Jeyamohan's Blog, page 757

June 23, 2022

கோவை சொல்முகம், சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் 18 வது வெண்முரசு கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

இதில் வெண்முரசு நூல் வரிசையின் ஆறாவது படைப்பான “வெண்முகில் நகரம்” நாவலின், 16 மற்றும் 17 ஆம் பகுதிகளை (இறுதிப் பகுதிகள்) முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

பகுதிகள்:

தொலைமுரசுவண்ணப்பெருவாயில்

இதைத் தொடர்ந்து இரண்டாவது அமர்வாக பிற நாவல் வரிசையில் திரு. வெங்கடேஷ் மாட்கூல்கர் அவர்களின் ‘பன்கர்வாடி’ நாவலின் மீது கலந்துரையாடல் நிகழும்.

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

 

நாள் : 26-06-22, ஞாயிற்றுக்கிழமை

 

நேரம் : காலை 10:00

 

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம் வடவள்ளி, கோவை. 

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்                      – 73390 55954

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2022 22:52

குழந்தைகளும் நாமும்

Bathing the baby -Elisha Ongere நமது குழந்தைகள்

அன்புள்ள ஜெ

குழந்தைகள் பற்றிய உங்கள் கட்டுரை கண்டேன். அதைப்பற்றி ஏராளமான வசைகள். பெரும்பாலான வசைகளை வாசிக்கையில் ஒன்று தோன்றியது, நமக்கு உண்மையிலேயே புரிந்துகொள்வதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. எதையுமே படித்து உள்வாங்கும் பயிற்சி நமக்கு இல்லை. இது ஏற்கனவே நீங்கள் நம் பள்ளிகளைப் பற்றி எழுதிய கட்டுரைக்கான எதிர்வினைகளிலும் தெரிந்தது.

நான் கேட்பது இன்னொன்றுதான். நம் குழந்தைகளிடம் நாம் கொள்ளவேண்டிய சிறந்த உறவு என்ன? அவர்களை கண்டிப்பாக வளர்க்கவேண்டுமா?

ஜி.நாராயண்

***

அன்புள்ள நாராயண்

இந்தவகை கேள்விகளுக்கு பதில்சொல்ல நான் குழந்தை வளர்ப்பு நிபுணன் அல்ல. எனக்கு நம்பிக்கை இருப்பவற்றைச் சொல்கிறேன். நான் செய்தவை இவை. வெவ்வேறு வகையில் இவற்றை விரிவாக முன்னர் எழுதியிருக்கிறேன்

அ. குழந்தைகளிடம் நாம் உரையாடவேண்டும். செல்லம் கொஞ்சல் என்பது உரையாடல் அல்ல. தொடர்ச்சியாக அவர்களைக் கவரும்படி பேசுவது. கதைகள் மற்றும் செய்திகள் சொல்வது, அவர்கள் பேசுவதை செவிகொடுத்துக் கேட்பது இரண்டுமே உரையாடல் எனப்படுகிறது

அடம்பிடிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் எவராலும் போதிய அளவு செவிகொடுக்கப்படாதவைதான். என் நண்பர்கள் கண்டிருக்கலாம், என்னால் எந்தக்குழந்தையிடமும் உடனே ஓர் உரையாடலை தொடங்க முடியும். ஏனென்றால் நான் குழந்தைகளிடம் கொஞ்சுவதில்லை. தீவிரமாக உரையாடலை தொடங்கிவிடுவேன்.

ஆ. அவர்களுடன் விளையாடவேண்டும். நாம் செய்யும் வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதே மிகச்சிறந்த விளையாட்டு. குழந்தை மிக விரும்பும் விளையாட்டு பெரியவர்களின் உலகில் நுழைந்து எதையாவது செய்வதுதான்.

இ. குழந்தைகளை கைக்குழந்தையாக நடத்தக்கூடாது. பேச ஆரம்பிக்கும்போதே பெரியவர்களைப்போல நடத்தலாம். பெரிய விஷயங்களைப் பேசலாம். ஆலோசனைகள் கேட்கக்கூடச் செய்யலாம்.

ஈ. எந்தப் பொருளையும் கேட்டதும் வாங்கித்தரக் கூடாது. அதை அவர்கள் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் எதையாவது செய்யவேண்டும். பொம்மைகள் வாங்கிக் குவிக்கலாகாது. பொம்மைகள் அவர்களே செய்யவேண்டும். அல்லது நாமும் இணைந்து செய்யவேண்டும்.

உ.அடம் பிடித்து அவர்கள் ஒன்றை அடையலாமென எண்ணச் செய்யக்கூடாது.

ஊ. குழந்தைக்கு அப்பா மீது எந்நிலையிலும் பெருமதிப்பு இருக்கவேண்டும். அப்பாவுக்கு பிடிக்காததைச் செய்யலாகாது, அப்பாவிடம் நற்பெயர் பெறவேண்டும் ஆகிய உணர்வுகள் குழந்தைகளிடம் இருக்கவேண்டும். அதுவே வாழ்நாள் முழுக்க அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி. அப்பா என்னும் இடம் நம் பண்பாடு ஈட்டிக்கொண்ட ஒரு மாபெரும் உருவகம். குழந்தைகளிடம் அந்த பிம்பம் சிதைய விடவே கூடாது. ஆகவே அப்பாவை குழந்தை வேலை ஏவுவது, அப்பா குழந்தைக்கு பணிவிடை செய்வது எல்லாம் அக்குழந்தைக்கு அப்பா என்னும் ஆளுமை இல்லாமல் ஆக்குவதுதான்.

எ. குழந்தைகளை தண்டிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கண்டிப்பது அவசியம். எது தனக்கு பிடிக்கவில்லை என்பதை குழந்தையிடம் தந்தை கண்டிப்பாகச் சொல்லியாகவேண்டும். ஒரு வயது முதலே.

ஏ. ஆனால் ஒரு குழந்தை தனக்கு என்ன பிரச்சினை என தந்தையிடம் சொல்லும் இடம் எப்போதும் இருக்கவேண்டும். எல்லா வயதிலும்.

*

வெளியுலகம் இரக்கமற்ற விதிகளால், போட்டிகளால் ஆனது. ‘பிறர்’ எனப்படும் பல்லாயிரம் பேரால் ஆனது. ஆகவே எந்த விதிகளும் இல்லாத ஓர் உலகை உருவாக்கி, அதில் ஒரே ஒரு சக்கரவர்த்தியாக குழந்தையை வாழவிடுவது குழந்தைக்கு நன்மை செய்வது அல்ல.

எந்த மனிதரும் சில அடிப்படை ஆதிக்கங்களால் கட்டுப்படுத்தப்பட்டே இங்கே வாழ்கிறார்கள். அரசு, சமூகம், மரபு, குடும்பம், அலுவலகம், கல்விநிலையம் என பல்வேறு அமைப்புகளின் ஆதிக்கங்கள் இல்லாமல் எவரும் வாழமுடியாது.

