Jeyamohan's Blog, page 871
December 5, 2021
பெருந்தேவிக்கு இலக்கியத் தோட்ட விருது
கனடா இலக்கியத் தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. ரிஷான் ஷெரிபுக்கு நான் வாழ்த்து தெரிவித்தபோது ஒரு நண்பர் மின்னஞ்சலில் ஏன் பெருந்தேவிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டார். அதன் பின்னரே விருது அறிவிக்கப்பட்ட செய்தி எனக்கு தெரியவந்தது. விருது பெறுபவர்களில் பெருந்தேவி தவிர எவரைப்பற்றியும் நான் கேள்விப்பட்டதே இல்லை.
கவிஞர் பெருந்தேவிக்கு வாழ்த்துக்கள். நவீனக் கவிதையின் மொழியமைப்பையும் பார்வையையும் பிறிதொரு திசைக்கு கொண்டுசெல்பவை அவருடைய கவிதைகள். இலக்கியக் கோட்பாட்டு அறிமுகக் கட்டுரைகளிலும் புதிய திசைகளை திறந்தவர்.
விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி
பெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை
சீரோ டிகிரி விருது -ஐந்து நாவல்கள்
சீரோ டிகிரி பதிப்பகம்- தமிழரசி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நாவல்போட்டிக்காக நடுவர்களில் ஒருவராக இருக்க என்னிடம் கோரப்பட்டது. இறுதிப்பட்டியலில் இருந்த ஐந்து நாவல்கள் என் பார்வைக்கு வந்தன. நான் அவற்றை வாசித்து என் குறிப்பை அனுப்பி வைத்தேன். என் குறிப்பு இது
ஐந்து நாவல்கள் மதிப்பீடு
எழுத்து பிரசுரத்திற்காக நடத்தப்பட்ட நாவல்போட்டியில் முதல்கட்ட நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நாவல்கள் என் பார்வைக்கு வந்தன. அவற்றை வாசித்து ஒருநாவலை பரிசுக்குரியதாக தேர்வுசெய்யும்படி நான் கோரப்பட்டேன்.
இலக்கியத்துக்கு மிகக்கறாராக மதிப்பெண் போட முடியாது. அது ஒரு விமர்சகரின் மதிப்பீடாகவே அமையும். பல போட்டிகளில் தோல்வியடைந்த படைப்புகள் பின்னாளில் ’கிளாஸிக்கு’களாக ஆகியிருக்கின்றன. வெற்றிபெற்ற ஆக்கங்கள் எங்கே என்றும் தெரியாமல் அப்படியே மறைந்திருக்கின்றன. உதாரணம் பாரதியின் செந்தமிநாடெனும் போதினிலே என்னும் பாடல் ஓர் இலக்கியப்போட்டியில் தோல்வி அடைந்தது. வென்ற படைப்பு எங்கென்றே தெரியவில்லை.
ஆயினும் இலக்கியப்போட்டிகள் தேவைப்படுகின்றன. அவை புதிய திறமைகளை கொண்டுவருகின்றன. புதிய வெளிச்சங்களை படைப்பாளிகள்மேல் வீசுகின்றன. ஆகவே இந்த வகையான போட்டிகளை இலக்கியம் மீதான அறுதி மதிப்பீடாகக் கொள்ளவேண்டியதில்லை. இவை ஒருவகை அமைப்புசார் செயல்பாடுகள் என்றே கொள்ளவேண்டும்.
நான் இத்தகைய போட்டிகளுக்கு உடன்படுவதில்லை. ஏனென்றால் எனக்குரிய பொழுது மிகவும் எல்லைக்குட்பட்டது. அத்துடன் மூத்த எழுத்தாளர்கள் இளையபடைப்பாளிகள் மேல் விமர்சனப்பார்வையை முன்வைக்கலாகாது என்பது என் எண்ணம். நான் புதிய படைப்பாளிகளின் படைப்புகளை சிபாரிசு செய்வதுண்டு. எதிர்விமர்சனம் செய்வதில்லை. ஏனென்றால் என் எதிர்விமர்சனம் அவர்களை உளம்தளரச் செய்துவிடலாம். உருவாகி வரும் புதுப்போக்குகளை மறுப்பதாகவும் என் பார்வை அமைந்துவிடக்கூம்.
ஆனாலும் புதிய போக்குகள் என்னென்ன என்று பார்க்கலாம் என இதை ஏற்றேன். இந்நாவல்களை வாசித்து என் மதிப்பீடுகளைப் பதிவுசெய்திருக்கிறேன். இதிலுள்ள கறாரான எதிர்விமர்சனம் அவர்களை தளரச்செய்யக்கூடாது என வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் படைப்புகளை புறவயமாகப் பார்க்க இது உதவவேண்டும். ஏற்கமுடியவில்லை என்றால் ஒதுக்கிவிட்டு முன்செல்ல அவர்கள் முயலவேண்டும்.
1.சொர்க்கபுரம் – கணேசகுமாரன்
கணேசகுமாரனின் சொர்க்கபுரம் குற்றவாழ்க்கையுடன் தொடர்புள்ள அடித்தள மக்களைப் பற்றிய சித்தரிப்பு. ஆண்வேசியாக கழிவறைகளில் வேலைபார்க்கும் ஒருவனை தொடர்ந்து அந்த வாழ்க்கைப்பகுதிக்குள் சென்று அவனுடைய மனைவி, அண்டைவீட்டுக்காரிகள் என விரிந்து வெவ்வேறு கதாபாத்திரங்கள் வழியாக ஒரு சித்திரத்தை முன்வைக்கிறது.
ஒரு புனைவு ஏன் இத்தகைய வாழ்க்கையை முன்வைக்கவேண்டும்? எளிய விடை என்பது, இப்படியும் இங்கே வாழ்க்கை இருக்கிறது என்று காட்டுவதற்காக. ஆழ்ந்த விடை என்பது மானுடம் எதிர்கொள்ளும் அசாதாரணமான, உச்சகட்டமான அனுபவங்கள் வழியாக மானுடத்தின் பெறுமதி என்ன என்பதை உசாவியறிவதற்காக. கீழ்நிலையும் உண்மையில் உச்சமே.
இந்நாவலில் இரண்டாவது கோணம் முற்றிலும் இல்லை. அசாதாரணமான இருண்ட வாழ்க்கைச்சூழலில் வெளிப்படும் மனிதசாரம் ஏதும் இதில் பேசப்படவில்லை. அத்தகைய வினாக்களோ, அவ்வினாக்களை நம்மில் எழுப்பும் தருணங்களோ இதில் இல்லை. ஆசிரியர் கூற்று என முன்னும் பின்னும் வரும் வரிகள் ‘இதோ இதுதான் வாழ்க்கை’ என்று அவர் சுட்டவிரும்புவதையே சொல்கின்றன. இதுதானய்யா பொன்னகரம் என்னும் புதுமைப்பித்தனின் குரல். நாவலுக்கு சொர்க்கபுரம் என்று வைக்கப்பட்டிருக்கும் தலைப்பும் அதையே சுட்டுகிறது.
அவ்வகையில் இது சீண்டக்கூடிய, அமைதியிழக்கச் செய்யக்கூடிய, நினைவில் ஒரு தொந்தரவாக நீடிக்கக்கூடிய நாவல். ஆசிரியரின் வெற்றி என அந்தச் சீண்டலைச் சொல்லலாம்.
நாவலின் குறைபாடுகள் என நான் காண்பவை
அ. இத்தகைய நாவல்களில் இரண்டு வகை கலைக்குறைபாடுகள் அமையும். ஒன்று கருத்துப்ப்பிரச்சாரம். அது இதில் இல்லை என்பது பாராட்டுக்குரியது. ஆனால் இத்தகைய நாவல்களில் வழக்கமாக வரக்கூடிய ரொமாண்டிக்கான மொழியாட்சிகள் வருகின்றன. அவை நாவலின் வீச்சை குறைக்கின்றன.”தூரத்து வானில் கருமேகம் ஒன்று கவனித்துக் கடந்தது” “வீட்டை விட்டு இறங்கி வெயிலில் கலந்தாள் நளினி” போன்ற வரிகள் இத்தகைய நாவல்களுக்குரியவை அல்ல. ஜி.நாகராஜன் உணர்ச்சியற்ற, வெறும் அறிக்கைபோன்ற, காட்சிகளில் தலையிடாத மொழியையே கையாள்கிறார் என்பதைக் காணலாம். இந்நாவலின் மொழி வணிகக்கதைகளின் நடைக்கு நெருக்கமானது. ஆகவே அது இலக்கிய வாசகனை விலக்கம் கொள்ளச் செய்கிறது.
ஆ. அதிர்ச்சியூட்டும் காட்சிகளால் நிறைந்திருக்கிறது இந்நாவல். ஆனால் அதிர்ச்சி தொடர்ச்சியாக நிகழ்ந்தால், அப்பட்டமாக நிகழ்ந்தால் மிக விரைவிலேயே வாசகன் அதற்கு உளம்பழகி பின்பு சலித்துவிடுவான். இந்நாவலில் அது நிகழ்கிறது.
இ. அனுபவத்தின் துளியில் இருந்தே எந்த கலைப்படைப்பும் முளைத்தெழமுடியும். இந்நாவலின் பல பகுதிகள் உருவாக்கப்பட்டவை. அதிர்ச்சியோ திகைப்போ அளிக்கும்பொருட்டு. உதாரணமாக புனிதாவை சுந்தர் சந்திக்கும் காட்சியைச் சொல்லலாம்
ஈ. இந்நாவலில் கதாபாத்திரங்களின் பெயர்கள், நிகழ்வுகள் வருகின்றன. குணச்சித்திரங்கள் செதுக்கப்படவில்லை. வெறும் முகங்களாகவே எஞ்சுகிறார்கள். கதாபாத்திரங்களின் அன்றாடவாழ்க்கை நம்பகமாகச் சித்தரிக்கப்படுகையிலேயே அவர்கள் நாமறிந்த மனிதர்களாக நம்முள் பதிகிறார்கள். மதுக்கடையில் குடித்துவிட்டு “ஒரு மசுத்துக்கும் ஏறலை” என்று சொல்லிச்செல்லும் ஜி.நாகராஜனின் கதாபாத்திரம் ஒரே வரியில் நாமறிந்தவராக ஆவது அவ்வாறுதான்.
வாதி- நாராயணி கண்ணகி
ஜோலார்ப்பேட்டை பகுதியில் ஐம்பதாண்டுகளுக்கு முன் இருந்த ஜமீன்தார் ஆதிக்கம், அதை எதிர்த்து போராடிய அக்கால நக்சலைட் இயக்கத்தவர், அவர்கள் மேல் போலீஸாரின் அடக்குமுறை ஆகியவற்றை இன்றும் உயிர்வாழும் எஞ்சிய ஒருவர் நினைவுகூரும் முறையில் எழுதப்பட்ட நாவல். அன்று மூவரை கொலைசெய்துவிட்டு காணாமலான ராமலிங்கம் என்பவரை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. அவரைப்பற்றி விசாரிக்கிறது. விசாரணைக்கு உள்ளாகிறவரின்நினைவுகள் கொப்பளித்து எழுந்து இந்நாவலாகின்றன
எழுதப்படாத ஒரு நிலம், எழுதப்படாத ஒரு வாழ்க்கைச்சூழல். அது இந்நாவலை ஆர்வத்துக்குரியதாக ஆக்குகிறது. ஆனால் மிக மேலோட்டமாகவே இந்நாவல் அதைச் சொல்லிச்செல்கிறது. அந்நிலத்தின் காட்சிச்சித்திரம் விரிவதில்லை. நினைவில் விரியும் தொடர்நிகழ்வுகள் வழியாகவே நாவல் செல்கிறது.
