Jeyamohan's Blog, page 932

August 19, 2021

அ.முத்துலிங்கம், கடிதங்கள்

அ.முத்துலிங்கமும் ஈழப்போரும் அ.முத்துலிங்கத்தின் கலை

ஜெ மோ விளக்கம் அருமை. நன்றி. அ.முத்துலிங்கமும் ஈழப்போரும். ஈழத்தில் நான்கு நிலைகள் உண்டு.

1. போருக்கான காரணங்கள்
2. நீண்ட போர்
3. போரின் விளைவுகள் – தாயகத்தில்
4.போரின் விளைவுகள் – புலம் பெயரும் போராட்டங்களும், புலம் பெயர்ந்த வாழ்வின் போராட்டங்களும், அதில் வென்ற நிகழ்வுகளும்.

நான்கு நிலைகளும் எழுதப்பட வேண்டியவை. அவரவர் அனுபவம் களத்தை  தீர்மானிக்கும்

அ.முத்துலிங்கம் நான்காவது களத்தில் அதிகமாக எழுதி இருந்தாலும், மற்ற மூன்று தளங்களிலும் சில எழுதி இருக்கிறார். நான்காவது களத்தில் ஒரு எடுத்துக்காட்டாக, ‘பயணத்தின்’ கொடிய துயரத்தை ‘கடவுள் தொடங்கிய இடத்தில்’ பார்க்கலாம். அது உறுதியாக எழுதப்பட வேண்டியதே!

அவர் சிறப்பு, பல நாடுகளின், கலாசாரங்களின் பின்னணியில் அவர் படைத்த இலக்கியம். எடுத்துக்காட்டாக, நம்மில் சிலர் இறந்த உடலை எரிப்பதை, ஆப்பிரிக்காவில் காட்டுமிராண்டித் தனமாகப் பார்க்கிறார்கள் என்பதை அவரை படித்தே நான் அறிந்து கொண்டேன். அவருடைய இந்த பரந்த உலக தளம் தமிழில் மற்ற எவரிடமும் நான் கண்டதில்லை. வேறு மொழிகளில் சாத்தியம் என்றும் தோன்றவில்லை.

ஜெயமோகனின் விளக்கம் மிகவும் நேர்மையானதே. அ.முத்துலிங்கத்தை அபரிதமாக படித்தவன் என்ற முறையில், ஜெயமோகன் சொல்வதில்,  எனக்கு முழு உடன்பாடு உண்டு. அது மட்டுமல்ல அ.முத்துலிங்கம் கதை சொல்லுதலும் அபாரம். அ.முத்துலிங்கம் தமிழுக்கு கிடைத்த கொடை.

அன்புடன்,

கே கேசவசாமி.

***

அன்புள்ள ஜெ

அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரை நிறைவை அளித்தது. அவர் என்னுடைய ஃபேவரைட் ஆசிரியர். அவருடைய எல்லா நூல்களையும் விரும்பிப் படித்திருக்கிறேன். மென்மையானவை, நுணுக்கமானவை. அவரை தமிழின் அதிநவீன எழுத்தாளர் என்றுதான் சொல்லவேண்டும். அவரை வாசிக்க அந்த மென்மையான நுட்பமான கதைசொல்லும் முறையை ரசிக்கும் பார்வை தேவை. அது இல்லாவிட்டால் அவரை வெறும் கதைசொல்லியாக நாம் புரிந்துகொள்ள முடியும்

பொதுவாக சாதாரண வாசகர்களுக்கு இலக்கியத்தை வாசிக்க வெளி ரெஃபரன்ஸ் தேவைப்படுகிறது. அவர்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் விஷயங்களிலிருந்து தான் அவர்களால் இலக்கியத்திற்குள் வரமுடியும். சூழலில் பொதுவாகப் பேசப்படும் அரசியலும் வம்புகளும் சமூகப் பிரச்சினைகளும்தான் அவர்களை இலக்கியத்துடன் தொடர்புகொள்ள வைக்கின்றன. அப்படி தொடர்பேதும் இல்லாத எழுத்தானாலும் அவர்கள் அப்படித்தான் தொடர்புபடுத்திக் கொண்டு புரிந்துகொள்வார்கள்.

ஆனால் நல்ல இலக்கியம் காலாதீதமானது. ஆகவே அது அந்தக் காலகட்டத்தின் அரசியலுக்கோ வம்புகளுக்கோ சமூகப் பிரச்சினைகளுக்கோ முழுமையாக கட்டுப்பட்டது அல்ல. அது செல்ப் ரெபரன்ஸ் உள்ளது. அத்தகையது முத்துலிங்கம் எழுதும் கதையுலகம். அது சாதாரண வாசகர்களுக்கு உரியது அல்ல. மொழி எளிமையாக இருந்தாலும் அதன் நுட்பத்தை உணர கூர்ந்த ரசனையும் வாசிப்புப் பயிற்சியும் தேவை

எஸ்.பாஸ்கர்

அ.முத்துலிங்கம் – கடிதங்கள்

ஆட்டுப்பால் புட்டு- அ.முத்துலிங்கம்

புலம்பெயர் இலக்கியம் – அ.முத்துலிங்கம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 11:31

இரு பேட்டிகள், முன்னோட்டம்

 

கைரளி நியூஸ் – கட்டுரை

இரு பேட்டிகள் ஒரே சமயம் மலையாள டிவிக்களில் வெளியாகின்றன. பிரைம் டைமில், பண்டிகைக் காலத்தில் ஓர் எழுத்தாளனின் பேட்டி வெளிவருவது தமிழில் வியப்புக்குரியதாக இருக்கலாம். மலையாளத்தில் சாதாரணமாக நிகழ்வதுதான்.  அரசியலுக்கும் வம்புகளுக்கும் அப்பால் எழுத்தாளனுக்கு இருக்கும் இடம் என்ன என்பதற்கான சான்று இது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 11:31

ஞானி, கடிதங்கள்

ஞானி நூல் வாங்க

அன்புடையீர்,

வணக்கம்

ஞானி நூல்- வரலாற்று ஆவணம் தங்கள் பதிவு பல்வேறு தகவல்களைப் பேசுகின்றது. அய்யா தாங்கள் கூறிவதைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார். தங்களின் பெரும் படைப்புகளை இறுதிவரைக் கொண்டாடினார்.

“ஞானி என் பார்வைகளை ஏற்றுக்கொண்டவர் அல்ல. எல்லா இடங்களிலும் என் பார்வையை திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் என்னைத் தமிழின் முதன்மையான படைப்பாளியாக நினைத்தார். நான் என் பெரிய படைப்புக்களை எழுதிய பின்னர் அல்ல. எழுதத் தொடங்கியபோதே அவர் என்னை அவ்வண்ணம் கணித்தார். அதை திட்டவட்டமாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.”

– இருவரது பார்வையும் சரியாக இருக்கின்றது. எங்களது மகிழ்வைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

நன்றி

அன்புடன்

மீனா

***

அன்புள்ள மீனா

நான் ஞானியுடனான சந்திப்புகளின்போது உங்களை கண்டிருக்கிறேன். நாம் விரிவாகப்பேசியதில்லை. உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் ஞானியின் கண்களாக செயல்பட்டதை அறிவேன். அவருக்கு பலர் வாசித்துக் காட்டியிருந்தாலும் நீங்கள் வாசிப்பதே அணுக்கமானது என்று சொல்வார். நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

ஜெ

***

அன்புள்ள ஜெ

நான் மார்க்ஸியச் செயல்பாடுகளில் இருபதாண்டுக்காலமாக இருந்தவன். இப்போது கொஞ்சம் ஓய்வு. உடல்நிலைதான் காரணம். ஞானியை அறிவேன். அவர் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். நான் மார்க்ஸிய அமைப்புகளில் இருந்தாலும்கூட தமிழகத்தில் சென்ற ஐம்பதாண்டுகளில் நடந்த மார்க்ஸிய விவாதங்கள் என்னென்ன என்பதை ஞானி நூல் வழியாக ஒரே வீச்சில் வாசிக்க முடிந்த போதுதான் தெளிவையே அடைந்தேன். ஞானியின் இடமென்ன என்றும் தெரிந்தது. நன்றி.

ஒரே மூச்சில் ஒரு விறுவிறுப்பான நாவல்போல வாசிக்கவேண்டிய படைப்பு. உற்சாகமான நகைச்சுவையும் சித்தரிப்புகளும் கொண்டது. எதிர்காலத்தில் இதில் சொல்லப்பட்டுள்ள பல நிகழ்வுகள் மேடைகளில் துணுக்குகள், கதைகளாக உலவுமென நினைக்கிறேன்.

ஆ. பன்னீர்செல்வம்

***

அன்புள்ள ஜெமோ

ஞானி இறந்தபின் எழுதப்பட்ட மேலோட்டமான குறிப்புகளையும் அற்ப வம்புகளையும் பார்த்து கசந்துபோயிருந்த எனக்கு ஞானி நூல் ஒரு பெரிய அனுபவமாக அமைந்தது. நான் சில ரிசர்வேஷன்களால் அதை முன்பு படிக்கவில்லை. மார்க்ஸிய எதிர்ப்பாக எழுதியிருக்கிறீர்கள் என்று எதையும் வாசிக்காமலேயே சொல்லிச் சொல்லி நிறுவினர் சிலர். வாசித்தபோது சென்ற ஐம்பது அறுபது ஆண்டுகால மார்க்ஸிய விவாதங்களின் ஆவணம் என்ற எண்ணம் வந்தது.

அதோடு இது ஒரு சுவாரசியமான நாவல். இதில் ஞானி மட்டுமல்ல எஸ்.என்.நாகராசனும் முக்கியமான கதாபாத்திரம். ஒரே மூச்சில் வாசிக்கமுடிந்தது

ஜி.கந்தசாமி

***

ஞானி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 11:30

தஸ்தயேவ்ஸ்கி, நற்றுணை கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,

‘நற்றுணை’ கலந்துரையாடலின்  அடுத்த அமர்வு வரும் ஆகஸ்டு 22 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்களின்  கரமசோவ் சகோதரர்கள்  நாவல் குறித்து  எழுத்தாளர் அருண்மொழிநங்கை  அவர்கள் உரையாடுவார்.

இவ்வருடம்  ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்களின் இருநூறாம் ஆண்டு என்பதால் இந்நிகழ்வில் ரஷ்யகலாசார மையத்துடன் இணைந்து நாம் இந்த கலந்துரையாடலை முன்னெடுக்கிறோம். சிறப்பு விருந்தினராக ரஷ்ய கலாசர மையத்தின் இயக்குனர்,  Mr.Gennadii Rogalov (Director Russian House in Chennai )  அவர்களும் நம் உரையாடலில் கலந்து கொள்கிறார்.

