Jeyamohan's Blog, page 1058

January 27, 2021

வல்லினம் செயலி

இணைய இதழ்களில் முதல்முறையாக மலேசியாவின் வல்லினம் ஒரு செயலியை வெளியிட்டுள்ளது. இதை கைபேசியில் நிறுவிக்கொண்டால் வல்லினம் அதில் தானாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும். அச்செய்தியையும் அறிவிக்கும். அவ்விதழின் அத்தனை பகுதிகளையும் படிக்கவும் முடியும்

தரவிறக்க

https://play.google.com/store/apps/details?id=appvallinamcommyversion2.wpapp

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2021 10:31

இளநாகன் ஏன்?

அன்புள்ள ஜெ,

வண்ணக்கடலில் வரும் இளநாகன் கதைக்கு எவ்விதம் தேவைப்படுகிறான் என்று எனக்கு பெருங்குழப்பமிருந்தது. நீங்களே ஒரு கேள்வி பதிலின் போது, வண்ணக்கடல் முக்கிய கதைமாந்தர்களின் இளமையைப் பற்றி சொல்வது, எனவே ஒரு தொகுத்துக் கூறும் வசதிக்காக அக்கதைகளை வேறு ஒருவர் கேட்பது போல அமைத்திருக்கிறேன் என்றிருந்தீர்கள்.

அது சரி தான். அப்படி ஒரு பாத்திரம் இல்லையென்றால் பீமன், துரியோதனன், அர்ஜுனன், துரோணர், கர்ணன், ஏகலவ்யன் கதைகளைத் தொகுத்து ஒரே மூச்சில் சொல்லியிருக்க முடியாது. ஆனால் இளநாகன் அவ்வளவுக்கு மட்டும் தானா? அப்படி ஒருவன் தேவையென்றால் முதற்கனலின் ஆஸ்திகன் போல ஏதேனுமொரு பிற்கால கதாபாத்திரத்திற்கு அதன் தாய் கூறும் கதையாகவே அதை வைத்திருக்கலாமே! ஏன் பாரதத்திற்கே சம்பந்தமில்லாத ஒருவனை, அதுவும் ஓர் தமிழ் பாணனை வைத்து துவக்க வேண்டும்?

இருவிதமாக இதற்கு பதில் தேறலாம். ஒன்று அந்த இளநாகன் நீங்கள் தான். உங்களின் பாரத தரிசனங்களைத் தொடர்ந்தவர்களுக்கு இது இன்னும் தெளிவாகத் துலங்கும். வண்ணக்கடலின் நிலக்காட்சிகள், நகர் வர்ணனைகள் தங்களின் அருகர்களின் பாதை முதலான பயணக் கட்டுரைகளில் வந்தவற்றின் விரிவாக்கம் தான். குறிப்பாக அந்த மஹுவா கள்ளைக் குடித்து விட்டு மயங்கிக் கிடக்கும் ஓர் இளைஞனை இரு பெண்கள் தெளிவாக்க முயலும் காட்சி. இது நீங்கள் ஏற்கனவே எழுதியது தான். கழிந்த இருபத்தைந்து வருடங்களாக தங்களின் பயணத்தில் பாரதமும் இடம்பெற்றிருக்கிறது. குமரியில் துவங்கி வேறு வேறு வழிகளினூடாக நீங்கள் கண்டடைந்த அஸ்தினபுரயைத் தான் எழுதியிருக்கிறீர்கள்.

இளநாகன் கீரனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, கீரன் ‘ஏதேது அப்படியே அஸ்தினபுரி வரை சென்று விடுவீர்கள் போல’ என்று சொல்லும் சொல் தான் அவனக்கு அஸ்தினபுரி செல்ல தூண்டல். உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளின் சொல் தான் வெண்முரசு எழுதத் தூண்டுதல் என்றிருந்தீர்கள்.

இரண்டாவது அந்த இளநாகன் வாசிக்கும் நாங்களும் தான். ஒவ்வொருவாசகரும் தான். இளநாகன்  ஓர் வடநாட்டு சூதனிடம் கேட்கிறான், ‘அஸ்தினபுரிக்கு எப்படி போவது? அது நெருங்குவதை எப்படி கண்டுபிடிப்பது?’. அதற்கு அச்சூதன் சொல்கிறான்,’வழி, சூதர் பாடல்கள தான். அஸ்தினபுரி நெருங்க நெருங்க சூதர் பாடல்களில் உண்மை கூடிக் கொண்டே வரும்’. அதற்கேற்றார் போல அஸ்தினபுரியைப் பற்றி நல்ல விஷயங்களே மதுரையிலும், புகாரிலும் சொல்லப்படுகின்றன. அஸ்தினபுரி நெருங்க நெருங்க நாவல் புறக்கணிக்கப் பட்டவர்களின் கதையாக மாறுகிறது.மற்றொரு விதத்தில் உண்மை கூடுகிறது. இதுவும் இயல்பானது தான்.

இந்தியாவில் ஐரோப்பாவின் மேன்மைகள் மட்டுமே கேட்டிருக்கிறேன். இங்கே வந்த பிறகு தான் உண்மையை அறிகிறேன். மேலும் அஸ்தினாபுரம் என்பதே ஓர் பெரிய குறியீடு தான். இங்கே அஸ்தினபுரி என்பது மகாபாரதத்தைத் தான் குறிக்கிறது. பாரதத்தைப் பற்றி படிக்கும் தோறும், கேட்கும் தோறும் நமக்கு பாரதம் துலங்கி வரத்துவங்கும். வெண்முரசிற்கு முன்னர் இருந்ததை விட தற்போது என்னுடைய புரிதல் அதிகமாயிருக்கிறது. ஆனால் நான் பாரதத்தை முற்றாக அறிந்து கொள்வேனா? நிச்சயம் எனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் அதை அறிந்து கொள்வேன். ஒவ்வொரு வாசகரும் அவ்வாறே. ஜெவும் அவ்வாறே.

அதைத் தான் வண்ணக்கடலின் கடைசி அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது. ‘சூதரே, மாகதரே, ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் சென்ற அஸ்தினபுரி எது? அதை பிறர் சென்றடையமுடியாது. ஒவ்வொருவரும் அவரவருக்குரிய அஸ்தினபுரியையே சென்றடைகின்றனர். செல்லும் வழியில் சிறகுதிர்ந்து விழுபவரும் அதிலேயே உதிர்கின்றனர். செல்லாது கருவறையிலேயே தங்கிவிட்டவர்களும் அதையே உணர்கின்றனர்.’

மகாபாரதம் என்பது என்ன? வெறும் கதையா? அது ஐந்தாம் வேதம். நம் புண்ணிய பூமியின் தத்துவங்கள் அனைத்தும் முயங்கிய ஓர் வெளி. மற்றொரு விதத்தில் ஒட்டுமொத்த பாரதமும் பங்கேற்ற ஓர் நிகழ்வு தான் பாரதப் போர். அப்படியென்றால் அஸ்தினபுரியின் நிகழ்வுகள் பாரதத்தின் ஒவ்வோர் பகுதியிலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்பதும் மிக முக்கியம். அவற்றைப் பற்றி பிற்கால நாவல்கள் பேசும் பொழுது இந்த நிலக்காட்சிகள் மேலும் முக்கியம் பெறலாம்.

என்னை இளநாகன் என உணர்ந்த கணம் வண்ணக்கடல் மொத்தமாத் திறந்தது. அங்கங்கு தனித்து நின்றவையனைத்துமே ஓர் ஒழுக்குக்குள் வந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இளநாகன் ஓர் இன்றியமையா பாத்திரமே. அன்புடன்,

அருணாச்சலம், நெதர்லாந்து

அன்புள்ள அருணாச்சலம்,
எழுத ஆரம்பிக்கும்போது உண்மையில் திட்டம் ஏதும் இருக்காது. அல்லது நம் மேல்மனதுக்குத் திட்டங்கள் இருக்காது. ஆழ்மனது ஏதோ திட்டமிட்டிருக்கும்.

இளநாகன் மகாபாரதத்தின் தொன்மங்களும் தத்துவங்களும் விளைந்த நிலவியலைப்பற்றி ஆராயும் ஒருவன். தொன்மங்கள் பெருகிச்செல்லும் வெளியில் அவை முளைத்த மண்ணை முதலில் சொல்லியாகவேண்டியிருக்கிறது. ஆகவே அவன் வருகிறான் என நானே கண்டுகொண்டேன்.

மேலும் இங்கே வராவிட்டால் இனி போர் முடிந்தபின்னர்தான் பாரதம் வர முடியும். பாரதக்கதையும் பாரதநிலமும் ஒன்றே என்பது என் தரிசனம். நான் நடந்து அறிந்த தரிசனம். அது நாவலில் வந்தாகவேண்டுமல்லவா.

ஜெ

Monday, October 13, 2014
இளநாகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2021 10:30

January 26, 2021

வெண்முரசு கூடுகை- புதுவை

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 39 வது  கூடுகை 30.01.2021 சனிக்கிழமை  மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம் .

கூடுகையின் பேசு பகுதி

வெண்முரசு நூல் வரிசை 4 “நீலம்” ,

பகுதி  ஒன்பது.

1.அணிபுனைதல்

2.காத்திருத்தல்

3.கருத்தழிதல்

கடத்தல்

பகுதி பத்து:

1.வழி

2.விழி

 

இப்பகுதிகல்  குறித்து நண்பர் கடலூர் சீனு  உரையாடுவார்  .

 

இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,

27, வெள்ளாழர் வீதி ,

புதுவை -605 001

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 21:34

புனைவு வாசிப்பு தவிர்க்கமுடியாததா?

வணக்கம் ஐயா

நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். பள்ளிக்காலம் முதல் நாளீதழ் மட்டுமே வாசித்து வந்தவன். இப்போது புத்தகம், முகநூல் என வாசிப்பு தொடர்கிறது. அதுவும் தொடர் வாசிப்பாளனும் கிடையாது. அரசு சித்த மருத்துவராக பணி காரணமாக நேரம் கிடைக்கும் போது மட்டுமே வாசிப்பு!!! உங்களது இணையத்தினை நேரமிருக்கும் வாசித்தும் இருக்கிறேன். பல பதில்கள் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் என்பதால், இக்கேள்வியை கேட்கிறேன்.

பொதுவாக வாசிப்பு என்பது புனைவில் ஆரம்பித்து அபுனைவில் தொடர்வதாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் என்னுடைய நிலை என்பது நேர் எதிராகவே உள்ளது. நான் வாங்குவது அபுனைவு சார்ந்த நூல்களே!!!! சரித்திர நாவல்கள் மட்டும் சற்று பிடிக்கும்!!!! பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மட்டுமே ஆர்வத்தோடு படிக்க முடிந்தது!!! அதனை தொடர்ந்து சில வரலாற்று நாவல்களை படித்த ஆரம்பித்த போது…. எப்போதும் முடியும்? என்ற நிலைக்கு சென்று விட்டேன் !!! கதை, கவிதை என எந்த புத்தகத்தையும் வாங்கியதில்லை!!!