ஜமீன்தார் அடக்குமுறைக்காலம் என நாவல் சொல்கிறது. சித்தரிப்புகள் சுதந்திரத்திற்கு முந்தைய காலம்போல் தோன்றுகின்றன. நக்சலைட் எழுச்சி எழுபதுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. தமிழகத்தில் 1970களில் ஜமீன்தார் முறைக்கு அதிகாரம் இல்லை. அதன் அடிப்படை ஒழிக்கப்பட்டுவிட்டது. நிலம்சார்ந்த அதிகாரமும் இல்லை.ஏனென்றால் வேளாண்மையை மட்டுமே சார்ந்து ஆதிக்கம் இருக்கமுடியாத நிலை உருவாகி விட்டது.
அரிதாக சில நிலப்பகுதிகளில் அப்படி ஓர் ஆதிக்கம் இருந்திருக்கலாம். ஆனால் ஜோலார்ப்பேட்டை பகுதி அப்படி இருந்தது என்பதற்கான சித்திரமோ, அதற்கான சூழலோ இந்நாவலில் இல்லை. பெண்களை வயசுக்கு வந்ததும் சடங்குசெய்து ஜமீன்தார்கள் புணர்வதற்காக ஊராரே கொண்டு சென்று விடுவது எல்லாம் எழுபதுகளில் இருந்தமைக்கான பண்பாட்டுச் சான்று தமிழகத்தில் இல்லை. அவை கற்பனைகளில் வாழும் நிகழ்வுகள்.
அந்த ஜமீன்தார் எந்த சாதி, அவர்களின் பண்பாட்டுச்சூழல் என்ன, ஆதிக்கத்தின் வரலாறும் வலைப்பின்னலும் என்ன , அவருடைய அரசியல் என்ன எதுவுமே இந்நாவலில் இல்லை. அந்த மக்கள் மேல் அவருடைய பாலியல் சார்ந்த ஆதிக்கமே பெரும்பாலும் சொல்லப்படுகிறது. அவர் ஒரு வழக்கமான சினிமாவில்லன் போலவே காட்டப்படுகிறார். அதேபோலவே வீட்டில் நிர்வாணநடனம் ஆடச்செய்கிறார். அதை வேடிக்கை பார்க்க காவலதிகாரிகள் செல்கிறார்கள்.
அதேபோல நக்சலைட்டுகள் பற்றிய செய்திகளும் மிக மேலோட்டமானவை. எந்த இயக்கம் அந்த போராட்டத்தை நடத்தியது, அவர்கள் எப்படி பரவினர், அவர்களின் வகுப்புகள் எப்படி நடந்தன எதுவுமே இதில் விளக்கப்படவில்லை. நக்சலைட்டுகளைப் பற்றிய பொதுவான மனச்சித்திரமே இதிலும் உள்ளது
இலக்கியத்துக்கு தேவை உள்ளுண்மைகள். அரிய உண்மைகள். பொதுப்புத்திக்கு அப்பால் செல்லும் அறிதல்களும் உணர்தல்களும். அவை இல்லாமல் திரைப்படம், வணிகக்கலைகள் வழியாக உருவாகும் பொதுவான பதிவுகளையே நம்பி எழுதபட்ட நாவல் இது.
3 உடல்வளர்த்தான் – அபுல் கலாம் ஆசாத்
உடற்பயிற்சி, உடல் வடிவமைப்பு சார்ந்த களம் இந்நாவலின் சிறப்பு. தமிழுக்குப் புதுமையானது. ஏராளமான நுண்தகவல்கள். உடல்வடிவமைப்பு பற்றிய செய்திகள் மட்டுமல்லாமல் சென்னையில் அதைச்சார்ந்து உருவாகியிருக்கும் ஒரு கலாச்சாரச் சூழலையும் இந்நாவல் நம்பகமாகச் சித்தரிக்கிறது.
எளிய நிலையில் இருக்கும் ஓர் ஆட்டோ ஓட்டுநர் [அப்துல் கரீம்] தன் உடலை வளர்ப்பதனூடாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆற்றலையும் அடைகிறான். உடலை வென்று உலகையும் வெல்கிறான். அவ்வகையில் ஒரு மனிதனின் வென்றுசெல்லுதலின் கதையும்கூட.
இந்நாவலின் குறைபாடுகளாக நான் காண்பவை இவை
அ.இது ஆசிரியர்கூற்றாக பல இடங்களில் ஒலிக்கிறது. அங்கெல்லாம் கதைப்புலத்துக்கு வெளியே நின்றுகொண்டிருக்கும் ஒருவர் செய்திகளை நம்மிடம் நேரடியாகச் சொல்லும் தன்மை வந்துவிடுகிறது. இது வடிவம்சார்ந்த கலைக்குறைபாடு. அப்துலின் பார்வையே நாவலின் கோணமாக அமைந்திருந்தால், அவன் அறிபவையே வாசகனுக்கும் அறியக்கிடைத்திருக்குமென்றால் இயல்பான ஒழுக்கும் கலையமைதியும் உருவாகியிருக்கும்.
ஆ.இந்நாவல் உடல்வளர்ப்பதன் சவால்களைப் பற்றிப் பேசும்போது அதன் பொதுவான புறவயச் சிக்கல்களைப் பற்றியெ பேசுகிறது. பணம் திரட்டுவது, போட்டிகளில் கலந்துகொள்வது போன்ற சவால்கள். அகச்சிக்கல்களைப் பற்றிப் பேசுவதில்லை. சமூகச்சிக்கல்களையும் எடுத்துப் பேசுவதில்லை.
உடலை வளர்க்கும்போது அப்துல் அகத்தே எப்படி மாறுகிறான்? அவனுடைய ஒவ்வொரு அன்றாடச்செயல்பாட்டிலும் அவனுடைய பார்வை எப்படி மாறுபடுகிறது? நான் பார்த்தவரை உடல்மீதான கூச்சம் இல்லாதவர்களாக அவர்கள் ஆவதுண்டு. எங்கும் சட்டையை கழற்றுவார்கள். தன் உடல்மேல் மோகம் கொண்டு கண்ணாடிகளில் எல்லாம் உடலை பார்த்தபடியே இருப்பார்கள். தன் உடல்மேல் கொண்ட மோகம் காரணமாக பெண்ணுடல் மேல் மோகம் குறைவதும் உண்டு. தன்னம்பிக்கை மிக்கவர்களாக, பிரச்சினைகளை உறுதியுடன் எதிர்கொள்ளத் தயாராகிறவர்களாகவும் அதே சமயம் தேவையற்ற பூசல்களை தவிர்க்கும் அமைதி கொண்டவர்களாகவும் ஆவதுண்டு. அந்த உலகம் இந்நாவலில் பேசப்பட்டிருக்கலாம்.
சமூகச்சிக்கல்களும் வெறுமே தொட்டுச் செல்லப்பட்டுள்ளன.இரண்டு இடங்களைச் சுட்டிக்காட்டலாம். உடல்வளர்த்து அதை வெளிக்காட்டுவது பற்றிய இஸ்லாம் மதத்தின் எதிர்நிலை. அதை தத்துவார்த்தமாக எதிர்கொள்ளாமல் தொட்டுவிட்டு மேலே செல்கிறது நாவல். [இஸ்லாமின் ஹதீஸ்களின் படி கேளிக்கைக்காக உடலைக் காட்டுவது ஹராம். உடலை வளர்த்து வலுப்பெறச் செய்வது ஹராம் அல்ல, கடமை. இந்த முரண்பாடு சுவாரசியமானது].
உடல்வளர்ப்பவனை உடனே குற்றச்செயல்களுடன் சம்பந்தப்படுத்தும் நம் சமூக மனநிலையையும் விரிவான குற்றவிவரணையுடன் சொல்லவந்து அப்படியே கடந்து செல்கிறது. நம்மூரில் உடல்வளர்ப்பவர்களின் முதன்மை எதிரியே காவல்துறைதான்.
நம் சமூகம் உடலை எப்படி பார்க்கிறது என்பதை இந்நாவல் பேசியிருக்கலாம். நம் சமூகம் உடலை ஒருவகை சுமையாகவே எண்ணுகிறது. ‘கட்டை’ போன்ற சொற்களை உடலைச் சொல்ல பயன்படுத்துகிறது. மேலைச்சமூகம் உடல்வழிபாட்டுத் தன்மை கொண்டது. இந்தியச் சமூகம் உடல்மறுப்புத் தன்மை கொண்டது. இது உடல்செதுக்கும் கலையை அணுகும்போது அடையும் தத்துவார்த்தமான சிக்கல்கள் என்ன, உளவியல் சிக்கல்கள் என்ன என்று இந்நாவல் பேசியிருக்கலாம்.
இ. எந்நாவலும் ஆழத்தை சென்றடைவது பேசுபொருளை குறியீட்டுரீதியாக விரித்துக்கொண்டு அடிப்படைப் பிரச்சினைகளைச் சென்று தொடும்போதே. வாசகன் எழுதப்பட்ட நாவலில் இருந்து மேலும் மேலும் விரிந்து செல்ல அதுவே வழிவகுக்கிறது. உடல்வளர்த்தல் இதில் நேரடியாகவே பேசப்படுகிறது. மேலதிக குறியீட்டுப்பொருளை அடையவில்லை.
உடல் அப்துல் கரீமுக்கு காலப்போக்கில் என்னவாக பொருள் படுகிறது? உடலாகவே தன்னை அவன் எண்ணிக்கொள்வதன் ஆன்மிகச்சிக்கல்கள் என்ன? அந்த உடல் தவிர்க்க முடியாமல் முதுமை அடைகிறது. செதுக்கிய சிற்பம் பார்த்திருக்கவே அழிகிறது. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான்? அவன் உருவாக்கும் கலை மணலில் சிற்பம் உருவாக்குவதுபோன்றது. நிலையற்றது. அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான்?
அப்துல் தேடிக்கொண்டே இருக்கும் அந்த ‘இலட்சிய மனித உடல்’ எப்படி அவனை இழுத்துச்செல்கிறது? மானுட குலம் ஒட்டுமொத்தமாக அந்த இலட்சிய மானுட உடலை தேடிச்சென்றுகொண்டே இருக்கிறதே, அது உண்மையில் எங்குள்ளது? எத்தனையோ கேள்விகளை நோக்கி நாவல் நகர்ந்திருக்கலாம் என்பது வாசக எதிர்பார்ப்பு.
ஒரு புதிய களத்தை நம்பகமான செய்திகள் வழியாகச் சொல்வதனால் நல்ல நாவலாக அமைந்துள்ளது உடல்வடித்தான்.
அல்கொஸாமா- கனகராஜ் பாலசுப்ரமணியம்
இந்நாவலின் முதன்மைச்சிறப்பு இது இதுவரை தமிழில் எழுதப்படாத ஒரு களத்தை சித்தரிக்கிறது என்பது. அரபுப் பழங்குடிகளின் பாலைவன வாழ்க்கையின் நுண்விவரணைகள், அவர்களின்இனப்பெருமை மனநிலை, அதன் விளைவான பூசல்கள், பண்பாட்டுக்குறிப்புகள் ஆகியவை செறிவாக இணைந்து இதை குறிப்பிடத்தக்க படைப்பாக ஆக்குகின்றன.
அத்துடன் இந்நாவல் வெறும் வாழ்க்கைச் சித்தரிப்பாக இல்லை. இதில் உள்ள மாயத்தன்மையே இதன் கலைச்சிறப்பு. கவிதை வழியாக தாங்கள் வாழும் பாலைவனநிலத்தில் இருந்து ஜின்னுகள் வாழும் பிறிதொரு நிலத்திற்குச் சென்று உலவி மீள்கிறார்கள் அப்பழங்குடிகள். கனவுகளின் பிறிதொரு பாதை அங்கே வந்து இணைகிறது. அங்கே இங்குள்ள உலகம் உருமாறி தோற்றம் கொள்கிறது.
