Jeyamohan's Blog, page 813

March 12, 2022

எஸ்.வி.ராஜதுரை வழக்கின் முடிவு

எஸ்.வி.ராஜதுரை கடிதம்

எஸ்.வி.ராஜதுரையின் கடிதமும் பதிலும்

எஸ்.வி.ராஜதுரை கடிதம்

எஸ்.வி.ராஜதுரை வழக்கு

எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….

எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு…

பழைய கதைகள் சிலவற்றைச் சொல்லிவிட்டு தொடங்கவேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டுகளில் முற்றிலும் புதிய ஒரு தலைமுறை வாசிப்புக்கு வந்துவிட்டது. என் புதுவாசகர் சந்திப்புகளுக்கும் விஷ்ணுபுரம் விழாவுக்கும் வருபவர்கள் பலர் அப்போது ஆரம்பப்பள்ளியில் இருந்திருப்பார்கள்.

2012 ல் நான் இந்தியச் சிந்தனையில் ஆய்வுக்கு என வந்தமையும் நிதியுதவிகள் அளிக்கும் பங்கைப் பற்றி நீண்ட கட்டுரைத்தொடர் ஒன்றை எழுதினேன். இன்று அதைப்பற்றிய என் கருத்து மேலும் கூர்மையடைந்துள்ளது. மேலைநாடுகளின் ஆதிக்க ஆற்றல் இருப்பது அவர்களின் பல்கலைக் கழகங்களில்தான். அவை கீழைநாடுகளால் இன்னும் ஒருநூறாண்டுக்காவது வெல்லப்பட இயலாதவை. அவை கீழைநாடுகள் எப்படி, எதைச் சிந்திக்கவேண்டும் என வடிவமைக்கின்றன.

உடனே அவை இங்குள்ள வலதுசாரிகளை கட்டுப்படுத்துகின்றன, இடதுசாரிகள் அவற்றை எதிர்க்கிறார்கள் என ஓர் எளிய ‘டெம்ப்ளேட்’ புரிதலை தொடக்கநிலை வாசகர்கள் அடைவார்கள். அது பொய். இங்குள்ள இடதுசாரிகளின் சிந்தனைகளிலேயே முக்கியமான பகுதிகளை அவைதான் வடிவமைக்கின்றன. மறுபக்கம் க்ரியா போன்ற பதிப்பகங்களே அந்நிதியில் நடந்தவைதான்.

அதற்கு அவை கல்வியாளர்கள், சமூகச்செயல்பாட்டாளர்கள் இருசாராரையும் பயன்படுத்திக் கொள்கின்றன. அவ்விரு தரப்பையும் கவர அவை நிதிக்கொடைகளை கருவியாக்கிக் கொள்கின்றன. உடனே, இங்கே பேசுபவர்கள் ,செயல்படுபவர்கள் அனைவரும் பணம் பெற்றுக்கொண்டு பேசுபவர்கள் என நான் சொல்கிறேன் என்று பொருள் வரவில்லை. இதெல்லாம் செயல்படும் விதங்கள் மிகச்சிக்கலானவை.

இந்தியக் கல்வியாளர்கள் எண்ணி ஏங்கும் வாய்ப்புகள் என்பவை மேலைநாட்டு கல்விநிலையங்களில் ஆசிரியர் பணிதான். துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்ல அதுவே நம்பகமான எளிய வழி. இங்குள்ள பல்கலைகள், தனியார் ஆய்வுநிறுவனங்கள் ஆகியவற்றுக்கு  மேலைநாட்டுப் பல்கலைகள் நிதியளிக்கின்றன. தனிப்பட்ட முறையில் ஆய்வாளர்களுக்கும், ஆய்வு அமைப்புகளுக்கும் நிதி வருகிறது. உள்ளூர் நிறுவனங்களுக்கு வரும் நிதி பல்கலைகழகங்களுக்கு அளிக்கப்படுகிறது.

இந்நிதியால் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கூட்டங்களும் ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. மேலைநாட்டில் பயின்றவர்கள் அவற்றை வழிநடத்துகிறார்கள். அவற்றினூடாக நாம் சிந்திக்கவேண்டிய கோணம், அடிப்படையான ‘டெம்ப்ளேட்’டுகள் நம் சிந்தனைக்குள் நம்மையறியாமலேயே பதிக்கப்படுகின்றன. இச்செயல்களிலுள்ள மாபெரும் வலையை உணர்ந்தவர் சிலர். மிகப்பெரும்பாலானவர்கள் அதை ‘நவீனப் பார்வை’ என எடுத்துக்கொள்கிறார்கள். அதற்குரிய எல்லா அரசியல் தர்க்கங்களும், சமூகத்தர்க்கங்களும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. மிகமிக விரிவாக. தனிப்பட்ட நபர்கள் அதை கடப்பது கடினம்.

நான் சொல்லவந்தது நாம் சிந்திக்கவேண்டிய வகை, வழி எல்லாம் வெளியே இருந்து வரும் நிதியால் வடிவமைக்கப் படுகின்றன என்பது மட்டும்தான். பொதுசூழலில் புழங்கும் பல அடிப்படை சிந்தனைப்போக்குகள் இப்படி உருவானவை. அவற்றை எதிர்த்து நிற்பது கடினம்.ஓர் இடதுசாரிக்கு அவருடைய அரசியலுக்கு உதவும் ஒரு சிந்தனைப்போக்கு கையில் கிடைத்தால் அவர் அதை நம்பி சொல்லிக்கொண்டிருப்பார். அது அமெரிக்காவால், ஐரோப்பாவால் உருவாக்கப்பட்டது என்பதை அவர் அறியமாட்டார், அறிந்தாலும் பொருட்படுத்த மாட்டார்.

இன்றும் நம் கல்வித்துறையில் மேலைநாட்டுச் சிந்தனைப்போக்கின் பேராற்றலுக்கு எதிராக எதைப்பற்றிப் பேசுவதும் ஆபத்தானதே. அப்படிப்பேசுபவர்கள் எங்கும் எந்நிலையிலும் கவனம் பெறாமல் அப்படியே மறைந்துவிடுவார்கள்.

இடதுசாரிகளை மட்டும் சொல்லவில்லை. சென்ற பத்தாண்டுகளாகக் கண்டு வருவதென்ன என்றால் வலதுசாரி- இந்துத்துவ அரசியலைச் சார்ந்தவர்களும் அதே நிதியுதவி வலைக்குள், அதே கருத்தியல் வளையத்திற்குள் சென்றிருக்கிறார்கள் என்பதைத்தான். இன்றைய டெம்ப்ளேட்டுகள் பல. இரண்டு முக்கியமானவை

ஒன்று, அதீத வைதிகப் பார்வை. எந்த பன்முகத்தன்மையையையும் ஏற்காத மூர்க்கமான பழமைவாதம். இரண்டு, வட்டாரவாதம். அதாவது, இந்தியாவிலுள்ள இந்து மதமே வட்டாரத்துக்கு ஒன்று,மையமே இல்லை என்னும் பார்வை. தமிழ்ச்சைவம் வேறு கன்னட சைவம் வேறு,அத்வைதம் வேறு நாராயணகுருவின் அத்வைதம் வேறு, தாந்த்ரீகம் வேறு வங்காள தாந்த்ரீகம் வேறு என்கிறார்கள். இந்தியவியல் ஆய்வாளர்களின் பார்வைகள் சுவிட்ச் போட்டதுபோல இந்தியா முழுக்க ஒரேபோல வெறும் பத்தாண்டுகளுக்குள் மாறிவிட்டன. இரண்டு எல்லைகள், ஆனால் ஒரே டெம்ப்ளேட். ஒரேவகையான சொற்கள், ஒரேவகை உணர்ச்சிகள். இரண்டுக்குமே ஒரே வகை நிதித்தொடர்பு.

ஒரு சிந்தனைச்சூழலில் இந்த கூறை நாம் கவனிக்கவேண்டும் என்று நான் சொன்னேன். சுதந்திரசிந்தனைக்கு இந்த கவனிப்பு அவசியமானது. இதை இன்றைய சூழலில் முற்றிலும் சுதந்திரமாக, முழுக்கமுழுக்க வாசகர் பலத்தால்  நின்றிருக்கும் என்னைப்போன்ற ஒருவனே சொல்லமுடியும். ஒற்றைச்சொல்லில் ‘காசுவாங்கிட்டு பேசுறான்’ என்பதல்ல என் தரப்பு. இந்த வலையின் மேலாதிக்கத்தையே சுட்டிக்காட்டினேன். ( கட்டுரைகள் அன்னியநிதி ஒரு வரைபடம்.)

அதை நான் எழுதியபோது எஸ்.வி.ராஜதுரையின் பெயரை சுட்டியிருந்தேன். ஏனென்றால் ராஜதுரையும் வ.கீதாவும் இணைந்து எழுதிய பெரியார் பற்றிய நூலில் நிதிக்கொடை பற்றிய நன்றிக் குறிப்பு இருந்தது. அவர் பெரியாரியம் நோக்கித் திரும்பிய போது அவருடைய பழைய தீவிரஇடதுசாரித் தோழர்கள் அதைச் சுட்டிக்காட்டி எழுதிய பல கட்டுரைகள் வெளியாயின.அவற்றை எல்லாம் நானே விரிவாக பின்னர் வந்த கட்டுரைகளில் சுட்டி கொடுத்திருக்கிறேன்.

