Jeyamohan's Blog, page 753

June 30, 2022

மைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்

அஜிதனின் இச்சிறுநாவல், முழுவதும் தன்னை இனிமையால் நிறைத்து அதில் திளைக்க வைப்பது. துளியின் பூரணத்தை உணரச்செய்வது. பெருநாவல்களின் வீச்சும் ஆற்றலும் இதில் இல்லை. ஆகவே, அதன் பெருமூச்சுகளும், வீழ்ச்சியின் சரிவுகளும் இதில் இல்லை.

மாறாக, மொத்த உலகையும் நிறைக்கத் துடிக்கும் ஏதோ ஒன்றின் இனிய தவிப்பு மட்டுமே பக்கங்கள்தோறும் நிறைந்திருக்கிறது.

மைத்ரி : துளியின் பூரணம்

மைத்ரி அச்சுநூல் வாங்க  மைத்ரி அச்சுநூல் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் மைத்ரி மின்னூல் வாங்க  மைத்ரி நாவல் இணைய தளம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2022 11:33

எஸ்.ராமகிருஷ்ணன்,நூறு கதைகள்-கடிதம்

எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்)

மதிப்புக்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

தமிழ் விக்கி தளத்தின் பல பக்கங்களை அவ்வப்போது வாசித்து வருகிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவை எண்ணிலடங்கா முறை பயன்படுத்தியிருக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியா வாசிக்க நேரவில்லை. இப்போது தமிழ் விக்கி பக்கங்கள் வாசிக்க நேர்ந்திருக்கிறது.     பொதுநலத்தின் பொருட்டான இத்தகைய பெருமுயற்சிகளுக்கு, தங்களுக்கும் விக்கி குழுவினருக்கும் நன்றியும் வணக்கங்களும். ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்.

பேரறிவாளன் திரு. எஸ்.ரா அவர்கள் பற்றிய தமிழ் விக்கி பக்கம் வாசித்தேன்.  ஒரு தகவல் சேர்க்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமோ என்று நினைத்தேன்.   அதாவது எஸ் ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த 100 சிறுகதைகள் என்ற தொகுப்புப் பற்றி. கிட்டத்தட்ட முப்பது வயது வரை, வாரப் பத்திரிகைகளில் வரும் சிறுகதைகள் மட்டுமே வாசித்திருக்கிறேன்.  வீட்டில்  பெரியவர்கள் கல்கி, சாண்டில்யன் போன்றோரின் தொடர்கதைகளைக் கிழித்து பைண்டிங் செய்து பழுப்படைந்த புத்தகங்கள் நிறைய இருந்தாலும்,   சிலவற்றை வாசிக்க எடுத்து, ஆர்வமில்லாமல் விட்டுவிட்டேன்.

அதுவரை வாசித்திருந்த சிறந்த சிறுகதைகள் தினமணிக்கதிரில் வந்தவையே.   அது தவிர உயர் இலக்கியம் என்றால் என்னவென்று ருசித்ததில்லை. அந்த நிலையில் நிசப்தம் வா.மணிகண்டன் அவர்களின் தளம் வழியாக எஸ் ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த 100 சிறுகதைகள் தொகுப்பு கிடைக்கப் பெற்றது.  அது ஒரு புதிய திறப்பைக் கொடுத்தது.  புதுமைப்பித்தன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும், அவரது கதையெதுவும் வாசித்த நினைவில்லை.   ஆனால் அந்தத் தொகுப்பில்  முதலில் வாசித்த கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்  கதையும்,   பிற கதைகளும்,   ஆதுவரை உணர்ந்தறியாத வாசிப்பனுபவத்தைக் கொடுத்தன.   சிறுகதை என்பது இருபது பக்கங்கள் கூட இருக்கலாம் என்பது தெரியவந்தது.   கிளாசிக் கதைகள் என்ற வகைப்பாடு தெரியவந்தது.  நமது நுண்ணுணர்வுகளுடன், ஆழ்மனத்துடன் கைகோர்த்து உரையாடும் அந்தக் கதைகள்,    கிளாசிக் எழுத்தாளர்கள் மேல் மிகப்பெரிய மரியாதையை மனதில் ஏற்படுத்தின.

இன்றுவரை எனக்குப் பிடித்த சிறுகதை செல்லம்மாள் அதில் வாசித்ததுதான்.  ஜெயகாந்தனை முதலில் வாசித்தது அதில்தான். எவ்வளவோ பேருக்கு இந்தத் தொகுப்பு, கிளாசிக் இலக்கிய வாசிப்பின் திறவுகோலாக இருக்கும் என்று நம்புகிறேன்.  இவற்றைத் தொகுத்து வாசகனுக்கு அளித்த எஸ்.ரா. அவர்களின் அக்கறையும் முயற்சியும் வணங்கத்தக்கது. இந்தத் தொகுப்பைப் பற்றியும் தமிழ் விக்கியில் குறிப்பிடப்பட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,

வி. நாராயணசாமி

அன்புள்ள நாராயணசாமி

அந்நூல் பற்றி சிறுகதைகள் பகுதியில் இல்லை. தொகைநூல் பகுதியில் உள்ளது

ஜெ

எஸ். ராமகிருஷ்ணன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2022 11:31

அமெரிக்கா, கடிதங்கள்-2

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெ

சாமானியனின் உளவியல் என ஒன்று உண்டு. அவன் எதுவுமே சரியில்லை என்னும் நிரந்தரமான பதற்றத்தில் இருக்கிறான். எதுவோ போதவில்லை. ஏதோ தப்பாக ஆகப்போகிறது. இதுதான் அவனுடைய நிரந்தர மனநிலை. ஆகவே அவன் அவனிடம் எவர் பேசினாலும் ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ ’எல்லாமே சரியாக முடியும்’ என்று அவர்களிடம் சொல்பவர்களையே விரும்புவார்கள். ஆன்மிகவாதிகள், மதச்சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள், பட்டிமன்றவாதிகள் அனைவரும் அதையே சொல்வார்கள்.

நேர் மாறாக நீங்கள் அவர்களிடம் உண்மை சொல்கிறீர்கள். அவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் சிலவற்றை உடைக்கிறீர்கள். பல நம்பிக்கைகளை இல்லாமலாக்குகிறீர்கள். அவர்கள் பலர் ஒரு சமாளிப்பாகவே தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புகிறார்கள். ‘நாங்க தமிழ் சொல்லிக்குடுக்க நினைச்சோம். தமிழ்ப்பள்ளிக்கெல்லாம் அனுப்பினோம். அவன்தான் தமிழை மறந்துட்டான்’ இது எல்லா பெற்றோரும் சொல்வது. நீங்கள் அந்தச் சின்ன ஆறுதலை பிடுங்கிவிடுகிறீர்கள்.

