Jeyamohan's Blog, page 969

June 12, 2021

கடிதங்கள்

 

கேரளமும் பக்தி இயக்கமும்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமாயிருக்கிறீர்களா ?

‘கேரளத்தில் பக்தி இயக்கம்’ பற்றிய தங்கள் கட்டுரையில் நாராயணபட்டத்ரி பற்றியும், அவர் இயற்றிய நாராயணீயம் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. கே.எம். ஜார்ஜ் எழுதிய நூலில் அது பற்றி இல்லை என்பதாலா? வைஷ்ணவ சம்பிரதாயத்தையும், அதன் அங்கமான பக்தி இயக்கத்தையும் மிகப்பெரிய அளவில் கேரளத்தில் வேறூன்றச் செய்தது பட்டத்ரியின் நாராயணீயம் அன்றோ? அல்லது, பட்டத்த்ரியின் கால நிர்ணயம் சரிவர இல்லை என்பதால் அதைக் குறிப்பிடவில்லையா?

நன்றி.

ஆமருவி தேவநாதன்

www.amaruvi.in

அன்புள்ள ஆமருவி தேவநாதன்,

நாராயணீயம் முக்கியமான படைப்பு. ஆனால் அது சம்ஸ்கிருத இலக்கியம். அக்கட்டுரையில் நான் மலையாள இலக்கியங்களைப் பற்றியே பேசுகிறேன். இந்தியா முழுக்க சம்ஸ்கிருத இலக்கியம் உள்ளூர் இலக்கிய இயக்கங்களுடன் சம்பந்தப்படாத தனித்த இயக்கமாகவே இருந்துள்ளது.

மேல்பத்தூரை கேரள இலக்கிய மரபுடன் இணைக்கமுடியாது. அப்பைய தீட்சிதர் போன்ற அவருடைய சமகால சம்ஸ்கிருத கவிஞர்களுடன் இணைத்து இன்னொரு இலக்கியமரபைச் சேர்ந்தவராகவே கருதவேண்டும்

ஜெ

 

சூமுலகம்

அன்புள்ள ஜெ

உங்கள் ஸூம் உரையாடல் பற்றிய கட்டுரையில் அணிந்திருந்த டிஷர்ட்டுகள் நன்றாக இருந்தன. ஊரடங்குக் காலகட்டத்தில் பொதுவாக தலைசீவாமல், சவரம் செய்யாமல் இருக்கும் முகங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் உங்கள் தோற்றம் உற்சாகமளித்தது.

எம். கணேஷ்

அன்புள்ள கணேஷ்,

நான் அதை அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கூடுமானவரை ஊரடங்குக் காலத்தில் நன்றாகச் சவரம் செய்து, தலைசீவிக்கொண்டு புத்துணர்வுடன் இருக்கும்படி. அது நமக்கே உற்சாகத்தை அளிப்பது.

அதோடு நாள்தோறும் நான்குபேருடன் உரையாடுகிறேன். அவர்களுக்கு நான் காட்டவேண்டிய முகமும் அதுவே. அது பொதுமுகம். அத்துடன் என்னைப் பொறுத்தவரை சோர்வான சலிப்பான மனநிலை என்பது பொதுவாகவே கிடையாது. உற்சாகமில்லாத நாளும் இருக்காது. சில தருணங்கள் இருக்கலாம், அதை மிக நெருக்கமானவர்கள் அன்றி பிறர் அறியமுடியாது.

அந்தச் சட்டைகள் என் திருப்பூர் நண்பர் அழகுவேல் அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அனுப்பியவை. அவர் அடிக்கடி அப்படி டீஷர்ட்டுகள் அளிப்பதுண்டு.

என்னுடைய எல்லா ஆடைகளும் அன்பளிப்பே. சொந்தமாக உடைகள் எடுத்து நெடுநாட்களாகிறது. ஆகவே என் நண்பர்களுக்கு தோன்றும் கோலத்தில் நான் தோற்றமளிக்கிறேன்.

நண்பர் கேலிசெய்ததுபோல கோயில்சிலைபோல் ஆகிவிட்டேன். பிடித்தமானதை கொண்டுவந்து அணிவித்துப் பார்க்கிறார்கள்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2021 11:32

மதார் கவிதைகள்- கல்பனா ஜெயகாந்த்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மதாரின் கவிதைகள் பற்றி என் தளத்தில் எழுதிய குறிப்பு:

மதாரின் கவிதைகளில், எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது அவற்றில் இருக்கும் கற்பனை வளம். பல விதங்களில் விரியும் அவரின் கற்பனையின் வீச்சே, இப்புத்தகத்தை விருதுக்கு தகுதியாக்கியிருக்கிறது.

அவர் கவிதைகளில், பந்து சிரிக்கிறது; டெய்ரி மில்க் விதைகள் முளைத்து மரமாகி, காடாகின்றன; கிணறு தன் கப்பியில் நீர் அருந்துகிறது; வெயில் பறக்கிறது குக்கூ என்று கூவியபடி; ஆடு புல்லை பாத வடிவில் மேய்கிறது; கவிஞன் திகிலுடன் வெயில் கழுவி முகம் தேடுகிறான்; கதவும் கவிஞனும் தத்தமது இளம் பருவத்தை ஏக்கத்தோடு பார்க்கிறார்கள்; அதிலும் கதவு தன்னை மூத்தவன் என்று உரிமை கொண்டாடிக் கொள்கிறது; ராட்டினம் ஏறும் செருப்பு வியக்கிறது;சொல்லை கவிஞன் குழந்தையோடு பந்து விளையாட்டாய் விளையாடுகிறான்; ஒருக்களித்துத் துயிலும் நாய், பூமியின் இதய ஓசையையும் குழந்தையின் காலடி ஓசையையுமே சட்டை செய்கிறது; தனித்தனியாக மழை விளையாட்டு விளையாடச் செல்கின்றன வாளி என்னும் வகுப்பறைக்குள் இறுகி அமர்ந்திருந்த தண்ணீர் துளிகள்; டைரி எழுதும் பெண்ணிடம் அறைச்சுவர்கள் நெருங்கி வந்து அமர்ந்து கொள்கின்றன; வெயில் பறந்து பறந்து குளிக்க நீர் தேடுகிறது; முகத்தில் வந்தறைந்த நீரினால் வெயில் தும்மி விடுகிறது; ஆகாசத்தின் கதவாகிறது கவிஞனின் சன்னல்;

மிகவும் புதியதான இக்கற்பனைகள் நம் மனதிற்கு மிக நெருக்கமானவையாகி விடுகின்றன. அவற்றின் புதுமையாலேயே நம் மனதில் நெடுங்காலம் நீடிக்க வல்லவையாகி விடுகின்றன்.

மதாரின் கவிதைகளில் உள்ள கள்ளமின்மை பற்றி பெரும்பாலான வாசகர்கள் வியக்கிறார்கள். இளம் வயதிலிருப்பவரான கவிஞர் காதல் கவிதைகளாக அடுக்காமல், தத்தி தத்திப் பேசும் குழந்தையோடு பந்து விளையாடுபவராக இருக்கிறார்; தோளில் ஒரு சிறியவளைத் தூக்கிக் கொண்டு கதை சொல்பவராக இருக்கிறார்; ஒரு சிறுமி கண்ணாடி முன் நின்று சேலை கட்டிப் பார்ப்பதை கவிதையாக்குகிறார்; மெழுகுவர்த்தி முன் அமர்ந்திருக்கும் பெண்ணின் தனிமையை எழுதுகிறார்; சொந்த ஊர் திரும்பியவனின் ரசனைப் பட்டியலில் நதிக்கு ஓடும் பிச்சியும் இருக்கிறாள்; இந்த கள்ளமற்ற நோக்கே வாசகர்களின் மனதை மலரச் செய்கிறது.

எந்தக் காரணமும் இல்லாமல் கொளுத்தப்பட்ட தீக்குச்சியின் ஒளி தான் மதாரின் கவிதைகள். அவருக்கு வாழ்த்துகள்.

அன்புடன்

கல்பனா ஜெயகாந்த்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2021 11:31

பாலையாகும் கடல், கடிதம்- பாலா

பாலையாகும் கடல்- கடலூர் சீனு பாலையாகும் கடல்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

பாலையாகும் கடல் என்னும் சீனுவின் கட்டுரையும், அதற்கான கிருஷ்ணன் சங்கரனின் கடிதத்தையும் பார்த்தேன்.

நான் முன்பு பணிபுரிந்த கவின்கேர் நிறுவனம் வாங்கிய இந்தியக் கார, இனிப்பு வகைகள் தயாரிக்கும் தொழிலில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன். அந்தத் தொழில் வருடம் 20-25% வளர்கின்ற தொழில்.. தீபாவளி சமயத்தில் மட்டும் 300 டன் சோன் பாப்டி என்னும் இணிப்பு உற்பத்தியாகும்.. எங்களை விட ஹல்திராம் 50 மடங்கு பெரிய நிறுவனம். அவர்கள் எவ்வளவு சோன் பாப்டி உற்பத்தி செய்வார்கள் என யூகித்துக் கொள்ளலாம்.

நுகர்வு இன்று நிறுத்த முடியா வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. எனது வீட்டில் 5 ஆம் வகுப்பு வரை மின்சாரம் கிடையாது. இன்று மூன்று அறைகளிலும் குளிர்பதன சாதனம் உள்ளது. குளிர் பெட்டி உள்ளது. இரண்டு கார்கள்.கல்லூரி வரை 4-5 சட்டைகள் மட்டுமே இருந்தது. இன்று 25 உள்ளது.

சென்னை வெயிலிலும் வென்னீர்க் குளியல் தான்.  நீங்கள் ஒருநாள் வென்னீர் போட உபயோகிக்கும் மின்சாரம், லடாக்கில் ஒரு குடும்பத்துக்கு 3 நாள் மொத்த மின்சாரத் தேவை என்கிறார்.. இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் வென்னீர்க் குளியலை நிறுத்தினால், அல்லது, சூரிய வென்னீர் அடுப்பை உபயோகித்தால், சில ஆயிரம் மெகாவாட் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின்னுற்பத்தி நிலையங்களை மூடலாம் என்கிறார் லடாக்கின் சூழலியல் செயல்பாட்டாளார் சோனம் வாங்சுக்.

காவிரியில், அமராவதியில் மணற் கொள்ளை அடிக்கும் வட்டச் செயலாளர்களை வையும் நாம், அப்படி கொள்ளையடிக்கும் மணல் யாருக்கு வீடு கட்டப் பயன்படுகிறது என்பதையும் கொஞ்சம் யோசிக்கலாம்.  The Wild East – Criminal Political Economics in South Asia  – என்னும் புத்தகம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. தரவிறக்கி, அதில் தமிழ்நாட்டில் மணல் மாஃபியா வளர்ந்த கதையைப் படிக்கலாம்.

இன்று உலகமே வியந்து பார்க்கும் சீனாவின் சாலைக்கட்டமைப்புக்காக 2011-13 என மூன்றாண்டுகளில் மட்டும், அமெரிக்கா 20 ஆம் நூற்றாண்டில் உபயோகித்த மொத்த சிமெண்டையும் உபயோகித்திருக்கிறது..  ஒரு ஏர்போர்ட்டை ஏசி வசதி கொண்ட மாநகரம் போல அமைத்து வரும் துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், கட்டுமானத்துக்குத் தேவையான மணலை வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன.. வெளிநாடுகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டு, சிங்கப்பூர் தன் நிலப்பரப்பை 25% அதிகரித்திருக்கிறது.

கடல் வளம் கொள்ளையடிக்கப்படுவதும், அது நீடித்து நிலைக்க வழியில்லா வண்ணம் அழிக்கப்படுவதும் ஒரு முக்கியமான அழிவு.. ஆனால், அதைத் தாண்டி, ஆடம்பர நுகர்வுக்காக மனிதன் அழிக்கும் இயற்கை வளம் அதை விட அதிகம்.

நம்மைப் போன்ற மனிதர்கள், தேவைக்கு 2-3 ம்டங்கு அதிகமான உணவை உண்கிறோம். உலகத்தின் மிக அதிக நீரை உபயோகிக்கும் உணவு தானியம் நெல். அந்த வயல்களில் இருந்து உருவாகும் மீத்தேன் வாயும் உபரிக் கெடுதல்.

எதுக்கெடுத்தாலும், நாங்கள் வரிக்கட்டறோம்னு இந்திய அரசாங்கத்தை நோக்கி விரலுயர்த்தும் மக்களாகிய நாம் 1% தாம் இதன் முழுமுதல் குற்றவாளிகள் .. இந்த 1% செய்யும் அராஜகத்துக்கே உலகம் இந்தப்பாடு படுகிறது என்பதுதான் பீதியளிக்கும் நிஜம்.. காவிரியில் வெள்ளம் வந்தால் கூட, கால்வாய்களில் செல்ல வியலா வண்ணம் மணலை அள்ளி விட்டோம்.. நமக்கு 3 பெட்ரூம் வீடு வேணும் என்பதற்காக..  அதை விடுத்து வட்டச்செயலாளர் மீது அறச்சீற்றம் கொண்டுவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போகிறோம்.

மாற வேண்டியது நாம் அனைவருமே.. இல்லையெனில், அடுத்த 30 ஆண்டுகளில், கடலில் மீன்களை விட ப்ளாஸ்டிக் அதிக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதில் இன்னுமொரு முக்கியப் பிரச்சினை மிக அண்மையில் பயன்பாட்டுக்கு வந்த ப்ளாஸ்டிக்..  அது பற்றிய ஒரு குறிப்பை கீழே தருகிறேன்

அன்புடன்

பாலா

 

கிருஷ்ணன் சங்கரன் – மீன் சாப்பிடுபவர்கள், வாரம் ஒருநாள் மட்டும் சாப்பிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.. சைவ உணக்காரராகிய அவர், காலை வேளையில் நீராகாரமும், ஊறுகாயும் என மாறினாலும் சூழல் அதே அளவு மேன்மையடையும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்

Bala

ப்ளாஸ்டிக்: நாம் தூக்கி வளர்க்கும் துயரம்!

