Jeyamohan's Blog, page 9
November 18, 2025
தக்ஷசிலா பல்கலை கௌரவ முனைவர் வழங்கும் விழா இன்று.
About TAKSHASHILA
தட்சசிலா பல்கலைக் கழகம் எனக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கவிருக்கிறது. விழா நாள் நவம்பர் 19. மதியம்.
விருந்தினர்கள்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற லெய்மா ஆர் போவே. பிஜி தீவுக்கான துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி. என்னுடன் பி.டி.உஷாவும் கௌரவ டாக்டர் விருது பெறுகிறார்.
விழாவில் கலந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
கல்வித்துறையிலிருந்து ஒரு கௌரவம்நம்முள் வாழும் நஞ்சு
உலகின் பல நாடுகளில் பேரழிவுகளை உருவாக்கியது இனவாத அரசியல். பலநாடுகளில் இன்றும் உள்நாட்டுப்போர்களை உருவாக்கி சாவுகளையும் பஞ்சங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. அதெல்லாம் இங்கே வராது என நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் அனைவரிலும் கொஞ்சமேனும் இனவாதம் உள்ளது. ஒவ்வொரு நாளும் இனவாத அரசியலை நான் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த மனநிலை உண்மையில் என்ன?
இயற்கையும் நம் குழந்தைகளும்
அன்புள்ள ஜெ,
நான் ஓர் ஆசிரியை. இலக்கியவாசிப்பும் உண்டு. ஒரு முறை என்னுடைய மாணவிகளை ஒரு கானுறை முகாமுக்கு அழைத்துச்சென்றேன். எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அவர்கள் மிக ரசிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு செல்போன் சிக்னல் இல்லை என்ற மனக்குறை. பலருக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. அவர்கள் விரும்பும் சாப்பாடு விரும்பியபடி கிடைக்கவேண்டும் என்று மட்டும்தான் நினைத்தார்கள். திரும்பத் திரும்ப அதையே பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் கூட சிக்கன் இல்லாமல் சாப்பிடமாட்டேன் என்று ஒரு 16 வயதுப்பெண் முழுநாளும் பட்டினியாகவே அழுதுகொண்டிருந்தாள். கூடாரத்திலே தங்கமாட்டேன், தனி அறையும் தனி படுக்கையும் வேண்டும் என்று பல பெண்கள் அடம்பிடித்தார்கள்.
உண்மையைச் சொன்னால் 36 பெண்களுமே வசதிகளைப் பற்றி மட்டுமே பேசினார்கள். அந்த அற்புதமான காட்டையும் இயற்கையையும் ஒரே ஒரு பெண் கூட ரசிக்கவில்லை. சாப்பாடும் அந்த மலவாழ் மக்கள் அற்புதமாகச் சமைத்து தந்தார்கள். அந்த சாப்பாட்டை குறைகூறி அப்படியே தூக்கி கொட்டினார்கள். இந்த மக்கள் எல்லாம் குளிக்காமல் இருக்கிறார்கள், நாற்றமடிக்கிறது என்று ஒரு பெண் சொன்னாள். அந்தப் பெண்கள் வசதி போதவில்லை என்று பெற்றோரிடம் புகார் சொன்னார்கள். பெற்றோர் வந்து என்னைப்பற்றி புகார் சொல்லி திட்டினார்கள். இதுதான் இந்தியக்குழந்தைகள் இன்றைக்கு இருக்கும் நிலை.
இப்போது என் பள்ளியில் கானுறைப்பயணம் நிகழ்கிறது. எல்லா வசதிகளுடனும் நிகழ்கிறது. பிள்ளைகள் சாப்பாடு கொண்டுவரலாம். உயர்தர உணவு அங்கே நேரிலும் கொண்டுவந்து பரிமாறப்படும். செல்பேசி சிக்னல் உள்ள இடம் மட்டுமே தேர்வுசெய்யப்படுகிறது. அங்கே போய் தீமூட்டி, சிக்கன் சாப்பிட்டு, பாட்டு போட்டு நடனமாடுகிறார்கள். அதைத்தான் ரசிக்கிறார்கள்.
