Jeyamohan's Blog, page 956

July 6, 2021

குமரித்துறைவி பற்றி…

குமரித்துறைவி வாங்க

அன்பிற்கினிய ஜெ,

கடந்த சில மாதங்களாகவே எனக்கு ஆழ்வார்களின் பாசுரங்களின் மீது மிகுந்த ஈடுபாடு. தற்செயலாக திரு மாலோல கிருஷ்ணன் – ரங்கநாதன் இருவரும் பாடிய ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களை கேட்க வாய்த்தது. ஆழ்வார் பாடல்கள் புரிய ஆரம்பித்ததற்கு காரணம் அவை இசைப்பாடல்களாக கேட்க வாய்த்ததுதான். பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் அவர்கள் மார்கழி மாதம் தினமொரு திருப்பாவை பாடலுக்கு விளக்கம் சொன்னார். பின்னர் இராமானுஜ நூற்றெட்டந்தாதி உட்பட அனைத்து ஆழ்வார் பாடல்களையும் இசைப்பாடலாகவே கேட்டேன். பாடுபவரின் குரல் ஏற்ற இறக்கங்கள், பண்களின் இழுவைகளும் அழுத்தங்களும் அப்பாடலுக்கு முழுமையான விளக்கத்தை அளித்து விடுவதை கண்டேன்.

பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளின் இறைபாவங்களே என்னை உருக்கியது. இவர்கள் இருவருக்கும் பெருமாளும் கூட மனிதன்தான். பொதுவாக பக்தியுடையோர் யாவருக்கும் ஏதாவது நேர்ச்சை இருக்கும். முக்தியாவது கேட்பார்கள். பெரியாழ்வார் கண்ணனை தன் பிள்ளையாகவே பாவிக்கிறார். பெருமாளுக்கு கண்ணேறு கழிக்கிறார். அவன் சிறுநீர் துளி பட்டு சிலிர்த்ததாக பாடுகிறார்.

ஆண்டாள் கண்ணனை தன் காதலனாக, கணவனாக பார்க்கிறார். வாரணம் ஆயிரம் சூழ வலம் வர கண்ணனை கரம்பிடிப்பதாக கனா காண்கிறாள். செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் கண்ணனோடு கலக்கிறாள். அதை அவள் கெஞ்சவில்லை. உரிமை என்கிறாள். நான் சூடிக்கலைந்த மாலையை கண்ணன் தன் கருணையால் ஏற்று கொண்டான் என சொல்லவில்லை. காதலால் அது நிகழ்ந்தது. தெய்வ அணுக்கம் பக்தியால் நேரும்போது அது வெறும் சடங்காகிவிட கூடும். ஆனால் அது தன் குருதியுறவாகவோ அந்தராத்ம விழைவாகவோ பாவித்து வெளிப்படுகையில்தான் தெய்வமிறங்கிவிடுகிறது.

இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி என அபிராமியின் கொங்கைகளை அபிராமிபட்டன் பாடுகிறான். பிரபஞ்சத்தின் ஆதியந்த செளந்திரி என வர்ணிக்கிறான்.பாரதியார் கண்ணனை தன் பிள்ளையாக, காதலனாக கண்டு திளைக்கிறார்.

இவர்களெல்லாம் பக்திக்கும் மேல் சென்று கனிந்தவர்கள். பக்தி தெய்வத்தை மேலானதாக்கி பக்தனை தன்னிழிவுக்குள்ளாக்கி விடுகிறது. நாகரிக மனிதனுக்கான ஞான வழி தெய்வத்தை தன்னுறவாகவே கருதுவதே. சைவத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் பெருமானோடு தோழ மார்க்கம் கொண்டிருந்தாலும், தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என தான் யாருக்கெல்லாம் அடியார் என பட்டியலிடுவது முரணாக இருக்கிறது.

நவீன இலக்கியம் எழுதுபவர், வாசிப்பவருக்குள்ளே தெய்வத்தை உலவ விடுவதுதான் அதன் சிறப்பு. அல்லது இந்த பிரபஞ்சத்தில் தெய்வம் திகழும் நிலைகளை சொல்வது. அது மனிதர்களுக்கு அப்பாற்பட்டதல்ல. அவனுக்கு சாத்தியமற்றதுமல்ல. அந்த சாத்தியத்தை எழுதி இசைத்து காட்டியவர்கள் விஷ்ணுசித்தர், ஆண்டாள், பாரதியார், அபிராமி பட்டர் போன்றோர். அந்த வகையில்தான் தங்களின் குமரித்துறைவி நாவலும் வருகிறது.

மதுரைக்காரர்களுக்கு மீனாட்சி என்பவள் வளர்ந்த முது தாயல்லள். மதுரை வட்டாரத்தில் எல்லோர் வீட்டிலும் காலந்தோறும் வயதேறாமல் வசித்து வரும் செல்ல மகள்தான் ஆத்தா மீனாட்சி. புலவரென்பதால் குமரகுருபரர் பிள்ளைத்தமிழில் பாடி அரங்கேற்றினார். மதுரையின் எளிய மக்கள் பாடும் பிள்ளைத்தமிழையே அவர் வரிவடிவில் எழுதியிருக்கலாம்.

2017 ல் காவல் கோட்டம் நாவலை முதலில் வாசித்தேன். எங்கள் ஆத்தா மீனாட்சி புக்ககம் திரும்பி வரும் காட்சியை இரண்டு பக்கங்களுக்கும் குறைவான பக்கங்களில் விவரித்திருப்பார். அந்நாவலோ ஆயிரத்து எழுபது பக்கங்கள் கொண்டது. அவ்வப்போது சில தகவல்களுக்காக சில பக்கங்கள் வாசிப்பது நீங்கலாக, இருமுறை அந்நாவலை முழுமையாக வாசித்திருக்கிறேன். எங்கள் ஆத்தா மீனாட்சி நகர் திரும்பும் காட்சியும், மதுரைக்கோட்டையை இடிப்பதற்கு முன் கோட்டையின் காவல் தெய்வங்களை தரையிறக்கி, செல்லத்தம்மன் கோயில் வளாகத்தில் கொண்டு நிறுத்தும் காட்சிகள் வரும் பக்கங்களை வாசித்ததும், அது பற்றி பலருடன் பேசியதும் சிந்தித்ததையும் நான் கணக்கிலேயே வைத்து கொள்ளவில்லை. சு வெங்கடேசன் தன் அரசியல், அபிலாசைகளையெல்லாம் கைவிட்டாடிய சன்னதம். நவீன இலக்கியத்தின் அழகு இது என்பேன்.

கினியாழ்வினின் கதை இல்லையென்றால் பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் மற்ற பக்கங்கள் என்ன பொருள் கொள்ளும்? கிறிஸ்துவின் மலைப்பிரசங்கம் பற்றிய உரைகள் இடம்பெறாமல் போயிருந்தால் புத்துயிர்ப்பு நாவலின் இலக்கென்ன? டால்ஸ்டாய்தான் யார்?

சிந்திக்க தெரிந்தவன்தான் சிரிக்கிறான். இலக்கியம் வெற்றுச் சிரிப்புகளை விதைப்பதில்லை. பேரிலக்கியங்கள் அனைத்துமே மனிதனை அழச்செய்கின்றன. அந்த உச்சியில் உழன்று வெள்ளுயிராகி  அரும்பும் முறுவல், முறுகி முறுகி வெடிக்க வைக்கின்றன. அங்கு மனிதன் சிரிக்கிறான். குழந்தை போல பொக்கையான  புனித சிரிப்பு. வளர்ந்த மனிதன் சிரிப்பதற்கு அழுகை அவசியப்படுகிறது, வலி நிறைந்த வாழ்க்கை போல. இலக்கியத்தால் வரும் அழுகை என்பது அந்த பொக்கைச்சிரிப்புக்கான தயாரிப்புகள்தான்.

குமரித்துறைவி நாவலை வாசிக்கையில் என் கண்கள் நீர்கட்டிக் கொண்டது எத்தனை முறையோ தெரியவில்லை. இந்த கடிதத்தை எழுதி முடிப்பதற்குள் ஒரு சொட்டாவது உருண்டு இதில் விழுந்து அதற்கு சாட்சியாக வேண்டும்.

முன்பெல்லாம் பெருங்கோயில்களில் வழிபட விருப்பம் காட்டியதில்லை. பல கோயில்களின் வாசல்வரை சென்று கோயிலுக்குள் செல்லாமல் திரும்பியிருக்கிறேன். கன்னியாகுமரியும் அதிலுண்டு. அந்த இழப்புகளை எங்ஙனம் ஈடு செய்வேன் என தெரியவில்லை.

சுமார் அறுபதாண்டுகள் எங்கள் ஆத்தா எங்கள் மண்ணில் இல்லை. எத்தனை ஆசைகளோடு தன் புக்ககம் திரும்புகிறாளெனில் எத்தனை துயரங்களோடு இந்நகர் நீங்கியிருப்பாள்? ஆனால் மதுரை நகர் விட்டு போகும் வழியில் கொண்டையத்தேவன் கண்டது குறும்புசிறுமியையல்லவா? சுந்தரேசனும் உடனிருக்க பிள்ளைக்கனாக்களோடு பிறந்தகம் வருகிறாள் எங்கள் ஆத்தா மீனாட்சி.

எங்கள் ஆத்தா மீனாட்சி இம்மாமதுரை நகர்விட்டு போகும் போது எத்தனை உயிர்கள் என்னென்ன சொல்லி ஒப்பு வைத்திருக்கும்? இந்நகர்த்தெய்வங்களின் அழுகையை யாரறிவார்?

அவர் வேணாடு விட்டு கிளம்பும் பொது வேணாட்டுயிர்கள் என்ன உணர்ந்த்தனவோ எங்கனம் கலங்கியழுதனவோ அதைவிட கூடுதலாகவே எம் நகர் மக்களும் அழுதிருப்பர்.அவளை தன் வலத்தொடையிலும், உலகளந்த பரம்பொருள் ஆதிகேசவ பெருமாளை இடத்தொடையிலும் இருக்க, எதிரில் சுந்தரேச பெருமானைக்காணும் வேணாட்டு மகாராஜாவின் மனம் போல பெரும்பேறுடைய பிறிதொன்றுண்டோ?

அங்கயற்கண்ணியை புக்ககம் அனுப்புவதே சரி என, சிவீந்திரம் பெரிய திருமேனியின் கூற்றை வாசித்த போது, கருவேல முள்ளின் நுனியிறாங்க இடமில்லாமல் உடம்பெல்லாம் சிலிர்த்தது.

மகாராஜா பேசும் காட்சிகளிலெல்லாம் எனக்குள்ளிருக்கும் எல்லாம் உருகியோடின. மகளின் முன் பானகம் அருந்தி அவள் முன் அயர்ந்துறங்கும் காட்சியை கண்ட நான் பேறு பெற்றேன். அடுத்த வரியில் உறைந்தே போனேன். “அன்னையின் முலைப்பால் உண்ட பிள்ளை போல.”  இது ஜெயமோகன் விரல்வழியே எங்கள் ஆத்தா சுரத்தி அருளிய அமுதம். அந்தச் சுவையுணர முடிந்ததே சாமி! தந்தைக்கு மகளும் அன்னைதானே சாமி!

இந்நாவல் முழுக்க என்னையொரு தந்தையாகவே பெரும்பாலும் உணர்ந்தேன் என்பதற்கு என் மகள் குழலினியா மீன ராசி திருவோணத்தில் பிறந்தவள் என்பதும் காரணம். திருப்பூட்டுக்கு முன் மகாராஜா மீனாளுக்கு திலகமிடும்போது ‘இதுதான் கடைசி. இனி உன் மகளை தொட முடியாது’ என்ற வரிகள் என்னை உலுக்கி விட்டது. என் மகளை ஆத்தா மீனாட்சி என்றே கொஞ்சுவேன். என் மகளும் பிறந்தகம் நீங்கி புக்ககம் செல்வாள் எனும் எதிர்காலத்துக்கு ஆயத்தமாயிருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியது.