1865 ஆம் ஆண்டு, யானைத் தந்தங்களின் பற்றாக்குறை காரணமாக, தந்தத்தில் செய்யப்படும் பில்லியர்ட்ஸ் பந்துகளுக்கு மாற்றாக செயற்கைப் பந்தை உருவாக்குபவர்க்கு 10 ஆயிரம் டாலர் பரிசு கொடுப்பதாக ஒரு நியுயார்க் நகர விளையாட்டு நிறுவனம் அறிவித்தது. ஆன் வெஸ்லி ஹயாத் என்பவர், செல்லுலோஸ் நைட்ரேட்டையும், கற்பூர எண்ணெயையும் கலந்து செயற்கையான பந்தைத் தயாரித்து, அந்தப் பரிசைப் பெற்றார். செயற்கை பாலிமர் உருவாக்கத்தின் வரலாறு இதிலிருந்து துவங்குகிறது எனச் சொல்லலாம்.  இதையடுத்த பெரும் கண்டுபிடிப்பு, 1907 ஆம் ஆண்டு பேக்லேண்ட் என்பவர் கண்டுபிடித்த பேக்கலைட்.

இந்தக் கண்டுபிடிப்புகள், நவீன உலகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. அதுவரை, பல மனித உபயோகங்களுக்கு, மரம், விலங்குகளின் எலும்புகள், கற்கள், கொம்புகள் போன்றவை உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. அவை கிடைப்பதும், அவற்றின் வடிவங்களும் உபயோகத்துக்குத் தேவையான பொருட்களை உருவாக்குதலில் பல சிக்கல்களை உருவாக்கின. ப்ளாஸ்டிக் பொருட்கள், இந்தச் சிக்கல்களுக்கான பெரும் தீர்வாக உருவாகி வந்தன. தொழில்நிறுவனங்கள், ப்ளாஸ்டிக் பொருட்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடத் துவங்கின.

இரண்டாம் உலகப்போர்க்காலத்தில், உலோகப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட, ப்ளாஸ்டிக் பொருட்கள் மாற்றாகப் பயன்படுத்தப்பட்டன. 1935 ஆம் வருடம் கண்டுபிடிக்கப்பட்ட நைலான், போர்விமானங்களில், பாரச்சூட்களில் உபயோகப்படுத்தப்பட்டது. பொருட்களைப் பொதிந்து எடுத்துச் செல்ல அதுவரை பயன்படுத்தப்பட்ட மரம், உலோகம், கண்ணாடி போன்றவற்றுக்கு, மலிவான மாற்றுப் பொருளாக ப்ளாஸ்டிக் வந்தது. இன்று கம்ப்யூட்டர் முதல் கண்புரைச் சிகிச்சையில் பயன்படும் செயற்கை விழித்திரை வரை ப்ளாஸ்டிக் ஆட்சி செய்கிறது. ப்ளாஸ்டிக் இல்லா ஒரு உலகை, இன்று நாம் கற்பனை செய்ய முடியாது.

ஆனால், இந்தப் பொருளுக்கு இன்னொரு முகம் இருக்கிறது. மனிதர்களின் பல்வேறு உபயோகங்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இவை மக்காத பொருட்கள். பெரும்பாலும், ஒரு முறை உபயோகிக்கப்பட்ட பின் தூக்கி எறியப்படுபவை. உலகைக் குப்பை மேடாக்கும் மிகப்பெரும் மாசுக் காரணி. மலிவான, மனிதனுக்கு மிகவும் உபயோகமான, இதன் உற்பத்தியும், நுகர்வும், கற்பனை செய்ய முடியாத அளவில் பெருகி, அதன் கழிவுகள், மனித இனத்தின், கடல் வளத்தின், வன உயிர்களின் பெரும் எதிரியாக விஸ்வரூபமெடுத்து பயமுறுத்துகின்றன.

கடந்த ஆண்டு மட்டுமே 38 கோடி டன் ப்ளாஸ்டிக் பொருட்கள் உலகில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.  உலகம் இதுவரை 830 கோடி டன் ப்ளாஸ்டிக்கை உற்பத்தி செய்திருக்கிறது, அதில் 630 கோடி டன் ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்படாமல், குப்பையாகக் கிடக்கிறது என்கிறது நேஷனல் ஜியாக்ரஃபிக். ஆண்டுக்கு 80 லட்சம் டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்படுகின்றன. உலகக் கடற்கரையின் ஒவ்வொரு அடிக்கும், ஆறு ப்ளாஸ்டிக் பைகள் அளவுக்கான ப்ளாஸ்டிக் கழிவு கொட்டப்படுகிறது. சீனா, தன் உற்பத்தியில் 30% கழிவைக் கடலில் கொட்டுகிறது.  2050 ஆம் ஆண்டில், கடலில், மீன்களை விட ப்ளாஸ்டிக் அதிகமாக இருக்கும். இனியும் தாமதம், மனித இனத்தைப் பேரழிவுக்குக் கொண்டு செல்லும்.

ப்ளாஸ்டிக் மறுசுழற்சி:

மனிதர்கள், பாலியெத்திலீன் (தண்ணீர் பாட்டில்கள்), பாலி ப்ரொப்பிலீன் (ஷாப்பிங் கவர்கள்),  பாலிவினைல் குளோரைட் (ப்ளாஸ்டிக் ட்ரேகள்) என்னும் ப்ளாஸ்டிக் வகைகளையும், பல ப்ளாஸ்டிக் வகைகள் இணைக்கப்பட்ட லேமினேட் (சமையல் எண்ணெய்க் கவர்கள்) எனப் பலவிதமான பொருட்களை உபயோகிக்கிறார்கள். இவற்றை ஒன்றாகச் சேர்த்து மறு சுழற்சி செய்ய முடியாது.

எனவே, இன்று உலகெங்கும் மலையாய்க் குவிந்திருக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளுக்கும், இனிமேல் உற்பத்தி செய்யப்போகும் ப்ளாஸ்டிக் பொருட்களால் உருவாகப்போகும் கழிவுகளுக்கும், ஒரு முழுமையான தீர்வு, உடனடியாக எட்டப்படவேண்டும். இந்தியாவில் தினமும் 16000 டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என தேரி என்னும் இந்திய எரிசக்தி ஆய்வுக்கழகம் சொல்கிறது. தில்லி, கொல்கத்தா, அமதாபாத் நகரங்கள் இந்தியாவின் மிக அதிக ப்ளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகின்றன. இவை பெரும்பாலும், நகரத்துக்கு வெளியில் மலைகளாகக் குவிக்கப்படுகின்றன. மும்பை, கேரளக் கடல்பகுதிகள், ப்ளாஸ்டிக் குப்பைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

திடக்கழிவு மேலாண்மை, உள்ளாட்சி நிர்வாகங்களின் முதன்மையான பொறுப்பாக உள்ளது. வீடுகளில், ப்ளாஸ்டிக் கழிவுகள் தனியே பிரிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு, விதி மீறல்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். நமது உள்ளாட்சி அமைப்புகளில், திடக்கழிவு மேலாண்மை ஓரளவு நன்றாக நடக்கின்றது. மக்கும் கழிவுகள் தனியே பிரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரிக்கப்பயன்படுகின்றன. ஆனால், ப்ளாஸ்டிக் குப்பைகள் வணிகர்களுக்கு விற்கப்பட்டுவிடுகின்றது. ஆனால், உருவாகும் எல்லாப் ப்ளாஸ்டிக் கழிவுகளும் இந்தச் சுழற்சிக்குள் வருவதில்லை.

ஒவ்வொரு மாநிலமும், ப்ளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தையும், கிடங்குகளையும் அமைக்க வேண்டும். மறு சுழற்சி பல வகைப்படும். அதில் முக்கியமானது,  சாலைகள் அமைப்பதில் ப்ளாஸ்டிக் கழிவுகள் உபயோகப்படுத்தப்படுவது. மத்திய அரசு ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், கிராமப்புரச் சாலைகள் அமைக்கும் திட்டத்தில், ப்ளாஸ்டிக் கழிவுகள் 10 சதம் அளவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என விதிகளை வகுத்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில், தற்போது, சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது மிக அவசரமாக முன்னெடுக்கப்பட்டு, இந்தியாவின் தேசிய, மாநில, கிராமச் சாலைகள் என அனைத்துச் சாலைகளிலும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

டேராடூனில் உள்ள இந்தியப் பெட்ரோலியக் கழகமும், மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து, ப்ளாஸ்டிக் கழிவுகளில் இருந்து எரிபொருள் (பெட்ரோல்) உற்பத்தி முறையை உருவாக்கியுள்ளன. சோதனை முறையில், பூனே, கோவா நகரங்களில், ப்ளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.  ஒவ்வொரு மாநிலமும் உற்பத்தி செய்யும் ப்ளாஸ்டிக் கழிவுகளைக் கணித்து, அந்த மாநிலத்தில் உள்ள சாலைகளின் தேவைகளுக்கேற்ப ப்ளாஸ்டிக் உபயோகத்தையும் கணித்து, மீதிப் ப்ளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக மாற்றுவதற்கான சரியான அலகுகள் கொண்ட தொழிற்சாலைகள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த நிறுவனங்களும், மாநில ப்ளாஸ்டிக் சேகரிப்பு நிறுவனமும் இணைக்கப்பட்டு, ப்ளாஸ்டிக் கழிவுகள், பொது வெளிக்குச் சென்று விடாத வகையில், எரிபொருள் நிறுவனங்களுக்குச் சீராக ப்ளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கும் வகையில், ஓட்டைகள் இல்லாத கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும், ப்ளாஸ்டிக் நுகர்வு மற்றும் சுழற்சி இரண்டையும் சம அளவில் மேலாண்மை செய்து, சில வருடங்களில், ப்ளாஸ்டிக் கழிவுகள் இல்லாத மாநிலமாக உருவாவதைக் கட்டாயமாக்கும் சட்டம் உடனடியாகக் கொண்டுவரப்பட வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் 16 ஆயிரம் டன் மக்காக் குப்பை நம் தலைமீது குவிகிறது என்னும் அவல நிலையை அனைவரும் உணர வேண்டும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2021 11:31

வெண்முரசு ஆவணப்படம் – நியூ ஜெர்ஸி அனுபவம்

கடந்த மே 23, ஞாயிறு மாலை நியூ ஜெர்சியின் மான்வில் நகரில் வெண்முரசு ஆவணப்படம் திரையிடப்பட்டது. சென்ற வருடம் கோவிட் தொற்றின் தாக்கம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் கடுமையாக இருந்ததால் திரையரங்கு மற்றும் பொது இடங்களில் கூடுகைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் இருந்தன. சென்ற மே 19 லிருந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் திரையிடலாம் என்று முடிவு செய்தோம்.

திட்டமிடல், ஒருங்கிணைப்பு என பத்து நாட்களுக்கு முன்பே பணிகளைத் தொடங்கி விட்டாலும் படத்தொகுப்பின் கோப்புகளை இயங்கச் செய்வதில் சிக்கல்கள் வந்தவண்ணமிருந்தன. இந்த கோப்புகள் DCP (Digital Cinema Package) எனும் திரையரங்குகளில் இயக்கப்படுவதற்கான சிறப்பு வடிவத்தில் இருந்ததால் ஒவ்வொரு முறையும் திரையரங்கிலேயே சோதனை செய்ய வேண்டியிருந்தது. ராஜனும், ஆஸ்டின் செளந்தரும் ஊக்கமும், ஒத்துழைப்பும் கூடவே புதிய கோப்புகளையும் தந்தவண்ணமிருந்தார்கள்.

திரையிடல் அன்று நிறைய நண்பர்கள் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். அஞ்சனாவும் அவள் தோழிகளை அழைத்திருந்தாள். பெரும்பாலும் பதின்பருவப் பெண் குழந்தைகள். பெண்களும் ஆண்களும் சம அளவில் இருந்தார்கள். வெண்முரசை அது எழுதப்பட்ட போதே தொடர்ந்து வாசித்து முடித்த, உங்களை தினமும் வாசிக்கும் நண்பர்கள், அறம், புறப்பாடு மற்றும் சிறுகதை, கட்டுரைகள் வழியாக உங்கள் படைப்புகளைத் தொடரும் நண்பர்கள், வாசிக்க ஆர்வமும் எங்கு தொடங்குவது என்ற தயக்கமும் கொண்ட நண்பர்கள் என கலவையான பார்வையாளர்கள்.

மற்ற அமெரிக்க நகரங்களிலுள்ள நண்பர்கள் அவரவர் நகரங்களில் திரையிடும் முயற்சியில் இருப்பதாலும், பிற நாடுகளில் உள்ள வாசகர்களுக்கு இன்னும் காணும் வாய்ப்பு இல்லையென்பதாலும் இந்த ஆவணப் படத்தின் உள்ளடக்கத்தை விரிவாகச் சொல்லாமல், பார்க்கும் போதும், பார்த்த பின்பும் கண்ட, கேட்ட அனுபவங்களை மட்டும் பகிரலாமென்று நினைக்கிறேன்.

சரியாக மதியம் மூன்று மணிக்கு எல்லோரும் அரங்கில் அமர, மறைந்த முதுபெரும் எழுத்தாளர் திரு.கி.ராஜநாராயணன் குறித்த ஒரு சிறு அறிமுகத்தையும் தமிழுக்கு அவரின் பங்களிப்பையும்  ஒரு சில வரிகளில் சொன்ன பிறகு ஒரு நிமிட மெளன அஞ்சலியோடு துவங்கினோம். அரங்கின் அரையிருளில், ஓசையடங்கி அனைவரும் எழுந்து நிற்க, வையத்துள் வாழ்வாங்கு பொருள் பொதிய வாழ்ந்தபின் வானுறைந்திருக்கிறார் என்று சொல்லும் போது நெகிழ்ச்சியில் கண்கள் நிறைந்தன.

