Jeyamohan's Blog, page 947
July 22, 2021
ஈகலிட்டேரியன்ஸ் – உதவிகள், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நீங்கள் தொடங்கி வைத்த ஈகலட்டேரியன்ஸ் குழுவுக்கு சில உதவிகள் சென்றிருக்கின்றன..
உங்களுடன் தொடர்பு கொண்ட அன்பு, நான் படித்த இர்மாவில் பணியாற்றி வருகிறார். அவர், When will Dalit lives matter என எழுதிய தீபக் மால்கனின் மாணவர்.. (அந்தக் கட்டுரையை வெளியிடுவீர்களா? கொஞ்சம் சுமாரான மொழிபெயர்ப்புதான் – ஆனால், நல்ல கட்டுரை)
அவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தை உபயோகித்து, மத்திய மற்றும் மாநில உயர்கல்வி நிலையங்களில் இருக்கும் Diversity defecit பற்றிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்கள்.. ஐஐடி மும்பை, ஐஐடி கரக்பூர், கோயமுத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் புள்ளி விவரங்களை, பொறுமையாக கேட்டுப் பெற்று வெளியிட்டிருக்கிறார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு,அவர்களுடன் நான் ஜூம் கால் வழியே பேசினேன். எனது பங்களிப்பாக ஒரு விஷயத்தை முன் வைத்தேன்.. ஐஐடி /ஐஐஎம் போன்ற ஒரு உயர்தரக் கல்வி நிலையத்தில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைக்கும் நம் குழந்தைகள், அந்தச் சூழலைக் கண்டு மிரண்டு விடுகிறார்கள்.. அது இயல்பு.. இர்மாவில், முதல் டெர்மில், தோல்வியுற்று விடுவேன் என பயந்து ஓடி வந்து விட்டேன்.. அங்கிருந்த எந்தப் பேராசிரியரும் எனக்கு ஒரு ஆலோசனை சொல்லித் தேற்ற வில்லை.. எனக்கு, நல்லூழாக என் அம்மாயி இருந்தார்.. போயிப் படிடா.. ஃபெயிலானா, நான் சாகற வரைக்கும் உனக்கு சோறு போடறன்னு சொன்ன ஒரு தேவதை.. அது பெரும் உதவி.
எனது நண்பர் தேசிகாமணி கோபாலதேசிகன் – நினைவிருக்கிறதா – சென்னை வெண்முரசு விழாவுக்கான டீஸரில் பேசியவர் -மனித வள மேம்பாட்டு ஆலோசகர் – ஈகலட்டேரியன்ஸ் குழுவில் இருக்கும் எந்த ஒருவருக்கும், எந்தப் பிரச்சினை என்றாலும், ஆலோசனை சொல்ல ஒத்துக் கொண்டிருக்கிறார்.. அவரை இந்தக் குழுவுக்கு அறிமுகப்படுத்தி உள்ளேன். எந்தப் பிரச்சினை என்றாலும், அதை எதிர்கொள்ளும் நேர்நிலை மனநிலையை உருவாக்கிக் கொள்ள உதவும் மனிதர்.
அப்புறம், மேல் படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் முக்கியப் பிரச்சினை, அவர்களுக்கான பாதைகள், தங்கள் நோக்கத்தைத் தெளிவாக எழுத வேண்டிய வழிமுறைகள் (statement of Purpose) முதலியவற்றில் தடுமாறுகிறார்கள். எடுத்துக்காட்டாக, என் உறவினன் ஒருவர் அமெரிக்காவில் படிப்புக்குச் சென்றான். அவனை விட அதிகம் GRE யில் ஸ்கோர் செய்த என் இன்னொரு உறவினன், அமெரிக்கா உயர் கல்வி நிலையங்களில் அட்மிஷன் பெறத் தவறினான்.
இதைச் சரி செய்ய, முகநூல் வழியே நண்பரான பேராசிரியர் கோபி ரெத்தினராஜ் அவர்களை இணைத்துக் கொடுத்திருக்கிறேன்.. அவர் தஞ்சாவூரைச் சார்ந்தவர்.. அமெரிக்காவில் வசிக்கும் உயர்சாதித் தமிழர்களில் பலர், தமிழகத்தில் இருந்து செல்லும் விண்ணப்பங்களின் விலாசத்தில் இருந்தும், பெயர்களில் இருந்தும், அவர்கள் சாதியைத் தவிர மற்றவர்களை அப்ளிகேஷன் ஸ்டேஜிலேயே வடிகட்டும் ஒரு நிரூபிக்க முடியாத சாதிச் சல்லடை இருப்பதைச் சொன்னார்.. ஈகலட்டேரியன் நண்பர்களை, அந்தச் சுழல்களில் மாட்டிக் கொள்ளாமல் செல்லும் வழிகளைச் சொல்லித்தர முன்வந்துள்ளார்.. இப்போது இந்தக் குழுவில் 2-3 பேர் உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் எண்ணத்தில் உள்ளனர்.
நம் நண்பர் சரவணன் விவேகானந்தனும் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார். இவை கொஞ்சம் நேர்நிலையாகத் தொடங்கியுள்ள விஷயங்கள்.. யாரேனும் சிகரம் தொட்டுவிட்டால், கொண்டாடலாம்
அன்புடன்
பாலா
அரசன் ராமாயணம் தொடக்கம்
[image error]
முழு மகாபாரதம் மொழியாக்கம் செய்தபின் அருட்செல்வப்பேரரசன் ஹரிவம்சபுராணத்தை மொழியாக்கம் செய்தார். இப்போது வான்மீகி ராமாயணத்தை ஆங்கிலத்தில் இருந்து சொல்லுக்குச் சொல்லாக மொழியாக்கம் செய்யும் பெரும்பணியை தொடங்கியிருக்கிறார்.
இராமாயணம் முழுமையாக – இணையதளம்அரசனின் மொழியாக்கம் ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவியானது. மூலத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சொல்லெண்ணி உணரலாம். மூலங்கள் பலவற்றுடன் ஒப்பிட்டே இந்த மொழியாக்கத்தை அவர் செய்து வருகிறார்.
இந்நன்னாளில் அருட்செல்வப்பேரரசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஜெ
‘அரசன் பாரதம்’ பாராட்டுவிழா ‘அரசன் பாரதம்’ நிறைவு விழா அழைப்பிதழ் அருட்செல்வப் பேரரசன் சந்திப்பு விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு கங்கூலி பாரதம் தமிழில்July 21, 2021
நாவலின் பேசுபொருள் -பி.கே.பாலகிருஷ்ணன்
பி.கெ.பாலகிருஷ்ணனின் “நாவல் – சித்தியும் சாதனையும்” நூலில் உள்ள ஆரோக்கிய நிகேதனம் நாவல் தொடர்பான கட்டுரைகளில் “நாவலிலே பிரமேய சர்ச்ச” என்ற கட்டுரையை மொழிபெயர்த்திருக்கிறேன். மற்ற கட்டுரைகளையும் மொழிபெயர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
அன்புடன்
மணவாளன்
பி.கெ பாலகிருஷ்ணன்ஒரு வலுவான பேசுபொருளையோ பிரச்சனையையோ முன்வைக்காத, மதிப்பீடுகள் எதையும் நிறுவாத ஒரு நாவல் சிறந்த நாவலாக ஆக முடியுமா? இந்த கேள்வி நாவலுக்கு மட்டுமல்ல, எல்லா கலை வடிவங்களுக்கும் பொருந்தக்கூடிய கேள்வி. ஆனால், நாவலைப் பொறுத்தவரை அதன் வடிவம், கதைத்தொழில்நுட்பத்தில்(craft) உள்ள தனித்தன்மைகள் போன்ற காரணங்களால் இந்த கேள்வி விஷேஷ முக்கியத்துவம் கொண்டதாக ஆகிவிடுகிறது. ஒரு கலைப்படைப்பு என்பது பயன்பாடு சார்ந்ததாகவோ, அறிவார்ந்ததாகவோ இல்லாமல் வெறும் அழகியல் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும். முடியும் என்பதல்ல, கலை என்பதே அழகியல் வெளிப்பாடுதான். கலைக்கு அழகியல் வெளிப்பாடுதான் முக்கியம், அதை சார்ந்து மட்டும்தான் கலைப்படைப்பின் மற்ற நோக்கங்களை பற்றி நாம் பேச வேண்டும்.
கலைப்படைப்பில் அழகியல் வெளிப்பாடு சாத்தியப்படுவதற்கான ஒரே வழி- வடிவம் சார்ந்த தொடர்ச்சியான கவனம், உணர்வுச் சமநிலை இவற்றின் வழியாகத்தான். இதை கலையின் அடிப்படை உண்மை என்றே சொல்லிவிடலாம். இதை புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். திட்டவட்டமான உள்ளடக்கம் கொண்ட, அதேசமயம் வடிவத்தில் உட்சிக்கல்கள் நிறைந்த ஒரு யதார்த்தவாத நாவல்(realistic) ஒன்றை கற்பனை செய்யுங்கள். அந்த நாவலை நாம் மேலே விவாதித்த கலையின் அழகியல் வெளிப்பாடு சார்ந்த அம்சங்கள் சிக்கலான நிலையில் நிறுத்துகின்றன. நாவலில் வடிவ ஒருமை, உணர்வுச்சமநிலை போன்றவை அமைய நாவலின் கதைத்தொழில்நுட்பத்தை (craft) மிகமிக கவனத்துடன் கையாள வேண்டும். இங்கு நான் சிக்கல் என உத்தேசிப்பது கலையின் கதைத்தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறை சிக்கலைத்தான். உலக இலக்கியத்தைப் பொறுத்தவரை, வலுவான பேசுபொருள் அற்ற, முன்னரே உத்தேசித்த இலக்குகள் இல்லாத, வெறும் அழகியல் வெளிப்பாட்டால் மட்டுமே வெற்றியடைந்த நாவல் என்பது அபூர்வமான ஒன்று. ஜேன் ஆஸ்டனின்(Jane Austen) நாவல்களை தவிர்த்துப்பார்த்தால் ஏறக்குறைய பெரிய நாவல்கள் அனைத்தும் வலுவான பேசுபொருளாலும், அவை எழுப்பிய மோதல்களால்(conflict) மட்டும்தான் சிறந்த நாவல்களாக ஆகியிருக்கின்றன.
இந்த விஷயத்தில் மற்ற இலக்கிய வடிவங்களுக்கு இல்லாத சில வசதிகளும் நாவலுக்கு இருக்கிறது. ஒரு நாவல் தன் பேசுபொருளை மட்டுமே கவனத்துடன் கையாண்டு, அதை பகுதிகளாக பிரித்துக்கொண்டு, எந்த பகுதியை வேண்டுமென்றாலும் விரிவாக்கலாம். காவியம், நாடகம் போன்ற வேறு கலைகளின் எந்த உத்தியையும்(technique) பயன்படுத்த நாவலாசிரியனுக்கு சுதந்திரம் இருக்கிறது. இந்த வசதியானது நாவலை அறிவார்ந்த உள்ளடகத்தை நம்பி இயங்கும் ஒரு கலைவடிவமாக ஆக்கிவிடுகிறது. உலகில் உள்ள தலைசிறந்த நாவல்கள் எல்லாம் வலுவான பிரச்சனையையும் பேசுபொருளையும் திட்டவட்டமான வடிவத்தில் விவாதிப்பவை.
ஒரு நாவலாசிரியன் தன் நாவலில் தான் கையாளும் வலுவான பிரச்சனையைப்பற்றி சொற்பொழிவு ஆற்றுவேண்டுமென்றோ, அந்த பிரச்சனைக்கு தன் நாவலில் விளக்கவுரை எழுத வேண்டுமென்றோ நான் சொல்லவில்லை . ஒரு நாவலாசிரியர் தான் புனைந்துகாட்டும் வாழ்க்கைச் சித்திரத்தின் வழியாக தன் நாவலின் பேசுபொருளுக்கும் பிரச்சனைகளுக்கும் உயிர்த்துடிப்புள்ள, திட்டவட்டமான வடிவத்தை அளிக்க வேண்டும் என்று தான் நான் சொல்லவருகிறேன். நாவலில் ஒரு பெரிய பிரச்சனையை நேரடியாக அல்லாமல் வாழ்க்கை சித்திரங்கள் வழியாக நுட்பமான வடிவில் கையாள வேண்டும். அம்மாதிரியான முயற்சியில் இறங்கும் கலைஞனும் அந்த அளவு விரிவும், வலிமையும் கொண்ட ஆளுமையாகவும் இருக்கவேண்டும். மகத்தான நாவல்கள் என்பவை மகத்தான பேசுபொருட்களை கையாளக்கூடியவைகூட என்ற கருத்தைத்தான் நான் விளக்க முயற்சி செய்கிறேன். பெரிய நாவலில் வலுவான பேசுபொருளை கையாளும் முறை பற்றி அறிய ஆர்வம் கொண்ட வாசகர்களுக்கு “ஆரோக்கிய நிகேதனம்” நாவல் ஒரு முக்கியமான உதாரணம்.
ஆரோக்கிய நிகேதனத்தின் பேசுபொருள் என்பது சுருக்கமாக மானுடத்தின் மகத்துவமும், மனிதனில் வெளிப்படும் நன்மையும் என்று சொல்லலாம். இந்த பெரிய பேசுபொருள் நாவலில் நுட்பமாக கையாளப்பட்டிருக்கிறது. அசாதாரணமான லாவகத்துடன் நாவலாசிரியர் தாராசங்கர் பானர்ஜி இந்த பணியை செய்திருக்கிறார். புகழ்பெற்ற நாவலாசிரியர்கூட தங்கள் நாவலில் ஒரு வலுவான பேசுபொருளை முன்வைக்கும்போது, நாவலாசிரியர் என்ற நிலையை மறந்துவிட்டு தீர்க்கதரிசியைப் போல சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்துவிடுவார்கள். உலக இலக்கியத்தில் அப்படி நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. பேசுபொருளை இன்னும் வலுவானதாகக் காட்டுவதற்காக அல்லது அதை இன்னும் தெளிவுபடுத்த நாவலுக்கு உள்ளே இருக்கும் கதாப்பாத்திரங்களை சொற்பொழிவு ஆற்ற வைக்கவோ, நீண்ட விளக்கவுரை அளிக்கவோ செய்வார்கள். அதற்குக்கூட பொறுமை இல்லாத நாவலாசிரியர்கள் நேராக நாவலுக்குள்ளே வந்து ஆசிரியர் கூற்றாக வாசகர்களிடம் பிரசங்கம் செய்வதும் சாதாரணம்.
இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் முன்னரே அறிந்து இருப்பது காரணமாக இருக்கலாம், ஆரோக்கிய நிகேதனம் நாவலில் இந்த மாதிரி பலவீனங்கள் எதுவுமே இல்லை. கலையின் எந்த விதியையும் மிக மெல்லிய அளவில் கூட மீறாத வகையில் அந்த நாவல் தான் கையாளும் பேசுபொருளை முன்வைக்கிறது. நாவலின் எந்த கதைச் சந்தர்ப்பத்திலும் அந்த சூழலுக்கு பொருந்தாத ஒரு உரையாடல் கூட இல்லை. நாவலின் ஒரு சம்பவத்தில்கூட, அந்த சம்பவத்திற்கு கொஞ்சமும் அவசியமில்லாத வகையில் பேசுபொருளை துலங்க வைப்பதற்காக கதாப்பாத்திரங்கள் எதையும் சொல்வதில்லை. அதைவிட நாவலாசிரியர் தானாகவே நாவலுக்குள் முகம்காட்டக்கூடிய பகுதிகள் இந்த நாவலில் சுத்தமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். ஆனால், ஆரோக்கிய நிகேதனம் நாவலின் கதைச்சந்தர்ப்பங்கள், கதாப்பாத்திரங்கள், சித்தரிப்பு முறை, மொழி என ஒவ்வொரு அம்சமும் மையமான பேசுபொருளின் வலிமையை உணர்ந்துகொண்டு அந்த பேசுபொருளின் வெவ்வேறு பகுதிகளை துலக்கிக்காட்டும் பணியை செய்கின்றன.
நாம் மொழிபெயர்ப்பு வடிவத்தைதான் வாசிக்கிறோம் என்றாலும் , நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இந்த நாவலின் மொழிநடை. உணர்ச்சிகளை குறைத்து சொல்லும் (under statement ) இயல்பைக்கொண்ட மொழிநடை. உறுதியான, சமநிலை உள்ள, தத்துவ அறிவும், கருணையும் கொண்ட ஒருவரின் ஆணையிடும் தொனியில் உள்ள மொழி உண்டாக்கும் தனித்தன்மையும் இந்த நாவலுக்கு உண்டு. நாவலின் எந்த சூழலிலும், அது நகைச்சுவையான சம்பவத்தை விளக்கும்போதோ அல்லது உணர்வெழுச்சியின் நிறைந்த சம்பவத்தை விவரிக்கும்போதோ எதுவாக இருந்தாலும், பின்னணியில் கம்பீரமான முழக்கம் மட்டும்தான் பிரதானமானதாக இருக்கும். இதை ஒரு வகையில் நாவலின் நிமிர்வு என்று சொல்லலாம். அந்த நிமிர்வை குலைக்கும் எந்த அம்சமும் நாவலில் இல்லை. அபூர்வமாக இருக்கும் விவரணைகளும், நாவல் முழுக்கவே நிறைந்திருக்கும் நாடகீய தருணங்களும் (இந்த நாவலில் உள்ள பல உவமைகள் வரை) இந்த நிமிர்விற்கு பங்களிப்பாற்றுகின்றன. இம்மாதிரியான நிமிர்வை நாம் இயற்கையின் கம்பீரமான, என்றென்றைக்குமான நிலைகளில், இதிகாசங்களில், புராணங்களில் உள்ள பிரம்மாண்டமான வாழ்க்கைச்சித்திரங்களில் மட்டும்தான் காணமுடியும்.
இந்த நாவலில் உள்ள உணர்வுநிலைகளின் ஏற்ற இறங்கங்களை இன்னும் வீரியமானவையாக ஆக்கும் கூறு என்று இயற்கையைச் சொல்லலாம். இந்த நாவலின் கதைக்களம் என்பது முழுக்கவே கிராமம் தான் இல்லையா? கிராமம் என்று எடுத்துக்கொண்டால் அங்குள்ள பூக்கள், செடி கொடிகள் வழியாக வெளிப்படும் காட்சியழகு என்பது எப்போதுமே இருப்பது. ஆனால், ஆரோக்கிய நிகேதனம் நாவலுக்கு பின்னணியாக உள்ள இயற்கையில் நாவலாசிரியர் கவனம் செலுத்துவது அதில் உள்ள காட்சியழகுகளில் அல்ல. எந்த காலமாக இருந்தாலும் சரி, எந்த ஊராக இருந்தாலும் சரி இயற்கையின் என்றென்றைக்குமான மகத்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய அம்சங்கள் சில இருக்கின்றன. நன்கு உழுத நிலம், நாற்று நடப்பட்ட வயல், தரிசாகக்கிடக்கும் பூமி, வானம், மேகங்கள், அவற்றை நோக்கி தலை உயர்த்தி நிற்கும் மரங்கள் ,பேய்மழை, இடிமின்னல் இப்படிப்பட்டவை. சிருஷ்டியின், படைத்தவனின் அழகுணர்வை விட, அவனது கம்பீரத்தை, அவனுடைய இருப்பை குறிப்பால் உணர்த்தும் இந்த இயற்கையைத்தான் ஆரோக்கிய நிகேதனத்தில் உள்ள கதாநாயகனும், மற்ற கதாப்பாத்திரங்களும் சுவாசிக்கிறார்கள்.
இந்த கம்பீரத்தின் எதிரொலிகள் நிறைந்த சூழலில், சிறு சிறு இடைவெளிகளில் அடிக்கப்படும் முரசின் கார்வைபோல மரணம் என்ற எதிர்பாராமை கடந்துவரும். இந்த பின்னணியில் திடமான மனதுடன், கண்களை மேகங்களுக்கு அப்பால் என செலுத்தியபடி , சூழலை மறந்து, யானை போன்ற உறுதியான நடையுடன் ஜீவன் மஷாய் நுழைகிறார். அந்த காட்சியைப் பார்த்தால் ’எவ்வளவு உன்னதமானது!’ என்று தோன்றும். அபூர்வமான சில சந்தர்ப்பங்களில் ’எவ்வளவு மங்கலமானது!’ என்று தோன்றும். ஆனால் எப்போதுமே நம் மனதில் அந்த காட்சியைப் பார்த்தால் ’எவ்வளவு கம்பீரமானது!’ என்ற எண்ணம்தான் பிரதானமானதாக இருக்கும். ஒரு மரஉச்சியில் இருந்து, எங்கிருந்தோ என அசிரீரி போன்ற குரலில் கத்தும் ஹாட்குடோ மீனவன் வளர்க்கும் மைனாவின் குரலைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, அதை நினைத்துநினைத்து சிரித்தபடி மறுபிறவி பற்றி ஒரு நீண்ட மன ஓட்டத்தில் மூழ்கியிருப்பார் மஷாய். அவ்வப்போது மரணத்தை பற்றிய எண்ணங்களும் கடந்துவரும். அது ஒரு ஆவணி மாத பின்மதியம். கருமேகங்களால் சூழப்பட்ட, வானிலிருந்து துளித் துளியாக மழை விழத்தொடங்குகிற நேரம், நீளமாக வளர்ந்த தாடி மீசையுள்ள 70 வயதையுடைய ஜீவன் மஷாய் இடிந்து கிடக்கும் ஆரோக்கிய நிகேதனத்தின் முற்றத்தில், தன் தந்தை நட்டுவைத்த, இப்போதும் அதே பொலிவுடன் பூத்து நிற்கும் இரண்டு அரளிச்செடிகளை பார்த்துக்கொண்டு நிற்கிறார். “ செடிகளின் ஆயுள் மனிதனின் ஆயுளை விட எவ்வளவோ மடங்கு! ” நாவலில் ஜீவன் மஷாய் சித்தரிக்கப்பட்டிருப்பது கிட்டத்தட்ட இவ்வாறுதான். நாவல் என்ற இலக்கிய வகைமையை எடுத்துக்கொண்டால் வடிவ நோக்கில் முழுமை கொண்ட, நம்பகத்தன்மையான, கம்பீரமான வேறொரு சிறந்த உதாரணத்தை நம்மால் காண முடியாது.
ஜீவன் மஷாய் என்ற ஆளுமையின் கதையான ஆரோக்கிய நிகேதனம் இயல்பாகவே மனித மகத்துவத்தின் கதையாக ஆகிவிடுகிறது. பல்வேறு வகையில் ஜீவன் மஷாயின் கதாப்பாத்திரப்படைப்பு அசாதாரணமான ஒன்று. எல்லா புகழ்பெற்ற நாவல்களிலும் வலுவான கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எப்போதுமே நாவலின் வேறொரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவர்கள், இன்னும் நுட்பமாகப் பார்த்தால், அவர்கள் நாவலின் இன்னொரு முழுமையான கதாப்பாத்திரத்தை சார்ந்தவர்கள். இயல்பாகவே, அம்மாதிரியான கதாப்பாத்திரங்களை முழுமையான உயிர்த்துடிப்பு கொண்டவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. ஒரு குறையாக இதை சொல்லவில்லை. இலக்கியங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது நம்மால் தெளிவாகவே காணமுடியும் தரவு என்ற அடிப்படையில்தான் இதை சொல்கிறேன். லே மிசிரபில்ஸ் நாவலில் உள்ள மெத்ரான் (ஏன் ஜீன்வல்ஜீன் கூட), கரமசோவ் சகோதரர்கள் நாவலில் ஃபாதர் ஸோசிமாவ் போன்றவர்கள் பாதி நம்பகத்தன்மை கொண்ட பாதி கதாபாத்திரங்கள் தான். ஆரோக்கிய நிகேதனம் நாவலில் ஜீவன் மஷாய் என்ற ஒரு சாத்வீகமான கதாப்பாத்திரத்தை உருவாக்கி, நாவலை முழுக்க அவரை மட்டுமே முழுமையாக சித்தரித்து, அதை மைய இழையாகக்கொண்டு மற்ற சிக்கல் நிறைந்த பகுதிகளை இந்த மைய ஓட்டத்தில் இணையவிட்டு கிட்டத்தட்ட கங்கை நதியைப்போல தன் நாவலை தாராசங்கர் பானர்ஜி படைத்திருக்கிறார். இயல்பாகவே, நாவலின் ஒட்டுமொத்த இயல்பு என்பது இந்த மைய இழையின் இயல்பு என்னவோ அதுதான். அதனால், இந்த மைய இழையின் இயங்குமுறை என்னவோ அதைத்தான் நாம் நாவலின் பேசுபொருள் என எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கட்டுரையில் ஒரு கதாபாத்திரம் என்ற நிலையில் ஜீவன் மஷாய் பற்றி ஆய்வு செய்வது என்னுடைய நோக்கம் அல்ல. ஆரோக்கிய நிகேதனத்தின் பேசுபொருளை பற்றி விவாதிக்கும்போது அது நேரடியாகவே ஜீவன் மஷாயைத்தான் சுட்டுகிறது என்றுதான் சொல்ல வருகிறேன். மனித மகத்துவம் என்ற ஆரோக்கிய நிகேதனத்தின் பேசு பொருளோடு தொடர்புடைய வேறு சில விஷயங்களையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியிருக்கிறது. முதலாவதாக, தன் கதையை நிறுவ நாவலாசிரியர் தேர்ந்தெடுத்த களம். ஒரு கிராமத்திலிருக்கும் சாதாரண மனிதர்களும் அவர்களின் வாழ்க்கையிலுள்ள அன்றாட விஷயங்களும் மட்டும்தான் இந்த நாவலில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழலில் என்றும், எப்போதும் இருக்க சாத்தியமான ஒரு வைத்தியர் மட்டும்தான் ஜீவன் மஷாய். நாவலில் மஷாய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் யதார்த்தத்தை எந்த வகையிலும் மீறாதபடி தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சொந்த இயல்பை மீறி நாவலில் உள்ள எந்த கதாப்பாத்திரமும் பேசியதாக ஒரு உரையாடல் கூட இல்லை.
இந்த பின்னணியில், ஜீவன் மஷாய் என்ற கதாபாத்திரத்திற்கு ஒரு பரிணாமத்தை ஏற்படுத்துவது மிகமிக சவாலான விஷயம்.ஏனெனில் மோதல்(Conflict) வழியாக, நெருக்கடி(tension) வழியாக மட்டும்தான் ஒரு ஆழமான கதாபாத்திரம் உருவாக முடியும். அவ்வாறு மட்டும்தான் செறிவான பேசுபொருள் சரியான முறையில் நாவலில் வெளிப்பட முடியும், வேறு வழியில்லை. ஜீவன் மஷாய்க்கும் அந்த ஊர்ச்சூழலுக்கும் உள்ள முரண்பாடு (ஊர்க்காரர்களின் இயல்பான சிறுமைக்கும் ஒரு வைத்தியருக்கும் இடையேயான முரண்பாடு )என்பது சாதாரண பூசல் அவ்வளவு தான். இந்த சின்ன முரண்பாட்டிலிருந்து அசாதாரணமான உணர்வுநிலைகளும், செறிவான பேசுபொருளும் வெளிவருவது என்பது சாத்தியமில்லாத காரியம். ஜீவன் மஷாய் போன்ற ஒரு பெரிய ஆளுமையை சிருஷ்டிக்க எப்படிப்பார்த்தாலும் இந்த ஊர் ஆட்களுடனான சில்லரைப்பூசல் என்பது சுத்தமாக உதவாது. அப்படியிருக்க, இந்த நாவலை வாசித்தபிறகு நாவலாசிரியர் தன் கலைத்தன்மையால் இந்த இக்கட்டை லாவகமாக கடந்துவிட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த நாவலின் கதைக்களமான கிராமத்தில் இருக்கும் மனிதர்கள் மிக யதார்த்தமான(realistic) சித்திரங்களில் விவரிக்கப்பட்டிருகிறார்கள். அந்த கிராமத்தின் சூழலுடன் முழுமையாக இணங்கி அந்த மனிதர்களை நேசிக்கும் விதத்தில்தான் ஜீவன் மஷாய் சித்தரிக்கப்பட்டிருகிறார். அப்படியென்றால், மனிதனின் மகத்துவங்கள் வெளிப்பட அவசியமான மோதல் (conflict) இந்த நாவலில் எங்கே இருக்கிறது? யாருடனானது அந்த மோதல்(conflict)? உடனே நம் மனதில் நாம் வாசித்த துன்பவியல் நாடகங்களில்(Classical Tragedy) உள்ள வீரநாயகர்கள் நினைவுக்கு வருவார்கள். இந்த நாவலில் ஜீவன் மஷாயின் எதிர்கொள்ளும் மோதல்(conflict) என்பது தனக்குள்ளேயே உள்ள மோதல். அதை ஆன்மிகமான முழுமைக்காக துடிக்கும் உயிரும், அந்த உயிர் எதிர்கொள்ளும் வாழ்க்கைக்கும் இடையேயான மோதல் என்று சொல்லலாம்.
