Jeyamohan's Blog, page 613
March 13, 2023
கு.ப.சேது அம்மாள்
கு.ப.சேது அம்மாள் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். தமிழில் சிறுகதை தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என அறியப்படுகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் தங்கை. ராஜகோபாலன் கண்பார்வை குறைந்தவராக இருந்தபோது அவர் சொல்ல கதைகளை எழுதியவர்
புது வாசகர் சந்திப்பு,கடிதம்
கடந்த மூன்று நாட்கள் குறித்த கடிதம். வாழ்க்கை தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததை உணர்ந்த கணத்தில்தான் உங்களை அடைந்தேன். அதிகம் வாசிக்க தொடங்கினேன். உங்களிடம் இருந்து நிறைய கற்று கொண்டது மட்டுமல்லாமல் கற்றவற்றை வைத்து என் வாழ்க்கையையும் சீராக்கி கொண்டேன். உங்கள் நிழலில் இருப்பதையும் விரும்பினேன். அப்படியாகத்தான் இளம் வாசகர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன்.
அங்கு வந்த பிறகு உங்களை நுணுக்கமாக கவனிக்க தொடங்கினேன். நீங்கள் வகுப்பறையில் ஆசிரியராகவும், இரவு கூடுகையில் நண்பராகவும்,உணவு உண்ணும் வேளையில் குடும்பத்து உறுப்பினர் போன்றும் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு தனி நபராக காட்சியளித்தீர்கள், எனக்கு சரியாக கூற தெரியவில்லை. ஆனால் நிறைய கற்றுக் கொண்டேன் நான் சரி என நினைத்து கொண்டிந்ததையெல்லாம் தவறென உணர்ந்தேன் , தவறென நினைத்து கொண்டிருந்ததையெல்லாம் சரி எனவும் உணர்ந்தேன்.
மேலும் அந்த பாறை விளிம்பில் அடிக்கடி உங்களை சந்திக்க நேர்ந்தது, பேசி விடுவோம் இல்லை இல்லை வேண்டாம் இல்லை பேசுவோம் எனும் பெரிய மன போராட்டங்களில் சிக்கி கொண்டு மிகவும் குறைவாவே பேசினேன். உங்கள் அனுமதியுடனும் அனுமதி இல்லாமலும் உங்களை புகைப்படம் எடுத்தேன் இருந்தபோதும் இல்லை இது போதவில்லை என்ற எண்ணம் துடித்து கொண்டே இருந்தது.
படைப்பு குறித்தும் இலக்கியங்கள் குறித்தும் நீங்கள் உரையாற்றியதுஎனக்கு பல்வேறு திறப்புகளை கொடுத்துள்ளது. கடைசியாக அவ்வளவுதான் மூன்று நாட்கள் முடிந்து விட்டது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் எனும் தருணத்தில் என்னால் நகர முடியவில்லை, அங்கேயே தேங்கினேன், மீண்டும் அந்த பாறை விளிம்பில் உங்களை காண முடிந்தது, இந்த முறை கண்டிப்பாக உங்களிடம் பேசி உங்களை கட்டி அணைத்தே ஆக வேண்டுமென அமர்ந்திருந்த உங்களை எழச் செய்தேன் மன்னித்து விடுங்கள், ஒரு வழியாக அந்த நிகழ்வும் நிகழ்ந்தது உங்களை கட்டி அணைத்தேன்.
இந்த உணர்வுகளையெல்லாம் என்வென்று கூற இயலவில்லை ஆனால் இப்போது நான் மிகவும் தெளிந்தும்,நிதானமாகவும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் நிதர்சனம், உங்களிடம் இன்னமும் நிறைய கற்க விரும்புகிறேன். நீங்கள் கைகாட்டிய பாதையில் வெகு தூரம் செல்ல என்னை தயார் செய்து கொள்கிறேன்.
இப்போது வீட்டில் இருக்கிறேன் ஆனாலும் என் மனம் அந்த பாறை விளிம்பிலும் மர நிழல்களிலும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது.
இவையனைத்திற்கும் நன்றி நன்றி
அன்புடன்
சக்தி
குற்றத்தின் ஊற்றுமுகங்கள், கடிதம்
அன்புள்ள ஜெமோ
அண்மையில் சினிமா நண்பர் ஒருவர் சொன்னார். ஐந்து நெருப்பு என்ற ஒரு தொகுப்பிலுள்ள கதைகளுக்காகவே ஜெமோ பல லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டார் என்று. வெந்து தணிந்தது காடு தவிர மேலும் இரண்டு கதைகள் சினிமாவுக்கான உரிமைகள் அளிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி.
தொகுப்பை அதன்பிறகுதான் வாங்கி வாசித்தேன். ஐந்து நெருப்பு சினிமாவுக்கான கதைதான். ஆனால் அதைவிடவும் தீவிரமாக சினிமாவாக எடுக்கத்தக்க பலகதைகள் உள்ளன. எல்லாமே குற்றம் சார்ந்த மனோநிலைகளை நுட்பமாக ஆராயும் கதைகள். ஒவ்வொன்றில் இருந்தும் ஒரு நல்ல சினிமாவை உருவாக்கமுடியும்.
குறிப்பாக இழை, பேசாதவர்கள் இரண்டுமே மிகச்சிறந்த சினிமாவுக்கான கதைக்கட்டமைப்பும் நுட்பமும் கொண்டவை. அவற்றையும் சீக்கிரமே வாங்கிவிடுவார்கள். (அல்லது ஏற்கனவே வாங்கிவிட்டார்களா?)
இந்தக்கதைகளிலெல்லாம் உள்ளது குற்றத்தைச் செய்பவனின் மனநிலையை நோக்கிய ஒரு பயணம்தான். அதேசமயம் கதைகள் மிக விறுவிறுப்பாக அமைந்துள்ளன. மிகத்தீவிரமான சம்பவங்கள் சிறுகதை வடிவிலே சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. பேசாதவர்கள் கதையை ஒரு நாவலாகக்கூட எழுதியிருக்க முடியும்.
அன்புடன்
ஜெயக்குமார் அருண்
மார்கழிப்பனியில்…
1976 ல் எம்.எஸ்.விஸ்வநாதன் சலிப்பூட்டிக்கொண்டிருந்தார் என இன்று சிலர் எழுதுகிறார்கள், ஆகவேதான் இளையராஜாவின் வருகை கொண்டாடப்பட்டது என்பார்கள். ஆனால் உண்மையில் அப்படியா என எனக்கெல்லாம் சந்தேகம்தான். அந்தக் காலத்தில்தான் நான் சினிமாப்பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். எனக்கு எம்.எஸ்.வியின் அரிதான பாடல்கள்கூட இன்னும் தீவிரமாக நினைவில் உள்ளன.
இந்தப் பாடலை அண்மையில் ஒரு சினிமா நண்பர் சொன்னார். இதில் அக்கால இசைப்பதிவுச் சூழல் உள்ளது. அதில் அவருடைய தந்தை இருக்கிறார் என்றார். ஒரு ஃப்ரேமில் எம்.எஸ்.வியின் இசைக்குழுவில் இருந்தவரும் பின்னர் சியாம் என்னும் பெயரில் இசையமைப்பாளராகி முக்கியமான பாடல்களை உருவாக்கியவருமான சாமுவேல் ஜோசப் இருக்கிறார். உற்சாகமான இளைஞராக.
சியாம் எனக்கு மிகப்பிடித்தமானவர், மலையாளத்தில் அற்புதமான பாடல்களை இசையமைத்துள்ளார். தமிழிலும் மழைதருமோ என் மேகம் போன்ற மகத்தான பாடல்களை அமைத்தவர்.
March 12, 2023
இனிதினிது…
வேலூர் மத்தியச்சிறைச்சாலை. உள்துறை அமைச்சரின் அரசாங்கக்கொடி பறக்கும் கார் வந்து நிற்கிறது. அதிகாரிகள் பரபரப்பு அடைகிறார்கள். உள்ளிருந்து உள்துறை அமைச்சரின் மனைவியும் அவரது மகளும் நான்குவயதான பேத்தியும் இறங்குகிறார்கள். சிறைத்துறை அதிகாரி நேரில் வாசலுக்குச்சென்று மரியாதையுடன் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்கள் அங்கே சிறையில் இருக்கும் ஒருவரைக் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர் அமைச்சரின் மகளின் கணவர்.