பெரும்பாலான தமிழ்ப்பெற்றோர் ‘என் பையன் தமிழ்ப்பொண்ணுதான் வேணும்னு சொல்றான்’ ‘நம்ம சாப்பாட்ட விரும்பி சாப்பிடுவான்’ ’முருகன் கோயிலுக்கெல்லாம் வருவான்’ – இந்த மூன்றையும்தான் தங்கள் பிள்ளைகள் அப்படியெல்லாம் தமிழ்ப்பண்பாட்டிலிருந்து விலகிச்செல்லவில்லை என்பதற்குச் சான்றாக சொல்வார்கள். முதல் காரணம், நம்மவர்களுக்கு தோல்நிறம் ஒரு சிக்கல். வெள்ளையர்களின் நிலையில்லாத குடும்ப வாழ்க்கைமேல் ஒரு சந்தேகம். இரண்டாவது மூன்றாவது காரணங்கள், அவை பழகிவிட்டன என்பதுதான்.

அத்தனை சால்ஜாப்புகளையும் பிடுங்கிவிட்டு அவர்களிடம் நீங்கள் அவர்கள் மெய்யாகவே செய்யவேண்டியதென்ன என்று சொல்கிறீர்கள். தமிழ்ப்பண்பாட்டின் உண்மையான வெற்றியும் பெறுமதியும் என்ன என்கிறீர்கள். அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல என்ன செய்யவேண்டும் என்கிறீர்கள். ஆனால் அதெல்லாமே ‘நீங்கள் வாழுங்கள். நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் செயலாற்றுங்கள்’ என்றுதான் இருக்கிறது. அது ஒரு பெரிய சவால். அதைச்செய்வதுதான் கடினம்.

ஆனால் அதை இத்தனை கூர்மையாகச் சொல்ல ஓர் எழுத்தாளனின் குரல் தேவையாகிறது. பசப்புகள் இல்லாமல் நேருக்குநேராகச் சொல்லவேண்டியிருக்கிறது. அதை ஓர் ஆயிரம்பேர் கவனித்திருக்க வாய்ப்புண்டு. அவர்களில் கொஞ்சபேர் சிந்திக்கலாம்.

ஆனந்த்ராஜ்

வணக்கம் திரு. ஜெயமோகன்,

தங்கள் “அமெரிக்க தமிழ் குழந்தைகள்” மூன்று கட்டுரைகளிலும் உள்ள கருத்துக்கள் 99% உண்மை. நீங்கள் சொல்வதுபோல் அமெரிக்காவுக்கு வர சொல்லி யாரும் எங்களை வலியுறுத்தவில்லை. நாங்களாக வேண்டி, விரும்பி வாழ்நாள் கனவாக தான் இங்கே வந்து சேர்ந்தோம்.

வந்த இடத்தில் “பிள்ளைகள் தமிழராக வாழவேண்டும்” என்பதில் ஹிப்பாக்ரஸி எதுவும் இல்லை. அதுதான் உங்கள் கட்டுரையில் தவறவிட்ட அந்த 1% விசயம். “என் பிள்ளை தமிழனாக/ தமிழச்சியாக வளரவேண்டும்” என்பது வெறும் மொழி, இலக்கியம், மண்ணுடனான கலாசார தொடர்பு மட்டும் அல்ல. ஒவ்வொரு கலாசாரமும் மதிப்பீடுகள் (values) சார்ந்து அமைந்தவை. சீன கலாசாரம் கன்பூசியஸ் மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டு அமைந்தது. அமெரிக்க கலாசார மதிப்பீடு என்பது தனி மனித சுதந்திரம், துப்பாக்கி, ஜனநாயகம், பெடெரல் அரசின் மேலான அவநம்பிக்கை (மாநில உரிமை) இவற்றின் அடிப்படையில் அமைந்தது.

தமிழ் கலாசரத்தின் மதிப்பீடுகள் என பட்டியல் போட்டால் நம் அறநூல்களில் இருந்து எடுக்கலாம். குறிப்பாக குறளில் உள்ள இல்வாழ்க்கை, வாழ்க்கைதுணைநலம், மக்கட்பேறு, பிறனில் விழையாமை…இவற்றில் உள்ளதுபோல் தான் பெரும்பான்மை தமிழ்குடும்பங்கள் (தமிழகம் உள்பட) வாழ்வதாக அல்லது இவற்றை மதிப்பீடாக கொண்டுள்ளதாக கருதுகிறேன். பிள்ளையை ஹார்வர்ட் அனுப்பும் நோக்கமும் “சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே” எனும் தமிழ் மரபின் வழி வந்ததே.

அமெரிக்கர்களை மாதிரி இங்குள்ள பிள்ளைகள் மொழியளவில், யூத் ஸ்டைலை பின்பற்றினாலும் அமெரிக்கர்கள் மாதிரி ஹூக்கப் கலாசாரம், லிவ் இன் கலாசாரம் பரவவில்லை. அமெரிக்க தமிழ் குழந்தைகளில் டீனேஜ் தாய்மார்கள் இல்லை. தம் பெற்றோர் மாதிரி கல்யானம் செய்துகொன்டு நல்ல குடும்ப வாழ்க்கை அமையவேண்டும் எனதான் இங்குள்ள பிள்ளைகளும் விரும்புகிறார்கள்.

“என் பிள்ளை தமிழனாக வாழவேண்டும்” என சொல்பவர்கள் இப்படிப்பட்ட மதிப்பீடுகளின் அளவில் சொல்வதாக தான் கருதுகிறேன். இந்த மதிப்பீடுகள் தமிழருக்கு மட்டும் பொதுவானதல்ல என்பதும் உண்மை. இவற்றில் பல இந்திய கலாசாரங்கள் பலவற்றுக்கும் பொதுவானவை. இந்தியாவும், தமிழும் இவ்விதத்தில் வேறுபட்டவை என நான் கருதவில்லை.

