Jeyamohan's Blog, page 14
October 4, 2025
சிகண்டி – மலர்விழி மணியம்
சிகண்டி நாவலை வாசித்து முடித்த பொழுது என் தோழி பிரேம்மாயா அவர்கள் ஓஷோ அவர்களின் சில வரிகைகளை என்னிடம் பகிர்ந்தார்கள். அவை கீழ்கண்டவாறு,
“ஆதாம் தன் ஏதேன் தோட்டத்தை விட்டு, வெளியேறி, அலைந்து, திரிந்து பாதையைத் தவறவிட்டு, பின்னர் ஒரு காலத்தில் மீண்டும் தன் வீட்டிற்குத் திரும்புகிறான், வெகுதூரம் சென்றுவிடுகிறபோது ஆதாமாக இருப்பவன் மீண்டும் வீட்டை அடையும் போது இயேசுவாகிறான். வீடு நோக்கிய பயணத்தைத் தொடங்கும்போதே அவன் இயேசுவாகி விடுகிறான். ஆதாம் தான் முதல் மனிதன் இயேசு கடைசி மனிதன், ஆதாம் தொடக்கமாகவும் இயேசு முடிவாகவும் இருக்கிறார்கள், ஒரு வட்டம் அங்கே முழுமைமடைகிறது.”
இவ்வரிகளுக்கும் சிகண்டி நாவலின் நாயகன் தீபனிற்கும் நிறைய பொருத்தம் இருக்கின்றது.
தன் அம்மாவோடு சண்டையிட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் பதினைந்து வயது தீபனின் பாதையில் முன்னும் பின்னும் நகர்கின்றது கதை. லூனாசில் இருந்து கிளம்பியவன் தனது தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்து சௌவாட்டிலும் காராட் பஜாரிலும் இயங்கும் இருண்ட உலகிற்கு அவனது ஆசைகளும் பேராசைகளும் எவ்வாறு அவனை இழுத்துச் செல்கிறது என்பதும், அங்கே சரா என்னும் திருநங்கையை பெண் என நினைத்துக் காதலித்து, பின் ஒரு கட்டத்தில் அவள் ஒரு திருநங்கை என அறிந்து அவளைப் புறக்கணிக்க எண்ணியும், அவனது ஆண்மையை இழந்து, அதை மீட்டெடுக்கும் பொருட்டு அவன் மேற்கொள்ளும் இருண்ட பாதையும் எங்கு அவனை இட்டுச் செல்கிறது என்பது தான் கதையின் சாராம்சம்.
சிறுகதையோ நாவலோ வாசிக்கும் பொழுது நாம் வாழாத ஒரு வாழ்க்கையை வேறொரு நிலப்பரப்பில், வேறு மனிதர்களின் இடத்தில் நம்மைப் பொருத்திக் கொண்டு வாழ்ந்துவிட்ட அனுபவங்களை அடைய முடியும் எனில், அந்தப் படைப்பு ஒரு சிறந்த படைப்பிற்கான உதாரணம்.
அப்படியான அனுபவங்கள் அனைத்து படைப்புகளும் அளிக்கின்றனவா என்றால், இல்லை என்று தான் நினைக்கின்றேன். சில படைப்புகளை வெறும் Bird’s view-ல் இருந்து கூட வாசித்திருப்போம்.
ஆனால் சிகண்டியின் வாசிப்பின் வழி நான், தீபனாக, சராவாக, ஈ.புவாக, நிஷாம்மாவாக என்னால் வாழ முடிந்தது.
இந்நாவலின் அடித்தளம் ஈபு. ஈபு ஒரு மாபெரும் ஆளுமை. தனது சேவல்களைக் காக்கும் பகுச்சரா மாதாவின் உருவம் ஈபு. தாயம்மாகை என்ற முறையில் தன் ஆண் குறியை அறுவடை செய்து கொண்டு, தன்னை ஒரு பெண் என நிலைநிறுத்தியவர். சௌவாட்டில் தன்னை நாடி வரும் திருநங்கையினர்களுக்கு அறுவடை செய்து கொள்ள உதவியும், அவர்கள் விரும்பும் வாழ்வை அமைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறார்.
பகுச்சரா மாதா தனது சேவல்களை வஞ்சிப்போருக்குத் தரும் தண்டனை மிக நூதனமானது. அவளது உருவமான ஈபுவும் தனது பாதுகாப்பில் இருக்கும் திருநங்கைகளை அவ்வாறே காத்து வருகிறார்.
சிறுபான்மையினரைக் காக்கும் தலைவனுக்கென்று ஒரு அறம் உண்டு. நாட்டின் அரசனாகினும் தனது நிலத்திற்கும் மக்களுக்கும் ஒரு ஆபத்தென்றால் அதை எதிர்த்துப் போராடுவதும், வேண்டுமெனில் கொலை செய்வதும் தான் அந்த அரசனிற்கு உரிய தர்மமாகவே இருக்க முடியும். அப்படிப்பட்ட ஆளுமை தான் ஈ.பு.
சரா, ஈ.பு வை அம்மா என்றும், நிஷாம்மாவை சின்னம்மா என்றும் அழைக்கிறாள். ஈ.பு என்றால் ‘அம்மா‘ என்று பொருள். தன்னிடம் அடைக்களம் நாடி வரும் திருநங்கைகளுக்கு எல்லாம் அவர் “அம்மா” தான். இந்நாவல் திருநங்கையினரின் வாழ்வின் வழி உணர்த்தும் ஒன்று, தாய்மை என்கின்ற தகுதியை அடைய ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என்றோ, ஒரு உயிரைக் கருவில் சுமக்க வேண்டும் என்றோ கட்டாயம் ஏதும் இல்லை என்பது. தாய்மை என்பது ஒரு உணர்வு. அந்த உணர்வு ஒரு ஆணிற்குள் மேலோங்கி இருப்பினும் அதற்குப் பெயர் ‘தாய்மை’ தான் என்றும், அது பெண்மைக்கு உரியதென்றும் நிலைநாட்டும் கதைமாந்தர்கள் தான் ஈபுவும், நிஷாம்மாவும், சராவும்.
ஈ.பு எவ்வாறு பகுச்சரா மாதாவின் பிம்பமோ, சரா, கருணையின் மாதாவான குவான் யின்–ன் பிம்பம். உடைந்த பொருட்கள் எவற்றையுமே தூக்கி எறியாமல், தன்னுடைய கைவண்ணத்தினால் அவற்றை ஒன்றிணைத்து உயிர் தரும் அவளுடைய குணம், உடைந்த ஒவ்வொன்றிலும் அவள் தன்னையே காண்கிறாள் என்பதனைக் காட்டுகிறது. மேலும், அவற்றுக்கு வேறொரு வடிவம் தந்து, அவள் தன்னையே உயிர்ப்பித்துக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட குணம் கொண்டவளால் எப்படி தீபனை தண்டிக்க முடியும்.
தன் கடவுள் முன் மாத்திரம் அவள் ஆடும் அப்ஸரஸ் நடனத்தை தீபனிற்கும் அவள் காட்டுவதில், தீபனின் மேல் அவளுக்கு இருக்கும் அன்பின் ஆழம் வேறு என்று காட்டுகின்றது.
நான் இந்த உலகில் பயப்படும் முதல் மனிதர்கள், மன்னிக்கின்ற குணம் கொண்ட மனிதர்களை. தனது உடலைத் தாண்டி ஆன்மாவை நொறுக்கியவர்களை மன்னிக்கத் தயாராக இருக்கும் மனங்களை. ஒருவரை எத்தனை முறை மன்னிக்கலாம் என்று இயேசுவைக் கேட்டால் ‘ஏழு எழுபது முறை’ என்கிறார்.
சோனியாவால் மட்டும் தான் ரஸ்கோல்னிகோவிற்கு மன்னிப்பும் மீட்பும் வழங்கிட முடியும். நெக்கில்யுதோவை மன்னிப்பதின் வழி மட்டும் தான், தன்னை மீட்டுக்கொள்ள முடியும் என்று மஸ்லோவா சொல்கிறாள்.
அதே வழியில் சராவால் மட்டும் தான் தீபனுக்கு மன்னிப்பும் மீட்பும் வழங்கிட முடியும். இறுதியில், “உன்ன சாவடிக்கத் தான் நான் வந்தேன்?” என்று தீபன் கூறும் தருணத்தில், அவனுடைய ஆன்மா மாசடையக் கூடாதென்று, சரா மேற்கொள்ளும் முடிவில் அவள் தேவதை ஆகின்றாள். அக்கணம் தீபனிற்கு அவனது ஆண்மையைத் திருப்பித் தந்து அவள் தன்னை அப்ஸரஸ் என்றும் குவான்–யின் என்றும் நிறுவுகிறாள்.
என் நிஜ வாழ்வில் என்னால் இந்த அளவு ஒருவனை நேசிக்க முடியுமா என்று கேள்வி எழுந்தது என்னுள்.
ஆனால் நாவல் அப்படியொரு சுதந்திரத்தை அந்தரங்கமாக வழங்குகின்றதே. சராவாக உருமாறி தீபனை என்னால் நிபந்தனைகளின்றி நேசிக்கவே முடிந்தது. மன்னிக்கவும் முடிந்தது.
அதே சமயம் தன் மகளை அழிக்கத் துணிந்தவனை மகளே மன்னித்தாலும் தாயால் மன்னிக்க முடியாது. ஈ.புவாகவும் நிஷாம்மாவாகவும் என்னுடைய பயணத்தில் என்னால் தீபனை ஒரு இம்மி அளவு கூட மன்னிக்க முடியவில்லை.
பொதுவாக, பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று வாதாடுவது மிக சுலபமான ஒன்று. நாவல் நெடுகிலும் சௌவாட்டிலும், காராட் பஜாரிலும் இயங்கும் இருள் உலகையும், திருநங்கைகளுடயை இருண்ட வாழ்க்கையைப் பற்றியும் பேசப்பட்டாலும், என்னை மிகவும் பாதித்தக் கதாப்பாத்திரம் “தீபன்” தான்.
