Jeyamohan's Blog, page 953

July 10, 2021

நீலகண்டப் பறவையின் நிலம்

அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’ நீலகண்டப் பறவையைத் தேடி- நவீன் நீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…

அன்புநிறை ஜெ,

அதீன் பந்த்யோபாத்யாய வங்காள மொழியில் எழுதி தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ நாவல் கடந்த பத்து நாட்களாக ஒரு தொடர் கனவில் ஆழ்ந்திருந்த அனுபவத்தை அளித்தது.

சில சமயம் இரவுகளில் எண்ணற்ற கனவுகளும், இடையிடையே அரைகுறை விழிப்பிலும் தொடரும் நினைவிழைகள் ஒரு சரடு போல அந்தக் கனவுகளை எல்லாம் இணைத்துப் போவதாகவும் இருக்கும். இந்நாவலை வாசித்தது அது போன்ற ஒரு அனுபவம். இன்னும் மொழிபெயர்க்கப்படாத இரண்டு நூல்களில் இதன் இழைகளை முழுமை செய்யும் வேறு கதைகள் இருக்கலாம். ஆனால் இந்த ஒரு நாவலே தன்னளவில் ஒரு நிறைவான வாசிப்பனுபவத்தையும் தருகிறது.

கதையின் மையச் சித்திரம்:

ஒரு வங்காள டாகுர் குடும்பத்தில் தனபாபுவுக்கு மகன் (சோனா) பிறக்கும் நாளில், ஸோனாலி பாலி ஆற்றின் கரையில் அக்குடும்பத்தின் தர்மூஜ் வயல்களைக் காவல் காக்கும் ஈசம் ஷேக்கிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. இதில் வரும் நதி, வயல்கள், டாகுர் குடும்பம், அவர்களை அண்டி வாழும் ஏழை முஸ்லிம்கள் இவையே இந்த நாவலின் மையம் எனச் சொல்லலாம்.

அக்குடும்பத்தின் மூத்த மகனான மணீந்திரநாத் மனநிலை தவறியவர்(பைத்தியக்கார டாகுர்), வானிலிருந்து தவறிவிழுந்த ஒரு தேவன் போன்ற பேரழகன். பைத்தியக்கார டாகுர் ஒரு காலத்தில் அப்பிராந்தியத்திலேயே அறிவு மிகுந்தவர், சுற்று வட்டார மக்கள் அனைவராலும் நேசிக்கப்படுபவர். அவரது சித்தத்தை அலைக்கழியச் செய்து மறைந்து போன பொன்மான் தேடல் , பாலின் என்னும் வெளிநாட்டுப் பெண் மீதான காதல். அவரது தந்தை ஒரு மிலேச்சப் பெண்ணை குடும்பத்தின் மூத்த மருமகளாக ஏற்க இயலாத காரணத்தால் அவரது காதல் கனவு சிதைந்து மனநிலை சிதறுகிறது. அவரை இன்னும் இந்த மண்ணோடு பிணைத்து வைத்திருப்பது அவரது அகஆழம் உணர்ந்த மனைவியின் நேசம். சிறுவன் சோனாவின் கண்கள் வழியாக மேலும் சில பகுதிகள் விரிகின்றன. தனது காதலை அதி உன்னதமாக்கி, தன்னை மீறிய பித்தில் நிலமெங்கும் அலைகிறார் மணீந்திரநாத். அவரது இளவயது பிம்பம் என முளைவிடும் தம்பி மகன் சோனா அவரை போலவே நுண்ணுணர்வும் அறிவும் கொண்டவன். சாமுவின் மகள் பாத்திமா எனும் சிறுமியுடனான நட்பும், பின்னர் மூடாபாடா ஜமீன் பெண்கள் அமலா, கமலா உடனான உறவும், தனது குழந்தைமையில் இருந்து மீறிச்செல்லும் அனுபவத்தாலும் அலைக்கழிக்கப்படுகிறான் சோனா.

முக்கிய கதாபாத்திரங்களாக சில பெண்கள் வருகிறார்கள். திருமணமாகி வரும் போதே இழந்த காதலில் தன் சித்தத்தை சிதறடித்துவிட்ட டாகுர் மீது பேரன்பு கொண்ட அவரது மனைவி (பெரிய மாமி), டாக்கா கலவரத்தில் கணவனை இழந்து தன் சகோதரன் நரேன்தாஸ் குடும்பத்தோடு வாழும் மாலதி என்னும் அழகான இளம் விதவை, மூன்று முறை மணம் செய்து தலாக் செய்த பின் மேலும் துணையைத் தேடும் பதின்மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஜோட்டன் என்னும் முஸ்லிம் பெண், பசியின் தீயில் இடையறாது உழல நேரும் ஜாலாலி என சில முக்கிய பெண் பாத்திரங்கள். அத்தனை நீர்சூழ் உலகில் தாகம் தணிக்க வகையற்ற வாழ்வு அமையப் பெற்றவர்கள்.

மதக்கலவரத்தில் அகாலமாக தன் கணவனை இழந்து வைதவ்ய விரதங்களின் வெம்மையில் மனமும் உடலும் வாட வாழ்கிறாள் மாலதி. மாலதியின் இளம் வயது நண்பர்களான சமுசுதீனும் ரஞ்சித்தும் வளர்ந்து அரசியல் ரீதியாக ஆளுக்கொரு துருவமென முஸ்லிம் லீகிலும் சுதேசி இயக்கத்திலும் முனைப்பு கொண்டுவிடுகிறார்கள். பால்யத்தில் அவளுடன் திரிந்து அலைந்தவர்கள், அவளுக்கு பிரப்பம்பழம், பலிசப்பழம் பறித்துத்தரும் நண்பர்கள். இன்றும் மாலதியின் நிலை கண்டு வருத்தப்படுபவர்கள். அவர்கள் மூவருக்கிடையே அன்பின் ஈரம் தணியாது ஆங்காங்கே வெளிப்படுவதும், ரஞ்சித்துக்கும் சமுசுதீனுக்குமான நட்பும் மாலதிக்காக இருவரும் கவலைப்படுவதும், அவளுக்காக வேறேதும் செய்ய இயலாத சூழலும் என அப்பகுதி ஒரு அன்பின் சித்திரம்.

ஆபேத் அலியின் அக்கா ஜோட்டன், மனைவி ஜாலாலி. கடும் வறுமையில் இருப்பவர்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்காக வயல்களில் தானியக்கதிர்களை திருட்டுத்தனமாக அறுத்தும், ஒரே ஒரு பாக்கு உதிர்வதற்காக மரத்தடியில் மறைந்து காத்திருந்தும், ஆமை முட்டைகளை டாகுர் வீட்டில் கொடுத்து உதிர்ந்து கிடக்கும் வெற்றிலைகளை எடுத்துக் கொண்டும் உணவு சேகரிக்கும் ஜோட்டன். அவள் தன்னை உடனழைத்துச் செல்லக்கூடிய ஆணென அவள் நம்பும் முஸ்கிலாசான் பக்கிரிசாயபுவுக்கு அவள் சேகரித்த உணவனைத்தையும் சமைத்துப் படைக்கிறாள், தான் வெறும் வயிறாய் பட்டினியில் கிடக்கிறாள். அவர் வேறொரு பயணத்தில் இருப்பதாகக் கூறி கிளம்பிச் சென்றுவிட ஐந்து வருடங்கள் காத்திருக்கிறாள். பின்னர் அவர் வந்து அழைத்துப்போய் அவரோடு அவள் இடுகாட்டில் குடியேறுவதும், அவர்களது குடிசை வாழ்வும் மற்றொரு இழை.

எந்த நீரும் அணைக்க முடியாத வயிற்றுத்தீயைத் தணிக்க, மாலதி ஆசையாய் வளர்க்கும் வாத்து ஒன்றை ஜாலாலி திருடித் தின்று விடுகிறாள். மாலதி தான் ஆசையாய் வளர்க்கும் அந்த ஆண் வாத்து பிற பெண் வாத்துக்களுடன் வலம் வருவதைப்பார்த்தபடி தன் கணவனுடன் வாழ்ந்த இன்ப வாழ்க்கையை நினைத்து ஆறுதலடைபவள். வாத்து காணாமல் போன அன்று துடித்துப் போகிறாள். ஜாலாலி அந்த வாத்தை திருட்டுத்தனமாக நீருக்கடியில் கழுத்தைத் திருகியபடி அழுத்திக் கொண்டு நின்றதை அவள் நின்ற நிலையிலிருந்தே நினைவு கூறும் சாமு, மாலதியை ஆறுதல்படுத்தி வீடு திரும்பச் சொல்லிவிட்டு ஜாலாலியை தண்டிக்க வேண்டுமெனக் கோபமாக வருகிறான். குடிசைக்குள் சமைக்க எண்ணைக்குக் கூட வழியின்றி திருடிய வாத்தை நெருப்பில் வாட்டி உண்டுவிட்டு பசி ஆறிய நன்றி முகத்தில் தெரிய நிற்கும் ஜாலாலியைப் பார்த்தவுடன் பசியெனும் தீக்கு முன் திருட்டு சிறிதாகி விடுவதை சாமு உணரும் ஒரு சித்திரம்.