அந்த ஆதிக்கங்களின் கண்கூடான வடிவமாக உடனடியாக அறிமுகமாகிறவர் தந்தை. (அல்லது தாய். நான் என்னைப்பற்றிப் பேசுகிறேன்) அவர் அந்த ஆதிக்கங்களின் பெறுமதி என்ன என்று குழந்தைக்கு விளக்குபவராகவும், குழந்தையை புரிந்துகொண்டு அதை அளிப்பவராகவும் இருக்கவேண்டும்.

அந்நிலையில் ஆதிக்கம் என்பது நேர்நிலையாக, நல்லபடியாக குழந்தைக்கு அறிமுகமாகிறது. அதைக் கையாள குழந்தை கற்றுக்கொள்கிறது. தந்தையின் கடமை அதுவே. அதை அளிக்காத தந்தை உண்மையில் குழந்தைக்கு பெரிய தீங்கையே செய்கிறார்.

*

கடைசியாக, இதையெல்லாம் செய்தால் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றிபெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என உறுதி உண்டா? இல்லை. அது அவர்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் முறை சார்ந்தது. நாம் செடி எப்படி வளரவேண்டும் என்று ஆணையிடமுடியாது. நீரூற்றுவது எப்படி என்று மட்டுமே நான் சொல்கிறேன்

ஜெ

பிகு. நம் மக்களுக்கு ஒரு கட்டுரையை மட்டுமல்ல, எளிய குறிப்புகளையே படித்து புரிந்துகொள்ள மிகப்பெரிய சிக்கல் உள்ளது. மனப்பாடக் கல்வி உருவாக்கும் தீங்கு. நம் கல்விமுறை புரிந்துகொள்ள சொல்லித்தருவதில்லை. இங்கே மிகப்பெரும்பாலானவர்களால் எந்தையும் வாசித்து புரிந்துகொள்ளவோ, சாராம்சப்படுத்தவோ, அதனடிப்படையில் எதிர்வினை ஆற்றவோ முடியாது. புரிதலில் தங்களுக்குச் சிக்கல் இருப்பதையே அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எங்கும் ஒற்றை வரியை எடுத்து அதனடிப்படையிலேயே அவர்களால் எதிர்வினையாற்ற முடியும். ஏனென்றால் நாம் கல்விக்கூடங்களில் கற்பது அந்த அடிக்கோடிட்டு படிக்கும் வழக்கத்தைத்தான்.

இதுபற்றிய பழைய கட்டுரைகள்:

நாம் புரிந்துகொள்கிறோமா? அறிதலென்னும் பயிற்சி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2022 11:35

எஸ்.ராமகிருஷ்ணன்கள்

அன்புள்ள ஜெ

எஸ்.ராமகிருஷ்ணன் பற்றி தமிழ் விக்கியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்றுமுள்ள ஒரு சந்தேகம் அகன்றது. இரண்டு எஸ்.ராமகிருஷ்ணன்கள் உள்ளனர். இருவருமே முக்கியமானவர்கள். இருவரைப்பற்றிய பதிவிலும் இன்னொருவர் குறிப்பிடப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு கலைக்களஞ்சியத்திற்குப் பின்னால் சரியான ஓர் ஆசிரியப் பிரக்ஞை தேவை என்பதற்குச் சான்றாக இதைக் கருதுகிறேன்.

நன்றி

எம்.சிவக்குமார்

எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) எஸ். ராமகிருஷ்ணன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2022 11:34

உலகின் மிகச்சிறந்த காதல்கதை – டெய்ஸி

அன்புள்ள ஜெ

ரஷிய இலக்கியங்களை பற்றி நிறைய படித்திருந்தாலும் மொழிபெயர்ப்பு புத்தகங்களைப் படிக்க ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. “போரும் அமைதியும்”, “அசடன்” ஆகியவைகளை எடுத்துப் பார்த்துவிட்டு வைத்து விடுவேன். போன வாரம் “அன்னா கரினினா” பயந்து கொண்டே எடுத்தேன். மூன்றே நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இரவில் எல்லாரும் தூங்கின பிறகுதான் படிக்க ஆரம்பிப்பேன். நேரம் போனதே தெரியாமல் வாசித்து விட்டு காலையில் அலுவலகம் போக வேண்டுமே என்று அரை மனதாய் தூங்கினேன். உள்ளுக்குள் அப்படியே இழுத்துக் கொண்டது.

1875-77 வருடங்களில் எழுதப்பட்டது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் புத்தம் புதியதாய், எந்த நாட்டின் பின்புலத்தோடும் இணைத்துப் பார்க்கக் கூடியதாய் உள்ளது. உலகின் மிகச் சிறந்த காதல் கதை என்று அட்டையில் உள்ளது. ஆனால் இது வெறும் காதல் கதை மட்டும் அல்ல.

பெரிய இயற்கை வர்ணனைகள் இல்லை. சுற்றுப்புறத்தைப் பற்றிய விளக்கங்கள் இல்லை. வெறும் மனிதர்களும் அவர்கள் மன ஓட்டங்களும், மனநிலைகளும்தான். ஒரு காரியம் நம் மனதில் உச்சமாய் இருக்கும்போது அதைப் பற்றி நாம் சிந்திப்பதும், அந்த உச்சநிலையில் இருந்து இறங்கியதும் அதே காரியம் நமக்கு என்னவாய் தோன்றுகிறது என்பதும் மிக அழகாய் விவரிக்கப் பட்டுள்ளது.

வெளி நாடுகளில் இருப்பவர்களைப் பற்றி நாம் நினைத்துக் கொள்கிறோம். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்வார்கள். யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து வாழ்வார்கள். நாம் சொல்கிற கலாச்சார சிக்கல்கள் அவர்களுக்கு இல்லை. எத்தனை கணவர்கள், மனைவிகள் வேண்டுமென்றாலும் பிரச்னை இல்லை. இதெல்லாம் நமது அறியாமைதான். அவர்களுக்கும் கலாச்சார சிக்கல்கள் உண்டு. விவாகரத்து செய்ய வலுவான காரணம் வேண்டும். விவாகரத்து செய்யாமல் அடுத்த ஆணோடு சேர்ந்து வாழ்ந்து பிறக்கும் குழந்தைகள் கணவனின் வாரிசாகவே கருதப்படும் என்பதெல்லாம் ஆச்சரியமாய் இருந்தது.

நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது எங்கள் வீட்டை எப்போதும் பூட்டினது கிடையாது. எப்போதும் யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள். அப்பாவும், பெரிய அண்ணனும் வேலை முடிந்து வந்தால் வீட்டை விட்டு நகர மாட்டார்கள். பகல் ஷிப்ட், நைட் ஷிப்ட் என்று யாராவது ஒருவர் வீட்டில் இருப்பார்கள். எனக்குத் தெரிந்து நாங்கள் வீட்டை பூட்டிவிட்டு போனது எங்க மாமா பையனின் திருமணத்திற்கு. அந்தத் திருமணத்தில் அத்தையுடைய சகோதரியின் பெண் 17 வயதானவள் மிக மிக அழகிய பெண். திருச்சியில் கலைக்காவிரி என்னும் ஒரு இசை நடனக் கல்லூரி உள்ளது. அதில் படிக்கும் பெண்கள் சீருடையாய் சுடிதார் அணிந்து புடவை முந்தானைப் போல ஷால் போட்டு இடுப்பை சுற்றி அணிந்திருப்பார்கள். எங்களுக்கெல்லாம் அந்த சீருடை அணிந்த பிள்ளைகளைப் பார்க்கவே ஆசையாய் இருக்கும்.

