Jeyamohan's Blog, page 967

June 15, 2021

பாலையாகும் கடல்-பதில்

பாலையாகும் கடல் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

கிருஷ்ணன் சங்கரனின் எதிர்வினையைப் படித்தேன்.அவர் நான் எழுதியதை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை எனப் புரிகிறது.

கடல் சார் வளம் அழிவதற்கான காரணங்களில் அதீத கடல் உணவை உண்ணும் பழக்கமும், தேவையற்ற கடல் மிருக வேட்டைகளும் மிக முக்கியக் காரணம்.  அத்துடன், வளரும், வளர்ந்த நாடுகள் கடலில் கொட்டும் ப்ளாஸ்டிக் வேஸ்ட். இன்னும் 30 ஆண்டுகளில், கடல் ப்ளாஸ்டிக் வேஸ்டால் நிரம்பி, நம்ம கூவம் போல ஆகிவிடும் அபாயம் உள்ளது.

முதலில் உணவு. அசைவ உனவு குறிப்பாக கடல் சார் உணவு அதிகரித்திருப்பது போலவே, அதீத சைவ உணவுப் பழக்கமும் அதிகரித்திருக்கிறது. நாம் நம் தேவைக்கு 2-3 மடங்கு அதிகமாக உண்கிறோம் என்பது உண்மை.குறிப்பாக மாவுச்சத்துக்காக உண்ணும் உணவு தானியங்கள்.  புலாலைப் போலவே கார்போ ஹைட்ரேட்டும் அடிமைப்படுத்தும் ஒரு பழக்கம்தான்.    இந்தியர்கள் நொறுக்குத் தீனி தின்பதும்.

பொருளாதாரம் 7-8% வளர்கையில், நொறுக்குத் தீனித் தொழில், 20-25% வளர்கிறதென்றால், மத்திய, மேல் வர்க்கச் சராசரி நுகர்வு பல மடங்கு அதிகரித்திருக்கிறது என அர்த்தம். சிறு கடைகளாக இருந்த அடையாறு ஆனந்த பவனும், கிருஷ்ணா ஸ்வீட்ஸும் வளர்ந்த வேகத்தை நாம் கண் முன்னால் பார்த்தோம்.

ப்ரகாஷ் சங்கரன் தன்னைச் சுற்றி ‘கவிச்சி இல்லாமல் சாப்பிட முடியாத மக்களைப் பார்க்கையில் எரிச்சல் வருகிறது எனச் சொல்லியிருந்தார். சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால்,

‘மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

என்னும் பேச்சுக்கள் கேட்டிருக்கும்.. ஆண்கள், ரத்னா பவன் ரவா தோசை, அகர்வால் ஸ்வீட்ஸ் பெண்கள், ப்ளாக் ஃபாரெஸ்ட் சாக்லட் என உருகியிருப்பார்கள்.. ஐஸ்க்ரீம் சீசனிங் போன்ற தாவரக் கொழுப்புகள், பாமாயிலில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.. உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவையும் அந்த எண்ணெயில் தான் பொரிக்கப்படுகின்றன.. இந்த் தாவர எண்ணெய் உற்பத்திக்காக, உலகின் மிக உன்னதமான பல்லுயிர்க்காடுகள் அழிக்கப்படுகின்றன.

சைவமோ / அசைவமோ – இந்த வர்க்கம் உண்ணும் உணவு, உடலின் தேவைகளை விட மிக அதிகமான அளவு. This excess and unwanted consumption is diet agnostic.

என் கடிதம் சொல்வது அதையே.

ஆனால், சமூகப் பொருளாதாரப் பிரமிடில், பெரும் மக்கள் தொகை கீழே இருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் உடல் உழைப்பில் இருப்பவர்கள்.. அவர்களுக்கு அரிசியும், புரதமும் தேவைப்படுகிறது..  அவர்களது அண்மையில் கிடைக்கும் உணவு தானியத்தையும், புரதத்தையும் உண்பவர்கள். அங்கே பற்றாக்குறை உள்ளது. நாம் அவர்களை இங்கே பேசவில்லை.

அன்புடன்

பாலா

பாலையாகும் கடல்- கடலூர் சீனு பாலையாகும் கடல்- கடிதம் பாலையாகும் கடல், கடிதம்- பாலா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2021 11:31

கடவுளைக் காண்பது- கடிதங்கள்

கடவுளை நேரில் காணுதல்

அன்புள்ள திரு ஜெயமோகன்,

வணக்கம். வேலூரில் தங்கக்கோவில் நிறுவியுள்ள அருள்திரு நாராயணி அம்மா என்பவரிடம் சில ஆண்டுகள் முன்பு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்ன ஆன்மீக அனுபவம் சுவாரசியமாக இருந்தது.

அவருக்கு தீட்சையாக தரப்பட்ட நாமத்தை தொடர்ந்து மனதுக்குள் ஜெபித்தபடி இருந்தாராம். குறிப்பிட்ட காலத்திற்குப்பின், ஒரு நாள் பேருந்து பயணத்தின்போது தான் ஜெபித்துக் கொண்டிருந்த நாமத்துக்கு உரிய ரூபம் அவருக்கு தரிசனம் ஆகியிருக்கிறது. நாம் தொடர்ந்து ஜெபிக்கும் நாமம் அதற்குரிய வடிவம் கொண்டு எதிரே பிரசன்னமாகும் அனுபவத்தை அவர் பெற்றிருக்கிறார்.

அம்பிகையின் நாமத்தை தொடர்ந்து மனதில் ஜெபிப்பது மட்டுமின்றி அவள் திருவுருவை மனதில் பதிப்பதும் முக்கியமான ஆத்ம சாதனை என்பதை அபிராமி அந்தாதி உணர்த்துகிறது..

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே                                                                                                                                                                புராணங்களில் ‘தவம் செய்து கடவுளைக் கண்டான்’ என மிக எளிதாக அந்த அறிதலே சொல்லப்பட்டுள்ளது. புராணங்களைப்பொறுத்தவரை ஓர் உண்மை உள்ளது, அவற்றில் மிக எளிதாக எது சொல்லப்படுகிறதோ எது மிக அடிக்கடி வருகிறதோ அதுவே மிக முக்கியமானது, மிகமிக நுட்பமானது –  என்னும் உங்கள் வரிகள் அருளாளர் அனுபவங்களை நமக்குள் ஒரோவழி தொகுத்துக்கொள்ள உதவுகின்றன.                                                                                                                                        நன்றி.

அன்புடன்                                                                                                                                                                                                                                                        மரபின் மைந்தன் முத்தையா

 

அன்புள்ள ஜெ

கடவுளைக் காணுதல் ஒரு நல்ல கட்டுரை. இன்று இரண்டு எல்லைகள்தான் கண்ணுக்குப் படுகின்றன. ரேஷனல் என்ற பேரில் ஆன்மிக அனுபவங்கள், உள்ளுணர்வுகள், அழகுணர்வுகள் எல்லாவற்றையும் மறுக்கும் ஒரு உலகியல்பார்வை. இன்னொரு பக்கம் ஆன்மிகம் என்றாலே ஒருவகை மேஜிக் என்று சொல்லும் மிகையான புராணப்பார்வை. இரண்டுக்கும் நடுவே தர்க்கபூர்வமான ஒருபார்வையை, தர்க்கத்துக்கு அப்பால் செல்வனவற்றை புரிந்துகொள்ளக்கூடிய ஒரு நுட்பமான அணுகுமுறையை முன்வைத்திருக்கிறீர்கள். நன்றி

ஜே.தட்சிணாமூர்த்தி

பெருநதியில் எஞ்சியது

அன்னை சூடிய மாலை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2021 11:31

ஹெ.எஸ்.சிவப்பிரகாஷின் குரு

குரு- ஆளுமையும் தொன்மமும்

அன்புநிறை ஜெ,

ஹெச்.எஸ். சிவபிரகாஷ் எழுதி ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “குரு – பழம்பெரும் ஞானத்திற்கான பத்து வாயில்கள்” நூலை வாசித்தேன்.

இந்நூலைக் குறித்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் எழுத்தாளர் நண்பர் சுனில் கிருஷ்ணன் “அபாரமான நூல், நீங்க அவசியம் படிக்கனும், நம் ஸ்ரீனிவாசன் சார் மொழியாக்கம்” என்றார். அன்றே இணையத்தில் வாங்கி விட்டேன். அடுத்த நாளே தளத்தில் தங்கள் அறிமுகக் குறிப்பையும் வாசித்தேன். “குரு என நாம் குறிப்பிடுவது நாமுணர்ந்த  ஓர் அக உருவகத்தை. ஆகவேதான் ஒரே ஆசிரியர் வெவ்வேறு மாணவர்களில் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறார்.” என்ற வரி மனதில் சென்று அமர்ந்து விட்டது.வீட்டில் புத்தகம் காத்திருந்தது. இந்தியா வந்து இப்போது தனித்திருக்கும் வீடுறை நாட்களில் முதலில் எடுத்து இதைத்தான்.

நூற்றுப்பதினாறு பக்கங்கள் கொண்ட சிறிய, மிகச் செறிவான நூல்.  இந்திய ஆன்மீக மரபுகளின் முக்கியமான பத்து கருதுகோள்களை பத்து வாயில்களாக உருவகித்து தொகுத்து எழுதப்பட்டிருக்கிறது. வெறும் ஆய்வுக்கட்டுரை போலன்றி ஹெச்.எஸ். சிவபிரகாஷ் அவர்களது ஆன்மீக அனுபவங்களின் ஒளியோடு எழுதப்பட்ட நூல்.

ஆன்மீகம் குறித்த தேடல் கொண்டவர்களுக்கான அறிமுக நூல் இது எனக்கொள்ளலாம். தேர்ந்தெடுத்த வாயில்களுக்குரிய கருத்துக்களை விளக்க வேதாந்தம், சைவம், சமணம், பௌத்தம் என அனைத்து இந்தியத் தத்துவ மரபுகளின் பார்வையையும் அறிமுகப்படுத்தும் அதே வேளை, எந்த ஒரு குறிப்பிட்ட பள்ளியையோ சமயக் கருத்தையோ வலியுறுத்தாத நூல்.  ஒவ்வொரு கட்டுரையும் ஆன்மீகம் குறித்த பாவனைகள் ஏதுமின்றி, அந்தந்த நிலையை அறிமுகப்படுத்தி, அது குறித்த ஆசிரியரின் அனுபவம், அறிவர்களின், ஞானிகளின் பாடல் வரிகள், தத்துவ உருவகங்கள் வழியாக அக்கருதுகோளை விரிவாக்கி செல்கிறது.  நாடுபவரின் உளத்தன்மைக்கும் இயல்புக்குமேற்ற வழிகளை அவரவர் தேறலாம்.

புறவுலகில் நின்றபடி அகவயப் பயணத்தை தொடங்குபவரின் கைப்பற்றி இட்டுச் செல்லும் குரு எனும் முதல் வாயில் தொடங்கி மந்திரம், தெய்வம், பிராணன், மனம் என அருவமான வாயில்களைக் காட்டி, அறிதலுக்கு அப்பாற்பட்ட நிலையான அனுத்தரம் வரை பேசுகிறது.  உள்முகமான பயணத்தின் பல்வேறு நிலைகளில் மேலும் திறந்துகொள்ளக் கூடிய நூலென உணர்கிறேன்.

தத்துவக் கலைச்சொற்களையும் ஆன்மீகச் செறிவு கொண்ட கவிதை வரிகளையும் மிக நேர்த்தியாக பொருள் விளங்கும் வண்ணம், சாரம் குன்றாது தமிழில் மொழி பெயர்த்திருக்கும் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் நன்றி.

அறுபது நாட்களில் ஆன்மீக மலர்ச்சி,  குறுகிய காலத்தில் குண்டலினியை எழுப்புவது போன்ற போலி குறுக்குவழிக் கையேடுகள் இணையமெங்கும் மலிந்திருக்கும் இன்றைய சூழலில் இது போன்ற நேர்மையான ஆன்மீகம் குறித்த அறிமுகப் புத்தகங்கள் தமிழுக்கு ஒரு வரம்.

அன்புடன்,
சுபா

குரு-பழம்பெரும் ஞானத்தின் பத்து வாயில்கள். ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ்- வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2021 11:31

கதைகள் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நீர்க்கோலத்தில் நளன் வழியாக சுவையை அறியும் நிஷாதர் அதிலிருந்து நுண்மை நோக்கிச் செல்லும் சித்திரம் அற்புதமானது. நாச்சுவை சொற்சுவையாகவும் செவிச்சுவையாகவும் விழிச்சுவையாகவும் வளர்ந்து அதன் மூலம் சித்தம் நுண்மை கொண்டு அதன் உச்சியை அடைய  அவர்களிடையே கலைகள் பிறப்பெடுக்கும் என கதை செல்லும்.

வனவாசம் வாசிக்கையில் நாம் நடைமுறையில் நிஷாதரின் வளர்ச்சிக்கு நேர்மாறான பாதையில் நெடுந்தொலைவு சென்றிருப்பதைக் காண முடிகிறது. சாமியப்பாவும் குமரேசனும் சுப்பையாவும் மட்டுமான ஒரு அற்புதமான உலகத்தில் அவர்கள் நுண்ணிதின் சுவை தேர்கிறார்கள்.  உணவில் ஆரம்பிக்கும் சுவைதேர்தல் சங்கீதத்தில் தொடர்ந்து  இறுதியாக கூத்தில் உச்சம் பெற்று முடிகிறது.  இருவரிடமும் இருந்து சுப்பையா சுவை தேர்தலை கற்றிருப்பான். இந்தஉச்ச தருணத்தை இம்மூவரும் அன்றி வேறு யாரும் அறியப்போவதில்லை.

நான் பிறந்து வளர்ந்ததும் இப்போது வசிப்பதும் நகரத்திலேயே.    கிராமத்து திருவிழாக்கள் குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கதை ஆரம்பித்த நொடியில் இருந்தே கிராமத்து சூழலை உணர ஆரம்பித்தேன். சுப்பையாவின் பொங்கும் ஆர்வம், சாமியப்பாவின் நிதான கம்பீரம், குமரேசனின் உற்சாகம் , திருவிழா ஏற்பாடுகள் என கதை ஒரு நிகர் வாழ்வை சமைக்கிறது.  பழைய சோற்றிலும் சுவை தேர்ந்து ருசிக்கும், பின்னர் விருந்தில் அரசனைப் போல உண்ணும் சாமியப்பாவும் , உற்சாகமாக பேசிக்கொண்டே சுவைக்கும் குமரேசனும் சுப்பையாவிற்கும் நமக்கும் கற்பிக்கிறார்கள். நிதாந்தாகாசம் குறித்து சாமியப்பா விளக்குவது இன்னொரு உச்சம்.

குமரேசன் அல்லியாக மாறிய பின் அதில் பெண்மையின் கம்பீரத்தை காணும் சுப்பையா அதே போல் அர்ஜுனனிலும் அப்பெண்மை தோற்கும் ஆண்மையை காண்கிறான் .  பிறகு அல்லி-அர்ஜூனனின் முழு வாழ்க்கையையுமே காண்கிறான். ஆரம்பத்தில் வரும் கட்டற்ற இன்பமும் பிறகு வரும் கடும் பிரிவுத் துயரும் இரண்டையுமே அனுபவிக்கிறான். அவனுக்கும் அவனுடன் சேர்ந்து நமக்கும் கதார்ஸிஸ் நிகழ்கிறது.

கலையின் உச்சத்தை அடைந்த கலைஞர்களுக்கும் அதை கண்டறியும் ரசிகர்களுக்கும் நிஜ வாழ்க்கை வனவாசமாகவே இருக்கும். ஒருவேளை அப்படி இருப்பதையே அவர்களும் விரும்புவார்கள் போலும். நடைமுறை வனவாசம் நிகர் வாழ்வை மேலும் சுவை கூட்டும்.

சூழ்திரு கதையில் அனந்தன் தந்தையிடமிருந்து சுவைதேர்தலை அறிவான். இங்கு மீண்டும்.ஒரு நிகர் வாழ்வை வாழ, சுவை தேர்தலை  கற்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி ஜெ.

