Jeyamohan's Blog, page 988

May 13, 2021

கதாநாயகி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

கதாநாயகி கதை நினைக்க முடியாதபடி வளைந்து வளர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இத்தனை எழுதிய பிறகும் டெம்ப்ளேட் என எதுவுமே இல்லாமல், உங்கள் தீவிர வாசகர்கள்கூட கொஞ்சம் கூட ஊகிக்க முடியாமல் கதை சென்றுகொண்டிருப்பது ஆச்சரியமானதுதான்.

இப்போது இந்தக்கதையில் இரண்டு ஓடைகள் உள்ளன. ஒன்று, கதைசொல்லியின் கதை. அவன் ஒரு மலைக்குச் சென்று அங்கே ஆதிவாசிகளுக்கு ஒரு பள்ளி அமைப்பது. இன்னொரு கதை ஒரு புத்தகம், அதைப்பற்றிய பிரமைகளின் கதை. அல்லது பேயின் கதை. இரண்டு கதைகளும் இதுவரை சந்திக்காமலேயே சென்றுகொண்டிருக்கின்றன.

புத்தகத்தின் கதை மூன்று அடுக்குகளாக உள்ளது. ஃபேன்னி என்ற கதாசிரியையின் கதை. அவள் வாழ்க்கையிலுள்ள சில மர்மங்கள், அவள் அதை எதிர்கொண்ட விதம். அவள் எழுதிய நாவலில் உள்ள கதாநாயகி ஈவ்லினா. அவளுடைய கதை இன்னொரு அடுக்கு. ஈவ்லினா ஃபேன்னியின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறாள். கூடவே அவள் தன் வாழ்க்கையை பற்றியும் சொல்கிறாள். மூன்றாவது அடுக்கு அதை வாசிப்பவனின் உணர்ச்சிகள்.

இந்த மூன்று அடுக்கும் ஒன்றாகக் கலந்துவிடுகிறது. ஈவ்லினா ஒருபக்கம் ஃபென்னி பற்றி பற்றி பேசுகிறாள். மறுபக்கம் வாசிப்பவன் உலகிலும் அவள் வருகிறாள்

சுவாரசியமான பல கதைகளாக போகிறது.

ஆர்.சரவணன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

அதிகாலை தளத்தை திறந்ததும் கதாநாயகி 1 என்று கதைத்தலைப்பு  கண்ணில் பட்டதுமே அடைந்த நிம்மதியை எப்படிச்சொல்வதென்று தெரியவில்லை.  தொற்று குறித்த செய்திகள், வதந்திகள், மரணச்செய்திகள், ஊதிபெரிதாக்கப்பட்ட பொய்கள் என எத்தனை தள்ளியும் ஒதுங்கியும் இருந்தாலும் மேலேவந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது.

முன்னனுபவம் இருப்பதால் அச்சமூட்டும் முழு ஊரடங்கு நாளையிலிருந்து, கதை இன்றிலிருந்து.

உங்கள் கதைகளை இந்த அசாதாரண நாட்களில் வாசிப்பதுஉள்ளத்துக்கு பெரும் விடுதலையாக, சிகிச்சையாக இருக்கிறது.பலமணிநேர மின்தடைக்குப்பின்னர் மின் விசிறி ஓடத்துவங்குவதை போல ,அக்னி நட்சத்திரவெயிலில் முந்தாநாள் திடீரெனகுளிர குளிர பெய்த மழையைப்போல, மூச்சுக்காற்றுக்கு புழுங்கித்தவிக்கையில் கதவும் ஜன்னலும் திறந்து காற்றும் வெளிச்சமும் உள்ளே நிறைந்ததைப்போலவெல்லாம் உணர்கிறேன்.

சாதாரணமாக ஊரில் துவங்கும் கதை தீடீரென காட்சிமாறி காடு, மலை, அமானுஷ்யமென மாறியதில் இனி வேறொன்றையும் நினைக்காமல் அடுத்தென்ன நிகழுமென்று மட்டும் மனதில் நினைத்துக்கொண்டிருக்கலாமென்பதே  ஊரடங்குகாலத்தில் சுவாரஸ்யமான விடுதலை.

கிரியின் காட்டை நினைவூட்டும் சூழல். அந்த பங்களா, காட்டுமழை எல்லாம் விசேஷமென்றாலும் அந்த எழுத்து மேசை ஆர்வமூட்டியது. பஸ்ஸை பிடித்து போய் அதை வாத்தியாரிடம்கேட்டு வாங்கிவரலாமென்று கூட நினைத்துக்கொண்டேன்.அப்படி ஒரு மேசை பலஆண்டுகளாக கனவு எனக்கு.

நான் பார்த்தேயிராத கணக்குப்பிள்ளையாயிருந்த என் அம்மாவின் அப்பா புழங்கிய. ஒருமேசையை குறித்து அச்சு அசலாக இப்படியேதான் அம்மா பலமுறை விவரித்திருக்கிறார்கள். அதனுடன் அவர் உபயோகித்த ஈட்டி மர ரூல்தடி என்னிடம் விநோதமான முறையில் சமீபத்தில் வந்துசேர்ந்தது. இப்போது 80 வயதாகும் அம்மா தன் திருமணத்துக்கு பிறகுபிறந்த வீட்டு வாசற்படியை மிதிக்கவேயில்லை. ஆனாலும் அந்த குளிர்ந்த ரூல்தடி எனக்கு தாத்தாவின் ஆசிகளைப்போல வந்து சேர்ந்திருக்கிறது.

உங்களின் எல்லாக்கதைகளும் எனக்கு எங்கோ பழைய கனலை விசிறிவிடுகிறது.

மழைநீரில் கோரன்  போட் டீ ஏக்கமூட்டுகிறது.மலைக்குளிரில் கம்பளிக்குள் கதைசொல்லி உணரும் பாதுகாப்பையும்  கத கதப்பையும் உங்கள் கதைகள் எனக்கும் அளிக்கின்றன.

கதை தலைப்பிற்கு பின்னிருக்கும் 1 என்னும் எண்  இனி கதை தொடருமென்பதை சொல்லி பெரும் நம்பிக்கை அளிக்கிறது. நெருப்பைப்போல அணையாது வளரும் கதைகளுக்கான நன்றிகளுடன்

லோகமாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2021 11:31

பித்தப்பூ- பிரவீன்

பித்தப்பூ வாங்க

அன்புள்ள ஆசானுக்கு,

க.நா.சுப்ரமண்யம் அவர்களின் ‘பித்தப்பூ’ குறுநாவல் வாசித்தேன். இதுவே நான் வாசிக்கும் க.நா.சு வின் முதல் நாவல். மனநலம் பற்றிய நாவல் இது. ‘பைத்தியம்’ என்பதன் அர்த்தத்தை அறிய முயலும் முயற்சியே இந்நாவல்.

கதை தியாகராஜன் (எ) தியாகுவைப் பற்றியது. கதை கூறுபவர் (க.நா.சு) தியாகுவின் குடும்ப நண்பர். தியாகுவிற்கும், கதை கூறுபவருக்கும் (க.நா.சு)  நடக்கும் உரையாடல்கள் ஒரு பகுதி விட்டு விட்டு வருகிறது. முதல் பகுதியில் உரையாடல் என்றல் இரண்டாம் பகுதியில் காட்சிகளும், சம்பவங்களும் , பிறகு மீண்டும் மூன்றாம் பகுதியில் உரையாடல்கள். இந்த உரையாடல்கள் பெரும்பாலும் தியாகு தன் மனவோட்டங்களையும், தன் மீது பிறர் வைத்திருக்கும் அபிப்பிராயத்தையும் உடையது.

கதையில் சில “பைத்தியம்” அடைந்தவர்களின் சூழ்நிலைகள் கூறப்பட்டுள்ளது. தன் மனைவியின் செயலால் திடீரென்று “பைத்தியம்” ஆகுபவர், தந்தி கொடுக்கும் தபால்காரன் பைத்தியம் ஆவது, போன்ற சிறு கிளை கதைகள் வருகின்றன. உண்மையில் பைத்தியம் என்பது என்ன? தியாகுவின் அப்பாவையும் அண்ணனையும் கூட சிலர் பைத்தியம் என்கிறார்கள். பொதுவான மனித செயல்களை செய்யாமல் தனியே செய்பவரை உலகம் காலம் தோறும் பைத்தியம் என்று தான் சொல்லிக்கொண்டு வருகிறது. மக்கள் தன்னால் செய்ய இயலாததை, பிறர் செய்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அதை செய்வோரை பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுகிறது. இது ஒரு வகையான “பைத்தியத்தின்” வரையறை.

அவனின் தந்தை பெரிய பணக்காரராக இருந்து தான தர்மத்தால் தன் சொத்தினை முக்கால்வாசிக்கும் மேல் இழந்தவர். அவரின் இரண்டாம் மனைவியின் கடைசி மகன் தான் தியாகு (பத்தாவது பிள்ளை).  தன சிறு வயது முதலே படிப்பிலும், ஓவியத்திலும் படு சுட்டி. காலேஜ் படிக்கும் போது அவன் கலை இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டான். அதிலேயே அவன் எப்போதும் திளைத்திருந்தான்.

கதை கூறுபவரும்(க.நா.சு) ஒரு பைத்தியம் என்றே மக்கள் நினைப்பர். தன் வாழ்நாள் முழுதும் “எழுத்து” மட்டுமே நம்பி வாழ்பவரை உலகம் எப்படி சொல்லும். தியாகு தான் ஒரு பைத்தியமோ என்று எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு விபத்தில் சிக்கி அவன் காதலியயை இழந்த பின்னர் அவன் இன்னும் அந்த எண்ணத்தில் மூழ்கிவிட்டான். அவன் தொடர்ச்சியாக “தான் ஒரு பைத்தியமா இல்லையா” என்பதைப் பற்றியே தன் வாழ்நாள் முழுதும் போராடிக்கொண்டிருந்தான்.

தியாகு இறுதியில்  “electric shock” மருத்துவத்தின் கொடுமையால் உயிரிழக்கிறான். தன் மனைவியும் மகளும் வெளியூரில் இருக்க, தான் மட்டும் தனியே வாழ்ந்து மனச்சோர்வுடனே இறந்தும் போனான்.

“நான் பைத்தியமா?” என்ற கேள்வி பெரும்பாலும் தன் வாழ்க்கையில் எல்லோரும் ஒருமுறையாவது சிந்தித்திருப்போம். மனச் சோர்வு உடையவர்கள், அதில் உள்ளே சென்று தங்களை இழக்கிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக அவரவர் சுற்றமும் நட்பும் எப்போதும் இருக்க வேண்டும். இன்று “மனநோய்” பற்றி பல்வேறு விழிப்புணர்வுகள் மேலை நாடுகளில் இருந்தாலும், இன்றளவும் நம்மிடையே அதை ஒரு stereotype செய்து ஒதுக்கியே வைத்துள்ளோம். மனம் குன்றினாலும், மனம்  இல்லாவிட்டாலும் அனைவரும் ஓர் உயிரினமே. அடிப்படை அன்பும், பரிவுமே நாம் கொடுக்கும் மருந்து.

அன்புடன் ,

பிரவின்,
தர்மபுரி

சக்கரவர்த்தி உலா

க.நா.சுவின் தட்டச்சுப்பொறி சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம் க.நா.சு.கடிதங்கள் க.நா.சுவும் வெங்கட்சாமிநாதனும் சொல்வனம்-க.நா.சு சிறப்பிதழ் க.நா.சு.கடிதங்கள் க.நா.சு

ரசனையும் பட்டியலும்

இலக்கியவாதிகளும் அமைப்புகளும் பொய்த்தேவு- கண்டடைதல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2021 11:31

மலைகளின் மடி-கனவும் இலட்சியமும்

வெண்முகில் நகரம் தோன்றி மலைகளின் மடி வரும்வரை ஒரு நெருப்பு நதியின் கரையில் நடந்த உணர்வு இருந்தது. உடம்பில் அந்த அனலின் வெம்மை தகித்துக்கொண்டே இருந்தது. மலைகளின் மடிவந்தபோது திரௌபதி என்னும் அனல்நதியின் பிடியில் இருந்து வெளிப்பட்டு வெட்டவெளியில் விழுந்த மீனின் துள்ளல். இது பரவசம் என்று சொல்லமுடியாது மாறாக இடம்மாறியதன் சுவாச இம்சையாக இருந்தது. முற்றும் வெறுமையில் விழுந்ததுபோல முற்றும் புதிய கண்காணாத இடத்தில் எறியப்பட்டதுபோல, முற்றும் புதிய நிலத்தில் புடுங்கி நட்ட நாற்றுபோல வாடி வதங்கவேண்டியதாக இருந்தது. ஏன் இந்த மாற்றம்? உச்சத்திற்கு பிறகு வரும் சூன்யம்.

மலைகளின் மடி-கனவும் இலட்சியமும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2021 11:30

May 12, 2021

தன்னேற்பு

எழுதுவது, வாசிப்பது என வீட்டிலிருக்கிறேன். நெருக்கமானவர்களின் நோய்ச்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சோர்வுறக்கூடாது என எனக்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன். நடுவே இளைப்பாறலுக்காகச் சில சினிமாக்கள்.

ஆனால் இன்றைய படங்களில் விரிந்த காட்சித்தன்மை கொண்ட சில சினிமாக்களை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. பலர் பரிந்துரைக்கும் பெரும்பாலான படங்கள் உளத்திரிபு, வன்முறை, பாலியல்மீறல் ஆகிய மூன்று கருப்பொருட்களைச் சார்ந்தவை. அவற்றில் அதிர்ச்சியோ படபடப்போ அடைந்தால் மட்டுமே அவற்றில் ஈடுபாடு கொள்ள முடியும். எனக்கு அவை சலிப்பும் அலுப்பும் ஊட்டுகின்றன. அதுதான் தெரியுமே, மேற்கொண்டு சொல்லு என்கிறேன். மீண்டும் மீண்டும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். சரிதான் போடா என்று சொல்லி மூடிவிடுகிறேன்.

சமீபத்தில் அப்படி சொல்லி கணிப்பொறியை அணைத்தது கிம் கி டுக் படம் ஒன்றைப் பார்த்து.அவர் ஐரோப்பாவின் அறிவுஜீவி பாவனை கொண்ட முதிரா உள்ளங்களுக்கு என்ன தேவை என்று அறியும் திறன் கொண்ட சாமர்த்தியசாலி, அவ்வளவுதான்.

சரி, வழக்கமான வணிகக்கேளிக்கைச் சினிமாக்களுக்குச் செல்லலாம் என்றால் அவையும் பத்துநிமிடங்கள் தாங்கவில்லை. ஆகவே திரும்பத் திரும்ப பார்த்தவை மிஸ்டர் பீன் வகை காமெடிகள். அவ்வாறு துழாவிக் கொண்டிருக்கையில்தான் பழைய மலையாளக் கலைப்படங்களை இணையத்தில் கண்டடைந்தேன். பெரும்பாலும் முன்னர் பார்த்தவை. மெல்ல நகரும் இப்படங்களை எப்படி பார்க்கமுடியும் என்று பலமுறை கடந்தபின் ஏதோ ஒரு பலவீன நிமிடத்தில் பார்த்தேன். ஆச்சரியமாக அவை உள்ளிழுத்துக் கொண்டன.

இலக்கியமறிந்த ஒருவனுக்கு, இலக்கியவாதிக்கு, சினிமாவில் காட்டப்படும் வன்முறைகளும் காமமும் எந்த பெரிய ஈடுபாட்டையும் உருவாக்காது. அவனுடைய கற்பனைக்கு மிகக் கீழேதான் அவை நின்றிருக்கும். சினிமாவில் வெளிப்படும் தத்துவமும் தரிசனமும் அவன் தத்துவயியலிலும் இலக்கியப் படைப்புக்களிலும் அறிந்தவற்றின் ஒரு படி குறைவான வெளிப்பாடுகளாகவே இருக்கும் – நான் சினிமாவின்  ‘மாஸ்டர்ஸ்’ எனப்படுபவர்களை பெரும்பாலும் பார்த்திருக்கிறேன். அதன்பின் சொல்லும் கருத்து இது. எந்த சினிமாவும் சிந்தனைக்குப் புதிதாக எதையும் எனக்குத் தந்ததில்லை.

அதற்கப்பாலும் இலக்கியவாதிக்குச் சினிமாவில் ஆர்வமளிப்பது என்னவாக இருக்கும்? முதன்மையாக காட்சிகள். இலக்கியவாதி நேரடியாக வாழ்க்கையை பார்த்துக் கொண்டே இருக்கிறான். சினிமா மேலும் செறிவாக்கி, சட்டகமிட்டு வாழ்க்கையை காட்டுகிறது. மிக இயல்பாகக் காட்டப்படும் ஒரு காட்சி இலக்கியவாதியை மிகப்பெரிய கற்பனைகளுக்கு தள்ளிவிடும். நிலக்காட்சிகள், நகர்க்காட்சிகள், மனித முகங்கள்.

மனித முகங்களில் வெளிப்படும் மெல்லிய உணர்வுமாற்றங்களை சினிமாவில் காண்பதுபோல எங்குமே நாம் காணமுடியாது. எத்தனை நெருக்கமானவர்களாக இருந்தாலும் நாம் எவர் முகத்தையும் இத்தனை கூர்ந்து, இத்தனை அணுக்கமாகப் பார்ப்பதே இல்லை.

அத்துடன் ஒளிநிழலாட்டத்தை இணைக்கிறது சினிமா. ஓசைகளை தெரிவுசெய்து பின்னால் பரப்புகிறது. படத்தொகுப்பு வழியாக காட்சிகளை பொருத்துகிறது. தருணங்களை உருவாக்கி, தொடர்ச்சியை உருவாக்கி ஓர் உலகை கட்டமைக்கிறது. எத்தனை சாத்தியங்கள். முடிவிலி வரைச் செல்லும் கலைவாய்ப்பு உள்ளது சினிமாவில். எ

என்னைப் பொறுத்தவரை சினிமாவின் காட்சிகளே போதும், அர்த்தங்களை நான் உருவாக்கிக் கொள்வேன். படிமங்களாக நானே மாற்றிக்கொள்வேன். மெய்வாழ்க்கையிலிருந்து எப்படி உணர்ச்சிகளை, கதையை, தரிசனத்தை அடைகிறேனோ அப்படி.

அடுத்தபடியாகவே இயக்குநர் உருவாக்கும் காட்சிப்படிமங்களைச் சொல்வேன். என்னை மிகப்பெரிய தொலைவுக்கு எடுத்துச்சென்ற காட்சிப்படிமங்கள் சினிமாவில் உள்ளன. அவை அந்தப் படத்தின் எல்லைக்குள் இருந்து எழுந்து என் ஒட்டுமொத்தக் கனவையும் பாதித்திருப்பதை இன்று உணர்கிறேன். சினிமா மெய்யாகவே எனக்கு எதையாவது அளித்திருக்கிறதென்றால் இதைத்தான் சொல்வேன். காட்சிகளை, புறத்தே விரியும் ஒரு கனவை.

ஆகவே கலைப்படங்கள் என்னை மீண்டும் அதே தீவிர உளநிலைக்கு இட்டுச்செல்வதை, முற்றிலும் ஆழ்த்தி வைத்திருப்பதைப் புரிந்துகொள்கிறேன். அதை எளிமையான கேளிக்கைப் படங்கள் செய்ய முடியவில்லை. இவை வெறும் யதார்த்தச் சித்தரிப்புகள், இவற்றில் என்ன இருக்கமுடியும் என்றே சென்ற இருபதாண்டுகளாக எண்ணிவந்தேன். ஆனால் இப்போதும் இவைதான் பார்க்கச் செய்கின்றன.

