Jeyamohan's Blog, page 972

June 8, 2021

வண்ணக்கடலின் அருமுத்து கர்ணன்: இரம்யா

:

கர்ணன் என்றோ எப்போதோ என் மனதுக்கு அணுக்கமாகிப்போனவன். அவனை நினைக்கும்போதே என் உளம் பொங்கும். கண்கள் கசிந்து நீர் சுரந்துவிடும். பதின்ம வயதுகளிலெல்லாம் அப்படியான தனியனான, நிர்கதியானவனை, அன்புக்காக ஏங்கும் ஒருவனை காதலித்து அவனுக்கு அன்னையாகி விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதனால் தான் “தனியனான ஆண்களைப் பெண்கள் விரும்புகிறார்கள்” என்று நீங்கள் அம்பை-பீஷ்மர் காதல் தருணத்தின் போது சொன்னதை வியந்தேன்.

இத்துனை ஆழமாக பெண் மனதை அறிந்து வைத்திருக்கிறீர்களே என்று எப்போதும் வியப்பேன். புராண காலத்தினின்று மிக ஆழமாக மக்களின் மனதில் வேரூன்றி தொன்மமாக மாறிய பாத்திரம் கர்ணன். “ஆமா இவரு பெரிய கர்ணப்பரம்பரை!” என்பதெல்லாம் மிகச் சாதாரணமாக நாம் பயன்படுத்தக்கூடியவை. அப்படி நம்முள் ஒருவனாக மாறிவிட்ட கர்ணனின் பிறப்பை உங்கள் வரிகளில், உங்கள் வடிவமைப்பில் வெண்முரசில் காண ஆவலாயிருந்தேன்.

மழைப்பாடலில் அவன் குந்தியின் கருவாக உருவகியிருந்தபோதே ஆவலாகிவிட்டேன். குழந்தையைக் காக்க அந்த ராஜ நாகம் நாவலில் வந்தபோது மகிழ்ந்தேன். குந்தி அவனைப் பெற்றே ஆக வேண்டும் என்ற முடிவினை எடுத்த போது மேலும் மகிழ்ந்தேன். அவன் பிறக்கும் வரை அந்த ராஜ நாகம் போல் உடனிருந்து, அவன் பாதுகாப்பாக மண்ணில் காலூன்றிவிட்டான் என்று தெரிந்த போது நிம்மதிப் பெருமூச்சோடு கிளம்பினேன்.

யமுனை ஆற்றில் மிதந்து சென்றுராதையின் கையில் தவழ்ந்து அவனுக்கு முலையூட்டும் போது பரிதவித்தேன். அரசனாக வேண்டியவன் அவமானங்கள் படுவானே என்று ராதையின் மேல் கோபம் வந்தது. ஆனால் அவளின் முலை கனிந்து பாலூட்டும்போது அந்த எண்ணம் கரைந்துவிட்டது. ”என்றாவது ஒரு நாள் தன்னைவிட்டு கர்ணன் சென்றுவிடுவான்” என்ற எண்ணத்திலேயே பதட்டமாக உழலும் தாயாக ராதை இருக்கிறாள்.

எத்தனை நேரமானலும் இரவில் விழித்திருந்து உணவு கொடுப்பவளாக இருக்கிறாள். அவல் பொய்க் கோபத்துடன் கூடிய அந்த அன்பு எனக்குப் பிடித்திருந்தது. முதலில் வெறுத்த அவளுக்காக கர்ணன் தன் உண்மையான தாயை அறியும் கணம் அந்த வேதனையை எங்ஙனம் தாங்கிக் கொள்வாள் என்ற வருத்தம் பின்னர் தொற்றிக் கொண்டது.

வெள்ளந்தியாக இருக்கும் அதிரதன் ஒரு சாதரண தந்தையாக மகனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் கற்பிக்கிறான். ஒரு சிறந்த சூதனாக, குதிரைச் சாரதியாக வருவதற்கு தன்னிடம் இருக்கும் அத்தனை அறிவையும் புகட்டுகிறான். அனைத்து தந்தையரும் அப்படியிருப்பதில்லை. ஆனால் அதிரன் அப்படி கர்ணனுக்கு அமைந்திருப்பதில் மகிழ்ச்சி எனக்கு.

அங்க நாட்டில் தன் புரவித்திறனுக்குக் கிடைத்த மோதிரத்தை வேளாண் பெண் ஒருத்தியின் மகனான அஸ்வனுக்கு அளிக்கும் காட்சி மூலம் அவனின் கொடைத்தன்மையைக் காணித்திருந்தீர்கள். ’நீ கொடுக்காமல் வந்தால் தான் ஆச்சரியம்’ என்று அவன் அன்னை சொல்லும்போது ஒரு பெருமிதம் வந்து நெஞ்சை நிறைத்தது.

ஹிரண்ய வேளையில் தான் எதைத் தொட்டாலும் பொன்னாகும் என்று சூரியதேவன் கூறி ஒரு கருங்கல்லை நோக்க அது பொன்னாகிறது. அதை கர்ணனிடம் கொடுக்க அதை அவன் கங்கையில் ஒரு படகில் வைத்து “கங்கையே, வாழ்நாளெல்லாம் பிறர் பசியைப்பற்றி மட்டுமே எண்ணுபவன் ஒருவன் இன்றுகாலை உன்னில் நீராடுவானென்றால் அவன் கையில் இதைக்கொண்டுசென்று கொடு. இதை அளித்த கர்ணன் அந்த மாமனிதனின் பாதங்களில் மும்முறை பணிந்தெழுந்து இதை அவனுக்குக் காணிக்கையாக்கினான் என்று சொல். ஆணை! ஆணை! ஆணை!” என்று சொல்கிறான்.

“பெருஞ்செல்வத்தைக் கொண்டு நிறைவடையும் வழி இது ஒன்றே.” என்று அவன் கூறும் போது முழுமையாக அவனின் கொடைத்திறம் விளங்குகிறது.
முதன் முதலில் கிருபரை சந்தித்தபோது அவர் அவனை சோதிப்பதற்காக பறவையைக் குறிவைத்து அம்பெய்யச் சொல்கிறார். ஆனால் பறவையை அடிக்காமல் ஒரு அம்பை அடித்து ’அம்பும் பறவையே’ என்று கூறி, ”இது கருக்கல்கரையும் வேளை. முதலில் விண்ணிலெழும் பறவைகள் குஞ்சுக்கு இரைதேடச் சென்றுகொண்டிருக்கும் அன்னையராகவே இருக்கும்…” என்று தன் கருணையை வெளிப்படுத்துகிறான்.

துரோணர் ஒரு நாரையைக் குறி வைத்து அடிப்பதற்கான பயிற்சித் தேர்வை அஸ்வத்தாமன், அர்ஜுனன், கர்ணன் ஆகிய மூவருக்கும் கொடுக்கிறார். அதில் வெற்றி பெற்ற கர்ணன் அதன் பின் அந்தப் பறவையை ஒரு பாறைமேல் வைத்து கைகளைக்கூப்பி “இந்த உடலுக்குரிய ஆன்மாவே, என் செயலைப் பொறுத்தருள்க. இக்கொலையினால் நான் அடையும் பாவத்தை அறத்துக்காக நான் இயற்றும் நற்செயல்களால் மும்மடங்கு ஈடுகட்டுகிறேன். என் அம்புகளுக்குக் கூர்மையும் என் விழிகளுக்கு ஒளியும் என் நெஞ்சுக்கு உறுதியுமாக உன் அருள் என்னைச் சூழ்வதாக. ஆம், அவ்வாறே ஆகுக!” என்று சொல்கிறான். சிறு உயிரையும் மதிக்கும் கருணையுடையோனாய் மனதில் நிற்கிறான்.

துன்பங்களை, வலிகளைக் கடக்காமல் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வு அமையப் பெறுவதில்லை. சூதகுலத்தில் பிறந்து, தான் கொண்ட லட்சியத்தை அடைய எத்தனிக்கும்போது அவமானப்படுத்தப்படும் கர்ணன் இந்த நவீன காலத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் பிம்பமாகிறான். எங்கோ ஒரு புராண காலத்தில் நிகழ்ந்த பாத்திரம் தான் கர்ணன் என்று நினைக்க மனம் ஒப்பவில்லை ஜெ.

“தந்தையைப்போல இருக்க விழைகிறேன் அன்னையே. என்னால் இயலவில்லை. என்னை அவர்கள் அடேய் என அழைக்கும்போது என் அகம் நாகம்போல சீறி எழுகிறது. என்னைநோக்கி ஒருவன் கையை ஓங்கினால் அக்கணமே என் கைகளும் எழுந்துவிடுகின்றன. தந்தையும் பிறரும் அவர்களை நோக்கி கையோங்கப்படுகையில் அவர்களை அறியாமலேயே கைகளை மார்போடு கட்டி குனிந்து நிற்கிறார்கள். என் நெஞ்சு விரிந்தெழுகிறது.” என்று அவன் சொல்லும் வரிகளை நான் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு மேலெழ நினைக்கும் எளியவர்களின் சொல்லாக அன்றி வேறென்னவாக எடுத்துக் கொள்வது?

இங்கிருந்து அவன் விழைவே அவனை இட்டுச் சொல்லும் பாதை தோறும் அவனுக்கு நிமிர்வை அளிக்கும் ஒரு தருணத்திற்காகக் காத்திருந்தேன். சிறந்த கல்வியை அளிக்க முடியாத அன்னை தந்தையரைப் பெற்றாலும் கங்கை ஆற்றில் இருக்கும் ஒரு மரத்தை குருவாகக் கொண்டு வில் வித்தையைக் கற்கும் அவனின் முயற்சி பிடித்திருந்தது. முதன் முறையாக தன் உடல்வாகு மற்றும் வீரத்தின் நிமித்தம் சூரிய விழாவில் புரவிகளை ஓட்ட வாய்ப்பு கிடைத்தபோது அதை செவ்வனே செய்து புரவித்திறனுக்காக ஸ்தானிகரின் கையிலிருந்து மோதிரத்தை பரிசாகப் பெறுகிறான்.

அதன் பின் அங்கநாட்டு மன்னன் வேட்டைக்குச் செல்லும் போது அவனின் திறனின் நிமித்தம் சரதியாய் அவனுக்கு அமையப் பெறுகிறான். மன்னன் உயிர் ஆபத்தில் பரிதவிக்கும் போது வில் ஏந்தி அவனைக் காக்கிறான். ஒரு சூதனால் மன்னன் காப்பற்றப்பட்டான் என்று தெரிந்தால் அது அவமானமாகும் என்று கூறி வீரர்கள் அவனைக் கொல்ல எத்தனித்த போது அவர்களுடன் போரிட்டு வெல்கிறான். உயிரையே காப்பாற்றினாலும் ஒரு சூதன் என்று கூறி தன்னையே கொல்ல விழைந்தது அவனுக்கு மேலும் வருத்தத்தையே அளித்திருக்கும். இந்த நிகழ்விற்குப் பின்னர் இனி அங்க நாட்டில் இருக்க முடியாதென்று அஸ்தினாபுரிக்கு அவனை அதிரதன் அழைத்துச் செல்கிறான்.

தான் அடைய வேண்டிய இடத்தை நோக்கி அழைத்துச் செல்லும் ஊழின் பெருவல்லமையை வெறுமே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ”ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான் முந்துறும்” என்று சொல்லிக் கொண்டேன்.
கர்ணனுடைய வருகைக்குப் முன்னரே நீங்கள் பாண்டவர்களையும், கெளரவர்களையும் காணித்து விட்டிருந்தீர்கள். அவர்கள் கல்வி கற்க வளர்ந்துவிட்ட பருவமாய், தங்களுக்கான ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்து அதில் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களாகக் காணித்திருக்கிறீர்கள். எனக்கு யாவரையும் ஒவ்வொரு வகையில் பிடித்திருந்தது. ஆனால் அவர்களில் முக்கியமானவர்களான பீமனையும் அர்ஜுனனையும் நான் வெறுத்த இடமொன்று உண்டு. அதே சமயம் எந்தவித உணர்வுகளுமின்றி வெறுமே நான் நாவலில் பார்த்துக் கொண்டிருந்த துரியனை உச்சமாக விரும்பும் இடமும் உண்டு.

எந்நேரமும் சமையற்கூடத்தில் தன் நேரத்தைக் கழித்து அங்கிருந்து வாழ்விற்கான தத்துவத்தைக் கண்டடையும் வாயுவின் மைந்தனை எனக்கு மிகவும் பிடித்திருந்த தருணங்களெல்லாம் முற்றிலும் விலகும் இரண்டு இடங்கள் இந்த நாவலில் அமையப் பெறுகிறது. இரண்டுமே கர்ணனை அவன் அவமானம் செய்யும் இடத்தில் தான்.
இதற்கு முன்னரும் அங்க நாட்டில் கர்ணன் அவமானப்பட்டு துடித்திருக்கிறான் தான். ஆனால் பீமன் அவனுக்கு அளித்த அவமானம் என்பது ஆறாமல் நிலைத்திருக்கக் கூடியது.

நகுலன் மற்றும் சகாதேவனுடனான கர்ணனின் உறவை அந்த முதல் அவமானத்திற்கு முன்னர் விவரித்திருப்பீர்கள். அது இதமானது. உதடுகளின் விளிம்பில் புன்னகையோடே தான் வாசித்திருந்தேன். தன்னை “மூத்தவரே” என்று விளிக்கும் அவர்களுக்கு வாளை எதிர் கொள்வதற்கான பயிற்சியை அளித்துக் கொண்டிருக்கும் போது பீமன் அந்த வார்த்தையைச் சொல்லி அழைப்பதே கர்ணனுக்கு மன வருத்தத்தை அளித்திருக்கும். தன்னை விட வயதில் குறைவான் ஒருவன் “டேய் சூதா… நிறுத்து…” என்று கூவி “நீசா, ஷத்ரியர்களுக்கு எதிராக வாளேந்த எப்படித் துணிந்தாய்?” எனும் போது கர்ணன் அதிர்ந்திருப்பான்.

“சீ, இழிபிறவியே…. சென்று சம்மட்டியை எடுத்துக்கொள்… போடா” என்று சொல்லி அவனை ஓங்கியறைந்து முகத்தின்மேல் காறித்துப்பும் வண்ணக்கடலின் பீமனை முற்றிலும் வெறுத்தது அந்த கணத்தில்தான். “கர்ணா, நீ எதிர்க்காதே… என் ஆணை” என்று கிருபர் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக பீமனை எதிர்க்காத கர்ணனை ஆற்றுப்படுத்த தவித்திருந்தேன் அந்த இடத்தில். கிருபரின் சொல்லையும் கேட்காது “இது மன்னரின் ஆணை” என்று கிருபர் சொன்ன போது அவரையும் போருக்கு அழைக்கும் அந்த ஆணவத்தினால் பீமனை வெறுத்தேன்.