அப்போதெல்லாம் நாங்கள் பாட்டு, டான்ஸ் என்று கேட்டிருந்தால் பெட்டியில் வைத்து குழியில் இறக்கியிருப்பார்கள். அந்தப் பெண் அப்பொழுது கலைக்காவிரியின் புகழ் பெற்ற நடனக் குழுவைச் சேர்ந்தவள். அதனால் அவளுடைய உடை, நகைகள், ஒப்பனை எல்லாம் மிக அழகாய் அவளைக் காட்டியது. என் உறவின் முறை உள்ள பையன்கள் எல்லாம் அவளைச் சுற்றித்தான் இருந்தார்கள். கல்யாண வீட்டிலேயே அவளுக்கு நிறைய திருமண பேச்சு வந்தது. ஆனால் அவள் இருப்பதிலேயே கடைந்தெடுத்த ஒரு அயோக்கியனை காதலித்து திருமணம் செய்து கொண்டு மிகச் சிறிய வயதிலேயே செத்துப் போனாள். இந்தக் கதையின் அன்னாவை நான் அந்த பெண்ணோடு சேர்த்துப் பார்த்துக் கொண்டேன்.

கதாநாயகி அன்னா. பரிசுத்தமான தூய அழகு கொண்டவள். கொஞ்சம் அன்னாவைவிட வயது கூடிய கணவன் கரீன். செரிஜா எனும் அழகிய குழந்தை. நல்ல சமூகத்தில் ஓரளவு மேல்படியில் உள்ள குடும்பம். கணவனுக்கு நல்ல அரசாங்க உத்யோகம். எல்லோரும் பார்த்து பொறாமைப்படக் கூடிய வாழ்க்கைதான் அன்னாவினுடையது. தன் தம்பியின் குடும்பத்தின் பிரச்சனையை (தம்பியின் கள்ள உறவு) தீர்ப்பதற்கு அவர்களின் வீட்டிற்கு வரும் அன்னா தன் தம்பி மனைவியின் தங்கையின் (கிட்டி) காதலனை (விரான்ஸ்கி), ஏறக்குறைய திருமணம் நிச்சயிக்கப்படப் போகிற நேரத்தில் கவர்ந்து கொள்கிறாள். இதில் முரணாய் தம்பியும் அவள் மனைவியும் கடைசி வரை பிரியவே இல்லை.

கிட்டிக்கு துரோகம் இழைக்க வேண்டும் என்றோ, தன் கணவன் கரீனை ஏமாற்ற வேண்டும் என்றோ திட்டம் எதுவும் போடாமல் ரொம்ப இயல்பாய் அதை செய்கிறாள். கணவனோடு இருந்து கொண்டே விரான்ஸ்கி கூடவும் உறவில் இருக்கிறாள். கிட்டி கடைசி நிமிடத்தில் அவள் திருமணம் மாறி வேறு பாதையில் போனதும் அவள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகிறாள். கரீன் எல்லாம் தெரிந்து கொண்டாலும் அன்னாவை எச்சரிக்கிறான். மற்றபடி அவன் கடிந்து கூட ஒன்றும் சொல்வதில்லை. மனைவியின் பிறழ் உறவு தெரிந்தும் அந்த நேரத்திலும் கண்ணியத்தைக் கடைபிடிக்கிற கணவனை அவள் எப்படி விரும்ப முடியும்.

கணவனின் வீட்டில் இருந்துகொண்டே காதலனின் குழந்தையை பெற்றெடுக்கிறாள். பிரசவ நேரத்தில் மரணத்தைத் தொட்டு மீள்கிறாள். அந்த நேரத்தில் கணவனின் அருகாமையை மட்டுமே விரும்புகிறாள். அவனும் முழு மனதோடு மன்னிக்கிறான். உடல் தேறியதும் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு காதலனோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அதன்பின் விரான்ஸ்கி ஒரு செல்ல நாய்க்குட்டிபோல் அவள் கூடவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அவனுக்கு என்று ஒரு பொழுது போக்கு, நண்பர்கள், அவனுடைய குடும்ப உறுப்பினர்கள் எதுவும் அவனுக்கு இருக்கக் கூடாது என்று அவனைக் கசக்கி பிழிகிறாள். கொஞ்சம் நேரம் கழித்து அவன் வீட்டிற்கு வந்தாலும் அவன் வேறு யாரோடோ தொடர்பில் இருக்கிறான், என் மேல் இருந்த நேசம் போய்விட்டது என்று மருகுகிறாள். இன்னும் தன்னை கவர்ச்சியாய் காட்டிக் கொள்கிறாள். ஆனால் விரான்ஸ்கி அவள் மேல் மாறா காதல் கொண்டவன். ஒரு நேரம் அவள் தரும் துன்பம் தாளாமல் அவளிடம் கோபம் கொண்டாலும் அவளின் அழகிய முகத்தைப் பார்த்ததுமே மறுபடி மறுபடி பணிந்தே போகிறான். அன்னாவைப் போல் அடுத்த உறவுகளில் (வெளியே தெரியாமல்) இருப்பவர்கள் அவளை அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் அவளுடைய நெருங்கிய உறவினர்கள் எல்லாருமே அவளை பார்க்காதபோது திட்டினாலும் அவளைக் கண்டவுடன் அவளின் அழகு அவர்களை வேறு விதமாய் பேச விடவில்லை.

மனைவியாய் இருக்கும்போது சாதாரணமாய் உள்ள பெண்கள் இப்படி வேறு ஒரு உறவில் இருக்கும்போது ஏன் மாறிப் போகிறார்கள். அவர்களுக்கே தெரிகிறது. இது உண்மையான நேசம் இல்லை. பால் கவர்ச்சி மட்டுமே. எப்போது வேணுமானாலும் இது தீர்ந்து போகும் என்று உள்ளூர உணர்ந்து கொண்டே வருகிறார்கள் என்றே நான் நினைத்துக் கொள்கிறேன்.