என் பெயர் வேண்டாம்
எஸ்
அன்புள்ள எஸ்,
எங்கள் முகாமுக்கு வந்து, இரண்டு நாட்கள் அசைவம் இல்லாமல் இருக்க முடியாது என்று சொல்லி அடம்பிடித்துக் கிளம்பிச்சென்ற குழந்தைகள் உண்டு. ஒரு 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை வசதிகளுக்காக அடம்பிடிக்கிறது என்றால், தன் வசதியான இடத்திற்கு வெளியே செல்ல மறுக்கிறது என்றால் அதற்கு அடிப்படையில் ஏதோ சிக்கல் உள்ளது, அது சீரமைக்கப்படவேண்டும். ஒரு குழந்தையின் இயல்பான உள்ளம் புதியவற்றை நோக்கி (அந்தப்புதுமை எதுவாக இருந்தாலும்) பாய்ந்து சென்றுகொண்டேதான் இருக்கும். ஆரோக்கியமான குழந்தை வசதியான படுக்கைக்குப் பதில் இன்றைக்கு வெறுந்தரையில் படுப்போம் என்று சொன்னால் அதை செய்துபார்க்கவே விரும்பும்.
மேலைநாடுகளில் பள்ளிகளிலேயே பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்கிறார்கள். காட்டுக்குள் சென்று தாங்களே குடிலமைத்துக்கொண்டு, தாங்களே சமைத்துச் சாப்பிட்டு வாழ பயிற்சி அளிக்கிறார்கள். இப்போது ஆரம்பப்பள்ளியிலேயே அந்தப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களின் கல்லூரிக் கல்வியிலேயே தன்னந்தனியாக அறியாத நாட்டுக்குக் கிளம்பிச்சென்று அங்கே வாழ்வது, அங்கே மக்களை திரட்டி ஆய்வு செய்வது என்பவை கற்பிக்கப்படுகின்றன. ஆப்ரிக்காவுக்கு, போரும் இனக்கலவரமும் நிகழும் நாட்டுக்கு கிளம்பிச்செல்கிறார்கள் 20 வயது பெண்குழந்தைகள். அங்கே அந்த உணவை சாப்பிட்டு, வெறுந்தரையில் படுக்கிறார்கள். நாம் நமது பிள்ளைகளை இளவரசிகளாக, இளவரசர்களாக வளர்க்கிறோம்.
காரணம், நம்முடைய நடுத்தரவர்க்க வாழ்க்கை. இங்கே வசதியானவர்களில் இரண்டுவகையான மக்களே உள்ளனர். நடுத்தர, கீழ்மட்டத்தில் இருந்து உயர்நடுத்தர வாழ்க்கைக்கோ அல்லது அடுத்த கட்ட வாழ்க்கைக்கோ வந்தவர்கள். அல்லது பரம்பரையாக பணம் வைத்திருப்பவர்கள். இங்கே உள்ள பரம்பரைப் பணக்காரர்கள் பழைய மன்னர்கால மிதப்பில் இருப்பவர்கள். சுகபோகம் என்பது மட்டுமே வாழ்க்கை. அடிப்படை அறிவுத்தேடல், அடிப்படை நாகரீகம் இரண்டுமே பெரும்பாலும் இருப்பதில்லை. ஒருசாரார் பணவெறிக்குள் செல்வார்கள். எஞ்சியோர் போதையில் அழிவார்கள். மேலே வந்த வசதியானவர்கள் இந்த பிறவிச்செல்வந்தர்களை நகல்செய்வதிலேயே பெரும்பாலும் குறியாக இருப்பார்கள். அறிவுத்தேடல் என்பதற்கு அவர்கள் வாழ்க்கையில் இடமில்லை. தாங்கள் கஷ்டப்பட்டமையால் தங்கள் பிள்ளைகள் இளவரசர்கள், இளவரசிகளாக வளரவேண்டும் என நினைப்பார்கள். அப்படி வளர்க்கிறார்கள்.
