S. Ramakrishnan's Blog, page 64
April 19, 2023
முகமது அலியின் கையெழுத்து
இம்மாத உயிர்மை இதழில் எனது புதிய சிறுகதை “முகமது அலியின் கையெழுத்து “ வெளியாகியுள்ளது

April 18, 2023
சைபீரியப் பனியில் சில காலடிகள்
அகிரா குரோசாவாவின் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கி அவரது திரைப்படங்களின் தயாரிப்பு உதவியாளர் வரையான பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் டெருயோ நோகாமி


அகிரா குரசோவாவின் 19 படங்களில் பணியாற்றியிருக்கிறார். குரோசாவாவின் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இவர் தனது திரையுலக அனுபவங்களை Waiting on the Weather: Making Movies with Akira Kurosawa என்ற நூலாக எழுதியிருக்கிறார்.
அவர் திரைப்பட உலகிற்கு அறிமுகமான விதம் மற்றும் குரசோவாவின் படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, ரஷோமான். டெர்சு உசாலா, இகிரு, செவன் சாமுராய், ட்ரீம்ஸ் போன்ற பல்வேறு படப்பிடிப்புகளில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்

குரோசாவாவின் ஆளுமை, பணி முறைகள் மற்றும் மனநிலையைப் பற்றிய நோகாமியின் பதிவுகள் சிறப்பானவை. ஒரு பெண்ணாக படப்பிடிப்பு தளத்தில் தான் சந்தித்த பிரச்சனைகளையும் இதில் விவரித்துள்ளார்.
பெடரிகோ பெலினி, ஐசன்ஸ்டைன், ஓசு, சத்யஜித்ரே போன்ற சிறந்த இயக்குநர்கள் அடிப்படையில் ஓவியர்களே. அவர்கள் திரைக்கதை எழுதும் போதே காட்சிகளைச் சித்திரமாக வரைந்துவிடக்கூடியவர்கள். அதனால் தான் அவர்களால் துல்லியமாகப் படமாக்கமுடிகிறது. குரோசாவாவும் சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவர். ஆகவே அவர் படமாக்கவேண்டிய காட்சிகளைத் தனித்தனியான சித்திரங்களாக வரைந்துவிடுவார். இது போலவே அரங்க அமைப்பு. உடைகள் மற்றும் தேவையான கலைப்பொருட்கள் அனைத்தையும் படம் வரைந்து கொடுத்துவிடுவார் என்கிறார் நோகாமி.
ரோஷோமான் படப்பிடிப்பில் சூரிய வெளிச்சம் காட்டு மரங்களின் மீது பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக எட்டு நிலைக்கண்ணாடிகளைக் கொண்டு எப்படிச் சூரிய ஒளியைத் தேவையான இடங்களில் பிரதிபலிப்புச் செய்தார்கள் என்பதை விவரித்துள்ளார். முதன்முறையாகச் சூரியனை நோக்கி கேமிராவை திருப்பியது இந்தப் படத்தில் தான் நடந்தேறியது. அதுவரை சூரியனை நேராகப் படம்பிடிக்கக் கூடாது என்ற விதி இருந்தது எனும் நோகாமி தன்னை எவரும் சென்சாய் என மரியாதையாக அழைக்க வேண்டாம். பெயரைச் சொல்லியே அழைக்கலாம் என்ற நடைமுறையை குரோசாவா கொண்டுவந்தார் என்கிறார்
முத்தக்காட்சியில் நடித்த மிபுனே தனது வாயிலிருந்து வெளிப்படும் பூண்டு வாசனையை நீக்குவதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் அந்த முத்தக்காட்சிக்கு முன்பு நடிகையிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதையும் வேடிக்கையாகப் பதிவு செய்திருக்கிறார்.
ரோஷோமான் படத்தின் இறுதிப்பணிகள் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்த போது திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்ட கேமிராமேன் மயங்கி விழுந்துவிட்டார். படச்சுருள்கள் அவ்வளவு தான் என்று அனைவரும் பயந்து போனார்கள். நல்லவேளையாக சிறிய தீவிபத்து என்பதால் உடனடியாக தீ அணைக்கப்பட்டது. சொன்ன நாளில் படத்தைத் தயார் செய்து வெளியிட்டார்கள்.

டெர்சு உசாலா திரைப்படத்தை ரஷ்ய ஜப்பானியக் கூட்டுறவில் உருவாக்க முனைந்த போது ஏற்பட்ட சிரமங்களை, பிரச்சனைகளை உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் நோகாமி
அகிரா குரோசாவோடு இணைந்து திரைப்படம் உருவாக்க வேண்டும் என்று சோவியத் யூனியன் விரும்பியது. ஆகவே டெர்சு உசாலா கதையை அவர்கள் தேர்வு செய்து திரைக்கதையாக்கி அனுப்பி வைத்தார்கள். கதை பிடித்திருந்த போதும் திரைக்கதை சரியாக இல்லை என்பதால் தாங்களே அதன் திரைக்கதையை உருவாக்குவதாகக் குரோசாவா கூறினார். அதன்படி ரஷ்ய திரைக்கதை ஒன்றும் ஜப்பானியத் திரைக்கதை ஒன்றும் தனித்தனியே உருவாக்கப்பட்டது. இரண்டினையும் இணைந்து இறுதி திரைக்கதையைக் குரோசாவா உருவாக்கினார்