தன் வீட்டை விட்டு வெளியேறி, ‘தாய் மாமன் வீட்டில் தஞ்சம் புகுந்து, பிறகு காராட் பஜாரில் திருட்டுப் பொருட்களை கூவி விற்பவனாக, பிறகு பாலியல் விடுதிக்குக் காவலனாக, போதைப் பொருள் விற்பவனாக, மேலும் திருநங்கையனரின் இருள் வாழ்வில் சிக்கிக் கொள்கிறான். பின்பு ஒரு கட்டத்தில் இந்த மொத்த இருளில் இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டு வீடு திரும்பும் நோக்கத்தில் ஓடுகிறான். அந்த ஓட்டத்தின் நடுவில் ஒரு கணம் நின்று யோசிக்கின்றான். அவன் உண்மையில் எதனைக் கண்டு ஓடுகிறான் என்று, ஒரு கேள்வி அவனுள் எழும். புறத்தில் அவனைச் சுற்றி இயங்கும் இருள் உலகைத் தவிர்த்து அவன் தனக்குள்ளேயே திரும்பிப் பார்த்த கணம் அது. அவனுள் இருக்கும் இருளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டே செல்ல, அவ்விருளின் அடிமட்டத்தில் “க்காவா” என்ற ஒலி கேட்கின்றது. தீபனின்
நண்பனது மூளை வளர்ச்சி குன்றிய தங்கையின் குரல் அது. அவளுக்கு எல்லா மொழியும், உணர்வும் ‘க்காவா’ என்பது மாத்திரமே. தீபனால் வன்புணரப் பட்ட போதிலும் அவள் எழுப்பியது “க்காவா” என்ற ஒலி மாத்திரமே.
நாம் எல்லோருமே பிறந்த பொழுது இருந்த குழந்தைத் தனத்துடன் வாழ முடிகின்றதா? ஆம் என்றால் எது வரை ? ஏவால் தந்த ஆப்பிளை ஆதாம் உண்ணும் வரை தான். அவ்வகையில் தீபன் எனக்கு ஒரு ஒட்டுமொத்த உணர்வின் பெட்டகமாகத் தான் தெரிகின்றான். அவனுக்குள் இருக்கும் இருளுக்கும் ஒளிக்கும் மாறிக் கொண்டே இருக்கின்றது அவனுடைய பிம்பம்.
அம்மாவிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவன் தான், அதே அம்மாவிற்காக ஏங்குகிறான். அம்மாவின் மடி போதும், அம்மாவின் மன்னிப்பு போதும், அவனுக்கு மீட்பு கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறான்.
பாலியல் விடுதியில் உடல்நிலை சரியில்லாத பெண்ணோடு உக்கிரமாக உறவு கொள்ளச் சொல்வது அவனுள் இருக்கும் இருள். அதே சமயம் அந்தப் பெண் வாடி வதங்கி இருக்கின்றாள் என்று அவள் மீது ஒரு துளி கருணை காட்டுவது அவனுள் இருக்கும் ஒளி.
சராவிற்குள் இருக்கும் பெண்ணிற்கும் ஆணிற்கும் அவன் அல்லாடும் பொழுது அவன் மீது பரிதாபம் தான் வந்தது எனக்கு. சராவைக் கொல்வதொன்று தான் அவன் தப்பிக்க ஒரே வழி என்று அவன் மேற்கொள்ளும் பயிற்சிகள் யாவும் ஒரு வித அச்சத்தைக் கிளர்த்தியது என்னுள். உதாரணமாக ஒரு சிறு கருங்குரங்கினை அவன் கொன்ற விதம். அப்பார்ட்மெண்டில் கண்ணன், தினம் விளையாடும் பூனையினை தீபன் கொன்ற அந்தத் தருணம். அதனைக் கொன்று விட்டு தனது போர்வைக்குள் ஒழிந்து கொண்டு அவன் சிந்திய ஏளனச் சிரிப்பு அவன் மீது அத்துனை கசப்பை உண்டாக்கியது. எத்தனை குரூரம் அவனுக்குள் இருக்க வேண்டும் என்று கோபம் எழும் பொழுது அடுத்த கணமே அந்த பூனைக்காக வருந்தும் கண்ணனை எண்ணி வருந்தும் தீபனையும் காண முடிந்தது.
இறுதிக் கட்டத்தில் ஊரை விட்டு ஓட முற்படும் முன்பு கண்ணனுக்காகத் தன் மாமாவின் கடனை அடைத்துவிட்டுத் தான் கிளம்புகிறான்.
தீபனின் கதாபாத்திரத்தை நவீன் அவர்கள் ‘நான்‘ என்ற நிலையிலிருந்து ஏன் எழுதினார் என்று என்னுள் கேள்வி எழுந்தது. பொதுவாக அது ஆசிரியருடைய குரல் என்று எடுத்துக் கொள்வோம்.
ஆனால் இந்த நாவலில் ‘நான்’ என்கிற நிலையில் இருந்து எழுதி, எழுத்தாளர் நவீன் அவர்கள், அவருடைய வாசகர்களுக்கு விடுக்கும் ஒரு மாபெரும் சாவல் என்று எனக்குத் தோன்றுகிறது..
தீபன் கண்ட அனைத்துமே அவனுக்குள் இருக்கின்ற இருள் மட்டும் தானா?. அப்படியான இருண்ட பக்கங்களும் இருண்ட அறைகளும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கலாம் தானே?. நவீன் அவர்கள் தீபனின் கதாபாத்திரம் வழியாக வாசகருக்கு விடுக்கும் பெரும் சவால் அது தான் என்று எனக்குத் தோன்றுகிறது.
நம்முள் மண்டிக் கிடக்கின்ற இருளை உலகுக்கு அறிக்கை இடத் தேவையில்லை. குறைந்த பட்சம் ஒருமுறையேனும் நம்முள் திரும்பிப் பார்க்கின்ற தைரியம் இருக்கின்றதா என்று நம்மை சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
ஆசிரியரின் குரல் என்று தப்பித்துக் கொள்ளாமல் தீபனாக உருமாறி சிகண்டி நாவலைப் பிரவேசிக்க முடியுமெனில் நம்முடைய இருளைக் காண்பதும் சாத்தியம் என்று தான் நினைக்கின்றேன்.
திருநங்கையை மையப்படுத்தி, சு. வேணுகோபால் அவர்கள் எழுதிய பால்கனிகள் எனும் குறுநாவல் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமானதொரு மைல் கல். அதிலருந்து ம.நவீன் அவர்களின் சிகண்டி ஒரு மாபெரும் பாய்ச்சல்.
அமெரிக்காவில், கலிபோர்னியா மாகானத்தில் டெத் வேலி நேஷனல் பார்க் (Death Valley National Park) என்கிற இடம் உள்ளது. 3.4 மில்லியன் ஏக்கரில் அமைந்துள்ள இவ்விடத்தில் எண்ணற்ற பெரிய அபூர்வு மலைகளைக் காண முடியும். பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் பெரும் நிலப்பரப்பில் உயர்ந்து, அகன்று, பரந்து இயற்கை செதுக்கி இருக்கும் சிற்பங்களாக மலைகளின் கூட்டம் அவ்விடம். அவைகளில் ஒன்று, Badwater Basin என்ற இடத்தில் அமைந்துள்ள கருப்புமலை(Black Mountains). அம்மலையின் கருமை என் மனதை ஒருவகையான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியது. அவ்வளவு பெரிய அடர்ந்த கருமையை என்னால் என்னுள் ஏற்றி நிரப்பிக் கொள்ள முடியாமல் தவித்தேன். அம்மலை ஏதோ இவ்வுலகின் ஒட்டுமொத்த இருளையும் தன்னுள் நிரப்பிக் கொண்டது போல வீற்றிருந்தது. அம்மலையைக் காணக் காண என்னுள் பெயர் தெரியாத உணர்வலைகள் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலை போல எழும்பிக் கொண்டே சென்றது. அத்துணை கார் இருளை என்னால் தாளமுடியவில்லை. அதே இருளாக, அதே உணர்வாக, அதே கனமாகத்தான் சிகண்டி நாவல் என்னுள் பரவி இருக்கின்றது.
முடிவாக, ஒஷோவின் கூற்றுப்படி ஆதாம் ஆக வீட்டை விட்டு வெளியேறியவன் மீண்டும் வீட்டிற்குத் திரும்ப வேண்டுமெனில் அவன் இயேசுவாகினால் மட்டுமே அது சாத்தியம். அதுவே இந்நாவலின் முடிவும் ஆகும்.
–மலர்விழி மணியம்.
சிகண்டி வாங்கதொல்பாறைகளின் தொடுகை- தேவி லிங்கம்
இந்த குகை ஓவியங்கள் நம்முடைய மூதாதையர்களின் கைகளால் செதுக்கப்பட்டது என்பதை அறிந்துக்கொண்டு காணும் பொழுது இந்த ஓவியங்கள் மீது இனம்புரியாத பற்றுதல் ஏற்படுகிறது.அதை அருகில் சென்று கைகளால் தொட்டுப்பார்க்க வேண்டும் என உந்துதல் ஏற்படுகிறது.
தொல்பாறைகளின் தொடுகை
I had come to the Dooran festival. I have never seen such a large number of young people at a literary gathering in Erode. Every venue was filled with young people. It was astonishing to see so many young women along with young men. It is very rare for women to come to a literary gathering.
Where did they come?October 3, 2025
உரையாடும் காந்தி, உரையாடல்கள்
காந்தியைப் பற்றிய என் கட்டுரைகள் அடங்கிய உரையாடும் காந்தி என்னும் நூலைப் பற்றிய இணைய உரையாடல். அக்டோபர் 5, 2025. காலை 730
அனைவரும் பங்கேற்கலாம்
ஒரு திறப்புவிழா
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,
காந்தியவாதி G.S. லட்சுமண ஐயர் தன் இறுதி காலம் வரை தலித் மாணவர்களுக்காக நடத்தி வந்த D.S. ராமன் – சரோஜினி தேவி விடுதியின் புதிய வளாகம் அக்டோபர் ஐந்தாம் தேதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களால் திறக்கப்படவுள்ளது. விடுதியின் முன்னாள் மாணவரான மதிப்பிற்குரிய அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனர் கா. தங்கவேல் அவர்களின் பெருமுயற்சியில் விடுதியின் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. மேலும் லட்சுமண ஐயரைப்பற்றி புத்தகம் கொண்டு வர வேண்டும் என்பது சிவராஜ் அண்ணாவின் நீண்டகால கனவு. மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் அவர்களின் விருப்பமும் கூட. புத்தகத்தை ‘சத்திய மானுடம்‘ என்னும் தலைப்பில் அவரைப் பற்றிய ஆவண நூலாக அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடுகிறோம்.
