தமிழ் விக்கி, வாசகர்கள் என்ன செய்யலாம்?

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கி கட்டுரைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஓரு வாசகனாக நான் இதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. ஒருநாளில் ஒரு மணிநேரத்துக்கு மேல் நான் தமிழ் விக்கியில் நேரம் செலவிடுகிறேன். இதன் மிகச்சிறந்த இயல்பு என்பது தேர்ந்தெடுத்து அமைக்க பட்டிருக்கும் இணைப்புகள்தான். ஒரு சுழல்போல நம்மை சுற்றி உள்ளே கொண்டுசென்றுவிடுகின்றன. நான் எவ்வகையிலாவது பங்களிப்பாற்ற முடியுமா?

ராஜேந்திரன் எஸ்.

தமிழ் விக்கி முகப்பு

அன்புள்ள ராஜேந்திரன்,

தமிழ் விக்கி போன்ற ஓர் அமைப்பு நிலைகொள்ள வேண்டும் என்றால் அதற்கு பரந்துபட்ட பங்களிப்பு தேவை.

அ. எங்களுக்கு கட்டுரையாசிரியர் தேவைப்படுகிறார்கள். தமிழ் விக்கியில் இல்லாத கட்டுரைகளை நூல்களில் இருந்து உசாத்துணையுடன் எடுத்து எழுதி அனுப்பலாம். அக்கட்டுரை ஏற்கனவே இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்

ஆ. எங்களுக்கு ஆங்கில மொழியாக்கங்கள் நிறையவே தேவையாகின்றன. தமிழ் விக்கியில் உள்ள பதிவுகள் ஏற்கனவே ஆங்கிலத்தில் இல்லை என்றால் மொழியாக்கம் செய்து அனுப்பலாம். தமிழ் விக்கி தொடர்புக்கு

இ. தமிழ் விக்கியை தொடர்ச்சியாக வாசிப்பதே அதற்கு அளிக்கும் பங்களிப்புதான். ஆகவேதான் இணைப்பு அளித்துக்கொண்டிருக்கிறேன். பலர் அக்கட்டுரைகளை சொடுக்கிவிட்டு தமிழ் விக்கிக்குள் செல்லாமலேயே சென்றுவிடுகிறார்கள் என்றனர். நண்பர்கள்கூட அதைச்செய்கின்றனர். அது தமிழ் விக்கிக்குச் செய்யும் ஒருவகை துரோகம். உள்ளே சென்று கூடுமான வரை நேரம் செலவிடுவதே ஒருவர் தமிழ் விக்கிக்கு மிக எளிமையாகச் செய்யக்கூடிய பங்களிப்பு. அது தமிழ் விக்கி வாசிக்கப்படுகிறது என்பதற்கான சான்று. இன்றைய சூழலில் தமிழ் விக்கிக்குள் நுழையும் ஒவ்வொரு சொடுக்குக்கும் பெருமதிப்பு உண்டு. வாசகர்களிடம் கோருவது குறைந்தபட்சம் அதுவே.

ஈ. கூடுமான இடங்களில் எல்லாம் தமிழ் விக்கியை இணைப்பு அளிப்பது இன்றியமையாதது. இனி எழுதும் குறிப்புகள், கமெண்டுகளில் மட்டுமல்ல; ஏற்கனவே எழுதப்பட்டவற்றிலும் தமிழ் விக்கியை சுட்டிகொடுக்கலாம். அது தொடர்ச்சியாக வாசகர்களை உள்ளே கொண்டுவரும். வலைப்பக்கங்களில் நிரந்தர இணைப்பு அளிக்கலாம். கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இணைப்புகள் அளிக்கலாம்,

உ. வாட்ஸப், விவாதக்குழுமங்கள் போன்றவற்றில் இணைப்பு அளிக்கலாம். கட்டுரைகளை பகிர்ந்துகொள்ளலாம்.

பங்களிப்பது என எண்ணினால் ஏராளமாகச் செய்யமுடியும். மனமிருக்கவேண்டும். பொதுவாக நம் உள்ளம் பெருஞ்செயல்களை கண்டால் அச்சமும் விலக்கமும் கொள்கிறது. பெரும்பாலானவர்கள் சலிப்பு என்னும் மனநிலையிலேயே அன்றாடம் இருக்கிறார்கள். நான் எப்போதும் அவ்வாறல்லாத சிலரையே கருத்தில்கொள்கிறேன். அவர்களிடமே எதிர்பார்க்கிறேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 22, 2022 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.