தமிழன் என்பதை கலாசார மதிப்பீடுகளின் அடிப்படையில் அளவிட்டால் இங்குள்ள தமிழ்குழந்தைகள் 100% தமிழர்தான். மூன்றாம் தலைமுறை அப்படி இருக்குமா என சொல்லமுடியாது. ஏனெனில் கலப்பு மணம் காரணமாக அப்போது இனம் மாறிவிடலாம். ஆனால் அப்போது மொழி/கலாசார இழப்பு இருக்குமே ஒழிய மதிப்பீடுகளை தம் பெற்றோரிடம் இருந்து கற்றுக்கொண்டால், அவற்றின் பலன் தலைமுறை தாண்டி தொடரும் என கருதுகிறேன்

நன்றி

அன்புடன்
நியாண்டர் செல்வன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2022 11:31

மதுரையில் ஓர் இலக்கிய மையம்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

‘தன்னறம்’ எனும் சொல் உங்கள் வழியாகத்தான் எங்களுக்கு அறிமுகமானது. ‘தன் உள்ளார்ந்த இயல்பால் ஒருவன் தெரிவு செய்யும் செயலே தன்னறம்’ எனும் வரையறையின் அடியொற்றியே இதுவரையில் எங்கள் எல்லா செயல்களும் பிறப்படைகின்றன. நம் உள்ளாற்றல் எச்செயலில் தன்னை முழுதுற வெளிப்படுத்துகிறதோ அதுவே நமக்கான தன்னறம் என்ற தெளிவை சமகாலத்து இளையோர்களுக்கு உணர்த்தியதில் உங்கள் சொற்களுக்குப் பெரும்பங்குண்டு.

தமிழ் பதிப்பகச்சூழலில் தானும் ஒரு பதிப்பகமாகத் ‘தன்னறம்’ இணைந்து புத்தகங்கள் உருவாக்கத் துவங்கி ஐந்தாண்டுகள் ஆகிறது. இப்பயணம் இன்னமும் அதே அகத்தீவிரத்துடனும் செயல்விசையுடனும் நீடிக்கிறது. வாசிப்புத் தோழமைகளின் அகமார்ந்த துணைநிற்றலால் பதிப்புவெளியில் தன்னறத்திற்கும் நல்லதொரு நிலை வாய்த்திருக்கிறது. நேர்த்திக்கும் தரத்திற்கும் காலங்கொடுத்து வடிவமைக்கும் ஒவ்வொரு நூலும் சமகாலத்தில் தன்னறத்திற்கு நன்மதிப்பை ஈட்டித்தந்திருக்கிறது.

காலக்கனிவின் நல்விளைவாக ‘தன்னறம் நூல்வெளி’ மற்றும் தும்பி சிறார் இதழுக்கான புத்தக நிலையத்தை மதுரையில் துவங்குகிறோம். நண்பர்களைச் சந்திக்கும் நல்லிடமாகவும், நூல்களைப் பெறும் புத்தக நிலையமாகவும், சிறுசிறு நிகழ்வுகளுக்கான கூடுகையிடமாகவும் இப்புதிய அலுவலகம் அமையவுள்ளது. தும்பி இதழ் மற்றும் தன்னறம் நூல்வெளியின் எல்லா நூல்களும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

இந்தப் புத்தக நிலையத்தை கவிஞர் தேவதேவன் அவர்கள் தன்னுடைய நற்கரங்களால் திறந்திவைக்கிறார். மேலும், தேவதேவனின் வருகையை நினைவுள் எஞ்சும் நாளாக ஏந்திக்கொள்ளும் பொருட்டு, சனிக்கிழமை அன்று மதுரை கீழக்குயில்குடி சமணர்மலையில் அவருடன் படைப்பனுபவ உரையாடல் கூடுகையும் நிகழவுள்ளது. எளியதொரு நற்சந்திப்பாக, படைப்புமனம் கொண்ட இருபது இளையவர்கள் பங்குகொள்ளும் இலக்கியச் சந்திப்பாக அதை அமைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

தன்னறம் நூல்வெளி வாயிலாக அண்மையில் வெளியாகிய ‘தேவதேவன் கவிதைகள்’ பெருந்தொகுப்புக்கான முதல் அறிமுகமாகவும் இக்கூடுகை தன்மைகொள்ளும். நீங்களும் விஷ்ணுபுரம் நண்பர்களும் எல்லாநிலையிலும் எங்களுக்கு வழிகாட்டித் துணையிருக்கிறீர்கள். ஆகவே, இந்த நற்துவக்கத்தை உங்களிடம் சொல்லித் துவங்குவதில் நாங்கள் நிறைவுகொள்கிறோம்.

உங்கள் சொற்கள் வழியாக எங்களுக்குள் துலங்கித்திகழும் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியை இக்கணம் அகத்திலேந்துகிறோம். அனைத்துக்கும் அருளளிக்கும் பேரியற்கையை வணங்கி இந்நற்துவக்கத்தில் செயலாற்றுகிறோம்.

அன்பின் நன்றிகளுடன்,

தன்னறம் – தும்பி
குக்கூ காட்டுப்பள்ளி
www.thannaram.in

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2022 11:31

வல்லினம் கதைகள்

அன்புள்ள ஜெ

வல்லினம் இதழில் சுசித்ரா மொழியாக்கம் செய்த மேலங்கி என்னும் ஐசக் டினேசனின் சிறுகதை வாசித்தேன். மிகச்சிறப்பான கதை. ஒரு பழைய தொன்மம்போலவே தெரிகிறது. கதையா இல்லை ஒரு பழங்கனவா என்று தெரியாதபடி அமைந்துள்ளது. இந்தவகையான கதைகள்தான் பல்வேறு உத்திகள் கொண்ட புதியகதைகளை போல அல்லாமல் காலம்கடந்து நிற்கின்றன என நினைக்கிறேன்.

ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் இசக்கி என்றகதையும் அந்த மனநிலை நோக்கிச் செல்லமுயலும் கதையாகத் தோன்றியது. பொதுவாகவே வல்லினம் இதழின் எல்லா படைப்புக்களுமே சிறப்பாக இருந்தன. சிகண்டி பற்றி இளம்பூரணன் கட்டுரை ரம்யாவின் மெக்தலீன் எல்லாமே சிறப்பான கதைகளாக தெரிந்தன.

அருண் ராஜ்குமார்

மேலங்கி சுசித்ரா

மெக்தலீன் ரம்யா

இசக்கி ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

தைலம் அர்வின் குமார்

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 30, 2022 11:31

June 29, 2022

இலக்கியமும் சமூகமும்

கலேவலா – தமிழ் விக்கி

ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது?

தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள்

உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா? நம் பாட்டி சாப்பிட்ட உணவுகூட நம் உடலில் ஓடும் இல்லையா?

எது சரி எது தப்பு என நாம் எப்படி முடிவு செய்கிறோம்? எதைக்கேட்டதும் மனம் நெகிழ்கிறோம்? எதைக்கேட்டதும் கடுமையான கோபம் கொள்கிறோம்? யோசித்திருக்கிறீர்களா? அவற்றை எல்லாம் தீர்மானிக்கும் சில விதிகள் நமக்குள் உள்ளன. அவை நம்பிக்கைகளாகவும் உணர்ச்சிகளாகவும் உள்ளன. அதைத்தான் விழுமியங்கள் என்கிறோம்.

