Jeyamohan's Blog, page 52

July 22, 2025

புனைவின் கனவுக்காலம்!

அன்புள்ள ஜெ,

தங்கப்புத்தகம் தொகுப்பிலுள்ள கதைகளை முன்னரே வாசித்திருக்கிறேன். உண்மையில் இரண்டுமுறை வாசித்திருக்கிறேன். அந்தக்கதைகள் உங்கள் இணையத்தளத்தில் கோவிட் காலகட்டத்தில் வெளிவந்தபோதே வாசித்தேன். அதன்பின்னர் அவை நூலாக வந்தபோதும் வாசித்தேன். என்னை கவர்ந்த கதைகள் அதிலுள்ளன. 

ஆனால் இப்போது அந்தக் கதைகளைப் பற்றிய உரையாடல்களைக் கேட்கும்போது 

நான் வாசிக்கவே இல்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. நான் அவற்றை ஒருவகையான திரில் கதைகளாகவே வாசித்தேன். அவற்றின் ஆழம் எனக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக கரு கதையில் அந்த இளைஞன் எப்படி ஒரு ஆன்மிக அடையாளமாக ஆகிறான், அவன் ஷம்பாலாவில் இருந்து வருபவனா என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. 

அதேபோல தங்கப்புத்தகம் கதை அஜிதன் சொல்வதுபோல பிரதி எடுக்க மட்டுமே முடியும் நூல் அல்ல, பிரதியெடுக்கவே முடியாத நூல், அது ஒரு ஆன்மிக அனுபவத்தின் குறியீடு என்று புரியவில்லை. 

இதற்கான காரணம் என்ன என்று யோசிக்கிறேன். நாங்கள் சிலர் ஒரு வாசிப்புக் குழுமத்தில் இருக்கிறோம். அதிலுள்ள பெரும்பாலான வாசகர்கள் பெண்கள். நிறைய கதை படிப்பவர்கள். ஆனால் வேறேதுமே தெரியாது. கதைபடிப்பதனால் கதை பற்றி கருத்துச் சொல்ல முடியும் என நினைக்கிறார்கள். எந்த நாவலையும் , எந்தச் சிறுகதையையும் கதையாக மட்டுமே பார்த்துக் கருத்துச்சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். வரலாறு, தத்துவம் ,குறியீடுகள் ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாது. மனித உள்ளத்தின் இயல்புகள் கூடத் தெரியாது. கதாபாத்திரங்களின் உட்சிக்கல்களும் விரிவும்கூடப் புரியாது. அப்படியே பாலகுமாரன் கல்கி கதைபோல எல்லா நாவல்களையும் படிப்பார்கள்.

அந்த வாசிப்புமுறை எனக்கும் பழகிவிட்டிருக்கிறது. என்னால் ஆழமாகப் போகவே முடியாதபடி ஆகிவிட்டது. இது ஒரு பெரிய இழப்பு என நினைக்கிறேன். புனைவுக்களியாட்டுச் சிறுகதைகளை மீண்டும் வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன்.

ஆர்

அன்புள்ள ஆர்,

உங்கள் கருத்து சரிதான். இலக்கியவாசிப்பின் தொடக்கக் காலகட்டத்தில் நமக்கு அதைப்பற்றி உரையாட ‘யாராவது’ கிடைத்தால்போதும். எவருடன் பேசினாலும் நம் வாசிப்பு விரிவாக நிகழும். ஆனால் ஒரு கட்டத்தில் ‘ஆழமாக’ உரையாடுபவர்களை நோக்கிச் சென்றாகவேண்டும். இல்லாவிட்டால் நம் வாசிப்பு தேங்கிவிடும்.

பின்நிலை வாசகர்களில் இரண்டு வகை உண்டு. தொடக்கநிலை வாசகர்கள், தேக்கநிலை வாசகர்கள். தொடக்கநிலை வாசகர்கள் இன்னும் வாசிக்க ஆரம்பிக்காதவர்கள், அவர்களுக்கு மேலே செல்லும் ஆர்வமுண்டு என அவர்களின் தேடலே காட்டும். ஆனால் தேக்கநிலை வாசகர்கள் எங்கோ நின்றுவிட்டவர்கள். அவர்களால் புதிய எதையும் வாசிக்கமுடியாது. எதனுள்ளும் ஆழமாகச் செல்லவும் முடியாது. எது தங்களுக்கு முன்னரே தெரியுமோ அதையே அவர்கள் திரும்பவும் வாசிப்பார்கள். அதையே சொல்லிக்கொண்டும் இருப்பார்கள். அவர்கள் பிறருடைய வாசிப்புக்குப் பெரும் தடைகளாக அமைபவர்கள்.

அந்தவகையான வாசகர்களில் பல வகையினர் உண்டு. சிலர் சில அரசியல்கொள்கைகளை ஒட்டி வாசிப்பார்கள், எங்கும் அதை மட்டுமே தேடுவார்கள். சிலருக்கு இலக்கியம் என்றாலே அதில் ஆண்பெண் உறவு மட்டுமே தேவை, பாலியல் மீறலை மட்டுமே தேடுபவர்களும் உண்டு. அதை மட்டுமே ‘நுட்பம்’ என்று நினைப்பார்கள். அது சென்றகாலத்து பாலியல் இறுக்கம் கொண்ட சூழலில் இருந்து உருவான மனநிலை. சிலர் கதைவேகம் மட்டுமே இலக்கியம் என நினைப்பார்கள். சிலர் சமூக யதார்த்தம் மட்டுமே இலக்கியம் என நம்புவார்கள்.

அப்படி எங்கே நின்றிருந்தாலும் அது தேக்கமே. இலக்கியம் என்பதே தொடர்ச்சியான முன்னகர்வுக்காகத்தான். சிந்தனையில், மெய்யுணர்வில் நிகழும் வளர்ச்சியையே இலக்கியத்தின் பயன் என்று சொல்கிறோம்.

