Jeyamohan's Blog, page 938

August 7, 2021

குருகுலம் என்பது…

சொல்முகம் வாங்க

அன்புள்ள ஜெ

சொல்முகம் நூலில் நீங்கள் சிலாகித்திருக்கும் துறவு இன்றுகூட பெண்களுக்கு உரியதாக இல்லை. நீங்கள் சொல்லும் குருகுலத்தில் இருக்கும் அர்ப்பணிப்புடன் ஒரு மாணவப்பருவம் இருக்க வேண்டும் என்பது சிறப்புதான். ஆனால் குருகுலத்தின் மாடல் பழைய குருகுலத்தின் மாடலாக இருக்க கூடாது. நீங்கள் குருகுலம் என்று சொன்னவுடன் பழைய மாடலுக்கு மாற்றான என்ன மாதிரியான குருகுலத்தை முன்வைக்கிறீர்கள் என்பதையும் எங்காவது குறிப்பிடுங்கள். யாருக்குத் தெரியும், இன்றில்லாவிட்டாலும் என்றாவது புதிய குருகுலங்கள் உருவாகலாம்.

புதிய மாதவி

மும்பை

அன்புள்ள புதிய மாதவி,

துறவு இன்றும்கூட இந்துமதம், சமண மதம் உட்பட பல மதங்களில் பெண்களால் இயல்பாக ஏற்கப்படுகிறது. அவர்களுக்குரிய நெறிகள் சற்றுக் கடுமையானவையாக உள்ளன என்பது உண்மை. அதற்கு அவர்கள் பெண்கள் என்பது மட்டும் காரணமல்ல. நம் சமூகத்தின் ஒட்டுமொத்தமான பார்வையே காரணம்.

ஏனென்றால் ஒடுங்குதலே துறவு. பெண்கள் உடலை ஒடுக்கவேண்டும் என்றால் அவர்களின் உடல் பார்க்கப்படலாகாது, பாராட்டப்படலாகாது என சமணமும் பௌத்தமும் இந்துமதமும் கிறிஸ்தவமும் எண்ணுகின்றன. பெண்கள் உறவுகளை இயல்பாக உருவாக்கிக்கொள்பவர்கள், ஆகவே அவர்களின் தொடர்புகள் வெட்டப்படுகின்றன. சரியா தவறா என நான் விவாதிக்க மாட்டேன். அது அவர்களின் வழி.

நான் குருகுல முறையைப் பற்றிச் சொல்லும்போது சென்றகாலத்து நெறிகள் ஆசாரங்களை குறிப்பிடவில்லை. ஓர் ஆசிரியனுக்கும் மாணவனுக்குமான நேரடியான, நெருக்கமான, தொடர்ச்சியான உறவையே குறிப்பிட்டேன். அந்த உறவு இருந்தால் அது இயல்பாகவே குருகுலமே.

நான் அத்தகைய குருகுலத்தில் [ஸ்ரீநாராயண குருகுலம், ஊட்டி] என் மெய்யான கல்வியைப் பெற்றவன் என்பதனால் அதை முன்வைக்கிறேன். அது மரபான கல்விமுறையை கடைப்பிடிக்கும் அமைப்பு. ஆனால் மரபிலிருந்த சாதிமுறை, மூடநம்பிக்கை, பொருளில்லா ஆசாரங்கள் அனைத்துக்கும் எதிரானது.

இயல்பாகவே ஒன்றை நாம் கவனிக்கலாம். நாம் எல்லா கல்வியையும் சில குருநாதர்களிடம் இருந்தே பெற்றிருப்போம்.கல்விநிலையங்களிலேயே அப்படி சில குருக்கள் இருப்பார்கள். அதன்பின் தொழில் தளங்களில் ஆசிரியர் கிடைப்பார்கள்.கலையிலக்கியத் தளத்து ஆசிரியர்கள் வருவர். ஞானாசிரியர் அமைவர்.

ஏனென்றால் மனிதன் மனிதனிடமிருந்தே கற்றுக்கொள்ள முடியும். அமைப்புகளிடமிருந்து அல்ல. தன்னை அறிந்த ஒரு மனிதனிடமிருந்து அவர் உவந்து அளிப்பவற்றை பெற்றுக்கொள்கையிலேயே பிழையறக் கற்கிறோம். அன்பே கல்விக்கான ஊடகம். கல்வி எந்நிலையிலும் ஒரு பெருங்களியாட்டாகவே இருக்க முடியும்.

அத்தகைய கல்வி உண்மையில் நடக்கும்போது நாம் அதை உணர்வதில்லை. ஆகவே அதன்பொருட்டு நேரம் ஒதுக்குவதில்லை. அது முக்கியமானதென்னும் எண்ணமும் இருப்பதில்லை. அதை எவ்வகையிலும் முறைப்படுத்திக்கொள்வதில்லை. ஆகவே அது பெரும்பாலும் அரைகுறையாக நிகழ்கிறது. பின்னாளில் நினைத்து ஏக்கமும் வருத்தமும் அடைகிறோம்.

அத்தகைய கல்வியை அடையாளம் கண்டு அதற்கான அமைப்புக்களை உருவாக்குவதைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். பழமையான அமைப்புக்களை திரும்ப உருவாக்குவது பற்றி அல்ல. பழைய சம்பிரதாயங்கள், ஆசாரங்கள், மனநிலைகளை மீட்பதைப் பற்றி அல்ல. அவையெல்லாம் தேவை இல்லை. குருகுலத்தின் கல்விமுறை, அதற்கான உளவியல் மட்டுமே தேவை

அதுவும் அந்தக் கல்வி அனைவருக்குமான பொதுக்கல்விக்கு உகந்தது அல்ல. அதற்கு இன்றிருக்கும் கல்விமுறையே உகந்தது. தனித்திறன் வெளிப்படும் துறைகளுக்கான கல்வியிலேயே குருகுல முறை தேவை. ஒருவன் ஓவியனாகவேண்டும் என்றால் ஓவிய அடிப்படைகளை ஓவியக்கல்லூரியில் கற்றுக்கொள்ளவேண்டும். அதன் பின் ஓவியர் சந்துருவுடன் அவருடைய குருநிலையில் சென்று தங்கி உடன் வாழவேண்டும். அது ஒரு குருகுலம், நான் சொல்வது அதைத்தான்.

ஜெ

குருகுலமும் கல்வியும்

மணிமேகலை சீவகசிந்தாமணி- காவியங்களை வாசித்தல்

கற்றல்- ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2021 11:35

தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள்

ஆனந்த் குமார் கவிதைகள் இணையப்பக்கம்

தனிமையைக் கவிஞர்கள் எழுதத்தொடங்கி எத்தனை காலமாகிறது. கவிதை என ஒன்று இருக்கும் வரை அதை எழுதிக்கொண்டிருப்பார்கள் போல. கவிதையே தனிமையை எழுதும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு கலைவடிவம்தானா? கவிதையே தனிமையை உருவாக்கிவிடுகிறதா என்ன? மெலிந்து மெலிந்து திரையென்றாகி விட்ட சுவர்.ஆயினும் அதை விலக்கியாகவேண்டும். ஆயிரம் அகச்சுவர்களைக் கடந்து.

உறுதியான கதவல்ல

வாசலில் நெகிழ்வதோர் திரை.

நீ நினைத்தால்

உள்ளே வந்துவிடலாம்

அழைப்பு மணி ஏதுமில்லை

ஒரு தாழ்ப்பாள் போலுமில்லை

திறந்து வருதல் அத்தனை எளிது.

உன் வருகையை

அது எனக்கு அறிவிப்பதில்லை

ஒத்துக்கொள்கிறேன்

எப்படியும் அதை விலக்கித்தான்

என்னிடம் நீ வரவேண்டியிருக்கிறது.

நான் காத்திருக்கிறேன்

வாசலின்

அத்தனை வாசல்களிலும்.

