Jeyamohan's Blog, page 8
November 20, 2025
மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா.
விழாக்களில் எப்போதுமே அன்னியமாவது என் இயல்பு. எந்த விழாவிலும் நான் ஒரு வகையான ‘சம்மல்’ தோன்றும் முகத்துடன்தான் காணப்படுவேன். ஆகவே எனக்கு என்னுடைய விழாப்புகைப்படங்களைப் பார்க்கப் பிடிப்பதில்லை. கணிசமான விழாக்களில் என் மனம் எதிலும் சம்பந்தப்படாமலிருப்பதை எவரும் என் முகபாவனைகள் வழியாகக் காணமுடியும். நாங்களே ஒருங்கிணைக்கும் விஷ்ணுபுரம் விருதுவிழாக்களின் போதுகூட அப்படித்தான். காலச்சுவடு கண்ணனின் திருமண விழாவில் சுந்தர ராமசாமிதான் அங்கிருப்பவர்களிலேயே அந்நியமானவராக திகழ்ந்தார் என்பதை அப்போது கவனித்து எழுதியுள்ளேன்.
ஆனால் வகுப்புகளில் போது வேறொரு மனநிலை அமைகிறது அங்கு கற்றலும் கற்பித்தலும் நிகழும்போது உருவாகும் களிப்பு உள்ளது. என்னுடைய வகுப்புகள் ஒருவகையில் அணுக்கமான நண்பர்களுடன் உரையாடி மகிழ்ந்திருப்பது போல என்பதுதான் அது ஒரு கொண்டாட்ட மனநிலையை உருவாக்குகிறது. வகுப்புகளில் நான் என்னை மறந்து திளைக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். நான் உரையாற்றும் நிகழ்வுகள் எனக்கு ஒருவகை வகுப்புகள்தான். குறிப்பாக கட்டண உரைகள் நானே என் பேசுபொருளில் ஆழ்ந்து செல்லும் அனுபவம் கொண்டவை. ஆகவே ஒருபடி மேலானவை.
விழாக்கள் அவை எத்தனை முக்கியமானவையாக இருந்தாலும் அடிப்படையில் சம்பிரதாயமானவை. சம்பிரதாயமான செயல்பாடுகளுக்கு இயல்பாகவே ஒரு சலிப்பூட்டும் தன்மை உண்டு. ஏனென்றால் ஒன்று, அவை ஏற்கனவே நமக்கு முன்னரே தெரிந்தவையாக இருக்கும். இரண்டு, அவை இயந்திரத்தனமாக மட்டுமே செய்யப்பட முடியும். இயந்திரத்தனமாகச் செய்யப்பட்டால் மட்டுமே அவற்றுக்கு ஒழுங்கும் முறைமையும் அமைகிறது. ஒழுங்குதான் சம்பிரதாயச் செயல்பாடுகளிலுள்ள முதன்மை அழகு. அந்த ஒழுங்கு சற்றுச் சிதைந்தால்கூட பதற்றமும் ஒவ்வாமையும் உருவாகிறது. மூன்று, அவற்றில் உணர்ச்சிகரம் நேரடியாக வெளிப்பட வாய்ப்பே இல்லை. அவை நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகங்கள்தான்.
ஆனால் சடங்குகளைத் தவிர்க்கவும் முடியாது. ஏனெனில் வாழ்வின் முக்கியமான தருணங்களை எல்லாமே சடங்குகள் வழியாகத்தான் நாம் நிறைவேற்றிக் கொள்கிறோம். எல்லாச் சடங்குகளும் குறியீட்டுத் தன்மை கொண்டவை. ஆகவே மிகமிகத் தொன்மையானவை. முடிவிலாக் கடந்தகாலத்துடன், முன்னோருடன் நாம் நம்மை உணர்வுபூர்வமாக இணைத்துக்கொள்ளவே சடங்குகள். நாம் இங்கே வாழ்வது ஒரு தொடர்ச்சிதான் என்னும் உணர்வை, நாம் செய்யும் செயல்கள் அழிவற்ற தொடர்ச்சி கொண்டவை என்ற எண்ணத்தை அவை அளிக்கின்றன. ஆகவேதான் காலத்தொடர்ச்சி அற்ற புதிய சடங்குகள் வேடிக்கைகளாக ஆகிவிடுகின்றன.
ஒரு சடங்கு நிகழ்ந்து முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவில் எழும்போது அதில் ஆழ்ந்த உணர்ச்சிகள் ஏறி இருக்கின்றன எப்பதைக் காணலாம். என் நினைவில் அப்படி உணர்ச்சிகரமாக நீளும் சடங்கு நிகழ்வுகள் பல. என் திருமணம். அதன்பின் கதா விருதை டெல்லியில் சங்கர் தயாள் சர்மா அவர்களிடமிருந்து விருது பெற்றது. குர்அதுல்ஐன் ஹைதர் அவர்களிடமிருந்து சன்ஸ்கிருதி சம்மான் விருது பெற்றது. ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களிடம் இருந்து பாவலர் விருதை பெற்றது. அண்மையில் தமிழகத்திற்கு வெளியே இருந்து கிடைத்த முக்கியமான ஏற்பாகிய புக் பிரம்மா விருது வரை அப்படி பல தருணங்கள். அஜிதனின் திருமண நாள் கூட அத்தகைய ஓர் இனிய நினைவாகத்தான் என் நினைவில் இருக்கிறது.
இந்த மதிப்புறு முனைவர் பட்ட விருது விழாவும் அத்தகைய ஒரு நிகழ்வுதான். அது அணுகிவரும் வரை அதைப்பற்றி நான் எண்ணவே இல்லை. தொடர்ச்சியாக ஒன்றரை மாத அமெரிக்காப் பயணம். ஒவ்வொரு இரண்டு நாளுக்கும் ஒரு நிகழ்ச்சி. வகுப்புகள். அதன் பிறகு இந்தியா வந்து இங்கே செய்து முடிக்க வேண்டிய பல வேலைகள். குறிப்பாக இரண்டு பெரிய திரைப்படங்களின் திரைக்கதை வேலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வந்ததுமே அவற்றில் மூழ்கவேண்டியிருந்தது.
நவம்பர் 19ஆம் தேதி விருது விழா. 16 ஆம் தேதி தான் விருது விழாச் சடங்கு பற்றிய எண்ணங்கள் வந்தன. திருவனந்தபுரத்தில் திரைப்பட விவாதத்திற்காக தங்க வேண்டி இருந்தது. இயக்குநர் மும்பையில் இருந்து வந்திருந்தார். நானும் அருண்மொழியும் அங்கு சென்று எஸ்பி கிரான்ட் ஹோட்டலில் தங்கி அந்த விவாதத்தை முடித்துவிட்டு 18 ஆம் தேதி காலை திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து சென்னை வந்தோம். அங்கிருந்து காரில் மாலை நாலரை மணிக்கு புதுச்சேரி அக்கார்ட் விடுதிக்கு வந்தோம். நண்பர்கள் பலர் பல ஊர்களில் இருந்து ஏற்கனவே புதுச்சேரிக்கு வந்து தங்கி இருந்தார்கள்.
ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும் நண்பர்களும் அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தார்கள். அத்தனைபேர் கூடியிருக்கிறோமே, மாலையில் ஒரு சந்திப்பு எற்பாடு செய்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கலாமா என்று முன்னரே கிருஷ்ணன் கேட்டிருந்தார். ஆனால் மாலையில் ஏழரை மணிக்கு சிறப்பு விருந்தினர்களுடன் ஒரு விருந்தை அக்கார்ட் விடுதியிலேயே பல்கலை அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தமையால் அந்த நண்பர் சந்திப்பை நடத்த முடியவில்லை.
நண்பர்களுடன் கூட்டமாக புதுச்சேரியின் கடற்கரைக்கு சென்று ஏழு மணி வரை பேசிக் கொண்டிருந்தேன். சேலம், பெங்களூர், ஈரோடு, கோவை, சென்னை என பல்வேறு ஊர்களில் இருந்து வந்த நண்பர்கள் திரண்டிருந்தனர். ஏ.வி.மணிகண்டன் மேல்சித்தமூர் சென்றிருந்ததாகச் சொன்னார். கிளம்பும்போது அங்குள்ள சமண மடத்தின் பட்டாரகர் பார்த்து எங்கே செல்கிறீர்கள் என்று விசாரித்ததாகவும், அவரிடம் ஜெயமோகனுக்கு விருது வழங்கும் விழா என்று சொன்னதாகவும், அப்போதுதான் பட்டாரகர் என் வாசகர் என்று தெரியவந்ததாகவும் சொன்னார். பட்டாரகர் ஒரு வாழ்த்துச்செய்தி எழுதி எனக்கு கொடுத்தனுப்பியிருந்தார்.
வியப்பாக இருந்தது. மேல்சித்தமூருக்கு 2006ல் நான், வசந்தகுமார், யுவன் சந்திரசேகர், மதுரை சண்முகம் ஆகியோர் சிரவணபெலகொளாவுக்கு மகாமஸ்தகாபிஷேகம் பார்க்கச் செல்லும் வழியில் அங்கே சென்றபோது இப்போதிருப்பவரின் முந்தைய பட்டாரகரைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றுக்கொண்டோம். (பட்டாகரர் என்பவர் சமணர்களின் மடாதிபதி போல. மேல்சித்தமூர்தான் தமிழகச் சமணத்தின் தலைமையிடம்). பட்டாகரரின் வாழ்த்து என்பது என் இந்த கௌரவத்திற்கு ஒரு படி மாற்று கூட்டுவது என்று எண்ணிக்கொண்டேன்.
திரும்பி வந்து குளித்து உடைமாற்றி கீழே சென்று விருந்தில் கலந்து கொண்டேன். தக்ஷசிலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் மகாலிங்கம் என் வாசகர். என் தளத்தை நாளும் வாசிப்பவர். அவருடைய மகன் ராஜராஜன், மகள் நிலா ஆகியோர் பல்கலைக்கழக நிர்வாகிகள். அமைதிக்காக லெய்மா போவே (Leymah Gbowee), அவருடைய கானா நாட்டு தோழி ஆகியோர் வந்திருந்தார்கள். ஃபிஜி நாட்டின் இந்திய தூதர் ஜெகன்னாத் சாமியும் அவர் மனைவியும் வந்திருந்தனர். பத்து மணி வரை பேசிக்கொண்டிருந்தோம்.
அமைதிக்காக 2011 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெற்றவர் லெமா போவே. லைபீரியாவின் உலகமுகமாக அறியப்படுபவர். லைபீரியா அமெரிக்காவுக்கு ஆப்ரிக்காவில் இருந்த ஒரே காலனி நாடு. 1861ல் ஆப்ரஹாம் லிங்கனின் தலைமையில் அமெரிக்காவில் அடிமையொழிப்பு நிகழ்ந்தபோது அடிமைகளாக இருந்து விடுதலை பெற்ற ஏராளமான கறுப்பினத்தவர் லைபீரியாவுக்கு கொண்டு சென்று விடப்பட்டார்கள். இன்றைய லைபீரியாவின் ஒரு பங்கினர் அமெரிக்க ஆப்ரிக்க வம்சாவளியினர். நிறத்திலும் அதைக் காணலாம்.
அவ்வாறு அவர்கள் அனுப்பப்பட்டதைப் பற்றி அப்போது மிகப் பெரிய விமர்சனம் இருந்தது. ஏனென்றால் கருப்பின அடிமைகளில பெரும்பாலானவர்கள் பழைய எரித்ரியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள். அமெரிக்காவில் இருநூறு ஆண்டுகளாக வாழ்பவர்கள். அவர்களுக்கு ஆப்பிரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆப்பிரிக்காவில் வாழ்வதற்கான உடல் நிலை, அதற்கான உழைப்புப் பயிற்சி, சமூகத்தொடர்புகள் அவர்களுக்கு இல்லை. இனம் அன்றி அடிப்படையில் அவர்களை ஆப்பிரிக்காவுடன் இணைக்க எந்த அம்சமும் இல்லை. அவர்களை திரும்ப ஆப்பிரிக்காவுக்கு அனுப்புவது என்பது ஒரு வகையான நாடுகடத்தல் தண்டனைதான் என்று அமெரிக்க மானுட உரிமைச் சிந்தனையாளர்கள் சொன்னார்கள்.