தொடர்ந்து வெண்முரசைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தையும் இந்த ஆவணப்படத்தைப் பற்றிய சில சொற்களையும் பகிர்ந்த பின் திரையிடல் தொடங்கியது. திரை ஒளிரத்தொடங்கிவுடன் பின்னணியில் மெல்ல எழுந்து வந்த சேகண்டி போன்ற உலோக வாத்தியத்தின் ஓசை வளர்ந்து வளர்ந்து ’வெண்முரசு’ என்ற முப்பரிமாண எழுத்துக்கள் அறுபதடி நீளத் திரையை நிறைத்து பிரம்மாண்டமான சிம்ஃபொனி இசையில் நிலைகொள்ளும் போது அடுத்த ஒன்றரை மணி நேர பிரம்மாண்டமான பேசுபொருளின் முன்னறிவிப்பு போல் இருந்தது.

வெண்முரசு வரிசை நூல்களின் முகப்பு ஓவியங்கள் திரையின் எல்லாத் திசைகளிலுமிருந்து பெருகி மையத்தில் குவிந்து பின் விரிந்து திரை நிறைத்து நகர்ந்தன. வாசிக்கப்பட்ட போது நம் மனதோடு மட்டும் உரையாடிய ஒன்று பேருரு எடுத்து திரையளந்து நிற்பதாய் தோன்றியது.

நான் திரையையும் பார்வையாளர்களையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன்.  அனைவரின் கண்களும் திரையில் பதிந்திருந்தன. அகத்தில் ஏன் அந்த சிறு பதட்டம் என்று தெரியவில்லை. வெண்முரசின் ஆழத்தையும் அகலத்தையும் இந்தப் படம் சரியாகக் கடத்த வேண்டுமே என்ற படபடப்பால் இருக்கலாம். ஆனால் தேர்ந்த ஓவியனின் தூரிகையில் மெல்ல உயிர் பெற்று எழும் ஓவியம் போல் திரையில் படம் தனக்கான வடிவத்த அடைந்தவண்ணம் இருந்தது.

ஓடுபாதையில் ஓடிய விமானம் சட்டென வானிலெழும் கணமென பறக்கத் தொடங்கியது இருபத்து நான்காவது நிமிடத்தில். நீங்கள் கிருஷ்ணனை அறிந்து கொள்ள சரியான வழி அவனால் சூழப்படுவதுதான் என்று சொல்லி முடிக்க, விண்ணிலிருந்து எழும் குரலாய் வேய்ங்குழலின் பின்னணியோடு துவங்கி சிதார், சாரங்கி, சிம்ஃபொனி என அடுக்கடுக்காய் சூழ அரங்கையும், அமர்ந்திருப்போரையும் பிரிதொன்றில்லை என நிறைத்த இசையும், அந்த இசையில் தோய்ந்த நீலத்தின் கவித்துவமான வரிகளும்தான்.

நீலத்தில் வரும் அன்னை நீர்க்காகமொன்று ‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்று குஞ்சுகளைத் தன் நெஞ்சு மயிர்ப்பிசிறில் பொத்தியணைக்கும். இந்த மொழிக்குள் உறையும் இசையை ஒரு தேர்ந்த சிற்பியின் லாவகத்தோடு சிலையென எழுப்பியிருக்கிறார் நண்பர் ராஜன் சோமசுந்தரம். அவர் எழுப்பிய சிலைக்கு தங்கள் குரலால், வாசிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார்கள் கமல், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி, ரிஷப் ஷர்மா, பரத்வாஜ் போன்ற சிறந்த கலைஞர்கள்.

இசையைத் தன்னுள் தேக்கிய செறிவான வரிகள், பாடியவர்களின் இனிமையான குரல், செவ்வியல் ராகத்தின் இனிமை, சிம்ஃபொனியின் பிரம்மாண்டம், ஒலிக் கோர்ப்பின் நுட்பம், அதற்கேற்ற படங்கள், காட்சியமைப்பு என உலத்தரம் வாய்ந்த ஒரு இசை ஆல்பத்தைப் பார்த்த உணர்வு எழுந்தது. பாடல் முடிந்தவுடன் தன்னிச்சையாக அரங்கில் கரவொலி எழுந்தது. எல்லோர் முகமும் இளவெம்மையில் இளகிய மெழுகாய் நெகிழ்ந்திருந்தது. பின்னர் ஒருமுறை கூட காட்சி முடியும் வரை எவர் முகத்தையும் நோக்கவில்லை.

என் சிறு வயதில் எங்கள் தெருவில் மார்கழி மாதத்தில் தெருவை நிறைத்துக் கோலமிடுவார்கள். முதலில் வெண்புள்ளிகள் எங்கும் சிதறிக் கிடப்பது போல் தோன்றும்.  நெளியும் கோடுகள் மெல்ல ஒவ்வொரு புள்ளியையும் இணைக்கத் தோடங்கும். பார்த்துக் கொண்டிருக்கும் போதே நம் கண் முன் ஒத்திசைவும் பிரமிக்க வைக்கும் சிக்கலும் கொண்ட அழகிய கோலம் மையத்தில் பூசணிப் பூவுடன் சேர்ந்து மலர்ந்திருக்கும். எழுத்தாளர்களும், கலைஞர்களும், வாசகர்களும் பேசிய எண்ணத் துணுக்குகள் மெல்ல ஒரு அழகிய ஓவியமாக உருமாறிக் கொண்டிருந்தது.

இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்ட தந்தி இசைக் கருவி போல் தொய்வற்ற கச்சிதமான காட்சி தொகுப்பு. பல மணி நேரங்களுக்கு மேல் ஓடும், வெண்முரசின் வெவ்வேறு தளங்களைப் பேசும் காட்சித் துணுக்குகளைக் கடைந்து 90 நிமிடங்களுகுள் சுருக்குவதென்பது கங்கையைச் சிமிழில் அடைப்பது போல்தான். பிரமிப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவும் அருமை, குறிப்பாக பாடலினூடே வரும் அந்த ட்ரொன் காட்சிகள். கடைசி ஆறு நிமிடங்கள் வெண்முரசின் தீம் இசை ஷண்முகவேலின் படங்களின் பின்னணியில் ஓடியது.

திரையில் நாகங்கள் பேருருக் கொள்ள, வானுயர்ந்த பெருவாயில்கள் கொடியசைத்துத் திறந்திருக்க, ஒளி கொண்ட வானும் அதன் கீழ் விண்முட்டும் மாளிகைகளும் கண்களை நிறைக்க முரசமும், யாழும், கொம்பும், குழலும் சிம்ஃபொன்பொனி வடிவில் அரங்கைச் சூழ வாசக மனங்களில் கற்பனையின் சாத்தியதால் விரிந்தெழுந்த பெரும் படைப்பு, தனக்கான ஒளியையும் உருவையும் கண்டுகொண்டு கூத்தாடியது போலிருந்தது. இசை முடிந்து திரையணையும் பொது ஒரு நீள் கனவிலிருந்து மீண்ட உணர்வு. சில நொடிகளுக்குப் பின்னரே இருப்பு உறைக்க, ஏதோவொரு மூலையில் எவரோ ஒருவர் கையொலி எழுப்ப பற்றிய தழலாய் அரங்கம் கரவொலி எழுப்பியது.

காட்சி முடிந்த பிறகு ஒருவரும் அரங்கை விட்டு அகலவில்லை. தனித்தனியாகவும், சிறு குழுக்களாகவும் தாமாக வந்து பேசிய வண்ணமிருந்தார்கள். கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. வெண்முரசு வாசகர்கள் வழிகாட்டும் பணியைச் சிறப்பாகச் செய்தார்கள். புதியவர்களின் கேள்விகள் பெரும்பாலும் வாசிப்பின் ஆரம்ப நிலை சிக்கல்களைச் சுற்றி இருந்தது. புத்தகமாக எங்கு வாங்குவது? கிண்டியில் கிடைக்குமா? ஒலிப்புத்தக வடிவில் கிடைக்குமா? என்று பல கேள்விகள்.

பெண்களில் சிலர் தயங்கி நின்று, சற்று தனிமை கிடைத்ததும் ‘எனக்கு வாசிப்புப் பழக்கமில்லை. வெண்முரசை வாசிக்க வேண்டுமென்று ஆவலாயிருக்கிறது. காலம் கடந்துவிட்டதா?என்னால் இயலுமா?’ என்று கேட்டார்கள். ஆரம்ப நிலை வாசகர்கள் எனும் நிலையிலிருந்து வெண்முரசை வந்தடைந்தவர்களின் அனுபவங்களைச் சொன்னோம். அடுத்த சில நாட்கள் பலர் தோலைபேசி, வாட்ஸ்ஆப் வழியாகத் தொடர்பு கொண்டார்கள். சிலர் உடனேயே வாசிக்கவும் ஆரம்பித்தார்கள். சிலர் ஒலி வடிவில் கேட்க ஆரம்பித்தார்கள். எல்லோரின் குரலிலும், எதிர்பாராமல் தரப்பட்ட பரிசைப் பிரிக்கும் குழந்தையின் மலர்ச்சி தெரிந்தது. ஓரிரு நாட்களிலேயே பலரும் ஏழெட்டு அத்தியாயங்களைத் தாண்டி விட்டிருந்தார்கள்.

இவையனைத்தையும் விட இந்தத் திரையிடலின் உச்ச பயன் மதிப்பாக நான் நினைப்பது பதின்பருவக் குழந்தைகள் ஆற்றிய எதிர்வினையும் எழுப்பிய கேள்விகளும்தான். பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளியிலோ கல்லூரியிலோ படிக்கும் மாணவிகள். இந்த வயதுப் பெண்குழந்தைகளுக்கே உரிய கள்ளமின்மையும் கலகலப்பும் கொண்டவர்கள். இருவர் இணைந்திருந்தாலே அந்தச் சூழல் வாய் மூடாப் பேச்சும் வெடிச் சிரிப்புமாய் இருக்கும். கிட்டத்தட்டப் பத்துப் பேருக்கும் மேல் இருந்தார்கள். தமிழ் புரியும், ஆங்கிலத்தில் உரையாடும் குழந்தைகள். இது ஆவணப் படம் வேறு. அரங்கில் இருள் சூழ்ந்ததும் பேச்சும் சிரிப்பும் எழ ஆரம்பிக்குமோ என்ற சிறு நடுக்கமிருந்தது. ஒரே நம்பிக்கை, இவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வியிலும் அதற்கு வெளியிலும் தொடர்ச்சியான இலக்கிய வாசிப்பு உள்ளவர்கள்.

முதல் கேள்வியே இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டா என்பதுதான். இல்லை என்றதும் முகம் வாட, யாரவது மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்களா என்றார்கள். நான் வெண்முரசின் மொழிபெயர்ப்புக்கு முன்னுள்ள சவால்களைச் சொன்னேன். வெண்முரசின் பண்பாட்டு பின்புலம் செறிந்த கவித்துவமான அக மொழியை மொழிபெயர்ப்பதின் சிக்கல்களைச் சொன்னேன். புரிந்து கொண்டார்கள். அப்படியானால் வெண்முரசைப் படிக்கத் தமிழைப் பயில்வதுதான் ஒரே வழி என்று அவர்களே சொல்லிக் கொண்டார்கள்.

 

வெண்முரசைப் பற்றி வாசகர்களும் பிறரும் சொன்ன கருத்துக்களே ஒரு Fan Fiction போலிருந்ததாகக் கூறினார்கள். படைப்பு முழுவதையும் இணையத்தில் இலவசமாகப் படிக்கலாம்  என்பதை வியப்புடன் கேட்டுக்கொண்டார்கள். இதை எழுதிய உங்களின், இதைத் தங்களுக்குக்  கிடைத்த கொடையாகக்  கொண்டாடி மகிழும் வாசகர்களின் பேச்சில் இருந்த தீவிரம் தங்களைக் கவர்ந்ததாகச் சொன்னார்கள். பின் தங்களுக்குள் அவர்களுக்குப் பிடித்த மகாபாரதக் கதைமாந்தர்களைப் பற்றி பேசிக் கொண்டார்கள். நான் குறைத்து மதிப்பிட்டது மகாபாரத்திற்கு நம் சமூக ஆழ்மனத்தில் இருக்கும் இடத்தை. இலக்கிய வாசிப்பில்லாத  நண்பர்களுக்கும் மகாபாரதம் ஏதோவொரு வகையில் அறிமுகமாகி இருக்கிறது. ஏதோவொரு பாத்திரம் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கும் சிறிய அளவிலாவது சொல்லியிருக்கிறார்கள்.

இங்குள்ள குழந்தைகளிடம் அர்ஜுனனும், கர்ணனும், பீமனும் மார்வெல், அவெஞ்சர்ஸ் படக்கதைகளின் சாகச நாயகர்களின் இணைக் கதாநாயகர்களாக வலம் வருவது போல் தோன்றியது. ஹாரிபாட்டர், பெர்சி ஜாக்ஸன் போன்ற சாகச, கற்பனாவாதப் புதினங்களின் மேலுள்ள பெரும் ஈர்ப்பை மகாபாரதக் கதைகளுக்கும் எளிதாக நீட்டிக் கொள்வதைத் அவர்களுடனான இந்த உரையாடலின் போது உணர முடிந்தது. மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன். நீங்கள் ஏன் எத்தனை முறை என்றாலும் இளையோரின் கேள்விகளை சலிக்காமல் எதிர்கொண்டு பொறுமையாக பதிலளிக்கின்றீர்கள் என்றும், புதியவர்களைச் சந்திப்பதில் பேருவகை அடைகிறீர்கள் என்றும் புரிகிறது.

மொத்தத்தில் வெண்முரசு என்ற படைப்பை கருவியாக வைத்து வாசிப்பின்பத்தை குறிப்பாக இலக்கிய வாசிப்பை கொண்டாடியிருக்கும் ஆவணப்படம் இது. வெண்முரசின் வாசகர்களுக்கு இது ஒரு பெரு விழவு. அவர்கள் ஒவ்வொரும் இந்தப் பெரும் படைப்பின் வழி கண்டடைந்த தங்களுக்கான வாசல்களை மற்ற வாசகர்களுக்கும் திறந்து வைக்கும் ஒரு முக்கிய ஆவணம். வாசிப்பின்பத்தை நுகராத புதியவர்களுக்கு வாசிப்பின் சுவையை அறிமுகப் படுத்தும் ஒரு முக்கியக் காட்சிப் பதிவு.