எனது வாசிப்பு பட்டியல் என்பது முழுவதும் அபுனைவு சார்ந்த நூல்களாகவே அமைகிறது. இது சரியா? புனைவில் பெறக் கூடிய தகவல்களை, அபுனைவின் வழியாகவே பெற முடியும் என்று மனம் நம்புகிறது. சமூக வைத்திருக்கும் பிம்பத்திற்கு ஏதிராக எனது மனம் எண்ணுவதால், எனக்கு குழப்பம் வந்து விடுகிறது. விளக்கம் அளித்தால் நன்று.

மரு.பெ.இரமேஷ்குமார்

வேதாரண்யம்.

அன்புள்ள இரமேஷ்குமார்,

ஒருவரால் புனைவுநூல்களை வாசிக்கமுடியவில்லை, அவருடைய உள்ளம் அதில் ஓடவில்லை என்றால் அது அவருடைய குறைபாடு அல்ல. அது அவருடைய அறிவியக்கத்தில் எந்தச் சிக்கலையும் உருவாக்குவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான மூளைநரம்பமைப்பு, அதற்கேற்ற உளஅமைப்பு உள்ளது. தர்க்கபூர்வமான அறிதல்முறை ஓங்கிய உள்ளம் கொண்டவர்களால் புனைவுகளை வாசிக்கமுடியாது. தர்க்கபூர்வ அறிதல்முறை குறைந்தவர்களால் புனைவற்ற நூல்களை வாசிப்பது இயலாது

அதற்குமுன் நீங்கள் முதலில் சரியான புனைவுநூல்களை வாசித்தீர்களா என உறுதிசெய்துகொள்ளவேண்டும். ஏனென்றால் பொன்னியின்செல்வன் போன்ற எளிய பொழுதுபோக்கு நூல்களை வாசிக்கமுடியவில்லை என்று சலிப்புடன் சொல்லும் பலருக்கு தீவிரமான புனைவுநூல்கள் பிடித்திருப்பதை கண்டிருக்கிறேன். உங்களுக்கு வரலாற்றில் ஆர்வமிருக்கிறது. அவ்வரலாற்றை அதேயளவுக்கு தீவிரமாக பேசும் புனைவுநூல்களை வாசித்துப்பாருங்கள்.

புனைவிலக்கியத்தில் வெவ்வேறு படிநிலைகள் உள்ளன. அனைத்தும் ஒரே போன்றவை அல்ல. பொன்னியின் செல்வன் அடிப்படை வாசிப்புக்கானது. சாண்டில்யனின் நாவல்கள் இன்னும்கொஞ்சம் விரிந்த களம்கொண்ட சிக்கலான கதைக்கட்டமைப்பு கொண்ட ஆக்கங்கள். இன்னும் தீவிரமாக வரலாற்றைப் பேசும் காவல்கோட்டம், மானுடம்வெல்லும் போன்ற நாவல்களை வாசித்துப் பாருங்கள். வரலாற்று உருவாக்கத்தின் தத்துவச் சிக்கல்களைப்பேசும் விஷ்ணுபுரம் அடுத்தபடி. இவை எவையுமே கவரவில்லை என்றால்தான் உங்களுக்கு புனைவு ஏற்புடையதல்ல என்று பொருள்

அத்துடன் புனைவை சரியானபடி வாசிக்கவேண்டுமென்றால் அதற்குரிய சிறு பின்புல வாசிப்பும்தேவை. உதாரணமாக காவல்கோட்டம் வாசிக்கவேண்டுமென்றால் அது எந்த வரலாற்றுப்புலத்தில் எழுதப்பட்டுள்ளது, அதன் உள்ளடக்கத்தின் தனித்தன்மை என்ன என்பதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டால் உங்களுக்கு ஓர் ஆர்வமும் திறப்பும் ஏற்படக்கூடும். ஆனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்புகளைப் பற்றிய ஓர் அறிமுகம் இருந்தால் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் ஆர்வமூட்டக்கூடும். இந்தியத்தொன்மங்களும் தத்துவங்களும் செயல்படும் முறைபற்றிய அறிமுகநூல் ஒன்றை வாசித்தால் விஷ்ணுபுரம் கவரக்கூடும்

புனைவுக்குள் நுழையமுடியவில்லை என்றால் உங்களுக்கு ஒரு பகுதி இழப்பு ஏற்படுகிறது. வரலாற்றின் நுண்ணிய தளங்களை வாழ்ந்து பார்த்தே அறியமுடியும். நல்ல வரலாற்றுநூல்கள் புனைவினூடாக கற்பனைவாழ்வு ஒன்றை அளிக்கின்றன. அதனூடாக உங்களுக்கென ஒரு வகை அறிதல் உருவாகிறது. புனைவை வாசிக்காவிட்டால் அந்த அந்தரங்க அறிதல், உங்களால் மட்டுமே உருவாக்கிக்கொள்ளப்பட்ட அறிதல், இல்லாமலாகிறது. அதை ஈடுகட்ட நீங்கள் வரலாற்றை இன்னும் தீவிரமாகவும் நுட்பமாகவும் பலகோணங்களிலும் படிக்கவேண்டும். அது உங்களை அறிஞனாக ஆக்கும். அறிஞன் புனைவெழுத்தாளனை விட குறைந்தவனல்ல. அவனும் அதே இடத்தையே வேறுவழியில் சென்றடைகிறான்

இது எல்லாவகையான வாசிப்புகளுக்கும் பொருந்தும். புனைவெழுத்து அறிதல்முறையில் ஒரு வழி மட்டுமே. அது கற்பனையை துணைகொள்கிறது. புனைவல்லாத எழுத்து தர்க்கத்தை துணைகொள்கிறது. இரண்டும் சமம். ஆனால் இரண்டிலும் மூன்றாவது அறிதல்முறை ஒன்று இருந்தாகவேண்டும், உள்ளுணர்வு. [intuition]

கற்பனையில் உள்ளுணர்வு ஊடாடவேண்டும். தர்க்கத்திலும் அது வேண்டும். அதுவே அறிதலைக் கடந்து உணர்தலை நிகழ்த்துகிறது. அதை எவ்வகையில் வேண்டுமென்றாலும் வளர்த்துக்கொள்ளலாம். அது ஒரு தற்கண்டடைதல். வாசிப்பின் நோக்கம் அதுவே

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 10:35

வெங்கட்டாம்பேட்டை – கடலூர் சீனு

இனிய ஜெயம்,

என் அகத்தின் நிலையை நோய்ச் சூழலுக்கு முன் பின் என பிரித்து விடலாம். துயரும் துயர நிமித்தமும் என்று மட்டுமே வந்தணையும் அனுபவங்கள். நான் பேசக் கசக்கும் சொல்லெல்லாம் என் அகத்தின் இருள்.எனதிந்த முகம் எவரும் அறியக் கூடாதது நான் உட்பட. வெளியேற வேண்டும். மெல்ல மெல்ல. அப்படியே அனைத்தையும் விட்டு வெளிறிவிட விடும். ஆம் வெளியேறிவிட வேண்டும்.

உடைக்குள் புட்டு போல உடலை வேக வைக்கும் ஊமை வெயில். கிழக்கே தூரத்தில் இருட்டி இறங்கிகொண்டிருக்கும் மழையை வெறித்தபடி குறிஞ்சிப்பாடி ரயிலடி விலக்கில் நின்றிருதேன். மழை, எங்கெங்கோ பெய்கிறது என் தலைமேலன்றி. கடந்த ஆறு மாதத்தில் முதன் முறையாக ஏதேனும் கோவிலுக்கு செல்வோம் என முடிவு செய்திருந்தேன்.

குறிஞ்சிப்பாடிக்கு அருகே ஏழு கிலோமீட்டரில் பண்ரூட்டி சாலையில் வெங்கடாம்பேட்டை. நான் இறங்கவேண்டிய கிராமம். நோய் சூழல் நிலவரம். பேருந்து வரவு குறைவு. விலக்கின் தேநீர் கடையில் தேநீர் அருந்தியபடி, யாரேனும் கிராமத்துக்குள் இருசக்கரத்தில் தனியே செல்வோர் உண்டா என விசாரித்தேன். ஏழு கிலோமீட்டரில் வெங்கடாம்பேட்டை என்றார். சரிதான் என நடக்க துவங்கினேன்.

மதியம் மூன்று முப்பத்துக்கான சூரியன், மேகங்கள் விலகிய வெளிர் வானை சுட்டு, திசைகளை சுட்டு, பூமியை சுட்டு, என்னையும் சுட வேக நடையில் கிராமம் வந்திருந்தேன். சிறிய கிராமம் அதிகபட்சம் இருநூறு வீடு. ஒரு ஆரம்ப பள்ளி. கோவிலை சுற்றித்தான் ஊரே. கோவிலை நோக்கி திரும்பிய பாதை கோவிலின் பின் பக்கம் கொண்டு சேர்த்து. பிரத்யேகமாக ஒளிரும் பொன் மஞ்சள் வண்ணம் பூசிய ஏழு நிலை ராஜகோபுரம், நாலே கால் மணி வெயிலை ஏந்தி, மெய்யாகவே ஒரு கணம் பொற்கோபுரம் போல துலங்கியது ராஜ கோபுரம்.

கோவிந்தராஜப் பெருமாள் கோவில். கதைகளின் ஒன்றின் படி, தில்லை திருச்சித்ரகூடத்தில் இருந்து, பன்னிரண்டாம் நூற்றாண்டில் அகற்றிய கோவிந்தராஜப் பெருமாள் திருமேனி இங்குதான் உள்ளது. அகற்றிய திருமேனியை மீண்டும் தில்லை கருவறைக்குள் வைக்க இயலாதபடி கருவறை மாற்றி அமைக்கப்பட்டுவிட, அளவு குறைந்த அந்த கருவறைக்கு இயைந்த திருமேனியை அங்கே பதிட்டை செய்து விட்டு, மீண்டும் அங்கே வைக்க முடியாத முந்தய கோவிந்தராஜப் பெருமாள் திருமேனியை இங்கே இருந்த வனத்துக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

இப்படி வேறு வேறு வடிவில் இலங்கும் மூன்று கதைகளில் எனக்குப் பிடித்தது மேற்கண்ட கதை. ஷடமர்ஷணர் தவத்துக்கு காட்சி தந்த பெருமாள், அவர் வேண்டுதலுக்கு செவி சாய்த்து, தனது பத்து அவதாரங்களையும் அவருக்கு காட்டிய ஸ்தலம் இது என்பது, ஸ்தல புராணம்.