மாறாக பலரும் கொண்டாடும் கேம் ஆஃப் த்ரோன்ஸ் அரைமணிநேரம் பார்க்க முடியவில்லை. அந்த மிகைவண்ணமும், மின்னிச்செல்லும் காட்சிவேகமும், செயற்கையான வசனங்களும் அதைவிடச் செயற்கையான உச்சகட்டக் காட்சிகளும், ஆங்கிலப்படங்களுக்கே உரிய ’டெம்ப்ளேட்’ திரைக்கதையும், போலிக்கதாபாத்திரங்களும் இணைந்து ஒருவகை ஒவ்வாமையையே உருவாக்கின. அவற்றிலிருந்து தப்பச்செய்தவை இந்த கலைப்படங்கள்தான்.

அடூர் கோபாலகிருஷ்ணனின் முதல் படமான சுயம்வரம் 1972ல் வெளிவந்தது. இன்று எழுபதுகளில் வந்த புகழ்பெற்ற கேளிக்கைப் படங்களில் பாட்டுக்களைத் தவிர எதையுமே பொருட்படுத்த முடியவில்லை. ஆனால் சுயம்வரம் இன்று பார்க்கையில் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது. அதற்குக் காரணம் இது கலைப்படைப்பு என்று ஆவணப்படுத்தப்பட்டமையால், விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்பட்டமையால் நான் இதை கூர்ந்து பார்த்ததா என்று என்னால் சொல்லமுடியவில்லை.

அதைவிட இதில் காட்டப்படும் திருவனந்தபுரம். மண்குழைத்துக் கட்டப்பட்ட சுவர்களும், கறைபடிந்த காரைப்பூச்சும், தென்னையோலைக் கூரையும் கொண்ட வீடுகள். அக்கால உடைகள், பேச்சுமொழி. அதுவும் எனக்கு ஈர்ப்பாக அமைந்திருக்கலாம். அது காட்டும் கலாச்சாரப் பிரச்சினையும் எனக்கு அணுக்கத்தை அளித்திருக்கலாம், ஓர் அயல்நாட்டுப் படம் தராத ஒன்று.

[image error]

1972ல் அடூருக்கு வயது 32. அதற்குமுன் பல குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் எடுத்திருந்தார். சுயம்வரத்தின் திரைக்கதையுடன் மூன்று ஆண்டுகள் அலைந்தார். அவருடைய நண்பரும், அவருடன் திரைப்படச் சங்க இயக்கத்தில் பணியாற்றிய முன்னோடியுமான குளத்தூர் பாஸ்கரன் நாயர் தயாரிக்க படத்தை தொடங்கினார். பின்னர் கேரள ஃபிலிம் டெவெலப்மெண்ட் கார்ப்பரேஷனின் நிதியுதவி கிடைத்தது.

பலவகையிலும் சத்யஜித் ரே ‘பாதேர் பாஞ்சாலி’யை எடுத்த வரலாறுதான். சுயம்வரமும் பதேர்பாஞ்சாலியைப் போலவே திரையரங்கில் வெளியாகி போதிய எதிர்வினையைப் பெறவில்லை. அதைப்போலவே தேசிய விருது கிடைத்ததும் உடனே கவனிக்கப்பட்டு வணிகவெற்றியை ஈட்டியது. அதன்பின் உலகம் முழுக்க கவனிக்கப்பட்டு அடூரை இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக ஆக்கியது.

பாதேர் பாஞ்சாலி வெளிவந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த படம் சுயம்வரம். பாதேர் பாஞ்சாலி போலவே விட்டோரியா டி சிகாவின் புதுயதார்த்தவாத அழகியல் கொண்டது. வாழ்க்கையை  ‘அப்படியே’ காட்டுவதான கலைப்பாவனையுடன் வெளிப்பட்டது. பாதேர் பாஞ்சாலி போலவே மலையாள திரையுலகில் ஒரு கலைப்பட இயக்கத்தை தொடங்கிவைத்தது.

[அடூர் கோபாலகிருஷ்ணன், சுயம்வரம் படப்பிடிப்பின் போது]

மகிழ்ச்சியும் மனநிறைவுமாக நகரத்தில் நுழையும் ஒரு காதல்ஜோடி வாழ்க்கையில் சந்திக்கும் துயர், இழப்பு, அவளுடைய கடைசி உறுதிப்பாடு ஆகியவற்றின் சித்தரிப்பு. திரைக்கதையே இல்லையோ என்பதுபோலத் தோன்றும் சர்வசாதாரணமான அன்றாடத்தையே படம் காட்டிச் செல்கிறது. நிகழ்ச்சிகள் என நாம் சொல்லும் எதுவுமில்லை. அது அப்படித்தான் என அறிந்து அந்தந்த காட்சிகளில் நின்று பார்க்கும் பார்வையாளனுக்குரியது இப்படம்.

முதல் காட்சி முதல் இறுதி வரை என் கண்கள் அமைந்திருந்தது சாரதாவின்மேல். அத்தனை இயல்பான திரைத் தோன்றுதல். பேருந்தில் புதுக்கணவனுடன் வரும்போதிருக்கும் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும், விடுதியில் படுத்திருக்கும் கணவனைப் பார்க்கையில் கண்களில் மட்டும் தெரியும் காமம், தன் இல்லத்தை மெல்ல அமைத்துக்கொள்ளும் பொறுப்பு, அத்தனை வறுமைக்கு நடுவிலும் ஒரு வீடு தனக்கென அமைந்ததின் சுதந்திரம் வெளிப்படும் உடல்மொழி.

அத்தனை சிறிய கதாபாத்திரங்களும் மிக இயல்பான மனிதர்களாக தெரிகிறார்கள். அருகே வாழும் உற்சாகமான, கள்ளமில்லாத விபச்சாரி. தன்னியல்பாகவே உதவும் அண்டைவீட்டுக் கிழவி. பக்கத்துவீட்டுப் பையன் தன் தங்கையை தூக்கிச் செல்லும் காட்சியை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன். புதுயதார்த்தவாதம் என்பது ஒரு சாளரத்தை திறந்து வைக்கும் அளவுக்கே புனைவுக்கு இடமளிப்பது. சாளரச்சட்டகமும் அதில் தெரியவேண்டியதென்ன என்ற தெரிவும் மட்டுமே அதன் கலைப்பங்களிப்புகள்.

ஓளிப்பதிவாளர் மங்கட ரவிவர்மா, ஒலிப்பதிவாளர் தேவதாஸ் இருவரும் அடூரின் படைப்புவாழ்க்கை முழுக்க உடன் வந்தவர்கள். அவர்களின் கூட்டு இந்தப்படத்தில் தொடங்குகிறது. முகங்களிலும் கதைக்களத்திலும் தேவையான இடங்களில் மட்டும் ஒளிவிழும் ரவிவர்மாவின் காட்சியமைப்புகளும், இயல்பான ஒலிகளாலேயே சூழலை உருவாக்கும் தேவதாஸின் ஒலித்தெரிவுகளும் படத்தை ஒரு மெய்யனுபவமாக ஆக்குகின்றன.

மனிதர்களை அருகிருந்து நோக்கும் அனுபவமே புதுயதார்த்தவாதத்தின் மிகப்பெரிய அழகியல்கூறு. அர்த்தங்களை உருவாக்கிக் கொள்வது முக்கியமே அல்ல. சொல்லப்போனால் அர்த்தத்தை, கதைத்தொடர்ச்சியைக்கூட உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை. சிந்தனையை அகற்றிவிட்டு வெறுமே அவர்களை பார்ப்பதனூடாக நம் ஆழுள்ளம் அந்தக் காட்சிகளால் நிறைய அனுமதிப்பதும், அது தன்னிச்சையாக உருவாக்கிக்கொள்ளும் அர்த்தங்கள் என்னென்ன என்று பின்னர் மதிப்பிடுவதுமே நாம் செய்யவேண்டியது.

முதல் காட்சிகளில் வரும் சீதா [சாரதா] உயர்குடிப்பெண் என்பது அவள் அந்த உயர்விடுதியை இயல்பாக அணுகுவதிலிருந்து தெரிகிறது. அவளுடைய தொடர்வீழ்ச்சியின் கதை இது. அவள் அவனுடன் தங்கிய மறுநாள் காலையில் வெளியே ஒலிக்கும் பஜனைப் பாடலை கேட்டுக்கொண்டு கணவனை அவ்வப்போது காமத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கும் காட்சியை இப்படத்தின் கலையின் உதாரணமாகச் சொல்வேன். அந்தப் பஜனைப் பாடல் நம் உள்ளத்தில் பதியவேண்டும் என இயக்குநர் நேரமெடுத்துக்கொண்டு காட்டுகிறார்.

அப்போது அது ஏன் என தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் இழந்தபின் தாக்குப்பிடித்து வாழும் அவள் அந்த நாளை நினைவுகூர்கையில் அந்த பஜனையின் ஒலியை அத்தனை துல்லியமாக நினைத்திருப்பாள் என்று தோன்றுகிறது. அவளால் அந்த ஓசைகளிலிருந்து நினைவைப் பிரிக்கவே முடியாது. அவ்வாறு எண்ணியபடி மீண்டும் அக்காட்சியைப் பார்க்கையில் அது அமைக்கப்பட்டிருக்கும் விதத்திலுள்ள படைப்புசக்தி வியப்பூட்டுகிறது.

https://adoorgopalakrishnan.com/

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2021 11:35

கதாநாயகி-5

[image error]

[image error]நான் விடியற்காலையில் படுத்து கொஞ்சம் வெயில் வந்தபிறகுதான் கண்விழித்தேன். எப்போது படுத்தேன் என்று நினைவிருக்கவில்லை. ஆகவே காலையில் விழிப்பதே அப்போதுதான் என என் மனம் எண்ணிக்கொண்டது. உடலில் கொஞ்சம் தூக்கக்குறைவின் அசதிபோல் இருந்தது. கைகால்களை நீட்டிக்கொண்டு முதுகை நெளித்தேன். குளிரில் போர்வைக்குள் தூங்குவதன் பிரச்சினைகளிலொன்று நாம் உடலை இரவெல்லாம் குறுக்கி வைத்திருப்போம் என்பது. உடலை நெளித்தால் கிடைக்கும் இன்பத்திற்காகவே அப்படித் தூங்கலாம்.

சட்டென்று இரவில் நிகழ்ந்தவை நினைவுக்கு வர திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். போர்வையை தள்ளிவிட்டுக்கொண்டு ஓடிச்சென்று அந்தப்புத்தகத்தை எடுத்துப்பார்த்தேன். அது அப்படியே நான் வைத்த இடத்தில் இருந்தது. இரவு நான் வாசித்துவிட்டு வைத்த பகுதியில் தீக்குச்சி அடையாளம் இருந்தது. அதைப் புரட்டிப் பார்த்தேன். The die is thrown, and I attend the event in trembling!  ஈவ்லினா ரெவெரெண்ட் வில்லர்ஸுக்கு எழுதிய கடிதம் தொடங்கியது. அந்த கடிதத்திற்கு முந்தைய கடிதத்தில் ரெவெரெண்ட் வில்லர்ஸ் இப்படி எழுதி முடித்திருந்தார். you shall leave it for ever; and once again restored to my protection, secure your own tranquillity, and make, as you have hitherto done, all the happiness of my life. அதேதான் அங்கேதான் முடித்தேன்.

நான் புத்தகத்தை புரட்டிக்கொண்டே இருந்தேன். நேற்று வாசித்தவற்றை மீண்டும் வாசித்தேன். என் உள்ளம் எதை தேடியது? நான் வாசித்தவை அங்கிருக்கவேண்டும் என்றா, இருக்கலகாது என்றா? இருந்தால் நான் இந்த பதற்றத்தில் இருந்து விடுபடுவேன். இல்லை என்றால் என்னால் புரிந்துகொள்ள முடியாத எதையோ எதிர்கொள்கிறேன். உண்மையைச் சொன்னால் நான் அங்கே அந்த வரிகள் இருக்கலாகாது என்றே விரும்பினேன்.

புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து சென்று முற்றத்தில் நின்றேன். வெயில் ஒளியுடன் விழுந்துகொண்டிருந்தது. முந்தையநாள் மழையை முற்றத்தின் மென்மணல் வரிகளிலிருந்து மட்டுமே உணரமுடியும். இன்னும் சற்றுநேரத்தில் தோலை எரியச்செய்யும் வெயில் விழத்தொடங்கும். உடல் வியர்த்து வழியும். நீராவியால் மூச்சுத்திணறும். இந்தக் காட்டில் பகலுக்கும் இரவுக்கும் தொடர்பே கிடையாது. பகலில் இங்கே இரவில் நிகழ்ந்தவற்றை தொடர்பு படுத்திப்பார்க்கவே முடியாது.

நான் கேளாமலேயே கோரன் டீ கொண்டுவந்து தந்தான். அவனிடம் “இங்கே அரிசி எங்கே வாங்கிறது?”என்றேன்

“அரி, கோதையாறு கடையில்…” என்றான்.

“இப்போ போனா வாங்க முடியுமா?”

“இப்போ இல்ல… நாளை”

நான் யோசித்துவிட்டு “சரி, இன்னைக்கு ஸ்கூல் வேண்டாம். கோதையாறுக்கு போவோம்” என்றேன்.

“ஓ, கோதையாறு… அவ்விடம் கரண்டு உண்டு… ” என்று அவன் சொன்னான். கைகளை விரித்து உத்வேகத்துடன் “பெரிய கரண்டு… புலியை காட்டிலும் பெரிய கரண்டு” என்றான்

நானும் அவனும் கோதையாறுக்குச் சென்றோம். அவன் செல்லும் வழியில் புலியையும் கோதையாற்றின் மின்சாரத்தையும் பற்றி மாற்றி மாற்றி ஏதோ சொல்லிக்கொண்டே வந்தான். அவன் என்ன சொல்கிறான் என்று நான் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. இயல்பாகவே அச்சொற்கள் என்னுள் பொருள் கொள்ள ஆரம்பித்தபோது வியப்படைந்தேன்.

அவன் காட்டின் தலைமையை புலியிடமிருந்து மின்சாரம் எடுத்துக்கொண்டதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தான். மின்சாரம் கொடுமையானது, ஒரே அடியில் ஆளைக்கொன்றுவிடும். சண்முகம், மாதேவன் பிள்ளை, அம்புரோஸ் ஆகியோரை அதுதான் கொன்றது. நாகராஜன், வறுவேல், காமராஜ் ஆகியோருக்கு நல்ல அடி விழுந்தது. அவர்களின் கைகால்கள் உடைந்தன. புலி அப்படி அல்ல. நீண்ட நாட்களுக்கு முன்பு தூப்பன் என்பவனை அது கொன்ன்றிருக்கிறது. ஏனென்றால் தூப்பன் கெட்டவன், அவன் கடுத்தா சாமிக்கு பலி கொடுக்கவில்லை.

மின்சாரத்தை புலி அஞ்சுகிறது. புலி வரும் வழிகளில் மின்சாரக் கம்பிகளால் கோடு போட்டு வைத்திருக்கிறார்கள். மின்சாரம் புலியை ஒருமுறை அடித்து தூக்கி எறிந்துவிட்டது. அதன்பின் கோதையாறுக்கு புலி வருவதில்லை. அங்கே மின்சாரம்தான் அரசன். மின்சாரத்தில் பூ பூக்கும். மரங்களை நட்டு பூ மலரச்செய்வார்கள். பெரிய சிவப்புப் பூக்கள். இரவில் அந்தப்பூக்கள் வெளிச்சம் வீசும்.

தீ போல அவை எரியும். ஆனால் பற்றிக்கொள்வதில்லை. எரிவதுடன் சரி. புகையும் வராது. ஏனென்றால் அது தீயல்ல, ஒரு பூதான். பகலில் அந்தப் பூ வாடிவிடும். அந்தப் பூவில் தேனெடுக்க சிறிய பூச்சிகள் முட்டிமுட்டி அதைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும். ஆனால் அந்தப் பூவைக் கண்டால் புலி அஞ்சிவிடும். அந்தப் பகுதிக்கே அது வராது. நம் பங்களாவில்  மின்சாரத்தை கொண்டுவந்து பூ மலரச்செய்துவிட்டால் போதும், புலியை நாம் அஞ்சவேண்டியதில்லை.

ஆனால் மின்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்களை புலி பார்த்துக்கொண்டிருக்கும். அதற்கு நினைவிருக்கும். காட்டில் தனியாகப் போனால் பின்னால் வந்து கவ்வி கொண்டு சென்றுவிடும். புலி மனிதனைக் கொல்வதுடன் சரி, தின்பதில்லை. ஏனென்றால் மனிதனின் மேல் மலைவாதைகள் கூடியிருக்கின்றன. அவை இருட்டானவை. மனிதனின் வாய்க்குள் பார்த்தால் இருட்டு தெரியும். அந்த இருட்டை புலி தின்பதில்லை.

அவனுடைய உலகம் எனக்கு வியப்பாக இருந்தது. அவன் அவ்வளவு பேசுவான் என்பதும் கொஞ்சம் திகைப்பை அளித்தது, பேச ஆரம்பித்தால் பேச்சே அவனைக் கொண்டுசென்றது.

“உன் குடும்பம் எங்கே ?” என்று கேட்டேன். “உனக்கு மனைவி இல்லையா?”

“வீட்டாள் இல்லை. வீட்டாள் பாம்புகடிச்சு செத்துபோய்” என்று அவன் பற்களைக் காட்டிச் சிரித்தபடிச் சொன்னாள். “குஞ்சாள் செத்து போயி”

“ஓ’ என்றேன்.  “குழந்தைகள் இல்லியா?”

“இல்லை” என்று அவன் சொன்னான். “நான் கோதையாறு போயி… கரண்டு கண்டேன்”

அவன் தன்னை மின்சாரத்தின் பக்கமாக நகர்த்திக் கொண்டவன். ஆகவே புலியின் குடிமக்களான காணிகளுடன் அவ்வளவு நெருக்கமான உறவு இல்லை. அவர்களுக்கும் கோதையாறுக்கும் நடுவே அவன்தான் தொடர்பு. ஆனால் அவர்களின் ஏறுமாடங்களில் அவன் தங்குவதில்லை.

“நான் சோறு தின்னும். சோறு!” என்று அவன் கையை விரித்து காட்டினான். “கோதையாறிலே நெறைய சோறு!”.

வயிறுமுட்ட சோறு கொடுத்து அவனை கோதையாற்றின் பிரஜையாக ஆக்கிவிட்டார்கள் என்று தெரிந்தது.

நாங்கள் கோதையாற்றை அடைந்தபோது வெயில் உடலையே மெழுகாக உருகிவழியச் செய்துவிடும் என்பதுபோல அடித்தது. என் வீட்டில் நெல்லவிக்கும் அண்டாவுக்கு அருகில் நின்று கிளறும்போதுதான் எனக்கு அப்படி வியர்க்கும்.

கோதையாற்றில் ஒரு கடைதான் இருந்தது. கப்ரியேல் நாடாரின் கடையில் மளிகைச்சாமான்களும் மருந்துகளும் டார்ச்லைட்டுக்கு பேட்டரிகளும் பிளாஸ்டிக் செருப்புகளும் துண்டுகள் வேட்டிகளும் எல்லாமே கிடைத்தன. சைக்கிள் டயரும் டியூபும் கூட கிடைத்தன.

நான் நாடாரிடம் பள்ளிக்கூடத்திற்கு தேவையான அரிசியும் பருப்பும் மளிகையும் கொண்டுவந்து பங்களாவிலேயே தரமுடியுமா என்று கேட்டேன்.