சங்கரன். இ.ஆர்

 

அன்புள்ள ஜெ

சென்ற ஆண்டு நீங்கள் எழுதிய கதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அன்னம் கதை வாசித்து கண்ணீர் விட்டேன். மகத்தான கதை. சோற்றுக்கணக்கு போல ஒன்று. ‘அதனாலென்ன?’என்ற வரி ஒரு மாபெரும் ஆப்த வாக்கியம்.

மிக எளிதாக எழுதிச்சென்றுவிட்ட கதைகள். ஆனால் அவற்றின் வடிவமும் கதாபாத்திரங்களின் ஒத்திசைவும் மிகையாகாத ஆனால் குறையாத உணர்ச்சிகளும் கலை என்பது பிறப்பதே ஒழிய செதுக்கிச் செதுக்கி உருவாக்குவதல்ல என்பதற்குச் சான்றுகளாக உள்ளன. செதுக்கிஎழுத ஆரம்பித்தால் இந்த வகையான கதைகளை எழுதி முடிக்கவே முடியாது.

தி.ஜானகிராமன் அவர் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லும்போது நீண்டகாலம் மனதில்கிடந்தவற்றை எழுதவே முடிந்ததில்லை என்கிறார். மலர்களுக்கோ இதழ்களுக்கோ கதைகேட்டு பல கடிதங்கள் வரும். அவசரம் தலைக்குமேலே போகும்போது சரமாரியாக நாலைந்து கதைகளை எழுதி அனுப்பிவிடுவார். அவற்றை பிரசுரிப்பார்கள். பிறகு புத்தகம் வரும்போது திருத்திக்கொள்ளலாம் என்று நினைப்பார். ஆனால் அதற்குள் அந்த கதையில் இருந்து நகர்ந்திருப்பார்.

கலை அப்படித்தான் நிகழமுடியும் என நினைக்கிறேன். மூன்றுநான்கு மாதங்கள் உச்சியிலேயே இருந்திருக்கிறீர்கள்

ஆனந்த் ராம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2021 11:31

விஷ்ணுபுரம் வாசிப்பு- மஞ்சுநாத்

விஷ்ணுபுரம் வாங்கhttps://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக

பாரதத்தின் தத்துவ ஞான குவியல்கள் மூலம் விஷ்ணுபுரம் எனும் பெருங்கதையை கட்டமைத்திருக்கிறார். இது பூத்து இதழ் விரித்து வசந்தம் பரப்பி தேன் தந்து ஒவ்வொரு மடலாய் கீழ் உதிர்ந்து நீரில் கரைந்து போகும்  மெளரி* யைப்(*தாமரை) போன்றது.

தத்துவங்களை கதையாக்குவது சுலபபமல்ல,அதுவொரு ஓட்டை தோனி மூலம் சுழித்தோடும் பேராற்றைக் கடப்பது போன்றது. எழுத்தாளனின் தகவல் சேகரிப்பு மட்டும் என்பது பெரும் சுமை மூழ்கடிக்கவே செய்யும். தனது விழிப்புணர்வில் வைத்து அனுபவமாக்கி கொள்ளும் யுக்தியே அந்த தோனியின் ஓட்டையை அடைக்கும் . இது மதிப்பு வாய்ந்தது.

விஷ்ணுபுரம் புதிய கதை சொல்லும் பாணியை தருவித்து கொள்கிறது. வேதங்கள்,புராணங்கள், இதிகாசங்கள், தத்துவ ஞாண நூல்கள் , விவாதங்கள்,கதைகள், சுய கேள்வி பதில்கள், விமர்சனங்கள், காவியத்தன்மை, நாடகத் தன்மை.. என இதன் உள்ளீடுகள் நீள்கிறது. பல உள்ளீடுகளின் அழுத்தம் நிறைந்த நெருக்கம் வாசகனை உள்ளீடற்ற சூன்யத்தின் உச்சத்தை நோக்கி நகர்த்துகிறது.

படைப்பாளியின் மனம் பிரபஞ்சத்தை விட விரிவடையும் திறன் கொண்டது .ஆனால் அது கடற்கரையில் சிறுவர்கள் கட்டி விளையாடும் மணற் கோட்டைகளை தான் திரும்ப திரும்ப உருவாக்குகிறது. அதன் பிரமாண்டம் கட்டுபவனின் கை வலிமையையும் கற்பனைத் திறனையும் சார்ந்தது. பிரபஞ்சத்திடமிருந்து மனம் பெறும் அனுபவம் ஒன்று போல் இருந்தாலும் புலன்கள் வழியே  அவை வெவ்வேறாக வெளிப்படுகின்றன.

மாயக்கதைகளில் வரும் மாயநகரின் பிரமாண்ட வர்ணனைகள் பொருந்தும் மா நகரமாக விவரிக்கப்படும் மகாபத்மபுரம் , அக்னிபுரம் என்று புராணங்கள்  விளிப்பதாக கூறும் விஷ்ணுபுரம் பூவுலகின் ஈடு இணையில்லாத ஷேத்திரடணமாக காட்டப்படுகிறது. புராணங்கள், வரலாறுகள், செவிவழிக் கதைகள் யாவும் விஷ்ணுபுரத்தை ஒப்புயர்வற்றதாக பேசுகின்றன.

பெரு நிலம் விழுங்கிய கோவில் கட்டுமாணங்கள், வான்முட்டும் உயரங்களுடைய கோபுரங்கள், மலைகளின் உச்சி தொட போட்டியிடும் நுழைவாயில்கள் என ஒரு விஸ்வரூபம்  விரிகிறது.தோரண வாயிற் காவலர்களான கருடாழ்வர் ,விஷ்வக்சேனர் பிரம்மாண்டத்தின்  முன் மக்கள் சுண்டெலிகள்.

விஷ்ணுபுரத்தை நெருங்கும் போது மட்டுமே ராஜகோபுரத்தை காண இயலும் உள்நுழைந்த பிறகு அதன் பிரமாண்டத்தை தலை உயர்த்தி முழுவதுமாக தரிசிக்க இயலாது. கோவில் உள்ளே உள்ள மூல விஷ்ணுவும் அப்படித்தான்  . மூலவர் சிலை அறுநூறு கோல் நீளம் உடையதாம். இதன் தரிசனத்தை மூன்று கருவறைகள் மூலமே காண முடியும். முதல் கருவறையில் பாதம், அடுத்து உந்தி, இறுதியில் முகம்.

முகவாசல் திறக்கும் போது ஞானசபையும் , உந்தி வாசல் திறக்கும் போது தர்க்கசபையும் கூடுகின்றன. பாதவாசல் திறக்கும் போது ஸ்ரீபாதத் திருவிழா. ஒவ்வொரு வாசலும் 4 வருடங்கள் திறந்திருக்கும். முழுமையான ஞான செழுமை அடைந்த ஒருவர் தான் பூரண தரிசனத்தை அடைய முடியும்.

விஷ்ணுபுரம் காவியத்தன்மை கொண்ட கதைப் புனைவாக  3 பகுதிகளாக  விவரித்து சொல்லப்படுகிறது.

முதல் பகுதி ஸ்ரீ பாத காண்டம் :

விமர்சையான ஸ்ரீபாத திருவிழா,  விஷ்ணுபுராண வரலாறு ,  வழி பிறழ்ந்த பக்தி நெறி சமூகம் அதன் எதிரொலிப்பு என நகர்கிறது.

பாரதவர்ஷாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் ஸ்ரீபாத திருவிழாவிற்கு அலையலையாக வந்து கொண்டிருக்கிறார்கள்.  நகர் முழுவதும்  நெரிசல் . அப்பங்கள் மலை போல் அடுக்கப்பட்டுள்ளன. மலர்கள் வீதிகள் முழுவதும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

விஷ்ணுபுரத்தின் செந்தீர்த்தமாக சோனா நதி . இதன் பழைய பெயர் பவழ வரி. அது போல் அதற்கு பசுங்குன்றம் எனும் ஹரிததுங்கா மலை சிகரமும் புனித மலையாக ஸ்தபிக்கப்படுகிறது.

பிரமாண்ட தேர் சக்ரத்தின் அச்சு வரை தான் யானையின் துதிக்கை செல்லும். தேரைச் செப்பனிட யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆப்பை பிடுங்கும் போது சக்ரம் சரிந்து யானையின் துதிக்கை நசுங்கி இரத்த சகதியாகுகிறது. இதனால் மதம் கொண்ட யானை  தெருவில் தெரித்தோடுகிறது. இதில் 20 பேர் நசுங்கி மரணிக்கின்றனர். இதை கட்டுப்படுத்த  போர் யானை வரவழைக்கப்படுகிறது. பாகனின் அலறலை செவிசாய்க்காமல் அவனது  யானையை போர் யானை மூலம் குத்தி சாய்க்கிறார்கள். விசாரனையில்  தேர் தலைமை சிற்பி பலிகடவாகிறார். கண் மூளியாக்கப்பட்டு கை விரல்கள் இரண்டும் வெட்டுப்படுகிறது.

விஷ்ணுபுரத்தின் நிழலண்டி பிழைக்க வரும்  சங்கர்ஷணனுக்கு  அது  தழலாக மாறி விடுகிறது. ஞானசபை அரங்கேற்றத்தில் ஞானசூன்யங்கள்  தளும்புவது அவனது சுய உணர்ச்சியை கொந்தளிக்கச் செய்கிறது. காவிய அரங்கேற்றத்தை வெறுத்து போய் தேவரடியார்களுக்கு சிருங்கார கவி புனைவதே மேல் என்று செல்கிறான்.

அவனுக்கும் அவனது மனைவி லக்ஷ்மிக்கும் அக வாழ்வு ஒத்துப்போவதில்லை. குறிப்பாக ஆண் தனது இயலாமையை வெளிப்படுத்த  ஒரு போதும் விரும்புவதில்லை ஆனால் அது நீச்சல்  தெரியாதவன் நதி மீது செய்யும் முரட்டு சலம்பல் போல பிரதிபலித்து விடுகிறது. மகன் அனிருத்தன் கோவிலில் வேடிக்கை பார்க்கும் போது சிலை சரிந்து அதே இடத்தில்  மாண்டு போகிறான். தீயை விட மோசமான புத்திர சோகமும் போதாதக் குறைக்கு மனைவிக்கு பைத்தியமும் பிடிக்கிறது.தாசி பத்மாட்சி அவனை ஆற்றுப்படுத்துகிறாள்.வேதப் பாட சலையின் நியமத்தை உதறிய பிங்கலன் தனது தேடலை தேவரடியார் மடியில் தேடுகிறான்.

மக்கள் இதிகாச கற்பனை மாயஜால பூதத்தின் மயக்கத்தில் வண்டுகளாக இருக்கிறார்கள். கோவிலின் தலைமை ஸ்தபதி பிரேசேனன் கூறும் கட்டுமான அறிவியல் நுணுக்கங்கள் மூலம் அது உடைத்தெறியவும் படுகிறது.

மதுரை தலைமையின் கீழ்   இருப்பதாக கூறும் விஷ்ணுபுரத்தில் கதைப்படி அப்போதிருந்த பாண்டிய மன்னன் செம்பியன் கடுங்கோன் சுந்தர பாண்டியத் திரிபுவனச் சக்ரவர்த்தி.ஜெ.மோ பாண்டியனின்  உருவத்தையும்  ஒழுக்கத்தின் மீதும் பெரும் விவாவதங்கள் செய்யுமளவிற்கான எதிர்மறை கருத்துகளை சித்தரிக்கிறார்.

நிஷாதர்கள் விஷ்ணுபுரத்தின் பூர்வக்குடிகளாக சொல்லப்படுகிறது. திருவிழாவின் போது அவர்களின் பூசை மரபுக்கான உரிமை தரப்படுகிறது. வாத்தியக்கார மகன் திருவடி எனும் சிறுவன் மகாசங்கீத பித்திற்கு ஆட்படுகிறான். நீதி, நேர்மை , ஒழுங்கு சிதைந்த விஷ்ணுபுரத்தில்ஆச்சாரியர்களும், பிராமண பட்டாச்சாரியர்களும் கூட தாசி வீட்டிற்கு செல்கிறார்கள்.

விஷ்ணுபுரத்தை சிதிலமாக்க ஶ்ரீபாதமார்க்கி பிரளய தேவி சிலையை சிற்பிக்கு தெரிய வண்ணம்  மனோவசிய முறையில் தாந்ரீரிகத்தை பிரயோகித்து உருவாக்கி விடுகிறான்.  இச்சிலை சர்வநாச முத்திரை, மகா சூன்யா முத்திரையுடன் நீரும் நெருப்பும் கொண்ட உடலாய் விஷ்ணுபுரத்தை அழிப்பதற்காக காத்திருக்கிறது.

பாதமார்க்கி கங்காளர் கருத்துபடி மூலகத்தில் இருப்பது விஷ்ணு அல்ல .அவர்களது மகா யோகர் சிலை ,அவர் உங்கள் நாராயணனுக்கும்  தந்தை என்கிறான். பிரளயதேவி கண் திறக்கும் போது விஷ்ணு மகாநிர்மால்யம் அடைவார்.

இதில் தோல்வியடைந்தாலும், மகா கோபுரத்தினை பிடிப்பு அச்சைக் களைத்து சரிய வைக்கும் கமுக்கம் அறிந்த அந்த ஒரேயொரு சிற்பியின் மனதை கட்டுபடுத்தி அதை செய்ய திரும்பவும்  ஏவுகிறான்.

இரண்டாம் பகுதி கெளஸ்துப காண்டம்

கிருஷ்ண பட்சி விவாதங்கள் பெளத்தன் வெற்றி – தத்துவ விளக்கங்கள் என வேகமெடுக்கிறது.

மகாகாலன்  காசியபன் என்கிற சிறுவனுக்கு ஞான தீட்சை தருகிறான். அது எல்லயற்ற பரப்பின் விஸ்தாரத்தை கை கொள்ளும் சூன்ய தியான தீட்சையாகிறது.பவதத்த மகாபாதரின் காலத்தில் நடந்த கிருஷ்ண பரீட்சையின் போது வடக்கில் இருந்து வந்த பெளத்தனும் சக்ராயன மார்க்கத்தின் ஆதிகுருவான

திக்நாக மகாபாதரின் வழி வந்த முதன்மை சீடனுமான அஜிதன் (காசியபன், உபகாலன், சியாமன், மகாவீரன், அபராஜிதன் …,) . பாரத முழுவது 8 ஞான சபைகளை வெல்கிறான். இறுதியாக காஞ்சியில் அபி தர்ம பரிஷத்தை வென்று விட்டு விஷ்ணபுரத்தின் கிருஷ்ண பரீட்சை விவாதத்தில் அறுவகை மரபுகளை சார்ந்த ஞானிகளுடன் விவாதம் புரிகிறான்.  ராஜகிருக நகரில் மகா கஸ்யபரால் தொகுக்கப்பட்ட உபதேச மொழிகளை அடிப்படியாக கொள்கிறான்.

பிரத்யட்சம்,அனுமானம் என்ற பெளத்த சாரங்கள் மூலம் வேதஞானிகள், சைவ ஞானிகள், சாங்கிய ஞானிகள்… என அனைத்து மரபினரையும் வாதில் வெல்கிறான். இதை ஏற்றுக் கொள்வதற்கு போதுமான பெளத்த கருத்துகளை நிறுவவில்லை. ஆனால் ஜெ.மோ அவனது அணுகுமுறையைப் பற்றி பேசுகிறார்.

எதிர்வாதியின் அணுபவத்தை புறக்கனிக்கிறான். தருக்கத்தை தூண்டி அவர்கள் அணுபவத்தை கவித்துவத்தில் சிக்க வைத்து ஞாண அதிகாரத்தை  கைப்பற்றுவதாக கூறுகிறார்.

