Jeyamohan's Blog, page 936
August 11, 2021
திருமந்திரம், குர்ஆன் -விவாதம்
அன்பு ஜெ அவர்களுக்கு வணக்கம்.
திரு.ஆறுமுகத் தமிழன் அவர்கள்,திருமந்திரம் குறித்து தமிழ்இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையின் தொடக்கம் பற்றி, இதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.திருமந்திரத் திரிபும் சைவர் கடமையும்
எனக்கும் கூட கேள்வி என்னவென்றால், திருமந்திரத்திற்கு, தக்குபீர் முழக்கத்தின் பெருமையை பேசிவிட்டுத்தான் தொடரவேண்டுமா?
இந்த அளவிற்கு தங்களின் சுயமதவெறுப்பை வெளிப்படுத்தி யாருக்கு நிருபிக்க விரும்புகிறார்கள்?
இந்த போக்கு வன்மையான எதிர்மறையை உருவாக்காதா?
அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்,
திருவண்ணாமலை.
***
அன்புள்ள ராஜேந்திரன்
இந்த வகையான விவாதங்களில் ஆர்வமிழந்துவிட்டேன். இவை அம்மெய்நூல்களை அறிய, உணர எவ்வகையிலும் உதவுவதில்லை. இவ்விவாதங்களினூடாக நாம் மெய்யறிவிலிருந்து சழக்கறிவுக்குச் செல்கிறோம். ஆகவே இவ்விவாதத்தை முன்னெடுக்கும்பொருட்டு அல்ல, இவற்றைத் தவிர்க்கும் பொருட்டு இதை எழுதுகிறேன்.
கரு.ஆறுமுகத்தமிழன் திருமந்திரத்தைப் பற்றி எழுதிய தமிழ்ஹிந்து கட்டுரைகள் இளையதலைமுறையினரிடம் அதைக்கொண்டு சென்று சேர்க்க பெரிதும் வழிகோலியவை. அதை ஒரு மரபான சைவ உரையாளர், தன்னுடைய பழைய தமிழில், பழைய மொழிபுமுறையில் செய்திருக்க முடியாது. அது திருமந்திரம் காலந்தோறும் பிறந்தெழுவதையே எனக்குக் காட்டியது. எனக்கு நிறைவளித்த நிகழ்வு அது.
அது ஓர் அறிமுகம். அறுதியான உரையோ வகுத்துரைப்போ அல்ல. அறிமுகத்திற்குப்பின் திருமந்திரம் வாசகரில் வளரும். அவர் அதை அறிய ஊழ் வகுக்கப்பட்டவர் என்றால் தனக்கான வழியை, தன் ஆசிரியர்களைக் கண்டடைந்து விடுபடுவார். அது ஒரு வழியறிவிப்பு மட்டுமே.
அத்தகைய அறிமுகங்களுக்கு தமிழ்ச்சூழலில் பல எதிர்விசைகள் உள்ளன. முதன்மையானது தமிழ் இளையவாசகர்கள் நடுவே நிறுவன மதங்களின் சடங்குகள் நம்பிக்கைகள் மற்றும் ஆசாரங்கள் மேல் உள்ள கசப்பு.அது இங்குள்ள பழமைவாதிகளின் மூர்க்கத்தில் இருந்து உருவானது. கண்கூடான ஒரு விசை அந்தப் பழமைவாதிகளின் சழக்குப்பேச்சும் கண்மூடித்தனமும். அதற்கு எதிரான விசை இளையோரிடமுள்ள விலக்கம். அது நவீனக்கல்வியால் உருவானது.
மதத்தினுள் அமைந்த எந்த தத்துவத்தையும் இங்கே அறிமுகம் செய்வதென்றால் முதலில் இந்த இரு எதிர்விசைகளையும் ஒருவர் எதிர்கொண்டாகவேண்டும். சைவசித்தாந்தமோ வேதாந்தமோ முதலில் ஆசாரவாதம் மற்றும் பழமைவாதம் ஆகியவற்றிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கிறது என்றும், எவ்வாறு எதிர்த்துச் செல்கிறது என்றும் விளக்கவேண்டும். ஆசாரவாதம் பழமைவாதம் இரண்டையும் எதிர்க்கும் ஆன்மிகப்பயணம் அவற்றினூடாக நிகழமுடியும் என்று சொல்லியாகவேண்டும். இல்லையேல் இளையதலைமுறை அதை எவ்வகையிலும் செவிகொள்ளாது.
ஏனென்றால் பழமைவாதமும் ஆசாரவாதமும் சென்றகாலகட்டத்திற்குரிய அறவியல் மற்றும் ஒழுக்கவியல் கொண்டவை. அவற்றை இன்றைய நவீன அறவியல்கொண்ட ஓர் இளைஞன் ஒவ்வாமையுடனேயே அணுகுவான். அணுகியாகவேண்டும். ஆசாரவாதம் மானுடசமத்துவத்திற்கு, தனிமனிதனின் அகவிடுதலைக்கு எதிரானதாகவே இங்கே சென்ற சிலநூறாண்டுகளில் திரண்டுள்ளது. மதம் என்பது அந்த ஆசாரவாதம் மட்டும் அல்ல என்றும், அதன் தத்துவசாரமானது ஆசாரவாதத்தை எதிர்த்து மீறிச்செல்வது என்றும் அது எந்த நவீன அறவியலுக்கும் உகந்ததே என்றும் சொல்லியாகவேண்டும்.
அத்துடன் சைவசித்தாந்தத்தின் மையமும் சரி, திருமூலரின் தரிசனமும் சரி ஒருவகை சமரச வழியாகவும், மேலும் தூயவடிவில் மதம்கடந்த மெய்க்கொள்கையாகவும்தான் இங்கே கடந்தகாலங்களில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. மதச்சழக்குகளுக்கு அப்பாற்பட்ட ஒருமைத்தரிசனமாகவே விளக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அதைப்பேசியவர்கள் பலரும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் ஒருமைப்பார்வையுடன் ஒப்பிட்டு அதைப்பேசியிருக்கிறார்கள். குன்றக்குடி அடிகளார் முதல் கிருபானந்த வாரியார் வரை அப்படிப் பேசி நான் கேட்டிருக்கிறேன்.அது பெருமைபேசுதல் அல்ல. மெய்மை என்பது மதம்கடந்தது என்று காட்டுவதற்கான முயற்சி மட்டுமே.
ஆறுமுகத்தமிழன் திருமந்திரத்தை பிறமதநூல்களுடன் இணைக்கவோ ஒப்பிடவோ இல்லை. அதைப்புரிந்துகொள்ள பிறமதங்களின் தரிசனங்களை துணைக்கழைக்கிறார். அதைச் செய்தேயாகவேண்டும். நான் பேசியிருந்தாலும் பைபிளை தவிர்த்து பேசியிருக்கவே மாட்டேன். நான் மேலும் சென்று இன்றைய சிந்தனையை வடிவமைத்திருக்கும் ஷோப்பனோவர் முதல் ஹ்யூம்,லோக் வரையிலான மேலைத்தத்துவஞானிகளையும் துணைக்கழைப்பேன். ஒப்பிட்டு விவாதிப்பேன். எங்கேனும் திருமூலரைவிட அவர்கள் மேலும் துல்லியமாகச் சொல்லியிருந்தால் அதை கட்டாயம் குறிப்பிடுவேன்.
ஏனென்றால் இன்றைய சிந்தனை இந்த மேலைநாட்டுச் சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. இன்றைய இளைஞனின் உள்ளம் இவர்களால் ஆனது, அவன் இவர்களை அறியவில்லை என்றாலும். திருமந்திரம் அந்த மேலைநாட்டுத் தத்துவசிந்தனைகளின் அடிப்படையிலான பரிசீலனையில் எவ்வண்ணம் மதிப்பு கொள்கிறது, எவ்வண்ணம் மேலெழுகிறது, எவ்வண்ணம் பின்தங்கியிருக்கிறது என்று பேசுவதொன்றே அதை மதிப்பிடுவதற்கான வழியாகும்.
அவ்வாறன்றி திருமந்திரத்தின் பெருமையை அந்நூலுக்குள்ளேயே நின்று, சைவசித்தாந்தத்தை மட்டுமே துணைக்கொண்டு ஆராய்தல் குறுக்கலாகவே ஆகும். அந்நூலைச் சொல்பிளந்து பொருள் கொள்ளுதல், முதல்நூல்களுடன் இணைத்துக்கொள்ளுதல், ஆசாரவாத விளக்கமளித்தல் என்ற வழக்கமான வழியில் பேசிக்கொண்டிருந்தால் அது முதியோருக்கான முதுமைப் பிலாக்காணமாகவே எஞ்சும். அதனால் எந்தப் பயனும் இல்லை.
குர்ஆனையோ பைபிளையோ ஒரு திருமந்திர விவாதத்தில் சுட்டியதுமே சீற்றம் கொள்பவர் எவர்? அவர்கள் தீர்மானமான மத அடையாளத்தை திருமந்திரத்திற்கு அளிக்க நினைப்பவர்கள். மதங்களை முழுமுற்றாக வேறுபடுத்தி நோக்குபவர்கள். மாற்றுமதத்தின் ஒரு சொல்கூட செவிகொள்ள விரும்பாதவர்கள். அவ்வகையோர் என்றும் உள்ளனர். அவர்களையே அடிப்படைவாதிகள் என்கிறோம். இருதரப்பிலும் அத்தகையோர் உண்டு. திருமந்திரத்துடன் நாரே தக்பீர் கோஷத்தை இணைத்தமைக்காக ஆறுமுகத் தமிழனை கண்டிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இருப்பார்கள்.
ஆறுமுகத்தமிழன் முன்வைக்க நினைப்பது திருமந்திரத்தின் மதம்கடந்த தன்மையை. திருமந்திரம் மதத்தில் இருக்கிறது, மதத்தில் முகிழ்த்திருக்கிறது, ஆனால் மதம்கடந்த பெருந்தரிசனம் ஒன்று அதிலுள்ளது. மானுடர் அனைவருக்கும் உரியது அது. அதை அவ்வண்ணம் முன்வைக்க அதை மதத்தின் அடிப்படைகளில் இருந்து பிரித்து உரைத்தே ஆகவேண்டும். அதைச் செய்யும் அறிஞர்களும் ஞானிகளும் உண்டு.
மெய்த்தரிசனத்தை விட மதமே முதன்மையானது, மதத்தைக் காப்பதே மெய்யறிதலை விட முக்கியமானது என்று எண்ணுவோர் அதை எதிர்க்கலாம். அந்தத் தரப்பும் என்றும் இங்கே உள்ளது.
திருமந்திர விவாதங்களிலேயே மூன்று தரப்புகள் உள்ளன. ஒரு தரப்பு அதை நால்வேதங்களுடன் இணைத்து அணுகுவது. இன்னொரு தரப்பு தொன்மையான சைவமரபு சார்ந்து அதை புரிந்துகொள்வது. அவர்கள் சைவமரபை வேதமரபுக்கு மாற்றானதாக விளக்குவார்கள்.மூன்றாம் தரப்பு சைவத்திலிருந்தும் அதை விடுவித்து தூயமெய்யறிதல் மட்டுமென முன்வைப்பது.மூன்று தரப்பும் என்றுமிருக்கும். அவரவர் விளக்கங்களை முன்வைப்பார்கள். அவற்றை சழக்கென ஆக்கிக்கொள்பவர்கள் திருமந்திரத்தை இழக்கிறார்கள்.
*
இந்த விவாதத்தை ஒட்டி ஒன்றைச் சொல்லியாகவேண்டும். இந்துமெய்ஞான மரபுகள் அனைத்திலுமே உள்ள ஓர் அம்சம் மெய்த்தரிசனத்தை மதம்கடந்த ஒன்றாக முன்வைப்பது. நம்பிக்கைகள், வழிபாடுகள், சடங்குகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட தூய அறிதலாக அதை விளக்குவார்கள். பல குருநிலைகளில் இதைக் காணலாம்.
ஏனென்றால் அந்த மெய்த்தரிசனம் முன்வைக்கப்பட்டதுமே மதத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அதையொட்டியே நம்பிக்கைகளும் வழிபாடுகளும் சடங்குகளும் உருவாகியிருக்கும். காலப்போக்கில் அந்த நம்பிக்கைகளும் வழிபாடுகளும் சடங்குகளும் அந்த மெய்த்தரிசனத்தை மறைப்பவையாக மாறியிருக்கும். அவற்றிலிருந்து அந்த மெய்த்தரிசனத்தை விடுவிக்காமல் அதை அணுகவே முடியாது. ஆகவே ஆசிரியர்கள் அதைச் செய்கிறார்கள்.
அந்த மெய்த்தரிசனம் ஒரு மதத்தின் களத்தில் முளைத்து, அம்மதத்தின் உருவகங்ளையும் சொற்களையும் பயன்படுத்திக்கொண்டாலும்கூட அந்த மதத்தில் இருந்தும் அதைப் பிரித்துக்கொள்ளவேண்டியிருக்கும். ஏனென்றால் அந்த உருவகங்களும் சொற்களும் அந்தமதத்தின் அன்றாடப்புழக்கத்தில் இருப்பவை. ஆகவே எளிய நடைமுறைப்பொருள் கொண்டவை. அந்த எளிய பொருட்கோடலைக் கொண்டு அந்த மெய்த்தரிசனத்தை நாம் சென்றடைய முடியாது. அச்சொற்களும் படிமங்களும் பெரிய தடைகளும் ஆகும்.
மதநீக்கம் நிகழ்வது இதன்பொருட்டே. இது வேதாந்தம், சைவசித்தாந்தம் என்னும் இரு ஞானவழிகளிலும் தவிர்க்கவே முடியாத ஒன்று. ஏனென்றால் அவை தூயஅறிவை முன்வைப்பவை. இந்த கடந்தநிலையை எளிய மதநம்பிக்கையாளர்களுக்கு புரியவைக்க முடியாது. ஆகவே ஒருபக்கம் அந்த மெய்த்தரிசனங்கள் மதத்தின் பகுதியாகவும் இருக்கும். மறுபக்கம் மதம் கடந்தவையாகவும் விளக்கப்படும். இந்த முரணியக்கத்தை நாம் புரிந்துகொண்டாலொழிய வள்ளலாரையோ, விவேகாந்தரையோ, நாராயணகுருவையோ நித்யசைதன்ய யதியையோ அணுக முடியாது.
இந்த தூயஅறிதல் முறைமைக்கு இரு தரப்பில் இருந்து இன்று திரிபுகள் வருகின்றன. ஒருசாரார் உடனே இதை அரசியலாக ஆக்குகின்றனர். மெய்மைசார்ந்து மதத்திற்குள் இருக்கும் மாறுபட்ட தரப்புகளை எல்லாம் தனித்தனி மதப்பிரிவுகளாக எண்ணிக்கொள்கிறார்கள். சிலர் சைவம் தனிமதம் என்கின்றனர். வைணவம் தனிமதம் என்னும் குரல்கள் ஒலிக்கின்றன. சைவத்திற்குள்ளேயே தனிமதங்களை உருவாக்குகின்றனர். அதற்கு அயல்மதத்து நிதி வருகிறது.
இன்னொரு சாரார் மெய்யியலில் நிகழும் மதநீக்கமே இந்துமதத்தை, சைவத்தை அழிக்கும் முயற்சி என்று எகிறுகிறார்கள். ராமகிருஷ்ண மடத்தில் ஏசுவின் படம் இருப்பதைச் சுட்டிக்காட்டி கொந்தளிக்கும் பேச்சுக்கள் சமூகவலைத்தளங்களில் நிகழ்கின்றன. இவர்கள் மதத்தை அரசியலுக்கான அடையாளவெளியாக, மக்களை திரட்டி அரசியலியக்கமாக ஆக்குவதற்கு உதவும் மேடையாக மட்டுமே அணுகுபவர்கள். தங்கள் அரசியலின்பொருட்டு எந்த மெய்ஞானியையும் இழிவுசெய்ய தயங்காதவர்கள்.
இன்றைய அரசியல்சூழலில் இந்த இரு துருவங்களும் மிகப்பெரிய ஆற்றல்கொண்டிருக்கின்றன. மெய்யியல், தத்துவ விவாதங்களில் பாமரர்களின் குரல் இத்தகைய அழுத்தத்தை அளிப்பது இதற்குமுன் வரலாற்றில் என்றுமே நிகழ்ந்ததில்லை.
இந்த விவாதங்களை முழுமையாக ஒதுக்கிவிட்டு தன் வழியில் சென்றாலொழிய இங்கே பல்லாயிரமாண்டுகளாக நிகழ்ந்துவந்த மெய்ஞான உசாவல்கள் முன்னகர முடியாது. இன்று மதம் அரசியலாகிவிட்டிருக்கிறது. அரசியலை தவிர்க்காவிட்டால் மதத்திலுள்ள ஆன்மிகம் அகன்றுவிடும், வெற்றுக் குழுஅரசியலே எஞ்சும். மதத்தையும் தவிர்க்காவிட்டால் மெய்த்தரிசனம் சிந்தைக்கு அணுகாது.