“என்னண்ணு சொல்லுதிய? அவனுகளுக்கு சோறு மட்டும் போரும். நம்ம கறியும் கூட்டுமெல்லாம் அவனுகளுக்கு பிடிக்காது. இவன் திம்பான், இவன் காட்டுநாய் பளகி நாட்டுநாய் ஆனதாக்கும். அவனுகளுக்கு ஒண்ணும் வயத்துக்குப் பிடிக்காது. நெறைய மலிவான அரிசிய வாங்கிட்டு போங்க.  நல்லா சோறு பொங்கி வயிறு முட்ட குடுங்க…”

“பத்து பிள்ளைக தானே?”

கப்ரியேல் நாடார் பெரிய பற்களைக் காட்டி சிரித்து “அது பள்ளிக்கூடத்துக்கு. இவனுக அத்தனபேரும் சோத்துக்கு வருவானுக“ என்றார். ”ஆனா தினமும் வரமாட்டானுக…ஏன்னா இவனுகளுக்கு அரிசிச்சோறு வயித்துக்கு அவ்ளவு பிடிக்காது. இவனுகளுக்கு இறைச்சிதான் முக்கியமான சாப்பாடு…முயலோ பெருச்சாளியோ மானோ கொன்னு இறைச்சியை சுட்டு வயிறுநெறைய ஒருநேரம் தின்னுட்டான்னா அப்டியே இருந்திருவானுக”

அவரே அரிசியை கழுதைகள்மேல் ஏற்றி பள்ளிக்கூடத்துக்கே கொண்டுவந்து தருவதாகச் சொன்னார். “பள்ளிக்கூடத்திலே அரிசியை வைக்க இடமில்லை” என்று நான் சொன்னேன்.

”பிளாஸ்டிக் காயிதத்திலே போட்டு நாலடி ஆழத்திலே புதைச்சு வையுங்க… அதெல்லாம் இவனுகளுக்கு தெரியும். அன்னன்னைக்கு தேவையானதை எடுத்துக்கிடுங்க…” என்றார் கப்ரியேல் நாடார். ‘அரிசி வேணும்னா முன்பணம் குடுக்கணும். நான் போனிலே கூப்பிட்டுச் சொன்னா கொலசேகரத்திலே இருந்து அரிசி லாரியிலே போட்டு அனுப்புவாரு நாடாரு. நான் நாளைக்கு வெயிலுக்கு முன்ன கொண்டுவந்து சேத்திருதேன்”

நான் பணம் கொடுத்து அவரிடம் ரசீது பெற்றுக் கொண்டேன். நானும் கோரன்னும் நாடாரின் கடையிலேயே ஒரு பன் சாப்பிட்டு டீயும் குடித்தோம். திரும்ப நடந்து பங்களாவுக்கு வந்தபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டது. இந்தக் காடு தூரங்களால் இங்குள்ளவர்களைக் கட்டிபோட்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். இன்னும் சில ஆண்டுகள் நான் இந்த மூன்று இடங்களுக்கும் நடுவே ஊசலாடிக்கொண்டே இருக்கப்போகிறேன்.

காடுவழியாக வரும்போது நாங்கள் ஒரு யானைக்கூட்டத்தைப் பார்த்தோம். அதற்கு நெடுநேரம் முன்பே கோரன் மூக்கைச் சுளித்து “ஆன” என்று சொல்லிவிட்டான். சரிவுக்கு கீழே நாலைந்து யானைகள் நின்றிருந்தன. மண்நிறமானவை, செம்மண் குன்றுகள் என்றே தோன்றின. எங்களையும் அவை உணர்ந்துவிட்டிருந்தன. அவற்றில் முதிய யானை இருமுறை மெல்ல ஒலியதிர்வை எழுப்பியது. மற்றயானைகள் வாலைச் சுழித்தபடி மேய்ந்துகொண்டிருந்தன.

கோரன்”கறம்பியும் கூட்டமும்”என்றான்

அவர்கள் யானைக்கூட்டங்களுக்கே பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. கோரன் சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தான். இவர்கள் காட்டில் வாழ்வதன் வழியாக கற்றுக்கொண்டது காட்டில் செல்கையில் மனமில்லாமல் இருப்பது. உள்ளே எதுவுமே ஓடுவதில்லை. கண்ணும் காதும் மூக்குமாகவே செல்கிறார்கள். இந்தக் காட்டில் மனதையும் சுமந்து செல்பவன் வழிதவறுவான். விலங்குகளிடம் மாட்டிக்கொண்டு உயிர்விடுவான்.

சட்டென்று கோரன் ஒரு கல்லை எடுத்து சரித்து வீசினான். புதருக்குள் இருந்து ஒரு பெரிய முயல் துள்ளி விழுந்தது. அதன் மல்லாந்த அடிவயிறு தெரிந்தது. அது மீண்டும் துள்ளுவதற்குள் அவன் இன்னொரு கல்லால் அதை அடித்தான். அது துள்ளி துள்ளி அதிர்ந்துகொண்டிருந்தது. என்னால் அதைப் பார்க்கமுடியவில்லை. நான் முன்னால் சென்றேன்.

அவன் அதை எடுத்துக்கொண்டு வருவான் என்று நினைத்தேன். ஆனால் நான் சற்றுநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அவன் பெரிய நவரை இலையில் அந்த முயலின் இறைச்சியை கட்டி பொட்டலமாக்கி எடுத்துக்கொண்டு வந்தான். இரண்டுகிலோ வரை இருக்கும்.

“செவியன் இறைச்சி” என்று அவன் சொன்னான். நான் புன்னகைசெய்தேன்.

பங்களாவை அடைந்தபோது நான் மிகவும் களைத்திருந்தேன். கல்படிகளில் நிழலிருந்தது. அதிலேயே அமர்ந்துவிட்டேன்.அவன் உள்ளே சென்று எனக்கு டீ போட்டுக் கொண்டுவந்து தந்தான். அவனே முயலை சமைக்க ஆரம்பித்துவிட்டான்.

நான் எழுந்துசென்று அந்த நாவலை எடுத்துவந்து படிக்க ஆரம்பித்தேன். டூவல் சீமாட்டி ஈவ்லினாவின் பொருட்டு அவளுடைய தந்தை சர் ஜான் பெல்மோன்டின் மேல் ஒரு வழக்கு தொடுக்க திட்டமிடுகிறாள். அவர் அவளை தன் மகளாகச் சட்டபூர்வமாக ஏற்கவேண்டும், அவருடைய சொத்துக்களுக்கு வாரிசாகவும் ஆக்கவேண்டும். ஆனால் ரெவெரெண்ட் வில்லர்ஸுக்கு அதில் ஈடுபாடில்லை. அவரிடம் சொத்துக்காக உரிமை கோரக்கூடாது, சொத்து என்பது விரும்பி அளிக்கப்படவேண்டியது என்கிறார். ஹோவார்ட் சீமாட்டி பெல்மோண்ட் பிரபுவுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினாலும் அவர் ஆர்வம் காட்டுவதில்லை.

எனக்குச் சலிப்பாக இருந்தது. அந்நாவல் நான் எண்ணியதுபோல ஆழம் ஏதும் இல்லாததாகத் தோன்றியது. அப்போது ஏன் அந்தச் சலிப்பு வந்தது என்று இப்போது இப்படிச் சொல்கிறேன். புனைவெழுத்தில் ஒரு துடுக்குத்தனம் இருக்கவேண்டும். மீறல் என்றும் சொல்லலாம். பொதுப்புத்தியால் அறியும் விஷயங்களைத் தாண்டிச்செல்லும் ஆற்றலை அளிப்பது அந்த துடுக்குத்தனம்தான். அந்நாவலின் தலைப்பிலும், கருவிலும் எந்த அளவுக்கு துடுக்குத்தனம் தெரிந்ததோ அந்த அளவுக்கு நாவலில் இல்லை.

நீண்ட நீண்ட உரையாடல்கள், சில்லறை பிணக்குகள், அக்காலத்துச் சமூகச் சிக்கல்கள், அரசியல் முரண்பாடுகள். நாவலை மூடிவைத்துவிட்டேன். கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தேன். இங்கே எனக்கு நிகழ்ந்துகொண்டிருப்பது உண்மையில் என்ன என்று சிந்திக்கலானேன். இது கற்பனையும் பிரமையும் கலந்த ஒரு நிலை. இதற்கு உளவியலில் ஏதாவது பெயர்கூட இருக்கக்கூடும். ஒருவேளை மனச்சிக்கலின் தொடக்கமாகவே இருக்கலாம்.

அந்த எண்ணம் என்னை சில்லிட வைத்தது. மனச்சிக்கல் என் குடும்பத்தில் உண்டு. என் சித்தப்பா ஆவுடையப்ப பிள்ளை பலவகையான மனச்சிக்கல்களால் அவதிப்பட்டார். முழுப்பைத்தியமாக ஆகி சுசீந்திரம் போனவர் அங்கே தெப்பக்குளத்தில் குதித்து இறந்தார். உடனே அவரை நான் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வந்தன. அவர் எந்த புத்தகத்தை எடுத்தாலும் படித்துக்கொண்டே இருப்பார். தினத்தந்தியையே பலமணிநேரம் படிப்பார். எவராவது பிடுங்கிக் கொள்வது வரை.

வியர்த்துவிட்டேன். அந்த மனச்சிக்கல்தான் எனக்குமா? ‘எழுதாப்புறம் படிப்பது’ என்பார்கள் மலையாளத்தில். அது இல்லாதவற்றை கற்பனைசெய்து கொள்வது. அதைத்தான் செய்கிறேனா? இருக்கும் என்ற எண்ணம் அளித்த பதற்றத்தை தாங்கவே முடியவில்லை. ஆமாம் அதுவேதான் என்று தோன்றி, அதுவே என உறுதியாகி, கணநேரத்திற்குள் பூதம்போல எழுந்து நின்றது.

இது தொடக்கம்தான், இனி விழிப்பிலும் குரல்கள் கேட்கும், கண்களுக்குள் ஒளிப்புள்ளிகள் தோன்றும், காதில் அவ்வப்போது நாராசமான ஓசைகளும் மூக்கில் கெட்ட வாசனைகளும் வரும். அதன்பின் காட்சிகள் தெரிய ஆரம்பிக்கும். நேர் உலகம் போலவே தோன்றும் காட்சிகள். அவை நேருலகுடன் ஊடுகலந்துவிடும். எந்த உலகில் இருக்கிறேன் என்றே தெரியாமலாகும். பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சீறிக்கொண்டும் இருப்பேன்.ஒருநாள் கிளம்பிச் சென்றுவிடுவேன். தெருக்களில் அலைவேன். ஆடைகள் கந்தலாகும். சாக்கடைநீரை அள்ளிக்குடிப்பேன். எச்சில்களை உண்டு தெருவில் அமர்ந்திருப்பேன்.

என்ன செய்வது? இங்கிருந்து ஓடிவிடவேண்டும். இப்போதே, சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு ,பையை தூக்கிக்கொண்டு காட்டின்வழியாக ஓடி ,கோதையாறை அடைந்து, பஸ் பிடித்து குலசேகரம் சென்று, நாகர்கோயிலுக்கு சென்று, ஊரை அடைந்துவிடவேண்டும். ஆனால் திண்ணையில் அப்பா அமர்ந்திருப்பார். அவர் என்ன என்று கேட்பார். அம்மா உள்ளிருந்து வந்து “என்னடா மெய்யி?”என்பாள்.

நான் தளர்ந்து மீண்டும் நாற்காலியில் அமர்ந்துவிட்டேன். இந்த காட்டில், இந்த ஒழிந்த பங்களாவில் நான் இறந்தாலும் சரி, பைத்தியமாகி இங்கேயே அலைந்தாலும் சரி, என்னால் இந்த வேலையை துறக்க முடியாது. இது பைத்தியத்தின் தொடக்கம்தான். இல்லாதவற்றை காண்பது, இல்லாதவற்றை படிப்பது. பெரும்பாலான பைத்தியங்கள் இதைச் செய்கின்றன.

“இல்லை” என்று ஒரு குரல் மிக அருகே கேட்டது. என் முதுகுக்குப் பின்னால்.

“யார்?”என்றேன்

“நான் இங்கே இருக்கிறேன். உண்மையாகவே இருக்கிறேன். இது உங்கள் பிரமையெல்லாம் இல்லை”

பிரிட்டிஷ் உச்சரிப்பு கொண்ட ஆங்கிலம்.

“நீ பிரிட்டிஷ்காரியா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“நீ யார்? ஃபேன்னி பர்னியா?”

அவள் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.

“இல்லை, ஈவ்லினா?”

அவள் இருப்பதாகவே தெரியவில்லை. நான் சட்டென்று திரும்பிப் பார்த்தேன், யாருமில்லை.

“பொய்’ என்றேன்.

செவிகூர்ந்துவிட்டு “வெறும் பிரமை” என்றேன்.

மீண்டும் சற்று நேரம் கவனித்துவிட்டு “என்னுடைய மனச்சிக்கல்தான் இது” என்றேன்.

என் முன் ஒரு நிழல் உருப்பெற்று வருவதைக் கண்டேன். எனக்குப்பின்னால் நின்றிருக்கும் ஒருவரின் நிழல் அது. அவருக்குப் பின்னால் கண்ணாடிச் சன்னல் இருந்ததனால் நிழல் கூர்மையாக, நீண்டு விழுந்து கிடந்தது.

ஒரு பெண்ணின் நிழல் அது.

“யார்?”என்று நடுங்கும்குரலில் கேட்டேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. நான் உரக்க “இதுவும் என் மனமயக்கமாக இருக்கலாம்… “ என்றேன்.

அவள் “எல்லாமே மனமயக்கமாகவும் இருக்கலாமே?”என்றாள்.

”அப்படியில்லை என்றால் நீ யாரென்று சொல்”

அவள் மீண்டும் பேசாமல் நின்றாள்.

“சொல், நீ யார்?”

உள்ளிருந்து கோரன் வெளியே வந்து “ஏமானே…’என்று சொல்லி உடனே அஞ்சி பின்னடைந்தான். அவனுடைய கண்களில் இருந்த பயவெறிப்பை, வாய் திறந்திருந்ததை, நான் நன்றாகவே கண்டேன். திகைப்புடன் எழுந்துவிட்டேன்.

“என்னடா?” என்றேன்.

அவன் மாறி மாறிப்பார்த்தபடி அருகே வந்தான்.

”என்ன? என்னடா?”என்றேன்.

“ஆரோ நிக்குந்நு மாதிரி தோந்நி…” அவன் தரையைச் சுட்டிக்காட்டி “ஈ நிழலு… இது அப்புறம் நிக்குண மாவின் நிழலு” என்றான்.

நான் கீழே பார்த்தேன். ஜன்னலுக்கு அப்பாலிருக்கும் மாமரத்தின் மங்கிய நிழல்தான் தரையில் விழுந்துக் கிடந்தது.

“நான் கண்டு பயந்நேன்…”என்று அவன் பற்களைக் காட்டிச் சிரித்தான். “இறச்சிக்கஞ்ஞி எடுக்கட்டா?”

“என்னது?”என்றேன்.

“இறச்சிக்கஞ்ஞி… நாரகச்சம்மந்தி உண்டு”

“எடு”

அவன் உள்ளே சென்றான். நான் அவள் குரலுக்காக செவிகூர்ந்தேன்.

“அவனும் பார்த்துவிட்டான்” என்று குரல் கேட்டது.

“ஆனால் அது நிழல்”

“நாங்கள் அப்படித்தான் வரமுடியும்….ஆனால் இது உன் மனச்சிக்கல் இல்லை… அதை உறுதிசெய்துகொள்“

”ஆமாம்”என்றேன்.

“ஆகவே நீ பயப்படவேண்டியதில்லை. நாங்கள் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை”

“நான் என்ன செய்யவேண்டும்?”என்றேன்.

“அந்தப்புத்தகத்தை படி… முழுக்கப் படி…”

“ஏன்?”

“இந்தமாதிரி சென்ற நூற்றாண்டு நாவல்களை இப்போது எவருமே படிப்பதில்லை”

“அதற்காகவா?”

“அதில் எத்தனை வாழ்க்கைகள்!” என்றது அக்குரல். “யாரும் படிக்காவிட்டால் அவை எங்கே போகும்?”

கோரன் வந்து “கஞ்ஞி எடுத்து வைச்சேன்” என்றான்.

“வாறேன்”என்றேன்.

“ஏமான், தனக்குத்தான் பேசுந்நூ’ என்றான் கோரன்.

“இல்லையே”என்றேன்.

“இல்ல, நான் கண்டேன்”

”சும்மா பேசிப்பார்த்தேன்” என்றேன்.

முயல்கறியை அரிசியுடன் போட்டு வைக்கப்பட்ட கஞ்சி. நார்த்தங்காய் மரத்தின் இலைத்தளிர்களை பச்சைப்புளியுடன் பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து எடுத்த துவையல். விசித்திரமான சுவை. ஆனால் எனக்கு மிகப்பிடித்திருந்தது.

“இந்த பச்சைப்புளி எங்க கிடைச்சுது?” என்றேன்.

“அவிடே… வலிய புளிமரம் உண்டு”

கொல்லையில் நார்த்தங்காய் மரம் நிற்பதை முன்பே கண்டிருந்தேன். கழுவி ஊற்றிய நீரில் முளைத்த மிளகாய்ச்செடிகள் நிறையவே நின்றிருந்தன.

“நீ சாப்பிடு” என்றபடி முகப்புக்கு வந்தேன்.

நாற்காலியை நோக்கிச் செல்ல முயன்றபின், திரும்பி கட்டிலை நோக்கிச் சென்றேன்.

“அந்தப் புத்தகம் அங்கே இருக்கிறது” என்று மிகமெல்ல குரல் ஒலித்தது.

”ஆமாம்” என்றேன்.

”அதைப்படி”

“வேண்டாம்…”

“நீ அதைப் படிக்கவேண்டும்…”

“மாட்டேன்”

”தயவுசெய்து தயவுசெய்து…”

“ஏன்?”

“நீ அதைப்படித்தால்தான் நான் தோன்றமுடியும்”

“நீ யார்?”

அவள் பதில் சொல்லவில்லை.

நான் கட்டில் நோக்கிச் சென்று அதன்மேல் அமர்ந்தேன். அந்த உரையாடல் என்னுள் ஒலிக்கிறது. உண்மையில் செவியில் கேட்கவில்லை, கேட்பதாகத் தோன்றுகிறது.

“அதை எடுத்து வாசி… அதை எடுத்து வாசி”

“மாட்டேன்”

“தயவுசெய்து… தயவுசெய்து”

அந்தப் புத்தகம் மேஜைமேல் இருந்தது. அதைப் பார்த்தபடிஅமர்ந்திருந்தேன். சட்டென்று ஓர் எண்ணம் வந்தது. எழுந்து சென்று அதை எடுத்து டிராயரை திறந்து மூடி உள்ளே வைத்தேன்.

பின்னர் திரும்பி நடந்து வெளியே போய் படிகளில் அமர்ந்தேன். கைகளை மார்பில் கட்டியபடி வெளியே வெயில் சாய்ந்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மழை வருவதுபோல எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் நீராவி மூச்சடைக்க வைக்கும் அளவுக்கு நிறைந்திருந்தது.

“ஏன்?”என்ற குரல் கேட்டது.

“நீ அதை எடுத்து வெளியே வை பார்ப்போம்”

“எதற்கு?”

“நீ என் எண்ணக்குழப்பம் அல்ல, எனக்கு வெளியே உண்மையிலேயே இருக்கிறாய் என்று நான் நம்புகிறேன்”

“அவனும் என்னைப் பார்த்தான்!”

“அவன் என்னுடைய பாவனைகளைக் கண்டு அஞ்சிவிட்டான். நான் என்னருகே ஒருவர் இருப்பதைப்போல பேசிக்கொண்டிருந்தேன்”

“அதை எடுத்து வாசி…”

“மாட்டேன். நீ அதை எடுத்து வெளியே வை”

நான் செவிகூர்ந்தேன். எந்த ஓசையும் இல்லை.

