Jeyamohan's Blog, page 633

February 3, 2023

மாத்ருபூமி இலக்கிய விழா

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி இலக்கிய விழா பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறுகிறது. நான் கலந்துகொள்கிறேன். 4 ஆம் தேதி நானும் ஆனந்த் நீலகண்டனும் ஓர் உரையாடல். இலக்கியமும் தொன்மமும் பற்றி. மறுநாள் ‘நவீன இலக்கியத்தின் மரபுத்தொடர்ச்சி என்ன?’ என்னும் தலைப்பில் நான் உரையாற்றுகிறேன்.

பொதுவாக உலக இலக்கிய விழாக்களில் மிகக்குறைவான பங்கேற்புகளே இருக்கும். கேரள இலக்கிய விழாக்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கெடுக்கும் மக்கள் கொண்டாட்டங்களாக நிகழ்வன

இடம்: கனககுந்நு அரண்மனை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2023 10:36

பட்டாம்பூச்சியின் சிறகுகள்

தமிழ் விக்கி – பட்டாம் பூச்சி

நான் பள்ளிநாட்களில் வாசித்த தொடர்களில் ரா.கி.ரங்கராஜன் மொழியாக்கத்தில் குமுதத்தில் வெளிவந்த ‘பட்டாம் பூச்சி’ முக்கியமானது. அதற்கு ஜெ வரைந்த நிழல்வடிவ ஓவியங்களும் கணிப்பொறிவரைகலை இல்லாத அக்காலத்தில் ஆழமான பாதிப்பை உருவாக்கின. ஒருசாகச நாவலாகவே நான் பட்டாம்பூச்சியை வாசித்தேன். அந்த சுயவரலாறு அடைந்த வெற்றிக்கும் அதுவே காரணம்

பின்னர் ஆங்கிலத்தில் அதன் மூலத்தை ஒரு ரயில்பயணத்தில் வாசித்து முடித்தேன். அந்த சுயசரிதை பற்றிய மனச்சித்திரங்கள் மாறின. முத்ல் எண்ணம் அது ஒரு புனைவு என்பதே. அதில் உண்மையான வாழ்க்கைதான் பேசப்படுகிறது, ஆனால் தேர்ந்த புனைவெழுத்தாளனால் அது மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வாழ்க்கைவரலாறு அந்த அளவுக்கு நுட்பமான தகவல்களும் உத்வேகமான கணங்களும் கொண்டதாக இருக்க முடியாது.

அது புனைவு கலந்தது என்று சொல்லும்போது நான் அதை கீழே இறக்கவில்லை, மாறாக மேலே கொண்டு செல்கிறேன். அதன் அனுபவத்தளம் புனைவின்மூலம் மேலும் செறிவாக்கப்பட்டுள்ளது. ஆகவே மானுடவாழ்க்கையின் சாராம்சத்தை நோக்கிச் செல்லும் ஒரு தீவிரம் அதில் கைகூடுகிறது. அது ஒரு வரலாறாக அல்லாமல் இலக்கியமாக, ஏன் பேரிலக்கியமாக, ஆவதன் பரிணாமம் அதுவே

ஹென்றி ஷாரியர் [ Henri Charrière] என்ற வெனுசுவேலா குடிமகன் 1969ல் எழுதி பிரான்ஸில் வெளியிட்ட சுயசரிதைதான் பட்டாம்பூச்சி. [Papillon]. இரவுவிடுதிகளில் மாலைகளை கழிக்கும் ஒரு இளைஞனாக இருந்த ஹென்றி ஷாரியர் தற்செயலாக ஒரு கொலைக்குற்றச்சாட்டில் சிக்குகிறான். ஜூரி முறை காரணமாக அவனை எளிதில் குற்றவாளி என தீர்ப்பளிக்க வைக்கிறார் அரசு வழக்கறிஞர். ஜூரிகளான குடும்பத்தலைவர்களுக்கு ஷாரியர் ஒரு சுகவாசி என்பதே கசப்பைக் கொடுக்கிறது, அதை சொல்லிச் சொல்லி அவனை அவர்கள் கண்ணில் கொலையாளியாக காட்டி விடுகிறார் வழக்கறிஞர்

அன்றைய வழக்கப்படி ஷாரியர் 1931ல் பிற கைதிகளுடன் கப்பலில் ஏற்றப்பட்டு தீவாந்தர சிறைத்தண்டனைக்காக லத்தீன் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்படுகிறான். பிரெஞ்சு கயானாவில் உள்ள ஆளற்ற தீவுகளில் உருவாக்கப்பட்ட சிறைகளில் முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆன ஒரு சமூகம் இருக்கிறது. அவர்களில் ஒருசாரார் கைதிகள் பிறர் காவலர்கள். வன்முறையும் வதையும் அன்றாட வாழ்க்கையாக ஆன ஒரு சூழல். அந்த சிறைத்தீவுக்கு பெயரே டெவில்ஸ் ஐலண்ட் என்பதுதான்.

தன்னை சிக்கவைத்தவர்களை பழிவாங்குவதற்காக சிறையில் இருந்து தப்பி திரும்பி பாரீஸ் வரவேண்டும் என்று உறுதி கொள்கிறான் ஷாரியர். கப்பலிலேயே அந்த உறுதியுடன்தான் ஏறுகிறான். ஆனால் தீவாந்தர சிறைத்தண்டனைக்குச் சென்ற எவரும் திரும்பி வருவதில்லை என்பதே உண்மை. அவர்களை கொண்டுசெல்லும்போது அதிகாரியும் அதைச் சொல்கிறார் ‘உங்களை பிரான்ஸுக்கு இனிமேல் தேவையில்லை. போய்த்தொலையுங்கள்’ என்று

கப்பலிலேயே தப்பும் முயற்சியை ஆரம்பிக்கிறான் ஷாரியர். அதன்பின்னர் கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஒவ்வொரு கணமும் அவன் தப்பமுயன்றுகொண்டே இருக்கிறான். சென்றதுமே ஆஸ்பத்திரிக்குச் செல்ல ஏற்பாடுசெய்து, அங்கிருந்து பணம்கொடுத்து படகுகளை ஏற்பாடு செய்துகொண்டபின், காவலனைதாக்கிவிட்டு தப்பிச்செல்கிறான். படகை விற்றவன் ஒரு பாடாவதி படகை கொடுத்து ஏமாற்றிவிடுகிறான். முயற்சி தோற்கிறது. இன்னொருவன் உதவியுடன் புதிய படகை வாங்கி தப்பிச்செல்ல முயல்கிறான். பிடிபடுகிறான். தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகிறான்.

ஆனால் மீண்டும் மீண்டும் பலமுறை புது தோழர்களைச் சந்தித்து தப்பி ஓடிக்கொண்டே இருக்கிறான். இருமுறை தனிமைச்சிறை. தனிமைச்சிறை என்பது மரணத்தை முகத்தோடுமுகம் கண்டு கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு உக்கிரமான சித்திரவதை. மனம் ஒரு புற்றுநோய்க்கட்டியாக மாறும் நிலை. அதை அஞ்சாத கைதியே இல்லை. அதில் இருந்து அவனுடன் பிடிபட்ட கைதிகள் தப்புவதும் இல்லை. அவனோ அதில் இருந்து மீண்டதும் மீண்டும் தப்பும் முயற்சியை ஆரம்பிக்கிறான். தப்புவதற்கான எண்ணம் ஒருநாளும் அவனில் இருந்து விடுபடுவதில்லை

