Jeyamohan's Blog, page 1056

January 30, 2021

ஆன்மிகமும் சுதந்திரமும்

வணக்கம்

கொரோனா விடுமுறையில் கல்லூரி இரண்டாம் ஆண்டுக்கான ஆன்லைன் பரீட்சைகளை இந்த வாரம்தான்  முடித்தேன்.  பகலில் கல்லூரி மற்றும் இஸ்கான் வகுப்புக்களும் மாலையில் நானும் தம்பியும் 12 வரை படித்த சின்மயா குழும நல்லுரைகளும், இடையில் வெண்முரசு மற்றும் தொடர் சிறுகதைகள் கேட்பதும் வாசிப்பதும், வீட்டுவேலைகளில் உதவி செய்வதுமாக பொழுது நிறைவாக போகின்றது.

7 ஆம் வகுப்பிலிருந்து வெண்முரசை அம்மா சொல்ல சொல்லத்தான் கேட்டேன்.  கல்லூரி முதல் ஆண்டில்தான் நானே செந்நாவேங்கையை வாசித்தேன். இப்போது வெண்முரசு முழுமையடையும் நேரத்தில் முதற்கனலில் இருந்து நானே மீண்டும் தொடர்ந்து வாசித்து இப்போது அம்மாவுக்கு சொல்லுகிறேன்.  எனக்கு  HBO சேனலைப்போல வெண்முரசின் suitably modified version தான் சொல்லப்பட்டிருக்கிறது, வெறும் எஸ்ஸென்ஸ் மட்டுமே இதுவரை கேட்டிருக்கிறேன் என்று வாசித்த பின்னரே தெரிகின்றது. அப்போதைக்கு அதுவும், இப்போது என் வயசுக்கு இப்படி விரிவாக நானே வாசிப்பதும் சரியாகவே இருக்கிறது. உங்கள் மீதான பிரமிப்பு இப்போது இன்னும் பல மடங்கு அதிகமாகிவிட்டது

கல்லூரி சேர்ந்த புதிதில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் இஸ்கான் அமைப்பின் பிரதிநிகள் வந்து ஒரு கூட்டம் நடத்தி சில வினாக்கள் இருக்கும் ஒரு தாளையும் கொடுத்தார்கள், எல்லாருமாக நிரப்பினோம். அதில் நிறைய தத்துவம் குறித்த கேள்விகளே இருந்தன.  என் எண்ணங்களை தெரிவித்திருந்தேன்

விடைத்தாள்களை பார்த்தபின்பு நான் உள்ளிட்ட சில மாணவர்களின் spiritual quotient மிக அதிகமாக இருக்கிறதென்றும் நாங்கள் விரும்பினால் சிறப்பு  வகுப்புக்களில் கலந்துகொள்ளலாமென்றும் சொன்னதும் சம்மதித்து வாரா வாரம் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தேன். அவர்கள் ஆற்றும் உரைகளை இந்த இரண்டு வருடங்களுமே தொடர்ந்து கேட்டேன் .ஆனல் எனக்கு அந்த வகுப்புக்களில் சில அசெளகரியங்கள், சங்கடங்கள் இருந்தன. கிருஷ்ணரைத்தவிர வேறு கதிமோட்சமே உலகிற்கு இல்லை என்பதுபோன்ற உரைகளே எப்போதும் இருந்தது.

எனக்கு கிருஷ்ணரை பிடிக்கும். பகவத்கீதை வகுப்புக்களின் தேர்வில் அந்த பல்கலைக்கழகம் துவங்கியதிலிருந்து முதன் முறையாக 100 சவீத மதிப்பெண்களை பெற்றிருக்கிறேன். மகாபாரதம் என்னை எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கின்றது. வெண்முரசின் கூடவே மகாபாரதத்தின் ஒருசில பிற வடிவங்களையும் வாசித்திருக்கிறேன். பள்ளியின் பாலவிகாருக்கான ஆசிரியை காயத்ரி தீதி குழந்தைகளுக்கு  “குந்தி பாவம், எனக்கு குழந்தையே இல்லையே பகவானே ஒரு குழந்தையை கொடுன்னு கையை நீட்டி அழுதா, அப்போ சூரிய பகவான் தொப்புன்னு அவ கையில் ஒரு குழந்தையை போட்டார், அதான் கர்ணன்’’ போன்ற மிக எளிய வடிவில் கூட.

இளம் வயதிலிருந்தே மேலும் பல நூல்களையும் வாசிக்கும் பழக்கமும் இருப்பதால் புராண இதிகாசங்களெல்லாம் சொல்லும் பொது விஷயங்கள் காஞ்சனம் காமினி கீர்த்தி இந்த மூன்றில் விழிப்புடன் இருக்கவேண்டுமென்பதையே என்னும் அளவில் புரிந்துகொண்டிருக்கிறென். நான் செல்லவேண்டிய தூரம் அதிகம் என்பதும் தெரியும். ஆனால் இஸ்கான் ஆசிரியரகள் கிருஷ்ணர் வழிபாட்டை மிகவும் literal ஆக materialistic ஆக  எடுத்துக்கொண்டு இளம் மாணவர்களின் சுதந்திரத்தில் அதிகம் தலையிடுவதுபோலவும், எங்களை இவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையில் இழுத்துக்கொண்டு போவதாகவும் உணர்ந்தேன்.

ஏறக்குறைய மதமாற்றப்பிரச்சாரத்தைபோல இருக்கும் இவ்வுரைகளும், கருத்துக்களும் எனக்கு ஒவ்வாமையளித்தன. மேலும் பெண்களுக்கு இந்த வகுப்புக்கு அனுமதி மறுத்கப்பட்டிருப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை.  பெண்கள் குடும்பம் குழந்தைகள் போன்ற ஆசாபாசங்களில் சிக்குண்டவரக்ள் ,அவர்களால் ஆன்மீகப்பாதைக்கு வரவே முடியாது என்பது போன்ற பாலின சமத்துவமற்ற விஷயங்களை ஆணித்தரமாக முன்வைக்கிறார்கள். இப்படிப் பலவிஷயங்களில் கருத்து வேறூபாடு இருந்தாலும்  வகுப்புக்களுக்கு தொடந்து போய்க்கொண்டிருந்தேன்

இப்போது இவ்விடுமுறையில்  மாலையில் நான் படித்த சின்மயா நிறுவனத்தின் தலைவர் சுவாமி தேஜோமயானந்தாஜியின் கடோபநிஷத் உரைகளை தொடர்ந்து 41 நாட்கள் கேட்டேன். விவாதங்களிலும் கலந்துகொண்டேன். அதிலெனக்கு எந்த அழுத்தமும், அசெளகரியமும் இல்லை. என்னுடன் படித்த பல மாணவிகளும், நேரமிருக்கையில் அம்மாவும் கூட நேரலையில் கலந்துகொண்டார்கள். உரையின் இறுதியில் பஜன்களும் ஆரத்தியுமாக கொண்டாட்டமாக இருந்தது

பகல் நேரங்களில் இஸ்கானின் ஆன்லைன் வகுப்புக்களும் இருந்தன, ஆர்வமில்லை என்றாலும் அதையும் தொடர்ந்தேன் .ஆனால் இப்போது தினம் 4 மணிநேரம் வகுப்புக்கு வரசொல்லி அழுத்தம் கொடுத்தபோது நான் நிறைய யோசித்தேன்.

எனக்கான பாதையை நான் தேர்வு செய்யும் சுதந்திரம் வேண்டுமென்றும், நல்லதோ கெட்டதோ அதை நான்  செல்லும் பாதையில் சந்திக்கலாமென்றும் தோன்றுகிறது.  ஒரு மணிநேரம் வகுப்புக்கள் கலந்துகொள்ளுவதை விட தினம் 4 மணி நேரம் கலந்துகொள்கையில்  வீட்டுவேலைகளில் உதவ முடியாமலும் ஆகின்றது. எப்படியும் இது என்னை  சில வகையில் தொந்தரவுக்குள்ளாக்கும். பெண்களுக்கு இது சரிவராது என்று நம்பும் ஒரு அமைப்பில் எனக்கு நம்பிக்கையும் மரியாதையும் இல்லை

எனவே வகுப்புக்களில் கலந்துகொள்ள முடியவில்லை என்று ஆசிரியருக்கு செய்தி அனுப்பினேன். அவர் என்னை போனில் அழைத்து பலவிதமாக வற்புறுத்தினார் என்றாலும் நான் வேறு காரணங்களை சொல்லி மறுத்தேன்.

மீண்டும் ’’நீ சரியான முடிவுதான் எடுத்திருக்கிறயா’?’ என்று கேட்டு செய்தி அனுப்பினார்.ஆம் என்று பதில் அனுப்பியிருக்கிறேன். ஆமென்றேதான் நினைக்கிறேன்

எனக்கு தமிழுடன் இன்னும் பலவற்றை கற்றுக்கொடுத்த நீங்களே என் முதல் ஆசிரியர் எனவே உங்களுக்கு இதை தெரிவிக்க வேண்டுமெனெ தோன்றியது

அன்புடன்

சரண்

 

அன்புள்ள சரண்

நீங்கள் எடுத்த முடிவு தெளிவானது. அதற்கு வெண்முரசும் ஒரு காரணம் என்பது நிறைவளிக்கிறது.

