Jeyamohan's Blog, page 940

August 4, 2021

வெண்முரசு ஆவணப்படம் – போர்ட்லாண்ட்

சாக்ரமண்டோ திரையிடலுக்குப் பின் வெண்முரசு ஆவணப்படத்தின் அமெரிக்க திரையிடல்களின் வரிசையில் அடுத்த திரையிடல்.

ஆகஸ்ட், 7 – சனிக்கிழமை, 5.00 PM – 7.00 PM,போர்ட்லாண்ட், ஆரிகன்

Clinton Street Theater

2522, SE Clinton St, Portland, OR 97202

தொடர்புக்கு– பிரபு, prabumrgm@gmail.com, Phone:971-717-4223

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2021 06:44

வெண்முரசு சூம் சந்திப்புகள்

ஓவியம்: ஷண்முகவேல்

நண்பர்களுக்கு வணக்கம்,

உலகெங்கிலும் உள்ள வெண்முரசு வாசகர்கள், கூடி உரையாட இணையவழி மெய்நிகர் கூடுகைகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.

சென்ற மாத அமர்வில், நண்பர் ராஜகோபாலன், “வெண்முரசை வாசித்தல் – முதற்கனலை முன்வைத்து” என்ற தலைப்பில் உரையாடினார்

தொடர் உரையாடல்களில், வரும் வாரம் நண்பர் கலா தேவி “முதற்கனலில் புராணகதைகள்” என்ற தலைப்பில் பேசுவார். இது ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக இருக்கும்.

வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு, சூம் வழியே நிகழ்வு நடைபெறும்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நேரம் :- இந்திய நேரம் மாலை 06:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

 

தொடர்புக்கு: 9965315137 (லாஓசி)

 

நன்றி!!!

அன்புடன்,

விஷ்ணுபுரம் நண்பர்கள்

Regards,

S SANTHOSH,

+91-9965315137

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 04, 2021 01:25

August 3, 2021

நிலவும் மழையும்- 3

இந்தமுறை பயணங்களை எழுதவேண்டாமென எண்ணியிருந்தேன். ஆகவே முறையாக குறிப்புகள் என எதையும் வைத்துக் கொள்ளவில்லை. முன்னிரவில் வெறும் உளப்பதிவை நம்பியே எழுதினேன். ஆகவே நாள் முறை குழம்பிவிட்டது. குதிரேமுக் செல்வதற்கு முன்பு நாங்கள் சென்ற இடங்கள் நினைவிலிருந்து வழுவி விட்டன. உடன் வந்த நண்பர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு முதன்மைக்காரணம், குதிரேமுக் மலையேற்றம்தான். சிலபோது அவ்வண்ணம் அமையும். ஒரு பயணத்தில் ஒரு நிகழ்வு மிகமிக முக்கியமானதாக ஆகி அனைத்தையும் கீழிறக்கி விடும். இந்தப்பயணத்தில் குதிரேமுக் மலையேற்றம் கடுந்துன்பமும் அதன் விளைவான பரவசமும் நிறைந்தது. உள்ளம் நேரடியாக அங்கே சென்றுவிட்டது. அப்பயணத்தையே முதன்மையாக எண்ணிக்கொண்டுமிருக்கிறது.

பிஸ்லே மலைமுடி, மழைமூட்டம் இல்லாமலிருந்த போது. இணையத்தில் இருந்து

பயணக்குறிப்புகளை எழுதியாகவேண்டும் என்று தோன்றுவது எழுதாதவை நினைவில் இருந்து எப்படி மறைகின்றன என்னும் வியப்பால்தான். அழிந்துவிடுவதில்லை. ஆனால் அவை புறவயமாக நினைவில் தங்காமல் அப்படியே கனவுக்குள் சென்றுவிடுகின்றன. எங்கோ இருக்கின்றன. ஒரு நாவலில் எழுந்து வரவும்கூடும். ஆனால் அவை எழுதப்பட்டால் முகமும் அடையாளமும் கொள்கின்றன

மலாலி அருவியில் இருந்து நாங்கள் பிஸ்லே கட் என்னும் மலைமுடிக்கு காரிலேயே சென்றோம். அங்கிருந்து கர்நாடகத்தின் கீழ்க்கடலோர பெருநிலத்தை பார்க்கமுடியும். ஆனால் நாங்கள் சென்றபோது விண்ணில் நிற்பதாக உணர்ந்தோம். முழுக்க வெண்முகில். வெறும் கண்ணாடிப்பரப்பு போல. அதில் ஈக்கள்போல மனிதர்கள் ஒட்டியிருப்பதாகத் தோன்றியது.

சுற்றுலாப்பயணிகளாக சில இளைஞர்கள் இருந்தனர். சிலருடன் இளம்பெண்களும். ஒருவர் விந்தையான ஒரு பைக் வைத்திருந்தார். அந்த பைக்குக்கு உரிய இளைஞரை பெங்களூர் கிருஷ்ணன் உடனே கண்டுபிடித்துவிட்டார். எப்படி என்று வியப்புடன் கேட்டேன். கிருஷ்ணனும் பைக்கர். அவர்களுக்கென ஒரு தனி உடல்மொழி இருக்கிறது.

பெரும்பாலும் இளைஞர்கள் ஐடி ஊழியர்கள் என்று தெரிந்தது. அவர்களின் வேலையில்தான் இப்படிச் சுற்ற வாய்ப்பு இருக்கிறது. தேவையும் உள்ளது என நினைக்கிறேன். இதனூடாக அவர்கள் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதன் பெருஞ்சலிப்பை வெல்கிறார்கள் போல.

சக்லேஸ்வர் தாலுகாவில் உள்ள பிஸ்லே மலையேற்றத்திற்கான இடமாக கருதப்படுகிறது. ஆனால் மழைக்காலத்தில் அல்ல. இந்தப் பள்ளத்தாக்கு வண்ணத்துப்பூச்சிகளின் படுகை என அழைக்கப்படுகிறது.இந்தியாவெங்கிலுமிருந்து மழைக்காடுகளின் பட்டாம்பூச்சிகளை ஆராய்பவர்கள் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

திரும்பும்போது துர்க்கா ஓட்டல் என்ற சிறிய விடுதியைக் கண்டோம். அங்கே டீ குடிக்கத்தான் சென்றமர்ந்தோம். ஆனால் நீர்த்தோசை இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே கொண்டுவரச்சொன்னோம். இட்லியும் இருந்தது. மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டோம்

நீர்த்தோசை என்பது அரிசிமாவில் இளநீர் ஊற்றி நொதிக்கவைத்துச் செய்யும் ஆப்பம் போன்ற தோசை. இட்லியும் வழக்கமான கர்நாடக அரிசிநொய் இட்லியாக இல்லாமல் நன்றாக இருந்தது. இப்பயணத்தில் சாப்பிட்ட மிகச்சுவையான உணவு இந்த சிறிய கடையில்தான்.

சக்களேஸ்வரில் உள்ள திப்புசுல்தானின் நட்சத்திரமுனைகள் கொண்ட கோட்டை முக்கியமான சுற்றுலாக்கவற்சி. மஞ்சராபாத் என்னும் பெயர் கொண்ட இந்தக்கோட்டைக்கு திப்புசுல்தான் இதன்மேல் பெரும்பாலும் மஞ்சு- மழைமுகில்- படர்ந்திருப்பதனால் அப்பெயரைச் சூட்டினார் என்பது கதை. 1792ல் கட்டப்பட்டது. மைசூரின் மேல் திப்பு முழுமையாக ஆதிக்கம் செலுத்தி நிலையாக தன் கட்டுப்பாட்டின்கீழ் வைக்க விரும்பியதன் விளைவு

பிரெஞ்சு பொறியாளர்களால் கட்டப்பட்டது இக்கோட்டை. கோட்டைக் கட்டுமானக்கலையின் கடைசிக்கட்ட பரிசோதனை இது. தமிழகத்தில் இருந்த ஆரம்பகாலக் கோட்டைகள் மண்ணாலானவை. மண்ணை இரண்டு ஆளுயரத்திற்கு வெறுமே குவித்து வைத்து அதன்மேல் முள்மரங்களை நட்டு சேர்த்து கட்டி உருவாக்கப்பட்டவை. பின்னர் குழைத்த களிமண்ணாலான கோட்டைகள் வந்தன. பத்மநாபபுரம் கோட்டை அப்படித்தான் பதினாறாம் நூற்றாண்டுவரை இருந்துள்ளது. மழையில் கரையாமலிருக்க மேலே ஓலை அடுக்கி கூரையிட்டிருந்தனர்.

