Jeyamohan's Blog, page 754
June 29, 2022
நமது அரசியல் கவிதைகள் – கடலூர் சீனு
இனிய ஜெயம்,
நண்பர் அழைத்திருந்தார். இரண்டு வினாக்களுடன். முதல் வினா தமிழில் ‘அரசியல்’ கவிதை என்று எழுதப்படுபவை எல்லாம் ஒரே போலவே இருக்கிறதே அது ஏன்? இரண்டாவது வினா பிற அரசியல் கவிதைகளை மறுத்தாலும் இளங்கோ கிருஷ்ணனின் தூத்துக்குடி கவிதைகளை மட்டும் நான் ஏன் ஏற்றுக்கொள்கிறேன்?
நண்பர் போலவே, சமூக அரசியல் கலை கோட்பாட்டு போதம் கொண்ட சிலரும் அக் கவிதைகளை ஏற்கவில்லை என்பதை பின்னர் வாசித்து அறிந்தேன். நண்பருக்கு பதில் அளிக்கையில் திமுக வுக்கு ஓட்டு போட சொல்லும் மனுஷ்ய புத்திரன் கவிதைகளும், நாங்க மனுஷங்கடா என மாரடித்து ஒப்பாரி வைத்து கம்யூனிஸ்ட் கு ஓட்டு போட சொல்லும் இன்குலாப் கவிதைகளும், போஸ்ட் அப்போகலிப், போஸ்ட் மாடனிஸ்ட், போஸ்ட் லிங்விஸ்டிக், போஸ்ட் சைன்ஸ் ஃபிக்ஷனிக் (போஸ்ட் பொயட்ரி) யவனிகா ஸ்ரீராம் கவிதைகளும், இப்படி எல்லாமே அரசியல் கவிதைகள்தான். இந்த வரிசையில் இருந்து தூத்துக்குடி கவிதைகள் எங்கே வேறுபடுகிறது?
அரசியல் கவிதைகளுடன் தவிற்க இயலாமல் உடன் இணைந்து நிற்கும் பலவீனங்கள் இரண்டு. ஒன்று அதன் கச்சா படைப்பாளியின் ஆழுள்ளதுடன் பிணைந்த, அவனது ஆழுள்ளத்தை சமைத்த காரணிகளில் ஒன்றல்ல. மனுஷ்ய புத்திரன் கவிதைகளில் அம்மா இல்லாத முதல் ரம்சான் கவிதையில் வரும் அம்மாவும், அனிதாவை எரித்த நெருப்பு கவிதையில் வரும் அனிதாவும் படைப்பாளியின் அதே அக ஆழத்தை சேர்ந்தவர்கள் அல்ல.
இரண்டு. அதன் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் அரசியல் நிலையின் ஒற்றைப்படை தன்மை. கவிதைக் கலையின் அடிப்படைகளில் அது அளிக்கும் அர்த்த, கற்பனை சாத்தியங்கள், அது தீண்டும் காலாதீத கூறு இவை முதன்மையானவை. அரசியல் கவிதைகள் அது எதை சொல்கிறதோ அதை மட்டுமே சொல்லும். அதன் காலம், (முக நூலில் வார வாரம் பேசி மறக்கப்படும் புதிய புதிய அரசியல் நகர்வு உரையாடல் போல) மிக மிக குறுகியது. ஆகவே எல்லா அரசியல் கவிதையும் ஒரே போலத்தான் இருக்கும்.
இந்த எல்லைகளுக்கு உட்பட்ட அரசியல் கவிதைகளில், இந்த தூத்துக்குடி கவிதைகளை எடுத்து கொண்டால் முதல் கவிதைகளில் சுடப்படும் போராளிகள் எதனால் சுடப்படுகிறார்கள் என்றொரு பட்டியல் வருகிறது
பட்டியலில் முதல் இடத்தில் I P L. அடுத்து சினிமா, டாஸ்மாக்,பேஸ்புக், பீச், பார்க் கோயில் என்று நீளும் இவ்வரிசையில் மற்றவை தரும் அனுபவத்துக்கும் போராட்ட அனுபவத்துக்கும், அதற்கு பொது மக்கள் ஆதரவுக்கும் உள்ள இடைவெளி பார தூரமானது.
முன்னர் கிரிக்கெட்டில் டோனி தலைமையில் இந்தியா உலக கோப்பை வென்ற ஆண்டுக்கு முன்பான இந்திய அரசியல் சூழலை சற்றே திரும்பி பார்த்தால், ஆஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளானோம், மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வழியே தாக்கப்பட்டோம், இலங்கையில் முள்ளிவாய்க்காலில் உயிர்பலிகளை கண்டோம். ( அன்றும் தமிழ் நிலம் கிரிக்கெட்டில் லயித்து கிடந்தது). இந்த அத்தனைக்கும் இந்திய அரசின் பதில். மௌனம். விடுவோமா நாம். உலக கோப்பை கிரிக்கெட்டில் வரிசையாக ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இரண்டையும் மண்ணை கெளவ வைத்து, இலங்கையை புரட்டி எடுத்து உலக கோப்பையை வென்று, நடந்தவை அனைத்தையும் மறந்து, நாம் யார் என்று நமக்கும் உலகுக்கும் பறை சாற்றினோம்.
முக நூல் வந்த பிறகு போராட்ட களம் என்பதன் முகமே மாறி விட்டது. எல்லாமே ஐ சப்போட்டு, டிஸ்லைக்கு இரண்டு எமோஜிக்களில் முடிந்தது. ஒற்றை கருத்தியலின் கீழ் தெருவில் இறங்கி பொது ஜனம் திரண்டு நின்ற காலம் என்ற ஒன்றை முக நூல் வந்து முடித்து வைத்தது. அதன் சாதகம் அறிந்தே ஒவ்வொரு தேசத்திலும் அதன் ஆளும் சக்தி முகநூலில் கோடிகளில் முதலீடு செய்கிறது.
இந்த நிலைகளில் உள்ள முக்கிய அம்சம் கேளிக்கை. சினிமா, கோயில், பேஸ்புக்,டாஸ்மாக் எல்லாமே கேளிக்கை. இந்த அத்தனை கேளிக்கை அனுபவத்துக்கும் நீங்கள்தான் முதலாளி. ஒரு அனுபவம் பிடிக்கா விட்டால் வேறொரு அனுபவத்துக்கு மாறிக் கொள்ள முடியும். உங்கள் தேவைக்கு தக்க கேளிக்கையை கேட்டுப் பெற முடியும். இந்த அடுக்குகள் கொண்டு நமது போதத்தில் இருந்து மறைக்கப்படும், நம் மேல் கவியும் அந்த ‘உண்மையான’ அனுபவம் என்பது நமக்கு பிடித்த கேளிக்கை அல்ல. இந்த அனுபவத்தின் முதலாளி நாமும் அல்ல. நம் மேல் கவியும், நம்மால் மாற்றிக்கொள்ள முடியாத, நமக்கு உகக்காத, நாம் முதலாளி அல்லாத அந்த அந்த அனுபவம், எந்த முதலாளியின் விருப்பத்தின் பொருட்டு நிகழ்கிறதோ, அந்த முதலாளியின் கேளிக்கை சரக்கு மட்டுமே நாம். இங்கே எழும் கேள்விக்கு அதிகாரம் தரும் பதில் எதுவோ அதுவே முதல் கவிதை.
அனுபவம் என்பதற்கும் வாழ்வனுபவம் என்பதற்கும் இடையே மெல்லிய கோடு ஒன்று உண்டு. மேலே சொன்ன வகையில் அனுபவம் என்பதில் தேர்வு சாத்தியம் உண்டு. மாற்றிக் கொள்ள, விட்டு விலக, வாழ்வனுபவத்தில் அப்படி ஒன்று இல்லை. உதாரணத்துக்கு முப்பது வருடம் அறையை விட்டு வரமாட்டேன் என்று சொல்லி அறைக்குள் சென்று அமர்ந்து கொள்வது அதில் கிடைக்கும் அனுபவம், உங்கள் தேர்வு, எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எவரோ உங்களை பிடித்து கொண்டு போய் சிறையில் போட்டு, எப்போது வெளி வருவோம் என்றே தெரியாமல் முப்பது வருடம் உள்ளேயே கிடப்பது என்பதே வாழ்வனுபவம். இதன் நியதிகள் உங்கள் ஆழத்துடன் பிணைந்தவை.
எமது விரையிலிருந்து
பூட்ஸ்களை எடுப்பீராக
எமது குரல்வளையிலிருந்து
கத்தியை அகற்றுவீராக
என்று வளரும் இந்த
நான்காவது கவிதையின் உள்ளடக்கமும் அதன் பின்னணியும் மேற்சொன்ன வாழ்வனுபவம் என்றே வாசகனுக்கு கையளிக்கப்படுகிறது.
இந்த வாழ்வனுப கவிச் சுயத்தின் ஆழத்தில் இருந்து எழுவதே மூன்றாவது கவிதையின் இறுதி வரிகளான
உங்கள் அதிகாரம் பிணமாகும் வரை கேட்போம்
என்ற நீதி உணர்வின் குரல்.
தமிழில் பிற அரசியல் கவிதைகளில், மயிர் பிளக்கும் பின்நவீன அரசியல் கோட்பாட்டு விவாத குப்பைகளால், சுயம் காயடிக்கப்பட்ட காரணத்தால் இல்லாது போன, இளங்கோ கிருஷ்ணனின் தூத்துக்குடி கவிதைகளில் மட்டுமே காண முடிந்த இந்த நீதி உணர்ச்சி அதுவே இக் கவிதைகளை முக்கியத்துவம் கொண்ட கவிதைகள் என்றாக்குகிறது.
மிக நேரடியாக எழுந்து வரும் நீதியின் குரலை செவி மடுக்கஇயலாச் செவிடுகள் என்று அரசியல் கோட்பாட்டு புரிதல் வாதிகளை ஆகிய பெருமை பின்நவீன உரையாடல் சூழல் தமிழுக்கு அளித்த வெகுமதிகளில் ஒன்று. என்னைப் போல கோட்பாடுகளை அறியாத, கலை மட்டுமே அறிந்த அப்பிராணிகள் கண்ணில் மட்டும்தான் நீதி தேவதை தெரிவாள் போல :).
கடலூர் சீனு
June 28, 2022
அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
அமெரிக்காவில் சொன்ன சுவிசேஷத்தின் அடுத்த பகுதி இது.
அமெரிக்காவில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ஒரு சமூகமாக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்பது.
அமெரிக்கத் தமிழ்ச் சமூகம் இன்னமும் பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தால் ஆனது. இந்திய அளவுகோலின்படி அவர்கள் உயர்நடுத்தர வர்க்கத்தினர். அமெரிக்காவில் மெல்ல வேரூன்றிக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர்.
