Jeyamohan's Blog, page 934

August 15, 2021

சோழர்களும் மாமாங்கமும்

பழமைச்சரிதம்

அன்புள்ள ஜெ,

வணக்கம். நலந்தானே?

சமீபத்தில் எழுதிய ‘பழமைச்சரிதம்’ [https://www.jeyamohan.in/149037/] என்னும் குறிப்பில் திருநாவாயில் நிகழ்ந்த மாமாங்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்னும் கட்டுரையிலும் சேரமான் பெருமாள் மன்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக வள்ளுவநாட்டு திருநாவாயில் நடைபெற்ற மாமங்கம் பற்றி எழுதப்பட்டுள்ளது.

இராமச்சந்திரன் அவர்கள் திருநாவாய்க்கு அருகிலுள்ள காந்தளூர் என்னும் ஊரையே சோழ மெய்க்கீர்த்திகளில் காணப்படும் காந்தளூராகக் கொள்கிறார். ‘கலம்’ என்னும் சொல்லை வில்லங்கம் என்னும் பொருள் கூறி ‘இவ்வூர்க்கு எவ்வித கலனுமில்லை’ என்னும் கல்வெட்டு வாசகத்தைச் சான்றாகக் காட்டுகிறார். அதே சொல்லுக்கு இன்னொரு பொருளாக, வேதம் மூலம் நீதிநுட்பங்களை விளக்கும் போட்டியில் வெல்லும் மாணவரைக் குறிக்க சுந்தரசோழர் காலத்துக் கல்வெட்டொன்றில் பயன்படுத்தப்பட்ட சொல்லாட்சியான ‘கலமறுத்து நல்லாரானர்’ என்னும் பதத்தைக்கூறி போட்டிகளில் வெல்வதையும் கருதலாம் என்கிறார்.

தனது ஊகத்திற்கு சான்றுகளாக ராஜேந்திரச்சோழனும் அவனது மகன் ராஜாதிராஜனும் தங்களது மெய்க்கீர்த்திகளில் காந்தளூர்ச்சாலை கலமறுத்ததைப் பதிவுசெய்துள்ளதையும் கூறுகிறார். [வேலைகெழு காந்தளூர்ச்சாலை என பொதுவாகச் சொல்லப்படும் ராஜாதிராஜனின் மெய்க்கீர்த்திகளுள் ஒன்றில் மட்டும் வேலைகொள் காந்தளூர்ச்சாலை எனவும் குறிக்கப்பட்டுள்ளது]. குலோத்துங்கனுக்குக் கீழிருந்து படைநடத்திய சடையவர்ம பராந்தகப் பாண்டியனின் மெய்க்கீர்த்திகளிலும் ‘விழிஞம் கொண்டு கன்னிப்போர் செய்தருளி காந்தளூர்ச்சாலை கலமறுத்து’ என்னும் வாசகமும் இடம்பெற்றுள்ளதை எழுதியுள்ளார்.

காந்தளூர்ச்சாலை படையெடுப்பின் மூலமாக அழிக்கப்பட்டது என்பதாகக் கருதும் இராமச்சந்திரன் அவர்கள், சான்றுகளாக இலக்கிய ஆதாரங்களை முன்வைக்கிறார். “வேலை கொண்டதும் விழிஞம் கொண்டதும் சாலை கொண்டதும் தண்டு கொண்டல்லவா” என்று கலிங்கத்துப்பரணியிலும் “சாலைக் கலமறுத்த தண்டினான்” என்று மூவருலாவிலும் குறிப்பிடப்படுவதையும் காட்டி, நூறாண்டுகளாக வந்தமன்னர்கள் அனைவரும் படையெடுத்தும் முழுவதுமாக அழியாததாக காந்தளூர்ச்சாலை இருந்ததைக் காட்டுகிறார்.

ராஜேந்திரனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் ராஜராஜரின் முதல் படையெடுப்பாக பாண்டியன் அமரபுயங்கனை வென்று மேலும் தெற்கே சென்று சேரநாட்டின் உதகை நகரில் சிறையிருந்த தூதனை விடுவித்து, அந்நகரில் சதய திருநாளைக் கொண்டாடிய தென்னக படையெடுப்பையே கூறுகின்றன. உதகைப்போர் வெற்றி முதன்முதலில் சொல்லப்படும் கல்வெட்டுகளுக்கு முந்தைய ஆண்டுகளில் எழுதப்பட்ட ராஜராஜரின் மெய்க்கீர்த்திகளிலேயே காந்தளூர்ச்சாலையையும் தண்டால் கொண்டு மும்முடிச்சோழனானது எழுதப்பட்டுள்ளது. எனவே, ராஜராஜனின் காந்தளூர்ச்சாலையைக் கொண்ட ‘தண்டு’ என்பது அங்கசேவகர்களின் படைக்குழு எனக்கொள்ள வாய்ப்புள்ளதா?அங்கச்சேவகர்களுக்கு கடுமையான நெறிகள் ஏதேனும் உண்டா? கேரளம் தவிர்த்த பிறநில மன்னர்களுக்காகப் பொரிடக்கூடாது என்பது போல.சேரர்கள் மீதான சோழ படைவெற்றிக்கு முன்பே அல்லது நிகராக ஒரு கருத்தியல்வெற்றியும் மாமாங்கம் மூலம் ஏற்பட்டதா? சோழர்களின் ஆதிக்கம் முழுமைபெற்ற பின்னரே மாமங்கம் சாமூதிரி மன்னர், கொச்சி மன்னர், கொடுங்கல்லூர் மன்னர் முதலியோருள் முதன்மை கொண்டவரை முடிவு செய்வதாய் மாறியிருக்க வாய்ப்புள்ளதா?

அன்புடன்

யஸோ

அன்புள்ள யசோ

இதுகுறித்த ஆய்வுகளை எல்லா தரப்பும் வாசித்துத்தான் நாம் ஏற்கவேண்டும். நான் ஆய்வாளன் அல்ல. காய்தல் உவத்தல் இன்றி, சரியான தரவுகளைச் சேர்த்து வரலாற்றை எழுதியெடுப்பது ஒரு பொறுமை தேவையாகக்கூடிய, நுணுக்கமான, நெடுங்காலப் பணி. அதை நான் செய்யமுடியாது.

