Jeyamohan's Blog, page 975

June 2, 2021

வெண்முரசு ஆவணப்படம் -முன்னோட்டம்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (USA) தயாரித்து வெளிவந்திருக்கும் “வெண்முரசு Tribute” ஆவணப்படத்திற்காக கடந்த வருடம் அருண்மொழி அக்கா அவர்களை ஒரு சிறு பேட்டி எடுக்க வந்திருந்த போது வெண்முரசு குறித்த அவரது வாசிப்பும், உலக இலக்கியத்தில் அவரது பரவலான தேர்ச்சியும் வியக்க வைத்தன. தொடர்ந்து வெண்முரசு வாசகர்களை சந்தித்து ஆவணபடுத்தும் ஒரு நீண்ட பயண முயற்சிக்கு இந்த பேட்டி உந்துதலாக அமைந்தது. நோய்த்தொற்று காலத்தால் அந்தப் பயணத்தில் தற்போது சிறு தடங்கள் ஏற்பட்டுள்ளது.

அருண்மொழி அக்காவின் இந்த நீண்ட பேட்டி வெண்முரசு குறித்து புதிய வாசகர்கள் புரிந்து கொள்ளவும், ஒட்டுமொத்தமாக ஒரு பார்வையை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும். டால்ஸ்டாய், இசை, பயணங்கள் என வெவ்வேறு துறைகளில் அவருக்கு இருக்கும் புரிதலின் ஆழம் வியக்க வைத்தது.

நீண்ட பேட்டி என்பதால் இதை சோர்வில்லாமல் பார்க்கவும் நல்ல காட்சி அனுபவமாக மாற்றவும் ஷண்முகவேல் அவர்களின் ஓவியங்கள் பெரிதும் உதவின. அவரின் அனுமதியுடன் வெண்முரசுக்காக அவர் வரைந்த பல ஓவியங்கள் இதில் பயன்படுத்தப் பட்டுள்ளன.

இதன் துவக்கத்திற்கு காரணமாய் இருந்த ஆஸ்டின் சௌந்தர் அண்ணா மற்றும் ராஜன் சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள். கேட்டவுடன் இதை ஒளிபரப்ப ஒப்புக்கொண்ட ஸ்ருதி டிவி கபிலன் அண்ணாவுக்கு நன்றிகள்.

இது நாளை மாலை Shruthi TV சேனலில் ஒளிபரப்பப்படும். அதற்கு ஒரு சிறிய முன்னோட்டம் தயாரித்தேன்.

ஆனந்த் குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2021 22:44

கேரளமும் பக்தி இயக்கமும்

இனிய ஜெயம்,

சங்கம் மருவிய காலத்தில் குல, குடி, தலைமை அரசுகள் வளர்ந்து, சேர சோழ பாண்டிய முடியரசுகள் துவங்கி விடுவதை காண்கிறோம். கொற்றவை நாவலில் மதுரையில் இருந்து சென்ற கண்ணகி, சேர எல்லையில் சென்று அமைகையில், ப்ரக்ஞா தாரா தேவி வடிவுடன் இணைந்து பௌத்த மார்க்கத்துடன் அடையாளம் காணப்பெறும் சித்திரம் வருகிறது.

இங்கொரு இருபுரிச் சாலை பிரிவதை காண முடிகிறது. ஆறு ஏழாம் நூற்றாண்டு துவங்கி தமிழ் நிலத்தில் நிகழ்ந்த பக்தி காலகட்ட எழுச்சி. பல்லவர் காலம் துவங்கி சோழர் காலம் வரை, கோவில் பண்பாடு மற்றும் நில உடமை விழுமியங்களை உள்ளடக்கி, ஆழ்வார்கள், அவர்கள் மங்களாசாசனம் செய்வித்த கோயில்கள், பாசுரங்கள், அவை தொகுக்கப்பட்டு நாலாயிர திவ்ய பிரபந்தம், சைவ சந்தான மற்றும் சமய குறவர்கள், சைவ ஆதீனங்களின் பணிகள், பெரிய புராணம், ராமவதாரம், பின்வாங்கிய பௌத்த சமண சாக்த நெறிகள் என தமிழ் நிலம் கண்ட பெரும் பண்பாட்டு அசைவு ஒரு சாலை.

மற்றொரு சாலை சேர நிலம். கண்ணகி சேர நிலம் சென்று அமைந்த பிறகு, பௌத்த சமண தேய்வுக்குப் பிறகு சாக்தத்தின் பண்பாட்டு அசைவு என்னவாக இருந்தது என்பதை, நீங்கள் மொழியாக்கம் செய்து தமிழினி வெளியீடாக வந்த cv சந்திரன் எழுதிய கொடுங்கோளூர் கண்ணகி எனும் ஆய்வு நூல் பேசுகிறது.  அதன் பிறகான சூழல் பின்புலம் சார்ந்து ஒரு வினா.

தமிழ் நிலத்தில் பக்தி மார்க்க இயக்கமும் , அரசுகள் துவங்கி தமிழ் நிலம் முழுதையும் ஆண்ட பேரரசுகள் வரையிலான உருவாக்கமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆனால் சேர நிலத்தில்  சங்கம் மருவிய காலம் முதல் அந்த நிலம் நான்காக பிரிந்து, தனி தனி அரசுகள் என, பல்வேறு மன்னர்களால் ஆளப்படுவதை பார்க்கிறோம். கிட்டத்தட்ட ஒருங்கிணைந்த கேரளம் என்பது மிக பிந்தி மார்த்தாண்டவர்மா வந்து தான் உருவாக்குகிறார். தமிழ் நிலத்தில் பக்தி இயக்கம் செழிக்க  கண்ட  சாதக அம்சம் எதுவும் கேரளத்தில் இருப்பதாக தெரியவில்லை.

இத்தகு சூழல் பின்புலத்தில் கேரள நிலத்தில் பக்தி மார்க்கம் அதன் பணி முறைமை என்னவாக இருந்தது.கேரள பக்தி இயக்கத்தின் சமய சந்தான ஞானிகள் எவரெவர், பக்தி மரபு வழியே தமிழ் நிலத்தில் பின்வாங்கிய சாக்தம், கேரளத்தில் பாதிப்பு இன்றி நிலை பெற்றது எப்படி?

கடலூர் சீனு

அன்புள்ள சீனு,

உங்கள் கேள்வியால் தூண்டப்பட்டு நீண்ட நாளுக்கு பின் டாக்டர் கே.எம்.ஜார்ஜ் தொகுத்த ‘சாகித்ய சரித்திரம் பிரஸ்தானங்களிலூடே” என்ற அரிய மலையாள நூலை என் நூலகத்திலிருந்து எடுத்தேன். 1986ல் வாங்கியது. மிகமிக விரும்பி வாசித்த நூல். அதற்காக நன்றி [காலிக்கோ அட்டைபோட்ட இதைப்போன்ற நூல்களை வாசிப்பது ஒரு வகை கிளர்ச்சியை அளிக்கிறது. நம் ஓர் அறிஞராக ஆகிவிட்டதுபோல.]

சு.ரா எழுதிய வரி. “பனித்துளியிலும் பனை தெரியும் என்பார்கள். தெரியும். ரொம்பச் சின்னப் பனையாகத் தெரியும்” கேரளத்தில் பக்தி இயக்கம் உண்டு, ரொம்பச் சின்ன பக்தி இயக்கம். ஏனென்றால் இங்கே பேரரசுகள் இல்லை, பெரும்பாலும் கப்பம் கட்டும் சிற்றரசுகளே இருந்தன.

முதலில் நாம் தெளிவடைய வேண்டியது மலையாளம் என்ற மொழியை நாம் பதினேழாம் நூற்றாண்டு முதல்தான் தனிமொழியாகக் கணக்குவைக்கவேண்டும் என்பது. அதற்கு முன் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை மலையாண்மைக் காலகட்டம். பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பு கேரளநிலம் முழுக்க தமிழ்நிலமே. பதிமூன்று முதல் பின்னால் சென்று பத்தாம் நூற்றாண்டு வரை சோழர் ஆட்சிக்காலம். அதற்கு முன்பு சேரர் ஆட்சிக்காலம்.

கேரளம் தன்னுரிமையுடன் தனிநாடாக திகழ்ந்த காலகட்டம் மிகக்குறைவு. சங்க காலத்தில் சேரன் செங்குட்டுவன் முதலான அரசர்களின் ஒரு காலகட்டத்தைச் சொல்லலாம். அதிலும் பெரும்பாலும் சேரர்கள் தோற்கடிக்கப்பட்ட வரலாறே உள்ளது. அதன்பின் பாண்டியர், சோழர், நாயக்கர்களுக்கு கப்பம் கட்டும் அரசுகளே இங்கிருந்தன. சொல்லப்போனால் சேரன் செங்குட்டுவனுக்குப் பின் தன்னுரிமையுடன் ஆட்சி செய்த மன்னர் 1729ல் ஆட்சிக்கு வந்த மார்த்தாண்ட வர்மா மகாராஜாதான். அதுவும் மிகக்குறுகிய காலம். 1790லேயே பிரிட்டிஷாருக்கு கப்பம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

சங்ககாலத்தில் பௌத்தமும் சமணமும் கேரளத்தில் ஆழவேரூன்றி இருந்தன. கேரளம் முழுக்க சமண, பௌத்த அடையாளங்கள் கிடைத்தபடியே உள்ளன. பல இடங்களில் பௌத்த ஆலயங்கள் சாஸ்தா ஆலயங்களாகவும் சமண ஆலயங்கள் பகவதி ஆலயங்களாகவும் உருமாறியிருக்கின்றன. கேரளம் இளங்கோவடிகளின் நிலம்.

கூடவே பத்தினி வழிபாடு பெரும்செல்வாக்குடன் இருந்துள்ளது. அது பௌத்தமதத்தின் ஒரு கிளையாக இருந்தது. ஆனால் சாக்தமதத்திலும் பழங்குடி வழிபாடுகளிலும் அது வேர்கொண்டிருந்தது. பின்னர் பத்தினி வழிபாடே சாக்தமத்தால் உள்ளிழுக்கப்பட்டது. கண்ணகி தெய்வம் பகவதியாக, துர்க்கையாக உருமாறினாள். கேரளத்தின் மைய வழிபாட்டுத்தெய்வம் இன்றும் பகவதிதான்.

அதன்பின் ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கம் ஆரம்பித்தது. சோழர்கால முடிவு வரை, அதாவது 13 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் பக்தி இயக்கத்தின் நீட்சி கேரளநிலத்தில் நிலவியது. ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவாரத்தில் பாடல்பெற்ற தலமாக கொடுங்கல்லூர் அருகே உள்ள திருவஞ்சைக்களம் என்னும் வஞ்சி உள்ளது.

சோழர்கள் தங்கள் சிற்றரசர்கள் வழியாக கேரளத்தை ஆட்சி செய்த பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டுக் காலத்தில்தான் கேரளத்தில் இன்றுள்ள முக்கியமான சைவ, வைணவ ஆலயங்கள் உருவாயின. 108 வைணவத் திருத்தலங்களில் 11 தலங்கள் கேரளத்தில் இருக்கின்றன. நம்மாழ்வார் பாடல்பெற்ற தலம் திருவட்டாறு. அவருடைய அன்னை பிறந்த ஊர் திருவெண்பரிசாரம். இவை அன்றைய கேரளமாகிய குமரிமாவட்டத்தில் உள்ளன.

திருநாவாய, திருக்காக்கரை, திருமூழிக்களம்,திருவித்துவக்கோடு, திருவல்லா, திருக்கடித்தானம், திருச்சிற்றாறு, திருப்புலியூர், ஆறன்முளை, திருவண்வண்டூர், திருவனந்தபுரம், திருவட்டாறு, திருவெண்பரிசாரம் ஆகிய கேரளத்து ஆலயங்கள் ஆழ்வார்களால் பாடப்பட்டவை.

பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கேரளத்தின் இலக்கிய மொழியாக தமிழே இருந்துள்ளது. இக்காலகட்டத்தின் இலக்கிய வகைமை பாட்டு இயக்கம் அல்லது சிறுகாவிய இயக்கம் [பாட்டு பிரஸ்தானம் அல்லது லகுகாவிய பிரஸ்தானம்,  ] இவ்வியக்கத்தின் மொழி அப்படியே தமிழ்தான்.

பாட்டு எனப்படுவது கேரளத்தின் நாட்டார் வாய்மொழி பாடல்களுக்கு நெருக்கமான ஓர் இலக்கிய வகை. இசையுடன் பாடப்படும் அகவல் போன்ற வடிவம் கொண்டது. இதிலிருந்தே பிற்கால மலையாண்மையையும் மலையாளமும் உருவாயின. அதிலிருந்து அன்று கேரளத்தில் தீவிரமாக படிக்கப்பட்ட கம்பராமாயணத்தின் செல்வாக்குள்ளது பாடலியக்கம்.

பாட்டியக்கத்தின் முதன்மை நூல் ராமசரிதம். இதை எழுதியவர் சீராமகவி. திருவிதாங்கூரில் பிறந்தவர். கம்பன் வாழ்ந்த 1120-1200  காலத்தை அடுத்து 1195 -1208 காலத்தில் சீராமகவி வாழ்ந்திருக்கலாம் என்று உள்ளூர் பரமேஸ்வர அய்யர் கருதுகிறார். இக்காலகட்டத்தில் கம்பன் திருவிதாங்கூருக்கு வந்து பத்மநாபபுரத்தில் தங்கியதாகவும், அங்கே அவர் வழிபட்ட சரஸ்வதிதேவி கோயில் இருப்பதாகவும் தொன்மம். கம்பரின் நேரடி மாணவராகவே சீராமகவியை சிலர் சொல்கிறார்கள்.

கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தின் சற்றே மழுங்கிய வடிவம்போலிருக்கிறது ராமகதை. நிரணம் சகோதரர்கள் என்னும் பாட்டுகவிஞர்களும் ஏறத்தாழ இதே காலத்தவர்கள்,[மாதவப்பணிக்கர், சங்கரப்பணிக்கர், ராமப்பணிக்கர்] ராமப்பணிக்கர் எழுதிய கண்ணச்ச ராமாயணமும் ஒரு சிறுகாவியம், கம்பராமாயணம் போட்ட புழுக்கை போலிருக்கும்.

கானனங்களில் அரன் களிறுமாய் கரிணியாய்

கார் நெடுங்கண் அம்ம தம்மில் விளையாடி நடந்நான்

ஆனனம் வடிவுள்ள ஆன வடிவாய் அவதரித்த

ஆதியே! நல்ல வினாயகன் எனும் நிர்மலனே

என்பது இவ்வியக்கத்தின் மொழிநடை.

இவையெல்லாமே பக்தி இயக்கத்தின் விளைவுகளே. மலையாள இலக்கியத்தின் தொடக்கமாக கிடைக்கும் இந்நூல்களனைத்துமே பக்தி இயக்கத்தின் கொடைகள்தான்.

பதிமூன்றாம் நூற்றாண்டில் கேரள இலக்கியம் இரண்டு வழிகளாகப் பிரிந்தது. ஒன்று சம்ஸ்கிருதம் நோக்கிச் சென்று மணிப்பிரவாளமாக மாறியது. இன்னொன்று நாட்டர் மரபை நோக்கிச் சென்று மக்கள் வாய்மொழியில் புழங்கியது.

சம்பு என்னும் கவிதைவடிவம் சம்ஸ்கிருத கலவை மொழியில் முக்கியமானதாக இருந்தது. வெண்மணி நம்பூதிரிகள் அக்காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்கள். இவர்கள் எல்லாம் பெண்களின் இடுப்புக்குமேல் கழுத்துக்கு கீழ் புனைவிலக்கிய மையத்தை நிறுத்திக்கொண்டவர்கள்.

கேரளத்தில் மணிப்பிரவாள மொழி வேரூன்றிய அதேகாலகட்டத்தில்தான் தமிழிலும் மணிப்பிரவாளம் புகழ்பெற்றிருந்தது. வைணவ உரைகளின் மணிப்பிரவாளமும் அக்கால கேரள மணிப்பிரவாளமும் சமானமானவை. ஆனால் கேரள மணிப்பிரவாளத்தில் பக்தி இல்லை. அது பெரும்பாலும் காமம் சார்ந்த பாடல்களால் ஆனது. தமிழில் பின்னர் உருவான சிற்றிலக்கிய வகைமைகளால் ஆனது. அதில் சந்தேசம் [தூது] என்னும் கவிதைவடிவம் மிகப்புகழ்பெற்றது.

ஆனால் மறுபக்கம் நாட்டார் மரபிலிருந்து பக்தி இயக்கம் எழுந்தது. மக்கள் மொழிக்கு அணுக்கமான, மலையாண்மையில் எழுதப்பட்ட பக்தி- புராண கதைகள் உருவாயின. இதை ‘காதா பிரஸ்தானம்’ [கதை இயக்கம்] என்று சொல்கிறார்கள். இதன் முதன்மை முகம் செறுசேரி நம்பூதிரி. அவருடைய கிருஷ்ணகாதா முக்கியமான நூல்

மாண்பெழுந்நோர் சில மான்பேடகளெல்லாம்

சாம்பி மயங்கின கண்மிழியும்

ஒட்டொட்டு சிம்மிக்கொண்டு இஷ்டத்திலம்போட்டு

வட்டத்தில் மேவிதே பெட்டெந்நு அப்போள்

மந்தமாயொரு கந்தரம் தன்னெயும்

என்பது அதன் மொழி நடை.