அஜிதன் விஷ்ணுபுரத்தை தருக்க அமைப்பாகவே கருதுகிறான்.   மகா கோபுரத்தை கற்குவியலாக்கி  அக்கற்களை கொண்டே தனக்கான கோபுரத்தை கட்டமைத்துக் கொள்கிறான்.  சுமார் 200 வருடங்கள் பெளத்தர்கள் ஆட்சி, அஜிதனின் நண்பன்  முதல் தர்மதிகாரி சந்திரகீர்த்தி . வஜ்ராயன பெளத்ததில் அபிசர கர்மங்களை பிரயோகிக்கும் முறைகளை சிலர் செய்தனர் . அதிபன் ஒருவன் மூலம் விஹாரமும் இடிபடுகிறது. புத்த பிட்சுகளும் கொல்லப்படுகின்றனர்.

பின்பு பிரபாதத்தர் விஷ்ணுபுரத்தைகைப்பற்தினாலும் அது அரை வட்ட சக்ரமாகவே ஸ்தபிக்க முடிகிறது.தர்ம சக்கரம் அழிந்து விஷ்ணு சக்கரம் சுழல ஆரம்பித்தபோது முகலாயர்கள் படையெடுப்பும் கிளர்ச்சிகளும் சீரழிவை விரைவுப் படுத்துகிறது.

மூன்றாம் பகுதி மணிமுடிக் காண்டம்:

படிப்படியான அழிவு மகா சூன்ய தரிசனம் என ஒரு மூர்க்கத்தோடு காட்டாறு போல் வேகமெடுக்கிறது. இந்த காவிய புனைவெழுச்சியின் பிரமாண்டம் அதன் அழிவில் தான் தெரிகிறது. ஏனெனில் துவக்கத்தில் கட்டமைப்பில் சிக்கிக் கொள்ளும் படைப்பாளின்   கவனம் அழிவில் வெகு கூர்மையை கை கொள்கிறது.

அழிந்த இடிபாடுகளில் தன் தடயத்தை துருத்தி காட்டும் விஷ்ணுபுரத்தின்  இறுதி தலைமுறையின் வாழ்க்கையையும்  நதி, மலை, காடு ,விலங்குகள், வீடு , மனிதர்கள் , மழை ..,என காட்சிப்படுத்தும் ஜெ.மோவின் எழுத்து ஒரு மகாபிரளயத்தை நேரலையாக  வாசகனை உள்ளிழுத்துக் கொள்கிறது.

சில தத்துவ புரிதலில் ஜெ.மோ பிழை எற்படுத்துகிறார். அனுபவத்தை கதையாக்குதலுக்கும்  தகவல்களை கதையாக்கி தருதலுக்குமுள்ள வித்தியாசமே அது. விசுத்தி எப்பொழுதும் மோனம்  ததும்பம் நிலையல்ல . அது ஒரு கொந்தளிப்பு. சக்தியின் முழுப்பிரவாகம். செயல் அதீதம் கொண்டது.விசுத்தி சாதனாவில் உச்சம் பெற்ற யோகிகள் குறைவாகவே இருப்பதற்கு அது தான் காரணம். அவரது மொழியிலேயே சொல்ல வேண்டுமெனில் நிறைய இடங்களில்  தருக்கங்கள் மட்டுமே மோதிக் கொள்கின்றன.  தரிசனங்கள் அல்ல.  விஷ்ணுபுர  ஆதிதோற்றத்தை அதன் கட்டுமான உருவாக்தை அதிகம் பேசவில்லை.

விவாதங்கள் வழியே கோசங்ளை தத்துவ சட்டகத்தில் பொறுத்தி அதை பல பரிமாணங்களில் விளக்கி செல்வது புதுமையானது.அற்புதமானது.ஆன்மீகம் நவீன இலக்கியத்திற்கானது அல்ல என்பது இன்றும் சிலரின் பிடி வாதமாக உள்ளது. அதை தகர்த்தெரியும் சாத்தியங்கள் கொண்டதாக இருப்பதலே இந்நூல் இன்று வரை சர்சைக்குள்ளான படைப்பாக வைத்து பேசப்படுகிறது.

ஜெ.மோ தனது தத்துவ ஞான சாரங்களின் புரிதலை பல பரிமாணங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார்.

“மாற்று இல்லாத, சமரசம் இல்லாத தனிமை. இந்த தனிமை இம்மிக்கூட மறைக்கவோ மறுக்கவோ முடியாது. இதிலிருந்து தப்ப தான் கவிதை காமம் உறவுகள் சமூகம் தத்துவங்கள் எல்லாமே.”

“ஓர் அமைப்பு அன்றாட வாழ்வாக மாறும் போது எல்லாம் சகஜமாகிவிடுகிறது .அன்றாட  அநீதி என்பது அநீதியல்ல. ஒரு முறைமை அவ்வளவுதான்.”

“சூழ்நிலைக்கு ஏற்பவே மனம் தருக்கங்களை உண்டு பண்ணுகிறது உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது .சிக்குமெல் சதுரங்க விளையாட்டு வழியாகவே பரமஞானத்தை அடைந்து விட முடியும்.”

“பயனற்ற ஞான வழி எதுவுமில்லை. எனவே எந்த ஒரு தரிசனமும் அழிவதில்லை. எனவே எந்த ஞானத்தையாவது ஒருவன் வெறுதானென்றால் இழுத்துரைத்தானென்றால் அவனுடைய அகத்தில் ஒளி குடியேற முடியாது.”

“பூமி மீது ஒவ்வொரு உயிருக்கும் உண்மையாக வாழ்வது என்ற மகத்தான கடமை உள்ளது. அதிலிருந்து தப்ப வேடத்தை போட்டு பசப்புகிறான் மனிதன். அவனுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் நிச்சயம் துவங்க வேண்டிய இடம் தெரிந்து தான் இருக்கும். ஒவ்வொரு கனமும் அந்தப் பிரக்ஞை அவனைப் பின் தொடர்ந்தபடி தான் இருக்கும்.”

திபெத் பீடபூமியின் நிகரற்ற மறைஞானிகளில் ஒருவரான பத்மஷாம்பவா என்கிற மிலரெபா வரை தேடல் கொண்டு இறுதியில் பெளத்தம் விஷ்ணுவின் வேறொரு பரிமாணமாகவே காட்டமைக்கப்படுகிறது.

இந்த படைப்பின் புனைவில் கதாபாத்திரங்களின் பங்களிப்பை விட களத்தின் பங்களிப்பே அதிகம்.களத்தின் விஸ்தரிப்பை காட்டவே  கதாபத்திரங்கள் இயங்குகின்றன.

பொதுவான வாசகனுக்குரிய படைப்பாக  இல்லாதது இதன் குறை அல்ல. ஏனெனில் இது தேடல் நிறைந்த வாசகர்களுக்கான படைப்பு .

புதுவித அனுபவத்திற்கான தேடல் என்பது எதையும் ஒரு தடையாக பொருட்படுத்திக் கொள்ளாது. தங்கு தடையின்றி பாகுபாடற்ற நிலையில் அது பயணம் மட்டுமே இலக்காய்  கொண்டிருக்கும். தேங்கி போனால் அது தூர்நாற்றம் கொண்ட கழிவு. தேடல் கொண்டால் அது மகா சமுத்திரத்திற்கான  துடிப்பு.

அன்புடன்

மஞ்சுநாத்

புதுச்சேரி

விஷ்ணுபுரம் கடிதம் – கார்த்திக்

விஷ்ணுபுரம் பற்றி சரவணன் சந்திரன்

விஷ்ணுபுரம் -கடிதம்

விஷ்ணுபுரம் வாசிப்பு -பிரவீன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2021 11:30

வெண்முரசு அறிமுகம் – ஸூம் சந்திப்புகள்

நண்பர்களுக்கு வணக்கம்,

சென்னையில் விஷ்ணுபுரம் நண்பர்கள் இணைந்து, ஜூன் 2015 முதல் தொடர்ந்து வெண்முரசு குறித்து உரையாடி வருகிறோம். நண்பர்கள் காளிபிரசாத், சௌந்தர், ராஜகோபாலன் அவர்களின் ஒருங்கிணைப்பில் மாதந்தோரும் இந்த தொடர் உரையாடல் நடைபெற்று வருகிறது. மற்ற நகரங்களில் இருந்து வந்தும் நண்பர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். சென்ற ஆண்டு வீடடங்கு காலத்தில், தொடர்ச்சி அறுபடாமல் இருக்க இணையம் வழியே கூடுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இணைய வழி கூடுகைகளில் உலகெங்கிலும் இருந்து பல புதிய வாசக நண்பர்கள் பங்கெடுத்தார்கள்.

சென்னை, கோவை, புதுவை, ஈரோடு, தஞ்சை போன்ற நகரங்களில் விஷ்ணுபுரம் நண்பர்கள் வெண்முரசு குறித்த உரையாடல்களை முன்னெடுத்தாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து இணையும் நண்பர்கள் பலர், இதுதான் அவர்கள் பங்குபெறும் முதல் வெண்முரசு உரையாடல் என குறிப்பிட்டனர். வெளிமாநிலங்களில், வெளிநாட்டில் இருந்து பங்குபெறும் வாசகர்களும் அவ்வாறே. இதை மனதில் கொண்டு, வீடடங்கு முடிந்தாலும் இணையம் வழியே இந்த உரையாடல்களை தொடர வேண்டும் என எண்ணினோம்.

மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் வெண்முரசை வாசிக்க தொடங்கிய பல புதிய வாசகர்களும் உரையாடலில் பங்குபெறுவதை கவனித்தோம்.

இப்படி புதிதாக வாசிக்க தொடங்கிய, புதிதாக இணையும் வாசகர்களுக்காக, வெண்முரசை மீண்டும் முதற்கனலில் இருந்து வாசித்து உரையாடினால் சரியாக இருக்கும் என தோன்றியது.

அவ்வாறே, கடந்த சில மாதங்களாக நண்பர்கள் இணைந்து சூம் வழியாக முதற்கனல் குறித்து உரையாடி வருகிறோம். ஒவ்வொரு நாவல் குறித்தும் நண்பர்கள் தங்களுள் உரையாடுவது மட்டுமல்லாமல், ஒரு தேர்ந்த வாசகரை, அவரது வாசிப்பை பகிர, அழைக்கலாம் என விரும்பினோம்.

அவ்வகையில், முதற்கனல் குறித்து உரையாட நண்பர் ராஜகோபாலன் சம்மதித்துள்ளார்.

வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு, சூம் வழியே உரையாடல் நிகழ்வு நடைபெறும்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நேரம் :- இந்திய நேரம் மாலை 06:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137 (லாஓசி)

நன்றி!!!
அன்புடன்,
சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2021 10:19

June 14, 2021

விற்பனை!

“நீங்க எங்களோட ஞாபகசக்தி வளர்ச்சிப் பயிற்சியிலே பங்குபெற்று பயனடைய முடியும்னு நினைக்கிறீர்களா? தயவுசெஞ்சு எண் 3526273939017394726384072549190 ஐ அழுத்தவும்”

நான் வாசித்த சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று இது. அமெரிக்காவில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு ஏஜென்ஸிகள் உண்டு. அவற்றில் ஒன்றில் ஓர் அமெரிக்க இளைஞன் நுழைந்தான். “சொல்லுங்கள் அமெரிக்க ராணுவத்தில் சேர்வதனால் என்ன லாபம்?”

ஏஜெண்ட் உற்சாகமானார். “ஏகப்பட்ட லாபங்கள் உள்ளன. முதலில் நீங்கள் ஆண்மையானவராக மாறுவீர்கள். அழகிய பெண்களால் விரும்பப்படுவீர்கள். நீங்கள் உலகம் முழுக்கச் சுற்றமுடியும். அங்கேயும் பெண்கள் நிறைந்திருப்பார்கள். வீட்டிலும் ஊரிலும் உங்களுக்குப் பெரிய மதிப்பிருக்கும். மேலும் ஏராளமான பணரீதியான லாபங்கள்…”

”நான் ஒரு அற்புதமான சேல்ஸ்மேன். நீங்க அதியற்புதமான கஸ்டமர். நாம ரெண்டுபேரும் இணைஞ்சா பிரமாதமா செயல்பட முடியும்!”

கேட்கக்கேட்க வந்தவன் முகம் தெளிந்தான். ஏஜெண்ட் கேட்டார். “சரி , சேர்ந்துவிடுகிறீர்களா? ஒரு அட்மிஷன் போட்டுவிடவா? ஐந்தாண்டுகளா? பத்தாண்டுகளா?” பரபரவென்று படிவங்களையும் பேனாவையும் எடுத்தார்.

வந்தவன் சொன்னான். “என்னை மறந்துவிட்டீர்கள். நான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இங்கே வந்து உங்கள் பேச்சைக்கேட்டு ராணுவத்தில் சேர்ந்துகொண்டவன். லீவுக்கு வந்திருக்கிறேன். மனதை தேற்றிக்கொண்டு கொஞ்சம் உற்சாகப்படுத்திக் கொள்வதற்காக இதைக் கேட்க வந்தேன்.”

”நீங்க ரொம்பகாலமா ஆன்லைன்லதான் பொருட்களை வாங்குறீங்க. ஆனா அதனாலே நீங்க வாங்குற ஒவ்வொரு பொருளுக்கும் என் மூக்குநுனியிலே டபிள்கிளிக் பண்ணவேண்டியதில்லை”

உண்மையில் இந்த சேல்ஸ் பேச்சுக்கள் இல்லையென்றால் நாம் வாழ்க்கையில் எவ்வளவு சோர்வை அடைந்திருப்போம். காலையில் கடனே என்று எழுந்து டூத்பேஸ்டை பிதுக்கும்போது நம்மையறியாமலேயே கோல்கேட் விளம்பரம் நினைவுக்கு வந்து உற்சாகம் உருவாகிறதா இல்லையா? நானெல்லாம் அந்தக் காலத்தில் “closeup for closeups” என்ற விளம்பரத்தை நம்பித்தான் பெண்களையே அணுகத் துணிவுபெற்றேன்.

துபாய்க்காரர்கள் அந்த அமெரிக்க ராணுவவீரனைப் போலத்தான். லீவுக்கு வந்த இடத்தில் ஆடம்பரமாகப் பேசுவார்கள். “அங்கே எல்லா ரூமும் ஏஸிதான். அடுக்களைகூட ஏஸி. எனக்கெல்லாம் ஏஸியில்லாம இங்க தூக்கமே வரல்லை” மாடல் பேச்சுக்கள்.

”ஆட்டமாட்டிக் கஸ்டமர் கேருக்கு நல்வரவு. நீங்க நிதானமான ஆளா இருந்தா எண் ஒன்றை அழுத்தவும். பிலாக்காணப் பார்ட்டின்னா ரெண்டு. மண்டைகாய்ஞ்சவர்னா மூன்று…”

அதை ஒரு புதியவனிடம் பேசிய அச்சுதன் மாமாவிடம் நான் கேட்டேன். “துபாய் நல்ல சௌகரியமா அண்ணா?”

“அதொரு பெரிய தோசைக்கல்லாக்கும் மருமகனே”

”குவைத்து?”

“அது சீனச்சட்டி, கடலைய அப்டியே போட்டு வறுக்கலாம்”

“சவூதி?”

“அது இது மாதிரி இல்ல, நேரடியா அடுப்பு”

“அப்ப ஏன் இப்டி சொல்றீங்க?”

“இப்டிச் சொல்லித்தானே என்னைய அங்க போகவச்சானுக”

“இவன ஏமாத்தி அங்க கொண்டு போகப்போறீங்களா?”

“இல்லடே மருமகனே. இங்க வந்ததுமே மறுபடி போகவேண்டாம்னு தோணும். அத நாம சொன்னதுமே பெஞ்சாதி மூஞ்சி கறுத்திரும். போகாம இருக்க முடியாது. இங்க இருக்கிற பத்துநாளும் இதையே சொல்லிட்டிருந்தா பத்தாம்நாளு நமக்க மனசே மாறி போகணும்னு தோணிடும் பாத்துக்க”

”உங்க பெர்மாமென்ஸ் நல்லா இருக்கு. உங்க சம்பளத்தைக் கூட்டுறதுக்குப் பதிலா மத்தவங்க சம்பளத்தை கொஞ்சம் குறைச்சா உங்களுக்கு திருப்தியா இருக்குமா?”

