Jeyamohan's Blog, page 5
November 24, 2025
அக்கா பரதேசி சுவாமிகள்
ஜீவ சமாதிக்கோவில் முகப்பு வாயிலில் மூன்று கலசங்களுடன் கூடியதாகவும், தெய்வ பரிவாரங்களும் வீற்றிருக்கும் அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தினுள் விநாயகர் ஞானகணபதியாகவும், பழனியாண்டவர் தண்டத்தினை கையில் வைத்தபடி ஆண்டிக்கோலத்திலும், நடராஜர் சமேத சிவகாமியம்மனுடனும் காட்சிதரும் சன்னதிகள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன. நவகிரகங்கள் சந்நிதியும் இங்கு உள்ளது. சுவாமிகள் இங்கே முக்கியமாக மனோன்மணி அம்மையை வழிபட்டுவந்தார். ஸ்ரீசக்கரமும் பிரதிஷ்டை செய்தார் எனவும் சொல்லப்படுகிறது.
அக்கா பரதேசி சுவாமிகள் – தமிழ் விக்கி
சித்தாந்தம், நவம்பர் இதழ்
அன்பு மிக்க ஜெ,
நவம்பர் 2025 மாதத்திற்கான சித்தாந்தம் இதழ் வெளிவருகிறது. செப்டம்பர் மாதம் வெளியான தில்லை செந்தில் பிரபு அவர்களின் “36” என்ற கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது
அதை தொடர்ந்து இம்மாதக் கட்டுரை தர்க்க அளவைகளின் விளக்கம் அதை வாழ்வியலோடு ஒப்பீடு, ஆணவ மலத்தால் ஏற்படும் ஏழுவகை குற்றங்கள், சுய பயிற்சி என கட்டுரை சிறப்பாக வந்துள்ளது.
தாமல் கோ சரவணன் அவர்களின் வினை கொள்கை தொடர் நிறைவுப் பெறுகிறது. அருணாச்சல மகாராஜனின் துரியம் கடந்த சுடர் எனும் தொடர் வரலாற்றில் பூசாரிகளின் தோற்றம் இறையூக்கிகளின் பங்கு, என அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளது.
புதிய தொடர் மற்றும் மறு ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
இப்படிக்கு
செ.பவித்ரா மற்றும் உ .முத்துமாணிக்கம்.
சித்தாந்தம் சைவ இதழ்ஞானத்தின் வழித்துணை
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
உங்கள் டாலஸ் வருகையின் போது எங்கள் வீட்டுக்கு வருவதாக முடிவான நாளில் இருந்து, “சரஸ்வதி ஏழு சென்மம் பார்த்துத் தான் கண்ணுபாப்பான்னு சொல்லுவாங்க” என்ற அறம் கதையில் வரும் வரிகள் மீண்டும் மீண்டும் என் பேச்சில் வந்து சென்றது. எவ்வாறோ என் குழந்தைகளுக்கும் அந்தப் பூரிப்பையும் பரவசத்தையும் கடத்தி விட்டேன். ஒரு பேராளுமையை அணுகப் பயந்து கூட்டத்தில் ஓரமாய் அமர்ந்திருந்த அவர்கள் மெல்ல மெல்ல முன்னால் வந்து உங்கள் பேச்சைக் கவனித்து ஒரு கேள்வியும் கேட்டனர். என் பயணமும் அப்படியேதான், 2013ல் தளத்தின் வாசகி ஆகி உங்கள் புனைவுலகத்திற்குள் வந்து சேர்ந்தேன். நெடுநாள் எதிர்பார்ப்பிற்குப் பின் உங்களையும் அக்காவையும் சந்திக்க நேர்ந்தது ஒரு இனிய அனுபவமாக இருந்தது. நீங்கள் இருவரும் மிக இயல்பாகவும் எளிமையாகவும் நடந்து கொண்டதுதான் எங்களையும் சகஜமாக்கியது. குடும்பத்துடன் உங்கள் இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கியது எங்களின் நற்பேறாக இருந்தது. வாஷிங்டன் டி.சி. நாவல் வகுப்பில் கலந்து கொண்டு எங்களது திருமண நாளான அன்று தம்பதிகளாக மீண்டும் ஒருமுறை குருவின் பாதம் பணியும் நல்வினைப் பயனையும் பெற்றோம். அங்கு வாசிப்பு முறைகளையும் குருநாவல் எழுதுவதற்கான வழிமுறைகளையும் அறிந்து கொண்டு அந்தப் புரிதலுடன் நற்றுணைக் கதையின் வாசிப்பு அனுபவத்தைப் பதிவு செய்கிறேன்.
அம்மிணித் தங்கச்சியின் நல்வாழ்வுக்குத் துணை நின்றது கேசினி என்ற யட்சி. இந்தச் சமூகத்தில் ஒரு பெண்ணாகத் தன்னுடைய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்கு அம்மிணித் தங்கச்சி கடந்து வந்த பாதை பல போராட்டங்களையும், சவால்களையும், தடைகளையும் கொண்டதாக இருந்தது. இந்தச் சமூகம் பெண்களின் மீது திணித்த பல விதிகளையும் கட்டுப்பாடுகளையும் உடைத்துத்தான் அம்மிணித் தங்கச்சி வெற்றிகளைப் பெற்றார். அவருக்கு அடக்குமுறை முதலில் வீட்டுக்குள் இருந்துதான் ஆரம்பித்தது. அதன் நீட்சிதான் திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் இடம் கொடுக்க மறுத்தது, பட்டம் பெற்ற பின்பும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் பட்டம் தராமல் இழுத்தடித்தது, சட்ட கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டது, மற்றும் பார் கவுன்சிலில் சேர்க்க மறுத்தது ஆகியவை. நீதிபதி வாழ்க்கையிலும் தொடர் போராட்டங்களை சந்தித்தார். இப்படி அனைத்துத் தடைகளையும் உடைத்து அவர் பெற்ற எல்லா வெற்றிகளுக்கும் கேசினிதான் காரணம்.
