Jeyamohan's Blog, page 817

March 4, 2022

கருணையும் உரிமையும்

https://victorianweb.org/art/illustration/leighton/4.html அறிவியக்கவாதியின் உடல்

அன்புள்ள ஆசிரியருக்கு,

உங்கள் குரலையே பிரதிசெய்கிறேன். நலம்தானே?கடந்த 2021ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து உங்கள் தளத்தை தினமும்படித்துவருகிறேன். எனது அன்றாடக் கடமைகளில் அது தவிர்க்கஇயலாததாகிவிட்டது.கிண்டிலில் கூட உங்களுடைய பெரிய பெரிய நாவல்களை மட்டும்தான் படிக்கிறேன்.இப்போது பின்தொடரும் நிழலின் குரல் முடியும் தருவாயில் இருக்கிறது. தினமும் வெண்முரசில் ஒரு அத்தியாயத்தையும் படிக்கத் தவறுவதில்லை. மதம் தொடர்பான உங்கள் கட்டுரைகள் என் நாத்திகப்பார்வையை அடியோடு பிடுங்கிப்போட்டது.

உங்களின் தன் மீட்சிக் கட்டுரைகள் எனது அன்றாடத்தை சமநிலையோடு பேண உதவியிருக்கிறது.மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அன்றாட செய்திகளைத் தொகுக்கும் நோக்கத்தோடு கடந்த நான்கு ஆண்டுகளாக savaalmurasu.com என்ற தளத்தை வடிவமைத்து அதில் எழுதிவருகிறேன்.அவ்வப்போதைய தொய்வுகளிலிருந்து அந்த தளத்தை நான் மீட்டுக்கொண்டது உங்களின் தளத்தைப் படித்துத்தான். அதனால்தான் அதையும் உங்கள் தளம் போலவே வடிவமைக்க முயன்றுள்ளேன்.

என் 38 வயதுவரை என்னுள் கிளர்ந்தெழுந்த பெரும்பாலான வினாக்களுக்கு
நீங்கள் ஒரு தந்தையாய், ஆசிரியராய், வழிகாட்டியாய் விடையளித்துக்கொண்டே இருக்கிறீர்கள். இப்போது எனக்குள் நிறைய மாற்றங்கள்வந்தபடியே இருக்கின்றன. எனக்கு ஏதேனும் அகச் சிக்கல்கள் நேரும்போதெல்லாம் உங்கள் தளத்தில் உலவி விடை காண்கிறேன். ஐயா! எனக்கு ஒரு ஐயம். பொதுவாக பார்வையற்ற நாங்கள் பிறரின் பரிதாப உணர்ச்சி, இறக்க மொழிகளை வெறுக்கிறோம். ஆனால், அன்றாடத்தில் சாலை கடப்பது தொடங்கி, பல உதவிகளையும் பிறரிடம் பெற்றபடியே இருக்கிறோம். சமநோக்கு, சம பார்வை, no sympathy have empathy என்று பேசினாலும் அந்த empathy க்கு தொடக்கப்புள்ளி sympathy தானே. அதை ஏன் வெறுக்க வேண்டும்?

அப்படிநினைத்தாலும்,இரக்க மற்றும் பரிதாப மொழிகளை எதிர்கொள்கையில் கூசித்தான் போகிறோம். எப்படி எதிர்கொள்வது? இதை எப்படி வரையறைசெய்துகொள்வது?

நேரம் இருந்தால் விளக்குங்கள்.

ப. சரவணமணிகண்டன்
பட்டதாரி ஆசிரியர்
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
பூவிருந்தவல்லி.

 

அன்புள்ள சரவணன்,

நலம் என நினைக்கிறேன்.

உங்கள் தளம் பார்த்தேன். மிகச்சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து போல நம்மை தொகுத்துக்கொள்ளவும் நம்மை விடுதலை செய்யவும் உதவும் பிறிதொன்றில்லை.

நீங்கள் கேட்ட கேள்வி உண்மையில் மிக எளிமையான நம் சமூக மனநிலை ஒன்றின் சான்று அன்றி வேறல்ல. இங்கே எளிய மனிதர்கள் இன்னொருவருடன் ஒப்பிட்டு தன்னை மேம்பட்டவனாக எண்ணிக்கொண்டு மகிழ்ச்சியடைய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்கென எந்த அடையாளமும் இல்லாதவர்கள். தங்களைத் தாங்களே எண்ணி பெருமிதம் கொள்ளும் எதையும் செய்யாதவர்கள். இப்படித்தான் அவர்கள் மகிழ முடியும்.

ஆனால் இது உங்களுக்கு அல்ல. அனைவருக்குமே நிகழ்வதுதான். வேலை என்ன என்பார்கள். நீங்கள் வேலையைச் சொன்னதும் தன் வேலையுடன் ஒப்பிட்டு உங்கள் வேலை ஒரு படி குறைவானது என்றால் மகிழ்வார்கள். குழந்தைகள் உண்டா என்பார்கள். குழந்தை இல்லை என்றால் ஆழ்ந்த அனுதாபத்துடன் ஆலோசனைகள் சொல்வதுபோல மகிழ்ச்சியில் திளைப்பார்கள். குழந்தைகளின் மதிப்பெண், வேலை எல்லாமே அவர்கள் இதன்பொருட்டு கேட்டறிவதுதான்.

அவர்கள் நம் வாழ்க்கையில் எங்கே ஊடே புகுகிறார்கள்? அவர்கள் எளியவர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வென்றவர். நீங்களே நிறைவுறும் செயல்களைச் செய்பவர். அறிவியக்கவாதி. உங்கள் பார்வையில் அவர்கள் அனுதாபத்துடன் பரிவுடன் பார்க்கப்படவேண்டியவர்கள். பாமரர்களை பொருட்படுத்தக்கூடாது. ஆனால் அவர்கள்மேல் விலக்கமும் எரிச்சலும் வரவும்கூடாது. அவர்கள் அறிவியக்கத்தில் தலையிட்டால் அவர்களை அடையாளம் கண்டு அகற்றுவது வேறு. ஆனால் அன்றாடத்தில் அவர்கள் நம் முன் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களை நாம் மென்மையான, நட்பான புன்னகையுடன் கடந்துசெல்லவேண்டியதுதான். நான் எழுதுவதும் சிந்திப்பதும் உனக்கும், உன் சந்ததிகளுக்கும்தான் என சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.

அறிவியக்கவாதிக்கு எவருடைய அனுதாபமும் தேவையில்லை. ஏற்கனவே அவன் பிறருக்கு இல்லாத பல கொடைகளை பெற்றுக்கொண்டு பலபடிகள் மேலே இருப்பவன். அவன் அளிக்கவேண்டியவனே ஒழிய பெற்றுக்கொள்ளவேண்டியவன் அல்ல.

அப்படியென்றால் உங்களுக்குக் கிடைக்கும் உதவிகள்? அவை மனிதன் மனிதனுக்கு இயல்பாகச் செய்யவேண்டியவை. அப்படி ஏதேனும் ஒரு உதவியைப் பெறாமல் எவருடைய ஒருநாள்கூட கடந்துசெல்வதில்லை. ஒரு தகவல் கேட்கிறோம், ஒருவரிடம் அறிமுகம் கேட்கிறோம். ஒரு நாளில் எத்தனை உதவிகள். பார்வையில்லாமையால் நீங்கள் சில மேலதிக உதவிகளைக் கேட்கலாம். அவை இயல்பாக உங்களுக்குச் செய்யப்படவேண்டும். அவற்றை கோர மனிதனாக, அறிவியக்கவாதியாக உங்களுக்கு உரிமை உண்டு. அவற்றை நானும் ஒவ்வொருநாளும் எவரிடமிருந்தேனும் பெற்றுக்கொண்டேதான் இருக்கிறேன். நடந்துசெல்கையில் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்கிறீர்களா என்பவர் என்னிடம் இரக்கமோ பரிவோ காட்டவில்லை. இயல்பாக ஓர் உதவியைச் செய்கிறார் அவ்வளவுதான்.

