Jeyamohan's Blog, page 40
August 11, 2025
தமிழ்விக்கி- தூரன் விழா சென்ற ஆண்டு
தமிழ்விக்கி தூரன் விழா: அழைப்பிதழ், வருகைப்பதிவு தமிழுடன் இசை!
தமிழ் விக்கி தூரன் விழா சென்ற ஆண்டு ஆகஸ்டில் நிகழ்ந்தது. சுவடியியல் ஆய்வாளர் கோவை மணி அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் விழா நினைவுகளில் நிறைவும் பெருமிதமும் உருவாகும் அளவுக்கு வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டின் இரு மடங்கு வளர்ச்சி என்பது பெரும் பொறுப்பும் கூட. பணம், அமைப்பு வல்லமை எல்லாமே தேவையாகிறது. ஈரோடு நண்பர்கள் ஒரு மாதம் முழுக்க பணியாற்றவேண்டியிருக்கிறது.
2024ல் விருந்தினராக வந்தவர் வேதாசலம் அவர்கள். அவருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு அவர் நடத்திய வாசகர் சந்திப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. சுவடிஎழுத்துக்களை வாசிப்பதைப் பற்றி கோவை மணி அவர்கள் நடத்திய வகுப்பு அரங்கு நிறைந்து ‘மறுஎல்லை தெரியாதபடி’ அமைந்திருந்தது. சட்டென்று நாம் அறியாத புதிய ஓர் உலகுக்கு நம்மைக் கொண்டுசென்ற நிகழ்வு அது.
மூன்றாண்டுகள் ஈரோட்டில் இந்த விழா நிகழ்ந்துவிட்டது. அரங்கு நிறைந்து, தமிழகத்தின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாக நிகழ்கிறது. ஆனால் தூரன் பிறந்து வாழ்ந்த ஊரான ஈரோட்டில் இருந்து வந்து கலந்து கொள்பவர்கள் மிகச்சிலர். பங்கேற்கும் இருநூற்றைம்பதுபேரில் ஈரோட்டினர் அதிகபட்சம் இருபதுபேர். பல காரணங்களைச் சொல்வார்கள், நிகழ்விடம் தூரம் என்பது அதில் ஒரு காரணம். ஈரோட்டில் இருப்பவர்கள் அதைச் சொல்கிறார்கள். ஆனால் விழாவுக்கு பெங்களூர், சென்னையில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து கலந்துகொள்கிறார்கள்.
ஈரோட்டில் நிகழும் வெட்டியான பட்டிமன்றங்களுக்குப் பெருந்திரளாக மக்கள் அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறேன். ஓர் அறிவார்ந்த அவைக்கு ஏன் கூட்டம் வருவதில்லை என்பதற்கான காரணம் அதுவே. அந்தவகையான அறிவுதேவையற்ற கேளிக்கைகளுக்குப் பழகியவர்களால் ஓர் அறிவார்ந்த அவையில் அமர்ந்திருக்கும் பொறுமையை அடையமுடியாது.
சென்றமுறை பல புதிய தங்குமிடங்களை முன்னரே ஏற்பாடு செய்திருந்தோம். ஆயினும் கூட்டம் கூடுதலாக ஆகிவிட்டமையால் கடைசிநேரத்தில் தங்குமிடம் தேடி அலையவேண்டியிருந்தது. நெருக்கடிதான். ஆனால் அத்தனை இளைய முகங்களை, அறிவுத்தேடல் கொண்டவர்களை மட்டும், அவையில் பார்ப்பதென்பது மிக அரிய அனுபவம். நிறைவூட்டும் ஒரு கண்டடைதல்.
நிகழ்த்திக்காட்டுதலின் நிமிர்வு -யோகேஸ்வரன் ராமநாதன் தமிழ்விக்கி தூரன் விழா, கடிதம் அழைக்கப்பட்டவர்கள்,தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்- டெய்ஸி தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2022 நினைவு
சிட்டி
சிட்டியின் இலக்கிய இடம் மூன்று வகைகளில் வரையறைசெய்யப்படலாம்.தமிழின் நவீன இலக்கியப்பரப்பில் தொடக்ககால நையாண்டி எழுத்துக்களை உருவாக்கியவர்.தமிழ் பயண இலக்கியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றின் இணையாசிரியர்.தமிழின் முதன்மையான இலக்கிய வரலாற்றுநூல்களின் இணையாசிரியர்.

ஓஷோ: மரபும் மீறலும்-16
ஓஷோ மீதான எனது விமர்சனம்
நண்பர்களே , ஓஷோ பற்றிய என் உரையை அவரை அவருடைய காலச்சூழலில் வைத்து வரலாற்றுபூர்வமாக புரிந்துகொள்ளுதல், அவருடைய பரிணாமத்தை வகுத்துக்கொள்ளுதல், அவருக்கு இந்திய சிந்தனை மரபிலுள்ள தொடர்ச்சியையும் முரண்பாட்டையும் விளங்கிக்கொள்ளுதல், அவர் கூறிய அடிப்படைச் சிந்தனைகளை தொகுத்துக்கொள்ளுதல் ஆகிய தளங்களில் நிகழ்த்தினேன். அதன் இறுதியாக ஓஷோ மீதான என் எதிர்விமர்சனத்தை முன்வைக்கிறேன்.
ஓஷோ மீதான இந்த விமர்சனத்தை நான் எந்த தகுதியில் சொல்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம். முதலிலேயே அதுபற்றி சொல்லியிருந்தேன். ஓர் எழுத்தாளனாக, ஒரு தத்துவ ஞானியின் மாணவனாக, ஓர் ஆன்மீகப் பயிற்சியாளனாக இந்த விமர்சனங்களை நான் என்னுடைய அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன். இதை நீங்கள் பரிசீலிக்கலாம். மறுக்கவும் செய்யலாம். இதை உங்களுக்கு உபதேசம் செய்யவில்லை. நான் உபதேசங்கள் செய்வதில்லை. இவை ஒரு விவாதத்தின் ஒரு தரப்பு மட்டுமே.
ஓஷோவின் மரபு மறுப்புவாதத்தின் சிக்கல்
ஓஷோவிடம் நாம் பார்க்கும் முக்கியமான அம்சம் அவருடைய மரபு மறுப்பு / கடந்தகால மறுப்பு. இந்த விஷயத்தை இளைஞர்களாகிய நீங்கள் எளிதாகக் கையில் எடுக்கும்போது மிகப்பெரிய அபாயத்தை சந்திக்கிறீர்கள். ஆசாரவாதத்தையும் மரபையும் ஒன்றென நினைத்துக்கொள்ளக்கூடிய மனமயக்கம் நமக்கு ஏற்படுகிறது. ஆசாரவாதம் வேறு, மரபு வேறு. எல்லாமே மரபில் உள்ளது, அதை அப்படியே கண்மூடித்தனமாக, எந்திரத்தனமாக செய்யவேண்டியது மட்டும்தான் நமது ஒரே வேலை என்று சொல்வது ஆசாரவாதம். ஆசாரவாதிகள் எல்லா மதத்திலும் என்றும் இருப்பார்கள். சொல்லப்போனால் ஆசாரமே என்றும் மதமாக பொதுச்சூழலில் அறியப்படுகிறது. மத அமைப்புகள் எல்லாமே ஆசாரங்களை அடிப்படையாகக் கொண்டவைதான்.
ஆனால் மரபு என்பது ஆசாரம் மட்டுமல்ல. மரபு என்பது நெடுங்காலமாக தொகுக்கப்பட்ட உள்ளுணர்வுகளின் மிகப்பெரிய கட்டமைப்பு. அந்த உள்ளுணர்வுகள் இங்கே பலவகையான குறியீடுகளாக (உருவங்களாக / வடிவங்களாக), நடைமுறைகளாக (சடங்குகளாக), வரையறைகளாக (நூல்களாக) தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஓஷோவின் பேச்சைக்கேட்டு ஒருவன் மரபை முற்றாக துறப்பான் என்றால் அவன் பேரிழப்பையே சந்திக்கிறான். ஐம்பது வயதில் அந்த இழப்பை உணர்ந்தபின்பு திரும்பிச்செல்வது மிகமிக கடினம். உதாரணமாக நமது ஆலயங்கள், அதன் சிற்பங்கள், அதன் நடைமுறைகள் யாவும் ஓஷோவால் மறுக்கப்படக்கூடிய அளவுக்கு சிறியவை அல்ல. நம் பக்திமரபு ஓஷோ சொல்வதைப்போல அத்தனை எளியதோ தட்டையானதோ அல்ல.
அவற்றை எல்லாம் மறுக்கலாமா என்று கேட்டால், மறுக்கலாம். ஆனால் நீங்கள், உங்கள் சிறிய அறிவைக்கொண்டு மறுக்கக்கூடாது. வெறும் இளமைத்துடுக்கால் மறுக்கக்கூடாது. அதே அளவு உள்ளுணர்வின் ஆழத்திற்கு சென்று ஒருவித காலமின்மையை தன்னுள் உணர்ந்த ஒரு ஞானியால் நீங்கள் வழிநடத்தப்படுவீர்கள் என்றால் அவரை நம்பி நீங்கள் மரபை மறுக்கலாம். அந்த படகை நம்பி நீங்கள் கடலில் இறங்கலாம். ஆனால் நீங்கள் உங்களுடைய போலியான அறிவுஜீவித்தனத்தை, எளிய தர்க்கபுத்தியை வைத்துக்கொண்டு மரபை மறுப்பீர்கள் என்றால் நீங்கள் இன்னொரு திராவிடர் கழகக்காரனாகத்தான் மாறுவீர்கள். அது இறுதியில் கீழ்மையான எதிர்மறைத் தன்மைகளிடம்தான் சென்று முடியும். அவ்வாறு பலரையும் நான் பார்த்திருக்கிறேன். பரிதாபத்திற்குரிய எளிய மனிதர்கள் அவர்கள்.
நீங்கள் இணையத்தில் ஓஷோ என்று தேடினால் ஓஷோவை படித்தவர்களிலேயே அத்தகைய முட்டாள்களின் வரிசை வந்துகொண்டே இருக்கும். நான் ‘முட்டாள்களின் மடாதிபதி’ என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். ‘ஓஷோவை எவனொருவன் மடாதிபதி ஆக்குகிறானோ அவன் முட்டாளாகத்தான் இருப்பான். தன்னைத்தானே உடைத்துக் கொள்வதற்கான சுத்தியலாக அவரை பயன்படுத்துபவன் அவரை கடந்து செல்கிறான்’ என்பது அக்கட்டுரையின் சாரம். ஆனால் இங்கே ஓஷோ பற்றிப் பேசியவர்கள் பலர் புண்பட்டனர். தங்களை முட்டாள் என்று சொல்லிவிட்டார் ஜெயமோகன் என கொதித்து என்னை வசைபாடினர். ஓஷோ இதைப்போன்ற எத்தனையோ எதிர்ப்பொருள் சொற்றொடர்களைக் கையாண்டிருக்கிறார். அப்படியென்றால் ஓஷோவில் இவர்கள் எதைத்தான் படித்தனர்?
ஓர் ஓஷோயிஸ்ட் தன்னை இன்னொருவர் முட்டாள் என்று சொன்னால்கூட புண்படுவாரா என்ன? ஓஷோவே தன்னை அப்படிச் சொல்லிக்கொண்டவர். ஓஷோவை அப்படிச் சொல்லியிருந்தால் சிரித்துக்கொண்டிருப்பார் இல்லையா? தன் தரப்பை, தன் குருநாதரை, தன் நம்பிக்கையை ஒருவர் விமர்சித்தால் சீற்றம் கொள்பவர் யார்? அவர் வெறும் மதவாதி அல்லவா?. ஓஷோவை ஒரு மதநிறுவனத் தலைவராக காண்பவர்தான் ஓஷோ விமர்சிக்கப்பட்டால் கொதிப்பவர். விமர்சிப்பவரை வசைபாடுபவர் உண்மையில் ஓஷோவை அவமதிக்கிறார். ஓஷோ என்ன சொன்னாலும் பயனில்லை, மதவெறியே மக்களின் இயல்பு என்பதையே அவர் காட்டுகிறார்.பரிதாபம்தான்.
