Jeyamohan's Blog, page 41
August 9, 2025
குருகு வேதாசலம் சிறப்பு மலர்
குருகு பண்பாட்டு இதழின் ஆகஸ்ட் 2025 இலக்கம் ஆய்வாளர் வெ.வேதாசலம் சிறப்புமலர் ஆக வெளிவந்துள்ளது. வேதாசலத்தின் முக்கியமான நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
ஆய்வாளனின் நிமிர்வும் ஆய்வில் ஒரு மூலப்பொருள்தான் – வெ. வேதாசலம் நேர்காணல்ஜி.எஸ்.எஸ்.வி.நவின், தாமரைக்கண்ணன் அவிநாசி, மகேஸ்வரி, பொன் மகாலிங்கம் உள்ளிட்டவர்களின் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது.
குருகு இணைய இதழ்தமிழ்விக்கி தூரன் விழா: அழைப்பிதழ், வருகைப்பதிவு
யோகம் அளித்த மீட்பு
Beethoven is not only a master of music but also an initiator of a new era of cultural discourse, which made a new dawn in Europe possible. He is the grand unifier of Western philosophy and poetry with music.
Beethovan as a pioneerகடந்த ஆறு மாதங்களாக தினமும் காலை வேளையில் பிராணாயாமங்களும் யோக பயிற்சிகளையும் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன் இந்த பயிற்சிகளின் மூலம் பெற்ற பலன்கள் இதுவரையில் வேறு எதன் மூலமாகவும் பெறாதவையே
யோகம் அளித்த மீட்புAugust 8, 2025
அந்த வாசகர்கள், அந்த வாசிப்பு…
அன்புள்ள ஜெ
நலம்தானே?
இணையத்தில் உங்கள் கட்டுரைகளில் அடிக்கடி உங்கள் மேல் வசைபாடுபவர்களைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் மனநிலையை வெவ்வேறு கோணத்தில் பலமுறை எழுதியுமிருக்கிறீர்கள். வசைபாடுபவர்கள் பெரும்பாலானவர்கள் அரசியல்முகமூடி போட்டுக்கொண்டிருந்தாலும் அவர்களின் அடிப்படை என்பது மதம் அல்லது சாதி சார்ந்த காழ்ப்புதான். மிகச்சிலர் மட்டும் கண்மூடித்தனமான அரசியல் பற்று கொண்டவர்கள். ஆனால் இதெல்லாம் உங்கள் வாசகர்களுக்கும் தெரிந்தே இருக்கிறது. வாசகர்களும் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல.
உங்கள் வாசகர்களையும் இந்த மழுங்கின உள்ளங்கள் தொடர்ச்சியாக வசைபாடி இழிவுசெய்துகொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். தொடக்க காலத்தில் எனக்கு இந்த கருத்துகள் மேல் ஒரு கவனம் இருந்தது. இப்படி நம்மை சொல்கிறார்களே, உண்மையில் இவர்கள் நம்மைவிட நுட்பமானவர்களாக இருப்பார்களோ, நாம் கவனிக்கவேண்டுமோ என்று நினைப்பேன். ஆனால் முகநூலில் ஒரு மாதம் தொடர்ந்து கவனித்தால்போதும் எப்பேற்பட்ட அசடுகள் என்று தெரியவரும். அந்த அசட்டுத்தனம், அறியாமைதான் அவ்வளவு தன்னம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது என்றும் தெரியவரும். உண்மையிலேயே அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது.
அதேபோல அவ்வப்போது எழுத்தாளர்கள் உங்கள் வாசகர்களை மட்டம்தட்டி ஏதாவது சொல்வார்கள். நான் உடனே ஒரு குற்றவுணர்ச்சியை அடைவேன். சரிதான், நமக்குத்தான் வாசிப்பு போதவில்லை, இவரையும் வாசிப்போம் என நினைப்பேன். இப்படி பத்துக்கும் மேற்பட்டவர்களின் எழுத்துக்களை காசுகொடுத்து வாங்கியிருக்கிறேன். அவர்களில் பலர் தலையில் அடித்துக்கொண்டு தூக்கி வீசவேண்டிய நூல்களைத்தான் எழுதியிருக்கிறார்கள். மிகச்சிலர் பரவாயில்லை ரகப் படைப்புகளை எழுதியிருக்கிறார்கள்.
இந்தப் பரவாயில்லை ரக எழுத்தை எழுதியவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். இவர்கள் அதிகம் வாசிக்காதவர்கள் என்பதனால் உண்மையில் இவர்கள் இருக்கும் இடம் இவர்களுக்கே தெரியாது. ஆகவே உங்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். பொறாமையும் கசப்பும் அடைகிறார்கள். ஒரு காலகட்டத்தில் எழுதும் தலைசிறந்த எழுத்தாளர்மேல் எப்போதுமே முதன்மையான கவனம் இருக்கும். அவருடைய எழுத்துக்களால் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என நினைக்கும் வாசகர்களும் இருப்பார்கள். இந்த சராசரி எழுத்தாளர்களை இலக்கியவாதிகள் ஒரு பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாமே ஒழிய வாசகர்கள் பொருட்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. ஆகவே எவரும் வாங்குவதில்லை. வாசகனை இவர்கள் மட்டம்தட்டுவதும் வசைபாடுவதும் இவர்களுக்கு வாசகன் என்பவனே இல்லை என்பதனால்தான். அது வருத்தமானதுதான். ஆனால் ஒன்றும் செய்வதற்கில்லை. வாசகன் தன் நேரத்தையும் பணத்தையும் வெறும் அனுதாபத்துக்காக இவர்களுக்குச் செலவிடமுடியாது அல்லவா?
