Jeyamohan's Blog, page 937
August 9, 2021
எழுத்தாளன் என்னும் நிமிர்வு
அன்புள்ள ஜெ
நேரடியாக இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு தயங்குகிறேன். இருந்தாலும் என் நட்புவட்டாரத்தில் கேலியும் கிண்டலுமாக பலர் பேசுவதனாலும், இலக்கியரீதியாக பொருட்படுத்தத்தகாத சிலர் முகநூலில் வம்பு பேசுவதனாலும் இதைக் கேட்கிறேன்.
நீங்கள் ஓர் இலக்கியவாதியாக உங்களுடைய இடத்தையும் தகுதியையும் முன்வைத்துப் பேசுகிறீர்கள். தயங்காமல் உங்களை உயர்த்திச் சொல்கிறீர்கள். இப்படி இலக்கியவாதிகள் சொல்வதில்லை என்று சொல்கிறார்கள். தமிழில் மட்டுமே இப்படிச் சொல்வதுண்டு என்கிறார்கள். இப்படிச் சொல்லலாமா? இதற்கு முன்னுதாரணங்கள் உண்டா?
எஸ்.திவ்யா
***
அன்புள்ள திவ்யா,
இந்தக் கடிதத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் என் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர் என்றால் என் சாயல்கொண்ட ஒரு நல்ல மொழிநடை உருவாகியிருக்கும். இக்கேள்வியை என்னைப் படிக்க ஆரம்பிக்கும் ஒருவரின் மொழிநடை என்று எடுத்துக்கொள்கிறேன்.
பொதுவாக ஓர் ஆலோசனை, ஒருபோதும் தன்னளவில் எதையாவது பொருட்படுத்தும்படி எழுதாத ஒருவரின் கருத்துக்களை கருத்தில்கொள்ள வேண்டியதில்லை. இன்று சமூகவலைத்தளம் எந்த முட்டாளும் கருத்து உதிர்க்க வாய்ப்பை அளிக்கிறது. முக்கியமானவர்கள் மேல் அவன் கசப்பை கக்கினான் என்றால் அவனை கவனித்து ‘ஆகா’ போட ஒரு கூட்டம் உள்ளது. அது அவனுக்கு ஒரு மேம்போக்கான முக்கியத்துவத்தை அளிக்கிறது.
தமிழ்ச்சமூகத்தில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே சமூக ஊடகத்தளத்திலும் வாசகர்கள் மிகமிக அரிதானவர்கள். எஞ்சியவர்கள் வெறுமே பெயர் தெரிந்து வைத்திருப்பவர்கள். பண்பாட்டுப்பயிற்சி அற்ற சமூகம் எப்போதுமே அதிகாரத்தையே அஞ்சி வழிபடும். அரசியலாளர், செல்வந்தர்களை மிதமிஞ்சி வணங்கும். ஆனால் அறிவுச்செயல்பாடுகளை அஞ்சும், அருவருக்கும்.
ஓர் அறிவியக்கவாதி என்ன செய்கிறான் என பாமரனுக்கு தெரியாது. ஆகவே அவர்களையும் தன்னைப்போன்ற ஒரு சாமானியனாக நினைத்துக்கொள்கிறான். தன்னைப்போன்ற ஒரு சாமானியனுக்கு தன்னைவிட அதிக கவனம் ஏன் கிடைக்கிறது என்று அவனுக்குப் புரிவதில்லை. ஆகவே அறிவியக்கவாதிமேல் காழ்ப்பும் கசப்பும் ஏளனமும் கொண்டிருக்கிறான்.
இங்கே எழுத்தாளனைப் பற்றிப்பேசும் எந்த ஒரு பாமரனும் அவனை தன்னைப்போல நினைத்து, தன் நிலையில் வைத்து பேசுவதை, எள்ளிநகையாடுவதை காணலாம். ஓர் அறிவியக்கவாதியின் படிப்பும் உழைப்பும்கூட அவனுக்கு ஒரு பொருட்டாக தோன்றுவதில்லை. ஆனால் ஓர் அரசியல்வாதியை, செல்வந்தரை கும்பிட்டுத்தான் பேசுவான். ஆகவே எழுத்தாளனை ஏகடியம் செய்தோ வசைபாடியோ ஏதாவது சொன்னால் உடனே பலநூறுபேர் வந்து கூடி கும்மியடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இச்சூழலில் எழுத்தாளர்கள் பற்றி வரும் எதிர்மறைக்கருத்துக்கள், அசட்டு விமர்சனங்கள், நகையாடல்களுக்கு இலக்கிய ஆர்வமோ அறிவியக்க ஈடுபாடோ கொண்டவர்கள் செவிகொடுக்கலாகாது. அதைப்போல அறிவையும் பொழுதையும் வீணடிப்பது பிறிதில்லை.
*
உலகமெங்கும் எழுத்தாளர்கள் தங்கள் இடமென்ன, தகுதி என்ன என்று தேவையான இடங்களில் சொல்லாமலிருந்தது இல்லை. அப்படிச் சொல்லாத ஒரேயொரு இலக்கியமேதையைக்கூட சுட்டிக்காட்டமுடியாது.
தன் பெருமையை உணராமல் அளிக்கப்பட்ட பரிசை பெற மறுத்த பெருங்கவிஞர்களின் வரிசையை நாம் சங்கப்பாடல்களில் காணலாம். என்னை விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோ என்று பாடியவனும், கவிராஜன் தமிழ்நாட்டுக்கு இல்லை என்னும் வசை என்னால் கழிந்தது என்று பாடியவனும் தமிழ்க்கவிஞர்கள்தான்.
தன் தகுதியையும் இடத்தையும் அதை உணர்ந்தாகவேண்டியவர்கள் முன் தெளிவாக எடுத்துச் சொல்வது எழுத்தாளனின் கடமை. அதிலும் இலக்கியரசனையோ, மெய்யான வாசிப்போ இல்லாத பாமரர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் நம் பொதுச்சூழலில், அவர்களின் அசட்டு அரசியல்க் காழ்ப்புகள் எழுத்தாளர்கள் அனைவரையுமே சிறுமை செய்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றுக்கு மேல் எழுந்து நின்று, தருக்கி தலைநிமிர்ந்து, நான் இன்னார் என்றும் எனக்குரிய இடம் இது என்றும் சொல்வது அவன் ஆற்றும் சமூகக்கடமை. மெய்யான இலக்கியம், மெய்யான அறிவியக்கம் நோக்கி மக்களை ஆற்றுப்படுத்தும் செயல் அது.
ஒரு நல்ல படைப்பை எழுதியதுமே எழுத்தாளனுக்கு தெரிந்துவிடுகிறது அவன் வெற்றியடைந்துவிட்டான் என. அவ்வாறு அவன் அடைந்த வெற்றிகளை கொண்டு அவன் தன் தகுதியையும் மதிப்பிட்டிருப்பான். அவன் பிற இலக்கியப்படைப்புகளையும் வாசிப்பவன் என்பதனால் தன் இடத்தையும் ஐயமற அறிந்தவனாகவே இருப்பான். அந்த அறிதலே எழுத்தின் வழியாக அவன் அடையும் பயன். அவனுடைய நிமிர்வின் ரகசியம் அது. எழுத்தையும் இலக்கியத்தையும் அறியாப் பாமரர்களின் புறக்கணிப்பு ,எள்ளல் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் காலத்தின்முன் நிற்கும் நிமிர்வை அவனுக்கு அளிப்பது அது.
அவ்வண்ணம் தன்னுணர்வுடன் பேசிய தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி. பால்ஸாக், தாமஸ் மன் என நூற்றுக்கணக்கான இலக்கியமேதைகளின் வரிகளை எடுத்துச் சொல்லமுடியும். அவர்களில் பலர் உலகப்புகழ் பெற்றவர்கள். உலகமறியாத மேதைகளிடும் நாம் அதே நிமிர்வை காணமுடியும்.
ஆனால் இன்னொரு பக்கமும் உண்டு. அது எழுத்தாளன் தன்னிரக்கத்தில், சோர்வில் மூழ்கும் தருணங்களால் ஆனது. எந்த எழுத்தாளனும் அவன் எண்ணியதை எழுதியிருக்கமாட்டான். எய்தியதை விட மிகமிக அப்பால்தான் அவன் கனவு இருந்துகொண்டிருக்கும். அது ஓரு சோர்வலையென எழுந்து அவனை மூடும். அப்போது தன்னைத்தானே நிராகரித்து அவனே பேசவும்கூடும்.
அதேபோல தான் எழுதியவற்றிலிருந்து விடுபடுவதும் எழுத்தாளனுக்கு பெரும் சவால். எழுதியநூல்கள் ஒரு பெரிய வேலியென அவனைச் சூழ்ந்து முன்னகர்வை தடுக்கின்றன. குறிப்பாக அவை பெரும்புகழ் பெற்றுவிடுமென்றால் அவன் அவற்றை நிராகரித்தேயாகவேண்டும். மேலைச்சூழலில் வெற்றிபெற்ற எழுத்தாளனைச் சுற்றி அவன் எழுதிய பழைய நூல்களைப் பற்றி பேசுபவர்கள் நிறைந்திருப்பார்கள். அவன் அவர்களை, அந்நூல்களை மூர்க்கமாக உதறிப்பேசுவது அடிக்கடி நிகழ்வது.
இலக்கியப் படைப்பாளியின் உள்ளம் செயல்படுவதற்கு இலக்கணம் வகுக்க எவராலும் முடியாது. அவன் எங்கே எப்படித் தன்னை முன்வைக்கிறான் என அவனே உணர்வதில்லை. ஒருசமயம் காலத்தின் குழந்தையாக, மறுசமயம் உலகால் புறக்கணிக்கப்பட்டனவனாக அவன் உணரக்கூடும். இலக்கிய அறிமுகம் சற்றேனும் உள்ள எவரும் இலக்கியவாதி இப்படித்தான் பேசவேண்டும், இதுதான் நாகரீகம் அல்லது மரபு என்றெல்லாம் சொல்ல முன்வரமாட்டார்கள்.
எனக்கு என் எழுத்தைப் பற்றிய தன்னம்பிக்கை என்றும் உண்டு. என் முதல்நாவல் ரப்பர் வெளியீட்டு விழாவிலேயே அதைச் சொன்னேன். ‘தமிழின் முதன்மையான நாவல்களை நான் எழுதுவேன்’ என. விருதுபெற்ற அந்நாவலை நிராகரித்து மேலே செல்வேன் என்று சொன்னேன். விஷ்ணுபுரம், அதன்பின் பின்தொடரும் நிழலின் குரல், அதன்பின் கொற்றவை, அதன்பின் வெண்முரசு என என் உச்சங்களை அடைந்து அதன்மேல் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறேன்.
அதை வாசகர்களிடம் சொல்கிறேன். அதற்கு ஒரு துணிவுவேண்டும். வாசிக்காதவர்களிடம் ’வாசித்துப்பார், உனக்கே தெரியும்’ என்று சொல்வதற்கான துணிவு. வாசித்தவர்களின் முகம் நோக்கி அதைச் சொல்லும் துணிவு. அத்துணிவுள்ளவர் சொல்லவும் தகுதிபெற்றவர்.
எழுத்தாளனின் தகுதி, அவன் செயல்படும் விதம், அவனுடைய இடம் ஆகியவற்றைப்பற்றி தமிழில் பேசப்படும் இத்தகைய கருத்துக்கள் எவற்றையும் வேறெந்த உலகமொழிகளிலும் பேசவேண்டிய தேவை இல்லை. மலையாளத்தில் இந்த எந்தக் கட்டுரையையும் எழுதவேண்டியதில்லை. அங்கே இவை அனைவரும் அறிந்த பொதுக்கருத்துக்கள்.
ஆனால் தமிழ்ச்சூழலில் எழுத்தாளன் என்னும் ஆளுமையையே மிகப்பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. பண்பாட்டில் அவன் இடமென்ன என்றே தெளிவில்லை. வாசிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குக் கூட அந்த எளிமையான அடிப்படைகள் தெரியவில்லை. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு தலைமுறைக்காலம் அதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்கவேண்டும்.
தெளிவாக உதாரணம் சொல்கிறேன். வெண்முரசின் சில பகுதிகளை மலையாள இதழாளர், விமர்சகர் சிலர் தமிழிலேயே படித்திருக்கிறார்கள். ஆனால் வெண்முரசு எழுதப்படுவது, முடிவடைந்தது பற்றி மாத்ருபூமி இரண்டு அட்டைப்படக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளது. பாஷாபோஷிணி இரண்டு அட்டைக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளது. மூன்று தொலைக்காட்சி நிகழ்வுகள் வந்துள்ளன. வரவிருக்கின்றன.