நான் பல ஓஷோயிஸ்டுகளை பார்த்திருக்கிறேன். பழைய மலையாளப் படத்தில் அடூர் பாசி ஒரு வசனம் பேசுவார். ‘யாரை பார்த்து அடக்கமில்லாதவன்னு சொன்னே, நான் யார் தெரியுமா ? ஊர்ல யார்ட்ட வேணாலும் கேட்டுப்பாரு. எண்ணப்பத்தி அடக்கமான ஆள்னுதான் சொல்வாங்க. இன்னைக்கு வரைக்கும் ஒருத்தனும் என் முன்னால் நின்று அடக்கமில்லாதவன்னு சொன்னதில்லை. அப்படி சொன்ன எவனையும் நான் விட்டதில்ல’. இந்த அளவுக்கு அடக்கத்துடனும், தன்னிலை அழிந்தவர்களாகவும் தான் ஓஷோயிஸ்டுகள் இருக்கிறார்கள். ஓஷோவின் ‘நிபந்தனையற்ற அன்பு’தான் பிரபஞ்ச உண்மை, அதை மறுத்தால் உன் தாயை வசைபாடுவேன் என்னும் நிலைபாடு கொண்டிருக்கிறார்கள் நம் ஓஷோயிஸ்டுகள் பலர்.
மரபு எனக்கு அளித்த உறைந்தநிலையை உடைப்பதற்கான மாபெரும் சுத்தியல் ஓஷோ. ஆனால் என்னை சுற்றியிருக்கும் அனைத்தையும் உடைத்துவிட்டு நான் மட்டும் எஞ்சி இருந்தேனென்றால் அதைப்போல முட்டாள்தனம் எதுவும் கிடையாது. நிராகரிக்க வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு வலுவான ஆசிரியர் இருக்கவேண்டும். இல்லையெனில் உங்களுக்குள் உங்களை அறியாமலேயே நம் மரபால் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் பெரிய செல்வத்தை நீங்கள் இழக்கிறீர்கள். நம் முன்னோர் ஈட்டியது அது, அது காலத்தின் துருவும் களிம்பும் தூசியும் கலந்துதான் கிடைக்கிறது. அதை அப்படியே தூக்கி வீசிவிடமுடியாது.
முத்துச்சிப்பியை பற்றி ஒரு அழகான வரி உண்டு. ‘கோடி சிப்பிகளில் ஒன்றில்தான் முத்து இருக்கும். ஆனால் அத்தனை சிப்பிகளுக்கும் முத்தை உருவாக்கும் சாத்தியக்கூறு இருக்கும்’. ஒரு மனிதன் இந்தியாவில் பிறந்து தமிழ் மொழியை கற்று வளரும்போதே அடிப்படையான உருவகங்கள் அவனிடம் வந்துவிடுகின்றன. ஒரு சிற்பத்தை பார்க்கும்போது, அறிவார்ந்து அது என்னவென்று தெரியாதபோதும் கூட உணர்வுரீதியாக அவனால் அதை அடையமுடியும். அதுபோல சில சொற்கள் அவனுக்குள் அகத்திறப்புகளை அளிக்கமுடியும். அவன் எப்போது வேண்டுமென்றாலும் மெய்ஞானத்தின் பயணத்தை தன்னையறியாமலேயே தொடங்கிவிடக்கூடும். அப்படி சுய அனுபவத்தின் ஒரு துளியால் தீண்டப்பட்டு, ஒரு சொல்லால் திறக்கப்பட்டு பெரும் மாற்றங்களை அடைந்து தங்கள் அகப்பயணங்களை தொடங்கியவர்கள் பலரை எனக்கே தெரியும்.
ஜெயகாந்தன் ஓர் உரையில், தமிழ்மொழி இயல்பாகவே வேதாந்தம் நோக்கிச்செல்லும்தன்மை கொண்டது என்றார். ‘மனிதன் தோன்றினான், மறைந்தான்’ என்ற வரியை நாம் சாதாரணமாக பயன்படுத்துகிறோம். ஆனால் அற்புதமான ஒரு வேதாந்த கருத்து அதில் உள்ளது. மனிதன் கண்முன்னால் தோன்றுகிறான், கண்முன்னால் மறைகிறான், அவ்வளவுதான். அவன் உருவாவதில்லை, அழிவதில்லை .இப்படி நூற்றுக்கணக்கான சொற்கள் வழியாக, உருவகங்கள் வழியாக நமக்கு வரக்கூடிய ஒரு மரபை, ஓஷோ போன்ற ஒரு சமகால ஞானி வேறொரு சந்தர்ப்பத்தில் வேறொருவருக்குச் சொன்ன பதில்களைக் கொண்டு ஒரேயடியாக மறுப்போம் என்றால் நாம் இழப்பையே சந்திக்கிறோம்.
ஓஷோவின் ‘இன்று‘வாதத்தை இன்றைக்கு பயன்படுத்துவதின் சிக்கல்.
ஓஷோ பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ‘கடந்தகாலம்’ என்பது அவ்வளவு பிரம்மாண்டமான சுமையாக இருந்தது. ‘இன்று’ என்பது ஒரு இடுங்கிய பாதையாக இருந்தது. அந்த பாதையை வெட்டி பெரிதாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இன்றைக்குள்ள ‘இன்று’ அப்படியல்ல. ‘இன்று’ இல்லாமல் தேங்கியிருந்த அக்கால இளைஞர்களை நோக்கி நவீனத்தொழில்நுட்பம் சொல்லியது ‘உனக்கு இன்றுதானே வேண்டும், இந்தா வைத்துக்கொள்’ என்று. இன்றைக்குள்ள ‘இன்று’ என்பது பத்து திசைகளிலும் திறந்துகிடக்கும் பிரம்மாண்டம். இன்று தொழில்நுட்பம் நம்மிடம் சொல்கிறது. ‘உனக்கு நேற்று இல்லை. நாளை இல்லை. இன்று மட்டும்தான் உள்ளது. அதை நான் உருவாக்கி அளிக்கிறேன். நீ எனக்குள் இரு. என்னை மட்டும் சார்ந்திரு. என்னை மட்டும் அறிந்திரு’
இன்றைக்கு நீங்கள் இங்கே இருந்துகொண்டு உலகின் அத்தனை மனிதர்களிடமும் பேசமுடியும். நான் 1982இல் ஒரு திரைப்பட விழாவில் சர்வதேசத் திரைப்படம் பார்ப்பதற்காக காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பயணம் செய்யவேண்டி இருந்தது. பூனாவுக்கும் கல்கத்தாவுக்கும் செல்லவேண்டியிருந்தது. ஒரு நல்ல உரையை கேட்பதற்காக மும்பைக்கு டிக்கெட் எடுத்து சென்றிருக்கிறேன். ஆனால் இன்றைக்கு எல்லாமே விரல் தொடுகையில் உங்கள் முன்னால் உள்ளது. எல்லா இசையும், எல்லா சினிமாவும் உங்களுக்கு கிடைக்கிறது. ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு சதுர கிலோமீட்டர் அகலத்திற்குப் பரப்புவதுபோல இன்றைய ‘இன்று’ உங்களை சிதறடித்து பரப்புகிறது.
இன்றைய சூழலில் ‘இன்றிலிருத்தல்’ என்றால் உங்களை நீங்களே நூறாக, ஆயிரமாக சிதறடித்து வீணாகிப்போவதில்தான் சென்று முடியும். நேற்றும் நாளையும் இல்லாமல் இருத்தல் என்றால் வரலாறும் பண்பாடும் தன்னடையாளமும் ஒன்றும் இல்லாத வெறும் நுகர்வுயிரி ஆக மாறுவதில்தான் சென்று முடியும். இன்ஸ்டாவிலும் ரீல்ஸிலும் வாழும் இளைய தலைமுறை இன்றில் மட்டும்தான் இருக்கிறது. அதற்கு நேற்று இல்லை, நாளை இல்லை. ஓஷோ சொன்ன அந்த ‘இன்று’ அல்ல இன்றைய ‘இன்று’. அது பிரபஞ்சம் அளிக்கும் நிகழ்காலம். தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கக்கூடிய இன்றைய ‘இன்று’ முற்றிலும் வேறுபட்டது. இது உலகளாவிய பெருவணிகம் அளிக்கும் நிகழ்காலம்.
இன்று நீங்கள் உங்களது விருப்பம், உங்கள் பாதை போன்றவைகளை துல்லியமாக வரையறுத்துக் கொள்ளவேண்டியது அவசியம். நீங்கள் இன்று உங்களை வரையறுத்துக்கொள்ளவில்லை என்றால் காற்றில் திறந்து வைக்கப்பட்ட கற்பூரம் போல இல்லாமலாகிப் போவீர்கள். நீங்கள் ‘நோ’ சொல்ல கற்றுக்கொள்ளவேண்டும். தொழில்நுட்பம் உங்கள் முன் கொண்டுவந்து குவிப்பவற்றில் எவையெல்லாம் தேவையில்லை என நீங்கள் உறுதியுடன் முடிவெடுத்தாகவேண்டும். இல்லையேல் உங்களுக்கு உரியவற்றை நீங்கள் அடையமுடியாது. தொழில்நுட்பம் தான் விரும்பியதை உங்களுக்குள் திணித்து உங்களை அதன் அடிமையாக ஆக்கிவிடும். இன்று உங்களைச் சூழ்ந்திருப்பவர்களைப் பாருங்கள், வெறும் தொழில்நுட்ப அடிமைகள் அவர்கள். நவீனத் தொழில்நுட்பம் என்னும் மாபெரும் இயந்திரத்தின் சிறிய உறுப்புகள், கூடவே அதன் இரைகள்.
இன்றைய காலத்தில் ஓஷோவின் வரிகள் தவறாக அர்த்தப்படுத்தப்படக்கூடும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல ஓஷோவின் வரிகளில் உள்ள ‘என்றுமுள்ள’ அம்சத்தைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே நேரடியாக பொருள்கொள்ளக் கூடாது. இன்று ஒருவர் ‘ஹெடோனிஸம்’ என்று சொல்லப்படுவதை அப்படியே பொருள்கொண்டால் தொழில்நுட்பம் அளிக்கும் செயற்கையான புலன் இன்பங்களில் விழுந்து, அதற்கு அடிமையாக ஆவார். நிகாஸ் கஸண்ட்ஸகீஸ் சொன்னதோ, ஓஷோ சொன்னதோ அது அல்ல.
இன்றைக்கு உள்ள பிரச்சனை, நாம் நம்மை புதிதாக வரையறுத்துக் கொள்வதல்ல; மறுவரையறை செய்துகொள்வதே. நீங்கள் ஒரு ரிலையன்ஸ் வாடிக்கையாளர், ஒரு கூகிள் பயனர், ஒரு அமேசான் உறுப்பினர் என்பது போன்ற ஆயிரக்கணக்கான அடையாளங்கள் உங்களுக்கு உள்ளன. அதற்கு அப்பால் ஒரு அடையாளத்தை நீங்கள் வரையறுக்க முடியாது. அப்படி நீங்கள் வரையறுத்த உடனேயே அது கூகுளுக்கு தெரிந்துவிடும். உடனே அந்த அடையாளத்துக்கான விளம்பரத்தை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடும். ஒரு கதைக்காக இந்திய மதுபானங்களில் விலையுயர்ந்தது எது என்று கூகுளில் தேடினேன். கடந்த ஐந்து நாட்களாக எனது டைம்லைனில் மதுபான விளம்பரங்கள் வந்து குவிகின்றன. ஐயா, நான் குடிப்பது கிடையாது என்று கூகுளுக்கு எப்படி சொல்லமுடியும் ? இவ்வளவு பிரம்மாண்டமான எந்திரம் என் முன்னால் நின்றுகொண்டு என்னை வரையறுக்கும்போது அதற்கு ‘நோ’ சொல்வதுதான் இன்று எனது கடமையாக உள்ளது.