நான் எப்போதுமே விற்பனையிலும் வாங்குவதிலும் ஏமாளி. அந்தப்பெயரை மாற்ற ஒரு உத்தியை ஒரே ஒரு முறை கடைப்பிடித்தேன். அக்காலங்களில் மாக்கல்லில் சட்டி செய்து கொண்டுவந்து ஊர்முகப்பில் போட்டு விற்பார்கள். என்னிடம் ஒன்று வாங்க அனுப்பினாள் அம்மா. விலை இருபது ரூபாய் சொன்னான். நான் பத்துக்கு கேட்டேன். பதினைந்தை விட்டு இறங்க மறுத்தான். வாங்கிவிட்டேன்.

வரும்வழியில் ராதாகிருஷ்ணனிடம் ஐந்து ரூபாய் கடன்வாங்கினேன். அம்மாவிடம் ஒரு சட்டி பத்துரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லி கெத்து காட்டினேன். அப்பால் அப்பா கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்திருக்கிறர். எனக்கு அது தெரியவில்லை. மறுநாள் முப்பது ரூபாய் தந்து மூன்று சட்டி வாங்கிக்கொண்டுவரச் சொல்லிவிட்டு போனார். முகம் வழக்கம்போல கடுகடுவென இருந்தது. நான் சார்த்ர் சொன்னதுபோல சிரிப்பு வரும்வரை அழுதேன்.

”உங்க பாஸ் சொல்ற எல்லா ஜோக்குக்கும் பயங்கரமாச் சிரிக்கிற ரெப்ரசெண்டேட்டிவ் வந்திருக்கார்னு அவர்கிட்டேசொல்லுங்க”

சந்தையில் பொருட்களை விற்பது ஒரு கலை. அதாவது கொலையும் ஒரு கலை என்பதுபோல. அதிலும் மாட்டுவிற்பனை என்பது ராஜதந்திரிகளுக்கு உரியது. நாம் மாட்டுடன் நிற்கும் போது ஒருவர் வந்து “இதுக்கு என்ன சீக்கு? வயத்தால போவுதா?” என்பார். இன்னொருவர் வந்து “மாட்டுக்கு ஷயரோகம் உண்டோ?” என்பார். அப்படி பல நலம் விசாரிப்புகளுக்கு பின் ஒருவர் வந்து நூறுரூபாய் மதிப்புள்ள மாட்டுக்கு நூற்றைம்பதுக்கு கேட்பார். உடனே நாம் மலர்ந்து இருநூறு ரூபாய்க்கு ஒரு ரூபாய் குறையாது என்போம்.

அதன்பின் எழுபது முதல் தொண்ணூறுவரை விலைபேசப்பட்டால் கொடுக்க மாட்டோம். நூற்றைம்பது பேசப்பட்டிருக்கிறதே! அதற்கு ‘சாடைவிலை’ என்று பெயர். ஆனால் ஒருகட்டத்தில் எவருமே மாட்டை கேட்க மாட்டார்கள். நாம் மனமுடைவோம். மாட்டுடன் திரும்புவது கேவலம். மாடே என்ன நினைக்கும்? ஆகவே நாற்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு திரும்புவோம். சாடைவிலை ஆசாமி கேட்டதுமே இந்தா என்று விற்கத்தயாரானால் அவர் சுதாரித்துக் கொண்டு ‘இந்நா பைசாவோட வாறேன்’ என்று கிளம்பிச்சென்று மறைவார்.

”இந்த ஆண்டின் சிறந்த சேல்ஸ்மேன் விருதை உங்களுக்கு அளிக்கிறதிலே பெருமை கொள்கிறோம். 12 ஈஸி தவணைகளிலே நீங்க 19.95 டாலரைக் கட்டினாப்போரும். விருது உங்களுக்கு!”

நான் மாட்டுடன் கண்ணீர்விட்டு நின்றபோது ராதாகிருஷ்ணன் அதை விற்றுத்தரும் பொறுப்பை ஏற்றான். ஒருவன் “மாடு என்ன வெலெ?”என்று கேட்டபோது “புரோக்கருக்கு வெலை சொல்லுறதில்லை” என்றான். அவன் உண்மையிலேயே வியாபாரி. சீண்டப்பட்டு “புரோக்கரா? இதே சந்தையிலே வாரம் நாநூறு மாடுகளை வாங்குதவனாக்கும்” என்றார். ராதாகிருஷ்ணன் சிரித்து “செரி, இருக்கட்டு. நமக்குள்ள என்ன?” என்றபின் உரக்க வேறுபக்கம் பார்த்து “புரோக்கர்மாரெல்லாம் தள்ளுங்க. விக்கிறவங்க வாங்க” என்றான்.

அவருடைய கௌரவத்தை உசுப்பிவிட்டான். அவர் அந்த மாட்டை பத்துரூபாய் கூடுதலாக அளித்து வாங்கினார். அந்த பத்து ரூபாய்க்கு நாங்கள் பரோட்டாவும் பீஃப் கறியும் தின்றோம். “அவனுக நம்ம கௌரவத்தை எளக்குவானுக, நாம அவனுக கௌரவத்தை எளக்கி விடணும்” என அந்த வணிக உத்தியை அவன் சொன்னான்.

”வழக்கமா டேவ் மாசந்தோறும் சிறந்த சேல்ஸ்மேனுக்கான விருதை வாங்குவான். இந்த மாசம் எனக்கு வித்திட்டான்’

சந்தையின் வணிக உத்திகள் அபாரமானவை. தேங்காய் கொஞ்சம் முற்றலென்றால் வெயிலில் வைத்து வாடி நிறம் மங்கவைத்து முற்றலென்று தோன்றச்செய்யலாம். ராதாகிருஷ்ணன் புளியங்கொட்டைத்தோலை அரைத்து காய்ச்சி அதில் தேங்காயை முக்கி ஊறவைத்து உலரச்செய்தால் அது படுமுற்றல் தேங்காய் என தோற்றமளிக்கும் என்பதைக் கண்டுபிடித்தவன். கோழியை கடைக்குக் கொண்டுபோகும் முன் பார்சோப் போட்டு குளிப்பாட்டி துவட்டினால் அதன் தூவல் பளிச்சென்று இருக்கும் என்பது இன்னொரு கண்டுபிடிப்பு.

ஆனால் விற்பனையாளன் என்றுமே விற்பனையாளன்தான். வாங்குபவன் என்றுமே வாங்குபவன்தான். ராதாகிருஷ்ணனின் நண்பனாக இருந்தும் நான் கடைசிவரை விற்பதில் தேறவோ வாங்குவதில் சுதாரித்துக் கொள்ளவோ இல்லை. ஒருமுறை சந்தையில் ஒருவன் டிரான்ஸிஸ்டர் ரேடியோ விற்றான். ஒரு ரேடியோ வெறும் இருபது ரூபாய். நான் ஒன்றை எடுத்து பரிசோதித்தேன். வெவ்வேறு ஸ்டேஷன்களை மாற்றிவைத்தேன். பாடியது. பணம்கொடுத்து வாங்கிவிட்டேன். பரீட்சைக்கு ஃபீஸ்கட்டவேண்டிய பணம்.

இளையராஜாவையே வாங்கிவிட்ட மிதப்பில் வீடு திரும்பினேன். ஆனால் ரேடியோவில் சத்தமே இல்லை. வண்டுச்சத்தம்கூட! ராதாகிருஷ்ணன் கழற்றிப்பார்த்தான். அது வெறும் பிளாஸ்டிக் டப்பா. ஆனால் பாடியதே?

”நீ அவன் முன்னாலே வச்சு திருப்பிப் பாத்தியா?”

”ஆமா”

”அவன் உன் கையை பாத்திருக்கான். அதுக்கேத்தமாதிரி அவன் கையிலே இருந்த நிஜ ரேடியோவிலே ஸ்டேஷன் மாத்தியிருக்கான்”

“ஆளு கில்லாடி இல்ல?” என்று நான் முகம் மலர்ந்தேன்.

“நீயெல்லாம் வெளங்கவே மாட்டே”

”என்னைய உங்க சேல்ஸ்மேனா வைச்சுக்கிட்டா உங்களுக்கு ஒரு கம்ப்ளீட் மணிபேக் கேரண்டி தாரேன். இப்பவே முடிவெடுத்தீங்கன்னா உங்களுக்கு நூறு ரூபா மதிப்புள்ள அதியற்புதமான ஒரு செட் கத்தி தருவேன். முழுக்க முழுக்க ஃப்ரீ… இருங்க இன்னும் ஆஃபர் இருக்கு…” 

கொங்கு வட்டாரத்தைப் பற்றி அரங்கசாமி சொன்னார். “மிகச்சிறந்த சேல்ஸ்மேன்களும் மிகச்சிறந்த வாடிக்கையாளர்களும் உள்ள ஊர் சார் இது”. அதாவது சேல்ஸ்மேனின் கோணத்தில் சிறந்த வாடிக்கையாளர்கள். ஆகவேதான் ஈமுகோழி முதல் சகாராவில் தேக்கு நடுவது வரை எல்லாவற்றுக்கும் அங்கே ஆளிருக்கிறது. தேவாங்கை சவரம் செய்து குள்ளச்சித்தராக விற்கமுடிகிறது. சித்தரையே விலைகொடுத்து வாங்க திறந்த உள்ளம் இருக்கிறது!

அதிலும் வட்டாரவேறுபாடு உண்டு. கோவை நகரில் வாடிக்கையாளரை விட சேல்ஸ்மேன்கள் கொஞ்சம் திறன் குறைவானவர்ககள். ஈரோட்டில் வாடிக்கையாளர்கள் சேல்ஸ்மேனின் நலனில் அதீத ஆர்வம் கொண்டவர்கள். ஈமுகோழிக்கு பணம் கட்ட ஈரோட்டுக்காரர்கள் வரிசையில் நின்று ‘என் பணத்தை வாங்கு, நான் முன்னாடியே வந்தாச்சு’ என அடிதடியில் ஈடுபட்டதாகச் சொன்னார்கள்.

டெலிபதி மார்க்கெட்டிங். “யோசிச்சுப் பாருங்க! நீங்க இல்லாம ஆனா உங்க குடும்பம் என்னத்துக்கு ஆகும்?”

எங்களூரில் உச்சகட்ட சேல்ஸ்மேன்கள் கல்யாணத் தரகர்கள்தான். பையனுக்கு உயர்ந்த இடத்தில் வேலை என்றால் எட்டாம் மாடியில் பெயிண்ட் அடிப்பவன் என்று பொருள். ‘ஃபுட் இண்டஸ்டிரியில் சப்ளைச்செயின் மெயிண்டெயின் பண்றார்’ என்றால் ஓட்டலில் சப்ளையர்.

என் மாமா ஒருவர் கல்யாணம் செய்தார். “பொண்ணு பேசினா, பொழுதெல்லாம் உக்காந்து கேக்கலாம்” என்று தரகர் சொன்னது அவளுக்கு திக்குவாய் இருப்பதைப் பற்றி என்று சிந்தித்திருக்கவில்லை. அவசரமாக துபாயிலிருந்து வந்து கல்யாணம் செய்து அடுத்த ஃப்ளைட்டில் திரும்பிய அண்ணா ஒருவரிடம் “பெண் தேவியைப்போல இருப்பா” என்று சொல்லப்பட்டிருக்கிறது. ”கட்டுறவனுக்கு மனசுல எப்பவும் நிம்மதி உண்டு, பாத்துக்கிடுங்க”

”புதிய ஆராய்ச்சிகள் காட்டுறபடிப் பாத்தா நம்ம பிராடக்டை நம்ம முயற்சியே இல்லாம வாங்குறவங்களோட பெர்சண்டேஜ் இது…”

அண்ணா நினைத்தது லட்சுமி தேவி. புரோக்கர் உத்தேசித்தது  இசக்கி தேவியை என்பது கல்யாணப்பந்தலில் தெரிந்தது. ஆனால் மனக்குறை இல்லை. பெண்ணை ஊரில் பலவகை ‘பூவாலன்கள்’ நடுவே விட்டுவிட்டு துபாயில் எத்தனை காலம் வேண்டுமென்றாலும் இருக்கலாம். மனநிம்மதிக்கு புரோக்கர் அளித்த ‘கேரண்டி’ உண்டு.

பழைய விகடன் ஜோக் ஒன்று. கலர்ப்படம் ரிலீஸ். டிக்கெட் கௌண்டருக்குள் கைவிட்டு கிராமவாசி கேட்கிறார். “கலர் கேரண்டி உண்டுங்களா?” அக்காலத்தில் துணி எடுக்கும்போது அவசியம் இதைக் கேட்போம். நானெல்லாம் பிளாஸ்டிக் பக்கெட் வாங்குமிடத்தில்கூட கேட்டிருக்கிறேன்.

”என்ன பார்வை அப்டி? இதுக்கு முன்னாடி குறுந்தொழில்முனைவோரை பார்த்ததே இல்லியா?”

அப்பாவியான நளினாக்ஷன் ஆசாரி பெண்பார்க்கும்போது கூடச் சென்ற தோழர்கள் ‘லே, பெண்ணு நல்ல நெறமாக்கும், கலர் கேரண்டி உண்டுமான்னு அவளுக்க அப்பன்கிட்ட கேளுலே. பிறவு பேச்சு வந்திரப்பிடாது’ என உசுப்பிவிட அவர் கேட்டே விட்டார் என்று ஒரு நிகழ்வைச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

மதமாற்ற நிறுவனங்கள், மானுடதெய்வங்களின் ஆட்களுக்கு மார்க்கெட்டிங் முதன்மையாகச் சொல்லித்தரப்படுகிறது. மார்க்கெட்டிங் அவர்களுக்கு ஏன் முக்கியமென்றால் சுறாமீன் நீந்தினால்தான் மிதக்க முடியும் என்பதுபோலத்தான். அவர்கள் ஓயாது பிரச்சாரம் செய்துகொள்வது அவர்களுக்கேதான். பிரச்சாரம் செய்யாவிட்டால் அவர்களுக்கே நம்பிக்கை போய்விடும்.

’புவியீர்ப்புவிசைதான் காரணம்னு சொல்லிடலாமா?”

பஸ்ஸில் என்னருகே இருந்த ஒருவர் ‘சார், இப்ப ஆன்மிகமா பாத்தியள்னா…” என ஆரம்பித்ததுமே என் வழக்கமான ஆயுதத்தால் தடுத்தேன். “நான் ஏற்கனவே மாறியாச்சு சார்”

ஆனால் அந்த ஆள் வல்லாளகண்டன். அவர் ஒரு கத்தை துண்டுப்பிரசுரங்களை எடுத்து என்னிடம் தந்து “செரி, அப்ப நீங்க அந்தப்பக்கம் இருக்குத ஆளை மாத்துங்க. நான் இந்தாலே போறேன்” என்றார். சகட்டுமேனிக்குச் சலிக்காத  ஆன்ம அறுவடை!

விற்பனையாளர்கள் போல நம்பிக்கையாளர்கள் வேறில்லை. உலகையே அவர்கள் வாய்ப்புகளாகப் பார்க்கிறார்கள். வரலாற்றை விற்கப்பட்டவற்றால் வரைகிறார்கள். ஒரு விற்பனையாளர் எகிப்து சென்று பிரமிடுகளைப் பார்த்து வியந்து “டூட், அந்தக்காலத்திலேயே இங்க மல்டி லெவல் மார்க்கெட்டிங் இருந்திருக்கு” என்றதாக ஒரு நகைச்சுவை உண்டு.

