அகரமுதல்வன்'s Blog, page 15

June 8, 2024

June 7, 2024

நம்மைப் பேணும் மாங்கனி

மாம்பழமென்றால் பித்து. சிறுவயதில் யாழ்ப்பாணத்தில் ஆளரவமற்ற மாந்தோட்டங்களுக்குள் புகுந்து கூட்டமாக வேட்டையாடுவோம். எனக்கு விளா(லா)ட்டு மாம்பழமென்றால் தனிச் சுதி ஏறிவிடும். குரங்குகளே அதிர்ச்சியாகும் அளவுக்கு மரக்கொப்பில் சாவகாசமாக அமர்ந்திருந்து உண்பேன். எந்த மாங்காயை விடவும் கள்ள மாங்காய் உருசை அதிகம் என்றெல்லாம் சும்மாவா சொன்னார்கள்! சொலவடைக்கு வக்காலத்து வாங்கித்தந்து என்ன ஆகப்போகிறது. ஆனாலும் கள்ள மாங்காய் போலவே கள்ளக் கோழிக்கும், கள்ள ஆட்டுக்கும் இந்தச் சொலவடையே பொருந்தும்.

எங்கள் சொந்தவூரில் ஏக்கர் கணக்கிலுள்ள தேங்காய் தோட்டத்தில் களவாக இறக்கும் இளநீருக்கு இனிப்பும் வழுக்கலும் அதிகம் என்பார்கள். எனக்கு முக்கனிகளில் பிடித்தது மாம்பழம். அதுவும் கோவில் படையலில் இருந்து உண்ணும் மாம்பழச் சீவல்கள் கிளர்ந்தெழச் செய்துவிடும். வீட்டில் புட்டும் மாம்பழம் ஒருவேளை உணவு. அதில் மாங்கொட்டை பங்குகேட்டு நான் நடத்திய உரிமைப் போர்கள் ஏராளம். மாங்கொட்டை வெள்ளையாக வரும்வரை காந்துவது என் சுகம்.

எங்களூரிலிருந்த இராணுவத்தின் சிறிய முகாமொன்றின் வீதியோர வேலிக்கருகில் விளாட்டு மரத்தில் குலைகுலையாக கனிந்திருக்கும் பழங்களை அணில்கள் வீழ்த்திய பின்னர் எடுத்துச் சென்று உண்டிருக்கிறேன். தேனொழுகும் வாசனைப் பண்டம் போல, ஒருவகை தித்திப்பு. கண்களை மூடி உடலே இனிப்பதை உணர்ந்திருக்கிறேன். அந்த மரத்தின் கனிகளை கல்கொண்டோ, தடிகொண்டோ வீழ்த்த எண்ணினாலே பயங்கரவாதமென்பார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். மாம்பழத்துக்காக கையேந்தவும் மானம் ஒப்பவில்லை. கவரி மான்கள் எல்லாம் பிச்சை கேட்கவேண்டும் என்னிடம். ஆனாலும் அந்த மரத்தின் அணில்கள் என்னைப் போன்ற மாம்பழப் பிரியர்களுக்கு அருள் பாலித்தன.

பிறகொரு காலத்தில் மாம்பழங்கள் மீதான விரும்பம் அறவே அற்றுப்போனது. வழமை போல காட்டு முந்திரிப்பழங்களையும், பாலைப்பழங்களையும், விளாம்பழங்களையும் புசித்தேன். ஆனால் சொந்தத்தில் நிறையவே மாம்பழப் பிரியர்கள். வெள்ளைக் கொழும்பான், கறுத்தக் கொழும்பான், அம்பலவி என்று ஆளுக்கொரு ருசி பேதம் கதைப்பார்கள்.

மாம்பழத்தை விலக்கம் செய்த நாட்கள் நினைவிலுள்ளன. ஏதோவொரு கொந்தளிப்பும் அலைக்கழிவும் மனதுக்குள் தோன்றியிருந்தன. வாழ்வின் பிடிமானம் வேறு திசைகளுக்குள் கிளைபரப்பி, பூத்துக் காய்க்கத் தொடங்கியிருந்தன. அரசியல் உரையாடல்களின் வழியாக என் வயதை மீறிக் கடந்தபடியிருந்தேன். வீட்டிற்கு வருகிற மாம்பழங்களை பகிர்ந்து அளித்தேன். ஆனால் களவாக தோட்டங்களுக்குள் நுழைந்து சாப்பிடப் போகும் கூட்டத்தை நானே வழி நடத்தினேன். அதிலொரு கொழுத்த அனுபவம் எனக்கிருப்பதால் ஏனையோரும் பின்தொடர்ந்தனர்.