காந்தளூர்ச்சாலைக் கலம் என்பதைப் பற்றி கவிமணி முதலானோரின் ஊகம் அது கேரளத்தில் திகழ்ந்த தாந்த்ரீக – அதர்வவேத பூசனைமுறைகளை நிறுத்தி, அவற்றை பாதுகாக்கும்பொருட்டு இங்கே இருந்த போர்க்குழுக்களை ராஜராஜசோழன் அழித்ததைக் குறிக்கிறது என்பதுதான். அதுவே சிறந்த ஊகமாக இப்போதும் தோன்றுகிறது.

ஏனென்றால் கேரளம் தன் தாந்திரிக வழிபாட்டு முறைமையை தக்கவைத்துக்கொள்ளவே தலைமுறை தலைமுறையாக்ப் போராடியிருக்கிறது. ராஜராஜன், ராஜேந்திரசோழன் முதல் சோழர் கால இறுதிவரை. சோழர் ஆட்சி முடிந்ததுமே தாந்த்ரீக பூஜைமுறைகள் மீண்டும் வந்தமைந்து இன்றும் தொடர்கின்றன.

இது குறியீட்டுரீதியான போர். சடங்குகள் சார்ந்தது மட்டுமல்ல. கேரள ஆலயங்கள் மீதான உரிமைக்கான போரும்கூட. கேரளத்தின் நிலங்களில் மிகப்பெரும்பாலானவை கோயில்களுக்கு உரியவையாக இருந்தன. பின்னரும்கூட அந்நிலை பெரிதாக மாறுபடவில்லை. ஆகவே இது நேரடியாக நாட்டுரிமைதான்

கேரளத்தில் சோழர் ஆட்சிக்காலம் முடிந்தபின்னர் மீண்டும் நாநூறாண்டுக்காலம் அந்த உரிமைப் போர் நடந்தது. கேரள அரசர்கள் முடியுரிமையை அடைந்தபின்னரும்கூட கோயில்கள்மேல் அதிகாரத்தை அடையவில்லை. ஆகவே நாட்டின் பெரும்பகுதி நிலம் அவர்களின் ஆட்சியின்கீழ் வரவில்லை. கோயில்களை ஆட்சிசெய்தவர்கள் தனி நாடுகளின் அரசர்களாகவே திகழ்ந்தனர்

கோயிகளை உரிமைகொண்டிருந்த எட்டுவீட்டுப் பிள்ளைகள், கோயிலதிகாரிகள் போன்றவர்களுக்கும் சேரநாட்டு அரசர்களுக்குமான போர் மேலும் நாநூறாண்டுகள் நடந்தது. அதன் பின்னர் கோயிலை கைப்பற்றிக்கொண்டிருந்த வைதிகர்களுக்கும் அரசர்களுக்குமான அதிகாரப் போராட்டம் நடந்தது. மார்த்தாண்டவர்மா கோயில்சார்ந்த அனைத்து உரிமைகளையும் முற்றாக கைப்பற்றுவது வரை கேரளத்தின் முக்கியமான அதிகாரபோராட்டம் கோயில்களை கைப்பற்ற்றுவதும் தக்கவைத்துக்கொள்வதுமாகவே இருந்துள்ளது.

இப்படிப் பார்க்கையில் காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தல் என்பது கோயில்கள்மீதான வைதிக அதிகாரத்தை மாற்றுதல் என்ற கோணத்திலேயே சரியாக இருக்கமுடியும். கேரள அரசியல், பண்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த புரிதல்கொண்டிருந்த கவிமணி தேசிகவினாயகம்பிள்ளையின் ஊகமே ஏற்கத்தக்கது. ராமச்சந்திரன் அவர்களுக்கு கேரள பண்பாட்டு- அரசியல் சூழல் சரிவரத் தெரியாது. அவருடையது கல்வெட்டிலுள்ள சொற்களை கொண்டு மட்டும் செய்யப்படும் ஊகம். இப்போதைக்கு அது நிறைவளிப்பதாக இல்லை. ஆய்வாளர்களால்  பொதுவாக அது ஏற்கப்பட்டால் பரிசீலிக்கலாம். அதுவரை அது ஒரு தனிப்பட்ட ஊகம் மட்டுமே.

வரலாற்று ஊகங்கள் முன்பிருந்த வரலாற்றுச் சித்திரத்துடன் பொருந்தக்கூடியவையாக இருக்கவேண்டும். அதேபோல பிற்கால வரலாற்றுச் சித்திரத்திற்கும் பொருந்தவேண்டும். வரலாற்றிலுள்ள இடைவெளிகளை நிரப்பவேண்டும். கவிமணியின் ஊகமே அதைச் செய்கிறது.

மாமாங்கம் நெடுங்காலமாக கேரளத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு சடங்கு, திருவிழா என்பதில் ஐயமில்லை. அப்படி இருந்தாலொழிய அந்த முக்கியத்துவம் அதற்கு அமையாது. அடிப்படையில் அது நீத்தாருக்கு நீர்க்கடன் செலுத்தும் ஒரு சடங்காக இருந்திருக்கலாம். அந்நீர்க்கடனைச் செலுத்துபவரே சேரவழித்தோன்றல் என்பதனால் அப்போர் நடந்திருக்கலாம். அந்நிகழ்வைச் சோழர்கள் தலையிட்டு நிறுத்தினார்கள் என்பதற்குச் சான்றுகள் ஏதும் இல்லை. அந்நிகழ்வு இன்றும் தொடர்கிறது. அந்நிகழ்வு பற்றிய பழைய குறிப்புகளும் உள்ளன. காந்தளூர்ச்சாலையை அந்நிகழ்வுடன் தர்க்கபூர்வமாக பிணைக்கமுடியவில்லை. அது சற்று ’எகிறிச்செல்லும்’ ஊகமாகவே பொதுவாக கேரளப் பண்பாட்டை அறிந்தவனாகிய எனக்குப் படுகிறது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2021 11:34

சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்

சதீஷ்குமார் சீனிவாசனின் இக்கவிதைகள் அனைத்திலுமே ஓர் இலையுதிர்காலத்து உளச்சித்திரத்தை அடைந்துகொண்டிருந்தேன். உண்மையில் இந்தியச்சூழலில் இலையுதிர்காலம் என்பது இல்லை. சில மரங்கள் ஆடிமாதத்து காற்றில் இலையுதிர்க்கும். ஏராளமானவை ஏப்ரல் மாதத்தில் காய்ந்து இலையுதிர்க்கும். இலையுதிர்காலம் என்பது பனிபொழியும் நிலங்களுக்கு உரிய ஒரு நிகழ்வு. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குளிர்காலத்திற்கு முன் மெல்ல உருவாகும் இலையுதிர்காலம் ஒரு சிம்பனியின் முடிவு போல மெல்லமெல்ல அடங்குவது.