மஷாயுடைய ஆளுமையின் உள்ளார்ந்த இயல்புகளை வைத்துதான் அவருக்கான குருக்ஷேத்ரம் போன்ற மோதல் களத்தை நாவலாசிரியர் புனைந்திருக்கிறார். மஷாயின் இயல்பான மனநிலை(ஸ்தாயிஃபாவம்), வாழ்க்கை அவரில் ஏற்படுத்திய மனநிலைகள் இவை இரண்டிற்குமான கொந்தளிப்பான மோதலின் வழியாகத்தான் மஷாய் என்ற ஆளுமையின் மகத்துவத்தை புடம்போட்டு காட்டியிருக்கிறார் நாவலாசிரியர். இந்த நாவலில், மஷாய்க்கு புறச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தம் என்பது ஒரு நிமித்தம்தான். புறச்சூழல் ஏற்படுத்தும் அழுத்தத்தை பெரிய,ஆற்றல்கொண்ட ஏதோ ஒன்றை இயக்கவைக்கும் ஸ்விட்ச்(switch) என்று சொல்லலாம். இந்த நாவலை வாசிக்கும்போது துன்பவியல் நாடகங்களின்(Classic Tragedy) வீரநாயகர்களில் வெளிப்பட்ட மோதலைப்போல, அவற்றில் வெளிப்பட்ட மோதலின் அளவுக்கு இந்த நாவலில் மோதல்(Conflict) வெளிப்படவில்லை என்று நமக்குத் தோன்றும். அதற்கான காரணத்தை பார்க்கலாம்.
துன்பவியல் ஆக்கங்களின்(Classical Tragedies) வீர நாயகர்கள் என்பவர்கள் நூற்றாண்டுகளாக திரண்டு வந்த கற்பனையின் வீச்சில் தோன்றியவர்கள்தான். ஜீவன் மஷாய் 1957ம் ஆண்டில் வங்காளத்தில் ஒரு கிராமத்தில் வாழ்கிறார் (தான் வாழ்கிறோம் என்று நூறு சதவிகதம் உறுதியுடன் நம்புகிறார்). வைத்தியம் என்பது அவரது தொழில். யதார்த்தவாதத்தின்(realism) ஒரு விதியைக்கூட மீறாமல், கதாப்பாத்திரங்களின், சூழலின் நம்பகத்தன்மையை குலைக்காமல் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இம்மாதிரி நாவலில் துன்பவியல் நாடகங்கள்(Classic Tragedies) அளவுக்கு மோதல் கொண்ட ஒரு களத்தை அமைப்பது சாத்தியமில்லை. துன்பவியல் ஆக்கங்களின்(Classical tragedy) காலம் முடிந்துவிட்டது. நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை வீரநாயகர்களின் கொந்தளிப்பான மோதல்கள் என்பவை மகத்தான துயரத்தை ஏற்படுத்தாமல் கீழ்நிலையில் உள்ள பகடியைத்தான் வாசகனில் ஏற்படுத்துகின்றன. நவீன யுகத்தின் பெரிய அவலம் இதுதான் என்று விளக்கும் நவீன இலக்கிய விமர்சகர்கள் இருக்கிறார்கள். இந்த பின்னணியில், 1957ல் நடக்கும் கதையாக எழுதப்பட்ட ஒரு நாவலின் கதாநாயகன்தான் ஜீவன் மஷாய். அப்படித்தான் நாம் இந்த நாவலை மதிப்பிட வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நாவலில், துன்பவியல் நாடகங்களில் (Classic Tragedies) உள்ள வீரநாயகர்களின் நினைவை நம்மில் ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு பேசுபொருளையும் ஒரு கதாநாயகனையும் உருவாக்குவது என்பது எளிதான விஷயமில்லை.
ஜீவன் மஷாயுடைய ஆன்மாவின் இயல்பான மனநிலையான சஞ்சலம் அல்லது அமைதியின்மை என்பது என்ன? அந்த அமைதியின்மை எந்த வடிவில் வெளிப்படுகிறது? அவரிலிருக்கும் கடல் அளவுக்கு பரந்த பரிவுணர்வு முழுவதையும் வற்ற வைத்து, அங்கு கண்ணீரின் உப்பை நிரப்பிய அந்த துயரம் என்பது என்ன? எளிமையான மனம் கொண்ட மஷாய்க்கு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்கள்தான் அமைதியின்மையையும், துயரத்தையும் ஏற்படுத்தின என்று சொல்லலாமா? மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி தோன்றலாம். ஆனால் அப்படி சொல்லிவிடமுடியுமா என்ன? புகழ்பெற்ற, செல்வந்தரான ஜகத் மஷாயின் மகனாக நல்ல உருவ அமைப்பு, ஆரோக்கியம், அறிவாற்றல் போன்றவற்றோடு பிறந்த ஜீவன் தத்த மஷாய்க்கு ஏன் இந்த நிறைவின்மை? சாரமற்றவள் என்று பின்பு தான் உணர்ந்துகொள்ளும் ஒரு பெண்ணில் முதிரா இளமையில் ஏற்பட்ட ஈர்ப்பு ஜீவன் மஷாய் போன்ற ஆளுமையில் ஏன் என்றென்றைக்குமான நிறைவின்மையை உருவாக்கியது?
ஒன்று உறுதி. அதை ஊழ் என்றுதான் சொல்ல முடியும். இந்த நாவலில் ஆத்தர் பௌ, பிரத்யோத்போஸ் போன்றவர்களை நிமித்தங்கள் என்று சொல்லலாம். முத்து உயிர்கொள்ள சிப்பிக்குள் தூசி நுழையவேண்டும் என்பதுபோல ஒரு நிமித்தம் அவசியம். ஆனால், இவையெல்லாம் மஷாய் போன்ற பெரிய ஆளுமையின் அமைதியின்மைக்கும், மகத்தான துயரத்திற்கும், பொருளின்மைக்கும் போதுமான விளக்கங்கள் இல்லை. கணவனை வேதனைக்கு உள்ளாக்குவது என்பதற்கும் அப்பால் தன்னைத்தானே வதைத்துக்கொள்ளும் ஆத்தர் பௌ மீது மஷாய்க்கு அவ்வளவு பரிவுணர்வு! ஒட்டுமொத்தமாக, மஷாயின் மனதில் அவள் மேல் தன் இதயம் நோகும் அளவுக்கு பரிவுணர்வுதான் இருக்கிறது. “ நீ என் வாழ்க்கையின் நிழல். நான் போன பின்புதான் நீ மறைவாய்”. ஆத்தர் பௌ என்பது மஷாயின் வாழ்க்கையை பின் தொடரும் மரணமா? ”இல்லை, அவள் மரணத்தின் நிமித்தமான நோய் மட்டும்தான். மரணம் மஞ்சரி ” என்ற மஷாயின் கிண்டல் கலந்த மனஓட்டம் நாவலை ஆழமாக வாசிப்பவர்களின் சிந்தனையை, கற்பனையை எங்கெங்கோ இட்டுச்செல்லும். ஜீவன் மஷாயின் துயர் என்பது மகத்துவங்களுக்கு இயல்பாகவே உள்ள துயர்(tragedy).
மகத்துவங்களை துலங்க வைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இழைகள் இந்த நாவலின் கதாப்பாத்திரப்பரப்பில் இருக்கின்றன. அவற்றை ஒப்பிட்டுப்பார்க்கலாம். முதல் ஆள், ஜகத் மஷாய். அறிவும், பரிவுணர்வும், நிமிர்வும் கொண்ட லட்சிய வடிவம்தான் ஜகத் மஷாய். அவர் அதிமானுடர். ஆனால் நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்கள் அனுமதிக்கும் எல்லைவரைதான் அந்த அதிமானுடத்துவம் வெளிப்பட முடியும். நேரெதிராக, வேறு ஒரு சிறந்த குணாதிசயத்தின் பிரதிநிதியான கதாப்பாத்திரம்தான் ரங்க்லால் டாக்டர். அவர் ஒரு அசாதாரணமான கதாப்பாத்திரம். சாத்வீகமான மனம், நீதியுணர்வு, பரிவுணர்வு என்ற மூன்று நேர்நிலையான குணநலன்கள் எந்தவகையிலும் தீண்டாத விசித்திரமான ஆளுமை. இரண்டு ரூபாய் ஃபீஸ் தேவைப்படும் இடத்தில் ஒரு ரூபாய் மட்டுமே இருக்கும் ஒரு நோயாளி வேதனையில் துடித்து அலறும்போதும் ” போய் இன்னும் ஒரு ரூபாய் சேர்த்துக்கொண்டு வா! திருடா! நீ செத்து போகவெல்லாம் மாட்டாய்” என்று இரக்கமே இல்லாமல் ரங்கலால் சொல்வார். பாலியல் சார்ந்த நோய்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல தயங்கும் நோயாளிகளை திட்டித் தீர்த்துவிடுவார். ஆனால், தனக்கு என்று ஒரு நீதித்தொகுப்பும் அசாதாரணமான விழைவும் மேதைமையும் உள்ள ஆள்தான் ரங்கலால். தன் இயல்புகள், மேதைமை,அகச்சான்று போன்றவற்றுடன் உண்மையாக, மற்ற விஷயங்களை கவனிக்காத ஆளுமைகள் மகத்துவத்தை சூடிக்கொள்கிறார்கள். அதுதான் ரங்கலால். அதாவது, ஜகத் மஷாயின் நேரெதிரான எல்லையில் உள்ள மகத்துவத்துவம் தான் ரங்கலால்.
நாவலில் இந்த பெரிய கதாப்பாத்திரங்கள் போக சர்வ சாதாரணமான தன் அன்றாட வாழ்க்கையை வழியாக மகத்துவத்தின் மகரந்தங்கள் நிறைந்த மற்ற பல கதாப்பாத்திரங்கள் இந்த நாவலில் இருக்கிறார்கள். வரையறுக்கப்பட்ட வாழ்க்கைச் சூழல்களில், தன்னறம் என தாங்கள் நினைக்கும் வேலையை எந்த சஞ்சலமும் இல்லாமல் உறுதியுடன் செய்பவர்கள். அவர்களுடைய வாழ்க்கையும், சிந்தனையும், செயல்பாடுகளும் சாதாரணமானவை. பல சமயம் பண்படாதவை அல்லது தன்னிச்சையானவை. ஆனால் மகத்துவத்தால் ஈர்க்கப்பட்டு நன்மையின் உதாரணங்களாக ஆகிவிடுகிறார்கள். இதை சொல்லும்போது என் மனதில் தோன்றுவது 1947ல் அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு ஹோமியோபதி மருத்தவத்திற்காக, ஊர்க்காரியங்களுக்காக உழைத்து, தான் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் மனதையும் கவரும் தன்மைகொண்ட கிஷோர் போன்ற கதாப்பாத்திரம் அல்ல. தன் கணவனின் மரணத்தை முன்கூட்டியே உணர்ந்து தன்னிடம் கருணைகாட்ட முன்வரும் மஷாயை தவறாகப்புரிந்துகொண்டு, அவரை சாபம் இட்டு, அந்த சாபம் நிறைவேறிவிட்டது என்று எண்ணி மஷாய்க்காக மிகவும் பரிதாபப்பட்டு தவிக்கும் உடன்கட்டை ஏறிய அபயா போன்ற கதாப்பாத்திரத்தைத் தான் நான் உத்தேசிக்கிறேன். ஒழுங்கங்கள் அற்ற, தான்தோன்றியான ரானாபடக் போன்ற கதாப்பாத்திரம்கூட சஞ்சலமே இல்லாத சுயநிமிர்வுடன் ஒருமாதிரி லட்சியவாத பிடிப்பு உள்ள ஆளுமையாகத்தான் நம்முன்னே வருகிறார். இனியும் இந்த கதாப்பாத்திரங்களின் பட்டியலை நீட்டலாம். ஆனால், ஆரோக்கிய நிகேதனத்தின் பேசுபொருள் மனிதமகத்துவம்தான் என்றும் அந்த பேசுபொருளை திட்டவட்டமாக வடிவில், எல்லா கோணங்களிலும் காண்பிக்க நாவலாசிரியரால் முடிந்திருக்கிறது என்ற கருத்தை நிறுவ மேலும் மேலும் உதாரணங்களை அடுக்குவது அவசியமேயில்லை.
மகத்துவத்தின் அடிப்படையான கூறு என்ன என்று கேட்டால் அதை ‘நன்மை’ என்றுதான் சொல்ல முடியும். ஒரு கதாப்பாத்திரம் மகத்துவத்தை அடைகிறது என்றால், ஏதோ ஒரு வாழ்க்கைத் தருணத்தின் அசாதாரணத்துவம் வழியாக மேன்மையை அடைவது என்பது ஒரு வழிமுறை. அவ்வாறு அல்லாமல், ஒரு ஆளுமையின் இயல்பிலேயே, அதாவது அவனது தனிவாழ்க்கையில் தன்னிச்சையாகவே மகத்துவம் வெளிப்படும் என்றால், அது ஒரு ஒளிவட்டம்போல அந்த ஆளுமையின் தலையை அலங்கரிக்கும். இங்கே நன்மை என்பது மகத்துவத்தின் சர்வசாதாரணமான அடிப்படைக்கூறாக ஆகிவிடுகிறது. இந்த நன்மை ஆரோக்கிய நிகேதனம் நாவல் காட்டும் வாழ்க்கைச்சித்திரத்தில் தாராளமாகவே இருக்கிறது. ஒருவகையில் பார்த்தால், எல்லா கதாப்பாத்திரங்களின் வழியாகவும் நன்மையை கொண்டாடும், நன்மையை வழிபடும் ஒரு நாவல்தான் ஆரோக்கிய நிகேதனம். வெவ்வேறு வகையான மனித ஆளுமைகளை நன்மையின் ஒற்றை சரடில் இணைத்திருக்கும் ஒரு நாவல் என்று சொல்லும்போது படைப்பூக்கம் துளியும் இல்லாத நீதிநெறித்கதை என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். பார்வைக்கோணத்தின் மந்திரக்கோலை வைத்துதான் இந்த வித்தையை நாவலாசிரியர் சாதித்திருக்கிறார். பார்வைக்கோணத்தின் அசாதாரணத்தன்மையின் காரணத்தால் அன்றாட வழ்க்கையின் மிகச் சாதாரணமான அம்சங்கள்கூட அசாதாரணமான உணர்வுநிலைகளை வெளிப்படுத்துகின்றன. இந்த நாவலில் ராணா பாடக், ராமஹரி, சசி, தந்துகோஷால் போன்ற கதாப்பாத்திரங்கள் வேறு எந்த நாவலில் வந்திருந்தாலும் வாசகனில் வெறுப்பையும் அருவருப்பையும்தான் ஏற்படுத்தியிருப்பார்கள். கிட்டத்தட்ட வாசகன் தன் சொந்த வாழ்க்கையில் அம்மாதிரியான ஆட்களை எதிர்கொள்ளும்போது என்ன அனுபவத்தை அடைவானோ அதேபோல. ஆனால், ஒரு பெண்ணுடனான முறைமீறிய உறவில் காசநோயை பெற்றுக்கொள்ளும் தான்தோன்றியான ராணாபாடக் ஒரு இலட்சியவாதத்தின் பீடத்தில்தான் நிற்கிறான். நாவலுக்கு தீவரத்தையும், உணர்ச்சிகரத்தையும் ஏற்படுத்த கதாப்பாத்திரங்களுக்கு நோய்க்கூறுகளை திட்டமிட்டு உருவாக்கி, அந்த நோய்மைகளை வெளிச்சம்போட்டு காட்டும் நாவல்களை(கலைத்திறமைகளை) எளிதாக எங்கு காணமுடியும்.