ஆனால் உண்மையில் லைபீரியா சென்றவர்கள் அமெரிக்காவில் இருக்கும் கருப்பினத்தாரை விட மேலான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதே இன்றுள்ள உண்மை. அதற்கு மூன்று காரணங்கள், அவர்கள் அங்கே ஒரு வலுவான அமெரிக்க – ஆப்ரிக்க இனக்குழுவாக ஆகி வளர முடிந்தது. பிற இனத்தவருடன் இயல்பான உறவையும் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. இரண்டு, இனரீதியாக அமெரிக்காவில் அவர்கள் உணரும் அடிநிலை, ஆட்பட்ட நிலை, தாழ்வுணர்ச்சி அங்கே உருவாகவில்லை. மூன்று லைபீரியாவின் ஆட்சிமொழி ஆங்கிலம், பூர்வகுடி மொழிகள் இருபதுக்குமேல். அமெரிக்கக் கறுப்பர்களுக்கு அந்த ஆங்கிலம் ஒரு கூடுதல் தகுதியாகவும் அமைந்தது.
ஆப்ரிக்காவில் முதலில் சுதந்திரம் அடைந்த நாடு லைபீரியா. 1847லேயே அது சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் ஆப்ரிக்க நாடுகளில் பொதுவாக நிகழ்வதை போல அஙகும் 1980ல் உள்நாட்டு கலவரம் தொடங்கியது. ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் சிக்கல் என்பது அரசியல் அதிகாரமும் இனக்குழு அதிகாரமும் ஒன்றுடன் கலந்துள்ளன என்பதுதான். இனக்குழுக்கள் நடுவே அதிகாரத்திற்கான போட்டி நிகழும் போது அதில் அயல்சக்திகள் தலையிட்டால் ஒரு கட்டத்தில் உள்நாட்டு போராக வெடிக்கிறது. அயல்நாட்டுப்போர் நீண்டகாலம் நீடிப்பதில்லை, அதன் அழிவும் குறைவே. ஆனால் உள்நாட்டுப்போர் பல தலைமுறைக்காலம் நீடிக்கும். அந்நாட்டை வெறும் குப்பைமேடாக ஆக்கும். மாபெரும் மக்கள் அழிவை உருவாக்கும்.
ஆப்ரிக்காவின் பல நாடுகளில் பஞ்சத்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் செத்தழிந்து கொண்டிருப்பது உள்நாட்டுப் போர்களால்தான். ஆசியாவிலும் இந்தோனேசியா, கம்போடியா, இலங்கை என பல நாடுகளில் உள்நாட்டுப்போர்கள் நிகழ்ந்து பேரழிவுகள் உருவாகியுள்ளன. எந்தக் காரணத்துக்காக உள்நாட்டுப்போர் நிகழ்ந்தாலும் அதில் கூட்டம்கூட்டமாகச் செத்து அழிபவர்கள் சாமானிய மக்களே. எந்த வகையில் அப்போர் முடிந்தாலும் ஏதேனும் ஒரு தரப்பு அதிகாரத்தை அடைகிறது, அதனால் அந்த மக்களுக்கு எந்த நன்மையும் விளைவதில்லை. செத்தவர்கள் சருகுகள் போல கூட்டி ஒதுக்கப்படுவார்கள். மறக்கப்படுவார்கள். இதுவே வரலாறு.
லைபீரியாவின் உள்நாட்டுப்போரின் அழிவில் இருந்த அதை மீட்டெடுப்பதற்கான ஒரு பெண்கள் சக்தியாக இருந்தவர் லெய்மா. Women of Liberia Mass Action for Peace என்னும் அமைப்பை அவர் 2003ல் தன் 31 ஆவது வயதில் முன்னெடுத்தார். ஒரு மீன் சந்தையில் 5 பேரை திரட்டி அவர் ஆரம்பித்த இயக்கம் அது. படிப்படியாக மனித உரிமைகளுக்காகவும் ஜனநாயக அடிப்படைகளுக்காகவும் ஒரு போராட்டமாக அது மாறியது. லைபீரிய உள்நாட்டுப்போரில் 2,50,000 பேர் கொல்லப்பட்டனர். அதிகாரத்துக்காக போராடிய இரு தரப்பினரும் ஆண்களை தேடித்தேடிக் கண்டுபிடித்து வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்தனர். அல்லது கொடூரமாகக் கொன்றனர். தங்கள் மகன்களை, கணவர்களை ஒளித்து வைத்துக்கொண்டு தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் அலைந்தனர் பெண்கள்.
பொதுவாக உள்நாட்டுப் போர்களில்தான் மிக அதிகமாக கொடூரங்கள் நிகழ்கின்றன. ஏனென்றால் அயல்நாட்டுப்போர் ராணுவங்களுக்கு இடையே, ராணுவ முறைப்படி நிகழ்கிறது. உள்நாட்டுப்போரில் கடுமையான காழ்ப்புகளும் வெறுப்புகளும் உருவாக்கப்படுகின்றன. கொள்கைகள், இனஅடையாளங்கள், மதநம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படைகளில் இந்த வெறுப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். உள்நாட்டுப்போரில் ‘துரோகிகள்’ என முத்திரையடிக்கப்பட்டுக் கொல்லப்படுபவர்களே மிகுதி. அந்தக் கொலைகளும் பிறரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டவை என்பதனால் கொடூரமாக நிகழ்த்தப்படுகின்றன. லைபீரியாவில் உடலை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டவர்கள் பல்லாயிரம்பேர்.
அச்சூழலில் இருந்து எழுந்து வந்த ‘நாயகி’ லெய்மா. ஆப்ரிக்கப் பெண்களுக்கே உரிய கம்பீரமான ஒரு தாய்மை, தளராத உற்சாகம் அவரிடம் இருந்தது. சென்ற இருபதாண்டுகளாக தொடர்ச்சியான ஜனநாயகமும், அதன் விளைவான பொருளியல் வளர்ச்சியும் லைபீரியாவில் உள்ளன என்று சொன்னார். சிற்றூர்களுக்கும் மின்சாரம், சாலை, குடிநீர் வசதிகள் வந்துள்ளன. வணிகம் வளர்கிறது. கனிமவளம் நிறைந்த லைபீரியா பொருளியலில் அதையே இப்போது முதன்மையாகச் சார்ந்திருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் அங்கே கல்வி மறுமலர்ச்சி உள்ளது. அது பிற வளர்ச்சிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் என்றார்.
பிஜி தீவின் தூதர் ஜெகன்னாத் சாமியின் முன்னோர் ஆந்திரர்கள், ஆனால் பழைய சென்னையில் இருந்து ஃபிஜி சென்றவர்கள். கரும்புத்தோட்டத்தினிலே என்னும் பாரதியின் பாடலை பிஜி தீவின் தமிழர்களை எண்ணி எழுதியதாகச் சொல்வார்கள். (ஆனால் பிஜியில் கரும்பு இல்லை. பிஜி தீவிலிருந்து ஒருவர் வந்து அங்கும் பிற அயல்நிலங்களிலும் தமிழர்கள் படும் பாட்டைப் பற்றிச் சொன்னதை எண்ணித்தான் பாரதி அப்பாடலைப் பாடினார்) அதைப்பற்றி அவரிடம் சொன்னேன்.
இனிய உரையாடல் இரவு பத்து மணிவரை. அதன்பின் அறைக்கு வந்தேன். மறுநாள் பட்டமளிப்பு விழா. அருண்மொழி அதற்கான ஆடைகளை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
(மேலும்)
எம்.கே.குமார்.
சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி வருகிறார். குறும்பட இயக்குனர். ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழின் ஆசிரியர் குழுவில் பங்காற்றினார்
எம்.கே. குமார் – தமிழ் விக்கி
ஒரு தேசியவாதியின் சரிதம்
மகாத்மா காந்தியின் எழுத்துக்களைத் தொகுக்கும் பெரும் பணியின் நிர்வாக கமிட்டியில் உறுப்பினராக்கப்படுகிறார். இன்று நமக்குக் கிடைக்கும் ‘’The complete works of Mahatma Gandhi” தொகுப்பின் உருவாக்கத்தில் காகா காலேல்கருக்கு பெரும் பங்கு உண்டு. அவருடைய கலை இலக்கிய சேவையைப் பாராட்டி அரசாங்கம் அவருக்கு ‘’பத்ம விபூஷண்’’ அளித்து கௌரவித்தது.
இசைநாட்கள்
I am interested in learning more about the philosophy classes you are conducting. Do you have any plans to offer them in English? I am from Andhra and would like to attend one.
எந்தவிதமான மரபிசைப் பயிற்சியும் இல்லாத ஒரு பெரும் கூட்டத்திற்குக் கர்நாடக இசை கேட்கும் பயிற்சி அளிப்பதென்பது தண்ணீரை அறியாதவர்களுக்கு, கடலை விளக்குவது போன்றதொரு கடின முயற்சியாகும். ஆயினும் ஆசிரியர் ஜெயகுமார் இந்த முயற்சியில் முழுவெற்றி அடைந்தார் என்பதே எங்கள் அனைவரின் எண்ணம்.
இசைநாட்கள்November 19, 2025
கவிஞனுடன் வளர்தல்
தேவதேவனைச் சந்திக்கையில் எனக்கு வயது 25. அதாவது 1987ல், குற்றாலம் பதிவுகள் கவிதைப்பட்டறையில் அவரைச் சந்தித்தேன். அந்தச் சந்திப்புக்கு முன்னரே அவருக்கு நான் கடிதங்கள் எழுதியிருந்தேன். அவருடைய குளித்துக் கரையேறாத கோபியர்கள் என்னும் முதல் தொகுதியில் சில கவிதைகள் மட்டும் பிடித்திருந்தன. ஆனால் மின்னற்பொழுதே தூரம் தொகுப்பு என்னை ஆட்கொண்டது. அன்று முதல் அவர் எனக்கான கவிஞராக ஆகியிருந்தார்.
நான் தேவதேவனைச் சந்திக்கையில் அவரிடம் அவர் கவிதைகளின் தனித்தன்மை பற்றிச் சொன்னேன். நான் அன்று நவீனக்கவிதை என்னும் வடிவிலிருந்த நவீனத்துவக் கவிதைமேல் அவநம்பிக்கை கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தேன். தனிநபரின் அகவுலகம், இருத்தலியல் சார்ந்த எதிர்மறைநோக்கு, உலகியல்தன்மை ஆகியவற்றுடன் அவை முழுக்கமுழுக்க சிந்தனையின் கவிதைவடிவங்களாக இருந்தன. விதிவிலக்காக இருந்தவர் அன்று பிரமிள் மட்டுமே. பிரமிளின் அந்த கொந்தளிப்பையும், கனவையும் தேவதேவன் தனக்குரியதாக எடுத்துக்கொண்டிருந்தார்.
ஆனால் நான் பேசியதை தேவதேவன் கவனிக்கவில்லை. அவர் வேறேதோ பேசிக்கொண்டிருந்தார். அவர் கவனிப்பதில்லை என்று அப்போது புரிந்துகொண்டேன். அவருக்கு அவர் கவிதை பற்றி எவரும் வெளியிலிருந்து ஏதும் சொல்லவேண்டியதில்லை. “நீங்க கவிதை எழுதலாமே” என்று என்னிடம் சொன்னார். “நான் ஒண்ணுரெண்டு கவிதை எழுதியிருக்கேன். ஆனால் என்னோடது புனைவுலகம்” என்று நான் அவரிடம் சொன்னேன். “அது இன்னும் நல்லது. இப்ப தமிழிலே புனைவிலே கவிதையே இல்லாமப்போச்சு” என்று அவர் என்னிடம் சொன்னார்.
