Jeyamohan's Blog, page 49
July 27, 2025
வேதாசலம், கடிதம்
அன்புள்ள ஜெ ,
வணக்கம். தமிழ் விக்கி தூரன் விருது-2025 ஏற்கவுள்ள தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களின் அந்திமழை பேட்டியை வாசித்தேன். வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம்
இப்பேட்டி அவர் இதுகாறும் செய்தவைகள் குறித்த சித்திரத்தை அளிக்கிறது. கல்வி, வேலை, ஆசிரியர், களப்பணிகள், குடும்பம் எனத் தொட்டுச்செல்லும் பேட்டியை வாசிக்கையில் ஒரு ஆய்வு மாணவனாக மிகுந்த மன எழுச்சியை அடைந்தேன். அப்பேட்டியில் உள்ள எழுத்தைவிட புகைப்படங்கள் அதிகம் பேசுகின்றன. கீழடியில் ஒரு கை பானைமேல் சிநேகமாய் இருக்கிறதென்றால் மற்ற கையும், கால்சட்டையும் கீழடி மண்ணைத் தொட்டு அறிந்திருக்கும் சுவடுகளுடன் இருக்கின்றன. பாரம்பரிய நடைப் பயணம் என்னும் பெயரில் பொதுமக்களுடன் 300க்கும் மேற்பட்ட இடங்களில் உரையாடியிருக்கிறார். மேடை, ஒலிபெருக்கி என எதுவுமின்றி பொதுமக்கள்சூழ அவர் உரையாற்றும் காட்சி கண்டு என் கண்கள் கலங்கின. எவருக்கும் தொல்லியலைப் போதிக்கும் அவரின் பணி மெச்சத்தக்கது. இந்தப்பேட்டி மிக நன்றாக வந்திருக்கிறது. இடையே அங்கங்கே வரும் அனுபவத்தெறிப்புகள் பேட்டியைப் பலமடங்கு சுவாரஸ்யமாக்குகின்றன.
‘களப்பிரர் காலம் இருண்ட காலம் ‘என்று ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால் அது தவறு என்பதற்கு ஆதரவாக ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. சைவம் மறுமலர்ச்சி அடைந்தது அந்தக் களப்பிரர் காலத்தில்தான். அந்தக் காலத்தில்தான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்கள் எழுதப்பட்டன.
எப்போதும் உண்மை அமைதியாகத்தான் இருக்கும். ஆரவாரம் செய்யாது. அறிவார்ந்த செயல் செய்யும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
முதலில் தமிழ்நாட்டு அளவில் பார்க்க வேண்டும்; பிறகு இந்திய அளவில் பார்க்க வேண்டும்;அதன் பின்பு உலக அளவில் பார்க்க வேண்டும் என்கிற பார்வை எனக்கு விரிவடைந்தது.
என்றுமே தமிழ்நாட்டில் மூன்றாவது மொழி இருந்தது இல்லை.
சோழர்கள் பல்லவர்களுடன் ஒப்பிடும் போது பாண்டியர்கள் பற்றி அதிகம் எழுதப்படாத நிலையைக் கண்டேன். பெயர்க் குழப்பம் கூட பாண்டியர்கள் பற்றிப் பெரிய ஆய்வுகள் நடைபெறத் தடையாக அமைந்து பின்னடைவாக இருந்திருக்கலாம்.
என்பனவெல்லாம் மேலும்மேலும் வாசிக்கத் தூண்டுகின்றன. இவையெல்லாம் தமிழ்நாட்டை மேலும் புரிந்துகொள்ள உதவுமென நம்புகிறேன்.
அவர் பணிகள் குறித்து வாசிக்க வாசிக்க அவர்மீதான மதிப்பு பெருகுகிறது. மிகுந்த பொறுப்புணவுடனும் மனஊக்கத்துடனும் தொடர்ந்து களப்பணியாற்றுகிருக்கிறார். வெ.வேதாசலம் அவர்களைக் காட்டித்தந்தமைக்கு நன்றி.
தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.
நன்றி,
விஜயகுமார்.
தேவதேவன், கவிதையின் மதம்
கடந்த ஜுலை 6 அன்று தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனுடன் ஒரு நாள் அமர்வு நடந்தது. கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களின் முன்னெடுப்பில் தொடக்க நிலை கவிதை வாசிப்பாளர்களுக்காக நிகழ்ந்த அமர்வில் 19 பேர் கலந்து கொண்டனர். முன்பே கவிதையின் மதம் புத்தகம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட கவிதை பகுதிகள் பகிரப்பட்டு அனைவரும் வாசித்துவிட்டு வந்திருந்தோம்.
முதலில் தேவதேவன் அவரது கவிதையின் மதம் புத்தகம் சார்ந்து கேள்விகளையும் கவிதை அனுபவங்களையும் அமர்வில் அமைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டது அமர்வு முழுவதற்குமான திசைகாட்டியாக அமைந்தது.
எண்ணங்களற்ற தன்னிச்சையான செயல்கள் அனைத்துமே கவிதை என்றும் அந்தக் கணங்களில் வாழ்வினை தொடர்ச்சியாக அமைத்துக் கொள்வதையே நாம் செய்ய வேண்டும். அதுவே நம் மீட்சிக்கான வழி என்ற தரிசனத்தை முன் வைத்து இப்போது இருக்கும் மதங்களையும் அமைப்பினையும் தத்துவங்களையும் நிராகரிப்பதற்கான தர்க்க பூர்வமான மறுப்பினையும் முன் வைத்திருந்தார். இதற்கு முன் தோன்றிய அனைத்து ஞானிகளாலும் கருத்துக்களாலும் அறிவினாலும் மனிதர்களின் துன்பத்தை போர்களை நிறுத்த முடியவில்லை. எனவே இவை அனைத்தும் தோல்வியடைந்தவையே என்கிறார். நான் எனும் எண்ணங்களை, அடையாளங்களை, மரபினை, பெயரை, நாட்டினை துறந்து எண்ணமற்ற பொழுதில் உருவாகும் செயல்களையே அனைத்திற்கும் மாற்றாக முன்னிறுத்துகிறார்.
இதுவே என் செய்தி
இயேசுவே
மதமாகிய சிலுவையிலிருந்தும்
உம்மை நான் மீட்பேன்
இதுவே என் சேதி என் தந்தையே.
உமது ஆசைகளையும் தோல்விகளையும்
கண்ணீரையும் இரத்தத்தையும்
நான் அறிவேன்.
துயர் நீக்க அறிந்த
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியத்தில்
உம்மை நான்
இளைப்பாற்றுவேன் என் தந்தையே.
கவிதை என்பதை வாழ்க்கையாகவே சொல்கிறார். எல்லா உயர்ந்த தருணங்களும் செயல்களும் கவிதைகளே என்பதே தேவதேவனின் முடிவு. கவிதையை கலையாக்கிவிட்டால் அன்பு செலுத்த முடியாமலாகிறது. எந்திரங்கள் போல கவிதை உற்பத்தி நிகழுமே தவிர அவை கவிதை ஆகாது. உண்மையாக வாழ்ந்தால் எளிமையான சொற்களில் கவிதைகள் வெளிப்படும்.
உதாரணமாக கல்யாணத்தில் கண்ட வணக்கம் சொல்லும் பொம்மையை கண்டபோது அவர் அடைந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
கவிதை உலக வாழ்வை மதிப்பிடுகிறதே என்று கவிதையை உலக வாழ்வு மதிப்பிட முடியாது. கவிதையை கவிதைதான் மதிப்பிட முடியும். வேறு எதற்கும் கவிதையை மதிப்பிட அதிகாரம் கொடுக்கப்படவில்லை.
கவிதை என்பதை ரத்தினமாக பிரமிள் சொல்வதை குறிப்பிட்டு, ரத்தினம் ஒரே சமயத்தில் இயற்கையின் அற்புதத்தின் குறியீடாகவும், பேராசையின் குறியீடாகவும் திகழ்வதன் சிக்கலை அவிழ்த்து வாழ்வை மீட்சிக்கொள்ள செய்வதே கவிதை என்று குறிப்பிடுகிறார்.
நாம் மரணத்திற்கு அஞ்சுவதோ, இறப்பினால் துயரமடைவதோ நம்முடைய தன்னுணர்வினால் நிகழ்கிறது. கவிதையின் மதத்தில் இருப்பவனுக்கு இவை துயரளிப்பதல்ல என்கிறார்.
ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை என்னும் கவிதையில்
ஒரு நாள் என் தோட்டத்தில் ஈரத்தரையில்
உதிர்ந்த ஒரு மலர் போல் அது கிடந்தது
நல்லடக்கம் செய்யும் சுற்றமோ
மறைவுக்குக் கண்கலங்கும் உறவுகளோ
சமூகமோ தேசமோ இன்றி
அது அனாதையாய் மரித்திருந்தது
நெஞ்சுருகும் பார்வையின் முத்தம்
ஒரு கவிதை –
இவைதானோ அதன் மொத்த
வாழ்க்கையின்
மர்மமான இலட்சியம்?
இன்று அது நிறைவேறியதையோ
எளிய உயிர்கள் நூறுகள் கூடி
ஊர்வலமாய் அதை எடுத்து செல்ல
முயல்வதையோ
கண்களில்லாத கால்கள்
அதை மிதித்தபடி செல்வதையோ
ஒரு பெருக்குமாறு அதை குப்பைகளோடு
குப்பையாய்
ஒரு மூலைக்கு ஒதுக்கி விடுவதையோ
எதைப்பற்றிய கவலையுமில்லாமல்
எல்லாவற்றையும் அதுவே
ஒதுக்கிவிட்டதாய்
ஈரமான என் தோட்ட நிலத்தில்
மரித்துக் கிடந்தது அது.
மேலும் இயற்கையின் கருணையை அறியாதவனுக்கு அவர்
ஒரு அனாதைப்பிணம் தனியாக இருப்பதில்லை
அதன் மீது எவ்வளவு ஈக்கள் மொய்த்திருக்கின்றன
என்று சொல்லி செல்கிறார்.
மதம் மனிதனின் நன்மைக்காகவே உள்ளது மனிதர்களே அவற்றை தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற வாதத்தினை முன் வைப்பவர்களை கடுமையாகவே எதிர்க்கிறார். அப்படியானால் உங்களுக்கு மதம் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு அடையாளத்தை சூடிக் கொள்ளும் விழைவு தான் அது என்கிறார்.
கடவுள் எனும் கவிதையில்
மனிதனால் மனிதனுக்கு உருவான துயரத்தை மட்டும்
மனிதனே துடைக்கட்டும் என்று விட்டுவிட்டார்
கடவுள்
மேலும்
அவருக்கே அது புரியாதல்லவா?
என்கிறார்.
அதே போன்றே ஒரு ஆளுமையினை பெரிதாக எண்ணிக் கொள்பவர்களையும் நிராகரிக்கிறார். கவிஞர்கள் அபூர்வ மனிதர்கள் என்பதையோ பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் தோன்றுவார்கள் என்பதையோ, இன்னும் எத்தனை பெரிய மனிதர்களை, தத்துவங்களை, மதங்களை இன்னும் நம் மடத்தனத்தால் உருவாக்கிக் கொள்ளப் போகிறோம்?
உதாரணமாக திருவள்ளுவரின் பற்றுக பற்றறான் பற்றினை பற்று விடற்கு என்ற குறளினைக் கொண்டு அவரை அசாதாரண கவியாக காணும் போதே தோன்றின் புகழொடு என்ற குறளில் அவரை நிராகரிக்கவும் செய்கிறார்.
இது வரையிலான எந்த ஆளுமை வழிபாடும் மக்களுக்கு மீட்பாக அமையவில்லை என்று சொல்லி தன்னையும் அவர் நிராகரிக்கிறார். தனது கவிதைகளை மட்டுமே முன்னிறுத்துகிறார். அதனால் தான் தனது பெயரை தேவதேவன் என்று வைத்துக் கொண்டுள்ளேன்.
உடைந்த பூமியை மீண்டும் ஒட்டுவதற்கு பூமிக்கு வெளியே இருப்பவனால் தான் முடியும் என்கிறார்.
தன்னை நிராகரிப்பது என்பது எத்தனை கடினமானது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டோம். அதில் தன்முனைப்பிற்கும் செயல் விழைவிற்கும் எந்த அர்த்தமும் இல்லை என்பதோடு, கடவுளின் ராஜ்ஜியத்தில் கவிதையின் மதத்தில் வாழ முடியாது போகிறது என்பது பேரதிர்ச்சியாகவே இருந்தது. ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் தனது செயலின் வழியை தேர்வு செய்யவும் அதன் வழியே தன்னை ஆராய்ந்து வெளிப்பட்டு இந்த வாழ்வினை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைத்தவர்களுக்கு ஒன்றுமே எண்ணாமல் நீங்கள் செய்யும் செயலே முதன்மையானது என்று சொல்பவர் உருவாக்கும் பதற்றம் வெவ்வேறு கேள்விகளாக வெளிப்பட்டது.
தேவதேவனின் தரிசனத்தின் முன்னோடிகளாக ஜே கிருஷ்ணமூர்த்தி, புத்தர் இவர்களை குறிப்பிட்ட போது, மீண்டும் நீங்கள் ஆளுமை உருவாக்கத்தின் சிக்கலில் மாட்டிக் கொள்கிறீர்கள் என்றார். நீங்கள் எந்த ஆளுமையையும் முன்னிறுத்தாவிட்டல் இந்த தரிசனத்தை முன்னெடுப்பு செய்வது எவ்வாறு என்ற கேள்விக்கு, ஒவ்வொரு காலத்திலும் இந்த தரிசனத்தோடு மனிதர்கள் உருவாகி வருவார்கள் என்ற நம்பிக்கையை முன் வைத்தார்.
ஒரு உரையாடல்
நான் இல்லாதபோது, அன்பே
நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்க
வேண்டும் என நீ ஆசைப்படுகிறாயோ?
என் செயல்களை அறியும் ஆர்வமோ?
நீ இல்லாத போது
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்
என்பதை யோசித்துப் பார்.
அதுவேதான்,
அதுவே நாம் அடைய வேண்டிய
வழியும் ஓளியும் வாழ்வும்!
இந்த கவிதையின் தருணத்தை குழந்தைமையாக களங்கமின்மையாக ஒவ்வொருவரும் அறிந்து தான் இருக்கிறார்கள். அதை அறியாத ஒரு மனிதனும் இல்லை. இந்த கால இடமற்ற கவிதையின் கணத்தில் வாழும் மனிதன் கடவுளாகவே இருக்கிறான். அந்த கவிதை தருணம் தான் நாம் வாழ வேண்டிய மதம் என்று உணர்ந்து வாழ்வாக மாற்றிக் கொள்வதையே நாம் செய்ய வேண்டியது, மனிதன் தனது காம குரோத மோகங்களுக்காக பல சாக்கு போக்குகளை தேடிக் கண்டுபிடித்து கொள்கிறான் என்கிறார்.
அப்போது
எல்லோரும் இப்படி ஆகமுடியும்
எல்லாவற்றையும்
களைந்து நின்ற
காலமற்றபோதே
கடவுளானேன்
இதைச் சொல்லும்
இப்போது தவிர.
கடவுளின் போது
நானில்லை
நீயுமில்லை
ஒரு சொல்லுமில்லை
காதலும்
செயலும் மட்டுமே
இருந்தன அப்போது.
இந்த சமூக கட்டமைப்பிலிருந்து தப்பிக்கும் வழியாகவே ஆண்டாளும் காரைக்கால் அம்மையாரும் பக்தியை பற்றிக் கொள்ள நேர்ந்தது. காரைக்கால் அம்மையார் பேயுருக் கொண்டார் என்பதையும் இதே கோணத்தில் புரிந்து கொள்ளலாம் என்று கூறியது புதிய பார்வையாக இருந்தது.
இங்கிருக்கும் கடவுள் சிலைகளும் கோவில்களும் தேவையற்றதும் தோல்வியடந்தவையுமாக இருக்கிறது. இவை இருப்பதினால் தான் இயற்கையை மனிதன் பார்க்க மறுக்கிறான். அதன் பெருங்கருணையையும் இயற்கையை தாண்டிய ஒத்திசைவையும் அறிந்து கொள்ளாது போகிறான்.
ஒரு மரத்தைக் கூட காண முடியவில்லை
ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்க வைத்துவிட்டுப்
போவேன்
வெட்ட வெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிப்பெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பது போல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக
விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை
அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும்
தீவுகளையும்
வானமோ அனைத்தையும்
அறிமுகப்படுத்திவிடும்
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து
விட்டுப் போவென்
இந்த பெருங்கருணையையும் பேரன்பையும் மனிதன் உணர்ந்து கொண்டால் அவனுக்கு வெறுப்பு உணர்வே இல்லை. என்னை உங்களால் கோவப்பட வைக்க முடியாது. நான் கடவுளின் ராஜ்ஜியத்தில் 40 வருடங்களாக வாழ்ந்து வருவதை என்னுடைய கவிதைகளை படிக்கும் போது என்னால் உணர முடிகிறது.