(இன்று பெரியாரியம் என்று புழங்கும் மொத்த பார்வையையும் உருவாக்கியது எஸ்.வி.ராஜதுரை- வ.கீதா எழுதிய அந்நூல்தான். அது ஆயிரம் குட்டி போட்டிருப்பதை புத்தகக் கண்காட்சிகளில் காணலாம். அதை எதிர்த்த தோழர்களே பின்னர் பெரியாரியம் பேச ஆரம்பித்தனர் என்பது ஊகிக்கக்கூடிய நகர்வே.)

என் அக்கருத்துக்கு எதிராக எஸ்.வி.ராஜதுரை வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பினார். அது ஒரு ஆபாச வசை அறிவிக்கை. அதை ஒட்டி என் மேல் அவர் அவதூறு வழக்கு தொடுத்தார். ஊட்டி நீதிமன்றத்தில் அவ்வழக்கு சென்ற பத்து ஆண்டுகளாக நடைபெற்றது. அவ்வழக்கை எஸ்.வி.ராஜதுரை திரும்பப்பெற்றிருக்கிறார். என்மேல் குற்றம் பதியப்படாமலேயே, அதாவது வழக்கு தொடங்காமலேயே வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது.

என்ன நடந்தது? நானறிந்தது இதுவே. முதலில் எஸ்.வி.ராஜதுரை இவ்வழக்கை தொடுத்து நடத்த எண்ணவில்லை. அதற்கான நிதியோ நேரமோ உடல்நலமோ அவருக்கு இல்லை. அந்த வழக்கறிஞர் ஓர் ஆரம்பகட்ட வழக்கறிஞர். அவருடைய வற்புறுத்தலால் வக்காலத்தில் எஸ்.வி.ராஜதுரை கையெழுத்து போட்டிருக்கிறார். அப்போது ஒரு நீதிமன்ற வழக்கு எப்படி நடக்கும் என்றெல்லாம் அவருக்குச் சொல்லப்படவில்லை, வழக்கு தொடுத்த செய்தியை அந்த வழக்கறிஞர் ஜூனியர் விகடனுக்கு செய்திகொடுத்து விளம்பரம் தேடிக்கொண்டார். அவருடைய நோக்கம் அதுதான்.

2012ல் வழக்கு தொடங்கியதுமே நான் நீதிமன்றம் சென்று வழக்கை நான் நடத்துவதாகச் சொன்னேன். உடனே எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் என்னை குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என சொன்னார். என் வழக்கறிஞர் அதை எதிர்த்தார். எஸ்.வி.ராஜதுரை நேரில் நீதிமன்றம் வந்து என்மேல் குற்றச்சாட்டை பதிவுசெய்யவேண்டும், அதன்பின்னரே வழக்கு ஆரம்பிக்கும் என்றார் எனக்காக ஆஜரான நண்பர் கிருஷ்ணன். ஏனென்றால் எஸ்.வி.ராஜதுரை என்ற பெயரில் எழுதுபவர்தான் மனோகரன் என்பதே முதலில் நீதிமன்றத்தில் நிறுவப்படவேண்டும்.

எஸ்.வி.ராஜதுரை அதை எதிர்பார்க்கவில்லை .இப்போது வழக்கை வாபஸ் பெறும்வரை அவர் நீதிமன்றம் வருவதை தவிர்த்தே வந்திருக்கிறார். பத்தாண்டுகளில் மாதம்தோறும் நீதிமன்றம் அவருக்கு அழைப்பு அனுப்பியது. கடுமையான நீதிமன்றக் கண்டனம் வந்தபின் ஒரே ஒருமுறை அவர் நீதிமன்றம் வந்தார். ஆனால் போதிய ஆவணங்கள் இல்லை. நீதிமன்ற நடைமுறையை உடல்நலம் குன்றிய அவரால் தாளமுடியவில்லை. அதன்பின் நீதிமன்றமே வரவில்லை. இப்போது வழக்கை திரும்பப்பெற்றுவிட்டார். ஆகவே என்மேல் வழக்கு நீதிமன்றத்தில் புனையப்படவே இல்லை. வெறும் குற்றச்சாட்டுடன் வழக்கு அப்படியே நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகியிருக்கிறது

எஸ்.வி.ராஜதுரை மேல் பெருமதிப்பு கொண்டவர் என் நண்பர் நிர்மால்யா (மணி) அவர் எஸ்.வி.ராஜதுரை உடல்நலம் குன்றியிருக்கிறார் என்றும், சமாதானம் பேசி வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதுதான் நல்லது என்றும் என்னிடம் சொன்னார். ”நாம் நேரில் போய் அவரிடம் பேசுவோம். அருகே தான் இருக்கிறார். ஒரு மன்னிப்பு கேட்பதில் நீங்கள் குறைந்துவிட மாட்டீர்கள்” என்றார்

நான் சொன்னேன். ”எஸ்.வி.ராஜதுரை என் ஆசிரியர். அவர் நூல்களை படித்து உருவானவன் நான். அவ்வாறன்றி ஒரு முறைகூட அவரைப்பற்றி நான் எழுதியதில்லை. நான் சொன்னது இங்குள்ள பொதுப்போக்கு பற்றி. அவருடைய பணிகளை ஒட்டுமொத்தமாக நான் அடையாளப்படுத்தவில்லை. அவர் அதை அப்படி தீவிரமாக எடுத்துக்கொள்வார் என்றும் அதைச் சொல்லும்போது எனக்கு தெரியாது. அது ஓரு பொதுவெளி உண்மை என்றே நினைத்தேன். அவரைச் சந்தித்து மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தடையும் இல்லை. அவர் வருந்தும்படி நடந்ததில் எனக்கு வருத்தம்தான்” என்றேன்

நிர்மால்யா எஸ்.வி.ராஜதுரையிடம் பேசிவிட்டு என்னிடம் சொன்னார். ”எஸ்.வி.ராஜதுரை நெகிழ்ந்திட்டார். நான் அவனை சந்திச்சா கட்டிப்புடிச்சுக்குவேன். அவன் நம்ம காலத்தோட பெரிய எழுத்தாளன்ன்னு  சொன்னார்” என்றார்.

நான் கோவை ஞானியை ஃபோனில் அழைத்து எஸ்.வி.ராஜதுரையை சந்திக்கப்போவதைச் சொன்னேன். ”அப்டியே காலைத் தொட்டு கும்பிடுங்க. உங்க மரபிலே அப்டித்தானே செய்வீங்க. எஸ்.வி.ஆரோட வாழ்த்து உங்களுக்கு வேணும்” என்றார் ஞானி. ஏற்கனவே எஸ்.வி.ஆரை நான் புண்படுத்திவிட்டேன் என என்னை ஞானி கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். (ஞானி நூல்)

ஆனால் எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நான் எழுத்துபூர்வமாக மன்னிப்புக்கடிதம் தரவேண்டும், அதையும் அந்த வழக்கறிஞரிடம் தரவேண்டும், அதில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கவேண்டும் என்று அவர் முடிவெடுப்பார் என்றெல்லாம் நிர்மால்யாவிடம் சொன்னார். அவரே எஸ்.வி.ராஜதுரையிடமும் பேசி விலகச் செய்தார். நான் வழக்கு பற்றிய ‘பயத்தால்’ சமாதானம் பேச வருவதாக எஸ்.வி.ராஜதுரையை நம்பவைத்தார்,.

என் வழக்கறிஞர் விஸ்வநாதன் ஊட்டியின் முதன்மை வழக்கறிஞர். திருமாவளவன் மீது ஊட்டியில் நடந்த அவதூறுவழக்கு போன்றவற்றை திறம்பட நடத்தியவர். அவருக்கு துணையாக வழக்கை கவனித்துக்கொண்டவர் வழக்கறிஞர் ஈரோடு கிருஷ்ணன். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்க்ளாகிய நண்பர்களும் அவ்வழக்கை கவனித்துக்கொண்டிருந்தனர். அது அவர்களுக்கு பொருட்படுத்தும்படியான ஒரு வழக்கே அல்ல.

இந்த வழக்கில் ஆவணங்கள் எவையுமே நீதிமன்றம் முன்னால் தாக்கல் செய்யப்படவில்லை. எஸ்.வி.ராஜதுரை சார்பில் தாக்கல்செய்யப்படவேண்டிய ஆவணங்கள் என்னுடைய இணையப்பதிவுகள். அவற்றை நீதிமன்றம் ஆவணங்களாக கொள்ள நிறைய சான்றுகள் வேண்டும். ஆனால் என் சார்பில் எஸ்.வி.ராஜதுரை நிதி வாங்கினார் என வெவ்வேறு நபர்களால் அச்சில் எழுதப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தன. அவரே பதிவு செய்த WAC ஆவணமும் அதில் உண்டு. அவை அனைத்துமே நீதிமன்றத்தில் பதிவாகும். என்றென்றைக்குமான நீதிமன்ற ஆவணமாக இருக்கும். அதை சுட்டி எவர் வேண்டுமென்றாலும் மேலதிக வழக்கை தொடுக்கமுடியும். வ.கீதா நீதிமன்றம் வரவேண்டியிருக்கும். பல்வேறு தொடர்புள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்படுவார்கள்.