அதன்பின் செங்கல்கோட்டைகள் வந்தன. யானைகளால் தள்ளப்பட்ட பெரிய மரத்தடிகளின் தாக்குதலை சமாளிக்கும் பொருட்டு கல்லால் ஆன கோட்டைகள் உருவாயின. கற்சுவர் அரைவட்ட வளைவுகளால் ஆனதாகவும், மேலே காவல்கோபுரங்கள் கொண்டதாகவும் ஆக்கப்பட்டது. மேலிருந்து ஒளிந்து அம்புகளை எய்வதற்கான மடிப்புகளும் பிளவுகளும் வந்தன. பீரங்கிகளின் கல்லுருண்டைகளை தாங்கும்பொருட்டு சுவர்களை அலையலையான மடிப்பாக அமைத்திருப்பதை ராஜஸ்தானின் கும்பல்கர் கோட்டையில் காணலாம்.

பீரங்கிகளின் திறன் அதிகரிக்கும்தோறும் கோட்டைகளின் அமைப்பை மாற்றவேண்டியிருந்தது. அதிகவெடித்திறன் கொண்ட பீரங்கிகள் வந்தபோது கோட்டைகள் தாக்குபிடிக்க முடியாமலாயின. ஆகவேதான் இப்படி நட்சத்திர வடிவமான கோட்டைகளை ஐரோப்பியர் உருவாக்கினர். இதன் எல்லா பகுதியுமே கூம்பு வடிவில் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். ஆனால் அது கூம்பு அல்ல. உண்மையில் சதுரம். அதன் மறுமுக்கோணக் கூம்பு கோட்டைக்குள் இருக்கும்.

கோட்டைக்குள் சென்று பார்த்தால் கோட்டைச்சுவர் என நாம் எண்ணுவது சாதாரணமாகவே இருபதடி முப்பதடி தடிமன் கொண்ட சதுரங்களாலானது என்று தெரியும். பீரங்கிக்குண்டுகளின் அறைதலை அந்த தடிமனும் முக்கோணவடிவமும் தாங்கிக்கொள்ளும். ஆனால் அபப்டி தாங்கியதாகத் தெரியவில்லை. எளிதாக பிரிட்டிஷார் இந்தக்கோட்டையை பிடித்திருக்கின்றனர்.

அக்கால ஐரோப்பிய பொறியாளர்கள் அரசர்களை பேசி மயக்கி இத்தகைய கோட்டைகளைக் கட்டச்செய்திருக்கின்றனர். இவ்வாறு கோட்டைகளை கட்ட முயன்ற பல நாடுகள் திவாலாகியிருக்கின்றன. கையில் காசு ஓட்டமிருந்த உற்சாகத்தில் கட்ட ஆரம்பித்த திப்புவும் விழி பிதுங்கியிருக்கவேண்டும். கோட்டை என்றால் உள்ளே பெரிய கட்டிடங்களுடன் ஒரு குட்டி நகர் இருந்தது என்று பொருள் இல்லை. இது ஓர் ஒளிந்துகொள்ளும் இடம் அவ்வளவுதான். அதிகம்போனால் ஆயிரம் பேர் இருபது பீரங்கிகளுடன் ஒளிந்துகொள்ளலாம்

மிகப்பெரிய நுழைவாயில். அதையொட்டி காவலர்கள் அமரும் சிறு அறைகள். தலைக்குமேல் மசூதி மினாரத்தின் வாங்குக்கூண்டு போல காவல்கூண்டு. உள்ளே நட்சத்திரவடிவ வெளி. நடுவே ஒரு ஆழமான கிணறு. நிலவறைக்குள் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. ஒரு சுரங்கப்பாதை இருந்து அதை மூடியிருக்கிறார்கள்.

உள்ளே வெட்டுகல்லால் ஆன கட்டுமானம். அது மழையில் பசும்புல் படர்ந்து காற்றில் சிலுசிலுத்துக்கொண்டிருந்தது.எட்டு கூர்முனைகளுடன் கரையில் பிடித்து போடப்பட்ட பிரம்மாண்டமான நட்சத்திரமீன் போல கிடந்தது. இந்த கட்டுமானத்துக்கு Vaubanesque பாணி என்று பெயர். இந்தியாவில் இந்தவகையான கட்டுமானம் கொண்ட முழுமையான கோட்டை இதுதான் என்று சொல்லப்பட்டிருந்தது.

கோட்டையின் வழியாகச் சுற்றிவந்தோம். இந்தவகையான பழைய கட்டுமானங்களை காணும்போது நம் அகம் ஏன் திகைப்பை அடைகிறது? இவற்றின் பயன்பாடு நமக்கு தெரிகிறது. ஆனால் பொருள் புரிவதில்லை. இவை அச்சத்தை காட்டுகின்றனவா, ஆணவத்தையா? ஆலயங்களும் மசூதிகளும் திட்டவட்டமான பொருள்கொண்டவை. இக்கோட்டை திப்புவின் புகழின் சின்னமா, அவருடைய அறியாமையின் அடையாளமா?

[மேலும்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 11:35

பாமர வாசகர் என்பவர்…

“வாசகரில் பாமரன் இல்லை”.[கடிதங்கள்].  வாசகர் கடிதத்தில் இப்படி ஒரு வரி. போகிற போக்கில் ஒரு சதம் அடித்து விட்டிருக்கிறீர்கள்.  இரசிகனை பாமரனாக எண்ணும் எந்த கலைஞரும் தன் கலையை நீர்த்துப் போகச் செயகிறார்கள். செவ்வியல் இசையில் பாமர இரசிகர், தேர்ந்த இரசிகர் என்று தரம் பிரிக்கும் வழமை உண்டு. உண்மையில் இசை என்பது ஒன்று தானே?  சில நேரங்களில் தேர்ச்சி என்பது பெரும் மனத்தடை. தேர்ச்சி சுவையை கூட்டும் என்ற உத்திரவாதத்தை எந்த கலைஞனும் எந்த ரசிகனுக்கு அளிக்க முடியாது.

ஒரு வகையில் தேர்ச்சி என்பது வாசிப்பு, அல்லது ரசனையையும் தாண்டி விவாதத்திற்கான கருவியோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு வேளை ஒரு ரசிகனின் தேர்ச்சியை வைத்து கலைஞர் அவருடைய சிலாகிப்பையோ விமர்சனத்தையோ தீவிரமாக எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தால், கலைஞன் சிலாகிப்பது யாராக இருந்தாலும் அதை உந்து சக்தியாகக் கொள்ளும் மனிதன் என்று தோன்றுகிறது. பின் தேர்ச்சியின் பயன் என்ன? யார் தேர்ந்த வாசகர்/இரசிகரை அடையாளம் காண்பது? தேர்ச்சி என்பது தொடர்ச்சி, பயிற்சி, உள்ளத்தை, பார்வையை விரிவுபடுத்தும் முயற்சி. எப்படி கலைஞன் தன்னைத் தான் அடையாளம் காண்கிறாளோ, இரசிகனும் அவ்விதமே. இரசனை கலையாகும் இடத்தை தானே நிலைநாட்டிக்கொள்ள முடியும், அதற்கு பட்டமமும் விழாவும் தனியாகத் தேவை இல்லை, அதன் பாதையும் இலக்கும் வேறல்ல. இதனால் தானே இரசிகர்கள் கலைஞர்களுக்கு மேல் தொட்டால் சிணுங்கியாக இருக்கிறார்கள்? கலைஞர்களுக்காக அரண் இட்டு, கொடி பிடிக்கிறார்கள்?

