Jeyamohan's Blog, page 46
August 1, 2025
ஓஷோ:மரபு மீறலும் 6

இந்த உரையில் ஓஷோவின் நான்கு காலகட்டங்களை பற்றிய அறிமுகத்தை அளிக்க விரும்புகிறேன். ஓஷோவை தொடர்ந்து படிப்பவர்களுக்குக்கூட இந்த சித்திரம் இல்லாமலிருக்கலாம். இந்தப் பரிணாமக்கோடு அவரைப் புரிந்துகொள்ள மிக அவசியமானது என்பது என் எண்ணம்.
பேச்சாளர்
ஓஷோ ஒரு மேடைச் சொற்பொழிவாளராக, சொல்லப்போனால் கட்டணச் சொற்பொழிவாளராகத்தான் அறுபதுகளின் இறுதியில் இந்தியாவில் அறிமுகமாகிறார். புகழ்பெற்ற கட்டண சொற்பொழிவாளர். அவருக்கு விரிவான வாசிப்பு இருந்தது. நீங்கள் நினைப்பதுபோல அவர் ஓஷோ ஆனபின்பு படித்தவரல்ல. அதவாது பகவான் ரஜ்னீஷாக அறியப்பட்ட பிறகு அவர் படித்தது மிகவும் குறைவு, அநேகமாக இல்லை என்று சொல்கிறார்கள். அவருடைய படிப்புகள் எல்லாம் ஐம்பதுகளில் இருந்து பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குள்ளாகத்தான். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவின் அன்றைய பொதுஅறிவுஜீவி ஆளுமைகளில் மிக அதிகமாக படித்த மனிதர் அவர்தான்.
அவ்வளவு வாசிப்பது சாத்தியம் என்பதே கொஞ்சம் ஆச்சர்யமான விஷயம்தான். எழுதுவதிலும் படிப்பதிலும் தீவிரம் கொண்டவன் நான் என்று என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் திரும்பிப்பார்த்து திகைப்படையக் கூடிய சில ஆளுமைகள் உண்டு. ஓஷோ போலவோ அல்லது சிவராமகாரத் போலவோ. அவர்கள் முன்னால் நாம் சிறிய ஆட்களாக ஆகிவிடுகிறோம். அத்தகைய பெரும் படிப்பு, அந்த பெரும்படிப்பை சுமந்து மேடைக்கு வராத எளிமை ஓஷோவுக்கு உண்டு. அவர் தன் இயல்பாகவே புத்தகங்களை பற்றி பேசுகிறாரே ஒழிய திட்டமிட்டு அல்ல. இயல்பான நகைச்சுவை கலந்த ஒரு நட்சத்திர பேச்சாளராக இருந்திருக்கிறார்.
அந்தச் காலகட்டத்தில் சோஷலிசத்திற்கும் காந்தியத்திற்கும் எதிரான வலுவான இந்தியக்குரல் என்று ஓஷோ அவர் அறியப்பட்டிருக்கிறார். அதிகமும் இந்தியிலும், ஆங்கிலத்தில் குறைவாகவும் பேசியிருக்கிறார். சென்னையில் பேசிய ஒரு உரையை தான் கேட்டதாக சுந்தரராமசாமி என்னிடம் சொன்னார். இது அவருடைய முதல் காலகட்டம்.
மாற்று ஆன்மிகம்
தனது இரண்டாவது காலகட்டத்தில் மாற்று ஆன்மீகத்தை முன்வைப்பவராக ஓஷோ மாறினார். அன்றிருந்த மதம் சார்ந்த, மைய ஓட்டமான ஆன்மீக முறைமைகளுக்கு எதிரான, மாற்றான, உலகளாவிய ஓர் ஆன்மீக முறைமையை முன்வைக்கும் ஒரு சொற்பொழிவாளராக அவர் உருவாகிவந்தார்.
இந்தக் காலகட்டத்தில் உலகமெங்கும் அத்தகைய மாற்று ஆன்மீகத்திற்கான தேடல் ஓங்கியிருந்தது என்பதை நாம் நினைவில்கொள்ளவேண்டும். முதல் உலகப்போருக்குப் பின் பிறந்த தலைமுறையினரின் உளச்சோர்வு ஹிப்பி இயக்கமாக ஆகியது. ஐரோப்பாவில் தேசியம்போன்ற கருத்துக்கள் வலுவிழந்தன. அரசுகள் மேல் நம்பிக்கை குறைந்தது. உலகமெங்கும் புரட்சிகள் தோன்றி அழிந்தன. இளைஞர்கள் அன்னியர்களானார்கள்.
கூடவே மரபார்ந்த மதங்களின் பாவம்- மீட்பு என்னும் கருத்துக்கள் மேல் சலிப்பு ஓங்கியது. மதங்கள் பேசிக்கொண்டிருந்த பிரபஞ்ச உருவாக்கம், காலம், உயிர்க்குலத்தின் இணைவு உட்பட பல்வேறு கேள்விகளை அறிவியல் எதிர்கொண்டு தனக்கான பதில்களை முன்வைத்தது. மதங்கள் முன்வைக்கும் அறம் ஆதிக்கநோக்கம் கொண்டது என்னும் எண்ணத்தில் இருந்து மதம்சாராத புதிய அறத்தை நோக்கிய தேடல் தொடங்கியது.
யோக ஆசிரியர்
மூன்றாவது காலகட்டத்தில் ஓஷோ செயல்முறை தியானம் (Dynamic Meditation) எனும் தியான முறையை கற்பிக்ககும் ஒரு யோக ஆசிரியராக, பயிற்றுநராக உருவானார். அவற்றை பயிற்றுவிக்க அவர் தனக்கான இடத்தை புனே அருகில் உருவாக்கிக் கொண்டார். அவருக்கு ஏராளமான வெளிநாட்டு மாணவர்கள் அமைந்தனர். உடல், உள்ளம் சார்ந்த பலவிதமான பயிற்சிகளை அவர் அம்மாணவர்களுக்கு அளித்தார். அவருடைய யோக- தியான முறை இந்தியாவின் பொதுப்போக்கில் இருந்து பெரிதும் விலகியிருந்தது. அதன் வேர்கள் தந்த்ர மரபிலும் பல்வேறு மறைஞானச் சடங்குகளிலும் இருந்தன.
இந்த காலகட்டத்தில்தான் அவர்மீது அவ்வளவு பெரிய அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் உருவாகி வந்தன பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த அவர் இந்தியாவை விட்டு வெளியே செல்ல நேர்ந்தது. அங்கும் நெருக்கடிகள் உருவாகவே மீண்டும் இந்தியா திரும்பினார். தன்னை ஒரு ஞானாசிரியனாக, ஒரு படிமமாக மாற்றிக்கொண்டார். அப்போதுதான் ஓஷோ என்ற பெயரை தானே சூட்டிக்கொண்டார். அச்சொல் ஓஷியானிக் என்ற சொல்லில் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். அது ஜப்பானிய வார்த்தை என்று சொல்பவர்களும் உண்டு. அந்தப்பெயர் நிலைத்துவிட்டது. அதன்பின் சிலகாலங்களில் அவர் மறைந்துவிட்டார்.
மறைவுக்குப் பின்
மறைவுக்குப் பின் ஓஷோவின் முகம் பல்வேறு விவாதங்களில் இருந்து அகன்று விட்டது. ஊடகங்கள் வழியாக நாம் அவரை அறிவது குறைந்து அவருடைய நூல்கள் , உரைகள் மட்டும் முதன்மைப்பட்டன.அவற்றின் வழியாக மட்டுமே அவரை அறியும் ஒரு தலைமுறை உருவாகி வந்தது. இன்று அவர் ஒரு ஞானகுருவாக ஒரு சாராரால் அறியப்படுகிறார். அவர் ஓஷோ என அவர்களால் அழைக்கப்படுகிறார். அவர்களின் குழுமங்கள் உலகமெங்கும் உள்ளன. அவற்றில் ஒரு பங்கு அமைப்புசார்பாக தொகுக்கப்பட்டது, தன்னிச்சையான யோகப்பயிற்சிக் குழுமங்களும் அவர் பெயரில் உள்ளன.
இந்தியாவின் பொதுவான அறிவியக்கத்தில் ஓஷோ இன்று தொடர்ச்சியாக பேசப்படுபவராகவே உள்ளார். இடதுசாரி அரசியல் சார்ந்த கோணத்தில் ஓஷோ ஒரு கலகக்காரர் என்றும், இந்துமதம் சார்ந்த ஆதிக்கநோக்குக்கு எதிரானவர் என்றும் கருதும் தரப்பினர் உண்டு. அவர் அறமற்றவர், ஒழுக்கமறுப்பு நோக்கு கொண்டவர், ஆகவே ஒரு நசிவுசக்தி என எண்ணுபவர்களும் இடதுசாரிகளுக்குள் உண்டு.
இந்தியாவின் மததத்துவங்களின் களத்தில் இன்று ஓங்கியுள்ள இந்துத்துவ அலை ஓஷோவை முழுமையாகவே புறக்கணித்து, அவர் உண்மையில் நிகழவே இல்லை என்பதுபோல கடந்துசெல்கிறது. பிற மதங்களும் ஓஷோவை பொருட்படுத்தவில்லை. ஆனால் மாற்று ஆன்மீகம் என்னும் களத்தில் ஓஷோ இன்னும் முதன்மையான பெயர். சம்பிரதாயமும் நம்பிக்கையும் கடந்து அத்வைதத்தை முன்வைப்பவர்கள் அவரை வாசிக்கவும் அவருடன் விவாதிக்கவும் செய்கிறார்கள். மரபான மதம் சார்ந்த நோக்குக்கு அப்பால் சென்று உளவியல் உட்பட நவீன அறிவியல் அடிப்படையுடன் ஆன்மிகத்தை அணுகுபவர்களுக்கு அவர் ஒரு முன்னோடியாக உள்ளார். குர்ஜீஃப் உட்பட பல்வேறு மாற்று ஆன்மிக குருநாதர்களை அறிமுகம் செய்த ஆசிரியராக அவர் கருதப்படுகிறார். மறைஞானப் பயிற்சிகள் உட்பட பல்வேறு யோகமுறைகளைக் கற்பவர்களும் அவரை ஒரு மறைஞானியாகக் கருதுகிறார்கள். முதல் மூன்று காலகட்டத்தின் விளைவாகவும் அதன் தொகுப்பாகவும் உச்சமாகவும் இன்றுவரை அவருடைய நான்காவது காலகட்டம் நீடிக்கிறது.
இன்று, நம் காலகட்டத்தில் நின்றுகொண்டு ஓஷோவை பேசும்போது ஆரம்பத்திலிருந்தே அவர் திரண்டு வந்த படிநிலைகளை பார்க்கவேண்டும். அது அவரைப் புரிந்துகொள்ள உதவியாக அமையும்.