ஒவ்வொரு இலையாக உதிரத்தொடங்குகின்றது. பின்னர் இலைமழை. காற்றில் இலைச்சுழல். மெல்ல இலைகள் மண்ணாக அமைகின்றன. எஞ்சும் ஓரிரு இலைகளுடன் துயரத்தில் மூழ்கியென நின்றிருக்கின்றன வெறுங்கிளை மரங்கள். எஞ்சித்தயங்கி நின்றிருக்கும் இலைகளைப் பார்க்கையில் மரம் அவற்றையும் உதிர்க்க எண்ணுகிறதா, அவற்றையேனும் தக்கவைக்க முயல்கிறதா என்ற எண்ணம் ஏற்படும். இறுதி இலை ஒரு முடிவெடுத்தது போல சட்டென்று உதிர்வதைப் பார்ப்பது அளிக்கும் துணுக்குறல் ஓர் ஆழ்ந்த அகஅனுபவம்.

இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை

ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்

இரண்டு நாட்களாக நானொருவரை

விரும்புவதை விட்டுவிட்டேன்

அவரும் எப்போதோ அந்த

நிபந்தனைகளிலிருந்து

வெளியேறி இருந்தார்

குறைந்தபட்சமாய் உயிரோடிருப்பது மாதிரி

குறைந்தபட்ச நிபந்தனைகளோடு

இருக்கலாம் என இனி யாரிடமும் கேட்க முடியாது

நான் மட்டுமே இருக்கும் சுதந்திரம்

தனிமையில் இறந்துகொண்டிருக்கிறது

இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை

ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள்

இவ்வரிகள் வெறுமே உணர்ச்சிகளை முன்வைக்கின்றன. கவிதையாக முயல்வதில்லை. ஆனால் இரு கூறுகளால் இவை கவிதையாகின்றன. ஒன்று, இயல்பாக வந்தமையும் படிமங்கள். இரண்டு வரிகளுக்கு நடுவே உள்ள இடைவெளி. அங்கே நம் உள்ளம் தாவிச்செல்வதனால் கவிதை நிகழ்கிறது.

இப்போதெல்லாம் பறவைகளை யாரும் கனவு காண்பதில்லை என்ற வரிக்கும் ஒரு புகைப்படம்போல அசையாதிருக்கின்றன உணர்ச்சிகள் என்ற வரிக்கும் அர்த்தபூர்வமான தொடர்பு ஏதுமில்லை. ஆனால் உணர்வுநிலை இன்று. இரண்டு வரிகளையும் இணைக்கும் உணர்வுநிலைக்கு செல்லும் வாசகன் கவிதையை அடைகிறான்

அத்துடன் விந்தையான ஒரு வரி “நான் மட்டுமே இருக்கும் சுதந்திரம் தனிமையில் இறந்துகொண்டிருக்கிறது” வந்து ஒரு தசைத்துண்டு போல உயிருடன், குருதியுடன் நம் முன் கிடக்கிறது. இவைதான் கவிதையின் தொடுமுனைகள். அவ்வரிகளை ஏந்தியிருக்கும் ஓர் அனுபவ மண்டலத்தை சாதாரணமாகச் சொல்ல முயல்கின்றன நடுவே உள்ள வரிகள். அவை கவிதை அமர்ந்திருக்கும் பீடம்போல

பழக்கப்பட்ட இலைகள் காத்திருக்கின்றன

தீவிரம் புனலென பாயத்தொடங்கி

கரையின் ஈரமாக‌ கொஞ்சம்தான் மிச்சமிருந்தது

காற்றிலைசைந்து பழக்கப்பட்ட இலைகள்

காற்றுக்காக காத்திருக்கின்றன

சலனமற்று

நாளை என்றும்

விடியலென்றும்

அற்புதங்கள் நிகழும் என்றும்

அப்படி ஒரு

வீம்புபிடித்த வீணான நம்பிக்கைகள்

அசைவிலா இலைகளின் மரம். அது வானைநோக்கிக் காத்திருக்கும் தவம். மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட பின்னரும் அந்த படிமம் புதியதென நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பலசமயம் கவிதை என்பதே வாழ்க்கையில் இருந்து பெற்ற உணர்வுகளை இயற்கை நோக்கி எய்துவிடுவதுதானோ என்று படுகிறது.

உயரமான கட்டிடங்களின் நிழலைத் தாளமுடியாமல் ஏந்தி நின்றிருக்கும் அசையமுடியாத இலையை அசைக்கும் காற்று போல சிலசொற்கள் எழுந்து கவிதையாகின்றன.

ஞாபகம் பிளந்துகொண்டது

எரியும் வெயில் பொழுதில்

ஒரு இருளை சுமந்தபடி நடப்பது

பிரத்யேகமான விசயமாகப்படவில்லை

ஹாரன் ஒலியில்

ஞாபகம் பிளந்துகொள்கிறது

வாழ்க்கைபற்றிய உபந்நியாசங்கள்

உயரமான கட்டிடங்களின் நிழல்

ஒரு தனித்த இலைமீது விழுவது மாதிரி

விழுகிறது

எந்தப் பக்கமும் தானே

நகரமுடியாத இலையை

அவ்வப்போது வீசும் காற்று

நான்கு திக்குகளிலும் சற்றே

புரட்டிப் போடுகிறது

இருளிலிருந்து இருளுக்காய்

இருளில் பறப்பதில்

ஒரு அற்ப சந்தோசம்

பிளந்துகொண்ட ஞாபகம்

வழியவோ என ததும்பி நிற்கிறது

யதார்த்தத்தின் ஒரு சிறு கல்லை

அதில் விட்டெறிந்தேன்

இப்போது

குருதியாய் வழிகிறது

வழியாது என்று நினைத்த

சொந்தக் குருதி.

***

ஆடை களைதல்

பிறிதொன்று கூறல்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

சதீஷ்குமார் சீனிவாசன் – கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2021 11:32

அன்புராஜ் கடிதங்கள்

அன்புராஜ் ஒரு கடிதம் கலையின் வழியே மீட்பு – அன்புராஜுடன் ஒரு பேட்டி

அன்புள்ள ஜெ

இந்த கடிதமெழுதிய திரு. எட்வின்ராஜ் அவர்களுக்கு மிக்கநன்றி .

நானும் இதை முன்பு  படிக்க தவறிவிட்டேன் .

