S. Ramakrishnan's Blog, page 70

January 16, 2023

அதிகாரத்தின் அறைகள்

( இடக்கை நாவல் விமர்சனம் ; நெய்வேலி பாரதிக்குமார்  

அதிகாரம் என்பது எல்லா காலத்திலும் இரக்கமற்றது, கொலைக்கரங்கள் கொண்டது, இரத்தக்கறை படிந்தது, குரூர மனமும் கோமாளித்தனங்களும், மனநிலை பிறழ்ந்த நோய்மை பீடித்தது என்பதை ஔரங்கசீப் மற்றும் பிஷாடன் ஆகிய கதா பாத்திரங்கள் வழியே திரும்பத் திரும்ப நாவல் நெடுக காட்சிப்படுத்திக் கொண்டே போகிறார்.

 போரில் தோல்வி அடைந்த வீர்ர்களின் நாவுகளை அறுத்து எடுத்து வரச்சொல்லி ஆணையிடுகிறான் ஔரங்கசீப். கற்பனையில் கூட நினைக்கமுடியாத குரூரமான அந்த உத்திரவின் வழியே தன்னை எதிர்ப்பவர்களின் தலையை கொய்வதை விட குரலை நெரிப்பதுதான் அதிமுக்கியமானது என்று பிரகடனப்படுத்துகிறான். அத்தனை நாவுகளையும் தட்டில் வைத்து எடுத்து வந்த வீரனிடம் அவற்றை மாவிலைத் தோரணம் போல கட்டி அரண்மனையின் முன்பு தொங்கவிடு அப்பொழுதுதான் மற்றவர்களுக்கு அச்சம் வரும் என்று உத்திரவிடும்போது அதிகாரம் எப்பொழுதும் தன்னைக் காத்துக்கொள்ள எத்தனை கொடூரங்களையும்  இரக்கமில்லாமல் நிகழ்த்திக் கொண்டே இருக்கும் என்பதை எஸ்.ரா உணர்த்துகிறார்.

இன்றைக்கும் அரசினை, அதிகாரத்தினை வழி நடத்துபவர்கள் எதிர்க்குரல்களை நசுக்குவதன் வழியேதான் அச்ச உணர்வை பரவ விடுகிறார்கள்

 இன்னொரு இட்த்தில் அக்தர் என்பவனின் தலையை கொய்து தன் முன்னே வைத்து அதன் மீது காறி உமிழ்கிறான் ஔரங்கசீப். மரணத்தைத் தாண்டிய தண்டனையை தருவதன் மூலம் மட்டுமே அரசு அதிகாரங்கள் திருப்தி அடைகின்றன என்பதை ஔரங்கசீப்பே சொல்கிறான். அடக்கமுடியாத குதிரை தன்னைக் கீழே தள்ளிவிட்ட்து என்பதற்காக அதனை வெட்டிக்கொல்லும் ஔரங்கச்சீப். அது இறந்தபிறகும் கூட அதன் கண்கள் பணியாமல் முறைத்துக் கொண்டே இருப்பதாக தோன்றியதால் அதன் கண்கள் இரண்டையும் வாளால் செருகி சிதைக்கின்றான்  

அரச மனநிலை என்பது கம்பீரத்தையோ மனவலிமையையோ கொண்டது மட்டுமல்ல இரக்கமற்றத் தன்மையையும் அடிப்படை மன நிலையாகக் கொண்டது..

ஔரங்கசீப்பின் ஏழு வயதில் அவனது வளர்ப்புத்தாய் அனார் அதிகாரத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது என்பதை அவனுக்கு உணரவைக்க ‘கீழே உதிர்ந்து கிடந்த பூவை சக்கரவர்த்தியே திரும்பவும் அதன் கிளையில் ஒட்ட வையுங்கள்’ என்று சொன்னதன் பொருள் உணராது மரத்தில் ஏறி மூர்க்கமாக முயற்சிக்கின்றான். ஆனால் முடியாமல் கீழே விழுந்து அடிபட்டுவிடுகிறான். அந்த மாபெரும் குற்றத்துக்கு ஒரு தாயைப்போல வளர்த்த அனாரை யானையின் காலில் இட்டு நசுக்கி கொல்வதை எவ்வித சலனமும் இன்றி ஏற்கின்ற மனநிலை ஏழுவயதிலேயே அவனுக்கு அமைந்துவிட்டது.

எஸ்.ரா அவர்களின் கவித்துவமான சொல்லாடால் கதையை வாசிக்கும்போது அதன் காட்சிகள் தரும் நடுக்கத்தில் இருந்து நம்மை ஒருவாறு ஆசுவாசப்படுத்தி கதையின் நெடுக அழைத்துச் செல்கிறது. இரவை வெவ்வேறு சொற்கள் வர்ணனைகள் வழியே அவர் காட்சிப்படுத்தும் போது நம்மை அறியாமல் இரவு நம்மீது கவிழ்கிறது.

அரண்மனை அமைப்பு மற்றும் நிர்வாகம் பற்றி அவர் விவரிக்கையில் அரண்மனையில் யாருமே நுழைய முடியாத அந்தப்புரத்தில் அவரது விவரணைகள் வழியாக அனாயசமாக அவரை பின்தொடர வைக்கிறார்.

உங்கள் கற்பனையில் நிழலாடும் கனவுமாளிகை அல்ல அது… குரோதங்களும், பொறாமைகளும் சதிச் செயல்களும் நியாயமற்ற சட்ட திட்டங்களூம் அந்தப்புரங்களின் வேறொரு ரூபத்தைக் காண்பிக்கின்றன.

ஔரங்கசீப்பின் அந்திமக் காலத்தில் அவர் மரணத்தை எதிர் நோக்கி அச்சத்தில் உறக்கம் தொலைத்து வாழும் பரிதாப காட்சியில்தான் நாவல் துவங்குகிறது.