தமிழில் எந்த ஊடகமும் வெண்முரசு முடிந்தது பற்றி ஒரு வரிச் செய்தி வெளியிடவில்லை. இங்குள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் வெண்முரசு என்ன என்றே அறியாதவர்கள். பலர் செவிச்செய்திகளாகவே வெண்முரசை அறிந்தவர்கள். அது இயல்பு, தமிழில் அவ்வளவுதான் எதிர்பார்க்கமுடியும். நானறிந்த இதழாளர்கள் எவருக்கும் அன்றாட அரசியல் வம்பு, சினிமாவுக்கு அப்பால் ஏதும் தெரியாது. விமர்சகர்களுக்கும் அன்றாட அரசியலும், சில எழுத்தாளர்களின் பெயர்களும் அன்றி ஒன்றும் தெரியாது.
இச்சூழல் என்னிடம் மறைமுகமாகச் சொல்வதென்ன? ‘எழுதிவிட்டு பேசாமல் இரு, நாங்களும் கவனிக்கமாட்டோம்’ என்றுதானே? ஆகவே நான் என் எழுத்தைப்பற்றிச் சொல்லியாகவேண்டும். ஏன் பாரதி “நவகவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என தன் கவிதைபற்றிச் சொல்லவேண்டியிருந்ததோ அதே காரணம்தான்.
அதைக்கேட்டு தமிழகப் பெருந்திரளில் நூறுபேர் குழம்புவார்கள், பத்து அசடுகள் நையாண்டி செய்வார்கள், ஒருவர் என்னை அறிந்து வாசிக்க வருவார். அவரையே நான் சென்றடையவேண்டும். அவ்வாறே என்னுடைய வாசகர்வட்டத்தை அடைந்திருக்கிறேன். எந்த ஊடகத்தாலும் அல்ல. என் ஊடகத்தை நானே உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் இருந்த அதே நிலைதான் இது. இந்நிலை மலையாளத்தில் இல்லை, உலகமொழிகள் எதிலும் நானறிந்து இல்லை. ஆகவே இக்குரல்.
*
ஆனால் என்னை வேறு களங்களில் அப்படிச் சொல்லிக்கொள்ள மாட்டேன். நான் ஆன்மிகமான தேடலும் பயணங்களும் கொண்டவன். ஆனால் ஆன்மிகமான தகுதி கொண்டவன் என்று ஒரு கணமும், ஒரு மேடையிலும் சொல்ல மாட்டேன். அவ்வண்ணம் என்னை கருதுபவர்களிடம் அதை உறுதியாக மறுப்பேன்.
ஏனென்றால் வெண்முரசு எழுதும் நாட்களில் நான் கொண்ட கொந்தளிப்பை நானே அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். மாபெரும் உளச்சோர்வுக்குள் சென்றிருக்கிறேன். என்னுடைய காம குரோத மோகங்கள் கொந்தளித்து எழுவதைக் கண்டேன். அடித்தட்டின் சேறு அனைத்தையும் கிளறிவிட்டுவிட்டேன் என உணர்ந்தேன். தன்னிரக்கம் மிகுந்து தற்கொலையின் விளிம்பில் பலநாட்கள் அலைந்திருக்கிறேன்.
அன்று வேண்டுமென்றே உலகியலை அழுந்தப் பற்றிக்கொள்ள முயன்றேன். இங்கே என்னை பிடித்து வைத்திருக்கும் விஷயங்களை தேடினேன். மாதக்கணக்கில் வெறிகொண்டு போர்ன் சைட்கள் பார்த்திருக்கிறேன். படுகொலை வீடியோக்களை மனநிலை பிசகியவன்போல பார்த்திருக்கிறேன். அத்துடன் பலவகைச் சண்டைகள், பூசல்கள். முழுமையான தூக்கமின்மை பலநாட்கள் தொடர்ந்திருக்கிறது. என்னென்னவோ உளச்சிக்கல்கள். வேண்டுமென்றே, ஓர் இழப்பு ஏற்பட்டால் நான் அதைப்பற்றி கொஞ்சநாள் கவலைப்பட்டு உலகியலில் இருப்பேன் என்று எண்ணியே, கொஞ்சம் பணத்தை தப்பாக முதலீடு செய்து அழித்திருக்கிறேன்.
அந்நாட்கள் இன்றும் அச்சமூட்டுகின்றன. அர்த்தமில்லாத சொற்பெருக்கு பொங்கி நிறைந்து சட்டென்று ஒரு சொல்கூட இன்றி அப்படியே அணைந்துவிடும். மண்டையால் முட்டித் திறக்க வேண்டியிருக்கும். திறந்தால் அதுவாகவே வழிந்து படைப்பாக ஆகிவிடும். ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்து ஒன்று வருமா என்ற திகைப்பிலேயே முடியும். ஒரு நாவல் வந்த சில நாட்களிலேயே அது பின்னகர்ந்து மறைய ,வெறுமையும் கசப்பும் எஞ்சியிருக்கும்.
அதைவிட மோசமானவை உச்சநிலைகள். Bliss என ஆங்கிலத்தில் சொல்லும் பெரும் பரவசத்தருணங்கள். அவை தற்செயலாக உருவாகும் பேரொளி போன்றவை. ஏன் வருகிறதென தெரியாது, ஏன் அணைகிறதென்றும் தெரியாது. அணைந்தபின் வரும் கடும்இருட்டை கையாளவும் முடியாது. அதன்பொருட்டு இசை. நாட்கணக்கில். இடைவெளியே இல்லாமல் 36 மணிநேரம் இசைகேட்ட நாட்களுண்டு.
என் அகத்திறனால் அல்ல, என் நல்லியல்பாலும் அல்ல, என் குருவருளாலேயே கடந்துவந்தேன் என உணர்கிறேன். ஆகவே நான் என்னை அறிந்தவிந்தவனாக, அடங்கியவனாக நினைக்கவில்லை. வெண்முரசு முடிந்தபின் விடுதலை பெற்றுவிட்டேன். இன்று உள்ளம் அமைதி கொண்டிருக்கிறது. தெளிவடைந்திருக்கிறது. ஆனால் என் ஆழத்தின் இருளை எல்லாம் நன்கு அறிந்துவிட்டேன். அதைக்கடந்து செல்ல நெடுநாட்களாகும். கடக்காமலும் போகலாம்.
எனவே ஒருபோதும் வெண்முரசை வைத்து எனக்கு வரும் வணக்கங்களை ஏற்றுக்கொள்வதில்லை. என் குருவின் பெயரால் அன்றி என் பெயரால் எவரையும் வாழ்த்துவதுமில்லை. ஒருவேளை என் எழுத்தை மொத்தமாக நான் நிராகரித்துக் கடந்துசெல்லவும்கூடும். இதுவும் ஒரு தன்னுணர்வே. இது செயற்கையான எளிமை அல்ல. எழுத்தாளன் என்னும் நிமிர்வின் மறுபக்கம். எழுத்தின் இருவேறு பேறுகள்.
இதை என் வாசகர்களிடம் மட்டுமே பகிர்ந்துகொள்கிறேன். என் வாசகர்களன்றி எவரும் இவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாது.
ஜெ
எழுத்தாளனின் மதிப்பு எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும் எழுத்தாளனின் ஞானம் எழுத்தாளன் வாழ்க்கை பற்றிஅறிவுரைக்கலாமா? -2 எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?எங்கள் ஒலிம்பிக்ஸ்
அன்புள்ள ஜெ
நலம்தானே?
உங்கள் இணையதளத்தில் விளையாட்டு செய்திகளே இல்லை. ஒலிம்பிக் செய்திகள் இல்லை. நாம் தங்கம் வென்றபோதாவது ஏதாவது போடுவீர்கள் என்று நினைத்தேன். வேண்டுமென்றே விளையாட்டுக்களை ஒதுக்குகிறீர்களா?
டி.ராஜ்குமார்
***
அன்புள்ள ராஜ்குமார்
நீங்கள் புதுவரவு. நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். உண்மையிலேயே எனக்கு எந்த விளையாட்டைப்பற்றியும் எதுவும் தெரியாது. கிரிக்கெட் ஹாக்கி ஃபுட்பால் எதைப்பற்றியும் அடிப்படைகளே அறிமுகமில்லை. இதுவரை ஒரு முறைகூட இவற்றை ஆடியதில்லை. ஒருநாள்கூட இவ்விளையாட்டுக்களை டிவியில் பார்த்ததில்லை. இத்துறைகளில் எந்த செலிபிரிட்டிகளையும் அறிமுகமில்லை.
சினிமாவுக்கு வந்தபின் பல முன்னாள் இன்னாள் விளையாட்டுத் துறை நட்சத்திரங்களை பார்ட்டிகளில் சந்திப்பேன். பெரும்பாலானவர்களை டிவியின் விளம்பர மாடல்கள் என என் மூளை பதிவுசெய்து வைத்திருக்கும். டிவியே இருபதாண்டுகளாகப் பார்ப்பதில்லை என்பதனால் அதுவும் மங்கல்தான். ஆகவே மையமான ஒரு புன்னகையுடன் சமாளித்துச் சென்றுவிடுவேன். தங்களை இன்னொரு மனிதருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை என அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதனால் எந்தச் சிக்கலும் வருவதில்லை.
எனக்கு விளையாட்டு ஆர்வமிருந்தது எல்லாம் 20 வயது வரை. ஆனால் அது வேறொரு உலகம், வேறொரு காலம். தமிழ்நாட்டில் குமரிமாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாலுகாக்கள் கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு, காட்டாக்கட, நெய்யாற்றின்கரா ஆகிய மூன்றுமாவட்டங்கள் சேர்ந்த ஒரு கலாச்சார மண்டலம் உண்டு. அதுவே எங்கள் வட்டம். வெளியே ஓர் உலகமிருக்கும் செய்தியே தெரியாது.
இங்கே புகழ்பெற்ற விளையாட்டுக்கள் மூன்று. கிளியந்தட்டு, கபடி, ஓணப்பந்து. கிளியந்தட்டு ஒரு கேளிக்கை விளையாட்டு. ஒரு ஆறடுக்கு களத்தில் முதற்களம் முதல் கடைசிகளம் வரை ஆட்களை ஏமாற்றியபடியே தாண்டிச்செல்லவேண்டும். எல்லா களத்தில் தடுக்க ஆளிருக்கும்.
போட்டி விளையாட்டுக்கள் கபடியும் ஓணப்பந்தும். கபடி ஆற்றுமணலில் விளையாடப்படுவது. மற்ற ஊர் கபடி போலில்லாமல் கொஞ்சம் மல்யுத்தமும் கலந்திருக்கும். ஓணப்பந்து இப்பகுதிக்கே உரிய ஆட்டம். கிரிக்கெட் பந்து அளவிலுள்ள தோல்பந்தை கையால் அடித்து வீசி, காலால் தடுத்து ஆடப்படுவது. இருபக்கமும் 12 பேர் இருப்பார்கள்.
இதில் கபடியில் ஒருகாலத்தில் அறியப்பட்ட சாம்பியனாக பரிசுகள் பெற்றிருக்கிறேன். ஓணப்பந்தும் விளையாடுவேன். கபடித்தழும்புகள் இப்போதும் கால்முழுக்க உண்டு.
ஜூனில் இடவப்பாதி மழை தொடங்கி ஜூலை முதல்வாரத்தில் முடிந்ததும் போட்டிகள் ஆரம்பிக்கும். இளம்சாரலும் குளிர்காற்றும் ஓணம் வரை இருக்கும் என்பதனால் நாளெல்லாம் விளையாடலாம். விவசாய வேலைகள் இருப்பதில்லை என்பதனால் எல்லாருமே வந்துவிடுவார்கள். ஓணத்தின்போதுதான் வானம் தெளிந்து வெயில் தலைகாட்டும்
ஊருக்கு ஊர் கபடி, ஓணப்பந்து அணிகள் உண்டு. அக்காலத்தில் ஓணப்பந்தில் முழுக்கோடு, காட்டாக்கடை, மஞ்சாலுமூடு நெடுமங்காடு அணிகள் முந்தியவை. ஆகஸ்டில் ஓணத்திற்கு முந்திய நாள் கடைசிப்போட்டி. சாம்பியன் அணிக்கு சுழற்கேடயம். திருவிதாங்கூர் மகாராஜா அளிப்பது. உண்மையாகவே பொன்முலாம் பூசியது. மகாராஜா அல்லது அவரது பிரதிநிதியால் அளிக்கப்படும்.
தொண்ணூறுகள் வரைகூட இப்போட்டிகள் நடந்தன. பின்னர் இல்லாமலாயின. இன்று சில இடங்களில் சும்மா வேடிக்கைக்காக ஆடிப்பார்க்கிறார்கள். ஓணப்பந்து என இணையத்தில் தேடினால் நானே பேசிய தொலைக்காட்சிக் காணொளிகளே வந்து நிற்கின்றன. ஒரு வீடியோவில் பயல்கள் காமாசோமாவென விளையாடுகிறார்கள். விளையாட்டே வேறுமாதிரி இருக்கிறது.