முதல் காலகட்டம்
ஒரு பேச்சாளராக ஓஷோ திகழ்ந்த அந்த காலகட்டத்தில் சோஷலிசத்திற்கும் காந்தியத்திற்கும் எதிராக ஏன் அவ்வளவு தீவிரமான ஒரு நிலைப்பாட்டை எடுத்தார் ? அக்காலகட்டத்தின் ஓஷோவின் உரைகள் இன்று அச்சிலோ ஒலிவடிவிலோ கிடைக்கவில்லை. பிற்காலத்தில் வந்த பல உரைகளில் தான் ஏன் சோஷலிசத்தையும் காந்தியத்தையும் எதிர்த்தேன் என்பதை மேற்கோள்களாக சொல்லியிருக்கிறார். அந்த மேற்கோள்களை தொகுத்துக்கொண்டு அந்த தரப்புகளுக்கு எதிரான அவரது நிலைப்பாட்டில் உள்ள நியாயங்களை நாம் பார்க்கலாம்.
1. ஒழுக்கவியல்
ஓஷோ சோஷலிசத்தையும், காந்தியத்தையும் எதிர்ப்பதற்கான முதல் காரணம் ஒழுக்கவியல்தான். காந்திய ஒழுக்கவியலுக்கும், சோஷலிச ஒழுக்கவியலுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது. இங்கே ஒரு விளக்கம். இந்தியாவில் மார்க்சியம் நீர்த்துப்போய், நீர்த்துப்போய் அதைத்தான் சோஷலிசமாக மாற்றிக்கொண்டார்கள். மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களின் அதிகாரம். அதை வன்முறை மூலம் அடையலாம் என்று சொன்னால் அது கம்யூனிசம். அதையே ஜனநாயக வழிமுறைகள் மூலம் அடையலாம் என்று சொன்னால் அது சோஷலிசம். இதுதான் சுருக்கமான வரையறை.
1956 இல் கம்யூனிச கட்சியே தன்னை ஜனநாயக பாதைக்கு திருப்பிக் கொண்டுவிட்டது. இன்று இந்தியாவில் கம்யூனிசம் கிடையாது. இருப்பது சோஷலிசம் மட்டும்தான். அதை இன்று ஒரு பெரிய வட்டமாக எடுத்துக் கொண்டு இடதுசாரி அரசியல் என்று சொல்லலாம். ஒருபுறம் ராம்மனோகர் லோகியா ஒரு சோஷலிஸ்ட் என்றால் சற்று முற்றிய சோஷலிஸ்ட் என்று இ.எம்.எஸ்ஸை சொல்லலாம். சோஷலிசம் என்பது ஒரே சமயம் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் சொல்லிக்கொண்டிருந்த அரசியல். காந்தியம் என்னும் கொள்கை நேரு வழியாக சோஷலிசம் நோக்கிச் சென்றது. இந்தியாவில் எல்லாமே ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
இவ்விரு தரப்புகளைத்தான் ஓஷோ முதலில் எதிர்த்தார். இவர்களுக்குள் பொதுவாக இருக்கும் முதல் விஷயம் ஒழுக்கவியல்தான். முக்கியமான மார்க்சிய சிந்தனையாளராகிய எனது நண்பர் ஒருவரிடம் கேட்டேன், ‘ஏன் காந்தியவாதிகளும் மார்க்சிஸ்டுகளும் ஒரேவகையான ஒழுக்க அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள்’ என்று. அவர் சொன்னார், ‘காந்தியவாதி எப்போதுமே ஆணுறை அணிந்திருப்பவன், அந்த ஆணுறையையே இரும்பிலே செய்து அணிந்திருப்பவன் மார்க்சியவாதி’.
இத்தகைய ஒழுக்கவாதத்தை ஓஷோவால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தொடர்ந்து அடிகொடுப்பது இத்தகைய ஒழுக்கவாதத்துக்குதான். தன்னை எப்போதும் விறைப்பாக வைத்துக்கொள்வதை அவர் எதிர்த்தார். இருபத்துநான்கு மணிநேரமும் எழுச்சியடைந்த குறிபோன்ற தன்மை மார்க்சியர்களிடம் உண்டு. அது இயற்கைக்கு மாறான ஒன்று, நெகிழ்வாக இரு என்று ஓஷோ திரும்பத்திரும்ப சொல்கிறார். கேரளாவில் ஒரு நகைச்சுவை உண்டு. இடதுசாரி ஒருவரை திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் ஆறுமாதம் கழித்து தனது தோழியிடம் சொல்கிறார், ”நான் பலவிதமாக முயற்சி செய்து பார்த்தேன். அவருக்கு எதுவுமே ஆகவில்லை, என்ன செய்வது ?” என்று. அதற்கு தோழி, ”நீ அந்த நேரத்தில் இன்குலாப் சிந்தாபாத் என்று கோஷம்போடு. சரியாகிவிடும்”. உண்மையிலேயே சரியாகிவிட்டது. இத்தகைய இறுக்கநிலையைத்தான் ஓஷோ சுட்டிக்காட்டுகிறார். காந்தி மீதும் அவருடைய விமர்சனம் அதுவாகத்தான் இருந்தது.
தனக்குத்தானே வகுத்துக்கொண்ட ஒழுக்கம் ஒருவனின் வாழ்க்கை பார்வையையே அதற்கேற்றாற்போல மாற்றிவிடுகிறது. ஒழுக்கவாதி அனைத்தையும் ஒழுக்கத்தைக் கொண்டே புரிந்துகொள்ளுவான். ஒழுக்கம் அவனுடைய பார்வைக்கு எல்லையை வரையறைசெய்து, மேற்கொண்டு எதையுமே அறியமுடியாமல் ஆக்கிவிடுகிறது. ஆன்மிகம், தத்துவம், கலை உட்பட எதையுமே அவர்களால் தீவிரமாகச் அடையமுடியாது. அவை அவர்களின் ஒழுக்க எல்லைக்குள் வந்தால் மட்டுமே அவர்களால் உள்வாங்கமுடியும். நான் பாலியல் ஒழுக்கத்தை மட்டும் சொல்லவில்லை. அப்படி பல்வேறு சமூக ஒழுக்கங்கள் உள்ளன. அரசியல்சரிநிலை என்பதேகூட அப்படிப்பட்ட ஓர் ஒழுக்கம்தான்.
2. உலகியல் நோக்கு
ஒழுக்கம் சார்ந்த இறுக்கமான பார்வை என்பதை தாண்டி அவர்களை ஓஷோ அடிக்கக்கூடிய நுட்பமான இன்னொரு விஷயம் அவர்களிடம் இருக்கும் உலகியல் தன்மை (Materialism). நாம் ஓஷோவை ஒரு உலகியல்வாதி என்று நினைப்போம். ஏனென்றால் அவர் உலகியலை நிராகரித்து துறவை முன்வைக்கவில்லை. காமம் உட்பட எந்த உலகியல் இன்பத்தையும் ஓஷோ நிராகரிக்கவில்லை. ஓஷோ கருத்துமுதல்வாதி அல்ல. அவரை பொருள்முதல்வாதி என்றே சொல்லலாம். ஓஷோ இலட்சியவாதிகூட அல்ல. ஆனால் ஓஷோ உலகியல்வாதத்தை முன்வைத்தவர் அல்ல. உலகியலுக்கு அப்பாற்பட்ட சிலவற்றையே வாழ்க்கையின் மெய்யான இன்பம், நிறைவு என்று சொல்லிக்கொண்டிருந்தவர் அவர். உண்மையில் அவரால் எதிர்க்கப்பட்ட காந்திய, சோஷலிசத் தரப்புகள்தான் உலகியல்வாதிகள்.
இந்த உலகில் உள்ள சமூக அமைப்புகளையோ, பொருளியல் அமைப்புகளையோ மாற்றிவிட்டால் மனிதர்களை மாற்றிவிடலாம் என்று நினைப்பதுதான் பெரிய உலகியல்வாதம். காந்தியம், மார்க்சியம் இரண்டிலும் அது உண்டு. அவர்களிடம் இருக்கும் முழுமையான ‘இவ்வுலகத்தன்மை’யை ஓஷோ போன்ற ஒருவரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மொத்த கோவையையும் மாற்றிவிட்டால் ஜெயமோகனை மாற்றிவிட முடியாது. ஜெயமோகனின் பிரச்சனைகள் வேறு. மொத்த தமிழ்நாட்டையே மாற்றிவிட்டாலும் ஜெயமோகனை மாற்றிவிட முடியாது. இப்படிப்பட்ட ‘இவ்வுலகத்தன்மை’யை அடித்து நொறுக்குவதற்கு ஒரு குரல் இங்கு தேவையாய் இருந்தது. அதுதான் ஓஷோவின் குரல். இந்த வரியில் இருந்து ஓஷோ சொன்னவற்றை நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும்.
ஆனால் இது எந்த ஞானியும் சொல்லக்கூடிய ஒன்றுதான். ஜே.கிருஷ்ணமூர்த்தியும் அகப்புரட்சி வேண்டும் என்கிறார். 1970களில் உலகமே புரட்சி செய்துகொண்டிருந்த காலம். புரட்சி என்ற சொல்லே ஒரு தேய்ந்த நாணயமாக புழங்கிய கலாம். பல புரட்சிகள் நடைபெற்றன. அவற்றில் கியூபா என்ற பஞ்சாயத்து அளவிலான ஒரு நாட்டை தவிர எல்லா புரட்சிகளுமே தோல்வியடைந்தன. எல்லா புரட்சிகளுமே ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் ரத்தபலி வாங்கின. அது ஒருவகை புரட்சி என்றால், நடிகர்கள் தங்களை புரட்சித்தலைவர்கள் என்று சொல்லிக்கொண்ட காலமும்கூட.
அப்போதுதான் புரட்சி என்பது வெளியே இல்லை, உள்ள இருக்கிறது என்று ஜே.கே. சொன்னார். ஓஷோவும் அதைத்தான் சொல்கிறார். அவர்கள் உள்மாற்றத்தை பற்றி பேசினார்கள். காந்தியத்திலும் மார்க்சியத்திலும் இருக்கும் அந்த உலகியல் தன்மையை சுட்டிக்காட்டுவதற்கு ஆன்மீகத் தரப்பில் இருந்து ஒரு குரல் வரவேண்டியிருந்தது. அது ஓஷோவின் குரல்.
3. பகுத்தறிவின் வன்முறை
பகுத்தறிவு என்பது ஓர் ஆயுதம், ஒரு அகத்தெளிவு- அதில் ஐயமில்லை. ஐரோப்பிய மறுமலர்ச்சி உலகுக்கு அளித்த கொடை அது. அறிவியல்நோக்கு, தர்க்கபூர்வ அணுகுமுறை, மனிதாபிமான பார்வை என அதை மூன்று கொள்கைகளாக வரையறை செய்யலாம். உலகை பல்வேறு மூடநம்பிக்கைகள், தேங்கிய ஆசாரங்களில் இருந்து அதுவே விடுவித்தது.
ஆனால் பகுத்தறிவின் வன்முறை என்று ஒன்று உள்ளது. நாம் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக கடவுளுக்கு சமானமாக இந்தப் பக்கம் பகுத்தறிவை வைத்திருக்கிறோம். பகுத்தறிவு என்பது எந்த வகையிலும் பகுத்தறிய தேவையில்லாத அறிவு என்ற ஒரு புரிதல் கடந்த பல ஆண்டுகளாக நமக்குண்டு. ‘பகுத்தறிவா பேசு, இல்லேன்னா வெட்டிருவேன்’ என்று கொதிக்கக்கூடிய மக்களாக நாம் மாறியிருக்கிறோம்.ஆம், பகுத்தறிவுக்கு ஒரு வன்முறை உண்டு.