நடுத்தரவர்க்கத்தினரின் உளவியல்தான் அவர்களை ஆள்கிறது. அது அனைத்துத் துளி உழைப்பையும் சேர்த்து செல்வமாக ஆக்கிக் கொள்வது. சேமிப்பு ஒன்றே நடுத்தர வர்க்கத்தின் வேதம். மூன்றாமுலக நாடுகளின் நடுத்தர வர்க்கம் கேளிக்கைகளுக்கோ அறிவுச்செயல்பாடுகளுக்கோ தன் உழைப்பையும் பணத்தையும் செலவழிப்பதல்ல. எவ்வகையிலும் அறக்கொடைகளுக்கோ பிற செயல்பாடுகளுக்கோ முன்வருவதும் அல்ல.
இன்றைய அமெரிக்க இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களின் வாழ்க்கை இது. ஆண்டு முழுக்க கடும் உழைப்பு, குழந்தைகளுக்காக அவ்வப்போது சிறு இடைவெளிகளில் விடுமுறைகள், சமூகப்பார்வை முன் ஒரு கௌரவத்தைக்காட்டிக் கொள்வதற்காக செய்யப்படும் உடைகள் வாகனம் போன்ற சில வசதிகள், அவ்வளவுதான். ஆண்டுக்கு ஒருமுறையோ, இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ இந்தியாவுக்கு வந்து செல்வதே அவர்களுக்கு பெரும் செலவு. இதற்கு அப்பால் குழந்தைகளின் கல்வி எனும் பெருஞ்செலவு.
அமெரிக்கப் பெற்றோர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளை ஹார்வர்ட் பல்கலைக்கு அனுப்புவது போன்ற கனவுகளுடன் வாழ்கிறார்கள். அமெரிக்காவில் எனது நண்பர்கள் கேட்ட கேள்விகளில் பெரும்பாலானவற்றின் சாராம்சம் ‘என் பையனை எப்படி ஹார்வர்டுக்கு அனுப்புவது?’ என்பது தான். அதற்கு நான் சொன்ன பதில் ’ அது தெரிந்திருந்தால் நான் என்பையனை அனுப்பியிருப்பேனே?’ என்பது தான்.
இத்தகைய சூழலில் ஒரு சமூகமாக தமிழ்மக்கள் திரண்டு அங்கே ஆற்றும் பணிகள் மிக மிகக்குறைவு. பெரும்பாலும் அமெரிக்க நண்பர் ஒருவர் சொன்னது போல தமிழ்ச்சங்கங்கள் அங்கே ’தோசை மடங்கள்’ தான். இந்திய உணவை சாப்பிடுவதற்காக ஓரிடத்தில் கூடுவது, அங்கே தமிழக அரசியல், தமிழக சினிமா , அமெரிக்க குடியேற்றம் சார்ந்த கவலைகள் மற்றும் உள்ளூர் வம்புகளை பகிர்ந்துகொள்வது — அவ்வளவுதான் தமிழ் மக்களின் கூட்டுச்செயல்பாடாக இருக்கிறது.
எந்த வகையிலும் ஒரு பொருட்படுத்தப்படக்கூடிய கூட்டுச்செயல்பாடு அமெரிக்காவில் தமிழ் மக்களிடையே நிகழவில்லை. அங்கே கோயில்கள் இருக்கின்றன, புதிதாகக் கட்டப்படுகின்றன. ஆனால் பழகிப்போன சம்பிரதாயங்களை பேணுவதே அங்கு நிகழ்கிறது. தமிழ்ச்சங்கங்கள் உள்ளன. ஆனால் அங்கே இந்தியாவிலுள்ள ஒரு தமிழ்ச்சங்கத்தின் அதே தரம்தான் உள்ளது. ஒரு படி கீழ் என்றும் சொல்லலாம். அவர்களால் அங்கும் பெரிதாக ஏதும் நிகழவில்லை, அவர்களால் தமிழகத்துப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் நன்மை என ஏதுமில்லை.
அங்கே சமூகக் கூட்டுச்செயல்பாடுகளை வழிநடத்துபவர்களுக்கு அமெரிக்கச் சூழலுக்கு உகந்த ஒரு பண்பாட்டு அமைப்பை முன்னெடுப்பதற்கான உளவிரிவோ, அறிவுத்திறனோ, இலட்சியமோ இல்லை. அவர்கள் மிக எளிய அரசியல் நோக்கு கொண்டவர்கள். இந்தியாவிலுள்ள அரசியலுக்கு ஏற்ப அங்கே ஆடும் எளிய கூத்துப்பாவைகள்.
அதற்கப்பால், வழக்கம் போல தமிழர்கள் தங்களை சாதிகளாக பகுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் வேவு பார்த்தும், மட்டம் தட்டியும் வாழ்கிறார்கள். ஒரு சிறு செயலைக்கூட கூடிச்செய்ய முடியாதபடி ஒருவரோடொருவர் ஆணவத்தால் மோதிக்கொள்கிறார்கள். இந்நிலையில் அங்கு நிகழும் செயல்பாடுகள் என்பவற்றை எவ்வண்ணம் நிகழ்த்துவது என்னும் பேச்சே எழவில்லை. செயல்பாடுகளை தொடங்க வேண்டும் என்பதுதான் முதலில் சொல்லவேண்டியது.
(அதை தொடர்ந்து சொல்லிவந்தேன். விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளை அதன் விளைவாக தொடங்கப்பட்ட சிறு முயற்சி. ஆனால் அது உருவாக்கும் விளைவுகளே பிரமிப்பூட்டும் அளவு இருக்கின்றன. vishnupuramusa@gmail.com.தொலைபேசி எண் – 1-512-484-9369 )
அவ்வாறு செயல்பாடுகளை தொடங்குவதென்றால் நாம் ஒருபோதும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாதவர்கள் வடஇந்தியர்கள், குறிப்பாக குஜராத்தியர்கள். முன்னுதாரணமாக கொள்ளத்தக்கவர்கள் பஞ்சாபிகள், குறிப்பாக சீக்கியர்கள்.
அமெரிக்க சமுதாயத்தின் ஓர் அங்கமாக இன்று தமிழ் மக்கள் ஆகியிருக்கிறார்கள். தமிழ் மக்களின் அடுத்த தலைமுறை அங்கே வேரூன்றப்போகிறது. அவர்கள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை தமிழுக்கு , தமிழ்ப் பண்பாட்டுக்கு செலவழிப்பது இன்றியமையாததுதான். தமிழகம் அவர்களை நம்பியிருக்கிறது என்பது உண்மை. ஆனால் அதே அளவுக்கு அவர்கள் அமெரிக்கப் பண்பாட்டுக்கும் செலவழிக்க வேண்டும். அமெரிக்க மக்களின் நலனுக்கும் அவர்கள் பங்களிப்பாற்ற வேண்டும்.
இதை நான் சொன்னபோது அமெரிக்காவில் பல நண்பர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அவர்களுடைய பார்வையில் அமெரிக்கா செல்வவளம் மிக்க நாடு. எஜமானனின் நாடு. நாம் எஜமானனுக்கு கொடுப்பதா என்பதே அவர்களது துணுக்குறலுக்குக் காரணம். ஆனால் அமெரிக்கா ஒரு பெரும் சமூகம் . அதன் அடித்தளத்திலும் பல்லாயிரம் பேர் ஏழைகளாக, உதவிதேவைப்படுபவர்களாக இன்று உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மிக முக்கியமானது.
தமிழ்ச் சமுதாயம் அமெரிக்காவின் செல்வ வளம் மிகுந்த மேல்தட்டில் ஒட்டிக்கொண்டு வாழ்வது. அவர்கள் பெறுவதெல்லாம் அங்கிருந்துதான். அதை முழுக்கவே தாங்கள் எடுத்துக்கொள்ளாமல் அதில் ஒரு பகுதியையேனும் அந்நாட்டின் கீழ்மட்டத்திற்கு அவர்கள் அளித்தார்கள் என்றால் மட்டுமே அது அறமாகும். இல்லையேல் காலப்போக்கில் Suckers (சுரண்டுபவர்கள்) என்னும் அடையாளம் அவர்கள் மேல் விழும்.
அந்த அடையாளம் இன்று குஜராத்திகள் மேல் மிக வலுவாக இருப்பதை பார்க்கிறேன். குஜராத்திகள் அமெரிக்காவில் மிகப்பிரம்மாண்டமான சுவாமி நாராயண ஆலயங்களை நிறுவியிருக்கிறார்கள். பலகோடி ரூபாய் தங்கள் அடையாளத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் பகட்டுக்காகவும் செலவழிக்கிறார்கள். ஆனால் அவர்களுடையதென அமெரிக்கப் பண்பாட்டு செயல்பாடுகளுக்கோ அமெரிக்க மானுடசேவைக்கோ எந்த பங்களிப்பும் இல்லை.
அவர்கள் குஜராத்தி பண்பாட்டுக்கோ இலக்கியத்திற்கோ பத்து பைசா அளிக்க மாட்டார்கள். குஜராத்திலிருந்து அவர்கள் ஜிலேபிவாலாக்களான சாமியார்களை மட்டுமே அழைத்துவந்து கொண்டாடுவார்கள். கணேஷ் டெவி ஒருமுறை என்னிடம் சொன்னார், குஜராத்தி இலக்கியம் செத்துக்கொண்டிருக்கிறது. குஜராத்திகளிடம் பணம் வருந்தோறும் அது மேலும் அழியும்.
மாறாக ஒவ்வொரு சிக்கல்களின் போதும் சீக்கிய சமுதாயம் அமெரிக்காவின் எளிய தரப்பினருடன் நின்றிருக்கிறது, சேவை செய்கிறது. கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது. அது கண்கூடாகத் தெரிகிறது. தமிழர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டியது பஞ்சாபியர்களைத்தான்.
அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கோ துன்புறும் வீடில்லாதவர்களுக்கோ தமிழ் மக்களின் அமைப்புகள் ஏன் கொடையளிக்ககூடாது? அமெரிக்காவின் முகமென திகழும் கலாச்சார விஷயங்களை ஏன் ஒருங்கிணைக்கக்கூடாது? அளிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, அளிப்பது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும். இல்லையேல் நீண்ட கால அளவில் ஒட்டுண்ணிகள் என்னும் சித்திரத்தை அமெரிக்க தமிழர்கள் அடைவதை தவிர்க்க முடியாது. இப்போதே அச்சித்திரம் ஆங்காங்கே உருவாகத்தொடங்கியிருப்பதை டாக்சி ஓட்டுநர்கள், அங்கு பல இடங்களில் சந்திக்கும் எளிய கருப்பின மக்கள் பேசும் ஓரிரு சொற்களில் இருந்து என்னால் ஊகிக்க முடிகிறது.
அமெரிக்க மக்களுக்கு, தமிழர்களுக்கு நான் கூறவிரும்பும் இன்னொன்று உண்டு. அவர்கள் இன்று அமெரிக்க குடிமகன்கள். இந்திய அரசியலை அவர்கள் பேசுவதும், இந்திய அரசியலில் ஈடுபடுவதும் ஒருவகையில் அமெரிக்கத் தேசத்திற்கு இழைக்கும் துரோகம்தான். நான் அமெரிக்க குடியுரிமை பெற்றால் ஓர் அமெரிக்கக் குடிமகனுக்கு எந்த அளவுக்கு ஆர்வமிருக்குமோ அந்த அளவுக்கு ஆர்வத்தை மட்டுமே இந்தியாமேல் காட்டுவேனே ஒழிய, அமெரிக்கச் சட்டை போட்டுக்கொண்ட இந்தியனாக என்னை உணர்ந்து இந்திய அரசியல் பற்றிச் சலம்பிக்கொண்டு இருக்க மாட்டேன்.