”இருக்கிறாயா?”

பதில் ஏதும் எழவில்லை.

“என்ன செய்கிறாய்?”

நெடுநேரம் செவிகூர்ந்தேன். எந்த ஓசையுமில்லை.

“போய்விட்டாயா?”

அங்கே நான் உணர்ந்த இன்மை என்னை திடுக்கிடச் செய்தது. அங்கே எவருமில்லை. நான் திரும்பிப்பார்த்தேன். மெய்யாகவே எவருமில்லை. எழுந்து உள்ளே சென்று விரிந்த கூடத்தை பார்த்தேன். அதே இன்மை. கூடத்தில் சுற்றி நடந்தேன். யாருமே இல்லை.

அங்கே அந்தக்குரல் ஒலிக்காதபோதுகூட நான் ஓர் இருப்பை உணர்ந்திருக்கிறேன். அது முற்றிலும் இல்லாமலாகிவிட்டிருக்கிறது. நான் நாற்காலியில் சென்று அமர்ந்தேன். மெய்யாகவே அவளை திருப்பியனுப்பி விட்டேனா? இனி அவள் இல்லையா?

டிராயரை திறந்தேன். அந்த புத்தகம் அங்கே இருந்தது. அதை எடுத்து வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. வாசிக்க ஆரம்பித்தால் அவள் தோன்றிவிடுவாள். அந்த புத்தகத்திலிருந்துதான் அவள் எழுந்து வந்தாள்.

ஆனால் அதைப் படிக்க ஆரம்பித்தால் மீண்டும் அந்த அவஸ்தையை இழுத்து என்மேல் போட்டுக்கொள்வேன். அது ஒருவேளை அது மனநோய் என்றால் நானே அதை வளர்த்துக்கொள்கிறேன். நான் தனியாள் அல்ல. எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. அத்தனைபேரும் என்னையே நம்பியிருக்கிறார்கள்.

டிராயரை மூடிவிட்டேன். என் நெஞ்சில் கழிவிரக்கம் நிறைந்தது. என்னால் முடிந்தது இதுதான். வேறெப்படியும் நான் நடந்துகொள்ளமுடியாது. நான் இழந்தது மிகப்பெரிய ஒன்று . என் வாழ்க்கையில் இத்தகைய உச்சநிலையை அடைந்ததே இல்லை. நாள்முழுக்க ஒன்றையே எண்ணிக்கொண்டிருக்க நேர்வது எத்தனை அரியது.அது நாட்களை எத்தனை ஒளிகொண்டதாக ஆக்குகிறது. ஒருமாதம் கழித்து நினைவுகூரும்படி ஒருநாள் இருந்தால் அதில்தான் மெய்யாகவே வாழ்கிறோம். விக்டர் யூகோவின் வரியா அது? ஆனால் அத்தகைய எத்தனை நாட்கள் ஒருவருக்கு அமைகின்றன?

காதலில் விழுந்தவர்கள் அப்படி இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனக்கு இந்தக்காட்டில் என்ன காதல்? என் தங்கைகளுக்கு நான் பணம்சேர்க்க வேண்டும். ஒவ்வொருவரையாக கல்யாணம் செய்து அனுப்பவேண்டும். அதன்பின் எனக்கான ஒரு பெண். பெரும்பாலும் உலகமறியாத வேளாளப் பெண். பெரும்பாலும் பற்கள் உந்திய, கண்கள் குழிந்த, பலகாரணங்களால் திருமணம் தட்டிப்போய் வயதுகடந்த பெண்.

எரிச்சலுடன் நான் அந்த டிராயரை திறந்தேன். புத்தகத்தை கையில் எடுத்தேன். நான் தற்கொலை செய்துகொள்வதுதான் இது. ஆனால் மலையிலேயே நம்மை கவருமிடம் அதலபாதாளத்தின் விளிம்புதான். சாவின் அருகாமை இல்லாத எதுவும் ஆழமும் தீவிரமும் கொள்வதில்லை. ஒருகணம் தவறினால் சாவு என்றிருக்கையிலேயே நாம் நம்மை முழுமையாகத் தொகுத்துக் கொள்கிறோம். இந்தக்காட்டில் அத்தனை உயிர்களும் அப்படித்தான் வாழ்கின்றன.

ஆனால் கையில் சற்றுநேரம் வைத்திருந்துவிட்டு நான் மீண்டும் அந்த புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டேன். என்னால் முடியாது. என்னால் ஆசைப்படத்தான் முடியும். நான் அத்தனை புத்தகங்களைப் படித்ததே என்னால் எதையும் மெய்யாகவே நிகழ்த்திவிட முடியாது என்பதனால்தான். என்னால் மலைகளில் ஏறமுடியாது, கடற்பயணம் செய்யமுடியாது, எந்தப்பெண்ணின் கண்ணைப்பார்த்தும் காதல் சொல்ல முடியாது, எவரிடமும் குரலை உயர்த்தி சண்டைபோட முடியாது.

தன்னிரக்கம் கொண்டு நான் தலையை கைகளில் தாங்கிக்கொண்டேன். அழவேண்டும் போலிருந்தது. எனக்கெல்லாம் காதல்கூட வாய்க்காது. காதலி ஒருத்தி கனவுடன் வந்து என் முன் நின்றால்கூட என் குடும்பப்பொறுப்பை நினைத்து அவளை துரத்திவிட்டு தனிமையில் அமர்ந்து புலம்புவேன்.

எழுந்து முற்றத்திற்கு வந்தேன். இருட்டிக்கொண்டிருந்தது. மழை இன்னும் வரவில்லை. ஆனால் மழைக்கான எல்லாமே ஒருங்கிவிட்டிருந்தன. மரங்கள் அசைவில்லாத இலைகளுடன் காத்துநின்றிருந்தன. பறவைகள் ஒடுங்கிவிட்டன. தெற்குவானில் இடியோசை யானையின் உறுமல்போல எழுந்தது. வானில் மின்னல்கள் கீறித்துடித்துக்கொண்டே இருந்தன. மெல்லிய காற்றசைவு. அதில் செவிகளில் குளிரை உணர முடிந்தது.

தளர்ந்த காலடிகளுடன், உடல் எடைகொண்டு தள்ளாடுவதுபோல நடந்து கற்படிகளில் ஏறினேன். உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தேன். மேஜைமேல் இருந்த புத்தகத்தை எடுத்து கவனமில்லாமல் புரட்டினேன்.

சட்டென்று கை சுட்டதுபோல அதை மேஜை மேல் வைத்துவிட்டேன். அதை யார் எடுத்து மேஜைமேல் வைத்தது? அவளா? அது ஓர் ஆவிதானா? ஆனால் நானே முன்பு அங்கே அமர்ந்தபோது அந்த புத்தகத்தை எடுத்தேன். திரும்ப உள்ளே வைக்கவில்லையா? கைமறதியாக நானே மேஜைமேல் வைத்துவிட்டேனா? உள்ளே வைக்க எண்ணினேன், அது நினைவில் இருக்கிறது. ஆனால் வைத்தேனா? அப்படியே எழுந்து சென்றுவிட்டேனா?

அவளுடைய குரல் காதில் ஒலிக்கும் என்று காத்திருந்தேன். ஒலிக்கவில்லை. நெடுநேரம் ஆகியது. சட்டென்று மழை பேரொலியுடன் உடைந்து பங்களாவின் கூரைமேல் கொட்டியது. அந்த ஓசை என்னை மெய்சிலிர்க்கவைத்தது. நான் அந்த புத்தகத்தை பிரித்தேன். இந்த மழையில் இங்கே நான் செய்வதற்கொன்றுமில்லை. இதை வாசிப்பதைத் தவிர வேறேதும் செய்ய என்னால் முடியாது. இங்கே வேறேதுவும் இல்லை. நான் அஞ்சலாம், தயங்கலாம், நாய் வாய் வைப்பதற்கு முன் சுற்றிச்சுற்றி வருவதுபோல. ஆனால் இதை மட்டுமே என்னால் செய்யமுடியும்.

நான் அதை வாசிக்கலானேன். இம்முறை அந்த மொழி மிக அணுக்கமானதாக, இயல்பானதாக இருந்தது. எளிதாக அதற்குள் சென்றுவிட முடிந்தது. O, Maria! London now seems no longer the same place where I lately enjoyed so much happiness; every thing is new and strange to me; even the town itself has not the same aspect.-My situation so altered!-my home so different!-my companions so changed!-But you well know my averseness to this journey. ஈவ்லினின் உள்ளம் பெருகி வழிந்துகொண்டே இருந்தது.

இந்த நகரத்தில் பாவம் என்பது களியாட்டாக மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே செல்வம் என்பது அதிகாரமாக மாறியிருந்தது. செல்வத்திலிருந்து பாவத்தைப் பிரிக்கமுடியாது என்று சொல்வது உண்மை. இன்னொருவரிடமிருந்து பிடுங்கப்படாத செல்வம் என்பது இல்லை என்று ஒருமுறை ஃபாதர் மான்ஸ்ஃபீல்ட் சொன்னார். உண்மைதான். ஆனால் இங்கே செல்வமில்லாத காலம் இருந்திருக்கிறதா என்றாவது? கற்கால மனிதன் அவன் செய்த கற்கோடரியை பத்திரமாக வைத்துக்கொண்டிருப்பான். அவன் வேட்டையாடி உண்ணும் உணவை அந்தக் கோடரி இல்லாதவன் கனவுகூட காணமுடியாது. ஆகவே அவன் இவன் தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு அந்தக் கோடரியுடன் சென்றுவிட்டிருப்பான்.

அந்தக் கோடரி கைமாறிக்கொண்டே இருக்கிறது. அதை விலைகொடுத்து வாங்கலாம். அதற்கு இணையான போகங்களை அளிக்கவேண்டும். விலை என்பது என்ன? பணம்! பணம் என்பது என்ன?அது வாங்கும் போகங்கள். ஒரு நல்ல கோச் வண்டியை வாங்க பத்தாயிரம் நல்ல விருந்துணவுகளை கொடுக்கிறோம். அல்லது ஐநூறு பட்டு ஆடைகளைக் கொடுக்கிறோம். அவ்வளவுதான். இங்கே பரிமாறிக் கொள்வதெல்லாம் போகங்களை மட்டும்தான்.

அப்படியென்றால் ரெவெரெண்ட் வில்லர்ஸும் ஃபாதர் மான்ஸ்பீல்டும் எதை கொடுக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்படுவது எதற்கு பதிலாக? அவர்கள் அளிப்பது ஓர் எளிமையான இளைப்பாறல். அவர்கள் பிறரிடம் பாவம் பற்றிய எண்ணத்தை விதைக்கிறார்கள். பாவம் செய்தோம் என்னும் குற்றவுணர்வை ஏற்றுகிறார்கள். அதன் பின் அந்தச் சுமையை இறக்கி வைக்க உதவுகிறார்கள். அந்த ஆறுதல் ஒரு போகம். அதற்குப் பதிலாக அவர்கள் தங்கள் வீடுகளை, ஆடைகளை, நகைகளை, மடாலயங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ருமேனிய மாயாஜாலக்காரர்கள். அவர்கள் நம்மை பேயின் பிடியில் இருப்பதாக நம்பச்செய்கிறார்கள். பேயை துரத்தி நம்மை மீட்கிறார்கள். நாம் மகிழ்ந்து கூச்சலிடுகிறோம்.

இங்கே மிகமிக அரிய வணிகத்தைச் செய்பவர்கள் பெண்கள். அவர்கள் அளிப்பது என்ன? அவர்களால் உச்சகட்டமாக அளிக்கமுடிவது உடலை. காமத்தை. ஆனால் அது வெளியே பரவிக்கிடக்கும் கூழாங்கற்களைப்போல அத்தனை சாதாரணமானது. அத்தனை உயிர்களும் செய்துகொண்டிருப்பது. உயிர்கள் அதைச் செய்ததுமே மறந்து கடந்துவிடுகின்றன. பெண் என்றோ எப்படியோ அதை ஆண் மறக்கமுடியாதபடி செய்துவிட்டாள். அவன் அதையே நினைத்துக்கொண்டிருக்கும்படிச் செய்வதில் வெற்றிபெற்றுவிட்டாள். வரலாற்றில் பெண் அடைந்த மாபெரும் வெற்றி அதுதான்.

அதை அவள் ஏன் செய்தாள்? அவள் அதன் வழியாக தன் குட்டிகளுக்கு அந்த ஆண் பொறுப்பேற்கும்படிச் செய்தாள். அவன் அக்குட்டிகளுக்காக எஞ்சிய வாழ்நாள் முழுக்க உழைத்து, போராடி, தியாகம் செய்யும்படிச் செய்தாள். ஆண் அதற்குப்பின் செய்த போர்கள், சேர்த்த செல்வங்கள், அமைத்த பேரரசுகள் எல்லாமே அதன்பொருட்டுத்தான். கூழாங்கல்லை வைரமென காட்டினாள். உண்மையில் வைரமும் கூழாங்கல்தான். அதற்கு எங்கோ எவரோ எதனாலோ மதிப்பை ஏற்றியிருக்கிறார்கள்.

பெண் வாழ்நாளெல்லாம் செய்வது தன் மதிப்பை ஏற்றிக்கொள்வதைத்தான். அழகாக இருக்க முயன்றுகொண்டே இருக்கிறாள், வாழ்வின் கடைசிவரை. கலைகளை பயில்கிறாள், இலக்கியம் படிக்கிறாள், நடனம் ஆடுகிறாள். தன் தந்தைமேல் முதல் வெற்றியை அவள் அடைகிறாள். தந்தையை தன் அடிமையாக ஆக்குகிறாள். அவர்மேல் ஏறி நின்றுகொண்டு உலகை வெல்ல முயல்கிறாள். அவருடைய செல்வம், அவருடைய குடிப்பெருமை, அவருடைய சமூகநிலை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மேலே செல்ல எழுகிறாள்.

உயர்குடி என்பது இங்கே பெண்ணால் தீர்மானிக்கப்படுகிறது. ஆ! ஆதை தீர்மானித்தவள் ஒரு பெண்ணாகவே இருக்கவேண்டும். அவள் தன் மதிப்பின் உச்சமென முன்வைப்பது அது. இங்கே இந்த லண்டனில் அத்தனை பெண்களும் உயர்குடிப் பெண்களாகி, மேலும் உயர்குடிப் பெண்களாகி, அரசிக்கு சற்றுகீழே அமைவது வரை சென்றுகொண்டே இருக்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2021 11:34

மோட்சம்- சிறுகதை

ஒருமுறை எனக்கு காய்ச்சல் கண்டு நான் படுத்தபடுக்கையாகியபோது என் அப்பா கண்டிவீர நாயக்கர், மருத்துவரை அழைத்து மூன்று நாள் எனக்கு விபூதியிடச் சொன்னார். நான் விழித்தெழுந்த ஆறாம் நாளே மருத்துவர் வீதியில் எதிர்பட்டபோது எச்சில் உமிழ்ந்து காறித்துப்பிக்கொண்டே நடந்தார். போன காரியத்தை முடிக்காமல் பாதியிலேயே வீடு திரும்பினார், திரும்பி வரும் வரை காறிக்கொண்டே வந்தார்.

மோட்சம்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2021 11:34

அந்த முகில் இந்த முகில்- கடிதங்கள்

Pair Clouds Mood Sky Flying Birds Blue Swallows

அன்பின் ஜெ

நலமுடன் இருக்கிறீர்களா? நோய்கள் சூழ்ந்த கடும் நாட்களில் இருக்கிறேன்.

அந்த முகில் பற்றி இப்பொழுது தான் எழுத முடிகிறது. சினிமா படப்பிடிப்பு பிண்ணனியில் உள்ள கதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பழைய திரைப்படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்.ஆகவே இக்கதையின் களமே எனக்கு அணுக்கமாகிவிட்டது.நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள்,தையல் தொழிலாளர்கள் அக்கால படப்பிடிப்பு விழாக்கள் அனைத்தையுமே நேரில் நான் கண்டேன்.

இளமையில் உண்டாகும் அந்த பித்து மனநிலை,அது காதல் கூட இல்லை அதனைக் கடந்து வந்தவர்களுக்கு அது புரியும்.எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் பிரியத்துக்குரியவருடன் செல்லும் பயணமே எனக்கு இக்கதையின் பிடித்தமான பகுதி.அந்த பயம்,சாகசம் காதல் பிரேமை உலகிலுள்ள எல்லோரையும் விட்டு இருவர் மட்டுமே வாழும் அக உலகு ,அது தரும் உளநிலை அந்த நெருக்கம் அவையெல்லாம் வாய்க்கப் பெற்றவர்கள் பேறு கொண்டோரே.அப்படியான சில நாட்கள் என் பயணங்களிலும் இருந்ததுண்டு.அந்நினைவுகள் நான் அழியும் போது மட்டுமே மறையும்.அந்த உளநிலையை அளித்தது இந்நாவல்.மிக அற்புதமான படைப்பு.

நெருங்கிய உறவுகளின் இழப்பு, வீட்டுத்தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இப்போது தான் இதை வாசித்து எழுதுகிறேன்.இந்த பெருந்தொற்றில் எனக்கு பிடித்த வார்த்தை தனிமைப்படுத்துதல் என்பது தான்.இலக்கியத்துடன் தொடர்பு கொண்ட  எழுத்தாளர் வாசகர் அனைவருமே உள்ளத்தில் எப்பொழுதும் ஒரு தனிமை கொண்டவர் தானே.இப்பொழுது அரசும் சமூகமும் உடல் அளவில்  தனிமை படுத்துகிறது.

அன்புடன்

மோனிகா மாறன்.

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் நாவல் இந்த வீடடங்கு வாழ்க்கையில் மிகப்பெரிய ஆறுதலாக அமைந்தது. இப்போது ஒன்று தோன்றுகிறது, வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்பது ‘பிசியாக’ இருப்பதுதான். ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதையும் நினைத்துப்பார்க்கவோ கனவுகாணவோ பொழுதில்லை. அப்படி இருப்பது ஒரு பெருமை என்றுவேறு நினைத்துக் கொள்கிறோம்.

ஆனால் நாம் அடைந்த அனுபவங்களும் அதிலிருந்து கிடைக்கும் நினைவுகளும் நமக்கு பெரிய சொத்துக்கள். நஸ்டால்ஜியா என்று சொல்லலாம். ஆனால் நம் அனுபவங்களில் நாம் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பதில்லை. நமக்கு அதில் ஒரு தெரிவு இருக்கிறது. அந்த தெரிவு நம்முடைய சொந்த ரசனைக்கும் இயல்புக்கும் பொருந்திவருவது. ஆகவேதான் அவை ஞாபகத்திலிருக்கின்றன.

அவற்றை மீட்டிக்கொண்டிருப்பது ஓர் இன்பம். அது நமக்கு ஒரு முழு வாழ்க்கையிலும் கிடைத்த செல்வங்களை எண்ணிப் பார்ப்பதுதான். அதில்தான் நமக்கான ஞானமும் உள்ளது. அப்படி எண்ணிப்பார்க்கவைத்த நாவல் அந்த முகில் இந்த முகில்.