ஒரு சின்ன சிக்கல். இன்றைய தேதியில் புகழின் வெளிச்சத்தில் இருக்கும் ஒரு கலைஞருக்கு வாசக/இரசிகராய் இருப்பது என்பது உள்நோக்குடைய ஒன்றாக காணப்படுகிறது. சந்தேகப் பட்டியலில் பெயர் வந்துவிடுகிறது. வலைவீசி தேடுகிறார்கள் இணைய காவலர்கள். கலைஞர்களை மரபார்ந்தவர், புதுமைவாதி, கோட்பாடுபவர், தளைகளற்றவர், ஆத்திகர், நாத்திகர், பெண்ணியவாதி,  அரசு சார்பாளர், கலகக்காரர், வலது/இடது சாரி, களப்பணி ஆற்றுபவர், சாய்வு நாற்காலி நிபுணர் என்று பலவிதமாக அவரின் கலை அரசியல் நிலைப்பாடுகள் அடிப்படையில் பிரிக்கிறோம். பிரிப்பதன் சிக்கல், அந்த கலைஞரின் நிலைப்பாடுகளோடு தன்னையும் யாரவது அடையாளப்படுத்தி விடுவார்களோ என்ற பயம். சமூக வலைத்தளத்தின் பிடியில் நம்முடைய பொதுமதிப்புகள் சிக்கி இருப்பதால் வரும் மரண பீதி.

வெண்முரசு படிக்கிறேன், ஆனால் நான் இந்து அடிப்படைவாதி அல்ல என்று தன்னிலை விளக்கம் தர வேண்டும். டி எம் கிருஷ்ணாவும் பிடிக்கும் சஞ்சய் சுப்பிரமணியனும் பிடிக்கும் ஆனாலும் நான் கலகக்காரியோ, ஆரிய மேலாதிக்கவாதியோ அல்ல என்று நீட்டி முழக்கி பதிவு இட வேண்டும். எப்படி எழுதினாலும், போலி, கொண்டை தெரிகிறது என்று வண்டை வண்டையாக பின்னூட்டம் இடுவார்கள். அல்லது நாம் யாராக இல்லையோ அவர் நம்மைப் புகழ்ந்து தள்ளி “இப்படி தான் இருக்க வேண்டும் (ஆ)பொம்பளை” என்ற தொனியில் நாம் சொல்லாதவற்றை சேர்த்துக் கொள்வார். இல்லை அதெப்படி எனக்குப் பிடித்த கலைஞரை நீ இப்படிச் சொல்லலாம் என்று பிறப்புச் சான்றிதழ் முதற்கொண்டு ஆதார் அட்டை வரை கேட்பார்கள், இல்லை சுருக்கமாக தேசத்துரோகி, சமூக விரோதி என்பார்கள்.

இதற்கு அப்பால் நாம் விரும்பும் கலைஞர், பாலியல் வன்முறையாளரா, ஆணாதிக்க சிந்தனையாளர் வகுப்புவாதி, அடிப்படைவாதி, மதவாதி, சாதியவாதி,  (சத்தியவதி என்று இருமுறை திருத்துகிறது கூகிள்)பொய்யரா, இளம் வாசகர்களை அதைர்யப்படுத்துபவரா, தவறான பாதையில் வழி நடத்துபவரா என்று வேறு எண்ண வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் ரசனையின் அடிமடியில் கைவைத்த பதற்றத்துடன் அன்னாரின் மீது அது நாள் வரை முதலீடு செய்த மரியாதையை ஒரு நொடியில் பின் வாங்க வேண்டியுள்ளது. ஐந்து வருடங்கள் முன்னர் “வானம் எனக்கொரு போதி மரம்” என்று தலைப்பிட்ட புகைப்படத்தை வம்புக்கிழுத்து முதிர்ச்சியை, முரண் என்பார்கள். “உங்காள் தானே?” என்பார்கள். (யாரு அந்த ஆளா? என்று கேட்கமுடியுமோ?) தமிழகத்தில் பிறந்து தமிழ் பேசுவதால் கணியன் பூங்குன்றனாரின் சொல்லுக்கு பொறுப்பேற்பேனே அன்றி, காழ்ப்பை அள்ளிக்கொட்டும் கேவலவாதிகளின் சொல்லிற்கேல்லாம் பாத்தியதை ஏற்க சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?

சில நேரம் நம்மைப் போல் மனிதப் பதர் தானே, முரண்பாடுகளுக்கு இடம் தந்தால் என்ன என்று பச்சாதாபம் தோன்றாமல் இல்லை. பேசாமல் கலையை கலைஞனிடமிருந்து துண்டாக வெட்டி எடுத்துவிடலாம் என்று வேறு தோன்றும், ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா? மொத்தமாக விலகி இருந்தால் வேறு அறிவு தளத்தில் நிற்க தகுதி இல்லாதவர்கள், தீவிரமாக கலை ரசனையில் ஈடுபட முடியாதவர், சோம்பேறி அரைவேக்காடு அல்லது பெண் என்று ஒரு பாட்டு.

ஆனால் இந்தப் பாமர இரசிகர் என்பது எல்லாம் வல்ல அருமருந்து, தற்காப்புச் சொல். உணர்ச்சிப்பூர்வாமாக பாராட்டலாம், மறுதலிக்கலாம், தன்னிலை விளக்கங்கள் தேவை இல்லை, எந்த வட்டத்தில் உள்ளோம் அல்லது இல்லை என்று சொல்லும் அளவு முதிரவைல்லை என்பதனால். பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லையாம், ஆட்டத்தில் சுவைக்காக சேர்த்துக் கொள்வார்களாம்.  இன்னும் அந்த கலைஞரின் அறையிலிருக்கும் எலும்புக் கூடுகளை கண்டடையவில்லை என்று மேன்மக்கள் மன்னிப்பர். தவறுகளுக்கு இடம் உண்டு, தண்டனைக் காலம் சொற்பம். நேரமிருந்தால் கலையை கூட இரசிக்கலாம், கலைஞர்களின் குறை-நிறை, முரண், உட்பூசல், வேறுபாடுகளை, குதர்க்கங்களை கணக்கில் கொள்ளாமல். இத்துணை சமூக மதிப்புள்ள சொற்களை மதிப்பிழப்பு செய்யப் பார்த்தீர்களே? சரியான ஜெயமோகன் சார் நீங்க.

பார்கவி

***

அன்புள்ள பார்க்கவி

இசையில் பாமர ரசிகர் இருக்கமுடியும், நானே சாட்சி. ஆனால் இலக்கியத்தில் அவ்வாறு இருக்க முடியாது. இலக்கியம் வாசிப்பதே ஒருவரை பாமரர் அல்ல என்று ஆக்கிவிடும். ஏனென்றால் அது ஓர் அறிவுச்செயல்பாடு.

மனிதவரலாற்றிலேயே இலக்கியமும் அறிவுச்செயல்பாடும் முற்றிலும் சம்பந்தப்படாத பெருந்திரளின் முன் நிகழவேண்டிய கட்டாயம் இப்போது சமூகவலைத்தளச் சூழலில் அமைந்துவிட்டது. ஒன்றுமே தெரியாதவர்கள்கூட, எதிலும் அக்கறையோ பயிற்சியோ அற்றவர்கள்கூட, எங்கும் நுழைந்து எதுவும் சொல்லலாம் என்னும் சூழல். அதன் சிக்கல்களில் சிக்கியிருப்பவன் வாசகன்.

ஒருபோதும் பாமரர்களுடன் வாசகன் விவாதிக்க முடியாது. “ஆமாங்க, மன்னிச்சிருங்க” என்று சொல்லி தாண்டிச்செல்வதையே செய்ய முடியும். என் வாசகர்கள் பல அதைச் சொல்வார்கள். ”ஆமாங்க, அவரு ஃபாஸிஸ்டுன்னுதான் ஊரிலே சொல்லிக்கிறாங்க, நமக்கு என்னங்க தெரியும்? நாம கதை படிக்கிறவனுங்க” என்று சூதானமாகச் சொல்லி தப்பிச்சென்றுவிடுவார்கள். வேறென்ன செய்ய முடியும்?