மேலும் எஸ்.வி.ராஜதுரை அவர் வாங்கிய நிதியின் கணக்கை, அவற்றை அரசுகளுக்கு தெரியப்படுத்தியமைக்கான சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அனைத்துக்கும் மேலாக அவருடைய வழக்கறிஞர் அறிவிக்கை நீதிமன்றத்தில் பதிவானால் மறுகணமே அது அவமதிப்பு வழக்குக்கு ஆதாரமாக ஆகிவிடும்– அது அப்படிப்பட்ட லட்சணம் கொண்டது. அதில் இந்திய அரசியல்சட்டப்படி சாதி இழிவு படுத்தல் போன்ற தண்டனைக்குரிய குற்றங்களே உள்ளன. (பார்க்க எஸ்.வி.ராஜதுரைக்கு அன்புடன்….)ஆகவே நீதிமன்றத்தில் வழக்கின் முதல் கட்டமான ஆவணப்பதிவே நடைபெறவில்லை. அவரது வழக்கறிஞர் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை.

எஸ்.வி.ராஜதுரைக்கு இந்த வழக்கின் உண்மைச்சூழலைச் சொல்ல அணுக்கமானவர்கள் இல்லை. என்னை சிக்கவைக்கும் நோக்கத்துடன் வயதான அவரை தூண்டிவிடவே அவரது ‘நண்பர்கள்’ முயன்றனர். ஆனால் குறைந்தபட்சம் நீதிமன்றம் வரை காரோட்டி வரக்கூட அவருக்கு எவருமில்லை. நேர்மாறாக என்னிடம் இந்த வழக்கின் உள்ளீடற்ற தன்மையை விளக்கிய என் நண்பர் வழக்கறிஞர்  கிருஷ்ணன் “இது ஒரு கேஸே இல்லை‘சார். ஆனா, அப்பப்ப எஸ்.வி.ராஜதுரை மேற்கோள் சொல்லிட்டே இருக்கீங்க. அப்டி அவர் உங்களுக்கு முக்கியம்னா பேசாம மன்னிப்பு கேட்டுடுங்க” என்றே அறிவுறுத்தினர். ஆனால் எஸ்.வி.ராஜதுரை தரப்பு வழக்கறிஞருக்கு உண்மைச்சூழல் புரியவில்லை.

ஆகவே நான் வழக்கை அதன்போக்கில் விட்டுவிட்டேன். பின்னர் பவா செல்லத்துரை ஒரு முறை சொன்னார்.  “ஜெயமோகன் நீங்க நிபந்தனையில்லாம எஸ்.வி.ஆர் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கணும். நீங்க சொல்றது சரியா இல்லியாங்கிறதே பேச்சு இல்ல. அவர் நம் காலகட்டத்தோட நாயகன். நாம அவர் காலடியிலே இருந்து வந்தவங்க.”

நான் சொன்னேன் “அதிலே மாற்றே இல்லை. எனக்கு ஒரு தயக்கமும் இல்லை” பவா சொன்னார் “எஸ்.வி.ராஜதுரை இப்ப இங்கதான் இருக்கார். நான் அவர் கிட்ட சொன்னேன். அவர் உங்கமேலே பெரிய மரியாதை வச்சிருக்கார். நீங்க சந்திக்க நான் ஏற்பாடு பண்றேன்” ஆனால் பின்னர் பவா சொன்னார், “அதெல்லாம் நடக்காது. அந்த வக்கீல் ரொம்ப பிடிவாதமா இருக்கார். அவர் முன்னாடி நீங்க மன்னிப்பு கேக்கணும்னு சொல்றார்…”

நான் அவ்வழக்கை விட்டு மனம்நகர்ந்துவிட்டேன். வெண்முரசு எழுத ஆரம்பித்தபின் இவை எவையுமே என் அகத்தில் இல்லை. வழக்கு இழுத்துக்கொண்டே இருந்தது. எஸ்.வி.ராஜதுரை நீதிமன்றம் வருவதை முற்றாக தவிர்த்தார். பலமுறை நீதிபதிகள் சீற்றத்துடன் அதைச் சுட்டிக்காட்டி  கண்டித்துச் சொல்லியிருக்கிறார்கள். என் வழக்கறிஞர்கள் அவர் நீதிமன்றம் வராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியே வழக்கு தள்ளுபடி செய்யும்படிக் கோரலாம் என்றனர். வேண்டாம் என்று நான் சொன்னேன். அவர் வழக்கை நடத்தட்டும் என்றேன். கடைசிவரை நாங்கள் அப்படிக் கோரவில்லை.

எஸ்.வி.ராஜதுரை தன் வீட்டில் இருந்தே வாக்குமூலம் அளிக்க அனுமதிக்குமாறு கோரினார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்றார். ஆனால் அதே வாரம் அவர் மதுரையில் தீக்கதிர் அலுவலக நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அச்செய்தி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே நீதிபதி அனுமதி மறுத்துவிட்டார்.

பின்னர் கோவிட் காலத்தில் இணையம் வழியாக வாக்குமூலம் அளிப்பதாகச் சொன்னார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என என் வழக்கறிஞர்கள் சொன்னார்கள். ஏனென்றால் எஸ்.வி.ராஜதுரை அளிப்பது சாட்சியம் அல்ல, அது முதல் குற்றச்சாட்டு வாக்குமூலம். அதில் அப்படி ஒரு மனிதரை நீதிமன்றம் நேரில் பார்ப்பது அவசியம். ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை. கோவிட் சூழலில் அவரை நீதிமன்றம் வரவழைக்கவேண்டாம், அவர் இணையத்திலேயே வாக்குமூலம் வழங்கட்டும் என்றேன்.

அடுத்த கட்டம் ஆவணப்பதிவுதான். இச்சூழலில் எஸ்.வி.ராஜதுரை வழக்கை திரும்பப்பெற்றுவிட்டார் என்னும் செய்தியை என் வழக்கறிஞர் எனக்கு தெரிவித்தார். இம்முடிவை அவர்கள் எடுத்ததும், நீதிமன்றத்திற்கு தெரிவித்து வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்ததும் நீதிமன்ற அறிவிப்பின் வழியாகவே 10-3-2022 அன்று எங்களுக்குத் தெரியவந்தது. இதுதான் நிகழ்ந்ததன் சுருக்கம்.

இதில் கவனிக்கவேண்டியது ஒன்றே. பொதுவாக எதற்கெடுத்தாலும் மானநஷ்ட வழக்கு என்று பேசுவது ஒரு வழக்கமாக உள்ளது. எந்த வழக்கிலும் வழக்கு தொடுத்தவரே அலையவேண்டும். அவர்தான் பணம் செலவிடவேண்டும். கடைசியில் தண்டனை சில ஆயிரம் ரூபாய்தான். ஆனால் வழக்கு தொடுப்பவர் சில லட்சங்கள் வரை செலவிடவேண்டியிருக்கும். சில ஆண்டுகளை இழக்கவேண்டியிருக்கும். ஏனென்றால் அவர்தான் குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட நான் இரண்டு முறை ஊட்டி நீதிமன்றம் சென்றேன். அதுவும்கூட என் விருப்பப்படித்தான். ஒரே ஒருமுறை நான் சென்றால் போதுமானது. அதன்பின் என் வழக்கறிஞர்கள் செல்வார்கள். ஆனால் எஸ்.வி.ராஜதுரை அழைக்கும் போதெல்லாம் வந்தாகவேண்டும். விசாரணைக்கு உட்படவேண்டும். சான்றுகளை கொண்டுவரவேண்டும்.

இவ்வகை வழக்குகளில் அலையவைக்கலாம் என்பது மட்டுமே ஒரே லாபம். ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்டவர் ஒன்றை சொன்னார் என நிரூபித்தால் மட்டும் போதாது, அதனால் இழப்பு ஏற்பட்டது என நிரூபிக்கவேண்டும். அதைவிட அவ்விழப்பை உண்டுபண்ணும் நோக்கம் குற்றம்சாட்டப்பட்டவருக்கு இருந்தது என நிரூபிக்கவேண்டும். வழக்குகள் இல்லாத சிறிய வழக்கறிஞர்களே இவ்வகை வழக்குகளை போட ஊக்குவிப்பார்கள். அல்லது வேண்டுமென்றே தொல்லைகொடுப்பதற்காக அமைப்புகளைக்கொண்டு தனிநபர் மேல் போடுவார்கள். ஒன்றும் அறியாத நண்பர்கள் ‘வழக்குபோடுங்க தோழர்’ என ஊக்குவிப்பார்கள்.