அதன்பின்னர்தான் மலையாளமொழியின் தந்தை என அழைக்கப்படும் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் பிறவி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம். அதுவே மலையாளம் எனும் மொழி வடிவம் கொண்டகாலம். அவர் எழுதியது மக்களிடம் புகழ்பெற்றிருந்த கிளிப்பாட்டு என்னும் வடிவில். அதிலும் சம்ஸ்கிருதக் கலவை உண்டு, ஏனென்றால் மலையாளத்தில் இருந்து சம்ஸ்கிருதத்தை முழுமையாக அகற்ற முடியாது. ஆனால் அது மக்கள்மொழியில் அமைந்திருந்தது. ஆகவே பெரும்புகழ்பெற்று இன்றும் கேரளமெங்கும் ஒவ்வொருநாளும் இல்லங்களில் பாடப்படுகிறது.

கிளிப்பாட்டுக்கள் இக்காலகட்டத்தில் தமிழில் புகழ்பெற்றிருந்தன. பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் கிள்ளைவிடுதூது ஏறத்தாழ துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சனின் காலகட்டத்திலேயே எழுதப்பட்டது. அவற்றின் செல்வாக்கும் அவரிடமிருக்கலாம்.

ராமானுஜன் எழுத்தச்சன் முழுக்கமுழுக்க பக்தி இயக்கத்தின் சிருஷ்டிதான். மலையாள மொழியே பக்தி இயக்கத்தின் கொடை என்று சொல்லலாம். ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் அவர் கிளிப்பாட்டில் எழுதினார். அதன்பின் ஏராளமான பக்திநூல்கள் கேரளத்தில் உருவாயின.

பிற்பாடு கேரளத்தில் உருவான பக்தி சார்ந்த கவிதைகள் பெரும்பாலும் கதகளி, ஓட்டன் துள்ளல் ஆகிய நிகழ்த்துகலைகளுடன் தொடர்பு கொண்டிருந்தன. கதகளிக்கான ‘ஆட்டக்கதைகள்’ இசைநாடகம் போன்ற அமைப்பு கொண்டவை. அவற்றில் உண்ணாயி வாரியார், இரயிம்மன் தம்பி போன்ற பெருங்கவிஞர்கள் உண்டு. துள்ளல்பாட்டு வகையில் குஞ்சன் நம்பியார் ஒரு முதன்மைக் கவிஞர். இவர்களையும் பக்தி இயக்கத்தின் சிருஷ்டிகள் எனலாம்

கேரள பக்தி இயக்கத்தில் எழுத்தச்சனின் நூல்களுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றது பூந்தானம் நம்பூதிரி இயற்றிய ஞானப்பானை என்னும் பாடல்.

ஆனால் கேரள பக்தி இயக்கத்தை கூர்ந்து நோக்கினால் தமிழ் பக்தி இயக்கத்தில் நாலாயிரத் திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகத்தின் செல்வாக்கு குறைவு என்றே தோன்றுகிறது. கம்பராமாயணம், புராணங்கள், கிளிப்பாட்டு முதலிய பாடல்வகைகளின் செல்வாக்கே மிகுதி. கேரள பக்தி இயக்கத்தில் பொதுவாகவே பக்திப்பரவசம் குறைவு. எழுத்தச்சனும் பூந்தானமும் மட்டுமே தூயபக்தர்கள். மற்றவர்களுக்கு பக்தி என்பது புராணம் என்னும் பாயசத்தில் கலந்துள்ள வெல்லம் போலத்தான்.

ஜெ

மலையாள இலக்கியம் எளிமையின் குரல் நிகரற்ற மலர்த்தோட்டம் கிள்ளை மலையாள இலக்கியமும், தமிழ் இலக்கியமும்—ராஜகோபாலன்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2021 11:35

இருவர்- கடலூர் சீனு

இனிய ஜெயம்

இரட்டையர் கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவைகள், அந்த இரட்டையரில் உள்ள எதிர் எதிர் குணாம்சங்கள் கொள்ளும் முரணில் வேர்கொள்கிறது. ஒருவன் புத்திசாலி. மற்றவன் முட்டாள். ஒருவன் பலசாலி. மற்றவன் சோப்ளாங்கி. எதிர்பார்த்த வகையிலோ எதிர்பாரா வகையிலோ சோப்ளாங்கி, முட்டாள் வெல்லும் தருணம் என்பது அதில் கிளறும் நகைச்சுவை என்பது உலகெங்கும் விரும்பப்படும் ஒரு வகைமாதிரி.

அன்றைய லாரல் ஹார்டி இணையர் முதல் இன்றைய டாம் அன் ஜெரி வரை இந்த நகைச்சுவை பாணி வெற்றிகரமான ஒன்று. ஜாகிச்சான் கூட ரஷ் ஹவர், முதல் ஸ்கிப் ட்ரேஸ் வரை பல படங்களில் இந்த இரட்டையர் குணாம்ச முரண் நகைச்சுவையை பயன்படுத்தி இருக்கிறார். அத்தனையும் வெற்றி. தமிழிலும் கூத்தில் வரும் உளுவ தலையன் மற்றும் குள்ளன் எனும் இருவர் துவங்கி கவுண்ட மணி செந்தில் வரை இத்தகு தொடர் உண்டு.

குறைந்த பட்ச நகைச்சுவைக்கு உத்திரவாதம் கொண்ட இந்த இரட்டையர் நகைச்சுவையில் மற்றொரு வகைமாதிரி கண்டேன்.  கி மு 25000 கு முன்பான காலம். அந்த குடிகளில் இருவரில் ஒருவர் (சிகப்பு பாவாடை) காட்டுவாசி. மற்ற பச்சை பாவாடை இந்த காட்டுவாசிக்கு நாகரீகம் கற்றுக் கொடுக்க முயலும் ‘பண்பட்ட  காட்டுவாசி’. இந்த இருமை வழியே உருவான வெறும் மூன்று நிமிடத்தில் உயர் படைப்புத்திறம் கொண்ட  நகைச்சுவை துணுக்கு.

இந்த துணுக்கில் சிகப்பு ஆசாமி வரைவது லக்சாஸ் குகை மாடு. அன்னார் காட்டுவாசி இல்லையா. பச்சை ஆசாமி வரைவது மோனாலிஸா மருமலர்ச்சி கால ஆசாமி. நாகரீகத்தை நோக்கி கற்காலம் ஓடி வர, நாகரீகம் செய்யும் எதிர் வினை அதன் விளைவுகள் ரகளை.

 

காதல் விளையாட்டில் கற்கால ஆசாமியை நாகரீக ஆசாமி வெல்லும் போட்டியில் இறுதியில் கற்கால ஆசாமி வெல்லும் முறை, காதல் பரிசினை காதலி பயன்படுத்தும் முறை, வெடித்து சிரித்து விட்டேன்.

கற்கால ஆசாமிக்கு வெஸ்டர்ன் டாய்லெட் என்றால் என்ன அதில் கக்கா போவது எப்படி என்று பச்சை செயல் முறை விளக்கம் கொடுக்கும் இந்த துணுக்கில் உச்சம், கற்கால ஆசாமி இறுதியில் நொட்டாங்கை விறல் கொண்டு முடிக்கும் குகை ஓவியம்.

இந்த தேர்தல் அதிகார விளையாட்டு கற்காலம் முதல் இன்று வரை அவ்வாறே தொடரும் நகைச்சுவை. இப்படி முதல் மருத்துவம், முதல் விமானம், முதல் சக்கரம் என பல்வேறு நாகரீக முன்னேனேற்றங்களை கற்று தர முயன்று தோற்கும் வகைமையில் வெறும் மூன்று நிமிடத்தில் பிரச்சனையில் துவங்கி, முரண்களை வளர்த்து பன்ச் என ஒரு முடிவு கொண்ட திரைக்கதை கொண்ட இந்த துணுக்கு ஒவ்வொன்றிலும் முதல் முப்பது வினாடி ஒரு தனித்த நகைச்சுவை.  புன்னகைக்கு உத்திரவாதம் சொல்லும், க்ரியேட்டிவிடி கூடிய துணுக்குகள் கொண்ட இந்த சானல் உங்கள் பார்வைக்கு :).

கடலூர் சீனு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2021 11:34

மதார்- கடிதங்கள்

வெயில் பறந்தது தபாலில் பெற :https://azhisi.myinstamojo.com/product/289695/veyil-parandhathu/அல்லது Whatsapp ல் தொடர்புக்கு :7019426274கிண்டிலில் படிக்க :https://cutt.ly/9njlmdN ’மதார்’ருக்கு குமரகுருபரன் விருது 2021

அன்புள்ள ஜெ,

நகுலன் எழுதிய வரி என ஞாபகம். காட்டுமரங்களெல்லாம் வீட்டுப்பொருட்களாகி அனாதியான மௌனத்தில் உறைந்திருக்கின்றன. நெடுங்காலம் என் நினைவில் நின்ற கவிதை அது. அது ஒரு தரிசனம்போல என்னை தொடர்ந்து வந்துகொண்டிருந்தது

மரத்தின் உயிர்ப்பு, அதன் பொலிவு, அதன் நிழல், அதன் கனிகள் எல்லாவற்றையும் அழித்து அதை வளரவோ மாறவோ பூக்கவோ காய்க்கவோ பெருகவோ சுதந்திரமில்லாத ஒரு நிலையான வடிவமாக மாற்றிவிடுகிறோம். அதன்பின்னரே நாம் அதைப் பயன்படுத்த முடிகிறது.

மரத்தை பார்த்ததுமே வடிவமற்றது என்று தோன்றுகிறது. நாற்காலியோ மேஜையோ ஆனதுமே அது வடிவம் என்று தோன்றுகிறது.

ஆனால் மதுரைக்கு வரும் வழியில் மலைகளை அதேபோல அறுத்து பலகைகளாகவும் சதுரங்களாகவும் ஆக்குவதைப் பார்த்தபோது தோன்றியது முடிந்தால் மனிதன் இந்தப் பூமியையே ஒரு கனசதுரமாக ஆக்கிவிடுவான் என்று

சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட இரு நகைச்சுவைகள் எனக்கு மீண்டும் அந்த உணர்வை அளித்தன. ஒன்று, பிக்காசோவின் கியூபிசம் பற்றிய கிண்டல். பிக்காஸோ ஏன் எல்லாவற்றையும் கியூபாக ஆக்கிப்பார்த்தார்? “ஓவியமாத்தான் இருக்கு!”

அதைப்புரிந்துகொள்ள இன்றுவரை மனிதன் உருவாக்கிய கலைவடிவங்களில் மிகப்புகழ்பெற்றது கியூபிசம்தான் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். நம்முடைய கட்டிடக்கலை, எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டுப்பொருட்கள் எல்லாவற்றிலும் கியூபிசத்தின் செல்வாக்கு உண்டு. நாம் காணும் உலகமே கியூபிசத்தில் இருந்து வந்ததுதான்.

அது மனிதனின் கண்ணின் இயல்பு. மூளையின் இயல்பும்கூட அவனால் நேராகவே நடக்கமுடியும். ஆகவே சதுரங்கள்தான் அவனுக்கு சௌகரியம்.ஆகவே அவன் தன் வீட்டை தன் புழங்குபொருட்களை சதுரமாக்குகிறான். தக்காளியை சதுரமாக்குகிறான். உலகையே சதுரங்களாக ஆக்குகிறான்

மலைமேல் நின்று கீழே பார்த்தால் நாம் பார்ப்பது சதுரங்களைத்தான். சதுரங்கள்தான் மனித நாகரீகத்தின் அடையாளங்கள். மரங்களையும் நாம் அப்படி மாற்றிக்கொண்டிருக்கிறோம். பிகாஸோ அதை கலையில் நமக்கு காட்டினார். நாம் அதை பயன்படுத்திக்கொண்டோம்.

நான் ஒரு ஆவணப்படத்தில் பார்த்தேன். புலி, சிங்கம் எல்லாம் சதுர, செவ்வக வடிவமான கூண்டுகளுக்குள் போடப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக்கூண்டில் பார்த்தால் அவை வட்டமாகவோ நீள்வட்டமாகவோ நடமாடிய தடம் தெரியும். மூலைகளை அவை பயன்படுத்துவதே இல்லை. ஆனால் குரங்கு மூலைகளை பயன்படுத்தும். புலி வட்டவடிவ கூண்டுக்குள் வசதியாக இருக்கலாம். நாம் சதுரக்கூண்டிலேயே அடைப்போம்

இன்னொரு ஓவியம் ஒரு பச்சை மரத்தை வகுப்பில் கொண்டுசேர்க்கிறார் அப்பா. அவர் ஒரு ஃபர்னிச்சர். அங்கே எல்லா மாணவர்களும் ஃபர்னிச்சர்கள். ஆசிரியர் ஒரு கோடாலி. கல்வி

மதாரின் இந்தக் கவிதை அந்த அர்த்தங்களையெல்லாம் மீண்டும் ஒருமுறை கலைத்து அடுக்கிக்கொள்ள உதவியது

இரண்டாவது பக்க விளிம்பிலிருந்தும்
மூன்றாவது பக்க விளிம்பிலிருந்தும்
நான்காவது பக்கம் நிறைவுற்றபோது
மரம் உறுதி செய்தது
தான் ஒரு கதவென
இந்த வேலை
இந்த மினுமினுப்பு
பயன்பாடு
எதுவுமே கதவுக்கு நிறைவில்லை
எதிரே இருக்கும் மரத்தை
பார்த்தபடி இருப்பதைத் தவிர.
நான் கதவைத் திறந்து
மரத்தின் கீழ் விளையாடும்
சிறுவர்களைப் பார்த்தபடி இருப்பேன்
கதவு மரத்தையும்
நான் சிறுவர்களையும்
அப்படி பார்த்துக்கொண்டிருந்த ஒருநாள்
காற்றடித்து
கதவும் நானும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்டோம்
ஞாபகப்படுத்திச் சொன்னேன்
“மரம்தானே நீங்க?”
கதவு சொன்னது
“ஏ, குட்டிப் பயலே

 

விளையாட்டுத்தனமும் தரிசனமும் கலந்த இந்தக் கவிதை மதாரை சரியாக அறிமுகம் செய்கிறது. ஒரு வளர்ந்த மனிதன் பச்சை மரத்தில் கதவையும் மேஜையையும் பார்ப்பான். சிறுவன் கதவில் மரத்தை பார்க்கிறான். இன்று இருக்கும் அந்த சதுரத்தில் இருந்து வடிவமற்று வளரும் உயிரை கண்டடைகிறான்.

அது அவன் தன்னுள் இருக்கும் சிறுவனின் உயிர்த்தன்மையை கண்டடைவதுதான். மதாரின் கவிதைகளின் சிறப்பம்சமே அந்த எளிமையான அழகான குழந்தைத்தனம்தான்.

 

ஸ்ரீனிவாஸ்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2021 11:32

ஒளி- கடிதங்கள்-3

 

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

தாங்கள் எழுதி நண்பர்கள் Zoom இல் இயக்கி நடித்த ஒளி நாடகம் கண்டு உளம் மகிழ்ந்தேன். அதன் வீச்சை உள்வாங்கிக்கொள்ள இரண்டு முறை பார்த்தேன். எதிர்காலத்திற்கான ஒரு புதிய நிகழ்த்துக்கலை வடிவத்தை முன்னெடுத்திருக்கிறீர்கள்.

மிக மிகத் தீவிரமான ஒரு விஷயத்தை, ஆழமான வசனங்களை, உரிய பாத்திரப் படைப்புகளை கொண்டு, மிகச் செம்மையாக வடித்திருக்கிறீர்கள். நடித்த ஐந்து நண்பர்களுமே மிகச் சிறப்பாக தங்கள் பாத்திரத்தை உணர்ந்து உரிய முகபாவங்களோடும், ஏற்ற இறக்கத்துடன் கூடிய வசன உச்சரிப்புகளோடும் அந்த பதினேழு நிமிடங்கள் கதைமாந்தர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஐந்து கதாபாத்திரங்களையும் உங்களின் வெவ்வேறு வடிவங்களாகவே நான் கண்டேன். நீங்கள் நிச்சயமாக ஒரு அனேகன் தான். உங்களின் மிக முக்கியமான வேறுபட்ட குணநலன்களின்  ஆளுமை உருவாக்கமாகவே அவர்கள் வெளிப்பட்டுள்ளனர்.