ஜெ, நான் கேட்கவருவது இன்னொன்று. இந்த வசைகள் பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பதிப்பகம் வெளியிடும் உங்கள் நூல்கள் எல்லாமே விற்றுக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் யூடியூபில் பார்த்தால் உங்களுடைய நூற்றுக்கணக்கான கதைகளை வெவ்வேறு குரல்கலைஞர்கள் சொல்லி, வாசித்து வைத்திருக்கிறார்கள். பல பதிவுகளை லட்சம் பேர் வரைக்கும் கூட பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு பதிவுக்குக் கீழேயும் கண்ணீரும் கொந்தளிப்புமாக ஏராளமான எதிர்வினைகள் உள்ளன. எல்லாமே சாமானியர்கள். பலர் சரளமாகத் தமிழ் வாசிக்க முடியாதவர்கள் என்பதுகூடத் தெரிகிறது. பலருடைய எதிர்வினைகளில் அவர்கள் அவற்றை கதைகளாக எடுத்துக்கொள்ளவில்லை, வாழ்க்கைப்பாடமாகவே எடுத்துக்கொள்கிறார்கள் என்று தெரிகிறது.
ஓர் எழுத்தாளராக இந்த சாமானியர்களின் எதிர்வினைதானே உங்களுக்கு முக்கியம்? இவற்றைப் பற்றி நீங்கள் பெரிதாக எழுதியதில்லை. இத்தனை லட்சம் பேர் உங்கள் கதைகளுடன் கொண்டிருக்கும் இந்த ஆத்மார்த்தமான உறவு ஒரு மகத்தான நிகழ்வுதானே? தமிழில் இது ஓர் அரிய பண்பாட்டு நிகழ்வுதானே?
ரா. ஜெயக்குமார்.
அன்புள்ள ஜெயக்குமார்,
உண்மைதான், அந்த வாசகர்களிடம் கதைகள் சென்று சேர்வதும், அங்கே கிடைக்கும் எதிர்வினையும் மிகமிக முக்கியமானவைதான். அவை இன்று தமிழகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிக முக்கியமான கலாச்சார நிகழ்வுகள்தான். இலக்கியவாதி எழுதிக்கொண்டிருப்பது இலக்கியத்தை ஒரு வம்பாக, கேளிக்கையாக, அறிவுவிளையாட்டாக எண்ணிக்கொண்டிருக்கும் சிறு வட்டத்திடம் அல்ல. இலக்கியத்தை வாழ்க்கையாக எடுத்துக்கொள்ளும் மக்கள் திரளிடம்தான்.
ஆகவே நான் என் கதைகள் ஒலிவடிவில் சென்று சேர்வதை ஆதரித்தே வருகிறேன். அவற்றுக்கு எந்த காப்புரிமைக் கட்டுப்பாடும் விதிப்பதில்லை. அவற்றை கேட்பவர்கள் எந்த வடிவில் கேட்டாலும் அது நன்றே என எண்ணுகிறேன். அந்த எதிர்வினைகளை அவ்வப்போது நான் பார்ப்பதுண்டு. பல எதிர்வினைகளில் அவை என் கதைகள் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை என்பதைக் கண்டிருக்கிறேன். பவா சொல்லும் பல கதைகளை கேட்பவர்கள் அவர் சொல்லும் கதையாகவே எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலென்ன, அதுவும் சரிதான், சென்றடைய வேண்டியது கதைதான் என்று எண்ணிக்கொள்வேன்.
அதேபோல வெண்முரசின் கதைகள் மகாபாரதக் கதைகளாகவே மாறி பல அரங்குகளில் சொல்லப்படுகின்றன. நான் எழுதியவை அவை என சொல்பவர், கேட்பவர் எவருக்கும் தெரியாது. அண்மையில்கூட அப்படி ஒருவர் உருக்கமாக திருவிழா நிகழ்வு ஒன்றில் வெண்முரசுக்கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டேன். அதுவும் இயல்பானதே. மகாபாரதத்தை ஒட்டிய பல வடிவங்கள் அவ்வாறு கலந்தே மகாபாரதம் உண்மையில் பாரதக் கதையாக ஆகியிருக்கிறது. உக்ரசிரவஸ் முதல் நல்லாப்பிள்ளை வரை. என் கதை பவா வழியாக சற்று உருமாறுவதும் அவ்வாறுதான் இயல்பானது, கதைகளின் இயல்பு அது.