சிறிய காற்றிற்கு

எழுந்து வருகிறது,

பின்

தொடாமல் மீள்கிறது

ஒரு மெலிந்த அலை.

அந்தக் கவிதையில் அலையென நெளியும் திரையே இந்தக் கவிதையில் நாவென ஆகி உலகத்தால் பார்க்கப்படாத தீவை நக்கி நக்கி உவர்ப்பு கொள்கிறது. குருதிப் புண்ணை நக்கி நக்கி பெரிதாக்கும்  ஊனுண்ணிவிலங்குபோல. அச்சுவை அதற்கு போதையும் வெறியும் ஏற்றுகிறது. புண்ணை நக்கும் விலங்கு தன் சாவை நக்கி நக்கி அருகே கொண்டுவருகிறது.

அந்தத் தனித்தீவின்

பெருங்கடலுக்கு வயதாகிறது

இன்னும் யாரும் வந்து

பார்க்கவில்லை

காதலரும் முன்அமர்ந்து

பேசவில்லை

ஒருசொல்லும் முன்நின்று

எழவில்லை

ஒருவன் கண்ணீர்கூட

அதில் சேரவில்லை

நாவை

நீவி நீவி விடுகிறது

வெண்மணலில்.

தன்னை சுவைத்துத்

தானெனக்கிடந்த

அதற்கு

அத்தனை உவர்ப்பு.

அகன்று செல்லும் பாதைகள் அளிக்கும் தனிமையை ரயில் பயணங்களில் காணமுடியும். எவரெவரோ நடந்த பாதை. ஒரு நினைவு வடு. எல்லா வடுக்களும் தனிமையையே அடையாளப்படுத்துகின்றன

புழுவென
நெளிந்து எழுந்து
வளைந்து சென்ற
பாதை
விடியலில்
கொஞ்சம் நின்றது.

பாதை கடந்து
அலையென நீண்டு மேடேறிச்
செல்கிறது
விடியல்.

விடியலைச்
சுமந்து செல்லும்
பாதை
இப்போதொரு நத்தை

மொக்கவிழ்தலின் தொடுகை
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2021 11:34

வரவிருக்கும் படங்கள்

பொன்னியும் கோதையும்

ஒரு சினிமாவின் அறிவிப்பு வந்ததுமே தமிழ்ரசிகர்கள் கொள்ளும் உற்சாகம் சினிமா மேல் மங்காத நம்பிக்கையை அளிப்பது. வெற்றிமாறனின் விடுதலை அறிவிப்பு வந்ததுமே என்னுடைய துணைவன் கதைக்கான விசாரிப்புகள் பெருகின. இப்போது பொன்னியின் செல்வன் பற்றிய செய்தியும் மறுநாளே வெந்து தணிந்தது காடு அறிவிப்பும் வந்துள்ளன. மின்னஞ்சல்பெட்டி நிறைய அதைப்பற்றிய கேள்விகள்தான். சம்பந்தமே இல்லாதவர்கள். எனக்கு இணையதளம் ஒன்று இருப்பதே பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

ஒரு சினிமா தயாரிக்கப்பட்டு அரங்குக்கு வர மாதக்கணக்கிலாகிறது. அதுவரை அது பற்றிய செய்திகள் ரகசியமாகவே இருக்கும். அப்போதுதான் சினிமா புதியதாக இருக்கும். ஆகவே சினிமா சார்ந்த எவருக்குமே ரகசியக்காப்பு உறுதிப்பாடு அளிக்கும் கடமை உண்டு. பெரும்பாலும் வாய்திறக்கவே மாட்டார்கள். இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே கடிதங்கள் வழியாகச் செய்திகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்விகளில் பதிலளிக்கத் தக்கவையாக சிலவே உள்ளன.

பொன்னியின்செல்வன் கல்கியின் நாவலை அடியொற்றியே எடுக்கப்படுகிறது. தேசிய அளவில் ராஜராஜ சோழன் என்ற ஆளுமையை, சோழப்பேரரசின் சித்திரத்தை கொண்டுசெல்வதே முதன்மை நோக்கம். இந்தியாவில் தமிழகத்திற்கு வெளியே, ராஜராஜசோழன் நேரடியாக ஆட்சி செய்த கேரளத்திலும் கர்நாடகத்திலும் கூட, அவர் பெயர் எவருக்கும் தெரியாது. ஆய்வாளர்கள்கூட மேலோட்டமாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள். நாம் அசோகரையோ ஹர்ஷவர்த்தனரையோ தெரிந்து வைத்திருப்பது போல அவர்கள் நம்மை தெரிந்துவைத்திருக்கவில்லை. அதற்குரிய காரணங்கள் பல.

ஒரு வரலாற்று ஆய்வேடு அல்லது ஆவணப்படம் வழியாக ராஜராஜசோழனையும் சோழப்பேரரசையும் இந்தியாவெங்கும் மக்களிடையே கொண்டுசெல்லமுடியாது. ஓர் பண்பாட்டு அடையாளமாக நிலைநாட்டவும் முடியாது. பலகோடிப்பேர் பார்க்கும் ஒரு வணிகப்பெரும்சினிமாவாலேயே அதற்கு இயலும். பொன்னியின்செல்வன் அத்தகைய கதை. அது குழந்தைகளுக்குரிய உற்சாகமான சாகச உலகமும், மர்மங்களும், உணர்ச்சிகரமான நாடகத்தருணங்களும் வரலாற்றுப்பின்புலமும் கலந்த ஒரு கதை. அந்த கலவை வெகுஜனங்களுக்குரியது. ஆகவே பொன்னியின்செல்வன் எடுக்கப்படுகிறது. சோழர்காலம் மற்றும் ராஜராஜ சோழன் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களும் ரசிக்கும்படியாக எடுக்கப்படுகிறது. இந்தியாவெங்கும் சென்றுசேரும்படியாக.

பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக, மூன்றும் மூன்றுமாக ஆறுமணிநேரம் அமையலாம். நாடகத்தனம், நிறைய அடுக்கு வசனங்கள் கொண்ட வழக்கமான சரித்திரசினிமா அல்ல. காட்சிவிரிவு மேலோங்கிய சினிமா. நாவலின் காட்சிப்படுத்தல் அல்ல சினிமா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். சினிமா தனக்குரிய அழகியல் கொண்ட ஒரு தனிக்கலை. சினிமா எதையும் சுருக்கி, காட்சிவழியாகவே சொல்லும். பொன்னியின் செல்வன் பெரும் செலவில், பெரும் உழைப்பில் எடுக்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட சினிமாக்களிலேயே இதுதான் செலவில் மிகப்பெரிய படம். ஒவ்வொரு பைசாவாக எண்ணி எண்ணிச் செலவிட்டு எடுக்கும் மணிரத்னம் எடுக்கும்போதேகூட.

பொன்னியின் செல்வனின் நடிகர்கள் பற்றி வரும் செய்திகள் ஏறத்தாழ உண்மை. ஆனால் அவர்களின் தோற்றம் ஆனந்தவிகடனால் வரையப்பட்டது. அப்படி மிகையான ஆடையாபரணங்களுடன் இன்றைய சினிமா இருக்கமுடியாது. எந்த சினிமாவும் கதாபாத்திரங்களின் தோற்றத்தை இத்தனை முன்னரே வெளியிடாது.

பாடல்களை இளங்கோ கிருஷ்ணன் எழுதுகிறார். மணிரத்னம் புதிய சொற்சேர்க்கை தேவை என்று சொன்னதனால் நான் சிபாரிசு செய்தவர் அவர். மரபிலக்கியம் அறிந்த நவீனக்கவிஞர் தேவைப்பட்டார், இளங்கோவே தமிழில் என் முதல் தெரிவு. ஆனால் அவருடைய அத்தனை கவிதைகளையும் படித்து, பலமணிநேரம் காணொளிகளை பார்த்து, அவரை மதிப்பிட்டு அறுதி முடிவெடுத்தவர் மணிரத்னம். அதனாலேயே அவர்மேல் பெருமதிப்பு கொண்டவராகவும் ஆனார். இளங்கோ ஒரு கவிஞராக அவர் அடைந்த உச்சகட்ட மதிப்பை இந்த சினிமாக்களத்திலேயே பெற்றிருப்பார்.

