தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள்

ஆனந்த் குமார் கவிதைகள் இணையப்பக்கம்

தனிமையைக் கவிஞர்கள் எழுதத்தொடங்கி எத்தனை காலமாகிறது. கவிதை என ஒன்று இருக்கும் வரை அதை எழுதிக்கொண்டிருப்பார்கள் போல. கவிதையே தனிமையை எழுதும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு கலைவடிவம்தானா? கவிதையே தனிமையை உருவாக்கிவிடுகிறதா என்ன? மெலிந்து மெலிந்து திரையென்றாகி விட்ட சுவர்.ஆயினும் அதை விலக்கியாகவேண்டும். ஆயிரம் அகச்சுவர்களைக் கடந்து.

உறுதியான கதவல்ல

வாசலில் நெகிழ்வதோர் திரை.

நீ நினைத்தால்

உள்ளே வந்துவிடலாம்

அழைப்பு மணி ஏதுமில்லை

ஒரு தாழ்ப்பாள் போலுமில்லை

திறந்து வருதல் அத்தனை எளிது.

உன் வருகையை

அது எனக்கு அறிவிப்பதில்லை

ஒத்துக்கொள்கிறேன்

எப்படியும் அதை விலக்கித்தான்

என்னிடம் நீ வரவேண்டியிருக்கிறது.

நான் காத்திருக்கிறேன்

வாசலின்

அத்தனை வாசல்களிலும்.

சிறிய காற்றிற்கு

எழுந்து வருகிறது,

பின்

தொடாமல் மீள்கிறது

ஒரு மெலிந்த அலை.

அந்தக் கவிதையில் அலையென நெளியும் திரையே இந்தக் கவிதையில் நாவென ஆகி உலகத்தால் பார்க்கப்படாத தீவை நக்கி நக்கி உவர்ப்பு கொள்கிறது. குருதிப் புண்ணை நக்கி நக்கி பெரிதாக்கும்  ஊனுண்ணிவிலங்குபோல. அச்சுவை அதற்கு போதையும் வெறியும் ஏற்றுகிறது. புண்ணை நக்கும் விலங்கு தன் சாவை நக்கி நக்கி அருகே கொண்டுவருகிறது.

அந்தத் தனித்தீவின்

பெருங்கடலுக்கு வயதாகிறது

இன்னும் யாரும் வந்து

பார்க்கவில்லை

காதலரும் முன்அமர்ந்து

பேசவில்லை

ஒருசொல்லும் முன்நின்று

எழவில்லை

ஒருவன் கண்ணீர்கூட

அதில் சேரவில்லை

நாவை

நீவி நீவி விடுகிறது

வெண்மணலில்.

தன்னை சுவைத்துத்

தானெனக்கிடந்த

அதற்கு

அத்தனை உவர்ப்பு.

அகன்று செல்லும் பாதைகள் அளிக்கும் தனிமையை ரயில் பயணங்களில் காணமுடியும். எவரெவரோ நடந்த பாதை. ஒரு நினைவு வடு. எல்லா வடுக்களும் தனிமையையே அடையாளப்படுத்துகின்றன

புழுவென
நெளிந்து எழுந்து
வளைந்து சென்ற
பாதை
விடியலில்
கொஞ்சம் நின்றது.

பாதை கடந்து
அலையென நீண்டு மேடேறிச்
செல்கிறது
விடியல்.

விடியலைச்
சுமந்து செல்லும்
பாதை
இப்போதொரு நத்தை

மொக்கவிழ்தலின் தொடுகை
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2021 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.