பார்த்தன் கர்ணனை போருக்கு அறைகூவ இருவரும் தீவிரமாக போரிட்டுக் கொண்டிருக்கும் தருவாயில் இரண்டாவது முறையாக பீமன் அவனை அவமானப்படுத்துகிறான். ”இழிமகனே… சூதா!… மூடா!… உன்னிடம் நெறிநூலை விவாதிக்கவேண்டுமா நான்? போ, சென்று குதிரைநெறி கற்றுக்கொள்… போடா!.. மண்ணைக் காக்கமுடிந்தால் அவன் ஷத்ரியனே ஆனால் முதல் விதி அவன் குலமுடையவனாக இருக்கவேண்டும். குலமிலிக்கு எவ்வுரிமையும் இல்லை. சொல் உன் குலமென்ன?”… கீழ்மகனே, உன் தந்தையின் பெயரைச்சொல்லி வில்லை எடு…” என்று கர்ணனின் மனம் நோகுமாறு அவனை நோக்கி நாவினால் சுடுகிறான். நிராதரவாய் யாருமற்றவனாய் நின்றிருந்த கர்ணனின் நிமித்தன் பீமன் என்னுள் கசந்தேறினான்.

இதே கணத்தை அனுபவித்திருந்த துரோணரும் ஏதும் செய்ய இயலாதவராய் “இனியும் ஏன் இங்கே நிற்கிறாய்? மூடா, போ! சென்று சிதையேறு! இந்த இழிபிறவியை எரித்தழித்து விண்ணடை… இதற்குமேல் என்ன வேண்டுமென இங்கே நிற்கிறாய்? இதைவிட வேறென்ன கிடைக்குமென எண்ணினாய்?”; “நீ உன்னை ஆக்கிய தெய்வங்களாலேயே இழிவுசெய்யப்பட்டவன். உன்னை இழிவுசெய்து அவர்கள் தங்களை இழிமகன்களாக்கிக் கொண்டார்கள். சென்று நெருப்பில்குளி… போ!” என்று வெடித்தெழுந்து சொன்னபோது அவர் அதிர்ந்திருக்கக் கூடும். அவரின் உளக்கிடக்கை புரிந்திருந்தாலும் கர்ணனுக்கான உச்ச துக்கத்தை அவ்வார்த்தைகள் அளித்திருக்கக் கூடும்.

மூன்றாவது முறையாக படைக்களப்பயிற்சியின் போது அர்ஜுனனுக்கு எதிராக அறைக்கூவிய கர்ணனை மக்கள் திரளின் முன்னர் அவமானப்படுத்துகிறான் பீமன். ஒரு வீரனிடமிருந்து குதிரைச்சவுக்கை பிடுங்கி கர்ணனின் முகத்தில் அவன் உடல் அதிர வீசுகிறான். “சூதன்மகனே, போ! உன் இடம் குதிரைக்கொட்டில். உன் படைக்கலம் சவுக்கு. சென்று உன் பணியைச்செய்”; “உன் மேல் குதிரை மலம் நாறுகிறது அற்பா. உன் அம்புகளும் குதிரைமலம் பட்டவை… சென்று நீராடி வா… இப்பிறவி முழுக்க மும்முறை நீராடு. அடுத்த பிறவியில் வில்லுடன் வா… போ!” என்ற சொற்களினால் புண்பட்டவனைக் காணவியலாத துரோணர் கைகளை நீட்டி “சீ, நீசா! நாணமில்லையா உனக்கு? குலமும் கல்வியும் இல்லாத வீண்மகனாகிய நீ எந்தத் துணிவில் களம்புகுந்தாய்?” என்ற சொல்லில் பல நூறு முறை இறந்திருப்பான் கர்ணன்.

அர்ஜீனன் கர்ணனை வெறுக்க முழுமுதற்காரணம் குருவின் மீதான பற்று தான். குருவின் மீதுள்ள பற்றினால் துரோணரின் மகனான அஸ்வத்தாமனனின் அருகமைவையே தாழ முடியாதவனான அர்ஜீனன் கர்ணனின் மீது வெறுப்பு கொண்டமைவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கர்ணனை குலம் சார்ந்து அவமதித்து சொன்ன வார்த்தைக்காக, அவனின் திறனை மதிக்காத பெருந்தன்மையின்மைக்காக வண்ணக்கடலின் அர்ஜீனனை வெறுக்கிறேன். “இவ்விழிமகன் உங்கள் மாணவனாக அமைய நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்ற சொல்லில் அவன் சற்றே என் மனதிலிருந்து இறங்கி விட்டான்.போருக்கு அழைக்கும் போதும் கூட இதே போன்ற அவமானமான வார்த்தைகளில் தான் கர்ணனை அவன் கல்க்கமுறச் செய்கிறான்.

இந்த வெண்முரசின் கதைமாந்தர்களில் அஸ்தினாபுரியின் அரசில் உடற்குறை கொண்டவர்களை, நோய் கொண்டவர்களையும் காணித்திருக்கிறீர்கள். ஆனால் அவர்களின் துன்பம் கர்ணனை விட மிகப் பெரியதாய் எனக்குத் தோன்றவில்லை. அதற்கான காரணத்தை நான் சிந்தித்திருந்தபோது இந்த வரிகளைச் சொன்னீர்கள். “பெருந்துயர்கள் மூன்று. நோய், இழப்பு, அவமதிப்பு. அவற்றில் முதலிரண்டும் காலத்தால் ஆற்றப்படுபவை. காலமே காற்றாகி வந்து வீசி எழுப்பிக்கொண்டிருக்கும் கனல் போன்ற பெருந்துயர் அவமதிப்பே” என்ற வரிகளில் ”அவமானம்” என்ற ஒற்றைப் பெருந்துயர் தரும் வலி இவை யாவற்றையும் விட வலிமிக்கது என்பதை உணர்ந்தேன். ஒரு வகையில் இதை நானும் உணர்வேன்.

“அத்தகைய பெருந்துயர் கொண்ட ஒருவன் ஒருமுறை இவ்வழிச்சென்றான். உயிருடன் தோல் உரித்து வீசப்பட்ட சாரைப்பாம்பு போல அவன் விரைந்தான். பின்புமண்ணில் விழுந்து புழுவெனச் சுருண்டுகொண்டான்.அவனை வழியில்கண்டு வினவிய எங்கள் குலத்தவரிடம் அவன் பெயர் கர்ணன் என்றான்” என்ற வரிகளைப் படிக்கும் போது கலங்கிவிட்டேன். எங்காவது இந்த நாவலுக்குள் சென்று அவனைத் தழுவி ஆறுதல் கூற வேண்டும் என்பது போன்றதான வலியைக் கடத்தியிருந்தீர்கள். ”மாற்றிலாத பெருந்துயர் மனிதனை புழுவாக்குகிறது. தன்னைத்தான் தழுவிச் சுருளச்செய்கிறது.

நெளிதலும் குழைதலும் துடித்தலுமே இருத்தலென்றாக்குகிறது. பல்லாயிரம்பேர் நடுவேதனிமை கொள்கிறான். அவன் குரல் அவிகிறது. ஒளிந்துகொள்ளவும் ஒடுங்கிக்கொள்ளவும் புதைந்து மறைய விழைகிறான்” என்ற வரிகளில் அப்படி பரிதவித்திருந்த கர்ணனின் உளக்கிடக்கை மேலும் வலியைக் கூட்டியது.
“வலியை உயிர்கள் விழைகின்றன. மானுடமே வலியை விரும்புகிறது. ஏனென்றால் வலி அகத்தையும் புறத்தையும் குவியச்செய்கிறது. சிதறிப்பரந்துசெல்லும் அனைத்தையும் தன்னை மையம் கொள்ளச்செய்கிறது.

வலிகொண்டவன் பொருளின்மையை உணரமுடியாது. வெட்டவெளியில் திகைக்கமுடியாது. வெறுமையில் விழமுடியாது.” என்று நீங்கள் சொல்லும்போதும் என்னால் ஆற்றுப்படுத்த முடியவில்லை. இந்த இள வயதில் இத்துனை கொடுமையான வலியை ஏன் அனுபவிக்க வேண்டும் என்று தான் தெய்வங்களை நோக்கி கேட்கத் தோன்றியது. “வதைகளைப்போல ஈர்ப்பு மிக்க வேறேதுமில்லை. துன்பத்தை சுவைக்கும் ஏதோ ஒரு புலன் உயிர்களின் அகத்தில் குடியிருக்கிறது. நக்கிநக்கி புண்ணை விரிவாக்கிக்கொள்கிறது விலங்கு. அனலை நாடியே சென்று விழுகின்றன பூச்சிகள்.” அத்தகைய பூச்சியாய் அமைந்த கர்ணனுக்கு என்ன ஆறுதல் கூவியலும் என்னால் என்று எண்ணி ஏங்கினேன்.

”ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரிய நரகத்தைப் படைத்தே மண்ணுக்கனுப்புகின்றன தெய்வங்கள். அந்நரகத்தில் இருந்து மானுடன் எதனாலும் தப்ப முடியாது” என்று நீங்கள் ஆற்றுப்படுத்தினாலும் கர்ணனின் வெற்றித்தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்தேன். அத்தகைய தருணம் துரியோதனனால் நிகழ்ந்தது கண்டு மகிழ்ந்தேன்.

துரியோதனின் பிறப்பின் போது எத்தனையோ தீ நிமித்தங்களைப் பற்றி சொல்லியிருப்பீர்கள். கலி தெய்வத்தின் வடிவமாய், நாக அரசனாய் அவனைச் சித்தரித்தபோதும் நான் சற்றே நின்று பார்த்துக் கொண்டுமட்டுமிருந்தேன். திருதிராஷ்டிரன் “தன் மகனை யாருக்காகவும் கைவிடுவதில்லை” என்று அழுதரற்றியபோது அந்த தீய நிமித்தங்களினால் துரியனின் மேல் நான் கட்டிவைத்திருந்த பிம்பத்தைக் கரைத்தேன். பிறப்பினால் கண்ணொளியை இழந்தவனையும், எல்லோரையும் போல சாதரண கர்ப்பத்தில் பிறக்காதவனாகியவனையும், அதன் நிமித்தம் அவர்கள் படும் துன்பத்தையும் நினைத்து அவர்களுக்காக வருந்தவும் செய்தேன். பீமன் கர்ணனை அவமானப்படுத்தி, அடித்து காறி உமிழும்போது எங்கோ தூரத்திலிருந்து அதை கண்ணுற்றவன் துரியன்.

இரண்டாவது முறையாக தன் கண் முன் அத்தகைய அவமானப்படுத்தல் நிகழும் போது பொறுக்காது அவனுக்காக நிற்கிறான். “பிதாமகரே, குருநாதரே, இவன் மாவீரன். சிம்மம் தன் வல்லமையாலேயே காட்டரசனாகிறது. இவன் நுழையமுடியாத எந்த சமர்களமும் இப்புவியில் இருக்க இயலாது” என்று கூறி அங்க நாட்டை அவனுக்கு அளிக்கிறான். தானமாகப் பெற முடியாது என்று துரோணர் சொன்னபோது துரியோதனன் துணிந்து ”மாமன்னன் ஹஸ்தியின் குலம் இவன் முன் பணிகிறது. இனி என்றென்றும் நாங்கள் இவனிடம் தோற்றவர்களாகவே அறியப்படுவோம்” என்று மொழிந்த வரிகள் கர்ணன் தன் நெஞ்சில் பதித்துக் கொள்ளப்படுபவை. ”நாளை நான் விண்ணகம் செல்வேன் என்றால் அது இச்செயலுக்காகவே” என்று தீர்க்கமாக முடிவெடுக்கும் துரியண் அங்கு முழுமியிருக்கும் மற்றெவரையும் விடuௌயர்ந்து நிற்கிறான்.

“விண்ணவர் அறிக! மூதாதையர் அறிக! இந்தக் கணம் முதல் நீ என் நண்பன். என் உடைமைகளும் உயிரும் மானமும் உனக்கும் உரியவை! என் வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் உனக்கில்லாத வெற்றியும் செல்வமும் புகழும் எனக்கில்லை“ என்ற போது என் கண்கள் குளமாயின.

“இதோ கைலாய முடிமேல் கதிரவன் எழுந்தான்! அரியணை அமர்ந்தான் கர்ணன்! கருணைகொண்டவனின் கருவூலத்தை நிறைக்கும் தெய்வங்களே இங்கு வருக! எளியவரின் கண்ணீரை அறிந்தவன் மேல் வெண்குடைவிரிக்கும் அறங்களே இங்கு வருக! கொடுப்பதை மட்டுமே அறிந்தவன் தான் பெற்றுக்கொண்ட ஒரே தருணத்துக்கு நீங்களே சான்றாகுக!” எனும்போது அங்கு அமர்ந்திருந்த மக்கள் திரளினூடே நானும் இருந்து கண்களில் நீர் மல்க கர்ணனை வாழ்த்தியிருந்தே. இந்த வரிகளுக்குப் பின்னர் என்னால் தாளவியலாது நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தேன். இத்துனை உணர்வுப் பூர்வமான ஒரு புனைவை கொடுத்ததற்காய் நன்றி.

என்னைப்போலவே தருமனும் கைகளைக் கூப்பி அழுது கொண்டிருந்ததை அறிந்து மகிழ்ந்தேன். முடிசூட்டுவிழாவிற்குப் பின்னர் அங்கு வந்த அதிரதனை அணைத்து தரை படிய அவன் காலில் விழுந்து வணங்கியது மேலும் நெகிழ்ச்சியைக் கூட்டியது. துரோணர் மகிழ்ந்திருக்கக் கூடும். பீஷ்மர் என்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று உடனே நினைத்தேன். திருதிராஷ்டிரனுக்கு சஞ்சையன் என்ன விவரித்துக் கொண்டிருப்பான் என நானும் தர்மனைப் போல கேட்க ஆவல் பட்டேன். சான்றோர்கள் முன் கர்ணன் பெருமிதமடைந்தது கண்டு நிம்மதிப் பெருமூச்செறிந்தேன்.