என்னுடைய நீலம் நாவலின் சிலபகுதிகளை பாடலாக ஆக்க மணி ரத்னத்திற்கு எண்ணமிருந்தது. நீலம் நாவல் அவருக்கு மிக உவப்பான ஒன்று. அது வெளிவந்தகாலத்திலேயே அவருடைய கடிதம் வந்திருக்கிறது. ஆனால் அப்பகுதிகள் இசைக்குள் சரியாக அமையவில்லை. இசையுடன் அவற்றை இணைக்கும் பணி என்னால் இயல்வது அல்ல என்று . நீலம் நாவலை ஒட்டி வெண்பா கீதாயன் எழுதிய கவிதைக் குறிப்புகளின் அடிப்படையில் அவருடைய வரிகள் இசையமைக்கப்பட்டன.

பொன்னியின் செல்வன் சாதாரண சினிமா அல்ல. இத்தகைய படங்கள் பொழுதுபோக்கு என்பதைக் கடந்து பண்பாட்டு முகத்தை உருவாக்குகின்றன. மிகவிரிந்த காட்சியமைப்பு கொண்ட பெரிய படங்களே நம் இறந்தகாலம் பற்றிய சித்திரத்தை உருவாக்கி நம் இளைய தலைமுறையின் நினைவில் நிறுத்தமுடியும். நம் பெருமையை வெளியே கொண்டுசெல்லமுடியும் பாகுபலி வெறும் ஒரு ராஜாராணி கதை. பொன்னியின் செல்வன் வரலாறும்கூட. தமிழ்ப்பண்பாட்டின் உச்சக் காலகட்டத்தின் சித்திரம் அது.

எனக்கு பெரிய ‘செண்டிமெண்ட்’ எல்லாம் இருக்கவில்லை. ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை ’ரஷ்’ பார்த்தபோது ரத்தமும் புகையுமாக புலிக்கொடி மெல்ல ஏறி மேலே பறக்கும் காட்சியில் சட்டென்று உளம்பொங்கி மெய்சிலிர்ப்பு அடைந்து கண்கலங்கிவிட்டேன். இது நம்முள் நம் முன்னோர் பற்றி நாம் கொண்டுள்ள பெருமிதம். அந்தப்பெருமிதம் சற்றேனும் உள்ளவர்களையே பொன்னியின் செல்வன் தன் முதன்மைப் பார்வையாளர்களாகக் கொண்டுள்ளது.

கௌதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ முதலில் நதிகளில் நீராடும் சூரியன் என்று பெயரிடப்பட்டிருந்த படம்தான். அந்தக்கதை மென்மையான நகர்ப்புறக் காதல்கதை. அதுவும் பின்னர் படமாகவே வாய்ப்பு. சிலம்பரசன் இப்போது உடல்மெலிந்து, மென்மீசையுடன் மிக இளைஞராக, கிட்டத்தட்ட சிறுவன் போல இருக்கிறார். அவருக்கு பொருந்தும் கதை என்பதனால் இந்தக்கதை தெரிவுசெய்யப்பட்டது. அவருக்காக கதை உருவாக்கப்படவில்லை, கதைக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.

அசுரன் அல்லது கர்ணன் போன்ற கிராமப்புறக் கதை அல்ல இது. கிராமப்புறமும் உண்டு. பரபரப்பான, ஆனால் மிகையான சாகசங்கள் ஏதும் இல்லாத நம்பகமான சினிமா. வேறு படங்களின் சாயல் ஏதும் இல்லாதது. கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான படமாக்கல் உடையது. ஆனால் rustic என்று சொல்ல்லப்படும் கரடுமுரடான அழகியல் கொண்டது.

இந்தப்படங்களில் என் பணி முடிந்தபின்னரே படங்கள் ஆரம்பிக்கின்றன. நான் கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்தபடம், வசந்தபாலனின் அடுத்த திட்டம் என முன்னகர்ந்துவிட்டேன்.

நன்றி. மேற்கொண்டு சினிமா பற்றிய பேச்சுக்கள் இல்லை.

பொன்னி,கோதை – கடிதங்கள்

பொன்னியின் செல்வன், ஒரு கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2021 11:34

மழைப்பயணம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

மழைப்பயணம் பற்றிய கட்டுரை வாசித்தேன். இந்த சூழலில் இப்படி பயணம் செய்யக்கூடாது. உருமாறிய வைரஸ் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நோய் வந்து சென்றதோ அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டதோ உறுதியான பாதுகாப்பை அளிப்பது அல்ல. ஆனால் நீங்கள் பயணம் செய்யாமலும் இருக்க முடியாது. சாவு என்றாலும்கூட பயணத்தைத் தேர்வுசெய்வீர்கள் என்று தெரியும். ஆகவே உங்கள் மனநிலையையும் புரிந்துகொள்கிறேன்.

அர்விந்த்குமார்

***

அன்புள்ள ஜெ

நலமா?

குதிரேமுக் டிரெக்கிங் பற்றிய குறிப்பை வாசித்தேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் நண்பர்களுடன் சென்றிருந்தேன். ஆனால் கோடைகாலத்தில். அப்போதும் பசுமையாகவே இருந்தது. ஆனால் மழை இல்லை.

மழைக்காலத்தில் குதிரேமுக் டிரெக்கிங் ஆபத்தானது என்று அப்போது சொன்னார்கள். பாறைகள் உருள்வதுண்டு. மழைநீர் பாதை வழியாகவே பெரிய காட்டாறாக வருவதும் உண்டு. அங்கே மேகக்கிழிசல் போல ஒரே இடத்தில் சட்டென்று தீவிர மழை பொழியும். மிகப்பெரிய விசையுடன் காட்டாறு உருவாகி வரும். கர்நாடகத்தின் மலநாடு தென்னகத்திலேயே அதிக மழைபெறும் இடம். துங்கா, பத்ரா, காவேரி போன்ற பெரிய ஆறுகளும் ஏராளமான நடுத்தர ஆறுகளும் உருவாகும் இடம் அந்த மலைப்பகுதிதான். அங்கே திடீர் வெள்ளங்கள் சகஜம். சிருங்கேரியில் அப்படி ஒரு திடீர்வெள்ளத்தில்தான் எழுத்தாளர் ஆதவன் மறைந்தார். கவனமாகச் சென்றிருக்கவேண்டிய பயணம்.

அட்டைக்கடியின் அரிப்பிலிருந்து விடுபட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்

ஆர்.ராஜகோபால்

***

அன்புள்ள ஜெ,

ஆகும்பே ராஜநாகம் மழை என்று எல்லாமே ஒரு கனவுபோல இருக்கிறது. நானே ஆகும்பே பற்றி ஒரு கற்பனை வைத்திருக்கிறேன். முடிந்தால் நல்ல மழைக்காலத்தில் அங்கே சென்று ஒருநாள் மழையோசையைக் கேட்டுக்கொண்டு தங்கியிருக்கவேண்டும்.

ஜெயக்குமார் ராமநாதன்

நிலவும் மழையும்- 4 நிலவும் மழையும்- 3 நிலவும் மழையும்-2

நிலவும் மழையும்-1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2021 11:31

கண்ணனும் காந்தியும் – கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு

முதலில் என் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் உங்களை கண்டு கொண்டேன், கண்டு கொண்ட நாளில் இருந்து உங்கள் எழுத்தை வாசிக்காத நாள் இல்லை. உங்கள் படைப்பை, உங்கள் பேருரையை கண்டுகொண்டது முதல் என் வாழ்வில் எழுந்துள்ள நாள்பட்ட கேள்விகளுக்கு விடையை கண்டு கொள்ள பேருதவி புரிந்து இருக்கிறது. அதற்க்கு கோடானகோடி நன்றிகள்.