நாவலின் மையம் திரள்வது அம்மக்களின் வாழ்க்கையில் அல்ல, வாழ்க்கைக்கு அப்பாலிருக்கும் அவர்களின் அகவுலகில், கனவுலகில் என்பதுதான் இந்நாவலை தனிச்சிறப்பு கொண்டதாக ஆக்குகிறது.
இந்த அகவயத்தன்மைக்கு உகந்த ஒரு வடிவையும் இந்நாவல் அடைந்துள்ளது. பதூவிக்களின் சென்றகாலக் கதைகள் நிகழ்கால கதைமாந்தருக்குள் ஊடுருவுகின்றன. தமிழ்நாட்டு கூலிப்பணியாளர்களின் வாழ்க்கையும் அரபு நாடோடிகளின் வாழ்க்கையும் ஒன்றையொன்று தொட்டு பின்னிச் செல்கின்றன. கனவுகளும் யதார்த்தமும் முயங்குகிறது.
இந்நாவலின் கலைக்குறைபாடுகள் என சிலவற்றைச் சொல்லலாம்
அ. உரையாடல்கள் சீராக இல்லை. அராபியர் பேசும் மொழியே சட்டென்று தமிழ் வட்டாரவழக்கின் சாயல் கொள்கிறது.
ஆ. அவ்வப்போது தொடர்பில்லாமல் ஆசிரியர் குரல் ஊடாடுகிறது. ‘இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்ட’ என்று ஆசிரியர் சொல்கிறார். இந்நாவல் மெட்டாஃபிக்ஷன் தன்மை கொண்டது அல்ல என்னும்போது அது ஒரு பிசிறடித்தல்தான்.
ஆ. இத்தகைய நாவல்கள் முற்றிலும் அன்னியர்களான வாசகர்கள் முன் அவர்களின் வாழ்க்கையே என நிகழவேண்டும். அதற்கு இரண்டு வழிகள். ஒன்று, அந்நிலத்தையும் மக்களையும் காட்சிவடிவமாக கண்முன் காட்டுதல். இரண்டு, கதைத்தொகுதித்தன்மையை அளித்தல். [fable, parable போன்றவை]. இந்நாவல் வெறுமே நிகழ்வுகளைச் சொல்லிச் செல்கிறது. அது வாசகனுக்கு தனக்கான நிகர்வாழ்க்கையனுபவமென மாறாமல் வெறுமே ‘சொல்லப்பட்டதாகவே’ நாவலை நிறுத்திவிடுகிறது
இ.அனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு. இந்த வகையான வடிவம் கவித்துவத்தின் வல்லமையால் நிலைகொள்ளவேண்டிய ஒன்று. இந்நாவலில் அந்த தன்னெழுச்சியான கவித்துவம் நிகழ்ந்திருக்கவேண்டும். அது நிகழாமையால் ஒருவகை பயிற்சியெனவே நின்றுவிடுகிறது.அனைத்துக்கும் அப்பால் இது முக்கியமான ஓர் இலக்கிய முயற்சி.
மூத்த அகதி – வாசு முருகவேல்
ஒரு வாழ்க்கைச்சூழலை மட்டும் சொல்லி, பிற அனைத்தையும் வாசகனே ஊகிக்கவும் விரிவாக்கவும் வைத்துவிட்டு நின்றுவிடும் நவீனத்துவபாணி நாவல் இது. ஈழத்துக்கான விடுதலைப்போராட்டம் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சென்னையில் வந்து தங்கியிருக்கும் அகதிகளின் வாழ்க்கையின் சித்திரம். ஒரு கொத்து மனிதர்கள். அவர்களின் உறவுகள். ஒவ்வொருவரும் இன்னொருவருடன் மெல்ல தொட்டு உரசி விலகி தொட்டுக்கொள்கிறார்கள். அவர்களுக்குமேல் என அரசியலின் ஒழுக்கு. ஒரு கொலை. அவ்வளவுதான்.
இந்நாவலின் கலைவெற்றி என்பது இது நேரடியாக வாழ்க்கையை தன் ஊற்றுமுகமாகக் கொண்டுள்ளது என்பதே. பிற எழுத்துக்களில் இருந்து, இலக்கிய அலைகளில் இருந்து, அரசியல்கொள்கைகளில் இருந்து எழுத்து உருவாக்கப்படுவதற்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு.எத்தனை போதாமைகள் இருந்தாலும் நேரடியாக இத்தகைய எழுத்து வாசகனை ஒரு வாழ்க்கைக்குள் இட்டுச்செல்கிறது.
இலக்கியம் ஏன் எழுதப்படவேண்டும் என்னும் கேள்விக்கு விடையென முதலில் அமைவது இலக்கியம் மட்டுமே முன்வைக்கும் பிறிதொன்றிலாத பார்வைக்காக என்பது. பொதுப்புத்தியாலோ, அரசியலாலோ அளிக்கப்படும் சித்திரங்களை திரும்பவும் அளிக்க இலக்கியம் தேவையில்லை.ஆகவே எத்தனை இலக்கிய அழகியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இலக்கியம் வாழ்க்கை சார்ந்த நுண்சித்தரிப்புகள் மற்றும் ஒட்டுமொத்த பார்வை வழியாகவே அர்த்தம் கொள்கிறது.
இந்நாவலில் ஒட்டுமொத்தப்பார்வை இல்லை. ஆனால் நுண்சித்திரங்கள் நிறைந்து நாவலை ஆர்வமூட்டும் வாசிப்பு கொண்டவையாக ஆக்குகின்றன. நவீனத்துவ உள்ளம் வாழ்க்கையின் துயரங்களைக்கூட தன்னிடமிருந்து சற்று விலக்கிப் பார்க்கிறது. விலக்கப்படுவன அனைத்தும் வேடிக்கையாகிவிடுகின்றன. இந்நாவலில் மெல்லிய குரலில் ஒலித்துக்கொண்டே இருக்கும் பகடிதான் இதை கலைப்படைப்பாக ஆக்குகிறது
ஆனால் அந்தப்பகடி ஆசிரியர் குரலாக அல்லது பார்வையாக வெளிப்படவில்லை. பெரும்பாலும் எங்கோ எவரிடமோ வெளிப்படும் ஒற்றைக்குரலாக ஒலிக்கிறது. கல்யாணப்புகைப்படம் எடுப்பவர் “இப்ப எல்லாம் மூன்றுமுடிச்சு இல்லதானே?” என உறுதிப்படுத்திக்கொள்கையில், “கொஞ்சம் நேச்சுரலா இருங்க தங்கச்சி, உன்ர மனுசன்தானே?” என்று ஊக்கப்படுத்துகையில் “கீழ வாறியளா, இல்ல அம்மாவுடன் நான் மேலே வரவா?” என புதுப்பெண் “ஸ்பொன்ஸர்’ செய்யும் கணவனை மிரட்டுகையில் சட் சட்டென்று முகங்கள் நம் முன் மின்னிச்செல்கின்றன. சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் கதைகளின் அழகியல்பு இது. கலையால் மட்டுமே பொருட்படுத்தப்படும் பெயரிலா எளிய மானுடர் அவர்கள்.
அகதி வாழ்க்கையின் முக்கியமான சிக்கல் என வாசு முருகவேல் இங்கே காட்டுவது சம்பந்தமே இல்லாமல் பண்பாடுகள் கலந்து திரிபடைந்து ஒரு கேலிக்கூத்து நிலையை அடைவதைத்தான். ஓர் ஊரில், ஒரு நிலத்தில் உருவாகி நிலைகொண்ட பண்பாடு முற்றிலும் சம்பந்தமற்ற நிலத்தில் அபத்தமாக வந்து நிற்கிறது.
ஏனென்றால் எந்தப் போரிலும் மானுடர் வாழ்ந்தாகவேண்டும். புலம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, அங்கே குடியுரிமை பெற்று, நாற்பது வயதுக்குமேல் உள்ளூர் அகதிகளுக்கு பிரெஞ்சு ஒயின் ‘போத்தல்’களுடன் சென்னைக்கு வந்து, இங்கே அகதிப்பெண்ணை திருமணம் செய்து ஸ்பான்சர் செய்து கூட்டிச்செல்ல வேண்டும். அவள் தன் குடும்பத்தையே கூட்டிச்செல்ல முயல்வாள்.
அந்த திருமணங்களை இங்கே நாடக ஒழுங்குடன் செய்துவைக்கும் அமைப்பு உருவாகிறது. பலநூறு திருமணங்களில் ஒரே அப்பா வந்து நின்று சட்டத்தையும் வரலாற்றையும் காமிராவையும் நோக்கிப் புன்னகைக்கிறார். வரலாறு புகைப்படங்களின் அடிப்படையில் எழுதப்படுமென்றால் ஒரு பின்நவீனத்துவ பைத்தியக்கார வரலாறு எழுதப்படும்.
”கனம் போலீஸ் ஐயா அவர்களுக்கு” என பணிந்து போலீஸாருக்கு கடிதம் எழுதி மாதாமாதம் சென்னையில் தங்கும் அனுமதி பெறப்படுகிறது. திரும்பத்திரும்ப எம்ஜியார் நகர், திநகர் என சென்னையின் சிக்கலான பரமபத தெருக்களில் அலைச்சல். இதன் நடுவே ஊமைக்காமம். போரே திரிபடைந்துவிடுகிறது. எந்தப்போதையிலும்”புலி ஏண்டா உன்னை அடிச்சது?” என்று கேட்டால் போதை இறங்கிவிடுகிறது.
”திருமணம் ஆகவில்லை ரிஜிஸ்ட்ரேஷன் ஆகியிருக்கிறது” என்கிறது ஒரு கதாபாத்திரம். இரண்டுக்கும் நடுவே “பாரிய” வேறுபாடு இருக்கிறது. ஏனென்றால் பெண் தொடப்படாமல் கனடாவில் இருக்கிறாள். சுற்றிச்சுற்றி இந்த அபத்தவுலகுக்குள் அலையும் கதை சென்னையின் நான்கு தெருக்களில் வழியறியாமல் திகைத்து, ஒருகட்டத்தில் அந்த அபத்தத்தை எண்ணி நாமே சிரித்துக்கொள்ளும் அனுபவத்தை அளிக்கிறது.
நுண்சித்தரிப்புகளே இந்நாவலின் ஆற்றலை உருவாக்குகின்றன. “தோசையைப்போல முகமெங்கும் துவாரங்கள்” என்னும் இயல்பான வர்ணனை. “ஒரு மயிர் கொட்டேல்ல பாரும். காலையிலே வெந்தயம் வெறுந்தண்ணியிலே போட்டு விழுங்கோணும்” என அரைப்போதையில் சலம்பிக்கொள்பவரின் வீராப்பின் அசட்டுத்தனம். புன்னகையும் கசப்புமாக படித்து முடிக்கவேண்டிய ஒருநாவல் இது.
திரிபின் கதை என இதைச் சொல்லலாம். அகதிவாழ்க்கைக்குள்ளும் என்ன ஏது என தெரியாத அரசியல். தொடர்ந்து ஒரு படுகொலை. அதன்பின் போஸ்டரை பார்க்கும் ஈழ அகதி “இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கேட்போம்” என்ற வாசகத்தை வாசித்து “ஈழ இனப்படுகொலைக்கு” என்றல்லவா இருந்திருக்கவேண்டும் என, பெரிய அக்கறை ஏதும் இல்லாமல், நினைத்துக்கொள்கிறான். கண்ணெதிரே அந்த வரலாற்றையும் காலம் திரித்துவிட்டது.
இந்நாவலின் குறைபாடு என நான் எண்ணுவது முதன்மையாக பல அத்தியாயங்கள் முழுமையான ஒரு புனைவுப்பகுதியாக இல்லாமல் சிறிய காட்சிச்சித்தரிப்புகளாக, விவரணைத் துண்டுகளாக நிலைகொள்வதுதான். நாவல் ஒட்டுமொத்தமாக ஒரு கலைப்படைப்பு. ஆனால் எந்த நல்ல கலைப்படைப்பிலும் அதன் ஒவ்வொரு துண்டும் தனியான கலைப்படைப்பும்கூடத்தான். முழுமையடையாத ஓர் அத்தியாயம் வாசகனில் எந்த ஆழ்ந்த பதிவையும் உருவாக்காமல் கடந்து செல்லும்.