நான் வசைகளைப் பற்றிச் சொல்வது ஒரு காரணத்தால்தான், நம் சூழலில் உள்ள மிக அபாயமான பொறிகள் அவை. அவற்றை அறியாமல் இந்தக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். ஆனால் சமூகவலைத்தளங்களில் ஈடுபட்டு அவற்றில் சிக்கிக்கொள்பவர்கள் தங்கள் சிந்தனையில் மிகப்பெரிய திரிபை அடையக்கூடும். வாசகர்கள் நுண்ணுணர்வு கொண்டவர்கள், விஷயம் அறிந்தவர்கள். மறுக்கவில்லை. ஆனால் வெறும் சுவாரசியத்துக்காக அந்த வசைகளைக் கவனித்தால் கூட மெல்ல மெல்ல நம் உள்ளத்தின் ஒரு பகுதி அவற்றுடன் எதிர்வினை ஆற்றத் தொடங்கிவிடும். எதிர்மறைத்தன்மை கொண்டவற்றுக்கு அபாரமான வசீகரம் உண்டு. அவற்றைப் பற்றிய எச்சரிக்கை எவ்வளவு இருந்தாலும் பிழையல்ல.
ஜெ
ஓஷோ: மரபும் மீறலும்-13
நண்பர்களே, இந்த உரைநிகழ்வின் இறுதியில் இன்று ஓஷோவைப் பற்றி இதுவரை நான் சொன்னவற்றையும், ஓஷோ என நான் தொகுத்துக்கொள்வனவற்றையும் சுருக்கிச் சொல்லலாம் என நினைக்கிறேன். அதாவது அடிப்படையில் ஓஷோ முன்வைத்தது என்ன என்பதை ஓரளவுக்கு சுருக்கிக்கொள்வதைப்பற்றி சொல்ல விரும்புகிறேன். சுருக்கிக்கொள்வது என்பது எப்போதுமே ஒரு தெளிவை அளிப்பது. கூடவே, சில விஷயங்களை விட்டுவிடுவதும்தான். ஒரு சிந்தனையாளனை, ஞானியை, தத்துவவாதியை, கலைஞனை சுருக்கிக்கொள்வது என்பது ‘அவர் இவ்வளவுதான்’ என்று சொல்வதல்ல. உள்ளங்கை நெல்லிக்கனி எல்லாம் அல்ல. அப்படிச் சொல்லுவது அவரை அவமதிப்பது. நாம் நமக்கான ஒரு தொடக்கத்தை உருவாக்கிக் கொள்வதுதான் அது. நம்முடைய சொந்த புரிதல் மட்டும்தான்.
நமது தமிழ் மேடை பேச்சுகளில் ஒரு மரபு உள்ளது. எதைப்பற்றிச் சொன்னாலும் “இதோ இவ்ளவுதான்யா விஷயமே” என்று சொன்னால் உடனே அரங்கினர் படபடவென கைதட்டுவார்கள். அவர்களுக்கு எல்லாமே சுருக்கமாக, கையளவாக வேண்டும். ஒரு மேடைப்பேச்சில் இருந்தே எல்லாம் கிடைத்துவிடவேண்டும்.ஆனால் எந்தவொரு சிந்தனையும் எந்த அளவுக்கு சிக்கலாகவும் உள்விரிவுகள் கொண்டதாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் உண்மைக்கு அருகே செல்கிறது. எந்த அளவுக்கு எளிமையாகிறதோ அந்த அளவுக்கு அது அரை உண்மையாகிறது. எவரோ ஒருவர் மேடையில் ‘இவ்வளவுதான்யா ஓஷோ’, ‘இவ்வளவுதான்யா சங்கரர்’ என்று சொல்கிறாரென்றால் அவர் அறியாமையை அல்லது பொய்யைச் சொல்கிறார் என்று அர்த்தம். எனவே இங்கு ஓஷோவை சுருக்கும்போது இதை முன்னறிவிப்பாக சொல்ல விரும்புகிறேன்.
ஓஷோவைச் சுருக்குவது
ஆனால் சுருக்குவதென்பது மேலும் பெருக்குவதற்கான தொடக்கப்புள்ளியாக அமையமுடியும். ஓஷோ பாணியில் ஒரு நகைச்சுவை சொல்லலாம். இரண்டு சர்தார்ஜிகள் நாள்தோறும் குருத்வாரா செல்கின்றனர். இருவருமே சீரியஸான மனிதர்கள், அதிகம் பேசிக்கொள்ளமாட்டார்கள். அவர்களுடைய தாடி அவர்கள் பேசுகிறார்களா இல்லையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு தோற்றத்தை அளிக்கிறது. ஒருநாள் ஒருவர் மற்றொருவரிடம் ‘என் குதிரைக்கு வயிற்றுவலி’ என்று சொன்னார். மற்றொருவர், ‘போன வருஷம் என் குதிரைக்கும் வயிற்றுவலி வந்தது’ என்றார். முதலாமவர், ‘அதற்கு என்ன கொடுத்தீர்கள்?’ என்று கேட்டார். மற்றொருவர், ‘டர்பன்டைன்’ என்றார். பேச்சு முடிந்து இருவரும் சென்றுவிட்டனர். மறுவாரம் அவர்கள் மீண்டும் சந்தித்துக்கொண்டனர். அப்போது இந்த சர்தார்ஜி ‘என் குதிரைக்கு டர்பன்டைன் கொடுத்தேன். செத்துப்போச்சே’ என்று சொன்னார். அதற்கு மற்றொருவர் சொன்னார் ‘என் குதிரையும்தான் செத்துப்போச்சு’.