சிறையில் அமைச்சரின் மகள் தன் கணவனுக்கு ஒரு பழக்கூடையை அளிக்கிறாள். கடுமையான கண்காணிப்புக்கு உரிய அந்தக்கைதிக்கு அப்படி ஏதும் கொடுக்கலாகாது என்பது அதிகாரிக்குத்தெரியும். ஆனால் வேறு வழியில்லை. அந்தக்கூடைக்குள் அமைச்சரின் மகள் சில தடைசெய்யபப்ட்ட ரகசிய ஆவணங்களை மறைத்து தன் கணவருக்குக் கொடுக்கிறார். தன் மகளை அணைத்து முத்தமிட்டு கொஞ்சுகிறார் கைதி. அவர்கள் கிளம்பிச்செல்கிறார்கள்.
இப்படி ஒரு திரைக்கதை எழுதினால் சினிமாவில் அதை செயற்கையானது, நம்பமுடியாதது என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இது கற்பனையே கலக்காத நேரடியான சுயசரிதை ஒன்றில் வரும் நிகழ்ச்சி. இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சியின் மூத்த தலைவரான என்.கெ.கிருஷ்ணனின் சுயசரிதை அது. அவரது மனைவி பார்வதி கிருஷ்ணன் புகழ்மிக்க குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்தைச்சேர்ந்தவர். அந்தக்குடும்பமே அரசியலாலும் கல்வியாலும் உயர்பதவிகளாலும் இந்தியதேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பதில் பங்கு கொண்டது. பார்வதி கிருஷ்ணனின் தந்தை டாக்டர் சுப்பராயன் ராஜாஜியை ஆதர்சமாகக் கொண்ட காங்கிரஸ் தலைவர்.
கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள நடவரம்பு என்ற கிராமத்தில் ஒரு நடுத்தர தமிழ்ப் பிராமணக் குடும்பத்தில் 1913ல் பிறந்த கிருஷ்ணன் சிறுவயதிலேயே படிப்பில் மிகச்சூட்டிகையானவராக இருந்தார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கொச்சி அரசாங்கத்திலேயே முதல் மாணவராக வந்து உதவித்தொகை பெற்றார். பின்னர் உதவித்தொகைகள் பெற்றே படிப்பை தொடர்ந்தார்.
1930ல் பள்ளியிறுதியை முடித்தபின்னர் மேற்கல்வி கற்பதற்காக சென்னைக்கு வந்தார். பிரசிடென்ஸி கல்லூரியில் கணிதவியலில் எம்.ஏ படிக்க ஆரம்பித்தார். அங்கேதான் தேசிய இயக்கத்தொடர்பு ஏற்படது. சுதந்திரப்போராட்டம் உண்மையான வீச்சைப்பெற ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. கணிதப்படிப்பில் ஆய்வுசெய்யும் கனவுடன் 1934ல் அவர் லண்டனுக்குப்பயணமானார்.
லண்டனில் படிக்கும்போது இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடினார் கிருஷ்ணன். அப்போது கிருஷ்ண மேனனின் உறவு உருவாயிற்று. கிருஷ்ண மேனனின் இந்திய தேசிய லீகில் அவரது வழிகாட்டலில் பணியாற்றினார். தொடர்ச்சியாக அரசியல் கொந்தளிப்புகள் நடந்துகொண்டிருந்த அந்தக்காலத்தில் விரைவிலேயே அவர் கம்யூனிஸ்டாக உருமாறினார். 1936ல் அவர் கம்யூனிஸ்டுக்கட்சியின் உறுப்பினரானார். அதன்பின் 1988 ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் எல்லா பதவிகளிலிருந்தும் விலகும்வரை ஐம்பத்துமூன்று வருடங்கள் அவர் தொய்வில்லாது பொதுவுடைமைப்பணியாற்றினார்.
கிருஷ்ணனின் தன்வரலாற்றில் பெரும்பாலும் அவரது சொந்த வாழ்க்கை இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு வாழ்க்கையை அவர் பிரித்துப்பார்க்கவில்லை. அவரது வரலாறென்பது இடதுசாரி இயக்கத்தின் வரலாறேதான். 1939ல் அவர் இந்தியா திரும்பினார். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தினூடாக உலகப்போரின் பின்னணியில் இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சி மெல்லமெல்ல உருவாகி வலுப்பெறுவதை, சுதந்திரத்துக்குப் பின்னர் அது காங்கிரஸ் கட்சியால் தடைசெய்யப்படுவதை, தடை மீண்டு ஜனநாயகப்பாதைக்குத் திரும்புவதை, தொழிற்சங்க இயக்கம் மூலம் மெல்ல மெல்ல அது பரவுவதை, வலதுசாரி இடதுசாரியாக பிளவுபட்டு பலவீனமடைவதை அவரது சுயசரிதை வாயிலாக விரிவான தகவல்களுடன் காண்கிறோம்.
கிருஷ்ணனின் இரும்பாலான வரலாற்றில் ஒரு மெல்லிய சரிகைஇழையாக அவருக்கும் பார்வதிக்கும் இடையேயான காதல் ஊடாடிச்செல்வதைக் காணலாம். அவர் பார்வதியை லண்டனில்தான் சந்திக்கிறார். ஆனால் அந்தச் சந்திப்பு குறித்து அவர் எதுவும் எழுதவில்லை. எழுபத்தி ஆறாம் வயதில் தன் வாழ்க்கையைப்பற்றிச் சொல்லும்போதுகூட அவரது நினைவில் இனிமையை நிறைக்கும் அனுபவமாகவே அது இருக்கிறது, என்றாலும் அதை விரிவாக எழுத அவரது கம்யூனிஸ்டுமனம் ஒப்புவதில்லை. அவர்களிடையே தோழமையும் பின்பு காதலும் உருவாகி வலுப்பெறுகிறது.
ஒரு காட்சி அவரது நேரடியான, சுருக்கமான குறிப்புகள் வழியாக ஒற்றை வரியாக மின்னிச்செல்கிறது. வி.கெ.கிருஷ்ணமேனன் அக்காலத்தில் லண்டனில் இந்தியாவுக்கு ஆதரவான அனல் கக்கும் பேச்சாளராக இருந்தார். ‘பிரிட்டனின் ஆட்சியில் சூரியன் அஸ்தமிப்பதேயில்லை, ஏனென்றால் இரவில் பிரிட்டிஷாரை நம்பமுடியாதென அவன் அறிவான்’ போன்ற நகைச்சுவைத்துணுக்குகளை அவர் அள்ளி இறைப்பார். அவரது கூட்டங்களுக்குச் செல்லும் பார்வதிக்கும் கிருஷ்ணனுக்கும் அவர் எந்த இடத்தில் எந்த நகைச்சுவையை சொல்வாரென நன்றாகவே தெரியும். அவர்கள் அதற்கு முன்னதாகவே கண்களால் பார்த்துச் சிரித்துக்கொள்கிறார்கள்.
இங்கிலாந்திலிருந்து திரும்பிய கிருஷ்ணன் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்து தீவிரமாகக் கட்சிப்பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பார்வதி லண்டனில் ஆக்ஸ்போர்டில் படித்துக்கொண்டிருந்தார். 1941 இறுதியில்தான் அவர் நாடுதிரும்பினார். இந்த வருடங்களில் கிருஷ்ணன் தொடர்ச்சியாக பார்வதிக்குக் கடிதங்கள் எழுதிக்கோண்டிருந்தார். அலுவலகப்பணியாற்றிய இன்னொரு தோழரான சாந்தாராம் என்பவர்தான் அந்தக்கடிதங்களை கட்சிப்பணியில் அலைந்து திரிந்த கிருஷ்ணனிடமிருந்து பெற்று பார்வதிக்கு அனுப்பி வைப்பார்.
