Jeyamohan's Blog, page 984

May 19, 2021

கி.ரா.அஞ்சலிகள்

அஞ்சலி:கி.ரா கி.ரா- அரசுமரியாதை, சிலை.

ஒரு மொழியின் இலக்கியச்சூழல் அதன் பலதரப்பட்ட கதைசொல்லும் சாத்தியங்களால் வளமையடைகிறது. தமிழ் போன்ற ஒரு செவ்வியல் மொழி தனது இலக்கிய மரபை தக்க வைக்கவும் அதேநேரம் நவீன மொழியாக தனது இருப்பை நிறுவவும் பல கதையாடல் சாத்தியங்களை கொண்டிருக்க வேண்டியிருந்தது. நவீனத்துவம் ஒரு பெரும்புயலாக உருப்பெற்று சுழற்றியடித்த காலத்தில் ஒரு தனிமரம் அதன் சுழற்சிக்கு வீழ மறுத்து தனது கிளைகளை அசைத்த படி நின்றது.

மண்ணில் ஆழ வேரூன்றிய அந்த மரம் பெரும்புயலையே திகைக்க வைத்தது.தமிழ் நவீனத்துவத்தின் உச்ச ஆளுமையான சுந்தரராமசாமி ஒரு சிறுகதையை படித்துவிட்டு கி.ராஜநாராயணன் எனும் மண்ணின் கதைகளைப்பேசிய ஒரு சம்சாரியை “அந்தக்கூட்டத்திற்கு கோவில்பட்டி பக்கமிருந்து ஒரு சம்சாரி வருவாரே அவரா இதை எழுதினார்?” எனக்கேட்ட கணத்தை மேற்சொன்ன உருவகம் மூலம் பதிலீடு செய்து கொள்ளலாம்.

சீரான நுட்பமான கலையாக்கமாக இலக்கியத்தை வரையறுத்த சு.ரா கி.ராவின் எழுத்தை “ஆம் இது இலக்கியம்தான்” என உரைத்தார். அது ஏன் அபூர்வமானதெனில் கி.ரா பேசிய மொழியோ உள்ளடக்கமோ சு.ரா அதுவரை வலியுறுத்திய இலக்கியக்கொள்கைக்கு முரணானவை. ஆனால் கலை நமது வரையறைகளை கலைத்தெறிந்தே தன்னை நிறுவி நமக்கு புதிய சாளரத்தை திறந்து விடுகிறது. நாட்டாரியல் நவீன ஆய்வுத்துறையாக உருப்பெற்று வாய்மொழி வரலாறுகளுக்கு ஒரு ஆய்வுப்புல முக்கியத்துவத்தை அளித்தபோது கி.ரா தனது மண்ணில் வனங்களும் சோலைகளாகவுமே செழுமை என்பதற்கு நிகராக கருவைமுள்ளிற்கும்

கள்ளிச்செடிக்கும் மண்ணில் அதே நிலைபேறு உள்ளதென நிறுவினார். இலக்கியத்தோட்டம் பூங்காக்களை மட்டுமே உள்ளடக்கியது என்கிற சு.ராவின் மனநிலையை கி.ரா.வின் கரிசல்மண்ணும் கருவைமரங்களும் நிலைகுலைய வைத்தன. மண்ணும் மனிதர்களும் இப்படிக்கலந்து வாழ்வதின் அசலான நேர்காட்சியை கி.ராஜநாராயணனின் கதைகள் நம்முன் வைத்தன. தமிழ் தனது அசல்மைந்தர்களை மடியிலேந்திக்கொண்டது.போர்க்களத்தில் அம்புகள் துளைத்திருந்த கர்ணனை குந்தி மடியிலிட்டுக் கொண்டதைப்போல..!

தமிழ் இலக்கியத்தில் முன்மாதிரிகளோ, பின்தொடர்ச்சிகளோ அற்ற ஒரு ஆளுமை கி.ரா. ஒரு வாசகனாக என்னால் அவருக்கு முன்பின் என யாரையும் வரிசைப்படுத்த முடியவில்லை. கு.அழகிரிசாமி உட்பட.

கோபல்ல கிராமத்தில் வரும் காது மந்தமான பழங்கிழவியான தொட்டவ்வா காலத்தின் பிரதிநிதியாக நின்று ஊருக்கு ஆலோசனை சொல்லுவாள். அவள் தன் பெருவாழ்வின் முனையில் நின்று நுண்ணுணர்வால் சொல்லும் சொல்லில் புதியகாலம் பிறக்கும்.

அந்த நுண்ணுணர்வை வரையறுக்க முயன்றும் தோற்றுமே நவீனத்துவம் இங்கு நீடித்தது. நவீனத்துவத்தின் பரிதவிப்பை மேவாயின் ஓரத்தில் வெளிப்படும் எளிய புன்னகையால் கடந்து சென்ற கலைக்கு தமிழில் கி.ராஜநாராயணன் என்று பெயர்..!

எம்மொழியின் பெருங்கலைஞனுக்கு இறுதி வணக்கம்.

 

முருகானந்தம் ராமசாமி

 

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம். வருஷம் ஒருக்கா அவன் ராஜாங்கத்துல யாரு பெரீய கலைஞனோ அவன கூப்பிட்டு மரியாத செஞ்சி பெரீய பரிசு குடுப்பானாம். என்னா பரிசுன்னு கேட்டாக்கா… ஒரு படி புத்தரிசி சுடுகஞ்சி.

இதையெல்லாம் ராசா கிட்ட மொற சொல்ல முடியுமா…பெறகு அந்த கஞ்சியும் இல்லாம போயிருமே. இந்த ராசா இருக்க ஊருக்கு இன்னொரு பெரிய ஆளு வந்து, இந்த ராசா அரண்மணல இருக்க எல்லா கலைஞனையும் தன்னோட கலைய வெச்சி தோக்கடிச்சானாம். இவன் இங்க இருக்க எல்லா ஆளுகளையும் தோக்கடிச்ச பெரியாளு, இவனுக்கு இன்னும் பெரிசா பரிசு குடுக்கணுமே அப்டின்னு ராசா ரொம்ப யோசிச்சி, இவனுக்கு சூடா ஒரு படி புத்தரசி கஞ்சி கூடவே கைபுடி அளவு காணத் தொகையலும் குடுங்கோ அப்டின்னு உத்தரவு போட்டானாம்.

இப்டியா பட்ட ராசா ஊருக்கு ஒரு சாமியார் வந்தானாம். அவன் ரொம்ப சக்தி உள்ள சாமியார். ஒரு ஆளை பாத்த ஒடனே அவனோட போன ஆறு ஜென்மத்துல அவன் என்னவா இருந்தான்னு சொல்லிப் புடுவான். ஊர் சனம் மொத்தமும் அவன் கிட்ட போய் அவங்கவங்க போன சென்மத்த பத்தி தெரிஞ்சுகிடுறத பாத்த ராசாவுக்கும் அவனோட போன சென்மத்த பத்தி தெரிஞ்சிக்க ஆசை வந்துச்சாம். அவனும் சாமியார் கிட்ட போனானாம்.

சாமியாருக்கு ராசோவோட போன பிறவி பத்தி தெரிஞ்சது. ஆனா சொல்ல பயம். தலைய வாங்கி புட்டான்னா? அதனால சாமியார் என்ன விட உன் முன் சென்மம் பத்தி நல்லா தெரிஞ்சவன் இப்ப உன் அரண்மனைக்கு வந்த கலைஞன் தான் அவனை போய் கேளு அப்டின்னு சொல்லி அனுப்பினானாம்.

ராசாவுக்கு ஒரே ஆச்சர்யம். என்னடாது  இவம் இந்த சாமியார விட சக்தி உள்ளவனா அப்டின்னு. ராசாவும் சாமியார் சொன்னபடி அவன் கிட்ட போய், தன்னோட போன பிறவி என்னா அப்டின்னு கேட்டானாம். அவன் மூஞ்சில அடிச்சா மாறி  ” போன சென்மம் மட்டும் இல்ல, அதுக்கு முந்தின அஞ்சு சென்மத்துலயும் நீ பல நாள் சோறு காணாத பிச்சக் காரன்தான்” அப்டின்னு சொன்னானாம்.

ராசாக்கு கடும் கோபம், இருந்தாலும் பயம் அந்த சாமியார விட இவன் பெரிய ஆளாச்சே… கோவத்த அடக்கிகிட்டு எதை வெச்சி அய்யா அப்படி சொல்றீங்க அப்டின்னு கேட்டானாம். கலைஞன் ” பின்ன ஒருத்தனுக்கு சந்தோசத்துல பெரிய சந்தோஷம் படி புத்தரசி சுடு கஞ்சி மட்டும்தான் அப்டின்னு நினைக்கிறவன் ஏழு சென்மம் பட்டினியா வாழ்ந்த பிச்சக்காரனா தானே இருக்கணும்” அப்டின்னு சொல்ல, அப்போதான் ராசாக்கு புத்தி வெளங்குச்சாம்.  அதுக்குப் பிரவு அந்த  ராசா மனம் மாறி எல்லோருக்கும் பொன்னும் மணியும் பரிசா குடுக்க ஆரம்பிச்சானாம்.

முன்பொரு சமயம் நான் நைனாவை பார்க்க சென்றிருந்தபோது தன் முன் அமரந்திருந்த ஆறு ஏழு பேருக்கு சொன்ன கதை இது. Sub text என்ன என்று சொல்லவே தேவை இல்லை. அமர்ந்திருந்த ஆட்களில் ஒருவர் அன்று அரசாங்கத்தால் “பெரிய” கவுரவம் ஒன்றை அடைந்திருந்தவர்.

நைனா ஒரே கதையில் யார் யார் இடம் எது என்று புன்னகையுடன் சொல்லி முடித்தார். நைனாவின் பெரும்பாலான விமர்சனம் இப்படியானதுதான். நைனா சொன்ன எத்தனையோ கதைகளில் சாமியார் வரும் கதைகள் மட்டும் தனி வகை. தனது 89 ஆவது பிறந்த நாள் விழாவின் கேள்வி பதில் நேரத்தில் அவர் சொன்ன சாமியார் கதை அன்று மிக புகழ் வாய்ந்தது. நைனாவின் எத்தனையோ தொகுக்க படாத ‘வாய் மொழி’கதைகளில் இப்படி நிறைய உண்டு.

கி.ரா வுக்கும் எனக்குமான முதல் தொடர்பு என் அதி தீவிர முன்னாள் காதலி வழியே நிகழ்ந்தது. அது ஒரு காலம், அதாவது முன்ன ஒரு காலம் , இந்தப் பயதான் இப்படியா பட்ட புஸ்தகம் எல்லாம் கட்டிக்கிட்டு அழுவான் அவனை கேளு வழி கிடைக்கும் என்ற எவரோவின்  மட்டுருத்தலின் பேரில் அவள் என்னை தேடி வந்தாள். பிறகென்ன கண்டதுமே பற்றி எரியும் காதல்தான். அவள் அவளது கல்லூரி hod வழி காட்டுதலின் படி ” கி.ரா புனைவுகளில் நிலக் காட்சிகள்” என்ற தலைப்பின் கீழ் தீஸிஸ் செய்து கொண்டிருந்தாள். இலக்கியத்தில் எல்லா புதுவை இலக்கிய மாணவிகள் போலவே இணையற்ற வெற்று ஏகாம்பரமாக திகழ்ந்தாள்.  தீஸிஸ் சப்மிட் செய்ய முதல் வரைவு என்னை எழுதி தர முடியுமா என்று புதுவை கடற்கரையில் வெண்ணிலா ஐஸ் க்ரீம் வாங்கி தந்து கேட்டாள்.

ஒரு எழுத்தாளரின் புனைவு உலகை முழுமையாக உட்கார்ந்து வாசிக்க நேர்ந்தது அதுவே முதல் முறை. முதல் கதவை திறந்து விட்டவர் பிரேம் ரமேஷ். கலைஞன் பதிப்பகம் என்று நினைவு அதன் வழியே கிரா உலகை நெருங்கி பார்க்கும் பிரேம் ரமேஷ் நூல்  ஒன்று கிடைத்தது.  சாதி என்பதன் சமுக ஒழுங்கு அலகு ஒன்றின் ஆக்கப்பூர்வ கூறு குறித்து அதில் வரும் கி.ரா உலகின் பின்புல உருவாக்கம் குறித்து நூலில் விரிவாக பேசி இருந்தார்கள்.

நைனா படைப்புலக்கின் முதல் அம்சம் இது. அடுத்த அம்சம் ரசனை. அது அவருக்கு ரசிகமணி வழியே கூர்மை பெற்ற ஒன்று. இறுதி அம்சம் இந்த இரண்டின் வழியே இந்த வாழ்வை பரிசீலிக்க பொருத்திப் பார்க்க அவர் கைக்கொண்ட (பெரும்பாலும் நிறுவனத்துக்கு அரசியலுக்கு கோட்பாட்டுக்கு வெளியிலான) படைப்பூக்கம் அவரை கொண்டு சேர்த்த சோசியலிச சட்டகம். இந்த அமைப்புக்குள் செம்மைப்படுத்தப்பட்ட எழுத்து மொழிக்கு வெளியே நிற்கும் ‘கதை சொல்லி’ யாக கி ரா எழுந்து வந்தார்.

என் தேவதையின் தேவையின் பொருட்டு நிகழ்த்திய முதல் வாசிப்பில் வக்கனையான பேச்சு போன்ற   சரளம் வசீகரிக்கும் தருணங்கள் நிகழ்வுகள் காரணமாக என்னை வசீகரித்த கி ரா, விரைவில், சுரா போல பலர் உள்ளே வந்த  தொடர் வாசிப்பில் எனது  விமர்சன மூளை கெட்டி தட்டி, அவர் விகடனில் எழுதும் வெகுஜன கேளிக்கை எழுத்தாளர், சப் டெக்ஸ்ட் டே இல்லை, நுண்மைகளே இல்லை, பூடகமே இல்லை, இப்படி பல இல்லைகளை ‘கண்டு பிடித்து’ உதறி எழுந்து நவீனம் அடைந்து, ஜெ வின் படுகை ரப்பர் எல்லாம் வாசித்து, கி.ரா அப்படி ஓண்ணும் கேளிக்கை எழுத்து இல்லை போலயே என சந்தேகம் வந்து மீண்டும் அவர் உலகில் நுழைந்து உலவி, ஜெ வின் இலக்கிய முன்னோடிகள் தொடரின் கி. ரா குறித்த மதிப்பீடு வழியே எனக்குள் கி.ராவை மீண்டும் மீட்டுக் கொண்டேன்.

தீஸிஸ் முடிந்த பிறகு, கவரில் போட்ட 5000 ரூ காசு அதற்கு மேல் வைத்த ஸ்டராபெரி ஃபிளேவர் ஐஸ் க்ரீம்(இந்த ஸ்டரா பெரி ஃப்லேவரை ‘ருசி’ என்று கண்டு கொண்டவன் மட்டும் என் கையில் சிக்கினால் அவனை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து உயிர்ப்பித்து அடித்து கொல்ல வேண்டும்)   அதை என் பக்கம் நகர்த்தி வைத்து விட்டு,  என் தேவதை என்னுடனான காதலை முடித்துக் கொண்டு ( சிறகு கொள் தேவதைக்கு ஒளி பொங்கும் வானன்றி புழுதி மண்ணில் என்ன வேலை ) பறந்து சென்று விட்டாலும். நைனாவுடனான தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

எந்த எல்லை வரை என்றால், ஒரு முறை விடை பெற்று கிளம்பிய என்னை நைனா அவரது கைத்தடி கொக்கி வளைவை கொண்டு என் காலில் மாட்டி இழுத்து நிறுத்தி சொன்னார் “இப்புடித்தான் இருக்கு எனக்கு, நீ போக வேண்டிய தின்னவேலி ரயில்ல நானும் வாரேன். நான் இறங்க வேண்டிய கோவில்பட்டி வந்திருச்சு. என்னை இறங்க விடாம தின்னவேலி வரைக்கும் பேசிக்கிட்டே வாங்க அப்டின்னுன்னு சொல்ற நீ ” என்றார் மீசைக்குள் பூத்த புன்னகையுடன்.

அதன் பிறகு விஷ்ணுபுரம் சார்ந்து மற்றும் தவிர்க்க இயலா நண்பர்களின் தேவை கொண்டு மட்டுமே அவரை சென்று சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் கூறியது கூறல் அற்ற, புத்தம் புதிய நைனா ஆகவே உரையாடலில் திகழ்வார். வெடித்து சிரிக்கும் தருணம் இன்றி அவரது உரையாடல் என்றும் அமைந்ததில்லை. இந்த இரவு நெடுக அவரை எண்ண எண்ண தித்திக்கும் சித்திரங்கள் மட்டுமே மனதில் மீண்டும் மீண்டும் எழுகிறது.

இறுதியாக அவரை விஷ்ணுபுரம் நட்பு வட்ட நேர் காணலுக்காக சந்தித்தோம். இத்தனை வருட சந்திப்பு போலன்றி இம்முறை நைனாவை ‘வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவன்’ என அங்கே அவர் முன் அமர்ந்திருந்தேன். விடை பெறுகையில் முதன் முறையாக அவரிடம் அவரது நூலில் ஆட்டோ கிராப் வாங்கிக்கொண்டேன். நண்பர்கள் மூவரும் ஒரு சேர அவர் காலில் விழுந்தோம். “ரொம்ப சந்தோஷம், சந்தோஷமா போய்ட்டு வாங்கோ” என்று ஆசீர்வதித்தார்.

சந்தோஷம்…முன்பு ஒரு உரையாடலில் கி.ரா சொன்னார் தமிழின் முதல் நாவல் வரைக்கும்கூட ஓர் இலக்கியம் அது முடிந்ததும் ’இதை வாசித்தவரும் வாசிக்க கேட்டவரும் சந்தோஷமா இருக்க வேணும் சுபம்’ என்று முடியும் என்று சொன்னார். நவீனம் வந்ததும் இலக்கியம் முடிவாகவும்  முதலிலும் தொலைத்து இதைத்தான்.

