அகரமுதல்வன்'s Blog, page 17

May 12, 2024

May 11, 2024

மிகை வாசிப்பு

அன்புள்ள எழுத்தாளர் அகரமுதல்வன் அவர்களுக்கு,

ஒவ்வொருவரும் அவருடைய வாசிப்பு அனுபவத்தில் இருந்து தான் அவர்களது வாசிப்பை பகிர்கிறார்கள். சிலரின் வாசிப்பு பகிர்வு “இதெல்லாம் அக்கதையில் உள்ளதா ?” என்று திகைக்க செய்யும் அளவிற்கு உள்ளது.  over Reading என்பதை எப்படி கண்டடையலாம்?

ஞானசேகரன்

 

அன்பின் ஞானசேகரன் !

நீங்கள் குறிப்பிடும் திகைக்கவைக்கும் வாசிப்பு பகிர்வுகள் இலக்கியச் சூழலில் சர்வசாதாரணம். ஆனால் அதனை உங்களின் வாசக அனுபவத்தோடு வைத்து அணுகக் கூடாது. ஒருவர் சராசரி நிலையிலிருந்து வாசிப்புக்குள் அடியெடுத்து வைக்கும் தொடக்க காலத்தில் ஒரு “பாக்கெட்” நாவலைப் படித்தால் கூட அப்படித்தான் உணர்ச்சி வசப்படுவார். அதற்காக இதெல்லாம் ஒருநாவலா என்று நம் அறிவாற்றலால் அவரின் வெளிப்பாட்டைச் சீண்டக்கூடாது. அவருடைய வாசிப்பில் அவர் அடைந்த உணர்வெழுச்சிக்கு ஒரு மதிப்பு உண்டு. ஆகவே நான் அவரின் வெளிப்பாட்டுக்கு செவி சாய்ப்பேன்.

Over Reading -ஐ அவர்களின் மிகையான வெளிப்பாட்டில் காணக்கூடும். ஒரு துணுக்கை எழுதியவரிடம் சென்று உங்கள் கவிதையின் இரண்டாவது வரி அற்புதம் என்று பாராட்டுபவர்களை எதிர்கொண்டிருப்பீர்கள் அல்லவா! சில வேளைகளில் உங்களுக்கு கூட அந்த அனுபவம் வாய்த்திருக்கும். நான் எழுதிய அரசியல் கட்டுரையை வாசித்த ஒருவர், தங்களின் சிறுகதையை வாசித்தேன் ஐயா, அற்புதமான தொடக்கமும் முடிவும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இந்த வாசிப்பையே நான் அறியாமையின் அதீதம் என்று கருதுகிறேன். இன்றைக்கு முகநூல் முழுக்க இந்த Over Reading இலக்கியப் பாவனை பெருகியுள்ளது. எனக்கும் இலக்கியம் தெரியும் என்பதைச் சான்று பகிர பலரும் மிகையான வார்த்தைகளால் புத்தக வாசிப்பு அனுபவங்களை பகிர்கிறார்கள். எழுதும் வார்த்தைகள் கூட எங்கேயோ எழுதப்பட்ட கட்டுரைகளில் இருந்து கையாளப்பட்டிருக்கும்.

சமீபத்தில் வெளியான சிறுகதை தொகுப்புக்களை தொடர்ந்து  வாசித்து வருகிறேன். இன்றைக்கு எழுதும் சக படைப்பாளிகள் சிலர் Over Reading மனோபாவத்தினால் எழுத்தாளர் ஆனவர்கள் என்றே தோன்றுகிறது. மிகையான கண்மூடித்தனம். எழுத்தை எவ்வாறு கருதுகிறார்கள் என்று அறிய முடியவில்லை. ஒருபக்கம் இந்தப் புத்தகங்களுக்கு எழுதப்பட்டிருக்கும் சில வாசிப்பனுபவங்களை காண நேர்ந்தால் அதை விடக் கவலையே எஞ்சுகிறது.

