Jeyamohan's Blog, page 874

November 30, 2021

சொற்கள்- கடிதம்

அன்பு ஜெ,

“பொதுவாக சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவைதான் உணர்ச்சிகளையே உருவாக்குகின்றன. நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத்தொடங்குகிறோம். அதைச் சொல்லிவிட்டதனாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம். பெரும்பாலான பகைமைகளும் சினங்களும் சொல்லிவிட்ட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.” –(வெண்முரசு – மழைப்பாடல்).

இதை மதாரிடம் பகிர்ந்தபோது, தான் காலையில் படித்த அறிவியல்-கவிதை புத்தகமான “ஹோலுப் கவிதைகள்” என்ற புத்தகத்தின் வரிகள் நினைவிற்கு வந்ததாய்ச் சொன்னார். அந்தப் பக்கத்தை எனக்கு அனுப்பினார். நான் அதை வாசித்தபோது ‘அட!  இரண்டுமே ஒரே மூலத்தையே சென்றடைகின்றன.  ஆனால் சென்றடைந்த பாதை வேறு.’ என்று சொன்னேன். அதையே மதாரும் உணர்ந்ததாகச் சொன்னார். ஆனால் உங்களின் வரிகளைக் கொண்டே அந்தக் கவிதையை சரியாகப் புரிந்து கொண்டதாகச் சொன்னார்.

ஹோலுப்பின் அந்த வரிகள்:

” Poetry is very important , only I don’t know what for .” வார்த்தை அவருக்கு மிகப் பிரதானமானதாய் ஆகியிருந்தது. வார்தை இல்லாமலிருந்தால் அறிவியல் கட்டுரைகள் எழுதவியலாது. வலியைப் பொறுத்துக் கொள்ளவும் கூட வார்த்தை வேண்டிருக்கிறது என்ற கருத்தை முன் வைக்கும் ஹோலுபின் கவிதை : “வலி என்ற வார்த்தை பற்றி சுருக்கமான சிந்தனைகள் விட்கென்ஸ்டீன் சொல்கிறார் : ‘அது வலிக்கிறது’ என்ற சொற்கள் வலியின் அழுகையையும் கண்ணீரையும் பதிலீடு செய்துவிடுகின்றன வலி எனும் சொல் வலியின் வெளிப்பாட்டினை விவரிப்பதற்குப் பதிலாய் பதிலீடு செய்துவிடுகிறது . இங்ஙனம் அது ஒரு புதிய நடத்தை வகையை உருவாக்கிவிடுகிறது வலியைப் பொறுத்தவரை , அந்த சொல் நமக்கும் வலி என்பதற்குமிடையில் நுழைந்துவிடுகிறது மௌனத்தின் பாசாங்கு போல் . அது மௌனப்படுத்துவது . ரத்தத்திற்கும் களிமண்ணுக்கும் இடையிலான தையலை பிரித்து அகற்றும் ஒரு ஊசி . ஒருவர் தன்னிலிருந்து விடுதலை பெறுவதிலான முதல் அடியெடுப்பு அந்த சொல் . ஒரு வேளை பிற(வும்)ரும் வந்திருந்தால்” என்று விட்கென்ஸ்டீன் பற்றிய ஒரு கவிதையில் சொல்கிறார் . ஏதோ ஒரு விஷயத்திலிருந்து விடுதலை பெற அலறலை விட வார்த்தை சாலச்சிறந்தது . அலறல் பல விஷயங்களை சொல்லக்கூடியது. ஒரு நுண்மையான வழியில் வலிக்கிறது என்று சொல்வதால் வலியிலிருந்து தப்பிக்கிறோம் என்கிறார் ஹோலுப்: கவிதை பிரத்யேகமாய் அதன் மிக ஆழ்ந்த வேர்களில் மரணம் மற்றும் வலிக்கு எதிரான நலிந்த, குழந்தைத்தனமான அடி வைப்புகளாய் அமைகிறது. ”

இங்கு நீங்கள் ஒரு எதிர்மறைத் தருணத்தைச் சொல்லவும், ஹோலுப்போ நேர்மறைத் தருணத்தைச் சொல்லவும் ஒரு மூலத்தைப் பயன்படுத்தியிருப்பதாய் நினைத்தேன். இது வரை உங்கள் சிந்தனைகள் எப்படி என்னை ஆழமாக ஊடுருவி அன்றாடம் நான் பார்க்கும் விடயங்களை நானறியாத ஒரு கோணத்தில் அடைந்து என்னை வேறொன்றாக மாற்றுகிறது என்று நினைத்திருக்கிறேன். இதைவிட ஒருபடி மேலே போய் ஒரு நரம்பியல் சார் அறிவியல் பின்புலம் கொண்ட வாசகர் சமீபத்தில் உங்கள் சிந்தனைகளை சிலாகித்து தான் அறியாத ஒன்றை உங்கள் வெண்முரசின் எழுத்துக்களின் மூலம் கண்டதாகச் சொன்னது நினைவிற்கு வந்தது.  இப்படி அறிவியலும் தத்துவமும் சந்திக்கும் புள்ளியை நீங்கள் தொட்டுவிடுகிறீர்கள். நீங்கள் சொல்லும் தத்துவங்களை ஒவ்வொரு அறிவியல் ஆராய்ச்சியாளனும் அவன் பாதையில் கண்டடையலாம் ஆனால் அவனுக்கு அதன் மேல் சிரத்தை இருக்க வேண்டும். அப்படி ஒரே சமயத்தில் அறியலாளனாகவும் தத்துவவாதியாகவும் இருக்கும் அறிஞர்களின் கருத்துக்களைப் படிப்பதில் பல அன்றாடக் கண்டடைதல்கள் இருக்கும்.

அறிவியலில் WIND -ஐப் பற்றிச் சொல்லும்போது “THE MOVEMENT OF AIR FROM HIGH PRESSURE TO LOW PRESSURE AREA IS CALLED WIND” என்கிறார்கள். தமிழில் AIR என்பதைக் காற்று எனவும், WIND என்பதை வீசும் காற்று எனவும் கூறுகிறார்கள். காற்று வீசினால் தான் நம்மால் அதை உணர முடியும். அப்படி அது வீசுவதற்கு அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும். ஒரு வகையான அழுத்த/ வெப்ப மாறுபாடுகளால் மட்டுமே காற்று வீசுகிறது. இந்த வீசும் காற்றே பூமியைச் சுற்றி ஒரு அழுத்த பெல்ட்டை உருவாக்கி அதை ஓர் உயிருள்ள கோளமாக மாற்றுகிறது.

இங்கிருந்து ஒரு சிந்தனையை அடைந்தேன். இந்த உலகம் ஒரு சமமின்மையால் தான் உயிர்ப்புடன் இருக்கிறதோ என்ற எண்ணம் வந்தது. ஒரு வேளை அனைத்துமே சமமாக இருந்து எந்த ஒரு சலனமுமற்ற ஒரு இடத்தில் எதுவும் வீச வாய்ப்பில்லை. அதனால் பெரும் அனுபவமும் மானுடத்திற்கு இல்லை. நான் இங்கு சமத்துவம் என்று சொல்வது பணத்தையோ வசதி வாய்ப்புகளையோ அல்ல. அதையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நான் ஞானத்தை நினைத்தேன். ஞானம் இல்லை என்று உணர்ந்தாலொழிய ஞானத்தை அடையும் மார்க்கத்தை நாம் உணர முடியாது. அடைந்துவிட்ட/அதிகமிருக்கும் ஒரு இடத்திலிருப்பவனும் குறைவாயிருக்கும் இடம் நோக்கி சென்றடைந்து கொண்டே இருந்தாலொழிய இந்த இயக்கம் நடைபெறாது. இயக்கம் இல்லாமல் ஒரு STILL AIR போல இருந்தோமானால் சாக்கடையாய் துர்நாற்றமடிக்க வேண்டியிருக்கும்.

இந்த சமமின்மை எல்லை மீறும்போது வீசும் காற்றானது புயலாக மாறும் அதுபோலவே எப்பொழுதெல்லாம் மானுடத்தின் இந்த சமமின்மை எல்லை மீறுகிறதோ அப்பொழுதே அந்தக் காலம் முடிவுக்கு வந்து விடுகிறது. கரு சிறுகதையிலும், சிவம் சிறுகதையிலும் ஒரு யுகமுடிவென்பது அதீத வளர்ச்சியினால் வரும் என்ற ஒரு கருத்தும், விஷ்ணுபுரம் என்னும் புனைவு நகரத்தின் அழிவும்,வெண்முரசின் இறுதிப் போரும் கூட அத்தகைய முடிவுகள் தான். பின்னும் நம் இந்திய வரலாற்றில் மிகப் பெரும் சாம்ராஜ்ஜியங்கள் அழிந்ததும் இத்தகைய அதீத சமமின்மையால் தான். குறளினிது உரையில் நீங்கள் சொல்வது போல “அழுதாற்றித் தொழுத கண்ணீரால்” அழிந்த சோவியத்தையும் இந்தப் பட்டியலில் பொருத்தலாம்.

உடனே மீண்டும் உங்களின் இந்த வரிகள் நினைவிற்கு வந்தது “ஒரு போதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக”. இந்த உலகத்திலுள்ள அனைத்து இயக்கங்களுமே, தான் ஒரு போதும் சென்றடையவில்லை என்றே சென்றுகொண்டே இருக்கின்றன, பூமியின் அலையும், வீசும் காற்றும், நிலவு பூமியைச் சுற்றுவதும், பூமி சூரியனைச் சுற்றுவதும் என முடிவிலியில் யாவும் சென்று கொண்டே இருக்கும் தத்துவத்தையே பின்பற்றுகின்றன என்று கண்டேன். இன்னும் எண்ணங்கள் இது சார்ந்து சுழன்று கொண்டே இருந்தன… எனக்கு நீங்கள் தங்கப் புத்தகம் சிறுகதையில் சொன்ன வரிகள் மீண்டொலித்தது. “பாட், ஒரு வேளை எல்லா மூல நூல்களும் இப்படித்தானா? கார்ல் மார்க்ஸ் –ன் மூல நூலும் கூட?” ஆம். அனைத்து மிகப் பெரிய சிந்தனையாளர்களும் அடையும் மூலம் என்பது ஒன்றே.  இன்னும் மிகச் சரியாக இந்த வரிகளை இன்று கண்டடைந்தேன்.

அன்புடன்

இரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2021 10:31

தர்ப்பை – லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்

சமீபத்தில் பக்கத்து ஊரான பணக்கார செல்லப்பம் பாளையத்துக்கு  ஒரு துக்கநிகழ்வுக்கு சென்றிருந்தேன், கல்லூரியின் முன்னாள் செயலரின் மனைவி இறந்துவிட்டார்கள்.அந்த ஊரில் பெரும்பாலும் அனைவருமே நிழக்கிழார்களும் செல்வந்தர்களுமே என்பதால் ஊர்ப் பெயரே அப்படி.

மிகப்பெரிய கட்டுவீடு. மதிலின் உட்புறங்களில் சிமெண்டுத்தரையில், அழகிய வட்டங்களில் தர்ப்பைப்புற்கள் வளர்த்தியிருந்தார்கள் முதன்முதலாக தர்ப்பையை இப்படி பச்சைப்புல்லாக அங்குதான் பார்க்கிறேன். தர்ப்பையை எங்கும் வளர்ப்பதில்லை அவை தானே வளரும் என்றே அதுவரையிலும் அறிந்திருந்தேன். செயலருக்கு தாவரங்கள் மீது தனித்த பிரியமுண்டு, நாக்பூர் ஆரஞ்சைகூட பல ஏக்கரில் சாகுபடி செய்து பார்த்திருந்தார் ஒருமுறை..

தர்ப்பையை எங்கு வாங்கினார் என்று கேட்க முடியாதபடிக்கு அசந்தர்ப்பமாக இருந்தது. எனினும் எனக்கு  அந்த புற்களின் மீதே பார்வை போய்க்கொண்டிருந்து. ஒரே ஒரு புல், அடிக்கிழங்குடன் கிடைத்தால் வீட்டில் வளர்த்தலாமென்றே நினைவு ஓடியது. கொங்குப்பகுதியில் பிரபலமான ‘’பந்தலிலே பாவக்காய்’’ பாடல் நினவுக்கு வந்து மனதை கட்டுப்படுத்திக்கொண்டேன்.

உலர்ந்த தர்ப்பையை, அதுவரையிலும் வீட்டில் கடவுள் படங்களுக்கு அருகில் சம்பிரதாயத்துக்காகவும், கிரகண நாட்களில் உணவுகளிலும், நீரிலும் போடுகையிலும், ஹோமங்களிலும், கல்லூரி ஆய்வகத்தில் உலர் தாவரமாகவும்தான் பார்த்திருக்கிறேன்

வீடு திரும்புகையில் வெண்முரசில் தர்ப்பை வரும் இடங்களை எல்லாம் நினைத்துக்கொண்டே வந்தேன். வெண்முரசை வரிசைக்கிரமமாக பலமுறை வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்..  மனம் சமநிலையிலில்லாத நாட்களில் புத்தக அலமாரியில் இருந்து ஏதோ ஒரு நூலை மனம் சொல்லியபடி எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை பிரித்து வாசித்துவிட்டு நாளை துவங்குவதும் உண்டு.

இப்போது வெண்முரசில் தர்ப்பைகளை  பற்றி சொல்லி இருப்பவைகளை மட்டும் தனியே மீண்டும் வாசிக்க துவங்கினேன். தர்ப்பை புல் படுக்கை, இருக்கை, மோதிரம், பாய் என்று அதன் பயன்பாடுகள் பலநூறு முறை வெண்முரசில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றுடன் மிக முக்கிய உச்ச தருணங்களில் எல்லாமே வெண்முரசில் தர்ப்பையும்  இருக்கிறது

முதற்கனலிலிருந்தே தர்ப்பை  சொல்லப்பட்டிருல்கிறது. பிரஜாபதிக்கும் தீஷணைக்கும் விண்ணகப்பெருவெளியில் முளைத்தெழுந்த பொன்னிற தர்ப்பைபோல் பிராசீனபர்ஹிஸ் பிறந்ததையும் பிராசீனபர்ஹிஸின் கதிர்கள் மண்ணில் பட்ட இடங்களில் இருந்து தர்ப்பையும் நாணல்களும் மூங்கில்களும் உருவாகி வந்தையும் முதற்கனல் சொல்லுகிறது.

வனலீலையில் வேள்விக்குதிரையான நாய்க்குட்டி ஷிப்ரதேஜஸின் முகத்தில் அடித்து, முந்தையநாள்தான்  திறந்த புத்தம்புதிய கண்களில் தர்ப்பையால் குத்துகிறான் .ஜனேமேஜயன். கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்துகொண்டேஇருக்கும் அவர் வேள்விமுகத்தில் கண்ணீருடன் தர்ப்பையும் நீருமாக தட்சனின் உயிரை காணிக்கையாக கொடுக்கிறார்..

தன்னிச்சைப்படி புத்திரசோகத்தால் உயிர்விட துணியும் வசிட்டர் தர்ப்பைப்புல்லை பரப்பி அதன் மீது அமர்கையில்தான் அதிர்ஸ்யந்தியின் வயிற்றிலிருக்கும் மைந்தன் வேதமுரைப்பதை கவனிக்கிறார். கிங்கரன் குழந்தையை கண்டுவிடாமலிருக்க கையில் தர்ப்பையுடன் குடில் வாயிலில் காவலிருக்கிறார் தவக்குடிலுக்கு வந்துவிடும் கிங்கரனை தர்ப்பையை தலைக்கு மேல் தூக்கி மன்னித்து விடுதலை செய்கிறார்.

துறவு பூண்டு அரண்மணையை விட்டு விலகும் தேவாபியின் கைகளில் சித்ரகரின் சீடர்கள் தர்ப்பை கங்கணத்தை அணிவித்த பின்னர் விட்டுவிடுகிறேன் என மும்முறை சொல்லச் செய்கின்றனர் . அதே பகுதியில் பால்ஹிகன் சந்தனுவை நோக்கி ’’எந்த நோய்க்குறையால் என் அண்ணன் அவமதிக்கப்பட்டானோ அதே நோய் என்றும் உன் குலத்தில் இருக்கட்டும். ஆணை! ஆணை! ஆணை!” என்று தர்ப்பையை கையில் எடுத்துக்கொண்டே சொல்கிறான்

மழைப்பாடலில் குந்தியும் மாத்ரியும் தர்ப்பைக் காட்டில் நெருப்பெழுவதை உயரத்திலிருந்து பார்க்கையில் “தர்ப்பைக்குள் அக்னிதேவன் குடியிருக்கிறான் என்கிறார்கள்” என்கிறாள் மாத்ரி

ஆறாவது மாதத்தில் காந்தாரிக்கு  சீமந்தோன்னயனம் நடக்கையில்  வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வது சொல்லப்பட்டிருக்கிறது.