[image error]

நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -7

நாவல் – கரமசோவ் சகோதரர்கள் – ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

கலந்துரையாடல் நாள்:- 22-08-21

நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

 

தொடர்புக்கு: 9965315137

(லா.ஓ.சி. சந்தோஷ்  )

சிறப்பு விருந்தினர்:- திரு. கென்னடி ரோகலோவ்  ( இயக்குநர் – ரஷ்ய கலாசார மையம் – சென்னை)

நாவல் குறித்து உரையாடுபவர்:- எழுத்தாளர் திருமதி. அருண்மொழிநங்கை அவர்கள்

(ரஷ்ய இலக்கியங்கள் குறித்த எழுத்தாளரின் பதிவு)

பனி உருகுவதில்லை.

நிகழ்வின் நெறியாளர்:- எழுத்தாளர் சுசித்ரா அவர்கள்

ரஷ்ய கலாசார மையத்தின் சமூக வலைதள பக்க அறிவிப்பு

https://www.facebook.com/164145250307603/posts/4217231818332239/?app=fbl

இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்

 

நன்றி!!!

 

அன்புடன்,

சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 07:13

August 18, 2021

ஊடும்பாவுமென ஒரு நெசவு

கவிதை வாசிப்பின் இன்பங்களில் ஒன்று ஒரு கவிதையில் இருந்து இன்னொன்றுக்கு, ஒரு கவிஞனில் இருந்து இன்னொரு கவிஞனுக்குச் சென்றுகொண்டிருப்பது. தன்னிச்சையாக நினைவுகள் சென்று தொடும் இன்னொரு கவிதை வாசிக்கும் கவிதையை புதியபொருள்கொள்ளச் செய்கிறது. அவை ஒன்றையொன்று வளர்க்கின்றன. மிகமிக மென்மையான முனையால் அவை ஒன்றையொன்று தொட்டுக்கொள்கின்றன, நமக்குள் எங்கோ.

இணை

உறக்கத்தில் அதிர்ந்தவளின்
ஒரு கை மட்டும்
விழித்துக்கொண்டது
அது காற்றில்
எதையோ துழாவுகிறது

இவன்
நெருங்கிப் படுக்கிறான்
என்ன ஆயிற்று என்கிறான்
விழித்த கைக்கு
இவனைத் தெரியவில்லை
இவன் ஒரு கையை
அருகே நீட்ட
சட்டென்று அதைப்பற்றி
உறங்கிப் போனது
ஒற்றைக் கை

ஆனந்த் குமாரின் இக்கவிதையில் இருந்து நான் கல்பற்றா நாராயணனின் பழைய கவிதையை நோக்கிச் சென்றேன். அங்கே கை இணையவில்லை. சித்தார்த்தனைப்போல மிகமிக மென்மையாக இன்னொன்றை விலக்கி வைத்துவிட்டு எழுந்துகொள்கிறது. மழை முடிந்துவிட்டது.

கல்பற்றா நாராயணன்

குடை
எதிர்பாராமல் பெய்த ஒரு பெருமழையில்
அப்போது மட்டுமே மனிதர் கண்ணில் படக்கூடிய
அப்போது மட்டுமே உசிதமென்று தோன்றக்கூடிய
கடற்கரைப் பாதையோரத்து ஓலைக்கூரைக்குக் கீழே
சேர்ந்து நிற்கையில் அறிமுகம் கொண்டோம்
கனத்து பெய்யும் மழையில்
அதிபுராதனமான ஓர் அபயத்தின் நம்பிக்கையில்
எங்களுக்கு எங்களைப் பிடித்துப் போயிற்று.
சேர்ந்து வாழ முடிவெடுத்தோம்.
ஒரே போலத் தோன்றும் இருகுழந்தைகளுக்கு
பெற்றோரானோம்.
சமீபத்தில் ஓர் இரவில்
தூங்கிவிட்டாள் என்று தோன்றியபோது
அவளது கரத்தை எடுத்து மெல்ல கீழே வைத்தேன்
அவள் கேட்டாள்
அந்த மழை அரைமணிநேரம் மட்டுமே பெய்ததா என்ன?

ஆனந்த் குமாரின் இன்னொரு கவிதை. கையில் எஞ்சும் மென்மை. ஒளி. ஆனால் அவ்வளவுதான், மினுக்கும் ஒரு வரி. அது ஒரு ஏக்கம். ஓர் நினைவெச்சம். கவிஞர்கள் திரும்பத்திரும்ப காலத்திடம் கேட்கும் கேள்வி அது. அவ்வளவுதானா? தும்பைப்பூத்தேன் என அதை வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் சொல்கிறார். தும்பையின் மென்மையான சின்னஞ்சிறிய பூவில் எஞ்சும் மிகச்சிறிய இனிமை. வசந்தமே காலங்களில் குறுகியது.

மினுக்கும் வரி

பழைய குப்பைகளை
கிளறிக்கொண்டிருந்தவன்
கையில் கிடைக்கிறது
ஒரு காதலர் தின வாழ்த்து
அட்டை
அதில் அவன் எழுதிய
அபத்த வரி
பறக்கும் இதயங்களில்
ஒன்றை மட்டும்
துளைக்கும் அம்பு
மினுக்கும் மையினால்
சூழப்பட்ட
காதல் என்னும் வார்த்தை

சிரித்தபடி வைத்துவிட்டு
மீண்டும் அவளருகே வந்து
படுக்கிறான்
கையிலொட்டிய ஜிகினாவால்
அவள் கன்னத்தைத் தொடுகிறான்.

ஆனால் இன்னொரு கல்பற்றா கவிதையை நோக்கிக் கொண்டுசென்றது அவ்வரி. அது இன்னும் சற்று எஞ்சுகிறதே என வியக்கிறது. இன்னும் இன்னுமென அது எஞ்சுமென கண்டடைகிறது. அந்த கண்ணீர் இழப்பின் வெளிப்பாடு அல்ல. எய்துதலின் இன்பத்தாலானது.

தற்செயல் 

வீடு முழுக்க ஆட்கள் உள்ள
அந்தப் பண்டிகைநாளில்
ஒர் அறையிலிருந்து
மற்றொரு அறைக்கும் ஓடும்வழியில்
நொடிநேரம் அவள்முன் வந்தீர்கள்.
எங்கிருந்தோ வந்த ஒரு முத்தத்தை
அவளுக்கு அளித்தீர்கள்.
பிறகு
எல்லா பரபரப்பும் முடிந்தபின்னர்
படுக்கையில் குப்புறவிழுந்து கண்ணீர் வடிக்கிறாள்.
திடுமென வந்துசேரும் இனிமையை எண்ணி.
எதன்மீதும் தனக்கு ஒரு அதிகாரமும் இல்லையே என்று எண்ணி.

இரு கவிஞர்கள், இரு கவிதைப் பார்வைகள். ஒன்றையே மீளமீள எழுதுகிறது கவிதை. உறவு பிரிவு, இழப்பு எய்துதல் என அதன் தறிச்சட்டம் ஓடிக்கொண்டே இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத, இப்புவியையே போர்த்தும் ஒன்றை நெய்துகொண்டே இருக்கிறது.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2021 11:35

வயதடைதலும் வயதாவதும் -ஒரு கடிதம்

வயதடைதல்

திரு. ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,

வணக்கம்

வயதடைதல் – இக்கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். வயதடைதலின் போது ஒரு பிரம்மசரியத்தை நீங்கள் கடைப்பிடித்தாகவேண்டும் என்று. என் வட்டாரத்தில் நான் சந்திக்கும் முதியவர்களின் சிக்கல்கள்.

எப்படி ஒரு பெண்ணோ அல்லது ஆணோ தன்னை தனது மற்ற எல்லா சவால்களிலும் இருந்து தற்காத்துக்கொண்டு வயதடைதலின் போது பிரம்மசரியத்தை நோக்கி பயணிப்பது.

அதிகப்படியான முதியவர்கள், வயதடைந்த காலத்திலும்  சொந்தமாக உழைத்து வாழவேண்டிய கட்டாயம், கலாச்சார சிக்கல்கள் – குடும்பத்தோடு ஒட்டி வாழவேண்டும் என்ற நிபந்தனைகள், பேரக்குழந்தைகளின் பாதுகாவலர், உடல் உபாதைகள், முறையாக வழி காட்டுதலின்றி நான்கு சுவற்றிற்குள் சிக்கித் தவிப்பு.

அதற்கும் மேலாக, குடும்ப வாழ்க்கை என்ற பயணத்தில் அவர்களது தனி விருப்பங்களும் திறமைகளும் தொலைந்து விடுகின்றன. வயதடைந்த காலத்தில் அவர்களுக்கு அவர்களை அடையாளம் காணமுடியாத இக்கட்டான மனநிலை.

நகர்புறங்களில், தனது 60 வயதில் அனைத்தும் அடைந்த பின்பும், தனது குழந்தைகளுடனும் ஒன்றி வாழமுடியாமல் தான் இத்தனை வருடம் உழைத்து உருவாக்கிய வசதிகளை முழுமையாக அனுபவிக்க நல்ல உடல் மற்றும் மனநிலமையும் இன்றி ஓர் கசப்பான வாழ்நிலை. வேலையாட்களின் பாதுகாப்பில் அவர்களது கடைசி காலங்கள் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

இப்படி ஒரு கசப்பான வயதடைதலில் இருந்து எப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னை ஒரு காலகட்டத்தில் இருந்தே பயிற்சிகொண்டு நீங்கள் கூறியது போல முழு விருப்பத்துடனும் ஒரு பிரம்மசரியத்தை கையெடுக்க முடியும்.

உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி
எம் கிருஷ்ணப்ரியா

***

அன்புள்ள கிருஷ்ணப்பிரியா,

ஓர் ஆரம்ப வாசகர் என்பதனால் இக்கடிதம்.

நான் எழுதியதற்கும் நீங்கள் புரிந்துகொண்டிருப்பதற்கும் சம்பந்தமே இல்லை. நான் ‘வயதாவது’ பற்றிச் சொல்லவில்லை. முதுமையை எய்துவதைப் பற்றிச் சொல்லவில்லை. மாறாக ஒருவர் வாழ்க்கையில் பல்வேறு படிநிலைகள் வழியாக செல்வதைப் பற்றி பேசியிருக்கிறேன். ஒரு சிறுவன் எந்தக் கல்வி வழியாக ஓரு வளர்ந்த முழுமனிதனாக ஆவான் என்று சொல்லியிருக்கிறேன். முழுக்கமுழுக்க கல்வி பற்றிய கட்டுரை இது. இன்னொரு தடவை கூர்ந்து படித்துப் பாருங்கள்.