யார் இந்தக் கேசினி? என்ற கேள்விக்கு என் பார்வையில் ஒரு பெண்ணின் ஆழ்மனதுதான் கேசினி. ஆழ்மனதின் குரலே யட்சியின் குரலாக ஒலிக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் ஆசைகள், கனவுகள், குறிக்கோள்கள், லட்சியங்கள் ஆகியவற்றின் தீவிரத்தைப் பொறுத்து யட்சியின் குரலும் தீவிரமாக ஓங்கி ஒலிக்கும். எந்தப் பெண்ணிடம் இருந்து யட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கிறதோ அவர்களே சாதனைப் பெண்களாக மாறுகிறார்கள். யட்சியின் குரலைத் தன் ஆழ்மனதிற்குள்ளேயே அடக்கி விடும் பெண்கள் சமூகத்தின் விதிகளுக்குட்பட்டு ஒரு தேக்க நிலையை அடைந்து விடுகிறார்கள். குடும்பத்தாலும் இந்தச் சமூகத்தாலும் தன் ஆசைகள் முற்றிலும் புறக்கணிக்கப்படும் போதுதான் பெண்களின் ஆழ்மனதிலிருந்து கேசினி மீண்டெழுகிறாள். இந்தச் சமூகத்தில் சரியான சமநிலை இல்லாமல் ஏற்றத்தாழ்வு நிகழும் போதெல்லாம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கிறார்கள். சமூகத்தால் ஒடுக்கப்பட்டுக் கடைநிலையில் இருக்கும் மக்கள் எதிர்வினையாகத் தாக்க துணிவதும் பெண்களைத்தான். இவர்கள் தங்கள் கோபத்தை பெண்கவர்தல் என்ற பெயரில் பெண்களின் மீது திருப்புகிறார்கள். அடிமை வணிகம் என்ற பெயரில் பெண் விற்பனை செய்யப்படுகிறாள். பெண்களுக்கு எதிரான சில கொடூரமான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் நாகாத்தான் நாயரின் இறப்பு. சமூகத்தில் இன்றளவும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்குத் தரப்படும் தண்டனை குறித்து விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். அம்மிணித் தங்கச்சி நசுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் எதிர்ப்புகளால் உருவான வெறியின் காரணமாக யட்சி தன் கொடூர முகத்தைக் காட்டுகிறது. அந்த முகத்தில் அம்மணி தங்கச்சியின் படிப்பின் மீது இருந்த தீராவெறியும், தன் கனவை அடையும் மனஉறுதியின் வெளிப்பாடும் கண்டு ஆண்கள் வழி விட்டார்கள்.
இப்படிப் பெண்கள் தனக்கான பாதையை தன் பாத சுவடுகளின் மூலமே உருவாக்கும்போது தெய்வதையோ, யட்சியையோ, ஆவியையோ ஆழ்மனதில் இறுகப்பற்றித் தடைகளை கடக்க முயல்கிறார்கள். தேவையான போது அதிலிருந்து தன் ஆழ்மனதை மீட்டுக் கொள்ளவும் தெரிகிறது. ஏழு தலைமுறைகளாகப் பெண்களுக்கு படிப்பு மறுக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்து, படித்து, அதன் மூலம் வலிய குளத்தில் விழுந்து இறக்கும் பெண்களின் நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது அம்மிணித் தங்கச்சியின் மிகப்பெரிய சாதனையாகும். எல்லாக் காலங்களிலும் அம்மிணித் தங்கச்சிகள் இந்தச் சமூகத்தில் வாழ்ந்து சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காரணங்களும் எண்ணிக்கையும் மாறினாலும் இன்றளவும் பெண்களுக்கு யட்சியின் குரல் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லாப் பெண்களின் ஆழ் மனதிலும் தேவையானபோது யட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!
நன்றி,
ராதா பாலாஜி
டாலஸ்
அறிவுத்தற்கொலைக்கு எதிராக!
The difference between ideology and idealism is an intriguing question. Generally, we do not differentiate between the two because we believe in idealism and practice ideology. We expect idealism from simple ideologists, which is why we often feel disappointed by all kinds of ideologists.
“Idealism and Ideology”ஒரு சாதாரண திமுக அரசியல் பிரச்சாரகர் மிக ஆக்ரோஷமாகவும் விடம்பனத்தில் இருந்தும் பேசுவார். அவர் உங்களை பற்றி மிகக கடுமையாக அவன் இவன் என்று பேசிய ஒரு காணொளி வழியாகத்தான் உங்களுடைய பெயர் எனக்கு தெரியவந்தது.
அறிவுத்தற்கொலைக்கு எதிராக!November 23, 2025
சென்னையில் ஓர் ஆங்கில வாசிப்புக் குழுமம்.
அன்புள்ள ஜெ.
மானசா பதிப்பகம் புக் கிளப் பற்றிய செய்தியை பகிர்ந்திருந்தீர்கள். Manasa Book Club, Chennai. இப்படி ஒரு அமைப்பை தொடங்குவது பற்றிய செய்தியை முன்னரும் பகிர்ந்திருந்தீர்கள். மானசா பதிப்பகம், ‘புக் கிளப்’, அலுவலகத் திறப்பு. உங்களுடைய தளத்தில் நீங்கள் புக் கிளப் என்பது இன்றைய குழந்தைகளுக்கு மிக உதவியான ஒன்று என்றும், இணைய அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கான வழி என்றும் சொல்லியிருந்ததையும் வாசித்துள்ளேன். புத்தகக் குழுமங்கள்- குழந்தைகளுக்கான மீட்பியக்கம்.
எனக்கு இரண்டு குழந்தைகள். இருவருமே எதையுமே வாசிக்காதவர்கள். பத்து வயது வரை நன்றாக நிறைய வாசித்துக்கொண்டிருந்தார்கள். அதன்பின் செல்போனுக்கு அடிமை. கேம்களுக்கு அடிமை. பள்ளிப் படிப்பு தவிர மற்ற நேரமெல்லாம் வேறெந்த நினைப்பும் இல்லை. வாழ்க்கையையே அதனால் இழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப்போன்ற குழந்தைகளை இந்த புக் கிளப் போன்ற அமைப்புகளுக்குள் கொண்டுவர முடியுமா என்ன? இவற்றால் உண்மையாகவே ஏதேனும் பயன் உண்டா?
ஆர்.நளினி சுந்தரம்
Manasa Book Club, Chennai.அன்புள்ள நளினி,
மின்னணு அடிமைத்தனம் பற்றி நான் முன்னரே விரிவாக எழுதியுள்ளேன். (மின்னணு அடிமைத்தனமும் மீட்பும்). சொல்லப்போனால் சீரான இடைவெளியில் இதை எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன். நம் குழந்தைகள் மின்னணு அடிமைத்தனத்தில் சிக்கி அழிந்துகொண்டிருக்கிறார்கள். எதையும் சிறிதுநேரம்கூட கூர்ந்து கவனிக்கமுடியாதவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பம் உருவாக்கும் அறிவுச்சவால்களை எதிர்கொள்ளமுடியாதவர்களாக ஆகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு நூல்களை வாங்கிக்கொடுப்பதோ, படி படி என ஊக்குவிப்பதோ எந்தப் பயனையும் தராது. ஒன்று, அவர்களுக்கு ‘நேரடியாக செய்யும் செயல்கள்’ தேவை. தாவர அறிமுகம், பறவை பார்த்தல் போன்றவை அவ்வாறான நேரடியான செயல்முறைகள். அவை நிலத்துடனான உறவை உருவாக்குகின்றன. கவனத்தை குவிக்கப் பயிற்றுவிக்கின்றன. இரண்டாவதாக, கூர்ந்த அவதானிப்புக்கு பழக்கமுள்ள சுற்றம் தேவை. இன்றைய குழந்தைகள் மின்னணு அடிமைத்தனத்தை நோக்கி இழுக்கப்படுவதே பிற குழந்தைகளால்தான். சரியான சூழல், சுற்றம் இல்லையென்றால் வாசிப்பை நடத்த முடியாது.