தமிழ் மக்கள் அமெரிக்க அரசியலில் ஈடுபடவேண்டும். அமெரிக்க அரசியலின் அனைத்து தரப்புகளிலும் இந்தியருடைய பங்கு காலப்போக்கில் உருவாகி வரவேண்டும். இந்திய அரசியலில் அங்கிருக்கும் தமிழர்கள் எதிர்மறையாகவே பங்களிப்பாற்றமுடியும். அது அவர்களுக்கும் கேடு, தமிழகத்துக்கும் நல்லதல்ல.
இரண்டு காரணங்கள். இந்திய அரசியலை அமெரிக்காவில் இருப்பவர்கள் அங்கிருந்துகொண்டு முழுமையாக அறியவே முடியாது. அமெரிக்காவிலிருக்கும் எல்லா தரப்பினரும் தமிழக இந்திய அரசியலைப்பற்றி, இங்குள்ள வாழ்க்கைச்சூழலைப்பற்றி, மிக கற்பனையான பிம்பங்களையே வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். அவை சமூக ஊடகங்கள் வழியாகவும் செய்தி ஊடகங்கள் வழியாகவும் கிடைக்கும் உதிரிச் செய்திகளில் இருந்து அவர்களே உருவாக்கிக்கொண்டவை. தங்களுடைய நோக்கங்கள் ,உணர்வு நிலைகள் ,சார்புகள் ஆகியவை சார்ந்து புனைந்து கொண்டவை.
(தமிழக அரசியலை சென்னையில் இருந்துகொண்டே உணரமுடியாது. அதற்கு நாகர்கோயில்போன்ற சிற்றூர்களுக்கு வரவேண்டும். அதைவிட உள்ளூர்களில் வாழ்ந்த அறிதல் வேண்டும்)
அந்தப் பொய்யான உளப்பிம்பங்களை ஒட்டி மிகை உணர்ச்சி அரசியலை உருவாக்கிக்கொள்கிறார்கள் அமெரிக்கத் தமிழர்கள். அமெரிக்காவில் இருக்கையில் அவர்களுக்கு ஒரு கலாச்சாரத் தனிமை இருக்கிறது. அதன் விளைவான உளச்சோர்வும் உள்ளது. ஏனென்றால் அவர்கள் இங்கே வளர்ந்தவர்கள், அங்கே உளம் பொருந்தாதவர்கள். அவர்கள் அங்குள்ள வாழ்க்கைச்சூழலில் தொடர்புகொண்டுள்ள இடம் மிகக்குறைவானது.
அந்தத் தனிமையையும் சோர்வையும் வெல்லும் பொருட்டே அவர்கள் தமிழக அரசியல் பேசுகிறார்கள். அதைப்பகிர்ந்து கொள்ளும் கும்பல்களை கண்டடைகிறார்கள். அவர்களிடம் பேசிப் பேசி மேலும் தங்களைத் தாங்களே வெறியேற்றிக்கொண்டு,ஓர் உச்ச நிலையில் வெளிப்படுகிறார்கள். இந்துத்துவர், தமிழ்த்தேசியர், திராவிட இயக்கத்தவர், சாதிப்பற்றாளர் என அமெரிக்காவில் இருந்து அரசியல் பேசும் எல்லா தரப்பினரும் ஏதேனும் ஒருவகை வெறியைத்தான் முன்வைக்கிறார்கள். அங்கிருக்கும் தனிமை அளிக்கும் உளச்சோர்வின் விளைவு. பிரிந்திருக்கும் நெருக்கமானவர்கள் மேல் நாம் தர்க்கமற்ற உணர்ச்சிகரம் கொண்டிருப்பது போல. நிதானமான அரசியல் என்பதை ஒரு குடிபெயர்ந்த இந்தியனால் பேசமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
அமெரிக்க இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்துகொண்டு இந்தியப் பண்பாட்டுச் செயல்பாடுகளுடன் ஒத்துழைக்கலாம். இந்திய ஆன்மிகப்பணிகளுக்கு உதவலாம். இந்தியப்பண்பாடு, இந்து ஆன்மிகம் இந்தியர்களையும் அமெரிக்கர்களையும் இணைக்கிறது. தமிழ்ப்பண்பாடு தமிழகத்தையும் அமெரிக்கத்தமிழர்களையும் இணைக்கிறது.அந்தப்பண்பாட்டுச் செயல்பாடுகளில் அரசியல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு வெறும் பண்பாட்டுச் செயலாக மட்டுமே நிகழும் தளத்தில் அவர்கள் பங்களிக்கையிலேயே உண்மையான நிறைவை அடைவார்கள். சரியான பங்களிப்பையும் செய்வார்கள். அதாவது அவர்கள் அமெரிக்கர்களாக மட்டுமே நீடித்தபடி செய்யும் பண்பாட்டு, ஆன்மிகச் செயல்பாடுகளையே அவர்கள் செய்யவேண்டும்.
மோடி அமெரிக்கா வரும்போது பல்லாயிரம் அமெரிக்க இந்தியர்கள் இந்தியத் தேசியக்கொடியுடன் அவரை வரவேற்கும்பொருட்டு கூடியதைக்கண்டு நான் அருவருத்தேன். அது ஒரு அமெரிக்கனாக தன்னை உணரும் வெள்ளையருக்கு என்ன உணர்வை உருவாக்கும்? அத்தகைய ஒரு செயல்பாடு இந்தியாவில் நிகழ்ந்தால் இந்தியர்களாகிய நாம் அவர்களைப்பற்றி என்ன நினைப்போம்? இந்தியாவில் டெல்லியில் பர்மியக் குடியேற்ற மக்கள் பல ஆயிரம் பேர் உள்ளனர். இந்தியா அளிக்கும் அனைத்தையும் பெற்று இங்கே வேரூன்றியவர்கள். பர்மியத் தலைவர் ஒருவர் வரும்போது அவர்கள் திரண்டு பர்மியக் கொடியுடன் வரவேற்று ஆர்ப்பாட்டம் செய்து வெறிக்கூச்சல் எழுப்பினால் இந்தியா அதை எப்படி பார்க்கும்? அது ஒரு துரோகம் என்றே எனக்குத்தோன்றுகிறது. அது ஒரு கீழ்மையான உணர்வு வெளிப்பாடு. அந்த நாட்டுக்கு, அதன் மரபுக்கு விசுவாசமாக இருப்பதாகச் சொல்லி பிரமாணம் எடுத்து குடிமகன்களாக ஆனவர்கள் நீங்கள் என்று அந்த அமெரிக்க இந்தியர்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
இந்தியாவில் லத்தூர் பூகம்பத்தின்போது அமெரிக்க குடிபெயர்ந்த இந்தியர்கள் பெருங்கொடையால் ஓராண்டில் அப்பகுதி மறுபடி உயிர்த்தெழுந்தது. அது உயர்வான ஒரு மனநிலை. எங்கிருந்தாலும் இந்தியச் சகோதரனுக்கு கைநீட்டுவது, இந்திய பண்பாட்டுக்கு கொடையளிப்பது ஒரு பெருமையான பணி. ஆனால் இந்திய அரசியலில் ஈடுபட்டு தாங்களும் சிறுமையடைந்து, தங்கள் சென்று வளர்ந்து பெருகி வாழும் அந்தத் தேசத்தை சிறுமையடைச் செய்வது கீழ்மை. இந்திய அரசியல் பேசும் அமெரிக்கக் குடிமகன்கள் எவரையும் எந்நிலையிலும் பொருட்படுத்துவதில்லை என்பது என்னுடைய அழுத்தமான கொள்கைகளில் ஒன்று.
அமெரிக்க தமிழர்களுக்கு உரைத்த சுவிசேஷத்தை இங்கே முடிக்கலாமென நினைக்கிறேன். அமெரிக்கர்களாக இருங்கள். அமெரிக்கப் பண்பாட்டுக்கும் அமெரிக்க வாழ்க்கைக்கும் முடிந்தவற்றைச் செய்யுங்கள். உங்கள் வேர்த்தொடர்பினால் தமிழகத்துக்கு ஏதேனும் அளிக்கமுடியுமென்றால் அதை மட்டும் அளியுங்கள். சென்றுவிட்டீர்கள், சென்ற இடத்தில் முழுமையாகப் பொருந்துங்கள் அமெரிக்காவை உங்கள் வருந்தலைமுறைகள் வெல்லட்டும். மகத்தான அந்த தேசம் உங்களாலும் உங்கள் மரபினராலும் மேலும் மகத்துவம் பெறட்டும்.
ஆம், அவ்வாறே ஆகுக!
அ.ச.ஞாவும் தமிழர் மெய்யியலும்
’தமிழறிஞர்கள் என்னும் ஒரு இனம் இங்கே இருந்ததையே அடுத்த தலைமுறைக்கு சொல்லிப் புரியவைக்கவேண்டிய நிலைமை வந்துள்ளது. கிட்டத்தட்ட அழிந்துவரும் உயிரினங்களை பட்டியலிட்டிருக்கிறது தமிழ் விக்கி. அரியபணி, வாழ்க!’ புகழ்பெற்ற பேராசிரியர் ஒருவரின் வாட்ஸப் செய்தி.
அவர் மனம் வருந்தி எழுதியிருந்தாலும் அது உண்மை. அன்று காலை ச.து.சு.யோகியார் பற்றிய செய்தியை பகிர்ந்திருந்தேன். காலைமுதல் என்னை அழைத்த அனைவரிடமும் அந்த கட்டுரையை வாசித்தீர்களா என்று கேட்டேன். ஈரோடு கிருஷ்ணன் தவிர எவருமே வாசிக்கவில்லை. (ச.து.சு யோகியா ஈரோட்டுக்காரர். அதை எந்த ஈரோட்டுக்காரராவது அறிவார்களா, எவராவது இந்தக் கட்டுரையிலாவது அதை வாசித்தார்களா தெரியாது). நான் கேட்ட பெரும்பாலானவர்கள் அந்தப்பதிவு ஒரு தமிழறிஞரைப் பற்றியது என்பதனாலேயே உள்ளே நுழைய ஆர்வம் காட்டவில்லை.
ஆயினும் நாம் செய்யவேண்டியதைச் செய்வோம் என எண்ணிக்கொண்டேன். அ.ச.ஞானசம்பந்தன் உரைகளை நான் கேட்டிருக்கிறேன். நினைவில் இருந்தே பெருகிவரும் கம்பராமாயணமும் திருவாசகமும் ஒரு பெரிய அனுபவமாக அமைபவை.