தனியனான தத்துவஞானி தன்னை சிலுவையில் ஏற்றி எழுத்தாளனின் மீது ஏறிக் கொள்கிறான். இது உங்களுக்குள் இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்ற இந்த இரண்டு ஆளுமைகளுக்கு இடையேயான முரண் இயக்கத்தை எனக்கு தெளிவாக காட்டியது. அந்தத் ஒளி பெற்ற தத்துவ ஞானி உள்ளொளியின் வடிவில் எழுத்தாளனுக்குள் வாழ்வது நிறைவை அளித்தது. ஒரு ஞானியின் இருப்பின் நோக்கம் என்பது அவன் தத்துவ தரிசனங்கள் உபதேசங்களாக உலகம் முழுமைக்கும் பயனாவது தானே! எந்த ஞானியும் ஏதோ ஒரு வடிவில், எவருடைய எழுத்திலோ, சொல்லிலோ, இசையிலோ, நடனத்திலோ அல்லது குறைந்தபட்சம் செயல் வடிவிலோ நித்தியமாக வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறான்.

தானே விரும்பி குகையில் தனியாக இருப்பது, கட்டாயத்தின் பெயரில் சிறையில் தனிமைப் படுத்தப்படுவது என இரண்டைக் கொண்டு மிகப்பெரிய ஒரு தரிசனத்தை தொட்டுக் காட்டி இருக்கிறீர்கள். இந்த சிந்தனையை விரித்து பல உன்னதப் புரிதல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அறிவியக்கம், மதங்களின் நோக்கம், கடவுளின் தேவையும் உருவாக்கமும் கட்டுடைப்பும், உண்மைச் சுதந்திரம், இன்றைய வாழ்வின் இன்றியமையாத் தேவை என்ன, உண்மையில் ஒளி என்பது என்ன, உண்மையில் நம்மைச் சிறைப்படுத்துவது எது, ஒழுக்க விதிகளின் அவசியம் மற்றும் எல்லைகள், அரசுகளின் அத்துமீறல்கள் மற்றும் அசிங்கமான செயல் முறைகள், வாழ்க்கைக்கான பொருள் என்ன, சட்டென மாறிவிட்ட உலகச் சூழலில் ஒரு தனிமனிதன் செய்ய வேண்டியது என்ன, இந்தக் கடின சூழலில் எவ்விதமான கூட்டு உழைப்பு சாத்தியம் என பல தளங்களில் இந்த நாடகத்தை எல்லையற்று விரித்துக் கொண்டே செல்லலாம்.

தனித்து இருண்ட மனங்களின் திக்குத் தெரியாத காட்டில் யானைத் தடம் பதித்து புதியபாதை அமைத்திருக்கிறீர்கள். புதிய உலகுக்கான விடியல் வரும் என நம்புவோம். உங்களால் முடிந்த முதல் ஒளி காட்டி இருக்கிறீர்கள்.

நல்வாழ்த்துக்கள்!

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

 

அன்புள்ள ஜெ,

இன்று தங்களுடைய ஒளி நாடகம் பார்த்தேன்.’ஒளி நாடகம்’ இன்றைய சூழலிற்கு தேவைப்படும் கருத்துகளைச் சுருக்கமாக கூறியிருந்தது.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒலிக்கும் குரல்களினையும் சமூகம் நம்மிடம் எவ்வாறு எல்லையை கட்டமைத்துக் கொடுத்திருக்கிறது என்பதையும் கதாபாத்திரங்கள் பதிவு செய்தன.

தனி மனிதனாக விடுதலை வேண்டுபவன் கூட குற்றவாளியாக பாவிக்கப்படுகிறான்.போராட்டத்தினால் விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்தும் தனி மனிதன் முன் வந்தாலும் அவனை கேலி கிண்டல்கள் ஆக்கிரமிக்கும் சூழலில் அவனின் நம்பிக்கை துணையாக இருந்து என்றும் அவனை வழி நடத்தும் என்பதை புரிந்துக்கொண்டேன்.

அங்கிருந்த ஒவ்வொருவரின் உரையாடலும் நடப்பு நிகழ்வை பிரதிபலித்தது.ஒருவரின் தனித்தன்மையும் மாற்றத்தை ஏற்படுத்தும்.மாற்றத்தை தன்னிடம் தேடுபவன் மாற்றத்தை அடைகிறான்.மிக நேர்த்தியாக சொல்ல வேண்டிய விஷயங்களை குறும்படம் விளக்கியது.இது போன்ற இன்னும் நிறைய ஆக்கங்களை தாங்கள் தர வேண்டும்

தேவமதி

அன்புள்ள ஜெ

ஒளி ஒரு புதிய முயற்சி. எந்த பிரயத்தனமும் இல்லாமல் இயல்பாக நடித்திருந்தார்கள் நால்வரும். கதைநாயகனாகிய நரேனின் தீவிரம், எழுத்தாளரின் நையாண்டி, நடனமணியின் அலட்சியமான தோள்குலுக்கல், இசைக்கலைஞனின் விரக்தியான தனிமை, மலையேறுபவனின் துடிப்பும் தேடலும் எல்லாமே நடிகர்களால் சிறப்பாக நடிக்கப்பட்டிருந்தன. சில நிமிடங்களுக்குப்பின் நடிப்பு என்றே தோன்றவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் தனித்தனியாக இருக்கிறார்கள் என்பதும் சுவரைப்பார்த்து நடிக்கிறார்கள் என்பதும்கூட மறந்துவிட்டது.

ராஜ்

ஒளி- கடிதங்கள்-2

ஒளி- கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2021 11:31

 மல்லைப் பேரியாற்றில் அலைவுறும் புணை- அந்தியூர் மணி

[தேவிபாரதியின் நீர்வழிப்படூம் நாவல்]

அன்புள்ள ஆசிரியருக்கு,

இந்திய சமூகத்தினைப் புரிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் இதில் இருக்கும் சாதியும் வர்ணமும் பிறப்பின் அடிப்படையிலானதா அல்லது தொழிலின் அடிப்படையிலானதா என்பது தெளிவாகத் தெரிவதில்லை.இரண்டிற்குமான தரவுகள் கிடைப்பதால் உண்மையை அறிவது குறித்து மிகுந்த குழப்பத்தோடே அணுக வேண்டியுள்ளது.தங்களுக்குச் சாதகமான தரவுகளைமட்டும் எடுத்துக்கொண்டு பாதகமாகத் தெரியும் தரவுகளை மறைத்து அல்லது திரித்து தன் அரசியலை நிலைநாட்டும்போக்கே இங்கு பொதுவாக நிலவுகிறது.பொதுவெளியில் பேசப்படும் அரசியல் தரவுகளே இப்படியிருக்கையில் யதார்த்தவாத நாவலாக இப்போது வெளிவந்திருக்கும் தேவிபாரதி எழுதிய நீர்வழிப்படூஉம் நாவலின் தரவுகள் இந்தியச் சமூகத்தில் இருக்கும் வர்ணசாதிப் பேதத்தின் குழப்பமான தரவுகளை இன்னும் சிக்கலாக மாற்றும் வகையிலேயே அமைந்திருக்கிருக்கின்றன.

நான் வாழும் கொங்குப்பகுதியைச் சேர்ந்தவரான தேவிபாரதி இங்கு முன்னர் கட்டாயமாகவும்,இப்போது அழியும் நிலையிலும் இருக்கும் குடிநாவிதர்களின் வாழ்க்கையைக் குறித்து எழுதியுள்ள நாவல்தான் நீர்வழிப்படூஉம். காரு என்றழைக்கப்படக்கூடிய ஆறுமுகம் எனும் குடிநாவிதனின் நினைவுகள் அவருடைய இறப்புக்குப் பின் அவரது மருமகனான கதைசொல்லியின் பார்வையில் நிகழ்கால நிகழ்வுகளோடு பின்னிச் சொல்லப்படுவதே நாவலின் வடிவம்.

அ.நாவலின் சூழல்

குடி நாவிதர்கள் என்பவர் கொங்குப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு ஊருக்குள்ளும் உள்ள மக்களுக்கான தேவைகளில் பங்கெடுக்க உருவாக்கப்பட்ட தொழிற்குழு.இன்று நாவிதர்கள் என்று அழைக்கப்பட்டு சிகை அழகு நிலையம் நடத்துபவர்களாக அறியப்பட்டாலும் அது குடிநாவிதர்களின் பணியில் சிறுபகுதி மட்டுமே.அவர்கள் இருக்கும் ஊரில் இருக்கும் அனைத்து குடியானவர்களின் வீடுகளில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கு, அவ்வீட்டுடன் தொடர்புடைய வெளியூர் நபரகளுக்கு தகவல் கொடுப்பது தொடங்கி, அந்நிகழ்வுகளுக்கான சடங்குகளை நிகழ்த்துவதை வழிப்படுத்தி முடிப்பது வரையிலான பணிகள் சடங்குகளுக்கான அவர்களின் பங்கு.கருவுற்ற பெண்களுக்கான மருந்து தயாரித்தலில் தொடங்கி படுத்த படுக்கையாய் கிடக்கும் நபர்களுக்கான பணிவிடைகளைச் செய்வது வரையிலான மருத்துவப் பணி அவர்களுடைய வேலை.இவைகளுடன் இன்று அத்தொழிற்குழு செய்து கொண்டிருக்கும் பணியும் இத்துடன் இணைத்துப் பார்த்துக் கொள்வதே குடிநாவிதர்களின் பணி.கிட்டத்தட்ட ஊரின் எந்த நிகழ்ச்சிகளும் அவர்கள் இல்லாமல் நிகழ்வதற்கான வாய்ப்பே இல்லை.

இன்று பெரும்பாலும் சிகை அழகு நிலையங்களை நடத்தி வரும் நாவிதர்களின் ஆரம்பகாலத் தொழில் இரண சிகிச்சை எனும் அறுவை மருத்துவம் என்றே மனுநீதி குறிப்பிடுகிறது.அதன் காரணமாகத் தங்களை மருத்துவர் என்று இப்போது பெயரிட்டுக் கொண்டிருக்கின்றனர்.பிராமணனுக்கு வைசிய பெண்ணிடம் பிறந்த குழந்தையே அம்பஷ்டன்.அம்பஷ்டனையே தமிழில் அம்பட்டன் என்ற சொல்லால் குறித்தனர்.அவர்களே இவர்கள்.மனுநீதியின் உயர்வர்ணத்தின் ஆணுக்கு அடுத்த வர்ணத்தின் பெண்ணின் வழியாக அநுலோமம் எனறவகையில் குழந்தை பிறந்தால் அவன் தந்தைக்கு நிகரானவனாகவும் தாயின் வர்ணத்தினை விட உயர்வானவனாகவும் கருதப்பட வேண்டும்.இது விதியில்‌ இருக்கிறது.ஆனால் நடைமுறையில் இங்கு இருப்பது வேறு.

பிராமணர்களுக்குரிய பணிகளான தொன்மையான சடங்குகளை நடத்த துணைபுரிவதையும், தூது செல்லுதலையும் நிகழ்த்தினாலும் ,பிராமணர்களின் மரியாதையில் நூறில் ஒருபங்குகூட இவர்கள் அடைவது இல்லை.நவீன மருத்துவம் வரும் முன்னர் மருத்துவம் செய்திருந்தாலும் மரியாதை என எதையும் பெற்றதில்லை.இவர்களின் பெண்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு வரை பிரசவத்திற்கு முன்னர் கர்பிணிகளுக்கு குழந்தைகளின் வளர்ச்சிக்கான மருந்து கொடுப்பது முதல் பிரசவம் பார்ப்பது வரை செய்து வந்தனர் .இத்தகைய சமூகம் தீண்டத்தகாததாக நடத்தப்படவில்லையே தவிர எண்ணிக்கை காரணமாக சார்ந்து வாழவேண்டிய தேவையின் காரணமாக சற்று கீழாகவே நடத்தப்பட்டனர்.

இவர்களுக்கான இந்த சமூகநிலையில் குடிநாவிதன் நிலை இன்னும் சற்று மோசமானதென்றே குறிப்பிட வேண்டும்.நிலப்பிரபுத்துவ சமூகத்தின் வழக்கப்படி ஆண்டுக்கு ஒருமுறை அவ்வூரில் கிடைக்கும் வேளாண்மையில் தனக்கான பங்காக கிடைக்கும் தானியங்களை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு ஆண்டு முழுவதும் தன்குடும்பத்தின் பசிக்கு போதுமானதாக அளந்து பயன்படுத்த வேண்டும்.அதைத் தவிர நிகழ்ச்சிக்கு செல்லும் போது கிடைக்கும் சிறுதொகையில் குடும்பத்தினை நடத்தியாக வேண்டும்.இன்றும் குடிநாவிதன் முறை வழக்கொழிந்து போகவில்லை.தன் கடைசிக்கட்டத்தில் இருக்கிறது.பெருந்துறை அருகில் உள்ள வாய்ப்பாடியில் குடிநாவிதனுக்கு ஆண்டுக்கு கொடுக்கும் தானியம் கிடைக்கும்.நாற்பது குடும்பம் இருக்கும் அந்த கிராமத்தில் கிடைக்கும் தானியம் வீட்டிற்கு 1வல்லம் எனப்படும் இன்றைய அளவில் 3.5கிலோ கிடைத்தாலும் கண்டிப்பாக நாலு பேர் கொண்ட வீட்டிற்கே ஆறுமாதம் தாங்காது. சாதரணமாக கிராமங்களிலேயே முடிதிருத்தும் நிலையத்திற்கே சென்றால் 100ரூபாய் பெறும் முடி திருத்தவதை வீட்டிற்கு வந்து செய்ய அங்கு கொடுப்பது 10 ரூபாய் என்றால் அவர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நாமே யூகித்துக் கொள்ள முடியும்.அத்தகைய குடிநாவிதனின் வாழ்வினைப் பற்றிய நினைவுகளும் அவர் குடும்பத்தின் மொத்த வாழ்வுமே நாவலின் சூழல்

ஆ.நாவலின் கரு

வழக்கமாக மாதம் ஒருமுறை பார்க்கச் செல்லும் காரு மாமனை அவனுடைய வீட்டில் கவனிக்க யாருமில்லாத நிலையில் பிணமாக கதைசொல்லி பார்க்கிறான்.எப்படி அங்குவந்தோம் எனத்தொடங்கி மாமனின் பழைய நினைவுகளோடு அவனுடைய உறவுகளின் முந்தைய நினைவுகளும் இறப்பினை அறிந்து வரும் உறவுகளின் நிகழ்கால நிகழ்வுகளுமாக கதை விரிந்து செல்கிறது.கதை சொல்லியின் முன்னோர்களின் வாழ்வு தொடங்கி நிகழ்கால வாழ்வு வரை தொடரும் அனைத்து உறவுகளின் உணர்வுகளும் உறவுச்சிக்கல்களும் கதை சொல்லியின் பார்வையில் நமக்கு கடத்தப்படுகின்றன.

நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது உறவின் சாபத்தாலோ அல்லது ஊழ் உறுத்து வந்ததாலோ காருவின் மனைவி செட்டியோடு தன் குழந்தைகளோடு ஓடிவிடுகிறாள்.அதை முதலில் ஏற்றுக் கொள்ளத் தயாராகி பின் படிப்படியாக மனநிலை பிறழும் நிலைக்குச் செனறு பலவித துயர்களை அடைந்து உறவுகளால் அவ்வப்போது சில நன்மைகளைப் பெற்றாலும் யாருமில்லாத அநாதையைப் போல‌ இறக்கிறார் காரு.பிரிந்து கிடந்த மொத்த உறவுகளும் அந்த இறப்பின் பொருட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றன.ஊரும் உறவுகளும் கூடி பெரும் சம்சாரிகளுக்கே உரிய அனைத்து மரியாதையோடு காருவின் இறுதிச் சடங்குகளை முடிக்கின்றன.அனைத்துச் சடங்குகளும் முடிந்தபின்னர் காருவின் நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் ஒருவழியாக நிறைவேறுவதை நாவல் சுட்டி தன் இறுதியை எட்டுகிறது.

புறச்சூழலின் காரணமாக தன்னுடைய அடிப்படைக் கட்டமைப்பை ஒட்டுமொத்த சமூகமும் மாற்றிக்கொண்டிருக்கும் வேளையில் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத மனிதர்களுக்கு நிகழக்கூடியதைச் சொல்லும் படைப்பாக இந்நூலை எடுத்துக் கொள்ளலாம்.பழைய நிலவுடைமைச் சமூகத்திலிருந்து நவீன சமூகமாக இன்றிருக்கும் நிலைக்கு மாற ஆரம்பித்த சென்ற காலகட்டத்தின் கதை இந்நாவல்.