பிரமிள் அவரது வெறுப்புணர்வினால் தான் அவருக்கு நிறைய எதிரிகளை உருவாக்கி கொண்டு எதிர்ப்பவராக சுருங்கிப் போனார். தமிழ் இலக்கியச் சூழல் அவரை பலி கொண்டது. பிரமிளின் கருத்துக்களை அவரை விட தீவிரமாகவும் அதிகமாகவும் சொல்லியிருக்கும் நான் அனைவருக்கும் அன்புக்கு உரியவனாகவே இருக்கிறேன். ஏனெனில் இந்த எதிர்ப்புக் கவிதைகளை மனிதர்களின் மீது கொண்ட அன்பினால் தான் நான் எழுதியிருக்கிறேன்.
ஒசாமா பின்லேடன்
எவ்வளவு கம்பீரமாய் ஒலிக்கிறது உன் பெயர்
என் பெயரைப் பொலவே
உன்னைப் போலவே
ஒவ்வொரு கவிஞனும் – நானும் –
ஒரு தீவிரவாதிதானே
ஒரு சிறு வேறுபாடு மாத்திரமே உண்டு
உன்னிடமிருப்பது அறியாமையும் வெறுப்பும்
இக்கவிஞனிடமிருப்பதோ ஞானமும் அன்பும்
அன்பு மீதூறி நான் உன்னை
ஆரத் தழுவிக்கொள்ளும் இவ்வேளை
இதோ யுத்தம் முடிகிறது
சாந்தி மலர்கிறது
யாரோ ஒருவன் என எப்படிச் சொல்வேன்
குப்பைதொட்டியோரம்
குடித்துவிட்டு விழுந்துகிடப்போனை.
வீடற்று நாடற்று
வேறெந்தப் பாதுகாப்புமற்று
புழுதி படிந்த நடைபாதையில்
பூட்டு தொங்கும் கடை ஒட்டிப்
படுத்து துயில்வோனை.
நள்ளிரவில் அரசு மருத்துவமனை நோக்கி
கைக்குழந்தை குலுங்க அழுது கொண்டு ஓடும் பெண்ணை.
நடைபாதைப் புழுதியில் அம்மணமாய்
கைத்தலையணையும் அட்டனக்காலுமாய்
வானம் வெறித்துப் படுத்திருக்கும் பைத்தியக்காரனை.
எதையும் கவனிக்க முடியாத வேகத்தில்
வாகனாதிகளில் விரைவோனை.
காக்கிச் சட்டை துப்பாக்கிகளால் கவிலங்குடன்
அழைத்துச் செல்லப்படும் ஒற்றைக் கைதியை.
நான் மிகவும் நேர்மறையான கவிதைகள் மட்டுமே எழுதியவனாக கருதிக் கொள்கிறார்கள். ஆனால் நான் பெண்களைப் பற்றிய கடும் விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறேன் (உதாரணம் – பாலியல் தொழிலாளி பங்கஜவல்லி கவிதை) ஆனால் அந்த கவிதையில் வரும் பெண்ணாக என்னையே தான் நான் நினைத்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் மனித உணர்வுகள் அது எத்தகைய தீவிரமானதாக இருப்பினும் கவிதையாகாது. ஒரு பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுமி தனது தம்பியின் மீது கொண்டுள்ள அக்கறை, பாசமே தவிர அன்பு இல்லை. (உதாரணம் பெரியம்மாவும் சூரியனும் கவிதை).
புதிய ஏற்பாடு கவிதையில் ஆண்கள் அனைவரையும் பெண்ணாக மாறும்படி எழுதியிருப்பதை குறித்து கேட்டதற்கு இளம் வயதில் ஆண் தனித்து அறிய எதுவோ இருக்கும் என்று கருதியிருந்ததாகவும் ஆனால் தற்போதைய நிலையில் நான் எழுதியிருக்கும் கவிதை என்று புதிய ஏற்பாடு பற்றிக் கூறினார்.
ஒரு கவிஞன் அனைத்து புறச் சூழல்களையும் எதிர் கொள்பவனாக இருப்பதினால் எல்லா வகையான கவிதைகளும் உருவாவதும் அதனை எழுதுவதும் முக்கியமானது என்கிறார்.
நம் உறுப்புகள் ஒவ்வொன்றும் எவ்வளவு நேசத்துடன் உள்ளது. நம் கையால் நம்மை தொடுவதன் மூலம் எத்தகைய அன்பினை நாம் உணர்கிறோம். நாம் சும்மா நடக்கும் போது செடிகளை தொட்டுக் கொண்டே செல்வது ஒரு கவிதையின் தருணம் என்றே சொல்கிறார்.
கவிதையின் மதம்
அதற்குக் கடவுள்கள் இல்லை
கோயில்கள் இல்லை.
பூஜைகள் இல்லை
புனித நூல்கள் இல்லை
சடங்குகள் இல்லை
தனித்து நிற்கும் ஆசாரங்கள் இல்லை
பரப்புவதற்கும் விரிப்பதற்குமான
தத்துவங்கள் இல்லை.
அது தன்னைத்தானே விளக்குவதால்
அறிஞர்களும் புலவர்களும்
அதற்கு தேவையில்லை
கவிஞர்கள் கூடத் தேவையில்லை
ஆனால் அதன் இலட்சியமோ
மனிதர்கள் எல்லோரையுமே
கவிஞர்களாக்கிவிடுவதாயிருப்பதுதான்
விந்தை.
இலட்சியம் கொண்டிருக்காத
வேளையிலெல்லாம்
அது தன்னை மறைத்துக் கொண்டு
சுதந்திரமாக வாழ்கிறது
இலட்சியம் கொண்டிருக்கும்போதெல்லாம்
அச்சத்தால் நாம் உருவாக்கியிருக்கும்
அனைத்துக் கட்டுமானங்களையும் உடைத்து –
தன் இலட்சியத்தையும் கூட –
நொறுக்கியபடிதான்
தன்னை வெளிப்படுத்துகிறது அது.
ஒவ்வொன்றையும் தனது மென்மையான குரலில் நிதானமாகவும் உறுதியாகவும் உற்சாகத்தோடும் அவர் பேசியதும், அவரது முன்னால் அவர் விரும்பி சேகரித்து வைத்திருந்த இலைகளும் பூக்களும், நாள் முழுவதுமான அவரது அருகாமையும் ஒரு பேருணர்வை உருவாக்கியது. மாலை நான்கு மணியுடன் அமர்வுகள் முடிந்ததும் அனைவரும் பரவசத்துடன் பேசிக் கொண்டு பிரிந்தோம். நிகழ்வினை ஒருங்கிணைத்த சரண்யாவிற்கு நன்றி.
அன்புடன்
க சரத்குமார்
With a smile
In one of Guru Nitya Chaidanya Yati’s autobiographical speeches, it is recounted that Nataraja Guru approached a group of young students gathered under a tree and engrossed in a serious discussion.
ஈ.எம்.எஸ் பற்றிய காணொளி நெகிழ்ச்சியானது. நீங்கள் தொடர்ச்சியாக அவரைப்பற்றி எழுதி வந்திருக்கிறீர்கள். ஆனாலும் இந்தக் காணொளியில் தெரியும் அந்த உணர்வுகள் மிக அருமையாக உள்ளன. உங்கள் இளமையில் உங்களை ஆட்கொண்ட பேராளுமையின் ஞானமும் வரலாற்றுப் பாத்திரமும் இன்றுவரை உங்களில் தொடர்வதைச் சொல்லியிருக்கிறீர்கள்
இ.எம்.எஸ் என்னும் அறிஞர்July 26, 2025
தொல்குடியின் ஞானம் நம்மிடையே உள்ளதா?
திம்மண்ண மரிமண்ணு என்னும் ஊரிலுள்ள தொன்மையான ஆலமரம் இது. உலகின் மிகப்பெரிய ஆலமரம் என்றும் சொல்லப்படுகிறது. பல ஏக்கர் பரப்புக்கு விரிந்த ஒற்றை ஆலமரம். அது தெய்வமாக வழிபடப்படுகிறது. அதன் ஆன்மிகம் என்ன?
