S. Ramakrishnan's Blog, page 68
February 27, 2023
மலையாளத்தில்
எனது உறுபசி நாவல் மலையாளத்தில் வெளியாகிறது.
இடமன் ராஜன் இதனை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
லோகோஸ் பதிப்பகம் வெளியிடுகிறது.
தமிழக அரசின் சிறந்த நூலுக்கான மொழியாக்கத் திட்டத்தில் இதனை வெளியிடுகிறார்கள்.

February 26, 2023
சின்னஞ்சிறு கவிஞன்
The Kindergarten Teacher என்ற இஸ்ரேலியத் திரைப்படத்தில் Being a poet in our world is going against the nature of the world என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. முற்றான உண்மையிது.

ஒரு கவிஞனின் மனதில் கவிதை எப்படிப் பிறக்கிறது. எது அவனைக் கவிதை எழுதத் தூண்டுகிறது என்ற கேள்வியை நூற்றாண்டுகளாகக் கவிஞர்களிடம் கேட்டுவருகிறார்கள். இதற்குச் சொல்லப்பட்ட அத்தனை பதில்களுக்கும் வெளியே கவிதை உருவாகும் விதம் ரகசியமாகவும் ஆழ் மனதின் வெளிப்பாடாகவும் விளக்கமுடியாத புதிராகவுமே தொடர்கிறது.
ஜப்பானில் ஒரு காலத்தில் நிறையக் கவிதைப்பள்ளிகள் இருந்தன. அதன் ஆசிரியர்களாகப் புகழ்பெற்ற கவிஞர்கள் செயல்பட்டார்கள். பாஷோவின் நாட்குறிப்பிலும் இஸாவின் நாட்குறிப்பிலும் இத்தகைய கவிதைப்பள்ளிகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது
ஜப்பானுக்குச் சென்றிருந்த போது நானே கவிஞர் பாஷோவின் நினைவகத்தில் நடைபெற்றுவரும் கவிதைப்பள்ளி ஒன்றினை பார்த்தேன். பள்ளி மாணவர்கள் அங்கே கவிதை பயிலுகிறார்கள். ஹைக்கூ எழுதுவதற்கான அடிப்படை பயிற்சிகள் தருகிறார்கள்.
எந்தக் கவிதைப் பள்ளியிலும் பயிலாமல். முறையாக இலக்கணம் பயிலாமல் கவிதையின் வடிவம் மற்றும் நுட்பங்களை அறியாமல் ஒரு கவிஞன் பிறந்துவிடுகிறான். அற்புதமான கவிதைகளை எழுதுகிறான். கவிஞனாக அறியப்பட்ட பின்பு அதன் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும் அடுத்த நிலைக்குச் செல்லவும் முற்படுகிறான். அதில் வெற்றியும் தோல்வியும் அடைகிறான்.

The Kindergarten Teacher என்ற 2014ல் வெளியான இஸ்ரேலியத் திரைப்படத்தில் மழலையர் பள்ளியில் படிக்கும் யோவா என்ற ஐந்து வயது சிறுவன் திடீரென “I have a poem” என்று ஒரு கவிதை சொல்கிறான். அவனது கவிதையைக் கண்டு வியந்த ஆசிரியை நீரா எப்படி அந்தக் கவிதை தோன்றியது என்று விசாரிக்கிறாள். மனதில் திடீரெனத் தனக்குக் கவிதை வரிகள் தோன்றுகின்றன. அவற்றைச் சொல்கிறேன் என்கிறான்.
கவிதைகள் எதையும் வாசித்து அறியாத, கவிதையின் இலக்கணங்கள் எதுவும் அறியாத சிறுவன் எப்படி இவ்வளவு அற்புதமாகக் கவிதை சொல்கிறான் என்று வியந்து போகிறாள். அவனுக்குக் கவிதை எழுத வேண்டும் என்று தோன்றும் போது தன்னிடம் சொல்லும்படியாகக் கேட்கிறாள்.
பள்ளி ஆசிரியை நீரா கவிதைகள் எழுத விரும்புகிறவள். இதற்காக ஒரு கவிதை வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெறுகிறாள்.
அந்த வகுப்பில் ஒரு நாள் யோவா சொல்லிய கவிதையைத் தனது கவிதை என்று சொல்லி வாசிக்கிறாள். அதைக் கவிதை வகுப்பு நடத்தும் ஆசிரியர் சைமன் மிகவும் பாராட்டுகிறான். ஒரு பக்கம் சந்தோஷம் மறுபக்கம் அது தனது கவிதையில்லையே என்ற குற்றவுணர்வுக்கு உள்ளாகிறாள்
யோவாவின் திறமையை அவனது வீடு அறியவில்லை. உணவகம் நடத்தும் தந்தை தொழிலில் மூழ்கிக்கிடக்கிறார். , பிரிந்து வாழும் பெற்றோர்கள். அன்புகாட்ட யாருமில்லாத நிலை. தாதி தான் அவனைப் பள்ளிக்கு அழைத்து வருகிறாள். இந்தச் சூழலில் அவன் உணரும் விசித்திர மனநிலையே கவிதை எழுத வைக்கிறது..
கவிதை எழுதத் தோன்றும் தருணத்தில் தன்னைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லும்படியாக நீரா கேட்டுக் கொள்கிறாள். யோவாவும் அப்படி ஒரு நாள் அவளைத் தொலைபேசியில் அழைத்துக் கவிதை சொல்கிறான்.

கவிதை சொல்லும் தருணத்தில் அவன் பெரியவர்கள் போல நடந்து கொள்கிறான். அவனது முகபாவம் மாறிவிடுகிறது. உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அழுத்தமாகக் கவிதை சொல்கிறான். அவன் ஒரு பிறவிக் கவிஞன் என்பது போலவே நீரா உணருகிறாள்.
உள்ளூரில் நடைபெறும் கவிதை வாசிப்பு நிகழ்வில் யோவாயை பங்குபெற வைத்து அவனுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்று நினைக்கிறாள். இதற்கு யோவாவின் தந்தை அனுமதி தருவதில்லை. ஆகவே பொய் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு போகிறாள். யோவா அங்கே தனது கவிதையைச் சொல்லிப் பாராட்டுப் பெறுகிறான்
நீரா இந்நாள் வரை தன்னை ஏமாற்றியதாக உணரும் சைமன் அவளது மோசடியைக் கண்டு கோபமாகி கவிதை வகுப்பை விட்டு வெளியேறும்படி சொல்கிறான்.
யோவாவை நீரா கவிதை நிகழ்விற்கு அழைத்துச் சென்றதையும் அவள் யோவா மீது அதிக உரிமை எடுத்துக் கொள்வதையும் விரும்பாத தந்தை அவனை வேறு ஒரு மழலையர் பள்ளியில் சேர்க்கிறார்.
இந்த நிராகரிப்பை நீராவால் ஏற்கமுடியவில்லை. அவள் யோவாயின் மீது கொண்டுள்ள அன்பால் அவனைத் தேடி புதிய பள்ளிக்கு வருகிறாள். பழகுகிறாள்.

ஒரு நாள் அவனைத் தன்னுடன் காரில் அழைத்துக் கொண்டு கண்காணாத இடத்திற்குச் செல்கிறாள். அங்கே இருவரும் ஒன்றாக ஏரியில் நீந்துகிறார்கள். யோவா ஒரு கவிதை சொல்கிறான். அவர்கள் மகிழ்ச்சியாக நாளை கழிக்கிறார்கள். முடிவு எதிர்பாராத அதிர்ச்சியை உருவாக்குகிறது.
கவிஞனான ஒரு சிறுவனின் திறமையை அடையாளம் காணும் ஆசிரியர் கதாபாத்திரம் மிக அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது. யோவா கவிதை சொல்லும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் இயல்பான விளையாட்டு சிறுவனாகவே இருக்கிறான்.
நீராவால் கடைசிவரை கவிதை பிறக்கும் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிவதேயில்லை. ஆனால் அன்பிற்கான ஏக்கம் தான் கவிதையை உருவாக்குகிறது என்பது போலப் புரிந்து கொள்கிறாள். அவனிடம் அன்பு காட்டுகிறாள். இறுதிக்காட்சியில் அவனது அம்மாவைப் போலவே நீராவை நாம் உணருகிறோம்.
பள்ளி வகுப்பறைக்குள் ஒரு கவிஞன் ஒளிந்திருக்கக் கூடும். அவனை அடையாளம் கண்டு படைப்பாற்றலை உலகறியச் செய்ய நல்லாசிரியர் தேவை. அப்படி ஒரு ஆசிரியரை படம் நமக்குக் காட்டுகிறது. எளிமையும் அழகும் கொண்ட இத் திரைப்படம் இதன் காரணமாகவே நம்மைக் கவருகிறது,
February 24, 2023
தேசாந்திரி பற்றி
எனது தேசாந்திரி புத்தகம் இன்றுவரை விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்துவருகிறது. இந்த நூல் பற்றி மலேசியாவில் வாழும் வெங்கட்ராமன் சிறப்பான குறிப்பு ஒன்றை எழுதியிருக்கிறார்

Desanthiri – S. Ramakrishnan – Blogternator
Desanthiri – S. Ramakrishnan
written by Venky February 22, 2023
Armed with a copy of Dan Cruickshank’s A Portrait of a City in 13 Walks, I arrived in London in December 2022, only to be welcomed by a temperature that was downright forbidding. The unforgiving cold slashed, clawed and gnawed at my face while every gust of wind was like experiencing the impact of a thousand pin pricks. Yet I was unwavering in my determination to gallivant around Hampstead Heath and relive the industrial bustle of Victorian Bermondsey. As the remorseless weather incrementally put paid to many of my hopes, I sought consolation in a pile of books. The first one that I reached out to was Desanthiri a travelogue by the prolific author S. Ramakrishnan. And incidentally it was the only one that I kept myself occupied with throughout my brief stay in Old Blighty.
From watching the rays of a resplendent Sun through the windows of his home in the district of Ramanathapuram, to traversing the length and breadth of India in conveyance of every type (including undertaking a 6-day journey from Sivakasi to Delhi in a lorry just to soak in the experience of traveling by that particular automobile), S. Ramakrishnan weaves a seraphic tapestry of travel, whose quintessential leitmotif is “understanding India”. 41 Chapters, each not exceeding 6 pages provide a marvelous glimpse of an India that revels in the confluence of the old and the new. There is no clash of contradictions between the ancient and the modern but an unwritten malleability, a ductile recognition of acceptance and co-existence. The travelogue primarily concentrates on South India in general, and Tamil Nadu, in particular.
In Sarnath, amidst a cruel cold and blustery wind that serrates his skin, Ramakrishnan enveloped by a shroud like fog, encounters hordes of patient people adopting a statuesque manner while paying their obeisance to the Buddha. Eons ago, an identical scene would have played out day after day after day, but in the presence of the Great One. Can his manifestation still be found in the absolute stillness of Sarnath, thus wonders Ramakrishnan.
Approximately 25 kilometres from Srivalliputthur, in the district of Virudanagar, lies a small and obscure town named Arjunapuram. This unknown locality houses one of the most famous wells in South Indian mythology. The legendary character of Nallathankal, a woman who after being tortured by her sister-in-law, and leading an existence of hunger and poverty flings herself into a well but not before pushing her 7 children into a watery grave. Folklore has it that the lot is miraculously resurrected. Even today in Arjunapuram, puppet shows are held in memory of Nallathankal and instruments such as the Australian Didgeridoo are used in the process. Women silently weep and brush away their tears as the show reaches the tragic point of Nallathankal’ s suicide. Legend has it that a peep in the well would reveal a lock of Nallathankal’ s hair even to this day. Disappointed at not finding his piece of interest, Ramakrishnan accosts a woman leveling a fence and asks her if she has seen Nallathankal’ s hair. To his utter chastisement and chagrin, the woman of humble origin retorts, “Every village town and city has Nallathankals drowning on a daily basis. Even if the water of every well dries up, you may find mundane objects thrown inside, but you would not be able to hear the anguish and lament of a woman let alone get a glimpse of her hair.”
Ramakrishnan bemoans the fact that our grasp of history does not leave the cramped confines of bland textbooks. The desolate railway station of Maniacchi is a classic case in point. A revolutionary activist during the Indian independence movement, Vanchinathan, assassinated the then Collector of Tirunelveli, Robert Ashe as a recrimination for his misdeeds, before taking his own life. He was all of 25. The gunshot that reverberated across London is now reduced to a neglected footnote warranting 10 “marks” in an examination paper. Meanwhile the station named after this Braveheart lies in a decrepit state.
Only a sparse populace is aware of the fact in the famed Saraboji Palace in Tanjavur, there exists a separate section that highlights the progress made in India during that age in the field of ophthalmology. In 1752, while the whole world was celebrating the surgical exploits of ophthalmologists in France, King Saraboji himself was operating on patients by employing pioneering techniques in ophthalmology that did not even require anesthesia. The palace contains extensive documentation of the same.
My ‘bucket list’ also contained a visit to Stratford-Upon-Avon, the place that birthed William Shakespeare. But I am ashamed to confess that I was not aware of the birthplace of Srinivasa Ramanujan, a veritable genius and India’s gift to the wonderful and mystical world of Mathematics. His house, at Sarangapani Kovil Street in Kumbakonam, even though designated as a public and renowned place of interest, attracts a maximum of up to 5 visitors per day! This may still be 5 more than the number of visitors attracted by Kayathaaru, the place where the revolutionary King and freedom fighter Veerapandiya Kattabomman was hung by the British. This place would have faded into oblivion had the magnanimous Tamizh actor Chevalier Sivaji Ganesan not erected a statue of the fallen warrior out of his own funds, following the spectacular success of a movie based on the exploits of this fearless son of India.
Desanthiri is remarkable for its sweep. But it is also revealing in its wake. It is a ruthless albeit necessary wake up call, a much-needed kick in the butt! While it is not a crime to travel 4594 miles to drink a pint of beer sitting in the same pub where once George Orwell and Virginia Woolf imbibed their spirits, it is an absolutely travesty not being aware of the fact that a bunch of dedicated, yet unknown sculptors have sculpted such exquisite marvels in Gangaikondachozha Puram that one of the idols of Goddess Parvathi even has a depiction of the nerves in her feet!
At least from a personal viewpoint.
Desanthiri – An Indian Wanderlust!
February 22, 2023
நீலாம்பூர் சென்றவன்
1980களில் இது நடந்திருக்கலாம்.
அவரது பெயர் ஜெகநாதராவ்.
அவருக்கு அலங்கார விளக்குகள் மற்றும் கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்தவகையில் மூன்று லட்சத்து அறுபத்தி மூவாயிரம் ரூபாய் பாக்கியிருந்தது. அந்தப் பணத்தை வசூல் செய்ய யாராலும் முடியவில்லை. நீண்டகாலப் பாக்கியை வசூல் செய்வதற்காக அவனை நீலாம்பூர் அனுப்பி வைத்தார்கள்.
.••
அவனது பெயரை தெரிந்து கொள்ளும் முன்பு, அவன் ஏன் நீலாம்பூருக்கு செல்ல விரும்பினான் என்பதைத் தெரித்துக் கொள்வது முக்கியம்.