அவற்றை அளிப்பவர் கருணையால் அவற்றைச் செய்கிறார் என அவரே எண்ணிக்கொண்டால் அது அவருடைய பிரச்சினை. நீங்கள் அதன்பொருட்டு நன்றி காட்டவேண்டியதில்லை. இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2022 10:35

பின்தொடரும் நிழலின் குரல்- மறுபதிப்பு

விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும்  பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் பின்னட்டைக் குறிப்பு

1991 தமிழகச் சிந்தனையில் சில நெருக்கடிகள் உருவான ஆண்டு. அவ்வாண்டு சோவியத் ரஷ்யாவின் கம்யூனிச அரசு வீழ்ச்சியடைந்தது ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். தொடர்ச்சியாக இலங்கை உள்நாட்டுப்போரில் சகோதரக்கொலைகள் குறித்த செய்திகள் வெளிவந்தன.வன்முறை சார்ந்த புரட்சியின்மேல் நம்பிக்கை கொண்டிருந்த சிந்தனையாளர்கள் பலர் ஆழ்ந்த உளச்சோர்வை அடைந்தனர். அது தொடர்ந்து தமிழக அரசியல் கொள்கைகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அரசியல் சார்ந்து செயல்பட்ட பலர் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களாக மாறினர். பண்பாட்டரசியல் பற்றிய கேள்விகள் உருவாயின.

1991ல் கருக்கொண்டு 1997ல் எழுதி முடிக்கப்பட்ட பின்தொடரும் நிழலின் குரல் அந்த சிந்தனைக் கொந்தளிப்புகளை புனைவில் விரித்தெடுக்கிறது. கருத்தியலின் வன்முறையைப் பேசும் நாவல் இது. ஒரு கருத்தியலை நம்பி அதை தன் இலட்சியவாதமாகக் கொள்பவன் எப்படி அதனால் முழுமையாக அடிமைப்படுத்தப்படுகிறான் என்றும், எந்த அறத்தையும் மீறி எதையும் செய்பவனாக அவன் எப்படி ஆகிறான் என்பதையும் ஆராய்கிறது. கருத்தியலுக்கு அப்பாலுள்ள அழிவற்ற இலட்சியக் கனவுகள் என்ன என்று பார்க்கிறது.

தமிழின் அரசியல்நாவல்களில் முதன்மையானது என விமர்சகர் ராஜமார்த்தாண்டன் குறிப்பிட்ட இப்படைப்பு பல்வேறு உச்சகட்ட புனைவுத்தருணங்கள் வழியாக ஓரு தீவிர வாசிப்பனுபவத்தை அளிப்பது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2022 10:34

தேவியும் சில கதைகளும் -கடிதங்கள்

புனைவுக் களியாட்டு, புதிய நூல்கள் புனைவுக் களியாட்டு நூல்கள் புத்தகக் கண்காட்சியில்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

புனைவுக்களியாட்டு சிறுகதைகளில் அச்சுவடிவில் வந்தவற்றை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். தேவி தொகுதி இன்னும் வரவில்லை என நினைக்கிறேன். மின்னூலாக என்னிடம் அது உள்ளது. அதை நண்பருக்கு அனுப்பவேண்டும். அதற்கு அச்சுப்பிரதி தேவை.சீக்கிரம் வருமென நினைக்கிறேன்

தேவி ஓர் அருமையான தொகுதி. அந்த மையக்கதை உட்பட எல்லாமே அழகு. அது பெண்மையின் ஜாலத்தை. சூழ்ச்சியை, கருணையை எல்லாம் சொல்லும் கதைகள் அடங்கியது. தேவி என்ற தலைப்பு அவ்வகையில் மிகப்பொருத்தமானது

முதுநாவல் தொகுதியிலுள்ள நற்றுணை கதையையும் அதில் சேர்த்திருக்கலாமோ என நினைப்பேன்

எம்.ஆர்.கணேஷ்

 

வணக்கம். தேவி சிறுகதை வாசித்தேன். ஒரு பெண் கதாபாத்திரம் போதும் என துவங்கும் கதை, ஒரே பெண் மூன்று கேரக்டர் செய்கிறாள்  என விரிந்து, உண்மை அவள் மட்டும் என்பதால் மீண்டும் ஒரு பெண் ஆகிறாள்.. ஆரம்பத்தில் எல்லாம் ஒன்று.. இடையில் ஆசைகள் எதிர்பார்ப்புகளால் பலவாகி மீண்டும் அந்த ஒன்றே ஆகும் என்ற  ஆன்மீக தத்துவத்திற்கு செல்ல வைக்கிறது தேவியின் மூன்று முகங்கள்.

ஆரம்பத்தில் நகைச்சுவைகளைத் தெளித்து நகரும் கதை, தேவியே மூன்று நடிகைகளாக மாறும் கணத்தில் பரபரப்பாகி விடுகிறது… கிருஷ்ணரே தம் பக்கம் இருந்தும் தோற்போமோ எனும் அச்சம் ,தடுமாற்றம் பாண்டவர்களுக்கு இருந்தது போல, நடிப்பு ராட்சசி அருகில் உள்ளோம் என்பது அறியாது அனந்தன் வில்லி பாத்திரம் தொலைந்து விட்டதே என கலங்குகிறான்… ஆனால் இன்னும் இரண்டு கேரக்டர் கொடுத்தாலும் அவள் நடிப்பாள் என்பது வாசகனுக்குத் தெரியும் .

தேவி எனும் அந்த மாபெரும் நடிகை எதிர்பாராத அந்த வட்டி ராஜம்மையாகவும் வாழ வேண்டும் என்றதும் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் நிகழ்வுகள் இருக்கை நுனிக்கு நகர்த்துகின்றன.. தொழில் அனுபவம் மேக்கப் மேனிடமும் அநாயசமாக வெளிப்படுகிறது… ஒரு கிளிப் இருக்கு.. வாய்க் குள் வைத்திட்டால் தாடை இழுபட்டு ஆளே வேறாகிடும் என சொல்லி மூன்று பெண்களை ரசிகர்களுக்குக் காட்சியாக்குகிறார் மேக்கப்.

அனந்தனில் என்னைக் கண்டேன்… பள்ளி, பயிற்சிக் காலம், தற்போது ஆசிரியர் என சில நாடகங்களை உருவாக்கி இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு.. நாடகம் நெருங்க நெருங்க எங்கு ஏன் போகிறோம் என தெரியாது அலைந்து கால் வலித்து அனந்தன் போல நானும் உட்காந்தெல்லாம் உள்ளேன்.

லாரன்ஸ் கடைசியாக தேவியின் காலில் விம்மலோடு விழும் போது நானும் விழுந்தேன்…. தொடர் பயிற்சியை ஒரு தொழிலில் பெற்றவர்கள் தன் தொழிலையாற்றும் போது நமக்கு அது கடினமாகத் தெரியும்.. அவர்களுக்கு அது சாதாரணம்.. காரணம் தொடர்பு பயிற்சி அனுபவமே.. ஒரு நெருக்கடியை தேவி தன் தொழிலில் சந்திக்கிறாள்… அவ்வளவே என பிறகு தர்க்க மனம் விழிக்காமலும் இல்லை.

மூன்று பொம்பள கேரக்டர்  அவசியம் வேணும் என ஆரம்பத்தில்  வாதாடும் பெட்டி சாய்பு ரசிக நாடி உணர்ந்த கலைஞன்.எலே.. நீ நாடகத்தில் நடிக்கியால… இல்ல …நான் தான் எழுதினேன்… நாடகத்த யாராவது எழுதுவானா… நடிக்கனும்ல… தெரியாம எழுதிட்டேன் இனி எழுதல… என்ற அம்மச்சி அனந்தன் பேச்சு குபீர் சிரிப்பை வர வைத்தது. குன்னக்குடியை, காருக்குறிச்சியாக ரசித்து பாராட்டி செல்லும்  பெரியவர் சிரிப்பிற்கு உத்தரவாதம்.

ஆன்மீகம், லௌகீகம், எனது அனுபவம் என நல்லதொரு  வாசிப்பாக அமைந்தது தேவி

முத்தரசு

வேதாரண்யம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2022 10:31

அகரமுதல்வன் பேட்டி

ஈழப்படைப்புக்களுக்கென்று சில பொதுவான தன்மைகள் இருக்கின்றன. இனவன்முறையும் போராட்டமும் போரும் பேரழிவுச் சித்திரங்களும் அவற்றின் நீட்சியான கதையாடல்களும் பொதுத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ஆனால் “மாபெரும் தாய்” தொகுப்பிலுள்ள கதைகள் இவற்றை தொன்ம உரையாடல்களாக மாற்ற விளைகின்றன.