புத்தகத்தில் லட்சுமண ஐயர் அவர்களைப் பற்றி பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள், அவருடைய நேர்காணல் மற்றும் உங்களின் ‘காந்தியும் தலித் அரசியலும்‘ கட்டுரையுடன் நான் லட்சுமண ஐயரின் வாழ்வைப் பற்றி எழுதியதும் அடங்கியுள்ளது. என் எழுத்து அச்சாகி புத்தகமாக வருவதை மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன் ஜெ. எழுதுதலும் அறிதலுமே எனக்கு நிறைவளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. என் தன்னறம் அதுவே என்று உணர்கிறேன். உங்களின் மாணவனாக உங்கள் ஆசி வேண்டுகிறேன். புத்தகம் அச்சாகி வந்ததும் உங்களுக்கு அனுப்புகிறோம். விழா அழைப்பிதழை இந்த கடிதத்தோடு இணைத்துள்ளேன் ஜெ.
ஞானசேகரன்
கரூர் சாவுகள், எழுத்தாளன் சொல்லவேண்டியவை
அன்புள்ள ஜெ.,
கரூர் விஜய் பரப்புரை நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியானது இந்திய அளவில் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது . இது குறித்த உங்களின் கருத்து எதுவும் இதுவரை உங்கள் வலைப்பக்கத்தில் பதிவாகாமல் இருப்பது கவலை அளிக்கிறது. பொதுநிகழ்வுகள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்கப் போவதில்லை என்று நீங்கள் முன்னர் கூறியது என் நினைவில் உள்ளது. ஆனாலும் நீங்கள் மானுடத்தின் மீது கொண்டுள்ள ஆழமானஅன்புக்கும் அக்கறைக்கும் நீங்கள் கரூர் சம்பவம் பற்றியஅபிப்ராயம் தெரிவிப்பது முக்கியம்என்று நான் கருதுகிறேன். விலை மதிப்பற்ற உயிர்கள் சாதாரணநிகழ்வின் மூலம் பறிபோனதை நாம் எளிதாகக் கடந்து செல் ல இயலாது அல்லவா..பரிசீலிக்க வேண்டுகிறேன்.
அன்பின்
கீரனூர் ஜாகிர்ராஜா
அன்புள்ள கீரனூர் ஜாகீர் ராஜா,
உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொண்டேன். ஆனால் சமகால அரசியலுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை என்பதை நான் ஒரு கொள்கை முடிவாக கொண்டிருப்பதற்கான காரணங்கள் சில உண்டு .அரிதாக சிலவற்றுக்கு நான் எதிர்வினை ஆற்றுவும் செய்கிறேன் .
சில சமூகநிகழ்வுகள், உதாரணமாக விபத்துக்கள் அல்லது போராட்டங்கள் அல்லது குற்றங்கள் போன்றவை மிக நேரடியானவை. அவற்றின் காரணங்கள் மிக அப்பட்டமானவை. அவற்றைப் பற்றி ஓர் எழுத்தாளர் சொல்வதற்கு என்று பெரிதாக எதுவும் இல்லை என்பதுதான் உண்மை .வழக்கமான கண்டனமும் வருத்தமும் மட்டும்தான் தெரிவிக்க முடியுமே ஒழிய, அதற்கு அப்பால் குறிப்பிடும்படியாக எதையுமே சொல்வதற்கு இருப்பதில்லை. அந்நிலையில் ஏற்கனவே சூழலில் வந்த கண்டனங்கள், வருத்தங்கள், இரங்கல்களுடன் ஒன்றாக தன்னுடைய குரலையும் எழுத்தாளர் பதிவு செய்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அந்த கண்டனம் அல்லது வருத்தம் என்பது எழுத்தாளர் ஒருவகையான பெரிய மனிதர், பரவலாக அறியப்பட்டவர் என்ற அளவில் மட்டுமே அமைகிறது .எந்த இடத்தில் குறிப்பாக ஒன்றை, பிறர் சொல்லாத ஒன்றை, அவரால் சொல்ல முடியுமோ அங்கு மட்டுமே எழுத்தாளர் தன் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அத்தகைய ஒரு கருத்து எனக்கு இருக்கும் தருணங்களில் எல்லாம் வலிமையாக அதைத் தெரிவித்து இருக்கிறேன். சம்பிரதாயக் கருத்து என்பது இலக்கியத்தின் வழிமுறை அல்ல. இலக்கியவாதி அப்போது தன்னை ஒரு பெரிய மனிதனாக மட்டுமே வெளிப்படுத்திக் கொள்கிறார் .அல்லது சூழ்ச்சியும் தந்திரமும் கொண்டு தனக்கு என ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்கிறார். அது ஓர் இழிவு.
இன்று பொதுவெளியில் பெரிய மனிதர்களாக தங்களை முன்வைக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான நிபந்தனை என்பது ஒவ்வொன்றிலும் அவர்களுக்கு இருக்கும் நிலைப்பாட்டை முன்வைப்பது. அதை ஊடகமும் மக்களும் அவர்களிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அது அரசுச் சார்பா, அரசு எதிர்ப்புச் சார்பா, எந்த நிறுவனம் சார்ந்தது என்பதுதான் முக்கியமானது. அதை எவரும் நேர்மையாக, இயல்பாகச் சொல்வதில்லை. அவர்கள் தங்களுக்கு என உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு பொதுவெளிப் பிம்பத்தின் ஒரு பகுதியாகவே அந்த கருத்துரைப்பை உருவாக்கி கொள்கிறார்கள் . எழுத்தாளர்களில் சிறந்த பெரியமனித உதாரணம் வைரமுத்து. எந்த நிகழ்வுக்கும் அவருடைய மிகச்சம்பிரதாயமான கவிதை வெளிவந்துவிடும். ஓர் அலுவலகத்தின் அறிக்கை போலவே அது இருக்கும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி என்ன சொல்வார்கள் என்பது சாதாரணமாக பொதுவெளியில் புழங்கியவருக்கும் தெரிந்தே இருக்கும். எவருமே அதை மீறி ஒன்றை சொல்லி சொல்வதில்லை. அவ்வாறு சொல்லவும் அவர்களால் முடியாது. அவர்கள் அதுவரைக்கும் சொல்லி வந்த பலவற்றுடன் அது இணைந்து செல்ல வேண்டும் .அதில் முரண்பாடுகள் இருக்கக் கூடாது. ஒருவருக்கு தான் முன்பு சொன்ன ஒரு கருத்திலிருந்து வளர்ந்தோ மாறுபட்டோ இன்னொரு கருத்து இருப்பது ஏற்றுக்கொள்ளப்படுவதே இல்லை.
இந்த சம்பிரதாயக் கருத்துக்களின் மிகப்பெரிய பிரச்சனை என்ன என்றால் அதில் இருக்கும் போலித்தன்மை அல்லது நடிப்புதான்.கரூர் நிகழ்வை ஒட்டி ‘தூங்க முடியவில்லை’, ‘உடைந்து போய்விட்டேன்’, ‘வாழ்வே அர்த்தம் அற்று போய்விட்டது’, ‘என்ன அர்த்தம் இதற்கெல்லாம் என்று எண்ணி எண்ணி மருகுகிறேன்’ என்றெல்லாம் முகநூலில் பதிவு போட்டவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் இப்போது காந்தாரா அல்லது இட்லி கடை எது சிறப்பு என்று விவாதத்திற்கு ஈடுபட்டு அகன்று சென்று விட்டார்கள். எந்த வகையிலும் அவர்களுக்கு கரூர் நினைவில் வருவதில்லை. அந்த கண்டனம் அல்லது வருத்தம் வெளிப்பட்ட பதிவை கூட கரூர் அளித்த எளிய அகத்தொந்தரவை களைந்து அடுத்த கூட்டுக் களியாட்டத்திற்குச் செல்வதற்கான ஒரு வழிமுறையாகத்தான் வெளிப்படுத்தினார்களோ என்ற ஐயம் எனக்கு உள்ளது .
எழுத்தாளர் அவ்வாறு ஒன்றை எளிதில் தன் உள்ளத்தில் இருந்துகழுவி விடக்கூடாது .அவரைப் பாதிக்கும் ஒன்று அவனுக்குள் இருக்க வேண்டும் .அதன் நஞ்சும் கசப்பு அவருக்குள் ஊற வேண்டும். இல்லை என்றால் அவருடைய ஆளுமை மிக மேலோட்டமாக ஆகிவிடும். சமகாலம் விரிக்கும் இந்த வலைக்குள் எழுத்தாளர் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
எழுத்தாளர் மூன்று விஷயங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று, அவருடைய பார்வை என்பது ஆய்வு நோக்கு சார்ந்ததாக இருக்கக் கூடாது. ஆய்வாளருக்கு ஆய்வு முறைமை, அதற்கான அமைப்பு இரண்டும் இருக்கவேண்டும். எழுத்தாளரிடம் அவை இல்லை. அவர் ஆய்வாளர் அல்ல. ஆனால் இங்கே ஆய்வாளர்களாக வெளிப்படுபவர்களிடம் எந்த வகையான ஆய்வு அமைப்பும் இல்லை, ஆய்வு முறைமையையும் அவர்கள் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் சாதாரண மனிதனுக்குரிய ஒரு வகையான உணர்ச்சி கொந்தளிப்பைச் சேர்த்து ஆய்வாளரின் மொழியில் கருத்துச் சொல்கிறார்கள். தனக்கு உரிய ஒரு கட்சிச் சார்பு அல்லது அமைப்புச் சார்பை முன்வைப்பதற்கான ஒரு பாவலாவாக மட்டுமே அதைச் செய்கிறார்கள்.
எழுத்தாளரின் கருவி என்பது தனி அனுபவம் மட்டும்தான். தனி அனுபவத்திலிருந்து தன்னுடைய நுண்ணுணர்வாலும் கற்பனையாலும் அவர் சென்றடைய கூடிய பொது அனுபவச் சித்திரமும், அதிலிருந்து அவர் உருவாக்கும கருத்துக்களும் தான் முக்கியமானவை .அந்த கருத்துக்கள் அவர் பல்வேறு வகையில் அடைந்த வாழ்க்கை அனுபவத்தின் ஒட்டுமொத்தமாக அமைகின்றன. அந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து அவர் பொது உண்மையை நோக்கி செல்லும் பாதை என்பது அவருடைய வாசகர்களுக்கு தெரிந்ததாகவே இருக்கும். அது நுண்ணுணர்வும் கற்பனையும் கலந்த ஒன்று. கற்பனை என்பது பொய்யை உருவாக்குவது அல்ல, மெய்யை துலக்குவது என்றுதான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.