அந்த விழுமியங்களை நம் அன்னையும் தந்தையும் சிறுவயதில் கதைகளாகத்தான் நமக்குச் சொல்லியிருப்பார்கள். அந்தக் கதைகள் எல்லாமே நம்முடைய இலக்கியத்தில் இருந்து வந்தவையாக இருக்கும். நாம் நேரடியாக இலக்கியத்தை வாசிக்காமல் இருந்தாலும் இலக்கியம் நமக்குள் வந்து சேர்வது இப்படித்தான்.

மலையாள திரைப்பட எழுத்தாளர் லோகிததாஸ் சொன்னது இது. மகாபாரதம் ராமாயணம் பற்றி பேச்சு வந்தது. நம் நாட்டில் லட்சம் பேரில் ஒருவர் கூட மகாபாரதம் கதையை வாசித்திருக்க மாட்டார்கள் என்றார் ஒரு நண்பர். ஆனால் அத்தனைபேருக்கும் அடிப்படை நம்பிக்கைகளை மகாபாரதம்தான் தீர்மானிக்கும் என்றார் லோகிததாஸ்

சரி பார்த்துவிடுவோம் என்று இருவரும் பந்தயம் கட்டினார்கள். அன்று சாயங்காலத்துக்குள் எத்தனைபேர் ஏதேனும் வழியில் மகாபாரதத்தை குறிப்பிடுகிறார்கள் என்று பார்க்க முடிவெடுத்தனர். மூன்றுபேராவது மகாபாரதத்தைப்பற்றிச் சொல்வார்கள் என்று லோகிததாஸ் பத்தாயிரம் ரூபாய் பந்தயம் கட்டினார்.

அரைமணிநேரத்தில் ஒருவர் ‘ஆளு நல்லா பீமன் மாதிரி இருப்பான்…அதை நம்பி பொண்ணக் குடுத்தோம்’ என்று சொல்லிக்கொண்டு போனார். இன்னொருவர் ‘பெரிய அர்ச்சுன மகாராசான்னு நினைப்பு. மாசம் நூறு ரூபா வருமானமில்ல’ என்று யாரையோ திட்டிக்கொண்டு போனார். கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் ‘எச்சில் தொடாம தின்ன துரியோதனன் ஆன கெதி தெரியும்ல?’ என்றார். பகலுக்குள் பதினேழு முறை மகாபாரதம் காதில் விழுந்தது

நண்பர் அயர்ந்து போனார். இப்படித்தான் இலக்கியம் இங்கே ஒவ்வொருவர் மனதிலும் வாழ்கிறது. ஒருநாளில் கண்ணகியை எத்தனைபேர் எப்படியெல்லாம் குறிப்பிடுகிறார்கள் என்று பாருங்கள். சிலப்பதிகாரத்தை அதிகம்பேர் வாசிக்கவேண்டியதில்லை. சிலப்பதிகாரம் எல்லா மனங்களிலும் வாழும்

இன்னொரு வகையிலும் இலக்கியம் வாழ்கிறது. தூள் என்று ஒரு சினிமா. விக்ரம் நடித்தது. ஒரு ஊரிலே பெரிய அநீதி. அந்த ஊருக்கு புஜபலபராக்ரமியான விக்ரம் வருகிறார். அநீதியை தட்டிக்கேட்கிறார். வில்லனை வீழ்த்துகிறார்

அதேகதை மகாபாரதத்தில் உள்ளது. பீமன் ஓர் ஊருக்கு வருகிறான். அங்கே எல்லாரும் சோகமாக இருக்கிறார்கள். கேட்டால் அங்கே பகாசுரன் என்பவன் தினம் ஒரு இளைஞனை ஒரு வண்டிச் சோற்றுடன் கொன்று தின்றுகொண்டிருக்கிறான். அன்றைக்கு ஓர் அன்னையின் மகன் சோறுடன் உணவாகச் செல்லவேண்டும். அவள் அழுதுகொண்டிருக்கிறாள். குந்தி சொல்கிறாள், பரவாயில்லை என் மகன் செல்லட்டும் என்று

பீமன் வண்டி நிறைய சோறுடன் செல்கிறான். செல்லும் வழியிலேயே வண்டிச்சோற்றை தின்று விடுகிறான். பகாசுரன் அதைக்கண்டு கோபம் கொண்டு அடிக்க வருகிறான். கிளைமாக்ஸ் ஃபைட்! கொஞ்சம் கிராஃபிக்ஸ் உண்டு. பகாசுரன் சாகிறான். பீமன் ஊரைக் காப்பாற்றுகிறான்

நம் சினிமாக்கதைகளுக்கு உரிமைத்தொகை [காப்பிரைட்] கொடுப்பதாக இருந்தால் எல்லா சினிமாவுக்கும் வியாசனுக்கு பணம் கொடுக்கவேண்டும். வியாசர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்!

இதுதான் இலக்கியம் தனி மனிதனுக்கு அளிக்கக்கூடிய பங்களிப்பு. அவனுக்கு அது விழுமியங்களை அளிக்கிறது.

அப்பா அம்மா அளிக்கக்கூடிய விழுமியங்களை மட்டும் நம்பி அப்படியே வாழ்பவர்கள் பெரும்பாலானவர்கள். மிகச்சிறுபான்மையினர் விழுமியங்களை மறுபரிசீலனை செய்கிறார்கள். இது சரியா, இப்படிச் செய்யலாமா என்று யோசிக்கிறார்கள். அவர்கள் நேரடியாக இலக்கியத்தை வாசிக்கிறார்கள்.

சிந்திக்கக்கூடியவர்கள், அதாவது சமூகத்தில் இருந்து சற்று மேலே எழுந்து வாழ விரும்பக்கூடியவர்கள் இலக்கியத்தை வாசிக்கிறார்கள். இலக்கியம் வழியாக மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. நீங்கள் எந்த வகை என்பதை நீங்கள்தான் முடிவெடுக்கவேண்டும்

சரி, நான் முதலில் கேட்டது ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவை என்று. அதைப்பற்றி யோசித்திருக்கிறீர்களா?

ஒருசில உதாரணங்களைச் சொல்கிறேனே. பெரும்பாலான ஆப்ரிக்க நாடுகளை இன்று பார்த்தால் அவர்கள் ஒரு நாடாகவோ சமூகமாகவோ உருவாகாமல் இருப்பதைக் காணலாம். அவர்கள் தனித்தனி இனக்குழுக்களாக பிரிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு இனக்குழுவும் ஒன்றுடன் ஒன்று கடுமையாகப் போர் செய்தபடியே இருக்கிறது.