இந்த அளவில்தான் இன்று மதங்களுக்கும் கொள்கைகளுக்கும் இடையேயான உரையாடல் உள்ளது. இரண்டு மதத்தரப்புகள், இரண்டு ன்மீகத்தரப்புகள் விவாதிப்பதை பார்த்தல் ஒன்று தெரியம். அவர்கள் இருவருக்கும் நடுவே, திருமணமாகி இருபதாண்டுகள் கடந்த கணவன் மனைவிக்கு இடையே எந்த அளவுக்கு உரையாடல் இருக்குமோ அந்த அளவுக்குத்தான் உரையாடல் இருக்கும். அதற்கப்பால் ஒரு உரையாடலை உருவாக்குவது எல்லா காலகட்டத்திலும் தேவையாக இருந்திருக்கிறது. ஒருவகையில் சொல்லப்போனால் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் மாற்று மதங்கள் அனைத்தையும் கற்கக்கூடிய ஒரு பாடத்திட்டத்தை கொண்டுள்ளனர். இன்றைக்குக்கூட ஒட்டுமொத்த இந்திய சிந்தனைகளை படிப்பதற்கான சரியான பாடநூல் என்பது கத்தோலிக்க மதகுருமார்களுக்காக அவர்கள் எழுதி உருவாக்கியிருக்கும் பாடநூல்தான். அவர்கள் இந்திய தத்துவத்தை சார்வாகத்தில் இருந்து, வேதத்தில் இருந்து தொடங்கி ஓஷோ வரை ஓரளவுக்கு படித்த பிறகுதான் கிறிஸ்தவத்தை பற்றி பேசுகிறார்கள்.
அதே அளவுக்கு கிறிஸ்தவத்தை பற்றி பதினைந்து நிமிடம் பேசக்கூடிய தகுதியான இந்து அறிஞர்கள் எத்தனைபேர் என்று யோசித்துப்பாருங்கள். நான் கிறிஸ்தவப் பின்னணி கொண்ட கதைகளை எழுதும்போது அல்லது திரைப்படத்தில் கிறிஸ்தவம் தொடர்பான சில விஷயங்களை சொல்லும்போது, கிறிஸ்தவ இறையியலின் அடிப்படையான சில விஷயங்கள்கூட தமிழ் வாசகர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். ‘கிறிஸ்துவின் ரத்தமும் சதையும்’ என்ற கருத்து அவர்களுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. அதை நாம் உண்ணவேண்டும், அதோடு கிறிஸ்து நம் பிதாவாக ஆகிறார் என்பது ஒரு குறியீட்டு சடங்காக உள்ளது. சமீபத்தில் ஒரு வெள்ளையானை என்னும் நாவலில் அதை எழுதினேன். கடல் சினிமாவிலும் அந்த குறியீடு வருகிறது. வாசகர்களில் மிகக்குறைவானவர்களுக்குத்தான் அந்த ‘கிறிஸ்துவின் ரத்தம்’ என்பது ஆழ்ந்த இறையியல் அர்த்தம் கொண்டது என்பது தெரிந்திருக்கிறது என அறிந்துகொண்டேன்.
முன்காலத்தில் இங்கு தத்துவ விவாதத்தில் பரபக்கத்தை அழகாகச் சுருக்கிச்சொல்வார்கள். அதன் பின்னர்தான் தனது தரப்பை முன்வைப்பர். ஒருவரிடம் விவாதிக்கும் முன்னால் ‘நீங்கள் சொல்வது இதுதானே’ என்று அவருடைய தரப்பை கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல தனது தரப்பை சொல்வதுதான் வழக்கம். ஆனால் இன்றைக்குள்ள சமூகவலைத்தள விவாதம் என்பது, நாம் என்ன சொன்னாலும், நாம் சொன்னதாக அவர்கள் எதை கருதுகிறார்களோ அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ‘இல்லைங்க, நான் அதை சொல்லவில்லை’ என்றுதான் மீதமிருக்கும் வாழ்நாள் முழுக்க நாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். ஆகவே இங்கு ஓஷோவின் சிந்தனைகளை சில புள்ளிகளாக தொகுத்துக்கொள்கிறேன்.
உரைவடிவம் என்னும் தடை.
அவருடைய சிந்தனைகளை சுருக்குவதில் முக்கியமாக ஒரு சிக்கலும் உள்ளது. ஏறத்தாழ 760 நூல்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இவையனைத்துமே அவருடைய உரைகளில் இருந்து பதிவுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டவை. உரைகள் நூல்வடிவில் தொகுக்கப்படுவதில் ஒரு சிக்கல் உள்ளது. உரை என்பது எதிரில் இருக்கக்கூடியவர்களை நோக்கி பேசுவது. அது அந்த தருணத்தில் தோன்றும் எண்ணங்களை கோர்த்துக் கொண்டே செல்வது. பெரும்பாலான உரைகளில் பெரிய திட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. உரைக்கு ஒரு கட்டமைப்பும் இருப்பதில்லை. குறிப்பாக ஞானிகள் போன்றோர் அப்படியொரு திட்டத்தோடு பேசத்தொடங்குவதில்லை. நான் எழுத்தாளனாகையால் அந்த உரைகளுக்கு ஒரு கட்டமைப்பு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்த உரையைக்கூட ஒரு கட்டமைப்புள்ள விவாதமாக பார்க்கலாம். அது ஒரு புத்தகத்தின் பாணி. ஆனால் பெரும்பேச்சாளர்களாக அறியப்படக்கூடியவர்கள் தன்னிச்சையாக மேடையில் நிகழக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு கட்டமைப்பை உருவாக்க மாட்டார்கள்.