படப்பிடிப்பு நடக்க இருந்த சைபீரியப் பனிப்பிரதேசம். மாஸ்கோவிலிருந்து எட்டாயிரம் மைல் தூரத்திலிருந்தது. ஜப்பானியப் படக்குழுவில் இயக்குநரையும் சேர்த்து ஏழு பேர் மட்டுமே இடம்பெற்றார்கள். ரஷ்ய தயாரிப்பில் 75 பேர்கள் இணைந்து கொண்டார்கள்.
ஜப்பானிலிருந்து ரஷ்யாவிற்கு வரும் விமானத்தில் அகிரா குரோசாவாவும் எகானமி வகுப்பில் தான் பயணம் செய்தார். அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது என்பதால் படப்பிடிப்பு முழுவதற்கும் இருமொழி அறிந்தவர் தேவைப்பட்டார். இதற்காக லெவ் கோர்ஷிகோவ் நியமிக்கப்பட்டார்.
70 எம்எம்மில் படமாக்க வேண்டி இருந்த காரணத்தால் அதிக எடை கொண்ட கேமிராவை பனிப்பிரதேசத்திற்குக் கொண்டு செல்வது கடினமாக இருந்தது. இத்தோடு சோவியத் நடைமுறையில் தினமும் இத்தனை காட்சிகள் எடுக்க வேண்டும். இவ்வளவு படச்சுருள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயமிருந்தது. அதை ஆரம்பத்திலே குரோசாவா ஏற்க மறுத்துவிட்டார்.

மாஸ்கோவில் இருந்த ஸ்டுடியோவில் டெர்சு உசாலா படத்தின் முக்கியக் காட்சிகள் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அத்தோடு படப்பிடிப்பு நடக்க வேண்டிய இடங்கள் அத்தனையும் புகைப்படங்களாக எடுக்கபட்டு தனி ஆல்பமாக உருவாக்கப்பட்டிருந்தன.
படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஜப்பானிய உணவு ஏற்பாடு செய்து தருவதாகச் சோவியத் நிர்வாகிகள் சொல்லியிருந்தார்கள். ஆகவே அவர்கள் தங்கிய விடுதியிலே ஜப்பானிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன. மிக மோசமாகத் தயாரிக்கபட்ட அந்த உணவைச் சாப்பிட முடியவில்லை.
தாங்க முடியாத குளிர். நீண்ட தூரப் பயணம். அதுவும் இரவில் நடக்கும் படப்பிடிப்பு எனக் கடினமான சூழ்நிலை. தினமும் படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு பாட்டில் வோட்காவை தனியே குடித்து முடிப்பார் குரோசாவா. இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகத் துவங்கியது.

பனிப்பிரதேசத்திற்குள் படப்பிடிப்பு நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. போதுமான சூரிய வெளிச்சம் கிடைக்காது. கேமிரா வேலை செய்யாமல் போய்விடும். அவர் விரும்பியது போல நடிகர்களால் செய்ய இயலாத சூழ்நிலை. இப்படி தினமும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை. இத்தோடு சரியான உணவும் கிடைக்காமல் போனதால் குரோசாவா மிகுந்த அவதிப்பட்டார். படப்பிடிப்பை பாதியில் விட்டுவிட்டு ஜப்பான் போய்விடப் போவதாக மிரட்டினார். அவரது கோபத்தை எப்படிச் சமாளிப்பது என எவருக்கும் தெரியவில்லை
அவர் ஒரு ராணுவ அதிகாரி போலப் படப்பிடிப்பில் நடந்து கொண்டார். மொழி தெரியாத போதும் தான் விரும்பியபடியே காட்சிகளை எடுக்க முனைந்தார். இதனால் ரஷ்ய படக்குழுவினர் அவரைக் கண்டு பயந்தார்கள். குறிப்பிட்ட காட்சியில் என்ன லென்ஸ் உபயோகிக்க வேண்டும். கேமிரா எங்கிருந்து எங்கே நகர வேண்டும் என்பதை அவரே தீர்மானித்தார்.
முக்கியக் காட்சி ஒன்றில் காட்டில் வாழும் டெர்சு இரவில் புலியைக் காணுகிறார். அந்த காட்சியை எப்படிப் படமாக்கினோம் என்பதை நோகாமி பதிவு செய்திருக்கிறார்.