கதைகளிலிருந்து வாழ்க்கையின் சுரங்களை புரிந்து கொள்ளவேண்டும் என்பார் ஜெயகாந்தன். குமரித்துறைவி வெறும் கதையல்லவே! வரலாறு! மக்கள் மனங்களில் உறைந்த வரலாறு!

இந்நாவலை வாசிக்க தொடங்கிய போதிருந்து இப்போது இக்கடிதத்தை முடிக்கும் இத்தருவாய் வரை அவ்வப்போது மழை வந்தது. சாரலாக, தூறலாக, வழிவாக, ஒழுகலாக, பொழிவாக. இப்போதும் சொட்டிக்கொண்டே இருப்பதற்கு, இது பருவ காலம் என்பதொன்றே காரணம் என என்னால் நம்ப முடியவில்லை. நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட எல்லையற்ற, அளவற்ற, முடிவற்ற அருளுக்கு சாட்சிகளிருக்கலாம். காரணங்கள் அத்தனை வலிமை கொண்டதல்லவே!

குமரித்துறைவி நாவல் வாசிப்பவரை வெள்ளுயிராக்கவல்லது. ஏனென்றால் அன்னை மீனாட்சி மீண்டும் மதுரையில் குடியேறினாள் என்பதல்ல. எல்லோர் வீட்டுக்கும் வருவதாகவே உணர செய்கிறது. ஆத்தா மீனாட்சி எப்போதும் எங்கள் வீட்டு செல்லப்பெண்தான்.

அன்பன்
அ மலைச்சாமி
கண்ணூர், கேரளா

***

அன்புள்ள மலைச்சாமி,

குமரித்துறைவி வெளிவந்தபோது உணர்ச்சிக்கொந்தளிப்பான கடிதங்கள் ஏராளமாக வந்தன. எவற்றையும் வெளியிடவேண்டாம் என முடிவு செய்தேன். ஏனேன்றால் அன்று அந்த உணர்வெழுச்சிகள் அந்தரங்கமாகவே இருக்கவேண்டும் என நினைத்தேன். இன்றும் அவ்வாறே நினைக்கிறேன். அந்த உணர்வெழுச்சி அந்தரங்கமானது, ஆகவே புனிதமானது.

இன்று உங்கள் கடிதம் அந்நினைவுகளை மீண்டும் எழுப்புகிறது. அது ஒரு நிறைந்த ஆக்கம். மணச்சடங்குகள் போன்ற மங்கலநிகழ்வுகளில் என் படைப்புக்களை பரிசாக அளிக்கும் வாசகர்கள் பலர் உண்டு. சங்கசித்திரங்கள் அறம் வரை பல நூல்கள் அவ்வாறு அளிக்கப்பட்டுள்ளன. நூல் எதுவானாலும் நன்று. ஆனால் குமரித்துறைவி அந்த கொடையை மெய்யாகவே மங்கலமாக்கக்கூடிய ஒன்று

ஜெ

***

குமரித்துறைவி இரு கலைஞர்கள்வான் நெசவு பொலிவதும் கலைவதும் தங்கப்புத்தகம் ஆனையில்லா முதுநாவல் ஐந்து நெருப்பு மலைபூத்தபோது தேவி எழுகதிர் அந்த முகில் இந்த முகில் கதாநாயகி ஆயிரம் ஊற்றுகள் உடையாள் பத்து லட்சம் காலடிகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 06, 2021 11:31

துறவும் இலக்கியவாசிப்பும்- ஒரு கடிதம்

ஒரு மனிதன் எதன் பொருட்டு தனது வாழ்வில் மிக முக்கியமான ஒரு குறிப்பிட்ட முடிவுக்கு வருகிறான் என்பதை அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாது. ஏதோ நமக்குத் தெரிந்த வகையில் இது முக்கியம் அது முக்கியம் என்று விவாதத்தில் தொண்டை கிழிய பேசலாம். விவாதம் முடிந்தவுடன், இதெல்லாம் தேவையா சும்மா இருக்கிறத விட்டுட்டு எதுக்கு சாமி இந்த வம்பெல்லாம் என்று யோசித்து தூக்கம் கெடுத்து கொள்ளலாம்.

ஏனோ இதை தங்களுக்கு தெரிவிக்க தோன்றியது. இவையெல்லாம் நமக்கு தேவையா என்கின்ற குழப்பம் அடிக்கடி ஏற்படுகிறது. மனம் சும்மாயிரு சும்மாயிரு என்றே சொல்லிக் கொண்டிருக்கிறது. ஒடுங்கி அமர்தல் மட்டுமே உனக்கான பாதை என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

மிக்க அன்புடன்

அன்புள்ள _  அவர்களுக்கு,

இலக்கிய விவாதத்தில் ஈடுபடுவதைப் பற்றி கேட்டிருந்தீர்கள். தாங்கள் அறியாதது அல்ல. விக்ஷேபணம் என்பது அகத்தே கருவாக, விதையாக கிடப்பவற்றை செயலாக வெளிப்படுத்தி வெளியேற்றிவிடுவது. செயல்கள் அனைத்தும் அகத்துளிகளின் உமிழல்கள்தான்.

நீங்கள் இலக்கிய வாசிப்பு -விமர்சனத்தில் ஈடுபடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு அதற்கான தேவை இருக்கிறது, அதற்கான கரு உள்ளே இருக்கிறது என்றே பொருள். அதை மூடி உள்ளே தடுத்துவைக்க முடியாது. அது உள்ளே இருக்கும் வரை அதை இல்லாமலாக்கவும் முடியாது, அதிலிருந்து விடுபடவும் முடியாது.

வாசித்தும் பேசியும் ஒரு கட்டத்தில் அதை நீங்கள் கடந்துவிட்டால், உள்ளிருக்கும் விதைகளெல்லாம் முளைத்துவிட்டால் விடுபடுவீர்கள். பாலைவனத்தில் வீடுகட்ட மண் எடுக்கும்போது நீர் தெளித்து நாலைந்துநாள் வைப்பார்கள். விதைகளெல்லாம் முளைக்கும் அதை மீண்டும் காய வைப்பார்கள் மீண்டும் நீரூற்றி குழைத்து கட்டுவார்கள் இல்லையென்றால் சுவர்களில் செடிகள் முளைக்கும். அதைப்போல. நீரூற்றி எல்லா விதைகளையும் முளைக்கவைப்பதே விதைகளை அகற்றுவதற்கான வழி. இது

ஆனால் காமகுரோதமோகங்களுக்குப் பொருந்தாது. அவை முளைக்கும், ஆனால் அவற்றைவிட பெரிய எதிர்வினைகளை விளைவுகளை உருவாக்கும்.

ஆகவே ஒரு துறவிக்கு இலக்கியம் – இலக்கியப் பேச்சு தவறென நான் நினைக்கவில்லை. அவ்வாறு நித்யா சொன்னதும் நினைவில்லை. ஆனால் அதை கூர்ந்து கவனித்துச் செய்யவேண்டும். அது வெறும் ஆணவ வெளிப்பாடாக, பூசலாக ஆக விடக்கூடாது. அது கொந்தளிப்பை கசப்பை உருவாக்கக்கூடாது.

இலக்கியம் ஒருவகை உலகியல் என்பதனால் அதை உள்ளத்தின் ஒரு பெட்டியிலும் பிற சாதனைகளை இன்னொரு பெட்டியிலும் ஒன்றுடனொன்று தொடர்பில்லாமல் நடத்தவும் வேண்டும். இதுவே நான் அறிந்தது. உங்களுக்கும் தெரிந்திருக்கும். இத்தருணத்தில் சொல்வடிவை அளிப்பதே நான் செய்வது.

இங்கே சொல்லவேண்டிய இன்னொன்று உண்டு. இலக்கியம் காமகுரோதமோகங்களால் ஆனது. வாழ்வின் அலைக்கழிப்புகளால் ஆனது. அவற்றை கவனிக்கும் ஒரு யோகசாதகர் அவற்றிலிருந்து மெய்மையை நோக்கிய ஒரு பயணத்தையே செய்கிறார். அதை விழிப்புநிலையில், தெளிவாகச் செய்வதே உகந்தது. இலக்கியவாசிப்பை நீங்கள் கற்ற, உணர்ந்த மெய்மைநாட்டச் செயல்பாடுகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ள முயன்றால் இரண்டும் துலங்கக்கூடும்

உங்களுக்கு இருக்கும் தேவை என்பது அறிவார்ந்த செயல்பாடாக இருக்கலாம். அதுவே ஒருவகை யோகம்தான். பிரதிஃபா யோகம் என்பார்கள். சிலருக்கு அதுவும் தேவைப்படுகிறது. அந்தத் தேவை நிறைவுறாமல் அவர்களால் மேலும் செல்லமுடியாது. முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு துறவியிடம் கீதைக்கு ஓர் உரை எழுதும்படி நித்யா சொன்னார். அவர் சென்றபின் ‘கீதைக்குத்தான் ஏராளமான உரைகள் இருக்கின்றன, நீங்களும்கூட எழுதியிருக்கிறீர்கள்” என்றேன், சற்று நையாண்டியாகத்தான்.

நித்யா சொன்னார். “அவன் எழுதப்போவது அவனுடைய உரை. அவன் அறிந்த அனைத்தையும் தொகுத்துக்கொள்வான், அறியாத சிலவற்றை அடைவான். அதன்வழியாக முன்னால் செல்வான். அது ஒரு யோகசாதனை. அவன் எழுதி முடித்தபின் அந்நூலை எரித்துவிட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை”

அதையே சொல்ல விரும்புகிறேன். நீங்கள் உங்கள் மெய்ஞானத்தேடலை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கும் தீவிரமான அறிவுத்தளப் பணி ஒன்றைச் செய்யலாம். அது உங்களை முழுமையாக ஆட்கொள்ளலாம். அதற்கான விழைவு  நிறைவேறும், அதனூடாக நீங்கள் கடந்தும் செல்லக்கூடும். அந்த அறிவுச்செயல்பாட்டுக்கான தேவை ஒரு தடையென இருக்கவேண்டியதில்லை.

அந்த அறிவுப்பணியில் இந்த இலக்கியவாசிப்பு ஒரு பங்கை ஆற்றலாம். இதை அதனுடன் இணைத்து உங்களுக்கான உசாவல்களையும் கண்டடைதல்களையும் நிகழ்த்திக்கொள்ளலாம்.

இவை ஆலோசனைகள் அல்ல. அப்படி ஓர் இடத்தில் என்னை வைத்துக்கொள்ளவில்லை. நான் அறிந்ததை பகிர்ந்துகொள்கிறேன், அவ்வளவுதான்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 06, 2021 11:31

July 5, 2021

இலக்கியம், இடதுசாரிகள், தலித்தியர்

சிறுமையின் ஆதங்கங்கள்

அன்புள்ள ஜெ

உங்கள் கடிதம் [சிறுமையின் ஆதங்கங்கள்] கண்டேன். நான் அந்த கடிதத்தை அனுப்ப முக்கியமான காரணம், உங்கள் படைப்பு நீலம் இதழில் வெளிவந்திருப்பதை ஒட்டிய பிலாக்க்காணம்தான்.

சமீபத்தில் இடதுசாரிகள் தலித்துக்களை வசைபாடிய இரண்டு சந்தர்ப்பங்களில் ஒன்று இது, உங்கள் படைப்பை அவர்கள் வெளியிட்டது இடதுசாரிகளை கொந்தளிக்க வைக்கிறது.

தலித் சிந்தனையாளர்கள் பிறருடன் தொடர்பு கொள்வதை ஒருவகை ‘சோரம்போதல்’ ஆகவே இவர்கள் சித்தரிக்கிறார்கள். இதன்வழியாக தலித் சிந்தனை இயக்கத்தையே இவர்கள் சிறுமை செய்கிறார்கள். இதை நம்சூழல் ஒருவகையில் கண்டும் காணாமலும் அங்கீகரிக்கிறது.