போதாமை என நான் எண்ணுவது, இது அகதிவாழ்க்கையின் அபத்தத்தை, பண்பாட்டு திரிபுநிலைகளை சொல்லிச் செல்லும்போதே ஒட்டுமொத்த வரலாற்றைப் பார்க்கும் பார்வையை நோக்கிச் செல்லவில்லை என்பது. வரலாறெங்கும் மானுடர் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு கணக்கில் அத்தனை மானுடரும் இடம்பெயர்ந்து குடியேறிய அகதிகளே. ஓடும் நதி ஆங்காங்கே தேங்கி கொஞ்சநாளுக்கு குளம் என ஆவதுபோலத்தான் நிலைத்த பண்பாடுகளும். தமிழ் மக்களில் ஒரு பெரும்பகுதியினர் இன்று நகரங்களுக்கு குடியேறுகிறார்கள். நகரங்களில் இருந்து ஐரோப்பாவுக்குச் செல்கிறார்கள். இந்த பெயர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
புகழ்பெற்ற மலையாள ஆசிரியர் ஆனந்த் எழுதிய அபயார்த்திகள் [அகதிகள்] என்னும் நாவல் மானுட இனத்தையே அவ்வாறு அடையாளப்படுத்துகிறது. தேசம், நிலம், பண்பாடு எல்லாமே மானுடர் எனும் அகதிகள் ஆங்காங்கே தங்குமிடங்களில் உருவாக்கிக்கொள்ளும் தன்னடையாளங்கள், அல்லது பாவனைகள் மட்டுமே என்கிறது.
இது ஒரு பார்வை மட்டுமே. ஆனால் இத்தகைய வரலாற்றுப்பார்வை, தத்துவப்பார்வை ஒரு நாவலில் வாசகனால் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய போதாமையால் இந்நாவல் கலைரீதியாக சற்று பழையதாக உள்ளது, ஆனால் நேர்மையான வாழ்க்கைப்பதிவு என முக்கியமானது.
*
இந்நாவல்களை நான் வாசித்த தரவரிசைப்படி அடுக்கியிருக்கிறேன். முதற் பரிசுக்குரிய நாவலாக வாசு முருகவேலின் மூத்த அகதியை தெரிவுசெய்கிறேன். இரண்டாமிடம், ஏறத்தாழ அதற்கிணையான இடத்தில் அல் கொசாமா. மூன்றாமிடம் உடல் வளர்த்தான்.
மற்ற ஆசிரியர்களுக்கும் என் வாழ்த்துக்கள். இலக்கியத்தில் சற்றும் உளம்சலிக்காத முயற்சிகளுக்கே வெற்றிகள் அமைகின்றன. அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டுமென விழைகிறேன்.
ஒற்றை சம்பவம்- ஜா.தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா
நாதன் கிடத்தப்பட்டிருந்தான். மணிமாலா நாதனின் தலைமாட்டில் அமரவைக்கப்பட்டாள். அவளருகில் உட்காரத் தயங்கியோ விரும்பாமலோ இருவர் நகர்ந்து அமர்ந்தனர். மணிமாலாவுக்கு அவர்களை யாரென்று அறிந்து கொள்ளும் விருப்பமில்லை. வெறித்த பார்வை தான் எத்தனை வசதி என்று மணிமாலா அன்று உணர்ந்தாள். அவள் முன்பாக நடக்கும் சங்கதிகளை அவள் விரும்பாமலேயே கேட்டபடி இருந்தாள்.
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
இலக்கியத்தின் விலை -கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். இலக்கியத்தை விலைபேசுதல் கட்டுரையையும் அதற்கான எதிர்வினையையும் வாசித்தேன். நீங்கள் இவ்வளவு அழுத்தமாகப் பேசியிருப்பதை எண்ணி நெகிழ்ந்துவிட்டேன். என்னைத் திரட்டிக்கொண்டு எழுத சற்று நேரம் தேவைப்பட்டது. உங்கள் சொற்கள் எனக்கு மிகுந்த பலம் கொடுப்பவை. அமேசான் கணக்கு முடக்கப்பட்டது குறித்து அறிந்ததும் நண்பர்கள் பலரும் பேசினார்கள்.
துரதிர்ஷ்டவசமான இந்த நிகழ்வை நினைக்கும்போது சற்று சோர்வாகத்தான் இருக்கும். அழிக்கப்பட்ட அந்த ஐநூறு நூல்களில் லா. ச. ரா., க. நா.சு., பிச்சமூர்த்தி போன்ற சிலரின் பெரும்பாலான படைப்புகள் இருந்தன. ஆசையுடன் வெளியிட்ட ஆரோக்கிய நிகேதனம், அக்னி நதி நாவல்கள் இருந்தன. அக்கறையுடன் கேட்பவர்களுக்கு இந்தச் செய்தியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பதிலும் கொஞ்சம் சலிப்பு ஏற்படுகிறது. அதிலிருந்து மீள உங்கள் எழுத்து உதவுகிறது.
இன்னும் செய்வதற்கு வேறு பணிகள் இருப்பதால் அவற்றில் கவனம் செலுத்துகிறேன். உங்களுக்கும், உங்கள் கட்டுரையைத் தனது தளத்தில் பகிர்ந்திருக்கும் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கும், தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு ஆதரவாகப் பேசிய எழுத்தாளர்கள் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் என் ஆத்மார்த்தமான நன்றியை உரித்தாக்குகிறேன்.
அன்புடன்
ஶ்ரீநிவாச கோபாலன்
அன்புள்ள ஜெ
ஸ்ரீனிவாச கோபாலன் இணையவெளியில் சேர்த்து இலவசமாக அளித்த கிட்டத்தட்ட ஐநூறு நூல்கள் மிகப்பெரிய பொக்கிஷம். மிகப்பெரிய அறிவுத்துறை உழைப்பு. எந்த பயனும், நிதிக்கொடையும் இல்லாத பணி. அந்த நூல்பொக்கிஷம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட்டுள்ளது.
முதல் முறை நூல்கள் அழிக்கப்பட்டது பற்றி எழுதியிருந்தீர்கள். அப்போது இலவச பிடிஎஃப் வெளியிடும் ஏதோ கூட்டத்தின் செயல்பாடாக இருக்கலாமென நினைப்பதாகச் சொன்னீர்கள். இப்போது பேராசிரியரால் நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இப்போது எனக்கு இந்த நாசவேலை நம் அக்கடமிக்குகளால் செய்யப்படுகிறது என தோன்றுகிறது. இவர்கள் இந்த நூல்களை ‘கண்டுபிடிப்பது’ ‘பதிப்பிப்பது’ என பெரிய பிராஜக்டுகளை தயாரித்து யூஜிஸிக்கும் வெளிநாட்டுப் பல்கலைகளுக்கும் அளித்து பெரும்பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாம் பெரிய வேலைகள் இல்லை. டிஜிட்டலைஸ் செய்யப்படுந்தோறும் வேலை இன்னும் இல்லாமலாகிறது. ஆகவே தனியார் இதைச் செய்வதை இவர்கள் விரும்புவதில்லை.
ரமேஷ் ராம்
அன்புள்ள ஜெ,
இலக்கியத்தின் விலை கட்டுரை வாசித்தேன். அதைக் கண்டதும் இணையத்தில் சூடான விவாதம் வெடிக்கப்போகிறது என நினைத்தேன். ஒன்றுமே இல்லை. இல்லாத காரணங்களை எல்லாம் கற்பித்துக்கொண்டு, வரிகளை திரித்துப் பொருள்கொண்டு பொங்கிப்புகைபவர்கள் எல்லாம் சும்மாவே இருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. நமக்கு நூல்களில் இருக்கும் ஆர்வம் இத்தனைதானா என எண்ணிக்கொண்டேன்.
ராஜ்குமார்
அன்புள்ள ராஜ்,
இந்த விஷயத்தில் எனக்கு எதிராக ஒன்றும் சொல்ல முடியாது, எவ்வகையிலும் திரித்து அறச்சீற்றம் அடையமுடியாது, ஆகவே சும்மா இருக்கிறார்கள். எனக்கு எதிராக கொண்டுகூட்டிப் பொருள்கொண்டு எதையாவது சொல்ல முடிந்திருந்தால்கூட அறப்புகை கிளம்ப ஆரம்பித்திருக்கும்.
ஆனால் போலி பெயர்களில் இருந்து அழிசி ஸ்ரீனிவாசனை வசைபாடி மின்னஞ்சல்கள் வருகின்றன. ஏதோ ஒரு கண்காணா கும்பல் வலுவாக வேலைசெய்கிறது. அவர்கள் இந்த இலவச நூல் வலையேற்றத்தை வளர விடமாட்டார்கள். எவருடைய லாபமோ அதில் உள்ளடங்கியிருக்கிறது.
ஜெ
இலக்கியத்தின் விலை – கடிதங்கள்இரு கடிதங்கள்
வடிவமைப்பு கீதா செந்தில்குமார்அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
மிகவும் சிறந்த, புகழ்பெற்ற ஒரு எழுத்தாளரை சந்தித்துப் பேசும்பொழுது எந்த மாதிரியான உணர்வுகள் இருக்கும், எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும், அவருக்கு நம்மைப் பற்றிய பிம்பம் என்னவாக இருக்கும் என்று பல முறை சிந்தித்து விட்டு தங்களுக்கு அருகில் வந்து பேசுவதை தவிர்த்திருக்கிறேன்.
ஆனால் நேற்று கோவையில் கவிஞர் புவியரசு அவர்களுக்காக நடந்த பாராட்டு விழாவில் தங்களை முதல் முறை சந்தித்த பொழுது ஏற்பட்ட அனுபவம் எப்படிப்பட்டது என்பதை விளக்க முடியுமா என்று தெரியவில்லை.
ஆசிரியர் ஒருவர் தனக்குப் பிடித்த மாணவனைத் தோள் சேர்த்து ” என்னப்பா நல்லா இருக்கியா, என்ன பண்ணிட்டு இருக்கே” என்று கேட்பதுபோல, ஏற்கனவே நாம் பலமுறை சந்தித்து பேசியவர்கள் போல இருந்தது உங்களுடனான எனது சந்திப்பு.
மிகவும் மென்மையான மேன்மையான ஒரு சந்திப்பு என்று தோன்றியது. மனதை லேசாக்கக் கூடிய ஒரு போதை என்று கூட சொல்லலாம்.
முதல்முறை சந்தித்துப் பேசிவிட்டு சிறிது நேரம் கழித்து நீங்கள் பலரை சந்தித்தபின் நான் உங்களிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்க வரும்போது எனது பெயரை நினைவில் வைத்து தாங்கள் எழுத ஆரம்பித்தது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
யார் தங்களிடம் பேசினாலும் அதைக் கவனமாகக் கேட்டு பதில் அளித்தது, அனைவரிடமும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டது, எந்த ஒரு பரபரப்பும் இன்றி அமைதியாக அனைவரையும் அணுகியது, முக்கியமாக நான் கேட்ட கேள்விகளுக்கு அதை உடனே உள்வாங்கிக் கொண்டு உறுதியான பதிலைக் கொடுத்தது ஆகிய அனைத்தும் எனக்கு ஒரு புது அனுபவமாகத்தான் இருந்தது.
என்னுடன் வந்த எனது சக ஆசிரியர்கூட நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு நீங்கள் இன்னும் ஜெயமோகனை விட்டு மீண்டு வரவில்லை என்று கூறினார்.
அவர் கூறியதும் உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் நான் அதிலிருந்து மீண்டு வர விரும்பவில்லை.
ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்ற சுயத்தையும் ஆன்மீகத்தையும் தேடி விழிப்புணர்வு பெற்றவர்கள் பட்டியலில் எதிர்காலத்தில் நீங்களும் இருப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை.
இது தங்களை மட்டுமே படித்து தங்களின் மீது உள்ள ஈர்ப்பினால் எழுதியது அல்ல. பல எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்துவிட்டு, ஜே கிருஷ்ணமூர்த்தி ஓஷோ ஆகியோரது ஆன்மீக சிந்தனைகளை தெரிந்துகொண்டு, இந்து மதத்தின் பிரிவுகளையும் வேர்களையும் புரிந்து கொண்டு, புத்தம், வைணவம், கிருத்தவம் மற்றும் இசுலாம் ஆகியவற்றை ஓரளவு அறிந்து கொண்டும் தான் பேசுகிறேன்.
இதை படிப்பவர்களுக்கு நான் உங்களை மிகவும் புகழ்ந்து பேசுவதாக தோன்றலாம். ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. எனது அனுபவத்தை வைத்து எனக்குத் தோன்றியதை நான் எழுதியுள்ளேன்.
எது எப்படி இருந்தாலும் தங்களுடனான முதல் சந்திப்பின் அனுபவம் உற்ற நண்பனை, பிடித்த ஆசிரியரை நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கும்போது ஏற்படும் உணர்வை, மகிழ்ச்சியை கொடுத்தது. நீங்கள் எனக்கு மிக நெருக்கமானவர் என்ற உணர்வை கொடுத்தது.
நன்றி
சூரியகாந்தி சதீஸ்குமார்
வடிவமைப்பு கீதா செந்தில்குமார்அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
இது தங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் எழுதும் கடிதமாக எடுத்துக்கொள்ளுங்கள். தளத்தில் பிரசுரிக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் தொடர்கிறேன்.
இன்று உங்கள் தளத்தில் தங்களுக்கு நான் அனுப்பிய கடிதத்தை ‘புறப்பாடு, கடிதம்’ என்று பிரசுரித்து உள்ளீர்கள். அந்தக் கடிதம் அனுப்பிய அதே நாள் நான் ‘சுவாமி ஆனந்த்’ அவர்களை தொடர்பு கொண்டேன். அந்த வார இறுதியில் திருவண்ணாமலைக்கு சென்று அவரை நேரில் சந்திக்கவும் செய்தேன். இரண்டு மணி நேர உரையாடலுக்குப் பின் பல தெளிவுகள் எனக்கு கிடைத்தது.
அவர் ‘நீங்கள் வெண்முரசு கட்டாயம் வாசிக்க வேண்டும்’ என்று என்னிடம் தற்செயலாக சொல்ல, அதை ஆப்த வாக்கியம் போல் மனதில் நிறுத்திக்கொண்டேன். அன்று தொடங்கி கடந்த மூன்று மாதங்களாக வெண்முரசை வரிசையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது ‘வெய்யோன்’ தொடங்கியுள்ளேன். மிக உன்னதமான ஒரு செயல் செய்யும் அக நிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
கூடவே உங்கள் தளத்தையும் தினமும் பார்க்கிறேன். எனக்கு எல்லாமும் நீங்களாக மாறி விட்டீர்கள். மெய்யியல் சார்ந்த தெளிவும் ஆன்மிகத்தில் சரியான புரிதலும் அடைந்துள்ளேன் என்று மிக நிச்சயமாக சொல்ல முடியும். என் வாழ்க்கை எங்கேயேனும் தொடங்குகிறது என்றால் அந்தத் தொடக்கத்தின் விதையின் பெயர் ‘ஜெ’. இந்த மண்ணால் ஆன மூளைக்குள் உரமாக ஊடுருவுகிறது உங்கள் எழுத்துக்கள். விளைவாக முளைவிட்ட பல திறப்புகள். வேறு எப்படியும் இதை சொல்ல இயலவில்லை.
உங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள எனக்கு எட்டு மாதங்கள் ஆகியது. பிற ஆங்கிலம் மற்றும் தமிழ் புத்தகங்கள் வழியாக நான் அதுவரை வந்து அடைந்த சிற்றறிவுன் (அறிவியல், தத்துவம், ஆன்மீகம் & வாழ்க்கை என்னும் கோணங்களில்) உங்கள் கருத்துக்களை பரீட்சித்துப் பார்த்தேன். எவ்வகையிலும் இந்த நவீன காலத்திற்கு ஏற்ற ஒரு முழுமையான ஆளுமையை தான் கண்டு அடைந்துள்ளோம் என்று உறுதியான ஒரு புள்ளிக்கு வந்தபின்பு உங்களை குருவாக ஏற்றுக் கொண்டேன். உங்களது பல சீடர்களில் ஒருவனாக நான் மாறி நான்கு மாதங்கள் ஆகிறது.
இதுதான் எனது கடந்த ஒரு வருடப் பயணம் ஆகும். அனேகமாக உங்களை சிறிதேனும் உள்வாங்க எனக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகலாம் என்று கணிக்கிறேன். உங்களது அனைத்து படைப்புகளும் வாசிக்க, உங்கள் தளத்தில் இருக்கும் கட்டுரைகளை வாசிக்க, உங்களை பாதித்த மற்றும் நீங்கள் சுட்டிக்காட்டும் பிற முக்கிய படைப்புகளை வாசிக்க இவ்வளவு காலம் கண்டிப்பாக எனக்கு தேவைப்படும்.
என்னை இந்த உன்னதமான பாதைக்கு திசை திருப்பியதற்கு
என்றென்றும் நன்றியுடன்,
விஜய் கிருஷ்ணா.
கார்கடல்- கடிதங்கள்
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெ
சிறுவயதில் சீட்டு கட்டுக்களை அடுக்கி வைத்து குலைத்து அழிப்பது மகிழ்ச்சி தான். அதை போல தான் மானுட வாழ்க்கையை நினைக்கின்றன போலும் தெய்வங்கள். இறப்பை போல வாழ்வை பொருளும் பொருளின்மையும் கொள்ள செய்யும் வேறு ஒன்று உண்டா ?
கார்கடலின் துரோணர் வீழ்ந்தாயிற்று. சென்று கொண்டிருக்கிறான் அஸ்வத்தாமன் நாரயணத்தை ஏவ. ஒவ்வொருவரும் தங்கள் உருமாறி சிதைந்து சிறகு விரித்து பிறிதொன்றாகி உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இறப்பின் உச்சியில் ஆழத்தில் எதுவோ அதுவாக வெளிப்படுகிறோம். இந்த போர் எனக்கு என்னில் விதையென அமைந்த வஞ்சத்தை, காமத்தை காட்டியுள்ளது. முற்றாக அறிந்து கொள்ள மீண்டும் ஒருமுறை இக்களத்திற்கு நான் வந்தாக வேண்டியுள்ளது என உணர்கிறேன். அது வாழ்க்கை நேரடியாக எனக்கு இன்னொரு கொடு சூழலை உருவாக்கி கையளிக்கையில் நிகழும்.
ஆம் இவை ஆணவத்தின் அறிவின்மையின் சொற்களாக இருக்கலாம். இளையோர் எப்போதும் அபிமன்யுக்கள் தான். சிக்கல்களை விரும்பி சென்று அழியும் விட்டில்கள். கோடிகளில் ஒன்று ஒளி கொண்டு விண்புகுகிறது. எனினும் மெய்மைக்கென வலி கொள்வது மகத்தானதே. வென்றாலும் வீழ்ந்தாலும் நன்றே.
காலையில் குண்டாசிக்கு எரிக்கடன் அளிக்கும் துரியோதனாக இருந்தேன். மெல்ல மெல்ல உணர்வுகளில் ஏறி சென்று இப்போது உள்ளத்தின் ஒருமுனை சேற்றில் நனைந்து படிந்த துணியென உள்ளது. இன்னொரு ஆழம் விழி மயங்கினால் போரில் எங்கோ உலவி கொண்டிருக்கிறது. மூன்றாவது புறங்களில் திகழ்கிறது.
கடலின் துளி நீர் உப்பை சுவைத்து அறிபவன் உய்த்து கொள்ள இயலும் மொத்தத்தை பெருக்கி கொள்ள இயலும். இந்த துளி வெறுமையை கொண்டு நேர் களத்தில் நீங்கள் அடைந்த வெறுமையை எண்ணி கொள்கிறேன். இந்த களத்தை தாண்டி செல்லும் எவரும் வெறுமையை கொண்டு செல்லாமல் ஆகாது. அதை நீங்கள் இனிமையாக்கி உள்ளீர்கள் என பிற கடந்தோர் கூற்று. ஆனால் ஒன்றுண்டு பெருவிசை கொண்டு எழாதோர் மகத்தான ஒன்றை இழக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஏதென்று சொல்ல தெரியவில்லை.
நீங்கள் நூறுகதைகள் எழுதியது இங்கிருந்து நோக்குகையில் வேறு ஒரு ஆழம்கொள்கிறது.
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள ஜெ
கார்கடல் வாசித்து முடித்தேன். மிக மெல்ல வெண்முரசின் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன்.2010ல் நியூயார்க்கில் ஒரு சிம்பனி நிகழ்வு. வாக்னரின் ஒரு டிராஜடி. எனக்கு சிம்பனி பழக்கமில்லை. அங்கே ஒரு வெள்ளைக்கார நண்பருடன் சென்றிருந்தேன். இரண்டு மணிநேரம் சும்மா அமர்ந்திருக்கலாம் என்பதே என் எண்ணம். ஆனால் என்னவென்றே தெரியவில்லை. கடைசியில் என் மனம் அப்படியே இருண்டுவிட்டது. உள்ளும் புறமும் இருட்டு. கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
கார்கடல் அப்படிப்பட்ட ஓர் அனுபவம். ஒரு துளி வெளிச்சம்கூட இல்லாமல் இருட்டிவிட்ட கடலை கண்முன் பார்க்கிறேன்
ஜெ
December 4, 2021
எம்.ரிஷான் ஷெரிபுக்கு விருது
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 03.12.2021 அன்று நடைபெற்ற இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய இரண்டு பிரிவுகளில் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்புக்கு இரண்டு சாகித்ய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பூபாலசிங்கம் பதிப்பகம் மூலமாக வெளிவந்த ‘தரணி’ மொழியாக்க நாவல் மற்றும் வம்சி பதிப்பகம் ஊடாக வெளிவந்த ‘அயல் பெண்களின் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு ஆகியவை 2019, 2020 ஆகிய வருடங்களில் வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூல்களாகத் தெரிவு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ரிஷான் ஷெரிபுக்கு வாழ்த்துக்கள்
குடி- அறமும் ஒழுக்கமும்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களுடைய டால்ஸ்டாய் உரை சமீபமாக கேட்டேன். நான் ஒரு தேர்ந்த பேச்சாளன் அல்லன் என்று பலமுறை தாங்கள் சொல்லி வந்தாலும், அதை நீங்கள் செயலில் காட்டாமைக்கு வருந்துகிறேன் ! வழக்கம்போல, உரை கேட்டு முடித்தவுடன் , மனதின் பல அடுக்குகளில் வேர்பரப்பி உரையின் கரு சூழ்ந்துகொள்கிறது. நிறுவன அறம் தொடங்கி தனிமனித அறம், சமுதாய அறம் என்று உரை பலகோணங்களில் சிந்திக்க வைத்தது.