ஆகவே அந்நாடுகளில் உள்நாட்டுப்போர் முடிவுறவே இல்லை. அந்நாடுகளில் வளர்ச்சி இல்லை. அந்நாடுகளில் செல்வங்களை அன்னியர் கொள்ளையடித்துச்செல்கிறார்கள். அங்கெல்லாம் பெரிய பஞ்சம் வந்து லட்சக்கணக்கான மக்கள் செத்து அழிகிறார்கள்.

நீங்களே டிவியில் பார்த்திருக்கலாம், எலும்பும் தோலுமாக குழந்தைகள் கைநீட்டி நின்றிருப்பதை. சாகக்கிடக்கும் குழந்தைக்கு அருகே கழுகு காத்திருப்பதை படமாகக் கண்டு கண்ணீர் விட்டிருப்பீர்கள். ஆனாலும் அவர்கள் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களை ஒற்றுமைப்படுத்த என்ன செய்வதென்றே எவருக்கும் தெரியவில்லை.

உலகில் உள்ள அத்தனை சமூகங்களும் அப்படித்தான் இருந்திருக்கின்றன. மனித குலம் வளர்ச்சி பெறும் விதம் அப்படித்தான் அமைந்திருக்கிறது. முதலில் சிறிய இனக்குழுக்களாக இருப்பார்கள் மக்கள். அதன்பிறகு கொஞ்சம் பெரிய இனக்குழுக்களாக ஆவார்கள். அந்த இனக்குழுக்கள் ஒன்றாக மாறி ஒரு சமூகமாக ஆகும்.

அப்படி சமூகங்கள் உருவானபின்னர்தான் அம்மக்களிடையே அமைதி உருவாகும். அனைவருக்கும் பொதுவான அறமும் நீதியும் ஒழுக்கமும் உருவாகும். அவற்றின் அடிப்படையில் அந்தச் சமூகம் செயல்படத் தொடங்கும்

இப்படிப்பட்ட சமூக உருவாக்கம் நிகழும்போதுதான் இலக்கியங்கள் தேவையாகின்றன. இலக்கியங்கள் அந்த சமூகங்களை உருவாக்குகின்றன. கான்கிரீட் கட்டிடம் கம்பி, மணல், செங்கல் எல்லாம் கலந்தது. சிமிண்ட்தான் அதை ஒட்டி ஒன்றாக நிலைநிறுத்தியிருக்கிறது. சமூகம் ஒரு கான்கிரீட் கட்டிடம். அதன் சிமிண்ட் என்பது இலக்கியம்தான்

ஆப்ரிக்காவில் காங்கோ,கென்யா, எதியோப்பியா, சூடான் போன்ற நாடுகளெல்லாம் இனக்குழுச் சண்டைகளால் அழிந்துகொண்டிருக்கின்றன. அதே மாதிரியான ஒரு நாடுதான் நைஜீரியா. அந்த நாட்டிலும் இனக்குழுக்கள் உண்டு. அவர்கள் நடுவே கடுமையான சண்டைகளும் நடந்துகொண்டிருந்தன

ஆனால் இருபதாம் நூற்றாண்டு முதல் அங்கே வலிமையான இலக்கியங்கள் உருவாக தொடங்கின. ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்த வொலே சோயிங்கா என்ற எழுத்தாளர் அதை விட்டுவிட்டு நைஜீரிய மொழியில் எழுத ஆரம்பித்தார். பென் ஓக்ரி என்ற மாபெரும் எழுத்தாளர் அங்கே எழுத ஆரம்பித்தார். ஃபெமி ஓசோபிசான், எலச்சி அமாடி போன்ற பல எழுத்தாளர்கள் எழுத ஆரம்பித்தனர்

அப்படி ஒரு வலிமையான இலக்கியம் உருவானபோது அங்கே கொஞ்சம் கொஞ்சமாக இனக்குழு வெறுப்புகள் மறைந்தன. ஒவ்வொரு இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவை அறிந்துகொள்ளத் தொடங்கியது எல்லா இனக்குழுக்களுக்கும் பொருத்தமான நெறிகளும் அறங்களும் வந்தன.அவர்கள் ஒரே சமூகமாக மாறினர்

காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் என்ன வேறுபாடு? காங்கோவில் இலக்கியம் வலுவாக இல்லை. ஆகவே அது ஒரு சமூகமாக ஆகவில்லை. நைஜீரியாவில் இலக்கியம் வலுவாக உள்ளது. சமூகம் உருவாகி விட்டது . ஆகவே காங்கோ அழிகிறது நைஜீரியா வளர்கிறது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் கரேலியா ஃபின்லாந்து என்று இரண்டு நாடுகள் இருந்தன. இரண்டு நாடுகளுக்கும் நடுவே கடுமையான மனவேறுபாடு இருந்தது. ஆனால் அவர்கள் ஒரே மக்கள். அவர்கள் ஒன்றாக இருந்தால்தான் முன்னேறமுடியும் . அந்த மண்ணின் வளங்களை பயன்படுத்தமுடியும். அந்த மண்ணின் எதிரிகளை எதிர்கொள்ளமுடியும்

பின்லாந்து அன்று ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழே இருந்தது. ரஷ்ய ஆதிக்கத்துக்கு எதிராக பின்னிஷ் மக்களையும் கரேலிய மக்களையும் ஒன்றாக்கவேண்டும். ஒரே சமூகமாக ஆக்கவேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை

அவர்களை எப்படி ஒன்றாக ஆக்குவது? அவர்கள் மொழிக்குள் மிகச்சிறிய வேறுபாடுதான் உள்ளது. பின்னிஷ் மொழியிலும் சரி கரேலிய மொழியிலும் சரி பெரிய காப்பியங்கள் ஏதும் இல்லை. பெரிய இலக்கிய வரலாறுகூட அவர்களுக்கு கிடையாது.

அவர்களுக்கு ஒரு வாய்மொழிக் காப்பியம் இருந்தது. அதன் பெயர் கலேவலா, எலியாஸ் லோன்ராட் [ Elias Lönnrot] என்ற மொழியியல் அறிஞர் அந்த காப்பியத்தை வாய்மொழி மரபில் இருந்து அச்சுக்குக் கொண்டுவந்தார். 1835ல் அது நூலாக வந்தது.

கரேலியாவையும் பின்லாந்தையும் ஒற்றை சமூகமாக ஆக்கியது அந்த காப்பியம்.அந்த மக்களை ஒன்றாக்கியது. அவர்களின் விழுமியங்களை தொகுத்து அவர்களை ஒரு நாடாக கட்டி எழுப்பியது. அவர்கள் சுதந்திரப்போரில் ஈடுபட்டார்கள். ரஷ்ய ஆதிக்கத்தை ஒழித்து வெற்றிபெற்றார்கள்.