இது கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய செயலாதலால் கிருஷ்ணனுக்கு குற்றவுணர்ச்சி இருந்தது. ஆனால் சாந்தாராம் அவரது உணர்வுகளைப் புரிந்துகொண்டு கட்சிக்கட்டுப்பாட்டை மீறியது பெரிய தவறல்ல என்று கிருஷ்ணனை தேற்றினார். பின்னர் 1942ல் பார்வதியை கிருஷ்ணன் திருமணம் செய்துகொண்டபோது பார்வதியை சாந்தாராம் ‘இரக்கமற்ற சொற்களால்’ தாக்கினார் என்கிறார் கிருஷ்ணன். கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய ஒரு செயலாக அதை அவர் வர்ணித்தார்.
அந்த உணர்ச்சியை ஐம்பதாண்டுக்காலம் கழிந்தும் கிருஷ்ணனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு ஒரே விளக்கம்தான் இருக்க முடியும். ஆரம்பத்தில் ஒரு எளிய ஆண்பெண் ஈர்ப்பாக மட்டுமே சாந்தாராம் அந்தக் காதலைக் கண்டிருப்பார். ஆனால் பின்னர் அது சமூகத்தடைகளை எல்லாம் தாண்டி முழுவாழ்நாளையும் ஒளிமயமாக்கியபடி நீடிக்கக்கூடிய அமரத்துவம் வாய்ந்த ஒரு காதல் என்பதை அவர் புரிந்துகொண்டபோது அவரது எளிய மனத்தால் கிருஷ்ணனின் அந்த அதிருஷ்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவ்வளவுதான்.
பார்வதியை மீண்டும் சந்தித்ததை முடிந்தவரை சாதாரணமாகச்சொல்ல கிருஷ்ணன் முயன்றாலும் அதில் உணர்ச்சி கலக்கிறது. சிறையிலிருந்து விடுபட்டு அலுவலகம் திரும்பியதும் ராஜாஜியைச் சந்திக்கும்படி அப்போதைய கட்சித்தலைவர் பி.ஸி.ஜோஷி ஆணையிடுகிறார். ஆகவே கிருஷ்ணன் சென்னைக்கு வந்தார். அங்கே அந்தச் சந்திப்புக்கு பார்வதி ஏற்பாடுசெய்தார். அப்போது சோவியத் நண்பர்கள் சங்கம் என்ற அமைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன், மணலி கந்தசாமி ஆகியோருடன் இணைந்து அவர் மாணவர் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
“அச்சந்திப்பு குறித்த நினைவுகள் என்றும் மங்காதவை. சென்னையில் நான் தங்கியிருந்த காலம் முழுவதும் நாங்கள் முடிவற்று பேசிக்கொண்டே, மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருந்தோம். அரசியல் பற்றி, இன்னும் பல விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். 1939 ஜூனில் லண்டனில் நாங்கள் பிரிந்ததில் இருந்து கழிந்துபோன ஏராளமான சம்பவங்கள் நிரம்பிய அக்காலகட்டம் குறித்தும் எங்களது பல்வேறு அனுபவங்கள் குறித்தும் நாங்கள் எங்களிடையே பரிமாறிக்கொள்ள வேண்டியிருந்தது” என்று கவனமாகச் சொல்கிறார் கிருஷ்ணன். என்ன பேசினால் என்ன, பேசப்படுவது காதல்தானே?
ராஜாஜி தன் நுண்ணுணர்வால் பார்வதிக்கும் கிருஷ்ணனுக்குமான உறவை உய்த்துணர்ந்து அதை அப்போதே பார்வதியின் தந்தை டாக்டர் சுப்பராயனிடம் சொல்லவும்செய்தார் என்கிறார் கிருஷ்ணன். அப்போது கிருஷ்ணனும் பார்வதியும் தாங்கள் காதலிப்பதை தாங்களே ஒப்புக்கொள்ளவில்லை, மணம்புரிய முடிவும் எடுக்கவில்லை! ராஜாஜி என்ன, அப்போது அவர்களைப்பார்த்த வழிப்போக்கர்களுக்குக்கூட அது தெரிந்த ரகசியமாகத்தான் இருந்திருக்கும்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸ¤க்கும் இடையே பெரிய அளவில் முரண்பாடுகள் இருக்கவில்லை. இருசாராரும் இணைந்து பணியாற்றும் களங்களும் இருந்தன. குறிப்பாக தொழிற்சங்க நடவடிக்கைகள், பாஸிஸ எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில். 1942ல் சேலத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநாடுதான் தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கு வழிவகுத்த திருப்புமுனை. அதில் கலந்துகொள்வதற்காக கிருஷ்ணன் சேலம் வருகிறார். அங்கிருந்து திருச்செங்கோட்டுக்குச் செல்கிறார். அங்கே டாக்டர் சுப்பராயனுக்குச் சொந்தமான பெரிய பூர்வீக மாளிகையில் தங்கினார். சுப்பராயனின் மனைவி திருமதி ராதாபாய் அவர்கள் அவர் அங்கே தனியான குடியிருப்புப் பகுதி ஒன்றில் தங்கியிருந்து கட்சிப்பணி ஆற்ற உதவினார்.
சுப்பராயனின் குடும்பத்தைப்பற்றி கிருஷ்ணன் விரிவாகச் சொல்கிறார். டாக்டர் சுப்பராயன் வசதியான ஜமீன்தார் குடியில் பிறந்தபோதிலும் காந்தியின் கொள்கைகளாலும் ராஜாஜியின் ஆளுமையாலும் பெரிதும் கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமகாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். பலமுறை அதற்காகச் சிறைசென்றார். மங்களூர் கொங்கணி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரான ராதாபாயின் தந்தையார் ஹரிஜன நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவரை காந்தி வியந்து பாராட்டியிருக்கிறார்.
ராதாபாய் அவரது சமூகத்தில் முதல் பட்டதாரிப்பெண். சென்னை பல்கலையின் முதல் செனெட் உறுப்பினர் அவரே. பின்னர் முதல் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார். முதலாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்ட இரண்டுபெண்மணிகளில் ஒருவர் அவர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இந்திய தூதுக்குழுவின் முதல் பெண் உறுப்பினரும் அவரே. 1928ல் மத்திய சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அவர்தான்.
தமிழகத்து காங்கிரஸில் பல பதவிகளை வகித்த டாக்டர் சுப்பராயன் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றினார். நேருவின் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தார். மகாராஷ்டிரத்தின் கவர்னர் பதவி வகித்தார். பொதுவாக அவர் இடதுசாரிகளுக்காக நேருவிடம் வாதாடக்கூடியவராக இருந்தார். ராதாபாய்-டாக்டர் சுப்பராயன் திருமணம் காந்தியின் ஆசியுடன் ராஜாஜி தலைமையில் நடந்த ஒன்று. அவர்களின் மகள்தான் பார்வதி.
சுப்பராயன் குடும்பமே உயர்பதவிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒன்று. பார்வதியின் மூத்த சகோதரர் பரமசிவம் ராணுவ அதிகாரியாகப்பணியாற்றி இந்திய ராணுவத்தளபதி பதவியை அடைந்து ஓய்வுபெற்றார். இரண்டாவது அண்ணாவாகிய கோபால் இறுதிவரை உறுதியான கம்யூனிஸ்டாக இருந்தார். நிலக்கரித்தொழிலை நாட்டுடைமை ஆக்கியவர் அவரே. இந்தியப்பொதுத்துறையின் சிற்பி என்று அவர் மதிப்பிடப்படுகிறார். பார்வதியை கம்யூனிஸ்டுக்கட்சிக்குக் கொண்டுவந்தவரும் அவரே.
பார்வதியின் தம்பி மோகன் குமாரமங்கலம் கம்யூனிஸ்டுக்கட்சியில் பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் சேர்ந்து மத்திய அரசில் நிதியமைச்சராக இருந்தார். இந்திராகாந்தியின் அமைச்சரவையில் இரும்பு உருக்குத்துறை அமைச்சராக இருந்தபோது விபத்தில் மரணமடைந்தார். மோகன் குமாரமங்கலத்தின் மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய அமைச்சராக இருந்தார்.