அழகிய மணவாளன்அம்மாதிரியான நாவல்களில் ஆர்வம் உள்ள வாசகர்களுக்கு ஆரோக்கிய நிகேதனம் நாவல் கதாப்பாத்திரங்களை கையாளும் முறை கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்று தோன்றாது. கவனித்தாலும்கூட அவர்களை அது கவராது. தன் சொந்த இயல்புகளுக்கும், விழைவுகளுக்கும், விதிக்கும் கீழ்ப்பட்ட கைவிடப்பட்டவனும், பலவீனமானவனும், நேசிக்கப்பட வேண்டியவனும் தான் மனிதன் என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கைப் பார்வையில் சிபிலிஸ்(Syphilis) போன்ற பால்வினை நோய்வாய்ப்பட்டவர்கள் நம் எண்ணத்திற்கும், பரிவுணர்ச்சிக்கும் முன் இன்னும் பெரிய கையை நீட்டியவர்களாக, நம்மிடம் மேலும் இரப்பை பெறுபவர்களாக ஆகிவிடுகிறார்கள். பேசுபொருளின் நிமிர்வும் வடிவத்தின் நிமிர்வும் ஒன்றாக ஆகிய உயித்துடிப்புள்ள இந்த நாவல் விவாதிப்பதற்கு எண்ணற்ற சாத்தியங்கள் கொண்ட ஆக்கம்.
தமிழாக்கம் அழகிய மணவாளன்
புதிய எழுத்தாளர்களுக்கு…
அன்புள்ள ஜெ
நான் எழுதிய முதல் கதையை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். நீங்கள் படித்துப்பார்த்து உங்கள் கருத்தைச் சொன்னால் நான் என் இலக்கியவாழ்க்கையில் முன்னகர்வதற்கு உதவியாக இருக்கும்.
ஆர்.
***
அன்புள்ள ஆர்
இலக்கியவாதிகளுக்கு எழுத ஆரம்பிப்பவர்கள் தங்கள் தொடக்ககாலப் பயில்முறைப் படைப்புக்களை இப்படி அனுப்பக் கூடாது. அவற்றை வாசிப்பதற்கான நேரம் அவர்களுக்கு இருப்பதில்லை. அதைச்செய்ய ஆரம்பித்தால் வேறெதற்கும் நேரமிருக்காது.
நான் புதிய படைப்புக்களை கவனிப்பதுண்டு. ஆனால் அவை எங்கேனும் பிரசுரமாகியிருக்கவேண்டும். அதுவே முதல் சல்லடை. அதில் தேறுவதே முதல் அறைகூவல். அதை மேற்கொள்ளுங்கள். தரமான இதழ் ஒன்று அக்கதையை வெளியிடட்டும். அது வெளியிடும் வரை உங்கள் எழுத்தை செப்பனிட்டுக்கொண்டு முன்னகருங்கள். அது ஒரு போராட்டம். அந்த போராட்டம் வழியாகவே நீங்கள் முன்னகர்கிறீர்கள். அப்படித்தான் நாங்கள் அனைவருமே வந்திருக்கிறோம்,
அந்த இதழ்கள் உங்கள் படைப்புக்களை நிராகரித்தால் உடனே அந்த இதழ்கள் மேல் விமர்சனங்களை வளர்த்துக்கொள்ளாதீர்கள். வேண்டியவர்களைத்தான் வெளியிடுவார்கள், ஆள்பிடிக்கவேண்டும் என்றெல்லாம் உங்களை நீங்களே வெளியே தள்ளிக்கொள்ளவேண்டாம். அதை அறைகூவலாக எடுத்துக்கொண்டு இலக்கியம் வாசித்து, எழுதி பயிற்சி எடுத்து மேம்படுபவர்களே எழுத்தாளர் ஆகிறார்கள்.
அதன்பின் இரண்டாவது சல்லடை, வெளியானபின் அந்தக்கதை சிலரை பாதிக்கவேண்டும். அவர்கள் அதைப்பற்றிப் பேசவேண்டும். அப்படியாக அது என் வரை வரவேண்டும். என் வாசகர் வட்டம் பெரிது. உண்மையாகவே மதிப்புள்ள படைப்பு நான் மதிக்கும் சிலர் கண்களுக்குப் படும். அதன்பின்னரே நான் வாசிக்கமுடியும். அதுதான் எனக்கு இயல்வது.
சரி, ஆரம்பகட்ட எழுத்தாளர்கள் என்ன செய்யவேண்டும்? எப்படி தன் படைப்புக்களைச் செப்பனிட்டுக் கொள்ளவேண்டும்?
இலக்கியப் பயிலரங்குகள் உதவியானவை. நானே அவ்வப்போது புதுவாசகர்களுக்கான பயிலரங்குகள் நடத்துகிறேன். அதில் இரண்டு நாட்களை இதற்காகவே ஒதுக்குகிறேன். அங்கே அனைத்து ஆக்கங்களையும் வாசித்துக் கருத்துரைத்து வழிகாட்டுகிறேன். அங்கே வந்து விவாதிக்கலாம், கற்றுக்கொள்ளலாம்.
தன் தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் படைப்புக்களை கொடுத்து அவர்களிடம் விவாதிப்பது, தொடர்ச்சியாக அவற்றைச் செய்வது மிக அவசியமானது. மூத்த படைப்பாளிகளின் வழிகாட்டலை விட ஒரு படி மேலாக பயனளிப்பது. தமிழகத்தின் பல நகரங்களில் அத்தகைய இளம்படைப்பாளிகளின் கூடுகைகள் நடைபெறுகின்றன. இன்று அமெரிக்காவிலும் பிரிட்டனிலும்கூட தமிழ் இலக்கியக் கூடுகைகள் நிகழ்கின்றன. அவற்றைப் பற்றிய செய்திகள் இந்த தளத்தில் உள்ளன.
[அவ்வண்ணம் எவற்றிலுமே கலந்துகொள்ள முடியாதவர்கள்,எவரிடமும் விவாதிக்க முடியாமல் வாழ்பவர்கள் என்ன செய்ய என்று கேள்வி ஒருமுறை வந்தது. அவர்கள் இலக்கியம் பக்கம் வரவேண்டாம் என்பதே என் பதில். வாழ்க்கையில் தான் முதன்மையாகக் கருதும் ஒன்றுக்காக சற்றும் பணமோ, நேரமோ செலவிட முடியாதபடி வாழ்பவர் அறிவார்ந்த உள்ளடக்கமோ தீவிர ஆர்வமோ இல்லாதவர். அவரெல்லாம் எழுதவோ வாசிக்கவோ கூடாது. வேறு ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன.]
ஜெ
வாசிப்பின் வழிகள்

நவீனத் தமிழிலக்கியக் களத்திற்குள் ஒருவர் தற்செயலாகவே நுழைகிறார். பெரும்பாலும் எங்காவது எவராவது அளிக்கும் ஒரு நூலை புரட்டிப்பார்த்து, ஆர்வம் கொண்டு படிக்க ஆரம்பித்து இலக்கிய உலகுக்குள் நுழைகிறார். இங்கே அவர் ஏராளமான கேள்விகளையும் சிக்கல்களையும் சந்திக்க நேர்கிறது. பல குழப்பங்கள் அவருக்கே உருவாகின்றன. அவற்றை அவர் தொடர்ந்த விவாதம் வழியாகவே தீர்த்துக்கொள்ள முடியும்.
இந்நூலில் அத்தகைய விவாதங்கள் கேள்விபதில் வடிவில் இடம்பெற்றுள்ளன. இலக்கிய உலகுக்குள் இன்று நுழையும் வாசகர்கள் பெரும்பாலும் இணையதள வாசிப்பு வழியாகவே வருகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தோன்றும் அடிப்படையான ஐயங்களை கடிதங்களாக எழுதி அனுப்புகிறார்கள். அவற்றுக்கு பதில் சொல்லும்போது அதே வகையான ஐயங்கள் கொண்ட பல்லாயிரம்பேர் உள்ளனர் என்று எண்ணி, அவர்களுக்கும் சேர்த்து விரிவாகப் பதில்சொல்வது என் வழக்கம். அப்படிச் சொல்லப்பட்ட பதில்கள் இவை
தனித்தனியான கேள்விபதில்கள் என்றாலும் ஒட்டுமொத்தமாக தொகுக்கையில் ஒரே உரையாடலாக இவை ஆவதை காணலாம். ஒரு வினாவுக்கான பதில் இன்னொரு வினாவுக்கு வழிவகுக்கிறது. கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரே தரப்பாக ஆகின்றன. வாசிப்பை ஒழுங்குபடுத்திக்கொள்ள, முனைப்பாக்கிக்கொள்ள முயலும் அனைவருக்கும் இவை உதவும் என நினைக்கிறேன்.
இந்நூலை விஷ்ணுபுரம் அமைப்புக்கே குடும்ப மருத்துவரான நண்பர் மாரிராஜ் இந்திரன் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
ஜெ
***


ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை
வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரை

ஐந்து நெருப்பு முன்னுரை
தேவி – முன்னுரை
பொலிவதும் கலைவதும் முன்னுரை

குமரித்துறைவி முன்னுரை
எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரை

ஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரைஅந்த முகில் இந்த முகில் முன்னுரை

பத்துலட்சம் காலடிகள் முன்னுரை
இருகலைஞர்கள் முன்னுரை
உடையாள் முன்னுரை
ஞானி முன்னுரை
கதாநாயகி முன்னுரை
வாசிப்பின் வழிகள் முன்னுரை
பொன்னியின் செல்வன், ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு முடியப்போகும் செய்தி அறிந்து நிறைவடைந்தேன். பலகாலமாக பலரும் எடுக்க நினைத்த சினிமா அது. இப்போது பெரும்பாலும் நிறைவேறியிருக்கும் கனவு.
இன்று சிலருக்கு அந்தக்கதையை அப்படியே எடுக்கமுடியுமா என்ற சந்தேகமெல்லாம் வந்தது. அப்படியே எடுக்கமுடியாது. அதற்குச் சீரியல்தான் எடுக்கவேண்டும். ஆறுமணிநேர சினிமா என்றாலும்கூட சுருக்கியாகவேண்டும்.
பொன்னியின்செல்வன் கதை ஒரு கதாபாத்திரம் வழியாகச் சென்று கொஞ்சதூரம் போனபின் இன்னொரு கதாபாத்திரம் வழியாகச் செல்லும். அதில் பல சரடுகள். பல இடங்களில் அது மூலக்கதையை விட்டுவிட்டுச் செல்லும். அதை அப்படியே சீரியலாகக்கூட எடுக்கமுடியாது. அது நாவலின் இயல்பு. சினிமாவும் சீரியலும் கதையோட்டம் திசைதிரும்பாமல் அமையவேண்டியவை. ஆகவே சினிமா வேறு நாவல் வேறுதான்.
நாவலில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் எவரோ எவரிடமோ சொல்வதுபோலத்தான் வரும். போர்கள் கூட சுருக்கமாகச் சொல்வதாகவே இருக்கும். நேரடி வர்ணனையாக, காட்சியாக போரே வராது. பேச்சுதான்.ஆனால் சினிமாவில் அப்படி வசனமாக காட்டமுடியாது.
நாவலில் குணச்சித்திரங்கள் கொஞ்சம்கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கும். நந்தினி, பழுவேட்டரையர் கதாபாத்திரங்கள் அப்படி மாறும். அதேபோல சின்னக்கதாபாத்திரங்களான மணிமேகலை, கந்தமாறன் எல்லாம் சட்டென்று பெரிசாகும். அதையும் அப்படியே எந்தச் சினிமாவும் காட்டாது.
ஆகவே சினிமாவேறு நாவல் வேறுதான். நாவலில் இருந்து எடுத்துக்கொண்டு சினிமாவாக ஆக்கப்படுகிறது. அதை ஏன் சினிமாவாக எடுக்கவேண்டும்? நாவல் என்னதான் வாசிக்கப்பட்டாலும் தமிழகத்தில் அதை வாசித்த ஐந்துலட்சம்பேர் இருந்தால் அதிகம். சினிமா அதை பலகோடிப்பேருக்கு கொண்டுசென்று சேர்க்கிறது. சின்னக்குழந்தைகளுக்கு கொண்டுசேர்க்கிறது. இந்தியா முழுக்க உலகம் முழுக்க கொண்டுசெல்கிறது.
நம் வரலாற்றை சினிமாவாக எடுப்பது ஏன் தேவையென்றால் அந்தக்காலகட்டத்தின் அரண்மனைகள், நகைகள், ஆடைகள் என எல்லாவற்றையும் காட்சியாக காட்டுவதற்காக. நம்முடைய இறந்த காலம் எப்படி இருந்தது என்று காட்டுவதுதான் நோக்கம். இறந்தகாலப்பெருமிதம் இல்லாத சமூகத்துக்கு தன்னம்பிக்கை இருக்காது.
சினிமா வழியாகத்த்தான் தமிழகத்தின் ஒரு பொற்காலம் இளைஞர்களின் மனதிலே நிலைகொள்ளும். அந்த வாழ்க்கை அப்படியே நிலைகொள்ளும். ஹாலிவுட் சினிமாக்களெல்லாம் அப்படித்தான் பழைய ஐரோப்பாவை உருவாக்கி கண்முன் காட்டின.அதேபோல ஜப்பானியப்படங்கள். அகிரா குரசோவா எடுத்தவை. இப்போது சீனப்படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால் நிஜத்தை அப்படியே காட்டமுடியுமா? உண்மையை காட்டமுடியுமா? உண்மை என்னவென்று நமக்கு தெரியாது. நம்மால் ஊகிக்கத்தான் முடியும். அந்த ஊகத்தைக்கொண்டு ஒரு குளோரியஸ் பிக்சரைத்தான் நாம் உருவாக்கவேண்டும். ஆய்வுகளில் அது தேவையில்லை, உண்மைதான் முக்கியம். ஆனால் இது இளையதலைமுறைக்கானது. இது ரொமான்ஸ். ஆகவே இதில் கனவுதான் முக்கியம்
இது எல்லாவகையிலும் புனைவுதான். நம் இறந்தகாலப்பெருமையை நாம் புனைகிறோம். ஹாலிவுட் ஜப்பான் சீனா எல்லாம் புனைந்ததும் அப்படி கற்பனையான குளோரியைத்தானே ஒழிய அப்பட்டமான யதார்த்தத்தை அல்ல.
சோழர்களின் காலம்தான் தமிழ்ப்பண்பாட்டின் உச்சக்கட்ட காலம். சங்ககாலமெல்லாம் தொடக்கம்தான். சோழர்காலத்தில் நாம் ஒரு பேரரசை உருவாக்கினோம். தமிழக எல்லையை விட்டு வெளியே சென்றோம். கோயில்கலை, காவியங்கள், இசைக்கலை ,சிற்பக்கலை எல்லாமே உச்சத்தை அடைந்தன. அது தமிழ் வீரக்குடிகளின் வெற்றியாகும்.