இன்று தனித்த கலாச்சார மண்டலங்களே மறைந்துவிட்டன. உலகமே ஒற்றைப் பண்பாட்டால் இணைக்கப்பட்டுள்ளது. போலித்தேசியவெறிகள் விளையாட்டு என்ற பேரில் வளர்க்கப்படுகின்றன. இதன்மூலம் உருவாகும் இழப்புகள் திகைக்கச் செய்கின்றன.
முதல்விஷயம் சமூகக்கொண்டாட்டம் என்பதே இல்லாமலாகிவிட்டது. வாழ்க்கை என்பது வேலை மற்றும் வீட்டில் தனிமையில் ஓய்வு மட்டுமே என்பதாக மாறிவிட்டது. என் நினைவில் முன்பெல்லாம் ஆண்டில் நூறுநாட்கள் ஏதேனும் சமூகக் கொண்டாட்டங்கள் இருக்கும். அத்தனை பேரும் கொண்டாடும் விளையாட்டுக்கள், விழாக்கள். வறுமையிலும் அது மகிழ்ச்சியான வாழ்க்கையோ என்று இன்று தோன்றுகிறது.
ஓணப்பந்தும் கபடியும் ஒவ்வொருநாளும் ஆடுவோம். ஓணத்தையொட்டி கிட்டதட்ட இரண்டு மாதகாலத் திருவிழா. என் பார்வையில் விளையாட்டு என்பது அதுதான். அதிலிருக்கும் கொண்டாட்டம்தான். எங்கோ எவரோ விளையாடுவதை டிவியில் பார்த்து ஃபேஸ்புக்கில் கூச்சலிடுவதில் எனக்கு ஆர்வமில்லை. இன்று அனைவருமே பார்வையாளர்களாக ஆகிவிட்டனர். ஆட்டக்காரர்கள் அதிபயிற்சி பெற்ற சில நிபுணர்கள் மட்டுமே.
நான் என் நினைவின் உலகில் வாழவே விரும்புகிறேன். அதை இன்றைய ஊடகக் கொண்டாட்டங்களைக்கொண்டு அதை அழித்துக்கொள்ள விரும்பவில்லை.
ஜெ
அறியப்படாத தீவின் கதை, உஷாதீபன்
அறியப்படாத தீவு – என்ற தலைப்பே நம்மைக் கவனிக்க வைக்கிறது. அப்படியெனில் ஒரு தீவு உள்ளது என்றும், அது இப்பொழுதும் அறியப்படாமல் கிடக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். இதுவரை அறியப்படாத ஒன்றை அப்படிப் பெயரிட்டு அழைப்பதுதானே முறை.
அப்படியான தீவு ஒன்றை அறிய முற்பட்டு ஒரு படகு வேண்டி அரசனிடம் போய் நிற்கிறான் ஒருவன். (இங்கே முனிசிபாலிட்டியிலும், பஞ்சாயத்திலும் அல்லது மாநகராட்சியிலும் சொல்லி எந்தப் பயனும் இல்லை என்று கருதி நேரடியாக சீஃப் மினிஸ்டர் செல்-லுக்கே எழுதுவதில்லையா? அப்பொழுதுதான் காரியம் ஆகும் என்று கோரிக்கையைக் கவனத்திற்குக் கொண்டு செல்வதில்லையா?) அதுபோல அரசனிடம்தான் தன் கோரிக்கையை நேரடியாக அவரிடம்தான் சொல்ல வேண்டும் என்கிறான் அந்தப் பிரஜை. வாயிற்காப்போனிடம் சொல்லி, பிறகு கீழ்நிலைப் பணியாளனிடம் அதைப் பகிர்ந்து, அவன் மூலம் அடுத்தடுத்த படி நிலைகளைக் கடந்து கடைசியாக அரசனுக்குப் போய்ச் சேருவதுபோல, கோட்டை வாயிலில் கட்டப்பட்டிருக்கும் மணியை இழுத்து அடித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதைப்போல என்றெல்லாம் அல்லாமல் நேரடியாக மன்னனிடம்தான் சொல்லுவேன் என்று நிற்கும் ஒருவனை என்னதான் செய்வது?
நாடும் சமூகமும் அளித்த பெருங்கொடையின் நிமித்தமாக அல்லது அவனுக்கென்று அளித்துள்ள சிறப்புச் சலுகைகளின் வழி அரசன் உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நிலையில், விண்ணப்பங்களுக்கான கதவுகளும் அவ்வப்போது தட்டப்படும், அந்த வாசலும் எப்போதாவது திறந்து மூடப்பட வேண்டிய அவசியம் நேரும் என்பதை உணர நேரும் இக்கட்டான நிலை. சலுகைகளையே அனுபவித்து அதிலேயே சந்தோஷித்து வாழும் அரசனின் பொறுப்பு வாய்ந்த கடமைகளுக்கும் அவ்வப்போது நெருக்குதல் ஏற்பட்டுப் போகும் என்பதுதானே யதார்த்தம்?
அந்த விசித்திர மனிதன் கேட்பதென்ன? ஒரு படகு. எதற்காக? அறியப்படாத தீவு ஒன்றினைக் கண்டறிவதற்காக. அறியப்படாத தீவுகள் என்று ஏதுமில்லை. எல்லாமும் அறியப்பட்டுவிட்டன. வரைபடங்களை நன்றாக அறியட்டும். அதில் அப்படி ஒன்று இருக்கிறதா என்பதைத் தேடட்டும். அப்போது இந்த உண்மை புலப்படும். இது அரசனின் பதிலாக இருக்கிறது.
அதை அந்த எளிய மனிதன் ஏற்றுக் கொள்கிறானா என்ன? அப்படி இருப்பதற்கு சாத்தியமேயில்லை. அறியப்படாத தீவு என்று ஏதேனும் ஒன்று இருந்தே தீரும்.அறியப்படாத ஒன்றின் அறிதலே இப்போதைய என் பணி. அது என் மூலமாக முற்றுப் பெற வேண்டும் என்பதே என் கனவு. எனவே அதை அறிவதற்கு எனக்குப் படகு தந்து உதவுங்கள் என்று வேண்டி நிற்கிறான். அவனது தொடர்ந்த நச்சரிப்பின் காரணமாக மக்களின் ஆதரவுக் குரல் அதிகரிப்பதைக் கண்ணுற்று, அந்த உதவியை அளிக்காமல் அவனை அங்கிருந்து நகர்த்த முடியாது என்கிற உணர்தலில் துறைமுகத்திலிருந்து அவனுக்கு ஒரு பாய்மரக்கப்பல் படகு அளிக்க உத்தரவிடப்படுகிறது.
அது வெகு காலத்திற்குப் பயன்படுத்தப்படாது உபயோகமின்றி சிதிலமடைந்த, பழைய படகாக இருப்பதைக் கண்டு இரக்கமுற்று ஒரு கடைநிலைப் பணிப்பெண் உதவுகிறாள். அவன் கோரிக்கையோடு வந்து நின்ற நாள் முதலாய் அவனைக் கவனித்து வருபவள். அவன் மீது உண்டான இரக்கம் அவளை அந்த உதவிக்குத் தூண்டுகிறது. ஆனால் அவனோடு பயணிக்க எந்த மாலுமிகளும் மனமுவந்து வரச் சம்மதிக்கவில்லையே? அவனின் அந்த முயற்சியின் மீது எவருக்கும் நம்பிக்கை எழவில்லையே? பின் அவன் எப்படித் தன் பயணத்தை மேற்கொள்ளுவான்?எப்படிப் படகினை இயக்குவான்? எவரெவரின் ஒத்துழைப்பில் அந்த அறியப்படாத தீவினைக் கண்டறிவான்? கலங்கி நிற்கும் ஒவ்வொரு முயற்சியிலும் மனம் தளராது தன் சிந்தையில் அந்த லட்சியத்தைச் சுமந்து கொண்டேயிருக்கிறான் அவன்.
அறியப்படாத தீவினை அறிய முயலுதல், அதற்காகப் படகு ஒன்று வேண்டும் என்று அரசனிடம் போய் நிற்றல், படகைப் பெறுவதற்காக துறைமுகத் தலைவனிடம் விவாதித்தல், அளிக்கப்பட்ட பழைய படகை முழுமையாகச் சுத்தம் செய்து அவன் பயணத்திற்கு உதவுகையில் அந்தப் பணிப்பெண் அவன்பால் ஈர்க்கப்படுதல், என்று வெவ்வேறு படிநிலைகளில் நாவல் புரியும் விவாதப் பயணம், அந்த மனிதனின் கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற ஆர்வத்தை நமக்கு ஏற்படுகிறது. அவனோடு சேர்ந்து நாமும் பயணிக்க யத்தனிக்கிறது. இந்த வாழ்க்கையின் உன்னதமான பயணத்தை இந்த நாவல் அடியாழமாக உணர்த்திச் செல்கிறதோ என்கிற புரிதலில் நாம் வியந்து நிற்கிறோம்.
அன்றிரவு அவன் காணும் அரிய கனவு ஒன்றே அவனை அந்த அறியப்படாத தீவிற்கு அழைத்துச் செல்கிறது. அதில் அவனோடு பலரும் பயணம் செய்கிறார்கள். விவாதித்த மனிதர்கள், கேலி செய்த மாலுமிகள், உடன் வர மறுத்த பணியாளர்கள் என்று பலர் மற்றும் நிறையப் பெண்கள் அவனோடு பயணிக்கிறார்கள். கோழி. மாடு,கழுதை, குதிரை, வாத்து என்று பலவும் அந்தப் பயணத்தில் பங்கு கொள்கின்றன. அறியப்படாத தீவினைத் தேடிக் கிளம்பிய அந்தக் கப்பலே மெய்ம்மையான அந்தப் புது உலகில் ஒரு சிறிய தீவாக மாறிப் போகிறது. வாழ்க்கைப் பயணத்தின் புத்தம் புதிய அனுபவங்கள்.
…இந்தப் பயணத்திற்கு பேருதவியாய் இருந்த, அவன் மனதிற்குகந்த, அன்பின்பாற்பட்ட அந்தப் பணிப்பெண் என்ன ஆனாள்? அவளைக் காணவில்லையே? அவனோடு வந்தாளா என்றால் இல்லை. கரையிலேயே ஒதுங்கி விட்டாளே அவள்? அவன் கவனம் முழுதும் அவள் மீதே நிலைத்து விடுகிறது. அவளின் அளப்பரிய பணியை நினைத்து நெஞ்சம் உருகுகிறது. அவள் தன் பயணத்திற்குப் பேருதவியாய் இருந்திருக்கிறாள். தன் கனவுகளின், லட்சியங்களின், செயல்பாடுகளின் ஆணி வேராய் நின்று பணியாற்றியிருக்கிறாள். என் முனைப்பான முயற்சிக்குத் தன் முனைப்பாய் நின்று உதவியிருக்கிறாள். அவளோடு உயிரும், உடலுமாய் கலந்து அந்தக் கனவுலகில் பயணிக்கிறான் அவன். அதுவே அவனை வெற்றி கொள்ள வைத்து விடுகிறது.
கப்பல் தானாகவே ஒரு தீவினைச் சென்றடைந்து விடுகிறது. உடன் பயணித்தவர்கள் எல்லோரும் இறங்கிப் போய் விடுகிறார்கள். அவன் அவளோடு, அவளுடனான கனவுகளோடு தனித்து விடப்படுகிறான். படகிற்கு வர்ணம் பூசும் நிகழ்வின்போது அந்த வண்ணங்களின் கலவையில் அந்தப் படகே அழகிய தீவாய் புதிய உருப்பெற்று விடுகிறது.
ஒரு தீவைத் தேடிப் பயணம் புரியும் சின்னஞ் சிறு தீவு அளவிற்கான மிகச்சிறிய குறுநாவலே இது. அந்தப் பெண்ணிற்கும் ஆணிற்குமான உறவின், அன்பின் ஆழங்களை, அதன் உள்ளார்ந்த மெய்யுணர்வை ஆத்மார்த்தமாய் உணர்த்தி செல்லும் ஒரு இனிமையான பயணமாக அமைகிறது இந்தச் சிறு நாவல். அந்த ஆணோடு கலந்த அந்தப் பெண்ணின் பயணம், அவள் அவனுக்கு ஒத்துழைப்பாக இருந்து அவனை வழி நடத்திச் செல்லுதல், அவனின் பயணத்தை இனிமையாக்குதல், வாழ்க்கைப் பயணங்களில் சோர்வடையாத நிலையில் இருத்தல்…என்பதாக இந்த வாழ்க்கையின் பல படிநிலைகளை உணர்த்துவதாகவே நாம் இந்த நாவலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணோடு இணைந்து கொண்ட இந்த வாழ்வில் நம்மால் அதுவரை அறியப்படாத வாழ்வின் வெவ்வேறு விதமான அனுபவங்களை எதிர்கொள்வதும் அதன் மூலம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வதுமான மெய்யான உணர்வுகளை எய்த முடியும் என்பதாக இந்த நாவல் நமக்கு உணர்த்துகிறது என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தச் சிறு நாவலின் முன்னுரையில் இப்படிச் சொல்லப்படுகிறது.