இது ஓஷோவுடைய காலமல்ல, வேறொரு காலம். இந்தக் காலத்திற்கு உரிய ஆன்மிகம் என்பது வேறு. இந்த காலத்தில் நீங்கள் எதை வரையறுத்துக் கொண்டாலும், அங்கு நீங்க்ள் செல்லும்போது ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்குச் சென்றபோது அங்கே ஒரு நாயர் டீக்கடை இருந்தது என்று சொல்வது போன்று அங்கு ஏற்கெனவே கூகுள் உட்கார்ந்திருக்கும். நீங்கள், ‘நான் இதிலெல்லாம் இல்லைங்க. நான் மாடர்ன் டெக்னாலஜிக்கு எதிரானவன். என்னை நான் வரையறுத்துக்கொண்டு ஒரு குடிலில் தன்னந்தனியாக வாழ விரும்புகிறேன்’ என்று சொன்னாலும், உடனடியாக ஒரு கூகுள் விளம்பரம் வரும், ‘தன்னந்தனி குடில்கள், இமயமலை சாரலில், வாடகை ரூ.1000’ என்று. ஆகையால் இன்றைக்கு உங்களுடைய ஆன்மீகத்தை கண்டடைவது ஓஷோவிலிருந்து செல்லக்கூடிய பயணம் அல்ல.ஓஷோ அதற்கு உதவுவார், ஆனால் ஓஷோ மட்டும் போதாது.
ஓஷோவின் இலக்கு மறுப்புவாதம் சரியானதல்ல
ஓஷோ அகப்பயணத்தின் வழியைப் பற்றிப் பேசுபவர். இலக்கு / நோக்கம் என்பது இல்லை என்று சொல்கிறார். நானும் அவ்வாறு கருதிய காலமுண்டு. ஆனால் இன்று அப்படியல்ல. செல்லும் வழி எந்த அளவுக்கு மகிழ்ச்சியானது, நிறைவூட்டுவது என்பது வேறு. ஆனால் மனிதப்பிறவி என்பதற்கு இலக்கு என்று ஒன்று உண்டு. இந்த அம்பு சென்று தைக்கவேண்டிய ஒரு புள்ளி உண்டு என்றுதான் நான் நினைக்கிறேன்.
எந்தவொரு பயிற்சியிலும் அது எதன்பொருட்டு என்ற கேள்வி வருகிறது. பயிற்சியின் பொருட்டான பயிற்சி, பயிற்சியின் மகிழ்ச்சிக்கான பயிற்சி என்று ஒன்று இருக்கமுடியாது. முக்தி, மோக்ஷம், வீடுபேறு என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். அவையெல்லாம் உங்களுடைய வரையறை. ஆனால் அதற்கப்பால் ஒன்றுண்டு. இலக்கை நாம் அறியாமலிருக்கலாம். உணர்ந்தாலும் முழுக்க புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். நாம் மிகச்சிறியவர்கள், நம் வாழ்க்கை துளியினும் துளி. ஆகவே நம் அறிதலும் சிறிது. நாம் அறியமுடியாதென்பதனால் அது இல்லை என்பது சரி அல்ல. நாம் அறியாததனால் அது அறியத்தேவையற்றது என்பதும் சரியல்ல.
இயற்கையில் ஒரு சாதாரண விஷயத்தை பார்க்கும்போதும் நாம் சிலவற்றை உணரமுடியும். நான் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருந்தபோது பிரம்மாண்டமான சிதல்புற்றுகளை பார்க்கநேர்ந்தது. என் வாழ்க்கையில் அது ஒரு ஞானதரிசனம். ஆகவேதான் அதை மீண்டும் மீண்டும் உரைகளில் சொல்கிறேன். அந்த புற்றுகள் சாலமோன் காலத்தில் இருந்து இருப்பவை. அவை மண்ணுக்கடியில் மூன்று நான்கு பனைமர உயரத்திற்கும், மண்ணுக்கு மேலே ஒரு பனைமர உயரத்திற்கும் உள்ளவை. மேலே இருப்பவை சாளரங்கள் மட்டும்தான். அவை உள்ளே காற்றும் நீரும் செல்வதற்கான வாயில்கள். நியூயார்க் நகரத்தை மனிதர்களின் அளவோடு ஒப்பிட்டால் அது எவ்வளவு பெரிதோ, அதேபோல அந்தப் புற்றுகளை அந்த சிதல்களோடு ஒப்பிட்டால் அந்த புற்றுகள் நியூயார்க்கைவிட ஆயிரம் மடங்கு பெரியவை. அதன் பொறியியலை இன்றுவரை மனிதனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அந்தப்பகுதியில் அந்த புற்றுகளை ஆராய்வதற்கான ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. அங்கு ஒரு வெள்ளையர் எங்களிடம் அதுபற்றி விளக்கினார்.உள்ளே காற்று செல்வதற்கான வழிகள், வெளியேறுவதற்கான வழிகள், காற்றின் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதற்கான அமைப்புகள், போக்குவரத்து நெரிசலற்ற சாலைகள், தனித்தனியான அறைகள், உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்குமான வழிகள் அப்புற்றுக்குள் இருப்பதாக தெரிவித்தார். அதாவது அது மிகச்சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட மாபெரும் நகரம். அதை ஏன் ஆராய்கிறார்கள் என்றால் என்றாவது ஒருநாள் நாம் விண்வெளியில் மிதக்கும் நகரங்களை அமைப்போமென்றால் அதை இந்த சிதல்புற்று வடிவில்தான் அமைக்கவேண்டியிருக்கும் என்பதால்தான்.
ஆனால் அதில் இருக்கும் ஒரு கரையானுடைய வாழ்க்கை என்பது சில வாரங்கள்தான். அதனுடைய உருவ அளவே மிகச்சிறியதுதான். அப்படியெனில் அந்த பிரம்மாண்டமான புற்றின் பொறியியல் எதில் உள்ளது ? அது அந்த ஒரு கரையானிடம் உள்ளதா ? சொல்லமுடியாது. அதன் மூளைக்குள் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அதன் மூளை மிகச்சிறியது. அந்த கூட்டத்தில் ஒரு சிதல் பிறந்து வெளியே வந்து சில மண்துகள்களை எடுத்து உள்ளே சென்று வைக்கிறது. சில உணவுகளை கொண்டுசெல்கிறது. அதன்பிறகு இறந்துவிடுகிறது. ஆனால் அது அந்த பிரம்மாண்டமான புற்றை கட்டிக்கொண்டிருப்பது அதற்கு தெரியாது.
அதுபோல நாம் நமது வாழ்வில் எதை கட்டிக்கொண்டிருக்கிறோம் ? நோக்கம் என்பது ஒவ்வொரு உயிருக்கும் உள்ளது. நீங்கள் எந்த அளவுக்கு உயிரியல் செய்திகளைப் பார்க்கிறீர்களோ அந்த அளவுக்கு உயிர்களுக்கான நோக்கம் தெளிந்து வருவதைப் பார்க்கலாம். இங்குள்ள வாழ்க்கை பொருளற்றது அல்ல. எப்படியாவது மகிழ்ச்சியாக இருந்து கடந்து சென்றுவிடவேண்டிய ஒன்றல்ல நம் வாழ்க்கை. நாம் எய்த வேண்டிய சில உண்டு. நாம் செய்தேயாகவேண்டிய சில உண்டு. அது உங்களுக்கு தெரிந்திருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு உயிருக்கும் அது உள்ளுணர்வாக தெரியும். அந்த உள்ளுணர்வுக்கு மேல் மற்றவைகளை ஏற்றிவைத்து மறைக்கிறீர்கள் என்றால் அது உங்கள் சொந்த மாயை. ஆனால் உள்ளுணர்வால் ஒருவனுக்கு தெரியும், அவன் வந்தது எதற்காக, செய்யவேண்டியது என்ன என்று. அதை செய்வதற்குத்தான் வாழ்க்கை. வாழ்க்கையின் நோக்கம் என்பது அதுதான். அது பிரபஞ்சம், இயற்கை நமக்கு இடுவது. நாம் பிறக்கையிலேயே உடன் வருவது.
இதை கண்டடைந்த பிறகுதான் நான் ஓஷோவை கடந்தகால ஆசிரியன் என்ற இடத்திற்கு கொண்டுசென்றேன். என்னுடைய பணி என்னவோ அதை ஆற்றிமுடித்து இங்கிருந்து செல்வேன். நிகழ் கணத்தில் இருத்தல், ஹெடோனிஸம் என்றெல்லாம் எளிய உலகியல் இன்பங்களில் வாழ்வது வீண் என உணர்கிறேன். அவை இன்பங்கள் அல்ல. அவை நிறைவு அளிப்பதில்லை. செயல்நிறைவே எனக்கான முழுமையான இருப்பை அளிக்கிறது. செயல்வழியாகவே மெய்யான இன்பம் நிகழ்கிறது. இலக்கை எய்துதல் என ஒன்று உள்ளது. அது எனக்கான செயலை நான் முழுமைப்படுத்திக்கொள்வதே. ஆகவேதான் இத்தனை ஆயிராம் பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.
ஆனால் இந்த பிரம்மாண்டமான மானுட சிந்தனை வெளியில் எனது எழுத்துக்கள் கூட குமிழியே. கங்கையில் ஒரு குமிழியைப்போல. அருகில் இருக்கும் இன்னொரு குமிழிதான் டால்ஸ்டாய். மற்றொரு குமிழி ஐன்ஸ்ட்டின். ஆனால் இந்த ஒட்டுமொத்தம் என்பது மிக பிரம்மாண்டமானது. அதை அறிவியக்கம் என்கிறேன். நாம் ஒட்டுமொத்தமாக மானுடம், அந்த அறிவியக்கத்தின் நோக்கம் என்ன என்று நம்மால் சொல்லிவிட முடியாது. மானுடம் ஒட்டுமொத்தமாக சிந்தனைசெய்தாலும் அறிந்துவிட முடியாது. நாம் இதை ஆற்றிவிட்டு செல்வோம். நம்மால் இயல்வது இது என்பதனால் இதைச் செய்கிறோம். என்னால் இயல்வது இது என்பதனால், இதைச் செய்வதே என் மகிழ்வும் நிறைவும் என்பதனால் நான் இதைச் செய்கிறேன். இதுவே விடுதலை. சும்மா இருப்பது அல்ல. நேற்றும் நாளையும் இன்றி இருப்பது அல்ல. பொறுப்பேற்றுக்கொள்ளாமல் இருப்பது அல்ல.
இவ்வாறு வாழ்வின் நோக்கம் பற்றிய நமது தன்னுணர்வு அளிக்கக்கூடிய நிறைவை, அதை எய்தபின்பு அடையக்கூடிய விடுதலையை நீங்கள் ஓஷோவில் தேடமுடியாது. அதுவே ஓஷோவின் எல்லை.
நன்றி.
எல்லாவற்றைப்பற்றியும் ஏதாவது சொல்கிறேனா?
நீங்கள் சொல்லும் எவற்றுக்கும் ஆதாரங்கள், ஆய்வுமுடிவுகள் இல்லாமல் மனதில் பட்டதையே சொல்கிறீர்கள். அறிவியல்சார்ந்து இந்தவகையான கருத்துக்களுக்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்?
In this video, I have talked about why a new writer should write a novel, how to write it, what to do, and what not to do. Writing a novel
August 10, 2025
சரஸ்வதி யாமம்
சரஸ்வதி என்னும் ராகத்தில் அமைந்த பாடல் இது என்று சொல்லப்படுகிறது. எம்.கே.அர்ஜுனனின் இசையமைப்பில் 1976 ல் வெளிவந்த அனாவரணம் என்னும் படத்தில் இடம்பெற்ற பாடல். வயலார் ராமவர்மா எழுதியது. ஏசுதாஸ் பாடியது.
ஏசுதாஸின் குரல் கம்பீரம் அடையத்தொடங்கும்போது வந்த பாடல். (கம்பீரம் எனும்போது தமிழ்ச்செவிகளுக்கு தோன்றும் அந்தக் கம்பீரம் அல்ல. இது ஓர் இனிய மணியோசை)
இந்தப்பாடல் எனக்கு நீண்டகாலமாகவே பிடித்தமான ஒன்று. கொஞ்சம் ஊக்கப்படுத்திக்கொள்ள நான் கேட்பது. இந்தப் பாடலின் வரிகள் அந்த படத்துடன் இணைந்தவை. நிகழ்காலத்தில் சோர்ந்துகிடக்கும் கேரளத்தின் மேல் சூரியன் எழுகிறது என்றும், அதைநோக்கி பாடுவதாகவும் எழுதப்பட்டது
சரஸ்வதி யாமம் கழிஞ்ஞு
உஷஸின் சஹஸ்ர தளங்கள் விரிஞ்ஞு
வெண்கொற்ற குட சூடும் மலயுடே மடியில்
வெளிச்சம் சிறகடிச்சு உணர்ந்நு
அக்னி கிரீடம் சூடி அஸ்வாரூடனாயி
காலம் அங்கம் ஜயிச்சு வந்த தறவாட்டில்
இதுவழி தேரில் வரும் உஷஸே
இவிடுத்தே அஸ்திமாடம் ஸ்பந்திக்குமோ?