அந்தப் பேரரசின் தொடக்கமென்ன என்று காட்டும் ஒரு நாவல் பொன்னியின் செல்வன். ஆகவே அது புகழுடன் இருக்கிறது.ஆனால் அதை அது வெறும் சித்திரமாகக் காட்டவில்லை. சாகசநாவலாக காட்டுகிறது. விளையாட்டுத்தனமும் வீரமும் கொண்ட நாவல். குழந்தைகள் விரும்பிப்பார்க்கும் சினிமாவாக அதை ஆக்கமுடியும். தமிழர்களின் ஒளிமிகுந்த காலகட்டம் குழந்தைகளுக்கு தெரியவரும்.
அந்த குளோரியஸ் சித்திரத்தை சீரியலாக எடுக்கமுடியாது. அதற்கு சீரியலில் பட்ஜெட் இருக்காது. மணிரத்னம் நினைத்தால்தான் அந்த பட்ஜெட் கொண்டுவர முடியும். சாதாரணமான ஸ்டண்டுகளுக்கெல்லாம் பட்ஜெட்டை கோடிக்கணக்கில் போடுபவர்கள் நாம். இந்த மாதிரி நம் பாரம்பரியப்பெருமையை காட்டும் படங்களுக்கு எத்தனை பட்ஜெட் போட்டாலும் தகும்.
இந்த வகையில் நம் பெருமையை எடுத்து நாமே பார்க்கமட்டும் செய்தால் போதாது. இந்தியாவே பார்க்கவேண்டும். உலகமே பார்க்கவேண்டும். அப்போதுதான் நம் பெருமை நிலைநாட்டப்படும். நம் பிள்ளைகளிடம் நாம் இதைக் கொண்டு சேர்க்கவேண்டும். உலகம் முழுக்க உள்ள நம் வம்சாவளியினரிடம் கொண்டுசென்று சேர்க்கவேண்டும்.
நாவலாக இருந்தால் இதெல்லாம் சாத்தியமாகாது. சினிமா மக்களிடம் சேர்ந்தபின் நாவலை இன்னும் அதிகமாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். இன்னும் விரிவான சித்திரம் கிடைக்கும். அதற்கு மாறாக நாம் வாசித்த நாவல் நாவலாகவே இருக்கவேண்டும், சினிமா எடுத்தால் நாவல்போலவே எடுக்கவேண்டும், நாவலையே சினிமாவில் காணவேண்டும் என்று சொல்வதெல்லாம் அசட்டுத்தனமாகும்.
பொன்னியின் செல்வன் ஐரோப்பிய சினிமா போல இருக்க முடியாது. வீரபாண்டியக் கட்டப்பொம்மன் போல அடுக்குமொழி வசனமாகவும் இருக்கமுடியாது. நவீனத் தொழில்நுட்பத்துடன் இன்றைய ரசிகர்களின் பார்வைக்காக எடுக்கப்பட்ட பொழுதுபோக்குச் சினிமாவாகவே இருக்கமுடியும். அப்போதுதான் அந்த நோக்கம் நிறைவேறும்.
தமிழ்நாட்டில் சோழப்பேரரசு என ஒன்று இருந்தது என்பதையே வட இந்தியர்களிடம் சொல்ல முடியாது. எவருக்குமே தெரியாது. அவர்கள் இந்தியாவிலிருந்த பேரரசுகள் எல்லாமே மௌரியர், குப்தர் என்று சொல்வார்கள். வட இந்தியாதான் தென்னிந்தியாவை எல்லா காலத்திலுமே ஆட்சி செய்தது என்று சொல்வார்கள். பெரிய அறிஞர்கள், ஐஏஎஸ் காரர்கள்கூட ஆத்மார்த்தமாக நம்பி அதைச் சொல்வதை கேட்டிருக்கிறேன்.நான் ராணுவத்தில் இருந்த காலத்தில் ராஜராஜனை தெரிந்த ஒரு வட இந்தியரைக் கண்டதே இல்லை.
நம்முடைய புலிக்கொடியை இந்தியா முழுக்க வாழும் இளைய தலைமுறை பார்க்கவேண்டும். சோழர்களின் வெற்றியை அவர்கள் அறியவேண்டும்.ஒரு நல்ல கமர்ஷியல் சினிமா அதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதுபோல வேறெந்த ஊடகமும் செய்யமுடியாது.
அதற்கு நாம் நம் பாரம்பரியத்தை, தமிழ்ப்பெருமையை தூக்கிப்பிடிக்கவேண்டும். நாம் அதைக் கொண்டாடவேண்டும். அந்தச் சினிமாவின் நோக்கமென்ன, அந்த சினிமா எப்படி இருக்கமுடியும் என்பதெல்லாம் நமக்கு கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும். அற்பமான காழ்ப்புகளால் இத்தகைய பெரிய முயற்சிகளை எதிர்ப்பதும் அறிவுஜீவி என்று காட்டுவதற்காக மட்டம் தட்டுவதும் நமக்கே நாம் புழுதிவாசி பூசிக்கொள்வதுபோல.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் சமூகவலைத்தளங்களில் பரவும் காழ்ப்பைக் கண்டுதான். யாரோ ஒருசிலர் ஒரு ஃபேன் மேட் டிரையிலர் செய்து வெளியிட்டிருந்தனர். வெறும் ஆர்வம். அதில் வேறுபடங்களிலுள்ள கிளிப்பிங் சிலவற்றை சேர்த்திருந்தனர். அதில் விக்ரம் முகத்தில் விபூதி இல்லை என்றும், மணிரத்தினம் இந்து மரபை அவமதிக்கிறார் என்றும் வசைபாடித்தள்ளியது ஒரு கும்பல். அது ஃபேன் மேட் டிரையிலர் என்று சொன்னபோதும் வசைதான்.
இன்னொருபக்கம் அறிவுஜீவிகள். ஒருவர் என் நண்பர். அவர் விளம்பரத்திலிருக்கும் வாளில் கைப்பிடி தப்பாக இருக்கிறது என்று முன்பு எழுதினார். நீங்கள் தொல்பொருள் ஆய்வாளரா என்று கேட்டேன். இல்லை. சாதாரண அரசு அதிகாரி. அது குத்துவாள், வீசி எறியும் வாள், அதற்கு பிடி அப்படித்தான் இருக்கும் என்று நான் விளக்கினேன். உடனே சீண்டப்பட்டு கண்டபடி பொன்னியின்செல்வனையே திட்ட ஆரம்பித்துவிட்டார். நாம் வெளிவந்தாகவேண்டியது இந்த மனநிலையில் இருந்துதான்.
அழகர் ஆறுமுகம்
துவந்தம், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
துவந்தம் ஒரு சிறந்த கதை. உண்மையில் அக்கதையை நீங்கள் அளித்த ஒரு மானசீகச் சட்டகப்படி வாசித்தபோதுதான் கதை எவ்வளவு ஆழமானது என்ற எண்ணம் ஏற்பட்டது, அகம் புறம். இரண்டிலும் துவந்தம் நடந்துகொண்டிருக்கிறது. பெண் புறத்தை வென்று காட்டுகிறாள். அகத்தில் அவளை வெல்லமுடியாது என்று நிறுவிவிடுகிறாள். வேட்டை விலங்குகளின் உலகம். அதில் இரையாக அல்ல வேட்டைவிலங்காகவே இருக்கப்போவதாக அவள் நிறுவிவிடுகிறாள்.
இந்தக்கதையில் புறவுலகத்தில்தான் அத்தனை விரிவு. அகவுலகத்தில் சுருக்கமான சித்திரம்தான். ஆனால் அந்தப் புறவுலகச் சித்தரிப்பைக்கொண்டு அகவுலகை விளக்கி விரிவாக்கிக்கொள்ள முடியும். அந்தக் கற்பனைக்கான வாய்ப்புதான் இதை அபாரமான கதையாக ஆக்குகிறது. திருச்செந்தாழைக்கு என் அன்பு
ஆர்.ராகவ்
அன்புள்ள ஆசிரியருக்கு,
தங்களின் அறிமுகத்தால் ஒரு நல்ல கதை படித்தேன். கதை ஆசிரியரின் நடையும், இடையிடையே எடுத்தாளப்பட்டிருக்கிற உவமைகளும், இடியெனவும், சில்லெனவும் இதயத்தில் இறங்கியபடியே இருந்தன. இந்த மனம்தான் எத்தனை விசித்திரமானது. ஒரு கணம் “நாடோடிக்குக் கிடைக்கிற இறைச்சித் துண்டு”என எச்சில் கூட்டுகிறது. அதுவேதான் வியாபாரியின் கடைவாய்ப் பற்களுக்குக் கூழாகிவிடுகிற பயமும் கொள்கிறது.
தனது மதிப்பிட முடியாத உணர்வுகள் கரிசனத்துக்கான முதலீடாக விலைபோகும் ஆதங்கம் கொள்வதும், “கெட்டியான கொய்யாக்காய் நெற்றி” என மறுகணமே குறுகுறுப்பதுமாய், கதைக்குள்தான் எத்தனை ஆடல்கள், ஆட்டுவித்தல்கள். கொன்றைமரம் அப்படியே நின்றிருக்க, வானம்தான் வெளுத்துவிட்டது. ஆனால், சீக்கிரமே இருள் கவிவதும் அதே வானத்தில்தானே.
இப்படித்தான் கதை முடிந்தபின்னும், ரயில் கடந்தபின்னும் எனக்குள் என்னென்னவோ கடக் கடக் தடக் தடக்குகள். பொதுவாக ஒரு நல்ல கலைஞனுக்கு இன்னொரு கலைஞனைப் பிடிக்காது என்று தமிழ்த்திரை இசையுலகின் ஒரு முக்கிய ஆளுமை ஒரு பேட்டியில் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். முரணாக, மிகத் திறந்த மனதோடு பிற எழுத்தாளர்களை எங்களுக்கு அறிமுகம் செய்கிற உங்களின் பரந்த மனம் கண்டு வியக்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி
ப. சரவணமணிகண்டன்
வாழும் வள்ளுவம்
***
அன்புள்ள ஜெ,
தமிழில் எழுதப்பட்ட நல்ல கதைகளில் ஒன்று துவந்தம். வழக்கமாக இந்தவகையான புறவுலகங்கள் எழுதப்படும்போது இடதுசாரிப்பார்வையில் சுரண்டல், துக்கம் என்ற அளவிலேயே எழுதப்படும். அதில் ஒரு டிராக் இருக்கும். ஏழைவிவசாயியின் துயரம். இங்கே எல்லாமே ஒருவரை ஒருவர் வெல்வது வெல்லப்படுவது என்ற அளவிலேயே நிகழ்கிறது. நா ஹன்யதே என்று கீதை சொல்வதுபோல. கொலைக்களம், ஆனால் எவரும் கொல்லப்படுவதில்லை. திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கிறார்கள்.
இத்தகைய உலகத்தை எழுதவேண்டுமா என்ற கேள்வி உள்ளது. நம்மைச்சுற்றி பல்வேறு தொழிலுலகங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் எழுதியாகவேண்டுமா? அதற்கான பதில் இதுதான். இந்த தொழில் உலகங்களில் உண்மையில் வெளிப்படுவது மனிதனின் உச்சம் என்றால் அதை எழுதியாகவேண்டும். அது மேன்மையோ கீழ்மையோ. சங்ககாலத்தின் போர்க்களம்தானே இப்படி உருமாறியிருக்கிறது?
இரண்டு போர்க்களங்களும் அருமையாக ஒன்றையொன்று அர்த்தப்படுத்தும்படி எழுதியிருக்கிறார் திருச்செந்தாழை. புதிய கலைஞருக்கு என் வாழ்த்துக்கள்.
அர்விந்த்குமார்
***
வெண்முரசில் நிறைநிலவு- சுபஸ்ரீ
நிறைநிலவு கிளர்த்தும் நினைவுகள் அநேகம். இரு வருடங்களுக்கு முன் சித்திரை முழுநிலவு தொடங்கி பங்குனி முழுநிலவு வரை ஆண்டின் ஒவ்வொரு முழுநிலவும் ஒவ்வொரு இடத்தில், பலவேறு தேசங்களில் காண நேர்ந்தது. கங்கையின் மடியில், நீலக்கடல் அலைகளில், நகர நெரிசல்களுக்கு மேலே, அடர் மரங்களுக்கு இடையே, மணல் வெளியில் எனப் பல சித்திரங்கள் நிறைந்தது மனது. முழுநிலவினால் ஆனதோர் ஆரம் ஒன்றைத் தொடுத்துக் கொண்ட ஆண்டு. சென்ற ஆண்டு வெண்முரசு முழுமையடைந்த நாளில் வியாச பூர்ணிமை என்றும் அறியப்படும் குரு பூர்ணிமை வெண்முரசு தினமாக மலர்ந்தது. அந்த நினைவு வெண்முரசின் வெண்ணிலவுக் கணங்களை கோர்த்துப் பார்க்கும் எண்ணத்தை அளித்தது.
வெண்முரசை மீண்டும் இதற்கென வாசிப்பதன் முன்னரே முதலில் மனதில் எழுந்த வரி சித்திரை முழுநிலவு குறித்தது. வெண்முரசு துவங்கியதிலிருந்து எங்கிருப்பினும் சித்திரை முழுநிலவன்று வெண்முரசில் இடம்பெறும் இவ்வரிகள் நினைவில் எழுந்து அந்நாள் முழுவதும் உடனிருக்கும்.
“ அது சித்திரை மாதம் முழுநிலவு நாள். இனி என்றென்றும் ஞானம் விளையும் தருணமாகவே அது எண்ணப்படும் என்றார் பைலர். இந்த நாளில் பேராசிரியரின் பாதங்களைப் பணிந்து அவரளித்த ஞானத்திற்கு கைமாறாக தங்களை முழுதளிக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர். “இச்சொல் இங்கு வாழவேண்டும். இது இந்நிலத்தின் விதைக்களஞ்சியம்” என்றார் ஜைமினி.”
முதற்கனலில் வியாசவனத்தில் நிகழும் ஒரு சித்திரை முழுநிலவில் வியாசரின் மாணவர்கள் ஒன்று கூடி சொல்லும் வரி இது. மீண்டும் இமைக்கணத்தில் இத்தருணம் வரும்.
இன்றைக்கு ஒரு தலைமுறை முன்னர் வரை கூட பௌர்ணமியையும் அமாவாசையையும் வெவ்வேறு திதிகளையுமே வாழ்வின் முக்கிய தினங்களின் நினைவையொட்டி கூறி வந்திருக்கிறோம். அன்றாட மாற்றங்களோடு அகலாது உடன் வரும் விண்ணின் விழி. வெண்முரசு என்னும் காவியத்தின் ஒளியில் அதைக் காணும்பொழுது, நிலவு எந்த அளவுக்கு நமது வாழ்வின் முக்கிய தருணங்களை அடையாளப்படுத்தி வந்திருக்கிறது என்பதை நினைவூட்டுகிறது.