விளைச்சல் இல்லாத மாதத்தில் கிராமமே கடும் பசியில் அல்லிக்கிழங்கு தேடி பாவுசா ஏரியில் இறங்க, கூடையுடன் நீந்தி ஆழத்துக்குச் சென்று விடுகிறாள் ஜாலாலி. அங்கு நாட்பட்ட பசியிலும் தளர்விலும் அல்லிக்கொடிகள் காலைச் சுற்றிவிட நீராழத்தில் மிகப் பெரிய கஜார் மீன் அவளைத் தாக்குகிறது. தலைகீழாய் தண்ணீரில் மூழ்கிய நிலையில் மரணிக்கிறாள். பசியை அன்றி எதையுமே எண்ண இயலாத வாழ்வில் இருந்து நீருள் மூழ்கிடும் ஜாலாலி அந்த ஏரிக்குள் வாழ்வதாக நம்பப்படும் சோனாயி பீபி என்னும் தங்கப் படகின் ராஜகுமாரியைக் காணும்போது கேட்க சில கேள்விகள் இருக்கக்கூடும்!

நாடகீய தருணங்கள்:

கதையில் சில தருணங்கள் அதன் கனவுத் தன்மையால் மிளிர்கின்றன.

மேக்னா நதியின் மணல்வெளி, மட்கிலாச் செடிகளும், பிரம்புப் புதர்களும், காட்டு நாணற்செடிகளும் சூழ்ந்த இடத்தில் நிற்கும் அரசமரத்தடியில் தனக்கான உலகத்தை உருவாக்கிக் கொண்டு அம்மரத்தை ஒரு தெய்வத்தை வலம் வருவது போல மணீந்திரநாத் சுற்றி வருவதும், வானம் கருத்திருண்டு மழை பெய்யத் தொடங்கியதும் வெறிகொண்ட ஆகாயத்தைப் பார்த்து உற்சாகம் கொண்டு கைகொட்டி நடனமாடுவதும் அவர் அழகின் தேடலில் தன்னையழித்துக் கொண்ட ஒரு ஞானியாகவே படுகிறார். “There’s none I grieve to leave behind, but only one thee..” என்ற கவிதையை தியானிக்கும் மனதோடு தனையழித்துக்கொள்ளும் மகத்தான தேடல் இவ்வுலகத்துக்குரியதல்லாதாகிறது.

யாராலும் நிறுத்த இயலாமல் ஒரு யானை மீதேறி மணீந்திரநாத் ஊரை விட்டு வெளியேறும் பொழுதில் வெண்முரசின் நேமிநாதர் மனதில் தோன்றினார். வெண்முரசில் மண்ணில் நிகழ்ந்தவர்களிலேயே முழுமையான ஆண், மணமுடிப்பதன் முன் துறவு பூண்டு யானை மீதேறி அனைத்தையும் துறந்து துவாரகை விட்டகலும் காட்சி நினைவு வந்தது. அதுபோல உரிய தருணத்தில் இயலாமையினாலோ விதிவசத்தாலோ மேன்மையானதென அகம் அறிந்த ஒன்றின் அழைப்பை செவிமடுக்கும் வாய்ப்பிருந்தும் விண்ணெழ முடியாத போது எழும் நிலைகுலைவு சித்தத்தை அழித்துவிடுகிறது. ஏதோ ஒரு பொழுதில் இந்த நீலகண்டப் பறவையின் தேடலும் விண்ணிற்கு எழுந்துவிடும் சாத்தியங்களோடே மண்ணில் அலைகிறது. மண்ணை ஆளும் யானைக்கு சிறகு விரிக்கும் கனவுகள் அமைந்தால் ஏற்படக்கூடிய ஒரு மனநிலை எனத் தோன்றியது.

மீண்டும் மீண்டும் நிலவெரியும் இரவுகளில் மிதந்திடும் பொழுதுகள் கதையில் வருகிறது. ஆழ்மனம் சேகரிக்கும் நுண்தருணங்களால் ஆன கனவு வெளி. கரை காண முடியாத பாவுசா ஏரி தொன்மக் கதைகளின் உறைவிடமாக இருக்கிறது. நிலவிரவில் மயில் படகில் காற்றைத் துடுப்பாகக் கொண்டு ஏரியில் மிதந்து வரும் ராஜகுமாரி, நீருக்குள் வாழ்பவள். மாலையில் சூரியனை நீருக்குள் இழுத்துக்கொண்டு சென்று இரவெல்லாம் அவனைக் கையில் ஏந்தியபடி நீராழத்தில் நீந்தியபடி அதிகாலையில் மறுகரையில் வானில் ஏற்றிவிடுபவள்! கண்காண முடியாத பொழுதுகளில் நாளவன் எங்கு செல்கிறான் என பழங்குடி மனம் உருவாக்கிக் கொண்ட அழகிய கற்பனை மனதுக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது.

ஜாலாலி நீருள் ஆழம் நோக்கி போகும் அதே நேரம் கிராமத்தில் வாஸ்து பூஜைக்கென தாளங்கள் முழங்க எருமை பலியிடப் படுகிறது. ஒரே நேரத்தில் அந்த எருமைப்பலிக்கான ஆயத்தங்களும், ஹாஜி சாயபுவின் இரண்டாவது பீவி குளிப்பதைக் காண புதரில் ஒளிந்திருக்கும் பேலுவும், மகிழம்பழம் தேடி பாத்திமாவுடன் காட்டுக்குள் வழிதவறும் சோனாவும், பசியுடனும் காஜர் மீனுடனும் போராடும் ஜாலாலியும் என காட்சிகள் வேகம் பெறுகின்றன. ஜாலாலி நீருள் மூழ்கி உயிர் விட்டதும் ஆயிரக்கணக்கான மீன்கள், ராட்சஸக் கஜார் மீன்கள் அஸ்தமச் சூரியனால் சிவந்திருந்த நீரில் தண்ணீருக்கு மேலே வந்து துள்ளி விழுகின்றன. ஜாலாலியின் சடலத்தைச் சுமந்தபடி ஒரு கிரேக்க வீரன் போல டாகுர் ஓடும் தருணத்தில் உச்சம் அடைகிறது.

மணீந்திரநாத் பெற்ற உயர் கல்வியும், மேலை நாட்டுப் பெண்ணின் காதலும் அவரது தந்தை கைக்கொள்ளும் மரபின் மீதான பிடிவாதத்தின் முன் பலியாகிறது. அதனால்தான் மதத்தின் பெயரால் வெட்டுண்ட எருமைத் தலை பித்தனான டாகுரிடம் கேள்விகள் கேட்கிறது. “ஜாதியும் மதமும் மனுஷனை விட உசந்ததுன்னு ஏன் நினைசீங்க? ஏம்பா, நீங்க இந்த மனுஷனைப் பைத்தியமாக்கினீங்க?” என பெரிய மாமி தனது கணவரின் இழந்த காதலுக்காக மனதுக்குள் தன் மாமனாரிடம் கேள்வி எழுப்புவது போல, இத்தனை மக்கள் வயிற்றுப் பசிக்கு நீருள் மூழ்க என் தலையை வெட்டி எதை வெல்கிறீர்கள் என எருமை ஏளனம் செய்கிறது.

அதே போல மூடாபாடா ஜமீனில் துர்க்கை தசமி நாளில் நடைபெறும் எருமைப்பலியும் அதை ஒட்டி நிகழும் சம்பவங்களும் ஒரு புறம் அதிதீவிர நம்பிக்கையும் அதன் எதிரில் அவற்றைக் குறித்த ஒரு சிறு விசாரமும் என இருமைகள் கதையில் எதிரெதிர் உரையாடிய வண்ணம் இருக்கின்றன. மணீந்திரநாத்தின் தம்பி பூபேந்திரநாத்துக்கு தேவியிடம் அசைக்க முடியாத பக்தி. மணீந்திரரும் கம்பீரமாய் நிற்கும் தேவியின் முன் தன்னை மறந்து பணிகிறார். பத்தாம் நாளில் மகிஷனை பலியிடும் காட்சி உக்கிரமாய் இருக்கிறது. அனைவரும் உணர்ச்சிவயப்பட்டிருக்கும் அந்நிலையில் பைத்தியக்கார டாகுர் உருண்டு புரண்டு சிரிக்கிறார். தேவியின் சாந்நித்யமும் மகிஷ வதமும் ஒரு புறம் நிகழ விஸர்ஜனத்துக்குக் காத்திருக்கும் தேவியின் பதுமை அழுவதைப் போல சோனாவுக்குத் தோன்றுகிறது. மரபு நமக்குக் கையளிக்கும் நம்பிக்கைகளும், அதனுடன் முரண்பட்டு அறிவு எழுப்பிக்கொள்ளும் கேள்விகளுக்கும் இடையிலான அகத்தின் ஊசல்.

அரசியல்:
சிறிய கிராமம், சற்றே நிலவுடைமை கொண்ட சில குடும்பங்கள், அதனை அண்டி வாழும் ஏழை முஸ்லிம் குடும்பங்கள் என கதைமாந்தர்கள் அறிமுகமாகும் போதே பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்து அரசியல் பூகம்பம் அந்தத் தொலைதூர கிராமத்தில் மிக லேசான அதிர்வுகளாக உணரப்படுவதும் வருகிறது. எங்கோ நடக்கும் அரசியல் மாற்றங்கள் அந்த எளிய கிராமத்தில், டாக்கா கலவரத்தில் கணவனை இழந்த இளம் விதவை மாலதி, கிராமத்தில் லீக் அரசியலை உள்ளே கொண்டுவரும் சாம்சுதீன்(சாமு), சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டு தலைமறைவு வாழ்வு வாழும் டாகுர் குடும்பத்து பெரிய மருமகளின் தம்பி ரஞ்சித் என உணரப்படுகிறது. கடும் வறுமையில் இருக்கும் மக்கள் வாழ்வில் அந்தப் பிரிவினைக்கான விதைகள் முளை விடுவதையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த அழகிய நட்பு/உறவு என்னவாகப் போகிறதோ என்ற பதைப்பும் வாசகருக்கு வரச்செய்து விடுகிறார்.