தார் பாலைவனத்தில் நிழல் கூட விழாத ஒரு ஈச்சமரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் சூஃபி ஞானி இபின் முகைதீனிடம் சென்று தனது மரணம் எப்படி நிகழும் என்று கேட்கிறான் ஔரங்கசீப். உண்மையில் அந்த கேள்விக்கு உள்ளே ஒளிந்திருப்பது இன்னொரு கேள்வி தான் தன்னுடைய பிள்ளைகளில் எந்த பிள்ளையால் கொல்லப்படுவேன் என்பதுதான் ஔரங்கசீப்பின் அச்சம் நிறைந்த கேள்வி.

அதிகாரம் எத்தனை குரூரங்கள் நிரம்பியதோ அத்தனை பரிதாபங்களும் நிரம்பியது.

தன் வாழ்நாள் முழுக்க எவரையுமே முழுமையாக நம்ப முடியாத, ஒரு உண்மையான் நட்பை, உறவை பெற முடியாத துரதிர்ஷ்டம் மிக்கது. முதுகின் பின்னே எவனுடைய குறுவாள் தன் முனையை பதித்திருக்கும், தன்னுடைய எந்த வேளை உணவில் விஷம் கலந்திருக்கும், எந்தப்புன்னகையில் சதி கலந்திருக்கும் என்பதை சந்தேகிப்பதிலேயே வாழ்நாள் முழுக்க கழிந்திருக்கும். அதுவும் முகலாய மன்னர்கள் வீரமும், அச்சமும், சந்தேகமும்  கலந்து பிசைந்த கிரீடத்தையே சுமக்க விதிக்கப்பட்டவர்கள்.

இபின்முகைதீன் மற்றும் ஔரங்கசீப்பின் ஆசிரியர் மீர்காசிம் ஆகியோருடன் ஔரங்கசீப் தர்க்கிக்கும் இடங்கள் ஒரு தத்துவ விசாரணை போல எஸ்.ரா எழுதி இருப்பார்.  அஜ்யை என்னும் திருநங்கை அவரது அந்திம காலத்தில் அவரது உற்ற துணையாக இருப்பாள். அந்தக்காரணத்துக்காகவே ஔரங்கசீப்பின் மரணத்துக்குப் பிறகு அவள் ஔரங்கசீப்பின் மகன் அளிக்கும் சித்திரவதைகளை வாசிக்க வாசிக்க இதயம் சில்லு சில்லாக பெயர்ந்து விடும். எத்தனை அற்பமானவர்கள் இந்த அதிகாரப் பேய்கள்.?

தூமகேது என்கிற சாமானியனின் துயர்மிக்க கதாபாத்திரம் நாவலின் இணை பாத்திரமாக வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அதிகாரத்தின் கோரமுகங்களை தோலுரித்துக் கொண்டே செல்லும் எஸ்.ரா இன்னொரு பக்கம் அதிகாரத்தின் கூர்நகங்களில் கிழிபடும் அப்பாவிகளை தூமகேதுவின் வழியே காட்சிப்படுத்துகிறார். காரணமில்லாமல் குற்றவாளியாக்கப்பட்டு அதற்காக சிறைவாசம் இருக்கும் தூமகேது தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் என்பதால் காலா என்னும் சிறை தளத்தில் படும் அவமானங்கள் காலகாலமாக தொடரும் சாதிக்கொடுமைகளை சித்தரித்து காட்டுகிறது.

சதுர்வேதி என்னும் பண்டிதன் (சதுர்வேதி என்றாலே நான்கு வேதம் கற்றவன் என்பதால் கிடைக்கும் காரணப்பெயர்) உயர்குலத்தார் சிறையில் குளிக்கும் வாளியை தூமகேது தொட்டுவிட்டான் என்கிற காரணத்தால் நாயின் மலத்தை தூமகேதுவின் வாயில் திணிக்கும் துவேஷம் திண்ணியத்தைச் சாடும் இடமல்லாமல் வேறென்ன?

மண்ணுடல் கொண்ட பெண்ணாக உருவகிக்கும் லகியா என்கிற கதாபாத்திரம் வழியே ஆண்களால் கரைந்து அழியும் பெண்களின் வாழ்வுத் துயரை நாம் உணர்ந்து அதிராமல் இருக்க முடியாது. அதைப்போல புழு தன் இணையை தேர்க்காலில் இட்டு கொன்ற மகாராணிக்கெதிராக குரலெழுப்பி மன்னிப்பை தண்டனையாகப் பெறும் கதையும் அர்த்தமுள்ளது. புழு என்றாலும் நீதி என்பது பாரபட்சமற்றது, எதிர்க் குரலெழுப்ப வேண்டியது அத்தியாவசியமானது என்பதை எஸ்.ரா வலியுறுத்தும் இடமாகவே இருக்கிறது.

பிஷாடன் என்னும் அதிகார மமதையும், அளவற்ற கிறுக்குத்தனங்களை மக்கள் மீது திணிக்கும் ஆணவமும், மனநோய் கொண்டவன் போல நாளொரு சட்டமும் பொழுதொரு தண்டனையுமாக இருக்கின்ற கதாபாத்திரத்தை இன்றைக்கும் பல அதிகார மனிதர்கள் வழியே பார்க்கின்றோம். யானையை தூக்கிலிடச் சொல்லும் பேடித்தனம், குரங்குடன் விசித்திர சல்லாபம் செய்யும் கீழ்மைத்தனம், குரங்குக்கு பணிப்பெண்ணை மணம் செய்து பார்க்கும் குரூரத்தனம், ஒரு படியை இனி பத்து படி என்று அறிவிக்கும் மூடத்தனம் என சகல விதத்திலும் துகளக் தர்பார் செய்யும் பிஷாடன் இன்றிருக்கும் எத்தனை அரசியல்வாதிகளை நினைவுப் படுத்துகிறான்?