நிறைநிலவுநிகழ் மங்கலங்கள்
உதாரணமாக மங்கல நிகழ்வுகளாகிய மணநிகழ்வுகள் (பாண்டவர்-திரௌபதி மணமங்கலம் – பங்குனி முழுநிலவு, அரிஷ்டநேமியின் நிறைவுறா மணமங்கலம்), சுயம்வரங்கள்(தமயந்தியின் மணத்தன்னேற்பு -ஆவணி முழுநிலவு), அரச உரிமை அறிவிப்புகள் (புரூரவஸ் மைந்தன் ஆயுஸ் முடிசூட்டல், அஸ்தினபுரியின் இளவரசுப் பட்டம் குறித்த அறிவிப்பு), குருநிலைகளில் மாணவர்களின் வித்தையை பரிசோதிக்கும் பயிற்சிகள்(அக்னிவேசரின் குருகுலத்தில் நிகழும் பயிற்சிமுதிர்வு நிகழ்வுகள்) நிறைநிலவு நாட்களில் நிகழ்ந்திருக்கின்றன. இம்மாபெரும் காவியத்தின் முதற்கனலை ஏற்றும் காசி இளவரசிகளின் சுயம்வரம் வைகாசி மாதம் முழுநிலவு நாளில் நடக்கிறது. சுபத்திரையின் சுயம்வரமும் அதேபோல ஒரு வைகாசி முழுநிலவில் திட்டமிடப்படுகிறது.
போர் போன்ற ஷாத்திரம் கோரும் நிகழ்வுகளோ முழுநிலவுக்குப் பின்னர் நிகழ்கின்றன. மாபெரும் குருஷேத்திரப் போர் முழுநிலவுக்கு அடுத்த நாளில் துவங்கப்படுகிறது. ஆடிமாதம் தேய்பிறை முதல்நாள் கலி முழு வடிவுகொண்டு எழும் பொழுது என சகதேவன் துரியனுக்கு போருக்கான நாள் குறித்துத் தருகிறான்.
கல்வியின் நிறையொளி
ஆசிரியர் அளிக்கும் படைக்கலப் பயிற்சிகள் நிறைவடைந்து கச்சையும் குண்டலமும் அணியும் தருணமே ஒரு க்ஷத்ரியன் வீரன் என்னும் அடையாளத்தை முதலில் அணிகிறான். குருகுலத்து இளவரசர்களுக்கு சிராவண மாதம் முழுநிலவு (ஆவணி முழுநிலவு) நாளில் கச்சையும் குண்டலமும் அணிவித்து படைக்கலம் தொட்டுக்கொடுக்கும் சடங்கு நிகழ்கிறது. விண்ணேகிய பெருங்குருநாதர்கள் மண்ணை நோக்கி இளையோரை வாழ்த்தும் நாள் என்று வாழ்த்துகிறார்கள். பகற்பொழுதில் முழுநிலவு உதிப்பது தீர்க்கசியாமர் யாழ்தொட்ட நாளில் நிகழ்ந்த ஒரு அரிய நிகழ்வாக மக்கள் நினைவில் இருக்கிறது. முழுநிலவு நாளில் வேதச் சொல்லாய்வு போன்ற நிகழ்வுகள் நிகழ்வதை சொல்வளர்காட்டில் அறியலாம்.
குறிப்பாக சித்திரை முழுநிலவும் ஆஷாட மாதத்து முழுநிலவான குரு பூர்ணிமையும் பல முக்கிய நிகழ்வுகளின் சாட்சிகள்.
சித்திரை பூர்ணிமை
இந்திரப்பிரஸ்தத்தின் சுடர் ஏற்றும் விழா சித்திரை முழுநிலவில் நிகழ்கிறது. மண்ணில் இதுவரை எழுந்திராத ஒரு மாபெரும் நகரத்தை உருவாக்கி அதற்கு ஒளியேற்றும் நாளுக்கு சித்திரை முழுநிலவைத் தேர்கிறார்கள். “இருள்நிலவுப்பகுதியும் ஒளிர்நிலவுப்பகுதியும் நீண்டவை. முழுநிலவோ ஒரே ஒரு நாளுக்குமட்டும்தான்” என்ற வரிக்கு ஒப்ப மாபெரும் மனித உழைப்பில் வளர்ந்து அதன் உச்ச தருணம் அந்த முழுநிலவின் சுடரேற்று விழா. அதன் பின்னர் கைவிடப்பட்டு இந்திரப்பிரஸ்தம் ஒளியிழக்கும் தேய்பிறைக்காலமும் வருகிறது.
சித்திரை முழுநிலவின் சிறப்பு மீண்டும் மீண்டும் வெண்முரசில் வருகிறது. எட்டு மங்கலங்களும் நிறைந்த சித்திரை முழுநிலவு நன்னாள் என்கின்றனர் நிமித்திகர். அரிஷ்டநேமியை ஏற்றி அழைத்துச் செல்லும் மங்கலக்குறிகள் நிறைந்த சுப்ரதீபம் எனும் யானை சித்திரை முழுநிலவு நாளில் மண் நிகழ்கிறது. சித்திரை முழுநிலவு நாளை ஆசிரியரிடமிருந்து மாணவர்கள் இறுதிச் சொல்லை பெற்றுக்கொள்ள உகந்தது என கர்ணனுக்கு உரைக்கிறார் பரசுராமர். சித்திரை மாத முழுநிலவு கந்தர்வர்களுக்கு உரியது என்பதால் இல்லங்களிலோ தெய்வங்கள் பதிட்டை செய்யப்பட்ட காடுகளிலோ அன்றி வேறெங்கும் மானுடர் நடமாடலாகாது என்றும் பிறநிலங்கள் அனைத்திலும் கந்தர்வர்கள் களியாட்டு நிகழுமென்றும் மூதாதையர் சொல்கிறார்கள். தனது நிஷாத அடையாளங்களாகிய கலி மற்றும் காக வழிபாட்டை துறந்து இந்திரனை முதற்தெய்வமாக அறிவிக்கும் பொருட்டு கிரிப்பிரஸ்தத்தின் மீது சித்திரை மாதம் முழுநிலவு நாளில் இந்திரனின் பெருஞ்சிலையை நளன் நிறுவுகிறான்.
நிலவென்னும் அமுதம்
மலைவெளிகளில் முழுநிலவு சித்தத்தை அழியச் செய்யும் அனுபவம். நிழல் ஒளி விளையாட்டில் இருளின் வெவ்வேறு அடுக்குகள் நிலவின் ஒளியில் வெவ்வேறு கருமையின் அடர்த்தியில் வெண்பூச்சு கொண்டு துலங்குவது மானுடன் வரைய முடியாத ஓவியம். ஓரிரவு துங்கநாத் மலையின் அடிவாரத்தில் கூடாரத்தின் பாதுகாப்பில் அமர்ந்து கொண்டு துங்கநாத் சிகர நுனியில் சற்றே படர்ந்திருந்த பனிவிரிப்பு மெல்ல மெல்ல நிலவொளியில் விரிந்து மலர்வதை இரவு முழுவதும் அவ்வப்போது கண்விழித்து பார்த்திருந்த இரவு நினைவில் வருகிறது. அதுபோன்ற ஒரு பனிமலையின் நிறைநிலவுப்பொழுதை அர்ஜுனனை கருக்கொண்ட நிறைவயிறோடு குந்தி அனுபவிக்கிறாள். அவள் சதசிருங்க நாட்களில் நந்ததேவி அருகே இருக்கும் சரத்வான் ஆசிரமத்தில் நள்ளிரவில் ஒரு அழைப்பை உணரும் காட்சி. ஒளியில் அவள் கரைந்து போகும் உணர்வின் உச்சத்தில், அவ்வெண்ணிற ஒளியே உடலெடுத்து வந்தது போல ஒரு வெண்ணிறச் சிறுத்தைப்புலியை எதிரில் கண்டு மயங்கிவிடுவாள். அது ஒரு ஃபால்குன மாதத்து(பங்குனி) பௌர்ணமி. அந்த அத்தியாயமே இமயத்தின் மடியில் உலவித்திரியும் கனவைக் கிளர்த்தும் பகுதி.
“கதவைத்திறந்து பனிவெளிக்குள் இறங்கினாள். தரையெங்கும் வெண்பனி விரிந்திருந்தாலும் காற்றில் பறந்து உதிர்ந்துகொண்டிருந்த பனித்துகள்கள் முழுமையாக நிலைத்திருந்தன. அதிதூய காற்றுவெளி அசைவில்லாது நின்றது. வானம் மேகமற்று விரிந்திருக்க மேற்குச்சரிவில் முழுநிலவு இளஞ்செந்நிற வட்டமாக நின்றிருந்தது. அதைச்சுற்றி வானத்தின் ஒளிவட்டம் விரிந்திருந்தது…
கண்கள்தான் தெளிந்து வருகின்றனவா இல்லை ஒளி கூடுகிறதா என்று குந்தி வியந்துகொண்டாள். இல்லை ஒளி அதிகரிப்பது உண்மைதான். நிலவொளி ஒரு குறிப்பிட்டகோணத்தில் விழும்போது அங்கிருந்த பனிச்சரிவுகள் அதை முழுமையாக எதிரொளிக்கின்றன போலும். ஒளி மேலும் கூடியபோது அப்பகுதியே வெண்ணிறமான கண்கூசாத ஒளியலைகளாக மாறியது. ஒளியாலான மலைகள் , ஒளியாலான சரிவுகள் , ஒளியாலான வானம். தன் உடலும் அமர்ந்திருந்த பாறையும் எல்லாம் ஒளியாக இருப்பதை உணர்ந்தாள். ஒளியில் மிதந்து கிடப்பதைப்போல , ஒளியில் தன் உடல் கரைந்து மறைவதுபோல அறிந்தாள். ”
முழுநிலவுநாட்களில் பனிமலைச்சிகரங்களில் விண்ணவர்கள் வந்து இறங்குவதாக ஒரு நம்பிக்கை. சரத்வான் நந்ததேவியை சூழ்ந்த பனிச்சிகரங்களை பற்றி இவ்விதம் குறிப்பிடுகிறார். பால்ஹிகர் தான் வாழும் பனிச்சிகரங்களில் பொழியும் முழுநிலவில் இருந்தே தனது உயிராற்றலை பெற்றுக் கொள்வதாக கூறுகிறார். பால் பொழிவு போலிருக்கும் வெண்ணிற பொழுதுகளில் ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் அந்த அமுதை அருந்தியவராய் இறப்பை பல ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக சொல்கிறார். “கீழிருப்பவர்கள் உண்ணுவதும் உயிர்ப்பதும் நஞ்சு. ஆகவே நாள்தோறும் அவர்கள் நலிகிறார்கள்.” – இது ஒவ்வொருமுறையும் மலைமக்களின் உடற்திறனை காணும் போது உண்மையென்றே தோன்றுகிறது.
நிறைநிலவின் நறுமணம்
உலகெங்கும் நிலவுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள தொடர்பு பண்டைய காலம் தொட்டே ஏதோ ஒரு விதத்தில் அறியப்பட்டிருக்கிறது. நிறைநிலவில் வான் மீது பித்தெழும் அலைகடலென உளம் பொங்குவதை உணர்ந்திருக்கலாம். முழுவெண்திகிரி உணர்வுகளை கட்டின்றி பெருக்கும் காட்சிகளை நீர்க்கோலத்தின் கரவுக்காட்டிலும் நீலத்தின் கன்னியிடமும் காணலாம். தன்னிருப்பைக் கரைத்து விடும் பிரேமையின் ஒளி நிலவொளியில் மேலும் சுடர்கொள்கிறது.
நிறைநிலவில் நீலம் பித்தின் நிலம், பிரிவற்ற காதலின் நிலம், மண்மேல் ஒவ்வொன்றும் மலர்ந்திருக்கும் நிலம். வசந்த கால இரவில் எழும் முழுநிலவு ஆயிரம் சுனைகளில் ஆம்பலைத் தழுவுவது அபாரமான படிமம். மண்ணில் உயிர்கொண்டு வந்ததனைத்தையும் அணைக்கும் ஒற்றைப் பேரருள், பல நூறு கோபியருடன் திகழும் நீலனின் பிருந்தாவனத்து ராசலீலை என முழுநிலவில் மலர்கிறது.
நிலவணிந்த நீலக்கடம்பு நிலவன்றி ஓரணியும் சுமையாகும் உணர்வு நிலையைப் பேசுகிறது. நிலவொளி போல் உடைந்து சிதறி வெளியெங்கும் நிறைந்திடத் துடிக்கும் சித்தம். பரவெளியில் கலந்திடத் துடிக்கும் சிறுதுளி.
“ பனியீரம் நனைந்த முழுநிலவு. அது தொட்டு வருடி சொட்டி வடியும் இலைப்பாளங்கள். ஒளிகொண்ட ஓடைகள். வெள்ளித்தகடான சுனைகள். மணியாகி சுடர் எழுந்த கூழாங்கற்கள். மண்ணில் வழிந்தோடிய பெருமோனம். ”
முழுமையை அடைதல்
அருகநெறியினருக்கும் முழுநிலவு மிக முக்கிய தினமாக இருப்பதை வெண்முரசில் வரும் பல கதைகளில் அறியலாம். கஜ்ஜயந்தபுரியை ஆண்ட ரைவதகர், அருகர்களின் முதல்தாதை ரிஷபரின் கதையை வணிகர்கள் வாயிலாக அறிகிறார். ரிஷபர் அயோத்தியை ஆண்ட இக்ஷ்வாகு குலத்தைச் சேர்ந்தவர். இருபத்தியெட்டு ஆண்டுகாலம் அருந்தவம் இயற்றி சௌராஷ்டிர மண்ணில் அமைந்த பாலிதானம் என்னும் குன்றில் ரிஷபர் சித்திரை முழுநிலவு நாளில் மெய்மையை அடைகிறார்.
ஆண்டில் ஒருமுறை சித்திரை முழுநிலவு நாளில் யாதவர்கள் மந்தரமலைக்கு நோன்பு கொண்டு செல்லும் வழக்கமிருக்கிறது. மந்தரமலை எனும் சொல் விடுத்த அழைப்பை ஏற்று அரசு துறந்து செல்கிறார் ரைவதகர். அருகநெறியினருக்கு அவர்களின் பனிரெண்டாவது தீர்த்தங்கரரான வசுபூஜ்யரின் பதிட்டை மந்தர மலையில் இருக்கிறது. வசுபூஜ்யர் ஆஷாட மாதத்தின் முழுநிலவு நாளில் மந்தரமலையில் விண்ணுலகை அடைந்தவர். ரைவதகர் அங்கே சென்று மலையுச்சியில் முழுமையில் நிறைகிறார். பின்னர் அருக நெறியினராக பன்னிரெண்டு ஆண்டுகாலம் கஜ்ஜயந்தநாட்டின் ஊர்களில் அலைகிறார். வைகாசி முழுநிலவில் ரைவத மலையேறி வடக்கிருந்து உயிர்துறக்கிறார். சௌராஷ்டிர நிலத்து யாதவர்கள் அந்த நாளில் விழவெடுத்து வணங்குகிறார்கள். அகிம்சையின் முதல் விதை ஒரு சமூகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சௌராஷ்ட்ரத்தில் தொடங்குவதைக் காண்டீபத்தின் இப்பகுதியில் காணலாம். சௌராஷ்டிரத்தின் மக்கள் அருகநெறியை ஏற்று ரைவதகர் விண்நிறைந்த சித்திரை முழுநிலவு நாளில் படைக்கலங்கள் அம்மண்ணில் தேவையில்லை என முடிவெடுக்கிறார்கள்.