சில மாதங்களுக்கு முன்பு விடிகாலையில் அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்த
கனவில் அவன் ஒரு ரயில் நிலையத்தில் நின்றிருந்தான் அங்கே அவனைத் தவிர ஒரு பசு மட்டுமே இருந்தது
அது நீலாம்பூர் என்பதை ரயில் நிலையத்தின் பெயர் பலவையிலிருந்து தெரிந்து கொண்டான்
பயணிகளோ ரயில் நிலைய ஊழியர்களோ எவரையும் காண முடியவில்லை. அந்தப் பசுவும்கூடக் கண்களைமூடி சிலையைப் போல உறைந்திருந்தது. அதன் காதுகள் அசைவதைக் கொண்டே உயிருடன் இருக்கிறது என்பதை அறிய முடிந்தது. தூங்குமூஞ்சி மரங்கள் கொண்ட அந்தப் பிளாட்பாரத்தின் தொலைவில் காகம் தென்பட்டது
அது காகம் தானா
அல்லது கிழிந்த துணியா என்று சரிவரத் தெரியவில்லை.
தான் எதற்காகப் பெயர் தெரியாத ரயில் நிலையத்தில் காத்திருக்கிறோம் என்றும்
அவனுக்குப் புரியவில்லை.
எந்தப் பக்கம் போக விரும்புகிறான் அல்லது யாரைக் காண காத்திருக்கிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை.
தொலைவில் எழும் ஓசைக் கேட்டு ஏதோ ரயில் வருகிறது என்று நினைத்து வடக்கே திரும்பி பார்த்தான்.
ரயில் எதுவும் வரவில்லை மீண்டும் அந்த ஓசையைக் கேட்கவும் முடியவில்லை.
மழை வருவதற்கான அறிகுறி ஏதுமின்றித் திடீரென அங்கே மழை பெய்யத் துவங்கியது. ஒதுங்குவதற்காக ஸ்டேஷன் அறையை நோக்கி ஒடும் போது மழை தன்மீது பெய்தாலும் அது தன்னை நனைக்கவில்லை என்பதை உணர்ந்தான். அவனை மட்டுமில்லை. பிளாட்பாரத்தில் மழை பெய்தும் ஒரு துளி ஈரமில்லை. ஆனால் மழைக்காற்றில் பசு வானில் பறந்து போய்க் கொண்டிருப்பதைக் கண்டான். என்ன விநோதம் என நினைத்து திடுக்கிடும் போது அவன் விழித்துக் கொண்டான். அது ஒரு கனவு என்று அவனால் நம்ப முடியவில்லை.
அன்று நாள் முழுவதும் நீலாம்பூர் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேயிருந்தான். ஏனோ நீலாம்பூருக்கு ஒருமுறை போய்வர வேண்டும் என்றும் விரும்பினான்.
••
இன்று கடை உரிமையாளர் நீலாம்பூர் போய் வர சொன்னதும் அவன் தனது
கனவுக்குள் திரும்பி செல்வதைப் போலவே உணர்ந்தான்.
ஆயிரத்து முந்நூறு ரூபாய் பணமும் வசூல் செய்ய வேண்டிய பில் விபரங்களும் பழைய ரசிது புக் ஒன்றையும் மேலாளர் அவனிடம் கொடுத்து இரண்டு நாளுக்குள் திரும்பி விட வேண்டும் என்றார்.
முழுமையாகக் கடனை வசூல் செய்துவிட்டு திரும்பி வருவேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு உற்சாகமாகப் பயணம் கிளம்பத் தனது அறைக்குத் திரும்பினான்.
தேவையான உடைகள், படிப்பதற்கான புத்தகம், சிறிய சோப்புக்கட்டி, பற்பசை டூத்பிரஷ் எனத் தேவையானதை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டான்
அவன் அறிந்தவரை நீலாம்பூர் மேற்கில் சில மணி நேர பயணத் துரத்தில் இருந்தது.
••

அந்த நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்தன. ஒன்று வெளியூர் பேருந்துகள் செல்வது மற்றொன்று நகரப்பேருந்துகளுக்கானது. அவன் வெளியூர் பேருந்துகள் கிளம்பும் நிலையத்திற்குச் சென்றான்
துர்வாடையுடன் அழுக்கும் குப்பையுமாக அந்தப் பேருந்து நிலையம் திறந்தவெளி குப்பைமேடு போலக் காட்சியளித்தது. மின்விளக்குகளில் பல எரியவில்லை. இந்த இருட்டிற்குள் மக்கள் பேருந்தை தேடி போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
கை குழந்தையுடன் ஒரு பெண் தான் செல்ல வேண்டிய பேருந்து ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தாள்.
பிளாஸ்டிக் பழங்கள் போல உறைந்து போய்க் காட்சி தந்த பழக்கடையைத் தாண்டி மரப்பெட்டிகள். சாக்கு மூட்டைகளையும் கடந்து முக்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்து மனிதரிடம் நீலாம்பூர் பேருந்து எப்போது புறப்படும் என்று கேட்டான்
அந்த நபர் எந்த நீலாம்பூர் என்று கேட்டார்.
குழப்பத்துடன் அவன் ”எத்தனை நீலாம்பூர் இருக்கிறது” என்று திருப்பிக் கேட்டான்.
மூன்று நீலாம்பூர் இருக்கிறது , எதற்கும் இரவில் பேருந்து கிடையாது நீ எந்த நீலாம்பூருக்கு போக வேண்டும் என்று கேட்டார்.
அவனுக்குப் பதில் சொல்ல தெரியவில்லை.
“ ஜெகநாதராவ் உள்ள நீலாம்பூர்“ என்று சொன்னான்
அந்த நபர் அவனை முறைத்தபடியே, “தெற்கு நீலாம்பூரா? என்று கேட்டார்.
“இருக்கலாம்“ என்று சொன்னான்
“காலையில்தான் பஸ் புறப்படும்“ என்று சொல்லிவிட்டு தன் சட்டைப்பையில் வைத்திருந்த ரசீது ஒன்றை எடுத்து பார்க்கத் துவங்கினார்.
அவர் சொல்லது உண்மையா?
தான் காலை வரை பேருந்துநிலையத்தில் காத்திருக்க வேண்டுமா?. அல்லது அறைக்குச் சென்று திரும்பிவரலாமா?. என்று குழப்பமாக இருந்தது.
வேறு எவரிடமாவது விசாரிக்கலாம் என்று பேருந்து நிலையத்தின் உட்புறமாக அலைந்தான்.
பிறரிடம் விசாரிப்பதற்கு முன்பு தான் எந்த நீலாம்பூருக்கு போக விரும்புகிறோம் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் பழைய ரசிது புக்கை வெளியே எடுத்து புரட்டிப் பார்த்தான்.
அதில் நீலாம்பூர் நெடுங்கோட்டை ஜில்லா என எழுதப்பட்டிருத்தது. மேற்கே செல்லும் பேருந்துகள் நிற்கும் வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் சென்று நீலாம்பூர் போக வேண்டும் என்றான்.
அதற்கு அந்த ஆள் “நேரடியாகப் பஸ் கிடையாது. நெடுங்கோட்டையில் இறங்கி, பேருந்து மாறினால் நிலாம்பூர் போகலாம்“ என்று சொன்னார்.
“இந்த பேருந்து நெடுங்கோட்டை போகிறதா “என்று அவன் கேட்டதற்கு மூன்றாவது பேருந்தை சுட்டிக்காட்டினான்.
அதில் ஏறி அமர்ந்து கொண்டு கண்களை மூடும்போது அவன் கனவில் பார்த்த
ரயில்நிலையம் நினைவில் வந்து போனது.
இரவு முழுவதும் பயணம் செய்து நெடுங்கோட்டைக்குப் போய் இறங்கி அங்கிருந்து நீலாம்பூர் செல்லும் பேருந்தை பிடித்தபோது, காலை மணி ஐந்தரையாகி இருந்தது.
நீலாம்பூர் செல்லும் பேருத்தில் கூட்டமில்லை, பச்சை சால்வை ஒன்றை தலையோடு போர்த்திய ஒரு கிழவர் அவனது முன்னிருக்கையில் இருந்தார். பேருந்து புறப்பட்டதும் அவன் திரும்பவும் கண் அயர்ந்தான்.
மழைதான் அவனை விழிக்கச் செய்தது. நீலாம்பூருக்குச் செல்லும் வழிமுழுவதும் அடர்த்தியான மழை, பேருத்துக்குள் கூட மழை நீர் சொட்டியது. காற்றோடு இவ்வளவு வேமமாகப் பெய்யும் மழையை அவன் கண்டதில்லை. பாதை தெரியாத படி பெய்த மழையில் ஊடாகப் பேருந்து மெல்ல ஊர்ந்து சென்றது. எந்தத் திசையில் பேருந்து செல்கிறது என்று தெரியவில்லை. காற்றும் மழையும் ஒன்று சேர்ந்து பேருத்தை புரட்டித்தள்ளிவிடுமோ எனும் அளவு வேகமிருந்தது.
இந்தப் பேருத்தில் இருந்தவர்கள் இப்படி மழைபெய்வது இயல்பு தான் என்பது போல் அமைதியாக இருந்தார்கள்.