தொடர்ச்சியாக நான் சொல்லி வரும் ஒரு கருத்து, வாசிப்புப் பயிற்சி என்பது. பயிற்சி இன்றி நூல்களை வாசிக்க முடியாது. நூல்களை வாசிக்காதவர்களால் சமகால அறிவியக்கத்தை புரிந்து கொள்ள முடியாது. நூல்களை வாசிக்காதவர் சமகாலத்தில் வந்து குவிந்து கொண்டிருக்கும் இணையக் குப்பைகளுக்குள் சென்று சிக்கிக் கொள்ளாமலிருக்க முடியாது. வாழ்வின் பெரும் பகுதியை வீணடிக்க நேரிடும். நீண்ட கால அளவில் தன் அறிவுத்திறனை இழந்து நவீன தொழில்நுட்பத்திற்கு அடிமையாகவும், இன்னொரு கட்டத்தில் தொழில்நுட்பத்தால் பணி நீக்கமும் ஆளுமை நீக்கமும் செய்யப்படும் சருகாகவும் ஆக நேரிடும்.
வாசிப்புப் பயிற்சியை அடைவதற்கான ஒரே வழி என்பது சிறுசிறு புத்தகக் குழுக்கள்தான். மேலை நாடுகளில் இந்த புத்தகக் குழுக்கள் மிகப்பெரிய அளவிலே வாசிப்பை முன்னெடுப்பதற்கான பங்களிப்பை ஆற்றுகின்றன. கூடி அமர்ந்து புத்தகங்களை பற்றிப் பேசுவதுதான் அது. புத்தகங்களைப் பற்றி கேட்பதே அதற்குள் நுழையும் வழி. அனைவருமே அங்கு பேசப்படும் அனைத்து நூல்களையும் படித்து விட்டு வர வேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். அந்த குழுக்களில் பங்கெடுப்பவர்களில் ஒரு சிலர் மிக நன்றாக படித்தவர்களாகவும் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். சிலருக்கு மிக எளிய அறிமுகம் அல்லது ஆர்வம் மட்டுமே இருக்கும். ஆனால் காலப்போக்கிலே அதில் ஈடுபடுகிற ஒவ்வொருவருமே புத்தக ஆர்வம் கொள்வதை, வாசிப்பாளர்களாக மாறுவதைகப் பார்க்க முடிகிறது .
நாங்கள் தொடங்கிய வாசிப்புக் குழுக்களில் கலந்து கொண்ட பலர் மிகுந்த தயக்கத்துடனும் தங்கள் அறியாமை பற்றிய தாழ்வுணர்ச்சியுடனும் வந்தவர்கள்தான். அவர்கள் இன்று சிறப்பாக பேசக்கூடியவர்களாகவும் சில குழுக்களை வழிநடத்த கூடியவர்களாகவும் மாறி இருக்கிறார்கள் என்பதை காண்கிறோம். புத்தகக் குழுக்களின் பணிகள் மூன்று.
அ. புத்தகக் குழுக்கள் என்பவை சரியாக நடத்தப்பட்டால் நமக்கு நூல்களை அறிமுகம் செய்தபடியே இருப்பவை.ஆ. நமக்கு வாசிப்பு மனநிலையை தக்கவைத்துக்கொள்ள உதவுபவை.இ. நமக்கு நம் வாசிப்பை பலகோணங்களில் விரித்தெடுத்து ஆழமாக்கிக்கொள்ளும் பயிற்சியை அளிப்பவை.நாங்கள் விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் பல புத்தகவாசிப்புக் குழுக்களை நடத்துகிறோம். அவை எல்லாம் தமிழ் நூல்களுக்காக. விஷ்ணுபுரம் அமைப்பின் களம் தமிழிலக்கியம் மட்டுமே. ஆனால் மானசா புத்தகக்குழு வேறு, விஷ்ணுபுரம் அமைப்புடன் அதற்கு தொடர்பில்லை. அவர்களின் இலக்கு ஆங்கில இலக்கிய வாசிப்பை உருவாக்குவது.
தமிழகத்தில் இன்று நம் குழந்தைகளை பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் படிக்க ஆரம்பித்தவர்கள். தொடக்கநிலை நூல்கள் படிப்பதில் அவர்களுக்கு ஓர் எளிய அறிமுகம் கல்விக்கூடம் வழியாக வருகிறது. ஆனால் அதன்பின் அவர்களில் சிலரே முதிராஇளமை வாசிப்புக்குள் செல்கிறார்கள். எஞ்சியோர் வாசிப்பை விட்டுவிடுகிறார்கள். தீவிரமான, தரமான வாசிப்பை நோக்கி செல்ல அவர்களால் இயல்வதில்லை. அதற்கான வழிகாட்டுதல்கள் நமது கல்லூரிகளில் அல்லது பள்ளிகளிலிருந்து அளிக்கப்படுவதில்லை. அந்த வழிகாட்டலுக்காகவே இந்த புத்தக குழுக்களை நான் பரிந்துரைக்கிறேன்.
விரைவாக ஓடும் குதிரையுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒருவர் தன்னியல்பாகவே தானும் அதே விரைவில் ஓடத்தொடங்குகிறார் என்பது போலத்தான் புத்தகக் குழுக்களின் செயல்பாடு. அவற்றுள்ள மிகச்சிறந்த வாசகரின் தரத்தை பிறர் தாங்களும் அடைகிறார்கள். மானசா பதிப்பகம் நிகழ்த்தும் இந்த ‘புக் கிளப்’ பற்றி நான் ஒன்றை உறுதியாகச் சொல்ல முடியும், நான் அறிந்த மிகச்சிறந்த இலக்கியவாசகர்களில் ஒருவர் என்று சொல்லத்தக்க ஒருவரால் இது நடத்தப்படுகிறது- சைதன்யா இன்று என் ஆசிரியர்கள் அளவுக்கே எனக்கு இலக்கியம் பற்றிக் கற்பிப்பவள்.