நான்  உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புவது, கண்ணனை குருவாகவோ/கடவுளாகவோ/அவதாரமாகவோ  ஏற்ற்கும் நீங்கள் காந்திஜியை அப்படி ஏன் ஏற்க மறுக்கிறீர்கள் .

என் தமிழில் உள்ள பிழையை ஜல்பனை துரியோதனன் நடத்தியது போல் தயைகூர்ந்து மன்னிக்கவும்.

நன்றி

உங்கள் வாசகன்
வெங்கடேஷ்
மான்செஸ்டர்
ஐக்கிய ராஜ்ஜியம்

அன்புள்ள வெங்கடேஷ்,

கண்ணனுக்கு இரண்டு முகங்கள். வரலாற்று மனிதன், மெய்ஞானி, தத்துவசிந்தனையாளன் என ஒரு முகம். ஒரு குறியீடு, ஒரு படிமம் என இன்னொரு முகம். நாம் அந்த வரலாற்று மனிதனை வரலாற்றினூடாகவும், மெய்ஞானியை மெய்ஞான வழிகளினூடாகவும், தத்துவசிந்தனையாளனை தத்துவம் வழியாகவும் அறிய முயல்கிறோம். வெண்முரசு அப்படித்தான் அவனை அறிய முயல்கிறது.

இன்னொரு முகம் கண்ணன் என்னும் உருவகம் அல்லது குறியீடு அல்லது படிமம். அது சென்ற மூவாயிரமாண்டுகளாக பல்லாயிரம் ஞானிகளாலும் கவிஞர்களாலும் திரட்டி எடுக்கப்பட்ட ஒன்று. நாம் அதைத்தான் தெய்வமென வழிபடுகிறோம். அது நம் உருவகம். இப்பிரபஞ்சத்தை படைத்தாளும் பெருவிசை ஒன்றின் அடையாளமாக அந்தப் படிமத்தை ஆக்கிக்கொள்பவர்கள் நாமே.

காந்திக்கு வரலாற்று மனிதன், தத்துவசிந்தனையாளன் என்னும் இருமுகங்களே உள்ளன. ஆகவே அவரை வரலாற்றில் வைத்தும் தத்துவத்தினூடாகவும் மட்டுமே அறியமுடியும். அவர் அகிம்சை போன்று அவர் முன்வைத்த சில விழுமியங்களின் அடையாளம் என்று வேண்டுமென்றால் சொல்லலாம். இன்று அவர் ஒரு படிமம் அல்ல. ஒருவேளை இன்னும் ஆயிரம் ஆண்டுகளிலும் அவரும் இறையுருவமாக ஆகக்கூடும். பல தலைமுறைக்காலம் மனிதர்கள் அந்த அடையாளத்தின்மீது தங்கள் கற்பனைகளையும் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் ஏற்றிக்கொள்வதன் வழியாகவே அது நிகழும், அதுவரை அவர் மனிதரே. இதுதான் வேறுபாடு

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2021 11:30

August 6, 2021

காவியங்களை வாசித்தல்

சொல்முகம் வாங்க பளிங்கறை பிம்பங்கள்

டியர் ஜெ.மோ,

நலமா?

ஒரு வாரமாக உங்கள் சொல்முகம் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாகப் புனைவுகளை வேகமாக வாசித்துவிட முடியும். அபுனைவுகளின் பக்கங்களை அவ்வளவு எளிதில் புரட்டிக்கொண்டு செல்ல முடியாது. இது என் வாசிப்பனுபவம்.

நவீன எழுத்தாளர்கள் பொதுவாக மரபு அறியாதவர்கள் என்றும் புலவர் வகையறாக்கள் மட்டுமே சங்க இலக்கியத்தைப் போற்றிக் கொண்டாடுபவர்கள் என்றும் ஒரு புரிதல் வாசகர்களிடம் இருக்கிறது. புலவர்கள் நவீனத்தை இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் உங்களைப் போன்றவர்கள் அதில் ஆழம் கண்டு எழுதும்போது ஏற்படும் மகிழ்ச்சி எப்படிப்பட்டது என்பதை உணரத்தான் முடியும். உணர்த்துவது எளிதல்ல.

குறிப்பாக மணிமேகலை – சீத்தலை சாத்தனாரின் பளிக்கறை படிமம்!

“அந்தப் பளிக்கறை தமிழிலக்கியத்தின் மிக முக்கியமான படிமங்களில் ஒன்று , ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே என்றும் இருக்கும் பளிங்கு அறையல்லவா? இதைத்தான் சுற்றி சுற்றி வந்து இன்றுவரை இலக்கிய உலகம் ஆண் பெண் உறவாக தடவி தடவிப் பார்த்து…”

(நான் தமிழிலக்கியம் படித்தவள் ஜெ.மோ. )மணிமேகலையின் தர்க்க ஞானமும் அறிவுத்திறனும் சமூகவெளியில் காணாமல் போனதற்கான காரணங்களை இன்றும் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணாக அவள் வாழ்க்கையின் முடிவுகளை அவளுக்கு எடுக்கும் உரிமையை அவளைப் பெற்ற மாதவி மறுத்திருப்பதைக் கண்டு எல்லா பெண்களுக்கும்

அம்மாக்கள் எதோ ஒருவகையில் அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள், மகளாக இருந்தப்போது இருந்த மாதவி, மணிமேகலையின் அம்மாவாக இருந்தப்போது இருந்த மாதவி. இருவரும் எவ்வளவு வித்தியாசப்படுகிறார்கள். இதற்கு வயது அனுபவம் மட்டுமல்ல காரணம், பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் உரிமை தனக்கிருப்பதாக அம்மாக்கள் நினைக்கும் நினைப்பும் தான் வினையாற்றுகிறது என்று நினைக்கிறேன்.

எதோ ஒருவகையில் இன்றுவரை அம்மாக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்! வாழ்க்கையில் பெண்களின் உலகத்தில் அம்மாக்களைப் புரிந்து கொள்ள முடிவதிலலை.! என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அப்போதும் பளிக்கறை படிமத்தின் பிரமாண்டத்தை… இன்னும் எழுதி எழுதி தீர்க்க முடியாத அந்தப் பக்கங்களை  வாசித்தும் உங்கள் அளவுக்கு அதை உணராமல் கடந்து சென்றிருக்கிறேன். உங்கள் சொல்முகம் மும்பையின் மழைக்கால மின்னலாய்… எனக்குள்..பளிச்சென அதை  உணர்த்தியது.

நன்றி ஜெ.மோ.

அன்புடன்,

புதியமாதவி,

மும்பை

அன்புள்ள புதியமாதவி,

ஐம்பெருங்காப்பியங்களில் சீவசிந்தாமணி, மணிமேகலை ஆகிய இரண்டும் நம்மால் சரியாக வாசிக்கப்படாத காப்பியங்கள். அவை ஏன் அவ்வாறு கடந்துசெல்லப்பட்டன என்பதற்கான காரணங்களை நாம் எளிமைப்படுத்திக் கொள்ளாமல் யோசிக்கவேண்டும்.

இங்கே அதிகமாக வாசிக்கப்பட்ட காவியங்கள் சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும். அவையிரண்டும் காவியச்சுவையில் மணிமேகலைக்கும் சீவகசிந்தாமணிக்கும் மேலானவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அவை அவ்வண்ணம் வாசிக்கப்பட காவியச்சுவை மட்டுமே காரணம் அல்ல.