மெய்நாட்டத்தின் வழிகள் இரண்டு துருவங்களில் நிகழ்பவை.ஒருவழி, தன் தரப்பை பிரித்து வகுத்து ஒதுக்கிக் கொண்டே செல்லும். சைவம், அதற்குள் வேதாந்தம், அதற்குள் அத்வைதம் என்று எல்லைக்குள் எல்லையிட்டு முன்செல்லும். வேறுபாடுகளை, மறுப்புகளை சமரசமே செய்துகொள்ளாது. இன்னொன்று, எல்லா வேறுபாடுகளையும் களைந்து களைந்து ஒரு பொதுமைத்தரிசனத்தை முன்வைக்கும். ஒரே சமயம் இவ்விரண்டையுமே தன் இயக்கவியலாகக் கொண்ட மெய்ஞான வழிகளும் உண்டு. அத்வைதம் அத்தகையது.
இப்படித்தான் இங்கே பல்லாயிரமாண்டுகளாக ஞானப்பயணம் நடந்துள்ளது. அதை அரசியலாளர்களுக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கும் புரியவைத்து, அவர்களின் அதிகார அரசியலுக்கு இணையும்படி நிகழ்த்தவேண்டும் என்பதில்லை. ஞானப்பயணத்தில் இருப்பவர்களிடம் ‘இந்து ஒற்றுமை முக்கியம்’ என்று சொல்வதும் சரி ‘இந்து மதநீக்கம் பிழையானது’ என்று சொல்வதும் சரி ஆக்ரமிப்பும் வன்முறையும் மட்டுமே.
இந்த விவாதத்தில் இறுதியாக நான் சொல்லவிருப்பது இதுவே.நான் சார்ந்துள்ள நாராயண குருகுலத்துப் பிரார்த்தனைகளில் கலந்துகொண்டிருப்பவர்களுக்கு தெரியும், அங்கே பைபிளும் குர்ஆனும் ஒருவரியாவது என்றும் ஓதப்படும். பிஸ்மில்லாஹி ஒலிக்காத நாளே இல்லை. இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் நித்யாவின் மாணவர்களாக இருந்துள்ளனர். அவருடைய வழித்தோன்றல்களாக நீடிக்கின்றனர்.
-ஜெ
திருமந்திரம்- இறுதியாக… திருமந்திரம் பற்றி… திருமந்திரம் கற்பது திருமந்திரம் ஒரு கடிதம் திருமூலரும் வேதாந்தமும் சவரக்கத்திமுனைப் பாதை ஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி மலரிலிருந்து மணத்துக்கு… மந்திர மாம்பழம்வருகை, ஓர் ஓவியப்புனைவு. – கடலூர் சீனு
இனிய ஜெயம்
சமீபத்திய பயணத்தில் நுண்கலை உயர்கல்வி பயிலும் மாணவர் ஒருவர் வசமிருந்து பெற்று, ‘பார்த்துப்’ பரவசம் அடைந்து, மனமே இன்றி திருப்பி அளித்த நூல் ஓவியர் ஷான் டான் வரைந்த, the arrival எனும் ஓவியப் புனைவு நாவல்.
https://en.m.wikipedia.org/wiki/The_Arrival_(graphic_novel)
ஒரு அடிக்கு ஒரு அடி அளவிலான கெட்டி அட்டை கொண்ட, முரட்டுத் தாள்களில் பழுப்பு வண்ண ஓவியங்கள் அடங்கிய புத்தகம். இந்திய விலையில் ஒப்பு நோக்க பிரதமரின் புதிய விமானம் விலை குறைவே. ஆனால் இப்புனைவுக்கு செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் அதற்கு இணையாக விலை மதிப்பே அற்ற காட்சி இன்பத்தை கொண்டு வரும் என்பது உத்திரவாதம்.
மனைவி குழந்தையை விட்டு புலம் பெயர்ந்து (அநேகமாக முதல் உலக போர் காலம்) வேறொரு சர்ரியல் நிலத்தில் அகதியாக தஞ்சம் புகும் நாயகன். அந்த அமானுஷ்ய மிகு கற்பனை சர்ரியல் உலகில் பழகி, இடம் கண்டு, வேலை கண்டு, நண்பர்களை வென்றமைந்து, தனது குடும்பத்தை இங்கே இவ்வுலகில் தன்னுடன் சேர்த்துக்கொள்ள, அந்த சர்ரியல் உலகம் உடோபியாவாகி நிறைவுறும் கதை.
ஒரே ஒரு வரி கூட உரையாடல் இன்றி, முற்றிலும் காட்சி மூலம் மட்டுமே நகரும் நாவல். நாயகன் கொள்ளும் பிரிவுத் துயர் துவங்கி மீண்டும் அவன் தனது குடும்பத்தை சேரும்போது அடையும் உவகை வரை அத்தனை உணர்வுகளையும் துல்லியமாக கடத்தும் ஓவியங்கள்.
ஜப்பானிய ஓவியர் மியசாகி படைப்புகளில் வருவதை போல வேறொரு உலகம் வேறொரு உயிர்கள். எல்லாமே ‘இதோ காட்டப்பட்டது எதுவோ அது மட்டுமே’ என்றவகையில் இன்றி ஒவ்வொரு ஓவிய சட்டகமும் மனதுக்குள் கற்பனையை சிறகுகள் விரித்து பறக்க விடுகின்றன. முற்றிலும் உயிரோட்டமான fantasy உலகு. அதன் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு உயிரையும் இக்கணம் தொட்டுவிடலாம் என்பதை போல அத்தனை உயிர்ப்பு. காலம் இடம், மாறும் பருவ கால சுழற்சி என ஒவ்வொன்றிலும் அவ்வுலகு என்னவாக தோற்றம் தருகிறது என்பது போல பல அலகுகளுடன் பிணைந்த முழுமையான அனுபவத்தை அளிக்கும் ஓவியங்கள்.
வெவ்வேறு உலகிலிருந்து அங்கே வாழவே வகையின்றி அங்கிருந்து இங்கு வந்தோர் சிலரின் வாழ்க்கை பின்னோக்கி பார்க்கும் வகைமையில், பழுப்பு வண்ண ஓவிய வரிசையில் கருப்பு வெள்ளையாக தனித்து காட்டப்படுகிறது. பழுப்பு வண்ண வரிசை இனிய ஒளி பொருந்திய கனவு எனில், கருப்பு வெள்ளை வரிசை கொடும் துர் கனவு. குறிப்பாக போர் சூழல் ஒன்றை சித்தரித்துக் காட்டும் அத்தியாயம்.
இறுதியாக நாயகனின் குடும்பம் அவனை வந்து அடைகிறது. இப்போது நாயகனின் செல்ல மகளின் பார்வையில் விரியும் இவ்வுலகம் அதன் ஒளி, மிகுந்த பொருளை அளிக்கிறது. இங்கே எவ்வுயிரும் சமம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். அன்பு ஒன்றே அனைவரையும் பிணைக்க, மகிழ்ச்சி ஒன்றே அனைவரையும் முன் செலுத்தும், எல்லாம் ஒன்றே என்றான ஓருலகம். அங்கே வந்திரங்கும் மற்றொரு அகதிப் பெண்ணுக்கு இந்த செல்ல மகள் இவ்வுலகுக்குள் வழி காட்டுகையில் நிறைவுறும் கதை. உண்மையில் நூல் நிறைகையில் உணர்வெழுச்சி மீறி கண்ணீர் துளிர்த்து. மானுடத் துயர் தீர்க்கும் அந்த ஒளி பொருந்திய உலகம் நோக்கி அப்படியே எழுந்து பறந்து விட மனம் தவித்தது.
ஓவியர் ஷான் டான் ஆஸ்திரேலியாகாரர். ஹாலிவுட்டிலும் தடம் பதித்து அகாடமி விருது வென்றவர். ஒரு ஓவிய நாவல் கலா பூர்வமாக எந்த ஆழம் வரை பார்வையாளரை தீண்ட முடியும் என்பதற்கு உதாரண ஓவியங்கள் அடங்கிய நாவல் இது. கதை நகர்வுக்காக இட்டு நிரப்பிய ஓவியம் என்ற வகையில் ஒரே ஒரு ஓவியம் கூட நாவலில் இல்லை. ஒவ்வொரு ஓவிய சட்டகமும் தனித்த முழு ஓவிய அனுபவத்தை அளித்து, ஒட்டு மொத்தமாக கூடி ஒரு பெரிய உத்வேகமான உணர்ச்சிகரமான கலா அனுபவத்தை நல்குகிறது.
இந்த நூலை ‘பார்க்காமல்’ போயிருந்தால் நிச்சயம் தேவதை கதை போலும் ஒரு தனித்துவமான உலகில் வைத்து நிகழும் உணர்ச்சிகரமான, (இந்த ஓவிய நாவல் எனும் வடிவம் மட்டுமே நல்க இயன்ற) பிரிதொன்றில்லா அனுபவம் ஒன்றை இழந்திருப்பேன்.
இந்த நூலின் ஓவியங்கள் சில கொண்டு, பின்னணி ஒலி சேர்த்து இந்த நாவலை அணிமேஷன் படம் போல எவரோ உருவாக்கி இருக்கிறார். நூலின் அறிமுகமாக கொள்ள ஏற்றது
கடலூர் சீனு
பிரஜாபதியும் கிறித்தவர்களும்- கடிதம்
பிரஜாபதியும் கிறித்தவர்களும்
அன்புள்ள ஜெ,
உங்கள் இணையதளத்தின் வீச்சு என்ன என்று சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இங்கே தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் பலவகைப்பட்ட திரிபுப்பிரச்சாரங்கள், அபத்தமான காழ்ப்புகள் அனைத்துக்குமான பதில்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. எவரோ அவற்றை சுட்டி எடுத்து உடனே போட்டுவிடுகிறார்கள்.
சமூகவலைத்தளங்களிலோ யூடியுப் கமெண்டுகளிலோ பேசுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கட்டுரையை வாசிக்குமளவுக்கு அறிவோ பொறுமையோ இருப்பதில்லை. ஆனால் கண்டிப்பாக அந்த இடத்திற்கு வருபவர்களில் கொஞ்சம் கூறுள்ளவர்கள் வாசிப்பார்கள். அவர்களால் மறுக்கமுடியாத தெளிவை அது அளிக்கும். காலப்போக்கில் சரியான பார்வை ஒரு வலுவான தரப்பாக நிலைகொள்ளும்.
காந்தியைப் பற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை இணையத்தில் இருந்த காழ்ப்புகள் எல்லாம் மெல்லமெல்ல இன்று அர்த்தமற்றவையாக ஆகிவிட்டன. அதற்கு உங்கள் இணையதளத்தில் வந்த கட்டுரைகளின் பங்குதான் முதன்மையானது. டிவிட்டரிலும் மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் கட்டுரை சரியாக மேற்கோள்காட்டப்படுகிறது. சமீபத்தில் வாஞ்சி- ஆஷ் பற்றிய அவதூறுகளை முடித்துவைத்ததே உங்கள் கட்டுரைதான்.
இன்றைக்கு யாரோ ஒரு பெண்மணி தன்னை பிராமணப்பெண் என்று சொல்லிக்கொண்டு இந்து வேதங்களில் பேசப்பட்டிருக்கும் பிரஜாபதி என்பவர் கிறிஸ்துதான் என பேசிக்கொண்டிருத கிளிப்பிங் சுற்றிவந்தது. உடனே அதற்கு நீங்கள் அளித்த ஆதாரபூர்வமான தெளிவான பதில் சுட்டி அளிக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட விவாதமே முடிந்துவிட்டது. பிரஜாபதியும் கிறித்தவர்களும்
இன்றைக்கு உங்களை வசைபாடுபவர்களில் அதிகம்பேரும் இந்துத்துவர்கள். உங்களை திமுக ஆதரவாளர், விலைபோய்விட்டவர் என்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். ஆனால் தேவையானபோது உங்கள் தளத்தை சுட்டிகொடுக்க அவர்கள் தயங்குவதே இல்லை.
நான் இதை ஓர் உறுதியாக கொண்டிருக்கிறேன். மற்றவர்களும் இதைச்செய்யவேண்டுமென நினைக்கிறேன். எந்த அவதூறு, திரிபு விவாதமானாலும் அந்தச் சொற்களைக்கொண்டு உங்கள் தளத்தில் தேடிப்பார்ப்பது. கட்டுரை இருந்தால் சுட்டி கொடுப்பது. தமிழ் அறிவுச்சூழலில் கொஞ்சமாவது அறிவுச்சமநிலை நிலைகொள்ள இன்றியமையாத செயல் இது
அதற்கு உங்கள் தளம் இலவசமாக இருப்பது மிக அவசியமானது. இன்றைக்கு பிரபல தளங்களில் இந்த தளமே இலவசமானது. இதை இலவசமாக நடத்த நிதியுதவியை செய்யவேண்டுமென்று நினைக்கிறேன்.
கே.ஆர்.ராஜசேகரன்
அறிவதும் அறியப்படுவதும்
அன்புள்ள ஜெ,
“இந்த விஷ்ணுபுரத்தில் எதுவும் ஒருமுறையாவது ஏற்கனவே நடந்திருக்கும். எனவே எல்லாமே மீண்டும் நிகழும் என்று ஐதீகம். என் தந்தை இதை இப்படி விளக்குவார். புதிதாக ஏதும் நிகழாது என்று இதற்குப் பொருள். “ [Vishnupuram]
இதை நினைவு கூரும் விதமாக இருந்தது, இந்த காணொளியை கண்ட பிறகு.
நாம் காணும் பொருட்கள் எல்லாம் (பிரத்யட்சமாகவும் அனுமானம் மூலமாகவும்) நம்முடைய புலன் உணர்வகளைக் (perception) கொண்டே அமைகிறது. இயற்பியலே புலன் உணர்வகளின் அறிவியல் என்று சொல்லலாம். இந்த புலன் உணர்வுகளால் அறியப்படும் திரைக்கு பின்னால் உள்ளது ஒரே ஒரு பிரபஞ்சம் முழுமைக்குமான பிரக்ஞை மடடுமே என்கிறது கருத்துவாதம் (idealism). இது அப்படியே சின்மாத்ர என்று சொல்லப்படும் அத்வைத சித்தாந்தமாகும்.
நாம் காணும் ஒவ்வொரு பொருட்களிலும் ப்ரக்ஞை உள்ளது, சிறிதளவேனும். அடிப்படையான பண்டங்கள் (எலக்ட் ரான், குவார்க்) கூட தன் இயல்பிலே அமைந்த ப்ரக்ஞையின் மூலமாக ஸ்தூலமாக நமக்கு தென்படுகின்றன. ஆகவே நாம் காணும் இந்த ஸ்தூல பிரபஞ்சம் உண்மை அவை ப்ரக்ஞையின் ஒரு வித வடிவங்களே, என்று புற தொகுப்புகளையும் (ஸ்தூலங்கள்) அக தொகுப்புகளைம் (மனம் முதலான் சூட்சுமங்கள்) ஒன்றிணைப்பது அனைத்து மனவாதம் (panpsychism). இது லீலாவிபூதியில் (நாம் காணும் பிரபஞ்சம்) காணப்படும் எல்லா பொருட்களும் உண்மை மட்டுமல்லாது அவை ஒவ்வொன்றுக்குள்ளேயும் சேதனமான (ப்ரக்ஞையுள்ள) ஒரு ஆத்மா உள்ளது என்று சொல்லும் விசிஷ்டாத்வைதமாக கொள்ளலாம். (விசிஷ்டாத்வைதம் இதற்கு மேலும் எல்லா ஆத்மாவுக்குள்ளும் உள்ளுறையாக ஈஸ்வரன் இருக்கிறான் என்கிறது. அனைத்து மனவாதம் இதை பேசுவதில்லை, ப்ரக்ஞையோடு நிறுத்தி கொள்கிறது).