வெளியே போய் ஏதாவது சேல்ஸ்மேனை கூட்டிட்டுவா. மூடுசரியில்லை. நல்லா யாரையாவது திட்டணும் போல இருக்கு”

சேல்ஸ்மேன்களில் சிலர் புத்திசாலிகள். சேல்ஸ்கேர்ல்களில் சிலர்  அதிபுத்திசாலிகள். ஆகவே மக்கு மாதிரி தோற்றமளிப்பார்கள். முன்பு ஒரு பெண் ஒரு பிளாஸ்டிக் வட்டையைக் கொண்டுவந்தாள். அதற்குள் அதற்குள் அதற்குள் அதற்குள் என பத்துப்பதினைந்து வட்டைகளை வைக்கலாம். வைத்து காட்டினாள்.

‘இம்ப்ரெஸ்’ ஆகிவிட்ட அருண்மொழி பெரிய வட்டையை எடுத்து தன் கண்ணெதிரே தூக்கிப் பார்த்து “இதிலே என்ன வைக்கலாம்!” என்று கேட்டாள். விற்பனைச் சிறுமி ஆர்வத்துடன் “மத்த வட்டையை எல்லாம் வைக்கலாம் மேடம்” என்று மீண்டும் வைத்துக் காட்டினாள். மேலும் ‘இம்ப்ரெஸ்’ ஆன அருண்மொழி ஐநூறு ரூபாயில் அதை வாங்கினாள்.

உண்மையில் அவள் கேள்விக்கு அதைவிட சிறந்த பதில் இருக்க வாய்ப்பில்லை. கடைசிவரை அந்த பெரிய வட்டைக்குள் சிறியவட்டைகள் மட்டுமே இருந்தன

“வெரிகுட்…வேலைக்கான விண்ணப்பத்திலே எல்லா தகவலும் முழுப்பொய்… நீங்கதான் நல்ல சேஸ்ல்மேன்… அப்பாயிண்டட்”

விற்பனையாளர்களில் எல்லாவகை திறமையானவர்களும் உண்டு. ஒரு பையன் வந்து நாநூறு பக்க புத்தகத்தை காட்டி “சார் பொது அறிவுசார். பொது அறிவு. உலகத்திலேயே பெரிய பறவை என்னான்னு கேட்டியள்னா…” என்றான். வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தாலும் வாசலிலேயே நின்றான்

“தம்பி இங்கபாரு, எவ்ளவு பெரிய லைப்ரரி வீட்டுக்குள்ளே வைச்சிருக்கேன். இந்த பொது அறிவு புத்தகத்தாலே எனக்கு என்ன பிரயோசனம்? நீயே சொல்லு” என்றேன்.

“இவ்ளோ புத்தகம் காசு குடுத்து வாங்கி வச்சிருக்கீங்க சார், இந்த ஒரு புக்கும் கூடவே இருந்தா என்ன சார்?”

வாங்கிவிட்டேன். லைப்ரரியில் இப்போதும் இருக்கிறது. பொதுஅறிவுக் களஞ்சியம். பொதுஅறிவு என்பது வாடிக்கையாளருக்கு தேவையானது, பெரும்பாலும் இல்லாதது.

26 விளம்பரம்

25 ’சயன்டிஸ்ட்!’

24தொழில்நுட்பம்

23’மரபணு’

22மெய்ஞானம் டாட் காம்

21 மனைவி!

20 ஊதிப்பெருக்கவைத்தல்

19ஊழ்

18“சயன்ஸ்!”

17கல்வி

16பழம் கிழம்

15“ஓவியமாத்தான் இருக்கு!”

14கடவேல்

13மோனா

12ஞானமே இது பொய்யடா!

11ஆப்’ 10பகடை பன்னிரண்டு 9சிரிக்கும் ஏசு 8டேனியல் லாபெல் 7ஸாரி டாக்டர்! 6ஆடல் 5கம்யூட்டர் யுகத்துக் கடவுள் 4 மனம் 3குருவும் குறும்பும் 2இடுக்கண் வருங்கால்… 1ஆன்மிகமும் சிரிப்பும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2021 11:35

மைதிலி சிவராமன் –பாலசுப்ரமணியம் முத்துசாமி

மைதிலி, 1939 ஆம் ஆண்டு, காக்கிநாடாவில், ஒரு வசதியான மேல்தட்டு பிராமணக் குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்தவர். தந்தை சிவராமன் ஒரு பொறியாளர்.  தந்தையின் பணி நிமித்தம் காரணமாக சென்னையில் வளர்ந்தார். சென்னையில் இளங்கலை அரசியல் பயின்று, பின்னர் தில்லியில், முதுகலை டிப்ளமா பொது நிர்வாகம் பயின்று பட்டம் பெற்றார்.

அதன் பின்னர், அமெரிக்காவின் சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில், முதுகலை பொதுநிர்வாகம் பட்டம் பெற்று, ஐக்கிய நாடுகள் சபையில், ஆராய்ச்சி உதவியளாராகப் பணிபுரிந்து வந்தார். அந்தக் காலத்தில், அமெரிக்காவில் கல்வி பயின்று வந்த இந்து ராம், ப.சிதம்பரம் முதலியோர், மைதிலியைச் சந்தித்த காலங்களில், நிகழ்ந்த வாதங்களை நினைவு கூர்கிறார்கள்.

தான் பிறந்த சாதி/வர்க்க நலன்களையொட்டிய சுயநலப்பார்வை கொண்டிருந்தால், அவர் அந்தப் பணியில் தொடர்ந்து, ஐநா சபையில் பல பெரும் பொறுப்புக்களை வகித்திருக்கக் கூடும்..ஆனால், மைதிலி சாதாரண சுயநல மனிதரல்ல. பெரும் லட்சியவாதி. இடது சாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, வியட்நாம் போருக்கெதிரான குரல்களுடன் இணைந்தார். பின்னர் ஐநா வேலையை விட்டு, சென்னை வந்தார்.

இந்தியா வந்த அவர் இடது சாரி இயக்கங்களுடன் இணைந்து கொண்டார்.  என்.ராம் மற்றும் ப.சிதம்பரத்துடன் இணைந்து ரேடிக்கல் ரெவ்யூ என்னும் ஆங்கிலப் பத்திரிக்கையை நடத்தத் தொடங்கினார்.

1968 ஆம் ஆண்டு, கீழ்வெண்மணிப் படுகொலைகள் நடந்த போது, களத்தில் இறங்கி, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனுடன் இணைந்து, அந்தப் படுகொலைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டினார்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த நினைவேந்தலில், கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் அதை மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்..  44 பேர் எரித்துக் கொள்ளப்பட்ட செய்தி கேட்டவுடன், குன்றக்குடி அடிகளாரிடம் பேசிய கிருஷ்ணம்மாள், கீழ்வெண்மணிக்குச் செல்கிறார்.. அங்கே அவருடன் மைதிலி சிவராமன் இணைந்து கொள்கிறார்.

“மைதிலி வந்ததும், ஓடிப் போய்க் கட்டிகிட்டேன்.. நாங்க ரெண்டும் பேரும் ஒரே குடும்பம் மாதிரி.. எங்க மைதிலி, இங்லீஸ் மாதிரியே தமிழ்லயும் கணீர்னு பேசுவா”, என வ.கீதா ஒருங்கிணைத்த நினைவேந்தலில் கிருஷ்ணம்மாள் சொல்கிறார்.

இருவரும் ஒவ்வோரு வீடாகச் சென்று தகவல்கள் திரட்டுகிறார்கள்.. அவர்களுக்கு உள்ளூர் ஆதிக்க சாதிகளிடம் இருந்து மிரட்டல் வருகிறது.

கீழ்வெண்மணிக் கொலைகள் பற்றி அவர் திரட்டிய தரவுகள், கட்டுரைகளாக வந்தன. இந்தக் கொலைகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என அரசை எதிர்த்துப் போராடினார். ஆதிக்கச் சாதிகளுக்கு எதிராக இயங்கத் தயங்கிய அரசு இயந்திரம் வேறு வழியின்றிச் செயல்பட நேர்ந்தது. இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர், Haunted by Fire: Essays on Caste, Class, Exploitation and Emancipation.[   என்னும் பெயரில் புத்தகமாக வெளிவந்தன.

ஒரு சமூக அவலம் நிகழ்கையில், உடனடியாகச் செயல்பட்டுக் களத்தில் இறங்கி, தரவுகளைத் திரட்டி ஆவணமாக்குதல், பின்னர் அதற்கான நீதி மற்றும் நிவாரணம் கேட்கையில், எவ்வளவு இன்றியமையாத ஒரு காரியம் என்பதைக் கீழ் வெண்மணிக் கட்டுரைகள் நிரூபித்தன.

பல ஆண்டுகள் கழித்து, இன்னொரு அவலம் நிகழ்ந்தது. 1992 ஆம் ஆண்டு, 155 வனத்துறைக் காவலர்களும், 108 போலிசாரும், 6 வருவாய்த்துறை அதிகாரிகளும் கொண்ட குழு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி என்னும் கிராமத்தினுள் நுழைந்தது. வீரப்பன் பற்றிய தகவல் அறியவும், கடத்தப்பட்ட சந்தனக் கட்டைகளைத் தேடவும் எனக் காரணம் சொல்லப்பட்டது.

மொத்த கிராமமும் சூறையாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள். 18 பெண்கள் பல்வேறு நபர்களால் கற்பழிக்கப்பட்டார்கள்.. மொத்த கிராமமும் சூறையாடப்பட்டது.

கேள்விப்பட்ட உடன் மைதிலி களமிறங்கினார். பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களைச் சேகரித்தார். மற்ற தரவுகளையும் திரட்டினார். திரட்டப்பட்ட ஆவணங்களை, தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலக் கமிஷன் முன்பு சமர்ப்பித்தார். வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. 19 ஆண்டுகள் நடந்த அந்த வழக்கின் இறுதியில், இந்த நிகழ்வில் பங்கெடுத்த 269 பேர் தலித் வன்கொடுமைச் சட்டத்தின் கீழும், 17 பேர் மீது கற்பழிப்பும் நிருபிக்கப் பட்டுத் தண்டனை பெற்றார்கள்.  ஒடுக்கப்பட்டோர் எழுச்சியில் இது முக்கியமான திருப்பு முனை என்றால் மிகையாகாது.

1970 களில் சிஐடியு (centre of Indian trade unions) வில் தலைவர் சிந்தனுடன் இணைந்து பணியாற்றினார்.  ரயில்வே யூனியன், சிம்ப்ஸன்ஸ் ,  டி.ஐ சைக்கிள்ஸ், எம்.ஆர்.எஃப் போன்ற நிறுவனங்களில் தொழிலாளர் நன்மைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்துப் பலமுறை சிறை சென்றவர்.

பாப்பா உமாநாத்துடன் இணைந்து, 1981 ஆம் ஆண்டு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்க உதவினார் மைதிலி.

ஜூன் 13 ஆம் தேதி, இவருக்கான நினைவேந்தலைக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சங்கரையா, நல்லக்கண்ணு, மைதிலியின் நண்பர்களான என்.ராம், ப.சிதம்பரம், விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் பிருந்தா கராட் உள்ளிட்ட பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கெடுத்து, மைதிலியின் பங்களிப்பை மனம் நெகிழப் பகிர்ந்து கொண்டார்கள்.

சமூகப் பிரச்சினைகளில், ஒடுக்கப்பட்ட சாதிகளின் சார்பில் களமிறங்கி, ஆதிக்க சக்திகளான நில உடைமைச் சாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் காவல் துறையையும், அரசாங்கத்தையும் எதிர்த்து, துணிச்சலாக நின்று, உண்மையான தரவுகளைத் திரட்டி, ஜனநாயகம் அளித்துள்ள அனைத்துச் சாத்தியங்களையும் பயன்படுத்தி வென்று காட்டிய தீரர் மைதிலி.

பிரதிபலன் எதிர்பாராமல், மக்கள் நலனே முக்கியம் எனத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மைதிலியின் பங்களிப்பிற்கு தமிழ்ச் சமூகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2021 11:35

மதார்- பேட்டி

முகமது மதார் முகைதீன் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 1993-ஆம் ஆண்டு சாகுல் ஹமீது, மும்தாஜ் சாய்பா தம்பதியின் இளைய மகனாகப் பிறந்தார். உடன் பிறந்தவர் சகோதரி ஆயிஷா பப்பி. பதினொரு வயதில் கவிதை எழுதத் தொடங்கி, கல்லூரி நாட்கள் முதல் இலக்கியத்தில் ஈடுபாடும் கொண்டு கவிதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான ‘வெயில் பறந்தது’ குழந்தையின் கள்ளமற்ற மொழிகளையும், துக்கத்தை ஓரமாக வைத்துவிட்டு தன் பணியைச் செய்யும் வாலிபனையும் வேடிக்கைப் பார்த்து எழுதும் விளையாட்டுச் சிறுவனுக்கு உரியது. இவ்வருடத்திற்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெரும் மதாரை எழுத்தாளர் தேவிபாரதி வீட்டில் சந்தித்தோம்.

 

கேள்வி: பெரும்பாலான கவிஞர்கள் தங்கள் முதல் கவிதையை காதலிக்காகவே எழுதியிருப்பார்கள். விரைவில் திருமணம் ஆகப்போகும் தருணத்தில் உங்கள் முதல் காதல் கவிதைப் பற்றிச் சொல்லுங்கள்?

மதார்: முதல் கவிதை நீங்கள் சொல்வது போல் காதல்கவிதை தான். ஆனால், அது காதலிக்காக எழுதியதல்ல. என் பள்ளி நாட்களில், வகுப்பாசிரியர் தலைக்கு ஒரு கவிதை எழுதி வரும்படி கேட்டிருந்தார்.

முதலில் நான் பக்கத்து வீட்டு அண்ணன் நன்றாக கவிதை எழுதுவார் என அறிந்து அவரிடம் கேட்கலாம் என்றிருந்தேன். அன்று அவர் இல்லாததால் நானே ஒன்றை முயற்சி செய்தேன்.

முயற்சி என்றில்லை வழக்கமாக எல்லா விடலைப்பருவத்தினரும் செய்யும் யுக்தி தான். பத்திரிகையில் படித்த கவிதையை நமக்குத் தோன்றுவது போல் மொழியை மாற்றி எழுதி சமர்ப்பிப்பதை தான் அன்று செய்தேன்.

கேள்வி: அந்த முதல் கவிதை நினைவில் இருக்கிறதா?

மதார்: அந்தப் பத்திரிகையில் வாசித்த கவிதை கூட நினைவில் உள்ளது. பத்திரிகையில், “கண்ணுக்கு விருந்து அவளது காட்சி, காதுக்கு விருந்து அவளது பேச்சு” என்றிருந்தது. அதனை நான் கொஞ்சம் மாற்றி, “கண்ணுக்கு விருந்து இரவின் காட்சி, காதுக்கு விருது பகலின் பேச்சு” என்று எழுதினேன். அது தான் என் முதல் முயற்சி. ஒரு காதல் கவிதையை, இயற்கையின் மீதான காதலாக மாற்றிப் பார்ப்பது.

அதற்கு பின் கல்லூரி நாட்களில் நிறைய காதல் கவிதை முயற்சி செய்தேன். கிட்டத்தட்ட இரண்டு தொகுப்பு அளவிற்கு காதல் கவிதைகள் மட்டும் சேர்ந்துவிட்டபின் தான் தெரிந்தது, இதெல்லாம் காலாவதியான காதல் கவிதைகள் என.

தீவிர இலக்கிய வட்டத்திற்குள் வந்த பின் ஒரு சில காதல் கவிதைகளும் முயற்சி செய்திருக்கிறேன்.

கேள்வி: இந்த வகை பொது பத்திரிகைத் தளத்திலிருந்து நீங்கள் தீவிர இலக்கியத்திற்குள் வந்த பயணம் பற்றி?

மதார்: நான் பள்ளி நாட்களிலேயே கவிதை எழுதத் தொடங்கியிருந்தேன். ஆனால், தீவிர வாசிப்பு அந்நாட்களில் ஏற்படவில்லை. பெரும்பாலும் சிறுவர் இதழ்களே எனக்கு வாசிக்கக் கிடைத்தன.