நமது சூழலில் வாசிப்பதையே ஒரு மிகையான செயலாகவே கருதுகிறார்கள். வாழ்க்கையில் இல்லாத அனுபவமா வாசிப்பில் கிடைக்கப்போகிறது என்று கருத்துக்களை உதிர்க்கும் பேர்வழிகள் எங்கும் காணக்கிடைப்பார்கள். இன்னொரு பக்கம் வாசிப்பே சுவாசிப்பு என்பவர்கள். அது பேச்சளவில் அளந்து விடும் கூற்று. அப்படி என்னவெல்லாம் சுவாசித்து இருக்கிறீர்கள் என்றால், மாதவன் நாயர் டீக்கடையில் நாளிதழ் என்பதுதான் மிஞ்சும். ஆனால் தீவிரம் கொண்ட இலக்கிய வாசகர்கள் வேறானவர்கள். அவர்கள் இதுபோன்ற அரட்டைகளில் சேராதவர்கள். Over Reading – என்கிற மிகையான வெளியிலிருந்து தப்பி இலக்கியத்தை முன்வைப்பவர்கள்.

என்னுடைய நண்பர்கள் சிலருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. Over Reading என்றால் அதிலுள்ளவற்றை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள் என்பார்கள். சிலருக்கு அசலான வாசிப்பு அளவீடுகள் எதுவும் இருக்காது. ஏற்கனவே யாராலோ சொல்லப்பட்ட அளவுகோலோடு படைப்புக்களை அணுகுவார்கள். எதுவும் பெரிசாக இல்லையே என்று வாயைச் சுழிப்பார்கள். அவர்களிடம் இருக்கிற அளவுகோலும் புதிதில்லை என்பதை மறந்துவிடுவார்கள். ஆனால் இவர்களுக்குப் பின்னால் ஒரு அணி திரளும். கோட்டை கொத்தளங்கள் உருவாகும். இலக்கியச் சூழலில் ஒரு குரலென ஆகிநிற்பார்கள். ஆனாலுமென்ன புதிதாக எதுவும் இவர்களிடம் இருக்காது.

பிறகு உங்களுக்கு ஒரேயொரு அன்பான கோரிக்கை. இந்த Over Reading – ஐ கண்டடையும் பிரயத்தனத்தை கைவிடுங்கள். ஏனெனில் கண்டு பிடிக்க வேண்டுமென்ற துடிப்பே ஒரு வகையில் Over Reading – என்றால் மிகையில்லை.

 

 

The post மிகை வாசிப்பு first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2024 11:29

May 10, 2024

பொன்முகலி கவிதைகள்

01

வண்ணங்கள் பெருகியோடுகிற நதிக்கரைக்கு

ஒருபெண் இடுப்பில் குடத்தோடு செல்கிறாள்

நாணற் புதர்கள் அடர்ந்த அவ்வாற்றங்கரையில்

காமத்தின் வண்ணம் கனிந்து பழுத்திருக்கிறது

பெருகியோடும் ஆற்றில்

கால்களை அளைந்து விளையாடி

நீர் மொண்டு திரும்புகிறாள்.

நதியில் நழுவிய அவள் கைவளை

வானில் ஒளிர்கிறது.

 

02

நான் புசிக்க நினைக்கிற மாமிசம்

நான் குடிக்க விழைகிற குருதி

நான் செய்ய விரும்புகிற துரோகம்

நான் வழங்க விரும்புகிற மன்னிப்பு

எல்லாம் நீயே

தெப்பத்தில் மிதக்கிற என் சிறு இலையே

இனி நீ வழிபட வேண்டிய கடவுள்

நானே.

 

03

நிறைசூல் வயிற்றை

நான் சுமந்தலைகிறேன்

நீலத் தாமரை வளர்கிற தடாகம்

சிறிய நாகங்களுக்கு மெத்தைகளாகும் தாழம்பூக்கள்

புணர்ந்து களித்துப் பிரிந்த

செண்பக மரக் குளக்கரையின்

முப்பதாம் நாளில்

மிகு பறவைகள் தங்க வேண்டி

என் தொப்புள் கொடியில்

வளர்கிறதொரு

ஆலமரம்.

