகிற ஆக்சைடுன்னு வெள்ளக்காரன் சொல்றான். செத்தவாயு, அதனாலேதான் அதை வெளியே விடறோம். பிராணவாயுமான ஆக்ஸிஜனை இழுக்கிறோம்.”
2. அறிவியல்கடந்த அறிவியல் .”சூரியன் சின்னதாக ஆனா அது கருந்துளையா ஆகிறதுங்கிறாங்க. கருந்துளை சின்னதா ஆனா என்ன ஆகும்? கேட்டா முழிக்கிறானுங்க. ஹெஹேஹெ.அறிவியலுக்கு புரியாத விஷயம் அது. கருந்துளை சின்னதானா சிறுதுளை. இத நாம சொல்லவேண்டியிருக்கு! தால்வளையுள்ளே தயங்கிய சோதின்னு திருமூலர் சொல்றார்… என்ன? வளை! வளைன்னா என்ன துளை!]
”அவரோட மூளை குழம்பிட்டுதுன்னு தோணுது. பேக்கப் எடுத்து வச்சிருக்கீங்கள்ல?”
3. அன்றாட விவேகம் கொஞ்சம் எடுத்துக்கொள்ளவேண்டும். [சாப்பிடுறதுக்கு முன்னாடி தட்டிலே என்ன பரிமாறியிருக்கான்னு நல்லா பாத்துக்கிடணும். அப்பதான் எவ்ளவு சாப்பிடறதுன்னு கணக்கு போடமுடியும். எவ்ளவு முடியுமோ அவ்ளவு சாப்பிட்டுட்டு மிச்சத்தை நொறுக்குத்தீனியா எடுத்துக்கலாம். தட்டிலே வர்ர சாப்பாடு பிரார்த்தம். நாம சாப்பிடுறது சஞ்சிதம். கையிலே எடுத்துண்டு போறது ஆகாமியம். பெரியவா சும்மா சொல்லலை!]
4. அதை ஒரு மாயத்துடன் பிணைக்கவேண்டும். [நாம சாப்பிடுற சோறு என்ன ஆகுது? அதிலே இருக்கிற அக்கினி அக்கினியைச் சேருது. தண்ணி தண்ணியைச் சேருது. வாயு வாயுவா சோன்னு வெளியே போயிடுது.அன்னம் என்ன ஆகுதுன்னு உங்களுக்கு தெரியும். இங்க பேசினா அசூசி. சரி, ஆகாசம் எங்க போகுது? அது ஓங்காரத்திலே கலந்துடுது. ஓங்காரம் சரியா கலக்கலேன்னா அது ஆங்காரம்]
“அதாவது நீங்க என்ன சொல்றீங்கன்னா, கடவுள் என்னைய காப்பாத்த நான் விடலேன்னா கடவுள் என்னை என்ன செய்வாரோ அதிலே இருந்து என்னைய காப்பாத்துறதுக்கு கடவுளை நான் அனுமதிக்கணும்னு கடவுள் விரும்புறார், சரியா?”
இந்த நான்கு வகை மேற்கோள்களைக் கலந்து சொல்ல ஆரம்பித்தால் நாம் முழுமையான ஞானியாக ஆகிவிடுகிறோம். நாம் ஞானியாக ஆகவேண்டும் என்றால் நம்மை ஞானியாக மற்றவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் நம்மை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றால் நாம் அவர்களை ஞானிகளாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஓஷோ உலகுக்குக் காட்டிய வழி அதுவே. அத்தனைபேரையும் ஓஷோவாக ஆக்குவது. அதன் பின் எவரும் ஓஷோவை மறுக்க முடியாது. எவர் தன்னைத்தானே மறுக்க முடியும்? ஓஷோ ஆவதற்கான எளிய வழியையே நாம் ஓஷோவியம் என்கிறோம்.
”தப்பு செய்றது மனுஷ இயல்பு. அதை இன்னொருத்தன்மேலே குற்றம்சாட்டுறது அடிப்படை மனுஷ இயல்பு”
ஓஷோ ஆனபிறகு என்ன செய்யவேண்டும்? ஓஷோவை பரப்ப வேண்டும். அது நம்மை நாமே பரப்புவதுபோல. இந்த உலகில் வைரஸ் முதல் அரசியல்வாதி வரை அனைவரும் செய்வது அதைத்தானே? ஓஷோ ஞானி என்றால் நானும் ஞானி என்று பொருள். ஓஷோவை சாமானியர் புரிந்துகொள்ள முடியாது என்றால் நான் சொல்வதையும் புரிந்துகொள்ள முடியாது என்று பொருள். ஓஷோவை கேள்விகேட்கக்கூடாது என்றால் என்னை கேள்விகேட்டால் கோபம் வரும் என்று பொருள்.
கொசுபோல அனைத்தின்மேலும் பறந்து ஒரே பாட்டை பாடிக்கொண்டிருக்கையில் நாம் ஞானப்பரப்பலைச் செய்துகொண்டிருக்கிறோம். ஆகவே மேற்கோள்கள் தேவை. மேற்கோள்கள் என்பவை தங்களை வந்தடையும் அனைத்தையும் மேற்கோளாக ஆக்கிவிடுபவை. கரம்சிரம்புறம் நீட்டாதீர், சாப்பிட்டபின் இலையை எடுக்கவும் எல்லாமே மேற்கோள்தான்.
தன்னை அறிந்து அடங்கி அமைதல்
மேற்கோள்களைத் திரட்டுவது மிக எளிது. ஓஷோ புத்தகங்கள் ஐந்து போதும். [ஐந்திலும் ஒரே உள்ளடக்கம்தான் என்பதனால் படிப்பது எளிது] ஜித்து கிருஷ்ணமூர்த்தி என்றால் ஒரே புத்தகமே போதும். [அதை ’நீபாட்டுக்கு இரு ராசா’ என ஒற்றைச்சொற்றொடராக ஆக்கிவிடலாம்]. ஸ்ரீபகவத் புத்தகம் என்றால் அட்டையே போதும். ஆசான்ஜி போன்றவர்கள் என்றால் நாம் பல்விளக்காமலிருந்தாலே போதும், பேசுவதெல்லாம் மேற்கோளே.
ஒரு கட்டத்தில் நாம் கண்டடைகிறோம். ஒரு குறிப்பிட்டவகையில் அழுத்திச் சொல்லப்படும் எல்லாமே ஞானமேற்கோள்தான். ’போறப்ப கதவைச் சாத்திட்டுப்போய்யா’ என்றால் அது ஒரு கோரிக்கை. ஆழ்ந்த குரலில் ‘போகும்போது கதவைச் சாத்திவிட்டுச் செல்லுங்கள்’ என்றால் அது ஒரு மெய்ஞானம். அவ்வளவுதான், ரொம்ப சிம்பிள்.
‘ரொம்பநாள் சொற்கத்துக்கும் நரகத்துக்கும் தான் அனுப்பிட்டிருந்தோம். அப்றம் ரீசைக்கிளிங் சிஸ்டம் வந்திட்டுது”
20 ஊதிப்பெருக்கவைத்தல் 11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்
கதாநாயகி- கடிதங்கள் 10
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு தமிழரசி எழுதுவது
புத்தகத்தை திறந்து நாம் புத்தக உலகத்துக்குள் நுழையும் போது புத்தக உலகத்திலிருந்ததை திறந்து வெளியே விடுகிறோம். நாம் உள்நுழைந்து வாழ்வதைப்போல வெளி வந்ததும் வாழ்கிறது. பரஸ்பர உரையாடல் நிகழ்ந்து அறிமுகமாகிதான் உள்நுழையவோ வெளியேறவோ முடியும். எத்தனை புத்தகம் படித்தாலும் அத்தனை உலகத்திலும் உள்நுழைந்து உரையாடி அதிலிருப்பதை அவிழ்த்து வெளியே விடுகிறோம்.
அது தேவதையாகவுமிருக்கலாம். பிசாசாகவுமிருக்கலாம். பரஸ்பர அறிமுகமிருப்பதால் சந்திக்க நேரும் போது புன்னகை ,பூக்கவோ துணுக்கறவோ, சீறவோ, சினக்கவோ நேரிடலாம்.
மெய்யன் பிள்ளையின்உள்நுழைந்ததும் அவிழ்த்து விட்டதும் சந்திக்கும் புள்ளியில்தான் ஹெலானாவின் உருவெளித்தோற்றத்தை பார்பப்பதும் சீறுவதும் சினப்பதுவும் ஆங்கிலத்தில் பேசுவதும் தன்னிலையழிவதும் நடக்கிறது.
இந்த சிறிய அளவு உளச்சிதைவுயில்லையென்றால் நாட்டில் பிறந்தவன் காட்டில் வாழ முடியாது. மெய்யன்பிள்ளை புத்தக வாசிப்பை நாளிதழைக்கூட வாசிப்பதை நிறுத்திதான் மீண்டார்.
ஹெலனா புலியின் முன் சாப்மானை உதைத்துத் தள்ளி பிரெஸ்லெட்டை வீசியெறிந்ததில் ஆச்சரியமில்லை. பெண்கள் மனதுக்கு ஒவ்வாதவற்றை திரும்ப திரும்ப செய்யவோ அணுபவிக்கவோ நேரிடும் போது மனதுக்குள் கசந்து கசந்து மனதுக்குள் இனிமையை அறியும் சாளரம் ஒன்றை இறுக்கி மூடிக் கொள்கிறார்கள்.
தனக்கு அடையாளம் தேடியலையும் ஹெலானா போன்ற பெண் எத்தனை கசந்திருப்பாள். ஆணை வைத்துதான் அடையாளம் எனில் அவள் போடும் வேடமும் சிரிப்பும் நாசூக்கான பேச்சும் கண்டிப்பாக ஆணை கவிழ்த்து போட்டு மிதிக்கவே செய்யும்.
நீ சுயமாக அரசியாக முடியாது. அரசியாக வேண்டுமென்றால் அரசனுக்கு மகளாக பிறக்க வேண்டும் அல்லது அரசனை மணமுடிக்க வேண்டும் என்றால் பெண் என்ன செய்வாள். மன்னன் மகளாக பிறப்பது அவள் கையிலில்லை. மணமுடிக்கவும் முடித்தவனை கைக்குள் வைக்கவும் சகல அஸ்திரங்களையும் பயன்படுத்துவாள்.
ஹெலானா நிறைவடையாமல் புத்தகத்துள் இருக்கிறாள். ஆண்களே கவனம்.
நன்றி.
தமிழரசி.
அன்புள்ள ஜெயமோகன்,
புற உலகம் பொருள்களால் ஆனது. ஆகவே தர்க்கத்திற்கு இடமளிப்பது. அக உலகம் உணர்வுகளால் ஆனது. தர்க்கத்திற்கு அதீதமானது. புற உலகில் ஆளுமை செலுத்தும் ஆண்கள் அக உலகில் பெண்களைச் செலுத்தும் விசைகளை புரிந்து கொள்ள வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்து முடியாமல் இறுதியில் உதை வாங்கி புலி வாயில் அகப்படுவதும் , தற்கொலை யில் மடிவதும் நல்ல முரண்பாடு.
நெல்சன்
அன்புள்ள ஜெ
கதாநாயகி நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒரே மூச்சில் வாசிக்க முடியாத நாவல். ஒரே வீச்சில் செல்லாமல் அங்குமிங்கும் தொட்டுக்கொண்டே செல்கிறது. நாவலின் முக்கியமான அம்சமே அதில் இருக்கும் ‘ரிப்பீட்டிங்’தான் ஒரே வகையான வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் ரோம் முதல் திருவனந்தபுரம் வரை நடக்கின்றன. அதற்கு ஆண்களும் பெண்களும் எதிர்வினையாற்றுவதில் மிக நுட்பமான வேறுபாடுதான் இருக்கிறது. ஒரே வகையான எதிர்வினை, ஆனால் ஓரிரு சொற்கள் மாறியிருக்கின்றன
அதேபோல உணர்ச்சிகளும் எவருடைய உணர்ச்சிகளென்று தெரியாமல் கலந்துள்ளன. ஒருவருடைய உணர்ச்சிகள் இன்னொருவருடைய உணர்ச்சிகளாக மாறியிருக்கின்றன. விர்ஜீனியா ஈவ்லின் ஃபேன்னி ஹெலெனா நால்வரும் ஒன்றுகலந்துள்ளார்கள். நால்வரின் சொற்களும் மெய்யனின் சொற்களும் ஒன்றாகின்றன. இந்த ரிப்பீட்டிங் அம்சத்தை கணக்கில்கொண்டுதான் கதாநாயகியை சரியாக வாசிக்கமுடியுமென நினைக்கிறேன்
ஆ.சிவக்குமார்
கதாநாயகி,கடிதங்கள் -5 கதாநாயகி கடிதங்கள்-4 கதாநாயகி- கடிதங்கள் 3 கதாநாயகி – கடிதங்கள்-2 கதாநாயகி- கடிதங்கள்-1
மாபெரும் தாய் –கடிதங்கள்
சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன்
ஜெ,
திரு. அகர முதல்வனின் எண் என்னிடம் இல்லை, இதை அவருக்கு அனுப்பி விடவும்.
“மாபெரும் தாய்” ஒரு உக்கிரமான கதை. இவ்வளவு கனன்ரெரியும் விவரிப்புகள் கொண்ட வெடித்து மின்னும் கற்பனை கொண்ட எழுத்தை நாம் அரிதாகவே வாசிக்கிறோம். முடிவிலாது பிறப்பிக்கும் தாய் என்கிற கதைக் கோடு இருந்தாலும் இதன் விவரணைகளே இந்த சிறுகதையின் சிறப்பு. இதில் காட்டப் பட்டிருக்கும் காட்சிகளும் அதை வர்ணிக்க துரத்திச் செல்லும் மொழியும் இதை ஒரு வாசிப்பு வளமிக்க கதையாக நம் முன் நிறுத்தி உள்ளது.
“தொன்மை உறைக்குள் செருகப்பட்ட மிகநீண்ட கருப்புநிற வாள்களாய் திசையெங்கும் பனைகள் உடல் நீட்டி நின்றன”
என்கிற வர்ணனையில் நம் வாசிப்பு பற்றிக் கொள்கிறது.