பழைய நகைச்சுவை. பிள்ளைவாள் அசலூர் சென்றார். நள்ளிரவு, நிலவு. எதிரே இரு மறவர்கள் குடிபோதையில் பூசலிட்டபடி வந்தனர். ஒருவர் கேட்டார். “வேய் இன்னிக்கு பௌர்ணமி, மேலே தெரியுறது நிலான்னு நான் சொல்றேன். இவன் சொல்றான் இன்னிக்கு அம்மாசை மேலே நிலா இல்லேன்னு. நீரு சொல்லும்வே நியாயம். இன்னிக்கு பௌர்ணமியா அம்மாசையா?”

பிள்ளைவாள் சொன்னார்,.”தெரியலீங்க, நான் வெளியூரு”

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 11:34

நேரம் – ஒரு கடிதம்

நேரா நிர்வாகம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஒவ்வொருநாளும் என்ற தங்களது அனுபவ கட்டுரையை படித்தேன். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரை. ஆனாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் என்றைக்குமானது என்றே தோன்றுகிறது. அதுவும், இந்த ஊரடங்கு காலத்தில் மிகவும் அவசியமானதும் கூட. தினமும் மனம் பல நிலைகளில் சிதறி கிடக்கிறது. அதை ஒன்று திரட்டி செயலாக்குவது என்பது மிக கடினமான ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக, என்னை போன்ற இளைய தலைமுறையின் முன் வைக்கப்படும் மித மிஞ்சிய பொழுது போக்கு ஒரு அறைகூவலாகவே தென்படுகிறது. இணையத்தில் அரை நிமிடத்தில் எங்கும் செல்ல முடியும், தொடங்கிய பின் வெளியேறும்போது கிட்டத்தட்ட ஒரு நாளில் பாதி நேரம் கூட மறைந்து விடுவதும் உண்டு. அதன் உள பாதிப்பில் இருந்து வெளிவர எஞ்சிய அரைநாள் என்று ஒரு நாள் மிக இயல்பாக வீணடிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் தூக்கம் ஒழுங்கற்று அடுத்த நாளின் காலையும் சோம்பலுடன் விழிக்க வேண்டியதாக இருக்கிறது.

என் நேரம் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்பதில் எப்போதுமே எனக்கு பிடிவாதம் உண்டு என்று கூறும் நீங்கள் என்னைப் போன்றவர்களின் முன் ஒரு பெரும் வியப்பாக, எங்கோ எட்ட முடியாத இலக்காக இருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், கட்டுப்பாடு, திட்டமிடல் போன்றவற்றை நீங்கள் வலியுறுத்தும் போது சிறிது நம்பிக்கை பிறக்கிறது. அதன் பிறகு, உங்கள் செயல்நிரைகள் பற்றி கூறும் பொழுது, மிகவும் பாதித்த இடம் உங்கள் தூங்கும் நேரம், கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் எடுத்தாலும் ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்கி இருக்கிறீர்கள். அதை எவ்வாறு சாத்தியமாக்கினீர்கள் என்று தெரியவில்லை. பிறகு, அதிலுள்ள ஒரு தொடர்ச்சியான பழக்கங்கள், நேரம் முன்பின்னானாலும் அதிலுள்ள விடுபடாத ஒரு தொடர்ச்சியும் பிரமிக்க வைத்தது. ஒரு நாள் என்பது ஒரு வாழ்க்கையின் முழுமை என்றே உணர செய்தது.

இறுதியாக, திட்டமிடல் பற்றி மட்டும் உங்களிடம் கேட்டு கொள்கிறேன். நீங்கள் திட்டமிட்டபடி நடந்து கொள்ள பல வருடங்களாக பழகி இருக்கிறீர்கள். ஆரம்ப காலத்தில் உள்ள ஒருவன், திட்டமிடுதலை எவ்வாறு நிகழ்த்த வேண்டும்? அதன் முன் அவன் கணக்கில் கொள்ள வேண்டியது என்ன?

ஒவ்வொருநாளும்

அன்புடன்,

நரேந்திரன்.

***

அன்புள்ள நரேந்திரன்,

நேரத்திட்டமிடல் என்பது உண்மையில் நேரம் பற்றிய பிரச்சினை அல்ல. நம் கவன ஒருங்கிணைப்பு பற்றிய பிரச்சினை. கவனம் எவ்வாறு ஒருங்கிணைகிறது என்றால் நாம் நமக்குரிய செயலைச் செய்யும்போது. அதை செய்வதற்கான வழியை கண்டடையும்போது. ஆகவே நம் பணி என்ன, அதை செய்வதற்கான உகந்த வழி என்ன என்பதை நாம் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும்

நேரத்திட்டமிடலில் உள்ள முக்கியமான அம்சம் பழக்கம். உடல் மனம் இரண்டுமே திட்டவட்டமான காலத்தன்மை கொண்டவை. ஒன்றை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மாறாமல் செய்தோமென்றால் அதற்காக உடலும் உள்ளமும் பழகிவிடுகின்றன. நேரத்தை திட்டமிட்டபின் அதை மாறாப்பழக்கமாக, பிடிவாதமாக, சில மாதங்கள் முன்னெடுத்தாலே போதும் அதுவே வழக்கமாக ஆகிவிடும். காலை ஏழுமணிக்கு சரியாக ஒரு கவிதையை படிப்பவன் ஆறுமாதம் அவ்வாறு படித்தால் காலை ஏழுமணிக்கு அவனுக்குக் கவிதை தேவைப்படும். இதைத்தான் தொன்மைக்காலம் முதல் யமநியமங்கள் என்று சொல்லி வந்தனர்.

எந்த நேரத்திட்டமிடலையும் எளிதாக நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கு நாம் ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் வாழ்க்கைமுறையை மாற்றவேண்டும். வாழ்க்கைமுறை உளநிலையில் வெளிப்பாடு. ஆகவே அதை மாற்றவேண்டும். அகமும் புறமும் மாறுவது ஒரு பெரும்பணி. அதற்கு படிப்படியான மாற்றம், கொஞ்சம் கொஞ்சமான மாற்றம் என்பது சாத்தியமே அல்ல. ஒரு புள்ளியில் தொடங்கும் முழு மாற்றமே இயல்வது. அதை ஒரு சுயவதைத் தன்மையுடன், முழுமூச்சாக, சிலமாதங்கள் விடாமல் செய்து மெல்ல உடல்மனப் பழக்கமாக ஆக்கிக் கொள்ளவேண்டும். வேறு வழியே இல்லை.

அத்துடன், முழுமையாகவே ஒழுங்கமைந்த சீரான வாழ்க்கையும் உகந்தது அல்ல. அவ்வப்போது ஒழுங்கிலிருந்து விடுமுறையும் தேவை. நான் அடிக்கடி பயணங்கள் செல்வேன். எந்த கால ஒழுங்கும் இல்லை. அது ஒரு கட்டற்ற விடுதலை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 11:33

அன்புராஜ் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ

உங்கள் தளத்தில் அந்தியூர் அன்புராஜுடன் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. மிகமுக்கியமான ஓர் ஆவணம். குறிப்பாக கலையின் வழியாக மீட்பு என்னும் அந்த வரியே முக்கியமான ஒன்று. அவருடைய பல பேட்டிகளும் அவரைப்பற்றிய குறிப்புகளும் பல இதழ்களில் வந்துள்ளன. ஆனால் அவற்றில் எவற்றிலும் இல்லாத ஆழம் இந்தப்பேட்டியில் இருந்தது. உங்கள் தளத்தை நான் தினமும் படிக்கிறேன். முன்பு பிரசுரமான கட்டுரைகளைப் பற்றி நீங்கள் அளிக்கும் குறிப்புகள் வழியாகச் சென்று படிக்கிறேன். ஆனாலும் இக்கட்டுரையை தவறவிட்டுவிட்டேன். ஒவ்வொரு நாளும் படித்தாகவேண்டிய ஒன்று உங்கள் தளம். ஓரிருநாள் விட்டுவிட்டால்கூட இத்தகைய ஆழமான சில விஷயங்கள் விடுபட்டுவிடும். வாசிக்க வாசிக்க ஆச்சரியம்தான். எத்தனை கட்டுரைகள், பேட்டிகள், விவாதங்கள். ஒரு பெரிய கலைக்களஞ்சியம்போலிருக்கிறது இந்த தளம். தமிழில் இதைப்போல இன்னொரு இலக்கியத்தளம் வேறில்லை என நினைக்கிறேன்.