அகரமுதல்வன் பேட்டி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2022 10:31

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன -உஷாதீபன்

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன வாங்க

’எப்பயோ படிச்சது, எப்பவோ படிச்சாச்சு…’.என்று நினைக்கவும், சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. வெறுமே ஒரு வார இதழில் வெளி வந்த தொடர்கதைதான் என்று சொல்லி ஒதுக்கி விடுவதற்கில்லை. ஜனரஞ்சக இதழ்களில் வந்ததெலல்லாம் இலக்கியமாகக் கருத முடியாது என்றும் சொல்வதற்கில்லை. வார இதழில் எழுதுவது யார், எழுதியது யார் என்று ஒரு கேள்வி கம்பீரமாக, அறியும் ஆவலாக முன்னே வந்து நிற்கும். அந்தப் படைப்பாளியைப் பொறுத்து அது மதிப்புப் பெறும் தலை நிமிரும். காலத்திற்கும் நிற்கும்படைப்புக்களைத்தான் தந்தார்கள் அவர்கள்.  தமிழ் இலக்கியச் சூழலில் எதுதான் காலத்துக்கும் நிற்கிறது? எல்லாம் போகிற போக்கில்தான் என்று சிலவற்றை ஒதுக்கி விடவே முடியாது. ஒதுக்கி விடவும் கூடாது. அப்படியான காலத்தால் அழியாத நாவல்களை, வார, மாத இதழ்களில் தொடர்கதைகளாக எழுதி, இன்றும் நினைக்கும் வண்ணம், நினைவூட்டும் வண்ணம் வாசகர்கள் மனதில் நின்று கொண்டிருக்கிறார்கள் சில படைப்பாளிகள். அதில் தி.ஜானகிராமன், இந்திரா பாரத்தசாரதி அசோகமித்திரன் போன்றவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

அழுத்தமும், சிந்தனையாழமும் கலந்த வேகம் அபூர்வமான சேர்க்கை. சிந்தனையாழம் என்றால் படிப்பதற்கு இரும்புக்கடலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சரளமாக வாசிப்பது கட்டாயமாக கஷ்டமாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை என்று இவரது எழுத்தை மனதாரப் புகழ்ந்திருக்கிறார் திரு.ஜானகிராமன். நாமும் அதைப் படிக்கும்போது மனம் கசிய,  ஆத்மார்த்தமாய் உணர்ந்து அந்தக் கருத்தை ஏற்பவர்களாகிறோம்.

அவர் திரு.இந்திரா பார்த்தசாரதி. நாவல் – “nஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன” . படிக்கும் வாசகனுக்கு மிகுந்த, ஆழமான ரசனை இருக்குமாயின் இந்த நாவலை ஒரு முறை மட்டும் படித்துவிட்டு ஓதுக்க மாட்டான். ஒதுக்க முடியாது. நாவல் எழுதப்பட்டிருக்கும் விதத்தை எல்லோரும் பிடித்து விடலாம். ஆனால் அதில் விவாதிக்கப்பட்டிருக்கும் விஷயங்களை எல்லோராலும் கொண்டு வந்து விட முடியாது.

உள் மன வியாபகங்களை, அகவடிவங்களை, அதன் ஆழங்களை கலை உருக் கொடுத்து சொல்லும் அழகு இத்தனை அற்புதமாக வேறெவர்க்கும் அமைந்திருக்கிறதா தெரியவில்லை. ஆர்.சூடாமணியும், ராஜம் கிருஷ்ணனும் இந்த வரிசையில் அடுத்தடுத்து என்று சொல்லலாம்.

மனைவியோடு ஒரு தமிழ் நாடகத்திற்குச் செல்லும் கணவன் அதில் நடித்த ஒரு பெண் அவனது பழைய சிநேகிதியைப் போலவே இருப்பதைக் கண்டு ஆச்சரியமுறுகிறான். அது அவன் அடி மனத்தில் புதைந்து கிடந்த பல உணர்ச்சிகளைச் சிலிர்த்தெழச் செய்கிறது. மனைவியோடு வாழ்ந்து வரும் சமூக தர்மத்துக்கு உட்பட்ட, ஆனால் போலித்தனமான வாழ்க்கையில் எரிச்சல் ஏற்படுகிறது அவனுக்கு. தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணுடனும் தன் கணவனுக்குச் சிநேகிதம் இருந்திருக்க முடியாது என்று பிடிவாதமாக நம்பி வந்த அவன் மனைவியிடம் அவனுடைய இந்தப் பழைய சிநேகிதத்தைப் பற்றிச் சொல்லி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறான்.

நாடகத்தில் நடித்த அந்தப் பெண்ணை மறுபடியும் சந்திக்க நேர்கிறது. அதுநாள்வரை  பொய்யோடு சமரசம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த அவன் அவளைச் சந்தித்ததுபற்றியும் மனைவியிடம் சொல்கிறான். கீறல் விழுகிறது. ஒட்டுப்போட்டு ஒட்டுப் போட்டு ஒன்றும் நடக்கவில்லை என்று ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்ள முயன்று, மனசும் எண்ணங்களும் படிப்படியாகக் கசடாகி, விரிசல் அதிகமாகி,  கடைசியில் பிரிந்தே போகிறார்கள். ஒரு கட்டத்தில் மனசு தெளிந்து, சமரசம்மிகுந்த இந்த வாழ்க்கையில் கட்டினவளோடு வாழ்ந்து கழிப்பதுதான் சரி என்கிற முடிவுக்கு வந்து தெளிந்து அவளைத் தேடி வருகையில் அவள் அவனைவிட்டுப் போயிருக்கிறாள்.

குழம்பித் தெளிவதற்கு முன் அவர்களுக்குள் இருக்கும் மனப் போராட்டங்களும், குறுக்கிடும் இன்னொரு பெண்ணி்ன் நடவடிக்கைகளும் சேர்ந்து இவனை அலைக்கழிக்கிறது. கதையின் நாயகன் அமிர்தம் படும்பாடு மிகுந்த குழப்பங்கள் நிறைந்தது.

வாழ்க்கை என்பது மிகவும் எளிமையானது. சராசரியானது. மேலோட்டமாய் வாழ்ந்து கழிக்க வேண்டியது. ஆழப் புகுந்தால் நாறிப் போகும் தன்மையது. இதை சாதாரண சராசரி மனிதன் தனது அன்றாடப் பாடுகளோடு எளிமையாய்க் கடந்து போகிறான். சற்று சிந்திக்க முற்படுபவன் அல்லது மேம்போக்கான வாழ்க்கையைக் கற்பனை செய்து அது கிடைக்காதவன் குழம்பித் தவித்து, தன்னையே தொலைத்து விடுகிறான். தன் கூட இருப்பவர்களையும் இம்சிக்கிறான். அமிர்தம் இதில் இரண்டாவது வகை. தன்னைத்தானே தவிப்புக்குள்ளாக்கிக் கொள்ளும் மனோபாவம் மற்றவர்கள் பார்வையில்  சமயங்களில் கேலிக்குள்ளாகவும் நேரிடுகிறது.

நாற்பது வயதைத் தொட்டுக் கடந்த அவன், சொந்த வாழ்க்கையில் திருப்தி காண முடியாமல் தவிக்கிறான். அவனுடைய இளமையை மீண்டும் வாழவேண்டுமென்று விரும்புகிறான். அதே சிந்தனையை, அதே கற்பனையை, அதே செயல் துடிப்பை மீண்டும் நடைமுறையாக்கி வாழ முடியுமா என்பதே அவன் பரிசோதனையாயிருக்கிறது. கடந்து போன சரித்திரத்தை நிகழ்காலமாக்க இயலுமா என்பதே அவன் விருப்பமாயிருக்கிறது. அவனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் யயாதி அவனை அப்படி இயங்க வைக்கிறது.

தான் உண்டாக்கிக் கொள்வதைத் தவிர மனிதனுக்கு வேறு பிரச்னைகளே இல்லை. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் போராட்டத்தில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் எல்லாம் பௌதிகத் தன்மை வாய்ந்தவையாகத்தான் இருக்க முடியும். மனப் போராட்டம் என்ற வார்த்தை மனிதன் தானாக ஏற்படுத்திக் கொண்டது. தன் ஈகோவைச் சீராட்ட…- நண்பர் பானர்ஜியிடம் ஏற்படும் விவாதத்தில் அவனால் தெளிவு பெற முடியவில்லை.

இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே நிகழும் போராட்டத்துக்கு வாழ்க்கை என்று பெயர். மனிதன் வாழந்து கொண்டிருப்பதே அவன் வெற்றி. மரணமே அவன் தோல்வி. ஆகவே போராட்டம் என்பது பௌதீக ரீதியில்தான் இருக்கும். மனம் கற்பித்துக் கொள்ளும் பயங்கரமான சிக்கல்களுக்கு அவன்தான் பொறுப்பே ஒழிய இயற்கையல்ல. நீ பௌதீக மனிதன். ஏன் பௌதீக விதிப்படி வாழக்கூடாது? உனக்குள்ள பிரச்னைகள், அதோ பந்தைத் துரத்திக் கொண்டு ஓடுகிறதே நாய்…அதற்கு இருக்கிறதா? அந்தக் காட்சி உன் மனத்தில் எந்தவிதமான சலனத்தையும் உண்டாக்கவில்லையென்றால் உன்னோடு பேசிப் பயனில்லை. நீ வெறும் இயந்திரம். மனிதனைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்குக் கிடையாது…..