குழந்தைப்பருவத்திற்குப் பின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தை  முழுமையாகவே கல்விக்கு அளித்துவிடுவதைப் பற்றியே அக்கட்டுரையில் பேசப்பட்டுள்ளது. அப்போது கல்வி அல்லாத பிறவற்றுக்கு உள்ளத்தை கொடுக்கக் கூடாது. அந்தக் கல்வி உண்மையான கல்வி என்றால் நம்மை முழுமைப்படுத்தும் ஆகவே மகிழ்ச்சியும் நிறைவும் ஊட்டக்கூடியதாக இருக்கும்.

கல்விக்கு பிறகு உலகவாழ்க்கை. அதன்பின் ஒரு கட்டத்தில் உலகவாழ்க்கையில் இருந்து விலகுவதை நம் மரபு சொல்கிறது. அதையே வானப்பிரஸ்தம் என்கிறது. உலகவாழ்க்கையின் கடமைகளை முடித்துவிட்டு ஒதுங்குவது அது. ஏனென்றால் அதற்குமேல் உலகவாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்ளும் திராணி இருக்காது. நாம் அறியாத புதிய உலகம் உருவாகி வந்திருக்கும். அந்த இளைஞர்களின் உலகில் நம்மால் நுழைய முடியாது.

இதையே அக்கட்டுரை சொல்கிறது. வயதானால் பிரம்மசரிய விரதம் மேற்கொள்ளவேண்டும் என்று அக்கட்டுரை சொல்லவில்லை. இரண்டு வகையான துறவுகள் உள்ளன. வாழ்க்கைக்கான கல்வியைப் பயிலும்போது முழுமூச்சாக அதில் ஈடுபடுவதற்காக பிற உலகச் செயல்பாடுகளை விலக்குவது ஒரு துறவு. வாழ்க்கையை நிறைவு செய்தபின் உலகியல் செயல்களிலிருந்து விலகுவது இன்னொரு துறவு. நான் பேசுவது அதைத்தான்.

வானப்பிரஸ்தம் என்பது முதுமையில் தன்னை அன்றாட உலகவாழ்க்கையின் சிக்கல்களில் இருந்து கூடுமான வரை விலக்கிக் கொள்வது, அவ்வளவுதான். பொருளியல் சிக்கல்கள், குடும்பச்சிக்கல்கள் ஆகியவற்றில் இருந்து விலகுவது. தன் உள்ளத்தை நிறைவு செய்யக்கூடிய, தன் ஆன்மிக வாழ்க்கைக்கு நிறைவு தரக்கூடிய, செயல்களைச் செய்வது.

அந்தத் துறவு எந்த அளவுக்கு என்பதையெல்லாம் அவரவர் முடிவு செய்யவேண்டும். அதில் நெறிகளெல்லாம் ஒன்றும் இல்லை. உலகியலில் இருந்து ஒதுங்கியபின் செய்யப்பட வேண்டியவற்றை அவர்களே கண்டடையவேண்டும். ஆன்மிகமாக இருக்கலாம், கலை இலக்கியச் செயல்பாடுகளாக இருக்கலாம், சேவையாக இருக்கலாம், அதைப்போன்ற ஏதேனும் செயல்பாடாக இருக்கலாம். அவரவர் இயல்புப்படி, அவர்கள் அதை முன்னரே பழகியிருக்கவேண்டும்.

ஒருவர் அந்த இறுதிக்கால வாழ்க்கையை முன்னரே திட்டமிடவேண்டும். அதற்காகச் சேமிக்க வேண்டும். அதற்குள் வாழ்வுமுறையைச் சுருக்கிக் கொள்ளவேண்டும். அது இயல்வதுதான். அப்படி பலரை எனக்குத் தெரியும்.

அவ்வாறன்றி, எந்த சேமிப்பும் இல்லாமல் கடைசிவரை ஒருவர் வேலை செய்யவேண்டியிருக்கும் என்றால் அது அவரது சொந்தத் தெரிவு. அல்லது எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு அளித்துவிட்டு அவர்களுடன் ஒட்டிக்கொண்டு வாழவேண்டுமென ஒருவர் விரும்பினால் அவர் அதை வாழவேண்டியதுதான். நீங்கள் சொன்னதுபோல வாழ்க்கை முழுக்க உருவாக்கிய வசதிகளை அனுபவிக்க வேண்டும் என ஒருவர் ஆசைப்பட்டால் அதன் சிக்கல்களையும் அவர் அனுபவிக்க வேண்டியதுதான்.

நான் சொல்வது பொதுவாக எளிய உலக வாழ்க்கையில் ஊறியவர்களுக்காக அல்ல. வாழ்க்கை முழுக்க பொருள் சார்ந்த உலகவாழ்க்கைக்கு அப்பால் எந்த ஆர்வமும் இல்லாமல், எதையுமே அறியாமல் வாழ்பவர்கள் வயதான காலத்தில் எதையும் புதியதாகத் தொடங்க முடியாது. அவர்கள் அதுவரை வாழ்ந்த லௌகீகமான வாழ்க்கையை, அதன் அத்தனை சிக்கல்களுடனும், அப்படியே வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான். அவர்களுக்குச் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.

நான் பேசியிருப்பது வாழ்க்கையும் முக்கியம், கூடவே அதற்கு அப்பால் சில தேடல்களும் ரசனைகளும் உண்டு என நினைப்பவர்களுக்காக மட்டுமே.

ஜெ

***

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2021 11:34

இமையத்தின் செல்லாத பணம் – டெய்ஸி பிரிஸ்பேன்

செல்லாத பணம் வாங்க

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

எழுத்தாளர் இமையம் அவர்களின் “செல்லாத பணம்” படித்தேன். வேலைகளை முடித்து இரவில் தான் படிக்க நேரம் கிடைக்கும். அப்படி இரண்டு இரவுகளிலாக படித்து முடித்தேன். இரண்டு நாளும் நானும் மருத்துவமனை வளாகத்திலேயே இருந்தேன். எல்லா விமர்சனங்களையும் படித்து விட்டுத்தான் நாவலையே படித்தேன். கதை முழுவதுமாக தெரிந்து இருந்தாலும்கூட ஒரு பதைபதைப்புடன்தான் படிக்க முடிந்தது. அம்மாம்பெரிய, ரவகூட போன்ற ஓரிரண்டு வார்த்தைகள்தான் பழைய கதைகளில் உள்ள இமையம் ஸ்பெஷல் வார்த்தைகள். மற்றபடி அப்படியே வேறுமொழி. இத்துடன் மயிலன் g சின்னப்பன் அவர்களின் “ஆகுதி” கதையும் நினைவில் வந்தது.

என்னுடைய மாமியார் வீட்டில் நாங்கள் நான்கு மருமகள்கள். காலை பதினோரு மணியளவில் நாலு கேரியர் சாப்பாடு கட்டி படிக்கட்டில் வைத்து விடுவோம். சாப்பாடு எடுக்க ஆரோக்கியம்மா என்றொரு அம்மா வருவார்கள். ஒரே மகன். கணவனை இளம் வயதிலேயே இழந்து சாப்பாடு கூடை தூக்கி பிள்ளையை வளர்த்தவங்க. பங்கரைக் கிழவி மாரி தலை ஒரு வேஷமும் புடவை ஒரு வேஷமும், எந்த நேரமும் வெத்தலை பாக்குப் போட்டுக்கொண்டு வரும். மகனும் நல்ல பையன். ஆனால் எப்படியோ குடிப் பழக்கம் வந்துவிட்டது. திருமணம் முடித்தால் திருந்தி விடுவான் என்று கல்யாணம் செய்து வைத்தது. நாங்கள் பெண்களாய் கல்யாணத்திற்குப் போயிருந்தோம்.

அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து சாப்பாடு எடுக்க வரும்போது அழகாய் எண்ணெய் வைத்து சீவி, வலை போட்டு கொண்டை போட்டு அயர்ன் பண்ணின புடவை நல்ல இறக்கமாய் கட்டி அழகாய் வந்தது. எங்கள் மாமனார் வெளியில் உட்கார்ந்து இருந்தவர் ஆரோக்கியம்மா ஒரு bag மாத்திரம் மாட்டி இருந்தால் ஆபீஸ் போகுற மாறி இருப்ப என்று கிண்டல் செய்தார். வெட்கிய சிரிப்புடன் என் மருமக வேலை. இனிமேல் இப்படித்தான் வெளிய போகணும் என்று அவளே எண்ணெய் வச்சு கொண்டை போட்டு விட்டாள் என்று மகிழ்ச்சியாக சொன்னாங்க. அப்புறம் எப்போதும் மருமக புராணம்தான். கட்டு செட்டா குடும்பம் நடத்தி ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனாலும் அவனின் குடிபழக்கத்தை அவளால் மாற்ற முடியல. அவன் அளவுக்கு மீறி குடித்துவிட்டு வரும்போது அவனை பயப்படுத்த நெருப்பு வச்சிக்கப் போவதாக மிரட்டி வருவாள். பிறகு கொஞ்ச நாள் குடிக்காம இருப்பான். மறுபடியும் கொஞ்ச கொஞ்சமாய் ஆரம்பிப்பான். ஒருநாள் இரவு இப்படி மிரட்டும்போது உண்மைலேயே நெருப்புப் பிடித்து எரிந்து ரேவதியைப் போல இரண்டு மூன்று நாட்கள் நொந்து அலறி இறந்துபோனாள். அதற்குபிறகு அந்தக் குடும்பம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. ஆனால் குழந்தையை மாத்திரம் அந்தப் பெண்ணின் பெற்றோர் எடுத்துக் கொண்டு போய்ட்டாங்க. அந்தப் பெண்ணை என்னால் மறக்கவே முடியாது.

“செல்லாத பணம்” ரேவதி. அவளுடைய படிப்பிற்கும் சூழ்நிலைக்கும் ரவி மாதிரி ஒரு பையனை சைட் அடிக்கக் கூட முடியாது. ஆனால் அவனை கல்யாணம் பண்ணி ஆறு வருஷங்கள் எல்லாப் பாடும் பட்டு போய் சேர்ந்தாள்.. ஏன் அம்மா, அப்பா, அண்ணன் பேச்சை மீறி எல்லாருடைய சாபத்தையும் வாங்கி இவனை ஏன் தேர்ந்தெடுத்தாள் என்று கடைசி வரைக்கும் அவளுக்கே தெரியல. கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்ல வேலைக்குப் போய் பொருளாதார ரீதியாய் முன்னுக்கு வந்து விடலாம், அப்பா அம்மா அப்ப ஏத்துக்குவாங்க என்றுதான் அவள் தன் தோழியும் அண்ணியும் ஆன அருண்மொழியிடம் சொல்கிறாள். ஆனால் அவளால் வீட்டை விட்டே போக முடியவில்லை.