அ.ச.ஞானசம்பந்தன்
அ.ச.ஞானசம்பந்தன் – தமிழ் விக்கி
தமிழ் விக்கி -தூரன் விருது- கி.ச.திலீபன்
கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கியின் தூரன் விருது அறிவிக்கப்பட்டதைப் பார்த்து பேருவகை கொண்டேன். பத்மபாரதி அவர்கள் எழுதிய ‘நரிக்குறவர் இன வரைவியல்’ மற்றும் ‘திருநங்கைகள் சமூக வரைவியல்’ என்கிற இரு ஆய்வு நூல்களைப் பற்றி நீங்கள் ஓர் நெடுங்கட்டுரை எழுதியிருந்தீர்கள். 2015ம் ஆண்டின் இறுதியில் எழுதப்பட்ட அக்கட்டுரையைப் படித்ததும் நான் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த குங்குமம் தோழி இதழுக்காக அவரை பேட்டி எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இந்த இரு நூல்களும் அப்போது அச்சில் இல்லை. உங்களது கட்டுரையை மட்டுமே தரவாகக் கொண்டுதான் பேட்டி எடுக்கத் திட்டமிட்டேன். எனது நண்பரும், உங்களது மிகத்தீவிரமான வாசகருமான தமிழ்ச்செல்வன் பேட்டி எடுக்கையில் உடன் வர விருப்பம் தெரிவித்தார்.
பத்மபாரதியின் தொடர்பு எண்ணைப் பெற்று அவரிடம் பேசினேன். சராசரியான நடுநாட்டுப் பெண் பேசும் தொணியில் வெகு இயல்பாக பேசினார். அவரைப் பேட்டி எடுக்க வேண்டும் என்றதுமே சற்று தயக்கம் காட்டினார். பின்னர் பொறுமையாக அனைத்தையும் விளக்கி அவரை சம்மதிக்க வைத்தேன். புதுச்சேரியில் ரோமன் ரோலண்ட் நூலகத்துக்கு எதிரே இருக்கும் பாரதி பூங்காவில் நானும் நண்பர் தமிழ்செல்வனும் அவரைச் சந்தித்தோம்.
தான் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும் செய்து விடவில்லையே என்பது போலத்தான் அவரது பேச்சு இருந்தது. அதில் நிறைந்திருந்த யதார்த்தம் எங்களை மேலும் கவர்ந்தது. வணிக இதழ்களைப் பொறுத்த வரையிலும் சினிமா பிரபலங்களிடம் மட்டும்தான் கேள்வி பதில் வடிவில் பேட்டி வெளியாகும். மற்றவையெல்லாம் கட்டுரை வடிவில்தான் எழுத வேண்டியிருக்கும். கேள்விகளை முன் தயாரித்துச் செல்லவில்லை. இயல்பாக அவரது ஆராய்ச்சிகள் சார்ந்து ஓர் உரையாடலை நிகழ்த்தினோம். அவரும் மிகப் பட்டவர்த்தனமாக இந்த ஆய்வுகள் குறித்துப் பேசினார்.
பேட்டி முடித்ததும் “எழுத்தாளர் ஜெயமோகன் உங்கள் நூல்களைப் பற்றி எழுதிய கட்டுரையைப் படித்த பிறகுதான் உங்களைப் பேட்டி எடுக்க வந்தோம்” என்றேன். “ஓ… அவர் நல்ல ரைட்டர்ல” என்று சொன்னார். நான் தமிழைப் பார்த்து சிரித்தேன்.
ஜெயமோகன் வாசகர் வட்டம் ஓர் குருகுலத்தைப் போன்றது. அதன் பீடாதிபதியான ஜெயமோகன் தனது சீடர்களை மட்டுமே முன் நிறுத்துவார் என்பது போன்ற கருத்துகள் நிலவிய சூழலில் இருந்து பார்க்கையில் அது எனக்குப் பெரும் முரணாகத் தெரிந்தது.அக்கட்டுரையில் நீங்கள் முன்நிறுத்தியது அப்பிரதிகளை மட்டும்தான். “திருநங்கைகள் வாழ்வை திருநங்கைகள் கூட இவ்வளவு துல்லியமாகப் பதிவு செய்ததில்லை” என அக்கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள்
உங்களை ஓர் நல்ல எழுத்தாளர் என்கிற அளவு மட்டுமே அறிந்திருந்த / உங்களை சந்தித்தே இருக்காத பத்மபாரதியை நீங்கள் மிகச்சிறந்த ஆய்வாளராக முன் நிறுத்தியிருந்தீர்கள். உங்கள் மீதும், பத்மபாரதி மீதும் பெருமதிப்பு உருவான தருணமாக அச்சந்திப்பு அமைந்தது. நவீன இலக்கியத்தில் மட்டுமல்ல முனைவர்கள் / பேராசிரியர்கள் ஒன்றுக்கும் பெறாத கவிதை நூல், ஆய்வு நூல் என எதையாவது எழுதிவிட்டு தமிழ் அறிவியக்கத்துக்கு தான் பெரும்பங்காற்றி விட்ட தோரணையில் நடந்து கொள்வதைக் கண்டு சலிப்புற்றிருக்கிறேன். அரும்பணி ஒன்றைச் செய்து விட்டு எந்த வித மிடுக்கும் இல்லாமல் “இவரா இதை எழுதியது” என்று கேட்குமளவுக்கு யதார்த்தமானவராக பத்மபாரதி இருக்கிறார்.
ஓர் நல்ல பிரதியைக் கண்டடைவது வாசகரின் வெற்றி. அப்பிரதிக்கான உரிய அங்கீகாரத்தை வழங்குவது ஓர் அறிவுலகச் செயல்பாட்டாளரின் வெற்றி. அவரது ஆய்வுப்பணியை முன்நிறுத்திய உங்களுக்கும், இவ்விருதினை வழங்கவிருக்கிற தமிழ் விக்கி குழுமத்துக்கும் நன்றி! கரசூர் பத்மபாரதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
கி.ச.திலீபன்
குங்குமம் தோழியில் வெளியான பத்மபாரதி பேட்டி பின்வருமாறு…
பதில் தேடும் பயணங்கள்!
நிலையான இருப்பின்றி அடிப்படை வாழ்வாதாரச் சிக்கலோடு நாடோடி வாழ்க்கை வாழும் நரிக்குறவர் இனத்தையும், மூன்றாம் பாலினமாக சமூகத்தின் அத்தனை புறக்கணிப்புகளுக்கும் ஆளாகினாலும் தங்களது உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருநங்கையர் சமூகத்தையும் மிக ஆழமாக ஆராய்ந்து பதிவு செய்திருப்பவர் கரசூர் பத்மாபாரதி!
இவரது ‘நரிக்குறவர் இன வரைவியல்’ மற்றும் ‘திருநங்கையர் சமூக வரைவியல்’ ஆகிய ஆய்வு நூல்கள் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றதோடு, முக்கியமான ஆவணங்களாகவும் கருதப்படுகிறது. புதுச்சேரி கரசூரைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், கவிதை, சிறுகதை என இலக்கியத் தளத்திலும் இயங்கி வருகிறார்.
‘‘புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு தமிழ் துறையில் படித்தேன். முதுகலைத் தமிழ் இறுதித் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டிய குறு ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்புதான் ‘நரிக்குறவர் சடங்குகள் ஓர் ஆய்வு’. நரிக்குறவர் இன மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் பின்பற்றும் சடங்குகளைப் பற்றி மட்டும் ஆய்வு மேற்கொண்டேன். பேராசிரியர் அறிவுநம்பி இந்த ஆய்வுக்கான தலைப்பை வழங்கி வழிகாட்டவும் செய்தார். குறு ஆய்வு என்பதால் எடுத்துக் கொண்ட தலைப்பைத் தாண்டி, வேறு பரிமாணத்தில் எல்லாம் செல்லவில்லை. முதுகலை தமிழ் முடித்த பின் இளமுனைவர் பட்ட ஆய்வுக்காக ‘சிறு பத்திரிகை வரலாற்றில் கசடதபறவின் பங்களிப்பு’ எனும் தலைப்பை எடுத்துக்கொண்டேன்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறிது காலமே வெளிவந்திருந்தாலும் அழுத்தமான தடத்தைப் பதித்துச் சென்ற ‘கசடதபற’ இதழிலிருந்து தலா 10 சிறுகதைகள், கவிதைகளை எடுத்துக்கொண்டு ஆய்வு சமர்பித்து இளமுனைவர் பட்டம் பெற்றேன்’’ என்று தனது ஆராய்ச்சிகளின் தொடக்கம் பற்றி பேசுகிறார் பத்மாபாரதி. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானுடவியல் பட்டயம் படித்தபோது பத்மாபாரதிக்கு நெறியாளராக இருந்தவர் பக்தவச்சலபாரதி. தமிழகத்தின் மிக முக்கியமான மானுடவியல் ஆய்வாளரான இவரது வழிகாட்டுதல் இன்றி தனது இரு நூல்களும் சாத்தியப்பட்டிருக்காது என்கிறார் பத்மாபாரதி. ‘‘நரிக்குறவர் சடங்குகள் பற்றிய குறு ஆய்வை புத்தகமாக்க வேண்டும் என பக்தவச்சலபாரதி ஐயாவிடம் சொன்ன போது, ‘ஒரு முழுமையான நூல் ஆவதற்கு இந்தத் தகவல்கள் மட்டும் போதாது… மேலும் பல தகவல்களை ஆராய்ந்து எழுத வேண்டும்’ என்றார்.
கள ஆய்வுக்கான நெறிமுறைகளையும் கற்றுத்தந்தார். புதுச்சேரி பேருந்து நிலையத்தில் நரிக்குறவர் இனப்பெண்கள் பொதுவெளியிலே குழந்தைக்கு பால் கொடுத்த வண்ணமும், சுகாதாரமற்ற முறையிலும் இருப்பார்கள். ஏன் அவர்கள் இப்படியாக வாழ்கிறார்கள்? உலகம் பெரிய வளர்ச்சி கண்டுவிட்டாலும் கூட, ஏன் இவர்கள் இப்படியே இருக்கிறார்கள்? இப்படி எழுந்த கேள்விகள்தான் இந்த ஆராய்ச்சிக்கான பாதையை எனக்கு அமைத்துத் தந்தது. அதற்கு பதில் தேடும் பயணமாகவே இந்த ஆராய்ச்சி இருந்தது’’ என்கிறார். ஒரு கிராமத்துப் பெண்ணாக இருந்து களத்தில் இறங்கி ஆராய்ச்சி செய்வதில் பல சவால்கள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் கடந்து இந்த ஆராய்ச்சியை முடித்திருக்கிறார்.