இளையோரும், புதியவர்களும் ஆர்வத்துடன் இதைப் பற்றி எழுப்பும் வினாக்களை எதிர்கொள்ளும் போது  நெடுந்தூரம் பயணித்த நம் மரபின் விதைகள் முற்றிலும் புதிய நிலத்தில், பண்பாட்டுப் பின்புலத்தில் முளைவிட்டு எழுவதாகத் தோன்றியது. இந்தக் களிப்பும் பெருந்தொற்றுதான். ராலே, ஆஸ்டின், நியூ ஜெர்சியைத் தொடர்ந்து மேலும் சில நகரங்களில் திரையிட அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த வாசக நண்பர்கள் உற்சாகமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் சடங்கு ஒன்றுண்டு. இன்றும் கிரேக்க நாட்டின் தொல் நகரம் ஒலிம்பியாவில் வரலாற்றுக் கால உடையணிந்த மனிதர்கள் சூழ சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் குழியாடியிலிருந்து முதல் ஜோதி பற்றவைக்கப்படும். அந்த எரிதழலிருந்து அடுத்தவர் தன் பந்தத்தைப் பற்றவைத்துக் கொள்வார். ஒருவரைத் தொடர்ந்து மற்றவர் என்று ஒவ்வொரு நகராகத் தொடர்ந்து இறுதியில் ஒலிம்பிக் நிகழும் நகரை வந்தடையும். வியாசன் எனும் சூரியனில் இருந்து நீங்கள் கைதொட்டு எரியூட்டிய நெருப்பை ஒவ்வொரு வாசகரிடமும் கொடுத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு ஊராகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் கைகளில் இருப்பது எங்களுக்கான தழல் என்றாலும் இது சூல் கொண்டது சூரியனிலிருந்து.

இந்த ஆவணப் படத்தை சாத்தியப் படுத்திய ராஜன் சோமசுந்தரம், மூத்தவர் ஆஸ்டின் சௌந்தர், இசைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. பெருஞ்செயலென்னும் பேரலையில் ஒரு துமியாக இருந்ததின் நிறைவின் இனிய களைப்புடன் வீடு திரும்பினோம்.

 

பழனி ஜோதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2021 11:30

வெண்முரசு ஆவணப்படம் – வளைகுடாப் பகுதி மற்றும் கனெக்டிகட்

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம். திட்டமிட்டபடி, ஜூன் 12 – ல் வாஷிங்டன் DC  பகுதியிலும், அட்லாண்டாவிலும், தென் கலிபோர்னியா மாநிலத்திலும், வெண்முரசு ஆவணப்படம் நல்ல முறையில் திரையிடப்பட்டு,  வாசக நண்பர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது.  திரையிடலை திறம்பட எடுத்து நடத்திய நண்பர்கள் விஜய் சத்யா (வாஷிங்டன்  DC  / வர்ஜீனியா), சிஜோ (அட்லாண்டா), ராஜா (அட்லாண்டா), சிவகாந்த் (அட்லாண்டா), தாமோதரன் (அட்லாண்டா), ஸ்ரீராம் (இர்வின்) அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.விஜய் சத்யா, வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்துடனும், சிஜோ, அட்லாண்டா தமிழ் சங்கத்துடனும், ஸ்ரீராம், socialtamil.org , araneri foundation, sangamam அமைப்புகளுடனும் இணைந்து ஏற்பாடு செய்ததன் மூலம், வெண்முரசுவின் வரலாற்றுச் சாதனையை ஒவ்வொரு அமைப்பும் அறிந்து உதவுகிறது என்பதை மகிழ்வுடன் அறிகிறோம்.

இந்த மாதத்தில் இன்னும் இரு நகரங்களில் திரையிடல் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

வளைகுடாப் பகுதி, வட கலிபோர்னியா :

ஜுன் 19,  2021 – சனிக்கிழமை – 3:00 PM

Century Theaters at Pacific Commons XD,

43917 Pacific Commons Blvd,

Fremont, , CA 94538

தொடர்புக்கு – சுதர்ஷன்,  suchan87@gmail.com, Phone – 209-890-5072

முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

 

ஹார்ட்போர்டுகனெக்டிகட்:

ஜுன் 27 2021 –  ஞாயிற்றுக்கிழமை – 3:00 PM

Apple cinemas waterbury

920 Wolcott St, Waterbury, CT 06705

தொடர்புக்கு –  பாஸ்டன் பாலா,  bsubra@gmail.com, Phone – 978-710-9160

ஜூலை மாதத் திரையிடலுக்கும், ஹூஸ்டன், சிகாகோ,  போர்ட்லாண்ட், நியூ மெக்ஸிகோ என வெவ்வேறு நகர்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும்,  ஒருங்கமைப்பாளர்கள் அழைத்துப் பேசி , தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். Phone keeps ringing.

வெண்முரசு ஆவணப்படத்தைப் பற்றிய பொதுவான விபரங்களுக்கு, vishnupuramusa@gmail.com-க்கு தொடர்பு கொள்ளவும்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2021 07:14

June 11, 2021

புரட்சிகரம் எனும் ரகசிய ஊற்று – ‘அன்னை’ மாக்ஸிம் கார்க்கி

கார்க்கி தாய் – மாக்ஸிம் கார்க்கி

சமீபத்தில் கார்க்கியைப்பற்றி நினைக்கவேண்டியிருந்தது. ஊட்டியில் குருகுலத்துக்குள் நித்யாவின் அறையைப்பார்க்க நண்பர்கள் விரும்பினார்கள். உள்ளே செல்லும்போது ஒருவர் நான் நித்யாவைச் சந்தித்த நாட்களைப்பற்றிச் சொல்லும்படி கோரினார். நான் நித்யாவைச் சந்திக்க வந்த நாளைப்பற்றி விவரித்தேன்.

சாமியார்கள்மேல் பெரும் சலிப்பு இருந்த காலகட்டம். நிர்மால்யா  கட்டாயப்படுத்தியும்கூட நான் ஊட்டி குருகுலத்துக்குச் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. கடைசியில் அவர் சொன்னார், நித்யா கார்க்கியைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பதாக. ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது. குருகுலம் வந்தேன். நான் உள்ளே நுழைகையில் அவர் காவிநிறக் குளிருடையும் குல்லாவும் அணிந்து குனிந்து புதிதாகப்பூத்த ரோஜாக்களைப் பார்த்துக்கொண்டு புத்தம் புதியதாகப் பிறந்தவர் போல வந்து கொண்டிருந்தார்.என்னைப்பொறுத்தவரை அது ஒரு தரிசனம்.

நித்யா,கார்க்கியைப்பற்றி எழுதிய நூல் பின்னர் வெளியாகியது. அதில் அவர் கார்க்கியை ஒரு பேரன்பின் சித்திரமாகவே காட்டியிருந்தார். தினமும் ஒருமணிநேரம் அவர் சொல்வதை ராமகிருஷ்ணன் எழுதிக்கொள்வார். நான் அந்த சபையில் இருந்து அவரிடம் கார்க்கியைப்பற்றி விவாதிப்பேன். கார்க்கியை நான் முழுமையாக நிராகரிக்கும் மனநிலையில் இருந்தேன்.

தமிழ் நாவல்களை மிக அதிகமாகப் பாதித்த அன்னியமொழி நாவல் எது என்ற கேள்விக்குக் கணிசமான பேர் மாக்ஸிம் கார்க்கியின் `தாய்’ என்று கூறக்கூடும். அது உண்மையும் கூட. பல தமிழ் எழுத்தாளர்களின் குழந்தைகளுக்குக் கார்க்கி என்று பெயர் உண்டு (உதாரணம் பாவண்ணன்).கார்க்கியின் நாவல் மிகத்தொடக்க காலத்திலேயே 1950களில், ரகுநாதன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்து பரவலாகப் படிக்கப்பட்டது. அந்த நாவலை ஒட்டி ஆழமான விவாதங்களும் நடந்தன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 1960, 70களில் `தாய்’, ராகுலசாங்கிருத்தியாயனின் `வால்காவிலிருந்து கங்கை வரை’  என்ற `அரை’ நாவல் ஆகியவற்றைப் படிக்காத இலக்கியவாதிகளே இருக்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தமிழக முற்போக்கு இலக்கிய அலையை உருவாக்கியவை இவ்விரு படைப்புகளும்தான் என்றால் அது சற்றும் மிகையல்ல. இன்னும் கூறப்போனால் தமிழ் அறிவுலகம்,சித்தாந்த விவாதங்கள், தத்துவ நூல்கள் மூலம் மார்க்ஸியத்தின் இலட்சியவாதத்தையும் வரலாற்றுப் பார்வையையும் புரிந்து கொண்டது என்று கூறுவதைவிட இவ்விரு இலக்கியப் படைப்புகளின் வழியாகப் புரிந்து கொண்டது என்பதே முறையாகும். இன்றும் இவ்விரு நூல்களும் நம்ப முடியாத செல்வாக்குடன்தான் திகழ்கின்றன.

ராகுல்ஜியின் நூல்,தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக (மொழி பெயர்ப்பு கண முத்தையா) சமீபத்தில் மறுபதிப்பு வந்தது. சராசரியாக இரண்டு வருடத்திற்கு ஒரு பதிப்பு என்ற கணக்கில் இருபது பதிப்புகள் வந்துள்ளன. இப்போதும் தமிழ்நாட்டு இடதுசாரி இயக்கங்கள்,தங்கள் புதுத்தேர்வு உறுப்பினர்களுக்கு வாசிக்கத்தரும் நூல்களாக இவை இரண்டும் உள்ளன.

என் கருத்தில் இலக்கியம் மூலம் ஒரு புது சித்தாந்தம், ஒரு வாழ்க்கைத் தரிசனம் ஒரு சமூகத்துக்கு அறிமுகமாவது மிகச் சிறந்த விஷயம்தான். சித்தாந்தம் எப்படியோ `மனித’ அம்சத்தை `வாழ்வனுபவ’ அம்சத்தைத் தவிர்த்து விடுகிறது. ஏதோ ஒரு இடத்தில் அது வெறும் மூளை விளையட்டாகவும் அகங்காரப் பிரகடனமாகவும் சுருங்கி விடுகிறது. இலக்கியம் அப்படியல்ல. கூறப்பட்டவற்றை விட அதிகமாக அளிக்க இலக்கியத்தால் முடியும்.’

புரட்சிகரக் கருத்தொன்றை `அறிய’ நேரும் தமிழ் மனம் அதனை ஓர் அன்னியக் கருத்தாகக் கண்டு பிறகுதான் ஏற்கிறது. `தாய்’ போன்ற ஒரு நாவல் வழியாக அதை அடைய நேரும் போது அது அக்கதாபாத்திரங்களுடன், சூழலுடன் மெதுவாகத் தன்னையும் அடையாளம் கண்டு கொள்கிறது. தன் சொந்தப் புரட்சிகரத்தையே அது கண்டடைகிறது.

மார்க்ஸியத்தின் அரசியல் ரீதியான பாதிப்பு, தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியமானது. சங்கம் சேர்ந்து உரிமைக்குரல் எழுப்பும் எந்தத் தருணத்திலும் _ எந்தக் கருத்தியல், கட்சி சார்ந்து ஆனாலும் – மார்க்ஸியத்தின் சொற்கள் ,வழிமுறைகள்,மனோபாவங்கள் இங்கு வெளிப்படுவதைக் காணலாம். ஆனால், அதை விட முக்கியமானது மார்க்ஸியத்தின் சமூகப் பங்களிப்பு. என் தனிப்பட்ட கணிப்பில் இருபதாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூக மனத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பாதிப்பு, மார்க்ஸியம் மூலம் உருவானதேயாகும்.

காந்தியம் ஒரு விலகிய தளத்தில் (அன்றாட வாழ்வுக்குத் தொடர்பற்ற புனித தளத்தில்) இயங்கிய கருத்தியலாகவே இங்கு இருந்தது. மேலும் காந்தியம் தொடர்ந்து இங்கிருந்த சமூக மனக்கட்டுமானத்துடன் சமரசம் செய்தபடியே இருந்தது. ஆகவே அது பெரிய அதிர்வுகளை உருவாக்கவில்லை. திராவிட இயக்கங்கள் மார்க்ஸின் தரிசனங்களில் எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்களைப் பிரகடனங்களாக மாற்றின. மேலோட்டமான அலையை மட்டுமே அவை உருவாக்கின.

தன் தளர்வற்ற தொண்டர் வரிசையாலும், தொடர்ச்சியான கருத்தியல் பிரச்சாரத்தாலும் ,படிப்படியாக இயக்க வடிவம் கொண்டு சமூகப் போராட்டங்களாக மாறிய அமைப்பு வல்லமையினாலும், மார்க்ஸியம் தமிழ் மனதில் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கியது. ஒரு தமிழ் மனதில் இன்று காணக் கிடைக்கும் மானுடசமத்துவம் சார்ந்த எண்ணங்கள், மனிதனின் உரிமைகள் பற்றிய பிரக்ஞைகள், வரலாறு குறித்த புரிதல் அனைத்துமே மார்க்ஸியத்தால் உருவாக்கப்பட்டவை என்பதை அவர்கள் உபயோகிக்கும் சொற்கள் மூலமே அறியலாம்.

இம்மாபெரும் பாதிப்பை உருவாக்கிய அலையின் ஊற்றுப்புள்ளியாக ஒரு இலக்கியப் படைப்பு இருந்திருக்கிறது என்றால் அதன் வரலாற்று முக்கியத்துவம் சாமானியமானதல்ல. ‘தாயை’த் தவிர்த்து இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றை எழுதிவிட முடியாது என்று கூடக் கூறிவிடலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்நாவலின் பங்களிப்புக் குறித்து இதுவரை ஏதும் எழுதப்பட்டதில்லை. ஏன் இந்த இலக்கியப் படைப்பு குறித்து இதுவரை சுயமான ஒரு விமர்சனக் கணிப்பைக் கூடத் தமிழ்ச்சூழலில் எங்கும் முன்வைத்தது இல்லை. இதன் இருப்பு கிட்டத்தட்ட ஆழ்மன அளவிலேயே இருந்து கொண்டிருக்கிறது.