இப்போது யோசிக்கயில் நைனா வசம் கேட்ட அத்தனை கதைகளையும் அதில் உள்ள கசந்த தருணங்களை கடந்து சந்தோஷம் எனும் ஒரே உணர்வு நிலைக்குள் பொதிந்து விட முடியும் என்று தோன்றுகிறது. அந்த சந்தோஷத்தை இங்கே விட்டுச் சென்றிருக்கிரார் நைனா. அவர் உடலுக்கு மட்டுமே அஞ்சலி. அவரது  கதைகள் வழியே அவர் என்றும் வாழும் சிரஞ்சீவி.

கடலூர் சீனு

[image error]அமெரிக்க பகல்பொழுதில், எனது சக அலுவலருடன் தனிப்பட்ட உரையாடலை, அப்பொழுதுதான் ஆரம்பித்திருந்தேன். இளவேனில் பாபுவின் பெயர் என் கைபேசியில் மின்னியது. இது நல்லதற்கல்லவே என்று எடுத்தேன். சக அலுவலரிடம், இது இந்தியாவிலிருந்து வரும் அழைப்பு என்று சொன்னதும், நாம் அப்புறம் பேசலாம் என்று துண்டித்துக்கொண்டார். இளவேனில் பேசவேயில்லை, குரல் கம்மியது. ‘எத்தனை மணிக்கு?’ என்றேன். ‘பதினொரு மணிக்கு’ என்றார்

கி.ரா.அஞ்சலி – ஆஸ்டின் சௌந்தர் கி.ரா. உரையாடல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2021 11:34

உரைகள், கடிதங்கள்

கவிதை உரைகள்- கடிதம் என் உரைகள்,ஒரு தயக்கத்துடன்… உரைகள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

மோரில் தயிரிட்டு ‘உறையிடுவது’ போல உங்கள் ஒவ்வொரு உரையும் மனதைச் செறிவூட்டுவது நிதர்சனம். உங்கள் ‘கல்லெழும் விதை’ உரை பார்த்தேன். கதர்ச் சொக்காயில் முன்னாள் அரசியல்வாதி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் சாயல் தெரிந்தது. முன் நெற்றியிலிருக்கும் கொஞ்சநஞ்ச ஒட்டடையும் ஒழிந்ததென்றால் ஒரு அசலான தத்துவஞானியின் முகமும் கூடிவிடும் என்று தோன்றியது. உங்கள் குரலும் நல்ல வெல்லப்பாகு பதத்தை அடைந்து, கனிவான ஆசிரியரின் குரலாக ஒலித்தது.

கருத்தியல்வாதத்தையும் லட்சியவாதத்தையும் விளக்கிய ஒரு நல்ல உரை. வழக்கம்போல தொய்வில்லாத கச்சிதமான உரை. இப்படித்தான் உங்கள் ஒவ்வொரு உரையையும் விமர்சிக்க முடிகிறது. அரங்கிலிருக்கும் எல்லோர் முகத்திலும் அதுவே எதிரொலிக்கிறது. என்ன, சமீபத்தில் ‘கொரோனா’ விலிருந்து வெளியேறிய தைரியத்தில் எல்லோருடன் நீங்கள் அளவளாவுவதுதான் சற்றே அச்சத்தை ஏற்படுத்தியது. தவிர்ப்பது கடினம்தான். நிலைமை சரியாகும்வரை கவனம் கொள்ளவும்.

தங்களுடைய கி.ரா.புத்தக வெளியீட்டு உரையும் சமீபத்தில் கேட்டேன். மிகக் கச்சிதமான சிறந்த உரை. அதே வெல்லப்பாகுக் குரல். முதன்முதலாகக் கேட்பவர்களுக்கும் தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த பேச்சாளர் இவர் என்று மனதில் தோன்றும் அளவிற்கு சிறப்பான பேச்சு. உங்கள் உரைகளைத் தொடர்ச்சியாகக் கேட்கிறேன். மிக எளிதாகச் சொல்லலாம், பேச்சுக்கலையின் வடிவம் உங்கள் கைவசப் பட்டு நெடுங்காலமாகிவிட்டதென்று.

கி.ரா.விற்கு ஞானபீடம் கிடைக்காதது கூட வருத்தமில்லை. இப்பிடிப்பட்ட ஒரு எழுத்தாளருக்கு அவருடைய நூற்றாண்டு விழாவிலும் கூட, விருது கொடுத்து தன் மதிப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பை அந்த நிறுவனம் தவற விடுவதுதான் வருத்தமான விஷயம்.

உங்கள் உரை பல திறப்புக்களை அளித்தது. குறிப்பாக, நாட்டுப்புறக் கதையில் பாடபேதங்கள் இல்லாமல் இருப்பது. கி.ரா. வின் ஒரு நாவலில் வரும் கற்புநிலை தவறிய ஒரு பெண், தன் நிலையை நியாயப்படுத்தும் வகையில் பஞ்சாயத்தில் கொடுக்கும் ‘கிணறு-கயிறு’ விளக்கம் எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலிலும் அப்படியே வருகிறது. சொற்கள், எத்தனை ஆண்டுகள், எத்தனை காதுகள் மாறி, இன்றைய கதியை அடைந்திருக்கும்.

கர்நாடக சங்கீதப் பாடகர் அருணா சாய்ராம் பிருந்தாம்மா என்கிற அவருடைய குருவைப் பற்றிக் கூறுகிறார். அவர் பாடலை எழுதிக்கொள்ள அனுமதிக்க மாட்டாராம். அவர் பாடுவதைக் கேட்டு அப்படியே பாடவேண்டும். வேதங்களை ‘எழுதாக் கிளவி’ யாகச் செய்தவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆசிரியன் சொல்லுக்கிருக்கும் மதிப்பு அது. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடத்தப் பட்டிருக்கிறது. நானெல்லாம் பதினோராம் வகுப்பு படிக்கும்போது ‘வாழ்க்கையைப் படிக்கணும்னா ஜெயகாந்தனைப் படிங்கடா’ என்று ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னதினாலேயே அவரைப் படிக்க ஆரம்பித்தேன்.

நீங்கள் இதுவரை எழுத்தால் நிலைபெற்றுவிட்டீர்கள், நீங்கள் சொல்லாலும் நிலைபெறவேண்டும். உங்கள் குரல் ‘மொண்ணைச் சமுதாய’த்தின் உணர்கொம்புகளை உயிர்ப்பித்தெடுக்க (உங்களுக்குப் பிடிக்காத) கல்லூரிகள் தோறும் ஒலிக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள் தோறும் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும். கல்வி வியாபாரமாகி விட்ட இந்தக் காலத்திலும் ஆசிரியரின் சொல்லுக்கு ஒரு மதிப்பிருக்கிறது. நீங்கள் ஆசிரியர்களின் ஆசிரியர்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு தமிழரசி எழுதுவது
செவி வழி வாசிப்பு கட்டுரை வாசித்தேன். யுட்யூபில் உங்கள் உரையை ஓடவிட்டு, காதில் இயர்போன் போட்டு, முழு சத்தமும் வைத்து உங்கள் குரலில் ஒரு வார்த்தை காதில் விழுந்து விடாதா என்று கண்ணில் நீர் கரைகட்ட எத்தனை நாள் இருந்திருக்கேன் தெரியுமா?மனசு அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் தவிக்கும். புலன்குறை கண்ணுக்கு முன்னால பாறையாயிருந்து வழி மறைக்கும். அசமஞ்சமாயிருந்துட்டா கூட ஒன்னும் தெரியாம உண்டு உறங்கி வாழ்ந்துவிட்டு போய்விடலாம். மண்டைக்குள்ள அது என்ன இது என்ன்ன்னு ஆர்வம் பொறி பறக்குது. எதிர்ல பாறை வழி மறைக்குது. இந்த இடத்தில் உங்கள் எழுத்து என்னை ஆசுவாசப்படுத்துகிறது.

ஆனந்தவிகடன் வழியாகத்தான் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். Jeyamohan.in என்று டைப்படித்து உள்நுழைந்த அந்த கணம் தேவர்கள் மலர் மாரி பொழிந்து என்னை ஆசிர்வதித்தார்கள். வாழ்த்தினார்கள். என்னுடைய ஆசானை கண்டு கொண்டேன்.

தினப்படி வாழ்க்கையை வாழவே போராடும்( அழைப்புமணி அழைத்தால் அதை கேட்டு கதவை திறப்பதே போராட்டம்தான்) எனக்கு உங்கள் எழுத்து வரமேயாகும். என்னை எளிதில் ஏமாற்ற முடியும் என நினைத்து சொன்னதை இல்லையென்றும், சொல்லாதவற்றை சொன்னதாகவும் கூறுபவர்களையே பார்த்து வந்த எனக்கு தங்கள் தளம் பெரிய திறப்பு.

பாசாங்கில்லாமல் ,அப்பட்டமாக ,முன் பின் முரணில்லாமல், உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் எழுத்து என்னை வசீகரித்தது போல வேறு எந்த எழுத்தாளரும் வசீகரிக்கவில்லை.

கீதை உரை ,குறளினிது ,கட்டண உரை போன்றவற்றை புத்தகமாக மாற்றினால் என்னை போன்றோருக்கு படிக்க வசதியாகயிருக்கும். உங்களுடைய உரைகளை வாசித்தால் பாறையை நகர்த்த ஒரு அடி முன்னால் செல்வேன். நன்றி.

தமிழரசி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2021 11:31

புலிநகக்கொன்றை- கடிதம்

புலிநகக்கொன்றை வாங்க

சிறுவயதில் பி ஆர் சோப்ரா–வின் மஹாபாரதத்தின் தொடக்கத்தில் “நான் காலம் பேசுகிறேன்” என என்றொரு வரி வரும்.. காலம் நம் எல்லாரையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. நம் கடந்தகாலம், நிகழ்காலம், இனிவரும் எதிர்காலத்தையும். அது யாருக்காகவும் நிற்பதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நாம் என்ன முடிவெடுக்கிறோமோ அதுவே நாம்.. நாம் அதுவாகவே ஆகிறோம்…

உங்கள்   “குமரித்துறைவியில்” காலமின்மையை உணர்ந்த பிறகு காலம் எவருக்காகவும் நிற்காதென காட்டும் புலிநகக் கொன்றை…

மரணப்படுக்கையில் இருக்கும் பொன்னாப்பாட்டி. அவள் நினைவினூடாக அவளுடைய பரம்பரை, குடும்பம், நிலம், நீச்சு என நீள்கிறது. இது பொன்னாப்பாட்டியின் குடும்ப வரலாறா எனில், அதுமட்டும் இல்லை. கதையினூடாக தமிழகத்தின் வரலாறும் கூடவே பின்னிப்பிணைந்திருக்கிறது…

சுமார் முதல் நூறு பக்கங்களில் தென்கலை ஐயங்கார் குடும்பத்தை வைத்து நகரும் கதை திடீரென முழுவீச்சுடன் அரசியலுக்குள் நுழைகிறது. கட்டபொம்மன் முதல் ஊமைத்துரை, ராஜாஜி, வ.உ.சி., பாரதி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், எம்.ஜி.ஆர், தி.மு.க. வரை…

பொன்னப்பட்டியின் கணவன் ராமனின் கொள்ளுத்தாத்தா கேசவ ஐயங்கார் காலத்தில் கட்டபொம்மனை தூக்கிலிடுவது போகிறபோக்கில் ஒரு செய்தியாக வருகிறது. கேசவ ஐயங்கார் மூலமாக அரசியல் குடும்பத்திற்குள் நுழைகிறது. சிறிதுகாலத்திற்குப்பின் பொன்னாப்படியின் தாத்தா சிப்பாய்கலகத்தின் துப்பாக்கிச்சூட்டில் தன உயிரை விடுகிறார்.

பொன்னாப்பாட்டியின் அடுத்த தலைமுறையில் அவரது மகன் நம்மாழ்வார் திலகரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயுதபுரட்சி மூலமே வெள்ளையரை விரட்டமுடியுமென உழைக்கிறார். ஆனால் ஆஷ்துரை வாஞ்சிநாதனால் சுட்டு கொல்லப்படுவது அவரது மனதை மாற்றுகிறது, நாடோடியாகி துறவியாகிறார்… அவரது மகன் மதுரகவி காங்கிரஸ் கட்சியில் தொடங்கி கம்யூனிஸ்டாக மாறி தான் நம்பிய கொள்கைக்காக உயிர் துறக்கிறான். அவரது மகன் நம்பி, கம்யூனிசத்தை நம்பி ஏற்றுக்கொண்டதனால் அவனுடைய வாழ்க்கையையும் உயிரையும் இழக்கிறான்.

குடும்பத்தில் இளவயது துர்மரணங்கள் அரசியலோடு கலந்து நடந்துகொண்டே இருக்கின்றன. ஊழ் பலவாறு குடும்பத்தை புரட்டியெடுக்கிறது.

நாவலின் காலம் மிகவும் பெரியது என்பதால் பலவிதமான தகவல்களை சுவாரஸ்யத்தோடு ஆசிரியரால் உள்ளே கொண்டு வரமுடிகிறது. ராஜாஜி, வ.உ.சி., பாரதி, வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன் போன்றோர் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். வ.வே.சு.ஐயர் நடத்தும் பள்ளியில் தனிப் பந்தி போடும் நிகழ்ச்சியும் கதையினூடாக வருகிறது. அதனை ஈவெரா எப்படி அரசியலாக்குகிறார் என்பதையும் விட்டுவைக்கவில்லை.

அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். நம்பி, கண்ணன், திருமலை போன்ற பாத்திரங்களுக்கு நடுவில் பொன்னாப்பாட்டி, உமா, ராதா, ரோசா போன்ற பலமான பெண்களும், நரசிம்மன், ஜீயர், ஜெர்மன் ஐயங்கார் போன்ற துணை கதாபாத்திரங்களும் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

எவ்வளவு கவலைகள்… ஒத்துழையாமை இயக்கம் எப்படி அவனுடைய வக்கீல் தொழிலை எப்படி குலைக்குமென்னும் பட்சியின் கவலை, மகளுக்கு மறுமணம் செய்ய முடியாமல் தவிக்கும் ராமனின் கவலை, பக்கத்துவீட்டு ஐயரை பற்றி பொன்னாவின் கவலை..

பலவிதமான நகைச்சுவைகள்… ஜெர்மன் ஐயங்காரின் சர்வாங்க சவரம், மாணவர்கள் கல்லூரியை ஆஸ்ட்விச்சுடனும், அவரை ஜின்னாவுடனும் ஒப்பிடும்போது அவரின் பதில்…

ஆசிரியரின் வாசிப்பும் பொதுஅறிவு வெளிப்படும் இடங்கள் முக்கியமாக இரண்டு. ஒன்று நாவலில் காட்டப்படும் மேற்கோள்கள். ஷேக்ஸ்பியரிலிருந்து கம்பன் வரை. மார்க்சிய சிந்தனையாளர்கள் முதல் ரெம்ப்ராண்டின் The Anatomy Lesson of Dr. Nicolaes Tulp ஓவியம் வரை. பல புத்தகங்களை வாசிக்கத்தூண்டும் மேற்கோள்கள்… இரண்டாவது பல நுண்தகவல்கள்… எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டநாளில்தான் இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஆட்டம் தொடங்கியது, ஆஷ்துரையை  சுட்ட வாஞ்சிநாதன் திருவிதாங்கூர் அரசில் காட்டிலாகாவில் ரேஞ்சராக பணியாற்றிக்கொண்டிருந்தார், என்பன போல…

இன்னொரு அம்சம், வெவ்வேறு காலங்களில் படிக்கப்பட்ட புத்தகங்கள்… தொடக்கத்தில் “குற்றமும் தண்டனையும்“, பிறகு கம்பன், பிரபந்தங்கள், ஜி.கே. செஸ்டர்டன், The Mayor of Casterbridge, கிரிக்கெட் பற்றிய புத்தகங்கள்… இந்த வாழ்க்கை வாசிப்பதற்கே…

பி.ஏ.கிருஷ்ணன்

எந்த ஒரு சித்ததாந்தமும் அடிப்படையில் வன்முறையையே போதிக்கிறது. எந்த ஒரு சித்தாந்தத்தையும் முழுமையாக நம்பக்கூடாது என்னும் கருத்து கதையின் அடிச்சரடாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நம்மாழ்வாரும் சரி, நம்பியும் சரி, மீண்டும் மீண்டும் தங்கள் சித்தாந்தங்களை மறுபரிசீலனை செய்துகொண்டே இருக்கிறார்கள்… நம்மாழ்வார்–நம்பி உரையாடல் வாழ்க்கையின் நிதர்சங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது. கண்ணன் தொடக்கத்தில் அரசியலில் நுழைய நினைத்தாலும் தன் காதலி உமாவின், தங்கை ராதாவின் உந்துதலால் மத்திய அரசின் ஆட்சிப்பணிக்கு செல்கிறான்.

இவற்றிற்கெல்லாம் நடுவில்… புத்தகத்தின் முக்கியமான பேசுபொருள்… காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. வரலாறு யாருக்காகவும் நிற்பதில்லை.. சில சமயங்களில் நம்மை மீறி சென்றுவிடுகிறது, நம்பியின் கதை போல… சில சமயங்களில் நம்மை வெளியே வைத்து விளையாடுகிறது, நம்மாழ்வாரின் கதை போல… சில சமயங்களில் நம்மை மாற்றி சென்றுவிடுகிறது, உண்டியல் கடை குடும்பத்தை போல… அப்படி காலத்தால், வரலாற்றால் சுழற்றியடிக்கப்பட்ட குடும்பத்தின் கதையே புலிநகக் கொன்றை… 


அன்புடன்,

கோ வீரராகவன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 19, 2021 11:31

May 18, 2021

கி.ரா- அரசுமரியாதை, சிலை.

கி.ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்ட செய்தி நிறைவை அளித்தது. அவருக்குச் சிலை வைக்கப்படும் என்பதும் மகிழ்வூட்டுவதே. எப்போதும் என் ஆதங்கமும் கோரிக்கையுமாக இருந்தது அதுதான். இந்த அரசுக்குக் கலை- கலாச்சார விஷயங்களில் ஆலோசனை சொல்ல நல்ல குழு அமைந்துள்ளது என நினைக்கிறேன்.

நல்ல ஆட்சியாளன் என்பவன் அதீத திறமைசாலி என்பதில்லை. என்னிடம் பொள்ளாச்சி மகாலிங்கம் சொன்னது இந்தவரி. “நல்ல நிர்வாகி என்பவன் நல்ல குழுவை அமைக்கத் தெரிந்தவன். அதன் குரலை கேட்கும் மனம் கொண்டவன்” தமிழிலக்கியவாதி என்ற முறையில் தமிழக, பாண்டிச்சேரி அரசுகளுக்கு நன்றி.