இவ்வகை வழக்குகளில் அனைவரும் உடனே செய்வது இன்னொரு வழக்கை குற்றம்சாட்டியவர் மேல் தொடுப்பதுதான். அதற்கான எல்லா காரணங்களும், ஆதாரங்களும் இருக்கும். எஸ்.வி.ராஜதுரை மேல் நாகர்கோயில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க என்னிடம் ஆலோசனை சொன்னார்கள். அதற்கு சாதகமான மனநிலைக்கும் வந்தேன். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் பின்வாங்கிவிட்டேன். இது எப்படியானாலும் ஒரு வரலாற்று நிகழ்வு. நான் அவர்மேல் வழக்கு தொடுத்தேன் என வரவேண்டாம். ஏனென்றால் அவர் சாமானியர் அல்ல, என் பெருமதிப்புக்குரிய எஸ்.வி.ராஜதுரை. இன்னொருவர் என்றால் விட்டிருக்க மாட்டேன். (இப்போதுகூட  என் மேல் வழக்குபோட்டு இழப்பு ஏற்படுத்தியமைக்காக எஸ்.வி.ராஜதுரைமேல் நான் சிவில் வழக்கு தொடுக்கலாம். உறுதியாக வெல்லும் வழக்கு அது)

எஸ்.வி.ராஜதுரையின் வழக்கறிஞர் எனக்கு அனுப்பிய வழக்கறிஞர் அறிவிக்கையை வைத்து வழக்கு தொடுக்கலாம் என பல வழக்கறிஞர்கள் சொன்னார்கள் (படித்துப் பாருங்கள்:எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ்) அது ஒரு அப்பட்டமான வசை, மற்றும் அவதூறு. உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ஒருவர் அவரே வழக்கை இலவசமாக நடத்துவதாகச் சொன்னார். எனக்குச் சம்பந்தமே இல்லாதவர் அவர். அந்த வழக்கறிஞர் அறிவிக்கையின் மொழிநடை வழக்கறிஞர் சமூகத்துக்கே அவமானம் என்றார்.வெகுவாகச் சீண்டப்பட்டிருந்தார். சாதி,மதச் சீண்டல்கள் கொண்ட நேரடியான எழுத்துவடிவக் குற்றம் அது. மிக எளிதில் வெல்லும் வழக்கு.

நான் விசாரித்தபோது அந்த வழக்கறிஞர் அறிவிக்கையில் கையெழுத்திட்டவர் எஸ்.வி.ராஜதுரை என்பதனால் அவர்தான் முதன்மைக் குற்றவாளியாக சேர்க்கப்படவேண்டும் என தெரியவந்தது. அதைச் செய்யவேண்டாம் என உறுதியாகச் சொல்லிவிட்டேன். அற்புதமான நடையுடன் மகத்தான நூல்கள் சிலவற்றை எழுதிய ஒரு பேரறிஞரை அந்த ஆபாசமான வசைக்கடிதம் எழுதியவர் என நீதிமன்றத்தில் நான் பதிவுசெய்யக்கூடாது. அது அநீதி. அது அல்ல அவர் வரலாற்றில் நின்றிருக்கவேண்டிய முகம்.

இப்போது வழக்கு முடிந்துவிட்டது. நான் அஞ்சினேன் என எந்த வழக்கறிஞரும் இனி சொல்ல மாட்டார். ஆகவே இப்போது சொல்கிறேன். எஸ்.வி.ஆர் சார், நான் உங்கள் முன் எளியவன். உங்கள் சொற்களில் இருந்து கற்றுக்கொண்டவன். நான் எழுதியபோது அது உங்களை இப்படி பாதிக்கும் என உணர்ந்திருக்கவில்லை. கருத்தியல் விவாதம் என்றே எண்ணினேன். க.நா.சு உள்ளிட்ட பலபேர் மீது நீங்களும் அதைப்போல கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளீர்களே என்றே நினைத்தேன். ஆனால் எதன்பொருட்டென்றாலும் ஆசிரியர் நிலையில் உள்ள ஒருவரின் உளம் வருந்தச் செய்தது பெரும்பிழை. அதன்பொருட்டு மன்னிப்பு கோருகிறேன்.

சுந்தர ராமசாமி உட்பட எல்லா ஆசிரியர்களிடமும் ஏதோ சில  மனவருத்தங்களை ஈட்டியிருக்கிறேன். என் மரபுப்படி என் தலை உங்கள் பாதங்களில் பட நிலம்படிய வணங்குகிறேன். மன்னித்துவிடுங்கள்.

ஜெ

எஸ்.வி.ஆர் சொல்லும் ‘சிக்கல்கள்’ என்ன?

எஸ்.வி.ஆர்,விடியல் சிவா, புதிய ஜனநாயகம்

எஸ்.வி.ராஜதுரை- கடிதங்கள்

எஸ்.வி.ராஜதுரை-கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2022 10:35

பத்துலட்சம் காலடிகள் வாசிப்பு

குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே அதிகமாக வாசிக்கப்பட்ட ஒரு கதை தற்போதைக்கு ‘பத்து லட்சம் காலடிகள்’ ஆக தான் இருக்க முடியும். அந்தக் கதையிலிருந்த சர்ச்சையான வரிகளைப் பற்றி பலர் பேசியிருக்கின்றனர். ஆனால், அதன் அழகியல் சார்ந்த, அதனுடைய போதாமைகள் குறித்த விமர்சனங்கள் குறைவாகவே இருக்கின்றன.

உண்மையில் இந்தக் கதை ஒரு துப்பறியும் கதை போல தோன்றினாலும், அது இந்தக் கதையை சுவாரசியமாக சொல்வதற்காக கையாளப்பட்ட ஒரு யுத்தி மட்டுமே. உண்மையில் அதன் மையச் சரடு, ‘பத்தேமாரி’ கப்பலின் கட்டுமானமும் ‘மாப்பிளா’ சமூகத்தை பற்றிய சித்திரமும் தான்.

பத்தேமாரி கப்பல் பத்து டன் எடை கொண்ட அலையை வெறும் ஆறு இன்ச் தடிமனுள்ள ஒரு பலகையில் எதிர்கொள்கிறது என்றால், அதற்கு காரணம் அங்கே ஒரு கணக்கில் அடுக்கப்பட்ட மரக்கால்கள் தான் அது அறிவியல் சூத்திரம் அல்ல. அது ஒரு அனுபவ அறிவால் கட்டப்படுவது. அது பிற சமூகத்திற்கு புரியாத ஒன்று. ஆனால், அந்தக் கணக்கின் படி அந்தக் கால்களை அடுக்கவில்லை என்றால், அந்த மொத்தக் கப்பலும் மூழ்கி விடும்.

அது போலவே தான், மாப்பிளா சமூகமும், அதுவும் அந்தக் கப்பலை போன்றே ஒரு பலமான, பிரம்மாண்டமான அமைப்பு. அதன் உறுதியான நெறிகள் என்கிற பல தலைமுறைகளாக அடுக்கப்பட்ட கால்களில் தான் அந்தச் சமூகம் தொடர்ந்து நிற்கிறது. ஒரு வேளை அந்தக் கணக்கில் சிறு பிசகு ஏற்பட்டாலும் அந்த மொத்த சமூகமும் மூழ்கி விடும். அதனை காப்பதற்காகவே அந்த அப்துல்லா சாகிப்பின் மகன் முன்னோர்களின் சம்மதத்துடன் அரபிக்கடலில் புதைக்கப்படுகிறான்.

இது கிட்டத்தட்ட மணி அடித்த பசுவிற்காக மகனை தேரிலேற்றி கொன்ற ஒரு புராதான கதை தான். ஆனால், அதனை ஆசிரியர் சொல்கிற முறையில் தான் இந்தக் கதை இன்னுமொரு சிறந்த கதையாக இருக்கிறது.

இந்தக் கதையை பற்றி சர்ச்சைகள் உருவாவதற்கான காரணம், இந்தக் கதையில் வருகிற ‘சாதி படி நிலை குறைய குறைய அழகு குறையும்’ என்கிற ஒரு வரி தான். ஆனால், அந்த வார்த்தைகளை யார் சொல்கிறார்? அந்த கதாப்பாத்திரத்தின் அமைப்பு, போன்றவற்றை பார்ப்பது மிக முக்கியமான ஒன்று.

இந்தக் கொரானா காலத்தில் அமேசான் பிரைம் ஒரு மாத ட்ரையலில் மலையாளப் படங்களை பார்த்தவர்கள் ஒன்றை உணர்ந்திருக்கக் கூடும் அதில் சாதிப் பெயரை வைத்து ஒருவரை கேலி செய்வதும் தீண்டாமையை பின்பற்றுவதும் இன்றும் மிகச் சாதாரணமாக நடக்கிற ஒன்று அதைத் தான் அந்தக் கதாப்பாத்திரம் பேசுகிறது. மேலும் அந்த ஔச்சப்பனுக்கு ஐஸ்வர்யாராய் அழகாக தெரிகிறாள் அதனால் வெள்ளைத் தோல் அழகாக தெரிகிறது. அதுவே ஒரு சிலுக்கு ரசிகனுக்கு அழகை பற்றிய மதிப்பீடு மாறவே செய்யும் அதனால், ஔச்சப்பனுடைய கருத்தை எழுத்தாளனுடைய கருத்தாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.

அப்படி, கதாப்பாத்திரங்களின் கருத்தை ஆசிரியரின் கருத்தாக எடுத்துக் கொண்டால், ஒரு கதையில் அனைத்து பாத்திரங்களும் ஒரே குரலில் பேசக்கூடிய ஒரே ஊரில் வசிக்க கூடிய ஒரு குமாஸ்தாவாக மட்டுமே இருக்க முடியும். பல தரப்பட்ட பாத்திரங்களை ஒரு எழுத்தாளனால் உருவாக்கவே முடியாது.