 

பொன்முகலி தமிழ் விக்கி – https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AF%E0%AE%AA%E0%AF_%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF

 

The post பொன்முகலி கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 10, 2024 10:27

May 9, 2024

May 8, 2024

திருச்சாழல்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

திருமுறை : எட்டாம்-திருமுறை-திருவாசகம்

நாடு :சோழநாடு காவிரி வடகரை

தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

சிறப்பு: — சிவனுடைய காருணியம்; நாலடித் தரவுக் கொச்சகக் கலிப்பா.

                                  திருச்சிற்றம்பலம் 

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.

என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ

அயனை அனங்கனை அந்தகனைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.

தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி
அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ.

அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ.

மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல்
தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.

கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.

தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.

தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண்
சாழலோ.

நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.

கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடீ
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.

மலையரையன் பொற்பாவை வாள்நுதலாள் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளா தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ.

தேன்புக்க தண்பணை சூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.

கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோடே சாழலோ.

அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியா
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.

சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.

அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண்
சாழலோ.

அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.

                           திருச்சிற்றம்பலம் 

The post திருச்சாழல் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 08, 2024 10:55

May 7, 2024

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் நேர்காணல்

எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் புதிய நேர்காணலொன்றைப் பார்த்தேன். Missed Movies New Wave வலையொளியினரின் சிறந்த உழைப்பில் நேர்காணல் வெளியாகியிருக்கிறது. ரமேஷ் பிரேதனின் வாசகர்களில் நானும் ஒருவன். சிறந்த எழுத்தாளுமை. எனக்கு ஆசான்களில் ஒருவர். மூன்று பெர்னார்கள் சிறுகதையை வாசித்து வாசித்து வியப்பிலாழ்ந்திருக்கிறேன். இந்த நேர்காணலை உருவாக்கிய Missed Movies New Wave வலையொளினருக்கு நன்றி.

The post எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் நேர்காணல் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 07, 2024 10:18

May 5, 2024

தீடை – கடல் எனும் வாசோ

இன்றுள்ள இலக்கியச் சூழலில் தமிழ் வாழ்வை எழுதுவதில் பெருமளவிலான இளம் படைப்பாளிகளுக்கு இனம் புரியாத விலக்கமுள்ளது. இந்த உண்மையை உரைத்ததால் சிலருக்கு என்னிலும் கசப்புத் தோன்றும். அது குறித்த நோவு எனக்கில்லை. புத்தாயிரத்தின் கடைசிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்ட புனைவுகள் பலவும் இந்த விலகல் மனோநிலையில் இருந்து அவதரித்தவையே. படைப்பாளன் நினைத்தும் அதனைச் சாத்தியப்படுத்த முடியாமல் தமிழ் வாழ்வு போரிட்டு நிலைக்கிறது. “தமிழ் வாழ்வை எழுதிக் குவித்துவிட்டார்கள். சலிப்புத்தான் எஞ்சுகிறது. நான் எழுத விரும்புவது அதைத் தாண்டிய கதைகளைத்தான்” என்றார் சக இளம் படைப்பாளியொருவர்.

இந்த நூற்றாண்டில் இதுவரை உலகம் முழுதுமிருந்து உருவாகி வந்திருக்கிற மாபெரும் படைப்புக்கள் பலவும் அவர்களது சொந்த இனத்து வாழ்வின்  அடிப்படையைக் கொண்டவையே. ஆனால் நம் சூழலில் தமிழ் வாழ்வின் விலக்கம்- ஒரு படர்தாமரை போல மிக ரகசியமாக பரவுகிறது. தமிழ் வாழ்வில் புதிய அறமதிப்பீடுகளையும், விசாரங்களையும் வாழ்க்கை கோரும் கேள்விகளையும் படைக்க இந்த நூற்றாண்டு ஒரு அரும்வாய்ப்பாக உள்ளது என்பதை மீண்டுமொருமுறை உரத்துக் கூறுகிறேன்.