“மொழி பெயர்த்தல் என்பது மற்றொரு சுயமான படைப்பை உருவாக்கும் செயலுக்கு ஒப்பானதாகும். மூலத்திற்கு இணையானதாகவும், நியாயம் செய்வதாகவும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு சித்திரத்தைப் பார்த்து வரையும் இன்னொரு சித்திரம் எனலாம். சில வண்ண மாற்றங்களும், வடிவ மாற்றங்களும் மூல சித்திரமாகவும், அதே நேரம் சுயமானதாகவும் இருக்க வேண்டும்”
ஆனந்த அவர்களின் இந்த நாவலுக்கான மொழி பெயர்ப்பு அந்த உணர்வை நமக்கு முழுமையாக ஏற்படுத்துகிறது. மொழி பெயர்ப்பில் தெளிவான ஒரு வாசிப்பு அனுபவத்தை நமக்குத் தரும் சின்னஞ்சிறிய சிறப்பான நாவல் இந்த “அறியப்படாத தீவின் கதை”.
புனைவும் தொன்மமும் மாடத்தியும் – கடிதங்கள்
புனைவில் தொன்மங்கள் தேவையா?
அன்புள்ள ஜெ
புனைவில் தொன்மங்கள் தேவையா என்னும் கட்டுரை வாசித்தேன். நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். புனைவில் வரும் தொன்மங்கள்தான் அதை நீண்ட மரபுடனும், வரலாற்றுடனும் இணைக்கின்றன. ஆழ்மன அர்த்தங்களை விரிக்கின்றன.
அத்துடன் இன்னொன்றும் உண்டு. எனக்கு ஒரு கதையை வாசித்ததுமே அதிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று தோன்றும். வெளியேறி வேறு விரிவுக்குச் சென்று அங்கிருந்து அந்தக்கதையை பார்க்கவேண்டும். அந்தக்கதை அப்போதுதான் விரிவடைகிறது. அதற்கு மிக உதவியாக இருப்பது அக்கதையில் இருக்கும் அந்த தொன்ம அம்சம்தான்.
ராஜகோபால் ஜி
***
அன்புள்ள ஜெ
சமீபத்தில் இரு சினிமாக்கள் வந்தன. ஒன்று கர்ணன், இன்னொன்று மாடத்தி. இரண்டுமே சமூகப்பிரச்சினைகளுக்கு தொன்மங்களை எடுத்தாண்டிருந்தன. நம் இடதுசாரிகள் கர்ணனைக் கொண்டாடினர். மாடத்தியை விமர்சித்தனர். மாடத்தி மனிதப்பிரச்சினையை தொன்மமாக ஆக்கி கீழிறக்குகிறது என்றனர். கர்ணன் அவ்வாறு செய்வதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அதற்கு லீனா மணிமேகலைமேல் அவர்களுக்கிருந்த தனிப்பட்ட காழ்ப்புதான் காரணம். ஏனென்றால் இடதுசாரிகளால் கலையை அல்லது கருத்தை புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் ஆளைப்பார்த்தே முடிவுசெய்கிறார்கள்.நம்மவரா இல்லையா என்பதுதான் கேள்வி.
ஆனால் இன்னொன்றும் உண்டு. மாடத்தியில் படிமங்கள் மேலே செல்கின்றன. கற்பனையில் விரிகின்றன. கர்ணனில் அவை திட்டவட்டமான வெறும் அடையாளங்களாகவே உள்ளன. ஆகவே நம்மூர் இரும்புத்தலை ரசிகர்களுக்கு இலக்கணப்படி ரசிக்க முடிவதாக உள்ளது. இந்த வேறுபாடு முக்கியமானது என நினைக்கிறேன்.
ஆனந்த்
***
இருட்கனி வரவு
அன்புள்ள ஜெ,
இருட்கனி செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கூரியரில் வந்து சேர்ந்தது. நன்றி! (இருட்கனி வந்து சேர்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும் இல்லையா ?)
நூலைக் கையில் எடுத்ததும் என் இரு பெண்களிடமும் தனித்தனியே காட்டி, அட்டையிலிருப்பது யார் என்று கேட்டேன். இளையவள் உடனே கர்ணன் என்று சொன்னாள். மூத்தவள் சற்று நேரம் யோசித்தபின் கர்ணன்தானே என்று கேட்டாள். இருவரும், கர்ணனின் ஒளிவீசும் மார்புக்கவசத்தைக் கொண்டே அடையாளம் கண்டதாகக் கூறினர். மனைவிடம் காட்டினேன். கர்ணன்தானே என்று கேட்டு உறுதிசெய்துகொண்டபின், முதலில் அது துரியோதனன் என்று நினைத்ததாகவும், பின்பு கவசத்தைக்கொண்டே அது கர்ணன் என்று ஊகித்ததாகவும் கூறினாள்!
அர்ஜுனன், கண்ணன், கர்ணன் இவர்களை வைத்து ஒரு சிறுகதையோடு ஆரம்பிக்கும் நாவல், இறுதிவரை கர்ணன் எவ்வாறு பிறருக்காகக் கனிந்து கொடையளித்துக்கொண்டே இருக்கிறான் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் நுட்பமாக விவரித்துக்கொண்டே செல்கிறது. குழந்தையில் படகை உதைத்துத் தன்னை விடுவித்துக்கொள்வதன்மூலம் தாயின் வாழ்வைத் திருப்பி அளிப்பதில் தொடங்கும் கர்ணனின் கொடை, சிதையில் மனைவிக்குச் சத்திரிய அரசி என்ற அந்தஸ்த்தை ஈட்டிக்கொள்ள உதவுவது வரை தொடர்கிறது. கொடிய யுத்தம்கூட அவனிடம் பிறர் உயிர்க்கொடை பெறுவதற்காகவே நடைபெறுவது போல் உள்ளது.
எவரிடமும் எதையும் பெரும் அவசியம் இல்லாதவன். தந்தையின் கொடைகூட அவருக்கே திரும்பிச்செல்கிறது. தானத்தின் பலன்களும் கொடையளிக்கப்படுகின்றன. அனைத்தையும் கொடையளித்தபின் கர்ணன் போர்க்களம் புகும் காட்சி:
// “கர்ணன் மீது விண்ணிலிருந்து பொன்னிற ஒளி ஒன்று இறங்கியிருந்தது. அவன் அணிந்திருந்த கவசங்களும் அணிகளும் விழிமலைக்கும்படி மின் கொண்டிருந்தன. அவன் புரவியின் கடிவாள மணிகளும் சேணத்தின் பித்தளை வளையங்களும் அது அணிந்திருந்த வெள்ளி அணிகளும்கூட பொற்சுடர் பெற்றிருந்தன. புரவியின் கால்கள் நிலம் தொடுவதுபோல் தோன்றவில்லை. அவை காற்றைத் துழாவி சென்றுகொண்டிருந்தன. முகில் ஊர்வது போல் அவன் படைகளின் நடுவே சென்றான்.” //
தந்தையை நோக்கும் விருஷசேனன் ஆச்சரியப்படுகிறான்:
//”தேவதேவனுக்கு அளிக்கப்பட்ட மணிக்குண்டலங்களும் கதிர்க்கவசமும் மீண்டு வந்துவிட்டனவா? இப்படை வீரர்கள் எதை பார்க்கிறார்கள்?”//
எந்த அணியம் இல்லாவிடினும் அவனைச் சூழ்ந்து ஒளிர்வது அறத்தின் கடமையல்லவா?
எவரிடமும் எதையும் பெரும் அவசியம் இல்லாத பெருங்கொடையாளியும் மைந்தர்களிடம் பெற்றே ஆகவேண்டும். நூலிலிருந்து:
//“நீங்கள் இப்புவியிலிருந்து எதையும் கொள்ளவில்லை, தந்தையே. ஆனால் எங்களிடமிருந்து நீங்கள் அவ்வண்ணம் ஒழிய முடியாது. நாங்கள் அளிப்பதை நீங்கள் மறுக்கவே இயலாது” என்றான் விருஷசேனன். “உங்களுடன் சேர்ந்து போருக்கெழுவோம். உங்களுக்காக உயிர்கொடுப்போம். நாம் வென்று மீண்டு நாடாண்டால் உங்களுக்கு அன்னமும் நீரும் அளிப்போம். உங்களுக்கு கொடுக்கும் நிலையில் இருப்பவர் நாங்கள் மட்டுமே. எந்த தந்தையும் மைந்தரிடமிருந்து கொள்ளமாட்டேன் என்று சொல்ல இயலாது. அது தெய்வ ஆணை!” என்ற விருஷசேனன் புன்னகைத்து “கொள்க, தந்தையே!” என்றான். கர்ணன் விழிகளில் நீர் வழிய சிரித்தபடி இரு கைகளையும் விரித்தான். விருஷசேனன் எழுந்து அவனை தழுவிக்கொண்டான். மைந்தர்கள் அனைவரும் சேர்ந்து தந்தையை தழுவிக்கொண்டார்கள்.//
யுத்தகளத்தின் நடுவில் உரைக்கப்பட்ட கீதையைப்போல, சிதைக்களத்தில் சூதர்கள் பாடல்கள் வழியாகக் கர்ணனின் வீரமும், அறமும், கொடையும், கனிவும் நிரம்பிய வாழ்வைப் பாடும் இருட்கனிக்காக நன்றி!
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை
August 8, 2021
தொழில், இலக்கியம்
வி.ஜீவானந்தம், ஈரோடுவணக்கம் ஜெ,
நலம் தானே!
நான் இலங்கையை சேர்ந்தவன். தொழில்முறையில் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். உங்களிடமிருந்து இதுவரை எனக்குள் எழுந்த அதிகமான கேள்விகளுக்கு பதில் கிட்டியிருக்கிறது.அதனாலேயே நீங்கள் என் ஆசானாகிப்போனீர்கள். சில மாதங்களாக என் மனதை நெருடும் இந்தக்கேள்விக்கு உங்களிடம் பதில் கேட்க விழைகிறேன்.
எதையாவது வாசித்தால் தான் தூக்கம் வருவது சிறுவயதிலிருந்து எனக்கு ஒரு பழக்கமாகிப்போனது. அப்பாவின் நூலகத்தில் இருந்தே என் வாசிப்பும் ஆரம்பமானது. ஆங்கில இலக்கியத்தில் பரீட்சயம் அதிகமாகவும் இருந்தது. இங்குள்ள கல்விமுறையில் வருடாந்தம் விவாதப்போட்டிகள் நடக்கும்.அதில் பங்குபற்றி பேசவே தமிழ் இலக்கியம் கற்கலானேன். பிறகு கல்லூரி நாட்களில் கூட நேரம் வகுத்து அதிகம் வாசிக்கப்பழகிப்போனேன். கல்லூரியிலிருந்து வெளியாகுகையில் தமிழின் செவ்வியல் வரிசையை ஓரளவு வாசித்து முடத்துவிட்டதாக மூளை சொல்லியும் மனம் ஏற்கவில்லை. இதுவரைக்கும் என் வாசிப்பு நீண்டுகொண்டே செல்கிறது.
நா.மகாலிங்கம்(விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைப்போல) ஆரோக்கியமான உரையாடல்களை நடாத்த இங்கு இலக்கிய வட்டம் ஒன்று இல்லை என்ற எண்ணம் மேலெழ நண்பர்கள் சிலர் சேர்ந்து வாசகர் குழுமம் ஒன்றை தொடங்கி பேசலானோம். அதன் கூடுகைகள் வழியாக இலக்கியப்புரிதலை ஒரு எல்லைவரை கண்டுகொள்ள முனைகிறோம். அதற்கு மேலாக புத்தகங்களாக வாங்கி குமிக்கலானேன். தினசரி வாசிக்கவேண்டும் என்ற வேட்கை உண்டாகிற்று. தினமும் வைத்தியனுக்கு ஏன் இலக்கியம்? இலக்கியம் பேச உனக்கு என்ன தகுதியிருக்கிறது? என்ற கேள்விகள் என் குடும்பமட்டத்திலேயே வலுப்பெறத்துவங்கிவிட்டன.
முதலில் அவற்றை கடந்து வந்த போதிலும் இப்போதெல்லாம் சற்று முடியாதுள்ளது. அப்படியாக இலக்கியம் பேச ஏதாவது தகுதி வேண்டுமா? இவர்கள் தான் பேசவேண்டும் என்ற வகையறா உள்ளதாக எனக்கு தெரியவில்லை. என் மனம் ஒரு சிறுகதையாவது எழுத வேண்டும் என்ற உணர்வு மேலெழும் போது மனதில் மேலும் இரண்டு கேள்விகள் உருவாகின்றன. ஒன்று இவ்வளவு காலமும் தமிழில் எழுதப்படாத ஒன்றையா நான் எழுதிவிடப்போகிறேன் என்பது மற்றையது நான் எழுதுவதை மருத்துவனுக்கு எழுத்து ஒரு கேடா என்று சமூகம் நச்சரிக்குமா என்பது? . உங்களிடமிருந்து இந்த குழப்பத்திற்கு அவசியம் பதில் கிட்டும் என நம்புகிறேன்.