ஆகவே அவர்களுடைய நூல்களை தொகுத்தால் அது ஒருவகையான ஊசலாட்டத்துடன் அலைந்துகொண்டே இருக்கும். மேலும் அதில் கூறியதுகூறல் இருக்கும். ஏனெனில் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு பார்வையாளர்களின் கேள்விகளுக்கான பதில்களாக அவை உள்ளன. ஓஷோவின் கேள்வி பதில்கள் அனைத்திற்கும் அத்தன்மை உண்டு. பலசமயம் அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தியும்கூட திரும்பத்திரும்பத்தான் சொல்கிறார். ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்ற வினாவுக்கு நாற்பதாண்டுக்கு முன் ஒரு விளக்கம் எழுதியிருக்கிறார். எல்லா ஞானிகளும் பேசப்பேச தங்கள் சொன்னதை திரும்பச்சொல்ல தொடங்கிவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் சொல்வது அடிப்படையான ஒரு தரிசனத்தைத்தான். அதை உலகியலில் வைத்து அவ்வளவு பெரிதாக விரித்துக்காட்டுகிறார்கள். நீங்கள் அவர்களை அணுகி பயிலும்போது அதை மீண்டும் சுருக்கி அளித்துவிடுவார்கள். ஆகையால் ஓஷோவின் 760 பக்கங்களில் விரிந்துகிடக்கும் உலகத்தை சுருக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல.
அதில் வேடிக்கையான ஒன்று உண்டு. அமெரிக்காவில் மாத்திரைகள் பயன்பாடு மிகத்தீவிரமாக ஆனபோது, மாத்திரைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு மாத்திரையை கண்டுபிடித்ததாக சொல்வார்கள். அதைப்போல ஆன்மிகம் சார்ந்த அத்தனை நூல்களும் பெரும்பாலும் நூல்களுக்கு எதிரான நூல்களே. புத்தக வாசிப்பின் பயனின்மையை சொல்லக்கூடிய புத்தகங்கள் என்று அவற்றை சொல்லலாம்.
சமகாலத்தன்மையின் தடை.
ஓஷோவின் சிந்தனைகளை சுருக்குவதுபற்றி இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். பெரும்பாலான ஞானிகளுடைய, அறிஞர்களுடைய சிந்தனைகள் காலத்தன்மை கொண்டவை. அவர்களுடைய சமகாலத்திற்கு அவர்கள் எதிர்வினையாற்றியவை. கேட்கப்பட்டதனால் சொல்லப்பட்டவை. கேட்கப்பட்டிராவிட்டால் சொல்லப்பட்டிருக்க வாய்ப்பற்றவை. ஆகவே அவற்றுக்கு அடிப்படையில் ஒரு சமகாலத்தன்மை இருக்கும். கட்டமைப்பிலும் சமகாலத்தன்மை இருக்கும். ஆனால் அந்த சமகாலத்தன்மைக்குள் காலாதீதமாக ஒன்று இருக்கும். கடல்நீரில் ஒரு பகுதி கனநீர் என்பார்கள். அதை தனியாக பிரித்தெடுக்க முடியும். அதுபோல இந்த சமகாலத்தன்மை கொண்ட உரைகளில் காலாதீதமாக இருக்கும் ஒன்றை வாசகன் மிக எளிதாக தனது அடிப்படைக் கேள்விகள் வழியாக சென்று தொட்டுவிட முடியும்.
ஓஷோவை பொறுத்தவரை அவர் எழுபதுகளில் அமர்ந்து, அக்காலகட்டத்தின் அமைதியற்ற தலைமுறையினரிடம் பேசியவர். உலகப்போர்களுக்கு பின்னர் பிறந்த அந்த தலைமுறையானது தனது மரபின் மீதும், மதத்தின் மீதும், தங்களுடைய ஆன்மீக அடித்தளங்கள் மீதும் நம்பிக்கையற்று மாற்றுப் பண்பாட்டையும் மாற்று ஆன்மிகத்தையும் உருவாக்கும்பொருட்டு தங்களது வீட்டை துறந்து வெளியேறியவர்கள். அவர்களை ஹிப்பிகள் என்று சொல்கிறோம். அவர்களை நோக்கிப் பேசத்தொடங்கியவர் ஓஷோ, ஹிப்பிகளை பற்றி ஓஷோ சொல்லும்போது ‘Yes சொல்ல மறுத்துவிட்டவர்கள்’ என்கிறார்.