பொதுவாக ஒரு நவீன மனிதனுக்கு மிகப்பெரிய ஒரு பொறுப்பு இன்று வந்து சேர்ந்துள்ளது. தெரிவுசெய்யும் பொறுப்பு. அத்தனை எளிதாக அதை செய்ய முடிவதில்லை. அதிலுள்ள குழப்பங்கள் பலருக்கு நாற்பதை ஒட்டிய வயதுகளில்தான் வந்து முகத்திலறைகின்றன.

ஆன்மிகம், மதம், மத அரசியல் மூன்றையும் தெளிவாக எல்லைபிரித்து வரையறைசெய்துகொள்ளவில்லை என்றால் அக இருளுக்குச் சென்று சேர்ந்துவிடநேரும். அதுதான் இன்றைய சூழல்

வழக்கமாக எடுக்கப்படும் நிலைபாடு என்பது ஒட்டுமொத்தமாக இவை மூன்றுமே தேவையில்லை என்று கொள்வது. தன்னை இவற்றுக்கு அப்பாற்பட்டவனாக கற்பனைசெய்துகொள்வது. பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இன்று இந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.ஆனால் இது ஒருவகை நடிப்புதான். அறியாமையிலிருந்து எழும் நடிப்பு.

இங்கே இவ்வாழ்க்கைச்சூழலில் இந்த மொழியில் இந்த  குறியீடுகளின் நடுவே பிறந்து வளர்ந்த எவரும் இவற்றை முழுமையாக நிராகரிக்கமுடியாது. இவற்றுக்கு ‘எதிர்நிலை’தான் எடுக்கலாம். ஆனால் அது ஆன்மீகம் அற்ற, மதம் அற்ற நிலை அல்ல. ஆன்மீக மறுப்பு, மதமறுப்பு நிலைபாடுதான்.

அந்த மறுப்பு நிலைபாடே ஒரு மதம்போலத்தான். ஒரு கொள்கை, ஓர் அமைப்பு சார்ந்தே அந்நிலைபாட்டை எடுக்கமுடியும். அந்நிலைபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கவேண்டும். அந்நம்பிக்கையை முயன்று பேணிக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கான எல்லா சொற்களையும் கேட்டுக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கவேண்டும்.

ஒருவர் அந்த கொள்கையை, அமைப்பை நேர்நிலையான நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் ஆன்மிகம், மதம் ஆகியவற்றுக்கு எதிராக அதைச்சென்று ஏற்றுக்கொண்டார் என்றால் அவர் தன்னை எதிர்மறையானவராக மாற்றிக்கொள்கிறார். வாழ்க்கை முழுக்க அவருக்கு நேர்நிலைத்தேடல் என்பதே இருக்காது. அவர் எதிர்ப்பிலேயே சிந்தனையைச் செலவிட்டுவிடுவார்.

எதிர்நிலைச்சிந்தனை படைப்பூக்கம் அற்றது. புதியவற்றை கண்டடையச்செய்யும் ஆற்றல் அற்றது. எதை எதிர்க்கிறார்களோ அதையே எண்ணிக்கொண்டிருக்கச் செய்வது. இளமையில் ஓர் எதிர்நிலைச் சிந்தனைப்போக்கு வருவது இயல்பானது. ஆனால் அதிலிருந்து வெளிவந்தபின்னரே சிந்தனை தொடங்குகிறது.

ஆன்மிகத்தை புறக்கணிப்பவர் தன் வாழ்க்கையின் அடிப்படைகளைப் பற்றிய தேடலை இழந்துவிடுவார். வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகத் தொகுக்கும் பார்வையை அடையாமலாகிவிடுவார். ஆன்மிகம் மதமாகவே தொகுக்கப்பட்டு நமக்கு கிடைக்கிறது. நேற்றைய ஞானிகளின் தொடர்ச்சி, மெய்மையின் பதிவுகள் மதத்திலேயே உள்ளன.ஆகவே ஆன்மிகத்தையும் மதத்தையும் புறக்கணிக்கமுடியாது

ஆன்மிகம் மதம் ஆகியவற்றை முற்றாகப் புறக்கணிப்பவர் கலை, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை இழக்கிறார். பின்னர் அவருக்கு எஞ்சுவன ஒன்றுமில்லை. அவர் படைப்பூக்கம் அற்ற வரண்ட உலகியலாளர் மட்டுமே.

ஆனால் மதம் நிறுவனங்களாக இறுகியிருக்கிறது. நிறுவனங்கள் தெளிவான மையப்பார்வையும், அவற்றை வலியுறுத்தும் அன்றாடச்செயல்பாடுகளும் கொண்டவை. மேல்மேல் அதிகார அடுக்கு கொண்டவை. ஆசாரம் இல்லாமல் மதம் இல்லை. மதநிறுவனங்களுக்குள் சிக்கிக்கொண்டவர் ஆசாரங்களுக்குள் சிறைப்படுகிறார்.

ஆசாரங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவன. சிலருக்கு அவை தேவையாக இருக்கலாம். ஆனால் புதியனதேடும் சிந்தனையாளர்களுக்கு, மெய்மையைத் தேடும் உள்ளம்கொண்டவர்களுக்கு ஆசாரங்களைப்போல தடைகளும் வேறில்லை.

மதங்களிலிருந்து மெய்மையை, தத்துவங்களை, அழகியலை மட்டுமே பெற்றுக்கொண்டு நம்மை சுதந்திரமானவர்களாக வைத்துக்கொள்ளவேண்டியது இன்றைய நவீன மனிதனின் பெரும் பொறுப்பு. அவனுக்கு காலம் விடுக்கும் மிகப்பெரிய அறைகூவல். மெய்மையை, தத்துவங்களை, அழகியலை நாடி எந்த மதத்துக்குள் சென்றாலும் ஆசாரத்தை, அமைப்பின் ஆதிக்கத்தையே நம் தலைமேல் சுமத்துகிறார்கள். அதை அடையாளம் கண்டு உடனே மறுத்துவிடுவதே நம் அகச்சுதந்திரத்தைப் பேணிக்கொள்ளும் வழி.

மதம்சார்ந்த அமைப்புக்களிலேயேகூட ஒப்புநோக்க வெறும் கருத்தியலால் மட்டுமே கட்டப்பட்ட அமைப்புக்களே உகந்தவை. இறுக்கமான நடைமுறைகளும் ஒற்றைப்படையான பார்வையும் கொண்டவை நம்மை சிறைப்படுத்துபவை.

இதற்கு அடுத்தபடியாக உள்ளது மதஅரசியல். அதற்கு மதத்தின் ஆன்மிகமோ தத்துவமோ அழகியலோ பொருட்டல்ல. மதங்களின் ஆசாரங்கள்கூட பொருட்டல்ல. மதத்தின் அடையாளங்கள் மட்டுமே அதற்குப் போதும். அந்த அடையாளங்களைக்கொண்டு மக்களை பெருந்திரளாக திரட்டி அதிகாரத்தை அடைவதே அவற்றின் நோக்கம். அதன்பொருட்டு அவை மதத்தை காப்பாற்ற வாருங்கள் என அறைகூவல் விடுக்கின்றன. மத அரசியலில் மதமே உண்மையில் கிடையாது. அங்கே சென்றவர்கள் ஆன்மிகத்தை மட்டுமல்ல மதத்தையும் கைவிட்டவர்கள்தான்.

நாம் நம் வாழ்க்கையை புரிந்துகொள்ள, நம்மைப்புரிந்துகொள்ள,முழுமையை அறிந்துகொள்ள ஆன்மிகத்தை நாடுகிறோம்.  சுதந்திரமே ஆன்மிகத்தின் முதல் நிபந்தனை. சுதந்திரமே ஆன்மிகத்தின் முதல் இயல்பான வழி. சுதந்திரத்தை அளிப்பவரே ஆன்மிக வழிகாட்டி, கட்டுப்படுத்துபவர் அதற்கு எதிரானவர்

 

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2021 10:35

கதைகளும் நோய்க்காலமும்

அன்புள்ள ஜெ,

கொரோனா தொற்றுக்கு பயந்து நான் வாழும் தென் கலிஃபோர்னியாவில் அத்தனை பள்ளிகளும், அலுவலகங்களும் மூடப்பட்டு நாங்கள் அனைவரும் வீடுகளில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளோம். வீதிகளில் வாகனங்கள் பெரிதளவில் இல்லை, எங்கும் ஒரு அமைதி. வேறு வழியில்லாததால் நாங்கள் நால்வரும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பித்து உள்ளோம். தினமும் 2 படங்கள் சேர்ந்து பார்க்க முடிவு செய்துள்ளோம். மார்வெல் திரைப்படங்கள் பார்ப்பது என்பது எனது 14 வயது மகளால் முன்மொழியப்பட்டு 7 வயது மகனால் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை அயன் மேன் (2008) மற்றும் ஹல்க் (2008) படங்கள் பார்த்துள்ளோம். எனக்கு இப்படி வீட்டில் அடைபட்டு கிடப்பது மிகவும் பிடித்தமானதாகவே ஆகிவிட்டது.