இந்தச் சிலை, அரசுமரியாதை எல்லாம் எதன்பொருட்டு? இதனால் கி.ராவுக்கு ஆகப்போவது ஏதுமில்லை. அத்தனை வாழ்ந்தவர் அவற்றை எல்லாம் எளிதாகக் கடந்திருப்பார். இது நமக்கு நாமே சொல்லிக் கொள்வது. நாம் எந்தெந்த மதிப்பீடுகளை முதன்மையாகக் கருதுகிறோம், எவற்றை நம் வருந்தலைமுறைக்கு முன்னுதாரணமாக நிறுத்துகிறோம் என்பதுதான் இது.

கேரளத்தில் எழுத்தாளர்களுக்கு அரசுமரியாதையுடன் அடக்கம் நடைபெறுகிறது. சிலைகள் வைக்கப்படுகின்றன.நினைவகங்கள் உள்ளன. நூலகங்களுக்கு பெயர்கள் சூட்டப்படுகின்றன. அதன் வழியாகவே அந்த எழுத்தாளர்கள்  கலாச்சார அடையாளங்களாக ஆகிறார்கள். தலைமுறை நினைவுகளில் நீடிக்கிறார்கள். அத்தகைய ஆளுமைகள் வழியாகவே ஒரு பண்பாட்டு மரபு உருவாக்கப்படுகிறது. ஒரு மாபெரும் கோலத்தின் புள்ளிகள் இவர்கள்.

இவர்கள் இல்லை என்றால் வேறெவர் நம் பண்பாட்டின் புள்ளிகளாக அமைய முடியும்? எவரைக்கொண்டு நாம் நம் வழித்தோன்றல்களுக்கு நம் பண்பாட்டை விளக்கமுடியும்? இது நமக்கு நாமே ஓர் அடையாளத்தை அளித்துக் கொள்வது. மரபென்பது அதுதான்,  நாமே தொடுத்துச் சூட்டிக்கொள்ளும் மாலை அது. தகுதியான மலர்களால் அமைந்தால் நமக்கு பெருமை, அழகு.

கி.ராஜநாராயணனின் இடம் தமிழில் வெவ்வேறு விமர்சகர்களால் அழுத்தமாக நிறுவப்பட்டது. அவரை இன்று மதிப்பிடுபவர்கள் அவ்விமர்சகர்களின் விவாதங்கள் மற்றும் கருத்துக்களின் வழியாகவே அவரை அணுகவேண்டும். கொஞ்சமாவது விமர்சனங்களை வாசித்தறியவேண்டும். வெறும் செவிச்செய்திகளிலிருந்து பேசக்கூடாது. ஒன்றாம் வகுப்பில் இருந்து மீண்டும் பேச ஆரம்பிக்கலாகாது.

பெரும்பாலும் ஓர் எழுத்தாளரின் மறைவை ஒட்டி மட்டுமே அவரைப் பற்றிப் பேசுபவர்கள் செய்யும் பிழை இது. இன்றைய சமூக ஊடகச்சூழலில் ஒற்றைவரிகள் வழியாக, அரட்டைகள் வழியாக இது பெருகவும்கூடும். இளம் வாசகர்களை அந்த சலசலப்புகள் குழப்பக்கூடும் என்பதனால் இதை எழுதுகிறேன்.

*

கி.ராஜநாராயணனின் இடமென்ன தமிழில்? மிகச்சமீபமாக அவரைப்பற்றி அவருடைய கடைசிநூலான மிச்சக்கதைகளின் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில்கூட அதை விரிவாகப் பேசியிருக்கிறேன்.

தமிழ்நவீன இலக்கியத்தில் அதன் தோற்றம் முதலே இல்லாமல் இருந்த அடிப்படையான ஓர் அம்சம் என்பது நாட்டார்கூறு. இங்கல்ல, உலகமெங்கும் எந்தக் கலாச்சாரச் செயல்பாடும், எந்த இலக்கியமும் நாட்டார் அடிப்படைகளில் இருந்து முற்றாக விலகி வெளியெ செல்லமுடியாது.

ஏனென்றால் நாட்டாரிலக்கியத்திலேயே மக்களின் வாழ்க்கை நேரடியாக வெளிப்படுகிறது. அடிப்படையான ஆழ்படிமங்கள், வடிகட்டிக் கட்டுப்படுத்தப்பாத நேரடியான உணர்ச்சிகள், அன்றாட நடைமுறைகள், முன்பிலாத வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் பதிவாகின்றன.

செவ்வியல் அதன் நுண்மையாக்கம், பெருங்கல்வி ஆகியவற்றினூடாக நாட்டாரியலைக் கடந்து செல்லும். செவ்வியலில் இருக்கும் நாட்டாரியல்கூறு நுண்வடிவை அடைந்திருக்கும். தத்துவப்படுத்தப்பட்டிருக்கும்.

நவீனத்துவம் அதன் விமர்சனத்தன்மை வழியாக, விலக்கம் வழியாக, தத்துவச்சார்பு மற்றும் அரசியல்சார்பு வழியாக நாட்டாரியலைக் கடந்து செல்லும்.

ஆனால் அந்த கடந்துசெல்லல் ஓர் எல்லைவரைக்கும்தான். அந்த எல்லைக்கு அப்பால் செவ்வியல் வெறும் உத்திப்பயிற்சியாகவும் புலமைப்பிரகடனமும் ஆகும். நவீனத்துவம் வெறும் வடிவச்சோதனையாக, மொழிச்சோதனையாகத் தேங்கும்.

நாட்டாரியலில் இருந்து தொடங்கி விலகி மறுதிசைக்குச் செல்லும் அந்த ஊசல் அதன் கடைசி எல்லையை நோக்கி எழுந்தபின் திரும்பி நாட்டாரியலுக்கு வந்தே ஆகவேண்டும். ஐரோப்பாவின் கலை மரபை, இந்தியக் கலையின் வரலாற்றை அறிந்தவர் எவரும் இதைக் காணமுடியும்.

தமிழ் நவீன இலக்கியம் ஒரு கட்டத்தில் ’செம்மையான வடிவத்துக்கான தேடல்’ என்ற இடத்தை வந்தடைந்தது. அதன் வாழ்க்கைப்பார்வை என்பது அதே இருத்தலியல், மார்க்ஸிய, ஃப்ராய்டிய அணுகுமுறைதான். வடிவம் சரியாக வந்தால் நல்ல இலக்கியம் என்னும் கோணம் உறுதிப்பட்டது. நாட்டாரியலின் சுத்தியல் வந்து உடைக்காவிட்டால் மேற்கொண்டு ஒன்றுமே நிகழாதென்ற நிலை.

அத்தருணத்தில் அடித்தளத்தைப் பெயர்க்கும் நாட்டாரியலின் அறைதலாக வந்தவர் கி.ரா. தமிழ் நவீன இலக்கியத்தில் நாட்டார் அழகியலின் ஊடாட்டம் கி.ரா வழியாகவே நடந்தது. அதுவே அவரது முதன்மைப் பங்களிப்பு.

இந்த ‘நாட்டார் அழகியலை நாடுவது’ என்னும் அலை கி.ரா எழுதவந்து மேலும் இருபதாண்டுகள் கழித்து எழுபதுகளில் ஐரோப்பிய கலை,நாடக, இலக்கிய அரங்குகளில் எழுந்து முதன்மைப்பட்டது. அங்கிருந்து எண்பதுகளில் இங்கே வந்தது. கூத்துப்பட்டறை போன்ற அமைப்புகளெல்லாம் அதன் உருவாக்கங்கள்தான்.

இதையெல்லாம் நூறு முறை தெளிவாகவே பேசிவிட்டோம். அதாவது கி.ரா ஒரு நவீன எழுத்தாளர், நாட்டார்கலைஞர் அல்ல. ஆனால் நாட்டார் மரபின் கலைக்கூறுகள் நவீன இலக்கியத்தில் அவர் வழியாகவே வந்தமைந்தன. மொத்த நவீன இலக்கிய மரபையும் மறு ஆக்கம் செய்தன. ஆகவேதான் கோணங்கி அவரை முன்னத்தி ஏர் என்றார்.

நாட்டாரியலின் அழகியல் வேறு, செவ்வியலின் அழகியல் வேறு, நவீனத்துவத்தின் அழகியல் வேறு. பேசுபவர்கள் குறைந்தபட்சம் இந்த வேறுபாட்டையாவது புரிந்துகொள்ளவேண்டும்.

செவ்வியலின் அழகியல் என்பது தொகுப்புத்தன்மை கொண்டது, எழுத்தின் எல்லா வடிவங்களையும் உள்ளடக்குவது, எல்லாவகை உணர்ச்சிகளுக்கும் இடமளிப்பது. மையத்தரிசனம் நோக்கிச் செல்வது, அதற்கு தத்துவத்தை பயன்படுத்துவது.

நவீனத்துவத்தின் அழகியல் என்பது தனக்குரிய வடிவபோதம் கொண்டது. சொல்லவந்ததை மட்டும் சொல்லும் ஒருங்கிணைவுள்ள வடிவம், குறிப்பால் உணர்த்தும் கூறுமுறை, உணர்ச்சிகள் மேலெழாத சமநிலை, பூடகத்தன்மை ஆகியவை கொண்டது.

நாட்டாரியல் நேரடியானது, அப்பட்டமானது, இடக்கரடக்கல்கள் அற்றது. அது உள்ளர்த்தங்கள் குறிப்புணர்த்தல்கள் வழியாக செயல்படுவது அல்ல. அதன் வலிமை இருப்பது அதன் நான்கு அம்சங்களில். ஒன்று, அதன் நுட்பமான,விரிவான நிலச்சித்தரிப்பு. இரண்டு, அதன் நம்பகமான அன்றாடச் சித்தரிப்பு. மூன்று, அதன் நேரடியான உணர்ச்சிவேகம், அறவேகம். நான்கு, அதில் உள்ளுறையும் ஆழ்படிமங்களும் அதன் தொன்மங்களும்.

நாட்டாரியல் அப்படியே வெளிப்படுகையில் அதில் மொழியின்நேரடியான  உச்சம் வெளிப்படும், ஆனால் நுட்பம் அரிதாகவே வெளிப்படும். நுட்பம் என்பது தேர்ந்த ரசிகர் – வாசகர்களுக்காக உருவாக்கப்படுவது. அதற்கு நாட்டாரியலில் இடமில்லை.

ஆனால் நாட்டாரியல் நவீன இலக்கியத்தில் வெளிப்படுகையில் அதில் நுட்பமும் இடம்பெறும். கி.ராவின் பங்களிப்பு அவ்வகையிலேயே. கன்னிமை போன்ற ஒரு கதையில் கன்யாகுமரி இடம்பெறுவதை ஒரு நாட்டார்கதையில் காணமுடியாது.

நாட்டாரியலில் ‘எழுத்தாளன்’ இல்லை. அதில் இருப்பவன் ‘கதைசொல்லி’. கதைசொல்லி என்ற சொல் எழுத்தாளன், நாடக ஆசிரியன், கதைப்பாடகன் என கதையை கையாளும் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் தொகுப்பு அடையாளம் கொண்டது. ஓவியத்தில் கதை இருந்தால் அவனும் கதைசொல்லியே என்றுகூட வரையறுக்கப்பட்டதுண்டு.

அதாவது கதைசொல்லியை எழுத்தாளனை விடப் பெரிய ஆளுமையாக, தொல்வரலாற்றுக் காலம் முதல் இருந்துவரும் ஒர் அழியா ஆளுமையாக பின்நவீனத்துவம் உருவகித்தது. இதைப் பற்றியெல்லாம் எத்தனை பக்கங்கள் பேசப்பட்டுள்ளன! நானே பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறேன்.பேசியிருக்கிறேன். அதன்பின்னரும் இதோ அடிப்படைகளை விளக்கவேண்டியிருக்கிறது.

வரலாறு அறியாதவர்களுக்காக கொஞ்சம் விரிவாக. 1986ல் ஆப்ரிக்க எழுத்தாளர் வோலெ சோயிங்காவுக்கு [Wole Soyinka] நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.  அதையொட்டிய பேட்டி ஒன்றில் அவர் தன்னை ஆப்ரிக்காவின் தொன்மையான கதைசொல்லிகளின் மரபைச் சேர்ந்தவராக உணர்வதாகவும், எழுத்துவழி இலக்கியமென்பது அண்மைக்காலத்தையது ஆகவே ஆழமற்றது என எண்ணுவதாகவும், மேற்கொண்டு ஆப்ரிக்க வாய்மொழி மொழியில் எழுதப்போவதாகவும் சொன்னார்.

அதையொட்டி உலகளாவ உருவான விவாதம் தமிழிலும் விரிவாகவே நிகழ்ந்தது. வாய்மொழி இலக்கியமே இலக்கியத்தின் அடித்தளம் என்றும், கதைசொல்லியே எழுத்தாளனின் தொல்வடிவம் அல்லது பெருவடிவம் என்றும் முன்வைக்கப்பட்டது. பலவகையிலும் அந்த விவாதம் விரிந்து சென்றது. அதன் வழியாகவே கி.ரா ஒரு கதைசொல்லியாக அடையாளம் காணப்பட்டார்.

கி.ராஜநாராயணன் தன்னை கதைசொல்லி என்றே அறிமுகம் செய்தார். எழுதுவது என்பது சொல்லுதலின் ஒரு வழிமுறையே என்று வாதிட்டார். எழுத்துமொழி என்பதற்கே எதிராக நிலைகொண்டார். எழுதப்பட்டவை எல்லாமே அழிந்துபோகும், பண்பாட்டில் நிலைகொள்ளவேண்டும் என்றால் அவை வாய்மொழியில் நிலைகொண்டாகவேண்டும் என்றார். அதாவது வாய்மொழியில் இருந்து வாய்மொழிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் தற்காலிகமாக மட்டும் கதைகள் நூலாக இருக்கின்றன, அவ்வளவுதான். அவை அதிகம்பேருக்கு சென்றடைவதற்காக எழுதப்படுகின்றன. எழுத்து என்பது கதைசொல்லலின் ஊர்தி மட்டுமே.

[இலக்கியவாசகனுக்கு விசித்திரமாகத் தோன்றும், ஆனால் யோசித்துப் பாருங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய எந்த புனைகதையை நீங்கள் நேரடியாக வாசித்தீர்கள்? அவை கதையாக, வாய்மொழிக்குள் புகுந்து வேறுவேறு கலைவடிவங்கள் வழியாகவே நீடிக்கின்றன. விக்டர் யூகோவின் ஜீன் வல் ஜீனை அறியாதோர் குறைவு. அந்நாவலை படித்தவர்கள் மிகமிக குறைவு. டிராக்குலாவை அறியாதோர் இல்லை, பிராம் ஸ்டாக்கரின் நூலை வாசித்தவர்களும் இல்லை.]

தொண்ணூறுகளின் பின்நவீனத்துவம் வந்தது. அவர்களும் எழுத்துவடிவம் [logos] என்பதை ஒரு படி குறைவானதாகவே கண்டனர். அதில் அதிகார உருவாக்கம் உள்ளது. எழுத்து உறையவைக்கப்பட்டு பன்முகப்பொருளை அளிக்காததாக உள்ளது. அதில் ‘இடையீடு’ [intervention] என்ற அம்சம் இல்லை. அதாவது பல்வேறு கலைகளின் ஊடாட்டம் இல்லை. அதில் பார்வையாளர், வாசிப்பவர் பங்கெடுக்க வழி இல்லை. பின்நவீனத்துவத்தின் இப்பார்வைக்கு உலகளாவ ஓர் ஏற்பு உண்டு. அதுவே கி.ராவை அதற்கு முன்பிருந்ததைவிட கூடுதலான முக்கியத்துவம் கொண்டவராக ஆக்கியது. மலையாளத்தில் பிற அனைவரை விட பஷீரை முன்னெடுத்தது.

இவ்வாறுதான்  ‘கதைசொல்லி’யாக கி.ராஜநாராயணன் கூறப்ப்பட்டார். அதுவரை எழுதிக்கொண்டிருந்த சுந்தர ராமசாமியின் மரபில் இருந்து அடுத்த தலைமுறை எழுத்து உருவாகவில்லை. சுந்தர ராமசாமியின் அணுக்கமானவனாக இருந்தாலும் கூட நான் அவரிலிருந்து தொடங்கவில்லை. என்னுடைய படுகை போன்ற கதைகளின் மூலம் கி.ராஜநாராயணனே.  கி.ராஜநாராயணனிடமிருந்தே பூமணி முதல் சோ.தர்மன் வரை படைப்பாளிகள் தோன்றினர். சமீபத்தில் வெளிவந்த பூமணியின் கொம்மை கூட கி.ராஜநாராயணனின் மரபின் விளைகனிதான்.

நாட்டாரிலக்கியம் என்பது ஒரு நிலத்துடன் அடையாளம் கொண்டிருக்கும். எந்த நிலத்தைச் சேர்ந்த இலக்கியம் என்ற கேள்வி அதற்கு மிக முக்கியமானது. செவ்வியல், நவீனத்துவம் இரண்டுக்கும் வெளிப்படையான ஓர் உலகளாவிய தன்மை, அனைத்துமானுடத் தன்மை உண்டு. அதற்கு நேர் எதிரானது நாட்டார் அழகியல்.

அந்த அடிப்படையிலேயே கி.ரா கரிசல் எழுத்தாளர் என அடையாளம் செய்யப்பட்டார். நாட்டாரியல் அழகியல்கூறு கொண்ட படைப்பாளியையே அப்படி அடையாளப்படுத்த முடியும், அடையாளப்படுத்த வேண்டும். நவீனத்துவ, செவ்வியல் படைப்பாளிகளை அவ்வாறு அடையாளப்படுத்தக் கூடாது.

அதாவது வண்ணதாசன் நெல்லை எழுத்தாளர் அல்ல. சுந்தர ராமசாமி நாஞ்சில் எழுத்தாளர் அல்ல. ஆனால் கி.ரா கரிசல் எழுத்தாளர். பூமணி கரிசல் எழுத்தாளர். கோணங்கி அம்மரபின் ஒரு பதாகை. ஆனால் கோயில்பட்டிக்காரரான தேவதச்சன் கரிசல் கவிஞர் அல்ல. இதையெல்லாம் மிகமிக விரிவாகப் பேசிவிட்டோம். மீண்டும் சொல்கிறேன்.