முழுமையில் அமர்தல்
நமது இந்திய மரபில் குரு பௌர்ணமி மகா வியாசரின் தினமாகப் போற்றப்படுகிறது. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் அக்குருதிக் களத்திலிருந்து விலகும் பொருட்டு வியாசர் இப்பாரத நிலமெங்கும் அலைகிறார். அறுதியாக குமரிமுனை வந்தடைந்து தன்னுள் அலைமோதும் அத்தனை சொற்களும் விலக, எஞ்சி நின்ற “மா” என்னும் முதற் சொல்லை அடைகிறார். அந்த நாளே ஆடிமாதம் முழுநிலவு என்று வியாச பூர்ணிமையாக வணங்கப்படுகிறது.
“அன்று பரதகண்டத்தின் எட்டு எல்லைகளிலும், அத்தனை குருநிலைகளிலும் எங்கள் ஆசிரியனின் அழியாச் சொல் ஓதப்படுகிறது. அதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் குருபூர்ணிமை நிறைநாள். அன்று தொல்மலைகள் எட்டிலும் சென்று அழியாப் பெருங்காவியத்தை முற்றோதுவது எங்கள் வழக்கம்” என்று இமைக்கணக்காடு (நைமிசாரண்ய ) குருநிலையை சேர்ந்த, வியாசர் மாணவர்களில் உக்ரசிரவஸ் என்னும் சூததேவரின் மாணவனாகிய சீர்ஷன் தென்திசை பாண்டியன் அவையில் சொல்கிறான்.
ஆடி மாதம் தட்சிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமை. உத்தராயணத்தில், இப்புவி ஆண்தன்மை வாய்ந்ததாகத் திகழ்வதாகவும், தட்சிணாயனத்தில் பெண்தன்மை நிரம்பியதாக, உள்வாங்கும் தன்மை கொண்டதாக விளங்குவதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த தட்சிணாயனத்தில் வரும் ஆஷாட மாதத்து முழுநிலவு நாளில் அனைத்தையும் கடந்த சிவம், ஞான தாகம் கொண்டு தன்னை நாடி வந்த சப்த ரிஷிகள் மேல் கருணை கொண்டு ஞானம் அருளிய நாளாகவும் வணங்கப்படுகிறது. இவ்வுலகின் எதுவும் சென்று தொடமுடியாத பேரிருப்பு கருணை கொண்டு ஆசிரியராக, குருவாக அமர்ந்த முழுநிலவு. அறிதலின் பாதைக்கான உறுதியை மேற்கொள்ளவும், அதிலே மனம் அமைந்திருக்கவும், குருவின் அருள் பெறவும் சிறந்த நேரம்.
குரு எனும் வார்த்தைக்கு “இருளை அகற்றுபவர்” என்று பொருள். தேடுதலில் இருப்பவரின் அக இருளை நீக்கி, ஒளியை உணர வழி செய்பவர். இந்திய மரபில் குருபௌர்ணமி அன்று, தேடுதலில் இருப்பவர்கள் தம் நன்றியை வியாசன் முதலாகிய ஆசிரிய நிரைக்கு, தத்தமது குருவிற்கு வெளிப்படுத்தி ஆசி பெறும் நாள். துறவின் முதல் சங்கல்பத்திற்கும், யோக சாதனைகளில் ஈடுபடவும், ஊழ்கத்தில் அமரவும் குருபௌர்ணமி உகந்த நாள்.
ஜனமேஜயனின் சர்ப்பசத்ர வேள்வியில் வியாச காவியநிறைவை ஒட்டி உளம் எழ, ஆஷாடமாதம் முழுநிலவு காவியம் முழுமைகொண்ட நாள் என்பதால் வியாசபூர்ணிமை என்றும், இக்காவியத்தை நூல்தொட்டு பயில்வோர் ஒவ்வொருவரும் குருபூர்ணிமை என்றும் கொண்டாடவேண்டும் என அறிவிக்கிறான். வியாசனின் பாதங்களைத் தொட்டு எழுதப்பட்ட வெண்முரசு என்னும் காவியம் நிறைவுற்ற நாளும் இதுவே. “வியாசன் முதல் நித்யா வரையிலான ஆசிரியர்களை நினைத்துக்கொள்ளும் நாள்” என்ற ஆசிரியரின் சொல்திகழ வெண்முரசு தினத்தில் அருள் கனிந்த ஆசிரிய நிரையை வணங்குகிறோம்.
குருபூர்ணிமைக்கு வெண்முரசின் வாழ்த்து: “மெய்மை அறிந்தோர் சொல்லும் வார்த்தையில் கலைமகள் வந்தமரும் நன்னாள். மந்திரங்கள் உயிர் கொள்ளும் தருணம்.”
ஓம் அவ்வாறே ஆகுக!
July 20, 2021
நாட்டார்த் தெய்வங்கள் விலக்கமும் ஏற்பும்
வேதாந்தமும் இறைவழிபாடும்
அன்புள்ள ஜெ
நாட்டார் தெய்வங்கள் பற்றி அத்வைதம் கொண்டிருக்கும் கருத்தை விளக்கி நீங்கள் அனுப்பிய கடிதநகலைப் பார்த்தேன். என்னுடைய கேள்விக்கும் அதில் பதில் இருந்தது.
ஆனால் நான் அந்தக்கேள்வியைக் கேட்பதற்கான காரணம் நாராயணகுரு நாட்டார் தெய்வங்களை நீக்கம் செய்தார், அத்தெய்வங்களின் சிலைகளை தூக்கி வீசிவிட்டு அங்கே வேறு பெருந்தெய்வங்களை அமைத்தார் என்ற செய்திதான். அவர் அத்வைதியானதனால்தான் அதைச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. அதைப்பற்றித்தான் விளக்கம் கோரினேன்.
சுந்தர்
அன்புள்ள சுந்தர்,
பழங்குடித் தெய்வங்கள் மற்றும் நாட்டார் தெய்வங்களையும் பற்றிய பார்வையில் வந்த மாற்றங்களை ஆன்மீகரீதியாக பொருள் கொள்வதை விட சமூகரீதியாக பொருள் கொள்வதே உகந்ததாக இருக்கும்.
நெடுங்காலமாக இந்தியாவில் இந்து, சமண, பௌத்த மதங்கள் மூன்று அடுக்குகளாகவே இருந்து வந்துள்ளன. உச்சியில் தத்துவார்த்தமான ஒரு மதம். அதற்கடியில் பெருந்தெய்வங்களால் ஆன ஒரு வழிபாட்டு மதம். அதற்கடியில் நாட்டார் பழங்குடி வழிபாடுகளின் தொகை ஒன்று. இந்த அமைப்பு இன்று இந்து மதத்தில் அவ்வாறே நீடிக்கிறது.
நாட்டார் தெய்வங்களும் பழங்குடித் தெய்வங்களும் பல்வேறு உள்ளூர் வழிபாடுகள், குலக்குறிகள், ஆசாரங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவை. ஒரு குலமோ, இனக்குழுவோ பௌத்த, சமண, இந்து மதங்களுக்குள் வரும்போது அவர்களின் தெய்வங்களும் உள்ளே வந்து உள்ளே அந்த மதங்களின் மையத்தரிசனத்திற்கு இயைப சற்று உருமாறி அமைகின்றன.
காலப்போக்கில் அந்த தெய்வங்களுக்கு ஒரு தத்துவார்த்தமான விளக்கம் சிலபோது அளிக்கப்படுகிறது. புராண உருவாக்கத்தினூடாக அச்சிறுதெய்வங்கள் பெருந்தெய்வங்களின் உலகில் அமையச் செய்யப்படுகின்றன. அவற்றுக்குரிய வழிபாட்டு முறைகள் அந்த மதத்தின் மைய நம்பிக்கைக்கேற்ப உருமாற்றம் செய்யப்பட்டு ஏற்பு கொள்ளப்படுகின்றன. உதாரணமாக பௌத்த, சமண மதத்தில் நுழைந்த தெய்வங்களுக்கு உயிர்ப்பலி இல்லாமலாகியது.
இந்துமதத்தில் தொடர்ந்து மூவாயிரம் ஆண்டுகளாக பழங்குடி, நாட்டார் தெய்வங்கள் உள்ளே நுழைந்து இவ்வாறு ஒர் ஒட்டுமொத்த அமைப்பில் பொருந்திக்கொண்டே இருந்திருக்கின்றன. இந்துமதம் ஒரு பிரம்மாண்டமான உரையாடல் மற்றும் தொகுப்புச் செயல்பாடினூடாக இடைவிடாது நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒரு மெய்ஞான செயல்பாடு. ஒரு பண்பாட்டுப் பரிணாமம். இவ்வாறு இந்துமதத்திற்குள் நுழைந்த நாட்டார் தெய்வங்கள் காலப்போக்கில் தாங்களும் பெருந்தெய்வங்களாவது உண்டு.
ஒவ்வொரு வட்டாரத்திலும் அந்த ஊருக்கான நாட்டார்த் தெய்வ வழிபாடு இந்துமதத்திற்குள் இருப்பதைப் பார்க்கலாம். வடஇந்தியாவில் ஏகவீரன் போன்ற தெய்வங்கள். தமிழ்நாட்டில் முனியசாமி, சுடலைமாடன் போன்ற தெய்வங்கள், கன்னி தெய்வங்கள், மூத்தார், நீத்தார் உருமாறிய தெய்வங்கள். இந்துமதத்தின் தத்துவக் கட்டமைப்பும் பெருந்தெய்வ வழிபாட்டுக் கட்டமைப்பும் இச்சிறுதெய்வங்களுக்கும் உள்ளே இடமளிப்பதாகதான் எப்போதும் இருந்துள்ளன.
ஏனென்றால் இந்துமதத்தின் அடிப்படை தத்துவ தரிசனமாகிய வேதாந்தம் எந்நிலையிலும் சிறுதெய்வங்களுக்கு இடமளிக்கிறது. வேதாந்தத்தின் சிறப்பே அனைத்தையும் தன்னுள் கோக்கும் அந்த மையத்தரிசனம்தான். ஒரு பொற்பட்டுநூல் போல பல்லாயிரம் மணிகளைக் கோத்து இந்துமதத்தை உருவாக்கியிருப்பது அதுதான்.
இந்துமதத்தின் மையச் சடங்கு முறைமைகளான வேள்வி மரபும் சரி, ஆலய வழிபாட்டு மரபும் சரி, நாட்டார் பழங்குடி தெய்வங்களை உள்ளே அமைத்துக்கொள்ளும் தன்மையுடன்தான் இருந்திருக்கின்றன. இன்றும் அவ்வாறே. நம் கண்ணெதிரிலேயே அந்த இணைவுச்செயல்பாடு நடந்துகொண்டிருக்கிறது.
[இந்துமத எதிர்ப்பாளர்கள் அஞ்சுவது அந்த இணைவுச்செயல்பாட்டைத்தான். அவர்கள் அதை அழித்தொழிக்கும் செயல்பாடு என திரித்து வசைபாடுகிறார்கள். ஆனால் அழித்தொழிக்கும் கொள்கை கொண்ட மதங்களை ஆதரிக்கிறார்கள். அழித்தொழிக்கும் கொள்கை கொண்ட மதங்கள் இந்துமதம் நாட்டார்- பழங்குடிப் பண்பாடுகளை அழிக்கிறது என கூக்குரலிடுகின்றன]
ஆனால் இந்துமத மறுமலர்ச்சிக் காலம் என்று நாம் சொல்லும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த நாட்டார் தெய்வங்களைப் பற்றிய ஒரு மாற்றுப் பார்வை உருவாகி வந்தது. நாட்டார்- பழங்குடி தெய்வங்களும் சடங்குகளும் இந்துமதத்தின் மையமாக இருக்கும் தத்துவ தரிசனத்துடன் முரண்படுபவை அல்லது தொடர்பற்றவை இவை என்ற புரிதல் உருவாகியது. இவை பின்பட்ட மதநம்பிக்கைகள் என்றும் பண்படாதவை என்று மதஅறிஞர்கள் எண்ணத்தலைப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் மதச்சீர்திருத்த நோக்கம் கொண்டவர்கள்.
இந்துமதச் சீர்திருத்தம் என்பது அடிப்படையில் இந்துமதம் ஐரோப்பாவுடன் உரையாடியதன் விளைவு என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இந்துமதத்தின் பழமையான கட்டமைப்புகள் அவ்வுரையாடலுக்குள் இல்லை. இந்து மதம் கிறிஸ்தவப் போதகர்கள் வழியாகவும் சுதந்திர சிந்தனையாளர்கள் வழியாகவும் ஐரோப்பாவின் அறிவு மரபுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டது. அதுவே இந்துமதச் சீர்திருத்ததின் அடிப்படை.
கிறிஸ்தவப் பார்வையை இங்குள்ள மிகச் சிறுபான்மையினரான சிலர் கருத்தில் கொண்டனர். ஆனால் ஐரோப்பாவில் அறிவொளி காலத்தில் உருவாகிவந்த தனிமனிதவாதம், ஆன்மீக சுதந்திரம் குறித்த பிரக்ஞை, தத்துவத்தின் தனித்த இயக்கம் குறித்த புரிதல், மனித உரிமை, அடிப்படை மானுட அறம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை இங்குள்ள கற்ற பெரும்பான்மையினரிடம் பெரும் செல்வாக்கை செலுத்தின.
இந்துமதத்தை அந்த புதிய பார்வையின் அடிப்படையில் மறுஅமைப்பு செய்வதற்கான முயற்சியை ஒட்டுமொத்தமாக இந்து மறுமலர்ச்சி என்கிறோம். பலநூறு மதச் சீர்திருத்தவாதிகளால் ஆன ஓர் அறிவியக்கம் இது. தயானந்த சரஸ்வதி, ராஜாராம் மோகன்ராய், விவேகானந்தர், வள்ளலார், நாராயண குரு என அந்த சீர்திருத்தவாதிகளின் பட்டியல் மிக நீண்டது.
அவர்களின் பார்வையில் பழங்குடி, நாட்டார் வழிபாடுகள் பண்படாதவையாக, காலத்தால் பிற்பட்டவையாக, தோன்றின. ஏனென்றால் அத்தனை மதச்சீர்திருத்தவாதிகளும் மதத்தை அதன் மையத்திலுள்ள தத்துவத்தின் அடிப்படையில் மறுதொகுப்பு செய்யவே முயன்றார்கள். மையமே உண்மை, விளிம்புகள் திரிபுகள் அல்லது விலகல்கள் என புரிந்துகொண்டனர்.