*

புனைவுக்களியாட்டு என்ற பேரில் கோவிட் காலகட்டத்தில் நான் வெளியிட்ட கதைகள் இன்று உலகமெங்கும் மொழியாக்கம் செய்து வெளியிடப்படுகின்றன. உலகின் எந்த ஒரு இலக்கிய இதழுக்கு அனுப்பப்பட்டாலும் அவை உடனே ஏற்புபெறுகின்றன. பல தொகுதிகள் ஆங்கிலத்தில் சர்வதேசப்பதிப்புகளாக வெளிவரவுள்ளன. மெல்லமெல்ல அவை உலக அளவிலேயே இலக்கியத்தில் நிகழ்ந்த முக்கியமான வெளிப்பாடு என கொள்ளப்படும் என நம்புகிறேன்.

அவை அன்றைய என் உள எழுச்சியால் அத்தனை வேகமாக எழுதப்பட்டன. எதிர்மறைச்சூழலில் மிகுந்த வீச்சுடன் ஒளி நோக்கிச் செல்வதே என் இயல்பு. அதையே அக்கதைகளிலும் நிகழ்த்தியிருக்கிறேன். அது என் தரிசனம். என் தனிவாழ்க்கையின் ஆழ்ந்த இருட்பயணங்களினூடாக, என் தேடலின் விளைவாக, நான் கண்டடைந்தது அது. அது நானேதான். அந்த என்னை மீண்டும் மீண்டும் என் புனைவுகளினூடாகக் கண்டடைகிறேன்.

அக்கதைகள் அப்படி கொத்துக் கொத்தாக வெளியிடப்பட்டமையால் அவற்றுக்கு கூடுதல் கவனம் கிடைத்தது. அத்தனை கதைகளா என்னும் திகைப்பு அவற்றை வாசிக்கச் செய்தது – தமிழில் அதிகமாக வாசிக்கப்பட்ட சிறுகதைகள் அவையாகவே இருக்கும். அவை தொடர்ச்சியாக இன்றும் பேசப்படுகின்றன. ஆனால் அவை அப்படி வெளியிடப்பட்டமையாலேயே முழுமையான வாசிப்பைப் பெறமுடியாமலும் போயின. ஒரு நல்ல கதை இன்னொரு நல்ல கதையை மறைத்துவிட்டது.

அத்துடன் அக்கதைகளில் துப்பறியும்கதை, திகில் கதை, வரலாற்றுக்கதை, மிகுகற்பனை கதை, உருவகக்கதை என பல்வேறு வகைகள் இருந்தன. ஒரு வகைக் கதை உருவாக்கும் மனநிலை இன்னொருவகைக் கதை உருவாக்கும் மனநிலைக்கு எதிரானது. ஆகவே பல வாசகர்கள் நல்ல கதைகளை கவனிக்கவில்லை. சிலர் வாசித்திருந்தாலும்கூட நினைவுகூர்வதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சில ‘விருப்பமான’ கதைகள் இருக்கும். பேச்சில் ஒரு கதையை இன்னொருவர் சொன்னால் திகைப்பும் வியப்பும் அடைந்து ‘அந்தக் கதையை எப்படி கவனிக்காமல் விட்டோம்’ என மருகுவார்கள்.

அவற்றில் பல கதைகள் தமிழில் பொதுவாக இலக்கியச் சிறுகதைகளின் வட்டம் என வகுக்கப்பட்டவற்றை முழுமையாகக் கடந்தவை. ஆகவே பழைய வாசகர்களின் தேங்கிப்போன வாசிப்பு அவற்றை அடைவதற்குப் பெரிய தடை. புதிய வாசிப்பு, புதிய முன்னகர்வு இன்றி அவற்றை அடைய முடியாது. தன் சொந்த ரசனையை, நுண்ணுணர்வை மட்டுமே நம்பி வாசிப்பவர் மட்டுமே அவற்றை உணர முடியும்.

அக்கதைகளை வாசிக்கச் சிறந்த வழி தொகுப்புகளாக வாசிப்பதுதான். ஏனென்றால் தொகுப்புகள் ஒரே வகையான கதைகள் கொண்டவை. ஆயிரம் ஊற்றுகள் வரலாற்றுக் கதைகளின் தொகுப்பு என்றால் , பத்துலட்சம் காலடிகள் துப்பறியும் கதைகள் கொண்டது. உருவகக்கதைகளாலானது மலைபூத்தபோது. நாயக்கர் காலகட்டத்து வரலாற்றுக்கதைகளின் தொகுதி படையல்.

இந்தவகையாக ஒரே கதைக்களம் கொண்ட கதைகளை வாசிக்கையில் ஒரு கதை இன்னொரு கதைக்கான மனநிலையை அளிப்பதை, ஒரு நாவல்போல ஒட்டுமொத்தமாகக் கதையுலகம் திரண்டுவருவதைக் காணலாம். ஒரு சிறுகதைமேல் உச்சகட்ட கவனம் குவிய, அதன் குறியீட்டுத்தன்மையோ தரிசனமோ நம்மில் துல்லியமாகத் திரள அந்த வாசிப்பு மிகமிக உதவியானது. ஒருகதையை வாசிக்கையில் பலசமயம் முந்தைய கதையில் நாம் கவனிக்காமல் விட்ட நுணுக்கங்கள் பிடிகிடைக்கலாம்.

சில கதைகளுக்கு அவற்றுக்குரிய ஓர் உரையாடல்முறை, மொழிநடை உருவாகி வந்திருக்கும். அவற்றை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் எளிதில் பழகிக்கொள்ளலாம். ஆகவேதான் அந்தக் கதைகள் பொதுப்பேசுபொருள், பொதுக்களம் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவப் பின்னணி கொண்ட கதைகள் இன்னும் தொகுக்கப்படவில்லை , அந்த அளவு கதைகள் இல்லை. படையல் தொகுதியில் இணையத்தில் வெளிவராத மங்கம்மாள் சாலை போன்ற குறுநாவல் இடம்பெற்றுள்ளது. அந்த தொகுதியின் சிறந்த கதையும் அதுவே.

தங்கப்புத்தகம் தொகுதியிலுள்ள கதைகள் எல்லாமே ஆன்மிக உருவகங்கள்தான். அகப்பயணங்களை மட்டுமே அவை பேசுகின்றன. சற்று தியான அனுபவம் கொண்டவர்கள் அனைவருமே அந்த கதைகளின் உணர்வுநிலைகளையும், பேசுபொருளையும் ஏற்கனவே கொஞ்சம் அறிந்திருப்பார்கள். அப்படி ஒரு எண்ணத்துடன் அக்கதைகளை வாசித்தாலே போதும், இயல்பாகவே அவை திறந்துகொள்ளும். உண்மையில் பலவீனமான வாசிப்புகொண்டவர்களின் சூழல் அளிக்கும் தடை இல்லாமலிருந்தாலே அவை தெளிவாக தன்னை விளக்கும்.