வெண்முரசின் 26 நூல்களிலுமே மிக அதிகமாக மிக விரிவாக தர்ப்பையை குறித்து சொல்லப்பட்டிருப்பது  வண்ணக்கடலில் தான்.  பிரபஞ்சத்தாமரை எனும் அனல்குவை வெடித்து அவ்விளையாடலின் ஒரு கணத்தில்  இளம்பச்சை நிறமான உயிர்த்துளி  பூமியை மூடும் பசும்புற்களாகி   ஒன்று தர்ப்பையாகவும்,, பாலூறியது நெல்லாக, தேனூறியது கோதுமையாக, தன்னுள் இனித்தது கரும்பாக, தன்னுள் இசைத்தது மூங்கிலாக என ஒவ்வொரு புல்லும் ஒவ்வொரு வடிவை அடைந்தை சொல்லும் பரத்வாஜர் “புற்களில் புனிதமானது என தர்ப்பை கருதப்படுகிறது. ஏனென்றால் நீரும் நெருப்பும் அதில் ஒருங்கே உறைகின்றன. வேதங்களை ஜடங்களில் நதிகளும், மலர்களில் தாமரையும், தாவரங்களில் தர்ப்பையும், ஊர்வனவற்றில் நாகங்களும்,நடப்பனவற்றில் பசுவும், பறப்பனவற்றில் கருடனும் கேட்டறிகின்றன என்கிறார்

“குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விஸ்வாமித்திரம், யவை என தர்ப்பையின் ஏழுவகைகளையும், குசை காசம் ஆகிய முதலிரண்டும் வேள்விக்கும், தூர்வையும் விரிகியும் அமர்வதற்கும், மஞ்சம்புல் தவச்சாலையின் கூரை வேய்வதற்கும்,  போர்க்கலைக்கு .விஸ்வாமித்திரம், யவை நீத்தார் கடன்களுக்குரியது என்னும் விளக்கமும் வண்ணக்கடலிலேயே வருகிறது.மங்கலவேள்விகளுக்கு நுனிப்பகுதி விரிந்த பெண் தர்ப்பை, பெருவேள்விகளுக்குரியது திரண்டு,  அடிமுதல் நுனிவரை சீராக இருக்கும் ஆண் தர்ப்பை,    அடிபெருத்து நுனிசிறுத்தத வேள்விக்குகந்தல்லாத நபும்சக தர்ப்பைகளையும்  அவரே விவரிக்கிறார்.

பரத்வாஜரின் மாணவர்கள் குருநிலையில் தமக்குரிய தர்ப்பையை தொட்டெடுத்துக்கொள்ளுவதும்,  விடூகர் துரோணரை முன்னிருத்தி வேண்டிக்கொள்ளுவதும், துரோணர் விஸ்வாமித்ர புல்லை தேர்ந்தெடுப்பதுமாக அந்தப்பகுதி முன்பு வாசித்தவைதான் ஆனால் இப்போது தர்ப்பையை  முன்னிருத்தி வாசிக்கையில் மனம் பொங்கிக்கொண்டே இருந்தது. அதுவும் துரோணரை  விலக்கிவிட்டு பரத்வாஜர் மாணவர்களுடன் காயத்ரி சொல்லுகையில் மறைந்திருந்து துரோணர் பார்க்கும் காட்சியில் அவன் ஒரு அணுவிடை முன்னகர்ந்தால் அதை தன் அகத்தால் கேட்டுவிடமுடியும். ஆனால் அந்த எல்லைக்கு ஒரு மாத்திரை இப்பால் நின்று அவன் ஆன்மா முட்டிமுட்டித்தவித்தது. இந்த வரிகளில் நான் என்னையறியாமல் கண்ணீர் விட்டழுதேன்…

தர்ப்பைக்காட்டில் பிறந்த துரோணர் விடூகரின் கையை பிடித்துக்கொண்டு கையில் தர்ப்பையுடன் செல்லும் காட்சியை ஷண்முகவேலின் ஓவியத்தில் இப்போது புத்தம் புதிதாக பார்ப்பது போலிருகிறது. வெண்முரசில் பல இடங்களில் தர்ப்பை சொல்லப்பட்டிருந்தாலும் தர்ப்பையை முன்னிறுத்தி சொல்லப்பட்ட இந்த பகுதி மிகவும் உணர்வுபூர்வமானது.  தர்ப்பையை குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இந்த பகுதியில் இருக்கிறது.

அதுபோலவே வண்ணக்கடலில் துரோணர் அர்ஜுனனையும் பிறரையும் பந்துவிளையாட்டின்போது சந்திப்பதும் கிணற்றிலிருக்கும் பந்தை மிகச்சரியாக கிணற்றின் ஆழத்தை கணக்கிட்டு பிடுங்கிய தர்ப்பைக்கீற்றுக்களால் எடுத்து வானில் நிறுத்திக்காட்டுவதும், அர்ஜுனன் அவர் தாள்பணிவதுமாக மிக முக்கியமான அப்பகுதியிலும் தர்ப்பை இருக்கிறது.

அதே வண்ணக்கடலில் தான்  மண்ணில் புல்லிதழ் களாக எழுந்த குசை. பச்சைக்கரங்களை வான் நோக்கி விரித்து வெய்யோன் விடுத்த அமுதை வாங்கி உண்கிறாள்.. ஒரு சொல்லைகூட தாங்கமுடியா அகத்துடன்,  தாடி பறக்க, குழல் அவிழ்ந்திருக்க, விழிகள் அலைபாய பற்களால் கடிக்கப்பட்டு குருதி வழியும் உதடுகளுடன்   இருந்த துரோணரின் கையில் இருந்த தர்ப்பையை மெல்ல தொடுகிறாள் குசை.  இருளுக்குள் நடந்துகொண்டிருந்த அவர் முன் அலையடிக்கும் பசுந்தளிர் ஆடையும் விரிந்து காற்றிலாடும் வெண் மலர்க்கொத்து போன்ற கூந்தலுமாக குசை வந்து நின்று துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை அவளது சுட்டு விரலென்கிறாள்

அந்த பகுதியின் இறுதியில்  அவளையும் பிரிவதாக தர்ப்பையை  ஓங்கியபடி துரோணர் கூச்சலிடுகையில், இவனுள் ஓடும் காயத்ரிக்கு அனல் சிறகுகள் முளைக்கட்டும்.  என்னும் குரலுக்கு பின்னர் தர்ப்பைக்காட்டில் அனல் எழுகிறது. அந்த பகுதியிலும் ஷண்முகவேலின்  அனல்வடிவ அன்னையும் பற்றிக்கொண்டிருக்கும் தர்ப்பைக்காடும்,  துரோணருமாக  அபாரமான ஓவியம் அந்த தருணத்தை கண்முன்னே நிறுத்தும்.

அக்னிவேசரின் குருகுலத்துக்கு தர்ப்பையுடன் வந்ததுபோலவே  அங்கிருந்து வெளியேறுகையிலும் தர்ப்பையை எடுத்துச்செல்கிறார் துரோணர்

நாற்பத்தொன்றாம் நாள் அக்னிவேசரின் நீர்க்கடன்கள் முடிந்தபின்  மான்தோல் மூட்டையில் ஒரே ஒரு மரவுரியாடையை மட்டும் எடுத்துக்கொண்டு குருகுலத்திலிருந்து விடைகொண்டு கிளம்பும் துரோணர். திரும்பி குருகுலத்தின் ஓங்கிய அசோகமரங்களையும் தேவதாருக்களையும் நடுவே அக்னிவேசரின் குடிலுக்குப்பின்னால் நின்ற அரசமரத்தையும் சிலகணங்கள் நோக்கியபின் குனிந்து தன் காலடியில் நின்றிருந்த தர்ப்பையின் ஒரு தாளைப் பிய்த்து கையில் எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்குகிறார்.

வண்ணக்கடலில் மகாபலி கதையை சொல்கிறார் பூரணர். தன்னை வெல்ல ஒரு மைந்தன் பிறந்திருப்பதை சுக்ரர் கணித்த சுவடிகளிலிருந்து அறிந்த மகாபலி, மண்ணிலிறங்கி தன் அன்னை பூத்து நிறைந்திருக்கும் மலையடிவாரத்தை அடைந்து சுக்ரர் முன்னிற்க இறப்பை வெல்லும் மிருத்யுஞ்சய வேள்வியை தொடங்குகிறான். தன் அரியணையை, செங்கோலை, கருவூலத்தை, நாட்டை, உறவுகளை, வெற்றியை, புகழை அவ்வேள்வியில் மூதாதையருக்கு பலியாக்கிவிட்டு,  இறுதியில் எடுத்த தர்ப்பையால் தானெனும் உணர்வை பலியாக்கும் கணத்தில்தான் அங்கே கூனுடலும் குறுநடையும் சிறுகுடையுமாக வந்த பிராமணன் ஒருவனைக் காண்கிறான்.. ”குற்றடி தொட்டளக்கும் மூவடி மண் அளிப்பாயாக!’ என்று வாமனன் கேட்கையில், “அவ்வண்ணமே ஆகுக!’ என்று சொல்லி நிறைகுடுவை நீருடனும் தர்ப்பையுடனும் கிழக்கு நோக்கி நின்று வாமனனின் கையில் நீரூற்றி ‘அளித்தேன் மூன்றடி மண்ணை’ என்கிறான்..

ஏகலைவனுக்கு வில்வித்தையை துரோணர் மறுக்கும் பகுதியிலும் தர்ப்பைக்காடும், தர்ப்பை துகள்களும், தர்ப்பை மண்டிய ஆற்றங்கரையும் வருகின்றன.தனக்கு சுகபோகங்களில் விருப்பமில்லை என்னும் துரோணர் தன்னால் கைப்பிடி தர்ப்பையுடன் தன்னால் எங்கும் எப்படியும் வாழமுடியும் என்கிறார்

இளநாகனிடம் வடபுலத்து சூதரான உதர்க்கர் “தெய்வங்கள் பருவுடல் இன்மை என்னும் துயர்கொண்டவை. அவற்றின் அகம் வெளிப்பட உயிர்களும் உடல்களும் தேவையாகின்றன” என்கிறார்.“துரோணரில் எழுந்தவள் குசை. தர்ப்பையில் வாழும் தெய்வம் அவள். அனலை தன்னுடலின் ரசமாகக் கொண்டது தர்ப்பை என்கின்றன நூல்கள்” என்கிறார்

விடூகர் அக்னிவேசரின் குருகுலத்தில் துரோணரை விடுகையில்  “நான் எளிய சமையற்கார பிராமணன். தர்ப்பையை தீண்டவும் தகுதியற்றவன்’’ என்கிறார்

ஒருநாள் அதிகாலையில் கங்கைக்கு நீராட சென்றிருந்தபோது துரோணர் தர்ப்பைகளைப் பிய்த்து நீரில் வீசிக்கொண்டிருப்பதையும்,  தன் இடக்கையில் வைத்திருக்கும் தர்ப்பைத்தாள்களை  வலக்கையால்  எடுத்து காலைநீரில் கங்கையில் கொத்துக்கொத்தாக செல்லும் நீர் குமிழிகளில் ஒன்றை உடைக்கும் போது பிற குமிழிகள் ஏதும் உடையாத வண்ணம்  உடைத்துக் கொண்டிருந்ததை கண்டு திகைக்கிறார் அக்னிவேசர். துரோணர் யாரென்று குரு கண்டுகொள்ளும் முக்கியப்பகுதி அது.

குருநிலையில்  மாளவனுடன் போரிடுகையில் அவன் தன் வில்லை எடுத்து அம்பைத் தொடுப்பதற்குள் துரோணன் தன் முதுகுக்குப்பின் கச்சையில் இருந்த தர்ப்பைக்கட்டில் இருந்து இரு கூரிய தர்ப்பைகளை ஒரே சமயம் எடுத்து வீசி, அவை மாளவனின் கண்ணுக்கு கீழே கன்னச்சதைகளில் குத்தி நிற்கிறது.

வெள்ளிமுளைப்பதற்கு முன்னர் துரோணர் கங்கைக் கரைக்குச் சென்று வில்லில் தர்ப்பைப் புல்லை அம்புகளாக்கி பயிற்சி செய்வதை  அங்க நாட்டு இளவரசன் பீமரதன் கண்டு பிறருக்குச் சொல்கிறான்.

அதே பகுதியில் எதிரே கையில் தர்ப்பையும் ஈர மரவுரியாடையுமாக வந்த துரோணனைக் கண்டதும் யக்ஞசேனன் விலகி வழிவிட்டு சில அடிகள் எடுத்து வைத்து கடந்து சென்றான்

சரத்வானிடம் தர்ப்பைத்தாளை  கன்யாகல்பமாக கொடுத்துவிட்டுத்தான் கிருபையை துணைவியாகிக்கொள்கிறார் துரோணர் மணம் முடித்த பின்னர் செல்வழியில் ஓய்வெடுக்க. ஒரு குகையில் தர்ப்பையும் நாணலையும் பிடுங்கி இருக்கை செய்து அமர்ந்திருக்கையில் கூரையில் இருந்து வந்த நாகத்தை கண்ட துரோணரின் தோள்கள் தர்ப்பையுடன் எழுவதற்குள் கிருபை நாகத்தின் நாவில் நாணல் துண்டை சொருகிவிடுகிறாள் . அச்சமயத்தில் இருவருமாக பேசிக்கொள்ளுபவை அழகு

வண்ணக்கடலில் முதன் முதலாக தேர் ஓட்டும் 12 வயது கர்ணன் அரசமோதிரம் பரிசு பெறும் பகுதியில் சொல்லப்படும் ஒரு கதையில் ரிஷ்யசிருங்கர் தர்ப்பையுடன் மான்தோலாடையும் தலையில் புரிமான்கொம்பும் மார்பில் மலர் மாலையும் அணிந்திருக்கிறான்;

ஏழன்னையர் ஏறியமர்ந்த காட்டரசனான யானையின் துதிக்கையில் வாழும் சக்தையை காண விரும்பும் துரியோதனன் செல்லும் வழியிலிருக்கும் சதுப்புக்குட்டையை சுற்றி கோரையும் தர்ப்பையும் அடர்ந்து வளர்ந்திருக்கின்றன.

குருகுலத்திலிருந்து வெளியேறி பாரிஜாதரின் வழிகாட்டுதலின்படி மலைச்சரிவினூடாக நடந்துசென்று அஷ்டமுடி என்னும் மலைக்காட்டை அடையும் துரோணன்., நாணலும் தர்ப்பையும் கோரையும் அடர்ந்த சேற்றுக்கரை வழியை கடந்துதான் பாரிஜாதர் சொல்லிய   பஞ்சாப்சரஸை அடைகிறார்

பிரயாகையில் சாலிஹோத்ர குருகுலத்தின் குடில்களில் மாணவர்களின் வருவதை பார்க்கும் பீமன்,  உதடுகளில் மந்திரங்கள் அசைந்துகொண்டிருக்க, சால்வையால் உடல் மூடி கையில் தர்ப்பையுடன் சற்று விலகி அனைத்தையும் நோக்கிக் கொண்டிருக்கும் தருமனை கற்பனையில் காண்கிறான்.

குரோதத்தின் அனலை அணைக்க முடியாத துர்பதனுக்காக செய்யப்படும் பூத யாகத்தின் போது  சமித்துக்களில் கைக்குழந்தை தாய்மடியில் தவழ்ந்தேறுவது போல ஏறி சிறு பொற்கரங்களை விரித்து எழுந்த தழலில் வெண்கடுகு, அட்சதை, எள், தயிர், பால், தர்ப்பைப்புல், அருகம்புல், செண்பக இலை, தாமரைப்பூ முதலியவை வரிசையாக ஹோமிக்கப்படுகின்றன.  வேள்விப்பந்தலின் கூரையும் தர்ப்பையில்தான் வேயப்பட்டிருக்கும்

கடோத்கஜனுக்கு கதை சொல்லும்  பீமன் அஞ்சன வனத்தின் அஞ்சனைக்கும்  அவள் கணவனான கேசரி என்னும் ஆண் குரங்கிற்கும் பிறந்த குரங்குக் குழந்தை’’ மாந்தளிர் நிறத்தில் தர்ப்பைப் புல்லால் ஆன படுக்கையில் தீப்பிடித்ததுபோல தோன்றியதை’’ சொல்கிறான்.

பஞ்ச பாண்டவர் பாஞ்சாலியை மணம் கொள்ளும் நிகழ்வில்  பத்ரர்  தௌம்யரை வணங்கி மணநிகழ்வுக்கான ஒப்புதலை கோருகையில் அவர் தர்ப்பை மோதிரம் அணிந்த கைதூக்கி வாழ்த்தி ஒப்புதலளித்ததும் மணநிகழ்வுகள் துவங்குகின்றன.

வெய்யோனில்  பரசுராமர் மாலையில் கதிர்வணக்கம் செய்யும் பொருட்டு உலர் தர்ப்பை கொய்து வரும்படி சொல்லி, தர்ப்பையை வாங்கி தோலாடை களைந்து சிற்றாடை அணிந்து அலை வளைந்தமைந்த நீர்ப்படலத்தில் இறங்கி குனிந்து நோக்கி நிற்கிறார்.

நகரமைக்க இடம் தேடும் தேடும் பாஞ்சாலியை குறித்த நாடகத்தில்  காண்டவ காட்டை அணுகச்சொல்லும் அவளிடம் முதுநாகன் ’’அங்கு வாழ்பவை மாநாகங்கள். வடக்கே நாகபுரத்தில் முடிகொண்டு ஆண்ட தட்சநாகமான பிரபவர் குலத்துடன் எரித்தழிக்கப்பட்டபோது அவர் பல்லில் எஞ்சிய ஒருதுளி நஞ்சை ஒரு தர்ப்பை புல்நுனியில் தொட்டு எடுத்துக்கொண்டு இங்கு வந்தன அவர் குலத்து நாகங்கள் ஐந்து ’’ என்கிறான்.

