Jeyamohan's Blog, page 1060

January 23, 2021

குழந்தைக் கதைகள் பற்றி ப்ளூம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் முதன்முதலில் ஹெரால்ட் ப்ளூமை பற்றி படித்தது உங்கள் தளத்தில்தான். பிறகு அவரை பற்றி தேடிப் படிக்க ஆரம்பித்தேன். அவர் பிபிசிக்கு கொடுத்த ஒரு நேர்காணலில், ஹாரிபாட்டர் எல்லாம் படிக்க தகுந்தவையே அல்ல என்று சற்று காட்டமாகவே விமர்சித்திருந்தார். அதன் பிறகு சிறார் இலக்கியத்தை பற்றி அவர் என்னதான் கூறியிருக்கிறார் என்று தேடத்துவங்கினேன். அப்படித்தான் அவருடைய  ‘Stories and Poems for Extremely Intelligent Children of All Ages’ புத்தகத்தைப்பற்றி தெரிந்துகொண்டேன்.

கூகிள் புக்ஸில், பாதி பக்கங்களுக்கு மேல் நீக்கப்பட்ட ஒரு முன்னோட்ட பிரதி படிக்க  கிடைத்தது.  ஆனால் அதன் உள்ளடக்கப் பக்கங்கள் நீக்கப்படாமல் இருந்தமையால், அவர் மிக கவனமாக தேர்ந்த்தெடுத்த 41 கதைகள், 83 கவிதை/பாடல்களின் பட்டியல் கிடைத்தது. அவற்றை ஒவ்வொன்றாக இனையத்தில் தேடி படிக்க ஆரம்பித்து, பின்னர் அதனுடைய சுட்டிகளையும், கவிதை, பாடல்களையும், எனது வசதிக்காகவும், என் மகள் படிப்பதற்காகவும், ஒரு இனைய பக்கத்தில் தொகுத்து வைக்க ஆரம்பித்தேன். அவர் தனது பரிந்துரையை வசந்தம், கோடை, இலையுதிர், குளிர்க்காலம் என்று  நான்கு பகுதியாக பிரித்திருக்கிறார். அதே போல், நான்கு பக்கங்களை வடிவமைத்திருக்கிறேன்.

Book 1: Spring

https://medium.com/@brajassekar/stories-and-poems-for-extremely-intelligent-children-of-all-ages-c95537ed1393

Book 2: Summer 

https://medium.com/@brajassekar/book-2-summer-1ea8912a5375

Book 3: Autumn

https://medium.com/@brajassekar/book-3-autumn-7c83b6c6f1a7

Book 4: Winter

https://medium.com/@brajassekar/book-4-winter-e48e94843be

சிறு குழந்தைகளுக்கான பாடல்கள், கவிதைகள், பேய் கதைகள், தேவதைக் கதைகள் என்று இந்நூல் ஒரு அலாதியான அனுபவத்தையே தரும் என நம்புகிறேன். ஹெரால்ட் ப்ளூம்  இந்நூலுக்கான முன்னுரையில், இத்தொகுப்பிற்காக தேர்வு செய்யப்பட்ட படைப்புகளை பற்றி சொல்லும்போது.

“Most of this book is nineteenth century or earlier because I wanted to maintain a coherence of the tone and vision in these fantasies, narratives, lyrics and meditations.  After the first world war, various waves of what then was called as “Modernism”, ended the visionary speculation and wonder that makes ‘Stories and Poems for Extremely Intelligent Children of All Ages’ a harmony, at least in the editor’s intention” என்கிறார்.

ஹெரால்ட் ப்ளூமை அறிமுக செய்தவரே நீங்கள்தான், அதனால் உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். வீட்டிலேயே இருப்பதினால் இப்படைபுகள் என்னை ஒரு கனவுலகத்திற்கு அழைத்துச்செல்லும் என நம்புகிறேன்.

ராஜசேகர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2021 10:31

ஐந்நிலமும் ஆனவள்

அன்புள்ள ஜெ

சமீபத்தில் நான் நீலம் நாவலை வாசித்து முடித்தேன். எட்டே நாட்களில் நான் வெண்முரசு வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மூன்றையும் வாசித்தேன். நீலம் வந்ததும் நின்றுவிட்டேன். நீலத்தை இதுவரை நாலைந்துமுறை வாசித்துவிட்டேன். இரண்டுமுறை உரக்கச் சொல்லி வாசித்திருக்கிறேன். அதன் சொற்சுவையை நாவால் உச்சரித்தால்தான் உணர முடியும்

நீலம் பற்றி அற்புதமான வாசிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. நீலம் வெளிவந்தபோதே தொடர்ச்சியாக வாசகர்களின் எழுத்துக்கள் வந்தன. அழகான கடிதங்கள் பல பெண்களால் எழுதப்பட்டவை. நீலம் அவர்களை எந்த அளவுக்கு பாதித்தது என்று உணரமுடிந்தது. யோசித்துப்பார்த்தால் நீலம் பெண்களைத்தான் அந்த அளவுக்கு உணர்ச்சிகரமாக ஆட்டிப்படைக்கும் என்று தோன்றுகிறது. நீங்கள் பெண்ணாக நின்று எழுதிய நாவல். வாசகன் பெண்ணாக அமைந்து வாசிக்கவேண்டியது. வெண்முரசு நாவல் வரிசை ஒரு மரம் என்றால் இது அதிலே ஒரு அழகான பூ போல

உங்கள் தளத்தில் இரண்டு நீலம் வாசிப்புகளை கண்டேன். திரு மரபின் மைந்தன் முத்தையா [புகழ்பெற்ற பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையாதான் இவர் என நினைக்கிறேன்] ரெமிதா சதீஷ் இருவரும் எழுதியது. இருவரும் இரண்டு பார்வையில் எழுதியிருந்தார்கள். இரண்டு சிறந்த கட்டுரைகள். பொதுவான அம்சம் இருவருமே உணர்ச்சிகரமாக எழுதியிருந்தார்கள் என்பதுதான்

அதுதான் முக்கியமானது. நீலத்தை உணர்ச்சிகரமாக வாசித்தவர்கள் மட்டும்தான் அந்நாவலை அடையமுடியும். கொஞ்சம் உணர்ச்சிகரம் குறைவாக இருந்தால்கூட அந்நாவலை தொடவே முடியாது. அந்த நாவலில் உள்ளது ஓர் அரற்றல். ஒரு கட்டில்லாத மன அலைச்சல். அதை கூடவே சென்றால்தான் உணரமுடியும்

பழைய கவிதை ஒன்று உண்டு.  ஆனந்த் எழுதிய கவிதை என்று ஞாபகம். பறக்கும் பறவையை துரத்திக் கேட்டேன், பறப்பது எப்படி என்று. இப்படித்தான் என்றது. அட ஆமாம் என்று வியந்தேன். நான் கீழே விழுந்தேன், பறவை பறந்து சென்றது’ அதே அனுபவம்தான். எந்த அறிவுத்தயாரிப்பும் இல்லாமல் மனம் ஒன்றி படிப்பவர்கள் மிக எளிதாக அந்நாவலுக்குள் சென்றுவிடுவார்கள்.

உதாரணமாக ,என் மனைவி வெண்முரசு வரிசையில் நீலம் மட்டும்தான் வாசித்திருக்கிறார். ஆனால் அத்தனை வரிகளும் மனப்பாடம். அவ்வளவு ஈடுபாட்டுடன் வாசித்தார். கொஞ்சம் ஈகோ கொண்டு விலகி நின்று வாசிப்பவர்களுக்கு அந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவே முடியாது. இளமைக்காதலில் நாம் எந்த அளவுக்கு தர்க்கமே இல்லாத பித்துடன் இருப்போமோ அந்தப் பித்து தேவையாகிறதுநீலத்தை வாசிக்க

நான் நீலத்தின் வரிகளை தனித்தனியாக எடுத்து சொல்லிக்கொண்டே போவேன். முக்கியமான ஒன்று, இதுவரை நீலம் பற்றி எழுதிய எவருமே சொல்லாத ஒன்று உண்டு. அந்நாவலில் வரும் கண்ணனைக் கொல்லவரும் எல்லாருமே ராதையின் அம்சம் உடையவர்கள்தான். பூதனையிடம் அந்த அம்சம் ரொம்பவே இருக்கிறது. அவள் மண்ணின் வடிவம். முலைகொடுக்கவே வருகிறாள். ஆனால் கம்சன் ,திருணவிரதன், காளியன் எல்லாருமே ராதையின் அம்சத்துடன்தான் இருக்கிறார்கள்.

பீலி, குழல் எல்லாமே ராதைதான். யமுனையும் அவள்தான். அவளுக்கு காளிந்தி என்றபெயர் உண்டு. அவனுடைய எதிரிகளாகவும் அவளே நாவலுக்குள் வருகிறாளா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ”பதினாறாயிரம் பெண்களின் உடலென்னும் அலைவெளியாக காளிந்தி ஓடுவதைக் கண்டேன். அதில் காமம் கனிந்த கரிய உடல் நீந்தித் திளைப்பதைக் கண்டேன்”.என்று நீலம் காளிந்தி நதியைப் பற்றிச் சொல்கிறது

திருணவிரதனைப் பற்றிச் சொல்லும்போது அவன் விழியிமைகளை கவர்ந்து செல்கிறான் என்கிறது நீலம். அவன் மடியும்போது அதை ஒரு பெரும் முயக்கநிலையாகவே சொல்கிறது “அவன் மீது அவன் கவர்ந்த விழிமணிகள் இமையிதழ்கள் உதிர்ந்துதிர்ந்து மூடக்கண்டேன். அவன் மேல் அந்த நீலப்பீலி நிறைசிறகுகளாக விரிந்து குடைபிடிக்க பஞ்சு சூடிய விதைமணி போல் அவன் பறந்திறங்கக் கண்டேன். கருநிற விழியொளியன். விழிநிறக் கரியொளியன் ஆயரிளம் குலமைந்தன். அழியாத அச்சொல்லே உதடாக அச்சொல்லே விழியாக அச்சொல்லே விரல்மொழியாக அமைந்தங்கு அவன் மேலமர்ந்திருந்தான்”

நீலம் ராதையின் கதைதான். பஞ்சபூதங்களாகவும், எட்டுநாயகிகளாகவும், நான்கு பருவங்களாகவும் அவள் கிருஷ்ணனைச் சுற்றிச்சூழ்ந்துகொள்கிறாள். அதுதான் ராதையை ராதாகிருஷ்ணன் என்று கிருஷ்ணனுக்கு ஒருபடி மேலே வைக்கிறது. ஊழியில் கண்ணனின் பெயர் அழிந்தபின்னரும் ஒருகணம் நீடிக்கும் பெயராக ஆக்குகிறது

என்.எஸ்.பிரபாகர்

நீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா. Feeling Blue- Remitha Satheesh
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2021 10:30

January 22, 2021

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3

நவீன இந்தியாவின் சிற்பிகள் வாங்க

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள் பகுதி 2 [தொடர்ச்சி]

குகா அவருடைய நூலில் இந்தியாவைப்பற்றிய அறிமுகமாக ஒன்று சொல்கிறார், இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து புரட்சிகள் வெடித்தன. நகர்ப்புறப் புரட்சி, தொழிற்புரட்சி, தேசியப்புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி. இதுவே இந்தியாவின் வரலாற்றை உலக அளவிலேயே மிகமுக்கியமான ஒன்றாக ஆக்குகிறது என்கிறார்

குகாவின் புகழ்பெற்ற நூலான ‘காந்திக்குப்பின் இந்தியா’வில் தொடக்கத்தில் ஒன்று சொல்லப்படுகிறது. 1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது மிகவிரைவிலேயே இந்தியா உடைந்துவிடும் என்னும் எதிர்பார்ப்பு நிலவியது. ஒவ்வொரு பத்தாண்டிலும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உடைந்துவிடும் என அயல்நாட்டு அரசியல்நோக்கர்கள் ஆரூடம் சொன்னார்கள்.

ஆனால் இந்தியா நீடித்தது. நீடித்தது ஏன் என குகா அந்நூலில் ஆராய்கிறார் ஆனால் அப்படி ஆரூடம் சொல்ல காரணமாக அமைந்தது இந்தியாவில் இடைவிடாமல் நிகழ்ந்த கிளர்ச்சிகள், உள்நாட்டு முரண்பாடுகள். அவை ஏன் நிகழ்கின்றன? இந்தியா மாபெரும் முரண்பாடுகளின் தொகுப்பு. அவை மோதலாகவும் முரணியக்கமாகவும் நிகழ்ந்து இந்தியாவை முன்னெடுக்கின்றன

அந்த முரண்பட்ட தரப்புகளின் தொடக்கப்புள்ளிகளை ஆராய்கிறார் குகா. அவர்களை இந்தியாவின் சிற்பிகளாக காட்டுகிறார். அவ்வகையில் நவீனஇந்தியாவின் சிற்பியாக முகமது அலி ஜின்னாவை குகா முன்வைக்கிறார்.வரலாறு என்பது முரணியக்கத்தாலானது என்பதனால் ஜின்னா ஒரு விசை என எடுத்துக்கொள்ளலாம். அவர் உருவாக்கிய விளைவுகள் இன்றளவும் இந்தியாவை ஆட்டிப்படைக்கின்றன. ஆனால் எல்லாவகையிலும் ஓர் எதிர்மறைச்சக்தி என்றே ஜின்னாவை கருதமுடிகிறது.