மூன்று நினைவலைகள்;

உலகதிரைப்படவிழாவில் கனடா நாட்டின் டொரோண்டோ நகரில், இந்த திரைப்படத்தை பார்த்தேன். அன்புராஜ் அவர்களின் அனுபவங்களும் இதை எடுத்த பிரெஞ்சு கதை ஆசிரியர்/இயக்குனரின்  எண்ணங்களும் ஒரே மாதிரியாக இருந்தன. (அடி, உதை ,சித்ரவதை தவிர !)

https://www.imdb.com/title/tt12444440/

அதே திரைப்பட விழாவில் இந்த மராத்தி திரைப்  படத்தையும் பார்த்தேன். மிக நல்ல படம்.  ஆனால் பழைய படம். இந்த இளைய இயக்குனரை இங்கு அறிமுகப்படுத்துவதற்காக  மறு  பதிவாக இந்த திரைப்படத்தை வெளியிட்டார்கள்

அன்புராஜ் அவர்களின் நீதிமன்ற அனுபவங்களும்  இந்த படத்தில் வரும் காட்சிகளும் மிகவும் ஒத்துப்ப்போகின்றன. அன்புராஜ் அவர்களின்  நிலைமை மிகவும் மோசமானது. https://www.imdb.com/title/tt3717068/mediaviewer/rm869198336/

கிட்டத்தட்ட ? 55 வருடங்களுக்கு முன்னர் குமுதத்தில் பட்டாம்பூச்சியியை ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து படித்து ஒரு கைதி விடுதலைக்கு இப்படி போராடுவான என்று யோசித்தது நினைவுக்கு வருகிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி. அன்புராஜ்  அவர்களின் தொண்டு நீடிக்க வாழ்த்துக்கள்.

மனோகர்.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2021 11:31

உளச்சோர்வு -கடிதம்

வெண்முரசு- பெருஞ்செயலும் தடைகளும்

எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

தங்களின் நிறைய பதிவுகள் என்னை நான் கண்டடைய வைத்துள்ளன.

உளச்சோர்வு என்பது ஒரு இனிய நோய். உளச்சோர்வுள்ளவர்கள் மேலும் உளச்சோர்வை முயன்று திரட்டிக்கொண்டு அதில் மூழ்கி திளைப்பார்கள். வேறெந்த நோயிலும் அந்நோயிலிருந்து விடுபடும் துடிப்பு இருக்கும். உளச்சோர்வுநோய் அந்நோயிலேயே மூழ்கும் விருப்பத்தை நம்மிடம் உருவாக்கும்.

எனக்கு மேல சொல்லப்படுவதில் மிகுந்த அனுபவம் உண்டு. ஆம் 28 வருடம் அதில் மூழ்கி கடந்தேன். முதலில் அதில் இருக்கிறேன் என்பதை நானும்(எனது மனமும்) எனது அறிவும்(அகந்தை) ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டன. எனது மனசாட்சி படிதான் நடப்பதாக மயக்கியவை.

இன்று அது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து வெளியே வருவதற்கு மிகவும் சிரமத்துடன் ஒரு வண்ணத்து பூச்சியை போல் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

அதில் உங்களின் பாதிப்பு அதிகம் என்பதை நன்றியுடன் நினைத்து திளைக்கிறேன்.

இப்படிக்கு

அழகுவேல்

திருப்பூர்

***

அன்புள்ள அழகுவேல்,

நவீன வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சம் உள அழுத்தம். அது உருவாக பல காரணங்கள். முதன்மையானது இலட்சியம், இலக்கு. சிறுவயதிலேயே நாம் ‘ஆம்பிஷன்’ எனப்படும் உயர் இலக்குகளுடன் வாழக் கற்றுக்கொள்கிறோம். சூழல் அப்படி நமக்குச் சொல்கிறது. ஆகவே நம் முன் எப்போதுமே இலட்சியங்களும் இலக்குகளும் உள்ளன. அதைநோக்கிச் செல்லும்போது ஆழ்ந்த சோர்வும் அவ்வப்போது வந்தமைகிறது. எட்டமுடியுமா என்னும் மலைப்பு. பின்னடைவுகளின் விளைவான துயரம். நம் எல்லைகளை நாமே காணும்போது வரும் பதற்றம். ஆகவே சோர்வு.

நம் இலக்குகள் அல்ல நாம். இலக்கு என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. நம்மை செயலூக்கம் கொன்டவர்களாக ஆக்குவதற்கான ஒரு தூன்டுதல் அது. அதற்கப்பால் ஏதுமில்லை. அதன்பொருட்டே நாம் வாழவேன்டும் என்பதில்லை.அன்றாடமே முக்கியம். வாழ்க்கை என்பது நாளை அல்ல, இன்றுதான். இன்று இனிமையாக நிறைவாகச் சென்றாலே நாம் வாழ்ந்துவிட்டோம் என்று பொருள். ஆகவே இலக்கு நோக்கிய பதற்றங்களையும் சோர்வுகளையும் விட்டுவிட்டாலே பெரும்பாலான உளச்சோர்வுகள் அகன்றுவிடும். அன்றாடத்தில் முழுமையாக மூழ்கி, தன் இலக்குக்கு உரிய செயல்களை நிறைவுடனும் மகிழ்வுடனும் செய்தாலே, நாம் இலக்குநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்றுதான் பொருள்.

சோர்வை உருவாக்குவது இன்றைய உறவுகள். இன்று ஒவ்வொருவரும் தனக்கு என்னவேண்டும் என தெளிவுடன் இருக்கிறார்கள். உறவுகளில் தன் இடத்தை, தன் நோக்கத்தை முன்வைக்கிறார்கள். அளிப்பதையே உறவெனக் கொன்ட சென்றகால மனிதர்களுக்கு இல்லாத உளச்சிக்கல் பெறுவதையே உறவு என நினைக்கும் இன்றைய மனிதர்களுக்கு உள்ளது. அது ஓர் தன்னகங்காரம். அது இந்நூற்றாண்டின் விதி. நாம் அதை ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு என்ன வேன்டும் என என் அப்பாவிடம் நான் பேரம்பேசியதில்லை. அவர் அளித்த எல்லாமே கொடை என கொண்டேன். எனக்கு அவர் தன்னை முழுதாக அளித்தார். இன்று மகன் தந்தையிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறான். முழுதளித்தாலும் நிறையாது இன்றைய தேவை.