இந்தக் கதையில் அப்துல்லா சாகிப்பின் நீதி, அநீதியாக தோன்றுகிறது. அது பத்தேமாரி கப்பலை போன்று நினைவு பொக்கிஷமாக நிறுத்திக் கொள்ளலாம், மற்றபடி இன்றைய நடைமுறையில் அதனை பயன்படுத்த முடியாது. கூடாது. ஏனென்றால் அது ஒரு அனுபவ அறிவு மட்டுமே, தர்க்க (அறிவியல்) ரீதியான ஒரு தீர்வு அல்ல. இந்த சிந்தனைகள் மேற்கத்திய கல்வி முறையால் உருவானது தான். ஆனால், அது தான் இன்றைக்கு சரியானதாக இருக்க முடியும்.

சபரிராஜ் பேச்சிமுத்து

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2022 10:33

பெருங்கனவுகள் சிதைதல்

இப்போதெல்லாம் 600 + பக்கப் புத்தகங் களைப் பார்த்தால் ஒரு பெருமூச்சுடன் கடந்து விடுகிறதுதான். இந்த மனநிலை யில் ‘பி.தொ. நிழலின் குரல்’ (723 பக்கம்) நாவலை ஆர்வத்துடன் இரண்டே நாளில் படித்து முடித்தது ஓர் ஆச்சரியம். அப்படியொரு ஈர்ப்புவிசை எழுத்தில்.

கம்யூனிச கொள்கையென்பது மானுடத் தின் ஒருபெரும் லட்சியக் கனவு. ஆனால்,பெருங்கனவுகள் சிதையுமென்பது விதி. இயக்கத்தின் வளர்ச்சிப்பாதையில் சித்தாந்தத்தை விட கட்சியும் தலைமையும் முக்கியமாகி சர்வாதிகாரப்போக்கு தலை காட்டுகிறது. தலைமைக்குப் பிடிக்காத திறமைசாலி கள் மெல்ல ஓரம் கட்டப்படு கிறார்கள்; அல்லது களையெடுக்கப்படுகி றார்கள். ரஷியாவில் நிகலாய் புகாரின் என்றால், இங்கே உள்ளூரில் வீரபத்ர பிள்ளை ! அப்படி இயக்கத்தால் மறக்கப்பட்டு மறைக்கப்பட்டவர்களின் கதைகளை, அந்தரங்கங்களை நாவல் பேசுகிறது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி பற்றி எவ்வளவோ எழுதப்பட்டு விட்டாலும் அது கம்யூனிச சகாப்தத்தின் முடிவல்ல என்பதை சீனாவும் ரஷ்யாவும் இன்று உலகுக்கு உரக்கச் சொல்லிக்கொண்டு தானே இருக்கின்றன.

விரிவான அரசியல் பின்னணியில் எழுதப்பட்டிருக்கும் நாவல், தனி மனிதர்களின் வாழ்க்கை போராட்ட ங்களை ஆழமாக பேசுகிறது. தான் கொண்ட லட்சியத்தோடு போராட்டம்; பசியோடு போராட்டம்; உடலிச்சையோடு போராட்டம்; முடிவாக தன் மனதோடும்..

முடிவில்லாத போராட்டங்களினால் அருணாசலம் மனப் பிறழ்வுக்கு ஆளாகி றான். அதிலிருந்து மீண்டு வர அவன் மனைவி நாகம்மையின் பாசமும் ஆதரவும் துணை நிற்கின்றன. ஆனால், உள்மனப் போராட்டங்களில் நிலை குலைந்துபோகும் வீரபத்ரபிள்ளைக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. அவர் மனைவி இசக்கிதான் அவருடைய ஆளுமை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகிறாள்.

கதையின் மொழிநடை தீராத போதை. வீரபத்ரபிள்ளையின் கடிதங்கள், சுய குறிப்புகள், கதைகள், நாடகங்கள்.. இவற்றில் ஜெயமோகனின் எழுத்து, மொழியின் உச்சத்தை தொடும் தருணங் கள் நிறைய. ரஷியாவின் உறைபனிக் காலங்களில் நகரவீதிகளில் நீங்கள் அலைகிறீர்கள். அதிகாரத்தின் வன்பிடியில் சிக்கி மரித்தவர்களின் பிணவாடையும், தேங்கல்களின் நாற்றமும் உங்களைச் சுற்றிப்பரவுகிறது. தப்பிக்க வழிஇல்லை. உங்களைத் தொடர்வது உங்கள் நிழல் மட்டுமல்ல; உங்கள் அந்தராத்மாவில் நுழைந்துவிட்ட தோற்றுப்போனவர்களின் நிழலும் தான்..

கதையின் ஆன்மா அருணாசலத்தின் மனைவி நாகம்மையிடம் நிலைகொண்டி ருப்பதாக ஓர் எண்ணம். தன் கணவன் மீதும், குடும்பத்தின் மீதும் முடிவில்லாப் பாசம் கொண்ட சாதாரண குடும்பத் தலைவி. அருணாசலத்தின் மனஅவசங் களிலிருந்து அவனை மீட்டெடுப்பதற்கும், அழுத்தங்களை குறைப்பதற்கும் அவனு டைய உடல் வேட்கையையே மருந்தாகப் பயன்படுத்துகிறாள். கணவனின் மனதை ஆற்றுப்படுத்த சாமானியப் பெண்ணான அவளுக்குத் தெரிந்த ஒரே வழி.

கதிருக்கு அருணாசலம் கடைசியில் எழுதுகிற அந்தரங்கமான கடிதத்தில் தன் மனப்போராட்டங்களை ஒளிவுமறை வின்றி வெளிப்படுத்துகிறான். நாகம்மை மூலமே தான் மீண்டத்தை குறிப்பிடு கிறான். அப்பொழுது, ‘அவள் யோனி தான் என்னை ஒரு புள்ளியில் நிலை நிறுத்தியது’ என்று எழுதுகிறான். படிக்கையில் மனதில் ஒருவித ஏமாற்றம் பரவியது. நாகம்மையின் தன்னலமில்லா அன்பின் தாக்கத்தை அவன் சொல்லி யிருக்க வேண்டும். யோனிக்கு போதுமான மாற்று இருப்பதைத்தான் கதையில் அழுத்தமாக பதிவு செய்தாகி விட்டதே. அன்பு ஊற்றெடுக்கும் மனசுத்தான் எங்கு தேடினாலும் மாற்று இல்லை.

நாவலின் சில பகுதிகளையாவது நாகம்மையின் பார்வையில் எழுதியிரு க்கலாம். இந்த நாவல் அதற்கான வாய்ப்பை நிச்சயம் கொடுத்திருக்கிறது.

நாகம்மை, நாகம்மை, நாகம்மை..என்று மந்திரம் போல சொல்லிக்கொண்டிருக்க
தோன்றுகிறது.

நாவலின் தனித்த சுவைக்கு ஆதாரமாக இருக்கும் தற்குறிப்புகள், நாடகங்கள், கதைகவிதைகள் சில இடங்களில் அதிகம் நீண்டுவிடுகின்றன. அதில் கொஞ்சம் கறாராக இருந்திருந்தால், இன்னும் கச்சிதமாக வந்திருக்கும்.

சாதி தொடர்பான சொல்லாடல்களில், பகடிகளில் ஆசிரியருக்கு இருக்கும் ஈடு பாடு வியப்பளிக்கிறது, அவருடைய எல்லா படைப்புகளிலும் அதைப் பார்க்க நேரும்போது.

எந்த நாவலையும் படித்து முடித்த கையோடு மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றாது; இந்த நாவலை படித்தபின் அப்படியொரு எண்ணம் வந்தது.

தமிழின் சிறந்த நாவல்களின் வரிசையில் பின் தொடரும் நிழலின் குரலுக்கு தவிர்க்க முடியாத ஓர் இடமுண்டோ

பொன் . குமார்

தொடர்புக்கு

விஷ்ணுபுரம் பதிப்பகம்

info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  1 comment  •  flag
Share on Twitter
Published on March 12, 2022 10:31

வேதங்களை வாசிப்பது-கடிதங்கள்

வேதங்களை வாசிப்பது…

அன்புள்ள ஜெ

நலம்தானே?

வேதாந்தம் கற்க என்னும் கட்டுரை உதவியாக இருந்தது. ஆனால் என் அணுகுமுறையில் வேதாந்தக் கல்விக்கு சிறந்த உதவியாக இருப்பவை ராமகிருஷ்ண மடம் ஆசுதோஷானந்தா எழுதிய உபநிடத அறிமுக நூல்கள்தான். ஏனென்றால் அவை அடிப்படையான புரிதலை முன்வைப்பவை. பெரிதாக எந்த திரிபுகளும் அவற்றில் இல்லை. இந்நூல்களை வாசிக்கையில் நாம் மிக கவனமாக இருக்கவேண்டும்

அ.அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் எழுதுவது அரசியல். வேதம் படிப்பது பாரதிய ஜனதாவுக்கு கொடிபிடிப்பதற்காக அல்ல.

ஆ. பெரும்பாலான வேதவேதாந்த உரைகள் பசுவை தங்கள் கொல்லையில் கொண்டு கட்டும் முயற்சிதான். அதற்காக பசுவை அடித்து உதைத்து குண்டுகட்டாக தூக்கி செல்வார்கள். தங்கள் சொந்த மதக்குழு, சாதிக்குழுவுக்குள் எல்லாவற்றையும் கொண்டுசெல்லும் முயற்சிகளை பற்றி கவனமாக இல்லாவிட்டால் குளிக்கப்போய் சேற்றைப்பூசிக்கொண்ட கதை ஆகிவிடும்.