படப்பிடிப்பு துவங்கும் போது குட்டியாகப் பிடிக்கப்பட்ட புலி அவர்கள் படமாக்கும் நாளில் மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது. புலியைத் தான் சொல்வது போல மரத்தின் பின்புறமிருந்து வெளியே வர வைக்க வேண்டும், அது திரும்பி டெர்சுவை நேராகப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் குரோசாவா. ஆனால் அப்படி புலி செய்யவில்லை. இதற்காக படக்குழு போராடினார்கள். முடிவில் அவர் நினைத்தது போன்ற காட்சி அமைந்தது.
படப்பிடிப்பு நடந்த இடத்தில் புத்தாண்டினைக் கொண்டாடியது. ஒன்றரை வருஷ காலம் பனிப்பிரதேசத்தில் பட்ட கஷ்டங்கள். குரோசாவாவின் தீவிரமான செயல்பாடு, தினசரி பிரச்சனைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு. படம் வெளியாகிப் பெற்ற வெற்றி என நடந்த உண்மை நிகழ்வுகளை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.
ரஷ்யாவில் படப்பிடிப்பினை முடித்துக் கொண்டு ஜப்பான் திரும்பும் போது நோகாமி ஒரு பூனைக்குட்டியை விலைக்கு வாங்கியிருக்கிறார். இதை ரஷ்யாவிலிருந்து கொண்டு செல்வதற்குத் தனியே அனுமதி கடிதம் பெற வேண்டியிருந்தது என்பதையும், தனது வீட்டில் அந்த ரஷ்யப் பூனை எப்படிச் செல்லப்பிராணியாக இருந்தது என்பதையும் குறிப்பிடுகிறார்.
குரோசாவாவிற்கும் தொஷிரே மிபுனேவிற்குமான நட்பு மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்கள் அவரோடு பழகிய விதம், அவரது திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் உள்ள நெருக்கம் போன்றவற்றைக் கடைசி அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார்
படப்பிடிப்பு இல்லாத போதும் நாங்கள் ஒரு குடும்பம் போல ஒன்றாகச் சேர்ந்து இருந்தோம். உணவு உண்டோம். இது ஒருவகையான சேனை. எங்கள் நோக்கம் சிறந்த திரைப்படத்தை உருவாக்குவது என்கிறார் நோகாமி. இவரது பதிவுகளின் வழியே குரோசாவாவின் விருப்பு வெறுப்புகளும் ஆளுமையின் பன்முகத்தன்மையும் சிறப்பாக வெளிப்படுகிறது.
சைபீரிய பனிப்பிரதேசத்தின் பிரம்மாண்டத்தைக் காணும் அகிரா குரோசாவா உடனே ஆன்டன் செகாவை நினைவு கொள்கிறார். அவர் எழுத்தில் உருவாக்கிக்காட்டிய அழகினை எப்படித் திரையில் கொண்டுவருவது எனக் கேமிராமேனிடம் கேட்கிறார். ரஷ்ய இலக்கியங்களின் மீது குரோசாவா கொண்டிருந்த பெரு விருப்பம் வெளிப்படும் அழகான தருணமது.
டெர்சு உசாலாவைக் காணும் போது அவர் ஆன்டன் செகாவ் எழுத்தில் காட்டியதை விடவும் பேரழகுடன் பனிப்பிரதேசத்தை பதிவு செய்துள்ளார் என்பது புரிகிறது.
April 17, 2023
டாக்டர் ஷிவாகோ
போரிஸ் பாஸ்டர்நாக் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். இவரது புகழ்பெற்ற நாவலான டாக்டர் ஷிவாகோ டேவிட் லீனால் படமாக்கபட்டு ஐந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது. போரிஸ் பாஸ்டர்நாக்கின் வாழ்க்கை மற்றும் ஷிவாகோ நாவலுக்குப் பின்னுள்ள உண்மைகளை விளக்கும் விதமாகப் பிபிசி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது. The Real Doctor Zhivago என்ற இந்த ஆவணப்படம் அவரது கால அரசியல் மற்றும் இலக்கியச் சூழலை தெளிவாக விளக்குகிறது
சாந்தி சிவராமன்
சாந்தி சிவராமன் சாகர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.

எனது சஞ்சாரம் நாவலை வாசித்த சாந்தி சிவராமன் தனக்கு மிகவும் பிடித்துப்போகவே அதை முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துவிட்டார். எனது தொடர்பு கிடைக்காத காரணத்தால் தகவலைத் தெரிவிக்க இயலவில்லை.
இவரது மகன் சத்யா சிவராமன் இந்தியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்.
சாந்தி சிவராமன் முன்னதாக அசோகமித்ரனின் இன்று, பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டிருக்கிறார்.
2016 ஏப்ரலில் உடல்நலக்குறைவின் காரணமாகச் சாந்தி சிவராமன் இறந்து போனார்.
நண்பர் தேவராஜன் மூலம் தகவல் எனக்கு மிகவும் தாமதமாகக் கிடைத்தது. சத்யா தனது தாயின் மொழிபெயர்ப்பை என்னிடம் தர விரும்பி மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். என் எழுத்தின் மீது சாந்தி சிவராமன் கொண்டிருந்த அன்பிற்கு சத்யாவிடம் நன்றி சொன்னேன்.
சாந்தி சிவராமனின் மொழியாக்கப்பணி என்னை நெகிழ வைத்தது. அவரை ஒருமுறை பார்த்து பேசியிருக்க வேண்டும் என்று தோன்றியது.
மொழிபெயர்ப்பாளர்களே எழுத்தாளர்களை உலகம் அறிய வைக்கிறார்கள். அவர்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டவன்.
நேற்று சாந்தி சிவராமனின் நினைவு நாள். அவர் தனது இறுதி நாட்களை எனது நாவலோடு கழித்திருக்கிறார். ஆசையாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். இந்த அன்பிற்கு எப்படி நன்றி சொல்வது.
சஞ்சாரம் நாவலின் மொழிபெயர்ப்பினை வெளியிடுவதற்காக முக்கிய ஆங்கிலப் பதிப்பகம் ஒன்றைத் தொடர்பு கொண்டிருக்கிறேன்.
விரைவில் வெளியாகக் கூடும்.
நன்றி
எனது பிறந்தநாளுக்கு மின்னஞ்சல் மூலமும் நேரிலும் குறுஞ்செய்திகள் மூலமும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