1942ல் திருச்செங்கோட்டில் தங்கியிருந்த நாட்களில் கிருஷ்ணனும் பார்வதியும் திருமணம்செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். தன் முடிவை கிருஷ்ணன் தந்தையிடம் தெரிவித்தபோது ”உன் விருப்பம், ஆனால் பெரும்பணக்கார வீட்டுப்பெண்ணான பார்வதி உன்னுடைய வறுமையான வாழ்க்கைச்சூழலுக்கு ஒத்துவருவாளா என்று யோசித்துக்கொள்” என்றுமட்டும் அவர் சொன்னார். ஆனால் பார்வதியும் தன்னுடன் முழுநேரக் கட்சிப்பணிக்குத்தான் வருகிறார் என்று கிருஷ்ணன் சொன்னார். சுப்பராயன் குடும்பத்திலிருந்து எந்த ஆட்சேபணையும் எழவில்லை. முழுமையாக கருத்துச் சுதந்திரம் நிலவிய குடும்பம் அது.
1942ல் காங்கிரஸ் ”வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை அறிவித்தது. ஃபாஸிசத்துக்கு எதிரான போரில் பிரிட்டனின் கரங்களை வலுப்படுத்தவேண்டும் என்று எண்ணிய கம்யூனிஸ்டுக் கட்சி அதை எதிர்த்தது. காங்கிரஸ் கட்சிக்கும் கம்யூனிஸ்டுக்கட்சிக்கும் இடையேயான நிரந்தரமான மனக்கசப்புக்கான தொடக்கம் இதுவே. இக்காலகட்டத்தில் பி.ஸி.ஜோஷி தலைமையில் பம்பாயில் ஒரு கம்யூன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஜோஷி, பி.டி.ரணதிவே ஜி.அதிகாரி போன்றவர்கள் அதில் தங்கி வாழ்ந்தார்கள்.
ஏறத்தாழ 90 தோழர்கள் அங்கே தங்கியிருந்தார்கள். நிதிவசதி மிகக்குறைவாக இருந்தது. பார்வதியும் கிருஷ்ணனும் மோகன் குமாரமங்கலமும் பல தொழிலாளர்குடியிருப்புகளுக்குச் சென்று நன்கொடைகளையும் தேவையான தானியங்களையும் மலிவான துணிகளையும் சேகரித்துக்கொண்டு வந்து சேர்ப்பார்கள். அங்கேதான் கிருஷ்ணன் பார்வதியை எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். 1942 டிசம்பர் ஏழாம் தேதி மிக எளிமையான முறையில் அவர்களின் மணம் நடைபெற்றது
”அது ஒரு இனிமையான குளுமை வாய்ந்த காலைப்பொழுது என்பதை நான் நினைவில் கொண்டுள்ளேன். எங்கள் மீது சூரிய ஒளி பிரகாசித்தது. அந்நிகழ்ச்சியினைக்கண்டு இயற்கை இறும்பூது எய்தியதுபோலும். எங்களுடைய மூன்றுசாட்சிகளுடன் நேராக நாங்கள் இருவரும் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றோம். ஏ.எஸ்.ஆர்.சாரி, ஏ.எஸ்.வைத்யா மற்றும் மோகன் குமாரமங்கலம். இறுதிக்கட்டத்தில் திருமணப்பதிவுக் கட்டணத்தைக் கட்ட என்னிடம் பணமில்லை என்று அறிந்து மிகவும் கையறுநிலையில் இருந்தேன். பின்னர் அப்பணத்தை மோகனிடமிருந்து கைமாற்றாக வாங்கினேன் திருமணப்பதிவுக்குப் பின்னர் நாங்கள் ஐவரும் ஒரு ஈரானி டீக்கடைக்குச் சென்று ஐஸ்கிரீமும் டீயும் அருந்தினோம். அதுதான் எங்கள் திருமண விருந்து…” என்று அந்நிகழ்ச்சியை சித்தரிக்கிறார் கிருஷ்ணன்.
”அடுத்தநாள் ராஜ்பவனில் இருந்த பொது அறையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அங்கு நாங்கள் இருவரும் கட்சி உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் டீயும் பிஸ்கெட்டும் வழங்கப்பட்டன” அந்த கம்யூனில் அவர்கள் தங்குவதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவர்களின் குடும்பவாழ்க்கை அவ்வாறாகத் தொடங்கியது. கிருஷ்ணனின் நினைவில் கடும் உழைப்புடன் நெருக்கியடித்துக்கொண்டு வாழ்ந்த அந்த கம்யூன் வாழ்க்கையே பொற்காலமாக துலங்குவதை அவரது தன்வரலாற்றில் காண்கிறோம்.
பார்வதி அப்போது ஜோஷியின் தட்டச்சு உதவியாளராக இருந்தார். கட்சி துடிப்புடன் இயங்கிய தருணம் அது. ஆகவே கடுமையான வேலை. தினமும் 11 மணிக்கு கிருஷ்ணனும் பார்வதியும் டீ குடிக்கச்செல்வார்கள். அருகே உள்ள ஈரானி கடைக்குச்சென்று ஒரு கோப்பை தேநீர் வாங்கி அதை இருவருமாகப் பகிர்ந்து குடிப்பார்கள். இரண்டு கோப்பை தேநீர் வாங்க பணம் இருக்காது. அதன்பின் அரைமணிநேரம் இருவரும் அரட்டை அடிப்ப்பார்கள்.
1943ல் அவர்களுக்கு பெண்குழந்தை பிறந்தது. அதற்கு இந்திரா என்று பெயரிட்டார்கள். கிருஷ்ணனின் நேரு மீதான மனச்சாய்வு அதற்குக் காரணமாக இருக்கலாம். பிரசவத்துக்காக பார்வதி சென்னைக்கு வந்திருந்தார். குழந்தையைக் காணச்செல்ல கிருஷ்ணுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. சற்று பிந்தித்தான் அவர் சென்னைக்குச்செல்ல முடிந்தது. கடுமையான மழையால் சென்னையே வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த நாட்கள் அவை. ஆகவே ஆவடியோடு ரயில்கள் நின்றுவிட்டன. கிருஷ்ணன் ரயிலிறங்கி பேருந்தில் ஏறி முழங்கால்வரை நீரில் நடந்து பார்வதி தங்கியிருந்த அவரது அண்ணாவின் இல்லத்துக்கு வந்தார்.
”அவர்களின் இல்லத்தை அடைந்தபோது குடும்பத்தினர் அனைவரும் கதவை தாழிட்டுக்கொண்டு உள்ளே இருந்தார்கள். ஆனால் வெளியே இருந்த தோட்டத்தின் புல்வெளியில் பிரகாசமான சூரிய ஒளியில் அழகிய பெண்குழந்தை தனியாக தூங்கிக்கொண்டிருந்தது. கம்பீரத்தோற்றமுடைய செயல்திறன் கொண்ட சாலி என்ற நாய் அக்குழந்தையை விசுவாசமாக பாதுகாத்து நின்றது. அந்த சாலி என்ற நாய் பார்வதியின் அண்ணா பரமசிவத்துடையது. அவர் யுத்தப்பணிகளுக்காக வெளிநாடுசென்றிருந்தார். அங்கே பிடிபட்டு இத்தாலியில் யுத்தக்கைதியாக இருந்தார்… எனது குழந்தையை முதன்முதலாகப் பார்த்தபோதே மயங்கிவிட்டேன்…” என்கிறார் கிருஷ்ணன்.
1944 முதல் குழந்தையுடன் பார்வதி மீண்டும் கம்யூனில் தங்குவதற்காக வந்தார். இருவருக்கும் தொடர்ச்சியாக கடும் கட்சிப்பணிகள் இருந்தமையால் அப்போது அலுவலகத்தில் எந்த தோழர்கள் இருக்கிறார்களோ அவர்கள் இந்திராவை வளர்த்தார்கள். தன் ஐந்துவயதுவரை இந்திரா அந்த கம்யூனில்தான் வளர்ந்தாள்.