நண்பனின் இந்தப் பேச்சு அவனை திருப்தியடையச் செய்யவில்லை. காட்சி ரசனைக்கெல்லாம் அர்த்தம் கற்பிக்க நான் தயாராயில்லை. இந்த மாதிரியான அசட்டு மனோபாவங்கள்தான் வாழ்க்கையை இன்னும் சிக்கலாக்குகின்றன. காட்சி இன்பம் தூண்டும் ரசனைக்காக பகுத்தறிவை விலை கொடுக்க நான் தயாரில்லை. அது விவேகமற்ற தன்மை. எனக்கு எது வேண்டும் என்று நிச்சயமாகத் தெரியும் அதை அடைய முயன்று கொண்டிருக்கிறேன்….என்கிறான் அமிர்தம்.

இழந்து போன நித்யாவையும், அவளைப் போலவே இருந்து நினைவுகளைத் தூண்டும் பானுவையும் மனதில் வைத்துக் கொண்டு, மனைவி திலகத்திடமிருந்து விலகியே இருக்கிறான் அமிர்தம். அன்போ அரவணைப்போ இன்றி யந்திரத்தனமாக இருக்கும் அவனின் இருப்பை மிக நன்றாகப் புரிந்து கொண்டு அவ்வப்போது அவனை வார்த்தைகளால் சொடுக்குகிறாள் மனைவி திலகம்.

திலகத்துடன் விவாகரத்து என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத காரியம். அவள் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டாள்.  கணவனை மையமாக வைத்து எழுந்த சமூக தர்மத்தை வெறும் சட்டத்தின் மூலமாகச் சீர்திருத்தம் செய்ய முடியுமா? திலகத்துக்கும் அவன் மீது மனப்பூர்வமான ஈடுபாடு இருக்கும் என்று சொல்ல முடியாதுதான். ஆனால் நம் சமூகத்தில் கணவனைக் காட்டிலும் கணவன் எனப்படும் ஸ்தானத்திற்குத்தான் மதிப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால் ஒரு பெண் சுமங்கலியாக இருப்பதற்கு அவள் கணவன் காரணம் என்பதினால்தான் அவனுக்கு மதிப்பு. இந்தச் சமூகத்தை எதிர்த்துப் போராடக் கூடிய துணிவு தன்னிடம் இருக்கிறதா? – பலவாறு சிந்தித்து நிம்மதியின்றி அலைக்கழிகிறான் அமிர்தம்.

ஊருக்கு வெளியே ஒரு ஓட்டலுக்குச் சென்று அறையெடுத்து, உடன் வந்த பானுவோடு ஏற்பட்ட விவாதம் அவனை இன்னும் நிரூபணமாக்குகிறது. இவ்வளவு தள்ளி, தனியா ஒரு ஓட்டலுக்கு நீங்க என்னைக் கூட்டிட்டு வந்திருக்கிறதுலேர்ந்தே தெரியுது…நீங்க ஒரு கோழைன்னு…என்று சாடுகிறாள் அவள்..

நாம இருக்கிறது ஒரு ரெண்டுங்கெட்டான் சமூகம். ஐம்பது வருஷங்களுக்கு முன்னாலே எங்க தாத்தாவுக்கு மூணு பெண்டாட்டிகள். யாரும் புருவத்தை உயர்த்தலை… இந்த சமூகம் பெண்களை மதிக்கிற சமூகம்னு பேரு. ஒருவனுக்கு ஒருத்திங்கிற நியாயம். பெண்களும் விவாகரத்து செய்யலாம்னு சட்டம் சொல்லுது…ஆனா எவ்வளவு  பேர் செய்வாங்க…? புது தர்மத்திலேயும் புகுந்துக்க முடியாம, பழசும் அநாகரீகம்னு சொல்லிக்கிட்டு அவஸ்தைப்படறோம்… – இது இவன் பதில்.

உங்களுக்கும் உங்க மனைவிக்கும் உள்ள பொருத்தமில்லாத தன்மையை ஒரு இலட்சிய வேகத்தோட புரிஞ்சிண்டு நான் அனுதாபப்பட்டது வாஸ்தவந்தான். ஆனா உங்க மாதிரி இருக்கிறவங்களுக்கு, தைரியமில்லாம ஒரு சோக காவியத்தின் கதாநாயகன் மாதிரி ஒடிஞ்சு போனவங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டால் சமாளிக்கிற திறமை கிடையாது. சந்தர்ப்பம் கிடைச்சா அதை சாதகமாப் பயன்படுத்திக்கிறணும்கிற சுயநலந்தான்…சுயநலம் மட்டும்தான்…எல்லா ஆண்களைப் போலத்தான் நீங்களும்…அதனாலதான் எனக்கு ஆண்கள்னாலே வெறுப்பு ஏற்பட்டுப் போச்சு….

ஒருவேளை தான் நித்யாவைப் பற்றி பானுவிடம் சொன்னது தவறோ? என் மாஜிக் காதலி மாதிரியே நீ இருக்கிறாய் என்பதனால்தான் உன் மீது எனக்கு ஈடுபாடு…என்றால் தன் மதிப்புள்ள எந்தப் பெண் இதை விரும்புவாள்?  அங்கேயும் சிக்கலையே எதிர்கொள்கிறான் அமிர்தம். பானுவை அணுகும்போதெல்லாம் நித்யா நினைப்பிலேயே பழகுகிறான். அவளது ஒவ்வொரு அசைவும், நடத்தையும், பார்வையும், பேச்சும் அவனுக்கு அவளையே நினைவூட்டுகிறது.

காதலி நித்யாவைத் திருமணம் செய்வதில் இருந்த அவசரத்தை அவள்தான் கெடுத்தாள். இப்போ உடனே முடியாது…கொஞ்சம் பொறுத்திருக்கணும்…என்றவளை…அலட்சியப்படுத்தி, முறைப்பெண்ணான திலகத்தை மணந்தாயிற்று. தான் பிறந்ததே அமிர்தத்தை மணக்கத்தான் என்று நினைத்துக் கொண்டு வாழ்கிறாள் திலகம். அவளிடம் போய் நித்யாவைப் பற்றிச் சொன்னால் கதி என்னாவது? எல்லாம்தான் நினைத்துப் பார்க்கிறான். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சொல்லியும் விடுகிறான்.

என்னோட வெளில வரமாட்டேங்கிறீங்க…எப்பவும் ஏதாவது குத்தம் சொல்லிட்டேயிருக்கீங்க…கார்விடக் கத்துக் கொடுக்கச் சொன்னா மறுக்கிறீங்க…எதாச்சும் சாக்குச் சொல்லித் தள்ளிப் போடுறீங்க….உங்களுக்கு என்னைப் பிடிக்கலை…அந்த வெறுப்பை இப்டியெல்லாம் காட்டுறீங்க…நீங்க எங்க போறீங்க…என்ன செய்றீங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு மட்டும் நினைச்சிடாதீங்க…அந்த அளவுக்கு அசடில்லை நான்….

டெல்லியில் தான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் எப்படியோ அவளுக்குத் தெரிந்து விடுகிறது. எல்லா இடத்திலும் உளவு பார்க்க ஆள் வைத்திருப்பாள் போலிருக்கிறது.

அந்த நித்யாவ  நினைச்சிட்டு பானுங்கிற இந்த ஓடுகாலியத் தேடி அலையுறீங்களா? என்று புலம்புகிறாள் திலகம். கல்யாணம் ஆகி பன்னிரெண்டு ஆண்டுகள் கழிந்து ஒரு குழந்தைக்கு வழியில்லை என்பதும் அவளைக் குரோதம் கொள்ளச் செய்து விடுகிறது. அதனால்தான் வீட்டிலுள்ள ஆண் மகன் வெளியில் அலைகிறான் என்று குமுறுகிறாள். உங்களுக்குப் பிடிக்கிறமாதிரி நான் இன்னும் என்னமாத்தான் இருக்கணும்? சொல்லுங்க அதையும் செய்யக் காத்திருக்கேன்… – திலகத்தை நினைக்கையில் நமக்கு அத்தனை பாவமாகத் தோன்றுகிறது. கணவனே கண் கண்ட தெய்வம் அவளுக்கு. அவன்தான் அவள் உலகம்.

அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சலனத்தை ஏற்படுத்திக் கொள்வது விவேகந்தானா? அது சமாதியின் அமைதியோ, எது வேண்டுமானாலும் இருக்கட்டும், பிரச்னைகளை உண்டாக்கிக் கொண்டு அவற்றை எதிர்நோக்கக்கூடிய துணிவு தன்னிடம் இருக்கிறதா? அன்று நித்யா தன்னை கோழை என்றாள். இன்று பானு தன்னைத் தன்னம்பிக்கை இல்லாதவன் என்று ஏசுகிறாள். மனசாட்சி, தன்னைக் கோழையாக்கிவிட்டதா? – மனைவி திலகத்தோடு ஒன்றவும் முடியாமல், பழைய காதலி நித்யாவைப் போல் இருக்கும் பானுவிடம் சேரவும் இயலாமல் குழம்பித் தவிக்கிறான் அமிர்தம்.

உலகத்தையே வீடாகக் கொண்டு ஒரு நிலையிலும், உலகத்தையே வெளியாகக் கொண்டு மற்றொரு நிலையிலும் மனிதன் வாழ்கிறான் என்பது எவ்வளவு உண்மை! மானிடஇயல் கற்பிக்கும் சமூகப் பொறுப்புக்களைச் சுமந்து கொண்டு முதல் நிலையில் வாழ வேண்டும்.இரண்டாவது நிலையில் மனிதன் தன் சுதந்திரத்தின் எல்லையை உணர்கிறான். ஆனால் இச்சுதந்திரம் தனக்கு இப்போது சந்தோஷத்தைத் தருகின்றதா? – –

கடைசியாய் திலகம் அவனை விட்டுப் போய் விடுகிறாள். வீட்டின் நிசப்தம் இம்மாதிரிச் சிந்தனையைத் தூண்டி அவனைப் பயமுறுத்துகிறது.

உலகத்தையே வெளியாகக் கொண்டு நிற்கும் நிலையில் அவன் ஒரு சின்னஞ்சிறு புள்ளி. இந்தப் புள்ளிக்குத்தான் சிந்தனை, தன் வயமான தர்மம் எல்லாம்.மந்தையிலிருந்து விலகிச் செல்ல முயன்ற புரட்சி ஆடு், பொறியில் அகப்பட்ட எலி, விடுதலையைக் கண்டு பயப்படுகிறது. சமூகம் என்பது தவிர்க்க முடியாத சிறை. ஒன்று ஞானியாக இருக்க வேண்டும். அல்லது பைத்தியமாக இருக்க வேண்டும். தன்வயமான தர்மம் என்பது அப்பொழுதுதான் சாத்தியம்.

பொறிதான் சொர்க்கம்… நினைத்துக் கொண்டே படுக்கையில் விழுகிறான் அமிர்தம். அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கற்பித்துக் கொண்டு வாழ்வதுதான் விவேகம். உலகம் வீடாக இருந்துவிட்டுப் போகட்டும். திலகத்தைத் தேடியாக வேண்டும். அவளால்தான் அவனை அவனிடமிருந்து காப்பாற்ற முடியும். திலகம் எங்கே? மனம் தவிக்க ஆரம்பிக்கிறது. அப்போது டெலிபோன் மணி ஒலிக்கிறது. நாவல் முடிவடைகிறது.

அமிர்தம் நிதானத்துக்கு வந்த அந்தக் கணம்தான்  nஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிய தருணம். சப்தர்ஜங் சாலையில் காரில் வந்து கொண்டிருக்கும்போதே மனசு நிதானப்பட்டு விடுகிறது அவனுக்கு. அப்போது அந்தப் பகுதியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் nஉறலிகாப்டர்கள் கீழே இறங்கிக் கொண்டிருக்கின்றன. அவன் மனமும் அதோடு சேர்ந்து இறங்கி நிதானத்தை அடைகிறது.

உள் மனப்போராட்டங்களை தத்துவார்த்த ரீதியில்,  ஒரு அறிவு ஜீவியின்  நிலையிலிருந்து  இத்தனை அருமையாக விவாதித்து அகவடிவங்களுக்கும் அதன் ஆழங்களுக்கும் கலை உருக்கொடுத்து  ஸ்வாரஸ்யப்படுத்தி எழுதப்பட்ட வேறு நாவல் ஏதேனும் உண்டா? தேடிக் கொண்டிருக்கிறேன்.

 

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 04, 2022 10:30

March 3, 2022

பின்தொடரும் நிழலின் குரலின் முன்னுரை

பின் தொடரும் நிழலின் குரல் விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வரவுள்ளது. அது முதன்முதலில் தமிழினி வெளியீடாக 1999ல் வெளிவந்தபோது எழுதிய முன்னுரை இது

வணக்கங்களும் நன்றிகளும்

ஒரு படைப்பிலக்கியம் கண்ணுக்குத் தெரியாத நதியொன்றின் கண்ணுக்குத் தெரியும் சிறு பகுதி. வணக்கங்களும் நன்றிகளும் உண்மையில் அந்தப் பிரவாகத்தை அடையாளம் செய்யும் முயற்சியே.

என் அம்மாவின் அண்ணா மறைந்த கேசவபிள்ளை அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். கட்சி உடைந்தபோது வலது கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போனார். சிறு பெண்ணாக என் அம்மாவுக்கு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் பழக்கமும் சித்தாந்த அறிமுகமும் இருந்தது. அது அவளை ஒரு முதல்தர வாசகியாக்கியது. அவர்களைப் பற்றிய பற்பல சித்திரங்களை அம்மாவிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அவற்றில் ஒன்று கட்சியால் வெளியேற்றப்பட்டு மார்த்தாண்டம் சந்தையில் அனாதைப் பிச்சைக்காரனாக இறந்த இளம் கவிஞனின் கதை.

என் அரசியல் ஈடுபாட்டின் இரண்டாம் கட்டமாக 1984 முதல் 1986 வரை கேரளாவில் காசர்கோடு நகரில் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் மிகப்பெரிய கம்யூனில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. சித்தாந்த வகுப்புகளில் பங்கு பெறவும் பல மூத்த தோழர்களுடன் உரையாடவும் சந்தர்ப்பம் அமைந்தது. கம்யூனில் இருந்த சிறந்த நூலகத்தின் கம்யூனிச இலக்கிய சித்தாந்த நூல்களில் கணிசமானவற்றைப் பயிலவும் முடிந்தது. அதைவிட முக்கியமானது கம்யூனில் இரவுதோறும் நிகழும் நீண்ட விவாதங்கள். விடியும்வரை பேசிவிட்டு கறுப்பு டீ சாப்பிட சந்தைக்குப் போவோம். கூட்டமாக விவாதம் செய்தபடி தெருக்களில் நாங்கள் நடக்கும் சித்திரம் மனதில் எழுகிறது. நம்பிக்கையும் ஆர்வமும் போதையேற்றியிருந்த நாட்கள். தோழர்கள் நந்தகுமார். பரதன், கெ.ஜி.ஜான், நாராயண நாயக், கெ.வி.சந்திரன், கெ.கெ.வி.நாராயணன் ஆகியோரை நட்புடன் நினைவு கூர்கிறேன். முற்போக்கு எழுத்தை அறிமுகம் செய்த நண்பர் அப்துல் ரசாக்கையும் (ரசாக் குற்றிக்ககம்). குறைந்த காலம் கட்சியின் முதல்நிலை உறுப்பினராக இருந்தேன் எனினும் அது எனக்கு உவப்பூட்டும் அனுபவமாக இருக்கவில்லை.

இடதுசாரி அறிவுலகில் இத்தனை பரிச்சயம் இருந்தும் ஸ்டாலினிச அழிவுகள் பற்றிய எளிய தகவல்கள்கூட எனக்கு சுந்தர ராமசாமியின் அறிமுகம் மூலமே கிடைத்தன. பிற்பாடு அவர் மகன் கண்ணனுடனான உரையாடல்கள் உதவின. பிறகு நூல்கள். நூற்பட்டியலை இங்கு தர விரும்பவில்லையென்றாலும் சேரன் தொகுத்த ‘ரெஜிசிரிவர்த்தனே’யின் சோவியத் ருஷ்யாவின் உடைவு என்ற கட்டுரை நூல் இந்நாவலுக்கு நேரடியான தூண்டுதலாக அமைந்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்.

சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா. ஞானி ஆகியோருடனான நட்புக்கு இந்நாவலின் ஆக்கத்தில் மறைமுகமான பெரும் பங்கு உண்டு. மூவருமே கம்யூனிச இயக்கத்தில் பங்காற்றி மீண்டவர்கள் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனது எல்லா படைப்புகளும் அவர்களுடனான உறவின் விளைவுகளே.