கதையிலேயே நிறைய இப்படி பண்ணியிருக்கலாம் என்று வருகிறது. அண்ணனும், அப்பாவும் ரவியை கூப்பிட்டு கண்டிச்சிருக்கலாம், போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாம். நிறைய பணம் கொடுத்திருக்கலாம். என்னும் என்னென்னவோ. ஒருவேளை மாறியிருக்குமோ அதுவும் தெரியாது. ஆனால் வண்டிக்கு கட்ட வேண்டிய தவணைப் பணத்தை அம்மாட்டப் போய் வாங்கிட்டு வந்ததும் அதில் இருந்து பணம் எடுத்துட்டுப் போய் குடிச்சிட்டு வரவனுக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவன் முன்னேறப் போறதில்லை. தான் இளவரசியாய் வாழ்ந்த வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரியைப் போல் வெளியே இரந்து நிற்கிறாள். ஒருவேளை பெற்றோர் பார்த்துத் திருமணம் முடித்திருந்தால் அவள் வருகையே அவர்களுக்கு ஒரு கொண்டாட்டமான நிகழ்வாய் இருந்திருக்கும். அப்பா இதை வாங்கிட்டு வாங்க, அம்மா இதை செஞ்சுக் கொடுங்க என்று கால் மேல் கால் போட்டுக்கொண்டு அரட்டி உருட்டி இருப்பாள்.

ஆனால் அவளுடைய குழந்தைகள்தான் கடைசியில் பாவம். இரண்டு பெண் குழந்தைகள். எங்குமே அவர்கள் வரவில்லை. ரேவதி தன் அம்மா வீட்டிற்குக் கூட அழைத்துக் கொண்டு போனதில்லை. கடைசியில் ரேவதியின் பெற்றோரும் பொறுப்பேற்றுக் கொள்வது போல் வரவில்லை. குடிகார அப்பனிடமும், வாய் திறக்காத தாத்தாவிடமும், எங்க என்ன பேசுவது என்று தெரியாமல் வம்பிழுத்துக் கொண்டு இருக்கும் அப்பாயிடமும், முதிர் கன்னியான அத்தையிடமும் வளருங்களா என்றும் தெரியவில்லை. கேஸ் விசாரிக்க வந்த போலீஸ் ஒருவன்தான் முழு கதையிலும் அந்தக் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படுகிறான். ஏனென்றால் அவனும் நெருப்பு வைத்துக் கொண்ட தாயின் மகன். ரேவதி ரவியைப் பார்த்த உடனே அவளுடைய மரணத்தின் கருவியை அவளே தேர்ந்தெடுத்து விட்டாள். வேற யாரையும் எனக்குப் பார்தீங்கனா நெருப்பு வைத்துக்கொள்வேன் என்றுதான் தாயிடம் மிரட்டி திருமணம் செய்து கொள்கிறாள். அந்த நெருப்பு ஆறு வருடங்கள் காத்திருந்து அவளைக் கொண்டு போனது.

ரவி அருண்மொழியிடம் கொடுக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட். நான் சல்லிப்பயதான். ஆனால் நீங்க பெரிய மனுஷத்தனமாய் நடந்துக்கலையே. உங்க பணம்தான் அவளை எரிச்சது என்று. ஏன் இந்தப் பெண்கள் இவனை மாதிரி ஒரு ஆளை தேர்ந்தேடுக்குதுங்க. விதிதான். வேறென்ன சொல்வது. எப்படி வேணாலும் நடத்திருக்கலாம். ஆனால் ஒன்றே ஒன்றுதான் நடந்தது. “ஆகுதி”.

டெய்ஸி பிரிஸ்பேன்

இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2021 11:33

தலித்துக்கள், கேரள கம்யூனிசம் – கடிதங்கள்

கேரள கம்யூனிசமும் தலித்துக்களும்

அன்புள்ள ஜெ

கேரள கம்யூனிசமும் தலித்துக்களும் ஓர் அருமையான குறிப்பு. அதிலிருந்த சமநிலையும் அக்கறையும் ஆச்சரியப்படச் செய்தது. இங்கே அரசியல்பேசும் அனைவருமே ஒரு சிறிய நண்பர்குழுவில் அரட்டை அடிப்பவர்களின் மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆகவே தங்களுக்கான அடையாளத்துக்காகவே அரசியல் பேசுகிறார்கள். எனவே மிகமிகத் தீவிரமாக தொண்டைபுடைக்க ஏதாவது ஒரு தரப்பை எடுத்துப் பேசுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள், வசைபாடுகிறார்கள். இந்த மனநிலையால் காணப்படாமல் போவது உண்மை என்ன என்பதுதான். அதைச்சொல்ல சில நடுநிலையான குரல்கள் இருப்பது நல்லவிஷயம்.

கேரளத்தில் இடதுசாரி அரசுகள் தலித்துக்களுக்குச் செய்தவை என்ன என்று பட்டியலிட்டிருந்தீர்கள். அவற்றைச் செய்த முன்னோடிகளான இ.எம்.எஸ், கௌரியம்மா, அச்சுதமேனன் ஆகியோரை குறிப்பிட்டிருந்தீர்கள். வரலாற்றில் இதையெல்லாம் குறிப்பிடாவிட்டால் அப்படியே வரலாறு மறைந்துபோய்விடும். கம்யூனிஸ்டுகள் தங்கள் பணிகளை தாங்களே சொல்வதில்லை. ஆகவே அவை மறைந்துவிடுகின்றன. மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. மக்கள் அன்றாட வாழ்க்கையைத்தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஆகவே இவற்றைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

எஸ். முத்துக்குமரன்

***

அன்புள்ள ஜெ,

கேரளக் கம்யூனிசம் பற்றிய கட்டுரையில் ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தேன். இன்றைக்கு தலித்துக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் சலுகைகள் மட்டும் போதாது. அந்த தேவையை அவர்கள் கடந்துவிட்டனர். கல்வியில் இட ஒதுக்கீடு என்பது ஒரு தொடக்கம். அரசுவேலைகள் குறைந்துவிட்டன. இன்றைக்கு எந்தச் சாதி வியாபாரத்தில் முன்னுக்கு வருகிறதோ அதுதான் வாழும். தலித் மக்களுக்கு எங்கேயுமே வியாபார வாய்ப்பே இல்லை. ஆகவேதான் மிகப்பெரிய தேக்கநிலை. அந்த வாய்ப்பை அரசு வழங்க முடியாது. அதை வென்றெடுக்க வேண்டும். அதற்கு வாக்கரசியலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சமூக அதிகாரம் என்பது பேரம்பேசி பெறுவதாக ஆகிவிட்டிருக்கிறது.

அ.பாரி

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2021 11:31

August 17, 2021

இளம் வாசகிக்கு…

அன்புமிக்க ஜெ,

வணக்கம். கல்லூரி நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாகவே தீவிர வாசிப்பில் ஆழ்ந்துள்ளேன். இரண்டு வருடங்களாக உங்கள் தளத்தினை வாசித்து வந்தாலும் 6 மாத காலமாகத்தான் உங்கள் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இரவு, அறம், வெண்முரசில் 2 நாவல்கள், காடு, கொற்றவை, தளத்தில் வரும் சிறுகதைகள் என்று உங்கள் படைப்புகள் சிலவற்றை வாசித்து உள்ளேன். உங்கள் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்த பிறகு என்னால் மற்ற படைப்புகளை வாசிக்க தோன்றுவதில்லை. மீண்டும் மீண்டும் உங்கள் படைப்புகளை மட்டுமே மனம் தேடுகிறது.

ஆனால் நான் வாசிக்க ஆரம்பித்த ஆரம்ப காலங்களில் பல்வேறு ஆசிரியர்களை, இலக்கியங்களை, சில உலக இலக்கியங்களை கூட தேடித் தேடி வாசித்து வந்தேன். ஆனால் உங்களை கண்டடைந்த பிறகு எனக்கு வேறு வாசிக்க தோன்றுவதில்லை. என்னுடைய போக்கு சரிதானா? உங்கள் படைப்புகளே இன்னும் நான் வாசிக்க வேண்டியது நிறைய உள்ளது, அதை எல்லாம் வாசித்து விட்டு மற்ற இலக்கியங்களை நோக்கி செல்லலாமா? வழி கூறுங்களேன்.

என்னை வளர்த்து கொள்ளவே உங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுத முடிவு கொண்டுள்ளேன். நான் வாழந்து வரும் சூழலில் இலக்கியம் படிப்பவர்கள் யாரும் இல்லை. என்னால் இலக்கியத்தை பற்றி பேசுவதற்கும், விவாதிக்கவும் நண்பர்கள் இல்லை. நான் எனக்குத் தெரிந்த சில குழந்தைகளுக்கு  கதை சொல்லி மட்டுமே என்னை செயல்படுத்தி வருகிறேன். உங்கள் தளத்தில் அறிவிக்கும் இணைய தள கூடுகைகளிலும் இப்பொழுது கலந்து கொள்கிறேன். நான்  அறிவியக்க சூழலில் தொடர்ந்து முன்னேறி வருவதற்கு தகுந்த வழிமுறைகளையும் கூறுங்களேன். பிழையாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்.

மதுபாலா

***

அன்புள்ள மதுபாலா,

ஓர் ஆசிரியரில் முழுமையாக ஈடுபட்டு வாசிப்பதென்பதொன்றும் பிழையில்லை, உண்மையில் அதுவே இயல்பான நிலை. அவரை கடந்துசெல்லலாமே ஒழிய விட்டுச்செல்ல வேண்டியதில்லை. அந்த ஆசிரியரை முழுமையாக வாசிக்க அவருடைய எழுத்தின் தளத்தைச் சேர்ந்த பிறவற்றையும் வாசிக்கலாம். ஏதோ ஒரு கட்டத்தில் இயல்பாக நீங்கள் பிறவற்றையும் வாசிக்க ஆரம்பிப்பீர்கள். ஆகவே அதைப்பற்றிய சஞ்சலம் தேவையில்லை.

பொதுவாக இருவகை வாசிப்புகள் உண்டு. ஓர் ஆசிரியருக்கு தன்னை ஒப்புக்கொடுத்து வாசிப்பது ஒருவழி. அறிவார்ந்து முரண்பட்டும் விவாதித்தும் வாசிப்பது இன்னொரு வழி. முதல்வழியே அழகியல், மெய்யியல் ஆகிய இரண்டுக்கும் உகந்தது என்பது என் எண்ணம். நான் அப்படித்தான் வாசித்தேன். டால்ஸ்டாயாக இருந்தாலும் சரி, நித்ய சைதன்ய யதியாக இருந்தாலும் சரி, என் வழி முழுதளிப்பதும் வெறிகொண்டு வாசித்து அவர்களில் மூழ்கிக்கிடப்பதும்தான்.