‘‘புதுச்சேரி நகரம் மற்றும் பெத்திசெட்டிப்பேட்டை, வில்லியனூர், உத்தரவாகினிப்பேட்டை, சண்முகாபுரம், மதகடிப்பட்டு, விழுப்புரம் அருகே கூட்ரோடு ஆகிய பகுதிகளில் நரிக்குறவர் இன மக்கள் சாலையோரங்களில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கு காலையில் நேரமே எழுந்து சென்று விடுவேன். நாம் நினைக்கிறபடி கேட்டவுடனே எல்லாவற்றையும் சொல்லி விட மாட்டார்கள். சில பேர் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். அவர்களுக்கு சன்மானமாக வயதானவர்களாக இருந்தால் வெற்றிலை பாக்கு, குழந்தைகளாக இருந்தால் சாக்லெட், நடுத்தர வயதினருக்கு காசு கொடுத்தால்தான் பேசக்கூட செய்வார்கள். அப்படியே பேசினாலும் நாம் எதிர்பார்க்கும் பதில் கிடைக்காது. எதை எதையோ பேசுவார்கள். எல்லாவற்றையும் கேட்கக்கூடிய பொறுமை இருந்தால் மட்டுமே ஆராய்ச்சியை முடிக்க முடியும். நான் எனக்கான தகவல்கள் எல்லாம் கிடைக்கும் வரையிலும் ஓயாமல் கள ஆய்வுக்கு சென்று கொண்டிருந்தேன்.
நரிக்குறவர் இன மக்கள் ‘வாக்கிரி போலி’ எனும் மொழியைப் பேசுகின்றனர். வாக்கிரி என்றால் குருவி… ஆகவே அதனை குருவிக்கார மொழி என்கிறார்கள். இந்த மொழிக்கு பேச்சு வடிவம் மட்டும்தான் இருக்கிறது. 1972ம் ஆண்டு சீனிவாச சர்மா என்பவர் இம்மொழியைப் பற்றி ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். அதில் இந்த மொழி ஆரியம், திராவிடம் என இரண்டு வகையறைக்குள்ளும் அடங்காமல் இருக்கிறது என்கிறார். உருது, மராத்தி என இரண்டு மொழிகளையும் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் மராத்தி, உருது தெரிந்தவர்களால் இவர்களது வாக்கிரிபோலி மொழியைப் புரிந்து கொள்ள முடியாது. வாக்கிரிபோலி மொழியோடு பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக வாக்மேன் எடுத்துக் கொண்டு போவேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு வாக்மேன் என்பதே புதிதாக இருந்ததால் அதைக் கொண்டு போனாலே சில பேர் பேச மாட்டார்கள். இயல்பாகப் பேசும்போதுதான் அவர்களோடு கலந்து பல தகவல்களைப் பெற முடியும்.
இவர்கள் குழுக்குழுவாகப் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர் ஒருவர் இருப்பார். அவரிடம்தான் சாமி மூட்டை எனும் அவர்களது கடவுள் சிலையை கொண்டிருக்கும் மூட்டை இருக்கும். அந்த மூட்டையைப் பிரித்துப் பார்க்கவோ, தொடவோ பெண்களுக்கு அனுமதியில்லை. பெண்கள் தொட்டால் தீட்டு என ஒதுக்கி வைக்கிறார்கள். அவர்களது இனப்பெண்களுக்கே அனுமதியில்லை எனும்போது, நான் பார்க்கவும் அனுமதிக்கவில்லை. ஒரு நாள் அந்தத் தலைவரின் மகள் என்னை அழைத்து ஒருவரைக் கொண்டு சாமி மூட்டையைத் திறந்து காண்பிக்கச் செய்தார்.
அதனுள் வெள்ளியினாலான காளி சிலையை பதப்படுத்திய ஆட்டுத்தோல் கொண்டு மூடி வைத்திருந்தனர். நரிக்குறவர்களிலேயே பல பிரிவினர் இருக்கிறார்கள். சிலர் வெள்ளாட்டை பலியிடுவார்கள், சிலர் எருமையை பலியிடுவார்கள். பலியிட்ட பின் அதன் தோலை பதப்படுத்தி வைத்திருந்தனர். மேலும் பலியிடுவதற்கும் பூஜைக்கும் தேவையான கத்தி, தாம்பூலத்தட்டு, சலங்கை, பூஜை சாமான்கள் என பலவும் அந்த மூட்டைக்குள் இருந்தது.
விழுப்புரத்தில் வேறொரு பிரிவைச் சேர்ந்த நரிக்குறவர் திருவிழா நடந்தபோது நான் சென்றிருந்தேன். எருமையைக் கட்டி வைத்து அதன் காதோரத்தில் போகும் நரம்பை அறுத்து பலி கொடுத்தார்கள். அப்போது திபுதிபுவென வெளியேறிய ரத்தத்தைப் பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். சாமி ஆடுபவரிடம் குறி கேட்பார்கள். அதனையெல்லாம் அவர்களது மொழியிலேயே பதிவு செய்தேன். இந்த ஆராய்ச்சியில் இறங்கியதிலிருந்து, பல பகுதிகளிலும் யாரேனும் இறந்தால் தகவல் சொல்லும்படி சொல்லி வைத்திருந்தேன். பெத்திசெட்டிப்பேட்டையில் ஒருவர் இறந்து அடக்கமும் செய்து விட்டனர். கருமாதியின் போது எனக்குத் தகவல் கிடைக்கவே நேரடியாகச் சென்றேன். அவர்களது சடங்குகள் பெரும்பாலும் நீர் நிலைகள், மர நிழல் இருக்கும் பகுதிகளில்தான் நடக்கின்றது. நரிக்குறவர் வாழ்வியலில் மெச்சக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களுக்குள் மறுமணம் என்பது மிகவும் இயல்பானது’’ என்று நரிக்குறவர் இன வரைவியல் நூலுக்கான களப்பணி குறித்துப் பேசுகிறார் பத்மாபாரதி.
5 ஆண்டுகால உழைப்புக்குப் பின், 2004ம் ஆண்டு அந்த ஆய்வை எழுதி முடித்து தமிழின் பதிப்பக வெளியீடாக ‘நரிக்குறவர் இன வரைவியல்’ நூலைக் கொண்டு வந்திருக்கிறார். தமிழக அரசின் 2004ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான விருதையும், சுடராய்வுப் பரிசையும் அந்நூல் பெற்றிருக்கிறது. பத்மாபாரதி முனைவர் பட்ட ஆய்வுக்காக ‘புதுவை ஒன்றியத்தில் அடித்தள மக்களின் மரபுவழி இனப்பெருக்க மருத்துவம்’ என்கிற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அட்டவணை சாதிகளில் ஒன்றான பறையர் சமூக மக்களின் இனப்பெருக்க மருத்துவம் பற்றி முழுமையாக ஆய்வு செய்திருக்கிறார்.
‘‘இனப்பெருக்கம் தொடர்பான கை வைத்தியங்களை ஆய்வு செய்தேன். குழந்தை பிறப்பதற்கு முன்/பின் செய்யப்படும் சடங்குகள், குழந்தை பிறந்ததும் என்ன மாதிரியான உணவுகள் வழங்குகிறார்கள். உடல் பற்றிய நுண்ணிய வகைப்பாடுகள் என பல தலைப்புகளின் கீழ் ஆய்வைத் தொகுத்தேன். குழந்தைப்பேறுக்காக மாதவிடாயின் 3வது நாளில் புள்ளப்பூச்சி எனும் பூச்சியை வாழைப்பழத்தில் வைத்து சூரியன் உதிப்பதற்கு முன் சாப்பிடக் கொடுக்கிறார்கள். கெட்ட ரத்தத்தை வெளியேற்ற பெருங்காய உருண்டை சாப்பிடக் கொடுக்கிறார்கள்.
பூப்பெய்தாமல் இருக்கும் பெண்களை கோயிலில் தங்க வைக்கின்றனர். கருப்பையில் பிரச்னை இருந்தால் வேப்பிலை அரைத்து கொடுக்கின்றனர். இப்படியாக இவர்களின் வைத்திய முறைகள் ஒவ்வொன்றையும் பதிவு செய்தேன். இது மருத்துவம் மற்றும் அறிவியல் பூர்வமாக சரியானதா என்பதை ஆய்வுக்குட்படுத்தவில்லை’’ என்பவர், நாட்டு மருத்துவர்கள், கோயில் பூசாரிகள், பிரசவம் பார்க்கும் பெண்களிடம் நேர்காணல் புரிந்து, 2010ம் ஆண்டு இந்த ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
‘‘மானுடவியல் படித்த போது அதற்காக நடத்தப்பட்ட குறு ஆய்வு தான் திருநங்கையர் சமூக வரைவியல். நரிக்குறவர் ஆய்வு போலவே இதையும் விரிவாக செய்ய வேண்டும் என்று தோன்றியதுமே களத்தில் இறங்கி விட்டேன். ஆரம்பத்தில் திருநங்கைகளை அணுகுவதில் கொஞ்சம் பயம் இருந்தது. விழுப்புரத்தில் ஒரு வீட்டில் திருநங்கையர் வசித்து வந்தனர். அங்கு அடிக்கடி சென்று அவர்களிடம் பேட்டி கண்டேன். பிள்ளையார்குப்பத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழாவுக்கு சென்று அவர்களின் வழிபாட்டு முறையை பதிவு செய்தேன். திருநங்கையரும் குழுக்குழுவாக வசிக்கிறார்கள்.
ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவி இருப்பார்கள். நான் அணுகிய குழுவின் தலைவியான ராதா அம்மா மிகவும் வெளிப்படையாக எல்லாவற்றையும் பேசுவார். கிராமத்தில் வளர்ந்த பெண் என்பதால் பல தகவல்கள் எனக்கு புதிதாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருந்தன. ஆரம்பத்தில் இருந்த பயம் அவர்களுடன் கலந்து பேசப் பேச அகன்றது. நம் எல்லோரையும் போலவே அன்புக்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் இவர்களும் ஏங்குகிறார்கள். இன்றைக்கு மூன்றாம் பாலினம் என்கிற பார்வையாவது அவர்கள் மீது இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்போதிருப்பதை விட சமூகப் புறக்கணிப்பு அதிகம் இருந்தது.
ஒவ்வொருவரிடம் பேசும்போதும் அந்த வலியை உணர முடியும். அந்த வலியின் பிரதிபலிப்புதான் ‘திருநங்கைகள் சமூக வரைவியல்’ நூல். 2000ம் ஆண்டு இவர் எழுதிய ‘இளமை நதியில் முதுமை ஓடங்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு புதுவை இலக்கிய ஆய்வு மன்றத்தின் சார்பாக சிறந்த கவிதை நூலுக்கான விருதைப் பெற்றிருக்கிறது. அடுத்ததாக உயிர்ப்பு எனும் சிறுகதைத் தொகுப்பு, ஈசல் கனவுகள் எனும் கவிதைத் தொகுப்பு மற்றும் உயிர்ச்சொல் எனும் ஹைக்கூ தொகுப்பையும் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். குழந்தைகள் நல குழுமத்தில் புதுச்சேரியின் உறுப்பினர்களில் ஒருவராகவும் செயல்படுகிறார். குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து குழந்தைகள் உதவி மையத்தில் பதியப்படும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார். ‘‘வெளிப்படையான பார்வையை வைத்து எந்த ஒரு சமூகத்தையும் தீர்மானித்து விட முடியாது. இறங்கி ஆய்வு செய்யும்போதுதான் உண்மை நிலையை அறிய முடியும். இன்னும் ஆய்வு செய்வதற்கு எத்தனையோ இருக்கிறது. என்னால் இயன்ற வரையிலும் பங்காற்றுவேன்’’ என்கிறார் பத்மாபாரதி.