அதில் துன்பம் இருக்கலாம். கசப்பு இருக்கலாம். ஆனால் அது வாழ்க்கை. ஆகவே இனிமையானது. நாவல் முழுக்க அந்தக் கனவின் இனிப்பு இருந்துகொண்டே இருந்தது. அந்த நாவலை கொஞ்சம் கொஞ்சமாகவே வாசித்தேன்

அதனுடன் பழைய தமிழ் தெலுங்கு பாடல்களையும் கேட்டேன். அவற்றிலிருந்த இனிமையையும் துக்கத்தையும் ரசித்தேன். அடைபட்டுக்கிடந்த நான் ரொம்பதூரத்துக்குப் போய்விட்டேன். நன்றி

எச்.ஆர்.சாரதாதேவி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2021 11:32

வெண்முரசு ஆவணப்படம் – கடிதம்

[image error]

வெண்முரசு ஆவணப்படம்- கடிதம் வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு

அன்புள்ள ஜெ,

வெண்முரசு ஆவணப்படத் திரையிடலுக்காக ராலே, வடகரோலினா பகுதியில் இருப்பதிலேயே சிறந்த இருக்கைகள், அகண்ட திரை, ஒளி, ஒலி துல்லிய வசதிகள் கொண்ட திரையரங்கில் ஒன்றைத் தேர்வு செய்தோம். ஐந்து பேர்கொண்ட குழு நாங்கள் ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து செய்ய ஆரம்பித்தோம். திரைப்பட விநியோகஸ்தரைத் தொடர்பு கொள்ள, டிக்கெட், போஸ்டர்  வடிவமைத்து பிரிண்ட் செய்வதற்கு சுப்பிரமணி என்ற ராஜனுக்கும், எனக்கும் பொது நண்பர் ஒருவர் உதவி செய்தார். டிக்கெட் பதிவுக்கு, பணம் வாங்குவதற்கு , டிக்கெட் வினியோக வேலையை நான் பார்த்துக்கொண்டேன். தொழில்நுட்ப பிரச்சினைகளை சரிசெய்வதற்காக விவேக்கும், நவீனும் உதவி செய்தனர். நாங்கள் நான்கு  பெரும் சேர்ந்து ஒரு வாரம் ராஜனிடம் இணைந்து வேலை செய்தோம்.

இந்த ஆவணப்படத் திரையிடல் பற்றிய முதல் செய்தியை எழுதி நண்பர்கள் இருக்கும் வாட்சப் குழுவிற்கும், தனியாகவும் பகிரத்தொடங்கினேன். நண்பர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு இருந்தது. நான் எழுதிய அந்த செய்தி பகிர்வு இங்குள்ள மக்களிடம் நல்ல ஆர்வத்தைத் தூண்டுவதற்கு உதவியாக இருந்தது என்று ராஜன் சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டார் நாங்கள் இருந்த சிறு குழுவில்.

வெண்முரசு ஆவணப்படத்துக்கான டிக்கெட் வாங்குவதற்கு உன் மொபைல் எண்ணையும், நண்பர் சுப்பிரமணி எண்ணையும் கொடுப்பதால் உங்கள் இருவருக்கும் ஏராளமான தொலைபேசி அழைப்புகளும், தனிச் செய்திகளும் வரலாமென ராஜன் பயமுறுத்தினார். பெருஞ் சிரமம் இல்லாமல் இந்த வேலையை செய்து முடிப்பது எப்படி என்றுதான் யோசித்தேன். தனியாக இதற்கென வாட்சப் குருப் ஆரம்பித்து, ஏற்கனவே விருப்பம் தெரிவித்த நண்பர்களை இணைத்து, இங்கு இருக்கும் மற்ற இரு பெரும் குழுவுக்கு விருப்பம் இருக்கும் நண்பர்களை இணையச் சொல்லி லிங்க் அனுப்பினேன். அனுப்பிய ஓரிரு நாட்களில் நிறைய நண்பர்கள் இணைந்து விட்டனர், ராஜனிடம் நேரிடையாக தொடர்பு கொண்டவர்களைத் தவிர்த்து.

Google sheet ஒன்றைத் தயார் செய்து நண்பர்களை நேரிடையாக அவர்கள் தகவல்களை பதிவுச் செய்ய சொன்னோம். எல்லா தகவல்களும் அந்த தனி குழுவில் பகிரப்பட்டது. ஒரு சிலர் மட்டும் தனியாக தொடர்பு கொண்டனர். அதிக சிரமம் இல்லாமல் நிகழ்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே எல்லா முக்கிய வேலைகளையும் முடித்துவிட்டோம்.

நண்பர்களை ஒரு பொது இடத்துக்கு வரச் சொல்லி டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டோம். நேரில் வர முடியாத சில  நண்பர்களுக்கும் ஒரு ஐஸ்கிரீம் கடையில் அவர்களே நேரிடையாக சென்று வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டோம். அவர்களுக்கு தனியாகத் தகவல்களும் அனுப்பிவிட்டேன். ராஜனிடம் நேரிடையாக டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்வதற்காக மீதம் உள்ள டிக்கெட்டுகளை அவரிடம் கொடுத்து விட்டோம் .

இங்கு மே 7 முதல் தான் பொதுமக்களுக்காக திரையரங்குகள் திறக்கப்பட ஆரம்பித்தன. மே 8 மதியம் 2.45 சிறப்பு காட்சியாக வெண்முரச ஆவணப்படம் ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தோம்.

நாங்கள் தீர்மானித்திருந்த 90 டிக்கெட்டுகளையும் மே 5 ஆம் தேதியே  நண்பர்களிடம் கொடுக்க முடிந்தது. கடைசி நிமிடம் வரை எந்த வேலையையும் தள்ளி வைக்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தோம். எங்கள் அனைவருக்கும் பின்னால் எங்களை இயக்குவித்த மந்திர விசை ஜெ என்னும் ஆசானின்றி வேறு யாராக இருக்க முடியும்.

நேற்று மதியம் 2:30 மணியிலிருந்து மக்கள் வர ஆரம்பித்தனர். நேற்று நல்ல கூட்டம் ஆவணப் படம் பார்ப்பதற்க்கு. சரியாக 3 மணி அளவில் ராஜனின் உரையோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. வெண்முரசு ஆவணப்படத்தில் பங்கேற்று உதவிய உள்ளூர் நண்பர்கள் புகைப்படக் கலைஞர் பஷீர், வீணை இசைக்கலைஞர் கல்யாண் சுந்தர், ஆங்கிலத் தலைப்பு மற்றும் மொழியாக்க உதவி செய்த ரெமிதா சதீஷ் அவர்களுக்கும் ராஜன் மலர்க்கொத்து கொடுத்த கௌரவித்தார்.

1 மணி நேரம் 35 நிமிடம் நண்பர்கள் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். அவ்வவ்பொழுது நண்பர்களின் உற்சாகமான கரகோஷங்களை  கேட்க சந்தோசமாக இருந்தது. கலை, இசை, இலக்கிய ஆளுமைகள், விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் உரைகள் நம் எதிரில் உட்கார்ந்து நம்மோடு உரையாடுவது போல மிக இயல்பாக இருந்தது. உரையாடல்களுக்குப் பின்னணியில் மணி ஒலிப்பது போல மற்ற இயற்கை  இசை சத்தங்களை பல இடங்களில் கேட்க முடிந்தது. ஆவணப்படத்தில் வளைகுடா நண்பர், வட மாநில பணியில் இருக்கும் அரசு உயர் அதிகாரி நண்பர்களின் உரைக்குப் பின்னணியில்  அந்த நிலத்து இசையை ராஜன் தவழ விட்டிருப்பது மிகப் பொருத்தமாக  இருந்தது.

[image error]

பல கலை, இசை, இலக்கிய ஆளுமைகள், விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களின் உரையை நீண்ட உரையாக இல்லாமல் சின்ன, சின்ன உரையாக கத்தரித்து, கோர்த்து பார்ப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்குமாறு அருமையான முறையில் எடிட்டிங் செய்யப்பட்டு இருந்தது. திரையில் உங்களைப் பார்க்கும்போது உங்கள் மேல்  நண்பர்கள் வைத்திருக்கும் நேசமும், மரியாதையும் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

சவாலான பாடல்களுக்கும் சிறந்த மெட்டெடுத்து இசையமைப்பதில் ராஜன் வல்லவர். கமல் சார், ஸ்ரீராம் பார்த்த சாரதி சார், சைந்தவி மேடம் குரல்களில் தேனாக ஒலிக்கிறது பாடல். சிதார் இசைக்கருவியில் ரிஷாப் ஷர்மாவின் விரல்கள் நடனமாடுகின்றன என்றுதான் சொல்லுவேன். பரத்வாஜின் புல்லாங்குழல் இசையும் அற்புதம்.

வெண்முரசு தீம் பிரமாண்ட இசைக்கு உலகத்தரத்தில் எந்த இசைக்கலைஞர்களை, இசைக்கருவிகளைப் பயன்படுத்துவது என்ற சாமர்த்தியம் தெரிந்தவர் ராஜன். பிரமாதாக வந்திருக்கிறது. வெண்முரசு ஆவணப்படத்தை அடுத்தடுத்து திரையரங்கில் பார்க்க விரும்பும் நண்பர்களின் ஆர்வத்தை நான் விரிவாக எழுதி குறைக்க விரும்பவில்லை. அகண்ட திரையில் ஒளி, ஒலி துல்லியத்தில் படத்தை பார்ப்பது அபாரமான அனுபவமாக இருந்தது எங்களுக்கு.

திரைப்படம் முடிந்தவுடன் ராஜனுக்கு எல்லோரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி  மரியாதை செய்தார்கள். திரைப்படம் முடிந்து நெடுநேரம் ஆகியும் திரையரங்குக்கு வெளியில் நண்பர்கள் கலைந்து செல்லாமல் சந்தோசமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமெரிக்கா நண்பர்களிடம் எங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டோம். சௌந்தர் அண்ணா போனில் என்னை அழைத்து ஆவணப்படம் பார்த்த அனுபவத்தை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். முதன் முதலாக திரையரங்கில் பார்த்த சந்தோசம், பெருமை ராலே வட கரோலினா நண்பர்களுக்கு.

ஒரு தமிழ் நாவலை, எழுத்தாளளரை கௌரவிக்கும் விதத்தில் உலகத் தரத்தில் வெளியாகியுள்ள வெண்முரசு ஆவணப்படம் கண்டிப்பாக ஒரு சாதனை முயற்சிதான். பெருஞ்செயல் ஆற்றி முடித்த நிம்மதி, சந்தோசம் எங்களுக்கு.

ஆஸ்டின் சௌந்தர் அண்ணா அமெரிக்காவில் இருக்கும் மற்றத் திரையரங்கில் திரையிடத் தயாராகி வருவதாக சொன்னார்.

வெண்முரசு ஆவணப்படத்தை சாத்தியப்படுத்திய நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர், ராஜன் சோமசுந்தரம், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றி

“வேறெப்படி நாம் திருப்பியளிக்க முடியும்? தனக்கு அளிக்கப்பட்ட உணவில் ஒரு கைப்பிடி அள்ளி அன்னைக்கு திருப்பி ஊட்டமுயலும் மைந்தர் அல்லவா நாம்? அதைவிட இனிய உணவுண்டா அன்னைக்கு? (இமைக்கணம் பகுதி-42)”

முத்து காளிமுத்து

பிகு

வேறு ஊர்களில் வெண்முரசு ஆவணப்படம் திரையிடுவதற்காக அணுகவும்: vishnupuramusa@gmail.com

வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2021 11:30

May 11, 2021

குருவும் குறும்பும்

மாயை

சென்ற சில நாட்களாகவே வேதாந்தக் கல்வி, மூளை சூடாகும்போது கொஞ்சம் கார்ட்டூன்கள், அவையும் வேதாந்தமும் தத்துவமும்தான். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வரைந்து தள்ளியிருக்கிறார்கள். புன்னகைக்க வைப்பவை, சிரிக்கவைப்பவை, அரிதாக ஆழமாக யோசிக்கவும் வைப்பவை.

இந்த கேலிச்சித்திரங்களிலுள்ள பொதுவான  ‘டெம்ப்ளேட்’கள் சில உண்டு. ஒன்று ஞானத்தின் உச்சி என்னும் உருவகம். அங்கே டெக்னாலஜி வந்து அமர்ந்திருப்பது. அங்கிருந்துகொண்டு அன்றாட உலகியல் சார்ந்த ஒரு தீர்வைச் சொல்வது.அதிலுள்ள அபத்தம். பெரும்பாலான நகைச்சுவைச் சித்திரங்கள் இந்த வகையானவைதான். மெய்ஞானத்தை கூகிளில் தேடுவது பற்றி மட்டும் நூற்றுக்குமேல் கேலிச்சித்திரங்கள் உள்ளன.

’தியானத்தை சரியா கண்காணிக்கலைன்னா என்ன ஆகுது பாரு”

இது ஒரு மேலைநாட்டுப் பிரச்சினை என நினைக்கிறேன். தொழில்நுட்பம், உலகியல் இன்பம் ஆகியவற்றின் உச்சியில் இருந்து ஒரு நாள் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். இந்தியாவுக்கோ ஜப்பானுக்கோ வருகிறார்கள். இங்கே குருவை தேடி அலைகிறார்கள். எங்காவது அமர்ந்தார்கள் என்றால் ஐந்தாவது நாளில் இருந்து நினைப்பெல்லாம் தொழில்நுட்பம் பற்றித்தான், உலகியல் பற்றித்தான். மெய்ஞானத்தையே தொழில்நுட்பம் வழியாக ஏன் பெறக்கூடாது என உள்ளம் பறக்கிறது.

மலையிலுள்ள குருகுலங்களில் மின்னஞ்சல் பார்க்காமல் துடிதுடிக்கும் வெள்ளையரை கண்டிருக்கிறேன். சமீபகாலத்தில்கூட ஒரு வெள்ளையர் குருகுலத்தில் அமர்ந்துகொண்டு நல்ல ரொட்டி இந்தியாவில் கிடைப்பதில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். அந்த சிக்கலை அவர்கள் அந்த குரு மேல் ஏற்றி வேடிக்கையாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

’சீடா காலம் ஒரு மாயை. ஆனால் ஓய்வுநேரம் என்பது உண்மை. அதை தொந்தரவுசெய்யக்கூடாது”

மேலைநாட்டினர் மற்றும் இந்திய உயர்குடியினரின் சிக்கல் என்ன என்று என்னளவில் அவதானித்திருக்கிறேன். அவர்களுடைய சிக்கல் என்பது விழைவு இல்லாமலாவது அல்ல, நுகர்வில் உருவாகும் சலிப்பும் அல்ல, விழைவுக்கும் நுகர்வுக்குமான போராட்டமாக ஆகிவிட்ட வாழ்க்கையின் மெய்மையை அறிந்துகொள்வதும் அல்ல. அவர்களுடையது விழைவை, நுகர்வை கையாளத்தெரியாததன் பிரச்சினைகள்தான். அதன் விளைவான உளச்சோர்வுதான். அதாவது உண்மையில் எட்டு கோக் புட்டிகளை சேர்த்து வெறும்கையில் எடுத்துக்கொண்டு காருக்கு கொண்டுசெல்வதுபோன்ற ஒரு பிரச்சினை.

அவர்கள் பெரும்பாலும் உறவுச்சிக்கல்களில், அதன் வெறுமையில் சிக்கியிருக்கிறார்கள். அதிலிருந்து உளச்சோர்வை அடைந்திருக்கிறார்கள். விழைவும் நுகர்வும் உறவு வழியாகவே உருவாகிறது. மானுடருடனான உறவு, பொருட்களுடனான உறவு, சமூகத்துடனான உறவு. விழைவையும் நுகர்வையும் பெருக்கிக்கொள்கையில் அதற்கு நிகராக மறுபக்கம் உறவுகள் இழுபடுகின்றன, ஒரு கட்டத்தில்  அறுந்துவிடுகின்றன. அது உளச்சோர்வை அளிக்கிறது.

கேட்டுத்தான் தெரிஞ்சுகிடணும்னா பதிலை புரிஞ்சுகிடமுடியாது தம்பி”

உதாரணமாக, ஒருவன் காமவிழைவை முடிந்த எல்லைவரைக்கும் பெருக்கிக்கொண்டு அதற்கேற்ப ஏராளமாக நுகரவேண்டுமென விரும்பினால் அவன் மறுபக்கம் பெண்ணுடனான உறவை சிக்கலாக்கிக் கொள்கிறான். அவனுக்குக் காதலி இருக்க முடியாது, மனைவி இருக்கமுடியாது, குடும்பமும் குழந்தையும் இருக்கமுடியாது. வெறும் உடல்தான் கிடைக்கும். தன்னை உயிருக்குயிராக காதலிக்கும் ஏராளமான பெண்கள் வந்துகொண்டே இருக்கவேண்டும் என அவன் ஆசைப்பட முடியாது. உயிருக்குயிராக காதலிக்கும் பெண்ணுக்கு அவன் திருப்பி அதேகாதலையும், அதன் வெளிப்பாடான உலகியல் உறுதிகளையும் அளித்தாகவேண்டும்.

சரி,காமத்தையும் உறவையும் ரகசியமாக பெருக்கிக்கொண்டால் அந்த ரகசியத்தை அவனுடைய அன்றாட உலகம் தாங்கமுடியாது. உள அழுத்தமே பெருகும். அந்த உளஅழுத்தம் தாளாமல் ஒருநாள் காலையில் அவன் பின்பையை தூக்கி போட்டுக்கொண்டு இந்தியா வந்து இமைய மலைமேல் ஏறி அங்கே ஏதாவது குருகுலத்தில் தங்கி, எல்லாவற்றையும்  ‘துறந்து’, தியானம் செய்ய ஆரம்பித்தால் அவனுள் இருக்கும் காமம் சிலநாட்கள் அடங்கியதுபோல் காட்டிக்கொள்ளும். பின்னர் தடையுடைத்துப் பெருகி எழும். அதன்பின்னர் ஒரு துறவி ஒருமுறை சொன்னதுபோல இமையமலைமுடிகள் எல்லாம் மாபெரும் முலைகளும் பின்பக்கங்களுமாக ஆகிவிடும்.

”சீடா, கண்ணுக்குத்தெரியற எதுவுமே உண்மை இல்லை, தெரிஞ்சுக்கோ”

இன்னொரு ‘டெம்ப்ளேட்’ பொய்யான ஆசிரியர்களைப் பற்றியது. இதுவும் அவர்களுக்குரிய முதன்மைச் சிக்கல். இச்சிக்கல் எல்லாருக்கும் இருப்பதுதான். மெய்யான ஆசிரியரை எப்படி தெரிவுசெய்வது? நல்ல  இசை பயிலவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? நல்ல இசைக்கலைஞரை ஆசிரியராகத் தெரிவுசெய்யவேண்டும். அந்த தெரிவைச் செய்ய நமக்கு கொஞ்சம் இசை தெரிந்திருக்கவேண்டும். அந்த அடிப்படை இசையறிவு நமக்கு இயல்பிலேயே அமைவது.

ஆனால் மெய்யியலில் அது நடப்பதில்லை. எவருக்கும் அதில் இயல்பான திறமை அல்லது ருசி என ஏதுமில்லை. முதலில் நாம் தேடுவதென்ன என்பதே நமக்குத்தெரியாது. நாம் குழம்பி, துன்புற்று, முற்றிலும் இருளில் இருக்கையில்தான் மெய்மை நாடி செல்ல முனைகிறோம். அப்போது நமக்கு கண்ணுக்குத்தெரியும் ஏதேனும் ஒரு வழியை தெரிவுசெய்கிறோம். அந்த வழியே சென்றபின், அது பிழையென்றோ பொய்யென்றோ உணர்ந்தபின் திரும்பி வருகிறோம். வேறு வழியே இல்லை. அதிலுள்ள இழப்புகளை தவிர்க்கவே முடியாது.

”வாழ்க்கையோட அர்த்தமா? சரி, நான் சொல்லித்தரேன். ஆனால் எப்டி இந்த மலையிலே இருந்து இறங்கிறதுன்னு நீ எனக்குச் சொல்லித்தரணும்”

ஒரு மெய்யான குருவுக்கும் போலி குருவுக்கும் என்ன வேறுபாடு? மெய்யான மருத்துவருக்கும் போலி மருத்துவருக்கும் என்ன வேறுபாடோ அதுதான். மெய்யான மருத்துவரின் மருந்து குணப்படுத்தும். மற்றபடி போலி மருத்துவரும் அதே வெள்ளைக்கோட்டுடன், அதேபோன்ற மருத்துவமனையில், அதேபோன்ற மருத்துவக் கலைச்சொற்களுடன்தான் காட்சியளிப்பார். ஆனால் அவர் மருந்து குணப்படுத்தாது, சிலசமயம் ஆளைக்கொல்லவும் செய்யும்.