எங்களுடைய பூர்வீக வீட்டின் வலதுமூலையில் விளாட்டு மாமரம் ஒன்று உள்ளது. இளமையில் பூத்துக்குலுங்கும் குமரியைப் போல – பருவத்தில் மங்கலம் ஆகிவிடும் தரு. குலை குலையாக காய்த்துக் கனிந்து அருளுபவள். எவ்வளவு வாளிப்பான திரட்சி கொண்ட பழங்கள். அந்தப் பருவத்தில் ஊரில் தேனெடுத்து உண்டால், இந்த மரத்தின் அதே உருசையை உணரலாம். இப்போது வரை இளங்குமரியைப் போல பூத்துக்கனியும் தேன்தரு அவள். நிலம் பிரிந்து வாழ்வது எவ்வளவு துயர் என்று என்னிடம் கேட்பவர்களுக்கு – ஒருமுறை எனது பூர்வீக வீட்டின் மாங்கனியை கொடுக்க வேண்டும். பிறகு அவர்களே இந்தக் கேள்விக்கு பதிலை உரைப்பார்கள்.

மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும் என்கிற பழமொழியை சிலர் அறிந்திருக்க கூடும். ஆனால் இந்தக் கூற்றை அரிதானவர்களே உணர்ந்திருப்பார்கள். காலை உணவு முடித்து காடு குளமென்று சுற்றிவிட்டு மாலையில் வீடு வந்தவொரு வாழ்வில் மாங்கனிதான் எங்களைக் காத்த அம்மை.

இப்போது நகரவாழ்வில் எந்தப் பழங்களையும் நம்பி உண்ண முடியவில்லை. எல்லாவற்றிலும் ரசாயனம் என்பது இயல்பாக ஆகியிருக்கிறது. சில காய்கறிகளை கழுவும் போதே சாயம் வெளுக்கிறது. எல்லாத்துறைகளிலும் அறம் வீழ்ச்சி கண்டுவிட்டது. உணவகங்கள் பலவற்றுள் பரிமாறப்படும் உணவின் தரங்களை சோதித்தாலே நான் கூறும் அறவீழ்ச்சியை அறியலாம். மாம்பழக் காலம் வந்தால் வீதிகளில் கடைகள் முளைத்துவிடும். குவியல் குவியலாக மஞ்சள் குன்றுகள் மாம்பழங்களால் ஆகிவிடும். எந்தக் கடையில் கேட்டாலும் “சூப்பறான பழங்க. வாங்கிட்டுப் போய் நல்லதில்லேன்னா. எடுத்திட்டு வாங்க, சார்” என்பார்கள். முன்னர் இப்படியொரு வசிய வார்த்தைக்கு நம்பி வாங்கி வந்து சாப்பிட்டு இரண்டு நாட்கள் பேதியும் உடல் சூடும் ஆகியிருந்தது. அதன் பிறகு ஆசைக்கும் வேண்டாம் பூசைக்கும் வேண்டாம் என்கிற கசப்பு மட்டுமே எஞ்சியிருந்தது.

சில வருடங்களுக்கு முன்பாக நூல்வனம் மணிகண்டன் நமபிக்கையான இடத்திலிருந்து வாங்கிய பழங்களென சிலவற்றை தருவித்தார். எந்தவிதமான ரசாயனங்களும் போடப்படாமல் பழுத்த அசலான மாம்பழம் என்றார். பல ஆண்டுகளாக ஒரு அறங்குன்றா மாம்பழ யாபாரி அவருக்கு விற்பனை செய்கிறார் என்று தோன்றியது. தீங்கற்ற ருசியான பழங்கள். அளவில் பெரியதாயினும் உருசையில் குறையில்லை. இந்த வருடமும் அந்தப் பழங்களை உண்டேன். ருசி கூடியிருந்தது. ஆனாலும் நாட்டானாய் ஏதோ போதாமையிருந்தது. உலகமெல்லாம் சுத்தினாலும் ஊர்க்குளத்தில் குந்தி குண்டி கழுவினால்தான் ஊத்தை போன சுகமென்பார் அண்ணாவியார் ஒருத்தர். அதுபோலவே இந்த மனநிலையும்.

ஒரு மழை நாள் இரவில் லோகமாதேவி வீட்டில் அமர்ந்துண்ட மாங்கனிகளில் தேனொழுகும் தன்மையில்லை. ஆனால் கட்டித்து நின்ற உருசைக்கு இணையில்லை. அணில் கொறித்து கீழே விழுகிற மாங்கனிகள் இனிமை பெருக்குபவை. அந்தப் பழங்களை எண்ணுக்கணக்கற்று மண் ஒட்டவே திண்டிருக்கிறேன். கிளி கொத்தினாலும் அப்படித்தான். இது வெறுமென கற்பனாவாதம் அல்லவெனச் சொல்லிக் கொள்கிறேன்.