“நாகப்பழம்போல மின்னும் கன்னங்கரிய தோலும், இந்திரநீலம் சுடரும் விழிகளும் சினத்திலும் கருணை மாறா புன்னகையும் கொண்ட கர்ணன் மானுடன்தானா என்று வியக்கச்செய்யும் பேரழகு கொண்டிருந்தான். அழகன் அழகன் அழகன் என அகம் அரற்றிக்கொண்டே இருந்தது.” என்று தருமனின் கண்கள் வழி அவனை தரிசித்து, முதல் முறையாக ஒரு ஷத்ரியனாய் கவச குண்டலங்களோடு காட்சி தரும் கர்ணனை வணங்குகிறேன்.

உணர்வுப்பெருக்கெல்லாம் நீங்கிய ஒரு தருணத்தில் ராஜ நாகத்தைப் பற்றிய நினைவு வந்தது. கர்ணன் பிறக்கும் முன் அவனைக் காவல் காத்தது, அவமானத்தால் உந்தப்பட்டு நான்கு நாட்கள் தனித்திருந்து ஒரு கரும் இரவில் வீட்டிற்கு வந்தபோது அவனுக்குப் பின்னால் ராதை கண்ட அதே ராஜ நாகம் யாவும் நினைவுக்கு வந்தது. பீமன் இத்தகைய குரூரமாய் மாறிப்போனது நாக விஷம் ஏறிய உணவை அருந்தி நாகர்களின் உலகத்திற்கு சென்று வந்த பின்னர் தான். துரியோதனின் பிறப்பே நாக அரசனுடையது தான் எனினும் அவனுக்கும் அத்தகையதான் தன்னுணர்வுத் தருணம் காட்டில் நிகழ்ந்திருந்தது. யாதுமறியாது பிறந்த குழந்தைகளின் நெஞ்சில் விஷம் விதைக்கப்பட்டதோ என்று நினைத்தேன்.

இச்சையென்னும் தந்திரத்தால் ஆடும் நாகங்களின் ஆட்டம் ஒருக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். இந்த ஆடலில் நன்மை தீமை என்ன? என்று வியந்தேன். அதை வகுத்து ஒரு தரப்பைச் சொல்ல வருபவனை அதனால் தான் அடுத்த நாவலான நீலத்தில் வைத்திருக்கிறீர்கள் என்றும் உணர்ந்து இங்கிருந்து நகர்ந்தேன். எனினும் வண்ணக்கடலில் ஒரு அருமுத்தாக என்றும் என் நெஞ்சில் கர்ணனை பதித்திருப்பேன்.

இந்த அற்புதமான அனுபவத்திற்காய் நன்றி ஜெ.
அன்புடன்
இரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 08, 2021 11:30

June 7, 2021

’மரபணு’

“நம்பிச் சாப்பிடுங்க சார், ஜெனெட்டிக் எஞ்சீனிரியங் முறைப்படி நாங்களே பயிர் செஞ்சது எல்லாமே”

ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் வருவதற்கு முன்னமே என் அப்பாவுக்கு அதைப்பற்றிய உள்ளுணர்வு இருந்தது. எழுபதுகளில் ஜெழ்சி,கூஸா வகை மாடுகள் இந்தியாவுக்கு வந்தன. நம்மூர் மாடுகள் நல்ல தமிழில் அம்மா என்று அழைக்க இவை தகரம் பிளந்த ஓசையில் ங்கீஈஹே என்றன.

என் அப்பா சட்டென்று ஒருநாள் கண்டுபிடித்தார். அவர் அப்போது திண்ணையில் இருந்தார். முற்றம் வழியாக ஒரு ஜெழ்ஸி மாடு சென்றது. எங்கள் மாடு அதைப்பார்த்து “என்ன?”என்றது. அது ‘ஒண்ணுமில்லே, இந்நா கிடக்கேன் சாவாம” என்றது. அப்பா பாய்ந்து எழுந்துவிட்டார். அந்த அறிதலின் விசையால் அவர் உடல் நடுங்கியது.

“டேய், இது மத்ததாக்கும். களுதை… டேய், கழுதையக் கலந்து இந்தச் சீமைப்பசுவை செஞ்சிருக்காண்டேன்…டேய் கழுதைடே அது” என்று அப்பா கூச்சலிட்டார்

“கொஞ்சம் கிட்டப்பார்வைய சேத்துக்கிடுங்க, ஏன்னா கண்ணாடிபோட்ட குழந்தைங்க க்யூட்டா இருக்கும்”

தங்கையா நாடார் நம்பவில்லை. அப்பா ஒடி கதை சொன்னார். ஒடி வித்தை செய்பவன் தன்னை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றலாம், ஆனால் உடலின் ஒரு பகுதி மனிதனாகவே எஞ்சும். “அதுக்க சத்தத்தை மாத்த முடியல்ல பாத்தியாடே?”

நான் தங்கையா நாடாரைப் பார்த்தேன். அவர் ஞானம் திகழ புன்னகைத்து “பிள்ளே, கொஞ்சம் அடங்கி கிடக்கணும். அது இங்கிலீசு மாடாக்கும். அப்டித்தான் விளிக்கும். நம்ம பசு மாதிரி தமிழிலே அம்மான்னு விளிக்க அதுக்கு என்ன தெரியும்?”

அப்பா சீற்றத்துடன் “அப்ப இங்கிலீசிலே மதர்னு சொல்லட்டும் டே…என்ன மயிருக்கு களுதைக்கு காமம் வந்தமாதிரி விளிக்குது?”என்றார்.

நான் மெல்ல “இங்கிலீசிலே மம்மீன்னு விளிப்பாக” என்றேன்

”ஆமா, அதாக்கும். அது மம்மீன்னாக்கும் விளிச்சது” தங்கையா நாடார் விளித்துக் காட்டினார் “ம்ம்மம்மீஹ்ஹ்ஹ்”

அப்பா என்னை பார்த்து “போயி படிடா… வந்து நிக்குதான்” என்று கையை ஓங்கினார்

வாதத்தில் தோற்றாலும் அப்பா அதை நம்பினார். கடைசிவரை அவர் ஜெழ்சி பசுவின் பாலை குடிக்கவில்லை. வெளியே போனால் ‘கட்டன் சாயா’தான். வீடுகளில் என்றால் “நாட்டுப்பசுதானே?”என்று கேட்டுக்கொள்வார்.

 

”நான் வெயிட்டர் இல்ல. நான் ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் சயண்டிஸ்ட். நீங்க இப்ப சாப்பிட்ட ஆடு பத்தி உங்க கருத்து என்ன? ஒரு சர்வேக்கு தேவைப்படுது”

நீண்டநாட்களுக்குப்பின் தங்கையா நாடாரும் ஜெனெட்டிக் எஞ்சீனியரிங்கில் நம்பிக்கை வைக்க நேர்ந்தது. அவர்கள் இருவரும் யாருடைய கல்யாணத்துக்கோ போய் விட்டு திரும்பிக்கொண்டிருந்தார்கள். தங்கயா நாடார் கேட்டார். ‘பிள்ளே ஒரு சம்சயம்”

“என்னது?” என்று அப்பா ஏப்பத்துடன் கேட்டார்.

”இப்பம் இந்த களுதைய பசுவிலே சேக்குதது மாதிரி மனுசனிலே எருமையை சேக்க முடியுமா?”

‘ஏன்வே?”

“இந்த கல்யாணப்பய இப்டி இருக்கானே? உம்மாணை பிள்ளை, அவன் சிரிச்சப்ப நான் பக்கத்திலே எங்கிணயோ எருமைக்கிடா நிக்குதுன்னு நினைச்சுக்கிட்டேன்”

அப்பா அதை முன்னெடுக்கவில்லை. அப்படி ஒரு சாத்தியத்தை ஏற்றுக்கொண்டால் அவரை மற்றவர்கள் கரடி என அழைப்பதற்கான உயிரியல் நியாயம் உருவாகிவிடும்.

 

”ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் பத்தின பயம்லாம் மிகைப்படுத்தப்பட்டது. இதுவரை நடந்த ஆக்ஸிடெண்டை எல்லாம் ரெண்டு துடுப்புகளாலே எண்ணிடலாம்”

நான் பத்தாம் கிளாஸ் படிக்கும்போது துர்க்காப்பிரசாத் கத்ரி என்ற இந்தி எழுத்தாளரின் நூல்களை ஆங்கிலம் வழியாகப் படித்தேன். எல்லாமே கடுமையான துப்பறியும் சாகசநாவல்கள். அதிலொன்றில் ஓர் ஆய்வுக்கூடம் உடைந்துவிடுகிறது. அந்த மருந்து கங்கையில் கலந்து கங்கையிலுள்ள மீன்களெல்லாம் ம்யூட்டேஷன் ஆகிவிடுகின்றன. நீரிலிருந்து எழுந்து அலாக்காக ஒரு படகையே விழுங்கிவிட்டுச் செல்கிறது ஒரு மீன். உள்ளிருக்கும் ஆட்களுடன்தான்.

அந்நாவல்தான் எனக்கு ஜெனெட்டிக் எஞ்சீனியரிங்கில் நம்பிக்கையை வரவழைத்தது. மீன்பிரியனான நான் கடல்மீன்களை அந்த அளவுக்கு பெரிதாக்கினால் நாம் சோற்றுக்குப் பதில் மீனையே சாப்பிடலாம் என ஆசைப்பட்டேன். கமுகுப்பாளை பையுடன் சென்று சாளைமீனை எண்ணி வாங்கவேண்டியதில்லை. சாளைகள் ஒவ்வொன்றும் திமிங்கலமாக ஆனால் அதுவல்லவா வாழ்க்கை!

”இத முதல்ல மக்கள் சாப்பிடட்டும். அப்பதானே பத்துப்பதினஞ்சு வருசம் கழிச்சு என்ன ரிசல்ட்டுன்னு தெரியவரும்?”

ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் பற்றிய ஐயங்கள் உலகமெங்கும் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதன்பொருள் மனிதர்கள் அவர்கள் இப்போதிருக்கும் வடிவில் திருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பதல்ல.அவர்களுக்கு சகமனிதர்களிடம் நம்பிக்கை இல்லை. என் மூஞ்சியை சீரமைக்கும் பொறுப்பை நான் இன்னொருவரிடம் ஒப்படைத்தால் அது எப்படி இருக்குமென எனக்கு தெரியும்.

விலங்குகளையும் மரங்களையும் இணைத்து புது உயிரினங்களை உருவாக்கி மாமிசத்தை பயிரிடுவது பற்றிய ஒரு அறிபுனை கதையை நெடுநாட்களுக்குப்பின் வாசித்தேன். நாவில் எச்சில் ஊறியதை அறிந்ததும்தான் நான் மாறவே இல்லை என உணர்ந்தேன்.

[அதில் மற்ற மரங்களை உண்ணும் ஒட்டுண்ணிகள் சில ஊனுண்ணிகளாக மாறி அதிபயங்கர வேட்டைகளில் ஈடுபட ஆரம்பித்துவிடும். நம் காலுக்கு கீழே வேர்கள் கொண்ட ஒரு மரம் நம்மை கவ்விச்சாப்பிடுவதைப்பற்றி யோசித்துப்பாருங்கள்]

 

“அம்மா நான் பிறக்கறதுக்குள்ள என்னோட மரபணு மாற்றம்லாம் முழுசா நடந்திட்டுது இல்ல?”

ஜிஎம் பருத்தி அறிமுகமானபோது அதை எதிர்த்துப் பேசிய எஸ்.என்.நாகராஜன் விவசாயிகளிடம் சுருக்கமாக சொன்னார். “பருத்திய மனுசன் மாத்திருவான். பருத்தி பூச்சியை மாத்திரும். அந்த பூச்சிய மனுசனாலே மாத்த முடியாது. ஏன்னா அது தன்னைத்தானே மாத்திக்கிட்டே இருக்கும். அவ்ளவுதான் விஷயம்”

அத்தனை விவசாயிகளும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் ஒரு சத்யகிறிஸ்தவரான நாடார் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் தயங்கினார். “இல்லே அய்யா. இப்ப செடியும் பூச்சியும் எல்லாம் கர்த்தருக்க சிருஷ்டிகளாக்குமே… செடிய மாத்த விடுத கர்த்தரு ஏன் பூச்சிய மாத்த விடுதாரில்ல?”

”உங்கம்மாதான் கூப்பிடுறாங்க. உன்னோட ஜெனெட்டிக் மேக்கிங்கிலே ஏதோ விட்டுப்போச்சாம்.சரிபண்ணணுமாம்”

அதற்கு எஸ்.என்.நாகராஜன் விழிபிதுங்கிவிட்டார். [அவர் விழிகள் ஏற்கனவே கொஞ்சம் பிதுங்கியவைதான்] அவருக்கு மரபணுவியல்தான் தெரியும். கேள்வி இறையியல் சார்ந்தது. வேதசகாயகுமார் இறையியலை அறிந்தவரல்ல என்றாலும் அதைக் கையாள அறிந்தவர்.

“இருங்க நான் சொல்லுதேன்” என்று வேதசகாயகுமார் ஆரம்பித்தார்.  “இஞ்சபாருங்க, பைபிள் பிரகாரம் கடவுள் பருத்திய படைக்கல்ல”

“அப்டியா? பைபிளிலே இருக்கா?”

“நேரடியா இல்ல. ஆனால் அப்டித்தான் சொல்லுது” என்றார் வேதசகாயகுமார். “ஆதாமும் ஏவாளும் வேட்டியும் சட்டையுமா இட்டிருந்தாங்க?”

“இல்ல”

“எல தானே?”

“ஆமா” என்றார் கிறிஸ்தவர், சிந்தனையுடன்

”இவளிலே வேற என்னத்தையோ கலந்துட்டாங்க”

”அவங்களுக்கு ஆப்பிளைக் குடுத்து மனசைக்கெடுத்தது ஆரு?”

“மத்தவன், சாத்தான்”

“அப்பம் பிதாவாகப்பட்டவர் அவங்க ரெண்டுபேரையும் பிடிச்சு வெளிய தள்ளினாரு, இல்லியா?”

“ஆமா”

“ஏதேன் தோட்டம் கடவுள் படைச்சது. அங்க ஆதாமும் ஏவாளும் இருந்தாக. அவங்க ரெண்டுபேரையும் பிடிச்சு வெளியே தள்ளினாருன்னா வெளியே உள்ள எடம் ஆரு படைச்சது?”

அமைதி. வேதசகாய குமார் வெற்றியுடன் அனைவரையும் பார்த்தார்

“சாத்தான் படைச்சது, இல்லியா?”

“ஆமா”என்னும் முனகல்

”மனசை வெளியே கொண்டுவர்ர மரபணு டெக்னாலஜி வந்திட்டுது”

“அங்க வந்த பிறவுல்லா ஆதாமும் ஏவாளும் துணிகளை உடுத்தாக?” என வேதசகாய குமார் ஆழமான புன்னகையுடன் கேட்டார்.