இ. அதீத விளக்கங்கள் எல்லாம் வெறும் மூளைக்கொதிப்புகள் மட்டுமே. சொல்லுக்கு சொல் அர்த்தம் சொல்லி கமா புள்ஸ்டாப்புக்கெல்லாம் அர்த்தம் சொல்லும் கூட்டம் உண்டு.

ஆகவே நமக்கு தேவை எளிமையான கவித்துவமான நேரடி விளக்கம். மேலே படிப்பதும் புரிந்துகொள்வதும் நம் தேடலைப்பொறுத்து

மகாதேவன்

அன்பு ஜெயமோகன்,

வேதம், வேதாந்தம் பற்றி வாசிக்க விரும்பியவருக்கு நீங்கள் சில நூல்களைப் பரிந்துரை செய்திருந்தீர்கள். அவற்றோடு இந்து மதம் – சில விவாதங்கள்(ஜெயமோகன்) எனும் நூலையும் சேர்த்துக் கொள்ளலாம். கடலூர் சீனுவின் சொல்புதிது வெளியீடு.

வேதாந்தம் கற்க விரும்புவர்கள், சமயத்தத்துவ வரலாற்றுப் பின்னணியைக் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். கூடவே, இந்துமதத் தரிசனங்கள் மற்றும் பிற மதக்கோட்பாடுகள் பற்றிய குறைந்தபட்ச அறிமுகமேனும் வேண்டும். இல்லாவிடில், வேதாந்தத் தத்துவத்தின் தனித்துவத்தை அறிய முடியாமல் ஆகிவிடும். இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்(ஜெயமோகன்) நூல் அதற்கு உதவும்.

இந்தியத் தத்துவங்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்வதும் நல்லது. அதற்கு கி.இலட்சுமணனின் இந்தியத் தத்துவ ஞானம்(பழனியப்பா பிரதர்ஸ்) உதவும்.

முருகவேலன்,

கோபிசெட்டிபாளையம்.

இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்

https://www.suyaanthan.com/2018/06/bl...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2022 10:31

சுடலைப்பொடியின் பசுந்தழை நறுமணம் – அகரமுதல்வனின் மாபெரும் தாய்

வரலாற்றுச் சோகங்களை  வாதைகளை   போர்சூழலை காவியங்களில் வடிப்பதும், அத்தகைய  வேதனைமிகு சூழலை  வாசிக்கும் ஒருவருக்கு கடத்துவதும் தான்,  ஒரு படைப்பு செய்யக்கூடிய காரியம் எனில், ஒருவர் ஏன் இவ்வகை சோகத்தை தேடிச்சென்று படிக்க வேண்டும்?  தன் வாழ்விலேயே இருந்து கூட  பெற்றுக்கொள்ள முடியமே. அன்றாட வாழ்வில் சோகத்திற்கா பஞ்சம்?

சுடலைப்பொடியின் பசுந்தழை நறுமணம் – அகரமுதல்வனின் மாபெரும் தாய் நூல் குறித்து
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2022 10:30

March 11, 2022

எழுத்தாளனுக்கு எழுதுவது…

கடிதம் புதுமைப்பித்தனின் கதை

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே? சமீபத்தில்தான் புதுமைப்பித்தனின் “கடிதம்” என்ற சிறுகதையை வாசித்தேன். அவரது சிறந்த சிறுகதையென்று அதை கருதமுடியுமா? அது சிறுகதையா? போன்ற புறவயமான மதிப்பீடுகளுக்கு அப்பால் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த சிறுகதைகளில் ஒன்று அது.

நான் கடந்த இரண்டு வருடங்களில் வாசித்த இலக்கியத்தின் அளவு நான் அதற்கு முன்பு ஒட்டுமொத்தமாக வாசித்திருந்த புத்தகங்களின் அளவைவிடவும் அதிகம். ஆனால் இவற்றில் பெரும்பாலான புத்தகங்களைப் பற்றி நான் ஒரு வரிகூட எழுதவோ பதிவிடவோ இல்லை. எழுதிய குறைந்தபட்ச குறிப்புகளையும் என்னிடமே வைத்துக்கொண்டேன், அந்த புத்தகத்தைப் பற்றிய ஒற்றை வரி குறிப்பையும்கூட நான் எழுத்தாளருக்கு அனுப்பவில்லை.

இத்தனைக்கும் தமிழின் முன்னோடிகளையும், என் தலைமுறை எழுத்தாளர்களையும் ஓரளவுக்கேனும் சமமாக வாசித்துவிட முயற்சித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் எந்த எழுத்தாளரிடமும் அந்த படைப்புகளைப் பற்றி எழுத்திலோ, பேச்சிலோ ஒரு சொல்லும் நான் சொல்லவில்லை. என் மனதில் ஒவ்வொரு நாளும் உரையாடிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் மிகக் குறைந்த அளவு கடிதங்களையே எழுதி இருக்கிறேன்.

விஷ்ணுபுரம் விழாவில்தான் முதல் முறையாக நீங்கள் அல்லாத பிற எழுத்தாளர்களிடம் உரையாடும் துணிவே எனக்கு வந்தது. ஆனால் அதற்கு பிறகும் மீண்டும் உரையாடல்களை நிறுத்திக்கொண்டேன். “கடிதம்” வாசித்தபொழுது புதுமைப்பித்தன் என்னை நோக்கி பேசுவது போன்ற உணர்வை அடைந்தேன். அது வரையில் என் அமைதியே நான் எழுத்தாளருக்கு அளிக்கும் மரியாதை என்று நினைத்திருந்தேன். என் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது என்றும் அவற்றை எழுத்தாளரோடு பகிர்வது என் அகங்காரத்தின் வெளிப்பாடாகவே அமையும் என்றும் நினைத்திருந்தேன்.

ஆனால் அந்த சிறுகதை என் எண்ணங்களை மாற்றியது. அதில் வெளிப்படுவது புதுமைப்பித்தனின் வலி. என் அமைதி நான் எழுத்தாளருக்கு அளிக்கும் மரியாதை அல்ல அது அவரை நிராகரிப்பதற்கு நிகரான செயல் என்று உணர்ந்தேன்.

“புகழ் இல்லாமல் இலக்கிய கர்த்தா உயிர் வாழ முடியாது. முகஸ்துதி வேண்டாம். இல்லாததை நீங்கள் சொல்லிவிட வேண்டாம். செய்வது சரிதான், நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது!”

என்ற வரிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அந்த கதையின் பாதிப்பிலேயே இனி என்னை பாதிக்கும் படைப்புகளைப் பற்றிய சிறு குறிப்புகளையேனும் எழுதுவது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.

அப்படி எழுதாவிட்டாலும் அந்த படைப்பாளியிடம் ஒரு தொலைபேசி அழைப்பிலாவது உரையாடவேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு சிறந்த கலைஞனுக்கும் படைப்பாளிக்கும் இப்படியான எதுவுமே தேவையில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் அதைச் செய்வது என் கடமை என்றே நினைக்கிறேன்

என் பெயர் வேண்டாம்.

ஏ.

அன்புள்ள ஏ

உங்கள் பெயரை தவிர்ப்பது நல்லதே. நீங்கள் ‘கருணையால்’ எழுதியதாக புதுமைப்பித்தன் கதையில் வரும் ஆசிரியர் எண்ணியதுபோல எழுத்தாளர்கள் எண்ணிக்கொள்ளக்கூடும்.

நீங்கள் இதுவரை பேசாமலிருந்தது நீங்கள் பேசுவதற்குத் தயாராகவில்லை என்பதனால்தான். உங்கள் தயக்கம் நீங்கள் சொற்களை, கருத்துக்களைக் கோத்துக் கொள்ளவில்லை என்பதனால் மட்டுமே. உங்கள் தன்னிலையாக ஒரு விளக்கத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.மற்றபடி அந்த விளக்கத்தில் எப்பொருளும் இல்லை.

நீங்கள் எழுத்தாளர்களிடம் உரையாடுவதென்பது இரண்டு காரணங்களுக்காகவே தேவையானது.

ஒன்று, இங்கே ஓர் அறிவியக்கம் நிகழவேண்டும் என்றால் அதற்குரிய பொது உரையாடல் நடந்துகொண்டிருக்கவேண்டும். நீங்கள் அதில் பங்கெடுக்கையில் அது உயிருடன் இருக்க தேவையான ஒன்றைச் செய்கிறீர்கள்.

இரண்டு, உங்கள் அகவுலகை செம்மை செய்துகொள்ள நீங்கள் வெளிப்பட்டும் ஆகவேண்டும். உள்ளே செல்லும் சொற்கள் திரும்பி வருகையிலேயே அவை நம்முடையவை. இலக்கியம் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் இலக்கியத்தை ஆழமாக அறியும் வழி.

மூன்றாவதுதான் எழுத்தாளர் அடையும் ஊக்கம். அது தேவைதான், ஆனால் அது ஒன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல. எழுத்தாளர்கள் எதிர்வினையே இல்லை என்றாலும் எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். எதிர்வினைகளால் எழுத்து மேம்படுவதுமில்லை.

