Jeyamohan's Blog, page 1721
October 15, 2016
காந்தி கடிதங்கள்
அன்புள்ள ஜெ…
உங்களின் வலைப் பக்க வாசிப்பாளன் என்ற முறையில் உங்களைப் பின் தொடர்பவன் நான் காந்தியைப் பற்றிய உங்களது உரை என்னை ஒரு வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்று விட்டது! நீங்கள் எப்படி காந்தியை அவதானித்து எழுதுகிறீர்களோ அதைப் போலவே உங்களை அவதானிக்கும் ஒரு முயற்சி என்னிடம் உண்டு. நான் ஒன்றும் தேர்ந்த அறிவாளி அல்ல. ஆனால் அறிவாளிகள் எழுதுவதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் உடையவன்.
அமெரிக்காவில் 18 வருடங்களாக உள்ளேன். அமெரிக்காவைப் பற்றி எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு. நீங்கள் உங்கள் உரையில் தொட்டுச் சென்ற எல்லாவற்றுக்கும் முதலான காரணி அமெரிக்கா என்பது என் அசையா நம்பிக்கை. நீங்களே கூட காந்தியை ஆராதித்தாலும் வலதுசாரி சிந்தனைகள் அதிகம் கொண்டவராகவே நான் நினைத்ததுண்டு! ஆனால் Federalism, Consumerism, Globalism என எல்லாவற்றிலுமே நீங்கள் சொன்ன விடயங்கள் என் கருத்துகளை ஒத்தவையே. அமெரிக்காவின் காபிடலிசத்துக்கும் இவற்றுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன. நம் வாழ்க்கையே ஒரு hypocrisy என ஆகி விட்டது! என் நண்பரிடம் நான் அடிக்கடி சொல்லுவேன். Life is Hypocrisy. இதை நினைத்து நான் வருந்தும் போது சுற்றிலும் மற்ற நண்பர்களையும் பார்க்கிறேன். என்னையே ஒரு முட்டாளாக உணர்கிறேன்! ஏன் எல்லாரும் வாழ்க்கையை ஒரு running race மாதிரி நினைத்து ஓடிக் கொண்டுள்ளோம்? அவன நிறுத்தச் சொல்லு …அப்புறமா நான் நிறுத்தறேன் என ஏன் இருக்க வேண்டும். ஆனால் தீவிரமாகச் சிந்தித்தால் புரிவது என்னவென்றால் இதை இனிமேல் தனி மனிதர்களால் மாற்ற முடியாது என்பதே! இதுவே ஒரு வாழும் முறை என்றாகி விட்டது! செல் போன் பற்றி நீங்கள் சொல்லியதை வைத்து எத்தனை பேர் 3 வருடங்களுக்கு ஒரு செல் போன் வாங்கப் போகிறார்கள்? கடந்த 18 வருடங்களில் நான் 8 செல் போன்கள் பாவித்துள்ளேன். இப்போது இருப்பது என் இரண்டாவது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன். மூன்று வருடங்களாகப் பாவிக்கிறேன். எல்லாரும் என்னைக் கஞ்சன் என்கின்றனர்!
எல்லாவற்றிலும் மையம் தேடும் அல்லது மையம் இருக்க வேண்டும் என்ற நம் மனோநிலையின் விளைவே இந்த வாழ்க்கைமுறை. அதை நீங்கள் மிக அழகாகச் சொன்னது கண்டு வியந்தேன். பல நாடுகள் சுற்றும் போது தான் வாழ்க்கை என்றால் என்ன எனப் புரியும். அந்தப் புரிதலுடன் கூடிய இத்தகைய உரைகள் நிறையப் பேரைச் சென்றடைய வேண்டும். அதனால் அவர்களது வாழ்க்கை முறையில் ஒரு தெளிவு பிறந்தால் நல்லதே!
உங்களிடம் பேச நிறைய உள்ளது. முடியும் போது எழுதுகிறேன்!
அன்புடன்,
பாலா.
அன்புள்ள பாலா
இன்றையநிலையில் காந்தியைப்புரிந்துகொள்வதென்பது அவர் முன்வைத்த பிரச்சினைகளை புரிந்துகொள்வதே. தீர்வுகளை அவருக்கு நூறாண்டுகளுக்குப்பின் அவர் எண்ணிப்பார்க்காத சூழலில் வாழும் நாம் வேறுவகைகளில்தான் புரிந்துகொள்ளவேண்டும்
அது உலகம்தழுவிய பிரச்சினை என்பதனால் உலகளாவிய காந்தியசிந்தனையாகவே தீர்வும் வளரமுடியும் என நினைக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ..
வாசன் , சாவி போன்றோர்களின் நோக்கம் வணிகம் என்றாலும் இலக்கியப்பங்களிப்பும் ஆற்றி இருக்கின்றனர் என சொல்லி இருந்தீர்கள்
சாவியின் நவகாளி யாத்திரை நூலை வெகு ஆவலுடன் படித்தேன்.. எப்பேற்பட்ட வரலாற்று சம்பவம் , எப்பேற்பட்ட வரலாற்று மனிதரை சில நாட்கள் அவதானிக்கும் வாய்ப்பு… ஆனால் அந்த புத்தகம் எனக்கு ஏமாற்றம் அளித்தது.. உங்களாலேயே பாராட்டப்படும் ஒருவர் , இவ்வளவுதான் கவனித்தாரா என தோன்றியது…மற்றபடி அவர் நல்லெண்ணம் புரிந்தது
அந்த யாத்திரை குறித்து அன்றைய தமிழ் இதழ்களின் பதிவுகள் அல்லது அது குறித்து எழுதப்பட்ட தமிழ் நூல்கள் தங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என அறிய ஆவல்…
அன்புடன்,
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்,
உண்மையைச் சொல்லப்போனால் நவகாளி யாத்திரை பற்றி அல்ல ஏராளமான வரலாற்று நிகழ்வுகளைபற்றியும் தமிழில் முறையான பதிவுகள் இல்லை. நுணுக்கமான தகவல்களுடன் எழுதப்படும் சித்திரங்கள் இங்கே இல்லை. எளிய போகிறபோக்கிலான குறிப்புகள். மிகைநவிர்ச்சிகள். நம்பகத்தன்மை என்பது சொல்பவரின் சமநிலை சார்ந்தது. அதைத்தேடித்தான் பார்க்கவேண்டும்
ஏன் சமகால வரலாறான ஈழப்போர் பற்றி எத்தனை சமநிலைகொண்ட பதிவுகள் உள்ளன? நான் புஷ்பராஜவின் நூல் ஒன்றை மட்டுமே சுட்டிக்காட்டுவேன். பிற எல்லாமே பொய்யுணர்ச்சிக்கூச்சல்கள்.
சில விதிவிலக்குகள் உண்டு. தி.சே.சௌ.ராஜனின் நினைவலைகள், கோவை அய்யாமுத்துவின் வாழ்க்கைக்குறிப்புகள், க.சந்தானத்தின் நினைவலைகள் போன்றவை.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 2
அன்புள்ள ஜெ
நான் மனதில் நினைத்திருந்தது இவ்வருடம் நடந்தேறியிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி !
சில வருடங்களுக்கு முன்பு எதேச்சையாக ஒரு சலூன் கடையில் இந்தியா டுடே (தமிழ்) வாசித்துக் கொண்டிருக்கையில் வண்ணதாசனுடைய “நீச்சல்” சிறுகதை வாசிக்க நேர்ந்தது. என்னை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி அவருடைய அனைத்து தொகுப்புகளையும் வாசிக்கச் செய்தது. எனக்கு சிறுவயதில் நீச்சல் பழக்கிவிட்ட ஒருவரை இது ஒத்திருந்ததால் இருக்கலாம். அதையொட்டி அவருக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். சிறுவயதில் நீச்சல் பழக்கிவிட்டு தனக்கு உதவியும் செய்த ஒருவரை திரும்ப சந்திக்க கிராமத்திற்கு திரும்ப வரும் ஒருவனின் கதை.
“இந்த வீடு, என் மனைவி, மகள், கார் அனைத்தையும் ஒரு பொட்டலத்தில் கட்டி மகாதேவன் பிள்ளையிடம் காண்பிக்க வேண்டும்“ என்ற ஒரு வரி அச்சமயத்தில் என்னை வண்ணதாசனை தேடவைத்தது. அவருடைய அனைத்து கதைகளும் நெகிழ்ச்சியான கதைகள்…
அவரைப்போலவே… அணில் அவருடைய சிநேகத்திற்குரிய ஒரு உயிர் என்று நினைக்கிறேன் ! ஒரு இலை, ஒரு புல், ஒரு ஜன்னல் அல்லது ஒரு பூ போதும்… அதை ஒரு மிக அழகான கதையாக மாற்றிவிடும் வல்லமை அவருக்கு உண்டு.
கதையின் பெயர் மறந்துவிட்டேன்… ஒரு சேர் ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்கச் செல்கையில் ஒரு சிறுவனுடன் நடக்கும் உரையாடல்…. அவர் வாழ்க்கையில் மனிதர்களைப்பற்றி கவனிக்காத இடமே இல்லையோ என்று தோன்றச்செய்தது! இன்னும் எவ்வளவோ அவருடைய கதைகளைப்பற்றி கூற வேண்டியிருக்கிறது.
“வாழ்க்கையில் நடந்த ஒரு மிகச்சாதாரண நிகழ்ச்சிகூட ஒரு அருமையான கலைப்படைப்பாகிறது“ என்ற ஒரு வரி வண்ணதாசனுக்கு மிகவும் பொருந்தும். அவருடைய கதைமாந்தர்களை நாம் தினமும் நமக்கு அருகாமையில் பார்க்க முடியும் என்பது அவரை படித்தவர்களுக்குப் புரியும்.
ஒருமுறை சென்னையில் மாம்பலத்தில் அவருடைய வீட்டைத் தேடி அலைந்திருக்கிறேன். அவர் நெல்லைக்கு மாறியது தெரியாமல்! மரபின் மைந்தன் வலைப்பூ அறிமுக விழாவில் கோவையில் சந்தித்து சிறிது உரையாடினேன்.
இந்த வருடம் “விஷ்ணுபுரம்” விருதுக்கு மேலும் பெருமை சேர்ந்திருக்கிறது. விஷ்ணுபுரம் கிரீடத்திலுள்ள ரத்தினைக் கற்களின் மையக்கல் வண்ணதாசன்தான் என்பது என்னுடைய கருத்து !
சுரேஷ்பாபு பாலன்
***
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். சென்ற வருடத்திலிருந்தே விஷ்ணுபுரம் விருது பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டிருந்தது. வண்ணதாசனுடனான என் அறிமுகம் என்பது முகநூல் வழியாவே தொடங்கியது.
உயிர் எழுத்தில் பிரசுரமாகிருந்த என் சிறுகதையைப் பற்றி அவர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதுவரை நான் அவரை எங்கும் சந்தித்ததில்லை. அப்படி அவர் முகநூலில் குறிப்பிட்டிருந்தது என்னுள் புது உத்வேகமாக பீறிட்டது. அவரை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் தொற்றிக்கொண்டது.
மதுரை புத்தக் கண்காட்சியில் வெய்யிலின் கவிதை தொகுப்பு வெளியீட்டில் சந்தித்தபோது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். மெல்லிய புன்னகையுடன் என்னை நினைவுகூர்ந்தவர் என் கைகளைப் பற்றி ‘நிறைய எழுதுங்க” என்றார். மிக மென்மையாக இருந்தார். நிதானமாக வெளிப்படும் குரல். வசீகரமான புன்னகை.அவரது ஆளுமை என்னுள் ஒரு சித்திரம் போல் தங்கிவிட்டிருந்தது. அதன்பின் வண்ணதாசன் என்கிற பெயரை பார்க்கின்றபோதெல்லாம் அச்சித்திரமே நினைவில் வரும்.
இலக்கியம் வாசிக்கத்தொடங்கிய புதிதில் நூலகத்தில் அவரது ‘தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள், நடுகை’ வாசித்துவிட்டு அக்கதைகளை அசைபோட்டபடியே புத்தகத்தை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பேன். கதைகளில் சிறு அசைவுகள் கூட நுண் சித்திரமாக்கியிருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்.
என்னளவில் சிறுகதைகளில் வெளிப்படும் வண்ணதாசனும் கவிதைகளில் வெளிப்படும் கல்யாண்ஜியும் வேறுவேறானவர்கள். சிறுகதைகளில் மெளனமான நதியாக ஓடுவது கவிதைக்குள் நுழைந்ததும் காட்டாறுபோல பாய்ச்சலுறும். நுண்ணிய அவதானிப்பு கொண்ட சொற்கள் கூர்மையாக வந்துவிடும். சில நேரம் அக்கவிதைகள் சட்டென்று ஓங்காரமாகத் எழுந்துவரக்கூடியன
இலக்கிய வாசகர்கள் சங்கமிக்கின்ற நிகழ்வாக விஷ்ணுபுரம் விருது மாறிவிட்டிருக்கிறது. இதை இக்காலக்கட்ட இளம் வாசகர்கள்/படைப்பாளிகளுக்கு பெரும் வரம் என்றே நான் சொல்வேன். சிறுகதைகளிலும் , கவிதைகளிலும் தவிர்க்கவியலாதவொரு ஆளுமையுடன் உரையாட இவ்வருட டிசம்பருக்காக காத்திருக்கிறோம்…..