ஆர்.ராகவன்

***

டி.தர்மராஜ் விழா உரை

https://youtu.be/U_XH4SADt3A

அன்புள்ள ராகவன்,

முதலில் எனக்குள்ள ஓர் ஐயத்தைச் சொல்லிவிடுகிறேன். யமுனா ராஜேந்திரன் உள்ளிட்ட ‘சுதந்திர மார்க்ஸியர்’கள் ஏதோ அவர்களுக்குரிய ஒர் இடதுசாரி அரசியலை முன்வைக்கிறார்கள் என்று நான் நினைத்திருந்தேன். அவர்களின் வசைபாடலும் கொக்கரிப்பும் எல்லாம் புலம்பெயர்ந்தமையின் வெறுமை உருவாக்கும் உளவியல் சிக்கலின் விளைவு என்ற அளவிலேயே கருத்தில்கொண்டேன்

ஆனால் எனக்கு அணுக்கமான இடதுசாரி நண்பர்கள் அவரை ஓர் அன்னியராகவே பார்ப்பதையும் கண்டுவந்தேன். அவர்களிடம் அவ்வப்போது பேசுவதுண்டு.

சென்ற ஆண்டு ஓர் அரசியல் உரையாடல். என்னிடம் ஓர் இடதுசாரிக் கட்சி ஊழியர் சொன்னார். “அதிகாரபூர்வமாக கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரை கட்சியினர் பொருட்படுத்தலாகாது. அவருடைய உண்மையான நோக்கம் நமக்குத் தெரியாது. அவருடைய பின்னணியும் தெரியாது. அவருக்குமேல் கட்சியமைப்புக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலையில் அவருடைய கருத்துக்கள் கட்சியை பாதிக்க அனுமதிக்கவே மாட்டோம். அக்கருத்துக்கள் எங்கள் கட்சிக்கு எதிராக இருப்பவர்களின் கருத்துக்களைவிட அபாயகரமானவை.”

அது அறிவியக்கத்துக்கு எதிரான ஒரு மனநிலை என நான் வாதிட்டேன். ஆனால் அவர் சென்ற காலத்தில் இவ்வாறு கட்சிக்குமேல் நின்று கம்யூனிசம் பேசியவர்களின் பட்டியல் ஒன்றை அளித்தார். இளவேனில் போல பலர். அவர்களெல்லாமே காலப்போக்கில் திமுகவில் சென்று ஐக்கியமாயினர். கம்யூனிஸ்டுக் கட்சியை மட்டுமல்ல, கம்யூனிசத்தையே கடுமையாக நிராகரித்தனர். அவர்கள் உருவாக்கிய அழிவு மிகப்பெரியது என்றார்.

ஆனால் கம்யூனிசம் பேசியநாட்களில் அவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சியைவிட ‘புனிதமானவர்களாக’வும் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையைவிட ‘அறிவானவர்களாகவும்’ தங்களை காட்டிக்கொண்டனர். கட்சியின் ’சமரசங்களுக்காக’ கட்சியை கடுமையாக விமர்சித்தனர். இந்த ‘holier than thou’ மனநிலையை கட்சி நூறாண்டுகளாக எதிர்கொண்டு வருகிறது என்றார் தோழர்.

“களப்பணியாற்றும் கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை சொல்லவும் வழிநடத்தவும் இவர்களை எவர் நியமித்தனர்? அவர்களை வசைபாடவும் இழிவுசெய்யவும் இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றார்.

அன்று முதல் என் எண்ணம் சற்று மாறியது. யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் இன்று மொத்த இடதுசாரிகளுக்கும் மேலே ஒரு பீடத்தில் தங்களை அமர்த்திக்கொண்டு புலம்பெயர்ந்த லெனின் ஆக பாவனை செய்துகொண்டு எழுதுவதெல்லாம் வெறும் முகநூல்சலசலப்பு அல்ல. இவர்களுக்கு வேறேதோ உள்திட்டம் இருக்கிறது.

அவர்கள் அளிக்கப்படாத கம்யூனிசக் கருத்தியல் தலைமையை கையிலெடுத்துக்கொண்டு தாண்டவமாடுவது வெறும் தனிநபர் அகங்காரத்தால் அல்ல. கண்டிப்பாக அது கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்குச் சாதகமானது அல்ல. அதற்குப்பின் வேறுசில சக்திகள் இருக்கவே வாய்ப்பு. ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் கட்சியினர்தான்.

இந்தக் கும்பல் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும், தலித் களப்பணியாளர்களுக்கும் ‘ஆணைகளை’ இடுகிறது. அவர்கள் அதை பொருட்படுத்துவதில்லை. உடனே அவர்களின் நேர்மையை சந்தேகப்பட்டு வசைபாடுகிறது. அவர்களின் செயல்பாடுகளைக் கொச்சைப்படுத்துகிறது. பொதுவெளியில் அவர்களின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது. இளையோரில் ஒரு சிறுசாராரை அவர்களிடமிருந்து விலக்குகிறது. இவர்களின் செயல்திட்டம் இதுவே.

கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் தலித் அமைப்புகளுக்கும் சுயஅறிவும், நேர்மைத்தகுதியும் உண்டு. அவர்களுக்கான இலக்கும் செயல்திட்டங்களும் உண்டு. பொதுவாக ஒரு குறிப்பிட்ட சூழலில் அரசியலமைப்புக்கள் மிக அதிகமான நட்புச் சக்திகளை திரட்டிக் கொள்ளும். குறைந்தபட்ச புரிதலின் அடிப்படையிலேயேகூட நட்புச் சக்திகளை உருவாக்கிக் கொள்ளும். பிறிதொரு தருணத்தில் தேவையென்றால் தங்களை இறுக்கமான போராட்ட அமைப்பாகவும் ஆக்கிக் கொள்ளும்.

அரசியலமைப்புகள் எவரை அணுகவேண்டும், எவரை விலக்கவேண்டும் என்பதை அவற்றின் கொள்கைத் தலைமையே தீர்மானிக்கவேண்டும். சந்தேகத்திற்கிடமான பின்னணி கொண்டவர்கள் அல்ல. அவர்கள் இடும் ஆணைகளையும் அவர்களின் வசைகளையும் எப்படிக் கையாள்வதென கட்சி முடிவெடுக்கவேண்டும்.

அம்பேத்கரின் வரலாற்றுப் பார்வை

https://youtu.be/U_XH4SADt3A

இன்றைய சூழலில் தலித் தரப்பினர் எதிர்கொள்வது ’ஒதுக்கிவைத்தல்’ என்னும் எதிர்வியூகத்தை. அதை வெல்ல ’அத்தனை இடங்களிலும் பரவுதல்’ என்னும் போர்முறையை அவர்கள் கையிலெடுக்கிறார்கள்.

இன்று தலித் இயக்கங்கள் குறுங்குழுக்களாக, அரசியல்-சமூகவெளிக்கு வெளியே நின்று கூச்சலிடுபவர்களாக தங்களை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவ்வாறென்றால் மொத்த சூழலும் அவர்களை அப்படியே கடந்துசென்றுவிடும் என அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

தலித் அமைப்பினர் இன்று அத்தனை அறிவுச்சூழல்களிலும் ஊடுருவ விரும்புகிறார்கள். அத்தனை பேரிடமும் விவாதிக்க விரும்புகிறார்கள். தங்கள் செயல்பாட்டில் சற்றேனும் ஆர்வம்கொண்ட அனைவரையும் உள்ளிழுத்துக்கொள்ள முயல்கிறார்கள். அவர்களின் போர்முறை இன்று அதுவாகவே உள்ளது.

விரைவிலேயே இன்று அவர்கள் நுழையாத பல களங்களில் அவர்களின் ஊடுருவல் நிகழலாம். சிற்பக்கலை, ஆலயக்கட்டுமானக்கலை, இந்து வழிபாட்டுமுறைகள், சிந்தனைமுறைகள் உட்பட பலவற்றில் ஆழ்ந்த தலித் பார்வைகள் உருவாகலாம். அது பெரிய கொந்தளிப்பையும் மாற்றங்களையும் உருவாக்கலாம்.

ஓர் உதாரணம், பேரா.டி.தர்மராஜ். அவருக்கும் பிற தலித் அறிவியக்கவாதிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அவர் தலித் சிந்தனைச்சூழலை நோக்கிப் பேசவில்லை. தலித்துக்களுக்கு சிந்தனையில் இடம்கோரி எழுதவில்லை. அவர் தமிழ்ச்சூழலை நோக்கிப் பேசுகிறார். ஒட்டுமொத்தமாக அதை வழிநடத்த முயல்கிறார்.

ஆகவே அவர் என்னுடன் பேசியே ஆகவேண்டும். தமிழில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களையும் கருத்தில் கொண்டபடியே பேசவும் எழுதவும் வேண்டும். அவர் அடுத்த தலைமுறையின் தலித் சிந்தனையாளர். உண்மையில் நான் தர்மராஜைப் பற்றி தலித் அரசியல்- கலாச்சாரம் சார்ந்து யோசிப்பதே இல்லை. என்னுடைய புனைவெழுத்தின் சிக்கல்களில்தான் அவரை இணைத்துக்கொண்டு யோசிக்கிறேன்.

நீலம் முன்னெடுப்பது இந்த அரசியலைத்தான். தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் போன்று இந்த உரையாடலை உருவாக்கி முன்னெடுக்கும் தலித் அறிவுஜீவிகள்மேல் மட்டும் குறிவைத்து அவதூறு செய்யப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர்களின் நம்பகத்தன்மை சிதைக்கப்படுகிறது.

இந்த அவதூறாளர்கள் தமிழ்ச்சிந்தனையில் ஒரு ’சேரி’யை உருவாக்கி தலிதியர்களுக்கு அளிக்கிறார்கள், அங்கிருந்து அவர்கள் வெளியேறலாகாது என வற்புறுத்துகிறார்கள், வெளியேறினால் வசைபாடுகிறார்கள். ‘நாங்கள் சிந்திக்கிறோம், வழிகாட்டுகிறோம், எங்களுக்குப்பின்னால் கொடிபிடித்து கோஷமிட்டு வாருங்கள், உங்களுக்கு வேறென்ன தகுதி?’ என்கிறார்கள்.

இங்கே தலித் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் தானாக சிந்தித்தால், தனிவழி கண்டால் கொந்தளிக்கிறார்கள். மிகமிக மெல்ல தங்களை விமர்சித்தால் இழிவுசெய்து அவதூறுசெய்து வசைபாடி கொப்பளிக்கிறார்கள். “நாங்கள் போட்ட பிச்சை, எங்களுக்கு நன்றியுடன் இருங்கள்” என்கிறார்கள். எனில் தலைமைகொள்ளும் சிந்தனையாளர்களை இவர்கள் எப்படி சகிப்பார்கள்?

கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். தர்மராஜ், ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோரின் பங்களிப்பையும் அவர்களை வசைபாடுபவர்களின் அறிவுத்தகுதியையும். அவர்கள் இருவரும் இன்று தமிழ்ச்சூழலையே பாதிக்கும் சிந்தனையாளர்கள். அந்த அளவுக்கு அடிப்படை ஆய்வுகள் செய்தவர்கள். இவர்கள் எந்த அடிப்படையில் தங்களை அவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்?

உருவாகி மேலெழுந்து வரும் ஒரு சிந்தனைமரபில், தங்கள் சாதியினரால் ஒடுக்கப்பட்டவர்களின் அறிவியக்கத்தில் எந்தத் தகுதியும் இல்லாமலேயே ஊடுருவி அவர்களுக்கு ஆணையிட இவர்களுக்கு கூச்சமே இல்லை என்பதை பாருங்கள். அவர்களால் சொந்தமாகச் சிந்திக்க முடியாது, அவர்கள் சில்லறைக்குச் சோரம்போவார்கள் என எப்படி இயல்பாக எண்ணிக் கொள்கிறார்கள் என்று பாருங்கள். வேறொன்றுமில்லை, சாதிமேட்டிமைத்தனம். அதைத்தான் முற்போக்குக் கொள்கையென மாயம் காட்டி முன்வைக்கிறார்கள்.