அதன் பின் இன்றுவரை தொடர்ச்சியாக அவருடனேயே இருக்கிறேன். என்னுடன் அவரும். என் விஷ்ணுபுரம் நாவலைப் பற்றிய முதல் வாசிப்பு எதிர்வினை அவருடையது- அது ஒரு இந்தியக் காவியம் என்று. இரண்டாவது எதிர்வினை ரமேஷ் பிரேதனிடமிருந்து. அது ஒரு பின்நவீனத்துவ மெட்டாஃபிக்ஷன் என்று. “நாங்க சொல்றத நீ எழுதியிருக்கே”. மூன்றாவது எதிர்வினை எம்.டி.முத்துக்குமாரசாமியிடமிருந்து. அது நோபல் பரிசுக்குரிய படைப்பு என்று. கைப்பிரதியை வாசித்து அதை வெளியிடும் முயற்சியை முன்னெடுத்தவர் சி.மோகன்.”எழுதிட்டீங்க…இனிமே என்ன? ஒண்ணுமே எழுதலேன்னாலும் நீங்க இருப்பீங்க. ஜாலியா இருங்க”
தேவதேவன் என்னிடம் சொன்னார், “நாவலுக்காக ஒரு கவித்துவத்தை உருவாக்கிட்டீங்கன்னா அதுக்கு நாவலுக்கு வெளியே இடமில்லை…அதனாலே இன்னொரு நாவலை அந்த கவித்துவத்தோட எழுதக்கூடாது” இது அவர் சொன்னதிலிருந்து நான் புரிந்துகொண்டது. வரையறை செய்து சொல்லும் வழக்கம் அவருக்கு இல்லை. நான் அதை தலைக்கொண்டேன், அந்த மொழியையும் உருவகமுறைமையையும் பின்னர் கையில் எடுக்கவில்லை. ஒவ்வொரு நாவலுக்கும் அதற்கான கவியுலகையே உருவாக்கிக்கொண்டேன். அதுவே என்னை மீளமீளப் பிறக்கச் செய்கிறது.
தேவதேவனுக்கு 1997 ல் சின்னம்மைநோய் வந்தது. ஓர் அகவைக்குப்பின் அது வருவது ஆபத்தானது. உடலுக்குள் நோய் சென்றுவிட்டது. உயிர்பிரியும் அபாயம் இருந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கையில் என் பெயரைச் சொல்லிக்கொண்டிருந்தார் என்று அவர் மனைவி சொன்னார். பின்னர் அவரும் சொன்னார். “அவர்கிட்ட சொல்லுங்க…நான் எழுதின எல்லாத்தையும் அவர்கிட்ட குடுங்க” என்று அவர் அரற்றினார். நான் எப்போதும் எல்லா நெருக்கடிகளிலும் அவருடன் இருந்திருக்கிறேன்.
நான் தேவதேவனைப்பற்றித்தான் அதிகமாக எழுதியிருக்கிறேன். தொடர்ச்சியாக அவரைப்பற்றிய என் ரசனையை எழுதியிருக்கிறேன், ஒரு நூலாக ‘ஒளியாலானது’ என்னும் தலைப்பில் அவர்மீதான என் வாசிப்பு வெளிவந்த பின்னரும் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன். நான் தமிழ்க்கவிதைகளில் தீவிர ஈடுபாடுள்ளவன். இன்று என் ஆர்வம் செவ்வியல்கவிதைகளிலேயே. நவீனக்கவிதைகள் என் உள்ளத்தின் உயரத்திற்கு கீழேதான் நின்றுள்ளன, கவிஞர்களும். தமிழ் நவீனக்கவிதைகளில் நான் மேலே நோக்கி வியப்பவை தேவதேவன் கவிதைகள் மட்டுமே.
அவருடைய அகவுலகை அணுக்கமாக பின்தொடர்வது என் உள்ளம். அவர் ஒருவகை பித்தர். ஒருவகை குழந்தை. முற்றிலும் அறிவுச்செயல்பாடே இல்லாத உள்ளம் அது. அத்தகைய ஓர் உள்ளம் இப்புவியில் தூயபேரின்பத்தை மட்டுமே அறியும் என்று, இந்த இயற்கை அந்த உள்ளத்திற்கு ஒவ்வொரு துளியிலும் இனிக்கும் என்பது எனக்கு இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான அடிப்படையை அளிக்கிறது. ‘எல்லா இலையும் இனிக்கும் காட்டில் வாழ்வது பஷீரின் ஆடு’ என கல்பற்றா நாராயணன் ஓரிடத்தில் எழுதினார். அந்தக்காட்டில் ஒரு தும்பியாக அலைபவர் தேவதேவன்.
ஒரு கவிஞனுடன் ஒரு புனைவெழுத்தாளன் நாற்பதாண்டுகளுக்கும் மேலாகக் கொண்டுள்ள இந்த ஆன்ம உறவு என்பது தமிழில் மட்டுமல்ல, எந்த மொழியிலும் சற்று அரிதானது என்றே நினைக்கிறேன். புனைவெழுத்தில் என் விரிவும் உயரமும் எனக்குத் தெரியும். அவை தனிமரம் தோப்பானவை, வான்தொடும் மலைகளுக்கு இணையான தேவதாருக்கள். ஆனால் அவற்றுக்கும் மேலேதான் வண்ணச்சிறகுகள் கொண்ட சிறுபறவைகள் விளையாடும் வெளி.
ஏ.எஸ்.ராமநாதன்
சிதம்பரம் ஏ.எஸ்.ராமநாதன். மிருதங்கக் கலைஞர். தமிழகத்தில் பிறந்தாலும் இலங்கையில் நீண்டகாலம் வாழ்ந்தார். இலங்கையில் ஓர் இசை ஆசிரியராகவும், இசைமரபை உருவாக்கியவராகவும் அறியப்படுகிறார்.
ஏ.எஸ்.ராமநாதன் – தமிழ் விக்கி
சிவசங்கரியின் “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – உருது”வை முன்வைத்து…
அன்பின் ஜெ!
பயன்பாட்டு மொழியாக கடைவீதியில், குடியிருப்பு பகுதியில் உருதுவை தாய்மொழியாகக் கொண்ட எளிய மக்களைச் சூழ என் அன்றாடம் இருக்கிறது. நவீன இலக்கிய வாசகனாக (உருது / ஆங்கில) மொழிபெயர்ப்பின் வழியே வளைகுடா மத்தியக் கிழக்கு நாடுகளின் எழுத்துக்கள் என் முதன்மைத் தேர்வுகள்.
கோவையின் ஃபைஸ் காதிரி (ஏப்ரல், அக்டோபர் என) இரண்டு முறை வெள்ளிமலையில் “முழுமையறிவு உருது இலக்கிய வகுப்பு”களை எடுத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பொதுவான இணைப்பு உருது இலக்கியம், அதனால் நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட நாள்தோறும் ஒருமுறையேனும் (போனில்) கட்டாயம் பேசிக் கொள்வோம்.
இணையம் அவ்வளவு புழக்கத்தில் இல்லாத (1990-களின் நடுப்பகுதி) ஆண்டுகளில் விக்கிபீடியா, கூகுள் என தேடுபொறி வசதி அன்றில்லை. வட இந்தியாவில் பேசப்படும் மொழிகளை குறிக்கும் Apabhraṃśa என்ற சொல்லைக் கேட்டேன். மலினமான, இலக்கணமற்றது என்பது அதன் பொருளாம். அது இந்தோ – ஐரோப்பிய, இந்தோ – ஆரிய, இந்தோ – ஈரானிய மொழிக்குடும்பம் என இன்னும் கிளைகள் பிரிகிறது.
கடைசியாகப் பார்த்தால் கோபிசந்த் நாரங் பேசும்போது ஒரு இடத்தில் குறிப்பிட்டிருப்பதை இப்பொழுது (சிவசங்கரியின் நூலை) மீள்வாசிப்பு செய்யும்போது கவனித்தேன். இருபத்தி ஐந்தாண்டுகள் எப்படி அது நினைவில் இருந்தது என்பது வியப்பாக உள்ளது. எங்கோ ஆழ்மனத்தில் தங்கிவிட்ட அச்சொல்லைக் கண்டு மனம் குதூகலித்தது.
பிற்பாடு தங்களின் கட்டுரையிலும் ஒரு இடத்தில் Apabhraṃśa – “அப்பிரம்சா” என்கிற அச்சொல்லை மு. ஜகந்நாத ராஜா (1933 – 2008) கையாண்டிருப்பார். சாதாரண, பாமரர்களிடம் இதை கேட்டிருக்க முடியாது, கோபியும் ராஜாவும் உண்மையில் பன்மொழிப் புலவர்கள்.
https://www.jeyamohan.in/31750/#.Va7g...
ஆம், தினமணிக் கதிரில் (இந்திய மொழிகளின் இலக்கியங்களைப் பற்றி சிவசங்கரி) எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகளே – அவர் பிற்காலங்களில் “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” நூல் உருவாகக் காரணமானது.
“உண்மையில் அவர் மறைவுடன் பாலியும் பிராகிருதமும் தெரிந்த கடைசித் தமிழரும் இல்லாமலாகிவிட்டார்” என்று அஞ்சலி செலுத்தியிருப்பீர்கள். அப்துஸ் ஸலாம் (1940 – 2021) என்றொரு மேதை ஒருவர் (எங்கள் ஊரில்) இருந்தார். ஜகந்நாத ராஜாவைப் போல அவரையும் யாருக்கும் தெரியாது. உருது, அரபு, பார்சி மொழிகளிலிருந்து தமிழுக்கும் – அவ்வாறே தமிழிலிருந்து உருதுவுக்கும் மொழிபெயர்த்த, இருவழி மொழிபெயர்ப்பாளர் நரியம்பட்டு அப்துஸ் ஸலாம் சாஹிப்.
ஓஷோ உரைகளில் ஒன்றான “நாரதரின் பக்தி சூத்திரம்” நூலை இரண்டு தொகுதிகளாக இந்தியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர். மௌலானா ரூமியின் மஸ்னவி என்னும் பார்சீக காவியத்திலுள்ள 28,000 ஈரடிச் செய்யுட்ப்பாக்களை முழுமையாக தமிழாக்கம் செய்தவர்.
என் இளம் பருவத்திலிருந்து கொரொனாவின்போது அவர் இறந்துபோகும் வரை தொடர்பில் இருந்தேன். ஓஷோவும் ரூமியும் அவருக்கு ஒன்றே, எல்லாவிதத்திலும் முழுமையான சூஃபி. கிட்டத்தட்ட அதே தகுதிகளுடன் இருக்கும் இன்னுமொரு (கடைசி?) நபர் ஃபைஸ் காதிரி.
மதீனாவிலுள்ள திருக்குர்ஆன் அச்சுக்கூடத்தின் இயக்குனராக அதுவரை அரேபியர் மட்டுமே இருந்தனர். அவ்வாறு அரேபியர் அல்லாத முதல் இந்தியர், வாணியம்பாடியைச் சேர்ந்த முனைவர் ஃபா.அப்துற் றஹீம் (1933 – 2023), Philologist – மொழியியல் அறிஞரான அவரைப் பற்றியும் பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.
வெள்ளிமலையில் தெலுங்கு, மலையாள இலக்கிய அறிமுக வகுப்புகள் நடைபெறுமா எனக்கேட்டு வாசகர் எழுதிய கடிதத்துக்கு – உரிய ஆசிரியர்கள் கிடைத்தால் பரிசீலிக்கலாம் என்று கூறியிருப்பீர்கள்.. மொழிகளில்தான் பண்பாடு, வரலாறு, கலை, மதம், மெய்யியல் சேமிக்கப்படுகிறது. ஆகவே இவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒவ்வொரு சொல்லும், அதன் பொருளும் முக்கியம்.
K.M. George தொகுப்பில் ஷம்சுர் ரஹ்மான் ஃபாரூக்கி எழுதியிருந்த கட்டுரையைத்தான் சிவசங்கரியும் பிற்காலங்களில் தான் எழுதிய “Knit India Through Literature” என்பதில் இணைத்திருக்கிறார். ஒருவகையில் ஷம்ஸ்-சின் இந்த ஒரே கட்டுரைதான் கடந்த முப்பதாண்டுகளாக உருதுவைப் பற்றி வேறு மொழியில் கிடைக்கும் காத்திரமான அறிமுகம்.
இந்த தொகைநூலுக்காக சிவசங்கரி செய்திருக்கும் ஆய்வுகளும், திரட்டிய தரவுகளும் பிரமிக்க வைக்கின்றன. இந்த (உருது இலக்கிய) நூலில் மட்டுமே ஏறக்குறைய 100-150 கவிஞர்கள், சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்கள், நாடக இயக்குனர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், கலைஞர்கள் என சொல்லிக் கொண்டே செல்கிறார்.
1850 -1975 என ஏறக்குறைய 125 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட காலக்கட்டம் இந்த தொகை நூலில் ஆவணமாக கிடைக்கிறது. (உருது) எழுத்தாளர்களில் பலரின் பெயரை இப்பொழுதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன். மறந்து போயிருந்த வேறு சிலர் இங்கு குறிப்பிட்டிருந்ததால் – மீண்டும் படிக்க வேண்டுமென எண்ணியுள்ளேன்.