பெரும்பாலான ஐரோப்பியர் புறத்தோற்றத்தை முதன்மையாக கருதுகிறார்கள். குரு என்றால், ஒன்று பொலிவான தோற்றம், அல்லது உக்கிரமான தோற்றம். தோற்றம் என்பது ஒரு மனிதன் தன்னை ஓர் அடையாளமாக, குறியீடாக ஆக்கிக்க்கொள்வதே. குறியீடு நேரடியானது, ஆழமாக நம்மை பாதிப்பது. ஒவ்வொரு போலியும் மிக உண்மையான, அதனாலேயே மிகப்புகழ்பெற்ற ஒரு  மெய்ஞானியின் தோற்றத்தையே நகல் செய்திருப்பார். ஆகவே மிக எளிதில் நம்மை பாதிப்பார். அத்துடன் மெய்யியலுக்கான தனிமொழி, தனிக் கலைச்சொற்கள், அதற்கான பாவனைகளையும் கைக்கொண்டால் கண்டறிவதே கடினம். தின்றுபார்த்தபிறகுதான் நஞ்சா இல்லையா என்று சொல்லமுடியும். கொஞ்சமாக தின்று நோயுற்று மீள்வது நல்லது- நோயெதிர்ப்புசக்தி இருக்கும்.

”நிஜம்மாவே இதெல்லாத்தையும் பண்ண விரும்புறியா? இந்த மெய்ஞானத்துக்கெல்லாம் அவ்ளவு மதிப்பு இல்லேன்னு சிலபேர் நினைக்கிறாங்க”

அதைக் கண்டறிய ஒரே வழி நம் தேடலை உண்மையாக வைத்துக் கொள்வதுதான். நம் பசியை அல்லது நோயை சமரசம் செய்யாமலிருப்பதுதான். நம்மை ஏமாற்ற நம் ஆணவத்தையே போலிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். “நீ ஞானம் அடையும் விளிம்பில் இருக்கிறாய், ஏனென்றால் நீ மிக அரியவன், மிகக்கூர்மையானவன்” என்று ஒருவர் நம்மிடம் சொன்னால் “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க” என்று சொல்ல பெரிய ஆன்மபலம் வேண்டும். அது பெரும்பாலும் இருப்பதில்லை. ஏழுநாள் கிராஷ்கோர்ஸ் யோகமோ தியானமோ அப்யசித்துவிட்டு  “இங்கிட்டு ஒரு வைபரேஷன் இருக்குங்க” என்பவர்கள் நாம்.

இன்னொரு சிக்கல், போலியை கண்டறிகிறோம் என்ற பேரில் எப்போதும் ஐயத்துடனேயே இருப்பது. அணுகும் ஒவ்வொருவரையும் சோதனை செய்வது. ஆன்மிகத்தில் மட்டுமல்ல, இலக்கியத்திலும்கூட இந்த ‘பரிசோதிக்கும் மனநிலை’ மிகப்பெரிய தடை. ஏற்புநிலையையே இல்லாமலாக்கிவிடுகிறது. ஏற்பவனை திரிபடையச் செய்துவிடுகிறது. முக்கியமாக ஆசிரியனை [அல்லது இலக்கிய ஆசிரியனை] ஆய்வுப்பொருளாக்கி ஆய்வாளனின் இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்ளச் செய்கிறது. அது ஒரு அசட்டு மேட்டிமைத்தனம். ஒரு மெய்ஞானியை, ஓர் இலக்கிய ஆசிரியனை ‘ஆராய்ந்து மதிப்பிட’ நமக்கு ஏது திறமை அல்லது தகுதி என்று நாம் யோசிப்பதில்லை. இந்த அசட்டு ஆணவம் ஒரு மாபெரும் இரும்புச்சுவர். மண்டையை முட்டி உடைத்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

”அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்”

உண்மையாகவே ஐயப்படும்போதுகூட நாம் நம் தர்க்கபுத்தியை ஆன்மிகம் அல்லது இலக்கியம் நோக்கி திருப்பி, கூராக்கி வைக்கிறோம். ஆன்மிகமும் இலக்கியமும் தர்க்கபுத்தியுடன் உரையாடுபவை அல்ல. தர்க்கபுத்தியை நோக்கி திருப்பினால் பொருளிழந்து விடுபவையும்கூட. ஆகவே ஒருவன் ஆன்மிகத்தேடலுடன் ஓர் ஆசிரியரை அணுகி அவரை ஐயம்கொண்டு ஆராய்ந்துகொண்டிருந்தால் அத்தனைபேருமே போலிகளாகத்தான் தெரிவார்கள். அது அருவமான ஒன்றை பருவடிவ அளவுகோலால் அளப்பதுபோன்றது.

ஏனென்றால் அவன் அந்த ஆசிரியரை நோக்கி திருப்பி வைக்கும் அந்த தர்க்கபுத்தி அதுவரை அவன் கற்ற கல்வி, அவன் வாழ்ந்த வாழ்க்கைச்சூழல், அவன் அடைந்த அனுபவங்களிலிருந்து வருவது. அந்த குரு அவற்றுக்கு வெளியே வேறொரு சூழலில் இருப்பவர். அவருக்கு அவனுடைய இறந்தகாலத்தில் எந்த இடமும் இல்லை. அங்கிருந்து திரட்டிய தர்க்கத்தால் அவரை மதிப்பிடவும் முடியாது.

ஆகவே எப்படியானாலும் அவன் நம்பிக்கையை அளிக்கவேண்டியிருக்கிறது, தன்னை ஒப்படைக்கவேண்டியிருக்கிறது, கற்று உணர்ந்து மாறிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. அந்த மாற்றங்களை அவதானித்து அதனூடாகவே அவன் குருவை மதிப்பிடவேண்டும். மெய்யான குருவே மாற்றங்களை உருவாக்குவார். ஒரே குரு அனைத்தையும் அளிக்கவேண்டியதில்லை. ஒருவர் ஒரு மாற்றத்தை அளிக்க அதன் உச்சியிலிருந்து மேலே செல்ல வழிகாட்ட இன்னொருவர் வரலாம்.

”ஞானத்தை அடைஞ்சிடலாம். அப்றம் கீழேதான் போயாகணும்”

மேற்கத்திய நகைச்சுவைகளின் இன்னொரு டெம்ப்ளேட் தியானம் அல்லது யோகத்தில் ஊடாடும் அன்றாடத்தின் வீச்சு. தியானம் செய்யும்போது அவ்வப்போது ஓரக்கண்ணைத் திறக்காதவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள். அதைப்பற்றிய பகடிகள் எந்த குருநிலையிலும் புழக்கத்தில் இருக்கும். நித்யாவின் பகடி, ஒரு பெண்ணிடம். “சியாமளா, தைரியமாக தியானம் செய். முந்தானையை கவனித்துக்கொள்ள தியானமரபில் ஒரு தனி தெய்வம் உண்டு”

தியானம் என்பது உடலுக்கும் நமக்குமான போராட்டம்தான். தன்னை ஆத்மா மறந்துவிடக்கூடாது என உடல் நினைக்கிறது. மிகவும் உடைமையுணர்வுகொண்ட மனைவிபோல. தூக்கத்திற்குள்ளும் கனவாக புகுந்து வந்து நிற்கிறது. தியானம் செய்ய கண்ணை மூடியதுமே  ‘அங்கே என்ன சோலி?” என வந்து நின்றுவிடுகிறது. தியானம் செய்ய அமர்ந்ததுமே கீழ்வாயு கிளம்ப ஆரம்பிப்பவர்கள் உள்ளனர். சொறிபவர்கள், அசைந்து அமர்பவர்கள் ஏராளம். முட்டச் சாப்பிட்டால்கூட கண்மூடி அமர்ந்ததுமே பசி வந்துவிடும் என ஒருவர் ஒருமுறை சொன்னார்.

”ஞானம்தானே?நானே தர்ரேன். இப்பதான் ஒரு ஞானியை சாப்பிட்டேன்”

ஞானத்தின் அன்றாடப்பயன் மதிப்பைப் பற்றிய பகடிகள் கடைசி ‘டெம்ப்ளேட்’. ஞானம், அறிவு, திறமை ஆகிய மூன்றுக்கும் இடையேயான வேறுபாடுகள் எப்போதுமே சிக்கலானவைதான். முற்றிலும் உலகப்பயனற்ற ஒன்றுக்குத்தான் உலகியலில் முதன்மை மதிப்பிருக்கும்– வைரங்கள் போல, கலைப்பொருட்கள் போல. மெய்ஞானமும் அப்படித்தான். இந்த முரண்பாட்டை ஒரு லௌகீகனின் கோணத்தில் நின்று பார்த்தால் வேடிக்கையாக ஆகிவிடுகிறது. ஞானமடைந்தவனுக்கு ரேஷன் கார்டில் அரிசி கூடுதலாக கொடுக்க முடியாது. ஆதார்கார்டில்கூட அதை குறிப்பிட முடியாது.

ஞானத்தை கேலிசெய்வதென்பதும் ஞானமே- சரியான ஞானத்தை அது கேலிசெய்கிறது என்றால். ‘நிர்குண பிரம்மம் என்று ஒன்று இல்லை. ஏனென்றால் அது நிர்குணம் என்ற அடையாளம் கொண்டது’ என்ற வரிக்கு வேதாந்திகள் சிரிப்பார்கள். மற்றவர்களுக்கு அதில் என்ன நகைச்சுவை இருக்கிறதென்றே தெரியாது.

”எவ்ளவோ காலமா பண்றானுக, இன்னும் தன்குண்டிய தானே நக்கிக்க முடியலை”

ஆனால் உண்மையில் மிகக்குறைவாகவே சாராம்சத்தில் தத்துவ அம்சம் கொண்ட நகைச்சுவைகள் உள்ளன. உதாரணம் இந்த கட்டுரையின் முதல் சித்திரம். நமது பார்வை உருவாக்கும் தன்னிலையை பகடி செய்யும் அந்த கேலிச்சித்திரம் மிக ஆழமானது. பகடி எங்கே தத்துவமாக ஆகிறதென்றால் அங்குதான்.

இப்படி அச்சில் வந்த பகடிகள் மிகக்குறைவு என்றாலும் பெரும்பாலான நவீன வேதாந்த குருகுலங்களில் நுணுக்கமான பகடிகள் உரையாடல்களில் வந்துகொண்டே இருக்கும். முப்பதாண்டுகளுக்கு முன்பு நித்யா குருகுலத்தில் ஒரு ஜெர்மனியரின் டைரியில் அவர் வரைந்த கேலிச்சித்திரங்கள் நிறைந்திருந்தன. கூடவே கவிதைகளும்

ஒரு கவிதை இது, நினைவிலிருந்து. தலைப்பு இல்லை. ஆனால் தன் பின்பக்கத்தை தானே நக்கும் ஒரு பூனையின் படம் இந்த கவிதையுடன் இருந்தது

நேற்றுத்தான் சொன்னார்கள்

ஓம் என்றால்

ஆம் என்று பொருள் என்று.

அய்யய்யோ,

நேற்றுவரை தியானம் செய்யும்போது

நான் எதற்கெல்லாம் ஆம் சொல்லியிருக்கிறேன்!

பரிதவித்து

கண்ணீர் மல்கி

முடிவுசெய்தேன்.

இன்று முழுக்க இல்லை இல்லை என்றேன்.

உதவி உதவி!

என்னை காப்பாற்றுங்கள்!

ஏகப்பட்டவற்றுக்கு இல்லை சொல்லிவிட்டேன்!

”எலும்பு முக்கியம் அல்ல, தோண்டுவதுதான் நாம் அடையும் இன்பம்”

வேதாந்தத்தின் பல நுண்தளங்கள் உடனடியாக பகடியாகவும் ஆகக்கூடியவை. பகடியாக ஆனபின்னரும் அந்த மர்மம் நீடிக்கும். வேதாந்தத்திலுள்ள அனைத்தும் பிரம்மம்தான் என்னும் வாசகம் முடிவற்ற சிரிப்புடனும் உணரத்தக்கது. சாமானியம் விசேஷம் என்னும் பிரிவினை, அறிபடுபொருளும் அறிதலும் அறிவும் ஒன்றே என்னும் தரிசனம் எல்லாமே அபத்தத்தின் எல்லையைச் சென்று முட்டுபவை. ஆகவே நகைச்சுவையாக ஆகக்கூடியவை.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் பல குட்டிக்கதைகள் பகடிகள்தான்.உதாரணம் யானைக்கதை.  “யானையும் பிரம்மம் நானும் பிரம்மம். ஆகவே அஞ்சமாட்டேன்” என்று ஒருவன் யானைமுன் சென்று அடிவாங்கினான். சாகும்நிலையில் குருவிடம் அது ஏன் நடந்தது என்று கேட்டான். “மேலே இருந்து பாகன் என்ற பிரம்மம் விலகு விலகு என்றதே, அதை கேட்டாயா?”என்று அவர் சொன்னார்.

யாரோ சாமியார். நாம மோ ன்னு சொல்றத தலைகீழா சொல்லிட்டிருக்கார்”

வேதாந்த வகுப்புகளின் வேடிக்கைகளைப் பற்றி மட்டும் தனியாகத்தான் எழுதவேண்டும். ஆனால் அவற்றை வேதாந்தக் கோட்பாடுகளுடன் இணைத்துக்கொள்பவர்களால்தான் ரசிக்க முடியும். ஆகவே பெரும்பாலான பகடிகள்  வேதாந்தமும் பௌத்தமும் பாமரரின் பார்வையில்எப்படிப் பொருள்படுகின்றன என்ற அளவிலேயே அமைவது இயல்பானதுதான். வேதாந்த வகுப்பின் பகடிகள் சிதம்பரதீர்த்த சுவாமி நடராஜகுருவைப் பற்றி எழுதிய நூலில் நிறைந்திருக்கின்றன.

அதிலொன்று. ‘உழைப்பால்தான் மானுடனின் கை உருவானது என்கிறார் மார்க்ஸ்’ என்று ஒரு மாணவர் சொன்னான். ‘அப்படியென்றால் கண்?’ என்றார் நடராஜ குரு.

யோகம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2021 11:35

கதாநாயகி-4

அன்றும் முந்தையநாள் போல மாலை நான்கு மணிக்குமேல் காடு இருட்டிக்கொண்டே வந்தது. இலைகள் அசைவிழந்தன. எங்கும் இறுக்கமான நீராவிப்படலம் நிறைந்து, அழுத்தி மூடியது. ஓசைகள் நீருக்குள்ளிருந்து கேட்பவைபோல் ஒலித்தன.பறவைகள் பறந்து பறந்து அகன்று செல்வதுபோல அவற்றின் ஓசைகள் மயங்கி அமைந்துகொண்டிருந்தன.

நான் வாசலில் அமர்ந்து வெளியே மழை முறுகி வருவதை பார்த்துக் கொண்டிருந்தேன். குளிருக்குப் பதில் வெப்பம் தான் ஏறி ஏறி வந்தது. என் உடல் வியர்த்து வழிந்தது. விசிறியால் உடலின் ஒவ்வொரு பக்கத்தையாகத்  தேடித்தேடி விசிற வேண்டியிருந்தது. ஒரு கட்டத்துக்குப்பிறகு மூச்சுத்திணறத் தொடங்கியது. விசிறியால் மூக்குக்கு முன்னால் விசிறிக்கொண்டிருந்தேன். நாக்கே தள்ளி வாயைத்திறந்து பறவைகள் போல் அமர்ந்திருந்தேன்.

பின்னர் காட்டில் பறவைகள் எதுவும் இல்லை என்பதைக் கவனித்தேன். அவையனைத்தும் இலை தழைகளுக்குள் மறைந்துவிட்டிருந்தன. ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும் காகங்களின் ஓசைகூட முற்றாக மறைந்து விட்டிருந்தது. நான் மழையின் முதல்துளி விழும் கணத்திற்காக காத்திருந்தேன். பெரிய துளிகளாக மரத்திலிருந்து உதிர்க்கப்பட்டது போல அம்புகள் போல நீர்த்துளிகள் வந்து விழும் என்று நினைத்தேன். அதற்குள் கடுமையான வெயிலில் வெந்து முற்றம் நீர்காத்து தகித்துக்கிடந்தது

ஆனால் எதிர்பாராத கணத்தில் மிகத்தொலைவில் ஓங்கார ஓசை எழுந்தது. எந்த திசையிலிருந்து எழுந்ததென்றே நிதானிக்க முடியவில்லை. கிழக்கு என்று நினைத்தேன். திரும்பி கிழக்கு திசை நோக்கி பார்த்தேன். அங்கே வெளிச்சமில்லை. வானில் எல்லாத்திசையுமே  ஒருங்கு திரண்டு ஒரு அரைவட்டமாக இருந்தது. ஓசை மிகச்சில கணங்களிலேயே அணுகி என்னை மூடிக் கடந்து சென்றது பங்களாவின் மீது வானிலிருந்து பிரம்மாண்டமான அருவி ஒன்று விழுந்து அசைவின்றி நிற்கத்தொடங்கியது.பின்னர் சிறிய அலைகளுடன் அதன் ஓசை கேட்டுக்கொண்டே இருந்தது.

எங்களூரில் மழைக்குமுன் பலத்த காற்று வீசும். பெரும்பாலும் மழை தென்கிழக்கிலிருந்து வரும். மலைகளின் இடைவெளியினூடாக வருவதாகையால் காற்று கூர்மைகொண்டு தென்னை மரங்களை வில்லென வளையச்செய்வதாக ஓலைகளை மறுபுறம் எழுந்து பறந்து துடிக்கச்செய்வதாக இருக்கும். இங்கே காற்றில்லை. வானை ஓரு கத்தியால் கிழித்து உள்ளே தேங்கியிருக்கும் ஒரு மாபெரும் ஏரியை கொட்டச்செய்வது போல மழை விழுந்தது

மழையைப்பார்த்துக்கொண்டிருந்தபோது ஓர் உளச்சோர்வு ஏற்பட்டது. முதல் நாள் மழை அளித்த பாதுகாப்புணர்வை, கதகதப்புணர்வை, கிளர்ச்சியை பின் உருவான அமைதியை உணரமுடியவில்லை. மழையிருள் சன்னல் கண்ணாடிகளை நீர்நீல நிறத்திற்கு மாற்றியிருந்தது அவற்றின் மேல் நீர் விழுந்து வழிய அவை உருகி கொண்டு இருப்பதாகத் தோன்றியது. வீட்டுக்குள் அத்தனை பொருட்களிலும் மிக நுண்மையான நீர்த்துளிகள் பரவியிருந்தன. மேஜை மேல் சுட்டுவிரலால் எனதுபெயரை எழுத முடிந்தது.

கோரன் இரவுணவை சமைத்துக் கொண்டு வந்தான். கொதிக்கும் கஞ்சி பூசணிக்காய் கறி மதியம் செய்ததின் மிச்சம். பூசணிக்காயை துண்டுகளாக வெட்டி வேகவைத்து, அதில் உப்பும் மிளகாயும் போட்டு கிளறி எடுக்கப்பட்டது. தாளிக்கும் வழக்கம் அங்கில்லை. மரவள்ளிக்கிழங்கை துண்டுகளாக்கி அவித்து உப்பும் மிளகாய்ப்பொடியும் சேர்த்து கிளறி, அதன்மேல் தேங்காயெண்ணை ஊற்றி உருவாக்கிய பொரியல். அந்த இடத்திற்கு மிக தாராளமான மிக ஆடம்பரமான உணவுதான்.