போதமும் காணாத போதம் – துங்கதை நூலுக்கு சென்னையில் நிகழ்ந்த அறிமுக விழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்த பிரியத்திற்குரிய எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள், விழா முடிந்ததும் நண்பர்களுடன் கீழே நின்றும் பேசிக்கொண்டிருந்தார். பிறகு அங்கிருந்த நண்பர்களுக்கு மாம்பழங்களும், பச்சைக் கச்சான் (மல்லாட்டை)யும் பொதியாக கொடுத்தார். பத்தாயத்தில் கனிந்தவை என்றார். அளவில் சிறிய பழங்கள். இலேசான வாசனை. காம்பில் பால் நிற்கும் காய்கள் இரண்டுமிருந்தன. அடுத்தடுத்த நாட்களில் பழமொன்றை எடுத்து தோலோடு கடித்தேன். அடேயப்பா! பவாவின் பெருங்கதையாடல் முறைமையில் சொல்ல வேண்டுமென்றால் “ஒரு அபூர்வமான ருசி நண்பர்களே” எனலாம்.

அமிழ்தம் விளைந்த சிறுகனி. உள்ளே சிவந்து தீயென மங்கும் திரட்சி தேனாய் இருந்தது.  ஒரு பழத்தை உண்டு களித்தேன். மாம்பழம் உண்ணத் தெரிந்தவன் கொட்டையை தானம் செய்யமாட்டான். காந்தினேன். ஏதோ பேய்பிடித்தது மாதிரி அடுத்த பழத்தையும் தேடினேன். வீட்டில் உஷாராகிவிட்டார்கள். ஆதீரனுக்கு வைக்காமல் பேய் தின்றுவிடுமென அம்மா ஏற்கனவே கணித்திருந்தாள் போலும்!

இந்த மாங்கனி இன்னும் எவ்வளவு பேரைப் பேயாக்கும் என்று தெரியவில்லை. காரைக்கால் அம்மை பசித்து வந்த சிவனடியாருக்கு வழங்கிய ஒரு பழத்தைக் கொடுத்துவிடுகிறாள். வீட்டிற்கு வந்த கணவன் பரமதத்தன் மாம்பழத்தை எடுத்து வரும்படி கூறுகிறார். அம்மை எடுத்து வந்து கொடுக்கிறாள். நன்றாக உள்ளதே அடுத்த பழத்தையும் எடுத்து வா என்கிறார். என்ன செய்வதென அறியாது அம்மை சிவனிடத்தே இறைஞ்ச அவளுக்கு மாங்கனி கிடைக்கிறது. அதனை எடுத்துச் சென்று தனது கணவனுக்கு கொடுக்கிறார். சாப்பிட்டவன் இது இன்னும் ருசியாக இருக்கிறது. முன்னைப் பழம் போலில்லையே என்று கேட்கிறார். அம்மை நடந்ததைச் சொல்கிறாள்.  அப்படியா! எங்கே இன்னொரு பழம் கேள், கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்கிறான் கணவன். அதுபோலவே அம்மை கேட்க பழம் கிடைக்கிறது. கணவன் பரமதத்தன் இறையருள் வாய்ந்த உன்னோடு இல்லறம் நடத்த இயலாது என்று பயந்து விலகுகிறார். பிறகு கணவன் விலக்கிய இந்த உடல் வேண்டாமென பேயுருக் கொண்டு அம்மை கயிலைக்குச் செல்வது சைவர்கள் அறிந்திருக்கும் புராணக்கதை.

நான் மாம்பழத்தின் மீது விசர் பிடித்து திரிந்த சிறுவயதில் ஆழமாக ஒன்றை நம்பினேன். மானுடர்கள் இன்று உண்டு களிக்கும் மாங்கனி என்பது அம்மைக்கு சிவன் அருளிய இரண்டாவது கனி. அதாவது பரமதத்தன் எங்கே நீ சொல்வது உண்மையா இன்னொரு பழம் கேள் என்பதற்கு பிறகு கிடைத்தது. ஏனெனில் அந்தப் பழமே மானுடர்க்கு மிச்சம் வைக்கப்பட்டது. சிவன் அம்மைக்கருளியது மாங்கனி. ஆகவே என்னுடைய கூட்டாளிகளிடம் “இந்தப் பழங்கள் பேயுருக்கொண்ட நமது அம்மையினது தாய்மையின் கனிவு” என்பேன். மாதா ஊட்டாத சோற்றினை மாங்கனி ஊட்டும் எனும் பழமொழியில் மாங்கனி வெறும் கனியாக மட்டுமே இருக்கிறது. அதுவுமொரு மாதா என்பவன் நான்.