உருது மொழி குறித்து சிவசங்கரியின் இந்த நூலுக்கு Damodar Mauzo (1944…) முன்னுரை எழுதியுள்ளார். கொரொனா பெருந்தொற்றுக்குப் பிறகு தாங்கள் அதிகம் இந்தியப் பெருநகரங்களில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு சந்தித்த எழுத்தாளர்களைப் பற்றி எழுதுகையில் தாமோதர் மௌசோவைப் பற்றியும் எழுதி இருப்பீர்கள். இதையொட்டி தமிழிலேயே மொழிபெயர்க்கப்பட்ட “கார்மெலின்” நாவலையும் அண்மையில் படித்தேன்.
குர்ரத்துல் ஐன் ஹைதர் (1923 – 2007),குல்சார் (1934…) என இருவர் ஞானபீட விருதைப் பெற்றவர்கள். ஜோகிந்தர் பால் (1925 – 2016), பால்ராஜ் கோமல் (1928 – 2013), கோபிசந்த் நாரங் ஆகியோரின் நேர்காணல்களும், அறிமுகக் கட்டுரைகள், சிறுகதைகளையும் சிவசங்கரி இணைத்திருக்கிறார். மொத்தப் பக்கங்கள் சுமார் 260. உருது தொகை நூலுக்காக ஆறு பேர்கள் எழுதியுள்ளனர். முற்போக்கு முகாமில் செயல்பட்ட குர்ரத்துல் ஐன் ஹைதரைத் தவிர பிறர் அனைவரு,ம் முஸ்லிமல்லாதவர்கள்.
முகலாயர்கள் டில்லியிலிருந்து ஆட்சி செய்தனர். அவர்களிடமிருந்து கிழக்கிந்தியக் கம்பெனி, அதன் பிறகு பிரிட்டிஷ் நேரடி ஆட்சி 1772 முதல் 1911 வரை கல்கத்தாவிலிருந்தே நடத்தி வந்தனர். அதனால் இந்தியாவில் ஆங்கிலக் கல்வியும் நவீனச் சிந்தனைகளும் முதலில் கல்கத்தாவை மையம் கொண்டே தொடங்கின. ஆர்ய சமாஜ், பிரம்ம சமாஜ் என உள்ளூர் சீர்திருத்த இயக்கங்களும் இதற்கான பங்களிப்பைச் செய்தன. John Gilchrist (1759 – 1841) என்பவர் கல்கத்தாவில் 1800-ல் Fort William College அமைக்கிறார். அதையொட்டி உருது இலக்கியத்தின் நவீன அலை கிழக்கிலிருந்து வீசியது என்கிறார் குர்ரத்துல் ஐன் ஹைதர்.
முகலாய அரசு 1857-ல் ஆங்கிலேயர்களிடம் வீழ்ந்தது. அந்த கலகத்தில் பங்குகொண்டவர்களில் ஒருவரான Qasim Nanatwi (1832 – 1880) என்பவரால் தேவ்பந்த் என்னுமிடத்தில் தாருல் உலூம் 1867-ல் நிறுவப்பட்டது. இதுவே இன்று இந்தியாவெங்குமுள்ள மத்ரஸாக்களின் தாய் அமைப்பு. இது காலச் சக்கரத்தை பின்னோக்கி சுழலச் செய்யும் முயற்சி எனக்கூறியவர் Sir Syed Ahmed Khan (1817 – 1898). காலத்தால் முந்தையவரான சர் செய்யத் ஆங்கிலக் கல்வியே இனி இந்தியாவில் – வெள்ளையர்களுக்குப் பிறகும் நீடிக்கும், அது புதியதொரு உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் என்று தன்னைவிட 15 வயது இளையவரிடம் கூறி இருப்பது நகைமுரண்.
சர் செய்யத் முஸ்லிம்களுக்காக 1875-ல் நவீனக் கல்விமுறையில் அலிகர் கல்லூரியை நிறுவினார். அதன் பிறகு Mohd. Ali Jauhar (1878 – 1931) என்பவரால் ஜாமியா மில்லியா போன்றவை 1920-ல் கல்லுரியாகவும், பிற்பாடு பல்கலைக்கழகமாகவும் அது முன்னெடுத்துச் செல்லப்பட்டது. உருது இலக்கியம் பெரும்பாலும் மதச்சார்பற்றப் பண்புடன் இருக்க இதுவே அடிப்படை.
“சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் (அதாவது 1987-ல் ?) கருத்தரங்கு ஒன்று மைசூரில் நடந்தது. அமெரிக்கப் பெண்மணி எழுதிய நாவல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க சென்றேன். வெவ்வேறு மாநிலங்களைச் சார்ந்த எழுத்தாளர்கள் ஒன்றுகூடி, அந்த புதினத்தை பல கோணங்களிலிருந்து வரிவரியாக ஆய்வு செய்தனர். அந்த நினைவுடன் ஊர் திரும்பியபோது சக்தி வாய்ந்த கேள்வி ஒன்று என்னுள் எழுந்தது. கறுப்பர் இலக்கியம், இலத்தீன் இலக்கியம், ஐரோப்பி இலக்கியம் என்று உலக இலக்கியங்களை நன்கறிந்து விமர்சித்து விவாதிக்கும் அளவுக்கு, இந்திய மொழிகளில் வெளியாகும் இலக்கியம் குறித்தான விழிப்புணர்வு – மக்களை விடுங்கள் – பரவலாக எழுத்தாளர்களுக்கே இருக்கிறதா. நிச்சயமாக இல்லை, காரணம் – இந்திய மொழிகளிடையே போதுமான மொழிபெயர்ப்புப் பரிவர்த்தனை நடக்கவில்லை என்பதுதானே” என்று (1997-லில்) எழுதிய முன்னுரையில் சிவசங்கரி குறிப்பிடுகிறார்.
சிக்கிம் மாநிலத்துக்கு அவர் செல்கிறார், தமிழ் குறித்தும், இங்குள்ள இலக்கியம் குறித்தும் எவருக்கும் தெரியவில்லை என்பதை அறிந்து திகைக்கிறார். பிறகு நம்மைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். மற்றவர்களைக் குறித்து நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் – என்ற கேள்வியே இந்த பெருந்திட்டமாக சிவசங்கரியிடம் பெருகுகிறது.
அதற்கும் முன்பாக இருபது, இருபத்தி ஐந்தாண்டுகளாக எழுதிக் கொண்டிருந்த சிறுகதைகள் பழக்கத்தையும் கைவிட்டுள்ளார். படைப்பிலக்கியவாதியாக இது அவரளவில் பெரிய முடிவு என்று சொல்லலாம். அனேகமாக 1993-யில் ஆரம்பித்து 2009-லில் நிறைவு செய்த சிவசங்கரி – இந்த 15/16 ஆண்டுகள் வேறு எந்த இலக்கியப் பணிகளிலும் ஈடுபடவில்லை.
இந்திய மாநிலங்களில் வெவ்வேறு பழக்கவழக்கங்கள், வழிமுறைகள், உணவுமுறைகள், இயற்கை நிலவியல் உள்ளன. இவற்றை அந்தந்த மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியமே சரியாக பதிவு செய்துள்ளன. அவற்றின் சாறை – இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு நூலின் வழியாக சிவசங்கரி வெளிப்படுத்தியுள்ளார்.
“இந்திய இலக்கியம் ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படுவதல்ல, இந்திய மொழிகளில் உருவாவது, தனக்கென சுயமான அறிவுத்தளமும், அழகியலும், ஆன்மிகத்தேடலும் கொண்டது. அது இந்திய ஆங்கிலத்தில் வெளியாவதில்லை…” என்று ஓரிடத்தில் தாங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்.
அதே கட்டுரையில் தொடர்ந்து “இன்று இந்திய இலக்கியத்தில் என்ன நிகழ்கிறது என்று அறிவது மிகப்பெரிய சவால். உதிரியாக நூல்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் முழுச் சித்திரம் மிக அரிது. அண்மைக்காலம் வரை டாக்டர் கே.எம்.ஜார்ஜ் தொகுத்த “இந்திய இலக்கிய அறிமுக நூல்” மட்டுமே இருந்தது” என்கிறீர்கள்.
அதேபோல எம்.டி.வாசுதேவன் நாயரும்கூட “பிற மாநில இலக்கியங்களைக் குறித்து தான் புரிந்துகொண்டது குறைவானது என்பதால் பொதுவான இந்திய இலக்கியங்களைக் குறித்து என்னால் விமர்சிக்கவும் முடியாது. அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்களைக் குறித்து விரிவாக விவாதிக்க இயலும், நகைமுரணாக பக்கத்து மாநில இலக்கியங்களைப் பற்றி ஏதும் தெரியாது” என்கிறார். பொதுவாக ஆங்கில, ருஷ்ய இலக்கியங்களை படித்துள்ள எவரும், அதைப் பற்றி சொல்ல ஏதும் கருத்தை உருவாக்கிக் கொண்டிருப்பர்.
இன்னொரு இடத்தில் – “நமது நாட்டில் மாநில மொழிகளில்தான் இந்திய இலக்கியத்தின் மேன்மையை உணர முடியும்” – என்றும் – ஆங்கிலத்தில் எழுதும் ருஷ்டியும், குஷ்வந்த் சிங்கும் அல்ல” என்று சொல்வது தங்களின் வாதம் வாசுதேவன் நாயருடன் உடன்பட்டிருப்பதாக் காண்கிறேன்..
இந்த தொகைநூலின் முதல் பயணமாக கேரளா வந்த சிவசங்கரி தன்னை சந்தித்ததை எம்.டி.வாசுதேவன் நாயர் நினைவுகூர்ந்துள்ளார். எழுத்தச்சன் கவி துஞ்சத்துவின் இரும்பு எழுத்தாணியை சிவசங்கரி தொட்டபோது அடைந்த பரவசத்தை, சிலிர்ப்பை, பயபக்தியை நாயர் எழுதிச் செல்கிறார்.
வைக்கம் பஷீர், தகழி சிவசங்கரன் பிள்ளை சந்திப்புக்கு எம்.டி.வாசுதேவன் நாயரே ஏற்பாடு செய்து உடன் சிவசங்கரியை அழைத்துச் செல்கிறார். எழுத்தாளர்கள் 90 வயதில் இருந்துள்ளனர், நொய்வாய்ப்பட்டிருந்தபோதும் அந்த வேதனையை மறந்து கண்களில் சிரிப்பு வெளிச்சம் போட குறும்புடன் பேசிய வைக்கம் பஷீரைக் கடைசியாக நீண்ட பேட்டி எடுத்தது தானே என்று பெருமிதத்துடன் (சிவசங்கரி) எழுதுகிறார். தகழிக்கும் உடல்நலக் குறைவு இருந்தது, இருப்பினும் மணிக்கணக்கில் பேசியதை வாசுதேவன் நாயர் எழுதுகிறார்.
தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் உருது முஸ்லிம்கள் எண்ணிக்கையளவில் அதிகம் இருப்பதாலும், இங்கு ஏற்கனவே திப்பு சுல்தான், ஆற்காடு நவாபுகளின் செல்வாக்கின் கீழ் இருந்த பகுதி என்பதாலும் உருது இலக்கிய ஜாம்பவான்களின் பெயர்கள் ஓரளவுக்கு பிரபலம். கம்பனைப் போல, திருவள்ளுவரைப் போல மிர்சா காலிப் (உருது இலக்கியத்தைப் பொறுத்து) எங்கள் வட்டாரத்தின் நாட்டார் கருப்பண்ணசாமி மாதிரி பீடத்தில் அமர்ந்திருப்பார். அப்படியான ஒருவரை தான் எடுத்த ஆவணப்படத்தில் அல்வாக் கடையில் அமர்ந்து சாதாரண பாமரனைப் போல தெருவில் வரக்கூடிய, போகக்கூடிய ஆட்களிடம் பேசிக் கொண்டிருப்பவராக மிர்சா காலிபை காட்டியிருப்பார், இயக்குனர் குல்சார்.
