Jeyamohan's Blog, page 872

December 4, 2021

எம்.கோபாலகிருஷ்ணனின் ’தீர்த்தயாத்திரை’- போகன் சங்கர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

சமீபத்தில் மனமொன்றிப் படித்த நாவல் எம் கோபாலகிருஷ்ணனின் தீர்த்த யாத்திரை.(தமிழினி வெளியீடு)

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ஆணின் மனதிலும் துறவு இச்சை ஒருபக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.பெரும்பாலான இந்தியப் பெண்களின் மனதில் ஒரு தற்கொலை எண்ணம் இருப்பது போல.இது குறித்த fantasies ஒரு சேப்டி வால்வ் போலவோ லட்சியம் போலவோ பழிவாங்குதல் போலவோ இருக்கின்றன.(இந்த நாவலுக்குள்ளேயே அப்படியொரு தற்கொலை வருகிறது)எம் வி வியின் பைத்தியக்காரப் பிள்ளை கதை ஒரு உதாரணம்.

மதம் ஒரு பக்கம் ஆன்மீகம் ஒருபக்கம் என்று இப்போது இருக்கும் பிளவு முன்பு இருந்ததில்லை. பெரும்பாலான நபர்களின் மைய விசையாக இருக்கும் ஜென்மம் ஈடேறுதல் என்கிற இந்த விஷயம் குறித்து தமிழில் தீவிர இலக்கியத்தில் அதிகம் எழுதப்பட்டதில்லை.பாலகுமாரன் நிறைய வணிகப் பரப்பில் எழுதியுள்ளார்.

யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம் முக்கியமான ஆக்கம்.தி ஜாவின் சிறுகதைகள், சில அசோகமித்திரன் கதைகள் போன்றவை நினைவுக்கு வருகின்றன. இந்த தேடலின் இருள் பக்கத்தை சரவணன் சந்திரன் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார்.

தீர்த்த யாத்திரை துறவு அல்லது வானப்பிரஸ்தம் மேற்கொள்ளும் வாழ்வு,சிக்கல்கள்,போராட்டங்கள் அதன் முடிவு பற்றிப் பேசுகிற ஒரு முக்கியமான நாவல்.திடீரென்று குடும்பத்தை உதறி தீர்த்த யாத்திரை க்கு புறப்பட்டுவிடும் ஒரு மத்தியவயது மனிதன் பற்றிய கதை.எனது ஆரம்பகால அலைந்து திரிதலில் இதுபோன்ற மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன்.

பொதுவாக இதுபோன்ற நாவல்களின் தரிசனம் நிகழும்போது அபத்தமாய்த் தோன்றும் இலக்கில்லாதது போல்த் தோன்றும் நம் வாழ்க்கையும் அதன் இன்ப துன்பங்களும் ஆரம்பத்திலிருந்தே நம்மை ஒரு இலக்கை நோக்கிச் செலுத்தப் பின்னப்பட்டவையே என்பதுதான்.புத்தன் தற்செயலாக ஒரு பிணத்தையும் ரோகியையும் முதியவனையும் காண்பதில்லை.

தீர்த்த யாத்திரை நாவலில் ஒரு இளம் விதவை தற்கொலை செய்துகொள்கிறாள்.நாயகன் அவளை விட இளையவன் அவனது அக்காளின் தோழியுடன் உறவுகொள்கிறான்.இளம் வயதிலேயே விதவையாகிவிட்டவள் அவள்.இருவரும் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.ஆண் ஏதோ ஒரு மோகாவேச தருணத்தில் அவளை மணந்துகொள்வதாய்ச் சொல்கிறான்.பெண்ணும் அதை நம்புகிறாள்.அந்த உறவின் குற்ற முள்ளை நீக்க அப்படியொரு பொம்மை தேவைப்படுகிறது அவர்களுக்கு.ஒரு நாள் ஊரைவிட்டு ஓடிப்போகத் திட்டமிட்டு ஆண் கடைசி நேரத்தில் அச்சமடைந்து வழமையாகப் போகும் ஆபீசுக்குப் போய் அமர்ந்திருக்கிறான்.அவள் பையுடன் நம்பிக்கையுடன் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டிதான் அவன் ஆபீஸ் போகும் பேருந்து செல்கிறது..

இந்தக் காட்சி நாவலில் நுட்பமாக விவரிக்கப்பட்டுள்ளது.மாலை வரை பேருந்து நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு அந்தப் பெண் அவனது ஆபீசுக்கு வந்து பார்க்கிறாள்.அவன் ஒன்றுமே நடவாதது போல் வேலை செய்துகொண்டு அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள்.மறு நாள் காலை தற்கொலை செய்துகொள்கிறாள்.

இன்னொரு தருணத்தில் தன் கீழ் வேலை பார்ப்பவன் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு உதவிக்கு வரும்போது அவனைப்பற்றி மிகக் கடுமையான குறிப்புகள் எழுதி அவன் வேலையைக் காலி பண்ணிவிடுகிறான்.அவனது மனைவி மிக அழகாய் இருந்தது ஒரு காரணம்.மிக நேர்மையான அவனுக்கு ஒரு நோய்வாய்ப்பட்ட மனைவி.ஆபீஸ் பணத்தைக் கையாள்பவனுக்கோ ஒரு அப்ஸரஸ் மனைவி இருப்பது அநீதி என்கிற கோபம்.இரண்டு பெண்களின் சாபங்கள்.

அதே நேரம் நோயுற்று இறந்து போகும் தன் மனைவியிடமும் அவனை ஏமாற்றி வாழும் தம்பியிடமும் மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்ளும் மனிதனாகவே அவன் இருக்கிறான்.ஒரு மிடில் க்ளாஸ் ஆணின் இரண்டுபக்கங்களும் நாவலில் காட்டப்படுகின்றன.தன்னுடைய காமத்துக்குப் பொறுப்பேற்க அஞ்சும் கோழைத்தனம் ஒருபுறம்.கடமைகள் குறித்த அதீத தன் உணர்வு ஒருபுறம்.

இந்தியாவில் ஒரு பெண் பொதுவாக ஒரு ஆண் உடல் உறவுக்குத் தயாராகிவிட்டான் எனில் அவன் அதைத் தொடர்ந்த பொறுப்புகளுக்கும் தயாராகிவிட்டான் என்று எடுத்துக்கொள்கிறாள்.எதிர்பார்க்கிறாள்.இந்தியாவின் மிடில் க்ளாஸ் கோழைத்தனம் நிரம்பியது.முதுகெலும்பற்றது.அதன் பெண்களை விட ஆண்கள் இன்னும் கோழைகள்.

அவன் காதல்,காமம்,ஆன்மீகம்,துறவு எல்லாம் இந்தக் கோழைத்தனத்திலிருந்து பிறப்பது.அவன் மேல் எப்போதும் அவனது நிறைவேறாத ஆசைகள் சாபங்கள் போல்த் தொங்குகின்றன.அவனது உண்மையான துறவு முதலில் இந்த தளைகளிலிருந்து விடுபடுவதே.

தீர்த்த யாத்திரை நாவலில் வரும் விதவைப் பெண்ணின் தற்கொலை எனக்கு மோகமுள்ளின் தங்கம்மாவின் தற்கொலையை நினைவூட்டியது.மிகவும் வயதான ஒருவருக்கு இரண்டாம் தாரமாக அமைந்துவிட்ட தங்கம்மாவுடன் பாபுவுக்கு ஒரு முறை உறவு நிகழ்ந்துவிடுகிறது.அவள் அவனது கவனத்தை ஈர்க்க மிகவும் முயன்றாள்தான்.ஆனால் ஒருமுறைக்கு மேல் பாபுவுக்கு தான் ஏதோ அசிங்கத்தை மிதித்துவிட்டது போல் தன்னுடைய கலைக்கு துரோகம் செய்துவிட்டது போல் தோன்றி அவளை உதறிவிடுகிறான்.அவள் தற்கொலை செய்துகொள்கிறாள்.

இங்கு அசிங்கம் என்பது எது?அது வெறும் உடல் சார்ந்த உறவாய் மட்டுமே இருந்தது என்பதாலா?ஆனால் தங்கம்மாவுக்கு அது அப்படியில்லை.அதே உடல் உறவை தன்னை விட வயதில் மூத்த யமுனாவுடன் நிகழ்த்தும்போது அது அசிங்கமென பாபுவுக்குத் தோன்றுவதில்லை.ஏதோ கடும் சாதகம் செய்து ஒரு ஸ்வரத்தை,ஸ்தாயியைப் பிடித்துவிட்டது போல்தான் தோன்றுகிறது. பாபு நாவல் முழுவதும் சங்கீதத்தையும் யமுனாவின் மீதான பிரேமையையும் சாதகம் பண்ணிக்கொண்டே இருக்கிறான்.யமுனாதான் அதுவும் உடலுறவுதான் என்று ஒரு போதத்தை அவனுக்கு அளிக்கிறாள்.தங்கம்மாவுடன் நிகழ்ந்தது போலதான் அதுவும்.”இதுக்குத்தானா?”

மதுரையில் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு தங்கம்மாவைத் தெரியும்.அவளும் மிக வயதான நோய்வாய்ப்பட்ட கணவனுடன் இருந்தாள்.நான் அவள் தண்ணீர் எடுக்கப்போகும்போதெல்லாம் அவளது உருண்டு திரண்ட பின்பாகங்களைப் பார்த்துக்கொண்டே நிற்பேன்.ஒரு நாள் என் வீட்டுக்குள் ஒரு கடிதம் எறியப்பட்டது.

“என்ன பார்த்துட்டே இருக்கிறே?’

நான் லேசாகக் கலவரமானேன்.

மறு நாள் இன்னொரு கடிதம் ” நாளைக்கு காலைல பதினொரு மணிக்கு இந்த இடத்துக்கு வா”

நான் போகவில்லை.

“ஏன் வரலை?சரி.நாளைக்கு ராத்திரி பனிரெண்டு மணிக்கு புறவாசலைத் திறந்து வச்சிரு”

நான் பயந்து அன்று மாலையே வீட்டைப் பூட்டிவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன்.பின்பு அதைக் காலி செய்யப்போனபோது அவள் பார்த்த பார்வையின் இகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

பிறகு யோசித்துப் பார்த்தேன்.அன்று நான் ஏன் மிகுந்த அச்சமடைந்தேன்?முதலில் அவளைக் காமமாய் பார்த்துக்கொண்டிருந்தவன் ஏன் அவள் எதிர்வினை ஆற்றியதும் பயந்து ஓடிவிட்டேன்?

முதல் காரணம் நான் ஒரு பெண்ணை அடைய விரும்பினேன்.ஒரு பெண் என்னை அடைவதை விரும்பவில்லை.அதை என் ஆண் அகந்தை விரும்பவில்லை.இரண்டாவது மிடில் க்ளாஸ் ஆண்களுக்கே இருக்கும் free sex fantasy.வரிகள் பின்னால் வரக்கூடும் என்று தெரிந்ததும் ஏற்படும் அச்சம். ஆண்கள் வாசிக்கிற போர்ன் புத்தகங்கள் யாவும் ஆணுக்கு எங்கோ கிடைக்கும் இலவச செக்ஸ் பற்றிய பகல் கனவுகளால் நிறைந்திருக்கின்றன.