– கி.ச.திலீபன், குங்குமம் தோழி – 16.01.2016
தமிழ் விக்கி வம்புகள்
அன்புள்ள ஜெ,
உங்கள் பெயரில் அமைந்த முகநூல் பக்கத்தில் வந்த விவாதம் இது.
இன்று இந்த குரல் இப்படி ஓங்கியிருக்கிறதே, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்
என்.சங்கர்
*..
நீறில்லா நெற்றி பாழ்… என்று சொன்ன அவ்வையாரை ஏன் இப்படி செய்து வைத்து இருக்கிறீர்கள்? வள்ளுவருக்கும் அதே…
70 வருடங்களுக்கு முன் வந்த புத்தகங்களில் திருவள்ளுவர் திருநீறும், ருத்ராட்ச மாலையுமாக இருப்பார்… இப்போது?… வள்ளலாரையே பாழ்நெற்றியனாக்கியவர்கள் தானே இவர்கள்… இதை எல்லாம் சொன்னால் இவர்கள் நம்மை மனமுதிர்ச்சி அற்றவர்களாக சித்தரிப்பார்கள்.
தமிழ் – வாழ்வியல் மொழி என்பதால் இனம் மதம் நிலம் என்ற சிறு வட்டம் அல்லது எல்லைகளை கடந்த ஏகாந்த நிலை. ஆதலால் ஆசிரியர் திருநீறை மறைத்திறுக்க வாய்ப்பு அதிகம்
Ashok Kumar சரி, உங்களை போன்றவர்கள் தான் நம் எல்லா பாரம்பரிய, வாழ்வியல் முறைகள், அறிவியல் சேர்ந்த கலாச்சாரம், சிறந்த மருத்துவம், உலகிலேயே சிறந்த தமிழர் நாகரீகம், மொழி, உணவியல், விளையாட்டுக்கள், பண்டிகைகள், தேச பற்று போன்றவை அழிந்து 47000 பேர் தாய்மொழி தேர்வில் கூட தேர முடியாமல் தமிழர்கள் ஆனதற்கு உண்மையான காரணம்…
இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்த, இன்னும் இருப்பவற்றையும் அழிக்கும் வழிமுறைகளில் முதல் படிதான் இந்த அடையாள அழிப்பு… உங்கள் அடையாளம் தெரிந்தால் உங்கள் வரலாறை தெரிந்து கொண்டு விடுவீர்கள்… இதற்கு மதம் ஜாதி என்று திசை திருப்புவார்கள்… மூட நம்பிக்கை என்று நம்ப வைப்பார்கள்…
இவற்றை புரிந்து கொள்ளாமல் இவர்களுக்கு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள்… வருத்தம்…
நல்ல உருட்டு… இனம் மதம் எல்லாம் சிறு வட்டம்னா, அந்த வட்டத்திற்குள் கடைசி வரை வாழ்ந்த ஆளுமையானை திருவள்ளுவரை பற்றி ஏன் பேசுகிறீர்கள் ? பழம் மட்டும் வேண்டும், மரம் வேண்டாமா ?
*
அன்புள்ள சங்கர்
இதேபோல இன்னும் இரண்டு வந்தன. எனக்கு எடுத்து அனுப்பியிருந்தனர். ஒன்றுக்கு விரிவான பதில் சொல்லியிருந்தேன். அதாவது தமிழ் விக்கி அடையாளத்தில் ஏன் கோபுரம் இருக்கிறது என்று. அது தமிழக அரசின் அடையாளம் என்பதுகூட தெரியவில்லை அவர்களுக்கு.
இன்னொன்று, ஔவையார் ஏன் மடிசார் கட்டியிருக்கிறார் என்பது. அந்த ஓவியமும் பாடநூல்களில் உள்ளவற்றை அடியொற்றியதே. ஔவையார் அக்காலத்தில் எவ்வகையாக உடையணிந்தார் என நமக்கு தெரியாது. அந்த ஓவியத்திலுள்ளது மடிசார் அல்ல, எம்ப்ளத்தின் மறுபக்கம் வரவேண்டும் என்பதற்காக படம் திருப்பப்பட்டுள்ளது, அவ்வளவுதான்.
யோசித்துப் பாருங்கள், ஒரு மாபெரும் அறிவுத்தள முன்னெடுப்பு. அதற்கு வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகள் இவையெல்லாம்.
அறிவுஜீவிகள் என்பவர்களின் எதிர்வினைகளும் இதே தரம்தான். சிறியவற்றில் திளைக்கும் சிறிய மனிதர்கள்…
ஜெ
மின்மினித்தழல்
அன்புள்ள ஜெ.
சென்றவாரம் கோவையிலிருந்து வந்த நண்பர் ஒருவர் , அவர் அழைத்துச்சென்று கோவையை சுற்றிய பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட பயணங்களைப் பற்றி பேசிவிட்டு மீண்டும் ஒரு பயணம் செய்யலாம் எனவும் அழைத்தார்.
அப்போது நாங்கள் முன்பு சென்று வந்திருந்த ஆனைமலையில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு ஆச்சரியத்தை பகிர்ந்து கொண்டார்.
அந்தக் காட்டில் திடீரென லட்சக்கணக்கான மின்மினிகளால் இரவில் காடே பச்சை நிறத்தில் ஒளிர்ந்ததாகவும், இதுபோன்ற நிகழ்வு சமீபத்தில் எதுவும் நடக்கவில்லை எனவும், நான் தவறவிட்ட இந்நிகழ்வு நாளிதழ்களில் வெளியாகி இருந்ததாக சொல்லி , வெளியான செய்தியின் புகைப்படத்தை நேற்று அனுப்பியிருந்தார்.
உண்மையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது.
வெண்முரசின் சொல்வளர்காட்டின் ஏழாவதான சாந்தீபனியில் , சஸ்ரர், சாந்தோக்ய குரு நிலையிலிருந்து கிளம்பி சாந்தீபனி காட்டிற்கு வந்தபோது நடந்ததாக நீங்கள் எழுதியதல்லவா இது என நினைவை மீட்டிக் கொண்டேன்.
அதில் உங்கள் வார்த்தைகள் அப்படியே…. “ஏழுநாட்கள் பயணம் செய்து அவர் அந்த காட்டை சென்றடைந்தார். அது ஒளிவிடுவது ஒரு விழியமயக்கோ என்னும் ஐயம் அவருக்கிருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் அணுகிச் செல்லும்தோறும் அந்த ஒளி மிகுந்தபடியேதான் வந்தது. அது இளநீல ஒளியெனத் தோன்றியது. செந்நிறமோ பச்சையோ என மாறிமாறி மாயம் காட்டியது. பேருருவம் கொண்ட மின்மினி அது என எண்ணம் குழம்பியது. கந்தர்வர்கள் மானுடரை ஈர்த்து அழிக்க வைத்த பொறியோ என்று அஞ்சியது
…… அந்த ஒளியில் இலைப்பரப்புகளும் பளபளத்தன. சற்றுநேரத்தில் கீழே சதுப்புவெளியிலிருந்து பல்லாயிரக்கணக்கில் மின்மினிகள் எரிகனல்மேல் காற்றுபட்டதுபோல கிளம்பத்தொடங்கின. அவை எழுந்து இலைகள்மேல் அமர்ந்தன. காற்றில் சுழன்று நிறைந்தன. காட்டின் ஒளி செந்நிறமாகியது. விழிகொள்ளாத விம்மலுடன் அவர் அதை நோக்கி அமர்ந்திருந்தார்.”.
என் ஆச்சரியம் எல்லாம் இதுதான்..
இது போன்று சமீபகாலங்களில் எதுவும் நிகழ்ந்திராத நிலையில் நீங்கள் இதுகுறித்து விபரமாக எழுதியிருந்தது வெறும் தற்செயல் தானா அல்லது சொல்லுக்கிறைவி கம்பநாடனை “துமி” என்ற வார்த்தைக்காய் காப்பாற்றியது போலவா..
( எழுத்தாளன் வார்த்தையின் அறம் என்ன விளைவைத் தரும் என்பதை விஷ்ணுபுரத்தின் இறுதி அத்தியாயத்தில் சோனாவின் நீர் உயரும் பகுதிகளை மெழுகு திரி வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது உண்மையாகவே வீட்டின் வெளியே நீர் வரத்து ஏறி முழுகிப்போனதை 2015 ம் ஆண்டு முடிச்சூரில் நேரில் உணர்ந்தவன் என்பதால்கேட்கிறேன். (இது குறித்து விரிவாக பின்னர் எழுதுகிறேன்).
அன்புடன்
நாகராஜன்
முடிச்சூர்.
அன்புள்ள நாகராஜன்
இரண்டுவகை எழுத்தாளர்கள் உண்டு. தங்கள் எளிய சொந்தவாழ்க்கையை ஒட்டி எழுதுபவர்கள் ஒருவகை. அவர்களுக்கு ஒரு பங்களிப்பு உண்டு. ஆனால் பெரும்படைப்புகள் இன்னொருவகையினரால் எழுதப்படுகின்றன. அவர்கள் பெரும் பயணிகள். நிலத்திலும், நூல்களிலும், அகத்திலும் பயணம் செய்துகொண்டே இருப்பவர்கள். சைபீரிய நாரைகள்போல உலகை வலம்வந்தாலும் தீராதது அவர்களின் தாகம்
என் முன்னுதாரணங்கள் இரண்டாம் வகையினரே. நான் தொடர் பயணி. அந்த மின்மினிப்பெருந்தழலை பேச்சிப்பாறை பகுதியில் பலமுறை கண்டிருக்கிறேன். அதன்பின் மலேசியா சென்றபோது ம.நவீனுடன் Kampung-Kuantan என்னும் இடத்தில் படகில் சென்று ஒரு மின்மினித் தீவையே சுற்றி வந்தேன். சிறிய சதுப்புக்காட்டுத் தீவு. மொத்த தீவுமே மின்மினிகளால் சுடர்விட்டுக்கொண்டிருந்தது.
நான் நாவலில் எழுதிய சுடர்விடும் தாவரங்கள் கொண்ட காட்டையே கண்டிருக்கிறேன். ஒருவகை பூஞ்சை அது. இரவில் மென்மையாக மின்னும். நான் கண்டது நேபாள எல்லையில், இமையமலை அடிவாரத்தில். ஆண்டில் சில நாட்கள் மட்டுமே நிகழ்வது.