அன்புடன்
தூயன்
***
அன்புள்ள ஜெ,
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்னும் செய்தி மிகுந்த மகிழ்ச்சி அடையச்செய்தது. அவரது வாசகர்கள் எப்போதும் அவரை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரை பொதுவாக இலக்கிய உலகம் போதுமான அளவுக்கு கண்டுகொள்லவில்லை
அதற்கான காரணங்கள் என்று எனக்குத் தோன்றுவது சில உண்டு. பார்த்தால் தெரியும். இங்கே அறிவுஜீவிகள் ஒருவரைக் கொண்டாடுவதென்றால் அவர் பலரால் வாசிக்கப்படாதவராகவும் இவர்கள் மட்டுமே கண்டுபிடித்துச் சொல்பவராகவும் இருக்கவேண்டும். அவ்வப்போது அப்படி எவரையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மிகச்சாதாரணமான எழுத்துக்களைக்கூட எடுத்துவைத்து அக்கக்காக அலசி எதையாவது கண்டுபிடித்துக்கொண்டிருப்பார்கள். பார்த்தாயா நான் உன்னைவிட அபூர்வமானவன், ஆகவே நீ வாசிக்காததை நான் தேடி வாசிக்கிறேன். இதெல்லாம்தான் பாவனை. இவர்களுக்கு பல்லாயிரம்பேர் விரும்பும் வண்ணதாசன் மீது ஈடுபாடு இருப்பதில்லை
மறுபக்கம் வணிக எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவரது எழுத்தின் பூடகமும் நுட்பமும் பிடிகிடைப்பது இல்லை. ஆகவே அவர்களும் விரும்புவதில்லை. அவர்களுக்குரிய அங்கீகாரமும் புகழும் வண்ணதாசனுக்கு வருவது இல்லை.
ஆனால் இதெல்லாம் போலியான பாவனைகள். மனசைத்திறந்துவைத்து வாசிப்பவர்களுக்காக வண்ணதாசன் எழுதிக்கொண்டேதான் இருக்கிறார் என நினைக்கிறேன்
முருகேஷ்
***
அன்புள்ள ஜெமோ
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். வழக்கமான சம்பிரதாய வாழ்த்து சொல்லவில்லை. உண்மையாகவே எனக்கு இது கொண்டாட்டமான நிகழ்ச்சி. விஷ்ணுபுரம் விருது இதனால் பெருமைபெற்றுள்ளது
வண்ணதாசனை நான் என் இளமைக்காலம் முதல் வாசிக்கிறேன். இளமையில் அவர் எனக்கு இனிய தித்திப்பை அளித்த எழுத்தாளராகத்தான் இருந்தார். நான் வளரவளர அவரும் வளர்ந்தார். இன்றைக்கு மனிதர்களின் முடிவில்லாத முகங்களைக் காட்டும் எழுத்தாளராக மாறியிருக்கிறார். இன்று அவர் எனக்கு அளிப்பது வேறு உலகம்
வண்ணதாசனை நிறையபேர் இளமையில் வாசித்தபின் விட்டுவிடுகிறார்கள். பிறகு அன்றைக்கு வாசித்த நிலையிலேயே அபிப்பிராயங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வண்ணதாசனை அறியவில்லை என்றுதான் அர்த்தம்
அவர் இனிப்பை மட்டும் எழுதுபவர் என்று சிலர் சொல்வதுண்டு. நான் அவர்களிடம் நீங்கள் கடைசியாக அவரை எப்போது வாசித்தீர்கள் என்றுதான் கேட்பது வழக்கம்
முதிர்ச்சியடைந்த வாசகன் வண்ணதாசனிடம் அடைவதற்கு நிறையவே உள்ளன. இளமையில் வாசித்ததை உடைத்தபடி மீண்டும் அவருக்குள் நுழையவேண்டியிருக்கிறது
இந்தச்சிக்கல் ரூமி, கலீல் கிப்ரான் போன்ற கவிஞர்களுக்கும் உண்டு. இளமையிலேயே அவர்கள் அறிமுகமாகிவிடுகிறார்கள். அப்போது உள்ளக்கிளர்ச்சி அளிக்கிறார்கள். மறுமுறை அவர்களைச் சென்று வாசிக்காவிட்டால் நாம் நிறைய இழந்துவிடுவோம்
மகேஷ் பாலகிருஷ்ணன்
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது – தினமலர்
வண்ணதாசனுக்கு விருது தமிழ்இந்து
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 14, 2016
இருத்தலின் இனிமை
அமெரிக்காவில் ஒருமுறை சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு வீட்டு முற்றத்தில் பெரிய சாம்பல்நிற ஓணானின் பொம்மை ஒன்றை இளவெயிலில் மேஜை மேல் வைத்திருப்பதை பார்த்தேன். அதன் அருகே நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் வணக்கம் சொன்னபின் அது என்ன என்று கேட்டேன். மரகதத்தால் ஆன ஒரு சிற்பம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சட்டென்று அது இமைத்தது. அப்போதுதான் அது உயிருள்ளது என்று தெரிந்தது. ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனேன்.
அது நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓர் ஓணான் என்று அவர் சொன்னார். Tuatara என்றுபெயர்.பழைய டைனோசர்களின் வம்சம். அதை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். ”என்ன உணவு கொடுக்க வேண்டும்?” என்று கேட்டேன். ”மாமிசத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்க வேண்டும். ஆனால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு துண்டு மாமிசம் கொடுத்தால் போதும்”. நான் வியப்புடன் “பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையா?” என்றேன். “ஆம் இதன் வாழ்நாள் மிக நீண்டது. சராசரியாக இருநூறு ஆண்டுகள் வாழும். எனது தாத்தா நியூசிலாந்தில் நில அளவையாளராக வேலை பார்த்தபோது இதை கொண்டு வந்தார். இப்போது நான் வைத்திருக்கிறேன் என் பேரப்பையனின் காலம் வரைக்கும் கூட இது இருக்கும்” என்றார் அவர்.
அந்த ஓணானின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் ஒன்றே. அது அநேகமாக அசைவதே இல்லை. அதிகபட்சம் ஒரு நாளில் இரண்டு முறை இடம் மாறி அமர்வதோடு சரி இமைகள் கூட அடிக்கடி மூடித் திறப்பதில்லை. பெரும்பாலும் அசைவற்று அரை மயக்கநிலையில் அமர்ந்திருக்கும். குளிர்காலத்தில் ஆழ்ந்த உறக்கம். செதில்கள் இருப்பதனால் உடல் வெப்பத்தை பேணும் பொறுப்பில்லை. உள்ளுறுப்புகளும் மிக மெதுவாகவே வேலை செய்கின்றன. ஆகவே அது உணவை எரிபொருளாக்குவது மிகக்குறைவு. மிககுறைவான உணவு போதும். அதிகமாக வேட்டை ஆடவேண்டிய அவசியமில்லை. தேடி வரும் உணவை மட்டும் உண்டால் போதும்.
என் நண்பர் கால்கரி சிவா கனடாவில் இருக்கிறார். அவரை அமெரிக்காவில் ஒருமுறை சந்தித்தேன். அவர் ஏற்கனவே அவர் ஐம்பது வருடம் வயதான பிரெசில்நாட்டு கிளி ஒன்றை வளர்க்கிறார். நூறு வருடம் அது உயிர் வாழும். “என் மகனுக்கு அதில் ஆர்வமில்லை. எனக்குப்பின்னால் அதை எவருக்கேனும் விற்றுவிடவேண்டியிருக்கும்” என்று சொன்னார். அதன் வாழ்நாள் ரகசியமும் அதேதான். அசைவின்றி அமர்ந்து கொண்டே இருப்பது.
2013 செப்டெம்பரில் லடாக் சென்றபோது அந்த ஓணானையும் கிளிகளையும் போன்ற இயல்புள்ள மனிதர்கள் அங்குள்ளவர்கள் என்று தோன்றியது. அங்குள்ள அனைவருக்குமே சும்மா இருக்கும் கலை தெரியும் கம்பளி ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு ஹுக்காவை இழுத்தபடி வெயில் பெருகி சரிந்திருக்கும் மலைச்சரிவுகளை பார்த்து முழு நாளும் அசைவின்றி அமர்ந்திருப்பார்கள். காரில் செல்லும்போது தியானத்தில் என்பது போல் அமர்ந்திருக்கும் முதியவர்களைப் பார்த்துக் கொண்டே செல்வோம். சுருக்கம் அடர்ந்த முகம். சிறிய மின்னும் மணிக்கண்கள்
அவர்கள் உள்ளே என்னதான் ஓடிக் கொண்டிருக்கிறது? காலம் தன்னைக் கடந்து செல்வதை அவர்கள் உணர்கிறார்களா? அதைப்பற்றிய பதட்டம் அவர்களுக்கு உண்டா? அப்பகுதியில் இளைஞர்கள் கூட அப்படித்தான் இருப்பார்கள். பெரும்பாலான இடங்களில் இளைஞர்கள் வட்டமாக அமர்ந்து சீட்டாட்டம் ஆடுபுலி ஆட்டம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். அந்த ஆட்டம் கூட விறுவிறுப்பாக இருக்காது. நெடுநேரம் கழித்தே ஒருவர் சீட்டை விடுவார் அல்லது சோழியை நீக்கி வைப்பார். கூச்சல் சிரிப்பு எதுவுமே இருக்காது. ஒரு மந்திரவாதி தன் கோலை அசைத்து அவர்கள் அனைவருடைய பேச்சையும் செய்கைகளையும் பத்துமடங்கு மெதுவாக ஆக்கிவிட்டது போல் இருக்கும்.
அந்த உறைந்த நிலத்தில் நாம் மட்டும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருப்பதன் பொருத்தமின்மையை பார்க்கலாம். டீக்கடைக்கு சென்று அமர்ந்து உணவுக்கு உத்தரவிட்டால் அதன் உரிமையாளர் மிக மெதுவாக எழுந்து சென்று அடுப்பைப் பற்ற வைத்து உணவை தயாரித்து கொண்டு வந்து பரிமாறுவதற்கு ஒருமணிநேரத்திற்கு மேல் ஆகும். அதற்குள் நாம் பொறுமையிழந்து அசைவோம். எழுந்து சென்று அந்தக் கடையில் மாட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளைப் பார்ப்போம். பொருட்களை பரிசீலிப்போம். வெளியே நின்று சாலையை பார்வையிடுவோம். இல்லை ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளத்தொடங்குவோம்.
ஏன் நம்மால்அமைதியாக இருக்க முடிவதில்லை? அவர்கள் நடந்து செல்கிறார்கள், நாம் ஒரு ஏணியில் ஏறிக்கொண்டே இருக்கிறோம். அவர்களுக்கு இன்று மட்டுமே. நாம் நாளை, நாளை என்று இன்றை கடந்து கொண்டிருக்கிறோம்.. நாம் உண்ணும் உணவு அனைத்துமே நம் பரபரப்புக்கு எரிபொருளாக மாறுகிறது.
அங்குள்ள பௌத்த மடாலயங்கள் காலத்தில் உறைந்தவை . பௌத்த மடாலயக் கட்டிடங்களே சாதாரணமாக இருநூறு வருடம் பழையவை .உள்ளமைப்புகளும் பாத்திரங்களும் அனைத்தும் பழமையானவை .பெரும்பாலான பிக்ஷுக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் காலமற்றது. அவர்களின் பிரார்த்தனையே ஒருமணிநேரத்திற்குமேல் ஆகும். உணவுண்பதே ஒரு மணிநேரம் ஆகும். அதன் பின் ஆங்காங்கே அமர்ந்திருப்பார்கள்.
அங்கே மலைகளில் ஏறி இறங்குவதே போதுமான உடற்பயிற்சியாக அமைந்துவிடுவதால் அவர்கள் உடலில் மிகையான கொழுப்பு என்பதே இல்லை. லடாக்கில் எங்குமே தொப்பையுடன் ஒருவரை பார்க்க முடியாது. இத்தனைக்கும் அவர்கள் உணவு மிகக்குறைவானது ஒரு துண்டு மாமிசம். மிகக்குறைவாகவே மாவு, பெரும்பாலும் அதை நூடில்ஸ் வடிவில் கஞ்சிபோல அருந்துகிறார்கள். உணவு விடுதிகளில் சாப்பிடக் கேட்கும்போது அவர்கள் கொண்டு வருவது நமது கால்வயிற்றுக்குக் கூட போதாது என்று தோன்றும். அதுவும் பெரும்பாலும் ரசம் போன்ற திரவம். வெறுமே அமர்ந்திருக்க அவ்வளவு உணவு போதும் என்று தோன்றும்.
உடலை விட நம் உள்ளத்திற்கு அதிக உணவு தேவைப்படுகிறது. சாப்பிட்டபின் உணவு போதவில்லை என்று தோன்றுவது அதனால்தான். உடகாரவிடாத உள்ளம், ஓடு ஓடு என துரத்தும் உள்ளம், அமர்ந்திருந்தால் நமக்குரிய எதையோ எங்கோ எவரோ கொண்டுபோய்விட்டார்கள் என பதறும் உள்ளம்.
அவர்களின் தெய்வங்களும் அதே போல மடிமீது கைவைத்து அரைக்கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கின்றன. தன் உள்ளாழ்ந்து இதழ்களில் மெல்லிய புன்னகையுடன் தியானத்தில் இருக்கும் புத்தர் போல மலைப்பகுதிகளுக்கு பொருத்தமான தெய்வம் பிறிதில்லை. மலைச்சிகரங்களின் அமைதியும் தனிமையும் புத்தரிடம் உண்டு.
சமீபத்தில் ஸ்பிட்டி வேலி சென்றிருந்தோம். லடாக்கை A Tibet out of Tibet என்று சொல்வார்கள். ஸ்பிட்டி வேலியை A Ladakh out of Ladakh என்று சொல்வார்கள். திபெத்தின் ஒரு பகுதியாக இருந்தது, தேசப்பிரிவினையின்போது இமாசலப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சிம்லாவிலிருந்து மேலும் ஒரு முழுநாள் மலைப்பாதையில் ஏறிச்செல்லவேண்டும். இந்தியாவுக்குள் உயரமான மக்கள் குடியிருப்புப்பகுதி இதுதான். அங்கும் அதே காலமில்லா வாழ்க்கை.