இ.நாவலின் வாழ்வியல் தருணங்கள்

எப்படைப்பாக இருந்தாலும் அதில் வாழ்வின் தருணங்கள் சொல்லப்பட்டு இருப்பது எவ்வாறு அமைகின்றன என்பதை வைத்தே அப்படைப்பினைத் தீர்மானிக்க இயலும்.அவ்வாறு இதில் அமையும் தருணங்கள் பல இருந்தாலும் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

1.தன்னுடைய மனைவி மாற்றானுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டாள் என்பதை அறிந்தவுடன் தொடக்கத்தில் மிக இயல்பாக அதை ஏற்றுக் கொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் வீடு வரும் காருவின் நடத்தை வீட்டிற்கு வந்து குழந்தைகளுடன் தன் மனைவி சென்று விட்டாள் என்பதை அறிந்து திடுக்கிடும் இடம் உண்மையின் தரிசனம்.அங்கு ஆரம்பிக்கிறது காருவின் வலிப்பு நோய்க்கான ஆரம்பம். தன் குழந்தைகளைத்தேடி அலைந்து கிடைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினை அடையும் போது வலிய அந்நோய் வநது தன்னை அழித்துக்கொள்வதற்கான வாய்ப்பினை உருவாக்குமா என்று வாழ்வையும் மரணத்தையும் ஒரு சேர எதிர்பார்க்கும் மனநிலையை வெளிப்படுத்தும் மொழி கவித்துவத் தருணம்.

2.அக்கவித்துவம் போன்ற இன்னொரு தருணம் பழனிக் கோவிலில் முருகனைக் காரு அனைவரும் உடனிருக்க தனியாகத் தரிசிக்கும் மாயைக் காட்சி.பழனியாண்டவனைத் தவிரப் பார்க்கும் புறக்காட்சிகள் அனைத்தும் காருவின் சிந்தையிலிருந்தே மறைந்து முருகனும் தானுமாக காரு நிற்குமிடம் அற்புதம்.

3.மனநிலை பிறழ்ந்த நிலையில் வானொலியில் நேரலையில் கேட்ட பாடல் பேட்டரி தீர்ந்ததால் பாதியில் நின்றதற்கு வானொலி வைத்திருப்பவரிடம் சண்டையிட்டு பேட்டரி வாங்கிவர உடனடியாக நகரத்திற்குச் சென்று அங்கு இரவாகி விட்டதால் உடனே கிடைக்காத சூழலில் இரவு அங்கேயே தங்கி அடுத்தநாள்காலை கடைதிறந்தவுடன் வாங்கி வந்து வானொலி உரிமையாளரான உறவினரிடம் பேட்டரியைக் கொடுத்து மீண்டும் அதே பாடலைப் போடு எனும் இடம் மனித மனம் செயல்படும் விதம் குறித்தான பார்வையில் மெல்லிய புன்முறுவலைக் கொணர்வது.

4.வாழ்வதற்கான பிடிப்பினை என்றும் நேர்மறை மனம்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை , முழுத்தீமையும் அருளக்கூடும் என்பதற்கான உண்மையைச் சொல்லும் பாத்திரம் சௌந்தரம்மா.தனக்கு வந்திருக்கும் நோய்க்கான காரணமாக காருவை எண்ணி சாபம் கொடுத்து அந்தச் சாபம் பலிப்பதைக் காணவே வாழவேண்டும் என்று வைராக்கியம் கொண்டு பெரும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னும் வாழ்ந்து தான் சொன்னது சரிதான் என நீருபிக்க முயலும் தன்மை மனித மனத்தின் புரிந்து கொள்ளவே முடியாத ஆழத்தைச் சுட்டும் இடம்.செட்டிக்கும் காருவின் மனைவிக்கும் இருக்கும் தொடர்பு எங்கு செல்லும் என்பதை உணர்ந்து தன்நோயை தானே வெல்ல தீயதையே துணையாகக் கொண்டு அக்கதாபாத்திரம் ஆடும் நாடகம் தன் உயிரைக் காக்க ஒவ்வொரு தனி உயிரும் ஆடும் வாழ்வின் மாளாத ஆடல்.

5.கதைசொல்லி மற்றும் அவனுடைய சகோதரி இருவரும் சாயப்பட்டறையில் வேலை செய்யும் போது படும் துயரும் அங்கு வேலை செய்யபவர்கள் சாவதற்கான எளிய வழியாகத் தேர்ந்தெடுக்கும் நைட்ரேட்டினை கடும் கட்டுப்பாட்டினை மீறியும் சேகரித்து வைத்துக் கொள்ளும் இடமும் அத்தகையதே.வாழவேண்டும் என்ற ஆவலில் தான் மிகக் கடுமையான உடலுழைப்பினைச் செய்து கொண்டு வாழ்கின்றனர் இருவரும். ஆனாலும் சூழல் மாறினால் தேவைப்படும் என்றோ அல்லது மரணத்தின் மீதான மாளாத கவர்ச்சியினாலோ தங்கை சேகரித்து வைத்தததை கதை சொல்லி வேறொன்றினைத் தேடும் போது கிடைக்கும் நைட்ரேட்டினைப் பார்த்து உணரும் இடத்தினையும் அவ்வாறே கொள்ளலாம்.

6.தற்செயல் என்பதை எப்போதும் ஏளனமாகப் பார்க்கும் போக்கு நிலவிவரும் இக்காலத்தில் மனச் சிதறலின் ஆரம்பகட்டத்தில் இருக்கும்காரு மாமாவினை இரயில்தடத்தில் கதைசொல்லி சந்திக்கும் இடம் தற்செயலாக இருந்தாலும் அந்தத் தருணம் காலத்தின் சொல்லிலடங்கா சாத்தியத்தினை உணரும் இடமாகவே விரிகிறது.

ஈ.நாவலின் நிறையும் குறையும்

இத்தகைய நிகர்வாழ்வு அனுபவங்கள் இன்னும் இருந்தாலும் இவைகளுடன் நிறுத்திக் கொண்டு இந்நூலின் நிறை குறைகளைக் கூறலாமென்று எண்ணுகிறேன்.நிகர்வாழ்பவனுபவங்கள் இந்நூலின் நிறை என்று எடுத்துக் கொண்டாலும் அவற்றினைப் பற்றிய முழுமையான சித்திரம் கொங்கின் கிராமவாழ்வில் இல்லாதவருக்கு புரியும் வகையில் அமையாமல் சுருக்கப்பட்ட பிரதியினைப் போல இருப்பது இந்நூலின் போதாமை எனக் கொள்ளலாம். எந்நூலையும் விரித்துக் கொள்ளக்கூடிய திறனில்லாத வாசகனும் கொங்கின் வாழ்வினைப் பற்றிய அறிமுகம் இல்லாத வாசகனும் இந்நூலை முழுவதுமாக வாழ்பனுபவமாக அடைய முடியுமா என்பது சந்தேகம்தான்.

எடுத்துக்காட்டாக கொங்கு நாவிதர் வேட்டுவ நாவிதர் இரண்டும் நாவிதர் சமூகத்தினைச் சேர்ந்ததே.இதில் கொங்கு நாவிதர் கிடைக்காமல் வேட்டுவ நாவிதர் வைத்திருக்கும் ஊரைக் கேவலமாகப் பார்க்கும் பார்வை சிலகாலம் முன்பு வரை கொங்கின் இரண்டு பகை இனக்குழுக்களாகக் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டு இருந்த வெள்ளாளர் வேட்டுவர் என்ற இரு குழுக்களுக்கிடையேயான பகையே காரணம்.இன்று கொங்கிற்குள் வந்த பார்க்கும் யாருக்கும் இவ்விரண்டு குழுக்களும் முன்னர் பகையோடு இருந்ததற்கான அடையாளங்களை எளிதாகக் காண முடியாது.பழங்கதைகளை அறிய முயற்சிக்கும் நபர்களைத்தவிர மற்றவர்களுக்கு இரண்டும் ஒன்றுக்கொன்று தேவைப்பட்டால் உதவும் குழுப் போலவே தெரியும்.அப்படி புறச்சூழல் நிலவும் இன்றைய காலத்தில் எழுதப்படும் நாவல் முன்னர் இருந்த சூழலை எதேனும் ஒரு வகை அனுபவமாகச் சுட்ட வேண்டும்.அதை இந்நூல் செய்வதில்லை.இந்தியச் சமூகத்தின் பல்வேறு குழுக்களின் நடத்தையில் காலத்தால் ஏற்படும் இந்த மாறுதல்கள் நான் முன்னரே கூறியதுபோல் இந்திய சமூகங்களைப் புரிந்து கொள்வதில் குழப்பத்தினை ஏற்படுத்துபவை.ஒரே தொழிற்குழுதான் என்றாலும் இரண்டுக்கும் இருக்கும் முரண்களும் ஒருவரையொருவர்‌ முன்னர் நடத்தியவிதமும் பொதுவெளியில் இன்றிருக்கும் பொதுப்புத்திக் கருத்துக்களை உடைத்தெறிபவை.

உ. இருத்தலிலியல் நாவலா?.

மேலே நான் குறிப்பிட்ட சில தருணங்கள் போன்ற இருத்தலியலின் சிலகூறுகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்தாலும், இதை இருத்தலியல் படைப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. இருத்தலியலின் முதல் கூறாக வைக்கப்படும் தனிமனித, உறவு, சமூக இருண்மைகள் இக்கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்டால் அதை மறுக்கும் வண்ணம் கதைசொல்லியின் மூதாதைப் புலவனின் பாடலும் ஊரின் மக்கள் மத்தியில் அதற்கான மதிப்பும் ஊர் காருவிற்காகச் செய்யும் மரியாதைகளும் காருவின் குடும்பம் மீளும்போது காருவின் உறவுகளும் ஊரும் அவர்களை எதிர்கொள்ளும் விதமும் இப்படைப்பினை முற்றிலும் சாராம்சவாதத்தினை நோக்கிச் செலுத்தும் படைப்பாகவே மாற்றுகிறது

அது மட்டுமல்லாமல் எழுபதுகளில் நடந்த சமூக மாற்றத்தின் காரணமாக நடந்த பெரும் அலையில் சிக்கித் தவித்ததை இந்நூல் கூறுவதனால் வரலாற்றின் துயரினைக் கூறுவதாக அமைந்தாலும் காரு நம்பிய அனைத்தும் அவனைக் கைவிட்டதாக எண்ணி மனிதனைக் கைவிட்ட தத்துவம் என்பதாக எடுத்துக் கொண்டு அணுகினாலும் காருவின் மரணத்திற்குப் பின்னான ஊரின் ஒத்துழைப்பும் உறவுகளின் ஒன்றிணைப்பும் வாழும் காலத்தில் காரு எண்ணியது அனைத்தையும் அவன் மரணம் நிறைவேற்றி வைத்துவிடுவதால் வாழ்வின் சாராம்சவாதத்தினைக் காட்டும் படைப்பாகவே இதை எடுத்துக் கொள்ள முடியும்

ஊ.மையப்படிமம்

அடுத்து இந்நாவலின் மையப்படிமத்தினைப் பொறுத்தவரை புறநானூற்றின் புகழ்பெற்ற பாடலின் உவமையை தன் மையப் படிமமாகக் கொண்டு அமைந்திருப்பதும் அதற்குரிய தலைப்பாக அதன் வரியே அமைந்து இருப்பதும் சிறப்பு.இது தற்செயலாக அல்லது திட்டமிட்டதாக எவ்வாறு அமைந்து இருந்தாலும் அது சிறப்பே.எங்கோ இடிஇடித்து பெருங்கற்களில் மோதி விழுகின்ற நீர் ஒன்று சேர்ந்து பேராறாக வரும்போது அதில் சிக்கி அல்லலுறும் படகைப் போல காருவின் வாழ்வும் அமைகிறது என்பது சரியான மையப்படிமம்.அன்று உலகெங்கும் நடந்த மாற்றங்களினால் இந்தியாவிலும் பெரும் அலைகள் எழுந்தது.அந்த அலைகளில் சிக்கிய படகாக காரு மற்றும் கதைசொல்லியின குடும்பங்கள் அல்லலுறுகின்றன.அந்த அல்லலில் அவை பெற்றதென்ன என்பது இந்த மையப்படிமத்துடன் முழுமையாக ஒத்துப்போகின்றது.அவ்வகையில் இது சிறந்த படைப்பே.

எ.நாவலின் வடிவம்

நாவலின் வடிவமாக கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் பின்னிப் பிணைந்து சென்று கொண்டே இருக்கும் கதைசொல்லியின் நினைவுகளே அமைந்திருக்கின்றன.மனித மனத்தின் தொடர்சியில்லாத் தன்மையினைப் போல கதைசொல்லியின் சிந்தனையும் அமையும் வண்ணம் வெளிப்பட்டிருப்பதால் நாவலின் வடிவம் சரியான கட்டமைப்புடன் அமைந்திருப்பது உறுதியாகிறது.

ஏ.ஏன் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்

சென்ற காலத்தில் கொங்கில் நடந்த இன்று அழிந்து கொண்டிருக்கும் தொழிற்குழுவினைப் பற்றிய வரலாற்று ஆவணமாகவும் காலத்தால் சமூகங்களில் நடக்கும் மாற்றங்களால் இடர்படப்போவது யார் என்பதனைச் சுட்டும் நுண்மையாலும் மானிடம் எச்சுழலிலிருந்தும் மீளும் எனும் மானிடத்தின் மீதான நம்பிக்கையாலும் இப்படைப்பு கண்டிப்பாகப் படிக்க வேண்டிய படைப்பாகிறது.அதேசமயம் இது சுருக்கமான படைப்பாக இருப்பதால் விரித்துப் பார்க்கும் எண்ணத்தோடே இதை அணுக வேண்டிய தேவையும் இருக்கிறது.இதைச் சொல்லக்காரணம் இப்படைப்பு எந்தச் சூழலோ அத்தகைய கிராமத்தில்தான் இன்றும் என்வாழ்வு.சாயப்பட்டறையும் நான் வேலைக்குச் சென்ற இடமே.அதனால் என்னால் இதை சுருக்கமாகக் கூறும்போதும் விரித்துப் பார்க்க முடிந்தது.அது இல்லாதவர்கள் விரித்துக் கொள்ளக்கூடிய பார்வையோடே இதனை அணுகவேண்டியது அவசியம்.

ஐ.படைப்பாளியுடனான உரையாடல்

இந்நூலைக் குறித்து தேவிபாரதி அவரகளைத் தொடர்பு கொண்டு இந்நூலினைப் பற்றிய எனது எண்ணங்களைத் தெரிவுபடுத்தியதற்கு இந்நூலின் தலைப்பினைத் திட்டமிட்டே வைத்ததாகவும் இதனுடைய வடிவமும் அத்தகையதே என்றும் கூறினார். விரித்துக் கூறவேண்டிய தருணங்களைச் சுருக்கிக்கூறியது ஏன் என்ற கேள்விக்கு இன்றைய வாசகன் மேல் இருக்கும் நம்பிக்கையால் தான் விதையைப் போல தருணங்களை உருவாக்கி வாசனிடம் அளிப்பதாகவும் அவ்விதை முளைத்து மரமாகி கனியை தருவது வரையிலான பணியை செய்யுமளவு இன்றைய வாசகனின் தமிழிலக்கிய அறிமுகம் அமைந்திருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார். வாசகன் மேலும் தமிழ் இலக்கிய உலகின் மேலும் இவ்வளவு நம்பிக்கை கொண்ட படைப்பாளியை அறிமுகப்படுத்திக் கொண்டதில் வாசகனாக எனக்கும் மகிழ்ச்சியே.

இறுதியாக இந்நூலை எழுதிய தேவிபாரதிக்கு என் வாழ்த்துக்கள்.கொங்கின் சமூகவாழ்வின் ஆவணமாக மாறக்கூடிய இந்நூலை எழுதியதற்கு இப்பகுதியில் வாழ்பவன் என்ற முறையிலும் அவருடைய வாசகன் என்ற முறையிலும் அவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.நான் கூறியதை வைத்து ஏற்கனவே இந்நூலைப் பற்றித் தளத்தில் வெளியிட்ட தகவலுக்கு உங்களுக்கு என் நன்றி.

இப்படிக்கு

அந்தியூர் மணி.

திசை தேர் வெள்ளம்-ஊழின் பெரு நடனம்- அந்தியூர் மணி

மரபும் மாற்றமும்- இரு கவிதைகள், அந்தியூர் மணி

சொல்லும் எழுத்தும்

வெண்முரசு- செயல்,புகழ்

நோய்க்காலமும் மழைக்காலமும்-1

பழந்தமிழர்களின் அறிவியல்!

பாடநூல்கள் -ஒரு கடிதம்

மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2021 11:31

June 1, 2021

ராதை

நண்பர்களின் சூம் சந்திப்பில் சுபஸ்ரீ இந்த தனிநடிப்பு நிகழ்ச்சியை வழங்கினார். நீலம் நாவலின் ராதையின் உணர்வுகளைச் சொல்லும்பகுதி. நீலம் நாவலின் வரிகள். முழுமையாகவே நினைவிலிருந்து அத்தனை வரிகளையும் சொல்லி உணர்வுபூர்வமாக நடித்தது பிரமிக்கச் செய்தது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 11:35

ஊழ்

கர்மா கபே:  “மெனு எல்லாம் இல்ல, உங்களுக்கு எது கொடுத்துவச்சிருக்கோ அது கிடைக்கும்”

நவீனத் தொழில்முறை ஆன்மிக குருவாக ஆவதற்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று ஆணவத்தை வளர்ப்பது – தன் ஆணவத்தை. அதைவிட கூடுதலாக பக்தர்களின் ஆணவத்தை.