முத்து உடவாள் முனையாலே
நெற்றியில் குங்குமம் சார்த்தி
கைரளி கச்ச முறுக்கி நிந்ந களரிகளில்
நிறகதிர் வாரித்தூகும் உஷஸே
இனியும் ஒரு அங்கத்தினு பால்யமுண்டோ?
சரஸ்வதி யாமம் கடந்தது
காலையின் ஆயிரம் இதழ்கள் விரிந்தன.
வெண்கொற்றக்குடை சூடும்
மலையின் முடியில்
வெளிச்சம் சிறகடித்து எழுந்தது.
அக்கினி கிரீடம் சூடி, அஸ்வத்தின் மேல் ஏறி
காலம் களம் வென்றுவந்த தாய்நிலத்தில்
இவ்வழியாக தேரில் வரும்
உன்னைக்கண்டு
இங்குள்ள கல்லறை அதிர்வுகொள்ளுமோ?
முத்துபதித்த உடைவாள் முனையால்
நெற்றியில் குங்குமம் தீட்டி
கேரளம் கச்சை இறுக்கி நின்ற போர்க்களங்களில்
நிறைகதிர் அள்ளிச் சொரியும் புலரியே
இன்னும் ஒரு ஒற்றைப்போருக்கு
இளமையுள்ளதா?
ஓஷோ: மரபும் மீறலும்-15

தமிழ் புனைவிலக்கியத்திலும் கவிதையிலும் முன்னோடியாக திகழ்ந்தவர் ந.பிச்சமூர்த்தி. அவர் ‘ஆத்தூரான் மூட்டை’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அது அக்காலத்தில் கும்பகோணத்தில் உண்மையில் இருந்த ஆத்தூரான் என்பவரை பற்றியது. அவரது பழக்கம் என்னவென்றால் சாலையில் செல்லும்போது கையில் சிக்கக்கூடிய காகிதங்கள், அவருக்கு பிடித்த மற்ற பொருள்களையெல்லாம் பொறுக்கி தனது மூட்டைக்குள் போட்டுக்கொள்வார். நாளடைவில் மூட்டை பெருத்துவந்தது. ஒரு கட்டத்தில் அவரால் அந்த மூட்டையை சுமக்க முடியவில்லை. அந்த மூட்டையை கீழிறக்கி வைக்கவும் முடியாது, அதில் மேன்மேலும் பொருள்கள் சேர்வதை தடுக்கவும் முடியாது. பின்பு மூட்டையை அசைக்கமுடியாமல் தரையில் இழுத்து செல்கிறார். அதன்பிறகு இழுக்கவும் முடியாமல் அந்த மூட்டையை பிடித்து அதன் அருகிலேயே படுத்துக்கொண்டு இறந்துபோகிறார்.
இதன் பொருள் என்னவென்று உங்களுக்கு உடனே தெரியும். ஒவ்வொருவரும் ஒரு ஆத்தூரான் மூட்டையுடன் இருக்கிறோம். அந்த மூட்டையை நம்மால் விடமுடியாது. அதை எப்படி கீழே வைப்பது என்பது நமக்கு தெரியாது. அப்போது நம்மிடம் வந்து ஒருவர் சொல்கிறார், ‘அதற்குள் இருப்பது வெறும் குப்பைதான். அது உனது மனச்சிக்கல். அந்த மூட்டையை மட்டும் நீ விட்டுவிட்டால் உன்னால் எழுந்து சென்றுவிட முடியும். ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழமுடியும்’. ஆனால் ஆத்தூரானை பொறுத்தவரை அது அவர் வாழ்நாள் முழுக்க சேகரித்த செல்வம். அதில் அவருடைய உழைப்பு உள்ளது. அவரிடம் இப்படி சொன்னால் அவர் என்ன சொல்லியிருப்பார் ? ‘என்ன உளறிக்கிட்டு இருக்கே? இதை நான் சேர்த்துவைக்க நாற்பது வருஷமாச்சு தெரியுமா ?’ என்று அதட்டியிருப்பார்.
புகழ்பெற்ற ஒரு நம்பூதிரி நகைச்சுவை உண்டு. நம்பூதிரி மாட்டின் வளைந்த கொம்புகளுக்கு இடையே கழுத்தை விட்டுக்கொண்டார். மாடு ஓடத்தொடங்கியது. ஊர்க்காரர்களெல்லாம் சேர்ந்து வளைத்துப்பிடித்து அவரை மீட்டனர். அப்போது ஒருவர் கோபமாக ‘என்ன நம்பூதிரி, கொஞ்சம்கூட யோசிக்காம இப்படி பண்ணிட்டீங்களே’ என்று கேட்டார். அதற்கு நம்பூதிரி, ‘அத மட்டும் சொல்லாதே. முப்பத்தாறு வருஷமா நான் இதைத்தவிர வேறு எதுபற்றியும் யோசித்தது கிடையாது’ என்றார். இதை எப்படி செய்வது என்பதைத்தான் இத்தனைக்காலம் யோசித்திருக்கிறார். இப்போது செய்துபார்த்துவிட்டார்.
நம் வாழ்க்கை என்பது இப்படியான அபத்தங்கள் வழியாக சென்றுகொண்டிருக்கிறது. நாம் அசட்டுத்தனங்களையே யோசித்து, கனவுகண்டு, அர்த்தமில்லாதவ்ற்றைச் சேர்த்துக்கொண்டு, இங்கே வாழ்கிறோம். அதை ஒருவகையில் இயல்புநிலை நோக்கி திருப்பக்கூடியவையாக ஓஷோவின் தியான முறைகள் உள்ளன. ஆனால் வேடிக்கை என்னவென்றால், நீங்கள் அந்த தியான முறைக்கு சென்றீர்கள் என்றால் அது இயல்பு கடந்த ஒன்று என்றும் நீங்கள் இயல்பாக இருப்பதாகவும் தோன்றும். நீங்கள் சுயபுத்தியோடும் தர்க்கபுத்தியோடும் இருப்பதாகவும், அது கிறுக்குத்தனமாகவும் தோன்றும். ஆனால் உண்மையில் அந்த தியானத்தின் நோக்கம் என்னவென்றால் ஒரு கிறுக்கனுக்கு இயல்நிலையை உருவாக்குவதற்கான முயற்சியே.
டைனமிக் தியானம்
ஓஷோ தனது தியான முறைக்கு Dynamic Meditation என்று பெயரிட்டார். பின்னர் அதற்கு வேறு பெயர்களும் வந்தன. ஆனால் அந்த சொல் அவரால் புகழ்பெற்றது என்பதால் நாம் அதையே பயன்படுத்துகிறோம். அவருடைய பரிணாமத்தின் நான்கு கட்டங்களில் மூன்றாவது நிலையில் அவர் இந்த தியான முறையை ஏற்படுத்த முக்கிய காரணம், அறிவார்ந்து நிறைய பேசிவிட்டோம், அவையனைத்தும் இன்னொரு வகை அறிவாகத்தான் ஆகிறது, எனவே அதை சமநிலைப்படுத்த தராசின் மறுபக்கத்தில் ஒரு அறிவின்மையை அல்லது எதிர்அறிவை வைக்கலாம் என்ற அவருடைய நோக்கமே.
ஆனால் இந்தியாவின் மரபார்ந்த தியான முறைகளில் பழக்கம் உள்ளவர்களுக்கு ஓஷோவின் தியான முறைகள் நகைப்புக்குரியவையாகவே இருந்தன. தியான முறைகளில் இருக்கும் மிகப்பெரிய அபாயம் என்னவென்றால், சிலகாலம் நீங்கள் தியான முறையை பயின்றுவிட்டீர்கள் என்றால் உங்களை நீங்களே ஒரு ஆன்மீக குருவாக கற்பனை செய்துகொள்வீர்கள் என்பதுதான். எனது அறிதலில் மிக அதிகமான ஆன்மீக குருக்கள் நடமாடும் இடம் கோவை. நேற்று ஒருநாள் மட்டும், எப்படி நான் மெய்ஞானத்தை அடைவது என்று ஆலோசனை சொல்லி பதினைந்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. இந்த ‘ரெடிமேட் ஞானிகள்’ ஓஷோவை சகஞானியாக எண்ணிவிடுவார்கள். எனவே அத்தனைபேரும் ஓஷோவைப்பற்றி பரிகாசமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். கபீருடைய பாடல் என்று நினைக்கிறேன். ‘கங்கையில் குளித்தால் மோக்ஷத்திற்கு செல்லலாம் என்றால் கங்கையில் உள்ள மீன்கள் எல்லாம் மோக்ஷத்திற்கு செல்லும்தானே’ என்றொரு வரி உண்டு. அதை கொஞ்சம் மாற்றி வேறுவிதமாக சொல்வார்கள். ‘சக்கரமாக சுழன்றால் மெய்ஞானம் வரும் என்றால் அத்தனை வீட்டுக்கும் ஒரு ரங்கராட்டினம் வாங்கிக்கொடுக்கலாமே’ என்று. கையை விரித்துச் சுழன்றுவரும் ஓஷோவின் தியான முறை பற்றிய கேலி இது.
எது தியானம், எது தியானமல்ல என்று ஒரு சிறிய வரையறை கொடுக்கவேண்டியுள்ளது. தியானம் என்ற சொல் ‘ஆழ்ந்து நினைப்பது’ என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுகிறது. வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களில் ‘அவன் என்னை நோக்கி கத்தியுடன் வந்தான். நான் என்ன செய்வது என்று தியானித்துவிட்டு…’ என்று வரும். அங்கே தியானித்துவிட்டு என்றால் ஆழமாக யோசித்துவிட்டு என்று பொருள்.ஒரு வசதிக்காக இவ்வாறு பிரித்துக்கொள்ளலாம். யோகம் என்ற சொல்லின் ஒரு மரூஉதான் தியானம். ஆழ்நிலையை அடைவதற்கான அக, புற பயிற்சிகளை மொத்தமாக யோகம் என்றும், அகப்பயிற்சியை மட்டும் தியானம் என்றும் சொல்லலாம். தியானம் என்ற சொல்லுக்கு சமானமாக தமிழில் ஊழ்கம் என்று சொல்லப்படுகிறது. அது ஒரு சமண வார்த்தை. பௌத்தர்களும் அதை பயன்படுத்துகிறார்கள். திருமுறைகளில் அந்த வார்த்தை உள்ளது என்று ஒருவர் சொன்னார். எனக்கு அதுபற்றி தெரியவில்லை.
ஆழ், ஊழ் இரண்டும் ஒன்றுதான். ஆழ்ந்து செல்லுதல் என்பதில் இருந்து ஊழ்கம் என்ற சொல் வந்திருக்கலாம். ‘ஊழ்’ என்ற சொல்லேகூட ஆழம் என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். இச்சொல் நெடுங்காலமாக இங்கே இருந்திருக்கிறது. இதை ஆங்கிலத்தில் Contemplation என்று மொழிபெயர்க்கிறார்கள். ஆனால் அதன் பொருள் ‘கூர்ந்து கவனித்தல்’ என்பது மட்டுமே. Meditation என்பதும் ஊழ்கத்திற்கு இணையானது அல்ல. ஒன்றில் குவிந்திருத்தல் என்றே அதற்குப் பொருள். தியானம் / யோகம் என்பதுதான் சரியான வார்த்தை. யுஜ் என்ற வேர்ச்சொல்லில் இருந்து யோகம் என்ற சொல் வந்தது என்பார்கள். இணைத்தல் / ஒருங்கிணைதல் என்பது அதன் பொருள்.