கலையின் முக்கிய அம்சமே படைப்பாளியின் உணர்வில் கலந்து நிற்கும் அனுபவமே. அது நீக்கம் பெற்றாலோ, திரள மறுத்தாலோ படைப்பெனும் தகுதியை அடையாது போய்விடும். இன்றைக்கு அதிகளவில் நிகழ்வது இதுதான். ஆனால் இன்னொரு புறம் நம்பிக்கையளிக்கும் படைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன. சக படைப்பாளிகளான சுநீல் கிருஷ்ணன், கார்த்திக் புகழேந்தி, ம.நவீன், வாசு முருகவேல், செந்தில் ஜெகன்னாதன், ஜா. தீபா, தீபுஹரி, கமலதேவி, ரமா சுரேஷ், தெய்வீகன், லெ.ரா. வைரவன், முத்துராசா குமார், கார்த்திக் பாலசுப்ரமணியன், காளி ப்ரசாத்,  சித்ரன், தூயன், அஜிதன் எனத் தொடரும் இளம் படைப்பாளிகளின் படைப்புக்கள் தமிழ்த் தன்மையை, பிராந்திய பண்பாட்டை முன்வைக்கின்றன. இந்தப் படைப்பாளிகளின் பெயர்கள் என்னுடைய வாசிப்பை அடிப்படையாகக் கொண்டவை.  இவர்களின் நிரையில் ச. துரையையும் சேர்த்துக் கொள்கிறேன்.

ச.துரையின் “தீடை” சிறுகதைத் தொகுப்பு புதிய வரவொன்றின் அசலான பிரகடனம். மனித மனங்களை இருளுக்கும் ஒளிக்கும் பங்கிடுகிறார். தர்க்கங்களின் வழியாக கண்டடைய இயலாத இருப்பு பற்றிய பதற்றத்தை இயற்கையோடும் – உலகியல் அவஸ்தைகளோடும் தணிக்கிறார். இத்தொகுப்பில் உள்ள கடல் – வாய்பிளந்து நிற்கும் பேய்க்கடல். இந்த நூற்றாண்டில் தமிழ் வாழ்வை எழுதும் ஒருவனுக்கு கடல் ஏதேனுமொரு அலையில் முள்ளிவாய்க்காலின் உடலங்களைக் காட்டாமல் போகுமா?

ச. துரையின் கதைகள் நிகழ்தகவைப் போல நிகழ்கின்றன. யதார்த்தத்தின் குரூர நிச்சயங்களோடு முரண்படுகின்றன. பாத்திரங்களின் எண்ணங்களும் கனவுகளும் ஆசைகளும் சராசரி உலகியல் அம்சங்களுக்காக ஏங்குகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் யாவற்றிலும் மனங்குலைந்த சித்திரமும், எதற்கென்று உணர இயலாத  கொந்தளிப்பும், துர்மரணங்களும் நிகழ்கின்றன. இவைகளை கனவிலும் நினைவிலுமாய் துயரங்களின் நடுக்கத்தால் அச்சப்படும் கதைகள் எனலாம்.