ராவி நதியில்” என்பதும்கூட பிரிவினையைப் பற்றிய குல்சாரின் மிகப் புகழ்ப்பெற்ற படைப்பு. அதை மொழிபெயர்த்த தொடர்பில் வைக்கம் பஷீரின் கதைகளை குல்சாருக்கு அறிமுகப்படுத்துகிறார் சிவசங்கரி. தன் சொந்த தாயின் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத வயதில் இழந்துவிட்ட குல்சார் பிறந்த ஆண்டு 1934. அதன் பிறகு (பாகிஸ்தானாக பிரிந்து சென்ற) தன் சொந்த ஊரிலிருந்து டில்லிக்கு 1947-யில் அகதியாக வருகிறார். அதன் பிறகு 20-25 ஆண்டுகள் வரையிலும் அந்த துயரம், அதிர்ச்சி தன்னை பின்தொடர்ந்து வந்ததாக தெரிவிக்கிறார். நள்ளிரவில் கெட்ட கனவுகள் உடலை அதிரச் செய்ததாகவும் மீண்டும் கண்மூடித் தூங்க பயந்து கொண்டிருந்ததாராம்.
சர்தார் ஜாஃப்ரி, ராஜெந்திர சிங் பேடி போன்ற முன்னோடி, மூத்த எழுத்தாளர்களுடன் கொண்டிருந்த பழக்கமும் பேச்சுமே தன்னை வாழ்க்கையில் பிடிப்புடன் இருக்க வைத்தது என்றும், சூஃபிய ஆன்மீகம் தனக்கு மரபுரிமையாக கிடைத்தது என்கிறார். “நமது சொந்த மொழியை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் பிற மொழிகளின் இலக்கியங்களை வாசிக்கும் பழக்கம் வாசகருக்கு இருந்தாக வேண்டுமென்கிறார்” ஞானபீட விருதாளர் குல்சார்.
உண்மையில் இந்தியர்களாகிய நாம் மற்ற மாநிலத்தாரின் இலக்கியம் பற்றி எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்கிற கேள்வியே சிவசங்கரி அவர்களை இந்த நூல் எழுத தூண்டியிருக்கிறது. இந்த நூலை எழுதத் தொடங்கியபோது அவர் ஐம்பது வயதைக் கடந்திருக்கிறார். மேற்கொண்டு இன்னுமொரு பதினைந்து ஆண்டுகாலம் இதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று அவருக்கு ஆரம்பத்தில் தெரியாது.
மேலும் “தனி பெண்ணாக மணிப்பூர், காஷ்மீர் என தொலைதூர ஊர்களுக்கு எழுத்தாளர்களை தேடிச் சென்று சந்திப்பது சாத்தியமா? என்று தயங்கியிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்ல வேண்டியிருந்தது, இருந்தாலும் ஒரு மொழியை அந்த மொழி பேசப்படும் நிலங்களில் பயணம் செய்து கட்டுரைகளை எழுதி இணைத்துள்ளார்.
பணத்திற்கு என்ன செய்வது என்று மத்திய, மாநில அரசுகளை அணுகியிருக்கிறார். இத்தனைக்கும் வங்கியொன்றில் மாநிலம் தழுவிய பணியில் இருந்தவர், அதிகார மேல்மட்டத்தில் நீண்டகாலம் புழங்கியவரும்கூட. இந்த திட்டம் நூதனமானது, சிறப்பானது என்று வெறுமனே பாராட்டிவிட்டு – உதவி செய்ய தங்களின் விதிமுறையில் இடமில்லை என்று கையை விரித்தது தனியார் நிறுவனங்களும், அரசும்.
கொங்கணி மொழியின் எழுத்தாள நண்பர் Chandrakant Keni (1934 – 2009), குஜ்ராத்தி மொழியில் ஞானபீட விருதைப் பெற்ற Raghuveer Chaudhari (1938…) ஆகிய இருவர் மட்டுமே இதன் அருமையை உணர்ந்துகொண்டு கோவாவுக்கும், அஹ்மதாபாத் வந்துபோக பயண ஏற்பாடு, தங்குமிட வசதி ஆகியவற்றை அளித்தவர்கள் என்கிறார்.
அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் மறைந்த தலைவர் ஜி.கே. மூப்பனார் (1931 – 2001) மட்டும் இதற்காக பண உதவி செய்ததாகவும் இந்தத் தொகைநூலின் 300 பிரதிகளை தனிப்பட்ட முறையில் வாங்கி பள்ளிக்கூட நூலகங்களுக்கு அளித்தார் என்றும் சிவசங்கரி குறிப்பிடுகிறார்.
இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு என்ற திட்டத்திற்காக பதினெட்டு மொழிகளைச் சார்ந்த ஏறத்தாழ நூறு எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறார், சிவசங்கரி. தாங்கள் குறிப்பிடுவதைப் போல இந்திய இலக்கியச் சூழலில் இதற்கு முன்பு பிறர் செய்திராத முன்னுதாரணமற்ற பெரும் சாதனைக்காக 2022-ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்ட விருதைப் பெற்றிருக்கிறார்.
ஒரிய மொழியில் ஞானபீட விருதைப் (1993-ல்) பெற்றவரான Sitakant Mahapatra (1937)-வை பல கடிதங்கள் எழுதியும் தொடர்பு கொள்ள முடியவில்லை, அதனால் அவருடன் உரையாடும் சூழல் அமையவில்லை என்று வருத்தப்படுகிறார்.
ஒவ்வொரு மொழியிலும் சரியான இலக்கியவாதிகள் இடம்பெற வேண்டும் என்று நேர்காணல் செய்து, அதன் முதல் படியை (draft copy) அஞ்சலில் அனுப்பி 12-18 மாதங்கள் காத்திருந்து பலமுறை நினைவூட்டிய பிறகு – “திருத்திக் கொடுக்க தன்னிடம் அவகாசம் இல்லை, எனவே கட்டுரையை, நேர்காணலை தொகுப்பில் சேர்க்க வேண்டாம்” என்று சொன்ன எழுத்தாளர்களைப் பற்றியும் கூறுகிறார். நான்கு கடிதங்கள் போட்டும் பதிலளிக்காத எழுத்தாளர்களின் மனோபாவமும் இவரை பயமுறுத்தியிருக்கிறது.
ஒரு மொழியின் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் போது அந்தந்த மொழியில் ஞானபீட அல்லது குறைந்தபட்சம் சாகித்ய விருதுகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று வகுத்துக் கொண்டுள்ளார். இவ்வாறான விதிமுறைகளுக்குள் எழுத்தாளர் தெரிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.இதன் சாதகம், பாதகம் அப்படியே இந்த தொகைநூலில் தெரிகிறது.
இந்திய நிலப்பரப்பில் 8,9 – 11 ஆகிய நூற்றாண்டுகளில் உருவாகத் தொடங்கிய மொழிகலப்பு 13-ஆம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதன் பிறகு உருது மொழியின் தோற்றம் நிகழ்ந்திருக்கும் என்று மொழியியலாளர்கள் கருதுகின்றனர். ஒரு தரப்பு முன்னகர்த்துகிறது என்றால்; அவ்வளவு பழையதல்ல உருது என்று இன்னொரு குழு பின்னகர்த்தி வைக்கிறது. இரு தரப்புக்கும் வாதங்கள் உள்ளன.
“உருதுவுக்கும் இந்திக்கும் அதிகம் வேறுபாடில்லை, பாரசீக – அரபு லிபியில் எழுதினால் அது உருது, தேவநாகரி லிபியில் எழுதினால் இந்தி என்கிறீர்கள்” என்று சர்தார் ஜாப்ரி கூறியதை தெரிவிக்கிறார். இவ்விரு மொழிகளுக்குமே பொதுவான அடிப்படைதான். எனினும், இரண்டுக்குமே தனித்தனி அடையாளங்கள் உண்டு. இதே போன்றுதான் பஞ்சாபிக்கும், உருது – இந்திக்குமான வேறுபாடும், ஒற்றுமையுமாகும்.
உருது மொழியின் பேராசிரியராக இந்தியாவிலும், மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய கோபிசந்த் நாரங்-ன் கட்டுரை ஒன்று இத்தொகுப்பிலுள்ளது. பாகிஸ்தானிய நிலப்பரப்பில் பேசப்படும் மொழி Saraiki-யே அவருடைய தாய்மொழியாகும். பஞ்சாபி, சிந்தியிலிருந்து பிரிந்து திரிபடைந்த மொழி. அகதியாக இந்தியாவுக்கு வந்த பிறகும் அவருடைய தாயாரும், பாட்டி வழி உறவினர்களும் பேசிக் கொண்டிருந்தனர் என்றும், தனக்கு அந்த மொழி மறந்துவிட்டது என்கிறார் கோபிசந்த்.
“ஒன்றே ஒன்றைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறேன். உருது, இஸ்லாமியர்களின் மொழி அல்ல… அவர்களுக்கென ஒரு மொழி உண்டென்றால் அது அரபு மொழிதான். உருது இந்தியாவின் கூட்டுப் பண்பாட்டிற்குச் சொந்தமானது. சகோதரிகளைப் போல இந்தியும் உருதுவும் ஒன்றையொன்று பரஸ்பரம் சார்ந்திருப்பதோடு பாராட்டிக் கொள்ளும் தன்மையும் கொண்டவை. இதை எப்போதும் மறக்கக் கூடாது” என்று Gopichand Narang (1931 – 2022) கூறியுள்ளார்.
உருது என்பது துருக்கிய மொழிச் சொல் என்று எங்கோ படித்திருந்த சிவசங்கரி அதை கேள்வியாக முன்வைக்கிறார். அதற்கு, “உருது என்ற சொல் எப்படி வந்தது என்பதற்கு பல விளக்கங்கள் உள்ளன. அரச பரம்பரையினர் இருப்பிடங்களில் பேசப்பட்டதால் ‘உருது’ அதாவது ‘அரச இருப்பிடம்’ என்றும் பொருள் உண்டு. இந்தியாவைச் சேர்ந்த மொழி என்பதால் “ஹிந்தவி” என்றழைக்கப்பட்டது. இடைக்காலத்தில் “ரேக்தா”, கடிபோலி என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது. தென்னிந்தியாவிற்கு வடக்கிலிருந்து தெற்காக உள்ளே வந்தவர்கள் ஏற்கனவே புழக்கத்திலிருந்த மொழிகளோடு கலந்து தக்னி உருது உருவானது. கோட்டையின் படைவீரர்களும், சந்தையில் வணிகர்களும் உள்ளூரில் பேசும் இணைப்பு மொழியாக மக்களிடம் புழங்கியது” என்று விவரிக்கப்படுகிறது.
உருது மொழி இலக்கியம் பெருமளவில் அரேபிய, பெர்சிய, ஆப்கன், துருக்கி திணையை தோற்றுவாயாகக் கொண்டிருக்கிறது. அதன் செவ்வியல் ஆக்கங்களைத் தந்த உமர் கய்யாம் (1048-1131); ஸனாய் (1080 – 1150) ; ரூமி (1207 – 1273) ; அமீர் குஸ்ரு (1253 – 1325), ஹாபிஸ் (1325 – 1390) ; மீர் தகி மீர் (1723 – 1810), மிர்சா காலிப் தொடங்கி அல்லாமா இக்பால் (1877 – 1938); ஃபைஸ் அஹ்மத் (1911 – 1984) என நம் சமகால இலக்கியவாதிகளின் சுருக்கமான, திட்டவட்டமான முன்குறிப்புகளை இந்த நூல் தருகிறது.
மேலும் – ஆங்கில கல்வி கற்றவர்களே எல்லா மொழிகளிலும் நாவலை இந்திய மொழிகளில் எழுதியதைப் போல் உருதுவிலும் நிகழ்ந்திருக்கிறது. அந்த காலத்தில் மாவட்ட கலெக்டர் பதவி வெள்ளையர்களுக்கும் – துணை பொறுப்பில் மட்டும் இந்தியர்கள் இருந்ததாக தெரிகிறது, பெயரிலேயே பதவியைக் குறிக்கும் துணை ஆட்சியர் என்கிற முன்னொட்டுடன் அழைக்கப்படும் Deputy Nazeer Ahmed (1833 – 1912) உருது மொழியின் முதல் நாவலை எழுதியிருக்கிறார். Mirathul Uroos – மணப்பெண்ணின் கண்ணாடி என்கிற அந்த முதல் நாவல் 1869-ல் வெளியாகியிருக்கிறது. இதை தமிழ் சூழலில் ஒப்பிடும்போது மாயூரம் வேதநாயகம் பிள்ளை – “பிரதாப முதலியார் சரித்திரம்” நாவலின் (1879) காலத்தை ஒட்டி உள்ளது.