எனது ஆடிட்டர் சந்திரசேகர் பெரிய கேக் ஒன்றை வாங்கி வந்து பிறந்தநாளைக் கொண்டாடச் செய்தார். அவருக்கு எனது அன்பும் நன்றியும்
எனது பிறந்த நாளை பெரிய கொண்டாட்டமாக்கிய தூத்துக்குடி மாரியப்பன். ஜெயபால், அருண்பிரசாத் உள்ளிட்ட நண்பர்களுக்கும், நிலக்கோட்டை மாணிக்கம் நகைமாளிகை ஸ்ரீதர், எழில் உணவகம் சந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது தீராத நன்றிகள்.
வெர்தரின் காதல்
கதே எழுதிய The Sorrows of Young Werther நாவலை மறுபடி வாசித்தேன். Stanley Corngold மொழியாக்கம் செய்த புதிய பதிப்பு. அதன் தலைப்பு The Sufferings of Young Werther என மாற்றப்பட்டிருக்கிறது. எனக்கு The Sorrows of Young Werther தலைப்பே பிடித்துள்ளது.

கல்லூரி நாட்களில் இந்த நாவலை முதன்முறையாகப் படித்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு, மயக்கம் இன்றைக்கு துளியும் மாறவில்லை. கதே என்றைக்குமானவர். அவரது நாவல் உலகெங்கும் காதலர்களால் கொண்டாடப்படுகிறது.
ஒருவகையில் வெர்தர் நாம் அறிந்துள்ள தேவதாஸ் போன்றவன் ஆனால் வெர்தரிடம் காணப்படும் கலையின் மீதான தீவிரம். உயர் சிந்தனை, துல்லியமாகத் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறை தேவதாஸிடம் கிடையாது. மதுவிற்குப் பதிலாகக் காதலின் துயர நினைவுகளைப் பருகுகிறான் வெர்தர்.

அவனது காதலி சார்லெட் எனும் லோதே வேறு ஒருவனுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவள். அது தெரிந்தே வெர்தர் காதலிக்கிறான். உலகின் காரணங்கள் எதையும் அவன் மனம் ஏற்க மறுக்கிறது. அவள் சொல்லும் காரணங்களை, தயக்கங்களைக் கூட வெர்தர் ஏற்றுக் கொள்வதில்லை. காதலுக்காக மட்டுமே அவன் வாழுகிறான். காதலின் துன்பத்தைப் பேசும் இந்த நாவலின் ஊடாக ஹோமரும் கவிதையின் சிறப்புகளும் எடுத்துப் பேசப்படுகின்றன. நாவலில் வெர்தர் கதே பிறந்த அதே நாளில் பிறக்கிறான் கதே போலவே ஓவியனாக இருக்கிறான்.
கதேகாலத்தில் நாவல் என்பது ஒருவரின் ரகசியமான வாழ்க்கையை விவரிப்பதாகக் கருதப்பட்டது. இங்கிலாந்தில் வெளியான நாவல்களில் கதாபாத்திரத்தின் வாழ்க்கை வரலாறு என்பது போலவே தலைப்பு வைக்கப்பட்டிருக்கும். அந்த மரபின் காரணமாகவே என்னவோ நாவலுக்கு இது போன்ற தலைப்பு வைத்திருக்கிறார். இளம் வெர்தர் என்பது தான் கூடுதல் சிறப்பு. கதேயை கொண்டாடும் இவான் துர்கனேவ் இந்த நாவலை மிகவும் விரும்பி படித்திருக்கிறார். துர்கனேவ் எழுத்தில் கதேயின் சாயலைக் காண முடிகிறது. எண்ணிக்கையற்ற கவிதைகளை எழுதியிருக்கிறார் இத்தோடு நாவல். நாடகம் பயண நூல், விஞ்ஞான நூல்கள் கட்டுரை தொகுப்புகள் என எழுதிக் குவித்திருக்கிறார்.
வெர்தரையும் லெர்மன்தேவ் நாவலில் வரும் பிச்சோரினையும் ஒப்பிட்டு வாசிக்க வேண்டும். இரண்டும் அழகான காதல்கதைகள்.

நாவலின் முடிவில் தற்கொலை செய்து கொள்ள இரண்டு துப்பாக்கிகளை லோதேவின் கணவன் ஆல்பர்ட் வசமிருந்தே பெறுகிறான். அந்தத் தேர்வு வியப்பளிக்கக்கூடியது. அவன் இறந்தபின்பு இறுதிச் சடங்கு எதுவும் நடைபெறுவதில்லை. மதகுரு கலந்து கொள்ளவில்லை. ஆகவே அவன் கடவுளாலும் கைவிடப்படுகிறான். அதைத் தான் வெர்தர் விரும்புகிறான். தான் எங்கே புதைக்கப்பட வேண்டும் என்பதைக் கூட அவனே முடிவு செய்திருக்கிறான். அவன் விரும்பியபடியே இரண்டு எலுமிச்சை மரங்களுக்கு இடையே புதைக்கப்படுகிறான்
நாவலின் வேறு ஒரு இடத்தில் அவன் எலுமிச்சை மரங்களுக்கு இடையே இருப்பதை மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறான். அது குறியீடு போலவே உணர்த்தப்படுகிறது.