சிலப்பதிகாரம், கம்பராமாயணம் இரண்டுமே நாடகத்தன்மை கொண்டவை. உணர்ச்சிகரமானவை. மொழிச்சுவையும் அணியழகும் இயைந்தவை. ஆகவே அவை இயல்பாக ரசிக்கப்படுகின்றன. எந்த மேடையிலும் இவ்விரு பெருங்காப்பியங்களின் தருணங்களை அழகுறச் சொல்லி பாமரரையும் உளஎழுச்சி கொள்ளச் செய்ய முடியும். அப்பாடல்களை எவரும் மகிழும்படி நிகழ்த்திக்காட்டவும் முடியும்.

மாறாக, மணிமேகலை, சீவகசிந்தாமணி இரண்டுமே குறியீட்டு ,உருவக அழகுகள் கொண்டவை. தத்துவார்த்த ஆழம் கொண்டவை. நாடகீயத்தருணங்களும் உணர்ச்சிகரமான வெளிப்பாடுகளும் அனேகமாக இல்லாதவை. அவற்றை மேடைகளில் நிகழ்த்தி மக்களை உணர்வெழுச்சியும் நிறைவும் கொள்ளச் செய்ய முடியாது. அவை ஓரளவுக்கு அறிவுப்பயிற்சியும் ரசனையும் கொண்டவர்களுக்கு மட்டுமே உரியவை.

கம்பராமாயணம் முன்வைக்கும் தத்துவம் பின்னாளில் இங்கே ஆழமாக வேரூன்றிய பக்திஇயக்கத்தின் சாராம்சமாக அமைவது. ஆகவே கம்பராமாயணத்தின் உணர்வுகள், உருவகங்கள், கருத்துக்கள் இயல்பாகவே நமக்கு அறிமுகமானவையாக உள்ளன. அவை நேரடியாகவே நம் ஆழுள்ளத்துடன் உரையாடுகின்றன.ஆகவே இயல்பாக ஏற்பை அடைந்தது

சிலப்பதிகாரம் சற்று வேறுபட்ட வகையில் ஏற்பை அடைந்த நூல். அது சமண அல்லது பௌத்த காவியம். ஆனால் சமயப்பொறை கொண்டது. திருமாலையும் கொற்றவையையும் பாடுவது. ஆகவே அது இருபதாம் நூற்றாண்டுக்கு உகந்த மதம்கடந்த ஆன்மிகத்தை முன்வைப்பதாக வாசிக்கப்பட்டது.

அத்துடன் அதில் உள்ள மூவேந்தர் வாழ்த்து. தமிழ்நில அடையாளம் உட்பட்ட தமிழ்ப்பண்பாட்டை வரையறை செய்யும் பாடல்கள் அதை அன்று உருவாகிவந்த தமிழியநோக்குக்கு அணுக்கமானவையாக ஆக்கின. அது தமிழியக்கத்தின் முதன்மைநூல் என வாசிக்கப்பட்டது

மணிமேகலை, சீவகசிந்தாமணி இரண்டுமே அத்தகைய வாசிப்புகளைப் பெறவில்லை. அவை முன்வைக்கும் மதமும் ஆன்மிகமும் இங்கே இருந்து சுருங்கி அகன்றுவிட்டிருந்தன. நவீனச்சூழலுக்குரிய பண்பாட்டு அரசியல் கூறுகள் அவற்றில் இல்லை. அவை சமண,பௌத்த நூல்களாகவே நின்றன.

மணிமேகலை, சீவகசிந்தாமணி இரண்டும் மரபான காவியவாசிப்பு முறைமைப்படி வாசிக்கப்பட்டன. அணிகளை ரசிப்பது, முன்வைக்கப்படும் விழுமியங்களை ஆராய்வது, உணர்ச்சிகரத் தருணங்களை வளர்த்தெடுத்துக்கொள்வது ஆகிய மூன்றுமே மரபான காவியவாசிப்புக்குரிய வழிகள்.

ஆனால் காவியங்களுக்கு நவீன வாசிப்புமுறை ஒன்று ஐரோப்பிய இலக்கியவிமர்சனம் வழியாக திரண்டு வந்திருக்கிறது. காவியங்களை குறியீடுகளாக, பண்பாட்டு நுண்பொருட்களின் தொகைகளாக வாசிப்பது அது. காவியத்தின் அணிகள் வர்ணனைகளை மட்டுமல்ல இயல்பான நிகழ்வுகளையும்கூட அவ்வண்ணம் வாசிப்பது.

ஏனென்றால் ஒரு காவியம் எழுதப்பட்டபோது நேர்ப்பொருள் அளிக்கும்படி எழுதப்பட்ட நிகழ்வு கூட எவ்வகையிலோ குறியீடுதான். அதற்கு ஒரு குறியீட்டுப்பொருள் இருப்பதனால்தான் அது காவியத்தில் இடம்பெற்றிருக்கிறது, காலப்போக்கில் குறியீட்டுப்பொருள் பெற்றுமிருக்கிறது என கருதுவது.

அவ்வாறான வாசிப்பு நாம் ஏற்கனவே வாசித்துக் கடந்துசென்ற காவியங்களை முற்றிலும் புதிய பொருளில் வாசிக்க வைக்கும். காவியங்கள் மிகப்பெரிய அளவில் விரிவடையும். காவியங்களினூடாக நாம் ஒரு பண்பாட்டை முழுமையாக வாசித்தெடுக்க முடியும்

உதாரணமாக, ஒரு காட்சி. சிலப்பதிகாரத்தில் கவுந்தி பூம்புகாரிலிருந்து கண்ணகி கோவலுடன் மதுரைக்குச் செல்லும் வழியில் ஒரு குடிகாரன் தன் தோழியுடன் எதிரே வருகிறான். இந்த இருவரும் யார் என்று கேட்கிறான். கவுந்தி என் மக்கள் என்கிறாள். இருவரும் உங்கள் மக்கள் என்றால் உடன்பிறந்தார் நடுவே திருமணம் நடந்திருக்கிறது என்று அர்த்தமா என அவன் கேட்கிறான். கவுந்தி அவர்களைச் சாபம் போட்டு நரியாக ஆக்க அவர்கள் ஊளையிட்டபடி காட்டுக்குள் ஓடிச்செல்கிறார்கள்.

இந்தக் காட்சி ஒரு காவியத்தில் ஏன் இடம்பெறுகிறது? இது கதையில் எந்த விசேஷமான பங்கும் ஆற்றவில்லை. ஆனால் தமிழ்ப்பண்பாட்டுப் பரிணாமத்தின் பின்னணியில் வைத்து இதைப்பார்த்தால் மிகப்பெரிய ஒரு மாற்றத்தின் கதையை இது காட்டுகிறது.

சங்ககாலம் என்பது கள்ளும் ஊனுணவும் பெருகியிருந்த காலகட்டம். அதன் தொடக்கத்தில் ஒருவகையான பழங்குடித்தன்மையுடன் கள்ளுண்டு களியாடுவது பாராட்டப்படுகிறது. பாணர்கள் மன்னர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் சங்ககாலத்தின் இறுதியில் பாணனும் விறலியும் இழிவாக பாங்கனும் பரத்தையருமாக குறிப்பிடப்படுகிறார்கள்.தொன்மையான தமிழ்ப் பழங்குடிப் பண்பாட்டின் வாழ்க்கைமுறை திரிந்து களியாட்டவாழ்க்கையாக மாறியிருப்பதை கலித்தொகை காட்டுகிறது. அதன்மேல் கண்டனத்தை பல கலிப்பாடல்கள் சுட்டுகின்றன.

சங்கம் மருவியகாலம் என்பது சமண,பௌத்தப் பெருமதங்கள் தமிழ்மண்ணில் வேரூன்றிய காலகட்டம். சங்ககாலத் தமிழ்நாட்டின் பழங்குடித்தன்மைகொண்ட வாழ்க்கைமுறை சமண பௌத்த மதங்களால் கடுமையாக மறுக்கப்பட்டது. சமண,பௌத்த மதங்களின் அறவியலும் ஒழுக்கவியலும் முன்வைக்கப்பட்டன.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் அறவியல் என்பது சங்ககால அறவியலை சமண, பௌத்த மதங்களின் நோக்கில் மறுவரையறை செய்வதாகும். அதில் குடியும் ஊனுணவும் பரத்தமையும் பெரும் பாவமாகச் சொல்லப்பட்டன என்பதை நாம் குறளிலேயே காண்கிறோம்.