யமுனா போல் ஏதோ ஒரு பெண் அதை இலவசமாய் தருவாள்தான்.அன்பினால். தங்கம்மாவும் தன்னுடலை அதே போல்தான் தந்தாள்.அது வெறும் காமம் என வாங்கியவரால் கருதப்பட்டதும் கூசி தன் உடலை அழித்துக்கொண்டாள்.இது ஒரு விஷச்சுழல்.இந்த தலைமுறை இதிலிருந்து விடுபடக்கூடும்.

உடலை மிகுந்த புனிதமானதாகவோ மிகுந்த அசூயைக்கு உரியதாகவோ கருதாமல் சம நிலையுடன் நோக்கும் ஒரு தலைமுறை வரலாம்.ஆனால் அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.

ஆனால் உடலைச் சார்ந்த கதைகள் மறையும்போது உடல் சார்ந்த ஈர்ப்பும் குறைந்து போய்விடலாம்

போகன் சங்கர்

தீர்த்தயாத்திரை- மதிப்புரை பாவண்ணன்

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2021 10:31

திசைதேர் வெள்ளம்- பேரிசையின் தொடக்கம்

அன்புள்ள ஜெ,

திசைதேர் வெள்ளம் நாவலை வாசித்துக்கொண்டு இருக்கையில் எனக்கு ஒரு உவமை தோன்றியது. நாவலை சீக்கிரம் படித்து முடித்து… அந்த உவமையை உங்களுடன் எப்பொழுது பகிர்ந்து கொள்வேனா என்று தவித்தது மனம். எனக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு நல்ல யோசனை வருவதே ஒரு அபூர்வம் இல்லையா!

அந்த உவமை இசையை பற்றியது. இளையராஜா, ரஹ்மான் போன்ற மாஸ்டர்களின் பெரும்பாலான பாடல்களில் ஒரு ஒற்றுமையுண்டு : கேட்பவர்களை உள்ளுக்கிழுக்கும் நல்ல பல்லவி, மெட்டு  இருந்தாலும் பாடலை உடனே அங்கு கொண்டு செல்ல மாட்டார்கள்.  சற்று நீண்ட அற்புதமான வாத்திய இசையை அல்லது கோரஸை  முதலில் வைப்பார்கள். அதில் எத்தனையோ வர்ணஜாலங்களை அமைப்பார்கள். மீண்டும் மீண்டும் கேட்கையில் ஏதோ ஒரு புதிய இசை நெளிவுகள்,  குழைவுகள், புதிய புதிய ஓசைகள், ஓசையின்மைகளை அதில் ஒளித்து வைத்து இருப்பார்கள். ஒவ்வொரு முறை கேட்கையிலும் புதிய கண்டடைதல்களை பெற வைப்பார்கள்.

ரசிகர்களுக்கு இசை உச்சங்களின் சிறு கீற்றலை காண்பிக்கும் முயற்சி இதுவென்று தோன்றும். அந்த இரு மாஸ்டர்களின் இசையிலும் எத்தனையோ பாடல்களை இப்படி சொல்லலாம்.  கர்நாடக சங்கீதத்தின் ‘வர்ணம்’ களில் வரும் மிக நீண்ட ஆலாபனை- பல்லவி முறைக்கு இது ஒரு சுருக்கமான வடிவம் என்று நினைக்கிறேன். மற்ற இசைமைப்பார்களில் இந்த குணம் அபூர்வம். ஹிட்டடிக்கும் மெட்டு இருந்தால் போதும்… நம்மை அதிகம் காக்க வைக்க  மாட்டார்கள்.  ஒரு சம்பிரதாயத்துக்கு வாத்திய இசையை வைத்து விட்டு உடனே நம் செவிகளை தாம் கண்டடைந்த ஹிட் பல்லவிக்கு கொண்டு செல்வார்கள்.  நல்ல பாட்டு தான், அற்புதமான மெட்டுதான்… ஆனால் அதை தாண்டி ரசிகர்களுக்குள் வேறு எந்த ஒரு கண்டடைதலையம் அவை  நிகழ்த்துவதில்லை.  அப்படி அல்லாமல் கேட்பவர்களை ரசிகராக ஒரு படி மேல் உயர்த்துபவர்களே  மாஸ்டர்கள் ஆகிறார்கள்.

நீங்கள் அப்படி ஒரு இலக்கிய மாஸ்டர். சிறு வயதில், தூர்தர்ஷன்  ராமாயணம் குடும்பத்துடன் சேர்ந்து தான் பார்ப்போம். அதில் வரும் யுத்த காட்சிகள் தான் எனக்கு  விருப்பம். ‘அப்பா ஃபைட்டு எப்பப்பா வரும்…’என்று நச்சரித்து கொண்டு இருப்பேன். ‘மகாபா… ரத்’ ஒளிபரப்பு ஆகும்போது சற்று வளர்ந்து இருந்தேன். அதில் சில அற்புதமான நாடக தருணங்களை ரசிக்க முடிந்தாலும் மனம் யுத்தத்துக்காகவே ஏங்கி கொண்டு இருந்தது.  வீட்டில் யாருக்கும் இந்தி  புரியாது. ஆனால், அப்பாவிற்கு மகாபாரதம் தெரியும். தெலுங்கு ‘கவித்ரயம்’ எழுதிய மகாபாரதத்தின் ‘ஆதி பர்வம்’ புத்தகத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருப்பார்.  இந்தி மஹாபாரதம் வரும் போது அதை தோராயமாக புரிந்துக்கொண்டு எங்களுக்கு விளக்குவார்.

கடைசியாக கௌரவ அவைக்கு தூதுவரும் கண்ணன்… துரியனின் மேல் சக்கரத்தை எடுத்து, தொடுக்காமல் ஆவேசமாக பேசும் காட்சி இடம் பெற்றது.  பீஷ்மரும், துரோணரும் ‘உனக்கு தெரியாததா பெருமாளே!’ என்று பக்தி கொப்பளித்து நிற்க, கண்ணன் கிளம்பிச் செல்வார். அப்போதுதான் அப்பா சொன்னார்… ‘இன்னும் சில வாரத்துல யுத்தம் நடக்கும்டா!’ என்று. அடுத்த இரண்டு வாரங்கள் ஓடின. அதற்கும் அடுத்து… என் மனது குதூகலிக்க அர்ஜுனன் வெயிலில் தகதகக்கும் கவசங்களுடன் ரதத்தில் நின்று இருக்கிறான். ஆனால், அம்பு தொடுக்கவே இல்லை. அதுவும் எனக்கு பிரச்சனை இல்லை, ஆணால் ஒப்பாரி வைக்கிறான். அப்பொழுது கண்ணன் சம்ஸ்க்ருதத்தில் பாட தொடங்குகிறான்!

நான் அழாத குறையாக ‘என்னப்பா இது…’ என்கிறேன். ‘இது தான் பகவத் கீதை நைனா! அடுத்த வாரம் அர்ஜுனன் வில்லு எடுப்பான்’ என்றார். ஆனால், பீ ஆர் சோப்ரா அதற்காகவே இன்னொரு மூன்று வாரங்கள் எடுத்து கொண்டார். ‘சே… இனி பாரதமே ப்ப்பார்க்க கூடாது!” என்று நிச்சயித்த பிறகுதான்… ஊக்க மருந்து போன்ற  பின்னணி இசையுடன் அர்ஜுனன் அம்பை எடுக்கிறான். முதல் அம்பு பீஷ்மரின் பாதங்களுக்கு. ‘இது பெயர் தான் மர்யாத பாணம்’ என்று அப்பா விளக்கினார். இப்படித்தான் எனக்கு மகாபாரத புரிந்தது. பிறகு இது தமிழில் மீண்டும் ஒளிபரப்பு ஆனபோது தான் முழுக்க ரசித்தேன்.

ஆனாலும், மகாபாரத போர் என்னை எப்பொழுதும் கிறங்க வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. மகாபாரத யுத்தத்தின் உச்ச காட்சிகள் எல்லோர்க்கும் தெரியும்தான். ‘திசைதேர் வெள்ளம்’ அதன் தொடக்கம். இசை மாஸ்டர்கள் அளிக்கும் தொடக்கஇசை போன்றது. தன்னளவே உச்சங்கள் நிறைந்தது. ஒரு பீபத்ச, வீர ரசம் நிறைந்த பாடல்…  இசையுடன் தொடங்கி  பல்லவிக்கு செல்வது போல. பீஷ்மரின் மரணம் அல்லது ‘தன்கொடை’ தான் அந்த பல்லவி.  பீமனில் தொடங்கி… இரு பக்கங்களிலும் அறப்பிழைகள். நியதிகளில் இருந்து பெரும் சறுக்கல்கள். அசங்கன் உட்பட சாத்யகியின் கை தேறா மைந்தர்களின் மரணங்கள், அவர்களை கொன்று குவித்து சாத்யகியை கொல்லாமல் விட்டுவிடும் பூரிஸ்ரவஸின் அதே தத்தளிப்பு.

சுபாகுவின் மகன் சுஜயனின் மரணம். முதலில் சாதாரண நிகழ்வாக கடந்து செல்லும் அவனின் மரணம்… நாவலின் முடிவில் பப்ருவாகனின் சொற்களில் பெரும் விசையுடன் வந்து அறைகிறது. எத்தனையோ கேள்விகளை எழுப்பிச் செல்கிறது. இதெல்லாம், ஒரு பக்கம் இருக்க ருக்மியின் வருகை இந்த நாவலில் ஒரு அற்புதமான நிகழ்வு. அவனை பார்த்து கண்ணன் காலில் விழும் அந்த காட்சியை வாசித்து ஜோராக கைதட்டி விட்டேன்.  ‘என்ன ஒரு ஆளுமையாக்கம் இது! நம்மாளு இந்த கிருஷ்ணனை  எப்படி படைச்சிருக்கான் பாரு!’ என்று சிரித்து விட்டேன்.

நன்றி சார்,

ராஜு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 04, 2021 10:30

December 3, 2021

இலக்கியமென்னும் இலட்சியவாதம்

இலக்கியத்தை விலைபேசுதல்…

அன்புள்ள ஜெ,

பெருமாள் முருகனுக்கு நீங்கள் மறுப்பு எழுதிய கட்டுரையை இலக்கியத்தை விலைபேசுதல்… வாசித்தேன். வழக்கமாக நீங்கள் இந்தவகையான கடுமையான மொழிநடையில் எழுதுவதில்லை. ஆண்டுக்கணக்காக உங்களை வாடாபோடா என்றெல்லாம் முச்சந்தி மொழியில் எழுதிக்கொண்டிருப்பவர்களை பொருட்டென கொண்டதும் இல்லை. எழுத்தாளர்கள் உங்களைப் பற்றி கடுமையாக எழுதும்போது எதிர்வினையாற்றியதில்லை. நானே சிலவற்றை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். முன்பு ஓர் எழுத்தாளர் எழுதிய கட்டுரையை நான் அனுப்பியதும் “அவர் எழுத்தாளர்…அவர்கள் அப்படித்தான்” என்று எழுதினீர்கள். பெருமாள் முருகன் விஷயத்தில் ஏன் இந்தக் கடுமை?