இந்திராவின் இளமைப்பருவத்து வாழ்க்கையை அவ்வப்போது சிறிய தகவல்கள் வழியாக சொல்லிச்செல்கிறார் கிருஷ்ணன். கிருஷ்ணனும் பார்வதியும் சிறையில் இருக்கும்போது இந்திராவை சிலமுறை கேரளத்தில் அவரது தாய்தந்தையரின் வீட்டில் விட்டுச்செல்கிறார்கள். அங்கே பக்கத்துவீட்டுப்பெண்கள் ”உன் அம்மா அப்பா எங்கே?” என்று கேட்டு குழந்தையை வதைக்கிறார்கள். ஏற்கனவே பெற்றோரைப்பிரிந்து ஆழமான அதிர்ச்சியில் இருக்கும் குழந்தை அழுகிறது. பின்னர் அதுவே மூர்க்கமான ஒரு பதிலை உருவாக்கிக்கொள்கிறது ”என் அப்பா அம்மா ரெண்டுபேரும் செத்துப்போயிட்டாங்க”
நாற்பதுகளின் இறுதி என்பது கம்யூனிஸ்டுக்கட்சிக்கு கடுமையான காலகட்டம். காங்கிரஸில் வலதுசாரிகளின் குரல் ஓங்கியது. கம்யூனிஸ்டுக்கட்சி தடைசெய்யப்பட்டு பெரும்பாலானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். வேலூர் சிறையில் கிருஷ்ணன் இருந்தார். அப்போது சென்னை மாநிலத்தில் அமைச்சராக இருந்த சுப்பராயன் தன் பேத்தி இந்திராவுடன் சிலமுறை கிருஷ்ணனைச் சந்திக்க வருகிறார். இந்திராவை பார்ப்பது தனக்கு மிக வேதனையூட்டும் அனுபவமாக இருந்தது என்று சொல்கிறார் கிருஷ்ணன். சிறையில் இருக்கும் தன் அப்பாவைப்பார்க்கும்போது இந்திராவுக்கும் துயரம். தன்னையும் அப்பாவுடன் சேர்த்துஅடைத்துவிடும்படி அவள் கேட்கிறாள்.
காமராஜ் ஒருமுறை சுப்பராயன் வீட்டுக்கு வந்து இந்திராவைக் கொஞ்சும்போது ”என் அப்பாவை என் தாத்தா ஜெயிலில் அடைத்து வைத்திருக்கிறார். என் அப்பா ஏழை. அப்பாவை தினமும் ராத்திரி கட்டிப்போடுகிறார்கள்” என்று இந்திரா காமராஜிடம் சொல்கிறாள். காமராஜ் பின்னர் பார்வதியைச் சந்தித்தபோது அதைச் சிரித்தபடிச் சொன்னார்.
தீவிரமான அரசியல் தகவல்களின் நடுவே பார்வதியும் கிருஷ்ணனும் வாழ்ந்த வாழ்க்கையின் சித்திரம் ஆங்காங்கே மெல்லிய குறிப்புகளாக வந்துகொண்டே இருக்கிறது இந்நூலில். அவர்கள் பலவருடங்கள் கட்சி அளித்த உதவித்தொகையை ஏற்கவில்லை. பார்வதியும் கிருஷ்ணனும் கோவையில் ஆங்கிலமும் கணிதமும் கற்றுக்கொடுக்கும் தனியார்பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்தி அந்த குறைந்த வருமானத்திலேயே வாழ்ந்தார்கள். கட்சிப்பணி அதிகமாகும்போது அந்த வேலையையும் குறைத்துக்கொண்டு செலவுகளைச் சுருக்கிக் கொண்டார்கள். பார்வதி பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக ஆனபோது அந்த வருமானத்தில் வாழ்ந்தார்கள்.
ஒருமுறை டாக்டர் சுப்பராயனின் நண்பரான ஜி.டி.நாயுடு அவர்களின் இல்லத்துக்கு வந்தார். அப்போது அவர்கள் வீட்டில் அமர்வதற்கான நாற்காலி பெஞ்ச் ஏதும் கிடையாது. ஜி.டிநாயுடு உடனடியாக அவர்கள் இல்லத்துக்குத்தேவையான மரச்சாமான்களை வாங்கி ஒரு லாரியில் அனுப்பி வைத்தார். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அன்புகொண்ட தொடர்ந்து உதவிசெய்கிற நண்பராக ஜி.டி.நாயுடு இருந்தார். அதேசமயம் மிக உறுதியான கம்யூனிஸ எதிர்ப்பாளர் அவர். 1974ல் ஜி.டி.நாயுடு இறப்பதற்கு முன்னர் கடைசியாக பார்வதியைப்பார்க்க அவர் டெல்லிக்கு வந்திருந்தபோது அவர்கள் வசித்த சின்னஞ்சிறு வீட்டின் மாடிப்படி ஏறமுடியாமல் தெருவில் காரிலேயே அமர்ந்து பேசியதாக கிருஷ்ணன் எழுதுகிறார்.
உறவுகளுக்கும் கடமைக்கும் இடையேயான நுண்மையான நூல்பாலம் வழியாக வாழ்க்கை கடந்துசெல்லும் பல தருணங்களை கிருஷ்ணனின் சுயசரிதை சுட்டிச்செல்கிறது. கட்சி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில் தேடப்பட்டுவந்த கிருஷ்ணன் ஒரு தலைமறைவிடத்தில் வைத்து கடுமையான நிமோனியா நோய்க்கு ஆளானார். அதன் உச்சத்தில் மனச்சமநிலை இழந்து அவர் தெருவில் இறங்கி ஓடினார். அவரை தொழிலாளர்கள் கண்டுபிடித்து அலுவலகத்துக்குக் கொண்டுசென்றார்கள். அப்போது சென்னையில் பணியாற்றிக்கொண்டு கம்யூனில் வாழ்ந்துகொண்டிருந்தார் பார்வதி. அவருக்குத்தகவல் சொல்லப்பட்டது. மிகத்துணிச்சலாக கிருஷ்ணனை ரகசியமாக தன்னுடைய தந்தையின் மாளிகைக்குக் கொண்டுசென்று விட்டார் அவர். அப்போது டாக்டர் சுப்பராயன் சென்னை மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார்!
அவர்களின் குடும்ப மருத்துவரான ஏ.சீனிவாசன் வரவழைக்கப்பட்டு கிருஷ்ணனுக்கு சிகிழ்ச்சை அளித்தார். அவர் ரகசியமாக கிருஷ்ணனை அவர் பணியாற்றிய அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஒரு விசேட வார்டில் ‘பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை’ என்ற போர்டுக்குப் பின் கிருஷ்ணன் சேர்க்கப்பட்டு சிகிழ்ச்சை அளிக்கப்பட்டார். பத்துநாள் உயிருக்குப் போராடியபின் மெல்லமெல்ல கிருஷ்ணன் மீண்டுவந்தார். நோய் குணமான பின்பு அவரை பிணம் கொண்டுசெல்வதற்காக இருந்த சிறிய கதவின் வழியாக வெளியே நின்ற காருக்குக் கொண்டுசென்று தப்பச்செய்தார் டாக்டர்.
டாக்டர் சுப்பராயனுக்கு மருமகன் தன் வீட்டில் இருப்பது தெரியும். அவரைக் கைதுசெய்ய ஆஸ்பத்திரியின் எல்லா வாசல்களிலும் ஆளை நிறுத்தி வைத்திருந்தார் அவர். ஆனாலும் கிருஷ்ணன் தப்பிவிட்டார். நோயுற்றிருந்த மருமகனைக் கைதுசெய்ய சுப்பராயனின் மனம் ஒப்பவில்லை. இந்த சம்பவத்தைப்பற்றி அவர் பின்பு தன் மந்திரிசபைக்குத் தெரிவித்தார். அவரை ஒருவரும் எதிர்க்கவில்லை. அவரது நேர்மையை எவரும் ஐயப்படுவதில்லை. ஆனால் சுப்பராயன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி அவரே கோரி மந்திரிசபையிலிருந்து விடுபட்டு மகாராஷ்டிரத்தின் கவர்னராக பணியாற்றச் சென்றார்.