சிறுவயதில் இருந்து கதைகள் படித்து வளர்ந்த எனக்கு எப்பொழுது பேசினாலும் எதாவது ஒரு கதை சொல்வதென்பது இயல்பானது. என் நண்பர்கள் என்னை கேலி செய்தும்  (அய்யய்யோ கதை சொல்ல ஆரம்பிச்சிட்டான் என்றும், வேணாம் என்றால் சொல்லாமல் விட்டுவிடுவாயா என்றும்) என் கதைகளை ரசித்தும் என்னை சகித்தும் வருகிறார்கள்.

சமீப காலத்தில், எங்கள் தமிழ் பள்ளியில் திண்ணை என்ற நிகழ்வில் நான் உங்கள் அறம் கதைகளை சொல்ல ஆரம்பித்து உள்ளேன். எனது நண்பர்கள் என்னை மேலும் மேலும் கதை சொல்ல மற்றும் ஏதாவது எழுத நிர்பந்திக்கிறார்கள். இப்பொழுது வீட்டில் கட்டாய ஓய்வில் (work from home) உள்ளதால் எதாவது எழுதலாம் என்று தோன்றுகிறது.

படித்த கதைகளை சொல்லுவது என்பது வெகு இலகுவாக இருந்தது ஆனால் ஒரு உணர்வெழுச்சி இல்லாமல் என்னால் எழுத முடியவே இல்லை. நேற்று அவ்வாறான உணர்வுமிகு நிலையில் நான் எழுதிய ஒரு பத்தியை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். சரியாக எழுதி இருக்கிறேனா என்பதைவிட ஏதோ எழுதினேன் என்பது எனக்கு நிறைவாக உள்ளது. இதை என் மதிப்பிற்க்குரிய உங்களுக்கு அனுப்பி வைக்க எதோ என்னை உந்துகிறது. நான் எழுதிய பத்தியின் மற்றும் நான் சொல்லிய தங்கள் கதைகளின் சுட்டிகள் தங்கள் பார்வைக்கு.

சமத்துவ உலகு படைக்கும் கொரோனா எனும் புதிய விதி

ஸ்ரீராம் காமேஸ்வரன்

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2021 10:32

வடகரோலினா,2019

வடகரோலினாவில் 2019ல் ஆற்றிய உரையும் உரையாடலும்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2021 10:31

டொமினிக் ஜீவா பற்றி எம்.ஏ.நுஃமான்

அஞ்சலி:டொமினிக் ஜீவா

தனது 94ஆவது வயதில் நண்பர் டொமினிக் ஜீவா இன்று மறைந்த செய்தி மனதைச் சஞ்சலப்படுத்துகின்றது. கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக ஜீவா முதுமையின் அரவணைப்பில், நினைவு இழப்பில் வீடு அடங்கியிருந்தார். அந்த நிலையில் ஜீவாவைப் போய்ப் பார்க்கும் மன ஓர்மை எனக்கு இருக்கவில்லை. இன்று அவரது மறைவு அதிலிருந்து அவருக்கு விடுதலை வழங்கியிருக்கிறது. கடந்த சுமார் எழுபது ஆண்டுகால ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றுடன் ஜீவாவும் பின்னிப்பிணைந்து வளர்ந்தவர். தமிழ் உலகு எங்கும் நன்கு அறியப்பட்டவர். வாழ்த்துகளும், பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர். அவருடைய வாழ்வு முழுநிறைவானது. ஒன்பது ஆண்டுகளுக்குமுன் ஜீவாவின் 85ஆவது பிறந்த நாளை ஒட்டி ஞானம் இதழில் நான் எழுதிய கட்டுரையை அவருக்கு என் இறுதி அஞ்சலியாக இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

எம்.ஏ.நுஃமான் டொமினிக் ஜீவா பற்றி எழுதிய கட்டுரை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2021 10:31

வெண்முரசு,வாசகனின் இடம்

அன்புள்ள ஜெ,

வெண்முரசு பற்றிய நல்ல அறிமுகக்குறிப்புகள் தொடர்ச்சியாக கடிதங்களாகவும் கட்டுரைகளாகவும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. எனக்கு வெண்முரசு பற்றிய அறிமுகக்கட்டுரைகளின் உதவி தொடர்ச்சியாக தேவைப்படுகிறது. ஏனென்றால் வெண்முரசு அவ்வளவு பெரியது. அதை ஒட்டுமொத்தமாக தொகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. நான் வாசிக்கும்போது வெண்முரசில் எதையாவது விட்டுவிட்டேனா என்று பதற்றம் அடைந்துகொண்டே இருக்கிறேன். ஆகவே திரும்பத்திரும்ப நினைத்துக்கொள்வேன்

ஆனால் கடிதங்களை வாசிக்கையில் ’ஆமாம், இதை நான் கவனித்தேன்’ என்று சொல்லும்படித்தான் இருக்கிறதே ஒழிய எதையும் ’அடாடா இதை விட்டுவிட்டேனே’ என்று சொல்லும்படி இல்லை. மிகமிக அபூர்வமாகத்தான் அப்படித் தோன்றியிருக்கிறது. இது நான் கூர்ந்து வாசித்திருப்பதற்கான சான்று என்று எனக்குநானே சொல்லிக்கொள்கிறேன். நானே என்னை ஆழ்ந்து பார்க்க இது உதவுகிறது. என்னுடைய வாசிப்பை நான் தொகுத்துக்கொள்கிறேன். ஆனால் எல்லாவற்றையும்விட முக்கியமானது வெண்முரசின் அபூர்வமான கணங்களை திரும்ப நினைவுகூர்வதுபோல இருக்கிறது. அது ஒரு மிகச்சிறந்த அனுபவம். ஒரு பயணத்துக்குப் பிறகு ஆல்பம் பார்ப்பதுபோல இருக்கிறது

இதில் வந்த பல கட்டுரைகள் மிக ஆழமானவை. மிகவும் தீவிரமானவை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் மூன்று கட்டுரைகள் தலைசிறந்தவை என்று நினைக்கிறேன். அவை வெண்முரசை எப்படிப்படிக்கவேண்டும், எப்படித் தொகுத்துக்கொள்ளவேண்டும் என்று காட்டுகின்றன. ராஜகோபாலன் அவர்களின் கட்டுரை. சுசித்ரா அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரைகள். ஆங்கிலம், தமிழ். நாகராஜன் அவர்களின் கட்டுரை. அவை நான்கும் எனக்கு மிக உதவியாக இருந்தன

வெண்முரசின் சிக்கல் என்னவென்றால் அவை தனித்தனி நாவல்களாகவே முழுமைகொண்டவை என்பதுதான். அவற்றுக்கு ஒரு கதைத்தொடர்ச்சி உண்டு. சில குறியீடுகள் தொடர்ச்சியாக வருகின்றன. ஆனால் கதையின் கட்டமைப்பு தனியானது. ஆகவே ஒரு நாவல் முடிந்ததுமே நமக்கு ஒரு நிறைவுணர்வு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஒரே நாவலாக வாசிக்க நம்மால் முடிவதில்லை.இந்தச்சிக்கலால்தான் பலர் வெண்முரசை படிப்படியாக ஞாபகம் வைத்திருக்கிறார்கள். இந்த கட்டுரைகள் வெண்முரசு வாசித்தவர்களுக்கு அவர்களின் வாசிப்பை தெளிவாகப்புரிந்துகொண்டு ஒட்டுமொத்தமாகத் தொகுக்க மிகவும் அவசியமானவையாக உள்ளன

இந்த எல்லா நாவல்களிலும் வெண்முரசின் மையக்கதாபாத்திரத்தின் உள்ளமும் குணச்சித்திரமும் கொஞ்சம் மாறுபடுகிறது. காண்டீபம் நாவலில் உள்ள அர்ஜுனனின் குணச்சித்திரம் அதற்கு முன்பு வந்த நாவல்களில் காணப்படவில்லை. அதில் அவன் யோகியாகவும், ஞானம் தேடிச்செல்லும் விரக்தனாகவும்தான் இருக்கிறான். ஆனால் அடுத்த நாவல்களில் அவன் மீண்டும் வில்லேந்திய போர்வீரன் ஆகிவிடுகிறான். ஒரே நாவலாக வாசிப்பவர்களுக்கு உடனே இதென்ன குணச்சித்திர உடைவு என்று தோன்றும். ஆனால் இது இரண்டு வேறுநாவல்கள் என்று ஞாபகம் வைக்கவேண்டும். ஒரே நாவலின் தொடர்ச்சி அல்ல. தொடர்ச்சி என்பது உள்தொடர்ச்சி மட்டும்தான். காண்டீபம் ஒரு மையத்தரிசனத்தை கொண்டிருக்கிறது. அர்ஜுனன் கதாபாத்திரம் அதற்கேற்ப சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த நாவல்கள் அப்படி அல்ல

இது மகாபாரதத்திலும் அப்படித்தான். பர்வங்கள் நடுவே குணாதிசயங்கள் வேறுபடுகின்றன. விராடபர்வத்திலுள்ள அர்ஜுனனை வேறெங்கும் காணமுடியாது. இந்த தொடர்ச்சியும், தொடர்ச்சியின்மையும் ஒரு புனைவுக்கு ஏன் தேவைப்படுகிறதென்பதுதான் நாம் கவனத்தில்கொள்ளவேண்டியது. நாவல் முடியும்போது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக்கொண்டு ஒற்றை அமைப்பாக மாறவும் அதனால் முடிகிறது