எஸ்.ஸ்ரீனிவாசன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

ஆம் ,கொஞ்சம் எரிச்சலுடனேயே எழுதினேன். அதற்கு முதன்மைக் காரணம் பெருமாள் முருகனின் மொழி. தமிழில் சில பாவலா மொழிகள் எழுத்தாளர் நடுவே உண்டு. தமிழ் வாசகர்கள் எழுத்தாளர்களின் நிமிர்வை, சுதந்திரத்தை விரும்புவதில்லை. பணிவை தன்னிரக்கத்தை மட்டுமே ரசிக்கிறார்கள். பணிவை பெருந்தன்மையுடன் பாராட்டவும், தன்னிரக்கத்தை உச் உச் கொட்டி ரசிக்கவும் பழகியிருக்கிறார்கள்.

எழுத்தாளர்கள் சிலர் அந்த மனநிலையை சுரண்டுகிறார்கள். “நான்லாம் ஒண்ணுமே இல்ல” “நான்லாம் அப்டி ஒண்ணும் பெரிசா எழுதலை” “செருப்பு தைக்கிறதும் இலக்கியமும் ஒண்ணுதான்” “ஒரு ஆட்டோரிக்‌ஷாக்காரரா இருந்தா சந்தோஷமா இருந்திருப்பேன்” என்றெல்லாம் எழுத்தாளர் சொன்னால் தமிழக நடுத்தரவர்க்க குமாஸ்தா உள்ளம் நிறைவடைகிறது.

அந்த வாசக மனநிலையில் உண்மையில் இருப்பது சாமானியனின் உளப்புழுக்கம். தான் சாமானியன் என உணர்வதன் சிறுமையை அவ்வண்ணம் போக்கிக் கொள்கிறான். எல்லா அறியப்பட்ட ஆளுமைகளிடமும் அவன் “நீயெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்றுதான் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் அவனால் சினிமாக்காரர்களிடம், அரசியல்வாதிகளிடம், அதிகாரிகளிடம், செல்வந்தர்களிடம் அப்படி சொல்லவோ அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதை காணவோ முடியாது. ஆகவே எழுத்தாளனிடம் சொல்கிறான், எழுத்தாளன் அப்படிச் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறான்.

தமிழ்ச்சூழலில் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து எழுத்தாளர்களை வசைபாடித் தள்ளும் பாமரக் கும்பலின் உளவியல் உண்மையில் இதுதான். அவர்கள் ஏதோ அறத்தின் சிகரத்தில், அரசியலுணர்வின் உச்சத்தில், இலட்சியவாதத்தின் ஒளியில், மாந்தருள் மாணிக்கங்களாக வாழ்ந்துகொண்டிருப்பதாக பாவனை செய்வார்கள். எழுத்தாளர்கள் மட்டும் அறமில்லாதவர்கள், சமரசம் செய்துகொண்டவர்கள், அற்பர்கள், அறிவிலிகள் என திட்டுவார்கள். இந்தப்பாமரர்கள் நாலாந்தர அரசியல்தலைவர்களுக்கு கொடிபிடிக்கத் தயங்காதவர்கள். தன்னலத்துக்காக எங்கும் எந்த கும்பிடும் போடத்தயாரானவர்கள். அன்றாட அயோக்கியத்தனங்களில் வெட்கமில்லாமல் திளைப்பவர்கள்.

அச்சிறுமையை அறுவடை செய்ய முயலும் ஒரு பாவனையே “ நான் வீழ்த்தப்பட்ட, நம்பிக்கையிழந்துபோன எழுத்தாளர்” என்பது.  “எழுதி என்ன பயன்?” “இங்கே எல்லாமே சூழ்ச்சிதான்” ”எல்லாவனும் அயோக்கியனுங்க” என்பதுபோன்ற புலம்பல்கள் இன்றைய இணையவெளியில் ஒரு பெரும்சாராரால் ரசிக்கப்படுகின்றன. ஆறுதல்சொற்களுடன் கூடிவிடுவார்கள். இலக்கியத்தை, இலக்கியச் சூழலை, அறிவியக்கத்தைச் சிறுமைசெய்து என்ன எழுதினாலும் சிலநூறு அற்பர்களின் ஆதரவு உறுதியாகிறது. பெருமாள் முருகன் இந்த தன்னிரக்கப் புலம்பல் வேடத்தை மாதொரு பாகன் விவகாரத்தில்ல் வெற்றிகரமாக நடித்தார். அது அவருக்கு அமோக அறுவடையை அளித்தது. அதை அப்படியே இந்தக்குறிப்பு வரை தொடர்கிறார்.

அறிவியக்கம் பற்றிய பெருமிதம் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டும். அறிவியக்கத்தையே அறியாத பெருந்திரள் முன், அதற்கு எதிரான அரசியல்கும்பல் முன் அவன் அந்நிமிர்வை முன்வைக்கவேண்டும். அடுத்த தலைமுறைக்கு இந்த இலட்சியவாதத்தை அளித்துச் செல்லவேண்டும். இதில் பணம் இல்லை, புகழும் பெரிதாக இல்லை. இருப்பது அகநிறைவு. வாழ்க்கையை பொருளுடன் வாழச்செய்யும் ஒரு காலக்கடமை. அதையே எழுத்தாளன் தன்னைச் சூழ்ந்துள்ள பெருந்திரள்முன் வைக்கவேண்டும்.

எழுத்தாளனை அடுத்த தலைமுறை பார்த்துக்கொண்டிருக்கிறது. பல்லாயிரம்பேர் அவனை பழிக்கலாம். பத்துபேர் அவனைநோக்கிக் கிளம்பி வந்துகொண்டேதான் இருப்பார்கள். அவர்களே முக்கியமானவர்கள். அவர்கள் வழியாகவே இந்த இலட்சியவாதம் முன்னகர்கிறது. இது தொழில் அல்ல, வணிகம் அல்ல, இது ஒரு பெரும்கனவு, இக்கனவின் களியாட்டே இதன் லாபம் என அவன் அவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்

மாறாக, திரும்பத்திரும்ப புலம்புகிறார்கள் சிலர். என்ன கிடைத்தாலும் மேலும் பிலாக்காணம். மேதைகள் எல்லாம் வாழ்நாள் முழுக்க அரும்பணியாற்றி அறியப்படாதவர்களாக மறைந்த சூழல் இது. அவர்களுக்காக ஒரு சொல்கூடச் சொல்லாதவர்கள் தங்களுக்கு தனக்கு ஏதோ கிடைக்கவில்லை என எண்ணி ஒட்டுமொத்த இலக்கியச் சூழலே மோசடியானது, சூழ்ச்சியானது என்கிறார்கள். மொத்த அறிவியக்கமே இருண்டது, பயனற்றது என்று பாடுகிறார்கள். அவர்கள் உண்மையில் செய்துகொண்டிருப்பது ஒரு மாபெரும் அழிவுச்செயல். அவர்களின் அந்த தன்னிரக்கப் பிலாக்காணத்தை ஒரு வகை நஞ்சாகவே எண்ணவேண்டும். அடுத்த தலைமுறைக்கு முன் அதிலுள்ள கீழ்மையை வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.

ஒவ்வொரு முறையும் ஓர் இளைஞர் இலக்கியவேட்கையுடன், அறிவியக்கவாதிக்குரிய தீவிரத்துடன், தற்கொலைத்தனமான அர்ப்பணிப்புடன்  எழுந்து வருவதைக் காண்கையிலும் நிறைவடைகிறேன். அவர்களிடம் “நல்லது, கூடவே கொஞ்சம் பொருளியல் வாழ்க்கையையும் பார்த்துக்கொள்” என்று மன்றாடுகிறேன். ஏனென்றால் நான் ஒரு தந்தையும்கூட. ஆனால் அவர்கள்மேல் பெரும் பிரியம் எனக்கிருக்கிறது. அவர்களை காண்பதே உளஎழுச்சியை அளிக்கிறது. விஷ்ணுபுரம் விழாவில் அந்த இளைஞர்கூட்டத்தை காண்கையில் சிலசமயம் கண்கலங்குமளவுக்கு நெகிழ்ந்திருக்கிறேன்

ஆனால் இங்கே பெருமாள் முருகன் அத்தகைய இலட்சியவாதச் செயல்பாடுகளைப் பற்றி அறியாமையுடன் இருக்கிறார். அவற்றை தயங்காமல் இழிவு செய்கிறார். அவர் சேகரித்த சில தரவுகளை மேலதிகமாக சட்டபூர்வமாக ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொண்டதை திருட்டு என்கிறார். அதன்பொருட்டு அழிசி ஸ்ரீனிவாசன் செய்து வந்த ஒட்டுமொத்த அறிவுப்பணியை அழிக்கிறார். அதற்கு அவருக்கு எந்த அறத்தடையும் இல்லை. அழிசி ஸ்ரீனிவாசனிடம் ஒரு வார்த்தை பேசக்கூட உள்ளமில்லை. இவ்வளவும் செய்துவிட்டு தன்னிரக்கப் பிலாக்காணம்.

அழிசி ஸ்ரீனிவாசனிடமும் அவரைப்போன்று வரும் இளைஞர்களிடமும் ஒன்றையே சொல்லிக்கொள்வேன்.

“நண்பர்களே, உங்களுக்கு இன்னும் சில தலைமுறைக்காலம் இங்குள்ள பொதுச்சூழல் எந்த மதிப்பையும் அளிக்கப்போவதில்லை. உங்களை இங்குள்ள அரசியல்கும்பல் வசைபாடும். உங்கள் செயல்களை வீணானவை, அல்லது தங்கள் பிழைப்பை கெடுப்பவை என்றே கல்வித்துறையினர் நினைப்பார்கள். இலக்கியச்சூழலிலேயே காழ்ப்புகளையும் நீங்கள் சந்திக்கவேண்டியிருக்கும்.

உங்களுக்குப் பின்னால் எழுந்துவரும் அடுத்த தலைமுறை இலட்சியவாதி ஒருவருக்கு மட்டுமே உங்கள் பணியும் உங்கள் இடமும் புரியும். அவர்களுக்காக பணியாற்றுங்கள். அவர்கள் உங்களை மதிப்பார்கள். அனைத்துக்கும் மேலாக இந்த பணியால் உங்களை நீங்களே மதிப்பீர்கள். அது மிகமிகமிக முக்கியமானது. நம் சூழலில் லட்சத்தில் ஒருவரிடம்கூட இல்லாத செல்வம் அது.