நூறாண்டுக்காலம் பழைய தானியங்கி அரைவை மில் ஒன்று இருப்பதாக எண்ணி ஒரு சிற்றூரில் நுழைந்தோம். பனி உருகி வரும் நீரை கொண்டு ஒரு சக்கரத்தை சுழல வைத்து அதில் பொருத்தப்பட்டுள்ள குழவியை இயக்கி கோதுமையை மாவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதுவும் மிக மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முழுக்க அது ஓடினால்தான் ஏழெட்டு கிலோ மாவு உருவாகும்.
அதை பார்த்துவிட்டு வரும்போது லடாக்கிய தோற்றம் கொண்ட ஒரு பாட்டி தன் இரு குழந்தைகளுடன் அமர்ந்திருக்கக் கண்டோம். பேத்தியின் பெயர் ரித்திகா. அதை கையில் எடுத்து முகம் சேர்த்து கொஞ்சினேன். ரித்திகா பனி போல குளிர்ந்திருந்தாள். நான் அணைத்துக் கொண்டபோது என் தோளை கையால் வளைந்து மூக்கால் என் கன்னத்தை தொட்டாள். மஞ்சள்ஜாடி போன்ற முகம். குச்சி மூக்கு.நீர்த்துளிக்கண்கள்.
பாட்டிக்கு தன் பேரக்குழந்தையை பற்றி அவ்வளவு பெருமை. லடாக்கிய மொழியில் அவளைப்பற்றி நிறையச் சொல்லி சுருங்கிய முகம் வலைபோல இழுபட சிரித்தாள். “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டோம். அந்தக் குழந்தை பாட்டியின் கொள்ளுப்பேத்தியின் மகள் என்று தெரிந்தபோது பெரிய ஆச்சரியம் ஏற்படவில்லை. மலைப்பகுதிகளில் நூறுவயதுக்கு மேல் வாழ்க்கை என்பது சாதாரணமானது.
பாட்டி காலையிலேயே பேரக்குழந்தையுடன் அங்கு வந்து அந்த சிறிய முற்றத்தில் அமர்ந்திருக்கிறாள். பகல் முழுக்க இளவெயிலில் அங்குதான் அமர்ந்திருப்பார்கள் .அந்த இளவெயிலை தன் ரத்தத்தில் சேர்த்துக் கொண்டால் அடுத்து வரப்போகும் ஏழு மாத கால பனிப்பருவம் முழுக்க அந்த சூரிய வெப்பம் அவர்கள் ரத்தத்தில் இருக்கும்.
விடை பெற்று கிளம்பும்போது கிருஷ்ணன் சொன்னார். ”எது நல்ல வாழ்க்கை என்று எப்படி சொல்வது சார்? கடுமையாக உழைக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், இதெல்லாம் தான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. நமது குழந்தைகள் இரண்டுவயதிலேயே ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் மூளை உழைப்புக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். வெ றி பிடித்ததுபோல் ஒரு நாளின் பன்னிரண்டு மணி நேரம் உழைப்பவரே வெற்றி அடைகிறார். உழைப்பு கொண்டாடப்படும் பண்பாடு மலைகளுக்குமேல் இல்லை. நம் தலைக்குமேல் இப்படி ஒரு வாழ்க்கை இருக்கிறது. இங்கு வாழ்தல் என்பது உயிருடன் இருப்பதன் இனிமையை அனுபவித்தபடி உட்கார்ந்திருப்பதுதான். இதை சோம்பல் என்று நம் மக்கள் சொல்வார்கள். நான் இதை இயற்கையில் ஒன்றி அமர்ந்திருப்பது என்று தான் பொருள் கொள்கிறேன். என்னால் இப்படி வாழமுடியாது. ஆனால் வாழ முடிந்தால் இதுதான் நல்ல வாழ்க்கை”
“ஆமாம் அது தெரிந்துதானே கடவுள் அவர்களை நூறுவயதுக்கு மேல் வாழ வைக்கிறார்,. நம்மையெல்லாம் அறுபது எழுபது வயதுகளில் எடுத்துக் கொள்கிறார்?’ என்று சொன்னேன். கீழிருந்து மேலே நோக்கி ராஜமாணிக்கம் சொன்னார். “அந்த பாட்டி பகல் முழுக்க வெறுமே அமர்ந்திருப்பது பரவாயில்லை சார். ஆனால் மடியில் அந்த குழந்தையும் அப்படி அமர்ந்திருக்கிறது அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் அப்படியே வளர்கிறது. நம் குழந்தைகள் ஐந்து நிமிடம் அப்படி உட்காருமா?”. அந்தக்குழந்தை நூறாண்டுவாழ பயிற்சி எடுக்கிறது என நினைத்துக்கொண்டேன்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது: கடிதங்கள்
அன்பு ஜெமோ
நலம் தானே?
மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பை உங்கள் இணையத் தளத்தில் படித்தேன் – நம் கல்யாண்ஜிக்கு விஷ்ணுபுரம் விருது.
அழைப்பு அனுப்பி வைக்கச் சொல்லுங்க ஜெமோ, நான் கலந்து கொள்ள வேணும். உங்களோடும் நிறையப் பேசணும்
அன்புடன்
இரா முருகன்
*
அன்புள்ள முருகன்
நலம்தானே?
கண்டிப்பாக நீங்கள் கலந்துகொள்கிறீர்கள். அழைப்பு என்னுடையது. எங்கள் நண்பர்களுக்கும் ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன் சார்,
வண்ணதாசனுக்கு விருது வழங்கப்படவுள்ள செய்தி இந்தக்காலையை அழகாக ஆக்கிவிட்டது. என்னுடைய ஆதர்ச எழுத்தாளர் அவர்தான். நான் அவரது கதைகளை 1990 வாக்கில்தான் முதல்முதலாக வாசித்தேன். தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்னும் தொகுப்பு.
அற்புதமான ஒரு தொகுப்பு அது. அன்றைய என்னுடைய வாழ்க்கையைச் சொன்னால் அந்தக்கதைத் தொகுதி எனக்கு அளித்தது என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும் நான் அன்றைக்கெல்லாம் வேலை இல்லாமல் இருந்தேன். குடும்பச்சூழலால் பத்தாவதுக்குமேலே படிக்கவில்லை. ஒரு கடையில் வேலைபார்த்தேன்.
பழையதாள்களை வாங்கி அட்டியாக்கி விற்கும் கடை. சாப்பாடுக்கு மட்டும்தான் பணமிருக்கும். அதுவும் ஊருக்கு ஆரம்பத்திலேயே பணம் அனுப்பிவிடுவதனால் கடைசி நாட்களில் கையில் ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட பத்தாது. பெரும்பாலும் கையேந்தி பவன்களில் சாப்பிடுவேன். வாயில் வைக்கமுடியாத தக்காளிச்சாதம் உப்புமாதான் பெரும்பாலும் உணவு. ருசி என்பதையே பத்துவருஷம் நான் அறிந்தது கிடையாது.
கடையின் திண்ணையிலேயே தூங்குவேன். மழைக்காலம் பெரிய நரகம். கொசுக்கடி உயிர்போகும். உடம்பில் மண்ணெண்ணை தேய்த்துக்கொண்டு தூங்கியதுண்டு. ஏன் வாழவேண்டும் என்ற எண்ணம்தான் மனசு முழுக்க ஓடிக்கொண்டிருக்கும். ஊரில் என்னை நம்பி அம்மாவும் தங்கச்சியும் இல்லை என்றால் செத்திருப்பேன்.
அதையெல்லாம் விட எனக்கு மத்தவர்கள் மேல் பெரிய பயம். அவமானப்படுவோமோ என்று எவரிடமும் நான் நெருங்கியது கிடையாது. கடையில் உள்ள பழைய காகிதஙகளை வாசிப்பேன். அப்படித்தான் அந்த நூலையும் வாசித்தேன். எனக்கு அது பெரிய திருப்புமுனை.
என் அப்பா எனக்கு என்ன சொல்லித்தரவேண்டுமோ அதையெல்லாம் வண்ணதாசன் தான் சொல்லித்தந்தார். மனுஷங்களை நம்பு என்று அவர்தான் சொன்னார். மனுஷர்கள் பயமும் ஆசையும் கோபமும் எல்லாம் கொண்டிருந்தாலும் மனுஷனை நம்பினால் ஏமாற்றம் கிடையாது என்று அவரது கதைகள் காட்டின.
தாய்க்கோழி குஞ்சுக்கு சொல்லிச் சொல்லி மேயக்கற்றுக்கொடுக்குமே அதேபோல வண்ணதாசன் எனக்குக் கற்பித்தார். அப்படித்தான் நான் மனுஷன் ஆனேன். இன்றைக்கு கடை இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. பெரிய ஆள் எல்லாம் ஆகவில்லை. ஆனால் மனுஷன் ஆகியிருக்கிறேன். அதுக்கெல்லாம் வண்ணதாசன் தான் காரணம்.
நான் அவரை அப்பா என்றுதான் மனசுக்குள் அழைப்பேன். நேரில் ரெண்டுதடவைதான் பார்த்திருக்கிறேன். காலைத்தொட்டு கும்பிட்டபோது அவர் ‘ஏ ஏ ’என்று சொன்னார். நான் அறிமுகம் செய்யாமல் வந்துவிட்டேன். ஆனால் அன்றைக்கு ராத்திரி தனியாக இருந்து அழுதேன். நான் அவருக்கு எழுதியது கிடையாது. அவருக்கு எழுதவும் போவது கிடையாது. அவருக்கு நான் அறிமுகமே ஆகமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் இதை எழுதுகிறேன்.
நான் அவர் எழுதிய எல்லா வரியையும் நாலைந்துமுறை வாசித்திருக்கிறேன். அவர் நிறைய எழுதியிருக்கிறார். நான் அதிலிருந்து ‘வாழ்க்கையை நம்பு. இதிலே அழகு நிரம்பியிருக்கிறது. இது போதும் மனுஷப்பிறப்புக்கு’ என்றுதான் புரிந்துகொண்டேன்.
அவரைவிடப்பெரிய எழுத்தாளர்கள் இருக்கலாம். எனக்கு நீங்கள் அப்படிப்பட்ட பெரிய எழுத்தாளர் என்று சொன்னார்கள். நானும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். உங்கள் எழுத்து எனக்கு பயமாக இருந்தது. பெரிய அறிவாளித்தனம் என்று பட்டது. அதை தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.
வண்ணதாசன் கதையெல்லாம் வேறு மாதிரி. எனக்கு சங்கரன்கோயில் பக்கம். ரயிலில் ஒருநாள் ஒரு வயதான நாடாச்சி என் கையைப்பிடித்துக்கொண்டு நான் என்ன செய்கிறேன் எத்தனை பிள்ளை என்றெல்லாம் கேட்டது. கையில் இரும்பு வளையல் போட்டிருந்தது. பச்சைகுத்தின கையில் நரம்புகள் புடைத்து காணப்பட்டன. அந்த ஆச்சி மாதிரி என்னிடம் பேசுவதெல்லாம் வண்ணதாசன் கதை மட்டும்தான்.
அவர் தமிழிலேயே மிகப்பெரிய எழுத்தாளர் என்றுதான் நான் சொல்வேன். அவருக்கு நான் அறிமுகமாக ஆகக்கூடாது என்று நினைப்பேன். அவரை நினைத்துக்கொண்டே சாகவேண்டும் என்றெல்லாம் நினைப்பேன்.
நான் உங்கள் கதைகள் சிலது மட்டும்தான் படித்திருக்கிறேன். நிறைய அறிவாளித்தனம் கொண்ட கதைகளை வாசித்தால் வண்ணதாசனை இழந்துவிடுவோம் என்று பயம் எனக்கு. ஆகவே நிறைய வாசிப்பதே இல்லை. அவரைத்தான் மீண்டும் மீண்டும் வாசிப்பேன்.
நான் திருமணம் செய்துகொண்டது சொந்த மாமன் மகளைத்தான். எனக்குப்பெண்ணையும் கொடுத்து என்னை ஆளாக்கிவிட்டார். ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை நல்லதாக அவர் பேசியது கிடையாது. எப்போதுமே சுடலைமாடசாமி மாதிரியாகத்தான் முகம். வண்ணதாசனை வாசிக்கவில்லை என்றால் அந்த மனுஷனைப் புரிந்துகொண்டிருக்கமாட்டேன்.
பின்னாடி ஒரு பெரிய நோய் வந்தது எனக்கு. அந்த நோயில் நான் நம்பிக்கை இழக்காமல் இருந்தேன். எலும்பிலே டிபி. இப்பவும் முழுசாகச் சரியாகவில்லை. ஆனால் இப்போது பரவாயில்லை. ஆனால் அதை நான் விலகி நின்று பார்த்தேன். துக்கமே இல்லாமல் இருந்தேன். ஆஸ்பத்திரியை ஒரு வேடிக்கையான இடமாக ஞாபகத்திலே வைத்திருக்கிறேன். அன்பான பலரை அங்கே பார்த்தேன். அதுக்கும் வண்ணதாசன் தான் காரணமாக இருந்தார்.
அதன் பின்னால் என் தங்கை மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் ஒன்றைச்செய்தாள். ஆனால் இன்றைக்கும் அவளிடம் அன்பான அண்ணனாகத்தான் இருக்கிறேன். வண்ணதாசன் தான் மன்னிக்கச் சொல்லித்தந்தார்.
அவர் கதைகள் மனுஷன் எப்படி ரொம்பச் சின்னவன் என்பதைத்தான் சொல்கின்றன. சிலசில தருணங்கள்தான் மனுஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அந்தத்தருணங்களிலே அவன் தன்னை சரியாக நிறைத்துக்கொண்டு பெருகிவிட்டான் என்றால் வாழ்க்கை இனிப்பானதுதான். அப்போது அவனும் பெரியவன்தான்.