ஒரு சந்தர்ப்பம் நூலில் உண்டு.உண்மையாகவே தப்பும் முயற்சியில் இருக்கும் ஒரு கைதியை இன்னொரு முரட்டுக்கைதி கத்தியுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு இழுக்கிறான். அதை சிறையில் எவரும் மறுக்க முடியாது. யாரும் உதவிக்கும் செல்லக்கூடாது. இது ஒரு நடைமுறை விதி. அந்தக்கைதிக்கு ஆதரவாக ஷாரியர் கத்தியுடன் களமிறங்குகிறான். ‘ஒவ்வொரு கைதிக்கும் புனிதமான கடமையாக ஒன்றுதான் இருக்க முடியும். தப்பிச்செல்வது. நம்மில் சிலர் மெதுவாக இங்கேயே இருக்கும் மனநிலைக்கு வந்திருக்கிறோம். அதுகூட மன்னிக்கப்படலாம். ஆனால் உண்மையிலேயே தப்பிச்செல்லும் முயற்சியில் இருக்கும் ஒருவனை ஆதரிக்காமல் அவனை அழிக்க நினைக்கிறோம். இதைவிட கேவலம் வேறு இல்லை. அந்த கைதிக்காக நான் சண்டைக்கு வருகிறேன்’ என்கிறான்

சண்டைக்கு அழைத்த முரட்டுக்கைதி கத்தியை வீசி விடுகிறான். அவன் தான் அஞ்சவில்லை என்று காட்டுவதற்காக வெறும் கையுடன் ஒரு சண்டையை நடத்துகிறான். அதன் பின் ‘நீ சொன்னதுதான் உண்மை. எப்படியோ நமது மனங்கள் இந்த அழுக்குக்குழியில் சுகம் கண்டுகொள்கின்றன’ என்கிறான். அன்று மதியத்துக்குள் முகாமில் வாழும் அத்தனை கைதிகளும் அதையே ஷாரியரிடம் வந்து சொல்கிறார்கள். அதுதான் ஷாரியரின் பிரகடனம். கைதிகளின் ஆன்மாவின் குரலும்கூட.

கடைசியில், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகள் கழித்து 1945ல் பிரெஞ்சு நாட்டுடன் சட்ட உறவு இல்லாத வெனுசுவேலா நாட்டுக்கு தப்பிச்செல்லும் ஷாரியர் அங்கே ஒரு சுதந்திரக் குடிமகனாக ஆகிறான். தன் வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்கிறான்.உழைத்து செல்வந்தனாகிறான். அதன்பின் தன் வாழ்க்கை வரலாற்றை பிரெஞ்சில் எழுதி உலகப்புகழ்பெற்றான்.

நூலில் வாசக மனதை எழுச்சி கொள்ளச்செய்யும் பலபகுதிகள் உள்ளன. தூயநட்பும் அபாரமான மனிதாபிமானமும் வெளிப்படும் பல தருணங்கள் கொண்டது பாப்பில்யான். கடுமையான துயரங்கள் மானுடனுக்கு அமிலச்சோதனைபோல. அவனுடைய சாராம்சத்தில் உள்ள நல்லியல்புகளும் கெட்ட இயல்புகளும் ஒரேசமயம் உக்கிரமாக வெளிப்படுகின்றன. சர்வ சாதாரணமாக வார்டரை தாக்கும் ஷாரியரே ஒரு வார்டரின் குழந்தையைக் காப்பாற்ற சுறாமீன்கள் நீந்தும் கடலில் குதிக்கவும் தயாராகிறான். பலவேறு துணைக்கதைகள் வழியாக கைதிகளின் முகங்கள் நூலெங்கும் வந்துகொண்டே இருக்கின்றன

நூலில் வெளிப்படும் ஷாரியரின் பரிணாமம் மிக முக்கியமானது. அவன் தப்ப விரும்புவது பழிவாங்குவதற்காக மட்டுமே. மெல்லமெல்ல தப்பிச்செல்லுதல் என்பதே நோக்கமாக ஆகிறது. தப்பிச்சென்று செய்யவேண்டியது ஏதும் இல்லையென்றாலும். சுதந்திரத்தின் உபாசகனாக அவன் ஆகிறான். பழி வாங்கும் உணர்வு மறைகிறது. ’நான் மனிதன், ஆகவே சுதந்திரமானவன், ஒருபோதும் சிறையில் இருக்கமாட்டேன்’ – இந்த ஒரே வரிதான் ஷாரியரின் மந்திரம் எனலாம். ஆகவேதான் ஒரு மானுட சாசனம் என்று இந்நூல் கருதப்படுகிறது.

நூலின் இறுதியில் ஷாரியர் சென்று சேரும் இரு இடங்கள் முக்கியமானவை. ஒன்று அவனுக்கும் ஒரு எருமைக்குமான உறவு. அந்த எருமைகளை தன்னைப்போலவே சுதந்திரமான கௌரவமான உயிர்கள் என அவன் உணர்கிறான். அந்த எருமையை தன் தோழனாகவே அவன் ஏற்கிறான். இரண்டு, பிரெஞ்சு அரசால் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு தீவாந்தரச் சிறைக்கு அனுப்பப்பட்டு சலிக்காமல் நீதிக்காக போராடி மீண்ட ஜெனரல் டிரைஃபஸ் என்ற வீரருடன் அவன் தன்னை அடையாளம் காண்கிறான். அவர் அமர்ந்திருந்த அதே கடலோர பெஞ்சில் அவனும் அமர்ந்து கனவு காண்கிறான். ஒரு சுகவாசியான கைதி மானுடத்துக்கான புரட்சியாளனாக ஆகும் பரிணாமம் அது.

நாவலில் ஷாரியருடன் தப்பும் அனைவருமே எங்கோ ஒரு இடத்தில் தங்கள் விதியை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவன் ஏற்பதே இல்லை. நேரடி தண்டனை முடிந்து தீவுக்குள் சுற்றும் உரிமையும் வேளாண்மை செய்யும் வசதியும் அளிக்கப்பட்டு கட்டுப்பாடுள்ள சுதந்திரம் அளிக்கப்படும்போது பலர் அதற்குள் நிறைவடைகிறார்கள். ஷாரியர் அதிலிருந்தும் தப்பிச்செல்கிறான்.

நூலில் இந்த அம்சம் மிகவும் சிந்தனைக்குரியதாக எனக்கு தென்பட்டிருக்கிறது. ஷாரியர் ஒருமுறை தப்பி கோவாஜிரா என்ற சிவப்பிந்தியர் கிராமத்துக்குச் சென்றுவிடுகிறான். அங்கே அவனுக்கு இரு மனைவிகள் கிடைக்கிறார்கள். எளிய இனிய வாழ்க்கை. கடல், வெயில். நட்புகள்.சமூக உறவுகள். ஆனால் அங்கிருந்தும் அவன் தப்புகிறான். காரணம் அதுவும் ஒரு சிறைதான் என்பதே. அவனுக்கு உலகம் எத்தனை பெரியது என தெரியும், அதன்பின் அவன் ஒரு சிறு பழங்குடிக் கிராமத்தில் வசிக்கமுடியாது.

சமீபத்தில் இந்நூலின் திரைவடிவமான பாப்பிலான் என்ற திரைப்படத்தை பார்த்தேன். 1973 ல் வெளிவந்த இந்தப்படம் ஷாரியர் உயிருடன் இருக்கும்போதே அவரது பங்களிப்புடன் எடுக்கப்பட்டது. பிராங்க் சாஃப்னர் . [Franklin Schaffner] இயக்கியிருந்தார் ஸ்டீவ் மக்வீன் [Steve McQueen] ஷாரியராக நடித்திருந்தார் டால்டன் டிரம்போ [Dalton Trumbo] மற்றும் லாரன்ஸோ செம்பிள் Lorenzo Semple Jr.][ ஆகியோர் திரைக்கதை..