ஒருநாள் கடுமையான காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. அம்மம்மா லாம்பை பிடித்தபடி தாழ்வாரத்துக்கு முன்னால் சென்று மூத்திரம் போனாள். விளாட்டு மாமரம் காற்றில் அசைவதைப் பார்த்து பேயாய் ஆடுகுது மோனே என்றாள். எழுந்து வந்து பார்த்தேன். மின்னல் வெளிச்சத்தில் மரத்தின் ரூபத்தைக் கண்டேன்.

“ஓமன, முறியிற மாதிரியெல்லே ஆடுது”

“அது முறியாது மோனே. மாமரம் என்ன வெறும் மரமே. அதில இருக்கிறவள் கையிலைக்கு தலையால நடந்து போன ஆச்சியெல்லே. அவள் பேயாய்த் தான் ஆடுவாள்.” என்றாள்.

ஞாலமே ! மாமரமும் மாங்கனியும் – நம்மைப் பேணும் அம்மை காண்!

The post நம்மைப் பேணும் மாங்கனி first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2024 11:04

June 6, 2024

June 5, 2024

இறகு

01

றகுகள்

மண்டிக்கிடக்கும்

பாழ் கிணற்றுள்

மிதக்கும்

வானின் பிம்பம்.

02

பறவைகள் வந்தமரா

முதுமரத்தின் கீழே

வீற்றிருக்கும்

சித்தமிழந்த

கொடுநிழல்.

03

மரமெங்கும்

சிறகுலர்த்துகின்றன

பறவைகள்

நிதமும்

இறகுகள் உதிரும்

இலையுதிர்காலம்

பூமிக்கு.

 

 

 

 

 

The post இறகு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 05, 2024 10:05

June 4, 2024

நழுவும்

01

நிலவில் ஒரு வீடுள்ளது

நழுவும் மேகங்கள்

ஜன்னலில் அமர்ந்து சிறகுலர்த்துகின்றன.

02

அத்தகைய மழை நாளை

நீ மறந்துவிட்டாயா!

குளிர்ந்த நாணல்களின் பாடலையேனும்

நீ மறவாதே.

03

வானத்தைப் படைத்தவனே!

உன்னை அணைத்துக் கொள்கிறேன்

எனக்காக

அந்தக் கண்கூசும் சூரியனை

விடைகொடுத்து அனுப்புவீராக!

04

தங்கமீன்களின் கண்ணாடித் தொட்டி

நீந்தித்  தியானிக்கும் ஜலவெளி

இன்று ஒற்றை மீனின்

நீச்சலுக்கும் – மிதத்தலுக்கும் இடையில்

மல்லாந்திருப்பது

சூனியமா?

இறையா?

 

 

 

 

 

 

 

The post நழுவும் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2024 10:51

June 3, 2024

துளிர்த்தெழும் முருங்கை – சக்திவேல்

சிதைந்து தொங்கிய கால்களோடு குருதி தேங்கிய சாணத்தரையில் அண்ணாவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தாள் அம்மா. என்னைக் கண்டதும் “ இவனுக்கு சரியான தண்ணி விடாய், பாச்சியை விட்டு வாய எடுக்க மாட்டேன் என்கிறான்” எனச் சொல்லி மகிழ்ந்தாள். அம்மா, என்றபடி அவளருகே ஓடினேன். அவள் என்னை அணைத்துச் சொன்னாள். “சந்ததி சந்தியாய் இவனுக்கு நாங்கள் தண்ணி வைக்கவேணும். அவன் எங்கட வாசலுக்கு பறந்து வருவான்” அண்ணாவின் கால்களைத் தொட்டுப் பார்த்தேன். குருதியின் நீளக் கனியென தணல் பழுத்திருந்தது. கைகளை விசுக்கென எடுத்துக் கொண்டேன். “சரியான வெக்கை என்ன! இதுதான் எங்கட ஞாபகமடா மோனே” என்றாள் அம்மா.

– அத்தியாயம் 9

கரமுதல்வனின் போதமும் காணாத போதம் போருக்கு பின் ஈழ நிலத்தின் அம்மைகள் உணரும் வெக்கையையும் அதன் ஞாபகத்தையும் பேசும் படைப்பாக பரிணமிக்கிறது. ஈழப் போர் முடிவுக்கு வந்த பின் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான நம்பிக்கையை ஈட்டிக்கொள்ள அம்மக்கள் மேற்கொள்ளும் அகப்போராட்டங்களையும் கண்டடைதல்களையும் இருபத்தைந்து அத்தியாயங்களில் வெவ்வேறு கதைமாந்தர்களின் குரல் வழி வரைந்து காட்டுகிறது. “இவனுக்கு சரியான தண்ணி விடாய்” என்கிறாள்.  போரெனில் தீ. தீயெனில் வெந்துருகும் பாலை நிலம். பாலையில் நீர் என்பது வெறும் நீர் மட்டுமல்ல வாழ்தலுக்கான நம்பிக்கையும் கூட. இங்கும் ஈழப் போருக்கு பின்பு மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் தங்கள் நம்பிக்கையை மீட்டுக்கொள்ள போராடுகிறார்கள். எவை இருந்தாலும் உயிர்த்திருப்பதற்கான அர்த்தத்தை வழங்கும் தொன்ம நம்பிக்கை இல்லையெனில் வாழ்வு நசிகிறது என்பதை நூல் முழுக்க காண்கிறோம்.