கிட்டியை ஒரு தலையாய் காதலித்த லெவின் அவள் மனம், உடல் தேறி வந்ததும் அவளை அணுகி திருமணம் செய்து கொள்கிறான். கிட்டி முதலில் இருந்தே யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஈரெட்டாய் இருக்கிறாள். ஆனால் லெவின் கிராமத்தான். விரான்ஸ்கி நாகரீகமானவன். எனவே அவனைத் தேர்கிறாள். பிறகு மனம் மாறி உண்மையாகவே லெவினை நேசித்து அவனைப் பிடித்துக் கொள்கிறாள். இந்த நாவலில் லெவின்தான் இயல்பாய் இருக்கிறான். கிட்டி இல்லை என்றதும் மனதில் அவளை எதிர்மறையானவளாக நினைத்துக் கொள்கிறான். திட்டுகிறான். வேறு வேறு காரியங்களில் மனதைப் பிரயாசைப் பட்டு செலுத்திக் கொள்கிறான். அவள் தனியாய் இருக்கிறாள் என்று அறிந்ததும் மறுபடியும் முயற்சி செய்யலாமா என்று நினைக்கிறான். இப்பொழுது அவளை நேர்மறையானவளாக நினைத்துக் கொள்கிறான். திருமணம் தேதி நிச்சயித்த உடன் அந்த நாட்களில் வளையத்தை தாண்டக் கற்றுக்கொண்ட நாய் ஒன்று சரியாய் தாண்டியதும் அதற்கு ஏற்படக் கூடிய குதூகலம் தனக்கு கிடைத்திருப்பதாய் எண்ணிக் கொள்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் சொல்கிறான்.

திருமணம் முடிந்ததும் மனைவி யாரிடமாவது சிரித்துப் பேசினால் கோபம் கொள்கிறான். தனக்கு வேறு எந்தப் பெண் மேலாவது ஒரு சாய்வு ஏற்பட்டால் அதையும் உடனே மனைவியிடம் சொல்லி பாவமன்னிப்பு வாங்கிக் கொள்கிறான். மனைவியின் குடும்பத்தினரை நேசிக்கிறான். வீட்டில் கூப்பிட்டு உபசரிக்கிறான். கஷ்டப்படும் தன் மச்சினிக்கு உதவுகிறான். அன்னா செய்த தவறால் பாதிப்புக்கு உள்ளாகவேண்டிய கிட்டி ஒரு லட்சியக் கணவனைக் கண்டு கொள்கிறாள். அவளைப் பொறுத்த வரையில் அவளுக்கு அன்னா செய்தது ஒரு நல்ல காரியம்.

இந்த நாவலில் எல்லோரும் ஒருவரை ஒருவர் நல்ல கிறிஸ்தவ தர்மத்தின்படி நடந்து கொள்ளுங்கள், மன்னியுங்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி எல்லாரும் எல்லோரையும் மன்னித்து விடமுடியுமா? இப்பொழுதும் திருப்பலியில் மன்னிப்பின் மேன்மைகளைப் பற்றித்தான் பிரசங்கம் செய்கிறார்கள். இயேசு கிறிஸ்து சொன்னவைகளில் மிகவும் எளிமையாய்த் தோன்றுகின்ற காரியங்கள்தான், கடைபிடிக்க மிகவும் அரிதானவைகள். “உலகெங்கும் போய் நற்செய்தியை அறிவித்து எல்லா இனத்தாரையும் என் சீடராக்குங்கள்,” இது ரொம்ப சுலபமாய் செய்யக்கூடிய ஒரு காரியமாய் எப்பொழுதும் இருக்கிறது. “உன்னை நேசிப்பது போல் உன் அயலானை நேசி” என்பதும் ஏழெழுபது முறை (கணக்கில்லாதமுறை) பிறரை மன்னியுங்கள் என்பது மிக மிக கஷ்டமானது.

இந்த நாவலில் என்னை மிகவும் பாதித்த என்னுடையதாய் மாறிப் போன ஒரு வசனம் “விவேகமானவர்கள் புத்திசாலித்தனமுள்ளவர்களிடம் இருந்து இதை மறைத்து வைத்தீர்கள். குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுத்தீர்கள்.”

முதன்முதலில் அன்னா இந்த நாவலில் அறிமுகம் ஆகும்போது ஒரு ரயில் விபத்து. கடைசியில் அவளே ரயிலில் பாய்ந்து உயிரை விடுகிறாள். எதுவும் தற்செயல் இல்லை என்பது போல மேலே இருந்து பார்க்கிறவர்களின் நாடக மேடை போல இந்த பூமியில் நம் வாழ்க்கை இருக்கிறது. நீங்க சொல்வது போல “மேல உள்ளவன் களிக்குதான்.”

படித்து முடித்து 3 நாட்கள் ஆனாலும் வெளியே வர முடியவில்லை.

டெய்ஸி.

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2022 11:31

கரசூர் பத்மபாரதி -கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி பற்றி….

அன்புள்ள ஜெ

கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய இரண்டு ஆய்வேடுகளையும் படித்துள்ளேன். முக்கியமான நூல்கள். மானுடவியலாளர் என்றுதான் அவரை அறிந்திருக்கிறேன். அவர் கசடதபற இதழ் பற்றியும் ஆய்வு செய்துள்ளார் என அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய தமிழ்விக்கி பக்கம் சிறப்பானது.

’நலம்’ சந்திரசேகர்

***

அன்புள்ள ஜெமோ

கரசூர் பத்மபாரதிக்கு அளிக்கப்பட்டுள்ள தமிழ்விக்கி தூரன் விருது சிறப்பானது. அவர் தமிழில் மிகத்தகுதி வாய்ந்த ஆய்வேடுகளை எழுதியவர். களஆய்வு புரிந்து ஆய்வேடு எழுதுவதொன்றும் எளிய செயல் அல்ல. கரசூர் பத்மபாரதியின் இரண்டு ஆய்வேடுகளையும் ஒட்டி தமிழில் பல நல்லநாவல்கள் எழுதப்படலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன.

கரசூர் பத்மபாரதிக்கு உரிய கல்வித்துறை பதவி இல்லை என எழுதியிருந்தீர்கள். இன்று மிகமிக ஊழல்மயமாகியிருப்பது உயர்கல்வித்துறைதான். இதைப்பற்றி பலரும் எழுதிவிட்டனர். பள்ளிக்கல்வியில்கூட ஆசிரியர்கள்தேர்வில் கொஞ்சம் தகுதி அடிப்படை உண்டு. கல்லூரி ஆசிரியர் வேலை என்பது ஏலம்போட்டு விற்கப்படுகிறது.  கல்லூரிகள் பெரும்பாலும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இல்லை. அவற்றுக்கு அரசு நிதியளிக்கிறது, ஆனால் கட்டுப்பாடு இல்லை.

கல்லூரி ஆசிரியர் தேர்வில் கையூட்டு ஒரு ஏற்கப்பட்ட வழக்கமாக ஆனபின்னர் நம் கல்லூரிப்படிப்பின் தரம் அதலபாதாளம் நோக்கிச் சென்றுவிட்டது. இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. நீண்டகால அளவில் நம் சமூகத்தின் அறிவுத்தகுதியையே பாதிக்கும் பிரச்சினை. இதை இங்கே எந்தக் கல்வியாளர்களும் எழுதுவதில்லை. எந்த அறிவுஜீவிகளும் பேசுவதுமில்லை.