அதே நேரம் பிரிவினையின் முதல் விதைகள் விழும் நாட்களிலும் அந்த கிராமத்து நட்புகளிலும், உறவுகளிலும் இன்னும் உரமிருக்கிறது. மக்கள் தங்கள் இயல்பால் ஒருவருக்கொருவர் உதவிடும் சித்திரமும் வருகிறது. கயவர்களால் இரவெல்லாம் சிதைக்கப்பட்ட மாலதியை துர்க்கையென எண்ணி காப்பாற்றும் ஜோட்டன். இறுதியாய் தன் உயிர் போகும் வேதனையிலும் மாலதியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடாதிருக்க ஒரு அற்புதத்தை நிகழ்த்திவிட்டு பீர் ஆகிவிடும் சாயபுவின் கதை. ஏரியில் மூழ்கிய ஜாலாலியை தூக்கித் தோளில் ஏற்றி கரை சேர்க்கும் டாகுர். மண்ணின் ஆழத்தில் வேர்கள் பின்னியிருக்கின்றன.

நிலக்காட்சிகள்:

கதை நிகழும் நிலம் ஆசிரியரின் குழந்தைப் பருவத்தில் அவர் வாழ்ந்த பகுதி. மிக உயிர்ப்பான நிலக்காட்சிகளின் சித்தரிப்பு கதை முழுவதும் விரிகிறது. அம்மண்ணில் நிகழும் ஒவ்வொரு பருவ மாற்றங்களையும் விரிவாகக் காட்சிப்படுத்துகிறார்.

சைத்ர மாதத்து அனற்காற்றில் சூனியமாக்கிடக்கும் வயல்வெளிகள், வெண்கலப் பாத்திரம் போல பழுப்பு நிறமாக விரிந்து கிடக்கும் ஆகாயம், வயல்வெளிகளை எரித்து சாம்பலாக்கி விட முனையும் ஆரஞ்சுத் தோல் நிற சூரியன், புழுதிக்காற்று எழும் காய்ந்த வயல்கள், மெல்லிய போர்வையென நீரோடும் ஸோனாலி பாலி.

மழைக்காலம் வந்தாலோ வயல், ஏரி, ஆறு, குளம் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட தீவுகளாக நீரில் மிதக்கும் கிராமங்கள். நெல் வயல்களில் முட்டையிடக் கூடுகட்டும் கிரௌஞ்சப் பறவைகள். பூக்களின் மேல் ஒரு காலை வைத்தமர்ந்து மீன் பிடிக்க நீரை உற்றுப் பார்க்கும் நீர்ப்பறவை.
குளிர்காலத்தில் வயல்களில் பனி மூடியிருக்க, கடுகுப் பூக்கள் வயல்களுக்கு மஞ்சள் பூசியிருக்கும். பசுக்கள் பாலைப் பொழிய, அறுவடை முடிந்த பயிர்களின் காய்ந்த அடித்தண்டு மட்டும் தரைக்கு மேலே நீட்டிக்கொண்டுருக்கும் வயல்கள்.

காட்சிகள் மட்டுமின்றி, ஊறிய சணல் தட்டையின் மணம் , பிரம்பு இலைகள் வேகும் மணம் போல பல விதமான வாசனைகள், பள்ளங்களிலிருந்தும் தாழ்நிலங்களிலிருந்தும் நீர் வடிந்து ஆற்றில் விழும் ஒலி என கிராமத்தைச் சுற்றி எழும் ஒலிகள் புலன்களை நிறைத்து கதையை உயிர்ப்புள்ளதாக்குகிறது. முதல் காட்சியில் நமைச் சூழும் நீரின் ஒலி கதை முழுவதும் தொடர்கிறது.

ஒரு மாபெரும் திரையில் தீட்டப்பட்ட இயற்கைச் சித்திரத்தில் ஆங்காங்கே அதன் ஒரு சிறு அங்கமாக காணப்படும் சிறு மனித ஓவியங்களாகவே இக்கதையின் சம்பவங்கள், கதை மாந்தர்கள் நினைவில் நிற்கிறார்கள். அந்த நதி நீர் குறையும் காலத்தில் மக்கள் ஆற்றை நடந்து கடக்கிறார்கள், மழைக்காலத்தில் நீர் பெருகி கிராமங்களைச் சூழ்ந்து கொண்டு தனித்த தீவுகளாக்குகிறது. தொன்மங்களின் ரகசிய அடுக்குகளைப் போல ஆழமறிய முடியாத பாவுசா ஏரி எண்ணற்ற மீன்களையும், வறண்ட காலத்தில் அல்லிக்கிழங்குகளையும் உணவாகக் கொடுத்தும், அவ்வப்போது உயிரைக் குடித்தும் கதை நெடுக உடன்வருகிறது. பருவ காலத்தைப் பொருத்து தானியங்களும் பயிர்களும் கண்ணை நிறைக்கின்றன. கண்ணுக்கெட்டிய வரை விரியும் பொன்னிற நெல் வயல்களும், இடையிடையே தண்ணீர்ப் பள்ளங்களில் துள்ளும் மீன்களும், வாசிக்கும்போதே நம் மேலே படர்ந்து விடும் புல்லின் ஈரமும் என நிலம் விரிகிறது.

இதில் வரும் பறவைகளை, மீன்களை, தாவரங்களைக் குறிப்பெடுத்து அவற்றை தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். பானசப் பாம்பு விழுங்க கூவிக் கொண்டே இருக்கும் ஹாட்கிலாப் பறவை, விருந்தினர் வரவைச் சொல்லும் இஷ்டி குடும் பறவை, நதியில் இருந்து மேலெழும்பும் கங்கா மைனாப் பறவைகள், ஜிஞ்சீ எனும் இரவுப் பூச்சிகள் என ஒரு மாபெரும் உயிர்த்தொகை. கோரைப்புல் காடு, பிரம்புப் புதரின் குளவிக்கூடு, சீதாப்பழ மரமும், கட்டாரி மரமும், காபிலா மரமும் சூழ்ந்திருக்கும் மாலதி வீடு. புகையிலை, உருளை, வெங்காயம், பூண்டு என வயலில் பயிரிடும் அவள் அண்ணன் நரேன்தாஸின் வயல். கல்யாண முருங்கை மரத்துக்குக் கீழே சணல் தட்டை வேலி போட்ட ஜாலாலியின் குடிசை. பவழமல்லி மரம், செம்பரத்தி மரம், செங்கடம்பு மரம், வெற்றிலைக்கொடி, வெள்ளரிப் பந்தல், பீர்க்கை, பாகற் பந்தல், தொங்கட்டான் மலர்ச்செடிகள், சகட மரம், காசித்தும்பைச் செடிகள் வளர்ந்திருக்கும் டாகுர் வீடு. ஜாம்ருல் மரம், பாதாபஹார் மரங்கள், வயலோரத்து மஞ்சத்தி மரங்கள், சோள வயல்கள், கோதுமை வயல்கள், பட்டாணி வயல்கள், சணல் தட்டை ஊறிய மணம், ஆகாசத்தாமரையும் அல்லியும் படர்ந்த ஏரி என அக்கிராமம் கண்ணுள் விரிகிறது.

இதில் வரும் பலவகையான வங்காள உணவு வகைகள்: சாறு நிறைந்த மஞ்சள் நிறக் கரும்பு, மர்த்தமான் வாழைப்பழம், வெள்ளை நாவற்பழம், மழைக்காலத்தில் தயாராகும் பனங்காய் வடை, வீட்டுக்கு வீடு மணம் கிளப்பும் பனம்பிட்டு, நெல் அவல், குளிர்காலத்தில் தயாராகும் எள்ளுருண்டை, கத்மா எனத் தின்பண்டங்கள். கொய்மீன் வதக்கல், பூண்ட்டி மீன் வற்றல், மற்றும் பல வகையான மீன்கள் என நீள்கிறது. இவற்றுக்கிடையே சுவையான உணவோ, மீன் வாடையோ கூட அண்டி விடக்கூடாத விதவை வாழ்வில், பிரம்புக் கொழுந்தை வேகவைத்து கடுகெண்ணையும் பச்சை மிளகாயும் சேர்த்து சாப்பிட கனவு காணும் மாலதி.

மாலினி, பாப்தா, இச்சா, போயால், சாந்தா, அலிமத்தி, சுர்மா, பொய்ச்சா மீன்கள். சேலா மீன்கள், மாச்ரங்கா மீன், டார்க்கீனா மீன்கள், புடவை கட்டிய பூன்ட்டி மீன்கள், பத்மா நதியின் கூட்டம் கூட்டமாகத் திரியும் இலிஷ் மீன்கள், ஸோனாலி பாலி ஆற்றின் மாலினி மீன்கள், பெரிய பாப்தா மீன்கள், காலி பாவுஷ் மீன்கள், மழைநீர் வடியத் தொடங்கும் காலத்தில் கிடைக்கும் பெரிய கல்தா சிங்கிடி மீன்கள், பாவுசா ஏரியின் ஆழத்தில் இருக்கும் பிரம்மாண்டமான ரூயி, காத்லா மற்றும் காலிபாஷஸ் மீன்கள் என மீன்களின் தேசமாகிய கிழக்கு வங்காளத்தின் மீன் வளம் பிரமிக்க வைக்கிறது.