அவன் நீலாம்பூரில் போய் இறங்கியபோது மழை ஒய்ந்திருந்தது, லேசான சாரல் மட்டுமே விட்டுவிட்டு அடித்துக் கொண்டிருந்தது.
பள்ளத்திற்குள் இருந்த பேருந்து நிலையமது வெளியே தேனீர் கடைகள் எதுவும் காண முடியவில்லை.
அவன் தகரக் கொட்டகை ஒன்றில் அடியில் நின்றபடியே, சாலையில் வடிந்து செல்லும் மழைநீரை பார்த்துக் கொண்டிருந்தான். தெருவிளக்கின்
வெளிச்சத்தையும் கரைத்தோடிக் கொண்டிருந்தது மழைநீர்.
தொலைவில் குடையோடு ஒருவர் வருவதைக் கண்டான்.
அந்த நபர் அவனை நோக்கி வருவதைப் போலவே தோன்றியது. அருகில் வந்து குடையைச் சற்றே சாய்த்து “ ஜெகநாதராவ் வீட்டிற்குத்தானே“ என்று கேட்டார். “ஆமாம்“ என்று தலையாட்டினான்.
“போகலாம்“ என்று சொன்னபடி குடைக்குள் அவனையும் சேர்த்துக் கொண்டார்.
வடக்கு நோக்கி நீண்டு கொண்டிருந்த சாலை வழியாக அவர்கள் நடந்தார்கள். அங்கிருந்து இடப்பக்கம் நீளும் தெரு ஒன்றின் வழியாக நடந்து சென்றபோது மழை வேகமெடுத்தது
“இந்த ஊரில் ரயில்வே ஸ்டேசன் இருக்கிறதா” என்று அவன் கேட்டான் .
குடைவைத்திருந்தவர் “இல்லை” என்றார்
பின் எப்படித் தன் கனவில் ரயில்நிலையம் வந்தது என்று அவனுக்குப் புரியவில்லை, அவர்கள் மழை நீர் தேங்கியிருந்த ஒரு மைதானத்தின் வழியாக நடந்து கோயில் கதவு போன்ற பெரிய கதவின் முன் போய் நின்றார்கள்.
குடைவைத்திருந்த நபர் ”யோசே” என்று உறக்க சப்தமிட்டார்.
கதவின் பின்பக்கம் யாரோ ஒரு பெண் நடந்துவந்து பெரிய கதவின் சிறு வழியைத் திறந்துவிட்டாள். அவர்கள் உள்ளே சென்றபோது, அரண்மனை போலப் பெரியதான வீடு கண்ணில் பட்டது.
“இதுதான் ஜெகநாதராவ் வீடா” என்று கேட்டான்.
“அவர் பெயரை நாங்கள் சொல்வதில்லை” என்று குடைவைத்தவர் பதில் சொன்னர்.
உண்மையில் அது சிறிய அரண்மனையேதான் அதனால்தான் இத்தனை அலங்கார விளக்குகள் நிலைக் கண்ணாடிகள் அவர்களிடம் வாங்கியிருக்கிறார்கள்.
அவன் மாளிகையினுள் நுழைந்தபோது அபூர்வமான நறுமணம் கசிந்துவருவதை உணர்ந்தான். ஏதேனும் பூஜை நடக்கிறதோ என்னவோ என நினைத்தபடி தர்பார் ஹால் போல் இருந்த அறைக்குள் சென்றான். சுவரில் ஆள் உயர ஒவியங்கள். பூவேலைப்பாடு கொண்ட பெரிய இருக்கைகள். நடுவில் ஒரு சிம்மாசனம் காணப்பட்டது.
பட்டுதுணியில் பூ வேலைப்பாடு செய்த நாற்காலி ஒன்றில் அவனை உட்கரச் சொல்லிவிட்டுக் குடைவைத்திருப்பவர் உள்ளே சென்றார்.
நீண்ட காத்திருப்பின் பிறகு விளக்கின் சுடர் அசைந்து வருவதுபோல
அழகு மின்னும் இளம் பெண் ஒருத்தி அவனருகே வந்து “ஜெகநாதராவை
பார்க்கத்தானே வந்திருக்கிறீர்கள்“ என்று கேட்டாள்
“ஆமாம்“ என்றதும் அவனது கையைப்பற்றி மணமகனை மேடைக்கு அழைத்துச் செல்லும் பெண்போல எழிலாகக் கூட்டிச் சென்றாள்.
அந்த மாளிகை சுற்றுச்சுழல் பாதைகள் கொண்டதாக இருந்தது. ஒரு அறையைப் போலவே இன்னொரு அறையும் இருந்தன. அகலமான மரப்படிகளில் மேலும் கீழுமாக இறங்கி, பெரிய ஜன்னல்கள் கொண்ட ஒரு அறையில் அவன் உட்கார வைக்கப்பட்டான்.
அவள் மாறாச் சிரிப்புடன் “ ஜெகநாதராவ் வருவார் காத்திருங்கள்“; என்றாள். அந்தப் பெண்ணின் சிரிப்பிற்காக எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் காத்திருக்கலாம் எனத் தோன்றியது.
அவன் ஜெகநாதராவ்விற்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.
பகல் முடிந்து இரவாகியது. ஜெகநாதராவ் வரவில்லை
இரவெல்லாம் காத்திருந்தான். அடுத்தப் பகல் அடுத்த இரவு மீண்டும் பகல் இரவு எனத் தொடர்ச்சியாக நாட்கள் கடந்தன,
பருவகாலம் மாறியது. வருஷங்களும் ஓடி மறைந்தன. அந்த அறையில் ஜெகநாதராவ்விற்காக அவன் காத்துக்கொண்டே இருந்தான். அவர் இன்னும் வரவில்லை.
அவனுக்குத் தெரியாது,
அவனைப் போல ஜெகநாதராவ்வைக் காண வந்த சிலர் அதே மாளிகையில் வேறு வேறு அறைகளில் பல ஆண்டுகளாக உறைந்து போய்க் காத்திருக்கிறார்கள் என்பது,
ஜெகநாதராவைத் தேடி வருபவர்கள் ஏன் அங்கே உறைந்து போகிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் உங்கள் கனவில் நீலாம்பூர் ரயில் நிலையம் வந்திருக்க வேண்டும்.
மழையோடு நீங்கள் அங்கே சென்றிருக்க வேண்டும்
இதைத் தவிர வேறு வழியில்லை.
February 21, 2023
கன்னடத்தில்
காந்தியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் சிறுகதைகளைத் தேர்வு செய்து கன்னடத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் கே. நல்லதம்பி. இந்த நூலில் எனது சிறுகதை இடம் பெற்றுள்ளது.

February 20, 2023
பசியற்றவள்
அயர்லாந்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் பேரதிர்ச்சி இன்றும் அவர்கள் ஆழ்மனதில் படிந்திருக்கிறது. அந்த நினைவுகளின் வெளிப்பாடு போலவே The Wonder திரைப்படம் உருவாகியுள்ளது, செபாஸ்டியன் லீலியோ இயக்கியுள்ள இந்தப் படம் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சிறுகதையைப் படிப்பது போல விந்தையும் நிஜமும் ஒன்று கலந்திருக்கிறது.

கதையின் மகத்தான விந்தையாக முன்வைக்கப்படுவது பசியே. அன்னா என்ற சிறுமி நான்குமாதங்களாக எதையும் சாப்பிடுவதில்லை. அவளிடமிருந்து பசி மறைந்துவிடுகிறது. அவள் உணவு உட்கொள்ளாமலே உயிர்வாழுகிறாள். இந்த விந்தையை ஊர் மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் ரகசியமாகச் சாப்பிடுகிறாள் என்று நினைக்கிறார்கள். அல்லது இது தெய்வச்செயல். அவள் கடவுளின் அருளால் இப்படி உணவில்லாமலே உயிர்வாழுகிறாள் என்று கருதுகிறார்கள்.
எது உண்மை என்று கிராம அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த விந்தையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் உண்மையை அறிந்து கொள்வதற்காக அவர்கள் ஒரு நர்ஸை அன்னாவினை கண்காணிக்கும்படி நியமிக்கிறார்கள்
கதை 1862 ஆம் ஆண்டில் நடக்கிறது. அயர்லாந்தில் பெரும் பஞ்சம் (Great ஏற்பட்டது 1845-1852 கால கட்டத்தில். அப்போது பெரும் திரளான மக்கள் பட்டினியாலும் நோயாலும் மடிந்தார்கள். இந்தப் பஞ்சத்தின் பின்விளைவு போலவே இக்கதை விவரிக்கப்படுகிறது
பஞ்சத்தின் போது பசியற்று மனிதன் வாழ முடியாதா என்று மக்கள் ஏங்கினார்கள். பஞ்சம் நீங்கிய போதும் அதன் சுவடுகள் மறையவில்லை. அன்னா அதன் அடையாளம் போலவே இருக்கிறாள். எலிசபெத் “லிப்” ரைட் எனும் அந்த நர்ஸ் சிறிய அயர்லாந்து கிராமத்திற்குத் தனது சொந்த துயரிலிருந்து விடுபடுவதற்காகவே வருகிறாள். அவளது மருத்துவப் பரிசோதனைகள் அன்னா விஷயத்தில் தோல்வியடைகின்றன

அன்னாவிடம் ஏதோ ஒரு ரகசியமிருக்கிறது என்பதை லிப் உணர்ந்து கொள்கிறாள். ஆனால் அதைக் கண்டறிவது எளிதாகயில்லை
அவள் அறிந்து கொள்ளும் உண்மையின் போது நாம் அன்னாவை ஒரு பறவையைப் போல உணருகிறோம்.
இந்த உண்மை ஒரு துவக்க புள்ளி மட்டுமே. அதன்பின்பு மறைந்துள்ள கசப்பான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும் அதிர்ச்சி தருவதாக உள்ளன
லிப் கண்டறிந்த உண்மைகளை உள்ளூர் சபையிடம் முன்வைக்கிறாள். அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அன்னாவை விடவும் விசித்திரம் அவளது அம்மா ரோசலீன் , மௌனமாக நடந்து கொள்ளும் அவள் ரகசியங்களை ஒளிக்கிறாள். அவளே அன்னாவை உருவாக்குகிறாள்.
லிப்பிற்கும் டெய்லிகிராப் பத்திரிக்கையின் செய்தியாளருக்கான உறவு. அன்னாவிற்கும் லிப்பிற்குமான உறவு இரண்டும் அழகான இரண்டு இழைகளாகப் பின்னிச் செல்கின்றன

அன்னா தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறாள். அவள் ஒரு தெய்வப்பிறவி என்பது போலவே நடந்து கொள்கிறாள். அவள் நினைவில் பதிந்துள்ள கசப்பான நிகழ்வுகளை எளிதாகக் கடந்து போக முடியவில்லை என்பதே நிஜம்.
பஞ்சத்திலிருந்து கதை குற்ற மீட்பினை நோக்கி நகர ஆரம்பிப்பது எதிர்பாராதது. அன்னாவை சுற்றிப் பின்னப்படும் கதைகள் அவிழும் போது அன்னா உருமாற ஆரம்பிக்கிறாள். நரகத்திலிருந்து சொர்க்கத்தை நோக்கி செல்லும் அவளது முயற்சி அதிர்ச்சியானது. Ari Wegner ன் ஒளிப்பதிவு அபாரம்.
பெண்களைச் சுற்றியே நகரும் கதை ஆண்களின் இருண்ட மனதைப் பேசுகிறது என்பது தான் படத்தின் சிறப்பு.
.
February 15, 2023
தலைகள் இரண்டு
புதிய சிறுகதை
பிப்ரவரி 16 2023
குளோபல் செக்யூரிட்டி சிஸ்டம் நிறுவனத்தில் மனோகர் வேலை செய்து கொண்டிருந்தான். கண்காணிப்புக் கேமிரா பொருத்துவது தான் அவனது பணி.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குளோபல் செக்யூரிட்டி சிஸ்டத்தில் வேலை கிடைத்தது. மூன்று மாத பயிற்சி கொடுத்தார்கள். அதன்பிறகு நேரடியாகக் கண்காணிப்புக் கேமிரா பொருத்தும் பணியில் ஈடுபடத் துவங்கிவிட்டான்
அவனது நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது. அவர்கள் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி தருவதுடன் அதன் பராமரிப்பு பணியினையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் பள்ளி கல்லூரிகள் கூட கூட அவர்களின் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள்.
அப்படி ஒரு கண்காணிப்புக் கேமிரா பொருத்தும் பணியை முன்னெடுப்பதற்காகத் தான் மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு வந்திருந்தான். அந்த மருத்துவக்கல்லூரியின் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே முன்பு கண்காணிப்புக் கேமிராக்கள் பொருந்தப்பட்டிருந்தன. ஆனால் அவை முறையாகப் பராமரிக்கபடாத காரணத்தால் செயலற்றுப் போயிருந்தன. தற்போது மொத்த வளாகத்தையும் கேமிரா பொருந்த அவர்களை நியமித்திருந்தார்கள்.
மனோகர் மற்றும் மூன்று ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த மியூசியத்தில் கேமிரா பொருத்தும் வேலையை முன்னெடுத்தார்கள். அப்போது தான் அங்கே ஒரு மியூசியம் செயல்பட்டு வருவதைக் கண்டான்.
மருத்துவக் கல்லூரிக்குள் அப்படி ஒரு மியூசியம் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. இதுவரை அவன் கேள்விபட்டது கூடக் கிடையாது.