எஸ்.கே

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2022 11:30

சுஜாதா, கடிதம்

சுஜாதா சுஜாதா சுஜாதா பற்றி…

அன்புள்ள ஜெ

சுஜாதா பற்றிய பதிவை வாசித்தேன். சுஜாதா பற்றிய தமிழ் விக்கி பக்கத்தை வம்புகள் வழியாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். வேறு எல்லா விக்கி பக்கங்களையும் அவர்களின் சாதனைகளைச் சொல்லி அடையாளம் காட்டினீர்கள். சுஜாதா பக்கங்களில் மட்டும் விவாதங்கள் ஏன் சொல்லப்பட்டுள்ளன? சுஜாதாவின் இடம் அதுதான் என்று தமிழ் விக்கி சொல்ல நினைக்கிறதா? இது வருந்தத் தக்கது.

எம்.ராஜகோபால்

***

அன்புள்ள ராஜகோபால்,

சுஜாதா என்றில்லை, எல்லா விக்கி பக்கங்களிலும் விவாதங்கள் என தனிப்பகுதியாக முக்கியமான விவாதங்கள் உள்ளன. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என அனைவருக்கும்.

ஆனால் அதில் ஓர் அளவுகோல் கைக்கொள்ளப்பட்டது. அவை இலக்கியம் சார்ந்து, இலக்கியவாசகன் இலக்கியத்தை புரிந்துகொள்ள உதவக்கூடியவையாக நிகழ்ந்த விவாதங்களாக இருக்கவேண்டும். வெறும் வம்புகள் சேர்க்கப்படவில்லை.

சுஜாதா பற்றிய வம்புகள் அந்தப்பதிவில் இல்லை. அவ்விவாதங்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையில் முக்கியமானவை, அவரை புரிந்துகொள்ள மிக அவசியமானவை.

மேலும் அது நான் அவரை அறிமுகம் செய்து எழுதியதல்ல. அது எனக்கு வந்த ஒரு கடிதம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2022 11:30

June 22, 2022

தமிழ் விக்கி, வாசகர்கள் என்ன செய்யலாம்?

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓரு வாசகனாக நான் இதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒருநாளில் ஒரு மணிநேரத்துக்கு மேல் நான் தமிழ் விக்கியில் நேரம் செலவிடுகிறேன். இதன் மிகச்சிறந்த இயல்பு என்பது தேர்ந்தெடுத்து அமைக்க பட்டிருக்கும் இணைப்புகள்தான். ஒரு சுழல்போல நம்மை சுற்றி உள்ளே கொண்டுசென்றுவிடுகின்றன. நான் எவ்வகையிலாவது பங்களிப்பாற்ற முடியுமா?

ராஜேந்திரன் எஸ்.

தமிழ் விக்கி முகப்பு

அன்புள்ள ராஜேந்திரன்,

தமிழ் விக்கி போன்ற ஓர் அமைப்பு நிலைகொள்ள வேண்டும் என்றால் அதற்கு பரந்துபட்ட பங்களிப்பு தேவை.

அ. எங்களுக்கு கட்டுரையாசிரியர் தேவைப்படுகிறார்கள். தமிழ் விக்கியில் இல்லாத கட்டுரைகளை நூல்களில் இருந்து உசாத்துணையுடன் எடுத்து எழுதி அனுப்பலாம். அக்கட்டுரை ஏற்கனவே இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்

ஆ. எங்களுக்கு ஆங்கில மொழியாக்கங்கள் நிறையவே தேவையாகின்றன. தமிழ் விக்கியில் உள்ள பதிவுகள் ஏற்கனவே ஆங்கிலத்தில் இல்லை என்றால் மொழியாக்கம் செய்து அனுப்பலாம். தமிழ் விக்கி தொடர்புக்கு

இ. தமிழ் விக்கியை தொடர்ச்சியாக வாசிப்பதே அதற்கு அளிக்கும் பங்களிப்புதான். ஆகவேதான் இணைப்பு அளித்துக்கொண்டிருக்கிறேன். பலர் அக்கட்டுரைகளை சொடுக்கிவிட்டு தமிழ் விக்கிக்குள் செல்லாமலேயே சென்றுவிடுகிறார்கள் என்றனர். நண்பர்கள்கூட அதைச்செய்கின்றனர். அது தமிழ் விக்கிக்குச் செய்யும் ஒருவகை துரோகம். உள்ளே சென்று கூடுமான வரை நேரம் செலவிடுவதே ஒருவர் தமிழ் விக்கிக்கு மிக எளிமையாகச் செய்யக்கூடிய பங்களிப்பு. அது தமிழ் விக்கி வாசிக்கப்படுகிறது என்பதற்கான சான்று. இன்றைய சூழலில் தமிழ் விக்கிக்குள் நுழையும் ஒவ்வொரு சொடுக்குக்கும் பெருமதிப்பு உண்டு. வாசகர்களிடம் கோருவது குறைந்தபட்சம் அதுவே.

ஈ. கூடுமான இடங்களில் எல்லாம் தமிழ் விக்கியை இணைப்பு அளிப்பது இன்றியமையாதது. இனி எழுதும் குறிப்புகள், கமெண்டுகளில் மட்டுமல்ல; ஏற்கனவே எழுதப்பட்டவற்றிலும் தமிழ் விக்கியை சுட்டிகொடுக்கலாம். அது தொடர்ச்சியாக வாசகர்களை உள்ளே கொண்டுவரும். வலைப்பக்கங்களில் நிரந்தர இணைப்பு அளிக்கலாம். கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இணைப்புகள் அளிக்கலாம்,

உ. வாட்ஸப், விவாதக்குழுமங்கள் போன்றவற்றில் இணைப்பு அளிக்கலாம். கட்டுரைகளை பகிர்ந்துகொள்ளலாம்.

பங்களிப்பது என எண்ணினால் ஏராளமாகச் செய்யமுடியும். மனமிருக்கவேண்டும். பொதுவாக நம் உள்ளம் பெருஞ்செயல்களை கண்டால் அச்சமும் விலக்கமும் கொள்கிறது. பெரும்பாலானவர்கள் சலிப்பு என்னும் மனநிலையிலேயே அன்றாடம் இருக்கிறார்கள். நான் எப்போதும் அவ்வாறல்லாத சிலரையே கருத்தில்கொள்கிறேன். அவர்களிடமே எதிர்பார்க்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2022 11:35

சுவாமி விபுலானந்தர்- முளைத்தெழும் சிலைகள்

சுவாமி விபுலானந்தர் பற்றிய தமிழ் விக்கி பதிவை வாசிக்கையில் ஒன்று தோன்றியது, அவர் ஈழத்தில் பிறந்தது அவருடைய நல்லூழ். அங்கே இனக்கலவரத்தில் அவருக்கு வைக்கப்பட்ட சிலைகள் உடைக்கப்பட்டன. உடைக்க உடைக்க அவை மீள மீள முளைத்தெழுந்துகொண்டே இருக்கின்றன. ஈழ அறிவுலகம் அவரை கைவிடவே இல்லை

நான் 2001 ல் கனடா சென்றபோது அங்கே சிவதாசன் என்னும் ஈழநாட்டு நண்பர் சொந்தப்பணத்தில் யாழ்நூலை மறு அச்சு கொண்டுவரும் முயற்சியில் இருந்தார். பிரமிக்கச்செய்யும் அச்சுநுட்பத்துடன் அந்நூல் வெளிவந்தது. எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.