“மரத்தின் பொந்துக்குள் ஒரு நீலமலர் மட்டும் தனித்திருந்தது. பொந்தின் உள்ளே வரையப்பட்டிருந்த ஓவியத்தின் கோடுகளைக் கண்டதும் என் தண்டுவடத்தின் ரத்தவாசம் மூக்கைத் தீட்டியது. கால்களை அகல விரித்திருக்கும் பெண்ணின் ஆதிவாசலில் தீயின் கனி சுடர்ந்துகொண்டிருந்தது”
என்கிற வர்ணனை ஒரு அபாரமான காட்சி அனுபவம்.
பிரமிளின் காடன் கண்டது, ஜெயமோகனின் அம்மன் மரம் போன்ற கதைகளில் இதே போன்றதொரு உணர்வினை பெற்றுள்ளேன்.
நல்லதங்காள் போன்ற நாட்டார் தொன்மங்கள் வரிசையில் ஒரு நவீன தொன்மமாக வெற்றிகரமாக ஆச்சியை படைத்துள்ளார் அகர முதல்வன். வழிபடும் ஓவியத்தில் இருந்து ஒரு மந்திரக் கத்தியுடன் பிறந்து இறுதியில் அந்த ஓவியத்தில் சங்கமிக்கிறாள் ஆச்சி.
அவள் வழிபாடும் தன் பெண்ணுறுப்பில் பாய்ச்சிக் கொள்ளும் கத்தியும், கோபிகாவின் கருக் கலைப்பும் ரத்தத்தில் எழுதப்பட்ட பக்கங்கள். ஒரு இனத்தின் ஆழத்தில் தாய்மையும் குருதி காண் கொற்றவையும் ஒருங்கே அமைந்திருக்கும். அது தான் ஒருங்கே அவ்வினத்தை புரந்து கொண்டும் குருதி குடித்துக் கொண்டும் இருக்கும். இச்சிறுகதையில் அத்தன்மை நம் மனதில் ஒரு பழுக்க காய்ச்சிய கம்பியால் ஒரு ஆழமான சித்திரமாக எழுதப் பட்டுள்ளதையும் அது ஒரு இறந்த காலத வடுவாக அமைந்துள்ளதையும் இறுதியில் நாம் உணர்கிறோம். இது காட்டும் அரசியல் முகம் தனியே வாசிக்கத் தக்கது.
ஒரு வேட்டை நாய் போல அச்சிறுவன் பின்தொடரும் இடமும் அப்பகுதியை விவரிக்கையில் எழுத்தாளனின் சொல் பெற்ற விசையும் நம்மை திகைக்க வைக்கிறது. இக்கதையின் வாசகனாக நாமும் ஒரு நாய் போல அறியாபாதையில் நீட்டிய வாலுடன் முகர்ந்து கொண்டே சென்று ஒரு தொன்மையான குகைக்கு முன் நின்று அங்கு வரையப்பட்டுள்ள மாபெரும் தாயை திடுக்கிட்டு தரிசிக்கும் ஒரு தகிக்கும் அனுபவம் இக்கதை.
கிருஷ்ணன்,
ஈரோடு.
அன்புள்ள ஜெ
அகரமுதல்வனின் மாபெரும் தாய் ஒரு அருமையான கதை. ஒரு பழைய தொன்மத்தை நவீன தொன்மமாக ஆக்கி அளிக்கிறது இந்தக்கதை. நவீனச் சிறுகதையின் இலக்கணம் ஏதும் இல்லாமல் வெறும் ஒரு கதையாகவே நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் இதை இலக்கியமாக ஆக்குவது அதில் வரும் ரத்தம் என்ற குறியீடு. தாய்மையின் ரத்தம் போரின் ரத்தம் என்ற முரண்பாடு. ஆச்சி தாய்மையின் ரத்தத்தின் அதிபதி. போரின் ரத்தம் அவளை என்ன செய்யும் என்ற கேள்வியுடன், ஒரு தவிப்புடன் கதை முடிகிறது.
யோசித்துப் பார்க்கையில் இத்தகைய ஒரு கதை ஒரு சைவப்பின்னணியிலிருந்தே வரமுடியும் என்பது ஆச்சரியமளிக்கிறது. காரக்கால் அம்மையாரின் கதை நினைவில் வந்து தொட்டுக்கொள்கிறது. பேயவள் காண் எங்கள் அன்னை – பெரும் பித்துடையாள் எங்கள் அன்னை என்ற பாரதியின் வரியும் வந்து இணைந்துகொள்கிறது
எம்.மகேந்திரன்
மதார் கடிதங்கள்-3
அன்புள்ள ஜெ
கவிஞர் மதாருக்கு விருது அறிவிக்கப்பட்ட பின் அவருடைய கவிதைகளை வாசித்தேன். ஏற்கனவே நீங்கள் பேசிய உரையை கேட்டிருந்தாலும் அப்போது அக்கவிதைகளை வாசிக்க தவறிவிட்டேன். அல்லது இக்கவிதைகள் அன்றைக்கு மின்நூலகா வரவில்லை என நினைக்கிறேன்.
நான் சமீபத்தில் தமிழில் வரும் கவிதைகளை வாசிக்கையில் நுண்சித்தரிப்பு என்பது தமிழ்க்கவிதைக்கு பெரிய தீங்கைச் செய்துவிட்டதோ என்ற எண்ணத்தை அடைந்திருக்கிறேன். ஏனென்றால் இப்போது எல்லாரிடமும் செல்போன் கேமரா வந்து ஃபோட்டோ மலிந்துவிட்டதைப் போல. ஒரு படத்தை ஏன் எடுக்கவேண்டும் என்றே எவரும் நினைப்பதில்லை. கேமரா இருக்கிறது, ஆகவே படம் எடுக்கிறார்கள். ஃப்ரேம் பார்ப்பதில்லை. காம்பினேஷன் பார்ப்பதில்லை. லைட்கூட பார்ப்பதில்லை. பல்லாயிரக்கணக்கான ஃபோட்டோக்கள். அவற்றுக்கு ஒரு பத்து நிமிட ஆயுள் கூட கிடையாது.
அதேமாதிரி வாழ்க்கையை ஒரு ஸ்னாப் ஷாட் ஆக எடுத்து அப்படியே வைத்துவிட்டு போகிறார்கள். ஒரு காட்சி. ஒரு வாழ்க்கைச்சந்தர்ப்பம். அதன் அர்த்தமென்ன என்று சிந்திப்பதில்லை. அதில் இருந்து ஒரு பயணம் நிகழ்வதில்லை. அந்த காட்சியில் இருந்து அர்த்தம் எடுக்கலாம். ஆனால் அது அபூர்வமானதாக இருக்கவேண்டும். ஏராளமான காட்சிகளை கவிதைகள் வைத்துக்கொண்டே இருந்தால் காலப்போக்கில் எதிலும் நம் கவனம் நிலைகொள்வதில்லை. ஆகவே அர்த்தங்கள் உருவாவதுமில்லை.
ஒருகாலத்தில் படிமங்களைக் கண்டு சலித்துப்போய்த்தான் நுண்சித்தரிப்புக் கவிதைகளை வாசித்தோம். இன்றைக்கு நுண்சித்தரிப்புக் கவிதைகள், பட்டியல் கவிதைகள், பிளெய்ன் பொயட்ரி எல்லாமே சலிப்பை அளிக்கின்றன. மதாரின் கவிதைகளில் வெறும் நுண்சித்தரிப்புக் கவிதைகள் இல்லை. படிமங்களாக ஆக்கும் முயற்சியும் இல்லை. ஒரு காட்சியில் இருந்து இன்னொரு தளத்திற்கு நகர்வு இருக்கிறது. ஒரு விரிவு இருக்கிறது
தாத்தாவின் கண்ணாடியை
இழுக்கும் பேரன்
பார்வையை ஆக்குகிறான்
தெளிவற்றதாக
மரணத்தருவாய் காட்சியாக
பேரனிடம் கண்ணாடியை
இழுக்கும் தாத்தா
ஒவ்வொரு முறையும்
திரும்புகிறார் வாழ்க்கைக்கு
பேரன் திரும்பவும்
இழுக்கிறான்
தாத்தா மறுபடியும்
இழுக்கிறார்
தாத்தா சிரிக்கிறார்
பேரன் இழுக்க ஒவ்வொரு தடவையும்
தாத்தா அனுமதிக்கிறார்
அணிந்துகொள்ள அனுமதிக்கவில்லை.
என்ற கவிதையை இரண்டு முறைக்குமேல் வாசித்தபோதுதான் கவிதை முழுமையாகவே என் உள்ளத்துக்குள் வந்தது. கண்ணாடிதான் வாழ்வு. அதைப்பிடுங்கியதும் மரணத்தின் மங்கல். பேரன் தனக்கு சாவை அளித்து அளித்து விளையாடுவது அவருக்கு ஒரு கட்டத்தில் பிடித்திருக்கிறது. அதுவரைக்கும் ஒரு கவிதை. ஆனால் தான் காணும் முதுமையின் வாழ்க்கையை பேரன் காண அவர் அனுமதிக்கவே இல்லை என்ற இடத்தில் கவிதை இன்னொரு தாவுதலை நிகழ்த்துகிறது.
வாழ்த்துக்கள் மதார்
எம்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ,
கவிஞர் மதாருக்கு இவ்வாண்டு விருது அளிக்கப்படுவதை அறிந்தேன். ஆண்டுதோறும் அறிமுகமாகும் இளம் கவிஞர் நம் உள்ளத்தில் சிலகாலம் வீற்றிருக்கிறார். இது ஓர் ஆச்சரியம். நாம் அவருடைய கவிதைகளைச் சாதாரணமாக ஒரு இதழில் அல்லது இணையத்தில் வாசித்தால் பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் ஒரு விருது கிடைத்து அந்தக் கவிஞர் பற்றி ஒரு பேச்சு உருவாகி அவருடைய கவிதைகளை தொடர்ந்து படிக்கும்போது ஒரு பெரிய வாசிப்புநிலை கூடுகிறது. அக்கவிஞரின் உலகம் தெளிவாக பிடிகிடைக்கிறது. எல்லா வரிகளுமே மேலும் மேலும் அர்த்தங்களை அளிக்க ஆரம்பிக்கின்றன
துக்கம் ஒரு பரிசுப்பொருள்
நெடுநாள் என் மேசைமீது கிடக்கிறது
என்ற வரியை என் டைரியில் குறித்துவைத்தேன்
சுதாகர்
வெயில் பறந்தது தபாலில் பெற :
https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdN‘மாமலர்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’ நாவல் தொடரில் 13ஆவது நாவல் ‘மாமலர்’. ‘மாமலர்’ என்பது, ‘கல்யாண சௌந்திகம்’ என்ற மலர். இது, கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். இது, பீமன் அதன் அகத்தால் மட்டுமே நுகர்ந்தறியும் மெய்மையின் மலர்வடிவம்.
‘மாமலர்’ என்ற சொல், சங்க இலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
“கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்” (குறுந்தொகை, பாடல் எண் – 51)
நெய்தல் நிலங்களில் வளரும் முட்கள் நிறைந்த கழிமுள்ளிச் செடியில் பூத்த கரிய நிறமுடைய முண்டக மலர். இங்கு ‘மா’ என்பது, ‘கருமை’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. ஆனால், இந்த நாவலில் பீமன் அடைவது, தடித்த, தூய வெண்ணிற இதழ்களைக்கொண்ட, காம்பில் பால் வடியும் மலர். இங்கு ‘மா’ என்பது, ‘பெரிய’ என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் சிலவற்றுள் ‘மாமலர்’ என்ற சொல்லை வெவ்வேறு பொருண்மைகளில் பயன்படுத்தியுள்ளார்.
சான்று – 1
முதுயாதவர் சத்யபாமாவை உவமைப்படுத்திக் கூறும்போது, அவளை யாதவகுலம்பூத்த மாமலர் என்கிறார்.
“அமர்ந்திருந்த முதுயாதவர் எழுந்து கைகளைக் கூப்பியபடி, “நாங்கள் சென்று அவன் காலடியில் விழுந்து மன்றாடுகிறோம் அன்னையே. யாதவகுலம்பூத்த மாமலர் நீ. உனக்கன்றி எவருக்குள்ளவன் அவன்?” என்றார்.” (இந்திர நீலம்-12, பகுதி-3-வான்தோய் வாயில்-1)
சான்று – 2
மெய்மையைத் தேடி அலையும் தருமர் இறுதியில் பெருமலைகள் சூழ்ந்த இடத்திற்குச் செல்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் உளமயக்கினை விரித்துக்கூறும்போது, மலைமுகடுகளே மலர் இதழ்களாகி, தருமரின் மனத்தைச் சூழ்ந்துகொள்வதாகக் காட்சிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.
“தருமன் மூச்சுவாங்க இடையில் கைவைத்து நின்றபோது அவரை மலைமடிப்புகள் முழுமையாகவே சூழ்ந்திருந்தன. தொலைதூரத்தில் மலையடுக்கின் வெளியிதழ்கள் நீலநிறமாகத் தெரிந்தன. அருகே ஆழ்ந்த மஞ்சள்நிறம் கொண்டு அலைவடிவாகச் சூழ்ந்திருந்தன. மாமலர். அவ்விதழ்கள் மிக மென்மையானவை. உள்ளே தேனருந்த வந்த வண்டை மெல்லப் பொதித்துச் சூழ்ந்துகொள்பவை. அவ்வாறு எண்ணியதுமே தொலைவிலிருந்த மலைகள் மிக மெல்ல மேலெழுந்து வருவதாகவும் சற்று நேரத்திலேயே தலைக்குமேல் கூம்பிக்கொள்ளப் போவதாகவும் உளமயக்கு எழுந்தது.” (சொல்வளர்காடு–59, பத்தாம் காடு, கந்தமாதனம்–1)
சான்று – 2
தெய்வத்தின் கையில் இருக்கும் அருள்வடிவாக மாமலர் இருப்பதாகக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.