பாடம் செய்யப்பட்ட சிசுக்கள். உடல் உறுப்புகள், எலும்புகள் என விநோதமான பொருட்கள் அந்த மியூசியத்தில் காணப்பட்டன. அலெக்சாண்டர் கிரஹாம் என்ற வெள்ளைக்கார மருத்துவர் இதைத் துவங்கியிருக்கிறார்.
கண்ணாடி பாட்டில்களுக்குள் காணப்படும் அந்த விசித்திர உருக்களை, காணும் போது அச்சமாகவே இருந்தது. பெரிய கண்ணாடி பெட்டகத்திற்குள் விதவிதமான மருத்துவக் கருவிகளை வைத்திருந்தார்கள்.
அசாதாரண வளர்ச்சி கொண்ட கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள், சிதைந்து பிறந்த கருக்கள், உடற்குறைபாடு கொண்ட சிசுக்களின் இறந்த உடல்கள் கண்ணாடி பெட்டிகளில் பார்மால்டிஹைடில் பாதுகாக்கபட்டிருந்தன. சில பொருட்களின் அடியில் எங்கே சேகரிக்கபட்டது என்ற தகவல் டைப் செய்து ஒட்டப்பட்டிருந்த்து.
இந்த மியூசியத்தில் எங்கெங்கே கேமிரா பொருத்தப்பட வேண்டும் என்பதை மனோகர் தான் முடிவு செய்தான். இவற்றை யார் திருடப்போகிறார்கள். அன்றாடம் மியூசியத்தைக் காண வரும் மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கையே மிகக் குறைவு தானே.
பெரிய ஹாலில் மட்டுமில்லாது நான்கு அறைகளிலும் இறந்த சிசுக்களின் மாதிரிகள் வைக்கபட்டிருந்தன. அந்த அறைகளில் பகலிலும் டியூப் லைட் இல்லாமல் எதையும் காண முடியாது. நேரடி வெளிச்சம் மிகக் குறைவு என்பதால் கேமிரா பொருத்துவது சவாலான வேலையாக இருந்தது.
உள் அறையின் ஜன்னலை ஒட்டி இருந்த கண்ணாடி குடுவை ஒன்றில் இரண்டு தலை கொண்ட சிசுவின் உடல் மிதந்து கொண்டிருந்தது.
இரட்டைத் தலைகளைக் காணும் போது இரண்டு மலர்கள் ஒரே காம்பில் மலர்ந்திருப்பது போலவே தோன்றியது. மூடிய கண்கள் கொண்ட அந்தச் சிசுவை நெருங்கி பார்த்துக் கொண்டிருந்தான் மனோகர்.
அந்தக் குடுவையின் அடியில் சிசுவின் தாய் பெயர் இந்திராணி சுப்ரமணியம் இடம் காஞ்சிபுரம் வருஷம் 1994 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனோகர் அந்தப் பெயரை வாசித்த போது அது தனது அம்மாவின் பெயர் போலிருப்பதாக நினைத்தான். அம்மாவின பெயர் எப்படி இதில் இடம்பெற்றுள்ளது எனப் புரியவில்லை.
யாரிடம் இதைப்பற்றிக் கேட்பது எனத் தெரியவில்லை
அந்த மியூசியத்தில் மூன்று பேர் வேலை செய்தார்கள். ஒருவர் முக்காலி போட்டு ஹாலின் ஒரமாக அமர்ந்து காவல்பணியைச் செய்துவந்தார். இன்னொரு பெண் ரிக்கார்டுகளைப் பராமரிப்பதும்,தினசரி பதிவேட்டினை நிர்வகிப்பதுமாக இருந்தார். மூன்றாவது நபர் அந்த மருத்துவ மியூசியத்தின் பொறுப்பாளர். அவருக்கெனத் தனியறை இருந்தது. எப்போதாவது தான் அவர் வருவார் என்றார்கள்
பதிவேட்டினை நிர்வகிக்கும் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்ணிடம் சென்று விபரம் கேட்டான் மனோகர்
“கேமிரா பிக்ஸ் பண்ண தானே வந்தீங்க. நீங்க எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க“ என்று சந்தேகத்துடன் கேட்டாள் அந்தப் பெண்
“அதுல உள்ள பேரு எங்கம்மா பேரு மாதிரி இருந்துச்சி. அதான்“ என்றான் மனோகர்
“இரட்டை தலைப்பையனா“ என்று அந்தப் பெண் கேட்டார்.
“ஆமாம். ஜன்னலை ஒட்டி இருக்குது பாருங்க“ என்றான் மனோகர்
“அதுல என்ன நம்பர் போட்டு இருக்கு பாத்து சொல்லுங்க “என்றார் அந்தப் பெண்
மனோகர் உள்அறைக்குச் சென்று அந்தக் கண்ணாடி பாட்டிலின் அடியில் எழுதப்பட்டிருந்த எண்ணை தனது செல்போனில் போட்டோ எடுத்து கொண்டுவந்து காட்டினான்
அவள் தனது இருக்கையிலிருந்து எழுந்து நடந்தாள். பாரிய உடம்பு என்பதால் மூச்சுவாங்கியது. நிர்வாகியின் அறையினுள் பழைய மர டிராயரை இழுத்து அவள் எதையோ தேடுவது தெரிந்தது.
வெளியே வந்த அவள் பளுப்பு நிறமான காகிதம் ஒன்றை அவனிடம் காட்டினாள்.
“1994 ஏப்ரல் 6ம் குழந்தை காஞ்சிபுரம் ஜிஎச்ல பிறந்துருக்கு. தாயார் பேரு இந்திராணி. அப்பா பேரு சுப்ரமணியம். சொந்த ஊர் தாமல். “ எனத் தொடர்பு முகவரி உள்ளிட்ட விபரங்களைச் சொன்னாள் அந்தப் பெண்
மனோகரால் நம்பமுடியவில்லை. அது அவனது அம்மாவே தான். இப்படி ஒரு இரட்டை தலை பையன் தனக்கு முன்னால் பிறந்த விஷயத்தைப் பற்றி அம்மா சொன்னதேயில்லையே.
எப்போதோ ஒருமுறை தனக்கு முன்பாக ஒரு பையன் பிறந்து இறந்து போனதாகச் சொல்லியிருக்கிறாளே தவிர அவன் இப்படி ஒரு விநோத பையன் என்று சொன்னதில்லையே.
அப்படியானால் இந்தக் கண்ணாடி குடுவையில் பாடம் செய்யப்பட்டிருப்பவன் அவனது அண்ணன். அதுவும் இரட்டை தலை கொண்டவன். தான் ஒரு இரட்டை தலை கொண்டவனின் தம்பி என்ற எண்ணம் மனதில் தோன்றியதும் தானே விநோதமாகிவிட்டதாக மனோகர் உணர்ந்தான்.
மறுபடியும் அந்தச் சிசுவை பார்க்க விரும்பியவனாக உள் அறைக்குள் சென்றான்.
நெருக்கமாகக் காணும் போது அந்த முகத்தில் அம்மாவின் சாயல் இருப்பதைக் கண்டான். நிச்சயம் அவனது அண்ணனே தான்.
பிறந்த சில மணி நேரங்களிலே இறந்து போயிருக்கிறான். இறந்த சிசுவை மருத்துவ நிர்வாகம் பெற்றுக் கொண்டு பாடம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அம்மா ஏன் இதை மறைத்தாள்.
இன்று ஒருவேளை இந்தப் பையன் உயிரோடு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும். இரண்டு தலை பையன் என்பதால் நிறைய அவமானங்களைச் சந்தித்திருப்பான் என்று தோன்றியது
தனது செல்போனில் இரட்டைதலை சிசுவை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
தான் இதுவரை அறியாத அண்ணன் இங்கே காட்சிப்பொருளாக இருக்கிறான். அவனைப் பாதுகாக்க தான் கேமிரா பொருத்திக் கொண்டிருக்கிறேன் என்பது அபத்தமாக இருந்தது.
தன்னோடு வேலை செய்யும் ரூபனை அழைத்து வந்து அந்தச் சிசுவைக் காட்டி மனோகர் சொன்னான்
“இது எங்க அண்ணன்“
“எப்படிறா ரெண்டு தல இருக்கு“ என்று கேட்டான் ரூபன்
“அதான் தெரியலை“
“நல்லவேளை மூணு தலை இல்லே. இருந்தா நீ பிரம்மாவோட தம்பி ஆகியிருப்பே“ என்று கேலி செய்தான் ரூபன்
இத்தனை நாட்களாக எளிய மனுஷியாகத் தெரிந்த அம்மா இப்படி இரட்டை தலை கொண்ட குழந்தையைப் பெற்றவள் என்பது புதிராகயிருந்தது.
அன்றிரவு பெரம்பூரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியதும் அம்மாவிடம் கேட்டான் மனோகர்
“எனக்கு முன்னாடி ஒரு பையன் பிறந்தானே அவனுக்கு ரெட்டைத் தலையா“
அந்தக் கேள்வியை அம்மா எதிர்பார்க்கவில்லை
“ஆமா. அதுக்கென்ன. அவன் பிறந்தவுடனே செத்துப் போயிட்டானே“ என்றாள்
“அந்த பையனை இன்னைக்கு நான் பார்த்தேன்“ என்றான் மனோகர்
“என்னடா சொல்றே“ எனப் புரியாதவளாகக் கேட்டாள் அம்மா
“மெடிகல் காலேஜ் மியூசியத்தில அதைப் பாடம் பண்ணி வச்சிருக்காங்க நான் பார்த்தேன்“ என்றான் மனோகர்
“நீ அங்கே எதுக்குப் போனே“.
“அங்க எங்க கம்பெனி கேமிரா பிக்ஸ் பண்ணுறாங்க. நான் அண்ணனை போட்டோ எடுத்துட்டு வந்துருக்கேன். நீ பாக்குறயா“
“எனக்கு வேணாம்பா. அதெல்லாம் எப்பவோ முடிஞ்ச கதை…செத்துப் போனவங்களைப் பற்றிப் பேசி என்னடா ஆகப்போகுது. அதெல்லாம் எனக்கு மறந்தே போச்சு“
“அது எப்படிம்மா மறக்க முடியும். ரெட்டை தலையோட பிள்ளை பிறக்கிறது சாதாரண விஷயமில்லை. “
“பிள்ளைக்கு எத்தனை தலை இருக்கு. எத்தனை கைகால் இருக்குனு யாரு கவலைப்படப்போறா. அது பிறந்து ஒரு நாள் கூட வாழலையே. அது தான் மனசுக்கு கஷ்டமா இருந்துச்சி“.
“இத்தனை வருஷம் ஏன்மா இதை என்கிட்ட சொல்லவேயில்லை“
“இதுல சொல்றதுக்கு என்னடா இருக்கு. நல்லவேளை உனக்காவது ஒத்தை தலை இருந்துச்சே. அதை நினைச்சி சந்தோஷப்பட்டுகிட்டோம். “
அம்மாவின் பேச்சை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனது அப்பா ஆறு வருஷங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஒருவேளை அவர் இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் புகைப்படத்தைப் பார்க்க ஆசைப்பட்டிருப்பார். அம்மா அதைப் பெரிதாக நினைக்கவேயில்லை
ஆனால் இதன்பிந்திய நாட்களில் மனோகர் அடிக்கடி மியூசியத்திற்குப் போய் வரத்துவங்கினான். அண்ணன் முன்பாக நிற்கும் நிமிஷங்களில் ஏதோவொரு நெருக்கம் உருவாவதாக நினைத்தான்.
ஒரு நாள் அவன் மருத்துவக்கல்லூரி மியூசியத்திற்குள் நுழையும் போது அவனது அம்மா வெளியேறிப் போவதைக் கண்டான். அம்மாவே தான். இத்தனை நாட்களாகப் பார்க்க மாட்டேன் என்றவள் இன்று எதற்காகத் தேடி வந்திருக்கிறாள் என்று யோசித்தான்
பதிவேடுகளைப் பராமரிக்கும் பெண் சொன்னாள்
“அந்தம்மா ரொம்ப நேரம் இரட்டை தலை பையனை பாத்துகிட்டே இருந்தாங்க. அந்தப் பையன்கிட்டே ஏதோ சொன்னது மாதிரி கேட்டுச்சி. என்ன சொன்னாங்கன்னு தெரியலை“
அம்மா என்ன சொல்லியிருப்பாள். எதற்காகத் தேடி வந்தாள் என்று புரியவில்லை. உடனே வீடு திரும்பி இதைப்பற்றி விசாரிக்க வேண்டும் போலிருந்த்து. ஆனால் அவனது அலுவலகத்தில் புதிய பணி ஒன்றின் திட்டமிடலுக்கான கூட்டம் முடிய இரவு ஒன்பதாகியது.
பசியோடு வீடு திரும்பிய மனோகர் அம்மாவிடம் கேட்டான்
“நீ எதுக்கு அந்த மியூசியத்துக்குப் போயிருந்தே“
“என்னமோ பாக்கணும்னு தோணுச்சி. அதான் பார்த்துட்டு வந்தேன். அவன் பிறந்த அன்னைக்கே செத்துட்டான் பேரு கூட வைக்கலை. அதான் இன்னைக்குப் போய்ப் பெயர் வச்சிட்டு வந்தேன். இரண்டு தலை இருக்குல்லே. அப்பே அவன் இரண்டு ஆள் தானே. அதான் ஒருத்தன் பேர் சுந்தர் இன்னொருத்தன் பேர் சந்துருனு வச்சிட்டு வந்தேன். நம்ம புள்ளைக்கு நாம தானே பேர் வைக்கணும்“
“சுந்தர் சந்துரு “என்ற பெயர்கள் வைக்கபட்டவுடன் அந்த இரட்டைதலைப் பையன் தனது அண்ணனாக முழுமை பெற்றுவிட்டதாகத் தோன்றியது.
மனோகர் தானும் ஒருமுறை அந்தப் பெயர்களை மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
“ஒரு போட்டோ எடுத்து நம்ம வீட்ல மாட்டி வைப்போம்மா“ என்று கேட்டான் மனோகர்
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அதைப் பார்த்தா மனசை உறுத்திக்கிட்டே இருக்கும். நடந்ததை நினைச்சிகிட்டே இருந்தா பிழைப்ப பாக்க முடியாதுறா. நீயும்.. இனிமே அங்கே போகாதே“ என்றாள்
அம்மா சொன்னது சரிதான் எனத் தோன்றியது.
ஆனால் தான் இரட்டைதலை கொண்டவனின் தம்பி என்பதை எப்படி மறப்பது என்று தான் அவனுக்குப் புரியவில்லை
•••
February 14, 2023
கதைகளின் நாற்காலி
இயக்குநர் வசந்தபாலன்
(கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து இயக்குநர் வசந்தபாலன் எழுதியுள்ள குறிப்பு.)