நன்றி
அன்புடன்,
ஷாதீர்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன்அன்புள்ள ஷாதீர்,
எவருக்கானாலும் இரண்டு வாழ்க்கை உண்டு. அகவாழ்க்கை, புறவாழ்க்கை. புறவாழ்க்கை எனும்போது தொழில், சமூகம் என பல தளங்கள் அதற்கு உண்டு. அகவாழ்க்கை என்னும்போது காதல்ம் காமம், குடும்பம் போன்றவற்றைச் சொல்கிறார்கள். ஆனால் அது பழைய வரையறை. ஏனென்றால் இன்று அவையும் புறவாழ்க்கையென ஆகியிருக்கின்றன. அதற்கப்பாலுள்ள அகவாழ்க்கை ஒன்று உண்டு. அது நமக்கு மட்டுமே உரியது. நம் புறவாழ்க்கையிலுள்ள இடைவெளிகளை நிறைவுசெய்வது.நம் புறவாழ்க்கையைச் சமன்செய்வது.
அந்த அகவாழ்க்கையை நீங்கள் மதத்தைக் கொண்டு நிறைவுசெய்தீர்கள் என்றால் இங்கே எவரும் எதுவும் சொல்லமாட்டார்கள். மருத்துவனுக்கு இறைவழிபாடு எதற்கு என்று கேட்கமாட்டார்கள். ஏனென்றால் அதன் தேவையென்ன, முக்கியத்துவமென்ன என அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இலக்கியத்தின் தேவை என்,ன முக்கியத்துவம் என்ன என்று தமிழ்ச்சமூகத்திற்குப் பொதுவாகத் தெரியாது. அதை பொழுதுபோக்குக்குக் கதைபடித்தல் என்றுதான் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆகவேதான் இந்த குற்றச்சாட்டு எழுகிறது.
புறவாழ்க்கை மட்டுமே கொண்டவர்களைக் கூர்ந்து பாருங்கள். சட்டென்று அவர்கள் ஒரு பெரும் சலிப்பிற்குள் சென்று விழுவதைக் காண்பீர்கள். தொழில் வளர்ச்சியடைந்து பொறுப்பும் நெருக்கடியும் கொண்டதாக ஆகுந்தோறும் அச்சலிப்பு பெருகுகிறது. அச்சலிப்பை வெல்ல அவர்கள் பெரும்பாலும் குடிக்கிறார்கள். பலவகையான கேளிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் சம்பந்தமில்லாத தொழில்களில் ஈடுபடுகிறார்கள். முதலீடுகளால் விளையாடுகிறார்கள். என்ன செய்தாலும் அந்தச் சலிப்பு நீங்குவதில்லை. டாக்டர்களில்தான் அப்படி முழுக்கச் சலிப்படைந்தவர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்.
இயகக்கோ சுப்ரமணியம்நமக்கு உகந்த அகவாழ்க்கை நம்மை அப்படி சலிப்படையாமல் காக்கும். மேலைநாடுகளில் ஒவ்வொருவருக்கும் அப்படி ஒரு அகவாழ்க்கை இருக்கவேண்டுமென்னும் கருத்து உண்டு. நமக்கே உரிய உலகம் அது. ஒரு மருத்துவரைச் சந்தித்திருக்கிறேன், அவருடைய உலகம் வண்ணத்துப்பூச்சிகளை சேகரிப்பது. உலகம் முழுக்கச் சென்று சேகரிப்பார். அவருடைய தொழிலின் சலிப்பை வெல்ல, தொழிலில் ஆர்வம் குறையாமல் தொடர அது அவருக்கு உதவுகிறது.
இலக்கியம், கலை, இசை போன்றவை இன்றைய வாழ்க்கையின் நெருக்கடியும் போட்டியும் மிக்க சூழலில் மிகமிக இன்றியமையாதவை. அவை உண்மையில் போட்டிநிறைந்த புறவாழ்க்கைக்கு எதிரானவை அல்ல, உதவியானவை. அவை கவனத்தை திசைதிருப்பி தொழில்த்திறனை அழிக்கும் என்பது பழைய நம்பிக்கை. அவை தொழிலின் சலிப்பை வென்று ஊக்கம் கொள்ள உதவும். இளைப்பாறலாக ஆகும். ஒரு நல்ல குளியல்போல, நல்ல தியானம் போல. இன்று அத்தகைய அகவாழ்க்கையின் பயன்களை உளவியலாளர்களே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்
கொரோனா காலகட்டத்தில் கடும் உள அழுத்தத்திற்கு ஆளான மருத்துவர்கள் பலரை எனக்கு தெரியும் சிலர் மிகையான வேலையால். சிலர் வேலையில்லாமல் சும்மா இருந்தமையால். உளவியலாளர்கள் அவர்களிடம் புத்தகம் படிக்கும்படிச் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கு படிக்கும் வழக்கமே இல்லை. புதிதாக தொடங்க முடியவில்லை. எனக்கு நாலைந்து கடிதங்கள் வந்தன, எப்படி இலக்கியம் படிக்க ஆரம்பிப்பது என்று. புதியதாக தொடங்குவது கடினம் என எழுதினேன்.
இச்சூழலில் ஏற்கனவே படிக்கும் வழக்கம் இருப்பது, அந்த மனநிலை நீடிப்பது பெரிய வரம். அதை எவருக்காகவும் கைவிட வேண்டியதில்லை. அது வாழ்க்கையை எத்தனையோ சோர்வுகள், கசப்புகளில் இருந்து காப்பாற்றுவது. அதை வாழ்வின் இறுதிநாட்களில் உணர்வீர்கள்.
அத்தனைக்கும் அப்பால் ஒன்றுண்டு, முதுமை. இறுதிநாள் வரை எவரும் தொழில் செய்யப்போவதில்லை. முதுமையில் தொழிலை விட்ட பின்னரும் நீண்ட வாழ்க்கை மிஞ்சியிருக்கும். அப்போது இருக்கும் தனிமையில் அகவாழ்க்கை மட்டுமே எஞ்சியிருக்கும். அதுவரை எதுவும் பழகாதவர் அப்போது புதியதாக எதையும் தொடங்கிவிட முடியாது. ஆழமான , நேர்நிலையான எதையும் செய்யமுடியாத முதுமைச் சூழலில் ஆண்கள் அரசியல்சார்ந்த காழ்ப்புகளிலும், பெண்கள் குடும்பக்காழ்ப்புகள் அல்லது தொலைக்காட்சிச்தொடர்களின் காழ்ப்புகளிலும் மூழ்கி வாழ்க்கையை கசப்பால் நிறைத்துக்கொள்கிறார்கள்.
ஷண்முக சிவாதொழிலுக்கு இலக்கியம் தடையென ஆகுமா? இலக்கியத்தை நம் அகவாழ்க்கை என வைத்துக்கொண்டால் ஆகாது. அதை தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். அது எந்தவகையிலும் தொழிலுடன் ஊடாடக் கூடாது. அதை நம் அகத்துடன் தொடர்பில்லாத எவரிடம் பகிரவும்கூடாது. அதை நம் அகத்தே வைத்துக்கொள்ளவேண்டும். நமக்கே உரிய உலகமாக. அவ்வாறெனில் அது நம் தொழிலுக்கு உதவியானதே.
நான் நன்கறிந்த பெருந்தொழிலதிபர்கள் ‘சக்தி நிறுவனங்கள்’ நா. மகாலிங்கம் முதல் இயகாக்கோ சுப்ரமணியம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் வரை தொடர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர்கள்தான்.
மருத்துவர்களில் உதாரணம் அளிக்கவேண்டுமென்றால் மலேசியாவின் சண்முக சிவாவையும் ஈரோடு வி.ஜீவானந்தம் அவர்களையும் குறிப்பிடுவேன். அவர்கள் தலைசிறந்த மருத்துவர்கள். இலக்கிய வாசகர்கள். அதற்குமேல் மிகப்பெரிய அளவில் சமூகசேவையிலும் ஈடுபாடுள்ளவர்கள்.
சண்முக சிவா மலேசிய நவீன இலக்கியத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்த முன்னோடி. கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக கல்வியகங்களை உருவாக்க முயல்பவர். ஜீவானந்தம் மயக்கவியல் மருத்துவர் மட்டுமல்ல, குறைந்தசெலவுள்ள மக்கள் மருத்துவமனைகளை உருவாக்கி நிலைநிறுத்திய ஒருங்கிணைப்பாளரும்கூட.
அனைத்தையும் அவர்களால் செய்ய முடிந்தது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொன்றையும் அதனதன் தளத்தில் பிரித்து வைத்துக்கொண்டனர். ஒன்று இன்னொன்றை சிறப்புற ஆற்றும்படிச் செய்வதை அதன் வழியாகக் கண்டடைந்தனர்.
ஜெ
ஞானி நினைவுகள் – மீனாம்பிகை
2013-ல் நான் என் முகநூல் நண்பரான யுகமாயினி சித்தன் அவர்களை நேரில் சந்தித்தேன். என்னுடைய குடியிருப்புப்பகுதியில் வசித்தார். சில நாட்கள் மாலை நடை சேர்ந்து போவதுண்டு. அவர் அப்போது பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர்கள் ஒரு கருத்தியல் சார்ந்து இயங்கியவர்கள். என் இளமை முதலே நான் எதையாவது வாசித்துக்கொண்டிருந்தாலும் வாசிப்பு என்பதே எனக்கு அதிலுள்ள தகவல்களை, மனித இயல்பை, அகத்தை அறிந்து கொள்ளும் ஒன்றாகவே இருந்தது, அதற்கப்பால் இருந்த கருத்தியல்கள் நிலைபாடுகள் எனக்கு அந்நியமாக இருந்தன. காதல் போல ஈர்ப்பும், விலக்கமுமாக அறிந்து கொள்ள விரும்பியும், புதியவற்றின்மீது சலிப்புமாக தொடர்ந்து வாசித்துக் கொண்டும் இருந்தேன்.
இணைய வழி வாசிப்புகளின் அறிமுகம் இருக்கவில்லை. வாசிப்பதை வகைப்படுத்திக் கொள்ளவும், அதன் நுட்பங்களை அறிந்துகொள்ள வழிப்படுத்தும் ஆசிரியர்களை கண்டடையவும் இல்லை. ஜெயமோகன் என்ற பெயர் முகநூல் வம்புகளில் கண்டிருந்தாலும் அத்தகைய விவாதங்களில் ஈடுபாடற்றிருந்ததனால் அவற்றின் பின்சென்று அது என்ன என்று படிக்கவும் இல்லை. முழுநேர வேலையை விட்டபின் எப்படி வாசிப்பது என்றும் எதை வாசிப்பது என்றும் பள்ளிக்கூடம் போல எவரிடமாவது முறையாகப் பயில வேண்டுமென்ற ஆவல் எழுந்தது.
முகநூல் வழியாக அறிந்த பொன் இளவேனில், இளஞ்சேரல் ராமமூர்த்தி அவர்கள் நரசிம்மலுநாயுடு பள்ளியில் நடத்திக்கொண்டிருந்த மாதாந்திர இலக்கியக்கூட்டத்திற்கு 2012-ல் சென்றேன். என்னுடைய முதல் இலக்கியக்கூட்டம் அது. இன்று நான் அறிந்த பல நண்பர்களை அன்றுதான் சந்தித்தேன். அந்தக்கூட்டங்களுக்கு அப்போது ஞானி வந்து கொண்டிருந்தார். அன்று தமயந்தி என்பவர் சிறப்புப் பேச்சாளர். தன்னை எழுதக்கூடாது என்று தன் வீட்டினர் விரல்களை ஒடித்ததைப்பற்றி அவர் சொன்னதும் இடைமறித்து ஞானி “எந்த வயதில்?” என்று கேட்டார். அவர் பத்தாவது படிக்கும்போது என்று சொன்ன நினைவு. அந்தக்கேள்வியும் அதன் பின் வந்த அமைதியும் அவர் என்ன எண்ணுகிறார் என்று புரியாமல் மயங்கச்செய்திருந்தன. அதே கூட்டத்தில் நாஞ்சில் நாடனும், ஃபிர்தௌஸ் ராஜகுமாரனும் பேசினார்கள். எனினும் எவரையும் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கவில்லை என்று எண்ணியதால் அருகில் சென்று பேசவில்லை.