வாசிப்பனுபவம்:

இக்கதையை வாசித்த பிறகு சில நாட்களில் கதையின் நிகழ்வுகள் பின்சென்று நிறம் மங்கத் தொடங்கியது. இந்நிலமே மனதை நிறைக்கிறது, கனவுகளாகி பெருகுகிறது. உயிர்ப்பெருக்கான ஒரு நிலம், விரிநீர் வெளிகள், திசைவிரிந்த வானில் பறந்தலைந்தபடி இந்நிலத்தை பார்த்த ஒரு உணர்வு. கல்கத்தா செல்லும் போது விமானப் பயணத்தில் கங்கை கடல் சேரும் முகப்பில் பல ஆயிரம் அகிடுகள் போல மடி பெருத்த வங்காளத்தை பார்த்த காட்சி நினைவில் வருகிறது. அடுத்தது காட்டும் பளிங்கென ஆழத்தை மறைத்து அருகெனக் காட்டும் உம்காட் நதியை (டாக்கி) ஸ்படிகம் என நீரோடும் சோனாலி பாலி நதியாக உருவகித்து எண்ணிக் கொண்டேன்.

ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!

இந்த வரிகளை இந்த நிலத்தில் வாழ்ந்த ஒருவர்தானே எழுத முடியும் எனத் தோன்றியது.

நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்குளிர்பூந்தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் நிறைந்த ஊர்ப்புறங்கள். கதையின் புறவயமான நிகழ்வுகள் நீலவானில் அலைந்து கரைந்து மறையும் மேகங்களென மெல்ல மெல்ல கடந்து சென்றுவிட நிச்சலன நீலமென நிலம் உள்ளே நிறைந்திருக்கிறது.

“அடிவானம் வரை பரந்து கிடக்கும் மைதானத்தில் இந்த நாளில் கரைந்து மறைந்துவிட யாருக்குத்தான் தோன்றாது? உலகம் முழுதும் நிலவில் முழுகிக் குளிக்கும்போது, ஆழமான நீரில் முழுகிச் சாக ஆசை யாருக்குத்தான் தோன்றாது?” – இக்கதையில் வரும் வரிகள். நீரில் மிதக்கும் நிலவுக்கான பாதையைப் பார்க்கும் போதெல்லாம் அதில் இறங்கி விடத்தோன்றும் பித்தின் தருணம் வாய்க்கப் பெற்ற ஒவ்வொருவருமே நீலகண்டப் பறவைக்கான தேடலில் தன்னை எங்கேனும் அடையாளம் காணக்கூடும்.

மிக்க அன்புடன்
சுபா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2021 11:34

கரோலினா நினைவுகள்

அன்புள்ள ஜெ,

செப்டம்பர் 2019 ல் உங்கள் வட கரோலினா வருகை மறக்க முடியாத இனியத் தருண நாட்கள். நாம் விரும்பும் எழுத்தாளர்களின் உடனான முதல் சந்திப்பு என்பது எப்போதும் மறக்க முடியாதுதானே.  நண்பர் ராஜன் வாட்ஸாப் குழுமத்தில் உங்கள் வருகைச் செய்தியைப் பகிர்ந்தவுடன் உள்ளுக்குள் தலைகால் புரியாத சந்தோசத்தில்தான் திரிந்து கொண்டிருந்தேன். வீட்டில் வெளிக்காட்டி கொள்ளவில்லை. சந்தோசத்தை வெளிக்காட்டிக்கொண்டு வீட்டில் திரிந்து கொண்டிருந்தால் முதலுக்கே மோசமாகிவிடும். நிகழ்வன்று ஏதாவது பிரச்சினை முளைத்து கலந்துகொள்ள முடியாத முன்னனுபவங்கள் எல்லாம் இருக்கிறது. சூதானமா இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பதிவு செய்யப்பட்ட நபர்களுக்குதான் நூலகக் கூடுகை அறையில் அனுமதி. அதனால், நிகழ்ச்சி பற்றி செய்தியறிந்தவுடன் முதல் ஆளாக பதிவு செய்து கொண்டேன்.

நிகழ்வுக்கு 30 நிமிடம் முன்னரே நூலக அறைக்குச் சென்று மற்ற வாசகர்களோடு உங்களுக்காக காத்துக்கொண்டிருந்தோம். நூலக அலுவலர்கள் பதிவுச் செய்த வாசகர்களின் பெயரைச் சரிபார்த்து உள்ளே சென்றமர அனுமதித்துக் கொண்டு இருந்தனர். உள்ளே சென்று அமர்ந்து வெறுமனே எவ்வளவு நேரம் அமர்ந்திருக்க முடியும். தெரிந்த நண்பர்கள் சிலர் வந்திருந்தது ஆறுதல், சந்தோசம். ராஜனின் மனைவி, மகள் மற்றும் பெற்றோர்கள் கூட்ட அறைக்கு வெளியே ஒரு மேசைமீது தாங்கள் கொண்டு வந்திருந்த புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தனர். தமிழ்நாட்டில் இருந்து புத்தகங்களை இருப்பதிலேயே குறைந்த விரைவு செலவில் பதிவு செய்தாலும், புத்தக விலையைவிட அனுப்பும் செலவு தான் அதிகம் எப்போது. வாசகர்களுக்கு நல்ல வாய்ப்பும் கூட உங்கள் புத்தகங்களை அங்கேயே வாங்கிக் கொள்ள. இரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்.

கோட் அணிந்து ராஜனோடு நூலக கட்டிடதிற்கு வெளியில் நுழைநடைபாதையில் நடந்துவரும் போது தான் முதல்முறையாகப் பார்க்கிறேன். உற்சாகமாக இருந்தது உங்கள் நடை. “சார் எப்படி இருக்கீங்க?” என்று கேள்விக் கேட்டு கைகுலுக்கிக் கொண்டேன். நல்ல வேளை, கொரோனா தொற்று நோய்க்கு முன்பு நடந்த நிகழ்வு. இல்லையென்றால் வெறும் கைகும்பிடு மட்டும்தான். நேர்காணல் நிகழ்ச்சியாக அன்றைய முதல் மதிய வேளைக் கூட்டம். நேர்காணல் நிகழ்த்தும் நூலக முதன்மை அலுவலர் (என்று நினைக்கிறேன்), தங்களைப் பற்றிய அறிமுகக்  குறிப்போடு நேர்காணலை நடத்தினார். வெண்முரசு நாவல் வரிசை 26 புத்தகங்கள், 25000+ பக்கங்களென தொடர்ந்து 6 வருடங்களுக்கு மேலாக எழுதிவரும் எழுத்தாளர் என்ற அவருக்கு இருந்த (எங்களுக்கும்) பிரமிப்போடுதான் நேர்காணல் நிகழ்வு நடந்தது. அயல் இலக்கியம், எழுத்தாளர்கள் என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஆங்கிலத்தில் தங்கு தடையில்லாமல் நீங்க பதில் அளிப்பதை பார்க்க சந்தோசமாக இருந்தது. நேர்காணல் முடிவில் வாசகர்களின் கேள்வி, பதில்களோடு நிகழ்வு இனிதே நடந்தேறியது. என் பங்குக்கு ஓரிரு கேள்விகள் கேட்டுத் திருப்தி அடைந்துகொண்டேன்.

ஆங்கிலத்தில் தங்கு தடையற்ற உரையாடலை நிகழ்த்த முடிந்த சந்தோசத்தை எங்களோடுப் பகிர்ந்து கொண்டீர்கள். வாசகர்கள் வழக்கச் சம்பிரதாயமாக கொண்டு வந்த, அங்கு வாங்கியப் புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் உங்களிடம். நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டேன். கையெழுத்து வாங்கிய புத்தகத்தை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். கோட் அணிந்து ஆங்கிலத்தில் முழு நேர உரையாடல் என, இதற்கு முன்னர் வேறெங்கும் உங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் அமைந்ததா என்றுத் தெரியவில்லை.

மூன்று மணிநேர இடைவெளிக்குப் பிறகு மாலை கரோலினா தமிழ் சங்கம் மூலம் “குறளும் கவிதையும்” தலைப்பில் நீண்ட உரை. இறுதியில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில்கள் என ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள். ஜாக்பாட் தான் எங்களுக்கு. வாசகர்களின் கேள்விகளுக்கு நீங்கள் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று பதில்கள் அளித்தது வியப்பாகவும், சந்தோசமாகவும் இருந்தது. உங்கள் தளத்திலேயே இந்த நிகழ்ச்சியின் முழுக் காணொளிகள் காணக் கிடைக்கின்றன.

ஒரு வார இடைவெளிக்குப் பிறகு தமிழ் கலாச்சார சங்க அமைப்பு மூலமாக மூன்றாவது நிகழ்வும் நடைபெற்றது. வாசகர்களின் கேள்வி பதில்கள் உரையாடலாக முழு நிகழ்வும் இருந்தது. ஒரு சில வாசகர்கள் கேள்விகள் கேட்டு பல்பு வாங்கிக் கொண்டதும் நடந்தது. என் பங்குக்கு இரண்டு கேள்விகள் கேட்டேன். ஒரு கேள்வியின் ஒரு பகுதிக்கு எனக்கும் பல்பு கிடைத்தது. நிகழ்ச்சி முடிந்தப் பிறகு பெயர் என்னவென்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டீர்கள். பயம் கலந்த சந்தோசம். நிகழ்ச்சி முடிந்து அரங்கத்திற்கு வெளியிலும் வாசகர்களோடு சிறிது நேரம் உங்களுடன் உரையாடல் தொடர்ந்து கொண்டு இருந்தது.

ஒரு வாரத்திலேயே மூன்று சந்திப்புகள் திருப்தியாக இருந்தது. வேறென்ன வேண்டுமென்ற மனநிலை.