உணர்ச்சிகரமான நடையில் எழுதப்பட்ட நேரடியான கதை என்பது ‘தாயி’ன் முக்கியமான பலம். பிற ருஷ்ய பெரும் நாவல்களில் காணப்படும் மிக விரிவான கதைப்புலமும் விரிந்து விரிந்து பரவும் சித்தரிப்பும் இந்நாவலில் இல்லை. முரண்பட்டுச் செல்லும் சிக்கலான கருத்துச் சரடுகள் இல்லை. ஆகவேதான் இது இலக்கியப் பயிற்சியே இல்லாத எளிய வாசகனிடம் நேரடியாகப் பேச முடிகிறது.

அத்துடன் அவன் மனம் இலக்கியப் பயிற்சி இல்லாததனால் மிகுந்த நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் என்ற சாதக அம்சமும் சேர்ந்து கொள்கிறது. பதினெட்டு பத்தொன்பது வயதில், அறியும் ஆவலும் கற்பனைத்திறனும் இலட்சியக் கனவுத் தன்மையும் உச்சத்தில் இருக்கும் தருணத்தில், முதன்முதலாகப் படிக்கும் நாவலாக இது ஒரு வாசகனிடம் வந்து சேரும்போது மலைவெள்ளப் பெருக்குபோல அவனை அடித்துச்சென்று விடுகிறது.

இலக்கிய வாசகர்களில் பெரும்பாலானவர்கள் அறிந்தது இதன் கதை. கடுமையான சுரண்டல் சூழலில் வாழும் தொழிலாளர் காலனி. அங்கு படிப்படியாகப் புரட்சியின் விதைகள் முளைக்கின்றன. அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் தட்டியெழுப்பப்படுகிறது. அதில் ஈர்க்கப்படுகிறான் இளம் தொழிலாளியான பாவெல். படிப்பின் மூலமாக மெல்லப் புரட்சியாளனாகிறான்.

அவன் அன்னை அவனது மாற்றத்தைப் பீதியுடன் பார்க்கிறாள் `தன்னந்தனியாக நீ என்ன செய்து விடமுடியும்?’ என்று மீண்டும் மீண்டும் அவள் கேட்கிறாள். தன்மகன் அன்னியப்பட்டு விடுவான் என்றும், பிரம்மாண்டமான சக்திகளினால் தோற்கடிக்கப்பட்டு விடுவான் என்றும் அஞ்சுகிறாள். அவனைத் தடுக்க முயல்கிறாள். துயரமும் ஆற்றாமையும் கொள்கிறாள். படிப்படியாக அவளே பிரக்ஞை பெற்று ஒரு புரட்சிக்காரியாக மாறுவதுதான் நாவலின் மையச்சரடு. `இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது’ என்று அவள் கூவியபடி கைதாகும் போது நாவல் முடிகிறது.

இலட்சியவாதத்தை ஒற்றைப்படையான தீவிரத்துடன் முன்வைக்கிறது இந்நாவல் .ஒரு வேளை இலட்சியவாதம் என்பதே ஒற்றைப்படையான தீவிரம்தானோ? பாவெல், அன்னை போன்ற எல்லா இலட்சியவாதிகளும் படிப்படியாக பிம்பமாக்கப் படுகிறார்கள். அவர்களுடைய அகமுரண்பாடுகளோ,அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஊடுபாவுகளோ கருத்தில் கொள்ளப்படவேயில்லை.

இந்நாவலின் முக்கியமான குறை என்பது இதன் புரட்சிகரத் தன்மையை உருவகித்திருக்கும் முறைதான். இந்நாவலில் சுரண்டலைத் தன் அடிப்படையான இயல்பாகக் கொண்ட அதிகார அமைப்பு `வெளியே’ உள்ளது. அது குறித்த ஒரு விழிப்புணர்வு உருவாகி விட்டால் அதை எதிர்த்துப் போராட ஆரம்பித்துவிட வேண்டியதுதான் என்கிறது இது. சுரண்டப்படுபவர்களின் உள்ளத்தின் சிக்கல்களும் சவால்களும் இதன் பேசுபொருட்கள் அல்ல.

உண்மையில் ஒரு சுரண்டல்சார்ந்த அதிகார அமைப்பு நாம் அதற்கு அளிக்கும் சம்மதங்களின் மீது தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அதன் இருப்பை நமது பயம், சுயநலம், நாம் மரபாகப் பெற்ற நெறிகள், நமது ஆழ்மனக் கூறுகளின் பலவிதமான தேவைகள் முதலிய எண்ணற்ற காரணங்களுக்காக நாமே ஏற்றுத் தக்கவைத்திருக்கிறோம். மிகமிக அபூர்வமான வரலாற்றுத் தருணங்களில் மட்டுமே பொது மக்களுக்கு இம்மிகூடப் பங்கில்லாத முற்றிலும் வெளியே உள்ள அடக்குமுறை அரசு இருக்க முடியும்.

ஆகவே சுரண்டலுக்கு எதிராகப் போராட்டம் என்பது நமது சமரசங்களுக்கு எதிரான போராட்டம்தான். அடிப்படையில் புரட்சிகரம் என்பது ஒருவன் தன் எல்லைகளுக்கு எதிராகக் கொள்ளும் விழிப்பு நிலைதான். அதிகார அமைப்பு வெளியே இல்லை உள்ளேதான் உள்ளது. அதிகாரம், புரட்சிகரம் இரண்டையும் இப்படி மேலோட்டமாகப் புரிந்து கொண்டதுதான் இந்நாவலின் மிகப்பெரிய சரிவு.

கார்க்கி இதன் கருத்தியல் சட்டத்தை `வெளியே’ பார்த்துச் சமகால மார்க்ஸியக் கருதுகோள்களில் இருந்து பெற்றுக் கொண்டார். தன் உள்ளே பார்த்திருந்தாரானால் புரட்சிகரத்தின் உண்மையான ஊற்றைக் கண்டடைந்திருப்பார். தல்ஸ்தோயியின் `நெஹ்ல்யுடோவும்’, தஸ்தயேவ்ஸ்கியின் `ரஸ்கால்நிகாப்பும்’ துர்கனேவின் `பசரோவும்’ அப்படித்தான் கண்டு கொள்கிறார்கள்.

அப்படிப் பார்க்கும்போது இன்னொன்றும் தெரியவரும் புறவயமான கொடிய அடக்குமுறை நிலவும் சூழலில் மட்டுமல்ல, இனிமையான வாழ்வுநிலை உள்ள சூழலில்கூட மோசமான சுரண்டல் நிலவக்கூடும். அச் சுரண்டலை எதிர்ப்பதே மேலும் சிரமமானது.

இன்றைய வாசகர்களில் கணிசமானோர் தாய் நூலை எளிதில் கடந்து வந்து விடுகிறார்கள். பதினாறு வயதில் சாண்டில்யனையும் கல்கியையும் படித்துக் கச்சணிந்த கொங்கை மாதரையும் ஆதித்த கரிகாலனைக் கொன்ற கொடியவனையும் பற்றி யோசித்திருந்தது போலப் பதினெட்டு வயதில் உருவான ஓர் அசட்டு இளமைக்கனவாக அவர்கள் இந்நாவலைப் பிறகு கருதத் தலைப்படுகிறார்கள். ருஷ்யாவிலும், சீனாவிலும் `தாய்’ எப்படி ஒரு வேடிக்கைப் பொருளாக உள்ளது என்பதை இந்நாடுகளுக்குச் சென்று வந்த சச்சிதானந்தனும் கெ.ஜி. சங்கரப்பிள்ளையும் (மலையாளத்தில்) எழுதியுள்ளார்கள்.

ஆனால் அத்தனை எளிதில் நிராகரித்து விடமுடியாத சில அம்சங்கள் இப்படைப்பில் உள்ளன. ஒன்று: வன்முறையை எதிர் கொள்ளும் தருணங்களில் மானுட மனதில் வன்முறைக்கு எதிர்விசையாக உருவாகும் உச்சகட்டமான உறுதிப்பாட்டை பல தருணங்களில் இந்நாவல் காட்டித் தருகிறது. நீதிக்காக மனித மனம் கொள்ளும் ஆதி உத்வேகத்தின் சித்திரம் இது. நித்யா அதையே பெருங்கருணை என்றும் சொல்கிறார். இந்நாவலின் கலைவெற்றி அந்த இடங்களை அடைந்தமையில்தான் உள்ளது.

கருத்து என கொண்டால் இது பெண்ணை முன்வைப்பதைச் சொல்லலாம்.புரட்சி அரசியல் என்பது ஆண்களின் அதிகார விளையாட்டாக இருக்கும் போது அது எதையும் சாதிப்பதில்லை அது பெண்களிடம் வரவேண்டும், அன்னையரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று இந்நாவல் கூறுகிறது. கம்யூனிச சித்தாந்தத்தில் மார்க்ஸ் முதல் ஸ்டாலின் வரை எவராவது பெண்களின் இத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதாக தெரியவில்லை. இந்த அம்சத்தால் தாய் மிக முக்கியமான ஒரு பெண்ணியப் பிரதி ஆகிறது.

’அன்னை’ யின் வரலாற்று முக்கியத்துவம் எதுவாயினும் அதன் இலக்கிய முக்கியத்துவம் குறைவுதான். காரணம் அது எளிமைப்படுத்துவதன் வழியாக ஒரு கருத்தை முன்வைத்து வாதிடும் பிரச்சாரப் படைப்பு. இலக்கியப் படைப்பின் அடிப்படை இயங்குமுறை என்பது சிக்கல் படுத்துவது, உள்ளிழைகளைத் தேடுவது. அந்த வகையில் கார்க்கியின் முக்கியமான நாவல் (தமிழிலும் வெளிவந்துள்ள) ‘அர்த்தமோனவ்கள்’ தான். ருஷ்யப் பெரும் நாவல்களின் விரிந்திறங்கிச் செல்லும் பார்வை உடைய முக்கியப்படைப்பு இது.

ரகுநாதனின் மொழிபெயர்ப்பே இந்நாவலின் பலவீனமான அம்சம். செயற்கையான ஆர்ப்பாட்ட நடையில் இதை பெயர்த்திருக்கிறார். 1975ல் முன்னேற்றப் பதிப்பகம் இதன் மறுபதிப்பை வெளியிட்டது. 1985ல் இறுதிப்பதிப்பு வெளிவந்துள்ளது.

 

மறுபிரசுரம். முதற்பிரசுரம்Jul 18, 2011 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2021 11:35

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை

ஆச்சரியம்தான், ஒரு தேசம் அதன் இலக்கியம் வழியாக தொடர்பே இல்லாத இன்னொரு மண்ணில் இவ்வளவு ஆழமான செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. எனக்கு என் முன்னோர்கள் என்று நினைக்கும்போதெல்லாம் ரஷ்ய இலக்கியமேதைகளும் சேர்ந்தே நினைவில் எழுகிறார்கள்.

பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2021 11:34

ஓர் இலை, ஒரு வரலாறு- லோகமாதேவி

தே ஓர் இலையின் வரலாறு வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

தளத்தில்  தே குறித்த கடிதம் வந்த வாரத்திலேயே’ தே, ஒரு இலையின் வரலாறு’ வாங்கிவிட்டேன்.  இன்று அதிகாலை தொடங்கி ஒரே மூச்சில்  3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்.

ஏழை விதவையின் மகனான  21 வயது , ராய் தேயிலை அல்லது புகையிலை  தோட்ட மேலாளராக தனக்கு வேலை  தேவை என்னும் விளம்பரத்தை  வெளியிட்டதில் தொடங்கும் நாவல்  மொத்தம்  250 பக்கங்களில்  தே’ இலையின் வரலாறு மற்றும் வளர்ச்சியை முழுக்க சொல்லுகின்றது. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பு சிறப்பு..தட்டச்சு பிழை திருத்தலில் மட்டும் இன்னும் சிறிது கவனமாக இருந்திருக்கலாம் .

கார் ஓட்ட தெரியும் என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு  தேயிலை வளர்ப்பு குறித்தும், நியூசிலாந்தை குறித்தும்  ஏதும் அறியாமல், அங்கு பேசப்படும் மொழியுமே தெரியாமல்  துணிச்சலாக புறப்படும்  ராயுடன்  விமான நிலையத்தில் குடியுரிமை சரி பார்த்ததிலிருந்து  பயணித்து தேயிலையின் வரலாற்றை, வளர்ச்சியை முழுக்க  அறிந்து கொண்டது   ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அளித்தது .

1747 ல் நடக்கும் ஒரு படகு கொள்ளையில் தொடங்கும் நாவல் அதன்பிறகு 1559’ல் எழுதப்பட்ட தேயிலை குறித்த  முதல்  குறிப்புகளிலிருந்து துவங்கி வரிசைக்கிரமமாக தேயிலையின் வரலாறு,  கண்டுபிடிப்பு,  தேநீர் தயாரிப்பு அதன் வகைகள், புதிய பிராண்டுகள், கலப்படங்கள், சட்டங்கள், அடிமைகள், கூலி தொழிலாளர்கள், பல்லாயிரக்கணக்கான  இறப்புக்கள் என்று  விரிகின்றது.

தேயிலையின் தாவரவியல் சார்ந்த  தகவல்களை தவிர, இதில் சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை குறித்து  எந்த அறிதலும் இன்றி கடைகளில் வாங்கி வந்த தேயிலைத்தூளை கொதிநீரில் இட்டு  ஒரு கோப்பை தேநீரை ரசித்து அருந்தி கொண்டிருந்திருக்கிறேன் என்பதுதான் பக்கத்துக்கு பக்கம் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது. அந்த காலத்துக்கே மிகை என்னும் படிக்கு பல கொலைகள், மரண தண்டனைகளும் , பிற பல சுவாரஸ்யமான சம்பவங்களும்  இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன.

போர்ச்சுக்கல் அரசரொருவரின் மகளான காத்தரின் தனது வருகையை தெரிவிக்க எழுதப்பட்ட கடிதம் அவளது வருங்கால கணவருக்கு அனுப்படுகையில் அவர் நிறை கர்ப்பமாக இருக்கும் காதலியின் வீட்டில் இரவுணவு அருந்திக் கொண்டிருக்கிறார். இளவரசியின் வருகைக்கென அனைத்து வீட்டின் முன்பும் ஏற்றப்பட்டிருக்கும் கொண்டாட்ட நெருப்பு அந்த காதலியின் வீட்டு முன் ஏற்பட்டிருக்கவில்லை. காத்தரின் வரதட்சணை பொருட்களில் ஒரு பெட்டி தேயிலையும் இருக்கிறது.