விபுலானந்தர் என்றால் பெரும்பாலானவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்காது. சிலர் யாழ்நூல் என்பார்கள். யூபிஎஸ்சி போட்டித்தேர்வு எழுதுபவர்கள் தகவல்களை தேடி அலைவதைக் காணமுடிகிறது. இந்த விக்கிப்பதிவு, இதன் இணைப்புகள் ஒரு முழுமையான நூல் அளவுக்கே விபுலானந்தரை அறிமுகம் செய்கின்றன

விபுலானந்தர் சுவாமி விபுலானந்தர் சுவாமி விபுலானந்தர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2022 11:34

தமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி -தமிழ் விக்கி பதிவு

அன்புள்ள ஜெயமோகன்

நலம்தானே?

கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி தூரன் விருது வழங்கப்பட்டிருப்பது சிறப்பு. பெரியசாமித் தூரனுக்கு தமிழ் நாட்டாரியல் -சமூகவியல் ஆய்வாளர் என்னும் வகையிலும் முக்கியமான ஒரு தொடக்க இடம் உண்டு. அவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டருடன் இணைந்து வாய்மொழி நாட்டார் இலக்கியங்களை பதிப்பித்திருக்கிறார்.

கரசூர் பத்மபாரதி புறக்கணிக்கப்பட்ட ஓர் ஆய்வாளர். அவருடைய நூல்கள் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டாலும் ஓர் ஆய்வாளராக அவர் கல்விப்புலத்தால் இன்னும்கூட எங்கும் மதிக்கப்படவில்லை. அவர் பேராசிரியர் பணியில் இல்லை என்பதே காரணம். கரசூர் பத்மாவதிக்கு அளிக்கப்பட்ட இந்த விருது மிகப்பெரிய மதிப்பு மிக்கது.

தொடரட்டும் உங்கள் பணி

மா.செல்வராசன்

பெரியசாமித் தூரன் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்

அன்புள்ள ஜெயமோகன்,

கரசூர் பத்மபாரதியின் தமிழ் விக்கி இணையப்பக்கத்துக்குச் சென்று பார்த்தேன். அத்தனை விரிவாக அவரை ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள். இதேபோல காத்திரமான ஆய்வுகளைச் செய்து இன்னமும் கவனிக்கப்படாத பல ஆய்வாளர்கள் உள்ளனர். அவர்களையும் கவனத்திற்குக் கொண்டுவர தமிழ் விக்கி பரிசு அமைப்பினர் முன்வரவேண்டும். சரியான ஆய்வுகள் கவனிக்கப்படுவது ஆய்வுத்துறையில் மறுமலர்ச்சியை உருவாக்கும்

சி.சீரங்கன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2022 11:32

பூன், இர்வைன் – அருண்

அன்புள்ள ஜெயமோகன்,

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் அம்மாவிடம் இரு கரங்களை நீட்டி உள்ளங்கையிலும் விரல் ஓரங்களிலும் ஆங்காங்கே காய்ந்து போன fevicol உரிந்து வருவது போல தோல்  உரிந்துவருவதை காண்பித்தேன். அம்மா நீ வளரப்போகிறாய் அதனால் தான் புதிய தோல் வருகிறது என்றார். அதன்பின் பலமுறை உள்ளங்கையில் தோல் உரிந்து வந்திருக்கிறது. எவ்வளவுதான் பழைய தோல் உரிந்து புதிய தோல் தோன்றினும் கைரேகை மாற்றமடைவதேயில்லை. பாம்புகள் புதிய சட்டையை அணிந்தபின் பழைய சட்டையை மெல்ல மெல்ல கைவிடுகின்றன. அதன்பின் திரை மூடிய மங்கிய பார்வை மறைந்து தெளிவு உண்டாகிறது. தன்னைத்தானே உரித்தெடுத்து புதியதாய், தூயதாய், மேலும் பொலிவுடன், புதுப்பாய்ச்சலுடன், முன்பைக்காட்டிலும் தீவிரமாய் மாறுகிறது. பூன் முகாமும் அப்படி ஒரு தருணம் தான்.

முகாமின் நிகழ்வுகளை அனைத்தையும் தொகுத்து எழுத முயலவில்லை, மனதில் தோன்றிய சில விஷயங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் ஒரு இமயம் என்பது அறிந்த ஒன்றே. ஆனால் நேரில் சந்தித்தபோது தான் இமயத்தின் பிரம்மாண்டத்தை உணர முடிந்தது அதேவேளையில் நான் எந்த அளவு சிறியவன் என்றும் உணர்ந்தேன், நினைத்ததை காட்டிலும் சிறியவனாக.

பூன் முகாமில் களித்த ஒவ்வொரு காலத்துளியும் சிதறி வடிந்து மறைந்துவிடாமல் நினைவில் ஏற்றி தங்கு… தங்கு… வடிந்துவிடாதே என்று மூளை நரம்புகளை ஆணையிட்ட தருணம் பிறிதொன்றில்லை. கோடை காலங்களில் மாதம் ஒருமுறை வீட்டுக்குழாயில் வரும் பஞ்சாயத்து குடிநீரை அண்டா, குண்டா,  தொட்டி, தவலை, குடங்கள் என  பெரிய பாத்திரங்களில் நிரப்பிய பின்னரும் மனமடங்காமால் போதாது போதாது என்ற பதற்றத்துடன் வீட்டிலுள்ள ஜாடி, குவளைகள், டம்ளர், இட்லி பாத்திரம், போசி, டிபன் பாக்ஸ், என அடுமனையில் நிரப்பயேதுவான அனைத்திலும் நீரை நிரப்பி வைப்பதில் ஒரு மனநிம்மதி இருக்கத்தான் செய்கிறது.

ஒத்த ரசனையுள்ள நண்பர்கள் இவ்வளவு  பேரை ஒரேவேளையில் இதற்குமுன் சந்தித்ததில்லை. அமெரிக்கா முழுக்க எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது  கனவுபோல தோன்றுகிறது.

முகாமில் ராஜன் சோமசுந்தரம் காலை அமர்வின் தொடக்கத்தில் பாடிய கம்ப ராமாயணம் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் அப்பாடல்  எனக்கு புரிந்தது தான். இதுவரை நான் கேட்டிராத ஒன்று. ராஜன் அப்பாடலை தெளிவாக விளக்கிய பின்னர் பாடலை பாடினார்.