பிஷாடன் ஆட்சியில் தலைவிரித்தாடும் வணிகர்களின் வியாபார அதர்மங்கள், அதற்காக ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுக்கொள்ள முயலும் தந்திரங்கள், கீழ்மைகள், பிஷாடன் எத்தனை மூடத்தனங்களை செய்தாலும் ஆஹா ஆஹா என போற்றித் துதிபாடும் அவனது தாய்மாமன், கடலுக்கு பிஷாடனின் பெயரிடும் டச்சு தேசத்து  ரெமியஸ் என்னும் தந்திர வணிகன் என்று அவர் வடித்திருக்கும் பாத்திரங்கள்,  இன்றைக்கும் ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கும் வியாபரிகளை அப்படியே கண்முன் விரிக்கின்றன. ஒரு அசலான அரசியல் சாடல் நாவலாகவே இடக்கை வாசிப்பவர்களிடத்தில் முன் வைக்கப்படுகிறது.

பொதுமக்கள் முன்னிலையில் அழுபவர்களால் ஒரு போதும் அரசனாக முடியாது என்கிற வரி அத்தனை நித்தியமானது. எல்லா காலத்திலும் பொருந்தும் வாசகம் அது.

நாவலில் மனிதர்கள் மட்டுமல்ல அரச பயங்கரத்தால் பறக்கவில்லை என்ற காரணம் காட்டி கொல்லப்பட்டு தூக்கிலிடப்படும் யானை, தன்னியல்பில் ஓடும் குதிரை தனக்கு அடங்கவில்லை என்பதற்காக கொல்லப்படும் கொடூரம், பிஷாடனின் பைத்தியக்காரத்தனமான ஆணையால் கொல்லப்படும் நாய்கள், பெண்ணின் வாள் செருகிய உடல் கண்டு புத்தி பேதலித்ததால் கொல்லப்படும் குரங்கு என நாவலில் ஏதுமறியா வாயில்லா ஜீவன்களும் கூட வதைபடுகின்றன.

பூக்களின் வாசனை என்பது அவற்றின் ரகசியம் அதனால்தான் பெண்களுக்கு பூக்களை பிடிக்கின்றன. எவ்வளவுக்கு விரும்பப்படுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வெறுக்கப்படுபவர்கள் கவிஞர்கள்.

கலவரம் மனிதர்களை ரகசிய ஆசையை பூர்த்தி செய்கிறது போன்ற வரிகள் எஸ்.ராவின் தனித்துவமான வார்த்தைகளின் வார்ப்புகள். .

நாவலின் இறுதியில் ஔரங்கசீப் தன கையால் செய்த தொப்பி எப்படியோ தூமகேதுவின் தலைக்கு வந்து சேர்க்கிறது. ஒரு காலத்தில் கழுத்தில் விழுந்த சாமந்தி மாலைக்காக தண்டிக்கப்பட்ட தூமகேதுவின் கழுத்தில் தானே வந்து விழுகிறது வேறொரு சாமந்தி மாலை.   

நாவல் நெடுகிலும் எண்ணற்ற கதாபாத்திரங்கள் சமூகத்தில் நம் கண்ணெதிரே உலாவும் மனிதர்களை ஏதோ ஒரு விதத்தில் நமக்கு அடையாளம் காண்பித்தபடியே செல்கின்றன.

அதிகாரத்தின் அறைகள் எப்பொழுதும் இருள் கவிந்தவை. சரித்திரத்தின் பக்கங்களில் அரசதிகாரங்கள் சாலைகள் போட்டன, சாலை ஓரங்களில் மரங்கள் நட்டன, குளங்கள் வெட்டின என்பது போன்ற தகவல்களே பளபளப்பான வரிகளால்  பொறிக்கப்பட்டிருக்கும்  ஆனால் இருளின் முகங்களில் ஒளிந்திருக்கும் கறைபடிந்த கருநிற நிழல்களை வெளிச்சமிடுகிறது இடக்கை..

( ஐக்கிய அமீரக எழுத்தாளர்கள் விமர்சகர்கள் நடத்திய விமர்சனப் போட்டியில் பரிசு பெற்ற விமர்சனம் )

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2023 20:49

January 13, 2023

இந்து தமிழ் நாளிதழில்

இன்று வெளியாகியுள்ள இந்து தமிழ் நாளிதழில் இந்திய இலக்கியத்தின் சமகாலப் போக்குகள் குறித்த கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

https://www.hindutamil.in/news/literature/929422-todays-indian-literature.html

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2023 23:26

சென்னை சங்கமம் -நாவல் கருத்தரங்கம்

தைத்திருநாளை முன்னிட்டு சென்னை சங்கமம் இன்று துவங்குகிறது.

கவிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்பி. அவர்கள் முன்னெடுப்பில் நடைபெறும் இந்நிகழ்வு பெரும்கலைவிழாவாக மாநகரம் எங்கும் நடைபெறவுள்ளது.

தமிழ் வளர்ச்சித்துறையும் கலை பண்பாட்டுத் துறையும் இணைந்து நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக இலக்கிய சங்கமம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் அடையாறு ராஜரத்தினம் அரங்கில் இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இலக்கிய நிகழ்வினை கவிஞர் இளையபாரதி ஒருங்கிணைப்பு செய்கிறார்.