நான் கதைச்சுவாரசியத்தை முதன்மையாக எண்ணுபவன். நான் கதைசொல்லி என்றே என்னை உணர்பவன். ஆனால் வெறும் கதைகளை எழுதுபவன் அல்ல. வெறும் கதைகளாக அவற்றை வாசிக்கலாமா? வாசிக்கலாம். அப்படி வாசிப்பவர்கள் அபத்தமாக ஏதாவது சொல்வார்கள்தான், ஆனால் கதை அவர்களின் ஆழுள்ளத்தை தொட்டிருக்கும். சிலகாலம் கழித்தாவது அவர்கள் அக்கதைகள் உருவாக்கும் சாராம்சத்தை வந்தடைவார்கள். அப்படி பலபேரைக் கண்டிருக்கிறேன்.

இந்தக்கதைகள் தமிழில் இன்னமும்கூட மதிக்கத்தக்க வாசிப்பைப் பெறவில்லை என்றே நினைக்கிறேன். தெலுங்கில், மலையாளத்தில், கன்னடத்தில், ஆங்கிலத்தில் அவை மொழியாக்கம் செய்யப்படும்போது வரும் தீவிரமான, உணர்ச்சிகரமான, ஆழமான வாசிப்புகளைப் பார்க்கையில் தமிழக வாசிப்பு ஏமாற்றம் அளிப்பதை மறுக்கவில்லை. ஏனென்றால் இங்கே நாம் இலக்கியத்தை சில்லறை அரட்டையாக ஆக்கியுள்ளோம், எப்போதுமே எதிர்மனநிலையுடன் இருப்பவர்களின் கொசுத்தொல்லையும் பெரிய சிக்கலாக உள்ளது.

ஆனால் நல்ல வாசகர்கள் பலர் மிக இளைய தலைமுறையில் இருந்து உருவாகி வருவதையும் காண்கிறேன். இன்று உலகமெங்கும் வெவ்வேறு நிலங்களில் இக்கதைகளின் மீதான வாசிப்பும் விவாதமும் நிகழ்ந்துகொண்டிருப்பதை காண்கிறேன். வெளிநிலத்து வாசிப்புகள் தமிழ் வாசிப்பை மேலும் கூர்மையாக்கும் என எதிர்பார்க்கிறேன்.

தங்கப்புத்தகம் கதைத்தொகுதியின் ஆன்மிகம் ஒரு கோணத்தில் நமக்கு அன்னியமானது. அது பௌத்தம் சார்ந்தது. இந்து மதம் உருவாக்கும் வழக்கமான ஆன்மிகத்தின் எல்லைகளைக் கடந்தே நாம் அதை அடைய முடியும். அதைப்போலவே முதுநாவல் உருவாகும் சூபி ஆன்மிகத்தையும் நம் மரபும், நம் வளர்ப்பும் அளிக்கும் இயல்பான தடையைக் கடந்தே அடையமுடியும். அப்படி தடைகளைக் கடப்பதற்கே இலக்கியம் எழுதப்படுகிறது இல்லையா?

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2025 11:35

குந்துநாதர்

குந்துநாதர் இஷுவாகு குலமன்னர் சூரியதேவருக்கும், இராணி ஸ்ரீதேவிக்கும், அஸ்தினாபுரத்தில் மகனாகப் பிறந்தார். குந்து என்பதற்கு வட மொழியில் நவரத்தினங்களின் குவியல் எனப் பொருள். 100,000 ஆண்டுகள் வாழ்ந்த குந்துநாதர் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.

குந்துநாதர் குந்துநாதர் குந்துநாதர் – தமிழ் விக்கி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2025 11:33

July 21, 2025

பண்பாடல்

நீண்டகாலம் ஆகவில்லை, ஒரு விவாதம் இணையத்தில் நிகழ்ந்தது. பண்பாடு பற்றி நான் பேசியபோது ஒருவர் வந்து ‘பண்பாடு என்பது என்ன?’ என்று கேட்டார். கேட்டவர் மேல் எனக்கு பெரிய மரியாதை ஏதுமில்லை, அவர் ஒரு முதிரா (முதிரவாய்ப்பில்லா) அறிவுஜீவி என்பது என் எண்ணம். ஆகவே அவர் பெயரைச் சொல்லவில்லை. இந்தவகையான கேள்விகளைக் கேட்பது போலிஅறிவுச்செயல்பாடுகளின் வழிகளில் ஒன்று. ‘சீரியஸாக’ சிந்திக்கிறோம் என்னும் பாவனை இது. ‘இது நியாயம் அல்ல’ என்று நாம் எதையேனும் சொன்னால் உடனே வந்து ‘நியாயம் என்பது என்ன?’ என்று தத்துவார்த்தமாக ஆரம்பிப்பது, எதையாவது சொல்ல முற்படுவது.

அதிலுள்ள பிரச்சினை என்ன? அறம், நீதி, அன்பு, கருணை, பண்பாடு, நாகரீகம், மரபு என நாம் பயன்படுத்தும் சொற்களின் அர்த்தங்கள் ஒரு சொற்சூழலால் வரையறை செய்யப்படுபவை. அச்சொற்சூழலுக்குள் உள்ள அனைவருக்கும் அவற்றின் பொருள் தெரிந்திருக்கும். அல்லது, அப்படி நாம் உருவகித்துக்கொண்டாகவேண்டும். ஒவ்வொரு உரையாடலிலும் இந்த அடிப்படைகளை வரையறை செய்து நிறுவியபின்னரே பேசவேண்டும் என்றால் அதைப்போல அபத்தம் வேறில்லை

அச்சொற்களை வரையறை செய்யக்கூடாதா? முயலலாம், ஆனால் அது எப்போதுமே தத்துவார்த்தமான வரையறையே ஆகும். ஒரு பண்பாட்டுச்சூழலில், ஒரு குறிப்பிட்ட உரையாடற்சூழலில் மட்டுமே அவற்றுக்கு ஒரு பொது வரையறை அளிக்கமுடியும். அதுவும் மிகப்பொதுவான ஒரு வரையறை, அதன்பின் அவ்வரையறையை கொஞ்சம் விரிவாக்கி விரிவாக்கி தொடர்ந்து பொருள்கொள்ளவேண்டும். எந்தச் சமூகமும் அச்சொற்களுக்கு அறுதிப்பொருள் அளிக்கமுடியாது, அளிக்கும் சமூகம் அழிந்துவிட்ட ஒன்று, வாழ்க்கை நிகழாத ஒன்று.