ஜின்னா இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கக்கூடும் என்பதை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே ஊகித்தார். அல்லது, அது பிரிட்டிஷாரால் அவருக்கு சொல்லப்பட்டிருக்கலாம். அந்த இந்தியாவில் இந்து அரசே அமையும் என்றும், இஸ்லாமியர் இரண்டாம்குடிகளாக நேரிடும் என்றும் சொல்லி இஸ்லாமியரை தேசியப்போராட்டங்களிலிருந்து பிரித்தார். பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து நேரடியான வன்முறைக்கலவரங்கள் வழியாக அதை ஏற்கச்செய்தார். தேசப்பிரிவினையின் மாபெரும் வன்முறைக்கு இந்த தனிமனிதரின் அதிகாரவெறியே காரணம் என்று சொல்லலாம். இன்றும் தொடரும் அத்தனைபூசல்களும் தொடங்குவது ஜின்னாவிடம் இருந்தே.

பாகிஸ்தானியராக ஜின்னா பாகிஸ்தானியர்களால் போற்றப்படலாம். ஆனால் இந்தியாவுக்கு அவர் மாபெரும் அழிவுச்சக்தி. உலகப்பண்பாட்டுக்கும் அவர் அழிவுச்சக்தியே. இந்தியாவின் சிற்பி என அவரைச் சொல்லலாம் என்றால் எதிர்மறைவிசையும் ஆக்கத்தில் ஒரு தரப்பு என்பதனால் மட்டுமே.

முரண்பாடுகளை உருவாக்கிய ஆளுமைகளில் இன்னொருவர் ஈ,வே.ராமசாமி. தமிழகத்தில் இந்தியதேசிய காங்கிரஸுக்கு எதிரான குரலாக ஒலித்தவர். மூன்று தளங்களில் அவருடைய செயல்பாடு இருந்தது. காங்கிரஸ் முன்வைத்த ஒருங்கிணைந்த இந்தியா என்னும் கருத்துக்கு எதிராக ஆரிய -திராவிடவாதத்தின் அடிப்படையில் திராவிட இனவாதத்தை முன்வைத்தார். பிராமணர்களுக்கு எதிரான பிராமணரல்லாதார் சார்ந்த அரசியலை முன்னெடுத்தார். இந்தியாவின் ஆன்மிக கொள்கைகளுக்கு எதிராக நாத்திகசிந்தனைகளை முன்வைத்தார்

குகா சாதகமான குறிப்புடன் தொகுத்தளிக்கும் இந்நூலிலுள்ள குறிப்புகளில் ஈ.வே.ரா நன்னம்பிக்கையுடன், நேர்நிலை உள்ளத்துடன் சொன்ன ஒரு வரிகூட இல்லை. அவநம்பிக்கையும் கசப்பும் எதிர்ப்பும் மட்டுமே காணக்கிடைக்கின்றன. இந்நூலில் முகமது அலி ஜின்னா, ஈவேரா இருவரும்தான் இத்தகைய கோணத்தில் தென்படுகிறார்கள்.

கமலாதேவி சட்டோபாத்யாய

இப்பட்டியலில் குகா முன்வைக்கும் இன்னொருவர் கமலாதேவி சட்டோபாத்யாய. இந்த தெரிவு வியப்பாகவே இருக்கிறது. இந்திய அரசியலில் சோஷலிஸ்டுகளின் இடம் முக்கியமானது. அவர்கள் இந்தியாவை ஒரு ஜனநாயக சோஷலிச குடியராக நிலைநிறுத்த போராடியவர்கள். ராமச்சந்திர குகா கமலாதேவி சட்டோபாத்யாயவை அத்தரப்பின் முதன்மைப் பிரதிநிதியாக முன்வைக்கிறார்.

கமலாதேவி இளம்வயதிலேயே விதவையானார் .சரோஜினிநாயிடுவின் மூத்தவரான ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயவை மணம்புரிந்துகொண்டார். காந்தியின் உப்புசத்யாக்கிரகத்தில் முதன்மையான பங்குவகித்தார்.சிறைசென்றார். ஆனால் சுதந்திரத்துக்குப்பின்னர் அரசியலில் ஈடுபடவோ, பதவிகள் வகிக்கவோ மறுத்துவிட்டார். டெல்லியில் இந்தியா இண்டர்நேஷனல் செண்டர் உட்பட பல கலாச்சார அமைப்புகளை உருவாக்கினார். கைவினைப்பொருட்களுக்கான நிறுவனங்களை அமைத்தார். அகதிகளின் மறுசீரமைப்புக்காக பாடுபட்டார்

கமலாதேவியின் குறிப்புகள் இந்நூலில் உள்ளன. அன்றைய சோஷலிஸ்டுகளின் பொதுவான எண்ணங்களையே இதில் காண்கிறோம். பண்பாட்டுப்பிரச்சினைகளை பொருளியல் நோக்கில் அணுகுவது, நல்லெண்ணம்கொண்ட அரசால் பொருளியல் கட்டுப்பாடுகள் வழியாக செல்வம் சீராக வினியோகம் செய்யப்படுவது ஆகியவற்றைப் பற்றி அவர் பேசுகிறார். அனைவரும் பயன்பெறும் ஓர் அமைப்பிலேயே உற்பத்தி பெருகும் என நினைக்கிறார்

கமலாதேவி சட்டோபாத்யாய தொடங்கி இந்நூலில் இந்திய சிற்பிகளாகச் சொல்லப்படும் பலர் நேருயுகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நூலில் நேரு இடம்பெறும் விதமே இதை முக்கியமான ஆக்கமாக மாற்றுகிறது என நான் நினைக்கிறேன். இந்தியாவின் மறுமலர்ச்சியின் அடித்தளம் அமைத்த சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நேருவரை ஒரு நீட்சி உள்ளது. நேரு ராம்மோகன் ராயின் நேரடி நீட்சி என்றால் அது மிகையல்ல. அவர் காந்தியின் மாணவர். அதேசமயம் நவீன இந்தியாவில் உருவான அத்தனை முரண்பாடுகளையும் போராட்டங்களையும் சமரசம் செய்பவராக, அவற்றுக்கிடையே நிகழ்ந்த மோதல்களை உரையாடல்களாக ஆக்கி முரணியக்கமாக உருமாற்றி இந்தியாவை முன்னெடுப்பவராக இருந்தார்

ஐயமே இல்லாமல் இந்நூலின் கதைநாயகன் நேருதான். ஒரு வரலாற்றுநூலை உச்சகட்ட உளஎழுச்சியுடன், கிட்டதட்ட விழிநீருடன் படித்தேன் என்றால் இதில் நேரு குறித்து சொல்லப்படும் பகுதிகளைத்தான். இத்தனைக்கும் சுருக்கமான ஒரு வாழ்க்கைக்குறிப்பும், நேருவின் உரைகள் மற்றும் நூல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளும்தான் இந்நூலில் உள்ளன. உணர்ச்சிகரமாக ஏதுமில்லை.

கொந்தளிப்பு உச்சத்திலிருந்த ஒரு உள்நாட்டுச்சூழலில், பலமுனை நெருக்கடிகள் கொண்ட அயல்நாட்டுச் சூழலில், நேரு இந்தியாவை தலைமைதாங்கி நடத்தினார். தேசப்பிரிவினை உருவாக்கிய உளக்கசப்புகள், மொழிவழிமாகாணப் பிரிவினை உருவாக்கிய பிளவுகள், வங்கத்திலும் பிகாரிலும் உருவான பஞ்சங்கள் என நேரு சந்தித்தவை மிகப்பெரிய சவால்கள்.

ஆனால் சீராக ஒரு தேசத்தின் அடிப்படைகளை கட்டி எழுப்பினார். உலகிலேயே முற்போக்கானது என்று சொல்லத்தக்க அரசியல்சாசனம் ஒன்றை இந்தியாவுக்கு உருவாக்கி அளித்தார். அதிலிருந்த ஆணைகளுக்கு எதிராக நிகழ்ந்த போராட்டங்களை வன்முறை இல்லாமலேயே அணைத்தார். அதில் அத்தனை மக்களுக்கும் இணையான உரிமையும், சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் சலுகைகளும் அளிக்கச்செய்தார்.

நேருவின் சமகாலத்தில் புதியதாக அமைந்த நாடுகளிலெல்லாம் பெருகிய ரத்தவெள்ளத்துடன் இந்தியாவை ஒப்பிடவேண்டும். இந்தியாவில் அங்கிருந்தவற்றைவிட பெரிய அவநம்பிக்கைகள், பிளவுகள், கொந்தளிப்புகள் இருந்தன. கலவரங்களும் அரசுநடவடிக்கைகளும் இருந்தாலும் மாபெரும் ரத்தப்பெருக்கு இங்கே நிகழவில்லை. அதற்குக் காரணம் நேரு. இடதுசாரிகளும் வலதுசாரிகளும் அடிப்படையில் அவர்மேல் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவருடைய நேர்மை மற்றும் ஜனநாயகத்தன்மைமேல். அவரால்  எவ்வகையிலோ அவர்கள் அனைவரையும் பேச்சுவார்த்தைக்கும் சமரசத்திற்கும் கொண்டுவர முடிந்தது.

காந்தி கொலைக்கு அடித்தளமிட்ட வலதுசாரிகளும் அவருடன் பேச முன்வந்தனர், அவர் அவர்களுக்கும் ஜனநாயக உரிமையை அளித்தார். இந்தியாவின் அடித்தளத்தையே அழித்து புரட்சியைக் கொண்டுவர முயன்ற இடதுசாரிகளுக்கும் அதே நம்பிக்கை அவர்மேல் இருந்தமையால்தான் இங்கே ஆயுதப்புரட்சி கைவிடப்பட்டது, ஜனநாயக வழி தெரிவுசெய்யப்பட்டது. இடது வலது தரப்புகளின் பெருந்தலைவர்கள் நேரு மேல் பெருமதிப்பை பதிவுசெய்திருக்கிறார்கள்.

அணைக்கட்டுக்கள், அடிப்படைக்கட்டுமானங்கள் வழியாக தேசத்தின் பொருளியல் அடித்தளத்தை நிறுவினார். ஜனநாயக அமைப்புக்களை நிறுவி, அவற்றை சுதந்திரமாகச் செயல்படச்செய்து, அவற்றிற்கு தானே முன்னுதாரணமாக அமைந்து இன்று இந்தியா என எதையெல்லாம் பெருமிதமாகச் சொல்லமுடியுமோ அனைத்தையும் உருவாக்கினார். அனைத்துக்கும் மேலாக ஆசியாவின் முகமாக இந்தியாவை அறியப்படச்செய்தார்.

இந்த நூல் அளிக்கும் குறிப்புகளிலேயே நேருவின் தெளிவு பிரமிக்கச் செய்கிறது. பொருளியல் குறித்த ஒரு கடிதத்தில் கம்யூனிசம் நிலவும் நாடுகளில் சர்வாதிகார ஆட்சி வழியாக உருவாக்கப்படும் பொருளியல் மாற்றத்தை இந்தியாவில் கொண்டுவருவது எளிதல்ல என அவர் உணர்ந்திருப்பதாக சொல்கிறார். ஆனால் இலட்சியவாதம் மூலம் உருவாகும் ஒருங்கிணைவால் அதை சாதிக்கலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். ஏறத்தாழ அவர் அதை சாதித்தார் என்பது வரலாறு. அதற்குச் சான்றாக நம் மாபெரும் பாசனக்கட்டுமானங்களும் பொதுத்துறையும் நிலைகொள்கின்றன

ஆசியநாடுகளின் ஒருமைப்பாட்டை பற்றிப் பேசும்போது ஒரே உலகம் என்னும் கருதுகோளைநோக்கி ஐநா சபை நகர்வதை ஊக்குவிக்கும்பொருட்டே அந்த ஒருமைப்பாடு அமையவேண்டும், தனியான ஒரு குழுவாக நாடுகள் மாறலாகாது என்று சொல்கிறார். “நாம் விரும்புவது குறுகிய தேசிய உணர்வு அல்ல. ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய உணர்வு தேவைதான், ஆனால் அது உலக ஒற்றுமைக்கு எதிரானதாக அமையலாகாது” என்கிறார்.

இந்நூலில் அளிக்கப்பட்டிருக்கும் நேருவின் குறிப்புகள் மட்டுமே அவர் எவரென்று காட்டப்போதுமானவை. இந்தியா இந்தியதேசியத்திற்கு மட்டுமல்ல உலக ஜனநாயகத்திற்கும் அளித்த பெருங்கொடை என நேருவை எவரும் சொல்லமுடியும். இந்தியாவின் உருவாக்கத்திலிருக்கும் அத்தனை முற்போக்கான அம்சங்களையும் நேரு பிரதிபலிக்கிறார். இந்தியதேசியக் கட்டமைப்பில் இஸ்லாமியருக்கு இருக்கும் குறைவான இடம்குறித்த அவருடைய கவலையில் அவர் சையத் அகமது கானின் குரலை எதிரொலிக்கிறார். பெண்ணுரிமையைப் பேசும்போது ராம்மோகன் ராயை.

ஐரோப்பாவின் வளமான ஜனநாயக- பண்பாட்டு விழுமியங்களை இந்தியா ஏற்றுக்கொண்டு முன்னகரவேண்டும் என்னும் கனவு கொண்டிருந்தார் நேரு. அவர் உருவாக்கிய கலாச்சார, கல்விநிறுவனங்களின் பொதுவான கொள்கை அதுவாகவே இருந்தது. இந்தியாவின் சீர்திருத்தவாதிகள் அனைவரின் குரலையும் நாம் நேருவின் குறிப்புகளில் வாசிக்க முடிகிறது.

அத்தனை கொள்கைமுரண்பாடுகளையும் ஜனநாயக விழுமியங்களைக் கொண்டே நேரு எதிர்கொண்டார். அத்தனை முரண்பட்ட ஆளுமைகளுடனும் நல்லுறவிலும் இருந்தார். அவர்காலத்தைய கொள்கைத்தரப்புகளைச் சேர்ந்தவர்களை குகா தொடர்ந்து முன்வைக்கிறார். மாதவ சதாசிவ கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர். அவ்வமைப்பின் கொள்கைகளை எழுதி நிலைநாட்டியவர். அதை நாடெங்கிலும் வளர்த்தவர்.