சீதையை மீட்ட பிறகு, எந்த வழியெல்லாம் சீதையை தேடி ராமேஸ்வரம் வரை வந்தடைந்தாரோ, அந்த பாதையை சீதைக்கு காட்டிய படியே திரும்ப அந்த பாதை வழியாகவே அயோத்தி செல்கிறார் ராமர். இந்த வனத்தில்தான் பிரிந்த சீதையை எண்ணி துயரத்தில் சரிந்தார் ராமர். துயிலற்ற நாட்கள். இந்த வனத்தில் வந்து இப்போது லட்சுமணன் மடியில் தலை வைத்து, சீதை காலடியில் பணிவிடை செய்ய, அனுமன் துணையிருக்க ஆனந்த சயனம் கொள்கிறார். இக்கோவிலின் தொன்மக் கதை இது.

பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் வேங்கடப்ப நாயக்கர் என்ற செஞ்சி நாயக்க மன்னர்கள் வரிசையில் வந்த மன்னன் கட்டிய கோவில். புதுவை அனந்தரங்கப் பிள்ளை,இந்த ஊர் மீதும் கோவில் மீதும் தனித்த கவனம் கொண்டிருந்தார் என்று புதுவையில் அனந்தரங்கப் பிள்ளை குறித்த கூடுகை ஒன்றில் முனைவர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்.

கோவிலின் முன்பு நிற்கும் ஊஞ்சல் மண்டபம், நாயக்கர் கலையின் சாட்சியம். தரை முதல் விதானம் வரை நாற்பது அடி. கருங்கல்லில் கடைந்த யாளித் தூண்கள். மண்டபம் இடிந்து விட்டதால் அருகே செல்ல முடியாது. மெல்ல ஊஞ்சல் மண்டபத்தை சுற்றி வந்தேன். ஒரு கணம் உளம் மயங்கி, ஹம்பி நிலத்தில் நின்றிருந்தேன்.

யாரோ அல்லது எந்த அமைப்போ ராஜ கோபுரத்தை மட்டும் ஒளிரும் மஞ்சள் வண்ணம் பூசி சிறப்பித்திருக்குகிறார்கள். ராஜ கோபுரம் மட்டுமே கொண்ட சிறிய கோவில். மதில் வளைப்புக்குள் மூன்று சிறிய சுதை விமானங்கள் கொண்ட, ஒரே கோட்டம். இடது புறம் செங்கமல வல்லித் தாயார், வலதுபுறம் ஆண்டாள், மூலவர் பாமா ருக்மணி சமேத வேணு கோபாலன், அவரது வலது புறம் வைகுண்டப் பெருமாள்.

கொடிமரத்தின் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்து கரம் கூப்பி வணங்கி நிற்கிறார் கருடாழ்வார். அகலின் ஒற்றை சுடரில், பத்மாசனத்தில் அமர்ந்திருந்த தாயாரின் மூக்குத்தி வளையத்தின் கற்கள் சுடர்ந்தன. மேலிரு கைகளில் கஞ்ச மலர். அபய கரம் வரத கரம்.

பாமா ருக்மணி சமேத வேணு கோபாலன். மனித உயரமே கொண்ட திரு உருவங்கள், அடுத்த சிறிய சன்னதியில் ஐந்தலை அரவம் குடை பிடிக்க அமர்ந்த கோலத்தில் வைகுந்தப் பெருமாள். ஆண்டாள் சன்னதி முற்றிருளில் விழுந்து விளக்கின் சுடர் அணையப் போகும் இறுதி நிலையில் நின்றிருந்தது. மொத்த கோவிலுக்கும் மையத்தில் ஒரே ஒரு வெள்ளை led பல்பு எரிந்து கொண்டிருந்தது.

வெளியே வந்து யவருமற்ற கோவிலை ஒரு சுற்று வந்தேன். கோவிலின் வலது பக்கம் தனியே அனந்த சயன ராமர் சன்னதி. சென்று எட்டிப் பார்த்த முதல் கணம் திடுக்கிட்டுப் போனேன். உள்ளுக்குள் எங்கோ தூரத்தில் திருமேனியின் மத்திய பாகம் மட்டுமே தெரியும் கருவறையை எதிர்பார்த்திருந்தது அகம். கடல் விரிவையே ஒரு கணத்தில் காண நேர்ந்தது போல, என் முன்னால் தொட்டு விடும் தூரத்தில் நெடுங்கிடையில் கார்வண்ணன் திருமேனி. ஸ்தம்பித்து விட்டேன்.

எங்கும் எவரும் இல்லை. அவரும் நானும் மட்டுமே.

சென்றால் குடையாம்
இருந்தால் சிங்காதனமாம்
நடந்தால் மரவடியாம்
நீள்கடலுள் என்றும் புனையாம்
மணிவிளக்காம்
பூம்பட்டாம்
திருமால் புல்கும் அணையாம்
ஏழு தலை அரவம் கண்டேன்.

வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்க
குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் நீட்டி
அரவம் அணைத்துத் துயிலும்
எந்தை …
கருநிறக் கடவுள் கண்டேன்.

ஜெ …ஜெ… இதை எப்படிச் சொல்வேன் என்றே தெரிய வில்லை ஆம் கடவுளைத்தான் கண்டேன். நிலவொளி துலங்கும் விளிம்புக் கோடுகள் கொண்ட கொழுங் கன்னங்கள், உயிரையே முத்தமாக இட்டாலும் போதாதே. கருந்தாமரை மொட்டுக்கள் கண் வளர கோடி முத்தம் போதாதே. குழலழகன் வாயழகன், தோள் கண்டார் தோளே கண்டார் என்று நிற்க வைக்கும் தோளழகன். விரிமார்பில் சரிந்து கிடக்கும் யக்ஞோபவீதம். பத்ம பாதம். கோடிப் பிறப்பில் ஒன்றிலேனும் என் சென்னி பதிய வேண்டிய பத்ம பாதம். தலை அறைந்து விழுந்து சாக வேண்டிய பத்ம பாதம். கரியவன். கருமையின் பேரெழில்.

கடலூர் சீனு

மீண்டு பண்ரூட்டி செல்கையில், ஜன்னல் வழியே தெரிந்த செம்மண் நிலம் எல்லாம் அவன்தான். முந்திரிக் காடெல்லாம் அவனே. வியூகமும் அவனே விபவமும் அவனே. அனந்த சயன ராமர். காலருகே சீதாப்பிராட்டியார். கீழே அனுமன். இருபது அடி நீள திரு உருவம் .தொண்டமாதேவி எனும் கிராம நிறுத்தத்தில் நின்றது பேருந்து. இடதுபுறம் செம்மண் நிலத்தில் இரண்டு ஏக்கர் அளவில் கம்மாய். தளும்பி நிற்கும் கலங்கிய மஞ்சள் வண்ண நீர். ஊர் நுழைவில் பெரிய ஆலமரம். பின்னணியில் அந்திச் சூரியன். சூரியன் மறைந்து ஒரு கணம் வானமும் பூமியும் செம்மை கொண்டு பூத்தது. நீர் விரிவு மொத்தமும் செந்தூர வண்ணம் கொண்டு ஒளிர்ந்தது. அந்தர்யாமி.

கடலூர் சீனு

 

கடலூர் சீனுவின் பயணங்கள்

ஒரு மலை, மூன்று பயணங்கள்- கடலூர் சீனு தொல்பழங்கால அரியலூர் – கடலூர் சீனு சமண வழி – கடலூர் சீனு கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு முழுதுறக்காணுதல் – கடலூர் சீனு பண்ருட்டி நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 10:32

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்பின் ஜெ,

நலம் என்று கொள்கிறேன்.

”எண்ணும்பொழுது” சிறுகதை வாசித்தேன். ஒரு தளத்தில், எப்போது கதைக்கால ஆண் எண்ணத் தொடங்கினானோ அன்றே காதலில் நம்பிக்கை இல்லாமல் ஆகிறது. காலை பகல் மாலை என்று தெரியாமல் புரிவதே காதல். conscious உணர்வு எப்போது தலையிடுகிறதோ அப்போது காதல் உடைய நேர்கிறது. வெண்முரசின் பீஷ்மன் அம்பையிடம் சொல்வதுபோல் எப்பொழுது கையை நீட்டுகிறோமோ காட்டுக்கிளிகள் அஞ்சி பறந்துவிடும்.

மறுதளத்தில் ”எண்ணும்பொழுது” என்பது எண் என்பதை விடுத்து எண்ணம் என்பதையே நாடியது. உங்களின் குறள் உரையில் நீங்கள் குறிப்பிட்ட எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப என்பதன் சாத்தியப் பொருளான எண்ணம் என்ப வந்துபோனது. லெக்சிகனிலும் எண்ணம் என்பதற்கு thought உடன் கடைசியாக mathematics என்றும் பொருள் தரப்படிகிறது. போலவே எண் என்பதற்கு calculation உடன் thoughtம் வருகிறது.

கதைக்காலத்தில் பெண் கவித்தன்மையோடு முல்லையைக் கொடுக்கிறாள், தான் காத்திருப்பேன் என்று. கடலைவிட பெரியதாக இருக்கப்போகும் பிரிவு எனும் கங்குல் வெள்ளத்தை காத்து இருந்து கடந்துவிடலாம் என்று.  பொருள்வயின் செல்லும் ஆணோ ஒரு பொருளையே கொடுக்கிறான். ஒருவேளை வெகுநாட்கள் கழித்து பூக்கள் உதிராமல், அக்கணமே முல்லை உதிர்ந்துவிட்டதோ.

வள்ளுவன் சொன்னது போல் “பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை” — ஒருவர் ‘நான் உன்னைப் பிரிகிறேன்’ என்று சொல்லும் அளவுக்கு கொடுமையானவர் என்றால், அவர் திரும்பி வந்து என்னிடம் அன்புசெய்வார் என்று கொள்ளுதல் மிகுந்த முட்டாள்தனம் அல்லவா. உன்னைவிட்டுச் செல்கிறேன் என்ற எண்ணம் எழுந்தக்கணமே முல்லை உதிர்வதற்கான அறிகுறியா.

நிகழ்காலத்தில் ஆண் கவித்தன்மையோடு உள்ளான். அவள் எதிர்துருவம். இருவேறு துருவங்களைச் சேர்த்து வைத்திருப்பது காமம் ஒன்றே. சுடச்சுடவே பொன் மேலும் சுடரும். காதல், காமத்தால் சுட்டால் ஒழிய ஒளிராது. தங்கம் வெளிறியே போகும். எப்போது அவர்கள் காமமின்றி பிரிய நேர்கிறதோ அப்பொழுதே அவர்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள்; அப்பொழுதே நிரந்திர பிரிவு தொடக்கம்.

நன்றி

விஜய் ரெங்கராஜன்.

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது சிறுகதை என் பாட்டி அடிக்கடி சொல்லும் ஒரு சொலவடையை நினைவூட்டியது. அளந்து வாங்கணும், அளக்காம கொடுக்கணும். அன்பு, பாசம், கடமை, தியாகம் எதையுமே அளக்காமல், எண்ணாமல் , செய்பவர்கள்தான் உண்மையில் அதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடையமுடியும். அதை எண்ண ஆரம்பித்தால் கசப்பும் வருத்தமும்தான் மிஞ்சும்.