ஒரு காப்பியம் என்ன செய்யும் என்பதற்கு கலேவலா மிகச்சிறந்த உதாரணம். பின்லாந்து நாட்டின் எல்லையை கலேவலாதான் முடிவு செய்தது. அந்த நாட்டின் பண்பாடு என்ன அறம் என்ன அதன் மூதாதை மரபு என்ன அனைத்தையும் அந்தக் காப்பியம் முடிவுசெய்தது. இன்று அது பின்லாந்தின் தேசியக்காப்பியமாக உள்ளது

பின்லாந்து அரசு அந்நூலை உலகம் முழுக்க கொண்டு செல்கிறது தமிழில் ஆர்.சிவலிங்கம் (உதயணன்) அதை மொழியாக்கம் செய்தார்.(நாட்டார்த்தன்மையும் வீரசாகசத் தன்மையும் கொண்ட கலேவலாவை செயற்கையான, திருகலான , தேய்வழக்குகள் மிக்க மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது)

நண்பர்களே, அவர்களெல்லாம் இலக்கியங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். கண்டுபிடிக்கிறார்கள். நமக்கோ மகத்தான இலக்கியங்கள் ஏற்கனவே இருக்கின்றன. அவற்றை நாம் கற்காமல் மறந்துகொண்டிருக்கிறோம்.

நம்மை ஒரே சமூகமாக ஆக்கக்கூடியவை நம் இலக்கியங்கள்தான். நம் பண்பாடு என்ன என்று நமக்கே கற்பிக்கக் கூடியவை. நம்முடைய அறம் என்ன என்று நமக்கு சொல்லக்கூடியவை. அவற்றை இழந்தால் நாம் நம் சமூகத்தையே இழப்போம். நம் சமூகம் சிதறினால் நம் மண் அன்னியமாகும். நம் சந்ததியினரின் வாழ்க்கை அழியும்

மூன்று பெருநூல்களை தமிழின் அடிப்படைகள் என்று சொல்வார்கள். யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன் போல் இளங்கோவைப்போல் பூமிதனில் கண்டதில்லை என்று பாரதி அந்த பட்டியலை நமக்கு அளித்திருக்கிறார்

தமிழகம் ஒருகாலத்தில் ஆப்ரிக்கா போலத்தான் இருந்தது. இனக்குழுச்சண்டைகள். உள்நாட்டுப்போர்கள். சங்ககாலம் முழுக்க நாம் காண்பது போர்களைத்தான். சிறிய அரசர்களை பெரிய அரசர்கள் அழித்தனர்.

அந்தக்காலகட்டத்தில்தான் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் வந்தது. வடவேங்கடம் தென்குமரி ஈறாக தமிழ்கூறும் நல்லுலகம்’ என தமிழகத்தின் எல்லைகளை அது வகுத்தது. முடியுடை மூவேந்தர்களை அடையாளம் காட்டி தமிழகத்தின் அரசியல் மரபை நிலைநிறுத்தியது. அரசியல்பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும் உரைசால்பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவதும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதும் தமிழர் மெய்யியலின் அடிப்படை என வகுத்தது

அதன்பின் வள்ளுவன் எழுதிய குறள் நம்முடைய பண்பாட்டின் மூலநூல் அது. அறம்பொருள் இன்பம் என்று அது நம்மை வகுத்துரைத்துவிட்டது. அறத்தின் மூர்த்தியாகிய ராமனைப் பாடிய கம்பன் தமிழ் மரபின் உச்சமான படைப்பை ஆக்கினான்

இந்த மிகப்பெரிய மரபு நமக்கிருக்கிறது. நம் பண்பாட்டின் இலக்கணமே இந்நூல்களில் இருக்கிறது, தமிழ்பண்பாடு ஒரு ஏரி என்றால் இவைதான் கரைகள். இவை அழிந்தால் தமிழ்பண்பாடே அழிகிறது என்றுதான் பொருள்

நண்பர்களே, நாம் தமிழகத்தில் பயணம் செய்தால் இங்குள்ள அத்தனை ஏரிகளும் கரையிடிந்து கிடப்பதைக் காணலாம். பாழடைந்து குப்பைமேடாகக் கிடக்கும் ஏரிகள் போல ஆகிக்கொண்டிருக்கிறது தமிழ்ப்பண்பாடும்.

எங்கோ சிலர் அந்த ஏரிக்கரைகளுக்காக கவலைப்படுகிறார்கள். அந்த ஏரிக்கரைகளை பாதுகாக்க போராடுகிறார்கள். அவர்களை நாம் அறிவதே இல்லை.

அப்படிப்போராடுபவர்கள்தான் நவீன எழுத்தாளர்கள் அவர்களுக்கு புகழ் இல்லை. பணம் இல்லை. அவர்களை நீங்கள் கேள்விப்பட்டே இருக்கமாட்டீர்கள்.

பாரதி நவீன இலக்கியத்தின் தொடக்கம். புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,கி.ராஜநாராயணன் என்று பலர் இங்கே எழுதியிருக்கிறார்கள். பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். உலகில் எந்த மொழியிலும் அவர்களுக்கு சமானமான தரத்தில் எழுதுபவர்கள் மிகக்குறைவுதான் அவர்கள் தான் உடைந்துகொண்டிருக்கும் இந்த ஏரிக்கு கரையாக இன்று இருப்பவர்கள்

இந்தமேடையில் நான் சொல்லவிருப்பது இது ஒன்றே. தன் மரபை பேணிக்கொண்ட சமூகங்களே வாழ்கின்றன. நாம் வாழ்வதும் அழிவதும் நம் தேர்வுதான்.

நமக்கு நம் முன்னோர் தொடர்ந்து ஒரு விஷயத்தை கற்பிக்கிறார்கள். வாழ்வது என்பது பிழைப்பது என்பதுதான் அது. நம் தந்தையர் நம்மை எதையும் படைக்காதவர்களாக எதையும் சாதிக்காதவர்களாக வெறுமே பிழைத்துக்கிடப்பவர்களாக ஆக்க முயல்கிறார்கள். அவர்கள் அப்படி வாழ்ந்தவர்கள். அவர்கள் அறிந்தது அதையே

‘நான் செட்டில் ஆகிவிட்டேன்’ என்கிறார்கள். ’என் மகன் செட்டில் ஆகவேண்டும்’ என்கிறார்கள். எதில் செட்டில் ஆவது? எங்கே செட்டில் ஆவது? சோறில் கறியில் குழம்பில் கூட்டில் வீட்டில் சாதியில் மதத்தில் செட்டில் ஆவது அல்லவா அது?