காந்தியின் கொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மறைமுகப் பங்குண்டு. அதை அவர்கள் மைய அரசில் அதிகாரத்துக்கு வரும்வரை மறைத்துவாதாடி இன்று ஓரளவு ஏற்கத்தொடங்கியிருக்கின்றனர். ஆனால் அன்றைய சூழலில் ஆர்.எஸ்.எஸ் மீது நாடெங்கும் உச்சகட்ட கசப்பு நிலவியது. அதை பயன்படுத்தி அவ்வமைப்பை நசுக்க நேரு முயலவில்லை.நீதியை அடைய அவர்களுக்குரிய வாய்ப்பை வழங்க அவருடைய ஜனநாயகப்பற்று இடமளித்தது. இந்தியாவின் சிற்பிகளில் ஒருவராக கோல்வால்கரை குகா குறிப்பிடுகிறார்.

மாதவ சதாசிவ கோல்வால்கர்

இந்நூலில் எடுத்தளிக்கப்பட்டிருக்கும் கோல்வால்கரின் வரிகள் இன்று மைய அரசியல்களத்தில் பேசுபொருளாகிவிட்டிருக்கின்றன. நேரு முன்னின்றுநடத்திய இந்திய ஜனநாயகம் சிறுபான்மையினரை தாஜா செய்யும்போக்கு கொண்டிருக்கிறது என்பதே முதன்மைக் குற்றச்சாட்டு.”இது இந்து ராஜ்யம் என்பதை நாம் தொடக்கம் முதலே அறிந்திருக்கிறோம். ஆனால் இப்போது அதை மதவுணர்வு குறுகிய உணர்வு என்றெல்லாம் சொல்லி மறக்க முயற்சிக்கிறோம்.இதன் காரணமாகத்தான் இன்று இத்தனை இன்னல்களை அனுபவிக்கிறோம்” என்று கோல்வால்கர் இந்நூலில் உள்ள உரை ஒன்றில் சொல்கிறார். ஒரு எதிர்காலக் கனவு கோல்வால்கரால் முன்வைக்கப்படுகிறது, ஆனால் அது பிளவுபடுத்தும் அரசியலின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சோஷலிஸ்டு இயக்கத்தை மிதவாத இடதுசாரி இயக்கம் என்று சொல்லலாம். கம்யூனிஸ்டுகளை இந்தியச்சிற்பிகள் என்னும் பட்டியலில் இருந்து விலக்கும் குகா மூன்று சோஷலிஸ்டுகளை சேர்த்துக்கொள்கிறார். அவர்களின் சிந்தனை என்பது முழுக்கமுழுக்க ஒரு இந்திய உருவாக்கம் என்பதே காரணம். இந்தியாவில் அரசியல் பிறந்ததுமே ஜனநாயக வேட்கை கொண்டிருந்தது. இந்திய மக்களும் ஜனநாயகத்தை இயல்பாக ஏற்றுக்கொண்டார்கள். இந்தியாவின் தலைவர்களிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பொதுவாக அனைவருமே ஜனநாயகத்தை ஏற்றவர்களே. ஈ.வே.ராவும் கோல்வால்கரும் அம்பேத்கரும் சந்திக்கும் புள்ளி ஜனநாயகம் என்பதுதான்.

ஆகவே இங்கே இடதுசாரிகளிலும் ஜனநாயகத்துக்கான குரலே ஓங்கியிருந்தது. இந்தியக் கம்யூனிஸ்டுகளும் மிகச்சில ஆண்டுகளிலேயே ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டார்கள். லோகியா ஐரோப்பாவில் கற்றவர். அங்கிருந்து சோஷலிசக் கருத்துக்களை பெற்றுக்கொண்டார். காந்திக்கு அணுக்கமானவராகவும், காங்கிரஸ் செயல்பாட்டாளராகவும் இருந்த லோகியா பின்னர் நேருவுடன் முரண்பட்டு சோஷலிஸ கட்சியை நிறுவி எதிர்கட்சியாகச் செயல்பட்டார்.

ராம் மனோகர் லோகியா

லோகியா முன்வைக்கும் சோஷலிசம் என்பதை ஜனநாயகத்தை உள்ளடக்கிய மார்க்சிய அணுகுமுறை எனலாம். மார்க்சியத்தின் மையப்படுத்தப்பட்ட அதிகாரம், கட்சியின் ஆதிக்கம், வன்முறை ஆகியவற்றை லோகியா ஏற்கவில்லை. ஆனால் முதலாளித்துவத்தை ஒழிக்கவேண்டும் என்னும் கருத்தும் கொண்டிருந்தார்.

லோகியாவின் அரசியலை ஒருவகை இலட்சியவாதம் என்றே சொல்லவேண்டும்.அவருடைய செயல்பாடு பெரும்பாலும் பாராளுமன்றப் பேச்சு வடிவிலேயே இருந்தது. ஓர் உதாரணம், இந்நூலில் இருந்தே சொல்லத்தக்கது. லோகியா சாதியொழிப்பைப் பற்றிப் பேசும்போது “உயர்சாதி இளைஞர்கள் இனியாவது விழித்தெழவேண்டும்.இந்த இளைஞர்கள் தாழ்ந்த சாதிக்காரர்கள் முழு மேம்பாடு அடையும்பொருட்டு தங்களையே தியாகம் செய்ய தயாராக இருக்கவேண்டும்” என்கிறார்

சாதியொழிப்புக்கு அவர் சொல்லும் திட்டம் இதுதான். ஊதியம், சமூக அந்தஸ்து ஆகிய அனைத்திலும் தாழ்ந்த சாதியினரை மேலே கொண்டுவருவது. அதற்காக உயர்சாதியினர் தங்கள் நலன்களை முழுமையாக விட்டுக்கொடுப்பது. இப்படி தாழ்ந்த சாதியினர் மேலே வந்தால் ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் உயர்சாதியினருக்கும் நன்மை உண்டு. மாறாக நடந்தால் பெரும்பான்மையினராகிய தாழ்ந்த சாதியினர் வன்முறையால் உயர்சாதியினரை ஒழிக்கக்கூடும். அனைவரும் மேம்பட்டால் தாழ்ந்த சாதியினர் நிர்வாக அதிகாரத்தையும் உயர்சாதியினர் அறிவார்ந்த அதிகாரத்தையும் அடையமுடியும் என்கிறார் லோகியா

லோகியாவின் கருத்துக்கள் கொஞ்சம் விசித்திரமானவை, ஆனால் ஒருவகை நடைமுறைத்தன்மை கொண்டவை. லோகியா இந்தியா வேகமாக ஆங்கிலமயமாக்கப்படுவதைக் கண்டார். ஆங்கிலம் பொதுமொழியாக ஆனால் இந்தியாவின் உயர்மட்டமே அதனால் ஆதிக்கம்பெறும், எளியமக்களுக்கு ஆங்கிலம் அன்னியமாகவே இருக்கும் என்று கருதினார். ஆகவே ஆட்சிமொழி உட்பட அனைத்திலும் ஆங்கிலம் தவிர்க்கப்படவேண்டும் என்றும், தாய்மொழியே எளியமனிதர்களின் அதிகாரம் என்றும் வாதிட்டார்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

குகா இன்னொரு சோஷலிஸான ஜெயப்பிரகாஷ் நாராயணனை இந்தியச் சிற்பிகளில் ஒருவராக முன்வைக்கிறார். இந்திய சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். இந்திய ஜனநாயகம் ஆபத்திலிருந்த நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் களத்திலிறங்கி அதை மீட்டவர் என்பதனாலேயே வரலாற்றில் தவிர்க்கமுடியாத இடம்கொண்டவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.

ஆனால் போராட்டங்கள் வழியாக அவரை நினைவுகூரலாகாது என்று குகா கருதுகிறார். இருபதாண்டுகள் பூதான் இயக்கம் போன்றவற்றில் ஈடுபட்டு கிராமப்புறங்களில் சேவைசெய்தவர். அதனூடாக இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்குவதில் பங்கெடுத்தவர் என்பதே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பங்களிப்பு என்கிறார்

ஆனால் பூதான் இயக்க நிறுவனர் வினோபா இந்நூலில் சொல்லப்படவில்லை. இது குகாவின் ஒரு பார்வை என்றே கொள்ளவேண்டும். வினோபா மரபான காந்திய சிந்தனைகளை முன்வைத்தவர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் நவீன இந்தியாவைப்பற்றிய அசலான சிந்தனைகளை முன்வைத்தவர். இந்த வேறுபாட்டை குகா கருத்தில்கொண்டிருக்கலாம்.

இக்கட்டுரைகளில் இருவகையான பார்வைகளை ஜெயப்பிரகாஷ் நாராயணன் வெளிப்படுத்தியதை காணமுடிகிறது. ஒன்று அதிகாரப்பரவலாக்கம், அரசு கூடுமானவரை அதிகாரங்களை வட்டார அளவில் பகிர்ந்தளிப்பது. இன்னொன்று சமரசநோக்கம் கொண்ட வெளியுறவு. இரண்டுமே அதிகாரக்குறைப்பை வலியுறுத்துபவை

ராஜாஜி

லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகிய இருவருக்கும் நேர் எதிர்த்தரப்பாக இருந்தவர் ராஜகோபாலாச்சாரி. ராஜாஜி அன்றைய சூழலில் வெறுக்கப்பட்ட ஒரு அரசியல்- பொருளியல் கொள்கையை நம்பியவர். அன்று கம்யூனிஸ்டுகள், மென்மையான கம்யூனிஸ்டுகளான சோஷலிஸ்டுகள், சோஷலிசத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் என இந்தியாவின் எல்லா அரசியல் தரப்புமே இடதுசாரிப்பார்வை கொண்டவை. ராஜாஜி பொருளியலில் வலதுசாரிப்பார்வை கொண்டவர். தனியார்மயம், பெருமுதலீடு, மையப்பொருளியல் ஆகியவற்றை ஆதரித்தவர்.

இந்நூலில் ஒரு செய்தி பலருக்கும் வியப்பளிக்கலாம். ராஜாஜி 1959ல் ,அவருடைய எண்பதாவது வயதில், தொடங்கிய சுதந்திரா கட்சி ஒரு மாநிலக்கட்சியோ சிறிய அமைப்போ அல்ல. அது கூட்டணிகளில் இடம்பெற்று பல மாநிலங்களில் ஆட்சியமைத்திருந்தது. 1960 பொதுத்தேர்தலில் அது 22 பாராளுமன்ற இடங்களை பெற்றது. 1967ல் 44 பாராளுமன்ற இடங்களைப் பெற்றது. நேருவின் ஆதிக்கம் உச்சத்திலிருந்த நாட்களில் இது மிகப்பெரிய வெற்றிதான். 1971ல்தான் அது செல்வாக்கிழந்தது. வெறும் ஏழு இடங்களே கிடைத்தன. பின்னர் அது கலைக்கப்பட்டது

ராஜாஜியை ஒருவகையில் காலத்திற்கு சற்று முந்திய சிந்தனையாளர் என குகா முன்வைக்கிறார். ராஜாஜி அன்றிருந்த நன்னம்பிக்கை- இலட்சியவாதம் இல்லாத யதார்த்தவாதி. பலவிஷயங்களை முன்னுணர்ந்தவர். வெள்ளையனே வெளியேறு இயக்கம் இஸ்லாமியரை அன்னியப்படுத்தும் என்றும், தனிநாடு உருவாகும் என்றும் அவர் முன்னுணர்ந்து சொன்னார். இந்தியாவின் சோஷலிசக் கனவு அதிகாரிவர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்கும் ‘லைசன்ஸ் ராஜ்’ அமைப்பையே உருவாக்கும் என்று சொன்னார். அவையெல்லாமே நிகழ்ந்தன.

இந்நூலிலுள்ள கட்டுரைகளில் ராஜாஜி அதிகாரப் பரவலாக்கம் பற்றி பேசுகிறார். நாடெங்கிலுமுள்ள அரசுஅதிகாரிகள் ஒரு பொதுவான ஆட்சிக்குழுவால் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றும், உள்ளூர்செல்வாக்குக்கு அப்பால் அவர்கள் செயல்படவேண்டும் என்றும் சொல்கிறார். அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட மதம், சாதி ஆகியவற்றைச் சார்ந்தவர்களாக அமையாமல் அத்தனை சாதியினரும் பங்கேற்கும்படி அந்த அமைப்பை நடத்தவேண்டும் என்கிறார்.

அதாவது, தெளிவாகவே இந்திய ஆட்சியதிகாரத்திலிருக்கும் உயர்சாதி ஆதிக்கம் களையப்படவேண்டும் என்கிறார். 1957ல் இந்தியாவின் நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படுவதற்கு முன்னரே சொல்லப்பட்ட இக்கருத்து மிகமுன்னோடியான ஒன்று. ராஜாஜி பழங்குடிகள், தலித்துக்கள் மற்றும் பிற்பட்டோருக்கான சிறப்புச்சலுகைகளுக்காக மிக தீவிரமாக குரலெழுப்பியிருக்கிறார். தாராளவாதப் பொருளியலில் அவர் விதிவிலக்காகச் காட்டுவது அரசு எடுக்கவேண்டிய இந்நடவடிக்கைகளைத்தான்.ராஜாஜி பற்றி இங்கே திராவிட இயக்கம் உருவாக்கியிருக்கும் சித்திரத்திற்கும் அவருடைய இக்கருத்துகளுக்கும் சம்பந்தமே இல்லை.