அவ்வாறு நிலத்துடன் கிராவை அடையாளப்படுத்துவது அவரை அறிவதற்கு மிக உதவியானது. அது அவரை ‘குறுக்குவது’ அல்ல. அவருடைய அழகியலை அது உருவான மண்ணுடன் ஆழமாகப் பிணைப்பது. அவரை அந்த மண்ணின் மேலும் விரிவான தொன்மையான பண்பாட்டுடன் இணைத்து விரிவாக்குவது.

நவீனத்துவ எழுத்தாளருக்கு அப்படி ஒரு தனித்த நிலம் இல்லை. அவர் நின்று பேசுவதற்கென தனித்துவம் கொண்ட பண்பாடும் இல்லை. அவர் திரும்பத்திரும்ப தன்னைப் பற்றியே பேசுகிறார். வாசகன் அவருடைய சொந்த ஆளுமை நோக்கி மட்டுமே செல்லமுடியும்.

கி.ரா தன்னை கரிசல் படைப்பாளி  என்றே முன்வைத்தார். இன்னொருவகை அடையாளத்தை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. கதைசொல்லி என்ற சொல் தமிழில் நிலைநிற்கவும் அவரே காரணம்.

ஓர் எழுத்தாளனை அவ்வாறு வட்டாரப்படுத்துதல் என்பது குறுக்குதல் அல்ல. சர்வதேசக் கருக்களைப் பேசுபவன் சர்வதேச எழுத்தாளனும் வட்டாரத்தைப் பேசுபவன் வட்டார எழுத்தாளனும் அல்ல.

‘உலகப்பொதுத்தன்மை என்பது பொய்யானது. அது ஒரு கருத்தியல் அதிகாரம் மட்டுமே. உலகம் முழுக்க ஒரு பார்வையை வன்முறையாக திணிப்பது அது. எது வட்டாரத்தன்மை கொண்டதோ அது மட்டுமே உலகத்தன்மைகொண்டதாக இருக்கமுடியும்’ என்பது பின் நவீனத்துவ நிலைபாடு. அதை ஏற்றாகவேண்டும் என்பதில்லை, மறுக்கலாம், ஆனால் அந்த நிலைபாடு உருவாக்கிய தர்க்கங்களை வாசித்து புரிந்துகொண்டு மறுக்கவேண்டும்.

கி.ராவின் புனைவுலகின் அழகியல் என்பது நாட்டாரியலும் மார்க்ஸிய உலகப்பார்வையும் முயங்கிய ஒன்று. அவருடைய வாழ்க்கைத் தரிசனம் என்பது அந்நாட்டார் மரபிலிருந்து எழுந்து உலகுநோக்கிப் பேசுவது. அது வழக்கமான ஒழுக்கநெறிகளை கடந்துசெல்கிறது. எப்போதும் பேசப்படும் தத்துவக் கேள்விகளை பொருட்படுத்துவதில்லை. ஆனால் அது ஒரு மானுடக்கனவை முன்வைக்கிறது. எந்த நவீனத்துவ எழுத்தாளரிடமும் அத்தகைய கனவு கிடையாது.

அக்கனவால்தான் அவர் மாபெரும் படைப்பாளி. இலக்கிய விமர்சனத்தளத்தில் நிறுவப்பட்ட அக்கருத்தை இலக்கியவிமர்சனத்தால் மட்டுமே எதிர்கொள்ளவும் முடியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2021 11:36

கி.ரா. உரையாடல்

அஞ்சலி:கி.ரா

ஜெ,

கனத்த இதயத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இலக்கிய அறிமுகம் இல்லாத இளமை காலங்களில் வாசித்த ‘வயது வந்தவர்களுக்கு மட்டும்’ மூலமாகதான் கிரா அறிமுகமானார். இலக்கிய பரிச்சயம் ஏற்பட ஏற்பட அவரது மற்ற படைப்புகளையும் வாசிக்க தொடங்கினேன். நகரங்களில் வளர்ந்த எனக்கு கரிசல் நிலத்தை, அதன் வாழ்வை அவர் அறிமுகம் செய்து வைத்தார். என்றும் வணங்குதலுக்குரிய மூத்த படைப்பாளியாக என் மனதில் அவர் நின்றாலும், கிராவை சந்திக்க முயன்றதில்லை.

இந்நிலையில், சென்ற வருடம்,அக்டோபர் 2ம் தேதி, உங்கள் வாசக நண்பர் முத்து மாணிக்கம் என்னை தொடர்புக்கொண்டார். அன்று தான் அவரை முதன்முதலாக சந்தித்தேன். அவர் கி ராவை சந்திக்கப்போவதாக கூறினார். நானும் இணைவது என முடிவு செய்து, அக்டோபர் 4ம் தேதி இருவரும் புதுவைக்கு பயணப்பட்டோம். ஒரு தெய்வச்செயலாக தான் நான் கிராவை சந்திக்க அந்த வாய்ப்பு அமைந்தது. அதை தவறவிட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பு எனக்கு கிடைக்காமலே போயிருக்கும்.

நோய்தொற்று காலத்தில் அவரை சந்திப்பது குறித்து தயக்கம் இருந்தது. சந்திப்பை பற்றி கூறும் பொழுது தாங்களும் என்னை எச்சரித்தீர்கள். இளவேணிலிடம் உறுதிசெய்துக்கொண்டு சென்றோம். கிரா மிக உற்சாகமாக இருந்தார். தினமும் 4-5 பேர் வந்து சந்தித்துக்கொண்டிருந்தார்கள், இப்பொழுது அது வாரத்தில் ஓரிருவராக குறைந்துவிட்டது என அவரது மகன் குறிப்பிட்டார். வாசகர்களை சந்திப்பது கிராவிற்கு உற்சாகமூட்டுவதாகவே இருந்தது. நாங்கள் சென்ற அன்று கவிஞர் சாம்ராஜும் தனது நண்பருடன் கிராவை சந்திக்க வந்திருந்தார்.

உணவு இடைவேளைகளை தவிர்த்து கிட்டத்தட்ட 5 மணிநேரம் சோர்வோ தளர்வோ ஏதுமின்றி கிரா உரையாடினார். மெல்லிய கிண்டல் ஊடோடிய உரையாடல். தனது பால்யம், எழுத தொடங்கியது, இசை நாட்டம் என அவர் பகிந்தவற்றை தனி பதிவாக எழுத வேண்டும். இன்று நினைவுகூறுகையில், அவர் காலடியில் அமர்ந்து அவர் பேச கேட்டுக்கொண்டிருந்ததும், சிறிது நேரம் அவருக்கு கால் பிடித்துவிட வாய்த்ததும் வாழ்வின் மிகப்பெரும் பேறாக கருதுகிறேன்.

தொடர்ந்து நமது விஷ்ணுபுரம் உரையாடலில் அவர் பங்குபெற்று வாசகர்களின் கேள்விகளுக்கு விரிவாக பதிலளித்தார். இந்த உரையாடல்களுக்கு ஒரு வாரம் முன்பு, ஆஸ்டின் சௌந்தர் அவர்களும் நானும் சில நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதிரி அமர்வை ஒருங்கிணைப்போம். முக்கிய அமர்வில் தொழில்நுட்ப சிக்கல்கள் வராமல் இருக்க இந்த மாதிரி அமர்வு உதவும். பொதுவாக பங்குபெறும் ஆளுமைகளுடன் சிறு அறிமுகம், நிகழ்சி நிரல் குறித்த தகவல்கள் என சிறு நிகழ்வாக முடிந்து விடும். ஆனால், கிராவுடனான மாதிரி அமர்வு, ஒரு சிறு வாசக உரையாடலாக நீண்டது. பதிவு செய்யப்பட்ட அந்த உரையாடலை சில  திருத்தங்களுடன் நண்பர்களுடன் பகிர வேண்டும் என முடிவு செய்திருந்தோம். பல காரணங்களால் தாமதமாகியதை, இந்த இரவு செய்துமுடித்து YouTubeல் பதிவேற்றி உள்ளேன்.

முதுபெரும் கதைச்சொல்லி, தனது வாழ்வின் சில கதைகளை பகிந்துக்கொண்டபோது…

அன்புடன்

லாஓசி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2021 11:35

ஸாரி டாக்டர்!

[image error]

பிஸாரோ என்னும் கார்ட்டூன் வரிசையின் டாக்டர் நகைச்சுவைகள். டான் பிராரோ வரைந்தவை.

நம்மூரிலும் நாம் டாக்டர் நகைச்சுவைகள் எழுதிக்கொண்டிருக்கிறோம். “ இடுக்கண் [பிறருக்கு] வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொன்னதன் அடிப்படையில் நாம் அதிகம் சிரிப்பது டாக்டர்களைப் பார்த்துத்தான். ஏனென்றால் நாம் மருத்துவமனையில் சிரிப்பதில்லை. அங்கிருந்து வருவதுதான் அங்கே நிகழும் மிக மகிழ்ச்சியான அனுபவம். ஆகவே வந்தபின் சிரிக்கிறோம்.

ஒப்புநோக்க நம் டாக்டர் ஜோக்குகள்தான் மேல். மதன் நிறையவே வரைந்திருக்கிறார். ஆனால் ஜோக்குகளுக்கு ஒரு பிரசிச்னை உண்டு. நகைச்சுவைதான் ஒரு பண்பாட்டிலும், அன்றாடத்திலும் ஆழமாக வேரூன்றியது. அப்பண்பாட்டில் ஊறாமல் அந்நகைச்சுவையை ரசிக்க முடியாது. சினிமாக்களை டப் செய்யும்போது காமெடியை மட்டும் அந்த ஊர்க்காரர்களை வைத்து மீண்டும் புதியதாக எடுக்கும் வழக்கம் அதனால்தான் இருந்தது. வடிவேலு நகைச்சுவைக்குச் சிரிக்கும் மலையாளியை பார்த்ததே இல்லை. மலையாளத்தில் காமெடி உண்டா என நந்தமிழர் கேட்கிறார்கள்.

டாக்டர்கள் நகைச்சுவையாக இருப்பது குறைவு. இருந்தால் நமக்கு கொஞ்சம் பீதியாகும். இரண்டு டாக்டர் நகைச்சுவைகள் எனக்கு பிடித்தவை. ஒன்று அடூர்பாசி டாக்டராக வந்து ஒரு படத்தில் சொன்னது. மோசமாக இருமும் நோயாளியிடம் “ரொம்ப முடியலேன்னா இருமாதீங்க”

இன்னொன்று திருவனந்தபுரத்திலிருந்த டாக்டர் குருவிளா என்ற புகழ்பெற்ற சர்ஜனைப் பற்றியது. இலவசமாக அறுவைசிகிழ்ச்சை செய்து பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றிய மேதை. எந்த மேதையையும் போல கிறுக்கு.

ஒரு நோயாளி. அவனுக்கு கிட்னியில் கல். அதற்கு அறுவை செய்யவேண்டும். ஆனால் கழற்றிப் பார்த்தால் அவனுடைய விதைப்பையில் தொடக்க நிலை கான்ஸர்.டாக்டர் அதை வெட்டி வீசிவிட்டார்.

மறுநாள் டாக்டர் நோயாளியிடம் “பேரென்னன்னு சொன்னீங்க?”

“மணிகண்டன், டாக்டர்”

‘இனிமே கண்டன்னு மட்டும் சொல்லிக்கோ”

நகைச்சுவையைப் பற்றி இவ்வளவு சோகமாக பேசவேண்டியிருக்கிறது

https://www.bizarro.com/cartoons

 

“வாழ்த்துக்கள். உங்க நோய் மட்டும் என்னன்னு கண்டுபிடிச்சுட்டோம்னா அதுக்கு உங்க பேரையே போடப்போறோம்””நாம எலிகளை ஆராய்ச்சி பண்றப்ப அதுகளும் நம்மளை ஆராய்ச்சி பண்ணுதுபோல. ஒரு பேப்பர் பிரசண்ட் பண்ணியிருக்குதுங்க”

 

”சரி விஷயத்துக்கு வறேன் டாக்டர். நீங்க அடுத்தவாரம் என் நெருக்கமான தோழிக்கு அழகுசிகிழ்ச்சை பண்றதா தெரிஞ்சுகிட்டேன். அதை சொதப்புறதுக்கு என்ன கேக்கிறீங்க?”

 

எலும்புமுறிவு நிபுணரின் செல்ஃபி[image error]”நர்ஸ், இப்ப நீ என்னைய ஜட்டியோட பாத்தாச்சு. இதுக்குமேலே என்ன? உன் போன் நம்பர் அட்ரஸ் டீடெயில் குடு””ஒருவழியா எடையைக்குறைன்னு சொல்லாத ஒரு டாக்டரை கண்டுபிடிச்சிட்டேன் டாக்டர்””ஒண்ணும் பிரச்சினை இருக்காதுன்னுதான் தோணுது. எக்ஸ்ரேயிலே நீங்க உள்ள சிரிச்சு சந்தோசமா இருக்கிறதாத்தான் காட்டுது”[image error]”நீங்க நெறைய பணம் வச்சிருக்கிறதா டயக்னைஸ் பண்ணியிருக்கோம். நீங்க நார்ர்மலாகிறது வரை டிரீட் பண்றதா முடிவெடுத்திருக்கோம்”“நல்ல செய்திதான். உங்க புரோஸ்ட்ரேட் வீங்கலை. உங்க உடம்புதான் மொத்தமா சுருங்கிட்டு வருது”[image error]”வீட்டிலே அம்பத்தெட்டு இஞ்சு டிவி வாங்கினபிறவுதான் இப்டி ஆரம்பிச்சுது டாக்டர்””என்னோட கதை உங்களுக்கு இவ்ளவு திரில்லா இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல டாக்டர்’
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2021 11:35

கதாநாயகி-11

𝟙𝟙

இந்த பெரிய வராந்தாவில் அமர்ந்து, மேலிருந்து பொழியும் வெண்ணிறமான நெருப்பு போன்ற வெயிலில் பச்சை இலைகள் சுடர் என ஒளிவிடுவதைப் பார்த்தபடி இந்த புத்தகத்தைப் பிரித்து மடியில் வைத்திருக்கிறேன். ஆனால் படிக்காமல் வெறுமே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். பகலில் நான் படிப்பது குறைவு. பெரும்பாலும் பகற்கனவு கண்டு சோம்பி அமர்ந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் மடியில் புத்தகம் இருக்கவேண்டும்.

இது ஒரு நாவல். இந்நாவலை நான் இதற்குமுன் பலமுறை முழுக்கவே படித்துவிட்டேன். கைக்கு வந்த அன்றே முழுமையாக படித்தேன். நான் படிப்பதெல்லாம் இரவில்தான். ஒரு சிறு தூக்கம் முடித்து நான் விழித்துக்கொள்வேன். பெரும்பாலும் அருகே மக்கின்ஸி இருப்பதில்லை. அவர் அலைந்துகொண்டே இருக்கப் பழகியவர். அவருக்கு உள்ளூர்ப்பெண்களிலும் ஆர்வம் மிகுதி. அப்படியே வாசிக்க ஆரம்பித்தால் என்னால் நிறுத்தவே முடியாது. காலையில்தான் வாசிப்பு நிற்கும்.

இந்தப்புத்தகம் கொஞ்சம் பெரியது. ஐநூறு பக்கம் வரை இருக்கும். சென்ற மாதம்தான் இது என் கைக்கு வந்தது. அஞ்சுதெங்கில் நான் புத்தகங்களுக்காக சொல்லிவைத்திருந்த அகஸ்டின் ஜான் என்னும் சிரிய கத்தோலிக்கன் புத்தகக் கட்டுகளுடன் என்னை தேடிவந்தான். புத்தகங்களை என் முன் பரப்பினான்.  நான் முழந்தாளிட்டு அமர்ந்து அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன்.

பெரும்பாலான புத்தகங்கள் லண்டனின் ஈரநைப்புடன் கட்டுகளாக கட்டப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டு, நாலைந்து மாதம் அப்படியே இருந்து, இங்கே வந்து சேர்பவை. அவற்றில் பூஞ்சை பூத்திருக்கும். பல பக்கங்கள் நீரிலூறி நிறம் மாறியிருக்கும். அவற்றை முரட்டுத்தனமாகவே அழுத்திக் கட்டுவார்கள். அவற்றை கட்டி அடுக்குபவர்களுக்கு புத்தகமென்றால் என்னவென்றே தெரியாது. ஆகவே அவற்றின் விளிம்புகள் நசுங்கி சிதைந்திருக்கும். மேலே இருக்கும் புத்தகங்களில் கயிறு ஆழமாகப் பதிந்த தடம் இருக்கும்.

புகழ்பெற்ற புத்தகங்கள் எல்லாமே பழையவையாகவே இருக்கும். புதியவையாகத் தோன்றும் புத்தகங்கள் பெரும்பாலும் பயனற்றவை. அவற்றில் கிறிஸ்தவ மதநூல்களே மிகுதி. ஆர்வக்கோளாறால் வயதான பிரபுக்கள் எழுதி வெளியிடும் இசைநாடகங்கள் ஏராளமாக இருக்கும். அவை பெரும்பாலும் பழைய ரோம,கிரேக்க கதைகளை தழுவி உருவாக்கப்பட்டவை.

பெரும்பாலான பிரபுக்கள் கிராமர்ஸ்கூலில் ரைம் எழுத கற்றுக்கொண்டிருப்பார்கள். பிளெயின் பொயட்ரி என எதையும் எழுதலாம்.அவர்களைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம். இயாம்பிக் பெண்டாமீட்டரில் எல்லாம் எழுதுபவர்கள் கொடூரமானவர்கள். மொழியை அவர்கள் செம்புக்கம்பிபோல வளைப்பார்கள். சேறுபோல குழைப்பார்கள். இசைநாடகங்களை எழுதக்கூடாது என்று அரசர் ஓர் ஆணையிட்டால் ஆங்கிலத்தைக் காப்பாற்றலாம் என்று நான் கர்னல் சாப்மானிடம் சொன்னேன். அவர் வெடித்துச் சிரித்தார்.

பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன், புதியவற்றை நோக்கி திரும்பவே இல்லை. ஆனால் ஓரக்கண்ணால் ஒரு பெயரைப் பார்த்துவிட்டேன். ஃபேன்னி பர்னி. நான் அந்தப்புத்தகத்தை பாய்ந்து எடுத்துப் புரட்டினேன். அவள்தானா? இந்தப் பெயரில்தான் எழுதுவதாகச் சொன்னாள். அவளுடைய படம் ஏதும் இல்லை. ஆனால் அது மூன்றாம்பதிப்பு, முதல்பதிப்பு ஆசிரியரின் பெயரில்லாமல் வந்தது என்று தெரிந்தது.

புரட்டிப்புரட்டிப் பார்த்தேன். காப்பிரைட் பக்கத்தில் பெயர் இருந்தது. ஃப்ரான்ஸெஸ் பர்னி எழுதியதுதான். EVELINA or THE HISTORY OF A YOUNG LADY’S ENTRANCE INTO THE WORLD. நாவல்களுக்கு நீளமாக பெயர்கள் வைப்பது வழக்கம். ஆசிரியை பெயரை முன்பக்கம் அச்சிடும் வழக்கம் அமெரிக்காவில் வந்திருந்தது. பிரிட்டனில் உள்ளேதான் Fanny Burney. ஆசிரியை பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பை ஈஸ்டன் ஃபிளெச்சர் என்பவர் எழுதியிருந்தார். அதில் நான் அறியாத ஃப்ரான்ஸெஸ் பர்னியின் வாழ்க்கை வரலாறு இருந்தது.

1778ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. 1782ல் தான் இந்த மூன்றாம் பதிப்பு. முதல்பதிப்பு நன்றாக விற்றிருக்கலாம். அந்த புத்தகம் பெயரில்லாமல் வெளியாகி ஒரு சிறு பரபரப்பை உருவாக்கியிருக்கலாம். இரண்டாம்பதிப்பு ஃபேன்னி பர்னி என்ற பெயரில் வெளியாகி அப்பெயர் காரணமாக கொஞ்சம் பரபரப்பாக விற்கப்பட்டிருக்கலாம். மூன்றாம் பதிப்புக்கு பெரிய எதிர்வினை ஏதும் வந்ததுபோலத் தெரியவில்லை. நாவல் வெளியான அதே ஆண்டே இந்தியாவுக்கு வந்துவிட்டதென்றால் விற்பனையாளர்களுக்கு நஷ்டம் என்றுதான் அர்த்தம்.

நான் அதை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டேன். அகஸ்டின் ஜானுக்கு மகிழ்ச்சி. அந்தப்புத்தகத்தை அவன் சும்மா தள்ளிவிடவேண்டியிருந்திருக்கும். அவன் சொன்ன விலையை கொடுத்து வாங்கிக்கொண்டேன். அப்படியே ஓடிப்போய் அறையில் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தவள் மறுநாள் விடியற்காலையில்தான் வாசித்து முடித்தேன்.

ஃப்ரான்ஸெஸ், ஈவிலினா இருவரையுமே எனக்குத் தெரியும். ஆசிரியையும் கதாநாயகியும். ஆனால் உண்மையில் இருவர்தானா? ஈவ்லினாவை நான் சந்திக்கவே இல்லையா? அவள் ஃப்ரான்ஸெஸின் ஓர் உருவகம் மட்டும்தானா? அன்று நான் சந்தித்த பெண்ணின் பெயர் ஈவ்லினா அல்லது கரோலினா? அதை எழுதியவள் கூட தன்னை ஃபேன்னி என்றா ஃப்ரான்ஸெஸ் என்றா அறிமுகம் செய்துகொண்டாள்? குழப்பம்தான். அந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க அந்தக்குழப்பம் கூடிக்கூடித்தான் வந்தது.

நான் இந்த நாவலை வெறிகொண்டவள் போல வாசித்துக்கொண்டிருப்பதை மக்கின்ஸி கவனிக்கவே கொஞ்சம் பிந்திவிட்டது. இயல்பாக என் மேஜைமேல் இருந்து அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். “இதென்ன ஒரே மாதிரி ஏகப்பட்ட புத்தகங்கள்? இவையெல்லாமே ஒரே அச்சகத்தில் வெளியானவையா?”என்றார்

நான் “ஒரே புத்தகம்தான்” என்றேன்.

“ஒரே புத்தகத்தையா அன்றுமுதல் வாசிக்கிறாய்? இதென்ன செய்யுளா?”என்று புரட்டிப் பார்த்து ‘கடிதங்களா?”என்றார்.

“இல்லை, நாவல்”என்றேன்.

“வாசிக்கவே முடியவில்லையா?”

நான் அதற்குப் பதில் சொல்லவில்லை. அதை வாங்கி உள்ளறைக்குள் அப்படியே வைத்துவிட்டேன்.

மீண்டும் அதை வாசிப்பதை அவர் கண்டபோது “இதென்ன இன்னுமா நீ இதை வாசிக்கவில்லை?”என்று கேட்டார்.

“இன்னொரு முறை வாசிக்கிறேன்” என்றேன்.

“திரும்பவுமா? உனக்கு புத்தகங்கள் வேண்டுமென்றால் நான் ராணுவ நூலகத்திலிருந்து கொண்டுவரச் சொல்கிறேன்”

“வேண்டாம்… இது நல்ல புத்தகம். அதனால் வாசிக்கிறேன்”

“திரும்ப ஒரு புத்தகத்தை வாசிப்பதா? முதல்முறை வாசிப்பதே கடினம்”என்றார்.

நான் புன்னகை புரிந்தேன்.

அவருக்குத் தெரியவில்லை, நான் அந்தப் புத்தகத்தில் இருந்து எதையோ எழுப்பிவிட்டேன் என்று. என்னால் அந்த புத்தகத்தை வாசிக்காமலிருக்க முடியாது. ஏன், அதை அப்பால் வைக்கக்கூட முடியாது. நான் எங்குசென்றாலும் அந்தப் புத்தக நினைவாகவே இருக்கிறேன். ராணுவ அக்காதமியில் விருந்துக்குப் போனபோதுகூட அதை என் கைப்பைக்குள் வைத்திருந்தேன். நடுவே சலிப்பு வந்தபோது ஒப்பனை அறைக்குப்போய் நாலைந்து பக்கங்கள் வாசித்தேன். எவரோ கதவைத் தட்டியபோது அவசரமாக ஒப்பனையை மீண்டும் செய்துகொண்டு கதவைத்திறந்து வெளியே வந்தேன்.

அதையே படித்துக்கொண்டிருந்தேன். மக்கின்ஸியும் நானும் ஓர் அறையில் தூங்குவதில்லை. அவர் நிறையக்குடித்துவிட்டு தூங்குபவர். நான் கடுமையான மதுவகைகளின் வாசனையை விரும்பாதவள். அது வசதியாக ஆகியது. என் அறையில் நான் எழுந்து அமர்ந்து வாசித்துக் கொண்டே இருந்தேன். மீண்டும் மீண்டும்.

என்ன வியப்பென்றால் வாசிக்க வாசிக்க அந்த நாவல் புதியதாக ஆகிக்கொண்டே இருந்தது. ஒரு முறை வாசித்தவற்றை மீண்டும் வாசிக்கமுடியவில்லை. அதில் புதிய வரிகள் தோன்றுகின்றனவா? குறிசொல்லும் கிழவி போல அந்த புத்தகம் பேச்சினூடாக வளர்கிறதா? நான் சந்தேகத்துடன் அதை கவனித்தேன். அதில் நான் வாசித்தவையாக நினைவிலெழுந்தவற்றை குறித்து வைத்தேன். பின்னர் நாவலை விரித்து வாசித்த பகுதிகளைத் தேடினேன். அவை அங்கே இல்லை.

நெஞ்சு அதிர நான் அந்தப் புத்தகத்தையே புரட்டிக்கொண்டிருந்தேன். அதெப்படி அவ்வாறு இருக்க முடியும்? நான் அதில்தான் வாசித்தேன். அதில் இருந்த வரிகள்தான் ஈவ்லினா எழுதிய கடிதங்கள்.ஆர்வில் பிரபுவுக்கும் ரெவெரென்ட் வில்லருக்கும் அவள் எழுதியவைதான் அந்த வரிகள். ஆனால் அந்த நாவலில் இல்லை. பக்கங்கள் மாறிவிட்டனவா?. நான் பக்கங்களைப் புரட்டிப்புரட்டி படித்தேன். நாவலின் கட்டமைப்பே கடிதங்கள் என்பதாகையால் அந்த வரிகள் எங்கே வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தது.

தேடித்தேடி உழன்று நாவலை மூடிவிட்டு நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டு அமர்ந்திருந்தேன். எனக்குச் சித்தப்பிரமை உருவாகிறதா? இந்த பங்களாவின் தனிமையும் அமைதியும் என்னை நிலையழியச் செய்கின்றன. இங்கே என்னிடம் உரையாட எவருமில்லை. ராஜகுமாரியை கடத்திக்கொண்டு சென்று மலையுச்சியில் குடிவைத்து அவளுக்கு ஏவல் செய்ய பேய்களை நியமித்துச்சென்ற பூதம்போன்றவர் மக்கின்ஸி. இந்த மலையுச்சியில் இருந்து நான் எல்லாவற்றையும் பார்க்கமுடியும், எங்கும் செல்லமுடியாது.

மக்கின்ஸி என்னை ஒரு தேவாலய விருந்தில் பார்த்தார். என் பின்னால் வந்து என் வீட்டை கேட்டு தெரிந்துகொண்டார். அப்போதே எதற்கென்று தெரிந்துவிட்டது. என் தோழிகள் என்னை கேலி செய்ய தொடங்கிவிட்டனர். அவர் வந்த சாரட் வண்டி வெளியே நின்றிருந்தது. கன்னங்கரிய பளபளப்புடன். குதிரைகள் கால்மாற்றி நின்று செருக்கடித்தன. வண்டிக்காரன் சிவப்புக் கம்பிளிச் சீருடையும் , குதி உயர்ந்த காலணியும் கூம்புத் தொப்பியுமாக வெளியே இறங்கி நின்றிருந்தான்.

ஃபீட்டன் ரக வண்டி. உள்ளே உயர்தர செங்குருதி நிறமான தோல் பரவிய இருக்கைகள். அவற்றை மொராக்கோ தோல் என்பார்கள். நான் சாரட்டிலேயே ஏறியதில்லை.ஃபீட்டனை அரிதாகவே கண்டிருக்கிறேன். என் தோழிகள் எவரும் ஏறியதில்லை.

அப்போதே பொறாமை உருவாகிவிட்டது. லினன் வணிகரான ஆர்தரின் மகள் ஆஞ்சலினா “இனி ஃபீட்டனில் ரொட்டி கொண்டு சென்று விற்கலாமே” என்றாள். அப்போதே நான் முடிவெடுத்துவிட்டேன். இந்த மனிதனை திருமணம் செய்துகொள்ளவேண்டும். இந்த மனிதனை அல்ல, இந்த சாரட்டை. இந்த மொரோக்கோ தோலிடப்பட்ட சிம்மாசனத்தை. என்னை அவர் கேட்டுவரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கலானேன். வேண்டிக்கொண்டேன். நான்குநாட்கள் கடந்ததும் கண்ணீர்விட்டு ஏங்கினேன்.

ஐந்தாம்நாள் அவருடைய செய்தியுடன் சர்ச்சில் இருந்து ரெவெரெண்ட் வில்பர் வந்து அப்பாவிடம் பேசினார். நான் தட்டிக்குப் பின்னால் நின்று அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நெஞ்சைப்பற்றிக் கொண்டு விம்மியழுதேன்.

அப்பாவால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவர் கமறிக் கமறி “தேவனுக்கு மகிமை….வேறென்ன சொல்லவேண்டும் நான்?”என்றார்.

ரெ வெரெண்ட் வில்பர் “நீங்கள் நிறைவடையலாம். அவரிடம் நிறையவே பணமிருக்கிறது. உங்கள் பிற பெண்களின் சீதனத்தொகையை அவரே கொடுத்துவிடுவதாகச் சொன்னார். அவருக்கு இங்கே ஒரு பங்களா இருக்கிறது. லண்டனிலும் ஒரு பங்களா இருக்கிறது. இங்கிருக்கும் பங்களாவில் நீங்கள் குடும்பத்துடன் குடியேறலாம்” என்றார்.

அப்பா மௌனமாகக் கண்ணீர்விட்டார். என் தங்கைகள் என் கைகளைப் பற்றிக்கொண்டனர். கேதரின் என் தோள்வளைவில் முகம்புதைத்து கண்ணீர்விட்டாள்.

ஊரில் அன்றே செய்தி பரவியது. அம்மாவைப் பார்க்க ஊரிலிருந்து பெண்கள் வரத்தொடங்கினார்கள். என்னை சந்தித்து கைகளைப் பற்றி முகமன் சொல்லி வாழ்த்திவிட்டுச் சென்றனர். பலருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. சிலருக்கு பொறாமை.

“அப்படியென்ன இருக்கிறது அவளிடம்? இந்த ஆண்களுக்கு கண் என்பதே இல்லை” என்று சலவைக்கார டோரதி சொன்னதாக தங்கை சொன்னாள்.

இளம்பெண்கள் அந்த மனநிலையுடன் வந்து சென்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்குமே கனவு காண ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவர்களைப்போன்ற ஒருத்த்திக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த தேவதை சுற்றிமுற்றிப் பார்க்கும். அந்தன் கண்ணில்பட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

ஊரில் என்னை சிண்ட்ரெல்லா என்று என்னை அழைக்கத் தொடங்கினார்கள். பாதி கேலியாக பாதி அன்பாக. நான் சாலையில் செல்லும்போது என் செருப்பு அறுந்துவிட்டது. ‘எடுத்து வைத்துக்கொள் அந்தச் செருப்பை. ராஜகுமாரன் உன்னுடைய வீட்டுக்கு வந்துவிடுவான்”என்று கருமான் ஆண்ட்ரூஸ் என் தோழியிடம் சொன்னார்.

அந்த மாதமே மெக்கின்ஸி என்னை திருமணம் செய்துகொண்டார். அவருடைய தோழர்கள் என்று சிலர்தான் வந்திருந்தனர். இங்கே அவர் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல. அவருடைய சொந்த ஊர் ஸ்காட்லாந்தில் இருந்தது. எங்கள் பக்கமிருந்தும் பெரிய கூட்டம் இல்லை. காலை பத்துமணிக்கு தொடங்கி ஒருமணி நேரத்தில் எல்லாச் சடங்குகளும் முடிந்துவிட்டன.சர்ச்சை ஒட்டிய வெல்லெஸ்லி கூடத்தில் விருந்து. எங்கள் தரத்துக்கு மிகப்பெரிய விருந்துதான்.

அடுத்தமாதமே மெக்கின்ஸி கிளம்பி இந்தியா சென்றுவிட்டார். அவர் ஒரு வருடம் கழித்துத்தான் வருவார். வந்துசேர மூன்றுமாதமாகும்.  அத்தனைகாலம் என்னை மேடம் பியூமாண்ட் என்னும் சீமாட்டியின் வீட்டிலேயே தங்கச்செய்துவிட்டுச் சென்றார். அவளுக்குக் கட்டணம் அளிக்கப்பட்டிருந்தது. அவள் எனக்கு நாகரீகம் கற்றுத்தரவேண்டும்.

அவள் நாகரீகம் என்றால் பிரெஞ்சு என்று நினைத்திருந்தாள். “சொற்களைத் தெரிந்துகொண்டால் நாகரீகத்தின் பாதியை அறிந்துகொண்டதுபோல. உதாரணமாக என்பெயர் ப்யூமாண்ட். அதன்பொருள் அழகான மலை” என்றாள். நிற்க,நடக்க, பேச,சிரிக்க, போலியாக வியப்படைய, கவுனை பற்றிக்கொள்ள, கைக்குட்டையை வைத்துக்கொள்ள, கையுறைகளைக் கழற்ற கற்றுத்தந்தாள். நான் அவளிடம் பேசிக் கற்றதை விட அவள் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டதே மிகுதி. அவள் ஒரு நடனக்காரிபோல் இருந்தாள். எப்போதும் நடனத்திலேயே இருந்தாள்.

அவளிடம் லத்தீனும் பிரெஞ்சும் கற்றுக்கொண்டேன். இரண்டையும் சேர்ந்து கற்பது மிக வசதியானது. இரண்டையும் கற்றுக்கொண்டால் நம் ஆங்கிலம் தரமானதாக ஆகிவிடுகிறது. லண்டனின் உயர்குடிகளின் விருந்துகளுக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கே நான் அறிந்துகொண்டேன், லண்டன் பிரபுக்கள் உயர்ந்த நாகரீகம் என நினைப்பது பிரெஞ்சுப் பண்பாட்டைத்தான். பியூமாண்ட் சீமாட்டி சொன்னது சரிதான்.

இந்தியாவிற்கு நான் வந்திறங்கியபோது சென்னபட்டினத்தில் என்னை வரவேற்க வந்திருந்த பதினேழு சேடிப்பெண்கள் என்னை திகைக்க வைத்தனர். எனக்காக ஓர் அரண்மனையும் ஏவலர்களும் காத்திருந்தனர். பெட்டி பெட்டியாக ஆடைகள், காலணிகள், நகைகள். எனக்கு மட்டுமேயாக ஒரு சாரட் வண்டியும், வண்டியோட்டியும், காவலுக்கு நான்கு குதிரைவீரர்களும், என்னுடைய பூந்தோட்டத்தில் நான் மட்டுமெ உலவுவதற்காக ஒரு பாதை. வந்த ஒரு மாதத்திலேயே நான் அரசியென்று என்னை உணர்ந்தேன்.

இங்கே சென்னப்பட்டினத்தின் விருந்துகளில் இயல்பாகவே நான் சீமாட்டியாக கருதப்பட்டேன். இங்குள்ள மாவட்ட நீதிபதிகள், கலெக்டர்கள், பிளாண்டர்கள், ராணுவ அதிகாரிகள் எல்லாருமே லண்டன் சென்று அங்கே ஏழைக்குடும்பத்தின் அழகிய பெண்களை மணம் முடித்து வந்திருந்தனர். ஆனால் பலருக்கு அந்தப்பெண்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவேண்டும் என்று தெரியவில்லை.