தமிழ்ப் புனைவுலகம் எல்லைகளைத் தகர்த்து முன்னேறுவதில் ஆர்வமுடையது. புதிய வெளிகளில் அது தன்னை பரிசோதிக்கவும் தயங்குவதில்லை. படைப்பாளி உளப்பூர்வமாக இதுபோன்ற கூர்மையான செயல்களில் இறங்கவேண்டும். யதார்த்தவாதம் என்பதைக் கடந்து வேறொரு உலகை சிருஷ்டிக்க எண்ணுபவர்கள் நமது மரபை காவு கொடுக்காமல் முயன்று பார்க்கலாம். ச. துரைக்கும் இந்த ஊடுருவல் மீது பிடிப்பு இருக்கிறது.  திரோபியர் தானேஸ், வாசோ, குரைக்கும் பியானோ கதைகள் அந்தப் பிடிப்பின் சாட்சிகள்.  வாசோ கதையில் வருகிற சிறுமியின் தீப்பந்தம் ஏந்திய சித்திரம் இருள் கவிந்த காலத்தின் சிறுசுடரென, தத்தளிக்கும் விடுதலையின் மீதமான வரியெனத் தோன்றுகிறது. இத்தொகுப்பின் சிறந்த கதை வாசோ.

ச. துரையை எழுத்தாளனாக அறிவிக்கும் சிறந்த முகவரியும் இந்தக் கதைதான்.

வாழ்வின் அடர்த்தியும், தகிக்கும் அல்லல்களுமே கலையாகிவிடுமா என்பவரும் உண்டு. ஆமாம் அது மட்டுமே கலையாகிவிடுமா என்ன! பொன்னகரம் கதையில் அம்மாளுவின் அலைவு – வெறுமென ஒரு ஆவணத்தன்மையாக எழுதப்பட்டிருந்தால், இன்று நினைவுகூரப்படும் கதையாக அது பிழைத்திருக்குமா!

தீடை தொகுப்பின் போதாமைகளில் முக்கியமானவை. கதை கூறும் முறையிலுள்ள சிதறல் தன்மை. குவிய மறுத்த கதை மொழி. படைப்பின் சுதந்திரத்தையும், சூக்குமத்தையும் அனுமதிக்காத கதைசொல்லியின் கடும்போக்கு. “தன்னையே பாதிக்காத அனுபவத்தை வைத்துப் படைப்பாளியால் பிறரைப் பாதிக்கச் செய்யும் படைப்பை எப்படி உருவாக்க முடியும்?” என்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் இந்த வரிகள் இத்தொகுப்பின் ஓரிரெண்டு கதைகளை வாசிக்கும் போது நினைவிலாடியது.

ச. துரையின் கதைகள் வாழ்வுக்கும் அலைதலுக்குமிடையே காத்திருந்து காயும் கடல்நிலத்தில் விரிகிறது. வெவ்வேறு குரல்களின் வழியாக வெளிப்படும் அம்பா பாடல்கள். உப்பு நீரில் தோய்ந்து காற்றுலர்த்தும் வலையைப் போல, எவ்வளவோ பாறைகளையும், ஆழங்களையும் கண்ட தரிசனங்கள். நம்பிக்கையினால் சமாதானங்களை உயிர்ப்பிக்கும் சகிப்புத்தன்மை கொண்டவர்களைப் படைக்கிறார். நினைவாலும், பயங்கரங்களாலும் துன்புறுத்தப்படும் கடல் மனிதர்களின் மீட்சி பற்றி சிந்திக்கிறார். இந்தப் பொருண்மையாலும் தீடை சிறுகதை தொகுப்பு சிறந்ததாக மாறியிருக்கிறது.

தொடர்ந்து வாசித்து, எழுதுவதன் மூலமாக தமிழ் இலக்கியப் புனைவு வெளியில் உறுதியான தாக்கத்தைச் செலுத்தவல்ல எழுத்துச் சக்தியாக ச. துரை திகழுவார். அவர் திகழவேண்டும் என்பது என்னுடைய ஆத்மார்த்தமான விருப்பம்.

எழுத்தாளர் ச. துரைக்கும், இந்நூலை வெளியிட்ட சால்ட் பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.

 

அகரமுதல்வன்

 

The post தீடை – கடல் எனும் வாசோ first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2024 12:35

உன் யாதுமாகிய நான் – க. மோகனரங்கன்

ரயிலில்

நமது இருக்கைகளை

நாம் மாற்றிக்கொண்டோம்.