தங்களை கைவிட்ட தெய்வங்களுக்கு தாங்கள் வாழ்வளித்து பலத்தைப் பெறுதல், தம்மிடையே இருந்து நிலத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களை தெய்வமாக்குதல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளுதல், காதலும் காமமும் கொண்டு சூழுலகை பழித்து மறத்தல் என்ற நான்கு வழிகளில் வாழ்தலுக்கான அர்த்தத்தை மீட்டுக்கொள்கிறார்கள். தெய்வங்கள் மனித நிலையை அடைந்து புனர்வாழ்வு பெறுதலும் மனிதர்கள் தெய்வங்களாவதும் ஒரே அத்தியாயங்களில் பிணைந்து வெளிப்பட்டு ஒன்றிற்கொன்று சமானத்தன்மையை அடைகின்றன. தெய்வங்கள் மனித நிலையை அடைந்து புனர்வாழ்வு பெறுவதற்கு கொட்டடி காளி கோயில் சீரமைப்பை சொல்லும் அத்தியாயம் சிறந்த உதாரணம். இரவு முழுவதும் தீயை பார்த்து உட்கார்ந்திருக்கும் அம்மையிடமே காளி முறை வைக்கிறாள். அந்த இரவில் எரியும் தீ அவர்களது நினைவில் எரியும் நிலத்தை எரித்த தீ அல்லவா! அதை உணரும் ஒருவருக்கே தெய்வத்தின் குரல் கேட்கிறது. அவரே புனரமைக்கிறார். இந்த அறிகுறிகள் எல்லாம் கனவுச்சாயல் நிறைந்த பகுதிகளின் வழியாகவே கடத்தப்படுகிறது.

கொட்டடி காளியின் அத்தியாயத்தில் அவள் வந்து பசிக்கு கேட்பதாக இருக்கட்டும், இறுதியில் தலை நோவு என சொல்வதாக இருக்கட்டும். இரண்டுமே கனவுரு பகுதிகள். நூல் முழுக்க ஏராளமான அத்தியாயங்களில் சட்டென்று நிகழும் கனவுத் தாவலை கூர்ந்து பார்த்தால் ஒன்றை விளங்கி கொள்ள முடிகிறது. அதை இப்படி சொல்லலாம், பாலையில் நாவறண்டு நீரின்றி மரண தருவாயில் இருப்பவர்களுக்கு வரும் கனவை ஒத்தவை அவை. இங்கே அவர்களது நா அருந்த நீருண்டு. ஆன்மா அருந்த ஏதுமில்லை. அப்படிப்பட்ட தருணங்களில் ஒன்று தங்கள் புராதன தெய்வங்களையோ அல்லது இப்போது உயிர்த்திருக்க காரணமான போர் தியாகிகளையோ கனவில் கண்டு தாகம் போக்க தெய்வமாக வழிபடுகிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதை கவனிக்கிறோம்.

எப்போதெல்லாம் திக்கு தெரியாமல் தவிக்கிறார்களோ அங்கெல்லாம் அபோத நிலமான கனவில் கால் பதித்து அமுதம் சுரக்கும் சிலைகளை கண்டெடுக்கிறார்கள். திலகா அக்காவின் வளர்ப்பு நாயான வீமனின் மூன்று கால்கள் திரிசூல இலையாய் ஒளிர்ந்து தவேந்திரன் மாமா ஆலால கண்டனாக பங்கர் குழியில் புதிய வைரவர் கோவிலாவது கனவுகளில் வெளிப்படும் அருளுக்கு நல்ல உதாரணம். தெய்வங்கள் வாழ்வு பெறுகையில் பழைய முழுமையுடன் அல்ல, இழந்த அடையாளங்களுடனேயே நிறுவப்படுகிறார்கள். அந்த நிறுவலில் எப்போதும் இயக்கத்தின் சில அடையாளங்களும் கலந்து புதிய வார்ப்புருவை தெய்வத்திற்கு வழங்குகிறது. கொட்டடி காளிக்கு அம்மா காந்தள் மலர் சூடி அலங்கரிக்கிறாள். காந்தள் இயக்கத்தால் தமிழீழ மலராக அறிவிக்கபட்டதையும் சேர்த்து வாசித்தால் புதிய பரிணாமம் ஒன்று திறக்கிறது. இயக்கத்தின் அடையாளங்கள் தெய்வங்களுடன் கலப்பதை வீரபத்திரர் புதைக்கப்படுவது என வரும் தொடர்ச்சியான அத்தியாயங்களில் காண்கிறோம்.