ஒத்தை வரியில் ‘இன்னைக்கிருந்து நாளைக்குப்போற மனுஷனுக்கு இருக்கிற நாளெல்லாம் முக்கியம்தான்’ என்று பெரியவர்கள் சொல்வதைத்தான் அவரும் சொல்கிறார். ஆனால் அதை வாழ்க்கையாக காட்டி அதிலே திரும்பத்திரும்ப வாழவைக்கிறார். அதனால்தான் அவர் பெரிய எழுத்தாளர்.
அவரது வாசகர்களுக்கு அவர் காட்டுகிற ஒளி தான் முக்கியம். அவர் இருட்டை எல்லாம் எழுதியிருக்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் அதையெல்லாம் வாசிக்கவில்லை என்றும் சொல்லியிருந்தீர்கள். அதனால்தான் இதை எழுதுகிறேன். அது உண்மைதான். ஆனால் அவர் காட்டும் ஒளிதான் முக்கியம் என நான் நினைக்கிறேன். இருட்டைக்காட்டத்தான் ஏகப்பட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்களே. எல்லாரும் இருட்டு என்கிறார்கள். பார்த்தாலும் இருட்டுதான் தெரிகிறது. ஒருவர் ஒளியைக் கொஞ்சம் காட்டுகிறார். அதுதானே வேண்டும்.
நாங்களெல்லாம் வரண்ட மண்ணிலே வந்தவர்கள். பெரிய இருட்டுச்சுரங்கம் மாதிரியான வாழ்க்கை எங்களுக்கு. அந்த மறுபக்கம் ஒரு சின்ன வெளிச்சம் தெரிந்தால் போய்விடலாம். இல்லாவிட்டால் இங்கேயே சாவுதான். அந்த வெளிச்சம்தான் அவருடைய கதைகள்.
அதெல்லாம் அறிவுவாளிகளுக்குத் தெரியாது. அறிவாளிகள் வேறு வகையான வாசிப்புகளுக்குப் போகட்டும். நீங்கள் ஆண்டன் செக்கோவ் வாசித்திருப்பீர்கள். நானும் அவரை தமிழிலே முழுசாகவே வாசித்திருக்கிறேன். செக்கோவ் ஒளியைத்தானே காட்டுகிறார். நம்பிக்கைதானே தருகிறார். நம்மூரில் ஒரு செக்கோவ் என்றுதான் நான் வண்ணதாசனைச் சொல்லுவேன்.
எப்படியென்றாலும் அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்கு கோடி வணக்கம். அவர் எல்லா விருதுக்கும் தகுதியானவர். சாகித்ய அக்காடமி கூட இன்னும் அவருக்கு எவரும் கொடுக்கவில்லை. அவருக்கு கிடைத்த இந்த பெரிய விருது நாம் அவருக்குச் செய்யும் நமஸ்காரம் என்றுதான் நினைக்கிறேன். அதைத்தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடன் சேர்ந்து நானும் அவருடைய பாதங்களை சேவித்துக்கொள்கிறேன்
எஸ்.செல்வராஜ்
***
அன்புள்ள ஜெ
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது என்று அறிவித்திருந்தீர்கள். அச்செய்தியை அறிந்ததுமே உள்ளம் மகிழ்ச்சியில் மிதந்தது. எனக்கு மிகமிகப்பிடித்த எழுத்தாளர். அவருடைய கதைகளை எல்லாம் பத்தாண்டுகளாக விடாப்பிடியாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிகப்பெரிய அனுபவத்தை அளிக்கும் கதைகள் அவையெல்லாம் அவருக்கு நான் வாழ்க்கையிலும் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அவருக்கு அளிக்கப்படும் விருதுக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்
நடராஜன்
***
அன்புள்ள ஜெமோ
வண்ணதாசன் என்னும்போது எனக்கு ஒரு பழையபாட்டும் நினைவுக்கு வரும். வெள்ளிமணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே. வெள்ளிமணி ஓசையை கேட்டதே இல்லை. ஆனால் வெண்கலம் மாதிரி ஒலிக்காது என்று நினைக்கிறேன். ரொம்பச் சன்னமாக அழகாக ஒலிக்கும் என்று நினைக்கிறேன். அந்த மாதிரியான கதைகள். வெள்ளைத்தாளிலே தலைமுடி விழுந்துகிடந்தால் கோடுமாதிரி தெரியுமே அதே மாதிரி வரைந்த ஓவியங்கள் அதெல்லாம்.
வண்ணதாசனுக்கு வணக்கம்
சித்ரா
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
உலகெலாம் எனும் கனவு
அன்புள்ள ஜெ,
வெண்முரசின் இடைவெளி நாட்களை கடத்துவது பெரும் பிரயத்தனமாக உள்ளது. நேற்றுதான் நீண்ட நாட்களாக வாசிக்காமல் விட்டிருந்த ‘வெண்முரசு விவாதங்கள்’ தளத்தை மேய்ந்தேன். சொல்வளர்காட்டில் தவறவிட்ட பகுதிகள் முகத்திலரைந்துகொண்டே இருந்தது. இன்னும் எழுதப்படாத விவாதக் குறிப்புகள் அனைத்தும் தவறவிட்ட நுட்பங்களே என எண்ணியபோது உளம் சோர்வடைந்தது. சரி ‘கற்றது மந்தனளவு கல்லாதது தர்மர் அளவு’ என எண்ணி சமாதானம் கொண்டேன் (மந்தன் அறிந்தால் மண்டையை பிளக்கக் கூடும்).
இந்நிலையில் நீங்கள் சமீபத்தில் விகடனில் எழுதிய ‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதையை இன்று வாசித்தேன். பிரிட்டன் வெளியேற்றம் சமயத்தில் தங்களிடம் முன்பு கேட்க எண்ணிய சில கேள்விகளை இக்கதை நினைவூட்டியது. அதைக் கேட்கவே இக்கடிதம்:
இதுவரை அண்டை மாநிலங்களைத் தாண்டி பயணித்திராதவன் நான். இருப்பினும் கால்நடையாகவோ அல்லது மிதிவண்டியிலோ இலக்கோ முடிவோ இல்லாத ஒரு பயணத்தை மேற்கொள்வதாக கற்பனை செய்து ஆழ்ந்திருப்பது என் விருப்பத்திற்குரிய பகற்கனவு.
அவ்வாறு பயணிக்கும் போது ஏதோ ஒரு நாட்டு எல்லையில் சாலையில் நிறுத்தி, கடவுச்சீட்டு இல்லாததன் பொருட்டு அதிகாரிகள் என்னை தடுத்தாட்கொள்வார்கள். ‘உயிர்கள் அனைத்திற்கும் பொதுவான இப்பூமியை கூறுபோடும் உரிமையை உனக்கு அளித்தது யார் மனிதகுலமே?’ என தயங்கிய குரலில் முழங்கியவாறு என் பகற்கனவுகள் முடிவடையும்.
இளமையில் ‘முற்போக்கு’ என்பதன் அடையாளமாக சில கருத்துக்கள் கற்பிக்கப்படுகின்றன. அவற்றை இப்படி சொல்லலாம். சாதி கடந்து சிந்திப்பது, மதம் கடந்து சிந்திப்பது, மொழி அல்லது இனம் கடந்து சிந்திப்பது என. இதன் இயல்பான நீட்சியாக வந்து சேரும் இடம் நாடு அல்லது புவியியல் ரீதியான எல்லைகள் கடந்து சிந்திப்பது.. பெரும்பாலும் தேசஎல்லைகள் கடந்து சிந்திப்பது ஒரு ஆரம்பக்கட்ட சிந்தனையளவில் நின்றுவிடும். என்னளவில் இச்சிந்தனைக்கு முழுமையான வடிவம் கொடுத்தது தங்களின் ‘உலகம் யாவையும்’ சிறுகதைதான். வாசிக்கும்தோறும் ‘மகத்தான கனவு’ என்பதையே மனம் அரற்றிக் கொண்டிருந்தது.
‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதை சுமார் எண்பது வருடங்கள் கழித்து 2100 வாக்கில் நடக்கிறது. இக்கதையில் படிப்படியாக நாடுகள் இணைந்து ஒற்றை உலகம் உருவாகும் முன்நகர்தலுக்கான குறிப்புகள் கதையினுடே ஆங்காங்கே இருப்பதை கண்டேன். ஆனால், என் கேள்வியெல்லாம் அப்படி ஒற்றை உலகத்திற்கான கனவோ அதை நோக்கிய நகர்வோ தற்காலத்தில் ஊக்கத்துடன் இருந்து வருகிறதா என்பது தான்.
குறிப்பாக பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு பிறகு இச்சந்தேகம் எனக்கு வலுத்து வருகிறது. நவீன ஜனநாயகத்தின் லட்சிய உருவாக்கமான ஐரோப்பாவுக்கே இந்நிலையென்றால் நாள்தோறும் ஏதோவொரு மூலையில் பிரிவினைக் குரல்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் நம் தேசத்தில், தெற்காசிய நாடுகளின் கூட்டு போன்ற அடுத்தகட்ட நகர்வுகளுக்கு வாய்ப்பேயில்லை எனத் தோன்றுகிறது. பிரெக்சிட் சமயத்தில் இந்தியாவும் சார்க் அமைப்பிலிருந்து வெளியேற வேண்டுமென்ற (எக்காரணமுமில்லாமல்) ஒரு அன்பரின் கோரிக்கையை இணையத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
காஷ்மீர் விவகாரம், காவிரி விவகாரம் என எது தலையெடுத்தாலும் ‘ஆளாளுக்கு அத அத பிரிச்சு கொடுப்பதை’ சர்வரோகநிவாரிணியாக முன்வைக்கும் குரல்கள் ஒலிப்பதை காண முடிகிறது. இதற்காகவே காத்திருக்கும் சீறும் சீமான்கள் ‘அப்பவே சொன்னோம் பாத்தீங்களா..’ என கிளம்பிவிடுகிறார்கள். எந்தவொரு சிறு பிரச்சனைக்கும் பிற மாநில/நாட்டுடனான கூட்டுறவே காரணம் என்றும் தனித்தால் சொர்க்கபூமியாக மாறிவிடலாம் என்றும் எளிதில் சத்தியம் செய்கிறார்கள்.
அமெரிக்க தேர்தலிலும் இம்முறை பிற நாட்டினருக்கு அமெரிக்காவின் வேலைவாய்ப்பு பறிபோவது குறித்து பேசப்படுகிறது (ஒருவேளை இது அனைத்து தேர்தல்களிலும் பேசப்படுவது தானோ?).
எங்கும் சுய அடையாளம் சார்ந்த தேடல் தீவிரமடைந்திருப்பதாக நினைக்கிறேன். அதன் நீட்சியாக சுய இனத்தின் மீதான போலிப் பெருமிதங்களும் நாசூக்காக மாற்று இனத்தின் மீதான காழ்ப்புகளும். ஒருவேளை கலாச்சார ரீதியான காழ்ப்புகள் இல்லையெனில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் போன்ற காரணங்களை முன்வைத்து பிரிவினை பேசப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டின் பிரச்சனைக்கும் பல்வேறுபட்ட வரலாற்றுக் காரணிகள் இருக்குமென்றாலும் இந்த பொதுப்போக்கை எவ்வாறு விளங்கி கொள்வதென தெரியவில்லை. உலகமயமாக்கலின் நிறைச்செறிவு புள்ளியை (saturation point) அடைந்து விட்டோமா? இனி வெளியுறவு என்பது வெறும் வர்த்தகத்துக்கு மட்டுமென எஞ்சுமா? அல்லது உலகமயமாக்கலின் பயணத்தில் இவை தவிர்க்கமுடியாத கட்டங்களா? எனில், என்றேனும் ஒருநாள் எல்லைக்கோடுகளுக்கு பொருளில்லா உலகம் உருவாகும் எனும் கனவோடு நாம் மரிப்பதற்கு ஏதேனும் வாய்ப்புள்ளதா?
அன்புடன்,
பாரி.
***
அன்புள்ள பாரி,
எனக்கு ஒரு விசித்திர அனுபவம். இந்தியாவிலிருந்து தமிழகம் பிரியவேண்டும் என வாதிட்டவர்களின் தர்க்கம் எவவ்ளவு மேலோட்டமானது என்பதைக் காட்டுவதற்காக நான் ஒரு குறிப்பை எழுதினேன். அதே தர்க்கப்படி தமிழகத்தில் குமரிமாவட்டம் இருக்கவேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் எங்கள் பண்பாடு வேறு. எங்கள் வரலாறு தமிழகத்துடன் இணைந்ததல்ல. சுதந்திரம் கிடைத்தபின் வன்முறைமூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட இந்நிலம் அதுவரை தனி நாடுதான். அத்தனைக்கும் மேலாக குமரிமாவட்டம் நீர், மின்சாரம், மீன், விளைபொருட்கள், சுங்கவரி என தமிழகத்திற்குக் கொடுப்பது அதிகம். பெறுவது நூறில் ஒருபங்கு மட்டுமே
அதை எழுதி, அதன் கீழேயே அது எத்தனை அபத்தமானது என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் எனக்குத் தொடர்ச்சியாகக் கடிதங்கள் வந்தன, இன்றும் வருகின்றன. அது எவ்வளவு பெரிய உண்மை என சொல்லி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்திற்கும் நமக்கும் என்ன உறவு என இங்கே ஒருவர் மேடையில் பேசுவதைக் கேட்டேன். அது ஒரு முக்கியமான பேச்சாகவே இன்று இங்கே உள்ளது.