எப்படி வாசிப்பது, எப்படி படைப்புக்களுக்கு அடியில் உள்ள கூடுதல் அர்த்தங்களை எடுத்துக் கொள்வது என்பதற்கு எத்தனை காணொளிகள் வழியாகவும் சொற்பொழிவுகள் வழியாகவும் வழிகாட்டினாலும் அது பயனுள்ளதல்ல. தொடர்ச்சியாகச் செயபல்படும் ஒரு வாசிப்புக் குழுமம் மட்டுமே பயனுள்ளது.அத்தகைய ஒரு கூட்டுக் குழு வாசிப்பு ஆங்கில நூல்களுக்கு சென்னை சார்ந்து அநேகமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சென்னையில் ஆங்கிலம் வழியாக வாசிப்பவர்கள் மிகமிகமிகக் குறைவு.
சென்னையிலேயே பல கல்லூரிகளில் ஆங்கிலத் துறைகள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், முதுகலை பட்டம் பெற்ற்வர்களை பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் ஆங்கில நூல்களின் வாசிப்பு விற்பனை என்பது சென்னையை பொறுத்த அளவிலே கிட்டத்தட்ட பூஜ்ஜியம் அளவிலேயே இருக்கிறது. இந்தியாவின் பதிப்பகங்கள் எவையுமே சென்னையை ஒரு புத்தக விற்பனைக் களமாக கருதுவதே இல்லை. இந்தியாவின் பதிப்பாளர்கள் எவருக்குமே சென்னையில் கடைகளோ, விற்பனைத்தொடர்பாளர்களோ இல்லை. தமிழகத்திலேயே இல்லை. பெங்களூரில் ஒரே சாலையில் ஒன்பது ஆங்கில புத்தகக்கடைகள் உள்ளன, தமிழகத்தில் ஆங்கில நூல்களுக்கான ஒரு கடைகூட இல்லை.
ஆனால் சென்னை சேர்ந்த பெரும்பாலான பெற்றோர் ஒருவகையான பேச்சு மொழி ஆங்கிலத்தை தன் குழந்தைகளுக்கு பழக்கிறார்கள் .அந்த ஆங்கிலத்தில் அந்த குழந்தை பேசுவதைப் பார்த்து அது ஆங்கிலத்தில் திறமை மிகுந்தது என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் ஆங்கிலத் தரம் என்பது வருந்தத்தக்க அளவுக்கு குறைவானது என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு நூல்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு நமக்கு பெரும்பாலும் ஆளே கிடைப்பதில்லை. தமிழகத்திலிருந்து தொழில்முறை மொழிபெயர்ப்புக்கு கூட ஆங்கிலம் தெரிந்தவர்கள் குறைவானவர்கள். தமிழகத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களில் கூட தமிழர்கள் பணியாற்றுவது மிகக் குறைவு.
இந்த ஆங்கில அறிவின்மை என்பது நமக்கு நம்முடைய கல்வி முறையில் இருந்து வருகிறது. பொதுவாக இங்கே ஆங்கிலப்படிப்புக்குச் செல்பவர்கள் பிற படிப்புகளுக்குச் செல்ல தகுதியற்ற மதிப்பெண்கள் கொண்டவர்கள். ஆங்கிலத்தையே தமிழில் புரிந்து கொண்டு மனப்பாடம் செய்து எழுதி வெல்பவர்கள். அல்லது வெறுமே ஒரு பொழுதுபோக்குக்காக ஆங்கிலம் பயிலும் உயர்குடிப்பெண்கள். அந்த பெரும் கூட்டத்தில் சிலருக்கேனும் ஆங்கிலத்தில் வாசிக்கவும், ஆங்கிலத்தில் சிந்திக்கவும் ஆர்வம் இருக்கக்கூடும். தரமான ஆங்கிலத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு வாய்ப்பைத் தேடி அவர்கள் இருக்கக்கூடும். அவர்களுக்காக ஒரு வாய்ப்பை திறந்து வைக்க வேண்டும் என்பதுதான் இந்த புத்தகக் குழுவின் நோக்கமாக இருக்கிறது
தமிழகத்தில் இன்று எங்குமே ஆங்கிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்திய நாவல்களைப் பற்றியோ, வெளிநாட்டுப் படைப்புகளை பற்றியோ எந்த விவாதம் நிகழ்வதில்லை. (முகநூலில் மேலோட்டமாக பேசிக்கொண்டிருக்கும் snob களை நான் கருத்தில்கொள்ளவில்லை.) அப்படி ஒரு விவாதம் சென்னையில் ஓர் இடத்திலேனும் நிகழ்வது என்பது ஒரு தொடக்கம்.
ஜெ
at connect@manasapublications.com
or via WhatsApp at +91 7305567808.
Venue:
Manasa Publications
Flat No: 2, Srinivas Apartments,
Gandhi Nagar 2nd Main Road,
Adyar, Chennai – 600020
Time: 10:00 AM – 12:00 PM
Agenda for 2025:
November: Everything the Light Touches by Janice PariatDecember: Childhood Friend by Vaikom Muhammad Basheerஆகமம்
ஆகமங்களின் காலம் வரையறை செய்யப்படவில்லை. அவை வெவ்வேறு காலங்களில் உருவானவை எனப்படுகிறது. இந்தியாவெங்கும் ஆலயவழிபாடு பொ.யு. 4-ம் நூற்றாண்டிற்குப்பின் குப்தர் காலத்தில் பரவி வலுப்பெற்றது. ஆகமங்கள் அதற்கும் முன்னரே வழிபாட்டு நெறிகளாக புழங்கியவையாக இருக்கலாம். ஆலயவழிபாடு பரவலான போது அவை முறையாக சம்ஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கலாம்.
ஆகமம் – தமிழ் விக்கி
வெளியேறியவர்களின் கதை!
வணக்கம் ஜெ,
தத்துவ வகுப்பில் உங்களை சந்தித்துவிட்டு வந்த பின்னர் நான் வாசிப்பதோடு நின்று விடாமல் அதை தொகுத்து எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்துள்ளேன் அதன் ஆரம்பமாக ஹெர்மன் ஹெஸ்ஸே அவர்களின் சித்தார்த்தா புத்தகத்தில் நான் பெற்றதையும் உணர்ந்ததையும் பகிர்கிறேன்.இந்தப் புத்தகமும் என் கைகளுக்கு எனக்கு மிகவும் தேவையான நேரத்தில் வந்தடைந்தது.