சிந்திக்கும் குழந்தைகளுக்காக…
உங்கள் பனிமனிதன் நாவல் என் குழந்தைகளின் ஃபேவரைட் ஆக இருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு பின் நான் என் குழந்தைகளுக்கு அவற்றை வாசித்துக் காண்பித்தேன். தினசரி ஓர் அத்தியாயமாக வாசிப்பேன். அவர்களுக்குபுனைவில் ஆர்வம் உருவாவதற்கும் , நவீன சிந்தனைகள் மேல் ஆர்வம் வருவதற்கும் அது காரணமாக அமைந்தது.
இன்றைக்கு என் அக்காவின் பேரக்குழந்தைகளுக்கு அதே நாவலை ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சொல்லிக் கொடுக்கிறேன். வெள்ளிநிலம், உடையாள் இரண்டு கதைகளையும் வாசித்துச் சொன்னேன். அவற்றிலுள்ள சாகசக்கதை, நகைச்சுவை ஆகியவற்றுடன் அறிவியலும், தத்துவமும் இணைந்து ஆழமான ஒரு புரிதலை ஏற்படுத்தின.
ஆங்கிலத்தில் ஏராளமான குழந்தை இலக்கியங்கள் உள்ளன. அவற்றை குழந்தைகள் விரும்பி வாசிக்கிறார்கள். அப்படியென்றால் பனிமனிதனோ, வெள்ளிநிலமோ ,உடையாளோ கூடுதலாக அளிப்பது என்ன? அவை இந்தியாவின் குழந்தைக்கதைகள் என்னும் அம்சம்தான் முக்கியமானது. ஓர் இந்தியக்குழந்தை அவற்றை இன்னும் கூர்மையாக ரசிக்கமுடியும். இந்தியப்பண்பாட்டைப் புரிந்துகொள்ளவும் அவை உதவும்.
அதைவிட முக்கியமாக இன்னொன்று உண்டு. அந்த நூல்களிலுள்ள அறிவியல் செய்திகளை ஆங்கிலத்திலும் வாசிக்கலாம், அந்நூல்களிலுள்ள மாயம், சாகசம் எல்லாம்கூட வெளியேயும் உண்டு. ஆனால் அவற்றிலுள்ள வரலாறு, தத்துவம், ஆன்மிகமெய் ஆகியவற்றை வெளியே வாசிக்கமுடியாது. ஓர் இந்தியக்குழந்தையின் மனதில் எழும் பலவாறான கேள்விகளுக்கான விடைகள் இந்த நாவல்களிலுள்ளன. இந்த நாவல்கள் அவர்களே அந்தக் கேள்விகளை விடைகளாக ஆக்கிக்கொள்ளும் வழிகளையும் காட்டுகின்றன. அந்தச் சிந்தனைப்பயிற்சி இன்றைய குழந்தைகளுக்கு மிகமிக அவசியமானது.
தமிழில் இந்த நூல்கள் மிகப்பெரிய கொடை. போதிய அளவுக்கு அவை தமிழில் பெரும்பாலும் வாசிக்கப்படவில்லை. முக்கியமான காரணம் இன்றைய பிள்ளைகள் அதிகமும் ஆங்கிலம் வழியாக வாசிப்பவை என்பதுதான். அவற்றை ஆங்கிலத்தில் சொல்லும் அளவுக்குப் புரிதலும் நம்மவர்களிடம் இல்லை.
என் மனமார்ந்த நன்றிகள்.
ரா. கிருஷ்ணசாமி
அன்புள்ள கிருஷ்ணசாமி,
இந்த மூன்று நாவல்களுமே உடனடியாக ஆங்கிலத்தில் வரவுள்ளன- சர்வதேசப்பதிப்புகளாகவும் வெளிவரவுள்ளன. இவை இந்திய குழந்தைகளை உத்தேசித்து எழுதப்பட்டவை. நம் குழந்தைகளின் அறிவியலறிவும், ஆர்வமும் அதிகம். மொழித்திறன் குறைவு. நம் குழந்தைகளுக்கு நாம் எழுதவேண்டிய நூல்கள் நுட்பமான அறிவியல், வரலாறு, தத்துவம் ஆகியவை கொண்ட நூல்கள். ஆனால் மொழி குழந்தைகளுக்குரியதாக அமையவேண்டும். அந்தவகையில் இவை அமைந்துள்ளன. குழந்தைமொழியில் எழுதப்பட்ட இலக்கிய ஆக்கங்கள் இவை.
குறிப்பாக உடையாள் எனக்கு மிக அணுக்கமான ஒன்று. ஒரு முகமே பிரபஞ்சமாக ஆவது. சாக்தத்தின் அடிப்படையை விளக்கும் ஆன்மிக நூல் அது. அமெரிக்காவில் அதை வாசித்துக்கேட்ட குழந்தை,பத்துவயதான மாணவி, உடனடியாக அதன் பெண்மைய பார்வையைச் சென்றடைந்தது எனக்கு மிக மனநிறைவூட்டிய அனுபவம்.
இன்று குழந்தைகளை வாசிக்கச் செய்தாகவேண்டிய கட்டாயம் அக்குழந்தைகள் ஏதேனும் துறையில் வெற்றிகொண்டவர்களாக அமையவேண்டும் என விரும்புபவர்களுக்கு உள்ளது. அது எளிய வேலை அல்ல. மிகமிகச் சவாலான ஒன்று. உலகம் முழுக்கவே இன்றைய ‘செல்பேசி’ சூழல் குழந்தைகளை காணொளிகள், இணையவிளையாட்டுக்கள் நோக்கி இழுக்கிறது. மேலைக்கல்விச்சூழலில் திட்டமிட்டு குழந்தைகளை வாசிப்பு நோக்கிச் செலுத்துகிறார்கள். பாதிக்குமேல் குழந்தைகள் தப்பித்துக் கொள்கின்றன.
நம் சூழலில் பெற்றோரே குழந்தைகளின் கைகளில் செல்பேசியை அளித்து அந்த உலகுக்குள் தள்ளிவிடுகிறார்கள். மூர்க்கமான மனப்பாடக் கல்வியை அளிக்கும் கல்விநிலையங்கள் உள அழுத்தத்தை அளித்து குழந்தைகளை மேலும் செல்பேசி என்னும் சதிக்குழியை நோக்கிச் செலுத்துகின்றன. நாம் நம் குழந்தைக்கு வாசிப்பை அறிமுகம் செய்யலாம், ஆனால் மற்றகுழந்தைகளை நம் குழந்தைகள் தவிர்க்கமுடியாது. அவர்கள் வளரும் சூழல் அவர்களை சும்மாவிடாது.
ஆகவே மிகமிக ஆற்றலுடன் குழந்தைகளை வாசிப்புக்குள் கொண்டுவரவேண்டும். ஆனால் நம் சூழலில் பெற்றோரே எதையும் வாசிப்பதில்லை. வாசிப்பதன் அவசியம் பற்றிக்கூட நம் பெற்றோருக்குத் தெரிவதில்லை. வாசிப்பு என்பது வெட்டிவேலை என்று நம்பும் கூட்டத்தினரும், அதைப் பிரச்சாரம் செய்யும் மூடர்களும் ஏராளமாக உள்ளனர். வாசிப்பின் வழியாகவே குழந்தை தனக்கான தனி உலகை உருவாக்கிக் கொள்ள முடியும். நூல்கள் மட்டுமே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறனை அளிக்கின்றன. காட்சியூடகங்கள் எவையாயினும் அனைவருக்கும் ஒன்றையே பரிமாறுகின்றன, ஆகவே சராசரிகளையே உருவாக்குகின்றன.
வரும் செயற்கை நுண்ணறிவுக்காலகட்டத்தில் அந்தவகையான சராசரிகள் தவிர்க்கப்படுவார்கள். தனித்திறன் ஒன்றே மதிக்கப்படும். அதை முன்னரே அறிந்துதான் வெளிநாட்டுக் கல்விநிலையங்கள் தனித்திறனை அளிக்கும் கல்வியை முன்னெடுத்தன, அவற்றில் முதன்மையானது வாசிப்புப் பழக்கம்தான்.