இந்த வாசிப்பை ஒருவர் வெண்முரசின் வாசிப்பினூடாகவே அவரே அறியலாம். இப்படி பல அறிதல்கள் வழியாக ஒருவர் வெண்முரசின் வாசகராக தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நண்பர் வெண்முரசை வாசிக்கும்போது அதிலுள்ள சாகசப்பகுதிகளை தவிர்ப்பேன், அவை சிலசமயம் காமிக்ஸ் போல உள்ளன என்று சொன்னார். இன்னொருவர் நிலக்காட்சி வர்ணனைகளை தவிர்ப்பேன், அவை தேவை என்று தோன்றவில்லை என்று சொன்னார்

நான் சொன்னேன். அவை இரண்டுமே மூலமகாபாரதத்திலும் உள்ளவை அல்லவா என்று. மூலமகாபாரதம் ஒரு குழந்தைக்கதையின் அமைப்பும் உடையது. பலபகுதிகள் காமிக்ஸ் மாதிரித்தான் இருக்கின்றன. நிலக்காட்சிகள் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பண்டைய காவியங்களில் பெரும்பகுதி நிலக்காட்சிகளைத்தான் வர்ணிக்கின்றது. அவை நிலக்காட்சி வர்ணனை சொல்லவேண்டும், நகரவர்ணனை வேண்டும் என்று காவியலக்ஷணம் சொல்கிறது. அவை ஏன் தவிர்க்கப்படவேண்டும் என்று கேட்டேன்

சாகசங்களை தவிர்ப்பவர் எதை தவிர்க்கிறார்? அந்த சாகசங்களையே குழந்தைக்கதையாகவும் எடுக்கலாம் குறியீடாகவும் எடுக்கலாம். அர்ஜுன் மெய்நாடி பயணம் செய்பவன். ஆகவேதான் அவன் மேற்கே கருங்கடல் முதல் கிழக்கே பர்மா வரை, வடக்கே இமையமுடி முதல் தெற்கே கன்யாகுமரி வரை பயணம் செய்கிறான். அவன் தேடுவது என்ன என்பதை நான்கு திசைத்தேவர்களையும் சந்தித்துக் கேட்கிறான். அது சாகசம் மட்டுமல்ல, அதற்கு ஒரு குறியீட்டுட்டுத்தன்மை உண்டு

அதேபோல ஊர்களின் வர்ணனைகளையும் ஒரு நல்ல வாசகன் ஆழமான அர்த்தம்கொண்டு வாசிக்கமுடியும். வெண்முரசு அசுரர்களை எல்லாம் மண்ணுடன் பிணைந்தவர்களாக, மண்ணிலும் சேற்றிலும் வாழ்பவர்களாக காட்டுகிறது. மச்சர்குலம் நீரில் வாழ்கிறது. அந்தந்த ஊர்களின் வர்ணனைகள் அதை நேரடி அனுபவமாக விர்ச்சுவலாக ஆக்கிவிடுகின்றன

அசுரர்களை மிருணமயர் என்றுதான் மகாபாரதம் சொல்கிறது. மண்ணாலானவர்கள். அன்னத்தாலானவர்கள். தலித் என்ற சொல்லுக்கான அர்த்தமும் மண்ணின் மைந்தர், மண்மக்கள் என்றுதான். அந்த அர்த்தம் வெண்முரசு முழுக்க வருகிறது. அதன் உச்சம் சேற்றில் அசுரர்களின் தெய்வங்கள் நீராடி களிக்கும் வண்ணக்கடல் நாவலின் கடைசிப்பகுதி.

இந்தக்கோணத்தில் பார்த்தால் எந்த நாடு தண்ணீருடன் சம்பந்தப்பட்டது, எந்த நாடு சேறுடன் சம்பந்தப்பட்டது என்பது முக்கியமானது. சௌவீர நாடுகள், சிபிநாடு, பூரிசிரவசின் பால்ஹிகநாடு எல்லாமே புழுதியும் மண்ணும் நிறைந்தவை. காந்தாரம் புழுதியாலானது. ருக்மினியின் விதர்ப்பமும் சேறாலானது. இதெல்லாம் அவர்களின் அசுர அடித்தளத்தை காட்டுகின்றன

ஆனால் மணிபூரநாடு நீராலானது. அது அவர்களின் மச்சர்பின்னணியை காட்டுகிறது. பலநாடுகளின் அமைப்பைச் சொல்லிச் செல்லும்போதே அந்நாடு நீரா மண்ணா என்று சொல்லிவிடுகிறது வெண்முரசு.

அதேபோல பலநகர்களின் வர்ணனைகள். அசுரர்களின் கோட்டைகள் உயிருள்ள மரங்களை வளர்த்து அவற்றை சேர்த்து கட்டி அமைக்கப்பட்டவையாக உள்ளன. இது சாத்தியம்தான், இது விசித்திரமாக உள்ளது. ஆனால் குறியீட்டுரீதியாக பார்த்தால் அவர்கள் காட்டையே கோட்டையாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள், காடே அவர்களுக்கு காவலாகிறது என்றுதான் அர்த்தம். காடு காவலாகிறது. மூங்கில் காவலாகிறது. கிழக்கின் திசை மூங்கில். இந்திரனின் திசை. ஆகவே மணிபூரநாடும் நாகநாடும் மூங்கிலால் ஆனவையாக உள்ளன

வெண்முரசை நாம் நம்முடைய சின்ன ரசனை, சின்ன அறிவுத்தளம் ஆகியவற்றை நோக்கி இழுத்தால் நஷ்டம் நமக்குத்தான். நம்மை நாம் ஏற்கனவே எல்லாம் நிறைந்த ஞானிகள், அறிஞர்கள், மரபு சார்ந்த எல்லாம் தெரிந்தவர் என்று பலசமயம் அபத்தமாக கற்பனைசெய்துகொள்கிறோம். அதிலிருந்தே இப்படி எனக்கு தெரிந்தவற்றைத்தான் வெண்முரசிலே தேடுவேன் என்ற அசட்டுத்தனமும், தெரியாதவை இருந்தால் அல்லது புரியாதவை இருந்தால் அதெல்லாம் தப்பு என்று சொல்லும் அசட்டுத்தனமும் உருவாகின்றன. அறிதொறும் அறியாமை கண்டற்றால் என்பது வெண்முரசு வாசகனுக்குப் பொருந்தும் ஒருவரி.

எம்.பிரபாகர்

VENMURASU- SUCHITHRA வெண்முரசு வாசிப்பு- சுசித்ரா காவியம்- சுசித்ரா

வெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்

வெண்முரசின் கட்டமைப்பு- நாகராஜன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2021 10:30

January 29, 2021

செயல் எனும் விடுதலை

வணக்கம்..

தங்களின் வாசகன் நான். எந்தவொன்றை செய்யவும் மனநிலை வேண்டும். வாசிக்கவும். அந்த மனநிலையை நமது கட்டுபாட்டில் வைத்து கொள்ள முடியுமா. மனநிலை அமைவதில் சூழலின் பங்கு அதிகம் எனில் சூழல் நமது கட்டுபாட்டில் இல்லையே. மனம் நமது கைக்கு எப்படி அகப்படும். சிறப்பாக செயல்படுபவர்கள் சாதிப்பவர்களின் மனநிலையில் ஆச்சர்யம் எனக்கு உண்டு.. அந்த மனநிலையை தானே உருவாக்குகிறார்களா அல்லது தானே உருவாகுகிறதா?

உருவாக்கிக் கொள்கிறார்கள் எனில் அந்த எண்ணம் அவர்களிடம் வருவதும் மனசெயல்தானே.. விளக்கம் அன்பு வேண்டல். தங்களின் இணைய கட்டுரைகள் 300 மேல் வாசித்திருப்பேன்.. முதற்கனல் மழைப்பாடல் முடித்து தற்போது வண்ணக்கடலில் பாதி தூரத்தில் பயணித்துக கொண்டிருக்கிறேன்.விஷ்ணுபுரம் பாதி படித்தேன். தங்களின் ஓட்டப் பயிற்சியால் நானும் அதை துவங்கியுள்ளேன்.. நன்றி.

முத்தரசு.

வேதாரண்யம்.

அன்புள்ள முத்தரசு

நான் திரும்பத்திரும்ப சொல்வது செயலுக்கான உளநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள், அதில் இருங்கள் என்றுதான்.செயலூக்கம் தானாக அமையும் என்பது மாயை. மானுட இயல்பு செயல் அல்ல, சும்மா இருத்தலே. இயல்பில் அதற்கான நியாயங்களை உருவாக்கிக்கொள்வோம். அதற்கான உளநிலைகளை பெருக்கிக்கொள்வோம். ஒவ்வொரு பொருளும் அசையாமலிருக்கவே விழைகிறது. வெளியில் இருந்து அல்லது பஉள்ளிருந்து விசை வந்து தொட்டாலொழிய அது அசைவதில்லை.

செயலூக்கம் எவருக்கானாலும் அவர்களே உருவாக்கிக் கொள்வதுதான். தொழில்செய்பவர்களைப் பாருங்கள். லாபம் என்னும் கனவு அவர்களை வெறிகொண்டு வேலைசெய்ய வைக்கிறது. வெற்றிக்காக வேலைசெய்பவர்கள் உண்டு. நான் நிறைவுக்காக வேலை செய்யுங்கள் என்று சொல்வேன்.