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல கேள்வி மேவலால்

ஏற்கனவே பலமுறை சில கம்பராமாயண வரிகள் கேட்டிருந்தாலும் கம்பராமாயணத்தை முழுவதும் வாசிக்க உந்துதல் ஏற்பட்டதில்லை. இப்பாடலில் உள்ள முரண், குறு நகை, கம்பரின் குறும்புத்தனம் என்னை ஈர்த்திருக்கலாம். அடுத்தடுத்து நடந்த பாலாஜிராஜுவின் கவிதையரங்கு, விசு மற்றும் செந்திலின் கம்பராமாயணம் அமர்வு கவிதையின் மேலும் கம்பராமாயணத்தின் மேலும் ஒளிபாய்ச்சி உந்தியது என்றே கூறுவேன்.

முன்பு தளத்தில் கவிதை பற்றிய கட்டுரைகள் வந்தால்  தவிர்த்துவிடுவேன், இப்போது வாசிக்கிறேன். கம்பராமாயணம் பாடலை எப்படி உச்சரித்து வாசிக்க வேண்டும் என்றும் கூட்டு வாசிப்பின் பயனையும் எடுத்துக்கூறி வலியுறுத்தினீர்கள். கவிதை அரங்கில் பாலாஜி ராஜு திரும்ப திரும்ப கவிதை வரிகளை வாசிக்க நேரும் போது மங்கலான உருவங்கள் கூட வடிவங்கள் எடுப்பதை உணர்தேன். கூட்டுக் கவிதை வாசிப்பு கவிதையின் நுண்மையும், ஆழத்தையும் அறியச் செய்யும், ஒவ்வொரு திரையை விலக்கி  உள் நுழையும் அனுபவம் தருமென்றே நினைக்கிறேன். நிலத்தை நீரால் ஊறவைத்து துளையிடுவது போல.

குழந்தை வளர்ப்பு பற்றி வெவ்வேறு வடிவங்களில் கேள்விகள் எழுந்தபோது. இறுதியாக இந்த பந்து இனிமேல் கண்ணில் படவே கூடாது என்று எண்ணியவராய் ஆடுகளத்திலிருந்து இறங்கி வந்து சுழன்று அடித்த அடியில் பந்து வீர் என்று மைதானத்தை விட்டு வெகுதொலைவில் சென்று மறைந்து. நீங்கள் ஆற்றிய அச்சிறு உரை,  பல முறை எழுதியிருந்தாலும் உரையை அங்கமர்ந்து கேட்ட அனைவரின் காதுகளில் என்றுமே எதிரொலிக்கும். சில வினாடிகளில் தத்துவத்தின் சாரத்தை பஞ்சுமிட்டாய் வைத்து புரியவைத்தீர்கள். தத்துவம் பற்றி பல கட்டுரைகள் வாசித்தாலும் எப்போதுமே ஒரு குழம்பிய நிலையில் தான் இருப்பேன். தத்துவ அமர்வுக்கு கிழக்கு மேற்கு தத்துவம்  பற்றிய ஆழமான எளிய ஆரம்பகட்ட புரிதலை உண்டுபண்ணியது, பெரிய திறப்பாக அமைந்திருந்தது. மேலும் தத்துவத்தை பயில, அதில் பயணிக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இலக்கியம், ஈகோ, suspension of consciousness, life after death, ஊட்டி கதைகள், நான் உரையாற்றும்போது ஜெயின் இங்க இருக்கக் கூடாது என்று புன்னகையுடன் கூறிய அருண்மொழி நங்கை, செயலில் தீவிரத்தன்மை, படகு குழி புறம் கொண்ட யக்ஷி, இத்தியாதி என பூன் முகாமின் ஏதாவது ஒரு நினைவுத்துளிகளை சிறிதளவேனும் பருகுவது அன்றாடத்தின் ஒரு நிகழ்வாகவே அமைந்துவிட்டது.

***

இர்வைன் சந்திப்பு மனதிற்கு மிகவும் அணுக்கமான ஒன்று. ஸ்ரீராம் இச்சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார். சந்திப்பிற்கு சான் டியாகோ’வில் இருந்து அப்பா, மனைவி, ஐந்து வயது மகனை உடன் அழைத்து வந்திருந்தேன். சில மாதங்கள் எங்களுடன் செலவிட அம்மா அப்பா இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அப்பா உங்கள் வாசகர் அதனால் தவறாமல் அழைத்து வந்திட்டேன். மனைவி புதிய வாசகி அறம் கதைகளை வாசித்து வருகிறார்.

ஜெ, ஒரு உரையில் கூறியிருப்பீர்கள் ‘சருகுகளால் சூழப்பட்ட விதை’ என்று. இவ்வாக்கியம் என் தந்தைக்கு பொருந்தும் என்றே நினைக்கிறேன். பொருளியல் வெற்றியடையாத எந்தவொரு வாசகனும் ஏளனத்திற்குரியவனாகிறான். வண்ணங்களற்ற நாட்களான அன்றாடத்தின் உலோகச்  சுவரை சிறு துளையிட்டு அத்துளையின் வாயிலாக வேற்றுலகை கண்டு தன் அகத்தில் நிரப்பி அதில் விடுதலை கண்டு திளைப்பவரை சருகுகளால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

“ஏன் பெரும்பாலான ஊர் பெயர் எல்லாம் பாளையம் என்று முடியும்படி வைத்திருக்கிறார்கள்?” என்று பேச்சை ஆரம்பித்தால் எந்த  உறவினர் தான் காது கொடுத்து கேட்பார்கள். எப்படி கடன் அடைப்பதென்றே தெரியல, பிள்ளைகளுக்கு வரன் அமையவே மாட்டிங்குது என்று சுவாரஸ்யமாகவும் பேசத் தெரியாது. அதனால் அப்பா தனிமையே விரும்புவார். பெரும்பாலான உரையாடல்கள் சிறுவர்களுடன் தான்.

என் தந்தை கோவையில் உள்ள  மில் தொழிற்சாலையில் சுமார் 30 ஆண்டுகாலகம் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். உடல் வேலை, வாரம் ஒருநாள் விடுப்பு, மாறி  மாறி வரும் பகல் இரவு ஷிப்ட். இளமையிலிருந்தே வாசிக்கும் பழக்கம் உடையவர் ஆரம்பத்தில் கல்கி, சாண்டில்யன், அகிலன் ஆகியோரின் படைப்புக்களை வாசித்திருக்கிறார். அதன்பின் வேறெந்த புனைவும் வாசிக்கவில்லை. எதையும் வாசிப்பார். காகித பொட்டலங்களை கூட வாசிக்காமல் கசக்கி எரிய மாட்டார். வரலாறு, யோகாசனம், சித்த மருத்துவம் சார்ந்த நூல்களை வாசிப்பார். ‘ஏம்பா கத புக்கு எல்லாம்  படிக்கமாட்டயா?’ என்றால் அதெல்லாம் சகிக்க முடியாது என்று கூறிவிட்டு அப்பால் சென்று விடுவார். இலக்கிய அறிமுகம் வாய்க்கப்பெறாத நல்ல வாசகர். பக்தியில் நாட்டம் இல்லை இருப்பினும் எந்த புராதன கோயில் சென்றாலும் கோவில் வரலாற்றை அறிந்துகொள்வதில் பெருமுனைப்பு உடையவர். இயல்பிலேயே வரலாற்று கோணத்தில் வைத்து எதையும் பார்ப்பார். கோவில் ஸ்தலபுராணம் நூலை வாங்கிவிட்டுத்தான் வீடு திரும்புவார். நாடார் தெய்வம், குலதெய்வ வழிபாடு, பெருந்தெய்வம் பற்றி நான் சிறுவனாக இருந்தபோது அப்பா விலக்கி கூறியது இன்றும் நிவிருக்கிறது.