எங்கள் தாய்மாமா வீட்டுக்காக அவ்வளவு தியாகங்கள் செய்தவர். எட்டு தங்கைகளை அவர்தான் திருமணம் செய்துகொடுத்தார். நாற்பத்தாறாவது வயதில்தான் அவர் திருமணம் செய்துகொண்டார். அவர் எப்போதுமே அவர் செய்த தியாகங்களை கணக்குபோட்டு சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் தங்கைகள் எல்லாம் அவர்மேல் மிகப்பெரிய மதிப்பு கொண்டவர்கள். என் அம்மாவெல்லாம் தாய்மாமா பேரைச்சொல்லிவிட்டாலே கண் கலங்கிவிடுவார். ஆனால் அவர் அதையெல்லாம் கணக்குபோட்டு சொல்லிச்சொல்லிக் காட்டி கடைசியில் அத்தனைபேராலும் வெறுக்கப்படுபவராக ஆனார்

“நீ எதுவரை என்னை காதலிக்கிறாய்” ”உனக்கு யார் மிக முக்கியம்?” “நான் காதலிக்கும் அளவே நீ காதலிக்கிறாயா?”என்ற கேள்விகளெல்லாமே அர்த்தமில்லாதவை. அவற்றை கேட்க ஆரம்பித்ததுமே காதல் இல்லாமலாகிவிடுகிறது. எண்ணும்பொழுது ஒன்றுமே மிஞ்சாது. எல்லா பூவும் உதிரும். பொன் வெள்ளியாகிவிடும். கோணச்சி அறிந்த வாழ்க்கையின் அடிப்படையான ரகசியம் இதுதான்

 

ஆர்.கிருஷ்ணகுமார்

எண்ணும்பொழுது- கடிதங்கள்-5 எண்ணும்பொழுது- கடிதங்கள்-4 எண்ணும்பொழுது- கடிதங்கள்-3 எண்ணும்பொழுது- கடிதங்கள்-2 எண்ணும்பொழுது- கடிதங்கள் -1
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 10:32

மீரா- கடிதங்கள்

மெய்யான முன்னுதாரணங்கள்

அன்புள்ள ஜெ

மெய்யான முன்னுதாரணங்கள் ஒரு முக்கியமான கட்டுரை. அந்தக்கட்டுரையின் மீதான எதிர்வினைகளை இருவகையாக காணமுடிகிறது. நம் சூழலில் தங்களைத்தாங்களே சில அடையாளங்கள் அல்லது நிலைபாடுகளில் நிறுத்திக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அகம் சொல்லும் நிலைபாடு அது. அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை நியாயப்படுத்தி கொண்டே இருந்திருப்பார்கள். அதன் தொடர்ச்சியாகவே அவர்கள் கருத்துக்களைச் சொல்லமுடியும்

இலக்கியம், அறிவுச்செயல்பாடு என்பதெல்லாம் ஒரு வகையான தன்னலமில்லாத பணிகள் என்றும், அது ஒருவகையான தன்னிறைவுக்காகவே செய்யப்படுகிறது என்றும் நம்பும் ஒரு வட்டம் என்றும் உண்டு. அவர்களுக்கு மீரா ஓர் ஐடியலாக தெரிகிறார். அவரை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நெகிழ்ச்சி அடைகிறார்கள். இன்னொருபக்கம் இலக்கியம் மட்டுமல்ல எல்லாமே ஒருவகையான உலகியல் விஷயங்கள், ஏதாவது லாபத்துக்காகத்தான் எல்லாருமே செய்கிறார்கள் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் நிலைபாடு இரண்டு. ஒன்று, எல்லாருமே கணக்குடன் செயல்படுகிறார்கள், இதிலே எவர் மேலே எவர் கீழே என்று எப்படிச் சொல்லமுடியும் என்று கேட்கிறார்கள். இன்னொரு தரப்பு என்னவென்றால் இது ஒருவகை வியாபாரம், இதிலே வெற்றி அடைந்தவர்தான் சிறந்தவர். க்ரியா ராமகிருஷ்னன் வெற்றி அடைந்தவர். மீரா தோற்றவர். தோற்றவரை ஏன் கொண்டாடவேண்டும். இப்படி ஒரு கேள்வி

ஒருவர் தன்னை வியாபாரி என்றும், சுயநலநோக்குடன்தான் செயல்படுகிறேன் என்றும் மனசுக்குள்ளே உணர்ந்திருக்கிறார் என்றால் அவருக்கு மீரா பற்றிய கட்டுரை ஒரு எரிச்சலைத்தான் அளிக்கிறது. ஒரு பேராசிரியருக்கு அன்னியநிதி பற்றிய சபலம் இருக்கும் என்றால் அவருக்கு க்ரியா ராமகிருஷ்ணன் பற்றிய கருத்து எரிச்சலை அளிக்கிறது. இப்படியெல்லாம்தான் எதிர்வினைகள் இருக்கின்றன. பொதுவாக இது வணிக யுகம். தியாகம் சேவை அர்ப்பணிபு என்பதிலெல்லாம் எவருக்கும் நம்பிக்கை இல்லை. அதெல்லாம் எண்பது தொண்ணூறுகலுடன் முடிந்த விஷயம். இன்றைக்கு இருப்பவர்கள் எல்லாமே கணக்குபோட்டு வென்றுகொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் க்ரியா ராமகிருஷ்ணன்தான் பெரியவராகத் தெரிவார்

க்ரியா ராமகிருஷ்னனை தூக்கிப்பிடிப்பவர்கள் இன்றைக்கு உள்ள வெற்றிபெற்றவர்களே சிறந்தவர்கள், பணம் சம்பாதிப்பதே வெற்றி என்ற வேல்யூஸை முன்வைக்கிறார்கள். நீங்கள் சென்றகாலத்தைய வேல்யூஸை முன்வைக்கிறார். ஒருவர் ஜீவானந்தத்தையும் காமராஜையும் தலைவராகச் சொல்கிறார். இன்னொருவர் எம்ஜிஆரையும் கருணாநிதியையும் முன்னுதாரண தலைவர்களாகச் சொல்கிறார். இருவர் நடுவே உரையாடலே நடக்கமுடியாது. நீங்கள் இன்றிருக்கும் ஒரு வேல்யூ சிஸ்டத்துக்கு எதிராக ஒன்றை எடுத்துக் காட்டுகிறீர்கள். அது இன்று ஒரு மைனாரிட்டியின் குரல் மட்டும்தான். ஆனால் அதுவும் இருந்துகொண்டே இருக்கும்

ஆனந்த்

 

அன்புள்ள ஜெ,

நலம்தானே? க்ரியா ராமகிருஷ்னன் கட்டுரைபற்றி என் நண்பர்களிடையே விவாதம் நடைபெற்றது. அப்போது வழக்கம்போல ஒரு அரைவேக்காடு ‘ஜெமோ அஞ்சலிக் கட்டுரைகளிலே நஞ்சு ஊட்டுபவர்’ என்று ஆரம்பித்தது. ‘ஜெமோ இதுவரை எழுதிய அஞ்சலிக்கட்டுரைகள் என்ன சொல்லு, அதில் எதிலெல்லாம் நஞ்சு இருக்கிறது?’என்று நான் கேட்டேன். பதில் சொல்லத்தெரியவில்லை. ஜெமோ எழுதிய அஞ்சலிக்கட்டுரைகள் வழியாகத்தான் நீயெல்லாம் பாதிப்பேரை அறிமுகமெ செய்துகொள்கிறாய் என்று சொன்னேன்.

அதோடு க்ரிய ராமகிருஷ்ணனுக்கு நீங்கள் அஞ்சலிக்கட்டுரையே எழுதவில்லை, அஞ்சலிக்கட்டுரைகள் வெளிவந்து நீண்டநாட்களுக்கு பிறகுதான் எழுதினீர்கள். அதெல்லாம் அஞ்சலிக்கட்டுரைகளில் இருந்த பொய்களுக்கு எதிர்வினைகள்தான்.ஒருவரை அஞ்சலிக்கட்டுரைகள் வழியாக பொய்யான ஐக்கான் ஆக மாற்றுவதை கண்டிப்பதற்காகவே அந்தக்கட்டுரைகள் எழுதப்பட்டன என்று நான் சொன்னேன்.

ஆனால் இந்த அரைவேக்காடுகளுக்கு புரியாது. பத்துநாட்களுக்குப்பின் மீண்டும் அதையேதான் சொல்லி இளிக்கும். இது ஒரு தலையெழுத்து. எங்கே இலக்கியம் பேச ஆரம்பித்தாலும் இப்படி முகநூலில் மேயும் ஒரு வெள்ளாடு குறுக்கே வந்துவிடுகிறது

எம்.பாஸ்கர்

அன்புள்ள ஜெ

இணையச்சூழலில் க்ரியா பற்றி வந்த விவாதங்களை கவனித்தேன். தெளிவான ஒரு நிலைபாட்டை கண்டேன். ஃபோர்டு ஃபவுண்டேஷன் உட்பட அன்னிய நிதியை பிராமணர்கள் பெற்றால் அது தேசநன்மைக்கு, நாட்டுக்கு நலம்பயக்க. கிறிஸ்தவர்கள், லிபரல்கள் பெற்றால் தேசத்துரோகத்துக்காக. இவ்வளவுதான் இங்கே அரசியல்

எஸ். பென்னி ஜோசப்

மீரா- கடிதங்கள் மீரா- கடிதங்கள்-2
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 10:31

வெண்முரசு இருகடிதங்கள்

Ellora - Mahabhatara
[மகாபாரதம்- வாழ்க்கையளவே பெரிய போர்- எல்லோரா]

அன்புள்ள ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

உண்மையில் பெருமகிழ்வுடன் இதை எழுதுகிறேன். சிறுவயதில் மகாபாரத கதைகளைப் படிக்கும்போது பல சந்தேகங்கள் எழும். வியூகங்கள் எப்படி இருக்கும். , ஹஸ்தினபுரியின் அமைப்பு, கதைமாந்தர்கள் எப்படிப் பேசியிருப்பார்கள், குருகுலங்களில் எவ்வாறு கல்வி கற்பித்திருப்பார்கள் என பலவாறு கேள்விகள். பிறகு கற்பனையில் மூழ்கி அதில் கிடைக்கும் அரைகுறை பதில்களை வைத்து சற்று ஆறுதல் கொள்வேன். ஆனால் என் வாழ்நாளில் மகாபாரதத்தை இவ்வளவு விரிவாக – முக்கியமாக எல்லையற்ற வாசின்பத்துடன் வாசிப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை. பெரும் பரவசத்துடனும் மனநிறைவுடனும் வாசித்துவருகிறேன். ஒவ்வொரு பகுதியும் ஒன்றையொன்று மிஞ்சி வருகிறது. தத்துவத்தில் ஆர்வம் கொண்ட வாசகனுக்கு கல்வி கற்பிக்கும் பகுதிகள் குறிப்பாக வண்ணக்கடலில் துரோணர் அர்ஜுனனுக்கு கற்பிக்கும் இடம், கிருபர் – அர்ஜுனன் உரையாடல், உச்சகட்டமாக இளநாகன் சமணத் துறவியிடம் துடுக்குரைத்து பின்னர் அவர் சொல்லும் அறவுரையை கேட்பது – என வாசிப்பது பெரும் ஆனந்தத்தை அளித்தது. உண்மையில் இப்படி சில இடங்களை மட்டும் சுட்டிக் காட்டுவது சரியானதல்ல என்றாலும் , ஒரு பதின்பருவ வாசகனாக இவ்விடங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

ஆனால், மிக முக்கியமாக நான் கருதுவது, உள்ளும் புறமும் முடிவற்ற தூரம் செல்லும் தங்களின் எழுத்தே. பாண்டுவின் கனவிலிருந்து, நிஷாத நாட்டின் பெரும் சிற்பங்கள் வரை.. , மகாபாரத்தின் உட்சிக்கல்கள் , விதி முகூர்த்தங்கள் என கடலை கடலளவுக்கே கொள்வது போல் வெண்முரசை உருவாக்குகிறீர். பேரன்புடைய ஒரு தந்தை தனது அறிவுத்தாகம் கொண்ட பிள்ளைகளுக்கு கதை சொல்வது போலவே ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போது உணர்கிறேன். ஒரு நிமித்தம் போல இந்நிகழ்வைச் சாத்தியமாக்கிய சைதன்யாவிற்கு வணக்கங்கள் பல. தமிழுலகு – குறிப்பாக மூளைத்திராணியுள்ள இளம் வாசகர்கள் கொண்ட தமிழுலகு இதற்காக அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது .

பொருளற்ற ஒரு இயந்திர வாழ்க்கையில் சிக்கிக் கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் ஒரு மீட்பாகவே வெண்முரசைக் காண்கிறேன். இந்த வாசிப்பின் பெருங்களியாட்டத்தில் இருந்து சற்று இறங்கிய பிறகே விரிவாக விமர்சன கண்ணோட்டத்தில் எழுத வேண்டும்.

இ.ஆர்.சங்கரன்

136973-004-E93CD713

அன்புள்ள ஜெ சார்

நான் நீலம் வாசிக்கவில்லை. அந்த மொழியும் அதிலுள்ள பித்துநிலையும் என்னால் ஃபாலோ பண்ணக்கூடியதாக இல்லை. வண்ணக்கடல் முடிய வாசித்தேன். அதன்பிறகு மீண்டும் பிரயாகை ஆரம்பித்துவிட்டேன். பிரயாகை மிகச்சிறப்பாக இருக்கிறது. அதன் கதையின் வேகமும் நுட்பமும் மனசைக்கவர்க்கின்றன. சிக்கவீர ராஜேந்திரன் மாதிரி ஒரு சமநிலையான சித்தரிப்பு. கூடவே போர்க்களக்காட்சிகளில் ஒருவேகம்.

இன்றைய அத்தியாயம் சிறப்பு. மூன்றுபேருடைய [அர்ஜுனன் தர்மன் பீமன்] குணச்சித்திரங்களின் வித்தியாசத்தை அற்புதமாகத் தீட்டிக்காட்டியிருக்கிறீர்கள். அவர்கள் டீன் ஏஜ் க்கே உரிய கொந்தளிப்பும் மோதலும் கொண்டு பேசிக்கொள்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் போகும் இடம் முக்கியமானது. ஒருவன் தாசி வீட்டுக்கு ஒருவன் காட்டுக்கு ஒருவன் சதிரங்கம் விளையாடப்போகிறார்கள்.

அவர்கள் பேசிப்பேசி சிக்கலாக ஆக்கிவைத்திருக்கும் விஷயத்தை விதுரர் வந்து ஒரே நிமிடத்தில் பல தனிப்பிரச்சினைகளகாப்பிரித்து எளிமையாக்கி ஒன்றுமே இல்லாமலாக்கிவிடும் இடம் அற்புதம். என் முதலாளியின் அப்பா எப்போது ஆபீஸ் வந்தாலும் இதுதான் நடக்கும். பெரியவருக்கு எண்பது வயது ஆகிறது

நான் வாழ்க்கையில் காணும் ஒவ்வொரு விஷயத்தையும் நீலம் தவிர்த்த மற்ற மகாபாரத நாவல்களில் காணமுடிகிறது. நான் அறிந்த வாழ்க்கையை வைத்து மகாபாரதத்தை விளங்கிக்கொள்கிறேன். மகாபாரதம் [வெண்முரசு]ஐ வைத்து என் வாழ்க்கையை விளக்கிக்கொள்கிறேன்

மிக்க நன்றி

ராஜேந்திரன் சின்னச்சாமி

மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Nov 2, 2014 at 00:02

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 10:30

January 25, 2021

ராஜாம்பாள்

ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியில் ஒரு நாடகவிளம்பரம் வரும். ”ராஜாம்பாளே ராஜாம்பாளாக நடிக்கும் ராஜாம்பாள்! நவீன நாடகம்!!!” ராஜாம்பாள் என்ற அக்கால நாடகநடிகை ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதிய ராஜாம்பாள் என்ற நாவலைத் தழுவி எழுதப்பட்ட ராஜாம்பாள் என்னும் நாடகத்தில் கதைநாயகி ராஜாம்பாளாக நடிக்கும் விளம்பரம் அது. அந்நாடகத்துக்கு சென்னையில் இருந்து கும்பகோணத்துக்குச் சிறப்பு ரயில் விடப்பட்டதாம்.

ஜே.ஆர்.ரங்கராஜு தமிழில் புனைகதை தொடங்கிய காலத்தில் எழுதிய முக்கியமான நான்கு எழுத்தாளர்களில் ஒருவர். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி அம்மாள் ஆகியவர்களை பிற மூவராகச் சொல்லலாம். மூவருமே அன்றைய ஆங்கிலப் பொழுதுபோக்கு எழுத்தை நகலெடுத்தவர்கள். அதிலும் ஜே.ஆர்.ரங்கராஜு எழுத்தில் ரெய்னால்ட்ஸ் மற்றும் ஆர்தர் கானன்டாயிலின் செல்வாக்கு மிகுதி

ஜே.ஆர்.ரங்கராஜு இயற்பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு. 1875ல் பிறந்தவர் 1920கள் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். மோகனசுந்தரம் (1911), ஆனந்தகிருஷ்ணன் (1921), வரதராஜன் (1925), சந்திரகாந்தா (1936), ராஜேந்திரன், பத்மராஜு, ஜெயரங்கன் போன்ற இவருடைய நாவல்கள் புகழ்பெற்றவை. இதில் சந்திரகாந்தாதான் பின்னர் சவுக்கடி சந்திரகாந்தா என்றபேரில் நாடகமும் சினிமாவுமாக ஆகியது

ராஜாம்பாள் இருமுறை சினிமாவாக ஆகியிருக்கிறது. 1935ல் வெளிவந்த படத்தை கோயம்பத்தூர் டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்தது. ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி.எஸ்.ஸ்ரீனிவாசராவ் கதைநாயகனாக நடித்திருந்தார். கே.என்.ராஜலட்சுமி ராஜாம்பாளாக நடித்தார்

1951ல் வெளிவந்த இரண்டாவது ராஜாம்பாள் படத்தில்தான் துப்பறியும் கோவிந்தனாக ஆர்.எஸ்.மனோகர் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆர்.எம்.கிருஷ்ணசாமி இயக்கிய இந்தப்படத்திற்கு வசனம் எ.டி.கிருஷ்ணசாமி. எம்.எஸ்.ஞானமணி இசையமைத்திருந்தார். பாடல்கள் மருதகாசி, கு.சா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் எழுதப்பட்டன.

1951 ராஜாம்பாள்

ஜே.ஆர். ரங்கராஜு பெரும்பாலான நாவல்களை ஆங்கிலநாவல்களை தழுவித்தான் எழுதினார்.1930 வாக்கில் அவருடைய வரதராஜன் என்றநாவலின் முதற்பாகம் வெளிவந்தபோது அது தன் நாவலின் திருட்டு என்று ஆங்கில எழுத்தாளர் ஒருவர் வழக்கு தொடுத்தார். திருட்டு நிரூபிக்கப்பட்டு ஜே.ஆர்.ரங்கராஜு சிறைசெல்ல நேரிட்டது. அதன்பின் அவர் இலக்கியப்படைப்புக்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டார். இதேபோல வடுவூர் துரைசாமி அய்யங்காரும் இலக்கியத் திருட்டுக்காக தண்டிக்கப்பட்டபின் நாவல்கள் எழுதுவதை நிறுத்திக்கொண்டு தென்னகத்துச் சாதிகள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்

உண்மையில் அன்று இந்நாவல்களுக்கு மிகப்பெரிய சந்தை இருந்தது. நாவல்களை இவர்களே அச்சிட்டு வெளியிட்டனர். பல பதிப்புகள் கண்டவை இவை. இவற்றின் விலையும் அன்றைய கணக்கில் மிக அதிகம். ஆகவே லாபமும் மிகுதி. நாடகவாழ்க்கை நினைவுகளை எழுதும் ஔவை டி.கே.சண்முகம் அவர்கள் ஜே.ஆர்.ரங்கராஜுவுக்கு அவருடைய நாடகத்திற்கான ‘ராயல்டி’யாக ஒரு காட்சிக்கு ஐம்பது அறுபது ரூபாய் என்னும் கணக்கில் பல ஆயிரங்கள் கொடுத்ததாகவும், ஒரு கட்டத்தில் அது கட்டுப்படியாகாமல் நிறுத்திக்கொண்டதாகவும், ஆனால் ஜே.ஆர்.ரங்கராஜுவின் நாடகங்களுக்கு இருந்த மக்கள் ஈர்ப்பு பிறவற்றுக்கு இல்லாததனால் வசூல் குறைந்ததாகவும் சொல்கிறார்.

இந்நாவல்களின் தரம் என்னவாக இருந்தாலும் இவை ஆங்கிலேய ஆட்சியின் ஊழலையும் சுதேசிக்கருத்துக்களையும் சொல்கின்றன. அதனாலேயே ஆங்கிலேயரின் கசப்புக்கு ஆளாகியிருக்கலாம். பதிப்புரிமை பிரச்சினையை காரணம் காட்டி இவர்களின் எழுத்தை ஆங்கிலேய அரசு ஒடுக்கியது என்பதுதான் உண்மை.