“சுருங்கி விரியும் காலப்பெருக்குக்குள் காலமென்று தன்னை நிகழ்த்தும் ஒன்று அழியாதிருக்கலாம். பொருள் கொண்டு பொருள் அளித்து பிறந்து இறக்கும் சொல்லுக்குள் சொல்லென்று வாழும் தெய்வம் என்றுமிருக்கலாம். ஒரு கையில் மின்னல். மறு கையில் மாமலர். இரு கைகளில் இசையாழ். ஏடும் ஆணியும். விழிமணிமாலை எனும் காலப்பெருக்கு.” (கிராதம் – 16 (அத்-22) )
என்னைப் பொருத்தவரை ‘மாமலர்’ என்பது, பெருங்காதலின் தூயமலர். இது கனவில் நுகரத்தக்க பெருமணம்கொண்ட களவுமலர். இது கன்னியர் நினைவில் சுழன்று களவாகி, கற்பாகி ஓடும் இல்வாழ்க்கையின் அகமலர். இது காதல் பெருக்கெடுக்கும் பெருநினைவின் கரையெல்லாம் மணக்கும் மாமலர்.
‘கிராதம்’ நாவலுக்கும் இந்த ‘மாமலர்’ நாவலுக்கும் நேரெதிரான ஒரு வேறுபாடு உள்ளது. ‘கிராதம்’ நாவல், நேரடிப் புதிர்களையும் அதற்கு உரிய அறிவார்ந்த, வெளிப்படையான விடைகளையும் கொண்டது.
சான்று – அர்சுணனின் நாற்திசை வெற்றிகள் அனைத்துமே அவனுக்குத் தேர்வுபோல வைக்கப்பட்ட நேரடிப் புதிர்களைத் தன் அறிவுத்திறத்தால் விடுவித்தமையால் விளைந்தவையே.
‘மாமலர்’ நாவல், முக்காலத்தால் கட்டுண்ட, அவிழ்க்க இயலாத புதிர்களும் விடைகளும் நிரம்பியது. பீமன் அவற்றை அறிய முயற்சிசெய்து, தவித்து, நீண்ட நெடிய காலப்பயணத்தை மேற்கொண்டு, இறுதியில் தன்னளவில் மட்டுமே மெய்மையை அறிந்து, திரும்பிவருகிறான்.
‘வெண்முரசு’ தொடர் நாவல் வரிசையில் இந்த நாவல் ‘நீலம்’ நாவலைப் போலவே தனித்து விளங்குகிறது. ‘நீலம்’ நாவல் மொழியிலும் கதைப்பின்னலிலும் தனித்துவம் வாய்ந்தது. அதுபோலவே, இந்த ‘மாமலர்’ நாவலும் இரண்டு விதங்களில் தனித்துவம் வாய்ந்தது என்பேன்.
ஒன்று – இந்த நாவல் முழுக்க முழுக்க கனவு சார்ந்தது. கனவால் மட்டுமே தொட்டறியக்கூடிய ஒரு மலரின் மணம் பற்றிய தேடலை மையமாகக் கொண்டது.
இரண்டு – இந்த நாவலில் முக்காலமும் (சென்றவை, நிகழ்பவை, வருபவை) கலைந்து கலைந்து மீள்கின்றன. தனிஊசலின் அலைவுபோலப் பின்னுக்கும் முன்னுக்கும் ஆடி ஆடி இறுதியில், நடுவில் நிலைகொள்கிறது.
‘வெண்முரசு’ தொடர் நாவல்களில் இடம்பெற்றிருக்கும் ‘பிள்ளைப்பெரும்பித்து’ என்ற ஊழின் படைக்கலம், இந்த நாவலிலும் வலுவாக இடம்பெற்றுள்ளது. புரூரவஸ் – ஆயுஸ், ஆயுஸ் – நகுஷன், சுக்ரர் – தேவயானி, விருஷபவன் – சர்மிஷ்டை, யயாதி – புரு என இந்த வரிசை நீள்கிறது.
தர்மரைப் போலவும் அர்சுணனைப் போலவும் பீமனும் தனக்கான மெய்மையைத் தேடிச் செல்கிறான். ஆனால், காலத்தின் வழியாகப் பயணித்து, திரௌபதியின் பிற நான்கு உருவங்களையும் (ஊர்வசி, அசோகசுந்தரி, தேவயானி, சர்மிஷ்டை) கனவில் கண்டும் நேரில் சிற்ப வடிவில் கண்டும் மீள்கிறான்.
அதனால்தான் என்னவோ இந்தப் பிறவியில் திரௌபதி ஐந்து முகமாகக் காணப்படுகிறாள் போலும். அதனால்தான் அவளுக்கு ஐந்து கணவன்மார்களோ! இந்தப் பிறப்பில் ஐந்துமுகம் கொண்ட குத்துவிளக்காகத் திரௌபதி விளங்குகிறாள். அவளின் பெருங்காதற்சுடர்முகத்தின் நிழல் பீமன் மீதே விழுந்து, படிகிறது. அதனால்தான் அவள், ‘கல்யாண சௌந்திகம்’ மலரைப் பற்றிப் பீமனிடம் மட்டும் பேசுகிறாள். அதைக் கொண்டுவருவதற்காகவே பீமன் காலங்களின் ஊடாகப் பயணிக்கிறான். மனைவியின் அகத்தை மலர்த்தும் கணவனாகத் திரௌபதிக்குப் பீமனே திகழ்கிறான்.
இந்த நாவலில் காலங்களைக் கலைத்தாடுபவராக ஸ்ரீராமபக்த அனுமன் வருகிறார். அவர் தன்னுருவை மறைத்து, காலத்தின் ஏடுகளைப் புரட்டவல்ல குள்ளர் முண்டன் ‘குஸ்மிதன்’ என்ற நபராக உருமாறி வருகிறார். பீமனின் அகத்தேடலுக்கு உறுதுணையாகிறார். அர்சுணனுக்கு இந்திரன் எப்போதும் தோன்றாத் துணையாக இருந்து உதவுவதுபோலப் பீமனுக்கு அனுமன் எப்போதும் தோன்றாத் துணையாகவே இருந்து உதவுகிறார். தன்னுடைய படைக்கலமான கதாயுதத்தைப் பீமனின் கையில் கொடுத்துச் செல்கிறார்.
பீமன் பிறந்த போது மந்திக்குரங்கு வந்து பாலூட்டியது. பீமனுக்குத் தோழமைகளாகவும் சேவகர்களாகவும் குரங்கு இனமே அமைந்தது. பீமன் பெரும்பாலும் வாழ்வது குரங்குகள் குடியிருக்கும் காடுகளும் குன்றுகளும்தான். பீமன் பெரும்பாலும் பேசும் மொழியும் விலங்குகளின் (குரங்கினத்தின்) மொழிதான். பீமன் தன்னைக் காட்டாளனாகவும் விலங்கினத்தானாகவும்தான் பெரிதும் உணர்கிறார். பீமன் பெருங்கானகன். அவன் குரங்கினத்தின் பெருந்தலைவன். இவற்றை உறுதிப்படுத்தும் வகையில், இந்த நாவலின் இறுதி அத்யாயத்தில் வரும் ஓர் உரையாடல் அமைந்துள்ளது.
“ பீமன் புன்னகைத்தான். “ நாம் இங்குக் கொய்து உண்டிருக்கிறோம் , மூத்தவரே ! ஆகவே , விதைத்துச்செல்லும் கடன்கொண்டிருக்கிறோம் ” என்றான் சகதேவன். “ ஆம் ” என்றபடி பீமன் எழுந்தான். “ உங்கள் குலத்தார்தான் உண்ணப் போகிறார்கள் ” என்று நகுலன் சிரித்துக்கொண்டே சுட்டிக்காட்டினான். அப்பால் சில குரங்குகள் மிகுந்த ஆர்வத்துடன் நோக்கி அமர்ந்திருந்தன. ”
‘கல்யாண சௌந்திகம்’ தான் இந்த நாவலின் மையம். அதைப் பற்றிய முழுவிபரமும் தொடக்கத்திலேயே கொடுக்கப்பட்டுவிடுகிறது.
“ கல்யாண சௌகந்திகம் என்றொரு மலரைப் பற்றிச் சூதர்கள் பாடுவதுண்டு. கன்னியரின் துயிலில் மட்டுமே மணம் பரப்பும் தேவமலர். மூன்றாம் விண்ணில் கந்தர்வர்களின் உலகின் கன்னிமூலையில் அம்மலர் பூத்த மரம் நின்றிருக்கிறது. அதன் மலர்களில் ஒன்று பின்னிரவுப் பொழுதில் கந்தர்வர் மண்ணிலிறங்கும் போது அரிதாகத் தானும் நழுவி மண்ணில் உதிர்கிறது. அதைச் சிலர் எரிவிண்மீன் எனக் காணக்கூடும். எரிவிண்மீன் சிவந்த நிறம்கொண்டது. கல்யாண சௌகந்திகம் வெண்ணிறமானது ……… அந்த நறுமணம் அது விழும் இடத்தில் இருக்கும் கன்னியரின் கனவுக்குள் எழும். அவர்களை அது காதலில் அகம் ஒளிரச்செய்யும். விழித்த பின் பிச்சிகளாக்கும். சூழ்ந்திருக்கும் அனைத்தையும் வெறுக்க வைக்கும். உடலுருகி விழிகுழிந்து வாய்உலர்ந்து நோய்கொள்வார்கள். அறியாத ஒன்றை மட்டுமே எண்ணி எண்ணித் தவமிருப்பார்கள். கல்யாண சௌகந்திகத்தின் மணம்பெற்ற பெண் மானுட ஆண்களை விரும்புவதில்லை. அவள் உடலுருகி அழகிழந்துகொண்டே இருப்பாள். ஆனால், பின்னிரவின் ஒளியில் பேரழகியாவாள். அப்போது அவ்வழி செல்லும் கந்தர்வர்கள் அவளை ஒரு மலரென மணம்பெற்று அருகணைகிறார்கள். அழகனாகிய கந்தர்வன் ஒருவன் வந்து அவள் கைப்பற்றி அழைத்துச் செல்வான் ” என்றான் பீமன்.
முழுத் தகவலையும் வைத்துக்கொண்டும் அதை அடையமுடியாமல் தவிக்கிறான் பீமன். ‘ ‘குதிரைக்கொம்புபோல’, ‘ஆகாயத்தாமரைபோல’ இல்லாத ஒரு மலருக்காகத்தான் இந்தத் தேடலோ?’ என்று நம்மைச் சிந்திக்க வைக்கிறது.
நோக்கக் குலையும் அனிச்சமலர் போலவே இந்தக் ‘கல்யாண சௌந்திகம்’ மலர், நினைக்குந்தோறும் தன் மணத்தைச் சிதைத்துக்கொள்கிறது. அதனாலாலேயே இது கைப்பற்ற முடியாத மலராகவும் கனவில் அல்லது நினைவில் மட்டுமே நுகரக் கூடிய மலராகவும் இருக்கிறது.
இந்தப் பூமியில் மானுடர் செய்வதற்கு என எது உண்டு என்பது பற்றி எழுத்தாளர் விளக்குகிறார். அதைத் துர்வாச மாமுனிவரின் கூற்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
துர்வாச முனிவர்,
“நானறிந்ததெல்லாம் நாம் நம்மை ஆள்வதைப் பற்றி மட்டுமே. நம் கைகளால் கொலை செய்யாதிருப்பது. நம் உள்ளத்தால் அறம் மீறாதிருப்பது. இளையோனே! நமது விழைவுகள் முறை மீறாதிருக்கட்டும். நமது கனவுகளும் கரைகண்டு அமைவதாகுக! மானுடர் இப்புவியில் ஆற்றுவதற்குப் பிறிதொன்றுமில்லை”
என்றார்.
ஆம்! பிரிதொன்றுமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இதே கருத்தைப் புரூவரஸின் அன்னை தலைமை அமைச்சரிடமும் கூறுகிறார்.
“நீர்வழிப்படும் புணைபோலச் செல்லும் இப்பெருக்கில் நாம் செய்வதற்கென்று ஏதுமில்லை ” .
இது, இந்த நாவலின் கதையோட்டத்திற்கு ஏற்ப மிகச் சரியாகப் பயன்படுத்தப்பட்ட உவமை.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்
—————————————————–
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
——————————————————–.” (புறநானூறு, பாடல் எண்-192)
பொருண்மொழிக்காஞ்சித் திணையில் அமைந்த இந்தப் பாடலில் புலவர் கணியன் பூங்குன்றனார், நமது உயிரோட்டத்தைக் கணித்துப் பார்த்து, ஆற்று நீரோட்டத்தில் செல்லும் புணை போன்றது என்றார்.
‘ஊழ்’ பற்றிய பெருங்குறிப்பு இந்தப் பாடலில் உள்ளது. ‘ஊழ்’ என்பது, ஆற்றுநீரோட்டம் போன்று வலியது. அந்த நீரோட்டத்தோடு, மிக எளிதாக உயிர் மிதந்து செல்கிறது. “ ‘முறை’ என்பது, ஆற்று நீரின் ஓட்டம். ‘முயற்சி’ என்பது, உயிர்ப்படகைச் செலுத்தும் துடுப்பு.” (மேற்கோள் – இரா. வடிவேலன், இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள், அருணோதயம், சென்னை, 2003.)
ஊழுக்கு முன் நாம் செய்ய ஏதும் இல்லை; அதற்கு நாம் நம்மை ஒப்புக் கொடுப்பதைத் தவிர.
பிறிதொரு இடத்திலும் இதே கருத்து அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது. புரூரவஸைக் கைது செய்து, நாட்டைவிட்டு இழுத்துச் செல்லும்போது, திண்ணையில் கம்பளி போர்த்தி அமர்ந்திருந்த முதியவர் நீள்மூச்செறிந்து,
“ உருத்துவந்தூட்டும் ஊழ்வினை. பிறிதொன்றும் சொல்வதற்கில்லை ”
என்கிறார்.
சிலப்பதிகாரத்தில் கோவலனின் வீழ்ச்சிக்கு இதே சொல்லைத்தான் இளங்கோவடிகள் கூறியிருக்கிறார் என்பதை இங்கு நாம் நினைவுகூரலாம்.
“ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்” (உருத்து – சினந்து) (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், பாயிரம்)
அரசன் நகுஷனிடம் பத்மன்,
“ ஊழென்பது உடலிலேயே பொறிக்கப்பட்டுள்ளது என்றொரு முதுசொல் உள்ளது. நீங்கள் எவரென்பது உங்கள் தசைகளில் , விழிகளில் , நாவில் , எண்ணங்களில் பிறப்பதற்கு முன்னரே எழுந்துவிட்டது. பிறிதொன்றை நீங்கள் ஆற்ற முடியாது. சிட்டுக்குருவியின் சிறகுகள் துள்ளுவதும் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகள் சாமரமாவதும் பயிற்சியால் அல்ல ”
என்கிறான்.
எத்தனை விதங்களில் ‘ஊழ்’ பற்றிக் கூறினாலும் மானுட மனம் அதை ஏற்கத் தயங்கத்தான் செய்கிறது. இதுவும் கூட ஓர் ‘ஊழ்’தானோ?
இறந்தோரை உயிர்ப்பிக்கும் மந்திரமான ‘சஞ்சீவினி’யை அறிந்து கொள்வதற்காகச் சுக்ரரிடம் வரும் சகன் மூன்று முறை இறந்து பிறக்கிறான். அவனின் இறப்பை மூன்று விதங்களில் கூறியுள்ளார் எழுத்தாளர். அவன் மூன்றாம் முறை இறக்கும்போது அவனை உயிர்ப்பிக்க கிருதர் ஒரு வழியினைக் கூறுகிறார்.
“தங்கள் வயிற்றில் வாழும் கசனை மைந்தனென ஏற்றுக்கொள்ளுங்கள். அங்கே அவன் கருவடிவு அடையட்டும். கருவுக்கு முதன்மை நுண்சொற்களைப் பயிற்றுவிக்க முடியுமென்று நூல்கள் சொல்கின்றன. அக்கருவிலேயே சஞ்சீவினியைக் கற்றுக் கொண்டபின், அவனை உயிருடன் எழுப்புங்கள். உங்கள் வயிறு திறந்து, அவன் வெளியே வந்தபின் நான் அவனிடம் நிகழ்ந்ததைச் சொல்கிறேன். அவன் உங்களை உயிர்ப்பிக்க முடியும். தேவிக்குக் கணவனும் தந்தையும் திரும்ப கிடைப்பார்கள்” என்றார். தேவயானி திகைப்படைந்து எழுந்து, கிருதரின் கைகளைப் பற்றிக்கொண்டு, “ஆம், அதைச் செய்யலாம். அது ஒன்றே வழி. தந்தையே! அது ஒன்றே வழி” என்றாள்.
ஆனால், இந்த முடிவால் ஏற்படும் இரண்டு பின்விளைவுகளைப் பற்றிச் சுக்ரரும் கிருதரும் தேவயானியும் சிந்திக்கவே இல்லை. சுக்ரரின் வயிற்றில் கருவாகச் சகன் உருவாவதால் அவன் தேவயானிக்கு உடன்பிறந்த தம்பியாவான் என்பதையும் சகன் ‘சஞ்சீவினி’யை மந்திரத்தை அறிந்துகொள்வதால், தேவர்-அசுரர் போரில் தேவர்களே வெற்றிகொள்வார்கள் என்பதையும் மறந்துவிடுகின்றனர். இதுவும் கூட ‘ஊழ்’தான்போலும். இந்த முடிவுக்குப் பதிலாகச் சுக்ரரிடமிருந்து தேவயானியோ அல்லது கிருதரோ ‘சஞ்சீவினி’யை மந்திரத்தை அறிந்து கொண்டிருந்தால், இரண்டாவது பின்விளைவு மட்டுமாவது தவிர்க்கப்பட்டிருக்கும்.
இந்த ‘வெண்முரசு’ மாபெரும் காவியத்தில் மாபெரும் வல்லமை பெற்றவர்கள் மட்டுமே சுடர்கிறார்கள். அவர்களுக்கு அணுக்கத் துணையாக இருப்பவர்கள் பூவோடு சேர்ந்து நாரும் மணப்பதுபோல அவர்களுடன் சேர்ந்து சிற்றொளியைப் பெறுகிறார்கள். எழுத்தாளர் இந்த காவியத்தில் விளிம்புநிலை மக்களைப் பற்றியும் பேசியிருகிறார். வலியோர் பற்றி மட்டுமே பேசும் பெருங்காவியத்தில் எளியோர் பக்கமும் தன்னுடைய எழுத்தொளியைத் திருப்பியிருக்கிறார். அவ்வொளியின் வழியாக, அவர்களின் உலகும் அவர்கள் அடையும் துயர்களும் நம் கண்களுக்குக் காட்சியாகியுள்ளன.
அரண்மனைகளில் பணியாற்றும் சேடியர் உலகம் குறித்து எழுத்தாளர் அளித்துள்ள நுண்தகவல்கள் நமக்கு அச்சமூட்டுகின்றன. சேடியரிலும் பல வகைகள். சான்றுகளாக, அணுக்கச் சேடி, அணிச்சேடி
அஸ்தினபுரியின் பேரமைச்சர் விதுரரின் அன்னை ‘சிவை’யை இங்கு நினைவுகூர்தல் நன்று. ‘முதற்கனல்’ நாவலில் சிவையின் அறிமுகத்தோடு சேடியர் வாழ்வினை ஒரு தீற்றலாகக் காட்டியிருப்பார் எழுத்தாளர்.
“சூதர் குலத்தில் பிறந்து, காவியம் கற்ற காரணத்தால் சூத அரசியாக ஆணையிடப்பட்டு, காலப்பெருக்கில் புறக்கணிக்கப்பட்டு, தன்னைக்கடந்து செல்லும் வகையறியாது உளமழியும் சிவை.” (நன்றி – சுபஸ்ரீ https://www.jeyamohan.in/135321/ )
ஆனால், சேடியர் வாழ்வு குறித்த மதிப்பீடுகளை இந்த நாவலில் வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர். இளவரசி சர்மிஷ்டையிடம் அவளின் சேடி,
“சேடி என்பவள், தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக்கொள்பவள். பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள். துயரங்களில் பெருந்துயரென்பது, தன்னுள் தானென ஏதும் இல்லாமலிருப்பது, பிறிதொருவரின் நிழலென வாழ்வது…. பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே. சேடிக்கு அதுவும் இல்லை….. சேடியின் வயிற்றில் பிறக்கும் மைந்தருக்குத் தந்தை என எவரும் பொறுப்பேற்க வேண்டியதில்லை… அவர்கள் ‘அடுமனைச் சூதர்கள்’ என்றே அறியப்படுவார்கள்….சேடியின் மகளாகப் பிறந்தேன். எனக்குத் தந்தையின் அடையாளம் இல்லை. எனவே, இயல்பாக ஒரு கணவன் அமையப்போவதும் இல்லை. குலமகளுக்குரிய மங்கலமும் மதிப்பும் எனக்கு இப்பிறவியில் இல்லை” என்றாள். ‘சேடியர் வாழ்க்கை’ என்பது, முகமற்றவர்களின் குரல்கள்தானோ? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
‘தகவலை முன்னறிவித்துவிட்டு, பின்னர் விரிவாகக் கூறும்’ புதுமையான கதைவிரிக்கும் உத்தியினை எழுத்தாளர் இந்த நாவலில் பயன்படுத்தியுள்ளார். கல்யாண சௌந்திகத்தைப் பீமன் தேடிச் செல்வதற்கு முன்பே அந்த மலரைப் பற்றி நமக்குக் குறிப்புணர்த்திய எழுத்தாளர், ‘யயாதி’யின் வாழ்க்கையைப் பற்றி விரித்துக் கூறுவதற்கு முன்பாகவே யயாதியைப் பற்றிச் சுருக்கக் குறிப்பினை நமக்கு அளித்துவிடுகிறார்.
பீமன் தாண்டகர் வைத்திருக்கும் ‘அனந்தம்’ என்ற யானத்தைப் பார்த்து, யயாதியைப் பற்றி அறிந்துகொள்கிறான். அவனுக்குத் தாண்டகர் யயாதி பற்றிச் சிறுகுறிப்புத் தருகிறார்.
“ நகுஷனின் தனிமை யதி என்னும் மைந்தனாகப் பிறந்தது. அவன் துயரம் சம்யாதியாகியது. அவன் சினம் ஆயாதியாகியது. வஞ்சம் அயதியாகியது. விழைவு துருவனாக ஆகியது. பாண்டவனே , அவன் கொண்ட காமம் யயாதியெனும் மைந்தனாகியது. கணுக்களில் கூர்க்கொள்வதே முளையென மரத்திலெழுகிறது. அறிக , தந்தையரில் கூர்கொள்வதே மைந்தரென்று வருகிறது …. ஒருமடங்கு விழைவும் இருமடங்கு வஞ்சமும் மும்மடங்கு சினமும் நான்மடங்கு துயரும் ஐந்து மடங்கு தனிமையும் கொண்டிருந்தான் நகுஷன். அவன் நூறுமடங்கு கொண்டிருந்த காமமே யயாதி…. யயாதி பிற ஐவரையும் வென்று குருநாட்டின் முடிசூடினான்… தன் பொன்றாப் பெருவிழைவாலேயே சக்ரவர்த்தியென்றானான். ஐவகை நிலங்களையும் வென்றான். முடிமன்னர் கொண்டுவந்து காலடியில் சேர்த்த பெருஞ்செல்வத்தால் கருவூலத்தை நிறைத்தான். அள்ளிக்கொடுத்து அதை ஒழித்து புகழ்நிறைத்தான். வேள்விகள் செய்து விண்ணமர்ந்த இந்திரனுக்கு நிகரென்றானான். ”
எளிய மானுட மனம் ஒரு பிழைக்கு மற்றொரு எதிர்ப்பிழையை நிகராக்கிக்கொள்ளும் மனவிழைவு கொண்டது. யயாதி தான் செய்த பிழைக்குத் தேவயானி முன்பு செய்த ஒரு பிழையை நிகராக்கிக்கொள்கிறான். அது பற்றி யயாதி தன் அமைச்சரும் அணுக்கருமான பார்க்கவனிடம்,
“ அது என்னை உண்மையில் எளிதாக்கியது. ‘தேவயானி என்னிடம் மறைத்த ஒன்றுண்டு’ என்பது, நான் அவளிடமிருந்து மறைப்பதைப் பிழையில்லாததாக ஆக்கியது. நான் அதைச் சொல்லிச்சொல்லிப் பெருக்கிக்கொண்டேன். அதனூடாக தேவயானியிடமிருந்து விலகினேன். அவ்விலக்கம் சர்மிஷ்டையிடம் அணுக்கத்தை வளர்த்தது”
என்கிறார். அரசனானாலும்கூட இந்த எளிய மானுட மனவியல்பிலிருந்து தப்ப முடியாதுதான் போலும்!
அரசன் நகுஷன் தனக்குள் பேசிக்கொள்வதாக ஒரு தொடர் இடம்பெற்றுள்ளது.
“எண்ணங்களைச் சொற்களாக்குவது எத்தனை நல்லது! அது புகையை நீராக்குவது. நீரை உறையவைக்க வேண்டுமென்றால், எழுதவேண்டும்”.
ஆம்! எழுத்தாளரின் அதிகற்பனைதான் இங்கு நம் முன் வெண்முரசாக உறைந்திருக்கிறது என்பேன். எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் நம்காலத்திய காவியப்பெருந்தந்தை என உறுதியாக என்னால் கூறவியலும்.
பார்க்கவன் உக்ரசேனனிடம்,
“மானுடன் வாழ்வது அவன் எய்தும் உச்சங்களில் மட்டுமே ”
என்று கூறுவது என் மனத்தை உலுக்கிவிட்டது.
‘வெண்முரசு’ தொடர் நாவல்களை எழுதியமையே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் அடைந்த, எய்திய உச்சம். அதை முழுவதுமாகப் படிப்பதேகூட வாசகராக நாம் அடையும், எய்தும் உச்சம் என்பேன்.
– முனைவர் ப. சரவணன், மதுரை
‘பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை
‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்
June 3, 2021
அஞ்சலி: குமரிமைந்தன்
குமரிமைந்தன் படைப்புகள்- வலைத்தளம்
இருபதாண்டுகளுக்கு முன்பு நான் நாகர்கோயிலில் வீடுகட்டி குடிவந்தபோது மாடியில் ஒரு கொட்டகை போட்டிருந்தேன். அன்று பின்னால் வீடுகள் இல்லை. தொலைவுவரை வயல்கள், அப்பால் வேளிமலை. மேலே நாற்காலிகள் உண்டு.
அனேகமாக தினமும் நண்பர்கள் தேடிவருவார்கள். என் வீட்டு மாடியில் ஒரு குட்டி சபை கூடும். வழக்கமாக வேதசகாயகுமார், அ.கா.பெருமாள், பேரா. மா.சுப்ரமணியம், எம்.எஸ். போன்றவர்களுடன் குமரிமைந்தனும் இருப்பார். அவர் அப்போது விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு மறவன்குடியிருப்பில் இருந்த அவருடைய பூர்விக வீட்டில் வந்து தங்கியிருந்தார்.
நண்பர்கள் ஆளுக்கொரு கருத்து கொண்டவர்கள். ஆகவே எப்போதுமே கருத்துப்பூசல். குமரிமைந்தனுக்கும் வேதசகாயகுமாருக்கும் எப்போதும் உச்சகட்ட மோதல். பல சமயம் அது எல்லைமீறிச் சென்று அருண்மொழி வந்து ஆளுக்கொரு அதட்டல்போட்டு அவையை அமையச்செய்ய வேண்டியிருக்கும். அதன்பின் இருவரும் கட்டித்தழுவிக் குலாவிப் பேசிக்கொள்வார்கள்.
அன்று அஜிதனும் சைதன்யாவும் குழந்தைகள். அவளுக்கு குமரிமைந்தனை அறிமுகம் செய்தேன். “பாப்பு இந்த தாத்தா பேரு பெரியநாடார்!”
தலைசரித்து அவள் சிந்தனை செய்தாள். பிறகு கேட்டாள், “அவரு சின்னக்குளந்தையா இருக்கும்போது?“
குமரிமைந்தன் சைதன்யாவுக்கு அன்பான தாத்தா. அவருடைய பெரிய மீசைக்கு அவள் அடிமை. அங்கே வருபவர்களில் அவரே உயர்ந்த சிந்தனை கொண்டவர் என்று அவள் நம்பியது மீசையால்தான். அவரை மறுத்துப்பேசும் வேதசகாயகுமாரை அடிக்க ஒருநாள் கம்போடு வந்துவிட்டாள்.