16ம் தேதி மாலை நடைபெறும் நாவல் கருத்தரங்கில் பங்கேற்கிறேன். நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றுகிறேன்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2023 23:04

January 11, 2023

கடக்க முடியாத நிலப்பரப்பு

சமகால ஐஸ்லாந்து  திரைப்படங்கள் மாறுபட்ட கதைக்களன்களுடன் மிகுந்த கலைநேர்த்தியுடன் உருவாக்கப்படுகின்றன. Godland என்ற திரைப்படம் 2022ல் வெளியானது. கான்ஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றிருக்கிறது. படத்தின் முன்னோட்டக்காட்சியைக் காணும் போது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த The Mission திரைப்படம் நினைவிற்கு வந்தது.. Roland Joffé இயக்கிய அப்படத்தில் ராபர்ட் டி நீரோ நடித்திருப்பார். படத்தில் Ennio Morricone இசை அபாரமானது,. சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கார் விருது பெற்ற படம்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டேனிஷ் பாதிரியார் லூகாஸ் ஐஸ்லாந்தின் தொலைதூர பகுதிக்கு ஒரு தேவாலயம் கட்டவும், அதன் மக்களைப் புகைப்படம் எடுக்கவும் செல்கிறார். பிரம்மாண்டமான அந்த நிலப்பரப்புக்குள் நீளும் அவரது பயணத்தையும் கனவினையும் Godland திரைப்படம் அற்புதமாகச் சித்தரித்துள்ளது.

ஐஸ்லாந்திய எழுத்தாளர்-இயக்குநர் Hlynur Pálmason இப்படத்தை இயக்கியுள்ளார். டேனிஷ் ஆட்சியிலிருந்த தங்களின் கடந்தகாலத்தை நினைவுகூறும் விதமாகப் படத்தை உருவாக்கியதாகச் சொல்கிறார்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நான்கு புகைப்படங்களை மையமாகக் கொண்டே இதன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களை எடுத்த பாதிரியார் லூகாஸின் நினைவுகளே படமாக விரிவு கொள்கிறது

பிரமிக்கவைக்கும் காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகளும் படத்தை உன்னத அனுபவமாக்குகின்றன. குறிப்பாகக் கறுப்புக்குத்திரையில் பனிப்பிரதேசத்தினுள் செல்லும் அவர்கள் ஆற்றைக்கடப்பதற்கு முயல்வதும், புகைப்படம் எடுக்கத் தேடி அலையும் பள்ளத்தாக்குகளும் எரிமலை வெடித்துச் செம்குழம்புகள் உருகி ஓடுவதும் நிகரற்ற காட்சியனுபவத்தைத் தருகின்றன.

பனி உருகுவது போல மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. ஐஸ்லாந்தின் கண்கொள்ளாத இயற்கைக் காட்சிகள் அதன் ஊடாகச் செல்லும் கடினமான பயணம். கடந்து செல்லும் பகலிரவுகள். பயணத்தில் இறந்து போகும் மனிதர்கள் என மெல்லப் படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. தேவாலயத்தை நிர்மாணிக்கத் துவங்கும் புள்ளியில் கதை மையம் கொண்டுவிடுகிறது. குறிப்பாக இரண்டு பெண்களுடன் பாதிரிக்கு ஏற்படும் நட்பும் அங்கிருந்து அவர் விடைபெறுவதும் உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளன

வழிகாட்டியான ராக்னர் வித்தியாசமான கதாபாத்திரம். அவர் முடிவில் தன்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று மன்றாடும் போது லூகாஸ் மறுக்கிறார். அப்போது ராக்னர் சொல்லும் கடந்த கால நினைவுகள் அவரைப் புரிந்து கொள்ளவைக்கின்றன.

ஆற்றைக் கடக்க முற்படும் போது ராக்னர் எச்சரிக்கை செய்கிறார். ஆனால் லூகாஸ் அதை ஏற்கவில்லை. அதனால் விபத்து ஏற்படுகிறது. அந்த ஆற்றில் வைக்கோல் சிலுவை மிதந்து செல்வது சிறப்பான காட்சி

விளையாட்டுப் போட்டியில் லூகாஸ் தீவிரமாகப் பங்குகொள்வது, கார்ல் வீட்டில் அவர் நடந்து கொள்ளும் முறை. புதிய தேவாலயம் உருவாகும்விதம் இவற்றின் ஊடாக உருமாறும் பருவகாலங்கள் எனக் காலத்தின் திரையினுள் மறைந்து போன வாழ்க்கையைப் படம் துல்லியமாக மறு உருவாக்கம் செய்திருக்கிறது.

லூகாஸிற்கு ஐஸ்லாண்டிக் மொழி தெரியாது. ராக்னருக்கு டேனிஷ் மொழி அரைகுறையாக மட்டுமே தெரியும். அவர்களுக்குள் ஏற்படும் விலகலுக்கு இந்த மொழிக்கு பின்னாலுள்ள வரலாறு காரணமாக இருப்பதைப் படம் சுட்டிக்காட்டுகிறது

கார்ல் மற்றும் அவரது மகள்களான அன்னா மற்றும் ஐடா வீட்டில் ஒரு காட்சியில் உணவு மேஜையில் லூகாஸ் பிரார்த்தனை செய்கிறார். அப்போது அவரது முகமும் உடலும் உறைந்து போயிருக்கிறது. அவருடன் அன்னா நெருங்கிப் பழக ஆரம்பிக்கிறாள். அதன்பின்பே லூகாஸ் சமநிலை கொள்கிறார். கடவுளுடன் தான் ஒருமுறையாவது பேச வேண்டும் என ஐடா ஆசைப்படுகிறாள். லூகாஸ் ஐடாவுடன் நட்பாகிறார், அவர் அன்னாவை திருமணம் செய்து கொள்வாரா என அவரிடமே கேட்கிறாள். அது சாத்தியமற்றது என்கிறார் கார்ல். ராக்னர் லூகாஸின் குதிரையைக் கொன்றதை வெளிப்படுத்தும் இடம் அதிர்ச்சிகரமானது. இயற்கையின் ஒருபகுதியாக லூகாஸ் மாறுவார் என்று கடைசியில் ஐடா சொல்வது மிகப்பொருத்தமானது

படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. கேமிராக்கோணங்களும் நிறங்களைப் பயன்படுத்திய விதமும் அற்புதம்.