அக்காலத்தில் தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருந்தார். அவர் ஒரு மானுடதெய்வத்தைப் பார்க்கப் போயிருந்தார். ஆயிரம்பேர் நடுவே அவர் சபையில் அமர்ந்திருந்தார். மானுடதெய்வம் அழைத்தது. “திருவனந்தபுரத்தில் இருந்து வந்திருக்கும்…. எழுந்து என்னருகே வா”.

அவ்வளவுதான், அவர் மானுட தெய்வம் என்பதற்கு அதைவிட என்ன சான்று தேவை? இவர் எழுந்து அருகே சென்றார்.  கரகரவென்று கண்ணீர், மூக்குறிஞ்சல், கட்டித்தழுவல், கரைந்துருகல்…

”தேடித்தேடி கடைசியிலே நான் உச்சகட்ட ஞானத்தை அடைஞ்சிட்டேன்”

”சரி, அதோட லிங்க் அனுப்பு” 

”எனது ஞானம் அவருடைய தொடுகையால் முளைவிட்டது” அவ்வளவுதான். ஞானமெல்லாம் ஏற்கனவே இருக்கிறது. கொஞ்சம் தொட்டால்போதும். சும்மா கூடுதலாக ஏதாவது செய்து குழப்பவேண்டாம். கைய வச்சுக்கிட்டு சும்மா இரும் ஓய்.

பெரும்பாலான பக்தர்கள் தங்கள் குருநாதர்களைப் பற்றிச் சொல்லும்போது அவருடைய ஆன்மிக, மெய்ஞான, தவத்தகுதியை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள்.

“ஒரு திங்கக்கிழமை சார், ஆசிரமத்திலே செம கூட்டம். நான் சரி பாத்துட்டுப் போலாமேன்னு ஓரமா நின்னுட்டிருக்கேன். அவர் அப்டியே சுத்தி பார்க்கிறார். கண்ணு எப்டி இருக்கும்கிறீங்க? தீ மாதிரி. அந்தக் கண்ணு என் மேலே நிலைச்சுது. ஒரு செகண்டுதான். ஒரு சிரிப்பு. வான்னு கூப்பிட்டார். நான் அப்டியே கைகூப்பிக்கிட்டு பக்கத்திலே போனேன். உனக்காகக் காத்திட்டிருக்கேன், நீ எங்கேடா போனேன்னு சொன்னார்”

”மறுபிறப்பிலே உங்களுக்கு நம்பிக்கை உண்டா?”

”தெரியலை, முன்னாடி நான் நெப்போலியனா இருந்தப்ப நம்பிட்டிருந்தேன்”

பரவசபாவனை. கண்செருகல்.குரல் கம்முதல். ”எனக்கு அப்டியே நெஞ்சு உருகிப்போச்சு. சாமி எனக்கு ஞானம் வேணும்னு சொல்றேன். நீதாண்டா என் ஆளுன்னு சொன்னார். உனக்கில்லாத ஞானமா. டேய், மலைவிளிம்பிலே நின்னுட்டிருக்கேடா. அப்டியே பறந்திருன்னு சொன்னார். அப்டித்தான் அவருகூட சேந்திட்டேன்”

ஞானம் ஞானத்தை அடையாளம் கண்டுகொண்டுதானே ஆகவேண்டும்? ஞானத்தை ஞானம்தானே அடையாளம் கண்டுகொள்ள முடியும்? ஞானம் ஞானத்தில் கரைந்து ஞானமென்றே ஆனபிறகும் ஞானமே எஞ்சியிருக்கிறது.

இப்படி கண்டுகொள்ளவில்லை என்றால் கடுப்பு. “ஆளு பெரிய சாமிதான். ஆனா நெனைப்பு கொஞ்சம் ஜாஸ்தி. அதோட பணத்தாசையும் உண்டு. அப்டியே ஜாடையா சுத்திப் பாக்கிறது. பசையுள்ளவன பாத்தா பக்கத்திலே கூப்பிட்டுக்கிடறது. சாமானியங்க அவரு கண்ணிலே படுறதில்லீங்க”

“இத்துடன் இந்த வழி முடிவடைகிறது”

திறமையான சாமியார்கள் இதை அறிந்திருக்கிறார்கள். “உன்னில் இருக்கும் பொறியை எழுப்பு” என்கிறார்கள். “நீ சாமானியன் இல்லை, நீ வேறு” என்கிறார்கள். ”உனக்காக எல்லாமே காத்திருக்கின்றன” என்கிறார்கள். எவர் இல்லை என்று சொல்வார்கள்?

உண்மையில் அப்படி ஞானம் தேடிச் செல்பவர்கள் அனைவருமே சராசரிக்கு கொஞ்சம் மேலான ஈகோ கொண்டவர்கள்தான். அதாவது ‘நினைப்பு’ என்று நாம் சொல்வோமே அது. அவர்களுக்கு ஏற்கனவே தாங்கள் அசாதாரணப்பிறவிகள், மேலும் அசாதாரணமாக ஒன்று நிகழ காத்திருக்கிறோம் என்று தெரியும். ஓர் அற்புதத்துக்கு குறையாத ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். அது ஒரே அற்புதம்தான், புனித ஜான் ஏசுவை கண்டடைகிறார்!

”யோகசாதனையிலே வேகம் ஜாஸ்தியா இருந்ததனாலே மெய்ஞானத்தை கவனிக்காம தாண்டிப்போயிட்டேன்” 

ஆனால் அரசியலிலும் இதுதான். “உங்களை மாதிரி படிச்ச, சிந்திக்கத் தெரிஞ்ச, தைரியமான இளைஞர்கள்தான் தம்பி தட்டிக்கேக்கணும். உங்களை மாதிரி ஆளுங்கதான் மத்தவங்களுக்கு வழிகாட்டணும். புரலட்டேரியன்ஸோட பொறுப்பு அது தோழர்.லெனின் என்ன சொல்லியிருக்காருன்னா…” என்று சொல்லாமல் அழைத்தால் யாராவது கம்யூனிஸ்டாக ஆவார்களா என்ன?

புத்துலகம் படைக்கவேண்டும், அதுவும் நான் படைக்கவேண்டும், வேறுயாரும் படைத்துவிடவும் கூடாது- அதுதானே புரட்சி மனப்பான்மை? புரட்சியை நான் நினைக்கும் விதத்தில் அல்லாமல் நினைப்பவன்தான் முதல் எதிரி. அவனை கொல்லவேண்டும், ஆனால் போலீஸ் பிடித்து கேஸ் ஆகிவிடும். ஆகவே ஃபேஸ்புக்கில் திட்டுவோம், அதுதானே புரட்சியின் அடிப்படை?

மெய்ஞானம், மொறுமொறுப்பான பிட்ஸாவுடன்

ஆன்மிகர்களில் பலருக்கு தாங்கள் ஒருவகை பிறவித்தொடர்ச்சி கொண்டவர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தேவையான தேடல், தியானம் எல்லாம் முன்னரே செய்துவிட்டார்கள். எஞ்சிய மெய்ஞானமெய்துதல் மட்டும்தான் இந்தப் பிறவியில்.நேரமில்லை, சட்டுபுட்டென்று ஞானத்தை அடைந்துவிட்டால் கடவுளிடம் சிலபல பேச்சுவார்த்தைகளை தொடங்கவேண்டியதுதான்

என் சொந்தத்தில் ஒரு மாமா ஞானப்பதற்றம் கொண்டவர். கம்யூனிஸ்டாக இருந்தார். அதாவது மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி வழியாக நக்சலிசம் நோக்கிச் சென்று அதிதீவிர கம்யூனிஸ்டாக ஆனார். கம்யூனிஸ்டு ஓர் எல்லைக்குமேல் முற்றிவிட்டால் பூர்ஷுவாவை பிறகு பார்த்துக்கொள்ளலாம், மற்ற கம்யூனிஸ்டுகளை முதலில் வழிப்படுத்துவோம் என்னும் தீவிரம் உருவாகிறது.

”நான் எங்கிட்டதான் பேசிக்கிடறேன். வேற யாரும் அவ்ளவு கூர்ந்து கவனிக்கிறதில்லை”

தன்படை வெட்ட ஆரம்பிக்கும்போது கட்சியில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். பெரிய கட்சிகளில் இருந்து சின்னச்சின்ன கட்சிகளுக்குச் செல்கிறார்கள். நழுவி நழுவி வேறுவேறு கலங்களில் விழுந்து, கிண்ணிகளில் விழுந்து, கிண்ணங்களில் விழுந்து, நாலைந்துபேர் மட்டுமுள்ள கட்சிச் சிமிழ்களிலுமாகி அங்கிருந்து வெளியேறி தனியாளாகிறார்கள்

தனிமனிதனில் எஞ்சும் கம்யூனிசம் மலச்சிக்கல் போல ஓர் உபாதை. அது  மேலும் முற்றி முறுகினால் தனித்தேசியம். தமிழ்த்தேசியம் வழியாக திராவிட இயக்கம். திராவிட இயக்கத்தில் முற்றி பார்ப்பனவெறுப்பு. அங்கிருந்து இரண்டு வழிகள். ஒன்று, இஸ்லாமிய அடிப்படைவாதமும் நோன்புக்கஞ்சியும். இன்னொரு பாதை தொல்தமிழர் நெறி. நேராக அந்தப்பாதை  சைவசித்தாந்தத்துக்கு செல்கிறது.

பறவை ஆய்வாளரின் ஊழ்வினை

சைவம் முற்றினால்  சித்தர்மரபு. சித்தர் மரபு தீவிரமடைந்தால் சாகாக்கலை, கடைசியில் ரசவாதம். மூலநோய்க்கு மூவிலைத்தாமரை என கண்டுபிடிப்பதுபோன்ற பணிகளில் தாடி நரையோட அமர்கையில் ஓர் உபவீடுபேறு அமைகிறது. இது பல்லாயிரம் காலடிபட்ட அரசப்பெரும்பாதை.

மாமா கடைசிக்காலத்தில் அவருடைய ஆசிரம வாசலில் இளவெயிலில் அசையாமல் அமர்ந்திருப்பதைப் பார்ப்பேன். கடைவாய் மட்டும் இறுகி நெளிந்துகொண்டிருக்கும். தங்கையா நாடாரிடம் கேட்டேன். மாமாவுக்கு என்ன பிரச்சினை?

“பிள்ளை, அது ஜென்மதோசம்லா?”என்றார் தங்கையா நாடார். “அவரு போன சென்மத்திலே ஒணானாக்கும். அப்ப விட்டுப்போன வெயிலை இப்ப இருந்து காயுதாரு”

“அப்பாடா! சீனாவிலே ஒரு சுழல்காற்று உருவாகாம தடுத்தாச்சு”

அம்மாவிடம் கேட்டேன், மாமா முற்பிறவியில் ஓணானா? “இருக்கும், எத்தனை நெறம் மாத்தியாச்சு” என்று அவள் சொன்னாள்.

மாமா  கடைசியில் ஒரு வட்டமடித்து அவரைவிட வயதான ஒரு பெண்மணிக்குக் காதலராகி அவளுக்கு மூக்குப்பொடி வாங்க கடைக்கு வருவார். அவள் அவரைப்போலவே வேறொரு மார்க்கத்தில் நெடுந்தொலைவு சுற்றிவந்தவள். இரு புள்ளிகள் சந்தித்துக்கொண்டு ஒன்றையொன்று நிறைவுசெய்தன. அவள் தன் வீட்டுத் திண்ணையில் இளவெயிலில் அசையாமல் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 11:35

இருநகரங்களுக்கு நடுவே- அசோகமித்திரனின் புனைவுலகு

அசோகமித்திரனின் வாழ்க்கையை ஒரு பெருநகரத்தில் இருந்து இன்னொரு பெருநகரத்துக்கான இடமாற்றம் என்று ஒரே வரியில் சொல்லிவிடமுடியும். அவரது இளமைப்பருவம் செகந்திராபாதில் கழிந்தது. சுதந்திரத்துக்கு முந்தைய செகந்திராபாத் அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த ஒரு பெருநகரம் என்று சொல்லலாம். முதல் உலகப்போர் காலத்தில்தான் செகந்திராபாத் ஒரு ராணுவக்குடியிருப்பு என்பதைவிட்டு வளர்ந்து நகரம் என்ற நிலையை நோக்கிச்செல்ல ஆரம்பித்தது. இரண்டாம் உலகப்போர் அடுத்தகட்ட வளர்ச்சியை சாத்தியமாக்கியது. இடைப்பட்ட அந்த வளர்ச்சிக்காலகட்டத்தில் அங்கே இளமைப்பருவத்தைக் கழிக்க நேர்ந்தவர் அசோகமித்திரன்

அசோகமித்திரனின் கதைகளை செகந்திராபாத் பின்னணி கொண்டவை, சென்னைப் பின்னணி கொண்டவை என எளிதாக இரண்டாகப்பிரித்துவிடலாம். இவ்விரு சட்டகங்களுக்கு வெளியே செல்லும் கதைகள் மிகச்சிலவே. இவ்விரு கதைக்கட்டங்களுக்கும் இடையே அழகியல் ரீதியாகவும், வாழ்க்கை நோக்கிலும் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. செகந்திராபாத் கதைகள் கதைசொல்லியின் இளமைப்பருவத்தைச் சித்தரிப்பவை. வாழ்க்கையின் சுமையே தெரியாத கதைசொல்லி எப்போதும் உற்சாகமான ,சாகச எண்ணமும் பயந்தாங்கொள்ளித்தனமும் கொண்ட , சிறுவன். வாழ்க்கையின் சிக்கல்கள் எல்லாமே வேடிக்கைகளாக உருமாறி அவனுக்குக் காட்சியளிக்கின்றன.

நேர்மாறாக சென்னையைப் பின்னணியாகக் கொண்ட அசோகமித்திரன் கதைகள் எல்லாமே லௌகீக வாழ்க்கையின் அர்த்தமில்லாத துயரத்தையும் தனிமையையும் பற்றியே பேசுகின்றன. பிற்காலத்தில் ஒரு விமர்சகரால் சோகமித்திரன் என்று அசோகமித்திரன் அழைக்கபபடக் காரணமாக அமைந்த கதைகள். மிக அடங்கிய குரலில் வாழ்க்கையின் துக்கத்தைச் சொல்லும் அசோகமித்திரன் கதைகள் ஏராளம். அதேசமயம் உக்கிரமான சித்தரிப்பால் குரூரத்தையும் இழிவையும் காட்டிய அசோகமித்திரனின் கதைகளும் பல உண்டு.

ஒரு மதிப்பீட்டுக்காக இப்படிச் சொல்லிப்பார்க்கலாம். செகந்திராபாத் சூழலில் அமைந்த அசோகமித்திரன் கதைகளில் கதைசொல்லி வாழ்க்கையை வாழத்தொடங்குவதற்கு முந்தைய கோணத்தில் நின்று பார்க்கிறான். சென்னை சூழலில் அமைந்த கதைகளில் கதைசொல்லி வாழ்க்கையை வாழ்ந்து முடிந்த கோணத்தில் நின்று பார்க்கிறான். எளிமைப்படுத்தலாக இருந்தாலும் அசோகமித்திரன் கதைகளைப்பற்றிய ஒரு நல்ல பார்வையை இது அளிக்கும். பெரும்பாலான சென்னைக் கதைகளில் கதைசொல்லி அவர் சொல்லும் துயரங்களைத் தாண்டிவந்துவிட்ட ஒரு நிதானத்துடன், அல்லது பெருமூச்சுடன் பேசுவதை நாம் கண்டுகொள்ள முடியும்.


இரு நகரங்கள்

கர்நாடக நவாப்களின் வம்சத்தில் வந்தவரான ஹைதராபாத் நைஜாமின் தலைநகர் ஹைதராபாத்தான் தொன்மையும் சரித்திர முக்கியத்துவமும் கொண்ட நகரம் . கிபி ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்ட கோல்கொண்டா அரசைச்சேர்ந்த நிலப்பகுதி அது. வாரங்கல் காகதீய அரசின் கீழும், தேவகிரியின் யாதவ மன்னர்களின் கீழும் அது இருந்திருக்கிறது. கோல்கொண்டா டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் கைப்பற்றப்பட்டது. பின்னர் சுல்தான்களின் தளபதிகளால் ஆளப்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் அலாவுதீன் பாமின் ஷா டெல்லி சுல்தான்களுக்கு எதிராகக் கலகம்செய்து தனி உரிமையை நிறுவிக்கொண்டார். அவ்வாறு பாமினிசுல்தான்கள் தென்னகத்தில் உருவானார்கள். பாமினி சுல்தானின் தளபதியான சுல்தான் குய்லி கொல்கொண்டாவைத் தலைமையாக்கி குதுப் சாகி வம்சத்தை நிறுவினார். கொல்கொண்டாவில் குடிநீர்ப்பிரச்சினை வாட்டியது. பெரிய பீரங்கிகள் புழக்கத்துக்கு வந்ததும் சமநிலத்தில் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு காவல்காப்பது சாத்தியமாகியது. ஆகவே குன்றின்மேல் இருந்த கொல்கொண்டாவுக்கு பதிலாக மூசி ஆற்றின் கரையில் 1591ல் ஹைதராபாத் நகரம் நிறுவப்பட்டது.