ஆகவே,  தாழ்வுணர்வோ தன்னிரக்கமோ கொள்ளாதீர்கள். பிறர் அவ்வண்ணம் உங்களிடம் இரக்கம் காட்டினால் ஏற்காதீர்கள். உங்கள் நிமிர்வே நீங்கள் ஈட்டிக்கொள்வது. நிமிர்ந்திருங்கள், வெல்லுங்கள்.”

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2021 10:35

நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி

 

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

இளிவரல் நாடகமான மத்தவிலாசப் பிரகஸனத்தில் காபாலிகனான சத்யசோமன் தன் துணையான தேவசோமாவிடம்  சொல்லும் வேள்விப் பந்தலுக்கும் மதுக்கடைக்குமான ஒப்புமை முதலில்  பெரும் அதிர்வையும் பின்  உன்னிப்பாகக் கவனித்தால் காபாலீகத்தின் அடிப்படை அறிதலையும் தரக்கூடியது.

கபாலி : அன்பே, பார்! பார்! இந்த மதுக்கடை வேள்விக் கூடத்தை ஒத்து விளங்குகிறது. இங்கிருக்கும் அடையாளக் கொடிக் கம்பத்தைப் பார். அதுதான் வேள்விக் குண்டத்துக் கம்பம். மதுதான் சோமரசம். ஜாடிகள் புண்ணியப் பாத்திரங்கள். பொரித்த கறியும் மற்ற பொருட்களும் சுவைக்கும் நைவேத்தியங்கள். போதைப் பிதற்றல்கள் யஜூர்வேத மந்திரங்கள். பாடல்கள் சாம வேத கீதங்கள். தோல் பைதான் வேள்வி அகப்பை. தவிப்பே தீ. கடைக்காரர்கள் வேள்வி நேர்ந்தவர்கள்.

தேவசோமா: நமது பிச்சை உருத்திரனுக்கு ஒதுக்கிவைத்துள்ள வேள்விப்பங்கு.

கபாலி: ஆ! போதை வெறியாட்டம் என்னே அழகு! மத்தள தாளத்துக்கு இசையே அங்க அசைவு, குரலசைவு கண் இமைப்பு. இப்பொழுது மேலாடையைச் சரிப்படுத்த ஒரு கை உயர்த்தி கழுத்தணியை விலகவிட்டு பின் கீழாடையைச் சரிப்படுத்தும்பொழுது தாளத்தை இழக்கிறது.

தேவசோமா : ஆஹா! ஆண்டவர் பொல்லாத ரசிகர்.

கபாலி : இந்த தெய்வீக மதுவைக் கிண்ணத்தில் ஊற்று. ஆடை ஆபரணங்கள் நீங்கட்டும். ஊடிய காதலர் ஒன்றுவர். இளைஞர்கள் வெட்கம் நீங்கி வீரர் ஆவர். வாழ்க்கை முழுவதும் காதல் பெருகும். இனி என்ன பேச்சு இருக்கிறது?

முன்னர் அரனார் மூன்றாங்கண் தீ

மதனனைச் சுட்டது எனுமொழி பொய்மொழி

மன்மதன் தானே நீராய் உருகிட

மாண்புறு நேயக் கொழுந்து எரிந்தது;

அதுவே நம்மைச் சுடுகுது;

நம் மனங்களையும் பொசுக்குது.

இதை காபாலிகன் இளிவரலாகச் சொல்லியிருக்கிறான் என்றாலும் காபாலிகத்தின் மெய்மைகளுள் ஒன்றாக அவன் சொல்லியதிலிருந்து இதை நாம்எடுத்துக் கொள்ளமுடியும்.

“இங்கு உருவாகி வந்த அனைத்தும் இறையிடமிருந்து வந்த்தால் அனைத்திலும் அதன் துளி இருக்கும் .எனவே  அன்னத்தினை உண்டு மதுவினை அருந்தி இல்லறபோகத்தினைக் கொண்டாடி இறையைக் காண முயல்வோம் ”

இம்மெய்மையோடு நோக்கினால் வைதீகரது  வேள்வியும் காபாலிகனது துய்ப்பும் ஒன்றே என உணரமுடியும்.

என்னைப் பொறுத்தவரை மெய்மை நோக்கிய பயணத்தில் இருக்கும் அனைத்துயிரும் படைப்பினைக் கொடுக்க முயலும் படைப்பாளியும் கபால பைரவர்களே. மெய்மை தேடும்போதும் படைப்பாளி படைப்பினைக் கொடுக்க முயலும்போது உயிராற்றல் மெய்மையின் துளியாக படைப்பாக வெளிவரும்போது அதன் உயர்வை உணர்ந்தும் தனக்குள் இருந்து வருவது தன்னைவிடப் பெரிதாய்இருக்க முடியாதெனும் ஆணவத்தால்  அதை முழுமையாகக் கைப்பற்ற முயலும்போது பிரம்மனின் தலையைக் கொய்த காலபைரவனாக நிலை உருவாகிவிடுகிறது.அப்பிரம்மன் தலையை கொய்த பிரம்மஹத்தியான தன்னுணர்வுடன் அலையும் வாழ்வு அப்போதே ஆரம்பித்துவிடுகிறது.

முதல் காலபைரவனுக்கு தன் கட்டளையை மீறினான் பிரம்மன் என்பதும் பெரு நெறியினைத் தாண்டி நடந்ததும் மட்டுமே பிரம்மஹத்திக்கான காரணம்.அதற்கே நிறையாக் கபாலத்துடன் பிரம்மன் படைத்த உலகில் அலைந்து காசியில் நிறைவெய்தினான். ஆனால் இங்கிருக்கும் கபாலபைரவர்களுக்கோ எது தனக்கு நிறைவளிக்கும் என்பதைத் தேடி அலையும் வாழ்வு.அது எண்ணிக்கையில் அடங்காப்பிறவிகள்.பிரம்ம கபாலத்தின் இயல்பே அது படைப்பின் துளி என்பதால் இடப்படும் எப்பொருளின் துளியையும் பலமடங்கு  பெருக்கியே உணரும். இடப்படும் பொருளின் முதல் துளியைப் பெற்றவுடன் அதைவிடப் பலமடங்கு தானே பெருகும் கலத்தினை ஏந்தியவாறு  நிறைவு எங்கெனத் தேடியலைவதே படைப்பாளியின் நிலை.

எப்போது படைப்பாளி தன் கபாலமேந்தலை ஆரம்பித்தாலும் அதில் முதலில் வந்து விழுவது குடும்பமும் உறவும் சமூகமும் கொடுக்கும் பொருட்களே.அவைகளின் துளி கபாலத்தினைத் தொட்டவுடன் கபாலம் தன் வேலையை ஆரம்பித்துவிடுகிறது.கபாலத்தின் படைப்பு இங்கு கவிதையாக மாறுகிறது.

உயிர் வளர்வதற்கான ஆதாரம் அன்னம்.வளர்வதற்கான இச்சை பசியாக மாறி உறுத்த புலன்களின் ஆசை ருசியாக இழுக்க இரண்டுக்கும் இடையே அலைபாயும் படைப்பாளியின் நிலை மஹேஸ்வர பூஜை கவிதையாகிறது.

மஹேஸ்வரபூஜை

பசித்துக்கொண்டே

கொட்டிக்கொண்டே

ருசிருசியாய்

தின்று என்ன கண்டாய்

 

என்ன குழம்பு

இன்றைக்கு என்ன சமையல்

அம்மா கைபாகம்

மதினி கைபாகம்

இருந்து சமைத்தால்

விருந்து சமைப்பாள் இவள்

 

ஓட்டல்சாப்பாடு

ஒத்துக்கொள்ள மாட்டேனென்கிறது

எந்நேரமும் சாப்பிடலாம்

இட்லி

பிள்ளைமார் வீட்டுத் தோசைக்கு

பெறுமதியே இல்லை

அடை செரிக்கிற

குடல் வேண்டும்

பட்டினி கிடக்கும்

திராணி வேண்டும்

 

எப்போதாவதுதான்

செய்கிறார்கள் இடியாப்பம்

சப்பாத்தி

தமிழ் உணவில்லையென்கிறது மனசு

சின்ன வயசில்

பழையது சாப்பிட்ட ஞாபகம்

கூட்டாஞ்சோறென்றாலே

கொண்டாட்டம்தானே

 

மாட்டுக்குத் தீவனம்

மனுஷனுக்குச் சாப்பாடு

மனுஷி கையால்

மஹேஸ்வரபூஜை.

தான் வளரவேண்டுமெனும உயிரின் வாழும் இச்சையினை அழித்தொழிப்பது பிணி.அது வருவதற்குப் பல காரணங்களை மானுடம் சொல்லிக் கொண்டேயிருக்கிறது.எளிய பிணிகளே இவ்வாறிருக்க  வெளிவரத் துடிக்கும் படைப்பெனும்  எனும் பெரும்பிணியால் பாதிக்கப்பட்டவன் நிலை சொல்லும் தரமன்று.பிறர் அதை அறியாமல் திருஷ்டி என்றும் கிரகநிலை என்றும் நடத்தை என்றும் சொல்லி அதற்கான மாற்றினையும் கூறும் இடத்தில் கவிதையால் வந்ததெனச் சொல்ல இயலாமல் தன் துயரைக் இக்கவிதையாய் வடித்திருக்கிறார் கவிஞர்.

 

முன்பெல்லாம் இப்படியில்லை

சமீபகாலமாகத்தான்

மண்டைக்குள் குடைந்தெடுத்துக் கொண்டிருக்கிறது

வார்த்தைகள் வாக்கியங்கள் வரிகள்

 

இருக்கமுடியவில்லை படுக்கமுடியவில்லை

பொறுக்கமுடியவில்லை தலைவலி வேதனை பல்கடிப்பு

சூறைத்தேங்காய் சிதறிக்கிடப்பதுபோல கனவிலும்

சொற்களிள் திரள்கள் கவிதைச் சில்லுகள்

வெளியே கொட்டித் தொலைக்க

வழிவகை வாய்க்கால் தெரியவில்லை

 

வைத்தியரைப் போய்ப் பார்த்தால்

எழுத படிக்கக்கூடாது என்றிட்டார்

திருஷ்டி திருஷ்டிதான் எல்லாம் என்கிறார்

தைக்காத்தெரு அமீர்பாய்

ஜோஸியர் ஹரிஹரசுப்ரமண்யஐயர் யோசனை

அஷ்டமாதிபதிதிசை படுத்துது

வியாழக்கிழமைதோறும்

தக்ஷ்ணாமூர்த்திக்கு விளக்குப்போட்டுவரணும்

கோமதியம்மனுக்கு மாவிளக்கெடுப்பதாக

கவலையோடு நேர்ந்துகொண்டாள் அம்மா

அப்பாவின் தீர்மானம்

அதீதக்குடி செய்யும் சேட்டை

இவளானால் இளக்காரம் பண்ணுகிறாள்

இன்னும் என்னல்லாம் பாக்கியிருக்கோ

நீங்க வந்த வரத்துக்கு

 

கற்பனைபண்ணிப் பார்த்துக்கொண்டேன்

கவிஞனுக்குக் கோட்டிபிடித்தால்

கவிதையைத் தொட்ட பாவத்துக்கு

காலம்பூரா கொடுமை ஒண்ணா ரெண்டா

எதிரிக்கும் வரக்கூடாது இந்த கஷ்டம்

யாருக்கும் நேரப்படாது இந்த துன்பம்

பசியும் பிணியும் வாழ்வில்  தொடர்ந்திருக்க எதையேனும் நம்பிக்கையோடு பற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் எளிதாகப் பற்றிக் கொள்ளக் கிடைப்பது அன்னையின் அன்பு.அன்னை அருகிலிருக்கிறாள் என்னும் தைரியத்தில் அழும்பனாக ஆடும் நிலையை விவரிக்கிறது இக்கவிதை.