இன்றைய சூழலில் இன்னொருவரை திருத்தியமைக்க முயலாமல் இருந்தால், இன்னொருவர் வாழ்க்கையில் தலையிடாமல் இருந்தால், நம் வாழ்க்கையை மட்டுமே முன்கொண்டுசென்றால், உளஅழுத்தங்களை தவிர்க்கமுடியும். இன்னொருவருடன் முட்டி மோதிப் போராடுவதே உளச்சோர்வாக ஆகிறது. இன்னொருவர் அணுகாமல் நம் அகவாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளவும் வேண்டும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2021 11:31

August 14, 2021

இரண்டு அன்னப்பறவைகள் – அருண்மொழி நங்கை

மாமா வரப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததிலிருந்து நான் இருப்பு கொள்ளாமல் துள்ளிக் கொண்டிருந்தேன். அப்பா அம்மாவிடம்  இந்த சேதியை அத்தையின் காதில் விழுகிற தொனியில் சொல்லிக் கொண்டிருந்தார். நான் அடுக்களையில் நிற்கும் அத்தையின் புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டு சுழன்றேன். “என்னடி?” என்றது  அத்தை ரகசியக் குரலில்.

இரண்டு அன்னப்பறவைகள் – அருண்மொழி நங்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 11:35

பார்ப்பான், பார்ப்பவன்- ஒரு திரிபு

பார்ப்பான் பிறப்பொழுக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

‘பார்ப்பான் பிறப்பொழுக்கம்’ குறளுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத மத தரப்பு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

திருக்குறளுடைய கருத்துக்கள் எவ்விதத்திலும் வேத மத கோட்பாட்டுக்களுக்கு முரணல்ல என்று பல குறள்களை மேற்கோள் காட்டுகிறார்.

பார்ப்பான் என்ற சொல்லுக்கு பார்ப்பவன் என்றே பொருள் சொல்லி,  எதற்கு ஞான திருஷ்டி கொண்ட ரிஷிகளை ‘seer’ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்களோ  அதே பொருள் கொள்ள வேண்டும் என்கிறார்,

தன் குல ஆசாரத்தை விட்டவனை வேத வேதாந்தங்கள் காப்பாற்றாது என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதை ஒட்டியே வள்ளுவர் குறள் செய்திருப்பதாக விளக்கம் அளிக்கிறார்.

முழு விளக்கம் தெய்வத்தின் குரல் நூலில் இணையத்தில் தேடினால் கிடைக்கிறது.

– வைகுண்டம்

மதுரை

அன்புள்ள வைகுண்டம்,

பாடல்களைப் பொருள்கொள்வதில் வாசிப்புச் சுதந்திரத்திற்கு இடமுண்டு. எப்படி? படிமங்களை கற்பனையால் வளர்த்தெடுப்பதில். சொற்களின் வைப்புமுறையை வைத்து பொருள்கொள்வதில், சொற்பொருள் கொள்வதில். இவை மூன்றினூடும் கவிதை முன்வைக்கும் அறிதலும் அனுபவமும் பெருகவேண்டும், சுருங்கலாகாது.

சொற்பொருள் கொள்ளும் நெறி என்ன? அச்சொல்லுக்கு அவ்வண்ணம் பொருள்கொள்ள அந்தக் காலகட்டத்து சொல்முறைமை ஒத்துச்செல்கிறதா என்று பார்க்கவேண்டும். உரிய அகராதிகளில் நிகண்டுக்களில் அச்சொற்பொருளுக்கு ஆதாரமுண்டா என்று பார்க்கவேண்டும். முந்தைய நூல்களில் அச்சொல் அவ்வண்ணம் பயின்று வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்,

ஆனால் கருத்தியல்சார்ந்து, உள்நோக்குடன், பாடல்களை ஆராய்பவர்கள் அவ்வண்ணம் செய்வதில்லை. உதாரணம் ஞானசம்பந்தரின் திருவுளப்பத்து பாட்டில்  ‘அமண் சமணர் கற்பழிக்கத் திருவுளமே’ என்று வருகிறது. அதை சமகாலப்பொருள்கொண்டு சமணப் பெண்டிரை கற்பழிக்க ஞானசம்பந்தர் ஈசனிடம் வரம்வேண்டினார் என பேசிப்பரப்பி, இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கற்பழித்தல் என்பது நவீன நாளிதழ்கள் ரேப் என்பதற்குச் சமானமாக உருவாக்கிய சொல்லாட்சி. தினத்தந்திச் சொல் அது. பழங்காலத்தில் அந்த பொருள் இல்லை. கற்பு என்றால் கல்வி என்றே முதற்பொருள். எழுதாக்கற்பின் நின்நூல் என குறுந்தொகை சொல்வது எழுதாமல் கற்பது என்ற பொருளில்.

சமணர் மந்திரநூல்களில் வல்லவர்கள், அக்கல்வியை வெல்ல ஆயுதமாக சிவனருள் அமையவேண்டுமென ஞானசம்பந்தர் கோருகிறார். வாதுக்குச் செல்ல அனுமதி கோரும் பாடல் அது. சமணர்கள் சபைகளில் பெண்களை கொண்டுவருவதில்லை. ஆண்களை கற்பழிக்கும் வழக்கம் பொதுவாக இல்லை. ஆனால் இந்த அபத்தத்தைப் பேசுபவர்களுக்கு எந்த கூச்சமும் இல்லை.

அந்தக் கூச்சமில்லா பொருள்கோடலின் இன்னொரு தரப்பு இது. பார்ப்பான் என்னும் சொல் பார்ப்பவன் என்னும் பொருளில் குறள் காலகட்டத்து நூல்களில் எதிலும் கையாளப்பட்டதில்லை. ஞானிகள் அவ்வாறு கூறப்பட்ட முன்னுதாரணமே இல்லை. ஞானி,பரமஹம்சர்,அவதூதர், சித்தர் என பல பெயர்கள் உள்ளன. பார்ப்பவர் என்ற பொருளில் எச்சொல் உள்ளது?

ஆங்கிலத்தில் seer என்ற சொல் உள்ளது. அதன் பண்பாட்டுவேர் இருப்பது கிரேக்க மரபில். கிரேக்க மரபில் உச்சகட்ட மத அதிகாரம் கொண்டவர்கள் தெய்வங்களை கண்டு உரையாடி குறிசொல்பவர்கள். அவர்களை clairvoyant, oracle என்றெல்லாம் சொல்கிறார்கள். அதில் ஒரு சொல் seer. அது அங்கிருந்து கிறித்தவ மெய்யியலுக்கு வந்தது.