ஆனால் குழந்தைகளுக்கு நூல்களை வாங்கிக்கொடுத்தால் மட்டும் போதாது. வாசிக்கும்படிக் கட்டாயப்படுத்தினாலும் பயனில்லை. அவர்கள் சுவாரசியமாக வாசிப்பில் நுழையவேண்டும். எளிய கதைகள் இன்றைய குழந்தைகளுக்குச் சலிப்பூட்டுகின்றன. ஒரு குழந்தை கணிப்பொறி விளையாட்டுக்குள் செல்கிறது என்றால் அதன் மூளைக்கு ஒரு சவால் அங்கே உள்ளது என்றே பொருள். அதற்கிணையான சவாலை வாசிப்பு அளிக்கவேண்டும். அத்தகைய நூல்கள் பல்லாயிரக்கணக்கில் வேண்டியிருக்கின்றன. ஆனால் நம் குழந்தை எழுத்தாளர்கள் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது வாசித்தவற்றை இப்போது எழுதுகிறார்கள்.
இந்த தேவையை முன்னுணர்ந்தே நான் பனிமனிதன் உள்ளிட்ட நூல்களை எழுதினேன். அவற்றில் இன்றைய நவீன அறிவியலின் கொள்கைகளை, சமூகவியல் சித்தாந்தங்களை, தத்துவக் கொள்கைகளை விவாதித்தேன். மொழி மட்டும் எளிமையானது, திட்டமிட்டு குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. பனிமனிதன் நாவலில் பரிணாம அறிவியல் முதல் நவீன உளவியல் வரை பேசப்பட்டுள்ளன. வெள்ளிநிலம் நாவல் உலக மதங்கள் உருவாகி வந்துள்ள வரலாற்றுப்பரிணாமம் விவரிக்கப்பட்டுள்ளது. அதற்கும் அப்பால் சென்று தத்துவார்த்தமான மெய்யியல் விவாதமே உடையாளில் உள்ளது.
நான் ஆச்சரியத்துடன் பார்க்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அறம் கதைகள் இன்றைய இளம்சிறார்களுக்கு மிக விருப்பமானவையாக உள்ளன என்பதுதான். அவற்றிலுள்ள உலகம் முதிர்ந்தவர்களுக்குரியது. ஆனால் அவை நம் சமூகச்சூழலை, நம் பிரச்சினைகளை, நாம் வளர்ந்து வந்த பாதையை இளையோருக்கு அறிமுகம் செய்கின்றன. பெரியவர்களை விட முதிர்ச்சியுடன் அவற்றை இளையோர் வாசிக்கிறார்கள். தமிழில் மட்டும் அல்ல ஆங்கிலம் வழியாக இந்தியா முழுக்கவே அந்த வாசிப்பு நிகழ்கிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்கூட Stories of the True மிக விரும்பப்படும் நூலாக உள்ளது.
இன்றைய பெற்றோர் இந்நூல்களை குழந்தைகளுக்கு அளித்து கூடவே அந்த அறிவுத்துறைகளைப் பற்றியும் விவாதிப்பார்களானால் அதில் ஏதோ ஒன்று குழந்தைகளை தொட்டுக்கொள்ளும். அவர்கள் எதில் ஆர்வம்கொண்டாலும் அது நல்ல தொடக்கமாக அமையும்.
ஜெ
ஆர். பாலசரஸ்வதி
பாலசரஸ்வதி 1930-கள் முதல் 1960-கள் வரை தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். 1936-ல் சி. புல்லையாவின் இயக்கத்தில் உருவான சதி அனுசூயா, பக்த துருவா ஆகிய திரைப்படங்களில் குழந்தை நடிகையாகப் பாடி நடித்தார். இயக்குநர் கே. சுப்பிரமணியம் தனது தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க அழைத்தார். பக்த குசேலா, பாலயோகினி, திருநீலகண்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

வெண்முரசு, இரண்டு வாசிப்பு எல்லைகள்
அண்மையில் வெண்முரசு நூல்களை என் வீட்டுக்காக வாங்கினேன். அதில் ஒரு சுவாரசியத்தைக் காணமுடிந்தது. என் தங்கை அதில் முதல் மூன்று நாவல்களை வாசித்தாள். என் அம்மா இப்போது எட்டாவது நாவலில் இருக்கிறார். என் அம்மாவின் வாசிப்பு ஆழமானதாக இருந்தது. நாவலின் நுட்பமான உறவுகள், குறியீடுகள் எல்லாமே அம்மாவுக்குப் புரிந்தது. அம்மா எட்டாவதுடன் படிப்பை நிறுத்திக்கொண்டவர். கல்கி , சாண்டில்யன் படித்திருக்கிறார்.
ஆனால் என் தங்கை எம்.பி.ஏ பட்டதாரி. பாலகுமாரனின் உடையார், சு.வெங்கடேசனின் வேள்பாரி எல்லாம் வாசித்தவள். அவளுக்கு வெண்முரசு நாவல்கள் வாசிப்புச் சுவாரசியம் கொண்டவையாக இருந்தன. ஆனால் அவள் கதையை மட்டும்தான் வாசித்தாள். கதை எங்கே வேகமாக இருக்கிறது , எங்கே தேங்குகிறது என்று மட்டும்தான் அவளால் சொல்லமுடிந்தது.
வெண்முரசில் ஆங்காங்கே ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையம்கொண்டு கதை செல்லும்போது ‘சுத்திச் சுத்தி வருது’ என்று தங்கை சொன்னாள். மழைப்பாடல் நாவலில் குந்தி, காந்தாரி இருவரின் திருமணநிகழ்வுகள் சொல்லப்படும் இடத்தில் ‘ரொம்ப வர்ணனைகள்’ என்று சொன்னாள். இந்திரநீலம் நாவலில் சியமந்தக மணி பற்றிய பகுதிகளை ‘ஒண்ணையே சொல்லிட்டு இருக்காப்ல’ என்று சொன்னாள்.
நான் என் அம்மா என்ன சொல்கிறார் என்று அவரிடம் இதைப்பற்றி கேட்டேன். குந்தி மழைபெய்துகொண்டே இருக்கும் ஊரைச் சேர்ந்தவள், காந்தாரி மழை இல்லாத ஊரைச் சேர்ந்தவள். ஆகவேதான் நிலம் அப்படி விரிவாகச் சொல்லப்படுகிறது என்று சொன்னதோடு எங்கள் குடும்பத்திலேயே தஞ்சாவூர் மருமகள்களுக்கும் கோயில்பட்டி மருமகள்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றும் சொன்னார்கள். அந்த வேறுபாடுதான் மொத்த கதையின் சாரம் என்றும் சொன்னார்கள்.
சியமந்தகம் பற்றி கேட்டேன். அது இந்த உலக இன்பங்கள் மற்றும் பொருட்கள மீதான பற்று. அதற்கு எதிரான பற்றுதான் கண்ணன் மீதுள்ளது. ஒவ்வொருவரும் அதற்கும் இதற்கும் நடுவே அலைமோதுகிறார்கள். அலைமோதாத நிலைத்த தன்மை காளிந்தியிடம் மட்டும்தான் உள்ளது என்று சொன்னார்கள். எங்கள் குடும்பத்தில் பாகப்பிரிவினையின்போது ஒரு வைரமோதிரம் எப்படி பெரிய மனக்கசப்பை உண்டு பண்ணியது என்றும், ஒவ்வொருவரின் உண்மையான தன்மையை வெளிக்காட்டியது என்றும் சொன்னார்கள்.
இரண்டு வாசிப்பையும் ஒப்பிட்டால் எனக்கு நாம் கதைகளை நிறைய வாசிக்க வாசிக்க உண்மையான ரசனை இல்லாமலாகிவிடுகிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஜே.ஆர்.சந்திரமௌலி.
அன்புள்ள சந்திரமௌலி,
வெண்முரசுத் தொகுதிகளை இப்போது அதிகம் வாங்குபவர்கள் இளைஞர்கள், தங்கள் பெற்றோருக்காக. அவர்களுக்கு அளிக்கத்தக்க ஒரு நல்ல பரிசாக அவை உள்ளன. பலர் முதியோர் இல்லங்களுக்குக் கூட வாங்கி அளித்துள்ளனர். முதியவர்களில் கொஞ்சம் வாசிப்பவர்கள் எளிதாக அதற்குள் நுழைந்துள்ளனர். வாழ்க்கையில் வாசித்த ஒரே நூல் வெண்முரசுதான் என்பவர்களும் பலர் உள்ளனர்.