ஆனால் எதிர்வினைகள், உரையாடல்கள் ஒரு தனிமனிதனாக எழுத்தாளனை ஊக்கமும் மகிழ்வும் கொண்டவனாக ஆக்கும்.

சிலவற்றை கவனிக்கவேண்டும்

அ.பொய்யாகவோ சம்பிரதாயமாகவோ புகழாதீர்கள். அது ஊக்கமூட்டல் அல்ல. பலசமயம் எழுத்தாளனை எரிச்சலடையச் செய்வது.

ஆ. கடுமையாகக் கருத்து சொல்கிறேன் என தடாலடியான, தர்க்கமற்ற மறுப்புகளைச் சொல்லாதீர்கள். உங்கள் கருத்தை நிதானமாக தர்க்கபூர்வமாகச் சொன்னாலொழிய அதனால் பயனில்லை.

இ. ஒரு படைப்பின் நுட்பம் எதுவோ அதை தொட்டுணராதவன் சொல்லும் எதிர்மறைக் கருத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆகவே எதிர்கருத்து சொல்வதென்றால் அந்த நூலின் அதிகபட்சத்தை நீங்கள் உள்வாங்கிவிட்டதாக வெளிப்படுத்துங்கள்.

ஈ. எழுத்தாளன் என்ன வகையாக எடுத்துக்கொண்டாலும் நீங்கள் எழுதுவது ஓர் அடிப்படையான அறிவியக்கச் செயல்பாடு, ஓர் உரையாடலின் ஒரு தரப்பு என்னும் உணர்வுடன் இருங்கள்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2022 10:35

இந்தப்பக்கம் நோபல்!

சமீபத்தில் இந்த கருத்தை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் அடுத்தகட்ட சிந்தனையாளர் டான் அசோக் என்பவர் சொல்கிறார்.

இளைஞர்களே, திராவிடத்திற்கு, திமுகவிற்கு எதிராகத் தொடர்ந்து பேசினால், செயல்பட்டால், பொய்களை கூறினால் என்ன கிடைக்கும்

விருதுகள் / ஆராய்ச்சி நிதி என்ற பெயரில் பணம்கூட்டங்களுக்கு அழைப்பு என்ற பெயரில் விமான டிக்கட் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தங்குவது ஊடகங்களில் முக்கியத்துவம்தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைப்பார்கள்விகடன் / குமுதத்தில் கட்டுரை எழுதலாம்.நூலிபான்களின் நட்புஇணையத்தில் நூலிபான்களின் ஆதரவுநீலச்சாயம் பூசிய காவிக்குழுவின் ஆதரவுஅறிவு ஜீவி பிம்பம் காலச்சுவடு நூல் வெளியீடு ஜெமோ பாராட்டு

திமுகவில் இணைந்து திராவிடத்திற்கு ஆதரவாக செயல்பட்டால் என்ன கிடைக்கும்?

மேயர் / துணைமேயர் / முனிசிபல் சேர்மன் / பஞ்சாயத்து சேர்மன் / கவுன்சிலர் / எம்.எல்.ஏ / எம்.பி / அமைச்சர் ஆகி நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தும் மனநிறைவு

எது பெரிது? சிந்திப்பீர், செயல்படுவீர்.

*

உண்மையில் அந்தக் குறிப்பு மிகவும் பிடித்திருந்தது. நவீன இலக்கியத்தில் செயல்பட்டால் வைரமுத்து, இமையம், மனுஷ்யபுத்திரன் ஆகிய எவருக்கும் கிடைக்காத விருதுகள், கூட்டங்களுக்கு அழைப்புகள், விமான டிக்கெட், நட்சத்திர விடுதிகளில் தங்கல் ஆகியவை கிடைக்கும். அவர்கள் தலைவைத்தே படுக்காத விகடன் குமுதத்தில் எழுதலாம். அவர்கள் அந்தப்பக்கமே போகாத டிவிகளில் தோன்றலாம். ராஜன் குறை வகையறாக்கள் நினைத்தே பார்க்கமுடியாத ஆராய்ச்சிநிதி எல்லாம் கிடைக்கும்.

கேட்கவே பரவசமாக இருக்கிறது. என்ன செலவானாலும் பரவாயில்லை, இதை பரப்ப நாம் ஒத்துழைக்கவேண்டும் என நணபர்களிடம் சொன்னேன். இளைஞர்களே வாரியமா சாகித்ய அக்காதமியா, மேயரா ஞானபீடமா? தெரிவு உங்கள் கையில்!

கிடைப்பவற்றில் உச்சகட்டம் ஜெமோ பாராட்டு! ஆமாம், அது! இல்லையா பின்னே?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2022 10:31

கண்மலர்தல்

யானையை நான் கொஞ்சம் சாய்ந்து கையை நீட்டினால் தொட்டுவிடலாம். அவ்வளவு பக்கத்தில் நின்றது. ஏதோ வரைந்த கோட்டின் மேல் நடப்பது போல் நடந்துவந்து அமரிக்கையாக சாதுபோல் நின்று கொண்டிருந்தது

கண்மலர்தல் அருண்மொழி நங்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2022 10:31

சிகண்டி- ஒரு தேவதையின் கதை 

சிகண்டி நாவல் வாங்க

ம. நவீனின் சிகண்டி நாவல் திருநங்கையரைப் பற்றிய முதன்மையான நாவல் என்றும் மலேசியாவின் இருண்ட நிழல் உலகத்தைப் பற்றி நுட்பமாக விவரிக்கும் நாவலென்றும்  அறிமுகக் கூட்டங்களில் கூறப்படுகிறது. ஆனால் இந்நாவல் ஒரு தேவதையின் கதை என எனக்குத் தோன்றுகிறது.

ம. நவீன் இந்நாவலை எழுதத் தொடங்கியபோது அவரது எண்ணம் திருநங்கைகளின் வாழ்வை மலேசிய நிழலுவகப் பிண்ணனியில் கூறுவதாகவே இருந்திருக்க வேண்டும். அதனாலேயே சிகண்டி எனப் பெயர் சூட்டியுள்ளார். ஆனால் நாவலை வாசித்து முடித்தவுடன் மனதில் பெரும் அலைக்கழிப்பை ஏற்படுத்துவது சராதான். வாசித்தபின் கடந்த ஒரு வாரமாக ஏன் ஏனென்று  என்னை உலுக்குகிறது சில கேள்விகள்.  தன்னையே இழந்துதான் பேரன்பை புரியவைக்க வேண்டுமா. அப்படி அவன் புரிந்துகொள்ளாமல் போனால்தான் என்ன. அத்தனை அன்பை கொடுக்குமளவிற்கு அவன் தகுதியென்ன.

நாவலின் சில அத்தியாயங்கள் வாசித்த பிறகு சரா எப்போது தோன்றுவாள் என்ற எதிர்பார்ப்புடனேயே வாசித்தேன். நாவல் காட்டும் கீழ்மையையும் இருண்மையையும் சராவின் இனிமையையும் அன்பையும் கொண்டே கடக்க முடிகிறது.

இந்நாவல் தீபனின் பார்வையில் சொல்லப்படுவதால் சராவின் உள்ளக் கிடக்கை ஆசிரியர் காட்டவில்லை. அறிமுக உரையில் ஆசிரியர் ஜெ. கூறியதுபோல தீபனின் எண்ணங்கள் சலிக்கச் சலிக்க சொல்லப்படுவதால் வாசகனுக்கு அவன் மீதான கவனம் சிதறி பெரிதாக சொல்லப்படாத சராவின் எண்ணவோட்டம் என்னவாயிருக்கும் என மனம் துடிக்கிறது. வாசகனுக்கு இப்படி தோன்றும் என நாவலாசிரியர் கண்டிப்பாக எதிர் பார்த்திருக்கமாட்டார். நண்பனின் தங்கை, கண்ணன், பூனை பூஸ் போல சராவும் தீபனின் மீட்பிற்கான ஒரு கருவி என்றே கருதியிருக்கிறார் என எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் சராவின் உலகத்தை குறைவாகவே காட்டியுள்ளார். ஆனால், அவரே எதிர்பாராத விதமாக தீபனின் கீழ்மைகளில் இருந்தும் நிழலுலக இருண்மைகளில் இருந்தும் திரண்டு எழும் அமுதமென சரா விளங்குகிறாள். இருண்மையிலிருந்து தோன்றினாலும் அதன் சுவடு ஒரு துளியுமின்றி.

முதலில் தீபன் சராவைக் கண்டபோது அவளின் அழகில் மயங்குகிறான். அவளின் காதலுக்குப் பாத்திரமாகி விரும்பவும் செய்கிறான். தான் திருநங்கையென அவளாக கூறும்வரை அவன் அறியவேயில்லை என நாவல் காட்டுகிறது. அப்படியாயின் எத்தனை தாய்மையோடும் பெண்மையோடும் விளங்கியிருப்பாள் என வியப்பு எழுகிறது.

தீபன்மேல் கொண்ட பெருங்காதலால் அல்லவா அவன் இவளை உதாசீனம் செய்ய முயலும்போது கடுஞ்சினம் கொள்கிறாள். சிறு பிள்ளையென அடம்பிடிக்கிறாள். அலைபேசியையும் தலைக்கவசத்தையும் உடைப்பது இவன்மேல் சரா கொண்ட காதலினால்தானே.