இந்த காலகட்டத்தில் நீங்கள் பிறந்திருப்பதாலேயே நேற்றுவரை இருந்த அத்தனை பேரையும்விட நீங்கள் புத்திசாலி என்று நினைத்துக்கொள்வது ஒருவகையான பகுத்தறிவு சார்ந்த மூடத்தனம். உங்களுக்கு சில அறிதல்கள் ஏற்பட்டிருப்பதாலேயே, உங்கள் மண்டைக்குள் வந்துசேர்ந்த அறிவை வைத்துக்கொண்டு, இன்னமும் வந்து சேராத அனைத்தையும் பற்றியும் கருத்து சொல்லமுடியும் என்று நினைப்பது ஒருவகையான பகுத்தறிவு மடமை. அறிவின் எல்லையை தனக்குத்தானே வகுத்துக்கொள்ளலாமல் இருப்பது ஒருவகையான பகுத்தறிவுப் பேதமை . ஓஷோ இந்த விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்கிறார்.
ஓரிடத்தில் ஒரு சந்தை வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு ஆட்சியர் அங்கு வருகிறார். அவர் ஒரு நிபுணர். அந்த சந்தையை, வடிவேலு சொல்வதுபோல, அப்படியே தூக்கி அந்தப்பக்கம் வைத்தால் அது இன்னும் வளர்ச்சியடையும் என்கிறார். அங்கு சாலை வசதி, பேருந்து வசதி, வாகன நிறுத்துமிடம், மக்கள் எளிதாக அணுகக்கூடிய தன்மை போன்று பல காரணங்களை சொல்லி அந்த சந்தையை வேறு இடத்திற்கு மாற்றுகிறார். ஆனால் அவ்வாறு மாற்றப்பட்ட பின் சந்தை அப்படியே இல்லாமலாகிவிடுகிறது. ஏன் ? நாம் அறியும் சந்தை விதிகளுக்கு அப்பால் நம்மால் அறியமுடியாத எத்தனையோ விதிகள் உள்ளன. நம் அன்றாடப் பகுத்தறிவுக்கு அப்பாலும் எஞ்சியிருக்கக்கூடிய விஷயங்கள் உள்ளன. நான் கடவுளை பற்றியெல்லாம் சொல்லவில்லை. தர்க்கபூர்வமாகவே பல்வேறு விஷயங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அந்த பகுத்தறிவு புறக்கணித்து விடுகிறது. இந்த பகுத்தறிவின் வன்முறையைத்தான் ஓஷோ சுட்டிக்காட்டுகிறார்.
1971 வரைக்கும் காடுகளை வெட்டி அழித்து விறகாக்கி விற்பதற்கான உரிமையை அரசாங்கமே கூவிக்கூவி ஏலம்போட்டு விற்றுக்கொண்டிருந்தது. அதை எங்களூரில் ‘கூப்பு கான்ட்ராக்ட்’ என்பார்கள். நான் சிறுவனாக இருந்தபோது கோடைகால விடுமுறையில் நண்பர்களுடன் அந்த வேலைக்கு சென்றிருக்கிறேன். காடுகளை தீவைத்து அழிப்போம். எஞ்சிய பெரிய மரங்களை வெட்டுவோம். 1971 வரைக்கும் காடு ஒரு சொத்தாக தெரியவில்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்ற கருதுகோள் அன்று இல்லை. சமீபத்தில், 1960களில் வந்த விளம்பரங்களை ஒரு நண்பர் போட்டிருந்தார். ஒரு கைக்குழந்தையின் படத்தை போட்டு I will save my darling from flies என்ற வாசகத்துடன் கீழே DDT என்று இருந்தது. இன்று உலகம் உருவாக்கிய மாபெரும் நச்சுகளில் ஒன்று என்று சொல்லப்படும் ஒரு பூச்சிக்கொல்லியின் விளம்பரம் அது. அந்த காலத்திலும் பகுத்தறிவு இருக்கத்தான் செய்தது. அந்தக் காலத் தர்க்க எல்லைக்குள் அது இருந்தது.
எனவே அறிவின் எல்லை என்று ஒன்று உள்ளது. இந்த மூர்க்கமான பகுத்தறிவு என்பது ஒருவகையான அழிவுசக்தி. அதற்கப்பால் நகராமல் ஆன்மிகம், தத்துவம், அழகியல் ஆகியவற்றை அடையவே முடியாது.அதை சுட்டிக்காட்டி, அதற்கப்பால் எப்போதும் ஒன்று இருக்கிறது என்பதை ஒருவர் சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். அவர்தான் ஓஷோ.
4. சராசரிகளின் வன்முறை
இதற்கப்பால் இன்னொன்றும் உள்ளது. அது சராசரிகளின் வன்முறை பற்றியது. இதை இப்போது சொன்னாலும் எந்தவொரு மார்க்சியரும் எழுந்து நின்று ‘அய்யய்யோ ஃபாசிசம்’ என்பார். ஃபாசிசம் என்பது ஒரு நல்ல வசைச்சொல்லாக இன்று மாறியிருக்கிறது. பத்துரூபாய் கடன் கேட்டு தராதவர்களைக்கூட அப்படிச் சொல்வது நம் வழக்கம். மார்க்சியமோ காந்தியமோ மீண்டும் மீண்டும் சராசரிகளை பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றன. அவர்களுடைய நலன், அவர்களுக்கு புரியக்கூடிய அரசியல், அவர்களின் அதிகாரம் என்பதை பற்றியே அவை கவலைகொள்கின்றன. மார்க்ஸியர்களைப் பொறுத்தவரை சராசரி மனிதன் என்பவன் தெய்வம்போன்றவன். வரலாறு, கொள்கை, அழகியல் எல்லாவற்றையும் அவனுக்கே படையலிடவேண்டும்.
ஆனால் சராசரிகளுக்கும் மேலாக ஒருவன் இருக்கிறானல்லவா ? அவன்தான் படைப்பாளன், கட்டமைப்பாளன், முன்னோடி. இலக்கியம், கலை, சிந்தனை, புதிய சமூகஅமைப்பு எல்லாவற்றையும் உருவாக்குபவன் அவன்தான். அவனைப்பற்றி எந்த அரசியல் தரப்புக்கும் அக்கறை இல்லை. ஏனென்றால் அவன் எதிர்காலத்திற்கு உரியவன். சமகால அதிகாரத்துக்கு எதிரானவன். இன்று அவனுக்கு பெரிய எண்ணிக்கை பலமும் இல்லை. இன்றைய ஜனநாயகத்தில் சராசரிகளை புகழ்ந்து படைப்பாளியையும் முன்னோடியையும் இகழ்வது ஒரு வழக்கமாக உள்ளது. சராசரிகள் கூடி சிந்தனையாளனையும் கலைஞனையும் மக்கள்பணியாளனையும் தனிமைப்படுத்தி தாக்குவதும்கூட இயல்பானதாகக் கொள்ளப்படுகிறது.
ஓஷோ கடுமையாகவும் நக்கலாகவும் சொல்லும் ஒன்று, தான் சராசரிகளை விரும்பவில்லை என்பதே. உழைக்கும் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டால், ‘உழையுங்கள், சாப்பிடுங்கள், வேறென்ன செய்யமுடியும் நீங்கள்?’ என்கிறார். அசாதாரணமான மனிதர்களுடன் மட்டும்தான் தான் பேசிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அவன் கலைஞனாக இருக்கலாம், கொலைகாரனாகக்கூட இருக்கலாம். ஆனால் அவன் சராசரியல்லாதவன். அவன்தான் எனக்கு வேண்டும் என்கிறார். இதை நீங்கள் எளிதில் ஃபாசிசம் என்பீர்கள். ஆனால் மனித வரலாறு என்பது அவ்வாறான சராசரிக்கு அப்பாற்பட்ட மனிதர்களால்தான் இயக்கப்படுகிறது. அவனுக்காக ஒருவன் பேசவேண்டாமா ? நீதிமன்றத்தில் அத்தனைபேரும் ஒரே ஆளுக்காகவா பேசுகிறார்கள். எதிர்தரப்புக்காகவும் சிலர் பேசுவார்கள் அல்லவா ? ஆகவேதான் சராசரிக்கு எதிரான, சராசரிகளின் வன்முறைக்கு எதிரான குரல் தேவைப்படுகிறது. மார்க்சுக்கும் காந்திக்கும் எதிராக ஓஷோ முன்வைக்ககும் குரல் அதுதான். அது அசாதாரணமான தனிமனிதர்களுக்கானது. அதுதான் அவரது சிறப்பு, அவரது தொடக்கம்.
அக்காலகட்டத்தில் ஓஷோ பேசவரும்போது மிகக்குறைவான பார்வையாளர்களே இருந்திருக்கிறார்கள். ஓஷோ அவர்களிடம் கட்டணம் செலுத்தச் சொல்கிறார். பெரிய கட்டணம் அது. உரைக்குக் கட்டணம் என்பது அன்று ஓர் ஆடம்பரம். ஓஷோ ‘நீ இதை விலைகொடுத்து வாங்கமாட்டாய் என்றால் இதை நீ மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்’ என்கிறார். அக்காலத்தில் ஒரு கேள்வி எழுந்தது, ‘நீங்கள் ஏன் இலவசமாக உரைகளை ஆற்றக்கூடாது’ என்று. அதற்கு ஓஷோ, ‘நான் விந்துவை பீய்ச்சியடித்து செல்வதற்கு தவளை அல்ல’ என்று பதிலளித்தார். பெண் தவளைகள் இட்ட முட்டைகளில் ஆண் தவளை தனது விந்தை பீய்ச்சியடித்து செல்லும். பத்துலட்சத்தில் ஒன்று முளைத்து வெளிவரும். மற்றவை ஏதேனும் உயிரினத்தால் உண்ணப்பட்டுவிடும். தனக்காக பணம் கொடுத்து வந்து உட்காரக் கூடியவர்களிடம்தான் அவர் பேசுகிறார். அப்படிப்பட்ட ஒரு பேச்சாளராகவே அவர் உருவாகி வந்தார்
(மேலும்)
(2021 மார்ச் 12,13,14 தேதிகளில் கோவையில் கிக்கானி அரங்கில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். எழுத்தில் பதிவுசெய்தவர் விவேக் ராஜ் )
மயிலை கார்த்திகேயன்

தமிழிசை முன்னோடிகளில் ஒருவர் பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. அவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கே உரிய இசைமரபான நாதஸ்வரத்தில் இளைய தலைமுறையில் முதன்மைக் கலைஞர்களை அடையாளம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டு அந்த இசைக்குழுவில் நாதஸ்வர இசைக்கலைஞரான மயிலை கார்த்திகேயன் கலந்துகொள்கிறார்
மயிலை கார்த்திகேயன்
நீலி ஆகஸ்ட் இதழ்
நீலி பெண்ணெழுத்துக்கான இதழின் ஆகஸ்ட் இலக்கம் வெளிவந்துள்ளது. இது எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் பேட்டியுடன் அவரை முகப்பாகக் கொண்டு வெளிவந்துள்ள இதழ். நீலி ஒவ்வொரு இதழிலும் ஒரு பெண் படைப்பாளியை முன்வைப்பது நிறைவளிக்கிறது. இந்த இதழில் என் கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
நீலி இதழ் ஆகஸ்ட்இசைநாட்கள்
‘இசையின் உருவமே சிற்பம்; சிற்பத்தின் அருவமே இசை‘ என்ற கருத்துடன் வகுப்பு தொடங்கியது. கர்நாடக இசையில் தெலுங்கு,சமஸ்கிருதத்தில் பாடல் இயற்றியவர்களான தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் பற்றியும், தமிழிசை சீர்காழி மூவராகிய முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர் பற்றியும் அறிந்து கொண்டோம். பாடி நிறுவிய சமூகம் நம்முடையது.