டாக்டர் எம்.கங்காதரன், பி.கெ.பாலகிருஷ்ணன், கே.சச்சிதானந்தன் முதலிய மலையாளச் சிந்தனையாளர்களுடனான உரையாடல்களும் கடிதங்களும் எனக்கு பல திறப்புகளை அளித்துள்ளன. எம்.கோவிந்தனின் ஆளுமை எனது அரசியல் பிரக்ஞையில் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. குறைந்த தருணங்களிலேயே அவரைச் சந்தித்திருக்கிறேன். அவரது எழுத்துக்கள் என்னை அதிகம் கவர்ந்ததுமில்லை, எனினும் எப்படி இது நிகழ்ந்தது என்பது புரியவில்லை. படைப்பாளியின் அரசியல் வேறு வகையானது என்ற செய்தி அவரிடமிருந்து அவரது தொடர்ச்சிகளான சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா ஆகியோர் வழியாக எனக்கு வந்திருக்கலாம். தர்க்கத்தை உதறி உள்ளுணர்வைச் சார்ந்து நிற்கும் அரசியல் அது. அதிகாரத்திற்குப் பதிலாக கருணையை இலக்காகக் கொண்டது.

இலங்கைக் கவிஞர்கள் பலருடைய வரிகள் – பல சமயம் எளிய வரிகள்கூட – எனக்கு மிகுந்த மன உத்வேகத்தை அளித்துள்ளன. இந்நாவலின் பல பகுதிகளைப் படிக்கையில் அவர்களுடைய உணர்வுநிலைகளின் நீட்சியைக் காணமுடிகிறது.

இந்நாவலின் பிரதியைச் சரிபார்த்த நண்பர் எம் எஸ். அவர்களுக்கு நன்றி.

எழுதத் தொடங்கினால் தடைகளின்றி எழுதுவது என் பாணி. ஒரு கட்டுப்படுத்தும் முன்னிலையாக எப்போதும் அருண்மொழி நங்கை இருந்து வந்திருக்கிறார். இந்நாவலில் நண்பர் வசந்தகுமார் ஒரு தூண்டும் முன்னிலையாக விளங்கினார். அவர் இல்லையேல் இந்நாவல் இவ்வாறு விரிவு கொண்டிருக்காது. இருவருக்கும் என் மனம் நிறைந்த அன்பு.

இதன் கரு விரிவடையத் தொடங்கும் நேரத்தில் இயல்பாக என் மனதில் விரிந்த இரு குறள்கள் மெல்ல மெல்ல என் தியான மந்திரங்களாக மாறின. மீண்டும் மீண்டும் அவற்றை மனதில் ஓடவிட்டபடி தக்கலை பத்மநாபபுரம் சாலையில் வேகமாக நடக்கும் தருணங்களில் அறச்சீற்றத்துடன் என் மனம் பொங்கும். அல்லது குற்றவுணர்வுடன் சரியும், அபூர்வமாக ஆழ்ந்த துயரத்தில் தன்னை இழக்கும். எழுதி முடித்தபின்பு இப்போதுகூட அவ்வரிகள் அதேயளவு தீவிரத்துடன் என்னை அதிர வைக்கின்றன. இன்னும் ஒரு நாவலை அவற்றிலிருந்து படைத்துவிடலாம் என்று மனம் தாவுகிறது. நமது அறவுணர்வின் சாரமாக என்றுமிருப்பவை வள்ளுவ மாமுனியின் சொற்கள்.

ஆளற்ற தேவாலயங்களின் சாளரங்களில் காற்று பீறிடும் ஓங்காரமாக கிறிஸ்துவை இளவயதில் அறிந்ததுண்டு. எனது கிறிஸ்துவிற்கு முகம் தந்தவர் தல்ஸ்தோய். என் அகங்காரம் மண்டியிடும் ஒரே இலக்கிய ஆளுமையும் அவர்தான். இந்நூல் அவருக்கும் அன்னா புகாரினினாவுக்கும் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. தல்ஸ்தோய் எழுதாத அவருடைய மாபெரும் கதாபாத்திரம் அன்னா புகாரினினா. பெரும் படைப்புகள்தான் வாழ்வை உருவாக்குகின்றன.

புதிய விஷ்ணுபுரம் பதிப்பு

அவர்களிருவருக்கும் சமர்ப்பணம் செய்யத் தகுதி படைத்ததே இந்நாவல் என்று இதை முடித்த கணம் தோன்றியது. இத்தகைய நிறைவின் தருணங்களே படைப்பாளியைத் தன் வாழ்வு குறித்து திருப்தி கொள்ள வைக்கின்றன. தன் பலவீனங்களையும். சிறுமைகளையும், கர்வத்தையும், மூர்க்கத்தையும் சமநிலையின்மையையும் மன்னித்துக்கொள்ள வைக்கின்றன. அவனை நம்பிக்கையின் உச்சியில் சில கணங்களுக்கேனும் நிறுத்துகின்றன. அப்படிப்பட்ட தருணம் இது.

வணக்கத்துடன்

ஜெயமோகன்

பத்மநாபுரம்

26-08-1999

பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீட்டின் முன்னுரை

பழைய சுழல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2022 10:35

புனைவுக்களியாட்டு- தொகுப்புகள்- கடிதங்கள்

புனைவுக் களியாட்டு நூல்கள் புத்தகக் கண்காட்சியில்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ

புனைவுக்களியாட்டுச் சிறுகதைகளுள் மொழி எனக்கு மிகவும் பிடித்தமான கதை, நண்பர்களிடம் ஒருநூறு தடவையாவது சொல்லியிருப்பேன். சுக்கிரியிலும், சிறுகதைக்கூடலிலும் நண்பர்கள் இக்கதையை பேசியிருந்தார்கள். எளிய மொழியாலானது, பாத்திரங்களை மேலும் அணுகிக்காண்பிப்பது என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன். பைபிளின் பாபேல் கோபுரக்கதையோடு கூட ஒப்பிட்டதுண்டு.

திடீரென தோன்றியது, அந்தக் கதையிலேயே அந்த அறையைப் பற்றிய பழங்கதை ஒன்றிருக்கிறது. அந்தக் குடும்பத்தின் பெண்ணொருத்தி தீவட்டிக் கள்வர்களின் மொழிக்கு செவிசாய்த்து வெளிவரும் நிகழ்வு. ஏன் என் மனம் இவ்வளவு நாளாக இந்த கிலுக்காம்ப்பெட்டியை அவளோடு சேர்த்துப் பார்க்கவில்லை என்று தோன்றியது. இதை உணர்ந்ததும் அந்தக்கதையின் மையமே இடம் மாறிவிட்டது. நானிக்குட்டிக்கு வெளியே நின்ற கள்வனின் மொழி புரிந்து வெளியே வருகிறாள், அவள் மற்றவர்களை காக்கவும்தான் வருகிறாள். ஏறத்தாழ ஒரு நாட்டார் தெய்வம்போல. இந்தக்குழந்தையும் மொழிக்கு செவி சாய்ப்பாள் என்று அங்கேயே உணராது கரடிநாயரைப்போலத்தான் பதறிக்கொண்டிருந்தேன். வெளிவந்தவள் எல்லோரையும் காப்பவளாகவும் ஆகிப்போகிறாள்.

தாமரைக்கண்ணன்
புதுச்சேரி

அன்புள்ள ஜெ

புனைவுக்களியாட்டுச் சிறுகதைகளில் நூல்களாக வந்த ஆறு தொகுப்புகளையும் வாங்கிவிட்டேன். இவற்றை ஒன்றாகச் சேர்த்து படிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். புனைவுக்களியாட்டுக் காலகட்டம் ஒரு அபாரமான மன எழுச்சியின் தருணம். அப்போதிருந்த மனநிலை வேறு. ஒவ்வொன்றும் ஒரு உலகம். சீட்டுக்கட்டுகளை விரித்து விரித்து மந்திரவாதி காட்டுவதுபோல. அடுத்து என்ன அடுத்து என்ன என்று மனசு குதித்துக்கொண்டிருந்தது. ஆனால் தொகுப்புகள் அப்படி அல்ல. அவை ஒரே வகையான கதைகளின் தொகுப்புகள். எனக்கு நான் ஏற்கனவே சிந்தே முதலிய பல கதைகளை சரியாக வாசிக்கவில்லையோ என்ற எண்ணம் இருந்தது. அனலுக்குமேல் என்ற கதையை சமீபத்தில் வாசித்தபோது அதை புதிசாக வாசிப்பதுபோல இருந்தது. ஏனென்றால் புனைவுக்களியாட்டில் ஒரு கதை ஒரு மாதிரி. அந்த மனநிலை மாறுவதற்குள் அடுத்த கதை வந்துவிட்டது. இப்போது ஒரேவகையான கதைகளை தொகுப்பாக படிக்கும்போது ஒரு தொகுப்பு உருவாக்கும் ஒட்டுமொத்த மனநிலை எல்லா கதைகளையும் ஆழமாக உள்வாங்க வைக்கிறது.