தலித் அழகியல் பற்றி பேசும்போது நண்பர் சொன்னார். “நாங்கள் தமிழிலக்கியத்தில் ஒரு தலித் தரப்பை உருவாக்க முயலவில்லை. அது ஏற்கனவே உருவாகிவிட்டது. ஒட்டுமொத்த தமிழிலக்கியப் பார்வையை எங்கள் நோக்கில் திருப்பியமைக்க விரும்புகிறோம். இமையம் தலித் இலக்கியம் எழுதுவது அல்ல எங்கள் நோக்கம். ஒரு பிராமண எழுத்தாளர் எழுதினாலும் அதில் தலித் பார்வை ஊடுருவி இருக்கவேண்டும் என்பதுதான்.” அந்த வியூகமே நவீன இலக்கியத்தின் அத்தனை படைப்பாளிகளை நோக்கியும் அவர்களை திருப்புகிறது. அவர்களிடம் விவாதிக்க விரும்புகிறது.

“இனி நாங்கள் இலக்கிய அரங்குகளில் இடம் கோரமாட்டோம். அத்தனை கலைஞர்களும் எங்கள் அரங்குகளில் வந்து பேசவைப்போம். இருபதாண்டுகளில் அது நிகழும்” என்று சொல்லும் ஒரு குரல் இன்று எழுகிறது. ஈகலிட்டேரியன் போன்ற அமைப்பில், அறிவுச்சமூகம் போன்ற அமைப்பில் அவ்வாறுதான் அத்தனை பேரும் வந்து பேசுகிறார்கள். கவனியுங்கள் இந்த அவதூறாளர்கள் மிகச்சரியாக இந்த வியூகத்தையே குறிவைத்து தாக்கி இழிவுசெய்கிறார்கள்.

கருத்தியல் களத்தில் மெய்யாகவே செயல்படும் எவருக்கும் இலக்கியவாதி அவனுடைய படைப்புகளால்தான் பொருள்படுகிறான். நானோ சுந்தர ராமசாமியோ க.நா.சுவோ அதற்குமுன் புதுமைப்பித்தனோ அப்படித்தான் அணுகப்படுகிறோம். அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டனர். புதுமைப்பித்தன் இடதுசாரிகளால் நசிவிலக்கியவாதி, நச்சிலக்கியவாதி என விமர்சிக்கப்பட்டதுண்டு. ஒரு கட்டத்திற்குப் பின் அவர் படைப்புகளில் அவர்களுக்கு ஏற்புடையவை கண்டறியப்பட்டன. ஒரு நட்பு முரண் உறவு இது.

ஒரு சிறு ஐயத்திற்கிடமான பின்னணி கொண்ட குழு அளிக்கும் முத்திரைகளை சூழல் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. இலக்கியவாதியை காழ்ப்பு ஒன்றுமே செய்யாது. மேலோட்டமான சில வாசகர்களை அவனிடமிருந்து அது விலக்கும். அதனால் பெரிய இழப்பும் இல்லை. அவனுடைய ஆக்கங்களே அவனுக்காகப் பேசுவன. அவை என்றுமிருக்கும்.

அது இந்த காழ்ப்பாளர்களுக்கு புரிவதில்லை. நாலு காழ்ப்பை கொட்டிவிட்டதுமே ஒரு படைப்பிலக்கியவாதியை ஒழித்துவிட்டோம் என கற்பனை செய்கிறார்கள். சூழல் அதை கால்தூசுக்குக் கூட பொருட்படுத்தவில்லை என்று கண்டால் குமுறுகிறார்கள். இது என்றும் இவ்வாறே. இவர்களிடம் எவரும் பேசமுடியாது.

மிகவிரிந்த ஒரு புனைவுலகை நான் உருவாக்கியிருக்கிறேன். வரலாற்றை மீட்டெழுதியிருக்கிறேன். மெய்யான இடதுசாரிகளும் தலித்சிந்தனையாளர்களும் அதைநோக்கி வந்துகொண்டேதான் இருப்பார்கள். அதை ஏற்றும் மறுத்தும் ஆராய்வார்கள். இன்னும் சிலநூறாண்டுகளுக்கு.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 05, 2021 11:35

விகடன் பேட்டி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

விகடன் பேட்டியின் இரண்டாம் பாகமும் பார்த்துவிட்டேன். சுருக்கமான உரையாடல். நீங்கள் உற்சாகமாகவும் கூர்மையாகவும் பதிலளித்தீர்கள். உங்கள் கதைகளையும் கட்டுரைகளையும் இணையத்தில் வாசிப்பவர்களுக்கு அதில் புதியவை என சில கோணங்களையும், சில புதிய அவதானிப்புகளையும்தான் சொல்லமுடியும். ஆனால் புதிய வாசகர்களுக்கு நல்ல அறிமுகமாக அமையும் என நினைக்கிறேன். சற்று சீண்டிப்பேசவைக்கும் கேள்விகளும் ஆழமான கேள்விகளும் கலந்தே இருந்தன.

நாகராஜன்

அன்புள்ள ஜெ,

விகடன் பேட்டியின் இருபகுதிகளும் சிறப்பானவை. என் அலுவலகத்தில் இதுவரை உங்களைப் பற்றி பெரிதாகக் கேள்விப்படாதவர்கள் பலர் பார்த்தனர். அவர்களில் ஆசாரமான பார்வையும், மத விஷயமெல்லாம் கொஞ்சம் தெரியும் என்னும் நம்பிக்கையும் கொண்ட [ஆனால் வாட்ஸப்பை தாண்டி வாசிக்காத] சிலருக்கு பேட்டி சீண்டலாக அமைந்தது. அவர்களுக்கு ஓர் எழுத்தாளன் இத்தனை நிமிர்வுடன் இருப்பது ஆச்சரியம். எழுத்தாளன் பணிந்து மென்மையாகப்பேசவேண்டும் என நினைப்பவர்கள். மதவிஷயங்களில் ஒன்றும் தெரியாதவனாகவும் ஆசாரவாதிகளுக்கு அடங்கியவனாகவும் பேசவேண்டும் என நினைப்பவர்கள். அவர்களுக்கு ஒரு எரிச்சல். கொஞ்சம் பதற்றம். அதேபோல பெரிதாக படிக்காதவர்களுக்கு இதென்ன என்னென்னவோ சொல்கிறார் என்று குழப்பம். அவர்களில் எவரும் படிக்கப்போவதில்லை. ஆனால் இளைஞர்கள் சிலர் இதன்வழியாக வாசிப்புக்கு வந்தால் மிக நல்லது

ஜெயராஜ்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 05, 2021 11:34

மலைபூத்தபோது

அமேசான் நூல்கள்

சிறுகதையின் இயல்கைகளில் ஒன்று அது கவிதையை நெருங்கமுடியும் என்பது. கவிதை இன்று ஒருவகை நுண்கதையாக ஆகிக்கொண்டிருக்கிறது. உண்மையில் இவ்விரண்டு நகர்வுகளும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன. கவிதை தன் பாடல்தன்மையை கைவிட்டு உரைநடையை நோக்கியும் சித்தரிப்பு நோக்கியும் வந்தது. கதை வாழக்கையைச் சொல்வது என்பதை விட்டு மேலெழுந்து உருவகங்கள், படிமங்கள், மறைபொருள்தன்மை என கவிதைக்கான அழகியலை கைக்கொள்ளலாயிற்று. இன்று அவற்றுக்கிடையேயான வேறுபாடு மிகமிகச் சிறியது.

இவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை.

ஆகவே உணர்வெழுச்சிகளை, வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை. புன்னகைக்க வைக்கும், கற்பனை விரியச்செய்யும், வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம், அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது.

அவ்வகைமைக்குள் பல வழிகளை இக்கதைகள் தொடர்கின்றன.எரிமருள் போன்றவை வண்ணக்கலைவின் அழகு கொண்டவை என்றால் கழுமாடன் போன்றவை தொன்மத்தை தொட்டு விரிபவை. அனைத்துமே கவித்த்துவத்தின் வண்ணங்கள்தான். கதைகள் என்றவகையில் இவை வாழ்க்கையின் உயிர்த்துளி ஒன்றை ஊசிமுனையால் என தொட முயல்பவை.

மதிப்பிற்குரிய கோவை இயகாக்கோ சுப்ரமணியம் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெயமோகன்

வான்நெசவு வாங்க

ஆயிரம் ஊற்றுக்கள் முன்னுரை

வான்நெசவு முன்னுரை

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 05, 2021 11:33

ஆலயம் கடிதம்-6

ஆலயம் எவருடையது? ஆலயம் கடிதம் 1 ஆலயம் கடிதங்கள்-2

ஆலயம் கடிதங்கள் 3 

ஆலயம் கடிதம் 4

ஜெமோ,

திமுக அரசு வந்ததுமே அதற்கு சாமரம் வீச ஆரம்பித்துவிட்டீர்கள். நீங்கள் எடுத்துக் கொடுக்க அவர்கள் அதை வைத்து மேலே செல்வார்கள். இதற்கெல்லாம் உங்களுக்கு என்னென்ன அளிக்கப்படும் என்று எங்களுக்கும் தெரியும்.

இந்த கட்டுரையில் பாமரர்கள் மேல் இருக்கும் காழ்ப்புதான் இருக்கிறது. கோயிலைப் பயன்படுத்த சாமானியர்களுக்கு தெரியாது, ஆகவே அவர்களை உள்ளே விடக்கூடாது, கோயிலை பணமுள்ளவர்கள் மட்டுமே தரிசனம் பண்ணவேண்டும், இந்துக்களுக்கு மட்டுமாக கோயில் இருக்கக் கூடாது, இந்து அல்லாதவர்களும் பணமிருந்தால் கோயிலில் வந்து கலைக்கூத்தாடலாம். இதைத்தானே சொல்ல வருகிறீர்கள்?

கிருஷ்

****

அன்புள்ள கிருஷ்,

யாரென்று தெரியவில்லை. ஆனால் நேற்றே நண்பர்கள் இந்தப் பேச்சுக்கள் உலாவருவதைச் சொல்லிவிட்டார்கள். ஒரு கட்டுரை 12 மணிக்கு வருகிறது. ஒரு மணிக்குள் அதைத் திரித்து பரப்பிவிடுகிறார்கள். அதை எவரும் திறந்த உள்ளத்துடன் படிக்க முடியாதபடிச் செய்துவிடுகிறார்கள். சாதாரண வாசகர்கள் எதையுமே உண்மையான உணர்ச்சிகளுடன் வாசிக்கமுடியாதபடி அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள்  திரித்துக்கொண்டே இருப்பதுதான் நம் காலகட்டத்தின் மிகப்பெரிய அறிவுலக நோய்.

இந்த அரசியல் உள்நோக்கம் கொண்ட கூட்டம் உண்மையில் வெறும் சுயநலவாதிகளால் ஆனது. அதிகாரம் அன்றி இலக்கே அற்றது. கலை, சிந்தனை, இறையுணர்வு, பொதுநலம் அனைத்துக்கும் எதிரானது. இடது வலது  என எல்லா அரசியல் தரப்பும் இதிலுண்டு. எல்லாருடைய வழியும் ஒன்றேதான். பொதுவாசகர்களுக்கு ஒன்றும்தெரியாது, நாங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள சூதுவாதுக்களை சொல்லித்தந்து அவர்களை கடைத்தேற்றுகிறோம் என்னும் பாவனை. உண்மையில் எளிய வாசகர்க்ளில் பலர் இத்தகைய முன்பேச்சுகளை கண்டு உளத்திரிபுகொண்ட பின்னரே வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்களால் எதையுமே தாங்களாக வாசித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

ஒன்று, நான் இவ்விஷயங்களை பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அறிவுச்சூழலில் ஆலய அழிவைப்பற்றி நான் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆலயங்கள் அழிவதைக் கண்டுவந்தபின் சீற்றத்துடன் சொல்லியிருக்கிறேன். இக்கட்டுரையில் இன்னும் மென்மையாகவே அவற்றைச் சொல்கிறேன்.