நான் இந்தப் புத்தகத்தை ஒரு கவிதையாகவே அணுகினேன்.ஒரு கவிதையின் ஆழம் எப்படி வாசகர்களைக் கொண்டு மாறுகிறதோ அதேபோல் இந்தப் புத்தகத்தின் தத்துவமும் கவித்துவமும் வாசிப்பின் ஆழத்தை பொறுத்தது.சித்தார்த்த வாசித்தப்பின் நான் அடுத்ததாக படிக்க வேண்டும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்த புத்தகம் Mikhail Naimy அவர்கள் எழுதிய The Book of Mirdad.அந்த வகையிலும் இந்த புத்தகம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
சித்தார்த்தாவின் முதல் வரியே கவித்துவமாக இவ்வாறு தொடங்குகிறது “மனையின் நிழலில் படகுகள் ததும்பும் நதிக்கரையில் கோவிந்தனுடன் வளர்ந்தான் சித்தார்த்தன் “என்று ஆரம்பிக்கிறது. சித்தார்த்தன் பின்னாளில் ஒரு படகோட்டியாய் மாறி ஒரு படகோட்டியின் உதவியுடன் ஞானத்தை அடைய இருக்கிறான் என்பதை முதல் வரியிலேயே சொல்கிறார்.தன் தந்தையிடம் பிடிவாதமாக அனுமதி பெற்று சமணர்களிடம் சேர்ந்து கடினமான பயிற்சியின் மூலம் அறிவை மட்டுமே பெறமுடியும் ஞானத்தை ,நிர்வாணம் என்ற நிலையை அடைய இயலாது என்பதை உணரும் சித்தார்த்தனின் மனநிலையை நான் முழுவதுமாக என்னுடன் பொருத்தி பார்க்கிறேன்.கடுமையான பயிற்சிகளில் ஈடுபடும் பொழுது நான் என்ற நிலையை துறக்க முடிகிறது ஆனால் மீண்டும் அந்த நான் என்ற நிலைக்கு பயிற்சி முடிந்ததும் மனம் திரும்புகிறது .புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கும் பொழுதோ எழுதும்பொழுதோ ஒரு மனஎழுச்சியுடன் இருக்கும் நான் அடுத்த நிமிடமே அன்றாடத்தில் விழுந்து விடுவதை இதனோடு இணைத்து பார்த்தேன்.புத்தகம் வாசிக்கும் பொழுது அந்தக் கதை மாந்தர்களுடன் எனக்கு ஏற்படும் கருணை அவர்களை அவர்களின் தன்மையோடு ஏற்றுக்கொள்ளும் மன இயல்பு வாழ்க்கையில் இருப்பதில்லை அந்த “நான் ” நிலைக்கு திரும்பி விடுகிறேன்.புத்தகங்கள் நமக்கு ஞானத்தை கொடுக்க முடியாது அறிவை தான் கொடுக்க முடியும் என்பதை நம்புகிறேன்.
அடுத்து சித்தார்த்தன் கமலாவை சந்திக்கிறான்.சித்தார்த்தனிற்கும் கோவிந்தனிற்கும் நிர்வாண நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்து அதனை அடைய வேண்டிய பாதையை மேற்கொள்கிறார்கள் ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பே கமலா அதை அடைகிறாள்.அவள் அடைந்தது ஞானமா? முக்தியா? என்பதை நான் அறியவில்லை ஆனால் அந்த புத்தரை பார்த்தால் அவள் அடையக்கூடிய அதே உணர்வை அவள் அடைந்தாள் .ஏன் அவளுக்கு அது கிட்டியது? தன்னிடம் இருந்த செல்வத்தை ,இளமையை ,செருக்கை ஒவ்வொன்றாக உதறியதால் பெற்றாளா?
நிர்வாணா என்பது உண்மையான ஆனந்தம் என்று பொருள். கமலா அடைந்ததும் ஆனந்தம்.
சித்தார்த்தனிடமிருந்து கமலா காட்சியின் மூலம் அதாவது அவனது முகத்தைக் காண்பதின் மூலம் அடையும் ஆனந்தத்தை கோவிந்தன் சித்தார்த்தனை ஸ்பரிசிப்பதின் மூலம் அதாவது முத்தமிடுவதன் மூலம் அடைகிறான்.You cannot teach wisdom ,you can attain wisdom only through experience . காட்சி மற்றும் ஸ்பரிசத்தின் மூலம் ஞானம் அடைவது எனக்கு கவித்துவமாக இருந்தது .சித்தார்த்தன் மற்றும் வாசுதேவன் இடையே நிகழும் உரையாடல் அருமையான இடங்கள்.காலம் பற்றிய வரிகள் “காலம் என்பது ஒன்று கிடையாது ,ஏக காலத்தில் ஆறு எங்கெங்கும் இருக்கிறது,மூலஸ்தானத்திலும் முகத்துவாரத்திலும் ,நீர் வீழ்ச்சியிலும் , ஓடத் துறையிலும் ,மேகத்தும் ,விரி கடலிலும் எனவே நிகழ் காலம் ஒன்றுதான் அதற்கு உண்டு ” இந்த வரிகள் இந்த நிமிடத்தை முழுவதுமாக வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் அழகிய வரிகள்.நான் ,என் தந்தை மற்றும் என் பிள்ளை வேறு வேறு அல்ல எல்லாம் ஒன்றே என்ற அந்த புரிதல் .காலம் என்பது இல்லை என்ற உணர்தல் மிக எளிமையாக சொல்லப்பட்டது .
வாசுதேவன் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு மக்களை சேர்ப்பிக்கும் படகோட்டியாக அமைத்து நதியிடம் பேசுவது மற்றும் நதி பேசுவதை உற்று கவனிக்கும் ஆற்றலை(Art of Listening ) பயிற்றுவிக்கும் ஆசானாக வடிவமைத்து இருப்பதுதான் இந்த நாவலில் என்னை கவர்ந்த விடயம்.இயற்கையோடு இணைந்து இருப்பவர்கள் ஞானிகள் .இயற்கை நம்மிடம் உரையாடிக் கொண்டு இருக்கிறது ஆனால் நாம் அதை கேட்பதில்லை.இந்த இடத்தில் எனக்கு கவிஞர் தேவ தேவன் அவர்களிடம் ஒரு முறை “நீங்கள் ஏன் உதிர்ந்த இலைகளைப் பற்றி நிறைய கவிதைகள் எழுதுகிறீர்கள் ?”என்று கேட்டதற்கு, “அந்த இலைகள் என்னிடம் ஏதோ கூற விளைவது போல் இருக்கிறது அதனால் எழுதுகிறேன் ” என்று கூறியது என் நினைவில் வந்தது .
நன்றி ஜெ,
மதுநிகா சுரேஷ் .
நெருப்பு ஓடு — கல்பனா ரத்தன்
தேவி லிங்கத்தின் நெருப்பு ஓடு நாவல் பிறகு பதிப்பகத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2024 நெடும் பட்டியலில் இடம் பெற்றது.இவரது, ‘ நெய்தல் நறுவீ’ கவிதைத் தொகுப்பு மற்றும் கிளிச்சிறை சிறுகதை தொகுப்பும் வேதாரண்யம் பாரதிதாசன் கல்லூரியின் முதுகலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆராய்ச்சி நூல்களாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இவரது சிறுகதைகள் நிறைய இதழ்களில் வெளிவந்துள்ளன. பரிசுகளும் பெற்றுள்ளன.