முதியவர்களுக்கு இரண்டு சாதகமான அம்சங்கள் உள்ளன. ஒன்று, அவர்களுக்கு ஏற்கனவே மகாபாரதம் கொஞ்சம் தெரியும். அது ஒரு தொன்மையான கதை என்றும், அன்றைய வாழ்க்கை அது என்றும் புரியும். பாஞ்சாலிக்கு ஐந்து கணவர்கள், குந்தி ஐந்துபேரிடம் பிள்ளை பெற்றாள், ராதை கிருஷ்ணனின் அத்தைமுறை என்றெல்லாம் சொன்னால் கலாச்சார அதிர்ச்சியெல்லாம அடையமாட்டார்கள். இரண்டு, அவர்களுக்கு இலக்கியம் , வாசிப்பு சார்ந்த எதிர்மறைப் பயிற்சியும் முன்முடிவுகளும் இல்லை. ஆகவே இலக்கியத்தை வாழ்க்கையுடன் இயல்பாக இணைத்துக்கொண்டு வாசிப்பார்கள்.
ஆனால் தமிழ் வணிக எழுத்தை வாசித்துப் பழகியவர்கள், சீரியல்களில் ஊறியவர்களுக்கு எதிர்மறைப் பயிற்சி உண்டு. அவர்களுக்கு ‘கதை’ முக்கியம். அது அவர்கள் ஏற்கனவே ரசித்த கதைகளின் சாயலுடன் இருக்கவேண்டும். இல்லையேல் ஏமாற்றம் அடைவார்கள். விவாதங்கள், வர்ணனைகள், எண்ணங்கள் எல்லாமே ‘கதைக்கு தேவையற்றவை’ என்றுதான் நினைப்பார்கள். புனைவுத்தருணங்கள், உணர்வுகள், உறவுகள் ஆகியவற்றை எல்லாம் அவர்கள் ஏற்கனவே அறிந்தவற்றைக்கொண்டு மட்டுமே மதிப்பிடுவார்கள்.
இத்தகைய எதிர்மறைப் பயிற்சி கொண்ட வாசகர்கள் அவர்களுடைய நிலையை விட்டு சற்றும் முன்னகர மாட்டார்கள். வாசிப்பினூடாக வளர்ச்சி என்பதே இருக்காது. எந்த பெரும்படைப்பையும் தங்கள் சொந்த அளவுகோலைக்கொண்டு அலட்சியமாக மதிப்பிடுவார்கள். சாதாரண வணிக சினிமாச் சந்தர்ப்பங்களை எந்த விவாதங்களிலும் இழுப்பதை, எந்த புனைவுத்தருணத்துடனும் ஒப்பிடுவதை இவர்களிடம் காணலாம். அதன் வழியாக எல்லாவற்றையும் கொஞ்சம் கேலிக்கூத்தாகவும் ஆக்கிவிடுவார்கள்.
ஏனென்றால் அவர்கள் தங்களை வாசகர் என்றல்ல, நுகர்வோர் என்றே எண்ணிக்கொள்கிறார்கள். வணிகநுகர்வில் நுகர்வோர்தான் முதன்மையானவர்கள், எல்லாமே நுகர்வோரின் ரசனைக்காகவே படைக்கப்படுகின்றன, ஆகவே நுகர்வோரின் கருத்தே முக்கியம். இலக்கியம் நுகர்பொருள் அல்ல, அது ஒருவகைக் கல்வி, மாணவன் அந்த நூலைநோக்கி எந்த அளவுக்கு நகர்கிறான் என்பதே முக்கியம், முன்னேறிவராத மாணவன் தன்னை தோற்கடித்துக்கொள்கிறான். அதை அவர்கள் உணர்வதில்லை.
இந்த எதிர்மறைப் பயிற்சியை அத்தனை எளிதில் கடக்கமுடியாது. ஏனென்றால் தாங்கள் ‘நிறையப் படித்தவர்கள்’ என இவர்கள் எண்ணிக்கொள்கிறார்கள். இவர்களைப்போலவே சிந்திக்கும் ஒரு பெரிய கூட்டமும் இவர்களுக்கு இருக்கும். ஆகவே இவர்கள் தாங்களே ஏதேனும் ஒரு அகமாற்றத்தை அடைந்து, முன்னகர்ந்தால்தான் உண்டு.
கடந்த நூறாண்டுகளாகவே இலக்கியம் போராடிக்கொண்டிருப்பது இந்த வணிகஎழுத்தின் வாசகர்களுடன்தான். புதுமைப்பித்தன், க.நா.சு, சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், வேதசகாயகுமார் , ராஜமார்த்தாண்டன் என தலைமுறை தலைமுறையாக விமர்சகர்கள் போராடியதும் இவர்களுடன்தான்.
இன்று சமூகவலைத்தளங்கள் வந்தபின் அந்த போர் இன்னும் சிக்கலாகிவிட்டிருக்கிறது. ஒன்றுமே தெரியாத கும்பல், வெட்டி வம்புகளாகவே இலக்கியத்தை அணுகும் கூட்டம் உள்ளே வந்து சகட்டுமேனிக்கு உளறி பொதுவெளியில் எதையுமே பேசமுடியாமல் ஆக்கிவிட்டிருக்கிறது. ஆயினும் எதிர்பார்ப்புடன் தொடர் உரையாடல் ஒன்றை நிகழ்த்துவது மட்டுமே நம்மால் செய்யத்தக்கது.சிலர் மேலே வரக்கூடும். அவ்வாறு வந்த சிலர் அளிக்கும் நம்பிக்கையே நமக்கு ஊக்கமளிக்கவேண்டும்.
ஜெ
ஆங்கிலத் தன்வரலாறு, இரண்டு எதிர்வினைகள்
Dear J,
Read the book “Of men women and witches”. Splendid translation. Sangeetha has captured the tone of reminiscence and comprehension that you have used in the articles perfectly well. I had read some of the articles from this series that are in your website in Tamil. This English translation invokes the same emotions as your articles in Tamil did.
They are a glimpse into the yesteryear world of the generations past. The text invokes vivid images of the land; a beautiful one filled with mysteries and mundane all rolled into one. One gets to understand the slow transition that happens as colonialism and monarchy give way to democracy. The women from the matriarchal society also happen to lose their land in the process.
The men in the book are few and they mostly come across as people who wear their anger or innocence as shield to hide their true selves. The women on the other hand are many and they leave an everlasting impression on one.
The choices that they make in their lives are varied, one chooses power and remains in control of her destiny as long as she is healthy, one chooses to repress her aspirations for the greater good of her children, one chooses the extreme step of ending her life, one chooses to be kept, some die horrible deaths as captives, humiliated, one chooses to find solace in books amidst her day-to-day drudgery and some choose to beg, defeated by fate.
These were probably the women who have shaped your idea of the feminine until you met the women you fell in love with. You are blessed with what a man could ask for in his life in women, a loving mother, a loving sister and a wife who fell in love with you and whom you love. This book comes across as an ode to all these women.
The men in the book refuse to acknowledge the fact that all they crave for is validation from their women. This results in a constant friction in their households. Neither end up being fulfilled, the undertone of failed marital relationships is prominent in the book.
On the other hand, are the lives of women who are coveted by men. The idea of yakshis, the spirit of women who die a wrongful death, seems to have been very prevalent at that time. Real or imagined, they did manage to invoke terror in the men of the region. They were the reigning deities of the forest. When the forests turned into estates which in itself is as act of covetousness, they turned into mere stones. Maybe they joined forces with Mother nature, together they seemed to be unleashing extreme events that reduce man-made materialistic symbols to dust. One can take it as the wrath of yakshis, trying to reclaim their forest, depending on whichever side of science one happens to be on.
At the end of the book, one is left pondering about men, women and witches and the land they lived on.
From,
Priya,
Bangalore.
The book talks about the most beautiful land of Tamil Nadu, which is Kanyakumari, aka Nanjilnadu. It starts with Jeyamohan’s childhood, his relationship with his father and mother, and about their relationship. Women coexisting with strangers is one thing, but Jeyamohan’s mother had to transition from a matriarchal system to a patriarchal one as well.
Of Men, Women and Witches Reviewஅஜிதனின் உரையாடல்கள்
மேலைத்தத்துவம் பற்றிய அஜிதனின் உரையாடல்களை இணையத்தில் கண்டேன். மிக விரிவாக ஜெர்மன் தத்துவத்தை முதன்மையாக வைத்துப் பேசுகிறார். நான் வெவ்வேறு வகைகளில் இந்தப்பெயர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தாலும்கூட ஜெர்மானிய தத்துவம் எப்படி நவீன ஐரோப்பியத் தத்துவத்துக்கே அடிப்படையாக அமைந்தது என்பதை அறிந்திருக்கவில்லை.