செண்பகக்காட்டில்

செம்பாதேவி

குற்றால அருவிப்பக்கம்

குழலி

உலகம்மை ஒய்யாரமாக ஆற்றங்கரையில்

வேணுவனத்தில் விநயமாக காந்திமதித்தாய்

அம்மா இருக்கிற தைரியத்தில்

அழும்பனாக நான்

தொடர்ந்து இங்கு வாழ்வதன் பொருட்டு முதலில் சாந்தமும் பக்குவமும் பின்  துடியும் உக்ரமும் கேட்டுப் பெற்றாலும் அதைத் தாண்டி உயிரின் ஆதார இச்சை எழுவதற்கான சூழல் உருவாகிறது.அது தன்னையே தனக்கு யார் என்று உணர்த்துகிறது என்று சொல்லும் கவிதை.

ஒரு பெளர்ணமி இரவில்

வானம்

சுடரொளி கொண்டிருந்த நடுச்சாமம்

சொல்லமுடியாத குளுமை

விரிந்திருந்த நிலாக்காலம்

விளக்கவொண்ணாத அமைதி

நிலவிய நல்லநேரம்

தூக்கம் பிடிக்காது

வெளியில் வந்து நின்றிருந்த இனியபொழுது

தெக்ஷ்ணாமூர்த்தி

தேடிக்கொண்டு வந்து விசாரித்தார்

சாந்தமும் பக்குவமும்

வேண்டிக் கேட்டேன்

வழங்கினேன் என்றார்

அருமையாய்

பிறகு

கொஞ்சநேரம் சென்று காளி தோன்றினாள்

சிறிது துடியும் உக்ரமும்

தந்துவிட்டுப் போனாள் பாசமாய்

பிரமிள் கவிதைகள்

படித்துக்கொண்டிருந்த பிரம்மமுகூர்த்தம்

சுக்ராச்சாரியார் வந்திருந்தார் வழக்கம்போல

பிதர்ந்துகொண்டேனங நிகழ்ந்தவற்றையெல்லாம்

போதும் போதும் கவியெழுத என்று

பூரித்துப்போனார் சந்தோஷத்தில்

ஆசையாய்க்கேட்டேன்

நீங்கள் என்ன தரப்போகிறீர்கள்

என் கொடைதானே

உன் கவிதைகள் என்றார் இளமுறுவலோடு

நீர்த்துப்போனாற்போல

தெரிகிறதே என கவலைப்பட்டேன் அவரிடம்

சுக்கிலம் போலத்தான்

கவித்துவமும்

சும்மா விரயம் பண்ணக்கூடாது

என்று அறிவுறுத்தினார் சீரியதாய்

காலில் விழுந்து நமஸ்கரித்தேன்

தோள் பிடித்துத் தூக்கியெழும்பி ஆசிர்வதித்தார் கனிவாய்

நான்தான் நீ

கவிஞனென்றாலே சுக்ராம்சம்தான்.

அடைந்தன இன்னும் இன்னும்  வேண்டுமென்னும் என்பதால் இனிஅடையாதவைகளால்தான் இக்கலத்தினை நிரப்ப முடியும் என்று உணர்பவனுக்கு அனைத்தும் வெறுமையாகவே தோன்றும் .வெறுமையின் துளியை பெருக்கிக் காட்டுகிறது இக்கவிதை.

வாழ்நாள் முழுக்க

வெறுமையிலிருந்துதான்

துயிலெழுகிறான்

வெறுமையைச் சுமந்துகொண்டுதான்

காலைக்கடன் முடிக்கிறான்

வெறுமையில் அமர்ந்துதான்

சிற்றுண்டி சாப்பாடெல்லாம்

வெறுமையில் பாதம்பதித்துதான்

நடக்கிறான்

வெறுமையில் உட்கார்ந்துதான்

படிக்கிறான் எழுதுகிறான்

வெறுமையில் ஜமுக்காளம்விரித்து

விடிய விடியவும்

வெறுமைக்குள்தான்

அகமும் புறமும்

வெறுமையே வெறுமையே

வாணாள் பூராவும் தொயங்கட்டும் வயணமென்ன.

வெறுமையைப் பின்தொடர்வது பொறுமை.வாழ்வின் பல அல்லலுக்குப்பின் தான் யார் என்பதை அறியும் போது தன்னால் வருவதல்லவா அது?.

பூமிபோல

நடக்கும்

நடக்காதென்று சொல்ல

நான் யார்

வேண்டும்

வேண்டாமென்று நினைக்கத்தான்

நான் யார்

நன்மை

தீமையென யோசிக்க

நான் யார்

உண்மை

பொய்மையென கருதத்தான்

நான் யார்

பூமிபோல

இருக்கவேண்டியதுதான் சாமி.

வாழ்வின் அலைபாய்தலில் சிக்கித் தவிக்கும்போது தேடுதல் உள்ளவனை அனைத்தும் தேடிவரும் எனும்  பிரபஞ்சவிதிப்படி கனவில் கவிஞனுக்கான விடை கிடைத்திருக்கிறது.ஆனால் அதை நனவில் அடைய எவ்வழியும் இல்லை.கனவில் வந்தக் காட்டுக் கோவிலுக்காக ஏக்கம் கவிதையாக.

கனவில் கண்ட கோயில்

எங்கே

இருக்கிறதோ

இங்கேதான்

எங்கேயாவது இருக்கவேண்டும்

காட்டுக்கோயில்

தெரிகிறது

இலக்கு

தெரியவில்

எவ்வாறு

கண்டறிவது

எப்படி

போவது

அலட்டிக்கொள்ளாமல்

இருக்கலாம்

கனவில் வந்த கருப்பசாமியே

காட்டித் தருவான் இதையும் ஒருநாள்

கோயிலைக் காண்பித்தவனுக்கு

இடமும் வழியும் தெரியப்படுத்துவது

பெரிய காரியமா என்ன

கனவிற்கும் நனவிற்கும் இடையே சிக்கித் தவிப்பவனுக்கு வாழ்க்கை கொடுக்கும் பாடம் வகுத்த வகைப்படியே இங்கு யாவையும் நடக்கின்றன என்னும் புரிதல்.ஆழ்ந்தெடுக்கும் தெய்வத்திடம் தானறிந்தது உண்மையா என வினவுகிறார் கவிஞர்.

வகுத்த வகையல்லால்

நேர்ந்தன அனைத்தும்

நேர்ந்து முடிந்தனதாம்

நேர்ந்து கொண்டிருப்பன தப்பாது

நேர்ந்து கொண்டிருப்பனதாம்

நேரவிருப்பன

நேராமல் போகா

வெறுமை

நேரும்வரை

எல்லாம் நேரும்தாமே

இவ்வளவுக்கும் நடுவே

இருப்பே அதிசயம்தான்

வகுத்த வகையல்லால்

வாழ்வும் தாழ்வும் உண்டோ வாராஹி.

வாழ்வின் புரிதலைத்  தாண்டினால் அடுத்து வருவது  தான் யார் என்பதன் தத்ததுவக்குழப்பம்.இந்தியாவின் இரண்டு பெரும் தத்துவத்தில் தான் எவ்வகை  என்பதன் விடையைக் இக்கவிதை பேசுகிறது.

த்வைதம் X அத்வைதம்

அவன்

வீடற்றவனா வெளியில்

அலைந்துகொண்டிருக்கின்றான்

ஊரற்றவனா

தேசாந்தரியாய்த் திரிந்துகொண்டிருக்கின்றான்

பசிமிகுந்தவனா

கண்டதுகடியதையெல்லாம் தின்றுகொண்டிருக்கிறான்

தாகம் நிரம்பியவனா

கிடைத்ததையெல்லாம் குடித்துக்கொண்டிருக்கிறான்

தூக்கமற்றவனா

நீண்ட இரவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறான்

காமம் செறிந்தவனா

நீச்சஸ்திரீகளைத் தேடிக்கொண்டிருக்கிறான்

வாழ்வற்றவனா

மாயமான் வேட்டையாடிக்கொண்டிருக்கிறான்

சுகமற்றவனா

துக்கத்திடம் ஒப்படைத்திருக்கிறான்

நம்பிக்கையற்றவனா

அவநம்பிக்கையிடம் சரணடைந்திருக்கிறான்

தன்நினைவிலிருந்து போதைக்கும்

போதத்திலிருந்து அபோதத்துக்கும்

சாந்தியிலிருந்து அசாந்திக்கு

புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கும்

அற்பஜீவியை

என்னவென்று சொல்வீர்கள்.

தத்துவக் குழப்பத்தினைப் பின்தொடர்வது  தனக்கு வேண்டியதை அடையும் பிராப்தம் இருக்கிறதா என்ற எண்ணம்.தான் யார் தனக்கான பாதை எது அடையப்போகும் இடம் எது என்ற புரிதல் இருந்தாலும் அடைய வேண்டிய இடத்தினை அடைந்து விடுவோமா அதற்கான முன்வினையினை நாம் செய்திருக்கிறோமா என்ற எண்ணம் இங்கு கவிதையாக.

தாமிரபரணியின் கதையே தனி

சிற்றாறு

எங்கே போகும்

பேராற்றில்

கலக்கும்

மஹாநதியோ

வாங்கும்

தாமிரபரணியின் கதையே

தனி .

பிரச்னையும்

புரிகிறது

தீர்வும்

தெரிகிறது

பின்னே

என்ன

அடைபட

பிராப்தம் இல்லையே நெல்லையப்பா

இங்கு நிகழும் அனைத்தையும் உணர்ந்தபிறகு எவ்வாறு இங்கு வாழவேண்டுமென்பதை உணர்ந்த உயிரின் நிலை இந்தக் கவிதையில் .