உலகியல் சிக்கல்களால் வாசிப்பு குறைந்து வந்தது, ஒருகட்டத்தில் நின்றே விட்டது. எப்போவாவது நாளிதழ் மற்றும் சோ. இருக்கும் வரை துக்ளக். யோகாசனத்தில் தீவிரமான அர்ப்பணிப்பு கொண்டவர். சர்வாங்காசனம் முதல் மயிலாசனம் வரை அசால்டாக செய்து காட்டுவார். எனக்கு நினைவு தெரிந்தது முதல் அப்பாவால் கண்ணாடி அணியாமல்  வாசிக்க முடியாது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக கண்ணாடியே  அணிவதில்லை ஏன் என்று கேட்டால் யோகாசனம் செய்கிறேன் தானாக சரியாகிவிட்டது என்கிறார் (நிஜமாகவே கண்ணாடி அணிவதில்லை)

சரியாக சொல்லப்போனால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் உங்கள் படைப்புக்களை என் தந்தைக்கு அறிமுகப்படுத்தினேன். முதலில் விஷ்ணுபுரம் வாசிக்கும்  முன்  ஒரு தயக்கம், கதைகளே அவருக்கு பிடிப்பதில்லை. நான் கூறியதால் மட்டுமே வாசிக்கலானார்.  தங்குதடை இல்லாமல் வாசிதேவிட்டார். இதுதான் நாவல் என்றார். அடுத்து கொற்றவை, முதற்கனல், வண்ணக்கடல், மழைப்பாடல், 6 தரிசனம் இது போக இன்றைய காந்தி, இந்திய ஞானம், அருகர்களின் பாதை, காந்திக்கு பின் இந்தியா  1&2, இந்தியாவின் இருண்ட காலம், அ.கா.பெருமாளின் நாட்டாரியல் நூல்கள் இவையனைத்தும் வாசித்துவிட்டார். பின்தொடரும் நிழலின் குரல் வசித்து வருகிறார். அப்பா இப்போது தீவிரமான இலக்கிய வாசகர்.  தன் 62’வது வயதில் உங்களை கண்டடைந்திருக்கறார். இத்தனை ஆண்டுகாலம் ஜெயமோகன் என்ற ஆளுமையை அறியாமல் போனோமே என்ற ஏமாற்றம் உண்டு. தற்சமயம் கைபேசியில் இணையம் பயன்படுத்த கற்றுக்கொண்ட பின் உங்கள் தளத்தை தினமும்  வாசித்து வருகிறார். தளத்தில் உள்ள பல கட்டுரைகளை தேடித்தேடி வாசித்து வருகிறார்.

கோவையில் நீங்கள் ஆற்றிய  ஓஷோவின் உரையை மூன்று நாளும் தவறாமல் வந்து அமர்ந்து கேட்டிருக்கிறார். சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விழாவிற்கும் பார்வையாளராக வந்து அமர்ந்திருக்கிறார். பெரும்பாலும் அறுபதை கடந்தோர்  உடல் உபாதைகள், குடும்பம், கவலை, பக்தி என்று அவர்கள் சிறு வட்டத்திற்குள்  சுருங்கி ஒடிந்து உறைந்துவிடக்கூடும். என் தந்தை உறையாமல் இருப்பது உங்கள் எழுத்துக்களால் தான். அக உலகத்தை விரித்து எடுத்து அதில்  உரையாடல் நிகழ்த்தவும்  சிந்திக்கவும்,  கற்பனை செய்யவும்  கோருகிறது, அதற்கான கருவிகளையும் சமைத்துக்கொள்ள வழிவகுக்கிறது  உங்கள்  எழுத்து. அவர் உள்ளத்தில் புது பாய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்கூடு.

இப்படியிருக்க  அப்பா உங்களை இர்வைனில்  சந்தித்தது எனக்கு நெகிழ்வை தந்தது. அப்பாவுக்கோ குதூகலம், பரவசத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். எந்தப் புத்தகமானாலும் நேர்த்தியாக அட்டை போட்டு பாதுகாத்து வைப்பார், புக் மரக்குக்காக தாள்களை மடக்குவது அறவே பிடிக்காது. இர்வைன்  சந்திப்பின்போது தன்னுடைய ஒளிபுகும் அட்டைபோட்ட இரண்டு புத்தகங்களை உங்களிடம் கையெழுத்து வாங்க எடுத்துவந்தார். அட்டை கழன்று  வராதவாறு துண்டு பழுப்பு டேப் போட்டு ஒட்டி இருந்தது. நீங்கள் அப்புத்தகத்தை சில வினாடி புரட்டி அவருடைய பெயரை கேட்டு ‘அன்புள்ள அருணாசலத்திற்கு…’ என்று கையெழுத்து போட்டபோது அப்பாவின் உள்ளம்  சிறுவனைப்போல துள்ளிக் குதித்ததை அருகில் இருந்த  நான் உணர்ந்தேன்.

மகன் திகழ்வன், வயது ஐந்து. கிண்டர் கார்டன் செல்கிறான். அவனுக்கு உங்களை நன்றாகவே தெரியும். ஜெயமோகனை பார்க்க போகலாம் என்று சொன்னதும் மின்னல் வேகத்தில் புறப்பட்டுவிட்டான். சந்திப்பின்போது திகழ்வனை நீங்கள் மடியில் உட்க்காரவைத்தது, தூக்கி முத்தமிடும் போது எடுத்த புகைப்படம் குடும்ப பொக்கிஷமாக ஆகிவிட்டது. காரில் வீடு திரும்பும்போது ‘அப்பா, நானும் ஜெயமோகன் மாதிரி ரைட்டர் ஆகணும்’ என்றான் (தமிழ் நன்றாக பேசுவான்). சென்ற வாரம் மருத்துவமனை காத்திருப்பிருக்கையில்  அமர்ந்திருந்தபோது சட்டென்று ‘அப்பா ஜெயமோகன் எந்த வயசுல இருந்து எழுத ஆரம்பிச்சார்?’ என்றான். இன்னொருநாள் வீட்டிற்கு வந்த என் நண்பனிடம் தனிச்சையாக நான் ஜெயமோகன் மாதிரி ரைட்டர்  ஆகா போறேன், ஒன் பேஜ் ஸ்டோரி எல்லாம் எழுதிட்டு இருக்கேன்’ என்றான். நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

அன்புடன்,

அருண்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.