செகந்திராபாத் முற்றிலும் வேறுபட்ட ஒரு வரலாறு கொண்டது. 1798ல் ஹைதராபாத் நைஜாம் இரண்டாம் அசஃப் ஜா பிரிடிஷாரால் தோற்கடிக்கப்பட்டார். அவரைக் கட்டுப்படுத்த ஒரு நிலைராணுவத்தை ஹைதராபாத் அருகே நிறுத்த பிரிட்டிஷார் முடிவெடுத்தார்கள். அதற்கான செலவுகளை ஹைதராபாத் நைஜாமே கொடுக்கவேண்டும் என்பது பிரிட்டிஷாரின் நியதி. அவ்வாறு ஹைதராபாத் நைஜாமுக்கு ‘உதவி’ செய்வதறாக வந்த பிரிட்டிஷ் ராணுவம் ஹூசெய்ன் சாகர் ஏரிக்கு மறுபக்கம் அனேகமாகக் காலியான புல்வெளிகளாகக் கிடந்த உளுவில் என்ற கிராமத்தில் முகாமடித்தது. மெல்ல மெல்ல அது ஒரு நிரந்தர ராணுவக்குடியிருப்பாக ஆகியது. 1803ல் ஹைதராபாத் நைஜாம் சிகிந்தர் ஷா அவர் பெயரால் அந்த இடத்துக்கு சிகிந்திராபாத் என்று பெயர்சூட்டினார். பிரிட்டிஷ் உச்சரிப்பில் செகண்டிராபாத். அதாவது இரண்டாவது நகரம். அதிகாரம் மீதான அதிகாரத்தின் நகரம்.

ஒருவகையில் செகந்திராபாத் ஹைதராபாதின் நிழல். அல்லது ஹைதராபாதின் எதிர்வினை. ஹைதராபாத் நைஜாமின் அதிகாரமையம் என்றால் அதன் மீதான அதிகாரத்தின் மையமாக செகந்திராபாத் இருந்தது. கிட்டத்தட்ட இருநூறாண்டுக்காலம் இந்த அதிகாரப்போட்டி இருநகர்களுக்கும் நடுவே இருந்திருக்கிறது. இவ்விரு நகரங்களுக்கும் இடையே குண அடிப்படையில் உள்ள வேறுபாடும் அவ்வாறு அமைந்ததே. பிரிட்டிஷ் கண்டோன்மெண்டை மையமாகக் கொண்டு உருவாகி வந்த செகண்டிராபாத் ஐரோப்பியத்தன்மை மிக்கது.ராணுவநோக்குடன் பிரிட்டிஷார் அமைத்த ரயில்பாதைகளின் மையமுடிச்சாகவும் அது அமைந்தது. விளைவாக அது வெளியுலகுடன் நேரடித்தொடர்புள்ளதாக ஆகியது.

ரயில்பாதைகளை செகந்திராபாத் நகரின் நரம்புகள் எனலாம். அதனூடாக அது விரிந்து பரந்த பிரிட்டிஷ்இந்தியாவுடனும் உலகுடனும் இணைந்திருந்தது. இரு உலகப்போர்களில் ஏராளமான ராணுவ வீரர்கள் செகந்திராபாத்துக்கு வந்து தங்கிச் சென்றார்கள். செகந்திராபாத் ராணுவநோக்குடன் திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம். நேரான விரிந்த தெருக்களும் சீரான குடியிருப்புகளும் கொண்டது. அதன் அமைப்பிலும் கட்டுமானத்திலும் ஐரோப்பிய பண்பாட்டு, கலை அம்சங்கள் ஓங்கியிருந்தன. சுருக்கமாகச் சொன்னால் செகந்திராபாத் நகரத்தை ஒரு துண்டு பிரிட்டிஷ் இந்தியா என்று சொல்லிவிடமுடியும்

நேர்மாறாக ஹைதராபாத் அத்தகைய உலகத்தொடர்புகள் இல்லாத நகரமாக, தன்னுள் தானே சுருங்கிக்கொள்வதாக இருந்தது. சொல்லப்போனால் ஹைதராபாத் தன்னைத் திறந்துகொண்டு ஒரு நவீன நகரமாக ஆக ஆரம்பித்ததே தொண்ணூறுகளில் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிகளால்தான் என்கிறார்கள். அது பழமையின் மிதப்பும் சரித்திரத்தின் தூசுநெடியும் கொண்ட நகரம். புராதன காலத்தில் அன்றைய பல்லக்குகளுக்காக உருவாகி வந்த தெருக்கள். அரச சேவகர்களின் சந்துபொந்துகள். நடுவே பழமையின் சின்னமாக ஓங்கி நிற்கும் சார்மினார். அதைக் காலத்தில் மூழ்கி மறைந்த மொகலாய சாம்ராஜ்யத்தின் எஞ்சிய ஒரு துண்டு எனலாம்.

சென்னையை ஹைதராபாதையும் செகந்திராபாத்தையும் ஒன்றாகக் கலந்து கலக்கினால் உருவாகும் நகரம் என்று உருவகிக்கலாம். ஒருவகையில் சென்னை பிரிட்டிஷாரின் உருவாக்கம். 1639ல் சர் பிரான்ஸிஸ் டே, ஆண்ட்ரு கூகன் இருவரும் விலைக்கு வாங்கிய நிலத்தில் இந்தப் புதியநகரத்தின் முதல்புள்ளியை வைத்தார்கள். ஆனால் ஒரு பெரிய கோலமாக விரிந்த மாநகரம் விரைவிலேயே வரலாற்றுப்புகழ்மிக்க மைலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற ஊர்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டது. பிரிட்டிஷ்ராஜின் ஒரு பகுதியும் பல்லவர்களின் தொண்டைநாட்டின் ஒரு பகுதியும் இரண்டறக்கலந்து உருவான நகரம் இது.

செகந்திராபாதில் ஒரு ரயில்நிலைய ஊழியரின் மகனாக ஜ.தியாகராஜன் என்ற அசோகமித்திரன் பிறந்தார். தன் இளமைப்பருவத்தை அங்கே கழித்தார். தந்தையின் மரணத்துக்குப்பின் படிப்பை முடிக்காமல் வாழ்க்கையைத்தேடி சென்னை நகரத்துக்குக் குடிபெயர்ந்தார். சென்னையில் திரைத்துறை உட்பட பல தளங்களில் பணியாற்றி அல்லற்பட்டு எழுதி தன்னை நிறுவிக்கொண்டார். சென்னையின் கீழ்நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே வாழ்நாள் முழுக்க இருந்த அசோகமித்திரன் அந்த வாழ்க்கையைத் தமிழிலக்கியத்தில் நிகழ்த்திக்காட்டிய கலைஞராக அறியப்படுகிறார். அவரைப் பெருநகரநடுத்தரவர்க்கத்தின் குரல் என்று பொதுவாக விமர்சகர்கள் வரையறைசெய்கிறார்கள்.


இரு வாழ்க்கைகள்

ஒருபெருநகரில் வாழும் வாழ்க்கை எத்தகையது? கிராமவாழ்க்கையுடன் ஒப்பிட்டுக்கொண்டால் அதைப்பற்றிய ஒரு சித்திரத்தை அடையமுடியும். கிராமம் என்பது ஒரு நிலப்பரப்பு, ஒரு வரலாற்றுப்புலம், ஒரு சமூகம் ஆகியவற்றைக்கொண்டது. அதன் அளவு காரணமாகவே அந்த கிராமத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதன் ஒட்டுமொத்தம் பற்றிய ஒரு மனச்சித்திரம் இருக்கும். இந்த கிராமத்தின் எல்லை எது, இந்த கிராமத்தின் கதைகளும் தொன்மங்களும் என்ன, இந்த கிராமத்தில் யார் யார் வாழ்கிறார்கள் என்ற கேள்விகளுக்குப் பெரும்பாலும் கிராமவாசிகள் பதிலளித்துவிடுவார்கள்.

ஆகவே ஒரு கிராமவாசிக்கு அந்த கிராமத்தில் தான் யார், தன் இடமென்ன என்பதைப்பற்றிய ஒரு புரிதலும் இருக்கும். கிராமத்தின் அதிகார அடுக்கில் எங்கே இருக்கிறோம் எனத் தெரிந்திருக்கும். கிராமத்தின் பண்பாட்டுத்தளத்தில் தன் பங்களிப்பென்ன என்று தெரிந்திருக்கும். அக்கிராமத்துக்குப் புதியதாக வரக்கூடிய ஒருவர்கூட மிகச்சில வருடங்களுக்குள் அதில் தன் இடத்தை உருவாக்கிக்கொள்வார். அப்படி ஒரு ‘வரத்தன்’ கிராம சமூகத்தில் தன் இடத்தை உருவாக்கிக் கொள்வதைப்பற்றிய அழகிய சித்திரத்தை அளிக்கும் கதை என கி.ராஜநாராயணனின் நிலைநிறுத்தல் கதையைச் சொல்லலாம்.

ஆனால் நகரம் அப்படி அல்ல. நகரத்தின் அளவு காரணமாகவே அதைப்பற்றிய ஒரு முழுச்சித்திரம் அதன் எந்த குடிமகனின் மனதிலும் இருப்பதில்லை. ஒருநகரின் பண்பாடு வரலாறு அதிகார அடுக்கு பற்றி ஒரு அகச்சித்திரம் உள்ள நகரக்குடிமகன் மிகமிக அபூர்வமானவன். அத்துடன் நகரத்தில் மக்கள் தங்களை ஒட்டுமொத்தத் திரளாக உணர்வதில்லை. தன்னுடைய சிறிய வீட்டுக்குள் சிறிய குடும்பத்திற்குள் சிறிய சமூகக்குழுக்களுக்குள் ஒடுங்கிக்கொண்டு வாழவே விரும்புகிறார்கள். உதாரணமாக, சென்னையில் வாழும் சிந்திகளுக்கு சிந்திகள் அல்லாதவர்களுடனான பழக்கம் என்பது வணிகம்சார்ந்த எல்லைக்குள் மட்டுமே நின்றுவிடும்.

ஆகவே நகரத்தின் குடிமகனுக்கு அந்நகரத்தில் தன் இடமென்ன என்பது எப்போதுமே சிக்கலானது. ஒவ்வொரு வகையில் ஒவ்வொருவரும் அந்த நகரத்தில் ஒரு சிறு இடத்துக்காகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஹைதராபாத் போன்ற தொன்மையான நகரங்களில் அங்கேயே தலைமுறைகளாக நிலைபெற்று, அங்கேயே தங்கள் சுய அடையாளங்கள் உருவாகிக்கொண்ட குடிகள் உண்டு. குறிப்பாக பிரபுக்குலங்கள். அவர்களின் இடம் அங்கே நிறுவப்பட்டுவிட்டது. ஆனால் செகந்திராபாத் சென்னை போன்ற புதியதாக உருவாகி வந்த நகரங்களில் வந்து சேர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்களில் ஒருதலைமுறை வாழ்க்கை என்பது அடையாளத்தேடல் மட்டுமே. அவர்களின் சமூக ஊடாட்டம் என்பது அந்த இடத்தேடலின் விளையாட்டாகவே அமைகிறது.

இந்தப்பின்னணியில் அசோகமித்திரன் கதைகளை வாசித்தால் அவரது இரு நகர்சார் புனைவுகளையும் புரிந்துகொள்வதற்கான ஒரு புதிய வழி திறப்பதைக்காணலாம்.அசோகமித்திரன் அவரது கதைகளில் காட்டும் செகந்திராபாத் நகரில் உள்ள மக்களை இவ்வாறு பிரிக்கலாம்.ஒன்று, நேரடியாக அதிகாரத்துடன் தொடர்புகொண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள். அவர்கள் குட்டி தியாகராஜனால் ஒருவகை பீதியாக மட்டுமே உணரத்தக்கவர்கள். அவர்களைப்பற்றிய தொலைதூரத்துச் சித்திரம் மட்டுமே கதைகளில் உள்ளது. மாடு தொலைந்துவிடும்போது [சுந்தர்] தேடிப்போன இடத்தில் காண நேரும் பூங்கா சூழ்ந்த அழகான பெரிய பங்களாக்கள். திரைச்சீலை ஆடும் சன்னல்கள். வெள்ளைவெளேர் என்ற பெண்கள். உண்மையில் செகந்திராபாத் நகரின் சொந்தக்காரர்கள் இவர்களே.

இரண்டாவது சமூகக்குழு தெலுங்கர்கள். அசோகமித்திரன் கதைகள் அவர்களுக்குத் தெளிவான சாதி அடையாளங்களைக் கொடுப்பதில்லை. அவை அந்த அடையாளங்களைக் கண்டுகொள்ளும் வயது ஆகாத தியாகராஜனால் சொல்லப்படுகின்றன என்பதுதான் காரணம். விவரணைகளில் இருந்து இவர்கள் பெரும்பாலும் பிராமணரல்லாத உயர்சாதித் தெலுங்கர்கள் என ஊகிக்கலாம். இவர்கள் பெரும்பாலும் பிரிட்டிஷ் அரசூழியர்களாகவோ அவர்களை நம்பி வணிகம் செய்பவர்களாகவோ இருக்கிறார்கள். இவர்களுக்கு செகந்திராபாதில் தனி இடமெல்லாம் இல்லை என்றாலும் அந்த இடம் தங்களுக்கும் சொந்தமானது என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள்

இருவகை அன்னியர்களை அசோகமித்திரன் அவரது செகந்திராபாத்கதைகளில் சுட்டிச்செல்கிறார். ஒன்று செகந்திராபாத்நகரின் விரிவான சேரிப்பகுதி மக்கள். குசினிப்பறச்சேரி என்ற பேருள்ள ஒரு சேரிப்பகுதி குட்டி தியாகராஜன் வாழ்ந்த லான்ஸர்பாரக் அருகே இருக்கிறது. பெயர் சொல்வதைப்போல அது வெள்ளையர்களுக்கு மாமிச சமையல் செய்வதற்காக வந்து குடியேறிய தலித் மக்களால் ஆன சேரி. குட்டி தியாகராஜன் அல்லது சந்திரசேகரனுக்கு அது ஒரு மர்மப்பிராந்தியம். சின்னப்பையனாக இருக்கும்போது அப்பகுதியைத் தாண்டுவதென்பது பீதியூட்டும் ஓர் அனுபவம். யாராவது கிண்டல்செய்வார்கள், சைக்கிளைப் பறித்துக்கொண்டு சுற்றிவந்து பின்னர் கையில் கொடுப்பர்கள். கையில் உள்ள பொருட்களைத் தட்டிவிடுவார்கள்.

பன்னிரண்டு வயதைத் தாண்டியபின் அதுவே படபடப்புக்குரிய விஷயமாக ஆகிவிடுகிறது.அங்கே அச்சமும் கூச்சமும் இல்லாமல் தெருக்களில் சாதாரணமாகத் தென்படும் பெண்கள் அவன் அந்தரங்க உலகில் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். மிக ஆழ்ந்த ஒரு நினைவில் இருந்து தனிமையில் கிளம்பி வந்து படபடப்பூட்டும் குசினிப்பறச்சேரி புஷ்பா அவன் மனத்தில் அந்த இடத்தின் ஒரு அடையாளமாக நிரந்தரமாகவே தங்கி விடுகிறாள். ஆனால் அதற்கு அப்பால் அந்த இடம், அங்குள்ள மனிதர்கள் பற்றி அனேகமாக எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு அந்த இடத்துக்குள் சென்று பார்த்த அனுபவம் அனேகமாக இருப்பதாகவே தெரியவில்லை.அவர்கள் அந்த நகரத்தின் ஆழத்துள் அன்னியர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இன்னொருவகை அன்னியர்கள் முஸ்லீம்கள். ஹுசெய்ன்சாகர் ஏரிக்கு அந்தப்பக்கம் ஹைதராபாதில் முஸ்லீம்கள்தான் ஆட்சி செலுத்துகிறார்கள். அவர்களின் உயர்தர கார்கள், வெள்ளை வெளேரென்ற நிறம், பூனைக்கண்கள், அவர்கள் ஆடும் டென்னிஸ் எல்லாமே குட்டிக் கதைசொல்லிக்கு ஆச்சரியமானவை. ஆனால் செகந்திராபாதில் அவன் காணும் முஸ்லீம்கள் ஏழைகள். பெரும்பாலும் பிழைப்புக்காக வந்து போதிய படிப்போ தொழில்திறனோ இல்லாமல் சில்லறை வேலைகள் எதையாவது செய்துகொண்டிருப்பவர்கள். கூச்சமும் குறுகலுமாக அவர்கள் கண்ணுக்குத்தெரியாத சமூகமாக வாழ்கிறார்கள்.