“ஆமா”

“அப்ப பருத்தி சாத்தான் படைச்சதாக்குமே? மனுசன் துணி உடுக்கப்பிடாதுன்னு நினைச்ச பிதா சும்மா சோலி மெனக்கெட்டு பருத்திய படைச்சிருப்பாரா?”

விவசாயி குழம்பி தன் ஆடையை பார்த்தார். அதை உருவி வீசி எறியவேண்டுமா என்ன?

“அதனாலே பருத்தி சாத்தானாக்கும். அதை நாம மாத்தினா சாத்தான் எல்லாத்தையும் மாத்திருவான்” என இறையறிவியல் என்னும் புதிய அறிவுத்துறையை வேதசகாயகுமார் உருவாக்கினார்.

”விஞ்ஞானிகளை திடுக்கிடச்செய்த மரபணுச்சங்கிலி’

மரபணு மாற்றக் குழந்தைகள் வர ஆரம்பித்தால் என்ன ஆகும்? இந்தியாவில் கறுப்புக்குழந்தைகளே இல்லாமலாகும். எல்லா குழந்தைகளும் குண்டாக சிவப்பாக சூட்டிகையாக இருக்கும். படிப்பில் எல்லா குழந்தைகளுமே முதலிடம் வாங்கும். டான்ஸ், மியூசிக், கராத்தே, ஓரிகாமி உட்பட எல்லா கலைகளிலும் குழந்தைகள் சிறந்து விளங்கும். அப்பா அம்மா சொன்னபேச்சை முழுமையாக கேட்கும். அவர்கள் விரும்பும்போது மட்டும் வந்து விருந்தினர்களுக்கு பாபா பிளாக்‌ஷீப் பாடிக்காட்டும். மற்றநேரம் ஓரமாக சாதுவாக அமர்ந்திருக்கும். யார் கண்டது, குழந்தைகளுக்கு அவற்றை தேவையானபோது ஆஃப் பண்ணி வைக்கும் சுவிட்சை தொப்புள் மாதிரி பொருத்தும் தொழில்நுட்பம்கூட வந்துவிடலாம்

ஆனால் அதை எந்த மரபணுக்கலவையால் தயாரிப்பார்கள்? நான் நினைக்கிறேன் தென்னமேரிக்க ஸ்லோத் நம்மூர் தேவாங்கு இரண்டையும் கலந்து எடுத்த ஜீனை மனிதக்குழந்தைகளுடன் குழைத்து ஆம்லேட் போல ஆக்கி எடுத்தால் இலட்சியக் குழந்தைக்கான மரபணு தயாராகிவிடும். விசுவாசத்துக்கு கொஞ்சம் நாய் சேர்த்துக்கொள்ளலாம். லாப்ரடார் உசிதம், கைமறதியாக ராட்வீலர் கலந்துவிட்டால் கடி உறுதி.

“அதுவா? அவனோட ஜெனெட்டிக் எஞ்சீனியரிங் கொக்கோகோலா ஸ்பான்ஸர் பண்ணினாங்க. அவங்க விளம்பரத்தை தோலிலே மச்சமா வரவைச்சிருக்காங்க’

ஜிஎம் அரசியல்வாதிகள்! “சிங்கத்த்தின் மரபணுகொண்ட எங்கள் தானைத்தலைவருக்கு அளியுங்கள் வாக்கு!”.  புலிகள், சிறுத்தைகள் எல்லாமே நேரடி அர்த்தத்தில். “தலைவர் தன் மரபணுவை இப்போது உறுமிக்காட்டி நிரூபிப்பார்”. பழைய குலக்குறி அரசியல் வருகிறது. “பன்றிக்கட்சி! சாளுக்கிய மரபணு கொண்டது. தலைவர் வராகமூர்த்திக்கு வாக்களியுங்கள்”. தமிழில் பன்றிச்செல்வர். எத்தனை வாய்ப்புகள். எதிர்காலத்தில் என்னென்ன வரும்!

தீனியிலேயே பல சாத்தியக்கூறுகள் வரலாம். சிக்கனையும் மீனையும் கலந்து சிக்ஃபிஷ். ஆட்டையும் மீனையும்கூட கலக்கலாம். மட்டன்பிஷ். அவற்றின் உடலில் வேண்டிய உப்பு, காரம், மசாலா எல்லாம் இயல்பாகவே இருப்பதுபோல உருவாக்கலாம். ஏன் அட்வான்ஸ்ட் டெக்னாலஜியில் சிக்கன்ஃப்ரை வடிவிலேயே ஆடுகள் குட்டிபோட ஏற்பாடு செய்யலாம். கோழிகளை இப்போது கிட்டத்த இறகு,சிறகு இல்லாமல் நேரடியாக எண்ணைச்சட்டிக்கு போகும் வடிவிலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதை விரிவுபடுத்தலாம். தலை,கால்,குடல் தேவையில்லை.சாப்பிடும் பகுதி மட்டுமே போதும். ஃபைவ்ஸ்டார் சாக்லேட் போல அவற்றில் வெட்டுகள் இருந்தால் துண்டுபோடுவதும் எளிது!

”உங்க பிரச்சினை ஜீன்ல இருக்குன்னு டயக்னைஸ் பண்ணியிருக்கோம்”

நடுவே ஒரு ஜோக் .தமிழ் உதவி இயக்குநர் ஒருவர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னார். “சார், ஓப்பனிங் சீனிலே ஈரோயினி ஒரு ரயில்வே டிராக்காண்ட மட்டன் மேய்ச்சிட்டிருக்கா. அப்ப…”

தயாரிப்பாளர் கேட்டாராம். “சிக்கன் வைச்சுக்குவோமே தம்பி, நம்முளுது லோ பட்ஜெட் படம் பாத்துக்கிடுங்க”

பொதுவாகவே இன்றைய தலைமுறையினர் டெக்னாலஜிக்குச் சாதகமான எண்ணம்தான் கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக தீனியில். 2.0 படத்தில் பறவையாக வரும் வில்லனைப் பார்த்துவிட்டு தன் மகன் “மாமாமூஞ்சி சிக்கன் வாங்கித்தா.. மாமாமூஞ்சி சிக்கன்தான் சாப்பிடுவேன்..” என அடம்பிடித்து தரையில் விழுந்து அழுதுபுரண்டதாக ஒரு நண்பர் சொன்னார்.

”மார்க்கெட்டிலே கோழிச்சிறகு விலை ஏறினா அதுக்கேத்த டெக்னாலஜி”

நூறாண்டுகளில் மரபணுக்கள் சந்தைக்கு வரும் என ஒரு நண்பர் சொன்னார். நடிகர்கள், பாடகர்கள், விஞ்ஞானிகள், கோடீஸ்வரர்களின் மரபணுக்களை கலந்து தங்கள் குழந்தைகளை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கான விளம்பரங்கள் இணையத்தில் வெளிவரும். மரபணுக்கள் நடுவே போட்டி உருவாகும். மரபணுக்கள் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியாகும், இந்தியாவுக்கு இறக்குமதியாகும். எங்குபார்த்தாலும் நட்சத்திரங்கள், சூப்பர்மேன்கள். பொற்காலம்.

ஆனால் மரபணு வாபஸ் என்ற திட்டம் தேவை. ஒரு மரபணுவை நம்பி உருவாக்கி அந்த பிள்ளை உருப்படவில்லை என்றால் அதிலிருந்து அந்த மரபணுவை பிடித்து இன்னொன்றாக ஆக்க ஒரு தொழில்நுட்பம் வராமலா போய்விடும். “டாக்டர் என்ன செலவானாலும் பரவாயில்லை, இவனை ஒரு லாப்ரடார் நாயா மாத்தி குடுத்திருங்க. சொன்ன பேச்சே கேக்கிறதில்லை!”

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2021 11:35

விருதுகள்- ஆள்பிடித்தல், முன்வைத்தல்

இலக்கிய விருதுகளை ஏற்பது விருதுகள்,விடுபடல்கள் – கடிதம் தமிழக அரசின் இலக்கியவிருதுகள்

அன்புள்ள ஜெ,

இலக்கியவிருதுகள் பற்றிய கட்டுரை வாசித்தேன். அது ஒரு சுருக்கமான நிலைபாடு. ஆனால் அதற்கெதிராக இங்கே சொல்லப்படும் எல்லாவற்றுக்கும் பதில்சொல்லியபடியே அந்நிலைபாட்டை எடுக்கவேண்டியிருக்கிறது.

2002ல் சாகிதிய அக்காதமி விருதுகள் சம்பந்தமான நீங்கள் எழுதிய குறிப்புகளிலும் இதையே சொல்லிக்கொண்டிருந்தீர்கள். திண்ணை இளையதளத்தில் வாசித்தேன் என நினைக்கிறேன். இப்போதும் அதேபோன்ற வசைகள். ஆனால் ஆட்கள் மட்டும் மாறியிருக்கிறார்கள்.

நீங்கள் சினிமாக்காரர்களிடம் குழைந்துபோவதாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் இருப்பவன் என்ற முறையில் சிரிப்புதான் வருகிறது. ஆனால் இதெல்லாம் இவர்கள் வேண்டுமென்றே சொல்வதில்லை. இப்படியெல்லாம்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று உண்மையிலேயே நம்புகிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் அப்படித்தான் நடந்துகொள்வார்கள்.

சென்ற பதினைந்தாண்டுகளில்  தமிழின் நட்சத்திரங்கள் போன்ற சினிமாப்படைப்பாளிகள் உங்களைப் பற்றி பேசியதில் இருக்கும் பெருமதிப்பும் வியப்பும் இணையத்திலேயே இருக்கிறது. நீங்கள் அழைக்கும் விழாக்களுக்குச் சொந்தச்செலவில் வந்து செல்கிறார்கள். அதை ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள். நீங்கள்  பேசும் கூட்டங்களில் பார்வையாளர்களாக வந்து அமர்ந்திருக்கும் மாபெரும் சினிமா ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். ஒருவிழாவுக்கு அழைப்பதென்ன, அதற்காக அவர்களைச் சந்திப்பதே சினிமாவில் பெரும் சவால் என்பதை அறியாதவர்கள் இல்லை.

இந்தவகையாகப் பேசுபவர்கள் உண்மையில் நம்முடைய சினிமா ஆளுமைகளை அவமதிக்கிறார்கள்.  தங்களையும் கீழ்மைப்படுத்திக் கொள்கிறார்கள். அரசியலில்தான் அந்தவகையான கூழைக்கும்பிடுகளுக்கு தேவை உண்டு. தளபதி, தானைத்தலைவர், அண்ணன் என்றெல்லாம் குழையவேண்டும்.

இந்த வசைகளையெல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் விதம் எங்களைப்போன்றவர்களுக்கெல்லாம் ஒரு பெரிய பாடம்.

கணேஷ் ராமகிருஷ்ணன்

அன்புள்ள கணேஷ்,

இதெல்லாம் எவருக்கும் தெரியாதது அல்ல. ஆனால் அவர்களுடைய அன்றாடவாழ்க்கை அவர்களுக்கு கூழைக்கும்பிடு போடுவதே முன்னேற வழி என நம்பச்செய்திருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல அரசியலில் அது ஒன்றே முன்னேறும் வழி. அலுவலகங்களிலும் இந்த மனநிலை உண்டு.

ஆனால் தொழில் வணிகம் போன்றவற்றில் தனிப்பட்ட தகுதி, அதை தெளிவாக முன்வைக்கும் தோரணைக்கு மட்டுமே மதிப்பு. தொழிலோ வணிகமோ செய்த எவருக்கும் நான் சொல்வது புரியும். அங்கே நீங்கள் எத்தனை குழைந்தாலும் திறமையோ வணிகமதிப்போ இல்லையேல் நீங்கள் கடந்துசெல்லப்படுவீர்கள். உபச்சார மரியாதை இருக்கும். சாதனைகளுக்கான மதிப்பும் இருக்கும். அவ்வளவுதான்.

இதை நான் மீண்டும் மீண்டும் சொல்லிவருகிறேன். குறிப்பாக இளைஞர்களுக்கு. தொழிலில் திறனும் கூடவே இணைந்த சமரசமில்லாத நிமிர்வுதான் மதிப்பை அளிக்கும். மதிப்புதான் பணமாக ஆகிறது. தன் மதிப்பை இழந்து பணிபவர்களுக்கு உண்மையில் கையில் ஒன்றும் மிஞ்சாது.

இதெல்லாம் பலமுறை எழுதியதுதான்

ஜெ

வணக்கம்

தங்களின் கடிதம் உண்மைநிலையை பட்டவர்த்தனமாக கூறுகிறது.பாராட்டுகள். அதே நேரம்,தங்களை சாடி பல நூறு ஓநாய்கள் தங்களை வேட்டையாட இந்த நேரம்வியூகம் வகுத்திருப்பார்கள்.

உண்மையான படிப்பாளிகள் என்றும் உங்களுடன்.

கேசவன் ஶ்ரீனிவாசன்.

 

அன்புள்ள கேசவன்,

அது என்றுமுள்ளது. இங்கே ஏதாவது ஒரு தரப்பு சார்ந்து அறுதிநிலைபாடு எடுப்பதே எவருக்கும் வழக்கம்—அதுவே பாதுகாப்பென்றும் உணர்கிறார்கள். அது ஒருவகை பழங்குடி மனநிலை. சில விழுமியங்கள், அளவீடுகள் சார்ந்து நிலைபாடு எடுப்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

ஜெ

அன்புள்ள ஜெ

சமீப காலமாக இணையத்தில் ஒரு போக்கைப் பார்க்கிறேன். இலக்கிய விருதுகள் சார்ந்த எந்த விவாதத்திலும் ஒரு சிலர் வந்து ‘எல்லா விருதும் யாசகம் கேட்டு பெறுவதுதான்’ என்றும்  ‘இங்கே லாபி செய்யாதவர்கள் யார்?’ என்றும் ‘கூழைக்கும்பிடு போட்டால் மட்டுமே இங்கே விருதுகளும் அங்கீகராங்களும் கிடைக்கும்’ என்றும் எழுதுகிறார்கள். எழுதுபவர்களில் ஒரு சாரார் கவைக்குதவாத சல்லிஎழுத்தாளர்கள். எழுத்தாளர்களாக நடிப்பவர்கள்.