எஸ்.பாலகிருஷ்ணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2022 10:31

வௌவால் தேசம் சோ. தர்மன்

சாகித்ய அகாடமி விருது பெற்ற  எழுத்தாளர் சோ. தர்மனின் ஐந்தாவது நாவல் ‘வௌவால் தேசம்.’ 1800 காலகட்டங்களில் தொடங்கும் இந்த நாவல், அக்கால ராஜவிசுவாசத்தையும் உயிரைத் துச்சமென மதிக்கும் தேசப்பற்றையும் விரிவாகப் பேசுகிறது. கதைகளாலும் தொன்மங்களாலும் நிரம்பி வழிந்தோடும் தாமிரவருணியை விரிவாகப் பதிவு செய்கிறது. ஆண்டுக்கு ஆறு மாசம் தண்ணீர் மீதி ஆறு மாசம் வறண்டு கிடந்த தாமிரவருணி,  எப்படி வற்றாத ஜீவநதியாகப் பிரவாகித்தது என்பதை அறிகிற போது நாம் ஆச்சரியத்தால் உறைந்து போகிறோம்.

புனைவுகளாலும் படிமங்களாலும் வரலாற்றை அடுக்காமல், குவிக்காமல் கச்சிதமாக நெய்திருக்கிறார் நூலாசிரியர். வரலாற்றின் நரம்புகளை மீட்டும் போது நிறைய இடங்களில் ஆன்மிகத்தின் ஒலியே கேட்கிறது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் எதிர்மறைக் குணங்களை வௌவாலின் குணங்களுக்கு ஒப்புமைப்படுத்தி, வௌவால் தேசத்தை உருவாக்கி, அதில் நம்மையும் ஒரு அங்கமாக்கிவிடுகிறார். பல ஜமீன்தார்களை, வீரர்களை வேட்டையாடிய பிரிட்டிஷ் ராணுவத்தின் மேஜர் ஜெனரல், வௌவால் தேசத்தில் ஒரு வௌவாலாகப் பறந்து திரிகிறார். மனிதனை ஒரே இரவில் கரப்பான்பூச்சியாக உருமாற்றம் செய்த ஒரு பிரெஞ்சு எழுத்தாளனைப் போல, சோ. தர்மன் மனிதனை வௌவாலாகவும் வௌவாலை மனிதனாகவும் உருமாற்றி, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

இதன்மூலம் வௌவால் தேசத்திற்குள் நுழையும் நாம் ஒவ்வொருவரையும் பெரும் சிரிப்பில் ஆழ்த்தி வேறொரு உயிப்பிராணியாக உருமாற்றுகிறது இந்த நாவல்.

(பின்னட்டைக் குறிப்பு)

பக்கம்: 304
நூலளவு: டெமி
விலை ரூ. 320
தொடர்புக்கு: வாட்ஸ்அப்: +91 944 37 68004

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2022 10:31

குதிரைமரம் – ஒரு நெசவு

எழுத்தாளர் அசோக்குமாரின் இத்தொகுப்பிலுள்ள குதிரை மரம் என்ற கதையைப் படித்த பிறகு எழுந்த கனத்த மௌனத்தை எப்படியாவது கடப்பதற்காக என்னுடைய தர்க்க மனத்தில் இருந்து எழுந்ததுதான் இப்பதிவின் முதல் பத்தியிலுள்ள வார்த்தைகள். இருந்தாலும், நெசவையே தன் அகமாகக் கொண்ட கதைநாயகன் பிரபுராமின் படைப்புத் தன்மைக்கு முன் எந்த தர்க்கச் சொல்லும் வலிமையற்றுத் தான் போகிறது.

குதிரைமரம் – ஒரு நெசவு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2022 10:31

சிகண்டி ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன்,

நவீனின் சிகண்டி நாவல் அறிமுக உரையினைக் கேட்டேன். ஒரு மணி நேரத்துக்கும் குறையாத உரை. சிகண்டியைக் கொண்டு ஒரு நாவல் எப்படி அமைய வேண்டும் என்பதான தங்கள் பார்வையைப் பகிர்ந்திருந்தீர்கள். நீங்கள் நாவலுக்கான கோட்பாட்டை வரையறை செய்ய முற்படவில்லை என்பதை நான் அறிவேன். வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் ஒரு நாவல் எப்படி அமையலாம் என்பது பற்றிய உங்கள் தீர்க்கமான பார்வையை, இளம்படைப்பாளிகள் ‘அரசியலாகக்’ கடந்துவிடாமல் இருக்கக் கடவது.

இலக்கியப் படைப்புகள் பற்றிப் பேசும்போது ஆன்மீகம் எனும் சொல்லைக் கொண்டு வருகிறீர்கள். அச்சொல்லைக் கொண்டுதான் உங்களை வலதுசாரி என்று நிறுவுகின்றனர் நவீனஜீவிகள். சமீபத்தில் ஒரு நண்பரிடம் உங்களைப் பற்றிய பேச்சு வந்தது. நமது தளத்தைத் தொடர்ந்து வாசித்து வரக்கூடிய, தங்களை ஆசானாகப் போற்றுகிற வாசகர் அவர். “ஆசான் வலதுசாரி” என அடித்துச் சொன்னார். நான் அதை மறுத்து சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். “இப்ப என்ன சொல்றீங்க.. அவர் வலதுசாரியா, இடதுசாரியா.. தெளிவா சொல்லுங்க!” என்றார். “அதை நான் சொல்ல முடியாது. ஜெ-தான் சொல்ல வேண்டும். என் பார்வையில் அவர் வலதும் இல்லை, இடதும் இல்லை. ஒரு நல்ல இலக்கிய ஆசிரியர்!” என்றேன். அந்நண்பர், “நீங்க சொல்றது புதுசா இருக்கு.. ஆனா யோசிக்கற மாதிரியும் இருக்கு” என்றார். ”அவரோட படைப்புகளை நிதானமா வாசிச்சுட்டு வர்றவங்களுக்கு அது புரியும். இந்தியாவை விட்டுக்கொடுக்காம பேசறத வைச்சு அவரை வலதுசாரின்னு நீங்க முடிவு பண்ணிருக்கீங்க.. பரவாயில்லை, மறுபடியும் அவரோட இந்துத்துவா பற்றிய பதிவுகளைக் கவனமா படிச்சுப் பாருங்க. கூடுதலா பிற மதங்கள் பற்றி அவர் சொல்லி இருக்கறதையும் பொறுமையா படிச்சு பாருங்க!” எனக் கேட்டுக் கொண்டேன்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ்ச்சமூகம் அறிவு வளர்ச்சியில் அதிகம் மேம்பட்டிருக்கிறது, சந்தேகம் இல்லை. ஆனால் அவ்வறிவு எப்படியானது என்பதே மறுவிசாரிப்புக்கு உரியது. சமூகம் என்பது அறிவாளிகள் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பது கனவாக இருக்கலாம்; அதற்கான பிரச்சாரங்களையும் மேற்கொள்ளலாம். அதில் குறையில்லை. ஆனால், அறிவாளிகள் மட்டுமே சமூகத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது போன்று.. எல்லாவற்றையும் அறிவுக்குட்படுத்திக் கூறுபோடும் மனநிலையை என்னவென்று சொல்வது, எங்ஙனம் எதிர்கொள்வது? அம்மனநிலையில்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழகத்தில் அறிவுச் செயல்பாடு அரங்கேறி இருக்கிறது.

ஒரு கலைப்படைப்பை அறிவுக்கருவிகள் வழியாக அறுத்து ஆராய்ந்து அணுகவேண்டும் என்றே நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒத்து ஊதுவதாகவே ’அடையாள நடைமுறை அரசியலும்’ களத்தில் நிலவுகிறது. பொதுச்சமூகத்தில், இலக்கியம் என்றால் அண்ணாவும் வைரமுத்துவுமே முந்தி நிற்கின்றனர். தீவிர வாசகர் என்றால் மேத்தா, அறிவுமதி என்பார். அதிதீவிர வாசகர் என்றால் பாலகுமாரன் என்பார். இப்படித்தான் நம் சமூகப்பொதுப்புத்தி உருவாகி வந்திருக்கிறது. அரசியல் தளத்தில் மட்டுமல்ல.. இலக்கியத்தளத்திலும் ‘அடையாள அரசியல்’ வெகுவாக நுழைந்திருக்கிறது. ஆளும் திமுக அரசு, எழுத்தாளர்கள் என சமீபமாய் விருதுகள் வழங்கி இருக்கும் ஆளுமைகளே, நாளைய சமூகம் வரலாற்றில் இடம்பெறப் போகும் இலக்கியகர்த்தாக்கள். நினைக்கவே திகிலாய் இருக்கிறது. எனது மாணவப்பருவத்தில் திராவிட தமிழ்த்தேசிய அடையாளம் கொண்ட படைப்புகளையும் ஆளுமைகளையுமே இலக்கியவாதிகளாக நம்ப வைத்திருந்தனர். போனால் போகட்டும் என்பது போல, அசோகமித்திரனையும் வல்லிக்கண்ணனையும் இடம்பெறச் செய்தனர். சில பத்து ஆண்டுகளைக் கடந்த பின்னும் அதுதான் நிலைமை.