பன்னிரு படைக்களத்தில்  ஜராசந்தனுடன் மற்போரிட, ஸ்நாதக பிராமணர்களின் வெண்ணிற ஆடையும்,  தர்ப்பை திரித்த புரிநூலும் அணிந்த.பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனும் செண்டுவெளிக்குள் நுழைகின்றனர்.

இந்திரபிரஸ்தத்தில் அந்த பெருவேள்வி நிகழ்கையில் தர்ப்பை மோதிரம் அணிந்திருக்கும் பைலரும் மாணவர்களும் தர்ப்பைச்சுருள் பற்றிக்கொண்டதும் வேள்வியை துவங்கி, தர்ப்பையால் சோமச்சாறை தொட்டு தேவர்களுக்கு அவியாக்குகின்றார்கள்’

ராஜசூய வேள்வியின் போது முதல் எரிகுளத்தின் வலப்பக்கமாக வேள்வித்தலைவர் தௌம்யர் தர்ப்பைப் பீடத்தில்தான் அமர்ந்திருக்கிறார்.

இந்நூலில்  மற்றொரு உச்ச தருணத்திலும் தர்ப்பை இருக்கிறது காம்பில்யத்துக்கு துருபதனை காணச்செல்லும் துரோணர் அக்னிவேசரிடம் பயின்றதற்கு சான்றாக இடையிலிருந்து தர்ப்பையை எடுத்துக் காட்டுகிறார். மன்னனால் அவமதிக்கப்பட்ட போது ’’இம்மண்ணிலேயே ஆற்றல் மிகுந்த தாவரம் போல ஒருவன் இங்கே நிற்கிறான்’’ என்கிரார் தர்ப்பையை கையிலேந்தியபடி

தர்ப்பையை “இது ஆயிரம் ஆலமரங்களுக்கு நிகரானது. இலையாலோ கிளையாலோ ஆனதல்ல, வேராலானது. தன் உயிர்ச்சாரமாக நெருப்பை கொண்டிருப்பது.” என்கிறார். உதடுகளில் காயத்ரி துடிக்க,   தர்ப்பையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு கால்களைப் பரப்பிவைத்து தலைகுனிந்து அசைவற்று துரோணர் நிற்க்கும் காட்சி  வெண்முரசு காட்டும் உச்ச தருணங்களில் தலையாயது. இதில் தர்ப்பைக்கு சொல்லப்படும் அனைத்து இயல்புகளும் துரோணருக்கும் பொருந்தும்

சொல்வளர்க்காட்டில் தன்முன் நிரை வகுத்தமர்ந்திருக்கும் மாணவர்களிடம் சாந்திபனி முனிவர் ’’எல்லையற்றதை சொல்லும் சிறு சொல்,  முளைத்துதிராத விதையென்றாகி வேள்வியும் ஊழ்கமும் அதுவேயாகி, மேழியும் துலாவும் வாளும் தர்ப்பையும் அதுவே ஆனதை’’ சொல்கிறார்.

கிராதத்தில் தர்ப்பை வெட்ட சென்றபோது ஒரு  முனிவர் பொன்னிற மானையும் பொன்னிற உடல்கொண்ட சிறுவனையும் கண்டதை படுகிறார் சண்டன்

அபிசார வேள்விக்கு ’’எளிய வேள்விக்குரிய நெய்யும் விறகும் தர்ப்பையும் தோலிருக்கைகளும் போதும். பிறிதொன்றும் தேவையில்லை” என்கிறார் மகாகாளர்.

முதிய அந்தணன் வடிவிலிருக்கும் இந்திரன்  வருணனை வரவழைக்கும் பொருட்டு, அனல் கட்டையும் தர்ப்பையையும் கைகளில் வைத்துக்கொண்டு கழியால் அலைகளை  அடித்து கிழிக்கிறான்

கிராதத்திலேயே அத்ரி முனிவரின் செளகந்திக காட்டில் காட்டாளனின் பின்னே பெண்களும் குழந்தைகளும் செல்கையில் அத்ரி ’’இங்கிருந்தே வெல்வேன் அவன் மாயத்தை” என்று கூவியபடி அவியிலிட  கையிலெடுக்கும் தர்ப்பை பொசுங்கி எரிந்து தழலாகிறது.

நீர்க்கோலத்தில் நளமன்னரின் கதையை சொல்லும் ஆபர் ’’கர்ணிகளில் ஒருவனான் சிஷுகன் பரசுராமரை தேடிச்சென்று அனல் சாட்சியாக அந்தணன் ஆனபின்னர், தர்ப்பைப் புல்லில் அனலும், நாவில் வேதமுமாக வரும் அவனை அவன் குடியினர் முழுமையாக பணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள்’’ என்பதை சொல்கிறார்.

வெண்முரசின் மற்றொரு உச்சம் குருதிச்சாரலில் தன்னாகுதி அளிக்க தெரிவு செய்யபட்ட இளம் வைதிகனான அவிரதன் வரும் பகுதி. அவனுக்கு தர்ப்பையில் மட்டுமே அமர ஒப்புதல் இருக்கிறது. தன் அன்னையை, இளமையிலிருந்த அவளின் அழகு ஒரு புன்னகையில் மட்டும் மிச்சமிருப்பதை, தர்ப்பையுடன் அலையும் தந்தையை நினைத்துக்கொண்டு தர்ப்பைபுல் பாயில் அமர்ந்திருப்பதும், இப்போது கூட பின்னடி எடுத்து வைக்கலாமென்று சொல்லப்படுகையில் மனம் இதுவல்ல எண்ணுவது என்று பதறிக்கொண்டிருக்கையிலேயே புன்னகையுடன் “இதுவே என முடிவெடுத்துவிட்டேன், ஆசிரியரே என்பதும் பின்னர் அவன் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்து தர்ப்பை புல்லாழி அணிந்துகொள்வதுமாக மனதை பிழியும் பகுதி அது.

அவன் அன்னையின் புன்னகையை சொல்லுகையில் ’உடைந்திருந்தாலும் களிம்பிருந்தாலும் விளக்கின் சுடர் ஒளிகுன்றுவதில்லை’என்னும் வரிகளில் மனம் அப்படியே நின்றுவிடுகிறது சொல்லப்பட்ட அவ்வழகிலிருந்து விடுபடவே முடிவதில்லை எப்போது வாசித்தாலும்

குருதிச்சாரலில் வேள்வியரங்கில் அங்கரை அமர்த்துவது குறித்த முக்கியமான பகுதியில் ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு, ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், விளாமிச்சை வேர், சந்தனம், நொச்சி, நாயுருவி, தேவதாரி, மா என தனித்தனியாக கொண்டுவந்து குவிக்கப்பட்ட வேள்விக்கான. எரிவிறகுகளில் தர்ப்பைப் புல்லும் இருக்கிறது. வேள்வியில் அனலூட்ட அமர்வபர்கள் தர்ப்பைத் திரியால் வேள்விப்புரிநூல் அணிந்துதான் உள்ளே வருகின்றனர்.

புருஷமேத வேள்வியில் அஸ்தினபுரியின் அரசகுடியினருக்கான தர்ப்பை விரிக்கப்பட்ட தாமரை வடிவு கொண்ட மணைகளும் அமைந்திருந்தன..

இமைக்கணத்தில் இறைவன் அர்ஜுனனுக்கு யோகத்திலேற விழைவோருக்கானவைகளை  சொல்கையில் ’தூய இடத்தில் துணி, மான்தோல், தர்ப்பை ஆகியவற்றின் மேல் உயரமில்லாமல் தாழ்விலாமல் உறுதியான இருக்கையை அமைத்துக்கொண்டு அதிலமர்ந்து சித்தத்தையும் புலன் செயல்களையும் ஒருங்கிணைத்து கூர்மையாக்கி ஆத்மா தூய்மை கொள்ளும் பொருட்டு யோகத்தில் அமைய வேண்டும் ’ என்கிறார்.

ஊழ்கம் பயில விரும்பும் வியாசர் ஏழாவது முறை கேட்டும் தந்தை மறுத்தபோது, தன்னை மாய்த்துக்கொள்ள  எண்ணி  அருகிலிருக்கும் தர்ப்பையின் கூர் நுனியை கழுத்தில் வைக்கையில்தான்  ஆசிரியரிலிருந்து தந்தை எழுந்து ’’நில் மைந்தா’’ என கூவுகிறார்.

செந்நாவேங்கையில்  சிதைகளில்  எரியூட்டி இறுதிச்சடங்கு இயற்றும்.  வைதிகர்கள் ஒரு கூண்டு வண்டியில் இருந்து இறங்கி வெண்ணிற ஆடைகள் அந்தி வெளிச்சத்தில் துலங்கித்தெரிய கைகளில் தர்ப்பையும் மரக்கமண்டலங்களுமாக ஓசையில்லாமல் நடந்து வருகின்றனர்

திசைதேர்வெள்ளத்தில் முரு’விடம் ஆக்னேயர் “அந்தணர் சொல் மீறாதோன் அழிந்ததில்லை. இந்தக் கருவூலங்களில் இருந்து ஒரு செம்புநாணயத்தைக்கூட கொள்ள எண்ணாதோர் நாங்கள். தர்ப்பையே எங்கள் பொன். எங்கள் சொல்லை ஓம்புக, சிறப்புறுக!” என்கிறார்.

இருட்கனியில் சிதை பீடத்தின் மீதமர்ந்து ஊழ்கத்திலிருக்கும் கர்ணன் கண் திறக்கையில் அவன் முன்னிருக்கும் செண்பக மரத்தில்  வலக்கையில் தர்ப்பையும் இடக்கையில் மின்படையும் கொண்டு எழும் வஹ்னி.’’என்றும் உன் படைக்கலமாகி உடன் இருப்பேன்’’ என்கிறான்.

இருட்கனியில் கர்ணனிடம் பரசுராமரின் கதையை பிரவாகர் பாடியபின்னர்,   சூதரான உத்வகர்  அக்கதையை  அவனுக்கு மேலும் விரித்துரைக்கையில் “பார்க்கவ குருமரபின் பதிநான்காவது பரசுராமர் இப்போது இருப்பவர். முதல் பரசுராமர் பாரதவர்ஷத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து ஷத்ரிய குலங்களை அமைத்தார். அந்நிலங்களின் பழங்குடிகளில் வேதமும் தர்ப்பையும் அளிக்கப்பட்டவர்கள் பிருகு குலத்து பிராமணர்களானார்கள். செங்கோலும் மணிமுடியும் அளிக்கப்பட்டவர்கள் அக்னிகுல ஷத்ரியர்களானார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரசுராமர் அமைந்தார்’’ என்கிறார்

நீர்ச்சுடரில் எரிகுளங்களை சுற்றி பாண்டவர்கள் ஐவரும் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

களிற்றியானை நிரையில் சார்வாகரை நோக்கி கைகளில் தர்ப்பை வைத்திருந்த அந்தணன் ’’வேதம் பொய் என்கிறாயா’’ என கூவுகின்றான். அந்நூலிலேயே வேள்விக்காவலனாக யுதிஷ்டிரன் அமர்ந்திருக்கும் அஸ்வமேத யாக்த்தின்போது பந்தல்மேல் எழுகிறது   வேள்விக்குரிய தர்ப்பைக் கொடியும். இணையாக அஸ்தினபுரியின் அமுதகலக்கொடியும்..

கல்பொருசிறுநுரையில் வசுதேவரும் சூரசேனரும் மண்மறைந்த பின்னர், அரசியர் ரோஹினியும் தேவகியும் நீர்புகுந்து, பலராமரும் வடக்கிருக்கும் பகுதியிலும் தர்ப்பை வருகிறது. வடக்கிருத்தலின் இடத்தில் தர்ப்பை புல்லாசனத்தில் அமர்ந்தே 7 நாட்கள் உணவும் நீரும் இன்றி பலராமர் மறைகிறார்.

முதலாவிண்ணில் தருமனிடம் இறுதியாக விடைபெறும் விதுரர்  தர்ப்பையால் ஆன மரணப்படுக்கையில் தான் இருக்கிறார்.

இறுதிக்காலத்தில் திருதராஷ்டிரருடன் இருக்கும் சங்குலன் அவருக்காக நீரும் ,கனியும் கிழங்குகளும், சேகரிப்பது, தர்ப்பைப்புல் படுக்கை அமைப்பது போன்ற பணிவிடைகளை செய்கிறான்.

தர்ப்பையில் வாழும் தெய்வம் குசை, புல்லின் அதிதேவதை குசை, பசும்புல்லில் வாழும் தெய்வம் குசை எனவும், வியாசர் தர்ப்பை பாயில் துயில் கொள்வது, கணிகர் தர்ப்பைப் பாயின் மேல் தன் ஒடிந்த உடலைக் கிடத்தி அமர்வது இளைய யாதவரின் தர்ப்பை புல் இருக்கை, தர்ப்பையை கையில் பற்றியபடி தீச்சொல் இடுவது என தர்ப்பையும், குசையும்  மேலும் பற்பல இடங்களில் வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கிறது.

Desmostachya bipinnata என்னும் அறிவியல் பெயருடைய தர்ப்பை வேத காலத்திலிருந்தே சோமக்கொடிகளுக்கு அடுத்த முக்கியமான  புனித்ததாவரமாக  யாகங்களிலும் பலிச் சடங்குகளிலும் உபயோகத்தில் இருந்திருக்கிறது.

இதன் அறிவியல் கிரேக்க மொழிப் பெயரில்  ’’கட்டுவதற்கு/ இணைப்பதற்கு உபயோகப்படுகிற’’ என்று Desmo என்னும் சொல்லும் ’நீண்ட மஞ்சரிகள்’ என்பதை  stachya  என்னும் சொல்லும், bipinnata என்பது எதிரெதிரெ அமைந்திருக்கும் இலைகளையும் குறிக்கிறது. அஸ்ஸாமில் இதன் நீண்ட மென் மஞ்சரிகளில் துடைப்பம் செய்கிறார்கள்.

.ஆஃப்ரிக்கா, அல்ஜீரியாவிலிருந்து இந்தியா வரை பரவி இருக்கும் தர்ப்பை சொமாலியா மற்றும் சூடானில் தோன்றியது, உலகின் பிற பகுதிகளுக்கு இவை மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படாமல் தானாகவே காற்றில் விதைகளின் மூலம் பரவியிருக்கலாமென்றே கருதப்படுகின்றது. பல புனிதப்புற்களை குறிப்பிடும் ரிக் வேதம் குசரா என்று தர்ப்பையை குறிப்பிடுகிறது, அதர்வவேதமும் குசையை குறிப்பிடுகின்றது. பிரம்ம புராணம் மகாவிஷ்ணுவின் உடல் ரோமங்களிலிருந்து தர்ப்பை உருவானதாக சொல்கிறது

வால்மீகி ராமாயணத்தில் தர்ப்பை குசை என்னும் பெயரில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வால்மீகி தர்ப்பை புல்லாசனத்தின் மீது கிழக்கு நோக்கி அமர்ந்து, மடிந்த உள்ளங்கைகளுடன், தனது தவ ஆற்றலைப் பயன்படுத்தி ராமரின் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகளை தேடினார் என்கிறது பாலகாண்டம்

சுந்தர காண்டத்தில் சீதை அனுமனிடம் ராமன் தன் அமர்ந்திருந்த தர்ப்பை ஆசனத்தின் ஒற்றைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்திரம் செய்து ஏவியதை பெருமையுடன் விவரிக்கிறாள். மேலும் பல இடங்களில் தர்ப்பை கூரை வேயவும்,  சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டது சொல்லப்பட்டிருக்கிறது.

பஞ்சவடியில் குடிலமைக்கையில் ராமர் லக்ஷ்மணரிடம் ’’எங்கு வைதேகியும் நானும் மகிழ்ந்திருக்கும்படி நீரும் அழகிய இயற்கை காட்சிகளும் இருக்கிறதோ, எங்கு பூஜைக்குரிய விறகுகளும் மலர்களும் கிடைக்கிறதோ, எங்கு குசை வளருகிறதோ அங்கு குடில் கட்ட இடம் தேர்வு செய்’’ என்கிறார்.

துளசிதாசரும் ராவணனிடம் பேசுகையில் தனக்கும் ராவணனுக்கும் இடையில் தர்ப்பையை அரணாக வைத்துக்கொண்டு சீதை பேசினாள் என்கிறார். ரகு வம்சத்தின் அருமணியாகிய ராமன் எளிமையான குசை புல் பாயில் படுக்க நேர்ந்த அவலத்தையும் வருந்தி விவரிக்கிறார் துளசிதாசர்

இந்து மதம் தர்ப்பை புல்லுக்கு  தனித்துவமான ஆன்மீக பண்புகள் இருப்பதாக சொல்கிறது.  ஆபத்தான  கதிர்வீச்சு மற்றும்  எதிர்மறை ஆற்றல்களிலிருந்தும்,  சாபங்கள், பேய்கள், எதிர்மறை எண்ணங்கள்  ஆகியவற்றிலிருந்தும் தர்ப்பை மனிதர்களை காக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக பல்லாயிரம் ஆண்டுகளாக நம்பிக்கை நிலவுகிறது.

போதி மரத்தடியில் ஞானமடைந்த போது புத்தர் அமர்ந்திருந்தும்,  பகவான் கிருஷ்ணர் தியானிக்கையில் அமர்ந்திருந்ததும் தர்ப்பை ஆசனத்தில்தான். .   ஊழ்கத்திலிருக்கையில் உடலில் கூடும் ஆற்றல், பாதங்களின் வழியாக அதிலிருந்து விலகிச் செல்லாமல் தர்ப்பை புல்லாசனம் காக்கிறது.