சிலப்பதிகாரத்தின் அறவியலும் குறளுடையதே. கவுந்தி அதன் வடிவம். அங்கே அவள்முன் களிமகனும் பரத்தையுமாக வந்து நின்றிருப்பவர்கள் சங்ககாலத்தின் பாணனும் விறலியும்தான். அவர்களை நரிகளாக்கி காட்டுக்குள் ஊளையிடும்படி துரத்துகிறது சமணம். அது ஒரு பெரிய குறியீட்டுச்செயல். தமிழ்ப்பண்பாட்டில் நடந்த ஒரு பெரிய மாற்றத்தின் சித்தரிப்பு.

இத்தகைய நவீன வாசிப்பு மணிமேகலை, சீவகசிந்தாமணி இரண்டுக்கும் அளிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன்வழியாக அக்காவியங்கள் மீண்டெழுந்திருக்கும். ஆனால் இங்கே மரபிலக்கியம் வாசிப்பவர்களுக்கு நவீன அழகியல்கொள்கைகள் அறிமுகமில்லை. நவீன வாசகர்கள் மரபிலக்கியம் வாசிப்பதில்லை.

[மணிமேகலை பற்றி அ.மார்க்ஸ் போன்றவர்கள் புதிய கோணத்தில் சில எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இலக்கிய ரசனை என்பதே இல்லை. இலக்கியப்பிரதியில் சமகால அரசியலை கண்டடைவது மட்டுமே அவர்களின் வாசிப்பு]

மணிமேகலையின் கதாபாத்திரம் தமிழிலக்கியத்தில் தனித்தன்மை வாய்ந்தது. அவள் துறவி மட்டுமல்ல, அன்னையும்கூட. உலகுக்கு உணவூட்டும் பேரன்னை. மொத்த தமிழிலக்கியமும் இதுவரை உருவாக்கிய பெண் கதைமாந்தர்களிலேயே மிகப்பெரிய ஆளுமை மணிமேகலைதான். தன்னுள் இருந்து தன் தெய்வத்தை எடுத்து உலகுபுரந்தவள்.

ஆனால் இங்கே கண்ணகிதான் முன்வைக்கப்பட்டாள். கண்ணகி தமிழ்ச்சூழலை பாதித்ததுடன் ஒப்பிட்டால் மணிமேகலை அறியப்படாத ஆளுமையேதான். ஏன்? அதை ஆராய நான் முன்பு சொன்ன காவிய வாசிப்பு முறைமை அவசியமானது.

சிலப்பதிகாரம்- மணிமேகலை காலகட்டத்திற்குப்பிறகு வருவது சோழர்காலம். அது இங்கே தமிழ்நிலத்தின் முதல் பேரரசை உருவாக்கியது. பேரரசுகள் நன்கு வகுக்கப்பட்ட உறுதியான அடித்தளம் மீது நிலைகொள்பவை. பேரரசுகளுக்கு அடித்தளக் கற்களாக பெருமதங்கள், திட்டவட்டமான ஒழுக்கவியல், இறுக்கமான சமூகக்கட்டமைப்பு ஆகியவை இருக்கும். சோழர்காலத்தில் அவை உருவாயின.

அவற்றை உருவாக்கும்பொருட்டு இயல்பாகவே காவியங்கள் உருவாகி வந்தன. முதன்மையானது கம்பராமாயணம். அக்காவியங்கள் மற்றும் புராணங்களிலுள்ள பெண்களைப் பாருங்கள். அந்தப் பெண்கள் எல்லா வகையிலும் மணிமேகலைக்கு எதிரானவர்கள். அவர்கள் குடும்பத்தை கட்டிக்காக்கும், சமுக அமைப்பை நிலைநிறுத்தும் குலமகள்கள். கண்ணகி அந்த குலமகளுக்கான அடையாளம். கம்பனின் சீதை கண்ணகியின் மாபெரும் வடிவம்.

சிற்பங்களில் வரும் உமை அந்த குலமகளின் தெய்வீகத் தோற்றம். ஆடும் அரனுடன் ஆடுபவள். அவன் கொஞ்சும் சிறுமியென மடியில் அமர்ந்தவள். அவனருகே மைந்தருடன் அமைந்தவள். உலகம்புரக்கும் பேரன்னையாக இருந்தாலும் குலமகள். எத்தனை மகத்தான கல், செம்பு, ஐம்பொன் சிற்பங்கள். அவை உருவாக்கிய ஆழுள்ளச் செல்வாக்கு என்ன என்று எண்ணிப்பாருங்கள்.

அந்தவரையறை உருவானதுமே மணிமேகலைக்கான இடம் தமிழுள்ளத்தில் இல்லாமலாகியது. மணிமேகலைக்கு துணைவனே இல்லை. தேவைப்படவில்லை. அவளால் தன்னுள்ளேயே நிறைவும் முழுமையும் கொள்ள முடிகிறது. மணிமேகலை காதல்கொள்ளவில்லை. மானுட உணர்வெழுச்சிகள் எதையுமே அடையவில்லை. மணிமேகலையின் நாட்டம் தத்துவத்தில்தான். அத்தகைய விடுதலைகொண்ட பெண் குறித்த அந்த உருவகமே தமிழ் உளவியலில் இல்லை.

ஆனால் மணிமேகலையை புதிய காவிய இயல் கண்டடையக்கூடும்.   அதைத்தான் நான் அறிமுகம் செய்ய முயல்கிறேன்.

ஜெ

பௌத்தம் கடிதங்கள்

பளிங்கறை – கடிதங்கள்

சீவகசிந்தாமணி, உரையாடல்

சீவகசிந்தாமணி- கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2021 11:35

நுரையின் ஒளி

சுவாரசியமான ஓர் உவமையுடன் ஆரம்பிக்கிறது அருண்மொழியின் ’நுரை’ என்னும் கட்டுரை. வீட்டுக்கு வெள்ளையடிக்கிறார்கள். அத்தனை குப்பைகளையும் ஓட்டை உடைசல்களையும் அள்ளி வெளியே போடுகிறார்கள். வீட்டில் ஒளி வருகிறது, அழகாகிறது. உறவுகளின் நட்பின் கொண்டாட்டம். ஆனால் ஓர் உடைசல் எஞ்சியிருக்கிறது. விடாமல் வந்து அமர்ந்துவிடுகிறது.

இதில் வரும் அருண்மொழியின் அத்தை விஜயா நான் அருண்மொழியைக் காதல் திருமணம் செய்துகொண்டபோது பிணக்குகளை தீர்க்க மிக உதவியாக இருந்தவர். அருண்மொழியின் உளமுணர்ந்த தோழியும் அன்னையுமாக அன்று அவரை உணர்ந்தேன். வெந்நீர் மட்டுமே வைக்கத்தெரிந்த அருண்மொழிக்குச் சமையலும் அவர்தான் கற்றுத்தந்தார்.

உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாக இருந்தார். பேச்சு, கையசைவு, சிரிப்பு எல்லாவற்றிலும் அருண்மொழியின் சாயல் உண்டு. பெண்கள் அத்தையின் சாயலில் அமைவது மிக ஆச்சரியமானது. அவர் சற்று குண்டு. ’உன் அத்தை குண்டு, அதனால் நீயும் குண்டாக ஆவாய்’ என்று அன்று அருண்மொழியிடம் அன்று சொன்னேன். கடுமையாகக் கோபித்துக்கொண்டாள், ஆனால் கலைஞன் குரல் காலத்தின் குரல் அல்லவா?