படம் முழுவதும் பாதிரியார் லூகாஸ் கேமிராவைத் தூக்கிக் கொண்டே அலைகிறார். நிறையப் புகைப்படங்களை எடுக்கிறார். இது ஒருவகையான மீட்சி. புகைப்படத்தில் மனிதர்களை நித்தியமானவர்களாக மாறுகிறார்கள்.

நீண்டகாலத்தின் பின்பு மிகப் பரவசமளித்த திரைப்படம் ஒன்றைப் பார்த்த சந்தோஷம் மனதில் நிறைந்துள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2023 22:40

நட்பின் மறுபக்கம்.

சமீபத்தில் பார்த்த சிறந்த படம். The Banshees of Inisherin. படத்தை இயக்கியிருப்பவர் Martin McDonagh

அயர்லாந்தின் மேற்குக் கடற்கரையில் உள்ள தீவு ஒன்றில் கதை நிகழுகிறது. இரண்டு நண்பர்களுக்குள் ஏற்படும் பிரிவையும் அதன் விளைவுகளையும் பேசும் இப்படம் நட்பின் நிலைகுலைவை அழுத்தமாகச் சித்தரிக்கிறது

இசைக்கலைஞரான கோல்ம் டோஹெர்டி எளிய விவசாயியான பாட்ரைக் உடன் நீண்டகாலமாக நட்புடன் பழகுகிறார். இருவரும் ஒன்றாகக் கூடிக் குடிக்கிறவர்கள். சகல விஷயங்களையும் பற்றி அரட்டை அடிக்கக் கூடியவர்கள்.

திடீரென ஒரு நாள் காரணமில்லாமல் கோல்ம் தனது நண்பரை விட்டு விலக ஆரம்பிக்கிறார். இதைப் பாட்ரைக்கால் ஏற்க முடியவில்லை. தன் மீது ஏதாவது தவறு இருக்கிறதா எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்.

அதற்குக் கோல்ம் தவறு ஒன்றுமில்லை. ஆனால் வீணாக உன்னுடன் பழகுவது பிடிக்கவில்லை. நீ ஒரு மந்த புத்திக்காரன். உன்னோடு செலவிடும் நேரத்தை உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன் என்கிறார் கோல்ம்.

இத்தனை வருஷங்களாக இதே மந்தபுத்தியோடு தானே இருந்தேன். அப்போது நன்றாகப் பழகினாயே என்று கேட்கிறார் பாட்ரைக்.

ஆமாம். இப்போது வேண்டாம் என்று தோன்றுகிறது. நட்பை நீடிக்கவிரும்பவில்லை. விலகிப் போய்விடு என்கிறார் கோல்ம்.

இதனைப் பாட்ரைக்கால் ஏற்க முடியவில்லை. எப்படியாவது தங்கள் நட்பை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதங்களில் முயலுகிறார். இதைத் தொந்தரவாகக் கருதும் கோல்ம் கோபம் கொண்டு சண்டையிடுகிறார். தனது மீதமிருக்கும் வாழ்க்கையில் இசை அமைப்பாளராக உருவாக வேண்டும் என்று கோல்ம் ஆசைப்படுகிறார்

இத்தனை ஆண்டுகளாகப் பழகிய நண்பன் தன்னை வெறுத்து ஒதுக்குவதைப் பாட்ரைக்கால் ஏற்கமுடியவில்லை. எப்படியாவது நட்பைத் தொடர போராடுகிறார். இதற்காகச் சகோதரி மூலமும் பாதிரியார் மூலமும் முயலுகிறார்.

இதில் ஆத்திரமான கோல்ம் நீ இது போலத் தொந்தரவு செய்தால் அதற்குத் தண்டனையாக எனது கைவிரல்களில் ஒன்றை வெட்டிக் கொள்வேன் என்று எச்சரிக்கிறார். இது விளையாட்டுத்தனமான எச்சரிக்கை என நினைத்த பாட்ரைக் மீண்டும் நெருங்கிப் பழக முயற்சிக்கவே தனது ஒரு விரலை வெட்டி அவரிடமே தருகிறார் கோல்ம்.

நட்பின் மறுபக்கம் உக்கிரமான நிகழ்வுகளாக விரிவு கொள்ள ஆரம்பிக்கிறது.

எந்த நாளில் எதற்காக ஒருவரின் நட்பு சலித்துப் போகிறது. ஏன் திடீரென ஒருவன் தனது நேரத்தை நினைவில் நிற்கும் விஷயங்களைச் செய்வதிலும் செலவிட விரும்புகிறான் என்பதையே படம் மையம் கொள்கிறது.

ஒரு இலக்கியப்பிரதியைப் போலக் கதை இயல்பாக வளர்ந்து உச்சநிலையை அடைகிறது. குறைவான கதாபாத்திரங்கள். நிஜமான உணர்ச்சி வெளிப்பாடுகள், அபாரமான நடிப்பு, நிறைவான துணை கதாபாத்திரங்கள் என நாடகம் போலவே திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது

பாட்ரைக்கின் சகோதரி சியோபன் மறக்கமுடியாத கதாபாத்திரம். அவள் கோல்ம் முன்பாகக் கோபத்தில் வெடித்துப் பேசுவது அபாரமான காட்சி. நட்பு திரியும் போது எவ்வாறு வெறுப்பாக மாறிவிடுகிறது என்பதைப் படம் நிஜமாகப் பதிவு செய்திருக்கிறது.காலின் ஃபாரெல் மற்றும் க்ளீசனின் நடிப்பு பிரமாதமானது.