நான் ராஜாம்பாள் நாவலை நாகர்கோயிலில் தெருக்கடையில் ஒரு பிரதி வாங்கியிருக்கிறேன். பழைய பிரதி. 1926 ல் வெளியானது. அட்டை இல்லை. ஆழ்வார் ரெட்டியார் ,ஓய்வுபெற்ற தபால்அதிகாரி, 5- ஜெகன்னாதன் தெரு, ராமவர்மபுரம், நாகர்கோயில் என்று விலாசம் ரப்பர் ஸ்டாம்பாக அடிக்கப்பட்டிருக்கிறது. பழைய ஆப்டோன் படங்கள் இருக்கின்றன. அன்றைய கணக்கில் மிக செலவேறிய பதிப்பாக இருக்கவேண்டும். நூறாண்டுகள் ஆகப்போகின்றன, காகிதம் அப்படியேதான் இருக்கிறது. தரமான காகிதம், அழகான அச்சு , பிழையற்ற மொழிநடை

நீளநீளமான நாடகத்தனமான உரையாடல்கள்தான் இந்நாவலின் பாணி. எல்லாமே ஒருவர் இன்னொருவரிடம் சொல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளன. ஆகவே இவை எளிதாக நாடகமாக ஆகியிருக்கின்றன. நிகழ்ச்சிகள், சாகசங்கள் எல்லாமே காட்சிவடிவாக அல்லாமல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. பேச்சுக்கள் எல்லாம் அச்சுத்தமிழில் உள்ளன. பத்தி பிரிக்கப்படாமல் பல பக்கங்கள் ஒரே ஒழுக்காகச் செல்லும் நடை. ஆனால் உரையாடல்கள் பத்திகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதியவை பெரும்பாலும் துப்பறியும் நாவல்கள். துப்பறியும் நாவல் என்றால் அப்படிச் சரியாகவும் சொல்லிவிடமுடியாது. அன்றைய பொதுமக்களுக்கு தெருக்கூத்து மற்றும் நாட்டார்க்கதைப்பாடல்களில் இருந்து என்னென்ன பிடித்தமானவையாக இருந்தனவோ எல்லாமே கலந்து துப்பறிதலில் கொண்டுபோய் கோத்துச் சமைத்த கதைகள். சீமான் வீட்டுப்பெண் கதைநாயகி. அவளை காதலிப்பவன், அவளை கல்யாணம் செய்ய விரும்பும் கெட்டவர்கள். அரண்மனைச்சதிகள், அடுக்களைச் சதிகள், மாற்றாந்தாய்க்கொடுமைகள், தாசிகள். கூடவே போலீஸ்,  துப்பறிதல், நீதிமன்ற விசாரணை, சில்லறைச் சாகசங்கள். சாகசங்கள் பெரும்பாலும் மாறுவேடமிட்டு ஏறிக்குதிப்பது என்ற அளவிலேதான் இருக்கும்.

ராஜாம்பாளும் அதே அமைப்புப்படி எழுதப்பட்ட ஒரு கதைதான்.ராஜாம்பாள் பணக்காரரான சாமிநாத சாஸ்திரியின் மகள். அவளுடைய சிற்றன்னைதான் கனகவல்லி. அவள் படிப்பறிவில்லாதவள்,பேராசை கொண்ட தீயவள். அவளுடைய தம்பி நடேச சாஸ்திரி. நடேசன் கெட்டவன். அவனுக்கு ராஜாம்பாளை கட்டிவைக்க கனகவல்லி முயல்கிறாள். ராஜாம்பாள் கோபாலன் என்ற நல்லவனை காதலிக்கிறாள். கோபாலனுக்கே ராஜாம்பாளை கொடுக்கவேண்டும் என்று சாமிநாத சாஸ்திரி நினைக்கிறார்

இத்தருணத்தில் சப்மாஜிஸ்ட்ரேட் நீலமேக சாஸ்திரிகள் உள்ளே நுழைகிறார். அவர் மனைவியை இழந்த ஐம்பதுவயதுக்காரர். அவருக்கு இளம்பெண்ணான ராஜாம்பாளை திருமணம் செய்ய ஆசை. ராமண்ணா என்ற கொடிய சூழ்ச்சியாளரை கனகவல்லி அழைத்து சாமிநாத சாஸ்திரி மகளுக்கு ஜாதகம் பார்க்க அழைக்கும் சோதிடர்களை பணம்கொடுத்து பொய்சொல்லும்படி கேட்டுக்கொள்கிறாள். கோபாலனின் ஜாதகம் தப்பானது என்றும், அவனுக்கு ராஜாம்பாளை கொடுக்கக்கூடாது என்றும் சொல்லவேண்டும். அதே ராமண்ணாவை கூப்பிட்டு தனக்கு ராஜாம்பாளை ஏற்பாடுசெய்தால் பணம் தருவதாக நீலமேக சாஸ்திரி சொல்கிறார்

ராமண்ணாவின் ஏற்பாட்டின்படி சாமிநாத சாஸ்திரி திருட்டுவழக்கில் சிக்கவைக்கப்படுகிறார். அதிலிருந்து விடுதலையாகவேண்டும் என்றால் ராஜாம்பாளை நீலமேக சாஸ்திரிக்கு கொடுக்க அவர் சம்மதிக்கவேண்டும். வேறுவழியில்லாமல் அவர் சம்மதிக்கிறார். ராஜாம்பாளும் அப்பாவின் கௌரவத்தைக் காக்க அதற்கு சம்மதம் சொல்கிறாள். நீலமேக சாஸ்திரியை திருமணம் செய்யவேண்டும் என்றால் அவர் காஞ்சீபுரம் நகருக்கே சோறுபோட்டு தடபுடலாக கல்யாணம் செய்யவேண்டும் என்கிறாள்.

நீலமேக சாஸ்திரி சாமிநாத சாஸ்திரியின் சொத்தெல்லாம் தனக்குத்தானே என்ற நினைப்பில் அவ்வாறே செலவுசெய்கிறார். அவருடைய பணமெல்லாம் காலியாகிறது. ஆனால் திருமணம் நடப்பதற்கு முன்னரே ராஜாம்பாள் காணாமலாகிறாள். அவள் எழுதிப்போட்ட ஒரு துண்டுத்தாள் கிடைக்கிறது. அதிலிருந்து விசாரித்துச்சென்று கோபாலனை இன்ஸ்பெக்டர் மணவாள நாயிடு கைதுசெய்கிறார்.ராஜாம்பாளின் எரிந்து கருகிய சடலம் கிடைக்கிறது

ராஜாம்பாளை கொன்றது உண்மையிலேயே கோபாலன் தானா? விசாரிப்பதற்காக துப்பறியும் கோவிந்தன் வருகிறார். மணவாளநாயிடு, நீலமேக சாஸ்திரி ஆகியோரின் ஜோடனைகளைக் கடந்து துப்பறிந்து உண்மையைக் கண்டடைகிறார். இதை வாசிக்கும் எவரும் இந்நாவலை படிக்கப்போவதில்லை என்பதனால் முடிவைச் சொல்லிவிடலாம். ராஜாம்பாள் சாகவில்லை. செத்தது வேறொரு தாசி. கொன்றவன் நடேச சாஸ்திரி. கேஸ் முடிகிறது, ராஜாம்பாளை கோபாலன் திருமணம் செய்துகொள்கிறான்.

இந்நாவலில் இன்று ஆர்வமூட்டுபவை அன்றைய சமூகச் செய்திகள். சாமிநாத சாஸ்திரியை அன்றைய கணக்கில் முற்போக்கான, சுதேசி எண்ணம்கொண்ட, பிராமணராகவே ஜே.ஆர்.ரங்கராஜூ காட்டுகிறார். அவர் தன் மனைவியிடம் தன்னைப்பற்றிப் பேசும்போது இப்படிச் சொல்கிறார்:

சோஷியல் ரிபார்மில் சேந்தவர்கள் அநேகம்பேர் மேற்படி கூட்டங்களில் வந்து பேசும்போது மாத்திரம் சிறுவயதில் கலியாணம் செய்யக்கூடாதென்றும் பால்யவிதவைகளுக்கு மறுகல்யாணம் செய்யவேண்டுமென்றும் எல்லா ஜாதியையும் ஒரேமாதிரியாக பாவிக்கவேண்டுமென்றும் ஜாதிவேற்றுமையை வேரோடு கருவறுத்துவிடவேண்டுமென்றும் தாசிகள் கச்சேரிக்கு போகக்கூடாதென்றும் சாராயம் முதலிய லாகிரி வஸ்துக்களை குடிக்கக்கூடாதென்றும் பிரமாதமாய் தங்கள் முழுசாமர்த்தியங்களோடும் பிரசங்கம் செய்கிறார்கள். ஆனால் அவரவர்கள் சொந்தத்திற்கு மேற்படி காரியாதிகள் வரும்போது மாத்திரம் நாம் ஏன் முதலில் செய்யவேண்டும், யாராவது நாலைந்துபேர் முதலில் மேற்படி காரியங்களை நடத்திக்காட்டினால் அப்போது யோசிக்கலாம் என்று நினைத்துக்கொண்டு மாமூல் பிரகாரம் நடத்திக்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் தேசவிருத்தி தங்களால்தான் ஆகவேண்டும் என்று நினைத்து அதற்கு வேண்டிய காரியாதிகள் செய்யும் வரையும் நமது தேசம் விருத்தியாதாகையால் நான் என்னால் கூடியவரையில் எப்படி நடப்பேன் என்று ஒப்பி மேற்படி சங்கத்தில் கையொப்பமிட்டிருக்கிறேனோ அப்படித்தான் நடப்பேன்.

அப்படிப்பட்ட சாமிநாத சாஸ்திரி அதே உரையாடலில் கனகவல்லியின் தம்பி நடேசனைப்பற்றிச் சொல்லும்போது  ”உன் தம்பி நடேசன் படிக்காமல் மாத்திரம் இருந்தாலும் போனால்போகிறதென்று கொடுக்கலாம். அவன் சென்னையில் தேவடியாள்களை வைத்துக்கொண்டு செலவுகள் செய்வதாகவும் ஸ்பென்ஸர் கம்பெனியில் ஏராளமாய் சீமைச்சாராயங்கள் வாங்கிக் குடிப்பதாகவும் பறையர்கள் வீட்டிற்கூட தாரளமாய் சாப்பிடுவதாகவும் என் வக்கீல் எழுதியிருக்கிறாரே” என்கிறார்

நாவல் வெளிவந்த 1913 வாக்கில் சென்னையில் பறையர் உள்ளிட்ட அடித்தள மக்களுக்கான விடுதலை இயக்கங்கள் தொடங்கி வலுப்பெற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன என்பது வரலாறு. ஆனால் அந்த கருத்துக்கள் பொதுப்புத்திக்குப் போய்ச் சேரவே இல்லை என்பதற்கான சான்று இது.

அன்றைய உபசரிப்புக்கள் , வம்புப்பேச்சுக்கள், நையாண்டிகள் போன்றவற்றை நாவலில் சாதாரணமாக காணலாம். கனகவல்லி ராமண்ணாவை உபசரிக்கிறாள்:

”இராமண்ணா வாரும் வாரும் உட்காரும். பாவம் எங்கிருந்து நடந்து வந்தீரோ. அதிக சிரமமாயிருக்கும் .கொஞ்சம் தாகசாந்தி செய்துகொள்ளும்” என்று சொல்லி எட்டு தோசை, பத்து இட்டிலி, பன்னிரண்டு தையிர்வடை, பன்னிரண்டு சுகியன், ரவாலட்டு ஆறு ஜிலேபி ஏழு பூந்திலட்டு எட்டு ஆகிய இவைகளை ஒரு பெரிய தட்டில் வைத்து தாகசாந்திக்காக சுமார் இரண்டுபடி காப்பித்தண்ணீரும் கொண்டுவந்து அவர் பக்கத்தில் கனகவல்லி அமர்ந்தாள்.