கருத்துவாதத்தை முன்னிருத்தி வருபவர் பெர்னார்டொ காஸ்ட்ரப், அவரிடம் அனைத்து மனவாதத்தை முன்னிருத்தும் ஃபிலிப் கோஃப் வைக்கும் கேள்விகளில் இரண்டு அப்படியே இராமானுஜர் அத்வைதத்தின் மீது வைக்கும் ஆட்சேபங்களே. :-)
ஏன் பிரபஞ்ச ப்ரக்ஞையிலிருந்து அந்நியப்படுத்த ப்ரக்ஞை பிரிந்தது?-என்ற கேள்வி அறிவே ஆன ப்ரம்மத்தில் எவ்வாறு அவித்யை மூடி ஜீவாத்மா வாக தோன்றுகிறது எனும் ஆட்சேபமாகும்.உள்ளுறை பிரபஞ்ச ப்ரக்ஞையின் வடிவமைப்பு ஸ்தூல உடம்பின் வடிவமைப்பை ஒத்ததா? இல்லையென்றால் அதன் வடிவமைப்பு என்ன?ப்ரம்மம் நிர்குணமா? அவ்வாறு இருந்தால் சாமான்ய தளமான வ்யவாரிக சத்தியத்தில் அத்யாசம் எனப்ப்டும் மேல்பதித்தல் நிகழ்வத எங்ஙனம்?
இவையிரண்டு ஆட்சேபங்களுக்கு பெர்னார்டோ பெளத்த தத்துவங்களை துணை கொண்டே எதிர்கொள்கிறார், சங்கரர் பிர்சன்ன பௌத்தராயிற்றே! :-)
இந்த விவாதமும் எல்லா தத்துவ விசார்ங்களை போல் மீமாம்சத்தில் (அதாவது ஒரு சொல்லுக்கு எவ்வாறு பொருள் கொள்வது) என்பதில் மையம் கொள்கிறது.
ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த விவாதம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.
இடையே ஒரு நம்மை போல ஒரு பாவ ஆத்மா என்றாவது ஒரு நாள் இதில் ஏதாவது ஒரு தத்துவம் உறுதி செய்யப்பட்டு பிரபஞ்ச உண்மை கிடைக்குமா என்ற கேள்வியை கேட்கிறது.
தங்க புத்தகம் கதையை ஆங்கில மொழியாக்கம் சீக்கிரம் செய்ய வேண்டும். :-)
நன்றி,
முத்து
தங்கப்புத்தகம் வாங்க
ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை
வான்நெசவு முன்னுரைமலைபூத்தபோது முன்னுரை
ஐந்து நெருப்பு முன்னுரை
தேவி – முன்னுரை
பொலிவதும் கலைவதும் முன்னுரை
குமரித்துறைவி முன்னுரை
எழுகதிர் முன்னுரைமுதுநாவல் முன்னுரை
ஆனையில்லா! முன்னுரைதங்கப்புத்தகம் முன்னுரை
வெண்முரசு ஆவணப்படம் போர்ட்லாண்ட் திரையிடல்
இனிய ஜெ,
வணக்கங்கள்!
அமெரிக்க நகரங்களின் வெண்முரசு ஆவணப் படத்தின் பத்தாவது திரையிடல் போர்ட்லாண்டில் இனிதே நடந்தது. வெண்முரசு குறித்த ஆவணப் படம் ஒன்றை அமெரிக்காவில் உள்ள விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்கள் தயாரித்திருப்பதை முதலில் கலிப்போர்னியாவில் வசிக்கும் நண்பர் விசு ஜூன் மாதம் கூறக் கேட்டேன். அப்போது ஆவணப்படத்தை கலிப்போர்னியாவின் வளை குடா பகுதியில் திரையிடும் முயற்சியில் அவர் இருந்தார். நான் போர்ட்லாண்டிலும் திரையிட முயற்சி செய்கின்றேன் என்றதும் ஆஸ்டினில் வசிக்கும் நண்பர் செளந்தருடன் எனக்கு தொடர்பு ஏற்படுத்தி தந்தார்.
செளந்தருடன் பேசுகையில் தான் ஆவணப் படத்தின் தயாரிப்பிற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தெரிந்தது. கோவிட் தொற்றின் ஊரடங்கு காலத்தில் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள். அதுவும் அமெரிக்காவில் இருந்து கொண்டு இந்தியாவிலும், பிற நாடுகளிலும் உள்ள வெண்முரசு வாசகர்களின் நேர்காணல்களை ஒருங்கினைத்து சேகரித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அதற்கு உதவிய ஆனந்த் மற்றும் பிற நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
செளந்தர் ஆவணப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர் இராஜன் சோமசுந்தரத்துடன் அறிமுகம் செய்து வைத்தார். இராஜன் அவர் அமைத்திருந்த, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடலுக்கான இசை மற்றும் இன்னும் பிற சங்கப்பாடல்களுக்கு அவர் அமைத்திருந்த இசைகளின் வாயில்களாக அறிமுகமாகி இருந்தார்.அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் இருவரும் திரையரங்குகளை அணுகுவதற்கான வழிமுறைகளை பகிர்ந்து உதவினர்.
சான் பிரான்ஸிஸ்கோ, நியு ஜெர்சி போன்ற நகர்களுடன் ஒப்பிடுகையில் போர்ட்லாண்ட் சிறிய நகரம். வெறும் இருபது நிமிடத்தில் நகரின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்குச் சென்று விடலாம். நான் வசிப்பது நகர் எல்லைக்குள். இங்கு இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். பெரும்பாலான இந்தியர்களும், தமிழர்களும் புறநகர் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். அது இயல்பானதே. புறநகர்களில் தான் தொழில் நுட்ப பணியிடங்கள் பெரும்பாலும் இருக்கின்றன. வெண்முரசு ஆவணப்படத்தின் திரையிடலை எங்கு ஏற்பாடு செய்வது என்ற கேள்வி எனக்கு இருந்தது.
நான் அறிந்தவரை ஏதேனும் பெரிய பல்கலைக் கழகங்கள் இருந்தால் அன்றி அமெரிக்காவின் புறநகர்கள் பெரும்பாலும் தனித்து உறங்கும் இடங்கள் தான். வருடத்திற்கு ஓரிரு கலாச்சார நிகழ்வுகளே அவற்றில் நடைபெறும். இலக்கிய நிகழ்வுகள் எல்லாம் வாய்ப்பே இல்லை. கலாச்சார நிகழ்வுகளும் கூட அந்த குழுக்களுக்குள்ளே நடந்து முடிந்து விடும். நம் கலாச்சார நிகழ்வுகளில் பிறரை பெரும்பாலும் அரிதாகவே பார்த்திருக்கின்றேன். இதே போல் தான் பிற இனத்தவர்களின் மரபார்ந்த கலச்சார நிகழ்வுகளிலும்.
இதற்கு விதி விலக்கென்றாள் ஹாலிவுட் திரைப்படங்களையும், பாலிவுட் திரைப்படங்களையும் தான் கூற வேண்டும். அவற்றைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு பரிச்சயம் உண்டு . மேலும் புறநகர் பகுதியில் இருக்கும் திரையரங்குகள் முற்றிலும் பெறு நிறுவனங்களின் தொடர் அரங்குகள். நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவை ஒன்று போலத் தெரியும். அவற்றில் திரையிடப்படும் படங்களும் தான்.
மாறாக போர்ட்லாண்டின் நகர் பகுதிகளில் பல சிறிய திரையரங்குகள் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் இந் நகரைச் சேர்ந்த சிறு தொழிலாளர்கள். பலருக்கு இந்த திரையரங்குகள் மட்டும் தான் தொழில். அத்திரையங்குகளில் கலைத் திரைப்படங்களையும், சுயாதீனத் திரைப்படங்களையும் தொடர்ந்து திரையிட்டு வருகின்றனர். அவற்றில் சத்திய ஜித் ரேயின் சாரு லதா, தி மியூசிக் ரூம், தார்காவ்ஸ்கியின் ஆண்டரே ரூப்லாவ், தி சாக்கிரிபைஸ், இங்கமர் பெர்க்மனின் பெர்சோனா போன்ற படங்களில் இருந்து தெரன்ஸ் மாலிக்கின் பேட் லாண்ட்ஸ், நயிட் ஆப் கப்ஸ் போன்ற திரைப் படங்கள் வரை பார்த்திருக்கின்றேன். இங்கு வரும் பார்வையாளர்கள் படம் முடிந்த நிமிடம் எழுந்து செல்பவர்கள் அல்ல. அப்படத்தை பற்றி சிறிதேனும் விவாதித்த பின்னரே செல்வர். ஒருமுறை தெரன்ஸ் மாலிக் படங்களில் வரும் ஹைடிகரின் தத்துவப் போக்குகளையும், அவரது திரைப்படங்களில் வரும் இயற்கை குறித்த கருத்துக்களை ரூசோவின் சிந்தனையுடனும் ஒப்பிட்டும் மறுத்தும் விவாதித்திருப்பதைக் கண்டு வியந்திருக்கின்றேன்.
ஆவணப்படத்தின் திரையிடலை நகர் பகுதியில் இருக்கும் திரையரங்கம் ஒன்றில் அமைப்பது தான் சரி எனத் தோன்றியது. ஆர்வமுள்ள தமிழ் மக்கள் பதினைந்து நிமிடம் பயணிப்பதை பெரிய பொருட்டாக கருத மாட்டார்கள். போர்ட்லாண்டில் வசிக்கும் நண்பர் ஜானி ஸ்டாலிங்க்சை அழைத்து ஆவணப்பட திரையிடல் குறித்து பேசினேன். ஜானி சேக்ஸ்பியர் நாடக இயக்குனரும், நடிகரும். இப்போது ஓய்வு பெற்று விட்டார். எழுபதுகளின் தொடக்கத்தில் முதலாம் ஆண்டிலேயே கல்லூரியில் இருந்து drop out ஆகி வியட்னாம் போர் எதிர்ப்பு, சூழலியல் பாதுகாப்பு போன்ற செயல்களில் ஈடுபாடு கொண்டு ஹிப்பியாக வாழ்ந்தவர் குரு நித்யாவின் பகவத் கீதை வகுப்பகளைக் கேட்ட பின் இந்தியா கிளம்பி வந்து வர்கலையில் நடராஜ குருவை சந்தித்திருக்கிறார். குருகுலத்தில் ஒரு வருடம் நடராஜ குருவுடன் தங்கி இந்தியத் தத்துவங்கள் பயின்றிருக்கிறார். நடராஜ குரு The Integrated Science of the Absolute புத்தகத்தை முடித்து விட்டு சௌந்தர்ய லஹரிக்கான உரையை தொடங்கிவிட்டிருந்த காலம் அது. ஜானி குருகுலத்தில் தங்கி இருந்த முதல் ஆறு மாத காலத்தில் நடராஜ குருவின் செளந்தர்யலஹரிக்கான உரை நிறைவுற்றதாக குறிப்பிடுகிறார். அப்போது நடராஜ குரு காளிதாசரையும் தினம் வாசித்திருக்கின்றார். தொடர்ந்து நடராஜ குருவின் சமாதிக்கு முந்தைய ஓரிரு மாதக் காலம் வரை குருவின் அறையிலேயே தங்கி உதவியாளராக இருந்தவர் ஜானி. பிறகு, நெடுங்காலம் குரு நித்யாவின் மாணவராக பயின்றவர்.
(ஜானி ஸ்டாலிங்க்ஸ், சேக்ஷ்பியர் நாடக இயக்குனர்)
வெண்முரசு குறித்து முன்பே அவரிடம் பேசியிருக்கின்றேன். ஜானி ஆவணப்பட திரையிடலை போர்ட்லாண்டிலேயே ஏற்பாடு செய்யலாம் என்றார். அவர் தான் கிளிண்டன் திரையரங்கை பரிந்துரைத்தது. கிளிண்டன் திரையரங்கம் 1915 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, நூறு வருடங்களாக தொடர்ந்து செயல் பாட்டில் உள்ள திரையரங்கம். அமெரிக்காவில் உள்ள பழமையான திரையரங்குகளில் ஒன்று. எழுபதுகளில் ஹிப்பிக்கள் போர்ட்லாண்ட் நகரில் அவர்களது கலை நிகழ்வுகளுக்கு பயன்படுத்திய இடம். அவற்றைத் தொடர்ந்து கலைப் படங்களும், சுயாதீனப் படங்களுக்குமான திரையரங்கமாக செயல்பட்டு வருகின்றது. சென்ற ஆண்டு கோவிட் தொடங்கியதும் தான் முதல் முறையாக சில மாதங்கள் மூடப்பட்டது. இந்த ஆண்டின் துவக்கத்தில் பரவலாக வாக்சின் வந்த பிறகு மீண்டும் அரங்கை திறந்திருந்தனர்.
கிளிண்டன் திரையரங்கின் உரிமையாளர்கள் தொடர்பு கொண்டதுமே திரையிடலுக்கு ஒப்புக் கொண்டனர். ஆனால், ஆகஸ்டில் தான் தேதி கிடைத்தது. நான் உடனே பதிவு செய்து விட்டேன். சில நாட்களிலேயே விசு செளந்தர் அனுப்பிய Blu-Ray disk ஐ எனக்கு அனுப்பி வைத்தார். Blu-Ray வேலை செய்கின்றதா, குறிப்பாக Subtitles சரியாக வருகின்றதா என்பதை உறுதி செய்து கொள்வதற்காக ஜூலை மாத ஆரம்பத்தில் திரையரங்கம் சென்றேன். அதன் உரிமையாளர் லானி ஜோ வாசலில் வந்து என்னை திரையரங்கிற்குள் அழைத்துச் சென்றார். மொத்த திரையரங்கும் காலியாக இருந்தது. ஆவணப்படத்தின் முதல் அரைமணி நேரத்தையும், இராஜன் இசை அமைத்திருந்த நீலத்தீன் கவிகளையும் இரு நூறு பேர் வரை அமரும் வசதி கொண்ட திரையரங்கின் மத்தியில் நான் மட்டும் தனியாக அமர்ந்து ரசித்தேன்.
திரையரங்கத்தின் உள் நுழைந்ததுமே டிக்கட் விற்கும் மேசையில் “Unfit” என்று தலைப்பிட்ட புத்தகம் ஒன்று வைக்கப்பட்டிருப்பதை கவனித்திருந்தேன். அட்டையில் ஒரு பதின் பெண்ணின் படம் இருந்தது. அவள் இளவயது லானியைப் போல் தெரிந்தாள். அரங்கை விட்டு வெளி வருகையில் லானியிடம், ‘அது நீங்கள் தானா? நீங்கள் எழுதிய புத்தகமா?’ என்று விசாரித்தேன். அந்த புத்தகம் லானியின் ‘memoir’. நாற்பது ஆண்டுகளாக எனக்குள் நானே புதைத்து வைத்திருந்த நிகழ்வுகள். இப்போது தான் எழுத முடிந்தது என்றார்.
லானி ஓக்லஹாமா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவின் தெற்கில் இருக்கும் மாகாணமது. கிறிஸ்துவம் சார்ந்த பழமைவாத விழுமியங்களை தீவிரமாக பின்பற்றும் மாகாணங்களில் ஒன்று. லானி ஜானியை விட சற்றே இளையவர். அவர்களது கால கட்ட அமெரிக்காவைப் பற்றி பொதுவாக வெளி உலகிற்கு தெரிந்தது, அது ஹிப்பிக்களின் காலகட்டம் என்பது தான். பீட்டில்சின் இசை, Psychedelics, மகரிஷி மகா யோகியின் Transcendental meditation, பகவான் ரஜினிஷ், பாலியல் சுதந்திரம் என மேற்குக் கடற்கரை நகர்களில் வசிக்கும் ஹிப்பிக்கள் அன்றைய அமெரிக்காவின் பழமைவாத விழுமியங்களுக்கு எதிராக பயணிக்கத் தொடங்கிய தலைமுறை. இவற்றில் முக்கியமானது பெண்களுக்கான பாலியல் சுதந்திரம். 1962 ஆம் ஆண்டு Birth Pill அமெரிக்காவில் புழக்கத்திற்கு வருகின்றது. அது பாலுறவிற்கும், கர்பத்திற்கும் இடையே ஆன பினைப்பை மானுட வரலாற்றிலேயே முதல் முறையாக அறுக்கின்றது. அதன் பின்புலத்தில் இளமையை வாழத்துவங்கும் முதல் தலைமுறைப் பெண்கள். அவர்கள் கட்டுடைத்து உணரத் தொடங்கும் சுதந்திரம்.
அதே தலைமுறையைச் சேர்ந்த லானியின் இளமையோ இதற்கு நேர் எதிரானது. தனது பதினாறாவது வயதில் கர்ப்பம் அடைகின்றாள் இளம் லானி ஜோ. அவள் குடும்பத்தார்கள் கருக்கலைப்பிற்கு எதிரானாவர்கள். கருக்கலைப்பு அமெரிக்காவில் மதம் சார்ந்த பெரிய விவாதத்துக்குரிய விஷயம். இன்று அது அரசியலாக்கப்பட்டு விட்டது. அவள் கர்பமாக இருப்பதை அறிந்த உடனே குடும்பத்தார்கள் அவளை பக்கத்து மாகாணமான லூசியானாவில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த மகப்பேறு இல்லம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றார்கள். திருமணம் ஆகா பெண்களுக்கு மட்டுமே ஆன மகப்பேறு நிலையம். பெற்றோர்கள் கைவிட்ட வருத்தத்தில் இருக்கும் லானி தன்னை ஒத்த வயதுடைய இளம் கர்பினிகளிடம் தோழமையை உணர்ந்து மகிழ்வுடன் வாழத் தொடங்குகின்றாள். அன்னையாக உணரும் நொடிக்கான ஆவல் நிறைந்த நாட்கள் விரைந்து கரைகின்றன.