அதேசமயம் இறுதியில காளிக்கு மண்ட பீஸ் என்னும் அக்காவின் வாக்கு. ஒரு சமூகமாக எப்படி போர் வடு அவர்களை உள்ளிருந்து உழற்றும் நோயாக அமைகிறது என்பதையும் சுட்டி நிற்கிறது. மனிதர்கள் தெய்வங்களாக மாறும் அத்தியாயங்களில் சங்கன் வரும் அத்தியாயம் முக்கியமாக கவனிக்கப்படத்தக்கது. இயக்கத்தில் உளவுக்காரனாயிருந்து போருக்கு பின் களவுக்காரனாய் உருவம் தரிக்கும் அவன் முருகனின் வேலை திருடிக்கொண்டு, எங்களைக் காப்பாற்றாத நீ, இந்த திருட்டுக்காக ஒன்றும் என்னை தண்டிக்க செய்யமாட்டாய் என திட்டி விட்டு வருகிறான். சங்கன் ஊரில் நடக்கும் விவரங்களை கூர்ந்து கவனிப்பதும் பட்டாம்பூச்சியை சந்திப்பதும் நமக்கு காட்டப்படுகிறது. ஒருபக்கம் அவனுக்கு தெய்வ பொருளை திருடுவதன் குற்றவுணர்வும் வாழ்வு போய்விடுமோ என்ற அச்சமும் தங்கள் நிலையை இப்படி நசிப்பிக்க செய்த தெய்வத்தின் மீதான கோபமும் என திணறும் போது தான் விடுதலை கனல் சுமந்த கண்களை அணிந்த மேய்ப்பனான அவனது தெய்வம் வந்து யுத்தம் தங்களை கைவிட்டதை சொல்வதை கேட்கிறான். தெய்வம் எங்களை கைவிடாது என்ற புதிய நம்பிக்கையை அடைகிறான். அந்த தெய்வம் அவர்களின் புதிய தெய்வம்.

விமர்சகர் சக்திவேல் 

சங்கன் காணும் விடுதலை கனல் சுமந்த கண்களை  விடுதலைப்  புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் அவர்களுடன் அனிச்சையாக தொடர்புப்படுத்தி கொள்கிறோம். ஆனால் போதமும் காணாத போதத்தில் முழுக்க அத்தகைய கால, இடத்துடன் தொடர்புறுத்தும் சொற்கள் நீக்கப்பட்டு தொன்மமாக மாறி வருகிறது. அப்படி தொன்மமாக்குவது காலத்தை தொலைவுப்படுத்தி ஆறுதலை வழங்குகிறது. இந்த உக்கிரத்தை வருங்காலத்திற்கு கடத்தும் இலக்கிய பிரதியாக மட்டுமே நிற்க செய்கிறது – அரசியல் உள்ளீடுகளை தவிர்த்து. இயக்கம் மூலம் நம்பிக்கையை பெறுவதற்கு பூதவதி வரும் அத்தியாயமே முதன்மை உதாரணம். பூதவதியின் அன்னை புலிகளின் மேஜரை கருங்காலி முனி என்று நினைத்து மருளுகிறாள். இறுதியில் பூதவதியின் கால் பெருவிரல் உதிரும் மரத்துக்கு கீழ் நின்று என்ர தெய்வமே என அலறும் அத்தைக்கு பல்லாயிரம் முனிகள் காட்சியளிக்கின்றனர்.

முனிகளும் மாடன்களும் தெய்வங்களேயானாலும் நம்மை கொன்று குருதியுண்ணும் தெய்வங்களும் கூட. இயக்கம் அம்மக்களுக்கு அப்படித்தான் இருக்கிறது. வன்கவர் படையிடம் இருந்து அவர்களை காப்பாற்றும் அதே நேரம் அதற்காக தன் மக்களின் ரத்தத்தையும் குடிக்க தவறுவதில்லை. பூதவதி போல கட்டாய படையணி சேர்ப்பிற்கு சென்று களமாடியவர் முதற்கொண்டு துரோகத்தின் பெயரால் சுட்டுக்கொல்லப்படும் அதியமான் வரை அந்த பட்டியல் நீள்கிறது. காப்பாற்ற எழும் முனிகள் காவு கொள்ளத் தொடங்கும்போது இலட்சிய கனவுகள் கரைய தொடங்குகின்றன போலும்.