இந்த சமூகச்சித்திரத்தில் அசோகமித்திரனின் கதைசொல்லி எங்கே தன்னை அடையாளம் கண்டுகொள்கிறான்? கதைசொல்லி தமிழ்பேசக்கூடியவன். பிராமணன். கீழ்நடுத்தர வர்க்கத்தில் இருந்து படிப்பின்மூலம் பெற்றுக்கொண்ட சிறிய பதவி ஒன்றின்மூலம் அன்னியநகரத்துக்குக் குடியேறி அங்கே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் குடும்பம் ஒன்றைச்சேர்ந்தவன். அம்மா அப்பா அக்காக்கள் எனப் பெரிய குடும்பத்தில் பற்றாக்குறைக்குள் எளிமையான வாழ்க்கை வாழ்கிறான். அப்பா ஒரே ராம்கோபால் சீட்டித்துணியைத் துண்டுதுண்டுகளாக வாங்கிப் பெண்களுக்குப் பாவாடையும் பையனுக்கு சட்டையும் தைக்கும் அளவுக்கு சிக்கனமானவர். நஞ்சங்கூடு பல்பொடி மொத்தமாக வாங்கி வருஷம் முழுக்கப் பயன்படுத்துபவர்கள்.

இவர்களைப்போலவே ஏராளமான தமிழர்கள் அங்கே இருந்திருக்கலாம். எல்லாருமே அந்தப் பெருநகருக்கு அன்னியர்கள். அங்கே ஒண்டிக்கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள். பெரியவர்களுக்கு அது தங்கள் ஊரல்ல என்ற தன்னுணர்வு இருக்கிறது. ஆகவே தங்கள் வட்டங்களுக்குள் வாழ்ந்துகொண்டு மெலிதான சமூக உறவுகளை வைத்திருக்கிறார்கள். கதைசொல்லியின் அப்பா சாலையில் சென்றால் அத்தனை தமிழர்களையும் அடையாளம் கண்டு நாலு வார்த்தை பேசித்தான் மேலே செல்கிறார். அவருக்கென ஒரு சிறிய நட்புவட்டம் அங்கே உருவாகியிருக்கிறது.

இவர்களின் ஒரே அடையாளம் பிரிட்டிஷ் பேரரசின் உறுப்புகள் என்பதே. கதைசொல்லியின் அப்பா சாலையில் சென்றால் எதிரே சிங்கம் வந்து நின்று உறுமினாலும்கூட ‘நான் ரயில்வே செர்வெண்ட்’என்று அடையாள அட்டையை எடுத்து நீட்டிவிடுவார் என்கிறார். வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத சம்பளத்தில் பெரிய குடும்பத்தை நடத்திச்சென்றாலும் அந்த அடையாளம் வாழ்க்கைக்கு ஓர் உத்தரவாதமாக மட்டுமல்லாமல் ஒரு தன்னிலையை அளிப்பதாகவும் இருக்கிறது.

ஆனால் அங்கேயே பிறந்த பையன்களின் உலகம் வேறு. அவர்களுக்கு அந்த நகரம் அவர்களே கொஞ்சம்கொஞ்சமாகக் கண்டெடுக்கப்படவேண்டிய ஒன்று. அங்குள்ள ஒவ்வொருவரையும் அந்நகரத்தின் விரிந்த புலத்தில் ஆங்காங்கே நிறுத்தி அவர்களில் தன் இடத்தைக் கண்டடையும் முயற்சியில் குட்டி தியாகராஜன் அல்லது சந்திரசேகரன் அல்லது பாபு ஈடுபடுவதைக் கதைகளில் காணலாம். கிராமத்தைப்போலன்றி ஒவ்வொருவருடைய பண்பாட்டுப்புலமும் ஒவ்வொன்றாக இருக்கிறது. க்ஸேவியர் டேவிட் என்ற மாணவனின் வீட்டுக்குப் போனால் அவன் வீட்டில் ஆளைக்கூப்பிட ஒரு மணியை அடிக்கவேண்டியிருக்கிறது. அதைப் பக்கத்துவீட்டுப் பெரியவர் பலமுறை சொன்னபின்னர்தான் அடிக்கமுடிகிறது. அவன் கித்தார் வாசிக்கிறான். குட்டிப்பையன் பலவிதமான நுட்பமான தகவல்களை ஆச்சரியத்துடன் பொறுக்கித் தன் உலகை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான் இந்தக்கதைகளின் அழகு என்று சொல்லலாம்

இந்தக் குட்டிப்பையன் அவனுக்கு உகந்ததாகக் கண்டுகொள்ளும் சூழல் ஆங்கிலோ இந்தியர்களுடையது என்பது ஆச்சரியமானது. அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தப் பொது அம்சமும் இல்லை. அவர்கள் மாமிசம் உண்டு மது அருந்துகிறார்கள். பெண்கள் கவுன் அணிந்து ஆண்களுக்கு சமமாக வெளியே சுற்றுகிறார்கள். வீடுகளில் சன்னல்களுக்குத் திரைச்சீலைகளும் மேஜைகளுக்கு விரிப்பும் போட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் குட்டிப்பையன் தெலுங்கர்களையும் முஸ்லீம்களையும் விட இவர்களிடம்தான் அதிகம் நெருங்க முடிகிறது.

அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்தக்கதைகள் காட்டும் ஒரு மெல்லிய சித்திரம் பதிலாகத் தெரிகிறது. இந்த ஆங்கிலஇந்தியர்கள் ஒருவகையான திரிசங்குநிலையில், அடையாளமின்மையில், கைவிடப்பட்டவர்களாக வாழ்கிறார்கள். அன்றைய இந்திய பிரிட்டிஷ் அதிகாரத்தரப்பின் சோரபுத்திரர்களாகவே அவர்கள் கருதப்பட்டார்கள். குற்றவுணர்ச்சி காரணமாகவே அவர்களுக்கு பெரும்பாலும் ரயில்வே துறையில் வேலைகொடுக்கிறார்கள். ஆனால் அடையாளமின்மையின் விளைவான தன்மானமிழப்பு அவர்களைப் படிப்பில் முன்னேறவோ முக்கியமான இடங்களுக்குச் செல்லவோ முடியாதவர்களாக ஆக்குகிறது

அசோகமித்திரன் காட்டும் கதைக்களனிலேயே குட்டிப்பையனுக்குத் தெரிந்த ஆங்கில இந்தியக் குடும்பங்கள் நசிவுப்பாதையில்தான் இருக்கின்றன. சமூக அளவில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்களுக்குள் அல்லாமல் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். குடிப்பழக்கம் அவர்களை அழித்துக்கொண்டிருக்கிறது. குட்டிப்பையனுடன் விளையாட வரக்கூடிய ஆங்கில இந்தியப் பையன்கள் படிப்பில் ஆர்வமில்லாமல் விளையாட்டுத்தனமும் முரட்டுத்தனமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை மானசீகமாக இழிவாக நினைக்கும் தெலுங்குப் பையன்களுக்கு அவர்கள் காட்டும் எதிர்வினை என்று அந்த முரட்டுத்தனத்தைச் சொல்லலாம்.

இந்த ஒதுங்கலை ஆங்கில இந்தியக் குடும்பங்கள் கைவிடும் தருணம் இரண்டாம் உலகப்போர் முடியும்போது வருகிறது. அமெரிக்க, பிரிட்டிஷ் சோல்ஜர்கள் செகந்திராபாதில் வந்து நிறைகிறார்கள். அவர்கள் வெள்ளையர்கள், ஆனால் அதிகார அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்த அம்சம் சோல்ஜர்களைத் தங்களவர்களாகக் கண்டு ஆங்கில இந்தியக் குடும்பங்கள் உற்சாகம் கொள்ளச்செய்கின்றன. தங்கள் வீடுகளில் அவர்களுக்கு விருந்துக்களியாட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள். தங்கள் பெண்களை அவர்கள் மணக்கவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

குட்டிப்பையனுக்குக் கழுத்தில் குட்டையைக் கட்டி சட்டையைக் கால்சட்டைக்குள் தள்ளி விருந்துக்குக் கூட்டிச்செல்கிறார்கள் ஆங்கிலஇந்தியப்பையன்கள். கொஞ்சநாளாகவே எல்லா ‘சட்டைக்காரர்களும்’ வெள்ளையர்களாக மாறிவிட்ட பிரமையில் இருக்கிறான் பையன். அவர்கள் எல்லாரும் சீராக உடையணிந்து ஆங்கில பாணியில் பேசுகிறார்கள். வீடுகளை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார்கள். அன்றிரவில் அங்கே கூடியிருந்த சாதாரண சமூகநிலை உள்ள சட்டைக்காரர்களெல்லாருமே துரைகளைப்போல இருந்தார்கள். நடனமும் பாட்டும் குடியும் சாப்பாடும் நடக்கிறது.

ஆனால் சோல்ஜர்களுக்கு இவர்கள் மலிவான கேளிக்கையிடங்களை அளிப்பவர்கள் மட்டுமே. இவர்களை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. இவர்களின் பெண்களை அனுபவித்துவிட்டு சர்வசாதாரணமாக கைவிட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆனால் இவர்களின் இன்னொரு வேர் இந்தியாவில் இருக்கிறது ‘நாம் ஏதோ கண்ணகி மாதவி கோப்பெருந்தேவி என்கிறோம். திரும்பி வராத அந்த பிரிட்டிஷ் சோல்ஜரை நினைத்து ஏங்கி ஏங்கி சில்வியா இரண்டாண்டுக்குள் டிபி வந்து செத்துப்போனாள்’ என்று முடியும் சில்வியா என்ற கதை இந்த அடையாளமின்மையை ஏக்கத்தை கைவிடப்படுதலை அற்புதமாகச் சித்தரிக்கிறது

இந்த ஒதுங்கல்தான் குட்டிப்பையனை ஆங்கில இந்திய குடும்பத்துடன் நெருங்க வைத்த பொது அம்சம்போலத் தோன்றுகிறது. அவனால் செகந்திராபாதின் முஸ்லீம்கள் , தெலுங்கர்களிடம் ஓர் எல்லைக்குமேல் நெருங்கவே முடிவதில்லை. ஆனால் ஆங்கில இந்தியப் பையன்களுடன் சாதாரணமாக அணுகமுடிகிறது.

மிகத்துல்லியமாக அந்தப் பொது இயல்பைச் சுட்டும் ஒரு இடம் பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் வருகிறது. சுதந்திரத்துக்குப்பின்னர் செகந்திராபாத் கலவரபூமியாக இருக்கிறது. நைஜாம் தனியாக பிரிந்துபோக முடிவெடுக்கிறார். ரஜாக்கர்கள் அவருக்கு துணையிருக்கிறார்கள். நகரமே பதற்றநிலையில் இருக்கிறது. ஆனால் ஆங்கில இந்தியக்குடும்பத்துக்கும் தமிழ்க்குடும்பத்துக்கும் அதைப்பற்றி எதுவுமே தெரியவில்லை. பின்னாளில் கதை சொல்லி யோசித்துத் திடுக்கிடுகிறார். கலவரம் நடந்து ஆட்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையிலும் குட்டிப்பையனின் அப்பா அவரது குடும்பத்துடன் சினிமா பார்த்துவிட்டு இருளில் திரும்பி வருகிறார். ஆங்கில இந்தியப்பையன்களும் சந்திரசேகரனும் சந்தோஷமாகக் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் போராட்டம் நிகழ்ந்தது அவர்கள் இருவருக்கும் சம்பந்தமே இல்லாத இரு தரப்புகள் நடுவே. ரஜாக்கர்கள் பெரும்பாலும் செகந்திராபாதுக்குப் பிழைக்க வந்த எளிய அடித்தட்டு இஸ்லாமியர்கள் என்று அசோகமித்திரன் கதைகள் காட்டுகின்றன. அவர்களுக்கு அங்கே இடமே இருக்கவில்லை. அன்னியர்களாக ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ரஜாக்கர் படை அமைந்ததுமே அவர்களுக்கு சட்டென்று ஒரு மத அடிப்படையிலான அடையாளம் வழங்கப்படுகிறது. அரசியல் பங்கேற்பு அமைகிறது. அவர்கள் அடையும் அதீத உற்சாகம் நாவலில் ஒரு முக்கியமான சித்தரிப்பு.

குறிப்பாகத் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக வந்து அடங்கி ஒடுங்கிக் குறுகி வாழும் சையது திடீரென விஸ்வரூபம் கொள்கிறார். பண்டைய முகலாய மன்னர்களின் வாரிசாகத் தன்னை நினைத்துக்கொள்கிறார். அன்றுவரை உயிர்நண்பராக இருந்த சந்திரசேகரனின் தந்தையை ஒரு இரண்டாம்கட்டப்பிரஜையாக, அடிமையாக எண்ண ஆரம்பிக்கிறார். இவர்கள் வீட்டுக்குள் நுழைந்து பரிசோதனை போடுகிறார். அதட்டுகிறார். அதைவிட வேடிக்கை அவருக்கு அப்படிச் செய்ய உரிமை இருப்பதாக சந்திரசேகரனின் அப்பாவும் நினைத்துக்கொள்வதுதான். ஏனென்றால் இப்போது நகரின் அதிகாரம் அவர்களிடம் சென்று விட்டதென அவர் நினைக்கிறார். அவர் என்றும் அங்கே ஊழியர்மட்டுமே.

ரஜாக்கர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். எந்த அதிகாரப்பின்புலமும் எந்தப் பொது அம்சமும் இல்லாத கூலிக்கார முஸ்லீம்களின் கும்பல் அது. அவர்களை அதிகாரச் சதுரங்கத்தில் காயாகப் பயன்படுத்திக்கொண்ட உயர்குடி முஸ்லீம்கள் அந்தக் கலவர காலகட்டத்திலும்கூட எதைப்பற்றியும் கவலைப்படாமல் டென்னிஸும் கிரிக்கெட்டும் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்திய ராணுவத்துக்கு எதிராக அல்லாஹு அக்பர் என்று கத்தியபடி கழிகளைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். இரண்டுமணிநேரத்தில் ‘போர்’ முடிவுக்கு வந்தது. ரஜாக்கர்கள் அடித்து ஒடுக்கப்பட்டார்கள். நைஜாம் சரணடைந்து தன் அரண்மனை சொத்துக்கள் எல்லாவற்றையும் தக்கவைத்துக்கொண்டார்.[ பதினெட்டாவது அட்சக்கோடு]

இந்த ஆட்டத்தில் ரஜாக்கர்களுக்கு எதிரணியாக இருப்பவர்கள் தெலுங்கர்கள். தெலுங்கர்கள் கொள்ளும் கலாச்சார சுய உணர்வு சந்திரசேகரனுக்குப் புதிராக இருக்கிறது. செகந்திராபாதில் அவர்கள் பெரும்பாலும் பால்காரர்கள். சட்டென்று அவர்கள் வேமனாவைப் புதியதாகக் கண்டுபிடித்துவிட்டவர்களாகத் தோன்றினார்கள். அதிகாரசக்கரம் திரும்புகிறது. ஐநூறு கோப்பை தட்டுகள் என்ற கதையில் அதே சையது தெருவில்செல்லும்போது சாதாரணப் பையன்களால் ‘ரஜாக்கர் நாயே’ என்று உதைக்கப்படுகிறார். ஆறடி உடம்பை மூன்றடியாகக் குறுக்கிக்கொண்டு உம் உம் உம் என்று சொல்லி மௌனமாக அடிவாங்குகிறார். அப்பாவின் சினேகிதர் கதையில் அவர் மீண்டும் பழைய சையது மாமாவாக ஆகி சந்திரசேகரனின் அப்பாவின் நினைவைப் புதுப்பிக்க அம்மாவைப் பார்க்க வருகிறார்.

தன் லான்சர்பாரக் கதைகள் முழுக்க அசோகமித்திரன் காட்டும் குட்டிப்பையன் அவனுடையதல்லாத ஒரு நகரத்தைப் புதியதாகக் கண்டுபிடித்தபடியே இருக்கிறான். அந்தக்கதைகளின் மையச்சரடே அவனுடைய ஆச்சரியம்தான். பெரும்பாலும் எல்லாக் கதைகளும் ஆச்சரியத்துடன் ஆரம்பிக்கின்றன. ‘எதையும் நாடகத்தன்மையோடு செய்வது கோபாலுக்குப் பழக்கம். என்னை அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து வகுப்புக்கும் கொண்டு விட்ட என் அப்பாவிடம் அவன்தான் ஒருவகுப்பில் ஆசிரியரும் இருக்கும்போதே நான்கைந்து வரிசை பெஞ்சுகளைக் கடந்து எங்களிடம் வந்து ‘சம்ஸ்கிருத வாத்தியாருக்கும் ஒரு ரூபாய் தரவேண்டும்’ என்றான் – என ஆரம்பிக்கிறது ஆறாம் வகுப்பு என்ற கதை

அதேபோல பெரும்பாலும் எல்லாக் கதைகளும் ஒரு நினைவுகூரலின், இறந்தகால ஏக்கத்தின் தொனியில் முடிவடைகின்றன்றன.’இரண்டு அச்சுக்கட்டைகளில் என்னிடம் தங்கிப்போனதில் கோபாலின் பெயர் கலைக்கப்படாமலே இருந்தது. அவனுக்கே தந்துவிடவேண்டும் என்றுதான் இருந்தேன்.அவன் என்னிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டுப் போய்விட்டானே’ என்று அதே கதை முடிகிறது. லான்ஸர்பாரக் கதைகளின் பொது அமைப்பே இந்த ஆச்சரியமும் துள்ளலும் கொண்ட தொடக்கமும் மெல்லிய ஏக்கம் கூடிய முடிவும்தான்.