இனிய, மிகப் பயனுள்ள சந்திப்புகள். மூன்று சந்திப்புகள் மூலமாக நிறைய வாசக நண்பர்கள் கிடைத்து இன்றுவரை அந்த நட்பு நல்லவிதமாக தொடர்கிறது. இலக்கிய வாசிப்பு உரையாடல்கள் சிறு அளவில் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.

நன்றி.

அன்புடன்,
முத்து காளிமுத்து

அமெரிக்க நூலகச் சந்திப்பு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2021 11:33

கி.ரா.உரை- கடிதம்

அன்புள்ள ஜெ.,

தங்களுடைய கி.ரா.புத்தக வெளியீட்டு உரை கேட்டேன். மிகக் கச்சிதமான சிறந்த உரை. உங்கள் குரலும் வெல்லப்பாகுப் பதத்தில் இனிமையாய் ஒலித்தது. முதன்முதலாகக் கேட்பவர்களுக்கும் தமிழ் இலக்கியத்தின் தலை சிறந்த பேச்சாளர் இவர் என்று மனதில் தோன்றும் அளவிற்கு சிறப்பான பேச்சு. உங்கள் உரைகளைத் தொடர்ச்சியாகக் கேட்கிறேன். மிக எளிதாகச் சொல்லலாம், பேச்சுக்கலையின் வடிவம் உங்கள் கைவசப் பட்டு விட்டது என்று. கி.ரா.விற்கு ஞானபீடம் கிடைக்காதது கூட வருத்தமில்லை. இப்பிடிப்பட்ட ஒரு எழுத்தாளருக்கு அவருடைய நூற்றாண்டு விழாவிலும் கூட, விருது கொடுத்து தன் மதிப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பை அந்த நிறுவனம் தவற விடுவதுதான் வருத்தமான விஷயம்.

உங்கள் உரை பல திறப்புக்களை அளித்தது. குறிப்பாக, நாட்டுப்புறக் கதையில் பாடபேதங்கள் இல்லாமல் இருப்பது. சொற்கள், எத்தனை ஆண்டுகள், எத்தனை காதுகள் மாறி, இன்றைய கதியை அடைந்திருக்கும். கர்நாடக சங்கீதப் பாடகர் அருணா சாய்ராம் பிருந்தாம்மா என்கிற அவருடைய குருவைப் பற்றிக் கூறுகிறார். அவர் பாடலை எழுதிக்கொள்ள அனுமதிக்க மாட்டாராம். அவர் பாடுவதைக் கேட்டு அப்படியே பாடவேண்டும். வேதங்களை ‘எழுதாக் கிளவி’ யாகச் செய்தவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆசிரியன் சொல்லுக்கிருக்கும் மதிப்பு அது. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடத்தப் பட்டிருக்கிறது. நானெல்லாம் பதினோராம் வகுப்பு படிக்கும்போது ‘வாழ்க்கையைப் படிக்கணும்னா ஜெயகாந்தனைப் படிங்கடா’ என்று ஒரு ஆங்கில ஆசிரியர் சொன்னதினாலேயே அவரைப் படிக்க ஆரம்பித்தேன்.

நீங்கள் இதுவரை எழுத்தால் நிலைபெற்றுவிட்டீர்கள், நீங்கள் சொல்லாலும் நிலைபெறவேண்டும். உங்கள் குரல் ‘மொண்ணைச் சமுதாய’த்தின் உணர்கொம்புகளை உயிர்ப்பித்தெடுக்க (உங்களுக்குப் பிடிக்காத) கல்லூரிகள் தோறும் ஒலிக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால் ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள் தோறும் உங்கள் குரல் ஒலிக்கவேண்டும். கல்வி வியாபாரமாகி விட்ட இந்தக் காலத்திலும் ஆசிரியரின் சொல்லுக்கு ஒரு மதிப்பிருக்கிறது. நீங்கள் ஆசிரியர்களின் ஆசிரியர்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2021 11:31

எழுகதிர்

இந்த பத்து கதைகளில் நற்றுணை ஒரு குறிப்பிட்டவகையான கலவை கொண்டது. எனக்கு நன்கு தெரிந்த ஓர் ஆளுமையின் வரலாறு அது. பெரும்பாலும் நேரடிவாழ்க்கைக்கதை. ஆனால் எழுதிவந்தபோது அதில் இவ்வுலகில் இல்லாத, வேறொரு உலகைச்சேர்ந்த ஒன்று வந்துசேர்ந்தது. அதை தெய்வம் என்கிறோம். ஒரு வசதிக்காகத்தான். வேறேதாவது சொல்கூட பயன்படுத்தலாம். என்றும் மானுடனின் கதைகளில் ஊடாடும் ஒருவகை அதீதக்கூறு அது.

மானுடன் கதைசொல்ல ஆரம்பித்ததே அதற்காகத்தான். வாழ்க்கையைச் சொல்வதெல்லாம் சொல்லிச் சொல்லி வாழ்க்கையை கடந்து தாவி எழுந்து விடுவதற்காகத்தான். எங்கிருந்து இவை தோன்றியனவோ அங்குவரை சென்று எட்டிப் பார்த்து விடுவதற்காகத்தான். தெய்வம் என்பது ஒரு சொல்தான். அது குறிப்பது பல்வேறு பொருட்களை. மானுடன் நெஞ்சில் தோன்றிய அன்பும், காதலும், நீதியும் எல்லாம் தெய்வங்கள் அல்லவா?

அந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது.

வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன.அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன. இன்றுவாசிக்கையில் சொல்லிச்சொல்லி தீராத சிலவற்றை சொல்லிவிடும் தகுதியை அந்த தாவுதல் வழியாக இவை அடைந்துள்ளன என்று தோன்றுகிறது.

இந்நூலை நண்பர் சுனீல் கிருஷ்ணனுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஜெ

எழுகதிர் வாங்க

 

 

[image error]

ஐந்துநெருப்பு முன்னுரை

பொலிவதும் கலைவதும் முன்னுரை

குமரித்துறைவி முன்னுரை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2021 11:31

July 9, 2021

மாயச்சாளரம் – அருண்மொழி நங்கை

‘சம்பூர்ண ராமாயணம்’ படம் பார்க்கும்போது எனக்கு ஒன்பது வயது. நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் எங்கள் வீட்டில் அப்பாவின் ‘சாங்க்‌ஷ’ னுக்காக நாங்கள் ஒரு குட்டி நாடகமே போடவேண்டியிருக்கும். கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க போகும் வழியில் நானும் பாட்டியும் திட்டமிடுவோம். வெள்ளிக்கிழமையன்று வரவிருக்கும் படத்தின் போஸ்டரை வியாழக்கிழமை மாலை செல்வமணி மாமாவின் டீக்கடை வாசலில் பார்த்ததிலிருந்து திட்டமிடுதல் கட்டம், கட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கும்.

மாயச்சாளரம் – அருண்மொழி நங்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 11:36

இருத்தலியல் ஒரு கேள்வி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தமிழில் வந்துள்ள இருத்தலியம் சார்ந்த நாவல்களை பற்றி எழுதியிருந்தீர்கள்.பின்தொடரும் நிழலின் குரல் நாவலையும் அப்படியான ஒன்றாக கொள்ள இயலும் என்று நினைக்கிறேன்.அரசியல்,தத்துவம் வீரபத்திரபிள்ளையை , அருணாச்சலத்தை முழுமையாக கைவிடுகிறது இல்லையா.

மேலும் விஷ்ணுபுரம் நாவலில் அஜிதன் பவதத்தரை வாதத்தில் வென்று கொள்ளும் வெறுமை , திருவடி கொள்ளும் உன்மத்த நிலை, சங்கர்ஷணன் தன் மகன் அனிருத்தனை இழந்து அடையும் துயர், பிங்கலனின் தேடலும் அவனது கன்டடைதலும் ஆகியவை ஒரு பெரும் அமைப்பின் தனி மனிதர்கள் கொள்ளும் பாடுகளை பேசுவதாகவும் பொருள் கொள்ள இயலும்.

நன்றி

சர்வோத்தமன்.

இருத்தலியம் தமிழில்

கசாக்,இருத்தலியல்,ஹைடெக்கர் -கடிதம்

அன்புள்ள சர்வோத்தமன்,

இருத்தலியல் எனும்போது மானுட இருப்பு சம்பந்தமான எல்லா சிந்தனைகளையும் அதற்குள் கொண்டுவந்துவிட முடியாது. உண்மையில் எல்லாச் சிந்தனைகளும் மானுட இருப்பின் பொருளென்ன என்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றன.

பெரும்பாலான புனைவிலக்கியங்கள் இருத்தலியல் சிக்கலைப் பேசத்தொடங்குகின்றன. ஏனென்றால் அவை ஓர் எழுத்தாளனில் இருந்து தொடங்குகின்றன. அவனுடைய இருத்தலை அவன் தத்துவப்பிரச்சினையாக ஆக்கிக்கொள்வதில் இருந்துதான் அவனுக்கு வினாக்கள் எழுகின்றன. அவன் அவ்வினாக்களுடன் வெளியுலகைச் சந்திக்கிறான். அந்நோக்கில் வெளியுலகையும் மாற்றியமைக்கிறான்

ஆகவே பேரிலக்கியங்களில் இருத்தலியல் பறதி [ angst] கொண்ட மையக்கதாபாத்திரங்கள் இருக்கும். போரும் அமைதியும் நாவலில் பியர் அன்னா கரீனினாவில் லெவின் போன்றவர்கள் அத்தகையவர்கள். லெ மிசரபிள்ஸ் நாவலின் ஜீன் வல்ஜீன், மோபி டிக் நாவலின் காப்டன் அஹாப் ஆகியோரையும் அப்படிச் சொல்லலாம். இருத்தலியல் என்பது ஓர் அடிப்படையான தத்துவச்சிக்கல்.