தனிமனிதனுக்கான அறத்தை எப்பொழுதும் அடுத்தவர் சொல்லி உள்வாங்க இயலாது, தன் அனுபவத்தின் அவதானிப்புகள் மூலமே சென்று அடையமுடியும் என்ற உங்கள் கருத்து மூளையின் ஒரு இடுக்கில் இருந்துகொண்டேதான் உள்ளது. எனக்கான அறமாக தோன்றுவதை எங்கேனும் யாரேனும் சொல்லி கடக்க நேர்ந்தால், அவர்பால் பெருமதிப்பை உண்டாக்கும். இப்படியாக நான் சென்று அடைந்தவர் தான் திருவள்ளுவர், காந்தி போன்றோர். பாடப்புத்தகத்தில் மனனம் செய்யும்போது நான் பார்த்த குறள் வேறு, இப்பொது அதே குறள் பன்மடங்காக விரிவு பெறுகிறது. அந்த அறத்தின் உள்ளடக்கம் வியப்பில் ஆழ்த்துகிறது. தற்பொழுது பிளாட்டோ . அவர் cardinal virtues என்று எடுத்துரைத்த Justice, Temperance, Prudence, Courage ( இவ்வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் சரியான அர்த்தத்தை தொக்கி நிற்கும் வார்த்தை எட்டவில்லை எனக்கு, எனவே ஆங்கிலம்) மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. நான் பெரும்பாலும் மனதிற் கோழையாக உணர்பவன். ஆனால் இந்த பிளாட்டோவின் courage ஐ கண்டடைந்தவுடன் , மனதில் ஒரு தைரியம் தானாகவே பிறக்கிறது.
இம்மூவரில் பிளாட்டோ, வள்ளுவர் சொன்ன அறத்தை அறிவதற்கும் காந்தியின் அறத்தை அறிவதற்கும் என்னுள் பெரிய இடைவெளி உள்ளதாக தோன்றுகிறது. பிளாட்டோவின் அறமானது மனதிற்குள் ஊறி ,நமக்கு எந்த அளவுக்கு பருகமுடியுமோ , அதற்கேற்ப நம் அறத்தின் எல்லையை கண்டடைய முடியுமென தோன்றுகிறது. ஆனால், காந்தி சொன்ன அறவிழுமியங்களை அவை வாழ்க்கையினூடாக சென்றடைவதை நினைத்தாலே, பெரும் அயர்வினை தருகிறது.
எனக்கான கேள்வி இதுதான், தனிமனித அறத்திற்கான எல்லையை தீர்மானிப்பது எப்படி? எனக்கான உண்மையை கண்டடையும் பயணத்தில், சறுக்கல்கள் ஏராளம். சறுக்கல்களை விட, என்னை நானே ஏய்த்துகொண்டேன் என்றே சொல்லலாம். அப்படியான நேரத்தில், சமூகத்திடம் வரும் அறிவுரை ஒன்றுதான், இவ்வளவு படித்தும் என்ன உபயோகம் என. சாதாரண சமூக அறத்தை கூட கடைபிடிக்க முடியாத வறியோனாக இருக்கிறாயே என்பதுதான்.ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது போன்ற தத்துவங்கள் வேறு.
உதாரணமாக கள்ளுண்ணாமை என்ற அறத்தை மனம் இதுவரை ஏற்க மறுக்கிறது. என்னளவில் தவறாக உணரவில்லை. அது ஒரு மகிழ்ச்சியின், களியாட்டத்தின் பங்காகவே எனக்குத் தோன்றுகிறது. சங்க காலத்தில் அது ஒரு சமூக செயல்பாடாகவே இருந்தும் வந்துள்ளது. இச்சூழலில் என்னுடைய தனிமனித அறம் , சமூகத்தால் ஏற்க முடியாதாகிறது. பல நற்குணங்கள் இருந்தும் , இந்த ஒரு செயலால் தள்ளி வைக்கப்படுவேன்.
இதுபோல, சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல விழுமியங்கள் மீது கேள்வி எழுந்து , அதை என் அனுபவம் மூலம் கண்டடையவே மனம் தவிக்கிறது . இன்னொருபுறம், சமுதாயத்தின் குரலே என் மனதின் குரலாக , ஏற்கனவே கண்டடைந்த அறவிழுமியங்களை ஒழுங்காக கடைப்பிடிக்க வேண்டியதுதானே? இது என்ன முட்டாள்தனம் என்றொருபுறம் ! இப்படியாக, தனக்கான அறத்தை கண்டடைய இன்றைய சமூகத்தில் இடமுள்ளதா? அப்படி இருப்பின், அதை சமூக அறத்தோடு ஒட்டி நிறுவ வாய்ப்புள்ளதா?
கார்த்திக் குமார்
அன்புள்ள கார்த்திக் குமார்
இருவேறு சொற்கள் உள்ளன. அறம், ஒழுக்கம். இரண்டும் வேறுபட்ட பொருள் கொண்டவை. ஆனால் நாம் அவற்றை குழப்பிக்கொள்கிறோம். தோராயமாக ஆங்கிலத்தில் ethics and morality எனலாம். ஆனால் அறம் என்னும் சொல் ethics ஐ விட மேலும் அழுத்தமும் விரிவும் கொண்டது.
அறம் என்பது ஒரு சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள பொதுவான அடிப்படை. அச்சமூகத்தையே உருவாக்கி நிலைநிறுத்தியிருக்கும் சில விழுமியங்களால் ஆனது அது.
தர்மம் என்னும் சொல்லுக்குச் சமானமாக தமிழில் அறம் பயன்படுத்தப்படுகிறது. தர்மம் என்னும் சொல் ’செயல்நெறி’ ‘இயல்புநெறி’ என பொருள்கொள்கிறது. ஒவ்வொன்றுக்கும் செயல்நெறியும் இயல்புநெறியும் உண்டு. தீ எரிவதும் நீர் கழுவுவதும் அவற்றின் தர்மம். அதேபோல மானுடனுக்கும் சில செயல்நெறிகளும் இயல்புநெறிகளும் உண்டு. அவையே தர்மம் எனப்பட்டன. அனைத்தும் அவற்றின் தர்மப்படியே இயங்குகின்றன என்பது இந்து, பௌத்த, சமண நம்பிக்கை.
தமிழில் அறம் என்னும் சொல் அறுதல் என்னும் வேர்கொண்டது. அறுதி எல்லை அற்றம் எனப்பட்டது. அதுவே அறம் ஆகியது. மீறமுடியாத அறுதியான நெறி அது. அவ்வண்ணம் சிலவற்றை மானுடம் தனக்கென கண்டடைந்தது. அவற்றைக்கொண்டே அது சமூகமாக உருவானது. பண்பாடாக வளர்ந்தது.
அந்த அறம் இருவகை. பிறருடன், சமூகத்துடன், இயற்கையுடன் ஒத்திசைவதற்குரிய அறம் பொதுஅறம் எனப்பட்டது. கொல்லாமை முதலியவை அப்படிப்பட்ட பொது அறங்கள். தனக்கென ஒவ்வொருவரும் கொள்ளவேண்டிய அறம் தனியறம் அல்லது தன்னறம். முழுமையைநோக்கிச் செல்லுதல், வாழ்க்கையைப் பொருள்கொண்டதாக்குதல் தன்னறம் எனலாம். இரு அறங்களும் முரணின்றிச் சென்றாகவேண்டும்.
ஒழுக்கம் என்பது அறத்தின் அடிப்படையிலான நடத்தை வரையறைகள். ஒழுக்கம் காலம் சார்ந்தது, சூழல் சார்ந்தது, மாறிக்கொண்டிருப்பது. அறம் மாறாதது, ஏனென்றால் ஒரு சமூகத்தையே கட்டியமைத்திருக்கும் அடிப்படைகளால் ஆனது. அறத்தை அந்தந்தக் காலத்தில் நிலைநிறுத்தும் பொருட்டு ஒழுக்கம் உருவாகிறது. காலம் மாறும்போது அறத்துக்கும் அதற்கும் இசைவில்லாமல் ஆகுமென்றால் அந்த ஒழுக்கம் காலாவதியாகிறது. நேற்று ஒழுக்கம் என்று கருதப்பட்டது இன்று அவ்வாறு இல்லாமலாகலாம். அவ்வாறு எத்தனையோ ஒழுக்கங்கள் மாறிவிட்டிருக்கின்றன.
இந்த வேறுபாட்டை நாம் மிக எளிதில் உணர்ந்துகொள்ள முடியும். தமிழ்ச்சமூகம் அறம் என சிலவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. ’அனைவருக்கும் வாழ்வுரிமை உண்டு’ என்பது ஓர் அடிப்படை அறம். பிறரை அழிக்காமலிருப்பது அதற்குரிய நெறி.கொல்லாமை என்பது அதன் விளைவான ஒழுக்கம்.
வள்ளுவர் அறங்களில் அதுவே முதன்மையானது பிறவற்றின் வாழ்வுரிமையை ஏற்றுக்கொள்ளல் என்கிறார். ஆகவே கொல்லாமையை முன்வைக்கிறார். பிற அறங்கள் எல்லாம் அதன் விளைவாக வருவனவே என்கிறார்.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
ஆனால் போரில் கொல்லுவது ஏற்புடையது, ஏனென்றால் அது வாழ்வுரிமைக்காவே செய்யப்படுகிறது. கொலைக் குற்றவாளியை கொல்வது ஏற்புடையது, ஏனென்றால் அது ஓர் எளியவனின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டமைக்காக அளிக்கப்படும் தண்டனை. வள்ளுவரே அதை சொல்கிறார்
கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொலைக்குற்றவாளியை அரசன் கொல்வது என்பது பசும்பயிருக்கு களைபறிப்பதற்குச் சமமானது.
இதுதான் வேறுபாடு. கள்ளுண்ணாமை என்பது ஒழுக்கம். ஒருவன் எந்நிலையிலும் தன்னுடைய உணர்வுநிலையில் இருந்தும் அறிவின் கட்டுப்பாட்டில் இருந்தும் விடுபடலாகாது என்பதும், அவன் தன் செயல்களுக்கான பொறுப்பை தானே முழுமையாக ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதும் அறம். அந்த தன்னுணர்வை மழுங்கடிக்கும் என்பதனால்தான் கள்ளுண்ணாமை ஒழுக்கரீதியாக தடைசெய்யப்பட்டது.
கள்ளுண்ணாமை அறம் அல்ல, ஒழுக்கம்தான். அதை கடைப்பிடிக்கவேண்டுமா வேண்டாமா என்பது அந்த அடிப்படை அறமாகிய தற்பொறுப்பை பேணுவதற்கும் அதற்கும் தொடர்பு உண்டா என்பதை ஒட்டியே முடிவாகிறது. அது உங்கள் தெரிவு. ஆனால் என் நோக்கில் எந்தவகையான போதையும் மனிதன் தன் செயலுக்கு தானே பொறுப்பெற்கமுடியாமலாக்குகிறது. ஆகவே போதை என்பது அறமீறலுக்கு வழிவகுக்கும் ஒழுக்கமீறல்.