குமரிமைந்தன் என்னும் பெரியநாடார் பொதுப்பணித்துறையில் பொறியாளராக 1960 முதல் 1984 வரை 24 ஆண்டுகள் பணியாற்றினார்.விருப்ப ஓய்வுப் பெற்று தனியாக கட்டுமான ஆலோசகர் பணி செய்தார். அடிப்படையில் அவருடைய ஆர்வம் பழந்தமிழாய்வு, தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை நோக்கிய பயணம்.
குமரிமைந்தன் இளமையில் ஈ.வே.ராவின் திராவிட இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அங்கிருந்து தேவநேயப் பாவாணரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். பின்னர் தீவிரமான தமிழ்த்தேசிய சிந்தனைகளை வந்தடைந்தார். கடைசிவரை தமிழ்த்தேசியத்தின் பண்பாட்டு அடிப்படைகளை வரையறை செய்வதிலேயே ஈடுபட்டிருந்தார்.
தமிழ்ப்பண்பாட்டின் வேர்கள் குமரிக் கண்டத்தில் இருந்து தொடங்குகின்றன என அவர் நம்பினார். குமரிக்கண்டம் என்னும் நிலம் இருந்தால் மட்டுமே தமிழ்ப்பண்பாட்டின் பெரும்பாலான வரலாற்றுப் புதிர்களுக்கு பதில் கூறமுடியும் என எண்ணினார். தமிழர் வானியல், தமிழர் மெய்யியல் போன்ற பல மரபுகளுக்கு அப்படி ஒரு பொதுவான தொன்மையான ஊற்றுமுகம் இருந்தாகவேண்டும்.
குமரிக்கண்டம் என்னும் நிலம் பற்றிய மறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தென்குமரிக் கடலடிநிலம் இதுவரைக்கும் முறையாக ஆய்வுசெய்யப்படவில்லை என்று அவர் நினைத்தார். எதிர்காலத்தில் அங்கே ஆய்வுகள் நிகழும்போது உண்மைகள் வெளிவருமென வாதிட்டார்.அந்தப் பற்றினாலேயே தன் பெயரை குமரிமைந்தன் என்று வைத்துக்கொண்டார்.
தமிழ் அறிவுச்சூழலில் பல அடுக்குகள் உண்டு. கல்கி,சாண்டில்யன்,சுஜாதா என்பது ஓர் அடுக்கு. அதுவே பெரும்பாலானவர்களால் அறியப்பட்டது. அதற்கு நேர் எதிரான சிற்றிதழ்ச்சூழல் இன்னொரு அடுக்கு. புதுமைப்பித்தன்,க.நாசு, சுந்தர ராமசாமி என அதற்கு ஒரு வரிசை.
அறியப்படாத இன்னொரு அடுக்கு கலைமகள் போன்ற பிராமண அறிவுச்சூழல். கமலா சடகோபன், கண்ணன் மகேஷ் போன்ற எழுத்தாளர்கள். திராவிட இயக்க எழுத்தாளர்கள் அறுபதுகளுடன் நின்றுவிட்டனர். அவர்கள் ஓர் அறிவியக்கமாகச் செயல்படவில்லை. இதைத்தவிர சைவ, வைணவ, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களுக்குரிய அறிவுச்சூழல்கள் வேறு.
அறியப்படாத, ஆனால் ஆழ்ந்த செல்வாக்கு செலுத்திய ஓர் அறிவுச்சூழல் தனித்தமிழ் கூட்டம். இருநூறு பிரதிகள் அச்சிடப்படும் தென்மொழி, கண்ணிமை, தும்பை, தெசிணி போன்ற சிற்றிதழ்களில் அது வாழ்ந்தது. கா.அப்பாத்துரை,தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார் என அங்கு ஒரு வரிசை உண்டு. குமரிமைந்தன் அங்குதான் எழுதிக்கொண்டிருந்தார்.
எனக்கு தனித்தமிழ் அறிவியக்கத்துடன் ஈடுபாடும் தொடர்பும் உண்டு. அவ்விதழ்களில் எழுதியிருக்கிறேன். அவ்வாறுதான் குமரிமைந்தன் அறிமுகம். அன்றெல்லாம் நவீன இலக்கியச் சூழலில் வணிக இலக்கியம் எவ்வாறு வெறுத்து ஒதுக்கப்பட்டதோ அதேபோல தனித்தமிழியக்கமும் அடிப்படைவாதம் என அகற்றப்பட்டது.
நான் நவீன இலக்கியச் சூழலுக்குள் பாவாணரை மேற்கோள் காட்டி எழுதத் துணிந்தவன். சொல்புதிதை தொடங்கியதும் குமரிமைந்தனை அதில் எழுதவைத்தேன். அவருடைய மொழிநடையும் தர்க்கமுறையும் நவீன இலக்கியச் சூழலுக்கு ஒத்துப்போகின்றவை அல்ல. அவருடைய பெரும்பாலான கட்டுரைகளை நானே பத்தி பிரித்து, சொற்றொடர்களை ஒழுங்குபடுத்தி வெளியிட்டேன். அவர் சொல்புதிதில் நிறைய எழுதியிருக்கிறார்.
தமிழினி வசந்தகுமார் அவருக்கு என் வழியாக அறிமுகமானார். தமிழினியிலும் குமரிமைந்தன் தொடர்ந்து எழுதினார். குமரிமைந்தன் நவீனத்தமிழ் அறிவுச்சூழலில் திகழ்ந்தது இந்தக் குறுகிய காலத்தில்தான்.
குமரிமைந்தனுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு சிக்கின்குன்யா நோய் வந்தது. அவருடைய உடல்நலம் சீர்கெட்டது. அவர் நடமாடமுடியாதவராக ஆனார். அதன்பின் மதுரைக்குச் சென்றார். அவ்வப்போது சில கடிதத் தொடர்புகள் அன்றி தொடர்பில்லை. இன்று [3-6-2021] தன் 82 ஆவது அகவையில் அவர் காலமான செய்தி வந்துள்ளது.
குமரிமைந்தனின் பங்களிப்பு என்ன? சுருக்கமாக இப்படி வரையறை செய்கிறேன். ஒரு பண்பாட்டுச்சூழல் என்பது அதன் வரலாற்றுக்கு முந்தைய தொன்மையில் இருந்து எழுந்து வந்து நிலைகொள்வது. அதன் தன்னடையாளமும் தனிச்சிறப்பும் அந்த வேரில்தான் உள்ளது. அந்த தன்னடையாளத்தை இழந்தால் அது கட்டமைப்பு குலையும். தனிச்சிறப்பை இழந்தால் அது தன் பெருமிதத்தை இழந்து அழியும்
ஆகவே அதன் எதிரிகள் அந்த பண்பாட்டின் வேர்களைத்தான் மறுக்கவும் அழிக்கவும் முயல்வார்கள். அதற்கு அவர்கள் கையாளும் வழிகள் இரண்டு. ஒன்று, அந்த வேர்களிலிருந்து அதன் சமகாலத்தை துண்டிப்பது. இரண்டு, அந்த வேர்களை வேறுவகையில் விளக்கி அதன் தொடர்ச்சியை அழிப்பது. அதற்கு எதிராக அப்பண்பாட்டின்மேல் ஆர்வம்கொண்ட அறிஞர்கள் போராடிக்கொண்டே இருக்கவேண்டும்.
அதற்கு அவர்கள் எதிர்க்கவேண்டிய தரப்புகள் மூன்று. ஒன்று வைதீகம் மற்றும் ஆரிய இனவாதம். இரண்டு, நவீனமயமாகி மரபை மறுக்கும் பார்வை. மூன்று, பகுத்தறிவு என்ற பெயரில் வரலாற்றுணர்வில்லாத அன்றாடத்தர்க்கத்தை முன்வைக்கும் போக்கு.
மரபின் வேர்கள் சமகாலப் பண்பாட்டுடன் மூன்று வகையில் தொடர்புகொண்டுள்ளன. ஒன்று மெய்யியல் மற்றும் தொன்மங்களாக, இரண்டு, அன்றாடவாழ்க்கையிலிருக்கும் சடங்குகள் அடையாளங்கள் போன்ற பண்பாட்டுக்கூறுகளாக. மூன்று, தொல்லியலாக.
தமிழ்ப்பண்பாட்டின் வேர்கள் பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை. ஏனென்றால் ஆய்வுகள் பெருஞ்செலவில் முறையாகச் செய்யப்படவில்லை. ஆனால் தொன்மங்கள், பண்பாட்டுக்கூறுகள் ஆகியவை உள்ளன. அவை மொழியில் உள்ளன. ஆகவே மொழியை காப்பாற்றி வைத்துக்கொள்வதே இன்று செய்யவேண்டியது. மொழி அழிந்தால் அவையும் அழியும். தமிழ்ப்பண்பாடே அழியும்.
தொன்மங்கள், பண்பாட்டுக்கூறுகள் அழிந்தால் தொல்லியல்சான்றுகள் இருந்தாலும் பண்பாடு எஞ்சாது என்பதற்கு எகிப்தும் மெசபடோமியாவும் மாயன்நாகரீகமுமே சான்று. தமிழ்ப்பண்பாடு இன்றும் வாழ்வது தமிழ் மொழியாலும் அதிலுள்ள தொன்மங்கள் மற்றும் பண்பாட்டுக்கூறுகளாலும்தான்.
ஆகவே தொன்மங்களுக்கும் பண்பாட்டுக்கூறுகளுக்கும் எதிரான எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ளவேண்டும். திரிபுகளை மறுத்து உண்மைகளை முன்வைத்தபடியே இருக்கவேண்டும். நம் பண்பாட்டின் சில கூறுகள் இன்று நமக்கு புரியாமல் இருக்கலாம். சில பண்பாட்டுக்கூறுகள் ஒவ்வாமையை அளிக்கலாம். ஆனால் அவற்றை நாம் பேணவேண்டும். அவை நாளை நமக்கு புரியலாம். அவற்றை இழந்துவிடக்கூடாது.
இக்காரணங்களால்தான் குமரிமைந்தன் தமிழ்ப்பண்பாட்டின் எதிரிகளாக ஆங்கில ஆதிக்கத்தை, நவீனமயமாதலை அணுகினார். அதைவிட தீவிரமாக ஈவேராவின் பகுத்தறிவுப் பார்வையை அணுகினார். ஈவேரா தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைகளை மறுத்து அழிப்பதற்காகவே பகுத்தறிவு என்பதை முன்வைத்தார், ஏனென்றால் அவர் தமிழ்ப்பண்பாட்டின்மேல் வடுக ஆதிக்கத்தை முன்வைக்க விரும்பியவர் என்றார் குமரிமைந்தன்.
அன்றாட வாழ்க்கையின் தேவைக்காக, அரசியல் நோக்கங்களுக்காக பண்பாட்டை மறுக்கவோ மறுவிளக்கம் கொடுக்கவோ கூடாது என்பது குமரிமைந்தனின் எண்ணம். அவர் பாம்புபஞ்சாங்கம் தமிழர்வானியலின் ஆவணங்களில் ஒன்று என எண்னினார். அவரும் அவர் நண்பர் வெள்ளுவனும் இணைந்து அதில் ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். அக்கட்டுரைகளை நான் சொல்புதிதில் வெளியிட்டேன்.
இந்தியத்துணைக்கண்டத்திலுள்ள ஒட்டுமொத்தப் பண்பாட்டையும் தெற்கே குமரிக்கண்டத்தில் இருந்து தொடங்கவேண்டும் என வாதிட்டவர் குமரிமைந்தன். இந்தியமெய்யியல் என்பதே குமரிக்கண்டத்தில் உருவானதே. அத்தனை தெய்வங்களும் அங்கே எழுந்தவைதான்.
இங்குள்ள பண்பாட்டுக்கூறுகளை முழுமையாகத் தொகுத்து ஆராய போதிய அளவில் கல்விசார் அமைப்புகள் இன்றில்லை. நிதி இல்லை. ஆய்வாளர்களும் இல்லை. ஆனால் என்றோ ஒருநாள் தமிழ்நிலம் தன்னை மறுதொகுப்பு செய்துகொள்ளும். அன்று அது ஆராய்வதற்காக நாம் பண்பாட்டுக்கூறுகளை அழியாது பாதுகாக்கவேண்டும்.
தமிழ்ச்சூழலில் இன்று பரவலாகப் பேசப்படும் ’வடுக எதிர்ப்பு’க் கொள்கையின் வேர்கள் குமரிமைந்தனில் உள்ளன. அவரை அன்று கடுமையாக எதிர்த்துப்பேசிய வேதசகாயகுமார் பின்னர் அவருடைய ஆதரவாளராகவும் அதிதீவிர கொள்கைப்பரப்புநராகவும் ஆனார். நான் எழுதிய ‘கொற்றவை’ நாவலின் அடிப்படைச் சிந்தனைகளுக்கு குமரிமைந்தனுக்குக் கடன்பட்டிருக்கிறேன்.
குமரிமைந்தன் சிந்தனைசெய்பவர்களிடம் மட்டுமே பேசிய சிந்தனையாளர். அசல்சிந்தனையாளர்களுக்கே உரிய கிறுக்குத்தனங்கள், அத்துமீறல்கள் எல்லாம் கொண்டவர். கொந்தளிப்பானவர். ஆனால் சிறுவனைப்போல உற்சாகமான மனிதர். அவருடன் செய்த பயணங்கள் எல்லாமே வெடிச்சிரிப்புகளாலானவை. அவருடைய மகளின் திருமணத்தின்போது தொல்நாடார்குடிக்குரிய அத்தனை மணச்சடங்குகளும் நிகழ்ந்தன. அவர் தலைப்பாகையும் கச்சவேட்டியுமாக நின்றிருந்தார். அன்று அவர் கண்கள் கலங்கி உணர்ச்சிப்பெருக்குடன் தோன்றியதை நினைவுகூர்கிறேன்.