கோல்ம் ஏன் தன்னைத் தண்டித்துக் கொள்ள விரும்புகிறார். இத்தனை ஆண்டுகள் பழகியும் தன்னைப் பாட்ரைக் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறார். தனது கோபத்தை அவன் புரிந்து கொள்ளவோ விலகிப்போகவே முயலவில்லை என்பதால் தன்னைத் தண்டித்துக் கொள்வது என்று முடிவு செய்கிறார். இதே கோல்ம் தான் இசையில் நுண்மைகளை வெளிப்படுத்துகிறவராகவும் இருக்கிறார். விரல் துண்டிக்கப்பட்ட நிலையிலும் இசைக்கருவிகளை வாசிக்கிறார். படத்தின் தலைப்பாக இருப்பது ஒரு பாடல். அது முடிவு பெறாத பாடல். அதை உருவாக்கவே கோல்ம் முயற்சிக்கிறார்.,

சிறிய தீவு. அதில் வாழும் மனிதர்கள். அவர்களின் சலிப்பூட்டும் வாழ்க்கை, அதிலிருந்து விடுபடக் கலையால் மட்டுமே முடியும் என நினைக்கும் கோல்ம் எனக் கச்சிதமாகத் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது, பேட்ரைக்கின் அண்டை வீட்டாரில் ஒருவரின் மனநலம் குன்றிய மகனான ஃடொமினிக்கின் வழியே தீவு வாழ்க்கையின் தனிமை, தந்தையின் கண்டிப்பான உலகம் அழகாக வெளிப்படுகிறது.

படம் முடியும் போது நாம் சிலரது நட்பில் கோல்ம் போல நடந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிகிறது. சிலர் நம்மைப் பாட்ரைக் போல நடத்தியிருப்பதையும் உணர முடிகிறது. இந்த இருநிலைகளையும் படம் சமமாக விவரிக்கிறது.

கால்மின் நாயைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிட்டு பாட்ரைக் அவரது, வீட்டிற்குத் தீ வைக்கும் காட்சி அதிர்ச்சியூட்டுகிறது ஆனால் வீட்டை அழிப்பதன் மூலம் அவர்களின் சண்டை முடிவுக்கு வந்துவிடவில்லை.

படத்தில் இடம்பெறும் கழுதையும் நாயும் இரண்டு குறியீடுகள் போலவே உணரமுடிகிறது. மேக்பெத்தில் வரும் சூனியக்காரி போலப் படம் முழுவதும் ஒரு வயதான பெண் நிகழ்வுகளை முன்னறிவிப்பு செய்கிறாள். அவளைக் கண்டு பாட்ரைக் பயப்படுகிறான். அவள் வழியே இது தீவின் சாபம் என்பது போல உணர்த்தப்படுகிறது.

அயர்லாந்தின் உள்நாட்டு யுத்தம் பற்றிய நிகழ்வுகளைத் தான் நட்பின் கதையாகச் சொல்லியிருப்பதாக இயக்குநர் தெரிவிக்கிறார்

அந்தக் கோணத்தில் ஆராய்ந்தால் இப்படம் முக்கியமான அரசியல் திரைப்படமாகும்.

.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2023 03:09

புத்தகக் கண்காட்சி -2

மூன்று நாட்களாக தினமும் புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வந்தேன். திரளான கூட்டம். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. வெளியூரிலிருந்து நிறைய பேர் வந்திருந்தார்கள். நேற்று தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு கோணங்கி வந்திருந்தார். அவரது புதிய நாவல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மாலையில் எழுத்தாளர் தமிழ்செல்வன், எழுத்தாளர் உதயசங்கர், சாரதி ஆகியோரைச் சந்தித்தேன். அன்னம் அகரம் பதிப்பகம் கதிர் ஹெப்சிபா ஜேசுநாதனின் மானீ‘  நாவலின் புதிய பதிப்பு கொண்டு வந்திருக்கிறார். நேற்று அந்த நூலை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். தமிழில் வெளியான சிறந்த நாவல்களில் ஒன்று. நீண்ட இடைவெளிக்குப் பின்பு மறுபதிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்

புத்தக வெளியீட்டு விழா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2023 01:46

என் அறிவுலக ஜன்னல்

பு. பிரியதர்சினி ·

அரூ இணைய இதழில் வெளியானது,

என்னுடைய வாசிப்பு, திரைப்பட ஆர்வம் என எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆதாரம் ஆனந்த விகடன். வாரா வாரம் வீட்டுக்கு வரும் விகடன் கூடவே எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், திரைப்பட கலைஞர்கள், சாதனையாளர்கள் சாமானியர்கள் எனப் பலரைக் கைப்பிடித்துக் கூட்டி வரும்.

அந்த வகையில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு அறிமுகம். ஆனந்த விகடனில் வந்த ‘சிறிது வெளிச்சம்’ தொடர் அவரை எனக்கு வெளிச்சம் காட்டியது. அந்த தொடரில் அவர் கதை, திரைப்படம், பயணங்கள், நிகழ்வுகள் எனப் பலவற்றை விவரிப்பார். நிறையத் திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வமே தொடர்ந்து அவர் படைப்புகளைத் தேடிப் படிக்கும் ஆவலைத் தூண்டியது.

என் நூலகத்தில் இருக்கும் இவரின் பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் ஒரு இடத்தில் இருந்தாலும் எப்போதும் என்னை இன்னொரு புத்தகத்துக்கோ… திரைப்படத்துக்கோ… தேடலுக்கோ உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கும்.