அன்புராஜ் நீங்கள் சொல்லிவரும் அனைத்துக்கும் வாழும் சாட்சிபோல் இருக்கிறார். கலை மனிதனை பண்படுத்தும், மீட்கும் என்பதற்கு அவரைப்போல இன்னொரு சான்றே தேவை இல்லை. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

எட்வின்ராஜ்

கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 11:31

விகடன் பேட்டியின் நிறைவு

விகடனுக்காக பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் இருவரும் என்னை பேட்டி எடுக்கவேண்டும் என்றார்கள். எனக்கு கோவிட் வந்தமையால் முதல்முறை நாள் தவறிச் சென்றது. அதன்பின் பலமுறை மாற்றப்பட்டு பேட்டிக்கு நாள் குறிக்கப்பட்டது. பேட்டியின்போது என்னென்ன கேட்கக்கூடாது, எவ்வளவு நேரம் பேட்டி நிகழலாம் என்று கேட்டார்கள். என் இயல்பு என்பது மனிதர்களை கூர்ந்து தெரிவுசெய்வதுதான். அதன்பின் அவர்களிடம் நிபந்தனைகள் இடுவது அல்ல. எதை வேண்டுமென்றாலும் கேட்கலாம், எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பேட்டி நிகழலாம் என்று சொன்னேன்.

பேட்டி தீவிரமான இலக்கிய வினாக்கள், சுவாரசியமான தனிப்பட்ட கேள்விகள், சினிமாக்கேள்விகள் என நீண்டது. தொடர்ச்சியாக மூன்றுமணிநேரம். அதை வெட்டி வெளியிடுவார்கள் என நினைத்தேன். முழுப்பேட்டியும் ஆறு பகுதிகளாக யூடியூபில் வெளிவந்துள்ளது. நன்றாக இருப்பதாக பலர் சொன்னார்கள். குறிப்பாக என் பெரியம்மாவின் மகனும் என் தந்தைக்கு நிகரானவருமான பிரசாத் அண்ணன் பார்த்துவிட்டு “டேய் சில இடங்களிலே கண்ணீர் வந்திச்சுடா” என்றார்.அக்கணமே இப்பேட்டி எனக்கு இனிதானதாக ஆகியது.

ராஜா அவர்களுக்கும் பாரதிக்கும் அன்பும் நன்றியும்.

விகடன் பேட்டி – கடிதங்கள் விகடன் பேட்டி – கடிதங்கள் விகடன் பேட்டி – கடிதங்கள் விகடன் பேட்டி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 11:31

சாக்ரமண்டோ வெண்முரசு விழா

அன்பின் ஜெ,

வணக்கம்!

வெண்முரசு ஆவணப் படம் Aug 1 சாக்ரமென்டோ (ரோஸ்வில் ) நகரில் திரையிடப் பட்டது. முதன்முறையாக வெண்முரசு குறித்த ஒரு கூடுகைக்கு செல்கிறேன் என்ற படபடப்பும் எதிர்பார்ப்பும் கலந்த ஒரு மகிழ்ச்சி.

இனிய அண்ணன் திரு . அண்ணாதுரை அவர்களின் ஒருங்கிணைப்புடன், அவர்தம் நண்பர்களின் பங்களிப்புடனும்  திரையிடல் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தமிழ்த் தாய் வாழ்த்து, ராலே ராஜன் அவர்கள் இசையமைத்த யாதும் ஊரே பாடலுடன் தொடங்கியது நிகழ்ச்சி.

பிரபலங்களின் அறிமுக உரையோடு ஆரம்பித்த படம் , பின்னர் இலக்கிய எழுத்தாளுமைகளின் உரைகளோடு மிகச் சிறப்பான பின்னணி இசையோடும் , ஷண்முகவேல் அவர்களின் ஓவியங்களுடனும் அடுத்த ஒன்றரை மணி நேரமும் ஒரு இனிய சுகானுபவம். ஒவ்வொரு நாளும் படித்து, வெண்முரசு காலத்தில் வாழ்ந்த காலத்தை மீண்டும் இலக்கிய ஆளுமைகளின் வாயிலாக கேட்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி.

நீலம் தாலாட்டு பாடல் – நீலப் பித்தை மீண்டுமெழ செய்தது. மறுவாசிப்புக்கொரு தூண்டுகோல். பின் அத்தனைக்கும் சிகரமாய் வெண்முரசு theme song. Back to back musical treat .ராலே ராஜன் , ஆஸ்டின் சௌந்தர்,US விஷ்ணுபுரம் இலக்கிய  வட்டம் ஆகியோரின் பெருமுயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

நான் நாள்தோறும் உங்கள் தளத்தில் வாசிக்கும் நண்பர்களின் வெண்முரசு குறித்த அறிமுகம் இது வரை வெண்முரசு வாசிக்காத நண்பர்களுக்கு மிகத் தேவையான ஒன்றாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து பேசிய அனைவரும் ஒருவித excitement ல் இருந்தார்கள். வெண்முரசு குறித்து நிறைய கேள்விகள் –  எதில்  தொடங்குவது, எப்படி அணுகி படிப்பது, எங்குபுத்தகங்களை வாங்குவது, எப்படி ஒருவரால் இவ்ளோ எழுத முடியும் என்று .அதிமுக்கியமாக- செம்பதிப்பு நூல்களை எங்கு, எப்படி வாங்குவது.. (செம்பதிப்பின் தரமும், ஓவியங்களும் அனைவருக்கும் பிடித்திருந்தது)

‘கண்ணானாய்! காண்பதானாய்! கருத்தானாய்! காலமானாய்! கடுவெளியானாய்! கடந்தோய்!  கருநீலத் தழல்மணியே!’

– நீலக் கண்ணனை இவ்விதம் எனக்கு மறு அறிமுகம் செய்த பேராசிரியருக்கு பெருவணக்கம்

லக்ஷ்மிநாராயணன்

வணக்கத்திற்குரிய ஜெ,

நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்களுக்கு நினைவிருக்கும்-  2009 ல் சாக்ரமெண்டோவுக்கு   வந்திருந்தீர்கள்.  சாக்ரமெண்டோ தமிழ் மன்றத்தின் சார்பில் intel,Folsom அரங்கில்  ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு  நிகழ்வில் கலந்து கொண்டு  (https://www.jeyamohan.in/3662/) பேசினீர்கள். 12 வருடங்கள் கழித்து , ஆகஸ்ட் 1 அன்று மறுபடியும் வந்தீர்கள் –  உங்கள் வாசகர்கள் வடிவில். உங்களது இன்றைய வீச்சும், சமூகத்தின் மீதான உங்கள் பாதிப்பும், உங்கள் தொடர் உழைப்பின், செயல்பாடுகளின் வெளிப்பாடு.

சில விஷயங்களில் விமரிசனங்கள் இருப்பினும்,  இதற்காக நாங்கள் பேருவகை கொள்கின்றோம் அறிவுத் தளத்தில் இயங்குகிறவர்கள்  மீதான எங்கள் கரிசனை இது. வெண்முரசு ஆவணப்படம் நிகழ்வுக்காக கடும் கோடை, கொடு வெப்பம்,  கொள்ளை நோய்  போன்ற இடர்ப்பாடுகளை எல்லாம் மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்று கூடியிருந்தனர் Roseville அரங்கில்.