பெரும்பாலும் இப்படித்தானிருக்கிறார்கள். இவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இந்தக் காலம் மாறும் என நாம் எதிர்பார்க்கவேண்டியதுதான். நம் அக்கறை மிகச்சிறுபான்மையினரான பெற்றோருக்காவது தங்கள் குழந்தைகளுக்கு அறிவுலகை, இயற்கையை அறிமுகம் செய்யவேண்டும் என்னும் ஆர்வமிருக்கவேண்டும் என்பதில்தான். அவர்களின் குழந்தைகளில் ஒரு சிறுபகுதியினருக்கும் அந்த ஆர்வம் கடத்தப்பட்டிருக்கும். அவர்களை மட்டுமே நாம் கருத்தில் கொள்கிறோம், அவர்களுக்கான ஓர் இடத்தை உருவாக்குவது பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோம். இந்தியச் சூழலில் நாம் காலத்தில் கொஞ்சம் முன்னால் நகர்ந்திருக்கிறோம். ஆகவே நாம் ஒரு சிறு குழு மட்டுமே.
ஜெ
வீராயி- முதல் தலித் இலக்கியம்
தமிழ் ஒளி எழுதிய குறுங்காவியம். ஒரு தலித் பெண்ணை பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆகவே தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பு என்றும் கொள்ளத்தக்கது.
வீராயி
வீராயி – தமிழ் விக்கி
‘Indian English writing is very inferior…’: Author Jeyamohan on language, Salman Rushdie!
In this interview, he moves seamlessly from the deeply personal to the grandly philosophical. He explains why he blends fiction and raw autobiography, articulates a fierce and unapologetic critique of Indian English literature, and reveals the spiritual and political vision that drove him to re-imagine one of India’s foundational texts.
‘Indian English writing is very inferior…’: Author Jeyamohan on language, Salman Rushdie (
How are developing nations facing devastation?
நியாயகுசுமாஞ்சலி நூல் பற்றிய உங்கள் காணொளியை பார்த்தேன். சுருக்கமான, ஆனால் மிகச்செறிவான உரை. அதில் நியாயவியலின் படி பிரம்மம் (கடவுள்) உண்டு என்பதற்கான தர்க்கங்களைக் கண்டேன். நான் நாத்திகன். ஆனால் இந்த நியாயத்தர்க்கங்கள் ஆச்சரியமளிக்கின்றன.
நியாயகுசுமாஞ்சலி
I wanted to share my thoughts on the video you posted about your trip to Egypt. When a country begins to develop, it often faces a surge in issues like racism, linguistic divides, religious tensions, and other forms of separatism.
How are developing nations facing devastation?
November 17, 2025
Manasa Book Club, Chennai.
Hi Sir,
Hope you’re doing well.
Manasa Publications has launched the ‘Manasa Book Club’ — a monthly gathering for readers and writers. The meet will be on the last Sunday of every month at our office in Chennai. Through this initiative, we hope to build a community of literary enthusiasts in Chennai. Those interested can reach out to us by email
at connect@manasapublications.com
or via WhatsApp at +91 7305567808.
Venue:
Manasa Publications
Flat No: 2, Srinivas Apartments,
Gandhi Nagar 2nd Main Road,
Adyar, Chennai – 600020
Time: 10:00 AM – 12:00 PM
Agenda for 2025:
November: Everything the Light Touches by Janice PariatDecember: Childhood Friend by Vaikom Muhammad BasheerRegards,
Kirupa
Manasa Publications
People interested in learning about these books and engaging in discussion can participate.