A young person with the knowledge of Western music and Western philosophy and literature as well is very rare. I really felt happy to see her cute mannerisms and sweet voice.
About WagnerJuly 31, 2025
பழையகால பாடல்
அமேஸான் தளத்தின் நிர்வாகிகளில் ஒருவர் என்னிடம் சொன்னார், வெறும் 10 சதவீதம் பேர் கூட பத்தாண்டுகளுக்கு முந்தைய படங்களைப் பார்ப்பதில்லை என்று. சர்வதேச அளவிலேயே அதுதான் நிலைமை. பெரும் செவ்வியல் படைப்புகள் என்று கொண்டாடப்பட்ட படங்களைக்கூட இளையதலைமுறை பார்க்கத் தயாராக இல்லை. பழைய தலைமுறையினர்தான் அவற்றைப் பார்த்து நினைவுகளை மீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
தொடக்க காலகட்டத்தில் இந்த இணையதளங்கள் ஏராளமான திரைப்படங்கள் கைவசமிருந்தால் ரசிகர்கள் வந்துகொண்டே இருப்பார்கள் என நினைத்தனர். ஆனால் பழைய சினிமாக்களை இளையதலைமுறை பார்ப்பதில்லை என அறிந்தபின்னர்தான் புதிய படங்களுக்கான தேவை அவர்களின் கண்களுக்குப் பட்டது. அந்த தளங்களிலும் ‘நேற்று என்ன வந்தது?’ என்னும் கேள்வியே இப்போது உள்ளது.
காலத்தில் திரைப்படங்கள் பழமையடைவது மிக வேகமாக நிகழ்கிறது. இலக்கியம், இசை எல்லாம் அப்படி விரைவாக பழையன ஆவதில்லை. ஏனென்றால் அவை பதிவு செய்யப்பட்டுள்ள ஊடகம் முக்கியம் அல்ல. சிலப்பதிகாரத்தை ஏட்டிலும் அச்சிலும் படித்தோம். இப்போது இணையத்தில் படிக்கலாம். அனுபவம் வேறுபடுவதில்லை. ஆனால் சினிமா அது எடுக்கப்பட்ட ஊடகத்துடன் பிரிக்கமுடியாதபடி இணைந்தது. நாம் செவ்வியல் படைப்பு என்று கொண்டாடும் ஒரு படம் முப்பதாண்டுகள் பழையது என்றால் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு, நடிப்பு எல்லாமே பழையதாகியிருக்கும். அதன் ஊடகமான ஃபிலிம் அதற்கு ஒரு காட்சி சார்ந்த எல்லையை அளித்திருக்கும்.
இதுவே எதிர்மறையாகவும் செயல்படுகிறது. மற்ற கலைகள் ரசிகனின் கற்பனையைக் கோரி நின்றிருக்கின்றன. ஆகவே கற்பனை செய்ய முடியாதவர்கள் அதை ரசிக்க முடியாது. சினிமா அப்பட்டமானது, கண்முன் நிகழ்வது. ஆகவே அதை எவரும் ரசிக்கலாம், எல்லாரும் கருத்தும் சொல்லலாம். அதனால்தான் சினிமா மட்டும் அத்தனை பெரிய ஏற்பைப் பெற்று,பெரு வணிகமாக ஆகிறது. அதுவே அதன் எல்லை. இலக்கிய ஆக்கங்கள் நூறாண்டுகளை எளிதாகக் கடக்கின்றன. பலசமயம் காலம் செல்லச் செல்ல கூடுதலாக வாசிக்கப்படுகின்றன.
நடுவே சினிமாப்பாடல் ஒரு விந்தையான விதி கொண்டது. அதன் இசை காலாதீதமாக நிலைகொள்ளும். மிக மோசமான ஒலிப்பதிவு கொண்ட பழைய பாடல்கள் கூட மீண்டும் பாடப்பட்டு புதிய ஒலிப்பதிவுடன் வருகின்றன. இசைப்போட்டிகளில் சின்னப்பெண்கள் அறுபதாண்டுகளுக்கு முன் ஜானகி பாடிய பாடல்களைப் பாடுகிறார்கள். ஆனால் அவற்றுடன் இணைந்த காட்சியமைப்பை நம்மால் உட்கார்ந்து பார்க்கவே முடியாது.
அண்மையில் ஒரு மலையாளப் பாட்டைக் கேட்டேன். என் கற்பனையில் அது எழுபதுகளின் தொடக்கத்தில் வந்த பாடலாகவே ஓடியது. ஆனால் நான் அந்தப்பாட்டை முன்னர் கேட்டதில்லை. பிரேம் நசீரின் படமா என குழம்பி அகாட்சியை தேடிப்பார்த்தேன், ஒரு கறுப்புவெள்ளை படத்தை எதிர்பார்த்தேன். அது புதிய படம். மோகன் சிதாரா இசையமைத்தது. பழமையை நுணுக்கமாக மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள்.
வெள்ளரிப்றாவின்றே சங்ஙாதி என்ற இந்தப்படம் 2011 ல் வெளிவந்தது. சிறந்த படத்திற்கான விருது பெற்றிருக்கிறது. தந்தை 1969ல் ஒரு படம் எடுத்து வெளியிடமுடியாமல் கடன் பெருகி தற்கொலை செய்துகொள்கிறார். அந்த படச்சுருள் மகன் கையில் கிடைக்கிறது. அவன் அதை வெளியிட்டு அதில் நடித்தவர்களைத் தேடிச்செல்கிறான். அந்தப் படத்திலுள்ள பாடல் இது.
அந்தக் கால அசைவுகள், அந்தக்காலச் செயற்கைத்தன்மை எல்லாம் அமைந்து புன்னகைக்க வைக்கும் பாடல். எனக்கு ஆச்சரியம் ஷ்ரேயா கோஷலின் குரல். மலையாளத்தில் பாடியவர்களில் எஸ்.ஜானகி மட்டும்தான் மலையாளியாகவே பாடியவர். ஷ்ரேயா அந்த நுட்பத்தை இப்பாடலில் தானும் அடைந்திருக்கிறார்.
ஓஷோ:மரபு மீறலும் 5
கேரளத்தில் நம்பூதிரி நகைச்சுவை என்ற ஒரு வகை உண்டு. அசட்டுத்தனமும் புத்திசாலித்தனமும் முயங்கக்கூடிய இடத்தில் இருக்கும் நகைச்சுவை. அதில் ஒரு பிரபலமான நகைச்சுவை இது. தஞ்சாவூரை சேர்ந்த பண்டிதர் ஒருவர் சம்ஸ்கிருத கவிதை ஒன்றை எழுதி அதை எடுத்துக்கொண்டு கேரளா முழுக்க சுற்றிவந்தார். கடைசியாக தோலன் என்ற பெயர்கொண்ட ஒரு நம்பூதிரியை சந்திக்கிறார். தோலன் நம்பூதிரி வேடிக்கையானவர், அவருக்கு எழுதப்படிக்க தெரியாது. பண்டிதர் நம்பூதிரியிடம் சொல்கிறார், ”இந்த கவிதையை மேலமங்கலம் நம்பூதிரியிடம் காண்பித்தேன். அவருக்கு அர்த்தம் தெரியவில்லை. கீழமங்கலம் நம்பூதிரிக்கும் தெரியவில்லை. பூமுள்ளிக்கும் கீழில்லத்துக்கும் சென்றேன். அவர்களுக்கும் தெரியவில்லை. பதினெட்டு நம்பூதிரி மனைகளுக்கும் சென்றுவிட்டேன். யாருக்கும் அர்த்தம் தெரியவில்லை”.
உடனே தோலன் அவரிடம் மிக ஆர்வமாக ‘இங்க கொண்டா’ என்று அதை வாங்கி பார்த்துவிட்டு அப்படியே அவரிடம் திருப்பிக்கொடுத்து ‘என் பெயரையும் பட்டியலில் சேர்த்துக்கொள்’ என்றார்.
தெரியாத ஒன்றை எல்லாவற்றிலும் சேர்த்துக்கொள்ளலாம். க.நா.சு. ‘இல்லாதது’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
இல்லாததைப் போல
அழகானதொன்றும் இல்லை.
இல்லாததை கண்
உள்ளவர்களும் காண முடியாது
விளக்கேற்றியும் காண முடியாது
இல்லாததால் உபயோகம் ஒன்றுமில்லை
அதைப்போல உபயோகமானதும் ஒன்றுமில்லை
இல்லாததை அளக்க முடியாது
அழிக்க முடியாது
என்னதான் இல்லை
என்று சொல்ல முடியாது
உலகம் என்றுமே இல்லாததாக
இருந்திருந்தால்…
எப்படியெல்லாம்
நாம் உருவாகியிருக்கலாம் !
ஓஷோவை பற்றி பேசுவதில் உள்ள சௌகர்யம் என்னவென்றால், ஓஷோ போன்ற ஒருவரை நீங்கள் எந்தவொரு சிந்தனை மரபிலும் சேர்த்துக்கொள்ளலாம். ஏனெனில் அவர் ஒரு மறுப்புவாதி (Nihilist), ஐயுறுவாதி (Skeptic). மறுப்புவாதிக்கு அல்லது ஐயுறுவாதிக்கு எல்லா சிந்தனை பள்ளிகளிலும் ஒரு நாற்காலி இருக்கும். குமரி மாவட்ட கோவில்களில் எந்த உள்ளூர் சாமிகள் எப்படி இருந்தாலும் அரவணைப்போத்தி என்று ஒரு சாமி இருக்கும். எல்லோருக்கும் படையல் முடித்த பிறகு சட்டுவத்தில் சிறிது சர்க்கரை பொங்கல் மீதமிருக்கும். அதை ஒரு பூவரசு இலையில் வழித்து அரவணைப்போத்திக்கு வைப்பார்கள். எப்படியோ அதற்கும் ஒரு படையல் கிடைக்கும்.
சிந்தனையை பற்றி பேசவரும்போது ஓஷோவை எங்கு வைப்பது என்பது எப்போதும் ஒரு பெரிய சிக்கல். அவரை எதிலும் சேர்க்கலாம். ஆனால் எதிலும் சேரவும் மாட்டார். புத்தகக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஓஷோவின் நூல்களை பார்த்தாலே கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களுக்குக்கூட தலைசுற்றல் வரும். ஒருபுறம் தத்துவ நூல்கள் இருக்கும், இலக்கிய நூல்கள் இருக்கும். ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத விஷயங்களை விளக்கியிருப்பார். ஒருபுறம் ஜென் பௌத்தம் பற்றியும், மறுபுறம் தந்த்ரா பற்றியும் பேசுவார். இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. ஒருபுறம் கீதை இருக்கும், அந்தப்பக்கம் ரூமி இருப்பார். இவ்வளவையும் சொல்லக்கூடிய இவர் யார் என்று பார்த்தால், நேர் எதிராக நின்று சுத்தமாக தத்துவமும் கொள்கையும் எதற்குமே அர்த்தம் கிடையாது என்று அவர் பேசும் வேறொரு உரையும் இருக்கும். ஓஷோவை எங்கே வட்டமிட்டு சுழிப்பது என்பது ஒரு சிக்கலான விஷயம். நம்முடைய சமகாலத்தில் இவ்வளவு பெரிய புதிர் நம்முடன் வாழ்ந்து கடந்து சென்றது என்பது விந்தையான ஒன்றுதான்.