நெருப்பு ஓடு நாவல் பொற்கொல்லர்கள் சமூகம், நகை செய்பவர்களின் வாழ்க்கையைப் பேசுகிறது. கதையின் நாயகன் கதிர்வேலின் பார்வை வழியாக நாவல் விரிகிறது.பொற்கொல்லர் சமூகத்தில் பிறந்த அவன் தன் அப்பாவின், தாத்தாவின், தன் குடும்பத்தின், குடும்ப உறுப்பினர்களின், குடும்பத் தொழிலின் நிலை எல்லாவற்றையும் தங்கத்தை தட்டித் தட்டி ஆபரணம் ஆக்குவது போல முழுமையாக்கி இருக்கிறான்.
கதிரின் தாத்தா கந்தசாமி பத்தர் அந்தக் காலத்தில் நகை செய்யும் தொழிலில் திறமை வாய்ந்தவர். நிறைய சொத்து பத்துகள் சேர்த்தாலும் தான தர்மங்கள் செய்து, குடும்பத்தினருக்கு வேண்டியவற்றை செய்து தான் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருந்தவர். நான்கு மகன்களில் மூன்று பேர் பொறுப்பற்றவராக இருந்தாலும் கதிரின் அப்பா செல்வம் மட்டும் தன் சொந்த காலில் நின்று வேலை பார்க்கிறார். அவருக்கு தன் பிள்ளைகள் யாரும் தன் தொழிலுக்கு வராதது வருத்தம். தன் மூத்த பேரன் கதிர் மீது மிகுந்த பாசம். தனக்குப் பின் அவனாவது நகைத் தொழிலுக்கு வர வேண்டும் என ஆசைப்படுகிறார்.
கதிர் சிறுவனாக இருக்கும் பொழுது தாத்தா பாட்டி வீட்டு நினைவுகளை, மூத்த பேரனாக தான் கொண்டாடப்பட்டதை நினைவு கூர்கிறான். நகைகள் பற்றிய நகைத் தொழில் பற்றிய நுட்பமான விஷயங்களை கண்டறிகிறான்.
ஒரு கட்டத்தில் சில சம்பவங்களால் அமைதியாகிறான். தன் தாத்தா ஆசைப்பட்ட படியே நகைக்கடை வைக்கிறான். இந்த நாவலை ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதையாகப் பார்க்கலாம்.
அதற்குள் தாத்தா பாட்டி பேரன் பாசம், பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மை, சமையலே கதி என்று கிடக்கும் பாட்டி, தன் கணவர்களின் நிலை அறியாத மனைவிகள், தன் கணவனின் காதல் அறிந்தும், அவனை வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல போராடும் கதிரின் அம்மா, வாழ்க்கையில் அடி நிலைக்கு வந்துவிட்டதை எண்ணி வருந்தும் கந்தசாமி பத்தர், நகைத் தொழில் நசிவடைவது என நிறையக் கதைகளை உள்ளடக்கி உள்ளது.
துறை சார்ந்த தொழில் சார்ந்த நாவல்கள் கதைகள் பெண்கள் எழுதுவது வரவேற்புக்குரியது. நகைத் தொழில் சார்ந்த நிறைய விஷயங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் தேவி லிங்கம். நகை செய்பவர்களின் நேர்மை ஒரு பக்கம், பணம் வந்ததும் ஆடம்பரமாக செலவு செய்து கஷ்டப்படுபவர்கள் ஒரு பக்கம்.
அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் பாஷை, சயனைடு சாப்பிட்டு தற்கொலை பண்ணுபவர்கள், தெரிந்தோ தெரியாமலோ திருட்டு நகை கொள்முதல் பண்ணி கஷ்டப்படுபவர்கள், மிஷின்களின் ஆதிக்கம், பெரிய வியாபாரிகள் கைக்கு நகைத் தொழில் போனது, விஸ்வகர்மா சமூகத்தின் ஐந்து பிரிவுகள் பற்றி, அந்த சமூகத்து பெண்கள் போடும் இரண்டு தாலி, மூணு தாலி பற்றி என எல்லாவற்றையும் துல்லியமாக கதைப்போக்கிலேயே சொல்லி விடுகிறார்.
சிறுவயதில் நாம் பார்த்த சிறிய தொழில்கள் எல்லாம் காலங்கள் மாற மாற கார்ப்பரேட்டுகளின், பெரிய கம்பெனிகளின் மாயக் கரங்களுக்குள் சிக்கி நம் கண் முன்னே காணாமல் போவது வலி மிகுந்த துயரம். இந்த நாவலும் அதைப் பற்றித்தான் பேசுகிறது.
“ காப்பவுன மாப்பவுனு எடுத்துப்பான் பத்தன் “ போன்ற நகைத் தொழில் செய்பவர்களை இழிவுபடுத்தும் பழமொழிகளைக் கண்டு கோபப்படுகிறார் கந்தசாமி பத்தர். அவருக்குத் தெரியும், நகை செய்பவர்களின் வாழ்வாதாரம் என்றும் ஒரே நிலையிலேயே உயராமல் இருக்கிறது என்று.
ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புமே நகை மற்றும் நகை சம்பந்தமாக வைத்துள்ளது அழகிய ஆபரணமாக மிளிர்கிறது.
தேவி லிங்கம் முன்னுரையில் தன்னைச் சுற்றி நிகழ்வதை கூர்ந்து கவனித்து தன் மனதுக்குள்ளையே பேசிப் பார்ப்பதை குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் கதையின் பாத்திரங்களும் தங்களுக்கு நடக்கும் விஷயங்களை, அனுபவங்களை தங்கள் மனதுக்குள் பேசிப் பார்த்து தத்துவார்த்தமாக சிந்திப்பது அழகு.
“ நம்ம வாழ்க்கையில் எதை முக்கியமா எடுத்துக்களும் எத தகவலா எடுத்துட்டு போகணும்கிறது முக்கியம் “
இதுபோன்ற தத்துவார்த்த சிந்தனைகள் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
தேவி லிங்கம் கூறியது போல் நிறைய பெண்களுக்கு தங்கள் திருமணம்,குழந்தைகள்,கடமை என்று எல்லாவற்றையும் முடித்த பின்னர் தான் எழுத வர முடிகிறது என்பது சத்தியமான வலி மிகுந்த வார்த்தைகள். தாமதமாக வந்தாலும் தரமான எழுத்துக்களைத் தருகிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கதை வேதாரண்யம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கிறது. காலம் ஏணிப்படிகள் திரைப்படம் வெளிவந்த சமயம். பவுன் நானூறு ரூபாய்க்கு விற்ற காலம். பெண்களுக்கு ரேடியோ திரைப்படம் பாடல்கள் தவிர வேறு பொழுது போக்கு கிடையாது. சமூக கட்டுப்பாடுகள் பெண்களை அழுத்தி அழுத்தி பெண்களின் ஆசைகள் கனவுகள் நிறைவேறுவதற்கான கதவுகளை இழுத்து மூடி விடுகின்றன.