The Sorrows of Young Werther நாவல் 1774 ஆம் ஆண்டு வெளியானது. காதலுக்காக உயிர்துறக்கும் வெர்தரின் நினைவுகளையும் உணர்ச்சி கொந்தளிப்புகளையும் இளைஞர்கள் கொண்டாடினார்கள். வெர்தர் காய்ச்சல் என்றும் வெர்தர் சிண்ட்ரோம் என்றும் வெர்தர் காதலின் உன்மத்த நிலைக்கான அடையாளமாக மாறிப்போனான்.
இந்த நாவல் கடிதங்களின் தொகுப்பு போலவே எழுதப்பட்டிருக்கிறது. கதேயின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் தான் நாவலாக எழுதப்பட்டிருக்கின்றன.
.Young Goethe in Love என்ற திரைப்படம் இதனை விவரிக்கக்கூடியது.

கதே எழுதிய பாஸ்ட் என்ற நாடகம் மிகவும் புகழ்பெற்றது.. பாஸ்ட் மாயவித்தைகளை கற்றுக் கொள்ள சாத்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னை இழப்பவன். பேரழகி ஹெலனுக்காக ஏங்குபவன். அவனது இன்னொரு வடிவம் போலவே வெர்தர் இருக்கிறான். பாஸ்ட் நாடகத்தை முதலில் எழுதியவர் கிறிஸ்தபர் மார்லோ. அவர் இந்த நாடகத்தை 1589ல் எழுதியிருக்கிறார். அதே கதையைத் தான் கதே பயன்படுத்தியிருக்கிறார். இந்த நாடகத்தை எழுதிய போது அவரது வயது 24
The Beloved Returns என்றொரு நாவலை தாமஸ் மான் எழுதியிருக்கிறார். இது கதேயின் காதல் வாழ்க்கையை விவரிப்பதாகும். தன் வாழ்நாள் முழுவதும் கதேயின் புகழ் பரப்பி வந்தார் தாமஸ் மான்.
லோதே அருகில் இருக்கும் போது வெர்தர் அடையும் மனக்கொந்தளிப்பு மிகத் தீவிரமாக வெளிப்படுகிறது,.
She is to me a sacred being. All passion is still in her presence: I cannot express my sensations when I am near her. I feel as if my soul beat in every nerve of my body. There is a melody which she plays on the piano with angelic skill,—so simple is it, and yet so spiritual! It is her favourite air; and, when she plays the first note, all pain, care, and sorrow disappear from me in a moment.
கதேயிடமிருந்து தான் தஸ்தாயெவ்ஸ்கி இந்த உணர்ச்சி வேகத்தைக் கற்றுக் கொண்டிருக்கக்கூடும். வெண்ணிற இரவுகளில் இதை உணரமுடியும். அவரது முதல் நாவலும் வெர்தர் பாணியில் தான் அமைந்துள்ளது.
அவள் இன்னொருவனைக் காதலிக்கிறாள் என்பதை வெர்தரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நாவலின் ஒரு இடத்தில் இப்படிச் சொல்கிறான்
I sometimes cannot understand how she can love another, how she dares love another, when I love nothing in this world so completely, so devotedly, as I love her, when I know only her, and have no other possession.
எது இந்த நாவலை இன்றும் வாசிக்க வைக்கிறது என்பதற்கு டேவிட் சிம்சன் எழுதிய கட்டுரை ஒன்றில் பதிலிருக்கிறது.
Men and women still feel misunderstood, underappreciated, condescended to and confined to jobs they don’t like.
எலுமிச்சை பூக்கும் நிலம் பற்றிக் கதே ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
Knowst thou the land where the lemon trees bloom,
Where the gold orange glows in the deep thicket’s gloom,
Where a wind ever soft from the blue heaven blows,
And the groves are of laurel and myrtle and rose?
எலுமிச்சை பூக்கும் நிலம் உலகில் எங்கேயிருக்கிறது எனத் தெரியாது ஆனால் அது நம் மனதிலிருப்பதைச் சில வேளைகளில் உணர முடிகிறது
April 12, 2023
அழகிய மௌனம்
எனது ஐந்து வருட மௌனம் சிறுகதைத் தொகுப்பு குறித்து வெங்கட்ராமன் கணேசன் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள மதிப்புரை