லானி மகனுக்கு பிறப்பளிக்கின்றாள். மகன் பிறந்த வாரத்தில் குடும்பத்தார்களிடம் இருந்து மகப்பேறு இல்லத்திற்கு செய்தி வருகின்றது. அதை அறிந்தவள் மேலும் மகிழ்வுறுகின்றாள். ஆனால், அவர்களோ லானி ஜோவை அவ்வாரத்திலேயே மகனைத் தத்துக் கொடுக்கச் சொல்லி செய்தி அனுப்புகின்றனர். வேறு வழியறியாது மகனை தத்துக் கொடுக்கும் இல்லம் ஒன்றில் ஒப்படைத்து விட்டு தனியளாக வீடு திரும்புகின்றாள் லானி. அவளை ஒன்றும் நிகழாதது போல இயல்பான வாழ்க்கையை வாழச் செய்கின்றனர். மகனைப் பிரிவுற்ற அவ்வன்னையின் பெருவலியின், நாற்பது வருடங்களாக அவனைக் கண்டு கொள்ள விழையும் அனையா தவிப்பின் நினைவுக்குறிப்புகள் தான் ‘Unfit’. நான் குந்தியின், கர்ணனின் கதைகளை லானியிடம் கூறினேன்.
அவருடனான இந்த உரையாடல் வெண்முரசு திரையிடலுக்கான சரியான அரங்கம் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்கின்றேன் என்ற உறுதியை அளித்தது. சமீபத்தில் தன் மகனை கண்டடைந்து விட்டதாக லானி மகிழ்வுடன் சொன்னார். மனம் சற்று எளிதாக உணரத் தொடங்கியது. லானியிடம் திரையிடலன்று சந்திக்கிறேன் என்று விடைபெற்றுக் கொண்டேன்.
நான் ஒருங்கிணைக்கும் முதல் இலக்கிய நிகழ்வு இது. வெண்முரசிற்கான நிகழ்வாக அமைந்ததில் மகிழ்வு. போர்ட்லாண்டு திரையிடல் குறித்த செய்தி உங்கள் தளத்தில் வெளி வந்ததும் வெண்முரசு வாசகர்கள் சிலர் தொடர்பு கொண்டிருந்தனர். ஜானியின் நண்பர்களும், குரு நித்யாவின் மாணவர்களுமான தெபோரா புக்கானன், ஸ்காட் டைட்ஸ்வொர்த், ஆண்டி லார்க்கின் ஆகியோரும், மகாபாரதம் என்ற பெயரையே முதல் முறையாக கேள்விப்படும் நண்பர்கள் சிலரும் வெண்முரசு ஆவணப்படத்தைக் காண விருப்பம் தெரிவித்திருந்தனர். வாசகர் முத்தையா இராஜ கோபாலன் அவர்களும், அவரது மகள் சஹானாவும் நிச்சயம் வருவதாகச் சொன்னார்கள். சஹானா பனிமனிதன், யானை டாக்டர் போன்ற கதைகளின் வாயில்களாக உங்கள் படைப்புலகை அறிமுகம் செய்து கொண்டிருந்தார். முத்தையா அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைக்க இறுதிவரை உதவியாக இருந்தார்.
அனைவருக்கும் ஏற்றார் போல மகாபாரதம் குறித்தும், உங்களது எழுத்துலகம் குறித்தும்,வெண்முரசு குறித்தும் மூன்று நிமிடங்களுக்குள் அடங்கும் சிறிய அறிமுக உரை ஒன்றை அளித்தபின் ஆவணப் படத்தை தொடங்குவதாக திட்டம். உரையைத் தயாரிக்க கடலூர் சீனு உதவினார். சென்னை விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர் இராஜகோபாலனும், தோழி கரினாவும் ஆங்கில உரையின் பிழைத்திருத்தங்கள் செய்யவும், நிகழ்வை சீராக ஒருங்கிணைக்கும் வழிமுறைகளையும் அளித்து உதவினர். இலக்கிய நண்பர்கள் பாசிலும், ஜேக்கப்பும் நிகழ்வன்று உதவினார்கள்.
(ஶ்ரீனிவாசன் சடகோபன், சுப்பு தியாகராஜன்,ஶ்ரீனிவாசன் சங்கரன், சஹானா)
விருப்பம் தெரிவித்திருந்த அனைவரும் இன்ன பிற நண்பர்களும் திரையிடலுக்கு வந்திருந்தனர். வெண்முரசு வாசகர்கள் ஶ்ரீனிவாசன் சங்கரன், சுப்பு தியாகராஜன் மற்றும் ஶ்ரீனிவாசன் சடகோபன் ஆகியோர் சியாட்டலில் இருந்து கிட்டதட்ட இரு நூறு மைல்கள், நான்கு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் ஆவணப் படம் பிடித்திருந்தது.
‘கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்? ‘ இன் இசை அமைப்பு ஆவணப் படத்தின் உச்சம். மகாபாரதத்திற்கான theme music சிறப்பாக இருந்தது. நண்பர்கள் நிச்சயம் திரையரங்கங்களில் சென்று அவற்றைக் கண்டும் கேட்டும் ரசிக்க வேண்டும்.
புதியவர்களுக்கு மகாபாரதத்தையும், காப்பியத் தன்மை கொண்ட ஒரு மாபெரும் சமகால இலக்கியப் படைப்பையும் அறிமுகம் செய்து கொண்டதில் பேர் உவகை. இது உலகின் நீளமான நாவல் என்பது மட்டும் அல்லாது அதன் பிற முக்கியத்துவங்களை குறித்தும் கலந்துரையாடினோம்.
உலக இலக்கிய வரலாற்றை எடுத்துக் கொண்டோம் என்றால் சார்லஸ் டிக்கின்ஸ், தாஸ்தாவெஸ்கி போன்றவர்களின் நாவல்கள் வார இதழ்களில் தொடர் பிரசுரமாக வெளி வந்துள்ளன. ஆனால், தினம் ஒரு அத்தியாயம் என ஆசிரியர் எழுதுவதை ஒட்டியே வாசகர்களும் பின் தொடர்ந்து வாசித்தல், அதுவும் இணையதளத்தில் இலவசமாக, என்பது உலக இலக்கிய வரலாற்றில் வெண்முரசிற்கு முன் நிகழ்ந்தது இல்லை என்பதை அமெரிக்க நண்பர்கள் கூறினர்.
மேற்குலகம் ஒற்றை ஆண் கடவுளே போதும் என்றும் பெண் தெய்வங்களே வேண்டாம் என்றும் என்றோ முடிவு செய்து விட்டதன் விளைவுகள் குறித்தும், இந்தியப் பண்பாடு பல்வகைத் தெய்வங்களை இன்றும் வழிபட்டு வருவதன் முக்கியத்துவத்தையும் பேசினார்கள்.
உலகிற்கு இந்திய மரபின் மிக முக்கியமான கொடைகள் என்றால் புத்தரும், போதிசத்வரும், கிருஷ்ணனும் தான் என்று ஜானி கூறினார். அவர், ‘எங்கள் கடவுள் சிலுவையில் அரையப்பட்டு நிற்கின்றான். உங்களவன் புல்லாங்குழல் இசைத்து, கோபிகைகள் சூழ வாழ்வை ரசித்தவாறு நிற்கின்றான். கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்’ என்றவாறு புன்னகைத்தார். தொடர்ந்து, ‘கிருஷ்ணனின் குறியீட்டிற்கு சற்றேனும் அருகில் வரும் மேற்கின் ஒரு ஆளுமை என்றாள் அது வால்ட் விட்மென் மட்டும் தான். உண்மையில் அவரை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று எங்களவர்களுக்கு நீண்ட காலம் விளங்கவில்லை. இப்போது தான் சிறிதேனும் விட்மனை புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளோம்’ என்றார்.
திரையிடல் முடிந்த பின் குறைந்தது அரை மணி நேரமாவது உரையாடி பிறகு தான் கலைந்து சென்றனர். நிறைவான மாலை.
பிரபு போர்ட்லண்ட்
August 10, 2021
நுரைக்குமிழி- சிறுகதை
பர்ஸை எடுக்க ஹாண்ட்பேகில் கைவிட்டாள். என்னவோ குறைவது போல் தோன்றியது. இனம்புரியாத படபடப்புடன் விரல்களால் துழாவினாள். ஒரு மின்னல் போல அது என்னவென்று அவளுக்குப்புரிய அவள் உடம்பு அதிர்ந்து குலுங்கியது. ஒருகணம் மூச்சே நின்று போய்விட்டது.
“என்னம்மா என்ன ஆச்சு?” கண்டக்டர் சில்லறைக்காக நீட்டி கை அப்படியே நிற்கக்கேட்டான்.
“பர்ஸ்…” என்று மூச்சுத்திணறலுக்கு இடையே சொன்னாள். உடம்பெங்கும் வியர்வை ஆறாக ஓடியது.
“பர்ஸ் எடுக்க மறந்துட்டியா? வீட்டிலெ வெச்சிருப்ப… எறங்கணுமா?” என்றான்
“ம்”
“உய்”
பஸ் நின்றது. இறங்கிக்கொண்டாள். வியர்வையில் ஈரமான உடம்பு குளிர ஆரம்பித்தது. ஹாண்ட் பேக்கைத்திறந்து தேடினாள். உள்ளே டிபன்பாக்ஸ் இருந்தது, பர்ஸ் இருந்தது ,கர்சீஃப் இருந்தது…
மூச்சிரைக்க வீட்டுப்படி ஏறினாள். ஓசைப்படாமல் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே போனாள். ஹாலில் ஹாண்ட் பேக்கை முன்னம் வைத்திருந்த மேஜைமேல் புத்தகங்கள் குவிந்து கிடந்தன. படபடவென்று தேடினாள். ஓரத்து அறையின் கதவு லேசாக ஒருக்களித்திருந்தது. சிகரெட் மணம் வந்தது.
மணிகண்டன் உள்ளே இருக்கிறான். இந்த வாரக்கடைசியில் அவன் விடுமுறை முடிகிறது. ராணுவத்தில் கேப்டனாக இருக்கிறான். அவள் விரல்கள் கட்டுப்பாடின்றி நடுங்கின. புத்தகங்களில் தேடுவது மிகவும் சிரமாக இருந்தது. எங்கே வைத்தேன் அதை? ஞாபகமில்லை. கைத்தவறுதலாக ரவியின் புத்தகங்களில் எதிலாவது வைத்துவிட்டேனா? அந்தப்பெண் மீனா ஹாண்ட்பேக்கை திறந்து பார்க்குமே அது எங்காவது எடுத்திருக்குமோ? முருகா…!
“என்னது திரும்பி வந்துட்ட?”
அடிபட்டதுபோல் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அறைவாசலில் கதவில் கைஊன்றியபடி மணிகண்டன் நின்றிருந்தான். அவன் கண்கள் அவள் மேல் ஊன்றியிருந்தன.
”ஒண்ணுமில்ல.. நான்…”
“என்ன தேடறே?” அவன் குரல் இறுக்கமாக இருந்தது. அவள் தன் கால்கள் நடுங்குவதை உணர்ந்தாள். ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் அவளை உற்றுப்பார்த்தான்.
“என்னமோ ரொம்ப அவசரமாத் தேடற மாதிரி இருக்கு. என்னது?”
“அதுவந்து…”
“ஏதாவது கடுதாசா?”
பளீரென்று நெற்றிப்பொட்டில் ஒரு ஒளி வெடித்து போல் தோன்றியது அவளுக்கு. ஒருகணம் அவன் விழிகளை அவள் விழிகள் வெட்டின. அவளுக்குப்புரிந்தது. அவன் எல்லாவற்றையும் அறிந்தாகிவிட்டது. கடித்தை அவன் பார்த்துவிட்டான்.
விழுந்துவிடுவோம் என்று தோன்றியது அவளுக்கு.
”உள்ளே வா, உன்கூட கொஞ்சம் பேசணும்” அவன் உள்ளே போனான்.
ஹாலிலிருந்து அறைவரை நடக்க அவளால் முடியவில்லை. உடம்பே அவள் பிடியிலிருந்து நழுவிப்போவது போல் இருந்தது. விழாமலிருக்க கதவை இறுகப் பிடித்துக்கொண்டாள். அவன் தன் வழக்கமான நாற்காலியில் காலை நீட்டி அமர்ந்து, ஜன்னலுக்கு வெளியே வெறித்துப்பார்த்தபடி இருந்தான். ஆனால் அவன் பார்வை தன் மேல் கூர்மையாகப் பதிந்திருப்பது போன்ற உணர்வுதான் அவளுக்கு இருந்தது.
சட்டென்று திரும்பி அவளைப்பார்த்தான்.
“எத்தனை நாளா நடந்திட்டிருக்கு இது?”
என்னென்னவோ பதில்கள் அவளுக்குள் பொங்கின. ஆனால் மொழியே மறந்துவிட்டது போலிருந்தது.
“சொல்லுடி, யார் இவன்?”
தன் இதயத்துடிப்பைத்தவிர வேறெதையும் கேட்க முடியவில்லை அவளால்.
“யாருடி இந்த ராஜகோபால்…?”
“இல்லை…. இல்லை…” என்று சம்பந்தமின்றி உளறியபடி விம்மினாள்.
மணிகண்டன் மிகுந்த சிரமப்பட்டுத்தன் ஆவேசத்தை விழுங்கிக்கொண்டான். முடிந்தவரை தாழ்ந்த குரலில் “நான் இப்ப என்ன பண்ணணும்? டிவோர்ஸ் வேணுமா உனக்கு? இல்லை, தீர்த்துக்கட்டிடறதா தீர்மானிச்சிருக்கிங்களா?” என்றான்.
அடிவயிற்றிலிருந்து பீறிட்டு ஒரு கேவலாய் வெடித்த அழுகையுடன், பிடித்துத் தள்ளப்பட்டவளைப்போல அவள் ஓடி அவன் கால்களில் மடங்கி விழுந்தாள். எல்லா உணர்வுகளையும் வெளிக்கொட்டுபவளைப்போல பொங்கிப் பொங்கி அழுதாள்.
அவள் அழுகை ஒருகணம் அவனை இளக வைத்தது. மறுநிமிடம் ஆவேசத்தை வரவழைத்துக் கொண்டவனாக அவன் அவளை நெட்டித்தள்ளிவிட்டு எழுந்தான். நாற்காலி கிரீச்சென்று பின்னால் நகர்ந்தது.
“ச்சீ முப்பது வயசில, ரெண்டு பெத்துக்கு அப்புறம் உனக்குக் கள்ளக்காதல்… அல்ப ஜென்மம், உன்னை…. உன்கூட.…”
எந்த வார்த்தையும் வெளிவராமல் சிவந்த முகத்துடன் நின்று திக்கித் திணறித்துடித்தான். சட்டென்று கொடியிலிருந்து சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டான். செருப்பில் கால் நுழைத்து, லுங்கியை மடித்துக்கட்டியபடி அவளைப் பார்த்துப் பதறிய குரலில் சொன்னான்.
“போயிடு, உன் காதலன் கூட. என் கொழந்தைங்களை நான் பார்த்துக்கறேன். நான் திரும்பி வர்றதுக்குள்ள பெட்டியைக் கட்டிட்டு அவன்கூடவே போயிடு…”
தடதடவென்று இறங்கி அவன் போனபின் அவள் வெறும் தரையில் குப்புறப்படுத்து விம்மி, குலுங்கி அழுதாள். வெகுநேரம் அழுது முடித்து விம்மல்கள் ஓய்ந்தபிறகு அவள் மனத்தில் பயங்கரமான சூன்ய உணர்வு குடியேறியது.
கதகதப்பான ஓர் உறவு முடிந்துவிட்டது போலவும், இனி ஒருபோதும் அவனது அன்பும் அணைப்பும் தனக்குக் கிடைக்கப்போவதில்லை என்றும் அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை அவன் இனி திரும்பி வரவேமாட்டானோ என்று தோன்றியபோது வயிறு சில்லிட்டது.