விஜயா அவர்களுக்கு ஆசிரியைக்குரிய உரத்த குரல் உண்டு, அது அருண்மொழிக்கு வரவில்லை. ஆனால் அந்தத் தன்னம்பிக்கை, நிமிர்வு, அபாரமான நகைச்சுவை உணர்வு இவளுக்கும் உண்டு. விஜயா இருக்குமிடத்தில் எப்போதும் வெடிச்சிரிப்பு இருக்கும். அவர் கணவர் திரு வடிவேலும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்.டிரில் மாஸ்டர் மாதிரி இருப்பார். அவருடைய உடன்பிறந்தவர்கள் அனைவருமே போலீஸில் இருந்தனர். அவரும் எஸ்.ஐ. வேலைக்கு முயன்று முடியாமல் ஆசிரியரானவர். ஆனால் மானசீகமாக எஸ்.ஐதான். சபாரிதான் பிடித்த ஆடை.

அவர்கள் இருவரும் சரியான இணை. இருவருமே சிரிக்கத் தெரிந்தவர்கள். வடிவேல் நகைச்சுவைகள் ஒரு நூல் அளவுக்கு நினைவிலுள்ளன. திரு வடிவேல் அவர்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு வயிற்றுப் புற்றுநோயால் இறந்தார். மூன்றாண்டுகளுக்கு முன்பு அருண்மொழியின் விஜயா அத்தையும் நீண்ட புற்றுநோய் சிகிழ்ச்சைக்குப்பின் மறைந்தார். துயர்மிக்க நினைவுகள்தான். ஆனால் அருண்மொழி குதூகலமான நினைவுகளாக எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டிருக்கிறாள்.

புனைவின் மாயம் கலந்த நினைவுப்பதிவு. தி.ஜானகிராமனுக்கு அழிவில்லை என்று அந்த உரையாடல்கள் காட்டின.

நுரை – அருண்மொழி நங்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2021 11:34

கால்களுக்குக் கீழே…

ஓசூர் போனபோது எடுத்த படம். நண்பர் ஒருவரின் விளைநிலத்திற்குள் இருக்கும் கற்பதுக்கை இது. ஆனால் வரலாற்றுக்கு முந்தைய காலத்தையது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கலாம். யாரோ ஓர் அரசனுக்குரிய பள்ளிப்படை. அவன் இரு மனைவிகளுடன் இருக்கிறான். கொற்றக்குடையும் குதிரையும் அவனை அரசன் என்று காட்டுகின்றன.

மீண்டும் இப்புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அரங்கசாமி எடுத்தவை. தற்செயலாக விழுந்ததா அல்லது இயல்பாக அமைந்ததா தெரியவில்லை. இந்தப்படம் அபாரமான ஒரு குறியீடு போலத் தெரிந்தது. இன்றைய எளிய சிமிண்ட் வீடு ஒன்றுக்கு அடியில் அக்காலத்தைய பதுக்கை ஒன்று அமர்ந்திருக்கிறது.

காலம் என்று தலைப்பு வைக்கலாம். அல்லது வரலாறு என்று. விஷ்ணுபுரத்தின் முதல்வரி நினைவுக்கு வருகிறது. “என் காலடிக்குக் கீழே நான் அறிந்ததெல்லாம் மணல்தான்” ஆனால் நான் அந்நாவலை எழுத முதல்மந்திரமாக அமைந்தது என் காலடிக்குக் கீழ் என்னும் மூன்று சொற்கள்தான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2021 11:31

ஆரம்பக் கல்விக்கு ஓர் இயக்கம்- கடிதம்

ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

’’ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம் ’’குறித்த கேள்வியும், அதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலும் மிக மிக முக்கியமானது. இக்கட்டுரை அரசின் கவனத்துக்கு போக வேண்டுமே என்று ஆதங்கமாக இருந்தது. சின்னஞ்சிறிய குழந்தைகளை கணினித்திரை முன்பு அமர வைத்து சொல்லிகொடுப்பதெல்லாமே முற்றிலும் வீண், கல்லூரி மாணவர்களுக்கே அப்படி கற்று தருவது தோல்வியடைந்திருக்கையில் ஆரம்பக்கல்வியை  ஒருபோதும் இப்படி கற்றுக்கொடுக்க முடியாது. ஆனால் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே ஆசிரியர்களை எப்படி இணையவழிக்கல்வியின போது ஏமற்றுவதென்றும் குழந்தைகள் கற்றுக்கொண்டு விடுவதையும் கவனிக்கிறேன்.

அக்கம் பக்கம் நிறைய குழந்தைகளிப்படி வீணாக போய்க் கொண்டிருப்பதை மிகுந்த  வருத்தத்துடன்  பார்த்துக்கொண்டிருக்கிறேன்

சில நாட்களுக்கு முன்னால் மதிலுக்கு பின்னால் விளையாடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவன் எதோ அவர்களுக்குள் சண்டை வந்தபோது மிக மோசமான நினைக்கவே கூசும் ஒரு வசவை சாதாரணமாக சொன்னான். என் காதில் அது விழுந்த போது அதிர்ந்துபோனேன்.அவன் அப்படி பேசக்கூடியவன் இல்லை, இப்போது அவனை கவனிக்கவும், நெறிப்படுத்தவும் அவன் இளமையின் ஆற்றலை கல்வியில் திசை திருப்பவும் ஆசிரியர்களோ பெற்றோர்களோ அருகிலில்லை. நோய்த்தொற்றினால் கல்லூரிகள் மூடப்பட்டதும் அவன் அப்பாவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர் வேலை போனது எனவே தாயும் தகப்பனும் தினசரி கிடைக்கும் வேலைகளுக்கு சென்று விடுகிறார்கள்,சிறுவன் தெருவிலெயே எந்நேரமும் இருக்கிறான். வழிதவறும் வாய்ப்புகள் கல்விக்கூடங்களுக்கு செல்லாத சிறுவர்களுக்கு இப்போது சுலபமாக கிடைக்கின்றன.

இன்னுமொரு சின்ன குழந்தை, அவன் 2 வயதை கடந்த போது  நோய் தொற்றுக்காலம் வந்தது இப்போது 4 வயது தாண்டியும் அவன் பள்ளிக்கு செல்லவில்லை. உண்மையில் நல்ல புத்திசாலி குழந்தை அவன், உங்களின் கதைகள் அவனுக்கு நான் சொல்லி நன்றாக  நினைவு வைத்திருக்கிறான்.ஆனால் ஒரு நேர்கோடு போடு என்றோ ஓர் எழுத்தை எழுது என்றோ சொன்னால் அவன் செய்வதில்லை. பள்ளிச்சூழலை திறன்பேசியோ கணினியோ, எதன் துணைகொண்டும் வீட்டில் உருவாக்கிவிட முடியாது,

நீங்கள் பரிந்துரைத்திருப்பவை அனைத்தும் எளிதாக நிறைவேற கூடியவைகள்தான். இயக்கம் என்னும் சொல்லுக்கு மிகச்சரியான பொருள்தருமொன்றைத்தான் இந்த பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. இந்தக்கேள்வியை வாசித்ததும் மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்தேன். இவற்றை குறித்தும் கவலைப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்று .உங்கள் பதிலை வாசித்ததும் மிகுந்த நிம்மதி அடைந்தேன், ஆம் எத்தனை சரியான, முழுமையான தீர்வு இது.

இவை அனைத்தும் நிச்சயம் சாத்தியப்படும் ஏனெனில் நான் இதுபோன்ற ஒரு இயக்கத்தில் முழுமனதாக தொடர்ந்து பல ஆண்டுகள் பங்கெடுத்திருக்கிறேன்.

நான் முனைவர் பட்ட ஆய்வு செய்த கோவை பல்கலையில்  தினசரி  MLP , Mass Literacy Programme    என்னும் ஒரு இயக்கம் நடந்துகொண்டிருந்தது. இதற்கென பல்கலைக்கழக மானிய குழுவின் நிதி உதவியும் தொடர்ந்து  கிடைத்துக்கொண்டிருந்தது. தினசரி பாடத்திட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 1 மணி நேரம் இதற்கென வரையறுக்கப்பட்டு கட்டாயம் பின்பற்ற பட்டது.