எஸ்ரா சிறுகதைகளின் கருவைக் கண்டடைவதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.வரலாற்று மனிதர்கள் தவற விடும் இடைவெளிகளைக் கச்சிதமாக எடுத்து கதைகளாக்கிவிடுவார். அப்படி இந்த 125 குறுங்கதைகளில் பல அற்புதமான கதைகள் உள்ளன.
உலகின் உயர்ந்த இலக்கியமாகக் கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னகரீனாவில் அன்னாகரீனா தனது மகனுக்காக பொம்மை வாங்கினாள் என்ற இடத்தை அபகரித்து ஒரு கதை எழுதியிருக்கிறார். தன்னைப்பிரிந்து வாழும் மகனுக்கு “உண்மையில் அன்னா தன்னையே ஒரு பொம்மையாக்கி மகனிடம் தரவே விரும்பினாள்” என்று எழுதுகிறார் எஸ்.ரா. அதுவும் அந்த என்ன பொம்மையாம் ?
“கடைப்பையன் பொம்மையை இயக்கி காட்டினான். பொம்மையின் இதயப்பகுதியிலிருந்த சிறிய கதவு திறந்து சிவப்புக்குருவி வெளியே எட்டி சப்தமிட்டது. எல்லோர் இதயத்திற்கும் இப்படியொரு சிறு குருவி இருக்கத்தானே செய்கிறது.” என்கிறார் எஸ்.ரா.
என் இதயத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். சாலையில் கை ஏந்தும் எத்தனையோ புலம் சார் தொழிலாளர்களைக் கண்டும் காணாதது போலத் தானே முகம் மூடி முகக்கவசத்துடன் கடக்கிறேன். எனக்குள் குருவியும் இல்லை, இதயமும் இல்லை என்று அந்தக் கதையில் வாழும் குருவி என்னை வெட்கிக் கூனி குறுகச் செய்தது.

இந்தத் தொகுப்பில் ஒரு துளிக்கண்ணீர் என்றொரு கதை தான் என்னை உலுக்கியது. இந்தக் கதையைப் படித்த பிறகு தான் உலகில் கண்ணீரை விட எடையுடையது எதுவுமில்லை என்று தெரிய வந்தது.அலுவலக நண்பன் ஒருவன் நாதனை தன் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட அழைக்கிறான். நாதன் அவ்வீட்டிற்குச் சாப்பிடச் செல்லும் வேளையில் கணவன் மனைவியிடையே சின்னச் சண்டை நிகழும் சப்தம், சமையற்கட்டில் இடுக்கின் வழியாகக் கசிகிறது. நாதனுக்கு அந்தப் பெண் சோறு பரிமாறும் போது அவளை அறியாமல் ஒரு துளிக்கண்ணீர் சாப்பாட்டில் விழுந்து விடுகிறது.அதை நாதன் கவனித்து விடுகிறான். துளிக்கண்ணீர் விழுந்த உணவை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறான். துளிக்கண்ணீர் விழுந்த உணவை எப்படிச் சாப்பிடுவது இந்த வரி என்னைக் கொந்தளிக்க வைத்தது. அந்தத் துளிக்கண்ணீர் அவனைத் தூங்கவிடவில்லை. வேலை மாற்றலாகிக் கொண்டு ஓடக்கூடிய துயரத்தை அளித்துவிட்டது. துளிக்கண்ணீர் விழுந்து உணவு என்ற சொற்றொடர் பல்வேறு வினாக்களை இந்தியச் சமூகம் நோக்கி எழுப்புகிறது. இத்தனை வருடங்களாக நாதன் பெண்ணின் கண்ணீரைக் காணாதவனா ?
நம் சமையலறைகள் பெண்ணின் கண்ணீரால் தானே நிரம்பி வழிகிறது. கண்ணீரின் ருசி கலக்காத எந்த உணவும் இல்லை என்பது நாதனுக்குத் தெரியுமா? தெரியாதா? இந்த ஒட்டு மொத்த ஆண்களும் அது தெரியாமல் தான் வக்கணையாகக் குறை கூறியபடி சாப்பிடுகிறார்களா என்று அடுத்தடுத்த கேள்விகளை அந்தக் குறுங்கதை எனக்குள் எழுப்பியவண்ணம் இருக்கிறது.
கானலை அருந்தும் யானையாக இந்தக் கதைகளை அமுதென எண்ணி உண்டு கிறங்கி மயங்கிக் கிடக்கிறேன். இந்தக் குறுங்கதைக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கதைகளைக் கண்டறிவதில் தான் இந்தக் கதையின் வெற்றி இருக்கிறது. சூத்திரங்கள் போல் குறுங்கதைக்குள் பல திறப்புகளை உண்டாக்கிய எஸ்ரா வாசகன் திறந்து கொள்வான் என்று விட்டு வைத்திருக்கிறார். வழியும் கண்ணீரை அவசரமாகத் துடைத்து விட்டுச் செல்வதும் அதை உள்ளங்கையில் ஏந்தியவண்ணம் மனதிற்குள் நுழைவதும் நம் வாசிப்புத் தவம்.
கர்னலின் நாற்காலி போன்ற குறுங்கதைகளுக்குள் பெரும் காப்பியமே ஒளிந்திருக்கின்றது.
பறவைகளின் தையற்காரன் போன்று மாய யதார்த்தவாதம் பேசும் கதைகள் ஒரு கனவைப்போல நம்மை வாழ அழைக்கின்றன.
காதலுற்ற சிற்பங்கள் போன்ற குறுங்கதை தவறவிடக்கூடாத மின்மினிப்பூச்சியின் ஒளியாய்த் தெரிகிறது.
வழி தவறி வீட்டிற்குள் வந்த வண்ணத்துப்பூச்சி நம்மை மனித மலர் என எண்ணி வந்தமருமே அந்தத் தருணத்தைச் சிரிக்கும் நட்சத்திரம் போன்ற சில கதைகள் வழங்குகின்றன.
நூறு வயதைக் கடந்து வாழும் ஒரு கதைசொல்லி குழந்தைகளை அமர வைத்துச் சொல்லும் அழியாக்கதைகளாக இந்தக் குறுங்கதைகளைப் பார்க்கிறேன்.
•••
February 12, 2023
நகரம் விழுங்கிய மனிதர்கள்.
ஆற்றின் சுழல் நம்மை ஆழத்திற்கு இழுத்துச் சென்றுவிடுவதைப் போலச் சில நாவல்கள் நம்மை அதன் ஆழத்திற்குள் இழுத்துக் கொண்டுவிடுகின்றன. நாவலை வாசித்து முடித்தபிறகும் அதிலிருந்து வெளிவர முடியாது. மனதில் கதாபாத்திரங்கள் நடமாடியபடியே இருக்கும்.