ஒரு குறும்பு எண்ணம் ஏற்பட்டது. குமரிமாவட்டத்தில் விளவங்கோடும் கல்குளமும் ஏன் இருக்கவேண்டும் என்று ஒரு குறிப்பு எழுதினேன். விளவங்கோடு கல்குளம் பகுதிகள் மிக வளமானவை. முக்கியமான அணைகளும் துறைமுகங்களும் அவற்றில்தான் உள்ளன. அவற்றை தனிமாவட்டமாக ஆக்கவேண்டும் என அதில் வாதிட்டிருந்தேன். அதை மார்த்தாண்டத்தில் இருந்து வரும் பத்திரிகைக்கு அனுப்பினேன். அவர்கள் பரவசத்துடன் அதைப்பிரசுரிக்க முன்வந்தனர். அய்யய்யோ அது நையாண்டி என்று சொல்லி கையைக்காலைப்பிடித்து தடுத்துவைத்தேன்.
அதாவது ‘நாம்வேறு’ என்று சொல்லும் எந்தச்சிந்தனைக்கும் மக்களாதரவு எளிதில் கிடைக்கும். நம்மை பிறர் சுரண்டுகிறார்கள், நாம் ஏன் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று பேசினால் உடனே ஆமாம் என்பார்கள். சொந்தச் சகோதரனுடன் வாய்க்கால் தகராறு செய்பவர்கள்தானே நாம்? பேச்சிப்பாறை தண்ணீரை தேங்காய்ப்பட்டினத்திற்கு விடமாட்டோம் என இங்கே ஒரு பெரிய போராட்டம் நடந்தது. திருநெல்வேலிக்கு தண்ணீர் செல்வதற்கு எதிராக பல கட்டங்களாக போராட்டம் நடந்தது.
இது மனிதகுணம். பிரிந்து நிற்கவும் குழுக்களாகச் சேர்ந்து போரிடவும் அவர்கள் பல்லாயிரமாண்டுகளாக பழகியிருக்கிறார்கள். வெறுப்புதான் இயல்பாக மக்களை ஒன்றுசேர்க்கிறது. வெறுப்பைப் பேசுபவர்கள் எளிதில் புகழ்பெறுகிறார்கள். ’நம்மவர்’ என ஒருவரை நினைத்துவிட்டால் அவரை முழுமையாக ஏற்க நாம் தயாராக உள்ளோம்.
வசுதைவ குடும்பகம் என்பது ஒரு தத்துவ இலட்சியம். அதைநோக்கி மானுடம் செல்கிறதா என்று கேட்டால் ஆம் என்று சொல்ல நடைமுறைமனம் ஒப்பவில்லை. ஆனால் தத்துவார்த்தமாக யோசித்தால் அப்படித்தானே நிகழக்கூடும் என்றும் படுகிறது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பிச்சகப் பூங்காட்டில்
இந்தியாவின் மகத்தான சுவாரசியம் என்பது அதன் முடிவற்ற வண்ணங்கள். அவ்வண்ணங்கள் அனைத்தும் பிசிறின்றி இணைந்து உருவாகும் ஒற்றைப்பெரும்பரப்பு. முதல்பார்வையில் ஒன்றென்றும் மறுபார்வையில் முடிவிலா பலவென்றும் தோற்றம் காட்டும் பண்பாட்டுக்கூறுகள்.
சினிமாப்பாடல்கள் வழியாக மீண்டும் மீண்டும் அவ்வண்ணங்களையும் ஒருமையையும் பார்த்துக்கொண்டிருப்பேன். இன்று ஒரு கடந்தகால ஏக்கமனநிலை. ஆகவே என் இளமையில் கேட்ட பாடலொன்றை தேடி எடுத்தேன். இந்தப்பாடலின் மலையாளத் தனித்தன்மை நெஞ்சை நனைத்தது. பழகிய செவிகளை சற்று புதுப்பிக்க முடிந்தால் அந்த மலையாளமணத்தை எவரும் உணரமுடியும்
இதிலுள்ள தாளம் இடைக்கா என்னும் வாத்தியத்தை நினைவூட்டும்படி உள்ளது. நடுவே செண்டை. கண்ணூர் தலைச்சேரி பகுதியின் நாட்டுப்புற இசையின் சாயல் மெட்டில் உள்ளது. படகுப்பாட்டு. அத்துடன் குரல். அது மலையாளத்தின் குரலான ஜேசுதாஸ்.
பி.என் மேனோன் மலையாளத்தின் மூத்த கலை இயக்குநர். பின்னர் ஓளவும் தீரவும் போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். அவரது மருமகன்தான் பிரபல இயக்குநர் பரதன் .
இசை கே.ராகவன். மலையாள சினிமாவின் மூத்த இசையமைப்பாளர். பெரும்பாலும் நாட்டுப்புறமெட்டுகளை ஒட்டியே இசையமைத்தவர்.
இது கடம்பா என்னும் மலையாளப்படத்தில் உள்ள பாடல். செக்ஸ் கலந்த யதார்த்தபடம் என்னும் ஒரு வகைபாடு அன்றெல்லாம் இருந்தது. உண்மையான ஒரு வாழ்க்கை இருக்கும். கூடவே மெல்லிய காமம். 1982ல் வெளிவந்த படம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 13, 2016
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும்.
எழுதவந்த நாள் முதல் தமிழில் ஒரு நட்சத்திரமாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் தவறாகவே வாசிக்கப்பட்டிருக்கிறார்.
அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, முன்னோடி விமர்சகரான சுந்தர ராமசாமி அவரைப்பற்றி அரைகுறையாக வகுத்துரைத்தது. வாழ்க்கையின் நெகிழ்ச்சியான கணங்களை மென்மையாகச் சொல்பவர் என அவர் வண்ணதாசனைப்பற்றிச் சொன்னார். மேலோட்டமான வாசகர்கள் — இவர்களில் வண்ணதாசன் ரசிகர்களும் அடங்குவர் — பலர் அவ்வகையிலேயே அவரை மதிப்பிடுகிறார்கள்.
இன்னொன்று, வண்ணதாசனின் தனியாளுமை பற்றிய சித்திரத்தை அவர் புனைவுகள் மேல் ஏற்றிக்கொள்வது. வண்ணதாசன் நெகிழ்ச்சியான, மென்மையான மனிதராக இருக்கலாம். அது அவரது சமூகமுகம் மட்டுமே. எழுத்தாளர்களின் தனிப்பட்ட பேச்சு, கடிதங்கள், பேட்டிகள் போன்றவற்றினூடாக வரும் அவரது தனியாளுமையை புனைவுகள் மேல் பரப்பிக்கொள்வது வாசிப்பின் முதிர்ச்சியின்மை .
ஏனென்றால் எழுத்து அவ்வெழுத்தாளனில் அறிந்தும் அறியாமலும் வெளிப்படும் பல்வேறு உள்ளோட்டங்களால் நெய்யப்பட்ட பரப்பு. அதை அப்படைப்புகளைக்கொண்டு மட்டுமே நாம் மதிப்பிடவேண்டும். அதன் சொல்லப்பட்ட தளங்களுக்கு அப்பால் அப்பால் என செல்லும் பார்வை வாசகனுக்கு வேண்டும். படைப்பாளியின் தனியாளுமை என்பது அவன் முகங்களில் ஒன்று மட்டுமே.பலசமயம் தனக்கு எதிரான உளநிலைகளையே எழுத்தாளன் வெளிப்படுத்தக்கூடும்.
நாம் அறியும் வண்ணதாசனின் ஆளுமை கல்யாணசுந்தரம் என்னும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்குரியது. தி.க.சிவசங்கரனின் மகன். இடதுசாரி அரசியல் கொண்டவர். திராவிட அரசியல் சார்பும் உண்டு. அன்பானவர். நெகிழ்ச்சியானவர். தனித்தவர். மாறா அலைக்கழிப்புகள் கொண்டவர். ஆகவே பெரும்பாலும் துயரமானவர்
ஆனால் கதைகளில் வெளிப்படும் வண்ணதாசன் மேலும் பலமடங்கு வயதானவர். தொன்மையான நெல்லை ஆலயத்தையும் தாமிரவருணியையும் போல அவர் அவரைவிட பெரிய பலவற்றின் பிரதிநிதி. அவரது எழுத்து பெருமைகொண்ட பண்பாடு ஒன்றின் எஞ்சிய பகுதியின் பதற்றங்களும் கனவுகளும் உட்சுருங்கல்களும் கொண்டது. வன்முறையும் வன்மங்களும் உளச்சிக்கல்களும் வெளிப்படுவது.
வண்ணதாசனை முழுமையாக வாசிக்க, அனைத்துக்கோணங்களையும் நோக்க இந்தத்தருணம் வழியமைக்கவேண்டும்.
வண்ணதாசனுக்கு அவரது முதன்மை வாசகன், இளையோன் என்னும் நிலையில் வணக்கம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.
ஒரு புதிய வாசிப்பனுபவம்.
இரண்டு அல்லது மூன்று குறியீடுகள் தோன்றி மறைந்தன.. மனதில். சுக்கிரன் அல்லது வீனஸ் ஒரு முகம் மட்டுமே சூரியனை நோக்கி. எனவே ஒருபுறம் அதிக வெப்பம். மறுபுறம் அதிக குளிர். என்றென்றும் பகல் தரும் கிரகம். (அல்லது இரவு தரும்). தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும், சூரியனைச் சுற்றி வரவும் சுமார் 230 பூமி நாட்கள். (ஒரு சில அறிஞர்கள் இந்த கணக்கில் வேறு படுகிறார்கள்) எனினும் மனதில் அசை போட ஒரு நல்ல சிந்தனை.
நம் சந்திரனும் அது போன்றே. நமக்கு ஒருமுகமே காட்டும் ஒரு பேரழகி.
குட்டி இளவரசன் – என்கிற கதையில் (லிட்டில் பிரின்ஸ் தமிழாக்கம்) – அவன் சூரிய அஸ்தமனத்தில் அதன் அழகில் மயங்கி, அவனது சிறிய கிரகத்தில் நடந்து சென்று பலமுறை (47 தடவை?) அனுபவித்ததை கதை ஆசிரியரிடம் சொல்வான். அதுவும் நினைவிற்கு வந்தது.
பட்டி விக்ரமாதித்தன் – நாடாறு மாதம், காடாறு மாதம் என்கிற கதைகள் வேறு.
ஒரு வேளை நம் மரங்களும் அன்றாட பகலை விரும்புமோ? சுட்டெரிக்கும் வெயிலைத் தேடி, அன்புள்ள, என்புள்ள ஓருயிரின் முடிவற்ற பகலில் ஒரு சோகம்.. ஒரு அழகு.
அன்புடன்
முரளி
கதை முடித்தவுடன், விகடனில் வந்திருக்கிறதே, வார பத்திரிக்கைகளில் எழுத படும் contentஐ கிழி கிழி என கிழித்திருக்கிறாரே. இந்த கதை விகடனில் பிரசுரமே பகடிதானோ என்று தோன்றியது. அதுவும் முடிவு. இலக்கியம் என்றால் இடைவெளி் இருக்க வேண்டும். எதை வேண்டுமானால் போட்டு நிரப்பி கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுகிறார் என்று பட்டது. கதையில் அகழ்வாராய்ச்சியெல்லாம் செய்ய கூடாது என்பவர்களுக்கான உள்குத்து இருக்கிறதோ என்றும் தோன்றியது.
திரும்பவும் கதையின் ஆரம்ப வரிகள் படித்தால் “கணக்கு” என்ற சொல் கதையை திறந்து விட்டது.
உலகத்தை சுற்றி எண்பது நாட்களில் (Around the world in 80 days), கதை நாயகன், பிளியாஸ் ஃபாக் (Philleas Fogg), இலண்டனில் ஒரு க்ளபில், ஒரு பெரிய தொகையை பந்தயமாக வைத்து, உலகத்தையே எண்பது நாட்களில் சுற்றி வருகிறேன் என்று கிளம்புகிறான். இந்தியாவில் புது இரயில் தடம் அமைக்கபட்டுள்ளதால், இது சாத்தியம் என்று “டெய்லி டெலிகிராஃப்” செய்தி ஒன்றின் விவாதம், பந்தயமாக மாறுகிறது. சூயஸ் கனல், இந்தியா, ஹாங்காங்க், சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க் வழியாக இலண்டன் வந்தடைகிறான். வழியில், யானை, உடன் கட்டையிலிருந்து ஒரு இளவரசியை காப்பாற்றுவது, கப்பலை தவறவிடுவது, வங்கி கொள்ளைகாரன் என்று ஒரு துப்பறிவு சிங்கம் இவனை பின்னால் தொடர்வது என்று கதை முழுவதும் சாகசங்கள். இலண்டன் வந்து சேரும் பொழுது 81 நாட்கள் ஆகி விடுகின்றன. பந்தயத்தில் தோற்றுவிட்டோம் (இன்றைய பணம் படி 15 கோடி ரூபாய்) என்றிருக்கையில், அவனது வேளையாள் நாட் கணக்கில் ஏதோ தவறு. உங்கள் கெடு முடிய இன்னும் 15 நிமிடங்கள் உள்ளன என்று வந்து சொல்ல, அடித்து பிடித்து க்ளபிற்க்கு சென்று பந்தயத்தை வெல்லுகின்றான்.
81 நாட்கள் 80 நாட்கள் ஆன விந்தை, International Dateline உடன் தொடர்புள்ளது. கிழக்கே சென்று உலகத்தை சுற்றினால் ஒரு நாள் நாளடேனின் படி பயணிப்பவருக்கு அதிகம் கிடைக்கும். ஃபாக் 81 நாட்கள் வாழ்ந்திருக்கிறான் ஆனால் இலண்டன் கணக்குபடி 80 நாட்கள்தான்.