ஆனால் இந்தியர்களாகிய நமக்கு புதிர்களை சந்திப்பது என்பது புதிது அல்ல. நமது ஞானிகள், ஆன்மீகத் தலைவர்கள் பெரும்பாலானோர் புதிரானவர்களே. காந்தியே ஒரு மாபெரும் புதிர்தான்.இந்தவகையான புதிர்களை எதிர்கொள்வதற்கென்றே நாம் பல ஆண்டுகளாக நல்ல வழியொன்றை வைத்திருக்கிறோம். இதை சொல்லும்போது ஒரு நம்பூதிரி நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. கொல்லம் அரசருக்கு கேசவன் என்ற பெரிய யானை இருந்தது. கொடூரமான யானை, யார் அருகில் சென்றாலும் கொன்றுவிடும். ஆனால் தோலன் நம்பூதிரி கேசவன் தன்னை எதுவும் செய்யமாட்டான் என்று சொல்லிக்கொண்டிருந்தார். இவர் ஏன் இப்படி சொல்கிறார், ஒருவேளை யானை வித்தை எதுவும் தெரிந்திருக்குமோ என்று அவரை வரவழைத்து, ‘எப்படி கேசவன் உங்களை மட்டும் எதுவும் செய்யமாட்டான்’ என்று கேட்கின்றனர். அதற்கு தோலன் ‘அது எப்படீன்னா, நான் அவன் பக்கத்தில் போவதும் கிடையாது, அவனை என் பக்கத்தில் வரவிடுவதும் கிடையாது’ என்றார். கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக நாம் இந்த கொள்கையின் அடிப்படையில்தான் ஞானிகளை கையாண்டு வருகிறோம். ஓஷோ இந்தப்பக்கம் வருவதும் கிடையாது, நாம் அந்தப்பக்கம் செல்வதும் கிடையாது.
இங்கே ஓஷோ பற்றிப் பேசுபவர்கள், ஓஷோவை அறிந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்பவர்கள் பெரும்பாலும் தோலனின் நிலைபாடு கொண்டவர்களே. தங்களுக்கு உகந்த ஓர் ஓஷோவை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஓஷோ ஏற்கனவே நம் மரபில் இருந்துகொண்டிருக்கும் ஒரு வழக்கமான உருவத்தின் நகல்தான். “ஓஷோவா, அவர் ஒரு ஞானி அல்லவா?” என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். “ஞானிகளை நம்மால் புரிந்துகொள்ள முடியாது” என்கிறார்கள். எவராவது புரிந்துகொள்ள முயன்றால் “அதெப்படி ஞானியை நீ விமர்சிக்கலாம், விமர்சிக்க நீ யார்?” என்று சீற்றம் அடைகிறார்கள். இவர்களுக்கும் ஓஷோவுக்கும் எந்த உரையாடலுமில்லை. உரையாடாதவனுக்கு ஓஷோ எந்த பொருளையும் அளிப்பதுமில்லை.
‘நீங்கள் ரூமியை பற்றி பேசுகிறீர்கள், பின்பு கீதை பற்றியும் பேசுகிறீர்கள்’ என்று அவருடைய ஆளுமையிலுள்ள அந்தப் புதிரை பற்றி நாம் அவரிடம் கேட்டிருந்தால் ஒரு உரையாடல் தொடங்கியிருக்கும். ஆனால் நாமோ ‘அவருக்கென்னங்க, அவரு மகான். அப்படித்தான் சொல்வார். நாம நம்ம சோலிய பாக்கணும்க’ என்பதாக அப்படியே கடந்து வந்துவிடுகிறோம். இங்கே ஓஷோ பற்றி எப்படிப் பேசியிருக்கிறார்கள், என்னெவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என நமக்குத் தெரியும். ஆனால் இந்த புதிரை பற்றி கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் தமிழில் யாராவது எழுதியிருக்கிறார்களா என்று சிந்தித்துப்பாருங்கள். இந்த இடத்தில் இருந்துதான் ஓஷோவை பற்றி பேசத்தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.
நான் எப்படி ஓஷோவை அறிமுகம் செய்துகொண்டேன் என்பதில் இருந்து தொடங்கவேண்டும். 1974இல் The Illustrated Weekly of India என்ற வாரஇதழில் நிறைய படங்களுடன் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை வெளியாகி கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு சில ஆசிரியர்கள் அந்த பிரதியை கையில் வைத்துக்கொண்டு ஆர்வமுடன் பேசிக்கொண்டிருப்பதை கவனித்தேன். அப்போது எனக்கு பன்னிரண்டு வயது இருக்கும். அவர்கள் என்னை வெளியே அனுப்பிவிட்டனர். அதன்பின் வேறு எதையோ எடுக்க உள்ளே சென்றபோது அந்த பிரதியையும் எடுத்து வந்து, வீட்டிற்கு சென்று பரபரப்புடன் அதை பார்த்தேன்.
ஓஷோவின் புனே ஆசிரமத்தில் டைனமிக் தியானப் பயிற்சிகள் நடப்பதைப் புகைப்படம் எடுத்திருக்கின்றனர். அது ஓஷோ ஆசிரமத்தில் அவர்களே எடுத்துக்கொண்டது. ஆனால் அது எப்படியோ கசிந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஓஷோவே அதை வெளியே கசியவிட்டார் என்ற வதந்தியும் உண்டு. எப்படியோ அது அந்த வார இதழில் பிரசுரமாகி, அதனால் மொத்த இந்தியாவும் அதிர்ச்சியடைந்தது. உடனே இந்தியாவின் அத்தனை வட்டாரமொழிப் பத்திரிக்கைகளும் இரண்டாம்கட்ட அதிர்ச்சி அடைந்தன. குமுதம், விகடன், தந்தி போன்ற இதழ்கள் அந்த செய்தியை வெளியிட்டன. தந்தி ஒரு அற்புதமான வார்த்தையை கண்டுபிடித்தது. அது ‘செக்ஸ் சாமியார் ரஜ்னீஷ்’ என்பது. அப்போது அவர் பகவான் ரஜ்னீஷ் என்று பரவலாக அறியப்பட்டிருந்தார்.
இந்த Illustrated Weekly இதழை ஒரு குறியீட்டு அடையாளமாகவே சொல்ல விரும்புகிறேன். ஓஷோவை பற்றிப் பேசும் எல்லா விஷயங்களிலும் நீங்கள் இந்த வாரஇதழை ஒரு தரப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த இதழின் ஆசிரியர் குஷ்வந்த் சிங் (Khushwant Singh) அந்த வழக்கில் ஒரு கட்சிக்காரர். அவர் தன்னை ஒரு அதிநவீன மனிதராகக் காட்டிக்கொண்டவர். அதாவது பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவார், பாலியல் நகைச்சுவைகளை எழுதுவார், கட்டற்ற வாழ்க்கை பற்றி பேசுவார், நவநாகரீக உலகங்களை பற்றி சொல்வார். அந்த காலகட்டத்தின் எல்லா விஷயங்களுக்கும் எதிரான ஒருவர். ஆனால் பொற்கோவிலில் இந்திய ராணுவம் நுழைந்தபோது தனது பத்மபூஷண் விருதை சீற்றத்துடன் திருப்பிக்கொடுக்கும் அளவுக்கு தீவிரமான சீக்கியர். அதுதான் அவருடைய உண்மையான முகம். உயர்குடியில் பிறந்தவர், எதையும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் மனநிலை கொண்டவர், ஆனால் அடிப்படையில் கேசதாரி சீக்கியர்.
இந்தியாவில் இது மிகவும் சௌகரியமான ஒரு விஷயம். வீட்டில் நீங்கள் பெரிய நாமத்தை போட்டுக்கொண்டு இருக்கலாம். ஆனால் வெளியே அறிவியல் புனைவெழுத்தாளராக தோற்றமளிக்கலாம். அதிலிருக்கும் முரண்பாட்டை ஒப்புக்கொள்வதற்கு உங்களுக்கு எழுபது வயது தாண்டவேண்டும். அதன்பின் நீங்கள் நாமத்தை போட்டுக்கொண்டு வெளியே வரலாம். இத்தகைய முகம்தான் இந்தியாவின் பிரபல ஊடகங்களின் முகம். தமிழில் குமுதம் அப்படிப்பட்டது. ஆமையை தண்ணீரில் போட்டு தண்ணீரை சூடுபடுத்திக்கொண்டே இருந்தால் அது சூடாவதே தெரியாமல் கொதிக்கும்வரை நீந்திக்கொண்டிருக்கும் என்பார்கள். இந்த இதழ்கள் மெல்ல மெல்ல இந்தியச் சமூகத்தை அனைத்துவகை ஒழுக்கமீறல்களுக்கும் பழக்கப்படுத்தின. ஆனால் எந்த வகையான அரசியல் மீறலுக்கும், தத்துவ மீறலுக்கும் பழக்கப்படுத்தவுமில்லை. ஆகவே மிகக் கட்டுப்பெட்டியான அரசியலும், சமூகவாழ்க்கையும் கொண்ட ஒரு சமூகம் கூடவே ரகசியமான பாலியல்மீறல் சார்ந்த கனவுகளும் கொண்டதாக உருவாகியது. அதை உருவாக்கியவை இந்த இதழ்கள். இவைதான் மீறலுக்காக ஓஷோவைக் குற்றம் சாட்டின, செக்ஸ் சாமியார் என்றன.
ஒட்டுமொத்தமாக இந்த தமிழ் இதழ்களின் பங்களிப்பு என்னவென்றால், சமுதாயத்தின் சபைநாகரீக விளிம்புகளை சமுதாயத்துக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடுவதுதான். அதாவது ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு டிகிரியை கூட்டிவைப்பது. அதைத்தான் குமுதம் செய்தது.உதாரணமாக, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கதையில் ஒரு பையன் அண்டா திருடுவான். ஒரு வீட்டின் பின்னால் பெரிய அண்டா ஒன்று இருக்கும். அவனால் அதை தூக்கமுடியாது. பள்ளிக்கூடம் செல்லும்போது ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இன்ச் வீதம் அதை நகர்த்தி வைப்பான். அண்டா ஒரு இன்ச் நகர்ந்தால் அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அவ்வாறு ஆறுமாதகாலம் அந்த அண்டாவை வசதியான இடத்திற்கு நகர்த்தி அது ஒரு சரிவின் விளிம்பை அடையச் செய்வான். அதன்பின் அதை உருட்டி எடுத்துச் சென்றுவிடுவான். அப்படியான அண்டாஉருட்டிகளான பத்திரிக்கைகள்தான் Illustrated Weekly, குமுதம் போன்றவை.அவை உருவாக்கிய ஓஷோவின் உருவம்தான் நம்மில் பெரும்பாலானவர்களின் உள்ளத்தில் உள்ளது.