என் கட்டுரையில் பாமரர்கள் ஆலயத்திற்குள் செல்லக்கூடாது என்று சொல்லவில்லை. செல்லும் எண்ணிக்கை பாமரரோ செல்வந்தரோ எவரானாலும் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். ஆலயங்கள் இத்தகைய பெருந்திரளுக்குரிய கட்டுமானம் கொண்டவை அல்ல என்பதனாலும் அவற்றை இடித்தும் சிதைத்தும்தான் இத்தகைய பெருங்கூட்டங்களை கையாளமுடியும் என்பதனாலும்தான் அதைச் சொல்கிறேன். ஆலயங்களை சிற்ப, ஆகம முறைகளை கடந்து உருக்குலைத்தாலொழிய உள்ளே பெருங்கூட்டத்தை அனுமதிக்க முடியாது என்பதே நடைமுறை உண்மை.

பாமரர்கள் பாமரர்களாகவே நீடிக்கவேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். மரபின் பெருமையை, மதச்செல்வங்களின் அருமையை, அவற்றைக் காக்கவேண்டிய தேவையை, அதற்கான நடைமுறைநெறிகளை அவர்களுக்கு கற்பிக்கலாம். பாமரர் என உருகும் பாமரர் அல்லாத நீங்களேகூட அதையெல்லாம் செய்யலாம். அவர்களை கட்டணமில்லாமல் உள்ளே விடலாம். நீங்களேகூட அக்கட்டணங்களைச் செலுத்தலாம்.

நான் எழுதிக்கொண்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டவர்களுக்காக அல்ல. எதையுமே வம்பெனத் திருக்கும் அவல்வாயர்களுக்கும் அல்ல. பண்பாட்டின்மேல், மதத்தின்மேல், ஆன்மிகத்தின்மேல் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்ட சிலருக்காக மட்டுமே.

யார் என்ன சொன்னாலும் ஆலயங்களுக்குள் மக்களை கட்டின்றி அனுமதிப்பது இல்லாமல் ஆகத்தான்போகிறது. வேறு வழியே இல்லை. போக்குவரத்து கூடிவருகிறது. மக்களின் பொருளியல் மேம்பட்டு வருகிறது. அத்தனை சுற்றுலாமையங்களிலும் திணறத்திணறக் கூட்டம் நெரிபடுகிறது. ஆலயங்களும் அவ்வாறு நெரிசலாக ஆகிக்கொண்டிருக்கின்றன. ஆலயங்களை அழியவிட முடியாது.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 05, 2021 11:31

‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் 

‘வெண்முரசு’ நாவல் தொடரில் 15 ஆவது நாவல் ‘எழுதழல்’. இது வஞ்சத்தின் தழல். ‘எழுதழல்’ என்ற சொல் தமிழ் இலக்கண அடிப்படையில், முக்காலத்தைக் குறிக்கும் ‘வினைத்தொகை’யில் அமைந்துள்ளது. குந்தி-பாண்டு, திரௌபதி-பாண்டவர்கள், உத்தரை-அபிமன்யூ ஆகிய மூன்று இணைகளை நாம் மூன்று காலங்களாகக் கொண்டால், இது, ‘மூன்று தலைமுறையினரின் அடங்காச் சினத்தின் தழல்’ என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

உப பாண்டவர்கள் ஒன்பதுபேர், உப கௌரவர்கள் ஏறத்தாழ 1000 பேர், உப யாதவர்கள் 80 பேர், கர்ணனின் மகன்கள் 10 பேர் என இளைய தலைமுறையினரின் எழுச்சியை இந்த நாவல் வெளிப்படுத்தியுள்ளது.

குந்தியின் வஞ்சம் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து, திரௌபதியிடம் அது கனல்கொண்டு, உச்சம்பெற்று, உப பாண்டவர்களின் உள்ளத்தில் தோன்றா நெருப்பாகித் தழலாகி, நீட்சிப்பெற்று, நின்றாடுகிறது. உப யாதவர்களிடம் குலம், குடி, முடி சார்ந்த பூசல் பெருந்தழலாகித் தாண்டவமாடுகிறது. இந்த இரண்டு தழல்களின் எழுச்சி பற்றியதே இந்த நாவல்.

அஸ்வத்தாமன் அர்சுணனின் மூத்த மகன் சுருதகீர்த்தியிடம்,

“இளமைந்தரைப் பார்க்கையில் எல்லாம் நெஞ்சு பதைக்கிறது. நாங்கள் வாழ்ந்துவிட்டோம். செல்வதெனில்கூட இப்புவியில் பெரிதாக எதுவும் எஞ்சவில்லை. ஆனால் அஸ்தினபுரியின் நூற்றுவரோ இந்திரப்பிரஸ்தத்தின் ஐவரோ போர் தொடுப்பது ஒருவரோடொருவர் அல்ல. இளந்தளிர்களென எழுந்துவந்திருக்கும் இக்குடியின் இளையோரிடம். ஆம், தளிர்பொசுக்கும் காட்டெரி இன்று மூள்வது.”

என்று கூறுகிறார். உண்மையிலேயே இங்கு எழுந்துள்ள இந்தத் தழல் இளந்தலைமுறையைச் சுட்டெரிக்கும் தழல்தான்.

இளைய யாதவர் எல்லோராலும் தனித்துவிடப்படுகிறார். துரியோதனன் தான் அளித்த வாக்கைத் தவறிவிட்டார். பாண்டவர்களின் குரலுக்குச் செவிசாய்க்க யாருமே இல்லை. ஷத்ரியர்கள் அனைவரும் இளைய யாதவரின் புதிய வேதத்தை எதிர்ப்பதற்கும் பாண்டவர்கள் தமக்குரிய நிலத்தைப் பெறுவதற்கும் ‘போர்’ ஒன்றே தீர்வு என்ற நிலை ஏற்படுகிறது. பாரதவர்ஷமே இரண்டு அணியாகத் திரளவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.  நடக்க உள்ள பெரும்போரில், ‘யாருக்கு யார் துணை?’ என்ற வினாவே இந்த நாவலுக்கு அடிப்படையாகிறது.

‘பட்ட காலிலே படும் கெட்டகுடியே கெடும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பாண்டவர்களின் 13 ஆண்டுகாலக் கடும்வாழ்வுக்குப் பின்னரும் அவர்களுக்கு நல்லது என ஏதும் நிகழவே இல்லை. அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களின் எழுச்சியைத் தடுக்கும் தடையாகவே அமைந்துவிடுகின்றன. ஒவ்வொருவரும் போர் வேண்டாம் என்று மனத்தளவில் நினைத்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அவர்களைப் போரை நோக்கியே இழுத்துச் செல்கின்றது.

உப பாண்டவர்கள் ஒன்பதுபேரும் ‘இளமைசூடிய பாண்டவர்களே!’ என்று எண்ண வைத்துவிடுகிறார் எழுத்தாளர். தர்மரின் மகன்கள் பிரதிவிந்தியனும் யௌதேயனும் பீமனின் மகன்கள் சுதசோமனும் சர்வதரும் அர்சுணனின் மகன்கள் சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் நகுலனின் மகன்கள் நிர்மித்ரனும் சதானீகனும் சகதேவனின் மகன் சுருதவர்மனும் அவரவர் தந்தையின் இளம்வடிவாகவே அகத்திலும் புறத்திலும் திகழ்கின்றனர்.

எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களின் சொல்லாளுமைக்கு ஒரு சான்றாகச் ‘சோரி’ என்ற சொல்லைக் குறிப்பிட விரும்புகிறேன்.

துரியோதனன் சல்லியரிடம் கூறும்போது,

இது போர்வஞ்சினம் அல்ல. நாம் நம் குலமாளும் சொல்லான வேதத்திற்கு அளிக்கும் சோரியுறுதி .

என்றான்.

‘சோரி’ என்றால் ‘குருதி’ என்று பொருள். இந்தச் சொல்லைக் கம்பர் கம்பராமாயணத்தில் ஏறத்தாழ 16 இடங்களில் கையாண்டுள்ளார்.

எழுத்தாளர் நாவல் கதைமாந்தரை வர்ணிக்கும் தொடரமைப்புச் சிறப்புக்கு ஒரு சான்றினைக் கூற விரும்புகிறேன்.

இளைய யாதவர் 14 ஆண்டுகளுக்குப் பின்பு அவைபுகுகிறார். அப்போது அவரை வர்ணிக்கும் எழுத்தாளர்,

“செம்பட்டு சுழற்றி அதன்மேல் முத்தாரம் சுற்றி வைரமலர்கள் பதித்து இப்புவியின் முதன்மைப் பெருஞ்செல்வம் என்று அமைத்த மூன்றடுக்கு மணிமுடியின் மீது வானிலிருந்து மிதந்து வந்து விழுந்து மெல்ல தைத்து நிற்பதுபோல் மயிற்பீலி காற்றில் அசைந்தது. பொன்னென்றும் மணியென்றும் அணியென்றும் ஆடையென்றும் குலமென்றும் குடியென்றும் அரசென்றும் அறமென்றும் அவரை இங்கிருக்க வைக்கும் அனைத்துக்கும் அப்பால் சிறகு என எழுந்து அவரை வானில் எடுத்துச்செல்லும் ஓர் அழைப்பு அது.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுதழலுக்கு முந்தைய நாவல்களில், ‘அபிமன்யூ’ வெறும் சொல்லாகவே மட்டுமே வாசகருக்கு அறிமுகமாகிவந்தான். இந்த நாவலில் அவனின் அகத்தையும் புறத்தையும் அழகுறக் காட்டியுள்ளார் எழுத்தாளர்.

இளமைக்கே உரிய துள்ளலும் துடிப்பும் மூத்தோர் சொல் மீறலும் தொலைநோக்கற்ற எளிய திட்டமிடல்களும் தனக்கான பாதையைத் தானே வகுத்தலும் தேர்ந்தெடுத்தலும் ஆகிய அனைத்தும் அவனிடம் உள்ளன. இவற்றோடு, புகழுக்காக உயிரைக் காணிக்கையிடத் தயங்கா மனநிலையும் அவனிடம் உள்ளது.

தன்னுடைய இலக்கற்ற பெருவிழைவுகளால் தனக்கென வெற்றிகளையும் (குறிப்பாக, சிருங்கபிந்து எனும் ஊரைக் கைப்பற்றுதல்) தோல்விகளையும் (குறிப்பாக, பாணாசுரனிடம் நேருக்கு நேர் போர்புரிந்து தோற்றல்) சேர்த்துக் கொள்கிறான்.

சாத்யகி அபிமன்யூவிடம் கூறுவதை இங்கு இணைத்து நோக்கலாம்.

“ஆழமறியா நீர்நிலையில் தலைகீழாகப் பாய்வதற்குப் பெயர் வீரமாக இருக்கலாம் , அறிவுடைமை என்று இருக்க வாய்ப்பில்லை ”.

இந்த அறிவுரை காலந்தோறும் பெரும்பாலும் மூத்தோரால் இளையோருக்குச் சொல்லப்படுபவைதான். ஆனாலும் ‘இளங்கன்று பயமறியாது’ என்பதை ஒவ்வொரு முறையும் இளையோர் மெய்ப்பித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

அபிமன்யூவால் உப கௌரவர்களிடமும் உப யாதவர்களிடமும் எளிதாகத் தன்னை இணைத்துக்கொள்ள முடிகிறது. அதைவிட, அனைத்து மூத்தோரிடமும் எந்த நிலையிலும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு, அவர்களின் மனத்தில் குடியேறிவிட முடிகிறது. இளைய யாதவரின் அகத்தையும் அர்சுணனின் புறத்தையும் கொண்டவனாக அபிமன்யூவைப் படைத்திருக்கிறார் எழுத்தாளர். அதை அவர்,

“அர்ஜுணனும் இளைய யாதவரும் அன்றி எவரும் அபிமன்யூவுக்கு ஒரு பொருட்டே அல்ல என ப் பிரலம்பன் உணர்ந்தான். இளைய யாதவருடன் அவன் பேசுகையில் அவ்விழிகளை நோக்கினால் அக்கணமே பாய்ந்து அவரை அவன் தழுவிக்கொள்ளப் போகிறான் என்று தோன்றும். ஒரு சொல்லுக்காகக் காப்பவன் போல. அர்ஜுணனின் கதைகளைக் கேட்கையில் மட்டும் அவன் முகம் பிறிதொன்றென்று ஆகும். அவன் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் மாறி மாறி அகம்நடித்துக் கொண்டிருப்பவன். அவனுள் இருக்கும் அந்தப் பிறிதொருவன் பிறரை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளாதவன். அனைவருக்கும் மேல் எழுந்து நின்று குனிந்து நோக்கும் பேருருவன்.