அது அவர்களை மிகமிக அணுக்கமாக உணரச்செய்கிறது. அவர்களுள் நாமே நுழைந்துகொள்ளச் செய்கிறது. அவர்கள் அடைந்த அனைத்தையும் நாம் அடைய அதுவே நல்ல வழி.

முரண்பட்டு விவாதித்து அறிவது தத்துவத்திலும் அறிவியலிலும் பிற தர்க்கவழி அறிதல்முறைகளிலும் உகந்ததாக இருக்கலாம். ஆனாலும் அங்கே முரண்பட்டு எதிர்நிற்கும் அடிப்படைகளை அறிந்து அதற்கான தர்க்க ஆற்றலை அடையும் வரை அடிபணியும் கல்வியே உகந்தது. இல்லையேல் வெற்றாணவம் திரையென ஆகி எதையும் கற்க முடியாதவராக ஆக்கிவிடும்.

பொதுவாகப் பெண்களின் வழி முழுமையாக தன்னளிப்பதே. அது ஒரு பலவீனம் அல்ல. அது மிகப்பெரிய ஆற்றல். தெரியவேண்டிய அனைத்தையும் மிச்சமில்லாமல் தெரிந்துகொள்ள முடியும். அனைத்தையும் சுருக்கி உள்வாங்கிக் கொள்ளவும் முடியும்.

நம் சூழலில் இலக்கியவாசகர் ஒரு தனிப்பயணி மட்டுமே. ஏனென்றால் இங்கே வாழும் பத்துகோடிப்பேரில் ஒருலட்சபேர் எதையாவது வாசிப்பவர் இருந்தால்கூட ஆச்சரியம்தான். ஆகவே நாமே நமக்கான களங்களைக் கண்டடைய வேண்டியிருக்கிறது. நாமே நட்புச்சுற்றங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு இலக்கிய உரையாடல் இன்றியமையாதது. ஆகவே இலக்கியத்திற்கான அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கலாம். குழுமங்கள் உதவியானவை. விஷ்ணுபுரம் குழுமமேகூட.

இலக்கியம் ஓர் அகவாழ்க்கை. அதில் முன்னேற்றம் என்பது இல்லை. அதில் திகழ்வதே முக்கியமானது. அது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. தீவிரமான சிறு பகுதி. புறவாழ்க்கையை அதற்குரிய விதிகளின் படி அமைத்துக் கொள்ளவேண்டும். அது இலக்கிய வாசிப்பு மற்றும் கற்பனையுடன் முரண்பட்டு உரசக்கூடாது. இலக்கிய வாசிப்பில் தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதொன்றே நாம் செய்யக்கூடுவது.

அவ்வாறு நெடுநாட்கள் தொடர்ந்து வாசிப்பவர்கள் தங்களை அறியாமலேயே அகத்தே கூர்கொண்டபடி இருப்பார்கள். அதைத்தான் நாம் முன்னேறுவது என்று சொல்கிறோம்.

சில நெறிகளை நான் அடிக்கடிச் சொல்வதுண்டு

அ. ஒவ்வொரு நாளும் வாசிக்கவேண்டும். உளநிலை சரியாக அமைந்தால் மட்டுமே வாசிப்பது என இருக்கக் கூடாது

ஆ. வாசிப்பதற்கு ஒரே நேரம் ஒரே இடம் ஒதுக்கிக்கொள்வது நல்லது.

இ. இலக்கியம் வாசிக்கையிலேயே பிற துறை சார்ந்த ஒரு நூலையும் சேர்த்து வாசிப்பது நல்லது. அது ஓர் இளைப்பாறல். இலக்கியத்தை அதனுடன் இணைந்த தத்துவம், வரலாறு, பண்பாட்டாய்வு நூல்களுடன் சேர்த்து வாசிப்பது அவசியம்.

ஈ. வாசிப்பவற்றைப் பற்றி குறிப்புகள் எடுத்துக்கொள்வது அவசியம். நூல்களின் உள்ளடக்கம், அவற்றின்மீது உங்கள் மதிப்பீடு ஆகியவை.

ஈ. நூல்களை தெரிவுசெய்யும்போது முதலில் சுவை சார்ந்து தெரிவுசெய்வோம். காலப்போக்கில் நூல்களின் வழியாக நாம் தேடும் வாழ்க்கை வினாக்கள், தத்துவச்சிக்கல்கள் திரண்டு வரும். அதனடிப்படையில் தெரிவுசெய்வோம்.

உ. நூல்களைப் பற்றி உரிய சூழலில் விவாதிப்பது நல்லது. ஆனால் ஒருபோதும் இலக்கியம் மீது மதிப்பில்லாதவர்களிடம் விவாதிக்கலாகாது.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2021 11:35

நாவலும் மறைபிரதியும் – பி.கே.பாலகிருஷ்ணன்

ஜீவன் மஷாயின் பிறப்பிலிருந்து இறப்புவரை உள்ள முழுமையான வாழ்க்கை தான் ’ஆரோக்கிய நிகேதனம்’. ஜீவன் மஷாய் இல்லாத ஒரு தருணம் கூட, அவரைப்பற்றி விவாதிக்காத ஒரு பக்கம்கூட 530 பக்கங்கள் கொண்ட அந்த நாவலில் இல்லை. பொதுவாகவே ஒரே ஒரு கதாநாயகனையோ, கதாநாயகியையோ  கொண்ட நாவல்கள் பெரும்பாலும் அவர்கள் இருவரையும் மையமாகக்கொண்டுதான் இயங்கும். ஆனால், இந்த மையப்படுத்தும் போக்கு என்பது ”நாவல்” என்ற வடிவத்தைப் பொருத்தவரை ஒரு போதாமையும் கூட. கதாநாயகனின் சலனங்களை, சிந்தனைகளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை பிசகாமல் பின்தொடரும் புகழ்பெற்ற நாவல்கள் என நாம் ‘டான் க்விக்ஸாட்டையும் (Don- Quixote)’, ‘ழீன் கிறிஸ்தோஃப்பையும் (Jean Christophe)’ சொல்லலாம். இதில் ‘டான் க்விக்ஸாட்(Don- Quixote)’ ஒரு தனி வகைமை நாவல். அதை வேறு எந்த நாவலுடனும் ஒப்பிட முடியாது.

மொழிபெயர்ப்பில் 2000 பக்கங்கள் கொண்ட “ழீன் கிறிஸ்தோஃப்(Jean Christophe)” கிறிஸ்தோஃப் என்ற ஆளுமையை மையமாகக்கொண்ட நாவல். இசை ஞானம் கொண்ட, மாறிமாறி வரும் காதல் வாழ்க்கைகள் நிறைந்த கிறிஸ்தோஃப்புடைய ஆளுமையின் பரிணாமம் நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒரு கதாநாயகனும், காதலின் வெவ்வேறு உணர்வுநிலைகளுக்கு உதாரணங்களான கதாநாயகிகளும் கொண்ட “ழீன் கிறிஸ்தோஃப் (Jean Christophe)”  நாவலில் கிறிஸ்தோஃப்பின் ஆளுமை உச்சத்தை அடைந்தவுடன் நாவல் முடிந்துவிடுகிறது. ஆனால், ’ஆரோக்கிய நிகேதனம்’ ஜீவன் மஷாயின் பிறப்பு முதல் முதுமைவரை  (கிட்டத்தட்ட அவரது மரணம் வரை) விவரிக்கும் நாவல். இந்த ஒப்பீடு வழியாக, ழீன் கிறிஸ்தோஃப் நாவலை விட ஆரோக்கிய நிகேதனம் சிறந்த நாவல் போன்ற அபத்தமான கருதுகோளுக்கு நான் சென்று சேரவில்லை. ஆனால், உலக இலக்கியத்தில் கதாநாயகியே இல்லாத பெரும்பாலும் கதாநாயகனை மட்டுமே மையமாகக்கொண்ட (அதுவும் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள முழுமையான வாழ்க்கையை விவரிக்கும்) பெரிய நாவல்கள் மிகமிகக் குறைவு என்பது ஒரு முக்கியமான தரவு. அதுவும் நாவலின் கதாநாயகன் மஷாய் தன் கிராமத்தின் எல்லைக்குள் மட்டுமே (கிட்டத்தட்ட நடந்து சென்றே) காலத்தை கழித்தவர். தன் இளமையில் ஒரே ஒருமுறை மட்டும் பூசலுக்குச் சென்றது, “நிறுத்து, ஆத்தர் பௌ” என்று மனைவிடம் இரண்டுமுறை கத்தியது, “டேய், நீ நோய் முற்றிப்போய் செத்துத் தொலைவாய்” என்று பொறுக்கியும் நாடோடியுமான ஒரு நோயாளியிடம் கோபப்படுவது என்று நாவலில் இந்த மூன்று தருணங்களை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் நம் கதாநாயகன் மஷாய் சாகச உணர்வே இல்லாத ஒரு ஆள் என்றுதான் சொல்லத் தோன்றும். இந்த சாகசமற்ற தன்மை அளிக்கும் சலிப்பை சமன் செய்ய நாவலில் வெவ்வேறு கிளைக்கதைகளோ, சம்பவங்களோ ஒன்றுமே இல்லை. ஆரோக்கிய நிகேதனம் நாவலில் சலிப்பூட்டும்தன்மை என்ற சாத்தியக்கூறு மலைபோல உயர்ந்து நிற்கிறது. இந்த சவாலை நாவலாசிரியர் தாராசங்கர் பானர்ஜி எப்படி எதிர்கொண்டார்? இந்த சலிப்பூட்டும் தன்மையை வெல்ல அவர் நாவலில் என்ன செய்தார்? இந்த கேள்விகளை நாம் ஆராய ஆரம்பித்தால் நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் சாத்தியங்களைப் பற்றிய பல்வேறு விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

நாவலின்  கதைசொல்லும் முறை (narration), கதைத்தொழில்நுட்பம் (craft) சார்ந்த அம்சங்களில் சோதனை முயற்சிகள் என எதுவுமே இல்லாத  நாவல்தான் ஆரோக்கிய நிகேதனம். எந்த  கிராமத்து வைத்தியரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய மிகச் சாதாரணமான சம்பவங்கள்,  கொஞ்சம்கூட மிகையுணர்ச்சி இல்லாத வாழ்க்கை சித்திரங்கள் இவை மட்டும்தான் நாவல் முழுக்க இருக்கின்றன. நாவலின் கதாப்பாத்திரங்களை, சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் நம் நடைமுறை வாழ்க்கை சார்ந்த சாதாரண அனுபவ மண்டலத்தை மீறிய ஒரு கதாப்பாத்திரத்தை அல்லது குறைந்தபட்சம் ஒரு சம்பவத்தைக்கூட இந்த நாவலில் காணமுடியாது. சலனங்கள் அற்ற, வாழ்க்கை அப்படியே உறைந்துவிட்டது போன்ற, கிராமத்தின் மாறாத ஒரே பின்னணியில், சாகசவுணர்வு, கோபம் போன்ற எதுவுமே அற்ற ஒரு கிழட்டு கதாநாயகனும், மிகச் சாதாரணமான சம்பவங்களும் காட்டப்படுகின்றன. உணர்வுகள் கொப்பளித்து உயர்ந்து, உடனே தாழ்ந்து, சட்டென உச்சத்தை அடைந்து அரற்றும் ஒரு கீர்த்தனையைக் கேட்டபின்பு, ஓய்ந்து நின்றுவிட்ட அந்த நாதப் பிரவாகத்தில், இனிய துக்கத்தில் தோய்ந்திருப்பது போன்ற அனுபவம் நம்மில் எஞ்சும். கிட்டத்தட்ட ஆரோக்கிய நிகேதனம் நாவலை வாசிக்கும்போது நம்மில் உண்டாகும் அனுபவம் என்பது  கீர்த்தனைக்குப் பின் உள்ள தோய்ந்திருக்கும் அனுபவத்தை போலத்தான்.