ஆனால் அவர்கள் இருத்தலியல் கதைநாயகர்கள் அல்ல. அந்நாவல்கள் இருத்தலியல் உருவாவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டன. என்ன வேறுபாடு? அக்கதாபாத்திரங்கள் இருத்தலியல் சிக்கலை அடைகின்றன, அச்சிக்கலில் நின்றுவிடவில்லை. அந்நாவல்கள் இருத்தலியல் வினாக்களை எழுப்புகின்றன, ஆனால் ஏதோ ஒன்றைக் கண்டடைகின்றன.

விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் இரண்டிலும் இருத்தலியல் சிக்கலுக்குச் சமானமான சிக்கல்கள் கொண்ட மையக்கதாபாத்திரங்கள் உள்ளன. ஆனால் அது அவர்களின் வாழ்க்கைச்சிக்கல், இருத்தலியல் முன்வைக்கும் அதே கோணத்தில் அவர்கள் அதைச் சந்திக்கவில்லை. அவர்கள் இருத்தலியல் சென்றடையும் இடங்களையும் சென்றடையவில்லை.

விஷ்ணுபுரம் ஒருவகை அகவயமாம தன்வரலாறு. தன் வரலாறாக தெரியாமலிருக்கும்பொருட்டு விரித்து விரித்து வேறொரு நிலத்தில் வேறொரு புனைவுக்களத்தில் வேறொரு தொன்மக்காலகட்டத்தில் நிறுத்தப்பட்டது. அதிலுள்ள மையக்கதாபாத்திரங்களின் எல்லா சிக்கல்களும் அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் நான் கடந்துசென்றவை. அவற்றை வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு ஆளுமையாக ஆக்கியிருக்கிறேன், அவ்வளவுதான்.

அது இருத்தலியல் அல்ல. மெய்யறிதல் என ஒன்று உண்டா, அது மானுடனுக்கு தேவையா, அதை அறிந்தவன் விடுதலைபெறமுடியுமா, அவ்விடுதலை என்பது என்ன என்னும் வினாக்கள்.அம்மெய்யறிவை அன்றாடத்துடன் பிணைத்துக்கொள்ளும் தவிப்பு. வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கோணங்களில் அந்த வினாக்கள்மேல் முட்டிக்கொள்கிறார்கள். சிதைகிறார்கள், கடந்துசெல்கிறார்கள், கண்டடைகிறார்கள்.

அவர்களின் ஒட்டுமொத்தமாக அந்நாவலில் திரண்டுவரும் ஒரு விடை உள்ளது. அந்த விடை இருக்கும்வரை அது இருத்தலியல் நாவல் அல்ல. அந்த விடை மிக அகவயமானது, நானே அடைந்தது, என்னை அது விடுவிக்கவும் செய்தது என்பதற்கு என் வாழ்க்கையே ஆதாரம். நான் அதனூடாக கடந்து இப்பால் வந்துவிட்டேன்.

பின் தொடரும் நிழலின்குரலும் அப்படியே. அதிலிருப்பது கருத்தியலுக்கும் தனிமனிதனுக்குமான உறவு. அவன் அதிலிருந்து எந்தவகையில் விடுதலைகொள்ள முடியும், அவன் அதற்கு எவ்வகையில் பொறுப்பேற்றுக்கொள்ள முடியும் என்னும் வினா. அந்நாவலில் ஏசு வந்து பேசவில்லை என்றால் அது இருத்தலியல் நாவல் என்று ஒருவாறாக வகுத்துவிடலாம். ஆனால் அவர் தோன்றுகிறார். எழுதுபவனின் அகம்பிளந்து வந்து நின்று தெய்வம்பேசும் சில தருணங்கள் உண்டு. அந்நாவலில் அந்த அத்தியாயம் அப்படிப்பட்டது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 11:35

பத்து ஆசிரியர்கள் – கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம் .நலம் அறிய ஆவல் .இன்றைய தினமலர் செய்தி ஒன்றை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன்

தங்களுடன்  மீண்டும் இலக்கிய நிகழ்வுகள் மூலமாக நேரடி சந்திப்புகள் நிகழும் நன்னாளை ஆவலுடன்

எதிர்பார்க்கிறேன் .
நன்றிகள்

தி செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்

எஸ்.எல்.ஃபைரப்பா

புகழ்பெற்ற 10 இந்திய இலக்கிய நூல்கள்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு பரிசளிப்பு

பெய்ஜிங்: ஜெயகாந்தனின் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுதப்பட்ட 10 புகழ்பெற்ற நவீன இலக்கிய நூல்களை மொழிபெயர்த்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்.சி.ஓ.,) இந்தியா பரிசளித்துள்ளது.

ராஜேந்திரசிங் பேடி

ஜெயகாந்தனின் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’,

தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதிய ஆரோக்ய நிகேதன் (வங்க மொழி),

ராஜேந்திர சிங் பேடியின் ‘ஏக் சதர் மைலி ஸி’ (உருது),

ரச்சகொண்டா விஸ்வநாத சாஸ்திரியின் ‘இல்லு’ (தெலுங்கு),

தாராசங்கர் பானர்ஜி

நிர்மல் வர்மாவின் ‘கவ்வே ஒவுர் காலா பானி’ (ஹிந்தி),

மனோஜ் தாஸ் எழுதி ஒடியா சிறுகதைகள்,

குர்தயாள் சிங்கின் ‘மரீ த தீவா’ (பஞ்சாபி),

எஸ்.எல்.பைரப்பா எழுதிய ‘பர்வ’ (கன்னடம்)

மனோஜ்தாஸ்

ஜாவேர்சந்த் மேக்னானி எழுதிய ‘வேவிஷால்’ (குஜராத்தி),

சையத் அப்துல் மாலிக்கின் ‘சூா்ய முகீா் ஸ்வப்னா’ (அஸ்ஸாமி)

ஆகிய நூல்களின் சீன, ரஷிய, ஆங்கில மொழிபெயர்ப்புகள் பரிசளிக்கப்பட்டு உள்ளன.

ஜாவேர் சந்த் மேக்னானி

அன்புள்ள செந்தில்குமார்

இது ஒரு நல்ல முயற்சிதான். இந்தப்படைப்பாளிகள் பலவாறாக இங்கே பேசப்பட்டவர்கள். அனைவருமே குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள்தான். மனோஜ்தாஸ் நான் வாசித்தவரை அவ்வளவு ஆழமான படைப்பாளி அல்ல. விஸ்வநாத சாஸ்திரியின் நாவல்களும் மெல்லிய பகடிமட்டும் கொண்டவை. ஆயினும் இந்திய இலக்கியத்தின் ஒரு கீற்று இதன் வழியாக அறியப்படும்.

குர்தயாள் சிங்

இந்தவகையான நிகழ்வுகள் தொடர்ச்சியாக ராஜதந்திர அளவில் நிகழ்ந்து வருகின்றன. நினைக்கும் அளவுக்கு இவற்றால் பயன் இருப்பதில்லை. வெவ்வேறு நூலகங்களில் இவை உறங்கவே வாய்ப்பு. ஆனால் இந்திய இலக்கியம் பற்றி எவரேனும் நாலைந்து வரிகள் எழுதினால் இந்த பட்டியல் அப்படியே அதில் இருக்கும். அவ்வாறுதான் உலக இலக்கியம் தொகுக்கப்படுகிறது.

ஞானபீடம், சாகித்ய அக்காதமி போன்ற விருதுகளின் முக்கியத்துவம் இங்குதான். ஜெயகாந்தன் ஞானபீடப்பரிசு பெறுவது வரை இத்தகைய பட்டியல்களில் அகிலன்தான் இடம்பெற்றுவந்தார். இந்திய இலக்கியத்தை வாசிக்கும் அயலவருக்கு வேறு வழியில்லை. இந்தப்பட்டியலையே நம்பியாகவேண்டும்.

சையத் அப்துல் மாலிக்

ஓர் இலக்கிய வாசகர் எந்த மொழியிலானாலும் அகிலனை வாசித்ததுமே தமிழில் நவீன இலக்கியம் இல்லை என்று சொல்லிவிடுவார். பல மேடைகளில் அவ்வாறுபல அறிஞர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 1986ல் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் மொழியாக்கம் செய்யப்படும்  வரை மலையாள இலக்கிய கட்டுரைகளில் தமிழில் நவீன இலக்கியமே உருவாகவில்லை என்றுதான் ஆய்வாளர் எழுதிவந்தனர்.

இப்போது நாம் விஸ்வநாத சாஸ்திரியை வைத்து தெலுங்கிலும் மனோஜ்தாஸை வைத்து ஒரியமொழியிலும் நவீன இலக்கியம் இல்லை என நினைக்கக்கூடும். அங்கே இன்னும் மேலான படைப்பாளிகள் இருக்க எல்லா வாய்ப்பும் உண்டு.

நிர்மல் வர்மா

ரச்சகொண்ட விஸ்வநாத சாஸ்திரியின் அற்பஜீவி என்னும் நாவல் ஏற்கனவே தமிழுக்கு வந்துள்ளது. அவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றவர். அவருடைய படைப்புகளை உலகில் எங்குள்ள இலக்கிவாதி வாசித்தாலும் தெலுங்கு ஓர் அற்பமொழி என்னும் எண்ணத்தையே வந்தடைவார்.