மழை கஞ்சியை வயிறுமுட்ட குடிக்கச்செய்தது. மழைக்காலத்திற்குக் கஞ்சி சிறந்த உணவு. நமக்கு தண்ணீர் அருந்தவேண்டும் என்று தோன்றுவதில்லை. வெக்கைக்கு திடப்பொருட்களை உண்ணத் தோன்றுவதில்லை. ஆனால் தாகமிருப்பதனால் கஞ்சி நம்மை அறியாமல் உள்ளே செல்கிறது. இரவில் மிக விரைவிலேயே செரித்து  வயிற்றை காலியாக்கிவிடுகிறது. இர்வில் வயிறு ஒழிந்திருப்பது மிக ஆழ்ந்த தூக்கத்தை அளிக்கும்.

உண்மையில் நான் டிசம்பர் ஜனவரி மாத குளிர் காலம் தவிர எப்போதுமே எங்களூரில் அப்படி அசந்து தூங்கியதில்லை. மெய்மறந்து தூங்குவதென்பது ஒவ்வொரு குளிர்காலத்தையும் எதிர்பார்க்கச்செய்யும் இனிய நினைவாகவே இருந்தது. இங்கே அந்த குளிர்காலமே ஆண்டெல்லாம் நீடிக்கும்போல. இத்தகைய சூழலில் உள்ளம் ஆழத்தில் அமைதியடைந்துவிடுகிறது. மேலே ஒரு மெல்லிய பதற்றமோ அலையோ இருந்தாலும் கூட அகம் ஓய்ந்தே கிடந்தது. ஏனெனில் மிக தொலைவில் இருந்தது எனது குடும்பம் நானறிந்த உலகம் அங்கே ஒன்றுமே நிகழவில்லை.

காடு என்பது ஒரு நிகழ்வு மிக நிதானமான ஒற்றை நிகழ்வு அது. ஒரு அசையாப்படத்தை பார்த்துக்கொண்டிருப்பது போல. விலங்குகளும் பறவைகளும் புழு பூச்சிகளும் நிறைந்திருந்தாலும் கூட, காலையும் மாலையும் மாறி வந்தாலும் கூட, மழையும் வெயிலும் அடித்தாலும் கூட அது ஓர் ஓவியம் மட்டும்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த அசைவின்மை நம்முள்ளும் குடியேறிவிடுகிறது. அசைவின்மை ஓய்வை அளிக்கிறது. ஓய்வு சூன்யத்தை அளிக்கிறது.

உண்மையில் அங்கு சென்ற பலமாத காலம் நான் பெரும்பகுதி நேரத்தை தூங்கித்தான் கழித்தேன். தூக்கத்தை குறைத்துக்கொண்டு இயல்பான சுறுசுறுப்புடன் இருப்பதற்கு காடு என் அகத்திற்கு பழகவேண்டியிருந்தது. அதன்பிறகு ஊருக்கு வந்தால் ஊர் ஒரு இரும்பாலை போல கூச்சலிட்டுகொண்டிருந்தது. புயல் பிடித்த காடு போல கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் இன்னொருவரை நோக்கி அடிவயிற்றிலிருந்து கூச்சலிடுகிறார்கள் என்று தோன்றியது என் நரம்புகள் அதிர்ந்துகொண்டிருந்தன. ஊரில் நான் ஓரிரு நாட்கள் கூட தங்காமல் ஆனேன். தூங்க முடியாமல் ஆனேன். மீண்டும் காட்டுக்கே திரும்பினேன்.

அன்று ஏழுமணிக்கே கஞ்சி குடித்து நாற்காலியில் அமர்ந்து அந்த புத்தகத்தை வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். அந்த முன்னுரையை இன்னொருமுறை  வாசித்தேன் அதில் நான் வாசித்த எதுவுமில்லை என்பதை எனக்கே மீண்டும் மீண்டும் உறுதி செய்துகொள்பவன் போல .பின்னர் எழுந்து சென்று படுத்து கம்பளியை போர்த்திக்கொண்டேன் மழை வானிலிருந்த மொத்தக்குளிரையும் மண்ணுக்கு இறக்கிவிட்டிருந்தது. சன்னல்கள் மூடப்பட்டிருந்தாலும் கூட உள்ளே குளிர் வந்துகொண்டிருந்தது. அங்கிருந்த சன்னல்களை இறுக மூட முடியும் என்றாலும் ஓட்டுக்கூரைகளை இடைவழிகளினூடாக காற்று வருவதை  தடுக்க முடியவில்லை. ஆனால் அந்தக்குளிர் மிதமிஞ்சிப்போகாமல் போர்வைக்குள் எண்ணிய கதகதப்பை அனுபவிக்கும் அளவுக்கே தேவையான தாக இருந்தது. நான் தூங்கிவிட்டேன்.

தூக்கத்தில் நான்  ஒரு கனவு கண்டேன் அது கனவா என்பதை என்னால் இப்போதுமே கூடச் சொல்லிவிட முடியாதுதான் என் அருகே எவரோ நின்றிருந்தார்கள். குனிந்து என்னை பார்த்தார்கள். இம்முறை அந்தப் பார்வையை என்னால் உணரமுடிந்தது எப்படியோ அக்கண்களினூடாக என்னால் aது பெண்ணென்று உணரமுடிந்தது. ஒரு பெண்! யார் அவள்?  எனக்குத்தெரிந்த எந்தப்பெண்ணும் அல்ல.

எனக்குத்தெரிந்த பெண்களே குறைவு என் அம்மா, தங்கைகள் தவிர வேறெந்த பெண்ணையும் நான் அருகே பார்த்ததில்லை. நெருக்கமாக உரையாடியதுமில்லை. அவர்களின் அருகாமை என்னவாக இருக்குமென்று எனக்குத் தெரியவில்லை. இந்தப்பெண் அத்தனை நெருக்கமாக தன் இருப்பை உணர்த்துகிறாள் என்றால் இவள் பொய்யல்ல, உண்மை. உண்மையால்தான் முன்பிலாத ஒன்றாக திகழமுடியும் .பொய்யென்பது முன்பிருந்த ஒரு உண்மையின் மறுநிகழ்வாகவே இருக்க முடியும்

ஆனால் இவள் இந்த பங்களாவில் ஏன் இருக்கிறாள்?. இங்கே என்ன செய்கிறாள்? நான் தூங்கும்போது மட்டும் வந்து ஏன் என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள்?

நான் ”என்ன?” என்றேன்.

அவள் மிக மெல்ல என் காதில் ”அந்தப் புத்தகம்” என்றாள்

நான் ”என்ன?” என்று உரக்க கேட்டேன்.

”படிப்பதாக சொன்னீர்கள்” என்று மீண்டும் சொன்னாள்

”ஆமாம் அதற்கென்ன?” என்று சொன்னேன்

”இப்போது மணி இரண்டு” என்றாள்

”இரண்டா?” என்றேன்

”ஆமாம் இரண்டு”

”ஆனால் நான் இப்போதுதானே படுத்தேன்” என்றேன்

”இல்லை நீங்கள் அசந்து தூங்கிவிட்டீர்கள்”

”இப்போது மணி இரண்டு நேற்று நீங்கள் வாசித்த அதே நேரம்”

”அப்படியா?” என்றேன்

கையூன்றி எழுந்தமர்ந்தேன் மழை அதே போலவே நின்று பெய்துகொண்டிருந்தது. சன்னலுக்கு அப்பால் கிளைகள் முறியும் ஓசை கேட்டது அறையின் மூலையில் கோரன் கம்பளிக்குவியலாக தூங்கிக்கொண்டிருந்தான்

நான் எழுந்து நின்று சோம்பல் முறித்தேன். என்ன கனவு அது? ஒரு பெண் வந்து என்னை எழுப்பியிருக்கிறாள். சட்டென்று கடிகாரத்தை எடுத்து மணி பார்த்தேன். இரண்டு. மிகச்சரியாக. மெய்யாகவே எனக்கு சொல்லியிருக்கிறாள். கனவு அளிக்கும் திகைப்பு என்பது நாம் நம் உள்ளாழத்தை நேருக்குநேர் பார்ப்பதன் விளைவு

நான் பெருமூச்சுடன் சென்று அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டேன்.  அரிக்கேன் விளக்கொளியில் அந்த அறை சிவப்பான மங்கலான ஓவியப்பரப்பு போலிருந்தது. எழுந்து சென்று குடுவை விளக்கை பற்றவைத்து மேஜைமேல் கொண்டுவந்து வைத்துக்கொண்டேன்.இத்தனை கற்பனைகளை இத்தனை உயிர்ப்புடன் எழுப்பக்கூடியதாக என் மனம் முன்பு இருந்ததில்லை. என் ஊரில் நான் ஒருபோதும் இத்தகைய தீவிரமான கற்பனைகளை கனவையும் அடைந்ததில்லை.

அதற்குக்காரணம் நான் என் வழக்கமான சூழலிலிருந்து வெளியே வந்ததில்லை என்பதாக இருக்கலாம் திரும்ப திரும்ப ஒரே வாழ்க்கை. ஒரே நிகழ்வுச்சரடு. ஆகவே என் கற்ப்னை மேலே பொருக்கோடி கடினமாக இருக்கிறது.கற்பனைக்கு இத்தனை தீவிரமான சாத்தியம் கொண்ட இத்தகைய ஓர்   இடத்தில் நான் இதே போலத்தான் எண்ணங்க்ளை  வளர்த்துக்கொள்வேன் என்று நினைத்தே. எவராக இருந்தாலும் அதைத்தான் செய்வார்கள்.

பின்னர் நான் படித்தறிந்தேன், ஒரு சூழலை தர்க்க உள்ளமும் அதர்க்க உள்ளமும் சேர்ந்தே புரிந்துகொள்ள முயல்கின்றன. தர்க்க உள்ளம் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறது அதற்கு தொடர்ப்பில்லாதபடி அதர்க்க உள்ளம் இன்னொரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறது இரண்டும் ஒன்றின்மேல் ஒன்று படிந்து ஒற்றை சித்திரமாக ஆகவேண்டும் அதுவரை உள்ளம் தத்தளித்துக் கொண்டிருக்கும் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும் ஒன்று தொட்டு இன்னொன்றுக்கு ஓடிக்கொண்டிருக்கும். அதர்க்க உள்ளம் கனவுகளை முடிவில்லாமல் சமைத்து தர்க்க உள்ளத்துக்கு அளித்துக்கொண்டே இருக்கும். அவற்றை உடைத்து கலந்து தர்க்க உள்ளம் தனக்கான உண்மையை உருவாக்கிக்கொள்ளும்.

நான் அந்த புத்தகத்தை எடுத்து பிரித்து அதன் முன்னுரையை படித்தேன். அதன் முதல் வார்த்தையைக்கூட என்னால் படிக்க முடியவில்லை என் உள்ளம் பதறிக்கொண்டிருந்தது. மெல்ல தெளிந்து அந்த எழுத்துக்கள் விரிந்தபோது நான் அது பகலில் படித்த அதே கட்டுரைதான் என்பதைக் கண்டேன், வரிக்கு வரி அதுவேதான். நான் படித்த அந்த டைரிக்குறிப்புகள் இல்லை. பெரும்பாலான செய்திகள் இல்லை.

சலிப்புடன் புத்தகத்தை மூடினேன். நேற்றைய கனவு மட்டும்தான் அது. அதை விரித்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இங்கிருக்கும் இந்த சலிப்பை வெல்ல விரும்புகிறேன். எதையாவது நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பிறகு நினைவுகூர, பலரிட்ம சொல்ல. என்னை எப்போதுமே எழுதாத ஓர் எழுத்தாளன் என நினைத்துக் கொள்பவன். என்றாவது ஒரு நல்ல நாவலை எழுதிவிடுவேன் என்று உள்ளூர கருதிக்கொண்டிருப்பவன்.

மீண்டும் அந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். முன்னுரைக்குப்பின் ஒரு சுருக்கமான பதிப்புரை இருந்தது. ’ஈவ்லினா ஒர் இளம்பெண் உலகுக்குள் நுழைந்த வரலாறு’  1778ல் ஃபேன்னி பர்னியால் எழுதப்பட்டு அவருடைய மூத்த நண்பர் சாமுவேல் கிரிஸ்ப் முயற்சியால் தாமஸ் லாண்டர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. முதலில் அது ஆசிரியர் பெயரில்லாமல்தான் வெளியாகியது. ஆனால் லண்டன் வட்டாரங்களில் அந்த நாவலின் பல வடிவங்களை பலரும் முன்னரே வாசித்திருந்தார்கள். அவர்களுக்கு அதன் ஆசிரியை நன்கு தெரிந்தவராக இருந்தார்.

கவிஞரும் இறையியலாளருமான ரெவரென்ட் ஜார்ஜ் ஹட்டர்ஸ்போர்ட் அந்நாவலை ’பாவத்தின் குமிழி’ என்று கண்டித்து அதன் ஆசிரியையின் பெயரையும் வெளியிட்டு எழுதினார். ஆனால் அது ஃபேன்னிக்கு மேலும் புகழ்சேர்க்கவே உதவியது. ஃபேன்னியே அதை ஒரு ’தீமையின் கவிதை’ என்றுதான் சொல்லிக்கொண்டார். ‘பாவத்தை அஞ்சுவதை விட எதிர்கொள்வதே நல்லது என்று ஒரு பெண் கற்றுக் கொள்ளும்போதே அவள் வெல்லத் தொடங்குகிறாள்’

நான் பல பக்கங்களை புரட்டி பார்த்துவிட்டு வாசிக்க ஆரம்பித்தேன். நான் அந்நாவலை அதன்பின் பத்தாண்டுகள் கழித்து மீண்டும் ஒருமுறை வாசித்திருக்கிறேன். மூன்று வால்யூம்கள் கொண்ட அந்நாவல் ஆவணத்தொகை நாவல் [Epistolary novel] என்ற வகைமைக்குள் பின்னாளில் விமர்சகர்களால் சேர்க்கப்பட்டது. கற்பனையாக எழுதப்பட்ட கடிதங்கள், குறிப்புகள் போன்ற ஆவணங்களின் தொகுதியாக அமைந்தது.

நாவலின் கதாநாயகி ஈவ்லினாஅரசகுடியைச்சேர்ந்த ஒரு காமக்களியாட்டனின் மகள். பதினேழு வயது வரை அவள் ஒரு சிறு கிராமத்தில் வளர்க்கப்படுகிறாள். பிரிஸ்டல் அருகே உள்ள ஹாட்வெல்ஸ் என்னும் சிற்றூரில் அங்குள்ள மதக்கல்வியையும் அடிப்படை எழுத்தறிவையும் இசைக்கல்வியையும் மட்டும் பெற்ற ஈவ்லினாஒருவகை கிராமத்து அப்பாவியாகவும், ஆனால் இயல்பான கூர்மையும் சூழ்ச்சித்திறனும் நகைச்சுவையுணர்வும் கொண்டவளாகவும் வளர்கிறாள்.

ஈவ்லினா அங்கிருந்து லண்டன் வருகிறாள். அன்றைய லண்டனின் உயர்குடி வாழ்க்கையின் அபத்தமான ஆசாரங்களையும், பொதுப்புழக்க நாகரீகங்களையும், முடிவே இல்லாத வம்புப்பேச்சுகளையும், கள்ள உறவுகளையும், ஊழல்களையும் கண்டு அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு அவற்றை தானும் கையாளக் கற்றுக்கொண்டு கெட்டிக்காரியாகி ஒரு நல்ல ஆணை கண்டுபிடித்து காதலில் வீழ்த்தி கல்யாணம் செய்துகொண்டு ஒரு மதிக்கத்தக்க சீமாட்டியாக ஆவதுதான் கதை.

பழையபாணி ஆங்கிலம். நீளநீளமான சொற்றொடர்கள். ஆகவே ஒவ்வொரு வரியையும் நிறுத்தி நிறுத்திப் படித்து, கொண்டுகூட்டிப் பொருள்கொண்டு மேலே செல்லவேண்டியிருந்தது. நாவலின் தொடக்கத்தில் டூவல் சீமாட்டி தன் பேத்தியான ஈவ்லினாவை சந்திக்க லண்டனுக்கு வரவிருப்பதைப் பற்றிய ஒரு கடிதம் இருந்தது. டூவல் சீமாட்டியின் தோழியான கிழவி ஹோவார்ட் சீமாட்டி தனக்கு நெருக்கமான ரெவெரெண்ட் ஆர்தர் வில்லர்ஸுக்கு தெரிவித்த கடிதம் அது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் டூவல் சீமாட்டி தன் மகள் கரோலினை முழுமையாகவே விலக்கி வைத்துவிட்டாள். குடும்ப கௌரவத்தை குலைத்துவிட்டவள் என்று மகள்மேல் கிழவிக்கு கோபம். ஆனால் கரோலினுக்கு ஒரு மகள் இருப்பதை அவள் அறியவில்லை. அந்த மகளுக்கு பதினெட்டு வயதாகப்போகிறது என்ற செய்தியை சிலநாட்களுக்கு முன்புதான் அறிந்திருந்தாள். பேத்தியை உடனே சந்திக்கவேண்டும் என்று விரும்பினாள்.

Can any thing, my good Sir, be more painful to a friendly mind, than a necessity of communicating disagreeable intelligence? Indeed it is sometimes difficult to determine, whether the relator or the receiver of evil tidings is most to be pitied.  என்ற சொற்றொடரையே நான் நாலைந்து தடவை வாசித்தேன். அந்த மொழிக்குள் செல்வது என்பது நாம் நின்றிருக்கும் மண்ணை தோண்டி துளையிட்டு உள்ளே செல்வது போன்றது. நடுவே பெரிய கல் வந்து தடுக்கும். அங்கே நம் துளையிடும் பற்கள் உடையும்.

பின்னர் கண்டுகொண்டேன், நாம் அந்த சொற்றொடரை தமிழில் மொழியாக்கம் செய்துகொண்டே வாசிக்கக் கூடாது. அது மூளையை களைப்படையச் செய்கிறது. ஏனென்றால் அந்த மொழிக்கட்டுமானமே வேறு. அதை உடைத்து துண்டுதுண்டாக்கி திரும்ப இணைத்துத்தான் தமிழாக ஆக்கமுடியும். அந்த சொற்றொடர் சொல்வதென்ன என்று மட்டுமே கவனித்தபடி வாசித்துச் செல்லவேண்டியதுதான் ஒரே வழி.

ரெவெரெண்ட் வில்லர்ஸ் ஹோவார்ட் சீமாட்டிக்கு எழுதிய கடிதம் அடுத்தது. அதன் மொழியும் அதேபோலத்தான். மொத்த நாவலும் அந்த உபச்சாரமொழியாகவே இருக்குமோ என்ற பீதியை கிளப்பியது அது. Your Ladyship did but too well foresee the perplexity and uneasiness of which Madame Duval’s letter has been productive. However, I ought rather to be thankful that I have so many years remained unmolested, than repine at my present embarrassment; since it proves, at least, that this wretched woman is at length awakened to remorse….இப்படித்தான் அந்தக்காலத்தில் பேசி எழுதிக்கொண்டிருந்தார்கள் என்றால் அவர்களுக்கு ஏராளமான நேரம் இருந்திருக்கிறது

ரெவெரெண்ட் வில்லர்ஸ் கிழவியுடன் ஈவ்லினை அனுப்புவது சரிதானா என்ற ஐயத்தை அடைகிறார். ஏனென்றால் கிழவி வாழும் உயர்குடிச்சூழல் பாவமும் பாவனைகளும் நிறைந்தது. கிழவியின் மகளான கரோலின் சர். ஜான் பெல்மோர்ட் என்ற பிரபுவை ரகசியத் திருமணம் செய்துகொண்டாள். பின்னர் அவர் அந்த திருமணத்தை மறுத்துவிட்டார். குழந்தை தந்தையில்லாமல் பிறந்து அனாதையாக வளர நேர்ந்தது. ஈவ்லின் எளிமையான சூழலில் பக்தியும் அர்ப்பணிப்பும் கொண்ட பெண்ணாக வாழ்வதற்கு கிராமமே நல்லது என்று நினைத்தார்.