பின்னாளில் ஆங்கிலேயர் இந்துமெய்யியலை மொழியாக்கம் செய்தபோது இங்கிருந்த ஞானி, அவதூதர், பரமஹம்சர் போன்ற சொற்களுக்கு அவர்களுக்கு இணைச்சொல் இல்லாமையால் seer என்னும் சொல்லை கையாண்டனர். அச்சொல்லுக்கு இந்து மெய்ஞானமரபில் பண்பாட்டுப்பின்புலமே இல்லை.

அச்சொல்லை மீண்டும் தமிழுக்கு மொழியாக்கம் செய்து பார்ப்பவன் என்றாக்கி பார்ப்பான் என மாற்றி இக்குறளுக்கு பொருள்கொண்டிருக்கிறார். அதன் நோக்கம் ஒன்றே. அதாவது மெய்ஞானியாக இருந்தாலும்கூட பிறப்புக்குரிய ஒழுக்கநெறிகளை கடைப்பிடிக்கவேண்டும் என்ற ஆசாரவாதத்தை முன்வைப்பது. அதற்காக மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் என்ற வரியை விட்டுவிடுகிறார். அவதூதர்கள் எதை மறக்காமலிருக்கவேண்டும்?

சுருக்கமாகச் சொன்னால், ரமணராக இருந்தாலும் சந்தியாவந்தனம் செய்தாகவேண்டும் என்று சொல்லவருகிறார். பிராமணச் சடங்குகளை முறையாகச் செய்யாமையால் ராமகிருஷ்ண பரமஹம்சர் கெட்டவர்தான் என்று நிறுவ விரும்புகிறார்.ஊரிடும் சோறு, துணிதரும் குப்பை என இங்கே வாழ்ந்து மறைந்த சித்தர்களும் அவதூதர்களும் நெறிபிழைத்த வீணர்கள் என்கிறார். அதை நம்புகிறவர்கள் அந்த ஆசாரவாதத்திற்குள் செல்லலாம். எனக்கு அவர்கள் ஆயிரம் காதம் அப்பால் நிற்பவர்கள். அவர்களிடம் பேச ஒன்றுமில்லை.

இக்குறள் இல்லறவியலில், ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் வருகிறது. இது மெய்ஞானத்தைப் பேசவில்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 11:34

இறகிதழ் தொடுகை

நம்பூதிரி

முன்பொருமுறை நான் கேரள ஓவியர் நம்பூதிரியை இன்னொரு ஓவியரான எம்.வி.தேவனின் இல்லத்தில் சந்தித்தேன். அவர்கள் இருவருமே எம்.கோவிந்தனின் மாணவர்கள். உடனிருந்தவர்கள் எல்லாமே எம்.கோவிந்தனின் வழித்தோன்றல்கள்

பேச்சின்போது நான் நம்பூதிரியிடம் அவருடைய கோட்டோவியங்கள் மங்கலான கோடுகளால், அவ்வப்போது உடைந்து விடுமளவுக்கு மெல்லிய தீற்றல்களாக இருப்பதைப் பற்றிக் கேட்டேன்.

”என் இயல்புக்கு தூரிகையின் மெல்லிய கூர்நுனியால் மட்டுமே காகிதத்தை தொடமுடியும்” என்று நம்பூதிரி பதில் சொன்னார்.

அதற்குமேல் உரையாடல் நிகழவில்லை. அந்த இடத்தில் அப்போது நான் அவ்வளவு முக்கியமானவன் அல்ல.

ஆனால் அந்த வரி என்னை விடாமல் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. மிகமெல்லிய தொடுகையால் உருவாகும் சித்திரங்கள். சிலசமயம் கவிதைகள் அவ்வண்ணம் எழுகையில் அரிதாக ஆகிவிடுகின்றன.

லக்ஷ்மி மணிவண்ணன் உழவன் மேழியை என முழு பலத்தைக்கொண்டும் தூரிகையை தாளில் அழுத்தி எழுதிக்கொண்டிருந்தவர். இப்போதைய கவிதைகள் இறகுத்தொடுகைகளாக ஆகிவிட்டிருக்கின்றன. இந்த மாற்றம் நவீனக்கவிதையில் கவனிக்கத்தக்க ஒன்று.

பிறந்த குழந்தை

மடியில்

கனவு காண்கிறது

தூங்கி விளையாடுகிறது

அசைத்து விடப்பட்ட ஊஞ்சல் போல

சுய நினைவற்று

மெல்ல ஆடுகின்றன தாய் மடியில்

தாயின் தொடைகள்

தாய் மடியாக

எவ்வளவு விரிகிறது

இந்த மடி

பிரபஞ்சம் அளவிற்கு

பிரபஞ்சம் அளவிற்கு விரிந்த மடி

ஆணிடம் வரும் போது

சுருங்கிச் சுருங்கி ; சுருங்கி

சிறு யோனியின் அளவிற்கு

ஒரு துளையாகிறது

அதை பிரபஞ்சம்

அளவிற்கு

பெரிதாக்குகிறது

பூமியில் பிறந்தவுடன்

குழந்தை .

பெண்ணின் விரிதலையும் சுருங்குதலையும் சொல்லும் கவிதை என முதலில் தோன்றலாம். எனக்கு பிரபஞ்சத்தின் விரிதலையும் சுருங்குதலையும் சொல்லும் கவிதையென பட்டது. பெறும்போது சுருங்கி அளிக்கையில் விரிவதன் அழகையே இப்புடவியின் தாய்மை என்கிறோம்.

விபத்தில் மண்டை நைய்ந்து

பிழைத்த நபர்

தெருவில் நுழைந்ததும்

புன்னகை

செய்கிறார்

அரவணைப்பு ததும்பும்

புன்னகை

வடு ஆழமாக தெரியும்

அதனை

அப்படியே

எடுத்துக் கொள்ளத்தயங்கி

பதில் புன்னகை செய்கிறார்கள்

பிறர்

ஒரு புன்னகையில் இவ்வளவு பாடங்கள்

இருக்குமானால்

எவரால்தான்

அப்படியே

எடுத்துக்கொள்ள

இயலும்?

ஒருவரிடமிருந்து பிதுக்கி எடுத்த

புன்னகை போலுமல்லவா

இருக்கிறது அது?

இத்தனை எழுதிய பின்னரும் கவிதையில் எழுதப்படாது எஞ்சும் அனுபவங்கள் எத்தனை உள்ளன என்னும் திகைப்பை உருவாக்கியது இக்கவிதை. பொதுவாகவே புன்னகை என்பது சீரான முகத்திற்குரிய ஒன்றென நம்மால் கருதப்படுகிறது. ஒரு விபத்துக்குப்பின் தன் தந்தையின் முகமும் புன்னகையும் மாறிவிட்டமையால் அவரிடமிருந்து தன் அகம் முற்றாக விலகிவிட்டதைப் பற்றி நித்யாவிடம் சொல்லி அரற்றிய ஓர் இளம்பெண்ணை நினைவுகூர்கிறேன்.