தர்ப்பை காடுகள் நிறைந்திருக்கும் உத்தரபிரதேச குஷி நகரில் தான் புத்தர் இறந்து எரிக்கப்பட்ட புனிதத்தலம் இருக்கிறது

வலது கை மோதிர விரலில் பூஜைகள் செய்கையிலும் மந்திரங்கள் சொல்லப் படுகையிலும் தர்ப்பை மோதிரம் அணிந்து கொள்ளப்படும். சுப, அசுப நிகழ்வுகள் அனைத்திலும் தர்ப்பை தவறாமல் இடம் பெறுகிறது.

மரணச்சடங்குகளுக்கு ஒற்றைப்புல் மோதிரமும், சுப நிகழ்ச்சிகளில் இரண்டு புல் தாளாலான மோதிரமும், இறப்பல்லாத அமாவாசை தர்ப்பணம் நீர்க்கடன் போன்ற சடங்குகளில் மூன்று தர்ப்பைப்புல் மோதிரம், ஆலய வழிபாடுகளின் போது நான்கு தர்ப்பை புல்லாலான மோதிரமும் அணிந்து கொள்ளப்படுகிறது.. நுனி நறுக்கப்பட்ட தர்ப்பையின் பயன்கள் வெகுவாக குறைந்துவிடுகிறதென்றும் சொல்லப்படுகிறது. தர்ப்பை புல் நுனி ஒலி அதிர்வுகளை துல்லியமாக கடத்துவதை ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. ஹோமகுண்டங்களின் நாற்புறங்களிலும் நாலு திசையிலிருந்தும் வரும் எதிர்மறை சக்திகளை தடுக்க தர்ப்பை வைக்கப்படும்.

பொதுவில்  முழு நிலவுக்கு மறுநாள் தர்ப்பை அறுவடை செய்யப்படுகின்றது .தர்ப்பையை அமாவாசையில் அறுவடை செய்தால் ஒருமாதமும். பௌர்ணமியில் செய்தால்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2021 10:30

November 29, 2021

மதமும் அறமும்

மதம், மரபு, அரசியல்

அன்பிற்கினிய ஜெ,

வணக்கம் ,

நலம் , தங்கள் நலனை விழைகிறேன்.

பல முறை கேள்விகளால் துரத்தப்பட்டு இமெயில் வரை வந்து உங்களுக்கு அனுப்பாதவை பல . எழுதி வைத்து இமெயிலுக்கே வராதது என ஏகப்பட்ட கடிதங்கள். மிகப் பெரும்பாலும் அவைகளுக்கு பதில் இரண்டொரு நாளில் உங்கள் வளைதளத்தில் கேள்வி பதிலாக , கட்டுரையாக வந்துவிடும் .அல்லது எனக்கென இருக்கவே இருக்கிறது 26,000 பக்கங்கள் . எனது தேடலுக்கான் விடைகளை இங்கு எங்காவது கண்டடைந்து கொண்டே இருப்தால் அறுபடாத நீண்ட அகப்பயணத்தில் உங்களுடன் இருப்பதாக நினைக்கிறேன் .

தங்களின் அஜ்மீர் பயணம் மிக அனுக்கமான ஒன்றை கொடுத்திருந்தது. அதற்கு எப்போதும் என் நெஞ்சம் நெகிழும் நன்றிகள்.

ஜெ ,அகக் கொந்தளிப்பான நிலையில் உங்களை கோவையில் , நாகர்கோவிலில் சந்தித்த இந்த ஆறு ஏழு வருடங்களில் அடைந்த அகமாற்றம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது, மிக மிக அகவயமானது . இன்று எல்லா கொந்தளிப்புகளும் அடங்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறேன். இருந்தும் இந்த கேள்வியை கேட்டேயாக வேண்டும் எனத் தோன்றியதால் இந்தக் கடிதம் .

தங்களது சமீபத்திய பதிவு “மதம், மரபு, அரசியல்” அதில் தங்கள் கருத்து வரிக்கு வரி உடன்படுகிறேன் .காரணம் கடந்த 25 வருட காலம் நான் மிக விழைந்து பணியாற்றிய ஒரு துறை . அதில் தங்கள் பதிலில் இப்படி கூறியிருந்தீர்கள்“முற்றிலும் மாற்றமே இல்லாமல் நீடிக்கலாமா? இல்லை, அவ்வண்ணம் நீடிக்கும் எந்த அமைப்பும் பழமைகொண்டு அழியும். மாறும் காலத்தில் தன்னை தக்கவைக்கவே அது மாற்றமில்லாமல் இருக்கவேண்டியிருக்கிறது. அதேசமயம் சில மாற்றங்களைச் செய்துகொள்ளாவிட்டால் அது முழுமையாக அழியநேரிடும். அந்த மாற்றங்களை அது செய்துகொண்டே ஆகவேண்டும். அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்”

அதில் இந்த வரிகளை விரித்தெடுத்துக் கொண்டே இருக்கிறேன் .“அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்” அற்புதமான வரிகள் .

இந்தவரியை எழுதும் போது இருந்த உங்கள் அக எண்ணத்தை அறிய விழைகிறேன்.மரபான ஒரு மதம் இன்றைய மானுட அறத்தை நோக்க வேண்டிய விதம் எப்படி இருக்க வேண்டும் என விழைகிறீர்கள்.

ஆழ்ந்த நட்புடன்,

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

அன்புள்ள அரிகிருஷ்ணன் அவர்களுக்கு,

நாம் வாழும் சூழலில் இருந்து பின்னகர்ந்து வரலாற்றை, மானுடப்பரிணாமத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மிக எளிதில் விளங்குவது இது. மானுடம் விலங்குநிலை வாழ்க்கையில் இருந்து உருவானது. அது தனக்கான அறங்களையும், அவ்வறங்களைப் பேணும் நெறிகளையும் உருவாக்கிக்கொண்டு முன்னகர்ந்து வந்திருக்கிறது. ஒரு காலத்தில் வெறும் தசைவல்லமையும், குழுவல்லமையுமே அனைத்தையும் தீர்மானித்திருக்கும். அன்று அதுவே அறம்

அதன்பின்னர் கூட்டுவாழ்க்கைக்கான அறங்கள் உருவாகி வந்தன. பிறரையும் வாழவிடுவது, பிறருடன் ஒத்திசைவது போன்றவை தோன்றின. கருணை, இரக்கம், நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்தும் அவ்வாறு உருவானவை. அவை தன்னியல்பாக உருவானவை அல்ல. தகுதி வாய்ந்த மானுடர்களால் கண்டடையப்பட்டு சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்பட்டவை. சொல்லிக்கொண்டே இருக்கவேண்டிய தேவை கொண்டவை. ஏனென்றால் அவை மானுடனின் அடிப்படை இயல்புகளான தன்னலம், வன்முறை ஆகியவற்றுக்கு நேர் எதிரானவை.

அவ்வாறு அறங்களை கண்டடைந்து சொன்னவர்கள், அறங்களை புதுப்பிப்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக நாம் ரிஷி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறோம். அவர்களுக்கிடையே முரண்பாடுகள் இருக்கலாம். ஏனென்றால் அறம் என்பது விவாதங்கள் வழியாக, ஓரு கருத்தின் இடைவெளியை இன்னொரு கருத்து நிரப்புவதன் வழியாக, ஒரு கருத்தை இன்னொன்று எதிர்க்கும் முரணியக்கம் வழியாகவே செயல்படமுடியும், மேம்பட முடியும். ஆனால் அனைவரும் இணைந்து ஒன்றைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். பரத்வாஜரும் ரிஷிதான், பிருஹஸ்பதியும் ரிஷிதான், துர்வாசரும் ரிஷிதான், ஜாபாலியும் ரிஷிதான்.

இன்றைய யுகத்தை நிர்மாணித்தவர்கள் அனைவருமே ரிஷிதான். மார்க்ஸை ஒரு ரிஷி என முன்பு ஜமதக்னி என்னும் மார்க்ஸிய அறிஞர் எழுதினார். முனிவர் என்று கோவை ஞானி சொல்வதுண்டு. ஃப்ராய்டும் தல்ஸ்தோயும் ரிஷிகள்தான். ஷோப்பனோவரும் நீட்சேயும் ரிஷிகளே. அவர்கள் இந்த நூற்றாண்டை சமைத்து நமக்கு அளித்திருக்கிறார்கள். அறங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மானுடத்தை முன்னகர்த்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான பங்களிப்பு உண்டு.

மானுடத்தின் பரிணாமத்தில் சென்ற முந்நூறாண்டுகளில் படிப்படியாக சில அறங்கள் மேம்பட்டிருக்கின்றன. அவற்றிலொன்று மானுடசமத்துவம். பிறப்பால் எவரும் இழிந்தோரோ மேலோரோ அல்ல என்னும் அறம். வாழ்வுரிமை,ஆன்மிகநிறைவுக்கான உரிமை அனைவருக்கும் நிகராகவே இருக்கவேண்டும் என்னும் அறம். முந்தைய ரிஷிகள் உருவாக்கிய அறங்களுக்கு மேலதிகமாக அடுத்தகட்ட ரிஷிகள் மானுடத்திற்கு அளித்தது அது. அதிலிருந்தே அதிகாரத்தில், ஆட்சியில் அனைவருக்கும் பங்கிருக்கவேண்டும் என்னும் ஜனநாயகப்பார்வை உருவாகி வந்தது. அவையே இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய அடிப்படைகள். அவற்றின் மேல்தான் நம் சமூகவாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அவை முன்பிலாதவை. மாபெரும் தத்துவங்களை, மெய்ஞானங்களை முன்வைத்த ரிஷிகள் கூட மானுட சமத்துவம், சாமானியனுக்கும் அதிகாரம் என்னும் அடிப்படைகளை முன்வைத்தவர்கள் அல்ல. அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி இன்று அவர்களை ஒட்டுமொத்தமாக மறுப்பவர்கள் உண்டு. அது அறிவின்மை. அப்படி நோக்கினால் அடிமைமுறையை ஆதரித்த பிளேட்டோவில் இருந்து ஒட்டுமொத்த மானுட ஞானத்தையும் நிராகரிக்கவேண்டியிருக்கும். மார்க்ஸ் கூட அதைச் செய்யவில்லை.

மறுபக்கம், அந்த கடந்தகால ரிஷிகள் சொல்லவில்லை என்பதனால் இன்றைய அடிப்படை அறங்களை ஏற்க மறுக்கும் மனநிலை உள்ளது. அது மேலும் அறிவின்மை. அதை அறிவுத்தேக்கம் என்று மட்டுமே சொல்வேன். அறிவு விவேகத்துக்கு எதிரான விசையாக ஆகும் நிலை அது. யோசித்துப் பாருங்கள், பிளேட்டோவின் அதிதீவிர பக்தர் ஒருவர் பிளேட்டோ சொல்லியிருப்பதனால் இன்றும் அடிமைமுறை தேவை என்று சொல்லிக்கொண்டு அலைந்தால் அவரை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம்? அதற்காக பிளேட்டோவை தூக்கி வீசிவிட முடியுமா? அவர் இல்லாமல் மானுடச் சிந்தனை உண்டா?

நேற்றைய ரிஷிகளிடமிருந்து அவர்களின் மெய்ஞானத்தை, சிந்தனையை, கலையை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக ரிஷிகுலத்தால் உருவாக்கப்பட்டு இன்று நமக்கு அளிக்கப்பட்டுள்ள இன்றைய அறத்தின் மேல் நின்றுகொண்டு அவற்றைப் பரிசீலிக்கவேண்டும்.ஆகவே இன்றைய அறத்துடன் முரண்படும் என்றால் நேற்றைய சிந்தனைகள் எவையானாலும் நிராகரிக்கப்படவேண்டியவையே.

ஆனால் உண்மையில் அடிப்படைச் சிந்தனைகள், மெய்யறிதல்கள், கலையழகுகள் அவ்வண்ணம் முரண்படுவதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் அவை நன்றுதீது என்பதற்கு அப்பாலுள்ளவையாகவே இருக்கும். நேற்றைய அறவியல் [Ethics] மட்டுமே இன்றைய அறவியலுடன் முரண்படும்.

உதாரணமாக, அத்வைதசாரம் இன்றைய அறவியலுடன் முரண்படாது. ஏனென்றால் அது நேற்றைய அறவியலைச் சார்ந்து உருவானது அல்ல. அது ஒரு பிரபஞ்ச தரிசனம் மட்டுமே. ஆனால் அத்வைதத்தை ஒட்டி ஓர் அமைப்போ ஆசாரமோ உருவாக்கப்பட்டிருக்கும் என்றால் அது நேற்றைய அறவியலைச் சார்ந்தே அமைந்திருக்கும். இன்று அது இன்றைய அறவியலுடன் முரண்படும். அந்த அமைப்பு அல்லது ஆசாரம் மாற்றப்பட வேண்டும். அத்வைதம் மாற்றமில்லாதது, ஆகவே அந்த அமைப்பு அல்லது ஆசாரமும் மாற்றமில்லாததே என நினைப்பது மாபெரும் அறியாமை.

இதையே இன்றைய சிந்தனையிலும் காணலாம். மானுடவிடுதலையை, மானுட சமத்துவத்தை முன்வைத்த பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு நவீன ரிஷிகள் எவரும் பிற உயிர்களின் வாழ்வுரிமையை, இயற்கை என்னும் பேருயியிரியின் இருப்புரிமையை கருத்தில்கொண்டவர்கள் அல்ல. இன்று அந்த அறம் இன்றைய ரிஷிகளால் முன்வைக்கப்படுகிறது. காந்தி முதல் மசானபு ஃபுகுவேகா வரை ஒரு பட்டியலையே நாம் போடமுடியும். அவர்கள் கூட்டாக உருவாக்கிய அறம் அது.

உதாரணமாக, வளர்ப்பு யானைக்கும் தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உண்டு என இப்போது ஓர் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.[லலிதா என்ற யானை] இந்தத் தீர்ப்பு இருபதாண்டுகளுக்கு முன்புகூட வந்திருக்க முடியாது. ஏனென்றால் சென்ற ஐம்பதாண்டுகளில் உருவான அறம் அது. சிம்பன்ஸிகளைப் பற்றி ஆய்வுசெய்து அவற்றின் வாழ்க்கையை, உளவியலை மானுடத்தின் முன்பு வைத்த ஜேன்குடால் முதல் தொடங்கி பல நவீன ரிஷிகளின் கொடையாக உருவாகி வந்தது.

இன்று ஒரு பெருமாள் கோயிலில் சாமியை தன்மேல் ஏற்ற பிடிவாதமாக மறுக்கும் ஓர் யானையை அடித்து, துரட்டியால் நகங்களையும் செவிகளையும் பிய்த்து, கட்டாயப்படுத்தும் பாகனையும் விழாக்குழுவினரையும் பார்த்தால் அவர்களை ஒடுக்குமுறையாளர்கள், அறமிலிகள் என்று ஒருவர் எண்ணுவார் என்றால்தான் அவர் அறத்தில் நிற்பவர். ராமானுஜர் காலத்தில் அவ்வண்ணம் எண்ணியிருக்க மாட்டார்கள். ராமானுஜரே அவ்வாறு எண்ணாமலிருந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இன்று அவ்வண்ணம் எண்ணாதவர் ராமானுஜருக்கு அணுக்கமானவர் அல்ல.

ராமானுஜர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் அவ்வாறே கடைப்பிடிப்பவர் ராமானுஜருக்கு அணுக்கமானவர் அல்ல. அவர் எளிய பிடிவாதக்காரர் மட்டுமே. ராமானுஜ தரிசனத்தை அவர் அறியவில்லை, அவர் அறிந்தது உலகியல் ஆசாரங்களை மட்டுமே. ராமானுஜரை இன்றைய அடிப்படை அறத்துக்கு எதிராக நிறுத்துவதன் வழியாக அவர் ராமானுஜ மெய்ஞானத்துக்கு மாபெரும் தீங்கையும் இழைக்கிறார் என்றும் சொல்வேன். ராமானுஜரின் மெய்ஞானத்தை இன்றைய அறத்துடன் இணைப்பவரே ராமானுஜருக்கு நெருக்கமானவர். நாளை உருவாகும் புதிய அறங்களுடன் அதை இணைப்பவரே ராமானுஜரை முன்னெடுத்துச் செல்பவர்.

ஜெ

மெய்த்தேடலும் அரசியல்சரிகளும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2021 10:35

கணினிநிரல் எழுத்து, சில புதிய வாசல்கள்…

அன்புள்ள ஜெ,

நான் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 2001-2005 B.Tech IT பயின்றேன். பிஎஸ்ஜி கல்லூரியின் மாணவர் வட்டமும், ஆசிரியர்களும் என் வேலைக்கும், பின்னர் அமெரிக்காவில்  மேற்படிப்பு படிப்பதற்கும் உதவினார்கள். என் வகுப்பில் படித்தவர்களில் இப்போது 75% வெளிநாட்டில் தான் இருக்கிறோம். கல்லூரிக்கு மீண்டும் ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பாற்ற வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக தோன்றியது. உண்மையை சொல்லப்போனால், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு வந்த போது, இப்பொழுது விட்டால் பிறகு செய்ய முடியாது என்று தெளிவாகியது. “பெரு வெள்ளம் வரும்போது, தனிக் கிணறுகளால் என்ன பயன்?” என்று உங்கள் தளத்தில் வாசித்த வரிதான் தூண்டுதல்.