உருதுவின் துவக்கக்கால முதல் நவீன சிறுகதை 1900-வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. Sajjad Haider Yaldram (1880 – 1943) முன்னோடி சிறுகதையாளர்களில் ஒருவர் என்று தன்னிடம் “அக்னி நதி” புகழ் – குரத்துல் ஐன் ஹைதர் கூறிவிட்டு, அவர் தன் தந்தை என்று பெருமைப்பட்டதாக சிவசங்கரி கூறுகிறார். பண்டிதர்களும் புலவர்களும் எல்லா மொழிகளிலும் ஆரம்பத்தில் எழுதியவர்கள். அதனால் அதற்கொரு மேட்டுக்குடிதன்மையும் மிகையுணர்வு ஓங்கியும் இருந்தது.
அப்படியே உருதுவிலும் ஒரு கட்டத்தில் தேக்கம் உருவானது. அதுவரை உருது மொழி அணிந்துவந்த பட்டாடையை வீசியெறிந்த முதல் நபர் Munshi Premchand (1880 – 1936) எனப்படுகிறது. இத்தனைக்கும் அவருக்கு உருதுவே ஒழுங்காக தெரியாது என்று கூறப்பட்டதாம். அதனால்தான், (சிறு)கதைகளின் நிகழ்வுகளை நெருக்கமாகவும், யதார்த்தமாகவும் அவரால் சித்தரிக்க முடிந்தது. இலக்கியவாதி மொழியைப் படைப்பதில்லை, அதை மீறிச் செல்கிறார், கதையோட்டத்திற்குரிய நடையை அவர் கையாண்டார், அதுவே முன்ஷியின் சாதனை” என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
“புதிய இலக்கியவாதிகளின் முன்புள்ள பெரிய சவால் என்பது – அதன் முந்தைய தலைமுறையின் சாதனையை கடந்து செல்வதன் மூலம் தொடங்கியாக வேண்டும்” என்பதுதான் என்று W. H. Auden-னை மேற்கோள் காட்டுகிறார். இலக்கியத்தில் ஏற்படும் உடைவுகளே மொழியை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்வதால் இங்கு நம் தமிழ்ச் சூழலில் கி.ரா.வை நினைவு கூர்கிறேன்.
இயல், இசை, நாடகம் என்கிற வகைப்பாடு தமிழில் தொன்றுதொட்டு இருந்தாலும் – மீனாட்சி சுந்தரம் அவர்கள் (1891-ல்) எழுதிய “மனோன்மணியம்” தமிழின் நவீன நாடகமாக கருதப்படுகிறது. அதற்கு சற்று முன்பு உருது மொழியின் நாடகத்தை Agha Hasan Amanat (1815 – 1858) என்பவரால் 1853-ல் இயற்றப்பட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
“ஜே.ஜே. சில குறிப்புகள்” நாவலை ‘க்ரியா’தான் முதலில் வெளியிட்டிருந்தது (என்று நினைவு). தமிழின் சிறந்த எடிட்டர்களில் ஒருவர் என கிட்டத்தட்ட நிறுவப்பட்டிருக்கும் க்ரியா ராமகிருஷ்ணன் குறித்து தாங்கள் எழுதியவை வெளிப்படையானது. அதில் சொன்னதைப் போல, ”இலக்கியவாதி யாரும் மொழியைப் உருவாக்குவதில்லை, இலக்கியத்தைதான் படைக்கின்றனர் – படைப்பனுபவம்தான் இலக்கியத்தின் சாரம்” என்று இந்த நூலில் ஜோகீந்தர் பால் கூறுகிறார்.
உருதுவில் மொழிபெயர்க்கப்பட்ட ஐரோப்பிய, அமெரிக்க, ருஷ்ய கவிஞர்கள், எழுத்தாளர்கள் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள் போல, அத்தனை இஸங்களும் உருதுவில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. All India Writers’ Association – இந்தியாவைப் பொறுத்தவரை “முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்” இந்திய மொழிகளில் முதன்முதலாக உருது எழுத்தாளர்களால்தான் 1936-யில் தொடங்கப்பட்டது. “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அதன் பிறகு கால்நூற்றாண்டு கழிந்த பிறகு ”1961-யில்தான் வந்தது என்பது கவனிக்கத்தக்கது.
சோவியத் யூனியனுக்கு உலகம் முழுவதிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் சென்றதைப் போல உருதுவிலிருந்து ஏராளமானவர்கள் மாஸ்கோ சென்றனர், சிலர் அங்கேயே இறந்தும்போயினர். Sadath Hasan Manto (1912 – 1955) தன் முன்னோடி எனக்கூறிய Sajjad Zaheer (1905 – 1973) அவர்களில் ஒருவர்.
முற்போக்கு முகாம், நவீனத்துவர்கள், மரபாளர்கள் என உருது மொழி இலக்கியத்தில் இருக்கின்றனர். அதேபோல் – பழமைக்கு லக்னௌ சிந்தனைப் பள்ளி, புதுமைக்கு டில்லி சிந்தனைப் பள்ளி என்றும் பொதுவாக பிரிந்துள்ளனர். உருது மொழி இலக்கியத்தைப் பற்றி அந்த மொழியின் ஆறு பேராளுமைகளுடன் பேசியபோது அவர்கள் அனைவரும் இதனுடன் தொடர்புடைய 50-க்கும் அதிகமான பெயர்களை மேற்கோள் காட்டியதை சிவசங்கரி பதிவு செய்திருக்கிறார்.
Allama Iqbal (1877 – 1938) தாகூரைவிட பதினைந்து ஆண்டுகள் இளையவர். பாரதியாரைவிட ஐந்தாண்டுகள் மூத்தவர். அவரைப் பற்றி குறிப்பிடாமல் உருது கவிதைப் பற்றி எழுதவே முடியாது. Sare Jahan Se Acha, Hindustan Hamara-வை இயற்றிய பாடலாசிரியர். The Reconstruction of Religious Thought in Islam என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்ற 1930-ல் சென்னைக்கு வந்திருக்கிறார். ஆறு நாட்கள் இங்கு தங்கியிருந்து ஆற்றிய தத்துவார்த்த உரைகள் பிற்காலங்களில் நூலாகவும் தொகுக்கப்பட்டது.
பெர்சியன் இலக்கியத்தின் உச்சமாக கொண்டாடப்பட்ட தீவான் வடிவத்தை பரிட்சார்த்த ரீதியாக West–östlicher Divan 1815-வாக்கில் J. W. Goethe (1748 – 1832) எழுதினார். அது எழுதப்பட்டு நூறாண்டுகள் கழித்து அதே வடிவத்தில் Message from the East என்பதை மறுப்பாக 1923-ல் வெளியிட்டார், இக்பால். Cambridge, Munich-ல் ph.d. பட்டம் பெற்று இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாரிஸ்டர் ஆனவர் இக்பால்.
பஞ்சாபியரான சம்பூர்ணசிங் எனப்படும் குல்சார் அதிகம் உருதுவில்தான் எழுதினார், இந்தி சினிமாவின் பாடலாசிரியராக புகழ்ப்பெற்றவர். சுபாஷ் முகோத்பாத்யாவை மூலத்தில் படிக்க விரும்பி – வங்காள மொழியை கற்றுக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் கொடிக்கட்டிப் பறந்த வங்க மொழி இலக்கியம் இன்று தேங்கிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார்.
ஒரு மொழியின் இலக்கியத்தை இன்னொரு மொழியோடு ஒப்பிடவும்கூடாது, எந்தவொரு மொழியிலும் இலக்கியம் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வளர்ச்சியடையும், வீழ்ச்சியையும் அடையும், ஒரே இடத்தில் நிலைகொண்டிருக்காது என்கிறார்,
ஃபைஸ் காதிரி அடிக்கடி குறிப்பிடும் உருது எழுத்தாளர் Noon Meem Rashid (1910 – 1975) ஆவார். இஸ்மத் சுக்தாய், குர்ரத்துல் ஐன் ஹைதர் போலவே உருதுவில் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். Mumtaz Shireen (1924 – 1972) போன்று பலரைப் பற்றிய அறிமுகம் இதிலுள்ளது.
ஞான பீட விருதை உருது மொழி இலக்கியத்துக்காகப் பெற்றவர்களில் ஒருவர் Ali Sardar Jafri (1913 – 2000) அவருடைய கட்டுரையோ, நேர்காணலோ இதில் இல்லை. இந்த தொகுப்பை சிவசங்கரி தயாரித்துக் கொண்டிருக்கும்போதே அவர் இறந்து போய்விடுவதால் விடுபட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் பல்வேறு இடங்களில் அவரைப் பற்றி பலரும் பேசியதை பதிவு செய்துள்ளார்.
முஹம்மத் நபியைத் தொடர்ந்து Khaja Muinuddin Chisthi (1143 – 1236); Nizamuddin Awliya (1238 – 1325); Ameer Khusru (1253 – 1325) ஆகியோரின் காலத்தில் மெல்ல மெல்ல வேர்பிடித்த சூஃபித்துவம் இந்திய மண்ணில் வலுவாக நிலைகொண்டது. வரலாற்றில் இரண்டு ரூமிகள் உள்ளனர். ஒருவர் இன்றைய பங்களாதேசமாக இருக்கும் பழைய ஒன்றிணைந்த இந்தியாவுக்கு வந்த Shah Sultan Rumi (d.1075) . ஆனால் பிற்காலங்களில் Jalalulddin (1207 – 1273) எனப்படும் ரூமி மிகவும் புகழ்ப்பெற்றார், இந்தியாவைப் பற்றி எழுதிய ரூமி இங்கு இந்த மண்ணில் கால் வைக்கவில்லை என்பதே வரலாறு.
திருக்குர்ஆன் நெடுக காணப்படும் “Qul” என்கிற அரபுச் சொல்லின் வேரான – “Qawla” என்கிற வினைச் சொல்லுக்கு – (கதையைச்) சொல், (உரக்கக்) கூறு, (சரளமாக) பேசு, என்பது பொருளாகும். கடனாக அச்சொல்லைப் பெற்ற உருது – அதன் எல்லைகளை விரிவாக்கி கஸல் பாடலுக்கான கவ்வாலி என்று பிரபலயமாக்கியது. Whirling and chanting darvesh – சுழன்றாடி மந்திரம் ஓதும் துறவிகளைப் பற்றிய குறிப்புகள் மௌலானா ரூமியின் காலத்திலிருந்து கிடைக்கிறது.
இது அரபு நிலப்பரப்புக்கு கிழக்கிலும் மேற்கிலும் என இரு திசைகளில் முன்னேறியது. பாகிஸ்தான், பங்களாதேசம் உள்ளடக்கிய இந்திய துணைக்கண்டத்தில் கவ்வாலி அடைந்த ஏற்பு முஸ்லிம்கள் வசிக்கும் பிற நாடுகளில் கிடைக்கவில்லை. கவ்வாலிக்கும் இந்திய பஜனை, கீர்த்தனை சம்பிரதாயத்துக்கும் இடையே வெளிப்படையாக தெரியும் தொடர்பை கவனிக்கவேண்டும் என்றும் உள்ளூர் இசையும், நாட்டார் பாடலாக கவ்வாலியும், கஸலும் இணைபிரியாமல் கலந்தது என்றும் கூறுகிறார், கோபிசந்த் நாரங்.
மதரீதியான வழிபாட்டை முஸ்லிம்கள் தொழுகை என்று அழைப்பர். அதில் திருக்குர்ஆன் வசனங்களை பாராயணம் போல் மனதுக்குள், அல்லது மெல்லிய குரலில் ஓதிக் கொள்கின்றனர். இது பிரார்த்தனையாக, அருள்மொழியாக கருதப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தளவில் ஆட்சியிலிருந்த முஸ்லிம் மன்னர்கள் சூஃபிகளின் புரவலர்களாக இருந்தாலும் – அதிகார வட்டத்தில் மௌலவிகள், முல்லாக்கள், ஆலிம்கள் எனப்படும் மதகுருமார்களின் ஆதிக்கம் தொடர்ந்து இருந்துவந்தது. அதன் எதிர்பதமாக சூஃபிகள் மக்களுடன் ஒன்றுகலந்து இன்றைய கலைச்சொல்லான – விளிம்புநிலையில் இருந்தனர் என்பதே உண்மை.