மானசா பதிப்பகம், ‘புக் கிளப்’, அலுவலகத் திறப்பு
தக்ஷசிலா பல்கலையின் மதிப்புறு முனைவர் பட்டம்
தமிழ் எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் தமிழ்நாட்டுக் கல்வித் துறையில் இருந்து கௌரவங்கள் கிடைப்பது இயல்பானதாகவும், தகுதி அடிப்படையில் ஆனதாகவும் பெரும்பாலும் இல்லை என்பதே உண்மை. அதற்குக் காரணம் தமிழ் கல்வித்துறையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள், அல்லது குறைந்தபட்சம் ஏதேனும் முறையில் இலக்கியத்துடன் தொடர்பு கொண்டவர்கள் மிக மிகக் குறைவானவர்கள் என்பதுதான்.
ஏனென்றால் தமிழ்க்கல்வித்துறை பெரும்பாலும் தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்தது. தமிழகத்தில் பண்பாடு, இலக்கியம் சார்ந்த கல்வி முழுமையாகவே தேக்கமடைந்து பொருளற்றதாக ஆகியுள்ளது. இன்றைய கல்வித்துறையில் இருந்து பண்பாடு, இலக்கியம் சார்ந்து குறிப்பிடும்படியான ஆளுமைகள் ஒரு சிலர் தவிர எவரும் கண்களுக்குப் படவில்லை. வரலாற்றாய்விலேயே கூட சென்ற தலைமுறையில் இருந்த அறிஞர்களுடன் ஒப்பிடும் அளவுக்குப் பெரிய ஆளுமைகள் இல்லை. அதற்கு அரசுகள் பண்பாட்டுக்கல்வியை புறக்கணிப்பது, கல்லூரி ஆசிரியர்ப்பணியில் தகுதியை விட லஞ்சம் முக்கியத்தகுதியாகக் கருதப்படுவது என்று பல காரணங்கள் உள்ளன.
பொதுவாகக் கல்வித்துறை இலக்கியத்தை இலக்கியத்தை ஆய்வுக்கான கச்சா பொருள் மட்டுமாகவே அணுகுகிறது. ஆகவே அந்தந்த காலகட்டத்தில் செல்வாக்குடன் ஓங்கி இருந்த படைப்புகளையே அவர்கள் இலக்கியம் என்று கருதுவார்கள். அப்படி சமகாலத்தில் படைப்புகள் ஓங்கியிருப்பதற்கு அவை கேளிக்கை வாசிப்பு வழியாக அடையும் வணிக வெற்றி ஒரு காரணமாக இருக்கிறது. அத்துடன் அரசியல் சார்ந்த தொடர்பும் அதன் விளைவான அதிகாரமும் இன்னொரு காரணமாக இருந்திருக்கிறது.
சுதந்திரத்துக்குப் பிந்தைய தமிழ்க்கல்வித்துறையின் கடந்த காலத்தை எடுத்து பார்த்தோம் என்றால் அது தொடக்க காலத்தில் முதன்மையாக ராஜாஜி கோஷ்டியின் பிடியில் இருந்தமை தெரியும். அந்த அரசியல் சார்புடன், வணிக ஏற்பும் கொண்டிருந்தவர்கள் பெரும் ஆளுமைகளாக திகழ்ந்தனர். உதாரணம், கல்கி. பின்னர் காங்கிரஸுக்கு அணுக்கமானவராக இருந்த அகிலன், நா.பார்த்தசாரதி. இன்று பெரும்பாலும் எவராலும் நினைவு கூரப்படாத பல படைப்பாளிகள் ராஜாஜி குழு என்பதனாலேயே சாகித்ய அகாடமி போன்ற இலக்கிய அமைப்புகளின் விருதுகளை பெற்றிருக்கிறார்கள். உதாரணம் அ.ஸ்ரீனிவாச ராகவன், ரா.பி.சேதுப்பிள்ளை, கு.ராஜவேலு, மீ.ப.சோமு.