நீ ஜன்னலருகே

இருக்க விரும்பினாய்;

நானோ உன்னைப் பார்த்துக்கொண்டிருக்க

விரும்பினேன்.

மம்மூத் தர்வீஷ்

 

உன் யாதுமாகிய நான்

The post உன் யாதுமாகிய நான் – க. மோகனரங்கன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 05, 2024 11:25

May 4, 2024

என்னை

01

தொலைகடல் விளிம்பில்

விழுந்து சிதறும் விண்வீழ் கல்

என்னில் மோதியது

எரிந்த வாழ்வின் சாம்பல் கனத்து

புயலாய் மூடியது

கணத்தில்

என்னை நானே நினைவுகூர்ந்து

செழுஞ்சுடரைத் தீண்டினேன்

மிஞ்சிய நிழலும் உதிர்ந்து

உறக்கம் விழிக்கையில்

இக்கனவு வெந்தது.

 

02

எனக்கேது இருள்?

கனவுதான்

எனக்கேது கனவு ?

கனவுதான்

 

03

இலைகளுதிர்ந்த மரத்தின் கிளையில்

கூடு கட்டும் பறவையின் பொருட்டு

துளிர்க்கும்

வசந்தத்தின்

முதல் குருத்து.

 

 

 

 

The post என்னை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 04, 2024 10:47

May 2, 2024

இரவாகிப் பகலாகும் கதைகள்

வீனத் தமிழ் புனைகதையெனும் பெருவெளியில் நிரையான சாதனைகளும் மகத்துவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் அந்த மாட்சிமை அறுபடாத தொடர்ச்சியுடன் அரிதாக இயங்குகிறது என்பதே மிகப்பெரும் ஆறுதல். ஆனால் இன்றுள்ள இலக்கிய இணைய இதழ்களில் பெருகிவழியும் புனைவுகளில் பலதும் கசடுகள். வெறுங்குறிப்புக்கள். எந்த இலக்கியப் பெறுமதியுமற்றவை. முகநூல் எழுத்துக் கலாச்சாரத்தில் ஜனித்தவை. சொல்லப்போனால் கலைகோரும் எந்தக் கூறும் மூக்குத்தி அளவும் இல்லாத சொற்குவிப்புக்கள். இந்தப் போதாமைகளை அச்சில் ஏற்றி, அதற்கொரு இலக்கிய அந்தஸ்து வழங்கவும் தமிழில் பதிப்பகங்கள் நிறைந்திருகின்றன. பி.ஓ.டி என்கிற தொழில்நுட்பத்தின் வருகை நவீனத் தமிழ் வாசனுக்கும் பெரும் சோதனைதான்.

எதை எழுதிச் சென்றாலும் புத்தகமாக ஆக்கிவிடும் பதிப்பகங்கள் மெய்யான வாசகனுக்கேனும் கருணையோடு நடந்து கொள்ளவேண்டும். இப்படியான இலக்கிய உள்ளீடற்ற புத்தகங்களைப் பதிப்பித்து விட்டு, புத்தக விற்பனை மந்தம், இப்போதெல்லாம் புத்தகம் யார் படிக்கிறார்கள் என்று அவநம்பிக்கையாக பேசுவதில் பலனில்லை. சில முக்கியப் பதிப்பகங்கள் பி.ஓ.டி முறையில் குறைவான தலைப்புக்களை உருவாக்குகின்றனர்.  அதன் தரம் அச்சுக்கு சோரம் போகாதது. ஆனால் வேறு பல பதிப்பகங்கள் பி.ஓ.டியில் மட்டுமே இயங்குகின்றன. அது ஒருவகை கல்லாக்கட்டும் தொழில். “எந்தக் கசடையும் எழுது, புத்தகம் போட வேண்டுமானால் காசோடு வா” என்று அழைப்புக்கோரும் பதிப்பங்களை அறிவேன். இலக்கியத்தை தீவிரத்தோடு முன்வைக்கும் ஒரு தரப்பை, மேற்சொன்ன தரப்பு அறிவதேயில்லை. இவர்கள் தமிழ் புனைகதையின் நீரோட்டத்தை, அதன் வளத்தை ஆக்கிரமித்து வளர்ந்து நிற்கும் ஆகாயத்தாமரைகள். ஆற்றின் அழகை மூடி நிற்கும் களைகள்.