இரண்டாவதாக, எழுத்தாளர் ஒருபோதும் பொதுவெளியில் இருக்கும் உணர்ச்சி நிலைகளுக்கு கட்டுப்பட்டவராக இருக்கக் கூடாது .பொதுவெளியில் உருவாகும் கருத்துக்களுக்கு ஏற்ப தன்னுடைய கருத்துக்களை அமைக்கும் எழுத்தாளர் தன்னுடைய ஆளுமையைக் பொதுவெளியில் கரைத்துக் கொள்கிறார். கற்பூரத்தை காற்றில் திறந்து வைப்பது போல தன்னை அழித்துக் கொள்கிறார் . பொதுவெளி தன்னை கரைப்பதற்கு எதிராகவே எழுத்தாளர் ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டே இருக்கிறார். இந்த போராட்டம்தான் அவருடைய வாழ்நாள் முழுக்க நீடிக்கும் ஒரு எதிர்ப்பு நிலையை உருவாக்குகிறது. ஏதோ ஒரு வகையில் அது மிதமிஞ்சிப்போய் பொதுச்சிந்தனைக்கு எதிரான ஒன்றாகவே தன் அகத்தை அவர் கட்டமைத்துக் கொண்டு வாய்ப்பு உண்டு என்றாலும் எதிர்நிலையும் எச்சரிக்கையுமே பாதுகாப்பனது என்று நினைக்கிறேன்.
பொதுக்கருத்துக்கு என்பது மிக எளிதாகத் திரண்டு வரக்கூடியது. பொதுச் சமூகத்திற்கு அவ்வாறு பொதுக் கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கு ஒரு நீண்ட பின்புலமும் உள்ளது .அது எவ்வாறு அந்த பொதுநிலைபாட்டை உருவாக்கிக் கொள்ளவும் என்பதும் அதன் கூட்டுஉள்ளம் செல்லும் வழி என்ன என்பதும் எவருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கும். அதை எழுத்தாளராக நுணுக்கமாக பின்தொடர ஆரம்பித்தால் அவரும் அந்த பிரம்மாண்டமான கூட்டு மனதின் ஒரு பகுதியாக ஆகிவிடுவார் .அந்தபொதுமையையே தானும் வெளிப்படுத்துவார் .அது அவரை காலப்போக்கில் மிக எளிய சிந்தனை உள்ளவராக ஆக்கிவிடும். ஓர் எழுத்தாளன் அவ்வாறு ஆவது என்பது ஒரு விதமான அறிவுத் தற்கொலை. ஆன்மீகமான அழிவு
என் நண்பர் மலையாள இதழ் ஆசிரியர் ஒருவர் சொன்னார். கேரளத்தில் ஒரு பெரு நிகழ்வு என்றால் முதல் கட்டுரை எவரிடமிருந்து என்று சொல்லி விட முடியும். அந்த முதல் கவிதை முதல் பெரும்பாலும் உடனடியாக நாளிதழ்களிலோ இதழ்களிலோ வந்துவிடும். பெரும்பாலும் அட்டைப்படக் கட்டுரையாகவோ கவிதையாகவோ அது இருக்கும் .அது எளிதில் புகழைப் பெறுவதற்காக ஒரு வழி. ஆனால் இந்த வழி என்பது எழுத்தாளனுக்கு உகந்ததல்ல, அது ஒரு மலினமான பாதை. செய்தி வெளிவந்துகொண்டிருக்கையிலேயே எழுத அமர்ந்து விடுகிறார்கள் என்று ஏளனமாக அவர்களைப் பற்றிச் சொல்லுவதுண்டு. டெலிபிரிண்டர் கவிதைகள் என்று அவற்றை ஒரு நண்பர் சொன்னார். தானாகவே வெளிவந்துவிடும்.
எழுத்தாளர் முன்பின் முரண்படுவதற்கு அஞ்ச கூடாது என்பது மூன்றாவது நெறி என்று சொல்லலாம். எழுத்தாளருடைய வழி என்பது அந்தந்த தருணத்தில் இயல்பாக எதிர்வினை ஆற்றுவது மட்டுமே. அது தன்னிச்சையாக இருக்க வேண்டும். அவருடைய உள்ளம் அக்கணத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அதற்கு அர்த்தம் இல்லாமல் இருக்கலாம் .ஒருவேளை அது முரட்டுத்தனமாக அல்லது அசட்டுத்தனமாகக் கூட இருக்கலாம். ஆனால் அது தன்னிச்சையாக இருக்க வேண்டும். திட்டமிட்ட ஒன்றாக இருக்கக்கூடாது.
அந்தத் திட்டமிட்டத் தன்மைதான் ஒருமையை உருவாக்குகிறது. நேற்றும் முந்தையநாளும் சொன்ன அனைத்திற்கு ஒரு தொடர்ச்சியை உருவாக்குகிறது. அந்தத் தொடர்ச்சி தன்னியல்பாக அமையலாம். அது அவருடைய கருத்துப் பரிணாமம். ஆனால் அவர் யோசிக்க கூடாது, திட்டமிடக்கூடாது. ஓர் எழுத்தாளரிடம் “நேற்று அப்படிச் சொன்னாய், என் இன்று இவ்வாறு சொல்கிறாய்” என்று கேட்பது என்பது ஒரு இலக்கிய வாசகன் செய்யக்கூடியதல்ல. அக்கணத்தில் எதிர்வினை ஆற்றுவதன் வழியாக கலைஞர் வெளிப்படுத்தும் உள்ளுணர்வு மட்டுமே அவருடைய அறிவுப் பங்களிப்பாக இருக்கும்.அவருடையது அகப்பங்களிப்பே ஒழிய தர்க்கபூர்வமான பங்களிப்பு அல்ல .
ரமேஷின் மரணத்தை காத்திருக்கும் போது தான் கரூரின் செய்தி எனக்கு வந்தது. அந்த செய்தி எனக்கு எந்த வகையில் பாதிப்பை அளித்திருக்கும் என்பதை உங்களால் எளிதில் உணர முடியும். கொந்தளிப்பு , வருத்தம், கசப்பு. ‘விதியே தமிழ்ச்சாதியை….’ என பாரதி குமுறிய அதே உணர்வுநிலை. அதைத்தான் நாம் எழுத்தாளர் அனைவருமே உணர்வோம். அந்நிகழ்வில் ஓர் அரசு என்ன செய்யமுடியுமோ அதைச் செய்துள்ளது, காவல்துறை மிகப்பொறுப்பாகவே செயல்பட்டுள்ளது என்பதே செய்திகள் மற்றும் காணொளிகள் வழியாக எனக்குப் புரியவந்தது. அந்நிகழ்வை ஒருங்கிணைத்த கட்சி அனுபவமின்மையால் முறையாக ஏற்பாடுகள் செய்யவில்லை, கெடுநிகழ்வு நிகழ்ந்தபின் துணிந்து அதற்குப் பொறுப்பேற்று அங்கு நின்று அடுத்தபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவேண்டும். மன்னிப்பு கோரியிருக்கவேண்டும். இனி நிகழாது என அறிவித்திருக்கவேண்டும்.இங்கே நடப்பதெல்லாம் எப்போதும் கட்சியரசியலில் உள்ள வழக்கமான குற்றம்சாட்டுதல், சதிக்கோட்பாடுகளைப் புனைதல் மட்டுமே. ஆனால் இதை எல்லா கட்சிகளும் செய்கின்றன, ஏதேனும் ஒரு கட்சி செய்யாது என்று என்னால் சொல்லமுடியவில்லை.
நான் கவனிப்பதும், சொல்லவிரும்புவதும் வேறு. கைக்குழந்தையுடன் அங்கு சென்றபெண்களின் முகங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது வரும் கடுமையான ஒவ்வாமை. ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் சென்றாள். கைக்குழந்தை கீழே போடப்பட்டு செத்துப் போய்விட்டது. அந்தப்பெண் விஜய் தன்னை பார்க்க வரவேண்டும், வந்து பார்க்க வேண்டும் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்கிறாளே ஒழிய குழந்தை பற்றி பேசுவதில்லை. அரசு தனக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று இறந்தவர்களின் உறவினர்கள் கூச்சல் இடுகிறார்கள். எவருமே தங்கள் பிழை என எதையும் உணர்வதாக தெரியவில்லை. இந்த அறியாமைதான் பெரும் ஒவ்வாமையை உருவாக்குகிறது. அரிய மானுட உயிர்கள் என நாம் நினைக்கிறோம், அவர்கள் அப்படி நினைப்பதாகவே தெரியவில்லை.
அவர்களை பாமர மக்கள், எளிய மக்கள் என்று பார்க்கும் ஒரு கோணத்தில் இரக்கமும் ஏற்படுகிறது. அதே சமயத்தில் அறியாமை உருவாக்கும் கசப்பும் பெருகுகிறது. இந்த அறியாமையை யார் இவர்களிடம் உருவாக்கி, ஏன் நீடிக்க வைக்கிறார்கள்? இந்த அறியாமைக்கு யார் பொறுப்பு? இந்த அறியாமை இப்போது இந்தக் கட்சி சார்பில் இத்தனை சாவாக வெளிப்படுகிறது. ஆனால் எல்லா கட்சி சார்பிலும் இதுதான் அல்லவா வெளிப்படுகிறது. சாவு நிகழாமல் இருந்திருந்தால் இந்த கட்டுப்பாடில்லாத வெறியை ‘மக்களின் எழுச்சி’ என்று கொண்டாடியிருப்பார்கள். ஊடகமும் அவ்வாறே சித்தரித்திருக்கும்.
எல்லா கட்சிகளிலும், எல்லா மதங்களிலும் இதே மூர்க்கம்தானே வெளிப்படுகிறது ?இந்த பெருந்தொகையான சாவுகளை இன்னும் எங்கும் எதிர்பார்க்கலாம் .இது தொடர்ந்து தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முன்பு இதெல்லாம் நிகழ்ந்தது இல்லை என்பது போல, இதற்கு ஒரே ஒரு தரப்பே பொறுப்பு என்பது போல, இங்கே கூச்சல் விடுக்கப்படுகிறது. மகாமகப் படுகொலைகள் என்று சுந்தர ராமசாமி எழுதிய நிகழ்வு நம் நினைவில் இல்லை. அதன் பிறகு அத்தகைய நிகழ்வுகள் எத்தனை நடந்து இருக்கின்றன. இது ஏதோ ஏழைமக்களின் பிரச்சினையா? சென்னையில் விமானப்படை நெரிசலில் இறந்தவர்கள் எல்லாம் உயர்வர்க்கத்தினர் அல்லவா? அங்கும் இருந்தது இதே கண்மூடித்தனமான மூர்க்கம்தானே?