இந்தியாவில் நெடுங்காலமாக இந்த தியான முறைகள் இருந்திருக்கின்றன. நமக்கு இன்று கிடைத்திருக்கக்கூடிய மிகத்தொன்மையான அடையாளங்களில் ஒன்று, சிந்து சமவெளியில் கிடைத்த, யோகத்தில் அமர்ந்திருக்கும் பசுபதி உருவம்தான். சிவன் யோகேஸ்வரன் என்று சொல்லப்படுகிறான். கிருஷ்ணனும் யோகத்தில் அமர்ந்தவனே. இந்து மரபின் எல்லா தெய்வங்களும் யோகத்திலமர்ந்த தோற்றம் கொண்டவையே. சமணத் தீர்த்தங்காரர்கள் அனைவருமே யோகத்தில் அமர்ந்தவர்கள்தான். பௌத்தம் யோகத்தை வளர்த்தெடுத்தது, யோகாசார மரபு என ஒன்று அதற்குள் உண்டு.
எவை தியானமல்ல ?
எது தியானம், எது தியானமல்ல என்கிற வேறுபாடு இங்கு மிகவும் மழுங்கிவிட்டதால் அதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஜபம் என்பது தியானமல்ல
மந்திர ஜபம், நாம ஜபம் போன்றவை தியானமல்ல. வைதிக மரபின் அடையாளமாக இருப்பது நாம ஜபம்தான். பல்வேறு எண்ணிக்கைகளில் சொல்லப்படவேண்டிய நாம ஜபங்கள் உள்ளன. கூட்டாக சொல்வதும், தனியாக சொல்வதும் உள்ளன. அவர்கள் செய்தே ஆகவேண்டிய ஒன்றாக வேதம் அதை சொல்கிறது. ஜபம் என்பதை ஒரு சொல்லை சொல்லிச்சொல்லி கடத்தல் எனலாம். சொல்லச்சொல்ல சொல் பெருகி, தன்னைத்தானே இல்லாமலாக்கி வேறொரு இடத்திற்கு கொண்டுசெல்லும்.
மகாபாரதத்தில் தியானம் என்ற சொல் வருகிறது. ஆனால் மகாபாரத காலம் வரை யோகமுறை என்பது நாமஜபத்தோடு தொடர்புடைய விஷயமாகத்தான் இருந்துள்ளது. மந்திர உச்சாடனம், மந்திரத்தை உருவாக்கிக்கொள்ளுதல், தெய்வம் வந்து மந்திரத்தை அளித்து அதை பல்லாயிரம் முறை சொல்வது போன்றவை உள்ளன. தபஸ் என்பதே மந்திரத்தோடு தொடர்புடையதாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பாரதத்தை ஆராயக்கூடிய நவீன அறிஞர்கள் அதற்குள் யோகத்தை பற்றி நிறைய குறிப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள். அது வைதிக மரபோடு தொடர்புடையது அல்ல, அவற்றுக்கு வெளியே இருக்கும் மரபுகளோடு தொடர்புடையதாக உள்ளதென்றும் சொல்கிறார்கள். மகாபாரதத்திற்கு பிறகுதான் கீதை உருவாகி வந்தது என்பது என் எண்ணம். அதில் கிருஷ்ணன் தன்னை ஒரு யோகி என்று சொல்லிக்கொள்கிறான். அர்ஜுனன் ஒரு யோகியாகத்தான் மகாபாரதத்தில் வருகிறான். கீதையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு யோகம் என்றே அறியப்படுகிறது. இந்த யோகம் என்ற சொல் மகாபாரதத்திலும் கீதையிலும் வெவ்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.
பிரார்த்தனை என்பது தியானமல்ல
வேண்டுதல் என்பது கேட்டுப்பெறுவது. அது தவறு என்று நான் சொல்லவில்லை. நாம் உலகியலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மை சூழ்ந்திருக்கும் முடிவில்லாத வெளியுடன், நமக்கு அப்பால் இருக்கும் விசைகளுடன், தெய்வங்களுடன் நாம் நமது எளிய ஆசைகளை சொல்லி வேண்டுவது என்பது தவறல்ல. அது தவறு என்று நானும் சொன்ன காலமுண்டு. ஆனால் உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தபின்பு அதை சொல்லமாட்டீர்கள். ஏதோவொரு தருணத்தில் வேண்டிக்கொண்டிருப்பீர்கள். வேண்டுதல் என்பது எல்லா மதத்திலும் உள்ளது. ஆனால் அது யோகமோ தியானமோ அல்ல.
அதாவது, தியானமானது வைதிக மரபிலும் இல்லை, பக்தியிலும் இல்லை. மிக சமீப காலம் வரைக்கும் ஆலய வழிபாட்டின் ஒரு பகுதியாக யோகமோ தியானமோ இருந்தது கிடையாது. ஆலயத்தில் நாமஜபங்கள், வேண்டுதல்கள், வேள்விகள் உண்டு. ஆனால் யோகமும் தியானமும் கிடையாது. அது துறவிகளுக்குரியதாக, வேறுவகை சாதகர்களுக்கு உரியதாகவே இருந்திருக்கிறது. தமிழகத்தில் யோகத்திற்கு இத்தகைய நீண்ட மரபு இருந்திருந்தும் கூட பதஞ்சலி யோகத்திற்கு மொழிபெயர்ப்போ உரையோ கிடையாது. ஏனெனில் அது குரு சிஷ்ய தொடர்ச்சி வழியாக சொல்லிக்கொடுக்கக்கூடியதாக உள்ளது. அதற்கு நூல் அவசியமானதாக இருக்கவில்லை.
இந்திய மரபிலுள்ள யோகமுறைகள் பல. அவற்றைச் சுருக்கமாக அறிந்துகொண்டால் ஓஷோவின் தியானம் எந்தெந்த மரபுகளில் இருந்து உருவானது என்று அறியமுடியும்.
பதஞ்சலி யோகம்
இந்தியாவின் மைய யோகமரபு என்பது பதஞ்சலி யோகம்தான். அது ஆறு தரிசனங்களில் ஒன்றாக, சாங்கியத்தின் துணை தரிசனமாக உள்ளது. பதஞ்சலி யோகசூத்திரங்கள் நூல் ஒரு வழிநூலே. அதற்கு முன்னால் பல நூல்கள் இருந்திருக்கின்றன. அந்த நூல் ‘யோக: சித்த விருத்தி விரோத:’ என்று தொடங்குகிறது. விருத்தி என்றால் வளரும் செயல். சித்தத்தின் வளரும் செயல்பாட்டை ஒறுத்தல் என்பதே யோகம். ஒரு நதியை அதன் ஊற்றுமுகத்திற்கு கொண்டுசெல்வது. ஒரு புருஷன் தன்னை பரமபுருஷனாக உணர்வதும், பிரகிருதியை மூலப்பிரகிருதியாக உணர்வதும், பிரகிருதி-புருஷ பேதத்தை அழித்து பெருநிலையை உணர்வதும் அதன் இலக்கு. அதற்கான வழிமுறைகளாக யம நியமங்கள் கற்கப்படுகின்றன. ஓஷோ பதஞ்சலி யோக சூத்திரங்களுக்கு உரை எழுதியிருக்கிறார்.
தாந்திரீக மரபு
இரண்டாவது முக்கியமான மரபு என்பது தந்த்ரா எனும் தாந்திரீக மரபு. ஓஷோ அதுபற்றி நிறைய பேசியிருக்கிறார். இம்மரபை பற்றி தனியாகத்தான் பேசவேண்டும். இருப்பினும் இதை இங்கு சுருக்கமாக சொல்கிறேன். தந்த்ரா என்ற சொல்லின் நேரடிப்பொருள் ‘நடைமுறை செயல்பாடு’ என்பதே (Tantra – The regular order). இச்சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுவதால் பல்வேறு குழப்பங்கள் எழுகின்றன. உதாரணமாக சிற்ப சாஸ்திரமும் தந்த்ரா என்று சொல்லப்படுகிறது. பூஜை முறைகள், தியான முறைகள் போன்றவையும் தந்த்ரா என்று சொல்லப்படுகின்றன. இவை மூன்றும் வேறுவேறே.
தாந்திரீக வழிபாட்டு முறை (Tantric Rituals)
தமிழகத்தில் ஆகம முறைப்படியான வழிபாட்டு முறைகள் உள்ளன. ஆனால் கேரளத்தில் தாந்திரீக முறைப்படியான வழிபாடுகள் உள்ளன. அந்த தந்திரம் என்பது நாம் இன்று சொல்லக்கூடிய யோக தந்திரங்களோடு இணைந்தது அல்ல. அது வழிபாட்டு, பூஜை முறைகளை பற்றிய தந்திரம். அதற்கு ஆதாரமாக தந்திர சமுச்சயம் (Tantra Samuccaya) என்ற நூல் உள்ளது. அது பஞ்ச மகாரங்கள் என்பதோடு சேர்ந்தது. மது, மங்கை, மாமிசம், மாவு, மந்திரம் என்பவை பஞ்ச மகாரங்கள். கைகளால் காட்டப்படும் சைகைகள், உச்சாடனங்கள் மட்டுமேயான மந்திரங்கள் போன்றவை காணப்படும். அதன் வழிபாட்டு முறையே முற்றிலும் வேறுபட்டது.
வரலாற்று ரீதியாக ராஜராஜ சோழன் கேரளத்தில் தாந்திரீக பூஜையை நிறுத்தி ஆகம முறையை கொண்டுவந்தான். பதினான்காம் நூற்றாண்டில் கேரள மன்னர்கள் ஆட்சிக்கு வந்தபோது மீண்டும் தாந்திரீக பூஜை முறையை கொண்டுவந்தனர். இன்றுவரை கேரள கோயில்களின் அதிகாரம் என்பது தந்திரீகர்கள் எனும் உபாசகர்களிடமே உள்ளது. அவர்கள் பரம்பரையாக வரக்கூடியவர்கள்.
தாந்திரீக சிற்பமுறை (Tantric Iconography)
சிற்பங்கள், அதில் உள்ள முத்திரைகள் எப்படி அமையவேண்டும் என்று சொல்லும் தந்திர நூல்கள் உள்ளன. சைவமரபில் நெடுங்காலம் தாந்திரீகம் இருந்ததற்கான தடயங்கள் உள்ளன. சைவத்தின் பல பிரிவுகள் தாந்திரீக நடைமுறை உள்ளவையே. இங்குள்ள எல்லா சிவாலயங்களிலும் தாந்திரீகம் தொடர்பான சிற்பம் ஏதோவொன்று இருக்கும். சிலவகை சிற்பங்கள் தாந்திரீக மரபால் மட்டுமே உருவாக்கப்பட்டவை.
உதாரணமாக, யானையின் தோலை உரித்து போர்த்திக்கொண்டு நிற்கும் கரியுரித்த சிவன் (கஜசம்ஹார மூர்த்தி). அதற்கு கஜமுகாசுரனை சிவன் வதம் செய்த கதையை சொல்வார்கள். ஆனால் தாந்திரீகத்தில் அது வேறொரு அர்த்தம் கொண்ட வடிவம். ‘இரு நிலவுகள் எழுந்த இரவில் எழும் ஒளி’ என்று அதற்கு குறியீட்டுரீதியான அர்த்தம். யானையின் இரண்டு தந்தங்கள் இரண்டு நிலவுகள். அந்த யானைதான் இரவு. அதை கிழித்து எழக்கூடிய அனல் வடிவம்தான் சிவம்.
அதுபோல லிங்கம் பிளந்து வெளிவரக்கூடிய லிங்கோத்பவர் வடிவம். அந்த லிங்கத்தின் பிளப்பு யோனிவடிவில் இருக்கும். ஆவுடையில் இருந்து வெளிவரக்கூடிய சிவன். அதுவும் தாந்திரீகத்தில் மிக நுட்பமான பொருள் கொண்டவையே. மேலும், பிக்ஷாடனர், கங்காளர் போன்ற சிவ வடிவங்களையும் தாந்திரீகத்தோடு தொடர்புடையதாக சொல்வார்கள்.
இந்த வகைமைகளில் ஒன்றே தாந்தீர்க யோகமுறை.