அப்படியொரு நாவல் தான் அன்னையின் குரல்.
ஆப்பிரிக்க நாவலான இதை எழுதியவர் ஆலன் பேடன்
ஆலன் பேடனின் புகழ்பெற்ற நாவலான Cry, the Beloved Country தமிழில் அன்னையின் குரல் என்று மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்நாவல் குறித்த கவனம் தமிழ்ச் சூழலில் உருவாகவில்லை.
1948ல் Cry, the Beloved Country வெளியானது. இது ஆலன் பேடனின் முதல் நாவல். ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கை குறித்து உண்மையாக எழுதப்பட்ட நாவல் என்று மிகுந்த வரவேற்பு பெற்றது.. இந்த நாவல் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது

ஆலன் ஸ்டீவர்ட் பாடன் நிறவெறிக்கு எதிராக எழுதியவர்களில் முதன்மையானவர். இவரது தந்தை ஆப்பிரிக்காவில் அரசு உயரதிகாரியாகப் பணியாற்றியவர். நடால் காலனியில் உள்ள பீட்டர்மரிட்ஸ்பர்க்கில் பிறந்த ஆலன் பாடன் நடால் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அதைத் தொடர்ந்து கல்வியியல் டிப்ளமோ பெற்றார்.இக்ஸோபோ உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மாரிட்ஸ்பர்க் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
நிறவெறிக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய பாடன் இளங்குற்றவாளிகளுக்கான காப்பகத்திலும் பணியாற்றியிருக்கிறார். அங்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறார். இனவெறி குறித்து ஆராய்வதற்காக உலகப்பயணம் மேற்கொண்ட பாடன் நார்வேயிலிருந்த நாட்களில் இந்த நாவலை எழுதத் துவங்கியிருக்கிறார். அவரது பயணத்தின் முடிவிற்குள் நாவலை எழுதி முடித்திருக்கிறார்
ஒரு வெள்ளைக்காரரால் எப்படிக் கறுப்பின மக்களின் மனதையும் வாழ்க்கையினையும் இவ்வளவு உண்மையாக. ஆழமாகப் புரிந்து கொள்ள முடிந்தது என்று இலக்கிய உலகம் வியந்து கொண்டாடியது
சில நாவல்களை Mini Epic என்று வகைப்படுத்துகிறார்கள். இந்த வகை நாவல்கள் இதிகாசம் போல வாழ்வின் பிரம்மாண்டத்தை அடிப்படை உண்மைகளை, கேள்விகளை முன்வைக்கக் கூடியவை. செவ்வியல் தன்மை கொண்டதான இதிகாச நாவல்களில் ஒன்றாகவே அன்னையின் குரலைக் காணுகிறேன்..
இந்த நாவல் ஒரு நவீன இதிகாசம். இந்த இதிகாசம் கறுப்பின மக்களின் வாழ்க்கை துயரை, நிறவெறியை, வாழ்க்கை அவலங்களைப் பேசுகிறது. வீடு திரும்புதல் தான் நாவலின் மையம். இது ஹோமரை நினைவுபடுத்துகிறது. பிரிந்து சென்ற உறவுகளைத் திரும்ப ஒன்று சேர்க்க முனைவது இதிகாசங்களின் முதன்மையான கூறு. இந்த நாவலும் அப்படி ஒரு கதையைத் தான் சொல்கிறது.
1940களில் இக்சோபோ என்டோட்ஷேனி என்ற சிறிய கிராமத்தில் கதை தொடங்குகிறது, அங்குப் பாதிரியாராக உள்ள ஸ்டீபன் குமாலோவிற்கு ஒரு கடிதம் வருகிறது. அதை எழுதியவர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பாதிரியார் தியோபிலஸ் மிசிமாங்கு. அந்தக் கடிதத்தில் குமாலோவின் சகோதரி கெர்ட்ரூட் உடல்நிலை மோசமாகிக் கஷ்டப்படுவதால் அவளுக்கு உதவி செய்ய வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது
குமாலோ இதனால் ஜோகன்னஸ்பர்க் புறப்படுகிறார். நகரத்திற்குச் சென்றவர்கள் எவரும் ஊர் திரும்புவதில்லை என்று அவரை ஊர்மக்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். அவரோ தான் நிச்சயம் ஊர் திரும்பி விடுவேன் என்கிறார். நகரத்திற்குச் சென்று திரும்புகிறவன் ஏமாற்றங்களுடன் தான் வருவான் என்று ஒரு விவசாயி சொல்கிறார். அப்படியே கதையிலும் நடக்கிறது.

குமாலோவின் கிராமத்தில் வசிக்கும் வெள்ளையர்கள் கறுப்பின மக்களைத் துவேசத்துடன் நடத்துகிறார்கள். நிறவெறி அதிகமாக உள்ளது. குறிப்பாக அவரது கிராமத்தில் வசிக்கும் பணக்கார ஜேம்ஸ் ஜார்விஸ்: ஜோகன்னஸ்பர்க்கில் வெள்ளைக்காரர்கள் கறுப்பின மக்களுடன் கைகுலுக்குகிறார்கள் என்பதை அவமானத்துக்குரிய ஒன்றாக நினைக்கிறார். வெள்ளை அதிகாரம் அந்தக் கிராமத்தில் வலிமையாக இருக்கிறது.அவர்களிடம் பண்ணை அடிமை போலவே கறுப்பின மக்கள் பணியாற்றுகிறார்கள்
ஜோகன்னஸ்பர்க்கிற்கு முதன்முறையாக வரும் குமாலோ அங்குக் கறுப்பின மக்கள் இரண்டாந்தர பிரஜையாக நடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்
அதே நேரம் நகரத்திற்கு வந்த உடன் அவர் கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனால் ஏமாற்றப்படுகிறார். இது தான் உண்மையான சூழ்நிலை என்பது அவருக்குப் புரிகிறது
அவரது பயணத்தின் நோக்கம் சகோதரிக்கு உதவி செய்வது மட்டுமில்லை. தனது மகன் அப்சலோம் நகரிற்குச் சென்று வருஷங்களாகியும் வீடு திரும்பவில்லை. அவன் என்ன ஆனான் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்.
அவருக்கு உதவி செய்யப் பாதிரி தியோபிலஸ் முன்வருகிறார்கள். அவர்கள் கெர்ட்ரூட்டை தேடி அலைகிறார்கள். அந்தத் தேடுதலின் வழியே கறுப்பின மக்கள் வாழும் குடியிருப்புகளின் மோசமான நிலையினையும் வறுமையின் கோரத்தையும் குமாலோ அறிந்து கொள்கிறார். தேடுதலின் முடிவில் கெர்ட்ரூட்டை கண்டுபிடிக்கிறார்கள். அவள் விபச்சாரியாக இருக்கிறாள். அத்துடன் நாட்டுச் சாராயம் காய்ச்சி விற்கிறாள் என்பதை அறிந்து கொள்கிறார்.
அவளைச் சந்தித்துப் பேசும் இடம் அற்புதமானது. அவள் சூழ்நிலை தன்னை இப்படியாக்கிவிட்டது என்று கண்ணீர் விடுகிறாள். அவளிடம் பேசி சமாதானம் சொல்லி கிராமத்திற்கு வந்துவிடும்படி அழைக்கிறார். அவள் தனது மகனுடன் வந்துவிடுவதாக வாக்குறுதி அளிக்கிறாள்

இதன்பிறகு குமாலோ தனது மகன் அப்சலோமைத் தேடுகிறார். இந்தத் தேடுதல் எளிதாகயில்லை. அப்சலோம் ஒரு இளம்பெண்ணுடன் வாழுவதை அறிந்து அந்தப் பெண்ணைச் சந்திக்கிறார். அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள். தாங்கள் சேர்ந்து வாழுகிறோம் என்கிறாள்.. அப்சலோம் எங்கே எனக்கேட்க அவன் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதாகவும் எப்போதாவது தான் வீட்டிற்குத் திரும்புவான் என்றும் குறிப்பிடுகிறாள்.
அப்சலோமை தேடி குமாலோ பல்வேறு இடங்களில் அலைகிறார். இதே நேரம் அவன் தனது சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஆர்தர் ஜார்விஸ்: என்ற வெள்ளைக்காரன் வீட்டில் கொள்ளையடிக்கச் செல்கிறான். அங்கே ஏற்பட்ட குழப்பத்தில் அவன் ஆர்தர் ஜார்விஸைக் கொன்றுவிடுகிறான் . போலீஸ் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது
ஆர்தர் ஜார்விஸின் தந்தை ஜேம்ஸ் ஜார்விஸ் மகன் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டுத் துடித்துப் போகிறார். மனைவியோடு கிளம்பி மகனது இறுதிச் சடங்கிற்காக வருகிறார்
தனது மகன் கறுப்பின மக்களின் விடுதலைக்காகச் செயல்பட்டதையும் அவன் நிறவெறிக்கு எதிராக முன்னின்று செயல்பட்டதையும் அறிந்து கொள்கிறான். இப்படியான ஒருவன் கறுப்பின இளைஞனால் கொல்லப்பட்டதை நினைத்து வருந்துகிறார். மகனின் கடிதமும் எழுத்தும் அவரது மனதை மாற்றுகின்றன.
மகன் சிறையில் இருப்பதை அறிந்து கொண்ட குமாலோ அவனைச் சந்திக்கச் செல்கிறார். தந்தையும் மகனும் சிறைச்சாலையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. ஏன் அவன் இப்படி மோசமான பாதையில் சென்று குற்றவாளியாக ஆனான் என்று குமாலோ கேட்கிறார். தனது சகவாசமே தன்னை இப்படி ஆக்கியதாகச் சொல்கிறான் அப்சலோம். நீதி விசாரணை நடைபெற இருப்பதால் அவனை மீட்க முயற்சி செய்கிறார் குமாலோ. அதன்பின் வரும் நிகழ்வுகள் நம்மைத் துயரம் கொள்ள வைக்கின்றன.
நாவலின் முடிவில் அப்சலோம் காதலித்த பெண்ணைத் தனது மருமகளாக ஏற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்படுகிறார் குமாலோ. சகோதரி கெர்ட்ரூட் காணாமல் போய்விடுகிறாள் அவள் ஊர் திரும்புவதேயில்லை.
தனது கிராமத்தில் ஆர்தர் ஜார்விஸின் தந்தை ஜேம்ஸை சந்திக்கிறார் குமாலோ. தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறார். அவரை மன்னிக்கும் ஜேம்ஸ் குமாலோவை மிகுந்த நட்போடு நடத்துகிறார். இரண்டு தந்தையர்கள் சந்தித்துக் கொள்வதைப் பாடன் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
மகனைத் தேடும் தந்தையின் வழியாக 1940களில் இருந்த ஜோகன்னஸ்பர்க் நகர வாழ்க்கையை, அன்று நிலவிய இனவெறியை ஆலன் பாடன் மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.
ஆணும் பெண்ணும் ஊரைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணால் இனியும் அவர்களைத் தக்க வைத்திருக்க முடியாது என்று நாவலில் ஒரு வரி இடம்பெறுகிறது.
நிலமும் மனித வாழ்க்கையும் கொண்டுள்ள பிணைப்பு மாறும் போது ஏற்படும் விளைவுகளையே நாவல் பேசுகிறது.
நல்லவர்களாகத் தான் வளர்த்த சகோதரியும் மகனும் ஏன் நகரிற்குச் சென்று இத்தனை மோசமான செயல்களில் ஈடுபட்டார்கள். எது அவர்களை இப்படியாக்கியது என்று குமாலோ யோசிப்பது முக்கியமான இடம். வாழ்க்கை நெருக்கடியும் ஏழ்மையும் குரூரமான இனவெறியும் அவர்களை வீழ்த்தியது என்ற உண்மையை நாவல் வெளிப்படுத்துகிறது
நாவலில் வரும் வெள்ளைக்கார வழக்கறிஞரும் ஆர்தர் ஜார்விசும் இனவெறிக்கு எதிராகப் பேசுகிறார்கள். செயல்படுகிறார்கள். இரண்டு இனங்களின் சமூகநிலை மற்றும் நடத்தைகள் பற்றிச் சார்பற்ற, புறநிலைப் பார்வையில் எழுதியிருக்கிறார் பாட்டன். நகர்ப்புற குற்றங்களின் பின்புலம், அது ஏற்படுத்தும் விளைவுகளையும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்
நாவலில் வரும் இரண்டு பெண்களும் முக்கியமானவர்கள். காதலனை நம்பி ஏமாந்து விபச்சாரியாக வாழும் கெர்ட்ரூட் இப்படி வாழ்வதைத் தவிரத் தனக்கு வேறுவழியில்லை என்கிறாள். அவளது இன்னொரு வடிவம் போலவே அப்சலோம் காதலிக்கும் பெண் இருக்கிறாள். பதினாறு வயதிற்குள் அவள் மூன்று திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறாள். மூன்றும் ஏமாற்றமே அளித்திருக்கிறது. முடிவில் அப்சலோமினைக் காதலித்து அவனது கருவைச் சுமக்கிறாள். சூழலின் நெருக்கடியால் ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாவல் அழுத்தமாகச் சொல்கிறது.
குமாலோ மிக அழகாகக் கதாபாத்திரம். கிராமத்து மக்களின் அபிமானத்துக்குரிய பாதிரியான அவர் நகரத்திற்கு முதன்முறையாக வந்த போது அதன் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனது மகனைத் தேடும் போது அவனைப் போல எண்ணிக்கையற்ற இளைஞர்கள் கைவிடப்பட்டவர்களாக மோசமான பாதையில் அலைவதைக் காணுகிறார். தீர்க்க முடியாத வறுமை. பொருளாதாரச் சீர்கேடுகள், குற்றங்கள் நிரம்பியிருப்பதைக் காணுகிறார். இந்த நரகத்திலிருந்து தனது மகனைச் சகோதரியை மீட்டுவிட நினைக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை
மகனை நினைத்துக் கவலைப்படும் இரண்டு தந்தைகளும் இருவேறான வாழ்க்கை நிலையில் இருக்கிறார்கள். பணக்கார ஜார்விஸ் வீட்டில் அவரது மனைவி பேப்பர் படிப்பதைக் கூட அவர் விரும்பவில்லை. ஏழ்மையில் வாழும் குமாலோ தன்னால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்கிறார்.
கிராமத்தில் வாழமுடியாதபடி இனவெறி பண்ணை அடிமைதனம் மிகுதியாக இருக்கிறது. அதிலிருந்து விடுபடவே நகரம் நோக்கி செல்கிறார்கள். நகரமோ அதன் ஆயிரம் கைகளால் சுற்றி இழுத்து அவர்களை விழுங்கிவிடுகிறது. நகரால் விழுங்கப்பட்டவர்கள் அதன் அடிவயிற்றுள் தான் வாழுவார்கள். அவர்களுக்கு மீட்சியில்லை.
இரண்டு மகன்களும் ஏன் கிராமத்தை விட்டு நகரிற்குப் போனார்கள். ஏன் அப்சலோம் இப்படி ஆனான் என்ற கேள்விக்கு விடையில்லை. ஆனால் தந்தையின் சொல்லப்படாத அன்பை, வலியைப் பேசுவதன் வழியே இந்நாவல் நவீன இதிகாசத்தின் தன்மையை அடைகிறது.
February 10, 2023
அப்பாவின் பெயர்
புதிய சிறுகதை
பிப்ரவரி 9 2023
பேராசிரியர் அருண்சர்மா தொலைபேசியில் அவளை அழைத்தபோது இரவு ஒன்பது மணியிருக்கும். அவரது குரலில் அவசரம் தெரிந்தது