அஜிதனின் உரையாடல்கள்
It is interesting to listen to your explanation about the difference between the two ways of education that prevailed in our country. One is traditionalist, like giving a sermon. The method of education in that way of teaching is not so important; the personality of the teacher is more important.
The guru and the teacherJuly 25, 2025
நான் எழுதும் அரசியல்
நீங்கள் எழுதிய இரண்டு அரசியல் படைப்புகள் என்று பின்தொடரும் நிழலின் குரல், வெள்ளையானை என்ற இரண்டு நாவல்களையும் சொல்லமுடியும். (வெள்ளையானை இப்போது ஆங்கிலத்தில் வரவுள்ளது என அறிகிறேன். பின்தொடரும் நிழலின் குரல் நாவலும் அவ்வாறு வெளிவரும் என நம்புகிறேன்)
உங்கள் அரசியலை விரிவாக முன்வைத்து இந்நாவலில் எழுதியிருக்கிறீர்கள். பின்தொடரும் நிழலின் குரல் மார்க்சிய எதிர்ப்பு நாவல் என்று சொன்னார்கள். நான் இப்போதுதான் வாசித்தேன். அதில் எங்கே மார்க்ஸிய எதிர்ப்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. மார்க்சிய இலட்சியவாதம்தான் அதில் திரும்பத் திரும்ப தூக்கிப்பிடிக்கப்படுகிறது. அதிகார அரசியலால் அது எப்படி ‘கரெப்ட்’ ஆகிறது என்று நாவல் சொல்கிறது. அதை எதிர்த்து ஒவ்வொரு முறையும் நேர்மையான கம்யூனிஸ்டுகள் போராடுவதும் அந்நாவலில் உள்ளது. மிகமிக எதிர்மறையாகப் பார்த்தாலும்கூட தொழிலாளர்களுக்கு ஒரு பேரம்பேசும் சக்தியை மார்க்ஸியமே உருவாக்கித் தந்தது, எந்நிலையிலும் அதை மீறமுடியாது என்றுதான் நாவல் காட்டுகிறது.
மார்க்ஸியத்தின் அமைப்பு சார்ந்த இறுக்கம் எவ்வளவோ நல்ல இலட்சியவாதிகளைக் காவுகொண்டிருக்கிறது. மாமனிதர்கள் மனம் வெதும்பி விலகியிருக்கிறார்கள். அதை அந்நாவல் பேசுவதனால்தான் உண்மையில் இங்கே மார்க்ஸியக் கட்சிக்காரர்கள் அந்நாவல்மேல் வன்மம் கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். 2007ல் இந்நாவலை வாசிக்கும்படி கோவை ஞானி ஐயா என்னிடம் சொன்னார். ஆனால் என்னால் இப்போதுதான் முழுமையாக வாசிக்கமுடிந்தது.
அதே வேகத்துடன் வெள்ளையானையை வாசித்தேன். இது நேரடியான நாவலென்பதனால் நான் வேகமாக வாசித்து முடித்தேன். இந்நாவல் இரண்டு தொன்மங்களை உடைக்கிறது.
ஒன்று, இந்து மதம் என்னும் கட்டமைப்புக்குள் தலித்துக்கள் பஞ்சகாலத்தில் எப்படியெல்லாம் ஒடுக்கப்பட்டார்கள் என்பதைச் சொல்லி அந்த சமயத்தில் இங்கே இருந்த மத அமைப்புகள் எப்படிச் செயல்பட்டன என்று காட்டுகிறது. அந்த பஞ்சகாலத்தில் அரசுக்கு உடந்தையாக இருந்து, ரத்தம்குடித்தவர்களின் வாரிசுகள்தான் இன்றைக்குப் பெரும்கோடீஸ்வரர்களாக தொழில் செய்கிறார்கள்.
இரண்டு, பிரிட்டிஷ் ஆட்சி தலித்துக்களுக்குச் சாதகமானது என்பதும் பொய்தான். பிரிட்டிஷ் அரசு வேண்டுமென்றே தலித்துக்களைச் சாகவிட்டது. உலகமெங்கும் அடிமைகளாகக் கொண்டுசென்றது. அந்த பஞ்சங்களில் தலித் சமூகம் அழியவில்லை என்றால் அவர்கள் 50 சதவீதம் வரை மக்கள்தொகை இருந்திருப்பார்கள். இன்றைய ஜனநாயகத்தில் அவர்களிடமே அதிகாரமும் இருந்திருக்கும். அதை நீங்கள் சொல்லிக் கேட்கும்போது பெரும் திகைப்பே உருவாகிறது.
ஆழமான சிந்தனைகளை உருவாக்கிய இரண்டு நாவல்கள்.
ஜே.ஆர்.கோவிந்தராஜ்
அன்புள்ள கோவிந்தராஜ்,
இங்கே நம் சூழலில் அரசியல் என்பது ‘கட்சியரசியல்’ என்றுதான் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. உங்கள் அரசியல் என்ன என்று கேட்டால் அதன்பொருள் நீங்கள் என்ன கட்சி என்பதே. நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. எந்த அரசியல் தரப்பையும் ஏற்றுக்கொண்டவனும் அல்ல. ஓர் எழுத்தாளன் அப்படி ஒரு கட்சியை, ஒரு தரப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதையே எம்.கோவிந்தன், ஆற்றூர் ரவிவர்மா, சுந்தர ராமசாமி பி.கே.பாலகிருஷ்ணன் என அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் கற்றிருக்கிறேன். கட்சியரசியல் என்பது ஒரு பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில், அல்லது சுயநலத்தின் அடிப்படையில் ஒரு திரள் உருவாகி அது அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்வதும், கைப்பற்றி ஆட்சி செலுத்துவதும்தான். அப்படி ஒரு திரளின் குரலாக ஒலிப்பவன் இலக்கியவாதி அல்ல.
கட்சியரசியல் என்பதற்கு அப்பால் ஓர் அரசியல் இருக்க முடியும். அதைக் கட்சியரசியலாளர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. அவர்களைப் பொறுத்தவரை ஒருவர் தங்கள் தரப்பினராகவோ அல்லது எதிரியாகவோதான் இருக்க முடியும். காழ்ப்பு, திரிப்பு, ஏளனம், அவதூறு, வசை ஆகியவற்றினூடாக எதிரியையும்; முடிவில்லாத சப்பைக்கட்டுகள் வழியாக தன் தரப்பையும் அவர்கள் எதிர்கொள்வார்கள். இச்சூழலில் நான் சொல்லும் அரசியலை எந்த அரசியல்கட்சியாளரும் தங்கள் எதிரித்தரப்பு என்றே முத்திரையடிப்பார்கள்.
இலக்கியவாதியின் அரசியல் என்பது அவனுக்கு மட்டுமான ஒன்று என நான் நினைக்கிறேன். அவன் தனக்கான அறத்தை, தனக்கான உலகச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்கிறான். அதற்காகவே அவன் எழுதுகிறான். ஏற்கனவே இருக்கும் அரசியலை அவன் சொல்லவில்லை, அவனுக்கான ஒன்றை மட்டும் சொன்னால்தான் அவன் எழுத்தாளன். அந்த அரசியலையே தன் படைப்புகளினூடாக தொடர்ச்சியாக் விரிவாக்கிக் கொண்டிருக்கிறான். என் படைப்புகளிலுள்ள அரசியல் அவ்வாறு எனக்கான அறத்தில் இருந்து உருக் கொண்டது. அதைத்தான் என் புனைவுகளுக்கு வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறேன். அவை அறுதியான முடிவுகளோ உறுதியான நிலைபாடுகளோ அல்ல. ஏனென்றால் நான் நம்பிக்கையின் வழியில் செல்லவில்லை, என்னுடையது தேடலும் அதன் விளைவான தத்தளிப்பும் சில கண்டடைதல்களும் கொண்டது.
பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் உள்ளது அந்த அரசியல்தான். அது இடதுசாரி அரசியல் அல்ல, வலதுசாரி அரசியலும் அல்ல. அது அடிப்படையில் மானுட மீட்பைத்தான் கனவுகாண்கிறது. அக்கனவை எந்த தரப்பில் இருந்து எவர் கண்டாலும் அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் உணர்ச்சிகரமாக இணைந்துள்ளது. மார்க்ஸியத்தின் இலட்சியவாதத்தை அந்நாவல் பெரும் தாகத்துடன் ஏற்றுக் கொண்டாடுவதை வாசகன் காணமுடியும்.கூடவே அதுமானுடத்துயரம் அனைத்துடனும் தன்னை இணைத்துக்கொண்டு தன் துயரமாக உணர்கிறது. அதற்குக் காரணமான ஒடுக்குமுறைகள், அழிவுகள் அனைத்துக்கும் எதிராகச் சீற்றம் கொள்கிறது. ஆகவே மார்க்ஸியத்தின் பெயரால் ருஷ்யாவில் நிகழ்ந்த வன்முறைகளை எழுதுகிறது. மார்க்ஸியக் கொள்கைகளிலுள்ள ஜனநாயகமின்மையை சுட்டிக்காட்டுகிறது. கருத்தியல் நம்பிக்கை எங்கே மானுட விழுமியங்களுக்கே எதிராகச் செல்கிறது என்பதைப் பேசுகிறது.
