Jeyamohan's Blog, page 931

August 21, 2021

கி.ரா.உரையாடல்- கடிதங்கள்

அன்பின் ஜெ, வணக்கம்!

கி.ராவுடனான காணொளி சந்திப்பு, இரு நாட்களாக பல நினைவலைகளை உண்டு பண்ணியபடி இருக்கிறது. மார்பில் அரை ஈரத்தில், ஈரிழை துண்டு ஒன்றை போர்த்தியபடி சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் தாத்தாவிடம், அருகமைந்து பழங்கதைகளை கேட்டுக்கொண்டிருப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். பல வருடங்களுக்கு பிறகு, இந்நிகழ்வு எனக்கு அந்த மன நிறைவை கொடுத்தது. குறிப்பாக, கேள்வியின் தடத்திலிருந்து சற்றே விலகி, கேள்விக்கான பதிலைவிட அதீத சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சொல்லிமுடித்து “இப்ப கேள்வி என்ன…?” என்று எதிரில் அமர்ந்திருப்பவரை பார்த்து வாஞ்சையாய் கேட்கும் தருணம். “பேசிக்கிட்டே இருந்தா நல்லாத்தா இருக்கு, இல்ல… ஆனா நேரமாயிட்டுதே…. முடிச்சிக்க வேண்டியதுதான்…”

பாண்டிச்சேரியில் சென்ற வருட கடைசியில் நடைபெற்ற ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் கி.ரா சொன்னது. கி.ராவின் உடல்நிலை கருதி, நிகழ்வை விரைவில் முடித்துக் கொண்டாலும், இம்முறையும் அவர் அதையே எண்ணியிருப்பார்.. கி.ராவின் உரையாடலை வாய்பிளந்து கேட்ட ஒவ்வொருவரும் நல்லூழ் கொண்டவர்கள்…

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

***

அன்புள்ள ஜெ

கிராவுடனான உரையாடலை இப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். அன்று நானும் யுடியூபில் அந்த உரையாடலைப் பார்த்தேன். சொல்லப் போனால் நடுவே ஆபீஸ் வேலை பார்த்துக்கொண்டே பார்த்தேன். நினைத்திருந்தால் சூமில் வந்திருக்க முடியும். பரவாயில்லை என்று நினைத்தேன். இன்றைக்கு பார்க்கும்போது சட்டென்று ஒரு பெரிய ஏக்கம் வந்து கண்ணீர் மல்கிவிட்டேன். எவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வு. இன்னும் எத்தனை ஆண்டுகள் இது இங்கே இருக்கப்போகிறது. ஆனால் அப்போது தெரியாமல் போய்விட்டது. சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டேன். கிராவின் சிரிப்பும் சகஜமான பாவனைகளும் ஒரு கனவு போல தெரிந்தன. முப்பாட்டனுக்கு வணக்கம்

செல்வின் குமார்

கி.ரா உரையாடல் கி.ரா கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு கோபல்லபுரத்து மக்கள் – வாசிப்பனுபவம் கி.ரா – தெளிவின் அழகு கி.ரா.என்றொரு கீதாரி கி.ரா- ஞானபீடம்- கடிதங்கள் கி.ராவுக்கு இயல் கன்னி எனும் பொற்தளிர் கி ராவை வரையறுத்தல் கி.ராவுடன் ஒரு நாள் கி.ராவுக்கு ஞானபீடம் – இன்றைய தேவை சொல்லும் எழுத்தும் இந்த இவள் – கி. ரா- வாசிப்பனுபவம் கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி -2

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2021 11:31

அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் – ஒரு கடிதம்

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா

அன்பின் ஜெ,

நலம்தானே?

சென்ற வருடம் 2019 மே-யில் என்று நினைக்கிறேன். தளத்தில் பாலா எழுதிய காந்தியத் தொழில்முறை சார்ந்த அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அந்தக் கட்டுரையில் அரவிந்தின் வழிமறைகளாக பாலா குறிப்பிட்டவற்றுள் முதலிரண்டு கூறுகள்…

அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு வரை படித்த பெண்கள், பணியிலமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு, கண் சிகிச்சை முறைகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதனால் இரண்டு முக்கிய நன்மைகள் விளைந்தன. உள்ளூரில் படித்து வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடைத்தது. அர்விந்த் மருத்துவமனைக்கு, குறைந்த சம்பளத்தில் ஊழியர்கள் கிடைத்தனர்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும், தனித்துவமான வேலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டது.நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேல் கட்டுரையை படித்து முடித்தபின், இவ்வரிகள் மட்டும் என் நினைவுகளை பால்யத்திற்கு கிராமத்திற்கு கூட்டிச் சென்றன.

நான் எங்கள் கிராமமான ஓடைப்பட்டியில் ஊராட்சி ஒன்றியதுவக்கப் பள்ளியில்ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். பெரியப்பாதான் பள்ளியின் தலைமை ஆசிரியர். மிகவும் கண்டிப்பானவர். பள்ளி மேலப்பட்டி கிராம எல்லையில் ஓடுகள் வேய்ந்த ஒரு சிறிய கட்டிடத்தில் நடந்து கொண்டிருந்தது. ஐந்தாம் வகுப்பிற்கான அறையில் மட்டும்தான் உட்காருவதற்கு பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். மற்ற வகுப்பறைகளில் கீழேதான் உட்கார வேண்டும்.

ஒருநாள், மதிய உணவிற்கு முன்னதான தமிழ் வகுப்பில், கரும்பலகையில் ஒரு செய்யுளை எழுதிவிட்டு, ஆறாவதோ ஏழாவதோ வரிசையில் நடுவில் உட்கார்ந்திருந்த என்னை எழுந்து நிற்கச் சொல்லி “விஜயா, சத்தமா செய்யுளை வாசி” என்றார் பெரியப்பா. நான் எழுந்து நின்று கையைக் கட்டிக் கொண்டு கரும்பலகையைப் பார்த்தேன். எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை. கலங்கிப் போய் தெரிந்தன. கண்களை இடுக்கிக் கொண்டு சுருக்கி பார்த்தபோது ஏதோ கொஞ்சம் தெளிவானது போல் இருந்தது.

தட்டுத் தடுமாறி எழுத்துக் கூட்டி ஆரம்பித்து செய்யுளை முழுதும் வாசிக்க முடியாமல் பாதியில் நிறுத்தி விட்டு திருதிருவென்று முழித்தேன். எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லையென்று பெரியப்பாவிடம் சொல்லத் தெரியவில்லை. அல்லது சொல்வதற்கு பயமாக இருந்தது. பெரியப்பா நான் படிக்கத் திணறுவதைப் பார்த்து, என்னைப் பார்த்து முறைத்தார். அவர் வலது கை பெஞ்சின் மேலிருந்த பிரம்பை இறுகப் பிடித்திருந்தது.

அன்றிரவு இரவுணவின் போது வீட்டிற்கு வந்த பெரியப்பா, அப்பாவிடம், “போர்டுல எழுதியிருக்கறதப் படிக்க சிரமப்படறான். புக்க பார்த்து வாசிக்கச் சொன்னா கடகடன்னு வாசிக்கிறான். கண்ண டெஸ்ட் பண்ணா நல்லது. ஏதாவது கிட்டப்பார்வை/தூரப் பார்வை குறைபாடாயிருக்கும்” என்று சொல்லிவிட்டு மதுரை அரவிந்திற்கு கூட்டிக்கொண்டு போய் காட்டச் சொன்னார். சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்கு “ஆஹா… மதுரையா… ஜாலி” என்று தோன்றியது.

அப்போதெல்லாம் சிறிய பயணங்கள் கூட உற்சாகமும், திருவிழா மனநிலையும் தரக் கூடியவை. அம்மா சைக்கிள் கடை ராஜ் மாமாவின் பெண் ஜோதி மதுரை அரவிந்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருப்பதாக சொன்னார். ஜோதி அக்காவை எனக்குத் தெரியும். பத்தாவது வரை படித்துவிட்டு வீட்டிலிருந்தார். என்னைவிட ஆறு வயது மூத்தவர். காட்டு வேலைகளுக்குப் போய் வருவார். பெரியப்பா அம்மாவிடம் “ஜோதி மட்டும் லேதும்மா. இங்க மன ஊரு பிட்டலு நாலஞ்சு பேரு ஆடதான் பணி சேசரு” (ஜோதி மட்டும் இல்ல. இன்னும் நம்மூர் பொண்ணுங்க நாலஞ்சு பேர் அங்கதான் வேலை செய்றாங்க”) என்றார்.

அப்பா அடுத்த வாரம் வியாழக்கிழமை அரவிந்திற்கு கூட்டிப் போவதாகச் சொன்னார். நான் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். வகுப்புத் தோழிகள் லதாவிடமும், ஜீவாவிடமும் வியாழக்கிழமை மதுரை போவதைப் பற்றி குதூகலத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன்.

அந்த நாள் இன்னும் பசுமையாய் ஞாபகமிருக்கிறது. மருதங்குடியிலிருந்து திரும்பிய 1ம் நம்பர் பஸ்ஸில் ஓடைப்பட்டியில் ஏறி திருமங்கலத்தில் இறங்கினோம் நானும் அப்பாவும். திருமங்கலத்தில் அப்போது பஸ் ஸ்டாண்ட் எதிரிலிருந்த V.P.மதுரா பேக்கரி மிகவும் பிரபலம். அப்பா மதுராவிற்குச் சென்று தேங்காய் பன்னும், பக்கத்துக் கடையிலிருந்து இனிப்புச் சேவும் வாங்கி வந்தார். அக்காலத்தில் மதுரையில் இரண்டு பேருந்து நிலையங்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன். பெரியாரும், அண்ணாவும். அண்ணா பஸ் ஸ்டாண்ட்போகும் பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டோம்.

அரவிந்த் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகிலேயே இருந்தது. உள்ளே நுழைந்ததும், ஒரு கண் மருத்துவமனையின் அந்தச் சூழல் கிராமத்துச் சிறுவனான எனக்கு மெல்லிய ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் தந்தது. நான் அப்பாவின் கைபிடித்துக் கொண்டேன். ஒருவித அமைதியில் மனிதர்கள் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். வரவேற்பில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் சென்று அப்பா, ஜோதி அக்கா எங்கிருக்கிறார் என்று விசாரித்தார். அப்பெண் சிரித்துக்கொண்டே “மீரு ஓடைப்பட்டினா?” என்று கேட்டார். அப்பா ஆம் என்றதும், “உட்காருங்க. வரச் சொல்றேன்” என்றார்.

சேரில் உட்கார்ந்து மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பத்து நிமிடத்திற்கொரு முறை வெள்ளைச் சீருடை அணிந்த ஒரு அக்கா பெயர்கள் சொல்லி சிலரை அழைப்பதையும், அவர்கள் எழுந்து அந்த அக்காவின் பின்னால் போவதையும வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அழைக்கும் பெயர்களில் கிராமத்தில் பரிச்சயமான பெயர்களோடு தொடர்புபடுத்தி அவர்களா என்று திரும்பித் திரும்பி தேடிக் கொண்டிருந்தேன். கந்தசாமி, ராமக்கா, பவுனுத்தாயி…தாத்தா, பாட்டிகள்தான் அதிகமிருந்தனர். கைகளில் மஞ்சள் பைகள்.

ஜோதி அக்கா சிரித்துக்கொண்டே வந்தார். அப்பாவைப் பார்த்து “மாமா, ரண்ட (வாங்க)” என்று சொல்லிவிட்டு, என் தலையில் கைவைத்து “ஏமிரா விஜி? நஸ்ஸ உண்டாவா?” என்றார். கிராமத்தில் பார்த்த ஜோதி அக்காவிற்கும், இங்கு பார்க்கும் ஜோதி அக்காவிற்கும்தான் எத்தனை வித்தியாசம்! முகத்தில் ஒளி கூடியிருந்தது. பேச்சில் தயக்கங்கள் இல்லை. உடைகள் மாறியிருந்தன. அப்பா எனக்கு தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் சரியாகத் தெரிவதில்லை என்றார். “கிட்டப் பார்வை”ங்க உண்டச்சும். செக் சேத்தம்” என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு, என்னிடம் சிரித்துக்கொண்டே “ம். விஜி, கண்ணாடி வேசுகுண்டவா? (கண்ணாடி போட்டுக்குறியா?) என்றார்.

அன்று ஒவ்வொரு அறைக்கும் செக் செய்ய அழைத்துப் போவதிலிருந்து, உள்ளேயே கண்ணாடி ஃப்ரேம்கள் கடைக்கு அழைத்துப்போய் பொருத்தமான ஃப்ரேம் தேர்வு செய்து ஆர்டர் தரும் வரை எங்களுடன்தான் இருந்தார் ஜோதி அக்கா, அப்பாவுடன் கிராமத்துக் கதைகள் பேசிக் கொண்டே. உடன் தங்கியிருந்த தோழிகளை (வெவ்வேறு கிராமத்திலிருந்து வேலைக்கு தேர்வாகி அரவிந்திற்கு வந்தவர்கள்) எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். உள்ளிருக்கும் சிறிய கேண்டீனிற்கு எங்களை அழைத்துச் சென்று டீ வாங்கித் தந்தார்.

அரவிந்த் எத்தனை மாற்றியிருந்தது அக்காவை? அக்காவை மட்டுமா, அக்காவைப் போன்ற இன்னும் பல அக்காக்களை, அவர்களின் குடும்பங்களை!. டாக்டர் வெங்கிடசாமியை அவ்விரவில் மிகுந்த நன்றியுடன் நினைத்துக் கொண்டேன்.

வெங்கி

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2021 11:31

கர்ணனும் பீஷ்மரும்- கடிதம்

இனி நான் உறங்கட்டும்

ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் பி.கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘இனி நான் உறங்கலாமா’ நாவலை படித்தேன். அந்த நாவலில் என்னை கவர்ந்த ஒரு பகுதி கர்ணன் பீஷ்மரின் படுகளத்துக்குச் சென்று அவரைச் சந்திக்கும் இடம். உருக்கமான இடம் அது. பத்தாவது நாளோடு முடிந்த திசைதேர்வெள்ளம் கூட இப்படி ஒரு  நாடகத்தனமான நிகழ்வில் முடியும் என்று எதிர்பார்த்தேன். துண்டிகன் அவன் சடலம் எரிபட வரிசையில் காத்து நிற்கும் முடிவு வேறு தளத்தில் இருந்தது. காலத்தின் நீளத்தை போரின் அபத்தத்தை உணர்த்தும் விதமாய்.  டால்ஸ்டாய் நாவலில் வரக்கூடிய நிகழ்வு போல. நாடக உச்சங்கள் உன்னதங்கள் போருக்கான தர்க்கங்கள் சால்ஜாப்புகள் எல்லாம் பின்னால் சென்றுவிட்டது. போர் என்று வந்துவிட்டால் அர்த்தமில்லாத மரணமும், இயந்திரத்தனமான மறுகரை எய்தலும் தானா. விதி குறித்த பாதையில் சென்று தலை குப்பிற விழுவதைத்தவிர வேறு வழியில்லையா, போன்ற கேள்விகள் மட்டும் சோர்வுடன் எஞ்சியது.