தினமும் கல்லூரி பேருந்துகளில் வெவ்வேறு நேரங்களில் இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கோவையின் புறநகர் பகுதிகளில் இருக்கும் ஊர்களுக்கு பேருந்துகளில் செல்வோம். 1 மணி நேரம் அங்கிருக்கும் வீடுகளில் எழுதப்படிக்க தெரியாத பெண்களுக்கும் பள்ளிக்கல்வியை தொடராமல் ஆடுமாடு மேய்த்து கொண்டிருக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் நாங்கள்  கையோடு கொண்டு போயிருக்கும் சிலேட்டுக்களில் அடிப்படையான எழுத்துக்களையும் சொற்களையும் எழுதவும் உச்சரிக்கவும் சொல்லி கொடுப்போம். பல இல்லத்தரசிகள்  கையெழுத்து போட எங்களால் கற்றுக்கொண்டார்கள். பலர் ஆர்வமாக சமையல் வீட்டு வேலைகளையெல்லாம்  முடித்துவிட்டு எங்களுக்காக காத்திருப்பார்கள். நான் எனக்கான ஒரு மணி நேரமும் என் ஆய்வு நெறியாளருக்கான இன்னொரு மணிநேரமுமாக தினசரி 2 மணி நேரங்கள் இதில் பங்கெடுத்து கொண்டிருந்தேன்

பல சிறுவர்களை கூட்டமாக ஒரு அரசமரத்தடியில் அமரவைத்து எழுத கற்றுக் கொடுப்பதுதுடன் கதைகளும் சொல்லுவேன். ஒரு கட்டத்தில் கதைகள் தீர்ந்து போய் நானே சுயமாக கதைகள் உருவாக்கியும் சொல்லிக்கொண்டிருந்தேன்.  அங்கிருந்து பல்கலைக்கழகத்துக்கு திரும்பி பேருந்தை விட்டு இறங்கியதும் மாணவிகளுக்கு ஆளுக்கொரு  பட்டை சாக்லேட் கொடுப்பார்கள் ஊதியம் போல. மகிழ்வுடன் வாங்கி கொள்வோம்.

இப்பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு மட்டுமானது என்பதால் விடுதியில் இருக்கும் ஒரு சில மாணவிகள் தங்கள் காதலர்களை சந்திக்க இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டதைத் தவிர,  பெரும்பாலும் வெற்றிகரமாக இவ்வியக்கம் நடந்தது. நானங்கிருந்த 5 வருடங்கள் தொடர்ந்து இதில் மகிழ்வுடன் ஈடுபட்டிருந்தேன். இப்போதும் அந்த இயக்கம் தொடர்கிறதா  என தெரியவில்லை

இதுபோலவே அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அரசு இப்படியான இயக்கங்களை துவங்கி முறைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து கொண்டு இருந்தால் இது சாத்தியப்படும்.

இப்படி கல்விக்கூடங்கள்  அரசின் கீழ் இந்த அடிப்படைக் கல்வி அளிக்கும் இயக்கத்தில் ஒருங்கிணைந்து நேர்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் செயலாற்றினால் நிச்சயம் இந்த பெரும் குறைபாட்டை சீராக்க முடியும்.   கல்லூரிகளில் நடைபெறும் நாட்டு நலப்பணி திட்டத்தில்  மாணவர்கள் இரண்டு வருடங்களுக்காவது கோவில் சுவர்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும்  வெள்ளையடிப்பது, கல்லூரி வளாகத்தில்,குப்பை பொறுக்குவது போன்ற  நலப்பணிகளுக்கு பதிலாக எழுத்தறிவித்தலை அருகிலிருக்கும் பள்ளிகளில்  தொடர்ந்து செய்யலாம்

என்னைப் போன்ற அரசுப் பணியில் இருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்களும் வார இறுதிகளில் முழுநாளும் அருகிலிருக்கும் பள்ளிகளில் தொடர்ந்து இந்த பணியை செய்யலாம்

இந்த பதிவை வாசித்ததில் இருந்து இதை எத்தனை விரைவாக செய்கிறோமோ அத்தனைக்கு நல்லதென்று  மனம் பொங்கிக் கொண்டே இருக்கிறது.

நன்றியுடன்

லோகமாதேவி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2021 11:31

வெண்முரசு, கலிஃபோர்னியா

வணக்கத்துக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

விஷ்ணுபுரம் இலக்கிய வாசகர் வட்ட சார்பில்  Roseville, California -வில்  8/1/2021 அன்று  தங்களின் வெண்முரசு பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. உங்களது எழுத்துக்களுக்கு மிகவும் பரீட்சியம் இல்லாத சாதாரண தமிழ் ஆர்வலனான  என் பார்வை இதோ.

இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான இதிகாசமாக கருதப்படும் மகாபாரதத்தை படித்தும், பார்த்தும், அதன் ஆழத்தையும், அது கூறும் வாழ்க்கைத் தத்துவங்களையும்  வியந்திருக்கிறேன். அந்த காப்பியம் இன்று நவீன வாசகர்களுக்காக மறு ஆக்கம் செய்யப்பட்டு, ஒரு நவீன இலக்கியவாதியின் பார்வையில் புது போர்வை போர்த்தி வெண்முரசாக வெளிவந்துள்ளது அறிந்து மகிழ்ந்தேன். இந்த நாவல் வரிசையின் பிரமாண்டத்தை இந்த ஆவணப்படத்தின் மூலம் உணர முடிந்தது. மெய் மறக்க வைக்கும் பாடல், பின்னணி இசையுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படம் வெண்முரசை படிக்க வேண்டும், அதன் பிரமாண்டத்தை உணர வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விதமாக இருந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி, திரு.அண்ணாதுரை அவர்களின் முன்னுரை, எழுத்தாளர் மறைந்த திரு.கி.ராஜநாராயணன் அவர்களுக்கு  நினைவு அஞ்சலி, செல்வி. அமிர்தாவின் அறிமுக உரை என திரையிடல்  தொடங்கியது.  பின், கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” பாடல் திரு. ராஜன் சோமசுந்தரத்தின் இசையில் மெய்சிலிர்க்க வைத்தது. பின் அனைவரும் வெண்முரசை கொண்டாடும் இந்த ஆவணப் படத்தை பார்த்து மகிழ்ந்தோம்.

இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த திரையிடலுக்கு வந்திருந்தார்கள். சிறு வயது முதல் 80 வயது இளைஞி வரை இப்படத்தை பார்த்து மகிழ்ந்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் சிலர், இந்த நாவலை முழுவதுமாக முதலிலிருந்து படிக்க முடியாவிட்டாலும், எந்த ஒரு அத்தியாயத்திலும் தொடங்கலாம், ஒவ்வொரு  கதை மாந்தரையும் தனியாக படித்து உணரலாம் என்றனர். இந்த கருத்து என்னை போன்ற வாசகர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும் என நினைக்கிறேன். மகாபாரதத்தில் எனக்கு பிடித்த கதாபாத்திரத்தில் தொடங்கி  இந்த நாவலை வாசிக்க விழைகிறேன்.

இந்த திரையிடலுக்கு பின் பணியாற்றிய திரு.அண்ணாதுரை மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

நிகழ்ச்சியில் இளைய தலைமுறையினர் சிலரையும் கண்டேன். இது போன்ற இலக்கிய அறிமுக நிகழ்வுகள் நம் தமிழ் இலக்கியங்களை அவை கூறும்  நம் கலாச்சாரத்தை, தமிழின் செறிவை  அடுத்த தலைமுறையினரும்  உணரச்செய்யும். தங்களின் எழுத்துக்களுக்கு என் வணக்கம்.
வாழ்க தமிழ்!

நன்றி!
ரம்யா பாலகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 06, 2021 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.