மாற்றமில்லாத ஒரே ஒரு வாழ்க்கைச்சூழலை, எந்த அலைக்கழிப்பும் அற்ற ஒரே ஒரு வாழ்க்கையை மட்டும் பின்தொடர்வது என்ற சாத்தியத்தை பற்றி யோசித்துப் பார்ப்பது சுவாரஸியமானது. காலத்தை அப்படியே ஸ்தம்பித்து நிற்கச் செய்திருக்கும் கிராமம். முப்பாட்டன்களின் வாழ்க்கையை அப்படியே திரும்ப வாழும் நிறமற்ற சந்ததிகள். எண்ணிப் பார்த்தால் அப்படிப்பட்ட வாழ்க்கையில் தனித்தன்மைகள் என்று ஏதாவது இருக்குமா என்ன? ஆரோக்கிய நிகேதனம் நாவலின் வாழ்க்கைக்களம் அறிமுகமானவுடன் நாம் இந்த கேள்வியை கேட்டுக்கொள்வோம். அந்த கேள்விக்கான பதில் இதுதான். நம் வாழ்க்கைப்பார்வை, நம்முடைய அணுகுமுறைதான் பிரச்சனை. அந்த கிராமத்தின் ஒவ்வொரு மனிதனுக்கும் நீண்ட வரலாறு இருக்கிறது, பாரம்பரியம் இருக்கிறது, கிட்டத்தட்ட நம் தறவாட்டு வீடு போல. அந்த வீட்டின் ஒவ்வொரு கூரையிலும் எஞ்சியிருக்கும் நீண்ட வரலாற்றை, தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒரே பாரம்பரியத்தை எப்படி நம்மால் சாதாரணமான ஒரு தனிமனிதனின் வாழ்க்கை, அவனது சின்ன உலகம் என சொல்லிவிட முடியும்? அவை வெறும் கூரைகளாக இருக்கலாம்,

ஆனால் தத்துவார்த்தமாக அவை அரண்மனைகள் போல. அங்கே நாம் பார்க்கக்கூடிய ஆட்கள் தனித்தன்மைகளோ, சுவாரஸியங்களோ அற்றவர்கள் என நாம் நினைப்பது ஒரு பிழையான புரிதல். அவர்கள் சுவாரஸிமற்ற, பொருட்படுத்த தேவையில்லாத ஆளுமைகளாக இருக்கலாம். ஆனால், அவர்கள் பெருமரங்களைப்போல. பாரம்பரியம் என்ற  ஆழத்தில் வேர் கொண்ட உண்மையான ஆளுமைகள். அங்கே தலைமுறை தலைமுறையாக தொடரும் மாற்றமில்லாத தன்மையை நாம் ஒரு பெரிய சமவெளி என கற்பனை செய்துகொள்ளலாம். மானுட உறவுகள், பற்றுகள், விழைவுகள், அகங்கார மோதல்கள், உணர்வு கொந்தளிப்புகள் போன்ற தீவிர மானுட உணர்வுகள் அந்த சமவெளிபோன்ற நீண்ட பரப்பில் புதிய பச்சை தளிர்கள் முளைப்பதுபோல. சலனங்களையே அறியாத அந்த வெளியில் நுட்பமான சின்ன நடுக்கம் கூட அந்த சலனத்தின் இயல்புகள் என்ன என்று உரக்கச் சொல்லும் பெரிய சம்பவமாக ஆகிவிடும். அப்படிப்பட்ட கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக சிகிச்சை நடத்தும் ஒரு மருத்துவ குடும்பத்தின் வாரிசை நாம் சாதாரணமாக கிராமத்திலிருக்கும் வெறும் வைத்தியராக மட்டும் சுருக்கிவிட முடியாது.

பி.கெ.பாலகிருஷ்ணன்

மரணத்தின் முன் மனிதன் கைவிடப்பட்டவன் அல்லவா. மரணத்தின் தொலைதூர நிழல்கூட மனிதனை நடுங்க வைக்கிறது. மரணம் நோயாளியில் மட்டும் ஒதுங்கிவிடக்கூடிய  கைவிடப்பட்ட தன்மையோ, நடுக்கமோ மட்டுமல்ல. சொல்லப்போனால், இந்த விஷயத்தில் நோயாளி அவ்வளவு முக்கியமான அம்சமே இல்லை. ஒரு குடும்பம் முழுக்க நிறைந்திருக்கும் மறக்கமுடியாத உணர்வெழுச்சிமிக்க அனுபவம்தான் மரணம். மனித வாழ்க்கையை செறிவாக்கும் விலைமதிப்பற்ற மதிப்பீடுகள் அங்கே ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. சாதாரணமாக மனிதன் புனைந்துகொண்ட பல்வேறுவிதமான பாவனைகளின் பட்டாடைகள் மரணம் சார்ந்த தருணங்களில் கையறுநிலையின் காரணமாக, பயத்தின் காரணமாக அவர்களிலிருந்து உதிர்ந்து விழுந்துவிடுகின்றன. அப்பட்டமான, செயற்கைத்தனம் துளியும் இல்லாத வெறும் அடிப்படை உணர்வுகளுடன் அந்த தருணங்களில் இதயம் தானாகவே திறந்துகொள்கிறது. அந்த சூழலில் தன்னிச்சையாக எதிர்வினைகளை ஆற்ற வேண்டிய  கட்டாயத்திலிருக்கும் மனிதர்கள் அதன் வழியாக தங்கள் சொந்த ஆளுமையின் உண்மையான அடித்தளம் என்ன என்பதை வெளிப்படுத்துகிறார்கள். அப்படி ஒரு தருணத்தை எதிர்கொள்ளும் அந்த ஊரின் நம்பிக்கைக்குரிய வைத்தியர், நோய்க்கு மருந்து தரும் வெறும் டாக்டர் மட்டுமே என எப்படி சொல்லமுடியும்?

ஒரு நோயாளி, அவன் நோய் இது மட்டுமல்ல இங்கு வைத்தியரின் பிரச்சனை. அவர் அங்கு படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளியை முழுமையாக அறிந்தவர். அவனுக்கும் வைத்தியர் மிகமிக பரிச்சயமானவர். இதை பரஸ்பரம் இரு எல்லைகளிலும் தலைமுறை தலைமுறையாக இருக்கும் அறிவு என்றுதான் சொல்லவேண்டும். நோய்ப் படுக்கையை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரும் யார் என்று, அவர்கள் ஒவ்வொருவரும் என்ன நினைக்கிறார்கள் என்று, அந்த வைத்தியருக்குத் நன்றாகத் தெரியும். அவர் தகிக்கும் உணர்வுக்கொந்தளிப்புகளின் சுழியில் இருக்கிறார். உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அம்மா இருக்கிறாள். ஒவ்வொரு மரணத்திலும் அன்னையர், மைந்தர்கள், மனைவிகள் இதயம் நொந்து அழுகிறார்கள். ஆனால், ஒரு தாய் தன் மகனின் நோய்படுக்கைக்கு முன் பெருமூச்சுடன் இயல்பாக நிற்பது விசித்திரமான அனுபவம். இதயம் முழுக்க கனிவும், அக்கறையும் நிறைந்த வைத்தியரின் மனதில் அன்பின், பரிவுணர்ச்சியின் ஊற்றுகள் பீறிடுகின்றன. ஆனால் அவருக்கு பெருமூச்சும், கண்ணீரும் விலக்கப்பட்டிருக்கிறது.

அவர் உணர்வுகளுக்கு இடமற்ற உறுதியான பொறுப்புணர்ச்சியால், அறிவின் வெம்மையால் அந்த ஊற்றை வற்ற வைத்துக்கொண்டவர். அந்த கிராமத்தில் வாழும் ஒருவனுக்கு மரணம் சார்ந்த உணர்வெழுச்சி கொண்ட அனுபவம் என்பது அவன் வாழ்க்கையின் ஒட்டுமொத்த அனுபவங்களில் சின்னபகுதி மட்டும்தான். ஆனால், அந்த பெரும்பாரம்பரியத்தின் பாதுகாவலனான வைத்தியரின் வாழ்க்கை என்பது முழுக்க முழுக்கவே இம்மாதிரி உச்ச அனுபவங்கள் மட்டும்தான். அதாவது, அந்த கிராமத்தின் உள்ள ஒவ்வொருவரின் மரணம் சார்ந்த, நோய் சார்ந்த உணர்வுகொந்தளிப்பு நிறைந்த நாட்களை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் அதுதான் வைத்தியரின் தினசரி வாழ்க்கை. எப்பொழுதுமே  கொந்தளிப்பான வாழ்க்கை அனுபவங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உச்சமடைந்து, உடனேயே தணியும் இயல்பு கொண்டவை. வைத்தியரின் ஆளுமைக்கு இம்மாதிரியான அனுபவங்கள் விஷேஷமான பதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நாவலின் மையம் என்ன என இன்னும் ஆழமாக ஊடுருவி பார்த்தால் அதை இப்படிச் சொல்லலாம்: அது அன்பின், பரிவுணர்வின் சிறகுகளை வீசி மனிதன் என்ற எல்லையை கடந்து புனிதமான வேறொன்றாக ஆகத்துடிக்கும் ஒரு மனிதனின் வரலாறு. கூடவே, இந்த நாவல் அதன் கதைக்களமான அந்த கிராமத்திலிருக்கும் அனைத்து மனிதர்களின் செறிவான, உணர்வுப்பூர்வமான தனி வாழ்க்கையின் ஒட்டுமொத்த சித்திரத்தையும் அளிக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதாவது, மாற்றமில்லாத ஒரே பின்னணியில், வைத்தியரின் வாழ்க்கையை மட்டும்(மிகப்பெரிய வாழ்க்கையை) உண்மையாக சித்தரிப்பது வழியாக, அந்த ஊரிலுள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் சிக்கலான ஊடுபாவுகள் நிறைந்த, சலனங்கள் கொண்ட பெரிய நாவலாக அதை ஆக்க நாவலாசிரியர் தாராசங்கர் பானர்ஜியால் முடிந்திருக்கிறது.