(முஸ்லிம் சனாதனிகளான) உலமாக்களை ஆச்சாரவாதிகள் எனலாம். எதிர்நிலையிலிருக்கும் சூஃபிகள் மாற்றுச் சிந்தனையாளர்கள். எனவே முரண் எப்பொழுதுமே இருந்துவந
முகுந்த் நாகராஜன் சந்திப்பு
அன்புள்ள ஆசிரியருக்கு,
கவிஞர் முகுந்த் நாகராஜனுடன் நிகழ்ந்த கலந்துரையாடல்
கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளை கேள்.
அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச்
செல்லட்டும்.
உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை தொடர்ந்து கொண்டே இரு.
அதன் அருகாமையை
நழுவ விடாதே
ஒரு போதும்.
என்று ரூமி சொல்வது போல், கவியின் மனநிலையை வாசகன் அடைவதும், அதுவும் கூட்டு மனங்களால் இணைந்து அடையும் அத்தருணம், கவிஞருடனான கலந்துரையாடல் என்பது சொல்லிற்கு மேலான மீ மொழி ஆனது,.
கடந்த அக்டோபர் 25ஆம் தேதி, பிகின் பள்ளி ,ஓசூரில் கவிஞர் முகுந்த் நாகராஜன் அவர்களுடனான ஒரு கலந்துரையாடலை, திரு. வேணு வேட்ராயன் முன்னெடுத்து நிகழ்த்தியபோது.
பாடலோடு தொடங்கலாம் என்று வேணு அவர்கள் கூறியதற்கிணங்க, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா என்கிற பாரதியாரின் பாடலைப்பாடினேன். இசை நிகழ்ச்சிகளில் நாட்டை அல்லது ஹம்சத்வனி பாடி ஆரம்பிப்பது போல, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா பாடல் ஒரு குழந்தையின் உலகத்தைப் பற்றி பேசும் கவிஞருடனான கலந்துரையாடலுக்கு மிகவும் பொருந்தியதாய், அழகாய் அமைந்தது.
வேணு அவர்கள் முகுந்த் அவர்களின் கவிதைகளை தொகுத்து குறிப்புக் கையேடு ஒன்று செய்ந்திருந்தார், அதன்வழி கலந்துரையாடல் நிகழ்வை முன்னெடுத்தார். கவிதையின் பேசுபொருள் கொண்டு கோர்க்கப்பட்ட கவிதைகளை பக்க எண், வரிசை எண் வழியாக, ஒவ்வொருவரும் படித்து, உரையாடி இன்புற்றோம்.
அதில் கிருஷ்ணர், பிள்ளையார் பெயர்களில் எழுதப்பட்ட கவிதைகளை வாசித்தோம். பண்டிகை நாட்களில் இருந்த அவர் வீடும், அவரின் பால்யத்தையும், அவர் கவிதைகளின் வழி ரசித்ததோடு, நம் வீடும் பண்டிகையும் நினைவுக்கு வந்து புன்முறுவல் தந்தது மகிழ்ச்சி. எங்கள் அனைவருக்கும் பிடித்த கவிதையின் சில வரிகள்
கடவுள் செய்தோம்
கோலம் போட்ட பலகையை
….
எண்ணெய் போட்ட விளக்குகள்
இரண்டு பக்கமும் வைத்து
அருகம்புல் அர்ச்சனை செய்தோம்
பழங்களை வைத்தோம்
கொழுக்கட்டை வைத்தோம்.
இப்படி படிப்படியாக கடவுளை செய்து
அவர் காலில் விழுந்தோம்.
மறுநாள் இரவு கிணற்றில் போட்டோம்.
தினமும் கடவுள் கட்டுப்படியாகாது.
அலுவலக நிமித்தமாய் வீட்டை விட்டு வெளியூரில் தங்கியிருந்த போது அவர் சந்தித்த தனிமையைக் கூறும் கவிதைகள் நெகிழ்ச்சியானவை. தனிமைத்துண்டு என்ற பெயரில் உள்ள கவிதைகளும், இன்னும் சில தனிமை சொல்லும் கவிதைகளையும், நாங்கள் வாசித்தபோது முகுந்த் மென்மையான புன்னகையில் அதைக்கடந்தார். அவற்றிலிருந்து சில வரிகள்
எத்தனை மென்மையாய்க் கதவை மூடினும்
குழந்தையை முகத்தில் அடித்து துரத்தின
மாதிரி வலிக்கிறது.
வீட்டுக் கதவை மூடவாவது குடும்பம் ஒன்று வேண்டும்.
தனிமையின் விளிம்பு
அளவு சாப்பாட்டின்
வட்ட விளிம்பில்
பிரதிபலிக்கிறது
என் தனிமை.
செங்கல் அடக்கியவன்
உடம்பு சரியாக இல்லாத போது
தனியாக வரக்கூடாது என்றான்.
பின், கல்லெடுக்கச் சென்றான்.
வீட்டில் யாரும் இல்லை,
தனியாகத்தான் இருக்கிறேன்.
என்று சொல்ல நினைத்தேன்.
இவரது இரவு, தூக்கம் மற்றும் கனவு பற்றிய கவிதைககளை வாசித்தோம், அதில் ஒன்று,
காலத்தை நீர் சொட்டின் மேல் ஏற்றி இருப்பது சுவாரசியமானது,
சொட்டுச்சொட்டாய்
இறுக மூடிய பின்னும்
சொட்டுச் சொட்டாய்
நீர் ஒழுகி கொண்டிருந்த
குளியலறை குழாயின் கீழ்
காலி வாளியை வைத்து விட்டு
தூங்கப் போனேன்.
நள்ளிரவில், கல்யாணமான கனவிலிருந்து விழித்து
குளியலறைக்குப் போனபோது
பாதி வாளி நிறைந்திருந்தது.
குழந்தைகள் பிறந்து வளர்ந்து தனியே போய்
நாம் ஓய்வெடுப்பதற்குள் முழு வாளியும் நிறைந்துவிடும்.
அதுவரை என் கம்பளியைப் பிடித்து இழுக்காதே பெண்ணே,
நான் கொஞ்ச நேரம்
தூங்குகிறேன்.
தூங்காத இரவின் அவஸ்தையை நாசுக்காக, அழகாக சொல்லும் கவிதை
எனக்கு தூக்கம் வரவில்லை.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இரவெல்லாம் நடந்து, களைப்பாய்
நான் போய்ச் சேரும் காலைக்கு,
பூப்போல வந்து சேர்ந்து விடுகிறீர்கள்
குறுக்கு வழியாக.
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
எனக்கு தூக்கம் வரவில்லை.
முகுந்த் அவர்களின் குழந்தைகள் உலகம் அன்பும், அழகும் நிறைந்ததென்பது நாம் அறிந்ததே. சற்றேறக் குறைய அனைத்து கவிதைகளையும் படித்து ஆனந்தித்தோம். அதில் சில முக்கியமான, எங்கள் அனைவரையும் கவர்ந்த கவிதைகளை பகிர்கிறேன்.
ஆட்டம் போடும் வீடு இக்கவிதையில் , அவர் பார்க்கும் பொருட்களும் குழந்தைகள் போல விளையாடிக்களிக்கிறது.
பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.
எதையோ மறந்து போனதால்
உடனே திரும்பினேன், திறந்தேன்.
டிவியும் பிரிட்ஜும் ஓடிப் பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தன.
அலமாரியில் உள்ள புத்தகங்களெல்லாம்
அணி அணியாகப் பிரிந்து
கபடி ஆடிக் கொண்டிருந்தன.
பழைய சாக்ஸ் கூட தன்னிச்சையாய்
சுற்றிக் கொண்டிருந்தது.
………………………………………………………..
திறப்பதற்கு முன் தட்டி இருக்க வேண்டும்
என்ன நாகரிகம் இல்லாத பிறவி நான்!
விளையாட்டு பிள்ளைகள்
இரண்டு குழந்தைகள் விளையாடிக்
கொண்டிருந்தன அந்த பூங்காவில்
ஒன்று ஊஞ்சலில் நின்றும், உட்கார்ந்தும்
ஒற்றைக் காலைத் தூக்கியும்,
வேகமாக வீசி ஆடியும்,
ஓ என்று கத்திக் கொண்டும் இருந்தது.
மற்றொன்று காலி ஊஞ்சலை வேகமாக
ஆட்டிக் கொண்டும்
ஓ என்று கத்தி கொண்டும் இருந்தது.
எது நல்ல விளையாட்டு என்று
யார் கூற முடியும்?
வழி அனுப்ப வந்த குழந்தைகள் கவிதையில் கடைசி சில வரிகள்,
வழியனுப்பி விட்டு திரும்பினார்கள்;
பெரியவர்களைப் பிரிந்து பெரியவர்களும்,
ரயிலை பிரிந்து குழந்தைகளும்.
அணியுமாம் தன்னை வியந்து
….
தலையை ஆட்டி மூடியை உதறிவிட்டு
நான் விக்ஸ் டப்பா இல்லை என்றது
நீ யார் என்றதும்
மேஜை மேல் ஏறி நின்று
தன் இரட்டை குடுமியை தூக்கி
‘நான் தென்னை மரம்’ என்றது
தென்னை மரத்திலிருந்து
விக்ஸ் மிட்டாய் கொட்டியது.
நல்ல பலூன்
‘சாமி காப்பாத்து….
நல்ல புத்தி கொடு,
நல்ல படிப்பு கொடு,
நல்ல ஆரோக்கியம் கொடு’ என்று சொல்லிவிட்டு
கொஞ்ச நேரத்துக்குப் பின்,
நல்ல ரெட் பலூன் கொடு’ என்றாள்.
சாமி திடுக்கிட்டார்.
பூஜ்ய வாத்து
…..
‘ஜீரோ வாத்து தான் பாக்கி இருக்கும்’ என்றாள் நேயமுகில்.
அந்த ஜீரோ வாத்து
எப்படி இருக்கும் என்றேன்.
‘அது ரொம்ம்ம்ம்ப குட்ட்ட்ட்டியா இருக்கும்’ என்றாள்.
ஒரு வாத்தாக வளர்ந்து விடாதே,
என் பூஜ்ய வார்த்தே!
கிருஷ்ணா
வெண்ணெய் உண்ணும்
கிருஷ்ணன் சிலையை வைத்து
விளையாடிக் கொண்டிருந்த நேயமுகில்,
‘வாயில் விரல் வைக்காதே கிருஷ்ணா’ என்றாள்.
‘ஸாரி நேயமுகில்’ என்றான் கிருஷ்ணன்.
கவிஞரின் பரிவும், கருணையும் வெளிப்படும் கவிதைகளில் எனக்குப் பிடித்தமானது,
எழுப்புதல்
கீழ்வீட்டுக் குழந்தை வந்து
என் தண்ணீர் பாட்டிலுடன்
விளையாடிவிட்டுப் போனது.
குழந்தை படுத்து இருப்பது போல்
சுவர் ஓரம் உருண்டு கிடந்தது பாட்டில்.
மெதுவாக எழுப்பி உட்கார வைத்தேன்.
தழும்பி அடங்கியது தண்ணீர்.
அது வரைக்கும் திருதிரு என்று
முழித்தபடி
உட்கார்ந்திருந்தது குழந்தை.
பிரிந்து போன குழந்தை பூச்சி
….
பையை உதறிப் பார்த்துவிட்டு
எடுத்து வந்திருக்கலாம்
குட்டி பூச்சி பாவம்,
பஸ் நம்பர் கூட தெரியாது.
இவ்வாறாக அவரின் முழுத் தொகுப்பையும் நண்பர்கள் அனைவரும் ஒரு மாதம் முன்பே படித்து குழுமத்தில் பகிர்ந்து கவிஞருடன் கலந்துரையாடியதில் முடிவாக, பாரதியாரின் அதே சின்னஞ்சிறு பாடலின் கடைசி இரண்டு சரணங்கள் பாடியதில் இரண்டு வரிகள்,
இன்பக்கதைகள் எல்லாம் உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ,
அன்பு தருவதிலே உன்னை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ.
மிகப் பொருத்தமாக அமைந்து, நிகழ்வு நிறைவுடன் முழுமையுற்றது. இந்நிகழ்வை வடிவமைத்த வேணு மற்றும் சரண்யா இருவருக்கும் நன்றி.