செயலே கல்வி,விடுதலை இரண்டுக்கும் வழி. செயலின்மை என்பது நம் எல்லைகளுக்குள் நாம் சிறையிட்டுக்கொள்ளுதல். செயலின்மையை வெறுக்கும் மனநிலையை உருவாக்கிக்கொண்டாலேபோதும், செயலை நோக்கிச் செல்லத்தொடங்கிவிடுவோம்.

செயலுக்கு என சில மூளைரசாயனங்கள் உண்டு. செயல்படுகையிலேயே அவை உருவாகின்றன. செயலில் போதையை அளிக்கின்றன. செயல்படாதபோது அவை உருவாவதில்லை. சோர்வை வெல்ல சிறந்த வழி செயலே. இன்றைய உளச்சிகிழ்ச்சையிலேயே இந்த வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

நான் செயல்பற்றிய சில கொள்கைகளை வைத்திருக்கிறேன். இவற்றை நானே என் செயல்களிலிருந்து கற்றுக்கொண்டேன்

அ. உகந்த சரியான செயலைத்தான் செய்யவேண்டும் என்று காத்திருப்பதில்லை. எதுவானாலும் செய்யவேண்டும் என்பதே என் எண்ணம். பெருஞ்செயல்கள் சிறு செயல்கள் என்னும் படிகளின் வழியாக ஏறிச் சென்றடையவேண்டியவை. ஆகவே அருகிருக்கும் செயல் எதுவானாலும், அப்போது செய்யத்தக்க செயல் எதுவானாலும் உடனே செய்யத்தொடங்கிவிடுவேன்

ஆ. செயலை ஒத்திப்போடுவதனால் அது மேம்படுவதில்லை. அந்த கால இடைவெளியில் எவ்வகையிலும் நாம் நம்மை மேம்படுத்திக்கொள்வதோ தகுதிப்படுத்திக்கொள்வதோ இல்லை. உண்மையில் ஒத்திப்போடும் அந்த கால இடைவெளியில் நாம் நம்மை பின்னுக்கிழுத்துக்கொண்டு மேலும் தகுதியும் தயாரிப்பும் குறைவுடையவர்களாகவே ஆகிறோம்

இ. செய்வதே செயலை அறியும் ஒரே வழி. ஒரு செயலை செய்ய நாம் தகுதியுடையவர்களா, அதைச் செய்ய நம்மால் முடியுமா, மேலதிக தேவைகள் என்னென்ன என்பது நாம் செய்ய ஆரம்பித்தபின்னர்தான் தெரியவரும். நம் எல்லைகள் தெரியவருவதுபோலவே நம் சாத்தியங்களும் தெரியவரும்

ஈ. முற்றீடுபாடே செயலை யோகமென்றாக்குகிறது. முழுமூச்சுடன் செய்யப்படும் செயலே செயலின் இன்பத்தையும் வெற்றியையும் அளிக்கிறது. ஆகவே பலவற்றில் ஒன்றாக ஒரு செயலைச் செய்வதில்லை. செயல்மீதான ஆற்றலைச் சிதறடிப்பதில்லை.

. நாம் நம் செயலுடன் தனித்து இருக்கிறோம்.இளமையில் ஒரு செயல் வெல்லவில்லை என்றால் நாலுபேர் என்ன நினைப்பார்கள் என்ற குழப்பம் இருந்தது. அந்த நாலுபேருக்கு நம் வாழ்க்கையில் இடமே இல்லை என தெரிந்துகொண்டபின்னரே செயலை வீச்சுடன் செய்யத்தொடங்கினேன். வெற்றி தோல்வி என்பதெல்லாம் நமக்கே தெரிவதுதான்

ஊ. தொடங்கியவை முடிக்கப்படவேண்டும். முடிக்கப்பட்ட செயலுடன் நமக்கு உறவேதுமில்லை. நாம் அவற்றை துறக்கமுடியும். ஆகவே எப்பாடுபட்டேனும் செயலைச் செய்து முடித்துவிடுவதே என் வழக்கம். நான் தொடங்கி, செய்யாமல் விட்ட செயல்கள் மிகச்சிலவே. எனக்கு நானே அந்த அறைகூவலை விட்டுக்கொள்வேன்

ஊ. எச்செயலும் வீணல்ல. செய்து முடிக்காத ஒரு சிலசெயல்கள் உள்ளன, அவைகூட எனக்கு பயிற்சியை அளித்தன. பிறசெயல்களில் வந்து இணைந்துகொண்டன. அச்செயல்களும் நான் ஈட்டிய செல்வங்களே

. நிறைவடைந்த செயல் நமக்குரியது அல்ல. செய்துமுடித்தவற்றிலிருந்து உடனே விலகிவிடுவேன். ஏனென்றால் செய்தவற்றிலிருந்து வரும் சலிப்பும் நிறைவும் செயலின்மையை உருவாக்குபவை. வெண்முரசு என்னும் செயல்முடிந்தால் உடனே நூறுகதைகள் என்னும் செயலை எடுத்துக்கொண்டேன். செயலில் இருந்து இன்னொரு செயல்வழியாக விடுபடுவதே சரியான வழி

ஜெ

அரதி செயல் தன்மீட்சி வழி ஞானம் – காந்திகிராம் நிகழ்வு வெண்முரசு- செயல்,புகழ் உள அழுத்தம் பற்றி பெருஞ்செயல் – தடைகள் செயல்படுவோர் அளிக்கும் மீட்பு 3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2 ஆகவே கொலை புரிக! செயலின்மையின் இனிய மது தன்வழிகள் இரண்டு முகம் சோம்பல், எதிர்சோம்பல் -கடிதங்கள் சோர்வு,ஒருகடிதம் உடல்மனம்
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2021 10:35

விரதம்

அன்புள்ள ஜெ,

இன்றைய அரசியலில் ஃபாஸிசம் மேலோங்கியிருப்பதையும், அதற்கு எதிரான தரப்புகளின் சிக்கல்களையும் பற்றி மூன்று கடிதங்கள் எழுதியிருந்தேன். உங்கள் எதிர்வினையை எதிர்பார்த்தேன். அக்கடிதங்கள் பிரசுரமாகவில்லை. குறைந்தது அவற்றின் மீதான உங்கள் கருத்துக்களையாவது எதிர்பார்க்கிறேன்

 

ஜி.தியாகராஜன்

அன்புள்ள தியாகராஜன்,

பொதுவாக இந்த தளத்திற்கு என்று ஒரு கொள்கை உண்டு. மிகவும் பட்டுத் தெரிந்துகொண்டது. அதாவது இங்கே அரசியல் பேசுவதில்லை.

அதாவது அரசியல் என்று நாம் பொதுவாகச் சொல்வது அவரவர் நிலைபாடுகளை மூர்க்கமாகப் பற்றிக்கொண்டு பூசலிடுவது. அதில் ஒவ்வொருவரின் ஆணவம் மட்டுமே வெளிப்படுகிறது. எவரும் எதையும் கவனிப்பதில்லை, கற்பதில்லை.

அரிதாக, இந்த தளத்தில் அரசியல் பேசப்படும். அது அன்றாட அரசியல் அல்ல. கொள்கைகள் பற்றி. பொருளியல்பற்றி. வரலாறு பற்றி. தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் நன்கு எழுதப்பட்டது என்றால் நான் ஏற்காத தரப்பும் விரிவாக இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளது. மறுப்புகளும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் பார்த்தேன், பிரசுரமானவற்றில் நான் சொன்னதைவிட என்னை மறுத்து பிறர் சொன்னதே அளவில் மிகுதி

ஆனால், தேர்தல்கள் நெருங்கநெருங்க முற்றாகவே அரசியலை தவிர்ப்பேன். தேர்தல்கால அரசியல்பேச்சு என்பது சினிமா ரிலீஸுக்கு முன் சினிமாபற்றிய பேச்சு உருவாக்கப்படுவதுபோலத்தான். சினிமாவைப்பற்றிய பேச்சு உருவாக்கப்படுவதெப்படி என்று எனக்குத்தெரியும்,

தேர்தல்கள் நெருங்குகையில் அந்த உச்சப்பிரச்சாரம் அத்தனைபேரையும் உள்ளிழுக்கிறது. அனைவரும் அதையே பேசுகிறார்கள். செயற்கையான வியூகங்கள், மையங்கள் உருவாக்கப்படுகின்றன. அத்தனைபேரும் நிலைபாடு எடுக்கிறார்கள். அந்நிலைபாடு பெரும்பாலும் மதம்,சாதி சார்ந்தது. தமிழகத்தில் அதற்கப்பால் ஓர் அரசியல் இன்று இல்லை. அது இடைநிலைச் சாதியினரின் அரசியல் என்றால் அது முற்போக்கு என நம்பவைக்கப்பட்டிருக்கிறோம்.