வெண்முரசில் அற்புதமாக வந்திருக்கும் பாத்திரம் சிகண்டி. மற்ற மறுஆக்கங்களில் சின்ன பாத்திரமாகவே எழுதியிருப்பார்கள். அம்பையின் மறுவடிவமாக. இங்கு அம்பைக்கும் பீஷ்மருக்கும் மகன் என்ற உருவகம் அந்த பாத்திரத்துக்கு அசாத்திய விரிவை அளிக்கிறது. இறுதியில் கங்கையும் அம்பையும் பீஷ்மரை தாயும் மருமகளுமாகத் தாங்கிக் காவல் நிற்க சிகண்டி மட்டும் தன்னந்தனியாக சுடுகாட்டில் நிற்கும் இடம் நிலைகுலைத்துவிட்டது. இத்தனை நாள் வஞ்சமும் இவ்வளவுதானா என்று.

வெண்முரசு தளத்தில் ‘சிகண்டி’, ‘பீஷ்மர்’ என்று பாத்திரப்பெயர்களை தேடினால் அவர்கள் தோன்றக்கூடிய அத்தியாயங்கள் வரிசையாக கிடைக்கின்றன. அவற்றை மட்டும் சேர்த்து படித்தால் ஒரு தனி நாவலாகவே உருவாகி வருகிறது. நேற்று அப்படி பீஷ்மரின் கதையை மட்டும் முதற்கனல் முதல் படித்துக்கொண்டு வந்தேன். பீஷ்மர் எவ்வளவு பெரிய பாத்திரமாக பொருள்கொள்கிறார் என்று நினைத்துப்பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. இந்த புதினத்தை எங்கள் மொழியில் எழுதிக்கொண்டிருப்பதற்காக மிக்க நன்றி சார்.

அன்புடன்

பாலகுமார்

அன்புள்ள பாலகுமார்

ஒவ்வொரு ஆசிரியரும் தொன்மங்களை மறுபுனைவாக்கம் செய்யும்போது அவர்களுடைய வாழ்க்கைத் தரிசனத்துக்கு ஏற்ப அவை மறுவடிவம் கொள்கின்றன. அவ்வகையில் பார்த்தால் பி.கே.பாலகிருஷ்ணனின் நாவல் ஓர் இருத்தலியல் நாவல். வெண்முரசில் அப்படி ஒரு ஐரோப்பிய நோக்கு இல்லை. அது ஒட்டுமொத்தப் பார்வைக்காக முயல்கிறது.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2021 11:30

August 20, 2021

மூன்றாவது தனிமை

வயதடைதல் வனம்புகுதல் நான்கு வேடங்கள்

அன்பு ஜெ, வணக்கம்.

எனக்கு 60 வயதாகிறது. 33 வருட குடும்பவாழ்க்கை. தற்பொழுது சில காரணங்களால் அடிக்கடி தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

என் மகள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். ஒன்றரை வயதில் பேத்தி இருக்கிறாள். மகளையும், பேத்தியையும் கவனித்துக்கொள்ள,  என் மனைவி மாதத்தின் பல நாட்கள் மகள் வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை. (எனக்கு பெண் மட்டுமே, மகன் இல்லை) இதனால் நான் மட்டும் தனியாக வீட்டில் இருக்க வேண்டி உள்ளது. ஓரளவு சமைப்பேன். வீட்டை பராமரிப்பதிலும் எந்த சிரமும் இல்லை.

புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது, prime video, zee5, hotstar போன்ற OTT தளங்களுக்கு subscribe செய்து சீரியல்கள் – திரைப்படங்கள் பார்ப்பது, ஒவ்வொரு நாளும் உங்கள் தளத்தை படிப்பது, மாலை நேரங்களில் ஒரு இரண்டு மணி நேரம் வெளியே செல்வது, இதுதான் தற்போது என் தினசரி நடப்புகள். (உத்தியோக பூர்வமான பணி இல்லாததால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வேலை இல்லை) சொந்த வீடு என்பதால், குடும்பச் செலவிற்கும் தற்போதுவரை எந்த சிரமமும் இல்லை.

எனினும், ஒரு வெறுமை அவ்வப்போது கவ்வுகிறது. சமூகபணிகள் மற்றும் நண்பர்களுடனான வெற்று அரட்டையிலும் மனம் கொள்ளவில்லை. உளச்சோர்வில்லாமல், விதி என்னை கைவிட்டு விட்டதோ என்கிற சுயபரிதாபமும் இல்லாமல், வாழ்வின் இந்த பிற்பகுதி தனிமையை எப்படி எதிர்கொள்வது என்று புரியவில்லை. இந்நிலையில் உங்களின் ஆலோசனையையும், வழிகாட்டலையும் எதிர்நோக்குகிறேன்.

அன்புடன்,

“ஆர்”

***

அன்புள்ள ஆர்,

ஒவ்வொரு அகவையிலும் அதற்கான தனிமை உண்டு. ஒவ்வொரு தனிமையும் ஒவ்வொரு வகை. தனிமை மானுடனின் இயல்பான நிலை எனப் புரிந்துகொண்டால் இந்த வினாவின் அடிப்படை தெளிவாகிவிடும்.

நாம் நம் வாழ்க்கையை வைத்து யோசித்துப் பார்ப்போம். நமக்கு தனிமை இல்லாமலிருப்பது சிறுவர்களாக இருக்கும்போது மட்டும்தான். நோய், குடும்பச்சிக்கல்கள் போன்ற காரணங்களால் அப்போதும் தனிமையை உணரும் சிறுவர்களும் உண்டு. அவர்கள் விதிவிலக்கானவர்கள். நான் பொதுமையை பற்றி மட்டுமே பேசுகிறேன்.

இளைஞர்களாக உணரும்போது நாம் ஓர் ஆழ்ந்த தனிமையை உணர்கிறோம். நண்பர்கள் சூழ இருக்கும்போதும் அந்தத் தனிமை கூடவே இருக்கிறது. காலத்தின் முன், சமூகத்தின் முன் தன்னந்தனியாக நிற்கிறோம். ஆகவே நாம் எப்போதுமே ‘நான், எனது’ என்றே யோசித்துக் கொண்டிருக்கிறோம். உள்ளம் பகற்கனவுகளால் நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் காலம் அது.

எண்ணிப்பாருங்கள், எத்தனை பகற்கனவுகள். உள்ளம் கொள்ளாத கற்பனைகள். அப்பகற்கனவுகளை பெருக்கிக்கொள்ளவே நாம் புனைவிலக்கியம் வாசிக்க வருகிறோம். அதன் கதைநாயகர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அது அளிக்கும் வெவ்வேறு உலகங்களில் மானசீகமாக வாழ்கிறோம்.

அந்தப் பகற்கனவுகள் இருவகை. ஒன்று, காமம் மற்றும் உறவுகள் சார்ந்த களம். இன்னொன்று, இலட்சியவாதம் மற்றும் வாழ்க்கைச் சாதனைகள் பற்றிய களம். இரண்டும் மாறிமாறி நம்மை அலைக்கழிக்கின்றன. ஓர் இலட்சியத்துணைவி, இலட்சியக் குடும்பவாழ்க்கை, குறையாத காமமும் காதலும். இன்னொரு பக்கம் மாபெரும் இலட்சியவாழ்க்கை, தொழிலிலோ அரசியலிலோ வெற்றிகள், புகழ், செல்வம், உலகை ஆட்கொள்ளுதல். அப்படியே திளைத்துக் கொண்டிருக்கிறோம்.

அன்றிருக்கும் நம் தனிமையை முழுக்க அந்தப் பகற்கனவுகளைக் கொண்டு நிறைக்கிறோம். அந்தத்தனிமையை நாம் பகிர்ந்து கொள்வதில்லை. நம் பகற்கனவுகளை எவரும் அறிவதில்லை. அக்கனவுகளை தொடர்ந்து ஓடுவதில் பத்துப்பதினைந்து ஆண்டுகள் செல்கின்றன.

அதன்பின் நாற்பதை ஒட்டிய ஆண்டுகளில் மீண்டும் ஒரு தனிமை வந்தமைகிறது. முதலில், புறவுலகில் நாம் செல்லக்கூடுவது எதுவரை என நமக்கே தெரிகிறது. நமது திறனின் எல்லைகள் தெரிகின்றன. நம் சூழலின் வரையறைகளும் தெரிகின்றன. இவ்வளவுதான் என ஆகிவிடுகிறது. நாம் எந்த களத்தில் செயல்படுகிறோமோ அதில் திறனாளராக ஆகிவிட்டிருப்போம். கூடவே சலிப்பும் கொண்டிருப்போம்.

அதேபோல குடும்ப வாழ்க்கையில் காதல், காமம் என்பதன் மெய்யான அளவுகள் தெளிவாகியிருக்கும். அதில் கலந்திருந்த ‘ரொமாண்டிக்’ கற்பனைகள் கொஞ்சம் அகன்றிருக்கும். மண்ணில் நின்று பார்க்க ஆரம்பித்திருப்போம். காதல், காமம் என இருந்த குடும்ப வாழ்க்கை குழந்தைகள், பொறுப்பு என்று ஆகியிருக்கும்.

இந்த இரண்டாவது தனிமையில் நாம் எஞ்சிய முழு ஆற்றலையும் திரட்டி புதிய கற்பனைகளை உருவாக்க ஆரம்பிப்போம். சிலர் வேலையை விட்டு சுயதொழில் ஆரம்பிக்கிறார்கள். தங்கள் அகத்தே திகழ்ந்த கனவை தேடிச்செல்ல சிலர் முயல்கிறார்கள். ஆகவே இயற்கை வேளாண்மை, கிராமத்திற்குத் திரும்புதல், இசைப்பயிற்சி என எதையாவது தொடங்குகிறார்கள்.

அதாவது இளைஞனாக இருந்தபோது எப்படி கனவுகளுடன் வாழ்க்கையை தொடங்கினோமோ அதையே திரும்பவும் செய்ய விரும்புகிறோம். புதிய வாழ்க்கையை தொடங்க முயல்கிறோம். உண்மையில் கவனமாகச் செய்தால் இது நல்ல விஷயம்தான். அந்த அகவைக்குரிய தனிமையை இது இல்லாமலாக்கும். அத்தனிமையின் விளைவான சோர்வை அழித்து ஊக்கம் கொண்டவர்களாக ஆக்கும்.

ஆனால் நாம் அதுவரை அடைந்த அனைத்தையும் துறந்து செல்லக்கூடாது. நாம் உருவாக்கிக் கொண்ட சமூக, பொருளியல் அடித்தளத்தை இழந்து அபாயகரமாகச் செல்லக்கூடாது. நம்முடைய விழைவுகளை பிறர்மேல் சுமத்தலாகாது. அதன்பொருட்டு பிறர் விலைகொடுக்கும்படி ஆகக்கூடாது. அப்படி நிகழ்த்திக்கொள்ள முடியும் என்றால் அந்த புதிய முயற்சிகள் வாழ்க்கைக்கு முக்கியமானவையே.

அந்த இரண்டாவது கனவுப்பருவம், அல்லது இரண்டாவது மாற்றம் இல்லாதவர்கள் அத்தனிமையை என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். அன்றாடத்தில் சலிப்புறுகிறார்கள். துணை தேடுகிறார்கள். குடி உட்பட பல்வேறு சிக்கல்களில் சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.

மூன்றாவது தனிமை இப்போது நீங்கள் வந்தடைந்திருப்பது. இது வேலையில் இருந்து ஓய்வுபெற்றபின் உருவாவது. அப்போது உலகியல் கடமைகள் அனேகமாக முடிந்துவிட்டிருக்கின்றன. உலகியல் சவால்களிலும் ஆர்வம் இல்லாமலாகி விட்டிருக்கிறது. குடும்பம் என்னும் பொறுப்பு இல்லாமலாகி உறவுகள் சற்று சம்பிரதாயமானவையாக ஆகிவிட்டிருக்கின்றன. ஏனென்றால் அடுத்த தலைமுறை வாழும் உலகம் நாம் புரிந்துகொள்ள முடியாததாக, அயலானதாக உள்ளது. நாம் ஒதுங்கிவிடுகிறோம்.

மூன்றாவது தனிமை முன்பெல்லாம் அவ்வளவு பெரிதாக இருந்ததில்லை. ஏனென்றால் அன்று அது முதுமை. இன்று அது இன்னொரு இருபத்தைந்தாண்டுக்கால வாழ்வின் தொடக்கம். இலக்கு இல்லாமல், செயற்களம் இல்லாமல் இருப்பதன் சலிப்பு அந்த தனிமையை நிறைக்கிறது.

பலர் எதிர்மறை உணர்வுகளால் அந்தத் தனிமையை நிறைத்துக் கொள்வதை காண்கிறேன். அரசியல், மதவெறிச் செயல்பாடுகள், சாதிச்சங்க நடவடிக்கைகள் என சிலர் தீவிரமாகிறார்கள். சிலர் குடும்பச் சிக்கல்களில் ஈடுபட்டு தங்களை மூழ்கடித்துக் கொள்கிறார்கள்.

உண்மையில் எந்த நேர்நிலைச் செயல்பாடுகளைவிட இந்த எதிர்மறைச் செயல்பாடுகள் மிகத்தீவிரமாக உள்ளிழுத்துக் கொள்பவை. நாம் ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை. சொல்லுக்குச் சொல் எதிர்வினை வரும். செய்வதெல்லாம் எதிர்ச்செயலுக்கு ஆளாகும். ஆகவே நம்மை முழுக்க உள்ளேயே பிடித்து வைத்திருக்கும்.