அருவி

யாருக்கும் சொந்தமில்லை

அதனால்

அருவிக்கு யாரும் அந்நியமுமில்லை

விழுவது தவிர்த்து

வேறு லட்சியமென்ன உண்டு அருவிக்கு

குளிர்ச்சியும் தெளிவும் அதன்

குணங்களல்ல இயற்கை

அரசுகள் மாறுவதும் ஆட்சியாளர்கள்

புதிதாக வருவதும்

அதற்கொரு விஷயமேயில்லை

அருவியின் எல்லைக்குள் யாரும்

செய்தித்தாள் மேய்வதோ

அரசியல் பேசுவதோ இல்லை

அருவியிடம் கோபம் கொள்வோர் யாருமில்

அவசியமென்ன இருக்கிறது அதற்கு

அருவி

வாழ்தல் பயம் அறியாதது

அதனால்

சுரண்டல் தெரியாதது

அருவி

இரை தேடியோ புணர்ச்சிக்கோ அலைவதில்லை

கேள்வி கேட்பதும் குழம்பித் தவிப்பதும்

கிடையவே கிடையாது

பொறுப்பு அலட்சியம்

மகிழ்ச்சி வருத்தம்

பேறு இழப்பு

எல்லாம் கடந்தது அருவி

அத்வைதம் மார்க்ஸியம் ஸ்டரக்சுரலிசம்

எதுவும் தெரிந்துகொள்ளவேண்டிய ஹிம்ஸையற்றது அது

ஆயிரம் தடவை அருவியில் குளித்தாலும்

யாருக்கும் ஏன் புத்திவருவதில்லை.

இங்கு கிடைத்த அனைத்தையும் விரித்து அடைதலின் இனபமெனக்காட்டி உடனே அதைத் துயராக மாற்றும் பிரம்மஹத்தியின் பிடியிலிருந்து தப்ப தனக்கு முன் சென்ற காலபைரவனின் வழியில்  செல்வதைச் சொல்லும் கவிதை.

ருத்ரபூமி

கையில் ஒட்டிக்கொண்ட கபாலமென‌

கனக்கிறது நிகழ் இருப்பு

ஜோதிடரத்னா சொன்ன சொல்கேட்டு

வந்தாயிற்று வாரணாசிக்கு

வெள்ளிப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது

விரிந்து பரந்த புனித கங்கை

கங்கையில் நீராடி

கரைத்தாயிற்று கர்மவினைகளை

கண்குளிரத் தரிசித்தாயிற்று

கெளரியம்மையையும் கேதாரநாதரையும்

சகஸ்ரநாமம் சொல்லச் சொல்லியே

வழிபட்டாயிற்று அன்னபூரணியை

விசாலாக்ஷித்தாயின் முன்னுள்ள மேருவுக்கு

குங்கும அர்ச்சனைசெய்து வேண்டிக்கொண்டாயிற்று

காசிவிஸ்வ நாதரைக் கண்டு

கஷ்டங்களைக் கூறி முறையிட்டாயிற்று

காலபைரவர் ஆலயம் சென்று

கறுப்புக்கயிறு கட்டிக்கொண்டாயிற்று

துர்க்காதேவியயும் ஆஞ்சநேயரையும்

துணையிருக்கக் கேட்டுக்கொண்டாயிற்று

முறைப்படியே எல்லாம் நடத்தி

முடித்தாயிற்று

இனிமேல் எல்லாம்

நேரமாகிவிடும் பாப்பா.

முன் சென்ற காலபைரவனின் வழியில் சென்றாலும் தனக்கு அங்கு மெய்மை அருளப்படவில்லை  என்பதை உணர்ந்து தனக்கான குருவினைத் தேடிச் சென்றாவது தன் பிணி தீருமா என்பதற்கான அலைதலைச் சொல்லும் கவிதை

சித்தர்காடு

சூரியனார்கோயிலண்டை

சிவாக்ரகயோகிகள்

சுக்ர ஸ்தலப்பக்கம் சுயம்பிரகாசர்

ராமேஸ்வரம் நடராஜர்சன்னதியில்

பதஞ்சலிமுனிவர்

பழனியில்

போகர்

திருவொற்றியூர் கடற்கரையில்

பட்டினத்தடிகள்

திருவான்மியூர் கடலோரம்

பாம்பன்சுவாமிகள்

சங்கரன்கோயிலில்

பாம்பாட்டிசித்தர்

சீர்காழியில்

சட்டநாதர்

தருமபுரத்தில்

ஸ்ரீ குரு ஞானசம்பந்தர்

சித்தர்காடு சென்றுவந்தால்

இத்தரைமீது பிறவிப்பிணி தீரும்.

தன்னைத் தொட்ட அனைத்தையும் பெருக்கி உணரவைத்து  மீண்டும் மீண்டும் அவைகளைக் கொடு எனத்தூண்டி அடைந்தவற்றால் நிறைவினைத் தராமல் அடையாததைத் தேடி அலைய வைக்கும் கபாலத்தினை இங்கு ஏந்தி வாழ்ந்து கொண்டிருக்கும் பலரின்  நிலையை இங்கு கவிதையாய வெளிப்படுத்தியவர் கவிஞர் விக்ரமாதித்யன்.நிறையாக் கலத்துடன் அலையும் அக்கபால பைரவனின் கலம் நிறைய பிரம்மம் அருளட்டும்.ஆம்.அப்படியே ஆகுக!.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2021 10:34

மதம், அறம் -கடிதங்கள்

மதமும் அறமும்

மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மதமும் அறமும் பதிவு தொடர்பாக.

காலப்போக்கில் அறங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு அல்லது மாறுதலடைவதற்கு முக்கியக் காரணி அந்தந்தக் காலங்களில் பிரதானமாக இருக்கும் உற்பத்தி முறை(கள்) என்று எடுத்துக்கொள்ளலாமா?

வேட்டுவ நாடோடி முறை தொடங்கி,  நிலம் சார்ந்த உற்பத்தி, பின்னர் வணிகப் பெருக்கம் ஊடாக இன்றைய தொழிலக உற்பத்தி   மற்றும் சேவைப் பொருளாதாரம் வரை,   இவையே  ஒரு ஊரின் அல்லது நாட்டின்  சமுதாயக் கூறுகளையும்,  அறக்கோட்பாடுகளையும்,  ஆட்சிமுறைகளையும் வடிவமைப்பதில் முக்கியமாக அமைகின்றன என்று தோன்றுகிறது.

அன்புடன்,
வி. நாராயணசாமி

அன்புள்ள நாராயணசாமி

அறம் உட்பட அனைத்தையும் கலாச்சாரத்தின் பகுதிகளாகவும், அவை எல்லாமே பொருளியல் அடிப்படையில் இருந்து முளைத்தவை என்றும் பார்க்கும் மார்க்ஸியப் பார்வை உண்டு. நான் கலாச்சாரம் அப்படி பொருளியலுடன் நேரடியாக உறவு கொண்டது என ஏற்கவில்லை. அது ஒருவித குறுக்கல் வாதம்

கலாச்சாரத்தின் அடிப்படைகள் மானுடர் ஒன்று கலப்பதன் வழியாகவே விரிவடைகின்றன. அதன் அடிப்படையில் அறம் விரிவடைகிறது. குடிகள் கலந்தபோது, நாடுகள் உருவானபோது பல்லாயிரம் மக்கள் சேர்ந்து வாழ்ந்தனர். விளைவாக மற்றவர்களை மதித்து, ஏற்றுக்கொண்டு வாழும் அறநெறிகள் தோன்றின. இன்று நாடுகள் இணைந்து உலகச் சமூகம் உருவாகிறது. அதற்கேற்ப கலாச்சாரம் விரிவடைகிறது. அறநெறிகளும் மாறுபடுகின்றன

பல்லினக் கலாச்சாரம் உடைய நாடுகளுக்கு குடியேறுபவர்கள் இதை உடனடியாக உணர்வார்கள். முதலில் அவர்களுக்கு ஒழுக்கம் சார்ந்த திகைப்பு உருவாகும். ஒழுக்கம் என்பது பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடும் என்றும், தங்களுடைய ஒழுக்கம் மட்டுமே உண்மையானது உயர்வானது என எண்ணுவது அபத்தம் என்றும் உணர்வார்கள். தங்கள் ஒழுக்கநம்பிக்கைகளை மற்றவர்கள் மேல் போடக்கூடாது என்னும் எண்ணம் வரும்.

அதேபோல ஆசாரங்களையும் பிறர்மேல் போடமுடியாது என்று தெரியவரும். மெல்ல அவர்களின் அறவியலும் விரிவாகும். தாங்கள் கொண்டிருக்கும் அறவுணர்வை விரிவுபடுத்தாமல் பல்வேறு மக்களுடன் கலந்து வாழமுடியாது என்றும், உலகவாழ்க்கையின் வாய்ப்புகளும் வளர்ச்சிநிலைகளும் வேறுபட்டவை என்றும் அறிவார்கள். அறம் விரிவடைவது, புதிய அறங்கள் தோன்றுவது இவ்வாறுதான்.

இது புறவயமான காரணம். அதற்கு அப்பால் மானுடம் மேலும் மேலும் பெரிய அறம் நோக்கி சென்றுகொண்டிருப்பது, மானுடம் மேம்படவேண்டும் என்னும் கூட்டான விருப்பத்தின் விளைவு. அந்த விருப்பத்தை மானுடத்தின் உள்ளே புகுத்திய பிரபஞ்சவிசையின் ஆணை அதன் நாவாக ஒலிக்கும் ஞானிகளின் கொடை.

ஜெ

அன்புள்ள ஜெ,

தங்களது மதமும் அறமும் கட்டுரையைப் படித்தேன்,அந்தக் கட்டுரை மிகவும் அர்த்தமுள்ள கட்டுரை ஆனால் அதில் வரும் ஒரு உதாரணம் பிழையான அர்த்தத்தைத் தருகிறது.அதில் தங்களது பின்வரும் கருத்தான  ” ராமானுஜரே அவ்வாறு எண்ணாமலிருந்திருக்கவும் வாய்ப்புண்டு” என்பது மேலெழுந்தவாரியான ஒரு விளக்கம் மட்டுமே

அதேபோல  “ராமானுஜர் அவ்வாறு  கருதி இருக்கவும் வாய்ப்புண்டு””  என்றும் பொருள் கொள்ள இடம் இருக்கிறது.நீங்கள் சொல்வது நபரை விட கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற அளவில் மட்டுமே  புரிந்து கொள்ளகிறேன்..

அதை நேரடியாக சொல்லாமல் ராமானுஜரை மேற்கோள்காட்டி சொல்லுவது தேவையா என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளவும்..ஆனால் எனது நம்பிக்கை ராமானுஜர் ஒரு மகான்..ஆதிசேஷனின் அவதாரம்.அவரை கருணை அற்றவராக வலிந்து சித்தரிப்பது ஏன்?..

ரங்கராஜன்

சென்னை.