எல்லா செய்திகளிலும் காமம் உண்டு என்பதை கண்டுபிடித்ததுதான் குஷ்வந்த் சிங்கின் சாதனை. குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி குஷ்வந்த் சிங்கின் தமிழ் நகல் அன்றி வேறல்ல.ஜெயகாந்தனிடம் ஒருமுறை பேசும்போது ஒரு கதை சொன்னார். ஒரு மகப்பேறு மருத்துவர் சென்னையில் இருந்திருக்கிறார். அவரிடம் ஒருவர் தனது மனைவியை அழைத்து செல்கிறார். அங்குதான் அந்த பெண்ணின் முதல் பிரசவத்தின்போது அவளைக் காட்டியதாக அவர் மருத்துவரிடம் சொல்கிறார். மருத்துவர் அந்த பெண்ணை பார்த்துவிட்டு ‘அப்படியா, எனக்கு முகம் அடையாளம் தெரியவில்லை’ என்றார். ‘நீங்கள்தான் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்தீர்கள்’ என்கிறார் கணவர். ‘அப்படியா, தெரியாதே’ என்கிறார் மருத்துவர். அதன் பின்பு அப்பெண்ணை பரிசோதிப்பதற்காக ஆடைகளை களைத்துவிட்டு பார்த்தபோது ‘ஓ, நீயா’ என்றாராம். இவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான். அதைத்தான் எல்லா இடங்களிலும் பார்ப்பார்கள்.
ஆதிவாசிகளின் துயரம் பற்றி Illustrated Weekly ஒரு கட்டுரை வெளியிடும். ஆனால் அதில் திறந்த மார்பகங்கள்தான் முக்கியமாக இருக்கும். செஸ் விளையாட்டை பற்றிய ஒரு கட்டுரையில்கூட நிர்வாண பெண்களின் படங்கள் இருக்கும். ஏனெனில் எகிப்தில் ஏதோவொரு அரசன் ஏதோவொரு காலத்தில் நிர்வாண பெண்களை வைத்து செஸ் விளையாடியிருக்கிறார். அதை கண்டுபிடித்து இவர் வெளியிடுவார். நடிகை சாமி கும்பிட்டார் என்பதை தலைப்பு செய்தியாக போடக்கூடிய தந்திதான் ஓஷோவை செக்ஸ் சாமியார் என்று முத்திரையிட்டாது. நடிகை கர்ப்பம் என்று நான்கு ஆச்சர்யக்குறிகள் போடும் செய்தித்தாளிலும், அந்தக் கர்ப்பத்திற்கு உண்மையான காரணம் யார் என கிசுகிசு போடும் இதழிலும் தான் ரஜ்னீஷ் செக்ஸ் சாமியாராக குறிப்பிடப்பட்டார்.
அன்றைய செய்தியால் இந்தியா முழுக்க நடுத்தர வர்க்கத்திற்கு பெரிய அதிர்ச்சியும் தார்மீக கோபமும் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட இருபதாண்டுகாலம் இந்தியாவில் அது நீடித்தது. ஒருவகையில் ஓஷோ இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது Illustrated Weekly இல் இருந்து தொடங்கி வளர்ந்து வந்த கசப்புதான். அந்த ஒவ்வாமை இலக்கியவாதிகளிடமும் இருந்தது. நான் எண்பதுகளில் தமிழ் இலக்கியவாதிகளை சந்திக்கும்போது அவர்கள் அனைவருமே ஜே.கிருஷ்ணமூர்த்தியை பின்பற்றுபவர்களாக இருந்தனர். பிரமிள் ஜே.கே.வை கிருஷ்ணா என்றுதான் சொல்வார். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மேல் பற்றுகொண்டவர்களாக இருந்தனர். அசோகமித்திரன் ஜே.கே. கதாபாத்திரமாக வரும் கதைகளை எழுதியிருக்கிறார். ஆனால் ஒருவர்கூட ஓஷோவின் வாசகரோ ஆதரவாளரோ கிடையாது. சு.ரா. ஓஷோவின் ஒரேயொரு புத்தகத்தை படித்திருப்பதாகவும், ஓர் உரையை நேரில் கேட்டிருப்பதாகவும் சொன்னார். “ஓஷோ பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று அவரிடம் கேட்டேன். சுருக்கமாக ‘பெரிய வாயாடி’ என்றார். ஏனெனில் இவர்களுடைய ஏதோவொரு வகையான ஒழுக்கத்தை அல்லது தார்மீகத்தை ஓஷோவின் கருத்து சீண்டுகிறது. அவரை ஏற்பது அவ்வளவு கௌரவமாக இருக்காதோ என்பதாக எண்ணுகிறார்கள். உண்மையை சொல்லவேண்டுமென்றால் எனக்கும் அவ்வாறுதான் இருந்தது. நானும் அன்றைக்கு ஒரு ஒழுக்கமான நல்ல பையன்.
நான் அப்போது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜே.ஹேமச்சந்திரன் அவர்களிடம் இதுபற்றி கேட்டேன். அவர் எனக்கு தாய்மாமன் முறை. அவர் என்னை உட்காரவைத்து சொன்னார் ‘பூர்ஷ்வா கலாச்சாரம் தன்னைத்தானே இப்படி சீரழித்துக்கொள்ளும். இது ஒரு நோய்க்கூறு. குஷ்டநோயின் முதல் கொப்புளம். இவ்வாறுதான் முதலாளித்துவம் அழியும். ஏனெனில் பூர்ஷ்வா கலாச்சாரத்திற்கு உயர்ந்த வகையான இன்பங்கள் கிடையாது. கீழ்த்தரமான இன்பங்களே உள்ளன. எனவே அது சூதாடும், விபச்சாரம் செய்யும், இம்மாதிரி காமச் சோதனைகளை செய்துபார்க்கும்’. எனக்கும் அப்போது அது சரியென்றே தோன்றியது.
நீண்டநாட்கள் கழித்து, தொண்ணூறுகளுக்கு பிறகு அன்று இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி வெளியிட்ட அந்த புகைப்படங்களைப் பார்க்கும்போது அவை மிகவும் சர்வசாதாரணமாக தெரிந்தன. அதில் ஆறேழு பெண்கள் திறந்த மார்பகங்களோடு இருந்தனர். அமெரிக்காவில் மியாமி கடற்கரைக்கு சென்றால் ஐம்பதாயிரம் பெண்கள் திறந்த மார்பகங்களோடு இருப்பார்கள். அந்தச் சோதனையே கூட காமச்சோதனை அல்ல, காமத்தை அவதானிக்கும் பயிற்சிதான். காமத்தைப் பற்றி காமக்கிளர்ச்சி இல்லாமல் தெரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறைதான்.
அதன்பின், சொல்லப்பட்டவற்றில் இருந்து மாறாக நான் ஒரு உணர்வை அடைந்தேன். 1982இல் ஒருமுறை திருவனந்தபுரத்தில் இலக்கிய அழகியல் குறித்து பேசும் மார்க்சியச் சிந்தனையாளராகிய எம்.என்.விஜயன் பேசிக்கொண்டிருந்தார். ஆசார்ய ரஜ்னீஷ் இவ்வாறு சொல்கிறார் என்று சொல்லி ஒரு விஷயத்தை சொன்னார். எரிக் ஃப்ராம் (Erich Fromm) எழுதிய The Art of Loving என்ற நூல் அப்போது வெளிவந்திருந்தது. அந்த நூலில் எரிக் ஃப்ராம் எதை சொல்கிறாரோ அதை பகவான் ரஜ்னீஷ் முப்பதாண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதாக விஜயன் பேசினார். ஒரு படுக்கையில் நான்குபேர் என்ற தலைப்பில் கேள்விபதிலாக அமைந்திருந்த ஒரு கட்டுரை அது. அதில் ஓஷோ ஒரு பெண்ணிடம் சொல்கிறார், ‘நீயும் உனது கணவனும் படுக்கையில் இருக்கும்போது உண்மையில் அதில் நான்குபேர் இருக்கிறீர்கள். உனது கணவனை பற்றிய உனது பிம்பம், உன்னைப்பற்றிய உன் கணவனின் பிம்பம், அத்துடன் உண்மையான நீங்கள் இரண்டுபேர் என மொத்தம் நான்குபேர் இருக்கிறீர்கள். இந்நான்கு புள்ளிகளும் உருவாக்கும் முடிவற்ற சாத்தியக்கூறுகள் வழியாகத்தான் உங்கள் உறவுகள் ஒவ்வொருநாளும் நிகழ்கிறது’.
நாம் எப்படி மானுட உறவுகளை உருவாக்கிக் கொள்கிறோம். ஒரு மனிதனைப்பற்றி நாம் கொண்டிருக்கும் பிம்பத்துடன்தான் உண்மையில் உறவு வைத்துக்கொள்கிறோம். அந்த மனிதனை நாம் அறிவதில்லை. அவரைப்பற்றிய பிம்பத்தை வைத்து அம்மனிதனை நாம் வசதியாக மறைத்துக்கொள்கிறோம். அதுவே அவர் என நம்புகிறோம். அந்த பிம்பத்தோடு உறவுகொள்வதுதான் சாத்தியம், அதற்கப்பால் அம்மனிதரைப் பற்றிய உண்மையை நம்மால் அறியமுடியாது என்கிறார் எரிக். அம்மனிதர் உங்களுக்கு காட்டும் முகம் ஒரு நடிப்பு என்றாலும்கூட, நடைமுறையில் அவ்வளவுதான் சாத்தியம் என்கிறார்.
அந்த உரையை கேட்டபோதுதான் ‘இவர் யாரைப்பற்றி சொல்கிறார், அந்த செக்ஸ் சாமியார் பற்றியா ? அவர் இவ்வளவு ஆழமாக பேசியிருக்கிறாரா’ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அப்போதுதான் முதன்முறையாக ஒரு சிந்தனையாளராக ஓஷோ எனக்கு அறிமுகமாகிறார். அப்போது வினோத் கன்னா என்ற இந்தி நடிகர் நடிப்பை விட்டுவிட்டு ஓஷோ கம்யூனுக்கு சென்று துறவியாகியிருந்தார். அதுபற்றிய செய்திகள் பரபரப்பாக வந்துகொண்டிருந்தன. இத்தகைய பரபரப்புச் செய்திகளை தாண்டி ஓஷோ இவ்வளவு நூல்களை எழுதியிருக்கிறார் என்றோ, இவ்வளவு உரைகளை ஆற்றியிருக்கிறார் என்றோ எந்த செய்தியும் வரவில்லை.