உங்கள் கதையும் இதையே தொட்டு செல்லுகிறது. உயிர் விசையான சூரிய ஒளியை, இறப்பை தவிர்க்கும் பொருட்டு பாவிக்கும் ஜப்பானியனின் கதை. வாழ்வது என்பது எது, இறப்பு என்பது எது என்ற கேள்விகளை வாசகனின் மனதில் விவாதிக்க தூண்டும் கதை.
24 மணி நேரத்தில் ஒரு முறை உலக்கத்தை சுற்றி வருகிறான். அவன் கணக்கு படி 28 வருடங்கள். ஐன்ஸ்டீனின் சார்பியில் கோட்பாடின் மற்றும் Time dilation படி மேற்கே 1200 mph பறக்கும் விமானத்தில் சுற்றுபவன் ஒரு சுற்றுக்கு நானோ வினாடிகள் அளவுக்கு தான் அவனால் நிலத்தில் இருப்பவர்களைவிட அதிகம் வாழ முடியும். 28 வருடங்களில் ஒரு வினாடியைவிட குறைவான அளவுதான். அந்த மைக்கரோ வினாடி இறப்பை தள்ளி வைக்க 28 வருடங்கள் விமானத்தில் சுற்றல்.
இந்த கணக்கைதான், கதை சொல்லி கதையின் ஆரம்பத்தில் போட எண்ணுகிறார்.
கிரேக்க தொன்மங்களில் ஒரு கூறு உண்டு. கடவுள்கள் எப்பொழுதும் மனிதர்களை பார்த்து பொறாமை கொள்வார்கள். வாழ்வது என்பது நொடி பொழுதில் மறைந்து போக கூடியது. அதனால் மனிதர்கள் வாழ்வை அநுபவிக்க பல விதங்களை கண்டு பிடிக்கின்றனர். ஆனால் கடவுள் என்பவர் இறப்பே அற்றவர். சலிப்பு அளிக்க கூடிய வாழ்க்கை. கதையிலும் சலிப்பு என்பது நிறைய இடங்களில் வருகிறது.
இந்த ஜப்பானியரும் airport விட்டு வெளிவருவதில்லை. உலகத்தை சுற்றினாலும் உலகத்தை அநுபவிக்காதவர். Philleas fogg எண்பது நாட்களில் வாழ்ந்த்தில் ஒரு துரும்பும் வாழாதவர். இவர் வாழ்பவரா? இறந்ததவரா?
கதை சொல்லி இரவையும் அநுபவிக்கிறார், அதன் நீராவி தன்மையையும் உறக்கத்தில் உணர்கிறார்.
வாழ்வில் இந்த கதையை போட்டு பார்த்தால், ஒரு நாளையில் நான்கு மணி நேரம் வேலைக்கு பயணம் செய்யும் என் நண்பனின் புலம்பல் நினைவுக்கு வந்தது. அந்த நொடியில் வாழ்க்கை வாழுவது வாழக்கையா இல்லை வாழ்க்கை காலையில் குழந்தைகள் எழும் முன் புறப்பட்டு, அவர்கள் உறங்கிய பின் வீட்டிற்க்கு செல்லும் வாழ்வு. இத்தனைக்கும் அடிப்படை தேவைகளுக்கு மேல் உயரிய பொருளியல் சூழலில் வாழ்க்கை தரம். எலி ஓட்டத்தில் ஒடு்வது, சூரியன் அஸ்தமித்து இரவு வந்துவிடாமல் இருப்பதுக்கு மட்டுமே வாழுவது வாழ்க்கையா என்ற கேள்வி எஞ்சுகிறது.
சதீஷ்.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
‘சூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல்’ சிறுகதையை படித்துவிட்டு உறைந்து விட்டேன்.
நான் உறைந்தேனா அல்லது காலம் உறைந்ததா தெரியவில்லை. ஒரு படைப்பும்
அதை படிக்கும் மனமும் கண்ணாடியில் எதிரெதிரே பார்த்துக்கொண்டு உறைவதென்பது அரிதாகவே நடக்கிறது.
பெரிய வைரக்கல் ஒன்றில் ஒளி பட்டு சிதறி ஜொலிப்பது போல், இந்த சிறுகதையை எந்த பரிமாணத்தில் பார்த்தாலும் ஒளிர்கிறது. உடைந்த வளையல் துண்டுகளை கலைடோஸ்கோப்பில் போட்டு குலுக்கி குலுக்கி பார்த்து மகிழ்வது போல் , இந்த சிறுகதை மீண்டும் மீண்டும் சுண்டியிழுக்கிறது.
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை, இரவு-பகல், கிழக்கு-மேற்கு,ஆண்-பெண், அகம்-புறம், பிறப்பு-இறப்பு, ஊதா-சிவப்பு, உறவு-பிரிவு, புனைவு-உண்மை, கனவு-நிஜம், நோய்-மருந்து, குற்றம்-தண்டனை, கடந்த காலம்-எதிர்காலம் என்று சமச்சீராக எழுதி பிரமிக்க வைத்து விட்டீர்கள். இந்த கதையின் களத்தை கீழேயுமின்றி மேலேயுமின்றி அந்தரத்தில் பறக்கும் விமானத்தில் நிகழ்த்தியது , சமச்சீரின் சிறப்பை கூட்டுகின்றது.
அந்த ஜப்பானியரின் காதலி மரண படுக்கையில் இருக்கும் பொழுது நடக்கும் சம்பவங்களை , யோசித்து எழுதி நிரப்பிக்கொள்ளும் பணியை வாசகர்களுக்கும் கொடுத்து விட்டீர்கள். நன்றி. படைப்பாளியும் வாசகரும் கூடு விட்டு கூடு பாயும் தருணங்கள்தான் எத்தனை மகத்தானது?
இந்த சிறுகதையை மிகவும் ரசித்து படித்தேன் என்பது , நீங்கள் சொன்னது போல் ஃப்யூஜியாமா என்ற வார்த்தையை சொல்வது போன்றுதான். தாக்கத்தை எழுத முயன்று தோற்கிறேன். அதனால் இப்போதைக்கு கையில் வந்து அமர்ந்த இந்த நுரைக்குமிழியை ரசித்தபடி,
ராஜா,
சென்னை.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
October 12, 2016
ஆழத்தின் முகங்கள்
முகங்களின் தேசம் குங்குமம்
குஜராத் சுற்றுலாப்பயணிகளின் கனவு பூமி .நமது தொன்மையான பண்பாட்டு அடையாளங்களில் பலவும் ராஜஸ்தானிலும் குஜராத்திலும் தான் உள்ளன. பல காரணங்கள். முதன்மையானது, இவை அரைப்பாலைவனங்கள். அடர்ந்த காடுகள் பெரிய நாகரீகங்களை உருவாக்குவதில்லை. ஏனென்றால் நவீனச் சாலைகளும் எந்திரங்களும் வருவதற்கு முன்பு மழைக்காடுகளை அணுகுவதோ அழிப்பதோ அவ்வளவு எளிதல்ல. ஓரளவுக்கு மழை பொழிவுள்ள அரைப்பாலைவனங்கள்தான் இரும்பு கண்டுபிடிக்கப்படாத வெண்கலக்காலத்தில் மக்கள் குடியேறி வாழ்வதற்கும் விவசாயம் செய்வதற்கும் மிக ஏற்றவை.
ஆகவே தான் இந்திய பண்பாட்டின் தொடக்க கால அடையாளங்கள் அனைத்தும் சிந்து சமவெளியிலும், ராஜஸ்தான் பாலைவனத்திலும், குஜராத்தின் கட்ச் பாலைவனத்திலும் காணப்படுகின்றன. அவை ‘மறைந்த நாகரீகங்கள்’ என்று சொல்லப்படுகின்றன. ஆனால் தொல்பண்பாட்டின் அடையாளங்கள் எந்நிலையிலும் அழிவதில்லை. அந்த நாகரீகம் மறையும், ஆனால் அந்த பண்பாட்டு அடையாளம் ஏதோ ஒரு வகையில் மறுபிறப்பு எடுத்தபடியே இருக்கும்.
2012 ஜனவரி 28 ஆம்தேதி ஏழுநண்பர்களுடன் குஜராத்திற்குள் நுழைந்து அகமதாபாத் வழியாக குஜராத்தின் கடற்கரை பகுதியை சுற்றிக் கொண்டு கட்ச் நோக்கிச் சென்றோம். முதலில் தொன்மையான நகரமாகிய லோத்தலைப் பார்த்தோம். பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் சிந்து சமவெளி நாகரிகம் என்று படிக்கும்போது மொகஞ்சதாரோ ஹரப்பா என்று மனப்பாடம் செய்திருப்போம். அவை இந்தியாவில் ஆரியர்கள் புகுவதற்கு முன்பிருந்த மக்களின் நாகரிகம் என்றும் திராவிட நாகரிகமாக அவை இருக்கலாம் என்றும் நாம் சொல்லிக்கேட்டிருப்போம்.
ஜான் மார்ஷலும் அலக்ஸாண்டர் கன்னிங்ஹாமும் ஆர்.டி.பானர்ஜியும் மொகஞ்சதாரோவையும் ஹரப்பாவையும் 1870களில் அகழ்ந்து எடுத்த போது அந்த இரு தொல்நகரங்களே அறிய வந்தன. அவற்றைக் கொண்டு அந்தப் பண்பாடு ஆரியர்களின் வருகைக்கு முன்பிருந்த ஒரு மிகச் சிறிய நகரப்பண்பாடு என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தார்கள். அந்த பண்பாடு அத்தனை வளர்ச்சி அடைந்திருந்ததைக் கண்டு அவர்கள் எப்படி வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை ஊகிக்க முயன்றார்கள். அப்படித்தான் அன்றைய குறைந்த தகவல்களைக்கொண்டு அவர்கள் ஆரியரல்லாத நகரநாகரீகத்தினர் என ஊகித்தனர்.
ஆனால் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மொகஞ்சதாரோ ,ஹரப்பா நாகரிகத்தை சேர்ந்த அதைவிடவும் காலத்தால் முந்தைய பல தொல்நகரங்கள் இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அமைந்துள்ளன. அவற்றில் முக்கியமானவை லோத்தல், டோலவேரா, காலிஃபங்கன் ஆகியவை. இவ்வளவு பெரிய நாகரீகம் போரால் அழிந்திருக்காது, சூழியல் மாற்றமே காரணம் என்று இன்று ஊகிக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக மெல்லமெல்ல அந்த நிலம் வரண்டு பாலைவனமாகியபோது அந்த நாகரீகம் அழிந்தது. ஆனால் அந்த மக்கள் மறையவில்லை, அவர்கள் வேறுநிலங்களில் குடியேறி வேறுவகையில் வளர்ந்தனர். அவர்கள்தான் நாம்.
1954ல் லோதல் பற்றிய முதல் தடயம் கிடைத்தது. 1955இல் பெப்ருவரி 13 ஆம் தேதி லோதல் எஸ்.ஆர்.ராவ் தலைமையிலான குழுவால் முதல்முறையாக அகழ்ந்தெடுக்கப்பட்டது. ஐந்தாண்டுக்கால ஆராய்ச்சிக்குப்பின் 1960 இல் இந்தியத் தொல்லியல் துறை அந்நகரைப் பாதுகாக்க ஓர் அமைப்பை உருவாக்கியது. அதைப்பற்றிய ஆய்வேடுகள் வெளியிடப்பட்டன.
கிமு இருபத்துநான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த தொல்நகரம் இது. லோதல் என்றால் மரணமேடு என்று குஜராத்தி மொழியில் பொருள். மொகஞ்சதாரோவுக்கு சிந்தி மொழியில் அதே பொருள்தான். இன்று ஒரு மேடாக இருக்கும் இந்த இடம் வரை சமீபகாலம் வரை கடல் இருந்திருக்கிறது. லோதல் நெடுங்காலம் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது.
லோதலின் ஆச்சரியங்களில் முதலானது அங்குள்ள நுட்பமான சுடுமண் முத்திரைகளும் எழுத்துக்களும். பாடநூல்களில் மட்டுமே கண்ட சிந்துசமவெளி எழுத்துக்களை நேரில் கான்பது பிரமிப்பூட்டும் அனுபவம். பெரும்பாலான முத்திரைகளில் சிந்துவெளிக்காளையும் ஒற்றைக்கொம்பு மிருகமும் இருந்தன.
லோதல் நகருக்குள் நடந்தோம். உறுதியான சுட்டசெங்கற்களால் ஆன அடித்தளங்கள். சுவர்கள். அவை நாலாயிரத்தைநூறு வருடம் முந்தையவை எனக் கற்பனை செய்யவே பிரமிப்பாக இருந்தது. உயர்ந்த நகர்மையம். அங்கே பெரிய மாளிகைகளுக்கான அடித்தளங்கள். குளியலறைகள். அங்கிருந்து நீர் வழிந்தோடும் கச்சிதமான சாக்கடை அமைப்புகள். நகர் நடுவே சதுக்கபீடங்கள்.
லோதலின் முக்கியமான அமைப்பு என்பது அங்கே அமைக்கப்பட்டிருந்த பெரிய துறைமுகக்குளம்தான். ஒரு பெரிய படகுத்துறை இது. அறுபதடி நீளமான படகுகளைக்கூட லோதல் மக்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றில் ஏறி நெடுந்தூர கடற் பயணங்களைச் செய்திருக்கிறார்கள். சுமேரியாவுடன் வணிகம் செய்திருக்கிறார்கள். அக்காலத்தில் கடல் மிக அருகே இருந்தது, கடல்பாசிகளின் புதைவடிவத் தடம் வழியாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
படிப்படியாக இறங்கி சென்று ஆழத்தில் மண்ணுக்கு அடியில் ஆழத்தில் நமது தொல்வரலாற்றில் இருப்பது போன்ற ஒரு அனுபவம். அக்கால மக்கள் தங்கள் குழந்தைகளுக்காக செய்த சிறிய களிமண் பொம்மைகளை பார்த்தபோது பெருவியப்பே ஏற்பட்டது.