தொடக்கவுரை – விஷ்ணுபுர வாசகர்  வட்ட பொறுப்பாளர்  அண்ணாதுரை  வழங்கினார். அன்றைய நிகழ்ச்சியில் என்னென்ன இருக்கும் என்று கோடி காட்டிய அவர் உரைக்குப் பின்,   மறைந்த கரிசல் எழுத்தாளர் திரு கி ரா  அவர்களுக்கு  ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம். பிறகு  செல்வி   அமிர்தா பாலகிருஷ்ணன் எழுத்தாளர் பற்றிய  முன்னுரை வழங்கினார் ”ஜெமொவின் வெண்முரசு யானை பிழைத்த வேல் அல்ல.. மத்தகம் பிளந்த வேல்”  என்று சொல்லி உள்ளம் அள்ளிச் சென்றார் .

பிறகு ”யாதும் ஊரே” என்ற ராஜன் சோமசுந்தரத்தின்  யூடியூப் பாடல் திரையிடலுக்குப் பிறகு புத்தகத்தை பற்றிய ஆவணப்படம் துவங்கியது.  வாசகர்கள், சக எழுத்தாளர்கள், கலை ஆளுமைகள், ஜெ.மொவின் அணுக்கத் தொண்டர்கள் போன்ற பலரின் பார்வையில் வெண்முரசு. நடு நடுவே பாடல்கள் மற்றும்  ஜெயமோகன் செவ்வியுடன் தொய்வில்லாமல் சென்றது.  அமரர் ஜெயகாந்தனின் ஆவணப் படத்திலிருந்து அவர் மகாபாரதம் பற்றி உற்சாகத் தொனியுடன் பேசுவது போல  சில காட்சிகள்.  புலரும் நினைவுகள்

மொத்தத்தில் எல்லா வகை வாசகர்களையும் கவர்கிறார் போல ஒரு உள்ளடக்கம். நிகழ்ச்சியின் முடிவில் அண்ணாதுரை நன்றி நவின்றார்.  வாசகர்கள் அரங்கிலிருந்து கருத்தை பரிமாற விரும்பினால் பேசலாம். என்றார்.  சாக்ரமெண்டோ தமிழ் மன்ற பொறுப்பாளர்கள் ஜான், கோபி  மற்றும் முருகேஷ் பேசினார்கள். நடக்கவியலாத 83 வயது முதிய பெண்மணி ஒருவர்,  இந்தக் கூட்டத்துக்கு எப்படியாவது வர வேண்டும் என இரவல் வாகனத்தில் வந்த கதை சொன்னார். Walnut Creek ல் இருந்து நூறு  மைல் காரோட்டி வந்த லக்‌ஷ்மி நாராயணன் இந்த படைப்பை எப்படி அணுகலாம் என்று சொன்னார்.

என் பங்குக்கு நானும் உங்கள்  படைப்புகளுடனான என் பரிச்சயத்தை பகிர்ந்து கொண்டேன். வந்திருந்தவர்கள் கூட்டாக சேர்ந்து  நிழற்படம் எடுத்த பிறகு கலைந்தோம். வாசகர்கள் சிலர் இந்த புத்தகங்களுக்கு ஒலிப் பேழை ( audio book) கிடைத்தால் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருக்கும் என்றனர். இது படிக்கச் சோம்பல் படுபவர்களின் கோரிக்கை அல்ல… பிழைக்க ஒரு வேலை பார்த்துக் கொண்டு, அன்றாட இருப்பியல் ,  சங்கடங்களோடு,   “வாழவும்”  விழையும் வாசக மனத்தின் இறைஞ்சல்.

என்றென்றும் அன்புடன்

சுந்தர் பசுபதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 03, 2021 11:30

August 2, 2021

நிலவும் மழையும்-2

நிலவும் மழையும்-1

குளிரில் அதிகாலையில் எழுவதற்கு ஆன்மிகவல்லமை தேவைப்படுகிறது. ஆனால் ஆன்மிகவல்லமை பெறுவதற்கே அதை நிபந்தனையாக வைத்திருக்கிறார்கள். என்னால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் இது. காலையிலேயே மலாலி நீர்வீழ்ச்சிக்குச் செல்ல திட்டம். ஆகவே பலரும் பலவாறாக அழைத்து காலையில் எழுந்தோம். நல்லவேளையாக வெந்நீர் கிடைத்தது. குளிருக்கு வெந்நீர்குளியல் என்பது ஒரு மாபெரும் இன்பம்.

காலையுணவு அங்கேயே ஏற்பாடாகியிருந்தது. முந்தையநாள் சிக்கன் எல்லாம் செய்திருந்தார். நான் பழங்கள்தான் சாப்பிட்டேன். மறுநாள் இட்லி இருந்தது. கர்நாடக இட்லி. நண்பர்களில் ஒருவரான அருள் காலில் ஒரு சிறு உடைசலால் பாதியிலேயே பயணத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பவேண்டியிருந்தது. அவரை கொண்டுசென்று பஸ் ஏற்றிவிட்டு வந்தனர்.

முந்தையநாள் மாலையில் மலாலி நீர்வீழ்ச்சிக்கு சென்றுவிடலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் கர்நாடகத்தின் மலைநாட்டில் கூகிள் வரைபடம் சொல்லும் பயணத்தொலைவு மற்றும் நேரத்திற்கும் அனுபவத்திற்கும் சம்பந்தமில்லை. அது ரங்கராட்டினத்தில் சுழன்றுகொண்டிருப்பதுபோன்ற ஓர் அனுபவம். ஆகவே மாலையில்தான் வந்துசேர்ந்தோம். அருவியை பூட்டிவிட்டார்கள்.

மலாலி அருவி கர்நாடகத்தின் புஷ்பகிரி சரணாலயத்திற்குள் அமைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட் தாலுகாவில் உள்ள இந்த சரணாலயம் புலிகள் காப்பகமும் கூட. மழைக்காடுகளில் மட்டுமே வாழும் அரிய பறவைகளைக் காண இங்கே ஆண்டுதோறும் ஆய்வாளர்களும் பயணிகளும் வருகிறார்கள். குமாரபர்வதம் என்னும் உச்சிமலைமுடி இங்குள்ளது. இந்த காட்டின் மறுபக்கம் மிக அருகே புகழ்பெற்ற குக்கே சுப்ரமணியா ஆலயம் அமைந்துள்ளது.

நிறைய மரணங்கள் நிகழ்ந்த இடம் மலாலி அருவி. எல்லாருடைய பேச்சிலும் அந்த குறிப்பு வந்துகொண்டிருந்தது. எட்டுமணிக்குத்தான் கேட் திறந்து உள்ளே விட்டார்கள். படிகளில் இறங்கி கீழே சென்று மலைப்பள்ளத்திற்குள் கொட்டும் அருவியைப் பார்க்கவேண்டும்.

ஏறத்தாழ இருநூறு அடி ஆழத்தில் அருவி பெருகிப்பொழிந்துகொண்டிருந்தது. குளிப்பதை எல்லாம் கற்பனையே செய்யமுடியாது. சாதாரணமாகவே உக்கிரதெய்வம் . மழைக்காலத்தில் சன்னதம்  கொண்டிருந்தது. ஓலம், உலைந்து உலைந்து வெண்கூந்தல் சுழற்றும் வெறி. அதைச்சுற்றி அதற்கென்று மட்டும் ஒரு மழை.

மழைபொழிந்துகொண்டிருக்க படிகளில் இறங்கிச் சென்றோம். மழை நின்று சாரலாகியது. முகில்கள் விலகி ஒளி எழுந்தபோது அருவியின் ஒளி கண்கூசச் செய்தது. அருவியை அணுகியபோது அருவிச்சாரலின் மழை மீண்டும் பொழியலாயிற்று.

பேருருக் கொண்ட தெய்வமருகே நின்றிருக்கும் பூசகன் போல ஒரு தனிமரம் அருவியை ஒட்டி நின்று நீர்ப்பொழிவில் நனைந்துகொண்டிருந்தது. ஆண்டெல்லாம் அருவியின் அருளைப் பெறுவது. கைகூப்பி பணிந்து நிற்பதுபோலத் தோன்றியது அது.