குமரிமைந்தனின் அணுக்க மாணவர் இரா.எட்வின். நாகர்கோயிலில் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். எட்வினுடன் இணைந்து குமரிமைந்தன் நாகர்கோயிலில் குமரிக்கண்ட ஆய்வுக்காக ஓர் அமைப்பை நிறுவி அலுவலகமும் வைத்திருந்தார். ஓர் ஆய்வாளன் அவன் மறைவுக்குப்பின் மீண்டும் தொடங்குகிறான். குமரிமைந்தன் எட்வினில் எழவேண்டும்
அஞ்சலி.
குமரிமைந்தன் நூல்கள் வாங்க
குமரிக்கண்ட வரலாறும் அரசியலும்
சாதி வரலாற்றுக்கு ஒரு பதம்: நாடார்களின் வரலாறு
பிறிதொன்று கூறல்
சிலநாட்களுக்கு முன் சதீஷ்குமார் சீனிவாசனின் இரு கவிதைகளைப் பகிர்ந்திருந்தேன். என்னிடம் ஒரு நண்பர் கேட்டார். “ஏன் அந்த எறும்புகள் வழியாக கவிதை சொல்லப்படவேண்டும்? அது அத்தனை ஆழமான விஷயமா என்ன? என்றுமுள்ள தாபம்தானே?”
உண்மைதான். அது என்றுமுள்ள ஒன்று, எவரும் அறிந்தது. ஆனால் அதற்கு ஒரு தன்மை உள்ளது, அதை நேருக்குநேர் பார்த்தால் அப்படியே கூசிவிடுகிறது. அதன் மாயம் என்பது தன்னை மறைத்துக் கொள்வதில் இல்லை, தன்னை இன்னொன்றாக ஆக்கிக் கொள்வதில் உள்ளது. தன்னை சர்வசாதாரணமான ஒன்றாக, வெறும் அன்றாடமாக, ஒரு பயன்பாட்டுப்பொருளாக, ஒற்றை அர்த்தம் மட்டுமே கொண்ட மூடிப்போன சொல்லாக ஆக்கிக் கொள்கிறது. மலர் தன்னை கல்லெனக் காட்டுவதுபோல.
அதற்கே அந்த விலக்கிக் காட்டுதல். ஒன்றை உணர்த்த பிறிதொன்றைச் சொல்லுதல். அது தொடங்கி எத்தனை நூற்றாண்டுகளாகின்றது.மனிதன் என்றேனும் அதை நேரடியாகச் சொல்லியிருப்பானா என்றே ஐயுறுகிறேன். கற்கால மனிதன் ஒன்றென ஆகும் முகில்களையோ, முடிவிலாது காத்திருக்கும் மலைகளையோ சுட்டித்தான் அதைச் சொல்லியிருப்பான்.
கவிதை என்பதே அதுதான், பிறிதொன்றைச் சொல்லுதல். விலகிச்செல்லுந்தோறும் அருகே வரும் ஓர் ஆடலை நிகழ்த்துதல். கவிதையில் புதிய ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்னும் நம்பிக்கை எனக்கில்லை. கவிதையில் ஒரு கருத்தை, ஒரு சிந்தனையை சொல்லி ஏற்கவைக்கமுடியும் என்று நான் நம்பவில்லை. கவிதை ஒன்றை நேரடியாகச் சொல்லிவிட்டால் அக்கணமே அது உயிரிழந்துவிடுகிறது.
ஏனென்றால் கவிதையை நோக்கி நான் திருப்பி வைப்பது என் அகத்தின் மிகமென்மையான ஒரு பகுதியை. மிக அந்தரங்கமான ஒரு தருணத்தை. அங்கே ஒருவன் வந்திருந்து “ஆகவே தோழர் இந்த சமூகம்…” என ஆரம்பித்தால் அவன் என் நுண்ணுணர்வை கருங்கல்லால் உரசுகிறான். ஒருவன் தேம்பி அழுதால் நான் எரிச்சலுறுகிறேன். அவனுடையது உயிர்தெறிக்கும் வலியாக இருந்தாலும் கூட.
என்னுடைய தனிமையில் கவிதையை வாசிக்கிறேன். அங்கே குண்டூசி விழும் ஒலியே இடியோசை. ஆகவே கவிஞனுடைய வலியே கூட திசைவெளியின் வட்டவிளிம்பில் எதிரொலித்து அங்கிருந்து வானத்தின் மெல்லிய முணுமுணுப்பாகவே எனக்கு கேட்கவேண்டும். அது மண்ணின் ஆழத்தில் வேர்கள் முனகும் ஒலியாகவே எழவேண்டும்.
கவிதை நேரடியானதாக ஆகுதோறும் சாமானிய வாசகர்கள் அதை விரும்புகிறார்கள். அது புகழ்பெறுகிறது. ஆனால் நல்ல கவிதை வாசகன் கவிதையின் குரல் தன்னுள் இருந்து எழுவதுபோல ஒலிக்கவேண்டுமென விரும்புகிறான். நேரடியாகப் பேசப்படும்போது கூச்சமடைகிறான்.
ஆகவேதான் கவிதை பிறிதொன்று பேசுகிறது. இன்றைய சினிமாவில் ஒளிப்பதிவுக்கருவி நூறுமடங்கு நுண்மையானது. ஆகவே முகத்தின் மேல் நேரடியாக விழும் வெளிச்சம் அதில் வெளிறி மேடுபள்ளங்களாக தெரியும். ஆகவே ஒளியை சுவர்களின்மேல் வீசுகிறார்கள். சிலசமயம் ஒரு சுவரில் ஒளிவீசி அச்சுவரின் எதிரொளிப்பை இன்னொரு சுவரில் விழவைத்து அந்த வெளிச்சமே நடிகர் முகங்களில் படவைக்கிறார்கள். அதுதான் மென்மையானது, உயிரழகைக் காட்டுவது. தேர்ந்த ஒளிப்பதிவாளர்கள் ஓர் அண்மைக்காட்சிக்காக நான்குமணிநேரம் ஒளியமைப்பதை கண்டிருக்கிறேன்.கவிதை அத்தகையதே.
மழை ஓய்ந்த வானம்
நீலம் மலர்ந்து கிடந்தது
உலர்ந்த காகிதமென
நிலத்தில் மட்டுமே எஞ்சியிருந்தன
பெய்ததின் அறிகுறிகள்
புறத்தின் வெட்டவெளியில்
பெய்ததற்கான
ஒரு அறிகுறியும் இல்லை
இந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?
இல்லாமல் ஆக்க முடியாத
மனங்களின் சுவடுகள்போல
இருந்தது
இருந்ததற்கான ஒரு அடையாளமும் இன்றி
நாம் இழந்துவிட்ட உடல்களைப்போல இருந்தது
என்று சொல்லப்படும்போது கவிதை பேசுகிறது. இரண்டாம்பகுதியில் அது நேரடியாகவே பேசுகிறது. ஆனால் அங்கே தொடர்புறுத்தல் நிகழவில்லை. அது வெறும் பேச்சாகவே நின்றுள்ளது. தொடர்புறுத்தல் நிகழ்வது நீலம் மலர்ந்த வானம் மறந்துவிட்ட மழையின் பெருக்கில்தான். எளிய நேரடியான கவிதையே ஆனாலும் அது உணர்த்தவிரும்புவதற்குச் செல்ல படிமங்களையே நாடவேண்டியிருக்கிறது. பிரிவின், எஞ்சாமையின், கடத்தலின் துயரை ஒர் ஒளிகொள்ளலாக, துல்லியமாதலாக, எல்லையற்ற விரிதலாக ஆக்க அப்போதுதான் முடிகிறது.
Egle Lipeikaiteகாலம் தவறி மலர்களை பறிக்கப்போகிறவன்மழைக்கு முந்திய
பெரும்காற்று வரும்வரை
அந்தக் கொடியில் மலர்ந்திருந்த பூக்களை
நானறியவில்லை
குப்பையும் கூளமுமான காற்றில்
அவசர அவசர பறித்துக்கொண்டிருந்தேன்
பறிக்க பறிக்க நழுவி கீழே விழுந்து நாசமாகின்றன பூக்கள்
பறித்தும் பிரயோஜனமற்ற மலர்கள் .
பிறகு சோர்ந்த மனதுடன்
பறிப்பதை பாதியிலேயை நிறுத்திவிட்டு
நனைந்தும் நனையாமலும் அறைக்குள் போய்ப் படுத்துக்கொண்டேன்
இது எப்போதும் இப்படித்தான்
ஒரு விபரீதம் நிகழாதவரை
எதையும் முன்கூட்டியே
பாதுகாக்க முடிந்ததில்லை என்னால்
அந்த விபரீதங்கள்
ஒரு மரணத்துடன் நிகழ்ந்தன
மீண்டும் காணவே முடியாத
ஒரு பிரிவாக நிகழ்ந்தன.
அடையத் துடித்த
எவ்வளவோ கனவுகளை
அழித்தபடி நிகழ்ந்தன
நானெப்போதும்
விபரீதங்களின் கண்ணீருடன்
பறிப்பதற்கு உகந்த காலங்கள்
தீர்ந்துபோன பின்பே
பிரயோஜனமற்ற மலர்களை பறிக்கப்போய்
பாதியிலேயே திரும்பி வந்துகொண்டிருக்கிறேன்
இதுவும் நேரடியான கவிதையே. கடைசிவரியில் கவிதை சொல்லிவிடும் ஒன்றை அதற்கு முந்தைய வரிகள் நுட்பமாக்கிக்கொண்டே செல்கின்றன. மழைப்புயல் எழும்வரை பறிக்கத் தோன்றாத மலர்கள். மலர்கொய்ய வருபவனை முந்திக்கொண்டு வந்து மலர்களைச் சூறையாடும் ஒரு பிரம்மாண்டம் இக்கவிதையில் அந்த தொடக்கவரிகளில் திகழ்வதனாலேயே இது கவிதையாகிறது
நேரடித்தன்மையை ஏதோ ஒன்றால் மறைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மிக அந்தரங்கமான ஒன்றை சொல்லவரும்போது அசட்டுத்தனமாக புன்னகைக்கிறோம். கண்களை வேறெதையோ நோக்கி திருப்பிக் கொள்கிறோம். வேறெதிலோ இருந்து பேச்சை ஆரம்பிக்கிறோம்.
பழைய கவிதையில் யாப்பும் இசையொழுங்கும் அந்த மென்திரையாக இருந்தன. இன்றைய கவிதையில் அதன் ஆங்கிலச்சாயல் கொண்ட மொழிநடை அப்படி ஒரு திரையை அமைக்கிறது. நேரடியாக பேச்சுமொழியில் சொன்னால் நாடகத்தனமாக, பொய்யாக தோன்றிவிடக்கூடிய ஒன்று அந்த அன்னியத்தன்மை கொண்ட சொற்றொடர் அமைப்பால் அணுக்கமாகிறது. விலக்கமே கவிதையின் கலை.
”பிரிவே நீ கவிதையைப்போல எங்களை கண்களைக் கட்டி நெருங்கச் செய்தாய்’ என்று வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் கவிதை வரி ஒன்று உண்டு. விலக்கத்தின் அழகலேயே உணர்வுகள் கவிதைக்காக நுண்மை கொள்கின்றன.
Gladys Folkersஉன்னொரு சொல்உன்னொரு சொல் ஒரு நறுமணம் போல் மணத்துக்கிடக்கிறது
இதயத்தின் ஆழங்களில் .
பூர்வ படிமமென
அச்சொல் உறைந்துகிடக்கிறது
என் நினைவின் மலைகளுக்குள்.
மற்றெல்லா சொற்களும்
தன் அர்த்தங்களை இழந்துகொண்டிருக்கின்றன
ஒரு இலையுதிர்கால மரம்போல .
ஒரு இலையுதிர்கால
மரத்தின் கடைசி இலை
காற்றில் நீந்திக்கொண்டிருப்பதுபோல
அல்லது
இந்த வீணான வாழ்வின் பிடிவாதமான கடைசி நம்பிக்கையைப் போல
இருக்கிறது அந்த சொல் .
காதலே
ஒரு போதும் உதிராத
அந்த சொல்லை
மறுமுறை சொல்
நான் துளிர்க்க வேண்டும்
கனவுகளின் எல்வையற்ற கடல்களில்
நான் மீனாகி நீந்த வேண்டும்
நீ இல்லாவிடினும்
அந்த சொல்லோடு நீந்திக் கடப்பேன்
இந்தக் கடலை
தனிமையின் அலைகள் அலறும் கடலை.
இந்த பிறிதுகூறலுக்கு எத்தனை நீண்ட வரலாறு. சங்க இலக்கியமே இந்ந்நுண்மையில்தான் தன் அழகியலைக் கொண்டுள்ளது. கபிலனுக்கும் இன்றைய கவிஞனுக்கும் நடுவே அசைந்தால் முழங்கை பட்டுவிடும் தொலைவுதான்.
காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத்து இயம்பும் நாட! எம் தொடர்பும் தேயுமோ நின் வயினானே?
[காமத்தை மறைக்கலாம். இரவில் மலையில் பெருமழை விழுந்ததை அருவி ஊருக்குள் வந்து பாறையிலிருந்து விழுந்து ஓசையுட்டு உரைக்கும் நாட்டைச் சேர்ந்தவனே என்மேல் நீ கொண்ட தொடர்பு மறையுமோ?]
மலையில் மழைபெய்வதை மறைக்கமுடியாது. அருவி என அது ஊருக்குல் பொழிகிறது. ஆனால் அது இனிய ஒளிக்கொப்பளிப்பு. குளிர்ச்சாரல். மலையின் வெண்சிரிப்பு.
அச்சிரிப்பைச் சொல்லவே அதை கவிதையாக ஆக்கவேண்டியிருக்கிறது.
மனைவி!
“உனக்கு உன் வேலைதான் முக்கியம்னு தெரியும். ஹாபியா என்னை கல்யாணம்பண்ணிக்கலாம்ல?”
உலகம் முழுக்க எழுதப்படும் நகைச்சுவைகளில் பெரும்பாலானவை கணவன் மனைவி நகைச்சுவைகள் என்றுதான் நினைக்கிறேன். கணவன் சோம்பேறி, மணவாழ்க்கையில் மாட்டிக்கொண்டவன், கஞ்சன். மனைவி கணவனை திட்டிக்கொண்டே இருப்பவள், செலவாளி. இதுதான் சர்வதேச அளவில் கணவன் மனைவி நகைச்சுவையின் வடிவம்.