தாந்திரீக யோகமுறை (Tantric Yoga)
மேற்சொன்ன இரண்டு தாந்திரீக முறைகளும் தாந்திரீக யோக முறையினின்றும் வேறுபட்டவை. அந்த யோகமுறை இந்நாட்டில் நெடுங்காலம் மறைவாகத்தான் இருந்திருக்கிறது. நமது வரலாற்றில் மகாபாரத காலத்திலேயே அது மிக வலுவாக இருந்திருக்கிறது. ஆனால் ஏழாம் நூற்றாண்டு தொடங்கி பக்தி இயக்கம் வலுவாக இருந்த காலங்களில் பக்தி மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டது. பக்தி மரபு வேள்விச் சடங்குகளையும் முக்கியமாக கருதவில்லை. மறுபுறம் தாந்திரீக சடங்குகளை வெறுத்து ஒதுக்கியது. அத்தகைய சடங்குகளுக்கு சமூகத்தில் இடமில்லாமல் ஆக்கியது.
இந்தியாவில் எழுநூறாண்டுகாலம் தாந்திரீகத்திற்கு எதிரான மையவோட்டம் உருவானது. தாந்திரீகர்கள் தலைமறைவாகவும் வேறு உலகை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் சித்தர்கள், வீரசைவர்கள், அகோரிகள், நாகா துறவிகள் என வெவ்வேறு விதமாக இந்தியா முழுக்க உள்ளனர். தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு வரை தாந்த்ரீக சைவம் மிக வலுவாக இருந்தது. குறிப்பாக பாசுபதம். அதன் முதன்மையாசிரியரான லகுலீஸர் இங்கே தெய்வத்துக்கு இணையாக வழிபடப்பட்டார்.ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் பக்தி இயக்கம் உருவானது. அதன் பின் தமிழ்நாட்டில் மதங்களின் மையப்போக்கு என்பது பக்தியால் நிரம்பியிருந்தது. ஒரு சாமானியனிடம் தாந்திரீக சடங்குகளுக்கு செல்லவேண்டாம் என்றுதான் ஆழ்வார்களோ நாயன்மார்களோ சொல்லியிருப்பார்கள். அவை பயனற்றவை என்று சொல்லும் நூல்கள் பக்தி இயக்கத்திலுள்ளன.
பின்பு இங்கு வந்த வெள்ளையர்கள்தான் தாந்திரீக மரபை கண்டுகொள்கிறார்கள். இப்படியொரு மரபு குரு- சிஷ்யத் தொடர்ச்சியாக இங்கு இருந்ததை காண்கிறார்கள். முக்கியமாக பிரம்மஞான சபையின் மேடம் பிளவாட்ஸ்கி (Helena Petrovna Blavatsky) இதுபற்றி எழுதியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு சிறிதளவுதான் தெரியும். பெரும்பகுதி கற்பனைதான். ஆனால் இப்படியொரு விஷயம் இருப்பதை அவர்களால் கண்டடைய முடிந்தது. அதன்பிறகு ஆய்வாளராகிய, ஆர்தர் ஆவலோன் என்ற பெயரில் எழுதிய சர் ஜான் வுட்ரோஃப் (Sir John Woodroffe) முக்கியமானவர். அவர் ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார். ஒரிசாவிலும் வங்காளத்திலும் பணிபுரிந்ததால் தாந்திரீகர்களை சந்திக்கவும் அவர்களிடமிருந்து தெரிந்துகொள்வதற்கும், அவர்களின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திய தாந்திரீகத்தை பற்றி பேசும்போது அவரைப்பற்றி பேசாமல் இருக்கமுடியாது.அதுபோல அகேகானந்த பாரதி (Agehananda Bharati) என்ற அமெரிக்கர் இந்தியா வந்து துறவுபூண்டு இந்திய தாந்திரீக முறை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இவர்கள் வழியாகத்தான் தாந்திரீகம் பற்றி நமக்கு தெரியவருகிறது.
பொதுவாக இந்த தாந்திரீக யோகமுறை பலவாறாக பிரிந்திருக்கிறது. அது ஒற்றை அமைப்பு அல்ல. அதில் நான்கு வெவ்வேறு மார்க்கங்கள் உள்ளன.
1) வாசியோகம் – இது மூச்சுப்பயிற்சி சார்ந்தது. இதை தென்னிந்தியாவை சார்ந்ததாக சொல்கிறார்கள். வட இந்தியாவிலும் அதற்கு வேர்கள் உண்டு என்றும் சிலர் சொல்கின்றனர். இதுபற்றி ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் அது தெற்கில் மிக வலுவாக இருந்திருக்கிறது. திருமூலர் அதன் முக்கியமான ஆளுமை என்று இங்குள்ள சைவர்கள் சொல்கின்றனர்.
2) அந்தர்யோகம் (அ) சித்தயோகம் – இது அகப்பயிற்சிகளால் ஆன யோகமுறை. ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்தவர்கள் அத்தகைய பயிற்சியை அளித்திருக்கிறார்கள். இதில் புறப்பயிற்சிகள் குறைவு.
3) ஹடயோகம் – இது முழுக்கவே உடலைப் பயிற்றுவிக்கும் பயிற்சி சார்ந்தது.
4) சக்ரயோகம் (அ) முத்ரா யோகம் – இந்த முறைமையில்தான், இன்று அதிகமாக பேசப்படக்கூடிய ஏழு சக்கரங்கள், மையங்கள் உள்ளன. மூலாதாரம் முதல் சஹஸ்ரம் வரைக்குமான ஏழு சக்திநிலைகள் / தாமரைகள் / சக்கரங்கள். அவை உருவகங்கள்தான்.
இதை இங்கே முக்கியமாக சுட்டிக்காட்ட வேண்டும். சென்னை விஜயா பார்க் விடுதிக்கு அருகில் சந்துக்குள் ஒரு அறிவிப்புப்பலகை ஒன்றை பார்த்தேன். ‘இங்கு மூலாதாரம் திறந்து கொடுக்கப்படும், ரூ.300’ என்று இருந்தது. அப்போது என் நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கேட்டார் ‘சார் முன்னூறு ரூபாய்தானா?’ என்று. ‘திறக்குறதுக்கு முன்னூறுதான். ஒரு வாரம் கழித்து, சாமி மூடிக்கொடுங்க என்று கேட்டு செல்வீர்கள். அப்போது முப்பதாயிரம் கேட்பார்’ என்றேன்.
மூலாதாரத்தில் குண்டலினி சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. குண்டலினி என்றால் தீ, குண்டத்தில் இருப்பவள். அந்த நாகவடிவிலான ஆற்றல் எழுத்து சஹஸ்ரத்திற்கு செல்வது என்பது உருவகமாக சொல்லப்படுகிறது. அது பல வடிவங்களில் பேசப்படுகிறது. ஆர்தர் ஆவலோன் ஒரு விளக்கமளிக்கிறார். மூலாதாரம் என்று சொல்லப்படுவது படைப்பாற்றல் (creativity) / இனப்பெருக்க ஆற்றல். அதில் இருந்து பசி, சொல், சிந்தை என்பதாக மேல்நோக்கி செல்கிறது என்கிறார். அதன் முழுமை ஆயிரமிதழ்கொண்ட தாமரையாக மலர்கிறது , அதுவே சகஸ்ரம்.
இந்த நான்கு முறைகளும் இந்தியாவில் பிரபலமாக இருந்திருக்கின்றன. இவை தனித்தனியாக இருந்திருக்கின்றனவா என்றால் அவ்வாறும் சொல்லமுடியாது. சித்தர் பாடல்களை பார்த்தால் இந்நான்கும் கலந்துதான் காணப்படுகின்றன. குறிப்பாக இந்நான்கும் ஒரே இடத்தில் இருக்கும் நூல் என்றால் அது திருமந்திரம்தான். அதை முழுக்கவே ஒரு யோக நூலாகத்தான் சொல்லவேண்டும். தமிழர்களின் துரதிருஷ்டம், அதை ஒரு அரசியல் நூலாக புரிந்துகொள்ள முற்பட்டிருக்கிறோம். ஒரு யோகிதான் அதுபற்றி உரை எழுதவும் பேசவும் முடியும். ஒரு சிறு வட்டத்திற்குள் மட்டும்தான் அதுபற்றி விவாதிக்கவும் முடியும்.
கேளி யோகம்
கேளிக்கையாக, கொண்டாட்டமாக அமையும் ஒரு யோகமுறை உண்டு. அதன் சிறு பகுதியை நீங்கள் மதுராவுக்கு சென்றால் காணலாம். நான் நண்பர்களுடன் மதுராவிற்கு சென்றிருந்தேன். அப்போது வழிகாட்டி ஒருவர் கைதட்டி எங்களிடம் ‘பாருங்க, நீங்க இப்போ பிருந்தாவனம் வந்திருக்கீங்க. இது ராதையின் நிலம், பிரேமையின் நிலம். இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக மட்டும்தான் இருக்கவேண்டும். இங்கு யாரும் கவலைப்படக்கூடாது. யாரும் எதைப்பற்றியும் எதிர்மறையாக பேசக்கூடாது’ என்றார். ‘யாருக்கெல்லாம் சுகர் இருக்கு’ என்று கேட்டுவிட்டு, ‘சுகர் இருந்தாலும் கவலைப்படக்கூடாது. எல்லோரும் லட்டு எடுத்துக்கோங்க’ என்றார். ‘ராதே ஷ்யாம் சொல்லி எல்லோரும் சிரிங்க’ என்றார். எல்லோரும் சிரித்தோம். இது யோக முறையின் ஒரு சிறு பகுதி.
நான் அலைந்து திரிந்த காலங்களில் காசியில் ஒரு ரயிலில் ஏறி படுத்தேன். பயங்கரமான குளிர். குளிருக்கு சிறந்த வழி இருக்கைகளுக்கு அடியில் படுப்பதுதான். திடீரென்று ஒரு கூட்டம் வந்து ரயிலில் ஏறியது. எல்லோரும் பஞ்சகச்சம், தலைப்பாகை கோலத்துடன் கையில் வாத்தியங்களோடு இருந்தனர். வந்து அமர்ந்து பாடத்தொடங்கினர். என்னை அழைத்து ‘கிருஷ்ணா இங்க வா, சாப்பிடு’ என்றனர். அனைத்தும் இனிப்பு வகைகளாக இருந்தன. இரவு முழுக்க பாடிக்கொண்டே இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு தமிழ் தெரியும். அவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஸ்ரீசைலம் பக்கத்தில் தையற்காரராக பணிபுரிகிறார். ஆண்டில் ஆறுமாதங்கள் தையற்காரராக இருந்து சம்பாதித்ததை மனைவியிடம் கொடுத்துவிட்டு, அதன்பின் அங்கிருந்து கிளம்பி இரவும் பகலும் தன்னை ராதையாக மட்டும் உருவகித்துக்கொண்டும் பாடிக்கொண்டும், ஒரு பெரிய கூட்டத்துடன் பண்டரீபுரம் வரைக்கும் சென்றுவிட்டு பின்பு உடுப்பி வழியாக திரும்பி தனது ஊருக்கு வந்து மீண்டும் தனது தையல் தொழிலை செய்யத்தொடங்குவார்.
இப்படியொரு வாழ்க்கை உள்ளது. இனிப்பும் பாட்டும் மட்டுமேயான வாழ்க்கை. நான் அப்போது மெலிந்திருப்பேன். கிளம்பும்போது என் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னார் ‘உடம்ப பாத்துக்கோ கிருஷ்ணா, கிருஷ்ண மதுரத்தை தங்கத்தட்டில்தான் வைக்கணும்’. அதுபற்றி ஒரு அனுபவக்கட்டுரை எழுதியிருக்கிறேன்.