ஹென்றி ஷாரியர்

ஷாரியரின் மிகவிரிவான சுயசரிதையை திரைவடிவமாக்குவது என்பது சாதாரண வேலை அல்ல. நூலை வாசித்தவர்கள் ஏமாற்றம் அடைவதற்கே நியாயம். ஆனால் அற்புதமான திரைக்கதை மூலம் சிறப்பாகத் திருப்பிச் சொல்லப்பட்ட பாப்பிலான் இன்னொரு அனுபவமாகவே இருந்தது. படத்தின் தொடக்கக் காட்சியில் கைதிகள் வரிசையாக பாரீஸை விட்டு கப்பலுக்குக் கொண்டுசெல்லப்படும்போது அவர்களின் பூட்ஸ்களின் ஒலி அதிர அதிர அக்காட்சி நீண்டுகொண்டே செல்கிறது. அந்த விடைபெறலில் உள்ள கொடூரத்தை அற்புதமாக நிறுவியது அது.திரைக்கலையின் சாத்தியங்களைக் காட்டிய காட்சி என்று தோன்றியது.

மொழிக்கலைக்கும் காட்சிக்கலைக்கும் இடையேயான தூரத்தையும் இரண்டுக்கும் உள்ள சாத்தியங்களையும் இந்தப் படம் நினைவுறுத்தியது. நூலில் ஷாரியர் அந்த சிறைவாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் உணர நேர்ந்த அவமதிப்பையும் சிறுமையையும் பற்பல நிகழ்ச்சிகள் வழியாகச் சொல்லிக்கொண்டே செல்வார். மீண்டும் மீண்டும் கைதிகளை நிர்வாணமாக ஆக்கி மந்தை மந்தையாக சுவரை நோக்கி நிற்கச்செய்தும், அமர்ந்து முக்கச்செய்தும் செய்யும் சோதனைகள் வழியாக எப்படி அவர்கள் தன்னை ஒரு கீழ்த்தர மிருகமாக உணரச்செய்தார்கள் என்பதைக் காட்டுகிறார். அதை உணர்ந்து ஆரம்பத்தில் அவர் அடையும் மனக்கொந்தளிப்பும் விடும் கண்ணீரும் மெல்லமெல்ல அது ஒரு வன்மமாக மாறுவதும் அந்நூலில் தெரியும். ஒருசந்தர்ப்பத்தில் நண்பனை அவமதிக்கும் ஒரு வார்டர் மீது கொதிக்கும் நீரை அள்ளி ஊற்றுகிறான். அதற்கான கடுமையான தண்டனையை அனுபவிக்கிறான்.

திரைப்படம் அந்த மன ஓட்டங்களைச் சொல்ல முடியாது. ஆனால் இதில் அங்கே சேற்றில் ஒரு முதலையை பிடிப்பதற்காக ஷாரியரும் நண்பனும் செய்யும் முயற்சி மிக விரிவாக காட்டப்படுகிறது, நூலில் இல்லாத காட்சி அது. அச்சித்தரிப்பின் வழியாக அந்த வாழ்க்கை, மனித மாண்பை இழந்து சேற்றுப்பன்றியென ஆகும் நிலை, மிக தீவிரமாக உணரச்செய்யபப்டுகிறது. அந்த உழல்தலுக்கு காவலாக துப்பாக்கி ஏந்திய காவலர்.

அதேபோல ஷாரியரின் தனிமைச்சிறைக்காட்சிகள். நூலில் அவர் அந்த தனிமையை எதிர்கொள்ளும் முறை மிக முக்கியமான உளச்சித்தரிப்பு. அறையை தன் உலகமாக உருவகித்துக்கொள்கிறான். அதை பெண்டுலம் போல குறுக்கும் மறுக்கும் நடந்து நடந்து, அந்த காலடிகளை எண்ணி, தன் காலத்தை உருவாக்கிக் கொள்கிறான். வெளியும் காலமும் உருவாகும்போது வாழ்க்கை அங்கும் உருவாகி விடுகிறது. அதன்மூலம் தனிமையை வெல்கிறான். ஒரு தனிமனிதனே சமூகமாக ஆவதுதான் அது. அவ்வாறுசெய்யாதவர்கள் மனப்பிறழ்வடைந்து சாகும்போது அவன் மீள்கிறான்.

சினிமாவில் அந்தச் சிறைக்காட்சி நம் கற்பனை உருவாக்கிய அதிர்ச்சியை அளிப்பதில்லை. ஆனால் மேலிருந்து காவலன் ‘கருணைகூர்ந்து’ கீழே உதிர்க்கும் சிகரெட்டை காலால் மிதித்து தேய்க்கும் கைதியின் சுயமரியாதையும், பூரானக்கூட பிடித்துத் தின்னும் அளவுக்கு அவன் கொள்ளும் கடும் பசியின் மனப்பிறழ்வும் காட்சி வடிவில் மேலும் உலுக்குகின்றன.

ஷாரியரின் தன்வரலாற்றை வேகமான காட்சிப்படுத்திய படத்தின் மூன்று தருணங்கள் முக்கியமானவை. தப்பி ஓடி தொழுநோயாளிகள் மட்டும் வாழும் தீவொன்றை அடையும் ஷாரியர் அவர்களிடம் உதவிகேட்கிறான். தொழுநோயாளி தன் வாயில் வைத்த சிகரெட் ஒன்றை எடுத்து நீட்டுகிறான். சற்றும் தயங்காமல் அதை தன்வாயில் வைத்து ஷாரியர் இழுக்கிறான். தொழுநோயாளி புன்னகை செய்கிறான். ‘என் நோய் தொற்றாது’ என்கிறான். அவன் எதிர்பார்த்தது சகோதரத்துவத்தை மட்டுமே. அனைத்து உதவிகளையும் செய்கிறான் அவன். அந்த நோயாளி ஒரு தொப்பியை நீட்ட அதில் அந்த தீவின் தொழுநோயாளிக் கைதிகள் தங்களிடமிருந்த பணத்தை போடுகிறார்கள். ஷாரியர் மானுட சகோதரத்துவத்தை உணரும் கணம் அது.

இது நூலில் உள்ள இடம். ஆனால் இந்த திரைப்படத்தின் உச்சம் என நான் நினைக்கும் காட்சி நூலில் இல்லாதது, நூலின் சாரமாக திரைக்கதையாளரால் எழுதப்பட்டது. தனிமைச்சிறையில்; ஒரு மனப்பேதலிப்பின் தருணத்தில் ஷாரியர் சுதந்திரம் மீதான நம்பிக்கையை சில கணங்களுக்கு இழக்கிறான். அப்போது ஒரு கனவுக்காட்சி, அல்லது உருவெளிக்காட்சி தெரிகிறது. ஒரு உயர்ந்த இடத்தில் பிரெஞ்சு நீதிபதியும் அரசு வழக்கறிஞர்களும் ஜூரிகளும் தோன்றுகிறார்கள். அவர்கள் கைநீட்டி குற்றம் சாட்டுகிறார்கள். ‘ ஹென்றி ஷாரியர், நீ குற்றவாளி’ திக்பிரமையுடன் அதை கேட்டு நிற்கிறான் ஷாரியர். அவர்கள் சொல்கிறர்கள் ‘நீ சுதந்திரத்துக்கான விழைவை இழந்து விட்டாய். அதில் சமரசம் செய்துகொண்டாய். ஆகவே நீ குற்றவாளி’ ஷாரியர் மனம் சோர்ந்து மெல்ல பின்னடைகிறான். ‘’ஆம் குற்றவாளி…நான் குற்றவாளி’’ என்று பின்னகர்ந்து இருளுக்குள் செல்கிறான். ஒரு ’ஷேக்ஸ்பீரியன்’ கற்பனை இந்தக் காட்சி. இந்த ஒரு காட்சியை எழுதியதன் வழியாக திரைக்கதையாசிரியர்கள் மூலத்தை எழுதிய ஹென்றி ஷாரியரை தாண்டிச்செல்கிறார்கள்.