வேதாந்த தரிசனத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த இந்துமதத்தையும் மறுவரையறை செய்வதற்கு ராஜாராம் மோகன்ராய் முயன்றார் என்றால் வேதவேள்வி மரபின் அடிப்படையில் மொத்த இந்துமதத்தையும் மறுஅமைப்பு செய்வதற்கு தயானந்த சரஸ்வதி முயன்றார். இவ்வாறு முயன்றவர்கள் அந்த மையத்துடன் நாட்டார், பழங்குடி பண்பாடுக்கு வெகு தொலைவிருப்பதை உணர்ந்தனர்.
நாட்டார் பழங்குடி மரபில் இருக்கும் பலிச்சடங்குகள், கொடைச்சடங்குகள், தன்னை வருத்திக்கொள்ளும் வழிபாட்டு முறைகள், பலவகையான நோன்புகள், விலக்குகள் ஆகியவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்றும், மதத்துடன் தொடர்பற்ற பழங்குடிப் பண்பாட்டுக் கூறுகள் என்றும் அவர்கள் எண்ணினார்கள். ஆகவே ஆரம்பகட்ட மதச்சீர்திருத்தவாதிகள் அவற்றை நிராகரித்து பேசியிருக்கிறார்கள், தடை செய்ய முயன்றிருக்கிறார்கள்.
சமூகசீர்திருத்தப் பார்வையில் பழங்குடி நாட்டார் வழிபாடுகளை அணுகியவர்கள் அத்தெய்வங்களின் குறியீட்டுத் தன்மை மக்களிடம் உருவாக்கும் உளச்செல்வாக்கை கருத்தில் கொண்டனர். நாராயண குரு அதைப் பற்றிப் பேசியிருக்கிறார். உதாரணமாக, ஒரு போர்க்குடி உக்கிரமான போர்த்தெய்வங்களை தங்கள் குலதெய்வமாகவும் குடித்தெய்வமாகவும் வழிபடலாம். ஆனால் போர் யுகம் முடிந்துவிட்டது. சமாதானத்தின், ஜனநாயகத்தின் யுகம் வந்துவிட்டிருக்கிறது. இன்று போர்த்தெய்வங்கள் அளிக்கும் உளவியல் செல்வாக்கு என்பது அக்குடியை வெறும் வன்முறையாளர்களாக கலகக்காரர்களாக மாற்றிவிடக்கூடும்.
வாளேந்திய தெய்வம் குடித்தெய்வமாக இருக்குமென்றால் அக்குடியில் குருதி சிந்துவதைத் தடுக்க முடியாது என்று நாராயண குரு சொன்னார். ஆகவே புத்தகத்தை ஏந்திய தெய்வம், ஒளிச்சுடரை ஏந்திய தெய்வம், அருள்புரியும் தெய்வம் மட்டுமே வழிபடப்படவேண்டுமென்று அவர் அறிவுரைத்தார். அக்காரணத்தால்தான் தாங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் அங்கிருந்த நாட்டார் தெய்வங்களை நீக்கம் செய்து அங்கு பெருந்தெய்வங்களை நிறுவும் பணியை அவர் செய்தார்.
ஈழவர்கள் வழிபட்டு வந்த அறுகொலை, மருதா, குளிகன் போன்ற பலி தெய்வங்களையும் பல்வேறு ஆவி தெய்வங்களையும் நாராயணகுரு விலக்கினார். அவற்றை வழிபடக்கூடாதென்று தடுத்தார். பல இடங்களில் வழிபடப்பட்டு வந்த சிலைகளை தன் கையால் தொட்டெடுத்து அருகில் இருந்த கிணற்றில் போட்டு மூடிவிட்டு அங்கு வேறு தெய்வங்களை நிறுவி அவர்களை வழிபடச் செய்தார். அத்தெய்வங்களுக்கு ரத்தபலி கொடுப்பதை உறுதியாக மறுத்தார். உடலை வருத்திக்கொண்டு செய்யும் நோன்புகளை நிராகரித்தார்.
இதற்கான சமூகக் காரணங்கள் உண்மையானவை என்றுதான் நான் நினைக்கிறேன். இன்றும் கூட எந்தக் குடி, வன்முறை வெளிப்பாடு கொண்ட குடித்தெய்வங்களை வழிபடுகிறதோ அந்தக் குடியில் இருந்து வன்முறை அகல்வதில்லை. வன்முறை என்பது இந்த நூற்றாண்டில் ஒரு உயர்பண்பல்ல. தவிர்க்கப்படவேண்டிய ஒன்று அது
வன்முறைப்பண்பு குறுகிய காலஅளவில் உலகியல் வெற்றியையோ பொருளாதார நன்மையையோ அளிக்கலாம். ஆனால் அவ்வன்முறை குடும்பத்துக்குளேயேதான் பெரும்பாலும் செயல்படும். வன்முறைத்தன்மை கொண்ட சாதிகளில் உச்சகட்ட வன்முறைக்கு ஆளாவது அக்குடும்பத்தின் உறுப்பினர்களாகிய பெண்களும் குழந்தைகளும்தான். இது கண்கூடான உண்மை.
இது நான் பிறந்த ஜாதியிலேயே அரைநூற்றாண்டுக்கு முன்புவரை இருந்த ஒரு நிலைமை. படிப்படியாக போர்த்தெய்வங்களை அகற்றி, அருள் புரியும் தெய்வங்களை, வித்யா தெய்வம் என்று சொல்லக்கூடிய கல்வித் தெய்வங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே நான் பிறந்த போர்க்குடியிலேயே உளவியலில் பெரும் மாற்றங்கள் வந்தன.
நூறாண்டுகளுக்கு முன்பு எங்கள் சாதியில் ஒவ்வொரு குடியிலும் தலைமுறைக்கு ஓரிருவர் பூசலில் கொல்லப்பட்டிருப்பார்கள். ரத்தம் சிந்தாமல் ஒரு பொதுச்சடங்கு நடக்கும் வாய்ப்பே இல்லை என்பார்கள். குடும்ப உறுப்பினர்களே வெட்டிக்கொண்டு சாவார்கள். நீதிமன்றங்களில் சீரழிவார்கள். அச்சூழல் முழுக்க மாறியது வழிபாட்டு முறையில் வந்த மாற்றத்தினால்தான். அதற்கு சட்டம்பி சாமி முதன்மைக் காரணம்
இன்னும் சொல்லப்போனால் தெய்வங்களுக்கு ரத்தபலி கொடுப்பது என்பது குறியீட்டுரீதியான நடவடிக்கையாக தவிர்க்கப்படவேண்டிய ஒன்றுதான். அதன் உளவியல் விளைவுகளை நம்மால் எளிதில்தாண்டமுடியாது. ஆகவே நாராயண குருவோ சட்டம்பி சுவாமியோ வள்ளலாரோ சிறுதெய்வங்களை விலக்கியதும் பழித்ததும் புரிந்துகொள்ளத்தக்கதுதான். மறைமலை அடிகள் போன்ற சைவக்குரவர்கள் சிறுதெய்வங்களுக்கு எதிராக மிகக் கடுமையாக எழுதி பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். சைவ மதமே மிக அதிகமான சிறுதெய்வங்களை உள்ளடக்கியது என்னும் போது அந்த எதிர்ப்பு இன்னும் கவனத்துக்குரியது.
ஆனால் இன்று சிறுதெய்வங்களைக் குறித்த நமது பார்வை இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. இன்று தொடர்ச்சியாக நாம் கல்வி, பொருளியல் சூழலில் மேம்பட்டிருக்கிறோம். மிக வேகமாக உலகமயமாகிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய தனிஅடையாளங்கள் முழுக்க கரைந்தழிந்து சர்வதேச அளவில் எங்கும் காணப்படும் ஒரு பொதுவான அடையாளம் அமைந்துகொண்டிருக்கிறது. வெறும் நுகர்வோனாக நாம் மாற்றப்படுகிறோம். இச்சூழலில் நம்முடைய கலாச்சார வேர்களை ஆழ ஊன்றிக் கொள்வது, நம்மை நம் மண்ணுடன் பிணைத்துக் கொள்வது நம்முடைய அடையாளத்தை மீட்டுத் தக்க வைத்துக் கொள்வதற்கு உதவியானது.
நம்முடைய முன்னோர்களின் நீண்ட உணர்வுச்சரடில் நம்மைத் தொடுத்துக்கொள்ளவேண்டிய தேவை இன்றுள்ளது. அதற்கு நாட்டார் தெய்வ வழிபாடு இன்று வழிவகுக்கிறது. இன்று நமது மூதாதையர் நாட்டார் தெய்வங்களுடன் கொண்டிருந்த ஆழ்ந்த உளரீதியான உறவு நமக்கில்லை. ஆகவே ஒருவேளை அத்தெய்வங்கள் நம்மைத் தீவிரமான குறியீட்டுரீதியான பாதிப்புக்கு உள்ளாக்காமல் போகலாம். அத்துடன் இன்று மிகப் பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் உருமாறிவிட்டிருக்கின்றன. கண்கூடாக சென்ற இருபத்தைந்து ஆண்டுகளிலேயே சுடலைமாடன்களும் முத்தாலம்மன்களும் சைவ தெய்வங்களாக, அருள்மிகு தெய்வங்களாக மாறியிருப்பதை காண்கிறேன். அதன்பின் அத்தெய்வங்களை வழிபடுவதற்கான பழைய தடைகள் பொருளில்லாமலாகி இருக்கின்றன.
இன்று நாம் நமது வேர்களை நிறுவிக் கொள்வதற்காக நமது குலதெய்வங்களை வழிபட்டே ஆகவேண்டிய இடத்திற்கு வந்திருக்கிறோம். அத்தெய்வங்களை கைவிட்டுவிட்டால் நாம் வேரிழந்து நீரில் மிதந்தலையும் பாசிகளைப் போலாகிவிடக்கூடும். பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள் இரண்டுமே வெவ்வேறு வகையில் நமக்கு இன்று தேவைப்படுகின்றன. ஒரு இந்துவுக்கு இன்று அவனுடைய குலதெய்வவழிபாடு காவல்தெய்வ வழிபாடு ஊர்த்தெய்வ வழிபாடு முக்கியமானது, பெருந்தெய்வவழிபாடும் முக்கியமானது. தத்துவ தெய்வத்தைப் பற்றிய அறிதலும் ஊழ்கமும் முக்கியமானது.
மூன்று நிலையிலும் ஒருவன் இந்துவாக இருந்தால் மட்டுமே மெய்யாகவே ஒரு இந்து தன் ஞானத்தை அடைகிறான் என்று பொருள். அத்வைதம் உருவாக்கும் தத்துவத் தெய்வ உருவகம் சுடலைமாடனை வழிபடுவதற்கு எந்த வகையிலும் தடையாவதில்லை என்பது மட்டுமல்ல அதைப் போற்றுகிறது, அதற்கு இடம் கொடுக்கிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். சுடலைமாடனையும் சுசீந்திரம் தாணுமாலயனையும் பிரபஞ்ச வெளியின்இ நுண்பொருளாகத் திகழும் பிரம்மத்தையும் ஒரேசமயத்தில் வழிபடும்போதுதான் நான் ஓர் இந்துவாக அமைகிறேன்.
ஜெ
***
ஒரு புதிய வீச்சு
’காதலெனும் கலையை சிவன் பார்வதிக்குக் கற்பித்தான். குருதட்சிணையாக அக்கல்வியையே அவனுக்கு அவள் அளித்தாள்’ என்ற காளிதாசனின் வரியை சம்ஸ்கிருத அறிஞர்கள் மேற்கோளாக்குவதுண்டு. ஆணும்பெண்ணும் கொள்ளும் ஆடலில் உள்ள நுட்பங்கள் அளவிறந்தவை. மீளமீள உலக இலக்கியங்கள் எழுதிக்காட்டும் லீலை. பா.திருச்செந்தாழையின் இக்கதை முற்றிலும் புதிய ஒரு சூழலில் அதை மீண்டும் நிகழ்த்துகிறது.
தானியவணிகம் நிகழும் சூழல். நாம் எண்ணுவதற்கு மாறாக அது வணிகர்களும் விவசாயிகளும் நிகழ்த்தும் ஆடலால் ஆனது. அந்தக் களத்தின் உளவியல் நுட்பங்கள் இதுவரை தமிழில் எழுதப்படாதவை. தானியவணிகத்தில் ஒரு பெண் வந்தமர்ந்து இயல்பாக ஏன் என்று கேட்கும்போதே அங்குள்ள சூழ்ச்சிகள் சிதறிவிடுவது, சார் என்னும் சொல்லினூடாகக் கடத்தப்படும் கூரிய தாக்குதல்.
அந்த வணிகக்களத்தினூடாக ஆடையில் சரிகை என ஒரு காமத்தின் இழை ஓடுகிறது. அதிலும் ஓர் ஆடல். ஆண்பெண் ஆடலின் களத்தில் நிகழும் ஓர் உச்சப்புள்ளியை தானியவணிகத்தின் உச்சப்புள்ளியுடன் சரியாக இணைத்து கதையை நிகழ்த்திவிட்டிருக்கிறார் ஆசிரியர். பெண் வென்று செல்கிறாள், அது எப்போதுமே அப்படித்தானே?
பா.திருச்செந்தாழையின் கதைகள் எல்லாமே தொடர்ச்சியாக சிறப்பாக வெளிவந்துகொண்டிருப்பது வியப்பூட்டுகிறது. இது அவருடைய ஒரு ஆழ்ந்த புனைவுக்காலகட்டம். இத்தகைய ஒன்று கந்தர்வனுக்கு நிகழ்ந்தது. மிகக்குறுகிய காலகட்டத்தில் எழுதிய எல்லாமே சாதனைக் கதைகளாக நிகழ்த்திக் கடந்து சென்றார். அன்று அக்கதைகளை உடனடியாக அடையாளம் கண்டு நான் எழுதிக்கொண்டே இருந்தேன். இன்றும் அதைச்செய்ய விரும்புகிறேன்.
இத்தகைய காலகட்டம் நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. வருவதைப்போலவே மறைந்துவிடவும்கூடும். முடிந்தவரை அதைப் பேணிப் பெருக்கவேண்டும். அதிலேயே திகழவேண்டும். எவ்வகையிலும் அவர் அதைத் தளரவிடக்கூடாது. இரண்டு வகைகளில் அந்த விசை தளரும். ஒன்று, ஆசிரியர் தானாகவே வேறேதும் உலகியல் காரணங்களால் அதை ஒத்திப்போடுதல். இன்னொன்று, கலையுணர்வற்றவர்கள் உள்ளே புகுந்து அரசியலையோ வேறெதையாவதையோ சுட்டிக்காட்டி அபத்தமான விவாதங்களினூடாக ஆசிரியரின் தன்னம்பிக்கையை குலைத்து திசைதிருப்புதல்.
இரண்டுக்கும் எதிராக திடமான நிலைபாடு தேவை. முற்றிலும் புதியதோர் உலகம், இன்றுவரை சொல்லப்படாத கூர்மையுடன் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இக்கதைகளில். வாழ்த்துக்கள்.
த்வந்தம் – பா.திருச்செந்தாழைJeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