நான் அன்று பண்பாட்டுக்கு அச்சொற்சூழலில் ஒரு பொருள் அளித்தேன் “நம் ஆழுள்ளத்தை உருவாக்கியிருக்கும் படிமங்கள், ஆழ்படிமங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பையே பண்பாடு என்கிறோம்”. என்னுடன் விவாதித்தவர் அதை மறுத்து விழுமியங்களே பண்பாடு என வாதிட்டார். நான் அது அவரது கருத்து என்றே எடுத்துக்கொண்டேன். அப்படி அவரவருக்கான பொதுவான வரையறையை உருவாக்கிக்கொள்வதே நாம் செய்வது.

நாம் பண்பாடு என்று சொல்வது விழுமியங்கள், வாழ்க்கை முறைகள், ஆசாரங்கள், நம்பிக்கைகள், சமூகஅமைப்புகள் ஆகியவற்றைத்தான். நீதியுணர்ச்சி, அறவுணர்ச்சி, பாசம் ,கருணை எல்லாம் பண்பாட்டின் வெளிப்பாடுகள். வேட்டிகட்டுவது, சேலை கட்டுவது, பொட்டுவைப்பது, இலைபோட்டுச் சாப்பிடுவது எல்லாமே பண்பாட்டு அடிஅயாளங்கள்தான். பெரியவர்களைப் பார்த்தால் எழுவதும், வரவேற்பதற்காகக் கைகூப்புவதும் பண்பாடுதான். சாவுச்சடங்குகளும் பிறப்புச்சடங்குகளும் பண்பாட்டின் பகுதியே. இறைநம்பிக்கை, மறுபிறப்பு நம்பிக்கை, பாவபுண்ணிய நம்பிக்கை ஆகியவையும் பண்பாடுதான். குடும்பம், சாதி, கிராமம் போன்ற அமைப்புகளும் பண்பாடுதான். ஆனால் ஒட்டுமொத்தமாக இவையனைத்துக்கும் அடியில் இருக்கும் பண்பாடு என்பது ஒருவகையான அகக்கட்டுமானம். ஒவ்வொருவரின் உள்ளத்தில் இருப்பது அது. ஆழுள்ளத்தில் அதன் வேர்கள் உள்ளன. அதன் கட்டுமானப்பொருள், building block என்பது படிமங்கள்தான். அவை ஆழ்படிமங்களாக, தொன்மங்களாக வெவ்வேறுவடிவங்களில் இருக்கலாம்.

இலக்கியமும் கலைகளும் அந்த படிமங்களைக் கையாண்டு தங்களை நிகழ்த்திக்கொள்பவை. ஒலிப்படிமங்கள் இசை என்றும், காட்சிப்படிமங்கள் ஓவியமும் சிற்பமும் என்றும், மொழிப்படிமங்கள் இலக்கியம் என்றும் சொல்லலாம். ஆனால் இலக்கியம் உட்பட எல்லா நுண்கலைகளும் ஒன்றுடனொன்று பிணைந்து, ஒன்றை ஒன்று பயன்படுத்திக்கொண்டுதான் செயல்படுகின்றன. பண்பாட்டின் அடிப்படை அலகுகளான படிமங்களை உருவாக்குபவை, மாற்றியமைப்பவை கலைகளும் இலக்கியமும்தான். ஆகவேதான் அவற்றைப் பண்பாட்டு உருவாக்கச் செயல்பாடுகள் என்கிறோம்.

ஆகவே, ஒரு பண்பாடு பற்றி பேச முதன்மைத் தகுதிகொண்டவர்கள் கலைஞர்களும் எழுத்தாளர்களுமே. அவர்களின் கருத்துக்களுக்கு ஆய்வேடுகளின் முறைமை இருப்பதில்லை. தேவையுமில்லை. ஆய்வேடுகளின் முறைமை என்பது அவற்றுக்கு புறவயமான நம்பகத்தன்மையை உருவாக்கும்பொருட்டு கையாளப்படுவது. ஏனென்றால் ஆய்வேடு தன்னளவில் தொடர்புறுத்துவது. கலையிலக்கியம் புறவயமானது அல்ல, அது அந்த கலைஞனின், ஆசிரியனின் அகத்தின் வெளிப்பாடு மட்டுமே. அவனுடைய வெளிப்பாடு வழியாக நாம் அவனையே சென்றடைகிறோம். அவன் சொல்பவை தன்னை, தன் அகத்தை கருவியாக்கி அறிந்தவை. ஆகவேதான் உலகம் முழுக்க கலைஞர்களின் எழுத்தாளர்களின் பண்பாட்டு அவதானிப்புகள் ஆய்வாளர்களால் அத்தனை கூர்ந்து கவனிக்கப்படுகிறன, விவாதிக்கப்படுகின்றன.

ஓர் எழுத்தாளனாக நான் எழுதவந்த காலம் முதலே புனைவெழுத்துக்கு அப்பால் என்னுடைய அகவயமான பண்பாட்டு அவதானிப்புகளை முன்வைத்துக்கொண்டே இருக்கிறேன். இணையம் வந்தபின் எனக்கு அன்றாடம் எழுதுவதற்கான ஊடகம் அமைந்தது. இவை அவ்வாறு நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. வெளிவந்த காலகட்டங்களில் இவை வெவ்வேறுவகையான விவாதங்களையும் உருவாக்கியவை. அவ்விவாதங்கள் எத்தகையவை ஆயினும் ஒரு சூழலில் பண்பாட்டு விவாதங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தாகவேண்டும். அரசியல், சினிமா என இடைவிடாது விவாதம் நிகழும் தமிழ்ச்சூழலில் பண்பாட்டின் அடிப்படைகளைப் பற்றிய விவாதங்கள் அரிதினும் அரிதானவை. ஆகவே இந்த விவாதங்கள் காலம்கடந்த முக்கியத்துவம் கொண்டவை.