ஆகவேதான் சிலவிருதுகள் தகுதியற்றவர்களுக்குச் செல்லும்போது கடுமையான கண்டனத்தைஇலக்கிய விமர்சனத் தளத்தில் இருந்து தெரிவிக்கிறோம். சாதி, மதம், கட்சி, சிபாரிசுகள் சார்ந்து விருதுகள் அளிக்கப்படலாகாது. அது நம் முகத்தில் நாமே கரிபூசிக்கொள்வதுதான்.

ரச்சகொண்ட விஸ்வநாத சாஸ்திரி

தினத்தந்தி ஆதித்தனார் விருதோ, கலைஞர் கருணாநிதி விருதோ எவருக்கு அளிக்கப்பட்டாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேசிய அளவில் மதிப்புறு விருதுகள் தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் தேசியச்சூழலில், உலக அளவில் தமிழிலக்கியத்தின் மதிப்பையே அழிக்கிறார்கள்.

இங்கே ஒவ்வொருமுறை அத்தகைய இலக்கியவிமர்சனம் சார்ந்த எதிர்ப்புகள் வரும்போதும் பாமரக்கும்பல் ஒன்று ‘ஒருத்தருக்கு பரிசு கிடைச்சா மத்தவனுக வயிறெரிஞ்சு எதிர்க்கிறானுக’ என பேச ஆரம்பிக்கும். இலக்கியத் தகுதியில்லாத சில்லறை எழுத்தாளர்கள் இலக்கியத் தகுதி என்பதையே மறுத்து, இலக்கியமதிப்பீடு என்பதே மோசடியானது என சலம்புவார்கள். சிலர் கட்சிக்கோட்பாடு, சாதிக்கோட்பாடுகளை முன்வைப்பார்கள்.

பண்பாட்டின்மேல் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எவரை முன்னிறுத்துவது என தங்கள் தன்முனைப்பை, தன்னலத்தை கடந்து ஒரு பார்வை கொண்டிருக்கவேண்டும். பாமரரின் வசைகளை வாங்கிக்கொண்டு சிலர் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 11:34

கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

நான் தங்கள் தளத்தை ஓராண்டுக்கு மேலாக வாசித்து வருகிறேன். நான் முன்பு என் மேல் நம்பிக்கை இல்லாமல் ஆஞ்சி எந்த ஒரு செயலை செய்யவும் துணிவு இல்லாமல் இருந்தேன். காரணங்கள் பல அதில் ஒன்று என் கை நடுக்கம் (இது பரம்பரை பரம்பரையாக வர அதிக வாய்ப்பு உள்ளது ). நான் மருத்துவன் ஆணதல் என் கை நடுக்கம் அனைவரின் கவனத்தையும் இர்த்தது, நோயாளிகள், செவிலியர்கள் என அனைவரும் என்னை கேட்க என் கை நடுக்கம் மேலும் அதிகரித்தது. இதுவரை மது அருந்தாத என்னை கொஞ்சம் சரக்கை நிறுத்தினாதான் என்ன என்று பலர் கேட்டது உண்டு.

மேலும் இன்னும் பல குடும்ப சிக்கல்கள்.இதனால் நான் இரண்டு வருடங்கள் எந்த மருத்துவமனைக்கும் வேலைக்கு செல்லவில்லை. Post graduate தேர்வுக்காக படிக்க துவங்கினேன். ஆனால் அது நான் என் மீது கொண்ட அவனம்பிக்கையை அதிகரித்தது என்று உங்கள் தளத்தை வாசித்த நாட்களில் தெரிய வந்தது.

என்னை நான் மீட்டு எடுக்க செயல் ஆற்றுவது ஒன்று தான் வழி என்று கண்டுகொண்டேன். என் குறையை ஏற்று கொள்ள என் மனம் விரும்பாமல் என் தாழ்வுணர்ச்சிக்கு என் குடும்ப பிரச்சனைகளையும் ம ற்றவர்களையும் காரணம் காட்டியது. அந்த சுயஇரக்கத்தில் இருந்து நான் வெளியே வந்தது உங்கள் எழுதுக்களால் தான், இல்லை உங்களால் தான்,ஆம் உங்கள் எழுத்துக்கள் மூலம் நான் உங்களுடன் நேரடியான உரையாடலில் இருக்கிறேன்.

இன்று நான் வேலூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதுக்கு இரண்டு காரணங்கள் ஒன்று நீங்கள், இன்னொன்று உங்கள் வாசகனா கிய நான்.

நீங்கள் சித்திரை திருநாள் அன்று உங்கள் குருவான நித்ய சைதன்ய யதி அவர்கள் பற்றி ஆற்றிய காணொளியை உங்கள் தளத்தில் பகிர்ந்தால் என்னை போன்ற பலர் பயன் பெறுவார்கள்.

அனைத்திற்கும் நன்றி ஜெ.

இப்படிக்கு,

குமார்

அன்புள்ள குமார்

நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். செயல் உங்களை வளர்க்கட்டும். செயல் வழியாக நாம் கடந்துசெல்லும் போது மேலும் மேலும் புதிய களங்களைக் கண்டுகொள்கிறோம். அவ்வாறு அமையட்டும். வாழ்த்துக்கள்

ஜெ

அன்புள்ள ஜெ,

 

தமிழ் எழுத்துலகிற்கு உங்களின் பங்களிப்பு என்பது பிரம்மாண்டமானது. புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது. நாளும் சிலமணி நேரம் உங்களை வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்குள் ஒரு அறிதல் நிகழ்கிறது.  உங்களின் தீவிரமான எழுத்து , சலிப்பூட்டும் நடைமுறை வாழ்வில் இருந்து விடுபட்டு உக்கிரமான கற்பனை – நிகர் உலகில் வாழ வைக்கிறது. குறைந்த பட்சம் நடைபிணம் போல இருக்காமல் உயிர்ப்புடன் வாழ உங்கள் படைப்புகளை பற்றிக் கொண்டிருக்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சித்திரை பௌர்ணமிக்கான காணொளி வாசகர் சந்திப்பில் உங்களிடம் பேசியதும் பெரு மகிழ்ச்சியில் திளைத்தேன். உங்களிடம் கேட்பதற்கு பல கேள்விகள் இருந்தும் அனைத்தும் மறந்து விட்டது. அந்த இரண்டு மணிநேரமும் உங்களை பார்த்துக் கொண்டே இருந்தது உச்சகட்ட மகிழ்வை கொடுத்தது. சுரா தீவிரமான உரையாடல்களில் பேரழகனாக மாறுவார் என நீங்கள் சொன்னதை அப்போது நேரடியாக பார்த்தேன்.

“ஒழுங்கு என்பது நாம் அறிந்த வரிசைமுறையையும் தர்க்கத்தையும் கொண்டது. ஒழுங்கின்மை என்று நாம் சொல்வது நமக்குத்தெரியாத ஒழுங்கை” என்னும் உங்களின் ஆப்த வாக்கியத்தை பின்பற்றுவதால் பெரிதாக கண்டுகொள்ளவில்லை . அது போக 45 வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு நேற்று தான் தடுப்பூசிக்கான முன்பதிவு ஆரம்பித்தது.நான் பதிவு செய்து விட்டேன்.

நீங்கள் மேலும் இதே உக்கிரத்துடன் எழுத வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். மகாபாரதத்தை வெண்முரசு என மறுஆக்கம் செய்தது போல் இராமாயணத்தையும் , வேதாந்த – பௌத்த வரலாற்றை அதன் ஆசிரியர்களுடன் சேர்த்து மறுஆக்கம் செய்தால், அது தமிழிற்கு கிடைக்கக் போகும் மாபெரும் அதிர்ஷ்டம். விஷ்ணுபுரத்தில் ஒரு பகுதியாக வரும் இந்த பகுதி உங்களின் எழுத்தில் பேருருக் கொள்கையில் வாசகனுக்கு அதுவே இன்னொரு மாபெரும் பொக்கிஷம்.

இ.ஆர்.சங்கரன்

அன்புள்ள சங்கரன்

நலம்தானே?

நானும் நலம்.

இந்நாளில் இன்னொரு காலகட்டம் தொடங்கியிருப்பதாக உணர்கிறேன். புதிய களங்கள் காத்திருக்கின்றன என்றும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 11:33

குமரித்துறைவி

நாயக்கர் ஆட்சிக்காலம் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். உதிரிச் செய்திகளினூடாகச் சென்றபோது ஆரல்வாய்மொழியில் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் அறுபத்தொன்பது ஆண்டுக்காலம் மதுரை மீனாட்சி ரகசியமாகக் கோயில் கொண்டிருந்தாள் என்ற செய்தியை வாசித்தேன். முன்பு அதை அறிந்திருந்தேன், அங்கு சென்றுமிருக்கிறேன். ஆனால் வாசித்தது ஒரு நள்ளிரவில். அந்த தனிமையில் அச்செய்தி உடல்கரைந்து பறப்பதுபோன்ற உணர்வினை உருவாக்கியது. உடனே எழுத ஆரம்பித்து இரண்டு நாட்களில் எழுதி முடித்த சிறிய நாவல் இது- குமரித்துறைவி.

சிறுகதையாகவே எழுத ஆரம்பித்தேன். கொஞ்சம்போனதுமே குறுநாவல் என தோன்றியது. எழுதிமுடித்தபோது சிறிய நாவலாக ஆகிவிட்டது. இந்நாவலைப் பற்றி இதற்கு வெளியே நின்று நான் ஏதும் சொல்லக்கூடாது. ஏனென்றால் இதை எழுதியபோதிருந்த நிலை வேறொன்று. அங்கே எளிதாகச் சென்றுவிட முடியாது. இது ஒரு மங்கலப்படைப்பு.மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று.