சென்ற ஆண்டு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலமாக இரண்டு இணையவழி கலந்துரையாடலில் பங்கேற்றேன். அதன் தொடர்ச்சியாக ரூ.10,000 நிரல் போட்டி ஒன்றை அறிவித்தோம். இப்பொழுது அமெரிக்காவில் கூகிள், மைக்ரோசாப்ட்டில் பணிபுரியும் என் கல்லூரி நண்பர்கள் போட்டி நடுவர்களாக இருந்தார்கள். போட்டி: கல்லூரி முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கானது. வெண்முரசு நாவலில் உள்ள நீளமான பத்து வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும். வெண்முரசு இனையதளத்தை மொத்தமாக சொல் சொல்லாக பிரித்து, அடுக்கி, வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்.

இது ஒரு வகையில் சூப்பர் சிங்கர், கராத்தே போட்டி போலத்தான். இவற்றால் உடனடியான பலன் இல்லாவிட்டாலும், இவை போன்ற கொந்தர், நிரல் போட்டிகள் ஒரு வளமான கணினி தொழில்நுட்ப சூழலுக்கு முக்கியம். 13 மாணவர்கள் (5 மாணவிகள் உட்பட) பரிசு பெற்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் போட்டியில் வென்றதால், பரிசுத்தொகையை ரூ.21,000 ஆக அதிகரித்தோம்.

2020 நிரல் போட்டி குறித்த சுட்டி: https://vpt.ai/2021/11/23/contest/

வருடா வருடம் இது போல ஒரு போட்டி நடத்த வேண்டும் என கல்லூரியில் கேட்டு, அதை வெண்முரசு நாவல் வரிசையை தமிழ் சமூகத்திற்கு இலவசமாக அளித்த உங்களை கௌரவிக்கும் பொருட்டு “Venmurasu Programming Team Endowment Fund”  என நாங்கள் அளித்த நிதிக்கு பெயரிட விரும்பினோம். கல்லூரியிலும் ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் நண்பர் மகேந்திரராஜன் சந்திரசேகரன் வெண்முரசு தொழில்நுட்ப வாட்ஸ்அப் குழு வழியாக அறிமுகமானார். [மகேந்திரா venmurasu.in தளத்தில் தேடுபொறியை மேம்படுத்தியுள்ளார்.] கிண்டி பொறியியல் கல்லூரியில் முதுகலை பொறியியல் படித்தவர். கனடா வேன்கூவர் நகரில் வசிக்கிறார். அவரும் என்னைப் போல பெரிய நிறுவனங்களில் வேலை செய்யாமல், பல ஆண்டுகளாக ஸ்டார்டப்களில் வேலை செய்கிறார். ஒரு இணை-மனதை கண்டு கொண்ட பரவசம் எனக்கு. மகேந்திராவும் நானும் சேர்ந்து இந்த ஆண்டிற்கான நிரல் போட்டியை நடத்தலாம் என்று முடிவு செய்தோம்.

ஐரோப்பிய மொழிகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு கூகுள் நன்றாகவே மொழிபெயர்க்கிறது. ஐரோப்பிய மொழிகளுக்கும் ஆங்கிலத்திற்கும் இடையே வரிக்கு வரி சரியான மொழிபெயர்ப்பில் ஏராளமான நல்ல training dataset இருப்பதால் (உதா: ஐரோப்பிய யூனியனில் ஒரு சட்டம் இயற்றப்பட்டால், அதிகார்வ பூர்வமாக மற்ற 27 ஐரோப்பிய மொழிகளிலும் அவை மொழிபெயற்கப்படுகிறது. விக்கிப்பீடியா, செய்தித்தாள்கள், மனித மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்பு என சரியான வரிக்கு வரி மொழிபெயர்ப்புகள் ஏற்கனவே நிறைய உள்ளது.) அதனால் கணினி இருப்பதில் இருந்து கற்றுக்கொண்டு, புதியவற்றை ஓரளவு சரியாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறது. இலக்கியத் தரமாக இல்லையென்றாலும் அர்த்தம் சரியாக அமையுமாறு மொழிபெயர்க்கிறது.

இவ்வாறு நிறைய training dataset இருக்கும் மொழிகளை High Resource Languages என்று வகைப்படுத்துகிறார்கள். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட எந்த இந்திய மொழியில் இருந்தும் ஆங்கிலத்திற்கு தேவையான அளவு நல்ல training dataset இல்லை. இந்திய மொழிகள் Low Resource Languages வகையில் வருகிறது. கூகிள், மைக்ரோசாப்டிற்கு வெளியே Indic NLP / Machine translation தொடர்பான இலவச நிரலை IIT மெட்ராஸில் பணிபுரியும் இரண்டு பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளார்கள் –  https://indicnlp.ai4bharat.org/home/. Ai4Bharat தன்னார்வலர் நிரல் குழுவை சேர்ந்த இரண்டு இளைஞர்களை தொடர்பு கொண்டோம். (கோகுல், பிரேம்). அவர்கள் இந்த ஆண்டு போட்டியின் நடுவர்களாக இருக்க ஒப்புக்கொண்டார்கள்.

ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே மகேந்திரா “Natural Language Computing” குறித்து உரை ஆற்றினார். சுட்டி: https://vpt.ai/2021/11/24/introduction-to-machine-learning-in-natural-language-computing/

கடந்த ஆண்டு போட்டியை விட இந்த ஆண்டு போட்டி கடுமையானது. கிஸாரி மோகன் கங்குலியின் மகாபாரத மொழியாக்கத்திலிருந்து பத்து பகுதிகளையும், அதன் வரிக்கு வரி தமிழ் மொழிபெயர்ப்பான அருட்செல்வ பேரரசன் அவர்களின் மொழிபெயர்ப்பையும் தந்தோம். Ai4bharat மாடல்களை பயன்படுத்தி, தமிழ் அத்தியாயங்களில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்து, அவற்றை கிஸாரியின் மூலத்தோடு ஒப்பிட வேண்டும். ஐம்பது மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பதினைந்து மாணவர்கள் எங்கள் எதிர்ப்பார்ப்பை மீறி சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். மேலும் பதினைந்து பேர் முயன்றிருந்தார்கள்.

2021 நிரல் போட்டி குறித்த சுட்டி: https://vpt.ai/2021/11/23/2021-vpt-contest/

இனி வரும் ஆண்டுகளில் போட்டி சீனியர் மாணவர்களால் ஜூனியர்களுக்கு நடத்தப்படும். முன்னாள் மாணவர்கள் நடுவர்களாக இருப்பார்கள். முதலில் பி.எஸ்.ஜி கல்லூரிக்குள் போட்டியை நடத்தி விட்டு, ஓரளவு பிடி கிடைத்தபின் மற்ற கல்லூரிகளுக்கும் போட்டியை விரிவு படுத்தும் திட்டம் இருக்கிறது.

வருடந்தோறும் வெல்லும் மாணவர்களை கொண்டு, பிஎஸ்ஜி கல்லூரியில் Tamil NLP தன்னார்வலர் நிரல் குழு ஒன்றை துவங்கும் முயற்சியில் இருக்கிறோம். கல்லூரியிலும் இரண்டு ஆசிரியர்களை நியமித்திருக்கிறார்கள். நான் சான் ஃபிராண்ஸிஸ்கோவிலும், மகேந்திரா வான்கூவரிலும், மாணவர்கள் கோவையிலும்,  Ai4bharat நண்பர்கள் சென்னையிலும் இருக்கிறோம். சில சிறிய திட்டங்களை செயல்படுத்தி பார்ப்பதன் மூலம் கற்றுகொண்டு அடுத்த கட்டங்களை திட்டமிடலாம் என்று இருக்கிறோம்.

நம் வாசகர்களில், NLP துறையில் அனுபவம் உள்ள நண்பர்கள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளவும்.

We are looking for mentors. Please reach out to us – hello@vpt.ai – If you have:

Working experience (at least 2 years) in NLP for Indian languages, especially Tamil.Understanding of state of the art methods and models in NLP:
— For example, how multilingual models work, what is multi-task training, exploiting information from high-resource languages for low-resource languages.
— Understanding on how Transformer-based attention models work.Interest in mentoring students for open source Tamil NLP projects (mostly during weekends).[Bonus] If you have open source contributions, experience in publishing research works.

மேலும், ஸ்டார்டப்கள் தொடர்பான சில முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன். அவற்றை https://vpt.ai/ தளத்தில் வெளியிடும் திட்டமும் இருக்கிறது.

உங்கள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்.

நன்றி,

விசு

https://visu.me/

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2021 10:34

இன்றிருக்கும் நேற்று – நவீன்.ஜி.எஸ்.எஸ்.வி.

நான் காசியில் இருந்த போது ஒன்றுணர்ந்தேன். காசி என்பது கவியின் நகரம். கவி பாடி இசை மீட்கும் நகரம் அது. ஒரு தெருவில் நடந்து சென்றால் நான்கு இசை வகுப்புகள் நடத்தும் மையம் உள்ளது. பாட்டிசை கேட்காமல் எந்த ஒரு தெருவிலும் நாம் நடக்க முடியாது.

ஒவ்வொரு பாணனும் பாடி திரியும் நகரம் அது. ஒவ்வொரு கவியும் தன் பாட்டை எழுதி பாடிய நகரம் அது. வரலாறு நெடுக அது தான் நிகழ்ந்திருக்கிறது.

வேதம் முதலில் பாடப்பட்டது காசியில் தான். ஆதிசங்கரர் தன் பல பாடலை இங்கே தான் இயற்றியுள்ளார். ஆதிசங்கரரின் மொத்த வாழ்க்கையும் காசியில் தான் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவர் தன் காசி பஞ்சகத்தில் காசியை பற்றி “ஐம்பூதங்களின் ஒளியாய் இருப்பவள் அன்னை பார்வதி. அவள் உடலின் ஆன்மாவாக வீற்றிருப்பவர் சிவன். சிவன் என்னும் ஆன்மாவின் உண்மையான புறவடிவம் காசி மாநகரம் என்கிறார். உடலே காசி நகரம். மூவுலகத்திலும் நிறைந்து விளங்கும் அன்னையாகிய கங்கை (என்னுள் இலங்கும்) உயர்ந்த அறிவு.” என்கிறார். இந்நகரைக் கொண்டு மொத்த பிரபஞ்ச தரிசனத்தையும் தன் காசி பஞ்சகத்தில் விளக்குகிறார்.

அதற்கு நேர் தென்திசையில் தென்காசியில் அமர்ந்துக் கொண்டு இதே மரபை பாடும் கவியாகவே விக்ரமாதித்யன் கவிதைகளை வாசிக்கும் போது அவர் தெரிகிறார். இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்ந்துக் கொண்டு வேதம் பாடியதையும், ஆதி சங்கரர் பாடியதையும் நவீன கவிதையில் பாடியவர் விக்ரமாதித்யன் என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஆதிசங்கரரின் பாடலுக்கு நிகரான கவிதையாக விக்ரமாதித்யனின் அன்னபூரனி கவிதையை வாசித்தேன்,

அன்னபூரணி

இங்கில்லாவிடினும்

அங்கெங்காவது

வீசிக்கொண்டே காற்று

 

இந்நாட்டில்

பொய்த்திருந்தாலும்

பெய்து கொண்டிருக்கும் பருவமழை

 

இவ்வடுப்புகள்

இன்றெரியாது போயினும்

எங்கெங்கோ அடுப்புகளில் தீ

 

இவ்வயல்கள்

இப்போது தீய்வுகண்டிருந்தாலும்

வரையாது வகைதோகையாய் வழங்கும் பூமி

 

சூரியசந்திரர்கள்

வளையவளைய

வந்தபடியேயிருக்கும் வானம்

 

அன்றுமின்றும் இனியுமென்றென்றும்

ஐம்பூதங்களின் தயவிலேதான்

ஆதிநாதன் ஸ்வரூபங்கள்

***

ஆனால் ஆதிசங்கரர் நம்மை இட்டு செல்லும் தத்துவ ஞானித்திலிருந்து விக்ரமாதித்யன் சற்று விலகுகிறார். அதுவே ஆதிசங்கரரை தத்துவ ஞானியாகவும், விக்ரமாதித்யனை கவியாகவும் நாம் பார்க்க காரணமாகிறது என்று நினைக்கிறேன். ஆதிசங்கரர் தன் பாடல்கள் கொண்டு பிரபஞ்ச உண்மையை நிறுவ முயல்கிறார். அதனைக் கொண்டு தான் அடைந்த தரிசனத்தை விளக்குறார்.

விக்கி அண்ணாச்சி நடைமுறை தரிசனத்தை பகடி செய்கிறார். ஒரு துளி கூட்டலான எள்ளல் தான் நவீன கவிதையின் முன்னகர்வோ என அவர் கவிதைகளைப் படிக்கும் போது எண்ணத் தோன்றுகிறது. மேலுள்ள கவிதையில் அதன் சாயல் தெரிகிறது.

ஆனால் அவை வெறும் பகடிகளாய் மட்டும் அமைவதில்லை. அவர் கவிதை அதன் வழியாக வேறொரு ஆழம் நோக்கி செல்பவை.

நாம் வரலாறு தோறும் நமக்கான நெறி நூலை, சமய நூலை இயற்றிக் கொண்டே இருக்கிறோம்.  அதனைப் பற்றிக் கொண்டே நாம் நம் சிறு வாழ்வை கடத்துகிறோம். ஆனால் அதற்கு மேலே எப்போதும் ஒன்று உண்டு என்பதை காண மறந்து விடுகிறோம். அந்த மேலான ஒன்றைக் காண்பதற்கு மரபறிந்த கவிஞனின் கண் வேண்டும் என ”காந்திமதி” கவிதை சொல்கிறது.

காந்திமதி

முத்தொள்ளாயிரமே போதுமென்றான்

பித்தன்

திருமந்தரமே மதியென்றான்

சித்தன்

குற்றாலக்குறவஞ்சிதான் பிடிக்குமென்றான்

கோமகன்

சிலப்பதிகாரம்தான் விருப்பமென்றான்

தென்னவன்

சங்கம்தான்

சாலவும் நன்றென்றான் அத்தன்

நெல்லையப்பரிடம் சொல்லி

சிரித்துக்கொண்டாள் காந்திமதி

***

கவிதைப் பட்டறையில் விக்ரமாதித்யன் அரங்கில் (https://tamililakkiyakavithaigal.wordpress.com/2021/09/27/185/) கவிஞர் லட்சுமி மணிவண்ணன் பேசிய போது சொன்னார். விக்கி அண்ணாச்சியை நாம் நவீன கவிஞராக அணுகினால் அவர் நமக்கு தருவதற்கு ஒன்றுமில்லை. மாறாக மரபு கவிதையின் நீட்சியாக தான் அவரை பார்க்க வேண்டுமென்று.

அது விக்ரமாதித்யன் கவிதைக்கு ஒரு முகவுரை தான் என்றாலும், அதன் பின் விக்ரமாதித்யன் கவிதைகளை வாசிக்கும் போது லட்சுமி மணிவண்ணன் சொல்லிய வரி உண்மை உண்மை எனச் சொல்லிக் கொண்டே கவிதைகளை வாசிக்க தோன்றுகிறது.

நம் பக்தி மரபில் தோன்றிய பாடல்கள், ”நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என தேவாரமும், திருவாசகமும் ஒருபுறம் பாடப்பட்டால் மறுபுறம் சிவனை சக்தியின் காலின் கீழ் படுத்திருப்பவராக சாக்த/தாந்தரீக மரபில் சித்தரிக்கப்படுகிறார். சித்தர் பாட்டில் பல இடங்களில் சிவனுக்கு இணையாக நின்று சித்தர்கள் சிவனுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி பல தரப்புகள் கொண்டே நம் பிரதான தெய்வங்களாக விஷ்ணு, சிவன், பிரம்மன் எல்லோரும் உருவாகி வந்திருக்கின்றனர். ஒவ்வொரு தரப்பில் இருந்தும் துதி பாடல் இயற்றப்பட்டுள்ளது. இதில் விக்ரமாதித்யனை சாக்த மரபின் நீட்சியாக சொல்லலாம் என்றே அவரது பல கவிதைகள் சொல்கின்றன. சித்தர் மரபிலும் நான் உண்டு என சில கவிதையில் சொல்கிறார்.

 

சதாசிவா சதாசிவா

சதா எப்படி சிவனாகவே (இருக்கிறாய்)

நடராஜா நடராஜா

இமைப்பொழுதும் இடைவெளியின்றி எவ்வண்ணம் நடம்

***

சாமி மலையேறி

எங்கே போகும்

தேவி மடியில்

விழுந்து கிடக்கும்

***

நீலத்தை சூடிக்கொண்டது வானம்

பச்சையை ஏந்திக்கொண்டது வயல்

கறுப்பை வாங்கிக்கொண்டது கொண்டல்

வெண்மையை வாங்கிக்கொண்டது பருத்தி

மஞ்சலை அப்பிக்கொண்டது சந்தனம்

பழுப்பை அணிந்துகொண்டது மரம்

சிவப்பை வரிந்து கொண்டது ரத்தம்

ஏழு வண்ணங்களிலும் கொஞ்சம் திருடி

எடுத்துக்கொண்டது இந்திர தனுசு

இவனுக்கென்று இல்லாமல் போயிற்று

தனி ஒரு நிறம்.