ஓஷோ இந்தியாவை விட்டுச்சென்று, அங்கே பிரச்சினைகளுக்கு ஆளாகி, மீண்டும் இங்குவந்து, தொண்ணூறுகளில் மறைந்த பிறகுதான் அவருடைய நூல்கள் தமிழில் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்தன. அவர் பேசிமுடித்து முப்பதாண்டுகளுக்கு பிறகுதான் தமிழில் ஒரு சிந்தனையாளராக அறிமுகமானார். நமக்கு ஓஷோ என்ற அந்த ஆளுமையை, சங்கடமான சிக்கலூட்டக்கூடிய அந்த மனிதனை, தவிர்த்துவிட்டு அந்த சிந்தனைகளை பார்ப்பதற்கு அவர் மறையவேண்டியிருந்தது. இது நவீன காலமாகிவிட்டது. இதுவே கொஞ்சம் பழைய காலமாக இருந்திருந்தால் நாம் வசதியாக ஒரு சிலுவையை உருவாக்கி அவரை அறைந்து, புனிதராக்கி அல்லது தெய்வமாக ஆக்கி கோவிலில் நிறுத்தியிருப்போம். தீர்க்கதரிசிகளோ சிந்தனையாளர்களோ உயிருடன் இருக்கையில் ஒருவித சங்கடத்தை அளிக்கிறார்கள். அவர்களை சிலையாக, ஒருவித அடையாளமாக மாற்றவேண்டியுள்ளது. அதன்பிறகு நாம் அவர்களை சௌகரியமாக அணுகுகிறோம். நான் தொண்ணூறுகளில் யோகி ராம்சுரத்குமாரை சந்தித்தபோது அவரிடம் சொன்னேன், ‘இங்கு சுற்றியிருக்கும் அனைவரும் நீங்கள் சிலையாக மாறுவதற்கு காத்திருக்கிறார்கள்’ என்று. கற்சிலை மிகவும் வசதியானது. பேசும் சிலை அவ்வளவு வசதியானது அல்ல.
அக்காலகட்டத்தில் ‘காமத்தில் இருந்து கடவுளுக்கு’ என்ற புத்தகம் தமிழில் வந்தது. அது ஓஷோவின் ஆரம்பகால நூல்களில் ஒன்று. அதன் தலைப்பு காரணமாகவே இங்கு அதிகமாக படிக்கப்பட்டது. தமிழில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் பாலியல் தொடர்பான எதுவும் சிறப்பான விற்பனையை அடையும் என்பதே. தமிழ்ச்சமூகம் மிகப்பெரிய பாலியல் வறுமையும், அதன் விளைவான ரகசியத் தேடலும், அதை ஒளித்துக்கொள்வதற்கான ஒழுக்கப்பாவனைகளும் கொண்டது. மின்சாரம் வந்த புதிதில், பழைய மணிக்கொடி இதழில் ‘மின்சார நீர்’ விற்பனை பற்றிய செய்தி வந்திருந்ததை கண்டிருக்கிறேன். தண்ணீரில் மின்சாரம் பாய்ச்சி, அதை குப்பிகளில் அடைத்து ,ஆண்மை விருத்திக்கு என்று சொல்லி விற்றிருக்கிறார்கள். ஆண்மை விருத்திக்கு நல்லது என்று சொல்லி எதை வேண்டுமானாலும் விற்கக்கூடிய ஒரு பண்பாட்டு வெளி தமிழகம் என்று சொல்லலாம். அன்று குமுதம் உட்பட இதழ்கள் பலமணிநேரம் ஆண்மைச் சக்தியை தூக்கி நிறுத்தக்கூடிய யோகசக்தி உடையவர் என்று ரஜ்னீஷை பற்றி பேசிவந்தன. ‘இருக்கும்போல, நாமென்ன கண்டோம்’ என்று தமிழர்கள் அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தார்கள். அப்படித்தான் அந்த புத்தகம் தமிழகம் முழுக்க பரவலாக அறியப்பட்டது.
அதற்கும் முன்னால் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘அறிந்ததினின்றும் விடுதலை’ என்ற புத்தகம் தமிழில் வந்திருந்தது. நான் அன்று பலவிதமான தத்தளிப்புகளில் இருந்த காலம். அப்போது அந்த புத்தகத்தை படித்தேன். ஜே.கே. பற்றிய எனது விமர்சனம் ஒன்று இப்போதும் உண்டு. படிக்கப்படிக்க சரியானது என்று தோன்றி, படித்து முடித்தவுடன் ஒட்டுமொத்தமாகவே அந்தப்பார்வை தவறானதாக நமக்குள் மாறக்கூடிய விசித்திரமான ஒரு தன்மை அதில் உண்டு. எனக்கு அந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன் எதோ வலையில் விழுந்து மாட்டிக்கொண்டது போல இருந்தது. ஒன்றும் செய்யவேண்டியதில்லை, சும்மா ஒழுகிச் சென்றுகொண்டே இருந்தால்போதும், தியானமும் அறிதலும் ஆராய்தலும் பயனில்லை. எந்தச் செயலும் வெறும் எதிர்விளைவையே உருவாக்கும். எதை அறிந்தாலும் அறிவைத்திரட்டி மேற்கொண்டு அறியாமல் தடுத்துக்கொள்வதையே செய்கிறோம்… இப்படியே செல்லும் சிந்தனைகள். எப்போதுமே ஜே.கே.யின் நூல்களை படிக்கும்போது ஏற்படும் கேள்வி, ‘சரி,இப்போ என்னங்குற?’ என்பதுதான்.
அந்த வலையில் இருந்து என்னை வெளியே கொண்டுவந்தது ஓஷோவின் காமத்திலிருந்து கடவுளுக்கு தான். அதன்பிறகு வெறியுடன் சிலகாலம் ஓஷோவை படித்தேன். இந்த உரைக்காக மீண்டும் தனியே ஓஷோவை படிக்கக்கூடாது என்ற முடிவுடன் இருந்தேன். மீண்டும் அவரை படிக்க முடியுமா என்பதும் தெரியவில்லை. நான் எனக்கு ஓஷோ என்ன பொருள் அளித்தார் என்றே பேச விரும்புகிறேன். நுணுக்கமான ஓர் ஆய்வை நான் முன்வைக்கவில்லை. இந்நூற்றாண்டில், ஓஷோ உச்சத்தில் இருந்தபோது தன் அறிதல்பயணத்தைத் தொடங்கிய ஓர் இந்திய எழுத்தாளனுக்கு, அடுத்த தலைமுறையினனுக்கு, ஒட்டுமொத்தமாக அவர் என்னவாக பொருள்படுகிறார் என்பதுதான் இந்த உரையின் பேசுபொருள்.
பல இடர்களிலிருந்தும் தளைகளிலிருந்து ஓஷோ நம்மை எப்படியெல்லாம் விடுவிக்கிறார் என்பதை சொன்னேன். பசுமாட்டிற்கு மூக்கை சுற்றி கயிறுகட்டி மூக்கணாங்கயிறு போட்டிருப்பார்கள். எருமைக்கு மூக்கில் உள்ள மெல்லிய சவ்வில் ஒரு வளையத்தை போட்டு பிடித்திருப்ப்பார்கள். கரடிக்கு அதன் விரைப்பையில் துளையிட்டு அதில் கம்பியை கட்டி பிடித்திருப்ப்பார்கள். மரபு உங்களுக்கு எத்தகைய மூக்கணாங்கயிறு போட்டிருக்கிறது என்பது உங்களுக்குத்தான் தெரியும். எனக்கு போட்டிருந்தது கரடிக்கு போட்டிருந்தது போல. அதைவிட்டு வெளியே வருவதற்கு எனக்கு ஓஷோ பெரிய அளவில் உதவினார்.
இன்று இந்த மேடையில் ஓஷோவை பற்றி பேசும்போது மிகுந்த நன்றியுணர்வுடன், என்னை கட்டியிருந்த வாதைகளில் இருந்து விடுவித்த ஒரு பேயோட்டி என்ற அளவில்தான் பேசுகிறேன். இங்கு ஒரு பெரிய பாவனை இருந்துகொண்டிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எம்.ஜி.ஆரின் இதயக்கனி என்ற படம் வந்தது. அந்த படத்தில் ‘இன்பமே உந்தன் பெயர் …’ என்றொரு பாடல் உண்டு. அந்த பாடல் அளவுக்கு மோசமான ஒரு போர்னோகிராஃபி இன்றுகூட இணையத்தில் கிடைக்காது. ஆடைகள் அணிந்திருப்பது மட்டும்தான் வேறுபாடு. சிவாஜி கணேசனின் ஒரு படத்தில் வரும் ‘நாலுபக்கம் வேடர் உண்டு’ என்றொரு பாடலில் சிவாஜியும் சுஜாதாவும் ஒரு குழிக்குள் இருப்ப்பார்கள். அந்தக் குழியின் அனைத்து சாத்தியங்களையும் அவர்கள் பரிசீலிப்ப்பார்கள். அந்த அளவுக்கு ஒரு மோசமான போர்னோகிராஃபி இன்றுவரை இல்லை. ஆனால் இதையெல்லாம் அம்மா, பிள்ளை என்று குடும்பமாக சென்று பார்த்துக்கொண்டிருந்தோம். அது நமக்கு தவறாக தெரியவில்லை. ஆனால் முத்தமிட்டுக்கொண்டால் ஆபாசம். ஒரு கதையில் முலை என்று சொன்னால் அது ஆபாசக்கதை. ஒரு சாதாரண ஆண்பெண் உறவு விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது, கேட்டால் அதிர்ச்சியடைவோம். இத்தகைய அபத்தமான பாவனையை நமக்கு சுட்டிக்காட்டி இதிலிருந்து வெளியே வருவதற்கான வழியை திறந்தவர் ஓஷோ. அதன்பிறகுதான் நான் அவரை தொடர்ந்து படிக்கத்தொடங்கினேன்.
(மேலும்)
கோளேரி வினோத்குமார்
தமிழிசை முன்னோடிகளில் ஒருவர்பெரியசாமித் தூரன்.அவர் நினைவாக வழங்கப்பட்டுவரும் தமிழ்விக்கி-தூரன் விருது இந்த ஆண்டு வெ.வேதாசலம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. விழா வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. அவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கே உரிய இசைமரபான நாதஸ்வரத்தில் இளைய தலைமுறையில் முதன்மைக் கலைஞர்களை அடையாளம் காட்டி வருகிறோம். இந்த ஆண்டு அந்த இசைக்குழுவில் நாதஸ்வர இசைக்கலைஞரான கோளேரி வினோத்குமார் கலந்துகொள்கிறார்

தேவதேவன் அருகிருத்தல்- நாகநந்தினி
சில நாட்கள் எல்லாம் நன்றாக அமைந்து விடுகின்றன. சென்ற ஜூலை 6 ஆம் தேதியும் அப்படி ஒரு நாள். கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள் ஒருங்கிணைத்த “தேவதேவன் அருகிருத்தல்” கவிதை சந்திப்பில் 20 பேர் பங்கெடுத்தோம். ஒரு மாதமாக தேவதேவன் அவர்களின் கவிதையின் மதம் கட்டுரை, “நீல நிலாவெளி” மற்றும் “பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்” கவிதை தொகுதிகளை வாசித்து கொண்டிருந்தேன். நண்பர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் பகிர்ந்த பல முக்கியமான கவிதைகளையும் வாசித்தேன்.
புதிய திறப்புகள்
கவிதையின் மதம் கட்டுரைகள், ஆளுமைகளை துறப்பது குறித்து விரிவாக பேசியது. கவிதை கூடுகையின் முதல் கேள்வியே, ஆளுமைகளை ரத்து செய்வது குறித்து தான் எழுந்தது.
கவிஞர் கொட்டும் அருவி போல், சீராகவும், மிகவும் மென்மையாகவும் தன் கருத்துக்களை முன்வைத்தார் . எந்த ஒரு விஷயத்தையும் தத்துவமாக ஆக்கி விட்டால், அதை அமைப்புகள் கைக்கொள்ளும். அதன் உண்மையான சாராம்சம் திரிந்து விடும் என்று பொறுமையாக, பல உதாரணங்களுடன் விளக்கினார்.