இத்தகைய சாவுகள் நிகழாத இடங்களிலேகூட இதை பார்த்திருக்கிறேன். அங்கே சாவு நிகழ எல்லா வாய்ப்பும் உண்டு. பொதுவெளியில் பெரும்பாலான இளைஞர்கள் முற்றிலும் போதையில், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெற்றுக்கூட்டமாக கொந்தளிக்கிறார்கள். அங்கே ஒரு சாமானியனுக்கு எந்த உரிமையும் இல்லை. மதுரை சித்திரைத்திருவிழாவுக்குச் சென்று பாருங்கள். எந்த நெறியும் இல்லாத, எவராலும் கட்டுப்படுத்தப்படாத பல்லாயிரம் பேர் போதைவெறியில் கும்மாளமிடுவதைக் காணலாம். எங்கும் இதெல்லாம் திரும்பவும் நடப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.
பெரும்பாலான பொது நிகழ்வுகளில் கட்டற்ற நெரிசல் என்பது எப்போதும் உள்ளது. வெறிகொண்ட இளைஞர் கூட்டம் எந்த வகையான நெறிகளுக்கும் அப்பாற்பட்டு கட்டிடங்கள் மேல் ஏறுவதும் வீடுகளை தாக்குவதும், பேருந்துகளை அடிப்பதும், சாலைகளை மறிப்பதும் இங்கே அனுமதிக்கப்படுகிறது. அது இளமையின் இயல்பாகவோ அல்லது பொது மக்களின் அடிப்படை உரிமையாகவோ கருதப்பட்டு நம்மால் ஏற்கப்படுகிறது. கட்டின்மையை நாமே அனுமதிக்கும் வரை நம்மால் இத்தகைய நிகழ்வுகளை நம்மால் தவிர்க்க முடியாது . அண்மையில் மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் படத்தில் இந்த குடிவெறியும் கட்டின்மையும் கொண்டாடப்பட்டபோது நான் கடும் கண்டனத்தை தெரிவித்தேன். என்னை தமிழ் அறிவுஜீவிகள் உட்பட பெரும்பாலானவர்கள் வசைபாடினார்கள். அது ‘எளியமக்களின்’ இயல்பாம். அதை கண்டிக்கக்கூடாதாம்.
இப்படி ஒரு சாவு நிகழும்போதும் அதிலிருந்து பொதுமக்களின் கட்டுப்பாடின்மை, இளைஞர்களின் பொறுப்பின்மையை விலக்கிவிட்டே பேசுகிறார்கள்.பொதுமக்கள் பற்றி இங்கே நாம் குறைசொல்லக்கூடாது. அரசை குறைச் சொல்வதே ‘மோஸ்தர்’. அல்லது அரசியல் தலைவர்களை குறைச் சொல்லவேண்டும். பொதுமக்கள் புனிதர்கள். அவர்கள் என்ன செய்தாலும் அது சரி. ஆகவே என் கருத்து ஒருவகையில் எல்லா தரப்பினராலும் வசைபாடப்படும். உண்மையில் செய்யவேண்டியது பொதுவெளியில் மக்களின், குறிப்பாக குடிவெறியினரின் நடத்தையை எப்படி கட்டுப்படுத்துவது என்பதைப்பற்றி மட்டுமே. அந்த ஒரு விஷயத்தை தவிர மிக அனைத்தையும் அரசியல் கட்சிகள் இன்று பேசிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிகழ்வில் பல சாமானியர்களின் குரல்கள் வெளிவந்தன. அவர்கள் விஜயை பார்க்கச் சென்றவர்கள் அல்ல. கடைகண்ணிகளுக்குச் சென்றவர்கள், வேலைக்குச் சென்றவர்கள், பள்ளிக்குச் சென்றவர்கள். அவர்களின் பாதைகள் முழுக்க மறிக்கப்பட்டன. அவர்கள் வெயிலில் நடுத்தெருவில் சிக்கிக்கொண்டனர். செத்திருக்கவும்கூடும். அவர்களின் உரிமை இங்கே எவருக்கும் பொருட்டு அல்ல. அரசியல்வாதிகள் அதை கவனிக்கவே போவதில்லை. ஏனென்றால் இதே வெறியை தங்களின் தேவைக்காக அவர்கள் நாளை உருவாக்கவிருக்கிறார்கள்.
இதுதான் நான் பேசவேண்டியது. ஆனால் இந்த தருணத்தில் நான் இதைச்சொன்னால் இன்றுள்ள அரசியல் கூச்சல்காரர்கள் இதை இன்னொரு அரசியல் என்று மட்டும்தான் எடுத்துக் கொள்வார்கள். இந்தக் கருத்து ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமோ பாதகமோ என்று மட்டுமே பார்ப்பார்கள். இது எந்த வகையிலும் இப்போது கவனிக்கப்படாது .இந்த உணர்ச்சி நிலைகள் கடந்து சென்ற பிறகு இதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது என்னைப் போன்ற ஒரு எழுத்தாளர் செய்வதாக இருக்கும்.
ஜெ
விஷ்ணுபுரம் விருந்தினர் – 4 – ஜீவ கரிகாலன்
2025 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ரமேஷ் பிரேதனுக்கு வழங்கப்படுகிறது. நிகழ்வு 20 மற்றும் 21 டிசம்பரில் நடைபெறும். அந்நிகழ்வில் வழக்கம்போல இலக்கியச் சந்திப்புகள் அமைகின்றன. இவ்வாண்டு பதிப்பாசிரியர், எழுத்தாளர் ஜீவ கரிகாலன் வாசகர்களைச் சந்திக்கிறார். ஜீவ கரிகாலன் தமிழில் ஏராளமான புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தவர்.
ஜீவ கரிகாலன் – தமிழ் விக்கி/* inline tdc_css att */.tdi_1{padding-top:12px !important;padding-bottom:8px !important;border-color:#eaeaea !important;border-style:solid !important;border-width: 1px 0px 1px 0px !important;}/* custom css */.tdi_1 .td_block_inner{width: 100%;
margin-left: -20px;
margin-right: -20px;
}.tdi_1:after{
content: '';
display: table;
clear: both;
}.tdi_1 .td-image-wrap{
padding-bottom: 100%;
}.tdi_1 .entry-thumb{
background-position: center 50%;
}.tdi_1 .td-image-container{
flex: 0 0 30%;
width: 30%;
display: block; order: 0;
}.ie10 .tdi_1 .td-image-container,
.ie11 .tdi_1 .td-image-container{
flex: 0 0 auto;
}.tdi_1 .td-module-container{
flex-direction: row;
border-color: #eaeaea !important;
}.ie10 .tdi_1 .td-module-meta-info,
.ie11 .tdi_1 .td-module-meta-info{
flex: 1;
}.tdi_1 .td-module-meta-info{
padding: 1% 5%;
border-color: #eaeaea;
}.tdi_1 .td_module_wrap{
padding-left: 20px;
padding-right: 20px;
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
border-color: #eaeaea;
}.tdi_1 .entry-thumb,
.tdi_1 .entry-thumb:before,
.tdi_1 .entry-thumb:after{
border-radius: 500px;
}.tdi_1 .td-post-vid-time{
display: block;
}.tdi_1 .td-post-category:not(.td-post-extra-category){
display: none;
}.tdi_1 .td-author-photo .avatar{
width: 20px;
height: 20px;
margin-right: 6px;
border-radius: 50%;
}.tdi_1 .td-excerpt{
display: none;
column-count: 1;
column-gap: 48px;
font-size:= !important;
}.tdi_1 .td-audio-player{
opacity: 1;
visibility: visible;
height: auto;
font-size: 13px;
}.tdi_1 .td-read-more{
display: none;
}.tdi_1 .td-author-date{
display: none;
}.tdi_1 .td-post-author-name{
display: none;
}.tdi_1 .td-post-date,
.tdi_1 .td-post-author-name span{
display: none;
}.tdi_1 .entry-review-stars{
display: none;
}.tdi_1 .td-icon-star,
.tdi_1 .td-icon-star-empty,
.tdi_1 .td-icon-star-half{
font-size: 15px;
}.tdi_1 .td-module-comments{
display: none;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0;
padding-bottom: 0;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:21px !important;line-height:1.2 !important;
}html:not([class*='ie']) .tdi_1 .td-module-container:hover .entry-thumb:before{
opacity: 0;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}/* landscape */@media (min-width: 1019px) and (max-width: 1140px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:20px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* portrait */@media (min-width: 768px) and (max-width: 1018px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}.tdi_1 .entry-title{
font-size:17px !important;line-height:1.2 !important;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}/* phone */@media (max-width: 767px){.tdi_1 .td_module_wrap{
padding-bottom: 18px;
margin-bottom: 18px;
padding-bottom: 18px !important;
margin-bottom: 18px !important;
}.tdi_1 .td-module-container:before{
bottom: -18px;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1){
margin-bottom: 0 !important;
padding-bottom: 0 !important;
}.tdi_1 .td_module_wrap .td-module-container:before{
display: block !important;
}.tdi_1 .td_module_wrap:nth-last-child(1) .td-module-container:before{
display: none !important;
}.tdi_1 .td-module-title a{
box-shadow: inset 0 0 0 0 #000;
}@media (min-width: 768px) {
.tdi_1 .td-module-title a {
transition: all 0.2s ease;
-webkit-transition: all 0.2s ease;
}