 

அன்புள்ள ரங்கராஜன்

என் பார்வைக்கும் உங்கள் பார்வைக்குமான வேறுபாடு பெரியது. ராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம், அவருடைய ஒவ்வொரு சொல்லும் காலாதீதமானது என எண்ணுவது மதநம்பிக்கை. நான் அவரை மெய்ஞானி என எண்ணுகிறேன். ஆனால் பிளேட்டோவோ சங்கரரோ ராமானுஜரோ எந்த மெய்ஞானியும் அவருடைய காலகட்டத்தின் பொதுவான சிந்தனையின் எல்லைக்குள் தான் நிற்க முடியும். அது மானுடத்தின் எல்லை. ராமானுஜர் ஆதிசேஷனின் அவதாரம் என்றாலும்கூட அவர் மானுடராக வந்தமையால் மானுடரின் எல்லா எல்லைகளும் அவருக்கும் உண்டு என்றுதான் புராணமும் சொல்லும். ஆகவேதான் ராமனும் பிழைசெய்ய நேர்ந்தது. துயர்கொள்ளவும் வாய்த்தது.  

நான் ஞானிகளை கருணையற்றவர்கள் என சொல்பவன் அல்ல. ஆனால் மானுடரின் பார்வைகளின் எல்லைகளை உணர்ந்தவன். இளமையில் நான் மாட்டுவண்டிகளில் பயணம் செய்தவன். மாடு வண்டியிழுக்க வேண்டியது என்பதே என் இயல்பான எண்ணம். உழவுக்கும் பயணத்துக்கும் மானுடம் பத்தாயிரம் ஆண்டுகளாக விலங்குகளை பயன்படுத்தி வந்திருக்கிறது. நுகத்தில் கட்டி சவுக்காலடித்திருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன் அது எவ்வகையிலும் பிழையாக படவில்லை. சமீபத்தில் ஒரு குதிரை வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தது. குதிரை ஒன்றும் சிரமப்படவும் இல்லை.ஆனால் என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. அதை என் அகம் ஏற்கவே இல்லை. ஏனென்றால் இன்றைய மதிப்பீடுகள் மாறிவிட்டிருக்கின்றன

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோயில் யானை பெருமாளை ஏற்றிக்கொள்வது என்பது அதன் கடமை, அதன் மோட்சம் என்றே கருதப்பட்டிருக்கும். அதை அடிப்பது எவருக்கும் பிழையென பட்டிருக்காது. மனிதர்களே அவ்வாறுதான் நடத்தப்பட்டனர்.  எப்படி விழுமியங்கள் மாறின என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். வலிந்து சித்தரிக்கவில்லை. கேட்டவர் தீவிர வைணவர் என்பதனால் அவ்வாறு விளக்கினேன்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2021 10:33

சுபிட்சமுருகன் வாசிப்பு – கதிர்முருகன்

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

சுபிட்சமுருகன், வாசிப்பு

சுபிட்சமுருகன் – கடிதங்கள்

சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்

அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி எப்பொழுதும் தூய வெண்ணிற பருத்தி ஆடைகளையே அணிவார் அவ்வளவாக புகழ் பெறாத காலகட்டத்தில் பேருந்துக்காக காத்து கொண்டு நின்று கொண்டிருந்திருக்கிறார் பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி மென்று குதப்பிய வெற்றிலைச்சாற்றை மகரிஷியின் முகம் மார்பு பகுதிகளில் எதிர்பாராமல் துப்பிவிட்டாள்.பதறித் துடித்து இருக்கிறாள் அந்த அம்மாள் ஐயா மன்னித்துவிடுங்கள் கவனிக்கவில்லை என்று பல முறை மன்னிப்பு கேட்டுள்ளாள்.

துளியும் சலனமின்றி மகரிஷி சொன்னாராம் இந்த உடம்பே அம்மாவின் எச்சில் தானே அம்மா.நீங்கள் வேண்டுமென்று செய்யவில்லை பரவாயில்லை என்று கூறியுள்ளார்.இந்நாவல் முழுக்க எச்சில் பலவற்றின் குறியீடாய் வந்து கொண்டே உள்ளது.

கதை நிகழும் ஊர் மழைக்காக ஏங்கித் தவிக்கிறது குடிக்க நீரில்லை கால்நடைகள் மடிகின்றன, செடி கொடிகள் உயிர் தண்ணீர்க்கு ஏங்கித் தவிக்கின்றன.நாயகன் கட்டுக்கடங்காத ஆசைகளின் வெப்பத்தினால் உடலும் உள்ளமும் உருகி கொஞ்சம் கொஞ்சமாக கருகுகிறான்…

பிண்டத்தின் சூட்டிலிருந்து விடுபட்டு அண்டத்தின் முருகனின் குளிருக்காக தவம் இருத்தலும் நிறைவில் முருகனின் அருளால் அவன் அகம் நிறைவதுமே கதை.கிறிஸ்துவின் இறுதிச் சபலம், மிர்தாதின் புத்தகம், லிட்டில்   புத்தா என ஏற்கனவே படித்த பார்த்த பலவற்றை நினைவு மீட்டிக் கொண்டே இருந்தது இந்நாவலை வாசிக்கும் பொழுது.

கிறிஸ்துவும் சரி மிர்தாதும் சரி உண்மையை நோக்கிய தங்களுடைய யாத்திரையில் பெரு வலிகளை எதிர்கொள்கின்றனர்.எவ்வளவு வலி தாங்குகிறோமோ நிறைவில் வரும் இன்பம் ,அவ்வளவு பெரிதாக இருக்கும், இரவு தன் உச்சத்தை எட்டுகையில் விடியல் அருகில் இருக்கிறது.நாவலில் வலி குறித்து வரும் சில வரிகள்.

வலியை உணர்ந்து பின்தொடர்ந்து  போ.அதை   எடைபோடுகிற உரிமை உனக்கு இல்லை எண்ணங்களுக்கு உன்னை ஒப்புக் கொடுத்து விடு எண்ணங்களை உருக்குகிற சட்டி ஒன்றின் பெயரை அறிவாய் எண்ணங்கள் செல்கிற திசையில் போய் கணக்கைத் தீர்த்து விடு

கடைசி வலி உக்கிரமாத்தான் இருக்கும் பொறுத்துக்கிட்டீனா எல்லாத்தையும் கடந்துடுவ

மேலும் மனதைத் தொட்ட சில வரிகள்

சந்தேகம்  செந்நிறபூரானை போல மனதில் ஊற ஆரம்பித்தது

பயம் ஒரு பாம்பைப் போல பின் தொடர ஆரம்பித்தது என்னை

உள்ளுக்குள் சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் உயிர்  ஓடைகொப்பளித்து நீரை வெளியேவே துப்ப வேண்டும் அது வரைக்கும் அலைச்சல்கள் பொதுவானவை உயிர் ஓடை தேடி மக்கள் எறும்புகள் போல் அலைந்தனர்//.

தொழில்முறை ஹாக்கி விளையாட்டு வீரரான நாவலின் ஆசிரியர் தன் முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார்.பந்தை தொடுவதற்கு முன் பணி வைத்தான் கற்றுக்கொடுப்பார்கள் குருவிடம் சரண் அடைகிரஇடத்திலேயே பயிற்சிக்கான முதல் புள்ளி துவங்குகிறது.

குரு-சிஷ்ய உறவு பற்றி எவ்வளவு எழுதப்பட்டுள்ளது இருந்தும் இன்னமும் எழுத மிச்சம் உள்ளது.

குருவைப் பார்க்க ஒருவர் வருகிறார் தரமான சந்தனக் கலவை சட்டி ஒன்றை சாமி முன்னால் நீட்ட சாமி அதில் ஒரு     தீற்றலை பக்கத்தில் படுத்திருந்த நாயின் குண்டியில் தடவி விடுகிறார்.(ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்)

குரு எப்போதும் ஒரு வேப்பங்குச்சியை மென்றுகொண்டே இருக்கிறார். அவர் துப்பும் எச்சில் பக்தர்களால் ஆசீர்வாதம் என நம்பப்படுகிறது.

கசப்பு விஷத்தை தான் விழுங்கிறார் நீலகண்டனை போல.

ஒரு சாதகன் ஞான முழுமையை பெரும்பொழுது அங்கே சிஷ்யன் குரு இறை என பேதங்கள் எல்லாம் இல்லை.நாவலில் இது ஒரு சம்பவமாக வருகிறது கதை நாயகன் முழுமையை நோக்கி நகரும் ஒரு தருணத்தில் அங்கே கோவிலில் உள்ள குருவின் புகைப்படம் விழுந்து நொறுங்குகிறது தானாகவே.

நாவலில் நிறைய சுவாரசியமான பாத்திரங்கள் உண்டு . தாத்தா,அத்தை,என அதில் ஒன்று விருதுநகர் வடை மாஸ்டர் சுப்ரமணி.

குரு சொன்னார் என்ற ஒற்றை காரணத்திற்காக ஒரே இடத்தில் தொடர்ந்து வடை சுடுகிறார் பல இடங்களில் பெரிய சம்பளத்திற்கு வேலைக்கு அழைத்து போதும் குரு வாக்கினை மீறாது காக்கிறார் இதே சுப்பிரமணி இரவில் குடித்துவிட்டு குருவினை திட்டி தீர்க்கிறார். நான் யின் யாங்கினை நினைத்து கொண்டேன்.அதீத அன்பும் பற்றும் தானே ஒரு புள்ளியில் கோபமாக மாறுகிறது.

என்னளவில் நாவலில்  பித்துநிறைந்த அத்தியாயங்களாக முற்பகுதி அத்தியாயங்களை சொல்லுவேன்.இந்த இந்திய மண்ணில் பிறந்தது எவ்வளவு பேரதிர்ஷ்டம் நாயகன் இதே வேலையை பாலைவன நாடுகளில் செய்திருந்தால் எப்போதோ தலையை அல்லது குறைந்தபட்சம் கையையாவது வெட்டியிருப்பார்கள்.

எவ்வளவு கீழான காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் காட்டும் தீவிரம் ஈடுபாடு உங்களை முழுமையை நோக்கி நகர்த்தும்.நாவல் இவ்வாறு நிறையும் சாமி கடலுக்குள் அமிழ்ந்து பலம் கொண்டு எச்சில் துப்பினார் மயிலோன் விந்துதுளி செங்காட்டு நிலத்தில் விழுந்தது.

இந்த தீபாவளி திருநாளில் எல்லோருக்கும் இறைவனின் எச்சில் கருணை கிட்டட்டும்.

மு.கதிர் முருகன்

கோவை

 

https://www.amazon.in/Books-Saravanan-Chandran/s?rh=n%3A976389031%2Cp_27%3ASaravanan+Chandran

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2021 10:30

இருட்கனியின் ஐயங்கள்

அன்புள்ள ஜெ

நலம்.நலம் அறிய ஆவல்!

இருட்கனியைப் பற்றி ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதிகிறேன்.

தற்பொழுது நீர்க்கடன் வாசித்து கொண்டிருக்கிறேன்.வெண்முரசை வாசிக்கும் எளியவனாக சொல்கிறேன் ,வெண்முரசின் உச்சம் இருட்கனியே !.நீலத்தின் பித்தை விடவும் ,இமைக்கணத்தின் ஞானத்தையும் விடவும் இருட்கனி ஒருப்படி மேல் !