பின்னர் திராவிட இயக்கம் அதிகாரத்தை கைப்பற்றிய போதும் திராவிட இயக்கத்துடன் தொடர்பு கொண்டு பணியாற்றியவர்களுக்கு எழுத்தாளர்கள் ஏற்புகள் பெற்றனர். சுரதா முதல் வைரமுத்து வரை அந்த அணி இன்றும் தொடர்கிறது. தமிழ்க்கல்வித்துறையில் ஆசிரியர்த்தொழிற்சங்கம் வழியாக இடதுசாரிகளின் செல்வாக்கும் உண்டு. ஆகவே இடதுசாரிகள் கல்வித்துறை ஏற்பு பெற்றனர். ஆனால் திராவிட இயக்கம் எந்த எழுத்தாளரையும் பெரிதாக முன்வைக்கவில்லை. அவர்கள் அரசியல்தலைவர்களையே முதன்மை எழுத்தாளர்களாக முன்வைத்தனர். அரசியல்த் தலைவர்களை புகழ்ந்து துதிபாடி பதவிகளை அடைய கல்வியாளர்கள் அவர்களை இலக்கியவாதிகளாக கொண்டாடும் உத்தியை கண்டடைந்தனர் எனலாம்.
நவீன இலக்கியம் எப்போதும் கல்வித்துறையின் எல்லைக்கு வெளியே தனது செயல்பாட்டை வைத்துக்கொண்டது. அதற்கு அடிப்படையான காரணங்களில் ஒன்று நவீன இலக்கியம் என்பது எப்போதுமே எதிர்ப்பு தன்மை கொண்டது, மையப் போக்குகளுக்கு மாறாக நிலைகொள்வது என்பதுதான். ஆகவே அது அமைப்புகளிடமிருந்தோ மையப் பெரும்போக்கில் இருந்தோ தனக்கான கௌரவத்தை எதிர்பார்ப்பதும் நியாயம் அல்ல. ஆனால் ஓர் இயல்பான கல்விப்பரப்பு என்பது பெரும்பாலும் மையஓட்டத்தையும் , அதிகாரத்தையும் சார்ந்திருக்கும் போதேகூட அதில் ஒரு சிறு பகுதியேனும் மாற்றுச் சாத்தியங்களையும் எதிர்ப்பு லைகளையும் கருத்தில் கொண்டாக வேண்டும். அதுதான் உலகம் எங்கும் கல்வித்துறையில் நாம் பார்க்க கிடைப்பது. அது இங்கே அறவே இருக்கவில்லை.
அவ்வாறு மாற்றுப்போக்கையும் எதிர்ப்போக்கையும் கருத்தில்கொள்ளவில்லை எனில் கல்வித்துறை தேக்கமடைந்து அறிவார்ந்த தகுதியை இழந்துவிடும். பழம்பொருட்களை சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு துறையாக ஆகிவிடும். வாழும் இலக்கியம் என்பது எதிர்ப்பும், மையவிலக்கமும் , தனிநபர்போக்கும் கொண்டதாகவே இருக்கும். அதை தவிர்த்தால் கிடைப்பது சம்பிரதாயமான எழுத்துக்கள் மட்டுமே. அவற்றிலிருந்து சம்பிரதாயமான கருத்துக்களே கிடைக்கும். அவை கல்வித்துறையை முன்னகரச் செய்வன அல்ல. இந்த முரணியயக்கம் தமிழ் கல்வித்துறையில் அநேகமாக இல்லை என்பதுதான் அதன் மீதான முதன்மையான விமர்சனமாக இருந்து வருகிறது.