கட்ச் பகுதியின் ஆச்சரியங்களில், ஒன்று சிந்து சமவெளியின் இலச்சினைகளில் இருக்கும் அதே காளையை அங்கே அரைப் பொட்டலில் மேய்ந்து கொண்டிருப்பதாக காணமுடியும் என்பது. காலம் நான்காயிரம் வருடம் ஓடிப்போய்விட்டதை அது அறியவே இல்லை என்று தோன்றும். உயர்ந்த புள்ளிருக்கையும் தாழ்ந்த கழுத்து மடிப்புகளும் குட்டைக் கால்களுமாக அது சிலிர்த்தபடி நம்மைப் பார்க்கையில் ஹரப்பா நாகரிகம் நம்மை திகைப்புடன் நோக்குவதாகத் தோன்றும்.
லோத்தலில் இருந்து டோலவேராவுக்கு கட்ச் வளைகுடாக்கரை வழியாகச் செல்லும் போது வழியில் ஒரு உப்பு வளைகுடாவை பார்த்தோம். கடல் நீர் தேங்கி கடுமையான வெயிலில் ஆவியாகி வற்றி கீழிறங்கி செல்கிறது. பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெண்ணிற உப்பு மட்டுமேயான கடல். கண்ணாடி பரப்பு போல அதில் படர்ந்த வெயில் கண்களை கூசி நீர்வழியச் செய்தது. எங்கள் எவரிடமும் கறுப்புக்கண்ணாடிகள் இருக்கவில்லை. ஆகவே கண்களை மூடியபடி அந்த உப்புப் பரப்பின் மேல் ஏறி நடந்தோம். மீன்களும் நண்டுகளும் உப்புக்குள் செத்து கலந்திருந்தன. சேறும் உப்புமாக காலடியில் மிதிபட்டு குழம்பின. உள்ளே செல்லச் செல்ல உப்புக் குவியல்கள் கால்பட்டவுடன் நொறுங்கி உள்ளே இழுத்துக் கொண்டன. மேலும் செல்வதற்கு அஞ்சி திரும்பிவிட்டோம்.
உப்பு வளைகுடாவிலிருந்து செல்லும் பாதை எங்களுக்குத் தவறிவிட்டது. இந்த நிலம் உயரமற்ற குட்டை மரங்களும் முட்புதர்களும் மட்டும் கொண்டது. தொலைவிலிருந்து பார்க்கையில் வண்டிச்சாலைகள் கூட ஒற்றையடிப்பாதை என்று தோன்றும் அளவுக்கு விரிந்து பரந்தது. சாலை அடையாளங்கள் என ஏதுமில்லை. சாலையில் எவரிடமும் வழி கேட்கவும் முடியாது. ஏனெனில் மனிதர்களைப்பார்ப்பதே மிக அரிது. பார்க்கும் மனிதர்களுக்கும் அவர்களின் உள்ளூர் குஜராத்தி தவிர எந்த மொழியும் தெரிவதில்லை. அவர்கள் வாழும் மிகச்சிறிய வட்டத்திற்கு அப்பால் வழியும் தெரிவதில்லை.
ஒரு இடத்தில் வழி தவறிவிட்டால் கூட மீண்டும் ஒரு சாலையை பிடிப்பதற்கு முன்னூறு கிலோமீட்டருக்கு மேல் சென்றாக வேண்டும். நெடுந்தொலைவு சென்ற பிறகுதான் வழி தவறிவிட்டது என்பதை உணர்ந்தோம். அன்றெல்லாம் GPS இல்லை என்பதனால் வழியை வரைபடத்தை வைத்து தான் கண்டுபிடிக்கவேண்டும். வரைபடங்களோ இருபது முப்பது வருடம் பழையவை. ஒரு வழியாக ஊகித்து திரும்பி ஓட்டினோம். மாலையில் பலநூறாண்டுகளுக்கு முன்பு வற்றிப் போன பிரம்மாண்டமான ஏரி ஒன்றுக்குள் சென்று இறங்கினோம்.
என் வாழ்வின் மிக அற்புதமான காட்சிகளில் ஒன்று அந்த ஏரி. மழைக்காலத்தில் அது நனைந்து சேறாகிவிடுகிறது. மழை முடிந்ததும் அந்தச் சேறு வெடித்து பாளங்களாகிறது. கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை களிமண் ஓடுகளைப் பரப்பி தரையிட்டதைப் போல் இருந்தது.
அந்தி சாய்ந்துகொண்டிருந்தது. திடீரென்று வண்டியின் டயர் பொத்தலாகி சரிந்து நின்றுவிட்டது. ஓட்டுநர் சபித்தபடி அதை மாற்ற ஆரம்பித்தார். அதைப்பற்றி கவலையே படாமல் இறங்கிச் சென்று அந்தப்பாளங்களை எடுத்து சுழற்றி வீசி விளையாடினோம் ஒரு இஞ்சு கனம் கொண்ட களிமண் பாளங்கள். தொலைவில் நின்று பார்க்கையில் பிரம்மாண்டமான தோல்பையின் மேல் பகுதி போலவோ மாபெரும் முதலை ஒன்றின் தோல் போலவோ மரப்பட்டையின் பரப்பு போலவோ பிரமை தட்டியது. அல்லது வேறு ஏதோ கிரகத்தில் சென்று அங்குள்ள நிலப்பரப்பில் நடப்பது போல
பழுதை நீக்கி புதிய சக்கரத்தை மாட்டியவுடன் கிளம்பியபோது சிவப்பு வானம் குடைபோலச் சூழ்ந்திருந்தது. செல்லச் செல்ல எதுவுமே தென்படாமல் நான்கு பக்கமும் அந்த மாபெரும் களிமண் பரப்பே வந்து கொண்டிருந்தது. நிலம் மாறுபடாத போது உண்மையில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோமா இல்லை ஒரே இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறோமா என்ற ஐயம் வந்துவிட்டது.
நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் புழுதியுடன் விரைந்து கொண்டிருந்தது கார். ஒருமணி நேரம் ஆகியும் எதிரே எந்த வண்டியும் வரவில்லை. எந்த ஊரும் தெரியவில்லை. “இதன் மறுபக்கத்தில் கடல்தான் இருக்க போகிறது திரும்பிவிடுவோம்” என்றார் கிருஷ்ணன். சேற்று வெளிக்கு அப்பால் சூரியன் குழம்பி சிவந்து அணைந்தது. “இருட்டாகிறது. நம்மிடம் குடிநீர் கூட இல்லை” என்றார் கடலூர் சீனு. “திரும்புவோம்” என்று பல குரல்கள் எழுந்தன. ஓட்டுநர் “அவ்வளவு தூரம் திரும்பிப் போனால் அங்கும் பாலைவனம் தான் இருக்கிறது. எங்கு போவது?” என்றார்.
”மிகச்சரியாக நடுவில் வந்து மாட்டிக் கொண்டுவிட்டோம்” என்றார் ராஜமாணிக்கம். “வேறு வழியே இல்லை முன்னால் சென்றுகொண்டே இருக்க வேண்டியதுதான். எப்படியும் இதன் மறுபக்கம் ஒன்று இருக்கும்” என்றார் டிரைவர். “செல்வோம்” என்று துணிந்தோம். வேறுவழியே இல்லை.
மிக விரைவிலேயே காற்று இருட்டாகிவிட்டது. வானத்தில் மட்டும் மெல்லிய ஒளி இருந்தது. சற்று நேரத்தில் வேறெங்கும் பார்க்க முடியாதபடி வானம் விண்மீன்கள் செறிந்து ஒளி கொண்டது. விண்மீன்களின் ஒளியை நிலவொளி போல பார்க்க முடியும் என்று அப்போது தான் உணர்ந்தேன். அந்த வெளிச்சத்தில் தகடுகளாக அடுக்கப்பட்டிருந்த நிலம் லேசாக மின்னியபடி எங்களைச் சுழன்று வந்தது.
நெடுநேரம் கடந்தபின் மிகத் தொலைவில் ஒரு சிவந்த புள்ளியை பார்த்தோம். ”நெருப்பு! நெருப்புதான் அது!” என்று நண்பர்கள் கூவினார்கள். ”யாரோ விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள்” என்றார் கிருஷ்ணன். “விளக்கென்றால் அவ்வளவு தூரம் தெரியாது” என்றார் கடலூர் சீனு. “காட்டுத்தீயாக இருக்குமோ?” என்றார் கே.பி.வினோத். “அதற்கு இங்கே காடு எங்கே இருக்கிறது?” என்றேன் நான். “அங்கு மனிதர்கள் இருக்கிறார்கள் தானாக தீ எரிய வாய்ப்பே இல்லை. மட்டுமல்ல, அந்த தீ பரவவும் இல்லை. அதை நோக்கி செல்வோம்” என்றேன்.
கார் அதை நோக்கி சென்றது எவ்வளவு ஓடியும் அந்நெருப்பு கூடவோ குறையவோ இல்லை என்று தோன்றியது. ஆனால் மெல்ல அத்தீக்கு சுற்றும் மாடுகள் நிற்பதை மெல்லிய நிழலுருவமாக கண்டோம். மேலும் அணுகியபோது உயரமற்ற துணிக் கூடாரங்களை கண்டோம். ”மனிதர்கள்! மனிதர்கள்!” என்று உற்சாகத்துடன் கூவினோம். நாங்கள் அணுகிய போது அவர்கள் நெருப்பை தணித்து கனலாக்கி வைத்திருந்தார்கள்.
வண்டியை நிறுத்தினோம். நூறு மாடுகளுக்கு மேல் அங்கே பட்டி கட்டப்பட்டிருந்தன. எல்லாமே சிந்துசமவெளியின் இலச்சினையில் உள்ள மாடுகள். அவற்றின் உரிமையாளர்கள் ஐவர் அந்தக் கனலைச் சுற்றி கம்பளிகளைப்போர்த்தியபடி அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்களின் மூன்று துணிக்குடில்களுக்குள் குழந்தைகளும் பெண்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். நாங்கள் இறங்கி அவர்களை நோக்கி சென்றோம்.
எங்களைப்பார்த்ததுமே ”ஆவோ பாய்” என்று ஒருவர் உரக்க வரவேற்றார். ”வாருங்கள்! சகோதரனே!” என்று முற்றிலும் முகமறியாத ஒருவரை அழைக்க மனிதர்களை காண்பதே அரிதாக உள்ள பாலைவனத்தில் வாழவேண்டும்போல. நாங்கள் எதுவும் கேட்பதற்குள்ளேயே ”அமருங்கள் டீ குடியுங்கள்” என்றார். நாங்கள் ‘அமுதம் அருந்துங்கள்’ என்ற அழைப்பாகவே அதை எடுத்துக் கொண்டோம். நெருப்பை சுற்றி உடல் குறுக்கி அமர்ந்தோம்.
ஒருவர் ஒரு பெரிய அலுமினிய கெட்டிலை அந்தக் கனல் மேல் இருந்த கம்பியில் கட்டித்தொங்கவிட்டு நீர் ஊற்றினார். கொதிக்கும் ஒலி கேட்டதும் எடுத்து மண் கோப்பைகளில் ஊற்றி சூடான பால்விட்டு தேநீர் தயாரித்து எங்களுக்கு அளித்தார். ”மன்னிக்கவேண்டும் உண்பதற்கு ஏதும் இல்லை” என்றார். ”இல்லை நாங்களே வைத்திருக்கிறோம்” என்றோம். கிருஷ்ணன் சென்று காரிலிருந்து பிஸ்கட்டுகளையும் ரொட்டியையும் எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்தார்.
நாங்கள் வழி தவறிவிட்டதைச் சொன்னோம். ”நீங்கள் வழி தவறவே இல்லை இதுதான் அந்த வழி” என்றார் ஒருவர். “இங்கிருந்து இடமாக சென்றால் அரை மணி நேரத்தில் முதல் ஊர் வரும் அங்கிருந்து தார் சாலை இருக்கிறது அதில் மேலும் ஒரு மணி நேரம் சென்றால் நீங்கள் தங்குவதற்கு விடுதிகள் உள்ள சிறிய ஊர் வரும்” என்றார்.
“நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்றேன். ”நாங்கள் இப்பகுதியில் மாடுமேய்க்கிறோம். இங்கு மாடுகளை நெடுந்தொலைவுக்கு கொண்டு சென்றால் மட்டும்தான் புல் கிடைக்கும்” என்றார். மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விடை பெற்று வண்டியில் ஏறிக் கொண்டோம்.
சென்று அடுத்த ஊரை அடைந்த போதுதான் ராஜமாணிக்கம் சொன்னார். “அவங்க முகமே நாம பாக்கலை சார்!” அவர்கள் எவருடைய முகமும் எங்களுக்குத் தென்படவே இல்லை. அவர்கள் குனிந்து அமர்ந்திருந்தமையாலும் தலையை கம்பளியால் மூடிக் கொண்டிருந்தமையாலும் முகங்கள் இருளுக்குள் இருந்தன.