இயக்கத்தில் சேருபவர்களை பொறுத்தவரை யெகோவாவின் படைகளின் வழியாக – நூற்றாண்டுகளாக யூதர்களின் நம்பிக்கை தூணாக விளங்கிய விடுதலைப் பயணம்(Exodus)  நூலில் குறிப்பிடப்படும் தெய்வம் – நம்பிக்கையடையும் குங்குமம் முதற்கொண்டு, தன்மானத்திற்காக களம் நிற்கும் தேமா, எதிரிக்கு பயமிருப்பதை அறிந்த பின்னர் தற்கொலை செய்யாமல் வீரச்சாவு அடையும் கரியன் என பலதரப்பட்டவர்களை காண்கிறோம். இவர்களுக்கு இடையில் முக்கிய ஒற்றுமையாக தொலைதூர சாம்ராஜ்ய இலட்சியங்கள் அல்ல அவர்களை உந்துவது, வாழ ஒரு பிடி நிலம் வேணும் என்ற நெருக்கடி தான்.

இறுதிக்கட்ட போரின் போதும் அதன் பின்னரும் ஏற்படும் தனிமையையும் வெறுமையையும் காமம் முகிழ்க்கும் காதலில் போக்கும் உறவுகளாக ஐந்து அத்தியாயங்கள் விரிந்து அமைகின்றன. இந்த பகுதியில் முக்கியமாக குறிப்பிட நினைக்கும் கதைகள் யசோவுக்கும் ஆதாவுக்கும் உரியன. யசோ உடனான உறவு கனவுக்கும் நனவுக்கும் இடையில் ஊசலாடிய படியே சென்று முடிகிறது. வாசகன் தன் கற்பனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப அதனை வளர்த்து நீட்டலாம். ஆனால் யசோவின் கதையை போர்க்காலத்தில் நிகழும் காதலின் நிலைத்தன்மைக்கான குறியீடாக எடுத்து கொள்ளலாம். நிகழ்ந்ததா என அறிவதற்கு முன்னரே புகையாகிப் போவது. ஆதாவின் அத்தியாயத்தை பொறுத்தவரை வைத்தியலிங்கத்தின் வசையே அதன் சமநிலையை சிறப்பு தன்மைக்கு அடித்தளமாக அமைகிறது. ஏனெனில் எல்லா தியாகங்களும் சாமானியர்களால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. நறுமுகையின் புல்லாங்குழல் இனிமைக்கான தவிப்பாக எரிந்து எஞ்சுகிறது.

ஆக போருக்கு பிந்தையை வாழ்வில் தெய்வங்களை மீட்டெடுத்தும், போரின் போது இயக்கத்திற்கு தன்னை கொடுத்தும் போருக்கு நடுவில் காதலை சுகித்தும் நம்பிக்கையையும் வாழ்வுக்கான அர்த்தத்தையும் மீட்டுக்கொள்ளும் மக்களின் கதைகளை திறம்பட கூறும் போதமும் காணாத போதத்தில் அமைந்த போதாமைகள் சிலவற்றையும் குறிப்பிடத்தான் வேண்டும். நூலை வாசிக்கையில் ஒரு விலக்கம் உடன் வந்தபடியே இருக்கிறது. அது கதை சொல்லியின் குரலில் வெளிப்படும் புறவய யதார்த்தத்தால் சமனிலைப்படுத்தப்படாத உணர்ச்சிகரம் என்பேன். அந்த குரலில் வெளிப்படும் உணர்ச்சிகரத்தை சக மனிதனாக புரிந்து கொள்கிறேன். ஆனால் நவீன இலக்கிய வாசகனாக என் கேள்வியும் மதிப்பீடும் கால பெருக்கில், வரலாற்றில் உணர்ச்சிகரத்திற்கு என்ன இடம் ? என் வரையில் இழப்பினால் மட்டுமே உருவாகும் உணர்ச்சிகரத்திற்கு பெரிய மதிப்பில்லை.

நினைவுகூரலாகவும் சம்பவ இட வர்ணனைகளுமாக வரும் குரலில் அவர்களது நிகழுலகத்தின் துண்டு சித்திரமும் வருமென்றால் அது இந்த உணர்ச்சிகரத்தை நீடித்த அறச்சார்புடைய சமநிலை கொண்டதாகி இருக்கும் என்பது வாசகனாக என் பார்வை. ஏனெனில் வீர உணர்ச்சியானது நம்பிக்கையையும் வாழ்வுக்கான அர்த்தத்தையும் அளித்தால் மட்டும் போதுமானது இல்லை என்று நினைக்கிறேன். அங்கே அறம் வந்து நின்றாக வேண்டும். அந்த அறம் ஒருவர் தன் நினைவில் சுமந்த உணர்ச்சிகரத்தை நியாயப்படுத்தும் காரணமாக அன்றாடத்தை உணர்வதால் வருவது. எனவே உணர்வு கொந்தளிப்பும் சூழுலகமும் சந்திக்கும் புள்ளியே அறத்தை உருவாக்குகிறது. அது இந்நூலில் குறைப்படுவதாக உணர்கிறேன். தொழில்நுட்ப நம்பகத்தன்மையை பொறுத்தவரை வாசகனாக எனக்கு சில குறைகள் உள்ளன. புலித்தேவன் வரும் அத்தியாயத்தில் கனவுரு பகுதியேயானாலும் அம்மாவுக்கும் அவனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் பதிமூன்று வயது சிறுவனுக்கு எனும் போது நெருடல் ஏற்படுகிறது. அதேபோல அப்பனும் நறுமுகையும் வேதாரண்யத்தில் கரையேறுவது அந்தரத்தில் நிற்கிறது.