Aindhu Varuda Mounam – S. Ramakrishnan
written by Venky
Aindhu Varuda Mounam (“Silence of five years) is an alluring collection of short stories ranging from the profound to the plebian. Author S. Ramakrishnan in 32 short stories takes his readers on a whirlwind tour of sacrifice, selflessness, avarice and absurdity. Edgar Allan Poe once famously said, “A short story must have a single mood and every sentence must build towards it.” Aindhu Varuda Mounam is a resounding panegyric to the opinion of Poe with regards to short stories. S. Ramakrishnan adopts an arresting blend of logic and spontaneity to produce a wonderful bouquet of refreshing blooms.
Nizhal Kalaingnan (Shadow Artist) has a bemused Picasso waking up to find his car richly painted with colours and brush strokes that uncannily ape his own stye. When the same astonishing range of colours appear on his slippers, four cigarettes and a flying kite, the master artist’s nerves are put to the ultimate test. Who is the impudent individual responsible for such audacities? Is he an imposter out to prove a point or is he Picasso’s own shadow desperately seeking an element of substance? When the maestro and the mimic finally accost one another……
In Indian Cook, forest officer Walter Clavell is the epitome of debauchery and despicable decadence. Arriving from London in 1845 he is first appointed the warden of the jungles in Assam before being transferred to a forest area abutting the Kerala border. Instilling mortal fear amongst tribals and animals alike, Clavell molests and murders helpless women for fun. When Clavell murders Lord Kenning, an officer in the high echelon of power, mercilessly rapes his wife Dorothy for 7 brutal days before shooting her at the back of her head, Clavell’s wife Lara decides she has had enough of her husband. While she is wallowing in remorse, Clavell has an accidental fall from his horse that leaves him immobilized for a few days. During this period, the couple’s Indian cook, Sabesan prepares a rollicking delicacy for Clavell. But Sabesan forbids everyone else in the house from partaking this ‘special’ dish. After two weeks of consuming the addictive food, Clavell is found screaming in absolute pain and delirium. Boils erupt all over his body and blood spurts out of them. Even their doctor has no idea what has stricken the forest official. But a humble cook possesses answers to all questions….
A blind Jorge Luis Borges is surprised to find an Indian student named Tiruvadi take exception to Borges’ views on India. “Trying to understand India only through the medium of books is akin to an attempt to experience the dark by trying to reach out with one’s arms,” Tiruvadi boldly asserts in the classroom. Borges is fascinated both by the courage as well as the philosophy espoused by Tiruvadi and expresses a desire to meet the young student in private. Over cups of steaming beverages, master and student engage in an intricate gamesmanship that involves sardonic exchange of words, reciprocal show of respect and a search into one another’s souls. Thannerin Thiruvukol (Water’s Key) is a confession by S. Ramakrishnan of his penchant towards the Argentinian author.
Aindhu Varuda Mounam (Silence of Five Years) has Mahatma Gandhi paying a visit to a humble abode in the obscure hamlet of Lachmiapuram in Tamil Nadu to see Kadharkodi Kittu an indefatigable freedom fighter and a Gandhi acolyte who has now been reduced to a vegetative state. When attempting to dissuade a bunch of people from frequenting a bar, Kadharkodi Kittu is set upon by a few police officers who rain blows on him with their batons. A remorseless blow to his head sees blood spurt out of Kittu’s head and Kittu losing consciousness after falling to the ground. Never making a recovery from the unfortunate incident, Kittu is rendered immobile and vegetative. Reading about his plight from a letter, Gandhi, who is on a tour of South India, wastes not a single moment in traveling to Lachmiapuram. Entering Kittu’s hut, Gandhi takes his daughter Parvathi by absolute surprise. Gandhi then proceeds to feed and bathe Kittu in the most tender of manners. Kittu’s eyes begin to glisten as Gandhi whispers something in the stationary man’s ears. Before Gandhi takes leave of Kittu and the sparse inhabitants of Lachmiapuram, a virtual transformation overwhelms the villagers. S. Ramakrishnan’s adulation for Gandhi also finds mention in Irandu Kizhavargal (Two Old People), when septuagenarian Pattabhiraman undertakes a ‘pilgrimage’ to Rajghat to pay obeisance at Mahatma Gandhi’s memorial. The experiences which Pattabhiraman accumulates on his way from Chennai to Delhi also illustrates in a riveting manner, the incongruous relationship which modern day India bears to the Father of The Nation.
Both symmetry and asymmetry share symbiotic space in S. Ramakrishnan’s book. Flaccid emotions compete with restless sentiments. A medieval Chinese emperor, an idle caretaker of a neglected butterfly museum in the South Indian hill station of Kodaikanal, a resolute schoolteacher who on the very day she begins her 25th year of teaching, experiences an unimaginable altercation with a fellow teacher, are all reluctant protagonists and willing antagonists. Aindhu Varuda Mounam lays bare S. Ramakrishnan’s range of versatility as an innovative storyteller.
A book for all seasons and every weather
•••
Thanks
April 10, 2023
புத்தகப் பரிசு
மல்லாங்கிணறு அரசுப் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றுகிறார் K. ராம்குமார்.
இவர் மாவட்ட அளவில் கலைத்திறன் விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நான் எழுதிய புத்தகங்களைப் பரிசாக அளித்துள்ளார்.
ராம்குமாருக்கு எனது அன்பும் நன்றியும்.
அரசுப் பள்ளிகளில் வாசிப்பை மேம்படுத்தும் இவர் போன்ற ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன்.