அந்த செயற்கையான, மிகைவிசைகொண்ட விவாதத்தில் இறங்கி ஆகப்போவது ஒன்றுமில்லை. எவரிடமும் எதையும் சொல்லிவிடமுடியாது. எதைச்சொன்னாலும் வசை ஏளனம்தான் வரும். என்னைப்போன்ற ஒருவரின் தரப்புக்கு எல்லா தரப்பிலிருந்தும் வசை வரும். என் குரலை பொருட்படுத்துபவர்கள் பொதுவாக கட்சியரசியலில் இல்லாதவர்கள். அவர்களிடம் எப்போது வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளலாம்

தீபாவளி பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்ததும் கண்ணிலிருந்து மறைந்து ஏழுஎட்டு நாட்கள் கழித்து தலைதாழ்த்தி, கண்களை கீழ்நோக்கி உருட்டியபடி, வாலை நீட்டி ஆட்டிக்கொண்டு வந்து சேரும் நாய்போலத்தான் நானும். அடுத்த ஆகஸ்ட் செப்டெம்பருக்கு பிறகுதான் அரசியலை கவனிப்பதும், செய்திகளை தெரிந்துகொள்வதும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2021 10:34

இருபெண்களின் கடிதங்கள்


ஓராண்டுக்கு முன் என நினைக்கிறேன் உங்கள் தளத்தில் “யானை”என்றொரு சிறுகதை எழுதியிருப்பீர்கள் .அது அப்படியே என் கதையே. அதன் முடிவு போலாயிருக்கும் எனக்கும்.

எத்தனையோ உளச்சோர்வுகளுக்கு ஆளாகி நானும் எனது மகனும் சென்னையின் அபார்ட்மெண்ட் ஒன்றில் …அவர் தன் வேலையின் பொருட்டு நாடுநாடாகவும் மாநிலங்களுக்கிடையேயும் பயணப்பட்டுக் கொண்டேயிருப்பார்.பெற்றோர்களுக்கும் பல்வேறு கடமைகள் .அண்டைவீட்டு பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்பவர்கள். நின்று பேசக்கூட பாவம் அவர்களுக்கு நேரமிருக்காது.

என் மகளின் வரவு அடுத்த அழகான அத்தியாயத்தை கொடுத்தது அதன்பின் 2016ல் உங்கள் தளத்தின் அறிமுகத்தாலேயே இன்றுவரை எனது தனி உலகம் அழகாக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருக்கும் வேலைச்சுமை குறைவே. இன்று குழந்தைகள் வளர்ந்து நிற்கிறார்கள் நானும் மீண்டுவிட்டேன். நான் மீண்டதற்கு காரணம் பாப்பாவும் உங்கள் எழுத்துக்களும் மட்டுமே.

இன்று வாசக நட்பு வட்டம் ஒன்று உருவாகி வந்துள்ளது. உங்கள் கதைகளை பற்றி நித்தம் விவாதிக்கிறோம் .இந்த இணை வாசிப்புக்கான நூல்களை நண்பர்கள் விவாதங்களுனூடே பகிர்கிறார்கள் .இசையை பற்றிய அறிமுகங்களை அதன் தரவுகளை அள்ளி வீசுகிறார்கள். எனது ஒவ்வொரு நாளையும் பகுதிகளாக பிரித்து இலக்கியவாசிப்பு ,அதற்கிணையான இணைவாசிப்பு ,இசையை புரிந்துக்கொள்ளவும் மற்றும் பயிற்சிக்காகவும், ஸ்லோகங்களை புரிந்துக்கொள்ளமாகவும் மாற்றிக்கொண்டுயிருக்கிறேன். அத்தனையும் நீங்கள் தான் அளித்தீர்கள் . இத்தனை தெளிவையும் உங்கள் எழுத்துக்கள் எனக்கு கொடுத்துச் சென்றன.

அம்மச்சி பசுவின் அகிடு போல கைகள் முழுவதும் எழுத்துக்களையும் சொற்களையும் நிரப்பி என் போன்றவர்களின் சிந்தனையை வளப்படுத்துகிறீர்கள். இன்று நான் சொற்களால் நிரப்பப்பட்டிருக்கிறேன். அனைத்தும் உங்களிடமிருந்து நான் எடுத்துக்கொண்டவை .எத்தனை பெரிய உலகின் வாசலுக்கு கை பிடித்து அழைத்துச் சென்றீர்கள் .அப்படிப்பட்ட உங்களின் அப்பதிவை படித்துவிட்டு சிறிது நேரம் கண் தட்டியது போல் அமர்ந்திருந்தேன். சமீபத்தில் ஒரு ஒன்பதாம் வகுப்பு பெண் எழுதியிருந்தாள் .இன்னும் அது போல் பலர் வர வேண்டியிருக்கிறது ஜெ.

இன்று நான் எனக்கான பயணங்களில் இறங்க முடியும் .என் குழந்தைகளையும் குடும்பத்தையும் சரிவர நிர்வகிக்க முடியும் .நல்ல எழுத்துக்களில் மூழ்கி திளைக்க முடியும் ,அதன் நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து தெளிந்துக்கொள்ள முடியும் .அதற்கு ஒவ்வொரு கதையையும் கேள்விகளாக கேட்டு துளைத்தெடுத்து அதன் மையத்தை சரிவர விளக்க கூடிய அருமையான நண்பர்கள் கிடைத்துள்ளனர். இலக்கிய வாசகர்கள் என்பதலேயே விவாதத்தை சரிவர புரிந்துக்கொள்ளும் மேம்பட்டவர்களாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை முடியும்களை ஒரு 5 வருடங்களுக்கு முன் நான் எழுதியிருக்கமாட்டேன்.

அனைத்திற்கும் நன்றி ஜெ.
இப்படிக்கு
வி. ஆர்

அன்புள்ள வி. ஆர்

உண்மையான இன்பம் என்பது கற்றல்- விவாதித்தல்- கற்பித்தலிலேயே உள்ளது என்பது கீழைமேலைத்தேய மரபுகளிலுள்ள நம்பிக்கை. கலைமகளே நீடித்த இன்பத்தை அளிக்கமுடியும். குறிப்பாக அறிவுத்திறனும் ஆளுமையும் உடையவர்களுக்கு. ஆனால் இங்கே உலகியல் மட்டுமே போதும் என்னும் எண்ணம் சூழலில் வலுவாக உள்ளது.

அத்தகைய சூழலில் நாம் நம்மை தனிமையாக்கிக்கொள்கிறோம். சோர்வடைகிறோம். நாம் நம்மை மீட்டுக்கொள்ளவேண்டும். நம்மை உண்மையிலேயே மகிழ்விக்கும் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும். எழுதுவதும் படிப்பதும் உங்களை நிறைக்கட்டும்.

ஜெ

கனம் ஜெயமோகன் அவர்களுக்கு ,

உங்களை எப்படி விளிப்பதென்று எனக்கு தெரியாது. அதற்கான அறிமுகமும் இல்லை. அனுபவமும் இல்லை. நான் நீண்ட நாட்களாக எதனையோ ஒன்றினை தேடிக்கிட்டு இருக்கேன்.உங்கள் சிறுகதைகளை வாசிக்க தொடங்கின பிறகு அதில் பாதி அளவை கண்டடைந்த ஒரு நிம்மதி கிடைத்திருக்கு.

எனக்கு கேரள வரலாறு மற்றும் வாழ்க்கை முறை பற்றி அறய ஆசை .உங்கள் எழுத்துக்கள் மூலமாக ஏதாே அதனை தொட்டு விட்ட உணர்வு. இன்னும் உங்கள் சிறுவயது நினைவுகளை எழுதுவீர்களா? அந்த அழியாத நினைவுகளுக்குள் நானும் வாழ்ந்தயாய் எண்ணிக்கொள்கிறேன்.

எனக்கு வாசிக்க பிடிக்கும். வாங்கி படிக்கும் அளவுக்கு வசதிகள் இல்லை. இலங்கையில் இருந்து நன்றி கூறிக் கொள்கின்றேன் உங்கள் நினைவுக் கதைகளுக்கு.
நன்றி

ஆர்

அன்புள்ள ஆர்

என் எழுத்துக்களில் பெரும்பகுதி என்னுடைய இணையதளத்திலேயே இலவசமாக படிக்கக் கிடைக்கிறது. படியுங்கள்.

என்னுடைய எழுத்துக்கள் எவருக்கும் கிடைக்கமுடியாதவையாக இருக்கக்கூடாதென்பது என் எண்ணம். ஆகவே அச்சில்வந்த நூல்களுக்கும் இலவசப்பிரதி இணையத்தில் உண்டு

வாழ்க்கையில் எதையாவது தேடுபவர்களுக்கு துயரும் சலிப்பும் உண்டு. ஆனால் அந்த தேடல் இல்லாதவர்களுக்கு இருக்கும்அர்த்தமின்மை இருக்காது என நினைக்கிறேன்

நீங்கள் உங்கள் எண்ணங்களை எழுதலாம். எழுதுவ்து உங்களை தொகுத்துக்கொள்ள உதவும். கதைகள் கூட எழுதலாம்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2021 10:32

எண்ணும்பொழுது -கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

எண்ணும்பொழுது கதைக்கு நுட்பமான வாசிப்புகள் வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. உங்கள் முக்கியமான எல்லா கதைகளுக்கும் வாசிப்புகள், விவாதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் அவற்றை வாசிக்கும்போது நான் வாசித்த எதையாவது இவர்கள் வாசிக்காமலிருக்கிறார்கள என்றுதான் பார்த்தேன்.