எதிர்மறைச் செயல்பாட்டில்  நம்மிடமிருந்து நாமே அறியாத ஆற்றல் வெளியாகிறது. நாம் மிகுந்த ஆவேசத்துடன் செயல்படுகிறோம். காழ்ப்பைக் கக்குகிறோம். சலிக்காமல் வாதிடுகிறோம். தகவல்களை நினைவில் வைத்திருக்கிறோம். அவற்றைத் திரிக்கிறோம். கற்பனையை பெருக்கிக்கொண்டே செல்கிறோம். எதிரிகளையும் நண்பர்களையும் உருவாக்கிக் கொள்கிறோம். வெறுப்பும் கோபமும் நம் மூளையை உச்சகட்ட செயல்பாட்டில் வைத்திருக்கின்றன. அது மிகப்பெரிய போதை.

பொழுதுபோக்கு என்றால் எதிர்மறைச் செயல்பாடு போல் வேறில்லை. ஆனால் அது நம்மை உள்ளூர அமைதியற்றவர்களாக ஆக்குகிறது. கசப்பை நம்முள் நிறைக்கிறது. அது நம்மை நோயுற்றவர்களாக்குகிறது. சலிப்பை வெல்லத் துன்பத்தை தேடிக்கொள்வதுதான் அது.

நாம் என்ன கற்பனை செய்துகொள்கிறோம் என்றால் அந்த எதிர்மறைத் தன்மையை நாம் வெளிப்படுத்தும் களத்தில் மட்டும் எதிர்மறையாக இருக்கிறோம், அதற்கு வெளியே வந்து நாம் இயல்பாகவும் இனிதாகவும் இருக்கிறோம் என்று. அது உண்மை அல்ல. நீங்கள் முகநூலில் காழ்ப்பரசியலில் களமாடினீர்கள் என்றால் அதற்கு வெளியே அன்றாட வாழ்க்கையிலும் அதே காழ்ப்பியல்பு கொண்டவர்களாக மாறிவிட்டிருப்பீர்கள். இயல்பாகவே உங்கள் ஆளுமை அப்படி திரிபடைந்துவிட்டிருக்கும். உங்களை அறியாமலேயே. அன்றாட வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நுட்பமாக அந்த எதிர்மறைத்தன்மை வெளிப்படும்.

எதிர்மறைத்தன்மைக்கு உள்ள இயல்புகளில் ஒன்று அது நேர்நிலை மனப்பான்மை கொண்டவர்களை உங்களிடமிருந்து விலக்கிவிடும். எதிர்மறைப் பண்பு கொண்டவர்களை உங்களை நோக்கி ஈர்க்கும். உங்கள் வட்டமே நீங்கள் கொண்ட அதே காழ்ப்பையும் கசப்பையும் கொண்டவர்களால் ஆனதாக மாறிவிடும். நேர்நிலையான இனியவையே நிகழா உலகமாக ஆகிவிடும். எவரையாவது மட்டம்தட்டுவது, வசைபாடுவது ஆகியவை மட்டுமே இனிமையென உங்களால் உணரப்படும். அதை பங்கிடவே ஆளிருக்கும்.

ஆனால் உங்கள் ஆழம் தவித்துக் கொண்டிருக்கும். ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்யவில்லை என நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆகவே அந்த எதிர்மறைக் களத்தைவிட்டு விலகவும் நினைப்பீர்கள். அதற்காக அவ்வப்போது முயல்வீர்கள். ஆனால் எந்தப்போதையை விட்டும் எளிதில் விலகமுடியாது. ஏனென்றால் போதை என்பது நம்மை ஆட்கொண்டு நம் உடல், உள்ளம். சுற்றம் எல்லாவற்றையும் அதுவே வடிவமைத்திருக்கிறது. போதையை விட்டால் நாம் அனைத்தையும் விட்டுவிட வேண்டியிருக்கும்.    ஒரு போதையை விடுவதென்பது செத்து மீண்டும் பிறப்பதுதான். அது எளிதல்ல. போன சுருக்கிலேயே திரும்பி வந்துகொண்டே இருப்போம்.

மூன்றாவது தனிமையை எதிர்கொள்ள நாம் அதைப் புரிந்து கொள்ளவேண்டும். நாம் உலகியல் பொறுப்புகளையும் சவால்களையும் கடந்துவிட்டோம். உலகியலில் மெய்யாகவே நாம் ஆற்றவேண்டியது ஏதுமில்லை. பொய்யாக உலகியலை பாவனை செய்துகொள்ளலாம், ஆனால் அது ஏமாற்றத்தையே அளிக்கும். இங்கே நாம் நாடுவது எதை என நாமே அறிந்துகொள்ளவேண்டும்.

முதலில் ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். பலரும் எண்ணுவதுபோல கேளிக்கைகள், பொழுதுபோக்குகள் எவருக்கும் தனிமையை நிறைப்பதில்லை. அவை உண்மையில் தனிமையை வளர்க்கின்றன. நாளுக்கொரு சினிமா, சங்கீதம் ஆகியவை எந்தவகையிலும் போதுமானவை அல்ல.

நாம் வாழ்நாள் முழுக்க ஓய்வு, கேளிக்கைக்காக ஏங்கியிருப்போம். ஆகவே முதிய வயதில் முழுநேரமும் ஓய்வும் கேளிக்கையுமாக வாழவேண்டும் என்று கற்பனை செய்வோம். ஆனால் அதிகம்போனால் ஓராண்டு அவ்வண்ணம் ஈடுபட முடியும், அதன்பின் சலிப்பே எஞ்சும்.

ஏனென்றால் கேளிக்கைகளில் நாம் ‘பார்வையாளர்கள்’. எந்தவகையிலும் ‘பங்கேற்பாளர்கள்’ அல்ல. வெறும் பார்வையாளர்களாக இருப்பதில் செயலின்மை உள்ளது. மானுட உடலும் உள்ளமும் செயலுக்காக வடிவமைக்கப்பட்டவை. செயலின்மையில் சோர்வும் சலிப்பும் அடைபவை.

மற்றவற்றுடன் ஒப்பிட வாசிப்பு மேல். ஏனென்றால் அதில் நம் பங்கேற்பு இல்லாமல் இருக்க முடியாது. வாசிப்பை ஒட்டி எழுதவும் ஆரம்பித்தால் அது செயற்களமே. ஆனால் அது அனைவராலும் செய்யக்கூடுவது அல்ல. அதற்கு ஓர் எல்லையும் உள்ளது. அதற்குமேல் நாம் செயலாற்றக்கூடிய களங்கள் தேவை.

ஏன் நாம் செயல்படவேண்டும்? இரண்டு விஷயங்களை நாம் நாடுகிறோம். ஒன்று ஆணவ நிலைப்பேறு. நாம் இங்கிருக்கிறோம், இவ்வாறாக வெளிப்படுகிறோம் என நாம் நமக்கே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. விட்டுவிடுதலையாவது வரை ஆணவம் நிறைவடைந்தே ஆகவேண்டியிருக்கிறது. நம்மை பிறருக்கு தெரிவதும், அவர்கள் நம்மை மதிப்பதும் இன்றியமையாததாக உள்ளது. நாம் சிலவற்றைச் சிறப்புறச் செய்து கொண்டிருக்கிறோம் என்று நாமே உணரவும் வேண்டியிருக்கிறது.

இரண்டாவது, இந்த ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமான ஒரு நிறைவு. நம் வாழ்க்கையை நாம் தொகுத்துக் கொண்டே இருக்கிறோம். அதன் நோக்கமென்ன, அதன் நெறி என்ன என்று பார்க்கிறோம். நமக்கு நிறைவடையும்படி அது சென்று முடியவேண்டுமென நம் உள்ளம் எதிர்பார்க்கிறது.

சுருக்கமாக, அங்கீகாரம் மற்றும் ஆன்மநிறைவு இரண்டும் நம் மூன்றாவது தனிமையை நிரப்புவன. நமக்குத் தேவையாக இருப்பவை அவையே.

பழங்காலத்தில் இவை ஒவ்வொன்றையும் கணித்தே மூன்றாவது தனிமையை வெல்ல வானப்பிரஸ்தம் என்னும் வழிமுறையை உருவாக்கினர். உள்ளம் உலகியல் கடமைகளில் சலிப்புறும் காலம். அவற்றை முழுக்க விலக்கி தன் இருப்புக்கான அங்கீகாரம், தன் வாழ்க்கைக்கான நிறைவு ஆகியவற்றை மட்டும் செய்யும் வாழ்க்கையை தெரிவுசெய்வதுதான் அது. பழங்காலத்தில் அறச்செயல்களும் தவமும் அவ்வாறு அங்கீகாரம் ஆன்மநிறைவுக்கான வழிகளாகக் குறிப்பிடப்பட்டன.

இன்றும் அதே உளச்சூழல் உள்ளது. அறுபதை ஒட்டிய அகவைகளில் அது தேவையாகிறது. அப்போது உருவாகும் மூன்றாவது தனிமையை வெல்ல எவை நம்மை அடையாளம்கொள்ள, அகநிறைவுகொள்ளச் செய்பவை என்பதைப் பார்க்கவேண்டும். எவை நம்மை ஆன்மிகமாக முழுமை செய்பவை என்பதை பார்க்கவேண்டும்.

நான் பார்த்தவரை பொதுவான அறப்பணிகளில் பிறருடன் இணைந்து கூட்டாகச் செயல்படுபவர்கள் அந்த அகநிறைவை அடைகிறார்கள். இருத்தலின் நிறைவை. அடையாளம் கொள்ளுவதன் மகிழ்ச்சியை. நான் சாதிச்சங்கத்தில் ஈடுபடுவதையோ அறக்கட்டளைகளில் ஊடுருவுவதையோ சொல்லவில்லை. மெய்யான அறப்பணிகளைச் சொல்கிறேன். அப்படிப் பலரை நான் அறிவேன். அவரவர் இயல்புக்கும் திறனுக்கும் ஏற்ப அவை வேறுபடும்.

ஓர் உதாரணம் என்றால் நானறிந்த ஒருவர் ஓர் அறநிறுவனத்துடன் இணைந்து பழங்குடிப் பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உதவிசெய்யும் பணியைச் செய்கிறார். ஓய்வு பெற்றபின் தொடங்கி இப்போது இருபத்திரண்டு ஆண்டுகளாக அப்பணியைச் செய்கிறார். அவரை நிறைவும் கனிவும் கொள்ளச்செய்கிறது அப்பணி.

அத்துடன் ஆன்மிக நிறைவுக்கானவற்றையும் செய்தாகவேண்டும். அது பக்தியானாலும் சரி, தியானமானாலும் சரி. அவரவர் இயல்புப்படி. அதிலும் இணையுள்ளம் கொண்டவர்களுடன் சேர்ந்து புனித பயணங்கள் செய்வது, உழவாரப் பணிகள் செய்வது, முகாம்களுக்குச் செல்வது என கூட்டுச்செயல்பாடுகளே உதவுகின்றன.

தனியாக ஈடுபடலாமா? செய்யலாம். ஆனால் அச்செயல்பாடுகளில் விரைவிலேயே நாம் ஆர்வமிழப்போம். ஏனென்றால் நம் வாழ்க்கையின் ஒழுங்கை நம்மால் எளிதில் மாற்றிக்கொள்ள முடியாது. கூட்டாக ஈடுபட்டால் அந்த ஒழுக்கு நம்மையும் இழுத்துச் செல்லும். கூட்டாகச் செய்யத் தேவையில்லாதபடி நாம் நம்மில் நிறைவுற்றோமென்றால் தனியாகவும் செய்யலாம்.

மூன்றாவது தனிமையை  அவ்வண்ணம் வெல்லலாம். நான்காவது தனிமை? காலமும் வெளியும் நம்மைச் சூழ்ந்திருக்க நாம் கொள்ளும் முதல்முடிவான தனிமை? அது ஒவ்வொரு உயிருக்கும் உள்ளது. எல்லா உயிர்களும் தன்னந்தனிமையிலேயே உயிர்விடுகின்றன. மூன்றாவது தனிமையை கடந்தவர்களுக்கு நான்காவது தனிமை துயரமானது அல்ல, இனிய நிறைவு அது.

ஜெ

விடுதல் வானப்பிரஸ்தம் – கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2021 11:35

தெவிட்டாதவை

சின்னக்குழந்தைகளுக்கு இனிப்பு ஏன் தெவிட்டுவதில்லை? மருத்துவர்கள் சொல்லும் காரணம், அவர்களுக்கு தீராத கார்போஹைட்ரேட் தேவை இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஓடிக்கொண்டும் துள்ளிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களின் மூளை எப்போதும் அதிவிழிப்பு நிலையில் உள்ளது. அத்தனை கார்போஹைட்ரேட்டையும் எரிக்கும் அமிலம் அவர்களின் வயிற்றில் உள்ளது. இனிப்பு என்பது செறிவான மாவுச்சத்து. ஒவ்வொன்றும் செறிவாகத் தேவைப்படும் காலம் அது.

அந்த இனிமை பிறகெப்போதும் நம் நாவில் வந்தமைவதில்லை. அத்தனை இனிமை நமக்குத் தேவைப்படுவதில்லை. அதன்பிறகு நிகர் இனிமைகளை தேட ஆரம்பிக்கிறோம். கலைகளில், சொல்லில், உணர்வுகளில்…

பாதுஷாவும் சந்திரகலாவும்- அருண்மொழி நங்கை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2021 11:34

உலோகம் பற்றி…

உலோகம் வாங்க

ஒரு சமயம் ஜெயமோகன் பேசக்கூடிய காணொளிக் காட்சி ஒன்றைத் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அதில் ஈழத்தில் நடந்த போர் குறித்து அவர் பேசி இருந்த கருத்துக்களில் உடன்பாடு இல்லையெனினும் ஈழப்போரைப் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய நாவலை அதுவே வாசிக்கத் தூண்டியது. வாசிப்பின் முடிவில் தான் கொண்ட பார்வையை எந்த இடத்திலும் சரியானது என்று வாதிடவுமில்லை ஈழப்போர் தவறு என்று பேசவுமில்லை அதுவரையில் மகிழ்ச்சி.

உலோகம் பற்றி…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2021 11:31

விஷ்ணுபுரம் அமைப்பு- உதவிகள்

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்களின் வாசகன் சக்திவேல் எழுதுவது. நான் தங்களின் சிங்கப்பூர் வகுப்பில் பயனடைந்து இருக்கிறேன். தாங்கள் கருத்தில் கொள்ளுமளவுக்கு அறிவோ ஆற்றலோ அற்றவன். என் எதிர் கால கனவுகளில் ஒன்று தங்களோடு ஒரு நிழலாக, சாரதியாக, பயணங்களில் பல துணைகளில் ஒன்றாக, மென் நடைகளில் தூரத்து துணையாக, உறுத்தல் இல்லா அணுக்கனாக பயனுற்று பலனடைய விரும்புதல்.