வீணாகப் போகும் பயன்படாத பொருட்களை வீட்டில் அழகுப் பொருளாக்குகிறாள் சரா. இது அவளின் கலையுணர்வை மட்டுமல்லாமல் எல்லாவற்றையுமே விளையாட்டுப் பொருளாகப் பார்க்கும், பாவிக்கும் குழந்தமையையும் காட்டுகிறது. சாலையில், தான் உடைத்த தலைக்கவசத்தை கொண்டுவந்து அதில் செடி வளர்ப்பது அவளின் தாய்மைக்  குணத்தின் மிகச் சிறந்த வெளிப்பாடாகும். எதற்காக வீம்பு பிடித்தோம் என மறந்து அடுத்த விளையாட்டுக்குள் செல்லும் பிள்ளைகளென    கண நேரத்தில் அவள் மறப்பது தன் கோபத்தை மட்டுமல்ல தீபனின் தவறையும்தான்.

சராவின் உடல் அழகை ஆசிரியர் வர்ணிக்கவேயில்லை. இதுவே வாசகனுக்கு அவளை கற்பனை செய்வதற்கான கட்டற்ற சுதந்திரத்தை தருகிறது. தேவதை போல என சிலமுறை  தீபனே கூறுகிறான். வாசிப்பவர் தன் மனதில் கொண்டுள்ள தேவதை உருவில் சராவை பொருத்தி கண்டுகொள்ளலாம். அங்கோர்வாட் அப்ஸரசாக தன்னைக் கூறிக் கொண்டு அந்நடனத்தை பகுஞ்சராவின் முன் ஆடுகிறாள். நடனத்தைப் பற்றிய நுட்பங்களை அறியாதவர்கள்கூட அந்நடனத்தை மனதில் உருவகித்துக் கொள்ளமுடியும். அப்போது மண்ணிலும் விண்ணிலும் நடமாடுவதாகவே  தீபன் உணர்கிறான் அவள்மீது ஒவ்வாமையோடு இருந்தபோதும். என் மனதில்,  விண்ணில் நடனமாடுபவள் போன்றே தோன்றுகிறாள்.

சராவின் உள்ளத்தைப் பற்றி தீபன் எண்ணவோ கவலைப்படவோ இல்லை. அவளுக்கும் ஒரு மனமுண்டு என்ற உணர்வே தெரியவில்லை. ஆனால் அவனின் நோக்கம் தெரிந்த பின்னும் சரா அவனுக்காக தன்னை முழுவதுமாய் இழக்கிறாள். தன்னை பலி கொடுத்து அவனுக்கு பேரன்பின் தரிசனத்தை காட்டுகிறாள். எப்போதும் இப்படித்தான் நிகழ்கிறது. தன் அன்பை நிரூபிக்க தன்னையே அழித்துக் கொள்வது.  தேவதைபோல என தீபன் முன்பு அறிந்தது அவள் உடலழகை மட்டுமே வைத்து. அவள் இறந்த பின்புதான் அறிகிறான் அவள் குணமும் தேவதையைப் போன்றதே என. அதன்பின் அறித்து என்னாகப்போகிறது. ஒருத்தனின் கீழ்மையை மாற்ற பரிசுத்தமான ஒருவர் இறக்கத்தான் வேண்டுமா. அவன்மேல் எத்தனை காதலிருந்தால் அவனின் கீழ்மையை அறிந்தபின்னும் அவன் திட்டத்திற்கு ஏற்ப நடந்து கொள்வாள் என்று திகைப்பு ஏற்படுகிறது. ஆனால் என்ன செய்வது பல நேரங்களில் இப்படித்தான் நிகழ்கிறது. வேடிக்கை பார்ப்பதல்லாமல் நம்மால் இயற்றுவதற்கு என்னவுள்ளது.

அடர்ந்த முள் புதருக்குள்ளிருந்து மெல்ல தலை நீட்டி சிலிர்க்க வைக்கும் சிறு நீல மலர்போல வெளிப்படுகிறாள் சரா. நாவலின் கதைக்களமும் சொல்லவந்த வாழ்க்கையின் தீவிரமும்தான் சராவை தேவதையாக்குகிறது. அந்தத் தீவிரமும் இருண்மையும் குறைவாக இருந்திருந்தால் சராவின் பாத்திரம் இத்தனை துலக்கமாக வெளிப்பட்டிருக்காது என்றே மோன்றுகிறது. தமிழ் நாவல்களில் கூறப்பட்ட பெண் பாத்திரங்களின் முதன்மை வரிசையில் சராவும் இடம் பெறுவாள் என உறுதியாகக் கூறலாம்.

“சிகண்டி” நாவலின் மூலம்  சரா எனும்  தேவதையின் கதை தந்த ஆசிரியர் ம. நவீனுக்கு வாழ்த்துகள்.

கா. சிவா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2022 10:30

இன்றைய சிந்தனைகளின் வயல்

அன்புள்ள ஜெ

பின்தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலகாலமாக நான் விசாரித்துக்கொண்டிருக்கும் நூல். எந்த பதிப்பகத்தில் கேட்டாலும் ஸ்டாக் இல்லை என்பார்கள். மின்னூல் படிக்க எனக்கு மனம் ஒப்பவில்லை. அந்த எழுத்துக்கள் அசைவது என் பைபோக்கல் லென்ஸுக்கு பெரிய சிக்கலாக இருக்கிறது. அழகான அச்சுநூலாக வந்திருக்கிறது.

நான் 20 ஆண்டுகளுக்கு முன் வாசித்த நாவல். அன்று என் மனதில் இருந்த ஏராளமான கேள்விகளை தீப்பற்றி எரியச்செய்த நாவல். 1983ல் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இலங்கையில் இனக்கலவரம். அதன்பின் ஒரு புகைப்படம் நான் பார்த்தேன். மாத்தையா கைவீசி நடந்துவரும் காட்சி. அந்த குண்டான உருவம் என் அப்பா மாதிரி. என்னை ஆழமாக கவர்ந்தது. என் அப்பா அப்போது தவறியிருந்தார். ஒரு ரெண்டு ஆண்டு முன்னாடி. ஆனால் கொஞ்சநாள் தாண்டவில்லை. மாத்தையா துரோகி என்று சொல்லி கொல்லப்பட்டார். அந்த அமைப்பை உருவாக்கியவரே அதற்கு துரோகி என்றால் என்ன அர்த்தம்? என்னால் அந்த அடியில் இருந்து மீளவே முடியவில்லை. அதைவிட அந்தக்கொலை சரிதான் என்று என் நண்பர்கள் வாதிட்டதை ஏற்க முடியவில்லை.

பின்தொடரும் நிழலின் குரலை அதன்பிறகுதான் வாசித்தேன். அது என்னை என்ன செய்தது என்று சொல்லமுடியாது. செத்த குட்டியை தூக்கிக்கொண்டு அலையும் குரங்கு மாதிரி அதை ஒருவருஷம் வரை கையிலேயே வைத்திருந்தேன். பிறகு அதுவே உதிர்ந்து போய்விட்டது. இன்றைக்கு அந்நாவலுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதேசமயம் அது என்ன சரியாக அளித்தது என்று சொல்லவும் முடியவில்லை. அது ஒரு பெரிய குழப்பு குழப்பியது. சரித்திரம் முழுக்க இதுதான் கதை என்று சொல்லியது. புகாரின் அன்னாவிடம் விடைபெற்றுச் சாகப்போகும் இடத்தில் நான் அழுதேன். ஏசு வரும் இடத்திலும் அழுதேன்.

நாம் ஏன் கொள்கைகளுக்கு அடிமையாகிறோம்? கொள்கை என்பது ஒரு பூதக்கண்ணாடி. நம்மை நூறுமடங்கு பெரிசாக்கி நமக்கு காட்டுகிறது. நீ பெரிய இவன் என்று நம்மிடம் சொல்கிறது. ஆமா நான் பெரிய இவன் என்று நாம் உலகை நோக்கி கத்துகிறோம். அவ்வளவுதான். இலட்சியவாதமெல்லாம் சரிதான். ஆனால் நம்மை நாலுபேர் பார்க்காவிட்டால் எல்லாம் ஆவியாகிவிடும்.

1991ல் என்ன நடந்தது என்று நூலின் பின்னட்டையில் உள்ளது. நானறிந்து தமிழில் எழுதப்பட்ட மிகப்பெரிய சமகால அரசியல்நாவல் அதுதான். எழுத்தாளர்கள் சமகாலத்தை ஏன் எழுதுவதில்லை என அடிக்கடி கேட்பார்கள். சமகாலத்தை எழுதின பின்தொடரும் நிழலின் குரலை வாசித்திருக்கிறாயா என்று நான் கேட்பேன். இன்று அதை வாசிக்க வேண்டும் என நினைக்கும் இளைஞனிடம் ‘இன்றைய உன்னுடைய சிந்தனைகள், குழப்பங்கள் எல்லாமே எங்கே எப்படி தொடங்கின, எப்படி வளர்ந்தன என்று தெரிந்துகொள்ள இதைப் படி’ என்று சொல்வேன்.

ரவிச்சந்திரன்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

Email: info@vishnupurampublications.com

https://www.vishnupurampublications.com/

முகநூல் https://www.facebook.com/profile.php?id=100058155595307

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2022 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.