அதில் எனக்கு தோன்றிய ஒன்று கடலுக்கும் போம்பாளருக்குமான உறவு. கடலில் வணிகம்செய்பவர், கடலில் அலைபவர் அவர். கடல் அவரை அவளிடமிருந்து பிரிக்கிறது. அந்தக்கடல் அலைகளால் சூழும்போது அந்த செடியை பத்திரமாக பிடித்துக்கொண்டு நீந்தி கரையை அணுகிவிடுகிறார். அப்போது ஒரு பூவும் உதிரவில்லை.

பூ உதிர்வதெல்லாம் கரையில்தான். பூ உதிர்ந்ததும் கடலில் மூழ்கி அடியில் சென்றுவிடுகிறார். திருவீட்டில் கன்னி தீயில் விழுகிறாள். வீட்டு தீபத்திலிருந்து சிதைத்தீக்கு செல்கிறார்.

எஸ்.ஆர். சடகோபன்

 

அன்புள்ள ஜெ

எண்ணும் பொழுது உடலுள் உள்ளமேன கதைக்குள் கதையமைந்த கதை. உடல் உரு கொண்டது என்பதாலேயே எல்லை கொண்டது. அருவானதாலேயே அளவின்மையே அளவே எனக் கொண்டது உள்ளம். கணம் தோறும் உள்ளத்தை நிகழ்த்தும் உடல் அதை காண்காணிக்கவும் செய்கிறது. அவன் சொல்லும் கதை அவர்களின் ஆழுள்ளத்தை பிரதிபலிக்கிறது. அது கதையாக இருப்பதே சொல்லப்பட முடியாது என்பதால் தான். உண்மை மூள் என்பதாலேயே அதை கண்டபின்னர் வாழ முடியாது.

இந்த கதையை வாசித்த பின் ஞாபகம் வந்தது ஆழி சிறுகதை தான். இவ்விரு  கதைகளும் ஆண் பெண் ஆடலை பேசுகின்றன. இவற்றின் பொதுவான அம்சங்களில் இரண்டு கடல் இரண்டிலுமே பெரும் படிமமாக வருகிறது. இன்னொன்று கதாப்பாத்திரங்களுக்கு பெயரே இல்லை. அதிலும் எண்ணும் பொழுது ஓர் உச்சம். படுக்கையறை தவிர வேறு எந்த இடமும் இல்லை. அதை நம் பண்பாட்டுடன் இணைப்பது அந்த தாலி தான். அதை தாண்டி நேரடியாக மானுட தளத்திற்கு சென்று விடுகிறது கதை.

அவர்களின் அந்த ஆடலை பார்க்கும் போது மழைப்பாடலின் ஆரம்பத்தில் வரும் அம்மையும் அப்பனும் சேர்ந்தாடும் காட்சியில் வரும் வெல்லாவீழா ஆடல் என்ற சொல்லே நினைவுக்கு வந்தது.

போம்பாளர் கொடுக்கும் மோதிரமும் கன்னி கொடுக்கும் முல்லை கொடியும் இரண்டு படிமங்கள் ஆகின்றன. அந்த மோதிரம் ஆண் பெண்ணை பொருளென அணிந்து கொள்ள வேண்டும் என்று விழைவதன் என்பதன் குறியீடு எனலாம். அவர் கன்னியின் பிம்பத்தை பெரிதும் விரும்புகிறார். ஆடியில் நிறுத்தி அழகு பார்க்கிறார். அவனும் அவ்வாறு தான் செய்கிறான்.

ஆணின் பகற்கனவுகளை நோக்கினால் ஒன்று அறியலாம் ஒவ்வொரு முறையும் உடல்களை மாற்றுவானே ஒழிய அத்தனையிலும் தான் விரும்பிய அந்த ஒற்றை உள்ளத்தை நிரப்புவான். பெண் உடலை பொன்னென தழுவி மகிழ்பவன் அவளின் உள்ளத்தையும் உடலை போலவே வளைக்க ஆசை கொண்டுள்ளான். அவன் பார்த்த, கேட்ட கதைகளை, கவர்ந்த விஷயங்களை அவளிடம் சொல்லி கொண்டே இருக்கிறான். கதை சொல்லி கொண்டிருக்கையிலேயே அவள் கவனிப்பிற்காக ஏங்குகிறான். அவள் பலமுறை புறக்கணித்தும் ஏன் இன்று திரும்பவும் சொல்கிறான். ஒருவேளை என்றேனும் அவளை வென்றெடுக்க முடியும் என்ற கனவால் இருக்கலாம்.

ஆனால் போம்பாளர் கன்னியை திருமணம் செய்த கதையை சொன்னவுடன் அவளில் ஏற்படும் சிரிப்பு ஆழத்தில் அவளும் அதை அறிந்திருக்கிறாள் என்பதை காட்டிவிடுகிறது. அவள் அவனை அதுவரை கொண்டுவந்து சேர்த்திருப்பதை அவன் உணருமிடத்தோடு முல்லை கொடியை இணைத்து கொண்டால் ஒரு திறப்பு. மரம் கொடியை ஏற்றி கொள்வதாலேயே தான் வலிமையானது என்று நினைக்கிறது. ஆனால் முழுதாக கொடி ஏறிய மரம் என்பது மரம் மட்டுமல்ல கொடியும் தான். பெண் விழைவது ஆணை கொடியென சுற்றி அவனை தானென உணர செய்து பூத்து மலரும் தருணத்தை போலும். மரம் சரியலாம் குழைவே நெளிவே நீரே என்றான கொடி சரிவதுமில்லை சாய்வதுமில்லை.

மனசறிஞ்சு மனசறிஞ்சு கோணச்சியாய் போனேன் என்ற வரி முக்கியமானது. ஒவ்வொரு முறை மனதை நோக்கி அறியும் போது அதன் கோணல்களே. அந்த கோணல் காம குரோத மோகமாக வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த கோணல்களே படைப்பை நிகழ்த்துகின்றன ஆனால் அதை கோணலை மட்டுமே அறிவது கோணச்சி சென்றடையும் ஒருவகை மர்மத்தை. அந்த கோணமலை எதுவாக இருக்கலாம். இருளாக ஒளியாக இருப்பாக இன்மையாக எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம் நாமறியாத அந்த ஆழம்.

கோணச்சி சொல்லும் இன்னொரு வரி பறக்கிறது நடந்தா பதிஞ்ச காலை எண்ணும் அம்மையே. அந்த வரி உறவுகள் என்பதன் பின்னால் உள்ள மொத்த இலட்சியவாதத்தையும் சொல்லிவிடுகிறது. கணியன் பூங்குன்றானரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரி நாம் செல்ல இலட்சிய உலகத்தை சொல்கிறதென்றால் இந்த வரி நாம் நின்றுள்ள இலட்சிய கனவை சொல்கிறது. எண்ணி கணக்கிட்டால் உறவு இல்லை வணிகம். அத்தனை உறவுகளும் எண்ணாது இருக்கும் பெருங்கனவு தான்.

போம்பாளரை சுழற்றியடிக்கும் கடல் விலக்கி செல்ல துடிக்கும் இயற்கை விசை எனலாம். அதன் மறுவடிவம் தான் கடலுங்கரை கன்னி. அவர்கள் பிரிந்து சென்ற பின் இருவரும் சொர்க்கத்துக்கு செல்கிறார்கள். வழமை மாறி புதுமை பூக்கும் இடங்களில் ஒன்று. எண்ணியதால் கடைந்தெடுத்த சந்தேக நஞ்சை உண்டு சுவைக்கிறார்கள். ஏனெனில் மிக சிறந்த நஞ்சென்பது அமுதென்று சுவைப்பது. மனிதன் துயரில் இன்பம் கொண்டு துயரை பெருக்கி நிறைபவனும் கூட.

அன்புடன்

சக்திவேல்

எண்ணும்பொழுது- கடிதங்கள்6 எண்ணும்பொழுது- கடிதங்கள்-5 எண்ணும்பொழுது- கடிதங்கள்-4 எண்ணும்பொழுது- கடிதங்கள்-3 எண்ணும்பொழுது- கடிதங்கள்-2 எண்ணும்பொழுது- கடிதங்கள் -1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2021 10:31

மூங்கில் மிகைமலர்வு, வெண்முரசு- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

கடந்த வாரம் பொங்கல் விடுமுறையில் கபினிக்கு செல்ல திட்டமிட்டோம். கபினியின் கோஸ்ட் எனப்படும் அந்த கருஞ்சிறுத்தையை காண்பதென்பது இளைய மகன் தருணுக்கு வாழ்நாள் ஆசை. கோவிட் தொற்றுக்காலமென்பதால்  ரயில், பேருந்துப் பயணங்களை தவிர்த்து மகன்கள் இருவருமே இப்போது ஓட்டுநர் உரிமம் வாங்கிவிட்டதாலும், பொள்ளாச்சி-அன்னூர்-த்தியமங்கலம் வழியே மைசூருவுக்கு செல்ல அதிகபட்சமே 200 கிமீ தானென்பதால்  காரிலேயே சென்றோம்.