அதேபோல கடலில் சுடர்விடும் பூஞ்சை ஒன்றை காண உடுப்பி அருகே மழையில் பயணம் செய்து காத்திருந்தோம். பார்க்க முடியவில்லை
ஜெ
படிகம் ரோஸ் ஆன்றோவின் இல்ல விழா
நாளை (29-ஜூன் 2002) ரோஸ் ஆன்றோவின் இல்லம் திறப்புவிழா. அதையொட்டி ஓவியர் சந்துருவின் நூல் ஒன்றை படிகம் சார்பில் வெளியிடுகிறார். தமிழ் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். நானும் கலந்துகொள்கிறேன்
June 27, 2022
நமது குழந்தைகளின் முன்…
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2
நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3
நமது அமெரிக்கக் குழந்தைகள் என்னும் மூன்று பகுதிக் கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் நாம் செய்யவேண்டியதென்ன என்னும் வினாவுக்குப் பதிலாக ஒன்றைச் சொல்லியிருந்தேன்.
நம்முடைய அமெரிக்கக் குழந்தைகள் இலக்கியம், கலைகள், சிந்தனைகள் எனும் தளங்களில் உலகின் மிகச்சிறந்த கல்விமுறை ஒன்றில் பயில்பவர்கள். நாம் மிகமிகப் பின்தங்கிய கல்விமுறை ஒன்றில் பயின்று ஒன்றுமே தெரியாமல் வாழ்பவர்கள். இந்த வேறுபாட்டை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை பயிற்றுவிப்பது அல்ல நம் சவால், அவர்கள் அளவுக்கு நாம் உயர்வதே.
நம் குழந்தைகள் அங்கே பிறந்து, அங்குள்ள பண்பாட்டில் கலந்து வெல்லவேண்டிய அறைகூவல் உள்ளது. ஆகவே அவர்கள் தமிழை முறையாகவும் சரியாகவும் கற்று பேசவும் படிக்கவும் தேர்ச்சி பெறாமல் போகலாம். ஆங்கிலமே அவர்களின் முதன்மைமொழியாக இருக்கலாம். அது இயல்பு. அதுவே சரியானது.
ஆனால் அவர்களில் நுண்ணுணர்வுகொண்ட சிலர் ஒரு கட்டத்தில் தங்கள் பண்பாட்டு அடையாளம் சார்ந்த தேடலை அடையலாம். அவர்களுக்கு உகந்த வகையில் நாம் தமிழ்ப்பண்பாட்டை அறிமுகம் செய்திருக்கிறோமா? அவர்கள் மதிக்கும் வகையில் நம் இலக்கியங்களையும் சிந்தனையையும் முன்வைக்கிறோமா?
இல்லை என்பதே என் பதில். நேர்மாறாக தங்களுக்குப் பிடித்தவையும் தங்களுக்குப் பிடிபடுபவையுமான எளிமையான மலினமான விஷயங்களை அவர்கள் முன் தமிழ்ப் பண்பாடு என்று கொண்டுசென்று வைப்பதையே அமெரிக்காவில் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே ஆழமான மதிப்பின்மையை தங்கள் குழந்தைகளிடம் இருந்து ஈட்டிக்கொள்கிறார்கள்.
நம் பண்பாட்டின் வெற்றிகள் என்ன, சாராம்சம் என்ன என்றெல்லாம் அக்கட்டுரையில் விரிவாகவே பேசியிருந்தேன். செவியுள்ளோர் கேட்கட்டும்.
நான் சென்ற அமெரிக்கப் பயணத்தின்போது குமார் என்னும் நண்பரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே 15 வயதான ஸ்ரேயா என்னும் அவர் மகள் தன் பள்ளி செயல்முறைக்காக எழுதியிருந்த ஒரு குறுங்கட்டுரையை எனக்குக் காட்டினர். தன் சுருளான தலைமுடி பற்றி ஸ்ரேயா எழுதியிருந்தார். நவீன இலக்கியத்திற்குரிய இலக்கிய கருவிகளைக்கொண்டு எழுதப்பட்ட கட்டுரை. தன் தலைமுடியை தன் அடையாளமாக முன்வைக்கும் அக்கட்டுரை அதன் ‘வணங்காமுடி’த்தன்மையை கொண்டாடியது.
வியந்துபோய் ஸ்ரேயாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய இலக்கிய ரசனை, வாசிப்பு பற்றி. பின்னர் மேகனா அவரே ஓட்டும் ஜீப்பில் எங்களை இன்னொரு நண்பரின் இல்லத்துக்குக் கொண்டுசென்றார். குலதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு, ஆப்ரிக்க நாடுகளிலுள்ள வழிபாடுகளுக்கும் அவற்றுக்கும் உள்ள உறவு ஆகியவற்றை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
ஸ்ரேயாவின் தோழி மேகனா நண்பர் நிர்மலின் மகள். அன்று மேகனாவும் அந்த உரையாடலில் கலந்துகொண்டார். இருவரின் கூர்மையும் தீவிரமும் எனக்கு பெருவியப்பை உருவாக்கின. மேகனா சுசித்ரா மொழியாக்கம் செய்து அசிம்டோட் சர்வதேச இலக்கியப்போட்டியில் பரிசு பெற்ற பெரியம்மாவின் சொற்கள் கதை பற்றி ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார். அதை சுசித்ராவுக்கு அனுப்பியிருந்தேன்.
சுசித்ரா அதைப்பற்றி எழுதிய கடிதமும், சுசித்ரா அக்கடிதத்தை மொழிபெயர்த்ததும் கீழே உள்ளன
நான் என் கட்டுரையில் சொல்வது சுருக்கமாக இதுதான் நண்பர்களே. மேகனா போன்ற குழந்தைகளுக்கு நாம் தமிழ்ப்பண்பாடு என்று கொண்டுசென்று கொடுப்பது என்ன? தமிழின் உச்சங்களை மட்டும் கொண்டுசெல்வோம். தமிழகத்தின் சில்லறை அரசியல் காழ்ப்புகளை, அசட்டு வேடிக்கைகளை அல்ல. நம் முன் ஒரு வரலாற்றுக் கடமை வந்து நின்றுள்ளது.
தமிழ் விக்கி அந்தப் பெரும்பணியை தொடங்கியுள்ளது. தமிழ்ப் பண்பாடு, சிந்தனை, இலக்கியம் ஆகியவற்றை முன்வைக்கும் காத்திரமான லட்சம் கட்டுரைகள் என்பதே பெருங்கனவாக உள்ளது. மேகனாவின் தலைமுறைக்காக.
Analysis of “Periyamma’s Words”
Megana
Periyamma travels from meanings to words, while the narrator goes from words to meanings. To Periyamma, the very sounds of words have inherent truths. “Banana” asks a question, “mango” says hello, “potato” sighs and grumbles. While madhulai pazham covers her face bashfully, pomegranate climbs trees and shouts from rooftops. This itself adds a dimension of significance to the way the words are perceived. Periyamma also uses stories to define words. She uses the story of the dog following Yudistira up in the mountains to determine the meaning of nanni. Nanni is reciprocated between Yudistira and the dog, leading the narrator and Periyamma to use the word “kind” as a translation. She uses the word “kind” to describe people in her everyday life, people she could feel for and people who felt for her back. She even describes the clouds as kind as they nurtured the ground with their tears. The clouds, as Periyamma and the narrator come to learn, are beautiful.
A recurring theme in this piece is how singular words are not enough to produce meanings. When the narrator uses the word “love” to define Murugan’s arul, Periyamma objects, stating that the word “love” describes shallow plots in romantic cinema. “Love” isn’t enough to illustrate the strength and depth of Murugan’s arul for her. It is only when the narrator tells Periyamma about how Shabari meticulously tasted every fruit before giving it to Rama, and how Krishna sufficed himself with a piece of lettuce at Draupadi’s house that they come to the conclusion that the word “bond” is close to what arul means, not love. A connection between a person and a deity. Love, for Periyamma, is replaced with dear, which is replaced with near. The word near, used to indicate the location (“I’m near you” or “The parking lot is nearby”) becomes something deeper and more fluid through Periyamma’s understanding of it. In the planes of existence, the word “near” is used to describe expansion, moving from just physical distance to the distance of a person to your heart.
The innate nature of a person, in Tamil, is karpu. Here, I have defined it in just one sentence, but that sentence doesn’t do the word justice. What creates a person, what shapes them, what drives them, is this not karpu? Does karpu not change with the rides of time? Experiences, actions, can these add to our karpu? We cannot define karpu in a single word. Self is adequate, but it leaves out the story of the word, and what is a word without a story?
The words we speak are tied to our sense of self. They have different meanings for different people. If Gomathi and her family cannot understand Periyamma, does that show that Periyamma cannot speak English? No, it shows that she sees the world through a different wavelength. The way that she uncovers each word is not the same as you and I might. To Periyamma, beauty lies in the rain bearing clouds, bonds extend between her and Murugan, kindness lies in the eyes of the coconut man Arunjunai Nadar. Periyamma doesn’t “define” words, she finds their stories. “Periyamma’s Words” shows us how a word’s meaning has to be discovered, has to be felt, has to be drunk in through all of our senses. Words serve as the bridge between us and the world. Perhaps it is not us who define the words – but the words that define our sense of self.
*அன்புள்ள ஜெ,
இந்த கடிதத்தை கண்டதில் இந்த நாளே இனிமையானது. பத்தாம் வகுப்பு மாணவியா! இத்தனை அழகாக கதையின் சாராம்சத்தை உள்வாங்கி துல்லியமாக எழுதியிருக்கிறாரே. அற்புதம். தத்துவம் படிக்கிறாரா?
அவர் கடிதத்தை மொழியாக்கம் செய்திருக்கிறேன். உங்கள் தளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. இதை எழுதிய மாணவியை அவர் சொற்கள் வழியாக மிக நெருக்கமாக உணர்கிறேன். அவருக்கு என் அன்பு.
சுசித்ரா
பெரியம்மாவின் சொற்கள், ஆய்வுமேகனா
‘பெரியம்மாவின் சொற்கள்’ கதையில் கதைசொல்லி சொற்களிலிருந்து பொருளுக்கு பயணிக்கிறார். ஆனால் பெரியம்மா பொருளிலிருந்து சொல்லுக்கு செல்கிறார். சொல்லின் ஓசையிலேயே சாராம்சமான உண்மையொன்றை கண்டுகொள்கிறார் பெரியம்மா. ‘banana’ கேள்வி கேட்கிறது. ‘mango’ வரவேற்கிறது. ‘potato’ பெருமூச்சுவிட்டு அலுத்துக்கொள்கிறது. ‘மாதுளைப்பழம்’ நாணத்தில் முகத்தை பொத்திக்கொள்கிறாள். ஆனால் ‘pomegranate’ மரங்களில் தொத்தி ஏறி கூரைகளில் நின்று கூச்சலிடுகிறான். சொற்கள் இவ்வாறு அணுகப்படும்போது மேலும் ஆழம் கொள்கின்றன. பெரியம்மா கதைகள் வழியாக சொற்களின் அர்த்தங்களை அடைகிறார். தருமனை நாய் பின் தொடரும் கதை வழியாக ‘நன்னி’ என்ற சொல்லின் அர்த்தத்தை அடைகிறார். தருமனும் நாயும் ஒருவருக்கொருவர் கொள்ளும் ‘நன்னி’ வழியாக பெரியம்மாவும் கதைசொல்லியும் ‘kind’ என்ற் ஆங்கில வார்த்தையை புரிந்துகொள்கிறார்கள். நன்னிக்கு ஆங்கிலத்தில் kind என்கிறார்கள். பெரியம்மா தன் சுற்றத்தில் உள்ள, தன் மேல் அக்கறை உள்ள, தான் அக்கறை கொண்டுள்ள மனிதர்களை ‘kind’ என்று சொல்கிறார். மேகங்கள் தம் கண்ணீரால் நிலத்தை பேணுவதால் அவற்றையும் kind என்கிறார். தொடர்ந்து மேகங்கள் beautiful என்று பெரியம்மாவும் கதைசொல்லியும் அறிகிறார்கள்.