சமகால அதிகார அரசியல், அரசு ஆகியவற்றைச் சார்ந்து செயல்படுபவர்களே கல்வித்துறைக்கு பொதுவாக உவப்பானவர்கள். வரலாற்று நுண்ணுணர்வை, தன் பண்பாட்டின் நனவிலியை வெளிப்படுத்தும் படைப்பாளிகள் கல்வித்துறையைச் சென்றடைவது மிக அரிது. இரண்டு காரணங்கள். ஒன்று, அத்தகைய மெய்யான இலக்கியம் ஓர் இலக்கியப்படைப்பாளியின் ஆழுள்ளத்தின் மொழிவழி வெளிப்பாடாக இருக்கும். தன்னை சமூகத்தின் ஓர் அலகாக சரியாக அமைத்துக்கொண்டு, தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதன் வழியாக அப்படைப்பாளி சமூக ஆழ்மனமாக வெளிப்படுகிறான். ஆனால் மேலோட்டமான நோக்கில் அது ஒரு தனிமனித அகவெளிப்பாடாக மட்டுமே தோன்றும். மேலும் அவ்வாறு தனிமனிதன் வழியாக வெளிப்படும் பண்பாட்டின் ஆழம் என்பது சமகாலம் சார்ந்ததாகவும், நடைமுறை சார்ந்ததாகவும் இருக்காது. மாறாக எதிர்காலம் சார்ந்ததாகவும், ஒட்டுமொத்தப் பார்வைகொண்டதாகவும் இருக்கும். ஆகவே அது கல்வித்துறை ஏற்கனவே கையில் வைத்திருக்கும் அளவுகோல்களுக்கு எளிதில் அகப்படாது.
தமிழ் இலக்கியத்திற்கும் தமிழ்க்கல்வித்துறைக்கும் உள்ள முரண்பாடு மட்டுமல்ல இது, உலகஅளவிலேயே இப்பிரச்சினை உள்ளது. இந்த வேறுபாட்டினால்தான் சாதாரண அரசியல்மனம் கொண்ட கல்வியாளர்களால் நவீன இலக்கியத்தை உணர முடிவதில்லை, அவர்கள் அதை ஏதோ தனிமனிதர்கள் தங்களுக்குள்ள எழுதிக் கொண்டு தாங்களே வாசிக்கும் ஒரு சிறு அறிவுவட்டம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால்அதற்கப்பால் செல்லும் உள்ளம் கொண்ட கல்வியாளர்கள் சிலர் என்னும் தமிழில் இருந்தாக வேண்டும். அவ்வாறு ஒரு சிலரை கவித்துறையில் இருந்து எடுத்துச் சொல்ல முடியும் ஆ. முத்துசிவம் முதல் சி. கனகசபாபதி, பேரா. ஜேசுதாசன், எம்.வேதசகாயகுமார், அ.ராமசாமி வரை. ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்த வகையான கல்வித்துறை அதிகாரமும் இருந்ததில்லை. விதிவிலக்காக கி.வேங்கடசுப்பிரமணியம் அவர்களைச் சொல்லலாம். அவர் இந்திரா பார்த்தசாரதி, கி ராஜநாராயணன் ஆகியோரை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பயிற்றுனர்களாக மாற்றியது என்பது தமிழில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நகர்வு.அண்மையில் தஞ்சை தமிழ் பற்கலையில் சில எழுத்தாளர்கள் வருகைதரு எழுத்தாளர்களாக அழைக்கப்பட்டது ஒரு சிறு முன்னகர்வு.அவ்வாறு தமிழில் மிகச்சிற அளவிலேயே சில நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன.