அன்பும் நன்றியும்,
தீபா.R
யானை டாக்டர், அறம்- வாசிப்பு
யானைகளின் உடல் நிலையைப் பேணுவதற்காக இவர் உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்று உள்ளது. அவர் டாக்டர் கே./ டாக்டர் திரு.கிருஷ்ணமூர்த்தி. தன் வாழ்க்கையையே யானைகளின் நலனுக்காக அர்ப்பணித்தவர். அவைகளின் ஒவ்வொரு அசைவையும், நகர்தலையும், பார்வையின் பொருளையும் உணர்ந்தவர். சமிக்ஞைகளைப் புரிந்தவர். அவரின் அன்பார்ந்த நேசத்தை அவைகளும் உணர்ந்திருந்தன. இவர் நமக்கு ஆபத்தில்லாதவர். பாதுகாப்பானவர், நம்மைப் பாதுகாக்கவென்றே தன்னை அர்ப்பணித்தவர். தன் வாழ்வில் எந்த சுயநலத்தையும் கருதாமல், தனக்கென்று ஒரு குடும்பம் என்று கூடக் கொள்ளாமல் நம்மைப் பாதுகாக்க, பராமரிக்க என்று இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர் என்று உணர்ந்து இவர் மீது அளவிலா அன்பு செலுத்தின.
உடலில் ஒரு சிறு நோவு என்றாலும் இவர் இருப்பிடம் தேடி வந்தன. இரவானாலும், பகலானாலும், பனி பெய்யும் பொழுதானாலும், மழையும் புயலும் என எது நிகழ்ந்தாலும், எத்தனை மைல் தூரமானாலும், நமக்காக இவர் உண்டு என்று அவர் இருப்பிடம் நோக்கி வந்து தஞ்சம் புகுந்தன. தன் உறவுக்கு, தன் குட்டிக்கு, தன் இனத்தில் உள்ள எவருக்கும் எனினும் இவரிடம் சென்றால் நமக்கு நலம் உண்டு என்று அன்பு செலுத்தின. நம்பி வந்து நின்றன. அந்த நம்பிக்கையை அளித்தவர் அவர். டாக்டர் கே. அதற்காக அவர் பெரும்பாடு பட்டிருக்கிறார். நிறைய உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். தன்னலம் கருதாது செயல்பட்டிருக்கிறார். தன் சந்தோஷங்களை இழந்திருக்கிறார். விரும்பித் துறந்திருக்கிறார். யானைகளின் நலனே தன் நலன் என்று வாழ்ந்திருக்கிறார். தன் பொழுதுகளை, நாட்களை, மாதங்களை, வருடங்களை தன் மொத்தக் காலங்களை, எனக் கணக்கில் கொள்ளாது தியாகம் செய்திருக்கிறார்.
அன்பின் சின்னமாய் அவர் விளங்கினார். அரவணைப்பின் ஆதாரமாய் நின்றார். மனிதன் தன்னை, இந்த இயற்கையை, பிற ஜீவராசிகளை தன் மேன்மையான குணத்தை ஆதாரமாய்க் கொண்டு ஆழமாய் நேசிக்க முடியும், அவற்றை அரவணைத்து நலம் காக்க முடியும். தன் பார்வையாலும், புன்னகையாலும், கையசைவினாலும்,உடல் மொழியினாலும் அவைகளை ஈர்க்க முடியும். நேசத்தைப் புரிய வைக்க முடியும். தன் அன்பை வெளிப்படுத்த முடியும். அதன் ஆழத்தை, உண்மையை உணர வைக்க முடியும் என்று செய்து காட்டினார். அந்தச் செயலில் எந்தச் சுயநலமும் இல்லை. எந்த விளம்பரமும் இல்லை. யாரும் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. தூய அன்பின் வெளிப்பாடு அது. நான் நினைத்தேன். செய்கிறேன். இதைச் செய்வதில் நான் மன நிம்மதி அடைகிறேன். என் ஆத்மா சாந்தி பெறுகிறது. என் இதயம் பெருமிதமடைகிறது. மனம் பொங்கி வழிகிறது. இது எனக்கு இறைவன் வகுத்த விதி. அவன் போட்டுக் கொடுத்த பாதை. என் ஆழ் மன உணர்வினையே நான் பிரதிபலிக்கிறேன். அதுவே எனக்கு இறைப்பாதையை வகுத்துக் கொடுத்தது. இது நான் மனமுவந்து செல்லும் பாதை. முனைப்போடு மேற்கொண்ட புனிதப் பயணம். என் வாழ்நாளின் இறுதி மூச்சு வரை இது தொடரும்.
இந்த யானைகளே என் நண்பர்கள். என் உடன் பிறப்புக்கள். இதுவே என் வாழ்க்கை….இவையன்றி என்னால் தனித்து வாழ இயலாது. தனித்து இயங்க இயலாது. தனித்து என்னை உணரவே இயலாது.
இந்தக் காட்டைப் புரிஞ்சிக்கிட்டாதான் இங்க எதையாவது செய்ய முடியும். காட்டைப் புரிஞ்சிக்கணும்னா காட்டிலே வாழணும். இங்க வாழணும்னா,அந்த உலகத்துலே இருக்கிற பணம், புகழ், அதிகாரம், லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் உதறிட்டு வரணும். இவங்களை விட்டா நமக்கு வேறே சொந்தம் எதுவுமி்ல்லேன்னு இருக்கணும். போய்யா…போய்ப் பாரு…அந்தா இருக்கானே செல்வா…அவனை மாதிரி வேறு ஒரு சொந்தக்காரன் உனக்கு இருக்க முடியமா? அந்த நிமிர்வும், அந்தக் கருணையும், அற்பத்தனமே இல்லாத கடல் போல மனசும், அதை அறிஞ்சா மனுஷன் ஒரு பொருட்டா? -டாக்டர் கே.யின் கேள்விகள்.
மனிதனின் கீழ்மைகள் எண்ணிலடங்காதவை. இந்தக் காட்டுக்கு வரும் சிலரின் கீழான செயல்பாடுகள் – ஒவ்வொரு நாளும் முகத்திலறைந்ததுபோலக் காணக் கிடைக்கும் கொடுமை – வழி தோறும் குடித்துக் கும்மாளமிடுவதும், வாந்தி எடுப்பதும், மலைச்சரிவுகளின் மௌன வெளியில் காரின் உறாரனை அடித்துக் கிழிப்பதும், முடிந்தவரை உச்சமாக காரின் ஸ்டீரியோவை அலறவிட்டுக் குதித்து நடனமாடி, ஓங்கிக் குரலெடுத்துக் கெட்டவார்த்தைகளைக் கூவுவதும்….பாட்டில்களை உடைத்து எறிவதும், – கீழ்த்தரமான பச்சை சுயநலம் தெறிக்கும் – மனிதப் புழுக்கள். உடைந்த பாட்டில்களின் சிதறல்களால் எத்தனை யானைகள் எவ்வளவு துயரத்துக்கும்,துன்பத்துக்கும் ஆளாகியிருக்கின்றன. உயிரிழந்திருக்கின்றன. எவ்வளவு உடல் வேதனைக்கு ஆளாகி மீள முடியாமல் தவித்திருக்கின்றன? எந்த மிருகத்தை விடவும் யானைக்கு அந்த கண்ணாடிச் சிதறல்கள் மிகவும் அபாயகரமானது என்பதை யாரேனும் உணர்ந்திருக்கிறார்களா?
இதுபோன்ற எண்ணிலடங்கா வேதனைகளைத் தாளாமல்தான் என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன் என்று சொல்லாமல் சொல்லி கருணை மழை பொழிகிறார் டாக்டர் கே. அவருக்கு பத்மஸ்ரீ விருதிற்காக முயல, அது கடைசி நிமிடத்தில் நழுவிப் போன தகவல் மிகவும் வேதனையாய் உணரப்பட்டபோது, துளியும் அதனைப் பொருட்படுத்தாத ஒரு புன்னகையே அதற்கு பதிலாகிறது. அந்தோ நிற்குதே, அந்த யானைக்கு உன்னைத் தெரியும்ங்கிறதை நீ பெரிசா நினைச்சேன்னா, டெல்லியிலே யாரோ ஒரு காகிதத்துலே எழுதிக் கையிலே கொடுக்கிறதைப் பெரிசா நினைக்கத் தோணுமா?
நான் உங்கள வெளியே கொண்டு போகணும்னு நெனச்சேன் டாக்டர். இங்கே இப்படியொரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை இருக்கும்னு எனக்குத் தெரியாது. இப்படிப் புத்தம் புதுசா ஒரு உலகத்தைப் பார்க்கப் போறோம்னு நான் நினைக்கலை…..-அவன் சொல்கிறான்.
இங்க வந்து குடிச்சு வாந்தி பண்ணி பீர்பாட்டிலை உடைச்சு யானை காலுக்கு போட்டுட்டு போறானே அவனும் நம்ம சமூகத்திலேதான் டாக்டர் வளர்ந்து வர்றான். அவன்தான் ஐ.டி.கம்பெனிகளிலேயும் மல்ட்டி நேஷனல் கம்பெனிகளிலேயும் வேலை பார்க்கிறான். மாசம் லட்ச ரூபா சம்பளம் வாங்கறான். கொழ கொழன்னு இங்லீஷ் பேசறான். அதனால பிறவி மேதைன்னு நினைச்சிக்கிறான். தெரிஞ்சோ தெரியாமலோ அவன் கையிலேதான் இந்த நாடும் இந்தக் காடும் எல்லாமும் இருக்கு. அவங்களிலே ஒரு பத்து பர்சன்ட் ஆட்களுக்கு இப்டி ஒரு மகத்தான வாழ்க்கை, இப்டி ஒரு தெய்வீக உலகம் இருக்குன்னு தெரியட்டும்னுதான் முயன்றேன். இப்டி ஒரு ஐடியலிஸத்துக்கும் இன்னும் நம்ம சமூகத்திலே இடம் இருக்குன்னு காட்ட முற்பட்டேன். இன்னும் இங்கே காந்தி வாழறதுக்கு ஒரு காலடி மண்ணிருக்குன்னு சொல்ல நினைச்சேன்…ஒரு பத்துப் பேரு கவனிச்சாப் போருமே டாக்டர்….-என்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான்.
பெரும் லட்சியவாதம் மனிதர்களின் அந்தரங்கத்தில் உறையும் நல்லியல்புகளைச் சென்று தீண்டும்…காந்தியின் வலிமை அங்குதான். அந்த ஊற்றின் ஈரம் எங்கேனும் ஓரிடத்தில் இன்னும் இருக்கும்தான்….டாக்டர் கே. க்கான பத்மஸ்ரீ விருதுக்குரிய முயற்சிகளில் அவன் சிந்தனை இந்த ரீதியில்தான் பயணித்தது.
அந்த நன்னெறியினை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது ஜெயமோகனின் இந்த “யானை டாக்டர்“. வெறும் கதையல்ல இது. வாழ்க்கை நெறி. ஒரு புனிதமான வாழ்வியல். ஒவ்வொரு மனிதனின் கவனத்திலும் சென்று ஆழப் பதிய வேண்டிய அறநெறிச் சாரம். படித்துமுடிக்கும்போது கண்ணீர் முட்டி நிற்கிறது. எப்படியொரு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் டாக்டர் கே. என்று வியக்க வைக்கிறது. காடும்,காடு சூழ்ந்த இடமுமாக கதை நகர்த்தப்பட்டிருக்கும் விதத்தில் நாமும் கூடவே அர்த்தமோடு பயணிக்கிறோம். ஒரு நல்ல, சுயநலமற்ற, சேவை மனம் கொண்ட மனிதரைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டதில் மிகுந்த திருப்தி கொள்கிறோம்.
உஷா தீபன்
மதவெறியும் ஆன்மிகமும்
If this is accurate, does it imply that our Rishis did not discover anything new? Should we conclude that their knowledge lacks value? What then is the contribution of the Siddhas and sages?
Didn’t the Rishis create anything?
குரு நித்ய சைதன்ய யதி அவர்களை ஒரு இந்துத்துவ அரசதிகார அடிவருடி இழிவு செய்து எழுதியதை குறிப்பிட்டு உள்ள இடம் வந்தவுடன் என்னையறியாமல் அழுது விட்டேன். மனம் உடைந்து விட்டது இந்திய நாட்டைப் பீடித்திருக்கும் இந்த இந்துத்துவப் புற்றுநோய் இல்லாமல் ஆகட்டும்மதவெறியும் ஆன்மிகமும்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