நீங்கள் அமெரிக்காவின் பாடபுத்தகங்களை பார்த்தால் அது என்னவென்று தெரியும். நான் அமெரிக்கா செல்லும்போது அங்குள்ள சிறு குழந்தைகளின் பாடபுத்தகங்களை பார்ப்பேன். அமெரிக்கப் பெருமை என்பது அந்த பாடங்களில் மிக அடிப்படையான ஓர் அம்சம். அமெரிக்கா உலகை காப்பாற்றுகிறது என்பதில், அமெரிக்கா அணுகுண்டை போட்டதுகூட உலகின் நன்மைக்காகத்தான் என்பதில், அமெரிக்காவை உலகமே விரும்புகிறது என்பதில் சராசரி அமெரிக்கக் குழந்தைக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவ்வாறுதான் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். உலகில் யாரேனும் அமெரிக்கா மீது தாக்குதல் தொடுத்தால், ‘உலகைக் காப்பாற்றும் நம் மீது ஏன் தாக்குதல் நடத்துகிறார்கள்?’ என்று அந்தக் குழந்தைகள் அழுவதாக எனது நண்பர் ஒருவர் சொன்னார். இந்த பாடங்களுக்கு எதிராக மறுப்பு சொல்லப்பழகிய ஒரு தலைமுறை எழுபதுகளில் உருவாகி வந்தது. அவர்களிடம்தான் ஓஷோ பேசுகிறார். அவர்களுக்கு வாழ்க்கை என்பது என்ன, மகிழ்ச்சி என்பது என்ன ? எதை மீறி எதுவொன்றை கண்டடைய வேண்டும், எதை மீறி எங்கு வரவேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்கிறார்.
ஆகவே அந்தக் காலகட்டத்தின் சூழலை வைத்துத்தான் நாம் ஓஷோவை அறியத் தொடங்க வேண்டும். இதை இங்கு சொல்லும்போது நினைவுக்கு வருபவர் ஜெயகாந்தன். 1973இல் அவருடைய புகழ்பெற்ற நாவலான ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ வெளிவருகிறது. அந்த நூலைப்பற்றி நான் சமீபத்தில் ‘நான்கு வாசிப்புகள் நாற்பதாண்டுகள்’ என்ற கட்டுரை எழுதியிருந்தேன். கடந்த நாற்பது ஆண்டுகளில் நான்குமுறை அந்த நாவலை படித்ததன் நினைவு அக்கட்டுரை. அந்த நாவலில் ஓஷோவிடம் சென்றவர்களுக்கு கிட்டத்தட்ட சமானமான ஹென்றி என்ற கதாநாயகன் வருகிறான். அவன் உலகத்தையே வீடாகக்கொண்ட ஒரு மனிதன். அந்த ஹென்றிதான் எப்போதும் ஓஷோவுக்கு முன்னால் உட்கார்ந்து இந்த கேள்விகளை அவரிடம் கேட்டுக்கொண்டிருப்பதாக ஒர் எண்ணம் எனக்கு உண்டு.
தேவை ஒரு தொகுப்புநூல்.
ஓஷோ போன்ற சிந்தனையாளர்களை அணுகுவதில் உள்ள பெரிய தடை என்பது அவருடையனவாக நமக்குக் கிடைக்கும் பெருந்தொகுதிகளான நூல்கள்தான். இந்த சிக்கல் எல்லா தத்துவ ஞானிகளுக்கும் உள்ளது. ஹெகலை எடுத்துக்கொண்டால் ஒரு சிறு நூலகத்தையே நிரப்புமளவுக்கு, கிட்டத்தட்ட அறுபதாயிரம் பக்கங்களுக்கு நூல்கள் உள்ளன. அரவிந்தரை எடுத்துக்கொண்டால் முப்பதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட தொகுதிகள் உள்ளன. நான் ஒருமுறை ஊட்டி குருகுலத்தில் ஹெகல் தொகுதியில் இருந்து ஒரு நூலை எடுத்து படித்துக்கொண்டிருந்தேன். அப்போது நித்யா என்னிடம் கேட்டார், ‘நீ ஹெகலியன் ஆகப்போகிறாயா ?’ என்று. இல்லை என்றேன். அவர் ‘இல்லையென்றால் எதற்கு இந்த முழு தொகுதிகளையும் படிக்கிறாய் ?’ என்று கேட்டார். ‘முழுவதும் படிக்கும் எண்ணமில்லை. ஏதேனும் ஒரு நூலை மட்டும் படிக்கலாம் என்று எடுத்தேன்’ என்றேன். அவர் ‘ஒன்றை மட்டும் படித்துப்பார்ப்பது தப்பான சித்திரத்தை அளிக்கும். ஒரு வீட்டின் ஜன்னலை மட்டும் பார்த்துவிட்டு அந்த ஜன்னல்தான் வீடு என்று நினைப்பதுபோல். உனக்கு முழுமையான புரிதல்தான் வேண்டும். ஆனால் உன்னால் முழுவாழ்க்கையையும் அளிக்காமல் அவருடைய இந்த முழு தொகுதிகளையும் படிக்கவும் முடியாது’ என்றார்.