ஒரு இனிய காதல்கதை அதற்குரிய முடிவை நெருங்குவதைப்போல கிருஷ்ணன் தன் மகள் இந்திராவின் வளர்ச்சியைச் சொல்லிச் செல்கிறார். மருத்துவப்படிப்பை முடித்த இந்திரா தன்னுடன் படித்த மருத்துவரான மனஸ் தாஸ்குப்தாவை காதலித்து மணக்கிறார். அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பார்வதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் அந்த திருமணம் மிக எளிமையாக நடக்கிறது– பலவருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணன்-பார்வதி திருமணம் எப்படி நடந்ததோ அப்படி.
”1976 ஜனவரி 22 ஆம் நாள் என் குடும்பவாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. நான் தாத்தாவாகிவிட்டேன். அந்த நாளில் தான் பூர்ணிமா பிறந்தாள். அன்று அதிகாலையில் நான் கெஜி மருத்துவமனைக்கு விரைந்தேன். அச்சிறு குழந்தையை கரங்களில் எடுத்துக்கொண்டு அவளுடைய சிறிய முகத்தை ஆசைதீரப்பாத்துக் கொண்டிருந்தேன். எனது நினைவுகள் 1943ல் அவளின் தாயை சென்னையில் என் கரங்களில் ஏந்திக்கோண்டிருந்த நாட்களை நோக்கி திரும்பின”
வாழ்க்கை இனியது. போராடும்போது மேலும் இனிதாகிறது. ஏனெனில் எல்லா போராட்டங்களும் வாழ்க்கை மீதான ஆழமான விருப்பத்தில் இருந்து பிறப்பவை.
[நம்பிக்கை ஒளி, [ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலற்று நினைவுகள்]. என்.கெ.கிருஷ்ணன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடட். சென்னை. தமிழாக்கம் எல்.ஜி.கீதானந்தன்]
கண முத்தையா
தமிழ்ப்புத்தகாலயம் என் முதல் புத்தகம் ரப்பர்-ஐ வெளியிட்டது. 1990ல் அந்நாவல் அமரர் அகிலன் விருது பெற்றபோது அப்பதிப்பகத்தின் நிறுவனர் கண முத்தையாவை சந்தித்தேன். அவர் தமிழின் எப்போதைக்கும் உரிய ‘பெஸ்ட் செல்லர்’ ஆன வால்காவிலிருந்து கங்கைவரை என்னும் நூலை மொழியாக்கம் செய்தவர் என்பதே எனக்கு அப்போது முக்கியமாகத் தெரிந்தது
கண முத்தையா
கண முத்தையா – தமிழ் விக்கி
எழுத்தாளன், புனிதன், மனிதன் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
மிக எளிதாக உங்களைப் போன்ற ஒருவர் ஒழுக்கத்தீர்ப்பை அளிப்பவராக காட்டிக்கொள்ள முடியும். கோணங்கி உள்ளிட்ட அனைவரையும் ‘அடித்துக் காலிசெய்ய’ முடியும். அந்த வாய்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் எதைச் சொல்லவேண்டுமோ அதைச் சொல்கிறீர்கள். தர்மதேவதை அவதாரம் எடுக்கும் நேரமல்ல இது. எழுத்து- எழுத்தாளனின் தரப்பை முன்வைக்கும் நேரம்.
பாமரர்கள் என்று அடிக்கடிச் சொல்கிறீர்கள். அவர்கள் யாரென்று தெரிந்தது இப்போது. எல்லா ஊழல்களையும் ஒழுக்கக்கேடுகளையும் சகித்துக்கொண்டு அரசியல்தலைவர்களை கொண்டாடும் கும்பல்தான் இப்போது ஆவேசமாக கல்வீச வருகிறது. அவர்களால் குழம்பியிருக்கும் புதிய வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தெளிவான ஒரு புரிதலை அளிக்கும் கட்டுரை.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் கருத்துச் சொல்கிறீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் இது பேசப்படுகிறது. இப்போதுதான் இந்தத் தரப்பைச் சொல்ல முடியும். இப்போது சொன்னால்தான் போய்ச்சேரும். இப்போது நடக்கும் பொதுவிவாதங்களில் இலக்கியத்தரப்பின் குரலும் ஒலிக்கவேண்டும். உங்கள் குரல் வலுவாக ஒலித்தது மகிழ்ச்சியளிக்கிறது.
பிகு 1: விடுதலைக்கு வாழ்த்துக்கள். நானும் சினிமாவில்தான் இருக்கிறேன். உங்களை சீக்கிரமே சந்திப்பேன்.
பிகு 2: இன்னொரு சுவாரசியமான விவாதம். ஒரு நண்பர் “நிதானமாக சராசரியாக வாழ்ந்த இவர்களெல்லாம் எழுத்தாளர்கள் இல்லையா” என்று ஆவேசமாகக் கேட்டு ஒரு பட்டியலை அளித்தார். அவர்களில் நேர்பாதிப்பேர் மனச்சோர்வு, மனச்சிக்கலுக்கு நீண்டகால மருத்துவம் எடுத்துக்கொண்டவர்கள் என்று அவர்களே எழுதியிருக்கிறார்கள். சிரித்துக்கொண்டேன்.
ஷேக் முகம்மது எம்
அன்புள்ள ஜெ.
எழுத்தாளன், புனிதன், மனிதன் குறித்த தங்களின் கருத்துகள் யதார்த்தமானவை. புரிதல் இல்லா தருணங்கள் குழப்பத்துடன் கூடிய கூக்குரல்கள் நிறைந்தவை . அவைகளை சுமந்து கொண்டு ஒரு படைப்பாளியை உணர்ந்து கொள்ளமுடியாது. ஒரு சிறு கல்லெறி வழி ஒருவரின் படைப்பிலக்கிய பங்களிப்பை கலங்கடித்துவிடக்கூடாது. களங்கப்படுத்துவிடக்கூடாது. நீங்கள் சொல்வது போல
இலக்கியவாதி சட்டத்திற்கு, பொது ஒழுக்க நெறிக்கு, குடிமைப்பண்புகளுக்கு அப்பாற்பட்டவனா? இல்லை. சட்டமீறல் என்றால் சட்டம் தன் கடமையை செய்யட்டும். ஒழுக்கநெறி சமூகத்திற்கு தீங்கானது என்றால் அவனை ஒதுக்கி வைக்கட்டும். குடிமைப் பண்புக்கு எதிரானவன் அவன் என்றால் அவனை கண்டிக்கட்டும். ஆனால் இதெல்லாம் இலக்கியத்திற்கு நிபந்தனை என ஒருவன் சொல்வான் என்றால் அவனை ‘அப்பால் போடா’ என்று சொல்லாமல் எழுத்தாளன் ஒரு வரியும் எழுத முடியாது”
என்பது சரியான நிலைப்பாடு.
அதேசமயம் ஒருவருடைய இலக்கிய பங்களிப்பை புறந்தள்ளல் கூடாது. சக மனிதன் மீதான காழ்ப்புணர்வை கீழ்நிலையினும் கீழாய் வெளிப்படுத்தி அவரை புண்படுத்துவது ஒருவகையான நோய்க்கூறு. கோணங்கி சார் ஆன்ம பலத்துடன் உறுதியாய் நின்று இதிலிருந்து மீண்டுவரவேண்டும்.
அன்புடன்
பார்த்திபன்.ம.
அன்பு ஜெ சார். நலம்தானே.
திரு கோணங்கி அவர்கள் பற்றிய மூன்று கட்டுரைகளும் படித்தேன். ‘திரு’ வும் ‘அவர்க’ ளும் போட்டதே மனிதனாய்ப் பிறந்த எவரும் ஒரு குறைந்த பட்ச மரியாதைக்கு உரியவர்களே என்பதால். அதுவும் நீங்கள் சொல்வது போல் எழுத்தாளர்கள் நுண்ணுணர்வு மிகக் கொண்டு பல சமயம் தத்தளிப்புகளிலும் கொந்தளிப்புகளிலும் சிக்கிக் கொள்கையில் அவர்களை நடுத்தெருவில் வைத்து கல்லாலடிப்பது மானுடத்தன்மையில்லை.