என்று கூறுவதிலிருந்து உய்த்துணர முடிகிறது.

பாணாசுரன் – அபிமன்யூ போர் குறிப்பிடத்தக்க ஒன்று. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இளைய யாதவர் தன்னுடைய இருளுக்குள் இருந்து வெளியே வருகிறார். பாணாசுரனைக் களத்தில் வென்றாலும் தன்னுடைய புதிய வேதத்தை ஏற்கச் செய்ய, அவர் அவனிடம் தனிமையில் உரையாட வேண்டியிருக்கிறது. அவனைக் குகைக்கு அழைத்துச் சென்று, பேருண்மையை விளக்குகிறார்.

இதேபோலத்தான் மகத மன்னன் ஜராசந்தனை வீழ்த்துவதற்காகப் பீமன், அர்சுணன் ஆகியோரை அழைத்துச் சென்ற இளைய யாதவர் இறுதியில், தோட்டத்தில் ஜராசந்தனைத் தனிமையில் சந்தித்து உரையாடுகிறார். அதன் பின்பே ஜராசந்தன் உயிர்விடுகிறான்.

இளைய யாதவர் தன்னுடைய எதிரிகளை அவர்களின் இறுதிக்கணத்துக்குச் சற்று முந்தி தனித்துச் சந்திப்பதை வழக்கமாகக் கொள்கிறார் என்றே கருதமுடிகிறது. அவர்களின் ஆன்மாவுடன் உரையாடி, மெய்மையை உரைக்கிறார் போலும். ஆனால், அவர் சிசுபாலனிடம் அவ்வாறு செய்யவில்லை. சிசுபாலனுக்குத்தான் நூறுமுறை மன்னிப்புக்கொடுத்துவிட்டாரே! அதற்கு மேலுமா தனிச் சந்திப்புத் தேவை? என்றும் எண்ணத்தோன்றுகிறது.

பலராமரின் மனநிலையை இந்த நாவலில்தான் நம்மால் மிகச் சரியாக உய்த்துணர முடிகிறது. அவரிடம் எப்போதும் ‘செயல்படுதல்’ என்பது மட்டுமே முனைப்புடன் இருக்கிறது. ‘திட்டமிடுதல்’ என்பது, அவரிடம் இல்லவே இல்லை. ‘சினத்தோடு எழுபவர் இழப்போடு அமர்கிறார்’ என்பர். அது முற்றிலும் பலராமருக்கே பொருந்தும். அதனாலேயே அவர் அஸ்தினபுரியுடன் இணைகிறார், பின்னர் தன்னிலத்தையும் விட்டுக் காடேகுகிறார்.

‘ஆசிரியர்-மாணவர் உறவு’ என்பது, எவ்வளவு உறுதியான பிணைப்புடையது என்பதைப் பலராமர்-துரியோதனன் உறவிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. தன் மாணவரிடம் தனக்கென எதையும் கோரத் தயங்கும் ஆசிரியர். தன் ஆசிரியருக்காக எல்லாவற்றையும் கொடுக்கத் துணியும் மாணவர். லட்சிய ஆசிரியர்; லட்சிய மாணவர்.

இளைய யாதவரும் கணிகரும் நிகழ்த்தும் அறிவார்ந்த சூழ்ச்சிகள் வாசகரை வியப்பிலாழ்த்துகின்றன. அபிமன்யூவின் மணநிகழ்வுக்காக வரும் சல்லியரை அஸ்வத்தாமனைக் கொண்டு வழிமறித்து, துரியோதனனைச் சந்திக்க வைக்கும் கணிகர் அதிசூழ்ச்சி. இதனை உய்த்துணர்ந்து, உப பாண்டவர் இருவரைத் துரியோதனனிடம் தூதனுப்பும் இளைய யாதவரின மறுசூழ்ச்சி. சல்லியருடனான தன்னுடைய சந்திப்பினை உப பாண்டவர்களின் முன்னிலையிலேயே நிகழ்த்தும் துரியோதனனின் உளவிரிவு.

இந்த நாவலில், சிறு சிறு சூழ்ச்சிகளும் நெடுந்தொலைவுத் தூதுகளும் சிறு போர்களும் உப பாண்டவர்கள், உப யாதவர்கள், கர்ணனின் மகன்கள் ஆகியோரைக் கொண்டே நிகழ்த்தப் பட்டுள்ளன. அந்த வகையில், அடுத்த தலைமுறையினரும் மகாபாரதப்போருக்குள் நுழையும் அணிவாயிலாக இந்த நாவல் அமைந்துள்ளது எனலாம்.

குந்திதேவி மகாபாரதப்போர் நிகழ எவ்வகையில் முக்கியமோ அதே வகையில் தேவகி அந்தப் போரின் அழிவைத் தளர்த்துவதற்கு முக்கியமானவராகிறார். யாதவர்கள் தங்களுக்குள் போரிடக்கூடாது என்றும் யாதவர்களுக்கு எதிராக இளைய யாதவர் போரிடக்கூடாது என்றும் சத்தியம் பெற்றுக்கொள்கிறாள். குந்தியும் தேவகியும் யாதவர் குலத்தவர்களே என்பதை நாம் இங்கு மறக்க வேண்டியதில்லை.

வெண்முரசு தொடர் நாவல்களில் பெரும்பாலும் ஏதாவது ஒன்று குறியீடாக வந்தே தீரும். இந்த நாவலில் கழுதைப் புலி குஹ்யசிரேயஸ் இடம்பெறுகிறது. அது உப பாண்டவர்களிடம் உரையாடுகிறது. அது அவர்களிடம் குருதிப் பசி குறித்துக் குறிப்புணர்த்தி மீள்கிறது.

இளைய யாதவரின் மனைவிமார்களுக்கு இடையில் நிகழும் குல, குடி, முடி சார்ந்த பூசல்களே, பின்னாளில் அவர்களின் மகன்கள் மத்தியிலும் விரிவாக்கம் கொள்கின்றன.  இளைய யாதவரின் எட்டு மனைவியரும் மனத்தளவில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு எட்டுத் திசையில் நின்றாலும் இளைய யாதவர் நேரில் இருக்கும்போது, அவர்கள் அனைவரும் அவரின்பொருட்டே, அவருக்காகவே ஒரே மனநிலையினைக் கொள்கின்றனர். எட்டு மனைவியருக்கும் அவரே நடுநாயகமாக, திசைநடுவே நின்று, அவர்களை இணைக்கிறார். அவர் இருக்கும்போது மட்டுமே அவர்கள் எண்வரும் ஓர்மைகொள்கின்றனர். எட்டுப்பேரும் இணைந்து ஒரு ராதை என்பதுபோல.

இளைய யாதவர் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அவைபுகும் காட்சி மிகச் சிறப்பானது. தன் மகன்கள் உள்ளிட்ட அனைவரும் அவைக்கு வர மறுத்துவிட்ட நிலையில், அவர் தன்னுடைய மாற்றுத்திறனாளியான மகன் முரளியை மட்டும் விரும்பி அழைத்துக் கொள்வது உருக்கமான காட்சி.

யாருமே அவைக்கு வராத சூழலில், மாடுகளை மாலைநேரத்தில் ஒன்றுதிரட்டுவதற்காக இசைக்கப்படும் குழலிசையைத் தன் மகள் மயூரியைக் (ராதை) கொண்டு இசைக்கச் செய்து, மக்களை அவைக்குத் திரட்டும் இளைய யாதவரின் மதிநுட்பம் வியக்கச் செய்கிறது. ஆம்! அவரே சிறந்த மேய்ப்பர்.

ஏன் இளைய யாதவராலும் யாதவர்குலங்களை இணைக்க இயலவில்லை?. அவர் தோற்கும் புள்ளி அதுவாகத்தானே இருக்கிறது? இந்த வினாவுக்குரிய விடையாக ஸ்ரீதமர் அபிமன்யூவிடம்,

“செங்கோல் ஏந்துவதும் மணிமுடி சூடுவதும் அரியணை அமர்வதும் எளிது. அறத்தின் கோலேந்தி , புகழ் முடி சூடி , காலத்தில் அமர்வது மிகக் கடினம். பேரரசர்கள் அவ்வாறுதான் உருவாகிறார்கள். ஒரு சிற்றரசைப் படைவல்லமையால் ஆளலாம். ஆணை சென்றுசேர ஒரு மாதம் எடுக்கும் பெருநிலப்பரப்பை ஆள புகழ்வல்லமை மட்டுமே உதவும். ஆயிரம் குலங்களை இணைக்க அறம் ஒன்றாலேயே முடியும் .”

எனக் கூறுவதனைக் கொள்ளலாம்.

ஆம்! அந்த அறத்தின் மானுட வடிவாகவே பாண்டவர்கள் இருப்பதாலும் அந்த அறத்தின் இறைவடிவமாக இளைய யாதவர் இருப்பதாலும்தான் பாண்டவர்களுக்கும் இளைய யாதவருக்கும் நெருங்கிய பிணைப்பு ஏற்பட்டுள்ளது. அறம் இறைவனாக வந்தாலும் ஆயிரம் குலங்களை இணைக்க ‘ஊழ்’ இடம்கொடுக்க வேண்டும்.

உண்மையில், நாம் அனைவருமே ஊழைப் பின்தொடர்பவர்களாகத்தான் இருக்கிறோம். இதனைப் பிரலம்பன் சுபாலரிடம்,

“ஊழ் உறுதியான காலடிகளுடன் முன்செல்கிறது. நாம் அதன்மேல் அமர்ந்திருக்கிறோம். அக்காலடிகளை நம்புவோம்.”

என்று கூறுவதைக் கொண்டு உணரலாம்.

இந்த நாவல் முழுக்கவே ஒருவித ‘துள்ளல்’ நடையில்தான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதியிருக்கிறார். அதுமட்டுமல்ல, காட்சிகளின் நகர்விலும் கதைமாந்தர்களின் உரையாடல்களிலும் ஒருவித விரைவுத் தன்மையைக் காணமுடிகிறது. இதற்குக் காரணம், இந்த நாவல் முழுக்க முழுக்க அடுத்த தலைமுறையினரைப் பற்றியது (குறிப்பாக உப பாண்டவர்கள், உப யாதவர்கள்) என்பதால்தான் என்று எண்ணத் தோன்றுகிறது.

முனைவர் . சரவணன், மதுரை

கிராதம் முனைவர்  முனைவர் ப சரவணன் மதுரை

சொல்வளர்காடு – முனைவர் ப சரவணன் மதுரை

‘செந்நா வேங்கை’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இமைக்கணம்’ வாசிப்பு-முனைவர் ப. சரவணன்

பன்னிருபடைக்களம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்,

‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்

காண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  

‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்

‘பிரயாகை’ வாசிப்பு- முனைவர் ப. சரவணன்

வண்ணக்கடல் வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 05, 2021 11:30

July 4, 2021

சிறுமையின் ஆதங்கங்கள்

அன்புள்ள ஜெ,

இது அருண் என்பவர் முகநூலில் எழுதியது

தமிழ் சூழலில் இன்று சினிமா இலக்கியம் என யாவும் குறுகிய குழு அரசியல் கொண்டதாகவே இருக்கிறது. எழுத வருமுன்னர், படம் எடுப்பதற்கு முன்னர் நாம் நமக்கான குழுவை உருவாக்கிக் கொண்டுதான் வரவேண்டியிருக்கிறது. தமிழினி என்கிற மின்னிதழில் வெளிவரும் கதைகள் மட்டும்தான் சிறந்ததா, தமிழில் எவ்வளவோ மின்னிதழ் வெளிவருகிறது. அவற்றிலும் சிறுகதைகள் வெளிவருகிறது. ஆனால் தமிழினியில் வெளிவரும் சிறுகதைகள் குறித்து எல்லாரும் நெக்குருகுகிறார்கள். ஆனால் அவற்றில் வெளியாகும் சிறுகதைகளை படித்தால் இலக்கியம் என்பது யாருக்காக, யாருக்கு எழுதப்படுகிறது என்கிற ஐயமே எழுகிறது.