சேலம் எனது சொந்த ஊராக இருப்பினும் பார்வதிபுரத்தில் ஒரு வீடு எடுத்து தங்களோட தொடர்ந்து வரும் கனவு இருப்பதனால் சிறிது அடையாளப் படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

தங்களுடைய பல சகர்கள் போல சிறு வயதில் காமிக்ஸ், வார பத்திரிகை, துப்பறியும் நாவல்கள், கல்லூரி காலங்களில் பாலகுமாரனில் மயங்கி தெளிந்து எஸ்.ரா வை தொட்டு சாருவின் தூ(ற்)றல்கள் வழியாகத் தங்களை அடைந்தேன்.

தங்கள் வலை தளத்தில் நான் படித்த முதல் கட்டுரை காந்தி பற்றி. அன்றிலிருந்து தங்களைத் தவிர எவரையும் படிக்க இயலவில்லை. 2012-ல் இருந்து தினமும் முன்னும் பின்னுமாக தங்கள் வலை தளத்தை பல முறை குடைந்தும் அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது.

எனக்கு சிறிது நியாபக மறதி உண்டு. பார்த்த சினிமா, படித்த விஷயங்கள் கொஞ்சமே நியாபகம் இருக்கும். அதுவே பலனாக தங்களின் கட்டுரை, சிறுகதைகளை அதே சுவையோடு பல முறை படித்து இருக்கிறேன்.

சில மாதங்களுக்கு ஒரு முறை ‘அறம்’ படித்தாலும் யானை டாக்டரும், நூறு நாற்காலியும் கண்ணீர் வராமல் முடிந்ததில்லை. சோற்றுக் கணக்கும், ஓலைச் சிலுவையும் என்னை எப்போதும் நெகிழ வைப்பவை.

வெண்முரசு முதல் நாளில் இருந்து வாசகன். சில புத்தகங்களை வாங்கி இருக்கிறேன். எதிர் காலத்தில் அழகான ஓவியங்களோடு வெண்முரசு  மறுசிறப்பு பதிப்புகளுக்காக காத்திருக்கிறேன்.

சிறு வயதில் பார்த்த கர்ணன் பட பாதிப்பு காரணமாக கிருஷ்ணன் ஐ அறவே பிடிக்காது, வீட்டில் இருந்த பெருமாள் படத்தை கிணற்றில் போட்டு வாங்கிய அடி கர்ணனுக்கான அன்பாய் இனித்தது. தங்களின் வெண்முரசால் கிருஷ்ண அர்ஜுனர்களை நெருக்கமாய் விரும்ப முடிகிறது. எனினும் கர்ணன் வரும் இடங்கள் கொஞ்சம் என வருத்தமே. களம் சிறுகதையை எண்ணிக்கை இன்றி திரும்ப படித்திருக்கிறேன்.

விஷ்ணுபுரம் இரு முறை முயன்றும் என்னை காக்க வைத்து கொண்டிருக்கிறது. தவிர பிற கதைகள், குறு, சிறு கதைகள் மேலாக தங்களின் கட்டுரைகள், கருத்துக்கள் படித்து இன்புற்றுள்ளேன்.

காந்தி யை எடுத்து வைக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பெரியார் பற்றிய தங்கள் கருத்தில் முழுதாக என்னால் ஒத்து போக முடியவில்லை. காந்தி பெரிய அளவிலும், பெரியார், காமராஜர் சமூக அளவிலும் இன்றைய  எனது நிலைக்கு காரணம் என்றே உணர்கிறேன்.

தங்களுடைய ஆற்றலுக்கும் தமிழ் சமூகத்திற்கான பங்களிப்பிற்கும் என்னளவில் எனது சிந்தனை மேம்பாட்டுக்கும் எந்த அளவினான தொகையும் ஈடு செய்யவே முடியாது. அதிலும் தொகை விஷ்ணுபுர குழுமத்திற்க்காக. மிகக் குறைவான பணம் எனினும் பொறுத்தருள்க.

நீண்ட நாட்களாக பல நூறு முறை மனதளவில் தங்களுக்கு எழுதி அழித்தது, இன்று கொட்டி விட்டது. தங்களின்  பல லட்சம் வாசகர்கள் எழுதிய, எழுத போகிற விசயங்கள் தான், எதுவும் புதிதில்லை. எனது போதாமைதான். பொறுத்தருள்க

நன்றியுடன்,

சக்திவேல்

சிங்கப்பூர்

***

அன்புள்ள சக்தி

விஷ்ணுபுரம் அமைப்பு இப்போதுதான் ஓர் அறக்கட்டளையாக ஆகியிருக்கிறது. தேவைக்கு மட்டுமே நிதி பெற்றுக்கொள்வது என உறுதியாக இருக்கிறோம். ஆகவே தேவையானபோது அறிவிக்கிறோம். உங்கள் உதவிகள் எப்போதுமே தேவையாகும்.

அனைவரும் எப்போதும் சந்திக்கக்கூடிய ஓர் இடத்தில் தங்கவேண்டுமென விழைகிறேன். பார்ப்போம்

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2021 11:31

கனவுகள், கடிதம்

அன்புள்ள ஜே

தேங்காய் எண்ணை -கனவு- கடிதம் இந்த கடிதத்திற்கு அளித்த பதிலில் “கனவுகளின் ஆழம் மானுடரை மீறியது. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உறையும் தனி மூளையின் எல்லைகளுக்கு அப்பால் நின்றிருப்பது” என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளது உண்மை என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்தவன். ஆனால் நான் அந்த அனுபவத்தை எனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்ன போது எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இப்போது எதையும் சொல்வதில்லை.

எனது குல தெய்வங்கள் நீலியும், மாடசாமியும். நான் அவர்களின் குருட்டு பக்தன், முரட்டு பக்தன். கண்மூடித்தனமாக பக்தி. என்னளவில் அது சரி என்றே கொள்கிறேன். ஏனெனில் என் பக்தியினால் நான் அடைந்தவை பல.

நான் எனது 25 வயதில் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றேன். சென்ற ஆறு மாதத்தில் பாஸ்போட் தொலைந்து, அரபி மீண்டும் பாஸ்போர்ட் எடுப்பதற்காக இரண்டு ஆவணங்களை மட்டுமே தந்து இனி நீயே பார்த்துக் கொள் என்று கைவிட்டுவிட்டார். சவுதி அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின்படி அனைவரும் மூன்று மாதங்களுக்குள் தனது விசா பிரச்சினைகளை சரி செய்து கொண்டு எதாவது ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும். இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். நான் ரியாத் சென்று எனது நண்பரின் நண்பர் அறையில் தங்கி இரண்டு மாதமாக அலைந்து மற்ற ஆவணங்களை தயார் செய்தேன். அந்த நேரத்தில் எல்லா வெளிநாட்டினரும் தூதரகத்தில் முட்டி மோதியதால் இந்த தாமதம். அரபி முயன்றிருந்தால் எளிதாக முடிந்திருக்கும். புதிதாக சென்ற நாடு, அறியாத மொழி போன்றவற்றால் மிகவும் சிரமப்பட்டு எல்லாவற்றையும் தயார் செய்தேன்.

எல்லாம் தயார் இனி விண்ணப்பிக்க வேண்டியது தான். ஆனால் விண்ணப்பிக்கவும், நான் திரும்பி செல்லவும் சேர்த்து இரண்டாயிரம் ரியால்கள் தேவை. கையில் இருப்பதோ ஆயிரம் மட்டுமே. ஏற்கனவே, இரண்டு மாதமாக வேலைக்குச் செல்லாமல் நண்பர்களிடம் கடன் வாங்கியிருந்தேன். ரியாத்தில் எவரும் தர வாய்ப்பில்லை. முயற்சி செய்தும் பலனில்லை. மீீண்டும் எனது வேலை இடத்திற்கு சென்று ஒரு மாதம் வேலை செய்து ஊதியத்தை வாங்கி விண்ணப்பிக்கலாம். ஆனால் அரசின் கெடு முடிந்துவிடும். இரண்டு நாள் கழித்து விண்ணப்பிக்க வேண்டும், என்ன செய்வது என்றே தெரியவில்லை. தெய்வமே எதாவது வழி காட்டு என்று எண்ணிக் கொண்டு தூங்கினேன். கனவு. கனவில் குல தெய்வம் கோவிலில் நிற்கிறேன். பெரியப்பா மீது தான் சாமி வரும். அவர் எனக்கு திருநீறு அள்ளி தந்தார். அதை வாங்கிக் கொண்ட நான் திரும்பி செல்கிறேன். சாலையில் ஒரு கார் வந்து என்னருகில் நின்றது. கார் கதவை திறந்து உள்ளிருந்து ஒருவர் என்னிடம் சாப்பிட்டாயா என்றார், நான் இல்லை என்றதும் ஆயிரம் ரூபாயைை என்னிடம் நீட்டி சாப்பிடு என்று கூறி சென்று விட்டார். விழித்துக் கொண்டேன் ஏதோ கனவ கண்டோமே என்று கனவை நினைவில் மீட்டெடுக்க முயற்சித்தேன்.

முழு கனவும் நினைவில் இருந்தது, ஆனால் இதற்கு என்ன அர்த்தம் என்று மட்டும் புரியாமல் யோசித்து அப்படியே மீண்டும் தூங்கி விட்டேன். இதைக் கண்டு இரண்டாம் நாள் காலை, அதாவது விண்ணப்பிக்க உத்தேசித்திருந்த நாள் காலை கேட்ட இடங்களில் எங்கும் காசு கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டால் கையில் இருக்கும் பணம் மேலும் செலவாகும் என்று எண்ணி ஒரு சிறிய பழச்சாறு குடிக்க கடைக்கு சென்றேன். ஐநூறாக இரண்டு நோட்டுகளே என்னிடம் இருந்தது. கடையில் சென்றதும் முதலில் சில்லரை இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றதும் என்ன செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு கார் வந்து நின்றது. பெரும் செல்வந்தர் என்பதை அந்த காரும் அவருடைய தோற்றமும் வெளிப்படையாக காட்டியது. கடைக்காரர் அவரிடம் சில்லறை உள்ளதா என்று கேட்க, அவர் ஆம் என்றதும் என்னிடம் கைகாட்டினார். நான் ஐநூறை கொடுத்தேன். அவரோ ஐநூறுக்கு போதுமா இன்னும் வேண்டுமா என்று ஒரு கட்டு நோட்டை வெளியே எடுத்தார். நான் எதற்க்கும் வாங்கி வைப்போம் என்று ஆயிரத்தையும் கொடுத்து விட்டு சென்று பழச்சாறு எடுத்து வந்தேன். அவர் என்னிடம் நூறாக நோட்டுகளை நீட்டினார்.

நான் இவ்வளவு பெரிய பணக்காரரா ஏமாற்றப் போகிறார் என்று நினைத்து பணத்தை எண்ணாமல் வாங்கி பர்ஸில் வைத்து, பழச்சாறுக்கு பணம் அளித்து திரும்பினேன். அறைக்கு வந்து பர்ஸை எடு‌த்து வெளியே வைத்தேன். இரண்டாக மடங்காமல் விரிந்தது. மீண்டும் மடக்கினேன், விரிந்தது. என்ன இது பத்து நோட்டுகள் தானே பின் ஏன் என்று நோட்டுகளை நேராக்க முயற்சித்தபோதே கவனிதேன், பத்தை விட அதிகமாக இருப்பதை. எடுத்து எண்ணிப் பார்த்தேன் நான் செலவாக்கியது எல்லாமாக சேர்த்து இரண்டாயிரம் வந்தது. பேச்சடங்கி, மூச்சடங்கி கிட்டத்தட்ட அழும் நிலையில் உணர்ச்சி பெருக்கில் அமர்ந்திருந்தேன். அவர் ஆயிரத்திற்கு, இரண்டாயிரம் சில்லறை தந்து சென்றிருக்கிறார். அங்கு வைத்து எண்ணிப்பார்க்க தோன்றாதது நல்லது என்று எண்ணிக் கொண்டேன். எண்ணியிருந்தாலும், அவர் கவனிக்காத பட்சத்தில் திருப்பி கொடுத்திருப்பேனா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கையறு நிலை. இரண்டு நாள் முன்பு கண்ட கனவின் பொருளென்ன என்று அப்போது உணர்ந்தேன்.

அடுத்து, நான் சவுதி வந்து மூன்று வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியா திரும்ப விடுமுறை கேட்டு இரண்டு முறை முயன்றும் விடுப்பு தரவில்லை. ஆளில்லை, நிறைய வேலைகள் என்று ஏதேதோ காரணங்கள் பதிலாக வந்தது. மற்றவர்கள் அனைவரும் ஒரு முறை வந்து திரும்பி விட்டனர். நான் இரண்டாவது முறை முயற்சித்து இயலாமல் அன்று வழக்கிட்டு வந்தேன். இரவு தூக்கத்தில் கனவு. எங்கோ பாறைகள் வெடி வைத்து தகர்க்கும் இடத்தில் சரியாக வெடிக்கும் நேரத்தில் சிக்கி, பாறைகள் வெடித்து சிதற நான் தப்பி ஓடிக் கொண்டிருந்தேன். என்னுடன் வந்தவர்களுக்கு பெரும்பாலும் காயம். ஆனால் நான் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் தப்பி விட்டேன். இரவாகி விட்டது தொடர்ந்து ஓடுகிறேன், வழியில் ஒரு சுடலைமாடன் கோவில் “தலைவரே காப்பாத்தும்” என்று மனதில் வேண்டிக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறேன். வழியில் ஒரு காடு குறிக்கிடுகிறது.