ஒரு பண்பாடு தன் அடிப்படைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கவேண்டும். தன் நம்பிக்கைகளை, வாழ்க்கைமுறைகளை, ஆசாரங்களை, அறங்களை. மறுபரிசீலனைசெய்யவும் முன்னகரவும் அதுவே வழி. அத்தகைய விவாதங்கள் அடங்கியது இந்நூல். செறிவான மொழியில் அமைந்துள்ள நூல், ஆனால் வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் தன்மைகொண்டது, ஆகவே தடையற்ற வாசிப்பனுபவமும் ஆவது. தன்னை, தன் சூழலை, தன் வரலாற்றை ஆழ்ந்தறியவும் தனக்கான பார்வையை உருவாக்கிக்கொள்ளவும் விழையும் வாசகர்களுக்கானது.

ஆனால் இந்நூல் எந்த கொள்கை, கோட்பாடு, அமைப்பு சார்ந்ததும் அல்ல. எனக்கு எழுத்தாளன் என்பதற்கு அப்பால் எந்த அடையாளத்தையும் வைத்துக்கொள்ள நான் விரும்புவதில்லை. மேலும் உறுதியான கொள்கைகளும் கோட்பாடுகளும் அமைப்புகளும் எப்படியோ ஒரு கருத்தை பரப்பி நிலைநாட்டி அதனூடாக அதிகாரத்தை அடையும் நோக்கம் கொண்டவை. இங்கே கருத்துத்தள விவாதம் என்பது முழுக்கமுழுக்க அப்படி ஏதேனும் ஒரு அதிகாரத்தரப்பின் குரலாகவே உள்ளது. இது அந்த தரப்புகளின் மோதல்களுக்கு வெளியே அந்தரங்கமாக ஓர் எழுத்தாளனும் வாசகனும் உணரும் பண்பாட்டைப் பற்றிய விவாதம்.

என் மதிப்பிற்குரிய ஆசிரியர் பி.கே.பாலகிருஷ்ணன் தொடர்ச்சியாக பண்பாட்டு விவாதங்களில் ஈடுபட்டு வந்தவர். பண்பாட்டு விவாதங்களைச் செறிவாகவும், அதேசமயம் நல்ல வாசிப்புத்தன்மையுடனும் நிகழ்த்த முடியும் என்று காட்டியவர். இந்நூல் அவ்வகையில் அவருடைய அடியொற்றியது, ஆகவே அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்நூலை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்திற்கும் மறுபதிப்பை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்துக்கும் இப்போதைய பதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

ஜெயமோகன்

எர்ணாகுளம்

13 ஏப்ரல் 2025

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடான பண்படுதல் நூலின் முன்னுரை)

பண்படுதல் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:35

குழ கதிரேசன்

கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். சிறார் இலக்கியப் படைப்பாளி. சிறார் பாட நூல்கள் ஆசிரியர். சாகித்ய அகாடமி வழங்கும் பால் சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். ஐந்திணை பதிப்பகத்தை நிறுவி இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார்.

குழ கதிரேசன் குழ கதிரேசன் குழ கதிரேசன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:33

வேதாசலம் பேட்டி- அந்திமழை

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்? வேதாசலமும் வாசகர்களும் – ஒரு கேள்வி

மதுரையைச் சுற்றியுள்ள சமணக் குன்றுகளை ஆய்வு செய்து இவர் எழுதிய ‘எண்பெருங்குன்றம்’ மாபெரும் ஆவணமாகத் திகழ்கிறது.  தமிழகத் தொல்லியல் துறையின் முதுநிலைக் கல்வெட்டாய்வாளர், அகழாய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான விருதுகள், கல்வெட்டியலுக்காக வெங்கையா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அவர் இப்போது ‘தமிழ் விக்கி தூரன் விருது-2025 ‘ பெறவுள்ளார். இந்த நிலையில்  அவருடன் ஓர் உரையாடல் .

வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:33

டாலஸில் ஒரு சந்திப்பு

அன்புள்ள ஜெ,

சென்ற பூன் கூடுகைக்கு டாலஸ், டெக்ஸாசில் இருந்து நான், மூர்த்தி, பாலாஜி, செந்தில்வேல் கலந்துகொண்டோம். அனைவருமே பல பத்தாண்டுகளாக உங்கள் வாசகர்கள். இதற்கு முன் நீங்கள் 2022 இல் டாலஸ் வந்தபோது நாங்கள் சந்தித்து இருந்தாலும், பூன்கூடுகை நட்பை இன்னும் வலுவாக்கியது. அதன்பின் அட்லாண்டா நண்பர் சிஜோ நவம்பர் இறுதியில் இங்கு வந்தபோது நண்பர்கள் மீண்டும் சந்தித்தோம். நட்புக்கூடுகையை ஏன் இலக்கியகூடுகையாக மாற்றி தொடர்ந்து சந்திக்ககூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

தொடர்ந்து டிசம்பரில் நாங்கள் நால்வரும் நூலகத்தில் சந்தித்து இமைக்கணத்தில் வரும் சிகண்டி பகுதி பற்றி உரையாடினோம். முதல் கூடுகை என்றாலும், செந்தில் பாடி தொடங்கி வைக்க அனைவரும் தீவிரமாக பேச தயாரித்து வந்து இருந்தோம். முதல்முறையே இமைக்கணத்தின் தத்துவகட்டுமானம், உபநிடத முறையில் அமைந்து இருப்பது, இமைக்கணத்தின் விதைகள் முதற்கனலில் அமைந்திருப்பது, அதில் வரும் வராஹி படிமத்தை தொடர்ந்தால் 45000 ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட இந்தோனேசிய குகை ஓவியம் முதல் சுமேரிய நாகரிகத்தில் கொபக்லீடேபே கோவிலில் உள்ள வாரகம் சிற்பம் (வேளாண்மை தொடங்குவதற்கு  முன் முதல் கற்காலம்) மற்றும் தமிழக ஶ்ரீ முஷ்ணம் பூவாரகன் என்று மிகத்தீவிரமாக இருந்தது. முடிவில் இரு வாரங்களுக்கு ஒருமுறை சந்திப்பது என்று முடிவு செய்துகொண்டோம். கூடுகை முடிந்தபின் ஸ்டார்பக்ஸ் காஃபி உடன் மேலும் இலக்கிய பேச்சு இரண்டு மணிநேரம் நீடித்தது. பின்னர் இமைக்கணத்தில் பீஷ்மர், கர்ணன், விதுரர் என்று ஒரு ஒரு பகுதியாக பிரித்து படித்து கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து சந்திக்கும்போது எங்களுக்கு இமைக்கணத்தின் தத்துவ அடர்த்தியை தவறாக விளங்கி கொள்கிறோமோ, இன்னும் முதிர்ச்சி வேண்டுமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே ஒரு முறை இடைவெளி எடுத்துக்கொள்ளலாம் என்று விஷ்ணுபுர நண்பர் நிர்மல் எழுதிய கதைகள் பற்றி ஒருமுறை விவாதித்தோம். அதுவும் நன்றாகவே அமைந்தது, அதைப் பற்றி அவரிடமும் பகிர்ந்து கொண்டோம்.