சென்னை கவர்னர் ஜான் மக்கார்ட்டினி அளித்த விருந்தில் அவர் நடனமாட என்னைத்தான் தேர்ந்தெடுத்தார். அதைவிட அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டபோது மெய்யாகவே கைத்தட்டல் எழுந்தது. நான் நடனமாடி முடித்தபோது கைத்தட்டல் மேலும் ஓங்கி ஒலித்தது. ஏனென்றால் அங்கிருந்த பெண்களில் பலர் அவருடன் நடனமாடுவதை தவிர்க்கவே எண்ணினர். அவர் மிகச்சிறந்த நடனக்காரர். ஔச்சன்லெக் பிரபுகுடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடன் நடனமாடி தன்னை பயிலாதவள் என்று வெளிப்படுத்திக்கொள்ள எவரும் தயாராக இல்லை.

மக்கின்ஸி என்னைப் பற்றிப் பெருமிதம் கொண்டிருந்தார். நான் சென்னையிலேயே இருந்திருந்தால் ஒருவேளை அவர் என் வழியாகவே உயர்வட்டத்தில் எல்லா அறிமுகங்களையும் பெற்றிருப்பார். ஆனால் நான் வந்ததுமே அவர் டிரிவாங்கூருக்குச் செல்லும்படி ஆகியது. அங்கே அரசருக்கும் கம்பெனிக்கும் மோதலும் பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருந்தன. அரசர் போர்ச்சுக்கல்காரர்களாலும் டச்சுக்காரர்களாலும் மாறி மாறி மிரட்டப்பட்டு பிரிட்டிஷ் படைகளை நம்பியிருந்தார்.

மக்கின்ஸி நான் வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். “அதே புத்தகமா? உனக்கென்ன பைத்தியம் ஏதேனும் பிடித்துவிட்டதா?”

நான் புன்னகை செய்தேன்.

“நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மாதமாகவே நீ சரியாக இல்லை. உன் முகமே மாறிவிட்டது”

“என்னவாக?”என்று நான் கேட்டேன்.

“ஏதோ பித்துப்பிடித்தவள் போல. என்னைப் பார்த்தால் ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகே என்னை உன் மனம் அடையாளம் காண்கிறது. நீ உனக்குள் எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறாய்’

“இல்லையே” என்றேன்.

“நீ அந்தப் புத்தகத்தை தூக்கி வீசு…அதில் ஏதோ பேய் குடியிருக்கிறது. மெய்யாகவே புத்தகங்களில் பேய்கள் குடியிருக்கும்…என் அம்மா சொல்வதுண்டு”

நான் அதற்கும் புன்னகைதான் செய்தேன்.

அன்று கர்னல் சாப்மான் வந்தபோது மெக்கின்ஸி சொன்னார். “இவள் ஏதோ புத்தகத்தில் சிக்கியிருக்கிறாள்… அதை படித்துக்கொண்டே இருக்கிறாள்”

“என்ன புத்தகம் அப்படி?”என்று கர்னல் சாப்மான் கேட்டார்.

நான் “ஒன்றுமில்லை, ஒரு நாவல்”என்றேன்.

“என்ன நாவல்? நான் படிக்கக்கூடாதா?”என்று அவர் சிரித்தார்.

“ஒன்றுமில்லை, சும்மா சொல்கிறார்”என்றேன்.

மெக்கின்ஸி “சும்மா சொல்லவில்லை. திரும்பத் திரும்ப படிக்கிறாள். புத்தகங்களில் இருந்து பேய்கள் எழுந்து நம்மை பிடிக்கக்கூடும். அதைச் சொல்லி இவளை எச்சரித்தேன்”என்றார்.

“என்ன நாவல் அது? காட்டு” என்றார் கர்னல் சாப்மான்.

நான் உள்ளே சென்று ஏறத்தாழ அதே அட்டைகொண்ட ஒரு நாவலை எடுத்து கொண்டுவந்து காட்டினேன்.

”இதுவா? வேறு மாதிரி இருந்ததே”என்று மெக்கின்ஸி சொன்னார்.

“உங்களுக்கு என்ன புத்தகத்தைப் பற்றித் தெரியும்?”என்று நான் சொன்னேன். “கர்னல் சாப்மான், இவர் படையெடுத்துச் சென்றால் முசல்மான்கள் எதிரில் வந்து ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும், மிரண்டுபோய் அப்படியே திரும்பி ஓடிவந்துவிடுவார்”

கர்னல் சாப்மான் எப்போதுமே நான் மெக்கின்ஸி பற்றிச் சொல்லும் வேடிக்கைகளுக்கு வெடித்துச் சிரிப்பார். அவர் சிரித்தபடி நாவலை புரட்டிப் பார்த்து மேடையில் வைத்துவிட்டு “இந்த நாவலில் இருந்து வரும் பேய்களை சமாளிக்கலாம். இவை எல்லாமே பிரெஞ்சுப் பேய்கள்”என்றார்.

நான் புன்னகைத்து “நாம் பிரெஞ்சுக்காரர்களை வென்ற வரலாறு கொண்டவர்கள்… நீங்கள் கூட பிரெஞ்சுப்போரில் இருந்தீர்களே?”என்றேன்.

அவர் தன்னுடைய புதுச்சேரி அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். வெற்றிகரமாக அந்தப்பேச்சை திசைதிருப்பிக் கொண்டுபோனேன்.

அதன்பின் நேராக மது. கர்னல் சாப்மான் மதுவருந்தியதுமே இசை கேட்க விரும்புவார். என்னிடம் “நாம் பியானோ அருகே செல்வோம்”என்றார்

ஆனால் நான் உண்மையிலேயே அந்த நாவலில் சிக்கியிருந்தேன். அந்த நாவலில் நான் வாசிப்பவை மெய்யாக அதில் இல்லை. அவை என் நினைவில் இருந்தன. நான் வாசிக்கும்போது நாவலில் தோன்றின. நாவலில் இருந்து நான் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் பகலொளியில் யோசித்தால் ஒன்றும் புரியவில்லை. தர்க்கபூர்வமாகச் சில காரணங்கள் தோன்றும். நான் அரைத்தூக்கத்தில் இரவில் வாசிக்கிறேன். தூக்கத்தில் என் கற்பனைகளும் முன்பு வாசித்த நூல்களின் வரிகளும் ஊடுகலந்துவிடுகின்றன. இசைநாடகங்களில் சற்று தூங்கினால் வேறுநாடகங்களின் நினைவுகள் கலந்துவிடும். மாக்பெத் ஹாம்லெட்டின் வசனங்களைச் சொல்லிக் கொண்டிருப்பான். அதைப்போலத்தான்.

ஆனால் அதைப்போல அல்ல என்று நான்  உள்ளூர அறிந்துகொண்டும் இருந்தேன். உண்மையில் ஏதோ சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. சித்தப்பிரமையின் படிகள்தான் இவை. எங்களூரில் ஒரு போதகருக்கு பித்துப்பிடித்தது. பைபிளும் பிரார்த்தனைப் புத்தகங்களும் ஒன்று கலந்தன. பின்னர் அவர் வாசித்த சில ஆபாசநாவல்களும் கலக்க ஆரம்பித்தபோது அவரை கைகளைக் கட்டி கொண்டுசென்றுவிட்டார்கள்.

என் பேச்சிலோ நடத்தையிலோ எந்த மாற்றமும் இல்லை. எவரும் எதையும் கவனிக்கவில்லை. மெக்கின்ஸி அவருடைய உலகில் இருந்தார். நான் உள்ளூர மாறிக்கொண்டே இருந்தேன். அந்த நாவலில் இருந்து எழுந்துவந்துகொண்டே இருந்தன ஈவ்லினாவின் கசப்பும் நக்கலும் நிறைந்த சொற்கள். அல்லது ஃப்ரான்ஸெஸ் பர்னியின் சொற்கள். அல்லது அவர்கள் ஒன்றேதானா?

இன்று நான் வாசித்துக்கொண்டிருந்தபோது திடுக்கிட்டேன். அதில் வரிகள் விரைந்தோடிக் கொண்டிருந்தன. ஈவ்லினா எழுதியிருந்தாள். ‘இந்த கோடைநாட்டின் வானம் போல நம்மை வெறுமையில் தள்ளுவது வேறொன்றில்லை. நம் நிலத்தில் அவ்வப்போது வானம் நீலமாக வெறிச்சிடும். அது ஒரு கொண்டாட்டம். அத்தனைபேரும் தெருவிலிறங்கிவிடுவோம். வெயிலில் நீராடித் திளைப்போம். ஆனால் இங்கே வானம் எப்போதுமே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. நம் ஊரில் வானம் ஒளிர்வது ஒரு தெய்வீகப் புன்னகை. அரிதானது. இங்கே வானின் ஒளி கிறுக்கனின் சிரிப்பு போல, நீங்காதது, பொருளற்றது”

யார் எழுதியது அதை? ஈவ்லினா எப்போது இந்தியா வந்தாள்? அவள் எழுதியிருக்கும் இந்த வரிகளை நானே எப்போதாவது என் டைரியிலோ கடிதங்களிலோ எழுதியிருக்கிறேனா?

ஈவ்லினா எழுதியிருந்தாள். ” இந்த பங்களாக்கள் மிகப்பெரியவை. சிவந்த ஓடு வேயப்பட்ட உயரமான சரிந்த கூரைகள். செங்குத்தான வெண்சுவர்கள். தரையில் சிவப்புக் கம்பளங்கள். சிவப்புப்பட்டு உறையிடப்பட்ட நாற்காலிகள். திரைச்சீலைகள் இளஞ்சிவப்பானவை. வெண்மையான மேஜைவிரிப்புகள். பெரிய ஓவியங்கள். பொன்பூசி அலங்கரிக்கப்பட்ட வெள்ளிச் சிலைகள்.

இங்கே என்னை அச்சுறுத்துவது சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய, பாடம் செய்யப்பட்ட தலைகள். மான்கள், கரடிகள், காட்டெருதுகள். அவற்றின் கண்களுக்குக் கண்ணாடிக்குண்டுகள் அமைக்கப்பட்டு மெய்யான பார்வையே வரவழைக்கப்பட்டிருக்கும். அவை தலைக்குமேல் இருந்து அவர்களை கொன்றவர்களை பார்த்துக் கொண்டிருக்கும். அவற்றை கொன்ற துப்பாக்கிகள் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும்.

அவற்றின் கண்களைப் பார்க்க என்னால் முடியாது. ஆனால் பார்த்துவிடுவேன். ஒருமுறை பார்த்தபோது ஒருமானின் விழிகள் அசைவதையே பார்த்தேன். திடுக்கிட்டு மயங்கி விழுந்துவிட்டேன். ஏன் என்று சொல்லவில்லை. கோடையின் வெப்பத்தால் மயங்கியிருப்பேன் என்று அவர்களே முடிவுசெய்துவிட்டனர். அதன்பின் இந்த மாளிகையில் அந்தப்பகுதிக்கு மட்டும் நான் போவதே இல்லை”.

நானே உணர்ந்தது இது. இது ஈவ்லினா எழுதியது அல்ல. அவள் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. வீடுகளில் பாடம்செய்யப்பட்ட தலைகளை வைக்கும் வழக்கம் லண்டனில் இல்லை. அது ஒரு கீழைநாட்டு வழக்கம். கீழைநாடுகள்மேல் பெற்ற வெற்றியை ஐரோப்பா கொண்டாடும் ஒரு முறை அது. இங்குள்ள மகாராஜாக்களையும் முசல்மான்களையும் கொன்று அவர்களின் தலைகளையும் இப்படி பாடம் செய்து வைக்க இவர்கள் தயங்க மாட்டார்கள்.

இந்த வரிகள் எப்படி இந்நாவலுக்குள் சென்றன.ஈவ்லினா எப்படி இதை எழுதினாள். நான் என் தலையை ஓங்கி ஓங்கி தட்டிக்கொண்டேன். ஏதோ ஆகிக்கொண்டிருக்கிறது. என் தலையை உடைத்துக்கொண்டு தெருவிலிறங்கி ஓடப்போகிறேன். இங்கே அப்படி ஒரு பெண்ணைப் பார்த்தேன். அழுக்கானவள், பரட்டைத்தலை, பற்கள் கறைபடிந்தவை, ஆனால் வெள்ளைக்காரி. துறைமுகப்பகுதியில் அலைந்துகொண்டிருந்தாள் யாரோ காப்டனின் மனைவி என்றார்கள். அவளை காப்டன் என்றே அழைத்தார்கள்.

நாற்காலி பின்னால் நகர்ந்து ஓசையிட, எழுந்துவிட்டேன். அந்த புத்தகத்தை தூக்கி பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டு சென்று படுத்துக் கொண்டேன். என் கண்களுக்குள் எழுத்துக்கள் நீர்ப்பிம்பம் போல அலைபாய்ந்துகொண்டிருந்தன. ஆடைகளை மாற்றாமலேயே மெத்தைமேல் படுத்தேன்.

கண்களை மூடிக்கொண்டாலும் உள்ளே விழிகள் உருண்டுகொண்டிருப்பதை உணர்ந்தேன். பெருமூச்சுகள் விட்டுக்கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். அப்போது அந்த அறையில் இன்னொருவரை உணந்தேன். ஆனால் அச்சமில்லை. நான் வெறுமே உணர்ந்துகொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவர்தான்.பெண்

அவள் அருகே வந்து என் முகத்தை கூர்ந்து பார்த்தாள். நான் அவள் யார் என்று உணர்ந்தேன். ஈவ்லினா. “நீயா? நீ இறந்துவிட்டாயா?”என்றேன்.

“ஏன்?”என்று அவள் கேட்டாள்.

“இல்லாமல் நீ எப்படி இங்கே வரமுடியும்?”என்றேன்.

“நான் சாகவேண்டியதில்லை”என்று அவள் சொன்னாள்.

“பிறகெப்படி நீ இங்கே வந்தாய்?”

”அந்தப்புத்தகம் வழியாக வந்தேன். அது எப்படி வந்தது?”

“ஆனால் அது புத்தகம்”

“நான் அதற்குள் புகுந்து என்னை வைத்து மூடிக்கொண்டேன்”

“அதெப்படி?”

“முடியும். மனிதர்களால் புத்தகங்களுக்குள் நுழைந்துகொள்ள முடியும். வெளிவரவும் முடியும்”

நான் விழித்துக்கொண்டேன். அறைக்குள் எவருமில்லை. மேலே பிரம்பால் பின்னப்பட்ட சிவப்புநிறமான பங்கா அசைந்துகொண்டிருந்தது. அதன் நாடாவை வெளியே இருந்து இழுக்கும் இந்திய ஊழியனை நான் கண்டேன். என் மனதின் சரடு லண்டனில் எவர் கையிலோ இருக்கிறது. அசட்டுத்தனமான உவமை. நான் புன்னகைத்தேன்.

அந்த புத்தகம் மேஜைமேல் இருந்தது. எப்படி அங்கே வந்தது? திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். எப்படி  அது மேலே வரமுடியும்? அதை நான் உள்ளே தூக்கிப்போட்டு மூடியது நன்றாகவே நினைவிருக்கிறது. அதை நான் வெளியே எடுக்கவே இல்லை.

என் உடம்பு வியர்த்துவிட்டது. கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன.எவரோ இங்கே இருக்கிறார்கள். கனவில் அல்ல, மெய்யாகவே. ஒரு பருப்பொருளை ஒரு பருவடிவ விசையால்தான் அசைக்க முடியும்.

எழுந்து வெளியே ஓடி கூடத்தில் சென்று நின்றேன். அங்கே அத்தனை பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் கண்களும் என்னை பார்த்தன. அவ்விழிகள் அனைத்துமே அசைந்தன.

திரும்பி மீண்டும் என் அறைக்கு வந்து படுக்கையில் அமர்ந்துகொண்டேன். நானே அந்த புத்தகத்தை எடுத்து மேலே வைத்திருக்கலாம். ஏனென்றால் நான் எழுந்து சென்று அதை படிப்பதுபோல ஒரு கனவு வந்தது. அது கனவல்ல, மெய்யாகவே நான் சென்றிருக்கலாம். ஆம், அவ்வாறுதான் நடந்தது.

பெருமூச்சுடன் படுத்துக்கொண்டேன். அந்தப் புத்தகம் அங்கே மேஜைமேல் இருந்தது. அதற்குள் அடைபட்டிருக்கும் ஆவிகளை நினைத்துக்கொண்டேன்.

நான் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து வந்து இரவைப் பார்த்தபடி நின்றேன். அன்று அபூர்வமாக மழை இல்லை. காற்றுமட்டும் விசையுடன் ஒழுகிக்கொண்டிருந்தது. மேற்குச்சரிவில் ஒரு நட்சத்திரம் தெரிந்தது. நட்சத்திரமா விண்கோளா தெரியவில்லை. ஒளியுடன் இருந்தது. பின்னர் அது மறைந்தது. ஓசையே இல்லாமல் அங்கே முகில்கள் ஓடிக்கொண்டிருக்கலாம்.

நான் கண்களை கைகளால் அழுத்தி மூடிக்கொண்டேன். பின்னர் கசக்கிக் கசக்கி விடுவித்தேன். இந்த அறையில் இப்போது இருப்பவள் ஹெலெனாதான். என்றோ இங்கே வந்த வெள்ளைக்காரப்பெண். போலந்து நாட்டைச் சேர்ந்த முன்னோருக்கு பிறந்து பிரிட்டனில் குடியேறிய ரொட்டிக்காரனின் மகள். சீமாட்டியாக நடித்துச் சலித்தவள். அவளுடைய சொற்களால்தான் இப்போது நாவல் நிறைந்திருக்கிறது.

சட்டென்று மீண்டும் ஒரு மின்னல். போலந்துக்காரியா அவள்? எப்படி எனக்குத் தெரியும்? அதை எங்கே படித்தேன்? படித்த நினைவே இல்லை. ஆனால் அப்படி ஏன் தோன்றியது? தோன்றவில்லை, தெரிந்திருக்கிறது. ஒருவேளை இப்போது படித்த பகுதிகளில் அது இருந்ததா?

நான் அந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். ஹெலெனாவின் சொற்களாக அதிலுள்ள பகுதிகளைத் தேடினேன்.அப்படி எந்த சொற்களும் இல்லை. அதன்பின் புன்னகைசெய்தேன். அங்கே அவை இருக்குமென எப்படி எதிர்பார்த்தேன்?