இச்சூழலில் தமிழ் நவீன இலக்கியத்தைச் சார்ந்த எனக்கு தக்ஷசிலா பல்கலை வழங்கியிருக்கும் மதிப்புறு முனைவர் பட்டம் முக்கியமான ஒரு தொடக்கம். நான் எல்லா வகையிலும் தனிநபரின் அகம் வெளிப்படும் எழுத்தை மட்டும் முன்வைப்பவன், அதற்காக பேசுபவன். எல்லா அரசியல் தரப்புகளையும் விமர்சனம் செய்பவன், அவற்றுக்கப்பாலுள்ள பெரும் மானுடக்கனவுகளை நோக்கிச் செல்ல முயல்பவன். எல்லா அமைப்புகளுக்கும் எதிரானவன். அரசு சார்ந்த ஏற்புகளை பெறுவதில்லை என்ற கொள்கை கொண்டவன். ஆகவே எல்லா தரப்பாலும் வசைபாடப்படுபவனும்கூட. ஆனால் என் முன்னோடிகளைப் போலன்றி எனக்கான வாசகர்கள் உலகமெங்கும் திரண்டுள்ளனர். காரணம் என் முன்னோடிகளுக்கு கிடைக்காத தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்தான்.
தக்ஷசிலா பல்கலைக் கழகம் முக்கியமான ஒரு பேரமைப்பு. அது வழங்கும் முதல் மதிப்புறு முனைவர் பட்டம் எனக்கு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற லேமா போவே பிஜி தீவின் இந்தியத் துணைத்தூதர் ஜெகன்னாத் சாமி ஆகியோர் கலந்துகொள்ளும் விழாவில், துணைவேந்தர் தனசேகரன் தலைமையில் வழங்கப்படும் இந்த பட்டம் என்னுடன் விளையாட்டு வீராங்கனை பி.டி.உஷாவுக்கும் அளிக்கப்படுகிறது. மிகப் பெருமிதத்துடன் இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன்.என் வாசகருமான தக்ஷசிலா வேந்தர் தனசேகரன் மகாலிங்கம் அவர்களுக்கு என் நன்றி.
இது ஒரு பெரிய தொடக்கம் என்று நினைக்கிறேன். தமிழில் இதைப்போன்று எதிர்காலத்தில் கௌரவிக்கப்பட வேண்டிய நவீன எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர் ஒவ்வொருவரும் அந்த கௌரவத்தை அடையும்போதுதான் தமிழ் இலக்கியம் கௌரவிக்கப்படுகிறது. நான் எப்போதுமே என்னை நவீனத்தமிழிலக்கியம் என்னும் அமைப்பாகவே முன்னிறுத்துபவன், நாங்கள் தமிழ்க்கல்வித்துறை கௌரவம் நோக்கிச் செல்லும் முதற்காலடியாகவே இதைப் பார்க்கிறேன். நம் இலக்கியத்தை நாம் கொண்டாடும்போது தான் அதை உலகம் கொண்டாட தொடங்கும் .அதற்கான ஒரு முதல் முயற்சியை எடுத்த அனைவருக்கும் நன்றி.
நவம்பர் 2025 கவிதைகள் இதழ்
அன்புள்ள ஜெ,
நவம்பர் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக சங்க இலக்கியம் குறித்து க.நா.சு எழுதிய ஆங்கில கட்டுரை டி.ஏ. பாரி மொழிபெயர்ப்பில் ‘சங்க இலக்கியம் – ஒரு பார்வை’ வெளியாகியுள்ளது. கடலூர் சீனு சாரு நிவேதிதாவின் சாரு நிவேதிதாவின் ‘சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்’ கவிதை தொகுப்பு குறித்து ‘ஒண்முகில் ஒளிர்வு’ என்ற வாசிப்பனுபவம் எழுதியுள்ளார். கவிஞர் மதார். வி. சங்கரின் கவிதைகள் குறித்த தன் வாசிப்பனுபவம் எழுதியுள்ளார்.
மதார் சமப கால புனைவெழுத்தாளர்களிடம் கவிதைக் குறித்து சில கேள்விகள் கேட்டார். அதற்கான பதில்களை எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன், எழுத்தாளர் தூயன் எழுதியுள்ளனர்.
சில தமிழ் கவிதைகள் பகுதியில் மு.சுயம்புலிங்கம் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
நன்றி,
ஆசிரியர் குழு
மதார், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