அன்றைய எல்லா நாவல்களிலும் இராமண்ணாவைப்போல தீமையே உருவான, சூழ்ச்சிசெய்கிற, கூட்டிக்கொடுக்கிற பிராமணர்கள் வருகிறார்கள். மாதவையா நாவலிலும் இவர்களைக் காணமுடிகிறது. இவர்கள் அன்று ஒரு சமூகநிகழ்வாகவே நிறைந்திருந்தார்கள் என்று தோன்றுகிறது. பெண்ணுக்கு கணவன் பார்த்தல், சொத்துக்களை விற்று வாங்குதல், பல்வேறு வழக்குகளில் சமரசம் செய்துவைத்தல் ஆகியவற்றை இவர்கள் செய்கிறார்கள். கொழுத்த லாபம் பார்க்கிறார்கள்.

அதற்கு முன்னரே அரசசபைகளில் இந்த சூழ்ச்சிப் பிராமணர்கள் நிறைந்திருந்ததை நாம் நாயக்கர், மராட்டியர் வரலாறுகளில் பார்க்கிறோம். அவர்களின் இன்னொரு வடிவம் இவர்கள். சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம் போன்ற ஊர்கள் உருவாகி அங்கே ஒர் உயர்நடுத்தரவர்க்கம்  திரண்டு  வந்த காலத்தில் அதற்குரிய தரகர்கள் தேவைப்பட்டிருக்கலாம்

ராமண்ணா தன் திறமையைச் சொல்கிறார் “மேலவீட்டு சுப்பையர் பெண்ணை யாருங்கல்யாணம் செய்துகொள்ளாமல் கழித்துவிட்டார்களே. சுப்பையர் பத்து பை வெளியே கிளப்பினார். பெண்ணையும் சொத்துக்காரன் வீடுசேரும்படி செய்துவிட்டேன். இராம சுப்பய்யர் மகனுக்கு விழி கண் குருடு என்று யாரும் பெண்கொடுக்கமாட்டேன் என்றார்களே .பன்னிரண்டு பை வெளியே கிளம்பவே ஜட்ஜ் கோபாலய்யர் பெண்ணை கல்யாணம் பண்ணிவைத்தேன்” [பை என்பது ஐநூறு நூபாய் என அடிக்குறிப்பு உள்ளது]

இந்நாவலிலும், அக்கால நாவல்கள் அனைத்திலுமுள்ள முக்கியமான பேசுபொருளாக இருப்பது அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிமுறையில் மலிந்திருந்த ஊழல். நீதிமன்றங்கள் ஊழலாலேயே இயங்குகின்றன. நீதிபதிகள் வெளிப்படையாகவே பேரம்பேசி பணம் வாங்கி தீர்ப்பு சொல்கிறார்கள். குமாஸ்தாக்கள், தாசில்தார்கள், கலெக்டர்கள் அத்தனைபேரும் ஊழலில் திளைக்கிறார்கள்.

ஜே.ஆர்.ரங்கராஜூ இப்படி நீலமேக சாஸ்திரிகளை அறிமுகம் செய்கிறார். ”காஞ்சிபுரம் கஸ்பா சப் மஜிஸ்ட்ரேட் நீலமேக சாஸ்திரிகள் சுப்ரமணிய சாஸ்திரிகளின் ஏக குமாரர்.  நீலமேக சாஸ்திரிகளும் வாலாயமாய் யூனிவர்சிடி பரீட்சை கேள்விகளை பரீட்சைக்கு சிலநாட்களுக்கு முன்னாலேயே வரவசைத்து அதை வேண்டுபவர்களுக்கு விற்று பணம் சம்பாதித்து கேள்விகளை கொடுக்கும்படி யூனிவர்சிடி உத்தியோகஸ்தர்களுக்கு பாதியை கொடுத்துவிட்டு மற்றபாதியை வைத்து ஜீவனம் செய்துகொண்டிருக்கும் ஸ்ரீனிவாசய்யங்காராவர்கள் வீட்டில் வருஷம் பூராவும் வேலைசெய்வதும் பரீசை காலங்களில் மட்டும்போய் ஸ்ரீனிவாசய்யங்கார் சொல்லுகிறபடி எழுதி வந்துவிடுவார். அவர் பரீட்சையில் முதன்மையாகவே தேறி வந்தார்”

அன்றைய சென்னைப் பல்கலையில் தேர்வுமுறையில் இதெல்லாம் சாதாரணமாக நடந்திருக்கிறது. கேள்வித்தாள் திருட்டுக்கு சிண்டிக்கேட்டே இருந்திருக்கிறது. ஜே.ஆர்.ரங்கராஜூ நீதிமன்றம் பற்றிச் சொல்கிறார் “இப்படியே பீ ஏ பரீட்சையிலும் தேறினவுடனே சப்ஜட்ஜ் நரசிம்ம சாஸ்திரி பெண்ணை ஐயாயிரம் ரூபாய் வரதக்ஷிணை வாங்கிக்கொண்டு கலியாணம் செய்துகொண்டார். நமது நீலமேக சாஸ்திரிகள் அவருடைய மேலதிகாரிகளை பொன்னாலும் பெண்ணாலும் திருப்தி செய்து காஞ்சீபுரம் சப்மாஜிஸ்ட்ரேட் வேலை பெற்றார்”

இருபத்தைந்தாண்டுக்கால நீதிபதி வாழ்க்கையில் நீலமேகம் பத்துலட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.ஆகவே ராஜாம்பாளை கல்யாணம் செய்ய் விரும்புகிறார்.பத்துலட்சம் என்றால் பத்து லட்சாதிபதிகளுக்குச் சமம். சாமிநாத சாஸ்திரியின் சொத்தும் அவ்வளவுதான். இது குமாஸ்தாக்களுக்கு மாதச்சம்பளம் முப்பதுரூபாய் இருந்த காலம் என்பதை நினைவில்கொள்ளவேண்டும்

போலீஸும் நீதிமன்றமும் இணைந்து செயல்படுகிறது. நீலமேக சாஸ்திரிகள் நேரடியாகவே போலீஸ் இன்ஸ்பெக்டரை அழைத்துப்பேசுகிறார். இன்ஸ்பெக்டர் மணவாள நாயிடு எல்லாவகை ஊழலையும் செய்பவர். அதில் உச்சம் அவர் தீவட்டிக்கொள்ளையரை போற்றி வளர்க்கிறார் என்பது. அவ்வப்போது திருட்டுக்களை பிடித்து பாதி திருட்டுச் சொத்தை போலீஸே பிடுங்கிக்கொள்கிறது. திருட்டு நகைகளை கொண்டுவந்து சாதாரணர்கள் வீட்டில் போட்டு அவர்களை குற்றவாளியாக்கி மிரட்டி பணம் பறிக்கிறார் மணவாளநாயிடு. திருட்டிலும் பணம் நிரபராதிகளை மாட்டிவிடுவதிலும் பணம். அக்கால போலீஸே இப்படித்தான் செயல்படுகிறது.

இதில் என்ன நுட்பம் என்றால் கதையாசிரியரே இதை பெரிய குற்றம், பாவம் என்றெல்லாம் நினைக்கவில்லை என்பதுதான். இந்த குற்றங்களைச் செய்த போலீஸ்காரர்கள் நாவலில் தண்டிக்கப்படவில்லை. ஊரிலே உலகத்திலே நடப்பதுதானே என்றுதான் நாவல் சொல்லிச் செல்கிறது.

கனிஸ்டேபில் என அடிக்கடி வருகிறது. போலீஸ்காரர்களுக்கான பெயர். நீதிபதியே கான்ஸ்டபிளை பிரம்பால் அடிக்கிறார். அதன்பின் சமாதானப்படுத்த பக்ஷீஸ் சில்லறை கொடுக்கிறார். ‘கனிஸ்டேபில்’ எஜமானின் கருணையால் மகிழ்ச்சி அடைகிறார்

அதன்பின் நீதிமன்ற விசாரணை. அது ஒரு நாடகத்தனமான காட்சி. பாரிஸ்டர் கொக்குத்துரை அரசுத்தரப்பு வக்கீல். எதிர்ப்பக்கம் துரைசாமி அய்யங்கார் கோபாலனுக்காக வாதாடுகிறார். துப்பறியும் கோவிந்தன் கோர்ட்டிலேயே வந்திருந்து துண்டுச்சீட்டு கொடுத்தனுப்பி வழக்குக்கு உதவுகிறார்.அசிஸ்டெண்ட் சர்ஜன் காவன்னாத்துரையை துரைசாமி அய்யங்கார் கோர்ட்டில் காய்ச்சி எடுக்கிறார்.

அதன்பின் கதை மோகினிகள், லோகசுந்தரிகள் என்று தாசிகளின் உலகுக்குள் சென்றுவிடுகிறது. அன்றெல்லாம் அவர்கள் இல்லாவிட்டால் கதையை படிக்கமாட்டார்கள் போல. கடைசியில் எல்லாம் சுபம்.

இந்நாவலை வாசிக்கையில் எப்போதும் நான் சொல்லிவருவதுதான் மீண்டும் தோன்றியது. அதை இந்திய பிரிட்டிஷ் ஆட்சியைப்பற்றி எழுதிய ராய் மாக்ஸ்ஹாம் முதல் சமீபத்தில் சசி தரூர் வரை அனைவருமே வெவ்வேறு வகையில் எழுதியிருக்கிறார்கள். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி 1750 வாக்கில் வேரூன்றியது. நூறாண்டுகளில் அவர்கள் உலகிலேயே மிகப்பெரிய அதிகார வர்க்கத்தை இங்கே உருவாக்கிவிட்டனர். அதை அத்தனை எளிதாக உருவாக்க முடிந்தது ஊழலுக்கு அவர்கள் அளித்த அனுமதியாலும் ஊக்கத்தாலும்தான்.