இன்னொரு சாரார் ‘சலித்துப்போன’ குடிமக்கள் போல ஒரு பாவலா காட்டுபவர்கள். அதாவது ‘ரொம்ப’ நேர்மையாக இருந்து அதைச் சொல்கிறார்களாம். ஆனால் கவனித்தால் தெரியும், அவர்கள் தாங்கள் செய்யும் அன்றாட அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தவே ‘யார் சார் இங்க யோக்கியம்’ என்ற மோடில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த குப்பைகள் எழுதுவதை சில எழுத்தாளர்கள் தங்கள் சமூகவலைத்தளப் பக்கங்களில் பிரசுரித்து ஊக்குவிக்கிறார்கள். இந்த சல்லிப்பயல்கள் ஒட்டுமொத்தமாகவே இலக்கியமுன்னோடிகளை, இலக்கிய ஆளுமைகளை, இலக்கியமென்ற செயல்பாட்டையே கேவலப்படுத்துகிறார்கள் என்றுகூட இந்த எழுத்தாளர்களுக்குப் புரிவதில்லை.

தமிழிலக்கிய முன்னோடிகளான க.நா.சுவோ, அசோகமித்திரனோ, பூமணியோ கூழைக்கும்பிடு போட்டு ஆளைப்பிடித்து விருது வாங்கினார்கள் என்றெல்லாம் இணையத்தில் எழுதும் இந்த அற்பப்புழுக்களைப் பார்க்கும்போது அருவருப்பால் உடல் கூசுகிறது. அவர்களை ஊக்குவிக்கும் எழுத்தாளர்களை மலத்தைப் பார்ப்பதுபோலத்தான் எண்ணத் தோன்றுகிறது.

ஜெயகாந்தன் சொன்னார், “கீழ்மையே கீழ்களின் ஆசாரம்’ என்று

எஸ்.கிருஷ்ணன்

வண்ணதாசன்

அன்புள்ள கிருஷ்ணன்,

எப்போதுமே இப்படித்தான் இருந்திருக்கிறர்கள். க.நா.சுவை பரிசுக்கு ஆள்பிடிக்க அலைகிறவர் என எழுதிய பூவை எஸ் ஆறுமுகம் என்பவர் எங்கே? அன்று விருது வாங்கிய அகிலன் எங்கே? அன்று அவரை சிறுமைசெய்து கெக்கலித்தகூட்டம் எங்கே?.அவர்கள் புதுவடிவில் என்றுமிருப்பார்கள்.

மெய்யான படைப்பாளிகள் இந்த விருதுபிடிப்பு செயல்களில் ஈடுபட மாட்டார்கள். கூசி ஒதுங்கிவிடுவார்கள். விருதுகள் அவர்களை தேடிச்செல்கின்றன. அவர்கள் விருதுபெறுவதனால் விருதுக்கு மதிப்பு உருவாகிறது. அவ்விருதின் அளவுகோல் என ஒன்று அறியப்படுகிறது. அதன்பின் ஆள்பிடிக் கூட்டம் அடித்துப்புரண்டு அந்த விருதை தாங்கள் பெற்றுக்கொள்கிறது. அந்த இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் தானும் நிற்பதே அவர்களின் நோக்கம். அதன் பின் ‘எல்லாரும்தான் ஆள்பிடிக்கிறாங்க’ என நியாயப்படுத்த ஆரம்பிக்கிறது. பாமரக்கூட்டம் உடன் சேர்ந்து பேசுகிறது.

விருதுகளுக்கு ஆதரவுதிரட்டுவது என்று ஒன்று உண்டு. அது முற்றிலும் வேறு. நம் மொழிக்கு, நம் இலக்கியத்துக்கு பெரும்பங்களித்த ஒருவருக்கு விருது வரவேண்டுமென நாம் விரும்புகிறோம். அதன்பொருட்டு அவரை முன்னிறுத்துகிறோம். அதுவும் சில்லறைப்பயல்கள் தங்கள் தலைக்கு  தலைப்பாகைக்காக அலைவதும் ஒன்று அல்ல. 

இலக்கிய விருதுகளுக்காக ஒருவரை முன்வைப்பதன் பெயர் லாபியிங் lobbying அல்ல. அதை கேம்பெய்ன் campaign என்ற சொல்லால்தான் குறிப்பிடுவார்கள்.

முக்கியமான விருதுகள் ஆர்வலர் சிலரின் ஆதரவுதிரட்டலால்தான் அளிக்கப்படுகின்றன. ஏனென்றால் விருதுக்குழுவுக்கு சரியான முறையில் சரியான படைப்பாளிகள் சென்று சேர்ந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு சென்று சேர்ப்பதுதான் ஆதரவு திரட்டல்.

உதாரணமாக ஞானபீட விருதுக்கு தேவையானவை என்ன? எந்த ஆசிரியரை முன்வைக்கிறோமோ அவரைப்பற்றி பல பல்கலைக்கழகங்களில் கருத்தரங்குகள் நடந்திருக்கவேண்டும். ஆய்வடங்கல்கள் வெளியாகியிருக்கவேண்டும். அவரைப்பற்றிய முனைவர்ப்பட்ட ஆய்வேடுகள் வேண்டும். மாநில அரசின் விருதுகளும் மத்திய அரசின் விருதுகளும் அவருக்கு வந்திருக்கவேண்டும். பெரிய இலக்கிய அரங்குகளில் அவர்கள் ஏற்கனவே முதன்மைப் படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

அத்துடன் ஆங்கிலத்தில் அவரைப்பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கவேண்டும். பேட்டிகள் வாழ்க்கைக் குறிப்புகள் வெளியாகியிருக்கவேண்டும். முக்கியமான பிறதுறை ஆளுமைகள் [அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகக்காரர்கள்] அவரை பரிந்துரை செய்யவேண்டும்.அவ்வாறுதான் அவர் ஓர் முதன்மை இலக்கிய ஆளுமையாக முன்வைக்கப்படுகிறார். அவருக்கே விருது அமையும்.

எழுத்தாளர் பூமணி எழுத்தாளர் பூமணி

தமிழில் அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் இருவருக்கும் ஞானபீடத்திற்கான தகுதியும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் அவர்கள் பல்கலைகழகங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களைப்பற்றி பல்கலைகள் பேசவைக்க முயன்றபோது ஒன்றும் நடக்கவில்லை. பல்கலைகளால் முன்வைக்கப்பட்டவர்களுக்கு ஞானபீடக் கமிட்டி எந்த தகுதியையும் காணவில்லை

தமிழ் இலக்கியத்தை தேசிய அளவில் முன்வைக்கும் தகுதியுடன் ஆங்கிலத்தில் எழுதும் இலக்கியப்புரவலர்  [Literary Connoisseur] என இன்று எவருமில்லை. க.நா.சுவும், வெங்கட் சாமிநாதனுமே ஓரளவு வரை அப்பணியை செய்தனர். நமக்கு நல்ல தரமான ஆங்கிலத்தில், இலக்கிய நுண்ணுணர்வுடன்,தமிழிலக்கிய அறிதலுடன் எழுதுபவர்கள் எவரும் இன்றில்லை. இது மிகப்பெரிய இழப்பு.

ஆகவே அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் இருவரையும் ஞானபீடத்துக்காக முன்வைக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கி.ராவுக்கான முயற்சிகள் ஒரு ஆய்வடங்கல் தயாரிப்பதுடன் நின்றன. அந்த ஆய்வடங்கல் ஆங்கிலத்தில் வெளிவரவில்லை. அசோகமித்திரனுக்கு அதுவும் நிகழவில்லை. கி.ராவுக்கு ஞானபீடம் என நான் முதல் கட்டுரையை எழுதிய அதே ஆண்டில்தான் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரிக்கு ஞானபீடம் என மலையாளத்தில் எழுதினேன். சரியாக ஐந்தே ஆண்டுகளில் அவர்கள் விருதை வென்றுவிட்டார்கள்.

நான் இவ்வாறு இலக்கிய முன்னோடிகளுக்கு  ’ஆதரவு திரட்டும்’ செயல்களில் ஈடுபடத் தயங்கமாட்டேன். எல்லா விருதுகளிலும் அதைச் செய்வதுண்டு. பல விருதுகளில் அந்த விருதுப் பத்திரத்திலேயே நான் எழுதிய வரிகள்தான் அளிக்கப்பட்டிருக்கும்.

அது ஓர் இலக்கியப் பணி. சாதி, மதம், கட்சிச்சார்புக்கு அப்பால் சென்று தகுதியான படைப்பாளியை மொத்த சூழலும் சேர்ந்து முன்வைக்கும்போதுதான் கௌரவத்திற்குரிய விருதுகள் ஒரு மொழிக்கு வந்துசேர்கின்றன. இல்லையேல் லாபி செய்யும் ஆட்கள் அதை கொய்து கொண்டுசெல்வார்கள்.

இங்கே லாபியிங்கையும் கேம்பெயினையும் ஒன்றே என ஆக்குபவர்கள் அப்பாவிகள் அல்ல. அவர்கள் உள்நோக்குடன் திட்டமிட்டே அதைச் செய்கிறார்கள். பெரும்பாலும் சாதிவெறியே அதன் உள்ளடக்கம். அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் இருவரையும் வீழ்த்தியது  அவர்களுக்கு எதிராக எழுந்த கீழ்த்தரமானச் சாதிவெறிதான்

உள்ளடக்க மதிப்பு இல்லாமல், வெறும் லாபியிங் வழியாக ஞானபீடத்தை பெறுவதொன்றும் எளிதல்ல. சென்ற காலகட்டங்களில் தேசிய அளவில் அப்படி வாங்கியவர்கள் ஒருசிலரே. [சந்திரசேகரக் கம்பார், ஓ.என்.வி இருவரும்  உதாரணம்] ஆனால் பெரும்பாலும் அந்த முயற்சிகள் வெல்வதில்லை. ஆனால் அந்த தன்முன்னேற்றவாதிகள் தனக்கு விருது வரும்பொருட்டு தகுதியுடையவர்கள் பெறாமல் தடுத்துக்கொண்டிருப்பார்கள். ஆகவே எவருக்கும் கிடைக்காது. தமிழில் நடப்பது அதுதான்.

இன்றைய சூழலில் தேசிய அளவில் கொண்டுசென்று நாம் நிறுத்தினால் மதிப்பு பெறத்தக்க படைப்பாளிகள் தேவதேவன், தேவதச்சன், நாஞ்சில்நாடன், வண்ணதாசன், பூமணி ஆகியோர்.

ஜெ

 

முந்தைய கட்டுரைகள்

விருதுகள், அமைப்புகள்

கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை

ஞானபீடம்

கேள்வி பதில் – 67, 68 -விருதுகள்

கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள்

விருதுகள், அடையாளங்கள்

பத்ம விருதுகள் -கடிதங்கள்

விருதுகள் மதிப்பீடுகள்

நமது கோட்டையின் கொடி

சித்திரப்பாவை

சுஜாதா விருதுகள்

கி ராவை வரையறுத்தல்

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

ஞானபீட விருதுகள்

சாகித்ய அகாடமி விருதுகள்

சாகித்ய அகாதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்

சாகித்ய அகாடமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்

சாகித்ய அகாடமியும் நானும்

சாகித்ய அகாடமி விருது ?

கல்பூர்கி, தாத்ரி, சாகித்ய அகாடமி

சாகித்ய அகாடமி விருதுகளைத் துறப்பது பற்றி…

சாகித்ய அக்காதமி – விவாதங்கள்

சாகித்ய அகாடமி

சாகித்ய அகாடமி மீண்டும்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2021 11:34

ஒளி,நீலம் -கடிதங்கள்

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

அன்புள்ள ஜெ

ஒளி நாடகத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன். எனக்கு பொதுவாக நாடகங்கள் பார்ப்பது பிடிப்பதில்லை. அந்த மேடையமைப்ப்பே செயற்கையானதாக இருக்கும். நடிப்பவர்களின் குரல், உடலசைவு இரண்டுமே செயற்கையானதாக இருக்கும். காரணம் வேறுவழியில்லை. அவர்கள் தூரத்தில் நின்று நடிக்கிறார்கள். நாம் பார்க்கவேண்டுமென்றால் அப்படி நடிக்கவேண்டும்.

ஆகவே ஒளி நாடகத்தை கொஞ்சம் தயங்கித்தான் பார்த்தேன். நாடகத்தின் கரு பிடிகிடைக்க ஐந்துநிமிடம் ஆகியது. அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வசனம் வழியாக விரிந்தது வியப்பை அளித்தது. அவர்கள் நால்வருமே சுதந்திரமானவர்கள். அது புறச்சுதந்திரம். அவர்களுக்கு உண்மையான சுதந்திரத்தை அளிப்பவர் புறச்சுதந்திரத்தை பொருட்படுத்தாத அகச்சுதந்திரம் கொண்ட ஒரு மனிதர்.

நாடகத்தின் தீவிரம் அந்த இருபது நிமிடமும் ஆழமாகப் பார்க்கச் செய்தது. சிறந்த நாடகம். சிறப்பான நடிப்புகள். அனைவருக்கும் பாராட்டு

ரவீந்திரன்

 

அன்புள்ள ஜெமோ

ஒளி ஒரு ஆழ்ந்த கவனத்தையும் திடுக்கிடலையும் அளித்த நாடகம். அதிலுள்ள முரண்பாடுகள் சுவாரசியமானவை. இசையை தன் அறைக்குள் நடத்திக்கொள்கிறான். ஒருவன் இலக்கியத்தை உள்ளத்தில் நடத்திக்கொள்கிறான். ஒருத்தில் நடனத்தை அந்தரங்கமாக ஆடுகிறாள். மலையேறுபவன் எப்படி இருப்பான்? அவன் மலைகளை அந்த அறைக்குள் அடைய முடியுமா?

சுதந்திரம் விடுதலை ஆகியவற்றைப்பற்றிய பல சிந்தனைகளை உருவாக்கிய நாடகம். நடித்தவர்கள் இயல்பாக அழகாக நடித்திருந்தனர். பிரபாகரனாக நடித்தவரின் தீவிரமான முகம் நினைவில் நிற்கிறது

எஸ். அருண்

அன்புள்ள ஜெ

நீலம் தனிநடிப்பு அழகாக இருந்தது. தமிழ் மொழிக்கு ஓர் அழகு உண்டு. அதை இளமையிலேயே தமிழை உச்சரித்துப் பழகினால்தான் அடைய முடியும். இன்று இளமையிலேயே ஆங்கிலம் உச்சரிப்பதனால் தமிழின் ஒலியழகே காதில் விழாமலாகிவிட்டது. நடிகர்கள், டிவி காரர்கள் எல்லாமே செயற்கையான மெல்லின ஓசையுடன் பேசுகிறார்கள். தமிழ் இடையின, வல்லின ஓசை கொண்ட மொழி. அதை சுபஸ்ரீ மிக அருமையாக பேசி நடித்திருக்கிறார். உண்மையான உணர்ச்சிகளும் தீவிரமான கண்களும் சொற்களை அழுத்தமானவையாக ஆக்குகின்றன.