பன்னிரெண்டாம் வகுப்பு ஆண்டிறுதியில் மூன்று வரி எழுதியிருந்தேன், “கழிவறையில் அமர்ந்து மலம் கழுவ மறுத்தேன், விளிம்பில் ரயில் பூச்சிகள்” அந்தக் கவிதை எனக்கு ஒரு கவிதையாக வெற்றியடைந்ததாகப் பட்டது.

அதனை ஒட்டி பிற கவிதைகள், நூல்கள் வாசிக்கலாம் எனக் கல்லூரி நாட்களில் தொடங்கியது தான் வாசிப்புப் பழக்கம். ஆனால் அப்போது வணிக இலக்கியம் மட்டும் வாசிக்கவில்லை. முதலில் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தேன். இரண்டாவது, ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்குத் தாவிவிட்டேன். தீவிர இலக்கியம், வணிக இலக்கியம் என்ற பேதமில்லாமல் தான் வாசித்தேன். அன்று நூலகத்தில் கையில் கிடைக்கும் நாவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் மொழிப்பெயர்ப்பு நாவல்கள்.

கேள்வி: உங்கள் நூல் தேர்வு ஆச்சரியமானது. பொதுவாகவே வளரும் காலங்களில் நேரடியாகவோ நூல்கள் வழியாகவோ சில ஆசிரியர்களின் கைகளைப் பற்றியிருப்போம். தீவிர – வணிக பேதத்தில் நூல்களை அணுகாவிட்டாலும் அதன் ஆதாரமான வேறுபாடுகளை உணரும் தருணம் இளம் படைப்பாளியின் முக்கிய தருணம். அது பற்றி கேட்கிறேன்?

மதார்: வெயில் பறந்தது தொகுப்பை நான் லஷ்மி மணிவண்ணனுக்கும், ஸ்ரீநிவாச கோபாலனுக்கும் சமர்ப்பணம் செய்தேன். ஸ்ரீநிவாசன் என் பள்ளித் தோழன், அவன் தான் எனக்கு நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்தவன். கல்லூரி நாட்களில் அவனை பின் தொடர்ந்து அவன் வாசிக்கும் நாவல்களை, கவிதைத் தொகுப்புகளை வாசித்துக் கொண்டிருந்தேன்.

கல்லூரி முடிந்ததும் என்னுள் தன்னியல்பாக அந்த உடைவு நிகழ்ந்தது எனச் சொல்லலாம். அப்போது தான் என் ரசனை சார்ந்த நூல்களை மட்டும் தேர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அக்காலக்கட்டத்தில் தான் எனக்கான கவிதை மொழியும் உருவாகி வந்தது என நினைக்கிறேன்.

நட்ஹாம்ஸனின் பசி நாவல், தமிழில் க.நா.சு மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. அது தான் என் புனைவு வாசிப்பின் முதல் சவால் என்று சொல்லலாம். அந்த நாவலில் உள்ள பசியென்ற படிமம் என்னை அலைகழித்தது. பல நாள் பசிக்கு பின் கதாநாயகன் ஒரு ஹோட்டலுக்குச் சென்று என்ன சாப்பிடலாமென கேட்பான். பால் குடிக்கச் சொல்லி அங்கு வந்திருக்கும் மற்றொருவன் சொல்வான். அந்த தருணத்தை என் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் காண நேர்ந்த போது நாவல் என்னுள்ளே மேலும் வளர்ந்தது.

அதன் பின்பு தொடர்ந்து மொழிபெயர்ப்பு நாவல்கள் வாசித்தேன்.

கேள்வி : பிரபல ஏடுகளில் உள்ள கவிதைகளிலிருந்து விலகி வருவதற்கு உங்களுக்குத் தடையாக இருந்தது எது? அல்லது யார்?

மதார்: தடையென பிரபல ஏடுகளையே சொல்லலாம். தொடர்ச்சியாக அதில் தீவிரமாக செயல்பட எண்ணிய போது ஒருவகை சலிப்பு உருவாகியது. அதிலிருந்து தன்னிச்சையாக ஒரு விலக்கமும் உருவாகியது.

கேள்வி: கல்லூரி படித்து முடித்ததற்கு பின்பான நாட்கள் தனிப்பட்ட வாழ்விலும் ஒரு முக்கியமான காலகட்டம் என உங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது அக்காலகட்டத்திலேயே உங்கள் கவிதை மொழி உருவாகி வந்ததாக சொல்கிறீர்கள். அந்த காலகட்டத்தை பற்றி சொல்லுங்கள்?

மதார்: என் தனிப்பட்ட வாழ்க்கையில் அது ஒரு நெருக்கடியான காலகட்டம் தான். வேலை சார்ந்து, என் ஆர்வம் சார்ந்து சில தேடல்கள் இருந்தன. அதனை ஒட்டிய குழப்பங்களும் சேர்த்து. ஆனால் அந்த காலகட்டத்தில் தான் என் மனதிற்கு நெருக்கமான பல கவிதைகளை எழுதியுள்ளேன்.

உதாரணமாக, துபாயில் வேலையில் இருந்த நாட்களில், நான் வேலை செய்யும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவர் ப்ரஷை தெறித்த போது வானத்தில் அவருக்கு பின்னால் ஏரோபிளைன் பறந்தது. அவர் விட்ட வண்ணத்தில் இருந்து அந்த பிளைன் பறந்தது போல் காட்சியிருந்தது.

அந்த தருணம் நான் சென்றுக் கொண்டிருந்த நெருக்கடியான பல லௌகீகச் சிக்கல்களின் பாதையிலிருந்து விடுவித்தது. அதனை ஒரு கவிதையாக்க முயற்சி செய்தேன். இன்றுவரை என் கவிதையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமையை அந்த தருணத்தின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன். ஒரு வரியில் சொல்வதென்றால், சிக்கலான புறச்சூழலிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள இந்த பாதையை தேர்ந்தெடுத்தேன் எனச் சொல்லலாம்.

கேள்வி: உங்கள் கவிதையில் வெளிப்படும் ஒரு விளையாட்டுத்தனம் அதன் நீட்சி தானா? அந்த நெருக்கடியான மனநிலையில் இருந்து உங்களை ஒரு வேடிக்கைப் பார்ப்பவனாக ஆக்கிக் கொண்டீர்கள் எனச் சொல்லலாமா?

மதார்: உண்மைதான். அந்த மனநிலை அந்நாட்களில் பருவடிவம் கொண்டது எனச் சொல்லலாம். ஒரு வரி மனதில் தோன்றினால், எங்காவது சென்று அந்த ஒரு வரியை மட்டும் மீட்டிக் கொண்டிருப்பது, அந்த வரியை மட்டுமே தாங்கிக் கொண்டு நாட்களைக் கழிப்பது என இருந்திருக்கிறேன்.

அவ்வரிகள் என்னிடம் உள்ள போது நான் எங்கே செல்கிறேன் என்பதைக் கூட பல நாள் மறந்து சென்றிருக்கிறேன். லௌகீக வாழ்வில் இது ஒரு பெரும் சிக்கலும் கூட. ஆனால் ஒரு கவிஞனுக்கு அது வரம்.

அந்நிலை மொத்த இருளில் ஒரு இடத்தை மட்டும் டார்ச் அடுத்துக் கொண்டு அதில் மட்டுமே லயித்திருப்பது. முதலில் அதனை இங்கிருந்து வெளியேறும் தந்திரமாகவே கையாண்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது எனக்கான பாதையாக மாறியது என்று இப்போது தோன்றுகிறது.

கேள்வி: அப்படி நீங்கள் செல்லும் இடங்களில் மனதிற்கு அணுக்கமான இடம் எதுவும் உள்ளதா? அல்லது உங்கள் பயண அனுபவம் பற்றி?

மதார்: திருநெல்வேலி வ.உ.சி மைதானம் என் மனதிற்கு ரொம்ப அணுக்கமான இடம். நான் சென்று பெரும்பாலான நேரங்களில் அங்கே அமர்ந்திருப்பேன். இந்த தொகுப்பில் உள்ள பல கவிதைகள் அங்கே எழுதியவை தான். உதாரணமாக, பந்து கவிதை, அதே போல் பலூன் கவிதை எனப் பல கவிதைகளைச் சொல்லலாம்.

பயண அனுபவத்தைப் பற்றி கேட்டிருந்தீர்கள். என் பெரும்பாலான அந்நியநிலப் பயணம் வேலை நிமித்தமாக செய்தது. இப்போது இருக்கும் ஒரு நிலையான வேலை கிடைக்கும் வரை கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் நிறைய இடங்களுக்கு பயணம் செய்துள்ளேன். ஒவ்வொரு சூழலும் நம்மையறியாமல் நம்முள் ஒரு மாற்றத்தை நிகழ்த்துகின்றன. அந்த அறிய முடியாமையின் வெளிப்பாடே கவிதை என நினைக்கிறேன்.

நீங்கள் என் கவிதைகளில் வெயில் என்ற படிமம் தனி இடத்தை பிடித்திருப்பதை காணலாம். அது தன்னிச்சையாக என் கவிதையில் வந்தமர்ந்தது. ஒன்றை திட்டமிட்ட ஒரு கவிதைக்காக சென்று பார்ப்பதில்லை. வெவ்வேறு காலநிலையில், வெவ்வேறு பிரதேசத்தில் தன்னிச்சையாக நிகழ்ந்த பயணம் மூலமாக, நான் அறியாமலே உருவாகி வெளிப்பட்ட படிமமாகத்தான் அது அமைந்திருக்கிறது.

மேலும் காலம், இடம் போன்றவற்றை நான் பிரக்ஞாப் பூர்வமாக கவிதையில் திணிப்பதில்லை. அப்படி ஒரு கவிதை முயற்சித்தால் அது கவிதையாக ஆகாமல் நின்றுவிடும்.

இந்த வெயில் மீதான obsession கூட நான் எழுதும் போது கவனித்ததில்லை. இந்த தொகுப்பிற்காக கவிதைகளை திருப்பிப் பார்க்கும் போதே எனக்கு தெரிந்தது, வெயில் பற்றி என் கவிதையில் இத்தனை வந்திருக்கிறது என.

நமக்கு அணுக்கமான ஒரு சூழல் நம்மையறியாமலே நம் உறவினர்கள், நண்பர்கள் போல் உடன் கலந்துவிடுகிறது என்றே நினைக்கிறேன்.

கேள்வி: உங்கள் பணி இடங்கள் பற்றி?

மதார்: கல்லூரி முடித்ததும் முதலில் சென்னையில் ஒரு வீடியோ கேம் கம்பெனியில் சில நாட்கள் வேலைப் பார்த்தேன். பின் துபாயில் ஒரு எட்டு மாத காலம் இருந்தேன். என்.சி.பி.ஹெச் புத்தகக் கடையில் ஒரு ஆறு மாதம் இருந்தேன். ரயில்வே வயரிங் சார்ந்த வேலையிலும் ஆறு மாதம். திருநெல்வேலியில் எஃப்.எம் ஸ்டேஷனில் சில நாட்கள் வேலைப் பார்த்தேன்.

இக்காலகட்டத்தில், திருநெல்வேலியில் மாணவர் பத்திரிக்கை அலுவலகம் தொடங்க சிறு முயற்சி செய்தேன். பின் சென்னை சென்றதும் அங்கும் முயற்சித்தேன். சில காரணங்களால் அவை முடியாமல் போனது. பின் என் அலுவலக வேலைகள் எழுத்திற்கான நேரத்தை எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, நிலையான அரசு வேலைக்கு முயற்சி செய்து தேர்ச்சி பெற்றேன்.

கேள்வி: இலக்கியம், பயணம், வேலை நேரங்கள் போக வேறு தனிப்பட்ட கலை ஆர்வம் உண்டா?

மதார்: ஓவியம் சார்ந்த ஈடுபாடு உண்டு. கல்யாண்ஜி நன்றாக ஓவியம் வரையக்கூடியவர்.  என்னால் வரைய முடியாததால் என்னை பார்வையாளனாக நிறுத்திக் கொண்டேன்.

பாடல்கள் கேட்கும் வழக்கமும் உண்டு. பெரும்பாலும் அதன் சந்தத்திற்காகவே பாடலைக் கேட்பேன். ஒரு பாடலைக் கேட்டால் அதன் டியூன் நாள் முழுவதும் மண்டையை நிறைத்திருக்கும். அந்த துணுக்குகளுக்காக மட்டுமே பாடல் கேட்பது வழக்கம்.

நண்பர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே சினிமா பார்ப்பதுண்டு. என் பள்ளி நாட்களில் நான் இயக்குனர் ஜனநாதனின் ‘இயற்கை’ படத்தை காரணமின்றி பல முறைப் பார்த்திருக்கிறேன். பின்னால் அது தஸ்தோவ்யெஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலின் பாதிப்பில் எடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது இன்னும் நெருக்கமானது.

எனக்கான படங்களாக நான் நினைப்பது பெரும்பாலும், மனிதர்கள் குறைவான படங்கள். ‘Post Men in the Mountains’ என்ற ஒரு சீனப் படம் உண்டு. ஒரு மனிதன், ஒரு மலை, ஒரு நாயைச் சுற்றி நடக்கும் கதை, அதே போல் மனிதர்கள் குறைவான சூழல் கொண்ட படங்கள் மனதிற்கு நெருக்கமானவை.

கேள்வி: உங்கள் கவிதைகளில் சில கவிதைகள் நீங்கள் சொல்லும் சந்த நடையில் அமைந்துள்ளன. உதாரணமாக, கூவிக் கூவிக் கூவித் திரியும் குருவி. மரபு இலக்கியத்தின் மீது ஆர்வம் உண்டா? இல்லை பாடல் மெட்டுகள் இதனை உருவாக்கியதா?

மதார்: மரபு இலக்கியத்தில் பெரிய பரிச்சயம் இல்லை. ஆனால் ஆர்வம் உண்டு. இந்த கவிதை என்னுள் ஒரு சொல் வழியாகவே உருவாகியது. ’கூவிக் கூவிக் கூவித் திரியும் குருவி’ என்ற வரி பிறந்ததும் அதனை ஒரு மந்திரம் போல் சொல்லிக் கொண்டிருந்தேன். பலமுறை பாடிக் கொண்டிருந்தேன் கிட்டத்தட்ட இசை மெட்டிற்கு ஏற்ப அமைந்த வரி.

அத்தனை முறை என்னையறியாமல் அந்த வரி என்னுள் சென்ற பின்னர் தான் அந்த கவிதையை எழுதத் தொடங்கினேன். ஒரு பிரக்ஞையற்ற நிலையிலேயே அந்த கவிதையை எழுதினேன்.

இதே வடிவத்திலேயே இரண்டு, மூன்று கவிதைகள் முயற்சி செய்திருக்கிறேன். அவற்றுள் சில வடிவம் சார்ந்த முயற்சிகள் மட்டுமே. உதாரணமாக, ‘தலைகீழாக திருப்பாதீர்கள்’ என்ற கவிதை, அந்த கவிதை அச்சில் தலைகீழாக இருக்கும். ஆனால் இந்த தொகுப்பிற்காக கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது அந்த கவிதை தனியாக துருத்திக் கொண்டிருந்தது. அதனால் அதனை நீக்கி விட்டேன்.

இதே போல் எல்லா வடிவத்திலும் கவிதை முயற்சி செய்வதுண்டு. ஆனால் அது கவிதையானால் தான் வெளியிட வேண்டுமென்ற தீர்மானமும் உள்ளது.

கேள்வி: ‘தலைகீழாக திருப்பாதீர்கள்’ எனக் கவிதையின் தலைப்பு சொன்னீர்கள். வெயில் பறந்தது தொகுப்பில் பெரும்பாலான கவிதைகளுக்கும் தலைப்பு இல்லை அதற்கு ஏதேனும் காரணம் உண்டா?

மதார்: அப்படி யோசித்து எந்த கவிதைக்கும் செய்வதில்லை. கவிதை எழுதி முடித்தவுடன் தன்னிச்சையாக ஒரு தலைப்பு வந்தால் அதனைப் போட்டுவிடுவேன். தலைப்பிற்காக யோசித்து தலைப்பிடுவதில்லை.