காட்டின் எல்லைக்கு இப்பால் இடப்பக்கம் ஒரு வீடு. அதன் அருகில் சென்று நின்று, எப்படி இந்த இரவில் தனியாக காட்டைக் கடப்பது என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அந்த வீட்டின் கதவை திறந்து ஒரு ஆள் வருகிறார். மானுடக் கற்பனையில் மாடசாமிக்கி என்ன உருவமோ அதே மின்னும் கருமையான உடல் கொண்ட உயரமான ஆள். ஆனால் முகம் தெரியவில்லை, பட்டு ஜரிகையுடன், சிறு மணிகள் கோர்க்கப்பட்ட அரைக்கால் சட்டை மட்டும் அணிந்திருந்தார். எனக்கு கனவுக்குள்ளேயே புரிகிறது வருவது தெய்வம் என்று “தலைவர் நமக்கு தொணைக்கி வாறாரு” என்று மனதில் நினைத்துக் கொண்டேன். ஆனால் அவர் அருகில் வந்ததும் கடவுள் என்று தெரிந்தும் நான் பரிகாசம் செய்கிறேன். “எங்க போறீீரு, நீரு ஒண்ணும் வராண்டாம், எனக்கு போவ தெரியும்” என்றேன். உடனே அவர் “செரி அப்ப நான் போறேன்” என்று திரும்பினார். உடனே நான் சுதாரித்துக் கொண்டு “ஓய் நான் சும்மா இல்லா சொன்னேன், வாரும்” என்றேன். உடனே அவர் எனக்கு முன்னால் சற்று தூரத்தில் செல்ல நான் பின்னால் சென்றேன். ஒரு இடத்தில் வந்ததும் அவர் வலப்புறம் இருந்த பனைமரத்தடியில் போய் மறைத்து நின்றார்.

நான் மரத்திற்கு அப்பால் எட்டிப் பார்த்தேன். அது காட்டின் எல்லை, அப்பால் வீடுகள் தெரிந்தன. நான் அந்த பனைமரத்தை கடக்கும் போது திரும்பிப் பார்க்காமலேயேே “செரி, செரி சீீீீக்கிரம் வந்து சேரும்” என்று கூறி கடந்து சென்றேன். வழியில் ஒரு வெண்ணிற நாய் குறைத்துக் கொண்டு நின்றது. அதைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன் யார் என்று. அருகில் சென்றதும் அது என்னுடன் வந்தது, சென்று கொண்டிருக்கயில் மனதில் “கடவுளே எப்பிடியாவது லீவு வாங்கி தந்துரும்” என்று வேண்டுதல். அப்படி நினைக்கயிலேயே ஒரு கிரிக்கெட் மைதானம், அங்கிருந்து பந்து ஒன்று என்னை நோக்கி வருகிறது, பிடிக்காமல் நழுவ விட்டேன், இரண்டாவது முறையும் வருகிறது நழுவ விட்டேன், மூன்றாவது முறை கீழே விழுந்து நெஞ்சோடு சேர்த்து பிடித்துக் கொண்டேன். பின் நான் செல்ல வேண்டிய இடம் வந்ததும், அந்த வீட்டின் திண்ணையில் அமர்ந்தேன் கையில் சாம்சங் நிறுவ tab ஒன்று இருந்தது. அந்த நாய் அருகே வந்து என் கழுத்தில் நக்கியது. நான் அதை துடைப்பதற்காக கையை கழுத்தில் வைத்தேன்.

விழித்துக் கொண்டேன், எனது இடக்கை கழுத்தில் இருந்தது. அந்த அளவுக்கு உண்மையாகவே ஒரு நாய் நக்கிய உணர்வு. கனவின் அர்த்தம் கிட்டத்தட்ட முழுமையாக புரிந்தது, அடுத்தமுறை கொஞ்சம் கடினமானாலும் ஊருக்கு செல்வது உறுதி என்று. ஆனால் அந்த Tab எதைக் குறிக்கிறது என்று மட்டுமே புரியவில்லை. ஏனெனில் எனக்கு அதுவரை tab வாங்கும் எண்ணமில்லை, அதற்கு பின்பும் இல்லை. பின்னர் மூன்று மாதம் கழித்து மீண்டும் விடுமுறை கேட்டு, அப்போதும் மறுக்க நான் வேலைக்குச் செல்வதை நிறுத்தி அறையிலேயே இருந்து பிரச்சினை ஆகி, உடன் வேலை செய்தவர்கள் எல்லாம் சிபாரிசு செய்து ஒருவழியாக விடுப்பு கிடைத்தது. நான் திரும்பி வர மாட்டேன் என்பது தெரிந்ததால், எனது விமான பயணத்தின் முந்தைய நாள் இரவு, உடன் வேலை செய்யும் நண்பர்கள் எல்லாம் இணைந்து எனக்கு சாம்சங் நிறுவன Tab – ஐ நினைவு பரிசாக அளித்தனர். மீண்டும் கனவில் கண்டது யதார்த்த வாழ்வில் நடந்த போது வார்த்தைகள் முட்டி, உணர்ச்சிப் பெருக்கு.

இதுபோன்று கிட்டத்தட்ட இருபது கனவுகளையாவது கூற முடியும். சமீபத்தில் நடக்கவிருக்கும் என் திருமணத்துடன் தொடர்புடைய ஒன்றை கனவில் கண்டேன் அது யதார்த்தத்தில் தற்போது நடந்தாயிற்று. எல்லாவற்றையும் சொல்ல முடியாது, சொல்லி தீராது. மேலும் நான் தற்புகழ்ச்சி பேசுவது போல இருக்குமோ, என்ற எண்ணத்தால் நிறுத்திக் கொள்கிறேன். பொதுவாக நான் தினமும் காணும் மற்ற கனவுகள் எவையும் என் நினைவில் நிற்பதில்லை. ஆனால் எனது குல தெய்வம் கோவிலை கனவில் கண்டு அதன் தொடர்ச்சியாக நான் காணும் கனவுகள் முழுமையாக தொடக்கம் முதல் இறுதிவரை நினைவில் இருக்கும். மேலும் இந்த கனவுகளில் நடக்கப்போவவை அப்படியே நேரடியாக வராது. குறிப்புகளாக, படிமங்களாகவே இருக்கும். நாம் அதை நம்முடைய வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி அர்த்தப்படுத்திக் ஊகித்துக் கொள்ள வேண்டியது தான். என்னுடைய வெற்றிகளை மட்டுமல்ல, தோல்விகளையும் கண்டிருக்கிறேன். நடக்கப்போவது இதுவே, ஆகவே ஏற்றுக்கொள் எனும் அர்த்தத்தில்.

பின்னர் ஒரு கட்டத்தில் நாம் எதற்காக கடவுளிடம் வருந்தி, வேண்டிக் கொள்ள வேண்டும். தெய்வம் எல்லாவற்றுக்கும் துணையாக உடனிருக்கும் போது, எதற்காக இந்த வேண்டுதல், தெய்வம் அறியாததா எனும் நிலையை அடைந்திருந்த போது ஜெயமோகனை வாசிக்கத் தொடங்கி, அவர் சொற்களால் பகவத் கீதையை வாசிக்க நேர்ந்தது. அதில் குறிப்பிட்டுள்ள வேண்டுதல் இல்லா இறைபக்தியே மெய் எனும் வரிகள் அதை முயற்சித்து பார்க்க தூண்டியது. நேராக பத்மநாபசுவாமி கோவிலுக்கு சென்றேன். வேண்டுதல் இல்லாமல் தொழ முயற்சித்தேன், பெரும் வெறுமையே எஞ்சியது. ஒரு புனித தலத்தில் நிற்கிறோம், இறைவன் முன் நிற்கிறோம் என்ற எண்ணமே இல்லை. ஏதோ வெறுமனே கிழக்கு கோட்டை பேரு‌ந்து நிலையத்தில் நிற்பது போன்ற வெறுமை.

மீண்டும் வேண்டுதலுடன் தொழுதேன், உடனே மனம் பயபக்தியுடன் ஒரே புள்ளியில் குவிந்தது. அப்போது ஒன்று புரிந்தது நாம் மனதை இவ்வளவு காலமும் அவ்வாறு பழக்கி வைத்திருக்கிறோம், எனவே ஏதாவது வேண்டுதலுடன் தொழுதாலே, அதை கடவுள் நடத்தித் தர வேண்டும் என்பதால் அவர் மீது பயமும், பக்தியும் வருகிறது, இல்லாவிடில் வெறுமையே என்று. அந்த வெறுமை, வெறுமை எனும் சொல் எனக்குள் ஓடியபடி இருக்க, சட்டென்று மின்னல் கீற்று போல ‘ ஜெயமோகன், நாராயண குரு பற்றிய கட்டுரைல “ஓரோ சொல்லெண்ணி அகற்றி, எஞ்சி நிற்கும் வெறுமையே பரம்” என்று நாராயணாய குரு சொன்னதா எழுதியிருந்தாரே’ என்பது நினைவிற்கு வந்தது. “அந்த வெறுமை தான், இந்த வெறுமை ” என்று அக்கணம் நான் கண்டு கொண்டேன்.

பின்னர் எனக்குள் இதுவரை வேண்டுதல் இல்லை. எந்தக் கோவிலுக்கு சென்றாலும் வேண்டுதலின்றி பக்தியுடன் உருகி தொழ முடிகிறது. ஆனால் எடுத்த எடுப்பிலேயயே இது சாத்தியப்படவில்லை. மனதை அதுவரை அவ்வாறு பழக்கியதால் ஆரம்பத்தில் சில நாட்கள் ஆழத்தில் வேண்டுதல்கள் எழுந்தது, நான் அவற்றை பிடிவாதத்துடன் வலுக்கட்டாயமாக அகற்றினேன். அங்ஙனம் வேண்டுதல்கள் எழும் போது நாராாயண குருவின் சொற்களை எண்ணிக் கொள்வேன், அக்கணமே வேண்டுதல்கள் விலகுவதைக் கண்டேன். இன்று துளி அளவும் இல்லை வேண்டுதல்கள்.

மேலும் இந்த கனவுகள் மற்றும் ஆன்மீகம் பற்றி எனக்கிருந்த பல கேள்விகளுக்கும், சந்தேகங்களும் வேறு பலர் மூலமாக ஜெயமோகன் எனக்கு பதிலளித்தார். “எல்லாமுமான அது, நாம் நம்பிக்கைக்கு ஏற்ப, நாம் நம்பும் உருவில் நம் முன் வந்து நிற்கும் என்று”. நான் ஆரம்பத்தில் சிலரிடம் இந்த கனவுகளைப் பற்றி சொன்ன போது கேலியே எஞ்சியது. அதற்கும் ஜெயமோகனே பதிலளித்தார், நான் நிற்கும் தளம் வேறு, அவர்கள் நிற்கும் தளம் வேறு, அவர்கள் என்னுடைய தளத்திற்கு வந்து அனுபவத்தால் உணர்தாலொழிய அதை நம்புவதும், புரிந்து கொள்ளவும் அவர்களால் இயலாது என. எனவே நான் இப்போது எவரிடமும் பகிர்வதில்லைை. ஆனால் நான் இப்போதும் என் வாழ்வில் நடக்கப்போகும் முக்கிய சம்பவங்களை கண்டு கொண்டிருக்கிறேன் கனவுகளில்.

நான் வாழ்வில் இப்போது தான் முதல் முறையாக இவ்வளவு பெரிய கடிதம் எழுதுகிறேன். எனக்குள் இருந்தவற்றை சரியாக சொற்களாக எடுத்துச் சொல்லி விட்டேனா எனத் தெரியவில்லை. ஓரளவுக்கு சரியாக சொல்லி விட்டதாக நம்புகிறேன்.

நன்றியுடன்

எஸ்

***

அன்புள்ள எஸ்

கனவுகள் நம்முடைய ஆழுள்ளம் வெளிப்படும் வாசல்கள். அவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் அறுதியான அர்த்தம் அளித்துவிடக்கூடாது. நம் ஆசைகளையும் ஐயங்களையும் அவற்றின்மேல் ஏற்றிவிடக்கூடாது. நாம் அவற்றை முன்நிபந்தனை இல்லாமல் ஆராயவேண்டும். அதற்கு ஒரே வழி அதிகம் ஆராயாமல் வெறுமே கவனிப்பதுதான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 20, 2021 11:30

August 19, 2021

ஆரம்பக்கல்விக்காக ஓர் இயக்கம், நன்றியும் வணக்கமும்

ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கம்

வெளியூரில் இருக்கிறேன். இணைய இணைப்பு சீராக இல்லை. தொலைக்காட்சி  பார்ப்பதில்லை. நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார்.தமிழகத்தில் ஆரம்பக் கல்விக்காக ஓர் இயக்கத்தை அரசு முன்னெடுக்கவுள்ளது. சட்டச்சபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இவ்வறிவிப்பு வருவதை சொல்லியிருந்தனர். எனினும் அந்த அறிவிப்பு நேரடியாக சட்டச்சபையில் முன்வைக்கப்படுவதை தொலைக்காட்சியில் பார்ப்பது ஒரு மெல்லிய சிலிர்ப்பை அளித்தது.

மிக முக்கியமான முயற்சி. இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு பெருந்திட்டம். ஒருவேளை உலகிலேயே கூட இது முதல்முறையாக இருக்கலாம். இதை திட்டமிட்டு முன்னெடுக்கும் கல்வி,நிதி அமைச்சர்களும்; வடிவமைத்து நிகழ்த்தவிருக்கும் அதிகாரிகளும் நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். நம் தலைமுறையினர் அவர்களை நினைவுகூர்வர்.

அனைத்துக்கும் அப்பால் முதல்வர் ஸ்டாலின் போற்றுதலுக்குரியவர். இந்த திட்டம் திமுக அளித்த வாக்குறுதிகளில் இல்லை. குறையறிந்து தானாகவே செய்யப்படும் முயற்சிகளிலேயே அரசு மக்கள் மீதான தன் அக்கறையை வெளிப்படுத்துகிறது. இவ்வரசு இதுவரை எடுத்த திட்டங்களில் இதுவே தலையாயது. ஒரு முதல்வராக நிர்வாகத்திறனையும் இணையாகவே பெருங்கருணையையும் வெளிப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின் வரலாற்றில் இடம்பெறுவார்.

வாழ்க! பொலிக!

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 11:36

மெய்யாசிரியனுடன் ஒரு நாள் – மீனாம்பிகை

குரு வியாச ப்ரசாத் வலை தளம் குரு வியாச ப்ரசாத் வகுப்புகள், காணொளிகள்

ஊட்டி ஆசிரமத்துக்குச் சென்று ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று எனக்குள்ள குழப்பமான மனநிலையில் நான் சென்று நித்யாவிடம் நிற்க முடியும் என்று தோன்றியது. ஆசிரமம் செல்வதற்கு வியாசப்பிரசாத் மாஸ்டரிடம் மெயில் செய்து கேட்டிருந்தேன். வந்த அன்றே திரும்பிச் செல்வதாக இருப்பதால் வரலாம் என்றும் யாரையும் ஆசிரமத்தில் அனுமதிப்பதில்லை என்றும் மெயில் செய்திருந்தார்.