பொருளியல் தாராளமயமாக்கல் பற்றிய ராஜாஜியின் கருத்துக்களை படிக்கையில் அரைநூற்றாண்டு கடந்து காங்கிரஸ் அவர் சொன்னவற்றை சொல்லுக்குச் சொல் அப்படியே கடைப்பிடிக்க ஆரம்பித்தது என்று சொல்லத் தோன்றுகிறது. தனியார்துறையை வலுப்படுத்துவது, அவர்கள் மூலதனம் திரட்டிச்செயல்பட தடையற்ற சூழலை உருவாக்குவது, அவர்கள் லாபமடைய அனுமதிப்பது, அன்னியமுதலீடுகளை ஈர்ப்பது, எல்லா துறைகளிலும் போட்டியை உருவாக்குவது என அவர் ஒரு நவீன வலதுசாரிப்பொருளியலை தீர்க்கமாக முன்வைக்கிறார்.

ராஜாஜியின் இக்குறிப்புகளில் பலவரிகள் அனுபவம் வழியாக இந்தியா இன்று கண்டறிந்துவிட்டவை. ராஜாஜி பெருந்திட்டங்களில் அரசு முதலீடுகள் குவியக்கூடாது என்கிறார். சிறிய செயலூக்கம்கொண்ட ஏராளமான திட்டங்கள் தேவை என்கிறார். பாசனக்கட்டமைப்புக்களைக்கூட மாபெரும் திட்டங்களாக வகுக்கக்கூடாது என்கிறார்.உற்பத்தியே மாபெரும் திட்டங்களின் வழியாக அன்றி, நாடெங்கும் பரவியிருக்கும் பல்லாயிரம் சிறுதொழில்முனைவோர் வழியாக நிகழவேண்டும், அவர்களுக்கு எவ்வகை தடையும் அரசில் இருக்கலாகாது என்கிறார்

ராஜாஜி மொழிவழி மாநிலப்பிரிவினையை எதிர்த்தார், அது நீண்டகால பிரிவினை போக்குகளை உருவாக்குமென நினைத்தார். ஆனால் இணைப்புமொழியாகவும் ஆட்சிமொழியாகவும் ஆங்கிலமே இருக்கவேண்டுமென்றும், எதிர்காலத்தின் மொழி ஆங்கிலமே என்றும் கருதினார்.”இந்தியாவை ஆக்ரமித்த வெளிநாட்டினரின் மொழிதான் ஆங்கிலம் என்பது சரியே. ஆனால் அது நம் நாட்டில் வேரூன்றி தழைத்து வளர்ந்திருக்கிறது. அதன் ரகசியம் இதுதான். நம்மைப்பொறுத்தவரை ஆங்கிலம்தான் நமது முன்னேற்றத்திற்கும் அறிவு வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறது” என்று அவர் சொன்னார். இதுவும் ராஜாஜி பற்றி தமிழகத்தில் உருவாக்கப்பட்ட சித்திரத்திற்கு நேர் எதிரானது.

வெரியர் எல்வின்

குகா மேலும் இருவரை சுட்டிக்காட்டுகிறார். ஒருவர் வெரியர் எல்வின். இந்தியப்பழங்குடியினரை ஆராய்ச்சி செய்யவந்தவர். இந்தியப் பழங்குடிக்கொள்கையை வடிவமைப்பவராக ஆனார். இந்தியாவுக்கு ஒரு பார்வையாளராக வந்த எல்வின் இங்கேயே தங்கிவிட்டார். காந்தியிடமிருந்து ஆதர்சத்தைப் பெற்றுக்கொண்டார். பழங்குடிகளை கிறிஸ்தவராக மாற்ற அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதனால் கிறிஸ்தவ மதத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பழங்குடிகளை இன்னொருவராக ஆக்குவதை எல்லாவகையிலும் அவர் எதிர்த்தார், அதுவே அடிப்படையில் எல்வின் கொள்கை

இந்தியாவை ஒட்டுமொத்தமாக கருத்தில்கொண்ட காந்தி பழங்குடிகளை மறந்தேவிட்டார் என்று குகா சொல்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் தலைவராக உருவாகி வந்த அம்பேத்கர் பழங்குடிகளை தன் மக்கள் என கருதவில்லை. அரசியல் சாசன வரைவில் அவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோதும் அவ்வொதுக்கீட்டை அடைய அவர்கள் தகுதிபெறவில்லை என்று சொல்லி எதிர்த்தார். அச்சூழலில் வெரியர் எல்வின் அம்மக்களின் குரலாகவே ஒலித்தார்

இத்தொகுதியில் உள்ள ஒரு கட்டுரையின் தலைப்பே வெரியர் எல்வினின் பழங்குடிக்கொள்கையை அறிவிக்கிறது. ‘உள்ளிழுத்தலும் அல்ல, ஒதுக்குதலும் அல்ல’ பழங்குடிகளை வாழவிடுதலே அவர்களுக்கு நலம் பயப்பது. ஒரு குறிப்பில் பழங்குடிகளின் வாழ்விலுள்ள கொண்டாட்டங்களை இல்லாமலாக்கிவிட்டால் அவர்கள் அழிந்துவிடுவார்கள் என்கிறார் எல்வின். ‘நாகரீக’ மக்களின் கடும் உழைப்பு, சேமிப்பு, கல்வி ஆகியவை அவர்களுக்குச் சுமைகள் என்கிறார்

ஹமீத் தல்வாய்

மகாராஷ்டிர மாநிலத்தவரான ஹமீத் தல்வாய் பற்றிய இறுதிக்கட்டுரை இந்நூலை புரிந்துகொள்ள முக்கியமானது. ஹமீது தல்வாய் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிற இரு இஸ்லாமியர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டவர். சையத் அகமது கான், முகமது அலி ஜின்னா இருவருமே மதத்தை ஓர் அரசியல்கருவியாக கருதியவர்கள். இஸ்லாமியர்களை அவர்களின் மதம்வழியாக அணுகியவர்கள். ஹமீத் தல்வாய் நேர்மாறாக இஸ்லாம் மட்டுமல்ல எந்த மதமும் அதன் உறுப்பினர்களின் தனிப்பட்ட நம்பிக்கையாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும், அதை ஒருபோதும் பொதுவெளிக்கோ அரசியலுக்கோ கொண்டுவரக்கூடாது என்றும் வலியுறுத்தியவர்.

ஒருவகையில் மதச்சார்பற்ற முஸ்லீம் என்னும் கருதுகோளின் ஆசிரியர் என தல்வாயைச் சொல்லலாம். அவர் குர்ஆனின் புனிதத்தை ஏற்றுக்கொண்டவர் அல்ல. இஸ்லாமிய மதக்கருத்துக்களுக்கு சமூகவியலில், அரசியலில் எந்த இடமும் இல்லை என எண்ணியவர். அதே அளவுகோலை எல்லா மதங்களுக்கும் முன்வைத்தவர். “இந்துக்களையும் நாட்டையும் புதிய மாறுபட்ட பாதையில் அழைத்துச்செல்ல விரும்பும் இந்துக்கள் முஸ்லீம் மதவாதிகளை ஆதரிப்பது வருந்தத்தக்கது” என்று ஹமீத் தல்வாய் [காந்தியைப்பற்றி?] குறிப்பிடுகிறார்

தல்வாய் முன்வைக்கும் அந்த நவீனக்கல்வி பெற்ற, மத அடையாளத்தை பொதுவெளிக்கு கொண்டுவராத, தனிமனிதனாகவே அறவுணர்வும் அரசியலுணர்வும் கொண்ட இஸ்லாமியர் சிலர் சென்ற தலைமுறையில் இருந்தனர். இத்தலைமுறையில் உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாதமும், அது உருவாக்கும் நெருக்கடிகளும் அந்த அடையாளம் கொண்டவர்களை மிகமிக அரிதாக ஆக்கிவிட்டன. மறுபக்கம் இந்துக்களும் விரைவாக அடிப்படைவாதம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இச்சூழலில் நவஇந்தியாவை உருவாக்கியவர்களில் ஒருவராக தல்வாயை கூறும் குகாவின் நூல் ஒரு கவலையை, அச்சத்தையே முன்வைக்கிறது

ஒரு பரந்தநோக்கில் இருநூறாண்டுகளில் இந்தியா முரண்பாடுகள் வழியாக, நம்பிக்கைகள் வழியாக, இலட்சியவாதம் வழியாக உருவாகி வந்த வரலாற்றுப்பெருக்கை காட்டும் நூல் இது. வரலாறு இருவகை. நிகழ்வுகளாலான வரலாறு புறவயமானது. இது சிந்தனைகளின் வரலாறு, ஆகவே அகவயமானது. நாம் இந்தக்கோணத்தில் இந்திய வரலாற்றை எண்ணியிருக்கமாட்டோம். அவ்வகையில் மிக முக்கியமான ஒரு நூல் இது

ஒரு வரலாற்று நாயகன் காந்தியும் லோகியாவும் ராமச்சந்திர குகா குகா-இந்திரா காந்தியும் மேற்கும் -ராமச்சந்திர குகா மபொசி,காமராஜ், ராஜாஜி.. காந்தியின் கையில் இருந்து நழுவிய தேசம்- இந்திய வரலாறு-காந்திக்கு பிறகு பகுதி ஒன்று- ராமச்சந்திர குகா

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 10:35

நற்றுணை கலந்துரையாடல்

அன்புள்ள ஜெ,

சென்னை வெண்முரசு கலந்துரையாடல் ஐந்து ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அது வெண்முரசு என்னும் ஒரு தனிப்பட்ட நாவலுக்காக மட்டுமே நிகழ்ந்து வருவது. ஆகையால் அதில் பத்மவியுகம், அதர்வம்,  களம் போன்ற உங்களின் மகாபாரத சிறுகதைகளைக் கூட விவாதிப்பதில்லை.

ஆகவே, வெண்முரசு சாராத பிற படைப்புகளுக்காக இன்னொரு கலந்துரையாடல் அமர்வை  இந்த ஆண்டு முதல் முன்னெடுக்கிறோம். உங்களது தனிமைக்கால கதைகளில் ஒன்றான “நற்றுணை” சிறுகதையின் தலைப்பையே இந்த கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு எழுத்தாளர் ரமேஷ் சுப்ரமணியம் ஒரு லோகோ உருவாக்கித் தந்துள்ளார். இனி மாதந்தோறும் வெண்முரசு கலந்துரையாடல் மற்றும் நற்றுணை கலந்துரையாடல் என இரு உரையாடல்கள் நிகழும்.

அனைத்திற்கும் வாசக நண்பர்களின் ஆர்வம் மட்டுமே முக்கிய காரணம். தனிமைக் காலத்தில்  சென்னை வெண்முரசு கலந்துரையாடல் இணையவழியாக நிகழத் துவங்கியது. தமிழகத்தின் உட் பகுதிகள் முதல் உலகின் பிற நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் வரை பல புதிய வாசகர்கள் இணைந்தனர்.  அவர்களின் ஆர்வமும் இதை முன்னெடுக்க ஒரு முக்கியக் காரணம். ஆகவே இனி வரும் அமர்வுகளும் இணைய வழியாகவே நிகழ வாய்ப்புகள் அதிகம்.

‘நற்றுணை’ கலந்துரையாடலின் முதல் அமர்வு வரும் ஜனவரி 26 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவல் குறித்து நண்பரும் இலக்கிய விமர்சகருமான முத்துகுமார் பேசுவார்.

இது வழக்கம் போலவே ஒரு  கலத்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்

நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -1

நாவல்பின் தொடரும் நிழலின் குரல்

நாள் 26-01-21

நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137

(லா.ஓ.சி. சந்தோஷ்  )

நாவல் குறித்து உரையாடுபவர்:- முத்துகுமார்

(நண்பர் முத்துகுமார், கலை இலக்கியம் தத்துவம் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். அவரது சிறுகதைகள் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.   அவரது வலைதள முகவரி:-https://muthusitharal.com/)

நன்றி

R.காளிப்ரஸாத்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 10:33

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்

எண்ணும்பொழுது கதைக்கு வெளியே விரியும் ஒரு தலைப்பு. கதையில் அவனுடைய பிரச்சினை எண்ணி எண்ணிப்பார்ப்பதுதான். அவள் எண்ணாமலிருக்க முயல்கிறாள். அதை தவிர்க்க முயல்கிறாள். அவனால் அது முடியாது. எண்ணி எண்ணி வெங்காயம் போல எல்லாவற்றையும் உரித்து சூனியத்தை கண்டுகொண்ட பின்னர்தான் அவனுக்கு தீ ஆறும். அதைத்தான் அவள் சொல்கிறாள். எதற்கு இப்படி என்ணிக் கணக்கிடுகிறான் என்று கேட்கிறான். அவன் சிந்திக்கத்தெரிந்த பேதை. அவள் வாழ்க்கையைப் பற்றிய நுட்பத்தை உள்ளுணர்வாலேயே அறிந்த புத்திசாலி. அவர்களுக்கிடையே நடக்கும் உரையாடலும் இப்படித்தான்

ஆனால் கதையில் தவிர்த்துக்கொண்டே செல்லும் அவள் ஒரு கேள்வி கேட்கிறாள். யார் முதலில் எண்ண ஆரம்பித்தது என்று. அங்கே அவளும் சிக்கிவிடுகிறாள். அவளும் என்ண ஆரம்பித்துவிட்டாள். அவன் அவளையும் எண்ண வைத்துவிட்டான். அவள் தவிர்த்துக்கொண்டே இருந்ததில் அவளும் விழுந்துவிட்டாள். எண்ணி எண்ணி குறைப்பார்கள். எண்ணி எண்ணி கூட்டிக்கொள்வார்கள். அதுதான் இந்த முடியாத மாபெரும் நாடகம்

 

அர்விந்த்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

எண்ணும்பொழுது அருமையான சிறுகதை. நீண்ட நாள் நினைவில் நிற்கும். .

ஆனால், என்னுடைய வாசிப்பு இப்போதைக்கு தலைப்பிலேயே நிற்கிறது. நாம் அன்றாட கொடுக்கல் வாங்கல்களோடு நிற்காமல் உணர்வு உறவுகளையும் எண்ணி அளக்கிறோமா? மனித இனத்தை மற்ற விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது, நமக்கு எண்ணத் தெரியும், சிரிக்கத் தெரியும் என்பதுதான் என்பார்கள். இந்த பரிணாம வளர்ச்கியால் பீடிக்கப்பட்டு எல்லாவற்றையும் எண்ணுகிறோமோ?