சீனாவில் மிக சாதாரணமாக புழகத்தில் தேநீர் வந்து பல நூறு வருடங்கள் கழித்தே  ஐரோப்பாவிற்கு  வந்திருக்கிறது. 1652 களில் உருவான  முதல்  காபி ஹவுஸ்களில் பார்சல்  காப்பியும் தேநீரும்  வழங்கப்பட்டிருக்கிறது. உயர்குடியினர் பல தேநீர் கடைகளுக்கு அடுத்தடுத்து செல்லும் வழமையும், அவர்களை  தூக்கி செல்ல ’செடான்’ இருக்கைகளும் தூக்கு கூலிகளும் இருந்திருக்கிறார்கள். தேயிலைக்கான  ஏலம் கொளுத்தப்பட்ட மெழுகுதிரி ஓரங்குலம் எரிந்து முடியும் வரையிலும் ஏற்கபட்டிருக்கிறது, தேநீர், பானம் என்பதால் அதன் அளவுக்கேற்ப வரிவிதிக்க பட்டிருக்கிறது.

1757’ல்  ‘வீட்டில் கிடைக்கும் நல்ல  உணவில் திருப்தியில்லாமல் எங்கோ தொலை தூரத்தில் கிடைக்கும் சுவைக்காக மக்களின் கொடிய நாக்கு ஏங்கும் நிலை’  என்று  முதல் அத்தியாயத்தின் துவக்கத்தில்  ஜோனஸ்  சொல்லியிருப்பது நியாயம்தான் என்னும்படிக்கு  மக்களின் ஆதரவுடன் நடந்த தேயிலை கடத்தலும், அவ்வியாபரங்களில் நடந்த பல உள்ளடி வேலைகள்.சதிகள்  எல்லாம் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

தேயிலையின் கலப்படத்தில்  ஸ்லோ, எல்டர் உள்ளிட்ட பல  மரங்களின் இலைகளும், இரசாயனங்களும், சாயங்களும், ஆட்டுச்சாணமும் கூட பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ’அடப்பாவிகளா, அப்போவே வா! ’ என்று அங்கலாய்க்க தோன்றியது.

தேநீர் அருந்துவதற்கு சார்பாகவும், எதிராகவும்  எழுதப்பட்ட கட்டுரைகள் வெகு சுவாரஸ்யமானவை. தேநீர் பூங்காக்களில் முதலில் உயர்குடியினர் சந்திப்புகள் நடந்திருக்கிறது,  பின்னர், மலிவு விலை புத்தகங்கள் தொடங்கி, சின்ன சின்ன வியாபாரங்களும். கொள்ளைக்கான  திட்டமிடல்களும் நடந்து,  பின்னர் கைதுகள் கூட அங்கேயே நடந்திருக்கிறது.

கல்கத்தாவில் 1819 ல் தொடங்கப்பட்ட  தேநீர் கேளிக்கையகத்தில் தேநீரை மேசை மீதோ அல்லது  அருகில் இருப்பவர் மீதோ கொட்டுபவர்களுக்கு இரண்டு அணா அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது மருந்துப் பொருளாக விற்கப்பட்டு கொண்டிருந்த தேநீர் பின்னர் பானமாகி மளிகைகடைக்காரகளும்  தேநீர் மற்றும் தேயிலை விற்பனையில் ஈடுபட்ட போது, தேயிலை முகவர்களுக்கான  அனுமதி சான்றிதழ்  கடைகளுக்கு முன்பு தொங்க விடப்படுவது கட்டாயமாக்க பட்டிருக்கிறது..

தேயிலை இறக்குமதி திடீரென  குறைந்தபோது  அமெரிக்கர்கள் ரோடோடென்ரான் செடிகளின் இலைகளில் இருந்து லாப்ரடார் தேயிலை தயாரித்திருக்கின்றனர். இன்றும்  அந்த தேயிலை பல நாடுகளில் புழக்கத்தில் தான் இருக்கிறது.

இடையிடையே  வரும் தேநீரையும் தேயிலையையும் குறித்த

‘’கொஞ்சம் தேயிலை கலந்தது கடலிலே

நூறாயிரம் பேர் ரத்த வெள்ளத்திலே’’

போன்ற  பாடல்களும் கவிதைகளும் அப்போது இந்த பானத்துக்கு இருந்த பிரபல்யத்தை சொல்லுகின்றன.

சீனாவில் தேயிலையின் தோற்றம் குறித்த பகுதிதான் இந்நூலில்  ஆகச் சிறந்தது என்று சொல்லலாம். காலத்து ட்டு தான் ச்சா வா என்பதில் தொடங்கி, ஹான் அரச வம்சம்,  டாங், மிங், அரச வம்சத்தினரின் ஆட்சிகளின் போது தேயிலையின் வரலாறு  பயன்பாடு, விற்பனை, வளர்ச்சி அனைத்தும் விரிவாக சொல்லப்படுகின்றது.

கண்டடைய முடியாத தேயிலைக்கான தேடல்கள், ”நீர் கொதிக்கையில் அது மீன்களின் கண்களை போன்று இருக்க வேண்டும் ”என்னும் தேநீருக்கான ரெசிப்பி, தேநீர் சடங்க்குகள்,.கொதிக்கும் நீரில் தேயிலையை வேகவைத்து தயாரிக்கப்பட்ட தேநீர் பின்னர் கொதிநீரை தேயிலைத்தூளில் ஊற்றி தயாரிக்கப்பட்டது, தேயிலை கொட்டப்படும்மேசையின்  ஜென்  நடுக்குழிவு, வித்தியாசமான நீள வரிசை ஜப்பானிய  தேயிலை தோட்டங்கள்,  அறுவடைக்கு முன்னர் போர்வைகள் கொண்டு மூடப்படும் தேயிலை செடிகள், மிங் ஆட்சியில் அறிமுகமான சீன களிமண்,கப்பலின் பலாஸ்டிங்க்கிற்காக  அவற்றை பயன்படுத்தி அப்படியே ஏற்றுமதியும் செய்தது, மன்னரொருவர்  தனது இறப்புக்கு பின்னர் தேயிலைகளை படைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது, மிங்கு’கள்  தேயிலையுடன் மலரிதழ்களையும் கொதிக்க வைத்து தேநீர் தயாரிப்பது   என்று புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவுக்கு ஏராளமான விஷயங்கள் அடுத்தடுத்து வருகின்றன.

 

தேயிலை தோட்டங்களில்  இன்றைக்கு வரை  கடைப்பிடிக்கப்படும் அறுவடை செய்ய வேண்டிய ‘’ ஒரு இலை மொக்கு,இரண்டு தளிர்கள், அல்லது  ஓரு மொக்கு, ஒரு தளிர்  அல்லது ஒரு இலை மொக்கு மட்டும்  என்ற   ‘’flush , golden flush’’  வரையரறைகள்   அப்போதே தீர்மானிக்க பட்டிருக்கின்றன.

1628 ல் சீனாவில் ஓபியம் தேயிலையின்  இடத்தை ஆக்கிரமித்ததை சொல்லும் அத்தியாயத்தில்,   மால்வா என்றழைக்கப்டும் ராஜஸ்தான் ஓபியமும் குறிப்பிடப்படுகிறது.  நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில ஆளுமைகள் ஆச்சரியப்படுத்துகிறார்கள். உறங்காமல் இருக்க உயரமான  மேசை மீது ஏறி நின்று கொண்டு இரவெல்லாம்  விழித்திருந்து  ஓபியம் கடத்தலை  தடுக்க பணியாற்றுகிறார். சண்டைக்காரரும் ராஜதந்திரிமான   பாமெர்ஸ்டன் பிரபு , 1880களில் நடந்த தேயிலை கப்பல்களின்  ஓட்டப் போட்டியில் மிக விரைவாக சென்று   பரிசு தொகையை வாங்கிய.  வில்லியம் கிளிப்டன் என்னும் மாலுமிக்கு பிறகு  விரைவாக சென்று தேயிலையை சேர்க்கும் கப்பல்கள் பின்னர்  கிளிப்பர்ஸ் என்றே  அழைக்க பட்டிருக்கின்றன.

தேயிலை தோட்டங்களின் ஒரு அங்கமாக இருந்த யானைகளில். 1300 யானைகளைக் கொன்ற  ஒரு ஆங்கிலேயர் 41 வயதில் மின்னல் தாக்கி இறந்து போகிறார்.  ராணுவத்தினரின் உபயோகப்படுத்தப்பட்ட கோட்டுகள் தோட்ட தொழிலாளர்களுக்கு குளிருக்கு பாதுகாப்பாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் கொல்கத்தா தாவரவியல் பூங்காவுக்கு  வரவழைக்கப்பட்ட தேயிலை விதைகள்  துளிர்த்து இந்தியாவில்  தேயிலை செடிகள் நுழைகின்றது. தேயிலை வளர்ப்பை பிறருக்கு சொல்லி விட கூடாதென்று கொல்லப்பட்ட 12 சீனர்களிலிருந்து ,  மரணங்கள்  கொலைகள், சவுக்கடிகள்,  உடல் உறுப்புக்கள் வெட்டப்படுவது, பெண்கள்  மானங்கப்டுத்தபடுவது,, பிரம்படிகள் என பல பக்கங்கள் வலியிலும், வேதனையிலும் கண்ணீரிலும் ரத்தத்திலும்  நிறைந்துள்ளது.

நூலை  ஆழ்ந்து வாசித்தவர்கள் பின்னர் ஒரு கோப்பை தேநீர் கூட குற்றவுணர்வின்றி அருந்தமுடியாது .  மேல் அஸ்ஸாமில் கண்டுபிடிக்கப்பட்ட கெமிலியா அஸ்ஸாமிகா   வகையும் பின்னர் நடைபெற்ற  இனக்கலப்பு களும் விரிவாகச்  சொல்லப்பட்டிருக்கிறது

தேயிலையின்வரலாற்றை சொல்லும் பல நூல்களில் இல்லாத,  இந்தியாவில் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் இண்டிகோ சாயத்தையும் இண்டிகோ தோட்டங்களை குறித்தும்   கொஞ்சம் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது.  ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளை உணவுப் பயிர்களுக்கு பதிலாக இண்டிகோவை பயிராக்கச்சொல்லி கட்டாயப்படுத்திய கதைகளை எல்லாம் ஒரு நூலாகவே எழுதிவிடலாம். அத்தனை கொடுமைகள் நடந்தது இப்பயிரினால்.

நான்சிறுமியாக இருக்கையில் அவுரி எனப்படும் இந்த இண்டிகோ செடியை என் பாட்டி பறித்து வர சொல்லி அரைத்து,  சாணி மெழுகிய  தரையில்  ஓரத்தில் இந்த விழுதால் நீலச்சாய கரையிடுவார். பல நாட்களுக்கு சாணிக்கறை போன பின்னும் நீலக்கறை அழியாமல் இருக்கும்..இன்றைக்கு நம் வீட்டு வாசலிலும்  சாலை ஓரங்களிலும் படர்ந்து கிடக்கும் இவை,  உலர்த்தப்பட்டு, தலைமுடிச் சாயத்திற்கென அமேசானில் விற்கப்பட்டு  காசாகிறது.

சிறில் அலெக்ஸ்

உயிரை காப்பாற்றிய சிவப்பு வைன்,  குயினைன் கருப்பு தண்ணீர் காய்ச்சல் உண்டாக்குவது  போன்ற   அப்போது நம்பப்பட்ட பல மருத்துவ தகவல்களும் உண்டு தேயிலை தோட்டக் கூலிகள் அவர்களின் சம்பளம், அவர்களை கண்காணிக்க அமர்த்தப்பட்ட  கங்காணிகள், கூலிக்காரர்களை கொள்ளையடிப்பது, கொத்தடிமை முறை,  5 வயது குழந்தைகளும் தோட்ட வேலை செய்வது, கணக்கில்லாத மரணங்கள் என்று அசாமில் நடந்த கொடூரங்கள் மனதை கனமாக்குகிறது.இத்தனைக்கு பிறகும் சொல்லப்பட்ட கொடுமைகள் உண்மையில் நடந்ததில் சிறிதளவே என்று வாசிக்கையில் கண் நிறைந்துவிட்டது

மசாலாவுக்கு பிரபலமாயிருந்த சிலோனில்  தேயிலை  அறிமுகமாகின்றது.  மஞ்சள் பூஞ்சை நோயால் காபி பயிர்கள் அழிந்த பின்னர் தேயிலை  அந்த இடங்களை பிடிக்கிறது. ’’மடிந்த காபி செடிகளின் கிளைகளுடன் வெட்டப்பட்ட  மரத்தண்டுகள்   தேநீர் மேசைகளுக்கு கால்களாக வைக்கப்பட்டன’’ எனும் வரி ஒரு பெரிய வீழ்ச்சியையும் ஒரு புதிய அறிமுகத்தையும் எளிதாக சொல்லிவிடுகிறது.

கல்கத்தாவிலிருந்து அசாம் தேயிலை செடியின் விதைகள் கண்டிக்கு அருகிலிருக்கும் பேராதனை ராயல் தாவரவியல் பூங்காவுக்கு வரவழைக்கப்படுகிறது.ஆங்கிலேய ஆட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று இந்த  தாவரவியல் பூங்காக்கள். 1821 ல் ஆறு வளைந்து செல்லும் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவை குறித்து விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

தாவரவியல் பூங்காக்களுக்கு செல்வது குறித்த என் பல கனவுகளில் நிறைவேறிய  ஒரே ஒரு கனவு நான் இந்த பேராதனை தாவரவியல் பூங்காவுக்கு சென்றதுதான். நிச்சயம் பல நாட்கள் செலவழித்தாலே முழு பூங்காவையும் பார்க்க முடியும் என்றாலும் எனக்கு ஒரு முழு நாள் வாய்த்தது. நான் பார்த்து பிரமித்த, தாவரவியல் படிக்கும் மாணவர்கள்  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கும் பூங்காக்களில் இதுவும் ஒன்று. அத்தனை வசீகரமான, விஸ்தாரமான , பிரமாதமான பூங்கா அது.  அங்கிருக்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பான உலர் தாவர சேகரிப்பு மிக சிறப்பானதாக இருந்த்து.