காவிரியின் துணையாறான நேத்ராவதி [கண்ணுடையாள்] ஆற்றில் சென்று சேரும் குமாரதாரா [இளமையொழுக்கு] என்னும் ஆற்றில் நிகழ்கிறது இந்த பேரருவி. மலையுச்சியில் இருந்து நேராக மலைப்பிளவின் பெரும்பள்ளத்தில் விழுகிறது. அதைச்சூழ்ந்து செங்குத்தாக எழுந்த மலைவிளிம்புகளில் திரைபோல தொங்கியது மழைக்காடு. படிகளில் நின்றபடி எதிரே எழுந்த காட்டிலுள்ள கல்வாழைகள், காட்டுஈச்சைகள் போன்ற மரங்களை பார்ப்பது ஒரு வகை ஊழ்கம்.

இறங்குவது எளிது, ஏறுவது கடினம்.  மூச்சு வெடிக்கத்தான் மேலே வரவேண்டும் அருகே அருவியின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தாலும் மேலே நின்றால் அங்கே அருவி இருப்பதையே ஊகிக்க முடியாது.

 

அன்று மாலை குதிரேமுக் மலைச்சிகரம் அருகே பெல்லா தங்குமிடத்தை சென்றடைந்தோம் . வசதியான இடம். மழைக்குரிய சூழல். மழையில்லாதபோது வெக்கை தாளமுடியாது என நினைக்கிறேன். சூழ்ந்திருக்கும் காட்டின் குளிர் இரவில் வந்து அழுத்தவும்கூடும்.

நாங்கள் மறுநாள் காலை ஆறுமணிக்கே குதிரேமுக் மலைப்பயணத்தை தொடங்கவேண்டும் என்று விடுதிக்காரர் சொன்னார். அதற்குரிய ஏற்பாடுகளையும் ஆணையிடும் குரலில் விளக்கினார். பொதுவாக மலையில் வழிகாட்டிகள் தங்களை ராணுவ காப்டன்களாக எண்ணிக்கொள்கிறார்கள். அதற்கு மலையேற்றக்காரர்களும் ஒரு காரணம், அமெச்சூர் மலையேற்றக்காரர்கள் மலையில் ஏறிய பிறகே மலையேறுவதற்கு என்னென்ன தேவை என உணர்கிறார்கள்.

முன்னரே படுத்துக்கொண்டோம். அருவி வரை இறங்கி ஏறியமையால் உடனே தூங்கமுடிந்தது. காலை நான்கரை மணிக்கே எழுப்பிவிட்டார் கிருஷ்ணன். பல்தேய்த்து தயாரானோம். நான் ஷூக்களை கொண்டுவரவில்லை. மற்றவர்கள் ஷூக்கள் வைத்திருந்தனர். நான் கோவையில் வாங்கிய பிளாஸ்டிக் செருப்புதான் வைத்திருந்தேன்.

ஷூக்கள் மழையில் நனைந்தால் செத்த பெருச்சாளியை காலில் கட்டிக்கொண்ட அனுபவத்தை அளிக்கின்றன என்பது என் அனுபவம். ஆகவேதான் பிளாஸ்டிக் செருப்பை வாங்கினேன். ஆனால் அது பிடிமானம் நிற்குமா என்னும் ஐயம் இருந்தது. மழைக்கோட்டு வைத்திருந்தேன்.

காலையுணவை கனமாக உண்டபின் ஜீப்புகளில் கிளம்பினோம். வனத்துறையில் பதிவுசெய்து அனுமதி பெற்றிருந்தோம். மலைக்குமேல் முதல் முகாமிலிருந்து நேராக ஒன்பது கிலோமீட்டர் ஏறிச்சென்றால் குதிரேமுக் மலைமுடி. ஒன்பது கிலோமீட்டர் இறங்கி வரவேண்டும். செல்வதற்கு ஐந்துமணிநேரம், திரும்பிவர நான்கு மணிநேரம் என்பது கணக்கு.

ஆனால் பின்னர் சுபாவின் கைக்கடிகாரக் கணக்கு மொத்தமாக இருபத்தொன்று கிலோமீட்டர் காட்டியது. ஏறிச்சென்றபோது இருநூற்றொன்று கிலோமீட்டர் தோன்றியது. ஒவ்வொரு அடியாக எண்ணி எண்ணி வைக்கவேண்டியிருந்தது. எண்ண எண்ண அடி பெருகியது.

செல்வதற்கு ஒற்றையடிப்பாதைதான். அதுவும் பல இடங்களில் நீர்வழிந்து இறங்கிய தடம். உருளைக்கற்கள் மேல் கால்வைத்து செல்லவேண்டும். சீரான ஏற்றம், அவ்வப்போது கிட்டத்தட்ட செங்குத்தான சரிவுகளில் பாறைகள்மேல் தொற்றி ஏறவேண்டும். வழியில் காட்டாறுகளுக்கு குறுக்கே கயிறுகட்டியிருந்தார்கள். அவற்றை பற்றிக்கொண்டு கடந்துசெல்லவேண்டும்

நாங்கள் சென்றவற்றிலேயே கடுமையான மலைப்பயணம் இதுவே. மழை பொழிந்துகொண்டிருந்தது. கற்கள் உருண்டன, பாதையில் செஞ்சேறு வழுக்கியது. நெஞ்சு உடைய நுரையீரல் விம்மியது. வழியெங்கும் குருதி உறிஞ்சும் அட்டைகள்.

ஆனால் எந்த மலையேற்றமும் மெல்லமெல்லச் சென்றால் எளிதுதான். சிறிய சிறிய அடிகளாக வைக்கவேண்டும். முடிந்தபோதெல்லாம் ஓய்வெடுத்துக்கொள்ளவேண்டும். சீரான வேகத்திலேயே சென்றுகொண்டிருக்கவேண்டும். முக்கியமாக இன்னும் எத்தனை தொலைவு என்று கணக்குபோடக்கூடாது. மலையேறுவதன் அசௌகரியங்களையும் கஷ்டங்களையும் பற்றிப் பேசக்கூடாது.

அத்தனை கஷ்டங்களுக்கும் வெகுமதி இருந்தது. நான் என் வாழ்நாளில் பார்த்ததிலேயே அழகான இடங்களில் ஒன்று குதிரேமுக் மலையின் புல்வெளிப்பள்ளத்தாக்குகள். பச்சைமென்மை, பச்சை நெகிழ்வு, பச்சைக்குமிழ்வு, பச்சை அலைகள். மேலே முகில்கள் உருவாக்கிய நிழல்வடிவங்கள் பச்சைமேல் அலையலையென கடந்துசெல்ல புல்வெளிப்பரப்பு நீர்வெளியென ததும்பிக்கொண்டிருந்தது.

நோக்கநோக்க நெஞ்சுநிறைக்கும் அனுபவம் அது. அதை சொற்களாக ஆக்குந்தோறும் குறைகிறது. நான் எங்களுடன் வந்த ஜோசஃபைனிடம் சொன்னேன். மலையேற்றம் எதை அளிக்கிறது? நாம் நம் எல்லைகளை அறிந்து கடந்து செல்கிறோம். நம் எல்லைகளை சற்றேனும் மீறாமல் எந்த புதிய அறிதலும் நிகழ்வதில்லை. அறிவின், உணர்வின், உடலின் எல்லைகளை மீறாமல் நாம் நம்மை முன்னகர்த்திக்கொள்வதில்லை. வாசிப்பிலும் சரி, கலைகளிலும் சரி, பயணங்களிலும் சரி நாம் அதுவரை சென்றடைந்தவற்றில் இருந்து ஒரு அடியாவது முன்னகர்ந்திருக்கவேண்டும்.