சுவாமி ஆத்மானந்தா எங்கள் ஊரை சேர்ந்தவர். அவரது இயற்பெயர் கிருஷ்ண மேனன். அவர் கேரள அரசில் உயர் காவலதிகாரியாக பணியாற்றியவர். ஒவ்வொரு நாளும் தனது வீட்டு முகப்பில் வேதாந்த வகுப்புகள் நடத்துவார். அந்த வகுப்புக்கு திருவிதாங்கூர் மகாராஜா வருவார். பின்பு ஒன்பது மணிக்கு கிருஷ்ண மேனன் சீருடை அணிந்து பணிக்கு சென்று மகாராஜாவை கண்டு சல்யூட் அடிப்பார். அவருடைய உரையை கேட்பதற்காக ஜூலியன் ஹக்ஸ்லி (Julian Huxley) வந்திருக்கிறார். உலகின் முக்கியமான பல சிந்தனையாளர்கள் வந்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி தனது நினைவுக்குறிப்பில் க.நா.சு. அங்கு வந்ததைப்பற்றி எழுதியிருக்கிறார். கிருஷ்ணன் நம்பி அங்கு சென்றுவந்து அது ஐ.நா.சபை மாதிரி இருப்பதாக சொன்னதையும் எழுதியிருக்கிறார். க.நா.சு.வுக்கு பிடித்த புகழ்பெற்ற ஆத்மானந்தரின் மேற்கோள் ‘Waves are nothing but water. So is the sea’.
ஆனால் திடீரென்று ஒருநாள் அவர் ராதையாக மாறினார். புடவையெல்லாம் கட்டி, தலையில் பூச்சூடி ராதையாக வாழ்ந்தார். அந்த காலகட்டத்தில் மட்டும் அவர் கவிஞராக இருந்தார். அதற்கு முன்னர் அவர் கவிஞரல்லர். ஆனால் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில், இன்றும் புகழ்பெற்று இருக்ககும் ராதா மாதவம் என்ற இசைப்பாடலை எழுதினார். அதன்பிறகு மீண்டும் வேதாந்தியானார். இடையில் அத்தகைய குறிப்பிட்ட யோகம் அவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ராதையாக இருப்பது ஒன்று, கிருஷ்ணனாக இருப்பது ஒன்று என இருமுனைகளில் அந்த யோகம் உள்ளது.
ஆனால் அந்த யோகத்தை தவறாக செய்த ஒருவர் என்று காந்தியை சொல்லலாம். அவருக்கு சில ஆலோசகர்கள் இருந்திருக்கிறார்கள். ரைஹானா தயாப்ஜி (Raihana Tyabji) என்பவர் அதுபற்றி காந்திக்கு எழுதியிருக்கிறார். காந்திக்கு போலோநாத் என்ற ஆசிரியர் இருந்திருக்கிறார். நான் அதுபற்றி காந்தியும் காமமும் என்ற கட்டுரை எழுதியிருக்கிறேன்.இன்றைய காந்தி நூலில் அக்கட்டுரை உள்ளது. அந்த ஆலோசனையை காந்தியின் பாரிஸ்டர் மனப்பான்மை தவறாக புரிந்துகொண்டது. வழக்குரைஞராக இருப்பதன் அபாயம் அது. எதையும் தப்பாகப் புரிந்துகொள்ளுதல். இதை நான் எனது நண்பர் ஈரோடு கிருஷ்ணனிடம் ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். காந்தி அந்த யோகத்தை வேறுவிதமாக புரிந்துகொண்டு, ஆசிரியரில்லாமல் தானே செய்யத்தொடங்கி ,கூடுமானவரை எல்லா அவப்பெயர்களையும் வாங்கிக்கொண்டார். யோகத்தை அரசியல் எனும் சந்தை நடுவே வைத்து செய்தவர் என்று அவரை சொல்லலாம்.
சமணத்தின் யோகம்
சமணத்தின் அனைத்து தீர்த்தங்கரர்களும் யோகத்தில்தான் அமர்ந்திருக்கின்றனர். நின்றுகொண்டிருப்பதைக்கூட உத்திஷ்ட யோகம் என்பர். உள்ளங்கைகளை ஒன்றின்மீது ஒன்றாக விரிந்த நிலையில் வைத்திருப்பது உபேக்ஷா. ஆனால் அவர்கள் யோக முறைமை பற்றி குறைவாகத்தான் எழுதியிருக்கிறார்கள். அவர்களது முறைமை துறவுதான். ஒவ்வொன்றாக உதிர்த்துக்கொண்டே செல்வது. ராக்கெட் மேலே செல்லச்செல்ல எது தன்னை மேலே தூக்கிவிட்டதோ அந்த எரிபொருள் கலனை உதிர்த்துவிட்டுதான் செல்லும். ஞானம் வழியாக மேலே சென்று அந்த ஞானத்தை உதிர்த்துவிடுவது அவர்களது வழி.
ஓஷோ அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறார். துறவு சரியானது. ஆனால் எதை வைத்து துறப்பாய் ? அதைவிட பெரிய ஒன்றைக் கொண்டுதானே ? அந்த ஒன்றை எப்படி வெளியே தள்ளமுடியும் ? ஒன்றை துறப்பதற்கு நீ வைராக்கியம் என்பதை உருவாக்கிக்கொள்வாய். ஆனால் அந்த வைராக்கியத்தை உன்னால் துறக்க முடியாது என்கிறார்.
இதற்கு ஒரு சர்தார்ஜி நகைச்சுவை சொல்கிறார். சர்தார்ஜி ஒருவர் இயந்திரத்தை இயக்குபவர். ஒருநாள் இடதுகையில் பெரிய கட்டு போட்டிருந்தார். ஒருவர் என்னவென்று கேட்டதற்கு மெஷினில் கை மாட்டிக்கொண்டுவிட்டதாக சொன்னார். அதை கேட்டவர் ‘நல்லவேளை, வலதுகை மாட்டியிருந்தா என்ன ஆயிருக்கும்’ என்றார். அதற்கு சர்தார்ஜி சொன்னார், ‘எனக்கு தெரியாதா, நான்தான் கடைசி நிமிஷத்துல கையை எடுத்துட்டு இடதுகையை விட்டுட்டேன்ல’. அதுபோல இவர்களுடைய துறவு என்பது இன்னும் பெரிய ஒன்றை பற்றிக்கொள்வதுதான் அது. அத்தகைய வைராக்கியமே துறவுக்கு எதிரானது என்கிறார். எனவே அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
பௌத்தத்தின் யோகம்
பௌத்தம் மிக விரிவான யோக முறைகளை உருவாக்கிக்கொண்டது. அதற்கு நிறைய கிளைகள் உள்ளன. முக்கியமாக யோகாச்சார பௌத்தம் என்ற கிளையை சொல்லலாம். அதிலும் தேரவாதம் என்றும் மகாயானம் என்றும் இரண்டு கிளைகள் உள்ளன. இன்றைக்கு பௌத்த தியான முறைகள் இந்தியாவில் மிக பிரபலமாக உள்ளது. எந்தவொரு எழுத்தாளரை பார்த்தாலும் தான் அதை செய்வதாக சொல்கிறார்கள். முக்கியமாக விபாசனா தியானமுறை. பொதுவாக பார்த்தால் பௌத்தர்களுக்கு இரண்டுவகையான ஊழ்க முறைகள் உள்ளன.
உபாசனா – ஒரு மூர்த்தத்தை உபாசிப்பது. அதன்படி தன்னை தொகுத்துக்கொள்வது. இது திபெத்திய பௌத்தத்தில் மிக வலுவானது. காலதேவர் தொடங்கி போதிசத்வர் வரைக்குமான ஏதோவொரு குறிப்பிட்ட மூர்த்தத்திற்கு தன்னை முற்றாக அளிப்பது.
விபாசனா – தன்னை ஒவ்வொரு கணமும் பகுத்துக்கொண்டே செல்வது. பௌத்தத்தில் முக்கியமான சிந்தனை ஒன்றுண்டு. அதற்கு பிரதீத்ய சமுத்பாதம் (Pratītyasamutpāda) என்று பெயர். இதை ஒரு சிறு உவமை வழியாக விளக்கலாம். மினாண்டர் என்ற மன்னனுக்கு நாகசேனர் சொன்ன உவமை அது. கண்முன்னால் நாம் தீயை பார்க்கிறோம். ஆனால் நாம் பார்த்த கணத்தில் உள்ள தீ அல்ல அடுத்த கணத்தில் இருப்பது. தீ என்பது ஒரு நிகழ்வுதானேவொழிய ஒரு பொருள் அல்ல. ஒரு மலையும் நிகழ்வுதான். தீ வேகமாக நிகழ்கிறது, மலை மெதுவாக நிகழ்கிறது அவ்வளவுதான். இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே நிலையானவை அல்ல. எல்லாமே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த நிகழ்வுக்கு ஒரு தர்மம் (Order) உள்ளது. அந்த தர்மம்தான் அதை நம்மை பொருளாக உணரச்செய்கிறது. தீ என்பது ஒளிகொண்டதாகவும் வேகமாக மேல்நோக்கி செல்லக்கூடியதாகவும் உள்ளது. ஆகவே நாம் அதை பொருளாக பார்க்கிறோம். மலையும் அவ்வாறுதான். கொஞ்சம் மெல்ல நிகழ்கிறது. ஐம்பது லட்சம் ஆண்டுகள் நம்மால் உயிர்வாழ முடிந்தால் அந்த மலை உருமாறியிருப்பதை நாம் பார்ப்போம்.
இதை க்ஷணபங்கவாதம் (Kṣaṇabhaṅgavāda) என்று சொல்வதுண்டு. ஒவ்வொரு கணமும் ஒவ்வொன்றும் அழிந்து மாறிக்கொண்டே உள்ளன. நாம் அறியும் அந்த கணத்தில் அறிந்த பொருள் இல்லை. ஆகவே நாம் அறிவது அனைத்தும் ஒரு கணத்திற்கு முந்தைய பொருளைத்தான். அதன் தொடர்ச்சியை நாம்தான் உருவாக்கிக்கொள்கிறோம். தன்னிலை (Self) என்பதும் க்ஷணபங்கம்தான். அதை ஒரு யோகமுறையாக விரிவாக்கிக்கொள்வதே விபாசனா.
சமீபத்தில் ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் என்பவர் குரு எனும் நூலை எழுதியிருக்கிறார். அவர் கன்னட வீரசைவ மரபை சேர்ந்தவர். அவர் விபாசனா யோகம் செய்ததை பற்றி சொல்கிறார். அதை செய்தபின்பு அவரால் கவிதையே எழுதமுடியாமல் போய்விட்டது. அவர் தனது ஆசிரியரிடம் அதுபற்றி கேட்கிறார். அவர் ‘நல்லதுதானே, நீ விடுபட்டுவிட்டாயே. குறைந்தபட்சம் ஒன்றாவது விலகிச் சென்றிருக்கிறதே’ என்றார். ஆனால் தனது கவிதைதான் தான், அது இல்லாத சுயம் தனக்கு தேவையில்லை என்று விபாசனாவை விட்டு வெளியே வந்து சைவ முறைகளுக்குள் திரும்பியதை எழுதியிருந்தார். இன்று விபாசனா என்பது எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் பரவிக்கொண்டு இரு
இரா.கிருஷ்ணமூர்த்தி
இரா. கிருஷ்ணமூர்த்தி இந்தியாவின் தலைசிறந்த நாணயவியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். சேர, சோழ, பாண்டியர் கால நாணயங்களைக் கண்டறிந்து அவற்றில் பொறிக்கப்பட்ட பெயர்களையும் சின்னங்களையும் ஆய்ந்து சங்ககாலம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றாக நிறுவினார். சங்க காலம் வளர்ச்சியடைந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தது என்ற உண்மையை அவரது ஆய்வுகள் புலப்படுத்தின. பண்டைத் தமிழகம் கிரேக்கம் போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்தததையும் அவரது ஆய்வுகள் உறுதிப்படுத்தின. தமிழ் மொழியின் தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் வரலாற்று ஆதாரங்களைக் கண்டடைந்ததில் ஐராவதம் மகாதேவனின் ஆய்வுகளுடன் கிருஷ்ணமூர்த்தியின் பணி ஒப்பு நோக்கத்தக்கது. தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழக, தென்னிந்திய நாணயவியல் கழகங்களை நிறுவி, பல மாநாடுகளை ஒருங்கிணைத்தது இந்திய நாணயவியலுக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு.
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2023, நினைவுகள்
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2023 அதற்கான ஒரு கட்டமைப்பை முதல் விழாவிலேயே உருவாக்கிக் கொண்டுவிட்டது. ஆகவே அதை அப்படியே விரிவாக்கம் செய்வதை மட்டுமே இரண்டாவது விழாவில் செய்தோம். பாண்டியன் சதீஷ்குமார் என்னும் நண்பர் அளித்த நிதியில் ஒரு நாதஸ்வர இசைநிகழ்வை ஒருங்கிணைத்தோம். அது மிகப்பெரிய அளவில் ஏற்பு பெற்றது.