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் தான் ஒரு சிறந்த புத்தகத்தை இன்றுள்ள மெய்யான வாசகன் கண்டடைய வேண்டும். தவறவிடுவதன் வழியாக சிறந்த எழுத்தை, எழுத்தாளனை கண்டடையமுடியாத துர்ப்பாக்கியம் நிகழ்கிறது. இன்று சிறந்தவொன்றுக்கு நிகழ்பவை  பாராமுகம். புறக்கணிப்பு. கவனயீனம் அன்றி வேறில்லை. அரிதிலும் அரிதாகவே இன்று சிறந்தவைகள் அடையாளம் காட்டப்படுகின்றன. இலக்கியத்தைக் கொண்டாடும் புதுயுகத்தின் ஒரு திரள் இன்று உருவாகி வந்துள்ளது. அவர்களின் வழியாகவே சிறந்தவைகள் பொதுவெளியில் சுட்டிக்காட்டப்படுகின்றன. எந்தப் பேதமோ, குழுவாதமோ அற்ற வாசக நிலையினால் நிகழும் ஒரு தவமது.

சமீபத்தில் அப்படியொரு சிறந்த பிரதியை வாசித்து முடித்தேன். எழுத்தாளர் சித்ரன் எழுதிய பொற்பனையான் சிறுகதை தொகுப்புத்தான் அது. சித்ரன் தற்காலத்து சிறுகதை ஆசிரியர்களில் மிகச் சவாலானவர். அரிதிலும் அரிதான விசாரங்களை நிகழ்த்துகிறார். இந்தத் தொகுப்பு நம் கவனயீனத்தால் இன்றுவரை பெரிதாக அடையாளம் காணாதது. ஆறு சிறுகதைகளும், ஐந்து குறுங்கதைகளையும் கொண்டிருக்கின்றன.

“நம்பிக்கையோடு இருப்பதற்கு எண்ணற்ற சாத்தியங்கள் இருக்கின்றன. ஆனால் அவை நமக்கானவை அல்ல”  என்ற காப்காவின் அவநம்பிக்கையான இந்த வாக்கியத்தையும் சித்ரனின் கதைகளையும் பொருதவிட்டால், ஒரு தரிசனம் கிடைக்கிறது. நேர்மறைப் பெருக்கு மொழியின் சுழி குவிந்து ஓடும் கதைகள் இவருடையது.  ஒருவகையில் யதார்த்தவாதத்தின் மரபார்ந்த கதைகூறலை தன்னுடைய பலமாக நிர்மாணிக்கிறார். ஒரு மரங்கொத்தியின் நுணுக்கத்தோடும் கூர்மையோடும் அந்த யதார்த்தவாதத்தின் மீது தனது மொழி அலகால் துளையிட்டு ஒரு மாயத்தை நிகழ்த்துகிறார். “புங்கமரத்தாயி” என்கிற சித்ரனின் குறுங்கதை தமிழில் எழுதப்பட்டவற்றுள் முதன்மையான நிரையில் நிற்கும் சத்தியுடையது. கருகிய மரம் துளிர்த்த மறுநாள் என்பது எவ்வளவு ஆறுதலான படிமம். இந்தக் கதை எழுதப்பட்டிருக்கும் விதம், எந்த வடிவச்சோதனையுமற்றது. ஆனால் ஒரு கதை யதார்த்தவாத கதையாக எழுதப்பட்டு வாசிப்பின் முடிவில் மாய – யதார்த்தவாதமாக திரண்டு வருவதெல்லாம் எழுத்தாளன் நமக்கருளும் அனுபவம்.