எல்லோரும் உத்தமராய்ப் பிறப்பதோ வளர்வதோ இல்லை. அது வாய்க்கப்பெற்றவர்கள் நல்லூழ் வசப்பட்டவர்கள். உங்களைப் போலே.
சட்டத்தின் பார்வையிலும் சமூகத்தின் பார்வையிலும் தடம்பிறழ்பவர்களை ஒன்றுமே செய்யக்கூடாதென்று சொல்லவில்லை. விமர்சனம், கண்டனம், தண்டனை எல்லாம் சரியே.
ஆனால் ஒரு வன்மத்தோடு அவர்களைப் பொதுவெளியில் நார்நாராய்க் கிழிப்பது சரியில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தானே வேண்டுமென்பார்கள். சரிதான். ஆனால் இது போன்ற நிகழ்வுகளில் தவறிழைத்தவர்களோடு சேர்ந்து அவர்கள் குடும்பமும் தீராத தலைகுனிவுக்கு உள்ளாவது கொடுமை. அதுவும் எந்த சம்பந்தமில்லாமலும் அதே சமயம் தன் சுயவிளம்பரத்திற்காகவும் சிலர் பொதுவெளியில் ருத்ரதாண்டவமாடுவது……
குறிப்பாக அரசியல் பண்ணுபவர்கள் இதில் கோஷ்டிகானம் பாடுவது. சின்மயி வைரமுத்துவில் ஆரம்பித்து தொடர்ந்து இந்த தோரணம் கட்டித் தொங்கவிடும் மீ டூக்கள்
வைரமுத்து, பாடகர் கார்த்திக், பாரதிராஜா, வெற்றிமாறன் போன்ற பல திறமை வாய்ந்த கலைஞர்கள் இப்படி வன்மவாதிகளின் வார்த்தைவன்முறைகளுக்கு ஆளானார்கள். ஒழுக்கத்தின் உச்சத்தில் வாழும் பலகோடி சராசரி மனிதர்களுக்கு வாய்க்கப்பெறாத கலைத்திறன் பெற்ற இவர்போன்றவர்களின் வாழ்நாள் சாதனைகள் ஒரே நொடியில் மண்ணில் போட்டு மிதிக்கப்பட்டு விடுகின்றன.
ஓர்பாலோ எதிர்பாலோ, இருதரப்பும் இசைந்து இணையாததெல்லாம் வன்புணர்வே, வன்முறையே ஆகும். அது விலைமகளே ஆனாலும் வேண்டாமென்றால் விட்டு விடுவதே சரி. ஆனால் அந்தப் பிரச்சினை அதோடு, அவர்களோடு முடிந்து விடுவது நல்லது. பொதுவெளியில் எதற்கு இத்தனை ஆர்பாட்டங்கள்?
உங்களில் உத்தமர்கள் மட்டுமே கல்லைக் கையிலெடுங்கள் என்று சொல்ல நான் ஏசுபிரானில்லைதான். ஆனாலும் விளிம்புநிலை, வழிதவறிய (வக்கிரமே என்று சொன்னாலும்) மக்களை ஒரு குறைந்தபட்ச அனுதாபத்தோடும் புரிதலோடும் அணுகுவதை எங்கள் தலைமுறை ஜெயகாந்தனிடம் கற்றது. அந்தவகையில் நீங்கள் சொல்வது போல ஜேகேவின் எழுத்துக்களை வாசித்தது ஒரு குருகுலவாசம் போலவே ஆனது.
எழுத்தாளன் யார், அவனை எந்தத் தராசில் வைத்து நிறுத்தவேண்டும், அவன் எதனால் கட்டமைக்கப்பட்டவன் (நுண்ணுணர்வு) என்பதெல்லாம் இத்தனை விரிவாக விளக்க உங்களால் மட்டுமே முடியும். ஜேகேவானால் போடா மசுரேன்னு இரண்டு சொற்களால் தலை தெறிக்க ஓட விட்டு விட்டு அடுத்த இழுப்புக்கு பற்ற வைத்துக் கொண்டிருப்பார்.
புரிந்து கொள்ளல் என்ற உன்னத பண்பை சொல்லிக் காட்டியிருக்கிறீர்கள். அவ்வளவுதான் சார் சமாச்சாரம்.
நன்றி. வாழ்த்துக்கள்.
அன்புடன்
ரகுநாதன்.
இந்திய நுண்கலைகளின் தரிசனம்- கடிதம்
இனிய ஜெ,
வணக்கம். நன்கு வளர்ச்சியடைந்த சமூகம் என்பதன் அளவுகோல் அந்தச் சமூகம் அதன் தொன்மங்களை, நுண்கலைகளை எப்படி வளர்த்தெடுத்தார்கள் மற்றும் அதனை எவ்வாறு போற்றிப்பாதுகாக்கிறார்கள் என்பதில் விளங்கும். அந்த வகையில், நம் தமிழ்ச்சூழலில் நாம் அனைவரும் ஏறத்தாழ மறந்து விட்ட, மெதுவாக மறைந்துகொண்டிருக்கும் நுண்கலைகளில் ஒன்றான ஆலயக்கலை மற்றும் அதன் வரலாறு பற்றி வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது அனைவரும் அறிந்து கொள்வதன் தேவை புலனாகிறது. ஆலயக்கலை பயிற்சி முகாமில் சிற்பங்களை அறிதல் படிநிலைகளில் சிற்பங்களின் வகைகள், முப்பரிமாண சிலைகள், புடைப்புச்சிற்பங்கள், கோஷ்ட அமைப்புகள், ஒற்றைக்கை மற்றும் இரட்டைக்கை முத்திரைகள்
(ஹஸ்தம்), நிற்கின்ற நிலை (ஸ்தானகம்), அமர்ந்த நிலை (ஆசனம்), கிடந்த நிலை (சயனம்) மற்றும் ஆலய விமானம், அதிஸ்டானம், குமுதம் மற்றும் பல்லவர்கள் காலத்து குடைவரை கோவில்கள், மாமல்லபுர சிற்பங்கள், சோழர்களின் தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம், சாளுக்கியர், விஜயநகர மற்றும் நாயக்கர் சிற்ப வேலைப்பாடுகள் என்று மிகுந்த கவனத்துடன் செறிவாக தொகுக்கப்பட்ட அறிதல் முறை.
சிற்பக்கலையில் புடைப்புச்சிற்பங்கள் மற்றும் முழு வடிவ சிலைகளில் காணப்படும் முத்திரைகள் எவ்வாறு நாடக்கலையின் அபிநயங்களுடன் இயைந்து உருவாகி வந்தன என்று ஆசிரியர் ஜெயக்குமார் விளக்கிய விதம் மிகவும் அற்புதமான தருணம்.
உதாரணத்தி்ற்கு அவர் எடுத்தாண்ட விளக்கங்கள். நாட்டியத்தில் சிவனை குறிக்க முக்கண்ணன், திரிசடையன் போன்ற அபிநயங்களும், விஷ்ணுவைக் குறிக்க சங்கு சக்கர அபிநயங்களும், கிருஷ்ணரைக்குறிக்க புல்லாங்குழல், மயில் பீலி போன்ற அபிநயங்களும் மேலும் சில நடன முத்திரைகளோடு முக பாவனைகளுடன் நடித்தும் காட்டினார். முத்தாய்ப்பாக மறைந்த புகழ்பெற்ற கதக் நடனக்கலைஞர் பிஜூ மகாராஜ் அவர்களின் நடன அசைவுகள் மற்றும் முத்திரைகளோடு தொடர்புபடுத்தி விளக்கியது பரவச அனுபவம்.
சித்திரம் வரையும்பொழுது எப்படி ஒரு ஓவியரின் தூரிகை நுட்பத்துடனும், நுணுக்கங்களுடன், நெளிவு சுழிவுகளுடனும் வண்ணங்கள் தீட்டுகிறதோ அதே நுட்பத்துடன் சிற்பங்களிலும் கீறல்கள், புள்ளிகள், வளைவுகள், புடைப்புகள் எவ்வாறு செதுக்கப்படுகின்றன என்று அற்புதமாக விளக்கினார்.