தாராசங்கர்

இந்த நாவலின் தனித்தன்மைகளை பற்றி யோசித்துப் பார்த்தால் அது நாம் இதுவரை விவாதித்த விஷயங்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. தனிமனிதனுக்கும் சமூகத்திற்குமான உறவு (Individual and General), அதை இயக்கும் விதிகள் போன்றவற்றிலிருந்து தொடங்கி சமூகத்திற்கும் ஒட்டுமொத்தத்திற்கும் (General and Universal)இடையே உள்ள உறவை, அதன் விதிகளை நோக்கி இந்த நாவல் நகர்ந்திருக்கிறது. ’தனிமனிதன்’ என்பதை நாம் சமூகத்தின் மிக நுட்பமான அலகு என்று சொல்லலாம். அதேசமயம் ’தனிமனிதன்’ என்ற கருதுகோளின் பரப்பளவு என்பது சமூகத்தின் பொதுவான மனநிலைகளிலிருந்து முரண்படும் எல்லைவரைதான். ஒரு தனிமனித (individual) வாழ்க்கையின் நுட்பமான சித்தரிப்பு அந்த தனிமனிதன் புழங்கும்  சமூகத்தை (general) பிரதிபலித்து காட்டும். அதேபோல, ஒரு சமூகத்தை (general) பற்றிய துல்லியமான சித்திரம் அதற்கப்பால் உள்ள ஒட்டுமொத்தத்தை (Universal) பிரதிபலிக்கும். இந்த நாவலில் மேற்கு வங்கத்திலிருக்கும் ஒரு கிராமத்தின் (general) உண்மைத்தன்மை கொண்ட சித்திரம் மனிதனின் என்றென்றைக்குமான (Universal) குழப்பங்களை, நெருக்கடிகளை தெளிவாக பிரதிபலித்துக் காட்டியிருக்கிறது.  ஆரோக்கிய நிகேதனம் நாவலை நாம் வாசித்து முடித்தவுடன் நம் காதுக்கு மிக அருகிலேயே என ‘மரணம் என்றால் என்ன?’ என்ற கேள்வி ஒரு முழக்கம் போல எழுந்துவரும். அந்த முழக்கம் எஞ்சியிருக்கும்போதே, அதற்கான எதிரொலி என்பதுபோல ‘வாழ்க்கை என்பது என்ன? அதன் பொருள்தான் என்ன?‘ போன்ற கேள்விகள் நம் காதில் வந்து அறையும். ஆரோக்கிய நிகேதனம் நாவல் வாசிப்பில் இது மிக அசாதாரணமான ஒரு அனுபவம்.

வடிவ ரீதியாக, பேசுபொருள் சார்ந்து என எப்படி யோசித்தாலும் ”ஆரோக்கிய நிகேதனம் “ஒன்றுக்கும் மேற்பட்ட அடுக்குகள் கொண்ட நாவல். வாசகனின் கூர்ந்த வாசிப்பிற்கு ஏற்றபடி புதிய புதிய அர்த்தங்களை அவனுக்கு அளிக்க, ஒவ்வொரு வாசிப்பிலும் புத்தம்புதியதாய் தன்னை மாற்றிக்கொள்ள அந்த நாவலால் இயலும். மேலும், தங்கள் வாசிப்பின் வழியாக இந்த நாவலின் பல அர்த்த அடுக்குகளை அல்லது வாசிப்பு சாத்தியங்களை விரித்துக்கொள்ள இயலாத வாசகர்கள் இருக்கிறார்கள். அப்போதுகூட அவர்களுக்கு உணர்ச்சிகரமான ஒரு யதார்த்தவாத நாவலை வாசித்த திருப்தியை ”ஆரோக்கிய நிகேதனம்” அளிக்கும். சாதாரணமாக பார்த்தால்கூட, ஆரோக்கிய நிகேதனம் நாவலில் இருக்கும் அளவுக்கு நாடகீய தருணங்களை வேறு எந்த நாவலிலும் காண முடியாது. நேரடியாக மட்டுமே வாசிக்க, ரசிக்க இயலும் இந்த நாவலில் பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள், அர்த்த அடுக்குள் இவற்றையெல்லாம் தேடுவது பைத்தியக்காரத்தனம் அல்லது அகங்காரம் என்று சொல்லும் கள்ளமின்மை கொண்ட தூய வாசகர்கள் இருக்கலாம். நிறைய கதாப்பாத்திரங்கள் கொண்ட, வாழ்க்கைச் சித்திரங்கள் கொண்ட இவ்வளவு பெரிய நாவல் மறைந்துள்ள பல்வேறு அர்த்த சாத்தியங்கள் போன்ற விஷயங்களை மனதில் வைத்து எழுதியிருக்க சாத்தியமில்லை என விவேகமானவர்கள் என்று தங்களை நினைத்துக்கொள்ளும் வாசகர்கள் கேட்கலாம். ஆனால், இலக்கியத்தின் மறைபிரதி (Subtext) அல்லது பல அர்த்த அடுக்குகள் என்று சொல்லும்போது  ஒரு விஷயத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நவீன இலக்கியத்தில் நாம் சொல்லும் மறைபிரதி (subtext) என்பதை மரபுக் கவிதைகளில் பயன்படுத்தப்படும் இரட்டுற மொழிதல் என்றோ அல்லது கருத்துருவகம் (allegory) என்றோ நினைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒரு பொதுவான சரடில் இணையக்கூடிய இரண்டு வெவ்வேறு விஷயங்களை கிட்டத்தட்ட ஒரே விஷயம்தான் என்று வாசகனுக்கு தோன்றவைக்கும் வகையில் எழுத பலரால் இயலும். பகடியை மையமாகக் கொண்ட நாவல்கள் ஏறக்குறைய இவ்வாறுதான் எழுதப்படுகின்றன. பகடி என்ற இலக்கு இல்லாமலே கூட இப்படி இரண்டு அடுக்குகளைக்கொண்ட பல நாவல்களும், நாடகங்களும் இருக்கின்றன. ஆனால், ஆரோக்கிய நிகேதனம் நாவலில் அர்த்த அடுக்குகள் என்று சொல்லும்போது நான் உத்தேசிப்பது கருத்துருவகம் (Allegory) மாதிரியான விஷயங்களை அல்ல. நான் இங்கே குறிப்பிடும் பற்பல அர்த்த அடுக்குகள் என்பது எந்த விவாதத்திற்கும் சந்தேகத்திற்கும் இடமில்லாத விதத்தில் இறுதி விளக்கமளித்து தெள்ளத் தெளிவாக நிறுவப்பட்ட அர்த்தங்களை அல்ல. மிகச் சிறந்த இலக்கியங்கள் தங்கள் தனித்தன்மையால் உருவாக்கும் சூழலை உணர்ந்தவர்கள், அதை வாசித்து அறிந்தவர்கள் மட்டும் அடையும் ஒரு விஷேஷமான அனுபவம் உண்டு. அதை ’தத்தளிப்பை அளிக்கும் ஒரு விளங்கிக்கொள்ள முடியாமை’ என்று சொல்லலாம். அந்த அனுபவம் பௌர்ணமி இரவில் வானில் உள்ள மேகக்கூட்டங்களை பார்ப்பது போல அல்லது பனிமூட்டம் நிறைந்த அதிகாலையில் தூரத்திலிருக்கும் குன்றின்மேல் இருக்கும் ஒரு நகரத்தின் சேய்மைக்காட்சியை நோக்கி நிற்பதுபோல. மேகக்கூட்டத்திற்கு உருவம் இருக்கிறது, ஆனால் நம் மனதில் பதியும் உருவம் என்பது வரையறுக்கமுடியாத ஒன்று. நம்முடைய கற்பனைத்திறனைப்பொறுத்து மேகக்கூட்டங்களில் தெளிவான உருவங்களை நம்மால் காண முடியும். தூரத்தில், உயரத்தில், பனிமூட்டத்தில் மறைந்து இருக்கும் நகரத்தின் சேய்மைக்காட்சி ஒரே சமயம் தெளிவானதும், தெளிவற்றதும் ஆகும். எல்லைக்கோடு (Outline) தெளிவாக இல்லாத அந்த மயக்கநிலை காட்சிக்கு ஏதோ ஒரு ஆழத்தையும் கம்பீரத்தையும் அளிக்கிறது. மகத்தான இலக்கியப்படைப்பின் அர்த்த அடுக்குகள் என்று சொல்லும்போதும் நான் உத்தேசிப்பது இந்த விஷேஷமான நிலையைத்தான். நாவலாசிரியர் இந்த விஷயங்களையெல்லாம் நன்றாக சிந்தித்து மிக கஷ்டப்பட்டு அதை தன் நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நான் சொல்ல வரவில்லை. நுண்ணுணர்வுள்ள நாவலாசிரியர் தன் கலைத்தன்மையால் அவரது தனியாளுமையின் போதபூர்வமான எல்லைக்கு அப்பால் சிறகு விரித்து பறக்க இயலும். இம்மாதிரியான போத மண்டலத்தை மீறிய ’பறத்தலை’ உண்மையில் எழுதிய பிறகுதான் அதை எழுதியவராலேயே கண்டு கொள்ளமுடியும். அதனால், ஒரு நாவலை பொருள்கொள்வதில் வாசகனைவிட அந்த நாவலை எழுதியவனுக்கு அவ்வளவு அதிகாரம் கிடையாது என்பதால் நாவலாசிரியன் கைவிடப்பட்டவனின் நிலைக்கு சமானமானவன். ஜகத் மஷாயை பிரபஞ்சம் என்றும் ஜீவன் மஷாயை அதில் இருக்கும் உயிரோட்டம் நிறைந்த வாழ்க்கை என்றும் மனித வாழ்க்கையின் ஆன்மீகப்பயணம்தான் ஆரோக்கிய நிகேதனத்தின் கதை என்றும் சொன்னால் அது சரியோ, தவறோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இது சரி இது தவறு என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு நாவலாசிரியனுக்கு எந்த அருகதையும் கிடையாது.