***

பெருந்தெய்வங்களை விட சிறுதெய்வங்கள் என்றால் நமக்கு ஒரு படி கூடுதல் அணுக்கம் தான். சுடலைமாடனுடன் சேர்ந்து சுருட்டு பிடிக்கவும், சங்கிலி பூதத்தான் உடன் சேர்ந்து படையல் உண்ணவும் நமக்கு அனுமதி உண்டு. அதே உரிமையை சிறுதெய்வங்களும் நம்மிடம் எடுத்துக் கொள்ளும். அதனை விக்ரமாதித்யன் வரிகளில் சொன்னால்,

 

சிறு தெய்வங்களை

சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம்

பெருந் தெய்வம்தான்

பிடிகொடுத்துத் தொலைக்காது

***

சிறுதெய்வங்கள்

வலுத்தால்

பெருந்தெய்வம்

***

எனக்கும்

என்   தெய்வத்துக்குமிடையேயான

வழக்கு

 

முதன் முதலில்

கோழிதான் கேட்டது

கஷ்டப்படுத்தவில்லை வேறே

பிறகு பிறகு

கடாய் வெட்ட  சொல்லியது

குறைவைக்கவில்லை   அதையும்

இப்பொழுது

என்னையே பலியிட வேண்டும் என்கிறது

எங்கே ஒளிந்துகொள்ள .

***

மேலுள்ள கவிதைகளில் தென்படும் ஒரு வகை உரிமைக்கோரல் என்றால் கீழுள்ள சங்கிலி பூதத்தான் கவிதையில் அந்த அணுக்கம் நம் வாழ்வின் ஒரு துளியோடு ஒட்டி நிற்கிறது. சிறு வயதில் நாம் எப்போது சிறுதெய்வங்களை பயந்தே பார்த்திருப்போம். அப்படி தான் அவை முதன்முதலில் நமக்கு வந்து சேரும். ஒரு கட்டத்தில் அவை பயம் தாண்டிய காவல் தெய்வங்களாக ஆகும். இறுதியில் காவலுக்கும் மேலொன்றாக,

சங்கிலி பூதத்தான்

சின்னஞ்சிறு வயதிலேயே தெரியும்

சங்கிலிபூதத்தாரை

பள்ளிக்கூடம்

போகிற வழி

பயபக்தியுடன் கும்பிட்டுக்கொண்டிருப்பார்கள்

ஜனங்கள்

நகரின் காவல்தெய்வம் இல்லையா

அவன்

இருக்காதா

பின்னே

விவரம் தெரிவதற்குள்ளேயே

வர நேரிட்டது ஊரைவிட்டு

எனினும் சங்கிலிபூதத்தான்

கூடவே இருக்கிறானென எண்ணம்

இன்றும் அந்தப் பக்கம் செல்கையில்

நின்று வழிபடுவதுதான்

அவனுக்கு நிச்சயம்

அடையாளம் தெரியாமலிராது

கோபப்படமாட்டாள்

பாவப்பட்டுக் கொள்வான்

இங்கேயே இருக்க முடிந்திருந்தால்

இப்படியெல்லாம் ஆகியிருக்கமாட்டானென்று

நினைத்துக் கொள்ளலாம்

சங்கிலிபூதத்தான் உடன் இருக்கிறபோது

சண்டமாருதம் போலத்தான் சாகும்வரையிலும்

ராஜாத்தி

***

நான் இந்நாட்களில் தேடி வாசித்தது விக்கி அண்ணாச்சி தென்படும் மேற்சொன்ன வகை மரபு கவிதைகளில் தான். “பாரதி சென்றான் விக்ரமாதித்யன் வந்தான்” என விக்ரமாதித்யனின் வாக்கியம் போல் நம் மரபு கவிதையில் பாரதியின் நீட்சி தான் விக்ரமாதித்யன் எனப் பல கவிதைகள் சொல்கின்றன. இதனை ’ஆகாயகங்கை’ கவிதையில் அவரே சொல்கிறார்,

”யாருக்காக எதற்காக

மகாகவியின் வழித்தோன்றல் நான்

உன்னிடம் பேசியென்ன புண்ணியம்” என்று.

இப்போது நான் காசிக்கு சென்ற போது பாரதி காசியில் தங்கி வேதம் படித்த வீட்டை பார்த்து வந்தேன். அங்கு தான் பாரதி ஒன்பது, பத்தாம் வகுப்பை படித்திருக்கிறார். அங்கு தான் சுதேசம் மீதான ஆர்வம் பாரதிக்கு துளிர்விட தொடங்கியது. அங்கு தான் பல செய்யுள்களை பாடியுள்ளார். அவர் அமர்ந்து பாடிய, “வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்” சிவமடம் வீட்டினுள் அமைந்த கோவிலைப் பார்த்தேன். அந்த கவிதைக்கு இணையான கவிதையாக விக்ரமாதித்யனின் அபிராமி கவிதையை சொல்லலாம். இதில் ஒருபடி மேல் கொஞ்சல் உள்ளது எனத் தோன்றுகிறது.

அபிராமி

செண்பகம்தான்

நிரம்பவும் பிடித்தம்

மல்லி வேண்டாமென்பதில்லை

அதுக்காக

பிச்சிதான்

மிக இஷ்டம்

முல்லைக்கு

மறுப்பொன்றுமில்லை

மனோரஞ்சிதம்தான்

வெகுவாக விருப்பம்

ரோஜா சூடிக்கொள்வதும்

சம்மதமே

அபிராமி மனம்போல்

அவள் வாழ்வு

***

விக்ரமாதித்யனை சித்தர் மரபின் நீட்சியாக நான் சொல்ல காரணம் அவர் கவிதையில் தென்படும் சடங்குக்கு எதிரான நக்கலும், நையாண்டியும் ஆக கூட இருக்கலாம். பூஜைகள் வெறும் சடங்காகி போனதை அவர் கண்டிக்கிறார். சிறு கேலி மூலம் அதனை கடந்து செல்கிறார். இந்த திருவளர்த்தான் எப்பவும் சில்லென்று பூக்கும் சிறுநெருஞ்சிக் காடு என்கிறார். இத்தனை சமயம், சடங்கு என அனைத்தையும் பின்பற்றி ஒன்றையும் உருப்படியாக செய்யாமல் போன எல்லா சித்தாந்தங்களுக்கும் மேலானது எதுவுமற்று வாழும் பூர்வகுடியின் சித்தாந்தம் என்கிறார்.

 

கோயிலுக்கு

வாசல் நான்கு

சன்னிதி இரண்டு

சுயம்புலிங்கம்

சொல்ல ஒரு விசேஷம்

அம்மன்

அழகு சுமந்தவள்

ஐந்து கால

பூஜை நைவேத்யம்

பள்ளியறையில்

பாலும் பழமும்

ஸ்தல விருக்ஷம் பிரகாரம்

நந்தவனம் பொற்றாமரைக் குளம்

வசந்தோற்சவம் தேரோட்டம்

நவராத்திரி சிவராத்திரி

பட்டர் சொல்லும் மந்திரம்

ஓதுவார் பாடும் தேவார திருவாசகம்

சேர்த்துவைத்த சொத்து

வந்துசேரும் குத்தகை

ஆகமம் ஆசாரம்

தவறாத நியமம்

தெய்வமும்

ஐதிகத்தில் வாழும்

***

திருவளர்த்தான்

தள்ளிப்போட்டுக்கொண்டே

வந்தான்

தவிர்த்துக்கொண்டே

போனான்

விரதமிருப்பதுபோலவே

இருந்தான்

வேறுவேறு மார்க்கத்தில்

திருப்பிக்கொண்டிருந்தான்

எல்லாம் ஒரேநாளில்

ஷணச் சித்தத்தில் முறிந்தது

மறுபடியும்

தன்னிலைக்கு

மீண்டும்

பழையபடிக்கு

சில்லென்று பூத்த

சிறுநெருஞ்சிக் காடு

***

எதுவுமற்று

வடக்கேயிருந்து

வேதாந்தம்

தெற்கில்

சைவசித்தாந்தம்

கிழக்கே

தாவோயிஸம்

மேற்குலகில்

மார்க்ஸியத்திலிருந்து என்னென்னவோ

எதுவுமற்று

வாழ்கிறார்கள் பூர்வகுடிகள்

***

இப்படி தெய்வங்களோடு, சமயங்களோடும் உரையாடும் லைசென்ஸ் நாம் பாரதிக்கு பிறகு விக்ரமாதித்யன் என்னும் விக்கி அண்ணாச்சிக்கு தான் கொடுத்திருக்கிறோம். அந்நிலை என்பது சித்தன் என்றான கவிஞனின் நிலை. அந்த சித்த கவிஞனின் போக்கை அவர் வரிகளில் வினவினால், “நதியின் போக்கு நற்போக்கா முற்போக்கா பாப்பா” என்றால். அத்தனை உறுதியாக அதனை வரையறுத்து சொல்லிவிட முடியாது. ஆனால் தன் வாழ்நாளெல்லாம் அந்த காந்தமதி அம்மனை மட்டுமே பாடி நின்ற இந்த பெருங்கவிஞனுக்கு,

இன்னும் என்ன வேண்டும்

“இனி ஒரு துன்பமில் லை

ஒரு சோகமில் லை

வரும் இன்பநிலை 

வெகுதூரமில் லை.”

***

இந்த வகை விக்ரமாதித்யன் கவிதைகளை மட்டுமே வாசிக்கும் போது என் மனதில் அவர் கவிதையின் ஒரு சித்திரம் எழுகிறது. அவரின் கவிதை உலகம் அருபமான தெய்வங்களால் தான் சிருஷ்டிக்கப் பட்டிருக்கின்றன. அந்த தெய்வத்தின் பொருட்டே அவர் கவிதை ஒவ்வொன்றும் நிகழ்ந்திருக்கிறது. அந்த தெய்வத்தை பாடி நிற்கும் பாணனாகவே கவிஞர் விக்ரமாதித்யன் நினைவு கூறப்படுவார் என்று தோன்றுகிறது. வேத காலம் முதல் கபீர், பாரதி வரை காசி மாநகரில் பாடி நின்ற பெருங் கவிஞர்கள் போல் தென்காசி நகரில் பாடிய கவி விக்ரமாதித்யன் என்றே அவர் நினைவில் நிற்பார்.

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது பெறும் சித்த கவிஞர் விக்ரமாதித்யன் தாள்பணிந்த வணக்கங்கள்.

 

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2021 10:34

இன்றைய காந்தி- இந்துமதி மனோகரன்

நேற்று அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட சிந்தனை இன்று காலாவதியாகிவிடும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கை இன்றளவும் பேசுபொருளாக இருந்து வருகிறது. சொல்லப் போனால் இன்றைக்கு அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் அதிக அளவில் நடந்து வருகின்றன. அவர் குறித்து எழுத்தப்பட்ட புத்தகங்கள் புதிதாக எத்தனை வந்தாலும் அவை விற்றுத் தீர்ந்து விடுகின்றன

இன்றைய காந்திஇந்துமதி மனோகரன்

இன்றைய காந்தி மின்நூல் வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2021 10:31

குக்கூ ஆவணப்படம்

குக்கூ குழந்தைகள் வெளி பற்றிய ஒரு கேரளத்து ஆவணப்படம். அழகான புடப்பிடிப்பு. நல்ல மழைபெய்தபின் எடுத்திருக்கிறார்கள். பசுமையாக இருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 29, 2021 10:31

November 28, 2021

கல்வி பற்றி மேலும்…

நமது கல்வி

அன்புள்ள ஜெ

கல்வி பற்றி உங்களுடைய இரு கட்டுரைகளை வாசித்தேன். முன்பும் தொடர்ச்சியாக தமிழகக் கல்வி பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதுவும் பள்ளிக்கல்வி பற்றி. நான் கொண்டிருக்கும் ஐயம் இது. நீங்கள் எழுதும்போதெல்லாம் கிராமப்புற, அரசுப்பள்ளிகளைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள். அங்கே போட்டியைச் சந்திக்கத்தேவையான கல்விப்பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்று எழுதுகிறீர்கள். இன்று புகழ்பெற்றுள்ள விளையாட்டுவழிக் கல்வி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பலவகையான மாற்றுக்கல்வி முறைகள் இன்றைக்கு அறிமுகமாகியிருக்கின்றன. அவற்றைப் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன? இன்றைய கல்வி தன்னறிவை உருவாக்குவதாக உள்ளதா? சிந்திக்கவைக்கக்கூடியதாக உள்ளதா?

அத்துடன் ஒன்றுண்டு, இங்கே இன்றைக்கு தனியார்க் கல்விநிலையங்களில் அளிக்கப்படும் கல்வி என்பது அரசியல்நீக்கம் செய்யப்பட்டது. அரசுப்பள்ளிகளிலேயே அரசியலுணர்வு உருவாக முடியும். அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

என்.ஆர். லட்சுமிபதி

 

அன்புள்ள லட்சுமிபதி,

நான் சொல்வன எவையும் என்னுடைய மண்டையோட்டங்கள் அல்ல. நேரடியாக பார்த்து எழுதுபவை. என்னுடைய இயல்பு என்பது முற்றிலும் நேரடியனுபவம் சார்ந்த நடைமுறைப்பார்வையே. அந்த நடைமுறைப் பார்வையில் இருந்து உருவாகும் இலட்சியவாதத்தையே நான் முன்வைப்பேன்.வெற்று இலட்சியப்பேச்சுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

விளையாட்டுவழிக் கல்வி கேரளத்தில் முழுமையான ஆரம்பக் கல்வித் திட்டம் [TPEP. Total Primari Education Poliicy] என்றபேரில் அறிமுகப்படுத்தப்பட்டது  கேரளக்கல்விக்கு நிதியளிக்கும் ஆசியன் டெவலப்மெண்ட் வங்கி போட்ட நிபந்தனையால் அது கொண்டுவரப்பட்டது என்பது குற்றச்சாட்டு. முழுத்தோல்வி அடைந்த ஒரு திட்டம் அது. இன்று கேரள மாணவர்கள் தேசியப்போட்டிகளில், சர்வதேச வேலைவாய்ப்புகளில் கடும் பின்னடைவை சந்திக்க அது காரணமாகியது.

[இது வெளிப்படையான உண்மை. இதைச் சொல்லப்போனால் அதற்கு ஆதரவான கல்வியாளர்கள் புள்ளிவிவரங்களை கொண்டு அடிக்க வருவார்கள். புள்ளிவிவரங்களைச் சமைப்பது மிக எளிது என அறிந்தவர்கள், நடைமுறையைக் கண்டவர்கள் அவர்களை விட்டு ஒதுங்கிச்செல்லவேண்டும். வேறு வழியில்லை]

நடைமுறையில் இன்று கேரளத்தில் இடைநிலை பொருளியல் உள்ளவர்கள் கூட மாநில அரசின் டிபிஇபி கல்விமுறையை தவிர்க்கும்பொருட்டு தனியார் கல்விநிலையங்களை நாடுகிறார்கள். அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை அடித்தள மக்கள்.

விளையாட்டுவழிக் கல்வியின் கொள்கைகள் எதுவானாலும் ஏன் நடைமுறையில் அது தோற்கிறது? முக்கியமான காரணம், ஆசிரியர் பற்றாக்குறை. ஐம்பது அறுபது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்னும் நிலைமையில் விளையாட்டுவழிக் கல்வி என்பது குழந்தைகளை விளையாட விட்டுவிட்டு ஆசிரியர் சும்மா இருப்பதாகவே முடியும். பதினைந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்னும் நிலையில், வசதியான பள்ளியறைகளிலும் தோட்டங்களிலும் மட்டுமே அக்கல்வியை அளிக்க முடியும்.

அத்துடன் மேலைநாட்டுச் சூழலில் நான் நேரடியாகக் கவனித்த ஒன்று உண்டு. அங்குள்ள குழந்தைகள் வீட்டிலேயே கட்டுப்பாட்டுடன் வளர்பவர்கள். நான் செல்லும் இல்லங்களில் எல்லாம் குழந்தைகள் டிவி பார்க்கவேண்டிய நேரம் எழுதி ஒட்டப்பட்டிருப்பதை காண்பதுண்டு. ஒரு நாளுக்கு அரைமணி நேரம். வீடு சுத்தம் செய்வது முற்றத்தில் புல்வெட்டுவது உட்பட ஒவ்வொரு குழந்தையும் அதன் கடமையைச் செய்தே ஆகவேண்டும். விருந்தினர்களை உபசரிப்பது உட்பட ஒவ்வொன்றிலும் நெறிகள் உண்டு, அவற்றை குழந்தைகள் கடைப்பிடித்தே ஆகவேண்டும். அப்படி எதையும் எந்த இந்தியக்குடும்பத்திலும் கண்டதில்லை.

அவ்வண்ணம் அடிப்படைக் கட்டுப்பாட்டுடன் வளரும் குழந்தைகளுக்குரியது விளையாட்டுவழிக் கல்வி. இந்தியக்குழந்தைகள் பெரும்பாலும் இன்று எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வளர்கின்றன. மதிப்பெண் மட்டுமே அவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை பள்ளிகளில் கட்டுப்படுத்துவது மிகக்கடினம். அங்கே விளையாட்டுவழிக் கல்வி என்றால் அது கல்வியாக இருப்பதில்லை.