மீண்டும் இமைக்கணத்திற்குத் திரும்பி மேலும் கூடுகைகள் ஒருங்கிணைத்தோம். மேலும் இரு நண்பர்கள் வெங்கட் மற்றும் சரவணன் இணைந்து கொண்டனர். திரௌபதி பகுதி வரும்போது இமைக்கணம் திரௌபதி பகுதியில் கேதுமாலன் என்றொரு கதை இருந்தது. அழகை, முழுமையை விரும்பி ஏற்று பின் துறந்து செல்லும் கதை. கலந்து உரையாடியபோது மூர்த்தி கேதுமாலம் என்பது இன்றைய ஈரான் பகுதியாக இருக்கலாம். பழைய காலத்தில் புவியை ஏழு தீவுகளாக வகுத்து அதில் ஜம்புத்வீப பகுதியில் நாம் இருப்பதைச் சொன்னார்.

மேலதிகமாக தேடும்போது, இந்த கேதுமாலன் கதை விஷ்ணுபுராணத்தில் இருக்கிறது. கேதுமாலம் நவகண்டங்களுள் ஒன்று. சுவாயம்புவ மனுவின் மகன் பிரியவிரதனுக்கு பத்து புத்திரர்களும், இரண்டு புத்திரிகளும் பிறந்தனர். பிரியவிரதன் உலகை ஜம்புத்வீபம், பிளக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று ஏழு த்வீபங்களாகப் பிரித்து ஏழு புத்திரர்களுக்கும் பங்கிட்டுத் தந்தான்.

ஜம்புத்வீபம் பகுதியை பெற்ற அக்னிதரன் தன் நிலப்பகுதியை நாபி, கிம்புருஷன், ஹரி, இளவிரதன், ரம்யன், ஹிரன்வனன், குரு, பத்ரஷ்வன், கேதுமாலன் என்ற ஒன்பது புத்திரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான்.

இந்த ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாகப்  பிரிக்கப்பட்டது, அவற்றில் ஒன்று பாரத வர்ஷம். மற்ற எட்டு வர்ஷங்கள் கேதுமூல வர்ஷம், ஹரி வர்ஷம், இலாவிருத வர்ஷம், குரு வர்ஷம், ஹிரண்யக வர்ஷம், ரம்யக வர்ஷம், கிம்புருஷ வர்ஷம், பத்ராஸ்வ வர்ஷம். நாபியின் மகன் ரிஷபன் (சமணத்தின் முதல்  தீர்த்தங்கரர் ரிஷபதேவர்). ரிஷபதேவருக்கு சுனந்தா மற்றும் சுமங்களா என இரண்டு மனைவிகள். சுனந்தாவிற்கு பாகுபலி மற்றும் சுந்தரி என இரண்டு மக்கள் பிறந்தனர். சுமங்களாவிற்கு பரதன் மற்றும் பிராமி என்ற இரண்டு மக்கள் பிறந்தனர். இதில் பரதன் ரிஷபதேவரின் மூத்த மகன்.

கோசல நாட்டின் அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட வடபகுதியை பரதனுக்கும், போதானப்பூர் (இன்றைய ஹாசன் மாவட்டம்) நகரை தலைநகராகக் கொண்ட தென்பகுதியை பாகுபலிக்கும் பங்கிட்டு வழங்கினார் ரிஷபதேவர்.

உலகை வென்ற பரதன், தன் தம்பியின் நாட்டை வெல்லாததல் அவர் கையில் வைத்திருந்த அபூர்வ சக்தி படைத்த சக்ராயுதம் சுழலாமல் நின்று விடுகிறது. பின்பு சகோதரர்களுக்கிடையே போர் நடைபெறுகிறது. இதில் பாகுபலி வெற்றிவாகை சூடுகிறார். ஆனால் பாகுபலிக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரவில்லை. பாகுபலி துறவறம் பூண்டு சமண சமயத்தை தென்னிந்தியாவில் பரப்பி வந்தார். பிற்காலத்தில் பரதன் இந்திய நாட்டின் பேரரசனாகி மறைந்தபின் பாரதவர்ஷம் என்றும் பரதகண்டம் என்றும் அழைக்கப்படலாயிற்று. இந்த  நிரையில் வந்த 22 வது தீர்த்தங்கரர் கிருஷ்ணனின் சித்தப்பா நேமிநாதர். 24 வது தீர்த்தங்கரர் மகாவீரர். கேதுமாலன் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவருக்கு சித்தப்பா.இந்த முதல்கட்ட துப்பறியும் வேலை தவிர, அந்த பகுதி ஒன்றின் உண்மை மதிப்பு, அழகு, முழுமை தேடல், அதன் பின்னடைவு, அதற்கு தீர்வு என அனைத்தையும் முன்வைக்கிறது. இது மீண்டும் எங்களுக்கு தயக்கத்தை உருவாக்கியது.