பெண்களின் ஏக்கங்களும் நிராசைகளும், பள்ளி கல்லூரி செல்வதற்கு கூட பெற்றவர்களின் முடிவே பிரதானமாக உள்ள நிலை, காதல் காமம் எல்லாம் எட்டாப் பொருளாக இருக்கும் காலம், மூடிய கதவுகளைத் தட்டித்தட்டி புறவாசலைத் திறந்து தங்களுக்கான சுதந்திரத்தை தேடும் பெண்களும் இருக்கிறார்கள்.
இதெல்லாம் பெண்களாலே தான் உண்மையாகப் பதிவு செய்ய முடியும்.கதிர்வேல் வாழ்க்கையிலும் மெல்லிய தென்றலாக ஒரு காதல் வருகிறது.காதலிலே ஆரம்பித்து காதலுடன் நாவல் நிறைவடைகிறது. சிறுவனாக இருக்கும்போது ஜெயலட்சுமி பாட்டியிடம் உங்கள மாதிரி ஒரு பெண்ணை நான் காதலிப்பேன் என விளையாட்டாக சொல்கிறான். திருமணம் முடிந்து குழந்தைகளும் வந்தபின் காதம்பரி அவன் வாழ்வில் வருகிறாள். தன் பாட்டியின் குரலையும் சாயலையும் காதம்பரியிடம் கண்டடைகிறான்.
தேவி லிங்கத்திற்கு ஒரு நாவலை தங்கு தடை இன்றி இயல்பான மொழியில் கொண்டு செல்லும் லாவகம் நேர்த்தியாக வந்திருக்கிறது.நாவலில் கதிரின் வார்த்தைகளாக வரும், “ பூமியில் பிறந்த படைப்புல எல்லா உயிருக்கும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது. அதை கண்டறிவது தான் அவரவர் பொறுப்பு “.
தேவி லிங்கம் தனக்கான வசீகரத்தை தன் எழுத்துக்கள் வழியே கண்டடைந்து விட்டார்.அவசியம் படிக்க வேண்டிய நாவல்.
கல்பனா ரத்தன்
வெள்ளிமலை தியானம்
கலந்து கொண்ட பெரும்பாலானோர் இள மற்றும் நடுத்தர வயதினர். வேலை மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளும் நிலையில் உள்ளவர்கள். பணி ஓய்வு பெற்ற எனக்கோ அவ்வாறான பெரிய சிக்கல்கள் ஏதுமில்லை. ஆனாலும் ஒரு நிறைவின்மையும், ஏதோ தவற விடுகிறோம் என்ற அலைக்கழிப்பும் இருந்து கொண்டே இருந்தன.
I don’t know if we can thank you enough Sir . This “heart-felt thank you “ is not just for how nicely and meticulously you planned the whole episode of the music sangamam ( knowing its complexity)
About musicNovember 22, 2025
ஆலயக்கலை அறிமுக வகுப்புகள்
ஜெயக்குமார் நடத்திவரும் ஆலயக்கலை அறிமுகப் பயிற்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இன்று ஓர் இயக்கமாகவே ஆகியுள்ளன. ஆலயக்கலைப் பயிற்சியுடன் அவர் ஆலயங்களுக்கான பயணங்களையும் ஒருங்கிணைக்கிறார். அவருடைய மாணவர்கள் பெரிய திரளாக மாறியுள்ளனர்.
ஆலயங்களை அறிவது என்பது பக்தி, வழிபாடு என்றவகையில் முக்கியமானது. ஆலயம் என்பது ஒரு நூல் போல.ஆலயக்கலை அறியாதவர் அந்நூலின் முன் எழுத்தறியதவராக நின்றிருப்பவர். இப்பயிற்சி அந்நூலை வாசிப்பதற்கான எழுத்தறிவித்தல்கல்வி போன்றது.
ஆலயங்களை அறிவது என்பது மதம்சாராதவர்களுக்கும் முக்கியமானது. அது ஒரு பண்பாட்டுப் பயிற்சி. நம் மரபின் கலையும், இலக்கியமும், வரலாறும் ஆலயங்களிலேயே உள்ளன. ஆலயம் என்பது நம் ஆழ்மனம் போல. இப்பயிற்சி அதை அறிவதற்கானது.
பயிற்சி நாட்கள் டிசம்பர் 5,6 மற்றும் 7
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள். இடமிருப்பவை
நவீன ஓவியம்- காட்சிக்கலை- ரசனைப்பயிற்சி
ஏ.வி. மணிகண்டன் நடத்தும் நவீன ஓவியக்கலை- காட்சிக்கலை அறிமுகப் பயிற்சிகள் இன்று மிகப்பெரிய அளவில் பங்கேற்பாளர்கள் கொண்ட நிகழ்வாக மாறியுள்ளன. ஏனென்றால் அவை நவீன ஓவியக்கலை- காட்சிக்கலையை எப்படி ரசிப்பது என்று கற்பிக்கின்றன. நவீனக்கலையில் உள்ள அழகியல் கொள்கைகளைக் கற்பிக்கின்றன.
இந்தக் கல்வி இரண்டு வகையில் இன்று முக்கியமானது.
ஒன்று, ஒரு நவீன மனிதன் இன்று காட்சிக்கலையின் அடிப்படைகள் பற்றி அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால் அவனால் கட்டிடக்கலை, ஆடை வடிவங்கள்கள், நவீன மோஸ்தர்கள் எதையுமே புரிந்துகொள்ள முடியாது. ஐரோப்பிய- அமெரிக்கப் பண்பாட்டையே அறிந்துகொள்ள முடியாது. ஒரு நவீன இளைஞனுக்குரிய அடிப்படைக் கல்வி இது. தொழில், வணிகம் என எந்தத்துறையிலும் உலகுடன் புழங்குவதற்கும் நம்மை பயிற்சி அளிக்கும் கல்வி இது.இரண்டு, இன்று செயற்கை நுண்ணறிவு உருவாகி பேருருவம் பெற்று வருகிறது. தொழில்நுட்பப் பணிகளை எல்லாம் அது செய்யும். கூடுதலாக நாம் என்ன செய்யமுடியும் என்பதுதான் இன்று நம் தகுதியை அளக்கும் அளவுகோல்.அந்த தகுதி கலைகளால் வருகிறது. தொழில்நுட்பத்துடன் அசலான கலைப்பயிற்சியும் உடைய ஒருவர் தனித்தன்மைகொண்டவர் ஆகிறார். அந்த unique தன்மைதான் இன்றைய உலகில் மதிக்கப்படுவது. அதற்கான ஓர் அறிமுகம், ஒரு தொடக்கம் இந்தக் கல்வி. உலகமெங்கும் இன்று முதன்மையாகக் கற்பிக்கப்படும் இக்கல்வியை முறையான கல்விமுறையாக வளர்த்தெடுக்கும் நோக்கமும் எங்களுக்கு உண்டு.நாள் நவம்பர் 28 29 மற்றும் 30
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்
யோகப்பயிற்சி- முதல் நிலை
எப்போது வாகனப்போக்குவரத்தும் நாற்காலியும் கண்டடையப்பட்டதோ அப்போதே சில நோய்கள் தொடங்கிவிட்டன என்பார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவான சோம்பலான வாழ்க்கைமுறை உடலை செயற்கையான நிலைகளுக்கு பழக்கப்படுத்தி பலவகையான உடற்சிக்கல்களை உருவாக்கிவிட்டது. நம் உள்ளுறுப்புகள் எல்லாம் எப்படி இயல்பாக அமைந்திருக்கவேண்டுமோ அப்படி இன்று அமைந்திருக்கவில்லை. அவற்றைச் சீரமைக்க, சரியாக இயங்கச் செய்ய யோகாவே உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் முதன்மையான வழிமுறையாக உள்ளது. யோகா இன்று ஓர் உலகப்பேரியக்கம்.