கர்ணனின் வீழ்ச்சி சோர்வடைய செய்யும் என்றே எண்ணினேன் ,17ஆம் நாள் இரவில் இருந்து இருட்கனி பின் சென்றதால் என்னவோ தெரியவில்லை ,சோர்வில்லை ..ஓர் முழுமையை நோக்கிச் சென்று அமையும் பயமாகவே இருந்தது.

என் கர்ணணை வீழ்த்த விண்ணளந்தோனுக்கும் ஓர் வேள்வி தேவைப்படுகிறது இந்திரன் தேவைப்படுகிறான்,அவன் கொடை தேவைப்டுகிறது,அதுவும் ஆயுதம் இல்லாத கர்ணனை வீழ்த்தவே! .

“அவன் அருளலே, அவன் தாள் வணங்கி” என்பதைப் போல் ..”அவனருளாலே அவனை வென்றான் அம்மாயக்கண்ணன்”.சகுனியை அறைகூவும் பிரேசனன் எஞ்சும் கர்ணனாய் நிற்பது இருட்கனியின் இனிப்பின் எச்சம்.இருட்கனியின்ச் சுவைக்காக தங்களுக்கு என் வணக்கங்களும் ,நன்றிகளும்.

பின் ஓர் சிறிய சந்தேகம் ,

11ஆம் நாள் அர்ஜுனனும்‌ (விண்ணளந்தோன் கையை விரிக்கும் தருணம்)

14ஆம் நாள் இரவுப்போரில் சகதேவனும் ,

16ஆம் நாள் தர்மனும் பீமனும் தத்தம் உயிரை கெடையாய் பெறுகின்றனர் (அ) சிறுமை செய்யப்படுகின்றனர் ,அவ்வாறு போர்களத்தில் நகுலன் மட்டும் தப்பித்தது ஏன்? நகுலன் தன்னை உணர்ந்து தனியாக கர்ணனை எதிர் கொள்ளாம்ல் இருந்ததாலா ?இல்லை இயல்பாய் அவ்வாறு அமைந்ததா?!..

நன்றி,

அன்புடன்,

செ.சரவணப் பெருமாள்.

அன்புள்ள சரவணப்பெருமாள்

உண்மையில் இப்போது வெண்முரசு பற்றிய எந்த கேள்விக்கும் நான் பதிலளிக்க முடியாது. எந்த விவாதத்திலும் கலந்துகொள்ள முடியாது. மலையேறிச் சென்று உச்சியில் நின்று கண்டவை அதிலுள்ளன. இப்போது வேறு மலைகளில் இருக்கிறேன்.

வெண்முரசில் வரும் ஐயங்கள் அல்லது குழப்பங்களுக்கு வெண்முரசின் நல்ல வாசகர்கள்தான் பதில் சொல்லமுடியும். அப்படி ஏராளமானவர்கள் உள்ளனர். பல விவாத அரங்குகள் நிகழ்கின்றன. அங்குதான் இவற்றுக்கெல்லாம் பதில் கிடைக்கும்.

ஜெ

இருட்கனி வரவு

இருட்கனி, வாசிப்பு- முனைவர் ப.சரவணன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 03, 2021 10:30

December 2, 2021

பாபுராயன் பேட்டை பெருமாள்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

இந்த தீபாவளியன்று சென்னைக்கு அருகில் உள்ள பாபுராயன் பேட்டை என்னும் விஜய நகர சம்ராஜ்யச் சிற்றூர் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். கோவிலின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அறிந்து என்ன செய்ய முடியும் என்று பார்த்துவரலாம் என்ற எண்ணம்.

அங்கு சாம்ராஜ்யத்தின் பெயரைக் கொண்டுள்ள விஜய வரதராஜப் பெருமாள் கோவிலின் தற்போதைய நிலையைப் பதிவு செய்துள்ளேன். மனதைப் பிழியும் அக்கறையின்மை மற்றும் தொடர்ந்து வந்துள்ள அரசுகளின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டு கொந்தளித்தேன்.

காஞ்சி மடம் ஏதோ சிறு உதவி செய்துகொண்டிருக்கிறது. அதனால் கோவிலில் ஒரு கால பூஜை நடக்கிறது. பட்டர் அருகில் உள்ள ஒரத்தி என்னும் ஊரில் இருந்து வந்து சென்றுகொண்டிருக்கிறார். அவ்வூரில் உள்ள தொம்னையான சிவன் கோவிலையே காணவில்லை. சிவலிங்கத்தின் ஆவிடையார், துவாரபாலகர்கள் என்று பலதையும் இடிந்துகொண்டிருக்கும் பெருமாள் கோவிலில் வைத்துள்ளார்கள்.

சில ஆண்டுகள் முன்பு சிங்கப்ப்பூரில் சந்தித்த போது நீங்கள் கோவில் கோபுரங்களுக்கு வெள்ளை அடிப்பதைப் பற்றியும், வீச்சு மணல் கொண்டு சிலைகளைச் சிதைப்பதைப் பற்றியும் சொல்லியிருந்தீர்கள். இந்தக் கோவிலில் அவற்றுக்கான தேவையே இல்லை. எதுவும் செய்யாமலேயே வரலாறு நம்மை விட்டுப் பிரிந்து சென்றுகொண்டிருக்கிறது.

அன்னியப் படை எடுப்பு என்கிற தேவையே இல்லாமல் அறம் குறைந்த மானிடர்களால் நடத்தப்படும் அரசுகளின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அந்தக் கோவில் இருப்பதை என் உள்ளத்தில் உணர்ந்தேன்.  விஷ்ணுபுரத்தில் வரும் கோவில் சிதைவுகள் நினைவிற்கு வந்தன.

அற நிலையத்துறை, தொல்லியல் துறை என்று அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

‘குமரித்துறைவி’யில் மீனாட்சியம்மைக்கு நடக்கும் மீண்டெழுதல் வரதாராஜனுக்கும் நடக்க வேண்டும்.

ஆமருவி தேவநாதன்

www.amaruvi.in

 

அன்புள்ள தேவநாதன்,

சற்றுமுன் அ.கா.பெருமாள் அவர்கள் வந்து அவர் எழுதி வெளிவந்த நூலை அளித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது இங்கே குமரிமாவட்டத்தில் கைவிடப்பட்டு அழியும்நிலையில் இருக்கும் ஆலயங்களையும், அங்குள்ள கல்வெட்டுகளையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

நான் சில மாதங்களுக்கு முன் கரியமாணிக்கபுரம் பெருமாள் ஆலயம் சென்றதை அவரிடம் சொன்னேன். அந்த ஆலயம் குமரிமாவட்டத்தின் மிகத்தொன்மையான ஆலயங்களில் ஒன்று. ஆனால் நாங்கள் சென்றபோது தெரிந்தது, அங்கே அன்றாட பூஜைக்கு அர்ச்சகர் இல்லை. சுசீந்திரத்தில்  இருந்து ஓர் அர்ச்சகர் பகலில் ஏதேனும் ஒரு வேளை வந்து திறந்து விளக்கேற்றிவிட்டுச் செல்கிறார். ஆலயம் திறப்பதில்லை என்றார்கள் ஊர்க்காரர்கள்.

சுற்றிலும் செல்வச்செழிப்பு. மாடமாளிகைகள் என்று சொல்லவேண்டும். அத்தனைபேரும் இந்துக்கள். அந்த கோயிலுக்கு அங்குள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் நூறு ரூபாய் மாதம் அளிக்கமுடிந்தால் ஐம்பதாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு நல்ல அர்ச்சகரை அமர்த்தலாம். பூஜைகளை முறையாகச் செய்யலாம். ஒரு வேளை உணவுக்கு ஓட்டலில் ஆயிரம் ரூபாயை செலவிட தயங்காதவர்கள் அவர்கள். ஆனால் எவருக்கும் எந்த தயக்கமும் இல்லை. அப்படி ஓர் ஆலயம் ஊர்நடுவே கைவிடப்பட்டு கிடப்பதென்பது தலைமுறைகளுக்கும் பழி சேர்க்கும் என்று தெரியாது. தெரிந்தாலும் அக்கறை இல்லை.

ஆனால் அவர்களில் பலருக்கு இந்துத்துவ உணர்வு உண்டு. தேர்தலில் அப்படித்தான் வாக்களிப்பார்கள். கிறிஸ்தவர்கள்மேல் காழ்ப்பு உண்டு. குமரிமாவட்டத்தில் ஆயிரத்துக்குமேல் கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளன. பராமரிப்பில்லாத, கைவிடப்பட்ட ஓர் ஆலயம்கூட இல்லை. பக்தர்கள் செல்லாத ஓர் தேவாலயம் கூட இல்லை. அந்த அப்பட்டமான உண்மை மட்டும் இவர்களுக்கு உறுத்துவதே இல்லை.

இப்படித்தான் தமிழகம் முழுக்க இருக்கிறார்கள். எந்தப் பயணத்திலும் கைவிடப்பட்ட ஆலயங்களைப் பார்க்காமல் வர முடிவதில்லை. தஞ்சையில் பல ஆலயங்களுக்குள் மாடுகளை கட்டியிருப்பார்கள். சாணி குவித்திருப்பார்கள். கழிப்பறைகளாக பயன்படுத்தப்படும் ஆலயங்களைக்கூட இங்கே கண்டிருக்கிறோம். சொல்லிக்கொண்டே இருப்போம், ஊழிருந்தால் இந்த அழியும் இனம் செவிகொள்ளட்டும்

ஜெ

பிகு : குமரித்துறைவி நாவலில் வரும் பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயமே அந்நிலையில்தான் உள்ளது

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2021 10:35

ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்- இராயகிரி சங்கர்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

மிகமிக எளிய சொற்கள். அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்கள் பேசிப் பகிரும் அதே வார்த்தைகள். வாழ்வியல் அனுபவம் தரும் ஒளியூட்டலால் கவித்துவம் கொள்கின்றன. அண்ணாச்சியின் கவிதைகள் கனிந்த லௌகீகிக்கு உரியவை. எளியவை என்றாலும் குழந்தையின் களங்கமின்மை போன்று அபூர்வமானவை.

ஆழித்தேர் சென்ற தடம்- விக்ரமாதித்யனின் கவி முகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2021 10:34

நாராயண குருவின் இன்னொரு முகம்

நாராயண குரு என்ற பேராளுமைக்குப் பல பரிமாணங்கள் இருக்கின்றன. தத்துவ ஞானி, ஆன்மிகப் பெரியார், கேரள மறுமலர்ச்சியின் விடிவெள்ளி, சமூகச் சீர்திருத்தங்களின் முன்னோடி, ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயங்களுக்கு சமூக நீதியைப் பெற்றுத் தந்த போராளி, சாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட மனிதப் பற்றாளர் என்று அவரைப் பல நிலைகளில் காண முடியும். அவை அனைத்துக்குமான பேருருவாக இருந்தவர், இருப்பவர் குரு.

நாராயண குருவின் இன்னொரு முகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 02, 2021 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.