எதிலும் செட்டில் ஆகாதவர்களுக்கானது இலக்கியம். அவர்களே நம் மரபை வாழவைப்பவர்கள். நாளை நம் பண்பாட்டை முன்னெடுப்பவர்கள். படைப்பவர்கள். அவர்களுக்கானது இலக்கியம்

அத்தகைய சிலரேனும் இந்த அரங்கில் என் முன் இருக்கலாம். அவர்களுக்காகவே பேசுகிறேன். அவர்கள் இச்சொற்களைக் கேட்கட்டும்

[27-8-2014 அன்று சென்னை தாம்பரம் கிறித்தவக்கல்லூரி அவ்வை மன்றத்தின் விழாவில் பேசிய உரை]

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Aug 31, 2014

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2022 11:35

அறம்

விக்கி கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்கையில் ஒரு இடர் எழுந்து வந்தது. அறம், கற்பு போன்ற சொற்களை எப்படி மொழியாக்கம் செய்வது? மொழியாக்கம் செய்யும் சுசித்ரா அவற்றை அப்படியே பயன்படுத்தலாம் என்ற கருத்தை முன்வைத்தார். அவை தமிழ்ச்சூழலுக்கு, இந்தியச் சூழலுக்கு மட்டுமே உரிய சொற்கள். அவற்றுக்கு சரியான ஆங்கிலச் சொல் இல்லை. தத்துவக் கலைச்சொற்களை அப்படியே பயன்படுத்துவது உலகமெங்கும் வழக்கம். ஜெர்மானிய, ஜப்பானிய ,ஆப்ரிக்க கலைச்சொற்கள் அப்படி ஆங்கிலத்தில் வந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால் அக்கலைச்சொற்களுக்குச் சரியான, முழுமையான விளக்கம் இருக்கவேண்டும். ஆங்கிலத்திலும் கிடைக்கவேண்டும். அதற்காக சில சொற்கள் வரையறைகள், வரலாறு, நடைமுறை விரிவாக்கங்கள் ஆகியவற்றுடன் அளிக்கப்பட்டுள்ளன

முதன்மையாக அறம்.

அறம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2022 11:34

நாமக்கல் கட்டண உரை

நாமக்கல் நகரில் ஒரு கட்டண உரை ஆற்றுகிறேன். நாமக்கல் விஷ்ணுபுரம் நண்பர்கள் முன்னரே அதைக் கோரினர். ஆனால் அப்போது வசதிப்படாமல் உரை திருப்பூரில் நடத்தப்பட்டது.

இதுவரை சென்னை, நெல்லை, கோவை, திருப்பூர் நகர்களில் நடத்தப்பட்ட கட்டண உரைகள் அனைத்துமே பண்பாட்டை வரையறுக்கவும் புரிந்துகொள்ளவும் முயன்றவை. ஓர் ஒட்டுமொத்த, ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்கும் நோக்கம் கொண்டவை. என்னுடைய பார்வையை சுருக்கமாக ஒருங்கிணைவு நோக்கு என்று சொல்வேன். சமன்வயம் என சம்ஸ்கிருதத்தில். வள்ளலாரின் பார்வை அது என வரையறை செய்யும் ம.பொ.சி அதற்கு ஒருமைப்பாடு என பொருள் அளிக்கிறார். (வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு)

இந்த உரை தத்துவம், ஆன்மிகம் சார்ந்தது. ஆனால் இலக்கியம் என்னும் வழியினூடாக அவற்றை அணுகுவது. கட்டண உரை என்பது அடிப்படையில் ஒரே நோக்கம் கொண்டதுதான். கூர்ந்து கேட்கும் அவையினரை மட்டுமே திரட்டுவது

ஜெ

நாள் 17 ஜூலை 2022 (முன்பதிவு அவசியம்)

இடம் நளா ஓட்டல் திருச்சி சாலை நாமக்கல்

தொடர்புக்கு 9952430125, 9486068416, 9738233431

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2022 11:32

அமெரிக்கா, கடிதங்கள்

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அன்புள்ள ஜெ

நம் அமெரிக்கக் குழந்தைகள் ஒரு முழுமையான கட்டுரை. அத்தனை நீளம் எதற்கென்றால் எல்லா வழிகளையும் அடைத்து எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி நிறுத்துவதற்காகவே என்று புரிகிறது.

நெற்றியில் அடிப்பதுபோல சில விஷயங்கள் உள்ளன. அதிலொன்று நாம் பயின்றது பின்தங்கிய ஒரு கல்விமுறையில், வெறும் பொறியியல் கல்வி மட்டுமே என்பது. அப்பட்டமான உண்மை. நான் பொறியியல் படித்து முடிப்பது வரை எனக்கு தெரிந்தது என்ன என்று நினைத்துப் பார்க்கிறேன். தமிழ் இலக்கியம், பண்பாடு, வரலாறு எதைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பரிபூரணமான தற்குறி. ஆனால் நான் படித்தது கோவையில் ஒரு மிகச்சிறந்த கல்லூரியில். நான் மிகச்சிறந்த மாணவன். நீங்கள் சொல்வதுபோல நேராக ஐரோப்பா வந்தவன்.

ஆனால் உங்களுக்கே ஒரு மாயை இருக்கிறது. அதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். நீங்கள் முறையாகக் கல்வி முடிக்காதவர். ஆகவே கல்லூரிகளில் பொறியியலை மிகத்தீவிரமாக படிக்கிறார்கள் என நினைக்கிறீர்கள். மிகக்கடுமையான போட்டி இருப்பதனால் அப்படி படித்தே ஆகவேண்டும் என நம்புகிறீர்கள். அதுவும் பொய். நான் பொறியியல் கல்லூரியில் கற்றதெல்லாம் பொறியியலே அல்ல. பொறியியலை அப்படி கற்பிக்கவே முடியாது. கத்தோலிக்கர்கள் லத்தீன் மனப்பாடம் செய்வதுபோலத்தான் அறிவியல் விதிகளை படித்தோம். நான் படித்ததெல்லாம் வேலைபார்த்து கற்றுக்கொண்டதுதான்.