“சகுந்தலா உங்கப்பா வீட்டுக்கு வந்துட்டாரா“
“இல்லை. ஏதோ மீட்டிங் இருக்குனு வெளியே போயிருக்கார் இன்னும் வரலை“
“அவர் ஐசிஎல் அவார்ட் செலக்சனுக்குப் போயிருக்கார். அதுல உன் பேரு இருக்கு. அவர் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லலையா“
“இல்லையே. “
“மூணு நடுவர்ல உங்கப்பாவும் ஒருத்தர். நிச்சயம் உனக்கு அவார்ட் கிடைக்கும்னு நினைக்குறேன்“
“லிஸ்ட்ல என் பேரு இருக்குறது கூட எனக்குத் தெரியாது“
“பைனல் லிஸ்ட் உங்கப்பாவுக்கு ஒரு வாரம் முன்னாடியே வந்துருக்குமே. அவர் ஏன் உன்கிட்ட சொல்லலை“
“அதான் புரியலை“
“நீ அவருக்குப் போன் பண்ணி கேட்டுப்பாரு. நல்ல சான்ஸ் இது“..
அவளுக்கு ஐசிஎல் விருது பற்றி நன்றாகவே தெரியும். அவளது துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருது. மொழியியல் அறிஞரான அவளது அப்பா அந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வாங்கியிருக்கிறார்
அப்பா தன்னை விருதுக்குத் தேர்வு செய்திருப்பாரா என்று சகுந்தலாவிற்குத் தெரியவில்லை. இதை எப்படி அவரிடம் கேட்பது என்றும் புரியவில்லை.
மொழியியலில் அவளுக்கு ஆர்வம் உண்டானதற்கு அப்பா தான் காரணம். ஆனால் அவரது புகழே அவளது வளர்ச்சிக்கு பெரிய தடையாக இருந்தது. இதற்காகவே அவள் மைசூர் சென்று ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்கினாள். சென்னையில் வேலைக்குச் சேரக்கூடாது என்பதாலே பெங்களூரில் வேலைக்குச் சேர்ந்தாள்.

அவளது கட்டுரைகள் நிறைய ஆய்விதழ்களில் வந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி அப்பா ஒரு போதும் பாராட்டி பேசியதில்லை. அவள் விக்டர் பானர்ஜியோடு இணைந்து நான்கு புத்தகங்கள் எழுதியிருக்கிறாள். அதில் ஒன்று கல்லூரி அளவில் பாடமாக வைக்கபட்டிருக்கிறது. அதைப் பற்றி நல்லவிதமாக ஒரு வார்த்தை கூட அப்பா சொன்னதில்லை.
ஒரு முறை பத்திரிக்கையாளர் இதைப்பற்றி அப்பாவிடம் கேட்டதற்கு “மீடியாக்கர் ரைட்டிங்“ என்று பதில் அளித்திருக்கிறார்.
அம்மா இருக்கும் வரை அப்பா சென்னையில் தானிருந்தார். அம்மாவின் மறைவிற்குப் பிறகு அவரது உடல்நலம் நலிவடையவே சகுந்தலா அவரைத் தங்களுடன் பெங்களூரில் வந்து வசிக்கும்படி கேட்டுக் கொண்டாள்
அப்பா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. சென்னையிலுள்ள வீட்டை வாடகைக்கு விடுவதில் இஷ்டமில்லை என்றார்
அவர்களுடையது போன்ற பெரிய வீடுகள் இப்போது குறைந்துவிட்டன. பங்களா போன்ற அதை விற்றால் அந்த இடத்தில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிவிடுவார்கள். அவர்களுக்குச் சொந்தமாக இரண்டு வீடுகள் கிடைப்பதுடன் மிகப்பெரிய தொகையும் கிடைக்கும். ஒருமுறை சகுந்தலா இதைப்பற்றி அப்பாவிடம் பேசியபோது அவர் மறுத்துவிட்டதோடு தன் காலத்திற்குப் பிறகு அந்த வீட்டினை ஆய்வு மையமாக மாற்றப்போவதாகச் சொன்னார்
“அது சரியா வராதுப்பா“ என்றாள்
“என் வீட்டை என்ன செய்யணும்னு நான் முடிவு பண்ணிகிடுவேன்“ என்று உறுதியான குரலில் சொன்னார் அப்பா
அப்பாவோடு சண்டைபோட விருப்பம் இல்லாத காரணத்தால் அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டாள்.
ஆனால் அம்மா இறந்தபிறகு தனி ஆளாக அவ்வளவு பெரிய வீட்டில் அவரால் குடியிருக்க முடியவில்லை. முடிவில் ஒரு தொண்டு நிறுவனம் ஒன்றின் அலுவலகம் செயல்படுவதற்காக வீட்டைக் கொடுத்துவிட்டு பெங்களூர் வந்து சேர்ந்தார்
அவர்கள் வீட்டின் மாடி அறையை அப்பா எடுத்துக் கொண்டார். அது விஸ்வாவின் அறை. அவன் அமெரிக்கப் பல்கலைகழகத்திற்குப் படிக்கப் போனபிறகு காலியாகவே இருந்தது.
பகல் முழுவதும் அப்பா ஏதாவது படித்துக் கொண்டேயிருப்பார். சில நேரம் புத்தகக் கடைக்குப் போவதற்காக வெளியே கிளம்பி போவார். அப்போதும் அவர்கள் காரை பயன்படுத்துவதில்லை. வாடகை டாக்சியில் தான் போய்வருவார்
சகுந்தலாவின் கணவர் மின்னணு நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக இருந்தார் .அவர்கள் வீட்டில் சமைப்பதற்கு ஒரு பஞ்சாபி இருந்தார். டிரைவர், பணியாளர்கள் என மூன்று பேர் வேலைக்கு இருந்தார்கள். சகுந்தலா கல்லூரிக்கு போய்வருவதுடன் சரி வீட்டுவேலைகள் எதையும் கவனிக்க மாட்டாள். பெரும்பான்மை நாட்கள் இரவு கிளப் விருந்து எனச் சென்றுவிட்டுப் பின்னிரவில் தான் வீடு திரும்புவாள். அந்த வாழ்க்கை முறை அப்பாவிற்குப் பிடிக்கவில்லை. அந்தக் கோபத்தை அவர் காட்டிக் கொள்ள மாட்டார்.
அப்பாவின் நண்பர் கண்ணபிரான் அசோகா காலனியில் இருந்தார். அவர் எப்போதாவது உரையாடுவதற்காக அவர்கள் வீடு தேடி வருவதுண்டு. மற்ற நாட்களில் பிடிவாதமாக அப்பா வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்தார். சில நாட்கள் இரவில் எதையோ எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறாள்.
அருண் சர்மா சொல்லும் வரை அப்பா ஐசிஎல் நடுவராக இருப்பதை அவள் அறியவில்லை. தனது பெயர் இறுதிபட்டியலில் இருப்பதைக் கண்டு அப்பா சந்தோஷப்பட்டிருப்பாரா.
ஏன் இதைப் பற்றிப் பேசவில்லை.
யாரை விருதுக்குத் தேர்வு செய்திருப்பார்கள்.
சகுந்தலா அப்பாவிற்குத் தொலைபேசி செய்தாள். அவர் போனை எடுக்கவில்லை. ஒருவேளை தேர்வுக்குழுவின் கூட்டம் இன்னமும் முடியவில்லையா.
யாரிடம் கேட்டால் தெரியும். முரளிதரனுக்கு அந்தக் கமிட்டியில் உள்ளவர்களை நிச்சயம் தெரிந்திருக்கும். அவள் முரளிதரனுக்குப் போன் செய்தாள்.
“என்ன சகுந்தலா.. ஐசிஎல் அவார்ட் என்ன ஆச்சு“ என்று கேட்டான்
“அதை கேட்க தான் அப்பா கிட்ட பேச டிரை பண்ணினேன். அவர் போனை எடுக்கலை உனக்குத் தெரியுமா“.
“மைசூர்ல கூட்டம் ஏழு மணிக்கே முடிஞ்சி போச்சே. உங்கப்பா உடனே கிளம்பிட்டாருனு சொன்னாங்க“
“யாருக்கு அவார்ட் “
“அது உங்கப்பாவுக்குத் தான் தெரியும். முகர்ஜியும் ஷியாம் பிரசாத்தும் கமிட்டில இருந்தாங்க. நாளைக்குக் காலையில அறிவிப்பு வரும்னு கேள்விபட்டேன்“
“நீ முகர்ஜிகிட்டே கேட்டு சொல்றயா“.
“அவர் இந்நேரம் பார்ல குடிச்சிட்டு இருப்பார். காலையிலே கேட்டு சொல்றேன்“
அப்பா ஏன் இது போன்ற விஷயங்களைக் கூடத் தன்னிடம் மறைக்கிறார் என்று அவளுக்குக் கோபமாக வந்தது. அவர் போனை எடுக்கவில்லை என்பதாலே தன்னைத் தேர்வு செய்திருக்கவில்லை என்பது அவளுக்குப் புரிந்திருந்தது.
••