காலை 5.30 மணி பஸ் பிடித்தேன். குறைவான ஆட்களுடன் கிளம்பியது. கல்லார் வரை யூட்யூபில் உரை கேட்டபடி சென்றேன். கல்லார் தாண்டியதும் டவர் இல்லாததால் கேட்க முடியவில்லை. மழையினால் காடு கனத்து அதிகாலை வெயிலுக்கேற்ப பச்சையும் பொன்மஞ்சளும் செந்தளிர்நிறமுமாக மாறிக்கொண்டிருந்தது. சாலையோரம் நிற்கும் குரங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது, ஆறுதலாக இருந்தது. மேலே ஏறுவதற்குள் பஸ் நிறைந்துவிட்டது.

பூக்களைப் பார்க்கும்போது நித்யாவை நினைத்துக் கொள்வதுண்டு. அங்கேயே பூக்கடையில் அரளியும் மல்லிகையும் வாங்கினேன். 9.00 மணிக்கு ப்ரேயர் இருப்பதாக மாஸ்டர் முந்தின நாள் சொல்லியிருந்தார். அதற்குள் வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். வந்து சேர்ந்துவிட்டிருந்தேன்.

ஆசிரமத்தின் சுற்றுவேலி வேலைகள் முடிந்து கம்பிக்கதவு போடப்பட்டிருந்தது. வாசலில் நின்று பார்க்கும்போதே முன்னைவிட பசுமையாக இருப்பதாகத் தோன்றியது. வாசலில் நின்று அழைக்கவும் கஸ்தூரி வந்து கதவு திறந்தார். நலம் விசாரித்தபடி மீண்டும் பூட்டினார். யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் மாஸ்டரும் அப்புவும் மட்டுமே இருக்கிறார்கள் என்றும் தான் தினமும் வந்து சமைத்துவிட்டுச் செல்வதாகவும் சொன்னார்.

நான் பழங்கள் வாங்கிச் சென்றிருந்தேன். அவற்றைக் கொண்டு போய் மாஸ்டரிடம் கொடுத்து விட்டு வரலாம் என்று மேலேறிச் சென்றேன். அவர் அவருடைய அறையை பூட்டிக் கொண்டிருந்தார். “Namaskaram Master” என்றேன். வழக்கம் போல “Namaskaram Namaskaram! Good to see you yaar! It’s been a long time seen your smiling face” என்றார் மலர்ந்து சிரித்தபடி.

நான் அருகில் சென்று கால்தொட்டு வணங்கி பழங்கள் இருந்த பையைக் கொடுத்தேன். “ஓ குட்!” என்றபடி வாங்கி வைத்துவிட்டு “பிரார்த்தனைக்கு நேரமாயிற்று போகலாம்” என்றார். கையில் வைத்திருந்த பிஸ்கட்டைப் பொடித்து அருகிலிருந்த மீன்குளத்தில் போட்டார். சென்ற வருடத்தில் பராமரிப்புப் பணி நடந்து புதியதாக இருந்தது. கையளவு விதவிதமான மீன்கள் இருந்தன. “They like biscuits” என்று கைகளை உதறியபடி வந்தார். “வழக்கமாகக் கேட்பதைவிட அதிக பறவைக்குரல்கள் கேட்கிறது” என்றேன். “ஆம், இங்கு யாரும் வருவதில்லை, அமைதியாக இருக்கிறது, தொந்திரவில்லாமல்” என்றார். அவர் பெரும்பாலும் தனிமை விரும்பி. வகுப்புகளில் கலந்துகொள்வதும் அவர் வகுப்பு எடுப்பதையும் மிக விரும்புவார். அதற்கு அப்பாற்பட்ட கூட்டங்களில் தப்பியோடுவது போன்ற பரபரப்புடனே நிற்பார்.

பிரார்த்தனைக்கு வரும் வழியிலேயே “இரண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறேன்” என்று உற்சாகமாகச் சொன்னார். நான் வீடியோக்கள் பார்த்தேன் என்றும் உள்சென்று கேட்கவேண்டும் என்றும் தொடர்ந்து பயிற்சி செய்ய எனக்கு சொல்லித் தருமாறும் கேட்டபடி பின்னால் நடந்தேன்.

லைப்ரரி திறந்திருக்கிறது என்றும் இளைப்பாற வேண்டுமெனில் அங்கு அமரலாம் என்றும் சொன்னார். பிரார்த்தனைக்கு வருகிறேன் என்று சொன்னேன்.

தலையசைத்தபடி ”இன்று தைத்ரிய உபநிஷதம் படிக்கிறோம் வா” என்றபடி விரைந்தார். அவர் விரைந்த வேகம் நித்யாவே கேட்பதற்காக அமர்ந்திருப்பது போல இருந்தது. அவர் மட்டுமே இருந்தாலும் குறித்த நேரத்தில் பிரார்த்தனை என்பது தவறுவதில்லை. உள்ளே நுழையும் வேகத்திலேயே அலமாரியிலிருந்து தியான மஞ்சுஷாவை எடுத்து என் கையில் கொடுத்தார். ஏற்கனவே அமர்ந்திருந்த அப்பு எனக்கும் ஒரு அமரும் மெத்தை எடுத்துக் கொடுத்தார். நமஸ்காரம் என்றபடி அமர்ந்துவிட்டேன்.

பிரார்த்தனை தொடங்கிவிட்டது. என் செல்போனை அணைக்கவில்லை என்ற பதற்றம் எழுந்தது. ஆனால் அதை ஒதுக்கி அவர்களோடு சேர்ந்து கொண்டேன். பக்க எண்கள் தவறாக அச்சிடப்பட்டிருந்தன. தேடிக்கண்டடைய வேண்டியிருந்தது. தெய்வ தசகம், பிறகு தைத்ரிய உபநிஷதம் வாசித்த பிறகு அதற்கான குரு முனி நாராயண பிரசாத் அவர்களின் விளக்கம் ஒரு பக்கம் வாசிக்கப்பட்டது. இங்கு பிரார்த்தனை என்பதே அறிந்துகொள்ளல் தான், எதையும் வேண்டுதல் அல்ல.

அவர் கையிலிருந்த புத்தகமும், அவருடைய படிக்கும் முகமே என் மனதை இழுத்துக் கொண்டிருந்ததால் சொற்களைக் கவனிப்பதற்காகக் கண்களை மூடி அமர்ந்திருந்தேன். பிரம்மம் பேரிருப்பாக (Absolute) உருவகப்படுத்தப்படுகிறது. அதுவே இங்கு எண்ணற்ற உருவங்களாக விரிந்திருக்கிறது. வானிலிருந்து விரிந்திறங்கிப் பரவும் மேகம் போல ஒரு சித்திரம் எழுந்தது என்னுள்.

இவ்வாறு விரிந்ததை அறிய முதலில் உணவு, பிராணன், மனம், அறிந்துகொள்ளல், ஆனந்தம் (Food, Vital Breath, Mind, Understanding, Happiness) என்று கவனம் கொள்ள வேண்டும் என்று வரிசைப்படுத்தியிருந்தது. இவை அனைத்தும் பொருண்மையான உருவகங்களாக என்னில் படிந்தன. இன்னும் செறிவான மொழியில் விளக்கங்கள். “ஆன்மாவின் முதற்கடமை தன்னை அறிவதே” என்ற சொற்றொடர் பலமுறை நான் அங்கு கேட்டது. ஆனால் இம்முறை தனித்துக் கேட்டது, நான் கேட்டுவந்த கேள்விக்கு விடைபோல.

நித்யாவின் வீணையும் புகைப்படமும் நடராஜகுருவின் புகைப்படமும் இருந்த இடத்தில் ஒரு குத்துவிளக்கும், சுவற்றில் மாட்டியிருந்த நாராயண குரு புகைப்படமும் மட்டுமே இருப்பதை பிரார்த்தனை முடிந்தபின் தான் பார்த்தேன். நித்யாவின் புகைப்படமும் நடராஜ குருவின் புகைப்படமும் இரு பக்கங்களிலும் இருந்த புத்தக அலமாரிகளின் மேல் வைக்கப்பட்டு பூமாலை போடப்பட்டிருந்தது. வியாசா மாஸ்டர் அவர் அறைக்குச் செல்லக் கிளம்பினார். என்னிடம் ”உனக்கு இளைப்பாற அமர வேண்டுமெனில் லைப்ரரி திறந்திருக்கிறது” என்றார்.

“நான் சமாதிக்குச் சென்றுவிட்டு வருகிறேன்” என்றேன்.

“சரி சமாதியைத் திறந்து வைக்கிறேன்” என்று முன்னால் சென்றார்.

நான் நின்று புதிய புத்தகங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று பார்த்தேன். நிறைய மலையாளப் புத்தகங்கள்.

வெளியே வந்தபோது மழை பெய்யத் தொடங்கியிருந்தது. என் கைப்பையைத் தூக்கிக்கொண்டு மழைக்குளிரில் மூச்சிரைத்தபடி மேலேறிச் சென்றேன். இம்முறை செடிகளில் நிறைய பூக்கள் இருந்தன. ஒருவித அடர்வயலட்நிற பூக்கள். அடர்சிவப்புநிற டேலியா, வெள்ளை மஞ்சள் இதழ் கொண்ட பூக்கள், பார்க்கப் பார்க்க மனம் மேலும் கனத்து நெகிழ்ந்து கொண்டிருந்தது.

சமாதி கதவைத் திறந்துவிட்டபின் அவர் அறைக்குச் செல்லும்பாதையில் நின்று நான் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். “புற்கள் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன பார்த்து கால்வைத்து வா” என்றார். மழை அதன் மறுவடிவம் போல புல்வெளிமீது நிறைந்திருந்தது.

எவரும் அதிகம் நடக்காததால் பாதையிலும் புல் படர்ந்திருந்தது. “காம்பௌண்ட் சுவர் வேலை முடிந்துவிட்டதால் காட்டுமாடுகள் வருவதில்லை. எனவே செடிகளில் பூக்கள் நிறைந்திருக்கின்றன” என்றார்.

என்னிடம் பேசும்போது அவரிடம் ஒரு நாடகத்தில் பேசும் ‘டயலாக் பாணி’ வந்துவிடும். குதூகலமான அசைவுகள். குழந்தைகள் செய்வது போல இருபக்கமும் சாய்ந்து, கைகளை உயர்த்தி, விழிகளை விரித்து நடனம் போன்ற அசைவுகளுடன் பேசுவார். நான் சிரிக்கத் தொடங்கினால் ”சிரிக்காதே” என்று வழக்கமான குருமார்களின் இறுக்கத்தை நடித்துக் காண்பிப்பதும் உண்டு.

அன்றைய பிரார்த்தனையில் வாசிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு “இதற்கு முந்தைய வாசிப்பில் நம்மிலிருந்து பிரம்மத்திற்கான பயணம் குறிப்பிடப்பட்டிருந்தது” என்று சொன்னார். நம்மிலிருந்து பிரம்மத்தை அடைதல் ஒருபயணம், பிரம்மத்திலிருந்து நம்மை அறிதல் ஒரு பயணம். Not only, we are praying to God, God is also praying to us என்று கையை உயர்த்தி வானுக்கும் பூமிக்குமாகச் சுட்டியபடி குருவின் வாக்கியத்தைச் சொன்னார். இவை சந்திக்கும் புள்ளியை விளக்க வார்த்தைகள் இல்லை, அந்த இடம் மௌனம், வார்த்தைகளால் விளக்க முடியாதது. அது நம் உள்ளுணர்வாலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டியது என்று சொன்னார்.

தைத்ரிய உபநிஷதத்துக்கான குரு முனி நாராயணபிரசாத் அவர்களின் விளக்கம் மிகப் புதிதாக விளங்கிக்கொள்ள எளிதாக இருப்பதாக வியாசா மாஸ்டர் சொன்னார். நான் தலையசைத்து கவனித்துக் கேட்டேன்.

“எங்கிருந்தோ மீண்டு வந்தது போல் இருக்கிறது இரண்டு வருடங்களாக இருந்த வேலையினால் எதையும் படிக்காமலாகிவிட்டேன். இப்போது பதிப்பக வேலைகள் மட்டுமே இருப்பதால் இனிமேலாவது தொடர்ந்து படிக்கவேண்டும்” என்று சொன்னேன்.

சிரித்து, “சரி போய்விட்டு வா. காலை உணவுக்குச் செய்த உப்புமா இருக்கிறது. சாப்பிடு லைப்ரரியில் இரு” என்று சொல்லி மேலேறிச் சென்றார்.

நான் நித்யாவின் சமாதிக்குள் செல்வதற்குமுன் மூச்சு வாங்கி என்னை நிதானப்படுத்திக்கொண்டு கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். நாதாங்கி சத்தமிட்டது தவிர்க்க முடியவில்லை. குளிருக்கு இறுகியிருக்கலாம். உள்ளே விளக்கு எதுவும் ஏற்றப்பட்டிருக்கவில்லை. ஊதுபத்தியும் இல்லை. நான் கொண்டு சென்ற பூவை சமாதிக்கு எப்படி அணிவிப்பது என்று எண்ணி எடுத்து வைத்தேன். இத்தகைய அலங்காரக்கலைகள் எனக்கு வருவதில்லை. நான் மெனக்கெட்டு பயில்வதும் இல்லை. இம்மாதிரி நேரங்களில் ஒரு குற்ற உணர்வு தோன்றும். ஒரு வட்டமும் அதனுள் ஒரு நட்சத்திரமுமாக அமைத்தேன்.

சமாதிக்கு வலப்புறம் நான் எப்போதும் அமருமிடத்தில் இருந்த மெத்தை மேல் அமர்ந்தேன். இங்கு எந்தத் துயரத்தையும் வெளியிடக்கூடாது என்று ஒரு தடை மனதுள் தோன்றியிருந்தது. பிரார்த்தனைக்கான மந்திரத்தை சொல்லிவிட்டு ஃபோனை அணைத்துவிட்டு அமர்ந்தேன்.