தூரனின் பாடல்களை தமிழுக்கான இசைக்கருவியான நாதஸ்வரத்தில் வாசிக்கச் செய்தோம். அதன்பொருட்டு தமிழின் தலைசிறந்த இசைக்கலைஞர்களை தெரிவுசெய்து அழைத்தோம். நண்பர் யோகேஸ்வரன் ராமநாதன் அதற்கு பொறுப்பேற்றார். அந்த ஆண்டே அது ஒரு ‘தரவரிசை’ யாக ஏற்பு பெற்றது. எல்லா ஆண்டும் நாதஸ்வரம், அதில் இசைக்கலைஞர்களை முறையாகத் தெரிவுசெய்யவேண்டும் என்னும் கட்டாயம் உருவானது. தூரன் விருது வழங்க அறிஞர் தேர்வு செய்யப்படுவதுபோலவே இதுவும் ஒரு தெரிவு.
2023 ஆம் ஆண்டு விருது மு.இளங்கோவனுக்கு. கூடவே ஒரு சிறப்பு விருது எஸ்.ஜே.சிவசங்கருக்கு. ஆய்வாளரும் கவிஞரும் எழுத்தாளருமான சிவசங்கர் இதயநோய்க்கு ஆளாகி உளம் சோர்ந்திருந்த காலம் அது. அவருக்கு விருது ஓர் ஊக்கமாக அமைந்தது.
விருதுவிழா வழக்கம்போல ஆய்வாளர்களுடனான வாசகர்சந்திப்பு, உரையாடல்களுடன் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. இன்னொரு விஷ்ணுபுரம் விருதுவிழா என வளர்ந்துவிட்டது. இரண்டு மடங்கு பார்வையாளர்கள், விருந்தினர்கள். செலவும் இரு மடங்கு. ஆனால் நிறைவுதரும் ஒரு நிகழ்வு. தமிழில் ஆய்வுக்காக நிகழ்த்தப்படும் மிகப்பெரிய விருதுவிழாவாக தூரன் விருதுவிழா அதற்குள் உருமாறிவிட்டிருக்கிறது.
விருதைப்போலவே விழாவன்று உரையாற்ற அழைக்கப்படும் ஆய்வாளர்களும் முக்கியமானவர்களாக ஆகிவிட்டனர். அவர்களின் அரங்குக்காக விவாதங்களுக்குப்பின் தெரிவுகள் செய்யப்படுகின்றன. ஆய்வாளர்கள் பலவகை. கல்வியாளர்கள், தொல்லியல்துறை ஊழியர்கள், தனிப்பட்ட முறையில் ஆர்வத்தால் ஆய்வுசெய்பவர்கள். இந்த மூன்று களங்களில் இருந்தும் குறிப்பிடத்தக்கவர்களை அழைத்து இந்த விவாதத்தை ஒருங்கிணைக்கிறோம்.
காந்திராஜன் கொங்கு சதாசிவம் லோகமாதேவி தியடோர் பாஸ்கரன் சுவாமி பிரம்மானந்தர் ப. ஜெகந்நாதன்என எங்கள் விருந்தினர் பட்டியலும் மிகக்குறிப்பிடத்தக்கது.
ஜெ
தூரன் விழா 2023 கடிதம் தூரன் விழா, கடிதங்கள் தமிழ் விக்கி -தூரன் விருது விழாவில்… தூரன் விழா உளப்பதிவுகள்
————————————————————————————
தமிழ்விக்கி தூரன் விருதுவிழா 2022 நினைவு தமிழ்,இசை, நினைவுகள்வேதகாலப் பெண்கள்
வெண்டியின் கருத்தென்பது ஆழ நோக்காமையின் வெளிபாடா? அல்லது பெண்கள் வேதம் கற்றார்கள் என்பதை ஒரு புனைவின் பகுதியாக வெண்முரசில் நீங்கள் சேர்த்தீர்களா…? விளக்கினால் தெளிந்து கொள்வேன்.
வேதகாலப் பெண்கள்
Guru Nitya calls it a dialectical approach. It is an established way in Indian also thought—it is called the yogatma approach.
The dialectical wayஅமெரிக்காவில் கம்பராமாயண இசைநிகழ்வு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். நான்கு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் ஆரம்பித்த எமெர்சன் முகாமில் கம்பராமாயணம் அமர்வில், நாங்கள் கம்பனின் பாடல்களை உணர்வே இல்லாமல் ஒரு நவீன உரையைப் போல வாசித்து உரையாற்றினோம். ஒரு சின்ன புன்முறுவலுடன், கம்பனை எப்படி வாசிக்கவேண்டும் என்று ஒரு வகுப்பு எடுத்தீர்கள். அடுத்து அடுத்து நடந்த முகாம்களில், நான்கு ஐந்து நண்பர்கள், கம்பராமாயணம் அமர்வின் பொழுது , ராலே ராஜனிடம் பயிற்சி பெற்று கற்றுக்கொண்ட மெட்டுடன் அமர்வுக்கான பாடல்களைப் பாடினார்கள். முகாம் முடிந்தும், அந்த அமர்வில் கேட்ட பாடல்கள் காதில் ஒலித்த வண்ணம் இருக்கும். அப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்து காணொளி தயாரித்து யூட்யூபில் வெளியிட்டால் உலகளவிய இலக்கிய ரசிகர்கள் கேட்பார்கள் என, கடலோ மழையோ பாடலை ராலே ராஜன் இசையமைத்து ப்ரியா கிருஷ் பாட வித்வான் சிக்கில் குருச்சரண் , நாஞ்சில் நாடன் மற்றும் தங்கள் முன்னிலையில் ஜனவரியில் வெளியிட்டோம். எப்பொழுதும் முன்னகரும் சிந்தனையில் இருக்கும் நண்பர்கள், கம்பனின் பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து பொதுமக்கள் முன்னிலையில் பாடினால் என்ன என்று விவாதிக்க, கடலோ மழையோ என நிகழ்விற்குப் பெயரிட்டு, ஆகஸ்ட் 16, மாலை 4 மணிக்கு ப்ரிஸ்கோ (டாலஸ்) நகரில் கம்பராமாயண இசைமழை பொழியவிருக்கிறோம்.
ஒரு “அலை பாயுதே கண்ணா”, பாடலைப் போலவோ, அல்லது “குறை ஒன்றும் இல்லை” பாடலைப் போலவோ, யாவரும் ரசிக்கவேண்டும் என்றால் தாளம் சேர்ந்த இசை வேண்டும் என்று திட்டமிட்டு, இசையமைப்பாளர் ராலே ராஜன், பத்து பதினைந்து பாடல்களை தேர்வு செய்து, பாடகர் ப்ரியா கிருஷை , கர்நாடக இசையின் ராகத்தில் , தாளத்துடன் பாடிப் பயிற்சி பெறச் செய்துள்ளார். அவருடன் உமா மகேஷ் (வயலின்) ராஜு பாலன் (மிருதங்கம்) , ஸ்கந்த நாராயணன் (கஞ்சிரா), சாய் கணேஷ் (பியானோ) இணைய இந்தக் கச்சேரி ஆலாபணை, கற்பனை ஸ்வரம், தனி ஆவர்த்தனம் என அனைத்துக் கர்நாடக சங்கீத விஷயங்களும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமையான கச்சேரியாக இது அமையவிருக்கிறது. பழனி ஜோதி, ஒவ்வொரு பாடலையும் ப்ரியா கிருஷ் பாடுவதற்கு முன், அதன் கவிதை நயத்தையும், சிறப்பையும் விளக்கவிருக்கிறார்.
வெண்முரசு ஆவணப்படத்திற்கு இசை அமைத்த, Four Seasons படத்தின் மூலமாக திரை உலகிலும் அடியெடுத்து வைத்த ராலே ராஜனுக்கும், விஷ்ணுபுரம் நிகழ்வுகளை பாடித் துவக்கி வைக்கும் , தனது மகள் ஆராதிரிகாவுடன் “பாலும் தெளிதேனும்” பாடியும் பொதுவெளியில் பிரபலமாக உள்ள ப்ரியா கிருஷுக்கும் அதிக அறிமுகம் தேவையில்லை. அவர்களுடன் இக்கச்சேரியில் இணைந்து வாசிக்கவிருக்கும் டாலஸ், ப்ரிஸ்கோ, ப்ளேனோ, இர்வின் நகரங்களில் பிரபலாகவிருக்கும் இசைக்கலைஞர்களைப் பற்றிய சிறு குறிப்புகளை தருகிறேன்.
குரு பால பாலகிருஷ்ணா பிள்ளையிடம், தனது ஒன்பதாம் வயதிலேயே, வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்ட உமாமகேஷ், ஶ்ரீ நெடுமன்காடு சிவானந்தம், பேராசிரியர் ஆர். தியாகராஜன் வழிநடத்தலில், மேலும் தனது வயலின் வாசிப்பை மேன்படுத்திக்கொண்டார். இந்தியாவிலிருந்து வந்து இசைக் கச்சேரி நடத்திய சீர்காழி சிதம்பரம், Dr. பேபி ஶ்ரீராம், விவேக் மூழிகுளம் ஆகியோருக்கு வயலின் வாசித்துள்ளார்.
மிருதங்க வித்வான் ராஜுபாலன், துபாயை பூர்விகமாகக் கொண்டவர். தனது அன்னை விதூஷி சரோஜா பாலனிடம் வாய்ப்பாட்டுப் பயிற்சி பெற்று அவரது இசைப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். வித்வான் தளவூர் என்.எஸ். ராஜீவ் அவர்களிடம் பத்து வருட பயிற்சி பெற்றுள்ளார். இசை வல்லுனர்கள் தஞ்சாவூர் சங்கீத பாலசுப்ரமணியன், வயலின் மதுரை அனந்தகிருஷ்ணன், மண்டலின் சூர்யா மனோகர் ராவ் ஆகியோருடன் இணைந்து கச்சேரியில் வாசித்த அனுபவம் ராஜு பாலனுக்கு உண்டு.
கர்நாடக சங்கீதத்தில் இருபத்து நான்கு வருடம் தொடர் பயிற்சியில் இருக்கிறேன் என்று சொல்லும் Dr சாய் சங்கர் கணேஷ் , சம்பை வைத்யநாத பாகவதர் குருகுல வழி வந்த திருச்சி எஸ். கணேசனிடம் இசைப்பயிற்சி பெற்றுள்ளார். இருநூறுக்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடியிருக்கும் இவர் விஜய் டிவி நடத்தும் சூப்பர் சிங்கர் -4-ல் கால் இறுதி வரை தேர்வாகியுள்ளார். இசையை பிரதானமாகக் கொண்டு 2014-ல் வெளிவந்த வானவில் வாழ்க்கை படத்தில் முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ஏ. ஆர். ரஹ்மான், தேவி ஶ்ரீ பிரசாத், எஸ்.எஸ். தமண் அவர்கள் அமெரிக்கப் பயணத்தில் நடத்தும் கச்சேரியில் பியானோ வாசித்த அனுபவமும் உண்டு.
இவர்களுடன் ஆஸ்டினிலிருந்து நண்பர் ஸ்கந்த நாராயணன் இணைந்து கஞ்சிரா வாசிக்க இருக்கிறார். ஸ்கந்தா, பூன் எமெர்சன் முகாமில் நண்பர்கள் பாடும்பொழுது மிருதங்கம், கஞ்சிரா வாசித்து அதை பேரனுபவமாக மாற்றுவார். ஆஸ்டினில் நடக்கும் வார இறுதி கச்சேரிகளில் ஸ்கந்தா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாசிப்பார் என்பதை கச்சேரி செல்லும் நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.
அமெரிக்காவில் முதன் முதலாக நடக்கவிருக்கும் இந்தக் கம்பராமாயணக் கச்சேரியை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் முன்னின்று நடத்துகிறது. நண்பர்கள், அவர்களை காண அமெரிக்கா வந்திருக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்வில் கலந்துகொள்ள கட்டணம் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