சொற்கள் மிதக்கும் சிவப்புக்கம்பளம்
ந. பிரியா சபாபதி
(எஸ். ராமகிருஷ்ணனின் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” வாசிப்பு அனுபவம்)

அறிவின் திறவுகோல் புத்தகம். புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும் தங்கச் சுரங்கம் நூலகம். அந்நூலகம்தான் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” என்ற இந்தப் புத்தகத்தின் மையம். அந்த மையத்தைச் சுற்றி நிகழ்பவையே இக்கதை.
நந்து எனும் சிறுவன் வழியாக இக்கதைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. இக்காலக் குழந்தைகளின் மனநிலையின் பிம்பந்தான் இந்த நந்து.
‘குழந்தைகளின் பிடிவாதம் பெரியோர்களின் வீராப்பைப் போன்றது அல்ல’ என்பதை நூலகம் செல்வதன் மூலம் நந்து உணர்த்துகிறான். புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றித் தாய்க்கும் மகனுக்கும் நடைபெறும் உரையாடல் வழியாகப் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஆசிரியர் உணர்த்திச் செல்கிறார்.
நூலகத்தைப் பார்க்கும் பொழுது அதனோடு பிணைப்பு உடையவர்களுக்கு ஏற்படும் வியப்பு நந்துவுக்குள்ளும் ஏற்படுகிறது. இது நமக்குள்ளும் ஏற்படுவதை உணரமுடியும்.
புத்தகங்களை வாசிக்கும் பொழுது கதைக்குள் செல்ல வேண்டுமெனில், “ஒரு கதைக்குள் நாம போகவேண்டுமானால், அதைப் பத்தி நாமளே கற்பனை பண்ணவேண்டும். அது ஒரு விளையாட்டு. அருமையா இருக்கும்” என்ற வரிகள் வாசிப்பதின் நுட்பத்தையும் ஆழத்தையும் உணர்த்துபவையாகும்.
நாம் காணும் அனைத்துப் புத்தகங்களும் அறிவை வளர்ப்பவையாக இருக்காது. சில புத்தகங்கள் நம் மனத்தினைத் தவறு செய்யத் தூண்டுபவையாக, அதற்கு உறுதுணையாக இருக்கும். எனவே, புத்தகங்களைக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதையும் எழுத்தாளர் அறிவுறுத்துகிறார்.
வாசகர்கள், ‘தன் வாசிப்பின் வேர் எது?’ என்பதை உணர வேண்டும் என்பதையும் ‘உனக்காகப் படி’ என்ற வார்த்தையின் வழியாக வழிகாட்டுகிறார்.
மனிதர்கள் தமது சினத்தின் உச்சத்தில் பெருவார்த்தைகளை வீசுவது போல் கையில் கிடைக்கும் பொருள்களையும் வீசுவார்கள். அதில் முதல் இடத்தைப் பெறுவது புத்தகம்தான். இதை மருத்துவருக்கும் நந்துவிற்கும் இடையே நடைபெறும் உரையாடலை வாசிக்கும் பொழுது இந்த நிதர்சனமான உண்மை புலப்படுகிறது. இது போன்ற தவறினை இனி நாம் செய்யவே கூடாது என்று எழுத்தாளர் வலியுறுத்துகிறார்.
சாக்ரடீஸைப் பற்றிக் கதைமாந்தர்கள் பேசும் பொழுது, “ஆழ்கடலின் அதிசயம் போன்று வாசிப்பின் அதிசயத்தையும்” நாம் அறிய இயலும்.
இந்தப் புத்தகம் புத்தக வாசிப்பைப் பற்றி இளந்தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் அறிவுரைப் புத்தகம். தொடக்க நிலை வாசகர்கள் அனைவரும் இந்தப் புத்தகத்திலிருந்து புதிய பல புத்தகங்களைப் படிக்கத் தொடங்குவது சிறப்பு.
கதாபாத்திரங்களைத் தேடுகிறார் டிக்கன்ஸ்
1843ம் ஆண்டு – தொடர்ச்சியாக மூன்று நாவல்கள் தோல்வியுற்ற காரணத்தால் அடுத்து என்ன எழுதுவது என்று தெரியாத குழப்பத்திலிருந்தார் சார்லஸ் டிக்கன்ஸ். ஆடம்பரமான வாழ்க்கை காரணமாக நிறையக் கடன் ஏற்பட்டிருந்தது. கடன்காரர்கள் வீட்டை முற்றுகையிட்டார்கள். அதைச் சமாளிக்கப் பணம் கேட்டு பதிப்பாளரை அணுகுகிறார் டிக்கன்ஸ். அவரோ புதிய நாவல் ஏதாவது எழுதினால் முன்பணம் தருகிறேன் என்கிறார். என்ன எழுதுவது என்று தெரியாத நிலையில் பதிப்பாளரிடம் புதிய நாவலை ஆரம்பித்துவிட்டதாகப் பொய் சொல்லி முன்பணம் பெறுகிறார் டிக்கன்ஸ்.

புதிய நாவலை எழுதுவதற்காக அமர்ந்தால் மனம் வெறுமையாகியிருக்கிறது. அத்தோடு கடன் தொல்லைகள் எழுத விடாமல் செய்கின்றன. செய்வதறியாமல் லண்டனைச் சுற்றி அலைகிறார். அப்போது இறுதிச்சடங்கு ஒன்றினைக் காணுகிறார். அவரது மனதில் ஒரு கதாபாத்திரம் உதயமாகிறது.