ஒரு தனிச்சொல் மட்டும் பொருளை உணர்த்த போதுமானதாக இருப்பதில்லை என்ற அனுபவம் இந்தக்கதையில் மீண்டும் மீண்டும் கிடைக்கிறது. ‘love’ என்ற சொல்லை கதைசொல்லி முருகனின் அருளை பற்றிச்சொல்ல உபயோகிக்கிறார். ஆனால் பெரியம்மாவுக்கு உடன்பாடில்லை. ‘love’ என்பதை சினிமாக்காதலோடு அவர் தொடர்பு படுத்துகிறார். முருகன் அருளின் ஆற்றலையும் ஆழத்தையும் உணர்த்த ‘love’ அவளுக்கு போதுமானதாக இல்லை. அதன் பிறகு சபரி கதையையும் கிருஷ்ணன் திரௌபதியின் அட்சயப்பாத்திரத்திலிருந்து ஒரு பருக்கை கீரை உண்டு நிறைந்த கதையையும் விவாதித்து தான் அவர்கள் அருள் என்பது “bond” என்ற புரிதலை அடைகிறார்கள். மனிதனுக்கும் தெய்வத்துக்குமான பந்தம். பெரியம்மாவுக்கு love என்பது dear என்று ஆகி பிறகு near என்று ஆகிறது. Near என்பது ஆங்கிலத்தில் இடத்தை, அருகாமையை, குறிக்கும் சொல். ஆனால் பெரியம்மாவின் புரிதலில் அது மேலும் ஆழமான, மேலும் அர்த்தங்கள் கூடி ஒழுகும் சொல்லாக மாறுகிறது. தூய இருப்பின் தளத்தில் ‘Near’ என்பது மேலும் விரிவுகொண்டு, நடைமுறை தூரத்துக்கு அப்பால் இரு மனங்களுக்கிடையே உள்ள நெருக்கத்தை சுட்டக்கூடிய சொல்லாக ஆகிறது.
ஒரு மனிதனின் சாராம்சமான இயல்பையே தமிழில் கற்பு என்கிரார்கள். கற்பு என்ற சொல்லை ஒரு வரியில் வரையறை செய்ய இங்கே நான் முற்பட்டிருக்கிறேன், ஆனால் இதுவும் அந்தச்சொல்லின் முழுமையான அர்த்தத்தை கொண்டுவரவில்லை. ஒரு மனிதனை உருவாக்கும் விசை எதுவோ, எது ஒரு மனிதனை வடிவமைக்கிறதோ, செயலாற்ற உந்துகிறதோ, அது கற்பு இல்லையா? கற்பு காலத்தோடு மாறும் கருத்து அல்லவா? நம்முடைய அனுபவங்கள், செயல்கள், இவை நம் கற்புக்கு ஆழம் சேற்க்கும் விஷயங்கள் அல்லவா? ஆம், கற்பு என்னும் சொல்லையும் ஒரு வார்த்தையில் வரையறுத்துவிட முடியாது. Self என்பது ஓரளவு அதை கொண்டுவரும் சொல் தான், ஆனால் அந்த வார்த்தைக்குப் பின்னால் உள்ள கதை அந்தச்சொல்லில் இல்லை. கதை இல்லாத சொல்லுக்கு என்ன பொருள்?
நாம் பேசும் சொற்கள் நம்முடைய சுயத்துடன், அடையாளத்துடன் இணக்கமான தொடர்புடையவை. அவை வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு விதங்களாக அர்த்தப்படும். கோமதியும் அவள் குடும்பத்தாரும் பெரியம்மாவை புரிந்துகொள்ளவில்லை என்றால் பெரியம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்று அர்த்தமா என்ன? இல்லை, பெரியம்மா உலகத்தை வேறொரு அலைவரிசையில் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு சொல்லிலிருந்தும் அர்த்தம் எடுக்கும் விதத்தில் நீங்களோ நானோ எடுக்க மாட்டோம். பெரியம்மாவுக்கு அழகு என்பது மழை கனக்கும் முகில்களில் உள்ளது. முருகனுக்கும் அவளுக்கும் அருள் பாலிக்கும் பந்தம் இருக்கிறது. தேங்காய் கொண்டுவரும் அருஞ்சுணை நாடார் அவளுக்கு kind-ஆனவன். பெரியம்மா வார்த்தைகளை வரையரை செய்வதில்லை, அவற்றுக்கு பின்னால் உள்ள கதைகளை விரித்தெடுக்கிறார். “பெரியம்மாவின் சொற்கள்’ கதை நமக்கு காட்டுவதும் அதைத்தான். ஒரு சொல்லின் பொருள் என்பது கண்டடையப்படவேண்டும். உணரப்படவேண்டும். நம் அனைத்து புலங்களால் உட்கொள்ளப்படவேண்டும். நமக்கும் உலகுக்கும் பாலமாக அமைகின்றன சொற்கள். ஆம், ஒருவேளை நம்மால் சொற்களை வரையருக்கவே முடியாது. சொற்கள் தான் நம் சுயத்தை வடிவமைக்கின்றன.
மேகனா
ஜமீன்தாரிணி உரை
அன்புள்ள ஜெ,
பெண் எழுத்தாளர்கள் பற்றி உங்கள் தளத்தில் இருந்த ஓர் இணைப்பு வழியாக நான் கி.சு.வி.இலட்சுமி அம்மாள் என்னும் பதிவுக்குச் சென்றேன். நான் எம்.ஏ படிக்கும்போது திருக்குறளில் ஓர் ஆய்வேடு எழுதியிருக்கிறேன். அதில் ஜமீன்தாரிணி உரை என்று ஒரு நான்கு வரி எழுதியிருக்கிறேன். ஆனா அந்த ஜமீன்தாரிணி யார் என்று தெரியாது. இப்போதுதான் தெரிந்துகொண்டேன். அற்புதமான பதிவு. படங்களும் அரியவை.
தமிழ் விக்கி ஆய்வேடுகள் தயாரிப்பவர்களுக்கான சுரங்கம்
கே.ஆர்.மீனாட்சிசுந்தரம்
கி.சு.வி.இலட்சுமி அம்மாள் – தமிழ் விக்கி
கி.சு.வி.இலட்சுமி அம்மாள்
கழு, கடிதங்கள்
பீடம் கதையை ஏற்கனவே படித்துள்ளேன்.சென்றமுறை படித்தபொழுது கடிதம் எழுதவில்லை.இன்று மீண்டும் படித்தேன். எழுகிற கேள்வி யார் இந்த கழுமாடன்? அவன் எப்படி தெய்வமாக மாறுகிறான்? காந்தியும் ஒரு கழுமாடனா? மானுடநிரை இன்றுவரை எத்தனை கழுமாடன்களை கண்டுள்ளது? கவிஞர் மரபு, குரு மரபு போல் கழுமாடன் மரபும் இங்குள்ளதோ?அத்தனை கழுமாடன்களும் ஒன்றா?.
யார் இந்த கழுமாடன்?
நாம் அனைவரும் தான். அளவுகளில் வேறுபாடு இருக்கலாம். பொறுத்துப்போகிற மனம் எதோ ஒரு நொடியில் நிமிர்ந்து எழும் தரும் யாவரும் கழுமாடனே!. மனதின் இருளை, இவ்வெளியின் செயற்கையான மேடு பள்ளங்கள் உருவாக்கும் சோர்வை, சூழல் உண்டாக்கும் வெற்றுத்தடையை மீற துணியும் யாவரும் கழுமாடனே!
அவன் எப்படி தெய்வமாக மாறுகிறான்?
தெய்வம் ஒரு நினைவுப்பொருள். நமக்குள் உள்ள உன்னதத்தை நமக்கு நினைவு படுத்தும் ஒரு தூண்டல்.கழுமாடன்கள் கொஞ்சம் பெரிய உன்னதத்தை ஒரு கூட்டத்துக்கு நினைவுபடுத்துகிறான். பின் தெய்வம்தானே!
காந்தியும் ஒரு கழுமாடனா?
கொஞ்சம் பெரிய, இந்தியா நன்றாக அறிந்த, உலகம் தெரிந்து கொண்ட, வேறு நாட்டு மக்களும் கொண்டாடிய கழுமாடன்.
மானுடநிரை இன்றுவரை எத்தனை கழுமாடன்களை கண்டுள்ளது?
சிலை முன் நின்று தெய்வத்திடம் ஒரு குழந்தை கேட்கிறது. உனக்கு எங்களை எவ்ளோ பிடிக்கும்?. தெய்வம் இறங்கிவந்து, இரண்டு கையையும் விரித்து காண்பிக்கிறது. இரு கைகளும் விரிந்துகொண்டே செல்கிறது. அத்தனை கழுமாடன்கள் வந்துகொண்டே இருப்பார்கள்.
கவிஞர் மரபு, குரு மரபு போல் கழுமாடன் மரபும் இங்குள்ளதோ?
பரிணாமம் என்பது உயிரியலின் மரபு. இங்கு அத்தனையும் அதன் முந்தியவற்றின் மரபு. விதிகள் கழுமாடன்களுக்காக தளர்வதில்லை.
அத்தனை கழுமாடன்களும் ஒன்றா?.
ஆம். இல்லை. சுண்டனும், உருமனும் ஒன்றா? இவர்கள் இருவரும் காந்தியும் ஒன்றா? ஒரே பாதையில் வெவ்வேறு வாகனத்தில் செல்லும் பயணிகள்.
அன்புடன்,
மோகன் நடராஜ்
***
அன்புள்ள ஜெ
கழு, பீடம் என்னும் இரண்டு கதைகளையும் வாசித்தேன். தமிழக தலித் இலக்கியப் புலத்தில் எழுதப்பட்ட கதைகள் எதற்கும் இல்லாத வீரியம் உள்ள கதைகள் அவை. தன்னை கழுவிலேற்றிக்கொண்டு பழிவாங்குபவன். அதுதான் ஒடுக்கப்பட்டவனின் வஞ்சம். அந்த பீடத்தில் வந்து தலைமுறை தலைமுறையாக அமர்பவர்கள். எதிர்ப்பு என்பதை இத்தனை தீவிரமாக அண்மையில் எழுதிய கதைகள் வேறு இல்லை.
கே.ராஜேந்திரன்
விஷ்ணுபுரம் பதிப்பகம்
info@vishnupurampublications.com
https://www.vishnupurampublications.com/
முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