பழைய பிரிட்டிஷ்ராஜில் கவர்னர்ஜெனரல் முதல் கவர்னர்கள் கலெக்டர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் என அனைவருமே வரம்பற்ற ஊழலில் திளைத்தனர். வெள்ளைக்காரர்கள் இந்தியா வந்து பணியாற்ற தூண்டில்பொறியாக இருந்ததே பிரமிக்கவைக்கும் ஊழல்செல்வம்தான். இந்தியர்கள் வெள்ளையர்களிடம் சேவையாற்ற முண்டியடித்ததே அதனால்தான். நீதித்துறை, கல்வித்துறை எங்கும் அன்றிருந்த ஊழலை இன்றுகூட காணமுடியாது

இந்திய சுதந்திரப்போராட்ட காலம்தான் தூயநிர்வாகம், மக்கள்நலம்நாடும் அதிகாரவர்க்கம்  என்னும் கனவை முன்வைத்தது. அது ஒரு குறுகியகாலக் கனவு, அவ்வளவுதான். இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரத்திற்கு முன்னும் சுதந்திரம் கிடைத்தபின் இருபதாண்டுகளிலும் அப்படிப்பட்ட ஓர் அரசை உருவாக்கவும், ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்கவும் முயன்றது. அதன்பின் அனைத்தும் வழக்கமான பாதைக்கு திரும்பின. நாம் ‘வெள்ளைக்காரன் ஆட்சிபோய் கொள்ளைக்காரன் ஆட்சி வந்தது’ என்கிறோம்.அதைச் சொல்பவர்கள் பெரும்பாலும் வெள்ளைக்கார ஆட்சியில் கொள்ளையடித்தவர்களின் வாரிசுகளே

இந்நாவல் உட்பட ஆரம்பகாலத் தமிழ்நாவல்களில் அத்தனைவகையான ஊழல்களையும் செய்பவர்கள் பிராமணர்கள், நாயிடுக்கள், முதலியார்கள், வேளாளர்கள். வேறெந்த சாதியும் அதிகாரத்தில் இல்லை. அப்படியென்றால் இன்று நாம் காணும் மாற்றம் என்பது ஊழல்செய்வதற்கான வாய்ப்பை அடுத்தகட்ட சாதியினர் ஜனநாயகம் வழியாக எடுத்துக்கொண்டது மட்டும்தானா?

தாசியும் பெண்ணும் தமிழ்நாவலின் முதல்படிகளில் ஒன்று…

——————————————————————————-

ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய “ராஜாம்பாள்” சிலிக்கான் ஷெல்ப் ஜே.ஆர். ரங்கராஜு – கிருஷ்ணன் வெங்கடாச்சலம்

ஜே.ஆர்.ரங்கராஜு -கல்கி- பசுபதிவுகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 10:35

இரவு- கடிதம்

இரவு வாங்க

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

அண்மையில்தான் இரவு நாவலை வாசித்தேன். அதில் ஒரு காட்சி. ஒரு வடஇந்திய குடும்பம் கேரளாவிற்கு சுற்றுலா வரும். அந்த குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் காயலில் பயணித்தபடி பைனாக்குலர் வழியாக கரையை பார்ப்பார்கள். அந்த பைனாக்குலர் பெண்கள் குறித்த சரவணனின் பார்வை இவ்வாறாக இருக்கும், “அவர்களுக்கு எப்படி அந்தப் பயணத்தை ரசிப்பதெனத் தெரியவில்லை என்று ஊகித்தேன். எல்லாரும் சொல்கிறார்களே என்று கிளம்பி வந்திருக்கிறார்கள். ஆனால் இதில் என்ன இன்பம் இருக்கிறதென்றும் புரியவில்லை. நீர், தென்னைமரக் கூட்டங்கள், வானம். வேறு என்ன இருக்கிறது?”

இதே போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்பு தஞ்சை பெரியக்கோயிலுக்கு செல்ல எனது நண்பர்கள் சிலர் திட்டமிட்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இணைந்துக்கொண்டேன். அந்த பயணம் குறித்த எண்ணம் ஒருவித கிளர்ச்சியை அளித்தது. ”நாளை மதியம் மாபெரும் வரலாற்றின் முன்னால் சென்று நிற்கப்போகிறோம், தமிழர் கட்டடக்கலையின் உன்னதத்தை காணப்போகிறோம், ராஜராஜ சோழன் சுவாசித்த காற்றை நாமும் சுவாசிக்கப் போகிறோம்” என பலவாறு எண்ணிக்கொண்டேன். ஆனால், நடந்ததே வேறு. பெரிய கோயிலுக்கு சென்றதும் என்ன செய்வதென்று தெரியவில்லை. தெக்கையும் வடக்கையும் மாறிமாறி பார்த்தேன். தேமே என்று சுற்றி வந்தேன். சிறிது நேரம் கழித்து, அங்கிருந்த சிலைகளே தோற்கும் வகையில், பல்வேறு போஸ்களில் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன். பின்னர் நண்பர்களுடன் ஊர் திரும்பினேன்.

ஒரு புதிய இடத்தை பார்க்க செல்வதென்றால், அந்த இடம் குறித்தும், சிறப்புகள் குறித்தும் தெரிந்துக்கொண்டுதான் பயணிக்க வேண்டும் என்பதை பின்னர்தான் புரிந்துக்கொண்டேன்.

இரவு நாவலின் அந்த பகுதி பயணம் குறித்த மேலும் சிலவற்றை ஞாபகப்படுத்தியது.

1.. காற்றின் மொழி திரைப்படத்தில் பண்பலை நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிகா பேசுவார். அதில், தனது அம்மா ஹரிதுவார் சென்றபோது அடைந்த அனுபவங்களை விவரிப்பார். ஹரிதுவாரில் அவரின் அம்மா கண்ட கங்கா நதி, இமயமலை, சூரியோதயம் ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக தெரிவிப்பார். மிகவும் உருக்கமான காட்சி அது. தனது அம்மா கூறிய அனுபவங்களுக்கு மாறாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக, ஜோதிகா கடைசிவரை ஹரிதுவாரே செல்ல மாட்டார். || https://youtu.be/gnhUmNwmOFc ||

2.. “The Alchemist” நாவலில் படிக வியாபாரி ஒருவர் வருவார். நன்றாக உழைத்து, பணம் சேர்த்து மெக்காவுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் சிறு வயது முதலே அவரின் கனவு. மெக்காவுக்கு செல்வது குறித்தும், கபாவை வலம் வருவது குறித்தும், பிரார்த்தனை செய்வது குறித்தும் ஒவ்வொரு நாளும் அவர் கனவு கண்பார். ஒரு கட்டத்தில் மெக்காவுக்கு செல்வதற்கு தேவையான செல்வம் அந்த முதியவரிடம் சேர்ந்துவிடும். ஆனாலும், அவர் மெக்காவுக்கு செல்ல மாட்டார். மெக்கா செல்வது அவரின் வாழ்நாள் லட்சியம். அங்கு சென்று விட்டால் அவரின் வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிடும். அத்துடன், மெக்கா எப்படி இருக்கும், பிரார்த்தனை செய்யும்போது தனக்கு முன்னும் பின்னும் யார் நிற்பார்கள், என்ன பேசுவார்கள் என்பது உட்பட அனைத்தையும் அவர் கற்பனையில் வாழ்ந்திருப்பார். நேரில் சென்றால் இந்த கற்பனை ஏமாற்றத்தில் முடியலாம் என அவர் அஞ்சுவார். ஆகவே, அந்த முதியவர் தனது கனவு தேசமான மெக்காவுக்கு செல்லவே மாட்டார்.

3.. தங்களின் அறம் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெருவலி கதையிலும்  இதேபோன்ற ஒரு இடம் வரும். கோமல் சுவாமிநாதன் அவர்களுக்கு இமயமலை செல்ல வேண்டும் என்பது கிட்டதட்ட 30 வருட கனவு. முதுமை காலத்தில் புற்றுநோய் பாதிப்பால் எழுந்து நடமாட முடியாத நிலைக்கு ஆளாவார். இருந்தபோதும், தனது வாழ்நாள் கனவான இமயமலைக்கு செல்ல முடிவெடுப்பார். நோயுடன் மிகவும் சிரமப்பட்டு மலையேறுவார். ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கு வெறுமை ஏற்பட்டு விடும்.
”முப்பது வருஷமா ஏதோ கனவ வளத்து வச்சிண்டு இது வரைக்கும் வந்தாச்சு. அந்தக்கனவு என் அன்றாட வாழ்க்கையில இருந்த சலிப்பை இல்லாம பண்ணி ஒரு சின்ன குளுமைய மனசிலே நிறைச்சிட்டிருந்தது. அதை அப்டியே விட்டிருக்கணும். இவ்வளவு தூரம் வந்திருக்கக்கூடாது.” என அவர் எண்ணி வருத்தப்படுவார்.

4. 3 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அராத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் தாங்களும், சாரு நிவேதிதாவும் கலந்துக்கொண்டீர்கள். அப்போது ”நாடு கடத்தப்பட்டீங்கனா எந்த நாட்டுக்கு செல்ல விரும்புவீங்க” என்று சாரு தங்களிடம் கேட்டார். அதற்கு ஆஸ்திரேலியா என்று பதிலளித்தீர்கள். பதிலுக்கு, தான் சிலி நாட்டிற்கு செல்ல விரும்புவதாக சாரு தெரிவித்தார். அதற்கு தாங்கள் ”அனேகமா அங்க போகற வரைக்கும்தான் அது உங்களுக்கு பிடிக்கும்னு நெனைக்கறேன்” என்று கூறினீர்கள்.

5. ராகுல் சாங்கிருத்யாயன் தான் எழுதிய ஊர்சுற்றிப் புராணத்தில், ஊர்சுற்ற விரும்பும் மகன்களை அம்மாக்கள் பணம் கொடுத்து சில மாதங்களுக்கு வெளியே அனுப்பி வைக்க வேண்டும் என கூறுகிறார். ”இப்படி செய்தால் அந்த தாய்க்கு லாபம்தான். அந்த பையன் ஊர் சுற்றும் திறமை இல்லாதவனாக இருந்தால், மீண்டும் விரைவிலேயே தன் வீட்டுக்குத் திரும்பி வந்து விடுவான். அவனுடைய ஊர் சுற்ற வேண்டுமென்ற பொய்யான ஆசையும் அடங்கிப் போய்விடும்.” என அவர் தெரிவிக்கிறார்.

இவ்வாறு, இரவு நாவலில் வந்த அந்த பைனாக்குலர் பெண்கள் தொடர்புடனும்,  தொடர்பே இல்லாமலும் இவற்றை எல்லாம் நினைவூட்டிவிட்டு, மீண்டும் வடஇந்தியா சென்று சேர்ந்து விட்டார்கள்
………………..

ஹரிதுவார் குறித்த கனவில் வாழும் ஜோதிகா கதாபாத்திரமும், மெக்கா குறித்த கனவில் வாழும் அந்த இஸ்லாமிய முதியவரும் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களின் உணர்வுகளை பூரணமாக என்னால் உணர முடிகிறது. அவர்களை போலவே ஒரு ஊரை அங்குல அங்குலமாக படித்தும், கேட்டும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த ஊரை கற்பனையால் மேலும் பிரமாண்டப்படுத்தியப்படி இருக்க வேண்டும். ஆனால், கடைசி வரை அந்த ஊர் பக்கம் மட்டும் தலை வைத்து படுக்க கூடாது என்ற எண்ணம் எனக்கு உள்ளது. நிஜமான ஓர் ஊரில் கற்பனையில் மட்டுமே வாழ்ந்து வந்தால் சுவாரஸ்யமாகத்தானே இருக்கும்..

நன்றி
ஆனந்த குமார் தங்கவேல்
கோயம்புத்தூர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.