வெளிநாடுகளில் Reader என்ற நூல்மரபு உள்ளது. ஒரு பெரும் சிந்தனையாளனை சுருக்கி ஆயிரம் பக்கங்களிலோ, இருநூறு பக்கங்களிலோ நூல்களாக வெளியிடுவார்கள். அவர்கள் ஹெகலை விளக்கக்கூடியவர்களே ஒழிய ஹெகலுக்கு மறுவிளக்கம் அளிக்கக்கூடியவர்கள் அல்லர். அவர்கள் நம்பகமான தொகுப்பாளர்கள். நித்யா எனக்கு The essential Hegel என்ற இருநூறு பக்க புத்தகத்தை அளித்தார். ‘ஒரு எழுத்தாளனாக நீ படிக்கவேண்டியது பத்து நாட்களில் படித்து முடிக்கவேண்டிய ஹெகலைத்தான்’ என்றார். Peggy Kamuf என்பவர் தொகுத்த தெரிதா (Jacques Derrida) பற்றிய புத்தகத்தை கொடுத்தார். மட்டுமல்லாமல் ஹெகல், தெரிதா, அரவிந்தர் என எல்லோரையும் படிக்க வேண்டுமென்றால் இருநூறு பக்கங்கள் கொண்ட நூலைத்தான் படிக்க முடியும். இதற்கு அப்பால் ஒரு ஹெகலிய ஆய்வாளன் மொத்த ஹெகலையும் படித்து ஆய்வு செய்யலாம் என்றார். அது எனக்கு முக்கியமான வழிகாட்டலாக இருந்தது. நான் மையச்சிந்தனையாளர்களை தொகுப்புநூல்கள் வழியாகவே அறிந்தேன்.
அவ்வாறாக ஓஷோவுக்கு ஒரு சரியான ரீடர் இந்தியாவில் இன்றுவரை வரவில்லை. ஒரு இருநூற்றைம்பது பக்கங்களுக்குள் ஓஷோ சொன்னவற்றை மட்டும் சரியாக தொகுத்து, தனது தரப்பு ஏதும் இல்லாமல் ஓஷோவின் குரலாக மட்டும் ஒலிக்கக்கூடிய ஒரு தொகுப்பாளர் வழியாக ஒரு ரீடர் வருமென்றால் இந்த விவாதங்கள் அனைத்தும் இன்னும் கூர்பெறும். அப்படி ஒரு ரீடரை ஓஷோ ஆய்வாளர் ஒருவர்தான் வெளியிட முடியும். நான் ஓஷோ ஆய்வாளன் அல்ல. இந்த உரைக்கே கூட பல்வேறு ஓஷோ ஆய்வாளர்களிடம் தொலைபேசியில் பேசி, தகவல்களை தெரிந்துகொண்டுதான் உருவாக்கியிருக்கிறேன்.
(மேலும்)
அனுராதா ரமணன்
எழுத்தாளர். ஓவியர். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். இதழாசிரியராகச் செயல்பட்டார். இவரது படைப்புகளில் சில திரைப்படங்களாக, தொலைக்காட்சித் தொடர்களாக வெளியாகின. குடும்ப நல ஆலோசகராகச் செயல்பட்டார்.

தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2022 நினைவு
தமிழ்விக்கி தூரன் விருது 2022ல் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் நிகழ்ந்த தமிழ்விக்கி தொடக்க விழாவில் அறிவிக்கப்பட்டது. தமிழ்க்கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர் தூரனின் நினைவை போற்றும் நோக்கம் கொண்டது இந்த விருது. தமிழின் முதற் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய மேதைக்கு தமிழகத்தில் ஒரு நினைவுச்சின்னம்கூட இல்லை. ஒரு நினைவுகூரல்கூட நிகழ்வதில்லை. எத்தனையோ எளிய அரசியல்வாதிகள், சாதித்தலைவர்கள், சினிமாக்காரகள் கொண்டாடப்படும் நாட்டில் ஓர் அறிவியக்கமுன்னோடி மறக்கப்படுவதென்பது மிகமிக மோசமான ஒரு முன்னுதாரணம். அறிவியக்கத்தில் ஈடுபடுபவர் பொருட்படுத்தப்பட மாட்டார் என்னும் செய்தியை இளைய தலைமுறைக்கு நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
கலைக்களஞ்சியம் போன்ற மாபெரும் பணியை ஆற்றிய ஒருவர் வரலாற்றில் மறைந்து போய்விடக்கூடாது. அது தமிழ்விக்கி என்னும் இணையக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் எங்கள் அனைவருக்குமே சோர்வூட்டும் ஒரு விஷயம். நாங்களே எங்களுக்கு அளித்துக்கொள்ளும் உறுதிப்பாடுதான் தூரனுக்கான இந்நினைவுகூரல். அறிவியக்கவாதியை அதிகாரவட்டம் அறியாது, பொருட்படுத்தாது. சாமானியர் இகழ்வார்கள், பின்னர் மறந்துவிடுவார்கள். ஆனால் இன்னொரு அறிவியக்கவாதி நினைவுகூர்வான், அது போதும் என எங்களுக்கே சொல்லிக்கொள்வதுதான் இது.
முதல் விருது மானுடவியல் ஆய்வாளர் கரசூர் பத்மபாரதிக்கு 2022 ஆகஸ்டில் ஈரோட்டில் நிகழ்ந்த விழாவில் வழங்கப்பட்டது. தமிழ்விக்கியின் கௌரவ ஆசிரியர் அ.கா.பெருமாள், கொங்கு ஆய்வாளர் கு.மகுடீஸ்வரன் போன்ற ஆய்வாளர்கள் கலந்துகொண்ட விழா அது. வழக்கம்போல இந்த விழாவுக்கும் தமிழகம் முழுக்கவிருந்து எங்கள் வாசகர்கள் வந்து தங்கி கலந்துகொண்டனர். ஆகவே அவர்களுக்காக வாசகர்சந்திப்பு அரங்குகள் ஒருங்கிணைத்தோம். விஷ்ணுபுரம் அரங்கும், குமரகுருபரன் அரங்கும் இலக்கிய அரங்குகள். இது முழுக்கமுழுக்க ஆய்வாளர்களுக்கான அரங்கு.