ஒருமுறை மாலை நடையில் சித்தனிடம் பேசும்போது அவர் மறுநாள் ஞானியை சந்திக்கப் போவதைப் பற்றிச் சொன்னார். நான் ஞானியின் அருகில் இருந்தால் அல்லது அடிக்கடி சந்தித்தால் எதையாவது கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். அவர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தவர் என்பது எனக்கு ஆறுதலான தகவலாக இருந்தது. சித்தன் அழைத்துச் செல்வதாகச் சொன்னார்.
மறுநாள் கிளம்பியபோது ஒரு எழுத்தாளரை, ஒரு முதியவரை சென்று பார்க்கப் போகிறேன் என்ற பதற்றம் மட்டுமே இருந்தது. எவ்வகையிலும் அவரிடம் உரையாடும் அளவுக்கு எதையும் வாசித்திருப்பதாக நான் எண்ணவில்லை. இருப்பினும் ஓர் ஆர்வத்தில் கிளம்பியிருந்தேன். இருவரும் பேருந்தில் ஏறி அவரது குடியிருப்புப்பகுதியில் இறங்கினோம். மேடும் பள்ளமுமான மழைநீர் தேங்கி நின்றிருந்த மண் சாலையில் நடந்து இரண்டு திருப்பங்களுக்குப்பிறகு அவர் வீட்டை அடைந்தோம்.
வாசலில் செருப்புச் சத்தத்ததை அவர் கேட்டிருக்கவேண்டும். உள்ளறையிலிருந்து மிக மெலிதாகக் குரல் கொடுத்தார். செருப்பைக் கழற்றியபடி சித்தன் பதில் சொன்னார். அன்று அவர் மட்டும் தான் வீட்டிலிருந்தார். வாங்க என்றழைத்தபடி உள்ளிருந்து எழுந்து முன் அறைக்கு வந்தார். தூய வெண்ணிற சட்டை வெண்ணிற வேட்டி அணிந்திருந்தார். ஒடுங்கிய உடல். சிந்தனையா, புன்னகையா என்று வகைப்படுத்திக்கொள்ள இயலாத முகம். அவரது துணைவியார் மறைவுக்குப்பின் மனம் நலிந்திருக்கிறார் என்று சித்தன் சொல்லியிருந்தார். நலம் விசாரித்தபின் ஞானி அவரை நாற்காலியில் அமரும்படி நாற்காலி இருந்த திசையில் கைகாட்டினார். அங்கு நான்கு ப்ளாஸ்டிக் நாற்காலிகள் இருந்தன. நான் வேகமாக உள்நுழைந்து அந்த நாற்காலிகளை எடுத்துப் போடப்போனபோது சித்தன் என்னை மெதுவாக அவர் கைகாட்டிய இடத்தில் போடும்படி சொன்னார். மெல்ல நடந்து அவற்றில் ஒன்றில் நாற்காலியின் கைபற்றி ஞானி அமர்ந்தார். அவருக்கு அருகில் அமர்ந்தபடி சித்தன் என்னை அறிமுகப்படுத்தினார். நான் கைகூப்பி வணக்கம் சொன்னேன்.
“நீங்களும் மீனாவா?” என்று ஞானி சிரித்தார். அவருடைய உதவியாளர் பெயரும் மீனா என்று அறிந்தேன். சித்தன் என்னை அவர் கைகளைப் பற்றும்படி ஜாடை காட்டினார். நான் அப்போதுதான் அவர் அந்த உணர்தலின் வழியாகவே அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும் என்று உணர்ந்து திகைத்தேன். அருகில் சென்று என் கைகளை அவர் கையின் மேல் வைத்தேன். அவர் தன் இன்னொரு கையை என் கைகளின் மேல் வைத்தார். மிக மென்மையான வெம்மையான கைகள், சிறுகுழந்தையின் கைகள் போல. என் முரட்டுக் கைகளைப்பற்றிச் சற்று வெட்கமடைந்தேன். “உக்காருங்கம்மா” என்று சொன்னார். “கீழ உக்காந்துக்கறேன்” என்று அமரப்போன என்னை நாற்காலியில் அமரும்படி மீண்டும் சொன்னார். அங்கு புழங்குவதன் அச்சம் மீதூற நாற்காலியில் அமர்ந்தேன்.
என்னுடைய வேலை படிப்பு குடும்பம் பற்றி மெல்லிய குரலில் கேட்டார். என் வாசிப்புப் பற்றிக் கேட்டார் நான் பாலகுமாரனை ஜெயகாந்தனை அசோகமித்திரனை வாசித்திருந்தேன், சொன்னேன். சில கவிஞர்கள் முகநூலில் படித்தவர்களை சொன்னேன். அவருடன் அன்று நான் எதுவும் சரியாக உரையாடவில்லை. அன்று பாலகுமாரன் என்னுடைய பிடித்த எழுத்தாளராகவும் ஜெயகாந்தன் பிடித்தவராக, புதிரானவராகவும் இருந்தனர். அந்த வாசிப்புகளின் மீதான என்னுடைய அறிதல்களை வரையறுத்து அவரிடம் சொல்ல எனக்குத் தெரியவில்லை. சித்தன் அவரிடம், தான் கொண்டு வந்திருந்த காகிதங்களை படித்துக்காட்டி விவாதித்துக் கொண்டிருந்தார். அது இலக்கியம் சார்ந்ததாக இருந்தாலும், அரசியல் விவாதம் போல எனக்குத் தோன்றியது. எஸ்.பொ என்கிற பெயரை அங்குதான் கேட்டேன்.
நாங்கள் சென்று அமர்ந்த முன்னறையில் ஒரு உணவருந்தும் மேசையும் நாற்காலிகளும் இருந்தன. அவ்வறையில் கட்டப்பட்ட கொடியில் அவரது உலர்ந்த துணிகள் போடப்பட்டிருந்தன. அவரது அந்நிலையில் அந்த வெண்ணிற துணிகளை அணிவதும் அதை அவ்விதமே பேணுவதும் வியப்பாக இருந்தது. மேசையின் இறுதியில் சமையலறை. முன்னறையின் வலதுபுறம் திரும்பினால் ஒரு படிப்பறை இருந்தது. அதில் மரத்திலும் இரும்பிலுமான அலமாரிகள் முழுக்க புத்தகங்கள் நிறைந்திருந்தன. தரையிலிருந்து இடையளவு உயரத்தில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. படிப்பறை நடுவில் மேசை போடப்பட்டிருந்தது. அதன் இருபக்கமும் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேசைமீது அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள் இருந்தன, பாதி வேலை செய்து எழுந்து போகும்போது வகைப்படுத்தி எடுத்து வைத்தவை போல. ஷெல்புகளுக்கும் மேஜை நாற்காலிகளுக்கும் இடைப்பட்ட இடங்கள் முழுக்க தரைமீது புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. பெரிய புத்தகங்களினாலான அடுக்கு இடைவரை இருந்தது. சிறிய புத்தகங்களின் அடுக்கும் முழங்காலுக்கும் மேல் வந்தது. புத்தகங்களாலான ஒரு குளம் நடுவே இடம் தெரிந்து போடப்பட்டவை போல மேஜை நாற்காலிகள் அமைந்திருந்தன.
அவர்களின் உரையாடல் முடிந்து கிளம்பும்போது அவரது உதவியாளர் விடுப்பு எடுக்கும் நாட்களில் நான் வந்து அவருக்கு பத்திரிக்கைகள் படித்துக்காட்ட விரும்புகிறேன் என்று சொன்னேன். எப்படியும் படித்துக்காட்டும்போது அவர் அதைப்பற்றிப் பேசுவார் என்றும் எனவே எனக்கு இலக்கியம் புரிய வாய்ப்பிருக்கும் என்றும் எண்ணினேன். நான் சொன்னதும் “அவர் உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நீங்கள் அவ்வளவு தூரத்திலிருந்து இங்கு இதற்காக வரவேண்டும்” என்றார். நான் மீண்டும் வற்புறுத்தியபின் சரி என்றார். என் குரல் அவருக்குப் பிடித்திருந்தது என்று சொன்னார். அவரை இணக்கமானவராக உணர்ந்தேன்.
சில நாட்கள் கழித்து மீனா, தான் ஒரு நாள் விடுப்பு எடுப்பதாகவும் அன்று நான் வரமுடியுமா என்றும் போனில் கேட்டார். சிறு பதற்றத்துடன் வருகிறேன் என்று சொன்னேன். என் வீட்டுக்கும் அவரது வீட்டுக்கும் 10.கி.மீ தூரம். என்னுடைய டி.வி.எஸ் 50 வண்டியில் கிளம்பி கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கழித்து சென்று சேர்ந்தேன். (அப்போதுதான் வண்டி ஓட்டப் பழகியிருந்தேன்.) நான் சென்றபோது அவர் மட்டுமே இருந்தார். நான் வாசலில் நின்று வணங்கி வந்துவிட்டதைச் சொன்னேன். கைகளைப்பற்றி வரவேற்றார். அன்று ஹாலிலேயே அமர்ந்து படித்தோம். அவரது படிப்பறையில் முந்தின நாள் வேறு வேலைகள் செய்து கொண்டிருந்ததை மீனா அப்படியே விட்டுச்சென்றிருந்தார். அதைக்கலைக்க வேண்டாம் என்று ஹாலிலேயே அமர்ந்தோம்.
அன்று வந்திருந்த பத்திரிக்கைகளையும் முந்தின நாள் மீனா எடுத்து வைத்திருந்த புத்தகங்களையும் எடுத்து வைத்தேன். அவர் என்னை முதலில் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும்படி சொன்னார். சற்று நேரத்தில் அவர் அமர்ந்திருந்த நாற்காலி அருகில் தரையில் அமர்ந்தேன். நாற்காலியில் அமரச்சொல்லி வற்புறுத்தினார். எனக்கு தரை வசதி என்பதால் தரையில் அமர்ந்தேன். நான் தலைகுனிந்து படிக்க அவருக்கு அது சரியாகக் கேட்காமல் பிறகு அவருக்கு என் குரல் கேட்கும்படி உயரத்தில் அமர்ந்தேன். அவரே ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து படிக்கும்படி சொன்னார். நான் புத்தகத்தை எடுத்து முதல் கட்டுரையின் முதல் பக்கத்தை படிக்கத் துவங்கியதும் என்னைத் தடுத்து அது எந்தப் பதிப்பகம் என்றும் யாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று விவரங்களையும் படிக்கச் சொன்னார். நான் படிக்கத் துவங்கியதும் “மெதுவாக நிறுத்திப் படிங்க” என்றார். மிக மெதுவாகப் படித்தபோது “இப்படி இல்ல…” என்று சொல்லி திருத்தினார். நான் பதறிய குரலில் வாசிக்க என்னை சமனப்படுத்தினார்.
ஹாலில் நாற்காலியில் அமர்ந்து நான் படிப்பதைக் கேட்கும்போது தரையைப் பார்த்தபடி முன்சாய்ந்து அமர்ந்து காதைச் சற்றே சரித்துக் கேட்டுக்கொண்டிருப்பார். கைகள் இரண்டையும் நாற்காலியின் கைப்பிடியில் வைத்தபடி அல்லது ஒற்றைக்கையை மடக்கித் தாடையில் வைத்தபடி கேட்டிருப்பார். அப்படி அமர்ந்திருக்கையில் அவருடைய முகபாவனைகளை நாம் முழுவதும் பார்க்க முடியாது. சற்றே அருகமர்ந்து முன்சாய்ந்து அமர்ந்திருக்கும் அவர் முகத்தை நாம் பார்க்கலாம். ஆனால் எப்போதும் நாம் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே நம்முடைய அசைவுகளைத் தீர்மானிக்கிறது. அவரிடமும் கூட அவர் நம்மைப் பார்ப்பதில்லை என்பதை மறந்துவிடுவேன். எனவே பார்வையுடையவர்கள் முன்பு எப்படி நடந்து கொள்வேனோ அதைப்போலத்தான் நடந்து கொள்வேன்.
அவருக்காக மேசையின் ஃப்ளாஸ்கில் மூன்று டம்ளர் பாலும் சர்க்கரையும் இல்லாத காபி வைக்கப்பட்டிருந்தது. அதைத் தனக்கு ஒரு டம்ளரில் ஊற்றித் தருமாறும், எனக்கு மேசை மேல் இருந்த சர்க்கரையை கலக்கிக் கொள்ளும்படியும் சொன்னார். மிக மெதுவாக சுவரைப்பிடித்தபடி நடந்து உள்ளறைக்குச் சென்று வந்தார். விழியற்றவரின் உலகத்தில் வேறு துணைகளின்றி பொருந்த முடியாத பதற்றம் எனக்கு இருந்தபடியே இருந்தது.
பிறகு சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தார். முகநூல் பற்றி பேசிய நினைவு. எந்த வகையான எழுத்துக்கள் பதிவாகின்றன என்றும் முகநூலின் சாத்தியங்கள் பற்றியும் பேசிய நினைவு. பிறகு ஒரு கதைப்புத்தகம் படித்தேன். அதுவும் சில அத்தியாயங்கள். அதன்மீதான விவாதங்களென எதுவும் நினைவில்லை. என் மனநிலைக்கு முற்றும் அயலான ஒன்றையே வாசித்துக்கொண்டிருந்தேன்.