6,207 அடி உயரமான குதிரேமுக் சிகரம் கர்நாடகத்தின் மூன்றாவது மலையுச்சி. வன அலுவலகத்தில் இருந்து ஒண்டிமரா என்னும் இடம். அங்கிருந்து நேராக குதிரேமுக் மலைமுடி. தொடங்கும்போது எளிதென தோன்றும். குதிரைமுகம் கொண்ட மலையை அங்கிருந்தேகூட பார்க்கமுடியும். அணுகிச்செல்லவேண்டும் என்றால் மலையேறவேண்டும்.

குதிரேமுக் என்பது குதிரைமுகம் கொண்ட மலைச்சிகரம். அதை அண்மையில் காண இன்னொரு மலைச்சிகரத்தில் ஏறுவதே இந்த மலையேற்றம். ஆனால் மேலே சென்றால் அதைக் காணமுடியாது என்று கூறிவிட்டனர். மழைமுகில்களால் மலைமுடிகள் மூடப்பட்டிருக்கும் காலம் இது. மலைப்பாறைகளின் உச்சிகள் இவை. ஓரிரு அடி ஆழமே மண் இருக்கும். ஆகவேதான் புல்வெளிகள்.

மலையின் மடிப்புகளில் சோலைக்காடுகள் இருக்கும். குட்டைமரங்களால் ஆனவை அவை. கைப்பள்ளத்தில் பச்சைநுரையை அள்ளி வைத்திருப்பதுபோல. இங்கே வெயில் குறைவாகவே அடிக்கும், முகில்மூடியிருப்பதனால். ஆகவே புல்வெளியும் சரி மரங்களும்சரி அடர்பசுமை நிறமானவை. மழைக்காடுகளிலேயே இலைகள் பச்சை செறிந்தவை. சூரிய ஒளி அரிதானது. ஒவ்வொரு சொட்டும் அமுதாக மாற்றப்படவேண்டியது. ஆகவேதான் பசுமை.

மலைமடிப்புகளில் எல்லாம் நீரோடைகள், காட்டாறுகள், அருவிகள் சென்றுகொண்டிருந்தன. எங்கும் நீரோசை. புல்வெளிகள் நீரை தக்கவைத்து வெளிவிடும் மென்பஞ்சு போன்றவை. ஊறிய நீர் மடிப்புகளில் இறங்கி பெருகி சென்று ஓடையாகி ஆறாகி கீழிறங்கி கடல்நாடுகிறது.

நான் பிளாஸ்டிக் செருப்பு போட்டுவந்தது எவ்வளவு நல்லது என்று தெரிந்தது. மற்றவர்களின் பூட்ஸுகள் நனைந்து ஊறிவிட்டன. மிகப்பிழையான மலையேற்றம் எங்களுடையது. எல்லாவகையிலும் கற்றுக்குட்டிகள். உண்மையில் நல்ல கம்பூட்டுகள் தேவை. இந்தப்புல்வெளியில் பலவகைப் பாம்புகள் உண்டு. ராஜநாகமே உண்டு. அறியாமையே ஒருவகை ஆற்றல்தான்.

குதிரைமுக உச்சிநோக்கிய மலையேற்றத்தில் சுவாரசியமான அம்சம் பாறைகளை கவனிப்பது. பலவகையான தாதுக்கள் கொண்ட பாறைகள். பெரும்பாலானவை செந்நிறமான இரும்புத்தாதுப்பாறைகள். மஞ்சள்நிறமான கந்தகப்பாறைகள் பொன் என மின்னின. வெள்ளிபோல மின்னிய ஈயப்பாறைகளும் உண்டு. அரிய செல்வம் எவரும் தீண்டாமல் கொட்டிக்கிடப்பதுபோல உளமயக்கு உருவாகியது.

குதிரேமுக் இரும்பு அகழ்வு நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அரசுத்திட்டம். குதிரேமுக் சூழியல் போராளிகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. போராட்டத்தில் எழுத்தாளர் சிவராம காரந்த் முன்னின்றார். ஆனால் திட்டம் முன்னால் சென்றது. பின்னர் கடுமையான மழை முதலிய காரணங்களால் அது லாபகரமாக இல்லை என கைவிடப்பட்டது.

ஐந்தரை மணிநேரத்தில் உச்சிக்குச் சென்றோம். மதியம் ஒரு மணிக்கு மேல் உச்சியை அடைய அனுமதிப்பதில்லை என உடன்வந்த வழிகாட்டி சொன்னார். ஏனென்றால் ஐந்துமணிக்குள் காட்டுக்குள் எவருமில்லாமல் மூடிவிடவேண்டும். இது புலிகள் உலாவும் வெளி. நாங்கள் கெஞ்சிகூத்தாடி, நான்குமணிநேரத்தில் இறங்கிவிடுவோம் என வாக்களித்து மேலே சென்றோம்

மலையுச்சி ஒரு ஹெலிகாப்டர் போல பறந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. காற்று சுழற்றி வீசி அப்படி எண்ணவைத்தது. எங்களுடன் வந்த அழகுவேல் கையில் வைத்திருந்த அலுமினிய ஊன்றுகோலின் துளைகளில் காற்று செல்ல அது புல்லாங்குழல்போல பாடிக்கொண்டிருந்தது.

உச்சி எப்போதுமே வெறுமையானது. மேலே செல்ல இடமில்லாதது. தனிமையானது, வானால் ஏற்றுக்கொள்ளப்படாதது, மண்ணால் கைவிடப்பட்டது. ஆனாலும் உச்சி நம் எல்லையை காட்டுகிறது. உச்சி ஒரு வெற்றி. சிலகணங்களே நீடிப்பதென்றாலும் ஒரு கொண்டாட்டம்.

நாங்கள் இறங்கி வர ஆறுமணிநேரமாகியது. வழியில் மழைபெய்து பாதையே ஓடையென்றாகிவிட்டது. நான்கரைமணிக்கே கண் விளங்காமல் இருள் பரவிவிட்டது. தட்டுத்தடுமாறி வந்து சேர்ந்தோம். வழிகாட்டிகள் சலித்துக்கொண்டனர். காட்டிலாகாவினர் அபராதம் போடுவதாக மிரட்டினர். எல்லா இடங்களிலும் மொழிதெரியாமை பெரிய பாதுகாப்பாக இருந்தது. அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. போய்த்தொலை என்று சொல்லாமல் அவர்களுக்கும் வேறுவழியிலை.

ஏழரை மணிக்கு விடுதியை வந்தடைந்தோம். கொதிக்கக்கொதிக்க வெந்நீரில் நீராடியபோது உடல் மெல்ல இயல்படைந்தது. தசைகள் நெகிழ்ந்தன. ஆனால் காலில் அட்டைகள் கடித்த இடத்திலிருந்து குருதி வழிந்தோடியது. பாறப்புறத்தின் நாவல் போல ‘நிணமணிஞ்ஞ கால்பாடுகள்’

இரவு படுத்ததுமே தூங்கிவிட்டேன். ஒரு சொல் மிச்சமில்லாமல் வான்நோக்கி விசிறிவிட்டு மீண்டு வந்திருந்தேன்.

மேலும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2021 11:35

நடராஜ குரு விட்டுச்சென்ற குரங்குகள்- சங்கரராம சுப்ரமணியன்

எனது இலக்கிய ஆசிரியர்களோடு ஆசிரியராக நித்ய சைதன்ய யதி தொடர்ந்து என்னுடன் வந்துகொண்டிருக்கிறார். மனுஷ்ய புத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், கண்ணன் சேர்ந்து நடத்திய காலச்சுவடு பத்திரிகையில் ஜெயமோகன் எடுத்த நேர்காணல் வழியாக நுழைந்தவர் நித்ய சைதன்ய யதி. நல்ல அவியல் வைக்கத் தெரியாதவன் துறவியாக முடியாது என்ற கூற்று ஞாபகத்தில் இன்னமும் இருப்பது; நண்பர்களிடம் அதைத் தொடர்ந்து பகிர்கிறேன். அத்துடன் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு நல்ல அவியலைச் சமைப்பதில் படிப்படியாக முன்னேறியும் வருகிறேன்

நடராஜ குரு விட்டுச்சென்ற குரங்குகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 02, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.