ஆனால் எங்களூரில் குடும்ப வாழ்க்கை என்று எடுத்தாலே உடனே வரும் பழமொழியான “சட்டியும் கலமும் தட்டியும் முட்டியும்தான் இருக்கும்” என்பதுதான் எனக்குச் சிறந்த நகைச்சுவை என்று படுகிறது. இரண்டும் இருப்பது ஒரே அடுக்களையில். இரண்டு முட்டிக்கொள்ளாமல் அங்கே புழங்க முடியாது. ஆனால் உடைந்துவிடும்படி முட்டிக்கொண்டால் இரண்டுமே உடையவேண்டியிருக்கும்.
“இவளைக் கல்யாணம் பண்ணிக்க போற நீ ஆரோக்கியத்திலேயும் நோயிலேயும் செல்வத்திலேயும் வறுமையிலேயும் கடைசியிலே இவ உன் தலையை கடிச்சு திங்கிற வரைக்கும் வைச்சு காப்பாத்துவேன்னு உறுதி சொல்கிறாயா?
“எருமை ஈன்று அழியுமாம், கிடா புணர்ச்சிக்கு நிக்குமாம்” என்ற பழமொழி நாஞ்சில்நாடனுக்கு பிடித்தமானது. “முக்குறத திட்டவா நக்குறத திட்டவா?”என்பதும் எருமை சம்பந்தமான நகைச்சுவைதான். தொழுவம் சார்ந்து ஒரு ஐம்பது நகைச்சுவைகளை எடுக்கலாம். எல்லாமே குடும்ப வாழ்க்கைக்கும் பொருந்தும்.
பொதுவாக அக்கால நாயர்களைப் பற்றி சொல்லும்போது அவர்களை பாம்புடன் ஒப்புமைப்படுத்துவதுண்டு. அதாவது “உள்ளே வாலும் வெளியே பத்தி”யும் காட்டி அமர்ந்திருக்கும் அந்த கெத்துக்காக. நாயரை அவருடைய அச்சி பொருட்படுத்துவதில்லை. கடைவாய் மறைய மீசை வைத்த இடியன் சங்குப்பிள்ளையைக்கூட. அதைப்பற்றி பேடும்போது தங்கையா நாடார் சொன்னார். ”கோயில்பூனைக்கு சாமிபயம் இல்லை”
”டிரெஸ்போட்டுக்கிட்டு வாரேன்னு சொல்லிட்டு போய் மூடிக்கிட்டா… இவ்ளவு நேரமாச்சு”
பெண்களைப் பற்றிய பழமொழிகளை வயசாளிகளிடம் அடிக்கடி கேட்கலாம். ”அன்னநடைக்காரிய கெட்டுதத விட தன்னநடைக்காரிய கெட்டுலே” என்று அச்சு ஆசான் சொன்னது ஒரு நல்ல பெண்ணிய வரையறை என இப்போது தோன்றுகிறது. ஆனால் அதற்கு ஜெபராஜ் வாத்தியார் “அம்பு விட்டாச்சு, பண்ணிக்கு வேணும்னா வந்து பட்டுக்கட்டும்” என்று சொன்ன பதிலுக்கு என்ன பொருள் என்று இன்றும் புரியவில்லை.
ஆனால் சண்டைகளின்போது கையில் கிடைத்த கல், தேங்காய், தடி, அரிவாள்மணை என எதை ஏண்டுமென்றாலும் எடுத்து வீசுவதுபோல பழமொழிகளால் மாறி மாறி அடிப்பார்கள். பழமொழிகளே பழமொழிகளுக்கு பதில்களாக இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஒருத்தி சொன்ன பழமொழிக்கு உரிய பதில் பழமொழி கிடைக்காமல் அங்குமிங்கும் தட்டழிந்து வேட்டியை தூக்கி காட்டி வசைபாடுவதையும் கண்டிருக்கிறேன்
“என் மனைவி நான் உரிச்சுப்போட்ட சட்டைகிட்டே ரொம்பநேரமா பேசிட்டிருக்கா”
“ஏட்டி உனக்க கெட்டினவன்லா அடி முடிஞ்சபிறவு கம்பெடுக்கப் போறவன்” என்று நாணம்மை சொல்ல “ஆமாடீ அடியெல்லாம் செண்டைக்கு, பணம் எல்லாம் பாணனுக்கு” என்று உடனே தங்கம்மை சொன்ன பதில் எழுகிறது.
அவை இரண்டும் எங்கே சந்திக்கின்றன என்று நாம் யோசிப்பதற்குள் ”வளைஞ்ச தெங்குக்கு நேரான நிழல் வருமா? வந்து வாய்ச்சிருக்கே எனக்க அண்ணனுக்கு” என்னும் பழமொழியும் அதற்குப் பதிலாக ”ஆமாடி,விளுந்த மரத்தில் கேறுதது எளுப்பம்லா?” என்ற பழமொழியும் எழுந்துவிடுகின்றன
உடனே “கர்த்தாவுக்க நியாயம் அதுல்லா, வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமை” என்று கடைசி விசும்பலும் வந்துவிடுகிறது. பழமொழிச்சண்டை என்பது முழுக்கமுழுக்க மறைபிரதிகளால் நிகழும் ஓர் இலக்கியப் படைப்பு போல.
“என்ன இன்னும் கொஞ்சம் கூட்டுப்புழுவாவே இருக்கா?”
கணவன் மனைவி உறவுபோல எளிமையான உறவு வேறு இல்லை. அதைப்போல சிக்கலாக ஆக்கிக்கொள்ளப்படுவதும் இல்லை. அசோகமித்திரனின் கதை ஒன்றில் காதலர்கள் இருவர் சண்டை பிடித்துக்கொள்வார்கள். காதலன் சொல்வான் “சண்டைபோடாதே, நம்மை கணவன் மனைவி என்று நினைத்துக்கொள்ளப் போகிறார்க்ள்” .சண்டை நடந்தது கல்யாண விஷயமாகத்தான்.
மிகச்சிறந்த திருமண உறவுகள் அந்த உறவுக்குள் இருந்தே உருவாகும் விதிகளால் அமைகின்றன. தர்மபுரியில் நான் தொலைபேசி நிலையத்தில் பணியாற்றும்போது ஒரு நிகழ்வு. எதிரே சாலையோரம் புளியமரத்தடியில் தார்ப்பாய் இழுத்துக் கட்டிய டீக்கடை. அதை நடத்துபவர் ஒரு அக்கா. அவள் கணவன் ஒரு சாதிக்கட்சியாளர். அக்கட்சி அதிதீவிர தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அவர் ஒரு நல்ல கனிந்த குடிகாரர்.
“இதோபார், இப்டியே உன் கடந்தகால மனைவியை பத்தி பேசிட்டே இருந்தே நான் என் வருங்கால புருசனைப்பத்திப் பேச ஆரம்பிச்சிருவேன்”
குடிமகர் முழுப்போதையில் தொலைபேசி நிலையம் முன்னால் சென்று நின்று “டேய் மத்திய அரசு, டேய் மத்தியா, டேய், தில்லு இருந்தா வெளியே வாடா. உன்னை இன்னைக்கு ஒரு வளி செய்யாம போக மாட்டேண்டா” என்று வேட்டி அவிழ சவால் விட்டுச் சலம்பிக்கொண்டிருந்தார்.
டீ குடிக்கச் சென்ற நான் அக்காவிடம் ‘இந்தாக்கா, உன் புருசனை கூட்டிட்டு வச்சுக்கோ. மத்திய அரசுக்காக்கும் சவால் விடுறான். மத்திய அரசுகிட்டே என்ன இருக்கு தெரியும்ல? பட்டாளமாக்கும். இலங்கையிலே குண்டு போடுறாங்க, பாத்தேல்ல?”என்றேன்
அக்கா திரும்பிப்பார்த்தாள். “அங்கயா நிக்குதான்? இருங்க” என்று முந்தானையை தூக்கிச் செருகிக்கொண்டு நடந்து சென்றாள். படார் என ஒரே அடி. ஓசை இங்கே கேட்டது. ஆசாமி குவியலாக விழுந்தான். சத்தமே இல்லை. பழைய சாக்கைப்போல தூக்கிக் கொண்டுவந்து கடைக்குள் போட்டுவிட்டு என்னிடம் இயல்பாக “சாருக்கு சக்கரை கூட்டியா?”என்றாள்
“ஆக்ஸிடெண்டா பிரதர்?”
“ஆமா, ஃபேஸ்புக் பாஸ்வேட் மனைவிக்கு தெரிஞ்சுட்டுது”
எனக்கு அப்போது திருமணமாகவில்லை. கைகால்கள் நடுங்கிவிட்டன. எச்சிலை விழுங்கிக்கொண்டு “என்னக்கா இது?”என்றேன்.
“அவன் குடிக்குறது இங்க கடையிலே எடுத்த பணத்தாலேதானே? சொல்லுங்க தம்பி, சக்கரை கூடுதலா?”
அது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அது அப்போது சரியாக இருப்பதாகவும் பட்டது.
ஆனால் திரும்பி தொலைபேசி நிலையம் செல்லும்போது என்னுடன் வந்த முருகன் என்ற நண்பர் “அந்தாள் வாழுறான் தோழர், ஒரு வேலைக்கு போறதில்லை. நம்மளை மாதிரி டூட்டி, ஆஃபுன்னு ஒண்ணும் கெடையாது. சாப்பிடவேண்டியது, குடிக்கவேண்டியது, புள்ளைகளை உண்டாக்கவேண்டியது. அது லைஃபு, என்னங்கறீங்க?”என்றார். அவரைத்தான் நான் திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
”ஏங்க, அந்த ஹேர்டிரையரை கொஞ்சம் எடுத்துக் குடுங்க”
உண்மையில் பிரச்சினைகள் நிகழ்வது கணவனும் மனைவியும் உலகைப் புரிந்துகொள்வதிலுள்ள வேறுபாடுகளினால். நேற்று பேசும்போது கேரள திரை ஒளிப்பதிவாளர் ஒரு நிகழ்ச்சியைச் சொன்னார். மாத்ருபூமி நாளிதழின் உள்ளே ஒரு விளம்பரம். “நீங்கள் குடிப்பழக்கம் உள்ளவரா? குடிஅடிமையா? நாங்கள் உதவிசெய்கிறோம். அழையுங்கள்…..”. நண்பர் அதை எடுத்துப் பார்த்து ஒருகணம் தயங்கி அப்படியே தூக்கி போட்டார்.
அவர் மனைவி பிடித்துக்கொண்டார். “அது என்ன? எதை தூக்கி போட்டீங்க?” எடுத்துப் படித்துப் பார்த்து “பாத்தீங்களா? திருந்தவே மாட்டீங்களா?” உடனே அந்த எண்ணுக்கு ஃபோன் செய்துவிட்டார். விலாசமெல்லாம் சொல்லிவிட்டு “இப்டி ஒரு காண்டாக்டுக்காகத்தான் நானும் காத்திருந்தேன்” என கறுவினார்.
அரைமணிநேரத்தில் வந்துவிட்டார்கள். எல்லா பிராண்ட் மதுவகைகளும் அடங்கிய பெரிய பெட்டியுடன். “சாருக்கு என்ன ஐட்டம் வேணும்சார்? எல்லாமே இருக்கு. டோர் டெலிவரிக்கு பத்து பர்செண்டு விலைகூடுதல்… ஸ்காட்ச் எடுக்கட்டுமா சார்?”
“ஏண்டி, உன் ஃபேஸ்புக் பாஸ்வேட் என்ன?”
“நம்ம கல்யாணத்தேதிதான்”
“இத வேணும்னே பண்றா”
மது விஷயத்தில் பெண்களின் புனிதமான அறியாமையை சென்றகாலங்களில் பேணிவந்தனர். அதை பெண்களையும் பாருக்கு அழைத்துச்சென்று கெடுத்துவிட்டனர் என ஸகரியா ஒருமுறை புலம்பினார். அவருடைய நண்பர் குடிப்பழக்கம் உடையவர். அதாவது 24 மணிநேரமும் வாய்மணக்கும்.
திருமணத்தின்போதும் குடித்திருந்தார், தைரியத்திற்காக. முதலிரவில் குடித்திருந்தார், மேலும் தைரியத்திற்காக. பாத்ரூமில் ஃபுல் பாட்டில் வைத்திருப்பார், அங்கேயே குடித்துவிடுவார். மனைவிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை ’கணவன்மணம்’ என கற்பனாவாத எண்ணமும் கொண்டிருந்தார்.
அப்போது இந்திராகாந்தி சுடப்பட்டார். டெல்லியில் கலவரம். எல்லா மதுக்கடைகளும் மூடப்பட்டன. ஒரு சொட்டுகூட கிடைக்கவில்லை. சோகத்துடன் கணவர் வீடுவந்தார். கதவைத்திறந்த மனைவி அவருடைய வாயின் இயல்பான நாற்றத்தை முகம்சுளித்து மோப்பம்பிடித்து நெஞ்சிலறைந்து அழுதார். “வாய் நாறுது… குடிச்சுச்சு வந்திருக்கீங்க… அய்யய்யோ நான் என்ன செய்வேன். இப்படி குடிகாரப்பயலுக்கு என்னை கட்டிவச்சிட்டாங்களே!”
“45 சதவீதம் கூடுதல் பாதுகாப்பளிக்கும் சீட் பெல்ட்!”
மலையாளிகளைப் பற்றி ஒரு துபாய் ஜோக் சொல்வார்கள். நாயர் தன்னை பற்றி சொல்லும்போது “ஸீ, நான் ஒரு சிங்கம்!” என்று அடிக்கடிச் சொல்வார். அவருடைய தோற்றப்பொலிவால் அதை அரேபியர் நம்பவும் செய்தார்கள்.
அதன்பிறகு அரேபியர் கேரளத்துக்கு வந்தனர். பகவதிகோயிலுக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெரிய சிலைகளைப் பார்த்தனர். கேரளத்தில் சிங்கம் உண்மையில் எப்படி எங்கே படுத்திருக்கிறது என்று புரிந்துகொண்டனர். நாயர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் என உணர்ந்து அவர் மேல் அன்பும் பரிவும் காட்டலாயினர்.