மதிய உணவு பற்றி நான் எதுவும் எண்ணியிருக்கவில்லை. நான் வெளியே செல்கிறேன் என்றபோது தடுத்து அவருக்கு வந்திருந்த உணவையே இருவரும் பகிர்ந்து உண்ணலாம் என்றார். எழுந்து சென்று கைகழுவி வந்து நாற்காலி பற்றி அவரே அமர்ந்து கொண்டார். அங்கிருக்கும் பாத்திரங்களில் என்ன உணவு வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டார். சாதம், குழம்பு, பொரியல், ரசம் இருந்தது. அவருடனே அமர்ந்து உண்ண வற்புறுத்தினார். நோய் காரணமாக மிகக்குறைவான உணவு உண்டார். அவர் உதவிக்கு ஆட்களில்லாமல் தனியாகத் தானே இவற்றை கையாள்வதைப் பற்றிய எண்ணமும் பதற்றமும் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. உண்டபின் தட்டுகளைக் கழுவ சமையலறைக்குச் சென்றேன். அப்போது அங்கு சமையல் நடக்கவில்லை என்றாலும் நேர்த்தியாக ஒருவர் கையாண்ட அறை என்பது அதன் அமைப்பிலிருந்து தெரிந்தது. சிறிது நேரத்தில் அவர் ஓய்வெடுக்கச் செல்லவும் நான் கிளம்பினேன்.
திரும்பும்போது அவருக்கு உகந்தவாறு அன்றைய நாளை அமைத்துக்கொள்ளத் தவறியதன் குற்ற உணர்ச்சியே இருந்தது. அவருக்கு வாசித்துக் காட்டிய எல்லாமே வெறும் வார்த்தைகளாகவே இருந்தன. ஒரு கருத்தாக எதையும் நான் தொகுத்துக் கொள்ளவில்லை. பிறகு சிலமுறை அழைப்பின் பேரிலும் அழைப்பில்லாமல் நானே அழைத்து அனுமதி பெற்றும் அங்கு சென்று கொண்டிருந்தேன். எதையாவது அடைந்தேன் என்று அல்ல, ஆனால் வெறுமே அவர் அருகே இருக்க விரும்பிச் சென்றேன். ஒரு பெரிய மனிதரை மரியாதை நிமித்தம் சந்திப்பதாகவே அவை அமைந்தன.
பிந்தைய சந்திப்புகளில் அவரது மனைவி பற்றிச் சொன்னார். ‘அவங்க’ என்ற விளியில் தான் பேசினார். அவர் கண்கள் பார்வை குன்றியதைப்பற்றி அவர் மனைவி, அவர் மீது கொண்டிருந்த அக்கறை பற்றி, அவரது பள்ளி நாட்கள் பற்றிப் பேசியது நினைவிருக்கிறது. அவரது முதல் நினைவு நாளையொட்டி வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றை எனக்களித்து அடுத்த முறை வரும்போது அதைப்படித்துவிட்டு என் கருத்தைச் சொல்லும்படி சொன்னார். அவர் தன் சகியாகத் தன் மனைவியை எண்ணியிருந்தார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது. ஒருபோதும் தன்னிரக்கம் கொண்ட வார்த்தைகளை அவர் சொன்னதில்லை என்று இன்று நினைவுறுகிறேன். சில நேரங்களில் நாம் அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையுடனே அவர் முகபாவம் இறுகி இருக்கிறதோ என்று நான் எண்ணியிருக்கிறேன்.
கவிதைகள் மீது மிக அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளை வாசித்துக் காட்டும்போது முகம் மலர்ந்திருக்கும், முகம் பரவசமும் ஆர்வமும் கொண்டதாக இருக்கும். எனக்குப் பிடித்த கவிதைகளையும் அன்று நான் கவிதை என்று எண்ணி எழுதியவற்றையும் அவருக்கு வாசித்துக் காட்டியிருக்கிறேன். அதிலிருந்த உணர்வுகளைப் பற்றி, எழுத நேர்ந்த மனநிலை பற்றி பேசியிருக்கிறார். சாம்ராஜ் எழுதிய ஒரு கவிதை பற்றிச் சொன்னார். என் முகநூல் நண்பர் என்று சொன்னபோது அவரைச் சந்திக்க விரும்புவதாக என்னிடம் சொன்னார். நான் சாம்ராஜிடம் பேசும்போது சொன்னேன். பிறகொருமுறை அந்த சந்திப்பும் நிகழ்ந்தது.
அவர் நாம் படிப்பதற்கு உடனே எதிர்வினையாற்றுபவர் அல்ல. அவர் நாம் வாசிப்பதன்பின் நமது கருத்தென்ன என்றுதான் முதலில் கேட்பார். பிறகு அதைப்பற்றிய அவர் கருத்தை சொல்வார் என்று எதிர்ப்பார்க்கும்போது மேல படிங்க என்பார். அவருக்குகந்த பதிலை அல்லது அவர் பதிலுரைக்கத்தக்க கருத்தை நான் சொல்லவில்லை என்று புரிந்துகொள்வேன். அவருடன் உரையாடும் அளவுக்கு நான் படித்திருக்கவில்லை, அறிந்திருக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது. ஆனால் அவர் கருத்துக்கு ஒட்டியவர்களை மட்டுமே பாராட்டுவார் என்றும் மற்றவர்களை நிராகரிப்பார் என்றும் என்னுடைய மற்ற நண்பர்கள் சொன்னபோது எனக்கு அது சமாதானமாகவே இருந்தது. அவர் ஒரு விரிந்த நிலையில் அனைத்தையும் ஏற்றுக்கொள்பவரல்ல என்ற எண்ணத்தை அன்று ஏற்படுத்தியது. இன்று ஞானி தொகுப்பை படிக்கையில் அவரை நான் புரிந்துகொள்ளத் தவறியது தெரிகிறது.
அவருக்கு உவப்பான எதையாவது படித்து ஒருமுறையாவது அவரிடம் உரையாட விரும்பினேன். என் தோழி சுஜாதா, தான் வாசித்த ஒரு நாவலைப்பற்றி என்னிடம் பேசினார். நான் அந்த நாவலை அவரிடமிருந்தே வாங்கிப் படித்தேன். அடுத்த முறை ஞானியைச் சந்திக்கச் சென்றபோது அந்த நாவலைப் பற்றிச் சொன்னேன். கொண்டு வந்திருந்தால் வாசிக்கும்படி சொன்னார். அவர் முதல் மூன்று நான்கு பக்கங்கள் வாசிக்கக் கேட்டார். பின்னர் பத்து பக்கங்கள் தள்ளிப் படிக்கும்படி சொன்னார். ஒரு ஐந்து பக்கங்களுக்கு பிறகு மீண்டும் சில பக்கங்கள் தள்ளிப் படிக்க சொன்னார். பிறகு மீண்டும் ஒரு கற்றை தள்ளிப் படிக்க சொன்னார். நாவலின் த்வனி மாறியிருக்கவில்லை. காதலிக்காக ஏங்கும் ஒரு ஏழைப் பத்திரிக்கையாளனைப் பற்றிய கதை. ஓர் இரவில் தான் இருக்குமிடத்திலிருந்து காதலியின் இல்லம் வரை தரையை முத்தமிட்டுக்கொண்டே செல்வதாக அதில் வரும். அத்துடன் அந்த நாவலை நிறுத்தச்சொன்னார்.
“பின்னர் நீங்களும் ஒரு பெண், இந்தக்கதையில் வரும் நாயகியின் இடத்தில் நீங்கள் இருந்தால் இப்படி ஒருவரை நீங்கள் காதலராக ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டார். எனக்குப் பின்னந்தலையில் அடித்தது போல இருந்தது. ஒருபோதும் அப்படி ஒருவரை பொருட்படுத்த மாட்டேன் என்றும் முழுக்க முழுக்க அவரைப் புறக்கணிப்பேன் என்றும் சொன்னேன்.
எனக்கு அது ஒரு திறப்பு. அவரிடம் அன்றுதான் உண்மையில் நான் கற்க ஆரம்பித்தேன் என்று இன்று அறிகிறேன். அதுவரை ஒரு நாவலை என் வாழ்க்கையில் நான் போட்டுப் பார்த்தது கிடையாது. அது எவருடையவோ சாத்தியமான வாழ்க்கை என்ற நிலையில்தான் படித்துவந்தேன். அந்த நாவல் என் அறிதலை எவ்வாறு மேம்படுத்துகிறது என்று எண்ணிப் பார்த்ததில்லை. அதுவரை நான் வாசித்த அத்தனை கதைகளுமே பிறருடையவை, பிறர் வாழ்க்கையில் நடந்தவை. அவற்றை நான் யாரோவாக நின்று அவர்களைப் பார்த்தேன்.
அதற்குப்பிறகு வாசித்த அத்தனை கதைகளுமே என் கதைகள். அவற்றில் நாயகியோ நாயகனோ வில்லனோ அல்லது ஏதேனும் விலங்கோ இருந்தால் கூட அது நானே. கதைசொல்லியும் நானே. வெவ்வேறு வேடங்களை போட்டுக்கொள்வது போல ஒவ்வொரு இடத்திலிருந்தும் அக்கதாபாத்திரத்தின் கருத்துக்களை வகைப்படுத்திக் கொண்டேன். வெளியே நின்று பார்வையாளனாகவும் அதைப் புரிந்துகொண்டேன். ஏதேனும் ஒரு அறிதல் சாராத, உணர்வுகள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்ட நூல்களைத் தவிர்க்க அந்த உரையாடல் வழியமைத்தது என்று இன்று உணர்கிறேன். அதன் பிறகு நிறைய வாசித்தேன். அவை எனக்குள் புதிய விவாதங்களை தோற்றுவித்தன. அவற்றுடன் பேசிப்பேசி என் அறிதலை மேம்படுத்திக்கொண்டேன். ஏற்கனவே படித்திருந்தவையும் விரியத்தொடங்கியிருந்தன. தனிப்பட்ட முறையில் ஒன்றிரண்டு நண்பர்களுடன் வாசிப்பது பற்றி விவாதித்தாலும் நிறைவுறாமல் சுழன்றுகொண்டிருப்பதும் நிகழ்ந்துகொண்டிருந்தது.
இச்சம்பவத்துக்குப் பிறகு எனக்கு ஞானியைப் புரிந்துகொள்ள முடியும், கற்றுக்கொள்ளமுடியும் என்று தோன்றியது. சில நாள் மீனா இருக்கும் போதே செல்வதுண்டு. ஈஷா பற்றி அவரிடம் சிலமுறை பேசியிருக்கிறேன். அவர்களின் வழிபாட்டு முறைகள் பற்றி அனைவரும் பேதங்களற்ற முறையில் நடத்தப்படுவது பற்றி பேசியிருக்கிறேன். அவர் கடவுள் பற்றி பிறர் எனக்குச் சொன்னது இல்லாமல் நான் உண்மையில் என்ன நினைக்கிறேன், என்ன அறிந்திருக்கிறேன் என்று கேட்டார். என்னுடைய ஒரு அனுபவத்தைச் சொன்னேன். அதையொட்டி என்னுடைய எண்ணத்தையும் சொன்னேன். சிறிது நேரம் அமைதியாக இருந்தார். நான் பேச முற்பட்டபோது தடுத்தார். என் சொற்கள் ஒலித்தபோது தாக்கப்பட்டது போல பதறினார். நான் பேசுவதை அவர் கைநீட்டி தடுத்தபோது அவரது தோல் மயிர்க்கூச்செறிந்திருப்பதைக் கண்டேன். மிக நுட்பமான ஒரு மனநிலைக்குள் சென்றுவிட்டிருந்தார் என்று தோன்றியது. பிறகு சிறிதுநேர அமைதிக்குப்பின் அவரவர் அனுபவங்களை தமக்குத்தாமே மறுதலித்துக் கொள்ள முடியாது. பிற்பாடு அதற்கு அறிவியல் ஏதேனும் பொருள் கொடுப்பினும் இவை அதற்கும் மேல் நிற்கும் என்று சொன்னார்.
இன்று நினைத்துப் பார்க்கும்போது இவ்விரு சந்திப்புகளே மிக முக்கியமான சந்திப்புகளாக என் பொருட்டு, என் கற்றலின் பொருட்டு நினைவு கூர்வனவாக இருக்கின்றன. பிறகொருமுறை நான் வேறு வேலைக்குச்சென்ற பின் அவரைச் சென்று பார்த்தேன். அன்று அவருடைய மகன் பாரி இருந்தார். அவர் அன்று புகைப்படக் கலைஞராக இருந்தார். என்னை ஞானியுடன் நிறுத்தி அவரது படிப்பறையில் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பிக் கொடுத்தார். வேறு ஊர்களுக்கு வேலைக்குச் சென்றதும் என்னுடைய போதாமையின் அளவை உணரத்தொடங்கியதும் அவரைச் சந்திக்க முடியாமலாக்கின. எனினும் முடிந்தபோது போனில் அவரும் பேசுவார், நானும் அழைத்திருக்கிறேன். “இங்க வந்தா வாங்க” என்பார்.