முகநூல் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பக் காலத்தில் சுயமாக எழுதுவது மிக மிகக் குறைவு. அப்போது எல்லாம் ஒரு படத்துடன் எஸ். ரா அவர்களின் புத்தகத்தில் உள்ள வரிகளை எடுத்துப் போட்டுப் பதிவுப் போடுவேன்.

தேசாந்திரியாகக் குளிர் காலத்தில் காலையில் அவர் கண்ட கங்கை, மசூதியில் குடித்த கசகசா பாயசம், ரயில் நிலையத்தில் காய்ச்சல் வந்து தவித்த தருணங்கள், பசியோடு பயணித்த இலக்கியக் கூட்டம் போன்ற அனுபவங்களை அவர் மொழிகளில் கூற வேண்டுமானால் “சாலைகள் இன்று வரை மயக்கமூட்டுபவையாகவே இருக்கின்றன. உலகில் உள்ள எந்த விருட்சத்தையும் விட அதிகமாகக் கிளை விடுகிறது சாலைகள் மட்டும்தான் என்பதை உணர முடியும்.”

அவர் கையாளும் உவமைகள் ரசனை வாய்ந்ததாக இருக்கும். அவர் கூற வரும் நிகழ்வுகளை அந்த உவமை மேலும் வலுப்படுத்தி மனதில் வேரூன்றிக் கிளைப் பரப்பிவிடும். சில உதாரணங்கள்.

“உண்டியலில் காசு போடுவதைப் போல நம் மனது ஒவ்வொன்றாகப் போட்டுப் போட்டு நிரம்பிக் கொள்கிறது.”

“ஓட்டைப் பாத்திரத்திலிருந்து தண்ணீர் தானே ஒழுகி வருவது போல அவன் மனதிலிருந்து இந்தச் சொற்கள் மட்டும் தானே ஒழுகிக் கொண்டே இருந்தன.”

“உடம்பில் அம்மைத் தழும்புகள் மறையாமலிருப்பது போன்று இளவயது பசியால் ஏற்பட்ட அவமதிப்புகளின் வடுக்கள் இன்றும் மறையாமல் இருக்கின்றன.”

“டிராகுலாவின் பற்கள் பதிந்து விடுவது போல” வயலின் இசை நரம்புகளில் படிந்துவிடும்.

“ஒரு தாதி குழந்தையைக் குளிப்பாட்டித் துடைத்து எடுப்பது போன்று” இரவின் கைகள் உலகைச் சுத்தம் செய்கின்றன.

“கண்ணுக்குத் தெரியாமல் உப்புத் தண்ணீரில் கரைந்து விடுவதைப் போல தன்னிடமிருந்து அழகு யாவும் கரைந்து போய் விட்டிருக்கிறது.”

‘கேள்விக்குறி’யில் வரும் கேள்விகள் அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் ஒரு முறையேனும் கடந்து வந்து இருப்போம். அந்த கேள்விகளுக்கான ஆழம், அகலங்களை ஆராய்ந்து பதில் தேடும் பயணமாக ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கதையோடும் அல்லது நிகழ்வுகளோடும் நிறைவு பெறும். நான் இதில் வரும் கேள்விகளை அவ்வளவாக எதிர் கொண்டது இல்லை என்பது தான் உண்மை. “ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது?” என்ற கேள்வியைத் தாண்டி ஏமாற்றி விட்டு அவர்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது எனப் பலமுறை சிந்தித்து உள்ளேன். இதில் வரும் தந்தை மகன் கதை என் மனதுக்கு நெருக்கமானது.

‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ புத்தகத்தை ஒரு வழிகாட்டியாகக் கையில் வைத்துக் கொண்டு தமிழகத்தின் சிறு நகரங்களில் அலைந்து திரிந்து பயணம் மேற்கொள்ளலாம். புத்தகக் கண்காட்சியிலோ அல்லது நூலகங்களிலோ எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடிக் கண்டு வாசித்து மகிழலாம். திரைப்பட விழாவிலோ அல்லது இணையத்திலோ திரைப்படங்களைக் கண்டு ரசிக்கலாம். புத்தகங்கள், சினிமா, இசை, ஓவியம் என எல்லாத் தளங்களிலும் எனது ரசனையை மேலும் வளர்த்துக் கொள்ளக் கையில் ஒரு வழிகாட்டியாக இந்த புத்தகம் இருக்கிறது.

‘இதிகாசங்களை வாசிப்பது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்த பின்னர் ‘டிராய்’ (Troy) படம் எனக்கு நன்கு புரிந்தது. பாரீஸ், ஹெலன் இருவரும் திருமணம் செய்வதற்கு ‘அப்ரோடிட்’ தேவதை எவ்வாறு காரணமாக இருந்தது, எந்த வித நேரடி காரணமும் இன்றி அக்கிலஸ் ஒரு போர் வீரனாக மட்டுமே களத்தில் இருந்தது, அக்கிலஸ் குதிக்காலில் அம்புப்பட்டு இறப்பதற்கான காரணம் எனப் பல விஷயங்கள் இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் தான் புரிந்தது.

எப்போதும் ஒரு படம் பார்த்த பின்னரோ, புத்தகம் படித்த பின்னரோ அந்த படைப்பு பற்றித் தேடிப் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த வாசிப்பு அந்த படைப்பை மேலும் புரிந்துகொள்ள மற்றும் ரசிக்க உதவியாக இருக்கும். இதற்கு தலைக்கீழகாவும் நடக்கும்.