கவிதையில் தலைப்பு இரண்டு காரணங்களுக்காக வைக்கலாம்.ஒன்று, அந்த தலைப்பு கவிதைக்கு கூடுதலான அர்த்தத்தை தர வேண்டும் அல்லது அந்த கவிதைக்கு கூடுதலான அழகை சேர்க்க வேண்டும். இப்போது எழுதும் கவிதைகளில் இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே தலைப்பிடுகிறேன்.

சமீபத்தில் எழுதிய ஒரு கவிதை, ’பறவை ஒன்று நிலவை கடக்கும் போது ஓராண்டு பின்னோக்கி செல்கிறது. பறவையும் ஒரு வருஷம் பின்னோக்கி செல்கிறது, நிலவும் செல்கிறது, ஒரு வயது குழந்தையும் செல்கிறது’ என அந்த கவிதை முடியும். அந்த கவிதைக்கு கர்ணன் எனத் தலைப்பிட்டிருந்தேன். அந்த குழந்தை நிலவின் மைந்தனாக வரும், கர்ணன் சூரியனின் மைந்தன். இது போல் கூடுதலான அர்த்தம் வரும் பட்சத்தில் மட்டுமே கவிதைக்கு தலைப்பிடுகிறேன்.

கேள்வி : பொதுவாகவே புனைவுக்குள் நுழையும் இளைஞனுக்கு அதுவரை அத்துறையில் நடந்த உரையாடல்கள் மீதும், அறிவு சார்ந்த விவாதங்கள் மீதும் ஈர்ப்பு இருப்பதுண்டு. நீங்கள் மிக இயல்பாகக் கவிஞராகத் திரண்டு உருவாகியுள்ளீர்கள். கவிதையில் அதுவரை பேசப்பட்ட சாரம், வடிவ சோதனை, கோட்பாட்டுச் சுமை உங்கள் கவிதை மனதை எவ்வாறு பாதித்தது?

மதார்: முன்னோடிகளின் நூல்களை நான் எப்போதும் கோட்பாடு சார்ந்து அணுகியது இல்லை. எந்த ஒரு சாரமோ, வடிவ சோதனையோ என் ரசனை சார்ந்து இருந்தால் அதனை முயற்சித்துப் பார்ப்பேன். மேலே சொன்ன தலைகீழாக திருப்பாதீர்கள் கவிதை அந்த வகை முயற்சி தான்.

கமல் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பார்வையாளனுக்கும், படைப்பாளிக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி பேசியிருப்பார். ’ஒரு படத்தை டெக்னீஷினாக பார்க்கும் போது அதிலுள்ள டெக்னிகல் சார்ந்த விஷயங்கள் தான் மண்டையில் ஓடும். ‘எங்கே கேமரா இருக்கிறது’ போன்ற விஷயங்களே பார்வையில் முதலில் படும். அதனை தாண்டி ஒரு ரசிகனாக நான் பார்ப்பது சற்று சிரமம் தான்’ என்றார். கவிதைக்கும் அது பொருந்தும் என நினைக்கிறேன். நான் புனைவு வாசிக்கும் போது டெக்னீஷனாக என்னை ஆக்க விரும்பவில்லை. அதன் ரசிகனாக இருக்கவே விரும்புகிறேன்.

கேள்வி: உங்கள் கவிதை உங்களுள் நிகழும் தருணம் பற்றி சொல்லுங்கள்?

மதார்: கவிதை நிகழும் தருணம் எனச் சொல்ல முடியாது. கவிதை புறச்சூழலில் இருந்து தோன்றிய கணங்களைப் பற்றிச் சொல்ல முடியும். உதாரணமாக,‘கட்டையாகவும் நெட்டையாகவும் ஒரு திருமணப் பந்தல் ஜோடி’ இந்த கவிதை என் நண்பனின் காதல் திருமணத்தன்று எழுதியது. ‘பந்து’ கவிதை நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது எழுதியது. ‘தனிமையைப் பகிர ஆளிலா கிழத்தி’ எனத் தொடங்கும் கவிதையில் உள்ள தனியான ஆச்சி பாளையங்கோட்டையில் எங்கள் வீடிருக்கும் தெருவில் உள்ளவர். அவரை நினைத்து எழுதியது அந்த கவிதை. இப்படி ஒவ்வொரு கவிதையும் நிகழ ஒரு புறவுல செயல் காரணமாக இருந்தது எனச் சொல்லலாம். எண்ணில் அடங்காத உலக சாத்தியத்தில் இருந்து என் கவிதைக்கான ஊற்றைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் என நினைக்கிறேன்.

கேள்வி: உங்கள் கவிதையில் துக்கம் ஒரு ஓரமாக அமர்ந்திருக்கும் பரிசுப்பொருளாக அல்லது காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கிறது. பொதுவாக தமிழ் கவிதையில் தென்படும் கடும் துக்கமும், கசப்பும் அற்றி உங்கள் கவிதைகள் பற்றி?

மதார்: இதுவும் நான் முதலில் சொன்னது போல் தான், முதன்மையாக புறவுலக பயங்கரத்தில் இருந்து என்னை நான் விடுவித்துக் கொள்ள நான் கவிதை எழுதுகிறேன்.

நான் அந்த வகை கவிதைகளை ஆரம்ப நாட்களில் எழுதியிருக்கிறேன். அவை கவிதை ஆகாமல் வெறும் புலம்பலாக நின்றுவிட்டதோ எனப் பின் தோன்றியது.

என் கவிதையில் மறுபடியும் அந்த பயங்கர துக்கமும், கசப்பும் வந்து நிரம்பக் கூடாது என விரும்பினேன். ‘துக்கம் ஒரு பரிசுப் பொருள்’ கவிதை எனக்கு தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடித்தமான கவிதை. நான் நின்றிருந்த லௌகீக நிலையில் இருந்து வேறொருவனாக அந்த கவிதை என்னை எனக்கே காட்டியது. அந்த மனநிலையே பிற கவிதைகளிலும் பிரதிபலிப்பதைப் பார்க்கிறேன்.

இந்த பார்வை ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். ஆனால் என் தனிப்பட்ட பார்வையில் அவை என் மேசையின் ஓரமாக அமர்ந்திருக்கும் ஒரு எளிய பரிசுப் பொருள் மட்டும் தான்.

கேள்வி: இது இந்த காலகட்டத்தின் மனநிலை என நினைக்கிறீர்களா? அல்லது உங்கள் தனிப்பட்ட பேசுப் பொருள் எனப் பார்க்கிறீர்களா?

மதார்: அந்த கவிதை என் தனிப்பட்ட வெளிப்பாடு என்றே பார்க்கிறேன். ஒவ்வொருவருக்கும் அது மாறுபடலாம். அது இக்காலகட்டத்தின் பொது தன்மை எனக் கூற முடியாது.

கேள்வி: ஜெயமோகன் உங்கள் வெயில் பறந்தது நூல் வெளி யீ ட்டு விழாவில் பேசியது போல், நான் என்பது கடந்த காலகட்டத்தின் மிகப் பெரிய பேசுப் பொருள் ஆனால் உங்கள் கவிதையில் நான் சுத்தமாக இல்லை. மறைந்திருக்கும் நானும் ஒரு வேடிக்கைப் பார்ப்பவனாக மட்டுமே இருக்கிறான். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

மதார்: ஒவ்வொருவருக்கும் கவிதை எழுதுவதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கும், அதைப் பொறுத்து தான் அந்த கவி ஆளுமை வெளிப்படும். ‘நான்’ என்ற பேசுபொருளும் அப்படி தான் உருவாகி வருகிறது.

இது இக்காலகட்டத்தின் ஒட்டுமொத்த மனநிலை எனச் சொல்வதற்கில்லை. முந்தைய தலைமுறையில் இருந்த தன்னை சுமக்கும் கனம் குறைந்து வந்திருக்கிறது எனச் சொல்லலாம்.

ஆனால் நான் அது மறைந்துவிட்டதாக சொல்லவில்லை. ‘நான்’ என்ற ஆளுமை இத்தலைமுறையில் வேறு வேறு மாற்று வடிவம் கொண்டு பேசுப் பொருளாக நிற்பதைப் பார்க்கிறேன்.

உதாரணமாக, கவிஞர் வெயிலின் ஒரு கவிதை உண்டு. அப்பா மகனிடம் ஒரு சோகமான பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பார். ‘நாம தோத்துட்டோமா’ என்று முணுமுணுத்துக் கொண்டு நடப்பார். பையன் வளர்ந்து பெரியவனான பின் தன் கிராமத்தை துறந்து பெருநகர வாழ்வில் நிற்கும் நிலையில் ஒரு நாள் அவனை அறியாமல் அந்த பாடலை முணுமுணுப்பான். இந்த கவிதை இந்த கேள்விக்கான சிறந்த பதில். அந்த அப்பா பேசிய ‘நான்’ ஒரு காலகட்டத்தின் மனநிலை என்றால் பையனிடம் தன்னிச்சையாக பயின்று வரும் ‘நான்’ வேறொரு மனநிலை.

ஆனால் நான் சொன்னது போல் அதனை ஒவ்வொரு கவிஞர்களும் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதே இத்தலைமுறையின் கேள்வி.

கேள்வி: ‘நான்’ என்பது போல், என் சோகமும் போன தலைமுறையின் மிகப் பெரிய எடை. நீங்கள் அந்த எடையை தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டீர்கள். இந்த மனநிலை பற்றி உங்கள் கருத்து என்ன?

மதார்: அதனையும் ஒரு காலகட்டத்தின் மனநிலை என நான் பார்க்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கவிதையில் அதனை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்றே பார்க்கிறேன். அது அவர்களின் ஆளுமையை வரையறுப்பது கூட. எனவே இது காலகட்டத்தின் மனநிலையாக நான் நினைக்கவில்லை.

தேவதேவன் கவிதையில் சோகத்திற்கு ஒரு எடை கூட்டிச் சொல்வது போல் இருக்கும். தேவதச்சன் அதனை போகிற போக்கில் சொல்லிக் கொண்டு செல்வார். ஞானக்கூத்தன் அதனை பகடி செய்து பார்ப்பார். மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் சோகத்தை நேரடியாக பேசுவது போல் அமைந்திருக்கும்.

அது அந்த கவிஞனின் வெளிப்பாடு தான் அதனை அவன் எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறான் என்றே பார்க்கிறேன். என் கவிதையில் நான் சோகத்தின் எடையை என் மேல் ஏற்றாமல் ஒதுங்கி நின்றுக் கொள்கிறேன் அவ்வளவு தான்.

ஆனால் அதனை நான் மறைக்க விரும்பவில்லை, இல்லையென்றும் நிறுவ முயற்சிக்கவில்லை. தேவதச்சனின் ஒரு கவிதையில், டிவியில் ஒரு துப்பாக்கி வந்து குழந்தையின் கண்களை குத்துவது போல் ஒரு படிமம் வரும். அதில் அந்த துக்கத்தை மறைத்து வேறொன்றாக ஆக்க விரும்புகிறார். என் கவிதையில் துக்கத்தை நான் மறைக்கவில்லை அதனோடே உரையாடுகிறேன். அதுவும் ஒரு ஓரமாக நிற்கட்டுமே என்ன இப்போ?

ரூமியின் ஒரு கவிதை உண்டு. ‘மனிதனுள் துக்கம், சந்தோஷம் எல்லாம் விருந்தினர் போல் வந்து செல்கிறது. அதனை நாம் வரவேற்று அனுப்ப வேண்டும்’ என அந்த கவிதை முடியும். அதனை வாசித்த போது அதற்கு நெருக்கமாக என் துக்கம் ஒரு பரிசுப் பொருள் கவிதையை உணர்ந்தேன்.

கேள்வி: ரொமான்டிக் காலகட்டம் கவிஞனின் இலட்சியக் காலகட்டம். உங்கள் கவிதையில் நீங்கள் அதனை தொட முயற்சிக்கிறீர்களா? ந வீ னத்துவ கவிதைக்கு பின் மீண்டும் அது திரும்பி வருகிறது என நினைக்கிறீர்களா?

மதார்: ஆமாம் ஒரு காலகட்டத்தில் அந்த ரொமான்ஸ் தன்மை சலிப்பை ஏற்படுத்தியது. அதனால் கவிஞர்கள் அதனை மறுத்தே தங்கள் கவிதைகளை எழுதத் தொடங்கினர். பாரதி, அவருக்கு அடுத்தான காலகட்டத்தில் அத்தகைய மீறலின் தேவையும் இருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. எனவே அவர்கள் திரும்ப திரும்ப அதனை வலியுறுத்தினர்.

உதாரணமாக, பாரதியின் காலகட்டத்தில் அரசியல் கவிதையின் மிகப் பெரிய பேசுபொருளாக அமையும் தேவை இருந்தது.

இக்காலகட்டம் அரசியலும், ‘நான்’ என்ற சின்ன சட்டகத்துள் தன்னை அடைத்துக் கொள்ளும் பார்வையும் அருகி வரும் காலகட்டம். கவிஞன் அல்லாத பொது மனநிலையும் அவ்வாறே. அப்படி பார்க்கும் போது இப்போது ரொமான்டிக் காலகட்டம் முற்றிலும் வந்திருக்கிறது எனச் சொல்ல முடியாது. ஆனால் அதனைப் பற்றிய ஏக்கம் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது எனச் சொல்லலாம். அதனை முற்றிலும் நிராகரித்துவிட்டோமோ என்ற ஏக்கம். சில கவிதைகள் ஏதோ ஒரு வகையில் அதன் பிரதிபலிப்பாக அமைகிறது.

கேள்வி: பாரதி அரசியல் பற்றி பேசியிருந்தீர்கள். உங்கள் கவிதைகள் முற்றிலும் அரசியல் அற்றவை. அதனைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

மதார்: அதனை எழுதக் கூடாது என்றில்லை. ஆத்மநாம் தொடர்ந்து நிறைய அரசியல் கவிதை எழுதியிருக்கிறார். அதே போல் தனி மனித துக்கம், தத்துவம் அவரது பேசுப் பொருளாக ஒரு பக்கம் இருக்கும். மறுபக்கம் முற்றிலும் மாறுபட்ட, மனதை எளிதாக்கக் கூடிய கவிதைகள் எழுதுவார், ‘நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக் கூடாது சலனமற்று வானைப் பார்த்தப்படி பாறைகளுடன் பேசிக் கொண்டு’ என்று ஒரு வரி இருக்கும். முதல் வகை கவிதையை எழுதிக் கொண்டு நேர் எதிராக இரண்டாவது சொன்ன எளிய கவிதை அவரை எளிதாக்கிக் கொள்ள தேவைப்படுகிறது. பாரதியின் பல கவிதைகளைச் சொல்லலாம். அரசியல் எந்த காலத்திலும் ஒரு கவிஞனின் முழு பேசுபொருளாக இருந்ததில்லை.

அப்படி முழுவதும் அரசியல் பேசுவது எந்த வகை கவிதையாக இருக்கும் எனத் தெரியவில்லை. கவிஞனின் மனநிலை என்பது இப்படி வெவ்வேறு இடங்களில் முயங்கிச் செல்ல வேண்டும்.

வெறும் அரசியல் மட்டும் தொடர்ந்து எழுதப்படும் போது அவை வெறும் Statement ஆக மாறி நிற்பதைப் பார்க்கிறேன். நல்ல கவிதைகள் ஒரு சொல்லில் இருந்து மேலெழுந்து செல்ல வேண்டும். அந்த சொல்லில் இருந்து நழுவி மேலே பறக்கத் தொடங்கிவிடும். கவிதை ஒரு எல்லை வரைக்கும் தான் கவிஞனின் கைப்பிடியில் இருக்கும். கவிஞனின் கை மீறிய கவிதையே எப்போதும் சிறந்த கவிதை. கவிதை சிறுவனின் கையில் இருந்து பறக்கும் பலூன் போல், அது அவனுக்கு சந்தோஷம் தான். நம் பலூன் வானில் பறக்கிறது என ஆனந்தம் கொள்ளும் சிறுவனின் மனநிலையை கவிஞனுடையதும்.