அந்தப்பீதியிலும் விரக்தியிலும் கூட ஓர் ஓரத்தில் ஒரு நம்பிக்கை மின்னியது அவளுக்கு. தான் தப்பு செய்யாத வரைக்கும் பயப்பட வேண்டியதில்லை என்று நினைத்தாள். அத்தனை அநியாயமாகத் தன்னைக் கடவுள் தண்டித்துவிடமாட்டார் என்று சொல்லிக்கொண்டாள். அதையே மீண்டும் மீண்டும் நினைத்து நம்பிக்கையைப் பெருக்கிக் கொள்ளப் பாடுபட்டான். அவள் சொன்னால் அவன் புரிந்துகொள்வான். அவனை அத்தனை எளிதாக வெறுத்துவிட அவனால் முடியாது. பீதியும் விரக்தியும் நம்பிக்கையுமாய் அவள் மனம் அலைபாய்ந்தது.
மதியம் அவள் சாப்பிடவில்லை. அவன் வரமாட்டான் என்று தான் நினைத்தாள். மாலையில் குழந்தைகள் திரும்பி வந்தன. மாலை சரியச் சரிய அவள் மனம் மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்தது. வருவானா? முருகா! வராமலே இருந்துவிட்டால்… யோசிக்கும்போதே ‘பகீர்’ என்றது. வாசலில் அசையும் ஒவ்வொரு நிழலும் நம்பிக்கை அளித்து, பின்பு ஏமாற்றியது. இருள் கனக்கக் கனக்க அவள் மனம் பீதியில் நிறைந்தது.
ஒன்பது மணிக்கு அவன் வந்தான். அந்தப் பழக்கமான காலடியோசை அவள் உடலைப் புல்லரிக்க வைத்தது. அவள் நெஞ்சைக் கையால் அழுத்தியபடி “முருகா!” என்றாள். அவளைக் கவனிக்காத மாதிரி அவன் நடந்து அறைக்குள் புக முயன்றான்.
“சாதம் போடவா?” என்றாள்.
“ச்சீ” என்று அவன் சீறினான்.
அவன் அறைக்குள் நுழைந்தபின் கதவைத் தடாலென்று மூடிக்கொண்டான். அவள் தரையில் அமர்ந்தாள். அவளை அறியாமலேயே அழுகை வந்தது. இருளில் தனிமையில் அழுதாள். அந்த ஓசையற்ற அழுகை – தேற்ற ஆளில்லாத நிராதரவான அந்த அழுகை, அது அவளுக்கு வினோதமான ஒரு சுகத்தைக்கூட அளித்தது.
கதவைத்தட்டி அவனை எழுப்பி எல்லாவற்றையும் கூறிவிடவா? தன்னால் முடியாது. அப்போதும் தன்னால் அழமட்டும் தான் முடியும். அந்த எண்ணமே அவளுக்கு மூச்சுத்திணற வைத்தது. மெல்லத் தூங்கிப்போனாள். தூக்கமல்ல, அரை மயக்கம்… காற்றின் ஒலியும் கடிகார டிக்டிக்கும் கேட்டுக்கொண்டிருந்தன. — கிரீச். கதவு திறந்தது.
திடுக்கிட்டு எழுந்து அவள் நிதானிப்பதற்குள் மணிகண்டன் அவளைக் கடந்து சென்றிருந்தான். இரவு வெகு நேரமாகியிருக்கக்கூடும்.
பாத்ரூம் போய்விட்டு அவன் திரும்பி வந்தபோது அவள் அறைவாசலில் நின்றிருந்தாள். அவன் அவளை உற்றுப் பார்த்தான். அவன் முகம் இப்போது அத்தனை இறுக்கமானதாக இல்லை.
அவள் மூக்கு துடிக்க அழ ஆரம்பித்தாள்.
“வழியை விடு” என்றான்.
அவள் விலகினாள். அவன் அவளைக் கடந்து சென்று அறைக்குள் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
“பானு” என்றான்.
அவன் குரலில் ஒரு மென்மை இருந்தது. அவன் மனம் மெல்ல அமைதி அடைந்தது.
“வா, இங்கே”
அவனருகே சென்றாள். அவன் காலடியில் அமர்ந்தாள். அவன் கால்களில் முகம் புதைக்க மனம் திமிறியது. ஆனால் அவனைத் தொட அவளுக்குத் துணிச்சல் வரவில்லை.
அவன் அவள் தலையில் கை வைத்தான். அவளது காதோர மயிர் இழைகளில் அவன் கைகள் மெல்லத் துழாவின. சுற்றி இறுக்கின.
அந்த ஸ்பரிசமும் – வலியும் அவளை அப்படியே நெகிழ வைத்தன. தன் முதுகின் மேலிருந்த ஒரு பெரிய பாரத்தை யாரோ இறக்கி வைத்தது போல் அத்தனை எளிதாக உணர்ந்தாள்.
“பானு”
”ம்”
“யார் அந்த ராஜகோபால்?”
அவள் தொண்டை அடைத்தது. “அவன் எங்க ஆபீஸ்ல…”
“உன்கூட வேலை செய்றவனா?”
“ம்”
”ரொம்பச் சின்னப்பையனா இருப்பான் போல இருக்கு. அத்தனை அசட்டுத்தனமா எழுதியிருக்கான். எத்தனை வயசிருக்கும் அவனுக்கு? ஒரு இருபத்தஞ்சு இருக்குமா?”
“ம்”
”அவனுக்கு ஏன் இப்படித் தோணுச்சு? நீ அவன்கூடக் கொஞ்சம் ஃப்ரீயா பழகுவியா?”
“இல்லை, சத்தியமா இல்லை. எல்லார்கிட்டயும் பேசறமாதிரிதான் பேசுவேன்.”
“அவன் உன்கிட்டே கொஞ்சம் உரிமை எடுத்துப்பானா?”
”ம்”
”உரிமைன்னா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தால் பாராட்டாக ஏதாவது சொல்றது, அழகைப்பற்றி முகஸ்துதி செய்யறது…”
அவள் உதட்டைக் கடித்தாள். கண்கள் மறுபடியும் நிறைந்தன.
”பரவாயில்லை. இதெல்லாம் எந்தப்பொண்ணுக்கும் பிடிக்கிற விஷயம் தான். நீ சந்தோஷப் படறதை அவனுக்குக் குடுக்குற அனுமதியா அவன் நெனச்சிருப்பான். உன்னை வளைச்சிட்டதா தப்பா கற்பனை பண்ணியிருப்பான்.”
”என்னை மன்னிடுங்க. நான் தப்புப்பண்ணிட்டேன். என்னை என்ன வேணும்னாலும் செய்ங்க”
”நான் உன்னை இப்ப விசாரணை பண்ணலை. இந்த விஷயத்தைக் கிளியராகப் பேசிடறது நல்லது. இந்த லெட்டரை எப்பக்குடுத்தான்?”
“போன திங்கட்கிழமை”
“நேரில் குடுத்தானா?”
”இல்லை மேஜை டிராயரில் கிடந்தது.”
“படிச்சிட்டு நீ புகார் எதுவும் பண்ணலையா? பண்ணத் தோணலியா உனக்கு?”
”நான் அவனைக் காண்டீனுக்குக் கூப்பிட்டுப் பேசினேன். இந்த மாதிரி எண்ணத்தோட என்கிட்டே இனிமேல் பழகவேண்டாம்னு சொன்னேன். இந்த ஒரு தடவை விட்டுடறேன். இனிமேல் இப்படி செஞ்சா மானேஜர்கிட்டே கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன் அப்படீன்னேன்.”
“அவன் ரொம்ப ஆடிப்போயிருப்பானே?”
“ரொம்ப… கண்ணீர்விட்டு அழவே ஆரம்பிச்சிட்டான். ‘என்னமோ ஒரு வேகத்துல எழுதிட்டேன் ஸிஸ்டர். இப்ப அதை நெனச்சு வருத்தப்படறேன் ஸிஸ்டர். எழுதினதுக்கு அப்புறம் தூங்கவே இல்லை ஸிஸ்டர்’ அப்படீன்னு ஆயிரம் ஸிஸ்டர் போட்டான்.”
“அது நடிப்பில்லை பானு. அந்த வயசில ஒரு தடவையாவது புத்தி அப்படிப்போகும். நான் எம்.ஏ படிக்கிறப்ப இப்படி ஒரு லவ் லெட்டர் எழுதினேன். யாருக்குத்தெரியுமா? கூடப்படிக்கிற ஸ்டூடண்டுக்கு இல்லை, புரொபசருக்கு. ஒரு வயசான அம்மாள். அப்பவே என்னைவிடப் பெரிய பையன் இருந்தான். அவங்களுக்கு” மணிகண்டன் ‘ஹஹஹஹா’ வென்று சிரித்தான்.
“ஸ்ஸ்… மெள்ள குழந்தைங்க பயந்துக்கப்போவுது”
“சரி, அந்தக் கடிதாசை நீ ஏன் கிழிச்சுப்போடலை?”
அவள் கண்கள் தாழ்ந்தன.
“நான் சொல்லட்டுமா? அந்தப்பயல் சகட்டுமேனிக்கு உன்னைப் புகழ்ந்திருக்கான். அதை வாசிக்கிறதுல உனக்கொரு ‘த்ரில்’-என்ன? சரி சரி மறுபடியும் அழ ஆரம்பிச்சிடாதே. இதுக்காக உன்னை யாரும் தூக்கில் போடப்போறதில்லை.”
அவள் அவன் கால்களின் மேல் முகம் புதைத்துக்கொண்டாள். அவன் அவளை தலைமயிரில் முத்தமிட்டான்.
“இதோ பார் பானு, நமக்குக் கல்யாணமாகி ஏழெட்டு வருஷங்களாகுது. நமக்குள்ளே இருந்த வேகமெல்லாம் தணிஞ்சாச்சு. லைஃப் இப்ப ஒருமாதிரி போர்தான். உனக்கு என்மேலயோ எனக்கு உன்மேலயோ அலுப்புக்கூடத் தட்ட ஆரம்பிக்கலாம்…”
“அய்யோ… நான்…”
”சரி சரி, இல்லைங்கலை. ஆனால் இருபது வயசில் நம் உறவில் இருந்த வேகம் இப்ப இல்லை, இருக்க முடியாது. மறுபடியும் அதைக் கொண்டுவரவும் முடியாது. இப்ப மனசு கொஞ்சம் பரபரப்பா ஒரு விஷயத்துக்கு ஆசைப்படலாம். மனசைப்படபடக்க வைக்கிறதா, ராத்திரி தூக்கத்தைக் கெடுக்கறதா ஒரு அனுபவத்துக்கு மனசு ஏங்கலாம். மனசு அப்படித்தான். அதுக்கு தர்மம் நியாயமெல்லாம் தெரியாது. ஆனால் மனசை மனசின் போக்குக்கு விட்டுட்டா என்ன ஆகும்? உன் பேரில் ஒரு சின்னக் களங்கம் வந்தால் அது என்னை எப்படிப்பாதிக்கும்? நம்ம தாம்பத்யமே குலைந்து போகும். அதனால் பாதிக்கப்படறது நம்ம குழந்தைங்க. நம்ம சந்தோஷத்துக்கு அவங்களை பலி கொடுக்கலாமா? ஆணும் பெண்ணும் சுகமா இருக்கிறதுக்காக மட்டுமே பெரியவங்க குடும்பம்னு ஒண்ணை ஏற்படுத்தலை. புதிய தலைமுறையோட பாதுகாப்புக்காகவும் இப்படி ஒரு ஏற்பாட்ட செய்தாங்க…”
தன் பேச்சு நீண்டுவிட்டது என்று உணர்ந்து ஹாஸ்யமாகச்சிரித்தபடி “என்ன பரவால்லயா? நம்ம சொற்பெருக்கு…?” என்றான்
அவள் “என்னை மன்னிச்சிடுங்க” என்றாள்.
“சரி, மன்னிச்சாச்சு நம்ம அந்த சம்பவத்தையே மறந்துடலாம் என்ன?”
ஒரு வேகத்துடன் அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். “மறந்துடுவிங்களா? எல்லாத்தையும் மறந்துடுவீங்களா?”
அவள் தலைமேல் முத்தமிட்டபடி அவன் சொன்னான். “சத்தியமா…”
அவள் அவனுடன் ஒட்டிக்கொண்டாள். பரிச்சயமான இழைதல், வெப்பம் மிகவும் அறிமுகமான அந்த மணம். அரைமயக்கத்திலும் ‘மறந்துடுவிங்களா? மறந்துடுவிங்களா?’ என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தாள்.
துயில் கலைந்த ஒரு நிமிடம் அவள் திகைத்தாள். அவளருகே அவன் இல்லை. அறை இருட்டாக இருந்தது. ஹாலில் இருந்து வெளிச்சம் உள்ளே வந்தது. உடைகளை உடுத்திக் கொண்டு எழுந்து மெல்ல நடந்து ஹாலில் எட்டிப்பார்த்தாள். விளக்கு மிகப்பிரகாசமாய் எரிந்துகொண்டிருந்தது. சோபாவில் சாய்ந்து இருளை வெறித்தபடி மணிகண்டன் அமர்ந்திருந்தான். அவன் கையில் சிகரெட் அனாதையாய்ப் புகைந்தது.
தரையில் சிகரெட் சாம்பலும் மிச்சங்களும் கிடந்தன. அவன் முகத்தில் மனப்போராட்டம் தெரிந்தது. நெற்றியிலும் கன்னத்திலும் கவலையின் கோடுகள். இனி ஒருபோதும் திரும்பி வராதபடி எதுவோ ஒன்று தன்னை விட்டு விலகிப்போய்விட்டதை அவள் உணர்ந்தாள். அவள் மனம் எல்லையற்ற சூனிய வெளியில் திசை தவறியது.
(1987 ஜுலை 12, கல்கியில் வெளிவந்த சிறுகதை)
1986-ல் நான் காசர்கோட்டில் இருந்தபோது எழுதிய இந்தக்கதை 1987ல் வெளியாகியது. 1987ல் கணையாழியில் எழுதிய நதி என்ற கதையைத்தான் நான் என் முதல் கதையாக கொண்டிருக்கிறேன். அதைத்தான் சிறுகதைத் தொகுதியில் சேர்த்திருக்கிறேன். அதற்குமுன் பிரபல வணிக இதழ்களில் எழுதிய கதைகளை தொகுப்புகளில் சேர்க்கவில்லை. என்னிடம் அவற்றின் பிரதிகளும் இல்லை. இது சமீபத்தில் அழிசி ஸ்ரீநிவாசனால் கண்டெடுக்கப்பட்ட கதை. பரவாயில்லை, 1986 ல் என் 24 ஆவது வயதிலேயே தாம்பத்தியப் பிரச்சினைகளை எல்லாம் எழுதியிருக்கிறேன்
துளிக்கும்போதே அது துயர்
போகன் தனிவாழ்க்கையில் உடல்நலச்சிக்கல்கள் வேலைப்பளு உளச்சோர்வு கொண்ட மனிதர். அவற்றை நிகர்செய்ய ஒரு சிரிப்பை தக்கவைத்திருப்பவர். கவிதைகளில் பெரும்பாலும் அந்தச் சிரிப்பு மட்டுமே வெளிப்படுகிறது, பகடியாக. அவருடைய கவிதைகளில் பகடி இயல்பாக குவிந்து ஒரு sublime ஐ தொட்டுவிடும் கவிதைகளை மட்டுமே நான் பரிந்துரைக்கிறேன்.
சமீபத்தில் என் கவனத்திற்கு வந்த அவருடைய இரு கவிதைகளிலும் அந்த இயல்பான நகை இல்லை. உயர்தருணமும் இல்லை. ஆனால் நேரடியான வலி இருக்கிறது. கவிதையை அது கூரிய பொருள் போல ஆக்கிவிடுகிறது. தொடமுடியாத இடத்தில் இருந்தாலும்கூட எங்கோ எவரையோ கீறிவிடுமென எண்ணச்செய்கிறது
தெருநாய்களின் உடல்மொழியை கவனித்திருக்கிறேன். உலகமே தங்களுக்கு எதிராக வஞ்சம் கொண்டிருப்பதாக அவை எண்ணுகின்றன. எவர் அணுகினாலும் சட்டென்று ஒரு முழுப்பணிவை உடலில் காட்டுகின்றன. கெஞ்சல், மெல்லிய உறுமல், விழிதாழ்த்தி வால் ஒடுக்குதல். எத்தனை துன்புற்றிருக்கவேண்டும் என எண்ணிக்கொள்வேன். எத்தனை கொடியது முழு உலகமும் எதிரியாவது என்று தோன்றும்.
அவளுக்கு
ஏதோ ஒரு சந்தோஷம்
என்னைக் கேலி செய்கிறவர்கள்
எல்லோருடனும் சேர்ந்துகொள்கிறாள்.
ஒவ்வொரு முறை
அதை அவள் செய்கிறபோதும்
உன்னை நான் எவ்வளவு நேசித்தேன்
என்று சொல்லிக் காட்டுகிறாள்
என்று தோன்றும்.