சத்யஜித் ரேயின் ‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த பின்னர் விபூதி பூஷன் நாவலை நூலகத்திலிருந்து படித்து விட்டுத் திரும்பி வைக்கப் போன போது ‘பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள்’ புத்தகம் கிடைத்தது. பதேர் பாஞ்சாலியை நுணுக்கமாக உள்வாங்கிக் கொள்ள இந்த புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன். இந்த புத்தகம் அழைத்துக் கொண்டு விட்ட இடம் அகிரா குரோசாவாவின் ‘த்ரோன் ஒஃவ் பிளட்’. அது உந்தித் தள்ளிய இடம் ‘உலக இலக்கியப் பேருரைகள் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்’. இந்த தொட்டுத் தொடரும் தேடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

சில காலங்களுக்கு முன்னர் தினமும் எஸ். ராவின் வலைத்தள பக்கத்தைப் படித்து விடுவேன். அதன் தாக்கத்தால் நான் கண்ட படங்கள் — Blue Umbrella, Warriors of the Rainbow: Seediq Bale, Bright Star மற்றும் Desert Flower.

எனது பதவி உயர்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் என்னை மையமாகக் கொண்டு ஒரு பெரும் பிரச்சனை கிளம்பியது. புயலுக்கு முன் அமைதி போலக் காத்திருப்பு நேரத்தில் ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’ படித்துக் கொண்டு இருந்தேன்.

பல வருடக் காத்திருப்புக்குப் பின்னர் குழந்தைப் பேறு பெற்றேன். கொஞ்ச நாள் தொலைக்காட்சி அலைப்பேசியிலிருந்து தள்ளி இருக்கலாம் என எண்ணி வாசிப்பை மேற்கொண்டேன். அப்போது கையிலிருந்த புத்தகங்கள் ‘கோடுகள் இல்லாத வரைபடம்’, ‘கலிலியோ மண்டியிடுவதில்லை’, ‘மலைகள் சப்தமிடுவதில்லை’, ‘இலைகளை வியக்கும் மரம்’.

எஸ். ராவின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றிச் சென்றால் கானகமோ, கதைகளோ, அருவிகளோ, ஆளுமைகளோ, நிசத்தமோ, நிகழ்வுகளோ எனப் பாதைதோறும் பரவசம் நம்மைத் தூண்டில் போட்டு இழுத்துச் செல்லும்.

இலக்கற்ற பயணியாய் அவர் மேற்கொண்ட பயணங்களின் வழி ‘உலக சினிமா’, ‘எனது இந்தியா’, ‘பதினெட்டாம் நூற்றாண்டின் மழை’, ‘செகாவின் மீது பெய்த பனி’ என எல்லாவற்றையும் காற்றில் யாரோ நடந்து (நடக்கிறார்கள்) கைப்பிடித்து அழைத்துச் செல்வது போல் எஸ். ரா எனக்கு அறிமுகம் செய்த உலகம் விசாலமானது.

புத்தகங்கள் மீது தீர்க்க காதலையும், பயணங்கள் மீது அலாதி பிரியத்தையும் படங்களின் மீது அதீத பற்றையும் ஏற்படுத்திய எஸ். ராவின் படைப்புகள் என் அறிவு உலகத்துக்கான ஜன்னல்.

நன்றி :

Aroo. space.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2023 01:15

January 7, 2023

புத்தகக் கண்காட்சியில் -1

நேற்று மாலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். வாகன நெரிசலில் உள்ளே நுழைய முடியவில்லை. மிக நெருக்கமாக அரங்கு அமைத்துள்ளார்கள். ஆட்கள் இடித்துக் கொண்டு போகுமளவு நடைபாதை மிக குறுகலாக உள்ளது. எந்தக் கடை எங்கே உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகச் சவாலான வேலை. வழக்கமாக இதற்கு ஒரு வரைபடம் தருவார்கள். அது இன்னும் தயாராகவில்லை என்றார்கள்.

தேசாந்திரி பதிப்ப அரங்கில் நிறைய வாசகர்களைச் சந்தித்தேன். அதில் சிலர் ஒவ்வொரு ஆண்டும் எனது அரங்கிற்கு வந்து பைநிறைய புத்தகங்களை வாங்கிக் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள். இவர்கள் அன்பிற்குக் கைமாறே கிடையாது.

தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ள உலகப்புகழ் பெற்ற முறிந்தபாலம் நாவலை வாங்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாசகர் வந்திருந்தார். கோவையில் நான் உரையாற்றியபோது இந்த நாவலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதை நினைவுவைத்திருந்து எனது அரங்கைத் தேடி வந்து நாவலைப் பெற்றுக் கொண்டார்.

முறிந்தபாலம் – Thorton Wilder’s The Bridge Of San Luis Rey  நாவலின் தமிழாக்கம் . உலகப் புகழ்பெற்ற இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2023 22:16

டால்ஸ்டாயைக் கண்டறிந்தேன்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்து முதுநிலை கல்வெட்டியல் பயிலும் தரணி லெட்சுமணன் எழுதியுள்ள வாசிப்பனுபவம்.

படைப்பு தகவு இதழில் வெளியாகியுள்ளது

நன்றி

படைப்பு தகவு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2023 21:45

சென்னை புத்தகத் திருவிழா

சென்னை புத்தகத் திருவிழாவில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. எண் 415 416.

தினமும் மாலை 5 மணி முதல் தேசாந்திரி பதிப்பக அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம்

கால்வலி காரணமாக இரண்டு வாரங்களாக ஆயுர்வேத சிகிட்சை எடுத்துவருகிறேன். கண்காட்சியில் நீண்ட நேரம் நிற்க நேரிடும் ஆகவே செல்ல வேண்டாம் என்கிறார் மருத்துவர். ஆனால் என்னால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லாமல் இருக்க முடியாது ஆகவே நாற்காலியில் அமர்ந்தபடியே செயல்படுவேன்.

நாம் அமர்ந்து பேசலாம். புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். சந்திப்போம் நண்பர்களே

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2023 03:12

S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.