டிக்கன்ஸிற்கு விநோதமான பழக்கம் இருந்தது. எங்கே புதிய மனிதர்களைச் சந்தித்தாலும் அவர்கள் பெயரைச் சிறிய நோட்டில் குறித்து வைத்துக் கொள்வார். கல்லறைக்குச் சென்று இறந்தவர்கள் பெயர்களைக் கூட நோட்டில் குறித்து வருவார். பெயர்கள் உண்மையாக இருந்தால் அவர்களைப் பற்றித் தான் எழுதும் கற்பனைக் கதையும் உண்மை என வாசகர்கள் நம்பிவிடுவார்கள் என்பது அவரது எண்ணம்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாவல் வெளியாக வேண்டும் என்றுமுடிவு செய்து கொண்டு கிறிஸ்துமஸை மையமாகக் கொண்ட நாவலை எழுத விரும்பினார்.
ஒரு நாள் உணவகத்தில் கேட்ட பெயரைக் கொண்டு புதிய நாவலை எழுத ஆரம்பித்திருந்தார். ஆனால் நினைத்தது போல நாவல் வளரவில்லை. தனது இளமைக்காலத்தில் கேட்ட கிறிஸ்துமஸ் கதைகள். அன்றைய கிறிஸ்துமஸ் கொண்டாட்ட முறைகள். நம்பிக்கைகள். இசைபாடல்கள் இவற்றைக் கொண்டு புதிய நாவலை எழுத முற்பட்ட போது அவரது வீட்டின் பணிப்பெண் வழியாக அது பேய்க்கதையாக மாறியது.
அதன்பின்பு கதாபாத்திரங்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு தனது கதையைச் சொல்ல ஆரம்பிக்கின்றன.

புதிய நாவலை தானே சொந்தமாக வெளியிடுவது என டிக்கன்ஸ் முடிவு செய்கிறார். இந்த முயற்சி எப்படி நடைபெற்றது. அவரது நாவல் எவ்வாறு வெளியானது என்பதை விவரிக்கிறது The Man Who Invented Christmas திரைப்படம். 2017ல் வெளியான இந்தத் திரைப்படத்தை இயக்கியிருப்பவர் பரத் நல்லூரி என்ற இந்தியர். இங்கிலாந்தில் வசிக்கிறார்.
டிக்கன்ஸின் அனைத்து நாவல்களும் திரைப்படமாகியுள்ளன. அவரது வாழ்வை மையமாகக் கொண்டு மூன்று திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஷேக்ஸ்பியருக்குப் பிறகு அதிகம் படமாக்கப்பட்டது டிக்கன்ஸின் நாவல்களே. இந்தத் திரைப்படம் நிஜமும் கற்பனையும் கலந்து எப்படி டிக்கன்ஸ் நாவல் எழுதுகிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது

எபினேசர் ஸ்க்ரூஜ் என்ற நாவலின் மையக்கதாபாத்திரம் கிறிஸ்மஸை வெறுக்கும் இரக்கமில்லாத, கூரான மூக்கு கொண்ட கஞ்சனாகச் சித்தரிக்கப்படுகிறார். அவரைச் சந்திக்கும் மூன்று ஆவிகள் வழியாக ஸ்க்ரூஜ் செய்த கடந்த காலத் தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. முடிவில் அவர் மனம் மாறுகிறார். கெட்டவன் இறுதியில் நல்லவனாக மாறும் வழக்கமான கதையை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாகவும் தனித்தன்மையுடனும் டிக்கன்ஸ் எழுதியிருக்கிறார்.
பேராசை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை, கஞ்சத்தனம் இவற்றைக் கண்டிக்கும் டிக்கன்ஸ் நாவலின் வழியாகத் தனது தந்தை ஜான் டிக்கன்ஸ் கடனைச் செலுத்தத் தவறியதால் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிகழ்வையும், தான் அநாதையாக விடப்பட்டுத் தொழிற்சாலையில் கொத்தடிமை போன்று வேலை செய்த இருண்ட நாட்களையும் நினைவு கொண்டிருக்கிறார்
“எழுத்தாளனைப் பொறுத்தவரை நாவல் எழுதுவது என்பது ஆவிகளுடன் உரையாடுவது போன்றது தான்“ என்று விமர்சகர் பிராட்லி கூறியிருப்பது உண்மையே.
டிக்கன்ஸ் காலத்தில் அவரோடு போட்டியிட்ட எழுத்தாளர் தாக்கரே. இப்படத்தில் அவரும் ஒரு கதாபாத்திரமாக இடம்பெறுகிறார். தனது நண்பர்கள் மற்றும் பதிப்பாளர்கள் நிச்சயம் இந்த நாவல் தோற்றுப்போய்விடும் என்று சொல்லும் போதும் டிக்கன்ஸ் நாவல் வெற்று பெறும் என உறுதியாக நம்புகிறார்.

1843ல் இந்த நாவல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகக் கிறிஸ்துமஸ் கதைகளை மக்கள் மத்தியில் டிக்கன்ஸ் வாசிக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருநூறுக்கும் மேற்பட்ட முறை டிக்கன்ஸ் மக்கள் மத்தியில் கதை வாசித்திருக்கிறார். இதன் வழியாகப் பெரும் பணம் அவருக்குக் கிடைத்தது. இந்த நாவல் திரைப்படமாகவும் இசை நாடகமாகவும் மேடை நாடகமாகவும் நிகழ்த்தப்பட்டிருப்பதுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கமும் செய்யப்பட்டிருக்கிறது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