}}var block_tdi_1 = new tdBlock();block_tdi_1.id = "tdi_1";block_tdi_1.atts = '{"modules_on_row":"","limit":"10","hide_audio":"yes","show_btn":"none","show_excerpt":"none","show_review":"none","show_com":"none","show_date":"none","show_author":"none","image_floated":"float_left","sort":"oldest_posts","category_id":"11301","category_ids":"12659","image_width":"30","meta_padding":"1% 5%","modules_category":"","modules_category_margin":"","custom_title":"\u0bb5\u0bbf\u0bb7\u0bcd\u0ba3\u0bc1\u0baa\u0bc1\u0bb0\u0bae\u0bcd 2025 \u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\u0b95\u0bb3\u0bcd","custom_url":"\/tag\/2025-\u0bb5\u0bbf\u0bb0\u0bc1\u0ba8\u0bcd\u0ba4\u0bbf\u0ba9\u0bb0\u0bcd\/","post_ids":"-222742","tdc_css":"eyJhbGwiOnsiYm9yZGVyLXRvcC13aWR0aCI6IjEiLCJib3JkZXItYm90dG9tLXdpZHRoIjoiMSIsInBhZGRpbmctdG9wIjoiMTIiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjgiLCJib3JkZXItY29sb3IiOiIjZWFlYWVhIiwiZGlzcGxheSI6IiJ9fQ==","show_cat":"none","excerpt_col":"","m16_el":"20","ajax_pagination":"load_more","f_title_font_size":"eyJhbGwiOiIyMSIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNyJ9","f_title_font_line_height":"1.2","f_ex_font_size":"=","f_ex_font_line_height":"","image_height":"100","hide_image":"","modules_gap":"","meta_info_horiz":"","container_width":"100","image_radius":"500","block_type":"td_flex_block_1","separator":"","block_template_id":"","title_tag":"","mc1_tl":"","mc1_title_tag":"","mc1_el":"","tag_slug":"","autors_id":"","installed_post_types":"","offset":"","show_modified_date":"","time_ago":"","time_ago_add_txt":"ago","time_ago_txt_pos":"","el_class":"","td_ajax_filter_type":"","td_ajax_filter_ids":"","td_filter_default_txt":"All","td_ajax_preloading":"","m_padding":"","all_modules_space":"36","modules_border_size":"","modules_border_style":"","modules_border_color":"#eaeaea","modules_border_radius":"","modules_divider":"","modules_divider_color":"#eaeaea","h_effect":"","image_size":"","image_alignment":"50","video_icon":"","video_popup":"yes","video_rec":"","spot_header":"","video_rec_title":"","video_rec_color":"","video_rec_disable":"","autoplay_vid":"yes","show_vid_t":"block","vid_t_margin":"","vid_t_padding":"","video_title_color":"","video_title_color_h":"","video_bg":"","video_overlay":"","vid_t_color":"","vid_t_bg_color":"","f_vid_title_font_header":"","f_vid_title_font_title":"Video pop-up article title","f_vid_title_font_settings":"","f_vid_title_font_family":"","f_vid_title_font_size":"","f_vid_title_font_line_height":"","f_vid_title_font_style":"","f_vid_title_font_weight":"","f_vid_title_font_transform":"","f_vid_title_font_spacing":"","f_vid_title_":"","f_vid_time_font_title":"Video duration text","f_vid_time_font_settings":"","f_vid_time_font_family":"","f_vid_time_font_size":"","f_vid_time_font_line_height":"","f_vid_time_font_style":"","f_vid_time_font_weight":"","f_vid_time_font_transform":"","f_vid_time_font_spacing":"","f_vid_time_":"","meta_info_align":"","meta_width":"","meta_margin":"","meta_space":"","art_title":"","art_btn":"","meta_info_border_size":"","meta_info_border_style":"","meta_info_border_color":"#eaeaea","meta_info_border_radius":"","modules_category_padding":"","modules_cat_border":"","modules_category_radius":"0","modules_extra_cat":"","author_photo":"","author_photo_size":"","author_photo_space":"","author_photo_radius":"","review_space":"","review_size":"2.5","review_distance":"","art_excerpt":"","excerpt_gap":"","excerpt_middle":"","excerpt_inline":"","show_audio":"block","art_audio":"","art_audio_size":"1.5","btn_title":"","btn_margin":"","btn_padding":"","btn_border_width":"","btn_radius":"","pag_space":"","pag_padding":"","pag_border_width":"","pag_border_radius":"","prev_tdicon":"","next_tdicon":"","pag_icons_size":"","f_header_font_header":"","f_header_font_title":"Block header","f_header_font_settings":"","f_header_font_family":"","f_header_font_size":"","f_header_font_line_height":"","f_header_font_style":"","f_header_font_weight":"","f_header_font_transform":"","f_header_font_spacing":"","f_header_":"","f_ajax_font_title":"Ajax categories","f_ajax_font_settings":"","f_ajax_font_family":"","f_ajax_font_size":"","f_ajax_font_line_height":"","f_ajax_font_style":"","f_ajax_font_weight":"","f_ajax_font_transform":"","f_ajax_font_spacing":"","f_ajax_":"","f_more_font_title":"Load more button","f_more_font_settings":"","f_more_font_family":"","f_more_font_size":"","f_more_font_line_height":"","f_more_font_style":"","f_more_font_weight":"","f_more_font_transform":"","f_more_font_spacing":"","f_more_":"","f_title_font_header":"","f_title_font_title":"Article title","f_title_font_settings":"","f_title_font_family":"","f_title_font_style":"","f_title_font_weight":"","f_title_font_transform":"","f_title_font_spacing":"","f_title_":"","f_cat_font_title":"Article category tag","f_cat_font_settings":"","f_cat_font_family":"","f_cat_font_size":"","f_cat_font_line_height":"","f_cat_font_style":"","f_cat_font_weight":"","f_cat_font_transform":"","f_cat_font_spacing":"","f_cat_":"","f_meta_font_title":"Article meta info","f_meta_font_settings":"","f_meta_font_family":"","f_meta_font_size":"","f_meta_font_line_height":"","f_meta_font_style":"","f_meta_font_weight":"","f_meta_font_transform":"","f_meta_font_spacing":"","f_meta_":"","f_ex_font_title":"Article excerpt","f_ex_font_settings":"","f_ex_font_family":"","f_ex_font_style":"","f_ex_font_weight":"","f_ex_font_transform":"","f_ex_font_spacing":"","f_ex_":"","f_btn_font_title":"Article read more button","f_btn_font_settings":"","f_btn_font_family":"","f_btn_font_size":"","f_btn_font_line_height":"","f_btn_font_style":"","f_btn_font_weight":"","f_btn_font_transform":"","f_btn_font_spacing":"","f_btn_":"","mix_color":"","mix_type":"","fe_brightness":"1","fe_contrast":"1","fe_saturate":"1","mix_color_h":"","mix_type_h":"","fe_brightness_h":"1","fe_contrast_h":"1","fe_saturate_h":"1","m_bg":"","color_overlay":"","shadow_shadow_header":"","shadow_shadow_title":"Module Shadow","shadow_shadow_size":"","shadow_shadow_offset_horizontal":"","shadow_shadow_offset_vertical":"","shadow_shadow_spread":"","shadow_shadow_color":"","title_txt":"","title_txt_hover":"","all_underline_height":"","all_underline_color":"","cat_bg":"","cat_bg_hover":"","cat_txt":"","cat_txt_hover":"","cat_border":"","cat_border_hover":"","meta_bg":"","author_txt":"","author_txt_hover":"","date_txt":"","ex_txt":"","com_bg":"","com_txt":"","rev_txt":"","audio_btn_color":"","audio_time_color":"","audio_bar_color":"","audio_bar_curr_color":"","shadow_m_shadow_header":"","shadow_m_shadow_title":"Meta info shadow","shadow_m_shadow_size":"","shadow_m_shadow_offset_horizontal":"","shadow_m_shadow_offset_vertical":"","shadow_m_shadow_spread":"","shadow_m_shadow_color":"","btn_bg":"","btn_bg_hover":"","btn_txt":"","btn_txt_hover":"","btn_border":"","btn_border_hover":"","pag_text":"","pag_h_text":"","pag_bg":"","pag_h_bg":"","pag_border":"","pag_h_border":"","ajax_pagination_infinite_stop":"","css":"","td_column_number":1,"header_color":"","color_preset":"","border_top":"","class":"tdi_1","tdc_css_class":"tdi_1","tdc_css_class_style":"tdi_1_rand_style"}';block_tdi_1.td_column_number = "1";block_tdi_1.block_type = "td_flex_block_1";block_tdi_1.post_count = "3";block_tdi_1.found_posts = "3";block_tdi_1.header_color = "";block_tdi_1.ajax_pagination_infinite_stop = "";block_tdi_1.max_num_pages = "1";tdBlocksArray.push(block_tdi_1);விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 2 – அரிசங்கர்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 3 – கே. நல்லதம்பி
ரமேஷ், கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
ரமேஷ் பிரேதன் அவர்களின் இறுதி நிகழ்வுகளைப் பற்றி நீங்கள் எழுதியதை வாசித்தேன். ஒரு படைப்பாளியின் வாழ்க்கை, மற்றும் அவருடைய இறுதி ஆகியவற்றில் உள்ள ஒருவகையான காவியத்தன்மையை அந்த குறிப்புகள் காட்டிந்.அவருடைய படைப்புகளுக்கு ஒரு பின்புலமாக இந்த வாழ்க்கை குறிப்புகள் மற்றும் இதைப் பற்றிய நினைவுகள் எப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த குறிப்புகளுக்காக ஒரு வாசகனாக நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய படைப்புலவுக்கு செல்வதற்கான மிகச் சிறந்த ஒரு வழி இந்த குறிப்புகளே என்று தோன்றுகிறது.
அவருடைய வாழ்க்கை மரபணு குறை பாடலான மிக எடையாலும் ரத்த அழுத்தத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டது என்பதை உணரும்போதுதான் அவருடைய உடல் அரசியல் என்பதை மேலும் உணர முடியும் என்று தோன்றுகிறது. அவருடைய படைப்புகளில் உள்ள கருத்துக்களை வைத்துக்கொண்டு அவரை எளிய முற்போக்கு அரசியல் சார்ந்து அடையாளப்படுத்தும் வாசிப்புகளுக்கு மத்தியில் அவருடைய புனைவுலகின் உண்மையான சாராம்சம் என்பது உடல் என்பதன் மீதான உள்ளம் மற்றும் பண்பாட்டின் தாக்குதலே என்னும் கோணத்தை உங்கள் தளத்தில் வரும் சில கடிதங்களில் இருந்து மட்டுமே உணர முடிகிறது. அந்த கோணத்தில் அவரை அணுகுவதற்கு இந்த குறிப்புகள் மிக உதவியாகவே மிக நன்றி.