மனிதர்களை வைத்து தெய்வங்கள் விளையாடுகின்றன என்றால் தெய்வங்களை வைத்து மனிதர்கள் விளையாட முடியாதா என்ன? இரு விளையாட்டுக்களும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒன்றையொன்று ஆடிபோல் பிரதிபலித்து பெருக்கிக்கொள்கின்றன. அலகிலா ஆடலுடையது தெய்வம். தன்னை வைத்து ஆடும்படியும் மானுடனை ஆட்டிவைக்கிறது

இந்நாவலை என் பிரியத்திற்குரிய சைதுக்குட்டி என்னும் ஜெ.சைதன்யாவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஜெ

குமரித்துறைவி வாங்க வான்நெசவு முன்னுரை ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை மலைபூத்தபோது முன்னுரை தேவி – முன்னுரை ஐந்து நெருப்பு முன்னுரை பொலிவதும் கலைவதும் முன்னுரை   குமரித்துறைவி முன்னுரை  
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 11:32

மரபுக்கலையும் சினிமாவும்- கடிதம்

மரபுக்கலையும் சினிமாவும்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்

 என் மாணவன் யானை சிவா அனுப்பித்தந்த ஒரு சிறிய கதகளி காணொளியை பார்த்ததை குறித்து உங்களுக்கு எழுத இருந்தேன், எதிர்பாராமல் இன்று தளத்தில் ’’மரபுக்கலையும் சினிமாவும்’’ குறித்த பதிவில் கதகளி, கேரள சினிமா குறித்த பல முக்கியமான தகவல்களும் வந்ததில் கூடுதல் மகிழ்ச்சியாயிருந்தது.,

கதகளியைக்  குறித்து சமீபத்தில்தான் அறிந்துகொள்ள துவங்கி இருக்கிறேன். சிபிமலயில் படங்களாக தேடித் தேடி பார்த்துக்கொண்டிருந்த  பல்கலைகழக காலத்தில் வடவள்ளியில் ஒரு சிறு தியேட்டரில்  கமலதளம் பார்த்தேன். அதுதான் கதகளிக்கு அறிமுகம்  எனக்கு. எனினும நந்தகோபனாக  இருந்த மோகன்லாலில் என்னால் அப்போது  கதகளி கலைஞனை கண்டு கொள்ள முடியவில்லை.  மனைவியை இழந்த ஒரு குடிகார கதாபாத்திரம் என்னும் அளவிற்கே என் புரிதல் இருந்தது. ஆனால் அந்த புரிதலுக்கே  அப்படம்  எனககு மிகப்பிடித்ததாக இருந்தது.

கதகளியின் நுட்பங்கள் தெரியாவிட்டாலும் அவர்களின் ஒப்பனையும் உடையலங்காரமும் பிடித்திருந்தது.   .சில வருடங்களுக்கு முன்பு  திருவனந்தபுரத்தில் ஒரு மாத பயிற்சிக்கு சென்றிருக்கையில் பத்பநாபஸ்வாமி கோவிலின் முன்பிருந்த கடையொன்றில் கதகளி முகமொன்றை மரத்தில் செய்துவைத்திருந்தார்கள் வாங்கி வந்து  வந்து வீட்டின் நுழைவாயில் சுவற்றில் மாட்டி வைத்திருக்கிறேன்.

களியாட்டத்தில் தெய்யம் கலைஞரான சுரேஷ்கோபியை கதகளி களைஞரென்று நினத்துக்கொண்டிருந்தேன் அத்தனைதான் என் கதகளி குறித்த அறிவு.

இப்போதும் இக்கலையின்மீது எனக்கு ஆர்வம் மட்டுமே இருக்கிறது அறிந்துகொள்ள  நான் வெகுதூரம் போகவேண்டி இருக்கிறது எனினும் தொடர்ந்து தேடி தேடி தெரிந்துகொள்ள துவங்கி இருக்கிறேன்

என் மாணவன்   யானை சிவா கேரளாவின் தத்தமங்கலம் என்னும் சிற்றூரை சேர்ந்தவன் அங்கு அருகிலிருக்கும்  ஒருகோவிலில் மாதத்தில் ஒரு  சனிக்கிழமை  மாலையில் கதகளி  நிகழ்ச்சி நடக்கும் அவன் காட்டிலில்லாமல் வீட்டிலிருந்தால் எப்படியும் அங்கு சென்று விடுவான். இரவு வெகுநெரத்துக்கு பிறகு என்னைஅழைத்து அன்றய அந்த நிகழ்வை குறித்து பேசிக்கொண்டே இருப்பான். என்னையும் வரச்சொல்லி அவன் பல முறை அழைத்தும் எப்படியோ போகமுடியாமலே  இருக்கிறது.  இத்தனைக்கும் கேரளா எனக்கு ஒரே ஒரு மணி  நேர பிரயாண தூரம்தான். கதகளியை, கதகளி ஆசான்களை குறித்து சிவா நிறைய பேசி இருப்பதாலும், உங்கள் தளம் வழியாகவுமே  இக்கலையை சிறிது தெரிந்துகொண்டிருக்கிறேன்..மூணாறில் ஒரு நிகழ்ச்சியை மட்டும் நேரில் பார்த்திருக்கிறேன்.தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களை  இனி ஒவ்வொன்றாக பார்க்கவிருக்கிறேன். 

சிவா பாலக்காட்டில் ஒரு நீர்வீழ்ச்சி இருக்கும் காட்டுப்பகுதியில்  சில  வருடங்களாக  பணியிலிருக்கிறான். ,அங்கு நானும் சென்றிருக்கிறேன் அத்தனை அருமையான இடத்தில்  இருந்துகொண்டு இரவுப்பணியில் அவ்வப்போது  என்னிடம் வெண்முரசு  கதை கேட்டுக்கொண்டு,  யானைகளை   பார்த்துக்கொண்டு, கதகளியை நினைத்துக்கொண்டு, பேசிக்கொண்டு, காணொளிகளில் அவற்றை பார்த்துக்கொண்டு அவன் இருப்பதில் எனக்கு ஏகத்துக்கும் பொறாமை இருக்கிறது

 தமிழ்  வாசிக்க தெரியததால் நான் சொல்ல சொல்ல கேட்டே வெண்முரசை  ஏறக்குறைய பாதி கேட்டிருக்கிறான். ஒரு வயதாகும்  அவன் மகனுக்கு துருவன் என்றுதான் பெயரிட்டிருக்கிறான். உங்கள் மீது பெரும் மரியாதை வைத்திருப்பவர்களில் அவனும் ஒருவன்.

 சமீபத்தில் ’உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலின் வரிகளில் செஞ்சோற்றுக்கடனுக்கு அர்த்தம் கேட்டு  அழைத்த அவனுடன் பேசி பேசி எப்படியோ வெய்யோனுக்கு வந்துபின்னிரவு  வரை கர்ணனை குறித்து பேசிக்கொண்டிருந்தோம் அப்போது தான் இந்த காணொளியை அனுப்பினான்.

 குந்தி கர்ணனிடம் பாண்டவர்களை போரில் ஏதும் செய்யக்கடாதென்று சத்தியம் வாங்கிக்கொண்டு சென்றபின்னால் கர்ண சபதத்தின் ஒரு பகுதியான கர்ணனின் மனதை சொல்லும் ’’எந்திக மன்மானஸே ‘’என்னும் ஒரே ஒருபாடலுடன்  மிக சிறிய காணொளிதான் எனினும் மீள மீள பார்த்தேன். முதலில் மகாபாரதமென்று நினைத்துக்கொள்ளாமல்  விலகி நின்று ஒரு கலையாக அதை பொறுமையாக பார்த்தேன், பின்னர்  பாடலின் அர்த்தத்தை மட்டும் இன்னொரு முறை, பின்னர் அந்த கலைஞரின் ஆட்டத்துக்கென ஒருமுறை , பின்னர் என் மனதில் இருக்கும் வெய்யோனாக அந்த கலைஞரை நினத்துக்கொண்டு மற்றொருமுறை. வெண்முரசை வாசிக்காமல் இருந்த்திருந்தால் இந்த காணொளியை அப்படியே சாதாரணமாக கடந்து சென்றிருப்பேனாயிருக்கும். இப்போது பெரும் மனநிறைவை அல்லது துயரை அளிக்கும் அனுபவமாக இருக்கிறது. துண்டால் கணகளை ஒற்றும் அந்த பாவனையில் என்னையும் கர்ணனாக உணரவைத்து கண் நிறைய வைக்கிறார் அவர்.

இந்த பதிவில் நீங்கள் சொல்லி இருப்பது போல //கதகளி  கலைஞர்கள் இன்றைய உலகுடன் சம்பந்தமில்லாத ஒரு பழய உலகில் வாழ்பவர்கள் தான்//, இதை நான் அந்த  காணொளியை இன்று மீண்டும் பார்க்கையில் நினைத்துக்கொண்டேன்

கேராளாவின் நீ ஸ்டீரிமில் ரெஞ்சி பணிக்கர் நடிப்பில் ’’கலாமண்டலம் ஹைதர் அலி’’ வெளியாகி இருக்கிறது இந்த வார கடைசியில் பார்க்கவிருக்கிறேன். .

தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வைக்கும் உங்களின்   எழுத்துக்களுக்கான நன்றிகளுடன்

லோகமாதேவி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 09, 2021 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.