அப்பா இறந்ததுமே அசோகமித்திரன் குடும்பம் % நகரைவிட்டு வெளியேற முடிவெடுத்ததையும் குறிப்பாகச் சுட்டிக்காட்டவேண்டும். அந்த நகருடன் அவர்களுக்கு பிணைப்புகள் இல்லை. அவர்களின் குடும்பத்தலைவர் அங்கே வேலைபார்த்தார், அவ்வளவுதான். சென்னையும் அவர்கள் அறியாத நகரம்தான்.ஆனால் அவர்களுடைய நகரம். சென்னைக்குத் திரும்பும் குட்டிப்பையனின் குடும்பம் எப்படிக் கடும் போராட்டம் வழியாக அங்கே வேரூன்றியது என்பதை அசோகமித்திரன் சிலகதைகளில் மெல்லிய கோடிழுப்பால் எழுதிக் காட்டியிருக்கிறார்.

அப்பாவின் சினேகிதர் கதையில் அந்தச் சித்திரம் வருகிறது. ’அவனுக்குத்தெரிந்தவரை வீட்டுச்சாமான்களைத் திரட்டி வேண்டாதென்று தோன்றியவற்றை வண்டி வண்டியாக ஏலக்கடையில் பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் விற்றுவிட்டு அம்மா தம்பி தங்கையோடு சென்னை வந்துசேர்ந்து கிணற்றங்கரையில் ஓர் அறையும் வாசல்கதவருகே ஓர் அறையுமாகப் பிரித்து வைத்திருந்த பழைய மாம்பலத்துப் பழைய வீட்டுக்கு ஒண்டுக்குடித்தனம் வந்துவிட்டான்’

சென்னைக்கு வந்தபின் ஓர் ஆச்சரியம் இருக்கிறது. அசோகமித்திரன் கதைகளில் நான் என நேரடியாகக் கதைசொல்லி வரும் கதைகள் மிகவும் குறைந்துவிடுகின்றன. கதைசொல்லியாக நான் வரும்போதுகூட அது அசோகமித்திரனின் சொந்த ஆளுமைச்சித்திரத்துடன் தொடர்பற்றதாகவே இருக்கிறது. விதவிதமான மனிதர்கள், வெவ்வேறு வகையிலான முகங்கள். கதைசொல்லி என்ற நானை எடுத்துக்கொண்டால்கூட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட பஸ் பிடித்துச் சென்று ‘மக்கள் போராட்டத்தில்’ சிக்கி எங்கோ இறங்கிக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று திரும்பும் குமாஸ்தா முதல் சல்பேட்டா அடித்துவிட்டுப் பேருந்தில் ஏறி ’நான் சாப்ட்டாலும் நியாயமாத்தான் பேசுவேன்’ என்று சலம்புபவர் வரை பல்வேறு ஆளுமைகளைப்பார்க்கிறோம்.

இப்படிச் சொல்லலாம். செகந்திராபாத் கதைகளில் ஒரு தனிமனிதனாக உருவாகிக்கொண்டிருந்த அசோகமித்திரன் சென்னையில் ஒரு சமூகமாக விரிந்தார். சென்னையில் அசோகமித்திரன் காட்டும் அந்த சமூகம் ஒரே சொல்லில் கீழ்நடுத்தர வர்க்கம் என்று நம் சமூகவியலாளர்களால் சொல்லப்படுவது. அந்தக்கீழ் நடுத்தர வர்க்கமே ஒரு தேசத்தில் அமைப்புகளைக் கட்டிக்காக்கிறது, விழுமியங்களை உருவாக்குகிறது,கருத்துக்களைப் பரப்புகிறது, அரசியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது. ஆனால் அசோகமித்திரன் காட்டும் கீழ்நடுத்தரவர்க்கம் முற்றிலும் வேறுபட்டது. அது அரசியலற்றது. சாதி இன மொழி பேதம் கடந்தது. உயிர்வாழ்தல் ஒன்றையே வாழ்க்கையாகக் கொண்டது. அதற்கான முண்டியடித்தல்கள், சஞ்சலங்கள், ரகசியக்குமுறல்கள் மட்டும் கொண்டது.

எப

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 11:34

ஒளி- கடிதங்கள்-2

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

அன்புள்ள ஜெ,

ஒளி மிகச்சிறப்பாக இருந்தது. ஒரு நகைச்சுவை நாடகத்தையே நான் எதிர்பார்த்தேன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே நாடகம் வேறுமாதிரி என்று புரிந்துவிட்டது. நாடகத்தின் ஹைலைட் என்பது ஒரு seer க்கும் அறிவுஜீவிகளுக்கும் கலைஞர்களுக்குமான வேறுபாடுதான். எழுத்தாளன் தன் வாசகர்களை நினைத்துக்கொண்டிருக்கிறான். எவராவது வாசிக்கிறார்களா என்று பார்க்கிறான். கசப்படைகிறான். ஆனால் ஞானிக்கு கசப்பே இல்லை. தான் சரி என நினப்பதற்காக உயிரை அளிக்க தயாராக இருக்கிறான்.

இந்த பூமியில் நூறாண்டுகளுக்குமேல் நீடித்திருப்பவை எல்லாம் மதங்கள் மட்டுமே என்ற வரி துணுக்குற வைத்தது. ஆனால் உண்மை. இலக்கியம் உட்பட எதுவுமே இருநூறாண்டுகளை தாண்டுவதில்லை. இருநூறாண்டு பழைய எந்த நூலை நாம் இயல்பாக வாசிக்கிறோம்? கம்ன்யுனிசமே நூறாண்டு தாண்டவில்லை.

சிந்திக்கவைக்கும் நாடகம்

எச்.ஜெயக்குமார்

 

அன்பு ஜெ,

மேடை நாடகங்கள் பார்த்திருக்கிறோம். தொலைக்காட்சி வந்தபிறகு அதில் வரும் தொடர் நாடகங்கள் பார்த்திருக்கிறோம். இணையம் வந்த பிறகு சிறு/குறு நாடகங்கள் வந்தேறியிருக்கின்றன. ஓ.டி.டி தளங்கள் வந்தபின் அதில் சாத்தியமாகும் நாடகங்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால் புதியதாக வந்திறங்கிய ஜூம் ஆப்பில் ஒரு நாடகம் என்று நீங்கள் சொன்னபோது ஒர் சோதனை முயற்சி என்று மட்டுமே நினைத்திருந்தேன்.

ஆனால் இன்று நடந்த ”ஒளி” எனும் ஜூம் நாடகம் இந்த இணைய உலகத்தில் நீங்கள் செய்திருக்கும் பெரும் முன்னெடுப்பு. அதை மிகச் சிறப்பாக, நேர்த்தியாக செய்து முடித்திருந்தார் ”இயக்குனர் தனா” அவர்கள். ஐந்து நடிகர்களும் தனித்தனியாக பாராட்டப்பட வேண்டியவர்கள்.

முதலில் இந்த நாடகத்தை துவக்கியும் முடித்தும் வைத்த கதாப்பாத்திரமான பிரபாகர்(நரேன்). ”ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன?” என்றிருந்து இந்த வாழ்க்கைக் பயணத்தில் தன் பெண்டு, தன் பிள்ளை, வீடு, சோறு என்றமைந்து வெந்ததைத் தின்று விட்டு விதிவந்தால் சாகும் மானுடக் கூட்டங்களுக்கு மத்தியில், மாற்றத்தை விரும்பும் அல்லது மாற்று வாழ்க்கையை வாழும் மிகச் சில மனிதர்களின் கதை இது. அப்படியான மனிதர்களால் மட்டுமே கால காலத்துக்கும் வரலாறு படைக்கப் படுகிறது. புத்தன், இயேசு, காந்தி, மார்க்ஸ் என மதம் சார்ந்த மனிதரையோ அல்லது ஒரு வாழ்க்கை முறை, கொள்கை சார்ந்த மனிதரையோ எடுத்துக் கொண்டால் அவர்கள் யாவருமே இப்படி தேமே என்று காலங்காலமாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் மத்தியில் தான் மாற்றுக் கருத்தை விளம்பி, அதை விரும்பும் மக்களுக்கு அந்த விடுதலையை நல்க ஒரு தூண்டு கோளாகவும், ஊக்கியாகவும் அமைந்து மாண்டிருக்கின்றனர்.

அந்த ஒரு தலைவனை, முதல் ஆட்டுக்குட்டியை முதலாமனை சொல்லும் கதாப்பத்திரமே பிராபகர். பிராபகர் உதிர்த்த ஒவ்வொரு ஜெ –வின் வரிகளும் ஆழமானவை. அதை நடிப்பில் உணர்ச்சிகளோடு முழுமையாக வெளிப்படுத்திய பெருமை நரேனையே சாரும். அவர் அறையின் அந்த வெளிச்சங்கள் அந்த அறை, அவரின் வியர்வை, உடலினின்று எழுந்த துடிப்புகள், பரிதவிப்பு, எதையோ செய்ய வேண்டும் எனும் உணர்வு, செயல் என உந்தும் மனம், ஒத்தவர்களை ஒன்று திரட்ட எழுந்த சிரத்தை என நடிப்பை வழிய விட்டிருந்தார். அவர் அதை வெளிப்படுத்துவதற்கான நேர வெளியயும் இயக்குனர் கொடுத்திருந்தார். தனித்திருப்பவராக, மாற்று வழியில் வாழ்பவராக, நம்பிக்கைவாதியாக, அதனாலேயே முரட்டு முட்டாளாக அறியப்படும் ஒரு பாத்திரமாக அமைந்தொழுகுகிறார்.

”ஏன் பேசியே ஆக வேண்டுமா?” என்று எழுத்தாளர் கேட்கும் போது “பேச்சு ஒரு சரடு மாதிரி” என்று சொன்ன வரிகள் அருமையானவை. தவளை முட்டை கோளையோடு சேர்ந்து ஒரு பந்தாக இருப்பது போல நாமெல்லாம் ஒன்றிணைவோம் என்ற அற்புதமான உவமையைச் சொல்கிறார். அதை அவர் ஒரு முக்கியமான ஒரு கருத்துருவாக பிறருக்கு விவரித்து கடத்தும் விதம் அருமை. சுதந்திரத்தை, விடுதலையைக் கனவு கண்டவர்கள் தான் உள்ளே அறைகளுக்குள் முடக்கப் பட்டிருக்கிறோம் என்று அவர்களுக்கு மீண்டு உரைக்கிறார்.

அந்த ஐந்து நபர்களுக்குமான மையச் சரடைக் கண்டறிந்து கோர்க்கும் கதாப்பாத்திரமாகத் திகழ்கிறார். இன்னும் அங்கிருக்கும் அதே போன்ற 50 பேருக்குமான ஒற்றைக் குறிக்கோளை உருவாக்கும் மனிதராகிறார். அப்படி ஒன்று எது? என்று கேட்டுக் கொண்டு அதற்கான ஒரு அடையாளமாக, குறியீடாக ஒளியைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த சிறு அறையில் அடைந்து கொண்டிருக்கும் மனிதர்கள் யாவருக்கும் தெரிந்த ஒற்றை அடையாளத்தைக் காணிக்கிறார். அப்படியானால் இது ஒரு மத அமைப்பு போல தானே? என்று எழுத்தாளன் கேட்கும் போது “ஆமாம்” என்கிறான்.

யாவரையும் ஒரு புள்ளியில் சேர்த்து அமைந்தபின் ”எதை வாழ் நாளெல்லாம் முழுவதும் தேடினோமோ அதைச் சுருக்க வேண்டும். அதன் அர்த்தத்தாலேயே அடிக்கோடிட வேண்டும்” என்று அவன் சொன்ன போது என் மனமும் கூட எழுத்தாளனைப் போல “ஆப்த வாக்கியமா?” என்றது. ஆனால் அந்த அடிக்கோடு தன்னை அழித்தலாய் அமைந்தது கண்டு துடுக்குற்றேன்.

இயேசுவைப் பற்றிய ஒரு குறிப்பை கதையின் நாயகன் சொல்லியிருப்பார். அதையும் ஜெ –வின் வசன வரிகளைக் கொண்டும் இயேசுவை, அவரின் இறப்பை, அவரின் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சேர்த்த அப்போஸ்த்தலர்களை நினைத்துப் பார்த்தேன். ஆம் அவர் தேர்ந்தெடுத்ததும் கூட ஒளியின் பாதையைத்தான். அந்த மாற்று சிந்தனைக்கான வலுவான குறியீடுகளை அவர் விட்டுச் சென்றிருக்கிறார் என்றே நினைத்தேன்.

அடுத்ததாக இரண்டாவது ஃபிரேமில் வந்த எழுத்தாளரான அரங்கா அவர்களின் நடிப்பு அபாரம். அனைத்தையும் முயன்று ஒரு நிறைவின்மையின் உச்சியில் தவித்து அடங்கிப் போய் இருந்தவர். சற்றே பிராபகர் அவரின் சிந்தனைகளைத் தட்டி எழுப்பியதும் தன் சந்தேகங்களையெல்லாம் பகடியாய்க் கேட்டறிந்து அதற்கு இசைபவராக இருக்கிறார். ஒரு கொள்கை, தத்துவார்த்தம் போன்ற விடயங்களைப் பற்றி பேசும்போது எப்போதும் அதை பகடி செய்ய, வாசகரின் உளக்கிடக்கையில் உள்ள கேள்விகளை எள்ளலோடு கேட்கும் ஒரு கதாப்பாத்திரத்தைப் படைத்திருப்பார். அந்த பாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார் அரங்கா அவர்கள். அவர் உடல் மொழி அழுகை, எள்ளல், நகைச்சுவை என அனைத்து உணர்ச்சிகளாஇயும் கச்சிதமாக வடித்திருந்தது.

மூன்றாவதாக சொல்ல வேண்டியது ரீனா எனும் சுசித்ரா அவர்களைப் பற்றியது தான். நாட்டியம் ஆடுபவள் ஆகையால் அதற்கே உரிய கால்களை மடக்கி நளினமாக உட்காருதலும், உதட்டோரச் சினுங்களும், தோளைக் சிலுப்புவதுமென உடல் மொழியையும், ஒரு மாற்று பரிமாணத்தை காண விளையும் புரட்சி பேசும் போது கொற்றவை போலும் கனீர் குரலில் அந்த பாத்திரத்தை சிறப்பாக ஆற்றிவிட்டார்.

இசையமைப்பாளர் ஒரு முரண்பட்டவரைப் போல அமைதியை விரும்புபவர் போல முதலில் அமைந்திருப்பவராயும், அடியாளத்தில் அவரின் மீறல் பற்றிய நினைவை பிரபாகர் கிளரிவிட்டதும் சிறு ஒளி வந்தவராய் அமையும் அந்த முகுந்தன் பாத்திரத்தை மிக அருமையாக செய்திருக்கிறார்.

நவீன் அவர்களின் நடிப்பு முதலில் இருந்தே ஒரு ஆர்வமிகு இளைஞனைப் போல இருந்தது. பிரபாகரை தன் மனசாட்சி போல நினைத்து வியந்து பல்லி போல் ஒட்டிக் கொண்டு வசனங்களைப் பேசிய விதம் அருமை.

இப்படி அருமையாக நடித்து பார்வையாளர்களுக்கு ஒளியையும், விடுதலையுணர்வையும் கடத்தி, வரலாற்று நெடுகவும் அண்டர்லைன் போட்ட அனைத்து முதலாமன்களையும் நினைவு கூறும் நாடகமாக அமைந்தது சிறப்பு.

இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்கிய அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

-இரம்யா.

அன்புள்ள ஜெ,

‘ஒளி’ நாடகம் அற்புதம். சமீபத்தில் இத்தனை intenseஆன எதையும் பார்த்ததில்லை. தங்களின் சிறுகதை ஒன்றைப் படித்த உணர்வு. காட்சி ஊடகத்தில் எப்போதும் கதை எனக்கு வெளியே தான் நடக்கும். இப்படி மனதில் கதை நிகழ்வது அரிது. ஒவ்வொரு வசனமும் மனதுக்குள் விரித்தபடியே இருந்தது; இருக்கிறது.

அன்புடன்

பன்னீர் செல்வம்.

ஒளி- கடிதங்கள் இன்றிருத்தல்…

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2021 11:33

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.