செல்வராசன்
அன்புள்ள செல்வராசன்,
ஒரு படைப்பாளி விருதுபெறும் தருணத்தில், அவருடைய மறைவின்போது அவரைப்பற்றி வரும் வாசிப்பு சார்ந்த நேரடிப்பதிவுகளே அவரை அறிமுகம் செய்ய மிகமுக்கியமான வழிகள். பிற கருத்துக்கள் எல்லாமே விருப்பு வெறுப்பு மற்றும் சமகால எளிய அரசியல் சார்ந்தவையே.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நான் ரமேஷ் பிரேதன் அவர்களின் ஒருசில கதைகளை ஆங்காங்கே படித்திருந்தாலும்கூட உங்களுடைய தளத்தில் அவர் விருது பெற்ற பிறகு வந்த கடிதங்களில் இருந்த சில குறிப்புகள் அவரை சரியான வகையில் அணுகுவதற்கு எனக்கு உதவியாக இருந்தன. குறிப்பாக அவருடைய படைப்பில் இருந்த கசப்பு மற்றும் உடல் அணுகுமுறை இரண்டையுமே பல கடிதங்கள் குறிப்பிட்டு இருந்தன. அந்த கோணத்தில் மட்டுமே அவரை அறிய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவருடைய இறுதி நாட்களைப் பற்றி நீங்கள் எழுதிய குறிப்புகளை படித்தேன். அந்த குறிப்புகளையும் கடிதங்களில் இருந்த செய்திகளையும் இணைத்துக் கொண்டு அவரை அணுகுவது எனக்கு இன்னும் எளிதாக இருந்தது .தொடர்ந்து அவரை படிப்பேன் என்று நினைக்கிறேன் .
இணையத்தில் அதிகமாக உலவுபவன் இல்லை என்றாலும் ரமேஷ் பிரேதனைப் பற்றி தேடிய போது அவர் விருது பெற்ற நாள் இருந்து தொடர்ச்சியாக பலர் அவரை இழிவு படுத்தி எழுதியதை பார்த்தேன். அவர் மறைந்த போது கூட பலர் அதை ஒரு வம்பாக மட்டுமே சுருக்கியிருந்ததை கண்டேன். மரணத்தின் போது கூட அதை வம்பாக மட்டுமே பார்க்கும் இந்த பார்வை எனக்கு மிகுந்த கசப்பை கொடுத்தது. அவ்வாறு வம்புகளை எழுதியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் என்பதையும் கவனித்தேன். நான் அரசியல் பார்வையெல்லாம் இல்லாதவன். ஆனால் இந்த அணுகுமுறை கசப்பை அளித்தது. இவர்களை பற்றி என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
சதானந்த்
அன்புள்ள சதானந்தன் ,
ஒருவர் தன்னை பிராமணர் மட்டுமே என்று உணரும்போது ரமேஷ் பிரேதன் மீது காழ்ப்பு கொள்வதில் வியப்பொன்றுமில்லை. அவருக்கும் பிராமணர்கள் மீது அதே ஒவ்வாமை இருந்தது. அவருடைய படைப்புகளிலேயே வெளிப்பட்டதுதானே?
ஜெ
அஞ்சலி- ஜேன் குடால்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பிரிடிஷ் விலங்கியலாளரும், சிம்பன்ஸிகளின் பாதுகாவலரும், மானிடவியலாளருமான ஜேன் குடால் தனது 91 –வது வயதில் நேற்று அக்டோபர் 1, 2025 அன்று லாஸ் ஏஞ்சலீஸில் ஒரு மரம் நடும் நிகழ்வுக்கான பயணத்திலிருக்கையில் இயற்கையாக மறைந்தார்.
அவரை நினைக்கையில், அவரது காணொளிகளையும் உரைகளையும் கேட்கையில், சிம்பன்ஸிகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் எல்லாம் பேரன்னை என்றுதான் என் மனதில் தோன்றும். அன்னைமை அவரது உடல்மொழியில் அப்படி பொங்கிப்பிரவாகிக்கும். உலகில் சிம்பன்ஸிகளை குறித்த மிக நீண்ட கால, மிக விரிவான ஆய்வுகள் செய்த ஒரே ஒருவர் ஜேன்.
ethologist என்னும் ஒரு சொல்லையே அவரைக் குறித்து அறிந்துகொண்ட போதுதான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன். விலங்குகளை, அவற்றின் சமூக கட்டமைப்பை, அவற்றின் உயிர்வாழ்தல், தேவைகள், பரிணாம வளர்ச்சியை எல்லாம் அவற்றின் இயற்கையான வாழிடங்களிலேயே அறிந்துகொள்ளும் துறைதான் ethology.
ஜேன் 1060-களில் உலகளாவிய அளவில் இந்தத்துறையில் பிரபலமாயிருந்த ஒரு விலங்கியலாளராக இருந்தார். இவரது சிம்பன்ஸி ஆய்வுகள் விலங்குகள் பற்றிய உலகின் புரிதலையே அடியோடு மாற்றியது.மனிதர்களுக்கு மட்டும் உரியது என்று பலகாலமாக நம்பப்பட்ட பலவற்றை சிம்பன்ஸிகள் அறிந்து கொண்டிருப்பதையும், செய்வதையும் அவர் நிரூபித்தது அறிவியல் உலகில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.
நீர்நிலைகளுக்கு பெயர் பெற்ற லண்டனின் மிக புராதன, மிக மிக அழகிய நகரமான Hampstead –ல் பந்தயக்கார் ஓட்டுநரான (Morris-Goodall) அப்பாவுக்கும் எழுத்தாளரான (Margaret Myfanwe) அம்மாவுக்கும் பிறந்த ஜேன் அவரது குழந்தைப்பருவத்தில் பரிசாகக் கிடைத்த ஒரு சிம்பன்ஸி பொம்மையிலிருந்து தொடங்கிய தனது விலங்குகள் மீதான பேரன்பை வாழ்நாள் முழுக்க தொடர்ந்தவர்.
மனிதரல்லாத முதன்மை உயிரினங்களின் அறிவியலில் ( primatology) உலகளவில் இவரே முதன்மையானவர். சிம்பன்ஸிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்ட ஜேன் ‘’ மனிதர்களை விலங்கு உலகிலிருந்து பிரிக்கும் தெளிவான கோடு ஏதும் இல்லை’’ என்றார். 65 ஆண்டுகள் சிம்பன்ஸிகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜேன் காலப்போக்கில் மனிதர்களால் இயற்கை வாழிடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதன் ஆபத்தையும், அதற்கு தீர்வு மிக அவசரமாக தேவைப்படுகிறது என்பதையும் வலியுறுத்தும் காலநிலை செயற்பாட்டாளர் ஆகினார்.
1957 –ல் பள்ளிப்படிப்பை மட்டும் முடித்திருந்த ஜேன் கென்யாவின் விலங்குகளைக் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருந்தார் . கென்யா செல்ல தேவையான செலவுகளுக்காக ஒரு உணவகத்தில் பரிசாரகராக வேலைசெய்து பொருளீட்டினார். கென்யா சென்று தொல்லியலாளரும் புதைபடிம மனிதவியலாளருமான Dr.லூயி மற்றும் தொல்லியலாளரான அவரது மனைவி மேரியையும் சந்தித்தார். லூயி ஜேனை நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளராகப் பணியமர்த்தினார். மனிதப்புதைபடிமங்களின் தேடலில் ஜேனின் பொறுமையையும் அவரது இயற்கை மீதான ஆர்வத்தையும் கண்ட லூயி ஜேனை தான்சானியாவின் கோம்பே காடுகளில் சிம்பன்ஸிகளைக் குறித்த ஆய்வில் ஈடுபடச் சொன்னார்.
1960 ஜுலை 14-ம் தேதி ஜேன் கோம்பே காடுகளுக்குள் முதன்முதலில் நுழைந்தார். அங்கு பணியாற்றுகையில்தான் சிம்பன்ஸிகளுடனான அவரது பரிச்சயமும் ஈடுபாடும் உண்டானது. லூயி தம்பதிகளுடன் இணைந்து ஜேன் சிம்பன்ஸிகளின் பாதுகாப்புக்கான ஒரு அமைப்பை அங்கு துவங்கினார்.
அந்த அமைப்பிலிருந்து ஆய்வுகளைச் செய்கையில் தான் சிம்பன்சிகள் அது நாள் வரை உலகம நினைத்திருந்ததுபோல் தாவரவுண்ணிகள் மட்டுமல்ல அவை இறைச்சி உண்பதையும், மழைநடனமிடுவதையும், படுபயங்கரமான போர்களில் ஈடுபடுவதையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக புற்றிலிருந்து கரையான்களை எடுத்து உண்பதற்கான கருவிகளை அவை தயாரிப்பதையும் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.
சிம்பன்ஸிகளைப் பற்றிய உலகின் பல தவறான அறிதல்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து உண்மையில் சிம்பன்ஸிகள் மனிதனுக்கு மிக மிக நெருங்கிய உயிரினங்கள் என்பதை ஜேன் தெரிவித்தார். 1963-ல் 29 வயதான ஜேனின் 7500 சொற்களையும், 37 பக்கங்களையும் கொண்ட சிம்பன்ஸிகளைக் குறித்த பல முதல் நிலைத்தகவல்களைக் கொண்ட ஆய்வறிக்கையை நேஷனல் ஜியோகிராஃபிக் சஞ்சிகை வெளியிட்டது.
அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்த கோம்பே காடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர்தான் அவரது காதல் கணவர் ஹியூகோ. அந்தக்கட்டுரை சிம்பன்ஸிகளின் வாழ்வை மட்டும் காட்டவில்லை கோம்பே காடுகளில் ஆய்வுகளின் போது ஜேனுக்கு உண்டான நோய்கள், உடல்நலகுறைவு, அதிலிருந்து அவர் மீண்டது, சிம்பன்ஸிகளை நெருங்குவதில் இருந்த சிக்கல்கள், தடைகள், காட்டிலிருந்த கொல்விலங்குகளால் உண்டான ஆபத்துகள் ஆகியவையும் விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை இன்றுவரையிலும் உலகின் மிக முக்கியமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சிம்பன்ஸிகளின் இணைசேர்தல், கருவுறுதல், குட்டிகளை ஈனுதல், பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்து உலகிற்கு புதிய பல உண்மைகளை ஜேன் தெரிவித்தார்.சிம்பன்ஸி அன்னைகள் நாலரை வருடத்திலிருந்து 6 வருடத்துக்கொருமுறைதான் கருத்தரித்து, ஒன்றிலிருந்து இரண்டு குட்டிகளை மட்டும் அளிப்பவை, முதல்முறை அன்னைகள் ஆண் சிம்பன்ஸிகளிடமிருந்து குட்டிகளை மறைத்து வைக்கின்றன, அனுபவம் வாய்ந்த அன்னைகளே ஆண் சிம்பன்ஸிகளுக்கு குட்டிகளைக் காட்டுகின்றன போன்ற புதிய தகவல்களை ஜேன் உலகிற்கு சொன்னார்.