யாருக்கோ கொடுத்திருக்க வேண்டியது
உனக்கு கொடுத்தேன்
என்ற வெறுப்பின் இளிப்பு
என்றும் தோன்றும்.
அல்லது
இருக்கும்போது நீடித்த
அந்த நேசத்தின் மதுரத்தை
இந்த கசப்புகளின் மூலம்
கரைக்கப் பார்க்கிறாளோ?
அதற்கு எவ்வளவு கசப்பு தேவைப்படுகிறதோ
அவ்வளவுக்கு
அவள் என்னை நேசித்தாள்
என்றிருக்கட்டும்
என்றும் நினைத்துக் கொள்கிறேன்.
இனி என்ன செய்வது?
ஓடம்
நதியைக் கிழித்துச்
சென்ற பாதையை
நதி மீண்டும் மூடிவிட்டது.
சம்பந்தமில்லாத வரிகள் இறுதிப்படிமத்தில் இணையும் இக்கவிதை பலமுறை ஒடிந்து கட்டுபோட்டு குணமாகி இணைந்த எலும்பு போலிருக்கிறது என போகனுக்கு எழுதினேன். இந்த மொழி, கொடும் அநீதி இழைக்கப்பட்டவன் அளிக்கும் வாக்குமூலம்போல சொல் சொல்லாகச் சொட்டும் தயங்கிய நடை இதை முக்கியமான கவிதையாக ஆக்குகிறது.
இந்த வீட்டில்
என் படுக்கையறையின்
வசதியான மூலையை அறிய
எனக்கு
இரண்டு வருடங்கள் தேவைப்பட்டன.
எந்த வீட்டிலும்
நான் அப்படித்தான்.
நான்
என் உலகத்தை
மிக மெதுவாகவே சுற்றிப்பார்க்கிறேன்.
உன் உலகம் மிக வேகமாக சுழல்கிறது.
என் பக்கம் சுழலும்போது
அதன் பாலைவனங்களின் பருவம்
வந்துவிடுகிறது.
இத்தகைய கவிதைகளுக்குப் படிமங்கள் தேவையில்லை. அணிகளும் தேவையில்லை. வெறும் அறிக்கையிடல்களாக அமைந்தாலே போதும். எந்த அளவுக்கு குறைவாக, உணர்ச்சியின்றி சொல்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக குறிப்புணர்த்தி கவிதைகளாகிவிடுகின்றன. “எல்லா பெருமூச்சுகளிலும் கொஞ்சம் கவிதையின் பூச்சு உண்டு” ஆற்றூர் பேச்சுநடுவே சொன்ன ஒரு வரி.
மூன்று விதமான பெண்கள்என் வாழ்வில் வந்துகொண்டே இருந்தார்கள்.ராஜசத்தின் பெண்கள்என்னைஒரு நகையாகவோபத்திரமாகவோ ஆக்கிஒரு பெட்டியில்என்னைப் பூட்டி வைத்தார்கள்அதிலிருந்து தப்பித்துப் போகநான் முயலும்போது மட்டுமேஅவர்கள் என்னை நினைவு கூர்ந்துசில மிட்டாய்களை எனக்கு அளிப்பார்கள்.அவர்களது உடல்கள் அவற்றில் ஒன்றுஅவர்களதுஉடமையுணர்வின்விஷம் தடவிய மிட்டாய்களுக்குநான் மயங்காவிட்டால்கடும் தண்டனைகளைஅவர்கள் எனக்கு அளிப்பார்கள்.தாமசத்தின் பெண்களுக்குஎப்போதும் ஏதோ ஒரு நோய் இருந்தது.ஆற்ற முடியாத ரணம் இருந்தது.அவர்கள் தங்கள் புண்களை நக்கிக் கொண்டே இருந்தார்கள்.அவர்கள் என்னை ஒரு மருந்து போல் பாவித்தார்கள்.அல்லது போதை மருந்து.நான் அவர்களுக்கு செவிலியாய் இருந்து களைத்துப் போனேன்.அப்போதெல்லாம்என் கருணையின்மையை அவர்கள் சுட்டிக்காட்டத் தவறுவதேயில்லை.இவர்கள் முன்னவர் தரும் கசந்த மிட்டாய்களைக் கூடத் தருவதில்லை.அவர்கள் தங்களுக்கே கூடஅந்தமிட்டாய்களைத் தந்துகொள்வதில்லை.மிக அரிதாகஎன் வாழ்வில்சத்துவத்தின் நிதானம் கொண்ட பெண்கள்வந்ததுண்டு.அவர்கள் போய்விட்ட பிறகுவரைநான் அவர்களைக் கவனித்ததில்லை.அவர்களது பதில் வேண்டாஅன்பின் சொற்களைவருடங்களுக்குப் பிறகேஎன் குப்பைத் தொட்டியில்நான் கண்டுபிடிக்கிறேன்.மறைந்து போனபிறகுஒரு வானவில்லைப் பார்க்கப் போனஒரு முட்டாள்ச்சிறுவன் போல் உணர்கிறேன்.
சுருள்வில் – போகன் சங்கர்.
தீபம்- போகன் சங்கர்
மழை இருகவிதைகள்:போகன் சங்கர்
தீர்வுகள் – போகன்
லாலேட்டனோ இக்காவோ?
மூன்றுநாட்களாக சினிமாக் கதாநாயகனின் வாழ்க்கை. வழக்கமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலையாளத் தொலைக்காட்சிகள் என்னைப்பற்றி ஓர் ஆவணப்படம் வெளியிடுவதுண்டு. இதுவரை நான்கு ஆவணப்படங்கள் வந்துள்ளன. என் வீடு, எழுத்தறை, முகப்பு, என் சூழல், வேளிமலை, ஏரிகள் எல்லாமே காட்சிப்படுத்தப்படும். என் கருத்துக்கள், உணர்ச்சிகள் எல்லாமே பதிவாகும்.
இம்முறை மீண்டும் ஆசியானெட் டிவியில் இருந்து கேட்டார்கள். வெண்முரசு முடிந்ததை ஒட்டி ஓர் ஆவணப்படம் செய்ய கேட்டிருந்தனர். நடுவே கோவிட் தொற்று. ஆகவே கொஞ்சம் பிந்திவிட்டது. இங்கே ஒருவாரமே இருப்பேன் என்பதனால் நெருக்கமாக தேதி கொடுத்திருந்தேன். ஆகவே ஏழாம் தேதி முழுக்க ஆசியாநெட்டுக்காக நடித்தேன். ஒன்பதாம் தேதி நானா பத்திரிகையின் நிருபருக்கு நீண்டபேட்டி. இன்று, பத்தாம்தேதி கைரளி டிவிக்காக.
எழுத்தாளனாக நடிப்பது என்று கேலியாகச் சொல்லிக்கொண்டாலும் இது செயற்கையான அனுபவமாக இருக்கவில்லை. சொல்லப்போனால் ஓராண்டு முழுக்க நான் வாழும் வாழ்க்கையைச் சிலமணி நேரங்களில் மீண்டும் நிகழ்த்துவதுதான். உண்மையில் மிக நிறைவாகவே உணர்ந்தேன். என் உள்ளத்திற்கு இனிய வேளிமலை அடிவாரம், என் அகத்தில் என்றும் தித்திக்கும் என் இல்லமும், அறையும்.
கேரளத் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை எழுத்தாளர்களை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து பேட்டி எடுப்பதைவிட அவர்களின் எழுத்துக்குப் பின்புலமாகும் இடத்தில் எடுப்பதையே விரும்புவார்கள். அரிதாக ஓர் ஆழமான உரையாடல் மட்டுமே வேண்டும் என்றால் மட்டுமே ஸ்டுடியோ. நானும் கல்பற்றா நாராயணனும் கவிதையின் அழகியலை பற்றி மட்டுமே உரையாடிய ஒருமணிநேரப் பேட்டி முன்பு அமிர்தா டிவியில் வந்திருக்கிறது. மிக கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட, ஓர் உரையாடல் அது.
மலையாளத் தொலைக்காட்சிகளில் எப்போதும் ஒவ்வொன்றுக்கும் அதற்கான தேர்ச்சிகொண்ட நிருபர்கள் இருப்பார்கள். இதழ்களிலும் அவ்வாறே. அரசியல் பேட்டி என்றால் ஒருவர் செல்வார். கதகளி போன்ற மரபுக்கலைகள் என்றால் இன்னொருவர் செல்வார். நவீன ஓவியத்திற்கு ஒருவர் இருப்பார். சினிமாவுக்கு ஒருவர் இருப்பார். இலக்கியத்திற்கென்றே ஒருவராவது இருப்பார்கள். அவர்களே இலக்கியவாதிகளைப் பேட்டி எடுக்க வருவார்கள்.
அவர்கள் பேட்டிக்கென்றே தயாரித்துக் கொள்வதில்லை. இயல்பாகவே நல்ல வாசகர்களாக இருப்பார்கள். அவர்களே இலக்கியவாதிகளாக இருப்பதும் உண்டு. அவர்களில் இருந்து ஆர்.உண்ணி போன்ற பெரிய இலக்கியவாதிகள் பின்னாளில் எழுந்து வந்திருக்கிறார்கள். ஆகவே பேட்டி எப்போதுமே உற்சாகமானது. பேட்டிக்குப் வெளியே நிகழும் உரையாடல் மேலும் இனியது.
கைரளி டிவியின் வினேஷ் வடகேரளத்தின் பையன்னூர்க்காரர். எனக்குப் பிரியமான மலபார். பையன்னூரின் என் நண்பர்கள் பலரும் அவருக்குத் தெரிந்தவர்கள்தான். மலையாளத்தில் நான் எழுதிய எல்லாவற்றையும் அப்போதே படித்திருந்தார். அவற்றைப் பற்றிய கருத்துக்களையும் சொன்னார்
வெயில் இருந்தாலும் ஆடிக்காற்று வீசிக்கொண்டிருந்தமையால் தெரியவில்லை. காற்றுக்கு எதிராக நின்று மைக்கில் முழக்கம் இல்லாமல் பேசவேண்டியிருந்தது. வேட்டியை தூக்கிக்கொண்டு நடந்தபோது கதாநாயகனாக உணர்ந்தேன்.
திரும்பி வந்தபோது அருண்மொழி கேட்டாள். “எப்படி இருந்தது பேட்டி?”
நான் சொன்னேன். “ஹீரோவா ஆஃப் டே கால்ஷீட் குடுத்தது மாதிரி…”
உடனே மெல்லிய நையாண்டி. “ஆரா தான்? லாலேட்டனோ இக்காவோ?”
மீமி – இரம்யாஆமாம் யார்? குழப்பமாக இருந்தது. “ஏஷியானெட்டில் லாலேட்டன். கைரளியில் மம்முக்கா” என்றேன்
“ரொம்பதான்” என்றாள்.
குக்கூவில் சில நாட்கள்…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் குக்கூ காட்டுப்பள்ளியால் ஜுலை 20 முதல் 24ம் தேதி வரை நடத்தப்பட்ட “Niyathi-Tools for transformation” நிகழ்வில் கலந்துகொண்டேன். அதைப்பற்றிய எனது அனுபவ பகிர்தலே இந்த கடிதம். குக்கூ காட்டுப்பள்ளி, அதன் மனிதர்கள், அவர்கள் ஆற்றும் செயல்கள் அனைத்து குறித்தும் தங்களின் இணையதளம் வாயிலாகவே அறிந்துகொண்டிருந்தேன். அவர்களின் தயாரிப்புகள் மற்றும் புத்தகங்களை வாங்கி பயன்பெற்றிருக்கிறேன். காந்தி மீயூசியத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ‘கல்லெழும் விதை’ நிகழ்வில்தான் அவர்கள் அனைவரையும் அருகமர்ந்து பார்த்தேன்.
‘நியதி’ நிகழ்வில் 18 முதல் 25 வரையுள்ள வயதினரே கலந்துகொள்ள முடியும் என கண்டும், ஏதோ ஒருஉந்துதலில் விண்ணப்பித்தேன். அழைப்பும் விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையிலிருந்து 4 கி.மீ. வடக்கே சென்றால் புளியனூர் கிராமம் அதன் அருகில் ஜவ்வாதுமலையடிவாரத்தில் குக்கூ காட்டுப்பள்ளி அமைந்துள்ளது. அந்நிலத்திற்கு 20ஆம் தேதி மதியம் 12 மணிக்குசென்று சேர்ந்தேன்.
அகன்று திறந்திருந்த அதன் வாயிலுக்கு உள்ளிருந்து ஓடி வந்தது ஒரு நாய்க்குட்டி- சக்தி (நாங்கள் இட்டபெயர்). அது வாலை ஆட்டியபடியே என்னை மேலும் கீழும் கூர்ந்து பார்த்துவிட்டு உள்ளே வரவேற்று அழைத்துச்சென்றது. மரங்களும், செடிகளும், மலர்களும் சூழ குழந்தைமை மனங்கள் வரைந்த ஓவியங்களை போன்று ஆங்காங்கே முளைத்திருந்தன வாழிடங்கள். அவை உறுத்தலின்றி அந்த சூழலுடன் இயைந்து அதன்பகுதியாகவே இருந்தன. எங்கு திரும்பினும் பட்டாம்பூச்சிகளின் வர்ணஜாலம், அந்த நிலத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் ஓடைஎழுப்பும் வெண்கல கழுத்து மணிச்சத்தம், மலைமேல் மோதி திரும்பி வரும் தென்றலின் தீண்டல், கணத்திற்குள்மாறும் காலநிலை. எந்நேரமும் குதியாட்டம் போட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள், ஒரு கரிய நாய், இருசெவலை நாய்குட்டிகள், சாம்பல் வெள்ளை பூனை, பல வண்ண புறாக்கள், அகவும் தோகை மயில்கள், சாணம்மொழுககப்பட்ட தரைகள், உதிர்ந்து கிடக்கும் பழங்கள், அடுக்கி வைக்கப்பட்ட உருளைக்கற்கள், ஊன்றிநிறுத்தப்பட்ட கல் தூண்கள், இரவில் மிளிரும் நட்சத்திர கூட்டம், ஊர்சுற்றி அலையும் மின்மினிகள், ஓயாமல்ரீங்கரிக்கும் வண்டுகள் அதனுடன் இயைந்து அதன் பகுதியாகவே வாழும் மனிதர்கள் என ஒற்றைபெருநிலையான சூழல் எனவே அதன் தீவிரம் நம்மையும் அதற்குள் கரைத்துவிடுகிறது.
அங்கு குப்பைகளே இல்லையா எனக்கேட்டால், நாம் அந்த நிலத்திற்கு வெளியே கொட்டிக்கொண்டிருக்கும் அனைத்து குப்பைகளும் அங்கும் இருக்கிறது. ஆனால், அவையெல்லாம் அழகும், நேர்த்தியும் கொண்ட பொம்மைகளாகவும், கலை பொருட்களாகவும், பயன்பாட்டு பொருட்களாகவும் உருமாறியபடியே உள்ளன. அங்கே செல்லும்/சென்ற இன்னொரு மனம் இவற்றையெல்லாம் பார்த்து உணர தவறலாம். ஆனால், அதற்கான அகக்கண்களை எனக்கு அளித்தது நீங்களும், உங்கள் எழுத்துகளும்தான். அதற்கு நன்றிகள் கோடி. அந்த நிலத்தில் பல விதமான மனிதர்களும் வாழ்கிறார்கள், பலர் வந்து கூடி கலைகிறார்கள். இருப்பினும், அனைவரும் ஒற்றை ஆன்மாவாக பிணைந்து தங்கள் நோக்கத்தினை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அங்கு நாம் கலை, இலக்கியம், சினிமா, தத்துவம், அறிவியல், தொழில், மருத்துவம், விவசாயம் என மானுட சிந்தனைகள் எதைப்பற்றி வேண்டுமானாலும் விவாதிக்கலாம். அதற்கான எல்லா வாசல்களும் அங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தையும் தாண்டி அவர்கள் முதன்மையாக முன்வைப்பது அர்ப்பணிப்பையும், செயலையுமே. தங்களையே அர்ப்பணித்து ஒரு மாபெரும் லட்சியத்திற்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் சாட்சி மனிதர்களைத்தான் அந்நிலத்தில் சந்தித்தோம்.
அவர்கள் அங்கே நிகழ்த்திக் கொண்டிருப்பது மானுடத்திற்கு மட்டுமான கனவு அல்ல. ஒட்டு மொத்த உயிர்களின் நல்வாழ்வுக்கான கனவு. அந்த நிலத்திற்கு இனம், மொழி, நாடு என்ற எந்த அடையாளமும் கிடையாது. அதனாலேயே அதன் ஆற்றலும் அளப்பரியது. நான் அவர்களின் பெயர்களையும், ஆற்றும் செயல்களையும் பட்டியலிட விரும்பவில்லை. ஏனெனில் அந்த நிலமும், மனிதர்களும்நம் கண் முன்னே சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறார்கள். தேடல் உள்ளவர்கள் அவர்களை தேடி கண்டடைவார்கள். அந்த நிலத்திற்கு சென்று உணர்ந்து வருவார்கள். அந்த நிலம் நிச்சயமாக அவர்களுக்குள்ளும் அதன் விதையை விதைக்கும். அவர்களும் முளைத்தெழுவார்கள்.