திரைப்படத்தின் கடைசிக் காட்சியும் நூலின் சாரத்தில் இருந்து முளைத்த அபாரமான காட்சியாக எனக்குப் பட்டது. நூலிலேயே அந்தக் காட்சி மிகவிரிவாக உள்ளது. தான் தங்கியிருக்கும் செங்குத்தான கரைக்குக் கீழே உக்கிரமாக அலையடிக்கும் கடலில் பல அலைகளுக்கு ஒருமுறை ஒரு பேரலை வருகிறது என்றும் அதில் குதித்தால் அலையே ஆழ்கடலுக்குள் கொண்டு சென்றுவிடும் என்றும் ஷாரியர் கண்டுபிடிக்கிறான். கொப்பரைகளைச் சேர்த்துக் கட்டி தெப்பம்செய்து அதில் ஏறி தப்பி சென்று விடலாம் என்று திட்டமிடுகிறான். முதல் சிலமுறை அவன் போட்டுபபர்த்த கொப்பரைத்தெப்பங்களை அலை சிதறடிக்கிறது. அவனுடன் வருவதாகச் சொன்ன நண்பன் பின்வாங்கிவிடுகிறான். ஆனால் ஷாரியர் கடைசியில் அந்த பெரிய அலைமேல் ஏறி தப்பி விடுகிறான், அதுவே கடைசி விடுதலை.

சினிமாவில் ஆச்சரியமாக இக்காட்சி அற்புதமான குறியீடாக மாறியிருக்கிறது. விடுதலையின் முடிவிலாப் பெருவெளியாகிய கடல் ஷாரியரை சோதிக்கிறது. மீண்டும் மீண்டும் அவனை தோற்கடிக்கிறது. ஆனால் அவன் முயன்றுகொண்டே இருக்கிறான். கடைசியில் சுதந்திரதேவியின் வல்லமை மிக்க அந்தக் கரம் ஒன்று வந்து அவனை ஏந்திக்கொண்டு தனக்குள் எà

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2023 10:35

சி.கே.சுப்ரமணிய முதலியார்

பெரிய புராணத்திற்கு பலர் பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளனர், ஆறுமுக நாவலர் எழுதிய உரையை முடிக்கவில்லை. முழுமையான உரையை எழுதியவர் சி.கே.சுப்ரமணிய முதலியார். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோவை நகர்மன்றத்தில் துணைத்தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்

சி.கே.சுப்ரமணிய முதலியார் [image error] சி.கே.சுப்ரமணிய முதலியார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2023 10:33

மணல்கடிகையில் காலம்- கதிர் முருகன்

எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி

மணல்கடிகை தமிழ் விக்கி

நாவல்களை வாசித்தல் என்பது ஒரு வகையில் நாமே அசௌகரியத்தை சுமையை வலியை தேடிப்போவது போலத்தான்.அறியாத நிலத்தை பழகி இருக்காத பண்பாட்டை முற்றிலும் புதிய வாழ்க்கையை வாசிப்பது பரவசமாக தொடங்கி உற்சாகமாக சென்றாலும் இறுதியில் எஞ்சுவது வலி சோர்வு தான். ஓநாய் குல சின்னம் போல.இயற்கையின் பிரம்மாண்டத்தை பேரழகை  அணு அணுவாக ருசிக்கத் தந்து கடைசியில் அதன் அழிவை காட்டும் வனவாசி காடு நாவல்களை போல.வலியின்றி வளர்ச்சியில்லை…

என்னளவில் நாவலின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் ஏனைய காரணிகளை விட மொழி சார்ந்த எழுத்தாளரின் நுண்ணுணர்வு மிக மிக முக்கியமானது.மொழியை ஊடகமாக கொண்டு தான்  படைப்புக்குள் நாம் நுழைகிறோம்.

இந்த நாவலில் கையாளப்பட்டிருக்கும் மொழி நடை பெரும்பாலும் எவ்வித பற்றும் பரவசமும் இல்லாத  விலகலோடுகூடிய மிகை உணர்ச்சிகள் அற்ற நேரடியான யதார்த்தமான  கூறுமுறை தான். என்னுடைய வாசிப்பில் எழுத்தாளரது இயற்கை நிலக்காட்ச்சி வர்ணிப்பும்   கனவுகளை பற்றி பேசும் இடங்களும் காதல் மற்றும் புணர்வு தருணங்களும் மிக சுவையான வாசிப்பணுபவம் கொண்டவை. இந்தப் பகுதிகள் ஒரு விதமான பறத்தல் அனுபவம் தருபவை கவிதைக்கு நெருக்கமான பகுதிகள் மேலே சொன்னவை.

சிவராஜ், திருச்செல்வம் பரந்தாமன், அன்பழகன், சண்முகம் ஐந்து நண்பர்களின் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு தொடங்கி அடுத்த இருபத்தைந்து ஆண்டு கால வாழ்க்கை தான் மொத்தநாவலின் களம். முதலில் சைக்கிளில் ஐவரும் கதித்த மலை ஒன்றாக செல்கிறார்கள். இரண்டாவது பயணம் கம்பெனி காரில் சிவன்மலை.மூன்றாவது பயணம் ஓதிமலை. நான்காவது பயணம் திரு வாங்கிய காரில் ஐவரும் அலகுமலை செல்கிறார்கள், ஐந்தாவது பயணம் சிவாவின் குவாலிஸ் காரில் சென்னிமலை ஐந்துமே முருகன் ஆலயங்கள். சைக்கிளில் தொடங்கி டொயோட்டா குவாலிஸ் வரையிலான ஐந்து பயணங்களின் இடைவெளிகளில் நிகழும் வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு தான் நாவல்.

முதல் அத்தியாயத்திலேயே ஐவரைப் பற்றிய துல்லியமான வரையறை வெளிப்படுகிறது. மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட்டை குறுக்கு வழியில் பூந்தாவது வேகமாக கடந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறான் சிவா வாழ்க்கையிலே  எல்லாவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே இருக்கிறான். சித்தர் சாமி மூலம் ஆண்மீகம், ராஜாமணி மூலம் இலக்கியம், கம்யூனிசம் போன்ற மூன்று பெரிய அலைகளை சூழல்களை எதிர்கொண்டும் எதிலும் அவனால் ஈடுபட முடியவில்லை மேலும் மேலும் பொருள் சேர்க்க வேண்டும் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு விரிய வேண்டுமென்ற விழைவே சிவா.எதை முன்னேற்றம் என்று நினைத்தானோ அந்த முன்னேற்றமே அவன் இருப்பை அர்தமற்றதாக்கும் ஏமாற்றத்தில் முட்டி நிற்கிறான்.

இளமையில் அறிமுகமான ஆன்மீக செயல்பாடுகளில் மேலும் மேலும் விரிந்து திரும்ப முடியா எல்லை வரை சென்றவர்களையும் திருப்பூரில் நான் பார்த்திருக்கிறேன் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் கம்யூனிச செயல்பாடுகளில் ஈடுபட்டு நக்சல்பாரி இயக்கங்கள் வரை சென்று வாழ்வை தொலைத்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.

சண்முகத்துக்கு  அன்றாடம் குறித்த இந்த கவலையும் இல்லை சொத்து வாழ்க்கை வசதிகள் புலன் இன்பங்கள் என செழிப்பான வாழ்க்கை. இயல்பிலேயே விதவிதமான காமத்தையும் இலக்கிய ஆர்வத்தையும் தன்னுடைய வெளிப்பாடுகளாக கொண்டிருக்கிறான்.  இரண்டிலுமே  தோற்றுப் போகிறான்.திருப்பூரின் இயல்பான தளகதியோடு ஒட்ட முடியாதவனாக இருக்கிறான் திரு அவன் வாழ்வு முழுவதுமே  அன்றைய காலகட்டத்தின் மனநிலைக்கு பெரும் போக்குக்கு எதிர் திசையிலேயே இருக்கிறது கடைசி வரையிலும்.எல்லா திறமையும் இருந்தாலும் எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் நல்ல விளைவையே தந்தாலும் இறுதியில் செவன் ஸ்டாரில் கட்டிய சீட்டு போல நடுத்தெருவில் நிற்கும் தலைவிதி அன்பழகனுக்கு.

இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து வந்து திருப்பூரில் வாழ்வாதாரத்தை திடமாக நிலைநாட்டிக் கொள்வோர் லட்சக்கணக்கில் இருந்தாலும். திருப்பூரில் இருந்து குவைத்திற்கு பிழைப்பு தேடி செல்ல வேண்டி இருக்கிறது பரந்தாமனுக்கு. படுதோல்வி அடைந்த இரண்டு திருமணங்களின் ஆறாத வடுவோடு கழிகிறது வாழ்க்கை.என்னதான் பள்ளி கல்லூரி நட்பாக இருந்தாலும் பொருளாதாரத்தில், அந்தஸ்தில், அறிவு நிலையில், பெரும் வேறுபாடுகளை கொண்ட நட்புகள் நெடுங்காலம் நீடிப்பதில்லை. வறுமையும் தகுதிகளில் இருக்கும் இடைவெளிகளும் ஒற்றுமையை தருவதில்லை பெரும்பாலும் வேற்றுமையை வளர்க்கத்தான் செய்யும். சண்டையிடுவதற்கு பிரிவதற்கும் காரணிகள் இருந்தாலும் கடைசி வரை நண்பர்கள் அனைவரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள்.

நவாப்,பாக்யா,உமா, ரத்னவேல் செட்டியார், சுப்பிரமணிய,அருணா,சித்ரா,விமலா, சம்பங்கி,நாட்றாயன்,கண்ணம்மா,குடுமி அண்ணாச்சி போன்ற ரத்தமும் சதையுமாக எழுந்து வரும் நிறைய  பாத்திரங்கள். பஸ் ஸ்டாண்டில் வேலை தேடுபவர்களை பிடிக்கும் மாதவன் திரைப்படம் எடுக்கச் சென்று சொத்தை வாழ்வை தொலைத்தவர்கள், மேம்பால பைத்தியம், என்ன என்றென்றும் நம் நினைவில் நிற்கும்படியான பாத்திரங்களை படைத்திருப்பது இந்த நாவலின் சிறப்புக்களில் ஒன்று.

கால மாற்றத்தை யாரும் எதிர்த்து வெல்ல முடியாது மாற்றம் மாறாத பெருவிசை. நூற்றாண்டுகளாக நிகழ்ந்து வந்த திருப்பூரின் பல்வேறு பாரம்பரிய தொழில்களை நசித்து விட்டு தான் அந்த இடத்தில் பனியன் தொழிற்சாலைகள் பெருகுகின்றன. நெசவுத் தொழில் பாத்திர தொழிற்சாலைகள், விவசாயம் என. மக்களுக்கும் குறைந்த வருவாயும் கடுமையான உழைப்பும் கொண்ட சூழலில் இருந்து பணியன் கம்பெனி வேலை ஒரு பெரிய மீட்சியாக தெரிகிறது ஆரம்பத்தில். குறைந்த வருவாயும் கடுமையான உழைப்பும் இருந்தாலும் பாரம்பரியமான மரபான தொழில்களில் இருந்த அக நிறைவினை திடீர் பனியன் கம்பெனி பெருக்கம் எல்லோருக்கும் வழங்கி விடுவதில்லை. மேலும் இந்த புதிய மாற்றங்களின் எதிர் விளைவாக நொய்யல் நதி நாசமாகி ஒரத்துப்பாலம் அணையே விஷக்கடலாக மாறி பல லட்சம் மக்கள் உண்ணும் உணவிலும் நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும்  சாயக்கழிவுகள்  கலந்து தலைமுறைகளையும் அழிக்கும் நோய்க்காரணியாகியிருக்கிறது. எற்றுமதிக்கும் வேலை வாய்ப்பிற்க்கும் அன்னியச் செலவானிக்கும் கொடுத்த விலை இது. இன்னும் ஒரு 25 ஆண்டுகள் கழித்த பின்பு தான் நிகர லாபநட்டம்  தெரிய வரும். ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளும் ஈரோடு பவானி சாயப்பட்டறைகளும் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றிது. இலங்கையிலும் பங்களாதேஷிலும் இப்போது பனியன் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. நாளை ஆப்பிரிக்காவிலும் இது நடக்கலாம். ஆகவே இந்தக் களம் உலக பொதுவானது.

நாவல் நிகழும் காலகட்டத்தில் நாட்டைக் குலுக்கிய முக்கிய வரலாற்று திருப்பங்களையும் ஆங்காங்கே காலக்கணிப்பிற்கு உதவியாக தொட்டுச் செல்கிறது. இந்திரா காந்தி கொலை, கோவையில் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பு பற்றிய குறிப்புகள்.வீரப்பனை சுட்டுக்ககொன்றது, இந்திய வரலாற்றோடு தொடர்புடைய திருப்பூரின் இடங்கள் காந்தி தங்கிய வீடு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எரிக்கப்பட்ட காவலர்கள் பற்றிய இடங்கள் நன்று.

அதாரது, ரீவ்(லீவ்), சித்தநேரம், எத்தனாப்பு பன்னென்டு, கடேசி, சாலியா, ராஸ்கோல், எதுர்ல, சீராடிட்டு, அக்கியானம், நிக்கோணும், திரும்போணும் இதுபோன்ற பல நூறு கொங்கு தமிழ் சொற்கள் இயல்பாக நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அழகு.

நான் பிறந்தது வளர்ந்தது தொழில் செய்தது முப்பத்தி இரண்டு வருடங்கள் வாழ்ந்தது எல்லாமே திருப்பூரில் தான்.  1982 ல் பிறந்து 2013 வரை. அதன் பின்பு வயநாடு அட்டப்பாடி இப்போது கோவை என வசித்தாலும் பெற்றோர் உடன் பிறந்தோர் உறவுகள் நட்புகள் என என் வேர் இருப்பது இன்னும் திருப்பூரில் தான்.

நாவலில் விவரிக்கப்படும் தெருக்களில் ஆலயங்களில் தொழிற்கூடங்களில் மலைகளில் பள்ளிகளில் என் காலடி படாத ஒரு இடம் கூட இல்லை. சில ஆண்டுகள் பனியன் ஏற்றுமதி நிறுவனத்திலும் வேலை செய்திருக்கிறேன். ஆறாம் வகுப்பு இறுதியாண்டு விடுமுறையில் எட்டு மணி நேர வேலைக்கு ஐந்து ரூபாய் சம்பளத்தில் அடுக்கிக்கட்டும் வேலையை செய்திருக்கிறேன்.

எட்டாம் வகுப்போடு நின்று போன என் கல்விக்கு பின் இந்நாவலின் நாயகன் என்று சொல்லத்தக்க சிவாவை போல் குழந்தை தொழிலாளியாக பனியன் நிறுவனங்களில் பல்வேறு வேலைகளை செய்து இருக்கிறேன்.

இந்நாவலின் கதாபாத்திரங்களில் பெரும் பகுதியை தனிப்பட்ட முறையில் நான் நேரிலேயே அறிவேன். இந்நாவல் அர்ப்பணிக்கப்பட்டிருப்பதும் என் நெருங்கிய நண்பர் கோவிந்தராஜன் அவர்களுக்குத்தான்.