மெல்லிய சலிப்புடன் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். ஈவ்லினாவுக்கு ரெவெரெண்ட் வில்லர்ஸ் எழுதிய கடிதம். Yes, my child, thy happiness is engraved in golden characters upon the tablets of my heart; and their impression is indelible: for, should the rude and deep-searching hand of Misfortune attempt to pluck them from their repository, the fleeting fabric of life would give way; and in tearing from my vitals the nourishment by which they are supported, she would but grasp at a shadow insensible to her touch.

உண்மையில் இங்கே தோன்றவேண்டிய பேய்வடிவம் இந்தப் போதகர்தான். இத்தனை நேர்த்தியான மொழியில், இத்தனை சீரான சொற்களுடன் பேசுபவர் எங்கோ சிடுக்குகள் கொண்டவர். உனது மகிழ்ச்சி என் உள்ளத்தின் பலகையில் பொன்னெழுத்துக்களால் செதுக்கப்பட்டிருக்கிறது. நான் புன்னகை செய்தேன். ஈவ்லினா அதே மொழியில் அவருக்கு பதிலளித்திருந்தாள். ALL is over, my dearest Sir; and the fate of your Evelina is decided! This morning, with fearful joy and trembling gratitude, she united herself for ever with the object of her dearest, her eternal affection.I have time for no more; the chaise now waits which is to conduct me to dear Berry Hill, and to the arms of the best of men.

நாவலின் முடிவு அது. நான் புத்தகத்தை மூடிவைத்தேன். இந்தப் புத்தகத்தை எத்தனை முறை மூடிவைத்திருப்பேன், எத்தனை முறை திறந்திருப்பேன். என் அருகே ஒர் இருப்பை உணர்ந்தேன். மென்மையான லவண்டரின் மணம். பட்டுத்துணி உரசும் ஓசை. நான் கண்களை மூடி அவற்றை தெளிவாக உணர்ந்தேன்.

பின்னர் கண்களை திறந்தேன். அறையின் ஒளியும்,நிழலும் அப்படியேதான் இருந்தன. அறைமூலையில் கோரன் தூங்கிக் கொண்டிருந்தான். அமர்ந்து தூங்குபவர்கள் குரட்டை விடுவதில்லை. அவர்களின் மூச்சுக்குழல்கள் மடிவதில்லை. அறைக்குள் ஓசை ஏதுமில்லை. நான் கதவை மூடவில்லை. அதன் வழியாக காட்டின் குளிர்காற்று உள்ளே பெருகிக்கொண்டிருந்தது.

நான் அங்கே ஏதோ மாற்றத்தை உணர்ந்தேன். அதை எதிர்பார்த்திருந்தாலும் கூட, அத

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2021 11:34

சோஃபியின் உலகம்- கிறிஸ்டி

[image error]

சோஃபியின் உலகம் வாங்க

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்களா? தங்களுக்கு எழுதி நீநாட்கள் ஆகின்றன. புதிய பணிச்சூழலில் எதையும் வாசிக்க இயலாத அளவுக்கு மனம் சோர்வடைந்திருந்தது. தாங்கள் அடிக்கடி சொல்லுவீர்கள், உங்கள் மனம் சோர்வடையாதிருக்க உங்களைச்சுற்றி நல்ல நண்பர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று. ஏற்கெனவே குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பணநெருக்கடி இன்னும் தீராத நிலைமையில் என்னுடைய பணியிட மாறுதல் காரணமாகவும் நானே என் நல்ல நண்பர்களிடமிருந்து விலகித் தனிமையில் உழல  வேண்டுமென்றளவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தது.

மாதக்கணக்கில் எந்தவொரு எண்ணங்களும் சலனங்களுமில்லாமல் வெறுமனே  வீட்டுப்பணியையும் அலுவலகப் பணியையும் செவ்வனே ஆற்றி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். ஆனால் மனத்தின் உள்ளோரத்தில் எங்கிருந்தோ ஒரு சன்னமான குரல் ஒன்று எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அது  என் அம்மாவின் குரல் போல. எங்கள் அம்மா நாங்கள் எதற்காகவாவது கோவித்துக்கொண்டு சாப்பிடாமல் இருந்தால், “யாராயிருந்தாலும் சோறை சாப்ட்டுட்டு கோவிச்சிகிட்டு போய் மூலைல உட்கார்ந்துக்குங்க. திங்கிற  சோத்து மேல கோவிச்சிகிட்டா கடைசிகாலத்துல வீடு வீடா தட்டை எடுத்துகிட்டு போய் பிச்சைதான் எடுக்கணும்” என்று பொதுவாக எல்லோருக்கும் கேட்கும்படியாகக் கூறிவிட்டு எங்களின் வருகைக்காக காத்திருப்பார்கள்.

அந்தக்குரல்  எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மாதிரியும் இருக்கும். அதில் எங்களை எப்படியாவது சாப்பிடவைத்துவிடவேண்டும் என்ற உறுதியும் இருக்கும். வீட்டில் ஒருவர் கோவித்துக்கொண்டு சாப்பிடாமல் இருந்தாலும் தானும் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். வீடுவீடாக பிச்சை எடுக்காமல் இருக்கவேண்டும் என்ற எதிர்கால பயத்தைவிட அம்மா சாப்பிடாமல் இப்படி அழிச்சாட்டியம் பண்ணுகிறார்களே என்ற நிகழ்கால கோபமே எனக்கு மேலெழ நான் எழுந்து சாப்பிடச்செல்வேன். என் தங்கைகள் எனக்குப்பின்னால் எங்கள் அப்பாவிடம் முதுகில் இரண்டி அடிகளை வாங்கிக்கொண்டு உள்ளே வருவார்கள். நான் கோபத்தோடே முதல் சோறுடன் முடித்துக்கொண்டு மறுசோறு வாங்கிக்கொள்ளாமல் வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு வெளியே போய் திண்ணையில் முன்பிருந்தவாறே அமர்ந்துகொள்வேன்.

அனைவரும் சாப்பிட்டு எழுந்தவுடன் எங்கள் அம்மா, “அப்பாடா..ஒரு பெரிய சாப்பாட்டு வேல முடிஞ்சது” என்று ஒரு ஆயாச பெருமூச்சு விட்டபடி மெத்தைக் கட்டிலில் சிறிது நேரம் படுப்பார்கள். ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு சாப்பிட்ட இடத்தை ஒழுங்குபடுத்துவார்கள். நாங்கள் நான்கு பேரும் பெண்கள்தான் என்றாலும் எங்கள் அம்மா ஒரு வேலை கூட எங்களை செய்யச்சொல்லமாட்டார்கள். நாங்கள் படித்தால் போதும் எங்கள் அம்மாவிற்கு. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் நேராநேரத்திற்கு சாப்பாடு தயாராகிவிடும். எங்கள் அப்பாவுடன் சேர்த்து நாங்கள் ஐவரும் என்ன மனநிலைமையிலிருந்தாலும் சாப்பாடு தயாரானதும் சாப்பாட்டு மேஜைக்கு வந்து அமர்ந்து சாப்பிட்டுவிடவேண்டும். எங்கள் அம்மாவும் எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

இப்போதுவரை அந்த கண்டிப்பும் உறுதியும் எங்கள் அம்மாவிடம் இருக்கிறது. அந்த சிறுபிராயத்தில் ஊட்டப்பட்ட எச்சரிக்கையுணர்வு எந்தவொரு செயலைச் செய்தாலும் செய்யாமல் விட்டாலும் எனக்கு இருந்தது. அந்த உணர்வானது என் இரத்தத்தில் ஊறிவிட்டதோ என்னவோ, நான் சலனமற்று வாளாவிருந்த காலங்களில் என் உள்ளே ஒலித்துக்கொண்டிருந்த குரல் இவ்வாறாக இருந்தது,” மனிதர்கள் மேலேதானே உனக்குக் கோபம். அதைக் கொண்டுபோய் ஏன் புத்தகங்கள் மீது காட்டுகிறாய், அவை உனக்கு என்ன பாவம் செய்தன, நீ வேறு எதன்மீதாவது கோபப்பட்டுக்கொள், ஆனால் வாசிப்பதை விடாதே, சீக்கிரம் உன் மனதை மாற்றிக்கொள்” என ஓயாமல் நச்சரித்துக்கொண்டேயிருந்தது. அப்படி ஓயாத நச்சரிப்பு இருந்தாலும் வேறு ஏதொவொன்றை மனம் உள்ளூர எதிர்பார்த்தது. பொட்டில் அடித்தாற்போல, செவுளில் அறைந்தாற்போல, ஒரு தீராத கொந்தளிப்பை உருவாக்குவதுபோல, ஒரு சவாலை எதிர்கொள்வதுபோல, எங்கள் அம்மாவின் பயத்தை உண்டுபண்ணும் ஒரு எச்ரிக்கைக்குரல் போல ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருந்தது. அந்த என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.

ஏனெனில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எப்போதும் ஜீஸஸ் அவரது மலைப்பிரசங்கத்தில் கூறுவார், “பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”-மத்.7:12 என. நானும் விளையாட்டாக இதை அவ்வப்போது சோதித்துப் பார்ப்பதுண்டு. அதில் வெற்றியே எப்போதும் கிடைக்கும் என்று முன்னமே எனக்குத் தெரிந்திருந்தாலும் மற்றவரின் மனநிலை எவ்வாறெல்லாம் என் செயல்களால் மாறுகிறது என்பதைக் கவனித்துப் பார்ப்பதில் உண்டாகும் மகிழ்ச்சிக்காக இதைச் செய்வதுண்டு. இந்த மந்திரத்தையே அல்லது தந்திரத்தையே இப்போது உண்டாகியிருக்கும் என் மனக்குலைவை சீர்செய்துகொள்ள  பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தேன்.

“எப்போதும் நான் வாசிக்க வேண்டும்; வாசிப்பதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்; சோம்பி மூலையில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது; ‘உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்’ என்ற பொன்விதிக்கேற்ப  எப்போதும் என் முகம் மலர்ந்திருக்கவேண்டும், இதெல்லாம் சாத்தியமாகவேண்டுமென்றால் நான் என் நண்பர்களிடமிருந்து என்னை விலக்கிக்கொண்டிருந்திருக்கக்கூடாது; ஒரு மாபெரும்  தவற்றைச் செய்துவிட்டேன்”  என என் மூளைக்கு அப்போது உறைக்கத் தொடங்கியது. நான் எப்போதும் சந்தோஷமாகவும் உத்வேகமாகவும் இருக்கவேண்டுமென்றால் என்னைச் சுற்றி நண்பர்கள் இருந்தால் மட்டுமே முடியும் என உறுதியாகத் தோன்றிவிட்டது. எனக்கு நானே போட்டுக்கொண்டிருந்த தனிமை வட்டத்தை அழித்தேன். வெளியே வந்தேன். ஒவ்வொருத்தராக இல்லாமல் ஒட்டுமொத்தமாக என் நண்பர்கள் அனைவரையும் புதுப்பித்தேன். அதற்கு முகநூலும் வாட்ஸாப்பும் மிகவும் உதவிகரமாக இருந்தன. எங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும் ஜீஸஸுக்கும் மானசீகமாக நன்றி செலுத்தினேன்.

ஆனால் இந்த புதிய உலகம் சோஃபியின் உலகமாக மாறும் என சற்றும் நான் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பேன். அதில் ஒன்று, எனக்கு குருகுலக்கல்வி முறையில் இருந்த ஆழமான பற்று பற்றியது. மற்றொன்று, பள்ளிக்காலம் முதல் பெயரளவில் மட்டுமே தெரிந்துகொண்டிருந்த சாக்ரடீஸ், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகிய தத்துவமேதைகள் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே, அவர்களை நேரில் தரிசிக்கும் பேறுபெறாதவளாகிவிட்டேனே என்றெல்லாம் என் பிறவிப்பேற்றை எண்ணி அங்கலாய்த்திருப்பேன்.

அந்த வருத்தத்திற்கான தீ்ர்வு மீண்டு எழுந்திருக்கும் இந்த இரண்டாவது எழுச்சியின் முதல்படியிலேயே கிடைக்கும் என்று உண்மையிலேயே நான் நினைக்கவில்லை. “நாம் கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் கடவுள் நம்மை நோக்கி ஒன்பது அடி எடுத்துவைப்பார்” என்பதெல்லாம் உண்மைதான் போலும்.

என் வாழ்வின் முதல் விருப்பம், தாங்கள் என் ஆசானாக மானசீக குருவாக கிடைத்ததனால் நிறைவேறியது. என் இரண்டாவது விருப்பம், இதோ இந்த ஏப்ரல் 2021 ன் இறுதி இரண்டு வாரங்களில் சோஃபியின் உலகத்தில் என் பிரியமான தத்துவமேதைகளாகிய சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் முதல் ஹ்யூம், ஹெகல், மார்க்ஸ், லெனின், சார்த்தர், டார்வின், ஃப்ராய்டு என உலகத் தத்துவவாதிகள், கலிலியோ, கோபர்நிகஸ் எனும் வானவியலாளர்கள், நியூட்டன் போன்ற அறிவியல் விஞ்ஞானிகள், ஒற்றைப் பெருவெடிப்பைப்பற்றிப் பேசும் நவீன அறிவியலாளர்கள் வரை அனைவருடனேயும் வாழ்ந்ததனால் நிறைவேறியது. இதில் உச்சம் என்னவென்றால், நான் விரும்பிப் போற்றும் தத்துவமேதை பிளாட்டோ அவர்கள் நேரில் என்னுடன் பேசுவார் என்று கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை. நிறைவேற இயலாத ஆசைகள் என நான் பட்டியலிட்டிருந்த என் ஆசைகள் அனைத்தும் இந்நாவலின் மூலம் நிறைவேறிவிட்டன.

அந்த நார்வே நாட்டு பேராசிரியர் ஒரு மகான் என்றால் அதற்கு சற்றும் குறையாமல் நம் நாட்டுப் பேராசிரியர் திரு. சிவகுமார் அவர்கள் மகாமகானாகத் திகழ்கின்றார். ஒரு மிகப்பெரிய புரிவறிவைக் கோரும் உலகத் தத்துவமேதைகளின் கடினமான தத்துவக் கொள்கைகளையும் மானுட சிந்தனை வளர்ச்சியையும் பற்றி வாசிக்கிறோம் என்று நாவலின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும்  கொஞ்சம்கூட தோன்றவேயில்லை. அந்நாவலில் வரும் சோஃபி என்கிற பதினான்கு வயது சிறுமிக்கு எவ்வளவு எளிதாக விளக்க முடியுமோ அந்த அளவுக்கு மிக மிக எளிமையாக கணிதம், அறிவியல், வரலாறு, வான சாஸ்திரம், சுற்றுச்சூழலியல், இருப்பியல், அந்நியமாதல், தர்க்கவியல் என அனைத்தும் வாசிக்கும் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படியாக விளக்கப்பட்டுள்ளன.

தத்துவம் என்று சொல்லிவிட்டு இவள் என்னடா அறிவியலையும் கணிதத்தையும் பற்றிப்பேசுகிறாளே என்று எண்ணவேண்டாம். நான் இதுநாள்வரை தத்துவம் என்றால் எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியாத ஒரு மர்மமான புதிர் என்றே நினைத்திருந்தேன். முற்றும் துறந்த முனிவர்களின் வாயினின்று அவ்வப்போது உதிரும் மேற்கோள்கள்தான் “தத்துவம்” என்று நினைத்து “அதற்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன்” என்று ஒதுங்கியிருந்ததை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வருகிறது. ஆமாம் சார். உண்மையில் என் மடத்தனத்தை எண்ணி என்னைப் பார்த்து நானே சிரித்துக்கொள்கிறேன்.

நான் தத்துவத்தைப் பற்றி என்ன பூதாகரமாக நினைத்துக்கொண்டிருந்தேனோ அதை சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நாவல். என்னை ஒரு புதிய மனுஷியாக பிறப்பெடுக்க வைத்திருக்கிறது. இதுவரை நான் வாழ்ந்த அறியாமை என்ற உலகத்திலிருந்து பிய்த்து எடுத்து தெளிந்த நீரோடை போன்ற ஔிமயமான உலகத்திற்கு என்னைத் தூக்கி வீசியிருக்கிறது.

என்னை அன்றாடம் சூழ்ந்திருக்கும் மேலே விண்ணிலிருக்கும் சூரியன் முதல் கீழே என் காலடியில் நசுங்கும் புழு, புல் வரை அனைத்திலும் என்னைச் சுற்றி என்னுடன் வாழும் சக மனிதர்களிடத்திலும் நான் பார்க்கும் பொருட்கள் ஒவ்வொன்றிலும் வெளிப்படையாகத் தெரியாத கண்ணுக்குப் புலப்படாத ஒவ்வொருவர் மனதில் நிறைந்திருக்கும் எண்ணங்களிலும் நீராக, நிலமாக, நெருப்பாக, காற்றாக, ஆகாயமாக தத்துவம் இருந்திருக்கிறது. என் ஊனக்கண்களுக்கு தெரியாமல் அது மறைந்திருக்கிறது. விழியிருந்தும் குருடியைப் போலவே இத்தனை காலமும் இருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் மிகவும் வெட்கமாக இருக்கிறது. இத்தகைய குற்ற உணர்ச்சிக்குக்கூட என்னை இந்நாவல் ஆட்படுத்திவிட்டது என்றும்கூட நான் சொல்வேன்.

இப்போது என் மனம் எதை நினைத்து பரிதவிக்கிறது என்றால், “ஐயோ! இன்னமும் என்னைப் போல எத்தனை பேர் விழியிருந்தும் குருடர்களாக வீண்பெருமை பேசித் திரிகிறார்களோ! எப்போது அவர்கள் கையில் இந்நாவல் கிடைக்குமோ! எப்போது அவர்கள் அவர்களின் இருண்ட உலகிலிருந்து ஔியுலகிற்கு தூக்கிவீசப்படுவார்களோ!” என்றுதான். அரை நூற்றாண்டு வாழ்ந்தவர்களுக்கானது தத்துவம் என்றல்லாது பதினான்கு பதினைந்து வயதாகும் பருவ வயதினரிலிருந்து பழுத்து முதிர்ந்து தள்ளாடி விழும் நிறைமிகு வயதினர் வரை இவ்வுலகுபற்றிய பொறுப்புணர்ச்சியைக் கொண்டுவரும் வல்லமைமிக்க மானுட சிந்தனையே தத்துவம் என்பதை மிக ஆணித்தரமாக வலியுறுத்துகிறது இந்நாவல்.