சரி, விஷயத்திற்கு வருவோம். சாதாரண வாசிப்பிலேயே நம்மால் இந்த நாவலின் அர்த்த செறிவை உணரமுடியும். அப்படி நமக்கு உணர்த்த ஒன்றுக்கும் மேற்பட்ட சரடுகள் அந்த நாவலில் உள்ளன. இந்த நாவலில் ஜீவன் மஷாயின் தனிவாழ்க்கை என்ற மையச்சரடில் அந்த கிராமத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கிறது. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையில், மஷாயின் ஆளுமையின் சலனங்கள் மூலம் அந்த சமூகத்தை சலனப்படுத்தி அதன் வழியாக அந்த கிராத்தை  உயிரோட்டம் நிறைந்த ஒன்றாக ஆக்க நாவலாசிரியரால் இயன்றிருக்கிறது. சலனமற்று இருக்கும் அந்த கிராமம் ’மாற்றம்’ என்ற கண்ணுக்குப்புலப்படாத சுழியில் ஆட்படுகிறது. அதுவரை அந்த கிராமத்தை பிணைத்திருந்த எல்லா கூறுகளும் ‘மாற்ற’த்தின் விசையில் தள்ளாடி நம் முன்னே தெறித்து விழும் ஒரு சிறந்த யதார்த்தவாத(Realistic) சித்திரம் இந்த  நாவலில் உள்ளது.

இந்த நாவலில் ’மருத்துவம்’ என்பது ஒரு கச்சாப்பொருள்தான். பலர் பிழையாக புரிந்துகொண்டது போல, மருத்துவம் என்பது இந்த நாவலின் மையமான பேசுபொருளோ கதைக்கட்டோ (Plot) அல்ல.  மருத்துவம் இந்த நாவலின் கச்சாப்பொருட்கள் என்பதால் மருத்துவம் சார்ந்த  நுண்தகவல்களை, சிகிச்சைமுறைகளை நாவலில் விளக்கத்தான் வேண்டும். நாவலில் மருத்துவம் சார்ந்த அறிவார்ந்த விஷயங்கள் நுட்பமானதாக அல்லது நுட்பமானது என்று வாசகனை நம்பவைக்கும் அளவுக்கோ இருக்க வேண்டும். நம் மொழியில் எழுதும் நாவலாசிரியர்கள் மருத்துவம் என்ற அறிவுத்துறையைப்பற்றி, அதன் சிகிச்சைமுறைகள் பற்றி விஷேஷமாக எதுவும் அறியாமலேயே எத்தனை மருத்துவர்களை கதாப்பாத்திரங்களாக ஆக்க முடிந்திருக்கிறத். ஆனால், தன் கலையை அறிந்த, தன்னைப்பற்றி தனக்கே கொஞ்சம் மதிப்பிருக்கும் நாவலாசிரியனுக்கு அது எளிமையான விஷயமில்லை. நான் முன்பே சொன்னதுபோல, இந்த நாவலில் மருத்துவம் பற்றிய நுண்மையான, அறிவார்ந்த விஷயங்கள் இருப்பதால் அதன் மையம் மருத்துவம் என்ற அறிவுத்துறை என்று நினைத்துக்கொள்வது பிழையான புரிதல். ஆரோக்கிய நிகேதனம் காட்டும் உலகம் என்பது நோயாளிகள், நோய், மருத்துவர்கள் நிறைந்த ஒன்றுதான். பிரதான கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் நோயாளிகள், வைத்தியர்கள், டாக்டர்கள் இவர்கள் தான். நோய்ப்படுக்கை, வைத்தியசாலை, ஆஸ்பத்திரி, மருந்துகடை போன்ற களங்களில்தான் நாவல் இயங்குகிறது. தன் கலையை நன்கு அறிந்த நாவலாசிரியருக்குத் தெரியும் அப்படித்தான் இயங்கமுடியும், வேறு வழிமுறை சாத்தியமில்லை என்று. ஆனால், மருத்துவம் என்ற கச்சாப்பொருளை தனித்தன்மை வாய்ந்தமுறையில் கையாண்டதால் அசாதாரணமான பலன் ஒன்றை நாவலாசிரியர் அடைந்திருக்கிறார். சமூக இயக்கம் என்ற கண்ணுக்குப்புலப்படாத ஒரு செயல்பாட்டை அவர் மருத்துவம் வழியாகத்தான் துலங்க வைத்திருக்கிறார். இந்த நாவலில் உள்ள பாரம்பரியமான வைத்தியமுறைக்கும் நவீனமருத்துவத்திற்குமான மோதல் முக்கியத்துவம் பெறுவது அது துலக்கிக்காட்டும் விஷயத்தை வைத்துதான்.

அழகியமணவாளன்

ஜீவன் மஷாய்க்கும் பிரத்யோத் டாக்டருக்கும் இடையில் உள்ள மோதல், இறுதியில் ஜீவன் மஷாய்க்கு கிடைக்கும் வெற்றி என்பதை ஆயுர்வேதத்திற்கும் அலோபதிக்குமான மோதலில் புனிதமான,  ரிஷிகளால் அளிக்கப்பட்ட ஆயுர்வேதத்திற்கு கிடைத்த வெற்றி என்று நினைத்துக்கொள்வது இந்த நாவலை எளிமைப்படுத்துவது. நாம் சாதாரண அர்த்தில் சொல்லும் ஒரு ஆயுர்வேத வைத்தியர் மட்டும் அல்ல ஜீவன் மஷாய். நாவலாசிரியர் அவரை எப்படி சித்தரிக்கிறார் என்று பாருங்கள்:

“ஜீவன் மஷாயின் நாடியை பிடித்துப் பார்த்து காலதூதனின் காலடியை உணரக்கூடிய சக்தி வாய்ந்தவர். இந்த சக்தி மூதாதையரே தொட்டு வழிவழியாக அக்குடும்பத்தவரிடையே இருந்துவருவதாகும். அவர்களெல்லாம் நாட்டு வைத்தியர்கள் (கவிராஜ்). இவர் முதன் முதலாக டாக்டரானார் (அதாவது ‘அலோபதி’ முறையில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்). சமயத்திற்கு ஏற்றாற்போல் இரு முறையிலும் சிகிச்சை செய்யும் ஆற்றல் பெற்றவர்.”

அலோபதி குறித்த ஜீவன் மஷாயின் பார்வை என்பது அதன் மேன்மையை போற்றும், வணங்கும் அளவில் தான் இருக்கிறது. அதை அந்த நாவலில் தெளிவாகவே காணமுடியும். அப்படி இருக்கும் ஒரு ஆளுமையை ஆயுர்வேத மருத்துவத்தின் குறியீடு என்று வாசிப்பது அபத்தம் அல்லது முட்டாள்தனம், மஷாய் பிரத்யோத்போஸிடம் பெறும் வெற்றி மஷாய்க்கு பிறப்பிலேயே உள்ள சாமர்த்தித்தால் இயல்பாகவே வந்துசேரும் வெற்றி அவ்வளவுதான். மஷாய்க்கு பிரத்யோத் போஸிற்கும் இடையிலுள்ள (ஒரு வசதிக்காக ஆயுர்வேதத்திற்கும் நவீன மருத்துவமுறைக்கும்) மோதல் என்பது ஸ்தம்பித்த பாரம்பரியத்திற்கும் அறிவியல் ரீதியான நவீன யுகத்திற்குமான மோதலாகத்தான் நாவல் காட்டுகிறது. மஷாய்க்கு எதிரான பிரத்யோத் போஸின் அறைகூவலை அந்த கிராமமே எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. அந்த கிராமத்திலிருக்கும் மனிதர்கள் அவர்களின் பழக்கங்கள், நம்பிக்கைகள் மேல் ‘Shock’ போல அந்த அறைகூவல் விழுகிறது. அதை ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் உணர்கிறார்கள். இரண்டு மருத்துவர்கள் மத்தியில் நடக்கும் போட்டியில் (அதை அப்படி சொல்லமுடியுமென்றால்) ஏதோ ஒருவகையில் அந்த கிராமத்திலிருக்கும் ஒவ்வொருவரும் பங்கேற்கிறார்கள். இந்த பின்னணியில், மஷாயின் ’ஆரோக்கிய நிகேதனம்’ சிதிலமடைந்து கிட்டத்தட்ட மஷாயின் குடும்பத்துடன் சேர்ந்து  முழுமுற்றான அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் சித்திரமும் புதிய புதிய திட்டங்களுடன் அரசு மருத்துவமனை வளர்ந்து கொண்டிருக்கும் சித்திரமும் இருக்கிறது. இந்த இரண்டு பின்னணிகளுக்கும் மேலே மஷாய்-பிரத்யோத் போஸ் இடையே உள்ள மோதலை அமைத்து, சமூக மாற்றத்தின்  ஒட்டுமொத்தமான பாதிப்பை தாராசங்கர் பானர்ஜி உண்டாக்கியிருக்கிறார். மாற்றம் என்பது ஒரே சமயம் காரணமும்(Cause) விளைவும்(Effect) ஆகும். மாற்றத்தின் மிகப் பிரதானமான ஃபாவம் என்பது ’சலனம்’தான். சலனத்தை நேரடியாக விளக்கிவிட முடியாது. மருத்துவம், சிகிச்சைமுறை பற்றிய விவரணைகள், விவாதங்கள் வழியாக அந்த சலனத்தை பிரதிபலித்து காட்ட நாவலாசிரியரால் முடிந்திருக்கிறது என்று சொல்லலாம். அப்படி சொல்வதுகூட அதிகம்தான். இந்த நாவல் வாழ்க்கைப்பாடுகளின் கடுமையான பிடியில் இருந்து தன்னை அறிதல் என்ற ஆன்மிகமான பாதையை நோக்கி விரியும் பெரிய ஆளுமையின் கதை. பற்று, வெறுப்புகள், ஆசை- நிராசைகள் போன்ற என்றென்றைக்குமான உணர்வுகளின் சுழியில் இருக்கும் சாமானியர்களின் மிகச்சாதாரணமான வாழ்க்கையை சாவதானமாக சித்தரிக்கும் பெரிய கதையும்கூட. கூடவே, நூற்றாண்டுகளாக காலத்தை உறைய வைத்திருக்கும் ஒரு இந்திய கிராமம் நவீனத்தின் அடியால் துடித்து இயங்க ஆரம்பிப்பதன் புரட்சிகரமான சித்திரம் என்றும் இந்த நாவலைச் சொல்லலாம். இந்த வாழ்க்கை, புரட்சிகரம் இதற்கெல்லாம் அப்பால், மகத்தான வேறொன்றை நோக்கி கவனத்தை திருப்பும் விசித்திரமான மறைபிரதிகள் கொண்ட கலைப்படைப்புதான் ஆரோக்கிய நிகேதனம்.

தமிழாக்கம் அழகிய மணவாளன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 17, 2021 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.