தன் மகன் க்ரப்பை வளர்ப்பதற்கான பல படிப்பினைகளை சிம்பன்ஸிகளிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்லும் ஜேனின் மீது அத்தனை பிரியமுண்டாகியது எனக்கு. க்ரப்புடன் அடர் காட்டில் ஆய்வுகளைச் செய்த ஜேன் அவனை காட்டுவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க கூண்டில் அடைத்து வைத்திருப்பார். அர்ப்பணிப்புடன் ஆய்வுகளைச் செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருபபோம் எனினும் ஜேன் போல மகனை கூண்டில் வைத்துவிட்டு சிம்பன்ஸிகளை ஆய்வுசெய்யும் அர்ப்பணிப்பை நான் வேறெங்குமே கேள்விப்பட்டதில்லை.
அவரது கண்டுபிடிப்புக்களைப்பற்றி சொல்கையில் லூயி ’’சிம்பன்ஸிகளும் மனிதகளைப் போலத்தான் என்பதை ஒத்துக்கொள்ளும் முன்பு நாம் கருவி என்பதையும், ஏன் மனிதன் என்பதையுமே மறுவரையறை செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.ஜேனின் பங்களிப்பை, கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவத்தை உலகம் அவர் கல்விக்கூடத்துப் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே அங்கீகரிக்கும் என லூயி உணர்ந்திருந்தார் எனவே இளங்கலை படித்திருக்காத ஜேனை கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் படிக்க ஏற்பாடு செய்தார்.
அங்கு ஜேன் முனைவர் பட்டத்திற்காக மிகக்குறுகிய காலத்தில் செய்த The Behaviour of Free-living Chimpanzees in the Gombe Stream Reserve என்னும் தலைப்பிலான ஆய்வு விலங்குலகின் பல புதிய கதவுகளை உலகிற்கு திறந்துவைத்தது. இளங்கலை படிக்காமல் கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்ற வெகு சிலரில் ஜேனும் ஒருவர்
அடர் வனங்களில் பலவருடங்களை ஆய்வுக்காகச் செலவழித்த ஜேனின் முதல் கணவர் நேஷனல் ஜியோகிராஃபியின் முதன்மை வன உயிர்ப்புகைப்படக்கலைஞரும் ஜேனின் ஆய்வை படம்பிடிக்க வந்தவருமான ஹியூகோ வான்(Hugo van Lawick.) அவர்கள் காடுகளில் சந்தித்து காதல் கொண்டு 1964-ல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது மகன் Grub என்று செல்லப்பெயர்கொண்ட Hugo Eric Louis van Lawick.
ஹுயூகோவுடன் 1974-ல் விவாகரத்தானபின்னர் இரண்டாவதாக 1975-ல் தான்சானிய அரசியல்வாதியும் தான்சானிய தேசியப் பூங்காவின் முன்னாள் இயக்குநருமான டெரெக்கை (Derek Bryceson ) மறுமணம் புரிந்து கொண்டார், டெரெக் 1980-ல் மறைந்தார்.
அதுவரை விலங்கியலாளர்களின் வழக்கமாயிருந்ததைப் போல விலங்குகளுக்கு எண்களை இடுவதில் விருப்பமில்லாத ஜேன் சிம்பன்ஸிகளுக்கு, டெஸ் , ஃப்ளோ, பிஃபி, டேவிட் போன்ற பெயர்களை வைத்தார்.1977-ல் அவரது பெயரிலேயே ஜேன்குடால் நிறுவனத்தை வாஷிங்டனில் துவங்கினார். அந்த அமைப்பு சூழல் பாதுகாப்பு, சூழல் ஆரோக்கியம் மற்றும் வாழிட அழிப்புக்கெதிரான விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான உலகளவிய விரிந்த பிரச்சாரத்தையும் அது குறித்த கல்வியையும் ஆய்வையும் மேற்கொண்டிருந்தது.ஜேன் இந்த அமைப்பின் பொருட்டு வருடத்தின் 300 நாட்கள் அவரது இறுதிநாள் வரையிலுமே தொடர் பயணத்திலிருந்தார். இந்நிறுவனத்தின் 25 கிளைகள் உலகெங்கும் இயங்குகின்றன.
2014 –ல் நியூயார்க் டைம்ஸுக்களித்த நேர்காணலில் ‘’ சிம்பன்ஸிகளுக்காக ஒருவர் ஆண்டு முழுவதும் பயணம் செய்து, மிக முக்கிமான செயல்களைச் செய்கிறார் என்பது எனக்கு தொடர்ந்து வியப்பை அளிக்கிறது. அந்த ஒருவர் நான்தான்’’ என்றார்.
அதே நிறுவனத்தின் நீட்சியயாக 1991-ல் பள்ளிக்குழந்தைகளும் பங்களிக்கும் Roots & Shoots, என்னும் அமைப்பையும் சூழல் பாதுகாப்புக்காக உருவாக்கினார் ஜேன். துவக்கத்தில் 12 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களுடன் இருந்த அந்த அமைப்பு இப்போது 75 நாடுகளில் மிகத்தீவிரமான செயல்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2025-ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர விருது உள்ளிட்ட மிக உயரிய ஏராளமான விருதுகளையும் ஜேன் பெற்றிருக்கிறார். விலங்குகள் குறித்த அவரது அவதானிப்புகளை பல நூல்களாக எழுதியிருக்கும் ஜேனின் மிகப்பிரபலமான நூல் Reason For Hope: A Spiritual Journey.
அவரது The Book of Hope: A Survival Guide for Trying Times, என்னும் மற்றொரு நூல் உலகின் மிக முக்கியமான 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.ஜேனின் In the Shadow of Man (1971). மற்றும் The Chimpanzees of Gombe: Patterns of Behavior (1986). ஆகிய இரு கட்டுரைகளும் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவை.
ஆப்பிரிக்க காடுகளில் ஜேன் நெருக்கமாகச் சந்தித்த மலேரியா, முதலைகள், விஷம் துப்பும் நாகப்பாம்புகள், கொல்விலங்குகள், ராட்சஷ விஷ மரவட்டைகள் ஆகியவற்றையும் சொல்லும் அவரது கட்டுரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை.அவரது விலங்குலகம் குறித்த பலநூறு ஆவணப்படங்களும், திரைப்படங்களும் ஜேனின் கண்கள் .வழியாக நமக்கு விலங்குலகைக் காட்டுபவை.
20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மிகப்பிரபலமான இயற்கை அறிவியலாளராக இருந்த ஜேன் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் துறையில் அவரைத்தொடர்ந்து பல பெண்களும் வர காரணமாயிருந்தார் என்பதுவும் அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று. அவர்களில் சிம்பன்ஸிகளின் ஆய்வில் பெரும்பங்காற்றிய பெண்களான Dian Fossey, Biruté Galdikas, Cheryl Knott மற்றும் Penny Patterson,ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவரது இறுதிப் பயணத்திட்டம் லாஸ் ஏஞ்சலீஸ் காடுகளின் நெருப்பு பிடிக்கும் எல்லைகளில் நெருப்புத் தடுப்பாக 5000 மரங்கள் நடும் நிகழ்வுதான். அவரது மரணத்திற்குப்பின்னர் இன்று நடப்பட்ட முதல் மரம் ஜேன் குடால் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
ஜேன் மீது பெரும் அபிமானம் கொண்டிருக்கும் ஜாஜாவிடம் ஜேனின் மறைவு குறித்து இன்று பேசிக்கொண்டிருக்கையில் ஜேன் தனது பாட்டியின் சாயலில் இருப்பதாக சொன்னார் ஜாஜா. இயற்கை வளங்களைத் தொடர்ந்து சுரண்டுகிற, யானை வழித்தடங்களில் பெருநிருவனங்களை அமைக்கிற, பனைமரங்களை செங்கல் சூலைகளில் எரிக்கக்கொண்டு செல்கிற, அரசியல் ஆதாயங்களுக்காக பலநுறு மரங்களை வெட்டுகிறவர்களுகு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடைசி நொடி வரை. இயற்கையின் பாதுகாப்புக்காக உழைக்கும் ஜேன் போன்றவர்கள்தான் நமது சொந்தமாக இருக்கமுடியும். எனக்கும் ஜேன் பேரன்னையாகத்தான் தெரிகிறார்.
நம்பிக்கை மற்றும் மன உறுதிக்கான தூதராக ஜேன் உலகெங்கும் அறியப்பட்டார். அவரது முக்கியச் செய்தியாக ’’நம்பிக்கை கொள்வது என்பது நமது கையில், என் கையில், உங்கள் கையில் இருக்கிறது நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சின்னஞ்சிறு மாற்றங்களைச் செய்யமுடியும்’’ எனச் சொன்ன ஜேன் அவரது வாழ்க்கையையே அந்த செய்திக்கான உதாரணமாக விட்டுச் சென்றிருக்கிறார்.ஜேனுக்கு அன்பும் அஞ்சலியும்
அன்புடன்
லோகமாதேவி
பங்கேற்பு அரசியல் -திறல் சங்கர்
While you are talking about language politics or racial politics, you are trying to label it as simple “identity politics.” It is a superficial understanding.
Why is language politics progressive?
தாங்கள் சமீபத்தில் விஜயின் அரசியல் வருகையை முன் வைத்து பதிவு செய்திருந்த “விஜய் அரசியலும் மெய்யான அரசியலும்” எனும் கட்டுரை மிக முக்கியமான ஒரு கட்டுரையாகவும், மெய்யான அரசியலை நாம் மக்களுக்கு எடுத்து செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.
பங்கேற்பு அரசியல் -திறல் சங்கர்October 2, 2025
ஏழாம் உலகத்தில் இருந்து…
என் புனைவுலகில் ஏழாம் உலகம் ஒரு கெட்ட கனவு போல. இப்போது தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என பலமொழிகளில் வெளிவந்து தீவிரமான பாதிப்பை உருவாக்கியிருக்கும் இந்நாவல் அடுத்த ஆண்டு அமெரிக்காவிலும் வெளியாகிறது. அந்நாவலை எழுதத்தூண்டிய பின்னணி பற்றி ஒரு காணொளி
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