ரஜினி வெளிச்சத்தில் ரஞ்சித் மிளிர்ந்ததை போல ஜெயமோகன் பரிந்துரையில் அக்கதைகள் எல்லா அரைகுறை வலதுசாரி, பார்ப்பனிய ரசிகரகளையும் சென்று நேர்கிறது. தலித்தியம் சார்ந்து வாள்வீசலாம், ஆனால் காலச்சுவடில் புத்தகம் வெளியிடலாம், ஜெயமோகனுடன் கூட்டு வைத்துக்கொண்டு அம்பேத்கரியம் பற்றி பேசலாம், இடையில் எவ்வித சமரசமும் இல்லாமல் கொண்ட கொள்கையில் வழுவாமல் வாழும் எல்லாரும் இளிச்சவாயர்கள் அல்லது பிழைக்க தெரியாதவர்கள். தமிழில் சினிமாவும் சரி இலக்கியமும் சரி பெரும் குழு அரசியலால் பீடிக்கப்பட்டிருக்கிறது.

கெடுவாய்ப்பாக வலதுசாரி அல்லது மிதவாதி எனும் பார்ப்பனிய கூட்டு வைப்பவர்கள் பெரும் அங்கிகாரம் பெற்று பரவலாக சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களை பரவலாக கொண்டு சேர்க்கும் வேலையை அரைகுறை அறிவுடன் இயங்கும் வலதுசாரி அமைப்புகள் செய்துவிடுகிறது. தலித்தியம் பேசும் அமைப்பின் இதழ் ஒன்றில் ஜெயமோகனின் சிறுகதை வெளியாகிறது. அந்த அமைப்போடு நெருங்கிய தொடர்புடையவர் இடதுசாரி அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். என்ன மாதிரியான ஒரு கூட்டு. எழுதவே மனம் கூசுகிறது.

*

இந்த கடிதத்தில் உள்ள புலம்பல் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. உங்கள் பார்வைக்காக

ஆர்.ராகவன்

 

அன்புள்ள ராகவன்,

இந்த சுவாரசியமான புலம்பல் வரலாற்றில் பதிவாகவேண்டும். எந்த அடிப்படைச் சிந்தனையோ வாழ்க்கை பற்றிய புரிதலோ இல்லாமல் வெறும் சாதிக்காழ்ப்பை மட்டுமே முன்வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் தன் அசட்டு காழ்ப்பெழுத்தை தான் வெறுப்பைக் கக்கும் ‘அரைகுறை வலதுசாரி, பார்ப்பனிய’ தரப்பினரே வாசித்துப் பாராட்டவேண்டும் என்றும் ,இல்லாவிட்டால் அவர்கள் குழுமனப்பான்மை கொண்டவர்கள் என்றும் சொல்லி ‘நாட்ல குழு பெருகிப்போச்சுங்க’ என்று கண்ணீர் விடுகிறார்.

கலை என்பதன் ஒன்றாம் அடிப்படையைக்கூட அறிந்திராத, வாழ்நாளில் ஒரு நல்ல படைப்பை வாசித்துக்கூட உணர்ந்திராத வெள்ளந்தியான உள்ளத்தின் மூர்க்கம் இது. இத்தகையோர் எப்போதும் உள்ளனர். இவர்களுக்கு உண்மையில் கலைசார்ந்த அளவுகோல் ஒன்று உண்டு என்றே தெரியாது. ஒரு படைப்பை ஒருவர் பாராட்டும்போது அவரும் பாராட்டுபெறுவபரும் நெருக்கமானவர்கள் என்றுதான் இந்த பாமர உள்ளம் நினைக்கிறது. அந்த திகைப்பை மறைப்பதுமில்லை.

இதிலுள்ள இன்னொரு வேடிக்கை, இவர் தன்னை சமரசமில்லா, கொள்கை வழுவா நெறியாளராக உருவகித்துக் கொள்கிறார்? என்ன கொள்கை? சாதிக்காழ்ப்பு கொண்ட ஒருவர், அந்தக் காழ்ப்பில் நீங்காமல் நின்றிருப்பது கொள்கைவழுவா நிலையா என்ன? அந்தக்காழ்ப்பே கூட அதே போல காழ்ப்பைக் கொட்டும் சிறுகும்பலை திரட்டி அவர்களிடம் நிதியுதவிபெற்று வாழும்பொருட்டு மட்டுமே என்பது வெளிப்படை.

ஆனால் இந்த ‘கொள்கையாளர்’ இங்குள்ள பிற அத்தனை பேரையும் வசைபாடி இழிவுசெய்யலாம் என்று கருதுகிறார். இங்குள்ள முற்போக்குத் தரப்பை, தலித் தரப்பை சிறுமை படுத்தலாம்  என நினைக்கிறார்.அவருடைய எதிர்தரப்பினர் அவரை கண்டுகொள்ளவில்லை என்றால் பார்ப்பனசக்தி. அவருடைய சொந்தத் தரப்பினர் அவரை பொருட்படுத்தவில்லை என்றால் அவர்கள் சமரசம் செய்துகொண்டவர்கள்.

‘சரி, உன்னை பொருட்படுத்த நீ என்ன செய்திருக்கிறாய்?’ என்று ஒருவர் திரும்பி இவரிடம் கேட்கமாட்டார். சூழல் அப்படியே திரும்பிப்பார்க்காமல் இவர்களைக் கடந்துசெல்லும். இவர்கள் ஒரமாக ஓலமிட்டபடியே இருப்பார்கள். ஆகவே, ‘தம்பி, கலையிலும் சிந்தனையிலும் ஒன்றாம் வகுப்பாவது பாஸ் ஆகிவிட்டு மேலே பேசக்கூடாதா?”என்று மெய்யான கனிவுடன் இவருக்குச் சொல்ல விரும்புகிறேன்.

இலக்கியச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பு கவனிக்கப்படாமல் செல்வதே இல்லை. அது எங்கே வெளிவந்திருந்தாலும். இந்த தளத்திலேயே மிகுதியாக கவனிக்கப்பட்ட ஆக்கங்கள் கனலி, யாவரும் தளங்களில் வெளிவந்தவை. அதை எழுதிய அனைவரும் ஒரே அரசியல் கொண்டவர்கள் அல்ல.

நான் ஒரு படைப்பைக் கவனிப்பது நான் தகுதியானவர்கள் என நினைக்கும் வாசகநண்பர்கள் கவனித்து எனக்கு அவற்றை சுட்டி அனுப்பும்போது மட்டுமே. அது ஒரு அடிப்படைச் சல்லடை.

மற்றபடி நான் நேராக படிப்பதில்லை. எனக்கு நேரடியாக அனுப்பப்படுவனவற்றைக் கூட நான் படிப்பதில்லை. அவ்வளவு நேரமில்லை.ஒரு படைப்பு முதலில் நல்ல வாசகர் சிலரையாவது பாதிக்கட்டும், அதன்பின் படிக்கலாம் என்பதே என் எண்ணம். நல்ல படைப்பு வெளிவந்த சில மணிநேரத்திலேயே அதன் முதல்பதிவை உருவாக்கிவிட்டிருப்பதை நான் காண்கிறேன்.அது எந்த அரசியல் தரப்பு என்பது எனக்கு முக்கியமே அல்ல. அதை இந்த தளத்தை வாசிப்பவர் எவரும் காணலாம்.

இளையஎழுத்தாளர் எழுதும் ஆக்கங்களில் சரியாக வராதவை குறித்து ஏதும் சொல்வதில்லை. ஆகவே எதிர்மறை விமர்சனம் செய்வதில்லை.நான் சொன்னால் அது எண்ணியதைவிட பெரிய அடியாக அவர்கள்மேல் விழுந்துவிடும். அதோடு சிலசமயம் நாங்கள் எங்கள் முந்தைய தலைமுறைப் பார்வையால் எழும் புதுமை ஒன்றை எதிர்த்துவிடவும்கூடும்.

ஆனால் அவர்கள் தங்களுக்குள் எதிர்மறை விமர்சனம் செய்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்துகிறேன். பொதுவெளியில் அல்ல, தனி களங்களில். பொதுவெளியில் விவாதித்தால் சம்பந்தமில்லாதவர்கள் உள்ளே வந்து அதை தனிப்பட்ட காழ்ப்புக்களமாக, அரசியல் சொறிச்சூழலாக ஆக்கிவிடுவார்கள். ஒரு peer review அமைப்பு அவர்களிடையே இருந்துகொண்டிருக்கவேண்டும்.

எங்கள் தலைமுறை எழுதவந்தபோது முன்பு ஒரு கடிதச்சூழல் வைத்திருந்தோம். அப்படியொன்று சுந்தர ராமசாமி – கி.ராஜநாராயணன் காலத்திலும் அவர்களிடையே இருந்தது. அக்கடிதத்தொகுதிகளை நான் கண்டிருக்கிறேன்.

ஒர் ஆக்கத்தில் கலையின் ஓர் அம்சம் இருந்தாலும் அதைக் கவனிக்கவேண்டும் அடையாளம் காட்டவேண்டும் என்பதே என் எண்ணம். ஓர் இளம்படைப்பாளி தன் மொழியை கண்டடைய, பிசிறில்லா வடிவை அடைய பத்துப்பதினைந்தாண்டுகள் ஆகும். அதுவரை நடை, வடிவில் அவருக்குச் சலுகை கொடுத்தே ஆகவேண்டும்.

இது என் நிலைபாடு. நான் பரிந்துரைக்கும் கதைகளை பொதுவாசகர் சட்டென்று உள்வாங்க முடியாமல் போகலாம். ஏனென்றால் அவர்கள் இச்சலுகைகளை அளிப்பதில்லை. நான் இலக்கியப்போக்கை கூர்ந்தறிய முயலும் வாசகர்களுக்காகவே பரிந்துரைக்கிறேன். ஒரு தொடர்ச்சிக்காகவே இந்தப் பரிந்துரைகளைச் செய்கிறேன்.

இதை நான் செய்யத்தொடங்கி முப்பதாண்டுகள் ஆகின்றன. முன்பு ஒரு நல்ல கதையை கவனித்தால் இருபது முப்பது கடிதங்கள் எழுதுவேன். சுந்தர ராமசாமிக்கும் ஞானிக்கும் அவர்கள் கவனிக்கவேண்டிய கதைகளை நான் பல ஆண்டுக்காலம் தொடர்ந்து பரிந்துரை செய்திருக்கிறேன். அது ஓர் இலக்கியப் பணி.

*

இந்தக் குறிப்பை எழுதியவர் போன்றவர்கள் ஒரு படைப்பு நல்ல இதழில் பிரசுரமாகும்போது, அது பாராட்டப்படும்போது, பிற இளம் எழுத்தாளர்கள் விருதுபெறும்போது சட்டென்று அவர்களெல்லாம் தாஜாசெய்து அங்கீகாரம் பெறுகிறார்கள், குழு அரசியல் செய்து கவனம்பெறுகிறார்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆற்றாமையால் அப்படிச் சொல்கிறார்கள். பலசமயம் அந்த உணர்ச்சிகள் மெய்யானவை. அசடுகளின் துயரம் பெரும்பாலும் ஆத்மார்த்தமானது.