ஜெ
எல்லாமுமான கவிஞன் – காளிப்பிரசாத்
“தேவதைக்கதைகளில்வரும் தேவதைகளை
தெரியவே தெரியாது
பேய்க்கதைகளில் வருகிற
பேய்களை புரியவே புரியாது
கடவுளின் கதைகளில் வந்துபோகும் கடவுளைமட்டும் தெரியுமா என்ன
எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன் இவன்”
நேற்று தி.நகரிலிருந்து வரும்போது வண்டி தேங்கிய நீருக்குள் நின்று விட்டது. வழக்கமான பாதைதான். நீருள்ளது என்றும் தெரியும். வண்டியின் வலுவும் தெரியும். ஆனால் இறங்கிய பின்தான் அதன் ஆழம் தெரிந்தது. நேற்று காலை ஜன்னலோரமாக அமர்ந்து ரசித்த அதே சாரல்தான். காபி அருந்திக் கொண்டிருந்தே ரசித்துப் பார்த்த, படபடவென பொழிந்து தள்ளிய அதே மழைதான். நல்ல மழை என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். அது லேசானதா, மிக கனத்ததா என்பதையைல்லாம் நாம் சொல்வதற்கில்லை. ஒரு சென்டிமீட்டர் குறைந்தாலும் கூடினாலும் பெயர் மாறிவிடும். ஆகவே நல்லமழை என்றே சொல்லிவிட்டு தொடரலாம். அதுவும் பெய்த அளவை வைத்துத்தான். மற்றபடி மழையின் குணத்தை வரையறுக்கும் எண்ணமும் இல்லை. சொல்லப்போனால் இங்கு (மாநகரத்தில்) பலருக்கு கெட்டமழைதான். எனக்குமே வண்டி மாட்டி பின் இயங்கத் துவங்கும் வரை நல்லமழை என்று சொல்ல வாய்வரவில்லை. நன்றாக ஒருநாளில் வெளுத்து வாங்கிவிட்டு அடுத்தநாள் அதிக கனமழை என பெயர் வாங்கிக் கொண்டு போகும் மழைகளும் உண்டுதான். ஒருநாள் ஜாலி ஒருநாள் ஓட்டம். பரிசுப் போட்டிகளுக்கு மட்டுமே எழுதுவேன் என்ற பிடிவாத எழுத்தாளர்கள் போல சீசனுக்குத் தூறிவிட்டுப் போகும் மழைக்கூட உண்டு. அவை தனிரகம். அவற்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக தினமும் நின்று, ஆடி, நின்று சுரக்கும் மழை அப்படி இல்லை. சாரலாக துவங்கி, வலுத்து, நின்று பின் வான்வெளுத்து ஏமாற்றி, மீண்டுமொருமுறை வெளுத்துவாங்கி என மாறி மாறி நின்று பெய்யும் மழை அது. பார்க்கத்தான் சாரல், ஆனால் மெல்ல திரண்டு வண்டியை மூழ்கடிக்கும் ஆழம்.
கவிஞர்.விக்ரமாதித்யனை தொகுத்துக் கொள்வது போல வேறொரு கடினமான முயற்சி இல்லை. ஆனால் எப்பாடுபட்டாவது அவர் கவிதைகளை முற்றோதல் செய்யவேண்டும் என்றே பரிந்துரைப்பேன்.. அவரைப் புரிந்துகொண்டால் உலக இயக்கத்தை சிலர் புரிந்து கொள்ளலாம். மனித மனத்தின் பக்குவத்தை புரிந்து கொள்ளலாம். எனக்கு அவர் அறிமுகம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகையில் நிகழ்ந்தவைதான்.
அவர் புத்தகங்கள் வழி அறிமுகமாகிய காலம் தொட்டு இன்று வரையில் அவரது தோற்றத்தில், அவர் ஆளுமை குறித்து வாசித்த கட்டுரைகளில், கேட்ட கதைகளில், இலக்கிய பேச்சிலர் ரூம் ரகளைகளில் புரணிக்கதைகளில் என ஏதும் மாறவில்லை. இதில் ரஸம் என்னவென்றால், பார்த்த திரைப்படங்களிலும் அவர் அப்படியே வருகிறார். கடவுளை தேவ்டியாப்பயல் என்கிறார். அந்த விக்ரமாதித்யன் எப்படி ஒரே உருவத்தோடு கையில் வாளும் தோளில் வேதாளமுமாய் கதைக்குள் வசிக்கும் ஒரு நபரோ அதுபோலத்தான் எனக்கு இந்த விக்ரமாதித்யனும். அதனாலேயே நானும் அவருடைய கட்டுரைகள் ஏதும் இதுவரை வாசித்ததில்லை. முன்னுரைகளை வாசிப்பதில்லை. அதில் எங்காவது அவரது பால்யகாலம் இருந்துவைத்து சிறுவனாக பள்ளிக்குச் சென்ற அனுபவம் வந்தால் என்னாவது? அவரெல்லாம் ஒண்ணாங்கிளாஸுக்கு தாடியோட போனேன் என்று சொன்னால்தானே நம்ப முடிகிறது! அவரைக் கண்ட முதல் புகைப்படத்திலேயே அவர் நரைத்த தாடியுடன் இருந்ததால் ஒருவேளை தாத்தாவிடம் கொள்ளும் நெருக்கம் போல ஆகிவிட்டதோ என்னவோ. அவரை, அவரது கவிதைகள் வழியாகவும் பேட்டிகள் வழியாகவும் பிறருடைய கட்டுரைகள் வழியாகவும்தான் மாறி மாறி அறிந்து வருகிறேன்.
முதலில் விகடன் தீபாவளி மலரில் (நேரடியாகவோ அல்லது யாரோ குறிப்பிட்டிருந்தோ நினைவில்லை) வாசித்த கூண்டுப்புலிகள். பின் 2000 ஆண்டில் விக்கிரம வருடம் பிறப்பதை ஒட்டி விகடனில் இயக்குனர் விக்ரமன் நடிகர் விக்ரம் என விக்கிரம வரிசை பெயர்கொண்டவர்களின் பேட்டி வழியாக மறுமுறை. அதில் கவிஞர்.விக்கிரமாதித்யனும் இருந்தார். கையில் காசு இருந்தால் குடிப்பேன் அல்லது ஓவியம் வாங்குவேன் என்று சொல்லியிருந்தார். வீட்டுக்கு காசு தரமாட்டேன் என்றார். விக்ரமாதித்யனுக்கு வரமளித்த மாகாளியை வணங்க கல்கத்தாவிற்கு போனேன் என்றார். எத்தனை! அதன்பின் ஜெயமோகன் எழுதிய தமிழிலக்கியம் ஒரு அறிமுகம் எனும் பகடி கட்டுரை. எஸ்.ரா எழுதிய அவரது ஆளுமை குறித்த ஒரு கட்டுரை (விக்ரமாதித்யன் எனும் பெருநகரப் பாணன்). பின் நான்கடவுள்.. அங்காடி தெரு.. அந்த சமயங்களில் வந்த நேர்காணல்கள்.. இப்படியே.. இடையிடையே ஆங்காங்கு வாசிக்க கிடைத்த அவர் கவிதைகள். எங்கும் மனதளவில் எனக்கு அவருடைய தோற்றம் மாறவேயில்லை. ஆனால் அவரது கவிதைகள் மீதான எனது பார்வை மாறிக்கொண்டுதான் இருக்கிறது.
பாரதி முதற்கொண்டு அனைவரும் எதிர் கொண்ட சிக்கல் கொண்ட கூண்டுப்புலிகள் கவிதை. லெளகீகம் ஆட்டிப்படைக்கும் ஒரு படைப்பாளி தன்னை ஒரு கூண்டுப்புலியாகவும் ஒரு புலிக்கலைஞனாகவும் தான் உணர முடிகிறது.
(பிற்காலத்தில் ஜெயமோகன் எழுதய குருவி கதையும் இதே வரிசையில் வருகின்றது. ஆனால் சற்று மாறுபட்டது )
கூண்டுப்புலிகள்
நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்
இது இன்றும் அவர் பெயர் சொன்னால் அனைவருக்கும் நினைவில் வரும் கவிதைதான். ஆனால் அடுத்து வாசித்தது பலமாக ஆச்சரியப்படுத்தியது. அப்போது சென்னையில் நண்பர்களுடன் அறையில் வாசம்.
கூண்டுப்புலியா இவர் என்று தோன்ற வைத்த தொகுப்பு ஒன்றை அங்குதான் வாசித்தேன்.”தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு.” கூண்டுப்புலி கவிஞரின் கைவிலங்கை முறித்து எழுந்த கவிதைகள் இவை. அப்பட்டமான காம வர்ணனைகள். காமத்தின் வழியான சரணாகதி என. வரம்பு மீறிய மொழி. கட்டற்ற இளமைக்கனவு.. திமிறி வரும் சொற்கள் என அந்த தொகுப்பு.
“புல்முளைத்து இருப்பது
போல இருக்குமோ
புதர்மண்டிக் கிடப்பது
போல இருக்குமோ
வெட்டி விடப்பட்ட
வெம்பரப்பாக விளங்குமோ
எப்படி இருந்தால் என்ன
ஏதோ ஒதுங்க இடம்கிடைத்தால் சரி
எனத் தூண்டிவிடுகிறது. ஒருவித விடலை மனப்பாங்கா? நிஜத்தில் வாய்க்காத ஒன்று சிந்தையை ஆக்ரமிக்க அதைக் கடைந்து எடுத்து வெவ்வேறு தளங்களில் ஆடிப் பார்க்கிறது மனசு
“படுப்பது
சுலபம்
படுக்கை விரிப்பதெ
ஒரு வேலை
படுக்கை போட்டுக்கொண்டே
பெண்
படுத்துக்கொண்டே
ஆண்”
இவ்வாறு யோசிக்க வைக்கிறது.
“அம்மனின் ஒற்றை மூக்குத்தி
பத்து நூறு ஆயிரம் லக்ஷமென
மாயத்தோற்றம் தரும் ராத்திரி
செவ்வரளி ஆரம்
சிவனணையும் காளிக்கு
இருப்பதில் உயர்ந்த
மதுபானமும் அவளுக்கே
.
.
.
ஆதி
நிறம் கொண்ட தாய்
ஆடவிட்டு
வேடிக்கை பார்க்கிறாள்
சோதித்ததெல்லாம்
போதும்
சுகமாக
வாழவைக்க வேண்டும்”
இங்கு அந்த அரற்றல் எல்லாம் பிரார்த்தனையாக ஆகிறது. பின் அவளுடன் அமைகிறது
“காளி தர்சனம்
கதி மோட்சம்
ஓம் ரீம் காளி அபயம்
ஓம் ரீம் காளி தஞ்சம்
ஓம் ரீம் காளி சரணம்
ஓம் ரீம் காளி அடைக்கலம்
”
இங்கே அது ஒன்றிவிடுகிறது.
இது மனிதனின் படிப்படியான புரிதலா அல்லது யோகப்படிநிலையா? அல்லது காமசாஸ்திரமா? என்றால் அது எனக்கு காமசாஸ்திரம்தான். ஒருவகையில் அவர் நவீனவாத்ஸ்யாயனர்.
இதன்பிறகு அந்த ஜுர வேகம் பிற கவிதைகளில் இல்லை. ஆனால் கோபம் உண்டு. அமைதியும் உண்டு.
அவருக்கு விக்கி என்று பெயர். விக்கிக்கு நாடாறு மாசம். காடாறு மாசம். குடும்ப பிரச்சனை உண்டு. எந்தப் பெண்விலங்காவது ஆணை கொன்று தின்கிறதா? மனிதனில் மட்டும் ஏன் என அரற்றுகிறது. சமூக கோபமும் உண்டு. விக்கிக்கு தொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு வயிரெறிய வைக்கிறது. முன்னால் பின்னால் பதினைந்து கார்கள் சூழ பவனிவரும் அரசியல்வாதியைக் கண்டு மனம் கொதிக்கிறது. இயல்புமீறிய குடும்பத் தலைவனின் சாயல் கொண்ட கவிஞராக விக்கி. அவர் எழுதிய மங்களக் கவிதைகளை குறிப்பிடவேண்டும். குறிப்பாக, சைவத் தலக்கவிதைகள். கோவில்களாக அலைந்து அம்மையப்பன் ஆடலை பதிவு செய்த கவிதைகள். இங்கு அவர் நவீன நாவுக்கரசராக ஆகிறார். அவர் பாடிய ஸ்லதலங்கள் பாடல்பெற்ற ஸ்தலங்களாகின்றன. திருக்கோயில் வைபவங்களை பதிவு செய்கிறார். பழனியாண்டி, ஆழித்தேர், திருக்கல்யாணம் என.