இயற்கை கொடுமையானதா, ஒன்றை ஒன்று அடித்து தின்பதா என்கிற கேள்விக்கு, முற்றிலும் புதிய விளக்கம் கொடுத்தார். தேவை அன்றி இயற்கை எடுக்காது என்று புரிய வைத்தார். அனைத்து வாழ்வுகளும் மகத்தானவை. அதே சமயம் அவை பெரிய அடையாளங்களை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இயல்பாக இருந்தால் போதும் என்று விளக்கினார்.
பட்டாம்பூச்சி பற்றிய அவரது கவிதையை மேற்கோள் காட்டி, வாழ்க்கையின் நிலையாமையை, அத்தனை மகிழ்ச்சியான ஜீவனும், ஒரு அடையாளமும் இல்லாமல் இறந்து போகும் தன்மைதான், நிதர்சனம் என்று சொன்னார்.
கவிதை ஒரு ஆன்ம அனுபவம்
கடவுள் பற்றிய கவிதையில், மனிதன் செய்கின்ற அனைத்து தீமைகளுக்கும், கடவுளை பொறுப்பாக்க முடியாது என்ற இடத்தை விளக்கி, கவிஞரின் தரிசனத்தை முன் வைத்தார். மிகவும் ஆழமாக சென்ற அந்த கலந்துரையாடல் மூலம், சமூகத்தில் கவிஞர்கள் வகிக்கும் பங்கு எவ்வளவு முக்கியமானது என்று புரிந்து கொள்ள முடிந்தது.
கவிஞர்கள் ஒரு வகையில் விதி சமைப்பவர்கள். அவர்களுடைய உச்ச நிலை தான் கவிதை ஆகிறது. கவிஞர் தன்னை பற்றிய சுய அடையாளத்தை/ஆளுமையை விடும் பொழுதுதான், கவிதை ஒரு ஆன்மீக அனுபவமாக விரிகிறது என்கிறார்.
இந்த நிலையில் இருந்து தான் கவிஞர்கள் சமரசமற்ற கவிதை படைக்க முடியும் என்றார். ஒரு உயர்ந்த தரிசனம் இல்லாத, ஆன்மீக அனுபவமாக இல்லாத எதுவும் நல்ல கவிதையே அல்ல என்று சொன்னார்.
உதிர்ந்த இலைகள் , அரைகுறை உள்ளொளி , பிரமிள்
ஏன் உதிர்ந்த இலைகளை பற்றி இத்தனை கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்கு, தன் கண்ணில் அவை தொடர்ந்து கண்ணில் பட்டு கொண்டு இருப்பதாகவும், வாழ்க்கையின் உண்மையை அதில் பார்ப்பதாகவும் சொன்னார்.
தனக்கே உரிய மென்மையான பாணியில், சாமியார்களையும், ஆன்மீக குருக்களையும், அரைகுறை உள்ளொளி பெற்றவர்கள் என்று விமர்சித்தார். பிரமிள் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னுடன் அவருடைய பரிச்சயம், பிரமிள் எழுத வந்த சூழ்நிலை, அப்பொழுது எழுத்து உலகில் இருந்த அரசியல் எல்லாவற்றையும் சுருக்கமாக விளக்கினார்.
பெண்களை பற்றி
பெண்களை பற்றி பெண்களே எழுதும் கவிதைகளில் கூட, இயல்பாக பெண்கள் விரும்பும் அடையாளத்தை துறக்க சொல்லியோ, அல்லது அலங்காரம் போன்ற விஷயங்களை கேலி செய்தோ சில வரிகள் வரும். ஆனால் தேவதேவன் அவர்கள், அத்தகைய கூறுகளை, பெண்மையின் இயல்பாக ஏற்று கொண்டு, அவற்றை அங்கீகரித்து எழுதுவார்.
“முடிச்சு” என்கிற கவிதையில் வரும் முதுகு பற்றிய விவரணைகள், அதை ஆணின் பரந்த மார்போடு ஒப்பிட்டு எழுதியதை குறித்து அவரிடம் கேட்டோம். பெண்களின் முகத்தை விட்டு முதுகை ஒரு நட்பான, ஆதுரமான உறுப்பாக காட்டியது எப்படி என்று வியந்து பாராட்டினோம்.
அதை பற்றி அவரிடம் கேட்ட பொழுது, தானே ஒரு பெண்ணாக உணர்ந்த தருணங்களை சொன்னார். மிக சிறிய வயதில், தன்னுடைய அக்காவின் தோழிகள் சூழ்ந்த இடத்தில் இருந்ததை நினைவு கூர்ந்தார்.
நீலி இதழில் அவர் எழுதிய “புதிய ஏற்பாடு” கவிதையை மேற்கோள் காட்டி, ஆண் பெண் உறவு பரிமாணத்தை பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்த விஷயத்தில் தன்னுடைய மனநிலையே, எவ்வாறு முன்பு இருந்ததை விட மாறி இருக்கிறது என்று, தனிமையில் ஞானம் தேடும் தன்னுடைய பழைய கவிதையை கூறி விளக்கினார்.
வாசக உரையாடல்
மூன்று வகையான வாசகர்களை தான் தொடர்ந்து சந்திப்பதாக சொன்னார். அவர் மீது மிகவும் பக்தி கொண்டவர்கள், அவரை பற்றிய அறிமுகம் இல்லாதவர்கள், அவரை தீவிரமாய் எதிர்ப்பவர்கள்.இரண்டாம் வகை வாசகர்கள்தான் மிகவும் முக்கியம் என்றும், தான் அவர்களுடன் உரையாடி, தன்னை பற்றி ஒரு புரிதலை உண்டாக்க முயற்சி செய்வதாக கூறினார்.
கூடுகையின் ஆரம்பத்திலேயே, தன்னை பாராட்டி பேச வேண்டாம் என்றும், கவிதை பற்றி இருக்கும், புரிதல் சார்ந்த சந்தேகங்களை தீர்த்து கொள்ளும்படியும் சொன்னார்.அவருடைய முக்கியமான கவிதைகளை ஒருவர் படிக்க, எந்த வரி, எப்படி முக்கியம் என்று விளக்கினார். யாரையும் புண்படுத்த கூடாது என்பதை தன் இயல்பாகவே கொண்டு இருக்கிறார் இந்த பெரும் கவிஞர்.
தண்ணீருக்காக காத்திருந்த பொழுதும், அந்த வீட்டுக்காரர்கள் மனம் வருந்தி விடக்கூடாது என்று, திரும்பி வராமல் நின்ற மனம் அவருக்கு. மானசா கிருபாவின் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைத்ததையும், அந்த கவிதையை “ஏஞ்சல்” தொகுதியில் இருந்து படிக்கவும் வைத்தார்.
அருமையான ஏற்பாடுகள்
கூடுகை நடந்த பிகின் பள்ளி, ஒரு சோலை போல மரங்கள் சூழ, அருமையான இயற்கை கட்டுமானத்துடன் இருந்தது. சரண்யா உணவு, மற்றும் இதர ஏற்பாடுகளை அருமையாக செய்து இருந்தார்.
கவிஞர் வேணு வேட்ராயன் அவர்கள், தொடர்ந்து கேள்விகள் கேட்டு, கூடுகையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றார். கவிநிலவனும், தீபாவும் பாடிய பாடல்கள் கூடுகைக்கு செறிவு சேர்த்தன. மழை, மூங்கில் மரங்கள் நிறைந்த பூங்கா, மனம் ஒத்த நண்பர்கள் என்று மொத்த நாளும் கொண்டாட்டமாக இருந்தது.
கூடுகையில் கற்றுக்கொண்டவை
கவிதையை, மிகவும் deconstruct செய்ய முயற்சி செய்ய கூடாது. நேரடியாக புரிந்து கொள்வதை விடவும், கவிஞர் கொண்டுள்ள பொது கருத்துக்கள் மூலம் அதை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கவிஞருடனான சந்திப்புகள், உரையாடல்கள் அதற்கு மிகவும் உதவும்.கவிதைக்கு மிகவும் அலங்காரமான வார்த்தைகளோ, உருவகங்களோ தேவை இல்லை. மிக எளிமையான மொழியில், உறுதியான கருத்துக்களை சொல்லி விட முடியும்.கவிதையை, கதை போல வாசிக்காமல், சில முறை வாசித்து விட்டு, அது புரிவதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அதை பற்றி பல கோணங்களில் சிந்திக்க வேண்டும். பல கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொழுது கவிஞர், “இதை நீ முதலில் இப்படி யோசித்து பார்,” என்று தொடர்ந்து சொல்லியபடி இருந்தார்.வாழ்க்கை கவித்துவமான தருணங்கள் நிறைந்தது. கொஞ்சம் திறந்த மனதுடன், அனைத்தையும் ரசிக்க வேண்டும். அதுதான் கவிதையை புரிந்து கொள்வதற்கான முதல் படி.கவிதையின் தளம் மிகவும் சுருக்கமானது. குறைந்த வார்த்தைகளில், கவிஞருக்கும் படிப்பவருக்கும் ஆன பொதுவான ஒன்று புரிந்துகொள்ள படுகிறது. சில சமயம் அதில் தவறுகள் நேரலாம். ஒவ்வொருவருக்கும் வேறு, வேறு அர்த்தங்கள் புரிபடலாம். அது வாசிப்பின் போதாமை தான். தொடர் வாசிப்பும், விவாதமும், உரையாடலும், அத்தகைய தவறான புரிதல்களை களைய உதவும்.மிகவும் நன்றியுடன்,
நாக நந்தினி
புராணமயமாதல்
என்னைப் பொறுத்த அளவில் குரு என்பவர் நிச்சயமாக மதிக்கப் பட வேண்டியவர். என்னை விட மேலானவர். உதாரணமாகத் தமிழ் இலக்கியத்தில் எனக்கிருந்த ஒரு சுவையை மறுபடியும் உங்கள் தளம் மூலம்தான் பெற்றேன். அவ்விஷய்த்தில் உங்களை குருவாக நான் மதிப்பேன். ஆனால் நீங்களும் ஒரு மனிதர், விருப்பு வெறுப்பு நிறைந்தவர் என்ற ஒரு கோணமும் என்னிடம் இருக்கும்.
புராணமயமாதல்I enjoyed Ajithan’s two conversations regarding Western philosophy and Wagner. It seems he is personally obsessed with Schopenhauer and Wagner. I came to know that he is your son and an energetic, creative writer. However, he is not mentioning any creative writers as his icons.
Schopenhauer and WagnerJuly 30, 2025
பண்பாட்டின் தொடக்ககாலத்தைத் தேடி
நம் மதம், நம் பண்பாடு, நம் நம்பிக்கைகளின் வேர்கள் எங்கே உள்ளன? தேடித்தேடிச்சென்றால் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த தொன்மையான காலகட்டத்திற்கே செல்லவேண்டியிருக்கிறது. அங்கே அவர்களின் வாழ்க்கைப்போராட்டம் மட்டும் அல்ல அவர்களின் கனவுகளும்கூட பதிவாகியுள்ளன. அவற்றிலிருந்தே நாம் நம் அகம் என நினைக்கும் அனைத்தும் உருவாகியுள்ளன.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