இந்திய தேயிலை குழுமம் மற்றும்   இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி கழகம் உருவான பின்பு    தேயிலை வளர்ப்பில் உரங்களின் பயன்பாடு, விதைகளுக்காக   தாய் செடியை தெரிவு செய்து அதிலிருந்து  நல்ல விதைகளை சேகரிப்பது, நோய் கட்டுப்பாடு  ஆகியவற்றினால் விளைச்சலும் கூடுகிறது கேளிக்கை விருந்துகளும் கிரிக்கெட் புல்வெளிகளுமாக தேயிலைதோட்டங்கள் நவீனமடைகையில் மிக மெல்ல தொழிலாளர்களின் நிலையும் உயர துவங்குகிறது.

புரூக் பாண்ட், லிப்டன், டை-ஃபூ, கோஆப் தேயிலை பிராண்டுகள் ஒவ்வொன்றும் உருவானதின் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.  பரிசு ஸ்டிக்கர் திட்டம் மட்டுமல்லாது விதவைகள் ஓய்வூதிய திட்ட மெல்லாம் கூட தேயிலை தூள் பாக்கட்டுகள் வழியே மக்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

டீ பேக் எனப்படும் தேயிலை பைகள்  தற்செயலாக, தவறுதலாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. ஒரு நியூயார்க் தேயிலை வியாபாரி தனது உயர்குடி வாடிக்கையாளர்களுக்கு பட்டுத்துணியில் பொதிந்த தேயிலை தூள் அனுப்பியபோது , அவர்கள் அதை துணியுடன் கொதிக்கும் நீரில் இடவேண்டுமென தவறாக புரிந்துகொண்டு விடுகிறார்கள்.  பின்னர் இன்னும் மெல்லிய துணியில் பொதிந்து கொடுத்தால் வசதியாக இருக்குமென்னும் அவர்களின் கோரிக்கையில் பிறந்திருக்கிறது இப்போது பல கவர்ச்சிகரமான வடிவங்களில் சந்தைப்படுத்தப்ட்டிருகும் தேயிலை துணிப்பொதிகள்

முதல் அத்தியாயத்தில்  நியூசிலாந்து தேயிலை  தோட்டங்களுக்குள் சென்று மறைந்துவிடும் ராய் பின்னர் இறுதி அத்தியாயத்தில் தான் புலப்படுகிறார். வேலையையும் மொழியையும் கற்றுக்கொள்கிறார். ஆச்சரியப்படத்தக்க வகையில் ஓட்டுநர் உரிமம் வாங்கி விடுகிறார். லைசென்ஸ் கொடுக்கும் அதிகாரி  ராய்க்கு வைக்கும் சோதனை மிக புதுமை . ஐரோப்பியர் குழந்தைகளை கொன்று விடுவார்கள் என்று நம்பும் ஆப்பிரிக்க தாய்மார்கள் ராயை கண்டதும் குழந்தைகளுடன் ஒளிந்து கொள்கிறார்கள். .

ராய் வீடு திரும்பும் ஓரிரவில் ரேபிஸ் வெறிபிடித்த நாயொன்று அவர் வீட்டு கூடத்தில் நிற்கிறது, மற்றொரு இரவில் ராயின் காரில் மாட்டிக்கொள்ளும் முயலை  சாலையோரம் இருந்து கால் நீட்டி தட்டி பறிக்கின்றது சிறுத்தை  ஒன்று. காசோலைகள் இளம் பன்றியின்  பின்பக்கத்தில் எழுதித்தரப்பட்டு, அதே பின்பக்கத்தில் ஸ்டாம்ப்பு, வைக்கப்பட்டு  பணம் கைமாறிய பின்னர் பன்றி வங்கி ஊழியர்களுக்கு உணவாகிறது. இப்படி ராயின் நியூசிலாந்து அனுபவங்கள் நமக்கு   பெரும் ஆர்வத்தை உண்டாக்குகின்றன

தேயிலையின் வரலாறை போலவே, பிற முக்கியமான வணிக பயிர்களுக்கும் பணப்பயிர் களுக்கு இருக்கும் வரலாறையும், தொடர்புள்ள   சுவாரஸ்யமான உண்மை கதைகளையும் இப்படி  சொல்லி கற்றுக் கொடுத்தால் அதிகம் பேர் தெரிவு செய்யாத,  விலக்கி வைக்கிற, தாவரவியல் துறைக்கு மாணவர்கள்  விரும்பி வந்து சேர்ந்து கற்றுக் கொள்வார்களாயிருக்கும்.

தென்னாப்பிரிக்காவின் சிவப்பு தேயிலை செடிகளில் இருந்து கிடைக்கும் Rooibos tea எனப்படும் செந்தேநீர் , கென்யாவில்  கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலை செடிகளில் இருந்து  இப்போது கிடைக்கும் அந்தோசயனின் நிறமிகள் அடர்ந்திருக்கும் ஊதா தேயிலை, சின்ன சின்ன ஜவ்வரிசி பந்துகள் மிதக்கும் குமிழி தேநீர், வெள்ளை தேயிலை, பச்சை தேயிலை, என்று நமக்கு கிடைக்கும் இத்தனை தேநீருக்கும் தேயிலை வகைகளுக்கும் பின்னே  பல்லாயிரக்கணக்கான அப்பாவி தொழிலாளர்கள் கண்ணீரிலும் குருதியிலும் எழுதப்பட்ட  நெடிய வரலாறு இருக்கிறதென்பதை இனி ஒவ்வொரு கோப்பை தேநீரும் நினைவூட்டிக் கொண்டிருக்கும்.

சிறில் அலெக்ஸ்’க்கு வாழ்த்துக்களுடன்

லோகமாதேவி

ராய் மாக்ஸாம்- மூன்று நூல்கள்

ஜப்பானியத் தேநீர்

வெண்முரசில் மலர்கள்

மூங்கில் மிகைமலர்வு, வெண்முரசு- லோகமாதேவி

சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2021 11:31

மதார் கவிதைகள் குறித்து- கா.சிவா

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

கவிதை என்பது ஒரு கண நேர தரிசனத்தை அல்லது  காட்சியை சொற்களாக்குவது என்றும் கூறலாம். பொதுவாக துயர் அல்லது வியப்பே பெரும்பாலான கவிதைகளுக்கு கருப்பொருளாக இருந்துள்ளது. ஆனால் கவிஞர் மதாரின் “வெயில் பறந்தது” தொகுப்பிலுள்ள கவிதைகள்  அனைவரும் அறிந்த ஒரு காட்சியை வேறொரு கோணத்தில்  காட்டுகின்றன. அவை எதையும் விளக்குவதில்லை. வியப்பதுமில்லை. வாசிக்கும் போதுதான் இத்தனை நாள் இந்தக் கோணத்தில் காணவில்லையே என நமக்கு வியப்பு எழுகிறது.

    ஒருநாள் காலை நடை செல்கையில், என் மனைவி தன் அத்தை மீதான புகார்களை வாசித்துக் கொண்டிருந்தாள். “ம்” கொட்டிக்கொண்டிருந்த என் விழிகளுக்கு மரங்கொத்தியின் வடிவத்தில் வேறு வண்ணக் கலவையுடன் வாலை உதறியபடி பறந்த புது மாதிரியான குருவியொன்று  தென்பட்டது. அக்கணம் அப்படியே திகைத்து அது சென்ற திசையையே நோக்கிக் கொண்டிருந்தேன், மனைவி கையால் அசைக்கும்வரை. ஒரு  அரிய காட்சி நம் மனதை வெறுமையாக்கி இனம் புரியாத இனிமையை நிரப்பிவிடுகிறது. கவிஞர்  மதாரின் சில கவிதைகள் அதே போன்று இனிய கணத்தினை அளிக்கின்றன.

   எதிர்ப்படும் ஒருவரிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முகமன் கூறும்போது எத்தனை மகிழ்ச்சியாக இயல்பாக எதிர்தரப்பிலிருந்தும் எழுகிறது. ஆனால், ஏதாவது வேண்டுதல் இருந்தால் இருதரப்பிலுமே ஒருவித இளிப்பும் அலுப்பும் தோன்றிவிடுகிறது. மதாரின் இக்கவிதை எதிர்பார்ப்போ, பிரார்த்தனையோ இல்லா மனதின் மகிழ்வை அழகாகக் காட்டுகிறது.

பிரார்த்தனை


பிரார்த்தனை ஏதுமற்றிருந்தேன்
கைகளில்
ஜில் காற்று
வீசிக் கொண்டே இருந்தது
கைகளை அப்படியே வைத்திருந்தேன்
பிரார்த்தனை செய்வதை விடவும்
அது நன்றாக இருந்தது

நம்மிடம் இருக்கும் ஒன்று குறைந்தால் அதற்காக வருந்துபவர்களே மிகுதி. ஆனால் ஒன்று குறையும்போது அதன் எதிர்விகிதத்தில் கூடும் மற்றொன்றை யாரும் கண்டு கொள்வதில்லை. அது பல நேரங்களில் நலம் பயப்பதாக  இருந்தபோதிலும்.

உயரம் குறையக் குறையக்
உயரம் கூடுவதைக்
காண்கிறது
கிணறு

என்ற மதாரின் கவிதையை வாசித்தபோது மனதில் பெரும் துள்ளல் எழுந்தது.

  “டெய்ரி மரம்” என்ற கவிதையில் மகிழ்ச்சியின் விதையை நட்டு மகிழ்ச்சிக் காட்டை உருவாக்கி அதில் தனித்தனியாக தொலைவதைக் காட்டுகிறார். துக்கத்திற்குதானே துணை தேவை. மகிழ்ச்சியை கொண்டாட தனிமையே இனிமைதானே.

நீ தின்ற
டெய்ரி மில்க் சாக்லேட்டுக்குள்
ஒரு விதை இருந்ததாக
பயந்தபடி சொன்னாய்

நான் நம்பவில்லை
துப்பிக் காட்டினாய்

அன்று முதல்
நாம் டெய்ரி விதைகளை
விதைக்க ஆரம்பித்தோம்

அது மரமென வளர்ந்தபோது
அதில் காய்த்திருந்த
டெய்ரி  சாக்லேட்டுகளை
எடுத்துத் தின்றோம்

இவ்வாறாக
டெய்ரி மரங்களின்
எண்ணிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்தது

ஒரு அதிசய
காலை விழிப்பின் போது
நாம்
டெய்ரி காட்டுக்குள்
தொலைந்திருந்தோம்

ஒருவரை ஒருவர்
தேடிக் கொள்ளவில்லை

“கர்ப்பிணி பெண்ணுக்கான
பிறந்தநாள் பரிசு” என்ற கவிதையில்

கடவுள்
தன் பரிசை
உன் வயிற்றில்  வைத்திருக்கிறார்
உருண்டையாகக் கட்டி
பிறந்தநாளின் பரிசைப் பிரிக்க
பரிசின் பிறந்தநாள் வரை
நீ காத்திருக்க வேண்டும்

என்று கூறும்போது தனக்குள்ளேயே பதித்து வைக்கப்பட்டுள்ள சிறந்த பரிசுக்கென காத்திருக்கத்தானே வேண்டும் என்று தோன்றியதுடன், கடவுளின் அப்பரிசைக் கையிலேந்தும்போது அப்பெண் அடையும் பேருவகையினை நானும் அடைந்தேன்.

      குழந்தைகள் தங்களுடன் விளையாட குழந்தைகளையே சேர்த்துக் கொள்ளும். பெரியவர்கள் அவர்களுடன் இணைய வேண்டுமென விரும்பினால் தங்களை குழந்தையாக உருமாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கவிதையில் குழந்தையின் சொல்லை தூக்கிப் போட்டு விளையாட எப்படி  உருமாற வேண்டுமென்பதைக்  காட்டியுள்ளார்.

அப்போது தான்
பேசத் தொடங்கியிருக்கும் குழந்தை
மரத்தடியின் கீழ் நிற்கிறது

நான் அதன் அருகில்          அமர்வேன்
சம்மணமிட்டு

அப்போது வரை
பேசிக் கொண்டிருந்த
என் சொற்ளையெல்லாம்
துறந்து விட்டு

எதிரெதிரே
பந்து பிடித்து
விளையாட்டு
அது கொடுக்கும்
சொல்லை
அதனிடம் அதனிடம்
தூக்கிப் போட்டு

இத்தொகுப்பின் சிறப்பென விளங்கும், மனதை சிறகின்றி பறக்க வைக்கும் கவிதைகளுக்கு மிகப் பொருத்தமானவை கீழ்காணும் கவிதைகள். ஆற்றும்போது நறுமணம் கமழும் ஆவி பறக்கும் காஃபியைப் போல அனல் பறக்கும் வெயில் காலத்தையும் ஆற்றி, அருந்தும் பதத்மிற்கு தரவல்ல ஒரு மாஸ்டர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்

காஃபி ஆற்றும்போது
நறுமணக்கிறது
காற்று
வெயில் காலத்தை
ஆற்ற
ஒரு மாஸ்டர் தேவை

       ****

வாசல் தெளிப்பவள்
மழையாக்குகிறாள்
நீரை
வாளி வகுப்பறைக்குள்
இறுக்கமாக அமர்ந்திருந்தவை
இப்போது தனித்தனியாக
விளையாடச் செல்கின்றன

   வாளி நீரை மழையாக்கி விளையாட அனுப்புபவளைக் கண்டு உற்சாகம் கொள்ளும்போதே இந்த மழைத்துளிகள்  போலவே வீட்டறைகளிலும் வகுப்பறைகளுக்குள்ளும்  அடைந்துகிடக்கும் பிள்ளைகளும் உற்சாகமாக விளையாடும் காலம் வரவேண்டுமே என மனம் ஏங்குகிறது.

நிறைவாக இத்தொகுப்பின் முதன்மையான கவிதையென நான் கருதும் கவிதை.