வாசிப்பு என்பது நிகர் வாழ்வு என்று சொல்வார்கள் உண்மையில் இது என் நிஜ வாழ்வு. நெடுங்காலம் நான் வாழ்ந்த  என்னை சுற்றி நிகழ்ந்த வாழ்வு. இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் குறைந்தது பத்து மடங்காக விரித்துக் கொள்ளும் அளவுள்ள சம்பவங்களின் தொகுப்பு நினைவின் அடுக்குகளில் இருந்து எழுந்து வந்து கொண்டே இருந்தது. நினைவேக்கத்தை கிளறி விடுகிறது என்பதல்ல அதைத் தாண்டியும் முப்பது ஆண்டு வாழ்வை வாழ்ந்த ஊரை பழகிய மனிதர்களை பல்வேறு கோணங்களில் பார்க்கவும். அவர்களாகவே சிறிது நேரம் இருந்து வாழ்ந்துணரும்  வாய்ப்பை நாவல் எனக்குத் தந்தது.

உலகெங்கும் இருந்து பல லட்சம் பேர் திருப்பூருக்கு வந்து வேலைகள் செய்து தொழில்கள் செய்து வாழ்ந்து வந்தாலும் நான் திருப்பூரை விட்டு வெளியேறும் வேறு ஒரு நல்ல இயற்கை சூழ்ந்த மலையடிவார ஆற்றோரத்தில் வாழும் கனவோடு தான் எப்போதும் இருந்தேன். அதன் பொருட்டே வயநாட்டிலும் அட்டப்பாடியிலும் சென்று வாழ்ந்தேன். சென்னை கோவை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்களுக்கு இணையாக 2006ம் ஆண்டிலேயே தமிழகத்தின் முதல் பத்து அங்காடிகளில் ஒன்றாக என்னால் இயற்கை அங்காடி துவங்கி வெற்றிகரமாக நடத்த முடிந்ததற்கு திருப்பூரின் வளமான பொருளாதாரம் பின்னணியும் ஒரு காரணம்.

என்னால் ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாத பவர் டேபிள் கோன் வைண்டிங் பேப்ரிகேஷன் எந்திரங்கள் ஓடும் சப்தமே ஒடுக்குமுறைகளும் வறுமையும் நிறைந்த பின் தங்கிய கிராமங்களில் இருந்து வந்த லட்சக்கணக்கான பேருக்கு இனிய ஓசையாக இருந்ததை இப்போதும் இருப்பதை புரிந்து கொள்கிற அதே நேரத்தில் சரி தவறு நன்மை தீமை வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் எப்போதும் தனிநபர்களை பொறுத்து அவர்கள் இருக்கும் நிலையை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் ஒன்று தானா. பல ஊர்களில் வாழ்ந்து பார்த்து சென்னை உள்ளிட்ட இந்தியாவின் எந்த ஊரிலும் சென்று வாழ வாய்ப்பு இருந்தும் பல காரணங்களால் விரும்பி தேர்வு செய்து இப்போது மனதிற்கு மிகவும் உகந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கோவையும் ஒரு நாள் கசக்குமா…

ஆழ்மனதை ஊடுருவும் என் ஆளுமையை மாற்றி அமைக்கவல்ல பெரிய அறிதல்கள் நாவல் மூலம் எனக்கு திறக்கவில்லை. திருப்பூரில் இருந்து இமயமலை நெடுந்தொலைவு தான் குறைந்தபட்சம் நீலகிரி உயரத்தையாவது மேற்கு மலைத் தொடர்களின் மர்மத்தையும் புதிர்களையுமாவது நான் எதிர்பார்க்கிறேன்  வெறும் கதித்த மலை அலகுமலை சிவன்மலை  ஒதிமலை சென்னிமலை குன்றுகள் போதுமானதாக இல்லை. 

ஆயினும் இவ்வைந்து குன்றுகளுக்கும் அதற்கே உரித்தான தனித்தன்மையும் அழகுகளும் உள் மடிப்புகளும் ஆழங்களும் உண்டு இவ்வைந்து குன்றுகளுக்கும் பலமுறை விரும்பி சென்று இருக்கிறேன் சென்று கொண்டே இருக்கிறேன். மனைவி குழந்தைகளை மருத்துவமனை சேர்த்தும் அளவு சிக்கல்கள் இருந்த நாட்களிலும் அதீத சோர்வு தரும் அளவு வேலைப்பளுவில் மூழ்கி இருந்த நாட்களிலும் கூ கீழே ட வைக்க முடியாத அளவு நள்ளிரவு ஒரு மணி இரண்டு மணி மூன்று மணி வரை எல்லாம் நாவலை வாசித்தேன். மிகச் சிறிய பொடி எழுத்துக்களில் நெருக்கி அச்சடிக்கப்பட்ட 550 பக்க நாவல் இது உண்மையில் 750 பக்கம் வரும் இயல்பான எழுத்துருவில் அடித்திருந்தால். நேரமும் சூழ்நிலையும் அனுமதித்திருந்தால் ஒரிரு நாளிலேயே படித்து முடித்திருப்பேன் நாவலோடு ஒழுகிச்செல்வது அவ்வளவு சுகமாக இருந்தது.

கடைசி அத்தியாயம் வாசித்து முடிக்கையில்  பெரும் வெறுமை சோர்வு.

மனித வாழ்வே ஒரத்துப்பாளையம் அணை போல முழுக்க நீர் நிரம்பியிருந்தாலும் மின்னி ஒளிர்ந்தாலும் எதற்க்கும் பயனற்று எல்லா வகையிலும் தீங்கு சூழ்ந்ததுதானென்றால் என்னதான் செய்வது…

மு.கதிர் முருகன்

மணல்கடிகை வாங்க

சுரேஷ் பிரதீப் எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை பற்றி

http://manalkadigai50.blogspot.in/2017/12/blog-post_8.html?m=1

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2023 10:31

கேரள இலக்கியவிழா- கடிதங்கள்

கேரள இலக்கிய விழா

அன்புள்ள ஜெ, 

வணக்கம். கேரள இலக்கிய விழாவில் கே.சி. நாராயணன் வழிநடத்திய உரையாடலைக் கேட்டேன். அவர் அளித்த அறிமுகக் குறிப்பு வேறெந்த மேடைகளில் அளிக்கப்பட்டதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. பேச்சில் அமைந்த கதைத்தன்மை கூட்டத்தைச் சிதறவிடாததையும் கவனிக்க நேர்ந்தது. 

இறுதியில் கே சி ஆர் ஒரு மட்டுருத்துனராக மட்டும் அவ்வரங்கில் இருப்பதை நினைத்து வருந்தினீர்கள். அன்றைய தினத்தில் உங்கள் வருகைக்கு முன் அவருக்கென ஒரு தனி உரையாடல் பால் சக்கரியாவுடன் இருந்தது. அதில் அவர் மாத்ருபூமி வார பத்திரிக்கையின் பொறுப்பாசிரியராக இருந்தபோது ஓய்வுபெற்ற குடிமைப்பணி அதிகாரிகள், எழுத்தாளர்களையெல்லாம் எங்கனம் இதழுக்கு எழுத வைத்தார் என பேசினார். 

விஜயகுமார்.