அது ஒரு உரையாடல். நித்யா என்ன சொல்லுவார் என்று எனக்குத் தெரியாது. என்னுள் இருந்த கேள்விகளுக்கு விடைகளாக அந்த இடத்தில் என்னுள் தோன்றியவை, அவர் எனக்களித்தவை என்று கொள்கிறேன். இங்கு ஒவ்வொருவரின் பயணமும் தனித்தது. ஞானத்தின் பாதையும் அத்தகையதே. இன்றிருக்கும் தத்தளிப்புகளுக்கு அப்பால் தன்னை அறிதல் என்பதே நான் முதன்மையாகக் கொள்ளவேண்டியது. மற்ற அனைத்தும் மேலோட்டமானவை. இங்கு எனக்கு நிகழும் அனைத்தும் அங்கு கொண்டு சேர்ப்பதற்கான வழிகளே என்று தோன்றியது. கடக்க வேண்டிய உணர்ச்சிகரமான தருணங்களை மிகுந்த எச்சரிக்கையுடன், விழிப்புடன் கடந்து செல்லவேண்டும் என்றும் தோன்றியது.

இந்திரநீலம் புத்தகத்தை எடுத்து ஒரு அத்தியாயம் மனதுக்குள் வாசித்தேன். பிறகு கிண்டிலில் இமைக்கணம் எடுத்து முதல் அத்தியாயம் வாசித்தேன். தியானிகனும் பிரபாவனும் பேசிக்கொள்வது. ஸ்தூல வடிவில் இருக்கும் புழு எண்ணத்தில் சிறகு கொண்டிருத்தல், எண்ணத்தில் கால்கள் கொண்டிருத்தல். இல்லாத கால்கள், இல்லாத சிறகுகள் எண்ணத்தில் தோன்றுதல். புழுவின் வடிவு முயன்று பறவை வடிவெடுத்தல், எல்லைகளைக் களைந்து பறத்தல் என ஒவ்வொன்றும் புதிய பரிமாணத்தில் விளங்கிக்கொண்டிருந்தது. ஒரு புழு பறவையாகும் முயற்சியில், மேம்பட்ட மற்ற அனைத்துயிராக ஆகும் முயற்சியில் இருக்கிறது. எனில், நான் அடையவேண்டியதென்ன? Self-Realisation. வந்தவுடனேயே விடை அளிக்கப்பட்டிருந்தது. அதுவரை இருந்த எடைகுறைந்து எளிதானது போல உணர்ந்தேன். இங்கு உலகியலின் உணர்ச்சிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. மேலான அறிதல் மட்டுமே கேட்டுப்பெற்றுக் கொள்ளவேண்டியது. நித்யாவிடம் எப்போதும் உலகியல் தேவைக்கான எதையும் நான் கேட்டதில்லை.

சமாதியை ஒரு புகைப்படம் எடுத்தேன். என் பையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தேன். மீண்டும் உள்ளே சென்று நமஸ்காரம் செய்தேன். சென்றுவருகிறேன் என்று விடைபெற்றுக்கொண்டேன்.

வெளியில் புற்கள் உயரமாக மழையில் நனைந்திருந்தன. சமாதியின் வெளிப்புறத்தை சரியாக புகைப்படம் எடுக்க முடியவில்லை. சுற்றி வரும்போது மாஸ்டர் மீண்டும் மீனுக்கு உணவளித்தபடி நின்றுகொண்டிருந்தார். நான் வெகுநேரம் உள்ளே அமர்ந்திருந்ததை இடையில் ஒருமுறை வந்து தொலைவில் நின்று பார்த்துவிட்டுச் சென்றிருந்தார். பதினைந்து நிமிடம் சமாதியில் அமர்ந்துவிட்டு அவரிடம் ஓடுவது என் வழக்கம். இம்முறை ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாகியிருந்தது நான் சென்று.

என் முகம் பார்த்தபின் “ஆர் யூ க்ளியர் நௌ?” என்றார் குரலில் அக்கறையுடன்.

நான் அவரிடம் எதையுமே சொல்லியிருக்கவில்லை. “எஸ் ஆல் க்ளியர்” என்று சிரித்தபடி சொன்னேன்.

“இந்த சிரிப்புதான் உன்னிடம் இருக்க வேண்டியது. குட் டு ஸீ” என்றார்.

அவருடைய அறையின் வெளிப்புறம் படர்ந்திருந்த செடி, சுவற்றை, சன்னல் இடைவெளியைத் துளைத்து உட்புறம் புக ஆரம்பித்திருந்தது.

”See, this is creeping in. We have cut it. Still its green” என்றார்.

அதுவும் அவருடன் வசிக்க விரும்புகிறது போலும் என்று சொல்லிச் சிரித்தேன். அவரும் சிரித்தார்.

“பதிப்பக வேலைகள் மட்டும்தான் செய்கிறாயா?” என்று கேட்டார்.

”ஆமாம்” என்றேன்.

தான் ஒரு புத்தகத்திற்கு தயாரித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். நினைத்துக் கொண்டு “முதலில் சாப்பிட்டுவிட்டு வா, பேசலாம். நான் லைப்ரரியில் இருக்கிறேன்” என்றார்.

நான் சென்று சாப்பிட்டு, அவசரமாக சில பூக்களைப் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்ப இருபது நிமிடங்கள் ஆகியிருக்கலாம். லைப்ரரியில் சென்று பைகளை வைத்தேன். உள்ளே நுழையும்போது திடுமென ஒரு அதிர்வு. நித்யா அங்கே அமர்ந்திருப்பது போல அவரது சிலை. சென்று கால் தொட்டு வணங்கினேன்.

அடிக்கடி அமர்ந்து படிக்க, படம் பார்க்க இருப்பது போல மேசைமேல் கம்ப்யூட்டரும் டிவியும் அமைக்கப்பட்டிருந்தது. லைப்ரரியின் அடைசலாக இருந்த சோபாக்கள் நீக்கப்பட்டு விசாலமாக இருந்தது. திறந்திருந்த அலமாரியில் உள்ள புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஹெம்மிங்வேயுடைய பழைய கால நீல கெட்டி அட்டை போட்ட புத்தகம். லே மிசரபிள்ஸ் பெரிய புத்தகமாய், இன்னும் சிறிதும் பெரிதுமாய் நிறைய இலக்கியப் புத்தகங்கள்.

கை வைக்க அஞ்சி பார்த்துக் கொண்டிருந்தேன். கதவு திறந்து வியாசா மாஸ்டர் ஒரு ஃபைலுடன் வந்தார். அலமாரி திறந்திருக்கிறதே என்றேன். “இப்போது நிறைய வாசிக்கிறேன். அதற்காகத் திறந்திருக்கிறது” என்றார். “லே மிசரபிள்ஸ் வாசித்தேன். என்ன ஒரு அற்புதமான புத்தகம்!” என்றார்.

“நானும் இவற்றில் சிலவற்றை வாசித்திருக்கிறேன். ஆனால் கிண்டிலில் வாசித்தேன்” என்றேன்.

“என்ன இருந்தாலும் புத்தகத்தில் வாசிப்பது போல வராது, நானும் கிண்டில் வாங்கினேன். சிறியதாக இருக்கிறது படிக்கப் போதுமானதாக இல்லை” என்றார்.

மேசைக்கருகில் போட்ட நாற்காலியில் அமர்ந்தபடி மேசை மேல் இருந்த இந்திரநீலம் புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். ”எவ்வளவு பெரிய புத்தகம்!” என்று வியந்தார்.

“இது போல 26 புத்தகங்கள்” என்றேன், அவருக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி. ”இதை குரு சமாதியில் வைத்து பிரார்த்திப்பதற்காக எடுத்து வந்தேன்” என்றேன்.

“எத்தனை பக்கங்கள்! உன் மூளை இப்போது சரியாக இயங்குகிறதா?” என்று சிரித்தபடி கேட்டார். சிரித்துக்கொண்டேன்.

அவர் கொண்டுவந்த ஃபைலை விரித்து “இவை என் ப்ளாக்கில் எழுதியவை. அவற்றைத் தொகுத்துத் திரும்பப் படித்துத் திருத்தங்கள் போட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றார். பிறகு “இரு இதற்குப்பின் திருத்திய வடிவம் இருக்கிறது எடுத்துவருகிறேன். மேலே என் அறை இடைஞ்சலாக இருக்கிறது. இல்லாவிட்டால் அங்கேயே இருந்திருக்கலாம்” என்றபடி மேலே சென்றார்.

அவர் படித்துக் கொண்டிருக்கும்போது அவர் அறைக்குச் செல்ல நேர்ந்தால் அவர் படிக்கும் அந்தப் பக்கத்திலிருந்தே உரையாடல் தொடங்கும். முன்பொருமுறை நேராக அவரது அறைக்குச் சென்று அரைநாள் அமர்ந்து பேசி யாரையும் பார்க்காமல் சமாதிக்கும் செல்லாமல் திரும்பியிருக்கிறேன். அன்று காந்தியைப் படித்துக்கொண்டிருந்தார். படித்துக்கொண்டிருந்த பக்கத்திலிருந்து மேற்கோள் காட்டித் தொடங்கி நாராயணகுருவுக்கும் காந்திக்குமான உரையாடல்களைப்பற்றி சொன்னார். நாராயண குருவைப்பற்றிய அறிமுகமாக இன்று என் நினைவில் நிற்பவை அன்று அவர் சொன்னவையே.

வந்தபின் புத்தகமாகக் கையில் வைத்து வாசிப்பது, இப்போது அடுத்த பரிணாமமாக கிண்டிலில் வாசிப்பது, என்று உபயோகிக்கும் டூல்கள் மாறியிருப்பதை விந்தை போலச் சொல்லிக் கொண்டிருந்தார். பிரம்மம் எல்லையிலா வடிவங்கள் எடுக்கிறது. ஒவ்வொரு வடிவமும் தனித்தது இன்னொரு இணை சொல்ல இயலாதது. அவை ஒவ்வொன்றும் பிரம்மத்தை அறியும் வேட்கை கொண்டிருக்கின்றன. அதைப் போலவே பிரம்மமும் அவற்றை அறிய விரும்புகிறது என்று சொல்லிக்கொண்டு தொடங்கினார். அவர் வழக்கம் அது. எத்தனை சாதாரணமான ஒன்றிலிருந்தும் பிரம்மத்தை அடைந்துவிடுவார்.

தனித்தன்மை கொண்டது என்று சொல்லத் தொடங்கி நாராயண குருமரபின் மெய்மரபின் தொடர்ச்சி பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். “நடராஜ குரு எவ்வகையிலும் நாராயண குருவைப்போல் இல்லை. அதுபோலவே நித்யா குரு எந்த விதத்திலும் நடராஜ குருவைப் போல் இல்லை. குரு முனி நாராயண பிரசாத் அவர்களும் அப்படித்தான். அவர்களின் வழிகளும் அவ்வாறே தனித்தவை.

முழுமுதல் என்றும் பிரம்மம் என்றும் absolute என்றும் சொல்லப்படும் ஒன்றை அறிந்து கொள்ளுதலே ஆன்மாவின் கடமையாக நமது மெய்மரபு சொல்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய புதிய கண்டுபிடிப்புகள் அதன்வழியாகப் பிரம்மத்தை அறிந்து கொள்ளப் பிரயத்தனம் செய்யப்பட்டது. நாராயணகுரு அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகள், பௌதிக அறிவியலில் வந்த மாற்றங்களினூடாக இந்த ஞானத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினார். நடராஜ குருவை அதற்கே பணித்தார்.

நடராஜ குரு வரும்போது லண்டன் உலகை ஆண்டு கொண்டிருந்தது. Modern Thinking என்று சொல்லப்படும் தத்துவங்கள் யூரோப்பிலிருந்து பிறந்தன. அவர் அங்கிருப்பவர்களுடன் தொடர்பிலிருந்தார், ஐரோப்பிய தத்துவங்களில் ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்தார். அவரை வந்து சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் ஹிப்பிகள். அதுவரை அறிதல் என்பது மதம் சார்ந்ததாக இருந்தது. இதற்குப் பின் ஞானம் மதத்தின் வாயிலாக அல்லாமல் தனித்தரிசனமாகவே பயிலமுடியும் என்ற நிலை வந்தது.

அவருக்குப்பின் வந்த நித்யா குரு சைக்காலஜியின் வழி தத்துவத்தை அறிந்துகொள்ள, விளக்கத் தொடங்கினார். இரண்டாம் உலகப்போருக்குப்பின் அமெரிக்கா வலிமையுடனிருந்தது. அமெரிக்கா தத்துவத்தை விட சைக்காலஜியை அடிப்படையாகக் கொண்ட நாடு. நித்யாவின் பெரும்பாலான நண்பர்கள் அமெரிக்கர்கள் என்று சொன்னார். இப்போது இருக்கும் குரு முனிநாராயண பிரசாத் அவர்களின் வழி வேறு. இன்றைய அறிதல் முறையுடன் உரையாடுவது” என்று சொன்னார்.

“இதுவரை கருவிகளை நாம் பயன்படுத்தினோம். இப்போது டெக்னாலஜி யுகத்தில் கருவிகள் நம்மை அளவிடுகின்றன. நம்மை கண்காணிக்கின்றன. நமக்குத் தேவையானவை உகந்தவை என அவை தேர்வு செய்கின்றன. நம் பயணங்களில் செல்போன் இருந்தால் எத்தனை தொலைவிலிருந்தாலும் அறிந்த இடத்தில் இருப்பது போலத்தான். தொலைவு, தனிமை என்பதே இல்லை.”

”முன்பெல்லாம் எனக்குத் தோன்றியதை பிளாகில் எழுதிவிடுவது வழக்கம். இப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. இன்று நான் எழுதுவது நாளை எனக்கு சுமையாகிவிடக்கூடாது என்ற கவனம் வந்துவிட்டது என்றார். இது Algorithm-தின் யுகம்” என்றார். இந்தப்பதம் புரிய  எனக்கு சில நாட்களாகும்.

இப்போது படித்துக்கொண்டிருக்கும் Evan Thompson-ன் Waking, Dreaming, Being: Self and Consciousness in Neuroscience, Meditation, and Philosophy புத்தகத்தை எடுத்துவந்தார். அதைப் பிரித்து, “பார் இதுவரை உபநிஷதக் கருத்தை எடுத்தாளுபவர்கள் ஒருபோதும் எங்கிருந்து எடுத்தது என்று சொல்லமாட்டார்கள். இவர் ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். நல்ல விளக்கங்கள், படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

மீண்டும் எல்லாம் தனித்தது. ஒன்று போல இன்னொன்று இல்லாதது. ஒவ்வொன்றும் அதன் இன்னொரு பிம்பம்/பிரதி. ஆனால் தனித்தது, Unique. என்றார். அதுவும் இதுவும் நானும் ஒன்றே எனில் பிறிதொன்று எது, எதற்கு எதிராக நம்மை வளர்த்துக்கொள்வது என்றார். இந்த ஆறாண்டுகளில் நான் அவரிடம் என் மனக்குழப்பங்களை எப்போதும் சொன்னதில்லை. அவர் அவற்றைப் பொருட்படுத்தி என்னிடம் பேசியதுமில்லை. ஆனால் இம்முறை என்னவென்று கேட்காமலே அவற்றுக்கு விடைகளை சொல்லத் தொடங்கினார்.