ஒரு பூக்கடையை
முகப்பெனக் கொண்டு
இந்த ஊர்
திறந்து கிடக்கிறது

பூக்கடைக்காரி
எப்போதும் போல்
வருகிறாள்
பூக்களைப் பின்னுகிறாள்
கடையைத் திறப்பதாகவும்
கடையை மூடுவதாகவும்
சொல்லிக்கொண்டு
ஊரையே திறக்கிறாள்
ஊரையே மூடுகிறாள்

தன் பூக்களின் வண்ணங்களாலும் வாசத்தாலும் மலர்வினாலும் ஊரையே உயிர்தெழவும் உறங்கவும் வைக்கிறாள் பூக்காரி. அவள் வரவில்லையென்றால் ஊர் திறக்கப்படாமலேயே கிடக்கக்கூடும். மதார் இக்கவிதைகளின் எளிய காட்சிகளின் மூலம் வாசிப்பவர்களின் உள்ளத்தை எடையற்று மலரவைக்கிறார். இக்கவிதைகளை வாசிக்காதவர்கள் எடையற்றுப் பறப்பதை அறியாமலேயே வாழக்கூடும்.

குமரகுருபரன் விருது பெறும் கவிஞர் மதார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

 

  கா. சிவா 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2021 11:31

ஆழ்படிமம்,அந்தியூர் மணி -கடிதம்

இந்து என உணர்தல் – மறுப்பு

வணக்கம் ஜெ

அந்தியூர் மணி அவர்கள் எழுதிய கட்டுரை முக்கியமானது. சாதி குறித்த இன்றைய விவாதங்களில் அவர் சரியான கோணத்தை முன்வைக்கிறார். இன்று, எதிர்ப்பாளர்கள் மதத்தை Code of Conduct என்றே நம்ப விரும்புகிறார்கள். எனவே, அந்தச் சட்டங்களில் உள்ள போதாமைகளைச் சுட்டிக்காட்டி மதம் அழிய வேண்டும் என்று வாதிடுகிறார்கள். எதிர்தரப்பின் பலவீனமான பகுதியில் அடித்துவிட்டு, தன்னை கலகக்காரர்களாகவும், அறிஞர்களாகவும் எண்ணிக்கொள்கிறார்கள். எதிர்தரப்பின் பலமான பகுதியை எதிர்ப்பதே மெய்யான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைபுரியும். மற்றவை வெறும் அன்றாட அரசியலுக்கு மட்டுமே பயன்படும்.

***

மேலும், மணி அவர்கள் ‘ஆழ்படிமம்’ குறித்து விரிவாக, அதை மறுக்கும் தரப்பாகப் பேசியிருந்தார். அதுதொடர்பாக சில விஷயங்களை சொல்லலாம் என்றே இக்கடிதத்தை எழுதுகிறேன். அவர் பேசியிருக்கும் விஷயத்தின் சரியான கோணத்தையே முன்வைக்கிறேனா எனத் தெரியவில்லை. என்னால் புரிந்துகொண்டமட்டும் சொல்கிறேன்.

1) ஆழ்படிமங்கள் அறிதலுக்குப் பயன்படும் சாத்தியக்கூறை வைத்து, அது உருவான காலகட்டத்துக்கு மட்டும் பொருந்துவதாகக் கருதப்படுகிறது. ஆனால் ஒரு படிமம் அறிதலுக்கான கருவியாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. மேலும், அது ‘அழகியல்’ உணர்வோடும், ‘வரலாற்று’ உணர்வோடும் தொடர்புடையதாக உள்ளது. புதிய படிமங்களை உருவாக்கி அதை அறிதலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பழைய படிமம் அறிதலுக்கோ, அழகியலுக்கோ, வரலாற்றுணர்வுக்கோ பயன்படும் பட்சத்தில் அது உயிர்ப்புடன் இருக்கவே செய்யும்.

(i) அழகியல் உணர்வு, அறிதலுக்குச் சமமான அளவு முக்கியத்துவம் உடையதாகக் கருதுகிறேன். உதாரணமாகச் செம்மஞ்சள் நிற தீபத்தைக் கொள்ளலாம். அது படிமத் தன்மையை அடைந்து குறியீடாக இருக்கிறது. சிலவற்றை விளக்க (அறிதல் முறை) அச்சுடர் ஒளி பயன்படுகிறது. ஆனால் ஒரு நவீன மின் விளக்கு தீபத்தை விட விஷயங்களை விளக்குவதற்கு இன்றைய சூழலில் கச்சிதமாகப் பொருந்தலாம்; தீபத்தைவிட கூடுதலான பயன்மதிப்பும் அந்த மின் விளக்கிற்கு உண்டு. ஆனால் தீபம் அளிக்கக்கூடிய அழகியல் உணர்வை அம்மின் விளக்கு அளிந்துவிடுமா ? காலமாற்றத்தால் அழகியல் உணர்வும் மாறும் என்றால், இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தீபத்தின் இடத்தை மின் விளக்கு பெற்றுவிடுமா ? தெரியவில்லை.

(ii) இதே போல வரலாற்றுணர்வும் முக்கியம் எனக் கருதுகிறேன். சூலத்திற்கும், வேலுக்கும் இன்று எந்தப் பயன் மதிப்பும் இல்லை. வில்லை விட நவீன துப்பாக்கி துல்லியமாகவும் விரிவாகவும் அறிதலுக்குப் பயன்படலாம். ஆனால், வில்லும் வாளும் அளிக்கக்கூடிய வரலாற்றுணர்வை துப்பாக்கி அளிப்பதில்லை. முருகன் கையில் ஒரு துப்பாக்கியைக் கொடுத்தால் அதை நம் மனம் ஏற்பதில்லையே ! ஆயுதம் தாங்கிய தெய்வ வடிவங்களை நாம் இன்னும் புறக்கணிக்கவில்லை. வில்லேந்திய ராமனும், வாளேந்திய சோழனும் அளிக்கும் பெருமிதத்திற்கான தேவை இன்னும் இல்லாமல் ஆகிவிடவில்லை.

* இப்படி வம்படியாக வரலாற்றுப் பெருமிதங்களைப் பிடித்து வைத்துக் கொள்வது ஏன் ? வரலாற்றுப் பெருமிதங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். அத்தகைய பெருமிதத்தால் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளும் நேரலாம். ஆனால் வரலாற்றுப் பெருமிதங்களை புறந்தள்ள வேண்டும் என்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.

2) சில ஆழ்படிமங்கள் விரிவாக்கத்துக்கு உட்படாமல் உறைபடிமங்களாகத் தேங்கவைக்கப் படுகிறது. இந்த உறைதலையும் மேற்சொன்ன அழகியலுக்கும், வரலாற்றுணர்வுக்கும் பொருத்திப்பார்க்க முடியும். ஆழ்படிமங்களை நாம் விரிக்க மறுப்பதால் (உறையவைப்பதால்) பல்வேறு சாத்தியங்களை நாம் இழக்கலாம். ஆகையால், உறைதல் என்பது பாதகமான அம்சத்தையும் கொண்டிருக்கிறது என்பது உண்மையே. பொருள் படிமமாவது, அது ஆழ்படிமமாகி குறியீட்டுத் தன்மையை அடைவது, அது காலத்தில் உறையவைக்கப்படுவது, என்கிற இந்த செயல்முறை அதிகார அமைப்புகளால் மட்டுமே செய்யப்பட்ட ஒன்றாகக் கருத முடியவில்லை.

பழைய சூத்திரங்களையோ செய்யுள்களையோ எடுத்தவுடனேயே விரிவாகப் பொருள் அறிந்து படித்துவிட்டு மூடிவைத்துவிடுவது என்றில்லாமல், அதை அப்படியே வார்த்தை மாறாமல் மனப்பாடம் செய்யும் முறை நம் மரபில் உள்ளது. இதன் முக்கிய நோக்கம், ஒன்று, அதை அடுத்தடுத்த காலகட்டத்துக்கு அப்படியே கடத்துவது. அதன் பக்கவாட்டுப் பரப்பில் அதை விரித்தும் விவாதித்தும் கொள்ளலாம். ஆனால் மையத்தில் அது அப்படியே சரமாகச் செல்லும். இரண்டு, என்றேனும் ஒரு கணத்தில் ஏதாவதொரு திறப்பை அது நம்முள் ஏற்படுத்தும். அதாவது அறிதலுக்கான சாத்தியங்களையோ, கவித்துவத் தன்மையையோ அது தம்முள் கொண்டிருப்பின், ஒரு சந்தர்ப்பத்தில் அது நம்முள் அறிதலை நிகழ்த்தும்; ஒன்றைத் தொடும். ஆனால் அந்த சூத்திரத்தின் நேரடியான பொருளை மட்டும் விரிவாக எழுதிவைத்துக் கொண்டு, அச்சூத்திரத்தை நாம் அழித்துவிட்டால், மேற்சொன்ன சாத்தியங்களை நாம் இழந்துவிடுவோம்.

இது படிமங்களுக்கும் பொருந்தும். படிமமானது அதேபோன்று கவித்துவத் தன்மையை தம்முள் கொண்டிருக்குமாயின், அதை உறையவைத்து, ஒரு மூலையில் அடுக்கி வைக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதை வேறு இடத்தில நாம் விரித்துக் கொள்ளலாம். ஆனால், அதன் உறைந்த வடிவம் அதற்கான இடத்தில் அப்படியே இருக்கட்டும். தொல்பொருள் போல.

ஆனால், விரிவாக்க முடியாமல் அதிகாரமானது தடுக்கிறது என்பது பிரச்சனைக்குரிய விஷயம்தான். அதை முன்கூட்டியே திட்டமிட்டுத் தவிர்க்க முடியும் என்று எண்ண முடியவில்லை. ஏனெனில், வெகுஜனத் தன்மைக்குள் புழக்கத்திற்குள் வரும் படிமம் எளிதில் அதன் சமகால அரசியலுக்குள்ளும் ஊடுருவும். நாம் அதற்கான எதிர்விசையை உருவாக்கலாம்; அதன் அதிகாரமயப்படுத்துதலை மட்டுப்படுத்தலாம்; பல்வேறு தரப்புகள் வழியே சூழலில் சமநிலையைத் தோற்றுவிக்கலாம். அதை மட்டுமே செய்யமுடியும் என்றே எண்ணுகிறேன்.

ஆழ்படிமங்களைப் பயன்படுத்தும் சிறு கூட்டத்திற்காக அதை உறையவைப்பதில் ஏற்படும் அழிவுகளுக்கு யாரைப் பொறுப்பாக்குவது ? அப்படி யாரையும் பொறுப்பாக்க முடியாது என்றே தோன்றுகிறது. அந்தந்த காலகட்டத்து அறிஞர்களாலும், படைப்பாளிகளாலும், அத்தகைய உறைபடிமங்கள் அழிவுக்காகப் பயன்படுத்தப்படப் போவதை நோக்கிச் செல்லாமல், சரியான விளக்கம் அளிக்கப்பட்டு, சமநிலையைப் பேணலாம். இதை மட்டுமே செய்யமுடியும் என்று தோன்றுகிறது. ஒரு அரசியல் கட்சி, வழிபாட்டுக்குரிய அல்லது புனித நூல்களில் குறியீட்டுத் தன்மையுடன் பயன்படுத்தப்பட்ட ஒரு புனிதப் பொருளை தனது சின்னமாகக் கொண்டுள்ளது என்றால், அது ஒரு விளைவு மட்டுமே; தொடக்கம் அல்ல. தாமரை, பிறை சந்திரன், சிலுவை, சூரியன் என அனைத்துக் குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதானது, வரலாற்றுப் பெருமிதத்தையும், அந்தப் பொருள்களின் மரபார்ந்த தன்மையையுமே காரணமாக் கொண்டுள்ளது.

3) காலத்தால் அந்தப் படிமத்தின் தேவை தொடர்ந்து இருந்துகொண்டிருத்தால் (அதன் நீண்டகால பயன்பாட்டினால்) மட்டுமே, அது ஆழ்படிமமாக ஆக முடியும் என்பது உண்மையே. அந்த நீண்டகால பயன்பாடு என்பது ‘அறிதல்’ என்கிற பயன்மதிப்பை மட்டுமே கொண்டிருக்க வேண்டியதில்லை. கவித்துவத்தையோ, அழகியலையோ தன்னுள் கொண்டிருக்குமாயின், வரலாற்றுணர்வை அளிக்கும் ஒரு வடிவமாகப் பயன்படுமாயின் அதுவும் பயன்பாடே. அதுவும் காலத்தால் நீடிக்கப்பட வேண்டியதாகிறது. நவீன படிமங்களை உருவாக்கிக் கொள்வதால் பழைய படிமங்களைக் கைவிட வேண்டியதில்லை. எல்.இ.டி. விளக்கை படிமமாக்கி ஒருவன் கவிதை எழுதலாம்; தத்துவ விளக்கத்திற்குப் பயன்படுத்தலாம். ஆனால், யாரோ ஒருவன் உள்ளத்தில் இன்னும் செம்மஞ்சள் நிறச் சுடர் அல்லது தீ எரிந்து கொண்டிருப்பின் அந்தத் தீயின் தேவை இன்னும் உள்ளது என்றே பொருள்.

***

நான் இக்கடிதத்தில் சொல்ல விரும்பியது, ஆழ்படிமங்கள் அதன் அறிதல் செயலுக்காக மட்டுமல்லாமல், வெறுமனே கவித்துவத்திற்கும், அழகுணர்ச்சிக்காகவும், வரலாற்று உணர்ச்சிக்காகவும் காக்கப்படவேண்டும் என்பதே.

ஜெ. வின் வரியை இங்கு நினைவுகூறுகிறேன். ”உருள்பெரும் தேர் நம் ஆலயத்தில் நிற்கட்டும்; சாலையில் கார் ஓடட்டும்.” இவ்வரியை உணரத்தான் முடியும். அதன் பயன் மதிப்பு பற்றி கூற முடியாது. செம்மஞ்சள் நிறத் தீ நம் கற்பனையை நிறைக்கட்டும்; வேலும் வாளும் நம் வரலாற்றுணர்வை நிறைக்கட்டும்.

விவேக் ராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2021 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.