மார்க்கெடிங் துறை வல்லுனர் ஒருவர், நுகர்வோர் பொருட்களையும் சேவைகளையும் கணக்குப்போல் எண்ணி எண்ணி வாங்குகிறார்களா அல்லது உணர்ச்சியால் எண்ணாமல் வாங்குகிறார்களா என்ற கேள்வியை எடுக்கிறார். மார்க்கெடிங் துறையில் இருப்பவர்கள் எண்ணிக்கைக்கு அப்பால் (beyond numbers) என்று அடிக்கடி சொல்கிறார்களே அப்படி எண்ண முடியாதது இருக்கிறதா என்ற கேள்விக்கு அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ (The Little Prince) நெடுங்கதையிலிருந்து ஒரு பத்தியை பதிலாக சுட்டுகிறார்.

கதை ஒரு சிறுவனால் சொல்லப்படுகிறது. அவன் ஓத்த வயதுள்ள ஒரு சிறுவனை சந்திக்கிறான். வந்த சிறுவன் அருகாமையிலுள்ள ஒரு சிறுகோளின் இளவரசன். கதை தொடங்கும்போதே பூமியின் சிறுவன் தன் நண்பன் சிறுகோள் எண் பி- 612 லிருந்து வந்திருக்கிறான் என்று சொல்லிவிடுகிறான். மேலதிகமாக அந்த சிறுகோளைப்பற்றி பல தகவல்களையும் சொல்கிறான். இதோடு நிற்காமல், சிறுகோளின்  எண்ணையும் பௌதிக விவரங்களையும் ஏன் இவ்வாறு முன்வந்து சொல்கிறேன் என்று விளக்குகிறான்:

” நான் ஏன் உங்களுக்கு சிறுகோள் பி-612 பற்றி இவ்வளவு விவரங்களையும் சொல்லி அதன் அடையாள எண்ணையும் சொல்கிறேன் என்றால், அது பெரியவர்களால்தான். இந்த பெரியவர்களுக்கு எண்ணுவதில் அவ்வளவு ஆர்வம். உங்களுடைய புது நண்பனைப்பற்றி அவர்களிடம் சொன்னால், அவசியமான விஷயங்களைப்பற்றி கேள்வியே கேட்க மாட்டார்கள். ‘அவன் குரல் எப்படி இருக்கும்?  அவனுக்கு எந்த விளையாட்டு பிடிக்கும்? அவன் பட்டாம்பூச்சி பிடித்து சேர்ப்பானா?’ என்றெல்லாம் ஒருபோதும் கேட்க மாட்டார்கள். ‘அவன் வயது என்ன? அவனுக்கு அண்ணன் தம்பிகள் எத்தனை பேர்? அவன் எடை என்ன?’  என்றெல்லாம்தான் கேட்பார்கள். அப்படி கேட்டால்தான் அந்த பையனைப்பற்றி சரிவர தெரிய வந்தது என்று நினைப்பார்கள்.

‘நான் ஒர் அழகான வீட்டைப் பார்த்தேன்.   இளஞ்சிவப்பு கல்லால் கட்டியது.  ஜன்னல் அருகே ஜெரானியம் பூஞ்செடிகள் இருந்தன. மேல் கூரையில் புறாக்கள் இருந்தன’ என்று நீங்கள் பெரியவர்களுக்கு சொன்னால்  அவர்களால் அத்தகைய  வீட்டை  கற்பனை செய்து பார்க்க முடியாது. ‘ஓரு லட்சம் பவுண்ட் பெறுமானமுள்ள வீட்டைப் பார்த்தேன்’ என்றுதான் சொல்ல வேண்டும். உடனே அவர்கள், ‘ஓ, எவ்வளவு அழகு’ என்று குரல் கொடுப்பார்கள்.”

எண்ண எண்ண குறையும். எண்ணினால் துன்பம்தான். போம்பாளர் எண்ணாமல் இருந்திருக்கலாம்.

– வைகுண்டம்

மதுரை

எண்ணும் பொழுது வாசித்த போது ஏனோ அக்னி பிரவேசம் செய்த சீதையும் சரயுவில் மறைந்த ராமனும் நினைவுக்கு வந்தனர்.

நெல்சன்

எண்ணும்பொழுது- கடிதங்கள் 4 எண்ணும்பொழுது- கடிதங்கள் 3 எண்ணும்பொழுது- கடிதங்கள் 2 எண்ணும்பொழுது- கடிதங்கள் 1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 10:31

லலிதா என்ற யானை- கடிதங்கள்

லலிதா என்ற யானை

அன்புள்ள ஜெ

லலிதா என்னும் யானை குறிப்பு மிக அழகானது. வேறெங்கும் இச்செய்தியை காணமுடியவில்லை. இத்தகைய தீர்ப்புகளில் இருந்து ஒரு வாழ்க்கைக்கதையை- செய்தியை கண்டடையும் செய்தியாளர்கள் இங்கே இல்லை. உங்கள் நட்பு வட்டாரத்தில் இப்படிப்பட்ட வாசகர்கள் நிறைந்திருக்கிறார்கள். எல்லாம் எப்படியோ உங்கள் கண்களுக்கு வந்துவிடுகிறது. திரு வி.எஸ்.செந்தில்குமார் வழக்கறிஞர் என நினைக்கிறேன். மிகச் சிறப்பான நடையில் சுருக்கமாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துக்கள். சட்டத்துறையில் உள்ள வாழ்க்கைச்சிக்கல்கள் தத்துவக்கேள்விகள் பற்றி அவர் எழுதலாம்

அந்தத் தீர்ப்பில் இன்னும் சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. அந்த யானை புழங்கும் பக்கத்து தோட்டத்தை யானை இருக்கும் வரை வேறெவருக்கும் விற்கமாட்டேன் என ஓர் உறுதிமொழியை நீதிபதி பெற்றுக்கொள்கிறார். அந்த உறுதிமொழிக்குச் சட்டப்பெறுமதி உண்டா என்று தெரியவில்லை. ஆனால் அப்படி ஓர் உறுதிமொழி பெறப்பட்டதே மிக அருமையான ஒரு விஷயம்

மிகச்சிறப்பான கட்டுரை

என்.குமார்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம்

லலிதா என்னும் யானை பதிவையும் அது தொடர்பான மதுரை நீதிமன்ற தீர்ப்பையும் வாசித்தேன்.ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் உண்டு பண்ணும் தீர்ப்பு இது.

லலிதா குறித்த முழுப்பதிவையும், தமிழ் வாசிக்கத்தெரியாத ’யானை சிவா’ என்றழைக்கப்படும் என் மாணவன் ஒருவனுக்கு நேற்றிரவு வாசித்துக்காட்டினேன்.  அவன் மிக இளம் வயதிலிருந்தே யானைகளின் பேரிலான காதலில் இருப்பவன். விரும்பியபடியே கேரள வனத்துறையில் பணிபுரிகிறான்.

மனிதர்களுக்கும் யானைகளுக்குமான உறவு குறித்தும், மனித விலங்கு மோதல் குறித்தும் பல இடங்களில் முக்கியமான உரையாற்றுபவனும் கூட. கல்லூரியில் படிக்கையிலேயே நினைத்துக்கொண்டாற்போல் விடுப்பு எடுத்துக்கொண்டு யானை முகாம்களுக்கு செல்லுவதும், 10 ரூபாய் டிக்கெட் வாங்கிவிட்டு குருவாயூர் அருகே உள்ள யானைக்கொட்டடியில் நாளெல்லாம் யானைகளுடனேயே இருப்பதுமாக இருப்பான். சமீபத்தில் இறந்து போன டாப்ஸ்லிப்பின் கல்பனா என்னும் பெண் யானையுடன் அவனுக்கு பேரன்பு. இருவரும் அப்படி குலாவிக்கொண்டிருப்பார்கள். வாரா வாரம் போய் கல்பனாவை பார்ப்பதும் கொஞ்சுவதுமாக இருந்தான். சிவா கல்பனாவை கல்யாணமே செய்துகொள்ளப் போகிறான் என்றுகூட கேலிப்பேச்சுக்கள் அவன் வீட்டில் இருந்தது. எனக்கே அவன் ஸ்னேகா என்னும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளும் வரையிலும் அந்த சந்தேகம் இருந்தது.

லலிதா விவகாரத்தை போலவே சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் ஒரு சம்பவம்  நடந்ததாக சிவா நேற்று குறிப்பிட்டான்.

கேசவன் என்னும் குறும்புக்கார யானை, (குருவாயூர் கோவிலின் வலிய கேசவனல்ல, பிறிதொரு கேசவன்) அவன் குறும்பென்பது ஒருசில கொலைகளையும் உள்ளடக்கியது. கேசவனை திருச்சூர் பூரத்துக்கு அழைக்கவேண்டும் என ஒரு தரப்பும், வேண்டாம் குழப்பமாகும் என்று மறுதரப்புமாக சச்சரவாகி இறுதியில் அது வழக்கானது. வழக்கை விசாரித்த நீதிபதி கேசவனை நேரில் பார்த்தே முடிவு சொல்ல முடியுமென்கிறார்.

அவர் வந்திருக்கையில் வழக்கமாக ஒரு கோவிலில் பகவதி பூஜை முடிந்ததும் கேசவனுக்கு பிரசாதம் ஊட்டிவிடும் பூசாரி அன்றைக்கும் அதை செய்து கொண்டிருந்திருக்கிறார். பின்னர் கேசவன் பூசாரியை துதிக்கையில் தூக்கியும் அணைத்தும் கொஞ்சி விளையாடியதை பார்த்துக்கொண்டிருந்த அவர், அந்த பூசாரியும் உடனிருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன், கேசவன் விழாவில் கலந்துகொள்ள அனுமதி அளித்திருக்கிறார். விழாவில் பாகனை தட்டுவது உள்ளிட்ட சின்ன சின்ன பிரச்சனைகளை கேசவன் செய்தாலும் பூசாரி அருகிலிருந்ததால் பெரிய குழப்பமொன்றும் நடக்கவில்லை.

சிவா எப்போதும் பூரம் விழாவுக்கு செல்வான். சங்கிலிகள் யானைகளின் கால்களில் காயமேற்படுத்தி இருந்தால் கவனித்து பாகன்களுக்கு அதை தெரிவிப்பது, ஆபரணங்களால் அவற்றின் உடலில் புண்களிருப்பின் அதையும் சுட்டிக்காட்டி மருந்து போடச்சொல்லுவது என்று விழா முடியும் வரை அங்கேயே இருப்பான்.

இரவுகளில் காட்டில் ரோந்துப் பணியிலிருக்கையில் யானைகளைப் பார்த்தால் அகாலத்தில் அலைபேசியில் என்னை அழைத்து  அன்னை யானை இருளில்  குட்டிக்கு மாம்பழங்களை பறித்து ஊட்டிக்கொண்டிருந்ததையோ, மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானையைக்குறித்தோ, அஷ்டலக்ஷணங்களுடன் பிறந்த ஒரு யானைக்குட்டியொன்றின் அழகைக்குறித்தோ  விவரித்து  சொல்லிக்கொண்டிருப்பான். பல சமயங்களில் எனக்கு அவன் மீது பொறாமையாக இருக்கும். காடு கிரியை எனக்கு எப்போதும் அவன் நினைவூட்டுவான். வெண்முரசில் வரும் யானைகளைப்பற்றிய பதிவுகளை அவ்வப்போது அவனுக்கு சொல்லுவேன்.

படித்தது தாவரவியல் என்றாலும் அவன் பிடிவாதமாக யானைகளைக் குறித்தேதான் ஆய்வு செய்வேன்று பிடித்த பிடியில் நின்று, என் வழிகாட்டுதலில் ethnoveterinary பிரிவில்  யானைகளின் நோய்களுக்கும், உடலுபாதைகளுக்கும், உடற்காயங்களுக்கும், புண்களுக்கும் பாகன்களாலும் பழங்குடியினராலும் அளிக்கப்படும் தாவரமருந்துகளைக் குறித்து ஆய்வு செய்தான்.  அர்த்தசாஸ்திரம் அக்னிபுராணம், ஹஸ்த ஆயுர்வேதம், கஜசிகிக்‌ஷை, அஷ்டாங்க ஹ்ருதயத்திலிருந்தெல்லலாம் மேற்கோள்களும் குறிப்புகளும் எடுத்தாளப்பட்டிருக்கும் அவன் ஆய்வேடு எனக்கும் மிக விருப்பமானது.

யானைகள் குறித்த இப்படியான சர்ச்சைகளும் வழக்குகளும் நடந்தபடியேதான் இருக்கின்றன. கேரளாவில் இது அதிகம்.   இரண்டு வருடங்களுக்கு முன்பு கூட விதிகளின் படி ஆண்யானைகள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டிய தூத்தா பகவதி கோவில் பூரத்தில் வரிசையில் நிற்க ஒரு ஆண் யானை  குறைவாக இருந்ததால், அவசரத்துக்கு லக்கிடி என்னும் பெண்யானைக்கு பொய்த்தந்தங்களை பொருத்தி வேடமிட்டு கொண்டு வந்து நிறுத்தி அது கண்டுபிடிக்கப்பட்டு பெரிய சர்ச்சையானது.