ராஜ்குமார் ராமசாமி

நீலம்,ஒளி- கடிதங்கள்

ஒளி- கடிதங்கள்-3

ஒளி- கடிதங்கள்-2

ஒளி- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2021 11:31

மாபெரும்தாய்- கடிதங்கள்

சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன் மாபெரும் தாய் –கடிதங்கள்

அன்பின் ஜெ.,

எழுத்தாளர் அகரமுதல்வனின் ’மாபெரும் தாய்’ என்கிற சிறுகதை வாசித்தேன். வழக்கமாய் அகரமுதல்வனின் கதைகளை – ”மகுடி வாசிக்கும் சொற்சித்திரங்கள்” என்று நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு.

சமகாலத்தில் மொழியை மிக லாவகமாக கையாளும் எழுத்தாளர்களுள் அகரமுதல்வன் முதன்மையானவர். சில மாதங்களுக்கு முன் நவீன எழுத்தாளர்கள் ஏன் பக்தி இலக்கியம் வாசிக்க வேண்டும் என்றொரு விவாதம் வந்தது. அகரமுதல்வனின் பக்தி இலக்கிய பரிச்சயமே அவருடைய மொழியின் மீதான இந்தப் பிரக்ஞைக்கு காரணமென்பது என் கணிப்பு.

’கூறியது கூறல்’ என்பது எழுதுபவர்களில் பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை தான். அகரமுதல்வனின் அநேக கதைகளில் வரக்கூடிய இரவும், ஆச்சியும், சிறுவனும் ஒன்றே ஆனால் ஒவ்வொரு கதைகளிலும் அவர்களை வெவ்வேறாக நம் முன் அறிமுகப்படுத்துகிறார். முந்தைய கதைகளில் ஆச்சியைக் குறித்து அவர் சொன்ன எதுவும் அடுத்தடுத்த

கதைகளில் ’ரிப்பீட்’ ஆவதில்லை. அதற்கான அவரது மெனக்கெடல்கள் கவனத்திற்குரியது.

போருக்கு பின்னான ஈழ இலக்கியத்தில் இப்படியான தொன்மம் சார்ந்த கதைகளைத் தன்னுடைய நுட்பமான மொழியில் எழுதுவதன் மூலம் அகரமுதல்வனின் படைப்புலகம் தனித்து மிளிர்கிறது.

தான் கண்ட, கேள்வியுற்ற, வாசித்தவற்றை எழுத்தாளன் தன்னுடைய கதைகளில் பயன்படுத்தும்போது அதீத சிரத்தையுடன் எழுத வேண்டியிருக்கிறது. சற்று பிசகினாலும் ஏமாற்று வேலையாக ஆகிவிடக்கூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனால் இந்தக் கதையில் அந்தத் தவறு நிகழவில்லை. மிக கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார். வாசகனின் உழைப்பைக் கோரக் கூடிய கதை இது.

இந்தக் கதை பல்வேறு அடுக்கு நிலைகளைக் கொண்டது. ஈழம் குறித்தும் போர் குறித்தும் அறிமுகம் உள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும், இதை ஒரு தொன்மக் கதையாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு ஒரு வகையாகவும் இவை எவையும் இல்லாமல் ’சும்மா’ வாசிப்பவருக்கு குறைந்தபட்ச ‘மொழியின்பமும்’  உத்திரவாதம்.

இக்கதையை கவனப்படுத்தியமைக்கு நன்றி ஜெ.

வாழ்த்துகள் அகரமுதல்வன்.

நன்றி

பிகு

 

அன்புள்ள ஜெ

அகரமுதல்வனின் மாபெரும் தாய் ஒரு அழகான கதை. சமீபகாலமாக இந்த யதார்த்தவாதக் கதைகள் சலிப்பைத் தருகின்றன. ஏனென்றால் யதார்த்தவாதம்தான் சினிமாவிலும் டிவியிலும் குவிந்திருக்கிறது. அதற்கு அப்பால் செல்ல புனைவுகளால் முடியவில்லை. எந்த யதார்த்தவாதக் கதை படித்தாலும் இதை எங்கோ டிவியிலும் சினிமாவிலும் பார்த்தோமா என்ற சந்தேகம் வருகிறது. மாபெரும்தாய் ஒரு நவீன தொன்மம். ஒரு யாழ்ப்பாணக்கிராமத்தில் பழைய மனிதர் ஒருவரிடமிருந்து ஒரு கதையைக் கேட்டதுபோல் இருந்தது அந்தக்கதை.

நமக்கு இந்த மாயத்தாய் என்பது ஒரு முக்கியமான பிம்பம். ஆப்ரிக்காவுக்கும் அது அப்படித்தான். ஆனால் ஐரோப்பாவுக்கு அதுவே சூனியக்காரக்கிழவியாக ஆகிவிடுகிறது. நமக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயுள்ள முக்கியமான முரண்பாடே இதுதான்

ஜே.எஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2021 11:31

மதார்- கடிதங்கள் 6

 

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

அன்புள்ள ஜெ,

எனக்கொரு பழக்கமுண்டு. கவிதையில் எந்த அளவுக்கு  silliness இருக்கிறதென்று பார்ப்பேன். உலகியல் பார்வையில் அபத்தமும் சில்லறைத்தனமுமான ஒரு நடத்தை. ஒரு மனநிலை. அது கவிதையில் இருந்தால் மட்டுமே அது நல்ல கவிதையாக ஆகிறது. அந்த innocence கவிஞனுக்கு மிக அவசியமானது.

நமக்கு இந்த அரசியல்கவிதைகள், கொள்கைக்கவிதைகள் எல்லாம் ஏன் எரிச்சலூட்டுகின்றன என்றால் அவர்களிடம் அந்த innocence இருப்பதில்லை என்பதனால்தான். புரட்சி, சீர்திருத்தம், பெண்ணியம் என்றெல்லாம் பேசும் கவிதையின் சிக்கலே நாம் கவிதையில் எதிர்பார்க்கும் அந்த கள்ளமில்லாத ஒரு குழந்தைத்தனம்தான் அந்த பாவலாக்களுக்கு முதல்பலி என்பதனால்தான். கவிதை வேதாந்தமும் பிரபஞ்ச தத்துவமும் பேசும்போதும் இதேபோல அது கருங்கல்லாக ஆகிவிடுகிறது.

ஆனால் புரட்சியும் கலகமும் சீர்திருத்தமும் வேதாந்தமும் எல்லாம் கவிதையில் வரும். அந்தக் குழந்தைத்தனத்தில் இருந்தே அதெல்லாம் இயல்பாக கிளம்பிவரவேண்டும்.தேவதேவன் கவிதைகள் குழந்தைத்தனம் இருக்கும் கவிதைகள். ஆனால் அவை ஞானமும் அறிவும் எல்லாம் வெளிப்படுபவையும்கூட.

இந்தக் குழந்தைத்தனம் எங்கே வெளியாகிறதென்றால் கவிஞன் உலகத்தை வெறும் காட்சிகளாகவே வேடிக்கைபார்ப்பதில்தான். மனிதர்களின் நடத்தையை அவன் கொஞ்சம் விலகிநின்று வேடிக்கை பார்க்கிறான். கவிதை என்பதே ஒரு வேடிக்கைபார்த்தல்தான் என்றுகூட நான் நினைத்ததுண்டு.

மதாரின் கவிதைகளை இப்போதுதான் வாசிக்கிறேன். அவருடைய குழந்தைக் கண்கள்கொண்ட பார்வை வெளிப்படுமிடங்கள் எல்லாமே அழகானவை.

 

வெண்ணிற ஆடொன்ன்று

யாரோ போட்ட கோலத்தில்

தவறி விழுந்து புரண்டது

“மாறுவேடப்போட்டி முதல்பரிசு

மான்வேடமிட்ட ஆடு”

பின்னிருந்து வந்த பரிகாசக்குரல்

கேட்டு எழுந்த அது

சக ஆட்டை செல்லமாக

ஒருமுறை முட்டிக்கொண்டது

 

என்ற வரி அளித்த மகிழ்ச்சிதான் எனக்கு கவிதையனுபவம். இதிலுள்ளது ஒரு கற்பனையான காட்சி அளிக்கும் குதூகலம்தான். குழந்தைகள் இப்படி கேட்பதுண்டு. யானைக்கு சிறகு முளைச்சா எப்டி இருக்கும்? என்று என் பையன் ஒருமுறை கேட்டான். இந்த நாடகத்தில் ஆடு அடையும் வேஷ மாறுதலுக்கு குறியீட்டு அர்த்தமெல்லாம் அளிக்கவேண்டியதில்லை. நேரடியாகவே அழகான ஒரு காட்சியனுபவம். காட்சிக்குள் ஊடுருவும் அந்தக் குழந்தைத்தனம் அதை ஒரு அருமையான பிரபஞ்சநாடகமாக ஆக்கிவிட்டது

எஸ்.சத்யராஜ்

மதார்- கடிதம் -5

மதார் கடிதம்-4

மதார் கடிதங்கள்-3

மதார்- கடிதங்கள்-2

மதார்- கடிதங்கள்-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2021 11:31

நீலம் ஒரு நடனம்

அன்புநிறை ஜெ,

இந்நாட்களின் அகவிடுதலைக்காகத் தாங்கள் கூறியபடி தனிநடிப்புக்கென நீலத்திலிருந்து ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்க நீலத்திலேயே சில நாட்கள் நீந்திக் கொண்டிருந்தேன். எதைத் தேர்ந்தாலும் இன்னொரு பகுதி கோபித்துக் கொண்டது. இன்னொரு புறம் பல பகுதிகளின் உணர்வுத் தீவிரம் தொடவியலா வண்ணம் வெகு உயரே நின்றது. எந்த அத்தியாயத்தைத் தொட்டாலும் காளிந்தியின் நீர்ச்சுழல் போல உடனே உள்ளிழுத்துக் கொண்டது. மூச்சுத்திணற மூழ்கித் திளைத்து வெளியேற மறந்து, எப்போதோ தலைதூக்கி மீண்டும் மீண்டும் திளைத்துக் கொண்டிருந்தேன். இன்று வரை வெண்முரசில் எதைக் குறித்து எழுதினாலும் இதுவரை நீலம் குறித்து எழுதியதில்லை. அது பித்தின் வெளி. எதிர்வந்து நிற்பவரை வெளியேற வழியின்றி விழுங்கிவிடும் மாய ஆடி.

நேற்றோடு இதை இனி சில காலம் படிக்க வேண்டாம் என்றெண்ணி எடுத்து வைத்தேன். ஆனால்

நீலம் மொத்தமும் ஒரு நடனமாக தொடரந்து உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நான் நடனம் அறிந்தவளல்ல, ஆனால் நீலத்தின் தாளமும் சுருதியும் உடல் உணர்ந்து கொண்டே இருக்கிறது. இது உரைநடையல்ல, மொத்தமும் இசை, காலமும் வெளியுமென காட்டிக் கொள்ளும் முடிவிலியின் லயத்தில் அச்சுப்பிசகாமல் நிகழும் ஒரு நடனம்.  இந்த நிலை தாளமுடியாததாக, வெளியேற முடியாததாக இருந்தது.

இன்று அதிகாலை முதலே காளியனிலாடிய கரியவனை (நீலம்-18) மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டே இருந்தது அகம். “கண்ணா குலக்கொழுந்தே. நில் அங்கே. அன்னை குரல் கேள் என்ற என் குரலைக் கேட்டு அவன் ஒருகணம் திரும்பினான். அம்முகத்தில் எழுந்த இளநகையைக் கண்டேன். மறுகணமே கால்நழுவி கருநீர்ச்சுழிக்குள் விழுந்தான்”. அந்தக் கருநீலக் குழந்தை ஒரு இளநகையோடு நீருள் விழுவது  ஒரு காட்சியாக பதைபதைக்க வைத்துக் கொண்டே இருந்தது.

மனதை வேறெதிலேனும் திருப்ப இணையத்தில் இசைக் கோர்வைகளைத் தேடத் தொடங்க இந்த நடனம் கண்ணில் பட்டது. கள்குடித்த குரங்குக்கு பித்தும் பிடித்தது போல ஆகிவிட்டது, நேரம் கிடைத்தால் பாருங்கள்

காளிங்க நர்த்தனத்துக்கு முன் வரும் பந்து விளையாடலில் இருந்து கணமும் கண்விலக்க முடியவில்லை. நாகமும் கண்ணனும் பார்த்துக் கொள்ளும் கணம் சிலிர்ப்பாக இருந்தது.

நீலத்தை மொத்தமும் இசைக் கோர்வையாக்கி நாட்டிய நாடகமாய் யாரேனும் வரும்காலத்தில் நிகழ்த்தலாம். ராமநாமம் உச்சரிக்கப்படும் நிகழும் இடத்தில் வந்தமரும் அனுமனைப் போல, நீலம் நிகழும் இடங்களிலெல்லாம் ராதை இருப்பாள்.

“அணைந்தது கருந்தழல். அலையடங்கி அமைந்தது கருநதி. அதிலாடி எழுந்தது என் கருநீலக் கண்ணன் கழல்” என்ற வரிகளின் சந்தம் இதோ இன்னும் செவியில் எஞ்சியிருக்கிறது.

மிக்க அன்புடன்,

சுபா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2021 11:30

June 6, 2021

இலக்கிய விருதுகளை ஏற்பது

தமிழக அரசின் இலக்கியவிருதுகள் இலக்கியவிருதுகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

குடிமகனுக்குரிய உரிமைகளுக்கு அப்பால் அரசுகள் அளிக்கும் எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது– என்ற உங்கள் வரி சோர்வை அளித்தது. ஏன் அபப்டி ஒரு நிபந்தனையை போட்டுக்கொள்ளவேண்டும் என்று புரியவில்லை. எவருக்காக உங்களை நிரூபிக்கிறீர்கள்? உங்கள் வாசகர்களில் சிலரையாவது இது வருந்தவைக்கும் என்று நினைக்கிறேன். எழுத்தாளர்கள் அரசு விருதுகளைப் பெறலாகாதென நினைக்கிறீர்களா?

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ராஜேந்திரன்,

இந்த வகையான சிபாரிசுகளைச் செய்யும் தகுதியின் முக்கியமான அடிப்படை என்பது அவ்வரிசையில் சென்று நிற்காமலிருப்பது.