அன்னூரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் 27 கொண்டை ஊசிவளைவுகளுடன் இருந்த மலைப்பாதை முன்பு போலல்லாது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் சரக்கு லாரிகளினால் எந்த இடையூறுமின்றி செல்ல வசதியாக அகலப்படுத்தப்பட்டிருந்தது. மலைஇறங்கினதும் வந்த கல்லும் மண்ணும் குழிகளும் மட்டுமே இருந்த மிகக்கடினமான சந்தியமங்கலம்-மைசூர்  காட்டுப்பாதை சுமார் 40 கிlலோமீட்டருக்கு , நான்கு சக்கரங்கள் இருந்த பெரிய அளவிலான அரவை இயந்திரத்துக்குள் அமர்ந்து பயணிக்கும் அனுபவத்தை அளித்தது.  ஆனால் சொல்லி வைத்துக்கொண்டதுபோல்  காடெங்கும் மூங்கில்கள் பொன்னாய் பூத்து நிறைந்திருந்ததால். பாதைகொடுத்த சிரமம் தெரியவேயில்லை.

மூங்கில் பூப்பதை பார்ப்பது அரிது. நான் இரண்டாம் முறையாக இப்படி முழுக்காடும் நிறைந்து பூத்திருக்கும் மூங்கில்களை  பார்க்கிறேன். 2016’ல்  தாவரவகைப்பாட்டியல் பயிற்சியின் பொருட்டு அமைதிப்பள்ளத்தாக்கு சென்றிருக்கையில் காடெங்கும் மூங்கில் பூத்திருந்ததை முதன்முதலில் பார்த்தேன். காட்டின் பெயர் சைரேந்திரி என்பது இன்னும் அக்காட்டுடன் அணுக்கமாக வைத்தது. இனி வாழ்நாளில் மற்றோரு பூப்பை பார்க்கமாட்டேன் என்றே நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு மீண்டும் இவற்றை காணும் படி அருளப்பட்டிருக்கிறது.

பொன்னிற மலர்களுடன் கிளைத்த உலர் மஞ்சரிகள் 30’லிருந்து 40 மீட்டர் உயரத்துக்கு காடெங்கும், வழியெங்கும் நிறைந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஆனால் உடன் பயணித்த ஏராளமான வாகனங்களில் இருந்த ஒருவர் கூட மூங்கில் பூத்திருந்ததை நிமிர்ந்து பார்க்கவில்லை. இனியொருமுறை இந்நிகழ்வை அவர்களின் வாழ்நாளில் பார்ப்பது அரிது என்று தெரியாமல் சாலையோரம் வெகுசாதாரணமாக தென்பட்ட புள்ளிமான்களையும் யானைகளையும்  மட்டுமே வளைத்து வளைத்து படம் பிடித்தாகள் .எனக்கு ஆதங்கமாக இருந்தது அடடா, ஒரு அரிய நிகழ்வை தவற விடுகிறார்களே என்று.

மூங்கில்கள் வாழ்நாளின் இறுதியில் ஒரே ஒரு முறை மட்டும் பூத்து பின்னர் அழியும்  Monocarpic வகையை சேர்ந்தவை.   48-ருந்து 50 ஆண்டுகளில் மூங்கில்கள் இப்படி   முதலும் கடைசியுமாக மொத்தமாக பூத்து விதைகளை ஏராளமாக உருவாக்கிவிட்டு பின்னர் மடிந்துவிடும். மூங்கில் பூப்பதென்பது உண்மையில் மூங்கில் அழிவதுதான்.

மூங்கிற் சாவு  எனப்படும் மூங்கிலின் இத்தகைய மிகு பூப்பு பஞ்சத்துக்கும் அழிவிற்குமான அறிகுறி என்றே இந்தியாவில் பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் மூங்கில் பூப்பிற்குப் பிறகு மண்ணில் விழுந்த மிகுதியான விதைகளை பெருச்சாளிகள், எலிகள் ஆகிய கொறிக்கும் உயிர்கள் உண்டு, பல்கிப்பெருகி பிற தானியங்களையும் உண்ணத் துவங்குவதால்தான்   உணவுத்தட்டுப்பாடு வருமே ஒழிய இந்த மிகுபூப்புக்கும் பஞ்சத்துக்கும் எந்த தொடர்புமில்லை என்றே தாவர அறிவியல் சொல்லுகின்றது  மூங்கில் பூக்கும் காலத்தையொட்டி எலிகள் மற்றும் பெருச்சாளிகளுக்கு கூடுதல் இனப்பெருக்க உந்துதல் உண்டாகுமென்றும் சொல்லப்படுகின்றது.

மகாபாரதத்தின் ஒரு வடிவம், ஜெயத்ரதன் திரெளபதியை இழுத்துக்கொண்டு போகும்போது திரெளபதி ’’மூங்கில் பூத்தபின் வரும் அழிவைபோல நீ அழிவாய்’’ என்று சாபமிட்டதாக சொல்லுகிறது. வெண்முரசு காண்டீபத்திலும் இது குறிப்பிடப்பட்டுளது. கலிகன், நாகர்களை எதிர்த்து  சித்ராங்கதன் போருக்கு புறப்பட்டு போயிருக்கும் சமயத்தில் ஃபல்குனையிடம் “மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் பெற்று பெருகுவது போல அவர்கள் வளர்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பல நூறுபேர் படையென எழுந்து வருகிறார்கள்” என்பான். அந்த ஒரு அத்தியாயத்திலேயே பல இடங்களில் மூங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். (காண்டீபம் – 20, பகுதி மூன்று : முதல்நடம் – 3)

இப்படி பலநூறு கிலோமீட்டர் லைவிலிருக்கும் ஆயிரக்கணக்கான் மூங்கில்களும் சேர்ந்து ஒரேசமயத்தில் மலரும் விந்தையை தாவர அறிவியலாலும் சரியாக விளக்க முடிவதில்லை. Phenology எனபடும் தாவரங்களின் புதுத்தளிர்களும் மலர்களும் உருவாகும் காலத்திற்கான தனி அறிவியல்பிரிவு,  இன்னும் இதைக்குறித்து ஆய்வு செய்தபடியேதான் இருக்கிறது.

மூங்கில்களின் அடியிலிருக்கும் கிழங்குபோன்ற பகுதிகளில் தலைமுறைகளாக சேமிக்கப்பட்டிருக்கும் நினைவுக்குறிப்புக்கள் அதே இனத்தைச்சேர்ந்த பிற மூங்கில்களுக்கும் பூக்கும் சமயத்தை குறித்த தகவல்களை அனுப்பும். அல்லது எப்படியோ தெரிவிக்கும் சாத்தியமிருக்கின்றது என்று மட்டுமே இப்போதைக்கு ஆய்வுகள் அனுமானித்து சொல்லுகின்றன.

இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் மிகுபூப்பு நிகழ்வை கொண்டிருக்கும் மூங்கில், குறிஞ்சி போன்றவை Plietesials எனப்படும். குறிஞ்சியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மலர்பவையும், 9 வருடங்களுக்கு ஒருமுறை மலர்பவையும் அவற்றிற்குள் எந்த குழப்பமுமில்லாமல் மிகத்துல்லியமாக அதே காலத்தில் மலருகின்றன என்பது பெரும் அதிசயமே!

பூத்த மூங்கில் மஞ்சரிகளில் மகரந்த சேர்க்கை நடந்து பெண்பூக்கள் கருவுற்று, பின்னர் விதைகள் முற்றி விழுந்து  அவற்றிலிருந்து புதிய மூங்கில்கள் வளர சில ஆண்டுகளாகிவிடும். அதுவரை மூங்கிலின் இலைகளையும் குருத்துக்களையும் விரும்பி உண்ணும் அக்காட்டின் யானைகள் அவ்வுணவுக்காக காத்திருக்க வேண்டியதுதான். சாலையோரம்  பச்சைஇலைகள ஒன்று கூட இல்லாமல் பழுத்துதிர்ந்து கொண்டிருக்கும் இலைகளையும் பொன்மஞ்சரிகளையும் கொண்டிருந்த ஒரு மாபெரும் மூங்கில் புதருக்கருகே ஒற்றைக்கொம்பன் யானையொன்று தலை குனிந்தபடி தும்பிக்கை நுனி அசைவதை பார்த்துக்கொண்டு அசையமல் வெகுநேரம் நின்று கொண்டிருந்தது என்னமோ துக்கமாக இருந்தது எனக்கு

லோகமாதேவி

கபினி காட்டில் நாற்புறமும் திறந்திருந்த ஜீப்பிற்கு வெகு அருகே நிதானமாக நடந்தபடி கூடவே வந்துகொண்டிருந்த அத்தனை பெரிய புலி எனக்கு பெரிய பரவசத்தை ஏற்படுத்தவில்லை. காடுமுழுக்க பொன்போல பூத்திருந்த மூங்கில்களை இரண்டாம் முறையாக பார்த்ததே பெரும் மகிழ்வை நிறைவை கொடுத்தது.இனி இதே வழியில் இன்னும் 50.60 ஆண்டுகளுக்கு பிறகு மகன்கள் அவர்களின் பேரக்குழந்தைகளுடன் செல்லும் போது மீண்டும் மூங்கிலின் மலர்தலை பார்ப்பார்களாக இருக்கும்.

அன்புடன்

லோகமாதேவி

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2021 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.