சௌந்தர் சர்வதேச அளவில் புகழ்பெற்றுவரும் யோகப்பயிற்சியாளர். சென்ற மூன்றாண்டுகளாக அவர் தொடர்ச்சியாக எங்கள் அமைப்பில் யோகப்பயிற்சி அளிக்கிறார். இதன் வழியாகவே அவர் சர்வதேச அளவில் அறியப்படத் தொடங்கினார். யோகப் பயிற்சியை எவரும் பெறலாம். ஆனால் சரியான ஆசிரியருன் வழிகாட்டலில் சரியான பயிற்சியை அடைவது மிக முக்கியமானது. நமக்கான யோகமுறையை அவர் தனிப்பட்ட முறையில் அளிக்கவேண்டும். தொடர்ச்சியாக வழிகாட்டவேண்டும்.
யோகப்பயிற்சிகளை தனியாகச் செயபவர்கள் தொடர்ந்து செய்வதில்லை. அதை தொடர்ந்து செய்வதற்கான வழிமுறை என்பது அதற்கான நண்பர்களின்குழுமத்துடன் இணைவதுதான். அவர்களுடன் நேரிடையான அறிமுகம் அடைவது. அதற்காகவே யோகப்பயிற்சிக்கான தனியான இடம், தனியான சூழல் தேவை எனப்படுகிறது. இயற்கையான அழகான மலைப்பகுதியில் நிகழும் இப்பயிற்சி பலநூறுபேரின் வாழ்க்கையின் திருப்புமுனை ஆகியுள்ளது.
நாள் டிசம்பர் 12 13 மற்றும் 14
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
தாவரங்கள்- வனம்: அறிமுக வகுப்பு (குழந்தைகளுக்காகவும்)தாவரவியல் பேராசிரியை முனைவர் லோகமாதேவி நடத்தும் தாவர அறிமுக வகுப்புகள் பெரியவர்களுக்காகவே திட்டமிடப்பட்டன. ஒவ்வொருவரும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நூறு தாவரங்களையாவது அறிந்திருக்கவேண்டும் என்பதே நோக்கம். அதற்கான தேவை என்ன? முதன்மையாக மூன்று.
தாவரங்களை அறிவது சூழலுணர்வை உருவாக்கி அன்றாடவாழ்க்கையில் சிறுசிறு இன்பங்களை உருவாக்குகிறது. இன்றைய சலிப்பூட்டும் அன்றாடச்சுழற்சி கொண்ட வாழ்க்கையில் அது மிகப்பெரிய விடுதலை.நாம் உண்ணும் உணவு, நம் சூழல் ஆகியவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்குகிறது. அறிவியல்பூர்வமாக நம் வாழ்க்கையை வாழ்வதற்கான வழியக் அறிமுகம் செய்கிறது.யோகம், தியானம் பயில்பவர்கள் இயற்கையுடனான அன்றாட உறவைக்கொண்டிருக்கவேண்டும். அதை தாவர அறிமுகம் உருவாக்குகிறது.ஆனால் நாங்கள் எண்ணியிராதபடி அவ்வகுப்பு குழந்தைகள் நடுவே புகழ்பெற்றது. இதுவரை நிகழ்ந்த வகுப்புகளில் குழந்தைகள் பேரார்வத்துடன் கலந்துகொண்டனர். குழந்தைகள் கலந்துகொள்வதன் அவசியம்.
இன்றைய கணினி அடிமைத்தனம், செல்பேசி அடிமைத்தனத்தில் இருந்து குழந்தைகளை நேரடியாக இயற்கை நோக்கிக் கொண்டுவருகிறது. இயற்கையுடன் இருப்பதும், செயலாற்றுவதுமே இன்றைய ‘தகவல்தொழில்நுட்ப அடிமை’ மனநிலையில் இருந்து மீள்வதற்கான வழி.பறவைகளைப் பார்த்தல் இளையோருக்குரிய உயர்நிலை கல்வி- பொழுதுபோக்கு. தாவரங்களை அவதானித்தல் அதனுடன் இணைந்து செய்யப்படவேண்டியது.இளமையிலேயே குழந்தைகளுக்கு அவர்களுக்குரிய ஓர் அறிவுத்துறை அறிமுகமாகி அதில் ஈடுபாடு உருவாவது வாழ்க்கை முழுக்க உருவாகும் பல்வேறு திசைதிரும்பல்களை தவிர்க்கும்.இது நுணுக்கமான செய்முறைகளுடன் இணைந்த நிகழ்ச்சி. ஆகவே ஒரு விடுமுறை கொண்டாட்டமும்கூட.வரும் டிசம்பர் விடுமுறையில் மீண்டும் லோகமாதேவியின் வகுப்புகள் நிகழ்கின்றன.
நாள் டிசம்பர் 26, 27 மற்றும் 28 (வெள்ளி சனி ஞாயிறு. கிறிஸ்துமஸுக்கு மறுநாள் முதல்)
தொடர்புக்கு programsvishnupuram@gmail.com
We have been conducting Indian philosophy classes for over three years, with around 500 to 600 people having completed the first level across nine batches. Further-level classes are currently ongoing.
Many aspirants have expressed interest in attending these classes in English. As a result, we are launching the same classes in English for those who are not proficient in Tamil.
This class offers a thorough introduction to Indian philosophy, serving as the foundational starting point for advanced courses. The instruction will be conducted in English.
Date: January 2, 3, and 4 (Friday, Saturday, and Sunday), 2026
Venue: Nityavanam, at the hill station Vellimalai, near Erode.
For contact programsvishnupuram@gmail.com
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