***

அன்புள்ள ஜெ

கேரள கலைவிழாவில் உங்கள் உரையாடலை கேட்க வந்திருந்தேன். கேள்விகளும் பதில்களும் சிறப்பாக அமைந்திருந்தன. உங்கள் உரைகேட்க அத்தனைபெரிய கூட்டம் திரண்டிருந்ததைக் கண்டு திகைப்பு உருவானது. கேரளத்தின் பெரிய எழுத்தாள நட்சத்திரங்களுக்குக் கூட அந்த கூட்டம் இல்லை. நீங்களும் மிக நிமிர்வுடன் பேசினீர்கள். மலையாளிகளின் இயல்புகளைக் கண்டிப்பதற்கு தயங்கவில்லை. மலையாளிகள் காடுகள் மேல் கொண்டிருக்கும் மனநிலை, அதைப்பற்றி யானைடாக்டர் வசையாகச் சொன்ன சொல்லை அங்கே குறிப்பிட்டீர்கள். மலையாளிகள் பொதுவாக பயன்படுத்தும் க்ளீஷேக்களை கண்டித்தீர்கள். உங்களை கண்டிக்க துணிவில்லை என்றால் எழுதவே வந்திருக்கவேண்டியதில்லை என்று சொன்னீர்கள். ஆனால் அந்த நிமிர்வை அரங்கம் ரசித்தது என தோன்றியது. அந்தக்கூட்டமே அந்த நிமிர்வினால்தான் உங்களை நோக்கி வந்தது. தமிழ்நாட்டில் நல்ல கூட்டம் வருவதை கண்டுள்ளேன். கேரளத்தில் வந்த இந்த கூட்டம் பலமடங்கு. நீங்கள் அங்கே ஒரு கொண்டிருக்கும் இடம் தெரிகிறது. நிறையபேர் உங்கள் நூல்களையும் வாங்கியிருந்தார்கல்

ராஜசேகரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 03, 2023 10:30

February 2, 2023

ஈரோடு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட அலுவலகம்

நண்பர்களே,வரும் 4.2.23 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள புதிய விஷ்ணுபுரம் அலுவலக திறப்பு நிகழும். உடன் Ippo pay சேவை அலுவலகமும் திறக்கப்படும். குக்கூ சிவராஜ், Dr ஜெகன், அனீஷ் கிருஷ்ணன் நாயர், லோகமாதவி ஆகியோர் கலந்து கொண்டு இதை நிகழ்த்த இருக்கிறார்கள். பின்னர் சில இலக்கிய ஆக்கங்கள் மீது கலந்துரையாடல் நிகழும். வர விரும்புபவர்கள் முன்பே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.நண்பர்களை அழைக்கிறோம்.கிருஷ்ணன்,விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்ஈரோடு.98659 16970.salyan.krishnan@gmail.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 18:33

ஈரோடு விஷ்ணுபுரம் இலக்கியவட்ட அலுவலகம்

நண்பர்களே,வரும் 4.2.23 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு ஆசிரியர் காலனியில் உள்ள புதிய விஷ்ணுபுரம் அலுவலக திறப்பு நிகழும். உடன் Ippo pay சேவை அலுவலகமும் திறக்கப்படும். குக்கூ சிவராஜ், Dr ஜெகன், அனீஷ் கிருஷ்ணன் நாயர், லோகமாதவி ஆகியோர் கலந்து கொண்டு இதை நிகழ்த்த இருக்கிறார்கள். பின்னர் சில இலக்கிய ஆக்கங்கள் மீது கலந்துரையாடல் நிகழும். வர விரும்புபவர்கள் முன்பே தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.நண்பர்களை அழைக்கிறோம்.கிருஷ்ணன்,விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்ஈரோடு.98659 16970.salyan.krishnan@gmail.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 18:33

திருப்பூர் கட்டண உரை, பொதுவில்…

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்..

தாங்கள் பெங்களூரில் ஆற்றிய உரையை காண பல நண்பர்கள் அழைத்த வண்ணம் உள்ளனர்.

கட்டண உரைகள் 60 நாட்கள் கழித்து தான் கட்டண பார்வைக்கு (சேனல் membership ல் கட்டணம் கட்டி) தான் பார்க்க முடியும்.6 மாதங்கள் கழித்து தான் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும்..

தற்போது 10/04/22 அன்று தாங்கள் திருப்பூரில் ஆற்றிய கட்டண உரைபொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. (சுட்டி இணைப்பு) இதனை பார்வையிட membership தேவையில்லை.

ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்இணைந்து நடத்திய நிகழ்வில்
ஜெயமோகன் உரை

நன்றி,
கபிலன்.
ஆசிரியர்.
shruti.tv

அன்புள்ள கபிலன்

நன்றி

இந்தக் கட்டண உரைகளை உருவாக்கும்போது தோன்றிய எண்ணமே அவை பற்றிய கவலையே இல்லாமல், எவருக்கும் புரியவைக்க முயலாமல், எனக்குத் தோன்றியதை பேசவேண்டும் என்றுதான். என் சிந்தனைகள் எந்த திசையில் செல்கின்றன என்று நானே பார்க்கவேண்டும். இது ஒருவகையான கூட்டுச்சிந்தனை. எனக்கிணையாக வரும் ஒரு சிறு குழு உடனிருக்கவேண்டும். கட்டணம் அதற்காகவே.

அந்த கூட்டுச்சிந்தனை பயன் தந்தது. பல புதிய எண்ணங்கள் தோன்றின. பல திசைகளில் வழிதவறுதலும் நிகழ்ந்தது. ஆனால் இவை பேருரைகள் அல்ல. இவை பொதுமக்களுக்கானவை அல்ல. என்னை அணுக்கமாகத் தொடர்பவர்களுக்குரியவை.

பொதுவாக நம் சூழலில் அரசியலால் அல்லது சினிமாவால் உருவாக்கப்படும் உரையாடற்களம் (discourse) மட்டுமே உள்ளது. சினிமாவால் அது எப்படி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என அறிவேன். ஆகவே அதிகார அரசியல் அதை எப்படி கட்டமைக்குமென்றும் ஊகிக்க முடிகிறது. அதற்குள் சென்று உரையாடுவதில் எனக்கு ஆர்வமில்லை. அதில் புதியதாக எதுவும் பேசிவிட முடியாது. எந்த பயணமும் சாத்தியமில்லை. அரசியல்வாதிகள் அவர்களே இரண்டு தரப்பை எடுப்பார்கள். இரண்டிலொன்றை எடுத்து அவர்கள் முன்வைக்கும் தர்க்கங்களின்படி பேசிக்கொண்டிருக்கவேண்டும். அவர்கள் அளிக்கும் முத்திரைகள், அவர்கள் அளிக்கும் வசைகளை கையாளவேண்டும். அது சிந்தனைக்கே எதிரான ஓர் அடிமைத்தனம்.

ஆனால் அதில் ஈடுபடுபவர்கள் ஏதோ கருத்துப்போரில் ஈடுபட்டிருப்பதாக ஒரு பாவனையை அடைவார்கள். தங்கள் எதிரிகளை தாங்கள் கண்டடையவில்லை, அரசியலாளர்கள் அவர்களை சுட்டிக்காட்டி சண்டைக்கு அனுப்புகிறார்கள் என்றுகூடத் தெரியாத அப்பாவிகள் அவர்கள்.

இந்த உரைகளை பொதுவில் வெளியிடும் போது கீழே வரும் ’கமெண்ட்’களை சிலசமயம் பார்ப்பேன். ஒரே வகையான வசைகள், ஒரே வகையான உணர்வுநிலைகள். ஒன்றோ இரண்டோ அரசியல்தரப்புகள். அவ்வளவுதான். அதைக்கடந்து வந்தவர்களுக்கு உரியவை இவை. அவர்கள் இந்த உரைகள் வழியாக சொந்த சிந்தனையில் முன்னகர்வார்கள் என நம்புகிறேன்.