நான் எழுதவந்த காலகட்டத்தில் சாகித்ய அக்காதமி விருதுகள் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. எல்லா முக்கியமான விருதுகளையும் கோவி.மணிசேகரன் பெற்றுக்கொண்டிருந்த காலம் அது. அதற்கு எதிராகப் பேச, இலக்கியத்தின் அழகியலையும் நேர்மையையும் முன்வைக்க, சுந்தர ராமசாமி அன்றி எவருமே முன்வரவில்லை.

1992ல் கோவி மணிசேகரன் விருது பெற்றபோது மிகக் கடுமையாக எதிர்வினையாற்றினேன். அடுத்த ஆண்டு அவருக்கும் எனக்கும் ஒரு விருது வழங்கப்பட்டபோது அவருடன் இணைந்து அவ்விருதைப் பெறமாட்டேன் என அறிவித்தேன்.  

அது நான் எழுதவந்த காலகட்டம். பலரும் அது ஒரு தற்கொலைத்தனமான போக்கு என எச்சரித்தனர். அசோகமித்திரன் இரண்டு கடிதங்களே எழுதியிருக்கிறார். நான் ஆற்றல் மிக்க பகைவர்களைச் சம்பாதிக்கிறேன், என் பெயரே வெளித்தெரியாமலாகிவிடும் என்றார்.

சுந்தர ராமசாமியும் “இழப்புகளை கணக்கிலெடுத்துக்கொண்டு முடிவெடுங்கள். இழப்புகளும் எல்லா தரப்பிலிருந்தும் வசைகளும் மட்டும்தான் மிஞ்சும். எங்கும் எந்த நன்றியும் இருக்காது. வரலாற்றில்கூட பெயரில்லாமலாகிவிடும்” என்றார். அன்று இன்றைய ஊடகமேதும் இல்லை. சிற்றிதழ்களில் எழுதிக்கொண்டிருந்த சூழல்.

ஆனால் “யாராவது ஒருவர் சொல்லவேண்டும் அல்லவா? தலைமுறைக்கு ஒருவராவது?”என்று நான் அவரிடம் சொன்னேன். அது நான் எடுத்த முடிவு. அன்றுமுதல் இன்றுவரை தொடர்ச்சியாக அதை என் இலக்கியப் பணிகளின் ஒரு பகுதியாகச் செய்துவருகிறேன். தகுதியானவர்களை முன்வைப்பது, அல்லாதபோது எதிர்ப்பை பதிவுசெய்வது. தமிழிலும் மலையாளத்திலும்.

பலமுறை எழுதியிருக்கிறேன் – இது விருதுச் சர்ச்சை அல்ல. இது இலக்கிய விழுமியங்களை முன்வைப்பது, தொடர்ந்து பேசி அவற்றை நிலைநாட்டுவது. க.நா.சு அதைச் செய்தார், சுந்தர ராமசாமி செய்தார். அவர்கள்மேலும் இப்போது சொல்லப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. ’இவர்கள் தங்களுக்கு விருதுவேண்டும் என்றுதான் இதையெல்லாம் பேசுகிறார்கள், பிறருக்கு விருது அளிக்கப்படும்போது பொருமுகிறார்கள்’ — இதெல்லாம்தான் பாமரர் எப்போதுமே சொல்லும் எதிர்வினை.

அன்றுமின்றும் தொடர்ச்சியாக தகுதியானவர்களை முன்வைப்பது, தகுதியற்றவர்கள் விருதுபெறும்போது அதை கண்டிப்பது என்னும் இலக்கியச் செயல்பாட்டைச் செய்பவர்கள் எவர் என்று பாருங்கள். அரிதினும் அரிதாக தலைமுறைக்கு ஒருவர். பெரும்பாலும் எவரும் இதைச் செய்வதற்கு முன்வருவதில்லை. என் தலைமுறையில் நானன்றி எவர் இதைச் செய்கிறார்கள்? அடுத்த தலைமுறையில் எவர் செய்யக்கூடுமென தோன்றுகிறது? 

ஏனென்றால் இதைச் செய்வதற்கு முதலில் அனைவரையும் படித்து விமர்சனக் கருத்துக்களை உருவாக்கியிருக்கவேண்டும். விருதுச் சந்தர்ப்பத்துக்கு அப்பாலும் அந்த மதிப்பீடுகளை தெளிவாக முன்வைக்கவேண்டும். அதை பெரும்பாலான எழுத்தாளர்கள் செய்வதில்லை.

இத்தகைய கருத்துக்களைச் சொல்பவர்கள் விருதுகள் உட்பட அனைத்தையும் துறக்கும் மனநிலை கொண்டிருக்கவேண்டும். எழுத்தாளர்களுக்கு இங்கே கிடைக்கும் குறைந்த பட்ச நன்மை என்பது விருதுகளே, அவற்றை அவர்கள் துறக்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகாரக் கணக்குகளின்றி பேசவே முடியாது. அவர்களின் பணியிடங்களில் நெருக்கடிகள் எழும்.

ஆகவே எப்போதும் தனியாகவே குரல்கொடுக்கிறேன். ரகசிய ஆதரவுகளே கிடைத்துள்ளன. பொதுவெளியில் இலக்கியமறிந்தோர் மௌனமாக இருப்பார்கள். பாமரரும் இந்த விருதுகளுக்குள் ஊடுருவ முயல்பவர்களும் இணைந்து வசைபாடுவார்கள், அவதூறு செய்வார்கள், ஏளனம் செய்வார்கள். இன்று சமூக வலைத்தளங்களில் எல்லாவற்றிலும் எல்லாரும் ஏதாவது சொல்ல முன்வருகிறார்கள்.

இப்போதே பாருங்கள், ஆளுங்கட்சிக்கு ஆதரவுக்குரலெழுப்புவது, சொந்த எதிரிகளை ஆளுங்கட்சிக்கு எதிரானவர்களாக கட்டமைக்க முயல்வது, தன்னை முன்வைக்க பிறரை துதிப்பது தொடங்கி சம்பந்தே இல்லாமல் உள்ளே வந்து சலம்புவது வரை எத்தனை குரல்கள். ஆனால் இத்தருணத்திலாவது தங்கள் நோக்கில் தரமான படைப்பாளிகளை முன்வைப்பவர் எவர்? தரமற்றவர்களுக்கு அளிக்கப்பட்டால் எதிர்ப்பேன் என்பவர் எவர்? ஒருகுரல், ஒரே ஒரு குரலாவது உள்ளதா? 

இத்தகைய விஷயங்களில் அனைவருமே மிகத்தந்திரமான நிலைபாட்டையே எடுக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். இனிமேலாவது என் குரல் போல நாலைந்து குரல்களாவது ஒலிக்கவேண்டும் என விரும்புகிறேன்.

இத்தகைய செயல்பாடுகள் வழியாகவே அமைப்புகள்மேல் ஓர் அழுத்தம் உருவாகிறது. அமைப்புகளில் ஊடுருவும் தன்னலக் கூட்டம் கொஞ்சம் எச்சரிக்கை கொள்கிறது. அவ்வப்போது தகுதியானவர்கள் விருதுபெறுவது இப்படித்தான். [விருதுபெற்றபின் அவர்களே விழுமியங்களை முன்வைப்பவர்களுக்கு எதிராகப் பேசுவதும் உண்டு] கன்னடத்திலும் வங்கமொழியிலும் மலையாளத்திலும் இத்தகைய குரல்களை எழுப்பும் வலுவான தரப்பு எப்போதுமுண்டு – இப்போது வைரமுத்து விருதுவரை அதை நாம் கண்டோம்.

சாகித்ய அக்காதமி விருதுகளை விமர்சிப்பதனால் அதைப் பெறுவதில்லை என முடிவுசெய்தேன். அவ்வமைப்பின் மையப்பொறுப்புகளில் என்மேல் பெருமதிப்பு கொண்டவர்கள், என் நண்பர்கள் என்றே நான் சொல்லத்தக்கவர்கள் இருந்திருக்கிறார்கள். டெல்லி சென்றால் நான் சென்று சந்தித்தாகவேண்டிய அளவுக்கு அணுக்கம் கொண்டவர்கள்.  பலமுறை அவ்விருதை ஏற்கும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது- நான் மறுத்துவிட்டேன்.

அதற்குக் காரணம் இந்த விமர்சனப்பார்வையை தொடர்ந்து முன்வைக்க நான் வெளியே நின்றாகவேண்டும் என்பதே. க.நா.சு முதியவயதில் சாகித்ய அக்காதமி விருது பெற்றபோது அவர் அதுவரை சொன்ன விமர்சனங்கள் எல்லாம் அந்த விருதை அவர் பெறுவதற்காகவே என வசைபாடப்பட்டு, அவருடைய மாபெரும் வரலாற்றுப் பங்களிப்பு சிறுமைசெய்யப்பட்டது. அவருக்கு முன் அவ்விருதை வாங்கிய சில்லுண்டிகளெல்லாம் அவ்வாறு எழுதினர். “எனக்கு கண்சிகிழ்ச்சை செய்துகொள்ள பணமில்லை. இந்தப் பணம் அதற்கு உதவும் என்பதனாலேயே வாங்கினேன்” என அவர் பரிதாபமாக விளக்கம் அளிக்கநேரிட்டது.

இங்குள்ள பொதுமனநிலை அது.  அக்குரலுக்கு இடமளிக்காமலிருக்க நாம் விலகியாகவேண்டும். இல்லையேல் சொல்லப்படும் ஒவ்வொரு வரியையும் சூழ்ச்சி என்று திரிப்பார்கள். இல்லையென்றாலும் திரிப்பார்கள், ஆனால் நாம் விலகி நின்றால் வாசகர்களிடம் ஒரு நம்பகத்தன்மை உருவாகிறது. ஆகவேதான் அந்தக் கட்டுரையுடனேயே அவ்வறிவிப்பை வெளியிட்டேன்.

பாருங்கள், அக்கட்டுரையிலேயே அந்த தன்னறிவிப்பு உள்ளது. ஆனால் அதன் பின்னரும் அக்கட்டுரைமேல் ஏளனமும் வசையும் பொழிந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அது நான் எனக்கு விருதுகொடுங்கள் என்று கோரி எழுதியது என்றே சொல்லிக்கொண்டிருந்தனர். இந்தப் பாமரக்கூட்டம் பெரும் எண்ணிக்கையில் இருப்பதனால் இவர்களின் கூட்டுக்கூச்சலுக்கு ஒரு பாதிப்பு உள்ளது, இளம்வாசகர்களை அது திசைதிருப்பக்கூடும். ஆகவே அவ்வாறு நம்மைப்பற்றி நாம் திட்டவட்டமாகச் சொல்லிக்கொண்டே இருந்தாகவேண்டும் என்பதே நம் சூழல்.

*

அரசு விருதுகளை ஏற்பது பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எழுத்தாளர்கள் அரசு அளிக்கும் விருதுகளை, கௌரவங்களை ஏற்பதில் பிழையோ குறைவோ ஏதுமில்லை. ஒட்டுமொத்தக் குடிமக்களின் பிரதிநிதியாக நின்றே அரசு அதை வழங்குகிறது. வழங்குபவர் மக்களின் பிரதிநிதி. அரசரோ தலைவரோ அல்ல. மு.க.ஸ்டாலின் என்பவர் இன்னும் ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாடேதான். அவருடைய அமைச்சர்களும் தமிழகத்தின் பிரதிநிதிகளே.

ஆகவே நாளை திமுகவின் செயல்பாடுகள்மேல், ஸ்டாலின்மேல் ஒரு விமர்சனம் எழுந்தால் இன்று விருது பெறுபவர்கள் அவ்விருதை துறக்க வேண்டியதில்லை.அந்த விருது தமிழகம் அளித்த கௌரவம். அதை ஒருவர் ஓர் அரசியல் உத்தியாக துறப்பது வேறு. துறக்கவேண்டும் என எவரும் சொல்லமுடியாது.  விருது பெறுவதனால் அவரை அல்லது அரசை விமர்சிக்கக்கூடாது என்றில்லை. விருதுக்காக அவரிடமோ அல்லது திமுகவிடமோ நன்றியுடன் இருக்கவேண்டும் என்பதும் இல்லை. 

நான் அரசுவிருதுகளை ஏற்கமாட்டேன் என்னும் என் நிலையைக் கூறுவது எழுத்தாளனாக நின்று அல்ல, அதற்கப்பால் ஓர் இடத்தை எனக்கென நான் உணர்வதனால். வெண்முரசு எழுதுவதற்கு முன்பு அரசு விருதுகள் பெறுவதில் எனக்கு தடையேதும் இருக்கவில்லை. அப்போது பத்ம விருது வந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பேன். இன்று நான் வேறு ஒரு இடத்தில் இருக்கிறேன். இதை முன்னரும் பலமுறை எழுதிவிட்டேன்.

ஆனால் இதை பிறர் ஏற்கும்படி பொதுச்சூழலில் சொல்ல முடியாது. அதன்மேல் எழும் பிறருடைய மறுப்போ கேலியோ இயல்பானதுதான். ஏனென்றால் அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வையை நான் வடிவமைக்க முடியாது. நான் முன்வைப்பது என்னுடைய தன்னுணர்வு , எனக்கு அது முக்கியமானது.

ஒற்றைவரியில் இப்படி கூறுகிறேன். பல ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்படுவதுதான். ஒரு சாதகன் அவனுடைய குரு நிலையில் இருப்பவர்களிடம் அன்றி எவரிடமும் பணியலாகாது. அரசன் முன்னால் குறிப்பாக. அதைப்போல அவன் செய்யக்கூடாத மேலும் பல உண்டு. அது ஒரு நோன்பு என்றுகொள்ளுங்கள். 

ஜெ 

 

அன்புள்ள ஜெ,

நீங்கள் திராவிட இயக்க இணையக்கொழுந்துகளைப் பற்றிச் சொன்னது உண்மை. “நாங்க டிபியிலே தலைவர் படத்தை வைச்சுகிட்டு நேரடியா உழைச்சோம். இப்ப இவனுக தட்டை தூக்கிட்டு வந்துட்டானுங்க’ என்றவகையில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

கட்சிக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்த கட்சியெழுத்தாளர்களுக்கு மட்டுமே விருதுகள் செல்லவேண்டும் என்று கூறுகிறார்கள். அனேகமாக அப்படித்தான் நடக்கும். மற்ற எழுத்தாளர்களுக்கு விருதுகள் சென்றால் அவர்கள் இக்கூட்டத்தவரால் அவமதிக்கப்படுவார்கள்.