அப்பாவின் ஆய்வுமுறைகள். அவர் முன்வைக்கும் கருதுகோள்கள் இன்று காலாவதியாகிவிட்டன. ஆய்வு வட்டத்தில் அவரை இன்று வாசிப்பவர் எவருமில்லை. ஆனால் அவர் அதை உணரவேயில்லை. அவர் வேறு ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருந்தார். அதில் ஆய்வு என்பது ஒப்பற்ற தியாகம். நிகரில்லாத உழைப்பு. பெரும் கண்டுபிடிப்பு. இன்று அப்படி எதுவுமில்லை. தனது பார்வையை, கோணத்தை உரிய சான்றுகளுடன் கோர்வையாக விவரித்து எழுதினாலே போதும். அவள் அப்படித் தான் எழுதுகிறாள். அப்பாவிற்கு அது பிடிப்பதில்லை.
அதைவிடவும் மொழியியல் துறையில் தன்னைவிட மேதை எவரும் இல்லை என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அது தான் பரிதாபம். இன்றைய ஆய்வாளர்களில் ஒருவர் கூட அவரைத் தேடி வருவதில்லை. கட்டுரைகளில் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் இவரைப் போன்றவர்களைத் தான் விருது குழுவின் நடுவராக நியமிக்கிறார்கள். அவரும் தனது கறைபடாத கரத்தை நிரூபித்துவிட்டுப் பெருமிதமாக நடந்து கொள்ளுவார். இதெல்லாம் அர்த்தற்ற நாடகம் என்று அவளுக்குத் தோன்றியது
எல்லாத் துறைகளிலும் வேண்டியவர்களுக்கு உதவி செய்வது. விருது கொடுப்பது. தேவையான ஆட்களை அணி சேர்த்துக் கொள்வது நடக்கத்தானே செய்கிறது. கோவிந்தப்பாவின் மகள் கல்லூரி முதல்வரானது அப்படித் தானே. அந்தக் கமிட்டியில் இருந்தவர்கள் கோவிந்தப்பாவின் மாணவர்கள். தங்கள் குருவை சந்தோஷப்படுத்த மகளை முதல்வராக்கிவிட்டார்கள். யாரோ சிலர் இதைக் கண்டித்துப் பேசியதை தவிர வேறு ஒன்றும் ஆகவிடவில்லை. அவள் முதல்வராக அதிகாரத்துடன் வேலை செய்கிறாள்.
அப்பா இன்றைய கல்விபுலத்தைப் புரிந்து கொள்ளவேயில்லை. அவர் அர்த்தமற்ற லட்சியக்கனவுகளுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சகுந்தலாவிற்குத் தோன்றியது.
••
கோல்டன் கிளப்பில் அன்றிரவு ரூபி மனோகரின் விருந்து இருந்தது. அதற்குப் போவதா அல்லது அப்பாவிற்காகக் காத்திருப்பதா எனத் தெரியாமல் குழப்பம் கொண்டாள் சகுந்தலா.
அப்பாவிற்கு மறுபடியும் போன் செய்தாள்.
“சொல்லும்மா“ என்றார் அப்பா
“மைசூர்ல இருந்து கிளம்பிட்டீங்களா“
“இல்லை. நான் நிம்மியை பார்க்க கோயம்புத்தூர் போயிட்டு வரலாம்னு இருக்கேன்“.
“இப்போ எதுக்குப்பா. நாளைக்கு உங்களுக்கு டாக்டர் அப்பாயிண்மெண்ட் இருக்கு. “
“வந்து பாத்துகிடலாம். “
ஐசிஎல் அவார்ட் பற்றிக் கேட்க நினைத்தாள். ஆனால் அதற்குள் அப்பா போனை வைத்துவிட்டார்
நிம்மி அவளது உறவுப்பெண். பெயர் நிர்மலா. அவள் பள்ளி ஆசிரியராக வேலை செய்கிறாள். அவளது வீட்டில் போய்த் தங்குவதை அப்பா விரும்புகிறார். நிம்மியின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லி தருகிறார். நிம்மியின் சமையலை ருசித்துச் சாப்பிடுகிறார். நிம்மியை பிடிப்பது போலத் தன்னை ஏன் அவருக்குப் பிடிக்கவில்லை என்று எரிச்சலாக இருந்தது
ஐசிஎல் அவார்ட் பற்றி ஏன் கேட்காமல் விட்டோம் என்று ஆத்திரமாக வந்தது. அப்பாவிற்கு மறுபடியும் போன் செய்தாள்
“பஸ் ஏறிட்டீங்களா. இல்லை ஹெஸ்ட் அவுஸ்ல வெயிட் பண்ணுறீங்களா“
“ஹெஸ்ட் அவுஸ்ல தான் இருக்கேன்“
“ஐசிஎல் அவார்ட் யாருக்கு முடிவு பண்ணுனீங்க“
அப்பா பதில் சொல்லவில்லை
“என் பேரு இருந்துச்சாமே“
“நான் தான் எடுத்துறச் சொன்னேன். “
“நீங்க உத்தமசீலர் ஆச்சே. அப்படிச் செய்யாம இருந்தா தான் ஆச்சரியம். “
அப்பா மௌனமாக இருந்தார். ஆத்திரத்தை அடக்கியபடியே கேட்டாள்
“யாருக்கு அவார்ட்னு சொல்ல மாட்டீங்களா“
“நாளைக்குப் பேப்பர்ல அறிவிப்பு வரும்“ என்று போனை வைத்தார் அப்பா
அவளது கோபம் உச்சத்திற்குச் சென்றது. தனக்கு இந்த விருது கிடைக்ககூடாது என்று அப்பாவே நினைக்கிறார். இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா. ஒருவேளை தான் வாங்கிய விருதை மகளும் வாங்க கூடாது என்று நினைக்கிறாரா. வாங்கினால் என்ன. அப்பா மகள் இருவரும் ஒரே துறையில் அறிஞராக இருக்கக் கூடாதா.
யோசிக்க யோசிக்கச் சிறுவயதிலிருந்தே அப்பா அவளை இப்படித் தான் நடத்திருவருவதாகத் தோன்றியது
அவள் பள்ளி பேச்சுபோட்டியில் பரிசு வாங்கிய போது அப்பா சொன்னார்
“யாரோ எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சிருக்கே. இதுக்குப் பரிசு கொடுத்துருக்காங்க. இதுல உன் ஒரிஜினலாட்டி ஒரு மண்ணும் கிடையாது. “
அம்மா தான் அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.
இது போலத் தான் அப்பாவின் கண்டிப்பு எப்போதும் இருந்தது. தன் பெயரை எங்கேயும் அவள் பயன்படுத்தக் கூடாது என்பதில் அப்பா கறாராக இருந்தார். ஆனால் அவள் அதை ஒரு தங்கசாவி போலத் தேவையான போது பயன்படுத்திக் கொண்டாள். சில ஆய்வரங்குகளில் அவள் அழைக்கபட்டதற்கு அப்பா பெயர் தான் முக்கியக் காரணம். அதை அப்பா அறியமாட்டார்.
2014ல் அவளது ஆய்வுகட்டுரை அமெரிக்க ஆய்வு இதழில் வெளியான போது அப்பாவிடம் ஆசையாகக் காட்டினாள்
அவர் அதைச் சுண்டுவிரலால் புரட்டியபடியே சொன்னார்
“குக்கப் பண்ணி எழுதியிருக்கே. இந்த டேட்டா எல்லாம் நீ கலெக்ட் பண்ணினது இல்லே. அடுத்தவங்க உழைப்பிலே ஏன் பேர் வாங்க ஆசைப்படுறே“
“இப்போ ரிசர்ச் இப்படித் தான் நடக்குது“
“அந்த குப்பையில நீயும் சேராதே. அவ்வளவு தான் சொல்வேன்“
“நான் உங்க ஸ்டுடண்ட் இல்லை. உங்க மக. அதை மறந்துடுறீங்க“
“ரிசர்ச் பீல்ட்ல அப்பா மகள் எல்லாம் ஒரு முக்கியத்துவமும் கிடையாது. அதைச் சொல்லி ஏமாற்றவும் முடியாது“
அதிலிருந்து தனது கட்டுரை எதையும் அப்பாவிடம் காட்டியதில்லை.
••

யார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஷியாம் அங்கிளுக்குப் போன் செய்தாள். அவர் மாதவ் காட்கில் என்பதைச் சொன்னதோடு நான் உன்னைத் தான் சப்போர்ட் பண்ணினேன் உங்கப்பன் கேட்கலை என்றார்
தனது ஆற்றாமையை மறைத்துக் கொண்டு தேங்ஸ் அங்கிள் என்றார். அப்பா தனது குற்றவுணர்வை மறைக்க நினைக்கிறார். இதனால் தான் நிம்மியை காண கோவை செல்கிறார். அந்தக் குற்றவுணர்வை கிண்டிவிட வேண்டும் போலிருந்தது
மறுபடி அப்பாவிற்குப் போன் செய்தாள்
“கங்கிராட்ஸ்பா. மாதவ் காட்கில் நல்ல சாய்ஸ். “
“உனக்கு யாரு சொன்னது“
“நீங்க சொல்லாட்டி தெரிஞ்சிகிட முடியாதா“
“உன்னோட இந்தப் புத்தி தான் அவார்ட் தராமல் போனதுக்கு காரணம்“
“உங்களை விட நான் இன்டலிஜென்ட்பா. அதை உங்களாலே ஏத்துகிட முடியலை, நீங்க என்ன கண்டு பொறாமை படுறீங்க“
“ஹம்பக். உன் தகுதிக்கு மேல உனக்கு எல்லாமும் கிடைச்சிருக்கு. நீ அதுக்கு டிசர்வ் ஆனவ இல்லை“
“அதுக்கு உங்க பேரு தான் காரணம்னு நினைக்குறீங்களா“
“நிச்சயமா. இதைப் பற்றி நான் பேசவிரும்பலை“
“உண்மையை எப்போவாவது பேசிதானப்பா ஆகணும்“
“நான் கேட்கவிரும்பலை“
என்று அப்பா போனை வைத்துவிட்டார். அப்பாவின் அந்தத் தோல்வி ஏனோ அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.
நிம்மிக்கு போன் செய்து தனக்கு வரவேண்டிய விருதை அப்பா யாருக்கோ கொடுத்துவிட்டதைப் பற்றிச் சொன்னாள்
அவள் அப்பாவியாக “அக்கா.. உங்களுக்குக் கிடைச்சிருந்தா எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்“ என்றாள்
அப்பா அவள் வீட்டிற்கு வரப்போவதைப்பற்றிச் சொல்லிவிட்டு “நீ இதைப்பற்றிக் கேட்க வேண்டாம்“ என்றாள்
நிம்மிக்கு அது புரியவேயில்லை
••
அன்றிரவு சகுந்தலா தனது கணவர் மகாதேவனிடம் நடந்த விஷயங்களைச் சொன்னாள்
அவர் சிரித்தபடியே சொன்னார்
“உங்கப்பா அப்படி நடந்துகிடாம இருந்தா தான் ஆச்சரியம்“
“அப்போ அவர் செய்தது சரியா“
“அவரை மாதிரி ஆட்களைப் பாக்குறது சிரமம் சகுந்தலா. அந்தத் தலைமுறை இனிமே வராது“
“அப்போ எனக்கு அந்த அவார்ட் வாங்க தகுதியில்லையா“
“அது எனக்குத் தெரியாது. ஆனால் உங்கப்பா தப்பா ஒருத்தருக்கு அவார்ட் தர மாட்டார். அவர் பெரிய ஸ்காலர்“
“அவர் செய்தது சரினு சொல்றீங்களா“
“நீ தான் ஒவரா ரியாக்ட் பண்ணுறே. பாவம் உங்கப்பா. உனக்குப் பயந்துட்டு கோயம்புத்தூர் போறார்“ எனச்சிரித்தார்
அவள் பதில் சொல்லவில்லை. அன்றிரவு அவளுக்குச் சரியான தூக்கமில்லை. பழைய நினைவுகள் மனதில் தோன்றியபடியே இருந்தன. விடிகாலையில் எழுந்து கொண்டாள். அப்பா இந்நேரம் கோவை போய்ச் சேர்ந்திருப்பார். பனிமூட்டமான சாலையில் நடந்து நிம்மி வீட்டை நோக்கி போய்க் கொண்டிருப்பார். அவருக்குப் போன் செய்ய வேண்டும் போலிருந்தது. அந்த ஆசையைக் கட்டுபடுத்திக் கொண்டு காபி தயாரித்தாள். அப்பாவிற்காகவும் ஒரு கோப்பையைக் கலந்தாள்.
அவர் இல்லாவிட்டால் என்ன என்று நினைத்தபடியே தனது காபியோடு செய்தி தாளை படிக்க ஆரம்பித்தாள். அதில் அவார்ட் செய்தி வந்திருந்தது. படிக்க மனதின்றிப் பேப்பரை கிழே போட்டாள்.
அப்போது நிம்மியை நினைத்து மனதில் பொறாமை எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