முடிவாக, போதமும் காணாத போதத்தின் மக்களை வெட்டி வீசப்பட்ட முருங்கை மரத்தின் குச்சி ஒன்று துளிர் விட்டு மரமாவதன் நிகழ்வுடன் ஒப்பிடலாம். முருங்கையை நாம் விறகுக்கு பயன்படுத்துவதில்லை. அம்மக்களை அப்படி எண்ணியே இராணுவம் விடுவிக்கிறது. ஆனால் கடும் வறட்சியிலும் சொட்டு நீர் பாசனத்தில் வளரும் முருங்கை குச்சிகளை போல தங்களின் நினைவுகளை நீர் சொட்டாக்கி வேரூன்றி மரமாகிறார்கள்.

நூலினை வாங்க –  https://www.panuval.com/bothamum-kanadha-botham-10025742

The post துளிர்த்தெழும் முருங்கை – சக்திவேல் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2024 09:18

June 1, 2024

அன்றில்

01

வாள் வீழும் தலை

என்னுடையதாகட்டும்

பீடத்தில் பெருகும் குருதி

என்னுடையதாகட்டும்

தெய்வத்தின் பசிக்கு

பலியாகும்

கொடை என்னுடையதாகட்டும்.

அபயம் அருளும்

இறையே உனக்கு

உபயம் உதிரம்

உதிர உபயம்.

 

02

மலையின் உச்சியில் தனித்த பறவை

பெரும் பகலை உதிர்க்கிறது

இரவின் கிளையில் வெறித்த பறவை

தினம் ஒளியை மலர்த்துகிறது.

 

03

வரலாற்றின் காலடிகளை

இந்தப் புழுதியை விடவும்

சுமப்பவர்

எவர்?

சூறைக்காற்றில் பறந்த புழுதி

மறுபடி பூமியில் அமர்ந்தது.

 

 

 

 

 

 

 

 

The post அன்றில் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2024 11:26

May 31, 2024

அழியாவினாக்களின் கதைகள்

பொதுவாக அன்றைய வழக்கத்திற்கு மாறாக திசைகளின் நடுவே தொகுதி வெளியான ஆண்டே விற்றுத்தீர்ந்தது. சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி என பல முன்னோடிப்படைப்பாளிகள் சிறந்த மதிப்புரைகள் எழுதியிருந்தனர். அவ்வாண்டின் சிறந்த நூல்களிலொன்றாகப் பேசப்பட்டது. ஆகவே அடுத்த தொகுதி ஒன்றை கொண்டுவரலாமென்னும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால் நான் விஷ்ணுபுரம் நாவல் எழுதிக்கொண்டிருந்தேன். 1997 டிசம்பரில் விஷ்ணுபுரம் நாவலை அன்னம் அகரம் வெளியிட்டது. அது அன்றைய இலக்கியச் சூழலில் ஓர் அலை என நிகழ்ந்த படைப்பு.

அழியாவினாக்களின் கதைகள்

 

The post அழியாவினாக்களின் கதைகள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 31, 2024 10:25

May 30, 2024

மலரும் பூ மலரும்

                    01

அசையாத சுடரின் நீளம்

இருளிலும் பெரிது

இறுதிக் கனலில் திரியெரிய

கருகிய ஒளியின் வாசம் அசைந்து

அழியும்

அசையா அச்சுடர்.

 

02

மலையில் தரித்து நிற்கும் காலத்தை

மேகங்கள் அசைக்கும்

சந்திர ஒளியில் தவமிருக்கும் கூழாங்கல்லின்

தியானத்தை

ஆற்றின் கரையில் நீரருந்தும் மந்தைகள்

கலைக்கும்

அகவும் மயில்களில் அசையும் மழையை

வெயில் மறுக்கும்

அழகின் இனிமையென

முட்செடியின் பூ மலரும்.

மலரும் பூ மலரும்.

03

இரவைப் போலவே

வீடு திரும்புகிறவன் நான்

உறங்காமல் உதயமாகும்

வானொளியும்

உடைந்து உமிழும்

பிரளயத்தின் எரிமலையும்

நான்.

இப்படித்தான் தத்தளிப்பேன்

நான்.

The post மலரும் பூ மலரும் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 30, 2024 08:48

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.