நம்மை தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். வேலைபார்ப்பது, சேமிப்பது மட்டும்போதாது என்கிறீர்கள். கொஞ்சம் படியுங்கள், கொஞ்சம் பிள்ளைகள் கல்விநிலை அளவுக்கு நீங்களும் நகருங்கள் என்கிறீர்கள். அல்லது அப்படி ஓர் அறிமுகம் செய்து வைக்குமளவாவது தயார்செய்துகொள்ளுங்கள் என்கிறீர்கள். உண்மையில் அது மிகப்பெரிய சவால். அதற்கான எந்த வாய்ப்பும் புலம்பெயர் சூழலில் இல்லை என்பதே உண்மை. அதை மீறி எதையாவது செய்தால்தான் உண்டு.

ஆனால் அதற்கு எத்தனை தடைகள். இன்று, இக்கட்டுரை பற்றி ஒரு பேச்சுவந்தது. ஒருவர் “ஜெயமோகன் அறிவியலுக்கு எதிரானவர், மூடநம்பிக்கையை பரப்புபவர்’ என்றார். பொறியாளர்தான். ”எங்கே ஜெயமோகனை படித்தீர்கள், என்ன படித்தீர்கள்?” என்றேன். “அவர் இந்துஞானமரபு என்று பேசுகிறார்” என்றார். “சரி அறிவியல் மனநிலைக்கு எதிராக என்ன பேசியிருக்கிறார்?” என்றேன். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. எங்கோ வாட்ஸபிலோ டிவிட்டரிலோ எதையோ படித்திருக்கிறார். அதிகம்போனால் நாலைந்து வரி. அதையும் ஏதோ தற்குறிதான் எழுதியிருப்பான்.

நான் ‘தமிழில் அறிவியல் மனநிலை பற்றி முப்பதாண்டுகளாக ஓயாமல் எழுதி வருபவர் ஜெயமோகன்’ என்று சொல்லி உதாரணங்களை சொல்ல ஆரம்பித்தேன். “வேண்டுமென்றால் கட்டுரைகளை அனுப்புகிறேன். விரல்தொடும் இடத்தில் அவை உள்ளன” என்றேன். ஆர்வம் காட்டாமல் “அப்றமா பேசுவோம்” என்று எழுந்து சென்றார்.

இவர்கள் மழுமட்டைகளாக இருக்க இவர்களை ஓயாமல் மேலும் மழுமட்டைகளாக ஆக்கிக்கொண்டே இருக்கிறார்கள் அரசியல்வாதிகள்

சக்தி

***

அன்புள்ள ஜெ

நலம்.நலம் அறிய‌ ஆவல்!.

நான் அடிக்கடி எனக்குள் சொல்லிக் கொள்வேன், “நான் ஜெயமோகனின் அறிவியக்கத்தை சார்ந்தவன்” என, “நமது அமெரிக்க குழந்தைகள் -3”  கட்டுரையை வாசித்த பின் அதற்கான தகுதி எனக்கில்லை என்று தோன்றியது. “தமிழின் பெருமை என்ன?” என்ற கேள்விக்காக நீங்கள் சொன்ன பதில் தமிழகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கே நீங்கள் தான் இக்கட்டுரை மூலம் சொல்கிறிர்கள். தமிழ் உலகின் முதல் மொழி என்பது பிதற்றல் என்ற தெளிவு உள்ளது. ஆனால் அதன் பெருமை இலக்கிய வளம் என்று சொல்லியிருப்பேன். தொடர்ச்சி, தொடும் தொலைவின் கபிலன் இருக்கிறான் என்றெல்லாம் சொல்லியிருக்க மாட்டேன்.

ஜெவின் வாசகன் நான்,என்னை இம்மாதிரி கட்டுரைகள் தான் என் அறியாமைகளை நீக்கி அறிவியக்கத்தின் பாலபாடம் தருகின்றன.

பசியோடு காத்திருக்கிறேன்,வளர்க உங்கள் அறிவியக்கம்!

நன்றி,

அன்புடன்,

சரவணப் பெருமாள்.செ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2022 11:32

செயல் – கடிதம்

செயலும் ஒழுங்கும்

அன்புள்ள ஆசிரியருக்கு,

உங்கள் செயலும் , ஒழுங்கும் பதிவை படித்தேன்.

இந்த முறை வந்த வாஷிங்டன் பொழுது எங்கள் இல்லத்தில் இருக்கையில், உங்கள் தினசரி செயலை காணும் வாய்ப்பு கிடைத்தது.

சொல்லாக கட்டுரையில் வாசித்ததை காட்சியாக கண்ணுக்கு முன்னால் கண்டோம். காட்சியாக காணுகையில் இன்னமும் பிரமாண்டமாக இருந்தது.

இரவு எத்தனை மணி ஆனாலும் நீங்கள் தமிழ் விக்கிக்கு பங்களிக்காமல் உறங்க செல்லவில்லை, காலையில் எழுந்தாலும் தமிழ் விக்கிக்கு பிள்ளையார் சுழி போடாமல் பிற வேலைகளில் செல்வதில்லை. கொஞ்சம் கூட உற்சாகம் குறையாமல் இருந்தீர்கள்.  படைப்பூக்கத்தின் செயல் வேகம் என்பதை கண்ணால் கண்டோம்.

பல நண்பர் சந்திப்புகள், ஒவ்வொன்றிலும் 100 கேள்விகள், சுற்றுப்பயண வேலைகள், தமிழ் விக்கி விழா  என  வேகமும், பரபரப்பும் கொண்ட பலவற்றுக்கும் நடுவே நிதானமாக நீங்கள் ஆயிரம் கரங்களோடு அதை ஓவ்வொன்றாக எடுத்து மாலையாக கோர்த்தது போல நேர்த்தியாக கையாண்டது போல இருந்தீர்கள். அது  நீங்கள் சொல்லும் செயலும், ஒழுங்கும் தருவன என நினைக்கின்றேன்.

அன்புடன்

நிர்மல்

***

அன்புள்ள நிர்மல்

நலம் தானே?

நானும் நலமே.

நான் செயல் பற்றி யோசிக்கும்போது ஒன்று தோன்றியது. செயலாற்றுவதில் முழுமையாக நம்மைக் குவிக்கமுடியும் என்றால் அது ஒரு யோகம். ஒரு கொண்டாட்டம். மனம் அதை நாடும். எந்த நள்ளிரவிலும் நாம் அதை செய்யமுடியும். மனம் குவியாமல் செய்யும் செயல் நம்மை சிதறடிக்கிறது. நாம் உள்ளே பலதிசைகளில் இழுக்கப்படுகிறோம். அது பெரிய வதை. ஆற்றல் வீணாவதனால் களைப்பூட்டக்கூடியதும்கூட. கூர்ந்து, ஒருமுகப்பட்டு செயலாற்ற அறியாதவர்கள் செயலை அஞ்சி தவிர்க்க முயல்கிறார்கள் என்று தோன்றியது

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 29, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.