நான் இதுநாள் வரை என்னவென்று தெரியாத ஒன்றை தேடி எங்கெங்கெல்லாமோ அலைந்திருக்கிறேன். எங்குசென்று வந்தாலும் நிறைவின்மை மட்டுமே எஞ்சியது. குக்கூ காட்டுப்பள்ளியில் நுழைந்த அக்கணமே, இதுநாள்வரை நான் தேடிக்கொண்டிருந்த நிலம் இதுதான் என்றும், இந்நிலம் காந்தியும், நித்ய சைதன்ய யதியும் கலந்தகலவை என்பதையும் உணர்ந்துகொண்டேன். அங்கு இருந்த ஒவ்வொரு கணமும் மொட்டின் மலர்தலைப்போல நிகழ்ந்து கொண்டிருந்தேன். பசித்து அழுது உருகிக்கொண்டிருக்கும் என்னை, மடியில் ஏந்தி மார்போடு அணைத்து பாலூட்டும் அன்னையென அந்நிலத்தை உணர்ந்தேன்.
குருபூர்ணிமா நாளன்று, என்னை கைப்பிடித்து அந்நிலத்திற்கு அழைத்துச்சென்று இறக்கிவிட்ட தந்தையென உங்களை உணர்ந்தேன். என்வாழ்வில் இதுநாள் வரை நடந்ததனைத்தும் அந்த நிலத்திற்கு சென்று சேர்வதற்காகவே என்று உறுதியா கநம்பினேன். ஐந்து நாட்கள் நடந்த இந்நிகழ்வுக்கு முன்வரைவு, திட்டங்கள் என எதுவும் இருக்கவில்லை. இயற்கை எப்படி அதன் போக்கில் நிகழ்கிறதோ, அவ்வாறே இந்நிகழ்வும் நடந்து முடிந்தது. இன்று எண்ணுகையில் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றைவிட பலமடங்கு ஒத்திசைவோடும், நேர்த்தியோடும் இந்நிகழ்வு இருந்திருப்பது வியப்பையளிக்கிறது.
இந்நிகழ்வில் என்னவெல்லாம் நிகழ்ந்தது மற்றும் கற்றுக்கொண்டோம் என்று கேட்டால் என்னால் வகுத்து கூறிவிடமுடியாது. ஒரு சொல் எப்படி செயலாக மாறியது என்று கண்முன்னே சொல்லியும், செய்தும் காட்டினார்கள். நாங்களும் சிலவற்றை செய்து பார்த்தோம் அவற்றை கருப்பட்டி கடலை மிட்டாய், ராட்டையில் நூல் கோர்தல், மூலிகை சேகரித்து மருந்து காய்ச்சுதல் என்று பட்டியலிடலாம் ஆனால் நான் ஒவ்வொரு நாள் காலையிலும் சமையல் கூடத்திற்கு அருகிலிருந்த அத்தி மரத்திலிருந்து விழுந்து கிடக்கும் ஐம்பது பழங்களையாவது பொறுக்கி எடுத்து வைப்பேன், குரு பூர்ணிமா நாள் விடியலில் ஒரு பழம் கூடதரையில் விழுந்திருக்கவில்லை
இந்த கற்றலை நான் எப்படி வகுப்பது. அங்கு நிகழ்ந்ததை இப்படி சொல்லலாம், அந்நிலத்தில் அவர்களுடன் எங்களை இருக்க அனுமதித்தார்கள், கற்றல் தானாகவே நிகழ்ந்தது. நாங்கள் அந்த நிலத்தில் எங்கு இருந்தாலும், என்ன செய்துகொண்டிருந்தாலும் குறைந்தது இரு குழந்தைகள் மற்றும் ஒரு நாயின் அருகாமையை உணர்ந்தபடியே தான் இருந்தோம். காட்டிற்குள் நடந்து செல்கையில், பாதையில் கிடந் தநத்தையை நாங்கள் அனைவரும் பார்த்துவிட்டு கடந்து செல்ல அதை கையில் எடுத்து பாதையை கடத்தி விட்டசலோ பாப்பா, காற்றை கையில் பிடித்து எறிந்து விளையாடும் ஜூபி பாப்பா, எங்கு சென்றாலும் எஙகளுக்கு வழிகாட்டியாக முன்னால் சென்ற நாய் ஜோர்டான். அவர்கள் தந்த இன்பம் சொல்லில் அடங்காதவை. நான் அவற்றையே அதிஉன்னதமான கற்றலாக நினைகிறேன்.
அனைத்தையும் தாண்டி அந்நிலத்திலிருந்தவர்கள் எங்களிடம் முன்வைத்தது ஒன்றைத்தான், “இயற்கையோடு முரண்படாமல் அதன்முன் பணிந்து உங்களை அதற்கு ஒப்படைத்து செயலாற்றுங்கள். இப்பிரபஞ்சம் உங்களுக்கான அனைத்தையும் கரம் சேர்க்கும்”. இதையே ‘எல்லாம் செயல் கூடும்’ என்ற பிரார்த்தனையாகவும் அவர்கள் முன்வைக்கிறார்கள். அங்குள்ள அனைவரும் அந்நிலம் இன்னும் பத்து வருடத்தில் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுட்டிக்காட்டப்படும் ஒன்றாக மாறி நிற்கும் என்று தீர்க்கமாக நம்பி செயலாற்றுகிறார்கள். நானும் பரிபூரணமாக அதை நம்புகிறேன். அந்நிலத்தின் கனவு அளவுக்கு பிரமாண்டமானதே அது சந்திக்கும் நெருக்கடிகளும். அந்த நிலத்தை உருவாக்கஅனைவரும் தங்கள் உயிராற்றலை செலவு செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.
சஞ்சீவிமலையை தூக்கிய அனுமனாக இருக்க முடியவில்லை என்றாலும், ராமன் இலங்கைக்கு செல்ல பாறைகளைகடலில் போட்டு பாலம் அமைத்து தந்த வானரங்களில் ஒன்றாக இருக்கவேண்டும் என்றுமுடிவெடுத்துக்கொண்டேன். எனவே, நான் எனது பங்களிப்பாக என்னுடைய மாத வருமானத்திலிருந்து ஒரு சிறுபகுதியை அந்நிலத்திற்கு அளிக்க முடிவெடுத்துள்ளேன். ஏனென்றால் நானும் அந்நிலத்தின் ஒரு பகுதியே.
இறுதியாக ஒரு நிகழ்வை சொல்லி முடிக்கிறேன், குரு பூர்ணிமா நாளில் நாங்கள் சுமார் முப்பது நபர்கள்புல்தரையில் பாய்விரித்து வட்டமிட்டு அமர்ந்திருக்க நடுவிலிருந்து அவலும், பழங்களும் பரிமாறப்பட்டது. தட்டுடன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஜவ்வாது மலைக்கு பின்னால் விரிந்திருந்த கருநீல வானின் தாரைகூட்டங்களையும் அதன் நடுவில் வீற்றிருந்த முழுநிலவையும் ரசித்தபடி நிலாச்சோறு உண்டுகொண்டிருந்தோம். அப்போது ஒரு குரல் “மலையின் விளிம்பில் விளக்கு எரிகிறதே!” என்று கேட்க, மற்றொரு குரல் “அங்குமனிதர்களே இல்லையே, எப்படி விளக்கு வந்தது?” என்று வினவிய வேளையில் அந்த விளக்கொளி மெல்லமேலேறியது. அனைவரும் அகன்ற விழிகளில் அதையே கூர்ந்து நோக்கி கொண்டிருக்க, அவ்வொளி இன்னும்சற்று மேலே சென்று ஐந்து கைககளை விரிந்து ஒளியே உடலென ஆகி குழ்ந்தையைப்போல கண்கள்சிமிட்டியது. அப்போது பின்னாலிருந்து வந்த கணத்த குரல் “It’s a rising star” என கூற, சிறிது நேரம் அக்குரல் காற்றில்கரையாமல் அங்கேயே உறைந்து நின்றது. அங்கிருந்த அனைவரும் முகம்மலர, தலையசைத்து, பெருமூச்செறிந்து அக்குரல் எங்கிருந்து வந்ததென ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி
பின்குறிப்பு: ‘நியதி’ நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சகோதரி அபர்ணா காயத்ரி அவர்கள் வரைந்த ஓவியத்திற்குநண்பர் இழ செழியன் கொடுத்த பாரதியாரின் வரிகள் மிக பொருத்தமாக குக்கூ காட்டுப்பள்ளியை அடையாளம் காட்டக்கூடியது. “முப்பது கோடி முகமுடையாள் எனினும் சிந்தனை ஒன்றுடையாள்”
இந்த ஓவியம் குக்கூ காட்டுப்பள்ளியின் ‘விஜய் நோயல் கார்கி’ என்ற ஓவியரின் காபி தூள் பயன்படுத்தி வரையும் நுட்பத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. புகைப்படஙகங்கள் எடுத்து, அதனை எனக்கு அனுப்பிவைத்த காந்திகிராம் மோகன் மற்றும் நோயல் கார்கிஅண்ணா அவர்களுக்கும் நன்றி.
பிரயாகையின் துருவன் – இரம்யா
துருவனில் தொடங்கி துருவனில் முடியும் ஒரு நாவலாக பிரயாகை அமையப் பெறுகிறது. ”சொற்கனல்” பகுதி வாசிப்பிற்குப் பின்னர் ஒவ்வொரு நாளும் எழமுடிந்த நேரமெல்லாம், துருவன் தெரியும் அதிகாலை, அதி-இரவு நேரத்தில் துருவனை நோக்கி மனதுருகிக் கொண்டிருந்தேன். நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருப்பது சிறுவயதிலிருந்தே பிடிக்குமெனக்கு. அதனுடன் பேசிக் கொண்டிருக்கும் ஓர் பித்து வாய்க்கப்பெற்றிருக்கிறது. புதிதாக எங்கு சென்றாலும் அங்கு தங்க நேரும் சமயங்களில் முதலில் நான் காண்பது வானைத்தான். எனக்கு அணுக்கமான மூன்று நட்சத்திரங்களைக் கண்டதும் ஒரு அமைதி கொள்வேன். அது தவிர அதிகாலையும் அந்தி மாலையும் மேற்கு வானில் தெரியும் வெள்ளியான சிரஸை மிகப்பிடிக்குமெனக்கு. அவர்கள் இருவருமே பொறாமை கொள்ளுமளவு நான் துருவனை நாவலில் ரசித்திருந்தேன் உங்களின் வார்த்தையின் துணை கொண்டு.
”வடமீனாக எழுந்த சிறுவனை வணங்குக. அவன் அடைந்த நிலைபேற்றையே ஊழ்கத்திலமர்வோர் ஒவ்வொருவரும் இலக்காக்குக. கன்னியர் அவன் பெயர் சொல்லி கற்பில் அமைக! கற்றறிந்தோர் அவனை எண்ணி விவேகத்தில் அமைக. படைக்கலம் கொண்டோர் அவனைநோக்கி விழிதூக்கி அறம் உணர்க!” என்ற உங்களின் வரி கொண்டு தான் அவனைக் கண்டடைந்து முதலில் தொழுதேன்.
வானத்து அதிசயக் காட்சிகள் தோன்றுந்தோறும் பிரமித்து “நான் காணும் இந்தக் காட்சிகளை ஏதோவோர் நிகழ்த்தகவில் என் முன்னோர் கண்டிருப்பார்களா?” என்று நினைத்ததுண்டு. ஆனால் வாய்ப்பில்லை என்றும் தோன்றும். ஒவ்வொரு நாளும் வானம் வேறு வேறு உடையை உடுத்திக் கொள்கிறது. நட்சத்திரங்கள் வேறு வேறு காலத்தினின்று புன்னகை செய்கின்றன. அதனால் தான் எத்தனை முறை கண்டாலும் வானம் எனக்கு சலிப்பூட்டுவதில்லை.
ஆனால் துருவனை, நிலைபெயராதவனை, காலத்தில் நின்று, மானுடர்களுக்கு “காலம்” எனும் பரிமாணத்தை உண்டாக்கியவனை, நான் கண்ட அதே அவனை, எனக்கு முன் அதைக் கண்டறிந்த காலத்திலிருந்து கண்டுகொண்ட மானிடனைப் போலவே நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே சிலிர்ப்பைத் தந்தது. என்னைப்போல எனக்குப் பின்னும், இன்னும் இந்த மானுடமே நுரைத்துக் குமிழ்ந்து வெடித்தாலும் எஞ்சியிருப்பவனை வணங்கினேன்.
”ஒரு கண்ணிமைப்பால் அடையக்கூடுவனவற்றில் என்னைப்போன்றவர்களின் சித்தம் தங்காது.” என்று துருவன் சொல்லும்போது நான் இந்தப் புவியில் அடைய வேண்டியவை என நான் வகுத்துக் கொண்ட யாவும் என்னை விட சிறு குமிழிகளாக நின்று என்னைப் பார்த்து சிரிப்பது போலத் தோன்றியது. ஒன்றில் அமைந்து விட்டால் அதையே பெரியதென நினைத்து ஓடி அடைந்து விட்டால் கிடைக்கும் வெறுமையை நினைத்துப் பார்த்தேன். எதிலுமே அமைந்து விடாமல் செயல்! செயல்! என்று முன்னோக்கி செல்ல வேண்டும் என்று சென்று கொண்டிருக்கும் உங்களை நினைத்துக் கொண்டேன். “ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக!” என்பதை மீண்டும் கண்டடைந்தேன். மானுடர்கள் கை கொள்ள வேண்டியது அதுவாகத்தானே இருக்க முடியும்.
துருவனை வைத்து ஞானத்தைப் பற்றிச் சொன்ன வரிகள் மேலும் திறப்பைத் தந்தன ஜெ. “எந்த அறிதலும் அறியப்படும் அத்தருணத்துக்கு மட்டும் உரியதே. நிலையான ஞானம் என்பது விண்ணில் இல்லை என்பதனால் மண்ணிலும் இயல்வதல்ல. இதோ இந்த ஒற்றைவிண்மீன் மட்டும் நிலையானது என்றால், இதை வைத்து நாம் வகுத்து அறியும் ஞானமும் இதைப்போல நிலையானதாகவே இருக்கும். இது காலத்தாலும் இடத்தாலும் மாறாதது என்றால் நாம் உருவாக்கும் ஞானமும் எதிர்காலத்தின் முடிவின்மை வரை நீடிக்கக்கூடியதே” என்று மானுடம் உணர்ந்த தருணம் நிலையான ஞானத்தைப் பற்றிய திறப்பைத் தந்தது. சங்க காலம் தொடங்கி இன்று வரை தாம் கண்ட நெறிகளை சான்றோர் பின் வரும் தலைமுறைகளுக்காக எழுதி வைத்திருக்கின்றனர். வாய் மொழியாக, பழமொழியாக, கதைகளாக, திருவிழாவாக, சடங்காக என அவை நம்மைப் பின் தொடர்ந்து வருகின்றன. ஆனால் இன்று இங்கு இலக்கியத்தில் ஒரு நவீன வாசகனாக நின்று கொண்டே அவற்றை இக்காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல வாசிக்க வேண்டியிருக்கிறது. இங்கிருந்து இந்தக்கணத்துக்காகவே நான் சிந்திக்கிறேன். ஞானம் நிலையானது என்பதையும் உணர்கிறேன்.
”அன்றுவரை அந்தந்தக் கணத்துக்காகவே மானுடம் சிந்தித்தது. அந்நாளுக்குப்பின் எதிர்காலத்துக்காகச் சிந்தித்தது. கோடிச்சிதல்கள் சேர்ந்து கட்டும் புற்று போல ஞானம் துளித்துளியாகக் குவிந்து வளர்ந்தது. பேருருவென எழுந்து பிரம்மத்தை நோக்கி கைநீட்டியது.” என்ற வரிகளை அணைத்துக் கொள்கிறேன். நீங்கள் எப்பொழுதும் சொல்லும் எறும்புப் புற்று உவமை நினைவில் எழுந்து ‘நம்மால் அறிய முடியாத மாபெரும் செயல் திட்டத்தின் சிறுபகுதிதான் நாம்’ என்ற வரியைக் கொண்டு என்னை நிறைத்தது.
பிரயாகைசொற்கனல் பகுதி துருவனை அறிமுகப்படுத்தியபின் வரும் பகுதிகளில் துருவன் பிரயாகையின் மாந்தர்களை நிலைத்து நின்று பார்த்துக் கொண்டிருப்பவனாய், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில் அமைபவனாய் காட்சியளிக்கிறான்.