அப்படி ஒரு அரசியல் பேசும் கவிதை அமைந்தால் அது எனக்கு அணுக்கமானது. உதாரணமாக யவனிகா ஸ்ரீராமின் ஒரு கவிதை, ‘உலகம் இசக்கியை உழைக்கவே சொல்கிறது’. ’இன்னைல இருந்து வேலை செய்ய வேண்டாம்’ என ஒருவன் காலையைத் தொடங்குவான், கடைசியில் உலகம் அவனை உழைக்கத்தான் சொல்லும் என முடியும். அந்த கவிதை அரசியல் பார்வை கொண்ட கவிதை தான். ஆனால் அதில் பலூன் பறக்கும் இடம் ஒன்று இருக்கிறது.

மற்றொரு யவனிகா ஸ்ரீராமின் கவிதையிலும் இது நிகழும் ஒரு மந்திரவாதி தன் மந்திரத்தால் ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டு வருவான், காட்டை ஒரு சொல்லாக, உலகம், வரலாறு எல்லாம் வேறு வேறு வடிவில் மாறி வரும். அரசியல் கவிதை தான் ஆனால் இந்த கவிதையில் கவிதைக்கான ஒரு மாயம் இருக்கும்.

‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் ஜெயமோகனின் ஒரு மொழிபெயர்ப்பு கவிதை வரும், ‘அம்மா தன் மகனை போரில் பறிக்கொடுத்து குழியைத் தோண்டிக் கொண்டிருப்பாள். தோண்டி தோண்டி பூமியை முழுவதும் தோண்டிவிட்டாள்’ என்று கவிதை முடியும். முன்னர் சொன்னது போல் ஒரு பறக்கும் பலூன் இந்த கவிதையில் இருக்கிறது. அப்படி இருந்தால் அரசியல் கவிதை எழுதலாம் என்றே நினைக்கிறேன்.

கேள்வி: அரசியல் சார்ந்த கவிதை வெறும் Statement ஆவதைப் பற்றிச் சொன்னீர்கள். கவிதையிலேயே உரைநடையை ஒட்டிய Plain poetry முயற்சிக்கப் படுகிறது அவை Statement ஆகாமல் எப்படி தப்பிக்கிறது என நினைக்கிறீர்கள்?

மதார்: Plain poetry யில் சபரிநாதன் கவிதையை உச்சமாக சொல்லலாம். சபரிநாதன் ஒரு நேர்காணலில் சொல்லியது போல, ‘நவீன கவிதை என்பது உரைநடைதான்’. அவர் கவிதைகள் பெரும்பாலும் Plain poetry தான் ஆனால் அதில் ஒரு பலூன் பறக்கும்.

சமீபத்தில், ‘கலீலியோவின் இரவுகள்’ என்று ஒரு கவிதை சபரிநாதன் எழுதியிருக்கிறார். கனலி இதழில் வந்திருந்தது. கலீலியோ ஒரு இரவை எப்படி எதிர்கொள்கிறார் என அக்கவிதையை எழுதியிருப்பார். அந்த கவிதையில் உயரமான கோபுரங்கள் இறங்கி நீரில் மிதந்துக் கொண்டிருக்கும். அருகில் இளநீர் ஓடும் உடன் மிதந்துக் கொண்டிருக்கும். இதே போல் ஒரு படிமம் கவிதையை மேலெழச் செய்ய வேண்டும்.

ஸ்ரீனிவாச இராமநுஜன் பற்றிய ஒரு சபரிநாதன் கவிதை. அந்த கவிதை அவர் வாழ்க்கை வரலாற்றை உரைநடையில் எழுதியது போல் இருக்கும். ஆனால் வாசிக்கும் போது அந்த உரைநடை எங்கே கவிதையாகிறது என நம்மால் கணிக்க முடியாது. மற்ற கவிஞர்களில் இருந்து சபரிநாதன் வேறுபடக் கூடிய இடமும் அது தான்.

நான் அதனை முயற்சி செய்யாதன் காரணம். எனக்கு எப்போதுமே ஒரு சொல் கவித்துவம் கூடியே நிற்க வேண்டும். என் கவிதையில் ஒவ்வொரு சொல்லும் கவிதையாக வேண்டுமென்பது என் விருப்பம். அந்த கணம் வரை அதனை முயற்சிப்பேன்.

கேள்வி: உங்கள் கவிதைகளில் பல கவிதைகள் தன்னிச்சையாக குழந்தையின் கள்ளமின்மையை சென்று தொடுகின்றன. அது சாதாரண இயல்பல்ல. அந்த இயல்பை நீங்கள் எவ்வாறு ஈட்டிக் கொண்டீர்கள்?

மதார்: அது என் அம்மாவிடம் இருந்து வந்தது எனச் சொல்லலாம். சிறு வயதில் நம் சுற்றமும், சூழலும் அந்த கள்ளமின்மையுடனே நம்முள் நிறைகிறது. என் நண்பர்களும், நான் பார்த்த மனிதர்களும் அப்படி தான் இருந்தனர். ஒரு கட்டத்தில் நாம் வளர்ந்து முதிர்ச்சி அடைந்துவிட்டதாக எண்ணி அந்த குழந்தைமையை இழந்துவிடுவோம். கவிஞனாக அதனை நான் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென நினைத்தேன்.

கேள்வி: உங்கள் கவிதையை வாசிக்கும் போது தேவதேவன், தேவதச்சன் இருவருக்கும் அணுக்கமாக இருக்கிறீர்கள் அவர்கள் இருவரும் உங்களுள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி சொல்ல முடியுமா?

மதார்: தேவதேவனுடன் அதிகம் உரையாடியுள்ளேன். தேவதச்சன் நேரில் பார்த்த நாட்கள் குறைவு தான். ஆனால் தொலைபேசி தொடர்பு உண்டு. கல்யாண்ஜியை பார்த்து பேசியிருக்கிறேன்.

துபாய் செல்வதற்கு முன் தேவதச்சனை நேரில் சந்தித்தேன். அந்த உரையாடல் எனக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு கேள்விக்கும் அவர் ஒரு மணி நேரம் பேசினார். அப்போது அதனை முழுவதுமாகத் தொகுத்துக் கொண்டேனா எனச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் பின்னால் அவருடனான உரையாடல் என்னுள் தாக்கத்தை செலுத்தியிருப்பதைப் பார்க்கிறேன். தனிப்பட்ட வாழ்விலும் சரி, ஒரு கவிஞனாகவும் சரி இரண்டு தளத்திலும் அந்த உரையாடல் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அவர் பேசியவற்றில் சில சொற்கள் திடீரென்று மனதுள் உதிக்கும் மாயம் கொண்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2021 11:34

காணி மக்களுக்கான உதவி- ஷாகுல் ஹமீது

 

ஆசிரியருக்கு வணக்கம் ,

பெண்கள் பயணம்– இளையவள் பிரதீபாதேவி கடிதம் எழுதியிருந்தாள். பயணம்,பெண்கள் – கடிதம்

தோழி செல்வராணி இரு மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் சென்றிருந்தபோது நண்பர் சுப்ரமணியை சந்திக்க சொல்லியிருந்தேன்.அந்த சந்திப்பை தொடர்ந்து செல்வராணி பெண்கள் செல்லும் பயணதிட்டதை சொல்ல சுப்ரமணி ஏற்பாடாக்கி கொடுத்தார்.

அவர்கள் காளிகேசம் காட்டிற்குள் ஒரு நாள் தங்கியிருந்தார்கள்.அந்த பயணம் முடிந்தபின்.சுப்ரமணி என்னை அழைத்து நோய் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் காணி மக்களுக்கு உங்களால் ஏதாவது செய்ய முடியுமா எனக்கேட்டார் .பிரதீபாவின் கடிதத்தில் சுப்ரமணியம் அங்குள்ள வனக்காவலர் காந்திராஜனுடன் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருந்தார் என குறிப்பிட்டிருந்தார்.அப்போது தான் புரிந்தது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என.

கன்னியாகுமரி மாவட்ட  வனக்கோட்டம் அழகியபாண்டியபுரம் வனசரக்திற்கு உட்பட்ட காளிகேசத்தில் உள்ள படுபாறை சூழல் சுற்றுலா மையம் பழங்குடியின காணி இன மக்களால் செயல் பட்டு வருகிறது .தற்போதுள்ள சூழ்நிலையில் சூழல் சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.அங்குள்ள மக்களுக்கு உணவுக்கான அரிசியும்,பருப்பும் மட்டும் அரசு வழங்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என எங்கள் கிளப் டென் அறக்கட்டளையின் நிறுவனர் தாமரை செல்வியிடம் இது குறித்து சொன்னபோது மிகவும் உற்சாகமாகி தொலைநோக்கு திட்டத்துடன் அவர்களுக்கு வேண்டியதை செய்வோம் என உறுதியளித்தார்.

இங்கு வாழும் மலைவாழ் காணி மக்கள் முன்பு காட்டு விவசாயம் செய்து பிழைத்து வந்தனர்.அவர்களின் நல்வாழ்வுக்காக சூழியல் சுற்றுலா சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.தற்போது அது மூடப்பட்ட நிலையில்.மீண்டும் காட்டு விவசாயத்தை தொடங்கினர்.ஆனால் காட்டு விவசாயம் தற்போது பெரும் சவாலானது விலங்குகள் சாப்பிட்டு போக மீதியே அவர்களுக்கு உணவவாக கிடைக்கும் நிலை.தன் உயிருக்கு ஆபத்தே என்றாலும் காட்டு விலங்கை கொல்ல முடியாது இப்போது .

நிலத்தில் உள்ளவர்களுக்கு அரசு மற்றும் தொண்டுநிறுவனங்கள் வழங்கும் உதவிகள் எளிதாக கிடைக்கும்.அதுபோன்ற உதவிகள் ஏதும் மலைவாழ் மக்களுக்கு சென்று சேர்வதில்லை.தங்களுக்கு உதவி தேவை என்பதை தெரியபடுத்தும் மொழி அவர்களுக்கு பேச வராது.(உங்கள் கதைகளில் வரும் மலை மொழி கதாநயகி கதையில் கோரன் பேசும் மொழி)

அங்கு செய்யும் பணிக்காக நண்பர் சுப்பிரமணியம் காணி மக்களுடன் ஒரு  கூட்டம் நடத்தினார். அவர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். அவர் சொன்னார் “அவங்களுக்க வாழ்க்கைக்கு சரியா வழிகாட்டல்லன்னா காட்டில் நடக்கும் சமூக விரோத செயல்களுக்கு அவர்களை மூளை சலவை செய்து பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கு,அதுனால காண்டிப்பா நாமோ ஏதாவது செய்யணும்” என்றார்.

முதற்கட்டமாக அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி அங்குள்ள இரு குடிநீர் கிணறுகளை தூர்வாரும் பணியை மேற்கொள்ளவுள்ளோம் .அதுவே  அங்கு வாழும் மக்களுக்கும் ,சுற்றலா செல்லும் பயணிகளுக்கும் நீர் ஆதராம்.இப்பணி செவ்வனே முடிந்தபின் அங்குள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் மூங்கில் குடில்களையும் சீரமைக்கும் பணியை அந்த பழங்குடி காணி மக்களால் செய்ய உள்ளோம்.அதற்கான தினசரி கூலி அவர்களுக்கு கிடைக்கும்.கிளப் டென் அறகட்டளை அதற்கான நிதியை நண்பர்களிடமிருந்து திரட்டி கொண்டிருக்கிறோம்.

உங்கள் வாசkiகள் சென்ற பயணத்தால் காணி மக்களுக்கு ஒரு சிறு உதவி செய்ய எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.பணிகள் முடிந்து உகந்த சூழ்நிலை அமைந்தபின் நண்பர்களுடன் தாங்கள் அங்கு வந்து தங்கி செல்லவேண்டும் வேண்டுகிறேன்.

ஷாகுல் ஹமீது ,

(கிளப் டென் அறகட்டளைக்காக)

ஆசிரியருக்கு வணக்கம்,

காளிகேசம் காணி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான குடிநீர்கிணறுகளை தூர்வாரும் பணியை செய்யவிருப்பதாக எழுதியிருந்தேன்.முழு அடைப்பு காரணமாக அந்த பணிகள் மிக தாமதமாக இரு தினங்களுக்கு நல்ல படியாக நடந்து முடிந்தது.

அங்கு வாழும் காணி மக்களுக்கும்,சுற்றுலா செல்வோருக்கும் அதுவே நீர் ஆதாரம்.முழு அடைப்புகாரணமாக எங்கள் கிளப்டென் நிர்வாகிகள் யாரும் அங்கு செல்ல முடியாத நிலையில். உங்கள் நண்பர் சுப்ரமணியத்தை காளிகேசம் பகுதிக்கு நேரில் சென்று  காணி மக்களை சந்தித்து அவர்களின் உடனடி தேவையை கேட்டறிந்து கிளப் டென் நிறுவனர் தாமரை அவர்களுக்கு தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிணறுகளை தூர் வாரும் பணிக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிட்டிருந்தோம் .அறுபதாயிரம் ரூபாய் செலவானது.நண்பர்களிடம் நிதி கோரியதில் முப்பத்தி ஐந்தாயிரம் பங்களிப்பு கிடைத்தது.காளிகேசத்தில் பணிபுரியும் வன அதிகாரி காந்தி ராஜன் என்பவர் மூலம் அந்த பணிகளை திறம்பட செய்து முடித்தோம்.அங்கு  நேர்மையான அதிகாரி ஒருவர் இருப்பதால் இது சாத்தியமாகியது.

அந்த கிணறுகளில் சிறு விலங்குகள் முதல் காட்டு பன்றிகள் வரை உள்ளே விழுந்துவிடும் வாய்ப்பு அதிகம்.எனவே எப்போதும் அது பயன்பாட்டில் இருக்கும் வகையில் இரும்பு கம்பியால் மூடி  நைலான் வலைகொண்டு கிணற்றின் மேற்பகுதி முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது. கோடையில் விலங்குகளுக்கும் இந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து கேன்களில் கொண்டு செல்வதாக காந்தி ராஜன் சொன்னார்.

இரு மாதங்களுக்கு முன்பு அங்கு பயணம் சென்ற உங்கள் வாசகிகள்(செல்வராணி தலைமையில் பிரதீபா தேவி,மகேஸ்வரி இருவரும் முதல் பயண கட்டுரை எழுதவும்  மற்றும் ஆராய்ச்சி மாணவி அன்பரசி பறவைகள் குறித்து எழுதவும் துவங்கியுள்ளனர் )  எங்களிடம் காணி மக்களுக்கு உதவி செய்ய கோரிக்கை விடுத்த சுப்ரமணி மற்றும் இதில் தொடர்பே இல்லாவிட்டலும் உங்களால்தான் நண்பர்கள் இணைந்து இதை செய்வதற்கு காரணம் என்பதால் முதன்மையாய் உங்களுக்கும் நன்றி .

மேலும் காணி மக்களின் இயற்கை உணவு பழக்கத்தையும் அவற்றை தயாரிக்கும் முறைபற்றியும் இணையவழி  நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம் .வருங்காலத்தில் அங்கு சுற்றுலா செல்பவர்கள்  அந்த உணவு பொருட்களை வாங்கி சென்று குறைந்த செலவில் ஆரோக்கியமான இயற்கை உணவை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.

மேலும் காணி மக்களின் விளை பொருட்களை விற்பனை செய்ய ஒரு உறுதியான கூடம் ஒன்று அமைத்துகொடுக்கும் திட்டமும் போதிய நிதி கிடைத்தால் செய்து கொடுப்பதாக கிளப் டென் முடிவு செய்துள்ளது.

எங்களது நண்பர்கள் மட்டுமல்லாமல் இந்த கிணறு தூர் வாரும் பணிக்கு உங்கள் நண்பர்கள் பலர் பங்களிப்பு செய்து உதவினர் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

ஷாகுல் ஹமீது .

sunitashahul@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 14, 2021 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.