நம் புன்னகை என்பது இந்த தசைகளில் நிகழ்வதுதானா? அப்பாலிருந்து ஒரு புன்னகை எழுந்து கண்களில் ததும்புவதும் நிகழ்கிறதல்லவா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 11:33

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்- கடிதங்கள்

விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள்

அன்பு ஜெ. வணக்கம்.

நலமாயிருக்கிறீர்களா? உங்கள் துணைவியாரின் உங்கள் மகாபாரதம் பற்றிய விரிவான விளக்கவுரைகளைக் கேட்டேன். ரொம்பவும் நிதானமும், பகுத்தாயும் திறனும், சொற்செட்டும் அவர்களுக்குக் கைவந்திருக்கிறது. மலேசியாவில் பேய்ச்சி நாவல் பற்றி அவர்கள் பேசும்பொழுதுகூட ஒரு சிறு பதட்டம் கூடவே வந்து கொண்டிருந்தது. இப்போது மிகுந்த நிதானமும், திடமான வார்த்தைகளுமாய் அவர்கள் விவரிக்கும் பாங்கு திருப்தியாய் இருந்தது. சகோதரிக்கு ஒரு நல்ல முகராசியிருக்கிறது. மங்கலமான ராசி அது. உங்களை விரும்பி ஏற்றவர்களில்லையா? எனவே அது பொலிகிறது முகத்தில். மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிற்க…சொல்ல வந்த விஷயம் வேறு.

ஏழு புத்தகங்கள் விஷ்ணுபரம் வெளியீடு என்று எம்.செந்தில்குமார் பதிவிட்டிருக்கிறார் முகநுலில். அதை அப்படியே வாங்கிப் படிக்க ஆவல். மொத்த விலை… வங்கி விபரம்… ஃபோன் எண். பதிப்பக முகவரி… தாருங்கள். விஷ்ணுபுரம் என்று பெயர் இருப்பதனால் உங்களது சொந்தமானதோ என்று நினைக்கிறேன். உடனே பணம் அனுப்புகிறேன். தகவலுக்காகக் காத்திருக்கிறேன்.

உங்களின்

உஷாதீபன்

***

அன்புள்ள உஷாதீபன்

என் நண்பர்கள் மூவரின் முயற்சி இது. நான் நேரடியாக ஈடுபடவில்லை, ஆனால் பங்கு உள்ளது. முதலில் புதிய மின்னூல்களை வெளியிடுவதுதான் திட்டம். பிறகு அச்சு நூல்கள். எதிர்காலத்தில் தேவையெழுமென்றால் என் எல்லா நூல்களும் ஒரே வெளியீட்டு நிலையத்தில் இருந்து வரவேண்டும் என்பது எண்ணம்.

பெரிய இலாபநோக்கமெல்லாம் இல்லை. இன்று அச்சுநூல்களை வாங்குவோர் குறைந்து பெரிய பதிப்பகங்களே அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. மின்னூல்களை உடனே நகலெடுத்து வினியோகம் செய்யும் கும்பலும் தீவிரமாக உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான என் தனிவாசகர்களை நம்பி இதை ஆரம்பித்திருக்கிறோம்

ஜெ

***

அன்புள்ள ஆசானுக்கு,

நலம் தானே? மென்பொருள் எழுதுவது எனக்குப் பிடித்திருந்தாலும் தற்போதுள்ள நவீன கார்ப்பரேட் உலகில் நீங்கள் சொல்வது போல் எந்தச் செயலையும் தொடக்கம் முதல் இறுதி வரை செய்து, அந்த முழுமை அளிக்கும் நிறைவு கிடைக்காது என்பது ஒரு சோர்வாகவே என்னுள் இருந்தது. சென்ற வருடம் கொரோனா ஆரம்பிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஓவியம் கற்றுத்தரும் வகுப்புகளில் சேர்ந்தேன். சில அடிப்படைகள் புரிந்தது. அதற்குள் கோவிட் காரணமாக வகுப்புகள் மூடப்பட்டன. மீண்டும் வகுப்புகள் தொடங்க காத்து கொண்டு இருக்கிறேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் கற்ற சில அடிப்படைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து வரைந்து கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் படித்த தங்களின் வண்ணம் சிறுகதை மற்றும் குமரித்துறைவி குறுநாவல் என் மனதில் எழுப்பிய காட்சிகளை வரைய முயற்சித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசை. இத்துடன் படங்களை இணைத்துள்ளேன். இது ஆரம்பம் மட்டுமே, செல்ல வேண்டிய தூரம் அதிகம். நன்றி.

அன்புடன்,

மகேஸ்வரி

நியூஜெர்சி

***

அன்புள்ள மகேஸ்வரி

ஓவியம் நன்றாக உள்ளது. தொடர்ந்து வரையலாம். நிலக்காட்சிகளை இன்னும் தகவல்களுடன் வரையலாமென நினைக்கிறேன்.

ஜெ

 

[விளம்பர வடிவமைப்பு கீதா செந்தில்குமார்]

குமரித்துறைவி வான் நெசவுஇரு கலைஞர்கள் பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 11:32

ஆன்மிகக் கட்டுரைகள்- கடிதங்கள்

அறிந்து முன்செல்பவர் வழிபடலாமா? ஆலயம் ஆகமம் சிற்பம்

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தில் வெளிவரும் ஆன்மிகம், மதம் சம்பந்தமான கேள்விபதில்கள் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக உள்ளன. நான் பொதுவாக ஆன்மிக ஈடுபாடுள்ளவன். எனக்கு ஐயங்களும் குழப்பங்களும் உண்டு. அவற்றுக்கான விடைகள் தேடிப்பார்க்கையில் எனக்குக் கிடைப்பவை சம்பிரதாயமான விளக்கங்கள். அவற்றுக்கு இன்றைய வாழ்க்கை சார்ந்த பெரிய பொருத்தப்பாடு இருப்பதில்லை. சமயங்களில் தர்க்கபுத்திக்கும் ஒத்துப்போவதில்லை. எனக்குத்தேவையானது இன்றைய காலகட்டம் சார்ந்த, தர்க்கபூர்வமான பதில். அந்தப்பதில்கள் உங்கள் குறிப்புகளில் உள்ளன.