இதனிடையில் சென்ற பூன் தத்துவமுகாமில் நீங்கள் அளித்த புறவய சட்டகத்தை மருத்துவத்துக்கு போட்டுப்பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆவலில் சொல்வனத்தில் ஒரு மருத்துவக் கட்டுரைத்தொடர் எழுதத் தொடங்கி இருந்தேன். அதில் வரும் சித்த மருத்துவப்பகுதிக்காக தேடியபோது புதுமைப்பித்தன் நாசகார கும்பல் கதைக்கு சென்று சேர்ந்தேன். அந்த கதை என்னை மிகவும் பாதித்தது. எனவே புதுமைப்பித்தன் படிக்கலாமா என்று கேட்டேன். நண்பர்களும் முழு மனதாக ஒத்துக்கொண்டார்கள்.

இதனிடையில் ஆஸ்டின் சௌந்தர் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு கலந்து கொள்ளமுடியுமா என்று ஆஸ்டினில் இருந்து நண்பர் ஸ்கந்தா கேட்டார். டாலஸ் நண்பர்கள் ஆஸ்டின் சென்று கலந்துகொண்டோம். நண்பர் மூர்த்தி இது குறித்து உங்களுக்கு எழுதி இருந்தார்.

நேரில் சந்தித்தபோது சௌந்தர் அவர்கள் எங்கள் கூடுகையில் கலந்துக்கொள்ள ஆவலாக உள்ளதாக சொன்னார். அடுத்தமுறை அவரும், அவர் மனைவி ராதாவும் ஆஸ்டினில் இருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து வந்து கலந்துகொண்டனர். அன்னபூர்ணா என்ற புதுநண்பரும் இணைந்துகொண்டார். துன்பக்கேணி, கயிற்றரவு, கபாடபுரம் போன்ற கதைகள் விவாதித்தோம். அதன் பின் ஒன்றாக உணவருந்தச் சென்றோம். கூடுகை நன்றாக இருந்ததாக சௌந்தர் பின்னர் செய்தியும் அனுப்பினார்.

அடுத்த கூடுகை உங்கள் பிறந்தநாள் மற்றும் புதுமைப்பித்தன் பிறந்தநாள் சிறப்பாக நாசகாரகும்பல், மகாமாசானம், சிற்பியின் நரகம், காஞ்சனை கதையும், உங்களின் கிரீட்டிங்ஸ் கதையும் பேசினோம்.பாலாஜி மனைவி ராதாவும் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

அடுத்து ஒரு நாவல் பற்றி பேசலாம் என்று பாலாஜி சொல்லி, அ முத்துலிங்கம் அவர்களின் “கடவுள் தொடங்கிய இடம்” பற்றி பேசினோம். இதற்கு ஆஸ்டின் நகரத்தில் இருந்து 3 மணிநேரம் பயணம் செய்து பாலா மற்றும் அவர் மனைவி கவிதா, கிரி, ஆஸ்டின் சௌந்தர் மற்றும் அவர் மனைவி ராதா ஆகியோர் வந்திருந்தார்கள். அட்லான்டாவில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வந்து சிஜோ எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நிகழ்வுக்குப் பின் ஆஸ்டின் நண்பர்கள் மாதம் ஒருமுறை வந்து கலந்துகொள்வதாக வாக்களித்துப் பிரிந்தனர். பிறகு அ. முத்துலிங்கம் அவர்களின் 12 சிறுகதைகள் மூன்று கூடுகையிலாக கலந்துரையாடினோம்.

மீண்டும் ஆஸ்டின் நண்பர்களுடன் சேர்ந்து மத்தகம் குறுநாவல் வாசிப்பு கூட்டம் சென்ற சனிக்கிழமை நடந்தது. இந்த முறை 5 மணி நேரப் பயண தூரத்தில் இருந்து சான் அண்டனியோ கோபியும் கலந்துகொண்டார்.

ஒருநாள் பயணம் செய்து எலுமிச்சைசாதம் கட்டிவந்து பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு வந்து இலக்கியக்கூடுகையில் கலந்து கொள்வது எல்லாம் உங்கள் மேல்கொண்ட தீரா அன்பினால்தான் சாத்தியமாகிறது. ஆஸ்டின், சான் அன்டோனியோ நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.

மத்தகம் உரையாடலில் குறுநாவல் வடிவம், அதை ஒட்டி அளிக்கும் வாசக இடைவெளி, என்னைப்போலவே முதல் மூன்று அத்தியாயங்களை மட்டும் அடிக்கடி படித்துக்கொள்ளும் நண்பர்கள், கதையில் ஒரு சிறுவரியாக வரும் பாகனுக்கு பையன்களை பிடிக்கும் என்ற குறிப்பு நுட்பம், கதைக்கு வெளியே கேரள வரலாறு மற்றும் குறுநாவல் அளிக்கும் காலஅளவில் ஒரு சித்திரத்தை உருவாக்கி காட்டுதல் என்று தீவிரமான கலந்துரையாடல் நடைபெற்றது.

முதல் கூடுகைக்குப் பின் கடந்த 8 மாதங்களில் ஏற்பட்ட மாற்றம், திரும்பி பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.சென்ற பூன் முகாமில் ஒருநாள் காலை காபியின் போது நீங்கள் பறவை பார்க்க உலகெங்குமிருந்து கேரளா வருபவர்கள் பற்றி, ஒரு பறவை பார்ப்பதற்கு நாள்கணக்கில் காத்து இருப்பார்கள் என்று சொன்னீர்கள். நான் அந்த அனுபவத்துக்கு பிறகு அவர்கள் என்னவாக உருமாறுகிறார்கள், அது வெறும் ஆர்வம் மட்டுமா என்று கேட்டேன். நீங்கள் அது தெரியாது, அவர்களாக வந்து சொன்னால்தான் உண்டு. வேண்டும் என்றால் நீங்கள் அதைப்போல ஒன்றை தீவிரமாக செய்து கண்டு அடையுங்கள் என்று சொன்னீர்கள். அதன் ஒரு துளி என்றே இந்த கூடுகை ஒருங்கிணைத்தலை உணர்கிறேன். 

நண்பர்கள் அனைவரும் மிகுந்த மனநிறைவையும், அடுத்த கூடுகைக்கான எதிர்பார்ப்பும் இருப்பதாக ஒவ்வொரு முறையும் உணர்கிறோம். சொல்லவும் செய்கிறோம். கலந்துகொண்ட, இனி கலந்துகொள்ளப்போகும் அத்துணை நண்பர்களுக்கும் நன்றியும், அன்பும். 