ஆனால் ஈவ்லின் தனக்கென திட்டங்கள் வைத்திருந்தாள். அவளுடைய அழகான கள்ளமற்ற முகத்தால் அவை மறைக்கப்பட்டிருந்தன. அவளுக்கு அந்தச் சிற்றூர் சலிப்பூட்டியது. அவள் எழுதிய கடிதத்தில் அவள் அந்த ஊரை பலவாறாக பழித்தும் கசந்தும் எழுதியிருந்தாள்.  இந்த சிற்றூரை நான் வெறுக்கிறேன். இது கள்ளமற்றது என்கிறார்கள். இல்லை என்று நான் அறிவேன். ஏனென்றால் ஒவ்வொருநாளும் துணி தைக்கும் பெண்களுடனும் லினன் நெய்யும் பெண்களுடனும் பேசிக்கொண்டே இருக்கிறேன். இது பாவம் நிறைந்த, ஆனால் பாவம் செய்வதற்கான சூழல் அமையாத ஊர். செய்யமுடியாத பாவம் கற்பனையில் பெருகி இவர்களைச் சூழ்ந்திருக்கிறது.

இப்படிச் சொல்கிறேன், இந்த ஊரின் ஒர் எளிமையான பெண்ணை கடவுள் எடுத்துக்கொண்டு சென்று அவள் உள்ளத்தை வெட்டி ஆராய்ந்தார் என்றால் அங்கே ஆயிரம் சாத்தான்களும் பல்லாயிரம் பேய்களும் நடனமாடிக்கொண்டிருப்பதைக் காண்பார். லண்டன் நகரையே மூடிவிடுமளவுக்கு சாக்கடைப் பெருக்கு ஒன்றை கற்பனை செய்யுங்கள், அதுதான் இங்குள்ள ஒரு பெண்ணின் உள்ளம். ஏனென்றால் அது பாவத்தை உடலால் செய்ய வாய்ப்பே அமையாத துரதிஷ்டம் கொண்டது. 

அப்படியென்றால் நான் விரும்புவது என்ன? நான் லண்டனுக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் எதற்கு? இந்த பாவத்தில் இருந்தெல்லாம் தப்பவேண்டும் என்றுதானே நான் ஆசைப்படவேண்டும்? ஆனால் அப்படி தப்பவேண்டுமென்றால் நான் மேலும் மேலும் உள்ளே செல்லவேண்டும். கத்தோலிக்க கான்வெண்டுகளுக்குள் செல்லவேண்டும். அந்தக் கான்வெண்டுகள் ஏதாவது மலையுச்சிகளில் இருக்கவேண்டும். ஆனால் அங்கும் நான் என் இதே உள்ளத்துடன் செல்வேன். அது பாவம் வளரும் செழிப்பான நிலமல்லவா?

நான் பாவத்தை குறைப்பதற்கு ஒரே வழிதான் உள்ளது, அது நடைமுறையைச் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பளிப்பது. நடைமுறையில் இந்த உடலால், இது உருவாக்கும் உறவுகளால், மனிதர்களால் ஓர் எல்லைக்குமேல் பாவம் செய்ய முடியாது. ஒரு பாவத்தின் விளைவை நன்மையாகவோ தீமையாகவோ அனுபவித்துவிட்டால் பாவம் ஓர் எல்லையை கண்டுவிடுகிறது. பாவம் செய்து, அதனால் அடிவாங்கியவர்களிடம் மட்டுமே பாவத்துக்கான மெய்யான அகத்தடை இருக்கிறது. மற்றவர்கள் எல்லாருமே செய்யாத பாவத்தில் மகிழ்ந்து திளைப்பவர்கள் மட்டுமே.

ஈவ்லினை அவள் பாட்டியிடமிருந்து விலக்குவதற்காக ரெவெரெண்ட் வில்லர்ஸ் அவளை ஹோவார்ட் சீமாட்டியின் இல்லத்துக்கே அனுப்புகிறார். அங்கே ஒரு சிறு விடுமுறைக் கொண்டாட்டத்தை அவள் கழிக்கலாமென நினைக்கிறார். அங்கே ஹோவர்ட் சீமாட்டியின் மருமகனாகிய கடற்படை அதிகாரி காப்டன் மிர்வின் வருகிறார். அவர் அப்போதுதான் கப்பலில் இருந்து கரைக்கு வந்திருக்கிறார். அவர் ஓய்வுபெறும் வயதில் இருக்கும் முதியவர். நிறைய அனுபவங்கள் கொண்டவர். ஆனால் தான் ஒரு கனவான் என்றும், பெண்கள் தன்னுடன் பழகும்பொருட்டு உருகிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் நம்புகிறார். அவருடன் லண்டனுக்குச் செல்ல ஈவ்லின் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெறுகிறாள். தன்னை அழைத்துச்செல்லும் படி மிர்வினை பேசிப்பேசிக் கரைக்கிறாள்.

இந்த காப்டன் மிர்வின் ஒரு அற்புதமான மடையன். ஆண்மை என்று ஒன்றை நம்பி அதை தன் வெளிப்பாடாக வைத்திருக்கும் ஆண்களைப்போல மடையர்கள் எவருமில்லை. மோவாயை தூக்கிக்கொண்டு விருந்துகளில் அலைகிறார்கள். அப்படியே மேலதிகாரிகள் முன் வணக்கம் வைக்கிறார்கள். அப்படியே சென்று போர்க்களத்தில் சாகிறார்கள். சவப்பெட்டியிலும் மோவாயை தூக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் மிகச்சிறந்த குதிரைகள் இவர்கள். ஆனால் ஏறுவதற்குப் பழகியிருக்கவேண்டும்.

நான் ஒன்றைக் கண்டுகொண்டேன். அதுவரை நான் நம்பியிருந்த ஒன்று பொய். நான் கிராமத்தில் புனைவுகளை படித்தே வாழ்ந்தவள். எல்லாமே பதினாறாம் நூற்றாண்டு இசைநாடகங்கள், வீரசாகசக் காதல்கதைகள். வாளேந்திய தீரர்கள், அவர்களை காதலிக்கும் மென்மையான காதலிகள். கூர்முனைக் கோட்டைகள், உருளைக்கல் பரவிய குதிரைப்பாதைகள், கொடியவர்களான டியூக்குகள், கம்பீரமான பிரபுக்கள், பணிவான குடியானவர்கள், வெள்ளை உள்ளம் கொண்ட குடியானவப் பெண்கள், எப்போதுமே கனிந்துகொண்டிருக்கும் செவிலியன்னைகள், விசுவாசமான வேலையாட்கள். அவையெல்லாம் பொய், வெற்றுக் கற்பனை, அவற்றை கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாது என்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நான் அப்படித்தான் நினைத்திருந்தேன்.

ஆனால் அது என் கிராமச்சூழலுக்குத்தான் பொருந்துவது. இந்த பிரபுகுடும்பச் சூழலில் நான் பதினாறாம்நூற்றாண்டு இசைநாடகங்களில் கண்ட வாழ்க்கைதான் உண்மையிலேயே இருக்கிறது. அந்த வாழ்க்கை அல்ல, அதன் போலி நகல். இங்கே எல்லா சீமாட்டிகளும் அந்த கதைநாயகியரை நடிக்கிறார்கள். எல்லா ஆண்களும் அந்த கதைநாயகர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இவர்களின் அசட்டுத்தனமான பேச்சு மொழியும் அதன் சொலவடைகளும் அப்படியே நிகோலாஸ் உடாலின் நாடகத்தில் இருந்து எடுத்தவை.

அதை நான் நன்றாகவே நடிக்க முடியும். ஏனென்றால் அதைத்தானே நான் பகற்கனவில் நடித்துக்கொண்டிருந்தேன். நான் என்னை அப்பாவியான, நாகரீகமே அறியாத, எளிமையான அன்பும் கனிவும் கொண்ட கிராமத்து அழகியாக காட்டிக்கொண்டேன். நாகரீகத்தின் கறைபடியாத ஒரு தேவதை.  காப்டன் மிர்வின் போன்றவர்களுக்கு அந்வகை பெண்கள் மேல் ஒரு மயக்கம். ஏனென்றால் அந்தவகைப் பெண்களை அவர்கள் அதற்கு முன் கண்டிருக்க மாட்டார்கள். கற்பனையிலேயே உருவாக்கி வைத்திருப்பார்கள்.

அத்துடன் அவர்களுக்கு அவர்களின் வீங்கிய ஆணவத்தை மென்மையாக வருடிக்கொடுக்கும் பெண் தேவைப்படுகிறாள். இந்தச் சீமாட்டிப் பெண்களை அவர்கள் நிறையவே பார்த்திருப்பார்கள். அவர்களின் பட்டு ஆடைக்குள், பயின்று தேர்ந்த மொழிக்குள், சுயநலக் கணக்குகளும் இன்னொரு வீங்கிய அகந்தையும் இருக்கிறதென அவர்களுக்குத் தெரியும். பணமுள்ள சீமாட்டிகளுக்கு பணத்தின் ஆணவம். இல்லாத சீமாட்டிகளுக்கு எளிதில் புண்படும் கன்றிப்போன ஆணவம்.

இனிய பூங்கொடி போல அசைந்தபடி தங்கள் நகைச்சுவைகளுக்கு சிரித்து, இசையைப்பற்றியும் இலக்கியம் பற்றியும் பேசி, அரசியலே தெரியாதவர்களாக கண்களை மலரவிழித்து தங்களுடன் இருக்கும் இப்பெண்கள் சட்டென்று உள்ளிருந்து நஞ்சு பூசிய கூர்முனை ஒன்றை வெளியே எடுப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அந்த எல்லைக்கு முன் அத்தனை சரசங்களையும் நிறுத்திவிடுவதற்கு அவர்கள் எப்போதும் கவனமாக இருப்பார்கள்.

ஆனால் ‘கிராமத்து கள்ளமில்லாத பெண்’ அப்படி அல்ல. ‘ஓ, இது சேற்றில் கிடக்கும் வைரம் அல்லவா?’ அதாவது கூழாங்கற்களில் இருந்து வைரத்தை பார்த்ததுமே கண்டுகொள்ளும் கூர்மை கொண்டவர்கள் இவர்கள். கீழே ஆழத்தில் கைநீட்டித் தவிக்கும் ஒரு பெண்ணுக்காக இறங்கிச்சென்று கைநீட்டும் கருணை கொண்டவர்கள். அவளுக்கு நாகரீகத்தை கற்றுத்தருவதற்கான பொறுமையும், அவளுடைய நாகரீகமின்மைக்காக பொதுமேடைகளில் சிறிய அவமதிப்புகளைச் சந்திக்கும்போது அதை பொருட்படுத்தாத பெருந்தன்மையும் கொண்டவர்கள்.

அந்தக் குதிரை எதை விரும்புகிறது, எப்படி நான் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறது என்று கண்டுகொண்டேன். அதன்பின் எல்லாம் எளிதுதான். நான் அதன்மேல் ஏறிக்கொண்டேன். அதை சவுக்கால் அடித்து விரட்டி எனக்கான பாதையில் விரைந்தேன். அந்தக் குதிரை என்மேல் கருணை கொண்டு என்னை தூக்கிக்கொண்டு செல்வதாக எண்ணிக்கொண்டிருந்தது

ஈவ்லின் காப்டன் மிர்வினுடன் லண்டனுக்குச் சென்றாள். லண்டனில் அவளுடைய அழகு உடனடியாக கவனிக்கப்பட்டது. அதேசமயம் அவளுக்கு சமூக கௌரவம் ஏதும் இல்லை என்பதை அவர்கள் ஒவ்வொரு சொல்லாலும் நோக்காலும் உணர்த்திக்கொண்டிருந்தார்கள். லண்டனின் பொது நாகரீகங்கள், மரபுகள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை. அவள் விருந்தில் ஒரு முட்கரண்டியை வேகவைத்த முட்டைமேல் குத்தி வைத்தாள். பன்றியிறைச்சியை பெரிய துண்டுகளாக வெட்டி வாய்க்குள் திணித்தாள். அவளுடைய கரண்டிகள் ஓசையிட்டன. விரைந்து செல்லவேண்டியிருந்தபோது நீண்ட கவுனை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டாள்.

அவளைக் கண்டு மற்ற இளம்பெண்கள் கண்களைப் பரிமாறிக்கொண்டு புன்னகைத்தனர். முதியபெண்கள் அன்பாக அவள் தோளை தட்டி மென்மையான குரலில் அறிவுரை சொன்னபின்னர் இன்னொரு முதியவளைப் பார்த்து புன்னகைத்தார்கள். ஆனால் அத்தனைபேருக்குமே அவல் டூவல் சீமாட்டியின் பேத்தி என தெரிந்திருந்தது. ஒருவேளை அவளுக்கு கிழவியின் சொத்து கிடைக்கலாம். சீமாட்டிப் பட்டமேகூட அமையலாம். அவளை கொஞ்சம் சரிப்படுத்தி எடுத்தால் அவளேகூட ஒரு சீமாட்டியாக ஆகிவிடக்கூடும்.ராணுவக் குதிரைக்காரர்களின் மகள்களுக்கு அவளெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை.

ஆனால் அவள் எதையுமே கருத்தில் கொள்ளவில்லை. அவள் அந்நகரத்தை பெரும்பித்துடன் கண்டறிந்துகொண்டிருந்தாள். உலகின் முதல்நகரம் என்று பிரிட்டிஷாரால் சொல்லப்பட்டது. உலகை ஆளவிருக்கும் சக்கரவர்த்தியின் இருப்பிடம். உலகநாகரீகத்தின் மையம். அது அவளுக்கு ஒரு புத்தகம்போலிருந்தது, புரட்டிப்புரட்டி படித்துக்கொண்டே இருந்தாள். அவளுக்குத்தேவையான அனைத்தையும் அந்நகரமே கற்றுக்கொடுத்தது.

லண்டன்! நான் நினைவறிந்த நாள் முதலே கனவு கண்டுகொண்டிருந்த மாநகரம். நான் தாந்தேயின் டிவைன் காமெடியை ரெவெரெண்ட் வில்லர்ஸிடமிருந்து படித்திருக்கிறேன். அதிலிருக்கும் இன்ஃபெர்னோதான் லண்டன் என்று எனக்கு சொல்லப்பட்டது. மனிதனின் எல்லா ஆபாசங்களும் வெளிப்பட்டு பெருகிச் சூழ்ந்திருக்கும் கொடிய நரகம். இருளும் நாற்றமும் நிறைந்த வெளி. ஆனால் அந்தக் கற்பனையே என்னை இன்பக் கிளுகிளுப்புக்கு கொண்டுசென்றது.

நான் வாசித்த பழைமையான நூலில் மரவெட்டு ஓவியங்கள் இருந்தன. அதில் வரையப்பட்டிருந்த நரகச்சித்திரத்தில் நிர்வாணமான ஆண்களும் பெண்களும் உடலோடு உடலொட்டி ஒற்றை படலமாக நிறைந்திருந்தனர். அதைப் பார்த்ததும் நான் உடற்கிளர்ச்சி அடைந்தேன். என் முகம் சிவந்து வியர்த்துவிட்டது. மூச்சு ஏறியிறங்கியது. அன்றிரவுதான் நான் என் முதல் காமக்கனவை கண்டேன். என் உடலில் எழும் காமத்தின் இன்பம் என்பது எப்படிப்பட்டது என்றும் அறிந்தேன். அந்தப் புத்தகத்தை நான் நீண்டநாட்கள் என்னுடன் வைத்திருந்தேன். அதை நான் எதற்குப் பயன்படுத்தினேன் என்று எவருக்கும் தெரியாது.

ஈவ்லின் ரெவெரெண்ட் வில்லர்ஸுக்கு எழுதிய கடிதம் லண்டன் பற்றிய வர்ணனைகளால் நிறைந்திருந்தது. லண்டன் கண்ணைப் பறிக்கும் மாயங்களின் நகரம் என்றார்கள். இரண்டு நாடக அரங்குகள் திறந்திருக்கின்றன. ரானேலா மற்றும் பாந்தியன். அந்தப்பெயர்களை எல்லாம் நான் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறேன். அங்கே நான் செல்ல முடியும் என்றே நினைக்கவில்லை. நான் இல்லாமலேயே அவை நடக்கும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடலாம். ஆனால் எனக்கு வருத்தமில்லை

ஈவ்லின் தன் டைரியில் எழுதிய குறிப்பு சற்று மாறுபட்டிருந்தது. அதை அவள் நகலெடுத்து தன்னுடன் அனாதை விடுதியில் வளர்ந்த லாராவுக்கு அனுப்பினாள். நான் அந்த உலகியல் கொண்டாட்டங்களை எப்படிப் பார்க்கிறேன். அவை பொம்மைகள். குழந்தைக்கு அவை தேவைதான். ஆனால் குழந்தை முதலில் பாதுகாப்பை அதன்பின் பசியைத்தான் எண்ணும். அவை கிடைத்த பின்புதான் அது பொம்மைகளை நாடும். எனக்கு இன்று தேவை உறுதியான ஓர் இடம், என்னை பொருத்திக்கொள்ளும் ஓர் இல்லம். ஒரு ஆண். அவனை நான் வென்றாகவேண்டும். அதன்பின்னர் இதெல்லாம் என் முன் விரிந்து கிடக்கும்.

ஈவ்லினை ரெவெரெண்ட் வில்லர்ஸ் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கடிதத்தில் அவர் எழுதினார். Heaven bless thee, my dear child! And grant that neither misfortune nor vice may ever rob thee of that gaiety of heart, which, resulting from innocence, while it constitutes your own, contributes also to the felicity of all who know you. அவருக்கு அவளுடைய ஆழ்ந்த கள்ளமின்மை மேல் இருந்த நம்பிக்கை அந்த வரிகளில் தெரிந்தது. அல்லது அவநம்பிக்கையா?

ஆனால் ஈவ்லின் ரெவெரெண்ட் வில்லர்ஸை அப்படி நினைக்கவில்லை. அவளுடைய வரிகள் ஈவிரக்கமில்லாமல் அவரை விவரிக்கின்றன.

இந்தக் கிழவர்களுக்கு இளம்பெண்கள் மேலிருக்கும் அன்பென்பது உண்மையில் என்ன? அவர்கள் இளம்பெண்களின் உள்ளத்தின் ஆழத்தில் நுழைந்துவிட விரும்புகிறார்கள்.  அதன் வழியாக அவர்கள்மேல் கவிந்துவிட்ட முதுமையை வெல்ல முயல்கிறார்கள்.

அக்கறைகாட்டும், அணைத்துக்கொள்ளும், முதியவன் இளம்பெண்ணுக்கு தேவைப்படுகிறான். அவன் சென்றவழிகளின் அனுபவம் எல்லாம் பெண்ணுக்கு தேவையாகிறது. அவள் அவனை பயன்படுத்திக்கொள்கிறாள். ஆனால் அவனை அவள் வெறுக்கிறாள். ஏனென்றால் அவன் தன் முதிய கையால் அவளுடைய மிக அந்தரங்கமான இளமையை தொட்டுவிடுகிறான்

முதுமை என்பது சாவு. சாவின் நீர்த்த வடிவம். வற்றி வற்றி அது செறிவாகிக்கொண்டிருக்கிறது. இளம்பெண்ணில் வாழ்வு தளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. அவள் உறுப்புக்கள் தளிர்கள். அவற்றை அவன் தொட்டுவிட்டான்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.