என்னது? எதுக்காக விவாகரத்து கேக்கிறேன்னா? என்னோட ஃபேஸ்புக் பதிவுகளை நீ பாக்கிறதே இல்லியா?”
ஆங்கில கணவன் மனைவி நகைச்சுவைகள் எல்லாமே பதினெட்டாம் நூற்றாண்டு ’பார்ட்டிஜோக்’ வகையிலிருந்து உருவானவை. ஸ்டீபன் லீக்காக் பாணி. “அவன் முதல்பார்வையிலேயே காதல்கொண்டான், சரியாக பார்த்திருக்கவில்லை” வகையான pun. அதிலிருந்துதான் உலகமெங்கும் இந்தவகையாக நகைச்சுவைகள் பரவிப்பெருகியிருக்கின்றன. “திருமணத்திற்குப் பின் இருவரும் ஒருவராகிறார்கள், அந்த ஒருவர் எவரென தீர்மானிப்பதே பிரச்சினை”
மனைவி ஜோக்குகள் மட்டுமல்ல கணவன் ஜோக்குகளும் ஆண்களால் உருவாக்கப்படுபவை. பெண்கள் உருவாக்கிய ஜோக்குகள் உண்டா? இருக்கலாம். ஆனால் கற்பரசிகளான பெண்டிர் அதை ஆண்களுக்குச் சொல்வதில்லை. சொன்னாலும் அதிலென்ன நகைச்சுவை, யதார்த்தம்தானே என்றுதான் ஆண்களுக்குத் தோன்றுகிறது.
”ஏதாவது வேலை குடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதனாலே அப்பப்ப டிவி ரிமோட்டை எடுத்து ஒளிச்சு வைச்சிடுவேன்”
ஆனால் திருவனந்தபுரம் சாலை பஜாரில் ஒரு கூடைக்கார அம்மச்சி நெஞ்சுபொறாமல் சொன்ன ஒரு வரி நினைவில் நிற்கிறது. அதுதான் சரியான பெண்பார்வை நகைச்சுவை என இன்று நினைக்கிறேன்.
“கொட்டையையும் கோலையும் மட்டும் பகவான் தனியா படைச்சிருந்தா இவனுகளை இப்டி தாங்கிக் கொண்டாடவேண்டிய விதி நமக்கெல்லாம் இருந்திருக்காதே”
பிள்ளையைப்பெற்று நிம்மதியாக இருந்திருப்பார்கள். நல்லவேளை.
ஆப்’ பகடை பன்னிரண்டு சிரிக்கும் ஏசு டேனியல் லாபெல் ஊதிப்பெருக்கவைத்தல் ஸாரி டாக்டர்! ஆடல் கம்யூட்டர் யுகத்துக் கடவுள் மனம் குருவும் குறும்பும் இடுக்கண் வருங்கால்… ஆன்மிகமும் சிரிப்பும்
மதார்- கடிதங்கள்-2
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். இளைய கவிஞர்களுக்குரிய குமரகுருபரன் விருதுக்குரியவராக மதாரின் ‘வெயில் பறந்தது’ தொகுதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ந்தேன். இத்தொகுதியின் கவிதைகளை நான் மிகவும் ஆர்வத்தோடு படித்தேன். எதார்த்தக் காட்சி இன்னொன்றாக மாறும் ரசாயனநுட்பம் அவருடைய மொழியில் இயல்பாக படிந்திருக்கிறது. ஒரு முதல் தொகுதி என்கிற வகையில் இத்தொகுதிக்கு இலக்கியப்பரப்பில் உறுதியான ஓர் இடமுண்டு. அத்தொகுதியை விருதுக்குரிய தொகுதியாக தேர்ந்தெடுத்த உங்களுக்கும் தேர்வுக்குழுவினருக்கும் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
அன்புள்ள ஜெ
அறிவிப்புக்குப் பிறகுதான் மதாரின் கவிதைத் தொகுதியை தரவிறக்கம் செய்து வாசித்தேன். அற்புதமான ஒரு கள்ளமின்மையை கொண்ட கவிதைகள். எனக்கு தமிழ் நவீனக் கவிதைகளின் மேல் ஓர் ஒவ்வாமை உண்டு. நான் ரசிக்கும் கவிஞர்கள் ஆங்கிலத்தில்தான். ஆனால் எவ்வளவு படித்தாலும் திரும்பத்திரும்ப எமிலி டிக்கன்ஸனை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். ஏனென்றால் கவிதை என்பது ஒரு விடுதலை, ஒரு கொண்டாட்டம். கவிதையில் வலியும் துயரமும் தனிமையும் எல்லாம் பதிவாகியிருக்கின்றனதான். ஆனால் உலகக் கவிதையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அதிலிருக்கும் அடிப்படை உணர்வு என்பது விடுதலையின் கொண்டாட்டம்தான்
எதிலிருந்து விடுதலை என்று கேட்டால் இந்த உலகின் யதார்த்தமான, நடைமுறையான விஷயங்களிலிருந்து விடுதலை என்றுதான் சொல்வேன். அரசியல் கருத்தியல் எல்லாமே இந்த உலகைச் சேர்ந்தவைதான். மூளையில் வீக்கம் வரும்போது அல்லது மூளைநீர்கூடி அதில் அழுத்தம்கூடும்போது அதிலே ஒரு துளைபோட்டு விடுவோம். அதுபோல ஒன்றுதான் கவிதை. அது சங்கக் கவிதையானாலும் சரி சம்ஸ்கிருதக் கவிதையானாலும் சரி. பாதலேர் ஆனாலும் சரி எமிலி டிக்கன்ஸனானாலும் சரி.
தமிழ் நவீனக்கவிதைகளில் உள்ள ஒரு கூட்டுப்பாவனை எனக்கு மிகப்பெரிய சலிப்பு. அதில் தங்களை தாங்கமுடியாத வலியால் துடிதுடிப்பவர்களாக பாவனை செய்துகொள்கிறார்கள். என் நண்பரும் அதே எண்ணம்தான். பாதி தமிழ்க்கவிதைகள் ஆஸ்பத்திரி வார்டிலிருந்தும் மார்ச்சுவரி வாசலில் இருந்தும் எழுதப்படுகின்றன என்று சொல்வார். செயற்கைத் துக்கம். செயற்கை நெருக்கடி. அதை ஒருவரிடமிருந்து இன்னொருவர் கற்றுக்கொண்டு எழுதுகிறார்கள்.
ஆகவே எனக்கு தமிழில் சில கவிஞர்களையே உண்மையில் பிடித்திருக்கிறது. நீங்கள் சொல்லி வாசித்ததனால் இசையை மிகவும் பிடிக்கும். முகுந்த் நாகராஜன் பிடிக்கும். புதிய கவிஞர்களில் இவர்கள் இருவரும்தான். கவிதைக்கு தேவை ஒரு அடிப்படையான innocence. அது இல்லாவிட்டால்தான் மூளைவீங்கி மண்டையோடு வலியெடுக்கிறது
மதாரின் கவிதைகளை படிக்கையில் இந்த கள்ளமற்ற தன்மை, சிறுவனின் பார்வை அழகான அனுபவமாக ஆகிறது. கவிதைகளில் ஒரு தூய்மையான mundaneness உள்ளது. அது இன்று கவிதைக்கு மிக அவசியமான ஒன்று. பழைய கவிதை இந்த அன்றாடத்திலிருந்து விலக இரவு நிலவு தென்றல் ஆறு மலை கடல் என்றெல்லாம் சென்றது. அவை ரொமாண்டிக் ஆக மாறிவிட்டன. அன்றாடம் அப்படியேதான் உள்ளது. அன்றாடத்திலேயே ஓர் அரிய கணத்தைக் கண்டடைவதுதான் இன்று உயர்ந்த கவிதையாக இருக்கமுடியும்
நாம் செல்லும் சாலையிலேயெ ஓரமாக மலர்ந்திருக்கும் ஒரு சின்ன பூவை பார்ப்பதுபோல அது ஒரு அனுபவம். மலையே பூவாக மாறியிருப்பதை நாம் வேர்ட்ஸ்வெர்த்தில் பார்க்கிறோம். இங்கே ஒரு சின்னப்பூதான். பலசமயம் வெள்ளைநிறமான பூவாகக்கூட இருக்கும். ஆனால் அது ஒரு அழகான புன்னகை. ஒரு சின்னக்குழந்தையின் புன்னகை போன்றது. அதை மதாரின் கவிதைகளில் காணமுடிகிறது
சாரலுக்கு ஒதுங்கும் பெண்களை
மழை புகை சிகரெட்டை
பேருந்து நிலையக் கடைகளை
விரையும் வாகனங்களை
சாலையை
தரையை
சினிமா போஸ்டர்களை
அழைக்கு ஆட்டோக்காரர்களை
பரோட்டா வாசனையை
பிச்சி கனகாம்பரத்தை
நதிக்கு ஓடும் பைத்தியத்தை
சொந்த ஊருக்கு திரும்பியவன் பார்க்கிறான்
பைத்தியம் தெளிபவனின்
மண்டையில் நிகழும்
மாற்றங்களுக்கு
ஒப்பானது அது
இந்தக் கவிதையை இந்த தொலைதூர தேசத்தில் இருந்துகொண்டு பார்க்கிறேன். புகைவிலகுவதுபோல விடிவதுபோல ஒருவனில் எழுந்துவரும் ஓர் உலகம். அவனுடைய தன்னடையாளம் படிந்த ஓர் உலகம். பைத்தியம் தெளிபவன் தொட்டு தொட்டு ஒவ்வொரு பொருளாக உணர்கிறான், அந்த ஒவ்வொரு பொருளுடனும் தனக்குள்ள உறவை, நினைவை மீட்டுக்கொள்கிறான். அது ஒரு புதிய உலகை பரிசாகப்பெறுவதன் கொண்டாட்டம்தானே?
ஆர்.ராமச்சந்திரன்
அன்புள்ள ஜெ
மதாருக்கு குமரகுருபரன் விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலும் இளங்கவிஞர்களை இப்படி விருதுகள் வழியாகவே கேள்விப்படுகிறோம். நான் உங்கள் உரையால் ஈர்ப்படைந்து மதாரின் தொகுப்பை படித்தேன். சட்டென்று நினைவுக்கு வரும் வரி
வானத்தின் மேற்பூச்சு நீலம்
உள்பூச்சு கருமை
என்ற வரி. அன்றுமுதல் இன்றுவரை மனதிலேயே நின்றுகொண்டிருக்கும் வரி.
உள்ளடக்கம் கருமை என்று இல்லை. அதுவும் பூச்சுதான். அதற்கப்பால் வெளியோ ஒளியோ
பிரவீன்குமார்
வெயில் பறந்தது தபாலில் பெற :
https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdNநீலம்,ஒளி- கடிதங்கள்
வணக்கம் சார்.
ராதை தனி நடிப்பில் சுபஸ்ரீ பிரமாதப் படுத்தி விட்டார். ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய உணர்வுடன் வெளிப்பட்டன. வாக்கிய முடிவுகளில் கேவலும் ஏக்கமும் விம்மலும் வெளிப்பட்ட விதம் அபாரம்.
4 கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பைமிக மெல்லிய குரல் மாறுபாட்டில் மிக அனாயாசமாக உணர்வு மாறாமல் வெளிப்படுத்தி விட்டார்.
அபாரம். எங்கள் வாழ்த்துக்களைத் தெரியப் படுத்தி விடுங்கள்.
அன்புடன்
சித்ரா பாலசுப்ரமணியம்
அன்புள்ள ஜெ
நீலம் நாவலை வாசிக்கும்போது அதை எவராவது சொல்லிக் கேட்டால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன். ஆனால் நானே சொன்னால் அந்தச் சொற்களெல்லாம் அன்னியமாக ஒலிக்கும். ஏனென்றால் அந்தச் சொற்களுக்கும் எனக்கும் நடைமுறைவாழ்க்கையில் சம்பந்தமே இல்லை. வாயில் அவற்றைச் சொல்லவே முடிவதில்லை.
ஆகவே சுபஸ்ரீ அவற்றை அழகான உச்சரிப்பில் உணர்வுக்கொந்தளிப்புடன் சொன்ன தனிநடிப்பு எனக்கு பெரும் பரவசத்தை அளித்தது. நீலம் ஒரு மொழிச்சாதனை. ஒரு மலர் பூப்பதுபோல. வெண்முரசு என்ற மரத்தின் பூ அது. அந்த அழகு முழுக்க அந்த நடிப்பிலே தெரிந்தது.
எஸ்.மீனாட்சி கார்த்தியேகன்
அன்புள்ள ஜெ
ஒளி அழகான ஓர் அனுபவம். தீவிரமான ஒரு வெளிப்பாடாக இருந்தது அது. நான் அப்படி அதை எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் என்றால் என்ன என்று புரிந்துகொள்வதற்கு நாம் இன்றிருக்கும் இந்தச் சூழலை விட உகந்தது வேறு உண்டா என்ன?
சுதந்திரத்தை இழப்பதென்றால் என்ன என்பதை நடைமுறையில் நாம் இப்போது புரிந்துகொண்டிருக்கிறோம். இந்த சிறைப்படுதல் அரசியலில் ஆன்மிகத்தில் எல்லாம் நிகழ்வதுதான். அதிலிருந்து விடுதலைதான் இன்றைய தேவை. ஒளி ஒரு எச்சரிக்கை.
என்.ஸ்ரீதர்
அன்புள்ள ஜெ
ஒளி நாடகத்தில் அனைவருமே நன்றாக நடித்தார்கள். இயல்பான உணர்ச்சிகள். புழங்குவதுபோன்ற நடிப்பு. இந்த மீடியாவுக்காக கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசவேண்டியிருந்தாலும் அதை மிக கட்டுப்பாட்டுடன் நடத்தினார்கள். ஒரு ஞானதரிசனம் எப்படி கசப்புடன் ஏளனத்துடன் எதிர்கொள்ளப்படுகிறது, அது சொல்பவனின் ரத்தத்தால் மதிப்பு பெறுகிறது என்பதை கண்முன் கண்டபோது சிலிர்த்தது
ஆர். விஜயகுமார்
‘ஒளி’ ஒரு சூம் நாடகம் ஒளி- கடிதங்கள் இன்றிருத்தல்… ஒளி- கடிதங்கள்-2Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