டிபிஇபி கல்வி பற்றி ஸ்ரீனிவாசன் எழுதி மலையாளத்தில் ‘இங்கிலீஷ் மீடியம்’ என்று ஒரு சினிமா வந்தது. டிபிஇபி முறையால் ஏழைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதைக் கண்டு கொதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழிக் கல்வி அளிக்கும் தனியார்ப்பள்ளி ஒன்றை ஆரம்பிப்பதே அந்த படத்தின் கதை. அதில் டிபிஇபி முறைக்கு ஸ்ரீனிவாசன் ஒரு விளக்கம் அளிப்பார். ‘தரித்ரராய பிள்ளேர் எங்கினெயெங்கிலும் படிச்சோட்டே’ [ஏழைப்பிள்ளைகள் அவர்களே எப்படியாவது படிக்கவேண்டியதுதான்]

நான் மாற்றுக் கல்விமுறைகளை கவனித்துக்கொண்டிருக்கிறேன். அவை உயர்செல்வநிலையில் உள்ள குழந்தைகளுக்கு, உடனடியாக கல்வி- வேலைவாய்ப்புச் சந்தையில் போட்டியிடவேண்டிய தேவையற்ற குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மட்டுமே பயனுள்ளவை. அடிப்படைச் சூழல்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு எவ்வகையிலும் உதவாதவை.

வெளியே ஒவ்வொரு களத்திலும் வெறிகொண்ட போட்டியை மட்டுமே நெறியாக வைத்திருக்கிறோம். ஒரு மதிப்பெண் வேறுபாட்டில் வாழ்க்கையே திசைமாறும் சூழல் உள்ளது. அதை அப்படியே வைத்துக்கொண்டு அமெரிக்கபாணியின் ‘படைப்பூக்கக் கல்வி’ பற்றி கனவு காண்பது அபத்தமானது.

அரசுப்பள்ளிகளின் கல்வி ஆங்கிலவழியில் அமையவேண்டும் என்பதும் என் உறுதியான எண்ணம். தமிழ்வழிக்கல்வி அத்தனை தனியார்ப்பள்ளிகளிலும் தவிர்க்கப்படுகிறது. அத்தனை வேலைவாய்ப்புப் போட்டிகளும் ஆங்கிலம் சார்ந்தவை. அந்நிலையில் அடித்தள மாணவர்கள் மட்டும் தமிழ்படித்து தமிழை வாழவைக்கவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். எனக்கு கல்வியாளர்களாக நண்பர்கள் உள்ளனர். அனைவரிடமும் நான் ஆணித்தரமாகச் சொல்வது தரமான ஆங்கிலம் கிராமப்புற மாணவர்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்பதைத்தான்.

தமிழை காப்பாற்றவேண்டும்தான். அதை ஏன் நடுத்தர, உயர்குடி மக்கள் செய்யக்கூடாது? அவர்கள் தமிழ் படிக்கட்டுமே. ஆங்கிலமே இன்று பொருளியல்கல்விக்கு அடிப்படை. அது அனைவருக்கும் அளிக்கப்படவேண்டும்.

விளையாட்டுவழிக் கல்வி, பண்பாட்டுக்கல்வி ‘கூடுதலாக’ அளிக்கப்படலாம். ஆர்வமுள்ள திறமையுள்ள மாணவர்களுக்கு மட்டும். அதையே குக்கூ போன்ற அமைப்புகள் செய்கின்றன. அவை மிக முக்கியமான முயற்சிகள். குறிப்பாக பின்தங்கிய கிராமங்களில் அளிக்கப்படும் அத்தகைய கல்வி ஒரு பெரும் கொடை.

தன் ஏழ்மைசூழ்ந்த வாழ்க்கையை கல்வி மீட்கும் என நம்பி பள்ளிக்கு வரும் ஒரு மாணவன் ஏமாற்றப்படலாகாது. அவன் நாடுவது கிடைக்கவேண்டும். ஆகவே போட்டிகளில் வெல்லும் தகைமை கொண்ட கல்வியை மட்டுமே நான் ஆதரிக்கிறேன். எதன்பொருட்டும் கல்வித்திட்டம் எளிமைப்படுத்தப்படுவதை நான் ஏற்கவில்லை.

அரசியல் பற்றி…. அத்தனை அரசியலார்வம் கொண்டவர்கள் தங்கள் பிள்ளைகளை அரசியலில் இறக்கட்டுமே. இங்குள்ள அத்தனை புரட்சிப்புயல்களின் பிள்ளைகளும் சிறந்த தனியார் கல்விநிலையங்களில்  முறையான போட்டிக்கல்வி பெற்று உயர்பதவிகளில், உயர் பொருளியல் நிலைகளில் இருப்பவர்கள் என்பதை மறக்கவேண்டியதில்லை. இவர்கள் சொல்வதெல்லாம் அடித்தள மக்கள் அரசியல்தொண்டர்களாகி தங்கள் அரசியலுக்கு கூட்டம்சேர்க்கவேண்டும் என்று மட்டுமே. என் மகன் அரசியல் தொண்டன் ஆவதை நான் விரும்ப மாட்டேன். ஆகவே எந்தக் குழந்தைக்கும் நான் அதை பரிந்துரைக்க மாட்டேன்.

கேரளத்தின் சென்ற முப்பதாண்டுக்கால பொருளியல் வளர்ச்சியை ஆராய்ந்து தாமஸ் ஐசக் ஒரு கட்டுரையில் சொல்லும் ஒரு செய்தி என்னை எப்போதுமே ஆழ்ந்து யோசிக்கச் செய்வது. கேரளத்தில் தீவிரமாக அரசியல்மயப் படுத்தப்பட்ட சமூகங்கள் பொருளியல் பின்னடைவைச் சந்தித்தன. வணிகத்திலும் தொழிலிலும் ஈடுபட்ட சமூகங்கள் மேலெழுந்து ஆட்சியதிகாரத்தையும் கைப்பற்றின.

ஆகவே இன்று எந்த அடித்தள இளைஞரிடமும் நான் சொல்வது பொருளியல் அடிப்படையை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்றுதான்.அதுவே முக்கியமானது, இன்றியமையாதது. போராட்ட அமைப்பை உருவாக்கி எழுந்த தலைவர் திருமாவளவன் கூட தன் சமூகத்திடம் இன்று சொல்வது கல்வி, தொழில் ஆகியவற்றில் கருத்தூன்றும்படித்தான் என்பதை கவனித்திருக்கிறேன். சென்ற இருபதாண்டுகளில் எதன்பொருட்டும் அவர் தன் சமூக இளைஞர்களை தெருஅரசியலுக்கு இறக்கியதில்லை. கடுமையாகச் சீண்டப்பட்டபோதும்கூட. அதுவே நடைமுறை விவேகம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2021 10:35

நந்தனாரின் நந்தியும் சுடுகாட்டுச் சேவலும் -இரம்யா

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

கவிஞனைப்பற்றி கவிதையைப் பற்றி புதுமைப்பித்தன் கூறும்போது “சிருஷ்டி கர்த்தா ஒரு பெரிய கலைஞன். அவனுடைய ஆனந்தக் கனவுதான் இந்தப் பிரபஞ்சம். அதன் ரகஸியம் தத்துவம் வேறு. அது இன்பத்தின் விளைவு. அவனுடைய அம்சத்தின் சிறு துளிதான் கவிஞன். அவன்தான் இரண்டாவது பிரம்மா. கண்கூடாகக் காணக் கூடிய பிரம்மா.” என்கிறார். கவிஞர் விக்ரமாதித்யனும் அப்படியான ஒரு பிரம்மா தான். எந்தவித சிரத்தையுமின்றி கவிதை திறக்குங்கணந்தோறும் எழுதிக் கொண்டே இருக்கும் கவிஞன் அவன்.

தான் கவிதை எழுதுவதைப் பற்றி விக்ரமாதித்யன் கூறும்போது “என்னைப் பொறுத்தவரை கவிதை எழுதுவது எளிமையானது அல்ல. அது ஒரு வகையான வாதை. என் கவிதைகள் அனைத்தும் தானாக வருவது. ஏறக்குறைய அருள்வாக்கு வருவது போலத்தான் எனக்கு கவிதை வருவதும். ஆனால் நான் எழுதுவது பூசாரிகளின் அருள்வாக்கு அல்ல” என்கிறார். ஒரு வகையில் எல்லா கலைஞர்களும் தங்கள் படைப்பின் உச்ச தருணத்தில் சிருஷ்டி கர்த்தாவாக உணர்ந்து கொள்வதுண்டு.

கோவை கவிதை முகாமில் (2021) அவருடன் நீண்ட வருடங்கள் பயணித்த லஷ்மி மணிவண்ணன் அவருடைய கவிதையை, அவரை அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த அரங்கு கவிதையை வாசித்துக் காணித்து விவாதம் நடைபெற்ற பிற அரங்கு போலல்ல. நேரடியாகவும் கவிதை வாயிலாகவும் ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனைக் கண்டடைந்ததை தொகுத்துக் கொள்ள கவிதையையே ஊடகமாகப் பயன்படுத்தியது போல சிக்கலானது.  கவிஞர் யுவன் சொல்லும்போது விக்ரமாதித்யன் கவிதைகளை அவருடைய காலகட்ட கவிஞர்களோடு கவிதைகளோடும் தொடர்பு படுத்தி வாசிக்க வேண்டும் என்று ஒரு சித்திரத்தை அளித்தார். ஒரு வாசகனாக அந்த விளக்கம் அவரைப் புரிய அவசியமானது. ஏனெனில் இன்று தேய் கவிதைகளாக மாறிப் போன பல கவிதைகளின், கவிதை வடிவத்தின் ஊற்றுக் கண்ணாக விக்கியின் கவிதைகள் அமையப்பெறுகின்றன. அவருடைய காலகட்டத்தில் அவர் எழுதிய கவிதையின் வடிவம், பேசு பொருள் என யாவுமே கட்டுடைப்புகளாக இருந்திருக்கின்றன.

லஷ்மி மணிவண்ணனின் விக்ரமாதித்யன் அமர்வு முடியும் போது அந்த அமர்வினின்று என்னில் எஞ்சியது இரண்டு உவமைகள் தான்.

“… திருப்புன்கூரில் மட்டுமல்ல தேசமெங்கும் நந்தனார் நந்தி சிவன்”

திருப்புன்கூரில் தீண்டாமைக் கொடுமையால் சிவனை தரிசிக்க முடியாது தவிக்கும் நந்தனாருக்காக விலகி அமரும் நந்தி எனும் மரபுப் படிமத்தை “திருப்புன்கூர் நந்தி” எனும் கவிதையில் விக்ரமாதித்யன் கையாண்டிருப்பார். அமர்ந்திருக்கும் அந்த நந்தி அமருவதற்கு ஒரு கணத்திற்கு முன்னதான நிலையா? இல்லை எழுவதற்கு ஒரு கணம் முன்னதான நந்தியா என்பதே குழப்பமானது. விக்ரமாதித்யனும் அப்படித்தான் என்றார்.

தென் மாவட்டங்களில் சில இடங்களில் ஒரு சடங்கு உண்டு. இறப்புச் சடங்குகளில் ஒரு சேவலை சுடுகாட்டிற்கு நேத்திக் கடன் செலுத்துவார்கள். இறந்தவர்கள் அந்தச் சேவலில் வாழ்வதாக நம்புவார்கள். இப்படி காலங்காலமாக அந்தச் சுடுகாட்டில் சேவல்கள் விடப்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப் புறமாகிய அந்த சுடுகாட்டில் திடீரென ஒட்டுமொத்தமாக அவை நடந்து வரும் காட்சியைப் பார்ப்பவன் முதலில் அடைவது திகைப்பைத்தான் என்றார். விக்ரமாதித்யன் அப்படி ஒரு திகைப்பைத் தரக்கூடியவர் என்றார்.

இரண்டொரு கவிதைகள் மற்றும் இந்த இரு படிமம் என விக்ரமாதித்யன் அரங்கு பெரிய திறப்பானதாக இல்லை என்று நினைத்திருந்தேன்.

நானே திறந்து கொள்ள எத்தனித்து அவருடைய கவிதைகள் மற்றும் எழுத்துகளுக்குள் புக முற்பட்டேன். அவருடைய வாழ்வும் கவிதையும் வாசிக்க வாசிக்கவே அவருடைய உலகத்துக்குள் அழைத்துச் சென்றது. கிட்டத்தட்ட கவிதை சொல்லி எனுமளவு பேசிக் கொண்டே இருந்தார். என் பாட்டனிடம் அவனுடைய காலத்தின் வாழ்வை அகத்தை புறத்தை, என் காலத்தை அவன் பார்க்கும் விதத்தை என அவன் சொல்லிக் கொண்டேருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது அவரது கவிதை. சில கவிதைகள் எடை மிகுந்து கனக்கிறது. “உம்” கொட்ட வைக்கிறது. ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று அவருக்கு ஆறுதல் சொல்லத் தோணுகிறது. சில கையறுநிலையைத் தருகிறது. அப்படியானால் எடைமிகுந்த கவிதைகளைச் சொல்லும் ஆத்மாநாம் சுகுமார் கவிதைகளுடன் வைக்கலாமா என்றால் இல்லை.

எளிமையும் வடிவமின்மையும் ஒழுங்கின்மையும் என கட்டற்ற கவிதைகள் அவரிலிருந்து வருகின்றன. எடையற்ற இலக்கற்ற தத்துவச் சிக்கலற்ற கவிதைகளின் நிமித்தம் அவரை பின் நவீனத்துவக் கவிஞர்களின் வரிசைக்குள் அடைக்கலாமா எனில் இல்லை.

தன் வாழ்நாளில் அவர் விரும்பக்கூடிய யாவும் அப்படியே அவருடைய கவிதைகளில் வாழ்கின்றது.  அனைத்து உணர்வுகளையும் கொட்டித் தீர்க்கும் ஊடகமாக கவிதையைப் பயன்படுத்தியிருக்கிறார். மகிழ்ச்சியில், துக்கத்தில், கையறுநிலையில், கோபத்தில், அவமானத்தில், தன்னைத் தேற்றிக் கொள்ளும்போது, புலம்பும்போது, அன்புணர்வில், காதலில், காமத்தில், ரசனையில், ஏதுமற்ற சிந்தனையிலும் கூட அவர் கவிதை வழியாகவே தன்னை வெளிப்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. தனக்குத் தெரிந்த ஊடகம் அது மட்டும் தான் என்பது போல. வாழ்ந்த காலம் முழுமைக்கும் அவர் அப்படியே காட்டாற்று வெள்ளம் போல பொங்கிக் கொண்டே இருப்பது சில சமயம் திகைப்பூட்டுகிறது. அவர் இது தான்.. அவர் கவிதை இன்னது தான் என்ற வரையறைக்குள் வைக்கமுடியாத அளவு தன்னை மாற்றிக் கொண்டே செல்கிறார். எந்தக் குற்றவுணர்வும் இல்லாது தன் போக்கில் வாழும் கவிஞன் என்றும் கண்டேன்.

அவருடைய தன் வரலாற்றின் வழி அவர் கொடுக்கும் சித்திரமும் அவ்வாறு தான் இருக்கிறது. புனைவுகளற்ற ஒரு சுயசரிதை. இப்படி ஒரு அப்பட்டமான சுயசரிதையை கவிஞர் கண்ணதாசனின் வனவாசம் மனவாசத்தோடு ஒப்பிடலாம். புனைவுகளற்ற அந்தக் கவிஞன் தன் கற்பனை யாவையும் கொணர்ந்து தீர்க்கும் இடமாக கவிதையைப் பயன்படுத்திக் கொள்கிறான் என்றே தோன்றுகிறது.

தன் கவிதைகளை எழுதும்போதும் அச்சிடும்போதும் மிகத் தெளிவாக அதன் வாசகர்களை நோக்கி மட்டுமே பேசுகிறான். அவன் எல்லா மட்டத்திலிருக்கும் வாசகர்களுக்கும் எழுதுகிறான்.

காதலைப்பற்றி எழுதுவதில் மட்டும் குறிப்பாக இருக்கிறான். “யாயும் ஞாயும் யாரா கியரோ” -வை விட மிக அழகாக உயர்வாகச் சொல்ல முடியுமானால் மட்டுமே காதலை எழுத வேண்டுமென்கிறான். நிலவும் காதலும் பிரிக்கமுடியாதது என்று எப்போதும் தோன்றுமெனக்கு. அப்படியான அவரின் ஒரு கவிதை மிகப் பிடித்திருந்தது.

 

“பெண்ணே

பெண்ணே

எங்கே

இருக்கிறாய்

எப்போது

புறப்பட்டு

வருவாய்

வரும்போது

பௌர்ணமியாக இருக்கட்டும்.”

 

காதல் பரிபூரணத்தில் தானே அழகாயிருக்கிறது. நிலவின் சௌந்தர்யமான அந்த பூரணத்தில் உணர்வுகளும் உச்சமாயிருக்கும் தானே. நானே என்னை பூரணமாய் வெளிக்கட்ட முடிந்த அந்த நாளில் நீ வா. பூரணியாய் என்னை நிறைகக்க வா என்றழைப்பது போன்ற தொனி அது. முழு மதி எப்போதும் என் மனதை நிறைக்கக் கூடியது. அன்று தன் பெண்ணை அழைக்கும் அந்தக் காதலனை மிகப் பிடித்துவிட்டது. இனிவரும் முழு நிலவில் அவனையும் நினைந்து கொள்வேன்.

காமத்தைக் குழைத்த ஒரு கவிதையும் மிகப் பிடித்திருந்தது.