இதை இவரைப்போன்ற அசடுகள் சொல்லும்போது பிரச்சினையில்லை. ஆனால் அரிதாக நன்றாக எழுதும் வாய்ப்புள்ள இளம்படைப்பாளிகளே இந்த மனநிலைக்கு ஆளாகிறார்கள். இப்படிச் சொல்லாமலிருக்கும் தற்கட்டுப்பாடு எந்த நல்ல எழுத்தாளனுக்கும் அவசியமானது. ஏனென்றால் அதன் வழியாக அவர்கள் எழுத்தியக்கத்தையே அவமதிக்கிறார்கள். சக எழுத்தாளர் அனைவரையும் சிறுமைசெய்கிறார்கள். இலக்கியச்சூழலே மோசடியானது, தானொருவனே யோக்கியன் என ஒருவன் நினைப்பான் என்றால் அவன் ஒருவகை நோயாளிதான்.

தன் படைப்பின் மீதான ஏற்பையும் மறுப்பையும் எழுத்தாளன் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். தனிமனிதர்களுக்கு தனிப்பட்ட விலக்கங்கள் இருக்கலாம். சூழலுக்கு அப்படி ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அந்த ஏற்பையும் விலக்கத்தையும் ஒரு நோக்கில் ஆராயும்போதே மறுநோக்கில் எழுத்தாளன் தன் எழுத்தையும் ஆராய்ந்துகொண்டிருக்கவேண்டும்.

எழுதும்போது தன் எழுத்துமேல் கொஞ்சம் மிகைப்பற்று இருக்கும்தான். கொஞ்சம் காலம் கடந்தால் தன் படைப்பை தானே பார்க்க முடியும்.தான் எழுதிய எந்தப் படைப்பையும் எழுத்தாளன் சற்றுக் காலம் கழிந்து மீண்டும் படிக்க முடியாதவனாக ஆவான். அது அவன் நகர்வதன் இலக்கணம்— அது எப்போதும் வளர்வதாக இருக்கவேண்டியது இல்லை. தளநகர்வாகவும் இருக்கலாம். அவ்வாறு நகர்ந்து செல்வது எழுத்தாளனின் அடிப்படைப் பண்பு. எழுதியதன் மேலேயே பீடமிட்டு அமர்வது நல்ல படைப்பாளி செய்யும் செயல் அல்ல.

சூழல் பல்வேறு ‘தப்பான’ காரணங்களுக்காக தன் படைப்பை புறக்கணிக்கிறது என பாவலா செய்வது எழுத்தாளனைச் சுற்றி ஒரு கோட்டையை உருவாக்குகிறது. தன்னிரக்கக் கோட்டை அது. அதற்குள் இருந்துகொண்டு அவன் வசைபாடினால் அவனை அனைவரும் கடந்து செல்வார்கள்.

ஏனென்றால் சூழலில் ஒருவன் பொருட்படுத்தும்படி இருந்தால் மட்டுமே சூழல் அவனிடம் விவாதிக்க, மறுக்க முன்வருகிறது. வசைபாடுவதும்கூட ஒருவன் முக்கியமானவனாக இருப்பதனால்தான். பொருட்படுத்தத் தகாதவனின் வசைபாடலைக்கூட சூழல் கண்டுகொள்ளாமல் சென்றுவிடும். ஏன் எதிர்வசையாடி நேரத்தை வீணடிக்கவேண்டும் என நினைக்கும். அவ்வாறாக கவனிப்பின்றி விமர்சனமும் இன்றி அவ்வெழுத்தாளன் விடப்படுகிறான். அதன்பின் வளர்ச்சியே இல்லாமலாகிறது.

அத்தனைக்கும் பிறகு ஒன்றுண்டு, உண்மையிலேயே வாசிப்புச்சூழல் ஒருவகை எழுத்துக்கு எதிராக இருக்கலாம். அவ்வாறெனில் அதை எழுதிவெல்வதே எழுத்தாளனின் பணி. நான் எழுதவந்தபோது நான் எழுதிய இரு களங்கள் நாட்டார்ச்சூழல் [படுகை] புராணச்சூழல் [திசைகளின் நடுவே] இங்கிருந்த நவீனத்துவச் சூழலுக்கு ஒவ்வாததாக, எதிரானதாகவே இருந்தது. எனக்கான ஏற்பை நான் எழுதி அடைந்தேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2021 11:35

கவிதை வாசிப்பு- டி.கார்த்திகேயன்

அன்புள்ள ஜெ,

கவிதையுலகின் நுழைவாசலில் நிற்பவன் நான் .நேரம் கிடைக்கும்போதெல்லாம் கவிதைகளை படிக்கிறேன். இதுவரை படித்த கவிஞர்களில் எனக்குப் பிடித்தவர் கலாப்ரியா. எந்த அளவுகோலின்படி ஒரு கவிதையை எனக்குப் பிடித்தது என்று கூறுகிறேன்? ஒரு கவிதை என்னை புன்னகக்க வைத்தால், வாழ்வின் ஒரு தருணத்திற்கு நான் யோசிக்காத ஒரு கோணத்தை காட்டினால், என் வாழ்வுடனோ அல்லது மனித வாழ்வுடனோ பொருத்திப் பார்க்க வைத்தால், அது எனக்குப் பிடித்த கவிதை ஆகிறது (என்று நினைக்கிறேன்).

என் கேள்வி : கவிதை பள்ளியின் துவக்க வகுப்பில் இருக்கும் என்னைப் போன்றோர் ஒரே கவிஞரை நிறைய படித்தல் சரியா? “பிடித்த” கவிஞரை நிறைய படித்து பிறகு வேறு கவிஞர்களுக்கு செல்லுவதுதான் சரியான வழியா? இல்லை கவிதையில் எப்போதும் பல கவிஞர்களை படிப்பதுதான் சரியா? கலாப்ரியா எழுதிய கவிதைகள் “கலாப்ரியா கவிதைகள்” என்ற பெயரில் இரு தொகுதிகளாக கிடைக்கின்றன. அவற்றை வாங்கலாம் என்று இருக்கிறேன். அதற்காகவே இந்தக் கேள்வி.

ஒரு எச்சரிக்கை : உங்களின் “கவிதைகள் – விமரிசகனின் சிபாரிசு” என்ற பட்டியலில் உள்ள கவிதைகளை மெல்ல படித்து வருகிறேன். ஓரு Google Document-டிலும் பதிந்து வருகிறேன். சில பிடித்திருக்கின்றன. சில மண்டை காய வைக்கின்றன. ஆகவே இன்னும் பல கேள்விகள் என்னிடமிருந்து வரலாம் என்று உங்களுக்கு தெரிவிப்பது என் கடமை!

கவிதை பற்றிய மின்னஞ்சலில் கவிதை இல்லாமல் இருக்கலாமா? எனக்குப் “பிடித்த” 3 கவிதைகள்.

உச்சி வெயிலில்

இரண்டு

வண்ணத்துப் பூச்சிகள்

கீழ் மேலாய்

மேல் கீழாய்

பறந்து

ஒன்றுகொன்று

நிழல் தந்து கொண்டு.

 

[ கலாப்ரியா]

வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றையொன்று சுற்றி சுற்றி பறப்பதை பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று நிழல் தருகின்றன என்பது என்னை புன்னகைக்க வைத்தது. படித்த பல மாதங்களுக்குப் பிறகு என் அலுவலுகத்தின் நாலாம் தளத்தின் கண்ணாடிக்கு வெளியே இரு மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகள்  ஒன்றையொன்று சுற்றி வந்தபோது இக்கவிதை நினைவுக்கு வந்தது.

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்
இதெல்லாம் ஒரு காரணமா?

 

[முகுந்த நாகராஜன்]

இத்தனை வயது ஆனபிறகும் இந்தக் குழந்தை என்னுள் இன்னமும் இருக்கிறது. பயணத்தில் ஜன்னல் சீட் இன்னமும் பிடிக்கிறது. கிடைக்கவில்லயென்றால் வருத்தமாக உள்ளது. அலுவலகத்திலும் ஜன்னல் பக்கத்தில் உள்ள சீட் வேண்டுமென்று கேட்டுப் பெற்றிருக்கிறேன் பல முறை; மரங்களையும், பறவைகளயும், வானத்தையும், மேகங்களையும், தொடுவானத்தையும், விமானங்களையும் பார்ப்பதற்காக.

மூன்றாவது கவிதை இன்று காலை கண்ணில் பட்டது :

மரத்தில், கிளையில்,
மஞ்சரியில் பார்த்தாயிற்று.
கீழ்த் தூரில், மண்ணில்
கிடப்பதையும் ஆயிற்று.
வாய்க்க வேண்டும்
காம்பு கழன்ற பின்
தரை இறங்கு முன்
காற்றில் நழுவி வருமோர்
அந்தரப் பூ காணல்

  [கல்யாண்ஜி]

காற்றில் நழுவி, சுழன்றபடி கீழிறங்கும் பூவை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு இக்கவிதை பிடித்த காரணம் எனக்கு இருக்கும் ஒரு, சற்றே கிறுக்குத்தனமான, விருப்பம். பலவிதமான மரங்களிலிருந்து விழும் இலைகளை, அவை தரையை தொடும் முன்பே பிடித்து ஒரு ஆல்பம் தயாரிக்க வேண்டுமென்று! ஆல்பத்தின் பெயர் : “விழுந்து கொண்டே இருக்கும் இலைகள்” அல்லது “விழுந்து முடியாத இலைகள்”! :-)

நன்றி

டி.கார்த்திகேயன்

 

அன்புள்ள கார்த்திகேயன்

கவிதை வாசிப்பின் ஒரே வழி வாசித்துக்கொண்டே இருப்பதுதான். இசைக்கும் இசையை கேட்டுக்கொண்டே இருப்பதுதான் உள்ளே நுழைய, தேர்ச்சி பெற ஒரே வழி. வாசிக்க வாசிக்க நம் ரசனைகள் நமக்கே தெளிவுறுகின்றன. கவிமொழியும் கவிதைகளின் குறிப்பொருளும் துலங்கி வருகின்றன. அத்துடன் நாம் கவிதை ரசனையில் நம்மையறியாமலேயே முன்னகர்ந்துகொண்டும் இருக்கிறோம்.

வாழ்த்துக்கள்

ஜெ

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2021 11:34

சூடாமணி பற்றி சு.வேணுகோபால்

ஓர் எழுத்தாளர் மறைந்து நீண்ட நாட்களுக்குப்பின் அவரை இன்னொரு விமர்சகர் முன்னிறுத்துவதில் ஆழமான ஒன்று உண்டு, அது எழுத்தின் அழிவின்மைக்கான சான்று. தனக்கான வாசகர்களை, வழிவந்த எழுத்தாளர்களை இலக்கியம் கண்டுகொள்ளும் என்பதற்கான உதாரணம். அவ்வகையில் சு.வேணுகோபால் எழுதியிருக்கும் இந்த நேர்மையும் ஆழமும் கொண்ட குறிப்பு மிக முக்கியமானது.

நான் ஆர்.சூடாமணி அவர்களின் பெரும்பாலான ஆக்கங்களை வாசித்திருக்கிறேன். இளவயதில் அவருக்கு வாசகர் கடிதம் எழுதியிருக்கிறேன். அவருடைய நாவல் பற்றி ஒரு குறிப்பும் எழுதியிருக்கிறேன். ஆனால் பின்னர் என் இலக்கிய வாசிப்பில் அவர் மிகவும் பின்தங்கிச் சென்றார். அவரைப்பற்றிய மதிப்பீட்டை நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் எழுதியிருக்கிறேன். அவர் மறைந்தபோது ஓர் அஞ்சலிக்குறிப்பாகவும் எழுதியிருக்கிறேன்.

சூடாமணியை தமிழ்ச்சிறுகதையாளர்களின் பட்டியலில் எப்போதும் சேர்த்துவருகிறேன். ஆனால் அவர் ஓரு முதன்மையான சிறுகதையாசிரியர் என்னும் சு.வேணுகோபாலின் கருத்துக்களுடன் என்னால் உடன்பட முடியவில்லை.ஆனால் ஒரு விவாதத்தை தொடங்கிவைக்கும் இந்தக் கட்டுரை முக்கியமானது என நினைக்கிறேன்.

ஆர்.சூடாமணி- கொண்டாட மறந்த தேவதை- சு. வேணுகோபால்

ஆர்.சூடாமணி -ஜெயமோகன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 04, 2021 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.