இந்தத் தொகுப்பு குறித்து மொழிபெயர்ப்பாளர் நரேன் எழுதிய கட்டுரையை வாசித்தேன். “சித்ரனுக்கு கைகூடியிருக்கும் மொழி அழகும், இலகுவாகக் கதையை தன் போக்கில் விவரித்தபடியே செல்லும்  பாங்கும், புறவுலகின் இயல்பான சூழலில் கூட மர்மங்களைக் கண்டறியும் ஆர்வமும் அவரின் படைப்புகள் மேல் ஆர்வத்தை உருவாக்குகிறது” என்கிறார். சிறந்த அவதானிப்பின் வெளிப்பாடு.

சித்ரனின் கதைகள் ஆழமான உறங்குநிலையிலுள்ள கனவினைப் போன்றவை. ஏனெனில் உலகின் விசையோடு, அது சேர மறுக்கிறது. மையக் கதாபாத்திரங்கள் பலதும், வேறுலகில் இணைந்திருப்பவை. இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்றாக அடையாளமிட்டுச் சொல்ல விரும்புவது “உடல் இயற்கை துறவு எனும் ஃ” கதையைத்தான். சேகர் என்ற கதாபாத்திரம் தேவதேவியரின் ஆலிங்கனச் சிற்பங்களை செதுக்கும் காட்சி மாயத்தன்மையின் கலையுச்சம். தர்க்கங்களை கோரும் வறட்டுவாதிகளுக்கு அகப்படாத கலையின் செழுஞ்சுடர் பரவி நிற்கும் கதை. சித்ரன் இன்று எழுதும் பலருக்கும் சவாலானவர் என்பதற்கு இக்கதை ஒரு சான்று.

சில கதைகளில் சம்பவங்கள் அடுக்கப்படுகின்றன. சிலவேளைகளில் அவர் கைக்கொள்ளும் உத்தியாகவும் இருக்கலாமெனத் தோன்றுகிறது. ஆனால் புனைவில் சம்பவங்களின் எண்ணிக்கையை விடவும் முக்கியமானது, அவற்றின் அவசியம். எழுத்தாளனின் தன்னனுபவமாக மட்டுமே வாசகரின் மனதில் எஞ்சிவிட்டால் எல்லாமும் வீண். சித்ரனின் ஓரிரண்டு கதைகளில் இந்த ஆபத்து நேர்கிறது. அது வெறுமென கதை சொல்லியின் தன்னனுபவமாக மட்டுமே எஞ்சும் .

“பரிதவிக்கும் தன் காலத்துக்கான கனவுகளைக் கண்டடைபவனே இன்றைய படைப்பாளி” என்கிறார் இலக்கிய ஆளுமை  சி. மோகன். இத்தொகுப்பு அப்படியொரு படைப்பாளியினுடையது. தமிழின் சமகால புனைவெழுத்து முன்னேறிச் செல்லும் பாங்கையும், வேகத்தையும், திக்கையும் கண்டறிய உதவுபவை பொற்பனையான் சிறுகதைகள். தற்காலத்தின் சிறந்த தொகுப்பு.  சித்ரனின் கதைகூறல் முறையும், அவர் தேர்வு செய்யும் களங்களும் புதிதாகவுள்ளன. அணுகுமுறை இந்த யுகத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. சித்ரன், மண்ணையள்ளி மொழியில் அப்பி, கதைகள் வனையும் அசல் கலைஞன். வாழ்த்துக்கள் சமகாலத்தின் பொற்பனையான்.

இத்தொகுப்பினை வெளியிட்ட யாவரும் பதிப்பகத்திற்கு நன்றி. சிறந்த புதுயுகத்தின் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் இந்தப் பதிப்பகத்தின் எண்ணங்கள் வெல்லட்டும்.

அகரமுதல்வன்

 

 

The post இரவாகிப் பகலாகும் கதைகள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 02, 2024 12:04

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.