 

“தழுவக் குழைந்த தலைவி

குழையத்

தழுவிய தலைவன்

தழுவக்

குழைந்த தலைவி

குழைகிறாற்போல்

தழுவல்

குழைகிறாள்

தலைவி

தழுவுகிறாள்

தலைவன்

நிலம் தோன்றிய

காலம்

இடையறாத

இணக்கம்

தலை வணங்குகிறான்

பாதம்

பணிகிறான்

தழுவுதலும் குழைதலுமின்றி

தழைக்குமோ வாழ்வு

குழைதலும் தழுவுதலுமில்லையெனில்

குறைவுபட்டதே அகம்

மாதேவியே

அனந்தகோடி நமஸ்காரம்”

 

குழைதலும் தழுவுதலுமென நிறைந்து பூத்த அகம் நிறைக்கும் கவிதையாக இக்கவிதை நிறைக்கிறது.

நிலையாமையைச் சொல்லும்போது

 

“ஒரு நாளுக்காக

ஒவ்வொரு உயிரும்

 

வெறுநாள்களை

வாங்கிவைத்தபடி”

 

“…

ஓர்மையோடதான்

உரைத்திருக்கிறான் கவிஞன்

காலத்தின் முன் ஒரு செடி” என்கிறான்.

 

நிறைவின் ஆனந்தத்தைச் சொல்லும்போது

 

“எடுத்தால்

தீர்ந்துவிடும்

கொடுத்தால்

நிறைந்துவிடும்

எடுத்தும்

கொடுத்தும்” என்கிறான்

கவிதையைப் பற்றிக் கூறும்போது

“கவிதையைக் காண்பதே

அபூர்வமாயிருக்கிறது விக்கி

அதன் இருப்பே

அப்படித்தான் பூர்ணா” என்கிறான்.

 

புரவலரைத் துதிக்கிறான். ஆனபோதும்

 

“மண்டியிட்டதெல்லாம் போதுமென்றிருக்கிறது.

மண்டியிட்டுக் கொண்டே கழிகிறது

காலம்”

 

என்று அலுத்தும் கொள்கிறான்.

 

“தன்னைப்போல

இருக்க ஆசை

உத்தரவு வாங்கிக்கொள்கிறேன்

காளி”

 

என்று அவர்களைக் கடக்கவும் தப்பித்துக் கொள்ளவும் முற்படுகிறான்.

 

‘பர

தேவதையே

பார்த்துக்

கொள்ளலாம்

எவ்வளவு காலம்

துயிலாக விழிப்பாக

ஊமத்தம் சாறு

உன்மத்த கவி’

 

என்ற கவிதையை வாசிக்கும்போதே இனியையாக இருந்தது. கையறுநிலையாகவும் எடுத்துக் கொள்ளலாம். நிலையாகத் தெரிந்த இறுதி உண்மையாகவும் எடுத்துக் கொள்ளலாம் என்பது போல இருந்தது.

திசையின் முடிவைக் கண்டு கொண்டவன் போல, அதன் எண்ணங்களை அறிந்தவனாய்

 

“திசைமுடிவுக்குத் தெரிவதெல்லாம்

ஆகாசம்

நீலநிறம்”

 

என்கிறான். திறக்கத் திறக்க என் வாழ்வில் திறந்துகொண்டே செல்லும் கவி வரியாக மாறிப் போகும் வரிகள் இவை.

சாரலும் பருவமும் பொய்த்துப் போகும் போது ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கவலை இருக்கும். ஆனால் இந்தக் கவினுக்கு

 

“குறும்பலாவீசர் அபீஷகத்துக்கு

தண்ணீர் எங்கிருந்து வரும்

குழல்வாய்மொழியம்மே.”

 

-என்றுதான் கவலைப்படத் தோன்றுகிறது. என் கிறுக்குக் கவியே என்று கொஞ்சுவதல்லாமல் வேறென்ன செய்ய இவனை என்று அலுத்துக் கொண்டேன். .

கவிஞனின் வயிற்றுப்பாட்டை எடுத்துரைக்கிறான். அதே சமயம்

 

“சும்மா இருந்தால் ஓய்ந்து போய்விட்டதாக அர்த்தமில்லை.

சாயும் வரை

ஆதித்யன் தான்”

 

என்று சொல்லும் பாரதியைப்போலவும் செறுக்காக இருக்கிறான்.

‘திருப்புன்கூர் நந்தி’ மற்றும் மாறி ‘அமர்ந்திருக்கும் நந்தி’ ஆகிய இரு கவிதைகளிலும் மரபார்ந்த சப்தம் இருக்கும் கவிஞன் எனக் கண்டடைந்தேன்.

 

“…

சிவனுக்கென்ன சொல்லிவிட்டான் சிரமம் நந்திக்கல்லவோ

இருந்த இடத்திலேயே இருந்து பழகிப் போனது

எழுந்து நகர்ந்து அமர்வது”

 

அதே சமயம்

“..திருப்புன்கூரில் மட்டுமலல் தேசமெங்கும் நந்தனார் நந்தி சிவன்” எனும்போது ஒட்டுமொத்த தீண்டாமை சித்திரத்தையும் அதற்கான தீர்வையும் நல்கிவிடுவது போலத் தோன்றுகிறது. என்றென்றைக்கும் ஒரு தீண்டாமைக்கான தொன்மமாக மாறிவிடக்கூடிய கவிதையிது.

கவிதையைப் பற்றிச் சொல்லும் போது

“தன்னியல்பாய்

தோன்றி வருகிறது கவிதை” என்கிறார். அப்படி தன்னியல்பாய் தோன்றிவரும் அனைத்தையும் கவிதையாகவே எழுதியிருக்கிறார். பல சமயம் புலம்பல்களும் பிதற்றல்களும் உலரல்களுமே வெளிப்படும் திறவுகோல் அவருக்குக் கவிதையாக இருக்கிறது.

தன் மனம் முழுமைக்கும் நிறைந்திருக்கும் மண்ணை, தன்னை பாதித்த திரிகூட ராசப்ப கவிராயரை, பாரதியை, கண்ணதாசனை கவிதைகளில் பாடுகிறார். இங்ஙனம் தன் வாழ்நாள் தோறும் கவிதையாலேயே உரையாடிக் கொண்டிருக்கிறார்.

கவிதைகளையெல்லாம் வாசித்த பின் அவரை ஒன்றுக்குள் அடைக்க முற்பட்டு தோற்றுப்போனேன். அங்குதான் கவிஞர் லஷ்மி மணிவண்ணனின் படிமம் வந்து முன் நின்றது. ஆம்! அவர் நந்தனாரின் நந்தியே தான். எந்த ஒன்றுக்குள்ளும் அடைக்க முற்பட்டாலும் அதுவல்ல நான் என்று சற்றே விலகி நிற்கக் கூடிய நந்தி! எழுதலா அமர்தலா என்ற ஐயத்தைக் கொடுக்கும் நந்தி. வெளிச் செல்லலா வீடு திரும்புதலா என்று கணிக்கவியலாத நந்தி! கவிதையின் பல்வேறு சாத்தியங்களைத் திறக்க தடையாக இருந்தவற்றை சற்றே விலக்கி அமர்ந்த நந்தி! அதே சமயம் போலச் செய்யவே முடியாத, முடிந்தாலும் தோற்றுப் போகக் கூடிய கவிதையையும் வாழ்வையும் கொண்ட மிகச் சில கவிஞர்களில் ஒருவன்.

நவீனத்துவ/பின் நவீனத்துவ கவிதை வரலாற்றில் ஒப்பு நோக்கவியலாத தனியனாகவும் அதே சமயம் திகைப்பை ஏற்படுத்தக் கூடிய சுடுகாட்டுச் சேவலும் தான் இந்த விக்ரமாதித்யன்

இரம்யா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2021 10:34

கண்மணி குணசேகரன், கடிதங்கள்.

கண்மணி குணசேகரனும் சாதியும்

அன்புள்ள ஜெ

கண்மணி குணசேகரன் பற்றி உங்கள் கட்டுரையை கண்டேன். அவர் ஜெய் பீம் பற்றி சொன்ன கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அல்லது அவருடைய அந்த நிலைபாட்டை ஏற்கிறீர்களா? அதை ஒட்டி அவர் தாக்கப்படும்போது எழுத்தாளர்கள் கண்மணி குணசேகரனை ஆதரிக்கவேண்டும் என நினைக்கிறீர்களா? உங்கள் எழுத்தில் இக்குழப்பம் இருக்கிறது எனக்கு.

மகாதேவன்

 

அன்புள்ள மகாதேவன்,

எளிமையாக வாசிப்பவர்களுக்கு எக்குழப்பமும் வராது. இன்றைய சமூகவலைத்தளச் சூழலில் விதண்டாவாதமே தொழிலாக அலையும் வம்பர்களின் உலகு பேருருக்கொண்டுள்ளது. உங்கள் குழப்பம் அங்கே உலவுவதன் விளைவு

அக்கட்டுரை ஜெய்பீம் பற்றிய கண்மணி குணசேகரனின் கருத்தை பற்றியது அல்ல. அவருடைய அரசியல் பற்றியதும் அல்ல. அவர் ஜெய்பீம் பற்றிச் சொன்னது அவர் சார்ந்திருக்கும் சாதிக்கட்சி- சாதிச்சங்கத்தின் தரப்பு.அதற்கு எதிர்ப்பு வந்தால் அவரும் அவருடைய சாதிக்கட்சியும் சாதிச்சங்கமும்தான் அவரை ஆதரிக்கவேண்டும். அதில் எழுத்தாளர்கள் ஆதரவு தேவையில்லை,கூடாது.

அதேபோல ஓர் எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் சாதிச்சார்பு நிலையை ஏற்கவில்லை என்றால், கண்டிக்கிறார் என்றால் அதைச் சொல்லுவது அவருடைய உரிமை. நான் கண்மணி குணசேகரனின் அந்த எதிர்வினையை விவாதிக்குமளவுக்கு இலக்கிய- கருத்தியல் முக்கியத்துவம் கொண்டதாக நினைக்கவில்லை. அது ஓர் அரசியல், அவ்வளவுதான்.

ஆனால் கண்மணி குணசேகரனின் சாதிய ஆதரவு மனநிலையை ஒட்டி அவருடைய ஒட்டுமொத்த படைப்பியக்கத்தையே அவமதித்து எழுதப்படுவனவற்றை இலக்கியவாதியாக, இலக்கியவிமர்சகனாக என்னால் ஏற்கமுடியாது. நான் எப்போதுமே இலக்கியத்தின் குரலாக ஒலிப்பவன். இலக்கியவாதிகளை முன்வைப்பவன். அதில் மாற்று எண்ணமே இல்லை.

கண்மணியின் சாதிசார்பு உளநிலை அவர் வாழும் சமூகத்தின் பொதுப்பெருக்கில் அவரை இணைத்து அதன் குரலாக அவர் ஒலிக்கும்படிச் செய்கிறது. அது அவருடைய கலையின் ஊற்றுமுகம். அவருடைய அடையாளம், அவருடைய தனித்தன்மை. அந்த சாதிசார்பு மௌனிக்கும் கி.ராஜநாராயணனுக்கும் உண்டு. தி.ஜானகிராமன் உள்ளிட்டவர்களின் எழுத்தில் சாதிச்சார்பு இருக்காது, சாதிசார்ந்த பண்பாடு இருக்கும். அதுவே அவர்களின் தனித்தன்மையை உருவாக்கியது. அதை முன்னரே தமிழ் இலக்கியவிமர்சனத்தில் பேசியிருக்கிறார்கள். நானும் விரிவாக எழுதியிருக்கிறேன். இனக்குழு அழகியல் என அதைச் சொல்வேன்.

ஆகவே பொதுவெளியில் அரசியல்கூச்சலாளர் உருவாக்கும் நிபந்தனைகளைக் கொண்டு இலக்கியத்தை அளவிடவேண்டாம் என அக்கட்டுரை கோருகிறது. இலக்கியமே அறியா அரசியல்வாதிகளின் வம்பளப்புகளைக்கொண்டு இலக்கியவாசகன் இலக்கியவாதியை மதிப்பிடக்கூடாதெனச் சொல்கிறது. இலக்கியம் செயல்படும் ஆழுள்ளத்தை அப்படி எளிமையான அரசியலைக் கொண்டு வகுத்துவிட முடியாது என்கிறது. இலக்கியம் பொதுப்போக்கு அரசியல் கருத்துக்களால் உருவாவது அல்ல, வாழ்க்கை நுட்பங்களால் உருவாவது. ஆழுள்ளத்தில் இருந்து மட்டுமே அவை வர முடியும். ஆழுள்ளம் சிந்தனையின் கட்டுப்பாடு உள்ளது அல்ல. 

ஆனால் இலக்கியவாதி சாதிச்சங்கம், கட்சி உட்பட எந்த அமைப்பிலும் உறுப்பினராக இருந்தால் அவன் அதன் கொள்கைகளைச் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். அது அவனுடைய ஆழுள்ளம் கலையென வெளிப்படுவதை தடுக்கும். அதையும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது.

மிகத்தெளிவாக, இலக்கியவாதியான கண்மணி குணசேகரனை அவருடைய அரசியல் சார்புகளைக்கொண்டு அறுதியாக மதிப்பிடுவதை எதிர்த்து அவரை படைப்பாளியாக முன்வைக்கிறது. அதேசமயம் அவருடைய அரசியலில் இலக்கியவாதி ஈடுபட தேவையில்லை என்கிறது. எப்போதும் என் நிலைபாடு இதுவே. இதை ஏற்கனவே மனுஷ்யபுத்திரன் பற்றிய கட்டுரையிலும் சொல்லியிருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் மீதான தாக்குதல்கள். எனக்கு மனுஷ்யபுத்திரன் என்னும் கவிஞர் ஆதர்சமான படைப்பாளி. ஒருநிலையிலும் அவரை விட்டுக்கொடுக்க மாட்டேன். அவர் திமுகக்காரர் என்றால் அது அவருடைய பிரச்சினை. அவர் திமுகவுக்காக பேசியவற்றின் அடிப்படையில் அவரை கவிஞரல்ல என ஒருவர் சொல்வார் என்றாலும் இதுவே பதில்.

இதில் என்ன குழப்பம்? என்ன சிக்கல்? மிகமிக எளிய ஒன்றாம்நிலை விஷயங்களைக்கூட பேச, புரிந்துகொள்ள முடியாத நிலையை இந்த டப்பாக்களின் ஓசை இங்கே உருவாக்கியிருக்கிறதா என்ன? இந்நிலையில் எதையாவது புரிந்துகொள்ள உங்களால் முடியுமா?

ஜெ

அன்புள்ள ஜெ,

கண்மணி குணசேகரன் பற்றிய உங்கள் கட்டுரை ஒரு தெளிவை அளித்தது. எழுத்தாளனாக அவருடைய வெற்றிகள் எனக்கு தெரியும். ஆனால் அவர் சாதிய நிலைபாடு எடுத்தபோது நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். ஆனால் அவருடைய கலையின் ஊற்றே அதுதான் என்னும்போது அவர் இயல்பாக அதை வெளிப்படுத்துவதில் என்ன பிழை என்றே தோன்றுகிறது. நீங்கள் சொல்வதுபோல அவர் அதை அரசியலாக முன்னெடுத்தால் இழப்பு அவருக்கே. ஆனால் இங்கே பெரும்பாலும் படைப்பாளிகள் சாதி சார்ந்த அரசியல் நிலைபாடு கொண்டவர்கள். அதை பூடகமாக வெளிப்படுத்துபவர்கள்.

இத்தனை நாள் கண்மணி குணசேகரனை படிக்காதவர்கள் ,ஒரு வார்த்தை  எழுதாதவர்கள் ஏதோ இலக்கியக்காவலர்கள் அறச்செல்வர்கள் புரட்சியாளர்கள் என்றெல்லாம் பாவலா காட்டி வசைபாடுவதைக் காணும்போது வெறுப்பாக இருக்கிறது. எந்த எழுத்தாளரை திட்டினாலும் திரண்டு வரும்  அரசியல் சல்லிகளின் கூட்டம் இது என உறுதியாகிறது.

நடராஜ் முகுந்தன்

 

அன்புள்ள நடராஜ்,

முக்கியமான நாவல்களை, அகராதியை உருவாக்கிய ஒரு படைப்பாளி கண்மணி குணசேகரன். ஒரு காலகட்டத்தின், ஒரு நிலப்பகுதியின், ஓர் இனக்குழுவின் கலைஞன். அவர் பற்றி இணையத்தில் ஒரு நூறுபக்கம் பாராட்டி எழுதப்பட்ட பின், அவருடைய சாதனைகள் கணக்கில் கொள்ளப்பட்டபின், ஆயிரம் பக்க வசை வந்தால்கூட அதில் ஒரு நியாயம் இருக்கிறது. இங்கே வருவன வசை மட்டுமே. வசைபாட மட்டுமே எழுத்தாளனின் பெயரை கணக்கில்கொள்கிறார்கள். இவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. பொதுமக்கள் என எவருமில்லை. பெரும்பாலும் அரசியல்சல்லிகள். ஒப்பேறாத சல்லி எழுத்தாளர்கள், எங்கும் புகுந்து நடனமாடும் இலக்கிய வம்பர்கள். அவர்களின் கூட்டுமனநோய்தான் வசையாக விழுகிறது.

ஆனால் இப்படியாவது இலக்கிய ஆர்வமுள்ள நூறு இளைஞர்களுக்கு கண்மணி குணசேகரன் பெயர் சென்று சேர்ந்தால் நல்லது. இன்றைய சூழலில் இப்படித்தான் எழுத்தாளன் பெயர் பெறவேண்டியிருக்கிறது போலும்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 28, 2021 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.