“If you suffer because of emotions, you have to maintain two things. Be silent, be kind, Maintain silence in emotional state. If you have to react, be kind. All are suffering in different ways. If you take one perception as happiness, another is suffering, that is the duality, but there is no duality. Both are same. To know that you have to be Neutral. When you have a side you cannot perceive what is actually there” என்றார்.

அகங்காரமே நெகட்டிவான அனைத்து எண்ணங்களுக்கும் அடிப்படை, பொறாமையாகவும் பயமாகவும் தோன்றுவது கூட அதுவே. அகங்காரம் பொறாமையையும், பொறாமை பயத்தையும் விதைக்கிறது. பயம் நம் நிலைபற்றிய கேள்விகளை எழுப்புகிறது. பொறாமையும் பயமும் நம்முடைய இருப்பிற்கு அத்தியாவசியமான உணர்ச்சிகளாக தங்களை உணரச்செய்கின்றன, தீவிரமாக இங்குள்ளவற்றுடன் பிணைக்கின்றன. இது மிக அழுத்தமான களைய முடியாத தளை. அயரா முயற்சியுடனும் விழிப்பு நிலையுடனும் கண்காணிக்கப்பட வேண்டியது என்றார்.

அறிதலில் குருவின் இடம் என்பது ஒளியை ஏற்றிவைத்தல், ஏற்றிக்கொள்ள உதவுதல். ஏனெனில் இங்குள்ள அறிதல்கள் எல்லாமே நம்முள் இருப்பவை. அவற்றை நாம் கண்டறிகிறோம் என்பதே ஞானம் அடைதல். குரு என்பவர் இந்தக் கண்டடைதலுக்கு உதவி செய்பவர். அறிதலின் தடைகள் பற்றி, அதை எதிர்கொள்வது பற்றி விரிவாகச் சொன்னார். இவ்வுலகில் அன்றாடம் செய்யவேண்டியவைகளை செய்து கொண்டிருக்கும்போது கூட ‘நாம் இந்த தேடலின் பாதையில் இருக்கிறோம்’ என்ற awareness, conscious-உடன் இருப்பதே மிக உறுதியாகப் பயிற்சி செய்யப்பட வேண்டியது. ”Guru also cannot help on this, One has to walk on his own” என்றார்.

முடிவற்றதாக விளங்கும் ஒன்றே இங்கு எல்லைக்குட்பட்டதாக விரிந்திருக்கிறது. இரண்டும் வேறு வேறு என்பது மாயை. நன்மையும் தீமையும் இரண்டு வேறு எதிர் நிலைகள் அல்ல. இரண்டும் ஒன்றின் இருமுகங்களே என்றார் மீண்டும். கிருஷ்ணரையும் கணிகரையும் பற்றிச்சொன்னேன். மாயை பற்றி அவர் சொல்லும்போது விக்ரமாதித்யனின் நீலகண்டம் கவிதையைச் சொன்னேன். இரண்டாகப் பிரிந்தாடும் ஆட்டம். ஒரு முறை உணர்ந்துவிட்டால் அதன் பின் இத்தனை அழுத்தமாக இவ்வாழ்க்கையின் மேல் படியமாட்டோம் என்றார்.

எனக்கு கல்பற்றா நாராயணனின் டச்ஸ்க்ரீன் கவிதை நினைவுக்கு வந்தது. அதை அவரிடம் சொன்னேன். இத்தகைய உயர்தள உரையாடல்களில் கவிதை எத்தனை எளிதாக உணர்த்திவிடுகிறது என்று வியந்து கொண்டேன்.

“ஆம் அதுபோலத்தான். இவை எதுவும் பாதிக்காமல் வேடிக்கை பார்” என்றார் சிரித்தபடி. “நாங்கள் முதலிலேயே நியூட்ரலாக இருந்துவிடுகிறோம். அதனால் இவை எல்லாம் எங்களில் பிரதிபலிக்கின்றன அவ்வளவே” என்றார்.

நான் எனக்கான ஒரே விடையை என் கேள்வி என்ன என்று சொல்லிக் கொள்ளாமலேயே மூன்று இடங்களிலிருந்து பெற்றேன். உபதேசமாக, மந்திரமாக, ஆசியாக. அருகிருத்தல்!

பிறகு குருநித்யாவைச் சந்திக்க வருபவர்களைப் பற்றிப்பேச்சு திரும்பியது. குருநித்யாவைப் பற்றி எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு டாக்குமெண்டரிக்காக அவர் பேட்டி எடுத்ததை சொன்னார். மீண்டும் சென்று ஐபேடை எடுத்துவந்தார். அதில் அவர் எடுத்த பேட்டி தொகுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. பேட்டியில் பேசியவர் குருநித்யாவைப் பார்க்க வந்த முதல் சந்திப்பிலேயே அவரை, அவர் அணுக்கமாக. அன்பானவராக உணர்ந்தது பற்றிச் சொன்னார்.

மாஸ்டர் “முதல் சந்திப்பிலேயே நானும் அவ்வாறு உணர்ந்தேன். முதல்முறை பார்த்தவுடனேயே அவர் என் அன்னை தந்தைக்கும் மேல் எனக்கு அணுக்கமானவர் என்று தோன்றிவிட்டது. ஆனால் அதன் பின்னும் அவரிடம் வந்து சேர பலதடைகள் இருந்தது. இதுதான் நம் இடம் என்று உணர்ந்து அமையச் சற்று நேரம் பிடித்தது” என்று சொன்னார். பேட்டியைப் பாதியில் நிறுத்திவிட்டு சாப்பிடப் போனோம்.

எனக்கென்று மனமொன்று இல்லாதது போல வெறுமே நாய்க்குட்டி போல அவர் பின்னால் போய்க்கொண்டிருந்தேன்.

“எப்போது திரும்புகிறாய்?” என்றார்.

“நீங்கள் ஓய்வெடுக்கச் சென்றால் நான் கிளம்புகிறேன்” என்றேன்.

“எப்படிப் போவாய்?”

“பஸ்ஸில் போய்க்கொள்கிறேன்”

“வேண்டாம். நான் கொண்டு போய் விடுகிறேன்” என்றார்.

சமையலறையை நெருங்கும்போது “நாம் கட்லெட் செய்தது நினைவிருக்கிறதா?” என்றார்.

நான் அங்கு தங்கியிருந்தபோது முன்பொரு முறை கட்லெட்டும் ஆலூ சப்பாத்தியும் செய்து தந்தார். “நன்றாக நினைவிருக்கிறது” என்றேன். அவர் சமைப்பதே ஒரு நடனம் நிகழ்வது போலிருக்கும். சமஸ்கிருத மந்திரங்கள் வசனங்களும் பாடல்களுமாகும். கரண்டி வயலின் இசைக்கும்.

இன்று எனக்காக ஸ்பெஷலாக ஏதாவது செய்யச் சொல்லியிருக்கிறார். கஸ்தூரி, வெஜிடபிள் பிரியாணி செய்திருந்தார். காரமில்லாமல் மசாலா இல்லாமல்.

தட்டில் உணவு எடுத்து வந்து அமர்ந்தபடி “அன்னம் பிரம்மேதி” என்றார். அப்புவும் சாப்பிட வந்தமர்ந்தார்.

ஈகோவைக் களைய ஒரு வரிசை சொன்னார். காலையில் படித்தது அது. ”உணவுதான் பிராணன், மனம், அறிதல், ஆனந்தம் எல்லாமே. முதலில் உணவு பிரம்மம் என நினைக்கவேண்டும். தொடர்ந்து அதை கருத்தில் வைத்திருக்க அது பிரம்மமென துலங்கும். ஆனந்தம் என்பது இறுதி நிலை.” (அவர் குறிப்பிடும் ஆனந்தம் என்பது Bliss அல்ல, Value). “குரு முனி நாராயணபிரசாத் அவர்களின் அந்த வரிசையை இன்று காலை படிக்கும்போதுதான் உணர்ந்தேன், இது ஒரு நல்ல வைப்புமுறை” என்றார்.

எனக்கு வியப்பாக இருந்தது. அங்கே இந்தப் பாடங்களே திரும்பத் திரும்பப் படிக்கப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றைக் கண்டடைகிறார்கள். அதனால் தான் அங்கு ஒவ்வொன்றும் அன்றே பிறந்தது போல இருக்கிறது.

வழக்கம் போல பேசிச் சிரித்து கொண்டாட்டமான உணவு அருந்தல். பதிப்பகத்தின் முதல் புத்தகமாக குமரித்துறைவி வந்தது பற்றி மீனாட்சி கல்யாணம் பற்றி சொன்னேன். அச்சுப்புத்தகமாக வந்தபிறகு எடுத்துவருகிறேன் என்றேன். “எனக்குத் தமிழ் தெரியாதே, எப்படி படிப்பது?” என்றார். நான் மொழியாக்கம் செய்து தருகிறேன் என்றேன். இருகைகளையும் துப்பாக்கிக்கெதிரே தூக்குவது போல் தூக்கிக் குலுங்கிச் சிரித்தபடி தலையை ஆட்டினார். அவருக்கு தமிழில் பேசுவது முழுவதும் புரியாது. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மொழி. என் ஆங்கிலத்தை சகித்துக்கொள்கிறார்.

பிறகு வெண்முரசுக்கு எடுக்கப்பட்ட டாகுமெண்டரி பற்றிச் சொன்னேன். அதில் நானும் பேசியிருக்கிறேன் என்று சொன்னேன். “எவரிடமும் பகைமை இல்லை என்று அதில் சொன்னேன். ஆனால் நான் என்னில் எழுந்த தீவிரமான எதிர்மறை எண்ணங்களை பார்க்கையில், இது நானா என்று வெட்கமாகவும் பயமாகவும் இருக்கிறது” என்றேன்.

“Hey! all have that, that`s not important. I see only a beautiful soul in you, those are all shadows, they will be there, don’t mind” என்றார். “Don’t think I am this, that. Only pouring happiness is you, see how you are blooming” என்று சிரித்தபடி கையை நீட்டி என்னைச் சுட்டியபடி சொன்னார்.

என் உயிர் கண்களின் வழியாக வெளிவந்துவிடும்போல இருந்தது. அவருடைய கண்பார்வையே நீண்டு என் உள்ளத்துயரை துடைத்துவிட்டது போல, அதனுடன் அப்போதே என் உயிர் வெளியேறிவிடும்போல உணர்ந்தேன். கண்கள் மட்டுமே நான் என்றிருந்தது. உணவின் கடைசி கவளத்தை மிகுந்த சிரமப்பட்டு விழுங்கினேன். கைகழுவி வரும் வரை நின்றார்.

எங்கள் உரையாடல்களுக்கிடையே கஸ்தூரியும் அப்புவும் அங்குதான் இருந்தார்கள் என்பதையே மறந்துவிட்டிருந்தேன். மழை பெய்துகொண்டிருந்தது கையில் குடை வைத்திருந்தார். “நான் தொப்பி அணிந்திருக்கிறேன் நீ வைத்துக்கொள்” என்றார்.

“இல்லை, நீங்கள் நனையவேண்டாம்” என்று அவருடன் குடைக்குள் இணைந்து கொண்டேன். எப்போதும் அவரிடம் எனக்கு உருவாகும் அணுக்கம் கூடியிருந்தது. காலையில் என் அகத்துயரினால் அவரிடம் அணுகவில்லை. அந்த எடை குறைந்திருந்தது. மிக லேசாக உணர்ந்தேன். பிறகு அவரை பார்த்துக்கொண்டிருப்பதன், அருகிலிருப்பதன் இன்பமே இருந்தது.

 

 

பின்னர் விட்டுவந்த பேட்டியை முழுதும் பார்த்தோம். அவர் ஓய்வெடுக்கச் செல்லவில்லை. குருநித்யாவைப் பற்றி, அவர்கள் சேர்ந்து செய்த பயணங்கள் பற்றி, அவர் குருநித்யாவை உணர்ந்தது பற்றிச் சொன்னார். முழுச்சுதந்திரத்தை குருநித்யாவிடம் உணர்ந்ததாக சொன்னார். “குரு ஆரம்பத்திலேயே பயணங்களுக்கு என்னை துணையாக அழைத்துப்போவார். ஒரு சாதாரண மனிதன் தன் வாழ்நாளில் சென்றதற்கும் மேலாக பல நாடுகளுக்கு கணக்கில்லாமல் சென்றிருக்கிறேன். அங்கேயே பலநாட்கள் அலைந்து திரிந்திருக்கிறேன். வெற்றுப்பாக்கெட்டுடன். சுமையோ, அச்சமோ இல்லை. என் விருப்பம் போல இருந்திருக்கிறேன்” என்றார்.

”உறுதியாக, இதைச் செய் என்ற தொனியில் குரு எதையும் சொன்னதில்லை. அவர் அம்மா போல. நாம் அம்மாக்களின் பேச்சை மிகக்குறைவாகவே பொருட்படுத்துவோம். எனக்கு விருப்பமில்லாத ஒன்றைச் செய்யும்படி ஒருபோதும் பணிக்கப்பட்டதில்லை. அவர் மென்மையாகச் சொல்வதை நான் உள்வாங்கிக்கொள்ள சற்றுக் காலமாகியிருக்கிறது. அவர் என் போக்கிலேயே விட்டுவிடுவார். நான் இங்கிருந்து சென்றபிறகு மீண்டும் இதுதான் என் இடம் என்று திரும்பி வருவேன், இரண்டு முறையும் அப்படித்தான் என்றார். ஃபிஜி தீவுக்குச் செல்லவிரும்பவில்லை என்று சொன்ன கணமே போக வேண்டாம். நீ இங்கிரு என்று சொன்னார்” என்றார்.

பின் “குரு என்றால் அன்பு. என் அன்னை சமைத்த உணவை உண்டு அன்பு என்று உணர்ந்திருக்கிறேன். குரு சமைத்ததை உண்ணும்போது அதைவிட இந்த

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2021 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.