ஆய்வாளர்களை அறிமுகம் செய்துகொள்வதும், தொடர்வதும் ஓர் பொது அறிவியக்கவாதிக்கு மிக அவசியமான அடிப்படைப் பயிற்சிகள். ஆய்வுலகில் என்ன நிகழ்கிறது என்று அறியாதவனால் ஒருபோதும் தனிவாழ்வு சார்ந்த ஒரு நல்ல படைப்புக்குமேல் எழுதிவிட முடியாது. வாசகர்களுக்கும் இலக்கியத்தை, சமகால சிந்தனையை அருகமைந்து அறிய ஆய்வுகளுடனான அறிமுகம் அவசியம்.
முதல் ஆண்டில் நாங்கள் தமிழகத்தின் ஆய்வுமாணவர்களுக்கு பயணப்படி, தங்குமிடம் ஆகியவற்றை அளிக்க முன்வந்தோம். ஆனால் மூன்று மாணவர்கள் மட்டுமே அந்தச் சலுகையை பயன்படுத்தினர். ஆனால் மூவருமே ஒரு நிமிடம்கூட அரங்கில் அமரவில்லை. ஈரோட்டில் தங்கள் தனிப்பட்ட வணிகத்தை கவனிப்பதில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பயணப்படி கோரி சண்டைபோட்டார்கள். ஆகவே அந்த திட்டத்தை ரத்துசெய்துவிட்டோம். தமிழக பல்கலை ஆய்வுகளின் தரம் அது. தமிழகத்தில் கல்வித்துறையில் இருந்து ஒரே ஒருவர் கூட இதுவரை பார்வையாளராகக் கலந்துகொள்ளவில்லை.
அதேபோல தமிழக எழுத்தாளர்களில் மிகச்சிலரே பங்குகொண்டனர், அவர்களும் பொதுவாக மூத்த எழுத்தாளர்கள். இளம்படைப்பாளிகளுக்கு வரலாறு, பண்பாடு சார்ந்த ஆய்வுகள் எதிலும் ஆர்வமிருக்கவில்லை. அந்த ஏமாற்றம் இன்னொரு பக்கம் வாசகர் பங்கேற்பால் நிறைவாக மாறியது. மிகப்பெரிய அளவில் வாசகப்பங்கேற்பு இருந்தது. ஆய்வரங்குகளில் பேசிய அறிஞர்கள் அந்த பெரிய சபையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தமிழில் ஒரு புதிய தொடக்கமாகவே அந்த முதல் விருதுவிழா அமைந்தது.
தமிழ் விக்கி, தூரன் விருது -கடிதம் தமிழ் விக்கி, ஈரோடு விழா -கடிதம் தமிழ் விக்கி- தூரன் விருதுவிழா – கடிதம் தமிழ் விக்கி தூரன் விருது
ஞானமரபை அறிய
இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்” புத்தகத்தின் நீட்சியாக இந்தியத் தத்துவ/ஞான தரிசனங்களை மேலும் அறிய ஒருவர் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று எந்தப் புத்தகங்களை உங்கள் வாசகர்களுக்குப் பரிந்துரைப்பீர்கள்?
ஞானமரபை அறிய
He had been hunting women throughout his life, seeking only worldly pleasures and recognition. He has nothing ‘spiritual’ in his character. But that was the contribution of Mozart to Western art: he brought the reality of earthliness to Western music instead of boggy spiritualism.
Understanding Mozartசேலம் கலந்துரையாடல்
சேலம் வெண்முரசு வாசிப்பு வட்டம் சார்பில் நிகழும் சந்திப்பு. மழைப்பாடல் வாசிப்பு. நாகந்நந்தினி விஷால்ராஜாவில் திருவருட்செல்வி பற்றி ஓர் உரை ஆற்றுகிறார். நாள் 11 ஆகஸ்ட் 2025. இடம் சேலம்.
August 7, 2025
புக்பிரம்மா நிகழ்வில் இன்று
பெங்களூர் புக்பிரம்மா நிகழ்வில் இன்று (8 ஆகஸ்ட் 2025) காலை 11 மணிக்கு
8 ஆகஸ்ட் 11- 1150 வரை ஜெயந்த் காய்கினி, கே.ஆர்.மீரா, தமிழவன், சி.மிருணாளினி பங்கெடுக்கும் அமர்வு. ஒருங்கிணைப்பு சுசித்ரா
8 ஆகஸ்ட் 1600- 1630 முகாமுகி அரங்கு . நேருக்குநேர் உரையாடல்.
அனைவரையும் அழைக்கிறேன்.
புக்பிரம்மா இணையப்பக்கம்
எகிப்தில் ஒரு மனப்பதிவு
எங்கள் எகிப்துப் பயணத்தின்போது, அஸ்வான் நகரில் எடுக்கப்பட்ட காணொளி இது. எகிப்து ஒரு பொருளியல் வளர்ச்சியை அடைந்து மேலெழுந்து, மதவாதத்தால் வீழ்ந்து, மீண்டும் எழுந்துகொண்டிருக்கும் சித்திரத்தை அளிக்கும் உரை.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