ஆனால் ஆச்சரியம் ஒன்றுண்டு, நாமக்கல், திருப்பூர், பெங்களூர் உரைகளுக்குப் பின் பொதுவாக வாசிப்புப்பழக்கம் இல்லாத பெண்கள் பலர் அவ்வுரைகளை கூர்ந்து அறிந்திருப்பதை, உடன் நுட்பமாக பயணம் செய்திருப்பதை, கண்டேன். அவர்கள் அதை உணர்ச்சிகரமாக முன்வைத்தனர். அப்போது தெரிந்தது, இத்தகைய தத்துவ -அழகியல் உரைகளைக் கேட்பதற்கு பலருக்கு இருக்கும் பெருந்தடை என்பது இங்கே பொதுவெளியில் உலவும் சராசரிப் பொதுக்கருத்துக்களும் உணர்வுகளும் அவர்களின் மண்டைக்குள் நிறைந்திருப்பதுதான் என. எதையுமே அவர்களால் புதியதாக அறிந்துகொள்ள முடியாது. எதையும் ஏற்கனவே அறிந்தவையாக மாற்றி அந்தந்த சிற்றறைகளுக்குள் போட்டு மூடவே முடியும். பெண்கள் பெரும்பாலும் இந்த அரசியல்சார்ந்த மனச்சிக்கல்கள் இல்லாதவர்கள். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அது எனக்கு அளித்த தன்னம்பிக்கை மிக அதிகம்.

நன்று. பொதுவெளியில் உரை வரும்போது சில புதிய செவிகள் எனக்குக் கிடைக்கும். பல பழைய நாக்குகள் சூழச் சுழன்றாலும் கிடைப்பவை எனக்கு லாபம்தான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:35

திருப்பூர் கட்டண உரை, பொதுவில்…

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்..

தாங்கள் பெங்களூரில் ஆற்றிய உரையை காண பல நண்பர்கள் அழைத்த வண்ணம் உள்ளனர்.

கட்டண உரைகள் 60 நாட்கள் கழித்து தான் கட்டண பார்வைக்கு (சேனல் membership ல் கட்டணம் கட்டி) தான் பார்க்க முடியும்.6 மாதங்கள் கழித்து தான் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்படும்..

தற்போது 10/04/22 அன்று தாங்கள் திருப்பூரில் ஆற்றிய கட்டண உரைபொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. (சுட்டி இணைப்பு) இதனை பார்வையிட membership தேவையில்லை.

ஞானகங்கை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்இணைந்து நடத்திய நிகழ்வில்
ஜெயமோகன் உரை

நன்றி,
கபிலன்.
ஆசிரியர்.
shruti.tv

அன்புள்ள கபிலன்

நன்றி

இந்தக் கட்டண உரைகளை உருவாக்கும்போது தோன்றிய எண்ணமே அவை பற்றிய கவலையே இல்லாமல், எவருக்கும் புரியவைக்க முயலாமல், எனக்குத் தோன்றியதை பேசவேண்டும் என்றுதான். என் சிந்தனைகள் எந்த திசையில் செல்கின்றன என்று நானே பார்க்கவேண்டும். இது ஒருவகையான கூட்டுச்சிந்தனை. எனக்கிணையாக வரும் ஒரு சிறு குழு உடனிருக்கவேண்டும். கட்டணம் அதற்காகவே.

அந்த கூட்டுச்சிந்தனை பயன் தந்தது. பல புதிய எண்ணங்கள் தோன்றின. பல திசைகளில் வழிதவறுதலும் நிகழ்ந்தது. ஆனால் இவை பேருரைகள் அல்ல. இவை பொதுமக்களுக்கானவை அல்ல. என்னை அணுக்கமாகத் தொடர்பவர்களுக்குரியவை.

பொதுவாக நம் சூழலில் அரசியலால் அல்லது சினிமாவால் உருவாக்கப்படும் உரையாடற்களம் (discourse) மட்டுமே உள்ளது. சினிமாவால் அது எப்படி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என அறிவேன். ஆகவே அதிகார அரசியல் அதை எப்படி கட்டமைக்குமென்றும் ஊகிக்க முடிகிறது. அதற்குள் சென்று உரையாடுவதில் எனக்கு ஆர்வமில்லை. அதில் புதியதாக எதுவும் பேசிவிட முடியாது. எந்த பயணமும் சாத்தியமில்லை. அரசியல்வாதிகள் அவர்களே இரண்டு தரப்பை எடுப்பார்கள். இரண்டிலொன்றை எடுத்து அவர்கள் முன்வைக்கும் தர்க்கங்களின்படி பேசிக்கொண்டிருக்கவேண்டும். அவர்கள் அளிக்கும் முத்திரைகள், அவர்கள் அளிக்கும் வசைகளை கையாளவேண்டும். அது சிந்தனைக்கே எதிரான ஓர் அடிமைத்தனம்.

ஆனால் அதில் ஈடுபடுபவர்கள் ஏதோ கருத்துப்போரில் ஈடுபட்டிருப்பதாக ஒரு பாவனையை அடைவார்கள். தங்கள் எதிரிகளை தாங்கள் கண்டடையவில்லை, அரசியலாளர்கள் அவர்களை சுட்டிக்காட்டி சண்டைக்கு அனுப்புகிறார்கள் என்றுகூடத் தெரியாத அப்பாவிகள் அவர்கள்.

இந்த உரைகளை பொதுவில் வெளியிடும் போது கீழே வரும் ’கமெண்ட்’களை சிலசமயம் பார்ப்பேன். ஒரே வகையான வசைகள், ஒரே வகையான உணர்வுநிலைகள். ஒன்றோ இரண்டோ அரசியல்தரப்புகள். அவ்வளவுதான். அதைக்கடந்து வந்தவர்களுக்கு உரியவை இவை. அவர்கள் இந்த உரைகள் வழியாக சொந்த சிந்தனையில் முன்னகர்வார்கள் என நம்புகிறேன்.

ஆனால் ஆச்சரியம் ஒன்றுண்டு, நாமக்கல், திருப்பூர், பெங்களூர் உரைகளுக்குப் பின் பொதுவாக வாசிப்புப்பழக்கம் இல்லாத பெண்கள் பலர் அவ்வுரைகளை கூர்ந்து அறிந்திருப்பதை, உடன் நுட்பமாக பயணம் செய்திருப்பதை, கண்டேன். அவர்கள் அதை உணர்ச்சிகரமாக முன்வைத்தனர். அப்போது தெரிந்தது, இத்தகைய தத்துவ -அழகியல் உரைகளைக் கேட்பதற்கு பலருக்கு இருக்கும் பெருந்தடை என்பது இங்கே பொதுவெளியில் உலவும் சராசரிப் பொதுக்கருத்துக்களும் உணர்வுகளும் அவர்களின் மண்டைக்குள் நிறைந்திருப்பதுதான் என. எதையுமே அவர்களால் புதியதாக அறிந்துகொள்ள முடியாது. எதையும் ஏற்கனவே அறிந்தவையாக மாற்றி அந்தந்த சிற்றறைகளுக்குள் போட்டு மூடவே முடியும். பெண்கள் பெரும்பாலும் இந்த அரசியல்சார்ந்த மனச்சிக்கல்கள் இல்லாதவர்கள். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. அது எனக்கு அளித்த தன்னம்பிக்கை மிக அதிகம்.

நன்று. பொதுவெளியில் உரை வரும்போது சில புதிய செவிகள் எனக்குக் கிடைக்கும். பல பழைய நாக்குகள் சூழச் சுழன்றாலும் கிடைப்பவை எனக்கு லாபம்தான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:35

ஆரவல்லி சூரவல்லி

ஆரவல்லி சூரவல்லி கதை பெண்கள் ஆளும் கற்பனை அரசுக்கு எதிரான பாண்டவர்களின் போர் பற்றிய நாட்டார் காவியம். தெருக்கூத்து, நாடகம் ,சினிமா என பல வடிவங்களில் வந்து ஒரு காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்றிருந்தது. பீமனுக்கு ஆரவல்லிக்கும் சேவல்சண்டை எல்லாம் கூட நடைபெறுகிறது

ஆரவல்லி சூரவல்லி கதை [image error] ஆரவல்லி சூரவல்லி கதை – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2023 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.