திருஞான சம்பந்தர் எழுதிய திருக்கயிலாய பதிகத்தில் வரும் “பரிய களிற்றை அரவு விழுங்கி” என்ற உவமையை மறைபொருளாக விளக்கும் பாடலின் காட்சி வடிவம் தஞ்சைப்பெரிய கோவிலில் சிற்பமாக உள்ளது.
தஞ்சைப்பெரிய கோவில் இராஜகோபுரத்தின் வாயிலில் அமைந்திருக்கும் துவாரபாலகர் சிலையின் காலடியில், பாம்பு யானையை விழுங்கும் புடைப்புச்சிற்பத்தில் யானையை விழுங்கும் பாம்பு யானையை விடப் பெரியதாகவும், துவாரபாலகர் பாம்பை விட பெரிய உருவத்திலும், அவரது இடதுகை முத்திரை தலைக்கு மேல் உயர்த்தி காட்டியபடி “இறைவன் என்னை விடவும் மிகப்பெரியவன்” என்பதை மறைபொருளாக உணர்த்துவதையும் ஆசிரியர் எளிமையாக விளக்கினார்.
இந்த மறைபொருள் விளக்கம், எங்களை எல்லாம் விட ஆசிரியர் ஜெயக்குமாரும், ஆசிரியரும் ஆசானுமாகிய தாங்களும் எவ்வளவு பெரியவர்கள் என்பதை எங்களுக்கு உணர்த்திய தருணம் அது.
சிற்பம், ஓவியம், நாட்டியம், நாடகம் இவற்றுடன் ஓதுவார்களின் தேவாரப்பாடல் இசையையும் ஆலயக்கலை தன்னுடன் இணைத்துக்கொண்டதின் மகத்துவம் உள்ளுணர்வில் பரவி நிற்கிறது.
ஆசிரியர் ஜெயக்குமாரின் செறிவான இசை ஞானம், பரந்து பட்ட ஆலயக்கலை நுண்ணுணர்வு, நடன அபிநயங்கள், முக பாவனைகள், கற்றல் விழைவு, கற்றுக்கொடுப்பதில் பேரானந்தம், தேர்ந்த நகைச்சுவை ரசனை என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன.
இந்த நல் வாய்ப்பினை உருவாக்கித்தந்த உங்களுக்கும் இதனை சீராக ஒருங்கிணைத்த அந்தியூர்மணி அண்ணாவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மிக்க நன்றியுடன்.
அரசு, ஈரோடு.
இரு முகில்களின் கதை -கடிதம்
அந்தமுகில் இந்த முகில் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
அந்தமுகில் இந்த முகில் நாவலை அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் வாட்ஸாப்பில் தமிழின் மிகச்சிறந்த நாவல் என்று சொல்லியிருந்தார். சினிமாமேல் ஈடுபாடு உடையவன் என்பதனால் உடனே அந்த நாவலை வாங்கி வாசித்தேன்.
சினிமா ஒரு கனவு. திரையில் வரும் சினிமாவும் கனவுதான். சினிமா எடுக்கப்படுவதும்கூட ஒரு வகையான கனவுதான். ஆனால் அந்த சினிமா கடந்தகால சினிமா என்றாலது ஒரு பெரிய மாயக்கனவு. அந்தக்கனவை இந்த நாவல் அற்புதமாக காட்டுகிறது.
கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் உருவாகும் காதல் எந்த ரொமாண்டிக் அம்சமும் இல்லாமல் சாதாரணமாகத் தொடங்கி மெதுவாக மெதுவாக மேலே சென்று அந்த நிலாவில் அவர்கள் போகும் காட்சியில் ப்யூர் ரொமாண்டிக் ஆக மாறிவிடுகிறது. அதுதான் நாவலின் அழகே. அவர்களின் காதல் அந்த இடத்தில்தான். அவர்கள் வாழ்வது அந்த ஒரு பயணத்தில் மட்டும்தான்.
கதையை ஒருவிதமான படபடப்புடன் வாசித்து முடித்தேன். ஆனால் அதை மனதில் ஓட்டிக்கொண்டே இருக்கும்போதுதான் அந்த நாவல் எவ்வளவு அற்புதமான படிமங்களால் கோக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்தது. இரண்டு முகில்கள்தான் இருவரும். அவர்கள் இருவரும் கரைந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தொட்டுக்கொள்ளும் இடம் கொஞ்சம்தான். தற்காலிகமானதுதான். ஆனால் அவர்கள் ஒன்றாக கரைந்துவிடமுடியும்
நாவல் முழுக்க பல ரியாலிட்டிகள். சினிமா ஒரு ரியாலிட்டியாக வருகிறது. காலந்தோறும் கைகூடாத காதல்கள் எல்லாமே உள்ளிழுக்கப்பட்டுவிடுகின்றன. அந்த முகில் இந்த முகில் என்று மனசு அரற்றிக்கொண்டே இருக்கிறது. கடுமையான வேதனையை உருவாக்கிய நாவல். ஆனால் ஒரு வகையான நிறைவையும் அளித்தது. வாழ்க்கையைப்பார்த்த நிறைவு
ஏ.ஜாபர்கான்
March 11, 2023
படைத்தலின் இனிமை
பிரதமன் வாங்க
பிரதமன் கதை எழுதும் அக்காலகட்டத்தில் நான் இனித்துக் கொண்டிருந்தேன். கல்பற்றா நாராயணன் ஓர் உரையில் சொன்னார். குழந்தையாக இருக்கையில் சுவைத்த கட்டை விரல் போல வேறொன்றும் பின்னர் சுவைப்பதில்லை என்று. அது நம்மில் ஒரு பகுதி. நம்மை நாமே சுவைப்பது. எல்லா பகற்கனவுகளும் அத்தகையவையே. இலக்கியமென்பது அழகான, ஆன்மிகமான ஒரு பகற்கனவு.
நான் வெண்முரசு எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதிய கதைகள் இவை. அன்று ஒவ்வொரு முறை ஓர் அரிய புனைவுத்தருணம் நிகழும்போதும் என்னில் ஓர் எக்களிப்பு நிகழும். எப்படி நிகழ்ந்தது இந்த இனிமை? இந்த முழுமை எங்கிருந்து வந்தது? திட்டமிடவில்லை. வகுத்துச்செய்யவுமில்லை. அதுவே நிகழ்கிறது.
அத்துடன் அது நிகழ்வதை நாம் உணர்வதுமில்லை. ஒரு மாயப்புள்ளியில் அது முழுமையுடன் நிகழ்ந்துவிட்டிருக்கிறது. பின்னர் பின்னால் சென்று அது திரண்டுவந்த பாதையை நம்முள் கண்டடைய முடியும். ஆனால் அனைத்தும் ஒன்றுகூடி புதிய ஒன்று நிகழும் அக்கணம் முன்னர் இல்லாதது, எவ்வகையிலும் ஊகிக்க முடியாதது.
வெண்முரசுக்குப்பின்னர் எழுதிய பல கதைகளில் இந்த இனிய மர்மத்தை சொல்லிவிட முயன்றிருப்பேன். அதில் முதன்மையான கதை பிரதமன். பிரதமன் என்பது பாயசத்தில் ஒரு வகை. தேங்காய்ப்பாலும் வெல்லமும் போட்டு செய்வது. அச்சொல்லின் பொருள் முதன்மையானது என்பது. இனிப்பே சுவைகளில் முதன்மையானது என அறியாதோர் எவர்?
இந்த தொகுப்பு அவ்வகையில் எனக்கு மிக அணுக்கமான ஒன்று. சிறுகதை உத்திகள், நாடகீய தருணங்கள் ஏதுமில்லாமல் தூய கவித்துவத்தின் பலத்திலேயே நிலைகொள்ளும் கதைகள் இதிலுள்ளன.
இந்நூலை முதலில் வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்திற்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என் நன்றிகள்
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