[இவர்கள் ஒட்டுமொத்த்தமாக இலக்கியவாதிகளை சிறுமைசெய்து வசைபாடும் பதிவுகளை வெட்டி அனுப்பியிருக்கிறேன்]

இவ்விருதை வாங்குவதே ஒருவகையில் சேற்றை அள்ளிப்பூசிக்கொள்வதுதான் என்ற நிலைமையை உருவாக்கிவிடுவார்கள் இவர்கள்.

ஆர்.கணேஷ்

 

அன்புள்ள கணேஷ்,

இணையத்தில் கூச்சலிடுபவர்களுக்கெல்லாம் பெரிய இடம் கட்சியிலோ ஆட்சியிலோ இருக்காதென்றே நினைக்கிறேன். நம்பிக்கையை கொடுப்பதே நாம் இப்போது செய்யவேண்டியது. அது பொய்க்குமென்றால் மீண்டும் முன்பு போலவே சரியானவற்றை, சரியானவர்களை முன்வைத்துப் பேசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

ஜெ

 

விருதுகள், அமைப்புகள் நமக்குரிய சிலைகள்
1 like ·   •  1 comment  •  flag
Share on Twitter
Published on June 06, 2021 11:35

சோஷியல் டைலமா- பிரவீன்

 

அன்புள்ள ஜெ,

 ‘The Social Dilemma” என்ற ஆவணப்படம் பார்த்தேன். அதன் சுட்டியை கீழே டுத்துள்ளேன்.

https://www.youtube.com/watch?v=uaaC57tcci0

https://www.netflix.com/in/title/81254224

பொதுவாக நாம்  ஒரு செயலை செய்து கொண்டே இருப்போம், அது நமக்கு நல்லது இல்லை என்று தெரிந்தும் கூட. உதாரணமாக, காலையில் எழுந்து முதலில் மொபைல் பார்ப்பது நல்லதல்ல என்று தெரிந்தும் அதை நாம் எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். திடீரென்று ஒரு நாள் ஏதாவதொரு நிகழ்வு நடக்கும் போதோ அல்லது யாரவது நம் பின் மண்டையில் அடித்து சொல்லும் போதோ தான், அந்த தவறின் விளைவுகளை பற்றி தெரிந்து அதை கைவிட முயல்வோம்.

அப்படி ஒரு பின் மண்டையில் அடித்து சொல்லும் ஆவணப்படம் தான் ‘The Social Dilemma’. நாம் இந்த தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரன்டு வகையாகவே அதன் உபயோகத்தை வைத்து பிரிப்போம். ஒன்று அது நிகழ்த்தி இருக்கும் சாதனைகளை. அடுத்து அது மனித குலத்திற்கு ஏற்படுத்தும் அழிவை.ஒன்று அதை முழுமையாக ஏற்போம் அல்லது அதனை வசைபாடுவோம்.

`இந்த “cellphone” வந்ததிலிருந்து, எல்லாம் நாசமா போச்சு` போன்ற வசைகள். `இந்த செல்போன் வந்து நம் அன்றாட வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக்கியது`, போன்ற புகழ்ச்சியை. ஆனால்  நாம் உண்மையிலே அதன் நன்மை/தீமைகளை பட்டியலிட்டு ஒரு விவாதப்பொருளாக்கி அதில் இருக்கும் ethical/moral சவால்களை நாம் சீண்டியதே இல்லை.

அந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறது இந்த ஆவணப்படம். ஒருவன் ஒரு சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் போது, அவன் மொபைலுக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் `செயற்கை நுண்ணறிவுடன்` விளையாடிக் கொண்டிருக்கிறான் என்பது தெரியாது. இந்த `செயற்கை நுண்ணறிவு` நாம் கற்பனை செய்ய முடியாத அளவு மிகவும் பெரியது. நம் ஒவ்வொரு ரகசியமும் அதற்குத் தெரியும். அதை வைத்து நாம்  என்ன செய்வோம் என்றும் அதற்குத் தெரியும். அதன் அடிப்படையிலேயே அது நமக்கு ‘Suggestions’ஐ சொல்கிறது.

இது மேலோட்டமாக பார்த்தால் ஒரு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கும். இந்த சமூக ஊடகங்கத்தின் நோக்கம் என்ன? ஒன்றே ஒன்று தான். “நம் ScreenTimeஐ அதிகரிப்பது”. இது தான்  இங்கு சந்தை. நம்முடைய நேரம் தான் சந்தைப்பொருள். இந்த சந்தைப்பொருளுக்குத்தான் எல்லா சமூக ஊடகங்களும் போட்டி போடுகின்றன.

“If you are not buying any product, then you are the product”

அடுத்து நமக்கு இரு முக்கியமான கேள்விகள் வருகிறது.

இதனால் அந்த ஊடகங்களுக்கு என்ன லாபம்?இதனால் நமக்கு என்ன நஷ்டம்?

சமூக ஊடகங்கள் லாபம் அடைவது “Advertisement” வழியாகவே. நீங்கள் பார்க்கும் விடீயோவையோ, போடும் போஸ்டாயோ வைத்து, உங்கள் விருப்பங்களை அது ஊகிக்கும். அதன் பொருட்டு, Advertisement வரும். உதாரணமாக, நீங்கள் “How to cook gulab jamun” என்று Search செய்தால், அதற்கு தகுந்தவாறே “Jamun” கம்பெனி விளம்பரங்கள் வரும். அடுத்த முறை நீங்கள் பார்க்கும் போதும், அது சம்பந்தபட்ட வீடியோக்களே வரும். நீங்கள் ஒரு சந்தைப் பொருள் ஆகிறீர்கள்.

நாம் ஒரு போஸ்ட்ஐ, ஒரு போட்டோவை போடுகிறோம் என்றால், நாம் அதற்கு “likes” எதிர்பார்ப்போம். நம் எதிர்பார்ப்பு தான் இங்கே சந்தைப்பொருள். நம்மை மேலும் மேலும் இந்த எதிர்பார்ப்பை தூண்டிக்கிட்டே இருக்க செய்வது தான் அந்த செயற்கை நுண்ணறிவு programsஇன் வேலை. நம்மை அதற்கு அடிமை ஆக்குவது. இது தான் இங்கு நிகழ்வது. நாம் இதனை மறக்கச் செய்தால் கூட “Notifications” மூலம் நம் ஆசையினை கிளறச்செய்வது.

நாம் இதற்கு அடிமை ஆகிறோம் என்பது நம்மை அறியாமலேயே நடக்கும். மிகவும் கொஞ்சம் கொஞ்சமாக இது நடக்கும். நம் அரசியல் நிலைப்பாட்டை, காதலை, அன்றாட விருப்பங்களை, என்று அனைத்தும் அதற்குத் தெரியும்.  இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இந்த சமூக ஊடகங்கள் நம் “Data”வை  விற்கலாம். ஆனால் அதனை விற்காமலே நம் அனைத்து விருப்ப/வெறுப்புகளை பயன்படுத்தி, நம் எந்த ஒரு நிலைப்பாட்டினையும்  மாற்றலாம். உதாரணமாக, நம் அரசியல் நிலைப்பாட்டினை. இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த சமூக ஊடகங்கள் நேர்முகமாக, இதில் ஈடுபடுவதில்லை. அது ஒரு “platform”ஐ நமக்குத் தருகிறது. அதில் நம் அத்தனை வெறுப்புகளையும் , காள்புகளையும் நாம் ஏற்றுகிறோம். இதனால் ஒரு மெய்நிகர் தளத்தில் நடக்கும் வெறுப்புகளை, நம் அன்றாட பொதுவெளிக்கு மாற்றி சண்டையிடுகிறோம்.

சமூக ஊடகத்தினால் ஏற்படும் சமூகம்,அறம், உளவியல்   சார்ந்த சிக்கல்களின் ஆய்வுகள் நடக்கத் தொடங்கிவிட்டன. இது இங்கே வந்து 10 வருடங்கள் தான் ஆகின்றன என்றாலும், அதன் தாக்கம் எந்த ஒரு தொழில்நுட்பமும் செய்யாத அளவு மிகவும் பெரியது. ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக நம்மை அதற்கு அடிமை அடையச்செய்கிறது. நம் குழந்தைகளின் நேரத்தை நம்மிடமிருந்து பிரிக்கிறது. நாம் என்ன பார்க்க வேண்டும் எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. நாம் நம் கையில் வைத்திருப்பது (Mobiles) நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம், அதன் சாத்தியங்கள் எல்லையற்றது. அதனாலே அது மிகவும் பயங்கரமானது.

எந்த ஒரு தொழில்நுட்பமும் மனிதனுக்கு உதவவே உருவாக்கப்படுகிறது. அதை யாரும் இங்கே மறுக்க முடியாது. இந்த தகவல் தொழில்நுட்பமும் அவ்வாறே. ஆனால் இது வளர்ந்து வளர்ந்து மனிதனை ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டது.  நம் ஒவ்வொரு clickஉம் சேமிக்கக்ப்பட்டு, உபயோகப்படுத்தப்படுகிறது. நாம் அதனை கையாள்வதாக நினைத்துக் கொண்டாலும், உண்மையில் அதுவே நம்மை கையாளுகிறது.

இந்த ஆவணப்படத்தில், இதை ஒரு விவாதமாகவே கொண்டு செல்கிறார்கள். இது ஒரு தொடக்கமே. நாம் உருவாக்கிய பொருள் நம் கையையே கடிக்கும் போது, அதன் தேவையினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாம் என்ன தான் முற்றிலும் இதனை தவிர்க்க முடியாமல் போனாலும், நமக்கு உகந்தவாரு நாம் அதனை பயன்படுத்த தொடங்க வேண்டும். நம் குடும்பத்துடன் உரையாடி, நமக்கு நாமே ஒரு கொள்கையினை வைத்துக் கொண்டு தான் இதனை இப்போது சமாளிக்க தொடங்க வேண்டும்.

அன்புடன்,

பிரவின்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2021 11:34

மதார்- கடிதம் -5

’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

அன்புள்ள ஜெ

இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விருது பெறும் மதாருக்கு வாழ்த்துக்கள். நான் அவருடைய கவிதைகளை இப்போதுதான் வாசிக்கிறேன். இளவயதிலேயே, முதல்நூலிலேயே அங்கீகாரம் பெறுவது என்பது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் பெரிய சவாலும்கூட. மிக அதிகமான எதிர்பார்ப்புகள் உருவாகும். அவற்றை சந்திக்கவில்லை என்றால் ஏமாற்றமும் உருவாகும்

நான் மறக்கவே முடியாத ஓர் அனுபவம் உண்டு. 1993ல் சிம்லாவில் ஓர் இலையுதிர்காலம். நான் ரயிலில் சென்றுகொண்டிருந்தேன். நல்ல குளிர். ஆகவே கண்ணாடிவழியாகப் பார்த்துக்கொண்டே சென்றேன். காடு பூத்து செக்கச்செவேலென்று இருந்தது. மனம் கனவில் மிதந்தது. அந்தப் பரவசத்தை நான் மறக்கவே இல்லை. மொத்தக்காடும் ஒரு பூ மாதிரி இருந்தது

சிம்லா சென்றபிறகுதான் அதெல்லாம் மரங்கள் காய்ந்து இலைகள் சருகாகி சிவந்து இருந்தது என்று தெரிந்துகொண்டேன். நான் அவற்றை மலர்கள் என்று நினைத்தேன். ரத்தச்சிவப்பிலும் பொன்னிறத்திலும் அவை காய்ந்திருந்தன. ஆனால் ஒரு பத்துநிமிடம்தான் அந்த ஏமாற்றம். அதன்பின் மீண்டும் அந்த காய்ந்த காட்டை நான் மலர்க்காடாகவே நினைக்க ஆரம்பித்தேன்,

அது என் ஹனிமூன் என்று சொல்லத்தேவையில்லை. அந்தக் காடு இதுவரை சிவந்த மலர்க்காடாகவே இருக்கிறது. வண்ணம் குறையவே இல்லை.

பிறகு வீரான்குட்டியின் ஒரு கவிதை படித்தேன். உங்கள் தளத்தில்தான்

வீரான் குட்டிபூத்தபடி

சமவெளியின்
பசுமைநடுவே
இலைகாய்ந்து
நிற்கும் மரமே

பூத்துநிற்கிறாயென்று
தூரத்தே நின்றஒருவன்
எண்ணி
நெஞ்சில் பிரதியெடுத்துக்
கொண்டுசென்றிருக்கிறான் உன்னை.

மரணம்வரை அவனிலிருப்பாய்
பூத்தபடியே நீ.

அவனிலிருந்து கேட்டு
பிறரும்
மேலும் பூக்களுடன்
உன்னைக் காண்பார்கள்.

பூக்காலமாக உன்னை
ஒருவன் வரையலாம்.
கவிஞனும் எழுதலாம்

சமவெளியின் பசுமைநடுவே
இலைகாய்ந்து நிற்கும் மரமே
ஒருநாளும் காயமாட்டாய் நீ!

அந்தக்கவிதை என்னுடைய வாழ்க்கைப் பிரகடனம் போலவே இருந்தது. மலரோ சருகோ அது நமக்குள்தானே பூக்கிறது. அதை மலராகவே கொண்டுசெல்வதே நம் பொறுப்பு.

மதாரின் இந்தக் கவிதை எனக்கு அந்த அனுபவத்தின் இன்னொரு பக்கத்தை அளித்தது.

பட்டுப்போன ஒரு மரத்தை

தூரக்காட்சியில் பார்த்தேன்

மேகத்திரட்சி ஒன்று

இலைகளைப்போல

பொருந்தியிருந்தது

பட்டுப்போன அந்த மரத்தில்

இப்போது

மழை காய்த்திருக்கிறது

மழைக்கு ஒதுங்கும் ஒரு சிறுவன்

மரத்தடி நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான்

சுருக்கமான கவிதை. ஆனால் குளிர்மேகம் ஒரு பெரிய இலைத்தழைப்பு போல காய்ந்த மரத்தின்மேல் அமர்ந்திருப்பதை நான் கற்பனைசெய்துகொள்கிறேன். வெள்ளிபோல சுடர்விடும் மேகம். குளிர்ந்த இலைகள். மழையே இலையாக நின்றிருக்கிறது. அந்த காட்சியின் குளிர் உச்சிமண்டையில் ஒரு சொட்டு பனித்துளி விழுந்ததுபோல் இருந்தது

ஆனந்த்

மதார் கடிதம்-4

மதார் கடிதங்கள்-3

மதார்- கடிதங்கள்-2

மதார்- கடிதங்கள்-1

 

வெயில் பறந்தது தபாலில் பெற :

https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdN
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 06, 2021 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.