இந்த தீர்ப்பும் அத்தனை சுவாரஸ்யமாக அத்தனை அன்புடன் அளிக்கப்பட்டிருக்கிரது.  நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல குழந்தைகளின் கஸ்டடியில் செய்யவேண்டியவற்றை குறிப்பிட்டிருபப்து மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

லலிதாவை நேரில் பார்த்து, அதற்கு உணவளித்து, அதன் அன்பை அருகாமையை, உணர்ந்து, அதன் உடலில் புண்களேதுமில்லையென்பதை,  அந்த பரந்த தென்னதோப்பு லலிதாவுக்கு செளகரியமானதென்பதை, லலிதா சங்கிலியில் பிணைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை,  சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் அது அருந்துகிறதென்பதை, அந்த வாழிடம் லலிதாவின் வாழ்நாளில் விற்கப்படாது என்பதை  இப்படி எத்தனை நுட்பமான, எத்தனை முக்கியமான விவரங்களை எல்லாம் உறுதி செய்தபின்னரே இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறாரென்பது பெரும் ஆச்சரயத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றது.

வெண்முரசு, வண்ணக்கடலில் குருகுலத்தில்  அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்குமான அந்த முக்கியமான போர் நடக்குமுன்பு யானைகளைப்பற்றிய பல முக்கிய தகவல்கள் சொல்லப்பட்டிருக்கும். துரோணர் அர்ஜுனனிடம் // “யானையை அறிவது மிக எளிது. ஏனென்றால் யானை மிக எளிதாக நம்மை அறிந்துகொள்கிறது.” // என்கிறார். லலிதாவும் திரு சுவாமிநாதனும் அப்படி பரஸ்பரம் அறிந்து கொண்டதினால் இந்த தீர்ப்பு வந்திருக்கலாம்

நன்றியும் அன்புமாக

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 10:31

ஊழிக்கூத்து- கடிதங்கள்

பாரதியின் ஊழிக்கூத்து

அன்புள்ள ஜெ

இன்றைக்கு தங்கள் தளத்தில் வெளியிட்டிருந்த இசையமைப்பாளர் ராஜன் அவர்களின் ஊழிக்கூத்து பற்றி என் எண்ணத்தை சொல்ல வேண்டும். அந்த பாடல் வெளிவந்த உடனே கேட்டிருந்தேன். அதை கேட்ட அன்று அது அத்தனை பெரிதாக அப்பாடல் என்னை கவர்ந்ததாக தெரியவில்லை. முதலில் ஏதோ ஒன்று என விட்டுவிட்டேன். மறுநாள் காலையில் கண் விழிக்கையில் அன்னை அன்னை ஆடும்கூத்தை நாடச்செய்தாய் என்னை என்ற ஈற்றுவரி மனதில் ஓடிகொண்டே இருந்தது. அப்போது தான் நானே உணர்ந்தேன் அப்பாடல் என்னை அத்தனை ஊடுருவியிருக்கிறது என்று. அதன்பின் இரண்டொரு முறை மீண்டும் கேட்டேன். என் உள்ளம் கவர்ந்த பாடல்களில் ஒன்றானது. அப்பாடலுக்கான பரதமும் பொருத்தமாக காட்சியை கண்முன் நிறுத்துகிறது.

இங்குள்ள பெரும்பாலானவர்களை போலவே கர்நாடக சங்கீதம் குறித்து ஏதுமறியாதவர்களில் ஒருவனே நானும். அவற்றை எப்போதாவது கேட்டாலும் ஏதும் புரியாது தெரியாததால் கூர்ந்து கேட்பதில்லை. ஆனால் ராஜன் அவர்களின் பாடல்கள் கர்நாடக சங்கீதம் போல சில இடங்களில் வந்தாலும் அதில் அவர் சேர்க்கும் வெவ்வேறு வகையான இசை கருவிகள் வழியாக என்னை போல வெகுஜன இசை ரசிகனையும் கட்டிபோட்டு விடுகின்றன. உண்மையை சொல்லவேண்டுமென்றால் சினிமா பாடல்களை தாண்டி நம் மரபிசையின் சாயல் கொண்டவற்றில் நான் விரும்பி ரசிப்பவை ராஜன் அவர்களின் பாடல்களை தான். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த பாடலான பாலும் தெளிதேனும் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றானது.

 

அன்புடன்

சக்திவேல்

அன்புள்ள ஜெ

பாரதியின் ஊழிக்கூத்து பாடலை நான் இரண்டு மூன்று முறை கேட்டேன். இந்தப்பாடல்களுக்கு நமக்கு பலவகையான வடிவங்கள் ஏற்கனவே தெரிந்தவையாக உள்ளன. பெரும்பாலும் கர்நாடக சங்கீத வடிவங்கள். அவை ஒருவகை நிறைவை நமக்கு அளிக்கின்றன. ஆனால் அதற்குமேலும் நமக்கு தேவையாகிறது. ஒருவகையான புதிய உணர்வை அளிக்கும் பாடல்கள். ஏனென்றால் நாம் நம்மையறியாமலேயே மேலை இசைக்கு பழகிவிட்டிருக்கிறோம். மேலையிசையின் நுட்பங்களை நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் முழுக்கமுழுக்க மேலையிசையில் தமிழை கேட்பதும் நமக்கு உவக்கக்கூடியதாக இல்லை. நாம் ஃப்யூஷனை ரசிப்பது இதனால்தான். இந்தப்பாடலில் இசை கர்நாடகசங்கீதமாகவும் பின்னணி இசைக்கோப்பு மேலைநாட்டு இசையாகவும் அமைந்துள்ளது. அது அளிக்கும் உற்சாகமும் துடிப்பும் ஒருநாள் முழுக்க நீடிக்கிறது

சிவக்குமார். எம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 10:31

வெண்முரசு- கதைமாந்தரின் முழுமை

அன்புள்ள ஜெ

சென்ற செப்டெம்பரில்தான் வெண்முரசு வாசிக்கத் தொடங்கினேன். வெண்முரசு பற்றி முன்னரே பலரும் சொல்லியிருந்தார்கள். ஆனால் அன்று என் வேலை நாள்முழுக்க படுத்தி எடுப்பதாக இருந்தது. என்னால் வாசிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை வரவில்லை. ஏற்கனவே நான் விஷ்ணுபுரத்தை வாசிப்புக்கு எடுத்து வாசித்து முடிக்க மூன்றுமாதங்களுக்குமேல் ஆகியது. ஆகவே இதை அப்படியே ஒத்திவைத்துக்கொண்டிருந்தேன்

வெண்முரசை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது சமீபத்தில்தான். வீட்டிலிருந்தே வேலை செய்ய ஆரம்பித்து நிறைய நேரம் வந்தது. அப்போது ஏராளமான சினிமாக்கள், சீரியல்கள் பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக சலிப்பு. எந்த சினிமாவை எடுத்தாலும் பாதிதான் பார்க்கமுடிந்தது. அதற்குள் அலுப்பு வந்துவிடும். அதன்பிறகுதான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலநாவல்கள், கிளாசிக் என்றால் நெடுநாட்களாக எடுத்து எடுத்து வைத்த வுதரிங் ஹைட்ஸ்.

தற்செயலாகத்தான் வெண்முரசு படித்தால் என்ன என்ற எண்ணம் வந்தது. துணிந்து ஒரு வால்யூம் படிப்போம். மேலே இழுத்துக்கொண்டால் படிப்போம் என்று முதற்கனல் வாசித்தேன். தொடர்ச்சியாக வேறேதும் வாசிக்காமல் இப்போது இமைக்கணம் வரை வந்துவிட்டேன். வெண்முரசு உருவாக்கும் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் இதன் தனி உலகமும் தனி மொழியும் வேறெதையுமே வாசிக்கவிடாமல் ஆக்கிவிடும் என்பதுதான். இதன் நடுவே ஒரு சின்ன சுவாரசியத்துக்காக வேறு சில மகாபாரத நாவல்களை வாசிக்கப்பார்த்தேன். பர்வ எல்லாம் சின்னப்பிள்ளை விளையாட்டு போல சாதாரணமாக இருக்கிறது. இரண்டாமிடம், இனிநான் உறங்கட்டும் எல்லாம் அதைவிட கீழேதான்.

வெண்முரசின் மிகப்பெரிய ஈர்ப்பு என்பதே அது ஒரு விர்ச்சுவல் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது என்பதுதான். நிலம், மக்கள், வீடுகளின் அமைப்பு, சந்தைகள், நகரங்கள், அன்றாடவாழ்க்கை, மக்களின் பிரச்சினைகள் என்று ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய வாழ்க்கை இருக்கிறது. மிகமிக விரிவான வாழ்க்கை. முதற்கனல் முடிந்து மழைப்பாடல் தொடங்கும்போது அந்த விரிந்த உலகம் வர ஆரம்பிக்கிறது. அதற்குள் செல்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் உள்ளே போனபோது ஒரு முழுமையான வாழ்க்கையே என்னைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்தது. அதில் நானும் இருந்தேன். ஆகவே வெளியே வரவே முடியவில்லை.

புத்தகங்களை நாம் கூர்ந்து வாசிக்கவேண்டும். வாசிக்கும்போது எதையாவது விட்டுவிட்டோமா என்று திரும்பத்திரும்ப வாசிப்போம். ஆனால் வெண்முரசு போல ஆழமாக உள்ளே சென்று நாமும் கூடவே வாழ ஆரம்பித்துவிட்டோம் என்றால் நமக்கு எந்த திசைதிரும்புதலும் கிடையாது. முழுக்கமுழுக்க நாவலுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருப்பதனால் கூர்ந்து கவனிக்கவேண்டிய அவசியமே இல்லை. நம்முடைய கவனமே கூர்மையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு சின்ன விஷயம்கூட நம் கவனத்தைவிட்டு விலகுவதில்லை.

வெண்முரசை வாசித்து முடித்துவிட்டு உங்களுக்கு விரிவாக எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் நடுவே இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதக்காரணம் எனக்கு இந்நாவலில் தோன்றிய ஒரு தனிச்சிறப்புதான். அதை இமைக்கணம் வரை வந்த பின்னர்தான் உணர்ந்தேன்.

இமைக்கணம் வரும்போதுதான் நான் பீஷ்மரின் குணாதிசயத்தை தொகுத்துக்கொண்டேன். அவரை ஒரு பெருந்தந்தை என்றுதான் வெண்முரசு சொல்கிறது. மூலமகாபாரதத்தில் பழக்கம் உடையவர்களுக்கு பெரிய சிக்கலாக இருப்பது பீஷ்மர் அத்தனை பெரிய நியாயம் பேசுபவர் எப்படி துரியோதனனுக்கு ஆதரவாக இருந்தார், எப்படி திரௌபதி துகில் உரிவதை ஆதரித்தா என்பதுதான்.

அதற்கு பௌராணிகர்கள் பல விளக்கங்களைச் சொல்வார்கள். அதில் ஒரு விளக்கம் அது அவருடைய ஊழ்வினை, அவருடைய பூர்வஜென்ம பாவம் தொடர்ந்து வந்தது என்பதுதான். அவர் அப்படிச் செய்யவேண்டியிருந்தது என்பார்கள். இன்னொரு விளக்கம் உண்டு. என் ஞாபகம் சரியென்றால் முக்கூரார் இதைச் சொல்லியிருக்கிறார்.

அதாவது, பீஷ்மர் கடைசியில் பீஷ்மநீதி சொல்கிறார். அப்போது விதுரர் கேட்கிறார், இத்தனை நீதிசொன்ன நீங்கள் ஏன் இதுவரை துரியோதனனை ஆதரித்தீர்கள் என்று. அதற்கு அவர் சொல்கிறார். இதுவரை துரியோதனன் தந்த உணவு என் ரத்தமாக இருந்தது. ஆகவே நான் அவனை ஆதரித்தேன். இப்போது அந்த உணவு அர்ஜுனனின் அம்புகளால் ரத்தமாக வெளியேறிவிட்டது. ஆகவே நியாயம் தெரிகிறது என்று

இரண்டுமே வழக்கமான பிராமணப்பார்வைகள். ஊழ் என்றும் பூர்வஜென்ம வினை என்றும் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகப்போய்விடும். அதேபோல எல்லாவற்றையுமே எதைச்சாப்பிடுவது எவரிடம் சாப்பிடுவது என்று பார்ப்பது. விவேகானந்தர் சொல்வதுபோல சோற்றைக்கொண்டே ஞானம் என நினைப்பது.

மகாபாரதத்தின் மீது வழக்கமான பார்வைகொண்டவர்கள் இந்த பிராமண விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் கொஞ்சம் நிதானமாக யோசிப்பவர்களுக்கு அபத்தமாகத் தோன்றும். ஆனால் வெண்முரசு மிகத்தர்க்கபூர்வமான விளக்கத்தை அளிக்கிறது. வெண்முரசு விரிவாக எல்லா விஷயங்களிலும் தர்க்கபூர்வ விளக்கத்தை அளிக்க முயல்கிறது

பீஷ்மரை ஒரு பெருந்தந்தையாக பார்க்கிறது வெண்முரசு. அவர் ஆரம்பம் முதலே அப்படித்தான் இருக்கிறார். தந்தைக்குரிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். பழிகளையும் விரும்பி ஏற்றுக்கொள்கிறார். வெண்முரசின் கதாபாத்திர உருவாக்கம் கடைசிவரை அந்த கதாபாத்திரம் என்னென்ன செய்கிறது என்பதை முன்னதாகவே கண்டு அதனடிப்படையில்தான் ஆரம்பம் முதலே உருவாக்கப்பட்டிருக்கிறது.

மழைப்பாடலில் அவருக்கும் திருதராஷ்டிரனுக்குமான தந்தை மகன் உறவு சொல்லப்படுகிறது. நான் எந்நிலையிலும் உன்னோடுதான் இருப்பேன் என்று அவர் சொல்கிறார். அந்த வாக்குறுதியை புரிந்துகொண்டால் ஒரு தந்தையாக அவர் துரியோதனனை ஆதரித்தது விளங்கும். அப்பாக்கள் அப்படித்தான். நியாயம் தர்மம் எல்லாவற்றையும் விட திருதராஷ்டிரன் கண் தெரியாதவன், தன் ஆதரவுக்குரியவன் என்றுதான் அப்பாமனம் யோசிக்கும்.