இந்த பொறுப்புணர்ச்சி மிக்க சிந்தனை நார்வேயின் ஜோஸ்டைன் கார்டெர் அவர்களுக்கு தோன்றியதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தும் முயற்சியிலும் இறங்கி இப்புகழ்மிக்க நாவலை எழுதியுள்ளார். அவருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் என்றும் உரித்தாகுக! அது அப்படியே நார்வேஜிய மொழியிலேயே இருந்திருந்தால் நான் இன்று இப்போது இத்தனை ஆர்ப்பாட்டத்துடன் தங்களுடன் பேசிக்கொண்டிருக்கமாட்டேன். நம் சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் திரு. சிவகுமார் அவர்கள் இந்நூலின் பெருமையை உணர்ந்து நம் தமிழ்மொழிக்கு அருமையாக மாற்றியிருக்கிறார் பாருங்கள்….! அங்குதான் என்னால் என் பொங்கியெழும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை!

தத்துவத்தின்பால் அவருக்குள்ள ஈடுபாட்டையும் புரிதலையும் தமிழ்மொழிப் புலமையையும் வியந்து ஆராதித்துக்கொண்டிருக்கிறேன்.  நான் வாசிக்கையில் ஒரு கடினமான தத்துவக் கொள்கையை இப்படி ஒரு எளிமையான தமிழில் சொல்லிவிட இவரால் முடிகிறதே என அத்தத்துவத்தைப் புரிந்துகொண்டதில் உண்டான அறிதலின் மகிழ்ச்சியைவிட எளிய தமிழ்மொழிபெயர்ப்பின் அதிசயத்தை வியந்துகொண்டிருந்ததே அதிகமாக இருந்தது. அந்த வியப்பினாலேயே ஒவ்வொரு தத்துவவாதியின் ஒவ்வொரு கொள்கையையும் திரும்பத் திரும்ப வாசித்தேன்.மனனம் செய்யப்பட்டு திரும்ப ஒப்புவிக்கப்படும் திருக்குறளைப் போல; மேடைகளில் ஒரு முறைக்கு இருமுறை வாசித்துக்காண்பிக்கப்படும் சிறந்த கவிதை வரிகளைப் போல; அடுத்தடுத்த தத்துவவாதிகளின் சிந்தனை இருக்குமானால்  நான் என்ன செய்வேன்!

என்னால் அடுத்த தத்துவத்தை நோக்கி உடனடியாக செல்லமுடியவில்லை. அடுத்த தத்துத்திற்கு வந்தபிறகு முந்தைய தத்துவம் அதாவது முந்தைய மானுட சிந்தனை என்னவாக இருந்தது என்பதை மீட்டு வந்து நோக்காமல் இருக்கமுடியவில்லை.

சாக்ரடீஸிலிருந்து அவரின் மாணவர் பிளாட்டோவின் சிந்தனைக்குத் தாவினால் ஒரு நுண்ணிய தளத்தில் பிளாட்டோ அவருடைய ஆசிரியரின் சிந்தனையிலிருந்து சிறிது முன்னேறியிருப்பார். அப்படியே அவருடைய மாணவர் அரிஸ்டாட்டிலுக்கு தாவினால் அரிஸ்டாட்டில் வெளிப்படையாகவே அவரின் ஆசிரியரினின்று மாறுபட்டிருப்பார். கொஞ்சம்கொஞ்சமாக உலகமைய சிந்தனையிலிருந்து மனித மைய சிந்தனைக்கு மானுட சிந்தனை வளர்ச்சி முன்னேறி வந்திருப்பதை இந்நாவலில் கண்கூடாகக்காணலாம். கி.மு. 350 க்கு முந்தைய பண்டைய மேதைகளிலிருந்து இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுவரை உள்ள அறிஞர்கள் வரை பேசப்படுபவை படைக்கப்படுபவை கண்டுபிடிக்கப்படும் வானவியல் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தத்துவ சிந்தனைகளே!

எனக்கு இந்நாவலை வாசிக்கும்போதுதான் சாக்ரடீஸின் மாணவர் பிளாட்டோ என்பதும் பிளாட்டோவின் மாணவர்தான் அரிஸ்டாட்டில் என்பதும்  தெரியவந்தது.மிகவும் வியப்படைந்தேன். அவர்கள் மூவரும் புகழ்பெற்ற கிரேக்க தத்துவமேதைகள் என்று பள்ளி வகுப்பில் மனப்பாடம் செய்திருந்தேன். இவர்கள் மூவரின் மேல் இப்படி பைத்தியமாயிருந்திருக்கிறேனே இவர்கள் மூவரும் இப்படி வரிசையாக ஆசிரியர்கள் மாணவர்கள் என்ற அவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேனே என கூசிக்குறுகிப்போனேன். என் மனம் பதட்டமாகிவிட்டது. என் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. சரி இனி சற்றும் தாமதிக்கக்கூடாது என சர்வநாடியும் ஒடுங்கிப்போன என் உளத்தை மீட்டெடுத்து நாவலைத் தொடர்ந்து வாசிக்கலானேன்.

சாக்ரடீஸ் எப்போதும் சொல்வாராம்,”எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது என்னவென்றால் ‘ஒன்றுமே எனக்குத் தெரியாது’ என்பதுதான்” என்று. அவர் எல்லாவற்றையும் தெரிந்துவைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாததுபோல் இருந்திருக்கிறார். நான் என்னடாவென்றால் ஒன்றுமே தெரியாமல் எல்லாவற்றையும் தெரிந்தவள்போல் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் ஆறாகப் பெருகியது.

மூன்றாவதாக வந்த அரிஸ்டாட்டில் யாரென்று தெரிந்தவுடனேயே இப்படியாக அதிர்ச்சியுற்று மீண்டும் மெல்ல அடங்கிய என் மனம் அடுத்தடுத்ததாக வந்த பேரதிர்ச்சிகளால் தன் முழுக்கட்டுப்பாட்டையும் இழந்தது. ஏனெனில் நான் சற்றும் எதிர்பார்த்திராவண்ணம், நான் யாரையெல்லாம் தங்கள் இணையதள கட்டுரைகள் விமர்சனங்கள் வாயிலாக தத்துவவாதிகளாக  பெயரளவில் மட்டும் தெரிந்துவைத்திருந்து, “இவர்களையெல்லாம் பற்றி எப்போது தெரிந்துகொள்வேனோ! இவர்கள் எழுதிய நூல்களை எப்போது வாசிப்பேனோ! அப்படியே வாசித்தாலும் அவர்கள் கூறுவதை எல்லாம் என்னால் புரிந்துகொள்ள முடியுமா” என்றெல்லாம் நினைத்து ஒவ்வொரு தடவையும் எவர்களின் பெயர்களை வாசிக்கும்போதெல்லாம் பெருமூச்சு விட்டுக்கொள்வேனோ அவர்களெல்லாம் வரிசையாக என்னிடத்திலே அறிமுகம் செய்துகொண்டு அவர்களின் தத்துவ சிந்தனைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டால் எனக்கு எப்படி இருக்கும்!

என்னால் என் கைகால்கள் உதறலெடுப்பதை நிறுத்த முடியவில்லை. மனித கொரில்லா ஒன்று தன் பேரானந்தத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக பெருங்குரலெடுத்து ஊளையிட்டு கைகளை விரித்துக்கொண்டு ஓடியும் மரத்திற்கு மரம் தாவியும் கிளைக்குக்கிளைத் தாவித் தொங்கியபடியும் கொண்டாடுமோ அப்படியான உளநிலைக்கு ஆனந்தக்கண்ணீருடன் செல்லத் தொடங்கிவிட்டிருந்தேன். நான் கேள்விப்பட்ட தத்துவவாதிகள் ஒவ்வொருவர் பற்றியும் அவர்களின் சிந்தனைகளைப் பற்றியும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே என்னைப்  பரவசத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. என்னையே நான் நம்பாமல் அவ்வப்போது கிள்ளிப்பார்த்து சுய உலகிற்கு என்னை மீட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.

நாவல் முடியுந்தறுவாயில் என் அன்றாட வாழ்வில் என்கூடவே இருந்துவரும் இத்தனை நெருக்கமான வாழ்க்கைத் தத்துவத்தை மானுட சிந்தனையை இவ்வுலகின்மீது மனிதன் கொண்ட பொறுப்புணர்வை ஏதோ அயலானது என்றெண்ணி ஒதுக்கிவிட்டிருக்கிறேனே என்று என் மனம் மிகுந்த பாரமாவதைத் தடுக்க முடியவில்லை. மானுடராகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் வாழும் இவ்வுலகத்தைப் பற்றி  அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தை இருத்தி வைத்திருக்கும் பிரபஞ்சத்தைப் பற்றியும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த அண்டசராசரம் மனிதன் தோன்றுவதற்குக் காரணமாயிருந்துள்ளது. ஆனால் மனிதன் தன் அறியாமையால் தன் தலைக்கனத்தால்  தனக்கு உயிர் தந்த அந்த ஆதிமூலாதாரத்தாயையே எப்படியெல்லாம் சித்ரவதை செய்து கொன்றழித்துக்கொண்டிருக்கிறான் என்று இந்நாவல் வாசிக்கையில் மனம் பதறுகிறது. மனிதன் ஒன்றும் போய் அந்த பஞ்சபூதங்களையும் கட்டியாள வேண்டிய சக்தியை அந்தக்காலம் போல் காட்டிற்குச் சென்று நெடுங்காலம் தவமிருந்து பெறவேண்டியதில்லை. நான் ஏன் இங்கு இதைச் சொல்கிறேன் என்றால் சிறுவயதில் நிறைய சாமி படங்களைப் பார்த்துவிட்டு  நானும் இந்த முனிவர்களைப் போல காட்டுக்குச் செல்லவேண்டும்; அவர்களைப்போல ஒற்றைக்காலில் நின்று தவம்புரிந்து  என்னென்ன ஆற்றல்கள் வேண்டுமோ அதை என்முன் தோன்றும் தெய்வத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும் ; என்றாவது ஒருநாள் வீட்டைவிட்டுக் கிளம்பி காட்டுக்குச் சென்றுவிடவேண்டும் என்றே எண்ணம் கொண்டிருந்தேன். அந்த மயக்கம் தங்களைக் கண்டுகொள்ளும் வரையில் இருந்தது என்று சொன்னால் தாங்கள் நம்பமாட்டீர்கள்! தங்கள் விஷ்ணுபுர இலக்கிய விருதுவிழாவில் முதன்முறையாக முதல்நாள் கலந்துகொண்ட அன்றுதான் என் மனதிலிருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. சிறுபிள்ளைத்தனமான குழப்பங்கள் தெளிவாயின.

அதன் தொடர்ச்சியாக தங்கள் வெண்முரசுவை வாசிப்பதினின்றும் தங்கள் புனைவுகளை வாசித்ததினின்றும் தங்களின் ” நவீன தமிழிலக்கிய அறிமுகம்” அறிமுகப்படுத்திய இந்திய, ரஷ்ய எழுத்தாளர்களை வாசித்ததினின்றும் நான் என் இருள்மிக்க உலகத்திலிருந்து வெளிச்சத்தை நோக்கி நடைபோடத் தொடங்கினேன். இன்று அந்த வாசிப்பின் தொடர்ச்சியாகத்தான் சோஃபியின் உலகத்தையும் கண்டுகொள்ள முடிந்தது. இதை நான் மட்டும் கண்டுகொண்டால் போதாது. எனக்குத் தெரியவில்லை,

இந்நாவல் எந்த அளவில் நம்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என. அதிலும் நம் கல்விமுறையில் நிச்சயம் இதன் தாக்கம் இருக்கவேண்டும் என விரும்புகிறேன். 1950, 60 களில்தான் தத்துவம் ஒரு கட்டாயக் கல்லூரிப்பாடமாக இருந்துவந்துள்ளதாம். இப்போது தேர்ந்தெடுத்து கற்கப்படும் ஒரு துறையாக இருக்கிறது என்று இந்நூலின் முன்னுரையில் பேராசிரியர் குறிப்பிடுகிறார். இந்நூலை வாசித்ததிலிருந்து, ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளிலிருந்தே கணிதம் அறிவியல் போல தத்துவத்தை ஏன் ஒரு கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாது என்று எண்ணத் தோன்றுகிறது. நீ எந்த சாதியைச் சேர்ந்தவன்? நீ எந்த அரண்மனை பங்களாவிலிருந்து வருகிறாய்? என்று கேட்பதற்குப் பதிலாக, நீ எந்த நிலத்தைச் சேர்ந்தவன்? நீ வாழும் பூமி எங்கிருந்து வந்தது? நீ உன் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க என்ன செய்யப்போகிறாய்? என்று இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் மற்றவரைப்பார்த்து என்றைக்கு கேட்க ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் மனிதப்பிறவி என்று ஒன்று தோன்றியதற்கான அர்த்தமிருக்கும்! இவ்வுலகில் அன்பும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்!

என்னை மேலும் விரிவாக தத்துவ சிந்தனைகளை நாடுவதற்கு தூண்டியிருக்கும் இந்நூலாசிரியருக்கும் அதை மிகச்சிறந்த வகையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் திரு. ஆர். சிவகுமார் பேராசிரியருக்கும் மீண்டும் என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்!

நேரடியாக சந்திக்கும் பேறு தற்போது இல்லையென்றாலும் இணையதளம் மூலமாக தினமும் தங்கள் எழுத்துக்களாலும் மேடையுரைகளாலும் என்னை ஆசீர்வதித்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் என் அன்புமிக்க ஆசான் தங்களின் பாதங்களில் பணிந்து என் வணக்கங்களையும் நன்றிகளையும் இந்நேரத்தில் சமர்ப்பித்துக்கொள்கிறேன்!

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள,

கிறிஸ்டி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 18, 2021 11:31

May 17, 2021

அஞ்சலி:கி.ரா

கி.ரா மறைந்ததாக இணையத்தில் செய்தி. சமஸ் உட்பட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளம் ஏற்க மறுக்கிறது. சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றித்தான் இருந்தார். தசைகளின் இயக்கமும் குறைந்து வந்தது. ஆனாலும் பெரியவர், சாவே இல்லாதவர் என்று நம்பத்தான் உள்ளம் விரும்புகிறது.

நோய்க்காலம், எவரும் சென்று சந்திக்கவேண்டாம் என்று நண்பர்களிடம் சொல்வேன். எனக்கே சந்திக்கவேண்டுமென ஆசையிருந்தது. ஆனால் கி.ரா இளையவர்கள், வாசகர்கள் சந்திக்க வருவதை விரும்பினார். உற்சாகமாகி நினைவுகளை பெருகவிட்டு பேசிக்கொண்டிருப்பார்.

அவருடைய விருப்பப்படி கோபல்லகிராமம் மலையாள மொழியாக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தோம். இப்போது இச்செய்தி.

வணங்குகிறோம்

கி.ரா உரையாடல் கி.ரா கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு கோபல்லபுரத்து மக்கள் – வாசிப்பனுபவம் கி.ரா – தெளிவின் அழகு கி.ரா.என்றொரு கீதாரி கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள் கி.ராவுக்கு இயல் கன்னி எனும் பொற்தளிர் கி ராவை வரையறுத்தல் கி.ராவுடன் ஒரு நாள் கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை சொல்லும் எழுத்தும் இந்த இவள் – கி. ரா- வாசிப்பனுபவம் கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2021 11:36

ஆடல்

யாரோ பரிந்துரைக்க யாரோ அனுப்ப கிடைத்த இந்த இணைப்பு இந்த வீடடங்குக் காலகட்டத்தில் உற்சாகமான மனநிலையை உருவாக்கியது. முக்கியமாக இந்த காட்சித்துணுக்குகளில் நடிப்பு மிகச்சரளமாக இருக்கிறது. இங்கே தமிழகத்து டிவி நிகழ்ச்சிகளிலுள்ள செயற்கையான பாவனைகளும் நொடிப்புகளும் டெம்ப்ளேட் ஷாட்களும் இல்லை. இரண்டுபேருமே அத்தனை இயல்பு.

இன்னொன்று இலங்கைத்தமிழ். நான் மிகவிரும்பும் வட்டாரத்தமிழ். சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டது. அதன்பின் ஈழப்போராட்ட காலகட்டத்தில் அங்கிருந்து வரும் நண்பர்களிடம் பழகி அறிந்தது. எங்களூர் மொழிக்கு ஒலியளவில் நெருக்கமானது. திருவனந்தபுரத்துக்கு அந்தப்பக்கம் போனால் ஈழத்தமிழர்களை குமரித்தமிழர்கள் என்றுதான் நினைப்பார்கள். அன்று அது பலவகையிலும் வசதி.

அதிலும் ’காலம்’ செல்வத்தின் தீவுத்தமிழ். அவன் இவன் உவன் என்னும் சொல்லாட்சி. ‘அம்பது ரூபா உளைச்சிட்டான்’ என்பதுபோன்ற சொலவடைகள். அவர்கள் என்ன பேசினாலும் மகிழ்ச்சியாக கேட்டுக்கொண்டே இருப்பேன். அதிலும் செல்வத்தின் மனைவி தேவாவின் உச்சரிப்பு கிட்டத்தட்ட ஒருவகை பாடல்.

ஆண்பெண் உறவின் ரகசியங்களும் விளையாட்டுக்களும். இதற்கு முடிவே இல்லை. அஜந்தா சிற்பங்களில் பார்வதியும் சிவனும் சதுரங்கம் விளையாடும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. பார்வதி தெனாவெட்டான சிரிப்புடன் பகடையை உருட்ட திரண்ட புஜங்களுடன் விழி பிதுங்கி ‘என்னடா இது, ஒரெழவும் புரியலை’ என்று சிவன் அமர்ந்திருக்கிறார். மனம் உடைந்துவிட்டார் என்பது தெளிவு. கீழே பகடைக்களமாக பிரபஞ்சம்.

அறிந்த இலங்கை நண்பர்கள் எல்லாரும் நினைவுக்கு வருகிறார்கள். ஆச்சரியமென்னவென்றால் இது அ.முத்துலிங்கம் முதல் ’காலம்’ செல்வம் வரை அத்தனைபேருக்கும் பொருந்துகிறதோ என்று தோன்றுவதுதான். சரிதான் நமக்கும் பொருந்துகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 17, 2021 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.