உங்கள் கட்டுரைகளில் அறிந்துமுன்சென்றவர் வழிபடலாமா எனக்கு முக்கியமான கட்டுரை. நான் யோகப்பயிற்சிகள் செய்பவன். நான் இறைவழிபாடு செய்யலாமா என்ற சந்தேகம் எனக்கு நீண்டநாட்களாக இருந்தது. அவையிரண்டும் முரண்படுபவை அல்ல என்ற பதில் எனக்கு நிறைவை அளித்தது. அதேபோல நாட்டார்த்தெய்வ வழிபாடு, பழங்குடித்தெய்வ வழிபாடு ஆகியவற்றைப் பற்றியும் இந்து மதத்தின் அமைப்பைப்பற்றியும் இந்து மதம், இந்து ஆன்மிகம் ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவு பற்றியும் தெளிவுகளை அடைந்தேன். மனமார்ந்த நன்றி

குறிப்பாக நன்றி சொல்லவேண்டியது எதற்காக என்றால் எந்த ஆசிரியபாவனையும் இல்லாமல் இயல்பாக நண்பராக நின்று சொல்கிறீர்கள் என்பதுதான்.

என். மாணிக்கவாசகம்

***

அன்புள்ள ஜெ,

உங்கள் ஆன்மிகக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். வெண்முரசுக்குப் பின்னர் பல மாற்றங்களைக் காண்கிறேன். முன்பிருந்த கட்டுரைகள் நீளமானவை. ஏனென்றால் அவற்றில் நீங்கள் விவாதம் செய்கிறீர்கள். நிரூபணம் செய்ய முயல்கிறீர்கள். இப்போதுள்ள கட்டுரைகள் சுருக்கமானவை. ஏனென்றால் இப்போது தெளிவாக அறுதியிட்டுச் சொல்லிவிடுகிறீர்கள். குழப்பங்கள் இல்லை. நிரூபிக்க முயலவில்லை. சொல்லிவிட்டுச் செல்கிறீர்கள். ஏனென்றால் இன்றைக்கு உங்கள் குரலில் ஆமாம், எனக்கே தெரியும் என்ற ஒரு தன்னம்பிக்கை உள்ளது. நூல்களை ஆதாரம் காட்டாமல் சொல்கிறீர்கள். இந்த உறுதிப்பாடு வெண்முரசுக்குப் பின்னாடி வந்திருக்கிறது. இது இன்னும் கூர்மையாக அனைத்தையும் புரிந்துகொள்ள உதவுகிறது

கணேஷ்குமார்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 11:31

சிந்தாமணி,கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு ,

வணக்கம்.

பல்லாண்டுகளாக தங்களிடம் தொடர்பிலிருந்தாலும், நான் எழுதும் முதற்கடிதம் இதுதான்.அந்த எண்ணமே, ஒரே நேரத்தில் தயக்கத்தையும் உவகையையும் தருகின்றன.

தங்களின் சிந்தாமணி உரை மிகச்செறிவாக இருந்தது. நூல் தோன்றிய காலத்து சமணச்சூழல், சுடுகாட்டில் கதை தொடங்கும் நவீனத்துவ தொடக்கம், முன்னுதாரணம் இல்லாத விருத்தப்பா வகை, அடுத்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் தமிழ்க்காவியங்கள் சிந்தாமணியை பின்பற்றிய வரலாறு என பல கூறுகளை சிறப்பாக உரைத்தீர்கள்.

பல பாடல்களைச்சொல்லி நயங்கள் சொன்னது, என்னை மகிழ்வடைய வைத்தது. தமிழை முறையாக படித்தவர்களுக்கே சிந்தாமணி தெரியாது அல்லது அதிக பரிச்சயம் இருக்காது.

பறவையின் நிழல் தவறாதுபின் தொடர்வது போல ஒவ்வொருவரின் வினைபயன்களும் பின் தொடரும் எனும் உவமையை பல ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரி காப்பிய கழக விழாவில் தி.வே.கோபாலய்யர் தன் உரையில் குறிப்பிட்டது நினைவில் வருகிறது.

மிகப்பெரிய திறப்புகளை தந்தது தங்களின் உரை. எப்படி நூலை அணுகவேண்டும்,குறியீட்டுப்பொருளை எப்படி உணரவேண்டும் என பல கோணங்களில் உணர்த்தியது.

நீங்கள் Master of all Subjects என மிக நன்றாக எனக்குத்தெரியும். .இருந்தாலும்கூட சிந்தாமணியை நீங்கள் அணுகிய விதம் என்னை பெரும் வியப்பிலும் பேரானந்தத்திலும் மூழ்க வைக்கிறது. உரைக்கு மிக்க நன்றி.

ஓர் வேண்டுகோள். மணிமேகலையையும் இதே போன்ற ஓர் முழுமையான உரை மூலம் தாங்கள் வழங்கவேண்டும். தங்களால் முடியும்போது, அவசரம் இல்லை. பளிங்கு மண்டத்தைப்பற்றிய பெண்ணிய நோக்கிலான தங்கள் உரையும், இறந்தவர்கள் வசிக்கும் பெருங்கடல் தீவு இடம்பெறும் தங்களின் சிறுகதையும் உடனே நினைவுக்கு வருகின்றன என்றாலும் நான் வேண்டுவது சிந்தாமணி உரையை போன்ற முழுமையான ஒன்றை.

அன்புள்ள,

ஜி.நாகராஜன்

பாண்டிச்சேரி.

அன்புள்ள ஜெ

சீவகசிந்தாமணி உரையை ஆர்வமில்லாமல்தான் கேட்க ஆரம்பித்தேன். முற்றிலும் புதியவாசிப்பு ஒன்றை கண்டடைந்தேன். உரையில் நீங்கள் சிந்தாமணியின் குறியீட்டுவிரிவை மட்டுமே கருத்தில்கொள்கிறீர்கள். நாமகள் இலம்பகத்தை முதல் பெண் நாமகளாகிய கலைமகள் என அர்த்தம் கொண்டதில் தொடங்கி அந்த வாசிப்பு விரிந்துகொண்டே சென்றது. காவியங்களை ஒருவகையில் மதநீக்கம் செய்து வாசிக்கிறோம். பழைய விழுமியங்களையும் ஒதுக்கிவிட்டு வாசிக்கவேண்டும் என்று தெரிந்துகொண்டேன். வாழ்க்கைநுட்பங்கள், மொழிநுட்பங்களை மட்டுமே கருத்தில்கொண்டு வாசிக்கவேண்டும்

ஜெ

சீவகசிந்தாமணி, உரையாடல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 14, 2021 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.