எல்லாவற்றிற்கும் உங்களுக்கு தீரா அன்பும், நன்றியும் ஜெ!

அன்புடன்,

பிரதீப் பாரதி, டாலஸ்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:33

அகப்பாலை

 

மருபூமி வாங்க

அன்புள்ள்ள ஜெ

அஜிதனின் மருபூமி சிறுகதைத் தொகுதியை இப்போதுதான் வாசித்தேன். நான் முன்னரே அஜிதனின் சிறுகதைகளை இணையத்தில் வாசித்திருக்கிறேன். ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்பது என் மதிப்பீடு. சாவு பற்றிய ஒரு அற்புதமான காவியம்போல் இருந்தது. பொதுவாக வாழ்க்கையைப் பற்றிய சலிப்பும், ஒருவகையான நிறைவும் கொண்டபின்னர்தான் சாவு பற்றி நினைப்பார்கள். நாவல்களும் அப்படித்தான் பேசுவது வழக்கம். கள்ளமில்லாத குழந்தைப்பருவம் சாவை வெவ்வேறு புள்ளிகளில் எதிர்கொள்ளும் தருணங்களை ஆழமான கவித்துவத்துடன் சொன்ன கதை அது.

இந்த தொகுதியில் போர்க்ரோஸ்ட், மாரிட்ஜானின் உடல் ஆகியவையும் அழகான கதைகள். மாரிட்ஜானின் உடல் கதையிலுள்ள நுட்பமான கவித்துவத்தை பலமுறை வாசித்து ரசித்தேன். பொதுவாக இளம் படைப்பாளிகள் தங்கள் எழுத்தில் நேரடியான, உணர்ச்சிகரமான, வலுவான கதைகளையே எழுதுவது வழக்கம். அதுதான் எளிதில் வாசகர்களிடம் சென்று சேரும். அத்துடன் அவர்களின் உணர்ச்சிநிலைகளும் அப்படிப்பட்டவை. கொஞ்சம் கலைத்திறன் குறைவான இளம் கதையாசிரியர்கள் அரசியல் கருத்துக்களையும் சமூகக்கருத்துக்களையும் கதையாக்குவார்கள். இளம்படைப்பாளிகள் கவித்துவத்தை நம்பியே கதைகளை எழுதுவதும், அக்கதைகள் கவித்துவவெற்றிகளை அடைவதும் மிகமிக அரிதானவை. அதற்கு தன் கலைமேல் நம்பிக்கையும், இலக்கியவாசிப்பும், பயிற்சியும் தேவை. அஜிதனின் எல்லா கதைகளுமே கவித்துவமானவை. ஒரு குழந்தையிறப்புப் பாடல்கூட கவித்துவமானது.

ஆனால் இந்தத் தொகுதியின் அற்புதமான படைப்பு மருபூமிதான். பாலைநிலம் என்னும் அனுபவம் ஒரு பெரிய சிம்பனி போல தொடங்கி வலுத்து உச்சம் அடைந்து அப்படியே பொழிந்து அடங்குகிறது. பாலைநிலத்தை நடந்து கடப்பவர் தனக்குள் உள்ள பாலை ஒன்றைத்தான் கடந்துசெல்கிறார். அந்த அகப்பாலையின் வெம்மைமீதுதான் மழை பொழிகிறது. அந்தக்கதையின் உருவகங்களை படிக்கப்படிக்க வியப்புதான். அழகான நஞ்சுக் கனிகள். துணைவரும் ஓணான். தனிமையில் வந்து சூழும் பிரமைகள். ஒவ்வொரு வரியிலும் அழகும் நுட்பமும் கொண்ட இதற்கிணையான கதை உங்கள் படைப்புகளிலேயே ஒன்றிரண்டுதான்.

அஜிதனுக்கு வாழ்த்துக்கள்.

எம்.பாஸ்கர்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:31

பொருட்படுத்தவேண்டியவை

இந்த வசைகளை நீங்கள் பொருட்படுத்தாமல் செயலே வாழ்வு என்று இருப்பதும் அவர்களுக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்த கும்பலைப் பார்த்து பரிதாபமே வருகிறது. வாழ்க்கை முழுக்க இந்த பொசுங்கலிலேயே முடிந்துவிடும் இவர்களுக்கு என நினைக்கிறேன்.

பொருட்படுத்தவேண்டியவை

 

Some scholars used to say that reading is unnecessary in this era because today’s modern communication methods have improved a lot. You are also using modern communication methods to share your ideas.

Reading is outdated!
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 11:30

அஞ்சலி . வி.எஸ். அச்சுதானந்தன்

அஞ்சலி. என் இளமை நினைவுகளின் நாயகன். தலைவன் என்றால் அரசன் அல்ல, தியாகி என்று காட்டி என்னை வழக்கமான தமிழ் மாயைகளில் இருந்து காத்தவன். எளிமையும் நேர்மையும் அதிகாரத்தின் உச்சியில் இருக்கும்போதும் இயல்வதே என்பதை காட்டியவன். என் வீர நாயகனை இருமுறை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் அமைந்தது நல்லூழ்.

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2025 03:57

July 20, 2025

மேலைக்கலை பற்றி ஒரு விவாதம்

இப்போது ஆஸ்திரியாவின் வியன்னாவில் இருக்கிறேன். இன்று ஆஸ்திரிய அருங்காட்சியகத்தில் மேலை ஓவியங்களின் பெருந்தொகுப்பைப் பார்த்தேன். எத்தனை வகைபேதங்கள். எத்தனை காட்சிக்கொந்தளிப்புகள். ஆயிரமாண்டுக்கால ஓவியத்தொகுப்பு. இவற்றில் இருந்துதான் சினிமா உருவாகி வந்துள்ளது. நவீன ‘டிசைன்கள்’ எல்லாமே உருவாகி வந்துள்ளன. நவீன கட்டிடக்கலை, நவீன மென்பொருள் வடிவமைப்புக்கலை எல்லாமே இவற்றில் இருந்துதான். நாம் அவற்றை அறிந்துள்ளோமா? அறிமுகமாவது நமக்கு உண்டா? ஏ.வி.மணிகண்டன் ஓவியக்கலை பற்றி உரையாடுகிறார்.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 20, 2025 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.