தங்கள் கேள்விகளுக்கான பதில்களை விக்கிபீடியாவில் பெற்றுவிடலாம் எனும்படியான ’நுண்ணறிவுத்தலைமுறை’ ஒன்று சமீபமாய் உருவாகி வந்திருக்கிறது. தனது பெரும்பான்மையான நேரத்தைக் கைபேசியிலேயே செலவழிக்கும் அத்தலைமுறைக்கு கதை, கவிதை என்பது நான்கு வரிகளுக்குள் இருக்க வேண்டும். பத்து வரிகள் இருந்து விட்டால் பயந்து விடுவார்கள். எதைச் சொல்வதானாலும் அவர்களுக்கு இரண்டு வரிகளில் சொல்லியாக வேண்டும். அவர்களிடம், ”திமுக அரசு எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்த தகவல் தெரியுமா?” என்று கேட்டால், ”திமுகவா.. அப்படின்னா?” என்பார்கள். சமீபத்திய நீயா நானா ஒன்றில், ”தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் யார்?” என ஒரு கேள்வியை கோபிநாத் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் ஒரு இளைஞர் திணறிவிட்டார். இதுதான் இன்றைய நிலை. ஒருபுறம், அறிவுக்கருவிகள் கொண்டு கலைப்படைப்பைக் குதறி ஆராயும் அறிவுஜீவிகள்; மறுபுறம், இலக்கியம் என்றாலே ‘சாய்ஸ்ல விட்டுடலாம்’ என்பது மாதிரியான மின்னணுத் தலைமுறை. எப்படி வந்து சிக்கி இருக்கிறோம், பாருங்கள்.

ஆன்மீகத்துக்குத் திரும்பலாம். ஒரு படைப்பின் ஆன்மீகம் என நீங்கள் சொல்ல வருவது அதன் உயிர்த்தன்மையை. மதம் சொல்லும் ஆன்மீகம் அன்று அல்லது மதம் சொல்வதாய்ப் பரப்பப்படும் ஆன்மீகமும் அன்று. ஒரு வாழ்க்கை படைப்பாக மாறுவது அதன் ஜீவனால்தான். நினைவுகள், சம்பவங்கள் போன்றவற்றின் தொகுப்பை நாம் படைப்பாகச் சொல்ல முடியாது. வேண்டுமானால், சம்பவங்கள் அல்லது அனுபவங்கள் எனச் சொல்லலாம். நாளிதழ் பாணிக்கு மாற்றினால் அவை செய்திகளாகவும் ஆகலாம். அவை படைப்பாக மாறுவதற்கு அவற்றில் ஒருவித இரசவாதம் நிகழ வேண்டும்(அதை நாம் நிகழ்த்த முடியாது). அதைத்தான் உயிர் அல்லது ஜீவன் என்கிறோம். நீங்கள் அதை இன்னும் நுணுக்கமாய் ஆன்மீகம் என்கிறீர்கள். அதை அறிவுகொண்டு ஒருவரில் நிறுவிவிட முடியாது. அது ஒரு மேஜிக். நிகழ்வதற்கு முன்னும் பின்னும் அது சாதாரணம். நிகழும்போதே அது மேஜிக்.

ஒரு படைப்பை வாசித்துக் கொண்டிருக்கும் ஒருவன் திகைக்கும் கணத்தை ஆன்மீகம் எனச் சொல்ல மாட்டேன். அதை எழுதிக் கொண்டிருக்கும்போது எழுத்தாளனே திகைக்கும்படியான கணங்கள் அமையும். அப்படியான தருணங்களே ஆன்மீகம். எழுத்தாளனின் சிந்தனைப்பிடியை மீறி வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும். அவை அதற்கு முன்கணம் வரை அவன் நினைவில் இல்லாததாக இருக்கும்.

கதை, கவிதை, கட்டுரை என எப்படைப்பிலும் ஆன்மீகமான தருணங்கள் அமைவதுண்டு. இதுதான் எழுத வேண்டும் என முன்முடிவோடு அமர்பவர்களுக்கு ‘பண்டங்களே’ கிடைக்கும். திடும்மென ஒரு சம்பவத்தின் நினைவால் உந்தப்படும் ஒருவனை அச்சம்பவமே கூட்டிச் செல்லும்படியான அனுபவங்கள் அமையும். அங்குதான் ஆன்மீகமும் நிகழக் கூடும்.

நம்மை வெடுக்கென நம்மிலிருந்தே பிரித்து விலக்கிப் பித்தாக்குவதே ஆன்மீகம். இப்பித்தின் பரவசம் அதுகாறும் வாழ்ந்த வாழ்வில் பெறாத ஒன்றைப் பெற்றது போலவும், சமூகப்பரப்பிலிருந்து முழுக்க வெளியே தனியே நிற்கும் ரசவாதம் போலவும் தொனிக்கும். அப்பரவசத்தைச் சேகரிக்கவோ, தக்க வைக்கவோ இயலாது. அதனால்தான் அதை வரையறுக்கவும் தயங்குகிறேன்.

லா.ச.ரா ஒரு கதையில் சொல்வார், “திடீரென்று நேர்வதுதான் சிக்கறுப்பு, விடுதலை. விடுதலை திடீரென்றுதான் நேர முடியும்”. அவர் குறிப்பிடும் சிக்கறுப்பே ஆன்மீகம். தன்னில் ஆன்மீகத்தைக் கொண்டிருக்கும் படைப்புகளையே நாம் இலக்கியம் எனச்சொல்கிறோம். இது இலக்கியம் தொடர்பான கறார் வரையறை அன்று. வரையறுக்க முற்படும்போது அது கோட்பாடு எனும் சலிப்பாகி விட நேரும். மீண்டும் லா.ச.ராவின் ஒரு வரி. நஞ்சுக்குப் பழக்கிக் கொண்டால் நான் சிரஞ்சீவி. ஒரு சிறுகதையில் எதிர்ப்படும் ஆன்மீகப்பரவசத் தருணம் இது.

என் நண்பரின் அப்பா சொன்னது இது. அவரின் அப்பா தீவிர சன்மார்க்கி(வள்ளலார் பக்தர்). குடும்பத்தைத் துறந்து விட்டு ஒருநாள் வெளியேறி விடுகிறார். அதற்குப் பிறகு பல வருடங்கள் அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாது. ஒருசமயம், அவர் வள்ளலாரைப் போலவே வெள்ளுடை அணிந்து வடலூர் பக்கம் அலைந்து கொண்டிருக்கும் செய்தி கிடைக்கிறது. குடும்பத்தினர் அவரைச் சந்திக்க விரும்புவதில்லை. அறுபதாவது வயதில் வீட்டுக்குத் திரும்பும் அவர் வெள்ளுடைகளைத் தீயிலிட்டுக் கொளுத்தி விடுகிறார். ஒருநாளைக்கு பத்து சிகரெட்டுகள் பிடிக்கிறார். மாலையில் குடிக்காமல் அவர் தூங்குவதில்லை. மட்டன் சிக்கன் இல்லாத உணவுகளை பத்தியம் போலப் பாவிக்கிறார். இறக்கும்போது தன்னை அப்படியே விட்டுவிடக் கேட்டுக் கொள்கிறார். இறுதிவரை அவரிடம் யாராலும் பேச முடியவில்லை. அவர் எதனால் அப்படி வாழ்ந்தார் என ஆராயும்போது ’அவர் கோணம்’, ’நம் கோணம்’, ‘சமூகக்கோணம்’ போன்றவை வம்படியாய் நுழையும். அவ்வாழ்க்கையில் நம்மை இணைத்துப் பார்க்கும் கற்பனையில்(புனைவு) எக்கோணங்களுக்குள்ளும் அடைபடாத பரவசம் புலப்பட்டு மறையும். எனில், அக்கற்பனையே படைப்பு; அப்பரவசமே ஆன்மீகம்.

 

முருகவேலன்,

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2022 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.