அந்தக்காட்சியை மழைப்பாடலில் எதற்காக புனைந்து அளித்தீர்கள் என்று யோசித்தேன். பீஷ்மரின் காலில் திருதராஷ்டிரன் விழுந்து அழுவதும் உனக்கு எந்நிலையிலும் நான் துணையிருப்பேன் என்று அவர் சொல்வதும் மிக வலுவான காட்சிகள்.  பின்னர் பீஷ்மரின் கதாபாத்திரம் விரிந்து விரிந்து வரும்போதுதான் உண்மையில் அந்த இடம் எவ்வளவு ஆழமானது, எவ்வளவு அடிப்படையானது என்பது புரிந்தது

இப்படி குந்தி, விதுரர் உட்பட எல்லா கதாபாத்திரங்களும் கடைசியில் அவர்கள் என்னென்ன ஆகிறார்கள் என்பதை ஒட்டித்தான் ஆரம்பம் முதலே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களின் கதாபாத்திர ஒருங்கிணைவு அப்படித்தான் அமைந்துள்ளது. வெண்முரசை வாசிப்பவர்கள் அவ்வப்போது புனைவாக விரியும் பல சந்தர்ப்பங்களை கண்டு இது ஏன் என்று எண்ணிப்பார்க்கலாம். அந்தச் சந்தர்ப்பங்களிலிருந்து மேலே செல்ல நிறைய இடமிருக்கிறது. அந்த சந்தர்ப்பங்களைக்கொண்டுதான் நாம் அந்தக்கதாபாத்திரங்களை புரிந்துகொள்ள முடியும்

பீஷ்மர் அவருடைய இளமையில் கங்கைக்கு குறுக்காக அம்புகளால் அணைகட்டினார் என்ற கதை அவருடைய வீரத்தைக் காட்டுவதற்காக மகாபாரதத்தில் சொல்லப்படும் ஒரு சிறப்புவர்ணனை மட்டும்தான். ஆனால் அவர் நதியை அம்புகளால் அணைகட்ட முயன்றவர், தொடர்ந்து முயன்றுகொண்டே இருப்பவர் என்று அந்த தருணத்தை ஒரு உவமையாக, ஒரு மெட்டபர் ஆக ஆக்கி விரித்து அவருடைய மொத்த வாழ்க்கையையே காட்டிவிடுகிறது வெண்முரசு.

பீமனுக்கும் துரியோதனனுக்கும் பகைவரும் இடமும் ஓர் உதாரணம். அவர்கள் இருவரும் ஒன்று. ஒரே உடலின் இருபகுதிகள். அதுதான் போராட்டத்துக்கே காரணம். இடையே வருவது ஈகோதான். அந்த ஈகோ உருவாகும் கணம்தான் துரியோதனனை பீமன் கரடியிடமிருந்து காப்பாற்றுவது.

வெண்முரசு புதியபுதிய அர்த்தங்களை அளித்தபடியே விரிகிறது. A complete reading experience

ஆர்.மாதவ்

நீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா. ———————————————————————————————– Feeling Blue- Remitha Satheesh

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 10:30

January 21, 2021

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-2

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-1

குகா நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற அவருடைய நூலில் கம்யூனிஸ்டுகள் எவரையும் சேர்த்துக்கொள்ளவில்லை. அது ஏன் என்பதை அவரே முன்னுரையில் சொல்கிறார். இந்தியாவின் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு, ஜனநாயகச் செயல்பாடுகளுக்கு, உரிமைப்போர்களுக்கு இடதுசாரிகளின் பங்கு முக்கியமானது. ஆனால் அவர்கள் எதையும் அசலாக சிந்திக்கவில்லை, இந்தியாவுக்கான எந்த தீர்வையும் உருவாக்கவில்லை. அவர்கள் ஐரோப்பாவுக்காகவும் சீனாவுக்காகவும் அந்தந்த நாடுகளில் உருவாக்கப்பட்ட கொள்கைகளையும் நடைமுறைகளையும் அப்படியே இந்தியாவிற்கு கொண்டுவர முயன்றனர்.

ஆகவே இந்தியாவின் சிற்பிகளென இருபதாம்நூற்றாண்டில் குகா கருத்தில்கொள்பவர்களின் முதல் தகுதி என்ன என்று எளிதில் ஊகிக்கமுடிகிறது. குகா இந்தியாவுக்கான தீர்வுகளைச் சிந்தித்தவர்களையே முன்வைக்கிறார். அவர்களில் முதலாமர் காந்தி. இந்நூலை வாசித்துக்கொண்டு வருகையில் குகா ஒரு கோணத்தில்  காந்தியை அற்புதமாக வரையறை செய்வதைக் கண்டேன்.

கோகலேயின் மாணவராகத்தான் காந்தி இந்திய அரசியலில் நுழைந்தார். காந்திக்கு கோகலே மேல் இருந்த ஈடுபாட்டுக்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர் கோகலேயைப்போலவே ஜனநாயகத்துக்கான போராட்டம் ஜனநாயகமுறைப்படியே நிகழவேண்டுமென எண்ணினார். இன்னொன்று, கோகலே காந்தியின் தென்னாப்ரிக்கப் போராட்டங்களை அங்கீகரித்து நேரில் சென்று வாழ்த்தியவர்.

காந்தி தன்வரலாற்றிலும் தனக்கு திலகருடன் இருந்த முரண்பாட்டையும் கோகலேயுடன் இருந்த உறவையும் தன் வரலாற்றிலேயேகூடச் சொல்கிறார். காந்தியை கோகலேயின் தொடர்ச்சியாகத்தான் அனைவரும் அறிமுகம் செய்வார்கள்.

கோகலே சுதந்திரத்துக்காக மக்களை திரட்டிப் போராடுவதை நம்பியவர் அல்ல, அவர் மக்களைநோக்கிப் பேசவில்லை, மாணவர்களைநோக்கியே பேசினார். கல்வி, பொதுவாழ்க்கையில் பயிற்சி ஆகியவையே கோகலே சுட்டிக்காட்டிய வழிமுறைகள். காந்தி கோகலேயின் பல நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டார். பிரிட்டிஷ் சட்டம் மற்றும் கல்விமேல் நம்பிக்கைகொண்டிருந்தார். பொதுநிர்வாகத்தில் பிரிட்டிஷார்கொண்டுவந்த வழிகளை ஏற்றுக்கொண்டார்

கோகலேக்கு மாறாக திலகர் மக்கள்போராட்டங்களை ஒருங்கிணைக்க விரும்பினார். காந்தி இந்த விஷயத்தில் கோகலேயை அல்ல திலகரையே ஏற்றுக்கொண்டார். மக்களை திரட்டி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடவே அவர் விரும்பினார். காந்தி திலகரின் இறுதிச்சடங்கில் பெருந்துயரத்துடன் கலந்துகொண்டார். மக்கள் பங்கேற்கும் பெரிய போராட்டங்களை காந்தி திலகரிடமிருந்தே பெற்றுக்கொண்டார். காந்தி வந்தபின்னரே காங்கிரஸ் உண்மையில் திலகரின் போராட்டப்பாதைக்கு திரும்பியது.

அத்துடன் இந்திய மறுமலர்ச்சியாளர்களில் திலகரே இந்தியாவின் பண்பாட்டுப் பெருமிதத்தை முன்வைத்தவர். காந்தி அதைப் பெற்றுக்கொண்டார். நவீன இந்தியா ஐரோப்பிய ஜனநாயகவிழுமியங்களை கொண்டதாக இருக்கவேண்டும் என்றும், அதேசமயம் அது தன் பாரம்பரியத்தை பேணி முன்னெடுக்கவேண்டும் என்றும் காந்தி எண்ணினார். திலகரின் ஆசாரவாதத்தை ஏற்காத காந்தி திலகரின் மரபுசார்ந்த அணுக்கத்தை ஏற்றார். பகவத்கீதை திலகரைப்போலவே காந்திக்கும் வழிகாட்டிநூலாக அமைந்தது. காந்தியை கோகலே, திலகர் இருவருக்கும் நடுவே வைத்து வகுக்க முயலும் குகாவின் இந்தப்பார்வை முக்கியமானது.

காந்தியின் எழுத்துக்கள் தொண்ணூறு தொகுதிகளாக, எழுபதாயிரம் பக்கங்களுக்கு தொகுக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் கே.சுவாமிநாதன் தலைமையிலான குழு அப்பணியைச் செய்தது.அதிலிருந்து குகா தொகுத்தளித்திருக்கும் குறிப்புகள் ஆச்சரியமான ஒரு தொடர்ச்சியை காட்டுகின்றன. காந்தி ராஜா ராம்மோகன் ராய், சையத் அகமதுகான், ஃபுலே, தாராபாய் ஷிண்டே ஆகியவர்களின் கருத்துக்களின் வாரிசாகவும் திகழ்கிறார். அவர்கள் சொன்ன அனைத்தையும் அவர் மேலும் விரிவாக, மேலும் நடைமுறைநோக்குடன் பேசியிருக்கிறார்.

காந்தியின் குறிப்புகள் காட்டும் இந்தியா என்பது ஐரோப்பிய ஜனநாயகப் பார்வைகொண்ட, இந்துமெய்ஞானத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கும், இஸ்லாமியருக்கு இடமுள்ள, தலித் மற்றும் பெண்களுக்கு நிகரிடம் உள்ள ஒரு சமூகமாக இருந்தது. சுதந்திர இந்தியயாவில் பெண்கள் எவ்வகையிலும் ஆண்களுக்கு குறையாமல் பொதுவாழ்க்கையில் ஈடுபடவேண்டும் என அவர் கனவுகண்டார். தாராபாய் ஷிண்டே காட்டும் அடிமைப்பட்ட பெண்களில் இருந்து வெறும் முப்பபதாண்டுகளில் சுதந்திரத்திற்காக சிறைசென்ற பெண்களை உருவாக்க காந்தியால் இயன்றது.

காந்தியிடம் இல்லாத ஒன்று, அழகியல். எளிமை, பயனுறுத்தன்மை ஆகியவற்றாலன ஓர் நாட்டுப்புற அழகியல் காந்தியிடமுண்டு, அதற்கு இந்திய துறவியர்மரபிலும் சமணத்திலும் வேர்கள் உண்டு. ஆனால் இந்தியா உருவாக்கியெடுத்த மாபெரும் செவ்வியல், நாட்டாரியல் அழகியல்களுடன் காந்திக்கு தொடர்ச்சியான உறவேதும் இருக்கவில்லை.அந்த இடைவெளியை நிரப்புபவர் காந்தியின் நண்பரும் அழகியலிலும் ஆன்மிகத்திலும் வழிகாட்டியான ரவீந்திரநாத் தாகூர்.

தாகூர் இந்தியாவின் சிற்பிகளிலேயே மிகுந்த அளவுக்கு உலகப்பயணம் மேற்கொண்டவர் என்கிறார் குகா.ஐரோப்பா அவருக்கு பிடித்தமான இடம். ஐரோப்பாவை தாகூர் அதன் ஒளிமிக்க பகுதியைக்கொண்டே மதிப்பிடுகிறார். ஐரோப்பா உலகின்மேல் ஆதிக்கம் செலுத்துவது அதன் ராணுவ வல்லமையால் அல்ல, அதன் ஆன்மிக வல்லமையால் என்று இந்நூலில் உள்ள ஒரு கட்டுரையில் தாகூர் சொல்கிறார். இந்தியா அந்த ஆன்மிக வல்லமையை தானும் அடையவேண்டும், மரபிலிருந்தும் ஐரோப்பாவின் அறிவொளிக்காலத்திலிருந்தும் அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் சொல்கிறார்

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை தாகூர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்தியர்கள் பிரிட்டிஷாரை வெறுக்கலாகாது என்றும், இந்தியாவுக்கு பிரிட்டிஷ் ஆட்சி வந்தது ஒரு நல்லூழ் என்றும் நினைக்கிறார். பிரிட்டிஷ் அரசுமேல் தாகூர் இறுதிவரைக்கும் பக்தியுடனேயே இருக்கிறார். ஜாலியன் வாலாபாக் கொலைக்காக கண்டனம் தெரிவித்து தன் சர் பட்டத்தை அவர் திருப்பியளித்தாலும் பிரிட்டிஷ் எதிர்ப்புநிலையை எடுக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷாரை எதிரிகளாக கட்டமைக்கிறது என்று நினைத்து அதை கண்டிக்கிறார்

இந்தியா பிரிட்டிஷார் அளித்த கல்வியைக்கொண்டு தன்னை மறுகட்டமைப்பு செய்துகொள்ளவேண்டும் என்பதே தாகூரின் எண்ணம், அவர் அமைத்த பல்கலைக்கழகமான விஸ்வபாரதியின் நோக்கமும் அதுவே. தன் குறிப்புகளில் தாகூர் ‘மேலைநாட்டினரிடமிருந்து முழுவதாக வேறுபட்டு தனியாக நிற்க முயற்சிப்பது ஆன்மிகத்தற்கொலைக்குச் சமம்’ என்று ஆழமாக குறிப்பிடுகிறார். மேலைநாடுகளிடையே இந்தியாவைப்பற்றிய நற்புரிதலை உருவாக்கமுடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

காலனியாதிக்கம் வங்காளத்தில் உருவாக்கிய மாபெரும் பஞ்சத்தை தாகூர் கண்டிருந்தார். அவர் உயர்குடியைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, அப்பஞ்சத்தில் பொருளீட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவரும்கூட. ஆனால் உண்மையில் அவருடைய சிக்கல் அதுவல்ல. அன்று அப்பஞ்சத்துக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்கும் இருந்த தொடர்பு ஆய்வுசார்ந்து நிறுவப்படவில்லை. பஞ்சம் மழைபொய்த்தமையால் வந்தது, பிரிட்டிஷார் அதைச் சமாளிக்கவே முயன்றனர் என்னும் எளிய சித்தரிப்பே அறிஞர்களிடமும் இருந்தது. பிரிட்டிஷாரின் உருவாக்கமே பஞ்சங்கள் என்பது பின்னர் பிரிட்டிஷ் ஆவணங்கள் வழி, மேலை ஆய்வாளர்களால்தான் நிறுவப்பட்டது.