உங்களை வாசிக்கத் தொடங்கியபின் அவரைச் சந்திக்க விரும்பினேன். அப்போது நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஒரு வாசகியாக அவரை சந்திக்க உரையாடத் தகுதி கொண்டிருக்கிறேன் என்று நினைத்தேன். அவருடைய உடல்நிலை காரணமாக எவரையும் அவர் சந்திகாமலாகிவிட்டிருந்தார். அன்று முயன்று சந்திக்காதது இன்று ஒரு இழப்பாக சுமையாகக்கூட என்னுள் இருக்கிறது.
உங்கள் ஞானி தொகுப்பை முழுமையாக இன்று படிக்கையில் என் குலமூதாதை ஒருவரின் இழப்பு போல கனமாக அந்த இழப்பு உள்ளத்தில் படிந்திருக்கிறது. நான் படிக்க அவர் அமர்ந்து கேட்பதும் சிரிப்பதும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறது. அவருடைய இறப்பு செய்திகேட்டு போனபோதும் மிக சம்பிரதாயமான ஒன்றாக இல்லாமல் எனக்கு அணுக்கமான ஒருவரின் இழப்பாக ஒரு நிஜத்துயரமாகத்தான் அது இருந்தது.
விழாக்களில் சந்திக்கும்போது கூட கைகளைப்பற்றிக் கொள்வார். இன்று ஆசிரியரென அவரை எண்ணி நெகிழும் இப்பொழுதில் அந்த வெம்மையான மென்மையான கைகள், என் நினைவில் அழுந்தப் பதிகின்றன.
மீனாம்பிகை
ஞானி முன்னுரைசினிமாவில் எழுத்தாளன்
அன்புள்ள ஜெ
ஆனந்தவிகடன் பேட்டியில் சொல்லியிருந்தீர்கள் ஒரு சினிமாவுக்கு நீங்கள் அளிப்பது கதைத் தொழில்நுட்பத்தை மட்டும்தான் என்று. உண்மையில் ஒரு சினிமாவில் இங்கே எழுத்தாளனின் பங்களிப்புதான் என்ன? இந்த சினிமாக்களை பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த சினிமாக்களில் எவை உங்கள் சினிமா என்று சொல்லமுடியும்?
ஆனந்த்
அன்புள்ள ஆனந்த்,
தமிழ்சினிமாவில் திரைக்கதை என்பது இயக்குநரின் கையில் இருக்கும் ஒரு முன்வடிவம் மட்டுமே. அது எடுக்க எடுக்க மாற்றி எழுதப்படும். படப்பிடிப்பு முதல் கடைசிக்கணம் வரை உருமாறிக்கொண்டும் இருக்கும். ஆகவே திரைக்கதையை ஒட்டி சினிமாக்கள் அமைவது மிக அரிது.
கதை -திரைக்கதையில் பணியாற்றும் எழுத்தாளன் ஒரு ‘சேவை வழங்குநர்’ மட்டுமே. அவன் தன் கதைக்கட்டுமான அறிவை இயக்குநருக்கு, அவருடைய தேவைக்கு ஏற்ப வழங்குகிறான். ஒளிப்பதிவாளர், அரங்க அமைப்பாளர் போல.
ஓர் அரங்க அமைப்பாளர் என்னதான் அரங்கம் அமைத்தாலும் இயக்குநர் வைக்கும் படச்சட்டத்திற்குள் வருவதே படத்தில் இருக்கும். படத்தொகுப்பாளர் கடைசியாக தெரிவுசெய்யும் படச்சட்டங்களே படத்தில் எஞ்சும். பலசமயம் அரங்குக்குச் சென்றுதான் என்னென்ன காட்சிகள் எப்படி இருக்கின்றன என்று தெரிந்துகொள்ளவேண்டியிருக்கும். எழுத்தாளனும் அப்படித்தான்.
இருபதுநாட்கள் ஒரு சினிமாவில் நடித்துவிட்டு ஒரே ஒரு காட்சியில் மின்னிச்செல்லும் நடிகர்கள் இங்குண்டு. சினிமா அவர்களுக்குத் தெரியுமென்பதனால் அவர்கள் கவலைகொள்வதில்லை.
இது ஏன் நிகழ்கிறதென்றால் தமிழ் சினிமா ஒரு பெரும்கலவை. அதில் சாகசம், நகைச்சுவை, சோகம், அரசியல் என எல்லாமே இருக்கவேண்டும். இருபது நிமிடத்தில் பாட்டு வரவேண்டும். அரைமணிநேரத்திற்குள் செண்டிமெண்ட் வரவேண்டும். படத்தின் கதைக்கட்டமைப்பு என்ன என்பது இங்கே கடைசியில் எடிட்டிங்கில்தான் முடிவாகிறது.ஏனென்றால் இங்கே கலவையின் சரிவிகிதம் மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஆகவே இங்கே எந்த சினிமாவும் முழுக்க முழுக்க இயக்குநர் சினிமாதான். நான் பங்கேற்ற எந்த படமும் என்னுடைய படம் அல்ல. என் பங்களிப்பு என்பது எவ்வகையிலும் பெரியதென நான் எண்ணுவதில்லை. என் படம் என சொல்லிக்கொள்வதுமில்லை.
மிகக்கறாராக திரைக்கதையை ஒட்டியே எடுக்கப்படும் மலையாளப்படங்களில்கூட நடிகர்தேர்வு, நடிப்பு எல்லாம் இயக்குநர் கையில் உள்ளது. நன்றாக எழுதப்பட்ட ஒரு காட்சி ஒரு நடிகர் சரியாகச் செய்யவில்லை என்றால் எந்த விளைவையும் தராமலாகிவிடக்கூடும் என்பது சினிமாவின் விந்தை. அங்கும் நல்ல திரைக்கதை என்பது நல்ல சினிமாவுக்கான ஒரு சாத்தியக்கூறு மட்டுமே.
இங்கே இயக்குநர் என்பவர் கதைத் தெரிவில் இருந்து போஸ்டர் டிசைன் வரை செய்யவேண்டியவர். அவரே சினிமாவின் ‘ஆசிரியர்’. அவரே டிவியில் வந்து சினிமாவை விளம்பரமும் செய்தாகவேண்டும் என்பதே சூழல்.
சினிமாவில் நான் என்னிடம் கோரப்பட்டவற்றைச் செய்பவன், அதை மிகச்சிறப்பாகச் செய்து அளிப்பவன், அதற்கப்பால் எந்த உரிமையும் கோராதவன். அது என் தொழில், அவ்வளவுதான். ஆகவேதான் சினிமா பற்றி நான் பேசுவதில்லை. இதழ்களில், காட்சி ஊடகங்களில் கேட்டுக்கொண்டே இருப்பார்கள், மென்மையாக மறுத்துவிடுவேன். இங்கே நீங்கள் என் வாசகர் என்பதனால் சொல்கிறேன். ஆனால் இதையும் மீளமீளச் சொல்லிக்கொண்டிருக்க விரும்பவில்லை. நன்றி.
ஜெ
விகடன் பேட்டியின் நிறைவுஈரோடு ஜெயபாரதி – மாற்றுக்கல்விக்கென ஒரு வாழ்க்கை
கூட்டுறவு மக்கள் மருத்துவமனைகளின் தந்தையென கருதப்படுகிற சேவைமருத்துவர் ஈரோடு ஜீவானந்தம் அவர்களின் தங்கை ஜெயபாரதி. ஈரோடு சித்தார்த்தா பள்ளியின் தாளாளர். 34 வருடகால கல்வியப்பயணம் இவருடையது. சூழலியப் போராட்டத்தின் முன்மாதிரி வடிவமென, இவருடைய பள்ளிக்கூடத்துக் குழந்தைகளை ஈரோட்டிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிள் பயணமாகச் செல்லவைத்தது; வெவ்வேறு சூழலியப் போராட்டங்களை குழந்தைகளை உரியவாறு ஈடுபடவைத்தது என பல்வேறு முன்னெடுப்புகள் இவரால் செயல்படுத்தப்பட்டன. முப்பது வருடங்களுக்கு முன்பு, இந்தியளவில் முன்முயற்சியாக இத்தகைய குழந்தைகள்சார் முன்னெடுப்புகளை ஜெயபாரதி அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார் என்பது வியக்கவைக்கிறது.
இந்தியாவின் மிக முக்கிய சூழலிய வெற்றிப்போராட்டமான விஸ்கோஸ் ஆலையை மூடவைத்ததில் இவருடைய பள்ளிக்குழந்தைகளின் களப்பயண போராட்டமும், ஊரூராகச் சென்று நிகழ்த்திய நாடகங்களும் முதன்மையானவை. இவை எல்லாவற்றையும் தாண்டி, இவருடைய உறவுகளின் பின்னணி என்பது பெரும் அர்ப்பணிப்பும் தியாகமும் கொண்ட வரலாறுடையது.
ஒரு பெண் குழந்தைக்கு பால்யத்தில் அவளின் பெற்றோர் அளிக்கிற சுதந்திரமும் நம்பிக்கையும் நல்லெண்ணங்களும் அவளை என்னவாக மாற்றுகிறது என்பதற்கு பேருதாரணம் ஜெயபாரதி அவர்கள். காந்தியத்தையும் மார்க்சியத்தையும் இறுகப்பிடித்து வாழ்ந்துமறைந்த தன் தந்தையின் சொல் இவரை இவ்வாறாக வார்த்தது என்பதும் உண்மை.
கல்வியாளர் ஜெயபாரதி அவர்கள் ‘சுயகல்வியைத் தேடி’ ஆவணப் பயணத்திற்காக ஆற்றிய உரையாடல் இது. இரு பகுதிகளாக அமைந்துள்ள காணொளிப்பதிவின் முதற்பகுதியாக இது வெளிவருகிறது. நிறைய இடங்களில் உணர்ச்சிவசமடைந்து கண்களை கலங்கச்செய்கிற இந்த ஆவணப்பதிவு நம் அகநம்பிக்கைகான பெருங்குறியீடு. பாரதி கோபால், அய்யலு குமரன், அங்கமுத்து, கோகுல், மதுமஞ்சரி, சிவகுருநாதன் இவர்களின் கூட்டுழைப்பில் எழுந்துநிற்கிறது இக்காணொளி.
‘நம் ஆன்மாவைப் பற்றியிருக்கும் ஆணவ அழுக்கை நீக்குவதுதான் கல்வியின் வேலை’ என்றொரு வரியை இலங்கை ஜெயராஜ் அய்யா அடிக்கடி உரைப்பதுண்டு. அவ்வகையில், சிலருடைய வாழ்வைப்பற்றி நாம் அறிவதுகூட நமக்கான ஆணவ-அழிப்புக் கல்வியாகத் திறவுகொள்ள முடியும். அத்தகைய ஆசிரியமனதைச் சுமந்து அமைதியில் மலர்கிற பேருள்ளம் கல்வியாளர் ஜெயபாரதி அவர்கள்.
எத்தகைய நற்கூறுகளைச் சொல்லி தங்களது குழந்தையை வளர்க்க வேண்டும் என அகம்விழைகிற ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயம் காணவேண்டிய காணொளி இது.
ஸ்டாலின்
கருப்பட்டிக் கடலைமிட்டாய்
வெண்முரசு கேட்க…
வெண்முரசு கூடுகையின் போது தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள் எவ்வாறு வெண்முரசினை வாசிப்பது என்ற கேள்விக்கான விடை, ஒலி வடிவில் கேட்கலாம் என்று உங்கள் நண்பர் கூறினார்.
Youtube- ல் பொருட்செவியின் இலக்கிய ஒலிதம் எனும் தளத்தில் இதனை சிறப்பாக செய்கின்றனர். ஆங்காங்கே சிறு நெருடல்கள் இருப்பினும் இதனை விடாது செய்கின்றனர். ஒரு தவம் போல.
தங்கள் தளத்தில் வெளியிட்டால் சரி எனில் பகிரவும்.
உங்கள் கவனத்திற்கு கொண்டு வர ஆசைப்பட்டேன்.

முதற்கனல்
https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsAB03rVav_bjC7WrEAVHV5F0
மழைப்பாடல்
https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsACId-UV2Fw21VaQoGQpjMjj
வண்ணக்கடல்வண்ணக்கடல்
https://www.youtube.com/playlist?list=PLvWdiqurBsADJBSkIhpaE9KoNHvy4nJ07
லெக்ஷ்மிநாராயணன்
திருநெல்வேலி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