“அவங்க சிந்துசமவெளியிலே வாழ்ந்தவங்களா இருப்பாங்களோ? மாடுகளைப்பாத்தீங்கல்ல?” என்று கிருஷ்ணன் சொன்னார். வாய்விட்டுச் சிரித்தாலும் அப்படிக் கற்பனைசெய்வது நெகிழ்வூட்டக்கூடியதாக இருந்தது
முகங்களின் தேசம் குங்குமம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கிராதம்,அய்யனார்,கதகளி
இனிய ஜெயம்,
ஜன்னல் இதழில் நாட்டார் தெய்வங்கள் உருவான சாரத்தின் வித விதமான வண்ண பேதங்கள் கூடிய உலகில் கற்பனையில் உலவிக் கொண்டிருக்கிறேன். இதழ்களை சேர்த்து வைக்கும் பழக்கத்தை தற்ச்சமயம் கை விட்டு விட்ட்டதால், உண்மையில் இத் தொடர் நூல் வடிவம் கொள்கையில்தான் அதில் மூழ்கித் திளைக்க வேண்டும். முன்பு ஒரு உரையாடலில் சடங்குத் தெய்வம், தத்துவ தெய்வம் இவற்றுக்காண பேதத்தை விளக்கி, தொடர்ந்து அருள்மிகு எனும் அடைமொழியுடன் நாட்டார் தெய்வங்கள் பெருந்தெய்வங்களின் வரிசைக்குள் உயரும் பரிணாம கதிவரை விளக்கினீர்கள். அன்றைய உரையாடலின் தொடர்ச்சியாக சில வாரங்களுக்குள் இத் தொடர் வாசிக்கக் கிடைத்தது என் நற்பேறு.
ஊரில் பெரிய சண்டியன், பெண்களை கவர்ந்து செல்கிறான், கைகலப்புக்கு அஞ்சாதவன், அரசனின் சட்ட திட்டங்களுக்கும் தண்டனைக்கும் கூட பயப்படாதவன். வஞ்சனையால் கொலை செய்யப் படுகிறான். பேயாய் அலைகிறான். கொல்லப்பட்டவன் சண்டியன் மட்டுமல்ல, அவன் உருவில் இங்கே வந்த, மானுடத்தின் சாரமான ”அடங்காமை”. வென்று செல்லும் ஷாத்ரம், குற்ற உணர்வில் ஊரார் அவனை சாமியாக்கி வழி படுகிறார்கள்.வீரத்துக்கு ஒரு சாமி. பல நாட்டார் தெய்வங்களின் தோற்றப் பின்னணி இது. இந்தப் புள்ளியில் வைத்து, சந்தன வீரப்பன், [சாதி அமைப்புக்குள் என்றாலும் கூட] சில இடங்களில் குல சாமி அளவு கொண்டாடப்படும் நிலையின் பின்னுள்ள காரணியை அறிய முடிகிறது.
நேர் எதிராக, கள்ளர் குடியில், மல்லர்கலான தந்தை தாய்க்குப் பிறக்கும் சோப்ளாங்கியின் கதை. பரிதாபமாக வாழ்ந்து, பரிதாபமாக செத்து, ஊரார் பரிதாபப்பட்டு அவனை சாமியாக்கி, அவன் ஒரு நாட்டார் தெய்வம். பரிதாபத்துக்கு ஒரு சாமி. தென்னன் தோப்பை காக்க, ஐயனாரின் நாயை தோப்புக்கு காவலாக மாமா மாற்றும் கதை மிக்க சுவாரஸ்யம் கொண்டது. அக் கதையின் இறுதியில் ஒரு வரி,// ” இன்று பேய், என பயப்படும் பல விஷயங்கள், முன்பு வென்றவர்களின் [இன்றைய தோல்வியாளர்கள்] தெய்வமாக விளங்கியவை.’// ‘ மார்க்சிய சிந்தனையாளர் எஸ் ஏ டாங்கே, தனது கட்டுரை ஒன்றினில் இப்படி எழுதுகிறார், // ஒரு அரசியல் பண்பாடு பின்வாங்கி, புதிய அரசியல் பண்பாடு நிலைபெற்ற பின், முந்தய பண்பாட்டின் உயர்வான பல அலகுகள், இப்போது கீழான வெறுக்கத்தக்க, அல்லது பயப்படத் தக்க விஷயமாக காணக் கிடைக்கிறது//.
முன்பு ஆ கா பெருமாள் அவர்கள் வசம் ஒரு வினா எழுப்பினேன். இன்று எங்கெங்கும் காணக் கிடைக்கும் திரௌபதி அம்மன் கோவில், மயானக் கொள்ளை நிகழ்ச்சி, அனைத்துக்கும் மேலாக சபா பார்வ, பாரதப் போர் கூத்துக்கள், இங்கே வலுவான நாட்டார் கலையாக நிலை பெற்றது எப்படி?
அவர் சொன்னார், செவ்வியல் பாரதம் நாட்டார் கலைகளை பாதித்து போல, நாட்டார் கலைகளில் இருந்தும் பல அம்சங்களை செவ்வியலுக்குள் காணலாம். குறிப்பாக இந்த பரிவர்த்தனை தமிழகத்தில் பல்லவர் காலத்தில் வேகம் பெற்றது. அன்றைய அரசியல் நிலரவரப் படி, மக்கள் மத்தியில் போர் சார்ந்த விழுமியங்களை நிலை நிறுத்த, இங்கு ஏற்க்கனவே இருந்த வேறு கூத்துப் பிரதிகளுக்குப் பதிலாக, பாரதத்தின் பகுதிகள் பல்லவ அரசு மானியத்தில் கூத்தாக அரங்கேறின.
இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளின் ஒரு இழை பாம்பும் கீரியும், கதையில் வருகிறது. தொடரின் கதை வரிசை நெடுக வித விதமான தாய்களின் கண்ணீர். இக் கதையில் அந்த பிராமணத்தி ஏன் கிரியை, கொள்கிறாள் ? தனது மகனுக்கு இணையாக மறு முலையை கீரிக்கு அளித்து அதை வளர்த்தவள், ஒரு கணம் கூட சிந்திக்காமல் அதை அவளால் கொல்ல முடிகிறது என்றால் என்ன பொருள்? எந்த எல்லைக்கு சென்றாலும் தாயால் தன்னுடைய மகவுக்கு மட்டும்தான் தாயாக இருக்க முடியும், மற்றைய எல்லாம் வெறும் உள மயக்கு தானா? சிந்தனைகளை எங்கெங்கோ அழைத்து செல்லும் கதை. மகனை, கணவனை இழந்து, ஆற்றில் விழுந்து இறக்கிறாள், வெள்ளம் வந்து ஊரே அழிகிறது. ஊரார் அவளை சாமி ஆக்குகிறார்கள். ஊரை வெள்ளத்தில் இருந்து நோய் நொடிகளில் இருந்து காக்கும் சாமி ஆகிறாள் அவள். இன்னொரு எல்லையில் பாம்பும் கீரியும் எதிர் எதிர் நிலைகளில் நின்று அக் கூறு தத்துவ எல்லைக்குள் காலடி வைக்கிறது. சடங்குத் தெய்வம், தத்துவ தெய்வத்தின் வரிசைக்கு உயரும் கூறு. இக் கதை மகா பாரதத்திலும் வரும் கதை என எழுதுகிறீர்கள்.
கிராதம் நாவல் குறித்த அறிவிப்பு கண்டேன். கிராதம் கதகளியில் முக்கிய இடம் வகிப்பது என்றும் எழுதி இருந்தீர்கள். இனிய ஜெயம், வெண் முரசு வழங்கும் உணர்சிகரம், கதகளியில் தோயாமல் முழுமை கொள்ளாது என கடந்த சில நாட்கள் கிடந்தது ஊறிய கதகளி காணொளிகள் உணர்த்து கின்றன. உங்களது கலைக் கணம் வாசித்ததில் இருந்தே [அதற்க்கு முன் ஊட்டி குரு குலத்தில் ராஜீவன் அவர்களின் வெளிப்பாடு] ஒரே ஒரு முறையாவது கதகளியை பார்த்து விட வேண்டும் என ஆவல் உந்தியது. சிதம்பர நாட்யாஞ்சலியில் என்னென்னவோ நடக்கிறது ஏன் ஒரே ஒரு முறை கூட கதகளி நடைபெற மறுக்கிறது என்ற என் உள்ளத்து வினாவுக்கு ஆலப்புழாவில் பதில் கிடைத்தது.
அஜிதனுடன் தொற்றிக் கொண்டு ஆலப்புழா சென்றேன். அருகே ஒரு கிராமத்தில் அன்று கிருஷ்ணன் கோவிலில் கதகளி. ஒப்பனை துவங்கி, அதி காலை அனைத்தும் நிர்மால்யம் கொள்ளும் கணம் வரை அருகிருந்து கண்டேன். முதலில் ஒரு கதகளி நிகழ்ச்சி நடத்தி முடிக்க குறைந்த பக்ஷம் ஐம்பதாயிரம் முதல், ஒரு லட்சம் வரை தேவை, அதன் ஒப்பனை துவங்கி, ஒப்பனை கலைதல் வரை நடிகர்களுக்கு தேவையான நேரம், கதகளி இரவெல்லாம் அப்போதும் முடியவில்லை எனில் மறுநாள் இரவும் தொடரும் கலை, இது எதற்கும் நாட்யாஞ்லியில் இடமே இல்லை.
அனைத்துக்கம் மேலே கதகளி ஒரு ரணகளமான நிகழ்த்துக் கலை. தமிழக சக்கரைப் பொங்கல் கோவில்கள் இதற்க்கு தாங்காது. கதகளி ஒரு எல்லையில் மிகுந்த பிராந்திய தன்மை கொண்டது. மலையாளம் அறிந்திருந்தால் மட்டுமே முதல் கட்ட பிடி கிடைக்கும், [பாவம் அன்றெல்லாம் அஜிதனை நிகழ்வின் கூடவே அதை தமிழில் மொழி மாற்றம் செய்ய சொல்லி அவனது கதகளி ஆவலை கொன்றேன்] அடுத்தது கை முத்திரைகள், இதில் தேர்ச்சி கொண்டால் மட்டுமே கதகளி ருசிக்கத் தொடங்கும்.
அன்று ஒரு இளம்பெண் முதன் முதலாக அணி புனைந்து புறப்பாடு செய்ய மேடை ஏறினாள். மணிமுடி, வாத்தியக் கலைங்கர்கள், மேடை என அப் பெண் ஒவ்வொன்றாக வணங்கும் போது, என்ன என்னவோ உணர்சிகள் உள்ளே முட்டி கண்கள் பனித்தன. அதன் பின் ருக்மாங்கத சரிதம், அதன் பின் வாலி வதம் . என்ன சொல்ல ஒரு புதிய கலை அறிமுகம் ஆகும் போது கிடைக்கும் புரியாமையும், பரவசமும், அதுதான் வாழ்வின் காதலனை உயிர்த்திருக்க செய்கிறது. அதை அன்று மீண்டும் அனுபவித்தேன்.
இல்லம் மீண்டு, கதகளி சார்ந்த அணைத்து காணொளிகள்களிலும் விழுந்து எழுந்து புகுந்து புறப்பட்டேன். கதகளி அறியாதவர்களால் செய்யப்பட்ட ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பு. அந்த இடர் தாண்டியும் அக் கானோளிகளின் வசீகரம் குறையவில்லை. குறிப்பாக கர்ண சபதம். மனதுக்குள் ஆயிரம் முறை அம் மேடையை விழுந்து தொழுதேன். கர்ணனின் மனோ தர்மத்தில் ஒரு இடம், கர்ணன் குற்ற உணர்ச்சி மேலிட புலம்புகிறான், ”என் தனுஷுக்கு எதிர் இங்கே ஏதும் இல்லை. ஆனால் இந்த ஞானம், குரு உளம் கனிந்து எனக்கு அருளியது அல்ல, குருவின் இதயத்தைப் பிளந்து நான் எடுத்துக் கொண்டது.” மொட்டை மாடி, இரவு, தனிமை, கலை மட்டுமே கிளர்த்தும் தூய துயரம்.
மனோ தர்மம்ஒ ரே உருவம், துரோணராக, பரசுராமராக, குந்தியாக, கர்ணனாக மாறி மாறி கூடு விட்டு கூடு பாய்ந்து மாயம் நிகழ்த்தியது. அந்த உருவத்தில் எதை நாம் துரோணராக, குந்தியாக, கர்ணனாக காண்கிறோம்? குந்திக்கு பாண்டாவர்களின் உயிரை கர்ணன்உ த்திரவாதம் செய்யும் இடம். பல முறை மீண்டும் மீண்டும் கண்டு, அந்தக் கணத்தின் உணர்வு உச்சத்துக்கு சென்று சேர்ந்தேன். இனிய ஜெயம் உங்கள் நாவல் ஒன்றினில் ஒரு வரி வரும், பறந்து, பறந்து, பறவை உதிர்ந்து வெறும் பறத்தல் மட்டுமே எஞ்சும் கணம் என, அதைத்தான் அங்கே கண்டேன். அங்கே இருந்தது கர்ணனின் மேன்மை அல்ல, வெளிப்பட்டத்து மேன்மை மட்டுமேயான மேன்மை. எனது கர்ணனை இங்குதான் முழுதாக கண்டு கொண்டேன்.
கர்ணனாக நடித்தவர் கலாமண்டலம் கோபி. இன்றைய கதகளியின் லிவிங் லேஜான்ட். அன்று அஜிதனுடன் நெல்லியோடு வாசுதேவன் நாயர், மார்கி விஜயகுமார், கலாமண்டலம் கோபி இவர்களின் முன்னிலையில், இவர்கள் காலடியில் அமர்ந்து முதன் முதலாக கதகளியை அறிந்தேன். ருக்மாங்கதன் மகனை கொல்ல வாளுயர்த்தும் போது உயர்ந்த செண்டை, வாலியின் இறுதித் துடிப்பு அடங்குகையில் வெளியே சன்னமாக பெய்துகொண்டிருந்த மழை, அனைத்தையும் நோக்கிக் கொண்டு நின்றிருந்த பம்பா விளக்கு. என்ன சொல்ல, எல்லாம் என் நல்லூழ். கிராதம் துவங்க வாழ்த்துக்கள் .
கடலூர் சீனு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