இவ்விருவருக்கும் எதிரான தரப்பாக பி.ஆர்.அம்பேத்கரை குகா முன்வைக்கிறார்.இந்தியாவின் அரசியலில் நிகழ்ந்த எழுச்சி காந்தி. பண்பாட்டின் எழுச்சியின் அடையாளம் தாகூர். அவர்களுக்கு எதிராக அல்லது மாற்றாக உருவான அடித்தளம் சார்ந்த அறம் ஒன்றின் அடையாளம் அம்பேத்கர். அம்பேத்கரை தாகூருடன் ஒப்பிட்டபடி [இருவருமே பதினோராவது குழந்தைகள். அது ஒன்றெ பொது] குகாவின் விவரிப்பு தொடங்குவது கவனத்திற்குரியது.

முந்தைய தலித் செயல்பாட்டாளர்களைப்போலஅம்பேத்கரின் அரசியல் சேவையில் தொடங்கவில்லை. கல்வி வழியாக தன்னை அவர் தன் சமூகப்பின்னணியிலிருந்து மேலே எடுத்துக்கொண்டார். ஆங்கிலக்கல்வி பெற்று உயர்பட்டம் பெற்றார். வழக்கறிஞராக செல்வமீட்டினார். அதன்பின்னரே அரசியலுக்கு வந்தார். அவருக்கு கோலாப்பூர் மகாராஜாவின் உதவி இருந்தமையால் அவரால் இதழ்தொடங்கி நடத்த முடிந்தது.பிரிட்டிஷார் அவரை ஒரு தரப்பாக ஏற்றமையால்தான் அரசியல் மையத்திற்கு வரவும் முடிந்தது

இந்நூலில் உள்ள அம்பேத்கரின் குறிப்புகளிலிருந்து அம்பேத்கரின் மையமான சில கருத்துக்களை தொகுத்துக்கொள்ள முடிகிறது. முந்தைய சீர்திருத்தவாதிகளைப்போல சாதிச்சமத்துவம், உரிமை ஆகியவற்றை அம்பேத்கர் முன்னிலைப்படுத்தவில்லை. சாதியொழிப்பை முன்வைத்தார். இந்துசமூகம் என்பதே தோராயமான ஓர் உருவகம்தான் என்றும், அது வெவ்வேறு அடையாளங்கள் வழியாக உருவாக்கப்பட்டது என்றும், சாதி என்பது அதிலொன்று மட்டுமே என்றும் அவர் கருதினார். சாதியை ஒரு ஒரு சமூக அமைப்பாக எண்ணாமல் ஒரு கட்டமைப்பாக கருதி அதன் தோற்றம் செயல்பாடு ஆகியவற்றை வரலாற்றுரீதியாக ஆராய்ந்தார். இதுவே அவருடைய தனித்தன்மை

காந்தி தலித் விடுதலைக்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள்மேல் அம்பேத்கர் நம்பிக்கை கொள்ளவில்லை. அவை வெற்றிபெறவில்லை என நினைத்தார். காந்தி ஒத்துழையாமை, சத்யாக்கிரகம் போன்ற போராட்டங்கள் அயலவருக்கு எதிராக நிகழ்த்தப்படவேண்டியவை, இந்திய மக்கள் தங்களுக்குள் செய்துகொள்ள வேண்டியவை அல்ல, அது இந்தியர்களை பலவீனப்படுத்தும் என்று எண்ணம்கொண்டிருந்தார். அதை சுட்டிக்காட்டும் அம்பேத்கர் காந்தி உயர்சாதி இந்துக்களுக்கு நல்லவராக இருக்க முயல்கிறார், அவர்களிடம் தலித்துகளுக்காக பேசுகிறாரே ஒழிய அவர்களை வலியுறுத்தவில்லை, அவருடைய நோக்கம் உண்மையான விடுதலை அல்ல என்று சுட்டிக்காட்டுகிறார்

அந்த அறச்சிக்கல் அம்பேத்கருக்கே பின்னர் வந்தது என்பது வரலாறு. மகர்களுக்கு பிற தலித் சாதிகளுக்கும் இடையேயான பூசல்களின்போது அம்பேத்கரின் அதே சமரசநோக்கையே கைக்கொண்டார். தலித் மக்களுக்கிடையே போராட்டம் இருக்கலாகாது என்றார். ஆனால் காந்தியின் காலகட்டத்தில் அம்பேத்கர் பொறுமையிழந்தவராகவும் காந்திக்கு எதிரான கடும்நிலைபாடு கொண்டவராகவுமே இருந்தார்.

அம்பேத்கர் காந்தியின் முயற்சிகள் வீண் என்கிறார். ஆனால் காந்திய இயக்கம் உருவாக்கிய கிட்டத்தட்ட நான்காயிரம் பள்ளிகள் தலித் கல்விக்காக பெரும்பங்களிப்பாற்றின- தமிழகத்திலேயே அத்தகைய நூறு கல்விநிலையங்களுக்குமேல் உள்ளன என்பது வரலாறு. மாறாக அம்பேத்கரின் இயக்கம் கருத்துநிலைச் செயல்பாடாக மட்டுமே இருந்தது. மகாராஷ்டிரத்திற்கு வெளியே அவர் காலத்தில் அது பரவவுமில்லை

காந்தியின் ஹரிஜன இயக்கம் உருவாக்கிய மனநிலை மாற்றங்களாலேயே பின்னர் சுதந்திர இந்தியாவில் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை பெரும்பாலும் உயர்சாதியினராலான காங்கிரஸ் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டது. இந்திய தலித் வாழ்க்கைநிலையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தவை தலித் கல்வியும் இட ஒதுக்கீடும்தான். அவ்வகையில் காந்தியே இந்திய தலித்துக்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியவர்.

ஆனால் அம்பேத்கரின் பொறுமையின்மையை புரிந்துகொள்ளமுடிகிறது. அன்றைய ஒட்டுமொத்த தேசிய விடுதலைப் போராட்டத்தை அம்பேத்கர் கருத்தில் கொள்ளவில்லை, அவர் தலித் விடுதலையை தனிப்பிரச்சினையாக கண்டார்.அதன்பொருட்டு மட்டும் பேசினார். இக்கட்டுரைகளில் இந்தியாவுக்கு பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைக்கும் என அவர் 1940களில்கூட நம்பவில்லை என்பது தெரிகிறது.

குகா இம்மூவரையும் மூன்று புள்ளிகளாக்கி அக்காலத்தைய மறுமலர்ச்சியின் சித்திரத்தை வரைந்தளிக்கிறார். இந்தியா கட்டப்பட்ட அடிப்படைக்கொள்கைகளை முதலில் சொல்லி அந்த இந்தியாவின் பரிணாமத்தை உருவாக்கிய கொள்கைநிலைகளை மூன்று சரடுகளாக உருவாக்கிக் காட்டுகிறார். காந்தி அம்பேத்கர் என்னும் முரணியக்கம் பலரும் அறிந்ததே. காந்தி-அம்பேத்கர்- தாகூர் என்னும் மும்முனை முரணியக்கம் யோசிக்கத்தக்கது

இந்தியாவின் சிந்தனையாளர்களை இந்த மூன்றுசரடுகளில் எதில் பொருத்தமுடியும் என யோசிக்கலாம். பெரும்பாலானவர்களிடம் இந்த மூவரின் செல்வாக்கும் இருக்குமென்றாலும் ஓங்கியிருப்பவற்றை வைத்து சிலவற்றை வகுக்கலாம். அரசியல்தளத்தில் செயல்படுபவர்கள் பெரும்பாலும் காந்தியர் அல்லது அம்பேத்கரியர்களாக இருக்கலாம். ஆனால் அதேயளவுக்கு தாகூரின் செல்வாக்குள்ள, அல்லது தாகூர் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பின் செல்வாக்குள்ள கலையிலக்கியச் செயல்பாட்டாளர்களும் உண்டு. ஐரோப்பிய நவீனசிந்தனைகளையும் இந்தியாவின் தத்துவசாரத்தையும் இணைக்கமுயன்றவர்கள் அவர்கள்.

 

நவீன இந்தியாவின் சிற்பிகள் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2021 10:35

கதைகள், கடிதங்கள்

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் – தொகுப்பு 

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் யாதேவி கதைக்கு வரும் கடிதங்கள் மிகுந்த ஆச்சரியம் அளிக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இதுவே உங்களின் கதையின் வெற்றி.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் எழுதிய ஒரு கணத்துக்கு அப்பால் என்ற கதையின் மறுபக்கமாக இதை நான் காண்கிறேன். வலுவிழந்த ஒரு முதியவர் எப்படி மீண்டு வருகிறார் என்று என்று சொல்லும் அக்கதை. அவருக்கு மீட்பு அளிப்பது பாலியல் தளங்கள். யாதே வியில் பாலியல் தளங்களில் நடிக்கும் எல்லாவிற்கு எப்படி மீட்பு என்பதே கதை. இளமை திரும்புவதற்கு ஏதோ ஒரு பிடிமானம் இரண்டு கதைகளிலும். ஒருவருக்கு அதில் நுழைவது இன்னொருவருக்கு அதை விடுவது. எப்பொழுதும் போல் உங்கள் கதைகளில் வரும் குறியீட்டு பெயர்கள்,ஆன்செல் பெண்தெய்வ அனுக்கிரகம் உடையவள் என்ற பெயர். அனுக்கிரகம் அளிப்பது ஸ்ரீதரன். இந்தக் கதையை எழுதிய இதே நேரத்தில் வெண்முரசில் திரௌபதி புறவய அலங்காரங்களை துறந்து இளமைக்கு திரும்புவதும் அழகு.

 

அன்புடன்,

மீனாட்சி

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,

“கரவு ” சிறுகதை சிறுவயதில் கிளர்ச்சியும் பீதியுமாய் பார்க்கும் சுடலைமாட சுவாமி கோயில் கொடையை நினைவு படுத்தியது.  சுடலை சாமியாடும் போதும் , ரத்த பலி குடிக்கும்போதும்,வேட்டைக்கு போகும்போதும்  எனக்கு ” ஏன் இவ்ளோ வெறியா ..இவ்ளோ ஆவேசமா ஏன் சாமி இருக்கணும்? ” “ஏன் அதை கும்பிடணும் ?” என்று தோணும். ஆனாலும் ரத்தபொட்டு வாங்கும்போது மனதில் ஒரு திமிர் வரும்.  உங்களின்  “மாடன் மோட்சம்” கதை முதல் சுடலை மாடன் பல வடிவங்களில் வந்துகொண்டு இருக்கிறார். ஆசான் அப்புவிடம் அவனது அம்மா பாட்டி எல்லாம் திட்டு வாங்குகிறார்கள்.

முதலில் என் சுடலை மாடனுக்கும் இரவுக்கும் என்ன சம்பந்தம் என ?  ஒரு கேள்வி .அதற்கு ……… “ஏன்னா அவனுக கள்ளன் இல்லல்ல?அவனுக பகலிலே சீவிச்சுதவனுக. நாம ராத்திரியிலே சீவிச்சுதோம். ராத்திரியிலேயாக்கும் பாம்பு சீவிச்சுதது. பேயும் பூதமும் சீவிச்சுதது. கெந்தர்வனும் மாடனும் மாயாண்டியும் சீவிச்சுதது… இவனுகள பாரு… அந்தியானா வீட்டுக்குள்ள வெளக்க வச்சிட்டு இருக்குதவனுக. இவனுகளுக்கு ராத்திரியக் கண்டா பயம்” என பதிலாக தங்கன் கூறுகிறான்.

அடுத்தது என் சுடலைமாடனை ஒரு பயத்தோடு ஒரு ஒவ்வாமையோடு கும்பிடுகிறோம் ? …..அதற்கும் தங்கனே ” “பகலு கண்ணு முன்னால தெளிஞ்சு கெடக்கு. ராத்திரின்னா சொப்பனமுல்லா? சொப்பனத்திலே என்ன உண்டுண்ணு எப்பிடித் தெரியும்? சாதாரணக்காரனுக்கு சொப்பனத்தைப்போல பயம் வேற இல்ல. வாற சொப்பனத்திலே முக்காலும் கெட்ட சொப்பனமாக்கும்”  “கள்ளன் வாறது அந்த சொப்பனத்திலே. சொப்பனத்திலே அவனுகளுக்க பெண்டாட்டிகளுக்க கொணமும் வேறேயாக்கும்னு அவனுக்கு தெரியும். பகலிலே அவளுகளை அடைச்சு போடலாம். சொப்பனத்துக்கு தாப்பாள் இல்ல பாத்துக்க”  பதில் கூறுகிறான்.  தங்கன் பிடிபட்டபின் பெரியவர் ஒருவர் ” “அவனுகளுக்கு ஆயிரம் மந்திரமும் தந்திரமும் உண்டு.” என்கிறார். ஒரு கிழவர் “மாயம்படிச்ச கள்ளனாக்கும்…” என்கிறார்.

அதுதான் நம்மால் முடியாத மாயமும் தந்திரமும். ஒரு இயலாமை. நம் வீட்டு பெண்களையே தடுக்க முடியாது என்று உள்ளுர வந்து அறையும் இயலாமை.

கடைசியில் வரும் சம்பவம்தான் சிறப்பு. ….”மாயாண்டி சாமி “டேய், எவண்டா என் தோழனை கட்டியது? அறுத்துவிடுடா அவனை!” என்றது “டேய்! இப்பவே அறுத்துவிடுடா.”….தங்கன் சுடலைமாடனின் தோழன்.

ஸ்டீபன் ராஜ் குலசேகரன் 

100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96.  நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2021 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.