அதேநேரம், விக்கியின் சொற்கள் ஒரே நேரத்தில் தினசரி வாழ்வில் உழன்றும் அங்கிருந்து மேலேறியும் இருக்கும் சொற்கள்
‘ஃப்ராய்ட் பணத்தை விட்டுவிட்டார் மார்க்ஸ் மனத்தைக் கவனிக்கத்தவறிவிட்டார்
ஆனாலும் என்ன
இருவரின் கொடைகளும்
எந்நாளும் அழியாதவைதாம்
ஒன்றை யொன்று நிரவியபடியே”
ஆனால் அந்த விக்கியை கடந்தும் ஒருவன் எழுகிறான். அந்த மற்றையவன் அமர். அவன் அமரன். அமர் வரும் கவிதைகளில் அமருடைய சொற்களில் தெரிபவர் முந்தைய நாவுக்கரசரோ வாத்ஸ்யாயனரோ பாரதியோ விக்கியோ அல்ல. அங்கு அவன் சித்தராக இருக்கிறான். சித்தர் பாடல்கள் தொகுப்பின் அட்டையில் சித்தர்களின் ஓவியங்கள் உள்ளன. அமரின் புகைப்படம் அதுவாக இருக்கலாம் என்று சொல்லிவிடலாம்.
“அமர் என்ன மேன்மைதங்கிய குடியரசுத்தலைவரா
மாண்புமிகு முதல்வரா
மேதகு ஆளுநரா
மதிப்புக்குரிய மாவட்ட
ஆட்சித்தலைவரா
இல்லை சட்டமன்ற உறுப்பினரா லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகனா
ஒரு சுக்கும் இல்லை
முந்நூறுபேர் படிக்கும் கவிஞன் அமர்”
நான் வாசித்த வரிசையில் கூண்டுப்புலியாக இருந்து அமராக எழும்வரை அத்தனை தடங்களும் கவிதைத் தொகுப்புகளில் விரவியிருக்கின்றன. எனக்கு இந்த வரிசைப்படியில் இன்று அமர் அணுக்கமாக இருக்கிறான். விக்கியும்தான். ஆனால் விக்கி மீது கூடவே ஒரு மரியாதையும் உண்டாகிறது
விக்கிக்கும் முந்தையவர்கள் தினமும் வருகிறார்கள்தான். அவர்கள் மீது மரியாதை இருக்கறது. ஆனால் அனைவரை விடவும் அமர் அணுக்கமாக இருக்கிறான். அவனுக்கு ஒரு ச்சியர்ஸ் சொல்லிவிட வேண்டும் என்று தோன்றுகிறது
“பிறந்துவிட்டான் விக்கி வசித்துக்கொண்டிருக்கிறான் அமர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான் பூர்ணன் எழுதிக்கொண்டும் போகிறான் புட்டா”
கட்டுரையின் துவக்கத்தில் சொன்னதை மறந்துவிடவும். கவிஞர்.விக்ரமாதித்யனை தொகுத்துக் கொள்வது கடினம் அல்ல. அதுபோல சுலபமான வேறு ஒரு வேலை இல்லை.
சுருக்கமாக சொல்லிவிடலாம்.
நல்ல மழை.
காளிப்பிரசாத்
இலக்கியத்தின் விலை – கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கான தங்களின் எதிர்வினையை வாசித்தேன். இதைத் தங்களைவிடச் சிறப்பாக யாரும் பதிவு செய்திருக்க முடியாது.
சில வருடங்களுக்கு முன்பு உங்களுடைய மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பொன்றை (இப்போதும் அச்சில் இல்லையென்று நினைக்கிறேன்) வாசிக்கும்போது அதிலுள்ள ஒவ்வொரு கவிதையும் பிடிக்கப்போய் தனிப்பட்ட சேகரிப்பிற்காக ஸ்ரீனி அதைப்பதிவு செய்ய, அது அப்போதே இணைய வாசகர்கள் மத்தியில் பிரபலமடைந்து ஏறத்தாழ அவரது வட்டத்திற்குள் தீவிர வாசகர்கள் அனைவரையும் சென்றடைந்தது. இதற்குப் பிறகு அவர், இது சரிதானா? இப்படிச்செய்யலாமா? என உங்களுக்கு கடிதமும் எழுதியிருப்பார். அதற்கு நீங்கள் சொன்ன பதிலை இப்போது நினைவுகூர்கிறேன்.
அது ஒரு படைப்பு வாசகரைச் சென்றடைவேண்டும், என்ற ஒரு எழுத்தாளனின் தூய்மையான மனநிலையின் பதில். நீங்களும் சில அறிவுரைகளையும் கூறியிருப்பீர்கள்.
இப்போது பெருமாள் முருகன் செய்திருப்பதைப் பார்க்கையில் அவரை நினைத்துப் பரிதாபப்படத்தான் முடிகிறது. ‘இவ்வளவுதானா இவர்கள்’ என. இதில் ஒரு சில இணையவாசிகள் “இன்றைய இளைஞர்கள்…” எனக் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
பெ.மு இவரை அழைத்தாவது பேசியிருக்கலாம். Facebookஇல் அன்பிரண்ட் செய்துவிட்டாராம். சிரிப்புதான் வருகிறது. ஸ்ரீனி கேட்கும் கேள்விகளுக்கு இவரால் பதில் கூற இயலாது என்பது வேறு விசயம்.
ஸ்ரீனி, தனது பண வேட்கைக்கோ, புகழுக்காகவோ இதைச் செய்யவில்லை. ஒரு படைப்பு அனைவரையும் சென்று சேரவேண்டும் என்பதில் அவருக்குள்ள ஆர்வத்தினால் மட்டுமே தனக்கிருந்த முழுநேர வேலையை விடுத்து இப்போது பழைய புத்தகங்களை மின்னூலாக்குவதில் செலவிட்டு வருகிறார். இதுபோக வடிவமைப்பு, மெய்ப்புநோக்குதல் என freelancing செய்கிறார்.
இவரை யாரென்றே தெரியாதென பெ.மு கூறியதுதான் விந்தை. அதுசரி நம்மாள் என்ன இலட்சங்களில் புரளும் பதிப்பக மடாதிபதியா? அடிப்படை விலைக்கும் இலவசமாகவும் அரசுடைமை / அரிய நூல்களை கடந்த சில வருடங்களாக இலாபநோக்கின்றி மின்னூலாக்கி வருபவர் தானே? இவரைத்தெரிந்து என்ன பயன்? But ignorance is not always bliss.
அவரை நன்கு உணர்ந்தவன் என்கிற முறையில் பெ.முவின், “திருட்டு” என்ற வார்த்தை மிகவும் புண்படுத்தியது. ஸ்ரீனி ஒரு அரிய மனிதர். அவரை நாம்தான் இவர்களிடமிருந்து பாதுகாக்கவேண்டும்.
எனக்கு அக்கட்டுரையைப் படித்ததும் மிகுந்த கோபமும் ஒருவித ஆற்றாமையுமே எழுந்தது.
ஸ்ரீனியிடம் பலவற்றைக் கற்றுள்ளேன். அதிலொன்று இதுபோன்றவற்றை கண்டுகொள்ளாமல் உடனே மீண்டு இயங்குவது. இவர்களால் அவரது மாபெரும் பணியைச் சிறுமை செய்ய இயலாது. அவரது எதிர்காலத் திட்டங்கள் பலிக்கட்டும்.
அவர்மென்மேலும் தொடர்ந்து இயங்க தேவையான ஆன்மபலம் அமைய வேண்டுகிறேன்.
வேறு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
யமுனைச் செல்வன்
நெல்லை
அன்புள்ள ஜெ
பெருமாள் முருகன் பற்றிய கட்டுரையை வாசித்தேன். அதை வாசிக்கும் வரை நான் உண்மையில் பெருமாள் முருகனின் தரப்பு சரி என்றே நினைத்திருந்தேன். உழைப்புத்திருட்டு என்று சொல்லும்போதே நமக்கு ஒரு கொதிப்பு வந்துவிடுகிறது. ஆனால் அறிவுத்தளத்தில் வெவ்வேறு மனிதர்களின் உழைப்புகள் ஒன்றாக திரண்டுகொண்டே இருக்கின்றன. அது அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்கிறது. தன் அறிவுச்சேகரிப்போ உழைப்போ இன்னொருவருக்குச் செல்லக்கூடாது, தனக்கு பணம் தரும் வியாபாரமாக மட்டுமே இருக்கவேண்டும் என்று சொல்லும் ஒருவர் அறிவுத்தகுதி அற்றவர்
நான் அறிவியலில் ஆய்வு செய்பவன். ஒருவர் ஒரு ஆய்வேடு வெளியிடுகிறார் என்றால் அது உடனே ஆய்வுக்களத்தில் பொதுச்சொத்தாகிவிடுகிறது. அதை உள்வாங்கிக்கொண்டுதான் அடுத்த ஆய்வேடு வெளிவரும். ஓர் ஆய்வேட்டை அடுத்த ஆய்வேடு தாண்டிச்சென்றுகொண்டே இருக்கும். கடைசியாக ஒருவர் நோபல் வாங்கிவிடுவார். உடனே என் ஆய்வை திருடித்தான் அவர் நோபல் வாங்கினார் என சொல்லிவிடமுடியாது. அந்த ஆய்வுக்கான அடையாளத்தை அதைச் செய்தவருக்கு கொடுக்காமலிருந்தால்தான் அது ஆய்வுத்திருட்டு
குபரா கதைகளை தனக்கு முந்தையவர்கள் தொகுத்ததில் இருந்து மேம்படுத்தி பெருமாள் முருகன் வெளியிட்டார். அவரிடமிருந்து மேம்படுத்தி அழிசி சீனிவாசன் வெளியிட்டார். இனி வெளியிடுபவர்கள் சீனிவாசனிடமிருந்து இன்னும் மேம்படுத்துவார்கள். பதிப்புவரலாற்றில் ஒருவர் பெயரை விட்டுவிட்டால் அதுதான் தப்பே ஒழிய ஆய்வை உரிய கிரெடிட் கொடுத்து எடுத்தாள்வது ஆய்வுமுறைமைதான்.
ஆர்.ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
நான் ஆய்வுசெய்பவன். பெருமாள் முருகனின் கட்டுரைக்குறிப்பை பேத்தல் என்றுதான் சொல்வேன். அதிலும் பத்துவருடம் உழைப்பு என்றெல்லாம் பேசுவது ஆய்வுலகில் அத்தனை பேராசிரியர்களும் செய்வது. அதென்ன அறிவியல்தியரியா? இன்றைக்கு பழைய நூல்கள் எல்லாம் டிஜிட்டல் செய்யப்ப்பட்டு தரமணியில் ரோஜா முத்தையா நூலகத்தில் கிடைக்கின்றன. அங்கேபோய் அவற்றை புரட்டி காலவரிசை ஒன்றை போட்டிருக்கிறார். குபரா எழுதிய கதைகள் கொஞ்சம் தான். ஒரே ஒரு பெரிய தொகுப்பு. அதிலும் முன்னரே ஆய்வுப்பதிப்பு வந்துவிட்டது. அதை ஒட்டி மேலும் கொஞ்சம் ஆய்வு செய்திருக்கிறார். ஒரு கதை கண்டுபிடித்திருக்கிறார். விட்டுவிட்டுச் செய்தால்கூட ஆறுமாதம் தேவைப்படும் வேலை.
இருபதாண்டுகளுக்கு முன்பு என்றால் அந்த இதழ்களை தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். வேதசகாயகுமார் மூல இதழ்களை தேடித்தேடி சி.சு.செல்லப்பா, பி.எஸ்.ராமையா வீடுகளுக்கெல்லாம் அலைந்ததை எழுதியிருக்கிறார். இவரே பழைய இதழ்களை புரட்டி படித்ததைத்தான் கஷ்டமான பத்தாண்டுக்கால ஆய்வு என்றெல்லாம் எழுதியிருக்கிறார். பேராசிரியர்கள் ஆய்வேடுகளுக்கு ஓராண்டை ஐந்தாண்டு ஆக்குவார்கள். அது கொஞ்சம் பழக்கமான விஷயம்தான். பத்தாண்டுக்கால உழைப்பு இது என்றால் இவர் உழைப்பு என்று எதைச்சொல்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
ரவிச்சந்திரன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