துரோணர் தன் மாணாக்கர்களுக்கு துருவனை அறிமுகப்படுத்தி, “அதோ தெரிகிறான் துருவன். பரம்பொருளுக்கும் கிடைக்காத நிலைபேறு அவனுக்குக் கிடைத்தது என்கிறார்கள் ரிஷிகள். அவனை மையமாக்கியே வானமும் பூமியும் இயங்குகின்றன. ஒளிமிகுந்த பால்வழியில் விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்திருக்கிறான். யோகியர் ஒவ்வொரு மாதமும் துருவனை பார்த்தாகவேண்டும். கற்புள்ள மங்கையர் ஒவ்வொரு வாரமும் அவனைப் பார்க்கவேண்டும். படைக்கலமேந்திய வீரன் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்கவேண்டும்.” என்று கூறுகிறார். துரோணர் அர்ஜூனனைப் பிரியும் ஒரு தருணம் நிலையழிந்தவனாக பிரிவாற்றவியலாமல் தவிக்கிறான். அவனுடைய அன்பை உணர்ந்தவனாக துரோணர் அவன் விடை பெறுகையில் ”இனி உன்னுடன் நான் இருக்கமாட்டேன். எப்போதும் என் வடிவாக துருவன் உன்னுடன் இருப்பானாக!” என்கிறார்.
அஸ்தினாபுரியின் இன்னொரு ஆசிரியரான கிருபர் சொல்லும்போது “வடமீன் பகலிலும் தெரியும் நாளில் குருகுலநிறைவு கொண்டாடப்படவேண்டும் என்பது ஆன்றோர் முறை. இன்று அதோ விண்ணில் துருவன் தெரிகிறான். ஞானம் என்பது நிலைபெறுநிலை. துருவன் அருளால் அது கைகூடுவதாக! ஆசிரியரையும் துருவனையும் வணங்கி அருள்கொள்ளுங்கள்” என்று வாழ்த்துகிறார். இங்ஙனம் ஆசிரியர் வாழ்த்தும் ஒளிப்புள்ளியாக துருவன் அமையப் பெறுகிறான்.
துருவனை நோக்கும் போதெல்லாம் நம்மை வந்து அழுத்தும் சொற்கள் தருமனுடையவை. துருவனை நினைவு கூறும்போதெல்லாம் பாண்டுவும் தருமனும் வந்து புன்னகைக்கிறார்கள். அர்ஜூனனிடம் தருமன் கூறும்போது “அறத்தில் வாழ நினைப்பவன் முடிந்தபோதெல்லாம் துருவனைப் பார்க்கவேண்டும் என்பார் என் தந்தை. அறக்குழப்பம் வரும்போதெல்லாம் தனித்துவந்து வான் நோக்கி நின்றால்போதும், துருவன் அதைத் தெளியச்செய்வான் என்றார்.” என்று துருவனை அறத்தின் செல்வனாக தருமன் நமக்குக் காட்டுகிறார்.
பத்ரர் கூறும்போது “அலையடிக்கும் நெஞ்சுக்கு துருவன் நிலையை அளிப்பான் என்பார்கள். ஆனால் அலையடிக்கும் நெஞ்சு கண்களை அலையடிக்கச் செய்கிறது. எதையும் நிலையாக பார்க்கவிடாமலாக்குகிறது.” என்று துருவனை மறைக்கும் கண்ணைப்பற்றிச் சொல்கிறார். துருவனைப் பார்க்கத் தேவையான நிலையை நமக்குச் சொல்கிறார்.
அவமானங்களுக்கு ஆட்பட்டு உக்கிரமான நிலையை அடைந்த துருபதன் துருவனை நினைத்துக் கொள்ளும் தருணம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது. தெளம்ரர் சொன்ன வரிகளாக “துருவனை தனிமையின் ஒளிப்புள்ளி என்று சொல்வேன். இத்தனை பெரிய இருள் சூழ்ந்திருக்கையில்தான் அந்தத் தனிமையின் ஒளியின் அழுத்தம் கூடுகிறது. தனித்திருப்பதன் குளிர். சொல்லின்மையின் எடை.” நினைவுகூர்கிறார். ”வானில் தனித்திருப்பது எப்படிப்பட்டது? தெரியவில்லை. ஆனால் மண்ணில் தனித்திருப்பதைக் கொண்டு அதைப்புரிந்துகொள்ளமுடியும்.” என்று தன் தனிமையை துருவனால் நிறைத்துக் கொள்கிறார்.
நாவலின் இடையில் மதுக்கோப்பையை ஏந்திய கிழவர் கூறும்போது “திசைகளில் முதன்மையானது வடதிசை. மானுடன் முதலில் வகுத்த திசை அதுவே. அங்கேதான் விண்ணின் மாறாத மையப்புள்ளியாக துருவன் நிலைகொள்கிறான். வடதிசையை ஆள்பவர் எங்கள் தெய்வம் குபேரனே. வணிகர்களே, ஒன்றை அறிந்துகொள்ளுங்கள். என்றும் மாறாத நிலைபேறுள்ளவர் இருவரே. துருவனும் அவன் திசையை ஆளும் குபேரனும்.” என்கிறார்.
யாதவஅரசி அஸ்தினாபுரியின் பேரரசியாக இருப்பதை ஒப்பு நோக்கும் இடத்தில் இவ்வாறு சொல்லப்படுகிறது ”அவர்கள் பேரரசி என்ற பெயரைத்தான் அறிகிறார்கள். அதனுடன் இணைந்துள்ள பெரும் புராணக்கதைகளை அறிகிறார்கள். அந்த அரசி ஒரு யாதவப்பெண் என்பதை அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடிவதில்லை. அதில் வியப்பதற்கென்ன உள்ளது என்று குலப்பாடகர் களமர் சொன்னார். மண்ணில் பிறந்த துருவன் விண்ணுக்கு மையமாக அமைந்திருப்பதையும்தான் காண்கிறோமே” என்று குந்தி துருவனின் சிறப்புக்கு ஒப்பு நோக்கப்படுகிறார்.
விதுரர் அலைக்கழிந்தவராக இருக்கும் தருணத்தின் போது துருவனை நோக்குகிறார். ”விழிகளை விலக்கவே முடியவில்லை. ஆவல், அச்சம், அமைதியின்மை ஏதுமற்ற நிலைப்பு. தான் மட்டுமே தன்னுள் நிறைந்திருப்பதன் முழுமையான தனிமை.” என்று நினைத்துக் கொள்கிறார்.
இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளில், ஒவ்வொருவரின் நினைவாக, நிலைகொள்ள முடியாத உணர்ச்சிகளை போக்குபவனாக, நிலை பெயராதவனாக துருவன் நின்று நாவலில் ஒளிர்கிறான்.
”நிலைபெயராதவன்” என்ற சொல் எனக்கு கண்ணனை நினைவுபடுத்தியது ஜெ. தன் நிலைபெயராமையை கணந்தோறும் உணர்ந்தவன் அவனே தான். ஒளிரும் புன்னகை ஒன்றாலேயே யாவற்றையும் எதிர்கொள்கிறவன். விதுரரைக் கடிந்து கொள்ளும்போதும் அந்தப் புன்னகை இருக்கிறது. போருக்கான திட்டங்களை வகுக்கும் போதும் அந்தப் புன்னகை இருக்கிறது. அர்ஜூனன் அந்தப் புன்னகையை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நோக்கிக் கொண்டிருக்கிறான். கண்ணனின் மேலான உச்ச கட்ட வெறுப்பிலிருந்து அவனை அந்தப் புன்னகை வழியாகத்தான் விதுரர் கண்டடைகிறார். ”அவன் புன்னகையை கண்முன் கோட்டைச்சுவரை நிறைத்து வரையப்பட்ட பேரோவியம் போல கண்டார். ஒளிமிக்க உதயம் போல. அல்லது அலையடிக்கும் ஆழ்தடாகம் போல. உள்ளிழுத்து மூழ்கடித்துவிடும் புன்னகை.” என்று அந்தப் புன்னகையை தரிசிக்கிறார்.
கர்ணன் அந்தப் புன்னகையை தரிசிக்கும் போது திகைக்கிறான். “இல்லாமலிருக்கக் கற்றவன் என்று எண்ணம் தோன்றியதுமே சித்தம் பல்லாயிரம் காதம், பல்லாயிரம் ஆண்டுக்காலம் கடந்து பின்னால் விரைந்தோடி அந்த விழிச்சந்திப்பை மீண்டும் அடைந்து திகைத்து நின்றது. யாதவனின் விழிகளின் ஆழத்தில் ஒரு புன்னகை இருந்தது. இருண்ட குளிர்ச்சுனையின் அடியில் கிடக்கும் நாணயம்போல. என்ன சொல்கிறான்? எதையும் சொல்லவில்லை. சொல்லுமளவுக்கு நெருங்கவில்லை. ஒரு சொல்லுக்கு அப்பால்தான் நின்றிருக்கிறான். எதையோ அறிந்திருக்கிறான். எதை? இங்கிருக்கும் எவரும் அறியாத ஒன்றை. நிகழும் கணத்தில் நின்று நிகழவிருக்கும் கணத்தை கண்டவனின் விழியொளி.“ என்று கர்ணன் வியப்படையும் அந்தப் புன்னகை நம்மை திகைக்கச் செய்கிறது. கர்ணன் ஐந்தாவது கிளியை அம்பெய்ய முடியவில்லையெனினும் பல அவச்சொல்லுக்கு அப்பால் ஒரு முது சூதனின் வாழ்த்தொலி எழுகிறது. ”கர்ணன் திரும்பி அப்பால் தெரிந்த இளைய யாதவனின் முகத்தை பார்த்தான். அந்தப்புன்னகை அங்கிருந்தது. அறிந்தது. அன்னையின் கனிவென குளிர்ந்தது.” என்ற வரிகளில் அந்தப் புன்னகை கலங்கச் செய்கிறது.
இறுதியாக கேசினி அன்னையை வணங்கி வெளிவந்தபின்பு திரெளபதி தன்னை மீறி அழுகிறாள். அந்த அழுகையிலேயே அவள் மணத் தன்னேற்பில் எடுக்கப்போகும் இறுதி முடிவு விளங்கி விடுகிறது. அதன்பின் கண்ணனின் கண்களல்லாமல் அவனின் மயிற்பீலியே அவளைச் சந்திக்கிறது. மனத்தன்னேற்பில் கண்ணன் கிந்தூரத்தை எடுக்கும் போது அவள் அடைந்த ஒரு அலைபாய்தல், நிலைகொள்ளாமையுங்கூட மேலும் அவள் முடிவு என்ன என்பதை உறுதிபடுத்தியது. ஐந்தாவது கிளியான கேசினி முன்பு கண்களை மூடி ஏதோ முடிவெடுத்தவனாக கிருஷ்ணன் தன் கிந்தூரத்தை வைத்துவிட்டு அமர்ந்து கொள்கிறான். முதன்முறையாக திரெளபதியின் விழிகள் அர்ஜுனனின் விழிகளை சந்தித்தபோதே அன்னை கணிந்து கங்கையாக மாறுவதற்கான பிரயாகை உருவாகப் போவது புரிந்து விட்டது.
“நிலைகொள்ளலும் அலைபாய்தலும் இரு பக்கங்களாக அமைந்ததே முழுமை என்று உணர்க. செயலின்மையும் செயலூக்கமும் ஒன்றை ஒன்று நிறைப்பதே லீலை” என்ற வரிகள் வந்து முன் நின்று துருவனையும்-கங்கையையும்; கண்ணனையும்-திரெளபதியையும் ஒப்பு நோக்கச் செய்தது. ”அவளுக்குள் நின்றிருக்கிறது நிலைமாறாத வடமீன் என்றறிக” என்று கங்கைக்கு சொன்ன வரிகளை நினைவு கூர்ந்தேன்.
ஆறுகள் ஒன்றோடொன்று கலக்கும் புள்ளியை பிரயாகை அல்லது ஆற்றுச்சந்தி என்கிறோம். அப்படி பாகீரதி, அலக்நந்தா, மந்தாகினி, பிந்தர், தெளலிகங்கை ஆகிய ஆறுகளுடன் கலந்து முறையே தேவ, ருத்ர, கர்ண, விஷ்ணு, நந்த் ஆகிய பஞ்சபிரயாகைகளைத் தோற்றுவித்து கங்கையாக மண்ணை செழிப்புரச் செய்யும் அன்னையைப் பற்றிய புனைவையல்லவா பிரயாகை நாவலாக வடித்திருக்கிறீர்கள். பல யுகங்கடந்து நிலைபெயராமை நிகழாமை என்றுணர்ந்த துருவன் பரம்பொருளிடம் தன் இருப்பை உணரச் செய்ய மன்றாடுகிறான். அதன் பொருட்டு கொந்தளிப்பையும் பாய்ச்சலையும் துள்ளலையும் அலைகளையும் ஒளிர்தலையும் கொண்டவளாக பிறப்பெடுத்தவளே கங்கை.
“நூறு மகாயுகங்கள் நீ உன் காமத்தில் அலையடிப்பாய். கர்மத்தில் சுழல்வாய். கருணையில் கனிவாய். கன்னியும் அன்னையுமாய் முடிவிலாது நடிப்பாய். உன் சுழற்சி முடிவுறும்போது மீண்டும் ஒரு துளியாக மீண்டு பாற்கடலில் உன்னை அழிப்பாய். ஓம் அவ்வாறே ஆகுக” என்று கூறி ஆசியளித்த விஷ்ணுவிடம் ”என்னை இழந்துகொண்டே செல்லும் அப்பெரும்பயணத்தின் இறுதியில் எப்படி நான் இங்கு மீள்வேன்?” என்று கங்கை அன்னை வினவுகிறாள்.
“அவன் பெயர் துருவன். அழியாதவன். பெருவெளி நிலைமாறினும் தான் மாறாதவன். எப்போதும் உன்னை நோக்கிக்கொண்டிருப்பவன் அவன். நீ அவனை நோக்கிக்கொண்டிரு. நிலைகொள்ளாமையே நீ. உன் நிலைபேறென அவனைக் கொள்!” என்ற வரிகளின் வழி துருவனை முதலில் சந்திக்கிறாள் கங்கை. அவனை வணங்கி “மூத்தோனே, என் சஞ்சலங்களில் துணைநிற்பாயாக. என் வழிகளில் நான் திகைக்கும்போதெல்லாம் உன் விழி வந்து என்னைத் தொடுவதாக.” என்று கூறி பஞ்சபிரயாகையோடிணைந்து கங்கையாகிறாள்.
கன்னியாக துள்ளலுடன் இருந்த திரெளபதி ஐவரை மணந்து கொற்றவையாக மாறும் ஒரு தருணத்தில் துருவனின் காட்சியோடு தான் அத்தியாயம் முடிகிறது. என்றும் நிலை கொள்ளாதவளாக அமையப் பெறும் திரெளபதிக்கு துருவனாக அமையப் பெறப் போவது கண்ணனாகவே இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டேன். பிரயாகை நாவலின் ஒப்பற்ற நாயகியாக கங்கை-திரெளபதி –ம் கதையின் நாயகனாக நிலைபெயராதவனாகிய துருவன்-கண்ணன் -ம் அமையப் பெறுகிறார்கள்.
என் வரையில், நான் காணும் துருவனில் அமையப் பெறுவது நீங்கள் தான். உங்கள் சொற்கள் தான். துருவனைக் காணும்போதெல்லாம் உங்களின் சொற்கள் என் முன் வந்து நிற்கிறது. நாவல் எழுதி முடித்த பின்னர் அதிலிருந்து நான் வெளிவந்து விடுவேன் என்றும் “அது நானல்ல” என்று நீங்கள் சொல்வதையும் என்னால் இன்று முழுதுணர முடிகிறது ஜெ. ஏனென்றால் நான் துருவனில் தரிசிப்பது வெண்முரசு எழுதும்போது இருந்த ஜெ –வை தான். நான் உரையாடி சிலாகித்திருப்பது அவருடன் தான். நீங்கள் எழுதிக் கொண்டிருந்தபோதும், நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும்போதும், இனி எப்போதும், தன் நிலைபெயராமையை உணர்ந்து கொண்டு நிலைபெயராமல் தானே துருவன் அமர்ந்து கொண்டிருந்திருப்பான். காலமே அற்றவனும் பிறிதென ஏதுமற்றவனும் பிரம்மமே பற்றுக்கோளாகக் கொள்பவனும், மாயையும் அளப்பவனுமாகிய அவனை வணங்குகிறேன். ஓம்! அவ்வாறே ஆகுக!
பிரேமையுடன்
இரம்யா.
***
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