அந்த சுதந்திரமான அறம் , அந்த தனியறத்தின் அரசியல் தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அவர்கள் எப்போதும் தங்கள் எதிர்த்தரப்பு செய்யும் ஒடுக்குமுறைகளை, அநீதிகளைச் சுட்டிக்காட்டுவார்கள். கொந்தளிப்பார்கள். ஆனால் அதே ஒடுக்குமுறையும், அதே அநீதியும் தன் தரப்பால் செய்யப்பட்டால் நியாயப்படுத்துவார்கள், ஆதரிப்பார்கள். அதில் வெட்கமே இருப்பதில்லை. பின்தொடரும் நிழலின் குரலை வாசிக்கும் ஓர் இடதுசாரி அதில் கூறப்பட்டுள்ள மாபெரும் மானுட அழிவை பொருட்டாக நினைப்பதில்லை, ஏனென்றால் அதைச் செய்தவர் அவருடைய தலைவரான ஸ்டாலின். அந்நூலை அவர் இடதுசாரிகளுக்கு எதிராகவே நினைப்பார். அந்நாவலை மார்க்ஸிய எதிர்ப்பு என கொண்டாடும் ஒரு வலதுசாரி அந்நாவல் காட்டும் மாபெரும் சுரண்டல்களை கண்டும் காணாமல் சென்றுவிடுவார்.
அதேபோல வெள்ளையானை நாவலை வாசிக்கும் ஓர் இந்து மதவாதி அந்நூல் காட்டும் இந்தியச் சித்திரத்தில் பலகோடிப்பேர் பஞ்சத்தில் செத்தழிந்தபோது இந்திய மத அமைப்புகள் திரும்பியே பார்க்காமலிருந்தனர் என்னும் உண்மையை வெறுப்பார். பழியை முழுக்கமுழுக்க பிரிட்டிஷார் மேல் போடவேண்டும் என்று நினைப்பார். அந்நாவலை தங்களுக்கு எதிரான ஒன்றாக முத்திரையடிப்பார். அரசியல்வாதிகள் இந்நாவல்கள் ஒன்றுடனொன்று இணைந்து ஒரே அரசியல்தரப்பாக ஆகவேண்டும் என நினைப்பார்கள், அவ்வாறு ஆகின்றன என்று காட்டவும் முயல்வார்கள். ஆனால் ஒரு வைரத்தின் பட்டைகளை திருப்பித்திருப்பிப் பார்ப்பதுபோல ஒரே உண்மையின் முற்றிலும் வேறுபட்ட பல பக்கங்களைப் பார்ப்பவை இந்நாவல்கள் என்பதே சரியானது.
இலக்கியத்தின் அரசியல் என்பது இந்த அரசியல்கும்பல்களின் ஒற்றைப்பக்கச் சார்புள்ள மூர்க்கமான அறவுணர்வுக்கு அப்பாக் எழுந்து எல்லா திசையிலும் அறத்தை, விடுதலையை முன்வைப்பதேயாகும். அதைத்தான் அவ்விரு நாவல்களும் செய்கின்றன. அந்த அடிப்படை உணர்வை அடைபவர்களுக்குரியவை அவை – எந்த இலக்கியமும் அவர்களுக்குரியது மட்டுமே. தன்னை ஏதேனும் ஒரு தாப்புடன் இணைத்துக்கொண்டு வாசிப்பவர்களுக்கு உரியவை அல்ல. அந்நாவல்களை அரசியல் தரப்புகள் சார்ந்து சத்தம்போடுபவர்களும் வாசிக்கலாம், அவர்களுக்கு மனசாட்சி இருந்தால் அந்த மனசாட்சியுடன் அந்நாவல்கள் பேசும். அவர்கள் ஒளித்துவைத்தாலும் அவர்களுக்குள் அந்த அறத்தின் குரல் வளரும். அவ்வாறு அந்நாவல்களால் பாதிப்படைந்த எத்தனையோ பேரை நான் கண்டதுண்டு.
இலக்கியத்துக்கு அப்பால் என் ‘நடைமுறை அரசியல்’ என்ன? அதை நான் சிற்றலகு அரசியல் (மைக்ரோ பாலிடிக்ஸ்) என்று சொல்வேன். கட்சிசாராமல், அதிகாரம் நோக்கிச் செல்லமுயலாமல், சமூகத்தின் கருத்துநிலையை ஆக்கபூர்வமாக மாற்றமுயலும் அரசியல் அது. அதில் அதிகாரம் இல்லை என்பதனாலேயே அது தீங்கை இழைக்க முடியாது. சமூகம் நோக்கிய ஓர் உரையாடல்தான் அது. சமூகம் தனக்கான கொள்கைகளை அதிலிருந்து பெற்றுக்கொள்கிறது. சேவை, பிரச்சாரம் மூலம் சமூகத்தை நோக்கி செயல்படுவது அது. சமூகம் அதை ஏற்கலாம், ஏற்றால் சமூகம் முன்னகரும். ஏற்காமலும் போகலாம், ஏற்கவில்லை என்றால் எந்த அழிவும் உருவாவதில்லை.
இந்த சிற்றலகு அரசியல்தான் இதுவரையிலான இந்தியச் சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. கல்வி மறுமலர்ச்சி, சூழியல் உணர்வு முதல் பலநூறு ஜனநாயக உரிமைகள் வரை நாம் அடைந்துள்ள எல்லாவகையான மாற்றங்களும், வளர்ச்சிகளும் அதனால் உருவாக்கப்பட்டவைதான். ஒரு சமூகத்தின் பிரக்ஞ்ஞை மாறிவிட்டதென்றால் உண்மையான மாற்றம் நிகழ்ந்தே தீரும். அரசு மக்கள் அடிப்படையில் விரும்புவனவற்றைச் செய்தேயாகவேண்டும்.
ஒரு தெரு சுத்தமாக இருந்தாகவேண்டும் என அங்கே வாழும் மக்கள் உண்மையில் உறுதியாக எண்ணினால் அத்தெரு சுத்தமாகும். அரசு மக்களுக்குப் பணியும். ஆகவே தூய்மையை உருவாக்க தூய்மை தேவை என்னும் எண்ணத்தை உருவாக்கினால் போதும். அரசதிகாரத்தைக் கைப்பற்றி அங்கே தூய்மையை கொண்டுவருவதென்பது ஒரு மாயை. தூய்மை தேவை எனும் எண்ணம் உருவாகாமல் இருக்கையில் அரசு என்ன செய்தாலும் அந்த தெருவை தூய்மையாக வைக்கவும் முடியாது. எண்ணங்களை மாற்ற போராடுவதுதான் நுண்ணலகு அரசியல். அது பல தளங்களில் செயல்படுகிறது.
அந்த எல்லா நுண்ணலகு அரசியல் செயல்பாடுகளுடனும் நாற்பதாண்டுகளாக உடனிருந்துள்ளேன். அவ்வரசியலை செய்பவர்களை தொடர்ச்சியாக முன்வைத்தும் வருகிறேன். அந்த அரசியலின் ஒரு பகுதியாகவே நான் நேரடியாக அரசியல் கருத்துக்களை எழுதுகிறேன். காந்தியைப் பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களுமே அந்தக் கோணத்தில் அவரை அணுகுபவை.
ஆகவே தேர்தலரசியலை முற்றாகவே தவிர்ப்பது என் வழி. தேர்தல் நெருங்கும்போது முழுமையாகவே அமைதியாகிவிடுவேன். கட்சிவிவாதங்களில் கருத்தே சொல்வதில்லை. தேர்தலை ஒட்டி நான் எழுதியது ஒரே தருணத்தில்தான். ஆனால் அப்போதுகூட ஜனநாயகம் என்றால் என்ன என்று மட்டுமே எழுதினேன். ஜனநாயகச் சோதனைச்சாலையில் என்னும் நூலாக அக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
